Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16782 articles
Browse latest View live

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12

$
0
0

எரிமலையிலிருந்து இறங்கி மாலை சரிந்துகொண்டிருந்த மலைச்சரிவினூடாக வந்தோம். கிராமப்புறங்களில் ஒருவகையான அமைதியான விவசாய வாழ்க்கை. தோளில் விறகுடன் குனிந்து நடந்த பெண்கள். கூம்புத்தொப்பி வைத்த விவசாயிகள்.

முகம் முழுக்க சுருக்கங்களுடன் பாட்டிகள். கறைபடிந்த பெரிய பற்களுடன் பெரியம்மாள்கள் கார்களை கூர்ந்து நோக்கினர். எரிமலை மக்கள். அந்த எரிமலையை அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடித்தாலும் அதுதான் சோறுபோடுகிறது அவர்களுக்கு.
IMG_3214 [ராஜமாணிக்கானந்தா]

இன்றையநாளுடன் யோக்யகர்த்தா பயணம் முடிவுக்கு வருகிறது. செறிவான களைப்பூட்டும் பயணம் .ஆனால் பயணக்களைப்பு போல இனியது வேறில்லை.ஒவ்வொரு பயணமும் ஒரு விடுதலை. நாம் வாழுமிடமும் சூழலும் நம் உள்ளத்தின் படிமவெளியை உருவாக்கி நம்மை வடிவமைக்கின்றன. பயணம் அதைக்குலைக்கிறது. அந்த ஆதிக்கத்திலிருந்து வெளியே கொண்டு செல்கிறது

இதுவரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய உலகங்கள்’. அமெரிக்கா ,ஆஸ்திரேலியா, கனடா, நமீபியா, ஏன் மலேசியாவும் கூட. மக்கள்தொகை குறைவான திறந்த நிலவெளிகள். இந்தோனேசியா பழைய உலகம். நாம் வாழ்வது போல அடங்கிய நிலம் அல்ல. எரிநிலம்

கடைசியாக சாம்பிசரி ஆலயம். 1966ல் கார்யோவினாகன் என்னும் விவசாயி தன் நிலத்தை உழுதபோது ஒரு கற்கூம்பில் ஏர் முட்டக்கண்டார். தோண்டியபோது அங்கே கற்குவியல்கள் தெரிந்தன. அரசுக்குத்தெரிவித்தார்

அரசு அப்பகுதியை அகழ்வுமையமாக அறிவித்தது. கவனமாக தோண்டியபோது இடிந்து பாதிசரிந்து மண்ணில் முழுமையாகப்புதைந்து நின்ற கற்கோயில் ஒன்று வெளிப்பட்டது. அதுதான் சாம்பிசரி ஆலயம்.

இன்று அது ஒரு முக்கியமான சுற்றுலாப்பகுதி.மண்மட்டத்திலிருந்து இருபதடி ஆழமுள்ள குழிக்குள் இருக்கிறது இவ்வாலயம். இந்த ஆலயம் இருக்கும் சிற்றூரின் பெயர் சாம்பிசரி

இந்த ஆலயம் கண்டெடுக்கப்பட்டது ஜாவாவின் அகழ்வாய்வில் ஒரு ஆர்வமான திருப்பம். மேலும் பல ஆலயங்கள் மெராப்பியின் எரிமலைச்சாம்பலுக்குள் கிடக்கலாம் என சொல்கிறார்கள். போதுமான ஆய்வுகள் செய்யப்படவில்லை

பரம்பனான் ஆலயத்தின் அதே பாணியிலான சற்று காலத்தால் முந்தைய ஆலயம் இது. சாளுக்கியர் கால திராவிடபாணி கோயில் என்று தோன்றும். இதில் நான்கு பக்கங்களிலும் சிவலிங்கங்கள் நிற்கின்றன. கருவறையிலும் லிங்கம் உள்ளது.

இதனருகே கிடைத்த ஒரு பொற்தகட்டில் ஜாவா லிபிகளில் எழுதப்பட்டிருந்த செய்தியின்படி இந்த ஆலயம் எட்டாம்நூற்றாண்டின் இறுதியில் மதாரம் வம்சத்தினரால் கட்டப்பட்டிருக்கலாம். ராக்காய் கருங் என்னும் மன்னர் இதைக்கட்டியிருக்கலாம் என ஆய்வாளர் ஊகிக்கிறார்கள்.

ஓங்கிய சிவலிங்கம் நின்றிருக்கும் மையக்கருவறை கொண்ட பெரிய ஆலயத்தைச் சூழ்ந்து பரிவாரதெய்வங்களின் சிறிய கோயில்கள் இருந்திருக்கின்றன. அனைத்தும் எரிமலைப்பாறைகளால் வெட்டப்பட்டவை.

ஒன்பதடி உயரமான ஆலயம் ஆறடி உயரமான அடித்தளம் மேல் நின்றிருக்கிறது. மண்ணுக்கடியில் எட்டடிக்கு அஸ்திவாரம் உள்ளது, பரிவாரதெய்வங்களின் ஆலயங்களில் கருவறைகள் காலியாக உள்ளன.

மேற்குநோக்கிய கருவறை. மேலே காலனின் முகம். காலகாலர் என்று சிவனை சொல்லலாம். இருபக்கமும் இரு கோட்டங்களில் காலபைரவனும் நந்தியும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஜாவாவின் இந்துமரபின் படி இவ்வாலயத்தின் தெற்கே துர்க்கையும் பின்னால் பிள்ளையாரும் வடக்கே அகத்தியரும் கோயில்கொண்ட சுவர்புடைப்புக் கோட்டங்கள் உள்ளன. சிலைகள் அழகாக செதுக்கப்பட்டவை. பிள்ளையார் ஒரு பெரிய குழந்தை

அந்தவேளையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். குழந்தைகள். பெரும்பாலும் அனைவருமே இஸ்லாமியர். அவர்களுக்கு அவ்வாலயம் பற்றி எதுவும் தெரியவில்லை. உற்சாகமான ஒரு சுற்றுலா இடம், அவ்வளவுதான்.

ஆனால் கஷ்மீரில் பார்க்கக் கிடைத்ததுபோல இந்து ஆலயங்கள் மேல் கசப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் தமிழகத்திலேயேகூட இஸ்லாமியர் இடிந்த இந்து ஆலயங்களுக்குள் கூட வருவதைத் தவிர்ப்பார்கள்.

சிரித்துக்கூச்சலிட்ட பெண்கள் குழு ஒன்று எங்களிடம் வந்து “எந்த நாட்டவர்?’ என வினவியது. ”இந்தியர்கள்” என்றோம். இந்தியர்களையே அவர்கள் அதிகமும் பார்த்ததில்லை போல. உற்சாகமாகச் சிரித்தபடி கூடினர். அருண்மொழியின் சுடிதாரைப்பார்த்து வியந்து ‘நைஸ் நைஸ்’ என்றனர்


எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். பெண்கள் காதலர்களுடன் வந்திருந்தனர். மேலைநாட்டுப் பெண்களைப்போல கூச்சலும் கும்மாளமுமாக இருந்தனர். களங்கமற்ற இளமை முகங்களின் சிரிப்பு மனம் மலரச்செய்தது

புகைப்படம் எடுத்து எடுத்துத் தீரவில்லை. அரசரின் அரண்மனையில் கண்ட இளம்பெண்களும் சிரித்துத் துள்ளிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். இங்கே இஸ்லாமிய சமூகம் பெண்களுக்கு அளிக்கும் கட்டுப்பாட்டின் சுமைகள் ஏதுமில்லை என்பதை அது காட்டியது. உடைகளில் மட்டுமே இஸ்லாமுக்குரிய பாணி இருந்தது. குறிப்பாக கூந்தலை மறைப்பதில்.

விவசாயம் தொழில் அனைத்திலும் பெண்களுக்கு முக்கியமான இடம் உள்ளது. பணியாளார்களாக வெளிநாடுகளுக்குப்போய் இந்தோனேசியாவின் பொருளியலை மீட்டவர்களும் பெண்களே.

இந்தோனேசிய பணிப்பெண் சிங்கப்பூரில் மிக விரும்பப்படுபவள். ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்பதே காரணம். அதற்குக்காரணம் அவர்களின் எழுத்துரு ஆங்கிலம் என்பதுதான்.

அரண்மனையில் ஒரு டச்சு குடும்பம் சிறுகுழந்தையுடன் வந்திருந்தது. 2 வயதுப்பையன். இளம்பெண்கள் அவனை அள்ளித்தூக்கி வைத்து மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஒரே சிரிப்பு. ஆனந்தக் கூச்சல். பையன் என்ன செய்வது பெண்களாயிற்றே என்னும் கெத்துடன் போஸ் கொடுத்தான்

அருண்மொழியும் பத்மாவும் மாறிமாறி போஸ் கொடுத்து சலித்துவிட்டனர். இவர்களுக்கு செல்பேசிப் புகைப்படம் என்பது மாபெரும் கேளிக்கை. கைகளை விரித்து விரல்களைக் காட்டி படுத்து அமர்ந்து மேலே மேலே விழுந்து படம் எடுத்துக்கொண்டே இருந்தனர்.

இருட்டியபின் திரும்பினோம். மறுநாள் அதிகாலை சிங்கப்பூர் திரும்பவேண்டும். பயணம் சீக்கிரமே முடிந்துவிட்டது என்னும் ஏக்கம் எழுந்தது. ஆனால் இருந்த நாட்களில் நிறையப்பார்த்துவிட்டோம் என்றும் தோன்றியது. பிம்பங்கள் கண்களுக்குள் நிறைந்திருந்தன

மறுநாள் காலையில் சிங்கப்பூர் வந்தேன். ராஜமாணிக்கமும் பத்மாவும் யோக்யகர்த்தாவிலிருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்தே கொலாலம்பூர் வழியாக இந்தியா சென்றனர்.நாங்கள் சரவணன் வீட்டுக்குச் சென்றோம்

சரவணன் மனைவி ரதி வந்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாநாட்டுக்காகச் சென்றிருந்தார். நான் சென்றமுறை அவர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் எங்களுக்கு விமானம். கொழும்பு வந்து இன்னொரு விமானம் மாறி ஏறவேண்டும். கொழும்பு நகரை விமானத்திலிருந்து நோக்கியபோது திருவனந்தபுரம் போலிருந்தது. பசுமையான அழகிய சிறுநகர்.

இத்தனை பயணம்செய்தும் இன்னும் இலங்கை செல்லவில்லை. இலங்கைக்கு ஒருமுறை பயணம்செய்யவேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம். யாழ்ப்பாணத்தைப் பார்க்கவேண்டும். பௌத்த இந்து ஆலயங்களையும்

கொழும்புக்கு வந்த சில அரபுநாட்டு விமானங்களிலிருந்து வந்து இறங்கி சென்னை விமானத்தில் ஏறிக்கொண்டார்கள் தமிழ்நாட்டுப் பயணிகள். ஸ்ரீலங்கா ஏர்வேய்ஸ் விமானம் பெரிய மாநாட்டுக்கூடம் போல இருந்தது. 350 பேர் ஏறமுடியும்.

பாதுகாப்புச் சோதனைக்காக நின்றிருக்கையில் என் பின்னால் நின்றிருந்த ஒருவர் “போங்க…உம் போங்க…சீக்கிரம்” என்று கத்தினார். அவரை காவலர் அடக்கவேண்டியிருந்தது. பின்னால் நின்றவர்கள் “போங்க போங்க’ என்று கூவிக்கொண்டே இருந்தனர்

காத்த்திருப்புக்கூடத்தில் உரத்தகுரலில் கூச்சலிட்டனர். அறிவிக்கப்பட்டதும் மொத்தமாக எழுந்து வாயிலைச் சூழ்ந்துகொண்டார்கள். ”அறிவிக்கப்பட்ட இருக்கை எண்கள் மட்டும் வாருங்கள். மற்றவர்கள் விலகி வழிவிடுங்கள்” என்று கூவிக்கொண்டே இருந்தாள் பணிப்பெண்

எங்கள் அழைப்பு வந்தது. ஆனால் கூட்டத்தை கடந்து உள்ளே செல்லவே முட்டிமோதவேண்டியிருந்தது. “தயவுசெய்து வழிவிடுங்கள்” என கூவி மன்றாடியும் கூட்டம் முண்டியடித்தது. ஒருவழியாக உள்ளே ஏறிக்கொண்டேன்

விமானம் கிளம்ப அறிவிப்பு வந்தபின்னரும் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தனர். கைக்கணினிகளில் படம்பார்த்தனர். பலமுறை பணிப்பெண்கள் அறிவுறுத்தினர். கிட்டத்தட்ட வசைபாடி அவற்றை மூடவைத்தனர்

என்னருகே இருந்தவர் பேசிக்கொண்டே இருந்தார். “செல் பேசக்கூடாது சார். விமானத்தை எடுத்துவிட்டார்கள்” என்றேன். ‘உனக்கென்ன அதிலே?’ என்று சண்டைக்கு வந்துவிட்டார். பணிப்பெண் வந்து “அதை மூடு” என்று திட்டியதும் மூடினார்.சார் இல்லை, ப்ளீஸ் இல்லை. ‘ஷட் இட், ஓக்கே?’ இத்தனை அவமரியாதையாக விமானப் பயணிகளை நடத்துவதை இப்போதுதான் காண்கிறேன்.

விமானம் மேலெழுந்ததும் ஏராளமானவர்கள் எழுந்து கைநீட்டி குடிக்காக கேட்க ஆரம்பித்தனர். ‘உட்காருங்கள்…உட்காருங்கள்’ என்று அவர்களை பணிப்பெண்கள் அதட்டினர். என்னருகே இருந்தவர் பீர் வாங்கி குடித்தார். மீண்டும் குடித்தார். செல்பேசியில் காஞ்சனா பார்த்தார். வெடித்துச்சிரித்தார். அப்படியே தூங்க காஞ்சனா ஓடிக்கொண்டே இருந்தது

அதைவிட வேடிக்கை விமானம் சென்னையை அணுகியபோது பணிப்பெண்கள் ரெட்லேபில் , பிளாக்லேபில், ஸ்காச் மதுபானங்களை கொண்டுவந்து கூவிக்கூவி விற்றனர். ‘போனா வராது பொழுதுபோனா கெடைக்காது ஓடியா ஓடியா’ பாணி.இப்படி நான் பார்த்ததே இல்லை.

‘பதினைந்து அமெரிக்க டாலர் மட்டுமே. வரிகள் இல்லை’ என்று கூவினர். கிட்டத்தட்ட அனைவருமே ஆளுக்கு நாலைந்து வாங்கிக்கொண்டார்கள். இதை அறிந்தே இந்தவிமானத்தில் வருகிறார்கள் போலும். ஒப்புநோக்க மலிவான விமானம் இது.

சென்னையில் மதியம் வந்திறங்கினோம். கையில் மதுபானம் இல்லாமல் வெளியேவந்தவர்கள் நாங்கள் மட்டுமே. அதனால் சந்தேகப்பட்டு பிடித்து விசாரிப்பார்களோ என்று பயமாக இருந்தது.

சென்னை மழையில் நனைந்து ஊறிக்கிடந்தது. ஃபாஸ்ட் டிராக் டாக்ஸியில் ஓட்டலுக்குச் சென்றோம். எங்கும் இடிபாடுகள். உடைந்த சாலை. இடிந்த பாலங்கள். குப்பைக்குவியல் . சாக்கடை பெருகிய சாலையை சபித்தபடியே டிரைவர் வண்டியை ஓட்டினார்.

ஓட்டல் அறையை அடைந்ததும் அஜிதனையும் அரங்கசாமியையும் கிருஷ்ணனையும் ஃபோனில் அழைத்தேன். ‘திரும்பிவிட்டேன்’ என்றேன். அவர்களின் குரல் அனைத்தையும் இனியதாக்கியது.

ParambananTemple
“>Borobudur Temple, Monastery & Mendut temple

Dieng Plateau, Sikidang & Arjuna Temple

Sultan Palace, Merapi Volcano & Sambisari Temple

தொடர்புடைய பதிவுகள்


பரவா

$
0
0

mummy_1472607i (1)

“இன்னொரு காரணம் கிறித்தவ நூல் மரபு எகிப்திய பாரோக்களைப்பற்றி அளித்த சித்திரம். யூதர்கள் பாரோ மன்னர்களின் கீழ் அடிமைகளாக இருந்தார்கள், அங்கிருந்து கடவுளருளால் தப்பினார்கள் என்பது அவர்களின் குலக்கதை. அது பைபிளின் பகுதியாக இருப்பதனால் எல்லா கிறித்தவர்களிடமும் எகிப்து பற்றிய கொடூரமான ஒற்றைப்படைச் சித்திரம் உருவாகியிருந்தது.

இதுப் போன்ற தருணத்தில் தான் ஆசான் சறுக்கி விடுகிறார். எல்லா கிறித்தவர்களும் ‘Ten Commandments’ பார்த்து விட்டு வரலாற்றைத் தெரிந்துக் கொள்வதில்லை. மேற்கத்திய ஆய்வாளர்களும் பல்கலைக் கழகங்களும் ஆப்பிரிக்க கலாசாரத்தை நேர்மையோடு ஆராயவில்லையா? அவ்வப்போது ஆசான் ஜடாயு போன்றோருக்குத் தீனி போட்டுவிடுகிறார்.

ஜெ,

உங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ப நெருக்கமான ஒருத்தர் இப்படி எழுதியிருக்கிறார். என்ன சொல்கிறீர்கள்?

அருண்

அன்புள்ள அருண்,

கிறிஸ்தவர்கள் என்று நான் சொல்வது என்னையும் சேர்த்துத்தான். நான் இதையெல்லாம் கற்றுக்கொண்டதே கிறிஸ்தவ ஆசிரியர்கள் மற்றும் போதகர்களிடமிருந்து. சின்னவயசிலிருந்தே சர்ச்சில் அடிக்கடிச் சொல்லப்படும் பரோவா மன்னர் எகிப்திய பாரோ என்று புரிந்துகொள்ள கொஞ்சம் தாமதமாகியது.

[கொல்லாக்கொலை செய்யுற இந்த பறவாகிட்ட இருந்து எங்கள காப்பாத்தி அனுதின மன்னாவை அளியும் கர்த்தாவே]

ஆப்ரிக்கா எகிப்து பற்றி நேர்மையான ஆய்வுகள் அமெரிக்க ஐரோப்பிய ஆய்வாளர்களிடமிருந்து கண்டிப்பாக வந்திருக்கும். ஏன், அக்கட்டுரையில் பேசப்பட்ட ஆய்வாளரே மேலைநாட்டவர்தானே? அவர்கள் இங்கே வந்து சேரவேண்டுமே?

அதுசரி, நெருக்கமானவர் என்றால்? அரங்கசாமி இந்த அளவுக்கு அறிவா எழுதமாட்டாரே?

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 32

சகடங்களின் ஒலி எழுந்து சாலையைச் சூழ்ந்திருந்த மாளிகைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்து முழக்கமெனச் சூழ சாலைகளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர்களையும் புரவிகளையும் பல்லக்குகளையும் விலங்குகளையும் பதறி இருமருங்கும் ஒதுங்கச் செய்தபடி பாய்ந்து முன்னால் சென்றது அர்ஜுனனும் சுபத்திரையும் சென்ற தேர். தேர்த்தட்டில் எழுந்து பின்பக்கம் நோக்கி நின்ற அர்ஜுனன் தன் வில்லை குலைத்து சற்று அப்பால் கையிலொரு பெரிய மரத்தொட்டியுடன் வந்து கொண்டிருந்த முதிய பணியானையின் காதுக்குக் கீழே அடித்தான்.

சற்றே பார்வை மங்கலான முதிய களிற்றுயானை அலறியபடி சினந்து பின்னால் திரும்பி ஓடியது. இன்னொரு அம்பால் அதன் முன்னங்காலில் வயிறு இணையுமிடத்தில் அடித்தான். காலை தூக்கி நொண்டியபடி திரும்பி அரண்மனையின் பெருவாயிலின் குறுக்காக நின்றது. அவர்களின் தேரைத் தொடர்ந்து முற்றத்திற்கு ஓடிவந்த யாதவர்கள் தங்கள் தேர்களிலும் குதிரைகளிலும் ஏறி அதட்டல் ஒலியுடன் கூவி ஒருவரை ஒருவர் ஏவியபடி குளம்புகளும் சகடங்களும் சேர்ந்து ஒலிக்க பாய்ந்து வந்தபோது வாசலை மறித்ததுபோல் குழம்பிச் சினந்த பெரிய யானை நின்று கொண்டிருந்தது.

“விலக்கு! அதை விலக்கு!” என அவர்கள் கூவினர். யானையைவிட பாகன் குழம்பிப்போயிருந்தான். அதன் கழுத்துக் கயிற்றைப் பிடித்து துரட்டியை ஆட்டி கூவியபடி “வலது பக்கம்! வலதுபக்கம்!” என்று ஆணையிட்டான். முதியயானைக்கு செவிகளும் கேளாமலாகிவிட்டிருந்தன. ஒருகாலத்தில் அணிவகுப்பின் முன்னால் நடந்ததுதான். முதுமையால் சிந்தையிலும் களிம்பு படர்ந்திருந்தது. அது நின்ற இடத்திலேயே உடலைக்குறுக்கி வாலைச்சுழித்து துதிக்கையை சுருட்டியபடி பிளிறிக்கொண்டு சுழன்றது. கால்களை தூக்கியபடி இருமுறை நொண்டி அடித்தபின் எடை தாளாது மடிந்த மறு காலை சரித்து வாயிலிலேயே படுத்துவிட்டது.

பாய்ந்துவந்த புரவிகள் தயங்கி விரைவழியமுடியாது பின்னால் திரும்பி கனைத்து வால் சுழற்றிச் சுழல தொடர்ந்து வந்த தேர்கள் நிற்க அவற்றில் முட்டி சகடக்கட்டைகள் கிரீச்சிட நின்றன. ஒரு புரவி நிலை தடுமாறி யானையின் மேல் விழுந்தது. அதிலிருந்த வீரன் தெறித்து மறுபக்கம் விழ சினந்த யானை துதிக்கையைச் சுழற்றி தரையை அடித்தபடி காலை ஊன்றி பாதி எழுந்து பெருங்குரலில் பிளிறியது. ஒன்றுடன் ஒன்று முட்டி தேர்களும் புரவிகளும் முற்றத்தில் குழம்பின. தேரிலிருந்த ஒருவன் சவுக்கை வீசியபடி “விலகு! விலகு!” என பொருளின்றி கூச்சலிட்டான்.

சுபத்திரை நகைத்தபடி “மறுபக்கச் சிறு வாயில்களின் வழியாக சற்று நேரத்தில் அவர்கள் தொடர்ந்து வந்து விடுவார்கள்” என்றாள். “எனக்குத் தேவை சில கணங்கள் இடைவெளி மட்டுமே” என்றான். “இந்நகரம் சக்கரச் சூழ்கை எனும் படையமைப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது அறிவீர்களா?” என்றாள் சுபத்திரை. “அறிவேன்… அதை எதிர்த்திசையில் சுழன்று கடக்கவிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

சுபத்திரை புரவியை சவுக்கால் தொட்டு பெருங்குரலில் விரைவுபடுத்தியபடி திரும்பி “பாலை நிலத்தில் மெல்லிய கூம்புக்குழிகளை பார்த்திருப்பீர்கள். அதனுள் பன்றி போன்ற அமைப்புள்ள சிறு வண்டு ஒன்று குடிகொள்கிறது. இங்கு அதை குழியானை என்பார்கள். அக்குழியின் விளிம்பு வட்டம் மென்மையான மணலால் ஆனது. காற்றில் அது மெல்ல சுழன்று கொண்டிருக்கும். அச்சுழற்சியில் எங்கேனும் கால் வைத்த சிற்றுயிர் பிறகு தப்ப முடியாது. சுழற்பாதையில் அது இறங்கி குழியானையின் கொடுக்குகளை நோக்கி வந்து சேரும். தப்புவதற்கும் வெளியேறுவதற்கும் அது செய்யும் அனைத்து முயற்சிகளும் மேலும் மேலும் குழி நோக்கி அதை வரச்செய்யும்” என்றாள்.

சாலையில் எதிரே வந்த இரு குதிரைவீரர்களை அர்ஜுனனின் அம்புகள் வீழ்த்தின. குதிரைகள் திரும்பி கடிவாளம் இழுபட நடந்து சென்று சாலையோரத்தில் ஒண்டி நின்று தோல் அசைத்து பிடரி சிலிர்த்து குனிந்தன. “குழியானையின் சூழ்கையை நோக்கி நெறிகற்று அமைக்கப்பட்டது இந்நகரம்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “சக்கரவியூகம் பன்னிரண்டு வகை என்று அறிவேன். அதில் இது ஊர்த்துவ சக்கரம்” என்றான். “ஆம், செங்குத்தாக மேலெழும் மேருவடிவம் இது. இதுவரை எவரையும் இது தப்பவிட்டதில்லை” என்றாள். “நன்று” என்றான். சுபத்திரை கடிவாளத்தை சுண்டினாள். காற்றில் சவுக்கை வீசி குதிரைகளுக்கு மேல் சவுக்கோசை எப்போதும் இருக்கும்படி செய்தாள்.

“நூற்றெட்டு காவல்கோபுரங்கள் அறிவிப்பு முரசுகளுடன் இந்நகரில் உள்ளன. மானுட உடலின் நூற்றெட்டு நரம்பு நிலைகளைப் பற்றி சொன்னீர்கள். அவற்றுக்கு நிகர் அவை. முரசுகளின் மூலமே இந்நகரம் அனைத்து செய்திகளையும் தன்னுள் பரிமாறிக்கொள்ள முடியும். மூன்றாவது திகிரிப் பாதையை நாம் அடைவதற்குள் இந்நகரின் அனைத்துப் படைகளும் நம்மை முற்றும் சூழ்ந்துவிடும்” என்றாள்.

“பார்ப்போம். எந்த சூழ்கையையும் உடைப்பதற்கு அதற்குரிய வழிகள் உண்டு” என்ற அர்ஜுனன் அவள் இடக்கையை அசைத்து தேரை திருப்பிய கணத்திலேயே தொடர்ச்சியாக பன்னிரண்டு அம்புகளை விட்டு இரு சிறு பாதைகளினூடாக தொடர்ந்து பாய்ந்து மையச்சாலைக்கு அவனை பின்தொடர்ந்த புரவிப்படையை அடித்து வீழ்த்தினான். நரம்பு முனைகளில் அம்புகள் பட்ட புரவிகள் கால் தடுமாறி விரைந்து வந்த விசையிலேயே தரையில் விழுந்து புரண்டு கால்கள் உதைத்து எழுந்து நிற்க முயல தொடர்ந்து வந்த புரவிகளால் முட்டி மீண்டும் தள்ளப்பட்டன. நிலை தடுமாறிய அப்புரவிகள் சரிந்து விழ அவற்றின்மேல் பின்னால் வந்த புரவிகள் முட்டிச் சரிந்தன.

கடலலைகள் ஒன்றன்மேல் ஒன்று ஏறிப் புரண்டு சரிவது போல் புரவிகள் விழுவதை அரைக்கணத்தில் ஓரவிழியால் சுபத்திரை கண்டாள். ஒரு தேர் மட்டுமே செல்வதற்கு வழியிருந்த சிறு சந்துக்குள் விரைவழியாமலேயே உள்ளே நுழைந்தாள். நகரெங்கும் காவல் முரசுகள் ஒலிக்கத் துவங்குவதை அர்ஜுனன் கேட்டான். சுபத்திரை திரும்பி “தெளிவான ஆணை” என்றாள். “நம் இருவரையும் கொன்று சடலமாகவேனும் அவை சேர்க்கும்படி மூத்தவர் கூறுகிறார்.” அர்ஜுனன் “நன்று, ஆடல் விரைவுசூழ்கிறது” என்றான்.

இருமருங்கும் மாளிகைகள் வாயில்கள் திறந்து நின்ற அச்சிறு பாதையில் நான்கு புரவி வீரர்கள் கையில் விற்களுடன் தோன்றினர். அம்புகள் சிறு பறவைகளின் சிறகோசையுடன் வந்து தேரின் தூண்களிலும் முகப்பிலும் பாய்ந்து நின்றன. கொதிக்கும் கலத்தில் எழும் நீராவி என தேர்த் தட்டில் நின்று நெளிந்த அர்ஜுனன் அவற்றை தவிர்த்தான். பாகனின் தட்டில் முன்னால் இருந்த தாமரை இதழ் மறைப்புக்குக் கீழே தலையை தாழ்த்தி உடல் ஒடுக்கி கடிவாளத்தை சுண்டி இழுத்து புரவிகளை விரைவுபடுத்தினாள் சுபத்திரை. அர்ஜுனனின் அம்புகள் பட்டு இரு புரவி வீரர்கள் தெருவில் இருந்த கற்பாதையில் உலோகக் கவசங்கள் ஓசையிட விழுந்தனர். புரவிகள் திகைத்து பின்னால் திரும்பி ஓடின.

ஒரு குதிரை அம்புபட்டு நொண்டியபடி தொடர்ந்து வந்து கொண்டிருந்த புரவிகளை நோக்கி ஓட அவற்றை ஓட்டியவர்கள் நிலைகுலைந்து கடிவாளத்தை இழுக்கும் கணத்தில் அவர்களின் கழுத்திலும் தோள்களிலும் அர்ஜுனனின் அம்புகள் பாய்ந்தன. தேர் அவர்களை முட்டி இருபக்கமும் சிதறடித்தபடி மறுபக்கமிருந்த அகன்ற சாலைக்குப் பாய்ந்து சென்று இடப்பக்கமாக திரும்பி மேலும் விரைவு கொண்டது. தேர் திரும்பும் விசையிலேயே கைகளை நீட்டி சுவரோரமாக ஒதுங்கி நிலையழிந்து நின்றிருந்த வீரனின் தோளிலிருந்து ஆவநாழியைப் பிடுங்கி சுழற்றி தன் தோளில் அணிந்து கொண்டான் அர்ஜுனன். அதிலிருந்த அம்புகளை எடுத்து தன் எதிரே வந்த யாதவ வீரர்களை நோக்கி செலுத்தினான். ஒருவன் சரிய இன்னொருவன் புரவியை பின்னுக்கிழுத்து விளக்குத்தூணுக்குப்பின் ஒதுங்கி தப்பினான்.

“துறைமுகத்தை நோக்கி…” என்றான் அர்ஜுனன். “துறைமுகத்திலிருந்து கலங்களில் நாம் தப்ப முடியாது. எந்தக் கலமும் துறை விட்டெழுவதற்கு இரண்டு நாழிகை நேரமாகும். அதற்குள் நம்மை எளிதாக சூழ்ந்து கொள்ள முடியும்” என்று சுபத்திரை கூறினாள். “துறைமுகத்துக்கு செல்லும் பாதை சரிவானது. நம் புரவிகள் உச்சகட்ட விரைவை அடைய முடியும்” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றபடி அவள் மயில் போல அகவி சவுக்கை இடக்கையால் சுழற்றி புரவிகளை அறைந்தாள். மெல்லிய தொடுகையிலேயே சிலிர்த்து சினம் கொண்டு பாயும் வெண்புரவிகள் ஓசையுடன் புட்டங்களில் விழுந்த சாட்டையடிக்கு தங்களை முற்றிலும் மறந்தன. குளம்படி ஓசை கொண்டு இருபுறமும் இருந்த சுவர்கள் அதிர்ந்தன.

கல் பரவிய தரை அதிர்ந்து உடைந்து தெறிப்பதுபோல் சகட ஒலி எழுந்தது. அர்ஜுனனின் தலை மயிர் எழுந்து பின்னால் பறந்தது. தாடி சிதறி உலைந்தது. சுபத்திரையின் மேலாடை அவள் தோளை விட்டெழுந்து முகத்தை வருடி மேலெழுந்து தேர்த்தூணில் சுற்றி காற்றால் இழுத்து பறிக்கப்பட்டு பின்னால் பறந்து கிளை மீது அமரும் மயிலென ஓர் இல்லத்தின் உப்பரிகைமேல் சென்று விழுந்தது. மேலே காவல்மாடங்களில் இருந்து அவர்களைப் பார்த்தவர்கள் முரசொலியால் அவள் செல்லும் திசையைக் காட்ட துவாரகையின் அனைத்து சாலைகளிலும் இருந்து பேரொலியுடன் புரவிகள் சரிவிறங்கத்தொடங்கின.

மூன்றாவது வளைவில் ஒற்றைப்பார்வையில் பன்னிரண்டு சாலைகளையும் பார்த்த அர்ஜுனன் மலை வெள்ளம் இறங்குவது போல் வந்த புரவி நிரைகளை கண்டான். “பத்து அம்பறாத்தூணிகள் தேவைப்படும்” என்றான். “புரவிகளை நிறுத்த இயலாது. இவ்விரைவிலேயே நீங்கள் அவற்றை கொள்ள வேண்டியதுதான்” என்றாள் அவள். விண்ணிலிருந்து மண்ணை நோக்கி எடையுடன் விழுவது போல அவர்களது தேர் சென்று கொண்டிருந்தது. துரத்தி வந்த புரவிநிரைகளில் ஒன்று பக்கவாட்டில் சென்று சிறிய பாதை ஒன்றின் திறப்பு வழியாக அவர்களுக்கு நேர்முன்னால் வந்தது. அர்ஜுனனின் அம்புகள் அவர்கள் புரவிகளில் பட்டு தெறிக்க வைத்தன.

மீண்டும் மீண்டும் புரவிநிரையில் முதலில் வரும் மூன்று புரவிகளை அவற்றின் கால்கள் விலாவைத் தொடும் இடத்தில் இருந்த நரம்பு முடிச்சை அடித்து வீழ்த்தியதே அவன் போர் முறையாக இருந்தது. உச்சகட்ட விரைவில் வந்த பிற புரவிகளால் முன்னால் சரிந்து விழுந்த அப்புரவிகளை முட்டி நிலைகுலையாமலிருக்க முடியவில்லை. ஒன்றன் மேல் ஒன்றென புரவிகள் மோதிக்கொண்டு சிதறி சரிந்து துடித்து எழுந்து மீண்டும் முட்டி விழுந்தன. அவற்றின் கனைப்போசை பிற புரவிகளை மிரளச்செய்து கட்டுக்கடங்காதவையாக ஆக்கியது. மீண்டும் மீண்டும் அதுவே நிகழ்ந்தபோதும்கூட போரின் விரைவில் தெறித்துச் செல்பவர்கள் போல் காற்றில் வந்து கொண்டிருந்த அவர்களால் அதை எண்ணி பிறிதொரு போர் சூழ்கையை வகுக்க இயலவில்லை.

சிறிய நிரைகளாக துறைமுகப் பெரும்பாதையின் இருபுறங்களிலும் திறந்த சிறிய பாதைகளில் திறப்பினூடாக மேலும் மேலும் பாய்ந்து வந்து அவனை தொடர முயன்று விழுந்துருண்ட முதற்புரவிகளில் மோதி சிதறுண்டு தெருக்களில் உருண்டு தெறித்து துடித்தனர். கீழே விழுந்தபின் அவர்கள் எழுவதற்குள் அவர்களைத் தொடர்ந்து வந்த தேர்ச் சகடங்கள் ஏறி நிலைகுலைய அவர்கள் அலறி நெளிந்தார்கள். துடித்து விழுந்து சறுக்கி குளம்புகளை உதைத்து உடல் நிமிர்த்தி பாய்ந்தெழுந்த புரவிகள் இருபுறமும் ஒதுங்கின. அவற்றின் மேல் வந்து மோதிய தேர்ச் சகடங்கள் அவற்றை உரக்க கனைக்க வைத்தன.

கனவு ஒன்று நிகழ்வது போல மீள மீள ஒன்றே நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் எண்ணியது போலவே அவள் “கனவுரு போல” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “போரில் மனம் ஆயிரமாக பிரிந்துவிடுகிறது… அந்நிலை கனவில் மட்டுமே எழுவது.” தேரின் உச்சகட்ட விரைவில் முற்றிலும் எடை இழந்தவனாக உணர்ந்தான். விரைவே அவன் உடலை நிகர் நிலை கொள்ள வைத்தது. அவன் உள்ளத்தை விழிகளிலும் கைகளிலும் கூர்கொள்ள வைத்து ஒரு அம்பு கூட வீணாகாமல் வில்லதிரச்செய்தது.

துறைமுக மேடையை நோக்கி தேர் வீசியெறியப்பட்டது போல் சென்றது. “இப்புரவிகள் இனி அதிக தொலைவு ஓடாது” என்றாள். அர்ஜுனன் “மேலும் விரைவு…” எனக்கூவி வில்லுடன் சேர்ந்து நடனமிட்டான். “அங்கு பிறிதொரு தேர் நமக்குத் தேவை” என்றாள் சுபத்திரை. “துறைமுகக்காவலனின் புரவிகள் அங்கு நிற்கும்” என்றான். “நமக்குத் தேவை தேர்” என்றாள். அர்ஜுனன் “துறைமுக முகப்பில் காவலர்தலைவனின் தேர் நிற்க வாய்ப்புள்ளது. அங்கு செல்” என்றான்.

“இங்கிருந்து களஞ்சியங்களை நோக்கி செல்லும் பெரும்பாதை உள்ளது. ஆனால் அது பொதிவண்டிகளாலும் சுமைவிலங்குகளாலும் நிறைந்திருக்கும் இந்நேரம்” என்றாள். “சுமைவிலங்குகளுக்கு மட்டுமான பாதை என்று ஒன்று உண்டா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இவ்வழி சுமை விலங்குகளுக்கானது” என்று அவள் கைச்சுட்டி சொன்னாள். “அது மண்பாதை…” அர்ஜுனன் “அதில் செல்லலாம். மானுடரைவிட விலங்குகள் எளிதில் ஒதுங்கி வழிவிடும்” என்றான்.

எதிரேயிருந்த காவல் மாடத்தின் மீதிருந்து அவன் மேல் அம்பு விட்ட இரண்டு வீரர்களை அனிச்சையாக அவன் கை அம்பு தொடுத்து வீழ்த்தியது. ஒருவன் அலறியபடி மண்ணில் விழுந்து அவர்களின் தேரின் சகடத்தால் ஏறி கடக்கப்பட்டான். அவன் எலும்புகள் நொறுங்கும் ஒலி அர்ஜுனனை அடைந்தது. “நெடுநாளாயிற்று துவாரகை ஒரு போரைக்கண்டு” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “யாதவர் போர்கண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன” என்று சிரித்தான். “அதோ!” என்று அவள் கூவினாள். “அதோ யவனர்களின் சிறுதேர்.” அங்கே யவன கலத்தலைவன் ஒருவன் ஏறியிருந்த இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சின்னஞ்சிறிய தேர் அவர்கள் தேர் வரும் விரைவைக்கண்டு திகைத்து பக்கவாட்டில் ஒதுங்கியது.

அர்ஜுனன் “அதில் ஏறிக்கொள்” என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சுபத்திரை ஓடும் தேரிலிருந்து பறப்பவள் போல எழுந்து அத்தேரின் முகப்புப் பீடத்திற்கு சென்றாள். அர்ஜுனன் பாய்ந்து அதன் பின்பக்கத்தை பற்றிக் கொண்டான். கையூன்றி தாவி ஏறி யவன மொழியில் ஏதோ சொன்னபடி தன் குறுவாளை உருவிய கலத்தலைவனை தூக்கி வெளியே வீசினான். சவுக்கை பிடுங்கிக்கொண்டு அந்தத் தேரோட்டியை வெளியே வீசிய சுபத்திரை ஓங்கி புரவிகளை அறைய இரு புரவிகளும் கனைத்தபடி முன்னால் ஓடின.

அவர்கள் வந்த தேர் விரைவழியாது துறைமுகப்பை நோக்கி சென்றது. “பக்கவாட்டில் திருப்பு” என்றான் அர்ஜுனன். அவள் கடிவாளத்தை பிடித்திழுக்க எதிர்பாராதபடி அவ்விரட்டை புரவிகளும் ஒன்றன் பின் ஒன்றென ஆயின. “என்ன அமைப்பு இது?” என்றாள் அவள். “யவனத்தேர்களின் முறை இது. மிக ஒடுங்கலான பாதைகளில்கூட இவற்றால் செல்லமுடியும்” என்றான் அர்ஜுனன்.

துவாரகையின் ஏழ்புரவித்தேரைவிட விரைவு கொண்டிருந்தது அது. உறுதியான மென்மரத்தால் ஆன அதன் உடலில் பெரிய சகடங்கள் மெல்லிய இரும்புக்கம்பியாலான ஆரங்கள் கொண்டிருந்தன. பித்தளைக் குடத்திற்குள் பித்தளையால் ஆன அச்சு ஓசையின்றி வழுக்கிச் சுழன்றது . “சகடங்கள் உருள்வது போல தெரியவில்லை, பளிங்கில் வழுக்கிச்செல்வது போல் தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. அவர்களைத் தொடர்ந்து வந்த யாதவர்களின் தேர்கள் அவர்கள் தேர் மாறிவிட்டதை உணர்வதற்குள் விரைவழியாமலேயே நெடுந்தூரம் கடந்து சென்றன. “அங்கே! அங்கே!” என்று முன்னால் சென்ற யாதவர்கள் குரல்கள் எழ சுபத்திரை தன் தேரைத் திருப்பி சிறிய வண்டிகள் மட்டுமே செல்லும் வணிக சந்து ஒன்றுக்குள் புகுந்தாள்.

இரண்டு புரவிகள் மட்டுமே போகும் அளவுக்கு குறுகலான பாதை அது. துறைமுகத்தை ஒட்டி அமைந்திருந்த மரக்கல வினைஞர்களின் குடியிருப்பு. மரத்தாலான சிறிய அடுக்குவீடுகள் இருபுறமும் செறிந்திருந்தன. அங்கிருந்த நாட்டவரின் கொடிகள் சாளரங்களுக்கு முன்னால் எழுந்து சாலைமேல் பூத்து வண்ணங்களை காட்டின. உப்பரிகைகள் சாலையின் மேலேயே நீட்டி ஒன்றுடன் ஒன்று தோள் உருமி நிரை வகுத்திருந்தன. தேர் செல்வதற்கான பாதை அல்ல என்பதனால் அவ்வப்போது படிக்கட்டுகள் வந்தன. படிப்படிகளாக இறங்கி தொலைவில் அலையோசை என தன்னை அறிவித்த கடலை நோக்கி சென்றது அச்சாலை.

யவனத் தேரின் சகடங்கள் படிகளில் மோதி அலைகள் மேல் படகெனத் துள்ளி மேலெழுந்து நிலத்தில் அமைந்து முன் சென்றன. யவனப்புரவிகள் நீண்டகால்களைச் சுழற்றி சாட்டையில் கட்டப்பட்ட இரும்புக் குண்டுகளென குளம்புகளை கற்தரையில் அறைந்து முன் சென்றன. தேரின் இருபுறங்களிலும் மாறி மாறி இல்லங்களின் முகப்புகள் உரசிச் சென்றன. துறைமுகச்சாலையில் சென்ற யாதவர்களின் நிரை கூச்சல்களுடனும் ஆணைகளுடனும் திரும்பி அச்சிறுபாதையின் விளிம்பை அடைந்ததும் பிதுங்கி இரட்டைப் புரவிகளாக மாறி அவர்களை தொடர்ந்து வந்தது.

அர்ஜுனன் புன்னகையுடன் முன்னால் வந்த நான்கு புரவிகளை அம்பு தொடுத்து வீழ்த்தினான். தேர்கள் சென்ற விரைவும் அதிர்வும் அவை உருவாக்கிய காற்றும் சாலைவளைவுகளும் சிறுபாதை இணைவுகளும் உருவாக்கிய காற்றுமாறுபாடுகளும் பிறவீரர்களின் அம்புகளை சிதறடித்தன. நூற்றில் ஓர் அம்புகூட அர்ஜுனனை வந்தடையவில்லை. ஆனால் அவன் ஏவிய அம்புகள் தாங்களே விழைவு கொண்டவை போல காற்றிலேறி சிறகடித்து மிதந்து சென்றிறங்கின. அவர்கள் அஞ்சி ஒதுங்கியபோது முன்னரே அவ்விடத்தை உய்த்தறிந்தவை போல அவை அங்கே வந்து தைத்தன. அவன் அம்புகளுக்கு விசைக்கு நிகராக விழைவையும் அளித்து அனுப்புவதாக தோன்றியது.

“அவை நுண்சொல் அம்புகள். அவன் உதடுகளைப் பாருங்கள். பேசிக்கொண்டே இருக்கிறான். நுண்சொல்லால் அனுப்பப்பட்ட அம்புகளில் தெய்வங்கள் குடிகொள்கின்றன. அவற்றின் குருதிவிடாய் கொண்ட நாக்குகள் அம்புமுனைகள்” என்று ஒருவன் கூவினான். யாதவர்குடியின் பொது உள்ளத்தின் குரலாக அது ஒலித்தது. ஒலித்ததுமே அது பெருகி அவர்களின் வலுவான எண்ணமாக ஆகியது. யாதவர் அஞ்சத் தொடங்கியபின் விற்கள் கட்டுக்குள் நிற்காமல் துள்ளின. அம்புகள் பாதிவானிலேயே ஆர்வமிழந்தன. புரவிகள் சினம்கொண்டு பாகர்களை உதறின.

வளைந்து சென்றுகொண்டே இருந்தது சிறிய பாதை. “இது எங்கோ முட்டி நிற்கப்போகிறது” என்றாள் சுபத்திரை. “இல்லை. மறுபக்கம் கடலிருக்கையில் அப்படி நின்றிருக்க வாய்ப்பில்லை” என்றான் அர்ஜுனன். இருபுறமும் உப்பரிகைகளில் நின்ற யவனர்களும் பீதர்களும் சோனகர்களும் காப்பிரிகளும் தங்கள் மொழிகளில் அத்தேரை சுட்டிக்காட்டி கூச்சலிட்டனர். என்ன நிகழ்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அள்ளி உள்ளே இழுத்துக் கொண்டனர் அன்னையர். சாலையோரங்களில் இருந்த கலங்களையும் தொட்டிகளையும் எடுத்துக்கொண்டு உள்ளே மீண்டனர்.

சுருக்கங்கள் அடர்ந்த நீண்ட உடைகள் அணிந்து பொன்னிறச் சுருள் மயிர் கொண்ட யவனப்பெண்கள், இடுங்கிய கண்களும் பித்தளை வண்ண முகமும் கொண்ட பீதர்குலப் பெண்கள், பெரிய உதடுகளும் கம்பிச்சுருள்முடிகளும் காரிரும்பின் நிறமும் கொண்ட ஓங்கிய காப்பிரிப் பெண்கள். அவர்களின் குரல்களால் பறவைகள் கலைந்த வயலென ஒலித்தது அப்பகுதி. “இப்படி ஒரு உலகம் இங்கிருப்பதை நான் அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “இத்தனை பெருங்கலங்கள் வரும் துறைமுகத்தில் இவர்கள் இருக்கத்தானே வேண்டும்?” என்றாள் சுபத்திரை.

ஆண்கள் படைக்கலங்களுடன் ஓடிவந்து நடப்பது தங்களுக்குரிய போர் அல்ல என்றறிந்து திண்ணைகளில் நின்று நோக்கினர். போர் அவர்களை ஊக்கம் கொள்ளச்செய்தது. இயல்பாகவே யவனத்தேருக்கு ஆதரவானவர்களாக அவர்கள் மாறினர். மேலிருந்து மர இருக்கைகளும் கலங்களும் வந்து கீழே சென்ற குதிரைகள் மேல் விழுந்தன. ஒரு பெரிய தூண் வந்து கீழே விழ புரவிகள் பெருவெள்ளம் பாறையைக் கடப்பதுபோல அதை தாவித்தாவிக் கடந்தன.

அர்ஜுனன் “திருப்பு! திருப்பு!” என்று கூவுவதற்குள் எதிரில் வந்த பொதி மாடு ஒன்று மிரண்டு தத்தளித்து திரும்பி ஓடியது. சுபத்திரை எழுந்து தாமரை வளைவில் வலக்காலை ஊன்றி பின்னால் முழுக்கச்சாய்ந்து பெருங்கரங்களால் கடிவாளத்தை இழுத்து புரவிகளை நிறுத்தினாள். குளம்புகள் அறையப்பட்ட லாடங்கள் தரையில் பதிந்து இழுபட்டு பொறி பறக்க நின்றன. பக்கவாட்டில் ஒரு சிறு பாதை பிரிந்து சென்றது. பொதிமாடு நின்று திரும்பி நோக்கி “அம்மா” என்றது. எங்கோ அதன் தோழன் மறுகுரல் கொடுத்தது. சுபத்திரை புரவியை திருப்பி சாட்டையை வீசினாள். புரவிகள் சிறிய பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே நுழைய தேர் சகடங்கள் திடுக்கிட தொடர்ந்தது.

தேரின் வலதுபக்கம் அங்கிருந்த இல்லத்தின் காரைச் சுவரை இடித்துப் பெயர்த்து சுண்ணப் பிசிர்களை தெறிக்க வைத்தபடி சென்றது. “இப்பகுதியின் அமைப்பு துவாரகையில் எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஈரத்தில் புல்முளைப்பதுபோல தானாகவே உருவான பகுதியாகவே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன். “நாம் எவ்வழியே வெளி வருவோமென்று அவர்களால் உய்த்துணர முடியாது.” சுபத்திரை “துவாரகையின் யாதவர்கள் அறிவார்கள்” என்றாள். “ஏனெனில் அவர்களின் தலைவர் தன் உள்ளங்கை கோடுகளென இந்நகரை அறிவார்.”

அர்ஜுனன் “ஆம், மதுராபுரி யாதவர்கள்தான் மதுராவையே நன்கறிந்திருக்க வாய்ப்பில்லை” என்றான். சினத்துடன் திரும்பிய சுபத்திரை “மதுராவுக்கு வாருங்கள், நான் காட்டுகிறேன். நானறியாத இடம் ஏதும் அங்கில்லை” என்றாள். அர்ஜுனன் “சரி சரி தலைவி, நாம் போரில் இருக்கிறோம். தலைக்கு அடகு சொல்லப்பட்டுள்ளது. நாம் பூசலிட நீண்ட நாட்கள் நமக்குத் தேவை. அவற்றை நாம் ஈட்டியாகவேண்டும்” என்று சிரித்தான். விரைவழியாமல் இருபக்க சுவர்களையும் மாறி மாறி முட்டி உரசி மண்ணையும் காரையையும் பெயர்த்தபடி சென்றது தேர்.

“தப்பிவிட்டோம் என நினைக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நம்மைத் துரத்தியவர்கள் நேராக கடல்முகம் நோக்கி செல்கிறார்கள்.” முரசுகள் முழங்குவதை அவள் கேட்டு “ஆம், படகுகள் அனைத்தையும் கலங்களால் வளைத்துக்கொள்ளும்படி அரசாணை” என்றாள். “நாம் படகுகளில் ஏறி துவாரகையின் எல்லையை கடக்க முயல்வோம் என அவர்கள் எண்ணுவதில் பொருள் உள்ளது. ஏனென்றால் அதுவே எளிய வழி. பலராமர் அதை நம்பியிருப்பார்” என்றான் அர்ஜுனன். “நான் அவர்களுடன் இல்லாதது உங்கள் நல்லூழ்” என்றாள் சுபத்திரை.

“இந்தப் பாதை மையப்பெருஞ்சாலையை அடையும். நாம் துறை வழியாக தப்புவதாக செய்தியிருப்பதனால் அங்கே காவலர் குறைவாகவே இருப்பார்கள். முழுவிரைவில் சென்றால் அரைநாழிகையில் தோரணவாயிலை கடந்துவிடலாம். அதை கடந்துவிட்டால் நம் ஆட்டம் முடிகிறது” என்றான் அர்ஜுனன். அவள் “அரைநாழிகை நேரம் மிகமிக நீண்டது” என்றாள். “காமத்துக்கு நிகர்” என்று அவன் சொல்ல “மூடுங்கள் வாயை. எங்கே எதைப் பேசவேண்டும் என்பதில்லையா?” என அவள் பொய்ச்சினம் கொண்டாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்

$
0
0

1

நண்பர்களே ,

நவம்பர் மாத கோவை ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 29- 11- 2015 ( ஞாயிற்று கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. ( முன்பு 15/11/15ல் நடத்த திட்டமிட பட்டு இருந்தது ) வெண்முரசு வாசிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.முகவரி மற்றும் தொடர்பு எண் இணைத்து உள்ளேன் . இன்னும் பிற விபரங்கள் விரைவில். நன்றி .

Suriyan Solutions

93/1, 6th street extension ,
100 Feet road ,
near Kalyan jeweler,
Ganthipuram

விஜய் சூரியன் -99658 46999
ராதா கிருஷ்ணன் – 7092501546

விஜய் சூரியன்

Suriyan Solutions

தொடர்புடைய பதிவுகள்

ஏக்நாத்தின் ‘ஆங்காரம்’

$
0
0

ஆங்காரம் - ஏக்நாத்

பரவலாகக் கவனிக்கப்பட்ட கெடைகாடு நாவலுக்குப்பின் ஏக்நாத் எழுதியிருக்கும் நாவல் ஆங்காரம். ஒரு ரயில்பயணத்தில் இதை வாசித்துமுடித்தேன். இதன் ஈர்ப்புக்கு முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தபோது இதிலுள்ள நாஞ்சில்நாடன் எழுத்தின் சாயல்தான் என்று தோன்றியது.

நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில்காயும்’ போன்ற நாவல்களுக்கு பலவகையிலும் அணுக்கமானது ஆங்காரம். குமரிக்குப்பதில் திருநெல்வேலிமாவட்டம். சற்றே வரண்ட நிலம். ஆடுமாடு மேய்த்தலும் மழையை நம்பி விவசாயம் பார்ப்பதும் தொழில்.படிப்படியாக அழிந்துவரும் கிராமச்சூழல். அதில் ஒரு வறிய உயர்சாதி [வேளாள] இளைஞனின் இளமைக்காலம். நாவலின் கதைகூட இதுதான் என்று சொல்லிவிடலாம்.

முப்பிடாதி ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் சித்தரிப்பில் ஆரம்பிக்கிறது நாவல். மென்மழை பெய்கிறது. அவன் காலுடன் ஒண்டும் ஆட்டை ‘என்னமாம் கடிக்குதா?’ என்று கேட்டு அருகே அணைத்து உடலைத் தடவிப்பார்க்கும் அவனுடைய கரிசனம் அவனுடைய கதாபாத்திரத்தைக் காட்டுகிறது.

ஏழைக்குடும்பம். தந்தை வயிற்றுவலிக்காரராக இருந்து இறந்தவர். அன்னை புல்பறித்தும் விறகுசேர்த்தும் பையனைப் படிக்கவைக்கிறாள். அவன் அந்த கிராமத்திலிருந்து மெல்ல முளைவிட்டெழுந்து கல்லூரிக்குச் சென்று ஓர் இளைஞனாக ஆகி தன் ஆளுமையைக் கண்டடைவதை சித்தரிக்கிறது ஆங்காரம்

2

வயதடைவுச் சித்தரிப்பு நாவல் [coming to age novels] என்னும் வகைக்குள் இந்நாவலை சேர்க்கலாம். உண்மையில் மிக எளிதாக எழுதத்தகுந்த ஒரு வகைமை இது. ஏனென்றால் அத்தனைபேருக்கும் இப்படி ஒரு வாழ்க்கைக்காலகட்டம் இருந்திருக்கும். அதை நம்பகமாகவும் நுட்பமாகவும் சொல்லத்தெரிந்தாலே போதும்

ஆனால் தமிழில் இத்தகைய நாவல்கள் மிகக்குறைவு என்பது இப்போது எண்ணிப்பார்க்கையில் தோன்றுகிறது. நாஞ்சில்நாடனின் ’என்பிலதனை வெயில்காயும்’ தான் உடனடியாக நினைவுக்கு வரும் நாவல். நீலபத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலின் கரு வேறுதிசை நோக்கிச் சென்றாலும் ஓர் எல்லைவரை அதையும் இவ்வகைமைக்குள் வைக்கலாம்.

ஆனால் அனைத்து இலக்கணப்படியும் வயதடைவுச்சித்தரிப்பு நாவல் என்றால் ஆதவனின் ’என் பெயர் ராமசேஷன்’ தான். அந்த இலக்கணப்படி அமையாவிட்டாலும் அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு இவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட உச்சம். அந்த இளைஞன் எது புறவுலகு என புரிந்துகொள்ளும் தீவிரத்தை நாம் பிற எந்த நாவலிலும் காணமுடிவதில்லை.

சாலிங்கரின் Catcher in the rye போன்ற ஒரு வயதடைவுச்சித்தரிப்பு நாவலுக்கான களம் தமிழகத்தில் உண்டா என்ற எண்ணம் இந்நாவலை வாசிக்கையில் வந்தது. அறங்கள், அறமீறல்கள், கொள்கைகள், குழப்பங்கள் நிறைந்த பெரியவர்களின் உலகை சந்திக்கும் இளையவர்களின் கொந்தளிப்பைச் சொன்ன நாவல் அது. நீங்கள் சமைத்து வைத்திருக்கும் உலகை நான் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பதின்பருவத்து இளைஞனின் வினா அதில் இருந்தது.

அங்கிருந்து உண்மையில் இருத்தல் என்றால் என்ன என்னும் வினாவை நோக்கிச் சென்றது சாலிங்கரின் நாவல். ஆகவேதான் அது ஒரு காலகட்டத்தின் சினத்தின் அறைகூவலின் அத்துமீறலின் ஆவணமாக ஆகியது. இன்றும் ஒரு செவ்வியல்படைப்பாக கொள்ளப்படுகிறது. என் இளமைக்காலமாகிய எண்பதுகள் அரசியல் அவநம்பிக்கைகள், வேலையில்லாத்திண்டாட்டம், அழிந்த நிலப்பிரபுத்துவ வாழ்க்கை ஆகியவற்றால் கலங்கிமறிந்த ஒன்று. அன்று சாலிங்கரின் நாவல் ஒரு பெரிய அலைக்கழிப்பை அளித்தது. இன்று என்னவாக அது பொருள்படும் என மீண்டும் வாசித்தால்தான் தெரியும்

அத்தகைய அலைக்கழிப்பை, கொந்தளிப்பை தமிழ்ச்சூழலில் வளரும் ஓர் இளைஞன் அடைவதில்லை என்பதையே ஆங்காரம் நாவலும் காட்டுகிறது. ஏனென்றால் அலைக்கழிப்பு நிறைந்த ஓர் மேல்மட்ட உலகுடன் அவனுக்குத் தொடர்பில்லை. அவன் வாழும் கிராமம் காலத்தின் அடித்தட்டில் அசைவற்றுக் கிடக்கிறது. நிலப்பிரபுத்துவ வாழ்க்கைமுறையும் சமூக அமைப்பும் மெதுவாக அழிந்து வருவது, அருகே உள்ள நகருடன் கொள்ளும் தொடர்பு ஆகியவைதான் அவன் அறியும் மாற்றங்கள். அந்த மாற்றங்களை வியப்பும் கிளர்ச்சியும் சஞ்சலமுமாக அவன் எதிர்கொள்வதே இங்குள்ள யதார்த்தம்

1

ஏனென்றால் தமிழகத்தில் பெரிய அளவிலான சமூகக்கிளர்ச்சிகள் ஏதும் நிகழ்ந்ததில்லை. மேலோட்டமான சில அரசியல் அலைகள் வந்துபோயின. சுதந்திரப்போராட்டம் கூட தமிழகத்தைப்பொறுத்தவரை ஒரு சில செய்திகளும் நிகழ்ச்சிகளும்தான். ஆரம்பகால இந்தியவிடுதலை இயக்கங்களாலும், பின்னர் இடதுசாரி இயக்கங்களாலும் பின்னர் நக்சலைட் இயக்கத்தாலும் அலைக்கழிக்கப்பட்ட வங்கத்து இளைஞன் ஒருவேளை சாலிங்கரின் உலகுக்கு நிகரான ஒன்றை உருவாக்கக்கூடும். ஹைதராபாத் பின்னணியில் தேசப்பிரிவினைச் சூழலில் பதினெட்டாவது அட்சக்கோட்டின் நாயகன் அந்த கொந்தளிப்பை அடைகிறான்

நாஞ்சில்நாடனின் இளைஞனுக்கு உள்ள அதே வகையான சிக்கல்கள்தான் கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்காலத்திற்குப் பின்னரும் ஏக்நாத்தின் தலைமுறைக்கும் என்பதே இந்தியக்கிராமச்சூழலின் தேக்கத்தை திகைப்பூட்டும்படிக் காட்டுகிறது. ஆங்காரத்தின் முப்பிடாதிக்கு என்பிலதனை வெயில் காயும் நாவலின் சுடலையாண்டியுடன் நெருக்கமான ஒற்றுமை உள்ளது பெயரில்கூட.

உண்மையில் இக்கிராமத்தில் முப்பிடாதி சந்திப்பவை என்ன? நுணுக்கமான ஊடுபாவுகளாகப் பின்னப்பட்ட கிராமிய உறவுகள். அவற்றை அவன் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்வதை நாவல் காட்டுகிறது. கற்பழித்துக்கொல்லப்பட்ட வண்ணாத்தி, காமராஜரிடம் கிராம யதார்த்தத்தைச் சொன்னமைக்காக தாக்கப்பட்டு உயிர்பிழைத்த கம்யூனிஸ்டுத் தாத்தா என கதாபாத்திரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவர்களினூடாக எப்படி அந்தக்கிராமம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என அவன் அறிகிறான்

அடுத்தது அந்த எல்லைகள் மீறப்படும் சித்திரம். நிலவுடைமையாலும் சாதியாலும் மேல்கீழென உறுதியாக அடுக்கப்பட்டிருக்கும் அந்தக்கிராமத்தின் தீர்மானிக்கப்பட்ட விதிகளை பலர் மீறுகிறார்கள். மீறல் இருவகையில் நிகழ்கிறது. ஒன்று வழக்கம்போல காமம். செல்வந்தன் வீட்டுப்பெண்ணை சாதாரண இளைஞன் வலைவீசிப்பிடிக்கிறான். அடிபட்டு மும்பைக்கு ஓடிப்போகிறான். இன்னொன்று அரசியல். மானுட சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் ஊருக்குள் கொண்டுவருகிறது அது. அதன் உருவமாக இருக்கிறது கிராமத்து வாசிப்புசாலை.

கல்லூரிக்குப் போய் படிப்பவன் முப்பிடாதி. விடுமுறை நாட்களில் ஆடுமாடு மேய்க்கிறான். அது அவன் இடத்தை வகுத்துவிடுகிறது அங்கே. சாலையில் தன் வயதான இளம்பெண்களைப் பார்க்கையில் மார்பை சட்டையால் மறைக்கவில்லையே என அவன் கொள்ளும் பரிதவிப்பு ஒரு நல்ல குறியீடு போல இந்நாவலில் வருகிறது. முப்பிடாதி ஆசைப்படுவதே அதைத்தான், ஒரு வெள்ளைச்சட்டை. மாடுமேய்த்தவனை பிறிதொருவனாக ஆக்குகிறது அது. அதற்காக அவன் கொள்ளும் ஆங்காரம்

ஆதவன்

ஆதவன்

முப்பிடாதி தன்னுள் கண்டடையும் காமம் இன்னொரு சரடாக இந்நாவலில் ஓடுகிறது. வழக்கம்போல மதினியின் உடல்கட்டில் கொள்ளும் ரகசிய வேட்கையும் குற்றவுணர்வும். கல்லூரியில் ‘ஸ்டைலான’ பெண்களை எல்லாம் தவிர்த்துவிட்டு தனக்குரியவளாக தனக்குச் சிக்கக்கூடியவளாக சாயம்போன தாவணிக்காரியை கண்டடையும் தாழ்வுணர்ச்சி.இவற்றுக்கு நடுவே அலைபாய்ந்துசெல்கிறது அது.

மற்றபடி முப்பிடாதி பெரியதாக எதையும் எதிர்கொள்வதில்லை. அரசியல் அவனை தொடுவதில்லை. வரலாற்றை அவன் அறிவதேயில்லை. ஆழமான சமூகவினாக்களும் இருத்தல் ஐயங்களும் அவனை ஆட்டிப்படைப்பதில்லை. அவன் நாடுவது தன்னை இச்சமூகத்தில் பொருத்திக்கொள்ள ஓர் இடம். அதை நோக்கிய வீம்பும் வேகமும்தான் அவனுடைய இளமை.

முற்றிலும் நகர்ப்புறம் சார்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆதவனின் ராமசேஷனுக்கும் வேறுவாழ்க்கை இல்லை என்பதை வியப்புடன் நினைத்துக்கொள்கிறேன். இங்கே மதினி என்றால் அங்கே மாமி. அங்கும் தாழ்வுணர்ச்சி தயக்கம். தொழிலதிபர் வீட்டில் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்துத் தரப்படும் குளிர்ந்த ஆப்பிளை கூச்சத்துடன் ரசித்து உண்ணும் ராமசேஷனை நினைவுகூர்கிறேன். அவன் முப்பிடாதியேதான்.

உண்மையில் தமிழ் இளைஞனின் வாழ்க்கை என்பது இவ்வளவுதான் என்பதே இந்நாவலை நம்பகமான சமூகப் பதிவாக ஆக்குகிறது. எத்தனை சின்ன வாழ்க்கை என்னும் பிரமிப்பை உருவாக்குகிறது இது. காலடியில் ஒரு புழு நெளிந்து செல்வதைக் கண்டு ஆம் அதற்கும் ஒரு பயணம் இருக்கிறது என எண்ணுவதைப்போல.

இந்நாவலை ஒரு சம்பிரதாயமான தமிழ் யதார்த்தநாவல் என்றே வகைப்படுத்தமுடியும். இதன் யதார்த்தம் சுவாரசியமானதாக இருந்தாலும் இது நம்மை எங்கும் கூட்டிச்செல்வதில்லை. ஒரு பொதுப்புத்திப்பார்வைக்கு அப்பால் ஆசிரியரின் கலைநோக்கால் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட வாழ்க்கைத்தரிசனங்கள் இல்லை. கவித்துவ வெளிப்பாடுகள் இல்லை. அரிய தருணங்கள்கூட இல்லை.

அவ்வகையில் நாற்பதாண்டுகளுக்கு முன் நாஞ்சில்நாடனின் தலைகீழ் விகிதங்கள் வந்தபோது சுந்தர ராமசாமி முன்வைத்த விமர்சனங்கள் அனைத்தும் இந்நாவலுக்கும் பொருந்துவன என்று தோன்றுகிறது. யதார்த்தம் அதற்கு அப்பால் கொண்டுசெல்வதற்கான ஒரு பாதையாக அமையவேண்டும், அவ்வாறு அமையவில்லை. ஆகவே இதை ஒரு நவீனநாவல் என்று சொல்லமுடியாது.

நாஞ்சில்நாடனின் மொழி கற்பனாவாதம் அற்றது. ஆகவே அது அவரது யதார்த்தவாதத்தில் சரியாகப்பொருந்துகிறது. ஏக்நாத் பல இடங்களில் எளிய கற்பனனாவாத மொழிக்குச் செல்கிறார். அது இவ்வுலகுக்கு அயலாக உள்ளது. ‘ ஒருநொடியில் உயிர் அசைந்து இன்னொருமுறை பார்க்கமாட்டாளா என்றிருக்கும்’ போன்ற வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்.

நாவலை முடித்தபின் ஒரு சுவாரசியமான எண்ணம் வந்தது. முப்பிடாதி [ஆங்காரம்] ராமசேஷன் [என் பெயர் ராமசேஷன்] சுடலையாண்டி [என்பிலதனை வெயில்காயும்] திரவியம் [தலைமுறைகள்] என நாம் வாசிக்கும் வயதடைவுச்சித்தரிப்பு நாவல்கள் அனைத்திலுமே கதைநாயகனின் பெயர் பழமையானது. ஆசிரியர்களுக்கு ஏன் அப்படித் தோன்றியது? ராமசேஷன் ‘ஆம் ராமசேஷன்தான் , பழைய பெயர். என் தாத்தாவின் பெயர். அதைக்கூட மாற்ற என் அப்பாவுக்கு தைரியமில்லை’ என்று தன் பெயரைப்பற்றிச் சொல்லிக்கொள்வதில்தான் நாவல் தொடங்குகிறது.

அந்த இளைஞர்கள் புதிய காலத்தை நோக்கி எழ விழைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவர்களின் பாரம்பரியம் பழைமையை பெயராகவே சூட்டியிருக்கிறது. அதை அவர்களால் மாற்றிக்கொள்ளவே முடியாது. ஆகவே அவர்கள் போராடுவது அவர்களின் சொந்த அடையாளங்களுடன்தான். ஒரு முப்பிடாதி அல்லாமலாகத்தான் முப்பிடாதி ஆங்காரம் கொள்கிறான். நான் கல்லூரியில் படிக்கும்போது அனேகமாக ஒவ்வொரு இளைஞனும் அவனுடைய சொந்தப் பெயர்மீதுதான் கசப்பு கொண்டிருந்தான் என நினைவுறுகிறேன். அந்நினைவு இவ்வாசிப்பை பல திசைகளில் திறந்துகொள்ளச் செய்கிறது

ஆங்காரம்
Discovery book palace
6, Mahaveer complex
Munusami salai
K.K.nagar west.
Chennai- 78.
phone: 8754507070
விலை: 220.

ஏக்நாத் இணையதளம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருது விழா 2015

$
0
0

devadatchan

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.

நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

=====================================================================

தேவதேவன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 33

தேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது.

கீழே சென்றதும் “யவன தேர்! இல்லையேல் இந்நேரம் அச்சிற்று சகடங்கள் விலகி ஓடி இருக்கும்” என்றாள். “ஆம், தேர் புனைவதில் அவர்களே நிகரற்றவர்கள்” என்றான் அர்ஜுனன். உலர்ந்த மீனின் வீச்சம் எழத் தொடங்கியது. “மீன்களஞ்சியங்கள் இங்குள்ளன என்று நினைக்கிறேன்” என்றாள். “நன்று” என்றான் அர்ஜுனன். “யாதவர்கள் மீன் விரும்பி உண்பவர்கள் அல்ல. உலர் மீன் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத உணவு. எனவே இங்கு வந்திருக்கமாட்டார்கள்” என்றான்.

அப்பகுதியெங்கும் பீதர்களே நிறைந்திருந்தனர். “இவர்கள் உலர்மீனுக்கு அடிமைகள்” என்றான் அர்ஜுனன். அவள் “காலையிலேயே வாங்குகிறார்களே!” என்றாள். விரைந்து வந்த புரவியைப் பார்த்ததும் இரும்புப் படிகளில் ஏறி ஒரு பீதன் கைகளை விரித்து அவர்கள் மொழியில் கூவ சாலையில் கூடைகளுடனும் பெட்டிகளுடனும் நின்றிருந்த பீதர்கள் பாய்ந்து குறுந்திண்ணைகள் மேலும் சாளரங்கள் மேலும் தொற்றி ஏறிக்கொண்டனர். வண்ணத் தளராடைகள் கைகளை விரித்தபோது அகன்று அவர்களை பெரிய பூச்சிகள் போல காட்டின. அவர்களின் குரல்கள் மான்களின் ஓசையென கேட்டன.

தரையில் கிடந்த கூடைகளின் மேல் ஏறி மென்மரப்பெட்டிகளை நொறுக்கியபடி புரவிகள் செல்ல சகடங்கள் அவற்றின் மேல் உருண்டு சென்றன. சாலைக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தோல்திரைகளையும் துணிப்பதாகைகளையும் கிழித்து வீசியபடி சென்றது தேர். அவர்களின் மேல் பறக்கும் சிம்மப்பாம்பு பொறிக்கப்பட்ட குருதிநிறமான பதாகை வந்து படிந்து இழுபட்டு பின்னால் வளைந்து சென்றது. “இத்தனை மீன் இங்கு பிடிக்கப்படுகிறதா?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “இதைவிட பெரிய மீன் அங்காடி ஒன்றிருக்க வேண்டும். இது இங்குள்ளவர்கள் உண்பதற்காக கொள்ளும் மீன். கலக்காரர்களே இங்கில்லை பார்” என்றான்.

சாலை ஓரங்களில் தோல்துண்டுகளை போலவும், வெள்ளித் தகடுகளை போலவும், ஆலிலைச்சருகுகள் போலவும், சிப்பிகள் போலவும், கருங்கல்சில்லுகள் போலவும் குவிக்கப்பட்டிருந்த உலர் மீன்கள் நடுவே தேர் சென்றது. அங்கு தெருநாய்கள் நிறைந்திருந்தன. தேரைக் கண்டு கூவியபடி எழுந்து பாய்ந்து சிறுசந்துகளுக்குள் புகுந்து வால் ஒடுக்கி ஊளையிட்டு தேர் கடந்து சென்றபின் பின்னால் குரைத்தபடி துரத்தி வந்தன. “இந்தச் சாலை பண்டக நிலைக்கு செல்லும் பெருஞ்சாலையை அடையும் என எண்ணுகிறேன்” என்றாள் சுபத்திரை. “ஆம், பொதி வண்டிகள் சென்ற தடம் தெரிகிறது” என்றான்.

வீட்டு வாயிலைத் திறந்து பெருஞ்சாலைக்கு இறங்கியது போல சிறிய திறப்பினுடாக அகன்ற நெடுஞ்சாலையில் அவர்கள் தேர் வந்து சேர்ந்தது. நேராக ஒளிக்குள் சென்றதுபோல கண்கள் கூசி சிலகணங்கள் ஒன்றும் தெரியவில்லை. அங்கு நின்றிருந்த சிறிய யாதவர் குழு அவர்கள் வருவதை எதிர்பார்க்கவில்லை. ஓசையிட்டு திரும்பி ஒருவன் கை வீசி கூவுவதற்குள் கழுத்தில் பட்ட அம்புடன் சரிந்து விழுந்தான். அடுத்தடுத்த அம்புகளால் எழுவர் விழ பிறர் புரவிகளை இழுத்துக் கொண்டு விலகினர்.

அவர்களைக் கடந்து மையச்சாலைக்கு சென்று முழு விரைவு கொண்டது தேர். அப்பகுதியிலிருந்த காவல்மாடத்தில் முரசு ஒலிக்கத் தொடங்கியது. “வந்துவிட்டோம்! இந்த நீண்ட சாலையைக் கடந்தால் தோரணவாயிலை அடைவோம். அதைக் கடந்து அவர்கள் வர குலநெறி இல்லை” என்றாள் சுபத்திரை. “இது பாதுகாப்பற்ற திறந்த சாலை. உன் கையில் உள்ளது நமது வெற்றி” என்றான். சிரித்தபடி “பார்ப்போம்” என்று கடிவாளத்தை எடுத்து மீண்டும் முடுக்கினாள். வெண் புரவிகளின் வாயிலிருந்து தெறித்த நுரை சிதறி காற்றில் பறந்து வந்து அர்ஜுனன் முகத்தில் தெறித்தது. “களைத்துவிட்டன” என்றான். “ஆம், தோரண வாயிலைக் கடந்ததுமே கணுக்கால் தளர்ந்து விழுந்து விடக்கூடும்” என்றாள்.

பெருஞ்சாலையின் அனைத்து திறப்புகளின் வழியாகவும் யாதவர்களின் புரவிகள் உள்ளே வந்தன. அம்புகள் எழுந்து காற்றில் வளைந்து அவர்களின் தேரின் தட்டிலும் குவைமுகட்டிலும் தூண்களிலும் தைத்து அதிர்ந்தன. அர்ஜுனன் “இனி அம்புகள் குறி தவறுவது குறையும்” என்றான். அவன் அம்பு பட்டு அலறியபடி வீரர்கள் விழுந்து கொண்டிருந்தனர். குதிரைகள் சிதறிப்பரந்து வால்சுழற்றி ஓடி வர அந்தப் பெருஞ்சாலையில் விரிவிருந்தது. “இனி எல்லாம் முற்றிலும் நல்லூழ் சார்ந்தது. ஒரு முறை சகடம் தடுக்கினால் ஒரு புரவியின் குளம்பு உடைந்தால் அதன் பின் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றாள்.

“அனைத்து போர்களும் ஊழின் விளையாடல்களே” என்றான் அர்ஜுனன். “போரின் களியாட்டே அது நேராக ஊழெனும் பிரம்மம் கண்ணெதிரே வந்து நிற்கும் காலம் என்பதனால்தான். செல்க!” என்றான் அர்ஜுனன். சுபத்திரை திரும்பி நோக்கி “மேடை ஒன்றில் நடனமிடும் போர் மங்கை போலிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “நான் நன்கு நடனமிடுவேன், பெண்ணாகவும்” என்றான். பேசியபடியே விழிகளை ஓட்டி தன்னைச் சூழ்ந்து வந்த யாதவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அம்பும் முன்னரே வகுக்கப்பட்டது போல் சென்று மெல்ல அலகு நுனியால் முத்தமிட்டு அவர்களை வீழ்த்தியது.

“பெண்ணாகவா?” என்றாள். “பெண்ணாக ஆகாமல் பெரு வில்லாளியாக எவனும் ஆக முடியாது. வில்லென்பது வளைதலின் கலை” என்றான் அர்ஜுனன். நீண்ட சாலைக்கு அப்பால் கோட்டைப் பெருவாயில் தெரியத் தொடங்கியது. “கோட்டை வாயில்” என்றாள் சுபத்திரை. “எழுபத்தெட்டு காவலர்மாடங்கள் கொண்டது.”

அர்ஜுனன் “நன்று” என்றான். “காவல் மாடங்களிலும் கோட்டை மேல் அமைந்த காவலர் குகைகளிலும் தேர்ந்த வில்லவர்கள் இருப்பார்கள்” என்றாள். “ஆம், இறுதித் தடை இது, செல்” என்றான். “இங்குள்ள யாதவர் வில்லெடுக்க மாட்டார்கள். மதுராபுரியினருக்கு வில்லெடுத்து பறவைகளை வீழ்த்தியே பழக்கம்.” அவள் “மதுராவின் வில்லாளி ஒருத்தி அவர்களுடன் இல்லை. அதனால் இந்தப்பேச்சு” என்றாள். புரவிச் சவுக்கை மாற்றி மாற்றி வீறி விரைவின் உச்சத்தில் செலுத்தியபடி “இன்னும் இன்னும்” என கூவினாள்.

“பெரிய அம்புகளை இந்த மென்மரத்தேர் தாங்காது. இது விரைவுக்கானது. இதில் இரும்புக்கவசங்களும் இல்லை” என்றாள். “பார்ப்போம்” என்றபடி அர்ஜுனன் தன்னருகே வந்த வீரன் ஒருவனை அறைந்து வீழ்த்தினான். அவன் கழுத்திலணிந்த சரடைப் பற்றித் தூக்கி சுழற்றி எடுத்து தன் தேர்த்தட்டில் நிறுத்தி அதே விசையில் அவன் புறங்கழுத்தை அறைந்து நினைவிழக்கச்செய்து அம்புமுனையால் அவன் அணிந்த கவசங்களையும் இரும்புத் தலையணியையும் கட்டிய தோல்பட்டைகளை வெட்டிக் கழற்றி தான் அணிந்தான். அவனைத்தூக்கி பக்கவாட்டில் வீசியபடி பிறிதொருவனை பற்றினான். அவன் மார்புக்கவசத்தைக் கழற்றி சுபத்திரையின் மேல் வீசி “முதுகில் அணிந்து கொள். குனிகையில் உன் முதுகு திறந்திருக்கிறது” என்றான். அவள் அதைப்பற்றி முதுகில் அணிந்து வார்ப்பட்டையை மார்பில் கட்டிக் கொண்டாள்.

அவர்களின் தேர் அதில் தைத்த நூற்றுக்கணக்கான அம்புகளுடன் நெருஞ்சிக்குவியலிலிருந்து மீளும் வெண்ணிறப் பசு போல் இருந்தது. மேலும் மேலும் அம்புகள் வந்து தைத்தன. சகடத்தின் அதிர்வில் அம்புகள் பெயர்ந்து உதிர்ந்தன. அர்ஜுனனின் கவசத்தின் மேல் தைத்த அம்புகளை அவன் தேர்த்தட்டிலேயே உரசி உதிர்த்தான். அவள் “கோட்டை அணுகுகிறது…” என்றாள். கோட்டையின் கதவு வழியாக கூரிய கடற்காற்று நீர்க்குளிருடன் வந்து அவர்களை அறைந்தது.

துவாரகையின் முகப்புக் கோட்டை இருள் புனைந்து கட்டப்பட்டது போல அவர்களை நோக்கி வந்தது. அதன் உச்சியில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான அம்பு மாடங்களில் மதுராபுரியின் யாதவ வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் பாய்ந்து ஏறி நிறைவதை அர்ஜுனன் கண்டான். அம்புகளின் உலோகமுனைகள் பறவை அலகுகள் போல செறிந்தன. வெயிலில் மான்விழிகள் போல மின்னின. காவல் முரசங்கள் கருங்குரங்குகள் போல முழங்கிக் கொண்டிருந்தன. கொம்பு ஒன்று உரக்க ஓசையெழுப்பியது.

தொலைவிலேயே அவர்களின் தேர் வருவதைக் கண்ட வீரர்கள் கை நீட்டி பெருங்கூச்சலிட்டனர். சிலர் ஓடிச் சென்று முரசுமேடையில் ஏறி பெருமுரசை முழக்கத்தொடங்கினர். பதினெட்டு பெருமுரசங்கள் முழங்க களிற்று நிரைபோல பிளிறி நிற்பதாக தோற்றம் கொண்டது கோட்டை. “முழு விரைவிலா?” என்றாள் சுபத்திரை. “ஆம் முழுவிரைவில்” என்றான் அர்ஜுனன். பிறிதொரு வீரனிடம் இருந்து பெரிய வில் ஒன்றை பிடுங்கியிருந்தான். “தங்கள் அம்புகள் சிறிதாக உள்ளன” என்றாள் அவள். “சிறிய அம்புகள் பெரிய விற்களில் இருந்து நெடுந்தூரம் செல்ல முடியும்” என்று அதை நாணேற்றினான். கோட்டையில் இருந்து அம்புகள் வந்து அவர்கள் தேரை தொடுவதற்கு முன்னரே அதன் மேலிருந்து யாதவர்கள் அலறியபடி உதிரத் தொடங்கினர்.

“நேராக செல்” என்று அர்ஜுனன் கூவினான். “கோட்டைக் கதவுகளை அவர்கள் மூடக்கூடும்” என்றாள். “இல்லை, மூட வேண்டும் என்றால் முன்னரே மூடியிருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். “கோட்டையை மூட இளைய யாதவர் ஆணையிட்டால் அது துவாரகையின் போராக ஆகிவிடுகிறது.” சுபத்திரை புரவிகளை சுண்டி இழுத்து தூண்டி சவுக்கால் மாறி மாறி அறைந்தபடி “இன்னும் எத்தனை நேரம் இவை ஓடும் என்று தெரியவில்லை” என்றாள். அர்ஜுனன் “இன்னும் சற்று நேரம்… விரைவு! விரைவு!” என்றான்.

அவன் கண்கள் கோட்டை மேல் இருந்த வீரர்களை நோக்கின. அவன் கண் பட்ட வீரன் அக்கணமே அலறி விழுந்தான். கோட்டை மேலிருந்து வந்த வேல்அளவு பெரிய அம்பு அவர்களின் தேரின் தூணை முறித்து வீசியது. விறகு ஒடியும் ஒலியுடன் முறிந்த குவை முகடு சரிந்து இழுபட்டு பின்னால் சென்று விழுந்து உருண்டது. இன்னொரு பெரிய அம்பில் பிறிதொரு தூண்முறிந்து தெறித்தது. திறந்த தேர் தட்டில் கவசங்கள் அணிந்து நின்ற அர்ஜுனன் அப்பெரிய அம்புகளை எய்த இரு யாதவ வீரர்களை வீழ்த்தினான். அவனது மார்பில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தில் அம்புகள் வந்து பட்டு நின்றாடின. தலையில் அணிந்த இரும்புக்கவசத்தில் மணி போல் ஓசையிட்டு அம்பு முனைகள் தாக்கிக் கொண்டிருந்தன.

சுபத்திரை உஸ் என்று ஒலி எழுப்பினாள். அரைக்கணத்தில் அவள் தோளில் பாய்ந்த அம்பை அர்ஜுனன் கண்டான். “உன்னால் ஒற்றைக் கையால் ஓட்ட முடியுமா?” என்றான். “ஆம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவள். தேர் அணுகும்தோறும் கோட்டை முகப்பில் இருந்த யாதவர்கள் கூச்சலிட்டபடி வந்து செறிந்து வில்குலைக்கத் தொடங்கினர். அர்ஜுனன் முழந்தாளிட்டு தேர்த்தட்டில் அமர்ந்து வில்லை பக்கவாட்டில் சரித்து வைத்துக் கொண்டான். அவன் அம்புகள் அவர்களை வீழ்த்த அவர்களது அம்புகள் அவனை கடந்து சென்று கொண்டிருந்தன. பின்பு நன்றாக கால் நீட்டி தேர்த் தட்டில் படுத்து தேர்த்தட்டில் வில்லை படுக்கவைத்து அம்புகளை எய்தபடியே அவர்களை நோக்கி சென்றான். பதினெட்டு பேர் அவன் அம்புகள் பட்டு கீழே விழுந்தனர். முழு விரைவில் சென்ற தேர் கோட்டையின் வாயிலைக் கடந்து வெளியேறியது.

“வந்து விட்டோம்” என்றாள் சுபத்திரை. தொலைவில் தோரணவாயில் தெரியத் தொடங்கியது. கோட்டைக்குள் இருந்து யாதவர் இறங்கி புரவிகளில் அவர்களை துரத்தி வந்தனர். தேர்த்தட்டில் படுத்தபடியே உடல் சுழற்றி பின்பக்கம் நோக்கி அம்புகளை எய்த அர்ஜுனன் “செல்க! செல்க!” என்றான். “புரவிகளால் முடியவில்லை. ஒரு புரவி விழப்போகிறது” என்றாள் சுபத்திரை. “நாம் இன்னும் சில கணங்களில் தோரண வாயிலை கடந்தாக வேண்டும்” என்றான் அர்ஜுனன்.

புரவிகள் விரைவழியத் தொடங்கின. சுபத்திரை இரு புரவிகளையும் மாறி மாறி சவுக்கால் அடித்தாலும் அவை மேலும் மேலும் தளர்ந்தபடியே வந்தன. தோரண வாயில் அண்மையில் தெரிந்தது. அவள் கடிவாளத்தைப் பற்றி இழுத்து புரவிகளை நிறுத்தினாள். “என்ன செய்கிறாய்?” என்று அவன் கூவினான். “அவை களைத்துவிட்டன” என்றாள். “நேரமில்லை… ஓட்டு ஓட்டு” என்றான். “இல்லை, அவை அசையமுடியாது நிற்கின்றன.” அவன் பொறுமையிழந்து “ஓட்டு ஓட்டு” என்றான். “ஒரு கணம்” என்றாள். புரவிகள் கால் ஊன்றி தலை தாழ்த்தி நின்றன. ஒரு புரவி மூச்சு விட முடியாதது போல் இருமி நுரை கக்கியது.

அர்ஜுனன் அம்புகளை செலுத்தியபடி தொடர்ந்து வந்த யாதவர்களை தடுத்தான். மிக அகன்ற சாலையாதலால் அவர்கள் பிறை வடிவமாக விரிந்து தழுவ விரிந்த கைகள் போல வந்தனர். அவன் தேரின் புரவிகள் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டுவிட்டது போல் தெரிந்தது. “நாம் நிற்பதை அறிந்து விட்டார்கள்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை எதிர்பாராதபடி பேரொலியில் கூவியபடி சாட்டையால் இரு புரவிகளையும் அறைந்தாள். உடல் சிலிர்த்து கனைத்தபடி அவை முழு விரைவில் விரைந்தன. அர்ஜுனன் திரும்பி அவற்றின் விரைவை பார்த்தான். அவை தாங்கள் களைத்திருப்பதை ஒரு கணம் மறந்து அனிச்சையாக விரைவு கொண்டன என்று தெரிந்தது. தோரண வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த அவற்றின் விரைவு மீண்டும் குறையத்தொடங்கியது.

மேலிருந்து சரிந்து தலை மேல் விழுவது போல் துவாரகையின் மாபெரும் தோரண வாயில் அவர்களை நோக்கி வந்தது. இன்னும் சில கணங்கள்தான். சில அடிகள்… இதோ அருகில்… என்று அவன் மனம் தாவியது. அம்பொன்று வந்து அக்கணத்தில் நிலைமறந்த அவன் விலாவில் பதிந்தது. அதை ஒடித்து பிடுங்கி வீசியபின் அதை எய்தவனை நோக்கினான். அவன் முகம் புன்னகையில் விரிந்திருந்தது. திரும்பிப் பார்த்தபோது தோரணவாயிலைக் கடந்து அவர்களின் தேர் மறுபக்கம் சென்றுவிட்டிருந்தது.

தோரண வாயிலுக்கு அப்பால் கூடி நின்றிருந்த துவாரகையின் மக்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க! மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க!” என்று கூச்சலிட்டனர். தோரணவாயிலைக் கடந்தபின் அதேவிரைவில் சென்ற புரவிகளில் ஒன்று கால் மடித்து மண்ணில் விழுந்து முகத்தை தரையில் பதித்தது. பிறிதொரு புரவி மேலும் சில அடிகள் வைத்து பக்கவாட்டில் சரிந்து விழ தேர் குடை சாய்ந்தது. சுபத்திரை பாய்ந்து புரவிகளின் மேல் மிதித்து அப்பால் சென்று நிற்க அர்ஜுனன் குதித்திறங்கி அவளை தொடர்ந்தான்.

“வாழ்க! வாழ்க!” என்று துவாரகையின் மக்கள் கூவினர். ஓரமாக நின்ற வெண்புரவி ஒன்றை நோக்கி சென்ற சுபத்திரை அதன் கடிவாளத்தைப் பற்றி கால்சுழற்றி ஏறினாள். அதன் உரிமையாளனாகிய வீரன் தலை வணங்கி பின்னகர்ந்தான். இன்னொருவன் கரிய குதிரை ஒன்றை பின்னால் இருந்து பற்றி அர்ஜுனனுக்கு நீட்டினான். அர்ஜுனன் அதில் ஏறியதும் இருவரும் பாய்ந்து அக்கூட்டத்தின் நடுவே இருந்த பாலைவனப் பாதையினூடாக செம்புழுதி பறக்க புரவியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் வாழ்த்தொலிகளுடன் கூட்டம் ஆரவாரமிட்டது. தோரணவாயிலின் நிழலை கடந்து சென்றபோது அவன் மெல்ல தளர்ந்தான். அவளும் தளர்ந்து புரவியை இழுத்து சீராக நடக்கவிட்டாள்.

மென்புழுதியில் விழுந்த குளம்பு ஒலிகள் நீரில் அறைவது போல் ஒலித்தன. சுபத்திரை திரும்பி அர்ஜுனனை பார்த்து “இப்போது போர் புரிந்தவர் இளைய பாண்டவரல்ல. சிவயோகிதான்” என்றாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “அம்பு பட்டவர்களில் ஒருவர்கூட உயிர்துறக்கப் போவதில்லை” என்றாள். “ஆம், கொல்வது என்னால் இயலாதென்று தோன்றியது. அத்தனைபேரும் என் அன்புக்குரியவர்கள் என்றே அகம் எண்ணியது” என்றான். அவள் புன்னகைத்தாள்.

அர்ஜுனன் பெருமூச்சுடன் “வெளியேறிவிட்டோம்” என்று சொல்லி திரும்பி தோரணவாயிலை பார்த்தான். “இல்லை, பிறிதொரு வழியாக இந்நகரத்திற்குள் நுழையவிருக்கிறோம்… இன்னும் சில நாட்களில்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “ஆம், அவரிடமிருந்து எவர் தப்பமுடியும்?” என்று சிரித்தபடி சொன்னான். அவள் விழிகள் மாறுபட்டன. “இது சக்கர சூழ்கை கொண்ட நகரம். வந்தவர் எவரும் மீண்டதில்லை” என்றாள்.

அவள் உடல் ஏதோ எண்ணங்களால் உலைவது தெரிந்தது. குளம்படித்தாளம் பாலையின் நரம்போசை என ஒலித்தது. சுபத்திரை உதடுகளை இறுக்கி திரும்பி தோரணவாயிலுக்கு அப்பால் தெரிந்த துவாரகையின் இரட்டைக்குன்றுகளையும் அவற்றின்மேல் தெரிந்த மேருவடிவ நகரையும் உச்சியில் எழுந்த பெருவாயிலையும் நோக்கி கண்களை சுருக்கியபடி “இதை உடைத்து மீண்டு சென்றவர் ஒருவரே. என் தமையன் அரிஷ்டநேமி” என்றாள்.

அர்ஜுனன் “ஆம்” என்றான். பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. அவர்களின் புரவிகள் ஒன்றின் நிழலென ஒன்றாகி குளம்படிகள் மட்டும் ஒலிக்க வாள்போழ்ந்த நீண்ட வடுவெனக்கிடந்த செம்புழுதிப்பரப்பை கடந்து சென்றன. குறும்புதர்களின் நிழல் குறுகி ஒடுங்கத் தொடங்கியது. பாலையின் செம்மை வெளிறிட்டது. வானில் தெரிந்த ஓரிரு பறவைகளும் சென்று மறைந்தன. வியர்வை வழிந்து அவர்களின் புண்களில் காய்ந்த குருதியைக் கரைத்து வழியச்செய்தது.

பாலைவனத்தின் தொடக்கத்தில் அமைந்த முதல் சாவடியை அடைந்தனர். தொலைவிலேயே சங்குசக்கரக்கொடி வானில் பறப்பது தெரிந்தது. பாலைக்காற்றில் தானே ஊளையிட்டுத் திரும்பும் நான்குமுனைக்கொம்பு ஒன்று மூங்கில் உச்சியில் கட்டப்பட்டு மேலே நின்றது. அதைக் கண்டதும் விடாய் எழுந்தது. அணுக அணுக விடாய் உச்சம் கொண்டது. சாவடியின் முற்றத்தில் போய் புரவிகளை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றபோது கால்கள் தளர்ந்து விழுந்துவிடுவதுபோல் ஆயினர்.

சாவடிப் பணியாளர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். “நீராடுவதற்கு இளவெந்நீர். உணவு.” என்றான் அர்ஜுனன். “அதற்குமுன் இப்புண்களுக்கு மருந்து.” ஏவலன் “மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்றான். அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்தபடி அர்ஜுனன் “மது” என்றான். “ஆணை” என்று தலை வணங்கி ஏவலன் விலகினான். அவன் அருகே அமர்ந்த சுபத்திரை “இப்போது வரும்போது எண்ணிக் கொண்டேன் வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே” என்றாள்.

அர்ஜுனன் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை எண்ணியபடி முகத்தை பார்த்தான். “வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது. நாளை இங்கு பிறப்பவன் வெளியேறவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், என் தமையனைப் போல” என்றாள். அர்ஜுனன் உள்ளம் அறியாத துயரொன்றால் உருகியது. அவள் தலையைத் தொட்டு “நான் வெளியேறத் தெரியாதவன். உன்னுடன் இணைந்து நானும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன். கருணைகூர்க தெய்வங்கள். அருள்க மூதாதையர்” என்றான். அவன் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டு அவள் “தெய்வங்களே… ஊழே… கனிக!” என்றாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

சூழும் இருள்

$
0
0

1

வணக்கம்,

நான் உங்களின் நெடுநாள் வாசகன். ஒரு முறை 2 நிமிடம் நேரிலும் பேசியிருக்கிறேன். பார்த்த போது என்ன பேசுவது என்று தெரியாமல் பெயர் கூறி அறிமுகம் செய்துகொண்டு தொடங்கியவுடன் நீங்கள் என் பெயரை நினைவிலிருந்து “எங்கோ கேள்விப்பட்டிருக்கேனே?” என்றீர்கள். அத்துடன் மேற்கொண்டு வாயடைத்துப்போனேன். பின்னர் “என் பெயரை செம்பதிப்பில் சில முறை எழுதி கையெழுத்திட்டிருக்கிறீர்கள், அதனால் நினைவிலிருந்திருக்கலாம்” என்றேன். புன்னகைத்தீர்கள்.

அன்று உங்களின் உரை நான் பலமுறை உங்களிடமிருந்து கேட்டதே, ஆனாலும் மிகவும் ஒன்றி மறுமுறையும் கேட்டேன். நீங்கள் உரையாற்றும் முறை நூறு பேரிடம் மேடையில் நின்று பேசினாலும், கேட்கும் பொழுது அருகில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பேசுவதைப் போல் இருந்தது. இது பலநாள் உங்களை படித்தாலும், சில காணொளிகளில் பார்த்ததாலும் இருக்கலாம்.

நான் அறிமுகம் செய்து வெண்முரசை என் மனைவி படிக்கிறாள். என் பாட்டி படிக்கிறாள். என் தாயும், தந்தையும் படிக்கிறார்கள். என் மகளையும் மகனையும் படிக்கவைப்பதற்காக தனியே தமிழ் வகுப்புக்கு வாராவாரம் கூட்டிச்சென்று ‘அனா ஆவன்னா’ தொடங்கியிருக்கிறேன்.

என்னைப்போன்றவர்களுக்கு உங்களின் கொடை நானில்லாத போது என் மகளையும் மகனையும் வழிநடத்தும் என முழுமையாக நம்புகிறேன்.

என்னை வாட்டும் சில கேள்விகளை இத்தருணத்தில் கேட்டுவிட எண்ணம். அனைத்தும் என் சுயநலம் சார்ந்தவை. பதிலலித்தால் தெளிவடைவேன்.

1) என் தாய்மொழி தமிழ் அல்ல.ஆனால் அதில் எழுதப்படிக்கத் தெரியாது. முடிந்தால் படிக்க எழுத முயலுவேன், ஆனால் கடினம். அதே சமயம் ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் படிக்க எழுத தெரியும். நான் பிராமணன் அல்ல. என் மனைவி தமிழ்ப்பெண். என் மக்கள் தமிழ் குறைவாகவும் ஆங்கிலம் அதிகமும் பேசுபவர்கள். என்னைப்போல் என் தாய்மொழி பேசினால் மகிழ்வேன், அதைப்போலவே தமிழையும் கொள்ள விருப்பம்.

2 என் போன்றவர்களுக்கு/குறிப்பாக என் பிள்ளைகளை நாளைய தமிழ்நாடு எப்படிப் பார்க்கும்? கடந்த 2 வருடங்களாய் தமிழ் இனவாத அரசியல் கட்சிகளின் துவக்கம், என்னைப் போன்றவர்களை மிகவும் யோசிக்க வைத்திருக்கிறது.

3) இந்தியாவின் ஒருமைப்பாடு நீடிக்குமா? மேன்மேலும் துண்டாடப்படும் மாநிலங்களும், மொழி இனவாத அரசியலும் அச்சமூட்டுவதாய் உள்ளதை யாவரும் அறிந்திருக்கின்றனரா? ஒரு வேளை அதைத்தான் அனைவரும் உள்ளூர விரும்புகிறார்களா? நான் அன்னியமானவனா?

உங்களைப் படிக்காமல் என் ஒருநாளும் கடந்ததில்லை.

நன்றி.

வீரி செட்டி

அன்புள்ள வீரி செட்டி,

நான் திரும்பத்திரும்ப எழுதிவரும் ஓர் உண்மை உண்டு. இந்தியாவில் வங்கம் கேரளம் போன்ற சில பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகள் அனைத்திலுமே அனைத்து மொழி, இன, வட்டார மக்களும் கலந்துதான் வாழ்கிறார்கள். இது நீண்ட வரலாற்றின் விளைவாக உருவான அமைப்பு.

வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே இங்கே இனக்கலப்பும் மக்கள்பரவலும் நிகழத்தொடங்கிவிட்டன. மூவாயிரம் வருடங்களாக மக்கள் விரிந்து பரவி நிலங்களை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பெரும்பஞ்சங்களின்போது மிகப்பெரிய மக்கள் கலப்பு நிகழ்ந்தது

ஆகவே இந்தியாவின் எப்பகுதியிலும் மதம், இனம், வட்டாரம், மொழி சார்ந்த அடிப்படைவாதமும் பிரிவினைவாதமும் பெருந்தீங்கு இழைப்பதாகும். ஒரு பிரிவினை இங்கே உலகப்போருக்கு நிகரான அழிவையும் அகதிப்பிரவாகத்தையும் உருவாக்கியது. மேலும் பிரிவினைகள் என்பவை பேரழிவை மட்டுமே அளிப்பவை

அவற்றால் எந்த லாபமும் இல்லை, அரசதிகாரத்தைக் குறுக்குவழிகளில் கைப்பற்ற நினைக்கும் அயோக்கியர்கள் வளர்க்கும் கொள்கைகள் அவை. நம் நல்வாழ்வு ஒன்றுபட்டு ஒரே தேசமாக நவீனமயமாதலில் மட்டுமே உள்ளது. எதைநோக்கியும் திரும்பிச்செல்வதில் இல்லை.

துரதிருஷ்டவசமாக இங்கே மத அடிப்படைவாதத்தை எதிர்க்கிறோம் என்று பேசும் ‘முற்போக்கு’ கும்பல் மொழி, இன, வட்டார, சாதிய அடிப்படைவாதத்தை முற்போக்குச்சிந்தனை என நினைக்கிறது. வெட்கமில்லாமல் அதை ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறது. இந்த ஃபாஸிஸ்டுகளின் குரல் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது

உண்மையில் நினைக்கவைக்கப்பட்டிருக்கிறது. அது பெரும் நிதிச்செலவில் செய்யப்பட்ட அரைநூற்றாண்டுக்கால பிரச்சாரத்தின் விளைவு. எளிதில் அகலாது.அதற்கெதிரான போராட்டம் எளிதானதல்ல.

இந்தியா ஒரு நவீனக் குடியரசாக அமையவேண்டும் என கனவுகண்டனர் காந்தியும் நேருவும் பட்டேலும் அம்பேத்கரும். அவர்கள் அமைத்த மாதிரியை அவர்களின் கண்ணெதிரிலேயே உடைத்தனர் நம் குறுகிய அதிகார வெறியர்கள்

மொழிசார்ந்த அடிப்படைவாதமும் அதன் உள்ளுறையாக அமைந்திருந்த சாதிசார்ந்த அடிப்படைவாதமும் மத அடிப்படைவாதம் அளவுக்கே அழிவுச்சக்தியாக மாறுவதை நேருவும் அம்பேத்கரும் கண்டு மிகுந்த மனக்கொந்தளிப்புடன் எழுதியிருக்கிறார்கள்

அதன் பின் இன்றுவரை இந்தியாவின் ஜனநாயம் என்பது மதம், மொழி, சாதி சார்ந்த வெறிகளால் முன்னெடுக்கப்படுவதாகவே இருந்துள்ளது. வளர்ச்சி நல்வாழ்வு சார்ந்த முன்னுரிமைகள் பின்னுக்குத்தள்ளப்பட்டன.நம் இன்றைய அழிவுக்கான காரணம் ஜனநாயகம் அல்ல, உண்மையான ஜனநாயகம் மலராமைதான்.

ஆனால் நம் ஜனநாயகத்தைத் தோற்கடித்த அடிப்படைவாதச் சக்திகள் ஜனநாயகத்தின் தோல்வியைச் சுட்டிக்காட்டி மீண்டும் ஜனநாயகத்தை அழிக்கும்பொருட்டு எம்பிக்குதிப்பதைத்தான் கண்டுவருகிறோம்.

அடிப்படைவாதம் மிக கவர்ச்சிகரமானது. வெறுப்பின் மொழி மிக எளிதில் தொற்றக்கூடியது. வெறுப்பின் வெறிகொண்டிருப்பவர்கள் சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல் செயல்வீரர்களாகவும் கொண்ட கொள்கைக்ககா ‘எரிந்து’கொண்டிருப்பவர்களகாவும் தோற்றமளிப்பார்கள்.

ஆகவே எளிய மனங்கள், இளைய மனங்கள் எளிதில் அதைநோக்கிக் கவரப்படுகின்றன. ஆகவே எளிய அரசியல் வழியாக அடிப்படைவாதம் எப்போதும் இருந்துவருகிறது. ஜனநாயகத்தை அழிக்கும் வைரஸ் அதுவே.

எவர் ஒருவர் ‘எதிரி’ என ஒருதரப்பைச் சுட்டிக்காட்டி அனைத்துத் தீமைகளுக்கும் அதுவே காரணம் என வெறுப்புடன் பேசுகிறாரோ அவர் ஃஅடிப்படைவாதி என உணர்க. அந்த எதிரி எதுவாக இருந்தாலும்.

ஃபாசிஸம் என்றோ மதவெறி என்றோ மாற்றுமதம் என்றோ அடிபப்டைவாதம் என்றோதான் அவரும் தன் எதிரியைச் சுட்டிக்காட்டுவார்.நடுநிலைமைகொண்ட இருபக்கமும் நோக்கக்கூடிய பார்வையே ஜனநாயகத்தின் அடிப்படை விசை. வெறுப்புப்பேச்சு, பிறரை கீழ்மையாகச் சித்தரிக்கும் வாதங்கள் எவையாயினும் அவை அழிவை உருவாக்குவனவே

இந்தத்தெளிவைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டியிருக்கிறது. வெறுப்பை கக்கும் எந்த அரசியலையும் ஐயத்துடன் நோக்கி ஆராயும் கண்களை அடையவேண்டியிருக்கிறது

சமீபத்தில் இந்தோனேசியா சென்றேன். அந்த நாட்டின் வரலாற்றை நோக்கினேன். தொடர்ச்சியாக இனக்குழுப்பூசல்கள் தூண்டிவிடப்பட்டு அந்நாடு அரசியல் போராட்டத்தில் நிலையற்று இருக்கும்படிச் செய்யப்பட்டது.

அந்நாட்டின் அற்புதமான இயற்கை வளங்கள் மேலைநாட்டு நிறுவனங்களுக்குக் கொள்ளைபோகின்றன. கடைசியாக காடுகள் வெட்டி அழிக்கப்படுகின்றன. அந்த அன்னியக்கம்பெனிகளை ஒரு சொல் சொல்லமுடியாமல் புகையில் இருமி இருமி வாழ்கிறார்கள் மக்கள்.

இந்தியா இன்னும் அப்படி ஆகவில்லை. காரணம் இதுவரை நம்மைக்கொண்டுவந்து சேர்த்த ஜனநாயகப் பண்புகள். ஆனால் அத்திசை நோக்கித்தான் செல்கிறோமோ என்னும் அச்சமும் பதற்றமும் எனக்கும் உள்ளது.

ஒருபக்கம் வலதுசாரிகள் தங்கள் குறுகிய நோக்கில் பிடிவாதமாக நின்று பிளவுகளை முன்வைக்கிறார்கள் மறுபக்கம் இடதுசாரிகள் அப்பிளவுகளை பெரிதாக்கி பிரச்சாரம்செய்து சிறுபான்மையினரின் ஆதரவைப்பெற்றுவிடமுடியும் என முயல்கிறார்கள்.

மதவாதத்தை வெல்ல சாதியவாதத்தை மொழிவெறியை வட்டாரவெறியை முன்வைக்கிறார்கள். இருபக்கமும் நின்று இழுக்கிறார்கள். இதன் மொத்த லாபம் இந்நாட்டை சூறையாடுபவர்களுக்குத்தான்

சென்ற அரைநூற்றாண்டுக்கால உலக வரலாறு காட்டுவது ஒன்றே. இயற்கைச்சீற்றங்களால் எந்த நாடும் அழிவதில்லை. நாடுகள் அழிவது மக்களின் உட்பூசல்களால். உள்நாட்டுப்போரால். பஞ்சத்தால் குழந்தைகள் செத்துக்குவியும் நாடுகளில் மறுபக்கம் ஐம்பதாண்டுக்காலமகா ஈவிரக்கமில்லாத உள்நாட்டுப்போர் நிகழ்கிறது.

கொரில்லாக்கள் சுட்டுத்தள்ளுகிறார்கள். தற்கொலைப்படைகள் குண்டுவைக்கின்றன. எதற்காக? யார் பதவிக்கு வருவதற்காக? வந்து அந்த மரணவெளியில் அவர்கள் எதை நிகழ்த்தப்போகிறார்கள்? அரசியல்வெறியர்களுக்கு அந்த வினாக்களே எழுவதில்லை. மக்களுக்காக போர். அதில் மொத்த மக்களும் அழிந்தாலும் பிரச்சினையில்லை.

ஒரு சிறு உள்நாட்டுப்போர் வந்தால்கூட மொத்தப் பொருளியல் கட்டமைப்பும் சிதறிவிடுகிறது. சந்தைகள் அழிகின்றன. வணிகவலை சிதைகிறது. உற்பத்திமுறைகள் இல்லாமலாகின்றன. நாடு மேலும் மேலும் பஞ்சத்தை நோக்கிச் செல்கிறது.

சரியத்தொடங்கிவிட்ட நாட்டை என்ன செய்தாலும் மீட்கமுடியாது. சரியத்தொடங்கிய கட்டிடம் அந்த எடையாலேயே மேலும் மேலும் உடைவதுபோலத்தான். சூடான் எத்தியோப்பியா காங்கோ கென்யா என வீழ்ச்சியடைந்த நாடுகளின் பொருளியல் அதையே காட்டுகிறது. இப்போது ஆப்கானிஸ்தான் சிரியா என நாடுகள் சரிந்துகொண்டிருக்கின்றன.

இதற்கு எவரைக் குற்றம்சாட்டுவது? வேறு எவரையுமில்லை. தங்களுக்கு வரலாறு அளித்த வாய்ப்புகளை பூசலிட்டு அழித்துக்கொண்ட தங்கள் வளங்களை அன்னிய சக்திகளுக்கு தாரை வார்த்த தங்கள் கூட்டுவல்லமையை வீணடித்த அம்மக்களைத்தான்

ஆனால் மெலிந்து எலும்புக்கூடுகளாக ஆகி கைநீட்டி நிற்கும் அந்தக்குழந்தைகளைக் காண வயிறு பதைக்கிறது. அந்நிலைக்கு இந்தியா செல்லுமா? அந்நிலையில் இருந்து நாம் மீண்டதே இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர்தான். பண்டித ஜவகர்லால் நேருவின் பெருமுயற்சியால்தான்.

அரைநூற்றாண்டுதான் ஆகியிருக்கிறது. நாம் இன்று வைத்திருக்கும் இந்த ஜனநாயக அமைப்பு மிகமிக நொய்மையானது. எந்த ஒரு அன்னிய சக்தியும் சிலநூறு தீவிரவாதிகள் வழியாக இதை எளிதில் சிதறடிக்கமுடியும் என பஞ்சாபும் அஸாமும் நமக்குக் காட்டின. அந்த மாநிலங்கல் கொடுத்த விலையை நாம் அறிவோம்

ஆனால் மதவெறியர்கள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள், மொழி வெறியர்கள், வட்டாரதேசியம் பேசும் பிரிவினையாளர்கள் அதை உணர்வதில்லை. ஒவ்வொருவருக்கும் தங்கள் குருட்டுத்தனே தெளிவு எனத் தோன்றுகிறது.

ஒன்றும் சொல்வதற்கில்லை. எனக்கிருப்பது மிகப்பெரிய அச்சம் மட்டுமே. எந்தபூசலும் பஞ்சம் நோக்கிய நகர்வே. எந்தப் பஞ்சத்தின் அருகிலும் கழுகு காத்திருக்கிறது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திரிச்சூரில் இன்று

$
0
0

1

இன்று மாலை ஆறு மணிக்கு திரிசூரில் கேரள சாகித்ய அக்காதமி ஹாலில் டி வி கொச்சுபாவா நினைவுப்பேருரை ஆற்றுகிறேன்.

நண்பர்கள் கிருஷ்ணன், அரங்கா, ராஜமாணிக்கம், ஏ வி மணிகண்டன், திருப்பூர் கதிர் ,பெங்களூர் கிருஷ்ணன் ஆகியோர் ஒரு காரில் மழையில் திரிச்சூர் சென்று ஞாயிறும் அங்கே இருந்து மழையில் சைலண்ட் வாலி வழியாகத் திரும்பி வருகிறோம்

காண்டீபம் முடித்துவிட்டேன். அந்த வெறுமையிலிருந்து மழை வெளியே கொண்டுவருமென நினைக்கிறேன்.

டி.வி.கொச்சுபாவா திரிச்சூர் அருகே பிறந்தவர். பெரும்பாலும் வளைகுடா நாடுகளிலேயே பணியாற்றினார். 1996ல் தன் 44 ஆவது வயதில் இதய அடைப்பால் உயிரிழந்தார்.

முதன்மையாகச் சிறுகதையாசிரியர். இஸ்லாமிய வாழ்க்கைப்பின்னணியை நவீனத்துவ பாணியில் சித்தரித்தவர். அவ்வகையில் புனத்தில் குஞ்ஞப்துல்லா இக்காவின் வாரிசு எனச் சொல்லலாம்.

அங்கதமும் கூர்மையான சித்தரிப்புகளும் குறைத்துச்சொல்லல் கொண்ட மொழியும் கொண்ட கதைகள் கொச்சுபாவா எழுதியவை. எண்பதுகளில் எங்களுக்குள் ஓரிரு கடிதத் தொடர்புகள் இருந்தன.

நண்பரின் நினைவும் இந்நாளை நிறைவடையசெய்யும் என நினைக்கிறேன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள்

$
0
0

1

வரலாறு என்பதை வரலாற்றெழுத்தாக நம்மில் பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை என்பது ஆச்சரியமான உண்மை. தமிழக வரலாற்றைப்பற்றிச் சொல் என்று சாதாரண வரலாற்று மாணவர் ஒருவரிடம் கேட்டால் அவர் சங்ககாலம், களப்பிரர் காலம், பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழபாண்டியர்களின் காலம், சுல்தானிய படையெடுப்புகளின் காலம், நாயக்கர் காலம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் என ஒரு வரலாற்றைச் சொல்லக்கூடும். ஆனால் இது வரலாறு அல்ல, இருபதாம் நூற்றாண்டில் நம்மால் எழுதப்பட்டதுதான் என்று அவரிடம் சொன்னால் ஆச்சரியம் கொள்வார்.

உதாரணமாக மேலே சொன்ன வரலாற்றுக்காலகட்டங்கள் எப்படி இவ்வாறாகப் பிரிக்கப்பட்டன? அந்த அளவுகோல் என்ன? ‘நம்மவர் x அன்னியர்’ என்ற பிரிவினைதான். சங்ககால மன்னர்கள் தமிழர்கள். களப்பிரர் அன்னியர். பிற்காலப் பல்லவர்களும் சோழர்களும் பாண்டியர்களும் நம்மவர்கள். மீண்டும் இஸ்லாமிய அன்னியர்கள். அந்த அன்னியரை வென்ற இன்னொரு வகை அன்னியர்கள். அவர்களை வென்ற பிரிட்டிஷ் அன்னியர்கள்.

இவ்வகை வரலாற்றில் பிற்காலத்தைய மூன்று காலகட்டங்களில் நம்மவர் அன்னியர் பிரிவினை சார்புத்தன்மை கொண்டதாக ஆவதைக் காணலாம். சுல்தானிய அன்னியர்களுடன் ஒப்பிடுகையில் நாயக்கர்கள் நம்மவர்கள். பிரிட்டிஷாருடன் ஒப்பிடுகையில் இஸ்லாமியரும் நம்மவரே.

இந்தியா தன்னுடைய நவீனதேசியத்தைக் கட்டமைத்துக்கொண்டிருந்த பத்தொன்பதாம்நூற்றாண்டில் நம் வரலாற்றெழுத்து ஆரம்பித்தது. ஆகவே நம்மவர் அன்னியர் என்ற அளவுகோல் இயல்பான ஒன்றாக அமைந்தது. அதன்மேல் நமக்கு ஐயமே இல்லை. அந்த வரலாற்றையே நாம் உண்மையிலே நிகழ்ந்த இறந்தகாலம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இறந்தகாலம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. நாம் வரலாறென்று பேசுவது அவ்விறந்தகாலத்தில் இருந்து நம்மிடம் இன்று மிஞ்சுபவற்றைப் பற்றி மட்டுமே.

நினைவுகளே உண்மையான நேரடி வரலாறு. ஆனால் ஒரு சமூகம் எதை நினைவில்கொள்கிறது என்பது அதன் பண்பாட்டுத்தேவையைப் பொறுத்தது. நமக்குத் தேவையற்றவற்றை நாம் மறந்துகொண்டே இருக்கிறோம். ஒரு வரலாற்று நிகழ்வு நினைவில் நிறுத்தப்படுவது அதன் உள்ளுறையாக உள்ள விழுமியங்களுக்காகவே. நேற்றைய நம் வாழ்க்கையில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட அறங்களை, படிப்பினைகளை, வழக்கங்களை நீட்டித்துக்கொள்ளும் பொருட்டே வரலாற்றை நினைவுகூர்கிறோம்.

அதேபோல இன்று நாம் சென்ற காலத்தை நோக்கி ஆராய்ந்து எழுதிக்கொள்ளும் வரலாறு என்பதும் இன்று நாம் நிறுவ, முன்னெடுக்க விரும்பும் விழுமியங்களுக்காகவே. அவ்விழுமியங்களை நிரூபிக்கும் ஆதாரங்களையே வரலாற்றில் தேடுகிறோம். இன்றைய நிகழ்ச்சிகளுக்கு நேற்றில் ஒரு நீட்சியை நாடுகிறோம். முன்ஊகங்களே வரலாற்றாய்வுக்கான முகாந்திரங்களாகின்றன. அவை வலைகள். அவ்வலையில் எது சிக்கவேண்டும், எது விடப்படவேண்டுமென வலையே தீர்மானிக்கிறது.

வரலாற்றெழுத்தைப் பற்றிய தெளிவில்லாவிட்டால் வரலாற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியாது. யாரால் எப்போது எதற்காக எழுதப்பட்ட வரலாறு என்பது எப்போதும் வரலாற்றைத் தீர்மானிப்பதாகவே அமைந்துள்ளது. உதாரணமாக நவீன இந்திய வரலாற்றின் முழுமையான முதல் முன்வரைவும் 1911ல் வெளிவந்த வின்செண்ட் ஸ்மித்தின் The Oxford History Of India என்ற நூல்தான் என்று சொல்லப்படுவதுண்டு. முழுக்கமுழுக்க ஆக்ரமிப்பாளர்களின் கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தியவரலாற்றைப் படையெடுப்புகளின் கதையாகச் சொல்லியது. அந்த முன்வரைவை ஒட்டி அதற்கு நேர் எதிர்கோணத்தில் நின்றபடி இந்திய தேசிய வரலாறுகள் எழுதப்பட்டன.

வேறுகோணங்களில் நம் வரலாற்றை நாம் ஏன் எழுதக்கூடாது? உதாரணமாக இந்தியா நான்கு மதங்களின் பிறப்பிடம். இந்து,பௌத்தம்சமண,சீக்கிய மதங்கள் உருவாகி இந்தியப்பண்பாட்டை வடிவமைத்தன. இந்தியாவை வேதகாலம் முதல் நிகழ்ந்த பண்பாட்டுச்சலனங்களின் வரலாறாக எழுதலாமே. மன்னர்களையும் போர்களையும் எல்லாம் அதன்பகுதியாக விளக்கலாமே?

அப்படிப்பார்த்தால் தமிழக வரலாற்றைப் பழங்குடிவழிபாடுகளின் காலம் [சங்ககாலம்] வைதிகத்தின் காலகட்டம் [சங்கம் மருவிய காலம்] பௌத்தசமண மதங்களின் காலகட்டம் [களப்பிரர் காலம்] பக்தி இயக்க காலகட்டம்[ பிற்கால சோழ பாண்டியர் காலம்], இஸ்லாமியர் காலகட்டம் [ சுல்தானிய ஆதிக்கம்] இந்து மறு எழுச்சிக்காலகட்டம்[நாயக்கர் காலம்] நவீன ஜனநாயகக் காலட்டம் [பிரிட்டிஷ் காலம்] என்று பிரிக்கமுடியும் அல்லவா?

இன்னும் சொல்லப்போனால் பலநூறு பழங்குடிகளும் பல்லாயிரம் இனக்குழுக்களும் கலந்து வாழ்ந்த இந்தப் பெருநிலம் எப்படி எந்தெந்த வரலாற்றுச் சந்திகள் மூலம் ஒரு நவீன ஜனநாயக தேசமாக ஆகியது என்று எழுதலாமே?

அந்தக் கோணத்தில் பார்த்தால் பழங்குடிக் காலகட்டம், சிறுகுடிமன்னர்களின் காலகட்டம் [சங்ககாலம்], மூவேந்தர்களின் தோற்றம் நிகழ்ந்த காலகட்டம்[சங்கம் மருவியகாலம்], வணிக மயமாதலின் காலகட்டம்[களப்பிரர் காலம்], பேரரசுகளின் காலகட்டம்[பிற்கால சோழ பாண்டியர் காலம்] குடியேற்றங்களின் காலகட்டம் [ இஸ்லாமிய,நாயக்க படையெடுப்புகள்] நவீன ஐரோப்பிய மதிப்பீடுகளின் காலகட்டம் [பிரிட்டிஷ் காலகட்டம்] என தமிழக வரலாற்றைச் சொல்லலாம் இல்லையா?

பழைய புத்தகம் ஒன்றைப் புரட்டியபோது பத்துவருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு குறிப்பு கீழே விழுந்தது. அதில் அப்போது படித்த எதையோ எழுதிவைத்திருந்தேன். ஆர்னால்டோ மொமிக்லியானோ [Arnoldo Momigliano][ என்ற இத்தாலிய வரலாற்றெழுத்தியல் நிபுணர் சொன்னது. 1908 முதல் 19087 வரை வாழ்ந்த இத்தாலிய யூதரான மொமிக்லியானோ ஃபாசிச காலகட்டத்தில் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். ஆக்ஸ்போர்டிலும் லண்டன் யூனிவர்சிட்டி காலேஜிலும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சிக்காகோ பல்கலையில் வரலாறு கற்பித்தார். நியூயார்க் ரிவ்யூ ஆப் புக்ஸில் கட்டுரைகள் எழுதினார். பழங்கால கிரேக்க,ரோமாபுரி வரலாறு குறித்த ஆய்வுகளுக்காகப் புகழ்பெற்றவர்.

அந்தக் குறிப்பில் மொமிக்லியானோ நவீன காலகட்டத்தில் வரலாற்றெழுத்தில் நான்கு அடிப்படையான மாற்றங்கள் வந்துவிட்டன என்று சொல்வதை எழுதி வைத்திருந்தேன். அவை கீழ்க்கண்டவை

1. அரசியல் வரலாறும் மதவரலாறும் வழக்கொழிந்தன. தேசியவரலாறுகள் பழையவையாக ஆயின.சமூகப்பரிணாம- பொருளாதார பரிணாம வரலாறே இன்று முக்கியமானவதாக உள்ளது .

நெடுங்காலமாக வரலாற்றெழுத்தை உருவாக்கும் அளவுகோல்களை மதமும் தேசியமும்தான் அளித்திருக்கிறது. மதமோ தேசியமோ உருவாக்கும் ஒரு கூட்டான சுய அடையாளத்தைக்கொண்டு அந்த சுய அடையாளம் உருவானது, தாக்குதல்களுக்கு உள்ளானது, மீண்டது என்ற அடிப்படையிலேயே இதுநாள் வரை வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் வரலாறு இன்றுள்ளது போல. இப்போது வரலாற்றெழுத்தின் வழி சமூகம் எப்படி பரிணாமம் கொண்டது எப்படி அது பொருளியல் ரீதியாக கட்டமைவு கொண்டது என்பதை விளக்குவதாகவே அமையும்.

2 வரலாற்றை சில கருத்துக்களைக் கொண்டு விளக்குவது எளிதல்லாமலாகிவிட்டிருக்கிறது.

வரலாற்றை முன்னெல்லாம் ஒரு சில மையக்கருத்துக்களைக் கொண்டு விளக்குவதுண்டு. உதாரணமாக ஒட்டுமொத்த கிரேக்க வரலாற்றையும் ஜனநாயக விழுமியங்களின் வரலாறு என்று ஆர்னால்ட் டாயன்பி சொல்கிறார். இந்திய வரலாற்றை அருவமான இறையுருவத்தில் இருந்து பன்மைத்தன்மை கொண்ட இறையுருவகம் நோக்கி செல்லும் பரிணாமம் என சொல்வதுண்டு. அந்தவகை வரலாறு வழக்கொழிந்துள்ளது. இன்றைய வரலாற்றெழுத்தில் ஒரு மையச்சரடாக ஒரு கருத்தியலை ஊடாடவிடுவதில்லை.

3.சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது

இது நாம் வரலாற்றைப் பயன்படுத்தும் முறையில் எப்போதுமிருப்பது. குறிப்பாக இடதுசாரி வரலாற்றெழுத்தில் இது சகஜம். உதாரணமாக காஷ்மீர் மன்னன் ஸ்ரீஹர்ஷன் என்பவன் இந்து ஆலயங்களைக் கொள்ளையிட்டான் என்ற ஒற்றை நிகழ்வைக்கொண்டு இந்து மன்னர்கள் இந்து ஆலயங்களைப் படையெடுப்புக்காலங்களில் கொள்ளையிட்டனர் என்று மீண்டும் மீண்டும் நம் இடதுசாரி ஆராய்ச்சியாளர்கள் எழுதிவருகிறார்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் மதநம்பிக்கையால் இந்து ஆலயங்களை இடித்தது இந்து மன்னர்களும் செய்ததே என வாதிடுகிறார்கள்.

ஜாலியன் வாலாபாக் நிகழ்வை மட்டும் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியை மதிப்பிடுவதும் இப்படிப்பட்டதே. அதே பிரிட்டிஷார்தான் நிறுவனமயமாக்கப்பட்ட நீதியை இந்தியாவில் அறிமுகம் செய்தனர் என்பதை அதன் மறுபக்கமாக எடுத்துக்கொள்ளாமல் செய்யும் ஆய்வுகளுக்கு மதிப்பில்லை

4 இன்று வரலாற்றுக்கு திசையைக் கூறிவிட முடிவதில்லை.

வரலாறு ஒரு ஒரு திசை நோக்கி, ஒரு கருத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை பெரும்பாலான அரசியல்கோட்பாடுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. மார்க்ஸியத்தின் சாராம்சமே இந்த வரலாற்றுவாதம்தான். ஆனால் வரலாறு அப்படி ஒரு திசைநோக்கிய பரிணாமப் பயணத்தில் உள்ளது என்ற கோணத்தில் செய்யப்படும் வரலாற்றாய்வுகள் வழக்கொழிந்துவிட்டன. தமிழ்ச்சமூகம் எங்கே செல்கிறது என இதுவரையிலான தமிழ் வரலாற்றைக்கொண்டு கூறிவிட முடியும் என்ற கோணத்தில் தமிழக வரலாற்றை எழுதுவது அபத்தம்.

இந்த நான்கு அடிப்படைகளும் இன்றைய தமிழ் வரலாற்றெழுத்தைத் தீர்மானிக்கும் கூறுகளாக உள்ளனவா? இந்த அடிப்படையில் தமிழ் வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றதா? அப்படி ஒரு வரலாறு எழுதப்பட்டால் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Oct 30, 2011

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69

$
0
0

பகுதி ஆறு : மாநகர் – 1

தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது.

வெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் பிசிறிச் சிலிர்த்த தோல்பரப்புகளை விதிர்த்தபடி கழுத்துமணிகள் குலுங்க உலர்புல்லை தின்று கொண்டிருந்தன. அங்கும் சட்டிகளில் இட்ட அனலில் தைலப்புல்போட்டு புகைப்படலத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அடுமனையிலிருந்து சோளமாவு வேகும் மணத்துடன் மென்புகை நீர்த்துளிப் புதருக்குள் பரவி எழுந்துகொண்டிருந்தது.

நரைத்த தாடியும் பழந்துணித் தலைப்பாகையும் அணிந்த எளிய முதுவணிகர் தன் கையிலிருந்த பாளைப்பையை திறந்து உள்ளிருந்து பலாக்கொட்டைகளை வெளியே கொட்டி எடுத்து அனல்பரப்பிற்கு மேல் அடுக்கி வைத்தார். நீண்ட இரும்புக் கிடுக்கியால் அக்கொட்டைகளை மெல்ல சுழற்றி அனல்செம்மையில் எழுந்த பொன்னிற மென்தழலில் வெந்து கருக வைத்தார். தோல் வெடித்து மணம் எழுந்ததும் கிடுக்கியால் ஒவ்வொன்றாக எடுத்து நடுவே இருந்த மரத்தாலத்தில் போட்டார். சூழ்ந்திருந்தவர்கள் கை நீட்டி ஒவ்வொன்றாக எடுத்து தோல் களைந்து ஊதி வாயிலிட்டு மென்றனர்.

அருகே இருந்த கன்னங்கள் ஒட்டி மூக்கு வளைந்த மெலிந்த சாலைவணிகன் பலாக்கொட்டைகளை எடுத்து கற்சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுனனிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒன்றை உரித்து வாயிலிட்டு மென்றபடி அவன் சுவரில் எழுந்து மடிந்திருந்த அவர்களின் பெரு நிழல்களை நோக்கிக் கொண்டிருந்தான். “இன்னும் பத்து நாட்கள்தான்… பெருமழை தொடங்கிவிடும். அதன் பின் எங்கிருக்கிறோமோ அங்கு நான்கு மாதம் ஒடுங்க வேண்டியதுதான்” என்றார் நரைத்த நீண்ட தாடிகொண்ட முதிய வணிகர். “இப்போது பருவங்கள் சீர் குலைந்துவிட்டன. வைதிகர் மூவனலுக்கு உண்மையாக இருந்த அந்த காலத்தில் எழுதி வைத்த நாளில் மழை பொழிந்தது. போதுமென்று எண்ணுவதற்குள் வெயில் எழுந்தது.”

“ஆம். இன்னும் பன்னிரண்டு நாட்கள் கழித்தே மழை வரவேண்டும். ஐங்களச்சுவடியில் கணித்து மழைக்கணியன் சொன்னது. அதை நம்பி என் மரவுரிப் பொதிகளை ஏற்றி வந்தேன். நல்லவேளையாக என் இளையவன் மெழுகுப் பாயை என்னிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். இல்லையேல் முதலீட்டில் பாதி இந்த மழையிலேயே ஊறி அழிந்திருக்கும்.. இதை அயோத்தி கொண்டு சென்று சேர்த்தேன் என்றால் இழப்பின்றி மீள்வேன்” என்றான். “இழப்பை பற்றி மட்டுமே வணிகர்கள் பேசுகிறார்கள். ஏனெனில் ஈட்டலைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுவர் ஓரமாக அமர்ந்திருந்த மெலிந்து கன்னங்கள் ஒட்டிய நாடோடி சொன்னான்.

அனைவரும் அவனை நோக்கினர். கரிப்புகை போல் தாடி படர்ந்திருந்த அவன் கன்னம் நன்றாக ஒட்டி உட்புகுந்திருந்தது. மெலிந்த உடலும் கழுகுமூக்கும் பச்சைக்கண்களும் கொண்டிருந்த காந்தார வணிகன் “அனைவருக்கும் வணிகர்கள் பொருள் ஈட்டுகிறார்கள் என்று காழ்ப்பு. அப்பொருளுக்குப் பின்னால் இருக்கும் கணக்கீட்டையும் இழப்பையும் துணிவையும் எவரும் அறிவதில்லை” என்றான். முதிய வணிகர் “ஆம், என்னிடம் கேட்பவர்களிடம் அதையே நான் சொல்வேன். நீங்கள் வணிகம் செய்யவேண்டாமென்று யார் சொன்னது? துணிவில்லாமையால் எண்ணம் எழாமையால் எல்லைமீற முடியாமையால் உங்கள் சிற்றில்லங்களுக்குள் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சிறகு விரித்த பறவைக்கு கிடைக்கும் உணவு கூட்டுப் புழுவுக்கு கிடைப்பதில்லை” என்றார்.

நாடோடி “நான் அதைத்தான் சொன்னேன். வணிகர்களிடம் பேசினால் எவரும் வணிகம் செய்யத் துணிய மாட்டார்கள். உழைத்து அலைந்து இழப்புகளை மட்டுமே அவர்கள் அடைவதாக சொல்வார்கள்” என்றான். மூலையில் அமர்ந்திருந்த கொழுத்த மாளவத்து வணிகன் “இவன் வணிகத்தில் தோற்றுப்போன ஒருவன் என்று எண்ணுகிறேன்” என்றான். நாடோடி சிரித்தபடி “வணிகத்தில் தோற்கவில்லை. ஈடுபட்ட அனைத்திலும் தோற்றுவிட்டேன். தோல்வி ஒரு நல்ல பயிற்சி. வெற்றி பெற்றவர்களிடம் சொல்வதற்கு ஏராளமான சொற்களை அது அளிக்கிறது” என்றான். சிரித்தபடி முதிய வணிகர் பலாக் கொட்டைகளை எடுத்து அவன் முன்னால் இருந்த கமுகுப்பாளைத் தொன்னையில் போட்டு “உண்ணும்” என்றார்.

நாடோடி “இது உங்களுக்கு எங்கோ கொடையாகக் கிடைத்திருக்கும். அன்புடன் அள்ளிக்கொடுக்கிறீர்கள்” என்றான். முதியவணிகர் “விடுதியில் உமக்கு உணவளித்தார்களா?” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான் நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ?” என்றான் ஒருவன். “இல்லை, நான் என் அனுபவங்களை சொல்பவன். நாடோடியாக என் செவியில் விழுந்த செய்திகளையே விரித்துரைக்க என்னால் முடியும். அவற்றை விரும்பிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்” என்றான்.

முதியவணிகர் “அப்படியானால் சொல்லும். இந்தக் கல்மண்டபம் எவரால் கட்டப்பட்டது? சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இது அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா?” என்றான் இளவயதினனான தென்வணிகன். கரிய நிறமும் அடர்த்தியான புருவங்களும் கொண்டிருந்தான். “ஆம், கல் மண்டபங்கள் எளிதில் சரிவதில்லை. அத்துடன் இது மண்ணில் இயற்கையாக எழுந்த பாறையைக் குடைந்து கூரைப்பாறைகளை அதன்மேல் அடுக்கிக் கட்டப்பட்டது. இன்னும் சிலஆயிரம் வருடங்கள் இருக்கும்” என்றான் நாடோடி.

“ராகவராமன் அரக்கர்குலத்தரசன் ராவணனைக் கொன்ற பழிதீர கங்கை நீராட்டு முடித்து மீண்டபோது இவ்வாறு நூற்றெட்டு மண்டபங்களை கட்டினான். அதோ உங்களுக்குப் பின்னால் அந்தத் தூணில் அதற்கான தடயங்கள் உள்ளன” என்றான். வணிகர்கள் விலகி அந்தத் தூணை பார்த்தனர். அதில் புடைப்புச் சிற்பமாக ஏழு மரங்களை ஒற்றை அம்பால் முறிக்கும் ராமனின் சிலை இருந்தது. “எத்தனையோ முறை இம்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறோம். இதுவரை இதை பார்த்ததில்லை” என்றான் குள்ளனான வணிகன். நாடோடி “வந்து அமர்ந்ததுமே அன்றைய வணிகக் கணக்கை பேசத்தொடங்குகிறீர்கள். பிறகெப்படி பார்க்க முடியும்?” என்றான்.

“ஒற்றை அம்பில் ஏழு மரங்களை முறித்தான் வில்திறல் ராமன். நீங்கள் எல்லாம் ஒற்றைக்காசில் ஏழு உலகங்களை வாங்க முயலும் பொருள்வலர் அல்லவா?” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன? சொல்!” என்றார் முதுவணிகர். நாடோடி “நானறிந்தவரை பசியாலும் போராலும்” என்றான். “மூடா, இந்த பாரதவர்ஷத்தின் மேல் ஒன்றை ஒன்று முட்டி மோதும் கிளைகளென ஷத்ரியர்கள் உள்ளனர். அடியில் ஒன்றோடொன்று பின்னி விரிந்திருக்கும் வேர்களென நாங்கள். வணிகத்தால் கொழிக்கிறது பாரதவர்ஷம்” என்றார் முதுவணிகர்.

“தொலைதூரத்து பழங்குடிகளைக் கூட தேடிச் செல்கின்றன வேர்கள். மறைந்துள்ளவற்றை அறிந்து அங்கு உப்புதேடிச்சென்று கவ்வுகின்றன. பாரதவர்ஷத்தில் நாங்கள் தொட்டு நிற்காத எப்பகுதியும் இங்கில்லை. தென்னகத்தின் நாகர்தீவுகள் கூட வணிகத்தால் பின்னப்பட்டு விட்டன. நாங்கள் கொண்டு வரும் பொருளின் மேல் வரிவிதித்துதான் அஸ்தினபுரியின் மாளிகைகள் எழுந்தன. மகதத்தின் கோட்டைகள் வலுப்பெறுகின்றன. இந்திரப்பிரஸ்தம் கந்தர்வர்களின் மாயநகரம் என மேலெழுந்து கொண்டிருக்கிறது” என்றார். “நாங்கள் இந்நாட்டின் குருதி. அதை மறவாதே!”

“இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா?” என்றான் இளையவன். “பலமுறை” என்றான் நாடோடி. கொழுத்த வணிகன் “இன்று கட்டி முடியும் நாளை கட்டி முடியும் என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறார்கள். கட்டக் கட்ட தீராது விரிந்து கொண்டே இருக்கிறது அது. மண்ணில் அதற்கிணையான பெருநகரங்கள் மிகக் குறைவாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்” என்றான். காந்தார வணிகர் “பாஞ்சாலத்து அரசியின் கனவு அது. இப்போதே அதை அறிந்து யவன நாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் சோனக நாட்டிலிருந்தும் வணிகர்கள் தேடி வரத்தொடங்கிவிட்டனர். இன்னும் சில நாட்களில் அந்நகரம் பொன்னால் அனைத்தையும் அளக்கும் பெருவணிகபுரியாக மாறிவிடும்” என்றான். “அரசியின் இலக்கு அதுதான்” என்றான் குள்ளன்.

“துவாரகையை அமைக்கும்போது வணிகத்திற்கென்றே திட்டமிட்டு அமைத்தார் யாதவர். கடல்வணிகர்களையும் கரைவணிகர்களையும் அழைத்து பேரவை கூட்டி அமரவைத்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதை சமைத்தார். துறைமுகம் அங்காடிகள் பண்டகசாலைகள் பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை அனைத்தும் ஒற்றை இடத்தில் அமைந்த பெருநகர் பாரதத்தில் அது ஒன்றே. பாஞ்சால இளவரசி பெரிதாக ஏதும் உய்த்துநோக்கவில்லை. துவாரகையைப் போலவே மேலும் பெரிதாக இந்திரப்பிரஸ்தத்தை படைத்துள்ளார். அங்கு கட்டப்பட்டுள்ள சந்தை வளாகம் எந்தப் பெருவணிகனும் தன் அந்திக் கனவில் காண்பது” என்றார் முதுவணிகர். “ஆம்” என்றார் காந்தாரர்.

“இந்திரப்பிரஸ்தத்திற்கு மட்டுமே உரிய தனித்தன்மையென்பது பொன்வணிகமும் பொருள் சொற்குறிப்பு வணிகமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாது என்று அறிந்தது. அங்காடியின் நடுவே அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள அத்தனை வணிகநிலைகளில் இருந்தும் சில காலடிகளில் நடந்து பொன் வணிகனையோ சொல்வணிகனையோ அணுகிவிட முடியும். பொருளை பொன்னாகவும் பொன்னை சொல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இங்கு பத்தாயிரம் பொன் மதிப்புள்ள பொருளை விற்று செல்வத்தை பத்தே நாட்களில் தாம்ரலிப்தியில் சேர்த்துவிடமுடியும்” என்றார் கொழுத்த வணிகர். “பாரதவர்ஷமே இந்திரப்பிரஸ்தத்தை எண்ணி பொறாமை கொண்டிருக்கிறது” என்றான் இளைஞன்.

காந்தாரர் “ஆம், மகதத்திற்கு நான் சென்றிருந்தேன். அரசர் அவைக்கு என்னை அழைத்துச் சென்றனர். காந்தாரப் பெருவணிகன் என்று என்னை அறிவித்ததுமே ஜராசந்தர் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா என்றுதான் கேட்டார். அவர் என்ன எண்ணுகிறார் என்று நான் ஐயம் கொண்டேன். இந்திரப்பிரஸ்தத்தை புகழ்ந்து அவ்வவையில் பேசினால் என் தலை நிலைக்காது என்றறிந்தேன். இகழ்ந்துரைத்தால் பொய்யுரைப்பவனாவேன். எனவே அதன் அனைத்து சிறப்புகளையும் சொல்லி ஆனால் வணிகர்கள் அந்நகரை மிகை வரிகளுக்காகவும் காவலரின் ஆணவத்திற்காகவும் அரசியின் கட்டின்மைக்காகவும் வெறுப்பதாகவும் சொன்னேன்” என்றார். வணிகர்கள் “ஆம் ஆம், அது நன்று” என்றனர்.

“ஜராசந்தர் முகம் மலர்ந்து ஆம், வெற்று ஆணவத்தின் விளைவு அது என்றார். கையை பீடத்தில் அறைந்தபடி நோயில் எழுந்த கொப்புளம் போன்றது அது, நெடுநாள் நீடிக்காது என்று உறுமினார். நான் தலைவணங்கி நீடிக்கும் என்றேன். அவர் கண்கள் மாறுவதை கண்டவுடனே அது பாண்டவர்களின் நகரமாக இருக்க வேண்டும் என்பதில்லையே… மகதத்தின் தொலைதூரக் கருவூல நகரமாகவும் இருக்கலாமே என்றேன். சிரித்து ஆம் அது மகதத்திற்குரியது, சரியாகச் சொன்னீர் என்றார். நான் தேனீ உடல்நெய் குழைத்து தட்டுக்களைச் சமைத்து கூடு கட்டி தேன் சேர்ப்பதெல்லாம் மலைவேடன் சுவைப்பதற்காகவே என்றேன். ஜராசந்தர் சிரித்து என்னை பாராட்டினார்” என்ற காந்தாரர் சிரித்து “அரசர்கள் புகழ்மொழிகளுக்கு மயங்குவது வரை அவர்கள் நம் அடிமைகளே” என்றார்.

வணிகர்கள் உரக்க நகைத்தனர். இளைஞர் “பரிசில் பெற்றீரா?’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான்.

அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “அயோத்திக்கா?” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே?” என்றான். “படைவீரனாக இருந்தேன்” என்றான் அர்ஜுனன். “வில்லவர் போலும்” என்றார் முதுவணிகர். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். அவர்கள் அனைவரும் அவனைப்பற்றி ஐயம் கொள்வது தெரிந்தது. “நான் சிவதீக்கை எடுத்து அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றான் அர்ஜுனன்.

“படைக்கலங்கள் எடுப்பதில்லையா?” என்று இளைஞன் கேட்டான். “படைக்கலம் எடுப்பது எங்களுக்கு பிழையல்ல. ஆனால் என் பொருட்டு அல்லது என் குலத்தின் பொருட்டு அல்லது என் நாட்டின் பொருட்டு படைக்கலம் எடுப்பதில்லை.” “பிறகு எவருக்காக?” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…?” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே?” என்றார் அவர்.

அர்ஜுனன் “வணிகரே, விவாதிக்கும் தோறும் கலங்குவதும் முதற்பார்வையில் தெளிந்திருப்பதும் ஆன ஒன்றே அறம் எனப்படும்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். முதுவணிகர் “இப்போது திருடர்கள் வந்து எங்களை தாக்கி எங்கள் பொருள்களை கொள்ளை கொண்டு சென்றால் நீர் படைக்கலம் எடுப்பீரா?” என்றார். “மாட்டேன். அது உங்கள் வணிகத்தின் பகுதி. உங்கள் பொருளில் ஒரு பகுதியைக் கொடுத்து காவலரை அமர்த்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த நாடோடியை ஒருவர் தாக்கினார் என்றால் படைக்கலம் எடுப்பேன்” என்றான் அர்ஜுனன்.

“ஏன்?” என்றான் ஒருவன். “இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உள்ளது. வலியதே வாழும் என்றால் அறம் அழியும் என்றே பொருள். மேலும் அவரிடம் படைக்கலம் என்று ஏதுமில்லை. படைக்கலமின்றி இவ்வுலகின் முன் வந்து நிற்பவனுக்கு இங்குள்ள அறம் அந்த வாக்குறுதியை அளித்தாக வேண்டும்.” நாடோடி புன்னகைத்து “பாரதவர்ஷம் முழுக்க அலைந்து திரிந்தவன் நான். ஒரு தருணத்திலும் படைக்கலம் எடுத்த்தில்லை. எங்கும் எனக்காக எழும் ஒரு குரலும் ஒரு படைக்கலமும் இருப்பதை பார்க்கிறேன். அறம் இங்கு அனைத்து இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. அருகே உள்ள கைகளை அது எடுத்துக் கொள்கிறது” என்றான்.

“இந்திரப்பிரஸ்தத்தில் தங்களுக்கு யார் இருக்கிறார்கள்?” என்றான் கொழுத்த வணிகன். “யாருமில்லை. எங்கும் எவரும் இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ராகவராமனை எண்ணி இங்கு வந்தேன். செல்லும் வழியில் சற்று முன் இந்திரப்பிரஸ்தத்தைப் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டேன். ஆகவே அதைப் பார்க்கலாம் என்று எண்ணினேன். அங்கு செல்லும்வரை இவ்வெண்ணம் மாறாதிருக்குமெனில் இந்திரப்பிரஸ்தத்தை காண்பேன்.”

இளையவணிகன் “இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர் ஐவரில் மூவரே உள்ளனர். இளையபாண்டவர் அர்ஜுனர் காட்டு வாழ்க்கைக்கென கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாவலியாகிய பீமன் பெரும்பாலும் காட்டிலேயே வாழ்கிறார். தருமர் அரியணை அமர்ந்து அரசாள்கிறார். நகுலனும் சகதேவனும் அரசியின் ஆணைகளை உளம்கொண்டு நகர் அமைக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனன் காடேகும் கதைகளை நான் கேட்டுள்ளேன்” என்றான் அர்ஜுனன்.

“அவருடைய காடேகலைப்பற்றி அறிய பல காவியங்கள் உள்ளன. பலவற்றை சூதர் பாடிக் கேட்டிருக்கிறேன். அவர் உலூபியையும் சித்ராங்கதையையும் சுபத்திரையையும் மணங்கொண்டு திரும்பிய கதையைச் சொல்லும் விஜயப்பிரதாபம் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே போகும் காவியம்” என்றார் முதியவர். “சுபத்திரை மணத்தில் அது முடிகிறது அல்லவா?” என்றார் காந்தார வணிகர். “இல்லை, அதன்பின்னரும் எட்டு சர்க்கங்கள் எழுதப்பட்டுள்ளன. சதபதர் எழுதி முடித்த இடத்திலிருந்து தசபதர் என்னும் புலவர் தொடர்ந்து எழுதியிருக்கிறார்” முதுவணிகர் தொடர்ந்து சொன்னார்.

“இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டையின் வாயிலை விஜயர் சுபத்திரையுடன் சென்றடைந்தபோது எட்டுமங்கலங்கள் கொண்ட பொற்தாலத்துடன் திரௌபதி அவர்களை வரவேற்க அங்கு நின்றிருந்தாள் என்று கவிஞர் சொல்கிறார்” என்றார் கிழவர். “சரிதான், சூதர் ஏன் சொல்லமாட்டார்? அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று!” என்றார் காந்தாரர். கொழுத்த வணிகன் தொடையில் அடித்து வெடித்து நகைத்தான்.

“திரௌபதி கோட்டை வாயிலுக்கு வந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை நகரே நோக்கிக் கொண்டிருக்கும். ஆனால் அக்கண்களில் அனல் எரிந்து கொண்டிருக்கும். அவ்வனலை ஒரு வேளை அர்ஜுனன் கூட பார்த்திருக்க மாட்டான். சுபத்திரை அறிந்திருப்பாள்” என்றான் இளைய வணிகன். “ஆம் ஆம்” என்றபடி கொழுத்த வணிகன் உடலை உலைத்து நகைத்தான். “சுபத்திரை இப்போது இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருக்கிறாளா?’’ என்று குள்ளன் கேட்டான். “ஆம். அங்குதான் இருக்கிறாள். இந்திரப்பிரஸ்தத்தை அவளும் விட்டுக்கொடுக்கமாட்டாள். அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான் என்றார்கள். அவனுக்கு அபிமன்யு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் பிறவிநன்னாள் சடங்குகளுக்கு மரவுரி விற்கச் சென்றிருந்தேன். மக்கள் இன்னும் அந்நகரில் முழுமையாக குடியேறவில்லை. ஆயினும் பெருவிழா அது.”

“அர்ஜுனனுக்கு முன்னரே மைந்தர்கள் இருக்கிறார்களல்லவா?” என்றான் தென்திசை வணிகன். முதுவணிகர் “திரௌபதிக்கு முதல் மூன்று கணவர்களில் மூன்று மைந்தர்கள். தருமரின் மைந்தன் பிரதிவிந்தியன். பீமசேனரின் மைந்தன் சுதசோமன். அர்ஜுனனுக்குப் பிறந்த மைந்தன் தருதகீர்த்தி. தந்தையைப் போலவே கருநிறம் கொண்டவன் என்கிறார்கள். அவன் கண்களைப்பற்றி சூதர் ஒருவர் பாடிய பாடலை சில நாட்களுக்குமுன் சாலையில் கேட்டேன். தந்தையின் விழிகள் வைரங்கள் என்றால் மைந்தனின் விழிகள் வைடூரியங்கள் என்று அவர் பாடினார்.”

கொழுத்த வணிகன் ஏப்பம் விட்டு “அரச குலத்தவர்கள் புகழுடன் தோன்றுகிறார்கள். சிலர் கடுமையாக உழைத்து அப்புகழை இழக்கிறார்கள்” என்றான். நாடோடி சிரிக்காமல் “ஆம், வணிகர்கள் பொன்னுடன் பிறப்பதைப்போல” என்றான். கொழுத்த வணிகன் “அவை மூத்தவர் ஈட்டிய பொருளாக இருக்கும்” என்றான். “எல்லாமே எவரோ ஈட்டியவைதான்” என்றான் நாடோடி. “பழியும் நலனும்கூட ஈட்டப்பட்டவையே. இவ்வுலகில் அனைவரும் சுமந்துகொண்டு வந்திறங்குபவர்களே.”

அர்ஜுனன் கால்களை நீட்டியபடி “இந்த மழை இன்றிரவு முழுக்க பெய்யும் என்று தோன்றுகிறது. நாம் படுத்துக் கொள்வதே நன்று” என்றான். இளைய வணிகன் “விடுதிகளில் மரவுரிகளை பேண வேண்டுமென்பது நெறி. மகதத்திலும் கலிங்கத்திலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அனைத்து விடுதிகளிலும் படுக்கை வசதிகள் உள்ளன” என்றான். “அயோத்தியில் என்ன அரசா உள்ளது? பழம்பெருமை மட்டும்தானே? இன்று சென்றால் சற்று முன்னர்தான் ராகவராமன் மண் மறைந்தான் என்பது போல் பேசிக்கொண்டிருப்பார்கள். சந்தையில் பொருட்களை விரித்தால் வாங்க ஆளில்லை. பொன் கொடுத்தாலும் கொள்வதற்கு பொருளில்லை” என்றார் காந்தாரர்.

“ஆம், மாளிகைகள் மழை ஊறி பழமை கொண்டுள்ளன. சற்று முன் அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குகள் போல் உள்ளன அரண்மனைகள். அதையே அவர்கள் பெருமையென கொள்கிறார்கள். அயோத்தியில் ஒருவனுடன் பேசிப்பாருங்கள். ஒவ்வொரு அரண்மனையும் எத்தனை தொன்மையானது என்று சொல்வான். புதிய அரண்மனை ஏதுமில்லையா உங்கள் நகரில் என்றேன் ஒருவனிடம். சினந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டான்” என்றான் இளையவணிகன். “ஆனால் பழைய பொன் என ஏதுமில்லை அவர்களிடம்” என்றான் கொழுத்தவன்.

நாடோடி “நான் வெறும் கல் தரையிலேயே படுத்துத் துயில பழகிவிட்டேன். மரவுரி எனக்கு ஒத்துக் கொள்வதில்லை” என்றான். கொழுத்த வணிகன் “எனது மூட்டையில் ஒரு மரவுரி உள்ளது. வேண்டுமென்றால் அதை அளிக்கிறேன்” என்றான். அர்ஜுனன் “அளியும். நான் அதற்கு ஒரு வெள்ளிப்பணம் தருகிறேன்” என்றான். அவன் முகம் மலர்ந்து “நான் அதை பணத்திற்கு தரவில்லை. ஆயினும் திருமகளை மறுப்பது வணிகனுக்கு அழகல்ல” என்றபடி கையூன்றி “தேவி, செந்திருவே” என முனகியபடி எழுந்து பெருமூச்சுடன் தன் மூட்டையை நோக்கி சென்றான்.

மண்டபத்தின் மறு பக்கம் இருந்த கொட்டகையில் அவர்களின் வணிகப்பொதிகள் அடுக்கப்பட்டிருந்தன. காவல் வீரர்கள் அவற்றின் அருகே மரவுரி போர்த்தி வேலுடன் அமர்ந்து துயிலில் ஆடிக் கொண்டிருந்தனர். “சுபத்திரைக்கும் திரௌபதிக்கும் பூசல்கள் என்று சொன்னார்களே?” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள்? அப்படி ஒரு செய்தியை நான் கேட்டதில்லையே” என்றான் நாடோடி.

“பூசலில்லாமல் இருக்குமா என்ன? சுபத்திரை இந்திரப்பிரஸ்தத்திற்குள் துவாரகையால் கொண்டு வந்து நடப்பட்ட செடி. நாளை அது முளைத்து கிளையாகி அந்நகரை மூடி நிற்கும். சுபத்திரையின் கொடிவழி முடிசூடும் என ஒரு நிமித்திகர் கூற்றும் உள்ளது. அதை திரௌபதியும் அறிந்திருப்பாள். பெண்ணுருக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்திற்குள் வந்த இளைய யாதவர்தான் அவள் என்றொரு சூதன் பாடினான்” என்றார் காந்தாரர். “அதனாலென்ன? திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர்?” என்றான் குள்ளன். “ஆம், அதில் ஏதும் ஐயமில்லை” என்றார் காந்தாரர். “அப்படி இருக்கையில் சுபத்திரையிடம் அவளது சினம் இன்னும் கூடத்தானே செய்யும்” என்றார் காந்தாரர்.

“ஏன்?” என்றான் இளைஞன். “உமக்கு இன்னும் மணமாகவில்லை. எத்தனை சொற்களில் சொன்னாலும் அதை நீர் புரிந்து கொள்ளப்போவதும் இல்லை” என்றார் முதிய வணிகர். குள்ளன் “ஆம் உண்மை” என வெடித்து நகைத்தான். மரவுரியுடன் உள்ளே வந்த கொழுத்த வணிகன் “தேடிப்பார்த்தேன், நான்கு மரவுரிகள் இருந்தன” என்றபின் “மூன்றை நான் பிறருக்கு அளிக்க முடியும். சிவயோகியிடமே பணம் பெற்றுக் கொண்டபின் வணிகரிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது வணிகர்களுக்கும் மதிப்பல்ல” என்று சிரித்தான்.

குள்ளன் எழுந்து “அதைக் கொடும்” என்று வாங்கிக் கொண்டான். மெலிந்த வணிகர் “வெள்ளிப்பணத்திற்கு மரவுரியை ஒருநாளைக்காக எவரும் வாங்குவதில்லை. இரண்டு மரவுரியையும் கொடுத்தால் ஒரு பணத்திற்கு பெற்றுக்கொள்கிறேன்” என்றார். நாடோடி வெடித்துச் சிரித்து “இரு சிறந்த வணிகர்கள்” என்றான். “நீர் சொன்னது குழப்பமாக இருக்கிறது” என்றார் காந்தாரர். “சுபத்திரையின் மைந்தனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் என்ன இடம்? அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா?”

“இந்த அரசுக்கணக்குகள் நமக்கெதற்கு?” என்றார் ஒரு முதுவணிகர். “அஸ்வகரே, வணிகர்களுக்குத் தெரிந்த அரசியல் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியலில் ஷத்ரியர்களைவிட இழப்பும் ஈட்டலும் வணிகர்களுக்கே. ஆம்… அதை அறிந்திருக்க வேண்டும். அதன் திசைவழிகளுக்கேற்ப நமது செலவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதை நாம் வழிநடத்த முடியாது. எவ்வகையிலும் அதில் ஈடுபடவும் கூடாது” என்றார் முதிய வணிகர். “சுபத்திரை அருகநெறி சார்ந்து ஒழுகுகிறாள் என்று அறிந்தேன்” என்றார் காந்தாரர். “அவளது தமையன் அரிஷ்டநேமி ரைவத மலையில் ஊழ்கமியற்றுவதாக அறிந்தேன். ஒருமுறை துவாரகையில் அவரை நானே பார்த்துளேன். பிற மானுடர் தலைக்கு மேல் அவர் தோள்கள் எழுந்திருக்கும். ஆலயக்கருவறைகளில் எழுந்திருக்கும் அருக சிலைகளின் நிமிர்வு அவரிடம் உண்டு.”

“துவாரகையின் வாயிலை அவர் கடந்து செல்வதை நானே கண்டேன்” என்றார் அவர். “மணிமுடியையும் தந்தையையும் தாயையும் குலத்தையும் துறந்து சென்றார். அவரை கொண்டுசெல்ல இந்திரனின் வெள்ளையானை வந்தது. வானில் இந்திரவில்லும் வஜ்ரப்படைக்கலமும் எழுந்தன.” நாடோடி “கூடவே ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அழித்துச் சென்றார்” என்றான். “பெண் என்று சொல்லாதே. கம்சனின் தங்கையான அவள் இளவரசி. இளவரசியின் வாழ்க்கை எளிய மானுடப்பெண்களின் வாழ்க்கையைக் கொண்டு பொருள்படுத்தத் தக்கதல்ல. அவர்கள் கருவூலப்பொருட்கள். கவர்ந்து வரப்பட்டவர்கள். கவரப்படுபவர்கள்.”

அதுவரை பேசாது மூலையில் மரவுரி போர்த்தி அமர்ந்திருந்த வெண்தாடி நீண்ட முதியவணிகர் ஒருவர் “ராஜமதியின் வாழ்க்கை அழிந்ததென்று எவர் சொன்னது?” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று? பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது? தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள்?” என்றான் நாடோடி.

“ஆம்” என்றார் முதுவணிகர். “நாம் அதை எப்போதும் எண்ணுவதேயில்லை.” முதியவர் “நான் அருகநெறியினன். நான் அறிவேன்” என்றார். “அத்தனை அணிகளையும் ஆடைகளையும் களைந்து துறவு கொண்டு நகர்விட்டுச் செல்வதற்கு நேமிநாதர் குருதி வெள்ளத்தை காணவேண்டியிருந்தது. அவர் சென்று விட்டார் என்ற செய்தி அறைக்கு வெளியே நின்ற சேடியால் சொல்லப்பட்டபோதே அவள் அனைத்தையும் துறந்தாள். அதை அறிவீரா?”

அனைவரும் அவரை நோக்கினர். “நேமிநாதர் நகர் நீங்கிச் செல்லும் செய்தியை அவளிடம் எப்படி சொல்வதென்று செவிலியரும் சேடியரும் வந்து அறைவாயிலில் நின்று தயங்கினர். சொல்லியே ஆகவேண்டுமென்பதால் முதியசெவிலி வாயிலில் நின்று மெல்லிய குரலில் சொல்லத்தொடங்கினாள். அவள் சொற்கள் முழுமை அடைவதற்குள்ளேயே ராஜமதி அனைத்தையும் உணர்ந்து கொண்டாள்.  தன் மெல்லிய குரலில் நன்று நிறைக என்று மட்டும் சொல்லி அணிகளை களையத்தொடங்கினாள். அனைத்து ஆடைகளையும் களைந்து மரவுரி அணிந்தாள். தன் தலைமயிரை கைகளால் பற்றி இழுத்து வெறுந்தலையானாள். அழகிய வாயை வெண்துணியால் கட்டிக்கொண்டாள்.”

“அரண்மனைக்குள் பதினெட்டுநாட்கள் வெறும் நீர் அருந்தி ஊழ்கத்தில் இருந்தாள். பின்பு கருக்கிருட்டில் எழுந்து தன் அன்னையிடம் நான் செல்ல வேண்டிய பாதை என்னவென்று அறிந்து கொண்டேன் என்றாள். என்ன சொல்கிறாய் என்று அன்னை கேட்டாள். அவர் ஊழ்கத்தில் இருக்கும் அக்குகைவாயிலின் இடப்பக்கம் நின்றிருக்க வேண்டிய யக்ஷி நான். என் பெயர் அம்பிகை என்று அவள் சொன்னாள். தன் தமையர்களை கண்டு விடைகொண்டு அரண்மனை வாயிலில் வந்து நின்றாள்” என்றார் அருகநெறி வணிகர்.

“காலை இளவெயில் எழுந்தபோது அரண்மனை வாயிலுக்கு ஓர் இளைஞன் வந்தான். கையில் வலம்புரிச்சங்கு ஒன்றை ஏந்தியிருந்தான். அவன் சங்கோசை கேட்டு அவள் இறங்கி அவனுடன் சென்றாள். அவன் யார் என கேட்ட அரசரிடம் தன் பெயர் கோமதன் என்றான். அவனுடன் கிளம்பி நகர் விட்டுச் சென்றாள்” என்றார் அருக நெறியினர். “அவர்கள் ரைவத மலைக்குச் சென்றனர். நேமிநாதர் ஊழ்கத்தில் அமர்ந்த அக்குகைக்கு இருபக்கமும் காவலென நின்றனர். அருகர்களுக்கு காவலாகும் யட்சனும் யட்சியும் மானுட உருக்கொண்டு வந்தவர்கள் அவர்கள்.”

“கதைகள்” என்றான் இளைஞன். முதிய வணிகர் “ஆனால் காதல்கொண்ட பெண்ணும் மாணவனுமன்றி எவர் ஊழ்கக்காவலுக்கு உகந்தவர்?” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து முளைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா? இப்போதே நடுசாமம் அணுகிக் கொண்டிருக்கிறது” என்றான். கொழுத்த வணிகன் “ஆம், கரியும் அளவுடனே உள்ளது. நாம் அதை வீணடிக்கவேண்டியதில்லை” என்றான்.

அர்ஜுனன் “ஆம், இந்த அனல் விடியும் வரைக்கும் போதும்” என்றபின் மரவுரியை சருகில் விரித்து அதன் மேல் கால் நீட்டி படுத்துக்கொண்டான். அனைவரும் சிறு குரலில் உரையாடியபடி படுத்துக்கொண்டனர். அர்ஜுனன் வெளியே பெய்யும் மழையை கேட்டுக்கொண்டிருந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

இந்தோனேசியா பயணம் கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன்

இந்த கட்டுரையில் “இந்தோனேசியாவின் மொழி முன்பு இந்தியாவின் தொன்மையான வட்டெழுத்து போன்ற எழுத்துருவில் எழுதப்பட்டிருந்தது” என்கிறீர்கள்.

வட்டெழுத்து தமிழை எழுத 6/7ம் நூற்றாண்டு வரை பயன்பட்டது. பல்லவர் காலத்தில் கிரந்தமும், தமிழ் கிரந்தமும் உருவாயின. தற்கால தமிழ் எழுத்து இந்த கிரந்த அடிப்படையில் எழுந்ததுதான். வட்டெழுத்து தென் தமிழகத்தில் இன்னும் சில நூற்றாண்டுகள் பயன் படுத்தப்பட்டது. 10ம் நூற்றாண்டு வாக்கில் கிரந்தத்தமிழ் தமிழகம் முழுவதும் செல்வாக்கு அடைந்தது, வட்டெழுத்து பாண்டிய நாட்டிலும் கைவிடப்பட்டது. கிரந்தத்தமிழ் தமிழில் இல்லாத (சமஸ்கிருத) உயிர், மெய்யெழுத்துகளை கைவிட்டு, கிரந்தத்தில் இல்லாத தமிழ் எழுத்துகளை வட்டெழுத்தில் இருந்து கடன்வாங்கியது.

வட்டெழுத்து கேரளாவில் இன்னும் சில நூற்றாண்டுகள் வாழ்ந்து அங்கும் மறைந்தது. தற்கால மலயாள எழுத்து கிரந்தத்தில் இருந்து வந்ததாகும்.

https://en.wikipedia.org/wiki/Tamil_script

The modern Tamil script does not, however, descend from this script.[8] In the seventh century, the Pallava dynasty created a new script for Tamil, which was formed by simplifying the Grantha alphabet (which in turn derived from Southern Brahmi), and adding to it the Vaṭṭeḻuttu alphabet for sounds not found in Sanskrit.[9

தென் இந்திய எழுத்துகளும், பழைய கால தென்கிழக்குஆசிய எழுத்து முறைகளும் கிரந்தத்தை தழுவியவை

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள ஜெ

இந்தோனேசியப் பயனக்கட்டுரை அற்புதமாக இருந்தது. கடைசியில் அந்த சிவதரிசனம் அற்புதமானது. எரிமலையாக திருவன்ணாமலையைப்பார்க்க ஒரு பரவசம் வரத்தான் செய்கிறது. அதுவும் கார்த்திகை தொடங்கிவிட்டது. தீபத்துக்குச் சென்றே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியது கட்டுரை

சந்தானம் ஆர்

அன்புள்ள ஜெமோ

பயணக்கட்டுரை மிகச்சிறப்பு. புற்றுக்குள் இருப்பதுபோல ஸ்தூபிக்குள் இருக்கும் புத்தரின் படங்கள் சிலிர்க்கவைத்தன. மறைந்திருப்பதனாலேயே அவை மிகுந்த அர்த்தம் கொண்டவையாக ஆகிவிட்டன என்று தோன்றியது.

சிவராஜ்

அன்புள்ள ஜெ

இந்தோனேசியப்பயணக்கட்டுரை மிகச்சிறப்பாக இருந்தது. எரிமலைகளும் கோயில்களும் கலந்த ஒரு நிலப்பரப்பு ஒரு கனவு என்று தோன்றியது. அற்புதமான அனுபவம். உங்களுடன் சேர்ந்தே வந்ததுபோலிருந்தது

ஆனந்த்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வரலாற்றெழுத்தும் மையக்கருத்தும்

$
0
0

ஜெ,

வரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள்
கட்டுரையில் சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது என்று உள்ளது இது சரியா ,இல்லை இப்படி இருக்க வேண்டுமா ? “சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைத் தனிநிகழ்வுகளைக் கொண்டு ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது”

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது- என்பதே சரியானது. நீங்கள் சொல்வது நேர்மாறானது. மொமுக்லியானோ சொல்வதை இன்னும் எளிமையாக வரலாற்றுக்கு என ஒரு குறிப்பிட்ட இயக்கமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டியதில்லை எனப் புரிந்துகொள்ளலாம்

நான் கொடுத்திருந்த உதாரணம் நேர் எதிரான புரிதலை அளிக்கிறதா என்ன? இஸ்லாமிய மன்னர்கள் இந்து ஆலயங்களைக் கொள்ளையடித்தார்கள். அதேபோல இந்து மன்னர்கள் இந்து ஆலயங்களையும் கொள்ளையடித்தார்கள். ஆகவே மன்னர்கள் ஆலயங்களைக் கொள்ளையடிப்பது ஒரு வரலாற்றுப் போக்கு. அது இந்தியவரலாற்றில் எப்போதும் உள்ளது. காஷ்மீரமன்னன் ஸ்ரீஹர்ஷனின் செயல் அதில் ஒன்று– இப்படி விளக்கப்படுவதையே நான் சுட்டிக்காட்டினேன்.

மார்க்ஸியர்கள் வழக்கமாகச் செய்வதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையை அடிப்படையாகக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராய்வது. அதை வரலாற்றுவாத நோக்கு என்று சொல்லலாம். அந்த முறை இன்றைய வரலாற்றாய்வில் முக்கியத்துவமிழக்கிறது என்கிறார் மொமுக்லியானோ.

ஒரு தனிப்பட்ட வரலாற்று நிகழ்வை எடுத்துக்கொள்ளலாம். ராஜராஜசோழன் சேரபாண்டியர்களை வென்று அழித்து மும்முடிச்சோழனாக முடிசூட்டிக்கொண்டான் என்ற வரலாற்று நிகழ்வு. இது எப்படி எந்தச் சூழலில் நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது, அதற்கான வரலாற்றுப் பின்னணி என்ன என்றெல்லாம் ஆராயலாம். அது வரலாற்றாய்வின் வழி.

ஆனால் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தை ஒரு கருத்தாக்கமாக சுருக்கிக் கொண்டு மார்க்ஸியர் இதை விளக்க முயல்வார்கள். அந்த விளக்கத்துக்காக வரலாற்றாய்வை நிகழ்த்துவார்கள். அதுவே வரலாற்றுவாத அணுகுமுறை.

அவர்கள் இப்படிச் சொல்லலாம். தமிழ்ச்சமூகத்தில் முதலில் பழங்குடித்தலைவர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர் மற்றவர்களை வென்று சிற்றரசர்களாக [பாரி ஓரி முதலிய சிறுகுடி மன்னர்களாக] ஆனார்கள். அந்தச் சிற்றரசர்களை வென்று மூன்று பெருமன்னர்கள் உருவானார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் போராடினார்கள். மூவரில் ஒரு மன்னன் மற்றவர்களை வென்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருந்தான். சிறியவற்றை வலியது வென்று வென்று ஒன்று மட்டுமே எஞ்சுகிறது. பிரமிடின் நுனி நோக்கிச் செல்வது போன்ற சமூக வளர்ச்சி இது.

இவ்வாறு பல்லாயிரம் சிறு ஆட்சியாளர்கள் கடைசியில் ஒரு சக்ரவர்த்தியாக ஆகக்கூடிய ஒரு பரிணாமப்போக்கு தமிழகவரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஒட்டுமொத்தச் செயல்பாடுதான். பழங்குடிமரபு நிலப்பிரபுத்துவம் நோக்கிச் சென்று பேரரசாக ஆகும் பரிணாமம் இது. ராஜராஜன் மும்முடி சோழனாக ஆனது அந்தப்போக்கில் ஒரு நிகழ்ச்சி.– இவ்வாறு மார்க்ஸியர் சொல்லக்கூடும்.

இந்தவகையான ஆய்வு சென்ற ஐம்பதாண்டுகளில் நிறையவே நிகழ்ந்துள்ளது. இந்திய வரலாற்றைப்பற்றிய பிரிட்டிஷ் வரலாற்றாய்வுகளில் இந்த ஆய்வுமுறை எப்போதும் இருந்து வந்துள்ளது. உதாரணமாக ’இந்தியப்பண்பாடு பெண்மைத்தன்மை கொண்டது, அது எப்போதும் ஆக்ரமிப்புகளை ஏற்றுத் தன்வயப்படுத்த மட்டுமே முயல்கிறது, ஆக்ரமிப்புகளை நிகழ்த்துவதோ அல்லது ஆக்ரமிப்புகளை எதிர்ப்பதோ இல்லை’ என்பது போன்ற ஊகங்கள் பிரிட்டிஷ் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தியவரலாற்றின் ஒட்டுமொத்த இயக்கமுறையாக இதை சொல்லியபின்பு கஜினியின் படையெடுப்பையோ, கிளைவின் வெற்றியையோ இதைக்கொண்டு விளக்குவார்கள்

இந்த அணுகுமுறை வரலாற்றை அந்த வரலாற்றாசிரியரின் முன்முடிவை நோக்கிக் குறுக்கக்கூடியதாக இருக்கிறது. அவர் தனக்கு வசதியான தகவல்களை மட்டுமே பார்க்கவும், அவற்றைக்கொண்டு தனக்குப் பிடித்த வரலாற்று வரைவை உருவாக்கிக்கொள்ளவும் வழிசெய்கிறது.

வரலாறு பல்வேறு இயக்கவிசைகளால் பல்வேறு வகையான முரண்பாடுகளையும் சமன்பாடுகளையும் அடைந்தபடி நிகழ்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு சாராம்சமான இயக்கமுறையை உருவகித்துக்கொள்வது அதன் பன்முகப்பட்ட சிக்கலான இயக்கத்தை எளிமைப்படுத்தவே வழிவகுக்கும்.

இன்றைய ஆய்வாளன் அதற்குப்பதிலாக எல்லாவகையான தகவல்களையும் கருத்தில்கொள்ளவும் எல்லாவகையான சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்கவும் தயாராக இருக்கவேண்டும். வரலாற்றை அதற்கேற்ப எளிய மைய ஓட்டம் மட்டுமாக சுருக்காமல் பல சரடுகள் பின்னி ஊடாடிச் செல்லும் ஒரு நெசவாகப் பார்க்கமுயலவேண்டும்.

ராஜராஜன் முடிசூட்டிக்கொண்ட நிகழ்ச்சியை வரலாற்றின் ஒரு புள்ளியாக எடுத்துக்கொண்டால் அது வரலாற்றில் உள்ள ஒரு இயக்கமுறையின் வெளிப்பாடு அல்ல. பலநூறு காரணங்கள் அதற்கிருக்கலாம். பண்பாட்டுக் காரணங்கள், பொருளியல் காரணங்கள், தனிப்பட்ட உளவியல் காரணங்கள், ஏன் தற்செயல்கள்கூட இருக்கலாம். பலவகையில் அதை விளக்கவும் முடியலாம். அந்த எல்லா சாத்தியங்களையும் நோக்கி வரலாற்றை விரியச்செய்வதே இன்றைய வரலாற்றெழுத்து கொண்டுள்ள பணி.

ஒரு சிறப்பான மாதிரியை முன்வைத்துப் பேசவேண்டும் என்பதற்காகவே ராஜராஜன் மும்முடிச்சோழனாக முடிசூட்டிய நிகழ்ச்சியையும் அதற்கான மார்க்ஸிய விளக்கமுறையையும் உதாரணமாகச் சொன்னேன். ஏனென்றால் அது அதன் எல்லைக்குள் மிக முக்கியமான ஒரு பார்வையே. நடைமுறையில் இதைவிட சல்லிசான நிலையில்தான் நம் வரலாற்றாய்வுகள் செய்யப்படுகின்றன.

உதாரணமாக, ஒட்டுமொத்தத் தமிழக வரலாறே வைதீகம் தமிழ்ப்பண்பாட்டை வென்றதன் கதை மட்டுமே என்று பார்ப்பவர்களே இங்குள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள். நாலாவது வரியில் ‘பார்ப்பனியம்’ என ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ் வரலாற்றின் எந்த ஒரு தனி நிகழ்வையும் அந்த ஒரே ஒரு இயங்குமுறையைக் கொண்டே விளக்குவார்கள். ராஜராஜன் மும்முடிச்சோழனாக முடிசூட்டியதை பார்ப்பனியச் சதி என்றும் பார்ப்பனியத்தின் உச்சகட்ட வெற்றி என்றும் தமிழக வரலாற்று நூல்கள் பலவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்தவகை ஆய்வுமுறைகள் காலாவதியாவதை மொமுக்லியானோவின் அந்த வரி சுட்டுகிறது.

இங்கே ஒரு விளக்கம், அப்படியானால் வரலாற்றுக்கான மார்க்ஸிய விளக்கம் காலாவதியாகிவிட்டதா? இல்லை என்றே நினைக்கிறேன். மொமுக்லியானோ அதைச் சொல்லவுமில்லை. அவர் மார்க்ஸிய நோக்கின் எதிரி அல்ல. அந்த நோக்கு அரசியல்கோட்பாடு சார்ந்தது, அரசியல் தளத்தில் மதிப்பு கொண்டது. அது வரலாற்றாய்வு அல்ல, வரலாற்றின்மீதான அரசியல் விளக்கம் என்று சொல்லலாம். வரலாற்றாய்வு அவ்வகை அரசியல் முன்முடிவுகளில் இருந்து விடுபட்டுப் பன்மைத்தன்மை உடைய அணுகுமுறை கொண்டிருக்கவேண்டும் என்பதே மொமுக்லியானோவின் தரப்பு.

வரலாற்றை ஒட்டுமொத்தமாக எல்லாச் சிக்கல்களையும் கருத்தில்கொண்டு ஒரு பண்பாட்டுப் பரிணாமமாகவும் பொருளியல் பரிணாமமாகவும் விளக்கும் நவீன வரலாற்றெழுத்தை அவர் முன்வைக்கிறார். வரலாற்றுக்கு ஏதேனும் ஒரு வரைவை, pattern ஐ உருவாக்க முயல்வதை நிராகரிக்கிறார்

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 3, 2011

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70

$
0
0

பகுதி ஆறு : மாநகர் – 2

கிழக்கிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைவதற்கான மைய வணிகப்பாதையின் பெயர் அர்க்கபதம். அதன் வலப்பக்கம் அமைந்திருந்த இந்திரகீலம் என்ற பெயருடைய செம்மண் குன்றின் உச்சிமேல் வானிலிருந்து விழுந்தது போல் அமைந்திருந்த பெரிய பாறையின் மீது இந்திரனின் சிலை நின்றிருந்தது. இடக்கையில் அமுத கலசமும் வான் நோக்கி தூக்கிய வலக்கையின் நுனியில் வஜ்ராயுதமும் ஏந்தி வலக்காலை முன்னால் தூக்கி நின்றிருந்தான் விண்ணவர்கோன். அப்பெரும் பாறையில் புடைப்புச் சிற்பமாக ஐராவதத்தின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. இந்திரப்பிரஸ்தத்தை அணுகி விட்டோம் என்பதற்கான அடையாளம் அது.

சாலையின் முதல் வளைவிலேயே அச்சிலை கண்களுக்குத் தெரிந்தது. இளம்புலரியில் விழித்தெழுந்து வணிகப்பாதையில் பொதி வண்டிகளுடனும் அத்திரிகளுடனும் குதிரைகளுடனும் கழுதைகளுடனும் சிறிய குழுக்களாக வந்து கொண்டிருக்கும் வணிகர்களின் விழிகள் வானில் அச்சிலைக்காக துழாவிக் கொண்டிருக்கும். செறிந்த கூட்டங்களுக்கு மேல் இந்திரனின் கையில் வஜ்ராயுதம் தெரிந்ததுமே வணிக குழுக்களில் ஒலி எழும். பார்க்காதவர்களுக்கு பார்த்தவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். மெல்ல பசும் பெருக்கிலிருந்து இந்திரன் மேலெழுந்து வருவான். கீழ்வானை நோக்கிய விழிகளும் உடலெங்கும் அலை விரிந்த ஆடையுமாக.

இடக்கையில் அமுத கலசம் எழக்கண்டதுமே இந்திரப்பிரஸ்தத்தில் நுழைந்த உணர்வை வணிகர் அடைவார்கள். அர்ஜுனனின் அருகே சென்ற இளம் வணிகன் இரு கைகளையும் தூக்கி “இந்திரப்பிரஸ்தம்! இந்திரப்பிரஸ்தம் வந்துவிட்டது” என்று கூச்சலிட்டான். அர்ஜுனன் புன்னகைத்தான். “யோகியே, மண்ணில் மானுடர் அமைத்த மாநகரம் இது. யாதவர்கள் துவாரகையில் அமைத்த நகரம் இதில் பாதி கூட இல்லை” என்றான். அர்ஜுனன் “நான் அதை பார்த்திருக்கிறேன்” என்றான். “இதை பார்க்கப்போகிறீர். நீரே அறிவீர்” என்றான் இளைய வணிகன்.

சிலை அருகே பொதிவண்டிகளும் வணிகர்குழுக்களும் தயங்கின. சாலை ஓரமாக இருந்த சிறிய கல் மண்டபத்தில் இந்திர சிலைக்கு பூசனை செய்யும் நாகர்களின் குழு அமைந்திருந்தது. வணிகர்கள் அவர்களுக்கு காணிக்கை பொருட்களையும் குங்கிலியம் முதலிய நறுமணப் பொருட்களையும் அளித்து வணங்கினர். இளைய வணிகன் “இப்பகுதியெங்கும் முன்பு காண்டவ வனம் என்று சொல்லப்பட்டது, அறிவீரா?” என்றான். அர்ஜுனன் “ஆம் கேட்டிருக்கிறேன்” என்றான்.

“இளைய பாண்டவர் இங்கிருந்த நாகங்களை அழித்தார். அவரது அனல் அம்புகளால் காண்டவ வனம் தீப்பற்றி எரிந்தது. அன்று இங்கிருந்த நாகர்கள் அனைவரும் இந்திர வழிபாட்டாளர்கள். அவர்களைக் காக்க இக்குன்றின்மேல் இந்திரன் எழுந்தான் என்கிறார்கள். பன்னிரண்டு முறை கருமுகில் செறிந்து காண்டவ வனத்தில் எரிந்த அனலை முற்றழித்தது. பின்னர் இளைய பாண்டவர் தன் தந்தை இந்திரனிடம் நேருக்கு நேர் போர் புரிந்தார். தனயனிடம் போரில் தோற்கும் இன்பத்துக்காக இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தபடி வானில் மறைந்தான்.”

இளம் வணிகன் தொடர்ந்தான் “அதன் பின் இங்கிருந்த நாகர்கள் இளைய பாண்டவர் முன் பணிந்து அவரது வில்லுக்கு தங்கள் கோலை அளித்தனர். அஸ்தினபுரியின் பங்கு வாங்கி பாண்டவர் பிரிந்து வந்த போது இந்தக் காட்டிலேயே தங்கள் நகரை அமைக்க வேண்டுமென்று பாஞ்சாலத்து அரசி விரும்பினார்கள். இங்கு நகரெழுந்தபோது இந்திரன் மைந்தனால் வெல்லப்பட்டது என்பதனாலும் இந்திரனால் காக்கப்படுவது என்பதனாலும் அதற்கு இந்திரப்பிரஸ்தம் என்று பெயரிட்டார்கள். இங்கு அமைந்த இந்திரன் சிலையை நாகர்களுக்கு உரியதாக்கினார்கள். இன்றும் இப்பகுதி நாகர்களால் காக்கப்படுகிறது. இங்குள்ள பதினெட்டு நாகர் ஆலயங்களும் அவற்றின் மேல் எழுந்த இந்திரனின் பெருஞ்சிலையும் அவர்களாலேயே பூசனை செய்யப்படுகிறது” என்றான்.

அர்ஜுனன் புன்னகையுடன் “ஆம், அரிய சிலை” என்றான். “இதற்கு நிகர் தாம்ரலிப்தியின் கரையில் நின்றிருக்கும் சோமனின் பெருஞ்சிலையும் தெற்கே தென்மதுரைக் கரையில் நின்றிருக்கும் குமரியன்னையின் பெருஞ்சிலையும்தான்.” அர்ஜுனன் “குமரியின் பெருஞ்சிலை பேருருவம் கொண்டது என்கிறார்கள்” என்றான். வணிகன் அதை தவிர்த்து “விண்ணில் எழும் மின்னலைப் பற்றுவது போன்ற கைகள். கலிங்கத்துச் சிற்பி கம்ரகரின் கற்பனை அது. பாரதவர்ஷத்தின் பெருஞ்சிற்பிகளில் ஒருவர். இச்சிலை ஒற்றைக் கல்லால் ஆனதல்ல. இங்கிருந்து பார்க்கையில் அப்படி தோன்றுகிறது. பதினெட்டு தனிக்கற்களில் செய்து உள்ளே குழி மீது முழை அமரும் விதத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இதை எழுப்பியிருக்கிறார்கள்” என்றான்.

“மண் நடுங்கினாலும் சரியாத உறுதி கொண்டது என்கிறார்கள்” என்று அவன் தொடர்ந்தான். “அதன் எடையே அதன் உறுதி” என்றார் பின்னால் வந்த முதுவணிகர். “விண்ணிலிருந்து மின்னலைப் பற்றி இந்திரப்பிரஸ்தத்திற்கு படைக்கலமாக அளிக்கிறது இது. இடது கையில் அமுத கலசம் அஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் இனி இந்திரப்பிரஸ்தத்திற்கே என்பதை குறிக்கிறது. இன்னும் எட்டு மாதத்தில் நகரத்தின் பணிகள் அனைத்தும் முடியும் என்று சொன்னார்கள்.”

“அப்படித்தான் சொல்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் நான் வரும்போது இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்துவிடும் என்றனர். அதன் பிறகே தெற்கு வாயில் கோட்டை பணி தொடங்கியது” என்றான் இளம்வணிகன். “இத்தனை பெரிய மாநகரத்தை கட்டுவதற்கான கற்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டாமா?” என்றார் காந்தாரர். “இந்நிலம் காண்டவ வனமாக இருந்தபோது செந்நிறப் பெரும் பாறைகள் நிறைந்த வெளியாக இருந்தது. விண்ணை தாங்கி நிற்கும் பெருந்தூண்கள் ஒவ்வொன்றும் மரங்கள் அடர்ந்து இருந்தன. அனைத்து மரங்களையும் வெட்டி இல்லங்கள் அமைக்க கொண்டு சென்றனர்.”

“அச்செம்பாறைகளே இந்நகரை அமைக்க போதுமானவை என்று அந்தச் சிற்பிகள் கணக்கிட்டனர். ஆனால் மாளிகைகள் எழும்தோறும் கற்கள் போதவில்லை. எனவே வடக்கே தப்தவனம் என்னும் இடத்தில் இருந்த மென்பாறைகள் முழுக்க வெட்டப்பட்டு யமுனையின் நீர்ப்பெருக்கு வழியாக தெப்பங்களில் கொண்டுவரப்பட்டன. தப்த வனம் இன்று கல் பாறைகள் ஏதுமற்ற ஒரு கோடைகால மலர்த்தோட்டமாகிவிட்டது. அதற்கப்பால் இருந்த சீர்ஷகம் என்னும் பெருமலையின் அனைத்து மணல்பாறைகளும் வெட்டி உருட்டிக் கொண்டு வரப்பட்டு யமுனையினூடாக இங்கு வந்து சேர்ந்தன. கங்கைக்கரையின் ஜலபூஜ்யம் என்னும் இடத்திலிருந்து சேற்றுப்பாறைகளை பாளங்களாக வெட்டிக்கொண்டு வந்தனர். இங்குள்ள கோட்டைகள் அப்பாறைகளால்தான் அமைந்துள்ளன.”

“அரசப் பெருமாளிகைகள் சிவந்த கற்களாலும் கோட்டைகளும் காவல் மாடங்களும் பிற கற்களாலும் அமைந்துள்ளன. மானுட உழைப்பில் இப்படி ஒரு நகரம் அமையும் என்று விண்ணவர்களும் எண்ணியிருக்கவில்லை என்பதனால் எப்போதும் இந்திரப்பிரஸ்தத்திற்கு மேல் வானம் ஒளியுடன் இருக்கிறது. விண்ணூரும் முகில்களில் வந்தமர்ந்து கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் இந்நகரை விழிவிரித்து நோக்கியிருக்கின்றனர் என்கிறார்கள் சூதர்கள். இந்திரனின் வில் பல நாட்கள் இந்நகர் மேல் வளைந்திருப்பதை கண்டிருக்கிறார்கள்” என்றார் முதுவணிகர்.

நாடோடி “இந்நகர் அமைந்திருக்கும் இடத்தின் இயல்பு அது. பாரதவர்ஷத்தில் மிகக்கூடுதலாக மழை பெய்யும் இடங்களில் ஒன்று இது. பெரும்பாலான நாட்களில் இளவெயிலும் உள்ளது. விண்ணில் மழைவில் எழுவதனால்தான் இதற்கு இந்திரப்பிரஸ்தம் என்றே பெயர்” என்றான். “எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் விண்முகில் சூடி மழைவில் ஏந்திய ஒரு நகரம் பிறிதொன்றில்லை இப்புவியில்” என்றார் காந்தார வணிகர்.

இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லும் சாலையின் இருபுறமும் மென் மணற்கற்களால் கட்டி மரப்பட்டைக்கூரை போடப்பட்ட வணிகர் சாவடிகள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வணிகர் குழுவும் அவற்றின் குலக்குறிகள், ஊர்மரபுகளை ஒட்டி அவர்களுக்குரிய சாவடிகளை அமைத்திருந்தனர். அங்கு முன்னரே இருந்த அவர்களின் அணுக்கர்கள் வெளி வந்து கை வீசி அவர்களை வரவேற்று கூச்சலிட்டனர். ஒவ்வொரு வணிகராக விடைபெற்றுச் சென்று சாவடிகளில் தங்கினர்.

“நகருக்குள் செல்வதற்கு முன்னரே இச்சாவடிகளை அமைத்தது ஒரு சிறந்த எண்ணம். இங்கேயே பொதிகளை அவிழ்த்து சீராகப் பங்கிட்டு தேவையானவற்றை மட்டும் ஒவ்வொரு நாளும் அத்திரிகளில் ஏற்றிக் கொண்டு நகரின் பெரும் சந்தைக்கு நம்மால் போக முடியும். வணிகர்கள் மட்டுமே தங்கும் பகுதிகள் இவை. எனவே இங்கேயே ஒருவருக்கொருவர் பாதி வணிகம் நடந்து விடும்” என்றார் காந்தாரர். “வணிகரின் இடமென்பதனால் பொதுவான காவலே போதும். திருட்டுக்கு அஞ்சவேண்டியதில்லை.”

“நான் நகருள் நுழைகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நெடுந்தூரப் பயணம். இங்கே எங்களுடன் தங்கி யமுனையில் நீராடி உணவுண்டு ஆடை மாற்றி நகர் நுழையலாமே?” என்றான் இளைய வணிகன். அர்ஜுனன் “சிவயோகி மாற்ற விரும்பும் ஆடை ஒன்றே. ஒரு முறை மட்டுமே அணியும் ஆடை அது” என்றான். பின்பு இளவணிகனின் தோளை தட்டியபடி “இந்திரனின் நகரில் இன்று மழைவில் எழுமா என்று பார்க்கிறேன்” என்று புன்னகைத்தான். “வணங்குகிறேன். என்னை வாழ்த்திச் செல்லுங்கள் யோகியே” என்றான் அவன். “செல்வம் பெருகட்டும் குலம் பெருகட்டும்” என்று வாழ்த்தியபின் அர்ஜுனன் நடந்து இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டை வாயிலை நோக்கி சென்றான்.

இந்திரப்பிரஸ்தத்தின் முதல் வெளிக்கோட்டை பெருவாயில் மட்டுமே கட்டப்பட்டு ஒரு பெருமாளிகை போல தனியாக நின்றது. அதன் வலப்பக்கம் கரிய பெருஞ்சுவர் சற்றே வளைந்து சரிவேறி சென்று உடைந்தது போல் நிற்க அதன் அருகே வண்ண உடைகள் அணிந்த பல்லாயிரம் சிற்பிகள் அமர்ந்து கற்களை உளியால் கொத்தி பணியாற்றிக் கொண்டிருந்தனர். கிளிக்கூட்டத்தின் ஓசை போல உளியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் பணியாற்றுவதை கண்காணிப்பதற்காக தோல் கூரையிட்ட மேடைக் குடில் ஒன்று அமைந்திருந்தது. அதன் வாயிலில் மூங்கில் பீடத்தில் தலைமைச் சிற்பி அமர்ந்திருக்க அருகே அவர் அடைப்பக்காரன் மூங்கில் குடுவையுடன் நின்றிருந்தான்.

கிழக்கே எழுந்த வெயில் கோட்டையின் பெரிய கற்சதுரங்களை மின்ன வைத்தது. அருகணையும்தோறும் கருங்கல்லில் உப்பின் ஒளி தெரிந்தது. கருநாகத்தின் செதில்கள் மின்னுவது போல் வெயிலில் அதன் புதிய கற்பொருக்குகள் ஒளிவிட்டன. பெருவாயிலில் மிகச்சில காவலர்களே இருந்தனர். உள்ளே செல்லும் வணிகர்களை அவர்கள் தடுக்கவோ உசாவவோ இல்லை. காவல் மாடங்களில் மடியில் வேல்களைச் சாய்த்தபடி அமர்ந்து ஒருவரோடொருவர் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தில் சுங்க வரி இல்லை என்பதனால் காவலும் தேவையில்லை என்று திரௌபதி முடிவுசெய்திருந்தாள். ஆனால் கண்காணிப்பு எப்போதுமிருந்தது. “மிகப்பெரிய நகரம் என்பதனால் ஏற்படும் அச்சத்தை காவலின்மை போக்கிவிடும். நகரம் அவர்களுக்கு அணுக்கமானதாக ஆகிவிடும்” என்றாள்.

கோட்டை முகப்பு பதினெட்டு அடுக்குகள் கொண்ட இரு தூபிகளுக்கு நடுவே சென்ற கற்பாளங்கள் பதிக்கப்பட்ட பாதையால் ஆனதாக இருந்தது. தூபிகளின் அனைத்து அடுக்குகளிலும் வட்டமான உப்பரிகைகள் அமைந்திருந்தன. அவற்றில் காவலர் அமரவும் சாலையை நோக்கி அம்புகளை செலுத்தவும் இடமிருந்தது. தூபிகளின் உச்சி கவிழ்ந்த தாமரை வடிவ வேதிகையை சென்றடைந்தது. அதன்மேல் இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதம் பொறிக்கப்பட்ட செங்காவிநிறமான பட்டுக் கொடி பறந்து கொண்டிருந்தது.

தூபிகளை இணைத்து கதவுகளேதும் அமைக்கும் எண்ணம் இல்லையென்று அதன் அமைப்பே காட்டியது. இந்திரப்பிரஸ்தம் அகழியாலோ காவல் காடுகளாலோ காக்கப்படவில்லை. ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த ஏழு கோட்டை நிரைகளே அதற்கு காப்பு. “இந்நகர் ஓர் எறும்புதின்னி. எதிரி வருகையில் தன் செதில்களை ஒன்றன் மேல் ஒன்றென மூடி உலோக உருளையென ஆக முடியும்” என்றார் வாஸ்துபுனிதமண்டலத்தை அமைத்த கலிங்கச்சிற்பியான கூர்மர்.

தூபிகள் நடுவே சென்ற பாதையில் மிகக் குறைவாகவே வணிகர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தனர். சிற்பிகளும் வினைவலரும் அன்றி பொதுமக்கள் என சிலரே கண்ணுக்குத் தெரிந்தனர். இந்திரப்பிரஸ்தத்தை சூழ்ந்திருந்த நாநூற்றி எழுபத்தாறு யாதவர் ஊர்களிலிருந்தும் மக்கள் நகருக்குள் குடிவரத் தொடங்கவில்லை. அவர்களுக்கு நகரில் அவர்களின் இடமென்ன என்று அப்போதும் புரியத்தொடங்கவில்லை. மக்களை உள்ளே கொண்டுவர திரௌபதி தொடர்ந்து முயற்சிகள் செய்துகொண்டிருந்தாள். ஆனால் துறைமுகம் முழுமையாக பணிதொடங்குவது வரை நகரம் முற்றமைய வாய்ப்பில்லை என அவளும் அறிந்திருந்தாள்.

முதற்கோட்டைக்கு அப்பால் நகரைச் சூழ்ந்து நறுமணம் வீசும் சந்தனமும் நெட்டி மரங்களும் வளர்க்கப்பட்ட குறுங்காடு இருந்தது. அதனூடாக சென்ற சாலை இரண்டாவது கோட்டையை சென்றடைந்தது. அக்கோட்டையும் கட்டி முடிவடையா நிலையிலேயே இருந்தது. பெரிய மணற்பொரிக் கற்கள் நீள் சதுரங்களாக வெட்டப்பட்டு ஆங்காங்கே தரையில் கிடந்தன. அவற்றை வடங்களில் கட்டி சரிவாக அமைக்கப்பட்ட மூங்கில் சாரங்களில் ஒவ்வொரு படியாக இழுத்து ஏற்றி மேலே எடுத்துச்சென்று கொண்டிருந்தனர்.

அப்பெரும் பாறைகளை மூங்கில் சாரங்களில் ஏற்ற முடியுமா என்ற ஐயமே பார்வையாளர்களுக்கு எழும். அதை வேடிக்கை பார்த்தபடி அங்கேயே நின்றிருக்கும் கும்பலில் சிலர் “எப்படி மூங்கில் எடை தாங்குகிறது?” என்று எப்போதும் கேட்பதுண்டு. ஒருமுறை முதிய வினைவலர் ஒருவர் “மூடா, ஒரு மூங்கில் அல்ல அங்கிருப்பது பல்லாயிரம் மூங்கில்கள். அப்பெரும்பாறையை கட்டியிருப்பது பல நூறு சரடுகள். அவற்றின் ஒட்டு மொத்த வலிமை அப்பெரும்பாறையை கூழாங்கல் என ஆக்கக்கூடியது” என்றார். “சூத்திரர்களின் ஆற்றல் அதைப் போன்றது. ஷத்ரியர்களை தூக்கி மேலெடுக்க நமக்கு பல்லாயிரம் கைகள் உள்ளன” என்று ஒருவன் சொல்ல கூடி நின்றவர்கள் நகைத்தனர்.

பாறைகளை அசைத்த நெம்புகோல்களையும் தூக்கி மேலேற்றிய பெருந்துலாக்களையும் பின்னிக்கட்டியிருந்த வடங்களையும் இழுக்கும் யானைகள் மிக மெல்ல காலெடுத்து வைத்து அசைவதாக தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் உடற்தசைகளும் இழுவிசையில் தெறித்து நின்றிருந்தன. அவ்விசைகளுக்குத் தொடர்பின்றி தங்கள் சொந்த விழைவாலேயே செல்வதுபோல சதுரப்பாறைகள் மேலேழுந்து சென்று கோட்டை விளிம்பை அடைந்தன. அங்கிருந்த சிற்பிகள் கயிறுகளில் கட்டியிருந்த சிறிய வண்ணக்கொடிகளை அசைத்து ஆணையிட ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு வடங்களை பற்றி இழுக்க அவர்கள் இழுக்கின்ற விசைகளுக்கு இயைபற்றதுபோல அசைந்தாடிச்சென்ற பாறை துலாக்கள் கிரீச்சிட்டபடி சென்று தான் அமர வேண்டிய குழியில் முழை அமர்த்தி அமைந்தது.

அங்கு எப்போதும் பார்வையாளர் இருந்தனர். கற்கள் சென்று அமர்வது நோக்க நோக்க வியப்பு குறையாததாகவே எப்போதும் இருந்தது. கூடிநின்றவர்கள் கைசுட்டி கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். “முடிவற்ற உடற்புணர்ச்சியில் இனி அவை அமர்ந்திருக்கும்” என்றார் ஒருவர். உரக்க நகைத்து “நாய்களுக்காவது நாலு நாழிகை. இவற்றுக்கு நாலு யுகம்” என்றார் இன்னொருவர். “அவர்கள் இழுப்பது போல் தெரியவில்லை. அவர்கள் இழுக்கும் திசைக்கு அந்தப்பாறை செல்லவில்லை” என்றான் ஒருவன். “மூடா, எறும்புகள் வண்டுகளை இழுப்பதை நீ பார்த்ததில்லையா ஒவ்வொரு எறும்பும் ஒரு திசைக்கு இழுக்கும். அவை ஒட்டுமொத்தமாகவே சென்ற திசைக்கு சென்று சேரும்” என்றார் ஒரு முதியவர்.

வடிவமிலாது காலவெளியில் நின்றிருந்த பாறைகள். ஒவ்வொன்றையும் சூழ்ந்திருந்தது முடிவில்லாத தனிமை. வடிவம் கொண்டு ஒன்றோடொன்று பொருந்தி அவை உருவாக்கும் வடிவம் அக்கணத்திற்கு முன் இல்லாதிருந்தது. அப்போதென உருவாகி எழுவது. அது காலத்தின் முன் நிற்கும். ஆயிரம் காலம். பல்லாயிரம் காலம். ஆனால் ஒருநாள் உதிர்ந்து அழியும். அதில் மறுப்பே இல்லை. அவ்வகையில் நோக்கினால் மாலையில் வாடி உதிரும் மலரும் அதுவும் ஒன்றே. ஆனால் பாறைகள் அங்கே கிடக்கும். மிகமெல்ல அவை கறுத்து விளிம்புகள் உதிர்ந்து தங்கள் வடிவமில்லா தோற்றத்தை மீட்கத்தொடங்கும்.

மூன்றாவது கோட்டையும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இருந்தது. அதற்குள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட காவலர் இல்லங்கள் கூரை அற்ற நிலையில் நின்றன. “இவற்றுக்குள் ஒரு முறை வழிதவறினால் திரும்ப வருவது கடினம்” என்று அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வணிகர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் இவை மாறிக்கொண்டிருக்கின்றன. தென்னிலங்கை ஆண்ட ராவணன் நகருக்குள் படைகொண்டு வருபவர்களை சிக்க வைத்து விளையாடும் பொருட்டு இப்படி ஒரு சித்திரச் சுழல் பாதையை அமைத்திருந்தார் என்கிறார்கள். இதுவும் ஒரு ராவணன் கோட்டை போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும் யாராவது சென்று சிக்கி மீள முடியாமல் கதறி மறுநாள் மீட்கப்படுகிறார்கள்.”

இன்னொருவர் “அவை இன்று கட்டிமுடிக்கப்படவில்லை. எனவே அனைத்தும் ஒன்று போல் இருக்கின்றன. கூரை அமைந்தபின் முகப்பு எழும். அவற்றில் மானுடர் குடியேறுவார்கள். அவை அடையாளங்கள் சூடிக்கொள்ளும். அதன்பின் ஒவ்வொன்றும் தனி முகம் கொள்ளும்” என்றார். “இந்நகர் ஓர் ஒழிந்த கலம். இதற்குள் நிறைக்க மக்கள் தேவை” என்றார் ஒரு முதியவர். “யாதவர்களைக் கொண்டே நிறைப்பார்கள். அவர்கள் முதியகள்ளைப் போல. பெருகி நுரைத்து வெளியேயும் வழிவார்கள், பார்த்துக்கொண்டே இரு.”

ஒன்றினுள் ஒன்றாக அனைத்து கோட்டைகளும் பணி நடக்கும் நிலையிலேயே இருந்தன. அங்கு பல்லாயிரம்பேர் பணியாற்றியபோதும் அதன் பெருவிரிவால் அது ஒழிந்த வெறுமை கொண்டிருப்பதாகவே தோன்றியது. அங்கிருந்த நிலத்தில் பலநூறு சிறு சுனைகளும் குளங்களும் இருந்தன. அவற்றையெல்லாம் விளிம்புகட்டித் திருத்தி படியமைத்து நீரள்ளும் சகடையும் துலாவும் பொருத்தி பேணியிருந்தனர்.

கல்தொட்டிகள் நிரையாக அமைந்த குளக்கரையில் எருதுகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன. குளங்களில் யானைகள் இறங்கிச்சென்று நீர் அருந்துவதற்கான சரிவுப்பாதை இருந்தது. சில குளங்களில் யானைகள் இறங்கி கால்மூழ்க நின்று நீரை அள்ளி முதுகின்மேல் பாய்ச்சிக்கொண்டிருந்தன. யானையின் முகத்தில் கண்களோ மூக்கோ வாயோ இல்லை என்றாலும் எப்படி புன்னகை தெரிகிறது என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணமே அவனை புன்னகைக்கச் செய்தது.

நான்காவது கோட்டைக்குள் எழுந்த சற்றே சரிவான நிலப்பரப்பு முழுக்க தோல்களாலும் தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில் தட்டிகளாலும் ஈச்சை ஓலைகளாலும் கட்டப்பட்ட நெருக்கமான கொட்டகைகள் அமைந்திருந்தன. கோட்டைகளையும் கட்டடங்களையும் கட்டும் ஏவலரும் வினைவலரும் அங்கு செறிந்து தங்கியிருந்தனர். காலையில் பெரும்பாலானவர்கள் பணியிடங்களுக்கு சென்று விட்டபோதிலும் கூட அங்கு ஏராளமானவர்கள் எஞ்சியிருந்தனர். அமர்ந்தும் படுத்தும் சிறு பணிகளை ஆற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒலி திரண்டு முழக்கமாக எழுந்தது. அவர்களின் உச்சிப்பொழுது உணவுக்காக அடுமனைகள் எரியும் புகை எழுந்து கோதுமையும் சோளமும் வேகும் மணத்துடன் வானில் பரவி நின்றது.

ஐந்தாவது கோட்டை ஒப்பு நோக்க சிறியது. அதன் முகப்பில்தான் முதல் முறையாக பெரிய கதவுகள் அமைக்கும் இரும்புக்கீல்கள் இருந்தன. கதவுகள் அப்போதும் அமைக்கப்படவில்லை. அவை நகரின் மறுபக்கம் யமுனைக்கரையில் பெருந்தச்சர் குடியிருப்புகளில் தனித்தனி பகுதிகளாக கட்டப்படுகின்றன என அவன் அறிந்திருந்தான். அவன் கிளம்பும்போதே பணி நடந்துகொண்டிருந்தது. அவற்றை கொண்டு வந்து ஒன்றுடன் ஒன்று இணைத்து கோட்டை கதவாக ஆக்குவார்கள் என்றார்கள். “இணைக்கப்பட்ட கதவுகள் யானைகள் தண்டுகளை கொண்டு வந்து முட்டினால் எப்படி தாங்கும்?” என்று நகுலன் கேட்டான்.

“இணைக்கப்பட்டவை மேலும் வல்லமை கொண்டவை இளவரசே” என்றார் பெருந்தச்சரான மகிஷர். “ஒற்றைப் பெருங்கதவாக இவ்வளவு பெரிய கோட்டைக்கு அமைக்க முடியாது. அத்தனை பெருமரங்கள் தென்னகத்து மழைக்காடுகளில் கூட இருக்க வாய்ப்பில்லை. இவை கணக்குகளின் அடிப்படையில் இணைக்கப்பட்டவை. தண்டுகளோ வண்டிகளோ வந்து முட்டினாலும் அவ்விசையை பகிர்ந்து தங்கள் உடலெங்கும் செலுத்தி அசைவற்று நிற்கும்படி இக்கதவின் அமைப்பு சிற்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மழைவெயிலில் சுருங்கிவிரிந்து மரப்பலகை விரிசலிடும். இணைக்கப்பட்டவை அவ்விரிசலுக்கான இடைவெளியை முன்னரே தன்னுள் கொண்டவை.”

“காலம் செல்லச் செல்ல ஒற்றைமரம் வலுவிழக்கும். ஆனால் இணைக்கப்பட்டவற்றின் உறுப்புகள் ஒன்றை ஒன்று இறுகக் கவ்வி மேலும் உறுதி கொள்கின்றன. இதுவரை இங்கு கட்டப்பட்ட கோட்டைக் கதவுகள் அனைத்தும் வெண்கலப்பட்டைகளாலும் இரும்புப் பட்டைகளாலும் இறுக்கப்பட்டவை. குமிழ்களாலும் ஆணிகளாலும் ஒன்றிணைத்து நிறுத்தப்பட்டவை. இக்கலிங்கக் கதவுகள் முற்றிலும் மரத்தால் ஆனவை. ஒன்றை ஒன்று கவ்வி முடிவற்ற இணைப்பு ஒன்றை நிகழ்த்தியிருப்பவை. ஒரு முறை பூட்டி விட்டால் அவற்றை அவிழ்ப்பதற்கும் எங்கள் பெருந்தச்சனே வரவேண்டும்” என்றார் மகிஷர்.

கோட்டைக்குள் அமைந்த சிற்பியர் மாளிகைகளை கடந்து சென்றான். மெல்லமெல்ல அந்நகருக்குள் உளம்நுழைந்து உரிமைகொள்வதற்கு மாறாக முற்றிலும் அயலவனாக ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். கோட்டைப் பணிகளுக்குப் பிறகு காவலர்தலைவர் இல்லங்களாக மாற்றும்படி அமைக்கப்பட்ட மாளிகைகள். கோட்டை அமைவதற்குள் அவ்வில்லங்களை சிற்பிகள் அமைத்து அவற்றில் குடியேறிவிட்டனர். அவர்களுக்கு அனைத்தும் செம்மையாக அமைந்தாகவேண்டும். மலைக்கு மேல் இருக்கும் பன்னிரண்டு தடாகங்களிலிருந்து குடிப்பதற்கும் நீராடுவதற்குமான நீர் சுட்ட மண்குழாய்கள் வழியாக இல்லங்களின் ஒவ்வொரு அறைக்குள்ளும் வந்தது. வெண்பளிங்குச் சுவர்களில் நீர் வழிந்து கோடை காலத்தில் குளிர்ந்த தென்றல் அறைகள் எங்கும் உலவியது.

அவ்வில்லங்களை நோக்கி நின்றபின் ஒரு வணிகன் திரும்பி “சிற்பிகள் சக்ரவர்த்திகளுக்கு நிகரான வாழ்க்கை கொண்டவர்கள். ஆயிரம் வருடம் தவம் இருந்தாலும் லட்சுமி அத்தனை அருளை நமக்களிப்பதில்லை. பதினெட்டு வருடம் கற்றால் கலைமகள் அருளுக்கு விழைவதையெல்லாம் அள்ளிக் கொடுக்கிறாள்” என்றான். “அதற்கு முற்பிறப்பில் செய்த அபூர்வமும் துணைவரவேண்டும்” என்றார் சூதர் ஒருவர்.

அந்தப்பாதையில் சென்ற அனைவரும் விழிகளென உளம் குவிந்திருந்தனர். அகத்தில் எழுந்த வியப்பை கட்டுப்படுத்தும்பொருட்டு எளிய சொற்களாக அவற்றை மாற்றிக்கொண்டிருந்தனர். வீணாக சிரித்தனர். எளிமையான அங்கதங்களை கூறினர். தங்களை அறிந்தவர் போலவும் அறியாதவர் போலவும் காட்டிக்கொண்டனர். ஒவ்வொருவரும் அந்நகரின் குடிகளாக ஒருகணமும் அயலவராக மறுகணமும் வாழ்ந்தனர்.

அவர்களில் ஒருவனாகவே அர்ஜுனன் தன்னை உணர்ந்தான். அவன் பெயரால் அமைந்த நகரம். அவனுடையதென பாரதம் எண்ணும் மண். ஆனால் ஒருபோதும் அதை அவன் தன் இடமென உணர்ந்ததில்லை. ஒவ்வொருமுறையும் முற்றிலும் புதியவனாகவே திரும்பி வந்தான். எப்போதும் அது தனக்கு அவ்வண்ணமே இருக்கப்போகிறதென அவன் உணர்ந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

பேரழிவு நாவல்கள்

$
0
0

1

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக படித்துக்கொண்டு இருக்கின்றேன். பொதுவாக புனைவின் கற்பனைகள் கட்டமைக்கும் மொழியும் அதன் படிமங்களிலும் தினமும் துடிப்புடன் பரவசமாக வாழவைக்கும். துல்லியமான காட்சிகள்,பின்னிப்பிணைந்து விரியும் அக ஓட்டங்கள்,ஒட்டியும் உரசியும் விரியும் படிமங்களும் அதன் உள்ளர்த்தங்களும் மிகச்சிறந்த கற்பனை உலகுக்குள் கூடிச்செல்லும். புனைவுக்கும் நனவுக்கும் இடையிலான வெற்றிடம் மிகக்குறுகியதாக இருக்கும் படைப்புகளையே இலக்கியமாக கொள்ளமுடிகின்றது. இதே கதைசொல்லல் சம்பவ விவரிப்புகள் முறையினை குறிப்பிட்ட சில இலங்கை எழுத்தாளர்களைத்தவிர மற்றவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அழகியல் நுட்பங்கள் அற்ற மிகத்தட்டையான படைப்புக்களாகவே அவை இருக்கின்றன.

சமீபத்தில் இலங்கை வாசகர்களால் அதிகம்பேசப்பட்ட படைப்புகளான குணாகவியழகன் என்பவர் எழுதியிருக்கும் நஞ்சுண்டகாடு, விடமேரிய கனவு என்ற இரண்டு நாவல்களைப்படித்தேன். என்னவென்று சொல்லவது கரப்பான்பூச்சிகள் ஊர்வதுபோல இருந்தது. மிகமிக தட்டையான நடை. சம்பவக்கோர்ப்புக்களை காட்சியாக காட்டவோ நுண்மையாகச் சித்திரிக்கவோ தெரியவில்லை. சொல்லும்முறையில் எந்த நுட்பங்களும் இல்லை. மொண்ணையான உரையாடலுடன் பேசிக்கொண்டே போகிறது நடை. இவை இலங்கை விமர்சகர்களால் போலியாகக் கொண்டாடப்படுகின்றது.

போரின் முன்னும் பின்னும் போராளிகள்,பொதுமக்கள் அனுபவித்த வலிகளை எவராவது தட்டையாக எழுதிவிட்டாலும் அவரைக்கொண்டாடுகின்றார்கள், படைப்பாளி நாவலில் முன்வைக்கும் அரசியல் கருத்தையே கொண்டாடுகின்றார்கள் அல்லது எதிர்வினையாற்றுகின்றார்கள். அதனைச் சொல்லவரும் இலக்கிய அழகியலையும் அதன் உயிர்ப்புத்தன்மையையும் அவர்கள் மதிப்பிடுவதாகத் தெரியவில்லை. ஏன் இந்த மட்டமான அணுகுமுறைகளையும் போலியான கொண்டாடுதலையும் இலங்கை,புகலிட வாசகர்கள் முன்வைக்கின்றார்கள்?

அன்புடன்
x

பிற்குறிப்பு – இக்கடிதத்தினை பொதுவெளியில் பிரசுரிக்கநேர்ந்தால் என் பெயரை கடிதத்தில் மாற்றிவிடுங்கள்.

1
அன்புள்ள நண்பருக்கு

உங்கள் கடிதத்தை வாசித்தேன். ஏற்கனவே வேறு படைப்புகளைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதில் மட்டும் ஏன் இந்தத் தயக்கம்? இந்தத் தயக்கத்தை அளிப்பது இதிலுள்ள ஓர் அதிகாரம் கெடுபிடி அல்லவா? அதை உடைத்து மீறத்தானே ஓர் இலக்கியவாதிக்கு தினவு எழவேண்டும்? இந்த ரகசியம் எதற்காக?

மேலே குறிப்பிட்ட இரு நாவல்களையும் நான் வாசித்தேன். இலங்கை சார்ந்த எழுத்துக்களில் சயந்தன் அகிலன் இருவரையும் கருத்தில்கொள்ளலாம் என நினைக்கிறேன். குணா கவியழகனின் எழுத்துக்களை புறந்தள்ள விரும்பவில்லை, அவை முயற்சிகள் என்ற அளவில் முக்கியமானவை

இரு கோணங்களில் நீங்கள் சொல்வதைப் பார்க்கலாம். நேரடியான பேரழிவுச்சித்தரிப்புக்கு மினிமலிசம் என்னும் எளிமையாகச் சொல்லும் குறைத்துரைத்தல்முறை சரியாக வரும். உணர்வுகளை மிகையில்லாமல் நம்பகமாகச் சொல்ல அவ்வழகியல் கைகொடுக்கும்

இரண்டாவதாக, இவை புறவய யதார்த்ததை மட்டுமே சொல்ல முயல்கின்றன. உள்ளம் எதிர்வினையாற்றுகிறது அவ்வளவுதான். அகப்பயணமே இல்லை. இலக்கியத்தின் படிமம், மொழி சார்ந்த அனைத்து நுட்பங்களும் மானுட உள்ளத்தைக் காட்டுவதற்காக மட்டுமே.

இருந்தாலும் கூட இந்த அழகியலில் சயந்தனின் ஆறாவடு நாவல் அடைந்துள்ள வெற்றியை குணா கவியழகன் அடையவில்லை என்றே படுகிறது. அவரது எழுத்துநடை முதிராததாக, நுண்மைகளற்றதாகவே உள்ளது. அவரைக் கொண்டாடுபவர்களுக்கு அதெல்லாம் தேவையுமில்லை. சாதகமான அரசியலை, நேரடியான வெளிப்பாட்டை மட்டுமே தேடுபவர்கள் அவர்கள்.

இன்றைய சூழலில் உடனடியான பதிவுகள் உணர்வுபூர்வமாக வரவேற்கப்படுவதில் பிழையாக ஏதுமில்லை. குறைந்தபட்சம் அப்படி உணர்வுரீதியான பதிவுகளாவது வரட்டுமே. ஆனால் இவை ஆவணமதிப்பு மட்டுமே கொண்டவை என்றே மதிப்பிடமுடியும். இந்த எளிய வாசகர்களின் கொண்டாட்டங்களுக்கு அப்பால் சென்று தங்கள் தேடலை வளர்த்துக்கொள்ள இந்த இளம்எழுத்தாளர்களால் இயலவேண்டும்

இலக்கியத்தில் மேலும் ஆழமான நகர்வுகளுக்காக இக்களம் காத்திருக்கிறது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


ஆகவே கொலை புரிக!

$
0
0

நானும் ஒரு வருஷத்துக்கு மேலாக சிலிகான் ஷெல்ஃப் என்று ப்ளாக் எழுதி வருகிறேன். என் பாணியில், என் ரசனைக்கு ஏற்றபடி, சமரசம் இல்லாமல் மனதுக்குப் பட்டதை எழுதி வருகிறேன். நான் எழுதுவது விமர்சனம் என்பதை விட, புத்தக அறிமுகம் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒரு ஏழெட்டுப் பேர் மாதமொரு முறை கூடி ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறோம்.

நான் மட்டுமல்ல இந்தக் குழும உறுப்பினர்கள் பலரும் ப்ளாக் எழுதுகிறார்கள். கூகிளில் buzz-கிறார்கள். ட்விட்டர், ஃ பேஸ்புக், இந்தக் குழுமம் எதிலாவது புத்தகம், இலக்கியம் பற்றி அவரவர் கருத்தைப் பதிவு செய்து கொண்டே இருக்கிறோம்.

இதனால் எல்லாம் பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா, இத்தனை நேரம் செலவழித்து என்னத்தைக் கண்டோம் என்று எனக்கு சமீப காலத்தில் ஒரு சோர்வு உருவாகி இருக்கிறது. செலவழிக்கும் நேரம் அதிகம், பயன் குறைவு என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.

இது ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி இல்லை. அப்படி ஒரு கேள்வி எழாதபடி என் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறது. புத்தக அறிமுகத்தால் என்ன பயன் என்ற கேள்வியும் இல்லை. சொந்த அனுபவங்கள் எனக்கு என்ன பயன் என்று தெளிவுபடுத்தி இருக்கின்றன. இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதுவதால் என்ன பயன்?

ஆர்வி

சிலிகான் ஷெல்ஃப்

அன்புள்ள ஆர்வி,

எல்லாச் செயல்களிலும், அவை எவ்வளவு பயனுள்ளவையாக உண்மையில் இருந்தாலும், ஒரு சோர்வுத்தருணம் உண்டு. அதுவும் அதன் பகுதியே. இதை எழுதும்போது காகா காலேல்கரின் சரிதையை வாசித்துக்கொண்டிருக்கிறேன். காந்தியின் சீடர். எழுத்தாளர். நம்மைப்போன்றவரல்ல, லௌகீக வாழ்க்கையே இல்லாத அர்ப்பணிப்புள்ள தேச சேவகர். அவர் தொடங்கிய பெரும்பாலான முயற்சிகள் வெள்ளைய அரசால் அழிக்கப்பட்டன. பல முயற்சிகள் பல காரணங்களால் தேங்கி நின்றன. கூட இருப்பவர்கள் மனம் சோர்கிறார்கள். ஆனால் ‘இவற்றைச் செய்யாமலிருந்தால் அடையும் வெறுமையைவிட செய்து நிறைவேறாமல் போவது மேல்’ என காகா பதிலளிக்கிறார். பெரும்செயல்வீரர்கள் இத்தகைய சோர்வை அறியாதவர்கள் அல்ல, சோர்வைக் குறைந்த கால அவகாசத்தில் சமாதானம் செய்துகொண்டு மீளத்தெரிந்தவர்கள்.

நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை நாம் புரிந்துகொள்ளக்கூடிய அளவு சிறிதல்ல. மிகப்பிரம்மாண்டமான, மிகச்சிக்கலான ஒரு கூட்டியக்கம் இது. ஒன்று இன்னொன்றாக நீளும் நிகழ்ச்சிகளின் வலை. தற்செயல்களின் நடனம் அல்லது விதியின் ஆடல். இதில் நாம் செய்யக்கூடிய எந்த செயலும் எப்படி என்ன விளைவை உருவாக்கும் என்று சொல்லிவிடமுடியாது. சின்னஞ்சிறு செயல் இந்த மாபெரும் வலையை உலுக்கலாம். பெரிய செயல் ஒன்றுமே ஆகாமலும் போகலாம். நம்மால் இதைப் புரிந்துகொள்ளவே முடியாது. நாம் செய்வதன் பலனை மதிப்பிட முயன்றால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவேதான் கீதை. ‘பலனை என்னிடம் விட்டுவிட்டு உன் தன்னியல்புக்கு உகந்த கடமையை மட்டும் செய்’ என்ற அறிவுரை.

ஆனால் இங்கே செய்யப்படும் எச்செயலும் வீணல்ல என்பதும் ஓர் அனுபவமே. எல்லாச் செயலுக்கும் எதிர்ச்செயலுண்டு. ஆகவே எல்லாமே எங்கோ எப்படியோ விளைவுகளை உருவாக்கிக்கொண்டேதான் உள்ளன. அந்த எண்ணமே நம்மை செயல்நோக்கிச் செலுத்தவேண்டும்.

கருத்தியல் தளத்திலான செயல்பாடுகள் உருவாக்கும் விளைவுகள் மிக மறைமுகமானவை. உங்களை நாள்தோறும் மறுத்துக்கொண்டே இருக்கும் ஒருவரை நீங்கள் உள்ளூர மாற்றிக்கொண்டே இருக்கக்கூடும் – நீங்கள் இருவருமே அதை அறிய மாட்டீர்கள். ஒரு கல் நீரில் விழுந்து அலைகளை உருவாக்குவது போலத்தான் ஒரு கருத்து சமூக மனதில் செயல்படுகிறது. முதலில் சின்ன வட்டம். அடுத்து பெரியவட்டம். அடுத்து அதைவிட பெரிய வட்டம். சின்னவட்டமே பெரிய வட்டத்தை உருவாக்குகிறது. சின்னவட்டம் தீவிரமானது. பெரிய வட்டம் பலவீனமானது.

கருத்துத்தளத்தில் செயல்படும் சிலர் ஒரு பிரம்மாண்டமான சமூகத்தை மாற்றுவது அப்படித்தான். அது சாத்தியமற்றதாகத் தோன்றும். ஆனால் அது நிகழ்ந்தபடி இருக்கிறது. 1880களில் பெண்களைப் பள்ளிக்கூடம் அனுப்பவேண்டுமெனத் தீவிரமாகத் தமிழில் எழுதி பேசியவர்கள் சிலநூறு பேர். நூறுவருடங்களில் தமிழகத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் படிக்கும் காலம் வந்துவிடுமென அவர்கள் கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள். அதை நிகழ்த்தியது 250 பிரதி அச்சிடப்பட்ட இதழ்களில் அவர்கள் எழுதிய கட்டுரைகள் என்று அவர்களிடம் சொன்னால் மூர்ச்சையாகிவிடுவார்கள். இந்த பிரம்மாண்டமான நிகழ்வு ஒரு தனிமனிதனுடைய ஊகங்களைத் தாண்டியது.

இசைத்தட்டின் நடுவே உள்ள அச்சு அதைத் தூக்கிச்சுழற்றுவது போல ஒரு சமூகத்தின் கருத்தியல் மையமே அதை இயக்குகிறது. அதில் எல்லாக் கருத்துக்களுக்கும் இடமுண்டு. அரவிந்தன் நீலகண்டனும் அ.மார்க்ஸும் அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். ஆர்வியும் டாக்டர் சுனிலும் அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். கருத்துக்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று மோதி சமரசம் செய்தும் மீறியும் செயல்படுகின்றன.

நாம் நம் அன்றாடவாழ்க்கையின் அர்த்தமின்மையை உள்ளூர அறிந்தே இருக்கிறோம். தேடிச்சோறு நிதம் தின்னும் வாழ்க்கை. பிரபஞ்ச அர்த்தத்தை உணர்ந்து இந்த அன்றாட வாழ்க்கையில் சும்மா அமர்ந்திருக்க எல்லாராலும் முடியாது. இந்த அன்றாட வாழ்க்கையின் வெறுமையை வெல்லவே நாம் செயலில் ஈடுபடுகிறோம். செயல் இல்லாவிட்டால் இந்த வெறுமை நம்மைக் கொன்றுவிடும். ‘போர் அடிக்கிறது’ என நாம் சொல்வதே அர்த்தமற்ற காலத்தை நாம் உணர்வதுதான். அதைத் தாண்டவே மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உண்மையில் வேலையே குறி என்றிருப்பவர்கள் அந்த வேலை அளிக்கும் எந்த லாபத்துக்காகவும் அதைச் செய்யவில்லை. அந்த வேலை அவர்களின் அன்றாட அலுப்பை மறைத்து அவர்களை முன்னெடுத்துச் செல்லுகிறது என்பதனால்தான் செய்கிறார்கள். அதுவும் போதாமல் குடிக்கிறார்கள். சூதாடுகிறார்கள். அவ்வாறு செய்யும் செயல்கள் உருவாக்கும் வெறுமையை அவ்வப்போது உணர்ந்து இன்னும் சலிப்படைகிறார்கள்.

அதற்குப்பதிலாக நமக்குப்பிடித்த ஒன்றைச்செய்து இந்த அன்றாடவெறுமையைத் தாண்ட முடிந்தால் அதைவிட மகிழ்ச்சியானது ஏதும் இல்லை. நம் அடிப்படை இயல்புக்கு உகந்த ஒரு செயலைச் செய்வதன் மூலம் நாம் நம் நாட்களைப் பொருளுள்ளதாக ஆக்கிக்கொண்டால் வாழ்க்கை நிறைவுறுகிறது. அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என பெரிய ‘நோக்கமோ’ ‘அர்த்தமோ’ இல்லை. இருந்தால் அது லௌகீக வாழ்க்கையில் அறியக்கூடியதும் அல்ல.

ஆகவே அர்ச்சுனா கொலை புரிக! ))))

ஜெ

ஆகவே கொலைபுரிக!- கடிதம்

ஆர்விக்கு ஒரு வாழ்த்து

originally published on Jan 10, 2012/Republished

தொடர்புடைய பதிவுகள்

உபியும் பிகாரும்

$
0
0

1

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களுடைய தளத்தின் வழியாக பல்வேறு திறப்புகளை அடைந்தவன். அதற்காக என்றும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். தங்களின் இந்தோனேசியப் பயணங்களைப் படித்து வருகிறேன். வழக்கம்போலவே ஏதேதோ எனக்குள் திறக்கிறது. சமீபத்தில் ராமச்சந்திர‌ குஹா அவர்களின் கட்டுரை ஒன்றை ஹிந்துஸ்தான் நாளேட்டில் படித்தேன். அதனை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பி த‌மிழில் மொழிமாற்றி என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். இது என் முதல் மொழியாக்கம். தங்கள் பணிக்கு நடுவில் எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் வாசித்து தங்கள் கருத்தைப் பகிரவும்.

நம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம்

ராஜேஷ்குமார் முத்தையா

அன்புள்ள ராஜேஷ்குமார்

சுருக்கமான கட்டுரை. நன்றாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் உத்தரப்பிரதேசத்திலும் பிகாரிலும் பயணம்செய்தபோது தேசியநெடுஞ்சாலைகளில் ஊர்க்காரர்கள் தடுப்புகளை நிறுவி தண்டல் வசூல் செய்வதைக் கண்டேன். எவரும் எதிர்த்துப்பேசமுடியாது. தினம் பல்லாயிரம் ரூபாய் வசூலாகும். உள்ளூர் ரவுடிகளின் பணம் அது.

சென்ற ஆட்சியில் நிதீஷ்குமார் பிகாரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக அறுபதாயிரம் பேரை நியமித்தார். அவர்கள் பஞ்சாயத்துத்தலைவர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். பின்னர் தெரிந்தது அவர்களில் நேர்ப்பாதிப்பேர் ஆரம்பக்கல்வியே பெறாதவர்கள். அவர்கள் காட்டிய சான்றிதழ்கள் அனைத்தும் போலி. அவர்கள் பள்ளிக்கே வருவதில்லை

ஆனால் அவர்கள் எவரையும் வேலைநீக்கம் செய்யமுடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவருமே பிகாரின் செல்வாக்கான நடுத்தரச் சாதியைச் சேர்ந்தவர்கள். பஞ்சாயத்து முதல் பாட்னா வரை அவர்களுடைய அதிகாரம்தான். அவர்கள் அளிக்கும் அந்தக் கல்விக்கு என்ன மதிப்பு? அனைத்து நிர்வாகமும் செயலிழந்த்போக வேறென்ன வேண்டும்?

பிகார் , உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களின் நிலைமையைச் சொல்லும் அங்கதநாவலான ‘தர்பாரி ராகம்’ [ஸ்ரீலால் சுக்ல] வாசித்துப்பாருங்கள்.

உண்மையான பிரச்சினை எங்கே உள்ளது? ஒருமுறை இம்மாநிலங்களில் பயணம்செய்தால் போதும், புரியும். இங்கே பண்டைய நிலப்பிரபுத்துவமுறை மாற்றமில்லாமல் நீடிக்கிறது. ஒரே மாறுதல் பழைய பிராமண, ஷத்ரிய நிலவுடைமையாளர்களிடமிருந்து அதிகாரமும் நிலமும் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் கைகளுக்கு வந்துள்ளது. அவர்கள் எண்ணிக்கையும் அதிகமென்பதனால் ஜனநாயக அதிகாரமும் அவர்களுக்கே.

நம்மூரின் நடுச்சாதிவெறியை முற்போக்காக சித்தரிக்கும் கும்பல் இதையே முற்போக்கான அதிகார கைமாற்றம் என்கிறார்கள். ஆனால் எந்த விதமான குணாம்சமாற்றமும் நிகழவில்லை என்பதுடன் மேலும் மோசமான ரவுடித்தனமே உருவாகியிருக்கிறது என்பதே நடைமுறை உண்மை. எங்கும் ரவுடித்தனம்தான். ஒரு சாதாரண போலீஸ் செக்போஸ்டிலேயே ரவுடி அமர்ந்து வசூல் செய்வதை கயா அருகே கண்டிருக்கிறேன்.

ஆகவே அங்கே அனைத்துமே உறைந்து நிற்கின்றன. எங்கும் ஊழல், பொறுப்பின்மை. ஒவ்வொரு ஊரும் சில அடாவடி நில உடைமையாளர் கைகளுக்குள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் கூட அவர்களால் எல்லை பிரித்து ஆட்சிசெய்யப்படுகின்றன. அவர்களே அரசு, காவல்துறை, கலால்துறை அனைத்தும் ஆக உள்ளனர். மாநிலத்தின் கல்வி, பொருளியல் அனைத்தும் தேங்கிவிட்டன

உபி பையாக்களும் பிகாரிகளும் இந்தியாவெங்கும் கூலிவேலை செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தலித்துக்கள், அல்லது நிகரான சாதியினர். லடாக்கில் உறைபனிக்குளிரில் சாலைபோடுபவர்கள் இவர்களே. கஷ்மீரில் விவசாய வேலைகள், வீட்டுவேலைகள் அனைத்தும் இவர்களே. இந்தியாவே அவர்களைச் சுரண்டித்தான் வாழ்கிறது. இன்று திருப்பூரும் கோவையும்கூட அவர்களின் ரத்தத்தால் வாழ்கின்றன.

பிகாரின் அரசியலைக் கூர்ந்து பார்க்கும் எவருக்கும் இந்த ஆதிக்கம் தெரியும். லல்லு ஆட்சியில் அராஜகத்தின் உச்சத்திற்கே சென்ற யாதவ அரசியலை சற்று ஓரங்கட்ட நிதீஷால் முடிந்தபோது சிறிய மாற்றங்களைக் கொண்டுவர முடிந்தது. ஆனால் அதனால் பெரிய பயனேதும் இல்லை என பிகாரை காண்கையில் தோன்றுகிறது. பிகாரின் ஒரே பணப்புழக்கம் பிற மாநிலங்களில் கூலிவேலைசெய்து ஈட்டப்படுவதே.

பிகார் தேர்தலை மதவெறிக்கு எதிரான போர் என புளகாங்கிதம் கொண்டவர்கள் இங்கே பேசாமல் தவிர்த்த விஷயம் ஒன்று உண்டு. ஒட்டுமொத்த தலித் கட்சிகளும் அங்கே பாரதிய ஜனதாவுடன் நின்றன என்பதுதான். தலித்துக்கள் பாஜக கூட்டணியில் இருந்தமையாலேயே பல உயர்சாதியினரின் வாக்குகள் பாரதிய ஜனதாக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.

தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இன்றைய நடுச்சாதிகளுக்கு எதிராகத் திரள்வதன் அரசியல் என்ன என்பதே முக்கியமானது. ஏன் அவர்கள் பாஜக ஆதரவு நிலை எடுக்கிறார்கள்? அதற்கு அவர்களைக்கொண்டுசெல்வது எது? அதைமட்டும் எந்த தேசிய ஊடகமும், அரசியல் நோக்கர்களும் விவாதிப்பதில்லை. இன்றைய இந்திய அரசியல் விவாதங்கள் அனைத்துமே நடுச்சாதிகளுக்குச் சாதகமானவை என்பதனாலேயே இந்த சங்கடமான வினாக்கள் மழுப்பப்படுகின்றன.

உபியின் பிகாரின் எதிர்காலம் அங்குள்ள இன்றைய புதிய நிலப்பிரபுத்துவம் உடைக்கப்படுவதில்தான் உள்ளது. பிகாரிலும் உபியிலும் இன்றுள்ளது இடைநிலைச்சாதி நிலப்பிரபுக்களின் அரசுகள். இவற்றை அகற்றி ஆட்சிக்கு வரும் சாத்தியம் கொண்ட பாரதிய ஜனதா முன்வைப்பதோ உயர்சாதி நிலப்பிரபுத்துவம். அவர்கள் பேசுவது இன்னொரு வகை பழைமைவாதம். ஆயினும் அவர்களுடன் தலித் கட்சிகள் இருந்தமையால் ஜனநாயகத்துக்கான ஒரு சிறிய வாய்ப்பு இருந்தது

சாதியரசியலை விட்டு விலகி ஒரு ஜனநாயக அரசியலை நோக்கி இம்மாநிலங்கள் செல்லமுடிந்தால் மட்டுமே ஏதேனும் மீட்பு. ஒரிசாவில் அது சாத்தியமாகியிருக்கிறது. சத்தீஸ்கரில் நிகழ்ந்திருக்கிறது. பிகாரில் இனி ஒன்றுமே நடக்காது. லல்லுப்பிள்ளைகளின் வானர அரசியல்தான் கதி

குகா சொல்வதுபோல சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் உபிக்கு மீட்பு நிகழலாம்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

பௌத்தம் கடிதங்கள்

$
0
0

1

வணக்கம்

உங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால், முதல் முறையாக தற்போதுதான் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன். எத்தனையோ முறை உங்கள் எழுத்துக்களை வாசித்து விட்டு அதைப்பற்றி உடனே உங்களிடம் என் கருத்துக்களை பகிர வேண்டும் என்று தோன்றும் ஆனால் துணிச்சல் இல்லாமல், அம்முயற்சியினை கைவிட்டுவிடுவேன். ஆனால் இன்றிரவு உங்களுடைய ”இந்துமதம்,ஆத்திகம், நாத்திகம்” குறித்த மறு பதிவினை வாசித்த பிறகு, இதை எழுதுகிறேன்.

ஆத்திகம் மற்றும் நாத்திகம் குறித்த உங்கள் விளக்கம் எனக்கு பல புதிய புரிதல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, பெளத்தம் மற்றும் சமணம் போன்றவை பொருள் முதல் வாத மதங்கள் என்றே என் மனம் நம்பினாலும் கூடவே அதை ஏற்காதது போன்றும் என் மனம் எதிர்வினை புரியும் அது ஏன் என்று புரியாமல் இருந்தேன். உங்களுடைய இந்த கட்டுரையை வாசித்த பின் ஒரு தெளிவு பிறந்தது. நன்றி,

காஞ்சீபுரம் சரவணன்

*

ஜெ

பௌத்த கட்டிடக்கலை பற்றிய உங்கள் கட்டுரை ஒரு பெரிய திறப்பாக இருந்தது. பௌத்தம் பற்றி நிறைய வாசித்திருந்தாலும் பௌத்த கட்டிடக்கலையின் வரலாறு நம்முடைய கட்டிடக்கலையில் செலுத்தியிருக்கும் செல்வாக்கை எண்ணிப்பார்த்ததில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் கார்லே , ஃபாஜா எல்லா இடங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன்.

உண்டவில்லி பௌத்த குகைகளிலிருந்து வாதாபி குடைவரைகளுக்கும் அங்கிருந்து பல்லவர்கால குடைவரைக்கும் அங்கிருந்து மாமல்லபுரத்துக்கும் ஒரு கோடு வரைந்தால் தமிழகச் சிற்பக்கலையை அறிந்துவிடமுடியும் என்ற எண்ணம் வந்தது

நன்றி

அருண்

*

அன்புள்ள ஜெ,

// அவருக்கு நான் மணிமேகலை பற்றிச் சொன்னேன். உலக அளவில் பௌத்தத்திற்கு என ஒரு காவியம் மட்டுமே உள்ளது, அது தமிழில் உள்ளது. அதன் நாயகி ஒரு பெண், கணிகையும்கூட //

என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் (இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9). இது சரியல்ல. பௌத்தத்தின் முதலாவதும் புகழ்பெற்றதுமான மகாகாவியம் என்றால் அது அஸ்வகோஷர் சம்ஸ்கிருத மொழியில் எழுதிய “புத்த சரிதம்” தான். (பொ.பி. இரண்டாம் நூற்.). புத்தரின் வரலாற்றை விவரிக்கும் நூல். இவரே சௌந்தரானந்தம் என்ற மற்றொரு பௌத்த காவியத்தையும் எழுதியிருக்கிறார். புத்தரின் உறவினனான நந்தனுக்கும் சுந்தரிக்குமிடையேயான காதலையும், அவர்கள் புத்தநெறி தழுவுவதையும் கூறும் காதை இது. அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் சம்ஸ்கிருதத்தில் பல பௌத்த காவியங்கள் எழுதப் பட்டன. ஆரிய சூரர் போதிசத்வரின் முற்பிறவிக் கதைகளைத் தொகுத்து எழுதிய ஜாதகமாலா, ஆர்யதேவரின் சதுஷ்சடிகா, சந்திரகோமி எழுதிய சிஷ்யலேகதர்மகாவியம், சாந்திதேவரின் போதிசர்யாவதாரம் போன்றவை இதில் அடங்கும். புத்தரின் தெய்வீக இயல்பையும் மகாயானத்தையும் நிலைநிறுத்துவதே இவற்றின் முக்கியப் பணியாக இருந்தது. அழகிய கவித்துவம் கொண்ட அஸ்வகோஷரின் முதல் இரு காவியங்கள் தவிர்த்து, மற்றவை அனைத்தும் மிக சாதாரணனமானவை. சம்ஸ்கிருத இலக்கிய வரலாற்று நூல்களில் பட்டியல்களாக வருவதைத் தாண்டி, அவை பரவலாகக் கற்கப் படுவதில்லை. நாகார்ஜுனர், வசுபந்து, தர்மகீர்த்தி போன்றவர்கள் பௌத்தத்தை முழுவதுமாக தூய தத்துவத்திற்குள் கொண்டு சென்று விட்டதால், பின்னர் காவியங்கள் எழவில்லை.

இதன் தொடர்ச்சியாகவே பாலி, பைசாசி, தமிழ், சிங்களம் போன்ற மொழிகளிலும் பௌத்த காவியங்கள் எழுதப் பட்டன. சிங்களத்தின் முதல் காவியமான மகாவமிசம் அதிலொன்று. தமிழில் மணிமேகலை, குண்டலகேசி இரண்டுமே பௌத்த காவியங்கள். மகாவமிசம் பௌத்தத்தை இலங்கையின் சிங்கள அரசவம்ச வீரகாதைகளுடன் இணைப்பது போல, மணிமேகலை தமிழில் ஏற்கனவே வழங்கிய காதையை பௌத்தத்துடன் இணைக்கிறது. புத்தரை வரவேற்று உபசரித்து அவரது தர்ம நெறியை ஏற்று பிக்குணியாக மாறிய ஆம்ரபாலி என்ற கணிகையின் கதை ஏற்கனவே புத்தரின் சரிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதன் நீட்சியே மணிமேகலை.

சிலப்பதிகாரத்தின் உணர்வெழுச்சியும் காவிய நயங்களும் எதுவுமில்லாமல், மணிமேகலை பௌத்த சமய நெறிகளையும் தத்துவ வாதங்களையும் மட்டுமே சத்தமாக எடுத்துரைக்கும் வகையில் தட்டையாக அமைந்துள்ளதை இலக்கிய விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அந்த வகையில் பௌத்த காவியங்களின் பொது இயல்பின் படியே அது அமைந்துள்ளது.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

இந்த கேள்விக்கான விளக்கத்தை முன்னரே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். அஸ்வகோஷரின் புத்தசரிதம் பற்றியும், மகாவம்சம் பற்றியும் எழுதியிருக்கிறேன். பிற பௌத்த நூல்களைப்பற்றியும் சிறிய குறிப்பு ஒன்று எழுதியிருக்கிறேன்.

புத்தரின் வரலாற்றையும் பௌத்தஜாதகக் கதைகளையும் கூறும் செய்யுள்நூல்கள் அனைத்தையும் காவியங்கள் என்று கொண்டால் மட்டுமே நீங்கள் சொல்வது சரி.

ஆனால் அஸ்வகோஷருடையது சரித்திரநூல். ஜாதகக்கதைகள் போன்றவை புராணத்தொகுதிகள். மகாவம்சம் முதன்மையாகக் அரசகுலவரலாறு. இவையெல்லாம் காவியங்கள் அல்ல. செய்யுளில் அமைந்தவை என்பதனாலேயே காவியங்களாகக் கொள்ளக்கூடாது

நாம் காவியம் என்னும்போது புராணங்களையும் தலவரலாறுகளையும் குலவரலாற்று நூல்களையும் அதில்சேர்ப்பதில்லை. காவியம் என்பது தனியான ஒரு கதையோ அல்லது மூலக்கதையில் இருந்து எழுந்த ஒரு கருவோ சுதந்திர மறுஆக்கம் செய்யப்படுவது. ஒரு காவியகர்த்தனின் ஆன்மா வெளிப்படுவது. பொதுவாக காவிய இலக்கணங்கள் கொண்டது.

அவ்வகையில்தான் மணிமேகலையே இன்று கிடைக்கும் ஒரே சுதந்திரமான பௌத்த காப்பியம் என்று சொன்னேன். இதை நான் நீண்ட ஓரு கட்டுரையாகவும் பல்கலை ஒன்றில் முன்வைத்துள்ளேன்

நீங்கள் சொன்ன பட்டியல் பிரபலமானது. அதில் ஓரளவேனும் காவியம் என சொல்லத்தக்கது அஸ்வகோஷரின் புத்தசரிதம். ஆனால் அதில் மறு ஆக்கம் என்னும் அம்சம் இல்லை. அது வரலாறு மட்டுமே.

மணிமேகலைக்கும் அம்ரபாலி கதைக்கும் பொது அம்சம் என ஏதுமிருப்பதாக என் பார்வையில் தெரியவில்லை. அம்ரபாலி ஓர் அழகிய கணிகை, அவளுக்காக அரசர்கள் போட்டியிட்டனர் , அவள் பின்னர் பௌத்தநெறி சார்ந்தாள். மணிமேகலை கணிகையாக இருக்கவேயில்லை. மணிமேகலை காவியத்தின் முக்கியமான அம்சமே பசிப்பிணி போக்கல்தான்.

மணிமேகலையைப் பற்றிய பொதுவான புலவர் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. அதை வாசிப்பதற்கான இலக்கியரசனைமுறைகள், விமர்சிப்பதற்கான இலக்கியக் கருவிகள் இல்லாத நிலையில் பொதுவான பழந்ததமிழிலக்கிய ரசனையைக்கொண்டு மதிப்பிட்டு உருவாக்கப்பட்ட எதிர்மறைக் கருத்து அது

மணிமேகலை சிலப்பதிகாரம்போல உணர்ச்சிகர நிகழ்ச்சிகள், பாவியல்பு ஆகியவற்றால் ஆனது அல்ல. அது குறியீடுகள், மறைபொருட்கள் ஆகியவற்றாலான காவியம். பௌத்த குறியீட்டு மரபுடன் அதை இணைத்து வாசிக்கவேண்டும். அதன் படிமங்களை நவீன வாசிப்புமுறையால் விரிவாக்கிக்கொள்ளமுடியும். அப்போது அது பல பொருளடுக்குகளைத் திறந்து காட்டும் ஒரு நூலாக ஆவதைக் காணலாம்.

ஜெ

பளிக்கறை பிம்பங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74

$
0
0

பகுதி ஆறு : மாநகர் – 6

மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்!” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் பேசத்தொடங்கிவிட்டேன்” என்றான் அர்ஜுனன். சுபகை தலைவணங்கி விலகிச் சென்றாள். செவிலியும் அவளைத்தொடர்ந்து சென்றாள்.

சுபத்திரை அருகே வந்து அர்ஜுனன் எதிரிலிருந்த பீடத்தில் அமர்ந்து இரு கைகளையும் சேர்த்தபடி “என்ன சொல்கிறார் மாவீர்ர்?” என்றாள். அர்ஜுனன் திரும்பி சுஜயனை பார்த்தபடி “மாவீர்ராகிக் கொண்டிருக்கிறார். உண்மையான வீரம் என்ன என்று அறிந்துவிட்டார்” என்றான். “ஆம், இவர் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அப்படி என்ன செய்தீர்கள் என்று அந்த தடித்த செவிலியிடம் கேட்டேன். அவள் பேரென்ன?” என்றவுடன் அர்ஜுனன் “சுபகை” என்றான்.

“அவளை அறிவீர்களா?” என்று சற்றே மாறிய விழிகளுடன் சுபத்திரை கேட்டாள். “அறிவேன்” என்றான். சுபத்திரை ஓரிரு கணங்களுக்குப்பின் அவ்வெண்ணத்தை அப்படியே தள்ளி பிறிதொரு புறத்திற்கு மாற்றி “அவள்தான் இவரை மாற்றியவள். அப்படி என்ன சொல்லிக் கொடுத்தாய் என்றேன். ஒரே ஒரு நூலை பலமுறை சொல்லியிருக்கிறாள்” என்றாள். “ஒருநூலை அல்ல, இரண்டு நூல்களை” என்றான் அர்ஜுனன். “முதல்நூல் என்னுடைய பயணங்களை பற்றியது. இரண்டாவது நூல்தான் உங்கள் குடியின் நேமிநாதரைப்பற்றியது.”

சுபத்திரை “ஆம் நான் குறிப்பிட்டது அந்த இரண்டாவது நூலை மட்டும்தான். முதல் நூலை இவர் வெறும் கதைகளாகத்தான் கேட்டிருக்கிறார். கற்றிருக்கவில்லை” என்றாள். அர்ஜுனன் அவள் விழிகளைப் பார்த்து உடனே திரும்பிக்கொண்டு அபிமன்யுவின் கன்னங்களை தடவி “வலுவான சிறிய பற்கள்… மீன்பற்களைப்போல கூரியவை” என்றான். “இன்னும் உங்களை கடிக்கவில்லையா?” என்றாள் சுபத்திரை. “இல்லை. கடிக்கவில்லை. மறந்துவிட்டான் போலிருக்கிறது” என்று குனிந்த அர்ஜுனன் “கடிக்கவில்லையா? இந்தா கடி” என்று விரலை நீட்டினான். “கடிக்க மாட்டேன்” என்றான் அபிமன்யு. “ஏன்?” அவன் தலைக்கு மேல் கைதூக்கி சுட்டு விரலை ஆட்டி “நாளைக்கு கடிப்பேன்” என்றான்.

சுபத்திரை சிரித்து “எதிர்காலத்திட்டங்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்” என்றாள். சுருதகீர்த்தி “நானும் அவனும் வெள்ளைக்குதிரையில் போய் கலிங்கத்து இளவரசியை சிறை பிடித்து அவளை கடிப்போம்” என்றான். சுபத்திரை சிரித்து பீடத்தில் நிமிர்ந்தமர்ந்து “சில நாட்களாகவே கலிங்கத்து இளவரசியின் கதை ஓடிக்கொண்டிருக்கிறது” என்றாள். “என்ன கதை அது?” என்றான். “தெரியவில்லை. அங்க நாட்டு அரசரின் கதை அது. சூர்யபிரதாபம் என்ற பெயரில் புலவர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது. செவிலி ஒருத்தி சொன்னாள்.”

அர்ஜுனன் “ஓ” என்றான். “அதன் கதைத்தலைவர் கர்ணன். அதைக் கேட்ட பிறகுதான் கலிங்கத்து இளவரசி என்ற பேச்சு ஆரம்பித்திருக்கலாம். அதில் ஓர் பகுதியில் அவர் துரியோதனருக்காக வெண்புரவியில் சென்று கலிங்க இளவரசிகளை சிறைப்பிடித்து வருகிறார்.” என்றாள் சுபத்திரை. “இளைய இளவரசி சுப்ரியையை அவர் மணந்துகொள்கிறார்.”

அர்ஜுனன் இயல்பாக “ஓஹோ” என்றான். சுபத்திரை அவன் கண்களையே நோக்கியபடி “அங்குள்ள செவிலியருக்கு அந்தக் கதை பிடித்திருக்கிறது போலும்” என்றாள். “எங்கே?” என்றான் அர்ஜுனன். “தெரியவில்லை, பாஞ்சால அரசியின் மாளிகையிலாக இருக்கலாம்.” அர்ஜுனன் அவள் விழிகளைத் தவிர்த்துத் திரும்பி சுருதகீர்த்தியிடம் “அந்தக்கதையை உங்களிடம் சொன்னவர் யார்?” என்றான்.

“அந்தக் கதை… அது ஏட்டிலே…” என்றான் சுருதகீர்த்தி. கைவிரித்து “பேரரசியின் அரண்மனையில் உள்ள முதுசெவிலி என்னிடம் சொன்னாள். அங்கநாட்டரசர் கர்ணன் வெண்புரவி மேல் போகும் கதை” என்றான். சுபத்திரை “அத்தையா அந்தக்கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறாள்? வியப்புதான்” என்றாள். அர்ஜுனன் “அன்னை அக்கதைகளை விரும்புவாள்” என்றான். “ஏன்?” என்று சுபத்திரை கேட்டாள். “அதை அவள்தான் சொல்ல முடியும்” என்றான்.

சுபத்திரை “பேரரசியை நான் வெறுமே சடங்குகளில் மட்டுமே பார்க்கிறேன்” என்றாள். அர்ஜுனன் “உன் தமையனிடமிருந்து செய்தி ஏதேனும் உண்டா?” என்றான். “இங்கு இன்னும் சில மாதங்களில் நகர்ப்பணி முடிந்துவிடும். அதன் பிறகொரு பெரிய நகரணி விழா நடக்கவிருப்பதாக சொன்னார்கள். அப்படியென்றால் அவர் இங்கு வந்து சில மாதங்கள் தங்குவார் என்றுதான் பொருள்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “அவரை சொன்னதும் உன் முகம் மலர்கிறது” என்றான்.

“ஆம், அதில் என்ன? ஒவ்வொரு நாளும் காலையில் அவர் முகத்தை எண்ணிக்கொண்டுதான் விழிக்கிறேன். அவர் முகத்தை நெஞ்சில் நிறுத்தியபின்புதான் துயில்கிறேன் இங்கிருந்தாலும் இல்லையென்றாலும் அவர் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்.” அவன் “ஆம், நானும்தான்” என்றான். “நம் இருவரிடையே பொதுவாக இருப்பது இந்த ஒன்றுதான்.” அவள் அவனை நோக்கி “ஆம். இது ஒன்றேனும் பொதுவாக உள்ளதே என்று எண்ணிக் கொண்டேன்” என்றாள்.

அர்ஜுனன் “நேமிநாதர் விண்ணேகிய கருநிலவு நாளை ரைவத மலையில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்” என்றான். சுபத்திரை வியப்புடன் “எப்போது?” என்றாள். அர்ஜுன்ன் “இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. நாம் செல்வோம்” என்றான். அவள் “என் தமையன் உறுதியாக அங்கே வருவார். நாம் செல்வோம்” என்றாள். அவள் விழிகள் சரிந்தன. நீள்மூச்சுடன் “அவரது தோற்றம் என் விழிகளில் இன்னும் உள்ளது. அவர் இருந்த குகையையும் நின்று விண்ணேகிய பாறைகளையும் பார்த்தால் மீண்டும் அவரை பார்ப்பது போல” என்றாள்.

அர்ஜுனனின் கண்கள் வலிகொண்டவை போல் சற்று மாறின. சுபத்திரை “ரைவதமலைக்குச் செல்லும்போது நீங்கள் என்னுடன் அந்த சிவயோகியின் தோற்றத்தில் வரவேண்டும்” என்றாள், அர்ஜுனன் புன்னகைத்து “ஏன்?” என்றான். “அது என் விழைவு. இந்திரப்பிரஸ்தத்திற்குள் அன்று நுழைந்தபோதே நான் சிவயோகியை இழந்துவிட்டேன். என் நினைவுகளில் மட்டும்தான் அவர் இருக்கிறார். ரைவத மலையில் நான் அவர் கைபற்றி படிகளில் ஏறவேண்டும்” என்றாள்.

அர்ஜுனன் அபிமன்யுவை தொட்டு “உன் இடையில் இவன் இருப்பான்” என்றான். “இருக்கட்டும். இவன் அந்த சிவயோகியின் மைந்தன்” என்றாள் சுபத்திரை. “எந்த வலையிலும் சிக்காது அறுத்துக் கடந்து செல்லும் பெருவேழம் போன்று எந்தச் சூழ்கையில் இருந்தும் வெளியேறும் முழுமை கொண்ட வீரன் இவன். அந்தக் கனவைத்தான் நான் ஈன்றிருக்கிறேன்.” அர்ஜுனன் அபிமன்யுவை நோக்கி விழி கனிந்து “அவ்வாறு நிகழட்டும்” என்றான்.

அபிமன்யு “நான் உள்ளே நுழைவேன். வாளால் வெட்டி உள்ளே நுழைவேன்” என்றான். “எதற்குள் நுழைவாய்?” என்று அர்ஜுனன் கேட்டான். “பூவுக்குள்! பெரிய பூ” என்றான். “ஆயிரம் இதழ் கொண்ட பூ. அந்தப் பூவுக்குள் நான் நுழைவேன்.” அர்ஜுனன் செவிலியை நோக்க அவள் “மூடிய தாமரை ஒன்றுக்குள் இருந்து வண்டு வெளியேறி வந்ததைக் கண்டு அஞ்சி அலறினார். எப்படி அது உள்ளே சென்றது என்றார். அந்தியில் அது மூடும்போது வண்டு உள்ளே சிக்கிக்கொள்ளும் என்றேன். அன்றிலிருந்து தாமரை என்றாலே அஞ்சுகிறார்” என்றாள்.

“அஞ்சுகிறாயா?” என்றான் அர்ஜுனன் குனிந்து. “இல்லை” என்று அபிமன்யு சொன்னான். “நான் தாமரைமலரை வாளால் வெட்டுவேன். பெரிய வாளால் வெட்டுவேன்.” சுருதகீர்த்தி “நாங்கள் இருவரும் வெள்ளைக்குதிரையில் போய் பெரிய தாமரை மலர்களை வெட்டுவோம். அந்தக் குளத்தில் முதலைகள் இருக்கும். நூறு முதலைகள்… ஏழு முதலைகள். அவற்றின் வாய்க்குள் பெரிய பற்கள். குறுவாள் போன்ற பற்கள்!” என்றான். “நான் பார்த்தேன்! நானும் பார்த்தேன்!” என்று அபிமன்யு சொன்னான். சுஜயன் சிரித்து “இவர்கள் கனவு காண்கிறார்கள்” என்றான்.

சுபத்திரை “இவருக்கு காண்டீபத்தை காட்டுவதற்காகவே அந்தச்செவிலி அழைத்து வந்திருக்கிறாள்” என்றாள். அபிமன்யு “காண்டீபம்… காண்டீபம்” என்றான். சுருதகீர்த்தியும் “காண்டீபம்! காண்டீபம்!” என குதித்தான். அர்ஜுனன் சுஜயனிடம் “நீ பார்க்க விழைந்தாயா?” என்றான். “அந்நூலை படித்தால் காண்டீபத்தைப் பார்த்து தொழுதுதான் அமையவேண்டும் என்று செவிலி சொன்னார்” என்றான். “பார்ப்போம்… நானே அதைப்பார்த்து நெடுநாட்களாகின்றன” என்றான் அர்ஜுனன்.

சால்வையை எடுத்தபடி எழுந்து “நான் இவர்களுக்கு காண்டீபக்கோயிலை காட்டி வருகிறேன்” என்றான். சுபத்திரை இயல்பாக எழுந்து ஆடையை சரிசெய்தபடி “அவளை பார்த்தீர்களா?” என்றாள். அர்ஜுனன் அந்த வினாவை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் குழம்பி பின்பு “ஆம் பார்த்தேன்” என்றான். “என்ன சொன்னாள்?” என்றாள். பொருட்படுத்தாத பாவனை அதில் தெரிந்தது. அவன் புன்னகைத்தபடி “என்னிடம் அவள் எதைப் பேசினாலும் இறுதியில் அது இளைய யாதவரிடம்தான் வந்து சேரும்” என்றான்.

அவள் “ஆம்” என்றாள். “இந்நகரில் பெருங்குடியேற்ற விழா நடைபெறும்போது இளைய யாதவரை நானே சென்று அழைத்து வர வேண்டும் என்றாள். நான் ஆம் என்றேன்” என்றான் அர்ஜுனன். “ஏன், முறைப்படி அழைத்தால் அவர் வரமாட்டாரா?” என்றாள் சுபத்திரை. “இல்லை இந்நகரின் வேள்வித் தலைவராக அவர் அமர்ந்திருக்க வேண்டும் என்றாள்.” சுபத்திரை “வேள்வியா?” என்றாள். “ராஜசூய வேள்வி ஒன்று நிகழ்த்த வேண்டும் என்றாள்” என்றான்.

“அவருக்கு நாடும் நகரமும் உள்ளதே? இங்கு ஏன் வேள்வியில் அமரவேண்டும்?” என்றாள் சுபத்திரை. “அதை நீ அவளிடம்தான் கேட்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “யாதவர் வேள்விக்காவலாக அமர்வதை ஷத்ரியர் ஏற்பார்களா?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற நகரின் அரசர்” என்றான். சுபத்திரை “ஏதோ திட்டம்… என்ன திட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ திட்டம் இருக்கிறது அதில்” என்றாள். “அதை நீயே எண்ணி அறிந்துகொள். இவ்வரண்மனையில் உன் பணி அவளை எண்ணுவது மட்டும்தானே?” என்றபின் திரும்பி சிறுவர்களிடம் “காண்டீபத்தை பார்ப்போம், வருக!” என்றான்.

“காண்டீபம்!” என்று அபிமன்யு பளிங்கில் ஆணி உரசும் ஒலியில் கூவியபடி வாசலை நோக்கி ஓடி அதே விரைவில் திரும்பி கால்தடுக்கி விழுந்து இரு கைகளையும் ஊன்றி எழுந்து ஓடிவந்தான். விழுந்ததும் தன் ஓட்டத்தின் ஒருபகுதியே என்பதுபோல கைகளை தூக்கி “இவ்வளவு பெரிய வில்” என்றான். “அதை நான் நான் நான்…” என்றபின் செவிலியை பார்த்து “சிரிக்கிறாள்” என்றான். ஓடிப்போய் அவளை தன் கைகளால் தள்ளினான். அவள் உரக்க நகைக்க திரும்பி அர்ஜுனனை அணுகினான்.

அர்ஜுனன் அவனை தோள்களைப் பிடித்துச் சுழற்றித் தூக்கி தன் தோளில் அமர்த்திக் கொண்டான். சுருதகீர்த்தி சுஜயன் இருவரும் அவன் இரு கைகளை பற்றிக் கொண்டனர். அபிமன்யு அவன் தலைமயிரைப் பற்றியபடி கால்களை அவன் மார்பில் உதைத்து “விரைவு! புரவியே, விரைவாக” என்றான். திரும்பி சுபத்திரையிடம் “உச்சி உணவுக்கு இங்கு வந்துவிடுவேன்” என்றபடி அர்ஜுனன் வெளியே சென்றான். சுபத்திரை சிரித்தபடி நோக்கிநின்றாள்

இடைநாழியில் நின்றிருந்த சுபகையை நோக்கி அர்ஜுனன் புன்னகைத்தான். அவள் மெல்லியகுரலில் “எங்கு செல்கிறீர்கள்?” என்றாள். “இவனுக்கு காண்டீபத்தை காட்டத்தான் வந்தாயா?” என்றான். அவள் முகம் சிவந்து “நானும் பார்க்கத்தான்” என்றாள். “வா” என்று சிரித்தபடி அவன் முன்னால் செல்ல அவள் மூச்சுவாங்கியபடி பின்னால் வந்தாள்.

வெளிமுற்றத்தை அடைந்து அங்கு நின்றிருந்த காவலனிடம் “படைக்கலக்கோயிலுக்கு” என்றான். “ஆணை” என அவன் தலைவணங்கினான். அங்கு நின்றிருந்த மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அவன் குழந்தைககளை ஏற்றியபின் ஏறிக்கொண்டான். சுபகை தயங்கி நின்றாள். “ஏறிக்கொள்” என்றான்.

அவள் திகைத்து பாகனை நோக்கியபின் திரும்பி நோக்கினாள். “உம்” என்றான். அவள் மெல்ல “அரசத்தேர்” என்றாள். “ஏறு” என அர்ஜுனன் கைநீட்டினான். அவள் முகம் சிவந்தது. கண்களைத்தழைத்து இதழ்களை இறுக்கியபடி அசையாமல் நின்றாள். கழுத்தின் தசைகள் அசைந்தன. “உம்” என்றான் அர்ஜுனன். அவள் தன் தடித்த கையை நீட்டினாள். அவன் அவள் சிறிய மணிக்கட்டைப்பற்றி தூக்கி மேலே ஏற்றி தனக்குப்பின்னால் அமரச்செய்தான்.

சுஜயன் சிரித்தபடி “செவிலியன்னையின் முகத்தைப்பாருங்கள், அழுவதுபோல் இருக்கிறது” என்றான். அர்ஜுனன் திரும்பி நோக்க அவள் கைகளில் முகத்தை பொத்திக்கொண்டாள். சுஜயன் “என்னிடம் காண்டீபம் பற்றி நிறைய சொன்னார்கள்” என்றான். “அப்போதெல்லாம் முகம் வேறு யாரிடமோ பேசுவதுபோல் இருக்கும்.”

தேர் பெருஞ்சாலைமேல் எழுந்து சகட ஓசையுடன் மாளிகைகளை கடந்து சென்றது. “காண்டீபம்! காண்டீபம்! காண்டீபம்!” என்று சிறுவர்கள் கையசைத்து கூச்சலிட்டனர். அர்ஜுனன் திரும்பி சுபகையிடம் “மாலினியன்னையை பார்க்க நான் வருவேன்” என்றான். “நானும் அங்கிருப்பேன்” என்றாள் சுபகை. “நான் உன்னை அங்குதான் பார்க்கவும் விழைகிறேன்” என்றான். “இங்கே வந்ததுமே நான் பாஞ்சால அரசியைத்தான் பார்த்தேன்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “நினைத்தேன்” என்றான்.

தன் பதற்றத்தை வெல்ல சிரித்துக்கொண்டு “நீங்கள் இப்படி மைந்தர் சூழ வருவதை பார்க்கும்போது உங்களுக்குள் உங்கள் தமையன் பீமன் வாழ்கிறார் என்று தோன்றுகிறது” என்றாள். “நானும் அவரும் ஒன்றுதான்” என்றான் அர்ஜுனன். “அதை அவரது பெண்களிடம் அல்லவா கேட்க வேண்டும்” என்றாள் சுபகை. அர்ஜுனன் நகைத்தான்.

அரண்மனை மாளிகைகளுக்கு தென்கிழக்கே அக்னிமூலையில் இருந்தது காண்டீபத்தின் ஆலயம். அதன் முற்றத்தில் அவர்களின் தேர்சென்று நிற்பதற்கு முன்னரே அவர்கள் வரும் செய்தியை அறிவித்திருந்தனர். அர்ஜுனன் இறங்கி மைந்தரை ஒவ்வொருவராகத் தூக்கி இறக்கினான். அபிமன்யு “தூக்குங்கள்… தூக்குங்கள்” என கை நீட்டி கால்களை உதைத்தான். அவனைத்தூக்கி தோளில் வைத்தபடி சுபகையிடம் “வருக!” என்றான் அர்ஜுனன். அவள் இறங்கி அண்ணாந்து நோக்கி “இத்தனை பெரிய ஆலயமா?” என்றாள். அர்ஜுனன் “இங்கு அனைத்துமே பெரியவைதான்” என்றான்.

சுருதகீர்த்தி “மாமரம்” என்றான். “எங்கே?” என்றான் சுஜயன். அபிமன்யு “நான் பார்த்தேன்” என்றான். அவர்கள் மூவருமே ஆலயத்தை மறந்து மாமரத்தை நோக்கி திரும்பினர். “மாங்காயே இல்லை” என்றான் சுருதகீர்த்தி. அபிமன்யு உடனே விழிதிருப்பி ஆலயக்கொடியை நோக்கி “குரங்குக்கொடி” என்றான். அர்ஜுனன் “அவர் அனுமன்… காற்றின் மைந்தர். ரகுகுலராமனின் தோழர்” என்றான். “அனுமன்” என்று சொல்லி அபிமன்யு ஏதோ சொல்ல வந்து இதழ்களை மட்டும் அசைத்தான்.

உதட்டை பிதுக்கியபடி “மாங்காயே இல்லை” என்றான் சுஜயன். “இப்போது பருவம் அல்ல… வாருங்கள்” என்று சுபகை அவர்களின் தலையை தொட்டாள். “ஒரு மாங்காய்!” என்று அபிமன்யு சொன்னான். “மாங்காயா? எங்கே?” என்றான் சுருதகீர்த்தி. “அதோ…” என அவன் சுட்டிக்காட்ட அர்ஜுனன் பார்த்துவிட்டான். சுபகை “தந்தையின் விழிகள்” என்றாள்.

அதற்குள் சுருதகீர்த்தியும் பார்த்தான். “ஆமாம், ஒரே ஒரு மாங்காய்” என்றான். சுஜயன் “எங்கே?” என்றான். இலைகளுக்கு அடியில் ஒரே ஒரு சிறிய மாங்காய் நின்றது. “அது தெய்வங்களுக்குரியது” என்றாள் சுபகை. “இல்லை, அதை பார்க்கும் கண்கள் கொண்டவர்களுக்குரியது” என்றான் அர்ஜுனன். “நான் பார்த்தேன்” என்றான் அபிமன்யு.

அவர்களுக்காக காத்துநின்றிருந்த ஆலயப்பூசகரும் காவலர்களும் தலைவணங்கியபடி அணுகினர். சிவந்த பட்டை இடையில் கட்டி நெற்றியில் செந்நிறக் குருதிக்குறி அணிந்த பூசகர் அர்ஜுனனிடம் “காண்டீபம் தங்களுக்காக காத்திருக்கிறது இளையவரே” என்றார். அர்ஜுனன் “இவர்கள் அதைப்பார்க்கவேண்டும் என்றனர் சிருதரே” என்றான். “ஆம், கௌரவ சுபாகுவின் மைந்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என்ற பூசகர்.

திரும்பி இளையவர்களிடம் “வருக இளவரசர்களே. குருகுலத்தின் நிகரற்ற பெரும்படைக்கலம் அமைந்துள்ள இடம் இது. அதன் காட்சி உங்களை வெற்றிகொள்பவர்களாக ஆக்கட்டும். அதன் பேரருள் உங்கள் தோள்களில் ஆற்றலாகவும் உள்ளங்களில் அச்சமின்மையாகவும் சித்தத்தில் அறமாகவும் வாழ்க!” என்றார். அபிமன்யு “நான் நான்” என முன்னால் ஒடினான்.

அவரை சுருதகீர்த்தியும் சுஜயனும் தொடர்ந்துசென்றனர். வட்டவடிவமான கோயிலின் வட்டப்படிக்கட்டில் அவர்கள் முழங்காலில் கையூன்றி ஏறிச்சென்றனர். அபிமன்யுவை ஒரு காவலன் தூக்கி மேலே விட்டான். உள்ளே காற்று சுழன்றுகொண்டிருந்தது. சுருதகீர்த்தி பூசகரின் அருகே சென்று “அந்த வில்லை நான் தூக்கமுடியுமா?” என்றான். “முடியாது” என்றார் அவர். “நான் வளர்ந்தால்?” என்றான். “வளர்ந்தபின் உரிய தவங்களைச் செய்தால் தூக்கலாம்” என்றார் பூசகர். “ஏனென்றால் இது வெறுமொரு வில் அல்ல. இது ஒரு தெய்வம். மண்ணில் வில்வடிவில் எழுந்தருளியிருக்கிறது.” சுருதகீர்த்தி “ஏன்?” என்றான். “தெய்வங்கள் ஏன் மண்ணுக்கு வருகின்றன என்று நாம் எப்படி அறிவோம்?” என்று பூசகர் சொன்னார்.

“பிரம்மன் தன் புருவங்களின் வடிவில் அமைத்தது இந்த வில். ஆயிரம் யுகம் இது அவர் முகத்திலேயே ஒரு படைக்கலமாக இருந்தது. பின்னர் பிரஜாபதி இதைப்பெற்று ஆயிரம் யுகங்கள் வைத்திருந்தார். அப்போது ஒளிமிக்க வெண்முகில் கீற்றாக இது இருந்தது. அவர் இதை இந்திரனுக்கு அளித்தார். ஏழுவண்ண வானவில்லென அவர் கையில் இது ஆயிரம் யுகங்கள் இருந்தது. இந்திரனிடமிருந்து சந்திரன் இதைப்பெற்று தன்னைச்சூழும் வெண்ணிற ஒளிவளையமென சூடியிருந்தார். பின்னர் வருணன் இதை அடைந்தான். திசை தொட்டு திசை வரை எழும் பேரலை வடிவில் அவரிடமிருந்தது இது.”

“இந்த நிலம் காண்டவவனமாக இருந்ததை அறிந்திருப்பீர்கள். இதை ஆண்டிருந்த நாகர்களை வெல்வது அக்னிதேவரின் வஞ்சினம். அக்னிதேவரின் கோரிக்கையின்படி அந்த மாநாகங்களை வென்று இதை கைப்பற்றியவர் இளையபாண்டவர். நாகங்களின் கோரிக்கையின்படி இந்திரன் மழைமுகிலைக்கொண்டுவந்து இக்காட்டை மூடினார். மழைத்தாரைகள் காட்டுக்குமேல் நீர்க்காடு என நின்றிருந்தன. இந்திரனை வெல்ல இளையபாண்டவருக்கு ஒரு பெரும்படைக்கலம் தேவையாயிற்று.”

குழந்தைகள் தலைதூக்கி அர்ஜுனனையே நோக்கின. அவன் புன்னகையுடன் நடந்தான். முலைகள் மேல் கைவைத்து உணர்வெழுச்சியால் உதடுகளை இறுக்கியபடி சுபகை வந்தாள். “அக்னிதேவர் வருணனிடம் கோரியதற்கேற்ப அவர் காண்டீபத்தை இந்திரன் மைந்தருக்கு அளித்தார். தொடுவானில் ஒரு துண்டை வெட்டி எடுத்ததுபோன்ற பேருருவம் கொண்ட வில் இது. நினைத்த தொலைவுக்கு அம்புகளை ஏவக்கூடியது” என்றபடி உள்ளே அழைத்துச்சென்றார் பூசகர்.

“மண்ணில் ஊழை நடத்துவதற்காக பெரும் படைக்கலங்கள் பிறக்கின்றன. வீரர் கையில் அமைந்து மானுடரை ஆட்டிவைத்து மீள்கின்றன. ராகவராமன் கையில் அமைந்த சிவதனுசுக்குப்பின் இதுவே மிகப்பெரிய வில் என்கின்றனர் நிமித்திகர்.”

சுதையாலான பதினெட்டு பெருந்தூண்கள் கருங்கல்பாளங்களாலான தரையில் ஊன்றி மேலே மரத்தாலான குவைமாடத்தைத்தாங்கி நின்ற அந்த ஆலயத்தின் உள்ளே கருவறை நான்கு தூண்களுக்குமேல் குவைக்கூரையுடன் தனியாக நின்றது.உள்ளே வான்வெளி நீலநிற ஓவியமாக தீட்டப்பட்டிருந்தது. சூரியனும் சந்திரனும் ஆதித்யர்களும் ஒளிமுடி சூடி நின்றிருக்க ஐராவதமும் உச்சைசிரவஸும் பறந்துகொண்டிருந்தன. எட்டுதிசைகளிலும் திசையானைகள் துதிக்கை கொண்டு வானை தூக்கியிருக்க திசைக்காவல்தேவர்கள் படைக்கலங்களுடன் தங்கள் ஊர்திகள் மேல் அமர்ந்திருந்தனர்.

நான்கு பக்கமும் திறந்த வாயில்கள் கொண்ட கருவறையை சுற்றியிருந்த தாழ்வாரத்தினூடாக சுற்றிவர முடிந்தது. உள்ளே செம்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தின்மேல் சந்தனமரத்தாலான மேடையில் காண்டீபம் பொன்னூல் அணிசெய்யப்பட்ட செம்பட்டால் மூடிவைக்கப்பட்டிருந்தது. அதைச்சூழ்ந்திருந்த நான்கு அணித் தூண்களில் பிரஜாபதியும் இந்திரனும் சந்திரனும் வருணனும் அருளல் கையுடன் நின்றிருக்க மேலே பிரம்மன் குனிந்து அருள்நகைப்புடன் அதை வாழ்த்தினார். காலையில் அதற்கு போடப்பட்ட மலர்மாலைகள் ஒளியுடனிருந்தன. பூசைப்பொருட்கள் அதன்முன் பலிபீடத்தில் படைக்கப்பட்டிருந்தன.

பூசகர் உள்ளே நுழைந்து மும்முறை வணங்கியபின் “நமோவாகம்” என்று கூவியபடி அந்த செம்பட்டுத்திரையை மெல்ல விலக்கினார். வளைவுகளாகச் சுருங்கி அது இழுபட்டு விலக கடலலை விலகி எழும் கரைப்பாறை போல காண்டீபம் வெளிவந்தது. பொன் உருகி வழிந்த ஓடை போல தோன்றியது. இருபதடி நீளம் கொண்டிருந்தது. அதன் நாண் அவிழ்த்து சுருட்டப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. பொன்முனைகொண்ட மூன்று அம்புகள் அதன் நடுவே படைக்கப்பட்டிருந்தன.

“துருக்கொள்ளா இரும்பாலானது. பொன்னுறை இடப்பட்டுள்ளது” என்றார் பூசகர். குழந்தைகள் கருவறை தரைநிலையை கைகளால் பற்றி நுனிக்கால்களில் நின்று அதை நோக்கின. பூசகர் அதன் பொற்செதுக்குகளை சுட்டிக்காட்டி “வலது முனையில் சங்குசக்கரம். இடதுமுனையில் மாகாளையும் சூலமும். நடுவே பிரம்மனுக்குரிய வஜ்ராயுதம். இது பரசுராமனின் மழு. அனுமனின் கதை இது… துர்க்கையின் வாளும் வேலும் பாசமும் அங்குசமும் இதோ உள்ளன. குபேரனின் உழலைத்தடி இது. அனைத்து தெய்வங்களின் படைக்கலங்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளன” என்றார்.

குழந்தைகள் மூச்சிழுத்த நிலையில் சொல்லிழந்திருந்தன. “ஒவ்வொரு கருநிலவுநாளிலும் இதற்கு குருதிபலி அளித்தாகவேண்டும். இந்நகரில் வாழும் அனைத்து படைக்கலத்தெய்வங்களும் ஒவ்வொருநாளும் கருக்கிருட்டில் வந்து இதை வணங்கிச்செல்வதாக சொல்கிறார்கள். எனவே விடிந்து ஒளியெழுவதுவரை இங்கே எவரும் இருப்பதில்லை. இரவில் இதற்கு விளைக்கு வைக்கும் வழக்கமும் இல்லை” என்றார் பூசகர்.

சுருதகீர்த்தி திரும்பி அர்ஜுனனை நோக்கி பின்பு திரும்பி வில்லையும் நோக்கி நீள்மூச்சுவிட்டான். “நோக்க விழைகிறாயா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான். அர்ஜுனன் அவனைத்தூக்கி அதை நன்றாகக் காட்டினான். “இதை எப்படி வென்றீர்கள் தந்தையே?” என்றான் அர்ஜுனன். “அன்று என் உள்ளத்தில் உலகையே வெல்லும் விழைவு இருந்தது. விண்ணையும் மண்ணையும் தொடும் ஆணவமும் இருந்தது” என்றான் அர்ஜுனன். “மானுடன் தெய்வமாவதை தெய்வங்கள் விரும்புகின்றன.”

கைகளை தூக்கி கால்களை உதைத்து “எனக்கு எனக்கு” என்றான் அபிமன்யு. “நான் அதை தூக்குவேன்” என்றான். பூசகர் “அதை பிறர் தொடமுடியாது என்று நெறி உள்ளது இளையவரே” என்றார். அர்ஜுனன் கருவறைக்குள் சென்று அந்த வில்லை நோக்கி ஒருகணம் நின்றான். பின்பு “ஆழிவேந்தே” என மெல்ல சொன்னபடி குனிந்து அதைத் தொட்டு சென்னி சூடி வணங்கினான். அதன் வலது ஓரத்தைப்பற்றி இயல்பாக தூக்கினான். அது எடைகுறைவானது என்று அப்போதுதான் தெரிந்தது.

எம்பி தலைநீட்டி “அவ்வளவுதான் எடையா?” என்றான் சுஜயன். “இல்லை, முறைப்படி தூக்காவிட்டால் அசைக்கக்கூட முடியாத அளவுக்கு எடைகொள்ளும் வல்லமை இதற்குண்டு” என்ற அர்ஜுனன் அதை சற்றே வளைத்து அதன் தண்டை ஒன்றன் உள் ஒன்றாக செருகினான். அவன் கையில் அது மாயமெனச் சுருங்கி மிகச்சிறிய வில்லாக ஆகியது. “சுருங்குகிறது” என்றான் சுருதகீர்த்தி.

வலக்கையில் முழங்கையளவே ஆன சிறிய காண்டீபத்துடன் அர்ஜுனன் வெளியே வந்தான். இடக்கையில் சிறிய அம்பு இருந்தது. “இத்தனை சிறியதா?” என்றான் சுஜயன். “இலக்குக்கு ஏற்ப அது உருக்கொள்கிறது” என்றான் அர்ஜுனன். திரும்பி சுருதகீர்த்தியிடம் “வருக!” என்றபடி வெளியே சென்றான். முற்றத்தில் அவன் இறங்கியபோது அவர்கள் “நானும் நானும்” என்றபடி தொடர்ந்து ஓடிவந்தனர். அபிமன்யு “நான் வில்லை… நான் வில்லை… எனக்கு வில்” என்று சொற்களை உதிர்த்தபடியே அடிவளைவு உருவாகாத தளிர்க்கால்களை தூக்கித் தூக்கி பதித்து வைத்து அவர்களுக்குப் பின்னால் ஓடினான்.

அர்ஜுனன் வில்லை வளைத்து நாணேற்றினான். அது விளையாட்டுப்பாவை போலிருந்தது. அவன் அதைத்தூக்கி குறிநோக்கி எய்தான். பொன் முனையுள்ள அம்பு மீன்கொத்திபோல எழுந்து சென்று இலைகளை ஊடுருவி இருகிளைகளை தவிர்த்து வளைந்து தழைப்புக்குள் நின்றிருந்த மாங்காயைக் கவ்வி வானில் சென்று வளைந்து கீழிறங்கியது. சுருதகீர்த்தியும் சுஜயனும் அதை நோக்கி ஓடினர். சுஜயன் அதை எடுத்தான். “புதிய மாங்காய்….” என முகர்ந்தான். அபிமன்யு “எனக்கு! எனக்கு!” என்று கூவியபடி அவர்களைத் தொடர்ந்து ஓடினான்.

சுஜயன் மாங்காயை கடிக்கப்போனபோது அபிமன்யு நின்று காலை உதைத்து “கடிக்காதே” என்றான். சுஜயன் “ஏன்?” என்றான். அபிமன்யு “எனக்கு….” என்று கைநீட்டினான். சுஜயன் திகைத்து அர்ஜுனனை நோக்கினான். சுருதகீர்த்தி “அவனுக்கு பாதிபோதும்” என்றான். அபிமன்யு முகம் சிவந்து கண்கள் இடுங்க சுஜயனிடம் “நான் உன்னை கொல்வேன். அம்புவிட்டு தலையை அறுப்பேன்” என்றான். சுஜயன் மாங்காயை தாழ்த்தினான். சுருதகீர்த்தி அர்ஜுனனை நோக்க “அவனுக்குப் பாதி” என்றான் அர்ஜுனன்.

“எனக்கு முழுமாங்காய்… இல்லையேல் நான் உன்னை கொல்வேன்” என்றான் அபிமன்யு. “அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள் சுபகை. சிரித்தபடி “அதற்காக வில்லேந்தவும் சித்தமாகிறார்” என்ற சுஜயன் அதை அபிமன்யுவிடம் கொடுத்தான். அவன் அதை வாங்கி தன் மார்புடன் அணைத்துக்கொண்டு புருவங்களைச் சுருக்கி அவர்களை நோக்கினான். “எத்தனை கூரிய கண்கள்!” என்றாள் சுபகை. “கண்களின் ஒளியே அம்புகளுக்கும் செல்கிறது என்பார்கள்.”

அர்ஜுனன் அபிமன்யுவையும் சுஜயனையும் சிலகணங்கள் நோக்கிவிட்டு பெருமூச்சுடன் திரும்பி ஆலயத்திற்குள் சென்றான். காண்டீபத்தை கருவறையில் முன்பிருந்த வடிவில் வைத்து தொட்டு வணங்கிவிட்டு புறம் காட்டாமல் காலெடுத்து படியிறங்கினான்.

முற்றத்திற்குத்திரும்பி அவன் வந்தபோது மைந்தர் சிரித்துக்கூவியபடி அந்த மாங்காயை பந்துபோல வீசி எறிந்து ஓடிச்சென்று எடுத்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுருதகீர்த்தி மாங்காயை எடுத்ததும் அபிமன்யு “எனக்கு எனக்கு” என கூவினான். அதை அவன் வீச சுஜயன் பிடித்துக்கொண்டான். அபிமன்யு சிரித்தபடி அதைத் துரத்திச்சென்றான்.

“செல்வோம்” என்றான் அர்ஜுனன். “வாருங்கள் இளவரசர்களே…” என்றாள் சுபகை. சுஜயன் ஓடிவந்து தேரில் ஏறி “நான் முதலில்” என்றான். சுருதகீர்த்தி மூச்சிரைக்க படிகளில் கைகளால் தொற்றி ஏறி “நான் இரண்டாவது” என்றான். அபிமன்யு வந்து சுபகையின் ஆடையைப்பற்றி “என்னை தூக்கு” என்றான். அவள் அவனைத் தூக்கி மேலே நிறுத்த “நான் முதலில்… நான் முதலில்” என்று அவன் கை தூக்கி கூவினான்.

“நீ எப்போது கிளம்புகிறாய்?” என்றான் அர்ஜுனன். சுபகையின் கண்கள் சற்று மாறுபட்டன. “நீங்கள் என்னை மறந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்றாள். “மறந்திருப்பீர்கள் என்று எண்ணியே உங்கள் முன் நின்றேன்.” அர்ஜுனன் “நினைத்திருப்பேன் என்றால் வந்திருக்க மாட்டாயா?” என்றான். “மாட்டேன்” என்றாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அறிந்த சுபகை அல்ல நான்.” அவன் “மாறிவிட்டாயா?” என்றான்.

“பார்த்தாலே தெரியவில்லையா?” என்று அவள் சொன்னாள். அவள் விழிகள் அறியாமல் சரிந்து அவளுடைய பருத்து தொய்ந்த முலைகளை நோக்கின. அர்ஜுனன் அவளைப்பார்த்தபடி “அப்படியானால் அன்று வெறும் உடலையா எனக்காக கொண்டு வந்தாய்?” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “நீ அளித்தது இன்றும் உன் விழிகளில் அப்படியேதான் உள்ளது” என்றான். அவள் கீழுதட்டை இழுத்து பற்களால் கடித்தாள்.

“உன்னை நினைவு கூர்ந்த அனைத்துத்தருணங்களிலும் நான் பழுத்து இறப்பை நோக்கிச் செல்லும் முதியவனாக இருந்தேன். அவற்றில் நீ இன்னும் உடல் தளர்ந்து தோல்சுருங்கி கூந்தல் நரைத்த முதியவளாக இருந்தாய். இதே விழிகளுடன்” என்றான். அவள் கண்கள் நீர் நிறைந்தன. இரு கைகளாலும் மார்பை பற்றியபடி “அய்யோ” என்றாள். “அது வெறும் கனவல்ல. முதுமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காண்டீபத்தை தூக்கி வீசிவிட்டு முதியவனாக நான் சென்று அமரும் இடம் எங்கோ இருக்கிறது” என்றான்.

அவள் அழுகையில் உடைந்த குரலில் “அங்கு எனக்கு ஒரு இடம் இருந்தால் என் வாழ்வு முழுமைபெறும்” என்றாள். “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டும்தான் இடம் உள்ளது” என்றான் அர்ஜுனன். தன்னை மறைப்பவன்போல அவன் சாலையை நோக்கி முகம்திருப்ப ஒளியலைகளாக ஓரக்கட்டடங்கள் அவன் முகம்மீது கடந்துசென்றன.

சுபகை நீண்ட பெருமூச்சுவிட்டு “போதும். இத்தனை நாள் எனக்குள் ஓடிய வினாவுக்கான விடை இது. ஏதோ நோயின் வெளிப்பாடாக வெளிப்படும் வெறும் ஊன்கட்டிதானா நான் என்று எண்ணியிருந்தேன். என் உடலுக்கும் உயிருக்கும் உள்ளத்திற்கும் அதில் நிறைந்துள்ள அனைத்திற்கும் ஓர் இலக்குண்டு என்று இப்போது தெரிகிறது. நான் காத்திருக்கிறேன். திரும்ப மாலினி அன்னையின் தவக்குடிலுக்கே செல்கிறேன். அங்கு நானும் தவமிருக்கிறேன்” என்றாள்.

அர்ஜுனன் “ஆம், எங்கெங்கோ சென்றாலும் திரும்பி அங்கு வந்து கொண்டே இருக்கிறேன். நீ அங்கு இருப்பதுதான் உகந்தது. திரும்பி வர ஓர் இடம் இருக்கிறது என்ற எண்ணம் நன்று. மீளும்போது இல்லத்தில் அன்னை காத்திருக்கிறாள் என்று எண்ணி உலகெங்கும் அலைந்து திரியும் மைந்தனின் விடுதலையை அப்போது அடைவேன்” என்றான். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிய புன்னகைத்தாள். அவன் அவள் தோள்களில் கைவைத்து “செல்வோம்” என்றான்.

“போவோம், போவோம்” என்று அவள் ஆடையைப் பற்றி இழுத்தான் சுஜயன். “அன்னை மலர்ந்திருக்கிறார். இனிமேலும் உங்களிடம் பேசினாள் என்றால் அழுவார்.” சுபகை கண்ணீரை இரு கைகளாலும் துடைத்து புன்னகைத்தபடி “ஆம்” என்று சொல்லி தேரிலேறிக்கொண்டாள். அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து “’செல்வோம்’’ என்று சொன்னான்.

சிறுவர்கள் “விரைக! விரைக!” என்று கூச்சலிட்டனர். அதுவே விளையாட்டாக ஆக “விரைக! விரைக! விரைக!” என்று கூவியபடி துள்ளிக்குதித்து கையாட்டினர். அர்ஜுனன் புன்னகையுடன் சாலையை நோக்கிக்கொண்டிருந்தான். மறுபக்கச்சாலையை அவள் கண்ணீருடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.

[காண்டீபம் முழுமை]

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

காண்டீபம் முழுமை

$
0
0

இன்றுடன் காண்டீபம் முடிவடைகிறது. நான் ஒரு நாவலை தொடங்கும்போது அதற்கு அளிக்கும் உருவம் முடியும்போது எப்போதும் மாறிவிடுகிறது. அர்ஜுனனின் நான்கு மனைவிகள், அவனுடைய புற – அகப்பயணம் இதுதான் நான் எண்ணியது. ஆனால் என் எல்லா நாவல்களும் நானே மேற்கொள்ளும் பயணங்கள்தான். நானே புதியதாக கண்டடைவனதான்.

அர்ஜுனனின் அகம் என தொடங்கியபோதே காமம் மிகச்சிறிய பொருளாக ஆகிவிட்டது. அவன் ஓர் யோகி. அவனுக்கே கீதை சொல்லப்பட்டது. அவன் முழுவாழ்வும் கீதையை நோக்கித்தான். மெல்லமெல்ல அவனுடைய அகம் கொள்ளும் ஆழ்ந்த வினாக்களையே நானும் எதிர்கொண்டேன்.அவற்றில் முதன்மையானது வன்முறை. அதன் விடைநோக்கி சென்றது நாவல்.

முழுமையடைந்தபின் வழக்கம்போல நாவலின் முதல்வரியே அந்த முடிவுக்காக எழுதப்பட்டிருப்பதன் விந்தையை உணர்ந்தேன். முழுமையான கட்டமைப்புடன் நாவல் நிறைவுற்றது.

நிறைவும் வழக்கமான வெறுமையும் கொண்ட நாட்கள்.கொஞ்சம் பயணம், கொஞ்சம் வாசிப்பு, கொஞ்சம் சண்டை, சரியாகிவிடுவேன்.இன்னும் சிலநாட்களில் அடுத்த நாவலை தொடங்கிவிடுவேன்.

டிசம்பர் பத்தாம்தேதி முதல் என இப்போது நினைக்கிறேன்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16782 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>