Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17211 articles
Browse latest View live

யட்சி -கடிதம்

$
0
0

8be2a9c7-b064-49f2-818e-9a1b282bbed2

அன்புள்ள ஜெயமோகன்,

மூன்று அல்லது நான்கு முறை படித்தும் “யட்சி” வெறும் கதையாகக் கிடந்தது பல வருடங்களாக. என்னவோ நேற்று சட்டென அதில் வரும் யட்சியை அடையாளம் கண்டுகொண்டேன்….அல்லது அதில் என் யட்சியை அதில் புகுத்திக்கொண்டேன்.

யட்சி என்பது ஒரு உயிரின் ஒட்டுமொத்த இச்சைதானே? இல்லை இல்லை அப்படி சொல்வதை விட வேறு எதுவும்அதை எளிமை படுத்திவிட முடியாது! அது இச்சைகளால் ஆன ஒரு உயிரின் மாய வடிவம் என்றுதான் சொல்ல  வேண்டும். அதிலும் எதோ வெறும் உயிர் அல்ல. தணியாத வேட்கை   கொண்ட, தன் மீது அளவு கடந்த தன்னம்பிக்கை கொண்ட, தனது ஆசைகளின் மீது எந்த குற்ற உணர்ச்சியும் கொள்ளாத, தன்னை நாள்தோறும் முன்னெடுத்து செல்லும் ஒரு உன்னத ஆத்மா ஒன்றின் இச்சை தான் அந்த யட்சியல்லவா?

தொடர்ந்து அழகை கண்காணித்து வருவது பெண்களின் மனம். அதிலும் குறிப்பாக தன் அழகையே. அதில் நிறைந்து நிறைந்த மனதுக்கு அதைவிட அழகாய் தோணும் பிறிதொன்று இருப்பதில்லை; ஒன்றை தவிர. அது தன்  மனதின் ஆழத்தில் இருந்து எழுந்து வரும் ஆசைகள், விளைவுகளின் தொகுப்பு ஒரு பிரமாண்டமாய் அவளின் முழு ஆற்றலையும், ஆத்மாவையும், இருப்பையும் உறிஞ்சி எழுந்து வரும் யட்சியின்  அழகாய்தான் இருக்கவேண்டும்.

“அம்மாவின்” ஒட்டு மொத்த விழைவுதான் இந்த கதையின் யட்சி அல்லவா?. அதில் இருக்கும் நேர்மையை, தீர்க்கத்தை அல்லவா யட்சியாய் கண்டு  அவளின் அப்பா பயந்து செல்கிறார். அவளை அந்த காட்டில் கிழங்கு தோப்பிற்கு இரவில் வழிகாட்டி சென்றதும், அவளின் உச்ச அழகின் தருணத்திற்கு மறுநாள் அதிகாலையில்  இட்டு சென்றதும் அவளின் விழைவுதான் அல்லவா. காலையில் அவளை கண்டு மீட்டு வந்தவர்கள் அவளின் கனவை கலைத்து யட்சியை துரத்தி விட்டல்லவா மீட்டிருக்க வேண்டும்.

கண்கள் வெறுமனே நிகழ் நாடகத்தை நோக்கி நிற்க ஆசைமனம் யட்சியாய் இன்னும் உயர அமர்ந்து இன்னொரு நாடகத்தை நிகழ்த்தியும், பார்த்தும், களித்தும் கிடக்கிறது. அந்த நாடகத்தில் கானப்படுவை எல்லாம் சமூக நெறிகள் தாண்டி, பிரபஞ்ச விதிகள் தாண்டி நிற்பவை. அது அந்த ஆத்மாவின் படைப்பின் களம். அங்கு படைப்பதுவும், படைக்கபடுவதும் பார்ப்பதுவும் ஒன்றே. அம்மாவின் உடல் அந்த வீடு, கிரமம் தாண்டாமல் இருக்க விழைவோ அண்ட பெருவெளிஎங்கும் சென்று கண்டு வந்திருக்கிறது.

உள்ளுக்குள் யட்சி இல்லாதவர் இங்கு எவர்? அவளை கண்டு கொண்டவர்கள், அவள் சுட்டிய திசையில் நடந்தவர்கள் சிலரே!!

 

அன்புடன்

கௌதமன்

 

தொடர்புடைய பதிவுகள்


ஆன்மீகம் தேவையா?

$
0
0

index

 

அன்பின் ஜெ,

தங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி.

இருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன:

எனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை. இருப்பினும் இக்கேள்விகள் ஒரளவு என் மனநிலையை உணர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்களை ஒரு குரு என்று நினைத்து இவைகளைக் கேட்கவில்லை. ஒரு நல்ல நண்பராக மட்டுமே நினைத்து எழுதுகிறேன்.

1. ஆன்மீகமே தேவைதானா? கடவுள் என்ற கருதுகோள் அல்லது நம்பிக்கை அளிக்கும் நன்மைகளுடன் நின்றுவிட்டால் என்ன?

2. ஆன்மீகத்திற்கு நம்பிக்கை பலமா அல்லது தடையா? சில சமயங்களில் இது மிகப்பெரும் தடையாக எனக்குத் தோன்றுகிறது.

3. ஆன்மீகத் தேடல் (தேடலா?) – இதற்கு ஒரு குரு தேவையா?

4. ஒரு நல்ல குருவை எப்படி அடைவது? அவர் எப்படிப் பட்டவராயிருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வேண்டுமா? இந்த நம்பிக்கையுடன் நமது தேடலைக் கோர்த்தால் அதனால் ஏற்படக்கூடும் சங்கடங்கள் அல்லது இடையூறுகளை என்ன செய்வது?

5. சாஸ்திர ஞானம் ஆன்மீகத்திற்கு பலமா அல்லது தடையா? ஆதிசங்கரர் ஒருகட்டத்தில் தடையென்றே கூறுகிறார்.

6. ஆன்மீகத்திற்கு முறையான பயிற்சிகள் தேவையா? பலமுறை வெறும் மனப்பாய்ச்சல்கள் மட்டுமே ஏற்படுகிறது.

7. ஆன்மீகத்தின் குறிக்கோள் முழு மன அமைதியா? அப்படியென்றால சமநிலை அவ்வப்பொழுது முயலாமலே ஏற்படுகிறதே. அது தான் குறிக்கோளா? பல சமயங்களில் எவ்வளவு முயற்சித்தும் மனம் சமநிலையுடன் இருக்க மறுக்கிறதே. உண்மையில் இதுவே முதல் கேள்வியாயிருந்திருக்க வேண்டும்.

நன்றியுடன்,
சந்திரசேகர்.

அன்புள்ள சந்திரசேகர்,

இந்தக்கேள்விகளுக்கு ஒரு நண்பர் சகபயணி என்ற முறையில் நின்று பதில் சொல்கிறேன்.

1. ஆன்மீகமே தேவைதானா என்ற கேள்விக்கே அர்த்தமில்லை. ஆன்மீகம் என்பது ஒரு நிறைவின்மையை ஒருவர் உணர்வதில் இருந்து ஆரம்பிக்கிறது. ‘எனக்கு இந்த வாழ்க்கை போதவில்லை, நான் முழுமையான வாழ்க்கையைத் தேடுகிறேன்’ என ஒருவர் எண்ணும்போது ‘எனக்கு அனுபவம் மட்டும் போதாது அனுபவத்தை அறிவதும் வேண்டும்’ என ஒருவர் உணரும்போது அந்த நிறைவின்மை ஆரம்பிக்கிறது. அது வினாக்களாகிறது, தேடலாகிறது.

அந்த எண்ணங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளனவா என்ன? அந்த எண்ணங்கள் ஒருவருக்கு அவரது மன அமைப்பு வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே உருவாகின்றன. உருவான பின் அவை அவரை விடுவதில்லை.

வேண்டுமென்றால் இப்படிச் சொல்கிறேன். ஒருவருக்கு ஆன்மீகமான நிறைவின்மையும் தேடலும் உருவாகவில்லை என்றால் அவருக்கு அதை இன்னொருவர் உருவாக்கி அளிக்கவேண்டும் என்பதில்லை. கடவுளும் மதமும் அளிப்பவையே அவருக்குப் போதுமானவை. அதற்காக அவரைக் குறைத்து மதிப்பிடவேண்டும் என்பதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவருக்கான இயல்பும் அதையொட்டிய வாழ்க்கையும் உள்ளது.

இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறேன். ஒருவருக்கு ஆன்மீகமான வினாக்கள் உருவானபின்னரும் அவரால் அவற்றை நிரந்தரமாகத் தவிர்த்து நிம்மதியாக லௌகீகத்தில், மதத்தில், கடவுளில் நீடிக்கமுடியும் என்றால் அதைச் செய்யலாம். தவிர்க்கமுடியாமை ஆன்மீகத்தேடலுக்கான காரணமாக அமைவதே மேல்.

2. சாதாரணமாக உறுதியான நம்பிக்கை ஆன்மீகத்துக்கு எதிரானதே. அது லௌகீகத்தில் கடவுளைப் பிடித்துக்கொண்டு முன்னேறுவதற்குரியது. அந்த நம்பிக்கை என்பது ஆன்மீகத்தேடலுக்குரிய சுதந்திரம் இல்லாமல் செய்துவிடுகிறது.

ஆன்மீகத்தேடல் என்பது எல்லா திசைகளுக்கும் விரியக்கூடியதாகவே இருந்தாகவேண்டும். அதற்கு முன் நிபந்தனைகள் இருக்கக் கூடாது. முன்மாதிரிகள் இருக்கலாகாது. முன்பயிற்சி இருக்கக் கூடாது.

ஆயுர்வேத சிகிழ்ச்சை முறையானது தன் நோயாளியை முதலில் அருகம்புல் சாறுவழியாகச் சுத்தப்படுத்திய பின்னரே மருந்தைக் கொடுக்கும். அதுவரை நோயாளி உண்ட எல்லா மருந்துகளையும் அவன் உடலில் இருந்து நீக்குவதுதான் அது.

அது ஆன்மீகப்பயிற்சிக்கும் வேறுவகையில் தேவையாகிறது. முந்தைய நம்பிக்கைகளிலும் ஆசாரங்களிலும் இருந்து விடுபடாமல் ஆன்மீகத்தேடல் சாத்தியமில்லை. முன்னாளில் எல்லா குருகுலங்களிலும் இந்த முறை இருந்தது. இன்று ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ எல்லாரும் அதையே சொல்கிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

ஆனால் ஆன்மீக சாதனையில் ஒரு முக்கியமான பகுதியாக உள்ள உபாசனை முறையில் முழுமையான பாவபக்தி என்பது இன்றியமையாதது. அது ஓர் ஆன்மீக வழிமுறை. அதற்கும் லௌகீக பக்திக்கும் வேறுபாடுண்டு.

3 .ஆன்மீகம் என்பது தேடல்தான். உபநிடதமே அதைத்தான் சொல்கிறது. அதற்கு கண்டிப்பாகக் குரு தேவை. குரு அமையும்வரை நான் சொல்வது புரியாது. ஒருவனின் அடியாழத்தை அவன் எவரிடமும் திறப்பதில்லை. அது திறக்கப்படாமல் அவனுக்கு விடுதலையும் இல்லை. எங்கோ அவன் அதை திறந்து பரிசீலித்தாகவேண்டும். அதற்கான முன்னிலையே குரு.

அலோபதி மருந்துகள் ஒட்டுமொத்தமாகத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றன. அதுவே மதம் அளிக்கும் விடை.ஆயுர்வேத மருந்து நோயாளியைத் தனிப்பட்டமுறையில் நன்கறிந்த மருத்துவன் அவனுக்காகவே தனியாக உருவாக்குவது. அதைப் போன்றதே ஆன்மீகம் அளிக்கும் விடை. அதை ஒரு தனிமனிதரே அளிக்க முடியும்.நூல்கள் அல்ல. அவை ஒரு பொதுத்தகுதியை மட்டுமே உருவாக்கும்.

ஆனால் நான் சொல்வது பிரம்மாண்டமான திரள்களைக் கூட்டும் நவீன குருநாதர்களை அல்ல. அங்கே தனிப்பட்ட உறவே இல்லை

4. நல்ல குருவைத் தேடுவது பற்றித் தொடர்ந்து இந்தத் தளத்தில் பலர் கேட்டிருக்கிறார்கள். தாகம் நம்மை நீர் அருகே இட்டுச்செல்லும். அதுதான் வழிகாட்டிச்செல்லும் விசை. ஆனால் நீர் கிடைத்தாகவேண்டும் என்பதில்லை.

குரு மீதான உறவில் இரு படிகள் உள்ளன. அவரை சோதித்து விசாரணைசெய்து ஏற்பது. அங்கே அவநம்பிக்கையே அளவுகோல். ஏற்றபின் நம்பிக்கைதான் மேலும் நெடுந்தூரம் எடுத்துச்செல்லும்.

ஒரு பழங்குடி வழிகாட்டியுடன் காட்டுக்குச் சென்றோம். பகல் முழுக்க அவர் காட்டிய வழியைப்பற்றி சந்தேகமும் விளக்கமும் கேட்டுக்கொண்டிருந்தோம். திரும்பும்போது கூரிருள். அப்போது ஒன்றுமே கேட்கவில்லை. அவர் கையை மட்டும் பிடித்துக்கொண்டு வந்தோம்.முழு நம்பிக்கையுடன். ஆன்மீகத்தில் அப்படி ஒரு இருட்டுப்பிராந்தியம் உண்டு

அத்துடன் ஒரு நல்ல குரு நம்மை உடைத்து வார்ப்பார். நம் மீது அவரது பிரக்ஞை மோதுவதன் வலி பயங்கரமானது. நாம் நம்மை இழப்பதை உணர்வோம். அந்நிலையில் நாம் நம்மைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுவோம். குருவை நிராகரிக்கக் காரணங்கள் தேடுவோம். அப்போது அந்த ஆரம்ப ஐயம் நமக்கிருந்தால் நாம் அதைப் பெரிதாக்கி அவரை எளிதாக விட்டுவிட்டுச்செல்வோம். அதனால் நமக்கே இழப்பு. நம்மை உடைக்காதவர் நமக்குப் புதியதாக எதையும் தருவதில்லை. நம்மை அவமதிக்காதவர் நமக்கு உண்மை எதையும் காட்டுவதில்லை.

5. சாஸ்திர ஞானம் ஆரம்பகாலத்தில் தேவையானது. அது நம்மை வழிதவறாமல் சாராம்சம் நோக்கி நேராகக் கொண்டுசெல்லும். ஒரு கோயிலைப்பற்றிய சிற்பவியல் அறிமுகம் இருந்தால் நீங்கள் நேராகவே கருவறைக்குள் செல்லமுடியும். முதன்முதலாகக் கோயிலுக்குள் நுழைந்தால் கோபுரவாசல் புஷ்பயட்சி சிற்பத்தையே கடவுளாக நினைக்கக்கூடும் இல்லையா?

இப்போது ஆன்மீகச்சொற்பொழிவுகள் ஆற்றுபவர்கள், ஆன்மீககுருக்களாகத் தங்களை காட்டிக்கொள்பவர்கள் மிக அதிகம். வணிக ரீதியாகப் பெரும்பிம்பத்துடன் திரட்டப்பட்ட குருக்களும் அதிகம். அவர்கள் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் மிகச்சாதாரணமானவை. அவை மரபில் நெடுங்காலமாகவே பேசப்பட்டு வந்தவை. எளிய சாஸ்திர ஞானம் இருந்தால்கூட அவற்றை நாம் அடையாளம் கண்டுகொள்வோம். அது இல்லாததனால் அந்தச் சில்லறைக் கருத்துக்களிலேயே பிரமித்து அதிலேயே சிக்கிக் கொள்வோம்.

அதேபோல சாஸ்திர ஞானம் இல்லாத நிலையில் நம் மனதில் தற்செயலாக தோன்றும் எளிய கருத்துக்களை அரிய ஞானத் திறப்புகளாக எண்ணிக்கொள்வோம். அவை ஏற்கனவே மரபில் பெரிய அளவில் பேசப்பட்டவை என்பதை அறிந்திருக்க மாட்டோம்

அந்நிலையில் அரிய ஞானத்துளிகளைப் பெற்றுக்கொண்டு உள்வாங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்வோம். நம்மை நாமே ஒரு பீடத்தில் வைத்துக்கொள்வோம். அந்த மாயை மிக மிக அபாயகரமானது

இது ஓஷோ அல்லது ஜே.கே.போன்றவர்களின் ஒருசில நூல்களை மட்டும் வாசித்து உதிரியான கருத்துக்களை மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கும் பொருந்தும். சாஸ்திர ஞானம் என்பது ஒட்டுமொத்தமான ஒரு பார்வை அளிக்கும். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் நிறுத்தும்.

இன்னொருபக்கம் போலி சாஸ்திரங்கள் நம்மைக் குழப்புகின்றன. சாதி சார்ந்தும் ஆசாரங்கள் சார்ந்தும் நம்மைக் கட்டிப்போடும் அந்த சாஸ்திரங்களைச் சொல்பவர்கள் நமக்கு சாஸ்திரம் தெரியவில்லை என்றால் எல்லாமறிந்தவர்களாக நமக்குத் தோற்றமளிக்கிறார்கள். பலசமயம் நம் மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த சாதி, மத அமைப்புகள் நம்மை அத்தகைய போலி சாஸ்திரங்களில் சிக்கவைக்கின்றன. சாஸ்திர ஞானம் அவற்றின் உண்மையான மதிப்பை நமக்குக் காட்டுகிறது.

ஆன்மீகஞானிகளின் வாழ்க்கையில் அவர்கள் அந்த ஆரம்பகால வழிமயக்கங்களை வெல்ல சாஸ்திர ஞானத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருப்பதை காண்கிறோம். நாராயணகுரு போலத் தாழ்த்தப்பட்ட சமூகப்புலத்தில் பிறந்த குரு அவர்மீது அன்றைய சமூகம் ஏற்றிவைத்த எல்லா இரும்புப்பாறைகளையும் தன் ஞானத்தைக்கொண்டு தூக்கி வீசிவிட்டிருக்கிறார்

ஆனால் சாஸ்திரம் ‘கற்று மறக்கப்படவேண்டியது’ என்பது ஆன்மீக மரபில் எப்போதும் சொல்லப்படுகிறது. நீங்கள் அணியிலக்கணம் படித்தவர். வெளியே சென்று ஒரு பூவைப்பார்த்து அணியிலக்கண விதிகளின்படி பரவசம்கொண்டீர்கள் என்றால் அது அனுபவம் தானா? ஆன்மீக அக அனுபவமென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுறையும் தனித்துவமானது. முன்னால் வகுக்கப்பட்ட எந்த விதியும் அதை விளக்காது, வரையறைசெய்யாது. இலக்கணம் மறந்துதான் கவிதையை வாசிக்கமுடியும். சாஸ்திரம் மறந்து மட்டுமே ஆன்மீகத்தை அடையமுடியும்

6. ஆம், கண்டிப்பாகப் பயிற்சி தேவை. பயிற்சி என்பது என்ன?ஏற்கனவே ஒருவர் அடைந்த அனுபவத்தில் இருந்து நாம் பாடம்கற்றுக்கொள்வதுதானே? நான் பதஞ்சலிக்கு முந்தைய காலகட்டத்தில் நின்றுகொண்டு யோகசாதனையை ஆரம்பிக்கவேண்டுமா என்ன? ஆன்மீகத்தேடல் என்பது மிக மிக அகவயமானதென்றாலும் எல்லாரும் மானுடரே என்ப்ற வகையில் மிகப் பொதுவான தளங்களே அதிகம். அவை பொதுவாக வரையறைசெய்யப்பட்டு விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. அவை முக்கியமானவை.

ஒரு புது ஊருக்குச் செல்கிறோம். நாமே வழி கண்டுபிடித்துச்சென்றால் ஒரு சின்னக் குறுக்குவழி தெரியாமல் முழுநாளும் நடக்க நேரிடலாம். ஒரு வரைபடம் அந்தச் சிக்கலை சாதாரணமாகத் தீர்த்துவைக்கும். சிலசமயம் மிக எளிமையான ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளாமல் நாம் வெகுதூரம் சுற்றி வருடங்களை இழக்க நேரிடலாம். அதற்குப் பயிற்சிகள் உதவும்.

ஓர் உதாரணம் , நித்யா சொன்னது. ஒருவர் அவரது தனியறையில் தேவையற்ற பொருட்களை குவித்துப் போட்டு நடுவே அமர்ந்து தியானம்செய்துவந்தார். நித்யாவிடம் அவர் தன்னுடைய தியானச்சிக்கல்கள் சிலவற்றைச் சொல்ல நித்யா அவரது அறையை சென்று பார்த்தார். அதன்பின் சொன்னார், அந்தப்பொருட்கள் அவரது ஆழ்மனதைப் பாதிக்கின்றன என்று. புறப்பொருட்கள் மனிதர்களின் ஆழ்மனதில் இயல்பாகவே படிமங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. சுற்றியிருக்கும் பொருட்கள், அடிக்கடி கண்ணில் படுவதன் மூலம் நம் ஆழ்மனத்தை வடிவமைப்பவை. ஆகவே புற சூழலை ஒழுங்காக வைக்காமல் அகச்சூழலை சரியாக அமைத்துக்கொள்ள முடியாது. அதற்காகவே பதஞ்சலி யம நியமங்களைச் சொல்கிறார்.

இது யோகமுறையில். ஆனால்சாதாரணமாக சிந்தனைக்குக் கூட நமக்குப் பயிற்சி தேவையாகிறது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தேன். அப்போது புதிய சிந்தனைகள் மேல் எனக்குப் பெரும் மோகம் இருந்தது. புதிய கருதுகோள்கள், புதிய கலைச்சொற்களை ஆவேசத்துடன் அள்ளிச்சேர்த்துக்கொண்டிருந்தேன். நித்யாதான் அந்த மயக்கத்தை உடைத்தார்.

பழையதோ புதியதோ எல்லாக் கருதுகோள்களும், எல்லாக் கலைச்சொற்களும் வெறும் புற அடையாளங்களே என்றார். அந்த அடையாளங்களை நாம் நமக்கேற்ப மாற்றிக்கொண்டு நாம் அனுபவித்ததையும் சிந்தித்ததையும் முன்வைப்பதே முக்கியமானது. புதிய கலைச்சொற்களையும் கருதுகோள்களையும் சுடச்சுடக் கற்றுச் சொல்லவேண்டியவர்கள் பேராசிரியர்கள்– சிந்தனையாளர்கள் அல்ல. கலையும் ஆன்மீகமும் ’புதியதாக’ அறியக்கூடியவை, அந்த அறிதலைச் சொல்லமுயலக்கூடியவை.

இதேபோல நம் சிந்தனையில் ஏராளமான பிழைகள் நிகழ்ந்தபடியே உள்ளன. முறையான பயிற்சி நாம் சிந்தனையில் கொண்டுள்ள ஏராளமான பிழைகளை, வழிச்சுற்றுகளை சரி செய்துவிடும். அதற்காகவே பழங்காலம் முதல் குருகுல அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

7. ஓர் அறிவியல் ஆய்வாளனிடம் அவனுடைய ஆய்வில் முழு அமைதியை உணர்கிறானா என்று கேட்டால் என்ன சொல்வான்? அறிவியலே அப்படி என்றால் இன்னும் அகவயமான ஆழ்ந்த தேடலாகிய ஆன்மிகம் எப்படி அமைதி கொண்டதாக இருக்கமுடியும்?

மன அமைதிக்கான ஆன்மீகம் என்று சொல்லப்படுவதே வேறு. அது லௌகீகத்தில் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதற்காக ஆன்மீகத்தைப் பிடித்துக்கொள்வதுதான். அதற்கு பக்தி பயன்படும். தியானத்தின் ஆரம்பநிலைகள் பயன்படும்.

ஆன்மீகத்தேடலில் அமைதி உள்ளது. ’நான் எனக்குரியதைச் செய்கிறேன்’ என உணரும்போது ஏற்படும் அகநிறைவு. லௌகீகத்தின் கொந்தளிப்புகளில் இருந்து ஓடுக்குள் புளியம்பழம்போல விலகி நிற்பதன் சமநிலை.

ஆனால் ஆன்மீகமே உருவாக்கும் கொந்தளிப்பு நிலைகள் பல உள்ளன. யோகப்பயிற்சிகளில் முதலில் குவிநிலையின்மை, பின்னர் குவிநிலை, பின்னர் கொந்தளிப்பு என்றே அதன் பாதை உள்ளது. அவற்றின் தளங்கள் மிகச் சிக்கலானவை. அவற்றைப்பற்றி இதற்குமேல் பேசமுடியாது.

ஜெ

 

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம்Nov 2, 2011

தொடர்புடைய பதிவுகள்

அஞ்சலி, குமரகுருபரன்

$
0
0

13413619_1391576790868228_372599603473980680_n

 

இப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம் மனம் கணக்கிட்டிருப்பதில்லை. புரிந்ததும் இறப்புச்செய்திகள் அளிக்கும் வெறுமை, சலிப்பு, எவரிடமென்றில்லாத ஒரு கோபம்.

 

தொலைதூர அயல்நிலத்தில் இறப்புச்செய்தியைக் கேட்பது மேலும் அழுத்தம் அளிக்கிறது. மனுஷ்யபுத்திரன் காலையிலேயே அழைத்திருந்தார். அதைப்பார்த்தபோது உடனே பேசவேண்டும் என்று மனம் எழுந்தது. பின்னர்  மீண்டும் சலிப்பு

 

குமரகுருபரன் எழுத்தின் வழியாக அன்றி எனக்கு பெரிய அறிமுகம் இல்லாதவர். நான் அவரை இரண்டுமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். என் கூட்டம் ஒன்றுக்கு வந்திருந்தார். அதன்பின் அவரது கவிதை வெளியீட்டுக்கு நான் சென்றிருந்தேன். புகைப்படங்களில் கௌபாய் போல போஸ் கொடுப்பவர் நேரில் இனிய எளிய இளைஞராக இருந்தார்.

 

குமரகுருபரன் எனக்கு அறிமுகமானது சினிமா பற்றிய அவரது நூல் வழியாக. அதை எனக்கு அனுப்பி முன்னுரை அளிக்க முடியுமா என்று கேட்டிருந்தார். நான் முன்னுரைகள் எழுதுவதில்லை என கறாராக பதில் அனுப்பினேன். ஆனால் சும்மா அந்த நூலின் கட்டுரைகளை வாசித்தபோது ஊக்கமடைந்தேன். முன்னுரை எழுதி அனுப்பினேன்.

 

தொடர்ந்து அவரது கவிதைகளை கவனிப்பவனாக இருந்து வந்திருக்கிறேன். அலைக்கழிப்பும் தனிமையும் கொண்ட அவரது கவிதைகள் தமிழ்க்கவிதையின் புதிய வழிப்பாதை ஒன்றை திறந்தன என்று கணித்தேன். கடைசியாக வந்த தொகுதிவரை அவை தர்க்கமின்மையும் மொழிக்கூர்மையும் முயங்கும் படைப்புகளாக இருந்தன

 

யோசிக்கையில் குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது. குடி, துயில்நீப்பு, கால ஒழுங்கின்மை, கொந்தளிப்பு. கடைசியாக அவரது கவிதைவெளியீட்டுவிழாவில் பார்த்தபோது அவரால் நடக்கவே முடியவில்லை.

 

மீண்டும் மீண்டும் இது நிகழ்கிறது. கவிஞர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படித்தான் செல்லவேண்டும் என வேறெங்கோ முன்னரே முடிவாகிவிடுகிறது போலும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குமரகுருபரன் அஞ்சலி –செல்வேந்திரன்

$
0
0

maxresdefault

 

கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பினால் காலமானார் எனும் செய்தி இந்த நாளின் மீது ஒரு இடியாக வந்து விழுகிறது. இரண்டு வருட நட்பு. ஆனால் சந்தித்ததில்லை. அகாலத்தில் என்னை அழைக்கக் கூடிய இருவரில் ஒருவராக அவர் இருந்தார்.  கடந்த வியாழன் அன்றுதான் குமாரை முதன் முதலில் சந்தித்தேன். இரவு ஒன்பதரை மணி வாக்கில் அழைத்து ஒரு மதுவிடுதிக்கு வரச்சொன்னார்.  இரவு பத்து மணி துவங்கி நள்ளிரவு வரை பியர் அருந்திக்கொண்டே கவிதைகள், புதிய நாவல்கள், ஊடக அனுபவங்கள் என பேசிக்கொண்டிருந்தார்.

 

தினமலரின் சில பதிப்புகளுக்கு உயர் பதவி வகித்தவர். அந்நாளைய தொடர்புகளை இன்றும் பேணி வருபவர் என்பதால் அரசியல் உள்ளடி விவகாரங்களில் அவருக்குப் புலமை இருந்தது. கொஞ்ச நேரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பேசிக்கொண்டிருந்தோம்.  நான் அவரது குடியைப் பற்றிய எனது கவலையை தெரிவித்தேன். சர்க்கரை ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்சனையும் கிடையாது உடற்பயிற்சி தேவையின்றியே ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். ஐந்து ஃபாஸ்டர் பியர்களைக் காலி செய்த பின்னும் தள்ளாட்டமின்றி பேசிக்கொண்டிருந்தார்.

 

மதுவிடுதி மூடும் நேரத்தைத் தாண்டியது. பரிசாரகன் அவரது தோரணையைப் பார்த்து சீக்கிரம் கிளம்புங்களென சொல்லத் தயங்கினான். சரேலென திரும்பி தம்பி நீ கொஞ்ச நேரம் பக்கத்துல வராதே என்று விட்டு பேச்சைத் துவங்கினார். ‘பொதுவாக அதீத தோரணைகள் ஜெயமோகனுக்கு உவப்பானவையல்ல.. எனக்குத் தெரிந்து நீர் ஒருத்தர்தான் விதிவிலக்கு ..’ என் அவதானத்தை சொன்னேன். குமார் உடனே தலையை உதறி ‘அந்தாளு ஆளையும் பார்க்க மாட்டான்.. பூலையும் பார்க்க மாட்டான்.. அதனாலதான் எனக்கு ஆசான்..’ என்றார்.

 

குமார் கால்நடை மருத்துவம் படித்தவர். இதழியல் ஆர்வத்தால் நாளிதழ்களுக்கு வந்தார். மலர் டிவியின் பூர்வாங்க அணியில் இருந்தார். கொஞ்ச காலம் குமுதத்தில் பணியாற்றினார். குமுதம் ஜங்ஷன் இவரது பொறுப்பில் வெளிவந்தது. பிற்பாடு சேனல்களுக்கான டிரெய்லர், ப்ரொமோ உள்ளிட்ட எடிட்டிங் சேவைகளை செய்து தரும் நிறுவனத்தை துவங்கினார். விகேர் உள்ளிட்ட நிறுவனங்களின்  பொருட்கள் லைவாக தொலைக்காட்சியில் விளம்பரங்களைக் காட்டி டோல் ஃப்ரீ எண்களில் நேரடியாக விற்கும் சேவையையும் அவரது நிறுவனம் அளித்து வந்தது. கடைசி சில வருடங்களில் தொழில் கைகொடுக்கவில்லை என்கிற கவலை அவருக்கிருந்தது.

 

குமார் தன்னைப் பற்றிய ரகசியங்கள் தனது அபிப்ராயங்கள் இரண்டையும் மறைக்கிறவர் அல்ல. எதையும் உடைத்துப் பேசுகிறவர் என்பதனாலேயே அவருக்கு எடைக்கு எடை நண்பர்களும் எதிரிகளும் இருந்தார்கள். அந்தந்த நேரத்து மனோதர்மத்திற்கு ஏற்ப அதிரடியாகச் செயல்படுபவர். திடீரென கலக ஸ்டேட்டஸ்களைப் போடுவார். யாரை கிழித்து தொங்க விட்டாரோ அவரை நினைத்து சின்னாட்களில் கண்ணீர் மல்குவார். ஃபேஸ்புக்கை விட்டு திடீரென மாயமாவார். திடீரென வந்து குதித்து ஆட்டையைக் கலைப்பார். அர்த்த புஷ்டியோடு ஒரு விமர்சனத்தை வைப்பார். எதிர்பாராத தருணத்தில் லும்பன் மொழிக்கு தாவி கலவரப்படுத்துவார். மார்த்தாண்டன் விருதைப் புறக்கணித்தார்; இயல் விருதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவரது சிறிய வீடு நண்பர்களின் கொண்டாட்ட ஸ்தலமாக எப்போதும் இருந்தது. எவ்வளவு கருத்து வேறுபாடுகளுடனும் நட்பைப் பேண முடிகிற நபராக இருந்தார். தமிழில் ஒரே நேரத்தில் சாருநிவேதிதாவுக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்திற்கும் இன்னபிற இலக்கிய வகைமைகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் மேல் பிரியம் இருந்தது. மூன்று மணி நேரப் பேச்சில் சாரு எனக்கு அப்பன்; ஜெயமோகன் எனக்கு ஆசான் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.

 

ஒரு மணிக்கு மேல் எனக்கு உறக்கம் சொக்கியது; அவரை வலுக்கட்டாயமாக கிளப்பி குடியகத்தை விட்டு வெளியே வந்தோம். டாக்ஸி ஏதுமில்லை. அவரை எனது ஈருளியில் ஏற்றிக்கொண்டேன். ‘சாரு.. சொன்னமாதிரி நீரு இருநூறு கிலோ கறிதாம்யா..’ என்றேன். இருவரும் சிரித்துக்கொண்டோம். ஒரு விடுதியறையில் அவரை இறக்கி விட்டு அறைக்குத் திரும்பினேன்.

 

வெள்ளி காலையில் என்னய்யா நம்ம விருது வாங்கினா மட்டும் எந்த பேப்பர்லயும் வர்றதில்ல என்றார். அச்சு ஊடகங்களில் செய்தி வரவழைக்க முடிகிற அளவிற்கு நான் பெரிய ஆளில்லை என சற்றே காரமான உரையாடல். சிறிது நேரத்திலேயே மீண்டும் கொஞ்சல். பிறகு நான் வேலைகளில் ஆழ்ந்து அவரை மறந்து விட்டேன். இன்று திடீரென குண்டு வெடித்தாற் போல அவரது மரணச் செய்தி.

 

குமாருக்கு உள்ளே ஒரு டிஜே இருந்தான். எனக்குள்ளும் ஒரு டிஜே. நாங்களிருவரும் உள்டப்பியும் முகநூல் சுவற்றிலும் மாறி மாறி பாடல்களைப் பரிமாறிக்கொள்வோம். நான் இந்த வேடிக்கை விளையாட்டிற்கு  “# ஸாரி குரு” எனப் பெயரிட்டிருந்தேன்.

 

என் இனிய நண்பனே உனக்கான எனது இறுதி இசைத்துணுக்கு https://www.youtube.com/watch?v=aWIE0PX1uXk

 

செல்வேந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87

$
0
0

[ 20 ]

அனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய  அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த  மேடை.

வாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை அவை ஒற்றைக்குரலில் எதிர்கொண்டது. “ஆ!” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு! அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர்? பிழையல்ல…” என்றது அக்குரல்.

கடும்சீற்றத்துடன் “விலகு!” என அவன் சொன்னான். உதடுகள் நெளிய கைவிரல்களை சுருட்டிப்பற்றி “விலகிச்செல்!” என்றான். “நான் எவரிடமிருந்தும் விலகமுடியாது, மைந்தா. கருப்பைக்குள் நுழைந்து வந்து உன்னைத் தொட்டவன் நான்.” விகர்ணன் மூச்சிரைத்தான். தலையை இல்லை இல்லை என்பதுபோல அசைத்தான். கடும் வலி உள்ளே எழுந்தது போல அவன் உடல் இறுகி நெளிந்தது. அருகிருந்த ஒருவனின் கன்னம் ஒளிகொண்டிருப்பதை கண்டான். அவன் விழிகளுக்குள் ஒளிப்புள்ளிகள். அவ்வொளி அவன் புன்னகைப்பதுபோல காட்டியது.

அப்பால் இன்னொருவனும் ஒளியை முகம் என கொண்டிருந்தான். அதற்கப்பால் இன்னொருவனும். அங்கிருந்தவர் அனைவரும் ஒளிஏற்றிருந்தனர். தூண்வளைவுகளில் திரைநெளிவுகளில் பீடங்களின் செதுக்கல்களில் எல்லாம் ஒளி எழுந்திருந்தது. “ஒளி!” என்றது குரல். “இப்போது நீ நோக்கலாம்… இது ஒளிதான்!” அவன் விழிதிருப்பி பார்த்தான். துச்சாதனன் திரௌபதியின் குழலைப்பற்றி இழுத்து அவைநடுவே வருவதை கண்டான். கனவிலிருப்பவள்போல் அவள் முகம் அமைதிகொண்டிருந்தது. விழிகள் நீள்மலரிதழென அரைப்பங்கு மூடியிருக்க கைகள் குழைந்து கிடந்தன. கால்கள் தளர்ந்து அவன் தூக்கியதனால் மட்டுமே முன்னகர்ந்தாள். அவள் அணிகளேதும் பூண்டிருக்கவில்லை. இடைக்குக் கீழே வெண்ணிற ஒற்றையாடையை முழங்கால்வரை அணிந்திருந்தாள். அதன் நீள்நுனியைச் சுற்றி முலைகளை மறைத்து தோள்சுற்றி செருகியிருந்தாள். அவள் வலத்தோளும் புயங்களும் கால்களும் வெளியே தெரிந்தன.

கரிய உடல். ஆனால் அது நிலவென ஒளிவிடுவதாக தோன்றியது. அவளில் இருந்தே அவ்வொளி எழுந்து பன்னிரு பகடைக்களக்கூடத்தை நிறைப்பது போல. அவள் மட்டுமே அங்கே இருப்பதுபோல. சூழ்ந்திருந்தவை நிழல்கள். இருளின் அலைகள். துச்சாதனன் கையை தளர்த்தியதும் அவள் துணிச்சுருள்போல உடல் தழைய விழப்போனாள். ஆனால் கால்களை ஊன்றி எழுந்து நின்று தன் மேலாடையை கைகளால் பற்றிக்கொண்டாள். நீள்குழல் அலைகளாகச் சரிந்து தோள்களைத் தழுவி நிலம்தொடுவதுபோல விழுந்தது.

அவள் வரவைக் கண்டதும் அதுவரை அரியணைமேடையில் கைகளை முட்டிக்கொண்டும் பற்களைநெரித்தும் ஓசையற்ற சொற்களை உமிழ்ந்தும் பித்தன்போல் நகைத்தும் நிலையழிந்து சுற்றிவந்துகொண்டிருந்த துரியோதனன் அசைவற்று நின்றான். இணைந்த இருகைகளும் இயல்பாக எழுந்து கூப்புபவைபோல் நெஞ்சில் படிந்தன.  விகர்ணன் திகைப்புடன் நோக்கினான். கர்ணனும் கைகூப்பியிருப்பதாகத் தோன்றியது. விதுரர் கண்களை மூடி இமைப்பொருத்தில் நீர் ஊறிவழிய நெளியும் முகத்துடன் அமர்ந்திருந்தார். பீஷ்மர் விழிமூடி ஊழ்கத்தில் மறைந்தவர் போலிருந்தார்.

துரியோதனன் முகம் கனிந்து உருகிக்கொண்டிருந்தது. அன்னையிடம் மன்றாட்டொன்றுடன் அணுகும் மைந்தனைப்போல. தணிந்தகுரலில் அவன் எதையோ கேட்கப்போவதுபோல விகர்ணன் எண்ணினான். அவன் இடத்தோள் சிலிர்ப்பதை அங்கிருந்தே காணமுடிந்தது. இடப்பக்கம் நின்றிருந்த ஏவலன் ஏதோ சொல்ல அவன் அதற்கு செவிகொடுப்பதுபோல் தோன்றியது. ஆனால் ஏவலன் திரௌபதியைத்தான் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன.

துரியோதனன் தன்னிடம் பேசிய எவரையோ புறந்தள்ளுவதுபோல வலக்கையை வீசினான். அச்சொற்களை மறுப்பவன்போல முகம் சுளித்து தலையசைத்தான். இடப்பக்கம் பேசியவரின் சொற்களை ஏற்று சுட்டுவிரல்தூக்கி ஆம் என்று தலையசைத்தான். இருபக்கமும் காற்றடிக்கையில் புல்நுனியில் நின்று ததும்பும் நீர்த்துளி போல  தத்தளித்தான்.

விகர்ணன் உடல் குளிரிலென சிலிர்த்தது. உண்மையிலேயே அக்களத்தில் அறியாத்தெய்வங்கள் நிறைந்துள்ளனவா? அவைதாம் அனைத்தையும் ஆட்டிவைக்கின்றனவா?  அவன் தன் காதருகே ஏதேனும் குரலெழுகின்றதா என்று உளம்கூர்ந்தான். மூச்சொலிகள், ஆடை சரசரப்புகள். விழிதூக்கி மேலே நிறைந்திருந்த தேவர்களையும் தெய்வங்களையும் அசுரர்களையும் நாகங்களையும் நோக்கினான். தூரிகை தொட்டிழுத்த வெற்று வண்ணங்களாகவே அவை தெரிந்தன.

உரத்த குரலில் துச்சாதனன் “அஸ்தினபுரியின் அரசே, தங்கள் ஆணைப்படி இதோ இத்தொழும்பியை அவைக்கு கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.  அவள் இருபக்கமும் நிகர்கொண்டமைந்த கற்சிலை போல் நின்றாள். துரியோதனன் “நன்று!” என்றான். அவன் குரல் இடறியது. கயிறுமேல் நின்றிருக்கும் கழைக்கூத்தாடிபோல் அவன் உடல் தத்தளித்தது. “நன்று, இளையோனே” என அவன் மீண்டும் சொன்னான். என்ன சொல்வதென்றறியாமல் கர்ணனை பார்த்தான். கர்ணன் அவன் நிழலென அதே தத்தளிப்பை தானும் கொண்டிருந்தான்.

“நம் அரசவைத் தொழும்பி இவள். அதை இவளுக்கு உணர்த்தவேண்டும் என்றீர்கள், அரசே” என்றான் துச்சாதனன். “ஆம், அதை சொல்லவேண்டும்” என்றான் துரியோதனன். அவள் விழிகளை நோக்கி “பெண்ணே, உன் கொழுநன் உன்னை பணயம் வைத்து தோற்றிருக்கிறான். அவன் தொழும்பன் என உடன்பிறந்தாருடன்  இதோ நின்றிருக்கிறான். நீ என் அவைத் தொழும்பி என்றானாய். அறிந்துகொள்!” என்றான்.

அவள் தலையைச் சொடுக்கி நிமிர்ந்தாள். தணிந்த குரலில் அவள் சொன்னது அவையினர் அனைவருக்கும் கேட்டது. “எப்பெண்ணும் தொழும்பி அல்ல.” புரியாதவனாக கர்ணனை நோக்கியபின் “ஏன்?” என்றான். உடனே சினமெழுந்து “என்ன உளறுகிறாய்? சித்தம் அழிந்துவிட்டாயா?” என்று கூவினான். “அலைகள் கடலை ஆள்கின்றன என்றுரைப்பவன் அறிவிலி” என்றாள் திரௌபதி. “நுண்சொல் பேசி விளையாட நீ அரசி அல்ல. நீ இழிகுலத்தாள். என் அவைத்தொழும்பி” என்று துரியோதனன் கைகளை நீட்டியபடி எவருடையதோ என்னும் குரலில் கூச்சலிட்டான். “நீ என் உடைமை. என் அடிமை நீ!”

“எவருக்கும் எவரும் முற்றுரிமைகொண்டவர்கள் அல்ல. இங்குள்ள அனைத்தும் தன் தனிவழிப்பயணத்தில் இருக்கின்றன. அஸ்தினபுரியின் அரசே, ஊர்ந்துசெல்லும் எறும்பைக்கூட நாம் உரிமைகொண்டாட முடியாதென்றறிக! வைத்தாடுவதற்கும் இழப்பதற்கும் தன் வாழ்வன்றி ஏதும் மானுடருக்கில்லை.” அவள் புன்னகையுடன் “நீ இன்று  வைத்தாடி இழந்துகொண்டிருப்பதும் அதுவே” என்றாள்.

அச்சிரிப்பால் அவன் அனைத்து தளைகளையும் கடந்து எழுந்து பற்றிக்கொண்டான். “வாயை மூடு, இழிமகளே! என்னவென்று எண்ணினாய்? இது அஸ்தினபுரியின்  சூதுமாளிகை. நீ என் அரியணைக்கருகே கால்மடித்து நெற்றியால் நிலம்தொட்டு வணங்கவேண்டிய அடிமை… வணங்கு!” அவள் மெல்ல சிரித்தது அவையெங்கும் கேட்டது. “வணங்கு! இல்லையேல் இப்போதே உன் தலையைச் சீவி எறிய ஆணையிடுவேன். வணங்கு கீழ்மகளே!” என துரியோதனன் பெருங்குரல் எழுப்பி தன் கைகளை ஓங்கி அறைந்தான்.

அவள் “பெண் என நான் எந்த ஆண் முன்னும் இன்றுவரை தலைவணங்கியதில்லை” என்றாள். “முலையூட்டுகையில் உளம்கனிந்து குனிந்து நோக்கியிருக்கிறேன். மைந்தருடன் ஆடும்போது அவர்களின் கால்களை சென்னிசூடியிருக்கிறேன். அவர்களை நெஞ்சில் ஏற்றி அணைத்திருக்கிறேன். ஒருபோதும் பணிந்ததில்லை.” அவள் அதை சொல்கிறாளா அல்லது பிறிதொரு தெய்வம் தன் செவிகளை அச்சொல்லால் நிறைக்கிறதா? அவள் உதடுகள் அசையவில்லை என்றே தோன்றியது. அம்முகம் தன் கனவிலிருந்து எழவுமில்லை.

“பணிந்தாகவேண்டும்! என்முன் நீ பணிந்தாகவேண்டும்…” என்றான் துரியோதனன். “இல்லையேல் உன் தலையை வெட்டி என் கால்களில் வைக்க ஆணையிடுவேன்.” அவள் ஏளனத்துடன் சிரிப்பது தோளசைவிலேயே தெரிந்தது. துரியோதனன் மேலும் வெறிகொண்டு “உன் ஐந்து கணவர்கள் தலைகளையும் வெட்டி என் காலடியில் வைப்பேன். அவர்களின் குருதியால் உன்னை நீராட்டுவேன்… பார்க்கிறாயா? தயங்குவேன் என எண்ணுகிறாயா?” என்றான்.

“அவர்கள் எனக்கு யார்?” என்று அவள் மேலும் விரிந்த சிரிப்புடன் சொன்னாள்.  “நீயும் எனக்கு என்ன பொருட்டு?” துரியோதனன் இரு கைகளும் செயலற்று விரிய, அஞ்சிய எருதுபோல உடல் சிலிர்க்க அசைவற்று நின்றான். விழிகள் உருள தலைதாழ்த்தினான். அவன் உடலில் தசைகள் இறுகி அலைநெளிந்தன. அவன் திருதராஷ்டிரர் போல  விழியின்மை கொண்டுவிட்டதாக விகர்ணன் எண்ணினான். அவன் தலையை சற்று சரித்து மெல்ல உருட்டினான். இரு கைகளையும் பொருளின்றி தூக்கியசைத்தான். உதடுகளை மெல்வதுபோல அசைத்தான். தாடை இறுகி நெகிழ்ந்தது.

எவராலோ உந்தித்தள்ளப்பட்டதுபோல துரியோதனன் இரு அடி முன்னெடுத்து வைத்தான். தொண்டை நரம்புகள் புடைக்க விரல்சுட்டி துச்சாதனனை நோக்கி கூவினான். “அடேய், மூடா! அறிவில்லையா உனக்கு? அடேய், தொழும்பிக்கு ஏது மேலாடை? அகற்று அதை…!” விகர்ணன் “மூத்தவரே…” என்று கூவியபடி பாய்ந்து எழுந்தான். ஆனால் தன் உடலுக்குள் மட்டுமே தான் எழுந்ததை, உடல் உயிரிலாதது என குளிர்ந்து பீடத்தில் கிடப்பதை அவன் உணர்ந்தான். அவன் காதருகே ஒரு குரல் “நீ செய்வதற்கென்ன இதில்? நீ இங்கு இல்லை” என்றது.

அவன் மயிர்ப்பு கொண்ட உடலுடன் நெஞ்சைப்பற்றி “யார்?” என்றான். “உன் ஆழ்மனைத்தையும் அறிந்த தேவன்… நீ இங்கில்லை. நீ மறைந்துவிட்டாய்.” விகர்ணன் “இல்லை! இல்லை!” என திமிறி எழமுயன்றான். அரக்கில் முழுமையாகவே உடல்சிக்கியிருப்பது போலிருந்தது. அல்லது துயிலிலா? இது கனவா? அவ்வெண்ணமே இனிதாக இருந்தது. ஆம் கனவுதான். “ஆம், கனவே. கனவுமட்டுமே… துயில்க!” என்றது அக்குரல். அவன் நாகம் போல  குளிர்ந்த வழவழப்புடன் காற்று தன்னை தழுவி மூடுவதை உணர்ந்தான். “துயில்க! இது கனவே. கனவைக் கண்டு விழித்துக்கொள்ள இன்னும் பொழுதுள்ளது. துயில்கொள்க!”

திரௌபதி தன் ஆடையைப் பற்றியபடி “சீ! விலகு, இழிமகனே. என்ன செய்யப்போகிறாய்? உன் அன்னையின் ஆடையையா களைகிறாய்?” என்றாள். துரியோதனன் தன் அரியணையில் சென்றமர்ந்து  “அன்னையா? நீயா? நீ விலைமகள். ஆணொருவனின் குருதியை மட்டும் அறிந்தவளே  குலப்பெண். நீ  ஐவரை அணைந்தவள். ஐநூறுபேரை உளமறிந்திருப்பாய்…” என்று சிரித்தான். ஓங்கி தன் தொடையை அறைந்து “வா, வந்து அமர்ந்துகொள்… நீ தழுவிய ஆண்களில் ஒருவன் கூடுவதனால் இழுக்கென ஒன்றுமில்லை உனக்கு” என்றான்.

கர்ணன் “ஆம், ஐவருக்கும் துணைவி என்றால் ஒருவனுடன் உடலிருக்கையில் பிற நால்வருடனும் உளமிருக்குமா?” என்றான். துரியோதனன் வெறியுடன் சிரித்து “ஆம், எங்களுடனிருக்கையில் நீ அவர்களை நினைக்கலாம்…” என்றான். மேலும் சிரித்துக்கொந்தளித்து “இப்போது நான் சிரிக்கிறேன்… இழிமகளே. இதோ நான் சிரிக்கிறேன். பார்…! நான் சிரிக்கிறேன்” என்றான். சித்தமழிந்தவனைப்போல கண்ணீர்வார சிரித்து மேலாடையால் விழி துடைத்தான். “செல்…! அறிவிலியே, அவள் ஆடையை இழுத்துக்களை…!”

துச்சாதனன் நடுங்கும் உடலுடன் காலெடுத்துவைத்து அவளை நோக்கி கைநீட்ட ஆடைபற்றி அவள் விலகி அதே விரைவில் சுழன்று அவையை நோக்கி  “இங்குள்ளோர் எவரும் இதற்கு மறுகுரல் எழுப்பவில்லையா? உங்கள் நெறிகளும் முறைகளும் பொய்யா? உங்கள் நூல்களெல்லாம் மொழியழிந்தனவா? உங்கள் அன்னையரும் தேவியரும் மகளிரும் நெறிமறந்தனரா?” என்றாள். “எங்கே உங்கள் மூதாதையர்? எங்கே உங்கள் அறவுருக்கொண்ட தெய்வங்கள்?”

கர்ணன் சினத்துடன் “இது அஸ்தினபுரியின் அரசனின் அவை, கீழ்மகளே. இங்கு அவன் ஆணைக்கு அப்பால் தெய்வமும் இல்லை” என்றான். “அரசாணையை அவையோர் அவைமுறைப்படி சொல்சூழலாம். அடிமை  அதை ஆராயலாகாது. அவ்வுரிமையை நீ இழந்துவிட்டாய். செல், அவன் காலடியில் தலைவைத்து வணங்கு! அவன் ஆணையைச்சூடி அவையில் நில்! அதுவே உன் கடமை.”

“அரசியல் பிழைத்தால் கூற்றென அறம் எழுந்து வந்தாகவேண்டும் என்கின்றன உங்கள் நூல்கள். எங்கே அவை?” என்றாள் திரௌபதி. “நன்றென்றும் தீதென்றும் வகுத்து அமைந்த உங்கள் ஸ்மிருதிகள் எங்கே? ஒருவனுக்கு இழைக்கப்படும் மறம் உலகுக்கே என்று கூவிய உங்கள் சுருதிகள் எங்கே? மண்ணையும் மழையையும் ஆற்றையும் காட்டையும் புலரியையும் அந்தியையும்  அன்னையென வழுத்திய உங்கள் வேதங்கள் எங்கே?” துரோணரை நோக்கி திரும்பி “அறநூல் கற்று அமைந்த ஆசிரியர்களே, சொல்க!” என்றாள்.

துரோணர் “தேவி, நால்வேதங்களும் வேந்தனை வழுத்துபவையே” என்றார். “அறங்கள் வாழவேண்டுமென்றால் அரசன் ஆற்றல்கொண்டு அரியணையில் அமர்ந்திருக்கவேண்டும். கோலில்லா குடி மேய்ப்பனில்லா மந்தை. தனியொரு பிழைக்கென அரசன் ஏந்திய கோலை பழித்தால் இறுதியில் அவன் குடிகளுக்கே அது பேரிழப்பாகும்” என்றார். “அப்படியென்றால் இப்பிழை செய்ய அரசனுக்கு உரிமை உண்டு என்கிறீர்களா?” என்றாள். “உயிர்க்கொலை இன்றி வேளாண்மை நிகழவியலாது. மறம் இழக்காது கோல்கொண்டமைய அரசர் எவராலும் இயலாது” என்றார் துரோணர்.

கிருபர் “நான்கு வேதங்களையும் பேணி அவையமர்ந்த ஷத்ரியன் மண்ணுக்கு வந்த தெய்வத்திருவுருவே என்பதுதான் வேதநெறி என்றறிக!” என்றார். “அவனுக்கு சொல்லளிக்க கடமைகொண்டிருக்கிறோம், அவன் கோலை மறுக்க உரிமைகொண்டவர்கள் எவருமிருக்க இயலாது. தனியொருவருக்கு இழைக்கப்படும் தீயறத்தின்மேல் அரசின் வெற்றியும் அதன் குடிகளின் பெருநலனும் வாழும் என்றால் அதுவும் அரசனுக்கு அறமே.”

“சொல்லுங்கள், பீஷ்மரே! இந்த அவையில் உங்கள் சொல்லும் எழுந்தாகவேண்டும்…” என்று திரௌபதி கூவினாள். “பெண்ணே, ஆசிரியர்கள் முறைமையேதென்று சொல்லிவிட்டனர். பல்லாயிரமாண்டுகாலம் அரசின்மை நின்றாடிய மண் இது. உன்னைப்போல் பல்லாயிரம் பெண்டிர் இழிவடைந்தனர். பற்பல பல்லாயிரம் மைந்தர் அன்னையர்முன் தலையறுந்து விழுந்தனர். குருதிகாயாமல் மண் கீழ்மைகொண்டது. அறமென்று எங்கும் ஏதுமிருக்கவில்லை. அவ்விருளில் இருந்து எழுந்து வந்த ஒளியை வேதமென்றனர். அதைத்திரட்டி நான்கென்று வகுத்தனர் தொல்வியாசர் முதலான முனிவர். இங்கு அனல்சூடி நின்றெரியும் அதை வாளேந்தி தலைகொடுத்து காத்து நிற்பதற்கென எழுந்ததே ஷத்ரியர் என்னும் குடி” என்றார் பீஷ்மர்.

“அரசெனும் அமைப்பு மானுடருக்கு இறைவல்லமைகள் அளித்த பெருங்கொடை” என்று பீஷ்மர் தொடர்ந்தார். “மணிமுடியும் செங்கோலும் அரியணையும் உருவாகி வந்தபின்னரே இங்கே அறமும் நெறியும் முறையும் உருவாயின. கன்னியர் கற்புடனும், வேதியர் சொல்லுடனும், கவிஞர் கனவுடனும், கைத்தொழிலோர் திறனுடனும்  வாழத் தொடங்கினர். எதன்பொருட்டும் வேதக்கொடி இறங்கலாகாது. அதை விண்ணில் நிறுத்தும்  அரசு என்னும் அமைப்பு அழிய நான் எந்நிலையிலும் ஒப்பமாட்டேன். இங்கெழுந்தது அரசாணை. அவையில் அதை குடிகள் மீறலாகாது. நானும் குடியே.”

“இங்கு நீங்கள் பிதாமகர் அல்லவா? குலமூத்தார் அல்லவா?” என்றாள் திரௌபதி. “இல்லை, அவையில் நான் அஸ்தினபுரியின் குடி மட்டுமே. அதற்கென வில்லெடுத்த போர்வீரன். தலைகொடுக்க சொல்லளித்தவன்.  அவன் என்னை வாளால் வெட்டி வேதநெருப்புக்கு அவியென்றாக்குவான் என்றால் அதுவே என் முழுமை என்று எண்ணவேண்டியவன்” என்றார் பீஷ்மர். “அரசனின் மந்தணஅறைக்குச் சென்று அவனுக்கு மூதாதையாகிறேன். அவன் கன்னத்தில் அறைந்து குழல்பற்றிச் சுழற்றி என் கால்களை மண்டியிட்டு வணங்கச்செய்கிறேன். அவன் ஆற்றியவற்றில் எவை பிழை, எவை பழி என அறிவுறுத்துகிறேன். ஆனால் ஒருநாளும் அவையில் அமர்ந்து அரசனை ஆளமுயலமாட்டேன்” என்றார் பீஷ்மர்.

“இதோ எழுந்து ஒரு சொல்லுரைத்து இவ்வரியணையை நான் மறுக்கலாகும். அதன்பின் அஸ்தினபுரிக்காக நான் வில்லேந்த முடியாது. இன்று அஸ்தினபுரி சிம்மங்களின் காட்டில் கன்றை ஈன்ற பசு என சூழப்பட்டுள்ளது. அசுரர்களும், நிஷாதர்களும், புத்தரசுகளும் அதன் குருதியை விழையும் தருணம் இது” என்று பீஷ்மர் சொன்னார். “இது வேதம்புரந்த வேந்தர் அமர்ந்தாண்ட அரியணை. வேதம் காக்க வாளேந்தி எழுந்த அரசு இது. பெண்ணே, வாழ்நாள் முழுக்க இந்நகரையும் இதன் அரசகுடியையும் காப்பேன் என்று என் தந்தைக்கு சொல்லளித்தவன் நான். இக்கணம் வரை அதன்பொருட்டே உயிர்தரித்தவன். எந்நிலையிலும் அதை கைவிடவும் மாட்டேன்.”

துச்சாதனனை நோக்கி கைசுட்டி “இதுவா அரசன் சூடும் அறம்? பிதாமகரே, இதுவா நால்வேதம் ஈன்ற குழவி?” என்றாள்  திரௌபதி. “ஆம், இதுவும்தான். ரஜோகுணம் எழுந்தவனே ராஜன் எனப்படுகிறான். வெல்வதும் கொள்வதும் அவனுக்குரிய நெறியே. விழைவே அவனை ஆளும் விசை. காமமும் குரோதமும் மோகமும் அவனுக்கு இழுக்கல்ல. புவியை பசுவென ஓட்டிய பிருதுவையே பேரரசன் என்கிறோம். வான்கங்கையை ஆடைபற்றி இழுத்துக் கொண்டுவந்த பகீரதனையே வேந்தர்முதலோன் என்கிறோம். பெருவிழைவால் உருவாகிறார்கள் பேரரசர்கள்” என்று பீஷ்மர் சொன்னார். “அரசன் கொள்ளும் விழைவுகளுக்காகவே பூதவேள்விகளில் அனலோன் எழுகிறான். மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் அவனுக்களிக்கவே அதர்வவேதச் சொல்லுடன் வைதிகர் அவியளிக்கிறார்கள்.”

உணர்வெழுச்சியுடன் பீஷ்மர் தொடர்ந்தார் “ஆம், இங்கு நிகழ்ந்தது குலநெறி அழியும் தருணம். ஆனால் குட்டிகளுடன் மான்கணத்தைக் கொன்றுதின்றே சிம்மம் காட்டில் முடிசூடி ஆள்கிறது.  பலநூறு குலநெறிகளின் மேல்தான் அரியணையின் கால்கள் அமைந்துள்ளன.” அவர் குரல் சற்றே நடுக்கத்துடன் ஒலித்தது. “பெருந்தந்தையென என் உள்ளம் சொல்கிறது, இது அறப்பிழை. ஆனால் ஷத்ரியன் என நின்றிருக்கையில் என் நாட்டின் எந்த ஒரு பெண்ணும் எனக்கு நிகரே.  என் கடன் இங்குள்ள குடிகள் அனைவருக்கும்தான். அரசகுடிப்பிறந்தாள்  என்பதற்காக உனக்கென எழுந்து அவர்களை நான் கைவிடலாகாது.”

“ஆம், இது பெரும்பழியே.  ஆனால் இதன்பொருட்டு நான் தந்தைக்களித்த சொல்லைத் துறந்தால் அஸ்தினபுரி அழியும். பாரதவர்ஷத்தில் வேதப்பெருநெருப்பு அழியும். வேதம் மறந்த கீழோர், புறவேதம் கொண்ட  பகைவர், வேதம் மறுக்கும் விலங்கோர் வேல்கொண்டெழுவர். எங்கும் இருள்சூழும். என் குடிக்கு நூறுமடங்கு பழிசூழும்” என்றார் பீஷ்மர். தன் நெஞ்சைத்தொட்டு உரத்தகுரலில்  “இதன்பொருட்டு எனக்குப் பழிசூழ்வதென்றால் ஆகுக! இந்நகருக்கும் குடிகளுக்குமென களத்தில் தலை அளிப்பதற்கு சொல்கொடுத்தவன் நான். என் புகழையும் மறுமையையும் உடனளிக்கிறேன். ஆம், இதோ அளிக்கிறேன்” என்று கைதூக்கினார்.

பெருமூச்சுடன் “அரசாணையை மீற எவருக்கும் உரிமையில்ல, பெண்ணே” என்றார் துரோணர். “ஆற்றலுள்ளோர் அதை மீறலாம். அவ்வழியே அனைவரும் மீறுவர். அதன் பின் அரசென்பதே இருக்காது. நெறியிலமைகிறது அரசு என்று உணர்க!”  கிருபர் “ஆம், அதனால்தான் அங்கே உன் கொழுநர் ஐவரும் வெறுமனே நின்றிருக்கிறார்கள்” என்றார்.

“அவர்களும் உங்களவரே” என்று பாஞ்சாலி சொன்னாள். “நான் அவர்களில் ஒருத்தி அல்ல. உங்கள் அரசும் கொடியும் முடியும் எனக்குரியவையும் அல்ல. நான் எவருக்கும் குடியல்ல.” உரத்த குரலெழுப்பியபோது அவள் பேருருக்கொண்டதுபோல் தோன்றியது. அவள் நின்றிருந்த மையம் அவள் குரலைப்பெருக்கி அவைமேல் பொழிந்தது. “நான் குலமகள் அல்ல. துணைவியல்ல. மகளும் அல்ல. நான் அன்னை. என்னை தளைக்க உங்களிடம் நெறிகளில்லை.”

அச்சொல்கேட்டு சீறி எழுந்து கூவினான் துரியோதனன் “என்ன செய்கிறாய் அங்கே? அறிவிலியே, அவள் மேலாடையைக் களைந்து இழுத்துவந்து என் அவைமுன் அமர்த்து!” துச்சாதனன் விலங்கென உறுமி தன் சினத்தைப் பெருக்கி கைகளை ஓங்கி அறைந்துகொண்டு அவளை நெருங்க “அப்பால் செல்…! அணுகாதே!” என அவள் தன் ஆடையைப்பற்றியபடி கூவினாள். “உன் அன்னையின் பெயரால் சொல்கிறேன், அணுகாதே!” துரியோதனன் தொடையைத் தட்டி நகைத்து “ஆம், அன்னைதான். முதல்விடியலில் அன்னை துர்க்கையின் அணியிலாக்கோலம் காண்பதும் வழக்கமல்லவா?” என்றான்.

“இனி ஒருபோதும் உனக்கு அன்னை மடி என ஒன்று எஞ்சாது, மூடா!” என்றாள் திரௌபதி விலகிச்சென்றபடி. துச்சாதனன் “வாயை மூடு. தொழும்பியர் பேச அவை கூடிக் கேட்கும் இழிநிலை இன்னும் அஸ்தினபுரிக்கு வரவில்லை” என்று கூவியபடி அவள் மேலாடையைப்பற்றி இழுத்தான். அவள் விலகிச்சுழல அவள் ஆடை தோளிலிருந்து சரிந்தது. முலைகள் மேல் அதை அள்ளிப்பற்றி உடல்குறுக்கினாள்.

துரியோதனன் தன் தொடையிலறைந்து உரக்க நகைத்தான். விழிகள் நீரணிந்து முகம் கடும் வலியிலென சுளிக்க அச்சிரிப்பு கெடுதெய்வம் வெறிகொண்டு வந்தேறியதுபோல் தோன்றியது. கர்ணனும் அச்சிரிப்பில் இணைந்தான். கௌரவர்கள் உடன்எழுந்து நகைத்தனர். அந்த பகடைக்கூடமே பெருங்குரல் எடுத்து சிரித்து முழங்கியது. எதிரொலியின் அலைகளாக தெய்வங்களின் சிரிப்பொலி எழுந்து இணைந்துகொண்டது.

அனைத்துச் சாளரங்களும் மூடிக்கொண்டதுபோல அவை இருளத் தொடங்கியது. கரிய காகங்கள் நிழலசைவென உள்ளே நுழைந்து அவைமூடிப்பறப்பதுபோல ஓசை கேட்டது. அவற்றின் சிறகசைவின் காற்று காதுகளை தொட்டது. குளிர் ஏறிவந்தது. தூண்கள் சிலிர்த்தன. விண்நிறைத்திருந்த அத்தனை தேவர்களும் விழிகொண்டனர். அசுரர்களின் இளிப்புகள் பெரிதாயின. அவர்களின் கைகளில் உகிர்கள் எழுந்தன. கோரைப்பற்கள் கூர்கொண்டு வளர்ந்தன.  இருளில் அவையமர்ந்த எவர் முகமும் தெரியாமலாயிற்று. உப்பென மின்னும் விழிகள் மட்டுமே சூழ்ந்த வட்டமென்றாயிற்று பன்னிரு பகடைக்களம்.

சினந்து திரும்பும் பிடியானையின் உறுமல் போல ஒலியெழுப்பியபடி திரௌபதியின் தலை எழுந்ததை விகர்ணன் கண்டான். அவள் குரல் எழுந்து எரிகுளத்து அவி என தழலாடியது.  “எழுக புதியவேதம்! ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக!” என்று கூவியபடி  இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி கண்மூடி நின்றாள்.

அவள் மேலாடை அவிழ்ந்து துச்சாதனனின் கைக்குவர அவிழ்ந்த முடிப்பெருக்கால் பாதிமறைந்த  தோளும் முலைகளும் தெரியத் தொடங்கிய கணத்தில் உப்பரிகைமேடையில் வெண்பட்டுத் திரையை விலக்கியபடி லட்சுமணை தோன்றினாள். “அன்னையே!” என்று கூவியபடி படிகளில் இறங்கி ஓடிவந்தாள். துச்சாதனன் மேலே நோக்கி திகைத்தான்.

லட்சுமணையின் அருகே எழுந்த அசலை  “யாதவா! இறையோனே!” என்று கூவியபடி  தன் மேலாடையை எடுத்துச் சுருட்டி திரௌபதியின் மேல் வீசினாள். அவள்தோள்மேல் வெண்பறவைபோல வந்தமைந்து நழுவி அலையலையாகவிரிந்து உடல்மூடியது அவ்வாடை. இரு உப்பரிகைவட்டங்களும் முகிலுக்குள் இடியென முழங்கின.  “யாதவனே! இளையோனே!  கரியோனே! கார்வண்ணனே!” என்று அலறியபடியும் அரற்றியபடியும் பெண்கள் தங்கள் மேலாடைகளை எடுத்து திரௌபதியின் மேல் வீசினர். ஒன்றன் மேல் ஒன்றென மரத்தில் வந்து கூடும் வண்ணப்பறவைக்கூட்டம்போல  ஆடைகள் அவள் மேல் பொழிந்து மூடின. அனைத்து ஆடைகளையும் சூடியவளாக அவள் கைகளை விரித்து நின்றாள்.

துரியோதனன் அரியணை விட்டெழுந்து ஓடிச்சென்று இரு கைகளையும் விரித்து தன் புதல்வியை மறித்து “கிருஷ்ணை, நில்! எங்கே செல்கிறாய்?” என்றான். அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் அவள் உறுமினாள் “விலகி நில்! மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்!” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்.

அசலை ஓடிவந்து அவர்கள் இருவரையும் தழுவினாள். பானுமதியும் துச்சளையும் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் ஓடிவந்து ஒருவரை ஒருவர் தழுவி ஒற்றை உடற்சுழிப்பென்றாயினர். பன்னிரு பகடைக்களத்தின் நடுவே அச்சுழி மெல்ல சுழன்றது. அவள் அதன் மையமென்று தெரிந்தாள். விகர்ணன் விழிநீர் சோர கைகூப்பினான்.

தொடர்புடைய பதிவுகள்

இன்னொருவரின் ஆன்மீகம்

$
0
0

1

வணக்கம் சார்.

எனது பெயர் கே. நான் என்னுடைய பட்டப்படிப்பை முடித்துவிட்டு என்னுடைய அண்ணன் வீட்டிலிருந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய அண்ணனுக்கு திருமணமாகி 8 மாதங்கள் முடிந்துள்ளன. அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். என்னுடைய அண்ணி கிறிஸ்துவ மதம் சார்ந்தவர். ஆனால் நாங்களோ இந்து மதம். நான் எங்கள் வீட்டில் இருந்தவரை இந்து மதம் வழிபாடுகள் முறைகளை பார்த்து வளர்ந்து வந்தவன். ஆனால் என் அண்ணியோ அதற்கு மாறாக வேறுவிதமாக இருக்கிறார்.

இதனால் எனக்கு சில விஷயங்கள் அவரிடம் பிடிக்கவில்லை. நான் சில நேரங்களில் என்னுடைய அண்ணி என்ற உரிமையில் இவ்வாறு செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்கள் திரும்பவும் அதையே செய்கிறார்கள். இதனால் நான் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறேன். இதை நான் எப்படி எடுத்துகொள்வது? மறுபடியும் அவர்களிடம் சென்று ஏதும் சொல்லலாமா, இல்லை அவர்களிடம் பேசாமல் இருக்கலாமா?  இதைப் பற்றி என் அண்ணனிடம் கேட்டால் அவர் அது போகப் போக சரியாகி விடும் என்று சாதாரணமாகக் கூறுகிறார். எனக்கு மனதில் பெரிய கவலையாக இருக்கிறது. நான் என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது? கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள் சார்.

இப்படிக்கு,

கே

அன்புள்ள கே,

நீங்கள் உங்கள் அண்ணி கிறித்தவர் என்று தெரிந்துதான் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அதன்பின் அவரது மத வழிபாட்டுரிமையை கட்டுப்படுத்த, மாற்ற உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒருவருடைய ஆன்மீக விஷயத்தில் தலையிடுவது பெரும் பிழை. அவரை கட்டாயப்படுத்துவது அல்லது பிரச்சாரம் மூலம் அவரை திசை திருப்ப முயல்வது ஒரு குற்றம்.

ஒருபோதும் ஓர் இந்து அதை செய்யக்கூடாது. அவர் தன் வழியில் வழிபட எல்லா உரிமையையும் அளிப்பதும் ஒத்துழைப்பதும்தான் ஓர் இந்து செய்யவேண்டியது. உண்மையான இந்துவுக்கு எல்லா வழிபாடும் சமம்தான். ஏசுவும் கண்ணனும் முருகனும் ஒன்றே. அது இன்னொரு வகை இறைவழிபாடு. அவ்வளவுதான்.

அதேசமயம் உங்களுக்கு உங்கள் மத நம்பிக்கையில் உறுதி இருக்குமென்றால் அதில் அவர் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எவரும் உங்களை கட்டாயப்படுத்த அல்லது பிரச்சாரம் மூலம் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. அதை ஆரம்பத்திலேயே கறாராக தடுத்துவிட வேண்டும்.

பொதுவாக நம்மிடம் ஒரு எண்ணம் உள்ளது. நம் கருத்தை பிறர் மீது திணிப்பது ஒரு சரியான செயல்பாடுதான் என. காரணம் நாம் நல்லதுக்குத்தானே சொல்கிறோம் என்ற எண்ணம். ஒழுக்கம், தொழில் முதலிய விஷயங்களிலேயே அப்படி கருத்துத்திணிப்பு பெரிய வன்முறை. ஆன்மீக விஷயத்தில் அது கடும் குற்றமேயாகும்.

ஏனென்றால் ஆன்மீகமாக எவரும் மிக உறுதியான நிலையில் இருப்பதில்லை. ஊசலாடிக்கொண்டும் ஐயம் கொண்டும்தான் முன்னகர்வார்கள். ஆகவே தொடர் பிரச்சாரம் மூலம் ’நொச்சு’ பண்ணியே ஒருவரை கொஞ்சம் வலுவான சொற்களும் விருப்புறுதியும் கொண்ட இன்னொருவர் மாற்றிவிடமுடியும்.

அப்படி மாற்றுவதன் வழியாக அவர் அந்த மாற்றப்பட்ட நபர் இயல்பான ஆன்மீக மலர்ச்சி அடைந்து தனக்கான சொந்த ஆன்மீகநிலையை அடைவதை எப்போதைக்குமாக தடுத்துவிடுகிறார். அதன் வழியாக அந்த மனிதருக்கு மிகப்பெரிய அநீதியை, வன்முறையை இழைக்கிறார். அவரை தீராத இருளுக்குள் தள்ளிவிடுகிறார்.

ஏனென்றால் ஆன்மீகத்தின் விடைகள் ஆளுக்கு ஆள் மாறக்கூடியவை. சுயமான தேடல் மூலம் கண்டடைய வேண்டியதே ஆன்மீகம்.

நாம் இன்னொருவருடைய ஆன்மீகத்தில் தலையிடக்கூடாது. நம் ஆன்மீகத்தில் இன்னொருவர் தலையிட அனுமதிக்கவும் கூடாது.

ஜெ

மறுபிரசுரம்/முதற்பிரசுரம்

Sep 2, 2013

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நல்லதோர் வீணை

$
0
0

kumaraguruparan

 

இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’

 

நல்லதோர்வீணைசெய்தே – சுகா கட்டுரை

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88

$
0
0

[ 21 ]

மரத்தரையில் காலடிகள் உரசி ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்திய பின்பு நெய்பட்ட நெருப்பெனச்  சீறி எழுந்து கூந்தலைச் சுழற்றிமுடிந்து துரியோதனனை நோக்கி “இங்கே அரசன் என அமர்ந்த சிறியோன் எவன்?  நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன்? அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள்! உங்கள் குலங்களின் வேரில் நச்சுபெய்துவிட்டீர்கள்” என்றாள்.

துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது பெருவஞ்சம் நீர் என நிறைந்த கிருஷ்ணையின் விழிகளை சந்தித்தான். அஞ்சி அதிர்ந்து தலைதிருப்பினான். அவன் கண்களை நோக்கிய கர்ணனும் பதற்றமாக கைகளை கோத்தான். அவையமர்ந்த கௌரவர் துரியோதனனின் நிலையழிவைக் கண்டு ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். அவை நிறைத்திருந்த அஸ்தினபுரியின் குடிகள் மெல்ல மண்ணில் வந்து விழுந்தனர். அதுவரை இருந்த கனவுநிலையின் அத்தனை கீழ்மைகளையும் உளநடுக்குடன் உணர்ந்தனர். தங்கள் உள்ளத்தை எண்ணி நாணி பிறிதெவரையும் நோக்காது விழிசரித்தனர்.

சினந்த நாகங்கள் விழியொளிரச் சுருண்டு அமைந்தன. தெய்வங்கள் படைக்கலங்களுடன் வண்ணங்களில் படிந்து மறைந்தன. விழிகளில் இளிப்புடன் அசுரர் கைகள் பெருக நிறைந்தனர். படைக்களத்தைச் சூழ்ந்த அவை மெல்ல இயல்படைந்தது. எங்கும் நீள்மூச்சுக்கள் எழுந்தன. பலர் மாயையை நோக்காது விழிதிருப்பிக்கொண்டனர். சிலர் கண்களை ஆடைகளால் மூடிக்கொண்டனர். சிலர் விழிநீர் வார நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்தனர்.

பெருங்குரலில் மாயை சொன்னாள் “என்னவென்று எண்ணினீர்கள், இழிதிரளே? அன்னையின் கனிவே அவள் பணிவு. அன்பினால் ஆற்றலிழப்பவள் அவள். நீங்கள் வென்றுதருக்கியது உங்களுக்கு ஊட்டப்பட்ட முலைப்பாலை. கொன்று உண்டது கொல்லையில் நின்றிருந்த காமதேனுவை… நன்று, இனி நிகழ்பவை யாவும் நீங்கள் இயற்றியதே. அவ்வாறே ஆகுக!”

துரியோதனன் மீண்டும் கையெடுத்து ஏதோ சொல்ல முயல அவன் இதழ்கள் மட்டும் அசைந்தன. கிருஷ்ணை திரௌபதியை தோள்பற்றிச் சரிந்து கண்ணீருடன் அவள் மடியில் தலைசாய்த்தாள். அசலை அரசியின் கைகளைப்பிடித்து தூக்கி உள்ளே கொண்டுசெல்ல முயன்றாள். திரௌபதி இரும்புச்சிலை என எடைகொண்டிருந்தாள். கௌரவர்களின் பிற அரசியர் அவளைத் தூக்கி எடுத்து அழைத்துச்சென்றனர். அவர்கள் நடுவே பலவண்ண ஆடைகளால் உடல் மூடி திரௌபதி தலைநிமிர்ந்து நடந்துசென்றாள். அவள் நீள்குழல் அவிழ்ந்து அலையலையென இறங்கி நெளிந்தது.

அவையில் மங்கலஇசைக்கென நின்ற சூதன் ஒருவன் வெறியாட்டெழுந்தவன்போல “நகருலா செல்லும் கொற்றவை! ஆலயம் அமைந்த கரியதிருமுகம். அனல்நாவென செம்பஞ்சுப் பாதங்கள். அழல் உண்ட கரியென நீள்குழல் அலை.  அன்னையே, இதோ அடிபணிந்து நின்றிருக்கின்றன ஆயிரம் தலைகள்” என்று கூவினான். தன் நெஞ்சையே முழவாக்கி அறைந்து “தலைமேல் நடந்து செல்கின்றாய்! தாயே, ஆணவங்கள் மேல் நடக்கின்றாய்! ஆறாவஞ்சங்கள் மேல் நடக்கின்றாய்! காளீ, கருங்காளீ, கூளீ, கூத்திடும் தேவீ, எங்கள் விழைவுகள் மேல் நடக்கின்றாய்! வினைப்பெருக்குமேல் நடக்கின்றாய்!”  என்றான். உடல் சிலிர்க்க அங்கிருந்தோர் கைகூப்பினர். விகர்ணன் கண்ணீர் உதிர “அன்னையே!” என்றான்.

பன்னிரு பகடைக்களம் திடுக்கிட்டு அதிர பீமன் தன் பெருங்கைகளை ஓங்கியறைந்தபடி முன்வந்தான். “வீணர்களே, வெற்றுசோல்லில் ஆடித்திளைக்கும் கீழ்மைக்களமே!” என்று கூவினான் “என் மூதாதையர் அமர்ந்த அரியணை இது என்று இக்கணம் வரை பணிந்தேன். அரசென்றும் நெறியென்றும் குலமென்றும் எண்ணித்தயங்கி வீண்தசைக்குவை என இங்கு நின்றிருந்தேன்.  இனியும் என்னால் இயலாது” என்று ஓசையிட்டபடி அவைநடுவே வந்தான்.

“நான் எவருக்கும் குடியல்ல. எந்தக் குலத்திற்கும் மைந்தனல்ல. எவருக்கும் குருதிமுறையும் அல்ல. நான் காட்டாளன். பிடியன்னை ஆளும் பெருங்காட்டிலிருந்து என் நெறிகளை கற்றவன்… ஆம், இங்குள்ள ஒவ்வொருவரைவிடவும் அறமும் அளியும் கொண்டவன் நான்…”

“இது தொல்புகழ் அஸ்தினபுரி. யயாதியின் ஹஸ்தியின் குருவின் நகரம்…” என அவன் குரலெழுப்பினான். “எங்கே உங்கள் குலம்? தேவர்களுக்கு அவியளிக்கிறீர்கள். மூடர்களே, மூதாதையருக்கு அன்னமும் நீரும் அளிக்கிறீர்கள். உங்களில் எளியோருக்கு அளிக்க உங்களிடம் ஒன்றுமில்லையா? உங்கள் முன் விழிநீருடன் நின்றிருப்பவர்களுக்குச் சொல்ல அறம் ஒன்றும் இல்லையா? உங்கள் தெய்வங்களை கல்லில் இருந்து எழுப்பும் கனல் எங்கே?”

கைசுருட்டி தூக்கி ஓங்கி துப்பினான். “இதோ, காறி உமிழ்கிறேன். இங்கு அமர்ந்த அரசனை, இந்த அவையை, இங்கு சூழ்ந்த மூத்தோரை, இயலாது அமர்ந்திருந்த சான்றோரை,  இக்காற்றில் நிறைந்த மூதாதையரை, இவ்வானில் எழுந்த தெய்வங்களை என் இடக்காலால் உதைத்துத் தள்ளுகிறேன். இவர்கள் பேணும் அவ்வேதத்தின் முதல் எதிரி நான்!”

“இதோ, பீஷ்மபிதாமகர் முகத்தில், துரோணரின் கிருபரின் விதுரரின் முகத்தில், வழியட்டும் என் மிச்சில்!”  ஓங்கி என நாற்புறமும் உமிழ்ந்தான். காலால் நிலத்தை ஓங்கி மிதித்தான். அவையிலிருந்து ஊமைமுழக்கமென ஓர் ஒலி எழுந்தது. “ஆம், இதோ நின்றிருக்கிறேன். ஆண்மையிருந்தால் ஆணையிட்டு என் தலைகொய்யுங்கள். உங்கள் கீழ்மைமண்டிய அரசவையில் சொல்லறியா காட்டாளனாக குருதிபெருக்கி மடிந்துவிழுகிறேன். அதுவே என் மீட்பு” என்றான் பீமன்.

துரியோதனனை நோக்கி திரும்பி “அரியணை அமர்ந்த சிறுமதியனே, உன் அவைக்கு வந்த ஒற்றை ஒருபெண்ணின் மதிப்பைக் காக்க உன்னால் முடியாதென்றால் உன் கோலுக்கு என்ன பொருள்? அதற்கும் இடுகாடு காப்பவனின் தடிக்கும் என்ன வேறுபாடு?” என்றான். “இவ்வவையில் இழிவுகொண்டு நின்றவள் உன் குடியின் ஒவ்வொரு பெண்ணும்தான். அவள் சிறுமைசூடி நின்றது உன் குடியின் ஒவ்வொரு ஆணும்தான். இழிந்தாய். மண்கிழித்து இருள் கடந்து சென்று அழிந்தாய். இதற்குமேல் என மானுடன் அடைவதற்கொன்றுமில்லை கீழ்மகனே!”

“அரனே தெய்வமென்கின்றன உங்கள் வேதங்கள் என்றால் இன்று இத்தருணத்தில் அவை பொருளழிந்தன” என்றான். “இது தெய்வத்தருணம். பெருங்கதவமொன்றின் தாழ்குடுமி உரசி அனல்பறக்கக் கண்டோம். திறந்தது புதுயுகம்!”

இருகைகளும் தசைதிமிறி அசைய விரித்து ஆட்டி வெறிகொண்ட முகத்தில் நரம்புகள் புடைத்து நெளிய அவன் முழங்கினான் “இதோ அறைகூவுகிறேன்! இனி நீங்கள் சொல்லும் எச்சொல்லின்பொருட்டும் நான் கட்டுப்படப்போவதில்லை. உங்கள் எந்த நூலும் எவ்வறமும் எனக்கொரு பொருட்டல்ல. எங்கும் காட்டாளனாக குருதிசூடி நின்றிருக்கவே முனைவேன். ஊன்கிழித்துண்ணும் விலங்கென ஆனாலும் உங்கள் ஒவ்வொருவரை விடவும் மேலானவன் நான்.”

அவை நோக்கி திரும்பி பீமன் சொன்னான் “அவை கூடியமர்ந்து நீங்கள் கொண்ட கீழ்மைக்காக எரிக இந்நகரம்! உங்கள் உட்கரந்த இருளுக்காக இதன் குலக்கொழுந்துகள் குருதி பெருகி மண்தழுவுக! உங்களைப் பெற்றமைக்காக இதன் குலமகள்களும் அன்னையரும் மங்கலமிழந்து சுருள்க! இழிசினரே, இப்பெரும்பழியை நூறாண்டுகாலம் விழிவெந்நீர் கொண்டு அழிப்பீர்கள் நீங்கள்!” தெய்வக்குரல் என அவன் ஓசை அவைசூழ்ந்தது. “அறிக, மானுடனின் பிழைகளை பொறுக்கின்றன காட்டுதெய்வங்கள். அவன் சிறுமையை அவை ஏற்பதேயில்லை.”

நெஞ்சு விம்ம அவன் குரல்தளர்ந்தான். “ஆம், நெட்டைமரங்களென நின்றோம் நானும் என் உடன்குருதியினரும். அதன்பொருட்டு நாங்களும் சிறுமைகொள்க. பெண்ணுக்குப் பிழைஇழைத்தோர் பிள்ளைத்துயர் கொண்டழியவேண்டும் என்பதே முறை. விண்ணமர்ந்த தெய்வங்களே, இதோ எளிய காட்டாளனின் ஆணை! எங்கள் தலைமேல் பொழியட்டும் இத்தருணத்தின் பழி! கண்ணீர் அனலென எரிய எஞ்சும் நாளெல்லாம் நீறிப்புகைந்து நாங்கள் இதை ஈடுகட்டுகிறோம். எங்கள் குலம் இதன்பொருட்டு விழிநீர்பெய்து வீணென்றாகி அழிக!” நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தான் பீமன். அவ்வோசையில் அவைச்சுவர்கள் அதிர்ந்தன. “ஆணை! இது ஆணை! அழிக! அழிக! அழிக!”

நடுங்கிய குரலில் “மூத்தவரே…” என்று நகுலன் அழைத்தான். அக்குரல் கேட்டு வெறியுடன் தருமனை நோக்கி திரும்பினான் பீமன். “எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என்றாகி நின்ற அப்பேதை? சொல்லாய்ந்து பொருளாய்ந்து அவன் கற்ற நெறிநூல்கள் அளித்தது இதுதானா? இருளில் விளக்கும், போரில் வாளும், தனிமையில் காவலும் என்றாகவில்லை என்றால் கற்றவற்றுக்கு என்ன பொருள்? அது உணவென உட்புகுந்து வெளியேறாது தங்கிய மலம் அன்றி வேறென்ன?”

அர்ஜுனன் “மூத்தவரே, நாம் அவருக்கு முற்றிலும் கட்டுப்பட்ட இளையோர். நம் வாழ்க்கைப்பொருள் அது” என்றான். “மூடா! மண்ணிலெழுந்த எந்தச் சொல் விண்ணை தளையிடும்? இங்கு நிகழும் வாழ்க்கையின் நெறிகளனைத்தும் விண்ணில் உறைகின்றன என்றறியாதவனா நீ? குலம், வஞ்சம்,  விழைவு, தெய்வம் என எதன்பொருட்டும் மாறுவதில்லை இவ்வனைத்தின் மையமென நின்றிருக்கும் பெருநெறி என்று உணராததா உன் மெய்மை? வாழ்வையும் விழைவையும் சொல்லிச்சொல்லி வேதம் சென்றடைந்த உச்சம் அது என்றறியாமலா நூல்கற்றாய்?”

நரம்புகள் புடைத்து அதிர கொடிபின்னிய அடிமரம் போன்ற உடல் நின்று துடிக்க பீமன் கூவினான் “எப்படி என் குலமகளை சூதில் வைத்தாடினான்? இழிமகன். கல்லாக் களிமகனும் இழைக்கத் துணியாத கீழ்மைசெய்த வீணன்!” அவன் பற்கள் அரவையாழியில் சிக்கிய கூழாங்கற்கள் என உரசி ஓசையிட்டன. “சூதர்மனைகளில் தொண்டு மகளிருண்டு. சூதில் பணயமென்று அவர்களை வைப்பதில்லை . எப்படி குலமகளை வைத்தாடினான் முழுமூடன்?”

அவனில் இருந்து தெய்வங்கள் என சொற்களெழுந்தன. “இங்குள அனைத்தும் ஒன்றே என்றறியாது எதைக் கற்றான்? அனைத்திலும் கரந்துள்ள ஒன்றே தான் என்று அறியாது எதைத் தெளிந்தான்? எனவே மண்ணில் எவ்வுயிரும் எதற்கும் அடிமையல்ல என்று உணராது எதைச் சென்றடைந்தான்? ஒவ்வொன்றின் நெறியையும், மீளும் வழியையும் வகுத்தளித்து நின்றாடுவதை நோக்கி நீயே நான் என்று சொல்லத்தெரியாதவன் அறிந்ததுதான் என்ன?”

தருணங்களைத் தொட்டு தான் கனிந்து மொழியென்றாகிச் சொட்டும் முடிவிலியை அவன் சொற்களில் கேட்டனர் அவையோர். “மானுடர் எவருக்கும் மானுடர் உரிமையல்ல என்றறியாதவன் தன்னுள் நிறைந்துள்ள  ஒன்றின் கட்டின்மையை எப்போதேனும் உணர்ந்திருப்பானா? விடுதலை விடுதலை என ஏங்கும் அதன் குரலை ஒருகணமேனும் கேட்டிருப்பானா?”

பீமன் தன் உடலில் இருந்து எழுந்து வளர்ந்தபடியே செல்வதுபோல் தெரிந்தது. அவன் உடலில் இருந்து நூறுநூறு கைகள் எழுந்து விரிந்தன. அவன் மேல் தழலென ஒளி சிவந்து எழுந்தது. “பெண்ணை உரிமைகொள்ள ஆணுக்கென்ன தகுதி? அறிவிலியே, அவள் கருவில் உறைகின்றது எதிர்காலம். எவரைப் பணயம் வைத்தான் இவன்? அவள் கருவில் பிருதுவும் பரதனும் யயாதியும் ராகவராமனும் மீண்டும் எழவிருக்கிறார்கள் என்றால் அவர்களும் கருவிலேயே அடிமைகள்தானா? அவர்களை இந்தப் பகடைக்களத்தில் வைத்தாட இவனுக்கு உரிமையளித்தது எந்த தெய்வம்? பிரம்மனிடம் படைப்பாடும் பெருந்தெய்வமா இவன்? பேதை! பெரும்பேதை!”  கைகளை ஓங்கி அறைந்தான். “அட, காட்டுப்புலி அறியும் இதை. கன்னிவிலங்கையும் அன்னைவிலங்கையும் அது அணுகாது அகலும். எந்த அறிவின்மை மேலெழுந்து தருக்கி நின்றிருக்கிறான் இவன்?”

கொந்தளிப்புடன் கைசுருட்டி அவன் கூவினான் “அவன் ஆடியது எதை என்று நான் நன்கறிவேன். தன் ஆணவத்தை வைத்தாடினான். தன் ஆழத்து நஞ்சைத் திரட்டி அவைமுன் வைத்து ஆடினான்.” மூச்சிரைக்க பீமன் தருமனை நோக்கி சென்றான். “உள்ளம் கரந்த நஞ்சை வெல்லவில்லை சித்தம் சுரந்த அமுது என்றால் இவன் எவ்வகையில் அறமறிந்தவன்? எந்தக் கையால் என் குலமகளை அவைமுன் வைத்தான்? அந்தக் கையை வந்து பற்றவில்லையா இவன் அறிந்த நூலோரும் நெறியோரும் முனிவரும் தவத்தோரும்?”

அனைத்துக் கட்டுகளையும் அறுத்து மதவேழமென உடல் ஆட தருமனை நோக்கி கைநீட்டியபடி பீமன் சென்றான். “அவியிட்டு அனல்புரக்கும் கை தூயதென்றால் அதே நெறிப்படி இந்தக்கை  இழிந்ததிலும் இழிந்தது. இதை இன்றே எரித்தழிப்பதே முறை. இளையோனே, அனல்கொண்டு வா! இது என் ஆணை!”

தருமன் அச்சொற்கள் எதையும் அறியாதவர்போல நின்றார். அறியாது நகுலனும் சகதேவனும் வந்து அவன் இருபக்கமும் நிற்க அர்ஜுனனின் கை நீண்டு பீமனை தடுத்தது. “மூத்தவரே…” என அவன் கண்ணீருடன் அழைத்தான். “வேண்டாம்! சிறுமைக்குமுன் என்றும் எழுந்து பேருருக்கொள்பவராகவே உங்களை அறிந்துள்ளேன்.   என் நெஞ்சில் நிகரிலா மாவீரனாக அமர்ந்த தெய்வம் நீங்கள். நீங்களும் பீடம் விட்டிறங்கிவிடாதீர்கள்! தந்தையே, உங்கள் காலடியில் சிறுவனாக நின்று கோருகிறேன். அருளுங்கள்!”

பீமனின் உடற்தசைகள் தளர்ந்தன. உறுமியபடி அவன் திரும்பிக்கொண்டான். “உங்கள் பெருமையால் அனைத்தையும் அளவிடுகிறீர்கள், மூத்தவரே. நானோ என் சிறுமையால் இவற்றை புரிந்துகொள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “இங்கு அவைநின்று இழிவுகொண்டவள் நம் குலக்கொடி மட்டுமல்ல. முலைசூடி கருவறைசுமந்து வந்து நின்றிருக்கும் பெண்ணெனும் தெய்வமும்தான்… சிறுமைசெய்து சிறுமைசூடியவர்கள் அவனோ இந்த அவையோ மட்டுமல்ல. நானும்தான். மூத்தவரே, எத்தனை மஞ்சங்களில் இழிமகன் என தருக்கி நின்றிருப்பேன்! எத்தனை பெண்டிரின் விழிநீரைக் கடந்து வந்திருப்பேன்! எத்தனை சொற்கள்! எத்தனை இழிபாவனைகள்! ஆணென்று உணர்வதே ஓர் இழிவு, மூத்தவரே. அமுதமுலைசூடும் பெற்றி இல்லாத கீழ்பிறப்பின் வஞ்சம் அது.”

அர்ஜுனன் ஒருகண் கலங்கி வழிய தலையை அசைத்தான். “இச்சிறுமை அனைத்தையும் சூடி நின்றிருக்கும் பழி படைத்தவன் நான். இன்று சிறுத்தது காண்டீபம். இழிந்தன என் தோள்கள். இனி நூறு களங்களில் நான் வெல்லலாம். ஆயிரம் நாடுகளில் என் வேள்விப்புரவி கடந்துசெல்லலாம். ஆயினும் நான் கோழையே. அறம் காத்து நின்றிருக்கும்  ஆண்மை அற்ற பேடியே. ஆம், இச்சொல் நிற்கட்டும் என் தலைமுறைகளில். வென்று வென்று இனி நான் செல்வதெல்லாம் வெல்லமுடியாத இத்தோல்வியையே என சூதர் பாடட்டும்!”

“ஆம்” என்றான் பீமன். தலையசைத்து “இன்று ஆணென நின்ற அனைவரும் பழிசூடியுள்ளோம்” என்றான். அர்ஜுனன் பெண்டிர் நின்றிருந்த உப்பரிகைகளை நிமிர்ந்து நோக்கினான். “இன்றறிந்தேன், புதுவேதம் வகுக்கவந்த யாதவன் யார் என்று. அவன் சொல்லில் எழும் வேதமுடிவின் பொருள் என்ன என்று. இனி நான் மண்ணுக்கென எழும் ஷத்ரியன் அல்ல. அவன் சொல்காக்க வில்லெடுக்கும் எளிய வீரன் மட்டுமே. எய்தவும் ஆகவும் அமையவும் இனி ஏதுமில்லை எனக்கு” என்றான்.

தன் கையைத் தூக்கி அர்ஜுனன் உரத்த குரலில் சொன்னான் “அன்னையின் மைந்தர் என நாம் ஆற்றுவதொன்றுள்ளது, உடன்பிறந்தோரே. இனியொரு முறை இப்புவியில் இது நிகழலாகாது. நூறாயிரம் முறை குருதியால் ஆணையிடப்படட்டும் இச்சொல்! நூறுநூறாயிரம் தலைகள் உருள நிலைநிறுத்தப்படட்டும் இத்தருணம்!” என்றான். “இத்தருணத்தை அறிக அஸ்தினபுரியின் துறைமுகப்பில் கொற்றவை என நின்றிருக்கும் அன்னை அம்பை. மூண்டெழுக முதற்கனல்! ஆற்றாது அழுத ஒருதுளி கண்ணீர் ஒருநூறுமுறை உலகழிக்க வல்லமை கொள்ளட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!”

தன் கையைத் தூக்கியபடி அவன் அவைமுன் வந்து நின்றான். “அறிக! அவையும் ஆன்றோரும் மூதாதையரும் மூன்றுதெய்வங்களும் சான்றாகுக! எவனில் இருந்து இச்சிறுமையின் முதல்விதை முளைத்ததோ அவனை, இச்சூதன்மகன் கர்ணனை, நெஞ்சுபிளந்து செருகளத்தில் கொல்வேன். அறம் மறந்து இந்த அவையிலமர்ந்த மூத்தோர் ஒவ்வொருவரையும் குருதிக்களத்தில் சாய்ப்பேன். பீஷ்மரை, துரோணரை கொன்று நின்று விழிநீருடன் என் வில்தூக்கி கடன்முடிப்பேன்… ஆணை! ஆணை! ஆணை!”

“ஆம்!” என்று தன் தோளைத் தட்டியபடி பீமன் கூவினான். “இதோ என் வஞ்சினம்! பெண்பழிகொண்ட இச்சிறுமகனை, அஸ்தினபுரியின் அரசனென அமர்ந்த துரியோதனனை கதையால் அடித்து சிதைப்பேன். அவன் திமிர்கொண்ட நெஞ்சைப் பிளந்து குருதியள்ளி என் தோளிலும் முகத்திலும் அணிவேன். என் குலமகள் ஆடைதொட்ட அவன் தம்பியை, துச்சாதனன் என்னும் இழிபிறவியை, நெஞ்சுபிளந்து அங்கே நின்று துடிக்கும் செங்குலையை என் காலால் மிதிப்பேன். அவன் குருதி அள்ளிக்குடித்து என் நெஞ்சக்கனல் அவிப்பேன்.”

கடுங்குளிரில் நின்றிருக்கும்  காளை போல அவ்வப்போது உடல் சிலிர்த்து விழியுருட்டி அசைவற்றிருந்தது பன்னிரு பகடைக்களம். அதன் மூச்சு சீறியது. “கௌரவர் அனைவரையும் களத்தில் கொல்வேன். அவர் மைந்தர் அனைவரையும் கொன்றழிப்பேன். என்னை ஆளும் காட்டுத்தெய்வங்கள் என் தோளில் எழுக! அறமென்றும் உறவென்றும் அளியென்றும் ஒருகணமும் அவை தயக்கம் கொள்ளாதிருக்கட்டும்! எரிந்தழிந்து தளிர்க்கும் இக்காட்டின்மேல் இளமழை என வந்தமையும்  பேரறத்தின் பொருட்டு அவை புடைத்தெழட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!”

உடல்நடுங்கி குறுகி நின்றிருந்த தருமன் கால்தளர்ந்து விழப்போக நகுலனும் சகதேவனும் அவரை பற்றிக்கொண்டனர். துரியோதனன் உயிரற்றவன் போல அரியணையில் அமர்ந்திருந்தான். கிருபர் எழுந்து ஏதோ சொல்லப்போனபோது அணியறைவாயிலில்  புலிக்குரல் என ஓசை எழுந்தது. அவிழ்த்த கூந்தல் உடலெங்கும் விழுந்திருக்க விழிநீர் நிறைந்த கண்களுடன் மாயை தோன்றினாள். “அவையோர் அறிக! இது பாஞ்சாலமண்ணை ஆளும் ஐங்குழல்கொற்றவையின் வஞ்சினம்! ஐந்து தேவியரின் அழியாச்சொல் இது.”

“இன்று அவிழ்ந்தது அன்னையின் ஐங்குழல். இனி அது அவையமர்ந்த அரசன் துரியோதனனின் ஆக்கைக்குருதியும் அவன் இளையோன் துச்சாதனனின் நெஞ்சத்து நிணமும் கலந்து பூசப்பட்டபின்னரே அது சுருள்முடியப்படும். பாஞ்சாலத்து ஐந்தன்னையர் ஆலயத்து மூதன்னையர் வந்து குருதிதொட்டு எடுத்துக்கொடுக்க பின்னி அமைக்கப்படும். கௌரவ நூற்றுவரும் மண்மறைந்தபின்னரே அதில் மலர்சூட்டப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!”

அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். அச்சொற்களை அவளே அறியவில்லை என்று தோன்றியது. சொல்லி முடித்ததும் விழப்போனவள்போல கதவை பற்றிக்கொண்டாள். உள்ளிருந்து அசலையும் லட்சுமணையும் வந்து அவளை பிடித்துக்கொண்டனர். மெல்ல அவை புயல்காற்று நின்றபின் குறுங்காடு போல நிலைமீண்டது.

தொடர்புடைய பதிவுகள்


ஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்

$
0
0

 

 

ஜெ
ஐயோ ஜெ…. அமைதி அமைதி ..போதும்… பயணம் செல்லும் முன்னும் பின்னும் சொல்லும்  உங்கள் கட்டுரை குமுறல்கள் நடைமுறை உலகின் ( சில பகுதி ) நிதர்சனகள். உங்களின் idealistic உலகம் ( தமிழகத்தில் ) அனைவரும் தன் தன் கடமைகளை மிக சரியாக செய்தால் மட்டுமே வரும் – அரசாங்கம் மற்றும் அதன் நிர்வாகம் மிக மிக சரியான விதத்தில் ஓடினால் மட்டும் வரும் ஒரு விளைவு.
1. கம்பெனி உற்பத்தி செய்பவர்களுக்கும் அதை விற்பவர்களுக்கும் ( distributor/stockist, dealer, retailer ) இடையில் இருக்கும் எதிர்பார்ப்புகள் என்றும் சரி செய்ய முடியாதவை. உங்கள் நண்பர் சொன்னது போல, அந்த போலி பொருட்கள் இல்லை என்றால் b,c,d category ஊரில் வியாபாரம் செய்பவர்கள் நசித்து போவார்கள்.
2. எல்லா வகையான branded பொருட்களுக்கும் இந்த”முழு போலி” ( counterfeit ) அல்லது  நீங்கள் சொன்னது போன்ற எழுத்து பிழை போன்ற ” மயக்கும் போலி” ( duplicate )  ஆசிர்வாதம் உண்டு..கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் “counterfeit”… அடுத்து வரும் சிறு ஊர்களில் மற்றும் கிராமங்களில் இந்த “duplicate” உலகம் …
counter feit / duplicate என்று சொல்லப்படும் “போலி” களின் உலகம் மிக பிரமாண்டம். அது தரும் லாப சதவிகிதம் “ஒரிஜினல் ” தரும் லாப % சதவிகிதங்களை கொன்று போட்டு விடும் . பேனா, சோப்பு, ஷாம்பூ, பவுடர், முக பசை, தலை எண்ணை என FMCG industrykku நரக வேதனை தருபவை. குடிக்கும் பீர், நாம் உபயோகிக்கும் கரன்சி, ஆணுறை, பிரிண்டர் cartridges,வாட்ச்,perfume  என இதுதான் என்று அறியா பொருட்கள் மேல் எல்லாம் உண்டு இந்த “counter feit” and “duplicate” ஆதிக்கம்
இந்த “போலி” விற்பனர்களுக்கு இருக்கும் சந்தை அறிவு, பொருட்களின்  தேவை பற்றிய குறிப்புகள்வியாபாரிகளின் நாடி பற்றிய அவதானிப்பு, என்ன சொன்னாலும் அல்லது இந்த “போலி” களுக்கு எதிராக நடத்தும் “raid வேட்டை ” போன்ற மிரட்டல்கள் ஒன்றும் செய்யாதவை.
டிவி போன்ற consumer electronics அல்லது பைக் கார் போன்ற authomobile  உதிரி ( spares ) பொருட்களுக்கும் ( ball bearing, head lamps, wiper, engine oil ) இந்த “போலி” பொருந்தும்.
3. வாங்க வேண்டிய பொருட்களை வாங்க வேண்டிய இடத்தில வாங்கி கொள்ளுங்களேன். கோவை எத்தனை முறை சென்றீர்கள்? ஏன் company outlet அல்லது Arrow/Basics போன்ற outlet களில் Jockey வாங்க கொள்ள வில்லை?
நாகர்கோவிலில் Jockey  இல்லை என்றாலும் ராமராஜ் அல்லது poomex இருக்க கூடும். அந்த பெரிய “டவர் ரெடிமேட் ” கேட்டு பாருங்கள். கண்டிப்பாக louis philippes / arrow போன்ற சட்டைகளை வாங்கி வைத்து விற்காமல் மிக குறைவான விலையில் விற்று இருப்பார்கள் அல்லது திருப்பி அனுப்பி இருப்பார்கள் … சந்தைகேற்ற பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும். branding மட்டும் செய்து விட்டு விற்பனை ஆகவில்லை என்றால் என்ன பயன்.
ஆபத்து எங்கே என்றால் மருந்துகளில், சோப்பு,ஷாம்பூ போன்றவைகளில் தரும் பாதிப்பு யாருக்கும் தெரிவதில்லை. கண்டிப்பாக நீங்கள் சொன்னது போன்ற அரசு அதிகாரிகளும் அவர்களை விலைக்கு வாங்கி கொண்ட வணிகர்களை அடக்கினால் மட்டுமே இது நடக்கலாம்.
( ஐரோப்பா சென்று விட்டு அமைதியுடன் வாருங்கள். மீண்டும் இந்த தாய் தமிழகத்தை பற்றி கொந்தளிக்காமல் இருக்க வேண்டி கொள்கிறோம் )
அன்புடன்,
லிங்கராஜ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதையின் வழிகள்

$
0
0

ஓ ஹென்றி

 

 

[ 1 ]

ஒரு பண்பாட்டுச்சூழலில் குறிப்பிட்ட இலக்கிய படிவம் ஏன் உருவாகிறது என்ற வினா அவ்வடிவத்தில் எழுதப்படும் அனைத்து படைப்புகளையும் புரிந்து கொள்வதற்கான முதல் திறவுகோலாக அமைய முடியும். உதாரணமாக பெரும்பாலான நாட்டுப்புறப்பாடல்கள் ஏதேனும் தொழிலுடன் இணைந்ததாக உள்ளன. அத்தொழிலின் இயல்புக்கேற்ப அவற்றின் வடிவம் அமைந்துள்ளது. ஆகவே,கணிசமான நாட்டுப்புறப்பாடல்க்ள் ஒன்றிலிருந்து ஒன்று தொற்றி ஏறுவனவாகவும்,எத்தனை நேரம் வேண்டுமென்றாலும் ஒரு குறிப்பிட்ட கருவை நீட்டிக்கொண்டு போகும் தன்மை கொண்டதாகவும் உள்ளன. அவற்றுக்கேற்ப சுழன்று வரும் சொல்லாட்சியோ அல்லது உரையாடல் அமைப்போ அவற்றுக்குள்ளது.

பின்னர் சங்கப்பாடல்கள் போன்ற செவ்வியல் வடிவங்கள் உருவாகி வந்தபோது அவை நிகழ்த்துகலைகளின் ஒலிவடிவமாக இருந்தன. சங்கப்பாடல்களில் உள்ள செறிவான மொழியமைப்பும்,நுட்பமாகக் குறிப்புணர்த்தும் தன்மையும் ஓர் அரங்கில் பாணனும் விறலியும் நடித்து தங்கள் கற்பனை மூலம் பலவாறாக விரித்தெடுப்பதற்குரியவை. இன்று கூட கதகளி போன்ற செவ்வியல் கலைவடிவத்தில் அவற்றின் வரிவடிவப்பாடல்கள் மிகச்சுருக்கமானவையாகவும் நடிகனின் மனோதர்மத்தைக் கோரி நிற்பவையாகவும் இருப்பதைக் காணலாம். பின்னர் எழுதி வாசிக்கப்படும் வடிவம் வந்தபோது நான்கு நான்கு வரிகளாக அமைந்த செய்யுட்கள் உருவாகி வந்தன.

 

 

எட்கார் ஆல்லன் போ

 

காப்பியம் என்னும் இலக்கிய வடிவம் சமூக உருவாக்கத்தின் ஒரு வளர்ச்சிக் காலகட்டத்தில் உருவாகி வந்தது. ஒரு சமுதாயம் தன்னுடைய பல்வேறு பண்பாட்டுக்கூறுகளை வளர்த்தெடுத்தபின் அவற்றை ஒன்றுடன் ஒன்று பின்னி முடைந்து ஒற்றை பெரும் பண்பாட்டு வெளியாக ஆகும்போது அவற்றுக்கு காப்பியம் தேவைப்படுகிறது. பெருங்காப்பியங்கள் என்பவை முதன்மைக் குணமாக தொகுப்புத்தன்மை கொண்டவை. உதாரணமாக சிலப்பதிகாரம் போன்ற மிகச்சிறிய காவியத்திற்குள்ளாகவே வேட்டுவவரி,கானல்வரி போன்று வெவ்வேறு நிலப்பகுதிகளின் பாடல்களும் அவற்றை இணைக்கும் பொதுவானதொரு கதைப்போக்கும் இருப்பதைக் காணலாம்.

நவீன இலக்கியம் தோன்றியபோது அதனுடன் இணைந்து உருவாகிவந்த ஒரு வடிவம் சிறுகதை. சிறிய கதைக்கும் சிறுகதைக்கும் அடிப்படையில் உள்ள வேறுபாடு இலக்கிய வாசகன் அறிந்ததே. பண்பாட்டில் என்றும் இருப்பது சிறிய கதை என்னும் வடிவம். நீதிக்கதை, தேவதைக்கதை என பலவடிவங்கள் அதனுள் உள்ளன. அவை ஒரு மையத்தை வலியுறுத்தும் கதைவடிவுகள். சிறுகதை என்பது அம்மையத்தில் ஒரு திருப்பத்தை,ஒரு முடிச்சை முன்வைக்கும் வடிவமாக உருவாகி வந்தது. எட்கார் ஆலன்போ, ஓ.ஹென்றி போன்ற முன்னோடிகளால் வேடிக்கையும் வியப்பும் ஊட்டும் வாசக அனுபவத்துக்காக உருவாகி வந்த அக்கலை வடிவம் மிகச்சில ஆண்டுகளிலேயே உலகளாவிய செல்வாக்கு பெற்றது.

 

எந்த ஒரு கலைவடிவமும் அது உருவான முதல் தலைமுறையிலேயே அதன் மிகச்சிறந்த செவ்வியல் படைப்புகளை அடைந்துவிடும் என்று ஒரு கூற்று உண்டு. காவியங்களோ ஓபராவோ சிம்பனியோ அனைத்தும் இதையே காட்டுகின்றன. திரைப்படம் கூட . சிறுகதையும் விதிவிலக்கல்ல. இன்றும் சிறுகதையின் பெரும்படைப்புகளாகக் கருதப்படுபவை செக்காவ்,மாப்பசான் போன்ற முன்னோடிகளால் சிறுகதை என்ற வடிவம் உருவான ஆரம்பகாலத்திலேயே உருவாக்கப்பட்ட படைப்புகள் தான்.

சிறுகதை என்னும் வடிவம் ஏன் உருவானது, ஏன் அது உலகளாவ இத்தனை செல்வாக்கு அடைந்து இன்றும் நீடிக்கிறது? அது வியப்பும் வேடிக்கைக்கும் உரிய வடிவமாக முதலில் ஏன் அமைந்தது? முன்னரே இலக்கிய வாசகன் கதை என்னும் வடிவிற்கு பழகியிருக்கிறான். ஒரு களத்தில் ஒரு நிகழ்வுத்தொடர் ஒரு சில கதாபாத்திரங்களைக் கொண்டு தொடங்கும் என்றால் அது எதைச்சொல்லி எவ்வண்ணம் முடியும் என்று ஒரு கணிப்பு அவனுக்கு இருந்தது. பெருவிருந்துகளுக்குப்பிறகு அரட்டைகளிலும்,நூல் வாசிப்பு அரங்குகளிலும் கூடிய பெரும்பாலான வாசகர்கள் அத்தகைய கதைகளை கூடவே பயணம் செய்து ஆசிரியன் முடிக்கும் முன்பே தாங்கள் முடித்துவிடும் பழக்கம் கொண்டிருந்தனர்.

 

அவர்களிடம் ஒரு ஆர்வமூட்டும் விளையாட்டை ஆசிரியன் ஆடத்தொடங்கியபோது சிறுகதை உருவாகியது. வாசகனின் எதிர்பார்ப்பை, ஊகத்தை முறியடித்து முற்றிலும் எதிர்பாராத இடத்துக்கு கதையை ஆசிரியன் கொண்டு செல்லும் போது அவர்கள் திகைத்து பின் மகிழ்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்றுசீட்டு விளையாட்டுதான். நீங்கள் கைவைக்கும் இடத்தில் ஆடுதன் இருக்காது ஏஸ் இருக்கும். இத்தனை சோதனைகளுக்குப்பிறகும் சிறுகதையின் இந்த அடிப்படை வடிவம் மாறவேயில்லை.

வேடிக்கைக்காக உருவாக்கப்பட்ட இந்த வடிவம் இரண்டு அம்சங்கள் கொண்டது. ஒண்று அதில் ஆசிரியனுக்கும் வாசகனுக்குமான ஒரு உரையாடல் உள்ளது. ஆசிரியன் வாசகனிடம் விளையாடுகிறான். ஆசிரியன் விட்ட இடைவெளியை வாசகன் நிரப்புகிறான். வாசகனின் கற்பனையை ஆசிரியன் தாண்டிச் செல்கிறான் அங்கு ஆசிரியன் நின்றுவிட்ட இடத்திலிருந்து மீண்டும் வாசகன் மேலே செல்கிறான். சிறுகதையின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இந்த ஆடல். எவ்வகையிலேனும் இந்த ஆடல் நிகழாத ஒன்று ஒருபோதும் சிறுகதையாவதில்லை.

இரண்டாவதாக சிறுகதை எப்போதும் முரண்பாட்டை சொல்கிறது. அதன் இறுதித்திருப்பம் காரணமாகவே அது ஒருகளத்தில் நிகழக்கூடும் என எவரும் நினைக்காத ஒன்றை புதிதாகச் சொன்னது. அனைவரும் நம்பிய ஒன்றை மாற்றியமைத்தது. வழிவழி வந்தவற்றை மறுத்துப்பேசியது. ஆகவே, புனைவு விளையாட்டாகத் தொடங்கிய சிறுகதை வடிவம் மிக விரைவிலேயே சமூகத்தின், வாழ்க்கையின், தத்துவ தரிசனத்தின் அடிப்படை முரண்பாடுகளைச் சொல்லுவதற்கு உகந்த வடிவம் என்று கண்டடையப்பட்டது. ஆகவே தான் ஒரு கதையாடல் என்னும் இடத்திலிருந்து இலக்கியப்பிரதி என்னும் கௌரவத்தை அது அடைந்தது. எட்கார் ஆலன் போவிலும் ஓ.ஹென்றியிலும் வெறும் கேளிக்கை வடிவமாக இருந்த சிறுகதை செக்காவிலும் மாப்பசானிலும் இலக்கியத் தகுதி கொள்வது முரண்பாடுகளைச் சொல்லும் கலைவடிவமாக அது ஆனமையினால்தான்

சிறுகதை உலகளாவப்பெற்ற பெரும் வரலாற்றுக்கான காரணமும் இவ்விரண்டும் தான். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் காலனி ஆதிக்கம் வழியாக நவீனமயமாதல் உலகமெங்கும் சென்று சேர்ந்தது. அதன் மூன்று அடிப்படைகள் இவை. அனைவருக்குமான பொதுக்கல்வி, பொதுபோக்குவரத்து, கூட்டு உற்பத்தியமைப்புகள். அவை ஜனநாயகத்தை உருவாக்கும் அடிப்படைகளாக அமைந்தன. .

 

 

கோணங்கி

கோணங்கி

 

இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து புதிய வாசகன் ஒருவனையும் உருவாக்கின. அவன் தனது பாரம்பரியமான தொழிலிலிருந்து வெளியே வந்தவன். நவீன கூட்டு உழைப்பின் ஒரு சிறு பகுதியாக தன்னை ஆக்கி படைப்பாளி என்ற இடத்திலிருந்து உழைப்பாளி என்று தன்னை சுருக்கிக் கொண்டவன். ஆகவே அன்னியமானவன். தன்னை நிறைவுபடுத்திக்கொள்ள கேளிக்கைகளை மேலும் மேலும் தேடும் நிலையில் இருப்பவன்.பொதுக்கல்வி முறையால் சராசரியான அடிப்படைக்கல்வியை அடைந்தவன். அக்கல்வி அனைவருக்குமான ஒன்று என்பதனால் பரவலாக அவனைப்போன்ற ஒரு வாசகச் சமூகமே உருவாகியது. அச்சுக்கலையின் வளர்ச்சியும் கூடவே போக்குச்வரத்து விரிவாக்கமும் எழுத்தையும் வாசிப்பையும் ஒரு சமூக இயக்கமாக மாற்றின. சென்னையில் அச்சிடப்படும் ஒரு பக்கம் ஓரிரு நாட்களில் மதுரையையோ நாகர்கோவிலையோ சென்றடைய முடியும் என்றாகியது. இதன் ஒட்டு மொத்த விளைவாக உருவாகிவந்த நவீனவாசகன்தான் சிறுகதையின் இலக்கு.

இந்த நவீன வாசகனுக்கு முந்தைய காலகட்டத்து வாசகன் மிகக் குறைவாகவே வாசித்திருந்தான். அன்று ஒருவர் வாசித்த நூலை பிறிதொருவர் வாசித்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவாக இருந்தது. நவீனவாசகர் அனைவருக்குமே இருந்த ஒட்டுமொத்தமான வாசிப்பும் பொதுவானது அத்தகைய ஒரு வாசகன் முன்னால் வந்து அமர்ந்த ஆசிரியனால் எழுதப்பட்டது சிறுகதை. அவனே அவ்வாசிரியன் வாசகனுடன் உரையாடவும் விளையாடவும் தொடங்கினான். அவன் சமகால வாழ்க்கையின் முரண்பாடுகளைப்பற்றிப் பேசலானான்.

அந்த முரண்பாடுகள் உருவாவதற்கு முக்கியமான காரணம் அக்காலகட்டம்தான். அதற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ காலகட்டம் பல நூற்றாண்டுகளாக உறைந்து நின்ற ஒன்று. அதன் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சிறு சிறு வட்டங்களுக்குள் நிலைத்துவிட்டவை. நவீனகாலகட்டம் அதை முழுக்க நிராகரித்தது. மனிதன் வட்டாரங்களில் இருந்து வெளிவந்து உலகம் என உணரத் தொடங்கினான். முந்தைய காலகட்டத்தின் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் மறுபரிசீலனை செய்தான், கடந்து சென்றான். அந்த மீறலே நவீன இலக்கியத்தில் முரண்பாடுகளாக வெளிப்பட்டது. அதற்கான வடிவமாகச் சிறுகதை அமைந்தது

புதுமைப்பித்தன்

 

 [ 2 ]

 

தமிழில் சிறுகதையின் தொடக்கப்புள்ளி என்று வ.வே.சு அய்யரையும் சுப்ரமண்ய பாரதியையும் சொல்வது வழக்கம். வங்காளத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்து சிறுகதை என்னும் வடிவை தமிழுக்கு வ.வே.சு. அறிமுகம் செய்தார். வங்க மொழிச் சிறுகதைகளை தழுவி பாரதியும் வ.வே.சு. அய்யரும் அவ்வடிவை முன்னெடுத்தனர். அவர்களே வலுவான சிறுகதைகளை எழுதினார்கள். பாரதியின் சிறுகதைகள் பெரும்பாலும் கதை என்றவடிவுக்குள்ளேயே நிற்கின்றன. வ.வே.சு. அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் என்னும் தோப்பிலுள்ள குளத்தங்களை அரசமரம் சரியான சிறுகதை வடிவம் கொண்டதென்று சொல்வார்கள்.

தமிழ் சிறுகதை அதன் முழுஅடையாளத்தை அடைவது புதுமைப்பித்தனிடம் தான். ஒருமொழியின் ஒரு குறிப்பிட்ட கலைவடிவத்தில் பிற்காலத்தில் உருவாகும் அனைத்திற்கும் விதைநிலமாக அமைந்திருக்கும்தன்மை கொண்ட படைப்புக்களை செவ்வியல் என்கிறோம். அதை புதுமைப்பித்தனிடம் காணமுடியும். தமிழில் உருவான அனைத்துச் சிறுகதை வடிவங்களுக்கும் முன்னோடி வடிவங்கள் புதுமைப்பித்தனிடம் உண்டு. தமிழில் எழுந்து வந்த யதார்த்தவாதச் சிறுகதை இயக்கத்திற்கு புதுமைப்பித்தனின் செல்லம்மாள்,மனித யந்திரம்,பொன்நகரம் போன்ற கதைகள் முன்னுதாரணமாக அமைந்தன

முறையே யதார்த்தவாதத்தின் மூன்று வெவ்வேறு போக்குகளை அவை பிரதிபலிக்கின்றன. செல்லம்மாள் அழகியல்சமநிலை கொண்ட யதார்த்தவாதத்தை சுட்டுகிறது. அசோகமித்திரனின் படைப்புக்கு முன்னோடி வடிவம் என்று அதை எளிதில் சொல்ல முடியும். பொன்நகரம் இங்கு உருவான முற்போக்கு படைப்புகளுக்கான முன்னோடி வடிவம். மனித எந்திரம் கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி போன்றவர்களால் உருவாக்கப்பட்ட விமர்சன யதார்த்த வாதத்தின் முன்னோடி வடிவம்

செவ்வியல் மரபுகளை மறுஆக்கம் செய்யும் மரபிற்கு புதுமைப்பித்தனின் அகலிகை சாபவிமோசனம் போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம் அங்கத நோக்கம் கொண்ட உருவகக்கதைகளுக்கு எப்போதும் முடிவிலே இன்பம் போன்ற கதைகள். நனவோடை முறையென்றால் முன்னோடிக்கதையாக கயிற்றரவை சொல்லமுடியும். மிகு கற்பனைக்கதை என்றால் புதுமைப்பித்தனின் காஞ்சனை, கபாடபுரம் போன்ற கதைகளைச் சொல்லலாம். காஞ்சனை மாய யதார்த்த கதையென்றும், கபாடபுரத்தை கட்டற்ற கற்பனை விரியும் கதை என்றும் சொல்லலாம்

மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் கதையின் அனைத்து வகைமைகளையும் தொட்டு சென்ற புதுமைப்பித்தன் தமிழ் உருவாக்கிய மேதைகளில் ஒருவர் என்று ஐயமின்றி சொல்ல முடியும். இன்றைய வணிக இலக்கியத்திற்கும் ஒருவகையில் புதுமைப்பித்தனே முன்னோடி. வணிக இலக்கியத்தில் பின்னால் உருவாகிவந்த அனைத்து மரபுகளையும் அங்கு காணலாம் மு.வ.,கு. ராஜவேலு போன்றவர்கள் எழுதிய தனித்தமிழ் உரைநடைக்கதைகளுக்கு முன்னோடியாக இந்தாப்பாவி போன்ற கதைகளை, மனவக்கிரத்தை வெளிப்படுத்தும் விபரீத ஆசை போன்ற கதைகளை, அச்சுறுத்தும் செவ்வாய்தோஷம் போன்ற பேய்க்கதைகளை, இனிய நகைச்சுவைக்கதைகளான பூசனைக்காய் அம்பி போன்ற கதைகளை புதுமைப்பித்தனின் உலகில் பார்க்கும்போது இனி எழுந்து வரவிருக்கும் கதைகளையும் அவர் ஏற்கனவே எழுதியுள்ளாரா என்ற வியப்பேற்படுகிறது.

அத்துடன் சிறுகதைக்குரிய சரியான வடிவை அவர் உருவாக்கி முன்வைத்தார். மலையாளம் கன்னடம் வங்காளம் போன்ற நவீன இலக்கியம் வளர்ந்த மொழிகளில்கூட சிறுகதை என்னும் வடிவம் அறுபதுகளில்தான் சரியான வடிவை வந்தடைகிறது என்னும்போது நாற்பதுகளில் புதுமைப்பித்தன் அடைந்த பாய்ச்சல் மிக முக்கியமானது.

 

.

 

இவ்வாழ்க்கை முரண்பாடுகளாலேயே புரிந்துகொள்ளத்தக்கது என்றோ, அல்லது இவ்வாழ்வின் முரண்பாடுகளே மேலும் முக்கியமானவை என்றோ, அல்லது இப்பெரும்பெருக்கு முரண் இயக்கமாகவே முன் செல்கிறது என்றோ ஒரு பார்வை சிறுகதைக்குப்பின்னால் உள்ளது. அது நவீன இலக்கியம் என்னும் இயக்கத்திற்கே பொதுவான பார்வை ஆகவே தான் அது நீதியை உருவாக்குவதில்லை. விமர்சனத்தை உருவாக்குகிறது. அமைப்புகளை எழுப்ப முயல்வதில்லை, உடைத்து பிரிக்க விழைகிறது. விடைகளைச் சொல்வதில்லை வினாக்களை முன்வைக்கிறது.

நவீன இலக்கியம் எங்கு பண்டைய இலக்கியத்திலிருந்து மாறுபடுகிறது என்றால் பண்டைய இலக்கியம் ஒரு சான்றோனின் தரப்பாக, ஒரு மூதாதையரின் குரலாக ஒலிக்கிறது. நவீன இலக்கியம் திரும்பி நின்றுபேசும் ஒரு இளைஞனின் குரலாக, ஒரு கலகக்காரனின் குரலாக ஒலிக்கிறது. நவீன இலக்கியத்திலிருந்து ‘துடுக்கு’ என்று சொல்லத்தக்க இந்த அம்சத்தை விலக்கினால் அது பொருளிழந்து போய்விடும். திரும்ப திரும்ப பண்டைய இலக்கியத்தின் வாசகர்கள் நவீன இலக்கியத்தில் அடையும் அதிர்ச்சி நவீன இலக்கியத்தில் இருக்கும் இந்த அடங்காமை அல்லது துடுக்குதான். புதுமைப்பித்தனின் கதைகளின் சாரமே அவரது துடுக்குதான்

புதுமைப்பித்தன் கதைகளை வாசித்து இவர் இப்படியெல்லாம் எழுத யார் அதிகாரம் கொடுத்தது என்று ராஜாஜி முகம் சுளித்தார் என்பார்கள். நவீன இலக்கியம் பழமையின் மனத்தை சந்திப்பதற்கான மிகச்சரியான புள்ளி இது. ராஜாஜியின் திக்கற்ற பார்வதி என்ற கதைத்தொகுதியை படிக்கும் போது சிறுகதைக்கும் கதைக்குமான வேறுபாட்டை மிகத்துல்லியமாக உணர்ந்து கொள்ள முடியும்.

புதுமைப்பித்தனின் சமகாலத்தவர்களில் அவருக்கு இணையான புனைகதை ஆசிரியர்களாக சொல்லப்படும் கு.ப.ரா,கோபாலன், மௌனி, நா.பிச்சமூர்த்தி ஆகிய மூவரும் ஒருவகையில் புதுமைப்பித்தனின் சில இடைவெளிகளை நிரப்பும் படைப்பாளிகள் என்றே சொல்ல வேண்டும். புதுமைப்பித்தன் அவருடைய இயல்பான துடுக்குத்தனம் மற்றும் அத்துமீறல் காரணமாகவே ஆழ்ந்த நீதி உணர்வின் குரலை வெளிப்படுத்தத் தவறுகிறார் என்று சொல்லலாம். அந்த இடத்தை நிரப்பும் படைப்பாளி நா.பிச்சமூர்த்தி. அவருடைய காவல் போன்ற கதைகள் உதாரணமாக சொல்லலாம்.

புதுமைப்பித்தன் தன் புறவயநோக்கு காரணமாகவே பாலுறவின் நுட்பமான தளங்களை அவர் அலட்சியமாகக் கடந்து செல்கிறார். அவரில் எப்போதும் இருக்கும் கிண்டல் பாலுறவின் நுண்சிடுக்குகளை தொட்டெடுக்கும் பொறுமையை அவருக்கு அளிப்பதில்லை. அவ்விடைவெளியை நிரப்புபவராக கு.ப.ரா எழுதுகிறார். ’ஆற்றாமை’, ’விடியுமா’ போன்ற கதைகள் உதாரணம். புதுமைப்பித்தன் அவரது அடிப்படையான உலகியல் பார்வை காரணமாகவே உயர்கவித்துவத்தை அடைவதில்லை. மௌனி ’அழியாச்சுடர்கள்’, ’எங்கிருந்தோ வந்தான்’ போன்ற கதைகளின் வழியாக அந்த புள்ளியை மட்டும் தொட்டவர்.

தமிழில் புதுமைப்பித்தனுக்கு பிந்திய தலைமுறையில் ஒவ்வொரு படைப்பாளியும் எந்த முன்னோடியை தொடக்க புள்ளியாக கொண்டிருக்கிறார் என்பதை வைத்து அவர்களை மதிப்பிட முடியும். உதாரணமாக தி,ஜானகிராமன் கு.ப.ரா வழி வந்தவர். அடிப்படையில் ஆண்பெண் உறவைப்பற்றியே அவரும் பேசுகிறார். கு.ப.ரா, மிகச்சில புள்ளிகளை மட்டும் தொட்டு நுட்பமாக சொல்லி நிறுத்திய இடங்களை அழகிய மொழியில் உணர்வு தீவிரத்துடன் விரித்தெடுக்கும் நாவல்கள் சிறுகதைகள் தி.ஜா.வுடையவை. அவரது சிறுகதைகளில் மேலதிகமான அற உணர்வுவெளிப்படும் ’பரதேசி வந்தான்’, ’கடன் தீர்ந்தது’ போன்ற கதைகள் மேலும் முக்கியமானவை.

1

அழகிரிசாமி

 

கு.அழகிரிசாமியை பிச்சமூர்த்தியின் தொடர்ச்சியாளர் என்று சொல்லலாம். உதாரணம் ’ராஜா வந்திருக்கிறார்’, ‘அன்பளிப்பு’ போன்ற சிறுகதைகள். மனித மனங்கள் உறவு கொள்ளும் நுட்பமான உரசல்களை அவை எழுப்பும் அற பிரச்னைகளை அவர் பேசுகிறார். லா.ச.ரா ஒருவகையில் மௌனியிலிருந்து தொடர்பவர். மௌனி குறிப்புணர்த்தியவற்றை விரித்துரைத்தவர் என்று அவரை அடையாளப்படுத்தமுடியும். பாற்கடல், இதழ்கள், பச்சைக்கனவு போன்ற கதைகள் உதாரணம்.

புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கிய யதார்த்தவாதத்தின் இருபோக்குகள் என்று சுந்தரராமசாமியையும் ஜெயகாந்தனையும் குறிப்பிடலாம். தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான ஜெயகாந்தன் புதுமைப்பித்தனின் பொன்னகரம் என்ற கதையை தன் முதலூற்றாகக் கொண்டிருக்கிறார் என்று எண்ண முடியும். ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் சமூகப் பிரச்னைகளுக்கு பொருளியல் காரணங்களை எளிதில் சுட்டும் மார்க்சிய சட்டகத்திலிருந்து மீறி மனிதனின் அடிப்படையான ஆன்மீக தேடல்களையும் விவரிக்கிறது. விழுதுகள் முதன்மையான உதாரணம்

முற்போக்கு முகாமில் தொடங்கி,அங்கிருந்து நவீனத்துவ படைப்புகளை நோக்கி வந்தவர் சுந்தர ராமசாமி .மானுட உறவுகளின் அழகுகளையும் ஒடுக்குமுறைகளையும் பேசும்  பிரசாதம் வாழ்வும் வசந்தமும் போன்ற கதைகளை முதற்பகுதியில் உருவாக்கினார். பின்பு ரத்னாபாயின் ஆங்கிலம் போன்ற கதைகளின் வழியாக மேலும் நுட்பமான வாழ்க்கைச் சித்தரிப்புகளை நோக்கி வந்தார். இன்று வாசிக்கையில் அவற்றுக்கு நிகராகவே அவர் எழுதிய ’லவ்வு’ போன்ற அங்கதமும் மானுட விருப்பும் வெளிப்படும் கதைகள் முக்கியமானவை என்று தோன்றுகிறது.

சுந்தர ராமசாமிக்கு பின் சற்றே பிந்தி இலக்கியத்துக்குள் நுழைந்த கி.ராஜநாராயணன் தமிழிலக்கியத்தில் நாட்டுப்புற அழகியலின் உணர்வு நிலைகளை கொண்டு வந்தவர். கி,ராவின் சிறுகதைகள் பெரும்பாலும் நாட்டுப்புற வாழ்வின் நேரடிச் சித்திரங்கள். பலகதைகள் சிறுகதைக்குரிய முரண்பாடையோ உச்சத்தையோ கொண்டிருப்பதில்லை. அவை வாழ்க்கைப் பதிவுகளாகவே நின்றுவிடுகின்றன. என்றாலும் ‘பேதை’ போன்ற சில கதைகள் வழியாக நம் கிராமிய வாழ்விலிருந்து எழுந்த உக்கிரமான சில தரிசனங்களை அவர் முன் வைத்திருக்கிறார்.

உளவியல் பிரச்னைகளை நகர்ப்புறச் சித்திரங்களிலிருந்து எழுதிய இந்திராபார்த்தசாரதி ஆதவன் போன்றவர்கள் விரைவாக நகர்மயமாகி வந்த தமிழக வாழ்க்கையை ஃபிராய்டிய கோணத்தில் முன் வைத்தவர்கள். சா.கந்தசாமி மிகையற்ற வெறும்சித்தரிப்பையே கதை என எழுதியவர். வாழ்க்கையின் ஒருதுண்டே சிறுகதை ஆகிவிடும் என வாதிட்டவர். தக்கையின்மீது நான்கு கண்கள், இரணியவதம் போன்ற கதைகள் உதாரணம்.

ஆனால் ஒட்டுமொத்தமாக இத்தலைமுறையின் முதன்மை படைப்பாளி என்பவர் அசோக மித்திரன்தான் .தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத குரலில் மிகையற்ற சொல்லாட்சிகளின் வழியாக பழுத்த எதார்த்தவாத நோக்கில் அன்றாட வாழ்க்கையை மட்டுமே சொன்ன அசோகமித்திரன் சொல்லப்படாத நுட்பங்களின் வழியாக இருபதாம் நூற்றாண்டின் தேவையையும் கனவையும் தோல்வியையும் வெளிப்படுத்திய பெருங்கலைஞர்.

அவருடைய புனைகதை உலகில் வெவ்வேறு படிவங்கள் வியப்பூட்டுபவை மிகக்குரூரமான சித்திரங்கள் கொண்ட படைப்புகள், மிக மென்மையான எளிய விஷயங்களுடன் நின்றுவிடு, படைப்புகள் என்று அவை பலவகைப்பட்டவை.  புலிக்கலைஞன் காந்தி வாழ்விலே ஒரு முறை விமோசனம்  ஐநூறு கோப்பை தட்டுகள் போன்று அவற்றின் பட்டியல் பெரிது. அசோகமித்திரனின் புனைவுலகத்தில்தான் புதுமைப்பித்தனுக்கு பின்னர் சிறுகதை என்னும் வடிவம் அளிக்கும் முரண்பாடு என்னும் அம்சம் ஆழ்ந்த பொருளுடன் வெளிப்படுகிறது. அவரது பெரும்பாலான கதைகள் வலுவான இறுதித்திருப்பம் அமைந்தவை.

அசோகமித்திரனின் எதார்த்தவாதம் மெல்லத் தவிர்த்துவிட்டுச் செல்லும் ஓர் உலகம் அடித்தள மக்களின் ஆங்காரம் நேரடியாக வெளிப்படும் வாழ்க்கைச்சூழல். அந்த தளத்தைச் சேர்ந்தவை ஆ.மாதவனின் படைப்புகள் .திருவனந்தபுரம் சாலைத்தெருவின் கதைகளை மட்டுமே எழுதிய மாதவன் ‘கோமதி’ ‘நாயனம்’ போன்ற் கதைகளினூடாக அவ்வாழ்க்கையின் அடிப்படை முரண்களை வெளிப்படுத்தியவர்.

[ 3 ]

 

 

தமிழ்ச்சிறுகதை அதன் தொடக்கத்திலேயே புதுமைப்பித்தன் போன்ற ஒரு மேதை வழியாக எளிதில் அதன் உச்சங்களைத் தொட்டது. அடுத்த தலைமுறையில் அச்சாதனைகளை மேலும் வீச்சுடன் தொடர்ந்தன. அதற்கடுத்த தலைமுறை அந்த தரத்தை பெரும்பாலும் தொடர்ந்து தக்க வைத்தது. தி.ஜானகிராமனின் தொடர்ச்சி என சொல்லத்தக்க வண்ணதாசன் மெல்லிய உணர்வுசார்ந்த மொழியில் ஆண் பெண் உறவையும் அடுக்குகளையும் மானுடத்தின் அந்தரங்க தனிமையையும் எழுதியவர். தனுமை, நிலை போன்ற கதைகள் உதாரணம். ஜானகிராமனின் மரபையும் அழகிரிசாமியின் மரபையும் சேர்ந்தவர் என்று வண்னநிலவனைச் சொல்லலாம். எஸ்தர் போன்ற கதைகள் உதாரணம்

சுந்தர ராமசாமி மற்றும் கி ராஜநாராயணனின் அழகியல் போக்கின் நீட்சி என்று சொல்லத்தக்க நாஞ்சில் நாடன் அங்கதமும் விமர்சனமும் கலந்த எதார்த்த சித்திரங்களை உருவாக்கியவர். கால்நடையும் கனகதண்டியும், யாம் உண்பேம், போன்ற கதைகள் உதாரணம். அசோகமித்திரனின் பரபரப்பற்ற எதார்த்த சித்திரத்தின் தொடர்ச்சி என தமிழில் திலீப்குமார் குறிப்பிடத்தக்கவர். ‘கடிதம்’ ‘மூங்கில்குருத்து’ ‘தீர்வு’ போன்ற படைப்புகள். கந்தர்வனையும் ஒருவகையில் அழகிரிசாமியின் வழிவந்தவர் என்று சொல்லலாம். அவரது ‘சாசனம்’ ‘காளிப்புள்ளே’ போன்ற சிறுகதைகள் நாடகத்தனம் அற்ற நுண்ணிய சமூக விமர்சனத்தன்மை கொண்டவை.

தமிழின் இயல்புவாத எழுத்தின் சாதனையாளரான பூமணி வெறும் புறவயத்தகவல்களினூடாக முன்வைத்த வாழ்க்கைச்சித்தரிப்பு ஒரு தனித்த அழகியலை உருவாக்கியது. பின்னாளில் இமையம் போன்றவர்கள் பின்பற்றிய அழகியல் அது. பூமணியின் ரீதி போன்ற சிறுகதைகள் உதாரணம். பெண்ணிய நோக்கில் பிரச்சார வீச்சுள்ள கதைகளை அம்பை எழுதினார்.

ஈழ இலக்கியத்தில் வ.அ. ராசரத்தினம், தெளிவத்தை ஜோசப் போன்றவர்களின் வழியாக யதார்த்தவாதச் சிறுகதைகள் உருவாகி வந்தன. ஈழச்சிறுகதையின் முதன்மையான தொடக்கப்புள்ளி மு.தளையசிங்கம்தான். அவரது தொழுகை, கோட்டை முதலிய கதைகளை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதன்பின் சற்று பிந்தைய வயதில்  அ.முத்துலிங்கம் ஈழத்தின் முதன்மையான சிறுகதையாசிரியராக உருவாகிவந்தார்.

 

[ 4 ]

 

தமிழ்ச் சிறுகதைகளின் முற்றிலும் புதிய முகம் எண்பதுகளில் தொடங்கியது. எதார்த்தச் சித்தரிப்பென்பது அதுவரையில் சிறுகதையில் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது. சிறுகதை என்பதே அன்றாட வாழ்க்கையின் ஒரு துண்டு என்பது அவ்வாசகர்களுடைய புரிதல். ஐம்பதாண்டுகளாக அவர்கள் அதாற்கு பழக்கப்படுத்தப்பட்ட்டிருந்தார்கள். உண்மையில் அது ஒரு விந்தை. கதை என்பதே அன்றாட வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் ஒன்று என்ற எண்ணம் ஆயிரம் ஆண்டுகாலமாக நம் பண்பாட்டில் உள்ளது. ஆகவே புதுமைப்பித்தன் போன்றவர்களுக்கு எதார்த்தத்தை இலக்கியத்தில் சொல்வது என்பது ஓர் அறைகூவலாகவும் அதற்கான கூறுமுறைகளைத் தாங்களே கண்டுபிடிக்கவேண்டியதாகவும் இருந்தது. அக்கதைகள் அன்றைய வாசகர்களுக்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஊட்டின. பட்டிவிக்கிரமாதித்தன் கதைகளைப்புரிந்து கொண்டவர்கள் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் போன்ற கதைகளின் உள்ளடக்கம் தெரியாது தவித்தனர்.

ஆனால் மூன்றாவது தலைமுறை வரும்போது தமிழகத்தில் வணிக எழுத்து மிகப்பரவலாகியது. தங்கள் வாழ்க்கையையே பகல்கனவு கலந்து திரும்ப எழுத்தில் வாசிக்கும் மனநிலை வாசகர்களிடம் வேரூன்றியது. ஆகவே தங்கள் வாழ்க்கையுடன் நேரடியான சாயல் இல்லாத எதையும் வாசிக்க முடியாதவர்களாகிவிட்டனர். எந்த ஒரு படைப்பும் தாங்கள் அறிந்த வாழ்க்கையின் இன்னொருவடிவமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் வாசகர்களிடம் இருந்தது. அது இலக்கியத்தின் ஒரு நிபந்தனையாக ஆனபோது இயல்பாக அது ஒரு தளையாக ஆகியது

யதார்த்தத்தை உதறி உள்ளுணர்வுகளை மட்டுமே பின்தொடரும் எழுத்துமுறை மேற்கில் எழுந்து புகழ் பெற்றிருந்தது. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவின் மாயயதார்த்தவாதம் ஐரோப்பாவில் உருவான மீயதார்த்தவாதம் போன்றவை. யதார்த்தவாதம் வாழ்க்கையின் ஒரு பகுதியை சித்தரிப்பது. அதன் உட்பொருளை அது சித்தரிப்பில் தொக்கி நிற்கச்செய்கிறது. அந்த உட்பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு அதை விரிவாக்கம் செய்ய தடையாக இருப்பது அந்த யதார்த்தச் சித்தரிப்புதான் என்னும் எண்ணம் அடுத்த தலைமுறையில் உருவாகியது. இலக்கியம் அன்றாட வாழ்க்கையை அல்ல, அவ்வாழ்க்கைக்கு அப்பால் இருப்பவற்றையே சொல்ல வேண்டுமென்று அவர்கள் வாதிட்டனர்.

அவ்வாறு உருவாகி வந்த புதிய தலைமுறை சிறுகதை ஆசிரியர்களில் கோணங்கி முதன்மையானவர். கொல்லனின் ஆறு பெண்மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், கருப்பன் போன பாதை, மாயாண்டிக்கூத்தனின் ரசமட்டம் போன்ற கதைகளில் அன்றாட வாழ்க்கையிலிருந்து உருவான கனவை மட்டுமே அவர் தன் மொழியில் எழுத முயன்றார். வரலாற்றிலும் நாட்டார் மரபிலும் உள்ள தொன்மங்களையுமம், கனவுகளையும் மறுஆக்கம் செய்வதன் மூலம் ஒரு புதுப் புனைவு உலகை நான் உருவாக்கினேன்.

எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றவர்கள் தங்களுக்கென யதார்த்தத்தைக் கடந்துசெல்லும் கூறுமுறையை உருவாக்கினார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அசோகமித்திரன் பாணியிலான புறவய எழுத்து நடையையும் வண்ணதாசன் போன்றோர் எழுதும் நெகிழ்வான உணர்வுகளையும் கலந்து மாயத்தன்மை கொண்ட எதார்த்தத்தை உருவாக்க முயன்றார். வெவ்வேறு வகையான கதைகளுக்கு நடுவே ஊடாடும் பொதுப்புள்ளியை தேடும் ஒரு கதை வடிவை யுவன் சந்திரசேகர் தன் புனைவுகளில் உருவாக்கினார். மாற்று மெய்மை என்று அவர் குறிப்பிடும் யதார்த்தத்தை மீறிய உளநிகழ்வுகளை எழுதுவதற்கான தளமாக சிறுகதையை அவர்கண்டார்.

சுரேஷ்குமார இந்திரஜித் அன்றாடவாழ்க்கைச்சித்தரிப்புக்குரிய மொழிநடையில் குறைவாகச்சொல்லும் ஒரு கதைவடிவை உருவாக்கி அதற்குள் மீறிச்செல்லும் சில தருணங்களைக் கண்டடைந்தார். மொழியின் கட்டற்றபெருக்காக கதையை அமைக்க முயன்றவர் என்று பா.வெங்கசேனைச் சொல்லலாம். சாரு நிவேதிதா நேர்கோடற்ற முறையில் அமைந்த சிறுகதைவடிவில், விவரணைகளற்ற நேர்ப்பேச்சுநடையில் சிறுகதைகளை எழுதினார்.

இதே காலகட்டத்தில் பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், பெருமாள் முருகன், சு.வேணுமோபால் போன்றவர்கள் தமிழில் அழுத்தமான யதார்த்தவாதச் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வந்தனர். ஈழ இலக்கியத்தில் சட்டநாதன், ரஞ்சகுமார் போன்ற அழுத்தமான சிறுகதையாசிரியர்கள் எழுத வந்தாலும் தொடரவில்லை. ஷோபா சக்தியே இன்றைய தலைமுறையின் முதன்மையான சிறுகதையாசிரியர். அங்கதமும் வரலாற்றுவிமர்சனமும் கொண்ட அவரது கதைகள் தமிழிலக்கியத்தின் முக்கியமான சாதனைகள்.

DSC_0541

யுவன் சந்திரசேகர்

 

[ 5 ]

 

தொண்ணூறுகளுக்குப்பிறகு உலகெங்கிலும் சிறுகதைகளில் ஒரு பெருந்தேக்கம் நிலவுவதைக் காணமுடிகிறது. நான் அமெரிக்காவின் பிரம்மாண்டமான புத்தக அரங்குகளில் சிறுகதைக்கான பகுதி மிககுறைவாக உள்ளதைக் கண்டிருக்கிறேன். சிறுகதைகளைப் பிரசுரிக்கும் ஊடகங்கள் கூட மேற்கே மிக குறைந்துவிட்டன.  நாவல்கள்,வாழ்க்கை வரலாறு, பல்வேறு வகையான நுண் வரலாற்றுச் சித்தரிப்புகள், இதழியல் சார்ந்த நூல்கள் ஆகியவையே வாசகர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்படுகின்றன. சிறுகதைகளிலே கூட அறிவியல் புனைகதைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பிறவற்றுக்கு இல்லை. இப்போக்கு இந்தியா முழுக்க பிரதிபலிக்கிறது. தமிழிலும் அதைக் காண முடிகிறது.

சிறுகதையின் தேக்கத்திற்கான காரணங்களில் முதன்மையானது அதன் வடிவம்தான் என்று தோன்றுகிறது. நாவல் நெகிழ்வான வடிவம் கொண்டது, ஆகவே அது பலவகையான வடிவச்சோதனைகளுக்கு இடமளித்து ஏராளமான வெற்றிகரமான புதுமைகளை நிகழ்த்தியது. சிறுகதை வடிவம் அதன் இறுதிமுடிச்சு அல்லது உச்சம் என்னும் வடிவத்தால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அந்த கச்சிதமே அதன் அழகு. அது புகழ்பெற்றது அதனால்தான். அதுவே அதன் எல்லையும்கூட.

சிறுகதையில் பலவகையான வடிவமீறல்கள், சோதனைகள் நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் அவ்வடிவை இல்லாமலாக்கும்வகையிலேயே முடிந்தன. அவை மீண்டும் கவித்துவக்குறிப்பு குறுங்கதை ஆகிய பழைய வடிவங்களையே சென்று சேர்ந்தன. வாசிப்பில் அவை பெரிய அளவில் ஈர்க்கவுமில்லை.உலகஅளவில் இன்று சிறுகதையில் பெரிய வடிவச் சோதனைகள் ஏதும் நிகழவில்லை. மீண்டும் செவ்வியல்சிறுகதைவடிவமே புகழுடன் இருக்கிறது. மேலும் அறிவியல்புனைகதைகளுக்கு அவற்றுக்குரிய திகைப்பூட்டும் உச்சத்தை அளிக்கும் வடிவமாக சிறுகதை உள்ளது.

இன்னொன்று, பின்னவீனத்துவ எழுத்துமுறைக்குச் சிறுகதை உகந்ததாக இல்லை என்பது. சிறுகதை முரண்பாட்டை முன்வைப்பது. ஆகவே அது எதிரீடுகளை முதன்மையாக கவனிக்கிறது. பின்நவீனத்துவம் எதிரீடுகளை நிராகரிக்கிறது. ஊடுபாவுகளின் சிடுக்குகளை விளையாட்டை முன்வைக்கிறது. நாவல் அந்நோக்குக்கு மிக உகந்ததாக இருந்தது. சிறுகதை அதற்கு உதவவில்லை. ஆகவே நவீன இலக்கியத்தில் சிறுகதையின் இடம் குறைந்தது.

தமிழின் இன்றைய சிறுகதை எழுத்தாளர்களில் பலர் முன்னரே எழுதப்பட்ட சிறுகதை முறைமைகளை உடைத்தும் மறுஆக்கம் செய்தும் எழுத முயன்றனர் முந்தைய சிறுகதை ஆசிரியர்களால் அழகியல் நோக்குடனோ ஒழுக்க நோக்குடனும் சற்று மங்கலாக எழுதப்பட்ட வன்முறை பாலியல் போன்றவை வீரியத்துடன் விரித்தெழுதும் முறை தமிழில் உருவாகியது. எஸ்.செந்தில்குமார். கே.என்.செந்தில் ஜே.பி.சாணக்யா, லக்ஷ்மி சரவணக்குமார் போன்றவர்களின் சிறுகதைகள் இத்தகையவை.

கே.என்.செந்தில் எஸ்.செந்தில்குமார் போன்றவர்கள் யதார்த்தமான கதைகூறுமுறைக்குள் பாலியல், வன்முறை சார்ந்த உளநுட்பங்களைச் சொல்கிறார்கள். ஜே.பி.சாணக்யா அவற்றை சற்றே கவித்துவத்துடன் எழுதுபவர். இவ்வகை எழுத்துக்கான முன்னோடியாக ஓரிரு சிறுகதைகளை லக்ஷ்மி மணிவண்ணன் எழுதியிருக்கிறார். இவ்வகை எழுத்து தமிழில் உருவாவதற்கான சமூக உளவியல்காரணங்கள் பல. பொதுவாக, சென்ற கால எழுத்தைக் கொந்தளிக்கச் செய்த அடிப்படையான தத்துவ, அரசியல் வினாக்கள் மறைந்து அந்த வெற்றிடத்தில் பாலியல் சிடுக்குகள் எடுத்துக்கொள்கின்றனவா என்னும் ஐயம் எனக்குண்டு.

இன்றைய சிறுகதைகளின் மிக முக்க்கியமான இன்னொரு அம்சம் எழுதும் ஊடகத்தில் உருவாகியுள்ள மாற்றம். இன்று வார இதழ்கள் தொடர்ச்சியாக சிறுகதைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் கூட இணைய ஊடகம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இணையம் உரைநடையில் அடிப்படையான மாற்றத்தை உருவாக்குகிறது. ஒன்று, அது கைபேசியில் விரல்களால் தொட்டு தட்டச்சு செய்யும் பழக்கத்தை உருவாக்கியது. முகநூலில் மிகச்சுருக்கமான பதிவுகளை போட்டு வாசிப்பையும் எதிர்வினைகளையும் பெறக்கூடும் பழக்கம் உருவாகியது. விளைவாக குறுகிய சொற்றொடர்களும், சிறிய சித்தரிப்புகளும், வர்ணனைகள் அற்ற விவரணைகளும் கொண்ட ஒரு கூறுமுறை பிறந்தது

ஓர் உலகத்தை உருவாக்கி அதற்குள் வாசகனை பயணம் செய்யவைப்பதற்கு பதிலாக அவன் உடனடிக்கவனத்தை கோரி, அவன் பிரக்ஞையின் ஒரு பகுதியை சுண்டிவிட்டுச் செல்லும் ஒரு எழுத்துமுறை வந்தது. அவ்வெழுத்து முறையில் வெற்றிகரமாக செயல்படுபவர் என்று போகன் சங்கரைச் சொல்லலாம். பரவலாக படிக்கப்படும் அராத்து போன்றவர்களின் கதைகளும் இத்தகையவே. சிறுகதைகளில் இன்று வாசிக்கக்கிடைக்கும் புதிய போக்கு என்று இதைச் சொல்லலாம். இதை சிறுகதை என்று சொல்வதை விட குறுஞ்சித்தரிப்பு என்றே சொல்ல முடியும். அவர்கள் இதை குறுங்கதைகள் என்னும் வடிவமாகச் சொல்கிறார்கள். இது ஒருவகையில் நவீனக்கவிதையில் இன்று உருவாகியிருக்கும் நுண்சித்தரிப்பு என்னும் முறையின் இன்னொரு வடிவமாகவும் படுகிறது.

சிறுகதை என்னும் வடிவிலிருந்து முக்கியமான இளைய படைப்பாளிகள் நாவல் நோக்கி செல்வதையே காணமுடிகிறது, இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இதுவே நிகழ்கிறது. எதிர்காலத்தில் சிறுகதை குறுங்கதை என்னும் வடிவிலிருந்து மேலே செல்லுமா, நீண்ட சிக்கலான கதைகளாக தன்னை உருமாற்றிக்கொள்ளுமா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள். இலக்கியத்தில் என்ன நிகழுமென முன்னரே சொல்லிவிடமுடியாதென்பதே அதன் வசீகரம்.

தடம் இலக்கிய இதழ் ஜூன் 2016

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 89

$
0
0

பகுதி பன்னிரண்டு : பங்குனி

இருளோரும் ஒளியரும் இழுத்த நச்சுவடத்தின் நடுவே சுழன்ற திகிரி நுரைத்து நுரைத்துத் தயங்க எழுந்தது முதல் அமுதத்துளி. அதன் நேர்கீழே விரிந்திருந்தது பன்னிரு படைக்களம். நிறைந்து கவிந்தது கலம். இமையாவிழிகள் கனிந்து திறந்திருந்தது அன்னைப்பெருமீன். அதிலெழுந்தனர் ஐந்து அன்னையர். துர்க்கையும் லட்சுமியும் சரஸ்வதியும் சாவித்ரியும் ராதையும் இதழ்களில் மென்நகை ஒளிவிட அஞ்சலும் அருளலும் காட்டி நின்றனர்.

ஒழியா ஊற்றின் விழிதிறந்து வந்து நிறைத்தபடியே இருந்தனர். கங்கை, துளசி, மானசை, தேவசேனை, மங்களசண்டிகை, பூமி, ஸ்வாகை, தட்சிணை, தீக்‌ஷை, ஸ்வாதை, ஸ்வஸ்தி, புஷ்டி, துஷ்டி, ஸம்பத்தி, திருதி, ஸதி, யோதேவி, பிரதிஷ்டை, ஸித்தை, கீர்த்தி, கிரியை, மித்யை, சாந்தி, லஜ்ஜை, புத்தி,  மேதா, திருதி, மூர்த்தி, ஸ்ரீ, நித்ரை, ராத்ரி, சந்த்யை, திவா, ஜடரை, ஆகுலை, பிரபை, தாஹிகை, ஜரை, ருத்ரி, ப்ரீதி, சிரத்தா,  பக்தி என ஒன்றிலிருந்து நூறென ஆயிரமென பல்லாயிரமென கோடியென முடிவிலியென பெருகினர்.

பன்னிரு படைக்களத்தில் களம்தோறும் நின்றிருந்தனர் தெய்வங்கள். மூதேவர். முப்பத்துமுக்கோடியர். முனிவர். மூதாதையர். ஒன்றென நின்றனர். இரண்டாகிப் பிரிந்து இணைந்தாடினர். இருள்கள் ஒளிகள். சொற்கள் பொருள்கள். இன்மைகள் இருப்புகள். மையங்கள் முடிவிலிகள். இரண்டிலியென்றானாள். இருளொளி. இங்கங்கு. இவளவள். இன்மையிருப்பு.

பன்னிரு ஆதித்யர்கள் எழுந்த பெருங்களம். ஆடும் காளையும் இணையும் நண்டும் சிம்மமும் கன்னியும் துலாவும் தேளும் வில்லும் மீனும் கலமும் விழிமீனும் நிரந்த வெளி. அத்தனை அசுரர்களும் அரக்கர்களும் படைக்கலமேந்தி களம்நின்றனர். தெய்வங்கள் களம் வந்தன.நடுவே நின்றிருந்தாள். தன்னைத்தான் சூழ்ந்திருந்தாள். தன்னை வென்றாள். தன்னைக் கடந்தாள். தான் மட்டுமே இருந்தாள்.

“ஐந்தென எழுந்தவள் வாழ்க! அன்னை எழுந்த களம் வாழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” இந்திரப்பிரஸ்தத்தின் கொற்றவைக் கோயில் முன் வெறியாட்டெழுந்து கூவினான் பூசகன். “குன்றா ஒளியே. குறையா கதிரே. இருண்டவளே. கதிராயிரம் மூழ்கும் கசடே. அன்னையே. அணைக! அணைக! இங்கணைக தேவி!”

“ஆக்கும் அல்குல். ஊட்டும் இணைமுலைகள். எரித்தழிக்கும் விழிகள். இணைக்கும் ஈரடிகள். இருத்தும் இன்மையின் பீடம்.  பிறப்பு, செல்வம், தந்தை, நட்பு, மைந்தன், எதிரி, துணைவி, இறப்பு, நல்லூழ், தீயூழ், வருவினை, செல்வினை என பன்னிரு கொடைகளென உடன் சூழ்ந்துள்ளவள். நீ இங்கமைக! இப்பன்னிரு படைக்களத்தில் அமைக!”

முப்புரி வேலேந்தி வெறிநடனமிட்டான் பூசகன். அவன் தொண்டையிலிருந்து எழுந்தது ஆயிரம் தலைமுறைகண்ட மூதாதையரின் குரல் “குருதி எழுக! குருதியின்றமையாது அறமென்றறிக மானுடரே! வெங்குருதி எழுக! நீரென்றும் நெருப்பென்றுமான அமுதமே குருதி! அன்னையே குருதிசூடுக! செங்குருதி சூடுக! இதோ எழுகிறது பலிபீடம். இதோ தன்னை தான் வைத்து காத்திருக்கிறது பலிவிலங்கு. அவிகொள்க! ஐந்து குழல்களில் நிணம் நீவி முடித்து அமர்க! அன்னையே, அடியவர் தலைமேல் கால்வைத்து அமைக! மண் வென்றமைக! அன்னையே, விண்சூடி அமர்க!”

பலிபீடத்தின் மேல் கால்கள் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது எருமை. அங்கிருந்த புகையின், எழுந்துசூழ்ந்த முரசொலியின், பந்தச்செவ்வொளியின் அலையில் அது விழி அயர்ந்து சித்தமென்றே ஆகி அமைந்திருந்தது. முகில்மடிப்புகளுக்கு அப்பால் எழும் கோடையின் முதல் இடியோசை என சிம்மக்குரல் இருளில் எழுந்தது.

[பன்னிரு படைக்களம் நிறைவு]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள்: கடிதம்

$
0
0

அன்பின் ஜெ,

நலமா?  ஐரோப்பிய பயணத்தில் இருப்பீர்களென்று எண்ணுகிறேன்.சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

விகடன் தடம் இதழில் சிறுகதையின் நூற்றாண்டு வரலாற்றினைப் பற்றிய கட்டுரை நல்ல பதிவு. சிறுகதை என்பதன் வீச்சு அதன் குறுகிய எல்லையே.அதற்குள் வாசிப்பவரை இழுத்து மூழ்கடிக்க சொற்களும் வடிவும் முக்கியமானவை.சிறுகதை இன்று தேக்கமடைந்ததாக இருப்பினும் எழுதப்பட்ட மிகச்சிறந்தவை தேடித்தேடி வாசிக்கப்படுகின்றன.தமிழில் அழியாச்சுடர் போன்ற இணையதளங்களில் மௌனி,புதுமைப்பித்தன்,ஆதவன்  தொடங்கி முக்கிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன.எனவே சிறுகதைகளின் ஈர்ப்பு ஆரம்ப வாசிப்பில் இளம் வாசகர்களை இழுப்பதில் மிக முக்கியமானது என கருதுகிறேன்.தீவிர எழுத்துகளை பெரும் நாவல்களை வாசிக்க சிறந்த சிறுகதைகளை வாசிப்பது நல்ல பயிற்சியாக அமையும்.தனிப்பட்ட முறையில் என்னிடம் வாசிப்பு பற்றி கேட்கும் என் மாணவர்களுக்கு நான் பெரும்பாலும் சிறுகதைத் தொகுப்புகளையே பரிந்துரை செய்வதுண்டு.அதன்பிறகு அவர்கள் தேடி பிற ஆக்கங்களுக்குள் வருவார்கள்.

தமிழிலும் பிற மொழிகளிலும் சிறுகதைகளின் வளரச்சி,வடிவமைப்பு பற்றிய உங்கள் கட்டுரை மிக முக்கியமானது.இன்று பல்வேறு இணைய இதழ்களிலும்,வலைப்பூக்களிலும் எண்ணற்ற சிறுகதைகள் எழுதப்படுகின்றன.இணையத்தின் கட்டற்ற போக்கினால் அனைத்து வகையான வாசிப்போரும் வாசிக்கின்றனர்.இலக்கியம் பற்றிய அறிமுகமேயற்ற பேஸ்புக் ,ட்விட்டர் இரண்டு வரி வாசிப்பாளர்கள் வணிகசாயல் கொண்ட எழுத்திற்கும்,இலக்கிய ரீதியான நுண்மைகளுக்கும் வேறுபாடு உணர முடியாமல் இது தானா இலக்கியம் என்ற போக்கில் எதிர்வினையாற்றுகின்றனர். எப்படியோ வாசிக்கிறார்களே என்று மட்டுமே தோன்றுகிறது.சரியான விமர்சனங்கள் தமிழில் இல்லாததும் அதற்கு காரணமாக இருக்கலாம்.எப்படியாயினும் நல்ல எழுத்துகள் வாசகர்களை சரியாகச் சென்றடைகின்றன என்றே நம்புகிறேன்.

சிறுகதையில் நிகழ்ந்த பல்வேறு வடிவ மீறல்களும் சோதனைகளுமே அதன் அழகியல்.அதனாலேயே அவை முக்கியத்துவம் பெறுகின்றன.இன்றைய சிறுகதையில் நீங்கள் கூறுவது போல் பாலியல் வன்முறை சார்ந்த நுட்பங்கள் தான் அதிகம்.அதிர்ச்சியான இலக்கிய உக்தி இது என்றே நானும் எண்ணுவதுண்டு.

எப்படியாயினும்  இன்னும் பதிவு செய்யப்படாத எழுதப்படாத இன்றைய வாழ்வியல் சிறுகதையில் அதிகம் உண்டு.நாவல்கள் அளிக்கும் கட்டற்ற வெளி சிறுகதையில் இல்லை என்பதாலேயே அதிகம்பேர் சிறுகதைகள் எழுதுவதில்லை.சிறந்த சிறுகதையில் வாசகனுக்குத் தேவையானவற்றை குறிப்பிட்ட எல்லையில் கூறுவது சவாலானதே.சிறுகதைகள் குறுஞ்சித்தரிப்புகளாக குறுங்கதைகளாக எழுதப்பட்டாலும் அவற்றின் இலக்கிய ரீதியான தரம் சற்றே குறைவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

திஜா,வண்ணநிலவன் போன்றோரின் உணர்வு சார்ந்த  எழுத்துகளையும்,கிரா,சுரா என்று அழகியல் சார்ந்த எழுத்துகளையும் என்று நீங்கள் கூறுவது போன்ற தரம் இவற்றிற்கு உள்ளதா என்பதும் ஐயமே.

இணைய எழுத்துகள் சரியாக எடிட் செய்யப்பட்டால் அவற்றின் வடிவம் வீச்சு சரியாக அமையும் என்று தோன்றுகிறது.அசோகமித்திரன் போன்று மிகையற்ற ,எதார்த்தவாத அன்றாட வாழ்க்கையை கூறும் எழுத்துகளே இன்றைய தேவை என்று எண்ணுகிறேன்.மிகையுணர்வுகள்,நுட்பங்கள் என்ற பெயரில் சலிப்பூட்டும் அதிர்ச்சிகர விவரணைகள் சிறுகதைகளைத் தேக்கமுறச் செய்கின்றன.சிறுகதையின் வளர்ச்சியைப் பற்றிய கட்டுரை என்னைத் தெளிவாக்கியது.

நன்றி

மோனிகா மாறன்.

தொடர்புடைய பதிவுகள்

வரலாற்று ஊகங்களை அணுகுதல்

$
0
0

q

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம். சமிபத்திய ‘சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு’ பிரசுரமான செய்தி தொடர்ந்து அவை ஆமோதிக்கும் சில கருத்துக்கள்.

கங்கா யமுனா சரஸ்வதி என்றே நினைவு வைத்திருந்தமையால் இந்த புத்தகத்தின் தலைப்பே (என்னது இந்திரா காந்தி செத்துடாங்களா… ;)) ஆர்வமுட்டியது. மேற்படி புத்தக விவரங்கள் நிங்கள் அறிந்தவைதான். இருப்பினும் ஒரு சாமானியனாக பெரும் உற்சாகம் ஏற்ப்பட்டது புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கீழ் வரும் செய்திகள்.

கூறிப்பாக, படிக்கையில் நிச்சியமாக ஓன்றிரண்டு செய்திகளில் நம்மை நேரடியாகவே தொடர்புபடுத்தி பார்க்காளாம். உதாரணங்கள், பகடைக்காய்கள் உருவவொற்றுமை, அரச இலைகள் பயண்பாடு, காக்காய் வடை சுட்ட கதை!

இன்னும் சில வற்றை ஒப்பிட்டுழதொடர்புபடுத்தி பார்க்காளாம் என்றே தொன்றுகிறது, அவைகள் புள்ளி கோலங்கள் (இந்த வகை கோலங்கள் பற்றி தனி மடல் விரைவில் அனுப்ப நினைத்துள்ளேன்) மற்றும் தரை ஓடுகள். செட்டிநாட்டு வட்டாரங்களில், திருவிழா காலங்களில் புள்ளி கோலங்கள் இன்னும் பிரசித்தி (இரத விதிகளில் மிக பெரிதாக இடப்பட்டிற்க்கும்) என்றே சொல்லலாம். மேலும் இந்த வகை கோலங்களிலிருந்து பரிணாமம் பெற்றுது போன்ற கோலங்கள் நகரத்தார் விசேஷங்களில் (http://elvisalakshi.blogspot.in/2011/04/chettinadu-kolam-for-pongal-marriages.html) கண்டிப்பாக இடம் பேற்றிருக்கும். இதே போல, தரை ஓடுகளை இன்று புலக்கததிலுள்ள ஆத்தங்கூடி தரை (http://www.peacockcolours.com/home-living/flooring/athangudi-tiles) ஓடுகளுடன் ஓப்பிடளாம்.

மக்களாள் (நாகரிகத்தால்) மதிப்பாக போற்றப்பற்ற ஒரு மறைந்து நதி, அவை மறக்கபடக்கூடாது என்ற வகையில் அந்த பெருமைகளை தொடர்ந்து காத்து வந்தது, உதாரணமாக, சரஸ்வதி வழிபாடு நதியின் கூறியாக கையில் கமன்டலம். அனைத்து (நுன், நினைவு)அறிவு தொடர்பானவைகளுக்கு முதல் கடவுள் இவளே. இதன் மூலம் எத்தனை தலைமறைகள் பிறப்பேடுத்தாலும் சரஸ்வதி மறக்கப்படமாட்டாள். ‘கங்கா யமுனா சரஸ்வதி…. கங்கா யமுனா சரஸ்வதி….’ என்று நாலாயிரம் வருடங்களாக ஒரு செய்தி வாய் வழியாகவே காத்து வரப்படுகிறது என்பது என்னும் பிரம்மிப்பு! மரபின் சிறப்பு என்றும் சொல்லலாம்தானோ?

இந்த அனுபவம் எனக்களித்த உற்சாகமன்பது, எங்கள் ஊரில் மடத்தில் நடைபெறும் இராமயணம் பிரங்கம் தொடர்ந்து நடைபெற இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற கொள்கை ஏற்படுத்தியது.

நன்றி!

நாராயண்ன் மெய்யப்பன்

 

 

அன்புள்ள நா.மெய்யப்பன்

மிஷேல் டானினோவின் இந்நூலின் மையக்கருத்துக்களை ஒட்டிய பல கட்டுரைகளை முன்பு சொல்புதிதில் வெளியிட்டிருக்கிறோம். இந்நூலின் முன்னூகங்கள் பலவகையிலும் முக்கியமானவை என நினைக்கிறேன். பண்பாட்டு, வரலாற்று முன்னூகங்களுக்குள்ள கட்டற்ற பாய்ச்சல்களும் ஆதாரமற்ற எழுச்சிகளும் இந்நூலிலும் உண்டு. ஆனால் இப்படித்தான் புதிய வாயில்களைத் திறக்கமுடியும் என்பதே இத்தகைய நூல்களின் சிறப்பு. இவ்வூகங்களில் கணிசமான பகுதி கறாரான ஆய்வுகளின் போக்கில் மெல்லமெல்ல மறுக்கப்படும். ஆனால் இவை ஒரு திசைதிரும்பலை உருவாக்கவும் செய்யும்.

 

இத்தகைய நூல்களை வாசிக்கையில் நாம் கொள்ளவேண்டிய எச்சரிக்கை ஒன்றுண்டு. ஒன்று, இவை ஆய்வுக்களத்தில் செய்யப்படும் முன்னூகங்கள். ஆய்வு முடிவுகள் அல்ல. ஒரு வரலாற்றுப் பண்பாட்டுக்களத்தில் ஆய்வுமுடிவுகள் என்பவை மெல்லமெல்ல தொடர்விவாதத்தின் இறுதியில் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டு உருவாகி வருபவை. முன்னூகங்களைத் தெரிந்துகொள்ளலாம். மிகை உற்சாகம் அடைந்துவிடக்கூடாது. அவற்றை ஒட்டி நாம் நெடுந்தூரம் சென்றுவிடக்கூடாது. ஏனென்றால் நாம் ஆய்வாளர்கள் அல்ல. அதற்கு எதிரான தரப்புகளையும் தெரிந்துகொண்டு அக்களத்தில் நாமும் இருப்பதே நாம் செய்யவேண்டியது.

 

ஆனால் , இதைப்போன்ற முன்னூகங்களை மூர்க்கமாக எதிர்ப்பவர்களையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் மதம், இனம் சார்ந்த முன்முடிவுகளில் கெட்டிதட்டிப்போனவர்கள்.பொதுவாக இந்தியா குறித்து, கீழைப்பண்பாடு குறித்து மேட்டிமைநோக்குடனும் ஆதாரமான கசப்புடனும் [அதற்குக் காரணம் மதக்காழ்ப்ப்பு அல்லது இனக்காழ்ப்பு என்பது எளிதில் ஊகிக்கக்கூடியது] ஆராய்ச்சிசெய்து ‘இறுதிமுடிவுகளை’ நம் மீது திணிக்கும் மேலைநாட்டு ஆய்வாளர்களே எண்ணிக்கையில் அதிகம். அவர்கள் அதற்கு ‘அறிவியல் அணுகுமுறை’ என்னும் ஒரு பாவனையை முன்வைப்பார்கள். ஆனால் அவர்களின் முன்முடிவுகளுக்கு எந்த அறிவியலடிப்படையையும் நாம் கோரமுடியாது.

 

இந்தியாவுக்கும் இந்துப்பண்பாட்டுக்கும் எதிராக எது சொல்லப்பட்டாலும் அது அறிவுபூர்வமானது என நம்பும் ஒரு மேலைநாட்டு ஆய்வாளர்வட்டமும் அவர்களே ஆய்வுக்களத்தின் இறுதிநீதிபதிகள் என எண்ணும் அடிமைக்கூட்டமும் நிறைந்துள்ள இந்தியப்பண்பாட்டு- வரலாற்றுச் சூழலில் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்புகளைச் சொல்லக்கூடியவை என்பதனாலேயே இத்தகைய நூல்கள் முக்கியமானவை. இவை ஒரு வகையில் புதியசாத்தியங்களை திறந்துவைக்கின்றன. இவற்றின்முடிவுகளை அல்ல கோணங்களை மட்டுமே நாம் கணக்கில்கொள்ளவேண்டும்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நமது நீதிமன்றத்தீர்ப்புகள்….

$
0
0

index

அன்பின் ஜெ..

பெருமாள் முருகன் தீர்ப்பில், “நீதி மன்றத்தின் தீர்ப்பில் சற்றே நம்பிக்கை வருகிறது” என்னும் போலி அறப்பாவனையை சொன்னீர்கள்.

உங்கள் வாக்கியத்தில், நீதி மன்றத்தில் பெரும் அறத்தீர்வுகளே வருகிறது என்னும் பாவனையும் உள்ளது. பெரும்பாலும் முற்போக்கு; விதிவிலக்குகள் அபூர்வம் என.

இதை புள்ளியியல் கொண்டு விளக்க முடியாது; தரவுகள் இல்லை. ஆனால், நீங்கள் சொல்லும் விதிவிலக்குகள் சிலவற்றைக் குறிப்பிடத் தான் வேண்டும்.

இதில் ஆதி முதல்வர், குமாரசாமி. பெரும் கற்பனைத் திறமும், காவியச் சாயலும் கொண்ட தீர்ப்பு அது. தில்லியில் ஜெஸ்ஸிகா என்னும் பெண்ணின் கொலை வழக்கு பின் பெரும் திரைப்படமாகவும் வந்தது. மான் வேட்டை புகழ் கான் காரோட்டிய வழக்கில் மனம் பிறழ்ந்து மரித்த ஒரு சாதாரண போலீஸ் சாட்சி.

சமீபத்தில் இரு திருவாய்மொழிகள் உதிர்ந்துள்ளன – ஒன்று – வருமானத்துக்கு மேல் சொத்து சேர்ப்பது தவறில்லை. ஆனால், அந்தப் பணம், தவறான வழியில் வந்தால்தான் தவறு.. இந்த ஸ்டேட்மெண்டின் உள்ளர்த்தம் – ஒரு நல்ல வக்கீல் சொல்ல முடியும். இன்னொன்று குஜராத் கலவரத்தில், கொல்லப்பட்ட எஹ்ஸான் ஜாஃப்ரியைப்பற்றிய ஒரு வாக்கியம் – அங்கே அவர் தன் துப்பாக்கியால் சுட்டதுதான்அவர் கொல்லப்படக் காரணம் என்ற வாக்கியம்.

பெரும்பாலும், வியாபார சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கல்கத்தா கோர்ட்களில் போடப்படும். உலகின் மிக நேர்மையான கோர்ட்கள் உள்ள நகரம் அது என்பதால். கடந்த 25 ஆண்டுகளாக, பெரும் நிறுவனங்களில், நான் கண்ட வழக்குகள் பலவும், எந்த நீதிபதி, எந்தக் கோர்ட், எவ்வளவு வழக்கறிஞர் ஃபீஸ் என்றுதான் பேசப்பட்டிருக்கின்றன.

மிகச் சமீபத்தில், நான் பணிபுரிந்த நிறுவனத்துக்கு எதிராக ஒரு தீர்ப்பு ஒரு கீழ்க்கோர்ட்டில் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம் – ஏனெனில், எங்களுக்கு ஒரு நோட்டிஸ் கூட இல்லை. பின் விசாரித்த போது தெரிந்தது, நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக கோர்ட்டில் தகவ்ல் இருந்தது, ஆனால், எங்களுக்கு வந்து சேரவில்லை – தீர்ப்பின் நகல் வந்த அடுத்த நாள் நோட்டிஸ் வந்தது. பின்னர் என்ன செய்வது என்று யோசித்த போது, உடனே ஹை கோர்ட் செல்ல வேண்டும் எனச் சொல்லப்பட்டது. அங்கே வழக்கறிஞர் பீஸ் 3 லட்சம் – அதற்கான தொகை செக்காகவும், ரசீதுடனும் தரப்பட்டது. ஆனால், அத்தொகையில் ஒரு பங்கு எங்கு சென்றது என்று அனைவருக்கும் தெரியும்.

நீதிமன்ற விவகாரங்களில், கீழ் மட்டத்தில் ஊழல் மலிந்திருப்பது சாபக்கேடு – தனிப்பட்ட முறையில் பெரும் நீதிபதிகளைக் கேளுங்கள் சொல்வார்கள்.

no one killed jessica என, ஜெஸ்ஸிகா கொலைவழக்கில் தீர்ப்பு வந்த நாளன்று டைம்ஸ் தலைப்புச் செய்தி வெளியிட்டது. No one could prove income beyond means எனத் தீர்ப்பு வரும் நன்னாளை எதிர்நோக்கியிருக்கிறேன்.

மிக அற்புதமான முற்போக்கான தீர்ப்புகளை, நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மெஜாரிட்டியா மைனாரிட்டியா என்பதே கேள்வி.

ஒரு தீர்ப்பு வந்தவுடன், அதன் சரி / தவறுகளைப் பேசுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மற்ற விவாதங்கள் எல்லாமே பாவனையாக இருக்கலாம்.

பாலா

 

 

 

 

அன்புள்ள பாலா,

வழக்கம்போல ‘நான் சொல்லவந்தது அது இல்ல’ என்ற கட்டுரையை எழுத வாய்ப்பளித்தமைக்காக வழக்கம்போல நன்றி

நான் சொல்ல வந்தது இதுதான். “சமூக அறம் சார்ந்த, அடிப்படை உரிமை சார்ந்த விஷயங்களில் இந்திய நீதிமன்றங்கள் மிகப்பெரும்பாலும் முற்போக்கான தீர்ப்புகளையே வழங்கியிருக்கின்றன. விதிவிலக்குகள் மிகக்குறைவு”

என் வரிகள் இவை

இத்தகைய அடிப்படை விஷயங்களில் இறுதித் தீர்ப்புகள் எப்போதுமே முற்போக்கானவையாகவே உள்ளன – விதிவிலக்கு மிக அபூர்வம். சூழியல் சார்ந்து, மானுட உரிமைகள் சார்ந்து, அடிப்படை உரிமைகள் சார்ந்து சமரசமில்லாத ஒரு நிலைபாட்டையே எப்போதும் நீதிபதிகள் கொண்டிருக்கிறார்கள்

நீங்கள் அதை இப்படி விளக்கிக்கொள்கிறீர்கள். “இந்திய நீதிமன்றங்களில் பெரும்பாலும் சரியாகவே நீதி வழங்கப்படுகிறது. விதிவிலக்குகள் மிகக்குறைவு”. நீங்கள் சொல்லியிருக்கும் பதில் முழுக்க உங்கள் புரிதலுக்கு எதிராகச் சொல்லப்பட்டது. நான் சொன்னவற்றுக்கு எதிராக அல்ல..

உண்மையில் இந்த வேறுபாடு மிகமுக்கியமானது. அதைச்சுட்டிக்காட்டவே நான் எழுதினேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையும், வழிகாட்டுநெறியும் உண்மையிலேயே மகத்தானவை. ஓரு மானுட சாசனம் என்றே சொல்லத்தக்கவை. அது உருவான காலகட்டத்தில் அதற்கு நிகராக உலகில் மிகச்சிலவே இருந்தன.

பெரும் மானுடநேயமும், இலட்சியக்கனவும் கொண்ட வரிகள் அவை. மனஎழுச்சி இல்லாமல் அவற்றை என்னால் வாசிக்கமுடிந்ததில்லை. அவற்றை எழுதிய அம்பேத்கர், அவருடன் இணைந்து அரசியல்சாசன உருவாக்கத்தில் பணியாற்றிய பிறர் நம் தலைமுறையின் வணக்கத்திற்குரியவர்கள்

அடிப்படை விஷயங்களில் தீர்ப்புக்கள் வருகையில் பெரும்பாலும் நீதிபதிகள் அரசியல் சாசனத்தின் உள்ளக்கிடக்கையை கருத்தில் கொண்டே தீர்ப்பளிக்கிறார்கள். அதுதான் சாத்தியம், இல்லையேல் நிற்காது. ஆகவேதான் அவை முற்போக்கானவையாக இருக்கின்றன. விதிவிலக்குகள் மிகக்குறைவே.

உண்மையில் ஒரு சமூகத்தின் பொதுவான அறமனநிலையின் வெளிப்பாடாகவே நீதிமன்றமும் அமையும். ஆனால் இந்தியாவில் இந்திய மக்களின் பொது அறமனநிலையை விட நீதிமன்றத்தீர்ப்புகள் முற்போக்கானவை. சாதிப்பாகுபாடுகள். பெண்ணுரிமை, உழைப்பாளர் உரிமை போன்றவற்றில் தீர்ப்புகள் வந்தபின்னரே சமூகம் அவற்றைப்பற்றி விவாதித்து அவற்றை நோக்கி நகர்கிறது. இதை உணர நாளிதழ்களை வாசித்தாலே போதும். நான் சுட்டிக்காட்டியவை இவையே

இது நம் முன்னோர் நமக்கு வகுத்தளித்தது.நம் தேசக்கட்டமைப்பின் ஆதாரம். ஒருவகையில் இந்திய அரசியல்சட்டத்தை நம் மூதாதையர் அளித்த செல்வம் என்றே சொல்வேன். இன்றைய நீதிவழங்கல்முறை என்பது அதை நாம் பயன்படுத்தும் வழி. அதில் நம் சமூகத்தின் அத்தனை சீரழிவுகளும், சிறுமைகளும் வெளிப்படுகின்றன. நம்மைப்போலவே நாம் நீதிமன்றங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதன்பின் நீதி இல்லை என்று குறைகூறுகிறோம்.

இந்தவேறுபாடு மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த வேறுபாட்டை உணராமல் நாம் எந்த சுயவிமர்சனமும் செய்ய முடியாது. ஊழல்மிக்க அரசை நாம் தான் தேர்வுசெய்கிறோம். அந்த அரசு ஊழல் நீதிபதிகளை நியமிக்கிறார்கள். நீதிபதிகள் நம்மிடமிருந்து வருபவர்கள். அவர்களை நாம் சூழ்ந்து நின்று கீழே இழுக்க முயன்றபடியே இருக்கிறோம். இருந்தும் இங்கே நீதி எஞ்சியிருக்கிறது. அரசியலில் ஊழலை நாம் அனுமதித்தால் நீதியில் எங்கே நேர்மை திகழமுடியும்? அரசியல் ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் ஒருவர் நீதிமன்றம் பற்றி என்ன கருத்து சொல்ல தகுதியானவர்?

அது நம்முடைய கீழ்மை. நமக்களிக்கப்பட்ட மிகப்பெரிய வாக்குதத்தத்தை நாம் சீரழித்ததன் சித்திரம் அது. அதை அறியாமல் நீதியமைப்பை குறைசொல்வது பெரும் அறியாமை. அது நம்மை மேலும் கீழிறக்குவது. பெரிய அறசீலர்கள் போல பேசுபவர்கள் அடிப்படையை சீரழிக்கிறார்கள்.

நீங்கள் அறிந்த அளவுக்கே எனக்கும் நீதிமன்றத்தில் நிகழும் ஊழல்கள், நெறியின்மைகள் பற்றித்தெரியும். அதையேகூட இருவகைகளாகவே பிரித்துப்பார்க்கவேண்டும். ஒன்று, ஒரு சமூகத்தின் இயல்பான அயோக்கியத்தனம் நீதிமன்றத்தில் வெளிப்படுவது. இங்கே நிகழ்வது அதுதான்.

நீதிமன்றம் ஒரு முறைகேட்டை, ஊழலைச் சுட்டிக்காட்டினால் நாம் கொதித்தெழுகிறோமா? அரசியல்வாதியோ வணிகரோ அதற்குக் கட்டுப்படவேண்டுமென இங்கே ஏதாவது சமூகநிர்ப்பந்தம் உள்ளதா?

நீதிமன்றங்கள் மேல் நம் சமூகச்சூழலில் இருந்து ஏதேனும் அறநிர்ப்பந்தம் உள்ளதா? ஊழலில் திளைத்து கையும் களவுமாக பிடிபட்டு தகுதியிழப்பு வரை சென்ற நீதிபதிகளுக்குக்கூட சாதிய அடிப்படையில். மொழி இன வட்டார அடிப்படையில் ஆதரவு கொடுக்கத்தானே நம் சிவில்சமூகம் முன்னின்றது? அது நீதியில் எதிரொலிக்கிறது, அவ்வளவுதான்.

அதேசமயம் இந்த நீதியமைப்பின் அடிப்படையிலேயே ஒரு பிழை உள்ளது. இதை என் நண்பர் மறைந்த சோதிப்பிரகாசம் அவர்கள் நான் நடத்திய மருதம் இணைய இதழில் விரிவாக முன்பு எழுதியிருக்கிறார். அவரைச் சார்ந்து என் புரிதலைச் சொல்கிறேன்

நம் நீதிமன்றமுறை என்பது குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் சாட்டுபவர் இருதரப்பினரும் தங்கள் நியாயங்களை தங்கள் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் மூலம் முன்வைக்க, அவற்றை மட்டும் கருத்தில்கொண்டு ஒரு நடுவர் தீர்ப்பளிக்கும் வழிமுறை கொண்டது. ஒரு கிராமப்பஞ்சாயத்தில் தீர்ப்பளிப்பவர் அந்த சூழலுக்குள் இருக்கிறார். அவருக்கும் அவ்வழக்கு தெரிந்திருக்கும். நம் நீதிமன்றத்தில் நீதிபதி அன்னியர். அவர் அறிந்தது அங்கே வரும் வாதங்கள் மட்டுமே. அதைமட்டும் கொண்டே அவர் நீதி வழங்கியாகவேண்டும்.

அந்நிலையில் மிகச்சிறந்த முறையில் வாதிடக்கூடியவரின் கை ஓங்குகிறது. அவ்வாறு வாதிடும் திறமைகொண்ட வழக்கறிஞர் அதிக பணம் பெறுபவர் ஆகிறார். ஆகவே அதிகப்பணம் கொடுப்பவர் சிறந்த வாதத்தை பெறுகிறார். ஆகவே நீதி இயல்பாகவே அதிகப்பணம் உடையவரை நோக்கிச் செல்கிறது. நீதிபதியே நினைத்தால்கூட அதைத் தவிர்க்கமுடியாது.

இது இவ்வமைப்பிலேயே உள்ள பிழை.இதைத்தடுக்க குற்றம்சாட்டும் அரசுத்தரப்பில் மிகச்சிறந்த பொதுவழக்கறிஞரை நியமிப்பது, குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழக்குக்கு நிதியுதவிசெய்வது போன்ற வழிமுறைகள் உலகமெங்கும் உள்ளன. இருந்தாலும் இந்த சமமின்மை ஓர் உண்மை. ஆகவே இங்கே ஏழைகளும் சமூகமையப்போக்குக்கு அன்னியர்களும் பாதிக்கப்படுபவர்களே.

நீதிபதி அன்னியர் என்பதற்கான ஒரு சான்றைச் சொல்கிறேன். என் நண்பர் ஆஜரான வழக்கு இது. குற்றவாளி தன் எதிரியின் முந்நூறுசெவ்வாழைகளை வெட்டித்தள்ளிவிட்டார். வழக்கு விசாரணையில் குற்றவாளியின் வழக்கறிஞர் சான்றாக எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி இவ்வாறு வாதிட்டார்.

“வாழைகள் வெட்டப்பட்டது நள்ளிரவு பன்னிரண்டுமணிக்கு மேல் என்கிறார்கள்.. காலையில் அதை குற்றம்சாட்டுபவர் பார்ததாகவும், போலீஸ் எட்டுமணிக்கு. வந்து அதைப் புகைப்படம் எடுத்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் வாழையின் நடுவே இலைக்குருத்துச் சுருள் நாலு இஞ்சு உயரத்துக்கு வளர்ந்துள்ளது. எட்டுமணிநேரத்தில் அப்படி வளரமுடியாது. ஆகவே அந்த புகைப்படச்சான்று பொய்யானது. செல்லாது”

நீதிபதி அதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தார். நான் அதைக்கேட்டபோது அதிர்ந்து போனேன். ‘வாழையின் இலை மூன்றே நாளில் முழுமையாக வெளிவருவது. ஒருநாளில் அது ஒருசாணுக்குமேல் வளரும். இதுகூடத்தெரியாதா?” என்றேன். உண்மையில் அந்த வழக்கறிஞருக்கு அது தெரியவில்லை. நீதிபதிக்கோ எதிர்வழக்கறிஞருக்கோ நீதிமன்றத்தில் இருந்த பிறருக்கோ தெரியவில்லை. அங்கே நின்ற குற்றவாளிக்கும் குற்றம்சாட்டியவருக்கும் இவர்கள் பேசுவது புரியவில்லை.

நீதிபதி சூழலுக்கு அன்னியர் என்பதன் குறையைப்போக்கவே அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜூரி முறை உள்ளது. அச்சூழலில் இருந்தே ஒரு குழு உருவாக்கப்ப்ட்டு அவர்கள் தீர்ப்பை முடிவுசெய்வார்கள். ஆனால் அது இந்தியா போல சாதி, மத, மொழிப் பிரிவினைகள் நிறைந்த நாட்டுக்கு உகந்ததல்ல என்பதனால்தான் நம் அரசியலமைப்புச்சட்டத்தால் தவிர்க்கப்பட்டது,

இன்னொன்று, புறவயத்தன்மை என்பதன் எல்லை. புறவயமாக ஐயத்திற்கிடமில்லாது நிரூபிக்கப்படும் குற்றமே இந்த நீதியமைப்பில் குற்றம் எனப்படுகிறது. கணிசமான குற்றங்கள் புறவயமாக நிரூபிக்கப்பட முடியாதவை.

கடைசியாக, நீதிமுறையில் உள்ள தாமதம். சோதிப்பிரகாசம் எழுதிய கட்டுரையில் இங்கிலாந்து போன்ற மக்கள்தொகை குறைவான சிறிய நாட்டின் நீதிமுறை இங்கே அப்படியே நகல் செய்யப்பட்டதன் சிக்கல் என்று அதைச் சொல்கிறார்.1861ல் முதலில் கல்கத்தாவில் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது ஐந்தாண்டுகளுக்குள் நீதிமன்றமே செயலிழக்குமளவுக்கு வழக்குகள் வந்து குவிந்தன. வேறு வழியில்லாமல் பிரிட்டிஷார் வழக்கு தொடுக்கும் முறையை சிக்கலாக ஆக்கினார்கள். பலவகையான தடைகளை உருவாக்கினார்கள்.

இன்று குற்றவாளியின் தரப்புக்கு முடிந்தவரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. தீர்ப்பு வந்தபின் மீண்டும் மீண்டும் முறையீடு செய்ய நான்கு அடுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. ஆகவே இந்தியா போன்ற மாபெரும் தேசத்தில் நீதி மிகமிகத் தாமதமாகிறது., நடைமுறையில் மறுக்கப்பட்ட நீதியாகிறது.

ஆனால் அதற்கு வேறு என்ன மாற்று? இந்த வாய்ப்புகளை தவிர்த்தால் நீதியமைப்பு பலருக்கும் அநீதியை இழைப்பதாக ஆகக்கூடும்.இந்தமுறை செம்மையாக்கப்படவேண்டும்.

இவையெல்லாமே பேசப்படவேண்டியவை.உண்மையில் இந்த நீதிமுறையே இன்று உலக அளவில் இருப்பதில் சிறந்தது. இங்கிருந்த பஞ்சாயத்துக்கள் சாதிசார்ந்தவையாக, நவீன அறம் அற்றவையாக இருந்தன. ஆகவே. நாம் இதை ஐரோப்பாவிலிருந்து நகல் செய்துகொண்டோம்.. இதைவிடச் சிறந்த முறை வரும்வரை இதை என்ன செய்யலாம் என்பதே கேள்வி.

பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் ‘நீதிமன்றம் செத்துப்போச்சு’ ’ஜனநாயகமே தண்டம்’ போன்ற வரிகளுக்கு எதிரான பேச்சுக்களே இன்றைய அரட்டைச்சூழல்களுக்கு மிக அவசியமானவை. பிரச்சினைகளை பிரித்துப்பார்த்து பேசியாகவேண்டியிருக்கிறது. என் குரல் அதற்காகவே.ஒரு குடிமகனின் உணர்வு அது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அயல் வாழ்க்கை –குறிப்பு

$
0
0

images

 

ஜெ

(சமீபத்தில் பாலாவுக்கான பதிலில் ஜெ-ன்  “ஆப்ரிக்காவில் நீங்கள் பல மனைவிகளுடன் வாழ்வதாகச் சொல்லப்படுவது புரளிதான் என நம்புகிறேன்” வரியைப்படித்து அலுவலகத்தில் நான் சிரித்த வெடிச்சிரிப்பிற்கும், கீழ்க்காணும் கட்டுரைக்கும் தொடர்பில்லை என்பதை பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்!)

நான் அறிந்த அளவில், அன்றாட வேலைசெய்து மாத ஊதியம் வாங்கும் சமூக தளத்தில், இங்கு கென்யாவில் மூன்று வகையான திருமணங்கள் வழக்கத்தில் இருக்கின்றன.

முதலாவது “சர்ச் திருமணங்கள்”. இது கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் எடுத்த எடுப்பில் பெரும்பாலும் யாரும் இவ்வகையை தேர்ந்தெடுப்பதில்லை. சுற்றத்தை, நண்பர்களை அழைக்கவேண்டும்; அவர்களை கூட்டி செல்வதற்கு வண்டி ஏற்பாடு செய்ய வேண்டும்; உணவு செலவு; சர்ச்சிற்கு பணம் கட்டவேண்டும்; உடைகளுக்கான செலவு – குறிப்பாய் மணமகளுக்கான வெண்ணீள் உடை; சர்ச் பூக்கள் அலங்காரத்திற்கான செலவு. ஓரளவுக்கு வசதிகொண்ட மேல்மத்யமரும், மத்யமரும் மட்டுமே நேரடியாய் இதற்கு செல்கின்றனர்.

கீழுள்ளவர்கள் வேறுமுறையில் முதலில் திருமணம் செய்துகொண்டு, பணம் சேர்ந்தபின் சர்ச்சில் திருமணம் செய்துகொள்கின்றனர். சிலசமயம் குழந்தைகளுடன் அல்லது பேரக்குழந்தைகள் வரவுக்கு பின்கூட சர்ச் திருமணங்கள் நடைபெறுவதுண்டு. சிலவற்றில் தம்பதிகள் அதற்குள் மாறிவிடுவதுமுண்டு. சர்ச் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிலகாலத்திற்கு பின் இருவரும் பிரிந்தால் இருக்கும் சொத்தில் ஆளுக்கு பாதி (சர்ச் தலையிட்டு தீர்த்துவைக்கும்).

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள், எங்கள் நிறுவன, விமான நிலையத்திற்கு பூ கொண்டுசெல்லும் ட்ரக்கின் ஓட்டுநர் உதவியாளன் ஜான் திருமண அழைப்பிதழ் கொண்டுவந்து கொடுத்தான். “யாருக்கு ஜான்? உனக்கா அதுக்குள்ளயா?” என்று கேட்டபடி கையில் வாங்கி பிரித்தேன். ”இல்லை. என் பெற்றோர்களுக்கு”-ஜான் சொல்ல வியப்புடன் பார்த்தேன். ஜானுக்கு இரண்டு மூத்த சகோதரிகள்; இருவரும் ஜான் அம்மாவிற்கு முதல் கணவர் மூலம் பிறந்தவர்கள். ஜானும், இரண்டு இளைய சகோதரிகளும் இப்போது திருமணம் செய்துகொள்ளும் கணவர் மூலம் பிறந்தவர்கள்.

 

இரண்டாவது “சிவில் திருமணங்கள்”. தற்போது  இவைதான் அதிகம். பரஸ்பரம் நண்பர்களாயிருக்கும் ஆணும் பெண்ணும் (நட்புக்காலத்தில் உடல்சார் இணைவுகளுக்கு தடையில்லை) தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து இருவரின் குடும்பங்களும் அந்த பகுதியின் தலைவரிடம் (Area Chief) சென்று, வரதட்சணை முதலான விஷயங்களை இருபக்கமும் ஒத்துக்கொண்டு பதிவுசெய்கின்றனர். இங்கும் சான்றிதழ் கொடுக்கப்படும். வரதட்சணை பெரும்பாலும் செம்மறி ஆடுகள், பசுக்கள் மற்றும் பணம்; ஆண் பெண்ணின் பெற்றோருக்கு தரவேண்டும்; தவணை முறையிலும் கொடுக்கலாம். திருமணத்திற்கு பின்னான குடும்ப தகராறுகள், தலைவரிடம் முறையிட்டு தீர்த்துகொள்ளவேண்டும். காவல் நிலையம் செல்லும் தகராறுகளில் பெரும்பாலும் பெண்ணிற்கு சாதகமாகத்தான் காவல்நிலையம் நடவடிக்கை எடுக்கும்.

மூன்றாவது “பாரம்பரிய திருமணங்கள்”. தற்போது இவை குறைந்துவருகின்றன. அப்பகுதி தலைவரிடமோ, சர்ச்சுக்கோ செல்ல தேவையில்லை. பதிவு கிடையாது. ஆணும் பெண்ணும் அவர்களின் குடும்ப பெரியவர்களுக்கு தெரிவித்துவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம். குடும்ப பிரச்சனைகள் இரண்டு குடும்பங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். தலைவரோ, சர்ச்சோ உதவிக்கு வராது.

இம்மூன்றை தவிர நான்காவதும் உண்டு. பெற்றோர்களுக்கும் தெரிவிக்க தேவையில்லை. வேலை செய்யுமிடத்திலோ, வசிக்குமிடத்தின் அருகிலோ பிடித்துபோன ஆண்/பெண் இருந்தால், பேசி முடிவுசெய்து, ஒரே வீட்டில்/அறையில் தங்கி குடும்பம் நடத்துவதுண்டு. ஒத்துப்போகும்வரை சேர்ந்து வாழ்வது; பிடிக்கவில்லையென்றால் விலகிக்கொள்வது. குழந்தைகள் பெற்றபின்னும் விலகுதல்கள் நேர்வதுண்டு.

ஒருமாதம் முன்பு, எங்கள் பண்ணையின் முதன்மை நுழைவாயிலிலிருந்து, உள்ளிருக்கும் அலுவலகத்திற்கு, கம்பியில்லா இணைப்பில் பாதுகாப்பு அதிகாரி அழைத்து உள்ளூர் காவல் நிலைய வண்டி வந்திருப்பதாகவும், காவலர்கள் மனிதவள அலுவலரை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். நிறுவனத்தின் அரசுசார் வெளிவிவகாரங்களை மனிதவள அலுவலர்தான் பார்த்துகொள்கிறார். உள்ளேவர அனுமதிக்க சொல்லிவிட்டு நான் மனிதவள அலுவலர் அறைக்கு சென்றேன்.

மூன்று காவலர்கள் வந்தனர். பண்ணையில் வேலைசெய்யும் ஜாக்குலின் எனும் பெண்ணை அழைத்துப்போக அனுமதி கேட்டனர். என்ன விஷயம் என்று கேட்க, பண்ணையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கராட்டி எனும் கிராமத்தின் சிறு வணிகவளாகத்தில் வேலைசெய்த கெவின், கொஞ்சம் பணத்தையும், பொருட்களையும் திருடிக்கொண்டு ஓடிவிட்டதாகவும், ஜாக்குலின் கெவினுடன் இருப்பதாக கேள்விப்பட்டு, ஜாக்குலினை அழைத்துப்போய் வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஜாக்குலினை முதல் பசுங்குடிலிலிருந்து அழைத்துவர, காவலர்கள் விஷயம் சொல்லி “கெவின் எப்படிப்பட்டவன்?; சமீபத்தில் பணம் ஏதேனும் அதிகம் புழங்கியதா அவன் கையில்?; வீட்டிற்கு ஏதேனும் புதிய பொருட்கள் கொண்டுவந்தானா?” என்று விசாரித்தனர். ஜாக்குலினின் பதில்…

“அவன் எப்படிப்பட்டவன் என்று அதிகம் எனக்குத்தெரியாது. ஒருமாதம்தான் அவனுடன் சேர்ந்து வாழ்ந்தேன். கடந்த பதினைந்து நாட்களாக வீட்டுக்கு வருவதில்லை. சரி, வேறெங்கேனும் நகரத்திற்கு சென்று வேறுவேலை தேடி, வேறு பெண்ணை பிடித்திருப்பான் என்று விட்டுவிட்டேன்”

வெங்கடேஷ் சீனிவாசகம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குடைநிழல் -மென்மையின் வல்லமை

$
0
0

asd

அன்புள்ள ஜெயமோகன்,

தி ஹிந்து நாளிதழில் மண்குதிரை எழுதிய “குடைநிழல்” குறுநாவலின் மதீப்பிட்டை வாசித்துவிட்டு, அக்குறுநாவலை மிகச்சமீபத்தில்தான் வாசித்தேன். தெளிவத்தை ஜோசப் மிகமுக்கிய கதை சொல்லி என்பதில் சந்தேகமேயில்லை.

மிக நேரடியான மொழியில் சொல்லிவிட்டுச் செல்லும் சம்பவ சித்தரிப்புகள். இத்தனை நேரடியான யதார்த்தவாத சித்தரிப்பு தேவையா என்றால் அதுவே இக்குறுநாவலின் அழகியலாகவும் பலமாகவும் இருந்துவிடுகின்றது.

கைது விசாரணைகள் என்று வரும்போது நாயகனுக்கு நேரும் அனுபவத்தைவிட அவன் கேள்விப்பட்ட அனுபவம்தான் இம்சிக்க வைக்கின்றது. எத்தனை எளிமையாக ஒருவனை வீழ்த்த முடிகின்றது. உண்மையில் இந்த நாவலின் மையம் அதிகாரம் என்றே பட்டது. அதிகாரத்தின் உச்சியில் எழும் கொந்தளிப்பின் விளைவே நாவலின் கதை. அந்த அதிகாரம் ஒரு கட்டத்தில் அழியும் என்ற நம்பிக்கை நாவலில் இருக்கின்றது.

என்னை மிகக்கவர்ந்தது நாயகனின் தந்தையார் பற்றிய சித்தரிப்பு. தந்தையைச் சிறுவனாக இருக்கும்போது அவன் அணுகும் கண்ணோட்டமும், நுண்மையான சித்தரிப்புகளும் வீரியம் மிக்க இலக்கியமாக்குகின்றது. தோட்டத்தில் கங்காணியாக, தேவைக்கு அதிகமான பணத்தில் புரளும் அவனது தந்தையின் வாழ்வு மிகச் சொகுசாக இருக்கின்றது. வௌவால் இறைச்சி, காளான் கறி, ஹித்துள் கள்ளு குடிப்பது என்று அவரின் வாழ்க்கை நீள்கிறது. புறவயமான சித்தரிப்புக்களும் நுண்ணியத் தகவலும் விவரிப்புக்களை அழகாக்குகின்றது. தலைக்கேறும் போதையில் தடுமாறுவதும், சுருட்டு பற்ற வைப்பதில் ஏற்படும் தடுமாற்றங்களும் தேர்ந்த எழுத்துகளால் சித்தரிக்கப்படுகின்றன.

ஒரு நாள் குடிபோதையில் மனைவியை, வேலைக்காரன் கிருஷ்ணாவுடன் இணைத்துப் பேசுகிறார். அனைத்தையும் அந்தநாள் மாற்றிப்போட்டு விடுகின்றது. தினமும் தந்தையின் கொடுமையை அனுபவித்துவந்த அவன் தாய் ஒரு கணப்பொழுதில் யட்சியாகின்றாள். உக்கிரமாகப் பொங்கி எழுகிறாள். அந்த உக்கிரம் அவரை நடுங்கச் செய்கின்றது. ஒரு கணத்தில் அதிகாரம் இல்லாதவராக உணர்ந்து பயந்து நடுங்கி ஒதுங்குகின்றார்.

பூ வேலைப்பாடுகள் கொண்ட மரக்கால் கட்டிலை, லாம்பெண்ணை ஊற்றித் எரிக்கின்றாள். இருவரும் இணைந்து இன்புற்றிருந்த கட்டில் எரிகிறது. இருவருக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வருகின்றது. பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தந்தை அழிந்து இல்லாமல் போகிறார். அதிகாரத்தின் பிடி கொந்தளிக்கவைத்த ஆட்டம் அவரைச் மெல்லமெல்ல கரைந்துபோக வைகின்றது.

இலங்கை இலக்கியத்தில் இக்குறுநாவல் மிக முக்கியமான அரசியல் பதிவாக எப்போதும் இருக்கும். பிளவுண்டிருக்கும் இனவாதம், மொழிவாதம், பிரதேசவாதம் ஏதோவொரு விதத்தில் இரண்டு இனத்தையும் சேர்ப்பதும், அதிகாரத்தின் சுயநலம் அதனைப் பிரிப்பதுமாக இருக்கின்றது. அதே நேரம் இனத்துக்குள் உள்ளிருக்கும் பிரதேசவாத முரண்பாடுகளையும் உய்த்தறிய வைகின்றது.

தந்தையின் அதிகாரப் பின்னணியும் அவை உதிர்ந்து சென்று பலகாலம் ஆனபின், நாலாம் மாடியில் சிறைச்சாலையில் அவன் காத்திருக்போது தந்தையின் வாழ்கையில் அதிகாரம் வீழ்ந்த கணத்தை எமக்கு நினைவூட்டுகின்றது. அவன் சிக்குண்டிருக்கும் அதிகாரம் ஒரு கட்டத்தில் விலகும் என்றே அது நம்பவைக்கின்றது. அதிகாரம் ஒரு குடை நிழலாக இருக்கின்றது. அந்த நிழல் விலகும் தருணமே ஒடுக்கப்பட்டவனுக்கு விடிவாக இருக்கின்றது.ஆனால், அந்த தருணம் எப்படி வாய்க்கும்? அதையே இக்குறுநாவல் கேள்விகளாக எழுப்பிக்கொண்டு இருகின்றது.

அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்…

$
0
0
1

 

ஆசிரியருக்கு,

இணைப்பு -http://www.legallyindia.com/bar-bench-litigation/read-justice-sanjay-kishan-kaul-s-epic-defence-of-freedom-of-expression-author-perumal-murugan

நீங்கள் நீதிமன்றங்களுக்கு வழங்கியிருக்கும் பாராட்டுதல்கள் சற்று அதிகப் படியானது, போகட்டும்.

முதலில் இந்த விஷயத்தில் இரண்டு முக்கிய பேசுபொருட்கள் சற்றேறக் குறைய அனைத்து விவாதங்களிலும் இத்தீர்ப்பிலும் விடுபட்டுள்ளது.

புனைவென்பதும் ஒரு மாற்று வரலாறே : தற்போது வரலாற்று மறுஉருவாக்கம் ஏராளமாக அசலிலும் மொழிபெயர்ப்பிலும் வருகிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கும் புனைவுக்குமான கோட்டை கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக கிட்டத்தட்ட அழித்தே விட்டது புனைவு எழுத்து. இப்புனைவு இதை ஒரு மாற்று வரலாறு என கோருகிறது. அது போக ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறை ஒரு புனைவு எனவும் குற்றம் சாட்டத் துவங்கி விட்டது.

ஆய்வுக் கட்டுரைகளில் சான்றாக புனைவுகளை சுட்டும் போக்கும் இன்று உள்ளது. ஆக இன்றைய தேதியில் புனைவு என்பது சான்றாக முன்வைக்கத் தகாத கற்பனை அல்ல, ஆதாரமாகும் அளவுக்கு மதிப்புடையது என ஆகிவிட்டிருக்கிறது.

மாதொரு பாகன் ஒர் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது என ஆசிரியர் தனது முன்னுரையில் கூறுகிறார். பின்னர் சர்ச்சை எழுந்தவுடன் இது கற்பனை தான் என மாற்றிக் கூறினார். எனவே இது உண்மையா அல்லவா என்பன பற்றி நீதிமன்றம் ஒரு முடிவு செய்திருக்க வேண்டும். இதற்கான பதிலை எதிர்மனுதாரரான அரசிடம் இருந்து கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் அரசின் நிலைப் பாடு என்ன என தெரிவிக்க வற்புறுத்தியிருக்க வேண்டும். இதை தடை செய்யலாமா வேண்டாமா எனக் கூட அரசு தெரிவிக்கவில்லை. ஆக இவ்வழக்கில் நீதிமன்றம் முதலில் ஒரு சிந்தனைக் குறையுடனேயே தான் இதை அணுகியுள்ளது. கூடவே போதிய திடமற்றும் இதை அணுகியுள்ளது.

நிதி பெற்று எழுதும் புனைவின் மதிப்பு : இந்நாவலுக்கு டாட்டா நிறுவன நிதி பெறப்பட்டதாக அதன் முன்னுரையிலேயே உள்ளது, அந்நிறுவனம் ஃபோர்டு நிறுவன உதவிபெற்றது. இது பற்றி இந்துத்துவ எதிர்தரப்பு நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தெரிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இதை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்க வேண்டும், அவைகளும் இதை செய்யத் தவறி விட்டன.

ஆனால் இந்த முற்போக்கு, பெரியாரிய பாரம்பர்யத்தில் வந்த பெருமாள் முருகனுக்கு அவர் சார்ந்துள்ள சிந்தனைப் பள்ளியைப் போன்றே இந்து பண்பாட்டின் மீது எவ்வித மரியாதையும் இல்லை என்கிற ஒரு தரப்பையாவது அது சொல்லி இருக்கிறது. இந்த சிந்தனை பொதுவெளியில் வர வாய்ப்புள்ளது. .ஆனாலும் இந்த எதிர் தரப்பும் ஒரு சிந்தனைக் குறையுடனேயே இதை அணுகியுள்ளது.

 

**

ஆனாலும் நீதிமன்றம் இத்தீர்ப்பில் கவனிக்கத்தக்க இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது, கூடவே இரண்டு குறிப்பிடத்தக்க அவதானிப்புகளும் உள்ளன. இது பொதுவெளியில் நமது சிந்தனையை சற்று உயர்த்தும்.

  • இதுபோன்ற சம்பவங்களில் RDO க்கள் மட்டும் விசாரிக்கக் கூடாது, கலை இலக்கிய நிபுணத்துவம் உடையவர்கள் இந்த சமரச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்
  • நமது கலைகளிலும் இலக்கியத்திலும் நியோகம் உள்ளிட்ட பல வாழ்க்கை முறைகள் சித்தரிக்கப் பட்டுள்ளன. தற்போது நிலவுவது விக்டோரியா நெறி. நாம் நமதைதான் முன் வைக்க வேண்டும்.
  • இது போன்ற விஷயங்களில் ஒரு சராசரியின் பார்வையில் இந்நாவலை அணுக்க கூடாது ஒரு வலுவான நுண்ணுணர்வுள்ள நபரின் பார்வையில் தான் அணுகவேண்டும், கலைஎன்பது பொதுவாகவே எல்லோருக்குமானது அல்ல. ஒரு வலுவான நுண்ணுணர்வுள்ள வாசகனின் பார்வையில் இது அவதூறோ ஆபாசமோ அல்ல.
  • தமிழகத்திலும் இந்தியாவின்பிற பகுதிகளிலும் இதற்கு (விழாக்களில் கட்டற்ற பாலியல் உறவு) சான்று உள்ளது. ஒரு காலத்தில் தவறாக உள்ளது பிறகு சரியாகும், அதேபோல மாறாகவும் ஆகும்.

***

இந்த தீர்ப்பின் அடிப்படையில் நமது சிந்தனையை வளர்த்துக் கொள்ள சிறிது இடம் தான் உள்ளது. மற்றபடி இத்தீர்ப்பில் சான்றாக எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து மாதொருபாகன் ஆதரவுக் கருத்துக்களும் (உங்களது “சிலுவையின் பெயரால்” நூலில் உள்ளவை நீங்கலாக ) இந்த சர்ச்சை எழுந்த பிறகு  ஒரு தரப்பு எடுத்து எழுதப்பட்டவையாகும். பரிசீலனையில் இது சற்று தகுதி குறைவே.

ஒரு வாசகனாக இவ்விஷயத்தில் எனது கருத்து –

அ.இது ஆய்வுக்கான நிதி பெற்று ,ஆய்வு என்றே எழுதப்பட்டது. ஆனால் ஆய்வு அல்ல. எனவே இதற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

ஆ.பெருமாள் முருகன் தனது முன்னுரையை மீறி நீதிமன்றத்தில் இது ஆய்வல்ல புனைவே எனக் கூறியது பிழையானது. அது பிரச்னையின் தீவிரம் கருதி பின்னர் கூறப்பட்டது. அவ்வாறு அவர் சொல்லியிருக்கக் கூடாது.

இ. ஆய்வின் அடிப்படையில் இது சற்றேனும் உண்மை என்றால்தான் இன்றைய தேதியில் (2005 இக்குப் பிறகு கூட) ஒரு புனைவில் இதை சேர்க்க முடியும். அவ்வாறு குறைந்தபட்சத் தரவுகள் இல்லை எனில் (இது அக்காலத்தில் நமது கலாச்சார வழக்கம் என்றாலும் கூட) இன்றைய புனைவு- மாற்று-வரலாறுக் காலத்தில் இது ஒருவகை அவதூறே.

கிருஷ்ணன்

வழக்கறிஞர்

ஈரோடு

 

 

1அன்புள்ள ஜெ, பெருமாள் முருகன் தீர்ப்பை வாசித்தேன். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். திருச்செங்கோடு மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் ஒரு சாதாரண குற்றவழக்குக்கும் இப்படிப்பட்ட கலாச்சாரப் பிரச்சினை உள்ள வழக்குக்கும் வேறுபாடு தெரியவில்லை. அவர்கள் வழக்கமான அடிதடிப் பிரச்சினையை கையாளும் வழக்கறிஞர்களை அமைத்திருக்கிறார்கள்.
இந்துத்துவத் தரப்பினர் வழக்கம்போல மொக்கையான, கட்சி சார்புள்ள வழக்கறிஞரை நியமித்துள்ளனர். அவர்களுக்குச் சாதகமான எந்த அம்சத்தையும் இந்த வழக்கறிஞர்கள் அறிந்திருப்பதாகவே தெரியவில்லை.
இந்த இருதரப்பும் சரியான வழக்கறிஞர் தேவை என்ற கோணத்தில் அணுகியிருக்கமாட்டார்கள், வழக்கறிஞர் நம்மாளா என்று மட்டுமே பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.ஆகவே இது இதை ஒரு முக்கியமான பண்பாட்டுப் பிரச்சினையாக அணுகிய காலச்சுவடின் வழக்கறிஞரின் வெற்றி. காலச்சுவடு சரியான வழக்கறிஞரை நியமித்து, அவருக்குச் சரியான தரவுகளையும் அளித்துள்ளது. தீர்ப்பு மொத்தமும் காலச்சுவடு வழக்கறிஞர் அளித்த தரவுகளே விரவிக்கிடக்கின்றன- உங்கள் மேற்கோள் உட்பட

 

வழக்கறிஞர் என்றமுறையில் காலச்சுவடு வழக்கறிஞர் சுரேஷ் அவர்களை பாராட்டுகிறேன். இது அவரது சாதனை.

திருநாவுக்கரசு

 

index

Sanjay Kishan Kaul

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

நான் தீர்ப்பின் சுருக்கத்தை வாசித்தேன். அதன்பின் முழுத்தீர்ப்பையும் தேவையான பகுதிகளை மட்டும் வாசித்தேன். முக்கியமான தீர்ப்பு.

இதைப்பற்றி என் தரப்பைச் சொல்லி முடிக்கலாமென நினைக்கிறேன்

  1. ஓர் ஊர் அல்லது குடும்பம் அல்லது தனிமனிதரைப்பற்றி எழுத்தாளர் எழுதும்போது, அதை அவர் ஆய்வுமுடிவாக கண்டடைந்த உண்மை என்று சொல்லும்போது. அதை அவதூறு என்று கருத அவர்களுக்கு உரிமை உண்டு
  2. அதை அவர்கள் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளலாம். அது போதாது என்றால் சட்டபூர்வ முறைகளில் மேற்கொள்ளலாம்.
  3. ஆனால் அவர்கள் அதன்பொருட்டு கும்பல் கூட்டி சட்டத்தைக் கையில் எடுப்பார்கள் என்றால் அது மிகத்தவறான முன்னுதாரணம். அதன்பின் எல்லா கலாச்ச்சாரச் செயல்பாடுகளுக்கும் கும்பலின் அங்கீகாரம் தேவை என்றாகிவிடும். கும்பல் கூட்டத்தெரிந்த எவரும் கலாச்சாரச் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்பு இங்கேதான் முக்கியமானது ஆகிறது
  4. அரசு அதிகாரிகளின் கடமை சட்டம் ஒழுங்கைப் பேணுவது மட்டுமே. கலாச்சாரநடவடிக்கைகளை தீர்மானிப்பது அல்ல. ஆகவே அவர்கள் சமரசம்பேசியதும், பெருமாள் முருகனுக்கு அழுத்தம் அளிப்பதாக அது மாறியதும் இயல்பானதே
  5. இத்தீர்ப்பு அவர்கள் இத்தகைய கலாச்சாரப் பிரச்சினைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பேணுவது அவர்களின் கடமையே. ஆனால் கலாச்சார நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அது ஆகிவிடக்கூடாது. அவர்கள் நிபுணர்களின் உதவியை நாடவேண்டும். பேச்சுரிமை, சிந்தனை உரிமையை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் மேலதிக உதவிகளைக் கோரியிருக்கவேண்டும் என வழிகாட்டுகிறது.
  6. ஒரு தனிநபரின் சிந்தனைப் பேச்சுரிமையின்மீது ஒரு குழுவோ அல்லது அரசுநிர்வாகமோ கட்டுப்பாடுகளையோ நிபந்தனைகளையோ விதிக்கக்கூடாது, அதை அரசு அனுமதிக்கக்கூடாது என ஆணையிடுகிறது
  7. நாவலின் மொழி முரட்டுத்தனமானது, அது சற்று எல்லைமீறி நயமற்று பேசுகிறது என்றே நீதிபதி கருதுகிறார். ஆனால் அது அந்நாவலை தடுப்பதற்குரிய காரணம் அல்ல என்கிறார்.

அவ்வகையில் இது முக்கியமான தீர்ப்பே. நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் நன்றிக்குரியவர்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு கலந்துரையாடல் : சென்னை –ஜூலை 2016

$
0
0
ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

இந்த மாத சென்னை கூட்டம் பன்னிரு படைக்களத்தை பற்றியதாக இருக்கும்.

சுதா ஸ்ரீநிவாசன் “சுனந்தை முதல் கிருஷ்ணை வரை” என்கிற தலைப்பில் உரையாற்றுவார். அதற்கடுத்து மணிமாறன் (பாண்டிச்சேரி)  அவர்கள் தன் உரையை நிகழ்த்துவார்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-

வரும் ஞாயிறு (17-07-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்:-

SATHYANANDHA YOGA CENTRE,

15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,

VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)

Phone No.: 9952965505

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நிலம் பூத்து மலர்ந்த நாள் –கடலூர் சீனு

$
0
0

1

இனிய ஜெயம்,

எப்போதும் வெண்முரசு வரிசையில்  ஒரு நாவல் முடிந்து மற்றொரு நாவல் துவங்கும்  இடைவெளியில் முந்தைய நாவல் அளித்த உணர்வு நிலையின் அழுத்தம் குறையா வண்ணம் நீடிக்க செய்யும் புனைவுகளை மனம் நாடும். பெரும்பாலும் வெண் முரசின் முந்தைய  நாவல்களிலேயே அந்தத் தேடல் சென்று நிற்கும்.  மாற்றாக வாசிக்க நேரிடும் வேறு புனைவோ அ புனைவோ அதன் உள்ளுறையால் பலவீனமாக அல்லது வெறும் நேரம் கொல்லியாக இருந்தால், அதை எழுதியவர்கள் மீது வரும் எரிச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. பன்னிரு படைக்களம் நிறைந்த இரவே அஜிதன் அழைத்திருந்தான். வழமை போல என்னை  புறத்தால் அழகான, அகத்தால் ஆழமான, பயணம் ஒன்று அழைத்துச் சென்றான். மீண்டதும் மீண்டும் வாசிப்பைத் தொடர, முதல் நூலாக வீ எஸ் ராமச்சந்திரன் அவர்களின் ஆயிஷா நடராஜன் மொழிபெயர்ப்பில் வெளியான உருவாகிவரும் உள்ளம் என்ற மூளைநரம்பியல் குறித்த  கட்டுரைத் தொகுதியை துவங்கினேன். நல்ல மொழி பெயர்ப்பில் அமைந்த சுவாரஸ்யமான நூல். வீஎஸார் நியுரோ ஈஸ்தடிக் என்ற புதிய வகைமாதிரியில் சிற்பம் ஓவியம் போன்ற கலைகளை மனித மூளை படைப்பதன் பின்னுள்ள சாரத்தை அடிப்படையான பத்து அலகுகளை கொண்டு வகுத்து சொல்லும் மூன்றாவது அத்யாயம் சுவாரஸ்யமான ஒன்று. இரண்டாவதாக, ‘’சிந்தனைப் பல்லி’’யின் வாத்தி பாராட்டிய, காலத்தை தன் முன் மூத்து, நரைத்து, மண்டியிட வைக்கும் வல்லமை கொண்ட நாவல் ஒன்றை வாசித்து தலைச்சோறு வெந்தேன்.

வெந்ததை தணிக்க நெய்வேலி புத்தக சந்தையில் ‘’அலைவுற்றுக்’’ கொண்டிருக்கையில் வம்சி அரங்கிலிருந்து மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீ அவர்களின் மைந்தன், நண்பன் ஹரி கூவி அழைத்து நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலை உயர்த்திக் காண்பித்தான். அந்த நாவலை மொழிபெயர்க்கத் துவங்கியபோது அந்த நூலின்  சாரத்தை ஒரு நாள் நல்ல தேநீர் ஒன்றுடன் ஜெயஸ்ரீ என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அன்று துவங்கிய ஆவல் நூலைக் கண்டதும் பன்மடங்கு பெருகியது. இதோ இந்த இரவில் ஒரே அமர்வில்  வாசித்து முடித்து  என்ன எதை  பகிர்ந்து கொள்வது என்றே புரியாமல் உத்வேகம் மீதூர உங்களுக்கு தட்டச்சு செய்துகொண்டு இருக்கிறேன்.

இந்த நாவலை வாசித்து முடித்ததும், ‘’அடடா இந்த நாவலை ஜெயமோகன் எழுதாம விட்டுட்டாரே’’ மிஸ் பண்ணிட்டாரே என்று முதன் முறையாக தோன்றியது. பெரிதும் ஜெயமோகனின் அகம் எழுப்பிக் கொள்ளும் வினாவை அதன் தேடலை,தத்தளிப்பை ஒத்ததே மனோஜ் அவர்கள் இந்த நாவலில் எய்திய நிலை. சங்க கால தமிழ் நிலத்தின் பின்னணியில் வைத்து சொல்லப்பட்ட, சொல்லப்படாத மனிதர்களின் உலராக்குருதியும் ஆறாக் கண்ணீரும்கொண்டு  அறம் வேண்டி நிற்கும் அணையாஅழல் குறித்த கதை.

குட்ட நாட்டிலிருந்து அந்த அரசனைத் தொடர்ந்து தமிழ் நிலம் வந்த முன்னோர்களைக் கொண்ட பாணர் குடி ஒன்றின் முதன்மைக் குடும்பம் கொலும்பன் குடும்பம். வறுமை தாளாமல் சிறு வயதிலேயே செல்வம் தேடி குடி நீங்கிய மூத்த மகன் மயிலன், இளமை துவங்கும் மூத்த மகள் சித்திரை, இளைய மகன் உலகன், மகள் சீரை, மனைவி நெல்லக்கிளி. குடும்பம் மீது பாசம் கொண்ட சராசரித் தகப்பன் கொலும்பன். சித்திரை மேல் காதல் போலும் பிரியம் கொண்ட கூத்தன் சந்தன். சந்தனின் சொல் கேட்டு, ஏழிமலை நன்னன் நாட்டில் கண்டதாக சொல்லப்பட்ட மயிலனைத் தேடியும், மக்கள் மத்தியில் மட்டுமே பாடி ஆடும் குடி, முதன் முறையாக ஒரு அரசனைக் ‘’நேரில்’’ கண்டு பாடி ஆடி, பரிசில் பெற்று  தனது வறுமையை நீக்கிக் கொள்ளவும் ஏழி மலை நோக்கி பெரும்பாணன் தலைமையில் ஊர்நீங்குகிறது.

வேல்கெழுகுட்டுவன் பரிசாக அளித்த ஆழியாற்றின் கரையில் அமைந்த உம்பர்க்காட்டில் வசிக்கும் புகழ் வாய்ந்த பெரும் புலவர் பரணரை பாணர் குடி வழியில் சந்திக்க, பரணர் அவர்களுக்கு ஏழி மலை நன்னன் சேரர்களால் வீழத்தப்பட்தை சொல்லி, ஏழ்மை நீங்க பறம்புமலை பாரியை அணுகச் சொல்லி அதற்க்கு பாரியின் அணுக்கத் தோழர் பெரும்புலவர் கபிலரின் துணையை நல்கி, ஆற்றுப் படுத்துகிறார். பாணர் குடி பறம்புமலை நோக்கி நகர, சந்தன் தனது பால்ய நண்பனை தேடி தனியே ஏழி மலை செல்கிறான்.பாரியின் அவையில் ஆடல் பாடல் முடிந்ததும், பாரியைக் கொல்ல அரண்மைனைக்குள்ளேயே அவ்வமையம் நிகழ்ந்த சதியில், பாணர் குடி சிக்கிக் கொள்ள, சதிகாரர்களால் அரசன் பாரியும், கொலும்பனும் கொல்லப் படுகிறார்கள்.

கபிலர் துணையுடன் பறம்புமலை விட்டு தப்பிக்கும் பாணர் குழு, போக்கிடம் அறியாமல் பயணித்து, ஒரு ஆயர் புறச் சேரியில் அடைக்கலம் பெறுகின்றனர். சீரையின் நடத்தையில் விசித்திரம் கூடுகிறது. ஆயர் குடியில் சித்திரைக்கு கிளியோலம் தோழியாகக் கிடைக்கிறாள். குதிரைமலை அதியமானின், படைத் தளபதி தகடூரை சேர்ந்த மகீரன் காதலனாகக் கிடைக்கிறான். கபிலர் முசிறியில் சேர மன்னனுடன் இருப்பதை அறிந்து, பாணர் குடி முசிறி நோக்கி நகர, சித்திரை குடும்பத்திடம் விடை பெற்று மகீரனுடன் தகடூர் செல்கிறாள். அங்கே சித்திரைக்கு அதியமானுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவ்வையின் துணை கிடைக்கிறது. சித்திரைக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருக்கும் மகீரன், சித்திரையுடன் ஊடல் கொண்டு பிரிகிறான். தொலைந்த அண்ணன் மயிலன் மகீரனின் நெருங்கிய நண்பன், தான் மயிலனின் தங்கை என மகீரன் அறிந்தே இருக்கிறான்,  என அவ்வை வழியே அறிகிறாள். தான் அறியாத விளையாட்டு ஒன்றினில் யாராலோ தனது குடும்பமும் காதலும், வாழ்வும் வெறும் பொம்மைகளாக வைத்து ஆடப்படுவதை சித்திரை அறிய வருகிறாள். முசிறியில் அரசனையோ, கபிலரையோ காண இயலாத பாணர் குடியும், ஏழி மலையில் மயிலனை காண இயலாத சந்தனும் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து, சித்திரையின் தனிமை அறிந்து அவளையும் உடன் அழைக்கிறார்கள். சித்திரை வர மறுத்து அவ்வை வசம் அடைக்கலம் அடைகிறாள்.

சிறு வயதில் குடும்பம் விட்டு வெளியேறிய மயிலன், கள்வர் கூட்டத்துடன் இணைகிறான், நன்னன் படையால் கைது செய்யப் படுகிறான். பரணர் பார்வையில் பட்டு, அவன் பாணர் குடி ஒன்றினை சேர்ந்தவன் என அறியப்பட்டு, பரணரால் மீட்கப்படுகிறான். பரணர் வசம் கல்வியும் அரசியலும் கற்கிறான். நன்னனின் மெய்க் காப்பாளன் எனும் நிலை வரை உயர்கிறான். பெண் கொலை செய்த நன்னன் என புலவர் பழிக்கும் நன்னனின் செயலுக்கு மறைமுக ஊக்கியாக, முதன்மைக் காரணமாக ஆகிறான். நன்னன் ஆட்சியை விட்டு புலவர்கள் நீங்க, சேரர்கள் வசம் சமாதான தூதுவர்களாக செல்ல பரணரோ, பிறரோ இன்றி சேரனுடனான போரில் நன்னன் வீழ்கிறான். நாடிழந்து நாடோடியாக ஓடும் மயிலன், மகீரனை சந்திக்கிறான். சேரனுக்கு உளவாக செயல்படும் மகீரன் மயிலனை துணைக்கு சேர்த்துக் கொள்கிறான், சேரனுக்கு ஆதரவாக உளவு செய்ய மயிலன் சாமி என்ற பெயரில் பறம்புமலை நுழைகிறான். தனது கல்வியையும் பரணரின் நட்பையும் குறிப்பிட்டு கபிலரின் நட்பை பெறுகிறான். தருணம் வருகையில் ஒரு இக்கட்டு ஒன்றினில் நிறுத்தி கபிலரை தனது ஒற்று வேலைக்கு துணை சேர்க்கிறான். நாள் வருகிறது. சதி அரங்கேறுகிறது. மயிலன் பாரியைக் கொன்று தப்பிக்கிறான். சதியில் சிக்கி கொலும்பன் குடும்பம் சிதறுகிறது. சதியில் சிக்கியது தனது குடும்பம் என்பதை அறிந்து தவிக்கும் மயிலன், மகீரனின் துணையை நாடுகிறான், மகீரன் அவர்களை பாதுகாப்பதாக சொல்லி விட்டு அப் பணியில், சித்திரையின் மனம் மயக்கி அவளை ஏமாற்றுகிறான். மகீரனின் அனைத்து செயல்களும் சந்தன் வழியே மயிலனுக்கு தெரிய வருகிறது. நெடிய காலம்.எங்கோ துவங்கிய மயிலன் வாழ்வு எங்கோ, சென்று எங்கோ திரும்பி , பாலைப் பாறையில் விழுந்த துளி நீர் போல ஆகிறது. மயிலன் மீண்டும் குடும்பம் சேர்கிறான். பாணர் குடி சொந்த ஊர் திரும்பும் வழியில் உம்பர்க்காட்டில் பரணரை சந்திக்கிறார்கள். பரணர் தனக்கு பரிசாகக் கிடைத்த உம்பர்க் காட்டையும் பெரும் செல்வத்தையும் அந்த பாணர் குடிக்கு பரிசளித்து விட்டு சென்று மறைகிறார். ஆழியாற்றின் கரையில் சிறு குன்று. அதன் உச்சியில் சிறு கோவில். மயிலன் அங்கு செல்கிறான். அதிர்கிறான். நன்னன் கொலை செய்த பெண் அங்கே தெய்வமாக அமர்ந்திருக்கிறாள்.

இனிய ஜெயம்,

ஜன்னல் இதழில் திங்கள் எழுதி வரும் தொடரின் ஒவ்வொரு அத்யாயமும் பேசும் ஆழத்தை, தமிழ்ப் பண்பாட்டை அதன் வேரின் சாரத்துக்கு உயிர் நீராக விழுந்த பெண்களின் கண்ணீரை தொட்டுப் பேசும் படைப்பு இந்தப் புனைவு. நீலபத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் வரும் ஆச்சி தங்களது குலக் கதையை, குலதெய்வமாக வணங்கப் பெரும் சகோதரிகளில் இருந்து துவங்குவார். பேதை பருவத்தை தாண்டாத அந்த சகோதரிகள் அறிவுக் கூர்மை கொண்டவர்கள். அவர்களின் தந்தை முத்து வணிகம் செய்பவர். கிடைத்ததில் சிறப்பான முத்தை, அந்த நாட்டு அரசனுக்கு பரிசளிக்கிறார். அரசன் அந்த முத்துக்களை மாலையாக கோர்த்து அணியப் பிரியப் படுகிறார். அரண்மனை நகை ஆசாரிகள், முத்தில் துளை இடுவது சாத்தியமே இல்லை என தெரிவிக்கிறார்கள். அரசன் அந்த முத்து வணிகரையே காலைக்குள் அந்த முத்துக்களை மாலையாக கோர்த்து வரவும், தவறினால் சிரச் சேதம் எனவும் ஆணை பிறப்பிக்கிறார். தந்தையின் கவலை அறிந்த இரு மகள்களும். தமது மதி நுட்பத்தால் முத்துக்களை மாலையாக கோர்த்து தருகிறார்கள். மன்னன் உயர்ந்ததெல்லாம் தன் வசம் மட்டுமே இருக்க வேண்டும் என விழைபவன். ஆகவே இத்தகைய மதி நுட்பம் கொண்ட பெண்களை மனம் புரிந்து கொள்ள விரும்புகிறான். தந்தைக்கு இதில் விருப்பம் இல்லை. அரசனை மீறவும் முடியாது. ஆகவே தனது மகள்களை ஒரு கிணற்றில் உயிருடன் பொட்டு புதைக்கிறார். கௌரவக் கொலை. அந்த சகோதரிகளை அக் குலம் குலதெய்வமாக வணங்குகிறது. எந்த உணர்வும் அற்று சொல்லி செல்லும் நாவல். ஆனால் நினைக்க நினைக்க உள்ளம் குமுறும். ஒரு பெண்ணின் நுண் அறிவே அவளின் உயிர் பறிக்கும் எமனாக அமைவதை என்ன சொல்ல? ரிபு. ரிபு என வந்த விதி. விதியாகி வந்த அநீதி.

இந்த நாவலில் பேதைப் பருவப் பெண், ஆற்றில் மிதந்து வரும் மாங்கனியை ஆசையாக எடுத்து உண்கிறாள். அக் கனி நன்னன் தோட்டத்தை சேர்ந்தது. அங்கிருந்து ஒரு கிளை முறிந்தாலும் காவலர்களுக்கு மரண தண்டனை. காவலர்கள் பெண்ணை நன்னன் வசம் நிறுத்த பெண்ணுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. அன்னைத்தெய்வங்கள் முளைக்கும் அந்த அநீதியில் முட்டி திகைத்து நிற்கிறது இந்த நாவல். சீரிய இலக்கியத்துக்குள் வருபவர்கள்,சங்கச்சித்திரங்கள், காடு நாவலுக்குப் பிறகு, அடுத்ததாக வாசிக்க வேண்டிய நாவல் இந்த நிலம் பூத்து மலர்ந்த நாள். எனக்கு சங்க இலக்கிய அறிமுகம் மட்டுமே உண்டு, விற்பன்னன் அல்ல, சாரதாம்பாள் அவர்கள் எழுதிய சங்கச் செவ்வியல் போன்ற  ஆய்வு நூல்கள், சில தமிழ் ஆசிரியர்கள் துணையுடன் கடந்த ஆறு மாதகாலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உலகுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறேன்.  இந்த நாவல் நிகழும் காலம், களம், அதன் விரிவு, அரசியல் உட் சிக்ககல்கள், பண்பாட்டு கலாச்சார நுட்பங்கள் அனைத்தையும் இந்த நாவலின் முன்னுரையில் நீங்கள் சொல்லி [வாக்களித்து] இருப்பதைப்போல உடனடியாக எழுதி இந்த நாவலின் மறு வாசிப்புக்குள் என்னை தள்ளுமாறு கோரிக்கை வைக்கிறேன். நிற்க. இந்த நாவல் உருவாக்கும் பின் புலத்தின் அணைத்து அசைவுகளுக்கும் காரணமாக இருபத்து பாணர்களுக்கும் அரசர்களுக்குமான உறவு. அது குறித்து மனோஜ் அவர்களே முன்னுரையில் எழுதி இருக்கிறார். மிழக்குற்றம் ஆளும் எவ்வி இறந்தபோது பாணர்கள் தங்கள் இசைக் கருவிகளை உடைத்து எறித்து அழுதார்கள் என நாவலுக்குள் ஒரு குறிப்பு வருகிறது. கொலும்பன் தனது பேரியாழுக்கு மல்லிகை என பெயரிட்டு உயிர்ப் பொருளாய் பாவிக்கிறார், உயர்திணையாய்க் கொஞ்சுகிறார். போர் செய்து நிலம் வெல்லும் அரசர்கள், பாணர்களின் பாட்டுக்கு அந்நிலத்தையே பரிசாக அளிக்கிறார்கள். நிலம் சுருங்க சுருங்க கைக்கு அகப்பட்டதைப் பரிசாக அளிக்கிறார்கள். நாவலுக்குள்  பாணர் குடி ஒன்று தங்களுக்கு பரிசாகக் கிடைத்த யானையை வைத்து மேய்க்கவும் இயலாமல், அதைக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் திகைக்கும் சித்திரம் ஒன்று வருகிறது. மன்னருக்கும் பாணருக்கும் உள்ள உறவு போல, பாணர்களுக்கும் ஏனைய எளிய குடிகளுக்குமான உறவு மற்றொரு அழகு. நாவல் நெடுக எயினர், குறவர், உழவர், ஆயர் என எக் குடி ஆகிலும் ‘’செல்விருந்தோம்பி வரு விருந்துக்காக ஏங்கி’’ நிற்கிறார்கள்.தமிழ்ப் பண்பாட்டின் சாரமான விருந்தோம்பல் இந்த நாவல் நெடுக, நெக்குருக்கும் வண்ணம் வந்த படியே இருக்கிறது. [இன்றைய நிகர் வாழ்வில் மொத்த இந்தியாவிலும் விருந்தோம்பலை கைவிட்டு குறுகித் திரியும் ஒரே நிலம் தமிழ் நிலம் என்று தயக்கமின்றி சொல்வேன்]. வித விதமான உணவு முறைகள், அத்தனை வேற்றுமையும் விருந்தோம்பல் என்ற பண்பாட்டில் ஒற்றுமை கொள்கின்றன.

சங்க இலக்கியம் கொள்ளும் அதே அகம் புறம் அழகியலில் இயங்கும் இந்த நாவல், புறத்தில் உருவாக்கிக் காட்டும் நிலக் காட்சிகள் கனவுகளை எழுப்பக் கூடியது. குறிப்பாக உம்பர்க்கட்டை பாணர் குடி அடையும்வரை  வரும் மழைச்சித்திரம். எழுத்துத்தொழில் நுட்பமாகவும் சங்க இலக்கியக் கல்வி சில இடங்களில் முன் வைக்கும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு வகைமையை இந்த நாவல் கைக் கொள்கிறது. கொலும்பனின் தன்னுரையில் எடுத்து, சித்திரையின் தன்னுரையில் தொடுத்து, மயிலனின் தன்னுரையில் முடிகிறது நாவல். குறிப்பாக உடல் வெட்டுப்பட்டு கொலும்பனின் குரல் அடங்கும் புள்ளியில், முதல்பகுதி முடிந்து தந்தைமையின்  இழப்பில் சித்திரையின் தன்னுரயாக இரண்டாம் பகுதி தொடுங்குவது நாவலின் அழகுகளில் முக்கியமான ஒன்று.

மூன்று பகுதிகளிலும் நாவல் கைக் கொள்ளும் பாவம் வாழ்வனுபவத்துக்கு நிகரானதாக இருக்கிறது. ஊர் நீங்கிய நாள் தொட்டு கொலும்பன் நிம்மதியான தூக்கத்தை இழக்கிறான். சித்திரைக்கும் சந்தனுக்கும் இடையே எப்போதும் பதட்டம் கொண்டே நிற்கிறான். சீரை மேல் சொல்லவொண்ணா பாசம். அவளது பேதை வயதுக்கே உரிய முறையில் கண் பட்ட அனைத்திலிருந்தும் கேள்வி கேட்கிறாள். இழந்த மகனைத் தேடி புறப்படுவதில் இருந்து, தனது மனைவிக்கு ஒத்தாசை செய்யும் சந்தன் மேல் எழும் கனிவு வரை எல்லா நிலையிலும் அவன் சராசரி தகப்பன்தான். அவனது தவிப்புகளை சொல்லியபடியே செல்லும் நாவல், அம்மன் கோவிலில் நீதிக் கல்லில் மிளகாய் அரைத்து தேய்த்தபடி சாகும் வரை தனது மகளுக்காக காத்திருக்கும் அப்பனின் சித்திரத்தை அடைகையில் தந்தைமை எனும் பேராற்றலின் பெரும் தவிப்பின் உச்சத்தை எட்டுகிறது.

இந்த நாவலின் தனித்துவமான பகுதி, சித்திரையின் தன்னுரையாக வரும் இரண்டாம் பகுதி. வாசிக்கும் எந்த ஆணையும் தன்னை சித்திரை என்றே உணர்ந்து, தானே சித்திரை ஆகி உரைப்பதாக மயங்கச் செய்யும் பகுதி. ஒரு பெண்ணாக புதிய புதிய நிலங்கள் அளிக்கும் பரவசமும் பதட்டமும் வாசகனையும் தொடருகிறது. குறிப்பாக மகீரனுடன் சித்திரை ஊர் நீங்குகையில் வரும் புற சித்தரிப்பு. அங்கு வரும் அகச் சித்தரிப்பு நாவலின் உச்ச கவித்துவ தருணங்களில் ஒன்று. பறக்கும் கூண்டில் சிறை பட்டிருக்கும் பறவையாக தன்னை உணருகிறாள் சித்திரை. பதட்டம் பொங்கும் கள்வர் குடியில் அவளுக்கு வாய்க்கும் முதலிரவு. தனது ஆளுகைக்கு மீறிய மகீரனின் புரியாத நடத்தைகள் அளிக்கும் பதட்டம், தனது வாழ்வே யாரென்றே அறியாத ஒருவனால் பந்தாடப் பட்டது கண்ட துக்கம் அனைத்தும் அவ்வையின் மடியில் தணிகிறது. ஔவையை அவரது கனிவை இத்தனை அனுக்கமாக்கியது சித்திரையின் நோக்கு வழியே அவ்வையை காண்பதால்தான்.

மனிதனோ மந்தையோ மீறும் குட்டியே ஆபத்தை எதிர்கொள்கிறது. மீறும் குட்டியே புதிதாக ஏதேனும் படிக்கவும் செய்கிறது. புடவி சமைத்த படைப்பாற்றலின் விதியே மனிதனுக்குள் மீறலாக உறைகிறது. மயிலனின் மீறல் அவனது விதி அல்ல. அவனது உள்உரையே அதுதான். அதிகாரம் நோக்கிய விருப்புறுதி. பேதை பெண்ணுக்கு மரணதண்டனை வழங்க நன்னனை தூண்டுகிறான். இந்த குணக் கேடு அவனுக்குள் எங்கு விதைக்கப் பட்டது? அவன் கள்வனாக இருந்த போது, தங்கள் குழுக்களுக்குள் இருப்பவரை தவிர்த்து பிற யாருக்கும் கருணை காட்டக் கூடாது என கற்கிறான். கற்றபடி கருணையே இன்றி ஒரு சன்யாசியை தண்டிக்கிறான். தலைவன் வந்து மட்டுறுத்தும் வரை. அங்கு விழுந்தது அந்த விதை இன்னார் இனியார் என பார்க்காது தண்டிக்கும் அக் குணம். பெரும்புலவர் கபிலரையே சொல்லால் சுடுகிறான். கபிலர் வடக்கிருந்து உயிர் துறக்கிறார். கபிலர் உண்மையில் நாடும் மன்னனும்  பிழைக்கத்தான் மயிலனுடன் உளவு தோழனாக சேர்ந்தாரா, அல்லது உண்மையில் கபிலருக்கு சேர மன்னன் அவையில் கிடைக்கும் மதிப்பின் மேல் ஆவல் இருந்ததா, அந்த குற்ற உணர்வின் பகுதிதான் அவரது வடக்கிருத்தலா  எனும் சாம்பல் பகுதி இந்த நாவலில் இலங்கும் உளவியல் மர்மங்களில் ஒன்று.

நாவல் நெடுக அடையாளமற்ற பெண்களின் கண்ணீர்க் கோடு. கொலும்பனின் மனைவி நாவலுக்குள் ஒரே ஒரு இடத்தில்தான் பேசுகிறாள். பேச்சு கூட இல்லை விதவையின் எஞ்சிய வாழ்நாளின் துயர் சொல்லும் ஒரு சங்கக் கவிதை. அவளது முதல் மற்றும் ஒரே குரல் நாவலுக்குள் அது மட்டுமே. அதன் காரணமாகவே அத் துயர் வருவிக்கும் கண்ணீர்த் துளிக்கு கடலின் திணிவு. பாணர் குடி தஞ்சம் புகும் ஆயர் குடியில் ஒரு வழக்கு நடக்கிறது. களவொழுக்கம். தனது மகளுக்கு வாழ்வஅளிக்க அவனை தாய் கெஞ்சுகிறாள். தாயும் மகளையும் விடுத்து அவன் வேறு எங்கோ நோக்கி நிற்கிறான். ஆயர் குடியின் இன்னொரு எல்லையில் மஞ்சு விரட்டு. தனக்கு வேண்டிய பெண்ணை வெல்ல இளைஞ்சர்கள் மரணத்துடன் மல்லிடுகிரார்கள். அணைத்து ஆராவாரமும் ஓய்ந்த பிறகு மெல்லிதாக கேட்கிறது சில காதல் பெண்களின் மெல்லிய விசும்பல். கொலும்பனை இழந்து திக்கற்று அலையும் சித்திரையும், பாரியை இழந்து கபிலருடன் நாடு நாடாக அலையும் பாரியின் மகள்களும் இரக்கமற்ற ஒரே வாழ்வின் இரு முகங்கள்.

சீரை நன்னனால் கொல்லப்பட்டு அம்மனாக வணங்கப்படும் அவளது கோவிலில் இருந்து மீண்ட பிறகு சிரித்தபடியே சொல்கிறாள் ‘’அந்த சுடுகாட்டு அம்மனின் மறு பிறவிதான் நான்’’. அங்கு துவங்கி படிப்படியாக வளர்ந்து சீரையின் அகம் மிக்க அமானுஷ்யமாக முன்வைக்கப் படுகிறது. நாவலின் இறுதியில் சீரை எப்படி தான் இதுவரை ஒரு முறை கூட பார்க்காத  மயிலனை கண்டடைகிறாள்? நாவலின் மிக அழுத்தமான சித்தரிப்பு சீரையில்தான் நிகழ்கிறது. அவள் தனது உள்ளுணர்வின் ஆழத்தால், அல்லது தன்னுள் ஆவாகனம் கொண்ட அம்மனின் இருப்பால்,அவள் நெருக்கமாக மயிலனை பின்தொடர்ந்தே வருகிறாள்.சீரை குரலில் அப்பாவுக்கு அவள் கண்ட உருவெளிக் காட்சியும், சித்திரைக்கு அவள் கண்ட கனவும் சொல்லப் படுகிறது. அப்பாவிடம் நண்டுகள் வரைந்து அதிலிருந்து எழும் உருவங்கள் பற்றி சொல்கிறாள், சித்திரைக்கு பற்றி எரியும் உடலுடன் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஓடும் மான்கள் குறித்து சொல்கிறாள். முதல் காட்சியை முதன் முதலாக கடலைக் கண்ட மயிலன் அதன் கரையில் கண்டு உவகை எய்துகிறான், இரண்டாம் காட்சியை மயிலன் கள்வர் வசம் சேரும் முன் நேரில் காண்கிறான். இந்த இரண்டும் இணையும் புள்ளியில் மயிலனை பின்தொடரும் அழியாத அழலின் ஒளி துலங்குகிறது.

கண்ணகிக்கு கோவில் எடுத்த அதே நிலத்தில், யாரும் அறியா வனத்துக்குள் நன்னனால் கொலை செயப்பட்ட பேதைக்கும் கோவில். யாரறிவார் பரணர் எடுப்பித்த கோவிலாகவும் அது இருக்கலாம். அக் கோவிலின் கருவறைக்குள் மயிலன் காண்பது என்ன?

முதன் முதலாக கடலைக் காணும் மயிலன் அதன் தொடுவானுக்கு அப்பால் என்ன இருக்கும் என ஆவலுடன் சிந்திக்கிறான். இப்போது அனைத்திலிருந்தும் தப்பி ஓட, ஏதேனும் யவனக் கப்பலில் ஏறி தமிழ் நிலத்தை விட்டே விலக கடற்க் கரையில் நிற்கிறான். அனைத்துக்கும் அப்பால் தொடுவானுக்கும் அப்பால்  கையில் கொலை வாள ஏந்தி விஸ்வரூபம் கொண்டு நிற்கிறாள் அன்னை.

மனோஜ் அவர்களை சந்திக்க நேர்ந்தால், சற்றே பொறாமையோடு கைகுலுக்க ஆசை. வம்சி வடிவமைத்த அட்டைப்படம் என அறிகிறேன். நாவலின் சாரத்துக்கு வளம் கூட்டுகிறது. மொழிபெயர்ப்பு குறித்து சொல்லியே ஆக வேண்டும். தமிழ் தவிர[அதுவும் சுமாராக]  பிற மொழி எதுவும் அறியாத என் போன்ற தற்குறிகளுக்கு மொழிபெயர்ப்புகள் பல சமயம் வரம்.சில சமயம் சாபம். விஜய பத்மா என்பவர் மொழி பெயர்த்த மனற்குன்றுப் பெண் என்ற முக்கியமான உலக நாவல். ஆங்கிலம் அறியாத நானே அவரைக் காட்டிலும் சிறப்பாக மொழி பெயர்ப்பேன் என்ற தன்னம்பிக்கையை அளித்தது. அ புனைவுகளிலோ சொல்லவே வேண்டாம், போப்பு என்பவர் மொழி பெயர்த்த குகாவின் நுகர்வேனும் பெரும் பசி என்றொரு நூல், சில நாள் முன்பு மீண்டும் வாசித்துப் பார்த்தேன், என்னால் பாலி மொழியை சரளமாக வாசிக்க முடியும் என அதன் பிறகே அறிந்து கொண்டேன், இன்னும் சிலர் இருக்கிறார்கள். அண்ணன் அரங்காவின் சொத்தை விற்றாவது அவர்களுக்கு பள்ளிப்படை எழுப்ப உத்தேசம். சுகுமாரன், எம்.எஸ், யூமா வாசுகி, சி மோகன் என எனக்கு அணுக்கமான மொழிபெயர்ப்பாளர்கள் வரிசையில் கே வீ ஜெயஸ்ரீயும் இணைகிறார்.  ஆண்டவர் என்ற ஒரே ஒரு சொல்லைத் தவிர எந்த எல்லையிலும் வாசிப்பின்பத்தை சிதைக்காத கலாபூர்வம் குன்றாத மொழிபெயர்ப்பு.  நிற்க.  இந்த நாவல் குறித்து உங்களின் விரிவான கட்டுரையை எதிர்பார்த்து நிற்கும்….

கடலூர் சீனு.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தவிப்பும் ஒளியும்

$
0
0
p

வணக்கம்,

நலமாக இருக்க என் வேண்டுதல்கள்.

அகநானூறு படிக்க முயன்று தோற்று மறுபடியும் முயலும் போது எழும் சந்தேகம். தீர்த்தால் மகிழ்ச்சி.

கவிதைக்கு இணைப்பை பார்க்க. .

கவிதையை எப்படி அர்த்தம் பண்ணிக்கொள்வது.

முதல் 4 வரி

விளங்கின்ற என் காமத்தை சமூகமென்னும் மேகங்கள் பகலிலே மறைத்துக்கொள்கின்றன. நள் இரவிலே மேகங்களை ஊடறுத்து எழும் மின்னல் போல காமம், எல்லாவற்றையும் பிளந்து பொழிகிறது. அந்த ஆரா காம நோய் வருதத்துகிறது, மேலும் அலைகழிக்கிறது.

அல்லது

பகற்குறியிலே நீ வந்து கண்டதால் என் காமம, சூரியனை மறைக்கும் மேகம் போல மறைந்துகொண்டது. ஆனால் இரவுக்குறிக்கு வராததால், காமம் மின்னலேன பிளந்து கொண்டு, மழை போல் கொட்டிக்கிடக்கிற இந்த நள் இரவில ஆரா காமம் வருத்த தவிக்கிறேன்.

வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு

மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்

ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப

இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர

பாம்பு எறி கோலின் தமியை வைகி

தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை

களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்

ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன்

வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்

பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி

குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல்

அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப

முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை

புகல் அரும் பொதியில் போல

பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே.

 

பரணர்

*

அன்புடன்

மகேந்திரன்


images

அன்புள்ள மகேந்திரன்

சங்கப்பாடல்களை வாசிப்பதிலுள்ள இடர்களைப்பற்றி நான் பலவாறாக எழுதியிருக்கிறேன். அவற்றை நீங்கள் ஆய்வாளராக வாசிக்கிறீர்களா அல்லது கவிதைவாசகராக வாசிக்கிறீர்களா என்பது முக்கியமானது.

கவிதை வாசகர் என்றால் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், அக்கவிதையில் உள்ள சொற்களும் அச்சொற்கள் அளிக்கும் பண்பாட்டு உட்குறிப்புகளும் அக்கவிதை அதன்மூலம் விடும் வாசக இடைவெளிகளும் மட்டுமே முக்கியமானவை. அவற்றைப்பற்றி அறிஞர்களும் ஆய்வாளர்களும் முன்னர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது அல்ல

சங்கப்பாடல்களுக்கு திணை, துறைப் பகுப்புகள் எல்லாம் அவை எழுதப்பட்டு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர் சோழர்காலத்திலும் பின்னர் மேலும் ஆயிரமாண்டுக்காலம் கழித்து பத்தொன்பதாம்நூற்றாண்டிலும் உருவானவை. ஆகவே உரைகளை முழுக்கவே தவிர்த்துவிடுங்கள். சொற்பொருள்கொண்டு கவிதையை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புதியதமிழுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்

திகழ்ந்த வெயில் மங்க

கார்முகில் மூடி மின்னல் சுடர

இருண்டு மழைபொழியும் நள்ளிரவில்

அணையாத காமம் பெருகி அலைக்கழிக்க

மலைவிளிம்பிலிருந்து வீழ்பவனைப்போல

நடுங்கி அதிர்ந்து

கோலால் அடிபட்ட பாம்பென நெளிந்து

தனித்திருந்து வருந்துகிறாய் நெஞ்சே!

பிளிறிமுழங்கும் யானைகளும்

பின்னிக் குழம்பிய வாள்களும்

சூழ்ந்த களத்திற்கு

ஒளிர்வேல் கொண்ட படையும்

விசைமிக்கத் தேருமாகப் புகும் திதியனின்

பெருகி அருவி விழும் மரங்கள் செறிந்த காட்டில்

பிறைப்பல் கொண்டஅஞ்சாத பன்றிகளும்

ஊனுக்குப் பூசலிடும் வரிப்புலிகளும்

குழுமிய மலைச்சாரலில்

பாறையுச்சியில் கனிந்த தேனை

அறுத்தெடுக்க முயலும் குறவர்கள்

இறுதிவரை ஏறி அடையமுடியாததும்

சொல்லுக்கு அப்பாற்பட்டதுமான

பொதிகை உச்சியைப்போல

பெறுவதற்கு அரியவள்

நம்மை பித்தெழச்செய்த இவள்

*

மேலே உள்ள வரிகளில் எங்கே இரவுக்குறி பகற்குறி எல்லாம் உள்ளன? அவை ஒருகாலத்தில் பொருள்கொள்ளப்பட்டவை. இப்பாடல்கள் அன்றைய நிகழ்த்துகலைகளுக்கான வரிவடிவமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அந்த அவைக்குரிய அரசனாகிய திதியன் தொடர்பில்லாமல் உள்ளே கொண்டுவரப்பட்டு புகழ்பாடப்பட்டிருக்கிறான்.

அதைத் தவிர்த்தால் இக்கவிதையில் உள்ள வரிகளின் பொருள் இதுவே. பெறுதர்கரியவளாகிய ஒருத்தியைப்பற்றி ஒருவன் தன் நெஞ்சுக்குச் சொல்லிக்கொள்கிறான். அணங்குதல் என்றால் மோகினிப்பேய்க்கு ஆட்ப்படுதல். அந்த அளவுக்கு தன்னை பித்துகொள்ளச்செய்தவளை சில உருவகங்கள் வழியாக முன்வைக்கிறான்

உச்சிவரை சென்றடைய முடியாத மலை.,அந்த மலை அமைந்த மரம்செறிந்த காடு. அங்கே பெருகி விழும் மலையருவி, ஊன்வெறிகொண்ட புலிகள் ,மூர்க்கமான பன்றி ஆகிய தடைகளுக்கு அப்பால் உள்ள மலைத்தேன் அவள். அந்தத் தடைகளை அப்பெண்ணை சூழ்ந்துள்ள உறவையும் சுற்றத்தையும் குறித்தவை என வாசிக்கலாம்.

அப்பெண்ணை நினைத்து வருந்துபவன் தன் மனநிலையைச் சில உருவகங்கள் வழியாகச்சொல்கிறான். பகலைமூடி மறைத்த கருமுகில். அதைக்கிழித்து அதிரும் மின்னல்கள். மூடிப்பொழியும் மழை..அடிபட்ட பாம்பெனவும் மலையுச்சியில் நிலைதடுமாறியவனின் உடல் எனவும் தவித்து துடிக்கிறது அவன் உள்ளம்.

மழைமூடி மின்னல் எழுவதை , மூடிப்பொழியும் மழையை அவன் உள்ளக்கொந்தளிப்பாக வாசிப்பதில் என்ன தடை இருக்கமுடியும்? அடிபட்ட பாம்பு போல துடிப்பதன் வலியை அவளை அடைவதிலுள்ள தடைகளாகிய பன்றிகளுடனும் புலியுடனும் இணைத்துக்கொள்ளலாம். மலையுச்சியில் நிலைதடுமாறிவிழப்போவதை மலைத்தேன் எடுக்கும் குறவர்களுடன் இணைத்துக்கொள்ளலாம்

அத்துடன் திதியனின் யானைப்படையையும் தேர்ப்படையையும் வாள்பூசலையும் இணைத்து வாசித்தால் அணுகமுடியாமையின் துயரம் நம்மை வந்தடைகிறது

இவ்வாறும் இதற்கு அப்பாலும் நம் வாசிப்பை விரித்துக் கொள்ளலாம். அதுவே கவிதை வாசிப்பு. அதைத்தான் கவிஞன் கோருகிறான். கவிதைக்கு காலம் இல்லை. அழியா நிகழ்காலத்தில் உள்ளது அது. இந்தத்தவிப்பு இன்றைய கவிஞனும் எழுதுவதுதான். காலம்தோறும் அது மாறிமாறி வாசிக்கப்படும், பொருள்கொள்ளப்படும்.. இன்றைய வாசிப்பே நாம் அதற்கு அளிக்கவேண்டியது.

நீங்கள் சுட்டிக்காட்டிய பொருள்கோடலில் உள்ள சிக்கல் என்ன? திணை, துறைப் பிரிவினையின் விளைவான வாசிப்பு அது. இதில் குறவர், அருவி, பன்றி, யானை, மலை ஆகியவை வருவதனால் இதை குறிஞ்சி என வகுத்துக்கொண்டனர். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பது குறிஞ்சியின் இலக்கணம். ஆகவே இங்கே எங்கே புணர்தல் உள்ளது என தேடினர். இவ்வரிகளில் புணர்தல் இல்லை. ஆகவே வலிந்து அதை கண்டுபிடித்தனர்

திணை,துறை வகுத்து வாசிப்பதென்பது இலக்கண வாசிப்பு. இலக்கியத்தை இலக்கணமாக ஆக்குவது. இலக்கணத்தின் தளையிட்டு பரணர் என்னும் காட்டுக்களிற்றை கட்டியிடுவது அது. அதை நவீன வாசகன் செய்யக்கூடாது. நான் என் சங்கசித்திரங்கள் என்னும் நூலில் இதை விரிவாக விவாதித்திருக்கிறேன்.

இவ்வரிகளில் இருப்பது அணுகமுடியாதவனின் தவிப்பு மட்டுமே. அணுகிவிடுவோம் என்னும் மெல்லிய நம்பிக்கை இருக்கிறது, அது குறவர் தேனை எடுப்பதைப்பற்றிச் சொல்லுமிடத்தில் தெரிகிறது.அந்த நம்பிக்கையின் ஒளியே கார் மீறி மின்னுகிறது போலும்.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 17211 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>