Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16818 articles
Browse latest View live

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56

$
0
0

[ 3 ]

காலையில் புலரிச்சங்கோசையிலேயே எழுந்து நீராடி புதிய மரவுரியாடை அணிந்து தருமனும் பாண்டவர்களும் திரௌபதியுடன் வேள்விச்சாலைக்கு வந்தனர். வேதசாலை முழுமையாக தூய்மை செய்யப்பட்டு புதுத்தளிர்த் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்கவிடப்பட்டு காத்திருந்தது. எரிகுளத்தில் பலாசமும் ஆலும் சமித்துக்களாக வைக்கப்பட்டிருந்தன. சுஃப்ர கௌசிகரின் இளமாணவனாகிய சுஷமன் அவர்களை நோக்காமல் பொருட்களை சீரமைத்துக்கொண்டிருந்தான். அவர்கள் காலைக்குளிர்காற்றில் நீராடிய ஈரம் உலர காத்து நின்றிருந்தனர். வெளியே சங்கு முழங்கியது. மித்ரன் துணையுடன் சுஃப்ர கௌசிகர் வேள்விச்சாலைக்குள் வந்தார்.

மித்ரன் சங்கை முழக்கியபடி முன்னால் வந்து எரிகுளத்தைச் சுற்றிச் சென்று நிற்க சுஃப்ர கௌசிகர் கைகூப்பியபடி வந்து தன் பீடத்தில் அமர்ந்தார். அவர் விழிகள் அங்கு நின்ற எவரையும் நோக்கவில்லை. பார்வையின்மை ஒளிகொண்டிருந்தது. இரு மாணவர்களும் கைகட்டி பணிந்து நிற்க அவர் “ம்” என கைகாட்டினார். சுஷமன் “அரணிக்கட்டை…” என்றான். மித்ரன் “ஆம்!” என்றபடி திரும்பி வெளியே ஓடினான். சுஃப்ர கௌசிகர் சினத்துடன் சுஷமனை நோக்க அவன் “எடுத்துவைக்கும்படி நான் சொன்னேன், ஆசிரியரே” என்றான். சினத்தால் சுஃப்ர கௌசிகரின் உடலே சிவந்துவிட்டதெனத் தோன்றியது. சீறும் மூச்சுடன் அவர் கண்களை மூடிக்கொண்டார்.

வெளியே மித்ரன் அங்குமிங்கும் ஓடும் ஒலி கேட்டது. தருமன் மெல்லிய குரலில் நகுலனிடம் “சென்று பார்” என்றார். நகுலன் ஓசையெழாது வெளியே சென்றான். நேரம் செல்லச் செல்ல சினம் தாளாமல் கட்டிப்போடப்பட்ட கரடி போல சுஃப்ர கௌசிகர் அசையத்தொடங்கினார். நகுலன் உள்ளே வந்ததும் தருமன் விழிதூக்கி வினவினார். “அந்த அரணிக்கட்டைகளில் நோய் இருப்பதனால் அவற்றை குடிலுக்குள் வைப்பதில்லை. வெளியே நின்றிருக்கும் மகிழமரத்தின் தெற்கு நோக்கிய கிளையில் மாட்டியிருப்பார்களாம். இப்போது அதை காணவில்லை. கீழே விழுந்திருக்கலாம் என்று அங்கே தேடிக்கொண்டிருக்கிறான்.”

தருமன் “போய் தேடுங்கள்” என்றார். “இல்லை மூத்தவரே, அது அங்கிருந்து எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை. அதை அவனே தொலைத்திருக்கிறான். அவன் உடலசைவுமொழி அனைத்திலும் அது தெரிகிறது. நடிக்கத்தெரியாத எளிய அந்தணன்.” தருமன் “ஏன்?” என்றார். “தன் ஆசிரியர் எரியேறுதலை அவன் விரும்பவில்லை. அவன் கண்கள் கலங்கி வழிந்துகொண்டிருக்கின்றன. அவன் அழுவது இந்த அரணிக்கட்டையை தொலைத்துவிட்டதனால் அல்ல.” தருமன் “என்ன செய்வது?” என்றார். “அவனே வரட்டும். தன் நாடகத்தை அவன் முழுமைசெய்யட்டும்.”

மித்ரன் கைகூப்பியபடி கண்ணீருடன் உள்ளே வந்தான். “ம்?” என்றார் சுஃப்ர கௌசிகர். அவன் அருகே வந்து அவர் கால்களில் முகம் மண்படிய விழுந்து விம்மினான். “சொல்!” என்றார் சுஃப்ர கௌசிகர். அவன் அழுதுகொண்டே இருந்தான். “சொல், எங்கே அரணிக்கட்டைகள்?” மித்ரன் “அவற்றை வழக்கம்போல மகிழமரத்தில் மாட்டி வைத்திருந்தேன்…” என்று தலைதூக்காமலேயே சொன்னான். “அவை எங்கே?” என்றார் சுஃப்ர கௌசிகர். “அவற்றை காணவில்லை… அங்கெல்லாம் தேடினேன்.” அவர் உடல் நடுங்கியது. இருகைகளையும் கோத்து இறுக்கிக்கொண்டார். பற்கள் கடிபட தாடி அசைந்தது. பின்பு “நீ அவற்றை வீசிவிட்டாய், அல்லவா?” என்றார்.

மித்ரன் தலையை மண்ணுடன் அழுத்தியபடி படுத்திருந்தான். “எனக்கு மாற்றாக நீ எரியேறுவதாகச் சொன்னாய்… நேற்று மீண்டும் வந்து அதைச் சொல்லி மன்றாடினாய்.” மித்ரன் “ஆம், அதனால்தான். நீங்கள் எரியேற உங்கள் சாம்பலுடன் நாங்கள் செல்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவே இயலவில்லை” என்றான். சுஃப்ர கௌசிகர் தன் நாவிலெழுந்த வசைச்சொல்லை அடக்கி “அதற்காக வேள்வியை நிறுத்துவதா? வேள்வியை நிறுத்துபவனுக்குரிய நரகம் எதுவெனத் தெரியுமா?” என்றார். அவன் அப்படியே கிடந்தான். அழுவதை தோள் காட்டியது. “நீ அந்தணன். வேள்வியை நிறுத்திய நீ ஊழிமுடிவுவரை நரகத்தீயில் எரிவாய்.” மித்ரன் அசைவில்லாது கிடந்தான். “இவ்வேள்வியை முழுமை செய்வதாக சொல்லளித்து வந்தவன் நான். மூன்று முதற்தெய்வங்களும் வந்து ஏழுலகை அளித்தாலும் அதிலிருந்து நான் விலகப்போவதில்லை.”

அவன் எழுந்து கண்ணீரைத் துடைத்து “அதை நான் அறிவேன். இதை நான் ஏன் செய்தேன் என்று என்னால் இப்போது எண்ணக்கூட முடியவில்லை. புலரியில் பின்கட்டுக்குச் சென்றபோது அரணிக்கட்டையை பார்த்தேன். அப்போது தோன்றிய உணர்வெழுச்சியில் அதை எடுத்து வீசிவிட்டேன். அதன்பின் தோன்றியது, உங்களை என்னால் தடுக்கமுடியாதென்று. ஆனால் அந்த அரணிக்கட்டை திரும்பக் கிடைக்கும்வரை நீங்கள் இருப்பீர்கள். ஆகவே நன்று செய்ததாகவே உணர்கிறேன்” என்றான். சுஃப்ர கௌசிகர் “அதற்காக வேள்வியை நிறுத்துவதா? நீ அடையப்போவதென்ன என்று அறிவாயா?” என்றார்.

“ஆம், அறிவேன். அவ்வுலகில் நரகம். இவ்வுலகில் என் குடிக்கு தீராப்பழி. ஆனால் உங்கள் தீச்சொல்லைவிட அவை பெரியவை அல்ல. அவையனைத்தும் என் மேல் விழட்டும். நான் செய்ததற்கு வருந்தவில்லை. அவ்வாறு தோன்றியபின் அஞ்சி விலக்கி பின் நீங்கள் எரிபுகுவதைக் கண்டு நின்றிருப்பதைவிட அது மேல்.” அவன் பெருமூச்சுடன் தன்னை மேலும் இறுக்கிக்கொண்டான். “நான் சித்தமாக இருக்கிறேன். உங்கள் சொற்களை என் மேல் பெய்யலாம். இனி உங்களை விழிநோக்கவும் தகுதியற்றவன் என அகற்றலாம். என் நெஞ்சில் உங்கள் பாதங்களுடன் இக்காட்டில் உங்களுக்கு முடிந்தவரை அண்மையில் எங்கேனும் இருந்துகொண்டிருப்பேன். நீங்கள் எரிபுகும் அன்றே நானும் எரிசூடுவேன்.”

அவர் தலைகுனிந்து கண்மூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். இறுகி மடிந்திருந்த விரல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டன. நிமிர்ந்து “எந்நிலையிலும் உன்மேல் தீச்சொல்லிட என்னால் இயலாது. இது என் வாழ்த்து. நீ நூறாண்டு வாழ்வாய். பெருவைதிகனாக புகழ்பெறுவாய். செல்வமும், நற்குடியும், இறுதியில் கான்புகலும், கனிந்தபின் வீடுபேறும் உனக்கு அமையும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார். “இவ்வேள்வி நிறைவுறுமென தெளிவாக உணர்கிறேன். நான் எரிபுகுந்து நிறைவுகொள்வேன். என் சாம்பலுடன் நீங்கள் அவந்திக்கு மீளவேண்டுமென ஆசிரியனாக நான் ஆணையிடுகிறேன்.” மித்ரன் கைகளைக் கூப்பி கண்ணீர் வழிய உதடுகள் துடிக்க தலைகுனிந்து மண்டியிட்டிருந்தான். சுஷமன் கைகூப்பி அழுதுகொண்டிருந்தான்.

“வேள்விக்காவலராக பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி வந்து நின்றிருக்கிறார். ஆம், இவ்வெரி மரவுரி சூடி நின்றிருக்கும் இவரையே அவ்வாறு காட்டுகிறது. அவரும் இளையோரும் எனக்கு அந்த அரணிக்கட்டையை மீட்டுக் கொண்டுவந்து அளிப்பார்கள்.” தருமன் முன்னால் சென்று குனிந்து வாய்பொத்தி “ஆணை, வைதிகரே!” என்றார். “எத்திசைக்குச் சென்றாலும் எங்கிருந்தேனும் அந்த அரணிக்கட்டைகளுடன் இங்கு வருக! அதுவரை நான் இங்கேயே இருப்பேன். இப்பீடத்திலமர்ந்தபின் இனி எரிதான். எழுந்திருப்பதென்பதில்லை” என்றார் சுஃப்ர கௌசிகர். தருமன் கைகூப்பி “அவ்வாறே” என்றபின் திரும்பி தம்பியரை நோக்கிவிட்டு வெளியே சென்றார்.

நால்வரும் அவரை தொடர்ந்தனர். தருமன் “அரசி இங்கிருக்கட்டும். நாம் ஐவரும் சென்று அதைத் தேடி எடுப்போம்…” என்றார். அவர்கள் கொல்லைப்பக்கம் சென்று அங்கு நின்றிருந்த மகிழமரத்தை அணுகினர். அதைச் சுற்றி புல் வளர்ந்த நிலம் இருந்தது. அடுமனைச் சாம்பல் அப்பால் ஒரு குழியில் குவிக்கப்பட்டிருந்தது. நிலத்தை ஒருமுறை விழிகளால் சுற்றி நோக்கிய அர்ஜுனன் “அரணிக்கட்டைகள் இங்கில்லை, மித்ரன் அதைச் சுழற்றி வீசியதாக சொன்னான். அவை எறிதொலைவுக்கு அப்பால் சென்றிருக்க முடியாது. ஆனால் இங்கு அவை இல்லை என்பதனால் பிறிதொன்று நிகழ்ந்துள்ளது. மித்ரன் அதை சொல்வான் என நான் நினைக்கவில்லை” என்றான்.

அர்ஜுனன் மகிழ மரத்தடியில் இருந்து சாம்பல்குவை வரை சென்று நின்றான். இடையில் கைவைத்து தரையை கூர்ந்து நோக்கியபடி சென்று நிமிர்ந்து “அந்த அரணிக்கட்டை ஒரு கலைமானின் கவர்கொம்பில் மாட்டப்பட்டுள்ளது” என்றான். தருமன் நோக்க “அதன் காலடித்தடங்கள் இவை. அது இங்கே சாம்பல் உண்ணும்பொருட்டு வந்திருக்கிறது. கலைமான்கள் அப்படி வரும் வழக்கம் உண்டு. இன்று காலை இந்த மான் மட்டுமே வந்திருக்கிறது. தூக்கி வீசப்பட்ட அரணிக்கட்டை அதன் கொம்பில் விழுந்திருக்கலாம். இதோ இங்கிருந்து அது அஞ்சி விலகி ஓடியிருக்கிறது” என்றான். “ஒரே தாவலில் இத்தனை தொலைவு சென்றிருக்கிறது என்பதிலிருந்து அது அஞ்சிப் பதறியிருப்பதை உய்த்துணரலாம்.”

அவர்கள் அனைவரும் உடனே அங்கு நிகழ்ந்ததை அகவிழியால் கண்டனர். தருமன் “ஆயினும் அது ஒரு உய்த்தறிதல் மட்டுமே. உறுதியெனக் கூற இயலாதல்லவா?” என்றார். பீமன் விரைவாக மரத்திலேறி உச்சிக்கிளைக்குச் சென்று “ஆம் மூத்தவரே, அந்த மான் அதோ மலைச்சரிவின் அருகே பாறைமேல் நின்றிருக்கிறது. அதன் கொம்பில் அரணிக்கட்டைகளையும் காண்கிறேன். இருகட்டைகளையும் இணைக்கும் சரடு அதன் கொம்புக்கிளையில் நன்றாகவே சுற்றியிருக்கிறது” என்றான். “கிளம்புக!” என்றார் தருமன். “இளையோனே, அரணிக்கட்டைகளை ஏந்தியமையால் அந்த மான் அந்தணனுக்கு நிகராக ஆகிவிட்டது. அதை கொல்லலாகாது. அது புண்படவும்கூடாது. உயிருடன் பிடிக்கவேண்டும், அதற்கு நோகாது அரணிக்கட்டைகளை கைப்பற்றவேண்டும்” என்றார்.

அர்ஜுனன் தலைவணங்கி நாணலம்புகளை அள்ளிக்கொண்டு தன் மூங்கில் வில்லுடன் முன்னால் சென்றான். தொடர்ந்து மூவரும் ஓட பீமன் மரக்கிளைகள் வழியாக அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருக்கையிலேயே கால்கள் பட்டு உருண்ட கற்கள் சென்று விழுந்த ஒலியில் மான் உடலதிர்ந்து செவிகளைத் திருப்பியது. இன்னொருமுறை அதிர்ந்தபின் துள்ளி புற்பரப்புக்கு அப்பால் சென்றது. பிறிதொருமுறை துள்ளி பாறையொன்றில் ஏறி மறுபக்கம் சென்று மறைந்தது. “செல்வோம்… அது எங்கு ஓடினாலும் செல்லும் தடத்தை விடாதிருக்கமுடியாது… அது களைப்புற்றே ஆகவேண்டும்” என்றான் அர்ஜுனன்.

பாறையுருளைகள் அவர்களுடன் சேர்ந்து ஓசையிட்டபடி உருண்டு கீழிறங்க அவர்கள் பாய்ந்து அந்த மலைச்சரிவின் எல்லையாக அமைந்த சிறிய ஓடையை அடைந்தனர். கந்தகநீரின் மஞ்சள் தடங்கள் விளிம்பாகப் படிந்த ஓடை நீரோசையுடன் பாறைகளில் முட்டிச்சுழித்து சிதறி வளைந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. ஓடைக்கு அப்பால் உருளைப்பாறைகள் மேலிருந்து புரண்டுவந்து சிதறிப்பரவிய மலைச்சரிவு வெண்ணிறமான கந்தக மண்ணுடன் வளைந்து மேலேறிச்சென்று மலையென எழுந்தது. அதன் புழுதிப்பரப்பில் மானின் கூரிய இரட்டைக்குளம்புத்தடம் சென்றிருந்தது. பீமனும் இறங்கி அவர்களுடன் வந்தான். பன்றிப்பாறைகள் வழியாகவும் கூரிய முட்களுடன் நின்ற குட்டைப்புதர்களினூடாகவும் அவர்கள் சென்றனர்.

பாறைப்பரப்பில் குளம்புத்தடம் மறைந்தது. பீமன் குப்புற விழுந்து முகர்ந்து “இவ்வழி” என்றபின் தொடர்ந்து சென்றான். அவர்கள் தொடர்ந்து ஓடினர். அர்ஜுனன் பாறைமேலிருந்து பாறைக்கு விட்டில்போல தாவிதாவிச் சென்றான். “இந்தப் பாறைக்கூட்டங்கள் நடுவே வாழும் மான் அது. பிற மான்களைவிட இருமடங்கு விரைவை கற்றுக்கொண்டிருக்கிறது” என்றான் பீமன். தொலைவில் மீண்டும் மானின் குளம்புச்சரடு தெரியலாயிற்று. அதோ என கைகாட்டிவிட்டு அர்ஜுனன் பாய்ந்துசெல்ல அவர்கள் தொடர்ந்தோடினர். மிக அப்பால் ஒரு பாறைமேல் மானின் தலை எழுந்தது. செவிகோட்டி அவர்களை அது நோக்கியது. இயல்பாக அர்ஜுனன் அம்பை நாட “விஜயா, வேண்டாம்!” என்றார் தருமன்.

மான் மீண்டும் மறைந்தது. மலைச்சரிவில் அவர்கள் தொற்றியும் பாய்ந்தும் ஏறிச்சென்றனர். அவர்கள் கால்வைத்த பாறைகள் இளகி உருண்டு கீழே சென்று அந்த ஓடையில் நீர்தெறிக்க விழுந்தன. ஒன்றுடன் ஒன்று முட்டி ஒலியெழுப்பின. அவர்களின் கால்கள் பதிந்த குழிகளில் இருந்து வெண்ணிறமான மெல்லிய கந்தகப்புகை எழுந்தது. பல பாறைகளின் அடியிலிருந்து உலைமூடிபோல கந்தகப்புகை சீறிக்கொண்டிருந்தது. மேலே பெரும்பாறை ஒன்றின்மேல் ஏறிய அர்ஜுனன் “அது நெடுந்தொலைவு சென்றுவிட்டது” என்றான். பீமன் “அது களைத்தே ஆகவேண்டும்” என்றான். தருமன் “செல்வோம். அதைக் கொள்ளாமல் நாம் திரும்புவதில்லை” என்றார்.

மேலேறிச் சென்றபோது மலைச்சரிவு வெண்மணல் பரவிய நிலவெளிபோல ஆகியது. நூற்றுக்கணக்கான வெண்ணிற ஆவித்துளைகள் நாகமூக்குகள் போல சீறிக்கொண்டிருந்தன. நடுவே கரிய உருளைப்பாறைகள் நின்றிருந்தன. தொலைவளைவு வரை மான்குளம்புத்தடம் இருபுரிக் கயிறுபோல சென்றிருந்தது.

 

[ 4 ]

களைத்து மூச்சிரைக்க ஐவரும் ஒரு பாறைநிழலை அடைந்தனர். அதற்குமுன் அத்தகைய உயிரை தவிக்கச்செய்யும் விடாயை தருமன் அறிந்ததில்லை. உடலில் இருந்து அத்தனை நீரும் ஆவியாகிச் சென்றுவிட்டதைப்போல. வியர்வை குளிர்ந்து உலர்ந்து மேலும் வியர்வை எழாமலாகி தோல் சுருங்கி எரியத்தொடங்கியது. காதுமடல்களும் மூக்குக்குழாய்களும் உதடுகளும் விரலிடுக்குகளும் அனல்பட்டதுபோல காந்தின. விழுவதுபோல நிழலில் அமர்ந்த தருமன் “இளையோனே, நீரில்லாது இனி ஒரு அடியும் என்னால் எடுத்துவைக்க முடியாது” என்றார். “கந்தகநிலம். காற்றும் கந்தகம் கலந்துள்ளது” என்றான் நகுலன்.

பீமன் பாறைமேல் தொற்றி மேலேறிச் சென்று உச்சிக்குவை மேல் நின்று நான்குபக்கமும் நோக்கியபின் திரும்பிவந்தான். “மூத்தவரே, அங்கே வடகிழக்காகச் சென்றால் ஒரு பாறைச்சுனை தெரிகிறது. நீலநீர் உள்ளது” என்றான். “அங்குவரை செல்ல என்னால் இயலாது. நீயே சென்று நீர் கொண்டுவா!” என்றார் தருமன். “ஆம் மூத்தவரே, அனைவரும் களைத்திருக்கிறோம்” என்றான் நகுலன். பீமன் “இங்கிருங்கள். நான் நீருடன் வருகிறேன்” என பாறைகள் மேல் தாவிச்சென்று மறைந்தான். “நீர் என்னும் சொல்லே இன்னும் மூன்று நாழிகை உயிர்தங்கப் போதுமானது” என்றான் நகுலன்.

“அந்த மான் இந்த கந்தகநிலத்தில் பிறந்து வளர்ந்தது. அதன் குருதியிலும் கந்தகம் நிறைந்திருக்கும்” என்றான் அர்ஜுனன். “ஆகவேதான் அது சாம்பலுண்ண அங்கு வருகிறது. அது களைப்பறியவில்லை. இந்நிலத்தின் அனைத்துக் கரவுப்பாதைகளையும் அது நன்கறிந்திருக்கிறது.” அவர்கள் அந்நிலத்தை நோக்கியபடி சோர்ந்து கிடந்தனர். பாலைநிலமா வெண்களரா என்று தெரியாத நிலம். ஆங்காங்கே பச்சைமுள்ளெலிகள் முட்பன்றிகள் உடல்குவித்து அமர்ந்திருப்பதுபோல சிறிய புதர்கள். மரங்களே இல்லை. சீறும் கந்தகத்துளைகள் சிலவற்றிலிருந்து நீர் ஊறி வழிந்து ஓடைகளாக ஓடி இறங்கியது. அந்த ஓடைகளின் விளிம்பில் வெண்களிமண் படிந்து இறுகி பளிங்குத்தடமென ஆகியிருந்தது.

வெண்நிலம் மீது விழுந்த வெயில் வெம்மை மிகுந்திருந்தது. அலையலையாகச் சூழ்ந்து அது பார்வைக்கு முன் திரையிட நோக்குந்தோறும் விழிநீர் வழிந்தது. மூச்சு நிறைந்த நெஞ்சக்குவையே அனல்கொண்டது. காறித்துப்பிய எச்சிலிலும் கந்தகச்சுவை இருந்தது. “அழுகிய ஊன் நாற்றம்” என்றார் தருமன். “மண்ணுக்குள் வாழும் அனல்வடிவான விராடபுருஷனின் புண்ணின் சலம் இது என்று சொல்வார்கள்.” நகுலன் தலையசைத்தான். “அவன் உடல்திறந்து அனல் பொங்கி எழுவதுண்டு என்று அறிந்திருக்கிறேன். கந்தமாதன மலைக்குமேல் நெருப்பு ஆயிரம் சிறகுகளுடன் எழுந்திருக்கிறது. நீரென நெருப்பே ஓடி மலைச்சரிவுகளைத் தழுவி அருவியாகியிருக்கிறது. மண்ணுறையும் விராடபுருஷன் விண்ணை நோக்க எழும்தருணம் அதுவென்பதனால் மலை வெண்கொற்றக்குடை சூடியிருக்கும் என்கிறது பராசரரின் புராண மாலிகை.”

சகதேவன் துயின்றுவிட்டான். நகுலன் அவனை நோக்கி “மிகவும் களைத்துவிட்டான், மூத்தவரே. கந்தகமலையில் இத்தனை உயரம் ஏறுவதென்பது அவன் உடலுக்கு ஏற்றதல்ல” என்றான். தருமன் “நாம் எவருமே இத்தனை தொலைவுக்கு ஏறியதில்லை. விஜயனும்கூட களைத்திருக்கிறான்” என்றார். நகுலனும் சற்றுநேரத்தில் துயில்கொண்டான். அவர்களை நோக்கிக்கொண்டிருந்தபோது தருமன் கண்களும் சொக்கின. வெண்ணிறமான நிலம் கண்ணிமைகளுக்குள் அலையடித்தது. அது ஆயிரக்கணக்கான நாரைகளாக மாறி வானிலெழுந்தது. விழித்துக்கொண்டபோது தெரிந்தது, அந்த நாரையிறகிலிருந்தது அந்நிலத்தின் மணம்தான்.

“இளையோனே” என்றார் தருமன். அர்ஜுனன் “மூத்தவரே” என திரும்பினான். “நெடுநேரமாகிறது. மந்தன் இன்னும் வரவில்லை.” அர்ஜுனன் “ஆம், நானும் அதையே எண்ணினேன். ஏதேனும் இடர் நிகழ்ந்திருக்கலாம். நான் சென்று பார்த்துவிட்டு நீருடன் வருகிறேன். நீங்கள் இங்கிருங்கள்” என்று எழுந்தான். “நாம் சேர்ந்து செல்வோமே” என்றார் தருமன். “இளையோர் களைத்திருக்கிறார்கள்… நான் சென்று வருகிறேன்” என்றான் அர்ஜுனன். “விஜயா, நான் அஞ்சுகிறேன். ஏனென்று தெரியவில்லை, நெஞ்சு பதைக்கிறது” என்றார் தருமன். “என்ன கனவு கண்டீர்கள்?” என்றான் அர்ஜுனன். “இந்த களர்நிலத்திலிருந்து வந்த நாரை அது.” அர்ஜுனன் “நானும் அதையே நினைத்தேன். அவ்விறகிலிருந்த எரிமணம்” என்றான்.

“அது நம்மை இங்கு இட்டுவந்திருக்கிறது. வெண்குடைசூடி இதற்கு அப்பால் நின்றுள்ளது கந்தமாதனம்” என்றார் தருமன். “அனல்சிறகுகளுடன் எழும் பறவை அது என்கின்றது புராணமாலிகை.” அர்ஜுனன் “நாம் ஊழை நம்பி கானுறைபவர்கள். எதுவரினும் நம் திறனையும் மூதாதையர் அருளையும் நம்பி எதிர்கொள்வோம்” என்றான். வில்லம்புடன் வெளியே சென்று நிழலசையும் இயல்பான விரைவுடன் பாறைகள் மேல் மறைந்தான். அவன் தோற்றம் மறைந்தபின்னரும் மயங்கிய விழிகளில் மயக்குரு எஞ்சியிருந்தது.

மீண்டும் தருமன் துயில்மயங்கினார். அதில் அந்த நாரையை அருகே நோக்கினார். அது தன் கழுத்தில் அரணிக்கட்டைகளை மாட்டியிருந்தது. “நான் இங்கிருந்து எரிவிதைகளைச் சுமந்து சென்றேன். மாளவத்தின் காடுகளில் விழுந்தது என் எச்சமே” என்றது. “அது முளைத்து அங்கே பலிகொள்ளத் தொடங்கியது. என்னை நிறைவுசெய்யவே சுஃப்ர கௌசிகர் இங்கு வந்திருக்கிறார்.” சிறகடித்து எழுந்து பறந்து அகன்றது. வானமெங்கும் வெண்ணிற நாரைக்கூட்டம். நாரையாலான முகில்கள். அவர் “ஏன்?” என்றார். “நான் பலிகொண்டு முடிக்கவில்லை. ஆகவே வேள்வி நிறைவுறவேண்டியதில்லை” என்றது அவர் அருகே அமர்ந்திருந்த இன்னொரு நாரை. அதன் விழிகள் நாகங்களுக்குரியவையாக இருந்தன.

அவர் விழித்துக்கொண்டபோது உடலையே அசைக்கமுடியவில்லை. கண்ணீர் வழிந்து இரு பக்கங்களிலும் ஓடி உலர்ந்திருந்தது. “இளையோனே” என நகுலனை தட்டினார். இருவரும் உடனே எழுந்துகொண்டனர். நகுலன் “கனவு” என்றான். “என்ன?” என்றார் தருமன். “உங்களை ஒரு பெரும்பறவை வந்து தூக்கிச்சென்றது. செந்நிறமான தழல்சிறகுள்ள பெரும்பறவை. அது வெண்குடை சூடியிருந்தது.” சகதேவன் “ஆம், அதே கனவை நானும் கண்டேன். நான் என்ன என்ன என்று கேட்டேன். அறமென்பது என்ன என இவனை மெய்யுருக்கி கற்பிப்பேன் என்றது. நான் அதனிடம் சொன்னேன், நாங்கள் ஊழை நம்பி கானுறைபவர்கள். எதுவரினும் எம் திறனையும் மூதாதையர் அருளையும் நம்பி எதிர்கொள்வோம் என்று.”

“பார்த்தன் சென்றும் நெடுநேரமாகிவிட்டது. நாம் சென்று பார்ப்போம். இங்கு இப்படி அமர்ந்திருப்பதில் பயனில்லை” என்றார் தருமன். “ஆம், அதையே நானும் எண்ணினேன். நானும் நகுலனும் சென்று நோக்கி வருகிறோம். தாங்கள் இங்கு உறைக!” என்றான் சகதேவன். “உங்களை அனுப்புவதா?” என்றார் தருமன். “நாங்கள் இருவருமாகச் செல்கிறோம், மூத்தவரே. இது ஏதேனும் பொறி என்றால் அது உங்களுக்காகவே. நீங்கள் சென்று அகப்பட்டுக்கொள்ள வேண்டியதில்லை” என்றான் சகதேவன். “அவர்கள் இருவரும் தோளாலும் வில்லாலும் அணுகினார்கள். நாங்கள் மதியால் அணுகுகிறோம். அவர்கள் காணாததை கண்டுவிடக்கூடும். அவர்கள் அளித்த எச்சரிக்கையும் துணையுள்ளது.”

தருமன் மேலும் சொல்லெடுக்க முயல “மறுக்கவேண்டாம், மூத்தவரே! என் சொல்லை நீங்கள் மறுப்பதில்லை” என்றான் சகதேவன். “ஆம், நீ அனைத்துமறிந்தவன், இளையோனே” என்றார் தருமன். அவர்கள் இருவரும் எழுந்து தலைவணங்கி நடந்து சென்றனர். அவர்கள் செல்வதை நோக்கியபடி பாறைநிழலில் உடல் சுருக்கி தருமன் அமர்ந்திருந்தார். அவர்கள் செல்வதை முழுமையாக நோக்கக்கூட முடியாதபடி அனல்கொண்ட விழிகளின் நீர்மை மறைத்தது. வாயை சப்புக்கொட்டியபோது முற்றிலும் ஈரமில்லாமல் அது தோல்பை எனத் தோன்றியது. தொண்டையில் மணல் அடைத்திருப்பதைப்போல இருந்தது.

மீண்டும் அருகே அந்த நாரை தோன்றியது. அதன் கண்கள் மனிதநோக்கு கொண்டிருந்தன. “முன்பு காட்டில் என் தோழர்கள் இருவர் மரக்கிளையில் அமர்ந்திருந்தார்கள். இந்த நச்சுநிலத்தில் அவர்கள் உண்டு சுமந்துசென்ற நஞ்சை நிலமுதிர்த்தார்கள். அது அங்கு தவத்திலாழ்ந்திருந்த கொங்கணர் என்னும் அந்தணர்மேல் விழுந்தது. நஞ்சென உணர்ந்த அக்கணமே அவர் நிமிர்ந்து நோக்கி தன் விழிகளில் தவத்தீயை கொண்டுவந்து அவர்களை எரித்தழித்தார். ஆனால் அவர்மேல் விழுந்த நஞ்சு அவரில் முளைத்தது. தவம் அழிந்த வெறுமையில் அது கிளைவிட்டுப் பெருகியது. ஆறாச்சினமும் ஆணவமும் கொண்டவராக அவர் காடுநீங்கி நாட்டுக்குள் புகுந்தார். அவர் உடல் அருகிருப்போர் அகன்றோடும்படி கொதித்தது. விழிகள் அனலெரிந்தன.”

இரந்தபடி மிதிலைநகருக்குள் சென்றுகொண்டிருந்த கொங்கணர் அங்கே தன் நோயாளிக்கணவனுக்கு பணி செய்துகொண்டிருந்த குலமகள் ஒருத்தியின் வீட்டு முற்றத்தில் சென்று நின்று ‘அன்னம் அளிப்பாயாக!’ என மும்முறை ஆணையிட்டார். கணவனுக்கு பணி செய்துகொண்டிருந்தமையால் அவ்வழைப்பைக் கேட்கும் காதுகள் அவளுக்கு இருக்கவில்லை. அவள் நான்காம் முறை அவர் குரல் கேட்டு வெளியே வந்ததும் ‘மும்முறை என் குரலைக் கேட்காத நீ பிழைபுரிந்தவள். உன் அன்னம் நஞ்சு!’ என்று கூவிய கொங்கணர் அவளை தன் தீவிழியால் நோக்கினார். அவள் குளிர்ந்த நீர்மலர் போல் நின்றிருந்தாள்.

ஆணவம் சுருங்கி சிறுத்த கொங்கணர் ‘நீ ஆற்றும் தவமென்ன? அதை எனக்கு அளி. நான் உன் மாணவனாகிறேன்’ என்றார். ‘நான் இந்நகரின் சந்தையில் ஊன் அறுத்து விற்கும் வேடன் ஒருவனிடமிருந்தே என் தவத்தைக் கற்றேன். அவரை இங்கு தர்மவியாதர் என அழைக்கிறார்கள்’ என்றாள். கொங்கணர் சந்தையை அடைந்து அங்கே இளங்கன்றின் கழுத்தை முறுக்கித்திருப்பி கத்தியை ஓங்கிக்கொண்டிருந்த தர்மவியாதரின் முன் சென்று நின்றார். கைகளைக் கூப்பியபடி ‘எனக்கு தவமென்பது என்ன என்று உரையுங்கள்’ என்று கோரினார்.

‘இந்தக் கன்றின் கால்களைப் பிடி’ என்றார் தர்மவியாதர். ‘இவ்விழிசெயலைச் செய்தால் நான் எப்படி மீட்படைய முடியும்?’ என்றார் கொங்கணர். ‘என் மாணவன் நீ என்றால் இது நீ செய்யும் பணிவிடை’ என்றார் தர்மவியாதர். கன்றின் கால்களை பற்றிக்கொண்டார் கொங்கணர். அதன் குரல்வளையைக் கிழித்து குருதிப்பெருக்கைப் பீய்ச்சிவிட்டு தோலை உரித்து அகற்றி துண்டுபோட்டு விற்பனைக்காகப் பரப்பிவிட்டு தர்மவியாதர் முதல் மெய்மையை சொன்னார் ‘கடமை எந்நிலையிலும் இழிவாவதில்லை. முழுமையாக தன்னை அளித்துச் செய்யப்படும் கடமையே தவம்.’

‘இக்கன்றை நான் கொல்லவில்லை. ஏனென்றால் இதன்மேல் நான் வஞ்சமோ சினமோ கொள்ளவில்லை. இதைக் கொல்வதில் நான் மகிழவுமில்லை. இது பிரம்மவடிவம் என நான் அறிந்திருக்கிறேன். மைந்துக்கு முலையூட்டும் அன்னையும் நானும் ஒரே உளநிலையில் இருக்கிறோம்’ என்றார் தர்மவியாதர். ‘என்னுடன் இரு. என்று உன் உள்ளமும் அவ்வாறே உணர்கிறதோ அன்று நீ தவம் புரியலானாய்.’ அங்கே ஏழாண்டுகாலம் தர்மவியாதரின் மாணவராக இருந்தார் கொங்கணர். அவர் சொன்னவற்றை எல்லாம் நூலாக யாத்தார். ஒருநாள் அவரே உணர்ந்தார், தன் உள்ளம் கனிந்திருப்பதை. துண்டுகளாக வெள்ளாடு ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தபோது விழிநீர் பெருகி சொட்டியது.

‘சொல்க!’ என்றார் தர்மவியாதர். ‘ஆசிரியரே, நான் எரித்தழிந்த அந்தப் பறவைகளை மீட்டு உயிரளிப்பதென்றால் எத்தனை தவம் வேண்டும் எனக்கு?’ என்றார் கொங்கணர். ‘வடக்கே செல்க! அங்கே கந்தமாதன மலையின் அடியில் உள்ளது யக்‌ஷவனம். அங்குள்ள சுனையின் கரையிலமர்ந்து தவம் செய்க! நீ அனைத்தையும் மீட்டுருவாக்குவாய். மீள்வாய்’ என்றார் ஆசிரியர். கொங்கணர் வந்து இங்குள்ள பகசரோவரம் என்னும் பொய்கையின் கரையில் அமர்ந்து தவம் செய்தார். அந்தப் பொய்கையைச் சூழ்ந்திருந்த கந்தகச்சேற்றில் புதைந்துகிடந்த அத்தனை நாரைமுட்டைகளும் விரிந்தன. ஆயிரக்கணக்கான நாரைகள் சிறகுகொண்டு எழுந்தன. அவர் அவற்றைக் கண்டு நிறைந்து விண்புகுந்தார்.

தருமன் விழித்துக்கொண்டபோது பொழுது சாயத்தொடங்கியிருந்தது. பாறைநிழல்கள் உருகிவழிந்து நீண்டிருந்தன. வானம் முகில்கள் அற்று நீலமாக விரிந்திருந்தது. எழுந்தபோது தலைசுற்றி அவர் பின்னால் சரிந்து விழுந்தார். பாறையைப் பற்றியபடி நின்றார். நாவால் உலர்ந்த வாயை மீண்டும் மீண்டும் நக்கிக்கொண்டார். கண்களை மூடி சற்றுநேரம் நின்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். ஒவ்வொன்றாக நினைத்து எடுத்து கனவுக்கும் நினைவுகளுக்கும் இடையே துலாநிறுத்தி நனவை சமைத்தெடுத்தார். பின்பு நீள்மூச்சுடன் கிளம்பி அவர்கள் சென்ற அத்திசை நோக்கி சென்றார்.

தொடர்புடைய பதிவுகள்


கொலாலம்பூர்

$
0
0

2

 

மலேசியாவின் நவீன இலக்கியம் பெரும்பாலும் ம.நவீன் ஒருங்கிணைப்பில் நிகழும் வல்லினம் இலக்கிய அமைப்பையும் நண்பர்களையும் சார்ந்தே நிகழ்ந்துவருகிறது. நான் வல்லினத்தின் இருநிகழ்ச்சிகளில் முன்னரே கலந்துகொண்டிருக்கிறேன். இம்முறை சிறுகதை குறித்த ஒரு பட்டறையில் கலந்துகொள்ள நவீன் அழைத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பட்டறை. சனிக்கிழமை காலையே வந்தால் கொஞ்சம் சுற்றிப்பார்க்கலாமென்பது திட்டம்.

 

அருண்மொழி 6 ஆம்தேதி காலை இங்கே வந்தாள். அவளே பஸ்ஸில் டிக்கெட் எடுத்து ஜூராங் பறவைப்பூங்கா, கலைவைப்பகம், அருங்காட்சியகம் என சென்றுவந்தாள். அந்தச்சாதனையைச் சொல்லிச்சொல்லி பூரிப்பு தாளாமல் ஏகப்பட்ட தொலைபேசிச் செலவு. வெள்ளிக்கிழமையே இங்கிருந்து கொலாலம்பூர் செல்ல பேருந்தில் சீட்டு போட்டிருந்தோம்.

3si

ஆனால் சனி,ஞாயிறு விடுமுறை. திங்கள் பக்ரீத். இரவு பதினொருமணிக்கு பேருந்துநிலையம் சென்றோம். அங்கே கோயம்பேடு பேருந்துநிலையத்தின் தீபாவளிக்கூட்டம் போல தள்ளுமுள்ளு. எல்லா பேருந்துகளும் மணிக்கணக்காகத் தாமதம். புகை, வெக்கை. என்னால் அமர்ந்திருக்கமுடியவில்லை. மூச்சுத்திணறல், கண் எரிச்சல். ஆகவே திரும்பிவந்துவிட்டோம்

 

சிங்கப்பூர் தரையை அதிதூய்மையுடன் வைத்துள்ளது. ஆனால் காற்று  மாசடைந்தது. மிதமிஞ்சிய வாகனப்புகை ரசாயனங்கள். ரசாயன ஆலைகளின் புகை. அருகே உள்ல இந்தோனேசியாவின் காடுகள் எரிக்கப்படும் புகை. அத்துடன் காற்றோட்டமே இல்லை. உயர்ந்த கட்டிடங்கள் நடுவே காற்று ஓடுவதே இல்லை.

4s

ஸ்ரீதர்

 

இங்கு வந்தபின் நான் நடைசெல்வதையே முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். இரண்டுமுறை நடை சென்றேன். மீண்டால் உடல் முழுக்க கரிப்பசை. தூங்கினால் நள்ளிரவில் மூச்சடைப்பு வந்து விழிப்பு வந்துவிடும். பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளேயே வாழ்கிறேன். நான் பணியாற்றும் தேசியக் கல்விக்கழக – தேசிய தொழில்நுட்ப பல்கலை வளாகம் நல்ல காடு. அங்கே காற்று ஒப்புநோக்கப் பரவாயில்லை. ஆனால் அங்கே கட்டிடங்கள் எழுந்தபடியே உள்ளன.

 

சரவணன் அளித்த ஒவ்வாமை மாத்திரை இரவில் துயிலச்செய்தது. காலையில் நவீன் அழைத்து காரிலேயே அழைத்துச்செல்வதாகச் சொன்னார். மாலை நான்குமணிக்கு கிளம்பி இரவு பன்னிரண்டரைமணிக்கு கொலாலம்பூர் சென்றுசேர்ந்தோம். வழியெல்லாம் வண்டிகள் தேங்கி நின்று ஊர்ந்தன. ஆனால் பேசிக்கொண்டே சென்றதனால் அலுப்பு தெரியவில்லை

5s

நவீன்

 

நவீன் நடத்தும் பறை இதழ் சார்பில் ஒரு சிறுகதைப்போட்டி நடத்தப்பட்டு அதில் கலந்துகொண்டவர்களில் 30 பேர் தெரிவுச்செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் நான் சிறுகதையின் செவ்வியல் வடிவம் என்ன என்று பேசினேன். கதைகளை உதாரணமாகக் காட்டி அதை விளக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் சிங்கப்பூரில் இரண்டுமாதமாக என் வேலையே அதுதான்.

 

காலையில்  இரட்டைக்கோபுரம் அருகே சென்று சாப்பிட்டுவிட்டு சுற்றிவந்தோம். விழா மாலையில் முடிந்தது. டாக்டர் ஷண்முகசிவாவுடன் சென்று அவரும் வழக்கறிஞர் பசுபதியும் இணைந்து நடத்தும் மைஸ்கில் என்னும் கல்விநிறுவனத்தைப் பார்த்தோம். உலகமே அறிந்த அமைப்பு அது – கபாலி படத்தில் வருவது. பல்வேறு காரணங்களால் பள்ளிப்படிப்பை முடிக்கமுடியாதுபோன, குற்றப்பின்னணிகொண்ட, பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சிப்பள்ளி.

6s

அங்குள்ள மாணவர்களைச் சந்திக்கும் ஒரு சிறிய நிகழ்ச்சி நடந்தது. திருமதி மலர் அங்கு ஆசிரியையாக பணிபுரிகிறார். சமீபத்தில் நான் சந்தித்த முக்கியமான ஆளுமை. உற்சாகமும் துடிப்பும் நிறைந்தவர். இத்தகைய நிறுவனங்களை அமைப்பது எளிது. ஆனால் நடத்துவதற்குரிய மனிதர்கள் கிடைப்பது மிகமிக அரிது. அர்ப்பணிப்பும் உண்மையான தீவிரமும் இல்லாமல் வேலையாக இதைச்செய்யமுடியாது. மைஸ்கில் நிறுவனம் அவ்வகையில் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது. மலர் அந்த மாணவர்களிடம் உரையாடியதைப்பார்ப்பதே பரவசமூட்டும் அனுபவமாக இருந்தது.

 

மைஸ்கில் பள்ளி மாணவர்களைச் சந்தித்தது இந்நாளின் மிக உத்வேகமான நிகழ்ச்சி. எப்படிப்பட்டவர்கள் என்றாலும் இளமை உயிரோட்டமானது. கள்ளமற்றது. அங்கிருந்த ஒருமணிநேரமும் மனம் மலர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தேன். அவ்வுரையாடலில் அச்சிறுவர்கள் பலரின் கடந்தகாலமும் எதிர்கால ஆசைகளும் எழுந்து வந்ததைக் காண்பது ஒரு பெரிய வாழ்க்கைத்தரிசனம்

1s

இரவு பன்னிரண்டு மணிக்கு விடுதியறைக்குத் திரும்பிவந்தோம். நான் காலை ஆறுமணிக்கே நவீனின் காரில் கிளம்பி சிங்கப்பூரை பதினொன்றரை மணிக்கு வந்தடைந்தேன். கூட்டிச்செல்லவும் திரும்பக்கொண்டுவந்துவிடவும் நவீனின் நண்பர்களும் இலக்கியவாதிகளுமான ஸ்ரீதரும்,தயாஜியும் வந்திருந்தார்கள்.

 

சிங்கப்பூரில் என் விருந்தினர்களாக ஈரோடு கிருஷ்ணனும் சந்திரசேகரும் முந்தையநாள் மாலையே வந்து என் அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்தனர். என்னை கூட்டிச்செல்ல எம்.கே.குமார் வந்திருந்தார். அவருடன் அவர்களும் வந்து சிங்கப்பூர் பகுதியில் காத்திருந்தார்கள். புதியமண்ணில் புதியவர்களாகச் சந்தித்துக்கொண்டோம்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோத்திரம்

$
0
0

 

 

1

அன்புள்ள ஜெயமோகன்,

இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பல மாதங்களாகவே உங்களுடன் உரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கட்டாயமாக உங்களுக்கு எழுதியே தீர வேண்டும் என்ற சூழ்நிலையில் இப்போது உள்ளேன்.

வாழ்க்கை மற்றும் உறவு சம்பந்தமாக எழுந்த உள தடுமாற்றமே இதற்கு காரணம். சாதி, குலம் சம்பந்தமாக என் சொந்த வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகளும் அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பங்களுமே இதன் முதல் படி. நானும் முற்போக்கு சிந்தனையாளன் என்று எண்ணிக்கொண்டு சாதியை முற்றுமாக ஒதுக்கி வைத்து வாழ்ந்து வந்தேன். உங்கள் கட்டுரைகள் மூலம் அது ஒரு தவறான புரிதல் என்று கண்டேன். நம் சமூக வரலாற்றை தெரிந்து கொள்ள சாதியை பற்றின புறவயமான அறிதல்களும் தேவை படுகின்றன என்பதை புரிந்துகொண்டேன்.

என் பிரச்சனைக்கு வருகிறேன். எங்கள் குடும்பம், நான் என் தங்கை அப்பா அம்மா தாத்தா ஆயா என்று ஆறு பேரை உள்ளடக்கியது. கண்டிப்புகள் இல்லாத பாசமான பெற்றோர்கள். பிறந்தால் இப்படி குழந்தைகள் வேண்டும் என்று எங்களை பார்த்து சுற்றம் ஏங்கும் பிள்ளைகள். எங்கள்சாதியில் ஒரே குலத்தில் பிறந்தால் அவர்களை பங்காளிகள் என்றும் அவருடைய குழந்தைகள் சகோதர சகோதிரிகள் என்றும் வழக்கம் உள்ளது.

நாங்கள் இருவருமே படித்து விட்டு இப்போது சென்னையில் ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். குழந்தைகள் இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள் என்று பெருமையோடு சுற்றி வருகின்றனர் என் பெற்றோர்கள். நாங்கள் பிறந்ததில் இருந்து ஒரே ஊர் தான். பங்காளிகள் உறவுகள் எல்லாமே எங்கள் ஊரை சுற்றியே இருக்கின்றனர்.

நான் என்னோடு கல்லூரியில் படித்த பெண்ணையே காதலித்து மணந்து கொண்டேன். அவளும் எங்கள் சாதிப்பெண்ணே (வேறு குலம்) என்றதனால் ஊராருக்கும் பங்காளிகளுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட மணம் போல ஒரு நல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றி நல்ல படியாக திருமணம் முடிந்துவிட்டது. தங்கைக்கு பின் தான் அண்ணன் திருமணம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் என் திருமணம் என் தங்கைக்கு முன்னால் நடந்த காரணம் அவளுடைய காதல் கதை.

அவளும் கல்லூரி நாட்களில் தன்னோடு படித்த ஒரு பையனை காதலிக்கிறாள். அவனும் எங்கள் சாதிப்பையன் தான். ஆனால் எங்கள் குலமே. அதாவது என் தங்கைக்கு அண்ணன் முறை ஆகிறது சாதிய வழக்கப்படி. இதுவே அவளது திருமணத்துக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. அவள் இஷ்டம் இல்லாமல் வேறு ஒரு மணம் செய்து வைப்பதில் எங்கள் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. எனவே, அவள் ஆசைப்படும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களையும் அதனால் அவள் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கப்போகும் அவமானங்களையும் அவளிடம் சொல்லி புரிய வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஊர் நடுவிலும் பங்காளிகள் நடுவிலும் சொந்தங்கள் நடுவிலும் இனி மேல் பழைய மாதிரி இருக்க முடியாது என்ற வருத்தம் என் பெற்றோர்கள் நிம்மதியை குலைகின்றது. நாங்கள் வார விடுமுறையை கழித்து விட்டு சென்னைக்கு வந்து விட்டாலும் அவர்கள் உலகம் அங்கேயே தான் சுழன்று கொண்டு இருக்க போகிறது.

இவை அனைத்தும் என் தங்கைக்கு புரிந்தாலும் அவள் மனதால் பிரியம் கொண்ட காதலை அவளால் உதறிவிட்டு வர இயலவில்லை. இருபுறமும் அழுகையை மட்டுமே பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இது தான் எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது. நானும் பலவாறு இதை யோசித்து பார்க்கிறேன். “வேறு சாதியில் வேறு மதங்களில், சித்தப்பா பெரியப்பா மகன்களை மகள்களை கூட திருமணம் செய்து கொள்ளகிறாரகள். நம் சாதியிலேயே கூட அத்தை மகன்களை மகள்களை மனக்கிறார்கள். அதிலும் ரத்த சொந்தம் தானே இருக்கிறது” என்று பலவாறு என் மனைவியோடு விவாதித்திருக்கிறேன். அவளோ “அது சரி தான். அனால் நீ உன் சித்தி பெண்ணையோ பெரியப்பா பெண்ணையோ அல்லது உன் தங்கையையோ திருமணம் செய்து கொள்ளவாயா . எல்லா விஷயங்களையும் தர்க்க பூர்வமாக மட்டும் பார்க்க முடியாது” என்பது அவள் கொதித்து எழுந்து சொல்லும் வாதம்.

இந்த விஷயத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். நான் இதை எப்படி அணுகவேண்டும் என்ற குழப்பம் என்னுள் தீராமல், கடலை அடைய முடியாத நதி போல பாய்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கை சார்ந்தோ ஆன்மீகம் சார்ந்தோ எந்த ஐயம் வந்தாலும், நான் வந்தடைவது உங்கள் வலைத்தளத்தை தான். இன்றும் உங்களையே நாடி வந்துள்ளேன்.

  1. S:

(சாதி பெயரை குறிப்பிட்டது இந்த பிரச்னையின் முழுமையை விளக்க தான். இதை பிரசுரிக்கும் போது என் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். )

அன்புடன்,

வாசகர்

***

அன்புள்ள நண்பருக்கு,

குலம், கோத்திரம், சாதி ஆகியவற்றின் வரலாற்றுப்பரிணாமத்தை ஓரளவு உணர்ந்துகொண்டால் இந்தச்சிக்கலை எளிதில் கடக்கமுடியும். பெரிதாக வளர்ந்த குடும்பமே குலம் என்று புரிந்துகொள்ளலாம். அவர்களுக்குள் குருதித் தொடர்பு இருக்கும். குடும்பங்கள் குலங்களாகி வளர்ந்தது வரலாற்றின் ஒரு பெரிய திருப்புமுனை

குலங்களின் தொகுதியே கோத்திரம். கோத்திரம் இயல்பான ஒரு குருதிக்கூட்டம் அல்ல. [கோத்திரம் என்றாலே கூட்டம் என்றுதான் பொருள்] ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலிருந்து ஒன்றாக இடம்பெயரும் குழு ஒரு கூட்டமாக ஆவதுண்டு. ஒரு குறிப்பிட்ட குருவின் மாணவர்கள் கோத்திரமாக ஆவதுண்டு – அந்தணர்களின் கோத்திரப்பிரிவினை இவ்விரு வகைக்குள் அடங்குவதாகவே உள்ளது

ஒரு தொழிலுக்குள் குறிப்பிட்ட துணைத்தொழில் செய்பவர்கள் ஒரு கோத்திரமாகச் செயல்படுவதை ஆசாரிமார் போன்ற கைத்திறனாளர்களிடையே காணலாம். பழங்கால workers guild கள் அவை. இன்னும் பலவகையான கோத்திர அடையாளங்கள் உள்ளன. சில சாதிகளில் அவர்களின் குலதெய்வங்கள் சார்ந்து கோத்திரக்கட்டுமானம் உள்ளது. நில உரிமைகள் சார்ந்துகூட கோத்திர அடையாளம் உள்ளது.

இவை பழங்குடிவாழ்க்கைக்காலம் முதல் உள்ளவை. பல்வேறு நடைமுறைத்தேவைக்காக உருவாகி வந்தவை. கோத்திரங்கள் இணைந்து உட்சாதிகளாகின்றன. உட்சாதிகளின் தொகுப்பே சாதிகள்.

ஆனால் நம் நம்பிக்கையை உறுதிசெய்யும்முகமாக இவை பெரியவர்களால் பிரிவினைசெய்து உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. சமூகவளர்ச்சியின் பரிணாமம் என்பது இணைவே ஒழிய பிரிவு அல்ல.

இங்கே உட்சாதிகள் இல்லாத சாதியே இல்லை. ஆச்சரியமென்னவென்றால் ஆங்கிலேயர் 1891ல் எடுத்த முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒரே இயல்புகொண்ட வெவ்வேறு சாதிகளை ஒன்றாக ஆக்கினர். அவை இணைந்து ஒரே சாதியாக இன்று உள்ளன. இன்றைய பல சாதிகள் அப்படி அன்று உருவானவை. இப்படித்தான் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூறாண்டு கழித்தால் அந்த அடையாளம் அழியாதது, ஆயிரமாண்டுக்காலம் பழைமையானது என நம்ப ஆரம்பிப்போம்.

உட்சாதிகளுக்குள் திருமணம்செய்யும் வழக்கம் சென்ற தலைமுறை வரை இல்லை. இன்று சாதாரணமாக ஆகத் தொடங்கிவிட்டது. கேரளத்தில் சமானமான சாதிகளிடையே திருமணம் சாதாரணமாக ஆகியுள்ளது. நூறாண்டுகளுக்கு முன் துணைச்சாதிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத தனிச்சாதிகளாகவே இயங்கிய. கொள்வினை கொடுப்பினை இல்லை. அதெல்லாம் மாறிவருகின்றன

கோத்திரங்களுக்குள் திருமணம் செய்யக்கூடாது என்பது பல காரணங்களுக்காக. சிலகோத்திரங்கள் ஒரே குருதி கொண்டவை என்பது ஒரு காரணம். ஆனால் அந்த அடையாளத்துக்கு எப்படியும் முந்நூறு நாநூறாண்டுக்காலம் தொன்மை இருக்கும். அப்படிப்பார்த்தால் எவருக்கு எவர் குருதியுறவு என்று இன்று சொல்லவே முடியாது

கோத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று உறவுகொண்டாகவேண்டும், இல்லையேல் சாதியின் கட்டமைப்பு குலைந்துவிடும் என்பதனாலும் கோத்திரங்களே சாதிகளாக ஆகிவிடும் என்னும் அச்சத்தாலும் கோத்திரத்தின் திருமணம் செய்துகொள்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மற்றபடி சகோதர உறவு என்பதெல்லாம் பயப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்ட மிகைக்கூற்று மட்டுமே.

இன்று இந்த அடையாளங்களெல்லாமே பொருளிழந்து வருகின்றன. இவற்றுடன் உணர்வுரீதியாக சம்பந்தப்படுத்திக்கொள்வது நம்மை மேலும்மேலும் சிறைகளுக்குள் அடைத்துக்கொள்வது மட்டுமே. நான் சாதியையும் சேர்த்தே சொல்வேன். சிறையில் இருக்கும்போது ஓர் அசட்டுப்பாதுகாப்புணர்வு ஏற்படும். ஆனால் வாழ்க்கையை இழந்துவிடுவோம்

கடைசியாக, நாலுபேர் என்னசொல்வார்கள் என்ற கவலையால் வாழ்க்கையை முடிவெடுத்துக்கொள்வதுபோல அபத்தம் வேறில்லை. அந்த நாலுபேர் அதிகம்போனால் நாலுநாட்களுக்குமேல் வம்பாகக்கூட எதையும் பொருட்படுத்துவதில்லை இன்று

இன்றைய வாழ்க்கை முன்பு போல ஒரே ஊரில் ஒரே சாதிசனத்துக்குள் அடைபட்டது அல்ல. அது உலகமெங்கும் பரவி விரிந்துள்ளது. சாதிசார்ந்த வாழ்க்கை இங்கு எங்கும் இன்றில்லை. உழைப்பும் நுகர்வுமாக இன்று வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குடும்பவரலாறு

$
0
0

Beni-israel-india-2

 

குடும்ப வரலாற்றைப் பற்றிப் பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளுத்தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு தானா ?

ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்

மேல்நாடுகளில் குடும்ப பைபிள் என்ற ஒரு ஏட்டைத் தலைமுறை தலைமுறையாக எழுதிச்சேர்க்கும் வழக்கம் உள்ளது.குடும்பத்தின் வம்சவரிசை, முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வார்கள். இது ஒட்டுமொத்தமாக சமூக வரலாற்றை எழுதவும் இலக்கியப்படைப்புகளுக்கும் மிகப்பெரிய ஆவணத்தொகையாக உள்ளது.

நமக்குப் பொதுவாக பதிவுசெய்யப்பட்ட வரலாறு இல்லை. அந்த மனநிலையும் இல்லை. நாம் செவிவழி வரலாற்றையே வைத்திருக்கிறோம். தேசத்திற்கும் குடும்பத்திற்கும். செவிவழி வரலாற்றின் சிக்கல் என்னவென்றால் ஒரு தலைமுறை அதில் ஆர்வமிழந்துவிட்டால் அது அறுபட்டு பிறகு மீட்க முடியாதபடி ஆகிவிடும் என்பதே

உண்மையில் நமக்கு ஆர்வமிருந்தால் நம்முடைய குடும்பத்தின் வரலாற்றை ஓரளவேனும் எழுதிவிடமுடியும். பலரிடமிருந்தும் தகவல்களைத் திரட்டித் தொகுத்து எழுதப்போனால் தெரியும் எவ்வளவு தகவல்கள் கிடைக்கின்றன என்று. ஆர்வமோ தொடர்முயற்சியோ இல்லாத நிலையில் கேட்கும்போதுதான் வரலாறே இல்லையே என்று தோன்றுகிறது

ஒரு குடும்பத்தின் வரலாறு ஒருவேளை பெரியதாக ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த வரலாற்றின் ஒரு பகுதியாக அதை நாம் பொருத்திப்பார்க்கமுடிந்தால் அது மிகப்பெரிதாக வளர்வதைக் காணலாம். ஒட்டுமொத்த வரலாற்றை இத்தகைய துளிகள் வழியாக பிரம்மாண்டமாக ஆக்கிக்கொள்ளமுடியும்

உதாரணமாகத் தமிழ்க் குடும்ப வரலாற்றில் மிகப்பெரும்பாலானவற்றில் குறைந்தது இரண்டு இடப்பெயர்வைப்பற்றிய குறிப்புகள் இருக்கும். ’ந்ம்ம பூர்வீகம் குளித்தலைப்பக்கம். அங்கே இருந்து நாம தஞ்சாவூருக்கு வந்தோம். உங்க கொள்ளுத்தாத்தா காலத்திலே திருச்சியிலே குடியேறிட்டோம்’ என்று சுருக்கமாகச் சொல்வார்கள்

அந்த குடிபெயர்வுகள் நிகழ்ந்த வருடங்களைப் பிற குடும்பங்களில் குடிபெயர்வு நிகழ்ந்த வரலாற்றுடன் ஒப்பிட்டால் ஒன்று தெரியும். முதல் குடிபெயர்வு 1770களில் அல்லது 1889 களில் இரு தாதுவருட பஞ்சங்களை ஒட்டி நிகழ்ந்திருக்கும். இரண்டாவது பெயர்வு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் போரை ஒட்டி உருவான புதுவகை வேலைவாய்ப்புகளின் விளைவாக நிகழ்ந்திருக்கும்.

இத்தகைய சிறு தகவல்கள் வழியாகவே நாம் பொதுமக்கள் வரலாற்றை எழுதமுடியும். அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் வரலாற்றெழுத்தில் இரண்டு வகையான வரலாறுகளைக் காணலாம். அரசியல் வரலாறு, மக்கள் வரலாறு. மன்னர்களும் போர்களும் அடங்கியது அரசியல் வரலாறு. பண்பாடும் சமூகமும் வளர்ந்து வந்ததை விவரிப்பது மக்கள் வரலாறு

நம்முடைய அரசியல் வரலாறே இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை. ஆகவே மக்கள் வரலாறு ஆரம்பிக்கப்படவே இல்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. நம் சமூகத்தின் சாதியமைப்பு, கிராமிய அமைப்புகள், விவசாயமுறையின் பரிணாமம், சமூக இடப்பெயர்வுகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சித்தரிக்கும் மக்கள் வரலாறு இனிமேல்தான் எழுதப்படவேண்டும்.

அத்தகைய மக்கள் வரலாறு எழுதப்படுவதற்கான முதல் தேவை குடும்பவரலாறுகள். அவையே அதற்கான மக்கள் வரலாறு எழுதப்படுவதற்கான கச்சாப்பொருட்கள். எவ்வளவு குறைவாக இருந்தாலும் நாம் நம் குடும்ப வரலாற்றைப் பதிவுசெய்யலாம். இன்று இணையம் இருப்பதனால் வெளியிடும் பிரச்சினையே இல்லை. ஒட்டுமொத்தமாகத் தொகுக்கப்படும்போது ஒவ்வொரு சிறு தகவலுக்கும் பெரும் முக்கியத்துவம் வந்து சேரும்

மக்கள் வரலாற்றில் இருந்தே மேலான புனைவிலக்கியம் உருவாக முடியும். இன்றைய மக்கள் வரலாறு ஓரளவேனும் இலக்கியத்திலேயே உள்ளது. ஜோ டி குரூஸின் நாவல்கள் இல்லையேல் இங்கே மீனவர்கள் வாழ்ந்திருந்தமைக்கு வரலாற்றாதாரமே இல்லையே. அவரது நாவல்கள் ஒருவகைக் குடும்ப வரலாறுகள் அல்லவா?

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 17, 2013

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57

$
0
0

[ 5 ]

வெண்களர் மண்ணில் கால்கள் புதைய தள்ளாடி தருமன் நடந்தார். விழுந்துவிடுவோம் என்னும் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. நடந்துகொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வும் ஒரே இடத்தில் காற்றில் மிதப்பதாக இன்னொரு தன்னுணர்வும் ஒன்று கலந்து ஓடின. பலமுறை விழுந்ததாக உணர்ந்தும் நடந்துகொண்டிருந்தார். ஆனால் விழுந்துகிடப்பதாக உணர்ந்து திகைத்து சூழலை உணர்ந்து எழுந்தமர்ந்தார். கையூன்றி எழுந்து தள்ளாடி நடந்தபோது திசை மயங்கிவிட்டதா என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால் திசையுணர்வு முற்றிலும் இருக்கவில்லை.

கால்கள் தற்போக்கில் நடந்துகொண்டிருந்தன. சித்தம் காலமின்மையில் மிதந்து நின்றது. இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் அணிநிரைந்து சென்றன. சங்கிலிகள் குலுங்கக் குலுங்க யானைகள். எவரோ ‘திறந்த வாயில்’ என்று கூவினார்கள். எவரோ ‘நீர் நிறைந்துள்ளது’ என்றனர். அர்ஜுனன் வேறெங்கோ நோக்கியபடி தேரில் கடந்து சென்றான். யானை ஒன்று பார்வையை மறைக்கும் இருளெனச் சென்றது. தொலைவில் சங்கொலி. ஓர் ஆந்தை வந்து மரக்கிளையில் அமர்ந்தது. அது ஆந்தையல்ல நாரை. தலைக்குமேல் பறந்துசென்றது இன்னொரு நாரை. நாரை இத்தனை பெரிதா? வெண்முகில்போல அவ்வளவு பெரியது. முகில்நிழல் கடந்துசென்றது. எவரோ ‘ஆலமரம்’ என்றனர். மணியோசைகள் நிரைவகுத்தன. ‘அரிசி!’ என்றது ஒரு பெண்குரல்.

ஆற்றுநீரில் சென்று நாணல்களில் படிந்து இழுபட்டு நுனிதவிக்க நின்றுவிடும் ஆடையென சித்தம். மீண்டு எழுந்து தலையை உலுக்கி விடுபட்டு சூழ நோக்கினார். எங்கிருக்கிறேன்? இது எவர் வாழும் இடம்? இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தேன். பின்பு அஸ்தினபுரிக்கு வந்தேன். அவ்வெண்ணத்தால் பிடரியில் அறைபட்டு திடுக்கிட்டு முன்னால் விழப்போனார். பன்னிரு படைக்களத்திலிருந்து நினைவுகள் பொங்கி ஒரே அலையென அறைந்து நகுலனும் சகதேவனும் கிளம்பிச்சென்ற கணத்தை அடைந்தன. அச்சம் எழுந்து குளிரென பொதிந்துகொண்டது. நெஞ்சை அழுத்திய சுமையை ஊதி ஊதி வெளியேற்றினார். பின்னர் நடந்தபோது சீரான விரைவு கூடியது.

மேலும் மேலுமென வெறுமைகொண்டபடியே வந்தது நிலம். பசும்புதர்கள் மறைந்தன. கந்தகப்புகை மறைத்த பாறைகள் காற்றில் கரியமுகம் காட்டி மீண்டும் திரைக்குள் சென்றன. அவருடைய காலடியோசைகளை மட்டும் திருப்பியளித்து அறியாவிழிகளால் ஆழ நோக்கிச் சூழ்ந்திருந்தது நிலம். மலைச்சரிவின் உச்சியில் ஏறி நின்றபோது மறுபக்கம் சரிந்திறங்கிய வெண்ணிலத்திற்கு அப்பால் நீலச்சுனை தெரிந்தது. அங்கு கந்தகத்துளைகள் இருக்கவில்லை. புகை இன்றி தெளிந்திருந்தது காற்று. ஆனால் மலைப்பாறைக்கு அப்பால் எரிதழல்வதுபோல எச்சரிக்கையளித்துக்கொண்டே இருந்தது தன்னுணர்வு. ஒரு நாகம் மெல்ல நெளிந்துசென்றது. மலைப்பாறைகளின் பாசிபூத்த கருமையை தானும் கொண்டிருந்தது அது.

SOLVALARKAADU_EPI_57

அவர் சரிவிறங்கத் தொடங்கினார். மீண்டும் நினைவுகள் மயங்கின. ஒன்றோடொன்று எண்ணங்கள் முட்டி புகுந்து கலங்கி சொற்குவைகள் ஆயின. சொற்கள் உருண்டு ஓடின. நின்று ஒரு சொல் தானாகவே சுழன்றது. ‘பால்’. பாலா? ஏன்? என்ன பால்? பம்பரம். யானையொன்றின் மணியோசை. செண்பகத்தோட்டம். உள்ளே இறந்து கிடந்த ஆடையற்ற உடல். அதில் விரைத்து எழுந்து விண்நோக்கிய நிறைவடையாத விழைவு. யானையின் மணியோசை. தொலைவில் மீண்டும் ஓர் அழுகை. யார் அது? யாருடைய அழுகை? ஆண். ஆணின் குரல். அறிந்த குரல். மிகமிக அண்மையான குரல்.

மீண்டும் உணர்வுகொண்டபோது அவர் அச்சுனையின் அருகே நின்றிருந்தார். அங்கே ஆழ்ந்த அமைதி நிறைந்திருந்தது. அங்கே மரங்களில்லை. அப்பகுதியில் காற்றும் வீசவில்லை. எதுவும் அசையவில்லை. எனவே எந்த ஓசையும் இல்லை. துணி படபடக்கும் ஓசை. சாளரத்திரையா? மெல்லப்பேசும் ஒலி அது. ‘இல்லை இல்லை இல்லை!’ அவர் அச்சுனைநீரை நோக்கியபடி மெல்ல நடந்தார். நீரில் அவர் உருவம் விழுந்தது. அது அலைநெளிவில்லாது ஆடிப்பாவை போல தெளிவுகொண்டிருந்தது. தொலைவிலிருந்து நோக்கியபோது நீலப்பட்டு போலிருந்த சுனைநீர் வட்டம் அருகணைந்தபோது வான் ஊறிப்பரவிய தாலம் போன்றிருந்தது.

நீரைக் கண்டதுமே விடாய் திகைத்து உடலுக்குள் திரும்பப்புகுந்துவிட்டிருந்தது. அவர் சுனையில் தெரிந்த தன் உருவத்தை நோக்கியபடி அசைவில்லாது நின்றிருந்தார். நால்வரும் எங்கிருக்கின்றனர் என்று ஒரு வினா எழுந்து உடனே கலைந்தது. பேருருவின் கரிய தோற்பரப்பின் வரிகள் அசைந்தமைய யானை ஒன்று அவர் விழிநிறைத்து கடந்துசென்றது. தொலைவில் முரசு முழங்கியது. ஒருவன் எழுந்து சிறுகுழலை முழக்கினான். பகா!

யார் அது? நான் அச்சொல்லை முன்பு கேட்டிருந்தேன். முன்பு எப்போதோ நான் புதருக்கு அப்பால் மானசைவைக் கண்டு வில்கோத்து இழுத்து அம்பு தொடுத்தேன். அவை இணைசேர்ந்த மான்களென ஒன்று துடித்து விழுந்தபோது அறிந்தேன். மான் குளம்புகளைக் கண்டார். ஆம், மான்குளம்புகள்தான். கூரியவை. இணை கொல்லப்பட்ட பின் இத்தனை தொலைவுக்கு ஓடிவந்துள்ளது அது. அதன் கால்தடங்களில் குருதிச்சொட்டுகள். செந்நிறமான கூழாங்கற்களாக அவை உருண்டிருந்தன.

மீண்டும் விழித்துக்கொண்டபோது அவர் மண்டியிட்டு நீரின் அருகே அமர்ந்திருந்தார். முகம் நீருக்கு மிக அருகே இருந்தது. நீருக்குள் அவர் கண்டது ஓர் இளையமுகம். அவன் அவரை நோக்கி புன்னகை செய்தான். “நீங்கள் யார்?” என்றார். “என் பெயர் சித்ராங்கதன்.” அவர் வியப்புடன் “தந்தையே, நீங்களா?” என்றார். “ஆம், நீருக்குள் வாழ்கிறேன். இனிய நீர் இது, அருந்துக!” அவர் முகத்திலிருந்து ஒரு துளி வியர்வை நீரில் விழ அப்பாவை கலைந்து மறைந்தது. விடாயை உணர்ந்தார். சுனைநீரின் நீராவிபட்டு வியர்வை எழுந்தபிறகுதான் விடாய் எழுகிறது. எழுந்ததுமே அது அத்தனை தசைச்சுருள்களையும் விதிர்க்கச் செய்தது. அவ்வெண்ணங்களை உருவாக்கிய விடாய் எண்ணங்கள் தொடாத தழலாக தசைகளில் திகழ்ந்தது.

அவர் கைநீட்டி நீரை அள்ளியபோது மீண்டும் சித்ராங்கதன் தோன்றினான். “மைந்தா, அவன் கந்தர்வன். உன் உள்ளத்தை மயக்குகிறான். வேண்டாம் விலகு… இது நச்சுப்பொய்கை!” அவர் விழிகளால் “ஏன்?” என்றார். “ஏனென்றால் இது அழகியது. இத்தனை அழகுள்ள சுனை நஞ்சுகொண்டதாகவே இருக்கமுடியும்.” அவர் உடல்கொண்ட விடாய் கைநீரை வாய்க்கு தூக்கியது. “வேண்டாம், மைந்தா! இது நான் முன்பு அருந்திய நஞ்சு.” அவர் நீரை கீழே விட்டார். திரும்பி நோக்கியபோது மறுகரையில் நிரையாக தம்பியர் நால்வரும் கிடப்பதை கண்டார். “அவர்கள் அழகை உண்டனர். அழகு என்பது என்ன? அழைப்பு. அழைப்பதெல்லாம் அணைப்பது. அணைப்பதெல்லாம் அள்ளிஉண்பது.” சித்ராங்கதனின் உதடுகள் பேசும்போதும் விழிகள் சொல்லற்றிருந்தன.

“நான் அவர்களிடம் சொன்னேன்” என்று அருகே குரல் கேட்டது. அவர் திரும்பியபோது ஒரு சுனைநாரை நின்றிருப்பதை கண்டார். மானுடவிழிகள் கொண்டிருந்தது அது. அலகைத் திறந்து “இச்சுனை எங்களுக்குரியது… இந்நீரை நாங்கள் காக்கிறோம். அதைச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை” என்றது. தருமன் கால்கள் தளர்ந்து உடல் ஆடிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். விழுந்துவிடக்கூடாது என்று சொல்லிக்கொண்டார். “அவர்களின் அறிவுடன் என்னால் பேசமுடிந்தது. விடாயுடன் நீர் மட்டுமே பேசமுடியும். ஆகவே சுனை அவர்களை வென்றது. இந்நச்சு நீரை அருந்தி உயிரிழந்தனர்.”

“நீ யார்?” என்று அவர் கேட்டார். “நான் பகன் என்னும் யட்சன். இந்தச் சுனையை காப்பவன். இது யட்சர்களின் காடு” என்றது பறவை. அச்சுனையைச் சுற்றி அமைந்த வெண்ணிறமான பாறைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான நாரைகள் சிறகுகள் தாழ்த்தி ஒற்றைக்காலில் அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவற்றை அங்கு வந்தபோதே பார்த்ததை உணர்ந்தார். அவை நோக்கப்பட்டபோதே நாரைகளென்றாயின. விழிவிலக்கியபோது அவற்றின் நோக்குகள் வந்து தைத்தன. “இது கன்மதம் ஊறித்தேங்கிய சுனை. காலமின்மையைச் சூடிய பாறைகளின் சாறு. இதை பிறந்து இருந்து அழியும் எளியோர் அருந்தலாகாது. நீரெனத் தோன்றினாலும் இது நூறுமடங்கு எடைகொண்ட ரசம். மெழுகுத்துணியை கொதிக்கும் இரும்பு என இது கிழித்துச்செல்லும்.”

“நான் அருந்தவில்லை” என்று தருமன் சொன்னார். “உன் ஆணையை தலைகொள்கிறேன். நான் செய்யவேண்டியதென்ன என்று சொல். என் உடலில் இன்னும் சற்றுநேரத்தில் உயிர் அணையும். உன் சொற்களைக் கேட்ட எனக்கு கருணைகாட்ட நீ கடன்பட்டவன்.” நாரை சிறகடித்து மேலும் அருகே வந்தது. “ஆம், உண்மை. ஆனால் இங்கு வந்தவர்கள் எவரும் மீளலாகாதென்பதே எங்களுக்குரிய ஆணை.” அதற்குப் பின்னால் அனைத்து நாரைகளும் ஓசையில்லாமல் வெண்புகை சூழ்வதுபோல வந்தமைந்தன.

“வேதமெய்மை அறிந்தோர் மட்டும் எங்களால் பேணப்படுவார்கள். நீ அவர்களில் ஒருவனென்றால் இன்னீர் ஊற்றை சுட்டுவேன்.” “நான் வேதம் கற்றேன். மெய்யுசாவினேன். ஆனால் மெய்மையை அறிந்தேன் என்று சொல்லமுடியாது. மீன் நீரிலென அதில் நான் இருப்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். அது நானாகிவிட்டதா என்று அறியேன்” என்றார் தருமன். “அரசே, இச்சொற்களே மெய்யறிந்தோனுக்குரியது. சற்றறிந்தோன் தருக்க முற்றறிந்தோன் சொல்லடங்கும் முழுமை அது” என்றது நாரை. “நான் கேட்கும் வினாக்களுக்கு விடைகூறுக! உன் விடைகள் சரியென்றால் நீ மெய்மையைத் தொட்டவன் என்று எண்ணுவேன்.”

தருமன் “நான் விடாய்கொண்டு இறந்துகொண்டிருக்கிறேன்” என்றார். “ஆம், பருவெளியழிந்து எழும் பெருவெளியிலேயே இவ்வுசாவல் நிகழமுடியும்” என்றது நாரை. “இங்கு அனைத்தையும் திரிபடையச்செய்யும் காலம் இல்லை அல்லவா?” தருமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றார்.

 

[ 6 ]

புன்னகையுடன் பாண்டு தருமனை நோக்கி குனிந்தார். “மைந்தா, சூரியனை எழச் செய்வது எது?” இடையில் கையூன்றி சதசிருங்கத்திற்கு அப்பால் எழுந்த சூரியனை நோக்கி நின்று சிறுவனாகிய தருமன் சொன்னான் “அதற்கு அப்பால் எழும் இன்னொரு பெரும் சூரியன்.” பாண்டு சிரித்தபோது பற்கள் ஒளிவிட்டன. “அதைச் சூழ்ந்திருப்பவை எவை?” அவன் “அதன் முடிவிலாக்கோடி நீர்த்துளிப்பாவைகள்” என்றான். “மைந்தா, அது எப்போது முற்றிருள்கிறது?” அவன் சிலகணங்களுக்குப்பின் சொன்னான் “நோக்கும் விழி இருள்கொள்கையில்.”

சதசிருங்கக் காடுவழியாக பாண்டு நடந்துகொண்டிருந்தார். அவன் அவர் தோளில் அமர்ந்திருந்தான். அவர் காலடியோசை தொடர்ந்து வந்தது. “கதிரவனை விண்ணில் கட்டியிருக்கும் சரடு எது?” என்றார் பாண்டு. “இந்த மரத்தை மண்ணுடன் பிணைத்துள்ளது எதுவோ அது” என்றான் தருமன். அவர்கள் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். தருமன் ஓடிச்சென்று ஒரு சிறு தூவலை எடுத்தான். செம்பருந்தின் சிறகிலிருந்து உதிர்ந்தது. “மூத்தவனே, கல்வி என்பது என்ன?” அவன் திரும்பி நோக்கி “இந்த இறகு நான் அறிவது என்றால் அந்தப் பருந்தே கல்வி” என்றான்.

பாண்டு சிரித்து “சொல், எதனால் ஒருவன் அரியதை அடைகிறான்?” என்றார். “அனைத்தையும் துறக்கும்போது.” அவர் “பிறிதொன்றை வெல்வது எப்படி?” என்றார். “அறிவால்” என்றான் தருமன். “அறிவை அடைவதெப்படி?” தருமன் “அறிந்தோர்முன் மூடனாக உணர்கையில்” என்றான். பாண்டு “ஆம்” என்றார். அவன் நீரோடையில் இருந்து எழுந்தபோது மரத்தடியில் அமர்ந்திருந்த துரோணர் “நன்று இளவரசே, அந்தணனுக்கு ஆற்றல் எது?” என்றார். “வேதம்” என்றான் இளைஞனாகிய தருமன். அவர் முகம் மாறியது. அவர்கள் ஒருசொல்லும் உரையாடாமல் கங்கையிலிருந்து நடந்தனர். “அவர்கள் தவத்தால் உம்பர். இறப்பால் மட்டுமே மானுடர்” என்றான் தருமன். அவர் உடலின் வெம்மை மட்டும் அவனைத் தொட்டது. கருக்கிருளில் விடியலை உணர்ந்த பறவைகள் சிறகு குலைக்கும் ஒலி எழுந்தது. “மறுத்தலே அவர்களின் மறம்” என்றான் தருமன். அவர் “ஆம்” என்றார்.

படைக்கலச்சாலையில் கூரிய அம்புநுனியை சுட்டுவிரலால் வருடியபடி பீஷ்மர் நின்றிருந்தார். “ஆம், படைக்கலமே வீரரின் இறை” என்றான் தருமன். “செயலே வேள்வியாதல் அவர்களின் தவம். கருணையால் அவர்கள் வானோர். அஞ்சுகையில் மானுடர்.” பீஷ்மர் ஐயம் நிறைந்த விழிகளுடன் அவனை நோக்கினார். “அச்சம் ஆழத்திலமையும்தோறும் ஆற்றல்மிகுகிறது” என்றான். அவர் விழிதிருப்பிக்கொண்டார். “எதிரியை அஞ்சுபவனைவிட ஏழுமடங்கு கோழை தன்னை அஞ்சுபவன்.” பீஷ்மரின் தோள்கள் அதிர்வதை அவன் கண்டான்.

கூரிய விழிகளுடன் அர்ஜுனன் அவன் கையை பற்றினான். “மூத்தவரே!” என்றான். அவர்கள் கங்கைக்கரைக் குறுங்காட்டிலிருந்து மேலேறிய இடத்தில் நான்கு சிதைகள் எரிந்துகொண்டிருந்தன. “மூத்தவரே, அவை மானுடஉடல்கள் அல்லவா? அவற்றை ஏன் எரிக்கிறார்கள்?” தருமன் “உடல்களும் விறகுகளே” என்றான். பின்னர் “உயிர் நெய். அது எரியும் வேள்வியே இது” என்றான். “அதன் சடங்குகளை உள்ளம் என்கிறோம். அதில் ஒலிக்கும் அழியாச்சொல்லே வேதம்.” அவன் அச்சிதைகளை நோக்கியபடி நின்றான். கனவுபடிந்த விழிகளைத் தூக்கி “இவ்வேள்வியை இயற்றுபவர் எவர்?” என்றான். “இவ்வேள்விக்குக் காவலனும் யஜமானனும் ஹோதாவும் வேள்வியில் எழும் தெய்வமும் ஒன்றே” என்றான் தருமன்.

மத்ரநாட்டில் சேற்றிலாடிக்கொண்டிருந்தனர். நகுலன் “மூத்தவரே, இந்த வயல் எப்படி உயிர்கொள்கிறது?” என்றான். “விண் மழையென்றாகிறது. மண் விதையென நிற்கிறது” என்றான் தருமன். “முதல் உயிர் புல். அடுத்த உயிர் பசு. அன்னமும் அமுதுமாக எழுவது வானும் மண்ணுமாகிய ஒன்று.” அவர்கள் சேற்று வயலில் ஆடினர். மண்பாவைகள்போல உடல்கள் ஆயின. தழுவி வழுக்கி விழுந்து உருண்டு எழுந்து சிரித்தனர். பீமன் அவர்களைத் தூக்கி சேற்றுக்களியில் வீச மண் நாய்க்குட்டிபோல் இதழ்விரித்து அவர்களைக் கவ்வியது. “சேறுபோல் இனிய மணம் பிறிதில்லை, மூத்தவரே” என்றான் பீமன்.

பாண்டு படுத்திருக்க அப்பால் குந்தி அமர்ந்திருந்தாள். “பிருதை, மைந்தரைப் பெற்றவள் எதையும் இழக்கவில்லை” என்றார். அவள் நிமிர்ந்து நோக்க “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என ஐந்தோம்பாதான் பிறக்கவேயில்லை” என்றார் பாண்டு. அவள் விழிகள் களைப்புகொண்டிருந்தன. கருமுழுத்த பெருவயிற்றை சற்றே சாய்த்து செண்பக மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். “உன் வயிற்றிலெழுக மைந்தர்! அவர் என் மூதாதையரைப் பேணுவர்.”

“மண்ணைவிட எடைகொண்டவள் அன்னை. விண்ணைவிட உயர்ந்தவர் தந்தை” என்று அவர் சொன்னார். “இங்கு நிலையானவை அவை மட்டுமே. உள்ளம் காற்றைவிடக் கடியது. புற்களைவிட பெருகி முளைப்பவை எண்ணங்கள்.” அவள் விழிகள் சற்று வீங்கியிருந்தன. இதழ்கள் வெளுத்திருந்தன. “வானம் காற்றாகிறது. மண் புல்லெனப் பெருகுகிறது. அவை மாற்றுருக்களே என்று அறிந்தால் நீ அமைதிகொள்வாய்.” அவள் விழிமூட இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. பின்பு மெல்ல மூச்செழுந்தது.

மஞ்சத்தில் விழிமூடிக் கிடந்த திரௌபதியின் கரிய முகத்தில் தருமன் மெல்ல முத்தமிட்டார். அவள் “ம்” என்றாள். “நீ துயில்கையிலும் விழிமூடுவதில்லை. உன்னை தென்னவர் வணங்கும் மீன்விழி அன்னை என்பேன்.” அவள் கண்களைத் திறக்காமலேயே புன்னகை செய்தாள். “கல்லென்றிருக்கையிலும் முட்டைக்குள் உயிர் வளர்கிறது. முட்டையெனத் தோன்றுகையிலும் கல் வளராதிருக்கிறது” அவர் சொன்னார். “நாம் இருவரும் அருகருகே இருக்கையில் நோக்குபவர் வேறுபாடு காண்பதில்லை.” அவள் “ஆம்” என்றாள்.

எழுந்து பெருகியோடும் கங்கையை சாளரம் வழியாக நோக்கினார். “தன் விசையை தானே பெருக்கிக்கொண்டு தன் வழியை தானே அமைக்கும் ஆறுகள் எப்போதும் என்னை அச்சுறுத்துகின்றன” என்றார். மஞ்சத்தில் அவள் சொல்லற்றவளாக கிடந்தாள். “என்றும் தனித்த பயணி நான். எங்கிருந்தோ நாடுகடத்தப்பட்டவனென உணர்பவன். நோக்கி சொல்லாடி முகம் கரைந்து அகலும் வழிப்போக்கரே என் துணைவர்.” அவள் நோக்கை முதுகில் உணர்ந்து “இல்லறத்தானுக்கு முதற்துணை மனைவி என்கின்றன நூல்கள். நோயுற்றவனுக்கு மருத்துவன். இறப்பணைபவனுக்கு அவனளித்த கொடைப்பயன். தேடலால் தனித்தவனுக்கு எவையும் நிழலென அமைவதில்லை” என்றார்.

“எரியே அனைவருக்கும் விருந்தினன். அவியூட்டலே நாள்கடன்” என்று ஒரு குரல் சொன்னது. “யார்?” அவர் திகைத்தார். “எரி வாழ்வது நெஞ்சில். அவியென்பது மெய்மை. சொல்லுண்டு கனியும் அப்பசுவின் பாலே அமுது.” அவர் திகைப்புடன் “யார்?” என்றார். “வெறுமை உலவும் விண்ணகத்தில் சூரியன் முழுத்தனிமை கொண்டுள்ளான். தேய்ந்து மீள்கிறான் சூரியன். தண்மை நெருப்பாலும் முற்றிலும் நிகர் செய்யப்பட்டுள்ளது இங்கு. அறிக, பெருவெளியில் செயலும் செயலின்மையும் நிகர்!”

அந்த முகத்தை அவர் கண்டார். அறிந்த முகம். இனிய நகை நிறைந்த விழிகள். அவை விண்பேருருவமென எப்படி பரந்தன? “மேய்ச்சற்களம் இப்புடவி. அறமெனும் பசு பெருந்தன்மையை நாடுகிறது. புகழ் கொடையை. உண்மையை அழிவின்மை. உவகையை நல்லொழுக்கம். செயல்களால் ஆனது துலாவின் ஒரு தட்டு. துலாவின் மறுதட்டில் அமர்ந்துள்ளன ஆக்கி அழித்தாடும் தெய்வங்கள்.” அவ்விழிகள் அவரை நோக்கவில்லை. எவருக்கெனவோ ஒலிக்கும் சொற்கள் விண்முட்டி முழங்குவதென்ன! “செயலாற்றவே கடமைப்பட்டுள்ளாய். விளைவுகளில் உளம் வைக்காதே! செயலின் விளைவுகளில் கருத்தூன்றிச் செயல்பட எண்ணாதே! செயல்படாதிருக்கும் விருப்பும் கொள்ளாதே!”

தனித்த நீண்ட பாதையில் அவர் தன் மைந்தனுடன் நடந்தார். “நீ என் ஆத்மா. என் ஆழத்தை விதைத்துக் கொய்ய தேவர்கள் அளித்த துணை உன் அன்னை. விண் நிறைந்துள்ளது இங்கு வாழ்வைச் சமைக்கும் முகில். பெற்றுக்கொண்டமையால் அளிக்க கடமைப்பட்டவன் மானுடன். செய்நேர்த்தியால் விண்ணவர் மகிழ்கிறார்கள். அறிவோ அகம் அமைந்தது விழையும் செல்வம். இவ்வுடல் அவ்விசையின் யாழ். இதன் நரம்புகளை இனிது மீட்டுக! இசைநிறைந்த யாழ் பிறிதிலா முழுமைகொண்டது.”

“நீ அரசன். படைக்கலமேந்தவிருப்பவன். அறிக, கொல்லாமையே முதல்பெருநெறி! வேள்விகள் கனி ஓயா மரம்.” அவனை குனிந்து நோக்கி அவர் சொன்னார் “யுதிஷ்டிரனே, வெல்லப்பட்ட உள்ளம் அமுதுக்குரிய கலம். அரியோருடன் அமர்க! ஆணவம் ஒழிக! சினமும் காமமும் பெருவிழைவும் கடந்து செல்க! அறம்புலர அந்தணருக்கும் புகழ்பொலிய சூதருக்கும் பணிவுக்கு ஊழியருக்கும் கொடையளி! நட்புக்கென அரசர்களுக்கு அளிக்கட்டும் உன் கைகள்!” மைந்தன் நிமிர்ந்து நோக்கினான். சதசிருங்கத்தின் மலைமுடிகள் இருளில் அமிழ்ந்துகொண்டிருந்தன. விண்மீன்கள் கரிய பழக்கதுப்பில் விதைகளென பிதுங்கி எழுந்தன.

“பெருவெளியை மூடியிருக்கிறது இருள். அப்பாலிருந்து ஒளி வராது தன்னை வெளிப்படுத்தும் வல்லமை எவற்றுக்கும் இல்லை. இருளில் ஒவ்வொன்றும் பிறரிடமிருந்து விலகிச்செல்கின்றன. முடிவிலியைத் தேடும் விழைவால் அவை சிதறடிக்கப்படுகின்றன. அறிக, அவை ஒன்றிலிருந்து எழுந்தவை! அவை செல்லவேண்டிய திசையோ இணைந்திணைந்து செல்லும் ஒருமை.” மைந்தன் தந்தையின் உடலுடன் ஒண்டிக்கொண்டு விழிவிரித்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்தான்.

“அனைத்தையும் துறந்து இங்கு வந்தேன். இப்புவிச்செல்வங்களைத் துறந்தவன் இறந்தவனே” என்றார் பாண்டு. “அரசனற்ற நாடு அழிந்ததென்று சொல்லப்படும். முறையற்ற அந்தணன் செய்யும் நீர்க்கடன்போல. அந்தணர் நிறைவுறாத வேள்விபோல.” மைந்தனின் புன்தலை மேல் அவர் வெம்மூச்சு பட்டுக்கொண்டிருந்தது. “வீண் உடல்கொண்டவன் என நான் என்னை எண்ணியதில்லை. என் உடல்முளைக்கவில்லை என்றாலும் உள்ளம் முளைத்தது. ஆனால் அதை ஊர் அறியவேண்டியதில்லை. நன்மையின் வழி என்றும் வெல்வதே.”

“இன்மைவெளியே உண்ணும் நீரென ஆகிறது. இது பால்சொரியும் பசுவின் அகிடின் அடி. மானுடர் எவரிடமும் இரப்பது நஞ்சு. உண்க! ஊட்டுக! நீத்தார் புரந்து வாழ்க! மைந்தா, தன்னறத்தில் நிலைகொள்வதே உன் தவமென்றாகுக! கடிவாளம் கைவிடப்படாத தேர் காக்கப்படுகிறது. எதிரியை நூறுமுறை தாங்குக! கீழ்மையிலிருந்து நூறுமுறை விலகுக! அவையே பொறுமையும் நாணமும் எனக் கொள்க! மெய்ப்பொருள் சூடுக! அமைதியில் அமைக! அனைவருக்கும் அது நிகழ்கவென விழைக! அனைவருடனும் இணைந்திருக்கும் எளிமையென்றாகுக உன் இயல்நிலை! சினம் நாகம். பெருவிழைவு மதகரி. இக்காடு நீ கடந்து செல்லற்கரியது. கடந்து செல்பவன் அறிவான், இது ஏணி.”

கொடிபறக்க, வெடிப்பொலி எழுப்பி ஒரு படை கடந்து சென்றது. குளம்புகள் அறைபட்ட நிலமென நெஞ்சு நடுங்கி அதிர்ந்தது. சினம்கொண்டு விழி விரிய இதழ்கள் நெளிய குந்தி சொன்னாள் “நீ பெற்றுவந்தது பேடிமையை மட்டுமே.” அவர் கைகள் கோத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “அன்னையே, அனைத்துயிரும் வாழ விழைபவனே தனக்கும் மகிழ்வை விரும்பவேண்டும் என்பதே நெறி. இரக்கமற்றவன் நெறிபிறழ்ந்தோன். தன் கடமைகளை அறியாத மானுடன் இருளில் இருக்கிறான். அதே உண்மையான அறியாமை. இங்குள அனைத்தையும் நான் அறிந்து ஆற்றுவேன் என்பதே ஆணவம். ஆற்றுவதை ஆற்றாமலிருப்பது வீணன் இயல்பு. இவ்விரண்டையும் அறியாதிருப்பதே துயரம். உயிரென மைந்தன் என அரசன் என என் தன்னறத்தில் நிலைகொள்வதே நான் எந்தையிடமிருந்துகொண்ட உறுதி.”

“அச்சத்திற்கு ஆயிரம் சொற்கள்” என்றாள் திரௌபதி. தருமன் “இது அன்னையின் சொல்” என்றார். “ஆம், நானும் அவரும் ஒன்றே. ஐவரை அடைந்து ஐவராலும் கடக்கப்படாமல் எஞ்சும் பெண்கள் நாங்கள்.” தருமன் துயருடன் “இருமுனை எரி” என்றார். வெளியே இந்திரப்பிரஸ்தம் ஒளிகொண்டிருந்தது. விழவுகளுக்கே உரிய மானுடஓசை எழுந்து பெருமுழவின் உட்கார்வையென நகர்மேல் கவிந்த வானை நிறைத்தது. “ராஜசூயம் என்பது ஓர் அறைகூவல். அரசி, எல்லா அறைகூவல்களும் ஊழுக்கும் தெய்வத்திற்கும் எதிராகவே” என்றார். “அஞ்சுகிறேன் என்று சொல்லுங்கள். ஆற்றலில்லை என்று சொல்லுங்கள். அறம் அது என்று சொல்லவேண்டியதில்லை.”

“இது பொறுமை. புலன்களுக்குமேல் அறிவின் ஆணை” என்றார். “வெறும் நூற்சொற்கள்” என்று அவள் கைவீசினாள். “சான்றோர் சொல்லாடுபவன் அகம்நீராடுகிறான்” என்றார். “கொடைகளில் பெரிது அனைத்துயிர்களையும் காத்தல். இதோ உவகை கொப்பளிக்கும் இவ்வெளிய மக்கள்திரள் என்னை விழிகனிந்து நெஞ்சு விம்மச்செய்கிறது. நாளை இதன்பொருட்டு இவர்களில் ஒருவர் குருதிசிந்தினாலும் அது என் பிழையே. முடிசூடி நின்றிருக்கும் என் கடன் இது. கடமையறிந்தவனே நூலாய்ந்தவன். ஆற்றுவதறியாதவன் இறையற்றவன்.”

“இங்குளது இந்நகரம், இவ்வுலகம். இது அனைவருக்கும் உரியது, எவருக்கும் உடைமை அல்ல. இவையனைத்தும் என விரியும் கை அள்ளி அள்ளிச் சேர்க்கிறது. அறிக, அந்தக் கை ஒழிந்தே இருக்கும்! அதில் பொறாமைத் துயர் அறாது. நாம் என உணராமையே அறியாமையின் உச்சம். நான் எனக் கூவுவதே அதன் ஆழம். அளித்தல் அமுதாக்குமென்று அறிக!” அவள் இகழ்ச்சியுடன் உதடுகளைக் கோட்டியபடி அறைவிட்டு சென்றாள். வாயிலில் நின்று “சொற்களில் தன்னை ஒளிப்பவன் புதர்களில் பதுங்கும் எலி” என்றாள். “வசைச்சொற்களில் வீங்கும் ஆணவம் நச்சுநாவுடன் எழும் நாகம்” என்றார் தருமன்.

நாரை அவர் விழிகளை நோக்கியது. “நன்று. அறம், பொருள் இன்பம் மூன்றும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அவை எப்படி இணையமுடியும்?” தருமன் திகைத்து அதை நோக்கியபின் “நாம் பேசிக்கொண்டிருந்தோமா?” என்றார். “ஆம், சொல்!” என்றது நாரை. இகழ்ச்சியுடன் “மனைவியும் அறமும் சேர்ந்து அமையலாகுமென்றால் இணையாதது எது?” என்றபின் கண்களை சற்றுநேரம் மூடினார். பின்பு திறந்து நாரையிடம் “மூன்று கற்கள் நடுவே அடுப்புத்தீ எரிவதுபோல” என்றார்.

“அனைத்து இழிவும் என் மேல் பெய்க!” என்று தலைகுனிந்து அவர் சொன்னார். “அளிக்காதவன் அடையும் இழிவு மட்டும் அணையாதொழிக! யாதவனே, நான் ஷத்ரியனல்ல, அந்தணன். அந்தணனுக்குப் பிறக்கவில்லை, அனலோம்பவில்லை. அந்தண்மையால் அவ்வாறு ஆனேன்.” அவர்களைச் சூழ்ந்திருந்த காடு ரீங்காரத்துடன் இருண்டுகொண்டிருந்தது. இலைகளுக்குமேல் பறவைகளின் ஒலி வலுத்துக்கொண்டே சென்றது. “இனியசொற்கள் கொண்டவன் அனைவருக்கும் ஏற்புடையவன். ஆனால் தன் செயலில் முடிவுறுதி கொண்டவன் சென்றெய்துகிறான். சுற்றம் கொண்டவன் மகிழ்வுகொள்கிறான். அறத்திற்கு தன்னை அளித்தவன் இங்கு நீங்கி அங்கு சென்றாலொழிய இன்பம் அடைவதில்லை. நான் விரும்பி அதை தேர்வுசெய்தேன்.”

“இந்தக் கானக வாழ்க்கை என்னை நிறைவுசெய்கிறது. எவருக்கும் கடன்படவில்லை. எங்கும் சென்று நிற்கவேண்டியதில்லை. எளிய உணவுடன் மரங்களின் அணைப்பில் துயில்கிறேன். யாதவனே, முன்பெப்போதும் நான் இப்படி மகிழ்ந்திருந்ததில்லை. விந்தை, பிறப்பவை அனைத்தும் மண்மறைவதை நாளும் கண்டபின்னரும் என்றுமிருப்போம் என எண்ணுகிறான் மானுடன்! நகரங்கள், கோட்டைகள், அரண்மனைகள், மஞ்சங்கள். எதற்கும் பொருளில்லை. மகிழ்வுகொண்டு வாழும் ஒவ்வொரு கணமும் அவன் ஈட்டிக்கொள்பவை. எதன்பொருட்டேனும் இழக்கும் ஒவ்வொரு கணமும் மீளமுடியாதவை.”

“சொல்வளர்காடுகள்தோறும் சென்றேன். மெய்மை திகழ் நாவுகொண்ட முனிவர் காலடிகளில் அமர்ந்தேன். அறிந்தது ஒன்றே. சொல்லாடுதல் பயனற்றது. மெய்ச்சொற்களோ முரண்பட்டுள்ளன. மறுக்கப்படாதவர் எவருமில்லை. அறமும் நெறியும் சொற்களின் இருளுக்குள் புதையுண்டிருக்கின்றன. மூதாதையர் காலடித்தடங்களோ தெளிவானவை” என்றார் தருமன். “அறிதற்கரியது இப்புவி. இந்தப் பெருங்கலத்தில் பகலிரவுகளை உண்டு நின்றெரிகிறது சூரியன். பருவகாலங்கள் கரண்டிகள். காலம் சமைத்துக்கொண்டிருக்கிறது அதற்கான இன்னுணவை.”

அவர்களைச் சூழ்ந்து மரங்கள் ஒளிகொள்ளத்தொடங்கின. யாதவனின் உடலில் நீலச்சுடர் எழுவதை வியப்புடன் நோக்கினார். பின்பு தன் கைகளை பார்த்தார். “ஒளி!” என்றார். “இவை தங்கள் உள்ளிருந்து ஒளியை எடுத்து அணிகின்றன” என்றார் இளைய யாதவர். “அரசே, இங்கு ஆற்றப்படும் எந்த அருஞ்செயலும் வீணல்ல. அறம்திகழ் செய்கை விண்முட்டி மழையென மண்ணில்பரவுகிறது. அவனை மானுடன் என அறிகின்றனர் தேவர்கள். ஈட்டலும் இழத்தலும் நிகரெனக்கொண்டவர் அனைத்துச் செல்வங்களுக்கும் அரசர். நீங்கள் இன்றுதான் சத்ராஜித்.”

சுடர்பூசிய காடு அவர்களைச் சூழ்ந்து அலையிளகியது. சொல்லணைந்து இருவரும் ஒருவர் ஒளியை ஒருவர் நோக்கி அங்கே அமர்ந்திருந்தனர்.

தொடர்புடைய பதிவுகள்

சிங்கப்பூர் கடிதங்கள்

$
0
0

IMG_20160904_205249

மதிப்பிற்குரிய குரு ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த 4/செப்டம்பர் /2016 ஞாயிறு வாசகர் சந்திப்பு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வொன்றாக ஆகிப்போகக்கூடும் அல்லது அது போன்ற தருணங்களின் தொடக்க நிகழ்வாக என்றும் மனதில் பதிந்துபோகும். எப்படியாகினும் அஜீரணத்தினால் அல்லல் பட்ட ஒருவனுக்கு கிடைத்த ஜீரண மருந்தின் முதல் உதவி அது.

எனது வாசிப்பு பெரும்பாலானவர்களைப்போல சிறுவர் இதழ்களை தொடங்கி, உணவு கூட மறக்கும்படி மிகத்தீவிரமாக இருந்தது பின்பு அது வார இதழ்களிலும் அவ்வப்போது நூலகத்தின் சிறுகதைகளிலும் பின் கல்லூரிப்பருவத்தில் கவிதை, மனோதத்துவங்களிலும் வந்து நின்றது. இணையம் அறிமுகம் ஆன பின்பு 2008ல் தமிழிஷ் மூலமாகவே எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின பின்பு அத்துணையும் ஒரு கட்டத்தில் சலிப்பையே தந்தன காரணம் அங்கு அறிவார்ந்த பதிவுகளோ, இலக்கியங்களோ சொல்லிக்கொள்ளும்படி காணக்கிடைக்கவில்லை, தலைப்புகள் மட்டும் விபச்சாரப்பெண்ணின் அழைப்பை போன்றிருக்கும் உள்ளே சென்றால் வெறும் சண்டைகள், சொந்த பிதற்றல்கள் அரை வேக்காட்டு விமரிசனங்கள் அதில் கவனிக்கத்தக்கவையாக இருந்தவற்றில் உங்களை பற்றிய விமரிசனங்கள், விவாதங்கள். அதுவே உங்கள் வலைத்தளத்தை சென்றடைய, உங்களைப்பற்றி அறிந்துகொள்ள காரணமாக இருந்தது.

தங்களின் வலைதளம் அமைப்பையே என்னை சிந்திக்க வைத்தது, எந்தவித அலங்காரமும் இன்றி எளிமையாக படிக்கும் எழுத்து வடிவங்களுடன் இருந்தது. நான் முதலில் படிக்க நேர்ந்தது தங்களின் ‘இரவு’ குறுநாவல்தான். அது என்னை என்னை நான் இதுவரை அறிந்திடாத வேறொரு தளத்திற்கு இட்டுச்சென்றது.

பின்பு ‘அறம்’ சிறுகதைகள். வணங்காணும் கெத்தேல் சாகிப்பும் என்னை உலுக்கி எடுத்தன. அதிலிருந்து தெடர்ந்து வாசித்து வருகிறேன். பின்பு நாஞ்சில் நாடன், சு ரா, போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகள் அறிமுகமாயின. நிற்க.

எனக்கிருக்கும் மிகப்பெரிய குறை என்பது வாசித்தவற்றை அசை போடும் அல்லது விவாதிக்கும் நட்பு வட்டம் அமையப்பெறாததே. இதுவே என்னால் வாசித்தானவற்றை நினைவில் கொள்ள முடியாமல் அல்லது நினைவு அடுக்கில் இருந்து மீளப்பெற தவிக்கும் நிலை. அந்தவகையில் இந்த வாசகர் கூட்டம் எனக்கு மிகப்பெரிய விடுதலை பெற்றுத்தந்தது எனக்கூறலாம்.

ஒன்று செய்திருக்கலாம் அது வந்த வாசகர்களை ஒருங்கிணைத்து ஒரு நடப்பு வட்டம் அமைத்திருக்குமேயானால் அது என் போன்றோருக்கு மிகப்பெரிய நன்மையாக இருந்திருக்கும், கிட்டத்தட்ட 7 மணிநேரம் சிறு சுவாரசியம் கூட குன்றாமல் நிகழ்ந்த அந்த சந்திப்பில் இவை அமையாமல் போனதில் வியப்பேதுமில்லை தான்.

சந்திப்பில் அறிந்து கொண்டவை பல, குறிப்பாக பயணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும், வரலாற்றினை எவ்வாறு அணுக வேண்டும், தமிழகத்தின் வாசிப்பு பற்றிய விவாதங்கள், மொழி அரசியல், காரிய அரசியலின் பின்புலங்கள், வேதங்கள், சமஸ்கிருதம் பற்றியன குறிப்பிட்டு சொல்லலாம். குறிப்பாக தமிழகத்தின் வரலாறு எவ்வாறாக இருந்திருக்கும் என்ற தங்களின் பார்வை எனக்கு ஒரு புதிய கதவினை திறந்து விட்டது.

மொத்தத்தில் இந்த சந்திப்பு எனக்கு வழி தவறிய ஆட்டுக்குட்டி தன் மந்தையை கண்டடைந்ததைப்போல, இருட்டில் வலி தவறிவனுக்கு கிடைத்த கைவிளக்கைபோல அமைந்தது என்று சொல்லலாம்.

இவையனைத்திற்கும் மேலாக ஒன்று உண்டு அது நான் என் மானசீக குருவினை கண்டடைந்த நாள் அது!

தங்களின்

ஆசிக்குரிய

இராமநாதன்

***

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களை 4-9-2016 சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். மதியம் 2 மணி ஆரம்பித்த சந்திப்பு இரவு 9 மணி அளவில் முடிவடைந்தது. 7 மணி நேர Non-stop Marathon session.

ஒரு சின்ன இடைவெளி/ஒய்வு கூட எடுக்காமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தங்கள் அளித்த பதில்கள் நல்ல தெளிவை தந்தன.

உதாரணமாக வரலாற்றை அணுகும் விதம்.

தமிழ் மன்னனின் அரசு கங்கை வரை நீடித்தது என்று செய்யுள்களில் சொல்லப்பட்டிருந்தாலும், அது நடந்திருக்குமா என்று கேள்வி கேட்டு, அது முடியாது என்று நீங்கள் அளித்த விளக்கங்கள் முற்றிலும் உண்மையே.

It is just common-sense. How can a small population win over such a huge population in the Godavari/Krishna belt and Ganges belt?

நிறைய சொல்லி கொண்டே போகலாம்.

தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எத்தனை பாவனைகள்!

$
0
0

 

Lohithadas draw

மலையாளத் திரைஎழுத்தாளர் லோகிததாஸ் கேரளத்தின் பண்பாட்டு அடையாளமாகவே இன்று மாறிவிட்டவர். அவரது படங்களில் ஒரு பத்துபடங்களை இன்று அவர்களின் செவ்வியல் படைப்பாக அங்கீகரித்துவிட்டிருக்கிறார்கள். அவர்தான் என்னை சினிமாவுக்குள் அழைத்துவந்தவர். என் நண்பர், வாசகர் என்பதற்கு அப்பால் அண்ணனின் இடத்தில் இருந்தார். 2009-ல் மாரடைப்பால் காலமானார். அவரை எண்ணாமல் இன்றும் ஒருவாரம் கடந்துசெல்வதில்லை எனக்கு.

ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது லோகிசொன்னார் “கிளம்புவோம், எங்காவது போகவேண்டும் போலிருக்கிறது”. நான் திகைப்புடன் “எங்காவது என்றால்?” என்றேன். “எங்காவது… அறைக்குள் இருந்து மூளை சலிக்கிறது”. லோகி பயணங்களை விரும்புபவர் அல்ல. அவரது தேடல் உணவு சார்ந்தது, ஏதாவது ஓட்டலுக்காகத்தான் கிளம்புகிறார் என எண்ணினேன். சட்டைமாற்றிக்கொண்டு உடன்சென்றேன். அவரே காரை ஓட்டினார்

சென்னையை விட்டு வெளியே கார் செல்ல ஆரம்பித்ததும் குழப்பம் வந்தது. லோகி கேரளத்தின் குழந்தை. பிறநிலங்களில் மிக அரிதாகவே பயணம் செய்திருக்கிறார். கேரளத்துக்குப் போவதற்குப் பதிலாக வழி தவறி திருப்பதி பக்கமாகச் செல்கிறாரோ?

நான் தயக்கமாக “எங்கே செல்கிறோம்?“ என்றேன். “எங்கே என்பது ஒரு கேள்வியே அல்ல. செல்கிறோம்” என்றார் லோகி. நாடகத்தனமாக இருந்தது, அவரே அதை நக்கலடித்து “மோகன்லால் சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார். “திரும்பி வரவேண்டும் என்று தோன்றுவது வரைச் செல்வோம். செல்லும் வழியில் நல்ல பரோட்டா மட்டன் கிடைத்தால் சாப்பிடுவோம்.” லோகி சிக்கன் சாப்பிடமாட்டார்

நாங்கள் அன்றிரவு ரேனிகுண்டாவில் தங்கினோம். மறுநாள் குண்டூர். அதன்பின்னர் எங்கோ அற்று அலைந்து சூரியப்பேர் என்னும் ஒரு சிறு ஊர். ஒரு சாலைச்சந்திப்பில் வலமாகத் திரும்புவதா இடமாகத் திரும்புவதா என்பதை அந்தக்கணத்தில் ஸ்டீரிங் தான் தீர்மானிக்கும். ஓர் ஊருக்குப் போன பின்னர் டீக்கடைகளின் போர்டுகளில் ஆங்கிலம் இருக்கிறதா என்று தேடி அந்த ஊர் எது என கண்டுபிடிப்போம். லோகிக்கு ஆந்திரர்களின் காரம் பிடித்திருந்தது. அங்கு கிடைக்கும் வத்தலக்குண்டு மலைப்பழம் போன்ற சுவைகொண்ட வாழைப்பழத்தை தயிரில் சீனிபோட்டுக் கடைந்து சாப்பிடுவதில் பரவசம் அடைந்தார்.

சூரியபேரில் நாங்கள் சாயங்காலம் சென்று சேர்ந்தோம். தங்குமிடம் தேடி அலையத் தொடங்கினோம். லோகி வசதியாகத் தங்க விரும்புபவர். எங்கே சென்றாலும் டிராவலர்ஸ் பங்களா இருக்கிறதா என்றுதான் கேட்பார். பலருக்கு அது என்னவென்றே தெரியாது. சுற்றிவந்துகொண்டிருக்கும்போது ஒருவன் டிவிஎஸ்50 வண்டியில் பின்னால் வந்து மறித்து தமிழில் “வணக்கம் சார்” என்றான். ஆனால் தெலுங்கு ஆள்தான். “என்னசார் வேணும்? தங்கறதுக்கு பங்களாவா? அதெல்லாம் ஏற்பாடு செஞ்சிடலாம் சார்… வாங்கோ” என்றான்.

அவன் எங்களைக் கூட்டிக்கொண்டு சென்ற இடம் உண்மையிலேயே பங்களா. தோட்டம் சூழ்ந்த பழங்காலக் கட்டிடம். ”பேய்ப்பங்களா என நினைக்கிறேன். ராத்திரி இருட்டுக்குள் சலங்கை ஒலி கேட்கும். ஷாம்பூ போட்ட கூந்தலுடன் வெள்ளை ஆடை அணிந்து அழகி வருவாள்” என்று நான் சொன்னேன். “வெள்ளை ஜாக்கெட்டுக்குள் பிரா நன்றாகவே தெரியும்”.

லோகி சிரித்து “ஆனால் பேய்களுக்கு நல்ல இசைஞானம் உண்டு. ஆபேரி, பைரவி போன்ற உருக்கமான ராகங்களில்தான் பாடிக்கொண்டு வரும்…” என்றார். ஆனால் உண்மையில் கொஞ்சம் உதறல் இருந்தது. உள்ளே சுத்தமாகத்தான் பேணப்பட்டிருந்தது. மெத்தை கொஞ்சம் பழையது என்பதைத் தவிர்த்தால் பிரச்சினை ஏதுமில்லை. வாடகை அன்றைய கணக்குக்கு ஆயிரம் ரூபாய் கொஞ்சம் அதிகம். ஆனால் பங்களா.

“பழைய எழுத்தாளர்களுக்கு இந்தமாதிரி சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமைகின்றன. அருமையான கதைகளும் கிடைத்திருக்கின்றன. வைக்கம் முகமது பஷீர் எங்கெல்லாம் போய் தங்கி எதையெல்லாம் சந்தித்திருக்கிறார். நம்மைப்போல சமகால எழுத்தாளர்களுக்குத்தான் பிரியாணிகூட ஒரே மாதிரி கிடைக்கிறது” என்றார் லோகி.

அந்த பங்களா ஒரு ஜமீந்தாருடையது. எங்களைக்கூட்டிவந்தவர் அதையும் அந்தத் தோட்டத்தையும் பராமரிப்பவர். மறுவாடகைக்கு அவ்வப்போது அதை விடுவது அவரது வழக்கம். ஆவலுடன் எங்களுக்குப் பணிவிடைபுரிய வந்து நின்றார். சாப்பாடுக்கு ஆணையிட்டால் ஒருமணிநேரத்தில் கொண்டுவருவதாகச் சொன்னார். மேலே குடிவகைகள் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினார். குடிப்பதில்லை என்றதும் சுருதி மிகவும் குறைந்தது.

லோகி மட்டன் கறியும் சப்பாத்தியும் கேட்டார். நானும் அதையே சொன்னேன், ஆனால் இரவு அசைவம் சாப்பிட்டால் எனக்குக் கெட்டகனவுகள் வரும். வன்முறையாளனாக மாறியிருப்பேன். லோகி குளிர்ந்த நீரில் குளித்து குர்தா பைஜாமா அணிந்து சூரல்நாற்காலியை தூக்கி முற்றத்தில் போட்டு அமர்ந்துகொண்டார். ”ஒரு பிரபுவைப்போல உணர்கிறேன். டேய் என்று அழைக்க ஒருவன் அருகே இருந்தால் நல்லது” என்றார். நான் அருகே அமர்ந்தேன்.

“இதெல்லாம் நல்ல அனுபவங்கள்… உண்மையிலேயே ஒரு பேய் வரவேண்டும். இல்லையேல் ஒரு கொலை. சரி, கொலைவேண்டாம், ஒரு அடிதடி..” என லோகி சொன்னார். “என்ன காலகட்டம் பார். ஒரு போர் இல்லை. பட்டினி இல்லை. எழுதுவதற்கு விஷயமே இல்லையே…” சாப்பாடு வர தாமதமாகியது. இரண்டரை மணிநேரம் கழித்து தொலைவில் வெள்ளை நிற அசைவு கண்ணுக்குப்பட்டது. சாப்பாடுதான். ஆனால் இரண்டுபேர் வருவதுபோலத் தெரிந்தது

வந்தவர் வாட்ச்மேன்தான். அவர் கையில் இடுப்பளவு உயரமான டிபன் கேரியர். அதைக்கொண்டுவந்து திண்ணையில் வைத்தார். உடன் வந்தவர் இருட்டிலேயே மாமரத்தடியில் நின்றுகொண்டார். வாட்ச்மேன் பணிவுடன் “மட்டன்கறி, சப்பாத்தி, மட்டன் ஃபிரை. வாழைப்பழம், தயிர்சாதம் இருக்கிறது. கொக்ககோலாவும் நான்கு பாட்டில் வாங்கிவந்தேன்” என மஞ்சள் பையை காட்டினார்

எங்கள் பார்வை மாமரத்தடி நோக்கிச் செல்ல “அது எனக்குத்தெரிந்த ஒரு பெண். பெத்தாபுரத்துக்காரி. இங்கேதான் இருக்கிறாள். சும்மா பாருங்கள். வேண்டாம் என்றால் போய்விடுவாள்” என்றார். நான் கோபத்துடன் “வேண்டாம்” என்று சொல்ல லோகி மறித்து “வேண்டாம். வரட்டும். பேசிக்கொண்டிருக்கலாம். இன்றைக்கு நமக்கு கதையோகம் இருக்கிறது….” என்றார். அவர் வரச்சொன்னதும் வாட்ச்மேன் கைகாட்டினான்.

அந்தப்பெண்ணுக்கு அவளை அழகாகக் காட்டும்கலை அத்துபடி. இருளில் அவள் மறைந்து நின்றதே ஒரு கலை. அப்படியே விளக்கு வெளிச்சத்தில் நாடகக் கதாநாயகி போலத் தோன்றினாள். உண்மையிலேயே அழகி. அவள் அழகாக இருப்பாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எங்கள் கண்களைப் பார்த்த வாட்ச்மேன் “நல்ல பெண் சார். வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருப்பாள். நன்றாக பாடுவாள். பெத்தாபுரத்துக்காரி. அவளுக்கு எல்லாமே நல்ல பயிற்சி”

அவர் அவளிடம் எங்களுக்குச் சாப்பாடு பரிமாறச்சொல்லிவிட்டுச் சென்றார். அவள் நன்றாகவே தெலுங்குத்தமிழ் பேசினாள். நான் லோகிக்கு பெத்தாபுரம் என்றால் என்ன என்று சொன்னேன். கிழக்குக் கோதாவரியைச் சேர்ந்த பெத்தாபுரமும் அருகே உள்ள ஊர்களும் பாரம்பரியமாகவே விபச்சாரத்துக்குப் புகழ்பெற்றவை. அதை குலத்தொழிலாகச் செய்யும் ஏராளமான குடும்பங்கள் அங்கு உண்டு. “ஆ!கதை!” என லோகி பரவசமானார்

அவளிடம் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டோம், அவளிடம் சும்மா பேசிக்கொண்டிருக்கத்தான் விரும்புகிறோம் என்று. அவளுக்குரிய பணத்தையும் பரிசையும் தந்துவிடுவதாகச் சொன்னோம். அவள் அதில் ஆச்சரியப்படவில்லை. இயல்பாக எடுத்துக்கொண்டு பேசியபடி எங்களுக்குப் பரிமாறினாள். அவள் பெயர் சந்திரகலா. கணவனும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கணவன் லாரி ஓட்டுகிறான். குழந்தைகள் படிக்கிறார்கள். சொந்த லாரிதான். சொந்தமாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி, பிள்ளைகளைப்பற்றி எல்லாம் கேட்டாள். சிரித்தபடி “உண்மை சொல்கிறீர்களே?” என்றாள். லோகி அவள் வளர்ப்புச்சூழல். இளமைப்பருவம் என பல கேள்விகளைக் கேட்டார். எதைக்கேட்டாலும் அவள் நேரடியான மொழியில் சுருக்கமாக பதில் சொன்னாள். எல்லா பதில்களும் மெல்லிய நகைச்சுவையுடன் இருந்தன. “உன் அம்மாவும் இதே தொழில்தானா?” என்றார் லோகி. “இல்லை, மேல்வரும்படிக்காக இட்லிக்கடை நடத்தினாள்” இப்படி. நான் பலமுறை வாய்விட்டுச்சிரித்துவிட்டேன்.

அவளிடம் நாங்கள் சினிமாக்காரர் என்று சொல்லவேண்டாம் என்று லோகி சொல்லியிருந்தார். அவள் சினிமா வாய்ப்புக்காக பேச ஆரம்பித்துவிடுவாள் என்றார். ஆனால் அவரே அவர் சினிமாக்காரர் என்றார். அவள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சினிமாபற்றிய நக்கல்கள் சரசரவென்று வந்து விழுந்தன. என்.டி.ஆர் படங்களின் பெண்கள் அரைடிரௌசர் போட்டு ஆண்பிள்ளைத்தனமாகத்தான் வருவார்கள், ஏனென்றால் அவர் கொஞ்சம் பெண்பிள்ளை மாதிரி இருப்பார் என்றாள்.

பேசப்பேச லோகி ஆர்வமிழந்தபடியே வந்தார். சீக்கிரத்திலேயே “சரி, தூக்கம் வருகிறது” என்றார். உடனே தூங்கிவிட்டோம். மறுநாள் காலை அவள் கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்து அனுப்பினோம். அவள் இயல்பாகச் சிரித்து விடைபெற்றுக் கிளம்பினாள். லோகி என்னிடம் “எனக்கு திடீரென்று சலிப்பாகிவிட்டது. கதையே இல்லை” என்றார்

“ஏன் ?” என்றேன். ”அவளிடம் குற்றவுணர்ச்சியோ தன்னிரக்கமோ இல்லையே. பள்ளிக்கூடவாத்தியார் வேலைக்கும் அவள் செய்வதற்கும் வேறுபாடே தெரியவில்லை…”. நான் அப்போதுதான் அதை உணர்ந்தேன். லோகி கேட்ட கேள்விகள் எல்லாமே ஒரு கண்ணீர்க்கதையை எதிர்பார்த்து. அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள். “ஒருவேளை வெளியே சிரிப்பு உள்ளே கண்ணீர் என்று இருக்குமோ என்று பார்த்தேன். உள்ளேயும் அதே சிரிப்புதான்”

அங்கிருந்து ராஜமுந்திரி சென்றோம். நான் கேட்டேன். “ஏன் லோகி, கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சி இல்லாத ஒரு விபச்சாரியை சினிமாவில் காட்டமுடியுமா?” லோகி “எடுக்கமுடியும், கேன் திரைப்பட விழாவில் காட்ட்லாம்” என்றார்.

 

குங்குமம் முகங்களின் தேசம் தொடர்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சென்னை வெண்முரசு கலந்துரையாடல்

$
0
0

சென்னை வெண்முரசு கலந்துரையாடல் சென்ற 11-9-2016 அன்று நடைபெற்றது. நாற்பதுபேர் கலந்துகொண்டார்கள்.

படங்கள்

1a2a

3aunnamed

விழாவில் சுனீல் கிருஷ்ணன் பேசிய உரையின் வரிவடிவம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58

$
0
0

[ 7 ]

விழித்தெழுந்தபோது தருமன் தன்னை யட்சர்களின் நடுவே கண்டடைந்தார். அஞ்சி எழப்போனபோது “அஞ்சற்க!” என்ற குரல் கேட்டது. நாரையின் குரல் எனத் தெரிந்தது. மீண்டும் அவர் எழமுயன்றார். “இது பகயட்சர்களின் நிலம். பகர்களின் அரசனாகிய என் பெயர் மணிபூரகன். என் குலம் இங்கு பல்லாண்டுகளாக வாழ்கிறது. என் விருந்தினராக இங்கு இருக்கிறீர்கள்” என்றார் முதலில் நின்றிருந்தவர். தலை சுழன்றுகொண்டிருந்தமையால் தருமனால் எழமுடியவில்லை. கையூன்றி அமர்ந்தார்.

மணிபூரகனும் பிறரும் நாரையின் வெண்சிறகுகளால் ஆன பெரிய தலையணியும் வெண்ணிறமாக அடிதிருப்பப்பட்ட மான்தோல் ஆடையும் அணிந்திருந்தனர். கந்தகக்கல்லின் மஞ்சள் நிறம்கொண்ட உடல்கள். நீலக்கூழாங்கற்கள் போன்ற விழிகள். நாரை போல உடலைக் குவித்து கைகளைக் கூட்டியபடி அவர்கள் அவரைச் சூழ்ந்து நின்றிருந்தனர். நான்குபக்கமும் மஞ்சள்நிறமான பாறையடுக்குகள் சூழ்ந்த வட்டமான முற்றத்தில் பொழிந்த வெயில் வெண்மையால் பெருக்கப்பட்டு ஒளிகொண்டிருந்தது. பாறையிடுக்குகளுக்குள் இருள் தெரிந்தது. அவை குகைகள் என தோன்றியது. அங்கிருந்து பெண்களும் குழவியரும் எட்டிப்பார்த்தனர்.

உடலும் ஆடையும் அணியும் வெண்ணிறம் கொண்டிருந்த அவர்கள் அப்படியே அந்த நிலத்தின் வெண்மையில் ஒட்டி விழிமுன்னிருந்து மறைந்துவிடுபவர்கள் போலிருந்தனர். மணிபூரகன் “தாங்கள் எவரென்று தெரிந்துகொள்ளலாமா?” என்றார். “நான் இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாகிய யுதிஷ்டிரன். நாடுதுறந்து கானேகியவன். என் இளையோர் விடாய்நீர் தேடி இங்கு வந்தனர்.” அக்கணமே நினைவு தெளிய கையூன்றி எழுந்தமர்ந்து “அவர்களை நான் பார்த்தேன். அந்தச் சுனையின் கரையில்…” என்றார். நெஞ்சு அறைபட “என் உடன்பிறந்தோர். என்னாயிற்று அவர்களுக்கு? எங்கே அவர்கள்?” என்று கூவினார்.

“அவர்கள் ஒவ்வொருவராக இங்கு வந்தனர். முதலில் அப்பேருடலர். அருந்தவேண்டாம், அச்சுனையின் நீர் நஞ்சு. அது எங்களால் காக்கப்படுவது என்று கூவிச்சொன்னோம். அவர்கள் எங்களை எதிரிகளென்றே எண்ணினர். அவர்கள் படைக்கலம் கொண்டிருந்தமையால் நாங்கள் அருகணையவில்லை, எங்களை விழிகாட்டவுமில்லை. எங்கள் குரலை ஏதோ உளமயக்கென புறந்தள்ளி சுனைநீரை அருந்தி அவர்கள் உயிர்துறந்தனர்” என்றார் மணிபூரகன். தருமன் “இல்லை” என்று கூச்சலிட்டபடி பாய்ந்து அவர் தோளைப் பற்றினார். “அவர்கள் அப்படி இறக்கமுடியாது. அவ்வண்ணம் நிகழமுடியாது.”

மணிபூரகன் சிரித்து “இறப்புக்கு அப்படி நெறிகளுண்டா என்ன?” என்றார். “இல்லை, அவர்கள் இறக்கமாட்டார்கள்” என்றார் தருமன். “அத்தனை எளிய ஊழ்கொண்டவர்கள் அல்ல அவர்கள்.” மணிபூரகன் சிரித்ததும் சூழ்ந்திருந்த யட்சர்களும் சிரிக்கத்தொடங்கினர். அவர்களின் சிரிப்பை ஆற்றாமையுடனும் கண்ணீருடனும் நோக்கி “நிறுத்துங்கள்… அருள்கூர்ந்து நிறுத்துங்கள்… நான் என் தம்பியரை பார்க்கவேண்டும்… உடனே அவர்களை பார்த்தாகவேண்டும்” என்று தருமன் கூவினார். மணிபூரகன் சிரிப்பை அடக்கி “அனைத்து மெய்மைகளையும் அறிந்த ஒருவர் இத்தகைய அறிவின்மையை சொல்லும்போது எங்கோ எதுவோ மறுநிகர் கொள்கிறது” என்றார்.

தருமன் மெல்ல தளர்ந்து “ஆம், உண்மை. இறப்புக்கு மண்ணில் பொருள்கொள்ளும் நெறியென ஏதுமில்லை. முன்னரே நாம் அறியும் ஊழென்றும் ஒன்றில்லை” என்றார். மணிபூரகன் “அவர்கள் தங்கள் நீர்ப்பாவைகளுடன் உரையாடினர். பின்னரே நீரை அருந்தினர்” என்றார். “அவர்களை எனக்கு காட்டுங்கள்… தங்கள் அடிபணிகிறேன். முடியில் சூடுகிறேன். கனியுங்கள்” என அவர் கைகளை பிடித்துக்கொண்டு விம்மினார் தருமன். “வருக!” என மணிபூரகன் அவரை அழைத்துச்சென்றார். “இந்நிலமே மானுடருக்கு நஞ்சு. இக்காற்றில் மானுடரை உளமயக்கி உள்ளே குடியேறி அலையச்செய்து உயிர்குடிக்கும் எங்கள் காவல்தெய்வங்கள் குடிகொள்கின்றன.”

சுனைக்கு அப்பால் சேறு உலர்ந்து உருவான வரம்பு மறைத்தமையால் விழிக்குத் தெரியாமல் நான்கு உடல்களும் கிடந்தன. முதற்கணம் நால்வரும் சிறுமைந்தர்களாக அன்னையருகே துயின்றுகொண்டிருப்பதாக உளம் மயங்கி, உடனே தன்னுணர்வுகொண்டு அதிர்ந்து, முன்னால் ஓடி, திகைத்து நெஞ்சக்குலையில் வேல் செருகப்பட்டவர் போல நின்று நடுங்கினார். கைகள் அறியாது நெஞ்சோடு சேர்ந்து கூப்பிக்கொண்டன. பீமன் கைகளை விரித்து விடுவிக்கப்பட்ட விரல்கள் இல்லை என்பதுபோல் மலர்ந்திருக்க வானை நோக்கி பொருளில்லா விழிநிலைப்புடன் கிடந்தான். அர்ஜுனன் இனிய புன்னகையுடன் துயில்கொள்பவன் போல விழிமூடியிருந்தான். நகுலனும் சகதேவனும் கைகளைப் பற்றியிருந்தனர்.

கால்கள் உயிரிழக்க தருமன் விழப்போனார். நெஞ்சுக்குள் ஒரு நரம்பு சுண்டி இழுபட்டது. இடக்கை அதிர்ந்து பின் தளர்ந்தது. ஓடிக்கொண்டிருந்த உளப்பெருக்கின் அக்கணச்சொல் அப்படியே கல்வெட்டென நிலைத்தது. “நீர்மருது!” அச்சொல்லை நோக்கி மீண்டும் பெருகிய சித்தம் திகைத்துச் சுழன்றுவந்தது. நீர்மருதமா? அதன் பொருளென்ன? பொருளென ஏதேனும் உண்டா? அவர் விழிகளையும் நாவையும் செவிகளையும் ஆண்ட உள்ளத்துணர்வு அவர்கள் இறந்துவிட்டார்களென்பதை உறுதி செய்துகொண்டது. உடலுணர்வு கால்களை இயக்கி கொண்டுசென்றது.

“அவர்கள் எவரெனத் தெரியவில்லை எங்களுக்கு. இங்கு மானுடர் வருவது அரிதினும் அரிது. வருபவர்கள் மீள்வதுமில்லை” என்றார் மணிபூரகன். தருமன் தன் முகம் முழுக்க கண்ணீர் பரவி குளிர்ந்திருப்பதை உணர்ந்தார். அருகே சென்று மண்டியிட்டு பீமனின் தலையை வருடினார். “மந்தா” என மெல்ல அழைத்தபோது ஒலியெழவில்லை. அப்போதறிந்தார், தம்பியரில் தனக்கு முதல்வன் எவன் என. நெஞ்சு கொதித்துருகிக்கொண்டிருக்கையிலும் தொண்டை பதைத்ததே அன்றி ஒலியென ஏதுமெழவில்லை.

அறியா நிலமொன்றில் இருந்தார். அங்கே வெண்ணிற வெயில் மட்டும் சூழ்ந்திருந்தது. எங்கோ பறவைகளின் சிறகடிப்போசைகள். பீமனின் குழலையும் தோள்களையும் நடுங்கும் கைகளால் வருடிக்கொண்டிருந்தார். பின்பு நெடுநேரமாக அவனையே தொட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்து அர்ஜுனனின் கைகளைப் பற்றினார். நாணின் தழும்பேறிய சுட்டுவிரல். இளைய யாதவரின் நினைவு வந்தது. அவரிடம் அச்செய்தியைச் சொல்வதுபோல காட்சி உருவாகி உடனே அழிந்தது. அவர் ஏற்கெனவே அறிந்திருக்கக்கூடும். அர்ஜுனனின் கைமேல் வந்தமர்ந்த ஈ ஒன்றை கையால் வீசித் துரத்தினார். காலில் இருந்த மணல்பொருக்கை தட்டித்துடைத்தார்.

நகுலனையும் சகதேவனையும் அணுகி கன்னங்களை வருடினார். அப்போதும் சிறுவர்களைப்போலவே தோன்றினர். அவர்களுக்கு முதுமையே இல்லை. எண்ணங்கள் ஏன் இப்படி பெருகிச்செல்கின்றன? நீர்மருது. என்ன ஒரு பொருளற்ற சொல். ஆனால்… உடல் சிலிர்க்க அவர் நீர்மருதை கண்டார். அதனருகே செண்பகமரம். அதன் கீழே கிடந்தது பாண்டுவின் உடல். உடனே அறியாமல் அவர் விழி இளையோரின் இடைகளுக்குக் கீழே நோக்கியது. இல்லை, அவர்கள் விழைவுடன் இறக்கவில்லை. ஆனால் அவர்களுக்குள் நிகழ்ந்தது என்ன என்று எவர் அறியக்கூடும். என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? ஏன் இவ்வெண்ணப்பெருக்கு? எதைத்தொட்டு எதைக்கடந்து எங்கு செல்கிறது இது? மரம் விட்டுச்செல்லும் பறவைகளா அவை? அல்லது நெருப்பில் எழும் ஒளியலைகள்தானா?

மணிபூரகன் மெல்ல அசைந்ததை ஓரவிழி கண்டபோது அனைத்தும் கலைந்து அவர் மீண்டார். எழுந்தபோது உடல் இடப்பக்கமாக தள்ளியது. கைகளை ஊன்றி எழுந்து நின்று “யக்‌ஷர்களின் அரசே, என் இளையோருக்கான இறுதிச்செயல்களை இங்கேயே நான் செய்யவேண்டும். அதற்கு உங்கள் குடி எனக்கு உதவவேண்டும். இன்றே நான் கிளம்பி கீழே எனக்காகக் காத்திருக்கும் அந்தணரை அணுகவும் வேண்டும். அதற்குமுன் மான்கொம்பில் சிக்கி இங்கு வந்த அரணிக்கட்டைகளைத் தேடி எடுத்துக்கொள்ளவேண்டும்” என்றார்.

அருகே நின்ற ஒரு யக்‌ஷன் “இந்த அரணிக்கட்டைகள்தானா?” என்று காட்டினான். “ஆம்” என்றார் தருமன். அவன் “இவை அந்த மான் சென்ற வழியில் விழுந்துகிடந்தன… இங்கு அனலுண்ண கீழே சென்றுவரும் மான் அது ஒன்றே” என்றான். “ஆம்” என்று தருமன் பெருமூச்சுடன் சொன்னார். “நீங்கள் விரும்பியதை இங்கு செய்யலாம், அரசே” என்றார் மணிபூரகன். “இவ்விளையோரும் எங்கள் விருந்தினராக ஆகிவிட்டனர் இன்று.”

குழவியரும் பெண்களும் விழிதிருப்பினர். மணிபூரக யக்‌ஷர் திரும்பி நோக்கி தலைவணங்கினார். மஞ்சள்பாறைகளுக்கு அப்பாலிருந்த சிறிய குகைவாயிலிருந்து முதிய யட்சன் ஒருவர் தோன்றினார். நாரையிறகு சூடிய தலை எழுந்தபோது ஒரு பறவை சிறகசைப்பதாகவே தோன்றியது. “எங்கள் முதுமூதாதை…” என்றார் மணிபூரகன். “அவர் பெயர் மணிபத்மர்… இக்குடியின் அரசராக எண்பதாண்டுகாலம் இருந்து கனிந்து விலகியவர். மேலே தனிக்குகையில் விண்ணுடன் உரையாடி வாழ்கிறார்.” தருமன் கைகூப்பி தலைவணங்கி “யட்ச மூதாதையை வணங்குகிறேன்” என்றார்.

அவர் விழிகள் நோக்கற்றவை போலிருந்தன. “எந்நிலையிலும் முறைமை மறக்காத நீ அரசனென்றே காட்டிலும் வாழ்பவன். நன்று” என்றார். “யட்சர்கள் கீழே வாழும் மானுடர் அல்ல. இங்கிருந்து அங்கு செல்லும் இந்த நாரைகளே உயிரழிக்கும் நஞ்சை பரப்புகின்றன. நாங்கள் சென்றால் உங்கள் நகர்கள் முற்றழியும். அங்கிருந்து எவர் இங்கு வந்தாலும் நாங்களும் அழிவோம். எனவே வந்தவரை நாங்கள் மீளவிடுவதில்லை. இங்கு வரும் அயலவர் இங்குள்ள அனல்வாய்களில் எரியூட்டப்படவேண்டுமென்பதே நெடுநாள் நெறி.”

“நாங்கள் அதை அறியவில்லை. விடாய்நீர் தேடி வந்தவர்கள்” என்றார் தருமன். “ஆம், அவர்களில் ஏறிவந்தன எங்கள் தெய்வங்கள். அத்தெய்வங்களினூடாக அவர்களிடம் நீருண்ணும்படி சொன்னேன். எல்லைகடந்து வந்த அவர்களை நானே கொன்றேன்” என்றார் மணிபத்மர். “உன்னிடமும் சொன்னேன்.” தருமன் அவரை நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு “ஆம், நீரில் எழுந்த விழிகளில் இரண்டு உங்களுடையவை” என்றார்.

“அது யட்சர்களின் உளம்புகும்கலை. உன்னுள் இருந்து நான் எடுத்த பாவை அது.” தருமன் “அவர் என் மூதாதை சித்ராங்கதர்” என்றார். “ஆம், என்னுருவை விலக்கி பிறிதொன்று தன்னுருக் காட்டி உன்னை மீட்டது” என்றார் மணிபத்மர். “அதுவே என்னை உன்பால் ஈர்த்தது. நீ கொண்ட நுண்ணறிவை நானும் பெற விழைவூட்டியது. உன்னுள் புகுந்து உரையாடியவன் நானே. நீ அதை ஒரு சுவடிநூலென உளம் கொண்டாய். அந்நூலில் ஒரு நாரையென நான் உருக்கொண்டேன்.”

மணிபத்மர் தருமன் முன் வந்து நின்றார். “எஞ்சும் மூன்று வினாக்களை கேட்கிறேன். நீ சொன்ன விடைகள் அனைத்தும் மானுடருக்குரியவை, யட்சர்களுக்கு அவை பொருளற்றவை. இவற்றுக்கு யட்சர்களுக்கும் உரிய மறுமொழிகளை சொல்க! உன் இளையோரில் ஒருவரை நான் உயிர்கொள்ளச் செய்கிறேன்.” தருமன் திரும்பி நோக்கியபின் “தனியொருவனுக்குரிய அறிவு என இப்புவியில் ஏதுமில்லை. எனவே என் விடைகள் என் ஆசிரியர்களுக்கும் உரியவை” என்றார். மணிபத்மர் “சொல்க, துயர்களில் பெரியது எது? சுமைகளில் அரியது எது? நோய்களில் கொடியது எது?” என்று கேட்டார்.

தருமன் “மைந்தனை இழக்கும் தந்தையின் துயர். மண்ணில் அதற்கு நிகரில்லை, ஏனென்றால் அம்மைந்தரை ஈன்றதுமே அது தொடங்கிவிடுகிறது” என்றார். “சுமைகளில் அரியது கரு தாங்குதல். அன்னை அதை இறக்கிவைக்கவே முடியாது. மூத்தவரே, நோய்களில் கொடியது வஞ்சம். அதற்கு மருந்தே இல்லை. நோயுற்றவரை, அவர் சுற்றத்தை, அவர் எதிரிகளை, அச்சூழலை அழிக்காமல் அது அடங்குவதில்லை.” அவற்றை கண்களைச் சுருக்கி முகம்கூர்ந்து கேட்டிருந்த மணிபத்மர் சிலகணங்களுக்குப்பின் “ஆம், இம்மூன்றுமே எங்கும் திகழும் உண்மைகள். நீ பிறரையும் அறியும் அரசன். உனக்கு நாங்கள் எதிரிகளல்ல” என்றார்.

திரும்பி பாண்டவர்களின் உடல்களை நோக்கிய மணிபத்மர் “அரசே, நான் என் உயிரில் ஒரு பகுதியை இவர்களில் ஒருவருக்கு அளிக்கமுடியும். நீ விழையும் ஒருவனை சுட்டு!” என்றார். தருமன் “இவன் நகுலன், மூன்றாம் இளையோன். இவன் எழுக!” என்றார். விழிசுருங்க கூர்ந்து நோக்கிய மணிபத்மர் “என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவன் வில்விஜயன், அவனின்றி உன் அரசு மீளாது. இவன் பெருந்தோள் பீமன். இவனின்றி நீ இக்காட்டைவிட்டே செல்லமுடியாது. இவனோ வலுவில்லா இளையோன்” என்றார். “ஆம், அதை நானும் அறிவேன். மூத்தவரே, எந்தைக்கு தேவியர் இருவர். குந்திக்கு மைந்தனென நானுள்ளேன். மாத்ரிக்கு மைந்தனென மூத்தவன் எழவேண்டும். அதுவே உகந்த நெறி” என்றார்.

அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. இருமுறை ஏதோ பேசவிழைபவர் போல வாயசைத்தபின் தொண்டையை கனைத்தார். “மூத்தவரே, வாழும் மானுடரின் கடன் உடன்வாழ்பவரிடம் மட்டும் அல்ல, நீத்தாரிடமும் கூடத்தான். ஏனென்றால் நாம் நம் ஆணவத்தால் வாழ்க்கையை துண்டுபடுத்திக்கொள்கிறோம். இது வாளால் வெட்டிப் பிளக்கவியலாத நதிப்பெருக்கு.” மணிபத்மர் “ஆம்” என்றார். அவர் வாய் முதியவர்களுக்குரியபடி நடுங்கிக்கொண்டிருந்தது. அந்த நடுக்கம் உடலெங்கும் பரவியது. தன்னுள் ஓடிய எண்ணங்களில் கட்டுண்டவர் போலிருந்தார்.

பின்பு பெருமூச்சுடன் மீண்டு “அரசனே, அறம் முற்றுணர்ந்தவன் அமரும் அரியணை என்பது அவன் குடிகளுக்குரியது மட்டுமல்ல. தலைமுறைகள் சுட்டிக்காட்டும் தெய்வக்கருவறைபீடம் அது. நீ ஒருநாள் காடுகடந்து ஊர்மீண்டு வென்று அரியணையமரவேண்டும். உன் கைகள் அமுதகலமாக வேண்டும். கோல் சூடி ஆண்டு காலம் கடக்கையில் என்றேனும் அனைத்தும் வீண் என உணர்வாய் என்றால் இங்கு மீண்டு வருக! அன்று நான் உன்னிடம் சொல்ல ஒரு சொல் எஞ்சியிருக்கிறது” என்றார்.

அவர் மெல்ல கையூன்றி தரையில் அமர்ந்தார். “உன் தம்பியர் நால்வருக்கும் என் உயிரை அளிக்கிறேன். அழைத்துச் செல்க!” என்றார். பதறியபடி முன்னால் சென்று “இல்லை, அது முறையல்ல” என்றார் தருமன். “இது முதிர்ந்த உயிர் அரசே. என்று நான் இனியெழும் காலத்தின் அறத்தை முழுமையாகக் கண்டு நிறைகிறேனோ அன்று விடைகொள்ள வேண்டும் என்பது என் ஆசிரியரின் நல்வாக்கு. இன்று அது அமைந்தது. நன்று சூழ்க!” அவர் உடல் மழைவிழுந்து நடுங்கும் இலைபோல அதிரத்தொடங்கியது. மல்லாந்து விழுந்து கைகளால் மண்ணை பற்றிக்கொண்டார். கைகள் இழுபட்டு பின் அசைவிழந்தன. மூச்சு ஏறியமைந்தது. பெண்களும் குழந்தைகளும் ஓடிவந்து அவரைச் சூழ்ந்தனர். யட்சர்கள் அவரை நோக்கி கைகூப்பியபடி அசைவற்று நின்றனர். அவரிலிருந்து அவர் விடுபடும் அக்கணம் ஒரு விதிர்ப்பாகத் தெரிந்தது.

தருமன் பீமனின் அசைவைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பினார். அவன் எழுந்து சுற்றும் நோக்கி “யார்?” என்றான். அக்கணத்திலேயே அர்ஜுனனும் எழுந்துவிட்டான். “மூத்தவரே” என்றான். “இது யக்‌ஷரின் நிலம். நீங்கள் உயிர்மீண்டுவிட்டீர்கள்” என்றார் தருமன். பீமன் எழுந்து தருமனின் கைகளைப் பற்றியபடி “மூத்தவரே, நீங்கள் நலமாக உள்ளீர்கள் அல்லவா?” என்றான். அர்ஜுனன் “உங்களைக் காக்காமல் வீழ்ந்துவிட்டோம், அரசே” என்றான். தருமன் “நானும் நீங்களும் நலமாக இருக்கிறோம். நம் அன்னையரின் அருள்… இதோ இந்த முதிய யட்சரின் கொடை” என்றார்.

மணிபூரகன் அருகே வந்து “அவருடன் நானும் உங்கள் உள்ளத்துக்குள் வந்திருந்தேன். அவர் உள்ளத்துடன் இணைந்திருந்தேன்” என்றார். நகுலனும் சகதேவனும் எழுந்து தங்கள் உடல்களை உணர்ந்து கைகால்களை நீட்டி விரித்துக்கொண்டார்கள். “மூத்தோர் சாவு எங்களுக்குப் பெருவிழவு. இந்நாளை எங்கள் தலைமுறைகள் நினைத்திருக்கும்” என்றார் மணிபூரகன். “மூத்தவரின் புதைவுகொண்டாடி உணவுண்டபின் நீங்கள் திரும்பவேண்டும்.” தருமன் “ஆம், அது என் நல்லூழ்” என்றார்.

கீழே வெண்ணிற மண்ணில் ஒரு சேற்றுத்தடமென முதிய யட்சர் மாறிவிட்டிருந்தார். தருமன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினார். திரும்பி தம்பியரிடம் “இளையோரே, இனி என்றும் உங்கள் மூதாதையர் நிரையில் இவரும் நினைவுகூரப்படவேண்டும்” என ஆணையிட்டார். அவர்கள் சென்று அவர் கால்களில் தலை பணிந்து வணங்கினர்.

 

[ 8 ]

உளமென ஆகிவிடும் இயல்புகொண்டது நிலப்பரப்பு. எண்ணங்களும் வெண்வெளியில் வெண்பெருக்காக இருந்தன. வெண்ணிற ஒளியில் வெண்ணிறமான நாரைகள் பறந்து சென்றன. அவற்றின் நிழல்களும் வெண்ணிறக் கறைகள்போல கடந்தகன்றன. ஓசைகள் வெண்ணிறப் பாறைகளில் பட்டு வெண்ணிறமாக திரும்பி வந்து சூழ்ந்தன. களைப்புடன் நின்றபோது பறந்துகொண்டிருந்த தன்னுணர்வு மெல்ல வந்து தன் உடல்மேல் படிந்ததுபோல உணர்ந்தார். கண்களை மூடிமூடித் திறந்தபோது மெல்ல வெண்ணிற அலைகள் அடங்கி நிழல்சூடிய பாறைகள் மும்முகப் பருவடிவுகொண்டு அணுகின.

நகுலன் “யட்சர்கள் அளித்த குடிநீர் எஞ்சியிருக்கிறது மூத்தவரே, சற்று அருந்துகிறீர்களா?” என்றான். அவர் வேண்டாம் என தலையசைத்தார். “இங்குள்ள பாறைகளில் செந்நிறம்கொண்டவை சொட்டும் நீரை மட்டுமே இவர்கள் அருந்துகிறார்கள்” என்றான் நகுலன். “எரிநிறைந்த மண். எரிபரவிய காற்று. இந்நச்சுவெளியிலும் இவர்கள் வாழ்வது விந்தைதான்” என்றான் சகதேவன். பீமன் “வஞ்சச்சூழலில் பழகியவர்களால் எங்கும் வாழமுடியும், இளையோனே. நாம் இதோ இதையும் வென்று மீள்கிறோம்” என்றான்.

“ஆம், இவ்வுளமயக்குகள் காட்டும் வஞ்சம் இப்போது நினைக்கையிலும் அச்சுறுத்துவது” என்றான் நகுலன். சகதேவனை சுட்டிக்காட்டி “நான் அந்நீர்ப்பரப்பை நோக்கியபோது அதில் எழுந்தவன் இவன். கனிந்து புன்னகை செய்து என்னிடம் அந்நீரை அருந்தும்படி சொன்னான். உருவிலிகளின் குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன, அருந்தலாகாது என்று. நான் தயங்கியபோது அருந்தாவிடில் நான் இறப்பேன் என்றான், ஏனென்றால் முன்னரே அவன் இறந்துவிட்டான் என விழிநீர் உகுத்தான். மூத்தவர்கள் இருவரும் அருந்தாமலேயே உயிரிழந்தனர் என்று சொல்லி அழுதான்” என்றான். விழிநீர் உகுத்தான்.” சகதேவன் சிரித்தபடி “அப்போது இவன் முகத்தை நான் நீரில் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிடம் இவன் மன்றாடிக்கொண்டிருந்தான்” என்றான்.

நகுலன் “நீங்கள் பார்த்த முகம் எது, மூத்தவரே?” என்றான். பீமன் திரும்பி நோக்கியபின் வானில் விழிநட்டு ஒன்றும் சொல்லாமல் நடந்தான். “சொல்லுங்கள் மூத்தவரே, நீங்கள் நோக்கியது யாரை?” என்றான் சகதேவன். “அவனை” என்று பீமன் சொன்னான். அவன் எவரை குறிப்பிடுகிறான் என்று புரிந்துகொண்டு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அப்படியென்றால் நீங்கள் நோக்கியது அவரை அல்லவா?” என்று அர்ஜுனனிடம் நகுலன் கேட்டான். அவன் ஆம் என தலையசைத்தான். “நாம் தனியாக எங்கும் போவதில்லை மூத்தவர்களே, துணையாக அவர்களை கொண்டுசெல்கிறோம்” என்றான் நகுலன் சிரித்தபடி. இறுக்கம் அகன்று இருவரும் புன்னகை செய்தனர்.

“நீங்கள் நோக்கியது எவரை, மூத்தவரே?” என்றான் நகுலன் தருமனிடம். அவர் “மூதாதையான சித்ராங்கதரை. நச்சுப்பொய்கையில் அவர் மூழ்கி மறைந்தார். இங்கு மேலேறி வந்தார்” என்றார். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. “அவர் முகத்தை நான் பார்த்ததில்லை. நம் அரண்மனையில் உள்ள பட்டுத்திரை ஓவியம் ஒன்றில் அவர் முகம் உள்ளது” என்று தருமன் தொடர்ந்தார். “அழகிய முகம். ஆனால் அதில் ஓர் பதற்றம் தெரியும்படி வரைந்திருப்பான் ஓவியன். அந்தப் பதற்றம் அப்படியே அம்முகத்திலும் இருந்தது.” நகுலன் “அது அவரது இறப்புக்குப்பின் வரையப்பட்டது” என்றான்.

“அவர் இன்றும் பதற்றம் கொண்டிருக்கிறார். மூன்று தலைமுறைக்காலம் நீர்க்கடன் அளிக்கப்பட்ட பின்னரும்கூட” என்றார் தருமன். “அந்த விழிகளை நான் மீண்டும் மீண்டும் காண்கிறேன். அவற்றில் மேலும் சொல்ல ஒரு சொல் இருந்தது…” நகுலன் “அது நம் உளமயக்கு, மூத்தவரே. இங்குள்ள கந்தக நஞ்சின் விளைவு அது” என்றான். “ஆம், நஞ்சினால்தான். ஆனால் எப்படியாயினும் என்னுள் இல்லாதது எழுவதில்லை. என்னுள் இருப்பதே வெளியேயும் விரிந்திருப்பது” என்றார் தருமன்.

“நாம் சற்று ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம், மூத்தவரே” என்றான் பீமன். “நாம் இன்று இருட்டுவதற்குள் சென்றுவிடமுடியும்.” நகுலன் “அங்கே முனிவர் எரிகுளத்தின் முன் அமர்ந்திருப்பார்” என்றான். அதை அவர்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தமையால் ஒன்றும் சொல்லவில்லை. தருமன் பாறைமேல் படுத்து விழிகளை மூடிக்கொண்டார். அவர் இமைகளுக்குள் விழியுருளைகள் அசைந்தன. ஏதோ சொல்லப்போவதுபோல இதழ்கள் கசங்கிக்கொண்டிருந்தன. மெல்ல மூச்சொலி எழ நகுலனும் சகதேவனும் துயில்கொண்டனர். தருமனும் சித்தம் மயங்கி அமிழ்ந்துகொண்டிருந்தார். “பகா!” என்ற ஒலியுடன் ஒரு நாரை அவர்களை கடந்து சென்றது. அவ்வொலி கேட்டு அவர் எழுந்தமர்ந்தார்.

SOLVALARKAADU_EPI_58

“மூத்தவரே!” என்றான் பீமன். “இளையோரே, நீங்கள் சென்று அரணிக்கட்டையை சுஃப்ர கௌசிகரிடம் அளியுங்கள். நான் திரும்பி இத்திசை நோக்கி செல்கிறேன்” என்றார் தருமன். “மூத்தவரே, என்ன சொல்கிறீர்கள்? அங்கே எரியுமிழும் கந்தமாதன மலை இருக்கிறது” என்றான் பீமன். “ஆம், அங்குதான் செல்கிறேன். எரிபுகுந்து உருகி மீளவேண்டும் என்று அருகப்படிவர் சொன்னது இதைத்தான்.” பீமன் சினத்துடன் “அறிவின்மை. நீங்கள் அத்தனை தொலைவுவரை செல்லும் உடலாற்றல் கொண்டவர் அல்ல…” என்றான். “இது உடல் பயணம் அல்ல. உடல் அழியுமென்றால் அழிக!” என்றார் தருமன்.

“நானும் உடன் வருகிறேன்” என்றான் பீமன். அவன் குரல் தணிந்து மன்றாட்டாகியது. “தங்களை தனியாக அனுப்பிவிட்டு என்னால் எப்படி இருக்கமுடியும், மூத்தவரே?” அமர்ந்தபடியே அருகணைந்து அவர் கால்களைத் தொட்டு “என்னையும் உடனழைத்துச் செல்லுங்கள்… என் மேல் கருணைகொள்ளுங்கள்” என்றான். தருமன் “மந்தா, புரிந்துகொள்! இது நான் தன்னந்தனியாக செய்யவேண்டிய பயணம். மீண்டுவர ஊழ் இருந்தால் அது நிகழும்” என்றார். நகுலனும் சகதேவனும் எழுந்து திகைப்புடன் நோக்கினர். அர்ஜுனன் “அவர் சென்றுமீளட்டும், மூத்தவரே” என்று பீமனிடம் சொன்னான். “கந்தமாதன மலைமேல் எவரும் சென்றதில்லை. அது பாறையுருகும் அனல்கொண்டது” என்றான் பீமன் உரத்தகுரலில்.

“ஆம், ஆனால் என் வழி அதுவே” என்றார் தருமன். “மூன்றாம் மாதம் முழுநிலவுநாள் வரை எனக்காக காத்திருங்கள். நான் மீளவில்லை என்றால் நகர்மீள்கையில் சகதேவன் இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியை சூடட்டும்.” சகதேவன் கண்களில் நீருடன் கைகூப்பினான். “நன்று சூழ்க!” என்றபடி தருமன் எழுந்துகொண்டார். “சென்று வருக, மூத்தவரே. நாங்கள் அங்கே காத்திருப்போம்” என்று அர்ஜுனன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். நகுலனும் சகதேவனும் உதடுகளை இறுக்கி அழுகையை அடக்கியபடி வணங்க அவர்களை கைதூக்கி வாழ்த்தினார். பீமன் தலைகுனிந்து அப்படியே அமர்ந்திருந்தான். “நான் திரும்பவில்லை என்றால் தான் வாழும் காலம்வரை மைந்தன் என நின்று மந்தன் எனக்கு நீர்க்கடன் செலுத்தட்டும்” என்றபின் அவன் தலையைத் தொட்டுவிட்டு தருமன் திரும்பிப்பாராமல் நடந்துசென்றார்.

தொடர்புடைய பதிவுகள்

சண்டிகேஸ்வரர் –கடிதம்

$
0
0

1

அன்புள்ள ஜெ

 

நலமா ?

 

சண்டிகேஸ்வரர் குறித்த உங்களது  பதிலை படித்தேன்

 

இதில் மற்றோரு பார்வையை வைக்க விரும்புகிறேன் .எனக்கு தெரிந்த வரையில் சண்டிகேஸ்வரர் என்னும் பெயரை மூன்று இடங்களில் பொருத்தி பார்க்கலாம் :

 

1)சாஃஷாத் சிவனின் ரூபங்களில் ஒன்றான சண்டிகேஸ்வரர் .சிவ ரூபம் என்பதால் தான் ரிஷப ரூபம் ரிஷப வாஹனம் எல்லாம்.தந்த்ர நூலான “சாரதா திலகத்தில் ‘ இவருடைய உபாசனை விளக்க பட்டுள்ளது .”சூல டங்க ச அக்ஷ வலய கமண்டலு ரத்நாகரம் ….”என த்யான சுலோகம் செல்கிறது .இவர் சிவனின் மூர்த்தி பேதங்களில் ஒருவர் .

 

 

2) சிவாலயங்களில் கருவறைக்கு தொட்டு அடுத்த பிரகாரத்தில் காணும் சண்டிகேஸ்வரர் .தனி சந்நிதி இருக்கும்.கை கொட்டி வழிபாடு செய்ய படுவது இங்கு தான் .நமது நண்பர் கேட்டது இவரை குறித்து தான் .இவர் சிவ கணங்களில் ஒருவர்.ஆகம படியும் ,தந்த்ர படியும் சிவனின் நிர்மால்ய தாரி.சிவ பெருமானுக்கு சூட பட்ட மலரும் ,செய்யப்பட்ட நைவேத்தியமும் இவருக்கு தான் முதலில் அக்ர பிரசாதமாக ,முதல் பிரசாதமாக கொடுக்கப்பட வேண்டும் .பின்னர் தான் அதனை மனிதர்கள் எடுத்து கொள்ள இயலும்.

 

இந்த சண்டிகேஸ்வரரை ஆகம மரபுக்குள் கொண்டுவரப்பட்ட தேவதையாக கருதுவதில் பெரிய சிக்கல் உண்டு .சிவனுக்கு மட்டும் அல்ல அனைத்து சைவ தேவதைகளுக்கும் (சில பாஞ்சராத்ர ஆகம நூற்கள் படி வைணவ தேவதைகளுக்கும் ) தனி தனியாக நிர்மால்ய தேவதைகள் உண்டு.இந்த தேவதைகளை சண்டிகேஸ்வரரை ஸ்தாபிதம் செய்வது போலவே ஸ்தாபிப்பது உண்டு.உதாரணமாக நெல்லை அப்பர் கோவிலில் நெல்லையப்பருக்கு சண்டிகேஸ்வரர் ,காந்திமதி அம்மனுக்கு சண்டிகேஸ்வரி .இது போல ஆகமம் சுப்பிரமணியருக்கு சுமித்ர சண்டரை நிர்மால்ய தாரியாக வைக்க வேண்டும் என கூறுகிறது.(த்யானம் :த்ரி நேத்ரம் த்வி புஜம் ரக்தம் சுப்பிரசன்னம் சுயௌவனம் தக்ஷிண சக்தி சம்யுக்தம் ……).எல்லா இடத்திலும்,எல்லா தேவதா ப்ரதிஷ்டையிலும் இத்தகைய நிர்மால்ய தாரிகள் இருப்பதால் உள்ளிணைப்பு கருத்து சரியாக இருக்காது என எண்ணுகிறேன்.

 

3) நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர்.இவரை குறித்து கூறும் சிவ ரஹஸ்யத்தில் தான் ஹர தத்த சிவாச்சாரியாரை குறித்தும் வருகிறது.இந்நூலின் காலத்தை நிர்ணயம் செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன .பக்தர் கணமாக அல்லது கணத்தின் அவதாரமாக கூற பட்டிருக்கலாம் .

 

 

4) காமிகாகமத்தில் நீங்கள் கூறும் படலம்  65 ஐ குறித்து .இந்த படலம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இங்க கிடைக்கிறது

:http://temple.dinamalar.com/news_detail.php?id=11527(நண்பர் கங்காதர குருக்கள் இந்த சுட்டியை தந்தார் ).இது புராதனமான காமிகாகமம் அல்ல .அதனை கொண்டு எழுதப்பட்ட ஒரு கையேடு .இதில் சிவ உருவான சண்டிகேஸ்வரரையும் ,நிர்மால்ய தாரியையும் குழப்பி உள்ளனர் .

 

 

ஆனால் ஆகம வல்லுநர்கள் எளிதில் இதனை பிரித்தறிய ஒரு வழி இருக்கிறது .பிரதிஷ்டை ஸ்வதந்த்ரம் ,பரதந்த்ரம் என இரண்டாக பிரிக்க பட்டுள்ளது என இந்நூலில் கூறப்பட்டுள்ளது ..இதில் ஸ்வதந்த்ர மூர்த்தி சிவன் .எனவே தான் அவர் சுதந்திரமானவர் .தானே அனைத்தையும் செய்யும் ஆற்றல் உள்ளவர் .இவருக்கு தான் தனி ஆலயம் உற்சவம் எல்லாம் .பர தந்த்ர மூர்த்தி நிர்மால்ய தாரி .சிவனை சார்ந்து இருப்பவர் .இவரை ஒரு சிவ க்ஷேத்ரத்திற்குள் தான் வைக்க முடியும் .இவரை சிவன் கோவிலில் பரிவார தேவதையாக காண்கிறோம் .

 

 

உங்களோடு வெகு நாட்களுக்கு பிறகு உரையாட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி .என்று ஊர் திரும்புகிறீர்கள் ?

 

நன்றி

அனீஷ் க்ருஷ்ணன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பெல்ஜியத்திலிருந்து…

$
0
0

Madhavan

 

அன்பு ஜெயமோகன்,

நலம்தானே? இதை ஒரு கடித சம்பிரதாயமாகத்தான் கேட்கிறேன். உங்கள் தளம் மூலமாக உங்களை தினமும் தொடர்ந்துகொண்டிருப்பதால் இதைக் கேட்கவேண்டியத் தேவையே இல்லை.

இதற்கு முன்பு நான் எழுதிய கடிதங்களை வாசித்தீர்களா என்று தெரியவில்லை. உங்களுக்கு வரும் பல நூறு கடிதங்களில் அது விடுபட்டிருக்கலாம். நான் என்னுடைய முதல் கடிதத்தில் கூறியிருந்தது போல உங்களுக்கு எழுதியதை அனுப்பாமலும், எழுத ஆரம்பித்து முடிக்காமலும் விட்டதுபோல், இப்போது எழுத ஆரம்பித்து விட்டதால் முடிக்க மனமில்லை.

சில மாதங்களுக்கு முன்பு யானை டாக்டர் சிறுகதையை என்னுடைய நண்பர் ஒருவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை வாசித்த பிறகு அவர் எழுதியதையும், அதற்கு நான் எழுதிய பதில் கடிதத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியதால் பகிர்கிறேன்.

அவர் கடிதம்:

//

I have heard about him but got to read more only now….Amazing man!

As you cited, there were too many thoughts which came in my mind on people who think only about self. I used to explain few of them to realize their self, but have always failed. This story should open their eye i believe… Like J, why is it getting tough to change this society. A big question….

In fact to one of the point on realization of self is truly amazing and I strongly believe in that

I will read Aram…

Thanks buddy :)//

என் கடிதம்:

====

உங்கள் கடிதம் எனக்கு பேருவகை அளிக்கிறது!

எனக்கும் மிகவும் பிடித்த கதை இது. அறம் என்பதே அற்றுப் போய்விட்ட இந்த காலத்தில் இது போன்ற கதைகளின் தேவையை உணர்கிறேன். கதைகள் மட்டுமல்ல. இதுபோன்ற மனிதர்களுக்கான தேவையையும் உணர்கிறேன்.

இது கதைதான் என்றாலும், வி.கே. கதாபாத்திரம் கற்பனை கதாப்பாத்திரம் அல்ல. நம் காலத்திலேயே வாழ்ந்து மறைந்த ஒரு அருமையான மனிதர் என்றால் நம்புவீர்களா?

http://en.wikipedia.org/wiki/V._Krishnamurthy_(veterinarian)

ஜெயமோகனின் அறம் தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளும் நிஜ மனிதர்களின் கதை!!

அறம் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைத் தொகுப்பு. அறம் செய விரும்பு என்று கற்றுக் கொடுத்தார்கள். யார் இங்கே ஆறாம் செய்ய விரும்புகிறார்கள்? செய்வது இருக்கட்டும். செயத் தூண்டும் ‘அறம்’ புத்தகத்தையாவது வாசிக்க விரும்பு என்று என் நண்பர்களிடம் கூறினேன்.

ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பை 2012-இன் இறுதியில் இந்தியாவிற்கு வந்தபோது வாங்கினேன். ஆனால் அதற்கு முன்பே இணையத்தில் படித்துவிட்டேன். வாசித்துவிட்டு என்னை ஆட்கொண்ட ‘அறம்’ வாங்கச் சொல்லியது! வாங்கிவிட்டேன்.

‘அறம்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘சோற்றுக்கணக்கு’ சிறுகதையை எத்தனை முறை படித்தேன் என்று கணக்கு சொல்ல முடியாது. இந்த விஷயத்தில் நானும் அந்தக் கதையில் வரும் நிஜ மனிதர் கெத்தேல் சாகிப்புதான். ஒவ்வொருமுறை வாசிக்கும் போது புதிதாய் ஏதோ ஒன்று என் உள்ளே பாய்ந்து என்னை மாற்றுவதை உணரமுடிந்தது. Reading this book truly a cleansing ritual! என் இதயத்துக்கு நெருக்கமானதொரு கதை. இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகள் அப்படித்தான்.

சோற்றுக்கணக்கு பற்றி பெரிதாக நான் எதுவும் சொல்லப்போவதில்லை. உங்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன். இதுவரை வாசிக்காமலிருந்தால், இந்தக் கடிதத்தை ஒரு நினைவூட்டலாக எடுத்துக்கொள்ளுங்கள்.

முதன்முதலில் இந்தக் கதையை படித்த பிறகு, ஒரு இரண்டுநாட்களுக்கு அமைதியாகிவிட்டேன். மேலும் வாசிக்கையில் எனக்கு மூன்று விஷயங்கள் தோன்றின.

  1. நான் ஒரு சைவி என்பதை அறிவீர்கள்; இருந்தாலும் இந்தக் கெத்தேல் சாகிப்புக் கடையில் சென்று ஒரு பிரியாணி சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. ;-)
  2. இதுபோன்று என் வாழ்க்கையில் யாரேனும் இருந்திருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தபோது, நான் பிறந்து வளர்ந்த திருப்பத்தூர் நகர இரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இன்னும் நிறைய மனிதர்களும் அவர்களைப் பற்றிய நினைவுகளும் மனதை நிரப்பின. அவர்களைப் பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்று தோன்றியது. இரயில் நிலையம் சம்பவம் சுவாரசியமானது. அதுபற்றி எழுதியவுடன் உங்களிடம் நிச்சயம் பகிர்கிறேன்.
  3. என்னையே நான் ஒரு சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தோன்றியது. இப்போது உங்களுக்கு ‘யானை டாக்டர்’ படித்த பிறகு தோன்றியது போலவே. நான் பெருமையாக நினைத்துச் செய்து வரும் அறம் எல்லாம் ‘ஒன்றுமில்லை’!!! கெத்தேல் அறம் செய விரும்பியது மனது.

கெத்தேல் சாகிப்பின் வாழ்க்கை – அறம் என்பதற்கான வரையறை என்று தோன்றியது! கெத்தேல் சாகிப்பை போன்று எதையும் எதிர்பார்க்காமல் என்னால் முகமறியா மனிதர்களுக்கு (முகமறிந்தவர்களுக்குக் கூட) அப்படி வாரி வாரிக் கொட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்க முடியுமா என்று சற்று எண்ணிப் பார்த்ததும், நடுங்கிப் போய்விட்டேன்!

வாமன அவதாரத்தின் கால்களைப் போல் நீள்கின்றன கெத்தேல் சாகிப்பின் அறமும், ஜெயமோகனின் கைகளும். இவர்கள் முன்னே ஒரு தூசியைப் போல் உணர்கிறேன் நான்.

மீண்டும் இணைப்பு. சோற்றுக்கணக்கு கதையை இங்கே வாசிக்கலாம்:

http://www.jeyamohan.in/11976

ஜெ, அறம் சிறுகதைகள் அத்தனையையும் அவரது தளத்திலேயே வாரி வழங்கி இருக்கிறார் கெத்தேல் சாகிப்பை போல்.

வாசித்து விட்டு உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தால் நீங்களே உடனே புத்தகத்தை வாங்கச் சென்றுவிடுவீர்கள். வாசித்துவிட்டு சிந்திப்பீர்கள். அறம் செய்வீர்கள். குறைந்த பட்சம் செய்யத் தோன்றும். அதுவே பெரிய வெற்றி.

படித்த பிறகும் அப்படி ஏதும் தோன்றவில்லை என்று என் நண்பன் (??) ஒருவன் கூறினான்.

அவனிடம் நான் கூறியது – “அது பரவாயில்லை. ஆனால், நீ உன்னை விட்டு வெகுதொலைவில் வந்துவிட்டாய் என்று மட்டுமாவது புரிந்துகொள்!”

அவனுக்கு அதுவும் புரியவில்லை.

====

அவருக்கு எழுதிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தது போல இதுபோன்று என் வாழ்க்கையில் யாரேனும் இருந்திருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தபோது, நான் பிறந்து வளர்ந்த திருப்பத்தூர் நகர இரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்:

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதாக நினைவு. ஒன்பதாகவும் இருக்கலாம். அது இப்போது முக்கியமில்லை. எங்கள் தெருவில் திருவிழாவோ அல்லது அண்டை வீட்டில் எதோ விழாவென்று நினைக்கிறேன். ஒலிப்பெருக்கியில் எல்.ஆர். ஈஸ்வரி உரத்த குரலில் மாரியம்மன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். எனக்கு காலாண்டு தேர்வோ அல்லது அரையாண்டு தேர்வோ நடந்து கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி என்னைப் படிக்க விடாமல் சதி செய்து கொண்டிருந்தார். விழாக்குழுவினருக்கு தேர்வைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் எந்தக் கவலையும் இருந்ததாய்த் தெரியவில்லை. அவர்களின் கொண்டாட்டம் அவர்களுக்கு முக்கியம். தேர்வு நாட்களில் மாணவர்களெல்லாம் தவநிலையில் இருக்கும் முனிவர்களைப் போன்றவர்கள். அந்த சமயத்தில்தான் இதுபோன்ற திருவிழாக்களும், கிரிக்கெட் போட்டிகளும், சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்களும் அப்சரஸ் அழகிகளான ரம்பை, மேனகை, ஊர்வசி போன்று மாணவர்கள் முன்பு தோன்றி, தவத்தைக் கலைக்க நடனமாடுவார்கள். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போதெல்லாம் அப்படி ஒரு முனிவனாய் என்னை நான் உணர்ந்ததுண்டு.

நான் வழக்கமாக எங்களுடைய வீட்டு மாடியில் அமர்ந்துதான் படிப்பேன். சில சமயம் தண்ணீர்த் தொட்டி அருகில். அந்தக் குறுகிய வீட்டின் இருட்டுக்குள் அமர்ந்து படிப்பதற்கு எனக்குப் பிடிக்காது. அதற்காகவே காலை, மாலை வேளைகளில், குறிப்பாக மாலையில் திருப்பத்தூர் இரயில்வே நிலையத்துக்குச் சென்று, அங்கு நடைமேடையின் மீதமைந்த நீள் இருக்கையில் அமர்ந்து படிப்பதுண்டு. அவ்வப்போது என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பீம்ராவும், செல்வமும் என்னோடு சேர்ந்துகொள்வார்கள். உண்மையில் இதை ஆரம்பித்து வைத்தவன் செல்வம்தான் என்று நினைக்கிறேன். செல்வம் அவ்வளவாக வாயைத் திறக்கமாட்டான். அதனால் எந்தப் பிரச்சினையுமில்லை. பீம்ராவுடன் அங்கே படிக்கச் சென்ற சமயங்களில், படித்ததை விடப் பேசியதுதான் அதிகம். அவனுக்கு நான் இடையூறு. எனக்கு அவன். நானும் அவனும் ஆபத்தான கூட்டாளிகள் என்று பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் விருது வாங்கியிருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பள்ளியிலும் வெளியிலும் சேர்ந்து செய்த சேட்டைகளைப் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் எங்களின் கலகம் என்றும் நன்மையில்தான் முடியும். இன்றைக்கும் ஒருமையிலும், விலங்குகளின் பெயர்களையும் சொல்லி ஒருவரையொருவர் மரியாதையோடு விளித்துக் கொள்ளும் அளவில் நட்பு தொடர்கிறது. நான் சிறுவயதில் நண்பர்களின் வீடுகளுக்கு அதிகமாகச் சென்றதில்லை. அப்படியே சென்றாலும் அங்கு நீண்ட நேரம் இருந்ததில்லை. ஆனால் பீம்ராவ் வீடும், இன்னொரு நண்பன் புகழேந்தியின் வீடும் மட்டும் அதற்கு விதிவிலக்கு. பீம்ராவ் வீட்டிற்குச் செல்வதற்கு இரயில் நிலையத்தைக் கடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து அவன் வீடு ஐந்து நிமிடம்தான். படித்துக்கொண்டிருக்கும்போது பசி எடுத்தால் நேராக அவன் வீட்டிற்கு அடைக்கலம் புகுந்து விடுவோம்.

நாங்கள் அடிக்கடி சென்று கிரிக்கெட் விளையாடும் இரண்டு மைதானங்களுமே இரயில் நிலையத்தை ஒட்டியே அமைந்திருக்கும். அதனால் எனக்கும் இரயில் நிலைத்திற்கும் படிப்பு, அரட்டை, விளையாட்டு என்று வலுவானதொரு பிணைப்பு உண்டு. மாலை வேளைகளில் இரயில் நிலையத்தைச் சூழ்ந்த அமைதியும், நீள் இருக்கைகளுக்கு அருகிலேயே நடைபாதை விளக்குகளும் படிப்பதற்கு ஏதுவாக இருந்ததால், சில நாட்கள் ஒன்பது, பத்து மணி வரையெல்லாம் படிப்பதுண்டு.

அன்று திருவிழா ஏற்படுத்திய இரைச்சலால் அடுத்த நாள் தேர்வுக்குப் படிக்க முடியாமல் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு இரயில் நிலையத்துக்கு விரைந்தேன். வழக்கமாக நான் அமரும் இருக்கை, நிலையத்திலிருந்து சற்றுத் தள்ளி, நடை மேடையின் இறுதியில் ஒன்றிரண்டு மரங்கள் புடைசூழ அமைந்திருக்கும். என்னளவில் அது ஒரு ராஜ சிம்மாசனம். சில நாட்களில் மலர் மஞ்சமும் கூட. அந்தப் பகுதியில் நடை மேடையும் சற்று அகலமாகவே இருக்கும். வெகுசில பயணிகள், ஓரிரு இரயில்வே ஊழியர்கள், எப்போதாவது நடைபயிற்சி செய்யும் வயதானவர்களைத் தவிர வேறு யாரும் நாங்கள் இருக்கும் பகுதி வரை வந்ததில்லை. எப்போதாவது இரயில் வண்டிகள் கடந்து போகும்போது ஏற்படும் சப்தத்தையும், அதிர்வையும் தவிர வேறு எந்த இடையூறும் அங்கு கிடையாது. திருப்பத்தூருக்கு அருகிலேயே ஜோலார்பேட்டை சந்திப்பு இருப்பதால் முக்கியமான இரயில்கள் எதுவும் திருப்பத்தூர் இரயில் நிலையத்தில் நிற்காது. எப்போதாவது ஓரிரு வண்டிகள் நிற்கும்போது மட்டும் விற்பனையாளர்களின் “டீ காபி போண்டா.. டீ காபி போண்டா” கதறல்கள் கேட்கும்.

செல்வம் எனக்கு முன்னரே அங்கு வந்து அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அளவளாவி விட்டு நான் என்னுடைய இருக்கையைப் பிடித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டேன். இரயில்வே நிலையத்துக்கு படிக்கச் செல்லும்போதெல்லாம் என்னுடைய அம்மா ஒரு கைப்பை நிறைய நிலக்கடலையையும், தின்பண்டங்களையும் கொடுத்து அனுப்பி விடுவார். பீம்ராவ் அதற்காகவே இரயில் நிலையத்துக்கு வருவான் என்று நினைக்கிறேன். ஒரு பக்கத்துக்கு இரண்டு நிலக்கடலை வீதம் கணக்கு வைத்து படித்துக் கொண்டிருப்பேன்.

அன்றைக்கு ஒரு நீண்ட பயணிகள் விரைவு இரயில் வண்டி வந்து நின்றது. அது வழக்கமாக எங்கள் நிலையத்தில் நிற்கும் வண்டியாகத் தெரியவில்லை. நான் அமர்ந்து கொண்டிருந்த பகுதியில்தான் முதல் வகுப்புப் பெட்டி நின்று கொண்டிருந்தது. உள்ளே நடப்பது எதுவும் வெளியில் தெரியாது. ஆனால் உள்ளிருந்து வெளியே பார்க்கலாம் என்று அப்போது எனக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் முதல் வகுப்புப் பெட்டிக்குள் எப்படி இருக்கிறதென்று பார்த்து விட வேண்டும் என்று எனக்கொரு ஆசை இருந்தது. வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த அந்த வண்டி வடநாட்டிலிருந்து கேரளாவிற்குச் சென்று கொண்டிருக்க வேண்டும்.

வண்டியைப் பார்ப்பதும் படிப்பதுமாக இருந்தேன். எதிரே நின்று கொண்டிருந்த முதல் வகுப்புப் பெட்டியின் கதவைத் திறந்து வெளியே வந்த மனிதர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, “இங்கே வா.” என்று அழைத்தார். நான் செல்வத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவரோ, “இரண்டு பேரும் இங்கே வாருங்கள்” என்று ஹிந்தியிலும், பின்பு ஆங்கிலத்திலும் அழைத்தார். சில சமயங்களில் எங்களை பயணிகள் தண்ணீர் பிடித்துத் தர வேண்டுவார்கள். ஒருவேளை தண்ணீர் பிடித்து வரச் சொல்வாரா என்று எண்ணியபடியே புத்தகங்களை இருக்கையில் வைத்து விட்டு அவருக்கு அருகே சென்றோம். அவர் குர்தா அணிந்திருந்தார். குள்ள உருவம். சற்று பருமனான உடல்வாகு. கோதுமை நிறம். புன்னகை ஏந்திய நன்முகம். அவர் இப்படித்தான் என் மனதில் பதிந்திருக்கிறார்.

“இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் வினவினார். அவர் பெட்டிக்குள்ளிருந்தே எங்களை நீண்ட நேரம் கவனித்திருக்க வேண்டும்.

பள்ளியில் நாங்கள் ஆங்கிலத்தில் பேசியதில்லை. வெள்ளிக்கிழமை தோறும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றொரு விதி இருந்தது. ஆங்கில ஆசிரியர் ராஜி உருவாக்கிய விதி. பெரும்பாலான மாணவர்களுக்கு அது பிடிக்கவில்லை. எங்களுக்கு, குறிப்பாக, எனக்கும் பீம்ராவுக்கும் வெள்ளிக்கிழமை வந்தாலே ஒரே கொண்டாட்டம்தான். அன்று வெள்ளிக்கிழமையல்லாத ஒரு நாளில் ஆங்கிலம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் எனக்கு ஒரே சந்தோஷம்.

“தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறோம்.” என்று நான் கூறியவுடன் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. வண்டியிலிருந்து இறங்கி வந்து எங்களை அணைத்துக் கொண்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. படித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதற்கு ஏன் இந்த மனிதர் இத்தனை உணர்ச்சி வசப்படுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பச்சை விளக்கு விழுந்து இரயில் கிளம்ப ஆயத்தமானது. திடீரென்று என்ன நினைத்தாரோ, தன்னுடைய சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து என் கையில் திணித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நடுக்கமே வந்துவிட்டது. ஒருவேளை இந்த மனிதர் குடித்திருக்கிறாரா? குடிபோதையில்தான் மனிதன் ஒன்று மிருகமாகிறான் அல்லது குழந்தையாகிறான். இவர் குழந்தைபோல் நடந்துகொள்கிறாரே. ஆனால் அவர் நிச்சயம் குடித்திருக்கவில்லை.

“எங்களுக்கு பணம் எதற்கு? வேண்டாம்!” என்று மறுத்து அவர் கையிலேயே மீண்டும் திணிக்க முயன்றேன்.

அவர் விடவில்லை. “Like your papa giving.. Like your papa giving..” என்று கூறி மீண்டும் என் உள்ளங்கையில் வைத்து மூடிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார்.

“எனக்கு என் பெற்றோர் பணம் தருகிறார்கள். இது வேண்டாம். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே இரயில் கிளம்பிவிட்டது.

அவரோ மீண்டும் “Like your papa giving.. please go and have some good food.” என்று புன்னகைத் தவழ கூறிக்கொண்டே கையசைத்தார்.

நாங்கள் இருவரும் வண்டியுடனே சிறிது தூரம் துரித கதியில் நடந்து சென்றோம். வண்டி வேகமெடுத்தது. அவர் கண்ணிலிருந்து மறையும் வரை கையசைத்துக்கொண்டே சென்றார். நாங்கள் ஒன்றும் புரியதவர்களாய் அசைவற்று அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தோம். அதற்கு மேல் படிக்கவே தோன்றவில்லை. என் கையில் நூறு ரூபாய் பணம். அந்நாட்களில் நூறு ரூபாய் என்பது பெரிய தொகை. பள்ளியில் நான்கு நாள் உல்லாசச் சுற்றுலாவுக்கே ஐம்பது ரூபாய்தான் கேட்பார்கள். அதற்கும் வீட்டில் அனுமதி கிடைப்பது கடினம். வீட்டிலிருந்து தின்பண்டச் செலவுக்கு ஐம்பது பைசா வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. இந்த மனிதர் என்ன நினைத்திருப்பார். எங்களைப் பரம ஏழைகள் என்று நினைத்திருப்பாரா? வீட்டில் விளக்கு இல்லாததால் தெரு விளக்கில் படிக்கிறோம் என்று நினைத்திருப்பாரா? அல்லது எங்கள் படிப்பார்வத்தை ஊக்குவிக்க முனைந்தாரா? அல்லது என் வயதில் அவருக்கு மகன் இருப்பானோ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

இதுபற்றிய பேச்சிலேயே நீண்ட நேரம் ஓடிவிட்டதால், என் தந்தை இரயில் நிலையத்துக்கே என்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டார். அவரிடம் நடந்ததை கூறினோம்.

“இதுபோன்ற மாமனிதர்களால்தான் நான் இன்றைக்கு நல்லதொரு நிலையில் இருக்கிறேன். இல்லையென்றால் என்னுடைய கல்லூரிப் படிப்பைக் கடந்திருக்க முடியாது. நல்ல மனிதர்.” என்றார்.

அந்த நூறு ரூபாயை என் தந்தையிடம் கொடுத்தேன். அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.

“அது உங்களுக்கு அவர் கொடுத்தது. நல்ல உணவு வாங்கிச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார். நாளைக்கு தேர்வு முடிந்தவுடன் ஓட்டலுக்கு செல்லுங்கள்.” என்று யோசனை சொன்னார். அடுத்த நாள் தேர்வு முடிந்தவுடன், பேருந்து நிலையம் அருகேயுள்ள லக்ஷ்மி கபேவில் மசாலா தோசை சாப்பிட்டு விட்டு அருண் ஐஸ்க்ரீமில் கசாட்டா துண்டு சாப்பிட்டது இன்றும் நினைவிருக்கிறது.

அன்றைய இரவு எனக்கு நீண்ட நேரம் உறக்கமே வரவில்லை. அந்த மனிதரின் நினைவு மீண்டும் மீண்டும் வந்து அழுத்தியது. அவரது செய்கை அந்த வயதில் எனக்குப் புரியவில்லை. இன்னும் சற்று நேரம் அந்த நல்ல மனிதருடன் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. இன்றும் தோன்றுகிறது. அவர் பெயரைக்கூட கேட்காமல் விட்டு விட்டோமே. முகவரியைக் கேட்டிருக்கலாமே. அவரும் எங்களிடம் இதையெல்லாம் கேட்கவில்லையே. அதற்கான கால அவகாசம் கிடைக்கவில்லையே. அந்தத் தேர்வு காலாண்டா அரையாண்டா என்பது நினைவில்லை. பாடம் அறிவியலா, கணிதமா என்று நினைவில்லை. பத்தாம் வகுப்பு என்று கூறியதில்கூட சந்தேகமே. தெருவில் என்ன திருவிழா என்பதும் நினைவிலில்லை. என்னுடன் அந்த வகுப்பில் படித்த பெரும்பாலானவர்களின் பெயரும், சிலரின் முகமுங்கூட நினைவிலில்லை. ஆனால் அந்த மனிதரின் புன்னகையேந்திய முகம் இன்றளவும் நன்றாக என் நினைவிலிருக்கிறது.

இன்றைக்கு நான் அவருக்கு செய்யக் கூடியது ஒன்றுதான். அது, அவரைப்போலவே ‘Like your papa giving..” என்று படிப்பார்வம் மிகுந்த குழந்தைகளின் படிப்புக்கு அவர் நினைவாக உதவி புரிவது. அதுதான்அந்தத் தந்தை எனக்கு அன்றைக்குக் கற்றுக் கொடுத்து விட்டுப் போனது. இரயில் நிலையத்தில் வண்டி நின்று கொண்டிருக்கும்போது கிடைத்த சில மணித்துளிகளிலேயே ஒரு சிறுவனின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட அந்த மாமனிதரால் முடிந்திருக்கிறது.

நன்றி ஜெயமோகன்!

இந்த மாமனிதரின் நினைவுகளில் என்னை மூழ்கவைத்ததற்கு. இன்னும் ஏராளமான மனிதர்கள்

நான் செய்யக்கூடியதெல்லாம் இரண்டுதான். அவர்கள் அனைவரையும் நினைத்துப்பார்த்து நன்றி செலுத்துவது மானசீகமாக. பிறகு, அவர்கள் எனக்கு வழங்கியதை மற்றவர்களுக்கு வழங்குவது.

உங்கள் நேரத்துக்கு நன்றி. தொடர்பிலிருப்போம்.

அன்புடன்,

மாதவன் இளங்கோ

பெல்கியம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புண்படுதல்

$
0
0

ஆசிரியருக்கு,

நாம் ஆகும்பே அருவி வழியில் உரையாடியது தான், ஆனால் அது முற்றுப் பெறவில்லை. அங்கே கொண்ட அட்டையாக அது இன்னும் ஓட்டிக்கொண்டே இருக்கிறது , நீங்கள் வீடு திரும்பும் முன் இக்கேள்வி காத்திருக்கும் , ஆம் பாதையோர ஈரத்தில் அட்டைபோல.

நாம் உண்மையையோ அல்லது உண்மை என நம்புவதையோ அப்படியே போது வெளியில் சொல்ல முடிவதில்லை, சில சமயம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் கூட . இதனால் புண்பட்டுவிடுவார்களோ என்ற நிரந்தர அச்சத்துடனேயே ஒரு உரையாடலை நடத்த வேண்டி உள்ளது அதனால் இறுக்கமாகவே உணர்கிறோம். நம்மிடமும் வாரத்திற்கு ஒருமுறை யாரேனும் ‘ஹர்ட் ஆயிட்டீங்களா’ என வினவிக்கொண்டே இருக்கிறார்கள் . நீங்களும் இத்தளத்தில் வெளியாகியுள்ள பதில் கடிதங்களில் வாரத்திற்கு ஒருமுறை யாருக்கேனும் வருத்தம் தெரிவிக்கிறீர்கள், மாதம் ஒருவரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். எண்ணிப்பார்த்தால் இரண்டிலும் ஒரு சதம் அடித்திருப்பீர்கள் (இன்னும் ஆட்டமிழக்கவும் இல்லை ! ) .

ஒரு முறை ஈரோடு பற்றிய எனது எதிர்மறை கருத்துக்குக் கூட எனது ஈரோட்டு நண்பர் கடுமையாகப் புண்பட்டு எனது அனைத்து நண்பர்களிடமும் புகார் சொன்னார் . மதம் பற்றிப் பேசினால், சாதி பற்றிப் பேசினால் , ஈழம் பற்றிப் பேசினால், கேரளம் பற்றி, கர்நாடகம் பற்றி, முற்போக்கு பற்றி, ஏன் செவ்வாய் கிரகம் பற்றிப் பேசினால் கூட எதற்கும் புண்படுகிறார்கள், எதிர்மறை விமர்சனம் பற்றிக் கேட்கவே வேண்டாம் நம்முடன் உண்டான உறவையே முறித்துக்கொள்வர். அறிவு ஜீவிகளிடம் இடக்கரடக்கல்கள், தலைவர்கள் மற்றும் ஊடகங்களிடம் அரசியல் சரிகள் என நாம் ஒரு உப்புச்சப்பற்ற சமூகத்தில் மந்தமாக உழன்று கொண்டிருக்கிறோம்.

இன்னொருவர் புண்படாதபடி பேசுதல் ஒரு உயர்ந்த பண்பாடே. ஆனால் உண்மையையோ அல்லது நாம் நம்புவதையோ பேசாமல் இருத்தல் அறிந்து கொள்ளுதலில் இருந்து நம்மைத் தேக்கம் கொள்ளச் செய்துவிடும் . இந்த ஜாக்கிரதை உணர்வுடன் பூசப்பட்ட மொழியில் மட்டுப்படுத்திச் சொன்னால் ஒன்று அது வெண்ணை எடுக்கப்பட்ட நீராக சுரத்தற்று இருக்கிறது அல்லது சாரத்தின் ஒரு துளியே கடத்தப்படுகிறது, எனவே தக்க பதில் சாத்தியமாவதில்லை .

மனமும் புண்படாமல், அறிதலில் தேக்கமும் ஏற்படாமல் ஒரு தரமான உரையாடலையோ விவாதத்தையோ எவ்வாறு சாத்தியப்படுத்துவது ?

கிருஷ்ணன் .


அன்புள்ள கிருஷ்ணன்,

உங்களுடையது மிகச்சிக்கலான ஒரு கேள்வி, ஏனென்றால் அதற்கு நேர்மையாகப் பதில் சொன்னால் பலர் புண்பட வாய்ப்புள்ளது. அவர்களிடமெல்லாம் பாதம் பணிந்து முன்னரே மன்னிப்பு கோரியபின் இதை எழுதுகிறேன்.

நீங்கள் சொல்வது சரி. நான் என்னால் புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பிரசுரமாகும் கடிதங்கள் மிகக் குறைவு. தனிப்பட்ட மடல்கள் அனேகம். இந்தப்புண்படுதலுக்கான காரணங்கள் என நான் நினைப்பது இரண்டு. ஒன்று, நகைச்சுவை உணர்ச்சிஇன்மை. இரண்டு விவாதப்பயிற்சி இன்மை.

*
தமிழ்மக்கள் நகைச்சுவையைப் பெரும்பாலும் நேரடி அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்கிறார்கள். வசையாக, விமர்சனமாக, அல்லது தகவலாக

தமிழகத்தில் என் அனுபவங்கள் எனக்குக் கற்பித்தவை ஏராளம். 1987 ல் குற்றாலம் பதிவுகள் பட்டறையில்தான் நான் முதல்முறையாக தமிழிலக்கியச் சூழலுக்குள் காலடி எடுத்துவைத்து நுழைந்தேன். அதற்கு முன்னால் நான் கதைகள் எழுதியிருந்தாலும் சுந்தர ராமசாமி தவிர பிறர் அறிமுகம் இல்லை. காசர்கோட்டில் இருந்து வந்து பஸ்ஸிறங்கி பட்டறைக்குள் நுழைந்ததுதான் என் இலக்கிய நுழைவு.அந்த நுழைவே வில்லங்கமாக இருந்தது. எதிரே விரைந்து வந்த ஒருவரிடம் சிரித்தபடி ‘கவிதைவாசிப்பு ஆரம்பிச்சாச்சா? இப்டி ஓடிவர்ரீங்க?’ என்றேன். அவர் முகம் சிறுத்து ‘நீங்க மலையாளியா?’ என்றார். ‘ஏன்’ என்றேன். ‘மலையாளநாயிங்கதான் முன்பின் தெரியாதவங்களை வைவானுக’ என்றார். நான் ‘சாரி சார். வையலை..சும்மா ஜாலிக்காக கேட்டேன்’ என்றேன். அவர் மேலும் திட்டிவிட்டு சென்றார்

கவிதை அரங்கில் படுதீவிரமான விவாதம். என்னருகே வந்து அமர்ந்த ஒருவர் தன்னை கவிஞர் அப்பாஸ் என அறிமுகம் செய்தபின் ’அந்த கவிஞரை நீங்க எதுக்காக அவமானப்படுத்தினீங்க? ரொம்ப ஃபீல் பண்றார்’ என்றார். நான் பீதியுடன் ‘யாரை?’ என்றேன். ‘அவரை’ என்று சுட்டிக்காட்டினார். ‘அவரை கவிதை தெரியாத முட்டாள்னு சொன்னீங்களாமே’ . நான் பரிதாபமாக ‘வேடிக்கையாச் சொன்னேன். எங்கூர்ல சாதாரணமா அப்டிச் சொல்லிக்குவோம்…நான் சாரிகூட சொல்லிட்டேன்’ என்றேன். ‘வாங்க ஒருவாட்டி மன்னிப்பு கேட்டிருங்க’ என்றார். நேரில் சென்று மன்னிப்பு கோரினேன். அவர் மேலும் திட்டினார். நகைச்சுவைக்காக மன்னிப்பு கோருவது அங்கே ஆரம்பித்தது. இதோ இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.

அந்தசந்திப்பில்தான் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி கொண்ட யுவன் சந்திரசேகரையும், எம்.டி.முத்துக்குமாரசாமியையும் சந்தித்தேன் என்பதையும் மறுக்கமுடியாது. ‘பிரம்மராஜன் கவிதையப்போயி கட்டொடைக்கிறியே, அது ஏற்கனவே ஒடைஞ்சு போயிக் கெடக்கு. என் கவிதைய கட்டொடைடா’ என்று கண்ணீர்விட்ட விக்ரமாதித்தன் அண்ணாச்சியைக் கட்டிப்பிடித்து ‘ஒடைச்சுப்போடலாம் அண்ணாச்சி ஒடைச்சுப்போடலாம்’ என்று எம்.டி.முத்துக்குமாரசாமி ஆறுதல் சொன்ன காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

ஆனால் தமிழ் எழுத்தாளர்களுடன் என் அனுபவங்கள் விசித்திரமானவை. ஒருவர் நம்மைக் கிண்டல்செய்கிறார் என்பது நம் மீதுள்ள உரிமை அல்லது நட்பினால்தானே ஒழிய வன்மத்தால் அல்ல என்பதை உணர்ந்த எழுத்தாளர்கள் மிகமிகக் குறைவு. சொல்லப்போனால் நாஞ்சில்நாடன் போல ஒன்றிரண்டுபேர் மட்டும்தான். நான் வேடிக்கையாகச் சொன்ன ஒவ்வொரு வரிக்கும் பலமுறை பலரிடம் மன்னிப்பு கோரியிருக்கிறேன். சிலசமயம் ’அப்படி என்ன சொல்லிவிட்டேன்’ என ஆத்திரம் எகிறும். பிறகு அவர்கள் தரப்பில் உள்ள உணர்வைப் புரிந்துகொள்வேன். அவர்களின் பண்பாட்டுப்புலம் வேறாக இருக்கலாம்.

எம்ஜிஆர்,சிவாஜி கட்டுரை விவகாரத்தில் நான் அதிர்ச்சி ஏதும் அடையவில்லை. ஆனால் நகைச்சுவை என்பது தமிழ்நாட்டில் எப்படி புரிந்துகொள்ளப்படுகிறதென அப்போது கண்கூடாகவே கண்டேன். அதை ஒரு வசை என்று எடுத்துக்கொண்டவர்கள்தான் அனேகமாக அனைவரும். ’இருந்தாலும் நீங்க அப்டி சொல்லியிருக்கக் கூடாது’ என்று என்றுதான் இன்றும் சொல்கிறார்கள். அதன்பின் நான் எழுதிய ஒவ்வொரு நகைச்சுவைக்கும் புண்பட்ட கடிதங்கள் வந்துள்ளன.

நகைச்சுவைக் கட்டுரைகளை அப்படியே எடுத்துக்கொள்வது மிக அதிகம். ஆகவேதான் கட்டுரைகளுக்கு மேலே நகைச்சுவை என கொட்டை எழுத்தில் போடுகிறேன். இருந்தும் நேர் அர்த்தம் எடுத்துக்கொண்டு கடிதங்கள் வருகின்றன. குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபாவிடமும் சிவானந்த லஹரி மகாராஜிடமும் கூட்டிச்செல்லக்கோரி வாரம் ஒரு கடிதம் வந்துகொண்டிருக்கிறது இப்போதும். இந்தக் கட்டுரைக்கே தமிழுணர்வு புண்பட்டு எப்படியும் இருபதுமுப்பது கடிதங்களை எதிர்பார்க்கிறேன்.

*

இந்த நகைச்சுவை உணர்ச்சியின்மை ஏன் என்று யோசித்தால் எனக்கு மூன்று காரணங்கள் தென்படுகின்றன. ஒன்று, தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் ஒருவகை தாழ்வுணர்ச்சி. இன்னொன்று, நம்மிடமிருக்கும் வசைமரபு. மூன்று, நம்முடைய பொதுஅறிவுக்குறைவு

தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் உள்ளூர விளக்கமுடியாத ஓர் தாழ்வுணர்ச்சியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இதில் சாதிமத பேதம் ஏதும் இல்லை. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து மிகையான ஒரு பெருமிதத்தைக் கற்பிதம்செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் பற்றி, தமிழ்ப்பண்பாடுபற்றி, தங்கள் சொந்தச் சாதி பற்றி எல்லாம் ஊதிப்பெருக்கிய பெருமிதங்களைக் கட்டமைத்தபடியே செல்கிறார்கள். அவற்றை விவாதிக்கவோ, வரலாறுசார்ந்து பரிசீலிக்கவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை.

சராசரித் தமிழர்களிடம் தமிழ்பற்றியோ தமிழ்ப்பண்பாடு அல்லது வரலாறு பற்றியோ பேசினால் அவர்களிடம் அவற்றைப்பற்றிய ஒரு எளிய வரலாற்றுச்சித்திரம் கூட இருப்பதாகக் காணமுடியாது. ஆனால் மிகையான பெருமிதம்சார்ந்த பலவற்றைச் சொல்வார்கள். இமையத்தில் வில்கொடி பறந்ததில் ஆரம்பித்து தமிழில் மட்டும்தான் ழ என்ற எழுத்து உண்டு என்பது வரை. சங்க இலக்கியம் பற்றி நான்குவரி சொல்லக்கூடியவர்கள் அபூர்வம். ஆனால் சங்க இலக்கியம்தான் உலகிலேயே தொன்மையான, உலகிலேயே உயர்ந்த இலக்கியம் என்று அனேகமாக அனைவருமே சொல்வார்கள்.

சென்ற ஒருநூற்றாண்டில் நம்மிடம் எது உண்டு, எது இல்லை என்று நாம் பரிசீலித்ததே இல்லை. அப்படி எவராவது பரிசீலிக்கமுற்பட்டால் அவர்கள் தமிழ் விரோதிகள், இன எதிரிகளாக ஆக்கப்பட்டுவிடுவார்கள். தமிழ்ப்பண்பாடும் மொழியும் பெருமிதம் கொள்ளவேண்டிய எவ்வளவோ விஷயங்கள் உண்டு, அவை குறித்து தமிழர்களுக்கு ஏதும் தெரியாது. ஆகவே அவற்றை உலகின் முன் நிறுத்தும் ஆற்றலும் தமிழர்களுக்கு இல்லை. அதற்குப்பதிலாக மொண்ணையான ஒரு தற்பெருமை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கடியில் தாழ்வுமனப்பான்மை நொதித்து நாறிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தாழ்வுணர்ச்சியின் அடுத்தகட்டமே உலகமே தங்களுக்கு எதிரிகளாக உள்ளது என்ற பிரமை. இங்குள்ள அரசியல்வாதிகளால் திட்டமிட்டு இது பரப்பப்படுகிறது. தமிழர்களுக்கு சிங்களன், சீனன்,மலேசியன்,மலையாளி,கன்னடன்,தெலுங்கன், அமெரிக்கன், நார்வேக்காரன், சிந்தி, குஜராத்தி, மார்வாடி,பிழைப்புதேடிவந்த பிகாரி எல்லாருமே எதிரிகள். இந்த தமிழ்ப்பகைவர்களிடம் இருந்து தப்பிப்பதைப்பற்றி மட்டுமே தமிழன் சதா சிந்திக்கவேண்டும். இந்த மனநிலை காரணமாக தன் குறைபாடுகளையோ, பிரச்சினைகளையோ, பிழைகளையோ நம்மால் உணரமுடிவதில்லை. தன்னுடைய எல்லா சிக்கல்களுக்கும் காரணம் பிறரே என எளிமையாக நம்மைநாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

பொதுவான இந்தத் தாழ்வுமனநிலைதான் நகைச்சுவைக்கு எதிராக உள்ளது. கிண்டலைக்கூடத் தாக்குதலாக எண்ணச்செய்கிறது. எதைச் சொல்லிக்கேட்டாலும் புண்படச்செய்கிறது. தங்களைப்பற்றி எங்கே எவர் பாராட்டியிருந்தாலும் அதைத் தேடிப்பிடித்துத் தலைமேல் வைத்துக்கொண்டாடுவது தமிழ் மரபு. ஆகவே சிறிய விமர்சனங்கள் அல்லது கேலி கூட கடப்பாரைத்தாக்குதலாக தெரிகிறது. தன்னைப்பற்றிய கிண்டலை ரசிக்க ஒரு பெருமிதமும் பெருந்தன்மையும் தேவை. நான் உண்மையில் பெரியவன், இந்த எளிய கேலிகள் என் பெருமைக்கு உண்மையில் நிறைசேர்ப்பவை என்ற எண்ணம் தேவை. அது நம்மிடம் மிகமிகக் குறைவு.

நம்மிடம் எங்கும் நிறைந்திருக்கும் வசைபாடும் மரபும் நகைச்சுவைக்கு எதிரானது. பொதுவாக பார்த்தால் தமிழகத்தில் யாரையாவது யாரோ வசைபாடிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பட்டமான நேரடியான வசை. முதலாளி வேலைக்காரனை, ஆசிரியர் மாணவனை, பெற்றோர் பிள்ளைகளை, வண்டி ஓட்டுநர் சாலையில் போகிறவனை வசைபாடுகிறார். ‘நான் கன்னாபின்னான்னு திட்டுவேனே சரியா?’ என்று கேட்டபின்னர்தான் ஆட்களை வேலைக்கே வைத்துக்கொள்கிறார்கள்.

நம் அரசியல் மேடைகளில் முழுக்க வசைதான். நம்முடைய இலக்கியமேடைகளில்கூட வசைகள்தான் ஒலிக்கின்றன. நம்முடைய பெரிய சிந்தனையாளர்கள்கூட மேடைமேடையாகப்போய் வசைமாரி பொழிந்தவர்கள்தான். ஏதாவது ஒரு கொள்கைத்தரப்பை பாவலா செய்யவேண்டியதுதான். அதன் பின் யாரைவேண்டுமானாலும் மாறி மாறி வசைபாடிக்கொண்டே இருக்கலாம், எல்லாமே சிந்தனைச்செயல்பாடாகக் கருதப்படும். ஈ.வே.ரா முதல் அ.மார்க்ஸ் வரை வசைபாடிகளால் மட்டுமே ஆனது நம் பண்பாட்டுச்சூழல்.ஆக எந்த நகைச்சுவையையும் அந்த வசைமரபுடன் நம் மனம் இணைத்துக்கொள்கிறது. வசைபாடப்பட்டோம் என உணரச்செய்கிறது.

நம்முடைய பொது அறிவுக்குறைவும் நம்மை மொண்ணையாக ஆக்குகிறது. நகைச்சுவை என்பது கொஞ்சமாகச் சொல்லி மிச்சத்தை ஊகிக்க வைப்பது. ஊகிக்கத்தெரிந்தால்தானே நகைச்சுவையை ரசிக்கமுடியும்? உலகமெங்கும் சிறந்த நகைச்சுவை தகவலறிவில் இருந்து பிறக்கிறது. தகவல்களை திரித்தும் விசித்திரமாக இணைத்தும்தான் நகைச்சுவையை உருவாக்க முடியும். தமிழர்களுக்கு பள்ளிக்கல்வியில் இருந்து கிடைத்த பிழைப்பு சார்ந்த தகவல்கள், சினிமாத்தகவல்கள் அன்றி பொதுவான பண்பாட்டுதகவலறிவு மிகக் குறைவு. திகைப்பூட்டுமளவு குறைவு. ஆகவே நுண்ணிய பகடிகள் புரிவதேயில்லை. விவேக்-சந்தானம் பாணி கூச்சல்களே பிடிகிடைக்கின்றன.

சுந்தர ராமசாமியுடன் அவரது கடை வாசலில் வந்து இறங்கினோம். நாங்கள் நான்குபேர். கடை வாசலில் மாலைமுரசுக் கட்டுகள். அதன்மேல் படுத்து ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். ’அந்த மோசிகீரனை எழுப்பு’ என்றார் ராமசாமி. நான் சிரித்தேன். கூட இருந்த இன்னொரு நண்பர் கொஞ்ச நேரம் கழித்து சுந்தரராமசாமி என்ன சொன்னார், நான் ஏன் சிரித்தேன் என்று கேட்டார். முரசுகட்டிலில் தூங்கிய மோசிகீரனைப் பற்றிச் சொன்னேன். ’அப்டியா’ என்றார் யதார்த்தமாக.

*

நமக்கு இன்று விவாதிக்கத் தெரியாது.மிகவிரிவான ஒரு விவாதமரபு இங்கிருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. அரங்கேற்றமேடையில் நூல்கள் நாட்கணக்காக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. பௌத்த, சமண,சைவ, வைணவ மரபுகளில் நிகழ்ந்த மாபெரும் விவாதங்களின் தடயங்கள் மணிமேகலை முதலே நூல்களாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால் நாம் அந்தத் தொடர்ச்சியை இழந்து பல நூற்றாண்டுகளாகின்றன. நம்முடைய கல்விமுறை நமக்கு விவாதிக்கக் கற்றுத்தரவில்லை. தகவல்களைக் கற்றுத் திருப்பிச்சொல்வதே நம் கல்வியாக இருக்கிறது.

ஆகவே புறவயமான தர்க்கமுறை நமக்குப் பழக்கமில்லை. அதன் விதிகளும் நடைமுறைகளும் நாமறியாதது. நம் சிந்தனைக்கு ஒரு நல்ல மாற்றுக்கருத்து வருவதென்பது நமக்களிக்கப்படும் அங்கீகாரம். நம் தரப்பை மேம்படுத்திக்கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அது நமக்கு உவகையை அளிக்கவேண்டும். கிளர்ச்சியூட்டவேண்டும். அந்த மாற்றுத்தரப்பாளரை நமது மறுபக்கமாகத்தான் நோக்கவேண்டும். அவனும் நானே என எண்ணவேண்டும்.

அந்த மனநிலை பழக்கமில்லாத நிலையில் நம் கருத்துக்களுடன் நாம் கொண்டுள்ள உறவு உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. அது மறுக்கப்படும்போது நாம் அகங்காரக்கொந்தளிப்படைகிறோம். அதன்பின் நிகழ்வது வெறும் அகங்கார மோதல் மட்டுமே. விளைவு மனவருத்தங்கள். தனிப்பட்ட புண்படல்கள். இது டீக்கடை விவாதம் முதல் தொழிற்சங்கவிவாதம் வரை எங்கும் காணக்கிடைப்பதே. ஒருவர் சொல்லும் ஒரு பொதுவான தகவலை ஆதாரபூர்வமாக மறுத்தால்கூட மனம்புண்படுகிறார்கள். நாட்கணக்கில் திட்டித்தீர்க்கிறார்கள்.

தமிழில் இணையம் வந்தபுதிதில் விவாதமேடைகள் உருவாயின. திண்ணை, தமிழ்.காம், ஃபாரம் ஹப் போன்ற அமைப்புகள் விவாதிக்க இடமளித்தன. அந்த விவாதங்கள் முழுக்க எந்த ஒழுங்கும் இல்லாத வசைக்கொந்தளிப்புகள்தான் நிறைந்தன. ஒரு சாதாரணக் கருத்துகூட தர்க்கபூர்வமாக மறுக்கப்படாது. அதை தனக்கு எதிராக விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு மனம்புண்பட்டு வசைபாட ஆரம்பிப்பார்கள். எந்த ஒரு கருத்தும் விவாதத்துக்குரியதாக எண்ணப்படவில்லை. ’நான் நம்புவது விவாதத்துக்கு அப்பாற்பட்டது எவர் விவாதித்தாலும் நான் புண்படுவேன்’ என்ற மனநிலை நிலவியது

உதாரணமாக, ஓரு விவாத அரங்கில் சுஜாதா ஒரு வணிக எழுத்தாளர் என நான் நினைக்கிறேன் என்று சொன்னேன். ஒருவருடம் யார் யாரோ வந்து வசைமாரி பொழிந்தார்கள். இன்னொரு முறை நா.பார்த்தசாரதியைப்பற்றி அப்படிச் சொன்னதற்கும் வசைமழை. அவை இலக்கிய உலகில் ஏற்கப்பட்டுவிட்ட கருத்துக்கள், இணையத்தில் வாசிக்கவந்தவர்களுக்குத்தான் அவை புதிய கருத்துக்கள். தாங்கள் நம்பும் ஒன்று மறுக்கப்படும்போது அதை புரிந்துகொள்வதற்குப்பதிலாக அதைச் சொல்பவனை வாயைமூடச்செய்யவே முயன்றார்கள்.

ஒருவர் கூட நீ ஏன் அப்படிச் சொல்கிறாய், உன் அளவுகோல்கள் என்ன என்று கேட்கவில்லை. உன் அளவுகோல்களை இன்னின்ன காரணத்தால் நான் மறுக்கிறேன், என் நோக்கில் சுஜாதாவும் நா.பாவும் பேரிலக்கிவாதிகளே என்று வாதிடவில்லை. ’நீ எப்படி அப்படிச் சொல்லலாம், அவர் எவ்வளவு பெரிய ஆள், எவ்வளவுபேர் அவரைப்பற்றி பாராட்டியிருக்கிறார்கள், கருத்துச்சொல்ல நீ யார்?’ இந்த பாணியில்தான் வினாக்கள் எழுந்தன. இன்றுவரை இந்த பாணியே தொடர்கிறது.

என் இணையதளத்தில் சுஜாதா, கல்கி, பாரதி, ஈவேரா என எவரைப்பற்றி விமர்சனம் எழுந்தாலும் இந்த பாணியில்தான் கடும் சினக்கேள்விகள் வருகின்றன. மு.வரதராசனார் பற்றிய கருத்துகூட பலர் மனதை புண்படுத்துகிறது. இத்தனைக்கும் நான் எந்தக்கருத்தையும் சமநிலை இல்லாமல் ஒற்றைத் தன்மையுடன் சொல்வதில்லை. அவர்களின் எல்லா சாதனைகளையும் அங்கீகரித்தபின் என் விமர்சனங்களை முன்வைக்கிறேன். அவை நெடுங்காலமாக இலக்கியத்தளத்தில் செயல்படும் ஒரு விமர்சகனின் மதிப்பீடுகள் என்றும், அவை தீர்ப்புகள் அல்ல கருத்துக்களே என்றும் சொல்லியபிறகே பேசுகிறேன். ஆனால் எதிர்வினைகள் எப்போதும் ஒரே வகையானவை. அதி உக்கிரமான கோபத்துடன் கூடிய தனிப்பட்ட வசைகள்.

சமீபத்தில் பாரதி பற்றிய விவாதத்தில் ‘கருத்துச்சொல்ல உனக்கு என்ன தகுதி?’ என்ற வகை கடிதம் ஒன்று வந்தது. ‘எனக்கும் பாரதிக்கும் இடையே இருப்பதாக நீ எண்ணும் தூரத்தைவிட உனக்கும் எனக்குமான தூரம் பல மடங்கு அதிகம். என்னை மறுக்க உனக்கு என்ன தகுதி?’ என்று ஒரு பதிலைப் போட்டுவிட்டு மின்னஞ்சல் முகவரியை ஃபில்டரில் போட்டுவிட்டேன். நம்மில் பலரும் இதையெல்லாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.

ஒரு மாற்றுக்கருத்தால் நாம் ஏன் புண்படுகிறோம், நாம் நம்பும் ஒன்றை இன்னொருவர் நிராகரித்தால் ஏன் கொந்தளிப்படைகிறோம்? அது எந்தவகையான மனப்பலவீனம்? அதை மட்டும் நினைத்தாலே போதும் நாம் இருக்கும் அறிவார்ந்த தளம் என்ன நம் ஆன்மீக நிலை என்ன என்று புரியும்.

விவாதங்களில் கருத்துக்களுக்காகப் புண்படுவதென்பது அறிவுநிலையின் மிகத்தாழ்ந்த படி. அந்நிலையில் நிற்பவர்களிடம் ஒரு போதும் நேர்ப்பேச்சில் விவாதத்துக்குச் செல்லக்கூடாது. அவர்களிடம் விவாதிப்பதில் பொருளே இல்லை. நான் மிகப்பெரும்பாலும் பேசாமலிருந்துவிடுவேன். என் நெடுநாள் அலுவலகத்தோழர்கள் பலர் நான் எதையாவது மறுத்துப்பேசி கேட்டிருக்கமாட்டார்கள். ‘சார் எல்லாத்தையும் கேட்டுக்குவார், கருத்தே சொல்ல மாட்டார்’ என்பதே என்னைப்பற்றிய பொதுபிம்பம்.

ஆம், கிருஷ்ணன் புண்படுபவர்களை முழுக்க தவிர்த்துவிடுவதே நல்லது.மேற்கொண்டு அவர்களை புண்படுத்துவதில் அர்த்தமில்லை.

*

இச்சூழலில் பொது அறிவுத்தளத்தில் ஒரு நகைச்சுவையை அல்லது விமர்சனத்தை எப்படி முன்வைப்பது?

ஏற்கனவே இதைப்பற்றி பலமுறை எழுதிவிட்டேன். தமிழ்ச்சூழலில் நகைச்சுவையையும் விமர்சனத்தையும் புண்படுத்தாமல் பேசுவதும், எழுதுவதும் மிக எளிது. அவற்றுக்கு நம் சூழல் ஒரு விஷய எல்லையை உருவாக்கி அளித்திருக்கிறது.இன்னின்ன விஷயங்களைப்பற்றி, இன்னின்ன முறைகளில் எழுதுங்கள் என்று. ஆனந்தவிகடனைப் பார்த்தாலே தெரியும். அந்த அனுமதிக்கப்பட்ட களத்துக்குள் கம்புசுற்றவேண்டியதுதான். வரதட்சிணைக் கொடுமையை விளாசலாம். சமூக அநீதிகளை சாடலாம். பொத்தாம்பொதுவாக நகைச்சுவை எழுதலாம். கேளிக்கை எழுத்தும் ,கேளிக்கை சினிமாவும் மிகக் கவனமாக அந்த எல்லையை உருவாக்கிக் கொண்டிருக்கும். அதற்குப் பின்னூட்டங்கள் அவற்றுக்கு வழிகாட்டுகின்றன.

ஆனால் இந்த எல்லை மிகக்குறுகியது. ஆகவே திரும்பத்திரும்ப ஒரே விஷயம்தான். ஆனந்தவிகடன் நாற்பதாண்டுக்காலம் வீட்டோடு மாப்பிள்ளைகளை கிண்டல்செய்து நகைச்சுவை எழுதியிருக்கிறது. வேலைக்காரிகள், நர்ஸுகள்,டைப்பிஸ்டுகளை முப்பதாண்டுக்காலம் பல்லாயிரம் முறை ஒரே விதத்தில் கிண்டல்செய்திருக்கிறது. இன்று அவர்கள் புண்பட ஆரம்பித்துவிட்டதனால் திரும்பத்திரும்ப புறமுதுகிட்டு ஓடும் அரசர் பற்றிய ’ஜோக்கு’கள். நாம் சலிக்காமல் சிரித்துக்கொண்டே இருக்கிறோம்.

அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு எழுதுபவன் எழுத்தாளனே அல்ல. அவன் வணிகக் கேளிக்கையாளன். அவர்கள் எழுதட்டும், மக்கள் வாசிக்கட்டும். அது வேறு உலகம். அதை மட்டுமே வாசிப்பேன், புண்படாது பாதுகாப்பாக ரசிப்பேன் என்பவர்கள் அங்கேயே புழங்கட்டும். இலக்கியம் உண்மைகளின் களம். சுதந்திரத்தின் வெளி. இங்கே அந்த எல்லைகளும் விதிகளும் செல்லுபடியாகாது. ‘கடுகு’ நகைச்சுவையை வாசித்து கிச்சுகிச்சு அடைந்து சிரிப்பவன் ப.சிங்காரத்தை வாசிக்க வந்தால் புண்படத்தான் செய்வான். ஆனால் இது இலக்கியம், இப்படித்தான் இருக்கும். உனக்கு புண்படுகிறதென்றால் வராதே, திரும்ப கடுகிடமும் பாக்கியம் ராமசாமியிடமும் ஓடு என்பதே அவனுக்கான பதில்.

இலக்கிய வாசகன் என்பவன் தன் அகத்தை, ஆழ்மனதை இலக்கியம் முன்வைப்பவன். தன் புற அடையாளங்களை அழித்துக்கொண்டு இலக்கியப்படைப்பை அறிபவன். தன்னை சாதியுடன், மதத்துடன், மொழியுடன், இனத்துடன்,செய்யும்வேலையுடன்,படிப்புடன்,ஊருடன் எல்லாம் அடையாளப்படுத்திக்கொண்டு வாசிப்பவன் இலக்கியம் வாசிக்கவேண்டிய தேவையே இல்லை. அவனுக்கு இலக்கியம் ஒன்றுமே கொடுக்கப்போவதில்லை. மாறாக அவனுடைய சுய அடையாளங்களை சீண்டி அவனை நிம்மதி இழக்கச்செய்யும் அது.

தன் வாழ்வனுபவங்களைக்கொண்டு, தன்னுள் தன் பண்பாடு தேக்கிய படிமங்களைக்கொண்டு இலக்கியத்தை வாசிக்கையில் மட்டுமே இலக்கியம் அவனுன் உரையாடுகிறது. மற்றவர்களுக்கு அது நாய்பெற்ற தேங்காய்தான். உருட்டிப்பார்க்கிறார்கள். புண்படுபவர்கள் அவர்களே. அவர்கள் வழிதவறி வந்து விழிக்கிறார்கள்.பணிவுடன் அவர்களுக்கு திரும்பிச்செல்லும் வழியைக் காட்டுவதே நல்லது.உண்மையான நுண்ணுணர்வும் தேடலும் கொண்ட மிகச்சிலர் மட்டும் இலக்கியம் வாசித்தால் போதும்.

என் எழுத்தால் முஸ்லீம்கள் புண்பட்டிருக்கிறார்கள். கிறித்தவர்கள் புண்பட்டிருக்கிறார்கள். சைவர்களும் வைணவர்களும் புண்படுகிறார்கள். பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் புண்பட்டபடியே இருக்கிறார்கள். கணிப்பொறி வல்லுநர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், பஸ்கண்டக்டர்கள், சிறுகடை உரிமையாளர்கள், விவசாயிகள் எல்லாம் புண்பட்டிருக்கிறார்கள். வேடிக்கையாகச் சொல்லவில்லை. ஒரு கதையில் எதிர்மறை இயல்புகொண்ட கதாபாத்திரம் டாக்டர் என்றால் உடனே டாக்டர்கள் புண்பட்டு கடிதம் அனுப்புகிறார்கள். ஒரு முறை சோளக்கதிர் சுட்டு விற்பவர் ஒரு பசுவை அடித்து துரத்தினார் என்று எழுதினேன் என்பதற்காக ஒரு சோளக்கதிர் விற்பவர் புண்பட்டு கடிதம் எழுதியிருந்தார்- ஒருநாளும் ஒரு சோளக்கதிர் விற்பவர் அப்படிச் செய்யமாட்டார் என்று அவர் வாதிட்டிருந்தார்.

வணிக இலக்கியம் வாசிப்பவர்கள் எழுத்தாளன் என்பவன் வாசகன் ரசனைக்காக வாசகனுக்குப்பிடித்தபடி எழுதவேண்டிய ஒரு கேளிக்கையாளன் என நினைக்கிறார்கள். அப்படியே பழகி விட்டிருக்கிறார்கள். அவர்கள் இலக்கியத்துக்குள் நுழையும்போது தன் அந்தரங்கத்தின் ஆணைக்கேற்ப சுதந்திரமாக எழுதும் எழுத்தாளனைக் கண்டு திகைப்பு அடைகிறார்கள். வாசகனுக்கு புரியாமல் அவன் எழுதினால் எரிச்சல் கொள்கிறார்கள். வாசகனால் ஏற்க முடியாததை எழுதினால் வசைபாடுகிறார்கள். வாசகனுக்கு ஒவ்வாததை அவன் எழுதினால் அவனை ’திருத்த’ முற்படுகிறார்கள். இந்த புண்படும் மனநிலைக்கு காரணம் அதுதான்.

எழுத்தாளன் என்பவன் அவனுக்கான அனுபவ மண்டலம் ஒன்று உடையவன், அதிலிருந்து பெற்ற அந்தரங்க ஞானம் ஒன்றை எழுதக்கூடியவன் என்று உணரும் வாசகன் அந்த அனுபவ மண்டலத்துக்குள் நுழையவே முயல்வான். அவ்வாறு நுழைகையில் அங்கே தனக்குப்பிடித்தமானவை மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்க மாட்டான். அந்த உலகின் எல்லா இயல்புகளுடனும் அதை ஏற்க முயல்வான். எழுத்தாளனை தனக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் ஒருவன் என எண்ணக்கூடியவன் அந்த ஆசிரியன் சொல்லக்கூடிய உண்மைகளை அறியவும் பரிசீலிக்கவும்தான் முற்படுவான். தனக்குப்பிடித்ததை எழுத்தாளன் சொல்லாவிட்டால் புண்படுவேன் என்று நினைக்கமாட்டான்.

எவரையுமே புண்படுத்தாமல் உண்மையான எதையுமே தமிழில் எழுதிவிட முடியாது. அப்படி எழுதவேண்டிய அவசியமும் இல்லை. இலக்கியம் என்பதே ஏதோ ஒருவகையில் வாசகனை உசுப்பவும் ,சீண்டவும் ,உடைக்கவும், குலைக்கவும் முனையக்கூடிய ஒன்றுதான். நவீன இலக்கியத்தின் அடிப்படை இயல்பே விமர்சனம்தான். சமூக விமர்சனம், தத்துவார்த்தமான விமர்சனம், ஆன்மீகமான விமர்சனம். அந்த விமர்சனம் வாசகனின் சுய அடையாளங்களை உடைக்கலாம். அவனுடைய கொள்கைகளை சிதறடிக்கலாம். அவனுடைய உணர்வுக்கட்டுமானங்களை கொந்தளிக்கச்செய்யலாம். அவனுடைய ஆன்மீகநிலைப்பாடுகளை சுழற்றியடிக்கலாம்.

நம்மை அறைந்து நம் ஆளுமையை உடைக்காத ஒன்று இலக்கியமே அல்ல. அந்த நிலைகுலைவு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதில்லை.விரக்தியை எரிச்சலை கோபத்தை உண்டுபண்ணக்கூடியதாகவும் இருக்கலாம். சிலசமயம் நம்மை புண்படுத்துவதேகூட அந்த இலக்கிய ஆக்கத்தின் நோக்கமாக இருக்கலாம்.

ஆகவே புண்படாத வாசிப்புக்காக ஆசைப்படுபவர்கள் இலக்கியத்தின்பக்கம் வராமலிருப்பதே அவர்களுக்கும் நல்லது, இலக்கியத்துக்கும் நல்லது. அவர்கள் வாசித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. கோடிக்கணக்கான மக்கள் இலக்கியச் சகவாசமே இல்லாமல் நன்றாக வேலைபார்த்து, சாப்பிட்டு, பிள்ளைகளை உற்பத்திசெய்து, தொலைக்காட்சி பார்த்து, பாலகுமாரன் சுஜாதா வாசித்து, சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.ஆகவேதான் இலக்கியத்தை ஒருபோதும் பரப்பக்கூடாது என நான் நினைக்கிறேன். அதை வாசகன் அவனுடைய ஞானத்தேவைக்காக. தேடிவரவேண்டும்.

இலக்கிய ஆக்கங்களை எழுதும்போது எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் என்னை ஆளாக்கிக்கொள்ளக் கூடாது என்பதே எனக்கு நான் ஏற்படுத்திக்கொண்டுள்ள விதி. அந்த இலக்கிய ஆக்கம் எவரையேனும் புண்படுத்தும் என்றால் அதுவே அதன் பணி. அதன்மூலம் ஏதாவது எதிர்விளைவுகளுக்கு ஆளாகவேண்டும் என்றால் அதை எதிர்கொள்வதே என் விதி. தன் இலக்கியப்படைப்புக்காக உயிர்விட்டவர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் சமகால வாசகர்களுக்காக எழுதப்படுவதில்லை. சமகால அரசியல் சமூகச்சூழல்களை நோக்கி அதுபேசுவதுமில்லை. ஆகவே அது சமகால வாசகர்களின் மனநிலைகளை அல்லது எதிர்வினைகளை எழுத்தாளன் ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது என்பதே என்னுடைய எண்ணம்.

சமகால வாசகர்களை புண்படுத்தாத நல்ல இலக்கியமே இல்லை. புதுமைப்பித்தன் புண்படுத்தி வசைகளை வாங்கியிருக்கிறார். ஜெயகாந்தன் புண்படுத்துபவர் என்றே அறியப்பட்டார். சுந்தர ராமசாமியும் ஜி.நாகராஜனும் ப.சிங்காரமும் நாஞ்சில்நாடனும் புண்படுத்தியிருக்கிறார்கள். அது இலக்கியத்தின் வழி. சுற்றி இருக்கும் அசட்டுவாசகர்களின் உணர்வுகளுக்கு அஞ்சி அவர்கள் தங்கள் எழுத்தை எழுதாமலிருந்தார்கள் என்றால் இன்று அவர்களுக்கு என்ன மதிப்பு?

கருத்துவிவாதங்களைப் பொறுத்தவரை அப்படி அல்ல. அவை சமகால வாசகர்களை நோக்கியே பேசப்படுகின்றன. அவை வாசகர்களுடன் உரையாடுகின்றன. நான் என்னுடன் உரையாடும் தரப்புடன் மட்டுமே பேசுகிறேன். உதாரணமாக இஸ்லாமியர் தரப்புடன் எனக்கு உரையாடலே இல்லை, அது சாத்தியமும் இல்லை. ஒற்றைப்படையான தீவிர மத நம்பிக்கையை மட்டுமே அவர்கள் முன்வைப்பார்கள். அவர்களைப்பற்றி என்ன சொன்னாலும் புண்படுவார்கள். அவர்களில் ஒரு பத்துபேர் வேறுவகையில் இருந்தால்கூட அவர்களிடம் பேசலாம். அப்படி எவரையும் நான் கண்டதில்லை. ஆகவே அவர்களுடன் பேச எனக்கு ஏதுமில்லை.

ஏதோ ஒருவகையில் என்னைப் பொருட்படுத்துகிற, என்னிடம் சொல்லவும் நான் சொல்வதைக் கேட்கவும் நினைக்கிறவர்களிடம் மட்டுமே நான் பேசுகிறேன்.அந்த உரையாடலில் கூடுமானவரை உண்மையைப் பேசவே முயல்வேன். தெளிவாக நேரடியாக. என்னிடம் ஒளிக்கவோ, பூடகமாகச் சொல்லவோ ஏதுமில்லை. என்னுடைய தனிப்பட்ட நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் என்னுடன் பேசுபவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புவேன். அவர்கள் நம்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் பேசுவேன். அப்படி நம்பி என்னுடன் விவாதிப்பவர்களை மட்டுமே என் வாசகர்களாக நினைப்பேன்.மற்றவர்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவேன்.

விவாதங்களில் கருத்துக்களை கறாராக முன்வைப்பேன். எதிர்த்தரப்பைத் திட்டவட்டமாக மறுப்பேன். உணர்ச்சிகரமாக முன்வைக்கவேண்டிய விஷயங்களை அப்படித்தான் சொல்வேன். ஆனால் ஒருபோதும் ஒருவரை இடித்துரைக்க மாட்டேன். அவரது தனிப்பட்ட அகங்காரத்தைச் சீண்டும்படி கருத்துச் சொல்ல மாட்டேன். ஒரு தருணத்திலும் நேரடியாக எவரையும் கண்டிக்கக்கூடாதென்றே நினைத்திருக்கிறேன். அப்படி கண்டித்தால் அவரை என் நண்பராக, நெருக்கமானவராக நினைக்கிறேன், அவரிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்றே அர்த்தம். அவர்கள் புண்பட்டால் அவர்களிடம் என் நோக்கத்தை எடுத்துச் சொல்வேன். மன்னிப்பும் கோருவேன். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நல்ல விவாதச்சூழலுக்குள் அவரை கொண்டுவர முயல்வேன்.

பொதுவிவாதங்களில் எவரும் வந்து கலந்துகொள்ளலாம். எப்படி வணிகஎழுத்துக்கான வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க நேர்கிறதோ அதைப்போல ஒரு பொதுவான கருத்துவெளியில் விவாதித்துப் பழக்கமில்லாதவர்களும் விவாதங்களில் உள்ளே வந்துவிடுகிறார்கள். தமிழ்ச்சூழலின் வழக்கப்படி மாற்றுக்கருத்தை கேட்டதுமே புண்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் புண்பட்டதாக தெரிந்தால் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்குவதில்லை. ஏனென்றால் எனக்கு எந்த ஒரு தனிமனிதரையும் புண்படுத்தும் நோக்கம் எப்போதும் இருந்ததில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் அது என் தவறும் அல்ல.

ஆனால் அந்த மன்னிப்புக்கோரல் அப்படிப் புண்பட்டவர்களை முழுமையாகவே என் வாசகர் தரப்பில் இருந்து வெளியே நிறுத்துவதுதான். என் கருத்துக்களுக்காகப் புண்படும் ஒருவரை ஒருபோதும் நான் என் வாசகராக, நண்பராக ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு சந்தர்ப்பத்திலும் அவரை என்னருகே நெருங்கவிடுவதும் இல்லை. அவர் வாழும் உலகம் வேறு. அதில் எனக்கு இடமில்லை. என் உலகில் அவருக்கும்.

ஜெ


புண்படுத்தாத நகைச்சுவை என்பது

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 17, 2012 @ 0:00

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 59

$
0
0

பத்தாம் காடு : கந்தமாதனம்

[ 1 ]

தளர்ந்த காலடிகளுடன் ஏறத் தொடங்கியபோது மலை நேர்முன்னாலிருந்தது. மேலே செல்லச் செல்ல பக்கவாட்டிலும் முளைத்துப் பெருகி மேலெழத் தொடங்கியது. சற்று நேரத்திலேயே பின்பக்கத்திலும் மலையடுக்குகள் மாபெரும் நுரைபோல உருளைப்பாறைகளின் குவைகளாக எழுந்தன. தருமன் மூச்சுவாங்க இடையில் கைவைத்து நின்றபோது அவரை மலைமடிப்புகள் முழுமையாகவே சூழ்ந்திருந்தன. தொலைதூரத்தில் மலையடுக்கின் வெளியிதழ்கள் நீலநிறமாகத் தெரிந்தன. அருகே ஆழ்ந்த மஞ்சள்நிறம் கொண்டு அலைவடிவாகச் சூழ்ந்திருந்தன.

மாமலர். அவ்விதழ்கள் மிக மென்மையானவை. உள்ளே தேனருந்த வந்த வண்டை மெல்ல பொதித்து சூழ்ந்துகொள்பவை. அவ்வாறு எண்ணியதுமே தொலைவிலிருந்த மலைகள் மிக மெல்ல மேலெழுந்து வருவதாகவும் சற்று நேரத்திலேயே தலைக்குமேல் கூம்பிக்கொள்ளப் போவதாகவும் உளமயக்கு எழுந்தது. மூச்சு அடங்கி உடல் குளிர்கொண்டதும் அவர் மேலும் நடக்கலானார். எதிரொலிகளை அனுப்பும் தொலைவுக்கு அப்பாலிருந்த மலையெழுச்சிகள். ஆகவே அவருடைய காலடியோசை துளிசொட்டும் ஓசையென்றே ஒலித்தது. மூச்சிரைப்பின் ஒலி அவர் உடலுக்குள்ளேயே ஓடியது.

கிளம்பும்போது எதையும் எண்ணவில்லை. நீரையோ உணவையோ இரவின் குளிரையோ செல்நெறியையோ. களைத்து நின்றபோது அவை ஒவ்வொன்றாக எண்ணத்திலெழுந்தன. அது கனவுப்பயணம் அல்ல. நனவில் நீரில்லையேல் மேலும் சில நாழிகைகளுக்குக்கூட அவரால் செல்ல முடியாதென எண்ணியதுமே உணவையும் நீரையும் வழியையும் எண்ணினால் பிறிதொன்றையும் எண்ண இயலாதென்று உணர்ந்தார். சேருமிடத்தை எண்ணினாலும்கூட அது பயணமென்றாகாது. செல்வதோ வருவதோ பயணம் அல்ல, வளர்வது மட்டுமே பயணம்.

மறுமுறை கால் ஓய்ந்து நின்றபோது விடாயை உட்கனல் என உணர்ந்தார். ஆம், விடாய். ஆனால் இங்கு நான் அதையும் அறியவே வந்துள்ளேன். இந்நிலம் நானறியாதது. இங்கு நான் கொண்ட அறிவெல்லாம் என்னுள் இருப்பதே. என் குருதி போல என்னுள் ஓடுவது அது. அதுவே நான். அதையன்றி பிறிதை நான் இங்கு அறியவும் போவதில்லை. சிலகணங்கள் கண்களை மூடி நின்று அந்த விடாயை அகம்கூர்ந்தார். விடாய் ஓர் உள்ளமாகவும் அதை நோக்கும் அவர் ஓர் உள்ளமாகவும் மாற, அச்செயலை நோக்கி அப்பாலிருந்தது பிறிதொரு உள்ளம். விடாயை அறிந்த உள்ளமும் விடாயென்றாகியது. சுடர் அருகே உலோகங்கள் போல விடாயைச் சூழ்ந்திருந்த எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஒளிபெற்றன.

தன் விடாய் வலப்பக்கமாகவே திரும்புவதை அவ்வெண்ணங்களின் கலவை மெல்ல ஒன்றுடனொன்று படிந்தமைந்தபோது அவர் உணர்ந்தார். அவர் அறியாமலேயே உடல் வலப்பக்கமாகத் திரும்பியிருந்தது. உடலறிந்ததை அதுவே ஆற்றட்டும் என விட்டதுமே காதில் நீரோசையும் மூக்கில் நீராவியின் மென்மணமும் வந்தணைந்தன. அவை உள்ளிருந்தே எழுகின்றனவா என வியப்பூட்டும் அளவுக்கு மிகமிக மெல்லியவை. நெடுந்தொலைவு சென்ற பின்னரே அவை வெளிச்செவிக்கும் பருவடிவ மூக்குக்கும் வந்தடைந்தன. பின்னர் நீரோடையைச் சென்றடைய நெடுநேரமாகவில்லை.

அந்நீரோடை செந்நிறப்பாறை ஒன்றின் இடுக்கிலிருந்து காளையின் சிறுநீர் போல ஊறி விழுந்து மண்ணில் குழி அமைத்து சுழன்று ததும்பி வழிந்தோடியது. நீரின் மணம் யட்சர்களின் குடிநீரோடையில் அவர் அறிந்தது என உணர்ந்தார். அள்ளி அருந்திவிட்டு அருகே அமர்ந்தார். நீர்ச்சுழிப்பை நோக்கிக்கொண்டிருந்தபோது அது எதையோ சொல்வதுபோலிருந்தது. உதடுகள் சுழித்து விரிந்து ஒலி நீண்டு. செவிகளுக்காக அன்றி சொல்லப்படும் சொல் முடிவற்றது.

நோக்கி அமர்ந்திருக்கையிலேயே குளம்போசை கேட்டது. ஒரு மான் வந்து அவரை நோக்கி தும்மலோசை எழுப்பியது. செண்பக இலைபோன்ற காதுகள் விடைத்திருக்க உடல்சிலிர்க்க மூக்கைத்தூக்கி அவரை நோக்கியது. பின்னர் அருகணைந்து குனிந்து நீரை அள்ளியது. அது திரும்பிச் செல்வதுவரை அவர் நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் அதன் காலடித்தடங்களை பின்தொடர்ந்து சென்றார். சற்று நேரத்திலேயே உடலெங்கும் கனிகளுடன் ஓங்கி நின்றிருந்த மாபெரும் அத்திமரத்தை சென்றடைந்தார்.

அத்திப்பழங்களை உண்டு பசியாறியதும் அதனருகிலேயே ஒரு பாறைமேல் படுத்துத் துயின்றார். உடலில் இருந்து அனைத்து தன்னுணர்வுகளும் முழுமையாக விலக மண்ணெனப் பெருகிவிரிந்த அனைத்துடன் அது இணைந்துவிட்டிருந்த ஆழ்துயில். விழித்துக்கொண்டபோது உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. விண்மீன்கள் மிக அருகிலெனத் தெரிந்தன. எழுந்து அமர்ந்து உடலை நன்றாக குறுக்கிக்கொண்டு வானை நோக்கிக்கொண்டிருந்தார்.

வானம் அத்தனை பொருளற்றதாக எப்போதுமே இருந்ததில்லை. அத்தனை அண்மையிலும் தெரிந்ததில்லை. நோக்க நோக்க விண்மீன்கள் நெருங்கி வந்து அவரை சூழ்ந்துகொண்டன என்று தோன்றியது. அவற்றின் அதிர்வுகளை தன் உடலால் உணரமுடியுமென்பதுபோல. உடலைக் குறுக்கிக்கொண்ட நிலையிலேயே மீண்டும் துயிலில் ஆழ்ந்தார். அம்முறை கனவுகள் வந்தன. அவர் குழவியாக இருந்தார். துணியால் சுருட்டப்பட்டு அன்னையின் அருகிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

விழித்துக்கொண்டபோது அனைத்தும் துலங்கிவிட்டிருந்தன. எழுந்தமர்ந்தபோது தன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதை உணர்ந்தார். உடலில் களைப்பே இல்லை. தசைகள் புதியவை போலிருந்தன. அவர் அருகே ஒரு மான்கூட்டம் படுத்திருந்தது. அவரை அவை பொருட்படுத்தவில்லை. ஒரு குட்டிமான் மட்டும் விழிகள் மலர காதுகள் குவிய இளமூக்கை நீட்டியபடி அவரை நோக்கி வந்தது. அவர் புன்னகையுடன் கைநீட்டியதும் சுண்டப்பட்டதுபோல துள்ளி எழுந்து அப்பால் ஓடி அவருக்கு பின்பக்கம் காட்டி நின்றது.

அத்திமரத்தின் மேல் நாரைகள் அமர்ந்திருந்தன. அவற்றினூடாகவே அந்த மரங்கள் அங்கு வந்திருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டார். அவற்றை நம்பி அங்கு மான்கணங்களும் வாழ்கின்றன. மீண்டும் அத்திப்பழங்களை உண்டுவிட்டு மேலாடையில் அத்திப்பழங்களை அள்ளிச்சேர்த்து எடுத்தபடி கிளம்பினார். மான்குட்டி துள்ளி அவரை நோக்கி வந்து கால்களை சற்றுப்பரப்பி வைத்து நோக்கி நின்றது. அவர் புன்னகையுடன் அதை நோக்கிவிட்டு மேலே சென்றார்.

அன்று மாலைக்குள் அந்த மலைப்பகுதி அவருக்கு நன்கு அறிந்ததாக ஆகியது. அங்கேயே பிறந்துவளரும் மான்களைப்போல என எண்ணிக்கொண்டார். அத்திமரங்கள் நின்றிருக்கும் இடம். நீரோடையின் வழி. ஒவ்வொன்றையும் அவர் எண்ணுவதற்குள் சென்றடைந்தது உள்ளம். மறுநாளும் உணவும் நீரும் அமைந்தன. அதன்பின் ஆழத்தில் இருந்துகொண்டே இருந்த அச்சம் மறைந்தது. அச்சமாக மட்டுமே எஞ்சிய அந்தத் தன்னுணர்வும் அழிந்தது. பின்னர் அவருள்ளும் மலைகள் மட்டுமே எஞ்சின.

அமைதியின் பெருங்குவைகளாக நின்றிருந்தன மலைமுடிகள். அமைதி என வழிந்தன சரிவுகள். அசைவின்மை என, பிறிதின்மை என அமைந்த பருப்பேருரு. ஆனால் அவை அவருள் வெறும் எண்ணங்களென்றும் இருந்தன. உணரமட்டுமே படுபவை. இருப்புகள் மட்டுமே என்றானவை. ஒரு விழியிமைப்பால் சுருட்டி அகற்றப்படத்தக்க மலைகள். கணம்தோறும் பிறிதொன்றென மாறிக்கொண்டே இருப்பவை. அப்பாலிருக்கும் அப்பருவெளி அவருடையதல்ல. இது நான் வெளித்தது. இது நான் என்னைச் சூழ்ந்தது. என்னுள் அமைந்து என் இருப்பென அசைவின்மை கொண்டது. நான் எனும் பிறிதின்மையாகியது.

கிளம்பி நெடுந்தூரம்வரை அவர் தன்னுள் இளையவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். சினத்துடன், ஆற்றாமையுடன், கனவுடன், கனிவுடன். சொல்லச் சொல்லத் தீரவில்லை சொற்கள். சொற்கள் சொற்களைப் பெருக்குபவை. அவர் பின்னர் உலகுடன் உரையாடலானார். அறைகூவி ஆணையிட்டு அறிவுறுத்தி மன்றாடி சோர்ந்தமைந்து மீண்டும் ஒரு சொல்லில் இருந்து பற்றிக்கொண்டு எழுந்து சொல்பெருக்கி சொல்லடங்கி. இங்கு ஒவ்வொரு உள்ளத்துக்கும் உலகுடன் சொல்ல எவ்வளவு இருக்கிறது! அல்லது ஓரிரு சொற்களேதானா? அவற்றை உலகு செவிகொள்ள மறுப்பதனால்தான் அவை பெருகுகின்றனவா? பேருருக்கொண்டு பெருகிச்சூழும் தெய்வம் ஒன்று ஒவ்வொருவரையும் அணுகி ‘சொல்’ என செவிகொடுத்து மீளுமென்றால் உலகமே சொல்லடங்கி அமைதிகொள்ளும் போலும்.

சொல்முழக்கமாக இருந்த உள்ளம் மலையேறத் தொடங்கும்போதே அடங்கத் தொடங்கிவிட்டிருந்தது. பாலையில் மெலிந்தோடும் ஓடை போல ஒரு தனி எண்ணம் நிகழ்ந்து பொருளற்ற ஏதேதோ சொற்களில் முட்டித் தயங்கி வலுவிழந்து ஓரிரு சொற்களில் வந்து நின்றுவிடும். பின்னர் எப்போதோ அச்சொற்கள் சித்தத்தில் கைவிடப்பட்ட பொருட்கள்போல கிடப்பதை உணர்ந்ததும் அவை எங்கிருந்து வந்தன என்று வியந்தபடி நினைவுகூர்வார். அச்சொற்களிலிருந்து அவ்வெண்ணத்தைச் சென்றடைய முடிவதில்லை. அவற்றுக்கும் அவ்வெண்ணத்திற்கும் தொடர்பிருக்கவில்லை.

மெல்ல அச்சொற்கள் அங்கேயே நோக்கப்படாமல் கிடக்கலாயின. புழுதிபடிந்து அமிழ்ந்தழிந்தன. அகம் கொண்ட அச்சொல்லின்மையை எப்போதேனும் ஒரு சொல்லெழும்போதே உணரமுடிந்தது. அந்த மலையடுக்குகளுக்கு நடுவே தனித்து நடக்கும் அவரைப்போல அச்சொல் தன்னை உணர்ந்து உடனே திறந்துகொண்டது. பரவி வெளியாகி உருவழிந்தது. அமைதி என்பது அமைதியென்றும் உணரப்படாத நிலை என்பதை அறியவே அத்தனை காலம் ஆகியிருப்பதை எப்போதோ ஓர் எண்ணக்கீற்றென உணர்ந்து புன்னகைத்துக்கொண்டார். மகிழ்ச்சி என்பதும் அமைதியின்மையே என அதைத்தொடர்ந்து அறிந்தார்.

கிளம்பிய பன்னிரண்டாம் நாள் அவர் கந்தமாதன மலையின் முதல் முகத்தை சென்றடைந்தார். தொலைவிலேயே மேலே வெண்மையும் அடியில் கருமையும் கொண்ட புகைக்குவை ஆலமரம்போல எழுந்து குடைபரப்பி நிற்பது தெரிந்தது. அதை மலைமுடியில் அமர்ந்த முகிலென்று முதலில் எண்ணினார். பின்னர் அதன் அடியில் கருமை கொப்பளித்து மேலெழுவதை கண்டார். மேலும் கூர்ந்தபோது அக்கருமைக்குள் செந்நிற இறகுகள் என அனல் பறப்பது தெரிந்தது. அதுவரை இடியோசை என தொலைவில் முழங்கிக்கொண்டிருந்தது அந்த மலையின் உறுமலே என்று அப்போதுதான் சித்தம் அறிந்தது.

அங்கே நின்றபடி எரியுமிழ் மலையை நோக்கிக்கொண்டிருந்தார். சினம்கொண்ட பெருவிலங்கொன்றின் வாய். நீண்டு அதிரும் செந்நிற நாக்குகள். மீளமீள செவிகொடுத்தபோது அச்சொல்லை கேட்கமுடிந்தது. த! த! த! ஒவ்வொரு சொல்லும் நெருப்பாலாகியிருந்தது. மலையடுக்குகளை அதிரச்செய்தது. வானம் அவற்றை திருப்பிச் சொன்னது. “தம! தத்த! தய!” ஆணை ஏற்று அதிர்ந்துகொண்டிருந்தன மலைப்பாறைகள்.

நீள்மூச்சுடன் மேலும் நடக்கலானார். செல்லும்தோறும் அணுகாமல் அகலாமல் அங்கேயே நின்றிருந்தது மலையெரி. அந்தியில் வெண்புகைக்குடை அனல்வண்ணம் ஆயிற்று. கருமைகொண்டு மறைந்தது. இருளில் செந்தழல் மட்டும் தெரிந்தது. மலைச்சரிவிலிருந்த பாறையொன்றுக்கு அடியிலமர்ந்து அதை நோக்கிக்கொண்டிருந்தார். மாபெரும் வேள்வித்தீ. மேலிருந்து அதை ஓம்புபவர் யார்? தேவர்கள் என்றால் அவர்கள் அவியூட்டுவது எவருக்கு? வான்சரிவில் நிறைந்திருந்த விண்மீன்கள் தழலுடன் இணைந்து நடுங்கின. கரிய முகத்தில் அழிந்து நீண்ட குங்குமம். இருளிலமர்ந்து நோக்கும்போது அனல்தீற்றலை அன்றி பிறிதை முழுமையாக தவிர்த்தது விழி.

துயிலுக்குள்ளும் தழலெரிந்துகொண்டிருந்தது. விழித்தெழுந்தபோது வாயிலும் மூக்கிலும் மென்சாம்பல் படிந்திருந்தது. துப்பியபடியும் தும்மியபடியும் எழுந்து அமர்ந்தார். உடலெங்கும் சாம்பல் படிந்திருந்தது. காலையின் மென்னொளி சூழ்ந்திருந்தது. சூரியன் தோன்றாத கீழ்த்திசை காட்டுத்தீப்பரப்புபோல் தெரிந்தது. நீர் தேடி மலைவிளிம்பு வழியாக நடந்தபோது வானம் ஒளிகொண்டபடியே வந்தது. சூரியவிளிம்பு எழுந்தபோதிலும்கூட கண்கூசும் ஒளி எழவில்லை. கார்காலத்துக் காலை போலிருந்தது. காற்று திசைமாறி வீசியபோது எரியும் கந்தகத்தின் மணம் வந்தது.

மலைச்சரிவில் நீரோடையை கண்டார். நீரில் மெல்லிய கந்தகமணம் இருந்தாலும் குடிக்கமுடிந்தது. நீர் இளவெம்மையுடன் இருந்தது. நீர்விளிம்பில் நீட்டியிருந்த செடிகளில் உண்ணத்தகுந்த கீரைகளைப் பறித்து கழுவி பச்சையாகவே தின்றபடி ஓடை வழியாகவே மேலே செல்லத் தொடங்கினார். ஓடைக்கரைப் பாறைகள் வழுக்கவில்லை. அவை படிக்கட்டுபோல அமைந்து மேலே செல்ல உதவின. மலையேறுவதற்கு கால்கள் பழகிவிட்டிருந்தமையால் நெடுநேரம் நடந்தும் அலுப்பு தெரியவில்லை. மாலையில் மீண்டும் அனல்வாயை பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்தார். அது அணுகவே இல்லை என்று தோன்றியது.

நான்காவதுநாள்தான் முதல்முறையாக வெம்மையை உணரமுடிந்தது. காற்றில் அவ்வப்போது வெம்மை வந்து உடல்தழுவி எரியவைத்தது. காற்றலைகளில் அவ்வெம்மை ஏறிக்கொண்டே சென்றது. வானம் சாம்பல்படலத்தால் முழுமையாகவே மூடப்பட்டிருந்தது. திசைகள் அனைத்திலிருந்தும் இடியோசை எழுந்துகொண்டிருந்தது. மூச்சில் புகுந்த சாம்பலை தும்மி வெளியேற்றிக்கொண்டே நடந்தார். உடல் கருமண்ணால் வடித்த சிலைபோல் தோன்றியது. வியர்வை வழிந்த கோடுகளில் மீண்டும் கரிபடிய சாட்டையால் அறைபட்ட வடுபோல அவை தெரிந்தன.

திசைகளை சாம்பல்திரை மூடியிருந்தமையால் அனல்முடி சரியாகத் தெரியவில்லை. காற்று வீசி புகைப்படலம் கிழிபடும்போது தொலைவானில் தழலாட்டம் மட்டும் தெரிந்து மறைந்தது. அதைநோக்கி சென்றுகொண்டிருக்கையில் எதிர்ப்பக்கமிருந்து வீசிய காற்றில் காட்டுத்தீயின் அனல்போல வெம்மை வந்து அறைந்துசென்றது. காதுகளும் இமைகளும் மூக்கும் எரியத்தொடங்கின. மீண்டுமொரு அனலலை வந்தடித்தபோது தாடிமயிர் பொசுங்கும் நாற்றத்தை உணர்ந்தார். தொட்டபோது புருவமும் பொசுங்கிச் சுருண்டிருப்பது தெரிந்தது.

உள்ளத்திலெழுந்த அச்சத்தை அறியாத ஊக்கம் ஒன்று வென்றது. அப்பாலிருப்பதை நோக்கி எப்போதும் செல்லும் விழைவு. குழவியரை இயக்கும் முதல்விசை. மேலும் மேலுமென சென்றார். இன்னொரு அனல்வீச்சில் தாடிமயிர் பொசுங்கிச்சுருண்ட ஒலி கேட்டது. காதுகள் அழன்று காந்தத் தொடங்கின. அன்றிரவு மழையென பெய்துகொண்டிருந்த சாம்பலுக்குக் கீழே உடலைக் குவித்து முட்டுகளுக்குள் மூக்கை தாழ்த்திவைத்து துயில்கொண்டார். மறுநாள் எழுந்தபோது புற்றை உடைத்து வெளிவருவதுபோல சாம்பலில் இருந்து எழவேண்டியிருந்தது. சாம்பலின் அலைகளாக காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது.

‘இதற்கு அப்பால்… ஆம், இதற்கப்பால்தான்’ என்று தன்னைத்தானே தூண்டியபடி, தனக்கே ஆணையிட்டுக்கொண்டபடி நடந்துகொண்டிருந்தார். நடக்கவே முடியாதபடி அனல் வந்து அறைந்துகொண்டிருந்தது. நிலத்தில் அத்தனை பாறைகளும் தொடமுடியாதபடி சுட்டன. நீர் ஊறிவழிந்த இடம் நோக்கி சென்றார். சேறும் ஆவியுடன் கொதித்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவியால் உடல் வியர்த்து வழிந்தது. ஆனால் பாறைக்குழிவுகளில் குடிக்க சூடான நீர் இருந்தது. தரையில் வெந்த பறவை ஒன்று கிடந்தது. அதை எடுத்து உண்டு நீர் அருந்தியபின் மீண்டும் சென்றார். உறுமலுடன் தீயலை வந்து அவரை அறைந்து பின்னால் தள்ளியது. அதுவே எல்லை என்று உணர்ந்து அங்கே அமர்ந்தார்.

 

[ 2 ]

நாற்பத்தெட்டு நாட்கள் அவர் அவ்வெரிமுகத்தில் இருந்தார். மரவுரி சாம்பலாகி உதிர்ந்தது. உடலின் மயிர்களனைத்தும் கருகி மறைந்தன. தோல் வெந்து உரிந்தது. உடல் எலும்புபோர்த்த கரிப்படலத்தால் சுள்ளிக்கட்டுபோலாகியது. மண்டையோட்டின்மேல் விழிகள் அமைந்த முகம். நெடுந்தொலைவிலிருந்து அந்த அனல்நோக்கி வந்து சிறகு கரிந்து உதிரும் பறவைகளின் வெந்த ஊனே உணவாகியது. ஊறிச்சொட்டும் நீர் விடாய் தீர்த்தது. பின்னர் ஆற்றை உடலே கற்றுக்கொண்டது. உண்பதையும் குடிப்பதையும் அகம் அறியவில்லை. இடமும் காலமும் இருப்பும் உணரப்படவில்லை. வெறுமொரு சித்தத் துளி. பெருகாது சுழிக்காது துளித்து தயங்கி நுனியில் நின்றிருந்தது அது. அதன் முன் சீறியும் முழங்கியும் எழுந்தாடிக்கொண்டிருந்தது செவ்வனல்.

தன்னை நோக்கி முற்றிலும் திரும்பிய சித்தம் துயில்கொள்வதில்லை. தூங்காது தூங்கி விழித்திருக்கும் தன்னிலை. விழிகள் அத்தழலை நோக்கியபடி எப்போதும் திறந்திருந்தன. உதடுகளில் நிலைக்காமல் ஓடிக்கொண்டிருந்த சொல்லுச்சரிப்பின் சிற்றசைவுகளும் முகத்தில் பெருகிச்சுழித்துச் சென்றுகொண்டிருந்த உணர்ச்சிகளின் நெளிவுகளும் நின்றன. வெறித்த செவ்விழிகளில் மட்டுமே உயிர்தெரியும் வெந்த கரியமுகம் கொண்ட நிழலுரு அங்கு ஆடிய நூற்றுக்கணக்கான நிழல்களுடன் தானும் கலந்து மறைந்தது. பாறைவெடிப்புக்குள் உலர்ந்த தோல்கீற்றுபோல அவர் ஒட்டிக்கிடந்தார்.

அவர் விழிகளுக்குள்ளிருந்து என எழுந்தனர் கந்தர்வர்கள். யாழும் குழலும் இசைத்துச்சூழ இளஞ்சிவப்புநிறச் சிறகுகளுடன் அவரைச் சூழ்ந்து பறந்தனர். அவர்களின் விழிகளை அவர் அருகே என நோக்கினார். அவர்கள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தனர். அருகணைந்து அதைக் கூவி சலித்து விலகி மீண்டும் அருகணைந்து மீண்டும் கூச்சலிட்டனர். அவை விழியொளியாகவும் இதழசைவாகவுமே அவரை அடைந்தன. “என்ன?” என்று அவர் உடல் உடைந்து திறக்கும் விசையுடன் கூவினார். “என்ன சொல்கிறீர்கள்?” அவர்கள் துயருடன் ஆற்றாமையுடன் பதைப்புடன் மீண்டும் மீண்டும் அதையே சொன்னார்கள்.

பின்னர் அவர்களின் விழிகள் மாறுபட்டன. ஒவ்வொன்றாக ஒளியவிந்து வெறும் புள்ளிகளாக அவை மாறின. பறக்கும் விசை குன்றி சிறகுநனைந்த பூச்சிகளாக மாறி பின்வாங்கி எரிதழல்பெருங்குவை நோக்கி சென்றனர். அவர் பதைப்புடன் நோக்கிக்கொண்டிருக்க அவர்கள் அத்தீயில் சென்று விழுந்து கொதிநெய்யில் நீர்த்துளி விழுந்ததுபோல் வெடித்து மூழ்கி மறைந்தனர். ஒவ்வொருவராக செந்தழலின் அடியிலியால் உறிஞ்சப்பட்டு சென்றுகொண்டே இருந்தனர். அவர்கள் மறைந்தும் சற்று நேரம் குழலும் யாழும் மீட்டல் தொடர்ந்தன.

பொற்கொல்லனின் கிடுக்கிமுனையில் உருகிச்சொட்டும் துளி என ஒளிமுடிகள் சூடிய தேவன் ஒருவன் முகில்குவையிலிருந்து இறங்கினான். மேலும் ஒருவன் அவனைத் தொடர்ந்து இறங்கி வந்தான். ஒருவனே மீண்டும் மீண்டும் வருவதுபோல அவர்கள் வந்தபடியே இருந்தனர். பொன்முடி, பொற்கவசம், பொன்னிற ஆடை, பொன்மிதியடி. பொற்பெருக்கென அவரை சூழ்ந்துகொண்டனர். அவரில் ஒருவன் அவர் விழிகளை விழிதொட்டு நோக்கி ஒரு சொல்லை உரைத்தான். அவர் அச்சொல்லை முன்னரே அறிந்திருந்தார். ஆமென்பதற்குள் அச்சொல் அவரிடமிருந்து நழுவி உதிர்ந்தது. பதறி அதை அள்ள அவர் பாய்வதற்குள் முழுமையாகவே மறைந்தது.

அதன்பின் அவர்கள் அச்சொல்லை பந்தென வீசியபடி அவர்முன் விளையாடினர். அவர்களின் கைகளும் கால்களும் அதை தட்டிக்களியாடுவதை, அவர்களின் விழிகள் அதை நோக்கியபடி அசைவதை அவர் கண்டார். ஆனால் அதை காணக்கூடவில்லை. “இங்கே…” என்று அவர் கூவினார். “இங்கே! இங்கே!” அவர்கள் அப்பாலிருந்தனர். அவர் சென்றடைய முடியாத சேய்மையை பலகோடிச் சுருள்களாக ஆக்கி நடுவே நிறைத்திருந்தனர். அவர் கண்ணீருடன் ஆங்காரத்துடன் நெஞ்சிலறைந்து கூவினார் “இங்கே! இங்கே!”

நெருப்பின் நாக்கு நீண்டு அவர்களில் ஒருவனை சுழற்றி இழுத்துக்கொண்டது. அவன் திகைத்து கைகால்களை வீச இன்னொருவன் அவனை பற்றிக்கொண்டான். ஒரு நீண்ட பொன்மணி மாலையென அவர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு நெருப்புக்குள் நுழைந்தனர். பொன்னோடை ஒன்று வழிந்து விழுந்து உருகி எழுந்து தழலாக ஆடி கரிதுப்பி சீறியது. அவர் இறுதி தேவனின் விழிகளை நோக்கினார். அவன் நோக்கியது அச்சொல்லை என உணர்ந்தார். அதை விழிகளால் தேடித் தேடி அங்கிருந்தார். அவர் உடல் பாறையுடன் உருகி ஒட்டியிருந்தது.

சீறலோசையை கேட்டார். நெளியும் நிழல் கரிய நாகப்பாம்பென்றாகி எழுந்தது. அதன் பத்தியின் முகப்பில் இரு பிளவுண்ட நாக்குகளின் நடுவே நீலநிற மணியென அச்சொல்லை அவர் கண்டார். பொருளில்லாத ஒளித்துளி. அச்சொல்லை நோக்கி இன்னொரு நாகம் படமெடுத்தாடியது. இரு நாகங்களும் அச்சொல்லை முத்தமிட்டன. பிறிதொரு நாகம் எழுந்து இணைந்துகொண்டது. மீண்டுமொரு நாகம். நாகப்பெருங்கணம் கரிய பெருமலர்போல உடல்கள் நெளிய வட்டமாயின. அவ்வட்டத்தின் நடுவே நீலமணியென அது நின்றொளிர்ந்தது.

இடியோசையுடன் நிலம் பிளக்க உள்ளிருந்து கரிய தெய்வமொன்று எழுந்தது. ஆயிரம் கைகளும் திசைநிறைத்து ததும்பின. விழியற்ற பெருமுகத்தில் வாய் கோரைப்பற்களுடன் திறந்திருந்தது. நாகங்களை கைகளால் அள்ளிச்சுருட்டி நெருப்பை நோக்கி எறிந்தது அது. அவை சீறி நெளிந்து அடங்க தழலெழுந்து ஆடியது. அத்தனை நாகங்களையும் அள்ளி வீசியபின் அந்த மணியை எடுத்து தன் நெற்றியில் பதித்துக்கொண்டது அது. மணி சுடர்ந்து செம்மைகொண்டு விழியாகியது. ஒற்றை நுதல்விழி நோக்குடன் திரும்பி அவரை நோக்கியது. கோட்டெயிர் எழுந்த கொலைவாயில் நகை தோன்றியது. உறுமியபடி அவரை நோக்கி வந்தது.

இமையா விழி. அண்மையில் அது வந்தபோது ஊன் மணத்துடன் கைகள் அவரை சூழ்ந்துகொண்டன. இனிய மணம். “மைந்தா!” அவர் அவ்வணைப்பில் மெய்மறந்தார். அவர் குழல் நீவியது ஒரு கை. அவர் தோள் தழுவியது பிறிதொன்று. அவர் அண்ணாந்து நோக்கியபோது விண்மீன் என அப்பால் தெரிந்தது விழி. மறுகணம் மிக அருகே நோக்கு கொண்டது. குனிந்தணைந்த இதழ்கள் கன்னத்தில் ஒற்றி முத்தமிட்டன. ஊன்மணம். இனிய பசுங்குருதி மணம்.

கால்களைத் தூக்கி உதைத்து அதை அகற்றி வீரிட்டலறியபடி அவர் எழுந்துகொண்டார். மண்ணில் விழுந்து உருண்டு கையூன்றி எழுந்து நின்றார். எதிரில் நின்றிருந்தது அது. அதன் தலைகள் பெருகின. பதினாறு முகங்களாயின. விழி எரியும் நீலப்பெருமுகங்கள். தழல் பறக்கும் நாக்குகள். மையமுகத்தில் இரு நீலவிழிகளுக்குமேல் நுதல்விழியெனத் திறந்திருந்தது அந்த மணி.

“இதோ!” என்றது அந்த முகம். தன் நெற்றிக்கண்ணைத் தொட்டு எடுத்து கையில் சுடரென ஏந்தி அவரை நோக்கி நீட்டியது. “இதன் பெயர் மகாருத்ரம். இதுதான்…” அவர் கைநீட்டி அதை வாங்கினார். குளிர்மலர்போலிருந்தது. பனித்துளி படிந்த நீலம். இல்லை, இது மயிற்பீலி. அந்த விழியை நோக்கியபடி நின்றபோது எதிரே எழுந்த தழலை பார்த்தார். தலையில் விண்குடை சூடி நின்றிருந்தது. அதன் உறுமல் நான்கு திசைகளிலும் முட்டி இடியோசையென சூழ்ந்திருந்தது.

அனல் உருத்திரண்டு முகம்கொண்டு பின் கலைந்து சுழன்றாடி மீண்டும் முகம்கொண்டது. மெல்ல அதன் உருவம் செம்பிழம்பிலிருந்து பிதுங்கியதுபோல எழுந்து அருகணைந்தது. உருவென்றும் மயக்கென்றும் ஒருங்கே நின்றது. அதை நோக்கிக்கொண்டிருந்த அவர் திகைத்தெழுந்து நின்றார். அறியாது பின்னெட்டு வைத்து பின்பு வெறிகொண்டு அதை நோக்கி சென்றார். எரிந்து உருகி சொட்டிய உடலைக் கழற்றி, எரிதுளியென உள்ளத்தை உதிரவிட்டு, எஞ்சிய அனைத்திலிருந்தும் எழுந்து முன்னால் சென்றார்.

அதன் வாய் திறந்தது. பதைக்கும் நாக்குகொண்டது. அடியிலாப் பெருங்கிணறு. பசிகொண்ட பாழ்வாயில். அவர் தன் கையை உணர்ந்தார். அதிலிருந்தது ஒரு கைப்பிடி அன்னம். அருகணைந்து அதை அந்த வாயில் போட்டார். சுருங்கி மறைந்தது அனல்வாய். அலறலுடன் பேருருக்கொண்டு மீண்டும் எழுந்தது. தன் முழுவிசையையும் திரட்டி அதற்குள் தன்னை தூக்கி வீசினார்.

தொடர்புடைய பதிவுகள்

காடு -ஒரு பார்வை

$
0
0
1
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
என் வலைத்தளத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றியும்,
காடு பற்றிய என் பார்வையும்.

http://valaipesy.blogspot.in/2016/09/201609blog-post.html

பிரியங்களுடன்,
பிரகாஷ், கோவை.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கொடுந்தெய்வங்களை அகற்றுவது குறித்து…

$
0
0

index

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிங்கையில் நலமாக எண்ணிய யாவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

கோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா?என்ற கட்டுரை படித்தேன். ஒரு கேள்வி என்னவெனில் – இந்திய தர்ம மதங்கள் நாட்டார் தெய்வங்களை உள்ளிழுத்துக்கொண்டாலும் அதனின் தனித்துவம் குறையாமல் மேலதிக தத்துவம் மற்றும் குறியீட்டு விளக்கம் அளித்து உன்னதப்படுத்துவதும், இது எப்படி ஆபிரகாமிய மத மாற்றத்திலிருந்து வேறு பட்டது என்பதையும் உங்களுடைய முந்தைய கட்டுரைகள் மூலம் புரிந்து கொண்டேன். ஒரு கட்டுரையில் நாராயண குரு மக்களிடம் புழங்கிய கோர தெய்வ வழிபாட்டிற்கு மாற்றாக சரஸ்வதி (கல்வி குறியீடு), விளக்கு ஆகிய வழிபாட்டை முன்னிறுத்தியது பற்றியும் கூறி இருந்தீர்கள். நாராயண குரு இதை சமூக கூட்டு மடைமாற்றத்திர்க்கு செய்தார் என்பது புரிகிறது.

ஆன்மிகத்தில் ரூப வழிபாடு ஒரு சாத்தியம் தான் என்பது தெரிகிறது. நான் அத்வைத சார்பு உடைவன் என்ற போதிலும் விக்ரக வழிபாட்டில் நம்பிக்கை இருந்து ஆரம்பிக்கும் ஒருவரின் கோணத்தில் இருந்து இதை புரிந்து கொள்ள முயல்கிறேன். தனி மனித ஆன்மிகத்தில் மனம் இசைந்திசைந்து மேற்கொண்டு கனிய இந்த தெய்வ ரூப மாற்றங்கள் நிச்சயம் அவசியம் தானா? காளியை வழிபட்ட சாத்விக ராமகிருஷ்ணர் அமைந்தாரே? நிச்சயமாக இதை தெளிந்து கொள்வதற்கு மட்டுமே கேட்கிறேன்.

நன்றி,

தியாகராஜன்

கொலம்பஸ், ஓஹயோ

***

அன்புள்ள தியாகராஜன்,

தெய்வங்களை ஏதோ ஒரு சதிவேலை என்று மட்டும் புரிந்துகொள்ளும் மொண்ணைத்தனத்தைக் கடந்து இங்கே விவாதிக்க பல உள்ளன. நான் கட்டுரைகளில் அழுத்தமாகச் சொல்வது அதையே. தெய்வங்கள் கருத்துருவங்கள், ஆழ்படிமங்கள். அவை தொல்பழங்கால வாழ்க்கையில் உருவாகி நம் ஆழ்மனக்கனவுகளாலும் அச்சங்களாலும் விழைவுகளாலும் வளர்க்கப்பட்டு இன்றைய உருவத்தை அடைந்துள்ளன. மேலும் வளர்ந்து மாறியபடியேதான் உள்ளன.ஒரு சமூகத்தின் ஆழ்மனத்தை கட்டமைப்பவை. ஆழ்மனத்தைப்புரிதுகொள்ள உதவக்கூடியவை. குடித்தெய்வங்கள்ஒவ்வொரு குடியின் எழுதப்படாத வரலாற்றையும் அவ்வரலாறு உருவாக்கிய அவர்களின் கூட்டுநனவிலியையும் நமக்குக் காட்டுபவை.

தெய்வங்கள் உருவாகி உருமாறிச்செல்வதற்கு நியதமான ஒரு செல்நெறி இல்லை. விதிகளும் இல்லை. ஏன் அப்படி நிகழ்கிறது என ஆய்வாளன் கூர்ந்து ஆராயலாம். தன் தரப்பை முன்வைக்கலாம். அவ்வாறு பலதரப்புகள் உருவாகிவரும்போது அவற்றுக்கிடையே உள்ள விவாதம் மூலம் ஒரு பொதுப்புரிதல் திரண்டு வரலாம். ஆனால் இங்கே அதைப்பற்றிப்பேச நிதானமான நோக்கும் ஆய்வுமுறைமையும் கொண்ட ஆய்வாளர்கள் மிகமிகக்குறைவு. அதிகம் சத்தம்போட்டு நம்மால் அதிகமாக அறியப்படுபவர்கள் தங்கள் எளிய அரசியலையும் சாதிக்காழ்ப்புகளையும் ஆய்வென்றபேரில் வெளியிடுபவர்கள். அவர்களைக் கடந்துசென்று நாமே சிந்திக்கவேண்டிய கட்டாயம் இன்று உருவாகியிருக்கிறது.

தெய்வங்கள் மாற்றமடைவது பலவகையில். பெருந்தெய்வ வழிபாடு கொண்ட மதங்களுடனோ தத்துவமதங்களுடனோ இணைகையில் அவை மாறுதலடைகின்றன. உதாரணம் சாத்தன் என்னும் தொல்தமிழ் நாட்டார்த் தெய்வம் பௌத்தத் தொடர்பால் போதிசத்வருக்குரிய அடையாளங்கள் பெற்று பௌத்தம் மறைந்தபின் இந்துமரபுக்குள் சாஸ்தாவாக அமர்ந்திருப்பது. இன்னொருவகை, அந்தத்தெய்வத்திற்குரிய குடிகள் தாங்கள் அடையும் மாற்றத்திற்கு ஏற்ப தெய்வங்களை மாற்றமடையச்ச்யெவது. இன்று பெரும்பாலான நாட்டார்தெய்வங்கள் அவர்களின் வன்மையான இயல்புகளை இழந்து வருவது இவ்வாறுதான். சுடலைமாடசாமி அருள்மிகுசுடலைமாடனாக ஆவதை கவனித்தால் இது தெரியும்.

என் வீட்டருகே ஒரு சுடலைமாடச்சாமி கோயில் உள்ளது. நான் கல்லூரியில்படிக்கையில் அது சூழ்ந்திருக்கும் வயல்களின் நடுவே இருக்கும் சுடுகாட்டில் நின்றிருக்கும் ஓர் ஆலமரத்தடியில் கூம்புவடிவ மண்அமைப்பாக நிறுவப்பட்டிருந்தது. இரு எவர்சில்வர் கண்கள், ஒரு பெரிய வாய், அவ்வளவுதான். அருகே சிதைமேடை. வருடத்திற்கு இருபது பிணம் எரியும். யாதவ சமூகத்திற்குச் சொந்தமான சுடுகாடு அது. சாமிக்கு வருடத்தில் இருமுறை கொடை. படுக்கை என்பார்கள். ஆடுவெட்டி அந்தக்கறியை சோறுடன் சேர்த்துச் சமைத்த ஊன்சோறு.

அங்கே சாரதா நகர் உருவாகி வந்தது, காரணம் நகர விரிவாக்கம். அந்தப்பகுதி மதிப்புமிக்க நிலமாக மாறியது. சுடுகாட்டைச்சுற்றி நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டன. அவர்கள் பணம் கொடுக்கவே சுடுகாட்டை மேலும் மலையடிவாரம் நோக்கி அகற்றிக்கொண்டனர். நான் 2000- த்தில் அங்கே குடிவந்தபோதுகூட அச்சுடுகாடு அதேபோலத்தான் இருந்தது. பத்துவருடம் முன்புதான் கடைசிப்பிணம் அங்கே எரிந்தது.

இப்போது அது அருள்மிகு சுடலைமாடசாமி கோயில். அங்கே அய்யர் வந்து பூசை செய்கிறார். சாமிக்கு சைவம்தான் படையல். இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது ? யாரும் அதை மாற்றவில்லை. கோனார் சமூகம் பொருளியல் மேம்பாடு அடைந்தது. கல்வி முன்னேற்றம் அடைந்தது. அவர்களின் பழைய வாழ்க்கைமுறை மாறியது. அந்நிலம் மதிப்புமிக்கதாக ஆகியது. பெரும்பாலான சுடலைமாடன், மாரியம்மன், முத்தாலம்மன் கோயில்கள் மேம்பாடுஅடைந்தது இப்பின்னணியிலேயே.

இதன் மறுபக்கமாக, பின்னால்சென்றுதான் அந்த தெய்வங்கள் அந்தக்குடிகளுக்கிடையே செலுத்தும் செல்வாக்கை நோக்கவேண்டும். வன்முறை கொண்ட குடித்தெய்வங்கள் அக்குடிகளின் ஆழத்தில் வன்முறைமனநிலையை நிலைநிறுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதை இன்றும் தமிழகத்தில் பலசாதிகளிடம் நாம் காணமுடியும் அக்குடிகளிடமிருந்து வன்முறைமனநிலையை அகற்றவேண்டுமென்றால் அந்தத் தெய்வங்களை அகற்றவேண்டும் என வாதிடுவதில் ஒரு நடைமுறை நியாயம் உள்ளது. வன்முறை அக்குடியில் இல்லாமலானால் உடனே தெய்வமும் இயல்பாகவே வன்முறையை இழப்பதே அதற்கான ஆதாரம்.

நாராயணகுருவைப்போன்ற ஒரு சமூகசீர்திருத்தவாதி, தத்துவஞானி, மெய்யுணர்ந்தவர் தன் சமூகத்திற்காக அதைச்செய்ததற்கான வரலாற்றுக்காரணம் இதுவே. அவர் கொலைத்தெய்வங்களை, பலித்தெய்வங்களை அகற்றிவிட்டு அங்கே கல்வித்தெய்வமான சரஸ்வதியை நிறுவினார். அத்வைத ஆப்தவாக்கியத்தை தெய்வமாக்கினார். அது நேரடியாகவே பெரிய விளைவை உருவாக்கியது. கல்வியறிவற்றவர்களும் கள்ளிறக்கும் தொழில்செய்தவர்களும் அடிதடிச்சாதியான ஈழவர் கல்வியில் இந்தியாவுக்கே முன்னுதாரணமான சாதியாக மாறினர். ஒரே தலைமுறைக்குள்.

இது அதே தெய்வங்கள் பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் நுழைந்து தத்துவார்த்தமாக விளக்கப்படும்போது தேவையாவதில்லை. காளிக்கும் இன்னொரு எளிய நாட்டார்தெய்வத்துக்குமான வேறுபாடு அதுதான். காளிக்கு சாக்த மெய்ஞான மரபின் மிகப்பிரம்மாண்டமான தத்துவப்பின்புலமும் மெய்யியல் பின்புலமும் உள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர் காளியை அந்தப்பின்புலத்திலேயே புரிந்துகொண்டார். ஏன் , வன்முறைத்தெய்வங்களை அகற்றிய நாராயணகுருவே காளிநாடகம்என்னும் உக்கிரமான கவிதைநூலை இயற்றியிருக்கிறார். காளியின் நடனத்தைப் பற்றியது அது. அந்தக்காளி வன்முறையின் வடிவம் அல்ல. இப்பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் ஆற்றலின் வடிவம்.

ஆனால் கொலைத்தெய்வங்களையும் பலித்தெய்வங்களையும் அகற்றுவது வரலாற்றுநீக்கம் செய்வதாகும். அதை நாராயணகுரு கருத்தில்கொள்ளவில்லை. அது அக்கால வழக்கம். பாரதி மாடனை காடனை வேடனைப்போற்றி மயங்கும் அறிவிலிகாள்என்றதும் மறைமலை அடிகளும் வள்ளலாரும் சிறுதெய்வ வழிபாட்ட முற்றாக நிராகரித்ததும் அந்தப்பின்னணியிலேயே .குடித்தெய்வங்களை முற்றாக அகற்ற அவரால் முடியவில்லை என்றாலும் ஈழவர் கணிசமான வரலாற்றுப்பின்புலத்தை இழந்தனர். அத்தெய்வங்கள் வன்முறையை இழந்து உருமாற்றம் அடைவதே சாத்தியமான சிறந்த நடைமுறை வழியாக உள்ளது.

ஜெ

லம்மன் கோயில்கள் மேம்பாடுஅடைந்தது இப்பின்னணியிலேயே.

இதன் மறுபக்கமாக, பின்னால்சென்றுதான் அந்த தெய்வங்கள் அந்தக்குடிகளுக்கிடையே செலுத்தும் செல்வாக்கை நோக்கவேண்டும். வன்முறை கொண்ட குடித்தெய்வங்கள் அக்குடிகளின் ஆழத்தில் வன்முறைமனநிலையை நிலைநிறுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதை இன்றும் தமிழகத்தில் பலசாதிகளிடம் நாம் காணமுடியும் அக்குடிகளிடமிருந்து வன்முறைமனநிலையை அகற்றவேண்டுமென்றால் அந்தத் தெய்வங்களை அகற்றவேண்டும் என வாதிடுவதில் ஒரு நடைமுறை நியாயம் உள்ளது. வன்முறை அக்குடியில் இல்லாமலானால் உடனே தெய்வமும் இயல்பாகவே வன்முறையை இழப்பதே அதற்கான ஆதாரம்.

நாராயணகுருவைப்போன்ற ஒரு சமூகசீர்திருத்தவாதி, தத்துவஞானி, மெய்யுணர்ந்தவர் தன் சமூகத்திற்காக அதைச்செய்ததற்கான வரலாற்றுக்காரணம் இதுவே. அவர் கொலைத்தெய்வங்களை, பலித்தெய்வங்களை அகற்றிவிட்டு அங்கே கல்வித்தெய்வமான சரஸ்வதியை நிறுவினார். அத்வைத ஆப்தவாக்கியத்தை தெய்வமாக்கினார். அது நேரடியாகவே பெரிய விளைவை உருவாக்கியது. கல்வியறிவற்றவர்களும் கள்ளிறக்கும் தொழில்செய்தவர்களும் அடிதடிச்சாதியான ஈழவர் கல்வியில் இந்தியாவுக்கே முன்னுதாரணமான சாதியாக மாறினர். ஒரே தலைமுறைக்குள்.

இது அதே தெய்வங்கள் பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் நுழைந்து தத்துவார்த்தமாக விளக்கப்படும்போது தேவையாவதில்லை. காளிக்கும் இன்னொரு எளிய நாட்டார்தெய்வத்துக்குமான வேறுபாடு அதுதான். காளிக்கு சாக்த மெய்ஞான மரபின் மிகப்பிரம்மாண்டமான தத்துவப்பின்புலமும் மெய்யியல் பின்புலமும் உள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர் காளியை அந்தப்பின்புலத்திலேயே புரிந்துகொண்டார். ஏன் , வன்முறைத்தெய்வங்களை அகற்றிய நாராயணகுருவே காளிநாடகம்என்னும் உக்கிரமான கவிதைநூலை இயற்றியிருக்கிறார். காளியின் நடனத்தைப் பற்றியது அது. அந்தக்காளி வன்முறையின் வடிவம் அல்ல. இப்பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் ஆற்றலின் வடிவம்.

ஆனால் கொலைத்தெய்வங்களையும் பலித்தெய்வங்களையும் அகற்றுவது வரலாற்றுநீக்கம் செய்வதாகும். அதை நாராயணகுரு கருத்தில்கொள்ளவில்லை. அது அக்கால வழக்கம். பாரதி மாடனை காடனை வேடனைப்போற்றி மயங்கும் அறிவிலிகாள்என்றதும் மறைமலை அடிகளும் வள்ளலாரும் சிறுதெய்வ வழிபாட்ட முற்றாக நிராகரித்ததும் அந்தப்பின்னணியிலேயே .குடித்தெய்வங்களை முற்றாக அகற்ற அவரால் முடியவில்லை என்றாலும் ஈழவர் கணிசமான வரலாற்றுப்பின்புலத்தை இழந்தனர். அத்தெய்வங்கள் வன்முறையை இழந்து உருமாற்றம் அடைவதே சாத்தியமான சிறந்த நடைமுறை வழியாக உள்ளது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60

$
0
0

[ 3 ]

சுஃப்ர கௌசிகரின் குருநிலையில் பாண்டவ நால்வரும் திரௌபதியும் தருமனுக்காகக் காத்து தங்கியிருந்தார்கள். வேள்விநெருப்பில் மெய் அவியாக்கி முழுமைபெற்ற சுஃப்ர கௌசிகரின் சாம்பலுடன் அவரது மாணவர்கள் மித்ரனும் சுஷமனும் கிளம்பிசென்றுவிட்டபின் அவர்கள் மட்டுமே அங்கே எஞ்சினர். வேள்விச்சாலையில் சகதேவன் நாளும் எரியோம்பினான். அர்ஜுனன் பெரும்பாலும் சூழ்ந்திருந்த பொட்டலிலும் காட்டிலும் அலைந்துகொண்டிருந்தான். பீமன் அவர்களுக்கு உணவுதேடி சமைத்து அளித்தான். அங்கு வாழ்ந்த அந்நாட்களில் இரட்டையர் மட்டுமே ஒருவரோடொருவர் உரையாடினர். மற்றவர்கள் அன்றாடத் தேவைக்குமேல் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் செயல்களாலான வட்டத்திற்குள் முற்றிலும் தனிமையில் வாழ்ந்தனர்.

யக்‌ஷவனத்திலிருந்து திரும்பி வந்தபின் அங்கு நடந்தவற்றை பீமன் திரௌபதியிடம் சொன்னபோது அவள் விழிகளில் எந்த உணர்வும் இன்றி அதை கேட்டுக்கொண்டாள். மீண்டும் ஒருமுறைகூட அவள் தருமனைப்பற்றி உசாவவில்லை. எளிய அன்றாடச் செயல்களே அவளை முள்வேலியெனச் சூழ்ந்துகொண்டன. அதற்குள் அவள் சிலதருணங்களில் நூற்றுக்கிழவிபோலவும் சிலதருணங்களில் பாவாடைச்சிறுமிபோலவும் புழங்கினாள். செயலற்றிருக்கையில் முற்றமைதிக்கு மீண்டு கற்சிலையென்றானாள். அவளை முழுமையாக தவிர்த்து வாழ பாண்டவர்களும் பழகிவிட்டிருந்தார்கள்.

எப்போதேனும் அவள் விழிகளை சந்திக்கையில் மட்டும் அவர்கள் நெஞ்சு அதிர்ந்தனர். நோக்கில் அத்தனை அசைவின்மை மானுடருக்கு கைகூடுமா என்று நகுலன் வியந்தான். சகதேவன் “மானுட எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்கள் இரக்கத்திற்குரியவர்கள்” என்றான். நகுலன் அவன் சொன்னதை விளங்காமல் கேட்டுவிட்டு “ஆனால் அத்தனை மானுடரும் மானுடருக்குரிய எல்லைகளை மீறுவதற்காகத்தானே முயன்றுகொண்டிருக்கிறார்கள்? அவ்வெல்லைக்கோட்டில்தானே முட்டிமோதுகிறார்கள்?” என்றான். “ஆம், அந்த ஆணவமே இப்புவியிலுள்ள அனைத்தையும் படைத்தது. இங்கு இத்தனை துயரையும் நிறைத்தது” என்றான் சகதேவன். “நீ மூத்தவரைப்போல் பேசத்தொடங்கிவிட்டாய்” என்றான் நகுலன். சகதேவன் புன்னகைத்தான்.

அணையும் புல்நுனியில் இருந்து பற்றிக்கொள்ளும் அடுத்த புல்நுனி என நாள்கள் பிறந்து அணைந்து சென்றுகொண்டிருந்தன. அங்கு எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதை அவர்கள் உள்ளமுகப்பில் இருந்து விலக்கினர். ஆழுள்ளத்தில் அதை இருளில் வைத்தனர். அதற்காக நாட்செயல்களில் மிகையான நுணுக்கத்துடன் ஈடுபட்டனர். நகுலன் இல்லத்தையும் சூழலையும் நாளுக்கு மூன்றுமுறை தூய்மை செய்தான். கலங்களைத் துலக்கி பொன் என மாற்றினான். சகதேவன் வேள்விச்சாலையை பிழையற்றதாக ஆக்கினான். பீமன் நாளும் ஒருவகை கனி கொண்டுவந்தான். புதுவகை கீரையை சமைத்துக்காட்டினான்.

ஒவ்வொருநாளும் காலையில் அரணிக்கட்டையுடன் முற்றத்திலிறங்கும்போது சகதேவன் விழியோட்டி வானெல்லை வரை நோக்குவதுண்டு. இரவு கதவுப்படலை மூடும்போது இருள்நிலம் வானைத் தொடும் கோட்டில் நிழலசைவுக்காக விழிசென்று தேடிமீளும். நாள் செல்லச்செல்ல விழிகள் எதிர்பார்ப்பின்றி நோக்கி ஏமாற்றமின்றி திரும்பிக்கொள்ளலாயின. ஆனால் ஒவ்வொருநாளும் துயிலணையும் மயக்கில் அவ்வெண்ணமே இறுதியாக எஞ்சிக் கரைந்தது. துயில் கலையும் விழிப்பில் அவ்வெண்ணமே முதலில் எழுந்து வந்தது.

முன்காலையிலேயே வானம் ஒளிகொள்ளத் தொடங்கும் வேனிற்புலரியில் வேள்விக்காக எரியெழுப்ப அரணிக்கட்டையுடன் சகதேவன் குடிலைவிட்டு வெளியே சென்றபோது முற்றத்தின் வடக்குஎல்லையில் கிளைதாழ்ந்த முட்புதர் மரங்களுக்கு அப்பால் நிழலாடுவதைக் கண்டான். மான் என எண்ணி விழிகூர்ந்த மறுகணமே மெய்சிலிர்த்தான். அதன் பின்னரே சித்தம் உணர்ந்தது. நின்ற இடத்திலேயே உடல்விதிர்த்து தவித்து பின்னர் “மூத்தவரே!” என்று கூவியபடி இருகைகளையும் விரித்துக்கொண்டு ஓடி அங்கு நின்றிருந்த கருகிய மானுட உருவத்தின் காலடியில் விழுந்தான்.

அவன் குரலை பிற மூவரும் கேட்டனர். எவரும் பொருள்மயக்கம் கொள்ளவில்லை. முன்பே அங்கு செவிகூர்ந்திருந்த எண்ணம் ஒன்றையே அக்குரல் சென்று தொட்டது. கண்ணீருடன் அவர்கள் வெளியே ஓடிவந்தனர். பீமன் நெஞ்சில் ஓங்கி அறைந்து “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவியபடி ஓடிச்செல்ல பின்னால் சென்ற அர்ஜுனன் “மூத்தவரே நில்லுங்கள்… அவரை தொடாதீர்கள்!” என்றான். இருகைகளையும் தலைக்குமேல் தூக்கியபடி அழுகையில் உறைந்த முகத்துடன் பீமன் அசைவிழந்தான். “அவர் உடலில் தோலே இல்லை… தொட்டால் தசை உரிந்துவிடும்” என்றான் அர்ஜுனன்.

தருமன் காட்டுத்தீயில் வெந்து கருகி விழுந்த பறவைபோல் தெரிந்தார். உடலெங்கும் கருகிய தோல் வழன்று இழுபட்டிருக்க பல இடங்களில் வெள்ளெலும்பு வெளித்தெரிந்தது. கழுத்தில் நீலநரம்புகள் தோலோ தசையோ இன்றி தனித்து இழுபட்டு அசைந்தன. காதுமடல்களும் கைவிரல் முனைகளும் உருகி வழிந்திருந்தன. உதடுகள் வெந்து மறைந்திருக்க பற்கள் அற்ற வாய் கருகிய தசைக்குழியாக பதைத்தது. விழிகள் மட்டும் இரு செந்நிற மணிகள் என சுடர்கொண்டிருந்தன.

“மூத்தவரே, வருக!” என்றான் அர்ஜுனன். அவர்கள் நடுவே மெல்ல தத்தும் கால்களுடன் தருமன் நடந்தார். அர்ஜுனன் பீமனிடம் “மூத்தவரே, அவர் அமர்வதற்கு மெல்லிய தளிரிலைகளால் பீடம் அமைக்கவேண்டும். அவர் உண்பதற்கு நறுந்தேன் அன்றி பிற ஏதும் அளிக்கப்படலாகாது” என்றான். “இதோ” என பீமன் திரும்பி ஓடினான். “அவர் இன்னும் நம்மை அறியவில்லை. உள்ளமைந்த சித்தத்துளி ஒன்றில் அமர்ந்த குடித்தெய்வம் ஒன்று இங்கு அவரை கொண்டுவந்துள்ளது” என்றான் அர்ஜுனன்.

அவர்களால் அழைத்துச்செல்லப்பட்டு குடிலுக்குள் சென்று தளிரிலைப் பீடத்தில் தருமன் அமர்ந்தார். நகுலன் கொண்டுவந்து வாயுடன் பொருத்திய மலைத்தேனை அருந்தினார். அவர் உடல்மீதும் தேனை வழிய ஊற்றினார்கள். அவர் விழிகள் அவர்களைக் கடந்து எங்கோ நோக்கிக்கொண்டிருந்தன. தேன் உள்ளே சென்றதும் தசைகள் விடுபட்டுத் தளர மூச்சு சீரடைவதை காணமுடிந்தது. உடல் விரைப்பிழந்து வலப்பக்கம் சரிய அவர் துயிலத்தொடங்கினார். அவர் உடலை நோக்கியபடி அவர்கள் சொல்மறந்து நின்றிருந்தனர்.

ஆடையில் காற்றாடுவது எரியோசை எனக் கேட்டு அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கியபோது குடில்வாயிலில் நின்றிருந்த திரௌபதியின் விழிகளை சந்தித்தான். அவனை உடலால் உணர்ந்துகொண்டிருந்த பிற மூவரும் திரும்பி அவளை நோக்கினர். அவள் விழிகள் பொருளிழந்த வெறிப்புடன் தருமனை நோக்கிக்கொண்டிருந்தன. அவள் அவர்களின் நோக்கை சற்றுநேரம் கழித்தே உணர்ந்தாள். அசைவின்மை துளி விழுந்தது என கலைய விழிதிருப்பி திரும்பிச்சென்றாள். அவள் நீள்கூந்தலின் அலையை நோக்கி நின்றனர் நால்வரும்.

அர்ஜுனன் நீள்மூச்சுடன் திரும்பி “மூத்தவர் இப்போது கூட்டுப்புழு போல. தேன் ஒன்றே அவரை மீட்டு வளர்க்கும் அமுது” என்றான். “மலைமுழுக்க தேன்தட்டுகள் உள்ளன. நான் வேண்டிய அளவுக்கு தேன் கொண்டுவருகிறேன்” என்றான் பீமன். அர்ஜுனன் “எப்போதும் அவர் அருகே ஒருவர் இருக்கவேண்டும். ஒரு சுடர்விளக்கு எரியவும் வேண்டும். அவர் இங்கு வந்தது பல்லாயிரம் கோடி நிகழ்தகவுகளில் ஒன்றால்தான். அவ்வண்ணமே மீண்டு செல்லவும் கூடும்” என்றான்.

பீமன் மென்மரத்தைக் குடைந்து உருவாக்கிய நீண்ட படகுபோன்ற கலத்தில் தேன் ஊற்றப்பட்டு அதற்குள் தருமன் உடல்மூழ்க படுக்க வைக்கப்பட்டார். தேனே அவருக்கு உணவாகவும் அளிக்கப்பட்டது. மார்பின் எலும்புப் பஞ்சரத்தை அசைத்தபடி மெல்லிய மூச்சு ஓடிக்கொண்டிருந்தது. இமைகள் சுருங்கி அதிர்ந்தன. பதினான்கு நாட்களுக்குப்பின் அவரை வெளியே எடுத்தபோது எலும்புகளை தசை வளர்ந்து மூடத் தொடங்கியிருந்தது. வெளியே தளிர்ப்படுக்கையில் படுத்திருந்த அவர்மேல் ஈரம் உலராமல் தொடர்ச்சியாக தேன்விழுது ஊற்றப்பட்டது. தேனுடன் பழச்சாறும் கலந்து உணவளிக்கப்பட்டது.

நாற்பத்தெட்டு நாட்களில் தருமன் மானுட உடல் கொண்டவராக ஆனார். அவர் உடல்மேல் நாளுக்கு ஏழுமுறை தேன் பூசப்பட்டது. மேலும் நாற்பத்தெட்டு நாட்களில் அவர் உடல்மேல் தோல் முளைத்து மூடியது. பழங்களும் அன்னச்சாறும் உண்ணத்தொடங்கினார். உடலில் முடி முளைக்கலாயிற்று. கைவிரல்களில் நகங்கள் எழுந்தன. பற்கள் உதிர்ந்து கருகியிருந்த ஈறுகளில் இளமைந்தரைப்போல பால்பற்கள் தோன்றின. இமைகளில் முடிகள் நீண்டெழுந்தன.

மேலும் நாற்பத்தெட்டு நாட்களில் அவர் முழுமையாக மீண்டு எழுந்தார். கைகளைப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றார். சுவர்தொட்டு மெல்ல கால்வைத்து நடந்தார். வெளியே பெருகிப்பெய்த வெயிலை நோக்கியபடி நின்றார்.

“இனி வெயிலே அவருக்கு உயிர்” என்றான் அர்ஜுனன். “கதிரவனிடமிருந்தே உடலை இயக்கும் ஏழு அனல்களும் எழுகின்றன என்பார்கள்.” வெயிலில் நிற்கத்தொடங்கியதும் அவர் உடல் புதுமழை பெற்ற புல்வெளி என நோக்க நோக்கத் தளிர்கொண்டது. தோல் இளைஞர்களுக்குரிய மெருகு கொண்டது. கைநகங்கள் பொன்னென மின்னின. வெண்ணிறமான தலைமுடியும் தாடியும் பனிபோல பளபளத்தன. புன்னகைக்கையில் பற்கள் பரல்மீன் நிரை நீரிலெழுவதுபோல் மின்னி மறைந்தன. முகத்தில் என்றோ உடலுக்குள் புகுந்து மறைந்த இளமைந்தன் அவ்வப்போது தோன்றி மறைந்தான்.

“எரியுண்ட அடிமரத்தில் எழும் புதுத்தளிர்போல” என்றான் நகுலன். நோக்கும்தோறும் விழிவிடாய்கொள்ளும் அழகு கொண்டவராக தருமன் ஆனார். அவர் திண்ணையில் அமர்ந்திருக்கையில் அப்பால் நின்று நோக்கிய இளையோர் முகம் மலர்ந்து அங்கேயே நெடுநேரம் நின்றனர். “மீண்டு வந்தவர் மூத்தவரேதானா? இல்லை, ஏதேனும் கந்தர்வனா?” என்றான் நகுலன். “இப்பேரழகு மானுடர் அடைவதல்ல. உண்மையிலேயே எனக்கு அச்சமாக இருக்கிறது. மூத்தவர் இனி நம்மவர் அல்லவா? இப்புவியிலிருந்து விலகிச் சென்றுவிடுவாரா?”

சகதேவன் “நெருப்பு தீண்டிய அனைத்தும் நெருப்பாகின்றன என்பார்கள். அவர் அடைந்த மெய்மையின் ஒளி அது” என்றான். “இப்படியே இவர் சுடராகி மறைந்தால், சிறகுகொண்டு விண்ணிலெழுந்தால் வியப்பு கொள்ளமாட்டேன்” என்றான் நகுலன். “இளமை மறைவதில்லை என்பர் மருத்துவர். அது அன்னமயகோசத்திலிருந்து ஆனந்தமயகோசம் நோக்கி உள்வாங்கிச் செல்கிறது. ஜாக்ரத்திலிருந்து துரியம் நோக்கி புதைகிறது. அதை மீட்டு எடுக்கமுடியும்.” நகுலன் “காலத்தை மீட்கமுடியுமா?” என்றான். “முடியும், நிகழ்காலத்திற்குள் நுண்வடிவில் உறைகிறது இறந்தகாலம்” என்றான் சகதேவன்.

தருமன் இருந்த இடமே ஒளியடைந்தது. அவரைச் சூழ்ந்திருந்த அனைத்தும் அவர் அழகை பகிர்ந்துகொண்டன. அவர் அவர்களை அறியவில்லை. அவர் விழிகள் அதே கடந்த நோக்கின் ஒளியை அணையாது சூடியிருந்தன. அங்குள்ள கற்களையும் மரங்களையும் பறவைகளையும் மானுடரையும் அவர் பிரித்தறியவில்லை. ஏனென்றால் அவற்றிலிருந்து தன்னையும் அவர் தனித்துணரவில்லை.

பின்னர் தருமன் பல்முளைத்து காலெழுந்து உலகை அறியும் இளமைந்தன் என தன்னுள் இருந்து மீண்டுவந்தார். நீர்கொட்டும் சிற்றருவியருகே சென்று கைகளால் அளைந்து விளையாடினார். ஓடைக்கரையில் மண் அள்ளிவைத்து அணைகட்டி பின் அதை காலால் தட்டி மகிழ்ந்து சிரித்தார். குறுங்காட்டுக்குள் சென்று காற்றிலாடும் கிளைகளையும் இலைநிழல்களின் ஆடலையும் நோக்கி நின்றார். வண்ணத்துப்பூச்சிகளை, ஒளிச்சரடில் ஆடிப்பறக்கும் சிலந்தியை, சிற்றெறும்புகளை பேருவகையுடன் கண்டுகொண்டார்.

திண்ணைமேல் ஏறிவந்து கைகூப்பிய அணில்பிள்ளை அவரை திகைப்பும் பின் களிப்பும் கொள்ளச்செய்தது. கவைக்கொம்புடன் வந்த மான் அவரை அஞ்சி இல்லத்திற்குள் புகுந்து ஒளியச்செய்தது. மறுநாள் அதை அணுகி அதன் கழுத்தில் தொங்கிய மயிர்க்கற்றையைப் பிடித்து இழுத்தார். அதனுடன் ஓடி கூவிச்சிரித்தார். காட்டுக்குள் சென்று மறைந்து பின் உடலெங்கும் மண்ணும் பச்சிலைமணமுமாக திரும்பி வந்தார். “எண்ணியிருக்கையில் ஒருகணம் அவர் மூத்தவரல்ல, தந்தை பாண்டுதான் என நினைப்பெழுந்தது, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். பீமன் திடுக்கிட்டுத் திரும்பி அப்பால் எம்பி இலைகள் நடுவே வலைகட்டிய சிலந்தியை தொடமுயன்றுகொண்டிருந்த தருமனைப் பார்த்தபின் முகம் மலர்ந்து “ஆம், மீண்டுவந்திருக்கிறார்” என்றான்.

ஆலமரத்தளிர் இலையாவதுபோல நாள்தோறும் அவர் மாறிக்கொண்டிருந்தார். மெல்ல முதிர்வுகொண்டு ஆழ்ந்த நோக்கும் அடங்கிய புன்னகையும் கொண்டவராக ஆனார். இளையோரை அடையாளம் கண்டார். “மந்தா!” என அவர் தன்னை முதல்முறையாக அழைத்த நாளில் பீமன் விம்மலுடன் தலையைப் பற்றியபடி உடலை குனித்துக்கொண்டான். “எங்கள் பெயர்கள் அவர் நாவிலெழுகையில் மீண்டும் பிறந்துவந்தோம், மூத்தவரே” என்றான் நகுலன். “அவரில் எங்களுடையவை என எஞ்சுவன எவை? எங்கள் பிழைகளையும் நினைவுகூர்வாரா? மூத்தவரே, அவர் மடியில் புதிய மழலையென பிறந்துவிழுந்து சொல்கற்று எழுந்து வர விழைகிறேன்” என்றான் சகதேவன்.

நினைவிலிருந்து நினைவு என மீட்டு வளர்த்து அவர் தன்னை மீட்டுக்கொண்டே இருந்தார். முதல்முறையாக பாண்டு அவர் சொல்லில் எழுந்தபோது அர்ஜுனன் திகைத்தான். “செண்பகமலர் உன்னை அமைதியிழக்கச் செய்கிறதா, இளையோனே?” என்றார். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். எவரிடமும் சொல்லாத அந்த அகச்செய்தியை அவர் எப்படி அறிந்தார் என எண்ணிக்கொண்டிருக்கையிலேயே “தந்தை உனக்கென விட்டுச்சென்றது அது. செண்பகமணம் அருவிபோல சித்தக்கலத்தில் விழுவது. கலம் நிறையவே இயலாது” என்றார்.

அவர் அங்கு வந்த முதல்நாளுக்குப்பின் திரௌபதி அவரை வந்துநோக்கவில்லை. அவரை இயல்பான அசைவுகளுடனும் பழக்கமான விழிகளுடனும் கடந்துசென்றாள். அவர் அடைந்துகொண்டிருந்த மாற்றங்கள் எதையும் அவள் அறிந்ததாகவே தெரியவில்லை. அவர் அவளை அடையாளம் கண்டு “தேவி!” என்று அழைத்த முதல்நாளில் மட்டும் விழிகள் சற்றே சுருங்க நின்று நோக்கினாள். “நீ உன்னை எரிப்பனவற்றால் ஒளிகொண்டிருக்கிறாய்” என்றார் தருமன். இளமைந்தருக்குரிய புன்னகையுடன் எழுந்து அவளருகே வந்து “எரிகையிலேயே நீ உன்னை உணர்கிறாய் போலும்” என்றார்.

அவள் அவர் தன்னை முற்றிலும் நினைவுகூர்ந்துவிட்டாரா என்று குழம்பியவள் போல் பார்த்தாள். “குழவியரை தந்தையர் முதல்எண்ணமென கருக்கொள்ளும் தருணம் தெய்வங்கள் வகுப்பது. அந்தத் தருணமே அவர்களென பருவுடன் திரட்டுகிறது” என்று அவர் சொன்னதும் அவள் ஒருகணம் சினம் கொண்டாள். பின்னர் மெல்ல அடங்கி தலைசொடுக்கி குழல்கற்றையை பின்னால் தள்ளிவிட்டு இதழ்நீள வெற்றுப்புன்னகை புரிந்து அவரைக் கடந்து சென்றாள்.

அதன்பின் அவள் தன்னை மேலும் இறுக்கிக்கொண்டாள். அவர் முன் மறுநாள் வந்தபோது அதுவரை இல்லாதிருந்த இயல்புத்தன்மை அவளிலிருந்தது. அவருக்குரிய பணிகளனைத்தையும் செய்தாள். அவர் பேசியபோது எளிய உகந்த சொற்களால் மறுமொழி உரைத்தாள். புன்னகைத்தாள், கனிவும் கொண்டாள். எவ்வகையிலும் அவரை விலக்கவில்லை. அவர் அவளை அணுக ஒரு சிறுதடையையேனும் வெளிப்படுத்தவுமில்லை. ஆனால் அவ்வியல்புத்தன்மையாலேயே முழுமையாக தன்னை அரணிட்டு பூட்டிக்கொண்டிருந்தாள். முதல்நாள் அவளுடைய இயல்புநிலையை அவள் மீண்டுவருவதன் குறி என கொண்ட பாண்டவர்கள் மறுநாளே அது முற்றிலும் பழுதில்லா கோட்டை என்று உணர்ந்துகொண்டனர்.

அவரும் அதை அறிந்திருந்தார் என அவர்கள் உணர்ந்தனர். அவர் அறியமுடியாத ஏதாவது இருக்கவியலுமா என்றே ஐயுற்றனர். ஆனால் அவர் பிறர் நடத்தையால் உளம் தொடப்படாத நிலையை அடைந்துவிட்டிருந்தார். அவர்களை அன்று சந்தித்தவர்போல ஒவ்வொருநாளும் பழகினார். “நீரோடை போலிருக்கிறார் மூத்தவர். பாறைகளையும் முட்புதர்களையும் சரிவுகளையும் தழுவி இயல்பாக ஒழுகிச் செல்கிறார்” என்றான் நகுலன்.

[ 4 ]

காலையில் எரியோம்பும்பொருட்டு எழுந்த சகதேவன் படுக்கையில் தருமன் இல்லை என்பதைக் கண்டு திகைத்தான். வெளியே சென்று முற்றத்திலும் அப்பால் நிழலுருவாகத் தெரிந்த குறுங்காட்டிலும் அவரைத் தேடினான். பதற்றத்துடன் கொல்லைக்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கீழே படுத்திருந்த பீமனின் கால்களைத் தொட்டு “மூத்தவரே!” என்று அழைத்தான். அவன் தொடுகையை உணர்ந்து எழுந்த பீமன் “சொல்!” என்றான். “மூத்தவரைக் காணவில்லை. எல்லா பக்கங்களிலும் பார்த்துவிட்டேன்” என்றான்.

பீமன் பாய்ந்தெழுந்து இடையில் கைவைத்து ஒருகணம் நின்று செவிகூர்ந்தான். “கிழக்காக… அங்கே பறவையொலிகள் கேட்கின்றன” என்ற பின்னர் வெளியே பாய்ந்து காட்டுக்குள் ஓடினான். “மூத்தவரே, நாங்களும் வருகிறோம்” என்று நகுலன் கூவியபடி ஓட அர்ஜுனன் “அவரைப் பின்தொடர நான் அறிவேன்” என்றான். அவர்கள் குடிலைவிட்டு வெளியே வந்தபோது சிறுகுடிலுக்குள் இருந்து திரௌபதி எழுந்து வந்து வாயிலில் கோட்டுருவாக நின்றிருப்பதைக் கண்டனர். இருளில் அவள் கண்ணொளி மட்டும் தெரிந்தது. அர்ஜுனன் காட்டுக்குள் ஓட நகுலனும் சகதேவனும் பின்தொடர்ந்தனர்.

பீமன் சென்ற வழியை ஓசையினூடாகவே அறிந்து புதர்களை விலக்கியும் பாறைகள் மேல் ஏறித் தாவியும் அர்ஜுனன் சென்றான். பீமன் பெரும்பாலும் மரக்கிளைகள் வழியாகவே சென்றிருந்தான். “பார்த்துவிட்டார்” என்றான் அர்ஜுனன். அவர்களும் அதை எப்படியோ உணர்ந்தார்கள். மூச்சுவாங்க நடக்கத் தொடங்கினர். அவர்கள் இருளில் எழுந்து நின்றிருந்த பெரிய உருளைப்பாறை ஒன்றின் மேல் தருமன் நின்றிருப்பதை கண்டனர். அதன்பின் அருகே இன்னொரு பாறைமேல் நின்ற முள்மரத்தில் மறைந்தவனாக பீமன் நின்றதை கண்டனர்.

ஓசையின்றி அணுகி அவர்கள் பீமனுடன் இணைந்துகொண்டார்கள். “என்ன செய்கிறார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அங்கேயே அசைவில்லாது நின்றிருக்கிறார்” என்றான் பீமன் மூச்சொலியில். அவர்கள் அவரை நோக்கியபடி நின்றிருக்க விழியொளி தெளிந்தபடியே வந்தது. மலர்களும் இலைகளும் இருள்வடிவுக்குள் இருந்து வண்ணவடிவை வெளியே எடுத்தன. இலைப்பரப்புகளில் ஒளி நீர்மையென மிளிர்வுகொண்டது. வான்சரிவில் முகில்முகடுகளில் வெள்ளிவிளிம்புக்கோடு எழுந்தது. தொடுவான்வரியில் வாள்முனைக்கூர் மின்னியது.

“ஒளியே!” என்று ஒரு கரிச்சான் கூவியது. மிகத்தொலைவில் பிறிதொன்று மீளொலித்தது. காட்டுக்குள் பறவைகள் துயிலெழத் தொடங்கின. “நாளே! நாளே!” நாகணவாய் ஒலிக்கத் தொடங்கியது. “காவாய்! காவாய்!” என காகத்தின் ஓசைகள் எழுந்தன. இலைநுனிகளில் நீர்ச்சொட்டுபோல ஒளிமொட்டு நின்றிருக்க காடு வண்ணப்பெருக்கென எழுந்தது. முகில்கள் எரிமுகம் கொண்டன. பறவைப்பெருங்குலம் ஆர்க்க கிழக்குவிளிம்பில் கதிர்விளிம்பு தோன்றியது. நீண்ட கைகள் பரவி வானைத் தழுவின.

தருமன் உடல் ஒளிகொண்டபடியே வருவதை அவர்கள் கண்டார்கள். காலைச்சூரியனின் கதிரொளிப்பு அது என முதலில் எண்ணினர். பின்னர் அவர் உடலில் இருந்து பிற எதிலுமில்லாத ஒளி எழுவதை உணர்ந்தனர். அவர்கள் விழிகூர்ந்து நிற்க தருமன் மேலும் மேலும் ஒளிர்ந்துகொண்டே இருந்தார். அவர் உடலுக்குள் இருந்து அவ்வொளி எழுந்ததுபோல் தோன்றியது. அவர் உடல்மயிரிழைகள் ஒளியாலானவைபோல் தெரிந்தன. குழலும் தாடியும் தழல்போலிருந்தன. அவர் அசையாச்சுடராக அங்கே நின்றார். “எரிந்துவிடுவாரென அஞ்சுகிறேன், மூத்தவரே” என்றான் நகுலன். “தண்ணொளி அது” என்று அர்ஜுனன் சொன்னான்.

SOLVALARKAADU_EPI_60

பின்னர் தன்னிலை கலைந்து மீண்டு மேலெழுந்து நின்ற கதிர்வட்டத்தை நோக்கியபின் தருமன் திரும்பி நடந்தார். பாறைச்சரிவிலிறங்கியபோது அவர்களைப் பார்த்தார். அவர்கள் அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினர். அவர் புன்னகைத்து “அஞ்சவேண்டியதில்லை. நான் உங்களைவிட்டு எங்கும் செல்வதாக இல்லை” என்றார். “அவ்வாறு நாங்கள் எண்ணவில்லை” என்று அர்ஜுனன் சொன்னாலும் அவர்களில் அது உருவாக்கிய ஆறுதலை முகங்கள் காட்டின. “இங்கு வந்து நெடுநாளாகிறது. இன்றே கிளம்புவோம்” என்றார் தருமன். “ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்றான் அர்ஜுனன்.

அவர்கள் நடந்துசெல்லும்போது எதிர்பாராதபடி பீமன் நின்று “மூத்தவரே, தாங்கள் கந்தமாதன மலையுச்சியில் கண்டது என்ன?” என்றான். அர்ஜுனன் திடுக்கிட்டு “மூத்தவரே, இதென்ன கேள்வி?” என்றான். “நான் அதை அறியாமல் அமைதியாக இருக்கமுடியாது. ஒவ்வொருநாளும் என்னைக் கொல்கிறது அது” என்றான் பீமன். “அவர் கடந்து சென்று அறிந்ததை நீங்கள் இங்கிருந்து அறியலாகுமா?” என்றான் அர்ஜுனன் எரிச்சலுடன். “அவர் எங்கிருந்து எதை வேண்டுமென்றாலும் அறிக! என் தமையனிடமிருந்து நான் அறிய முடியாதவை ஏதுமில்லை” என்றான் பீமன். “ஏனென்றால் இப்புவியில் பிறிதொருவரை நான் ஆசிரியனாக ஏற்றதில்லை.”

நகுலன் “மூத்தவரே, வீண்சொல் வேண்டாம், வருக!” என்றான். பீமன் “அதை அறியாமல் இங்கிருந்து ஒரு கால் எடுத்துவைக்கமாட்டேன்” என்றான். அர்ஜுனன் மேலும் ஏதோ சொல்ல முயல தருமன் கைநீட்டித் தடுத்து “மந்தன் சொன்னது உண்மை, அவனுக்கு என்னால் சொல்லமுடியும்” என்றார். அர்ஜுனன் தலைவணங்கி விலகிச்சென்றான். அவனை நகுலனும் சகதேவனும் தொடர்ந்தனர். பீமன் உரக்க “சொல்லுங்கள் மூத்தவரே, நீங்கள் கண்டது என்ன? உணர்ந்தது என்ன?” என்றான்.

“நான் அனலைக் கண்டேன்” என்றார் தருமன். “இப்புவியை ஆட்டுவிக்கும் பேரனலை முடிவிலா வடிவுகளில் கண்டேன். முடிவில் ஒற்றை ஒரு வடிவமாக நேரில் நோக்கினேன்.” பீமன் நோக்கியபடி நின்றான். “மந்தா, அவனை புராணங்கள் ஜடரன் என்றழைக்கின்றன. பசிவடிவன்.” பீமன் மெல்ல மூச்சுவிட்டான். அவன் உடற்தசைகள் தளர்ந்தன. “அன்று நான் கொண்ட மெய்மை இன்றுதான் எனக்கு செயல்வடிவாகத் துலங்கியது. கருக்கிருட்டுக் காலையில் அரைவிழிப்பில் என்னிடம் முன்பு தௌம்யர் சொன்ன ஒரு மந்திரத்தை நினைவுகூர்ந்தேன். சூர்யாஷ்டோத்ர சதநாமம். எழுந்து வந்து நோக்கி நின்றேன். இங்கிருக்கும் கோடி அனல்களுக்கு அங்கு எரியும் அவ்வொரு அனலே நிகராகும் என்று அறிந்தேன்.”

“இங்கு நின்று அவனிடம் கோரினேன், நான் அமுதாகவேண்டும் என்று. என் கைவிரல்கள் ஒவ்வொன்றும் பசுவின் முலைக்காம்புகள் போலாவதை உணர்ந்தேன். என்னிலிருந்து பெருகி இக்காட்டை நிறைத்த பெருக்கைக் கண்டு நின்றேன். பின்பு மீண்டு வந்தேன்.” இரு கைகளையும் விரித்து தருமன் சொன்னார் “இன்று இது அன்னம்குறையாக் கலம்.”

[முழுமை]

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

தொடர்புடைய பதிவுகள்

படைப்பாளியின் துயர் -கடிதங்கள்

$
0
0

images

ஜெ

 

இன்று உங்களின் ”ஆல் படித்”தேன்.  சொல்வளர் காட்டில் நீங்கள் சொல்லியிருப்பது போலவே மரங்கள் வேறு வேறுதான் எனினும் மண் ஒன்|றேதான் . துயரமுற்றவர்கள் இல்லாத இடம் ஏது? அடுத்தவனின் துயரை அறிந்துகொள்பவர்களே குறைவு

 

மனைவி சொன்னதை நம்பாவிட்டாலும் தம்பியை வெளியேற்றுவதற்காக அடித்துக்கொண்டேயிருந்த அந்த அண்ணனின் துயரும் தெரிகிறது இதில்எத்தனை சிக்கலானது இந்த வாழ்வும் உறவுகளும்?.

 

அந்த காரக்குழம்புடன் தக்காளிச்சோறு என் நெஞ்சில் அடைத்துக்கொண்டது நீங்கள் சாப்பிடுகையில்.
துயரம் கொண்டவர்கள்  மட்டுமல்ல துயரில் துணை நிற்பவர்களும், துயரைப்பங்கு போட்டுக்கொள்பவர்களும்   எங்கும் இருக்கிறார்கள் .

மனசு கனத்துக்கிடக்கிறது

 

அன்புடன்

லோகமாதேவி

 

அன்புள்ள லோகமாதேவி,

ஒரு நிகழ்வானாலும் இருபக்கமும் அதில் இருக்கிறது. ஔவை சொன்னதுபோல இட்டார் இடாதார். அண்ணன் முதல்வகை. ஆனால் அதுகூட தம்பியின் இயல்பை மாற்ற முடியவில்லை. ஏனென்றால் அவர் ஆல்

 

ஜெ

 

ஜெ  அவர்களுக்கு,
சமீப காலமாக இளம் வயதில் பல எழுத்தாளர்களுக்கு மரணம் ஏற்படுவது பற்றி  தாங்கள் எழுதி இருந்தீர்கள். படைப்பாற்றலும் உணர்வு ரீதியான துன்பங்களும் பிரிக்க  முடியாதது என்பது முற்றிலும் உண்மை.
இந்தத் துன்பத்திலிருந்து ஒரு படைப்பாளி எப்படித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழே உள்ள கட்டுரை விவரிக்கிறது.
இது நடைமுறையில் சாத்தியம் தானா என்பது பற்றித் தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
சத்திஷ்
அன்புள்ள சதீஷ்
சுவாரசியமான கட்டுரை
ஆனால் சிக்கல் என்னவென்றால் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. அவர்களின் பிரச்சினைகளும் அப்படித்தான். பொதுமைப்படுத்தாமல் நாம் தீர்வுகளை யோசிக்கமுடியாது. பொதுமைப்படுத்தினால் அதற்கு வெளியே நிற்பவனே எழுத்தாளன்
மேலும் எழுத்தாளர்களுக்கு எல்லாமே தெரியும். பிறர் ஆலோசனை, வழிகாட்டுதல் அளிக்கவேண்டிய நிலை எழுத்தாளனுக்கு இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு வாழ்க்கை, மனம் சார்ந்த  ஆலோசனை வழங்குபவன் உண்மையில் அவரது எழுத்தை வாசிக்காதவன், வாசித்தாலும் புரியாதவன்.
தன் ஞானத்தை தனக்குப்பயன்படுத்திக்கொள்ளமுடியாதவனாகவே எழுத்தாளன் இருப்பான். இதுதான் சிக்கல்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பரப்பிலக்கியம்- இலக்கியம்

$
0
0

book3

அன்புள்ள ஜெயமோகன்

என்னுடைய முந்தைய கடிதத்தில் மிக முக்கியமாக நான் நினைத்த ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்தக்கேள்வியை தவிர்த்துவிட்டு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள். அதாவது பரப்புக்கலைகளில் ஒன்றாகிய பரப்பிலக்கியத்தை நீங்கள் எந்த அளவுகோல்களின்படி பார்க்கிறீர்கள்? நீங்களும் பரப்புக்கலையை செவ்வியல்கலையை வைத்து மதிப்பிடக்கூடிய பிழையைத்தானே செய்கிறீர்கள்? பாலகுமாரனை நீங்கள் தி.ஜானகிராமனை அளவுகோலாகக் கொண்டுதானே மதிப்பிடுகிறீர்கள்? இது மட்டும் எப்படி நியாயமாக ஆகும்? ஜெமினி கணேசனுக்கு கொடுக்கப்படும் முழுமையான கவனம் ஏன் பாலகுமாரனுக்கு அளிக்கப்படவில்லை?

சரவணன்,சென்னை

 

kalki_2540843h

அன்புள்ள சரவணன்,

முந்தைய கடிதம் மீதான என் பதிலே மிகப்பெரிதாக ஆகிவிட்டது. அதனுடன் வேறு விஷயங்களை கலக்கவேண்டாம் என நான் நினைத்தேன். உங்கள் கேள்வி முதலில் யார் மனத்திலும் எழுவதுதான். ஆனால் அதற்கான பதில் மிக எளியது. பாலகுமாரனை அல்லது சுஜாதாவை பரப்பிலக்கியத்தின் நாயகர்களாகக் கொள்வதை, அவர்களின் எழுத்த அந்த தளத்தில் முழுமையாக ஆராய்வதை, நானோ அல்லது வேறெந்த இலக்கியவாதிகளோ மறுக்கப்போவதில்லை. நானே அத்தகைய ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றே சொல்கிறேன்.

இங்கே பிரச்சினை என்னவென்றால் அவர்களை இலக்கியவாதி என அடையாளப்படுத்துவதுதான். பரப்பிலக்கியம் இலக்கியம் என்பதன் எல்லைக்கோட்டை அழிப்பதில்தான் முரண்பாடே எழுகிறது. டி.எம்.எஸ் பற்றி ஆராய்வது அவசியம். ஆனால் எம்.டி.ராமநாதனும் டி.எம்.எஸ்ஸும் ஒரே வரிசையில் வைக்கப்பட்டால் ஒரு இசை விமர்சகன் அவர்கள் நடுவே உள்ள வேறுபாட்டைக் கவனப்படுத்தவே முயல்வான்.

அதுதான் இலக்கியத்தில் எ.வி.சுப்ரமணிய அய்யர் ,க.நா.சு காலம் முதல் இன்றுவரை நிகழ்கிறது. என்னுடைய விமர்சனங்கள், ஒப்பீடுகள் அனைத்துமே அந்த வேறுபாட்டை முன்வைக்கதற்காக மட்டுமே. தி.ஜானகிராமன் வேறு பாலகுமாரன் வேறு என்று சொல்லவே அவர்களை நான் நான் ஒப்பிடுகிறேன்.

இந்த வேறுபாடழிதல் எப்படி நிகழ்கிறது. இங்கே பாமரன்கூட பரப்பிசைக்கும் மரபிசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருக்கிறான். அதேபோல பரப்பிலக்கியத்துக்கும் மரபிலக்கியத்துக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு தெரியும். அவை நம் நீண்டகால மரபு ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே அளிக்கும் பண்பாட்டுப் பயிற்சி.

ஆனால் நவீன இலக்கியம், நவீனக் கலைகள் சார்ந்து அத்தகைய பயிற்சி நமக்கு இல்லை. நாம் நவீன இலக்கியம், நவீனகலைகளை நோக்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கண் திறந்தோம். அப்போது விடுதலை தவறிக்கெட்டு, பஞ்சத்தில் வாழ்விழந்து, பாழ்பட்டு நின்ற சமூகமாக இருந்தோம். நமக்கு சோறுதான் முக்கியமாக இருந்தது , கல்வியும் ஞானமும் அல்ல.

ஆகவே நமக்கு சிலதனிநபர்களைச் சார்ந்தே நவீனச் சிந்தனை, நவீன இலக்கியம், நவீனக் கலைகள் அறிமுகமாயின. மிகச்சிறிய வட்டத்தில்தான் அவை நிகழ்ந்தன. ஒரு பெரிய சக்தியாக விளங்கிய பாரதியேகூட 1500 பிரதிகள் விற்ற இதழ்களில்தான் எழுதினான். அந்த நிலை இன்றும் நீடிக்கிறது.ஒரு சமூகமாக நாம் இன்னமும்கூட அவற்றை நோக்கிச் செல்லல்லை

தமிழில் இதழியல் ஆரம்பத்தில் தேசிய இயக்கத்தின் ஒருபகுதியாக, இலட்சியவாத நோக்குடன் உருவாக்கப்பட்டது. அந்த காலத்தை நாம் பாரதிகாலகட்டம் எனலாம். அக்காலகட்டத்தின் மையமும் சிறந்த உதாரணமும் அவர்தான். ராஜம் அய்யர், அ. மாதவையா ஆகியைருவரையும் அந்த யுகத்தின் முக்கியமான அறிஞர்கள் என சொல்வது வழக்கம்.

images

அவர்களால் உருவாக்கப்பட்டதே நவீன இலக்கியம். ஆனால் மிகச்சீக்கிரத்திலேயே நம் இதழியல் அதன் வணிகச் சாத்தியங்களைக் கண்டுகொண்டது. உடனடியாக இன்றும் நம்மிடம் பெரும்செல்வாக்கு செலுத்திவரும் இரு விஷயங்கள் இதழியலில் நுழைந்தன. ஒன்று போலிமருத்துவ விளம்பரங்கள். இரண்டு, குலுக்கல்கள் மற்றும் போட்டிகள்.

இதழியல் வணிகமாக ஆனபோது அதற்குரிய எழுத்தும் உருவாகியது. இவ்வாறு தமிழில் நவீன இலக்கியம் உருவான சிலவருடங்களிலேயே வணிக இலக்கியம் உருவாகிவிட்டது. வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், – ஆகிய மூவரும் அந்தக்காலத்தின் வணிக எழுத்தின் முகங்கள்.

இன்றும் அவர்கள் உருவாக்கிய மூன்று முகங்கள்தான் நம் வணிக இலக்கியத்தை ஆள்கின்றன. கல்கி, அகிலன்,நா.பார்த்தசாரதி, பாலகுமாரன் போன்றோரை வடுவூரார் வழிவந்தவர்கள் எனலாம். அநுத்தமா, லட்சுமி, ரமணிசந்திரன் போன்றோரின் தொடக்கப்புள்ளி வை.மு.கோதைநாயகி அம்மாள். மேதாவி, தேவன், சுஜாதா, ராஜேஷ்குமார் வரையிலானவர்கள் – வழி வந்தவர்கள்

இந்த வணிக எழுத்த்தாளர்கள் பெரும்புகழும் அபாரமான செல்வமும் ஈட்டினார்கள். வடுவூரார் சென்னையில் பங்களா கட்டி தொழிலதிபர் போல வாழ்ந்தவர். இந்த பேரலைக்கு எதிராக டி.எச்.சொக்கலிங்கம் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாற்று இயக்கமே மணிக்கொடி முதலிய இலக்கிய இதழ்கள். அதில் எழுதிய புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்களால் நவீன இலக்கியம் தமிழில் முதிர்ச்சியை அடைந்தது. ஆனால் அது பரவலாக வாசகர்களுக்குச்சென்று சேரவில்லை.

தமிழகத்தில் பொதுக்கல்வி பரவி, எழுத்தறிவுள்ள நடுத்தரவற்கம் உருவாகி, வாசிக்கும் பழக்கம் ஆரம்பமாகி வந்தபோது அவர்களுக்கு அறிமுகமானது பரப்பிலக்கியம் மட்டுமே. அந்த வாசிக்கும் வற்கத்தின் வணிகசாத்தியங்களை கண்டுகொண்டு ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் உருவாயின. அவற்றில் கல்கி , தேவன் போன்ற பரப்பிலக்கியவாதிகள் எழுத ஆரம்பித்து பெரும்புகழ் பெற்று தமிழில் எழுத்தாளர் என்றாலே அவர்கள்தான் என்ற இடத்தை அடைந்தார்கள்.

பரப்புக்கலை என்பது சமூகத்தில் இருந்து அதன் தேவைக்காக உருவாகி வருவது. ஆகவே அதில் அச்சமூகத்தின் எல்லா கூறுகளும் கலந்திருக்கும். அதன் ரகசிய ஆசைகள், அதன் இலட்சியக்கனவுகள், அதன் சபலங்கள், அதன் தடுமாற்றங்கள், அதன் பாரம்பரியக்கூறுகள், அதன் அன்றாட வாழ்க்கை எல்லாமே. ஆகவே அது எங்கும் மிக விரைவில் ஒரு மாபெரும் நிறுவனமாக ஆகிவிடும். தமிழிலும் அப்படித்தான். ஐம்பதுகளிலேயே தமிழ் பரப்பிலக்கியம் தமிழ் வணிகசினிமா இரண்டுமே ஆழமாக வேரோடிவிட்டன.

தமிழ்பரப்பிலக்கியம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் உருவாகிவந்த பண்பாட்டு அலைகளையும் உள்ளடக்கிய ஒன்று. தேசியப்பெருமிதம், தமிழ்ப்பெருமிதம் போன்றவற்றை நாம் கல்கி ,நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களின் எழுத்தில் காணலாம். அன்று உருவாகி வந்த தமிழ்ப்பொதுச்சமூகம் ஜனநாயக அடிப்படைகளுக்கான போராட்டத்தில் இருந்தது. அந்த அம்சங்களை நாம் இப்படைப்புகளில் காணலாம். பெண்விடுதலை, கல்வி ஆகியவற்றுக்கான குரலை அவை எதிரொலித்தன. இவை அவற்றின் இலட்சியவாத முகம்

இன்னும் நுட்பமான ஒருதளத்தில் கூட நாம் பரப்பிலக்கியத்தின் சமூகப்பங்களிப்பை காணலாம்., எதிர்வினைகளை அவதானிப்பதன் வழியாகவே நம் சமூகத்தின் பலவகையான அந்தரங்கத்தேவைகளை தமிழ் பரப்பிலக்கியம் கண்டடைந்தது. அவற்றை அது சொல்லிச் சொல்லி வளர்த்தது.

 

lakshmi

உதாரணமாக அன்றுமுதல் இன்றுவரை நம் பரப்பிலக்கியத்தில் காதலுக்கு இருக்கும் இடம். தமிழ்ச்சமூகத்தில் நெடுங்காலமாகவே ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் இல்லை. அன்றெல்லாம் திருமணம் ஆனபின்னரும்கூட வெளிப்படையாக ஆணும் பெண்ணும் சந்திக்க முடியாது. இருளில் ரகசிய உடலுறவே ஆண்பெண் உறவாக இருந்த காலம் அது. அந்த சமூகத்துக்குத்தான் தமிழ் பரப்பிலக்கியமும் அதை ஒட்டி எழுந்த தமிழ் பரப்புசினிமாவும் காதலை மீண்டும் மீண்டும் சித்தரித்தன.

இன்றும்கூட காதல் இல்லாமல் நமக்கு பரப்புக்கலை இல்லை! நம் பரப்புக்கலையின் மிகப்பெரிய சிக்கலே காதல் இல்லாமல் எதையுமே சொல்லமுடியாது என்பதுதான். காதலர்களை துரத்தித்துரத்திக்கொல்லும் சமூகமாக நாம் இருக்கும் வரை அப்படித்தான் இருக்கும்!

பெரும்பாலும் இத்தகைய கருக்கள் மொழியாக்கம் மூலம் வெளியே இருந்து கொண்டுவரப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. அவற்றுக்கான எதிர்வினைகள் அவதானிக்கப்பட்டு அந்த கருக்கள் நமக்கே உரிய முறையில் மேம்படுத்தப்படுகின்றன. காதல் என்ற கரு தமிழ்புனைகதை இலக்கியத்தில் ஆரம்பத்தில் ஆங்கில நாவல்களின் தழுவல்கள் வழியாகவே முன்வைக்கப்பட்டது. அவற்றில் உள்ள காதல் அப்பட்டமாக ஆங்கிலேயக் காதலாக இருந்தது. ஆணும் பெண்ணும் ஆங்கில மனமும் ஆங்கில பழக்க வழக்கங்களும் கொண்டவர்கள்.

சிறந்த உதாரணம் டி.எஸ்.துரைசாமி எழுதிய ’கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்ற நாவல். வால்டர் ஸ்காட்டின் ஒரு நாவலின் தழுவல் அது அந்நாவலின் கதாநாயகி தனியாக கொழும்புவில் இருந்து இந்தியா வந்து விடுதியில் அறை எடுத்து தங்குகிறாள். தனியாக சென்று துப்பறிகிறாள். மாறுவேடங்கள் போடுகிறாள். விருந்துகளில் பங்கெடுக்கிறாள்.

அவ்விருந்துகள் முடிந்தபின் ஆண்களுடன் பூங்காக்களில் நடக்கச் செல்கிறாள். அங்கே அவள் ஆண்களிடம் சமத்காரமாக பேசுகிறாள். ஆண்கள் அவளிடம் மரியாதையாகவும் சம்பிரதாயமாகவும் பேசுகிறார்கள். அவள் அழகை புகழ்கிறார்கள். அவளிடம் ஆண்கள் தங்கள் காதலை தெரிவிக்கிறார்கள். ‘உன் காதல் கிடைத்தால் உலகிலேயே பாக்கியமானவன் நானே’ என்ற வகையில்!

இதெல்லாம் இந்தியாவில், தமிழகத்தில் எங்கே சாத்தியம்? எந்தப் பெண் குடும்பத்தை விட்டு வெளியே செல்ல முடியும்? தாசிகுலப்பெண்கள் கூட அப்படி ஆண்களுடன் பழக முடியாது. அது வாசகர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் அதை விரும்பினார்கள். நம் ஆழ்மனதில் உள்ள ஆசை அது.

ஏனென்றால் வேறுஎங்கும் பெண் அடிமையாக இருந்தால் நமக்கு சுகம். காதலில் அவள் சமமானவளாக இருந்தால்தான் சுகம். தமிழ் ஆண்மனம் தேடிய ரகசியக்காதலி ஆணுக்கு நிகராக தன்னை நிறுத்திக்கொள்ளும் சுதந்திரமான அறிவார்ந்த பெண். ஆனால் மனைவி என்பவள் அடக்கமே உரிவானவள் !

அந்தக்காலத்தில் அத்தனை நாவல்களிலும் இந்த வகையான பெண் சித்திரம் முன்வைக்கப்பட்டது. அந்த குணச்சித்திரம் ‘வொர்க் அவுட்’ ஆனதுமே நம் பரப்பிலக்கியம் அதை பற்றிக்கொண்டது.
’கருங்குயில் குன்றத்துகொலை’ தமிழில் சினிமாவாக வந்து பெருவெற்றி பெற்றது. அதில் பானுமதி அந்தப்பெண் கதாபாத்திரத்தைச் செய்திருந்தார். அதே குணச்சித்திரத்தையே அவர் ‘மலைகள்ளன்’ உட்பட பல படங்களில் செய்திருந்தார்.

பானுமதி அந்தக் குணச்சித்திரத்தின் வடிவமாக ஆகி பலவருடங்கள் நம் திரையுலகை ஆண்டார். இன்றுகூட பானுமதி பாணியிலான ஒரு நடிகை நம்மிடம் இருப்பார். ஜெயலலிதா பானுமதியேதான். ஏன், ஜோதிகாகூட ஒருவகை பானுமதியே.

இருவகை பெண்சித்திரங்களை நாம் நம் காதல்கதைகளில் காணலாம். ஒன்று, ஏற்கனவே சொன்ன சுதந்திரமான அறிவார்ந்த பெண். இன்னொருத்தி அடக்கமான, பொறுமையே உருவான, காதலை உள்ளே புதைத்துக்கொண்ட, பேரன்பும் நெகிழ்ச்சியும் கொண்ட, மரபான பெண். முதலில் உள்ளவள் காதலி இரண்டாமவள் மனைவி. ஒரே பெண்ணே மணமானதும் இப்படி ஆகிவிடுவாள்!

இந்த இரண்டாம் சித்திரம் சரத்சந்திரர் போன்றவர்களின் வங்கநாவல்களில் இருந்து கொண்டுவரப்பட்டது. அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம், த.நா.சேனாபதி, த.நா.குமாரசாமி ஆகியோரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதுவும் நம் பரப்பிலக்கியப் காதல்கதைகளிலும் பின்னர் சினிமாக்களிலும் பரவலாகக் கையாளப்பட்டது.

இதைப்போலவே குடும்பம், சகோதர பாசம், நட்பு, தேசப்பற்று என பல விழுமியங்களை பேசிப்பேசியே கோடிக்கணக்கான மக்களுக்கு உகந்த முறையில் தன்னை உருவாக்கிக் கொண்டு மெல்ல எழுந்து வந்த ஒன்றுதான் பரப்பிலக்கியமும் பரப்பு சினிமாவும். ஆகவே நம் சமூக மனம் அவற்றில் இயல்பாக படிகிறது, ரசிக்கிறது, சொந்தம் கொண்டாடுகிறது.

ஆனால் நவீன இலக்கியம் அப்படி அல்ல. அது தன்னிச்சையானது. அது அந்தந்தக் கலைஞர்களின் அந்தரங்கத்தேடலையும் அந்தரங்க மனஎழுச்சியையுமே ஆதாரமாகக் கொண்டுள்ளது. அந்த அந்தரங்கம் என்பது அக்கலைஞன் நின்று எழுதும் பண்பாட்டின் அந்தரங்கமும்கூட என்பதனால் அதற்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அதுவும் மிகநுட்பமான ஒரு சமூக நிகழ்வே.

ஆனால் அந்த சமூக அம்சம் வெளிப்படையானதோ நேரடியானதோ அல்ல. நவீன இலக்கியம் மேற்தளத்தில் வாசகனுக்கு ஒரு பிற மனிதனின் அந்தரங்க உலகில் நுழையும் துணுக்குறலையே அளிக்கும். ஆகவே அதை ஒரு ரசிகன் இயல்பாக ரசிக்க முடியாது. அவனுக்கு கொஞ்சம் பயிற்சி தேவை. அப்பயிற்சியை அடைய அவனுக்கு ஆர்வமும் பொறுமையும் இருந்தாகவேண்டும்.

ஆகவே வணிகஎழுத்து பெரும்செல்வாக்கு பெற்றது. அது இயல்பே, உலகில் எங்குமே இலக்கியம் வணிகஎழுத்தின் புகழை அடைவதில்லை. ஆனால் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அச்சமூகத்தின் பண்பாட்டு மையத்தில் இருப்பவர்கள் அறிவார்கள். அவர்கள் பரப்பிலக்கியத்தை ஒரு எளிய சமூகப்பிரதிபலிப்பாக மட்டுமே கருதுவார்கள்.

அவர்கள் இலக்கியமே சமூகத்தின் ஆழத்தைக் காட்டுவது என எண்ணி அதையே ஆராய்வார்கள். தங்கள் சமூகத்தின் ஆன்மவெளிப்பாடாக இலக்கிய ஆக்கங்களையே முன்வைப்பார்கள். ருஷ்யாவிலும் பிரான்ஸிலும் அமெரிக்காவிலும் நம்மைவிட பலமடங்கு பிரம்மாண்டமான வணிக இலக்கியம் உண்டு. ஆனால் அந்த பண்பாடுகளில் இருந்து அவற்றின் குரலாக நமக்கு வந்து சேர்பவை அவர்களின் சீரிய இலக்கியங்களே.

தமிழில் என்ன நிகழ்ந்தது என்றால் நம்முடைய பண்பாட்டின் மையமாக இருந்தவர்களுக்கு இந்த வேறுபாடு தெரியாமல் போயிற்று என்பதே. நான் முதன்மையாகக் குற்றம்சாட்டுவது ராஜாகோபாலாச்சாரி அவர்களை. பலவகையிலும் அறிஞர் என்று சொல்லத்தக்க அவரது இலக்கியரசனை மிகச்சாதாரணமானது என்பது ஆச்சரியமாக இருந்தாலும் அபூர்வம் அல்ல. தனக்கு உவப்பான தேசியவாத, சீர்திருத்தவாத கருத்துக்கள் இருக்கும் ஆக்கங்கள் சிறந்த இலக்கியங்கள் என அவர் நினைத்தார்.

கல்கி முதல் மீ.ப.சோமு, கு.ராஜவேலு, அகிலன் வரையிலான பரப்பிலக்கியவாதிகளை இலக்கியக்கலைஞர்களாக அங்கீகாரம் பெறச்செய்தது ராஜகோபாலாச்சாரி அவர்கள் தலைமை தாங்கிய அதிகார மையமே. தமிழில் உருவாகி வந்து சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருந்த நவீன இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே இந்த மையத்தால் நிராகரிக்கப்பட்டது. இவர்களே அன்று தமிழின் ஊடகங்களை, அரசை வழிநடத்திய சக்தி என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

பின்னர் அதையே சி.என்.அண்ணாத்துரை அவர்களும் நிகழ்த்தினார். அவரது ரசனையை அவரது நூல்களில் வாசிக்க மிக ஏமாற்றமாக இருக்கிறது. மேலைநாட்டு வணிகக்கேளிக்கை நூல்களையே அவர் வாசித்திருக்கிறார். அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டே ரங்கோன்ராதா போன்ற பரப்பிலக்கிய நாவல்களை எழுதியிருக்கிறார். திராவிட இயக்கமும் ஒட்டுமொத்தமாக நவீன இலக்கியத்தை புறக்கணித்தது. திராவிட இயக்கமே ஒரு பரப்பிய இயக்கம். ஆகவே அது பரப்பிலக்கியம் பரப்புசினிமாவை ஆயுதமாகக் கொண்டதில் ஆச்சரியமே இல்லை.

ஆக, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையை ஐம்பதாண்டுகளாக ஆண்டுவரும் இரு பேரியக்கங்களும் சீரிய இலக்கியத்தை முற்றாகவே நிராகரித்தன. கல்விநிறுவனங்கள் இலக்கியத்தை பொருட்படுத்தவில்லை. பாடங்களில் இலக்கியம் பயிற்றப்படவில்லை. இலக்கியத்தை ஒருவர் தற்செயலாக, தன்னிச்சையாக படித்தால்தான் உண்டு. அவற்றின் அடிப்படைகளை ஒரு மூத்த வாசகர் சொல்லிக்கொடுத்தால்தான் கிடைக்கும். இல்லையேல் தட்டுத்தடுமாறி அவரே புரிந்துகொள்ள வேண்டும்

புறக்கணிப்புக்கும் இருட்டடிப்புக்கும் உள்ளான இலக்கியம் சிற்றிதழ்கள் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, சாலிவாஹனன் போன்ற சிற்றிதழ் முன்னோடிகள் சொந்தவாழ்க்கையை முற்றாகவே தியாகம் செய்து ஒருவகை தற்கொலைப்போராளிகள் போல இலக்கியம் என்ற இயக்கத்தை முன்னெடுக்க உழைத்தார்கள். விடாப்பிடியான அவர்களின் முயற்சியால்தான் இலக்கியம் இன்றளவும் நீடிக்கிறது.

இந்தக்காலகட்டத்தில் தமிழில் வணிகஇதழ்களின் பொற்காலம் ஆரம்பித்தது. ஏராளமான வார இதழ்கள் வெளிவந்து பலலட்சம் மக்களை சென்றடைந்தன. அவற்றின் வழியாக பரப்பிலக்கியவாதிகள் மாபெரும் நட்சத்திரங்களாக ஆனார்கள். அகிலன், நா.பார்த்தசாரதி இருவரும் இருந்த உச்சத்தில் எவருமே இருந்ததில்லை. அனைத்து அமைப்புகளாலும் அவர்களே பேரிலக்கியவாதிகளாகக் கருதப்பட்டார்கள்.

இந்நிலையில்தான் க.நா.சு போன்றவர்கள் பரப்பிலக்கியம் வேறு இலக்கியம் வேறு என்ற பிரிவினையை தொடர்ந்து முன்வைத்து விவாதித்தார்கள். அகிலன் ,நா .பார்த்தசாரதி போன்றவர்களின் வாசகர்களிடமிருந்து மிகமிகக் கடுமையான எதிர்ப்புகளை, வசைகளச் சம்பாதித்தார்கள். க.நா.சு சென்னைத்தெருவில் நடமாட முடியாத நிலையே உருவானது. அவர் தமிழகத்தைவிட்டே செல்ல நேர்ந்தது.

Sandilyan

நான் எழுதவந்த எண்பதுகளின் இறுதிவரைக்கும்கூட இலக்கியம் என்றால் அது முழுக்க முழுக்க சிற்றிதழ்களைச் சார்ந்து சிறிய வட்டத்துக்குள் மட்டுமே ஒடுங்கியதாகவே இருந்தது. சுஜாதா, பாலகுமாரன், வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோர் உச்சநட்சத்திரங்களாக விளங்கிய காலகட்டம் அது. நல்ல இலக்கிய நூல்கள் 300 பிரதிகள் அச்சிடப்பட்டன. நல்லவாசகர்களுக்கு கூட புதுமைப்பித்தன் அறிமுகமில்லாத காலம். சுந்தர ராமசாமி என கேள்விப்படாமலேயே இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று வெளிவரலாமென்ற நிலைமை இருந்த காலகட்டம்.

இரு காரணிகளால் வணிகஎழுத்தின் வேகம் மட்டுப்பட்டது. ஒன்று, தொலைக்காட்சி. தொடர்கதை வாசகர்களை அது எடுத்துக்கொண்டமையால் வணிக இதழ்களில் வெளிவந்துகொண்டிருந்த தொடர்கதைகள் காணாமலாயின. தொடர்கதை நட்சத்திரங்கள் மறைந்தார்கள். இரண்டு, ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக வந்தார். இலக்கியத்தை தினமணி பக்கங்கள் வழியாக பல லட்சம் வாசகர்களுக்கு கொண்டுசென்றார்.

அதன்பின்னர் நடுத்தர இதழ்கள் வெளிவந்தன. இணைய ஊடகம் வலுப்பெற்றது. புத்தகச் சந்தைகள் வந்தன. இன்று இலக்கியம் முழுமையான புறக்கணிப்புக்குள் இல்லை. இன்று கல்விநிறுவனங்களில் ஆங்காங்கே நவீன இலக்கியம் சென்று சேர்ந்துள்ளது. ஒரு நல்ல நூல் சாதாரணமாக சில ஆயிரம்பேரால் வாசிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் புறக்கணிக்கத்தக்க சிறிய எண்ணிக்கைதான் இது.

நமது கல்விநிறுவனங்களில் இலக்கியம் என்பது சமூகத்துக்கு தேவையான உயரிய கருத்துக்களைச் சொல்வது என்றே கற்பிக்கப்படுகிறது. அந்த மனநிலையில் வந்த ஒருவருக்கு பரப்பிலக்கியமே இலக்கியம் என்று தோன்றும். ஏனென்றால் அதுதான் மிகச்சரியாக சமூக மனநிலையை பிரதிபலிக்கிறது. அந்தப்பிரதிபலிப்பு மேலோட்டமானது, மேற்தளத்தை மட்டுமே சார்ந்தது என்பதை அவர் உணர்வதில்லை.

இலக்கியம் என்பது கருத்துக்களால் ஆனதல்ல. அகஅனுபவங்களால் ஆனது என நம் கல்வித்துறை இன்னமும் உணரவில்லை. இலக்கியம் சமூகமனநிலைகளின் கண்ணாடி அல்ல. அது அச்சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஒருசமூகத்தின் பேச்சு அல்ல அது, அச்சமூகத்தின் கனவு.

சாதாரணமான பேச்சுகளில் நம் கல்விநிறுவனங்கள் அளிக்கும் எளிய வாய்ப்பாடுகளைக் கொண்டே இலக்கியங்கள் மதிப்பிடப்படுகின்றன. ஆகவே இன்னமும் பெருவாரியான எளிய வாசகர்களுக்கு இலக்கியம் பரப்பிலக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு தெரியாது. இரண்டையும் ஒரே நோக்கில் வாசிப்பவர்கள்கூட உண்டு. ஆகவேதான் இன்றும் மீண்டும் மீண்டும் க.நா.சு சொன்னதையே சொல்லவேண்டியிருக்கிறது – இலக்கியமும் பரப்பிலக்கியமும் வேறு வேறு.

அந்த வேறுபாட்டை நிறுவியபின் பரப்பிலக்கியத்தை பரப்பிசையை ஆராய்வதுபோலவே நுட்பமாக, அறிவார்ந்த அளவுகோல்களுடன் ஆராய்வதிலும் மதிப்பிடுவதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதை நானே செய்யவேண்டுமென்றே ஆவலுண்டு.

உதாரணமாக, தமிழில் எப்படி காதல் என்ற கருத்து இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது என்று சொன்னேன். ஆங்கிலநாவல்களில் இருந்து இறங்கி வந்த அந்த விடுதலைபெற்ற ‘நவநாகரீக வனிதை’ எப்படியெல்லாம் தமிழ் பரப்பிலக்கியத்தில் இடம்பெற்றாள் என ஒருவர் ஆராய்ந்தால் நம் சமூகமனம் பற்றிய மிகப்பெரிய வெளிச்சங்கள் கிடைக்கும். ஆர்வி,எல்லார்வி, பி.வி.ஆர் வழியாக பாலகுமாரன் வரை அந்த பெண்சித்திரம் ஒரு நேர்கோடாக எப்படியெல்லாம் வளர்ந்து வந்தது என்பதை ஆச்சரியத்துடன் உணரலாம்.

பாலகுமாரன் ஆர்வியின் மிக நெருக்கமான வாரிசு. விடுதலைபெற்ற பெண் ஆர்வியில் ஆண்களுக்கு பிரியமானவளாக ஆக்கப்பட்டிருக்கையில் பாலகுமாரனில் அவள் பெண்களுக்கு பிரியமானவளாக மாறியிருக்கிறாள். காரணம் வேலைக்குப்போகும் நடுத்தரவற்கப் பெண்களுக்காக எழுதப்பட்டவையே பாலகுமாரனின் ஆக்கங்கள்.

 

 

images

தமிழ் வணிக எழுத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தன. அவர்களின் எழுத்துக்களுக்கான தேவை இருக்கும் வரை வணிக இதழ்கள் அவர்களைப்பற்றி பேசுகின்றன. அவர்கள் மறைந்ததும் அல்லது எழுதாமலானதும் அவை அவர்களை முழுமையாகவே மறந்துவிடுகின்றன. அவர்களும் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறார்கள். ஆர்வி, பிவிஆர் போன்றவர்கள் இருந்த உச்சபுகழில் ஒருபோதும் பாலகுமாரன் இருந்ததில்லை.

ஆனால் ஆர்வி, பிவிஆர் போன்றவர்களை இன்று பொருட்படுத்தவே யாருமில்லை. அது வணிகஎழுத்தின் இயல்பு, அது ‘நுகர்ந்துவீசு’ பண்பாட்டை சேர்ந்தது.. சமகாலத்தன்மையே அதன் வலிமை. சினிமாவும் அப்படித்தான். அது சென்றுகொண்டே இருக்கும். இன்று பல வணிகஎழுத்துக்கள் கிடைப்பதே இல்லை

நம் பரப்பிலக்கியத்தின் வரலாறு எழுதப்படவேண்டும். பரப்பிலக்கியமும் இலக்கியமே. அதுவும் நம் இலக்கியத்தின் ஒருபகுதியே. ஆகவேதான் நான் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் பரப்பிலக்கியத்தையும் ஒரு பகுதியாகச் சேர்த்து அதன் வரலாற்றையும் எழுதியிருக்கிறேன்.
பல இலக்கியவாதிகள் அதைப்பற்றி என்னிடம் குறை சொன்னதுண்டு. அந்நூலை பிழைசரிபார்த்த யுவன் சந்திரசேகர் அப்பகுதிகளை எடுத்துவிடவேண்டும் என அடம்பிடித்தான். அவனிடம் நான் விரிவாக விவாதிக்கவேண்டியிருந்தது.

பரப்பிலக்கியத்தை இலக்கியமாகக் கொண்டால் நம் இலக்கியரசனை மழுங்கும். நம் இலகிய இலக்குகள் சிறியனவாகும். நமக்கு பேரிலக்கியங்களை அளித்த முன்னோடிகளை அவமதித்தவர்களும் ஆவோம். எந்த பண்பாடு தன் கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் போற்றி அவர்களிடம் மேலும் மேலும் எதிர்பார்க்கிறதோ அதுவே வளரும். ஆகவேதான் பரப்பிலக்கியத்தை இலக்கியத்தில் இருந்து வேறுபடுத்தி அடையாளம்காட்ட எப்போதுமே முயல்கிறேன்.

ஆனால் பரப்பிலக்கியத்தின் வரலாறு முறையாக எழுதப்படவேண்டும் என்றும்,பரப்பிலக்கியத்தின் சமூகப்பங்களிப்பு விரிவாக ஆராயப்படவேண்டும் என்றும் நினைக்கிறேன். அது நம் சமுகத்தை நாம் அறிவதற்கான ஒரு வழியாகும். கோடானுகோடி பேர் வாசித்து ரசிக்கும் பரப்பிலக்கியம் ஒரு மாபெரும் நிறுவனம் என்பதே காரணம்

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 25, 2010

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016

$
0
0

4

வருடந்தோறும் ஊட்டி நித்யா குருகுலத்தில் நடத்தும் குருநித்யா ஆய்வரங்கம் இவ்வருடம்  நடத்தப்படவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, இளம்வாசகர்களைச் சந்திப்பதன்பொருட்டு இவ்வருடம் மூன்று சந்திப்புநிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டு, நான் மே மாதம் முதல் தொடர்ச்சியாகப் பயணத்தில் இருக்கிறேன்.

சிங்கப்பூருக்கு உடனுறை எழுத்தாளர் திட்டப்படி வந்து இரண்டுமாதம் தங்கியிருக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே அரங்கசாமிதான் இந்த எண்ணத்தைச் சொன்னார். சிங்கப்பூரில் ஒரு வாசகர் சந்திப்பை நிகழ்த்தினால் என்ன? தமிழகத்திலிருந்து முப்பதுபேர் சிங்கப்பூரிலிருந்து முப்பதுபேர். வருகையாளர்களை அங்குள்ள நண்பர்கள் இல்லத்தில் தங்க வைக்கலாம். சொந்தச்செலவில் வரவேண்டும். நிகழ்ச்சி நடக்குமிடம் மட்டுமே செலவு

1

பொதுவாக நான் ஏற்பாடுகளில் கலந்துகொள்வதில்லை. ‘உங்களால் முடியுமென்றால் செய்யுங்கள்’ என்று மட்டும்தான் நான் சொன்னேன். சிங்கப்பூர் சரவணன் முன்முயற்சி எடுத்துக்கொண்டார். மெல்ல ஒவ்வொரு ஏற்பாடாக பெரிதாக ஆரம்பித்தன. நண்பர் கணேஷ், கனகலதா ஆகியோர் உதவிசெய்தார்கள்.

3

முதலில் இல்லங்களில் தங்கவைப்பதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டு அனைவருக்கும் சிங்கப்பூரின் கேளிக்கைத்தலைநகரான செந்தேசாவிலேயே வசதியான குடில்கள் ஏற்பாடுசெய்யப்பட்டன. கடற்கரை ஓரமாக. விழாக்கூடமும் சிறப்ப்பாக அமைந்தது FMDIS நிர்வாகவியல் கல்லூரியின் சர்வதேசத்தரம் வாய்ந்த அரங்கம்

2

கிருஷ்ணனும் சந்திரசேகரும் நான்குநாட்களுக்கு முன்னதாகவே வந்து என்னுடன் தங்கியிருந்தனர். சிங்கப்பூரை ‘அத்து அலைந்து’ சுற்றிப்பார்த்தனர். பிறர் 15 அன்று நள்ளிரவில் சென்னையில் கிளம்பி 16 அன்று வந்துசேர்ந்தனர். 16  முழுக்க சுற்றிப்பார்த்தல். பிறநாட்களில் மாலையில் சுற்றிப்பார்த்தல். 19 மீண்டும் முழுநாள் சுற்றுப்பயணம். அன்றே இரவில் திரும்பிச்செல்லுதல். இதுதான் திட்டம்.

 

நேற்று முழுக்க நண்பர்கள் செந்தேசாவிலேயே சுற்றிப்பார்த்தனர். நல்ல களைப்பும் தூக்கக்கலக்கமும். இரவு ஒன்பதரை மணிவரை நானும் உடனிருந்தேன். அதன்பின் என் அறைக்கு வந்துவிட்டேன். வரும்போது நண்பர்களில் ஒரு கும்பல் நீச்சல்குளத்தில் எருமைக்கூட்டம் போல கிடப்பதைக் கண்டேன். எல்லாருக்கும் பேலியோ உணவு அவசியம் தேவை என நினைத்துக்கொண்டேன்

 

IMG-20160916-WA000620160916_202529

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கப்பூர் கடலோரப்பூங்கா

$
0
0

aஇன்று விஷ்ணுபுரம் இலக்கிய முகாமின் முதல்நாள். காலையில் ஏழுமணிக்கு எழுந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பி அரங்குக்குச் சென்றேன். செந்தேஸாவில் தங்கியிருந்த கும்பலும்  வந்தது. அரங்கிலேயே காலைச்சிற்றுண்டி. ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி.

மாலை ஐந்துமணிக்கு நண்பர்களுடன் கிளம்பி கடலோர செயற்கைப்பூங்கா. மானுடனின் கலைத்திறமும் இயற்கையின் அற்புதங்களும் கலந்த ஓர் அழகிய உலகம்.

 

 b

abd (2)de

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16818 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>