Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17024 articles
Browse latest View live

இந்துமதத்தைக் காப்பது…

$
0
0

a (2)

ஒருதெய்வ வழிபாடு

அன்பு ஜெ,

சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற  தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  அப்போது ஒரு அரேபிய நண்பன் உடன் சொன்னான் “இப்போது இஸ்லாமியர்” ஆப்ரிக்கா மற்றும் சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கிறார்கள். கூடிய விரைவில் அங்கும் மக்கள் தொகை பெருகி இஸ்லாமியர்களால் நிரம்பும் என்றான். இத்தகைய “இஸ்லாமிய உலக” கனவு அன்று மட்டும் அல்ல மேலும் பல சந்தர்ப்பங்களில் வேறு வேறு நண்பர்களால் அவ்வப்போது வெளிப்படையாக பேசப்பட்டு வருவதுதான்.

இப்போது மத்திய கிழக்கில் நடந்துவரும் சில அரசியல் நகர்த்தல்கள் அதை நோக்கி இருப்பதை யாரும் அவதானிக்க முடியும்.

முன்பு உங்களுடைய தளத்தில் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் “உலகளாவிய ஆளும் கனவு” பற்றி கட்டுரை வந்தபோது திரு அபிலாஷ் அதனை மறுத்து கட்டுரை எழுதினார். அன்றே அந்த கட்டுரைக்கு இணையத்தில் இதனை குறித்து கருத்தைப் பதிவிட்டிருந்தேன்.

…..

இந்தியாவில் இன்று இருக்கும் திரு மார்க்ஸ் அவர்களால் நிறுவப்பட்ட இடதுசாரி மதங்களும், தமிழகத்தில் “இந்து மதத்தை அழித்துவிட்டால் சாதி அழிந்துவிடும்” என்று தீவிர பிரசாரத்தோடு பெரியாரை முன்னிறுத்தி அங்கங்கே முளைத்திருக்கும் அரசியல் கட்சிகளும், பேய்களும் பிசாசுகளும் குடியிருக்கும் கோவில்கள் என்று பிரச்சாரம் செய்துவரும் ஆபிரகாமிய மதங்களும் நன்றாக அரசியல் செய்துவருகின்றன.

இந்த நிலையில் இன்று “ஒரு தெய்வ வழிபாடு” படித்ததிலிருந்து மனதில் ஒரு கேள்வி நிலைகொண்டு சுற்றிச்சுற்றி வருகின்றது.

“”இந்து மதம் – இந்துப் பண்பாடு ஆகிய இரண்டிலிருந்தும் இந்துத்துவ அரசியலை முற்றாகப் பிரித்துக்கொள்வதே இத்தருணத்தில் இந்துவென தன்னை உணரும் ஒவ்வொருவரும் செய்தாகவேண்டியது.””””
“””இந்துமதம் அதன் ஞானிகளால் வழிகாட்டப்படட்டும். அதன் மெய்நூல்களால் ஆளப்படட்டும். இன்றுவரை பிரிந்து பிரிந்து வளர்வதன் வழியாக, அனைத்துத் தேடல்களையும் அனுமதிக்கும் உள்விரிவின் வழியாக, தனித்தன்மைகளை தக்கவைத்துக்கொள்ளும் உறுதியின் வழியாகவே இது வளர்ந்துள்ளது”””

ஒரு இந்துவாக, ஆன்மிக நிலையில் இது உண்மையிலேயே சரியான பதில்தான்.   என்றாலும்…..

…….

ஐரோப்பாவில் பாகன் மதம் என்ற ஒன்று இருந்ததும், பெருமை மிக்க மெசபடோமியா பாரசீக, அபிசீனிய, காந்தார, பண்பாடுகள் இருந்து அழிந்ததும் உங்களின் வழியாகவே (“இந்திய ஞானம்”) தெரிந்து கொண்டேன்.

தற்போது இந்தோனேசிய நண்பர்களுடன் பழகும் பொது (தேவி, சத்யவதி, இந்திரா, சக்தி போன்ற பெயர்களில் இன்றும் நண்பர்கள் இருக்கிறார்கள்). என்றோ அவர்களின் உள்ளே அழிந்துகொண்டிருக்கும் பழைய பண்பாடுகளின் கூறுகளை கண்டுகொண்டே இருக்கிறேன்.

தென்கொரியா பிலிபைன்ஸ் போன்ற நாடுகளையும் இதன் பொருட்டு கணக்கில் கொள்ளலாம். ஏன் இந்தியாவிலேயே கடந்த ஐநூறு வருடங்களாக இந்து மதத்திற்கும் இந்து பண்பாட்டிற்கும் உள்ள நெருக்கடியை இன்றும் முழுதாக கடக்க முடியாத நிலையிலேயே இந்து மதம் உள்ளது என்று நினைக்கிறேன்.

மிகையில்லாமல் உண்மையிலேயே சொல்கிறேன் உங்கள் தளம் இல்லை என்றால் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த நானும் இந்து மதத்தை கண்டிப்பாக புரிந்துகொண்டிருக்க மாட்டேன் (“நான் இந்துவா” என் மனதை திறந்த முதல் கட்டுரை).

இந்த நிலையில்

அரசியலில் சக்தியாக இல்லாத நிலையில் இந்துமதத்தை இந்தியாவால் காப்பாற்ற முடியுமா?.

நீண்ட கால நோக்கில் இந்துமதத்தை ஒன்றும் செய்யமுடியாது என்பதை எந்த நம்பிக்கையின் வழியாக நம்பிக்கை கொள்வது.

அவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியாது என்பதை வடகிழக்கு மாநிலங்களும் காஷ்மீரும் கண்முன்பே நிற்பதை காண்கிறோமே.

ஒரு சாதாரண இந்துவாக

  • இந்துமதத்தின் பண்மை தன்மை இவர்களால் வளராது என்று உணர்ந்தாலும் மேலே சொன்ன “அழிவுகளால்” ஆபத்தில்லை என்ற முறையில்,
  • இந்துமதத்தின் பன்மைத்தன்மையை ஆபிரகாமிய, கம்முனிச மதங்களிலிருந்து கண்டெடுப்பதை விட இவர்களின் “ஒற்றை இந்து” மதத்திலிருந்து கண்டெடுப்பதுஎளிது என்ற முறையிலும்.
  • லட்சுமி மணிவண்ணன் “பெரியாரியர்களின் தேவை” என்ற கட்டுரையில்சொன்னதுபோல் “எந்த ஒரு குழுவும் சமூகத்தில் இல்லாத தேவைகளின் மீது நின்று கொண்டிருக்கவே இயலாது” என்ற முறையிலும் இந்த இந்துத்துவத்தின் அரசியலை ஏற்றுக் கொள்ளலாமா.

அன்புடன்,

பழனிவேல் ராஜா.

bakti

அன்புள்ள பழனிவேல்,

மேற்கண்ட வினா எனக்கு மிக அணுக்கமானது. ஏனென்றால் இருபதாண்டுகளுக்கு முன்பு என்றால் நானே இந்நிலையில் நின்று இதைக் கேட்டிருப்பேன். மேலும் நீண்டகாலம் அந்தக் குழப்பமும் ஐயமும் என்னுடன் இருந்துகொண்டேதான் இருந்தது. இன்றிருக்கும் புரிதல் படிப்படியாக வந்தடைந்தது.

உங்கள் கேள்வியின் முதல்புரிதல் மதம் என்பது அரசியல் வழியாக, அதிகாரம் வழியாக நிலைநிறுத்தப்படுவது என்பது. இந்த நம்பிக்கையை இங்கே அரசியல் வழியாக அதிகாரத்தை விழையும் சக்திகள் உச்சகட்ட பிரச்சாரம் வழியாக ஐம்பதாண்டுகளாக நிலைநிறுத்தியிருக்கிறார்கள். அந்த மாபெரும் அமைப்புடன் விவாதிப்பது பெரும்பணி. ஆனால் நீங்களே உங்களை, சூழ்ந்திருப்பவர்களை கூர்ந்து பார்த்தீர்கள் என்றால் சரியான பதிலை எளிதில் சென்றடைய முடியும்.

நான் ஓர் அனுபவத்தைச் சொல்கிறேன். அக்டோபர் 2016ல் நான் கேதார்நாத்துக்கு நண்பர்களுடன் சென்றேன். 13 கிமீ மலையேறி மேலே சென்றோம். அங்கே ஆலயத்தில் பூசை நிகழ்ந்தது. தாந்த்ரீகமுறைப்படி நிகழ்ந்த பூசை ஒரு கண்நிறைக்கும் உளம்நிறைக்கும் அனுபவம். காலாதீதமான ஒன்றை கண்முன் காண்பது. ஆனால் கூடிநின்றவர்களில் எங்கள் சிலரைத்தவிர அனைவருமே கருவறையையும் பூசையையும் செல்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தீப்பந்தங்களுடன் பூசகர்கள் வெளியே ஓடி ஒரு சடங்கைச் செய்தனர். செல்பேசிகளுடன் கூட்டம் பின்னால் ஓடியது.

இதேபோன்ற காட்சிகளை தமிழகத்தின் ஆலயங்களில் ஏராளமாகக் காணலாம். பூசைமுறைமை மீறல்கள். ஆலயச்சூறையாடல்கள். அவையனைத்தையும் செய்பவர்கள் இந்துக்கள் எனப்படும் இந்தப்பெருந்திரள்தான். அவர்களுக்கு தங்கள் மதம் பற்றி தத்துவார்த்தமாக பத்துவரி சொல்லத் தெரியாது. தங்கள் மதத்தின் வழக்கங்களில் அறிமுகமே இல்லை. தன்னலவெறிக்கு அப்பால் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை

இந்துமதம் எவரில் நிலைகொள்கிறது? இவர்களிலா? பிறப்பால் பழக்கத்தால் இந்துவாக இருக்கும் இவர்கள், ஏதாவது சிக்கல் என்றால் சோதிடனிடம் கேட்டுக்கொண்டு கோயிலுக்குச் செல்லும் இவர்களால்தான் இந்துமதம் நிலைகொள்கிறதா? இந்தக் கும்பலை அரசியலால் அதிகாரத்தால் ‘தக்கவைத்து’கொண்டால்தான் இந்துமதம் வாழுமா?

இந்து மதம் என்பதை ஒருவகையான ஆதிக்கம், அதிகாரம் என்று மட்டுமே புரிந்துகொள்பவர்கள்தான் இதைச் சொல்கிறார்கள். மதம் என்னும் வடிவில் தங்களிடமிருக்கும் ஆதிக்கமும் அதிகாரமும் கைவிட்டுப்போகக்கூடும் என்னும் பதற்றமே அவர்களை ஆள்கிறது. ஆதிக்கத்தாலோ அதிகாரத்தாலோ மதத்தை நிலைநிறுத்த முடியாது. அப்படி நிலைநிறுத்தப்படும் மதம் ஆதிக்கமும் அதிகாரமும்தானே ஒழிய மெய்நாடும்வழி அல்ல.

மதம் என்பது மெய்மைக்கான வழிகாட்டல், தொன்மையான பண்பாட்டுக்கூறுகளின் திரட்டு, வாழ்க்கைமுறைகளின் தொகுப்பு என்னும் மூன்று அடுக்குகளால் ஆனது. அம்மூன்றிலும் பெருவாரியான மக்கள் நம்பிக்கை கொண்டு அன்றாடவாழ்க்கையென ஆக்கிக்கொண்டிருக்கையிலேயே அது வாழ்கிறது. அந்த மூன்று தளங்களும் வலுவிழக்கும்போது அந்தமதம் அழியும். அவ்வாறு வலுவிழக்கும் மதத்தை அதிகாரம் காப்பாற்றாது. அத்தகைய அதிகாரத்தால் அந்தமதம் மேலும் கீழ்மைகொண்டு அழியவே வாய்ப்பு.

‘மதத்தைக் காப்பாற்றுதல்’ என்ற உளநிலையே பிழையானது. அது மதத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை வெறுமொரு அடையாளமாகப் பார்க்கும் கோணம். மதம் ‘காப்பாற்றி வைக்கவேண்டிய ஒன்று’ அல்ல. மெய்நாட்டத்தின், அன்றாடத்தின் ஒவ்வொரு நிலையிலும் கடைப்பிடிக்கப்படவேண்டியது. மதத்திற்காக எவரும் போராடவேண்டியதில்லை. மதத்தில் இருந்து தன் மெய்த்தேடலைத் தொடங்கினால்போதும். அதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டால்போதும்.மதத்தின் நோக்கமே அதுதான்.

இங்கேதான் மதம்சார்அரசியல் மிகப்பெரிய திரிபுநிலையைச் செய்கிறது. இதை மேலும் மேலும் தெளிவாக இப்போது பார்க்கிறேன். மதம்சார் அரசியல் அனைவரிடமும் சொல்கிறது: மதநம்பிக்கை முக்கியமல்ல, மதத்தின் மெய்யறிதல் முக்கியமல்ல, மதம்சார் ஒழுகுதலும் முக்கியமல்ல, மத அடையாளம் மட்டுமே முக்கியம் என்று. அந்த அடையாளத்தைச் சூடிக்கொண்டு பெருந்திரளாவது மட்டுமே தேவை, அதனூடாக அதிகாரத்தை அடைவது மட்டுமே இலக்கு என்கிறது.

ஏனென்றால் இந்த மதம்சார் அரசியலின் ஆழத்திலிருப்பதும் நவீன ஐரோப்பா உருவாக்கிய தாராளவாதநோக்குதான். அதன் அடிப்படை என்பது அறிவியல்சார்ந்த ஒரு தர்க்கநோக்கு. புறவயத்தன்மைகொண்ட ஒரு பகுப்பு- தொகுப்பு முறை அது. தாராளவாதநோக்கு மதத்தை ஒரு படி மேலே நின்று குனிந்து பார்க்கிறது. ஒட்டுமொத்த மரபையே அப்படித்தான் பார்க்கிறது. மரபைப்போற்றுவதுபோல அது பேசுவதெல்லாம் அதன் தர்க்கத்திற்கு உட்பட்டு மரபிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்ள முடியுமா என்பதற்காகத்தான். அப்படி எடுத்துக்கொள்வனவற்றையே அது கொண்டாடும். அவற்றைக்கொண்டு தன் அரசியலைக் கட்டமைக்க மட்டுமே அது முயலும்.

இந்து அரசியல் என்றபேரில் இங்கே நிகழ்வது ஒரு மாபெரும் சமநிலையாக்கம் [Standardization] அது மதத்தின் பல்லாயிரம் நுண்ணிய உள்விரிவுகளை, உள்விவாதங்களை அழிக்கும். ஒன்றிலிருந்து ஒன்றெனக் கிளைக்கும் அதன் படைப்பூக்கத்தை அழிக்கும். ஓர் இந்து இந்துமதம் அளிக்கும் ஒரு கூறின்மேல் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு மேலும் மேலும் மூழ்கிச்சென்றே தன் மெய்மையை அடையமுடியும். அரசியலுக்காக அந்த ஆழத்தை அவன் இழப்பான். அந்த ஆழம் மிகமிக அந்தரங்கமானது. மைதானத்திற்காகப் பூசையறையை தியானஅறையை அவன் கைவிடுகிறான்.

சுருக்கமாகச் சொன்னால் தன் அதிகார அரசியலுக்குத் தேவையான கருவிகளுக்காக மட்டுமே இந்துத்துவம் மரபையும், மதத்தையும் அணுகுகிறது. தங்கள் மத அரசியலுக்கு ஒவ்வாத கருத்தை மதத்தின் பிரதிநிதியாக நின்று எந்த அறிஞன் சொன்னாலும் எந்த ஞானி தங்களுடன் உடன்படவில்லை என்றாலும் இவர்களில் தெருச்சண்டியனான ஒருவன்கூட அவர்களை இழிவுபடுத்தத் தயங்குவதில்லை என்பதைக் காண்கிறோம்.

இந்த அரசியலின் மைய உணர்வென்ன என்று பாருங்கள். அதுவே தெளிவை அளிக்கும். எதிர்மறைத்தன்மை, வசை. வசைபாடப்படுபவர்கள் நிரந்தர எதிரிகளும் அன்றாடம் உருவாகிவரும் ‘துரோகிகளும்’. இதையா இந்துமதம் என்கிறீர்கள்? இத்தனை காழ்ப்புகளையும் கசப்புகளையும் உள்ளேநிறைத்துக்கொண்டு, இத்தனை வசைகளை நாளும் உமிழ்ந்தபடியா ஞானிகளும் யோகிகளும் உருவாக்கியளித்த மதத்தை காக்கப்போகிறார்கள்? உங்களுக்கு நாளும் எவரையாவது கசந்துகொட்டினால்தான் இருப்பு நிறைகிறது என்றால் ஏதேனும் ஓர் அரசியலை எடுத்துக்கொண்டு கம்புசுற்றுங்கள். அதை இந்துமதம் என்று மட்டும் சொல்லவேண்டாம். அதன் உளநெகிழ்வும் அகவிரிவும் முற்றிலும் வேறு.

இந்த மதக்காப்பாளர்களைப் பாருங்கள். ஓர் அறிஞனை, ஞானியை அடையாளம்காணத் திராணியற்றத் தெருக்கும்பல். குச்சிகளுடன் இறங்கி ‘எதிரிகளை’ வேட்டையாடும் குண்டர்கள். தன் மதம்பற்றியேகூட எதையும் அறியாத வெற்றுத்திரள். உங்கள் மதத்தை இவர்கள்தான் காப்பாற்றிக்கொடுக்கவேண்டும் என்றால் நீங்கள் உண்மையில் உங்கள் மதம் என எதைத்தான் நினைத்திருக்கிறீர்கள்? இன்னொரு மதநம்பிக்கையாளனை அன்புடன் பார்க்கமுடியாது உங்களால், அவன் உங்களுக்கு இயற்கை எதிரி என்றால் நீங்கள் என்னவகையான இந்து? அப்படி ஒரு மதமாக இந்துமதத்தை உருவாக்கி இங்கே தக்கவைப்பதில் என்ன நன்மை?

இவர்கள் நுட்பமாக நம் மதத்தை உருமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மதத்தின் சாராம்சமான பகுதிகளை அழித்து வெறும் அரசியலடையாளங்களின் தொகுதியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமலேயே நாம் அதற்கு ஆளாகி நம் மதத்தின் தொன்மையான ஆழங்களை அறியும் திறனை இழந்துவிடுகிறோம். நாம் இழப்பது மிகமிகப் பெரியது. இன்றைய சூழலில் இதைத்தான் இந்து மதத்தின் அறிஞர்கள், ஞானிகள் இந்துக்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.

இந்துமதம் அழிகிறதா? அதை என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் உலகின் பல நாடுகளில் பௌத்தம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துவருகிறது. அதன் மெய்யியல் அமைப்புக்கு அணுக்கமானதும் அதன் நம்பிக்கைமுறையையே தானும் கொண்டதுமான இந்துமதமும் அவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளலாம். ஆனால் பௌத்தம் அழிவதற்குக் காரணம் அயல்படையெடுப்புகள் அல்ல. முழுக்கமுழுக்க பௌத்தத்தின் பிரச்சினைகளால்தான் அது மறைந்துகொண்டிருக்கிறது. மக்கள் பௌத்தத்தில் இருந்து ‘திருடப்படவில்லை’ பௌத்தத்தை அறியாமலேயே உதறிச்சென்றார்கள்.

அங்கே பௌத்தம் தேங்கி ஊழல்நிறைந்த அமைப்புகளாக மாறி மக்களிடமிருந்து விலகியது. வெற்றுச்சடங்குகளும் நம்பிக்கைகளுமாக மாறி தன் மெய்யியலையும் தத்துவத்தையும் இழந்தது. நவீனவாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆற்றலை தன் மக்களுக்கு அளிக்காமலாயிற்று. மனிதசமத்துவம் சார்ந்த தரிசனங்களை அது கைவிட்டு மேலாதிக்கத்தையே பேசிக்கொண்டிருந்தது. சொல்லப்போனால் பௌத்தம் என்பது ஒரு வாழ்க்கைமுறையாக அல்லாமல் வெறும் அடையாளமாக மட்டும் மாறியது. அந்த அடையாளத்திலிருந்தே மக்கள் விலகிச்சென்றனர், பௌத்தம் என்னும் முழுமையான மதத்தில் இருந்து அல்ல. அந்த அடையாளத்தை மேலோட்டமாகத் தக்கவைத்தபடியே நாத்திகர்களும் கிறித்தவர்களுமாக நீடிக்கின்றனர் பலர்.

பௌத்தம் இந்துமதம் போன்ற தொல்மதங்களின் அடிப்படைகள் மீது உலகளாவிய தாராளவாதம் [லிபரலிசம்] தொடுக்கும் சற்றும் அறவுணர்ச்சி அற்ற தாக்குதல் அறிவுலகில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஐரோப்பியத் தாராளவாதத்தின் உள்ளுறையாக இருப்பது கிறித்தவச் சீர்திருத்தவாதிகளின் நோக்கும் இன்னொருபக்கம் உலகியல்வாதமும். அவை இரண்டுமே இந்துமதம், பௌத்தம், சமணம், தாவோ, ஷிண்டோ போன்ற தொன்மையான மெய்யியல்களை, வாழ்வுமுறைகளை அருவருப்புடனேயே அணுகுகின்றன. அந்த அருவருப்பை மிகமிக நாசூக்கான ஆய்வுகளாக’ ‘சீர்திருத்தப்பார்வைகளாக’ அவை நம் மீது கொட்டுகின்றன. அந்த கருத்துக்களே நம்மைச்சூழ்ந்து கல்வித்துறையில், ஊடகங்களில் நிறைந்துகிடக்கின்றன.

நாம் நவீனக்கல்வி பெறுந்தோறும் அதற்கு ஆட்படுகிறோம். மிகப்பெரிய அளவில் நம் மரபிலிருந்தும் மெய்யியலில் இருந்தும் அயன்மைப்படுகிறோம். நம்மை நவீனமானவர்கள் என்றும் மனிதாபிமானிகள் என்றும் அறிவியல்நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் கருதிக்கொள்ளும்பொருட்டு நம் மரபையும் மெய்யியலையும் பழிக்கிறோம். அதனூடாக நம் மதம் மெலிந்து வெறும்சடங்காக, வெறும் அடையாளமாக ஆகிக்கொண்டிருக்கிறது.

இங்கே இருவகை இந்துக்களே இன்று உள்ளனர். ஒன்று, நவீனத் தாராளவாதத்தின் செல்வாக்குக் உட்பட்டு ஏதென்றும் என்னவென்றும் அறியாமலேயே இந்துமதத்தை ஒட்டுமொத்தமாகப் பழித்துக்கொண்டு இந்துக்களாக குடும்பச்சூழலில் வாழ்பவர்கள். இன்னொருசாரார், வாழ்க்கையின் இக்கட்டுகளினூடாக இந்துமதம் சார்ந்த சில நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுபவர்கள். இருசாராருக்கும் இந்துமதம் பற்றி ஏதும் தெரியாது. இருசாராரும் வெறும் அடையாளமாகவே இந்துமதத்தைக்கொண்டிருக்கின்றனர்

வீழ்ச்சி இருப்பது அங்கேதான். அந்த வீழ்ச்சி சரிசெய்யப்படாவிட்டால்தான் இந்துமதம் அழியும். அதைச்செய்யவேண்டியது அரசியல்தளத்தில் அல்ல. இந்துத்துவ அரசியல்வாதிகள் தாராளவாதிகள் சொல்வதையே வேறுகோணத்தில் சொல்கிறார்கள். மதத்தை வெறும் அரசியலடையாளமாகச் சூடிக்கொண்டு எங்கள் ஊர்வலங்களில் வந்து கொடிபிடி என்று. எங்கள் அதிகார அரசியலின் தொண்டராக நிலைகொள் என்று.

இங்கேநாம் நம் மதத்தைப் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள்ள் அனைவருமே அதை ஐரோப்பியமயமாக்குவதைப்பற்றி, அதை ஆபிரகாமிய மதங்களைப்போல ஒற்றைமைய அமைப்பாக, ஒற்றைத்திரளாக ஆக்குவதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். அவர்களிடம் அவர்களின் செய்கைகளை கேள்விகேளுங்கள், ஏன் இஸ்லாமில் இல்லையா, கிறிஸ்தவம் செய்யாததா என்று வாதிடத் தொடங்குவார்கள். அதாவது,எது இந்து நம்பிக்கையோ, எது அதன் மேன்மையான உணர்ச்சிகளோ அதைக் கைவிட்டுவிட்டால்தான் அதைக் காப்பாற்றமுடியும் என்கிறார்கள்.

இந்துமெய்யியல்மேல், தத்துவம் மீது, வாழ்க்கைமுறைமேல் வைக்கப்படும் தாராளவாதத்தின் தாக்குதலை எதிர்கொள்வதே இன்றைய அறைகூவல். அது அம்மெய்யியலை கற்றுக்கொள்வதன் வழியாக, அதன் பண்பாட்டை வாழ்க்கைமுறையாகக் கொள்வதன்மூலம், அதன் நம்பிக்கைகளைத் தலைக்கொள்வதனூடாக அடையப்படவேண்டியது. அதற்கு ஞானிகளும் அறிஞர்களுமே வழிகாட்ட முடியும். நூல்களே உதவியாக அமையமுடியும். நீங்கள் மெய்யான இந்துவாக, உங்கள் வாழ்க்கைநிறைவுக்கும் மீட்புக்கும் இந்துமதத்தை கடைப்பிடியுங்கள். அங்கே தொடங்குங்கள். இந்துமதத்தை காப்பதல்ல இந்துவாக வாழ்வதே உங்கள் அறைகூவலாக அமையட்டும்.

இறுதியாக ஒன்று, இந்து மதத்திற்கு ‘வெளியே’ இருந்து ஆபத்துக்கள் வருகின்றன என்றே வைத்துக்கொள்வோம். மதமாற்றம், பிறமதத்தோர் பெருக்கம் போன்ற படையெடுப்புகள் நிகழ்கிறதென்றே கொள்வோம். அதற்கு இந்த அரசியல் ஒரு சிறுதுரும்பளவுகூட பாதுகாப்பை அளிக்காது, அளிக்கமுடியாது. அப்பிரச்சினைகளை மேலும் வளர்த்து உணர்வுகளைப் பெருக்கி அதனால் அச்சமும் குழப்பமும் அடைபவர்களை தங்கள் வாக்குவங்கியாக மாற்ற மட்டுமே அதனால் முடியும். நவீன அரசியலின் வழிமுறையே அதுதான். ஐயமிருந்தால் வரலாற்றை கூர்ந்து நோக்குக

ஏனென்றால் எந்த அரசியலின் நோக்கமும் அரசைக் கைப்பற்றுவதுதான். அரசு என்பது நிதித்தொகை மட்டுமே. அதைக் கையாள்வதற்கான அதிகாரத்தையே மதத்தின்பேரால் நம்மை ஒருங்கிணைக்க முயல்பவர்கள் நம்மிடம் கோருகிறார்கள். நாம் கட்டும் வரிப்பணத்தை வாங்குபவர்களிடம் நமக்கு நல்ல வாழ்க்கையை உருவாக்கித்தரும்படிக் கோருவோம். நம் மதத்தை நாம் பார்த்துக்கொள்வோம்.

ஜெ

நான் இந்துவா?

தீட்டு,சபரிமலை, மதம்

சவரக்கத்திமுனையில் நடப்பது

கலாச்சார இந்து

இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?

எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்

இந்துத்துவ முத்திரை

இந்துமதமும் தரப்படுத்தலும்

இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்

இந்துத்துவன்

இந்துத்துவம் ,காந்தி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22

$
0
0

ele1யுதிஷ்டிரர் மீண்டுவிட்டதை அறிவித்த முரசொலி கர்ணனை சீற்றம்கொள்ள வைத்தது. “அறிவிலிகள்! வீணர்கள்!” என்று கூவியபடி வில்லை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்தான். பற்களை நெரித்தபடி அவன் தன் அம்புகளை மேலும் விசையுடன் தொடுத்தான். அவன் அம்புகள் இலக்கு பிழைத்ததே இல்லை என்பதை பாண்டவர்கள் கண்டனர். அவை வளைந்தும் நெளிந்தும் ஏறியும் இறங்கியும் இலக்குகளை தேடிச்சென்று தைத்தன. “அவை அம்புகள் அல்ல! மாற்றுருக்கொண்ட நாகங்கள்!” என்று ஒரு வீரன் கூவினான். “நாகங்கள் மட்டுமே இவ்வாறு வானில் நெளிந்து பறக்க இயலும்!” எங்கும் “நாகங்கள்! பறக்கும் பாம்புகள்!” என்னும் கூச்சல்கள் எழுந்தன.

சாத்யகி விலகிச்சென்று பூரிசிரவஸை எதிர்கொள்ள திருஷ்டத்யும்னன் படைநடத்தும் ஆணைகளை அறிவிக்கும்பொருட்டு பின்னடைய அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் இருபுறமும் கர்ணனை எதிர்த்தனர். அதிரதனின் இளையோனாகிய தீர்க்கரதனின் மைந்தர்கள் துருமனும் வித்பலனும் விருத்ரதனும் சத்ருந்தபனும் அவனுக்குப் பின்னால் தேர்களில் வந்தனர். கர்ணனின் மைந்தர்களான விருஷசேனனும் விருஷகேதுவும் திவிபதனும் சத்ருஞ்சயனும் சுதமனும் சத்யசேனனும் சித்ரசேனனும் அவர்களுடன் இருந்தனர். மீன்கூட்டம்போல அவர்களின் வெள்ளிமின்னும் தேர்களின் அரைவளையம் பாண்டவ மைந்தர்களைச் சூழ்ந்தது.

அபிமன்யூ தன் தேர்ப்பாகனை காலால் உதைத்து “செல்க! செல்க!” என்று கூவினான். கர்ணனின் முன்னால் வந்து நின்று அவன் செலுத்திய அம்புகளை அறைந்து தெறிக்கச்செய்தான். “இதோ, நாகங்களை வெல்லும் கருடன்!” என்று கூவியபடி அபிமன்யூ ஏவிய அம்பு வந்து கர்ணனின் தேரை அறைய அவன் சற்று நிலையழிந்தான். கர்ணன் அம்புதேர்வதற்குள் அவன் பாகனின் தலையை அறுத்துவீசியது அபிமன்யூவின் வாளி. “தொடர்க! தொடர்க!” என கர்ணனின் படைக்குப் பின்னால் போர்முரசு முழங்கியது. “பாண்டவ மைந்தரை குறைத்து எண்ணாதீர்கள். அவர்களைச் சூழ்ந்து வெல்க! கர்ணனின் பின்பக்கத்தை காத்துகொள்க!” துருமன் பாய்ந்து கர்ணனின் தேரிலேறிக்கொண்டு அதை நிலைபெறச்செய்து முன்னால் செலுத்தினான்.

கர்ணன் சீற்றத்துடன் விருஷகேதுவிடம் “நீங்கள் சுருதகீர்த்தியை வளைத்துக் கொள்ளுங்கள். நான் இக்களத்திலேயே இந்த நாணிலா மைந்தனை கொன்றுவீழ்த்துகிறேன்” என ஆணையிட்டபடி தேர் விசைகொள்ள முன்னால் பாயந்தான். அபிமன்யூவின் தேர்ப்பாகன் அம்பு தைத்த நெஞ்சைப்பற்றியபடி இறந்து விழுந்தான். அபிமன்யூவின் தேரின் குதிரைகள் நான்கு தலையறுந்து விழுந்தன. அவன் கொடியும் தேர்மகுடமும் உடைந்தன. அபிமன்யூ பின்புறமாகப் பாய்ந்து புரவியிலேறி பாண்டவப் படைகளுக்குள் நுழைந்தான். விருஷசேனனுடன் நேர்நின்று பொருதிய சுருதசேனன் அவன் எய்த அம்பை தோளில் ஏற்று புண்பட்டு தேர்த்தட்டில் விழ அவனை பாண்டவர்கள் பின்னெடுத்துச் சென்றனர். அவர்களை விருஷகேதுவும் சத்ருஞ்சயனும் துரத்திச்சென்றனர்.

கௌரவப் படை கர்ணனின் தலைமையில் மீண்டும் கூர்கொண்டு பாண்டவப் படையை அறைந்தபடி முன்னெழுந்து சென்றது. கர்ணன் கணந்தோறும் சீற்றமும் விசையும் மிகுந்தவன் ஆனான். அவனைத் தடுக்க பாண்டவப் படைகள் அனைத்தும் அடுக்கடுக்காக இணைந்து அரணமைத்தும் முடியவில்லை. யுதிஷ்டிரரை இழந்த சினம் மேலோங்க தன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து கூச்சலிட்டபடியும் வசைபொழிந்தபடியும் பாண்டவப் படையைத் தாக்கிய துரோணரை துருபதனும் திருஷ்டத்யும்னனும் வந்து எதிர்கொள்ள சிகண்டி கிருபரை தடுத்தார்.

கர்ணன் தேர்த்தூணை ஓங்கி ஓங்கி அறைந்து “செல்க! முன்செல்க!” என்று ஆணையிட்டான். காட்டெரி மரங்களைப் பொசுக்கி ஊடுருவுவதுபோல அவன் தேர் பாண்டவப் படைகளுக்குள் சென்றது. இருபுறமும் பாண்டவ வில்லவர்கள் அவன் அம்புகள் பட்டு தேர்களிலிருந்து துடித்து கீழே விழுந்தனர். கர்ணன் இலக்கு நோக்குவதையே பாண்டவப் படையினர் காணவில்லை. அம்புகள் தாங்களாகவே ஆவநாழியிலிருந்து எழுந்து அவன் கையிலமர்ந்து நாணிலிழுபட்டு எழுந்து சீற்றொலி எழுப்பி பாய்ந்து வருவதாகவே அவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் வளைந்தாலும் நெளிந்தொழிந்தாலும் ஒளிந்தாலும் அவற்றிடமிருந்து தப்ப இயலவில்லை.

கர்ணனின் ஓர் அம்பு அவர்களின் கவச இடுக்கை புகுந்து தொட்டு நிலையழியச் செய்ய மறுகணம் பிறிதொரு பேரம்பு வந்து அவர்களின் தலைகளை கொய்து வீழ்த்தியது. அம்புகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள முடியுமென்று, காற்றில் தங்கள் திட்டங்களை வகுத்துக்கொண்டு தாங்களே ஒரு சூழ்கை அமைத்து வந்து தாக்கக்கூடுமென்று அவர்கள் முன்பு அறிந்திருக்கவில்லை. எழும் ஒரு அம்பை தடுத்து அடிப்பதற்கு அவர்கள் அம்பெடுப்பதற்குள் பிறிதொரு அம்பு வந்து அந்த அம்பை எடுத்த கையை தாக்குமென்றும் விண்ணில் சீறி எழுந்த அம்பு வளைந்து கீழிறங்கி விழுந்து கிடப்பவனை தேடி வந்து தைக்குமென்றும் அக்கணத்தில்தான் முதலில் கண்டனர்.

“இது போரல்ல! இது போரே அல்ல! இது நாகர்களின் மாய வித்தை!” என்று பாஞ்சாலப் படைவீரர்கள் கூச்சலிட்டனர் “எழுகின்றன கொடிய நச்சுநெளிவுகள்! நாபறக்கும் பாதாளக் கணைகள்! நாம் மானுடரிடம்தான் போரிட முடியும்! மண்ணுக்கடியிலிருந்து பெருகியெழும் தெய்வங்களுடனல்ல” என்று வில்லவன் ஒருவன் தேரைத் திருப்பியபடி கூவினான். அவன் சொற்கள் காற்றில் அலைகொண்டு நிற்கவே அவன் தலையை வெட்டி கொண்டு சென்றது பன்னகவாளி. அவனை நோக்கி அஞ்சி கூச்சலிட்டவனின் குரலையே இரண்டாக வெட்டிச்சென்றது பிறிதொரு அம்பு.

யுதிஷ்டிரரை பாண்டவப் படைக்குள் புகுத்திவிட்டு படைமுகப்பிற்கு வரும் வழியிலேயே அர்ஜுனன் கர்ணன் பாண்டவப் படைகளை அழித்து முன்னெழுந்துவிட்டதை முரசொலிகளிலிருந்து உணர்ந்தான். தேரில் விழுந்துவிட்ட சுருதகீர்த்தியை இழுத்து கொண்டுசென்று பின்னால் நகர்ந்த மருத்துவ ஏவலரையும் தொடர்ந்து அபிமன்யூ தரையிலமர்ந்து தன் புண்களுக்கு கட்டுபோட்டுக்கொண்டிருப்பதையும் கண்டான். சகதேவனும் நகுலனும் வில்லும் அம்பும் இழந்து கர்ணன் முன்னிலிருந்து தேரிலிருந்து பாய்ந்து ஓடி ஒளிந்து தப்பினார்கள் என அறிந்தான். அவனை எதிர்கொண்ட வீரன் ஒருவன் “அரசே, இன்னும் ஒரு நாழிகை இவ்வண்ணம் அங்கர் போரிட்டால் பாண்டவப் படைகள் இரண்டாகப் பிளந்துவிடும். நடுவே கௌரவர் ஊடுருவினால் நமக்கு முற்றழிவு” என்றான். மேலும் ஒருவன் ஓடி வந்து “பெருவில்லவர்கள் நூற்றுக்கணக்கில் விழுந்துகொண்டிருக்கிறார்கள். நிஷாத இளவரசர்களான உத்பாதரும் உஜ்வலரும் பார்க்கவரும் விழுந்துவிட்டனர்!” என்றான்.

அர்ஜுனன் “செல்க! படைமுனைக்கு விரைக!” என்று இளைய யாதவரிடம் சொன்னான். இளைய யாதவர் தன் தேரை மெல்ல ஓட்டிச்சென்றார். “செல்க! விரைக!” என்று அர்ஜுனன் கூவினான். தேர் சீராகச் செல்வதை உணர்ந்து “விரைவு கொள்க!” என்று கூச்சலிட்டான். “அங்கே அவன் யுதிஷ்டிரர் தப்பிவிட்ட சீற்றத்தில் இருக்கிறான். அச்சீற்றம் சிலரை கொன்றால் சற்றே தணியும். அதன் பின்னர் அவனை நாம் எதிர்கொள்வோம்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் காண்டீபத்தை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்து “விளையாடுகிறீர்களா? நான் கோழை என எண்ணுகிறீர்களா?” என்றான். “அல்ல, ஆனால் நீ அவனுக்கு நிகர் அல்ல. அவன் வில்லெடுத்து நின்றால் நானன்றி எவரும் எதிர்கொள்ள இயலாது” என்றார் இளைய யாதவர்.

“வென்றுகாட்டுகிறேன். இக்களத்திலேயே அவனை கொல்கிறேன்!” என்று அர்ஜுனன் தொண்டை கமற, நெஞ்சில் அறைந்து வீறிட்டான். “என் எல்லை எதுவென காண்கிறேன். அறிக தெய்வங்கள், இக்களத்தில் அவனை கொன்றுவீழ்த்துவேன்!” இளைய யாதவர் புன்னகையுடன் தேரை செலுத்தினார். தொலைவில் யானைச்சங்கிலி கொடி பறந்த பூசல்சுழி அலறல்களாலும் சங்கொலிகளாலும் கொம்பொலிகளாலும் நிறைந்திருந்தது. எரியெழுந்த இடத்தில் கலைந்து விண்ணில் பூசலிடும் பறவைகள்போல் அங்கு வானில் அம்புகள் தெரிந்தன. மையத்திலிருந்து நாற்புறமும் கிளம்பும் அலையென கர்ணனால் தாக்கப்பட்டு பின்னடையும் படைகளின் கொப்பளிப்பு நெடுந்தொலைவிற்கு வளையங்களாக பரவியது. அலைகளில் எற்றுபடும் நெற்றென பார்த்தனின் தேர் அந்த வளையங்களில் ஏறி அமைந்தது.

பாண்டவப் படையின் அலைமோதலைப் பிளந்து ஊடுருவி அப்பால் சென்ற அர்ஜுனனின் தேர் கர்ணனின் அம்புகளின் தொடுஎல்லையில் உடைந்த தேர்களும் இறந்த உடல்களும் குவிந்து உருவான வேலி ஒன்றைக் கடந்து அவன்முன் சென்று நின்றது. இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொண்ட கணம் இரு தரப்பிலிருந்த படைவீரர்களும் சொல்லில்லா வியப்பொலி ஒன்றை எழுப்பினர். பின்னர் கௌரவப் படையினர் “நாகபாசர் வெல்க! வெல்க அங்கர்! வெல்க கதிர்மைந்தர்! வெல்க கர்ணன்!” என்று வாழ்த்தொலி எழுப்ப பாண்டவர் தரப்பினர் “எழுக காண்டீபம்! எழுக இளைய பாண்டவர்! வெல்க விண்ணவன் மைந்தன்! எழுக மின்கொடி!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். இரு பெருவில்லவர்களும் ஒரே கணத்தில் அம்புகளால் முட்டிக்கொண்டனர். வானில் அம்புகள் பூசலிட்டு சிதறி விழுந்தன.

போர் உச்சத்தில் தொடங்கி மேலும் மேலுமென உச்சத்திற்கு சென்றுகொண்டிருந்தது. சில கணங்களில் சூழ்ந்திருந்தோர் அனைவரும் விற்களைத் தாழ்த்தி அந்தப் போரை நோக்கலாயினர். அர்ஜுனனின் தேரை அறைந்து நிலையழிய வைத்தன கர்ணனின் அம்புகள். குரங்குக்கொடி உடைந்து தெறித்தது. காண்டீபத்துடன் தேர்த்தட்டில் விழுந்தும் ஒளிந்தும் அர்ஜுனன் போரிட்டான். அவனுடைய கவசங்களும் தலையணியும் உடைந்து தெறித்தன. ஆவக்காவலன் தேரிலிருந்து அலறியபடி கீழே விழ திகைத்து நின்ற அர்ஜுனனை நோக்கி இளைய யாதவர் “பின்னடைக!” என்றார். “முன்செல்க! முன்செல்க!” என்று அர்ஜுனன் கூச்சலிட்டான். தேர்த்தட்டில் காண்டீபத்தால் அறைந்து “முன்னெழுக! முன்னெழுக!” என்றான்.

கர்ணன் “வருக! இதுவே நாமிருவர் போரிடும் இறுதித் தருணம் என்றாகுக!” என நகைத்துக்கொண்டே அணுகிவந்தான். அவன் பற்களின் வெண்மையை அருகிலென அர்ஜுனன் கண்டான். நாகங்களின் சீறல்சூழ்ந்திருந்த காற்றில் வெள்ளிமின்னல்கள் என அம்புகள் பறந்தன. அம்பை எடுத்த கணம் அர்ஜுனன் துரோணரின் காலடிகளை எண்ணினான். அந்த அம்பை அறைந்து சிதறடித்து அவன் தொடைக்கவசத்தை உடைத்தது கர்ணன் அம்பு. அடுத்த அம்பை எடுத்தபோது அவன் இந்திரனை எண்ணினான். அந்த அம்பு துண்டுகளாக உடைந்து அவன் தேரிலேயே விழுந்தது. சீறி அணுகிய அம்பிலிருந்து தப்ப அவன் விழுந்து எழுந்தபோது பிறிதொரு அம்புவந்து அவன் கால்குறடை உடைத்தெறிந்தது.

அடுத்த அம்பை எடுத்தபோது விழிநீருடன் அவையில் நின்றிருந்த திரௌபதியை எண்ணினான். அது அன்றில்சிறகொலி எழுப்பிச் சென்று கர்ணனின் தோளிலையை சிதறடித்தது. சீற்றத்துடன் கர்ணன் அம்பெடுத்து முன்னெழுந்த கணம் அர்ஜுனனுக்குப் பின்னால் மறைந்தவனாக அபிமன்யூ அம்புதொடுத்து கர்ணனின் பாகனாக அமர்ந்திருந்த உடன்குருதியினனான துருமனின் தலையை கொய்தெறிந்தான். அர்ஜுனன் “அறிவிலி! ஒளிந்திருந்து போரிடுகிறாயா?” என அபிமன்யூவை நோக்கி சீறினான். “அவனை கொல்வேன்! அவனை கொல்வேன்!” என வெறியுடன் கூச்சலிட்டபடி அபிமன்யூ அம்புகளால் கர்ணனின் தேரிலேற முயன்ற வித்பலனை கொன்றான்.

கர்ணன் “கீழ்மகனே, முன்னால் வந்து நின்று போரிடு!” என்றான். “கொல்வேன்! என்னை எவரும் வெல்ல விடமாட்டேன்! கொல்வேன்!” என்று அபிமன்யூ பேயெழுந்தவன்போல கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான். அபிமன்யூவைத் தேடிவந்த கர்ணனின் அம்பை அர்ஜுனன் அறைந்து தெறிக்கச்செய்தான். அடுத்த அம்பை ஒழிய இன்னொரு தேருக்குப் பாய்ந்தான் அபிமன்யூ. அங்கே தேருக்குப் பின் ஒளிந்து நின்று கர்ணனின் இளையோன் விருத்ரதனை கொன்றான். சத்ருந்தபன் கர்ணனின் தேர்ப்பாகனாக ஏறிக்கொள்ள அவனையும் அபிமன்யூவின் வாளி வீழ்த்தியது. கர்ணனின் மைந்தர்களான விருஷசேனனும் விருஷகேதுவும் இருபக்கமும் அம்புகளால் அரணமைத்து அபிமன்யூவை தாக்கி பின்னடையச் செய்ய திவிபதன் தேர்ப்பாகனாக ஏறிக்கொண்டான்.

சத்ருஞ்சயனும் சுதமனும் சத்யசேனனும் சித்ரசேனனும் சேர்ந்து அபிமன்யூவை எதிர்த்தார்கள். அபிமன்யூவின் உதவிக்கு வந்த சகதேவனை கர்ணனின் அம்பு தோளில் அறைந்து தேரிலிருந்து விழச்செய்தது. அவனை நோக்கிச் சென்ற நகுலனை பிறிதொரு அம்பு அறைந்து வீழ்த்தியது. பாண்டவர்களின் அலறல்களுக்கும் கூச்சல்களுக்கும் நடுவே அபிமன்யூவை அம்புகளால் அறைந்து அறைந்து பின்னடையச் செய்தனர் கர்ணனின் மைந்தர். விருஷசேனனின் அம்புபட்டு அபிமன்யூ தேரில் விழுந்தான். பாகன் அவனை பின்னெடுத்துச் சென்றான். அவனைத் தொடரமுயன்ற கர்ணனின் மைந்தர்களை அர்ஜுனன் அம்புகளால் தடுத்தான். சுதமன் அர்ஜுனனின் அம்பால் தேர்த்தட்டில் விழுந்தான். சத்யசேனனை அறைந்து அப்பால் விழச்செய்தது அர்ஜுனனின் கருடபாசம்.

பெருஞ்சினத்தால் எழுந்த சிரிப்புடன் கர்ணன் அர்ஜுனனை நோக்கி வந்தான். அவன் அம்புகளால் அர்ஜுனனின் தேர் உடைந்து சிதறியது. புரவிகளில் ஒன்று கழுத்தறுபட்டு முகம்தாழ்த்திச் சரிய தேர் நிலையழிந்தது. இளைய யாதவர் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து தேரைத் திருப்பி உள்ளே அழைத்துச்சென்றார். “முன்னெடுத்துச் செல்க! முன்னெடுத்துச் செல்க!” என்று அர்ஜுனன் கூவினான். அதை இளைய யாதவர் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. “யாதவரே, பின்திரும்ப வேண்டாம். இக்களத்தில் நான் பின்திரும்பினால் இனி எனக்கு புகழென்பதில்லை. நம் குடிக்கு வெற்றியென்பதில்லை!” என்று அர்ஜுனன் கூவினான். “அவன் முன்னால் இனி நிற்க இயலாது. நம் தேர் உடைந்துவிட்டிருக்கிறது. உன் அம்புகள் ஒழிந்துவிட்டிருக்கின்றன” என்று இளைய யாதவர் சொன்னார்.

“என் தலை கொடுக்கிறேன். இக்களத்தில் அவன் முன் இறந்து உதிர்கிறேன். சூதனை அஞ்சி பின்னடைந்தேன் எனும் பெரும்பழி எனக்குத் தேவையில்லை!” என்று அர்ஜுனன் கூவினான். “முன்னெடுத்துச் செல்க! முன்னெடுத்துச் செல்க!” என்று யாதவரின் பீலி சூடிய குழல்பற்றி உலுக்கினான். ஆனால் கர்ணனின் அம்பு வளையத்திலிருந்து தேரை பின்னெடுத்து மேலும் மேலும் பின்னகர்த்தி பாண்டவப் படைகளின் ஆழத்திற்குள் கொண்டு சென்றார் இளைய யாதவர். மருத்துவர்கள் பாய்ந்து வந்து தேரிலேறி கவசங்களைக் கழற்றி அவன் உடலில் பட்டிருந்த புண்களை அம்புமுனைகளைப் பிடுங்கி தூய்மை செய்து கட்டுகளை போட்டனர்.

அர்ஜுனன் விலகிய இடைவெளியை நிரப்பி முன்னெழுந்த சுருதசேனனும் சதானீகனும் இருபுறத்திலிருந்தும் வந்து கர்ணனை எதிர்கொண்டனர். அவர்களுடன் சாத்யகி வந்து சேர்ந்துகொண்டான். ஆனால் அவர்களால் கர்ணனின் விசையை சற்றும் நிலைகொள்ளச் செய்யமுடியவில்லை. பாண்டவர்கள் உளம் சோர்ந்து மேலும் மேலும் பின்னடைய கௌரவர்கள் கூச்சலிட்டு நகைத்தபடி முன்னெழுந்து வந்தனர். நிஷாத இளவரசர்கள் எழுவர் களம் பட்டனர் என அறிவித்து முரசொலி எழுந்தது. “பீஷ்மர் காற்றெனில் இவர் எரி. இனி பாண்டவப் படைகள் எஞ்சப்போவதில்லை!” என்று முதிய வீரர் ஒருவர் கூவினார். சோர்வுறுத்தும் எதையும் படையில் சொல்லலாகாதென்னும் நெறியை மீறி ஒவ்வொருவரும் அச்சத்தையும் ஐயத்தையும் கூவியறிவித்தனர். அவை ஒன்றுடன் ஒன்று கலந்து எழுந்த முழக்கத்தில் சொற்கள் பொருளிழந்தாலும் ஒலி உணர்வுகொண்டிருந்தது. கடந்துசெல்கையில் அம்முழக்கத்திலிருந்து பிரிந்து காதில் தொட்ட உதிரிச் சொற்றொடரை அம்முழக்கம் பீடமென அமைந்து தாங்கியிருந்தது.

இளைய யாதவர் திருஷ்டத்யும்னனிடம் “அலைகள்! அலைகள்!” என்று கூவி கைகளால் காட்டினார். அவர் கூறுவதை புரிந்துகொண்ட திருஷ்டத்யுமனன் “நிலைமாறாது எவரும் அங்கர் முன் நிற்கவேண்டியதில்லை. அரைநாழிகை நேரம் ஒவ்வொருவரும் அவர் முன் நின்று தடுங்கள்! ஆவநாழி ஒழியும் கணத்தில் பின்னடைந்து அடுத்தவருக்கு இடம்கொடுங்கள். கடற்பாறை முறை! கரைப்பாறையை கடலலைகள் அறைவதுபோல் முடிவிலாது நம் படைவீரர்கள் அவரை அறைந்துகொண்டிருக்க வேண்டும். மோதி உடைக்க இயலாது என்று உணருங்கள்” என்று ஆணையிட்டான். “கடற்பாறை முறை! கடற்பாறை முறை!” என  முரசுகள் முழக்கமிட்டன.

அவ்வறிவிப்பை கேட்டு பாண்டவப் படைகள் மேலும் உளம் சோர்வதை விழிகளால் காண முடிந்தது. சதானீகனும் சுருதசேனனும் தளர்ந்து பின்னடைய திருஷ்டத்யும்னனும் அவன் வில்லவர்களும் கர்ணனை எதிர்கொண்டனர். அவர்கள் தளர்ந்து பின்னடைய தன் யாதவப் படைகளுடன் சாத்யகி அவரை எதிர்கொண்டான். பின்னர் விராடரும் அதன் பின்னர் துருபதனும் கர்ணனை எதிர்கொண்டனர். அலையிறங்கி உருண்டு வரும் பெரும்பாறைக்கு முன் சிறு கற்களையும் மரத்தடிகளையும் போட்டு தடுக்க முயல்வதுபோல அவன் விரைவை சற்று குறைக்கமட்டுமே அவர்களால் இயன்றது. தாக்கி தலைகொண்டு திரும்பி ஆவநாழியையே அடையும் சுழிநாக அம்புகளிலிருந்து குருதிசொட்டி கர்ணனின் தேர் நனைந்தது. அவனுக்கு மட்டுமென குருதிமழை ஒன்று பெய்ததுபோல் அதன் மகுடவிளிம்புகளிலிருந்து குருதித்துளிகள் சொட்டின. அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. தொல்நிலங்களிலிருந்து எழுந்துவந்த அறியாத போர்த்தெய்வம் என்று அவன் தோன்றினான்.

தேர்த்தட்டில் உடல் சோர்ந்து அமர்ந்த அர்ஜுனன் எண்ணியிராக் கணத்தில் உளமழிந்து விம்மி அழத்தொடங்கினான். திரும்பி அவனது துயரைப் பார்த்த பின் இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார். தான் அழுவதை தானே உணர்ந்து சினமெழ எழுந்து ஓங்கி தேர்த்தட்டில் மிதித்து “முன்செல்க, யாதவரே! இக்கணம் முன் செல்லவில்லையென்றால் இங்கேயே என் அம்பால் சங்கறுத்து விழுவேன்” என்றான். “இனி முன் செல்லலாம். உன் ஆவநாழிகளை நிரப்பிக்கொள்” என்றார் இளைய யாதவர். “இதோ துருபதனும் சத்யஜித்தும் விலகுகிறார்கள். அந்த இடைவெளியை அரைநாழிகைப் பொழுதுக்கு நீ நிரப்பு!”

“இல்லை! அங்கிருந்து நான் மீளமாட்டேன்! அவ்விழிமகன் முன்னிருந்து உயிருடன் மீளமாட்டேன்! அங்கேயே இறந்து விழுவேன்!” என்று அர்ஜுனன் கூவினான். “கீழ்மகன்! கொலையாட்டுக்கென எழுந்து வந்திருக்கிறான்! யாதவரே, இவன் வில்திறனால்தான் அஸ்தினபுரி துணிவு கொண்டது. இவனை எண்ணியே இங்கு போருக்கெழுந்துள்ளனர். எங்கள் குலமகளை அவைச்சிறுமை செய்தவன் இவன். இவன் வென்றால் உங்கள் ஒவ்வொரு சொல்லும் இம்மண்ணிலிருந்து முற்றழியும். நாகர்களால் நிறையும் இந்த நிலம். எரிந்தணைந்த காண்டவ வனத்திலிருந்து முட்டைகள் பொரித்து பெருகுவதுபோல் பாம்புகள் எழுந்து பூமியை நிரப்பும். இவனை அழித்தாக வேண்டும். நான் உங்கள் கையில் அம்பு! என்னை ஏவுக!”

மறுமொழி சொல்லாமல் புன்னகைத்தபடி இளைய யாதவர் தேரைச் செலுத்தி மீண்டும் அர்ஜுனனை கர்ணன் முன் கொண்டுவந்தார். இரண்டாம் முறை வந்தபோது அர்ஜுனன் முற்றிலும் நிலையழிந்து தீப்பற்றி எரிபவன் போலிருந்தான். அவன் அம்புகள் எழுந்து பெருமுழக்கத்துடன் கர்ணனை நோக்கி வந்தன. வெற்புகளை இடித்தழிப்பவைபோல் விசை கொண்டிருந்த அவற்றை கர்ணனின் நாகஅம்புகள் எளிதில் சுற்றி வளைத்து சிதறடித்து அப்பாலிட்டன. அவன் அம்புகள் எவையும் கர்ணனின் தேரைச் சூழ்ந்திருந்த விழிதொட இயலாத காப்பு வளையமொன்றை அணுகக்கூட முடியவில்லை. உளம் சோர்ந்து அவன் மேலும் வெறி திரட்டிக்கொண்டபோது கர்ணனின் அம்புகள் வந்து அவனை அறைந்தன. நெஞ்சில் அறைந்த அம்பால் அவன் தேர்த்தட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டான். அவன் கவசம் உடைந்து அம்பு ஆழப்புதைந்து நின்றிருந்தது. வலியலறலுடன் எழ முயன்றபோது மீண்டுமொரு அம்பு அவனைத் தாக்க அவன் நிலத்தில் பதிந்தான். அவன் உடல் அங்கே கிடந்து துள்ளியது.

இளைய யாதவர் தன் தேரைத் திருப்பி அர்ஜுனனை மேலும் தொடர்ந்து தாக்க வந்த கர்ணனின் அம்புகளிடமிருந்து அவனை காத்தார். அம்புகள் தேரிலறைந்து உதிர்ந்தன. ஆனால் விண்ணிலெழுந்து குத்தாக இறங்கி வந்த பிறிதொரு அம்பு அர்ஜுனனை அறைந்து புரட்டியது. முழவுகள் “இளைய பாண்டவர் விழுந்தார்! இளைய பாண்டவர் விழுந்தார்!” என்று உறுமத் தொடங்கின. சுருதசேனனும் சதானீகனும் அர்ஜுனனை காக்கும் பொருட்டு இருபுறத்திலிருந்தும் ஓடிவந்தனர். உயிர் எஞ்சியுள்ளதா என்று அறியும்பொருட்டு திருஷ்டத்யும்னன் தன் தேரிலிருந்து குதித்து தரையில் கையூன்றி தவழ்ந்து அருகணைந்தான். சுருதசேனனும் சதானீகனும் இருபுறத்திலிருந்தும் கர்ணனை நோக்கி அம்புகளை எய்து அவன் விசையை தடுக்க முயன்றனர்.

கர்ணன் உரக்க நகைத்தபடி தன் ஆவநாழியிலிருந்து நாகவாளியை எடுத்தான். அக்கணத்தை சதானீகனும் சுருதசேனனும் ஒவ்வொரு கணத்துளியென தெளிவாக கண்டனர். கர்ணனின் கண்களில் அதுவரை இருந்த கூர் அகன்று கொலைத் தெய்வங்களுக்குரிய வெறிநகைப்பு குடியேறுவதை, அவன் உதடுகள் விரிந்து வெண்பற்கள் வெளித்தெரிவதை கண்டு அவன் மானுடனல்ல மண்ணாழத்திலிருந்து எழுந்து வந்த நாகம் என்று உளமயக்கடைந்தனர். நாகவாளி புற்றிலிருந்து படமெடுத்து எழும் அரசநாகம் என ஆவநாழியிலிருந்து எழுந்ததை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். பல்லாயிரம் இழுமூச்சுகள் எழ படையே சீறலோசை எழுப்புவது கேட்டது.

கர்ணன் நாகவாளியை கைசுழற்றி எடுத்து நாணிலிட்டு இழுத்த கணம் இளைய யாதவர் அதைப் பாராதவர்போல் தேர்த்தட்டில் பாய்ந்தெழுந்து பின்திரும்பி நின்று கீழே விழுந்து கிடந்த அர்ஜுனனை பார்த்தார். அவர் மேல் நாகபாசாம் பாயப்போகிறதென்று எண்ணி சதானீகன் “இளைய யாதவரே” என்று கூவினான். புன்னகையுடன் திரும்பிப்பார்த்து இளைய யாதவர் “என்ன?” என்று கேட்டார். மறுபுறம் சுருதசேனன் “நாகவாளி! அவர் கையில் நாகவாளி!” என்று கூவினான். திரும்பி கர்ணனைப் பார்த்து புன்னகைத்த இளைய யாதவர் இரு கைகளையும் விரித்தார்.

சில கணங்கள் இறுகிய வெண்நாணில் அம்பு விம்மி நின்றிருக்க அவரைப் பார்த்தபின் வில் தாழ்த்தி அம்பை எடுத்து மீண்டும் தன் ஆவநாழியிலிட்டு மறுபுறம் திரும்பி அங்கு நின்றிருந்த ஏழு பெருவில்லவர்களை ஒரே வீச்சில் கொன்றழித்தபடி “முன்னேறுக! முன்னேறுக!” என்று கர்ணன் கூச்சலிட்டான். அதற்குள் அர்ஜுனனை இழுத்து தேரிலேற்றி பாண்டவப் படைகள் உள்ளே கொண்டு சென்றன. “வீழ்ந்தான் அர்ஜுனன்! வீழ்ந்தான் இளைய பாண்டவன்!” என்று கௌரவப் படைகளில் முரசுகள் முழங்கலாயின.

பாஞ்சாலப் படைகளின் முகப்பில் நின்று போரிட்டுக்கொண்டிருந்த துரோணர் சலிப்புடன் தன் வில்தாழ்த்தி தலையை அசைத்தார். அவரருகே புரவியில் விரைந்து வந்த பூரிசிரவஸ் உரத்த குரலில் “வீழ்ந்தார் பார்த்தர்! இனி அவர் களமெழப்போவதில்லை என்கிறார்கள்” என்று கூவினான். கைகளை விரித்தபடி புரவியில் அமர்ந்தபடியே களிவெறியுடன் நடனமிட்டு “இனி அவர் களமெழப்போவதில்லை! இனி காண்டீபம் எழப்போவதில்லை!” என்றான். சீற்றத்துடன் அவனை நோக்கித் திரும்பிய துரோணர் கைவீசி “விலகு, அறிவிலி!” என்றார். அதை எதிர்பாராத பூரிசிரவஸ் தன் புரவியின் கடிவாளத்தை பிடித்திழுத்து நிறுத்தி வெற்றுவிழிகளுடன் கூர்ந்து நோக்கினான்.

மறுபுறத்தில் துரோணரை நோக்கி புரவியில் வந்த அஸ்வத்தாமன் “அவர் உயிர்துறக்கவில்லை, தந்தையே! அது வெறும் மயக்கம்தான்” என்றான். “இன்றைய போரிலிருந்து கற்றுக்கொண்ட அனைத்து ஆற்றலுடன் நாளை எழுவார். ஐயமில்லை!” என்றான். துரோணர் மெல்ல முகம் மலர்ந்து “ஆம்! அவனை வெல்ல இயலாது!” என்றார். பூரிசிரவஸ் அவர் உளநிலையை புரிந்துகொண்டு மெல்ல புரவியை இழுத்து பின்னடைந்தான். அஸ்வத்தாமன் தந்தையின் முகம் சுருங்குவதைக் கண்டதனால்தான் அருகணைந்திருக்கிறான் என்று தெரிந்தது. “காண்டீபம் ஒருபோதும் தோற்காது, தந்தையே!” என்றான் அஸ்வத்தாமன். துரோணர் “ஆம்! மெய்!” என்றார்.

அஸ்வத்தாமன் உரத்த குரலில் சூழ நின்ற அனைவரும் கேட்கும்படி “எப்போதும் கற்றுக்கொண்டிருப்பவர் அவர். இன்றைய வீழ்ச்சி இதுவரை அவர் பெற்றவற்றிலேயே மிகப் பெரிய கல்வியாக அமையக்கூடும்” என்றான். துரோணர் வாய்விட்டு நகைத்து “ஆம், பரசுராமரின் விற்தொழில் என்ன என்று இன்று புரிந்துகொண்டிருப்பான். இனி நாளை அவன் பொருதப்போவது பார்க்கவகுல முனிவரிடம்” என்றார். மேலும் நகைத்து கைதூக்கி “முதல்முறையாக பார்க்கவர் ஷத்ரியர்களிடம் தோற்கப்போகிறார். இப்புவி அதை பார்க்கவிருக்கிறது” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

பனிமனிதன் –கடிதம்

$
0
0

 pani-manithan-original-imadeww5533bgmfb

பனிமனித வாங்க

பனிமனிதன் மின்னூல் வாங்க

வணக்கம்,

இன்று எந்த முன் திட்டமிடலுமில்லாமல் பனிமனிதனை எடுத்துவைத்து அமர்ந்துவிட்டேன். தள்ளிப்போய்க்கொண்டே இருந்த வாசிப்பை இன்று மீண்டும் தொடங்கிவிட்டேன். பௌத்தம் சார்ந்து விரிவாக வாசிக்க வேண்டும் என்று முன்பு எண்ணியிருந்தேன், அவை இந்த வாசிப்பின் மூலம் தீவிரம் கொண்டுவிட்டன. புவியியல் சார்ந்தும் பரிணாமம் சார்ந்தும் இதில் பேசப்படும் பல செய்திகளை தேர்வுகளுக்காக முன்னரே படித்திருந்ததால் இதில் வாசிக்கும்போது அவை எளிதாகவும் மேலும் விளக்கமாகவும் துலங்கி வந்தன.

பிரடரிக் ஏங்கல்ஸின் கைகள் பற்றிய கருத்து, ஃபராய்டின் மன வகைப்பாடு, கால் யுங்கின் மன வகைப்பாடு, இந்திய ஞானிகளின் மன வகைப்பாடு குறித்தெல்லாம் அறிமுகம் செய்து கொண்டது மேலும் அதுகுறித்து வாசிக்கத் தூண்டுகிறது.

வைரம் பற்றிய விவாதம் பாண்டியன், திவாகர், கிம் மூவருக்கிடையில் வந்தபோது கிம் பௌத்தத்தின் திருஷ்ணை பற்றிக் கூறுவான். அப்போது ஒன்று நினைத்துக்கொண்டேன், நான் ஒவ்வொன்றையும் மூன்றாகப் பகுத்துக் கொள்வேன். தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது, உணர்ந்து கொள்வது என. ஏதோ ஒன்றைப்பற்றி நாம் பெயரளவில் கேள்விப்பட்டது, அதைப்பற்றி மேலும் அறிந்து வைத்திருப்பது, அதுவே நம் வாழ்வில் நிகழும்போது நாம் உணர்ந்து தெளிவது எனக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டால் பாண்டியன் தெரிதல் நிலை, திவாகர் பலவற்றை அறிந்திருந்தாலும் புரிதல் நிலையில் இருக்கிறார், கிம் பௌத்தத்தின் வழியில் உணர்ந்த நிலையில் இருக்கிறான் என்ற எண்ணம் தோன்றியது.

அடுத்து, இராமபித்தாகஸ் பற்றியது. இராமாயணத்தை ஆதிகாவியம் என்றும் வான்மீகியை ஆதிகவி என்றும் முன்னர் தேர்வுகளின்போது படித்திருக்கிறேன். ஆனால், இதில் இராமபித்தாகஸ் பரிணாமத்தின் படியில் நம்மிடமிருந்து விலகி வேறு படியில் நின்றிருக்கலாம், அதன் நினைவுகள் மக்களிடம் வழிவழியாக வந்து அதை வான்மீகி தன் காவியத்தில் பயன்படுத்தியிருக்கலாம் என்ற செய்தியைப் படித்ததுமே, இந்தாண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் ராஜ்கௌதமனின் ஆய்வுகள் பற்றி தாங்கள் பேசிய, அகப்பாடல்களில் காணப்படும் சித்திரமும் புறப்பாடல்களில் காணப்படும் சித்திரமும் வேறுபட்டிருக்கின்றன, எனவே அகப்பாடல்கள் அதன் காலத்துக்கு முந்தைய பெருங்கற்கால நாகரிகத்தின் வாழ்வை நடித்துக்காட்டுகின்றன என்பதாக ஒரு வரியைக் கூறினீர்கள். இதை வாசித்துக் கொண்டிருக்கையில் சட்டென அந்த வரி எழுந்து வந்ததும், இராமாயணத்தில் வரக்கூடிய அனுமன், வாலி, சுக்கிரீவன், வானரங்கள் என்பவர்கள் இதுவரை அளித்து வந்த சித்திரம் முற்றிலும் மாறி வேறாகத் தெரிந்தது உண்மையில் ஒரு உளக்கிளர்ச்சியைத் தந்தது. யதி என்ற சொல்லுக்கும் மைத்ரேயர் என்ற சொல்லுக்கும் பொருள் அறிந்துகொண்டது கூடுதல் மகிழ்ச்சி.

தற்செயல்கள் எப்போதும் நல்ல பலன்களையே தருகின்றன, முன்னர் ஒரு முறை எடுத்து முடிக்காமல் விட்டிருந்தேன், இன்று தற்செயல் திட்டமாக வாசித்து முடித்தேன், மிகுந்த மகிழ்ச்சி. தற்செயலாகத்தான் தங்களை அறிந்து கொண்டேன், எதிர்மறையாக அல்ல, கவிதை சார்ந்து இணையத்தில் ஏதோ தேடி, ஆக தற்செயலுக்கும் தங்களுக்கும் நன்றிகள் பல.

இமய மலை பற்றி தற்செயலாக இன்று இதுவும் கண்ணில் பட்டது, பனிமனிதனின் நிலத்தை மேலும் துல்லியமாகக் காண உதவியது – https://youtu.be/R3VMW6fxK6Y

பேரன்புடன்

பாரதி.

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்

பனிமனிதன்

பனிமனிதன்

பனிமனிதன் ஒரு கடிதம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யானை கடிதங்கள் – 4

$
0
0

yanai

யானை – புதிய சிறுகதை

அன்புள்ள ஜெ

யானை சிறுகதையில் அபாரமான கவித்துவம் கொண்ட ஓர் இடம் வருகிறது. மீன் நிலாவின் நிழலில் ஏறிக்கொண்டு போட் என்று சொல்லி ஓட்டியது என்கிறான் அனந்தன். அது நிழல், அதில் எப்படி ஏறமுடியும் என சாதனா கேட்டதுமே அது மீனின் நிழல்தான் என்று சொல்கிறான். குழந்தைகள் இப்படி மிகப்பெரிய கவிஞர்களைப்போல சட்டென்று பேசிவிடுவதுண்டு. பிச்சைக்காரக் குழந்தைகள்கூட எதையாவது சொல்லிவிடும். ஒரு பிச்சைக்காரப்பெண்குழந்தை என்னிடம் பைசா கேட்டது. நான் நாணயம் கொடுத்தேன். ரூவா குடு இது உருண்டு போயிரும் என்று அது சொன்னது. நான் ரூவா பறந்திருமே என்றேன். அதுமேலே பைசாவை வச்சிருவேன் என்றது. ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தக்குழந்தைக்கு ஐந்துவயதுதான் இருக்கும்.

மாரிச்செல்வம்

அன்புள்ள ஜெ

யானை சிறுகதையில் அனந்தன் சொல்லும் ஒரு கதையில் அவன் நிலாவின் நிழல்மீது மீனின் நிழல் சவாரிசெய்யும் என்று சொல்கிறான். அந்தக்கதைக்கும் அந்த உவமைக்கும் தொடர்புள்ளதுபோலத் தோன்றியது. அனந்தனின் அம்மா அவனுடைய கற்பனைமேல் ஏறிக்கொள்கிறாள் என்பதைத்தானே அந்தக்கதை காட்டுகிறது? இருவருமே இரண்டு நிழல்களாகத்தான் மாறிவிடுகிறார்கள். நான் நினைப்பது சரியா என தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணம் எனக்கு வந்தது

சபரி

அன்புள்ள ஜெ

யானை கதையின் படங்கள் வித்தியாசமாக இருந்தன. ஏதோ ஓவியர் குழந்தைகள் பாணியில் வரைந்திருக்கிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.நேற்றுத்தான் தற்செயலாகப் பார்த்தேன்.  ஓவியங்கள்: யாழினி (6 வயது), நிலா (8 வயது) என்று எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது. இரண்டு இளம் ஓவியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

எம்.பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

யானை கதை வாசித்து இத்தனைநாட்களுக்குப்பின்னரும் மனதிலேயே நிற்கிறது. அனந்தன் ஒரு தனியுலகில்வாழ்கிறான். அங்கே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். வெளியுலகம்தான் அவனுக்குக் கஷ்டம். ஆனால் அவன் அம்மா அவனுக்காக தான் மகிழ்ச்சியாக இருந்த உலகை உதறிவிட்டு அந்த உலகுக்குள் செல்கிறாள். அவளை வெள்ளையானைகளாக மாறி அந்த வீடு சூழ்ந்துகொள்கிறது.

நம் பெண்களில் பெரும்பாலானவர்களை குழந்தைகளின் பள்ளிக்கூடம் இப்படி பேய்போல பிடித்துக்கொள்கிறது. குழந்தைகளின் படிப்பைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் ஏராளமான பெண்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களின் பிரச்சினையும் இதுதான்

சரஸ்வதி ராமச்சந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மங்காப் புகழ் புத்தர்

$
0
0

aa

வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் அவையே முற்றாக வகுத்து முடிவெடுத்துவிடுகின்றன. நாம் செய்வதற்கொன்றுமில்லை.

ஆனால் பிறிதொரு தருணத்தில் எனக்கு வரைகலைநாவல்கள் தேவைப்பட்டன. மூளை வேறொரு புனைவில் வேர் அமிழ்ந்து சிக்கியிருக்கையில் வாசிப்பது கடினமாக ஆகியது. ஆனால் அவ்வப்போது எளிய வாசிப்பும் தேவைப்பட்டது. ஆகவே படக்கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் முத்து காமிக்சின் டெக்ஸ் வில்லர். அவை நான் பெரிதும் நாடிய எளிய இளைப்பாறலை அளித்தன.

எனக்கு அமெரிக்காவின் வன்மேற்கு [wild west] நிலப்பகுதிமேல் பெரிய ஆர்வம் உண்டு. நான் சிறுவனாக இருந்தபோதே கௌபாய் கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். என் நிலம் பசுமையும் அழகும் கொண்டது. அதற்கு முற்றிலும் மாறான அந்த வறண்ட வெற்றுநிலம் அளிக்கும் பரவசமே முதன்மைக் காரணம். அங்கிருக்கும் தனிமை. என் நிலம் மக்கள் செறிந்தது. பேச்சிப்பாறையின் அடர்காடுகளில்கூட இன்னொருவர் நம்மிடம் ‘சோமா இருக்கேளா?” என்று கேட்க எல்லா வாய்ப்பும் உண்டு. டெக்ஸ் வில்லர் கும்பல் பாலையின் விரிநிலத்தில் மூன்றுகால்நாட்டி கெட்டிலை தொங்க விட்டுக்கொண்டு காபி போட்டு குடிக்கும் காட்சி என்னை கனவில் ஆழ்த்தியிருந்தது. பின்னர் நேரில் சென்று அந்நிலத்தை பலகோணங்களில் பார்த்துவிட்டு வந்தபோதிலும்கூட அதிலிருந்து தப்ப முடிந்ததில்லை. இருபத்தைந்தாண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் டெக்ஸ் வில்லர் கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அதே கனவு நீடித்தது. அத்துடன் அதற்கு மூளை தேவையுமில்லை என கண்டடைந்தேன்.

ab

அவ்வாறு வரைகலை நாவல்களுக்குள் சென்றபின்னர் ஒருநாள் என் நூலகத்தொகையில் ஓசாமு டெஸுக்கா எழுதிய புத்தா என்னும் வரைகலை நாவலின் முதல் பகுதியாகிய கபிலவாஸ்துவை கண்டடைந்தேன். எவரோ எனக்கு அன்பளிப்பாக அளித்தது. நான் அதை பலமுறை கையில் எடுத்திருந்தாலும் இன்றுதான் வாசிக்க முடிந்தது. இதை என்றேனும் வாசிப்பேன் என நான் எண்ணவே இல்லை. ஏனென்றால் அப்படி புதிய புதிய உலகங்களுக்குள் செல்லும் ஆர்வம் எனக்கு இன்று இல்லை. நான் செல்லும் உலகங்களிலேயே கண்டடைவதற்கு ஏராளமாக உள்ளன.

இந்நாவல் ஜப்பானிய வரைகலையான மங்கா பாணியைச் சேர்ந்தது. இந்த வரைகலைக்கோடுகள் முற்றிலும் வேறுபட்டவை. டெக்ஸ் வில்லர் கதைகளின் ஓவியங்கள்போல நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் மெய்யுருவில் காட்ட முயல்பவை அல்ல. சினிமாபாணி காட்சிக்கோணங்கள் கொண்டவையும் அல்ல. இவை கேலிச்சித்திரங்களுக்கு இணையான எளிமை கொண்ட கோடுகளால் ஆனவை. கொந்தளிப்பான, நம்பமுடியாத அசைவுகளின் அசையாச்சித்திரங்கள். உணர்ச்சிவெளிப்பாடுகளிலும் கேலிச்சித்திரங்களுக்குரிய மிகை உண்டு. ஆனால் இவற்றை நாம் சற்று கூர்ந்து நோக்கி இவற்றின் உலகுக்குள் நுழைய முடிந்தால் உள்ளிழுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவை.

ozamu

ஓசாமு டெசுக்கா [Osamu Tezuka – 1928 –1989] ஜப்பானிய மங்கா வரைகலை நாவல் உலகின் பெரிய பெயர்களில் ஒன்று. வால்ட் டிஸ்னிக்கு இணையான ஜப்பானியக் கலைஞர் என கருதப்படுபவர். டெசுக்காவின் New Treasure Island  என்னும் வரைகலைப்படைப்பு 1947-இல் வெளியானது. அது ஜப்பானிய மங்கா யுகத்தை தொடங்கிவைத்தது. புத்தா அவருடைய உச்சப்படைப்பு.

ஒசாமு டெசுக்காவின் புத்தா என்னும் வரைகலை நாவல் வரைகலைநாவல் உலகின் ஒரு பெரும் செவ்வியல்படைப்பு என்று சொல்லப்படுகிறது. உலகளாவிய பல பரிசுகளை பெற்றது இது. 1972-இல் தொடங்கி 1983-இல் முழுமை அடைந்தது. நான் இணையத்தில் நூல்வாங்கும் வழக்கத்தை இன்னமும் தொடங்கவில்லை. பல சர்வதேச விருதுகளைப் பெற்றது இந்த வரைகலைநாவல்.  2004-இல் வரைகலைநாவலுக்கான Eisner Award இதற்கு அளிக்கப்பட்டது. இந்நாவல்நிரை திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.  மூன்று பகுதிகளால் ஆனது. முதற்பகுதி கபிலவாஸ்து மட்டுமே என்னிடம் உள்ளது. எஞ்சிய இரண்டு பகுதிகளை இனிமேல்தான் படிக்கவேண்டும். வாங்கவேண்டும்.

இந்நாவலை குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்கக்கூடும். குழந்தைகளுக்கு உவப்பான கொந்தளிப்பான காட்சிச்சித்தரிப்புகள், அரிய வீரச்செயல்கள், மானுடத்தன்மைமீறிய  கதைநாயகர்கள், திருப்பங்கள் கொண்ட கதையோட்டம் ஆகியவை கொண்ட நாவல் இது. இதன் உலகத்திற்குள் நுழைபவர்களுக்கு அவையெல்லாம் நம்பகமானவைதான். ஒன்றிலிருந்து ஒன்றுக்கு என நாம் சென்றுகொண்டிருக்கும் கனவுருக்காட்சிகளில் மானுடத் துயரும் மானுடக்களிப்பும் மானுடவெற்றியுமே வெளிப்படுகிறது. ஆனால் அவை வேறெங்கோ ஒரு களத்தில் கூர்கொண்டு நின்றிருப்பதாகவும் நமக்குப் படுகிறது.

இதிலுள்ள முதன்மையான கூறு ஒன்றுண்டு, செவ்வியலுக்கும் மானுடத்தன்மைக்கு அப்பாற்பட்டவற்றுக்குமான உறவு. புத்தரின் கதை, அன்றிருந்த தத்துவக்கொந்தளிப்பும் அரசியல் அலைகளும், நடப்பியல் நோக்கில் சொல்லப்பட்டிருந்தால் இதிலுள்ள செவ்வியல்கூறு நிகழ்ந்திருக்காது. ஏனென்றால் புத்தரின் பிறப்பும் மெய்யறிதலும் உலகவெற்றியும் எளிய அன்றாட நடப்புகள் அல்ல. நாமறிந்த அன்றாடத்தை கற்பனையிலிருந்து முற்றாக உதறாமல் அந்தத் தளத்தை நோக்கி நாம் செல்லவே இயலாது. மாபெரும் மெய்த்தேடிகள், வீரர்கள் எவ்வகையிலோ அன்றாடத்தை உதறியவர்கள்தான். அன்றாடத்தின் சலிப்பூட்டும் சின்னஞ்சிறுதன்மையில் கண்டடைதல் இல்லை. மாபெரும் வெற்றிகள் இல்லை. மெய்யறிவும் இல்லை. அன்றாடம் மானுடத்தின் சராசரிகளால் ஆனது. மானுடன் தன் சாரத்தை உச்சநிலைகளிலேயே கண்டடைய முடியும். வீரமும் மெய்மையும் அங்குதான் விளையும்.

bu

அந்த உச்சநிலைகள் மட்டுமே நிகழும் ஒரு களமே செவ்வியல். ஆகவேதான் மாபெரும் செவ்வியல் ஆக்கங்களில் இருந்து குழந்தைக்கதைத் தன்மையை பிரிக்க முடிவ்தில்லை. பித்தின் கட்டின்மை, கற்பனையின் விரிவு, குழந்தைகளுக்குரிய பெருவியப்புத்தன்மை ஆகியவை வரலாற்றுப்புலத்துடன், தத்துவ தரிசனத்துடன் இணைகையில் உருவாகும் உலகமே செவ்வியல். இந்நாவலை செவ்வியல் என ஐயமில்லாது சொல்லிவிடமுடியும். இதன் பல உச்சதருணங்களை வாசித்தபின்னரும் வாழ்ந்தேன். அஸிதருக்கு தன்னையே எரியிலிட்டு உணவாகக்கொடுக்கும் முயலின் கதையில் தொடங்குகிறது அந்த மிகைகற்பனை. தத்தன், சாப்ரன் ஆகியோரின் சாகசத்தன்மையினூடாக பெருங்கனவென திகழும் புத்தரின் பிறப்பு நோக்கி செல்கிறது.

இந்நாவல் புத்தரைப்பற்றியது என்றாலும் இந்தியாவைப் பற்றியது அல்ல. டெசுக்கா இந்தியாவை புத்தர்வரலாறுகளைப்பற்றிய பிற்காலத்தைய நூல்களில் இருந்தே உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவை பெரும்பாலும் இந்தியாவை அறியாத புத்த பிட்சுக்களால் இந்தியா குறித்த செய்திகளால் உருவாக்கப்பட்டவை. அதிலுள்ள இந்தியச்சித்தரிப்பு பெரும்பாலும் ஜப்பானிய யதார்த்தம் சார்ந்தது.

Manga-2_01_7f96b41a6a

ஓர் உதாரணம் சொல்லலாம். சூத்திரர்கள் எந்நிலையிலும் எவ்வகையிலும் சாதியின் அடையாளத்திலிருந்து மீளவோ, பிறிதொரு வாழ்க்கைக்குச் செல்லவோ இயலாது என டெசுக்காவின் நாவலான ‘கபிலவாஸ்து’ சொல்கிறது. ஆனால் அது அந்தக்கால நடப்பு அல்ல. மகாபாரதம் முதல் புத்தசரிதம் வரை அவ்வாறு அல்ல என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. சூத்திரப்பிறப்பிலிருந்து தங்கள் திறனால் அரசர்கள் ஞானிகள் என மேலெழுந்த மனிதர்கள் ஏராளமானவர்கள். சூத்திர ஜாதியினர் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு அரசுகளை அமைத்துள்ளனர் – மாபெரும் மௌரியப்பேரரசே அவ்வாறு உருவானதுதான். அவ்வாறு தங்களை நிலைமாற்றிக்கொள்வதற்கான பல்வேறு சமூகச்சடங்குகள் இருந்தன. அவை இன்றும் நீடிக்கின்றன.

டெசுக்கா ஜப்பானிய அடிமைமுறையைக்கொண்டு இந்திய சாதிமுறையை புரிந்துகொள்கிறார். இது ஜப்பான் போன்று சமூக அமைப்பு நிலைபெற்றுவிட்ட மிகச்சிறிய நாட்டின் அமைப்பு அல்ல. பல்லாயிரம் இனக்குழுக்கள் தங்கள் மேலாதிக்கத்துக்காக முட்டிமோதிக்கொண்டிருந்த ஒரு பெரிய வாழ்க்கைச்சூழலின் முரணியக்கக் களம். ஒவ்வொருகணமும் மாறிக்கொண்டிருப்பது. இத்தகைய சிறிய, ஆனால் முக்கியமான மாறுபாடுகள் வழியாக இதுகாட்டும் சித்திரம் நமக்கு அயலானதாகவே உள்ளது.

budh

இந்நாவல் உருவாக்கும் முழுமையான தரிசனம் என்ன என்பதை எஞ்சிய பகுதிகளை வாசித்தபின்னரே சொல்லமுடியும். ஆனால் இந்நாவலில் இருந்து கிடைக்கும் சித்திரமும் இந்தியாவிலிருந்து எழுந்தது அல்ல, முழுக்கமுழுக்க ஜப்பானியத்தன்மை கொண்டது இது. அன்றைய இந்தியா ‘தத்துவம் அற்ற’ வறுமையில் இருந்தது என எந்த வரலாற்றாசிரியனும் சொல்ல மாட்டான். நம்பமுடியாத மானுடத்துயர்களில் இருந்து ‘இறங்கிவந்தது’ போல ஒரு மெய்மையாக பௌத்தம் எழுந்தது என்றும் சொல்லமாட்டான்.

அன்றைய இந்தியப்பெருநிலம் தத்துவமோதல்களின் பெருங்களம். இந்தியாவின் மாபெரும் நிலவிரிவு காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மக்கள்குழுவும் தனக்கான தரிசனத்தை, தத்துவத்தை கண்டடைந்தது. இந்தியா ஒரே தட்பவெப்பம் கொண்ட நிலமாக இருந்தமையால், இமையம் போன்ற பெரிய மலைகளாலோ பாலைகளாலோ பிரிக்கப்படாத பரப்பாக இருந்தமையால் ஒற்றை மானுடவெளியாக ஆகியது. வணிகப்பாதைகளினூடாக இணைக்கப்பட்டது. விளைவாக அத்தனை தத்துவங்களும் தரிசனங்களும் ஒன்றோடொன்று முட்டிமோதின. உண்டு செரித்தன. கீறி மேலெழுந்தன. தழுவி வளர்ந்தன. அந்த மாபெரும் விவாதக்களத்தில் விளைந்ததே பௌத்தம்.

aas

பௌத்தம் சாங்கியத்தின், ஆசீவகத்தின், சமணத்தின் நீட்சி. அதன் மறுபக்கமாகத் திகழ்ந்தது வேதாந்தம். விவாதம் வழியாக அது வேதாந்தத்தில் இருந்து பெற்றுக்கொண்டதே மிகுதி. வேதாந்தம் இல்லாமல் பௌத்தம் இல்லை என்றே சொல்லலாம். அதேபோல பிற்கால வேதாந்தங்களைப் பொறுத்தவரை பௌத்தம் இல்லாமல் அவையும் இல்லை. இந்த விரிவான சித்திரத்தை இந்நூலில் இருந்து பெற இயலாது. இச்சித்திரத்தின் தொடக்கம்கூட இதில் இல்லை. டெஸுக்காவுக்கு அத்தகைய அழுத்தமான புரிதலேதும் இருந்ததாகவும் தெரியவில்லை. ஏராளமான மேலைநாட்டு ஆய்வாளர்களிடமிருக்கும் மேலோட்டமான தத்துவப்புரிதல்தான் அவரிடமும் உள்ளது.

அத்துடன் இன்னொன்றையும் சொல்லவேண்டும். டெஸுக்கா காட்டும் இந்த ஞானத்தேடல் ஜப்பானிய ஜென் வழிமுறை சார்ந்ததே ஒழிய இந்தியத்தன்மை கொண்டது அல்ல. புத்தர்காலத்து இந்தியா தீவிரமான தர்க்க வழிகளை கண்டடைந்தது. உள்ளுணர்வைத் தீட்டும் தியானமுறைகளையும் கையாண்டது. இரண்டும் ஒன்றை ஒன்று நிரப்பி அடையும் ஒன்றாகவே பௌத்தமெய்யறிதல் இருந்தது. யோகாசாரம் என பௌத்தம் தன் அறிதல்முறையை சொல்கிறது. அதுவே பிற்கால வேதாந்தங்களிலும் திகழ்ந்தது. இந்நாவல் காட்டும் மெய்யறிதல்கள் ஜென் பௌத்தத்தின் ‘ஒருகணத் திறப்பு’ என்னும் வகையில் அமைந்துள்ளன. ஓர் அதிர்வில் உள்ளம் தன் கோணத்தை மாற்றிக்கொள்வது, அகம் தன் ஆழம்நோக்கி திறந்துகொள்வது அந்த முறை. அது ஊழ்கத்தை அந்தக்கணம் நோக்கிச் செல்லவே பயன்படுத்துகிறது.

bbb

செவ்வியலுக்குரிய நகைச்சுவையும், ஆசிரியரே அவ்வப்போது புனைவுக்குள் ஊடுருவும் மீமொழிபுத்தன்மையும் [meta narration] கொண்டது இப்படைப்பு. கோஸலத்திற்குள் நுழையும்போது ஒரு வணிகன் அந்நகர் நியூயார்க் நகருக்கு இணையானது என்கிறான். புத்தரின் அன்னைக்கு பேறுபார்க்க டெசுக்காவே டாக்டராக நவீன உடையில் ஓரமாக வந்து நிற்கிறார். ஆசிரியரின் நுண்ணிய விளையாட்டுக்களை நாவல் முழுக்கவே பார்த்துச்செல்லமுடியும். அதேசமயம் நாவல் முன்வைக்கும் மையத்தரிசனங்கள் அவற்றுக்குரிய கவித்துவமான தீவிரத்துடனேயே வெளிப்படுகின்றன.

அறிதல்களின் வெவ்வேறு வாய்ப்புகளைக்கொண்டு பின்னப்பட்டிருக்கிறது இந்நாவல். தத்துவத்தின் பரிணாமத்தை எளிமையாக வாசிக்க விழைபவர்களுக்குரியது. ஆனால் இதன் குறைபாடு என்பது இதன் வரைகலைவடிவே என்றும் தோன்றுகிறது. ஒவ்வொன்றிலும் நாம் நின்று வாழ்ந்து விரிந்து கடந்துசெல்வதில்லை. மாறாக மிகவிரைவாக அனைத்துக்கும் மேல் பறந்துசெல்கிறோம்.

தொடர்புடைய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 22

$
0
0

unnamed (1)

 

அன்புள்ள நண்பர்களே ,

 

வணக்கம்

 

நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 22 வது கூடுகையாக “ஜனவரி மாதம்” 24 -01-2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசு பகுதி

வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்”

தொடக்கப் பகுதி 01&02 “மாமதுரை மற்றும் பெருந்துறைப்புகார்” 01 முதல் 10 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர் காளிப்பிரசாத் உரையாற்றுவார்

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்”

முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு : 9943951908 ; 9843010306

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23

$
0
0

ele1அரவான் சொன்னான். எவரும் எதிர்நிற்கவியலாத வெய்யோன் அங்கு செருகளத்தில் திகழ்வதை நான் காண்கிறேன். அவன் ஒளிமிக்க தேரை நேர்விழிகொண்டு நோக்கும் எவரும் அங்கில்லை. என் குடியினரே அறிக! அவன் அங்கே மாநாகன் என எழுந்து நின்றிருக்கிறான். இப்புவியில் இன்றுவரை வாழ்ந்த நாகர்கள் அனைவரும் நஞ்செனக் கொண்ட வஞ்சம் அனைத்தும் அவனில் திரள்கின்றது. அதன் முன் நின்றிருக்க இயலாமல் அனல்பட்ட தளிர்களெனச் சுருள்கின்றன அனைத்தும். அவர்களின் படைக்கலங்கள், அவற்றை ஏந்திய வஞ்சினங்கள், அவற்றை ஏந்திய மொழி, அம்மொழியை ஏந்திய நினைவுகள், அந்நினைவில் வாழும் வேள்விகள்.

ஆயிரம் யுகங்களின் அவிப்பயன் அவர்களை அங்கே காக்கவில்லை. என் குடியினரே, அந்த அவியுண்டு பெருகிய தேவர்கள் அவர்களை துணைக்கவில்லை. அந்த தேவர்களுக்குத் தலைவன் தன் மைந்தன் அம்பால் அறையுண்டு விழக்கண்டு விண்ணிலிருந்து பதைக்கிறான். அவன் ஊர்ந்த வெண்ணிற யானை துதிக்கை தூக்கி பிளிறுகிறது. அவனைச் சூழ்ந்து நின்று கூச்சலிடுகிறார்கள் தேவர்கள். விண்ணிலிருந்து அகம் துவள்கிறார்கள் முனிவர்கள். அவர்களின் தெய்வங்களெல்லாம் செயலிழந்து தங்கள் பீடங்களில் ஒட்டியிருக்கின்றன. நாகங்களின் நாளெழுந்தது. ஆழியனின் அரவு ஆயிரம்தலை சுருக்கி அங்கே மீள விழைந்தது. அனல்மேனியனின் அணி வழிந்திறங்கத் தலைப்பட்டது. அன்னையின் மேகலை தவழ்ந்திழிந்தது. இங்கு இங்கு என நெளிய, நான் நான் என தருக்க நாகங்களைப்போல் வடிவுகொண்டமைந்தவை எவை?

குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் மண்ணுக்கு அடியில் பல்லாயிரம் வளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பெருகி நிறைந்திருந்தன. அவற்றின் ஆழங்களில் நீண்ட குகைப்பாதைகள் இறங்கிச்சென்று பாதாள இருளில் முடிந்தன. கரிய நீர் ஊறிப்பெருகி எழுவதுபோல் அங்கிருந்து நாகங்கள் வந்தபடியே இருந்தன. அவை போர்க்களத்தில் ஓசையிடாது நெளிந்து மேலெழுந்தன. மின்னும் விழிகளுடன் படம் விரித்து நாபறக்க சீறிச் சொடுக்கி தலைதிருப்பி அங்கு நிகழ்வனவற்றை நோக்கின. வாலை ஓங்கி அறைந்து அவ்விசையால் எழுந்து பறந்து அக்காற்றை நிரப்பின. தங்களுக்கு உகந்த அம்புகளிலேறி அமர்ந்து சென்று எதிரிகளை தாக்கின. ஒன்றுடன் ஒன்று வாலறைந்து சுழன்று கவ்வி நிலத்தில் விழுந்து துள்ளித் துடித்துச் சுழன்றன. போர்க்களமெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்தது நாகங்களின் நெளிவுக்கொந்தளிப்பு.

ஆர்யகனின் குலத்திலமைந்த பல்லாயிரம் நாகங்கள் பாண்டவர் தரப்பிலும் இருந்தன. அவற்றுக்கு நூறுமடங்கு நாகங்கள் கௌரவத் தரப்பிலெழுந்தன. அவை ஒன்றையொன்று கடித்து ஒற்றைப் பந்தென ஆகி துள்ளியுருண்டன. வானிலிருந்து பார்த்த மூதாதையர் குருக்ஷேத்ரத்தில் கரிய நீரலைகளின் நெளிவு நிறைந்திருப்பதைக் கண்டு அங்கு பெருவெள்ளம் எழுந்ததோ என்று ஐயுற்றனர். பின்னர் மேலும் விழி கூர்ந்து அவை நாகங்களின் உடல்களாலான பெரும்பரப்பு என்று தெளிந்தனர். நாகங்களின் நச்சுத்துளிகள் சிதறி மண்ணில் விழுந்தன. அங்கே மண் வெந்து புகைந்து ஆழ்துளைகளாக குழிந்து இறங்கியது. மென்சேற்றில் கூழாங்கற்கள்போல் அவை புதைவுகொண்டன. அத்துளைகளால் குருக்ஷேத்ரக் குருதிநிலம் சல்லடை போலாயிற்று.

மேலும் மேலுமென மண்ணுக்கடியிலிருந்து நாகங்கள் எழுந்து வந்தன. கர்ணன் போரிடும்போது அவனைச் சூழ்ந்து அவை பெருகியெழுந்து முகில்படலம்போல் நின்றன. அவன் எய்த ஒவ்வொரு அம்புடனும் நூறு நாகங்கள் உடன் பறந்தன. உயிர்குடித்து விம்மி உடல் பெருத்து தங்களில் தாங்களே திளைத்து கொண்டாடின. அங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது நாகங்களின் பெரும்போர். அன்றி நாகங்களின் விழவுக் களியாட்டு. நாகங்களைப்போல் தங்களைத் தாங்களே உண்பவை வேறில்லை. தங்களைத் தாங்களே தழுவிக்கொள்பவையும் இல்லை. நாகங்கள் கொன்றன. வென்று நெளிந்தன. சீறித் தருக்கின. அஞ்சிப் பதுங்கின. சீற்றமே மொழியெனக் கொண்டவை. சினமே நோக்கெனக் கொண்டவை. அனலையே நாவெனக் கொண்டவை. நஞ்சென நெஞ்சம் கொண்டவை. நாகங்களை வெல்லவும் நாகங்களே எழவேண்டும். கூட்டரே, நாகங்கள் முழுதுற வெல்லவும் நாகங்களே தேவை.

ele1அந்தியில் போர்முடிவை அறிவித்து முரசுகளின் முழக்கு எழுந்தபோது நாகங்கள் மேலும் வெறிகொண்டு என்ன செய்வதென்றறியாமல் தங்களைத் தாங்களே முடிச்சிட்டு வால்சொடுக்கி தாங்களே எழுந்தமைந்து களம் நுரைத்து கொப்பளித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு படைவீரரும் சோர்ந்து வில்லும் வாளும் தாழ்த்தி தள்ளாடி நின்றபோது அவை அவர்களின் கால்களில் சுற்றிக்கொண்டு நிலையழியச் செய்தன. அவர்கள் பெருமூச்சுடன் விண் நோக்கி நிமிர்ந்தபோது சுழன்று உடலைச் சுற்றிக்கொண்டு இறுக்கி நெஞ்சுடையும் வலியை அளித்தன. அவர்கள் தனிமையும் துயரும் கொண்டு நிலம்பார்த்து தலைகுனிந்தபோது தரையெங்கும் நாகங்களை நிழலசைவெனக் கண்டனர். அஞ்சி மூடிய கண்களுக்குள் கரிய அலைகளென ஓடிய நாகங்களைக் கண்டு அவை என்னவென்றறியாது ஒருவரோடொருவர் தோள்பற்றிக்கொண்டனர். கால்களை இழுத்து வைத்து குருதி கொட்டும் புண்களை கைகளால் பொத்தியபடி அவர்கள் தங்கள் பாடிவீட்டுக்குத் திரும்பியபோது நிழல்கள் நீண்டு நாகங்களென அவர்களைத் தொடர்ந்தன.

நிலைமீண்டுகொண்டிருந்த தன் படைவிரிவின் நடுவே யானையின் மேல் பாய்ந்தேறி நின்ற கௌரவர் தலைவனாகிய துரியோதனன் இரு கைகளையும் விரித்து “வெற்றி! கௌரவர்களுக்கு வெற்றி! இப்போரில் நாம் வென்றோம்! நாம் மீண்டெழுந்துவிட்டோம்!” என்று கூவினான். “இதோ அர்ஜுனன் வீழ்ந்தான். பாண்டவர் மூவர் புண்பட்டுள்ளனர். அவர்களின் படைகள் சிதறி அழிந்துள்ளன. அவர்களிடம் எஞ்சுவது ஏதுமில்லை இனி” என அவன் கூவ அவன் படையினர் ஆர்ப்பரித்தனர். “இதுவரை நிகழ்ந்தது அல்ல இனி எழுவது. அவ்வீணர் மாநாகத்தின் உடலை மிதித்து அதை படமெடுக்க வைத்தனர். இன்று அதன் சீறலைக் கண்டனர். இனி அதன் நஞ்சை அவர்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள். அறிக, முற்றழியவிருக்கிறார்கள்!” அவன் சொற்களை முழவுகளும் கொம்புகளும் பெருக்கிப் பரப்பின. அங்கே பெருகியிருந்த கௌரவர்கள் வேல்களையும் வாள்களையும் விற்களையும் வானோக்கித் தூக்கி பெருங்குரலெழுப்பினர்.

கைகளையும் கேடயங்களையும் தட்டித் தாளமிட்டும் கூவி ஆர்ப்பரித்து சிறுநடனமிட்டும் கௌரவர் தங்கள் பாடிவீடுகளை நோக்கி நிரைவகுத்தனர். எங்கும் சிரிப்புகளும் வாழ்த்தொலிகளும் உளம்கிளர்ந்த வசைமொழிகளும் ஒலித்தன. “இன்றொடு முடிந்தது போர்! நாளை நிகழ்வது எரியாட்டு!” என ஒரு வீரன் தேர்க்கூரைமேல் ஏறிநின்று கூச்சலிட்டான். “முடிந்தது போர்! முடிந்தது போர்!” என்று கௌரவர்கள் ஏற்றொலித்தனர். “இனி சொல்லில்லை. இனி கள்மட்டுமே!” என ஒரு வீரன் கூவ “கள்! கள்!” என பல்லாயிரம் தொண்டைகள் கூச்சலிட்டன. அந்த உளநிலை மிக விரைவிலேயே சிரிப்பாகவும் கொண்டாட்டமாகவும் மாறியது. அது முதிர்ந்து தற்பகடியாக உருக்கொண்டது. “தலையை வெட்டிக் கொடுத்து காலை மீட்டிருக்கிறோம்! வெற்றி! கௌரவர்களுக்கு வெற்றி!” என்று ஒருவன் மொந்தையில் நிறைந்த கள்ளை தலைக்குமேல் தூக்கி கூச்சலிட அனைவரும் கைகளைத் தூக்கி கூவி நகைத்தனர்.

“கள் எழுக! கள்தெய்வம் கொலுக் கொள்க!” என்று படை முழங்கியது. “கள்! கள்! கள்!” என திரள் கொந்தளித்தது. வழக்கமாக படைகள் அமைந்த பின்னரே கள்வண்டிகள் கிளம்பும். அன்று படையினரில் ஒரு பிரிவினர் சென்று கள்வண்டிகளை கைப்பற்றி தாங்களே இழுத்துக்கொண்டு வந்தனர். அவர்களே கள்ளை அள்ளி அனைவருக்கும் ஊற்றினர். தங்கள் நிலைகளுக்குச் சென்று அமையாமையால் வீரர்கள் தலைக்கவசங்களில் கள்ளை வாங்கினர். அதை குடித்தபோது அவர்களின் உடலெங்கும் கள் வழிந்தது. கள்ளை மாறிமாறி ஊற்றிக்கொண்டார்கள். கள் வழியும் உடலுடன் ஒருவரை ஒருவர் தாக்கி களிப்போரிட்டனர். சற்றுநேரத்தில் கள்ளில் புழுத்தவை என அங்கே மானுட உடல்கள் கட்டிப்புரண்டு கொப்பளித்துக்கொண்டிருந்தன.

பாண்டவர்கள் களம் முழுக்க செத்துக் குவிந்திருந்த தங்கள் தோழர்களைப் பார்த்து சலிப்பும் துயரும் கொண்டவர்களாக தனித்தனியாக தங்கள் பாடிவீட்டை நோக்கி நடந்தனர். அர்ஜுனன் வீழ்ந்துவிட்டான் என்பதையே அவர்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் எவரும் அதை சொல்லாக்கவில்லை. அவர்கள் நடுவே சென்ற தேரில் யுதிஷ்டிரர் அர்ஜுனன் கிடந்த மருத்துவநிலை நோக்கி சென்றார். “அரசர் செல்கிறார். அவர் முகம் துயர்கொண்டிருக்கிறது” என்றான் ஒரு வீரன். “அவர் முகம் என்றும் துயருடன்தான் இருக்கிறது” என்றான் இன்னொருவன். “மருத்துவநிலையிலிருந்து என்ன செய்தி வந்துள்ளது?” என்று ஒருவன் கேட்டான். “நாம் எச்செய்தியையும் அறியவியலாது. முரசுகள் முழங்கும் வரை நம் அறிவுக்கு அவர் நலமுடன் இருப்பவரே” என்றார் முதிய வீரர் ஒருவர்.

யுதிஷ்டிரர் மருத்துவநிலையை அடைந்து தேரிலிருந்து இறங்கியதும் அங்கே நின்றிருந்த ஏவலர் இருவர் வந்து வணங்கினர். அவர் ஒன்றும் சொல்லாமல் தளர்ந்த கால்களும் தொய்ந்த தோள்களுமாக மருத்துவநிலை நோக்கி நடந்தார். அவர் வந்ததை அறிந்து உள்ளிருந்து வந்த முதிய மருத்துவரான கர்வடர் தலைவணங்கி “நெஞ்சிலும் இடையிலும் நிலையில் வலுவான தாக்குதல் பட்டுள்ளது, அரசே. குருதி ஒழிந்துள்ளமையால் இன்னும் தன்னினைவு மீளவில்லை. முயன்றுகொண்டிருக்கிறோம்” என்றார். யுதிஷ்டிரர் “அவன் உயிருக்கு…” என்று சொல்லெடுத்து அச்சொல் தன் செவியில் கேட்கவே தயங்கி நாவை நிறுத்தினார். “இப்போது எவராலும் எதுவும் சொல்ல இயலாது. உடல் உயிரை தக்கவைக்க போராடிக்கொண்டிருக்கிறது. நன்று நிகழுமென்றே எண்ணுவோம்” என்றார் கர்வடர்.

யுதிஷ்டிரர் மேலும் பேச எழுந்த நாவை அடக்கி தலையசைத்தார். கர்வடர் உள்ளே செல்ல அவர் தளர்ந்து மெல்ல பின்னடைந்து சுவரோரமாக போடப்பட்டிருந்த மரப்பெட்டிமேல் அமர்ந்தார். அவரை சூழ்ந்தவர்கள்போல ஏவலர் நின்றனர். மேலும் மேலும் புண்பட்ட உடல்கள் மருத்துவநிலை நோக்கி வந்துகொண்டிருந்தன. களம்பட்ட நிஷாத குல இளவரசர்களின் தந்தையர் விழிநீர் வழிய அவ்வண்டிகளுக்குப் பின்னால் வந்தனர். குருதிமணமும் கந்தகநீரின் மணமும் கலந்து காற்று அங்கேயே தங்கி நின்றது. அப்பால் பொதுவீரர்களுக்கான மருத்துவநிலையிலிருந்து முனகல்களும் அலறல்களும் கலந்த கூட்டோசை எழுந்து காற்றுச்சுழலுக்கேற்ப வலுத்தும் தணிந்தும் ஒலித்தது.

குளம்படியோசை கேட்டு யுதிஷ்டிரர் திரும்பி நோக்கினார். புரவியில் வந்து இறங்கிய திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரை அணுகி தலைவணங்கி “பேரழிவு! இப்போர் தொடங்கிய பின்னர் இன்றுபோல் அழிவு என்றுமில்லை. பீஷ்மர் உருவாக்கிய அழிவுக்கு ஒரு படி மேல்” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அதை எவரும் சொல்லவேண்டியதில்லை. விழிகளே காட்டின” என்றார். “அவர்களின் சூழ்கையை உடைத்துவிட்டோம். இன்று வெல்லும்பொருட்டு அவர்கள் இட்டிருந்த திட்டமும் தோல்வியடைந்தது. ஆனால் அங்கர் தனியொருவராக நின்று நம்மை அழித்தார்” என்றான் திருஷ்டத்யும்னன். “அவர் வெல்லற்கரியவர் என்று அறிவோம். ஆனாலும் நம்மில் எவரும் முன்னிற்கவியலாதென்பது…” யுதிஷ்டிரர் கைகாட்டி நிறுத்தி “அவன் புகழை பாடவேண்டியதில்லை” என்றார்.

திருஷ்டத்யும்னன் குரலைத் தாழ்த்தி “நான் சொல்வது அதுவல்ல. அவர் ஆற்றலைக் கருத்தில்கொண்டே நாம் இனி படைசூழ்கை அமைக்கவேண்டும் என்றுதான்” என்றான். சினத்துடன் முகம்தூக்கிய யுதிஷ்டிரர் “எந்தப் படைசூழ்கை? சொல்க! எந்தப் படைசூழ்கை? இன்று நாம் வகுத்த படைசூழ்கை என்ன? நம் வீரர்கள் அனைவருமே அவன் ஒருவனை மட்டும் சூழ்ந்து நின்று போரிட்டனர். நம்மில் எவராலும் அரைநாழிகைப் பொழுதுகூட அவன்முன் நிற்கவியலவில்லை” என்றார். திருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “நாம் செய்வதற்கொன்றே உள்ளது, அவன்முன் சென்று தலைகொடுப்பது. பிறிதொன்றுமில்லை. வீரர்கள் என சொல்லி நம்முடன் இருந்தவர்கள் அனைவரும் எத்தனை வீணர்கள் என இன்று அறிந்தேன். மாவீரன் என சூதர்களால் புகழப்பட்டவன் அதோ அம்புபட்டு உயிர்பிரியக் காத்திருக்கிறான். பிற மாவீரர் அவனைப்போலன்றி உயிருடன் எஞ்சியிருக்கிறீர்கள்.”

திருஷ்டத்யும்னன் சொல்லெடுக்காமல் கைகளை மார்பில் கட்டியபடி விலகி நின்றான். “நாம் தோற்றுவிட்டோம். இனி நம்மிடம் எஞ்சுவது ஏதுமில்லை” என்றார் யுதிஷ்டிரர். துயருடன் தலையை அசைத்தபடி “நாம் தருக்கியதெல்லாம் வீண். இந்தத் துயர் நமக்குத் தேவை. பீஷ்ம பிதாமகரை களத்தில் வீழ்த்தியமைக்கு நமக்கு முன்னோர் அளிக்கும் தண்டனை இது” என்றார். திருஷ்டத்யும்னன் முகத்தில் சினம் எழுந்தாலும் அவன் ஒன்றும் சொல்லவில்லை. “நாளை என்ன செய்யவிருக்கிறோம்? சொல்க! நாளை நம் திட்டம் என்ன?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். திருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லவில்லை. சலிப்புடன் கையை வீசி “நாம் செய்யக்கூடுவது ஒன்றுமில்லை. சொல்லாடலாம். சொல்லிச்சொல்லி எதையாவது மாற்றமுடியுமா என்று பார்க்கலாம்” என்றார். “சொல்லிச் சொல்லி அவனை எழுப்பி அமரச்செய்ய முடியுமா என்று பாருங்கள்” என உள்ளே கைசுட்டினார்.

திருஷ்டத்யும்னன் பொறுமையிழந்து பேச முற்பட்டபோது குளம்படிகள் ஒலித்தன. சாத்யகி புரவியில் வந்து இறங்கி அணுகிவந்து யுதிஷ்டிரரிடம் தலைவணங்கி “எப்படி இருக்கிறார்?” என்றான். யுதிஷ்டிரர் ஒன்றும் சொல்லாதது கண்டு புரிந்துகொண்டு திருஷ்டத்யும்னனிடம் என “எவராலும் அவரை தடுத்து நிறுத்த இயலவில்லை. இன்று நிகழ்ந்தது போரே அல்ல, வெறும் கொலையாட்டு” என்றான். பேச்சை மாற்றும்பொருட்டு “இளைய யாதவர் எங்கே?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “அவர் இளைய அரசர்கள் நகுலரையும் சகதேவரையும் பார்க்கச் சென்றிருக்கிறார்” என்று சாத்யகி சொன்னான். “அவர்கள் நலம்பெற்றுவிடுவார்கள். சிறிய புண்கள்தான்.” யுதிஷ்டிரர் உள்ளத்திலெழுந்த வினாவை இயல்பாகவே திருஷ்டத்யும்னன் சொல்லாக்கினான். “இங்கு அல்லவா அவர் வரவேண்டும்?”

அதை சொல்லெனக் கேட்டதும் யுதிஷ்டிரர் முகத்தில் சீற்றமெழுந்தது. அதைக் கண்ட சாத்யகி “ஆம், ஆனால் அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது போலும்” என்றான். “அவர்தான் தேர் தெளித்தவர். இளைய பாண்டவரைத் தூக்கி மருத்துவ வண்டியில் அவரே ஏற்றினார். அவர் அறிந்திருப்பார், பெரிதாக ஏதுமில்லை என்று எண்ணியிருக்கலாம்.” யுதிஷ்டிரர் “அதை சொல்லவேண்டியவர் மருத்துவர்” என்றார். சாத்யகி ஒன்றும் சொல்லாமல் சற்று கீழிறங்கி முற்றத்தில் நின்றான். இளம் மருத்துவன் ஒருவன் வெளியே வர யுதிஷ்டிரர் எழுந்து “என்ன செய்கிறார்கள்? விழிப்பு கண்டுள்ளதா?” என்றார். “இல்லை” என்றான் அவன். “நரம்புகளும் சிதைந்துள்ளன. உடலின் அனல் அணைந்துகொண்டே இருக்கிறது.”

யுதிஷ்டிரர் வெறித்து நோக்கி நிற்க “உடலை இயக்கும் ஏழு அனல்களில் மூன்று மட்டுமே வெம்மையுணர்த்துகிறது. மூலாதாரமும் சுவாதிட்டானமும் மணிபூரகமும் இயல்கையில் இருப்பும் பசியும் மூச்சும் எஞ்சியிருக்கிறது என்று பொருள். அதற்குமேல் நினைப்பும் சொல்லும் தன்னிலையும் மெய்யுணர்வும் மறைந்துள்ளது” என்றான். அரசரிடம் பேசக்கிடைத்த வாய்ப்பை அவன் மிகையாக பயன்படுத்துகிறான் என உணர்ந்த திருஷ்டத்யும்னன் “ம்” என்றான். அதிலிருந்த உட்குறிப்பை புரிந்துகொள்ளாமல் மருத்துவன் “உண்மையில் ஒரே அனல் என்பது சகஸ்ரத்தில் வாழும் மெய்யுணர்வே. அதிலிருந்தே ஆஞ்ஞையும் விசுத்தியும் அனாகதமும் பற்றிக்கொள்கின்றன. அவை எரியும் நெய்யென்றாவதே முதல் மூன்றின் பணி. மூன்று விறகும் நான்கு எரியும் என அதை நூல்கள் சொல்கின்றன” என்றான்.

“நாங்கள் இதற்குச் செய்யவேண்டிய ஏதேனும் உண்டா? வேள்விகள், பூசனைகள் எதை வேண்டுமென்றாலும் செய்கிறோம்… எவ்வண்ணமேனும் சகஸ்ரம் எழுந்தாகவேண்டும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “மானுடர் அதில் செய்வதற்கொன்றுமில்லை. அவ்வுடலில் தன்னை அமைத்துள்ள உடலிலி அதை எண்ண வேண்டும். அதற்கு ஊழின் நெறியும் தெய்வங்களின் ஆணையும் வேண்டும்” என்ற மருத்துவன் “நாம் வேண்டிக்கொள்ளலாம். எவ்வகையில் வேண்டிக்கொண்டாலும் அது நன்றே” என்றான். “நீர் செல்லலாம்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். அக்குரலில் இருந்த கடுமையால் திகைத்து பின் தலைவணங்கி அவன் சென்றான். “அவன் நெற்றியில் சகஸ்ரம் மலரவேண்டும். அவன் யோகி. அவன் உடலில் அது ஒருபோதும் அணையாது. அவன் மீள்வான். ஐயமே இல்லை, அவன் மீள்வான்” என்றார் யுதிஷ்டிரர்.

பீமனும் சுதசோமனும் இரு புரவிகளில் வந்திறங்கினர். பீமன் வந்தபடியே “எவ்வண்ணம் இருக்கிறான்?” என்றான். திருஷ்டத்யும்னன் “நலம்பெறக்கூடும் என்றனர்” என்றான். “ஆம், நலம்பெறுவான். அவன் வருகை நோக்கம் நிறைவேறாது செல்லமாட்டான். அவன் அவர்களை முற்றழிப்பான்” என்றான் பீமன். “மந்தா, வீண்சொற்கள் வேண்டாம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். சாத்யகி “சர்வதன் புண்பட்டுவிட்டான் என்றார்கள்” என்றான். பீமன் “நினைவு மீளவில்லை. ஆனால் நாளை விழித்தெழ வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர் சொன்னார்கள். அங்கிருந்துதான் இங்கு வருகிறேன்” என்றான்.

சுதசோமன் தன் தோளிலும் இடையிலும் பெரிய கட்டுகளை இட்டிருந்தான். திருஷ்டத்யும்னன் “இவனும் படுக்கையில் இருக்கவேண்டுமென்று தோன்றுகிறது” என்றான். “ஆம், இரு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்றுதான் மருத்துவர் சொன்னார்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் அவனிடம் “மைந்தா, நீ சென்று மருத்துவநிலையில் படுத்துக்கொள். இங்கு உன் இளைய தந்தை விரைவில் மீண்டெழுவான். நாளை களம் நிற்பான்” என்றார். தலையசைத்த பின் சுதசோமன் சற்றே விலகி தனித்து நின்றான்.

பீமன் திருஷ்டத்யும்னனிடம் “நாளைய போர்சூழ்கையை வகுக்கையில் அனைத்தும் அவனை மையம் கொண்டே அமையட்டும்” என்றான். சாத்யகி “இன்று இயல்பாகவே அவ்வாறு அமைந்துவிட்டது” என்றான். “ஒருவேளை நாளை இளையவன் களத்திற்கு எழாமலிருந்தால்…” என்று யுதிஷ்டிரர் சொல்ல தன் தொடையில் ஓங்கி அறைந்து வெடிப்போசை எழுப்பிய பீமன் “எழுவான்! அவன் எழுந்தாக வேண்டும்! அவன் எழுவான்!” என்றான். யுதிஷ்டிரர் நம்பிக்கை இழந்தவர்போல தோளை அசைத்து இன்னொரு பக்கம் திரும்பிக்கொண்டார்.

திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் வந்து நோக்கினால் நன்று. அவர் குரலை இளையவரின் உச்சித்தாமரை அறியும்” என்றான். பீமன் “அவர் இங்கிருப்பார் என்று நான் எண்ணினேன்” என்றான். சீற்றத்துடன் திரும்பிய யுதிஷ்டிரர் “ஏன் அவன் என்ன மருத்துவனா? இங்கிருந்து அவன் என்ன செய்யப்போகிறான்? அவன் தன் பணியை ஆற்றட்டும். இங்கு நாமே போதும்” என்றார். “இளையவரை எழ வைக்க அவரால் இயலும். அவர் அழைத்தால் போதும்” என்று சாத்யகி சொன்னான். பீமன் “அவர் ஆணையிட்டால் அவன் எழுந்துவிடக்கூடும்” என்றான். “பொருளற்ற பேச்சு! நம்மனைவருக்கும் தெரியும் என்ன நிலையிலிருக்கிறான் இளையோன் என்று” என்றார் யுதிஷ்டிரர்.

தேர் வந்துநிற்க அதிலிருந்து சிகண்டி இறங்கி அருகே வந்தார். “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். சிகண்டி தலைவணங்கி “நான் தெற்குக் காட்டிற்கு சென்றுகொண்டிருக்கிறேன். இன்றைய போரில் நம் படையினர் பெரும்பகுதியினர் அழிந்துவிட்டனர். பிணங்களை சிதைக்கும், மண்ணுக்கும் அனுப்பி முடிக்கும்போது பொழுது விடிந்திருக்கும்” என்றார். யுதிஷ்டிரர் வெறுமனே பேசுவதற்காகவே அவ்வினாவை கேட்டார். அந்த மறுமொழியால் சலிப்புற்று “அதையே மீளமீளச் சொல்லவேண்டியதில்லை” என்றார். “நான் வந்தது படைவீரர்களை விண்ணனுப்பும் சடங்குக்கு வழக்கம்போல் அரசர் இன்று வருவாரா என்று கேட்கத்தான்” என்றார் சிகண்டி. “இன்று நான் வரப்போவதில்லை. என்னால் இயலாது” என்றார் யுதிஷ்டிரர். சிகண்டி “அச்சடங்கை இங்கேயே நிகழ்த்தலாம்” என்றார். “என்னால் இயலாது. இப்போது என்னால் எதுவும் இயலாது” என யுதிஷ்டிரர் கூவினார்.

சிகண்டியின் விழிகளில் சினம் எழுந்து மறைந்தது. “அரசே, நீத்தோரை அரசச்சுடர் கொண்டு விண்ணுக்கு அனுப்புகிறோம். அவர்களின் பெற்றோரின் கைகள் என இங்கே இலங்குவது உங்கள் கைகளே” என்றார். யுதிஷ்டிரர் “என் உள்ளமே சிதையாக எரிகிறது. இத்தருணத்தில் நான் அச்சடங்கைச் செய்தால்…” என்றபின் “என் உள்ளம் கொள்ளும் கற்பனைகளை என்னால் தாளவியலாது, பாஞ்சாலரே” என்றார். சிகண்டி தணிந்து மென்குரலில் “எனில் நீங்கள் ஒரு சுளுந்தில் அனல் தொட்டு அளியுங்கள். அதையே அவர்களின் சிதைநெருப்பாக வைத்து விண்ணேற்றுவேன்” என்று சொல்லி சிறிய சுளுந்தொன்றை எடுத்து யுதிஷ்டிரரிடம் நீட்டினார். யுதிஷ்டிரர் அருகிலிருந்த பந்தத்தில் கொளுத்தி அதை அளிக்க தலைவணங்கி பெற்றுக்கொண்டு படியில் இறங்கினார்.

“இளைய யாதவரை வரும் வழியில் பார்த்தீர்களா?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். சிகண்டி திரும்பி நோக்கி “அவர் நகுல சகதேவரை பார்த்துவிட்டு தன் குடிலுக்கு திரும்புகிறார்” என்றார். “தன் குடிலுக்கா?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். சிகண்டி “ஆம், அங்கு உடற்பொடி நீக்கி ஓய்வெடுக்கப் போகிறார். ஏவலர் செல்வதைக் கண்டேன்” என்றார். யுதிஷ்டிரர் பீமனை பார்த்த பின் வெறுமனே தலையசைத்தார். சிகண்டி சுடருடன் இருண்ட முற்றத்தில் இறங்கியபோது யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். சுடர் ஒழுகிச்செல்வதை நோக்கி நின்ற திருஷ்டத்யும்னன் பெருமூச்சுவிட்டான்.

சாத்யகி “நான் வருகிறேன்” என்று யுதிஷ்டிரரை வணங்கினான். “இங்கே நிகழ்வனவற்றை அங்கு சென்று சொல்லவேண்டியதில்லை. அவரை அழைக்கவேண்டியதுமில்லை” என்று பீமன் சொன்னான். “அவர் அறியாதது ஏதுமில்லை. அவர் தன் வழியில் செல்லட்டும்.” சாத்யகி “ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்றான். யுதிஷ்டிரர் “அவன் இங்கு வந்தாகவேண்டும். இளையோனை அவனால் மீட்கமுடியும்” என்றார். “மூத்தவரே, நாம் முன்னரே முற்றடிபணிந்துவிட்டோம். இனி அவரிடம் நாம் எதை கோரினாலும் பிழையே” என்றான் பீமன்.

தொடர்புடைய பதிவுகள்

நூல்கள் பற்றி –கடிதங்கள்

$
0
0

stephen_leacock

தார்டப்பாவில்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

“தார்டப்பாவில்” என்ற பகடி படித்தேன்.

‘நான் உயரமான அழகான இளைஞன். கட்டுக்கோப்பான திடமான உடலமைப்பு. சூரியனாலும் சந்திரனாலும் வெண்கலநிறம் அடைந்தவன். [நட்சத்திரங்களின் பாதிப்பால் ஆங்காங்கே செம்புநிறமான புள்ளிகளும் உள்ளன] என் முகத்தில் நேர்மை, புத்திசாலித்தனம், அசாதாரணமான அறிவுத்திறன் ஆகியவை கிறித்தவத்தன்மை எளிமை அடக்கம் ஆகியவற்றுடன் கலந்து தெரிந்ததன’ மேற்கண்டவை தெரிவது ஒரு தார்டப்பாவில்.

படித்து கொந்தளித்து சிரித்தேன்.  நம்மை நாமே பகடி செய்வதின் உண்மையும் பயமும் நம்மை எப்படியோ சுத்திகரிக்கிறது. சுயவிமர்சனத்தில் இருந்து தான் விவாதம் ஆரம்பிக்கிறது. விவாதத்தில் இருந்துதான் நாம் எங்கே இருக்கிறோம் என்பது தெரிய ஆரம்பிக்கிறது. நம்மை நமக்கு தெரியும்போது உலகின் கண்ணிகள்,வலைகள் தெரிய ஆரம்பிக்கிறது. பிறகு இறுக்கம் குறைகிறது. இந்த வாழ்வு குறித்து புரிய ஆரம்பிக்கிறது. நீருக்குள்ளிருக்கும் வலையில் துடித்துக்கொண்டே வாழ்வதின் அர்த்தம் புரிய ஆரம்பிக்கிறது.

ஸ்டீஃபன்ராஜ் குலசேகரன்

அன்புள்ள ஜெ

முன்பு உங்கள் இணையதளத்தில் ஏராளமான மேலைநாட்டு நூல்களைப் பற்றிய சிறுகுறிப்புகள் இருந்தன. அவை ஃபேஷனபிள் ரீடிங் ஆக இல்லாமல் இன்றைக்கு அதிகமும் பேசப்படாத பிரிட்டிஷ் அமெரிக்க எழுத்துக்களைப்பற்றியவை. அவை பெரிய அறிமுகங்களாக இருந்தன. அவை இப்போது வருவதில்லை. நீங்கள் வெண்முரசில் பிஸி ஆனபின்னர் நூல்களைப்பற்றி விரிவாக எழுதுவது குறைந்துவிட்டது என நினைக்கிறேன். மீண்டும் எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

ஆனந்த்ராஜ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இரண்டு –சத்யஜித் ரே

$
0
0

.

இனிய ஜெயம்

சத்யஜித் ரே  இயக்கிய ஆவணப்படம் ஒன்றினை தேடியபோது [அவர் தாகூர் குறித்து எடுத்த ஆவணப்படத்தில் தாகூரே சொந்தக் குரலில் தேசிய கீதம் பாடும் காட்சி ஒன்று உண்டு என்றொரு வதந்தி] ரே இயக்கிய  இந்தக் குறும்படம் கிட்டியது .

பத்தே நிமிட குறும்படத்தில் எத்தனை வலிமையானதொரு உணர்வு நிலையை பொதிந்து, கலையாக்கி, காலத்தில் நிறுத்திவிட்டார் மனிதர் .  காமிரா நோக்கு முழுதுமே ,பெரும்பாலும் மேலிருந்து கீழே பார்க்கும் கோணம் . காலுக்குக் கீழ் உழலும் அற்ப மானுடனே எனும் கோணம் .

புட்டு [அவனது மிக்கி மௌஸ் தொப்பியில் உள்ள பெயர் ]  கீழே இருக்கும் சிறுவன் கையில் இருக்கும் குழலை விட மேம்பட்ட குழல் தன்வசம் இருப்பதை ஜன்னல் வழியே வாசித்து அவனுக்கு  காட்டுகிறான்.  சிறுவன் தட்டிக்காட்டும் மத்தளத்தை விட , புட்டு வசமிருக்கும் இயந்திர மனிதன் பொம்மையோ , உணவு உண்ணும் கரடி பொம்மையோ , கிடார் வாசிக்கும் மனிதன் பொம்மையோ மேம்பட்டது தானே ? அவற்றை காட்டாமல் ஏன் மத்தளம் கொட்டும் குரங்கு பொம்மையை காட்டுகிறான் ? அங்கிருந்துதான் புட்டுவின் ஆளுமை முழுமையாக வெளிப்படத் துவங்குகிறது .

ஏற்கனவே புட்டு சதா உண்டுகொண்டு இருப்பவனாக இருக்கிறான் , மென்று முடித்த பப்புள் கம்மை ,விலைமிகுந்த பொம்மையின் தலையில் ஒட்டும் திமிர் கொண்டவனாக ,  பலூனை நெருப்பு வைத்து உடைக்கும் [உள்ளார்ந்த குரூரம்] உள்ளம் கொண்டவனாக , செய்து அடுக்கிய பிரமிட்டின் கடைசி கண்ணியில் [மனதளவில்] நிற்பவனாக இருக்கிறான் .  இந்த தருணம் துவங்கி ,போட்டி மனப்பான்மை தாண்டி சிறுவனை ,கேலி செய்து மட்டம் தட்டும் இடத்துக்கு , அவன் கட்டும் பிரமிட்டின் அடுத்த படிக்கு , உயர்கிறான் .

அந்த கேலியால் சீண்டப்பட்டே சிறுவன் ,முகமூடியும் வில்லும் அம்பும் கொண்டு வந்து புட்டுவை பயமுறுத்தப் பார்க்கிறான் . புட்டு வித விதமான வேடங்களில் வந்து [  வரைந்த மீசை அதுவும் முறுக்கப்பட்ட மீசை ] சிறுவனை எதிர்கொள்கிறான் . வில்லும் அம்பும் கத்திக்கு ஓரளவு தாக்குப் பிடிக்கும் .எந்திரத்துப்பாக்கி முன்னால் முற்றிலும் தோற்றுப்போகும் என்பதுதானே வரலாறு ? சிறுவன் தோற்றுப் போகிறான் .

இறுதி சுற்றில் சிறுவன் பட்டம் விடுகிறான் .புட்டுவுக்கு பொறுக்க வில்லை .ஆம் அது உயரத்தில் பறக்கிறது .அவன் வீட்டை விட உயரமாக .  அது வரை வெல்லும் விளையாட்டை விளையாடிய புட்டு ,கொல்லும் விளையாட்டை தேர்வு செய்கிறான் . கவணால் முயன்று ,தோற்று ,துப்பாக்கி கொண்டு பட்டத்தை கிழித்து எறிகிறான் .பட்டம் சிதையும் கணம் அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் .அதன் பிறகே குனிந்து சிறுவனை பார்க்கிறான் . வானம் அளைந்து கிடந்த பட்டம் ,கிழிந்து புழுதியில் உழன்று சிறுவன் கையை சேர்க்கிறது .

வெற்றி மிதப்பில் அறைக்கு திரும்பும் புட்டு ,அந்த மிதப்பின் உச்சியில் தன்னிடம் இருக்கும் அத்தனை பொம்மைகளையும் இயக்கி தன்னை சுற்றி உலவ விடுகிறான் .  அந்த மிதப்பில் விழுகிறது அடி . கீழிருந்து மீண்டும்  எழுந்து வருகிறது குழலோசை .  அடைபட்ட அறைக்குள் நின்று , சட்டமிட்ட ஜன்னல் வழியே , இசை எழுந்து பரவும் வானை ,அவன் நிரந்தரமாக தவற விட்டு விட்ட வானைக்கண்டு உறைந்து நிற்கிறான் புட்டு .  அவன் இயக்கிய விட்ட பொம்மைகள் ஒன்றை ஒன்று மோதி ,அவன் கட்டி வைத்த பிரமிட் சரிவதில் படம் முடிகிறது .

பரியேறும் பெருமாள் போன்ற, காண விரும்பாத ‘யதார்த்தங்களை’ அதிலிருக்கும் நீலக்கலர் குறியீட்டு உள்குத்துக்களை வைத்து கட்டுடைக்கிரார்கள்  , 96 போன்ற காண விரும்பும் ‘பகல்கனவு’ களை  , புத்தகம் போடும் அளவு குறியீடுகளை, நுட்பங்களை ,உள்ளடுக்குகளை கண்டு  சொல்லி  அது ஏதோ உன்னத கலைப்படைப்பு போலவும் ,கைதவறி தமிழ் வணிக சூழலில் வந்து விழுந்து விட்டது போலவும்,அது தமிழ் அறிவு ஜீவி சமூகத்தால் சரியாக ‘உள்வாங்கப் ‘படாது போவிட்டத்து போலவும்  மறுகிக் கொண்டு இருக்கும் எவரும் இந்தகைதொரு படத்தை பார்த்தால் மாஸ்டர் டச் என்றால் என்ன என்று விளங்கும் . நாம எல்லாம் ரொம்ப ரொம்ப கீழ இருக்கோம் என்பதும் புரியும் .  வெல் டன். மாஸ்டர் ரே : )

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

ரயிலில் கடிதம் – 11

$
0
0

train4

ரயிலில்… [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

‘ரயிலில்’ சிறுகதையும் அதற்கு வந்த பல கடிதங்களும் படித்தேன். கடிதமெழுதிய‌ எல்லோரும் சொன்னது போல, ஆழமான பாதிப்பை உருவாக்கும் கதை.

சாமிநாதன் பாத்திரம்  Lord of the Flies கதையில் வரும் Piggyயை நினைவுறுத்தியது. ஆள் பலமோ உடல் பலமோ சூழ்ச்சித் திறனோ அற்றுப் போய் மற்றவர்களது நியாயவுணர்வையும், சட்ட அமைப்புமுறையின் பாதுகாப்பையும் நம்பியிருப்பவர். பொறுத்திருந்தால் என்றோ ஒரு நாள் நியாயம் வெல்லும் என்று வளைந்து கொடுத்துப் போகிறார்.

முத்துசாமி போன்றவர்களை செலுத்தும் மனவிசை என்ன என்பதை அசை போட்டால் எங்கெங்கோ எண்ணங்களைக் கொண்டு செல்கிறது.

தர்மமே நிலைத்து நிற்கும், தர்மவான்களை தெய்வம் காக்கும் என்பதற்கு சாட்சியாக சாமிநாதனின் குடும்பம் மீண்டும் நிலைகொண்டு செழித்ததை எடுத்துக் கொள்ளலாம். தெய்வம் நின்று கொல்லும் என்று நம்புபவர்கள் முத்துசாமியின் குடும்பம் அடைந்த‌ நிலைமையைப் பார்த்து “சொன்னேனில்ல, பாத்தியா!” எனலாம். அவர் மகள்கள் இருவருக்கும் கேடிகளால் நேரும் அவலங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் சாமிநாதனின் உள்ளார்ந்த கொடூரம் வெளிப்பட்டதாகக் கருதலாம். நேரடியாக ஏதும் செய்யாவிட்டாலும், முத்துசாமி பாவச் செயல்களின் மூலம் சம்பாதித்ததை அனுபவித்து வந்தவர்க‌ளாதலால் அதன் பின்விளைவுகளிலும் பங்குள்ளவர்கள் என்று சட்டம் படித்தவர்கள் வாதிடலாம்.

ஓயாமல் அடுத்தடுத்த பேரத்தில் ஜெயிப்பதுதான் முத்துசாமியை செலுத்துகிறது எனத் தோன்றுகிறது. லாபம் சேர்ப்பதைவிட பேரத்தில் வெற்றி பெறுவதே முக்கியமானதாகி, அதன் பொருட்டு பொய் சொல்வதும் ஏமாற்றுவதும் தொழில் கருவிகளாகி விடுகிறன. எல்லாவற்றையும் ஒரு தொழில் பேரமாகப் பார்ப்பதன் மூலம் எல்லாவற்றிலும் தயங்காமல் ஏமாற்ற முடிகிறது.

ஏமாறாமல் இருப்பது உன் கடமை, ஏமாற்றாமல் இருப்பது என் வேலையல்ல‌ என்கிற விதமாய் நடந்து கொள்கிறார். தன்னால் வஞ்சிக்கப்பட்டவர்கள், தன்னிடம் வந்து மன்றாடுபவர்கள் எல்லாம் பேரம் நடத்தி ஜெயிக்க‌த் தெரியாதவர்கள் என்று தன்னை உயர்த்திக் கொள்கிறார். எனவே ஈரமே இல்லாமல் மேலும் ஏமாற்றவோ, தெருவில் தள்ளிவிடவோ முடிகிறது. தர்மம், குற்றவுணர்வு போன்றவை, தன் இலக்கை அடையும் வழியில் மற்றவர்கள் வைக்கும் ஒரு  முட்டுக்கட்டை என எளிதில் கடந்து செல்ல முடிகிறது. அது மற்றவர்களிடத்தில் இருந்தால் அதையும் தயக்கமின்றிப் பயன்படுத்திக் கொள்கிறார்.

எக்காரணம் கொண்டும் தன் செயல்பாட்டில் நியாயவுணர்வுக்கு இடம் கொடுக்காமலிருக்க  விழிப்பாக இருக்கிறார்: அது வந்தால் அவரது மனச் சமன்பாடு போய்விடும். இத்தனை நாளாகச் செய்து வந்தவை த‌வறு எனத் தோன்றிவிட்டால் மொத்தமாகக் குற்றவுணர்வு அவரைத் தின்று விடும் எனத் தெரிந்திருக்கிறது. எனவேதான் நியாயவுணர்வுடன் பேசும் த‌ன் மனைவியை சீற்றத்துடன் விரட்டுகிறார். சாமிநாதனின் சொத்து நியாயமாகச் சேர்த்ததல்ல, எனவே தான் அபகரிப்பதில் தவறொன்றுமில்லை என்று கற்பித்துக் கொள்கிறார்.

எல்லாமே பேரத்துக்கு ஆட்பட்டது என்ற நம்பிக்கையும் முத்துசாமியை வழிநடத்துகிறது. இத்தனை நாட்களாகச் செய்துவந்ததெல்லாம் பாவமென்று தெரியவந்தால் அந்த சமயத்தில் கடவுளிடமே பேரம் பேசிப் பரிகாரங்கள் மூலம் ஈடு செய்து கொள்ளலாமென்று மனைவியிடம் கூறுகிறார். நீதிமன்றத்தில் சொத்துரிமை சாமிநாதனுடையது என்று முடிவான போதும், இவனால் நம்மை என்ன செய்து விட‌ முடியும் என்ற மனக்கணக்குடன் முத்துசாமி, பேரம் பேச வந்த சாமிநாதனை உதாசீனப்படுத்துகிறார்.

ஆனால் சொத்துரிமை, பலவீனமான சாமிநாதனிடமிருந்து பன்மடங்கு பலமும் கொடூரமும் அதிகாரச் செல்வாக்கும் வாய்ந்த கேடியிடம் போனதும் முத்துசாமியின் ராஜாங்கம் மொத்தமாகச் சரிகிறது. பேரம் என்பதற்கே இடமில்லாமல் போகிறது. அவரது மகள்கள் கடத்திச் செல்லப்பட்டுசிதிலமாக்கப்படுகிறனர். கேடியிடம் அழுது மன்றாடினாலும் எதுவும் கிடைக்காத‌ நிலைக்குப் போகிறார். குடும்பமே சின்னாபின்னப்பட்டுப் போகிறது.

மறுபடியும் தனக்குச் சாதகமான‌ பேரங்களின் வழியாகவே மீள தலைப்படுகிறார். பெரிய மகள் சரிக்கட்டமுடியாத நஷ்டமாகிப் போனதால்  கருணைக் கொலை செய்து அப்புறப்படுத்த  அனுப்பப்படுகிறாள். மனநலம் சரியில்லாத‌ இளைய மகளை ஒரு ஏமாளிக் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துக் கண் காணாத இடத்துக்கு அனுப்பி விடுகிறார்.

சாதாரண மனிதனை பேதலித்துப் போகச் செய்யக் கூடிய இடரில் முத்துசாமி குடும்பத்தைத் தள்ளியதும், அதிலிருந்து ஒருவிதமாக‌ மீண்டு வர வழி செய்ததும், பேரத்தில் எவ்வாறேனும் ஜெயித்துவிட வேண்டும் என்ற அந்த தாட்சண்யமற்ற உந்துதல்தான்.

அன்புடன்,

சுப்பிரமணியன்

ரயிலில் கடிதங்கள்-10

ரயிலில்- கடிதங்கள் -9

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒரு தொல்நகரின் கதை

$
0
0

varala

தமிழில் ஆண்டுதோறும் வரும் வரலாற்று நூல்கள் இரண்டுவகை. ஒன்று, வரலாறு என்றபேரில் நினைத்ததை எல்லாம் எந்தத் தர்க்க ஒழுங்குமில்லாமல் எழுதிக்குவிக்கும் எழுத்துக்கள். அவை மூன்று வகை.  திராவிட, தமிழ்த்தேசியப் பெருமிதங்களை அடிப்படையாகக் கொண்டு கொரியமொழி தமிழ்மொழியே, எகிப்தும் தமிழ்நாடே என்றவகையில் எழுதப்படுபவை ஒருபக்கம். இன்னொருபக்கம் இணையான அசட்டுத்தனத்துடன் அனைத்தையுமே சம்ஸ்கிருத, பிராமணியப் பெருமிதவரலாற்றுடன் திரித்து இணைத்துக்கொள்ளும் வரலாறுகள். முந்தைய வரலாற்றுக்கு நவீனவரலாற்றாய்வு என்னும் பாவனை உண்டு. இரண்டாவது வரலாற்றுக்கு தொன்மச்சார்பும் அதிலிருந்து கிளைத்த தொகுப்புமுறையும் உண்டு. மூன்றாவதாக இன்று வலுப்பெற்றிருப்பது சாதியவரலாறு. எல்லாச் சாதியினருமே ஒரேசமயம் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஆண்டகுடிகளாகவும் எண்ணிக்கொள்ளும் வரலாறு இது. இது இன்று ஒருவகை நேரடி வன்முறையாகவே மாறிவிட்டிருக்கிறது. எந்தவரலாற்றெழுத்தாளனும் இவர்களை அஞ்சியே ஆகவேண்டும்.

இதற்கு நடுவே அவ்வப்போது வந்துகொண்டிருக்கும் பொருட்படுத்தத் தக்க வரலாற்றுநூல்கள் பெரும்பாலும் தகவல்களின் கோவைகளாகவே உள்ளன. வரலாற்றெழுத்தின் மொழியும் தர்க்கமும் அமையவில்லை என்றாலும் இவற்றிலுள்ள தகவல்களின் தொகுப்புக்காகவே இவை முக்கியமானவை. அவ்வகையில் குறிப்பிடத்தக்க நூல்களில் ஒன்று வே.மகாதேவன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றில் பழையாறை மாநகர்.

பட்டீஸ்வரம்
பட்டீஸ்வரம்

தொடர்ச்சியாக வரலாற்றை வாசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இத்தகைய நூல்கள் பயனுள்ளவை. அவர்கள் ஏற்கனவே அறிந்திருப்பவற்றில் சிறிய துல்லியங்களை இவை உருவாக்குகின்றன. மேலும் சற்று தகவல்செறிவை அளிக்கின்றன. மிக அரிதாக சில புதிய திறப்புகளை இயல்வதாக்குகின்றன. தகவல்களினூடாக வரலாற்றுச் சித்திரத்தை உருவகித்துக்கொள்ள முடிபவர்களுக்கு உள எழுச்சியூட்டும் வாசிப்பாக அமைகின்றன.

முன்பு பழையாறை என்று அழைக்கப்பட்ட தொல்நகர் இன்று பழையார் என்ற பேரில் கும்பகோணத்தின் அருகே ஒரு சிற்றூராக விளங்குகிறது. அரிசில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இன்று கும்பகோணத்தின் வளர்ச்சி காரணமாக இது கும்பகோணத்தின் ஒருபகுதியே. கும்பகோணத்தின் பேட்டைநாணயக்காரத் தெரு முதல் முடிகொண்டான் ஆறு வரை பழையாறை என்று சொல்லலாம். பழைய பழையாறையின் பகுதிகள் பழையார். பட்டீஸ்வரம், திருச்சத்திமுற்றம், அரிச்சந்திரம்  பாற்குளம், முழையூர், இராமநாதன்கோயில், தாராசுரம், கோணப்பெருமாள்கோயில், ஆரியப்படையூர்,பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், ராஜேந்திரன்பேட்டை ஆகிய ஊர்களாக இன்று உள்ளன என ஆசிரியர் சொல்கிறார்.

பழையாறை சைவக்குரவர் முதல்மூவர் பாடல்களில் ஆறை என்றும் பழைசை என்றும் சொல்லப்படுகிறது. பழையாறு என்றும் நந்திபுரி என்று நந்திபுரம் என்றும் முடிகொண்ட சோழபுரம் என்றும் ஆகவமல்ல குலகாலபுரம் என்றும் இராஜராஜபுரம் என்றும் முடிகொண்டசோழபுரம் என்றும் இந்நகர் அழைக்கப்படுகிறது.

தாராசுரம்
தாராசுரம்

பழையாறையின் முதன்மையான சிறப்பு தமிழகத்தின் தொல்லூர்களில் ‘பழைய’ என்று பெயரிலேயே அடைமொழி இருக்கும் ஊர் இதுதான் என்பது. அதாவது பிற்காலப் பல்லவர், பிற்காலச் சோழர்காலகட்டத்தில், கிபி ஐந்தாம்நூற்றாண்டுமுதலே, இவ்வூர் பழையாறை என்றே அழைக்கப்பட்டது. ஆறைநகர் பழையாறையாக ஆனபின்னர்தான் வரலாற்றுக்குள்ளேயே நுழைகிறது. விரிவாக எழுதப்படவேண்டிய ஒரு மாபெரும் வரலாறு இந்நகருக்கு உண்டு. வே.மகாதேவனின் இந்நூல் அவ்வாறு எழுதத் தொடங்குபவர்களுக்கான ஒரு எளிமையான தகவல்தொகுப்பும் முன்னடிவைப்பும் என்று சொல்லலாம்.

பழையாறைநகர் பெருங்கற்காலத்திலேயே முக்கியமான மக்கள்குடியிருப்புகள் கொண்டதாக அமைந்திருக்கிறது. அதற்குக் காரணம் மிதமான மழை காரணமாக அடர்காடுகள் இல்லாமலிருந்ததும் அதேசமயம் ஆற்றின்கடையாக நீர்வளம் கொண்டிருந்தமையால் வேட்டைவிலங்குகள் கிடைத்ததும் வேளாண்மைக்கு உகந்த மண்கொண்டிருந்ததும்தான். கிபி ஆறாம் நூற்றாண்டிலேயே பழையாறை சமயச்சிறப்பு கொண்ட ஊராக இருந்திருக்கிறது. இங்கிருந்த வடதளி என்ற ஊரை தேவாரம்பாடிய திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். இங்கே அன்று இருந்த ஆலயங்கள் செங்கல்தளிகளாக இருந்திருக்கலாம்.

கோவிந்த தீட்சிதர்
கோவிந்த தீட்சிதர்

பல்லவமன்னன் இரண்டாம்நந்திவர்மன் காலகட்டம் [710-715] முதல் பழையாறை அரசியல்மையமாக ஆகத்தொடங்கியது. நந்திவர்மனின் இரண்டாம் தலைநகரமாக பழையாறை மாறியது. பல்லவநாட்டின் தென்னெல்லையாகவும் விளங்கியது. அப்போது நந்திபுரம் என்ற பெயர் பழையாறைக்கு இருந்தது. ’திருக்கோடிக்காவலாகிய கணமங்கலத்துச் சபையினர் பழையாறையாகிய நந்திபுரத்து வணிகன் குமரன் கணபதியிடம் ‘சதாசிவப் பட்டராலய மண்டபம்’ எடுப்பிக்கத்தந்த இறையிலியை உரைக்கும் கல்வெட்டு வழியாக நந்திபுரம் என்ற பெயர் பழையாறைக்கு இருந்தது பெறப்படும்’ என ஆசிரியர் கூறுகிறார்.

பல்லவர்களின் ஆட்சி தமிழகத்தின் பெரும்பகுதியில் நிலவியபோது பழையாறை பல்லவர்களுக்கு கப்பம் கட்டிய சோழர்களின் தலைநகராக விளங்கியது. பிற்காலப் பாண்டியர்களில் கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்ட பாண்டியன் சுந்தரமாறனின் மனைவி மங்கையற்கரசி மணிமுடிச்சோழன் என்னும் சோழமன்னனின் மகள் என திருஞானசம்பந்தர் சொல்கிறார். இச்சோழனின் தலைநகர் பழையாறை என குறிப்பிடப்படுகிறது.

பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பின் சோழர்களின் தலைநகராக பழையாறை ஆற்றல்கொண்டு எழுந்தது.   முதற்பராந்தகன் [907-53] காலகட்டத்தில் 14-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று பழையாறையை குறிக்கிறது. பழையாறையின் சிறப்பு முதலாம் ராஜராஜன் காலகட்டத்தில் உச்சத்தை அடைந்தது. இக்காலகட்டத்தில் பழையாறை இரண்டாம் தலைநகராக விளங்கியது. இன்று பழையாறையிலிருக்கும் பல ஆலயங்கள் ராஜராஜனால் கட்டப்பட்டன. தளிச்சேரிகள் அமைக்கப்பட்டு தேவரடியார் குடியேற்றப்பட்ட செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகள் அன்று பழையாறையிலிருந்த ஆலயங்களின் கணக்கை அறிவிக்கின்றன.

முதலாம் ராஜேந்திரன் நெடுங்காலம் அரசப்பிரதிநிதியாக பழையாறையில் வாழ்ந்தவன். பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ராஜேந்திரசோழனின் ஆணைகள் பழையாறையிலிருந்து வெளியானமையை காட்டுகின்றன. உதாரணமாக, ‘இராசேந்திரனுடைய மூன்றாவது ஆட்சியாண்டில் திருக்கற்குடி விழுமியார்க்குரிய பிரமதேய நிலங்கள் அளக்கப்பெற்றன. இதற்குரிய உத்தரவை பழையாற்று அரண்மனையில் தெற்குப்பக்கத்து உணவுச்சாலையில் இருந்தபோது அரசன் பிறப்பித்தான் என்பது உய்யக்கொண்டார் திருமலைக் கல்வெட்டில்கண்டது’ என ஆசிரியர் சுட்டுகிறார்.

ராஜேந்திரனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று முடிகொண்ட சோழன். அவன் பெயரை ஒட்டி பழையாறையும் அன்று முடிகொண்டசோழபுரம் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து சோழர் ஆட்சிக்காலம் முழுக்க பழையாறை பெருஞ்சிறப்புடன் விளங்கியதை ஆசிரியர் ஆவணங்கள் வழியாக காட்டுகிறார். இரண்டாம் இராஜராஜன் [1146-63] பழையாறையை தன் முதற்தலைநகரமாகக் கொண்டான். அப்போது அவன்பெயரில் இந்நகர் இராஜராஜபுரம் என்று பெயர் பெற்றது. நகரைச்சூழ்ந்து அரணையும் அவன் அமைத்தான். இவன் கட்டிய இராஜராஜேஸ்வரம் என்னும் பேராலயமே இன்று தாராசுரம் என அழைக்கப்படுகிறது. தென்னகக் கட்டிடக்கலையின் உச்சங்களில் ஒன்று அது.

மூன்றாம் குலோத்துங்கன் [1178-1218] ஆட்சிக்காலத்திலும் பழையாறை தலைநகரமாகவே இருந்தது. இவன் பழையாறையில் பேராலயங்களை எடுத்தான். தாராசுரம் ஆலயத்தின் கோபுரத்தை பொன்வேய்ந்தான். மூன்றாம் இராஜராஜன் காலகட்டத்தில் 1219-இல் பாண்டியமன்னன் சுந்தரபாண்டியன் சோழநாட்டை வென்று பழையாறையை கைப்பற்றி பழையாறை அரண்மனையில் ஆயிரத்தளிமண்டபத்தில் வீராபிஷேகம் செய்துகொண்டான். 1231-இல் மீண்டும் படையெடுத்துவந்த சுந்தரபாண்டியன் பழையாறை அரண்மனையில் வீராபிஷேகம் செய்துகொண்டான்.

அதன்பின் சோழர் ஆட்சி அருகி மறைய பழையாறையும் கைவிடப்படலாயிற்று. பழையாறை நகர் பாண்டியர்களால் தொடர்ந்து சூறையாடப்பட்டது என்று பாண்டியன் மெய்கீர்த்திகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஆலயங்கள் மட்டும் இடிக்கப்படவில்லை. பின்னர் வரலாற்றில் பழையாறையைப் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இல்லை. பழையாறை அரசச்சிறப்பு மறைந்தாலும் சமயச்சிறப்பு கொண்டு வணிகமையமாக மேலும் சிலகாலம் நீடித்தது. 1310-இல் தஞ்சைநிலம் மேல் படைகொண்டுவந்த மாலிக் காபூர் பழையாறையை முழுமையாகச் சூறையாடி அழித்தான்.

பழையாறை பல ஊர்களாகச் சிதறியது. சிறப்பிழந்து வரலாறு மறைந்து காலத்தில் புதைந்தது. பின்னர் விஜயநகரை ஆண்ட நாயக்க மன்னர்கள் சோழநிலத்தைக் கைப்பற்றியபோது ஆலயங்கள் பழுதுபார்க்கப்பட்டன. வழிபாட்டுக்கு புதிய இறையிலிநிலங்கள் அளிக்கப்பட்டன. காவிரிநீர் பாயும் பட்டீஸ்வரம் வாழ்வதற்குத் தகுதியான நிலமாக இருக்கவில்லை என நாயக்கர் கால சம்ஸ்கிருதக் கல்வெட்டு சொல்கிறது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கர் [1541–1580] பழையாறையின் ஆலயங்களை மீட்டுக் கட்டி இன்றைய வடிவில் அமைத்தார்.

வே மகாதேவன்
வே மகாதேவன்

விஜயநகர அரசரின் மகாமண்டலேஸ்வரனான திருமலைத் தேவமகாராயன் என்பவனால் பழையாறையின் பலபகுதிகள் புதுப்பிக்கப்பட்டன. 1450-ஆம் ஆண்டில் அவன் சத்திமுற்றம் கோபிநாதப்பெருமாள் ஆலயத்தை சீரமைத்தசெய்தியை கல்வெட்டு சொல்கிறது. தஞ்சை நாயக்க மன்னரின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர் பட்டீஸ்வரத்தில் பல திருப்பணிகளை செய்தார். 1453-இல் பழையாறை சிவன்கோயில் மண்டபம் வாணாதரையனால் கட்டப்பட்டது. விஜயநகர நாயக்கர் ஆட்சியில் ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய அந்தணர்குடியேற்றங்கள் உருவாயின. ஏரிகளும் குளங்களும் வெட்டப்பட்டன. பழையாறை பல ஊர்களாக மாறி மக்கள்வாழ்க்கைக்கு வந்தது. ஆனால் அதன் தொல்சிறப்பு வரலாற்றுச்செய்தியாகவே எஞ்சியது.

பழையாறையைக் குறித்த இந்நூலில் இங்கு இன்றுள்ள ஆலயங்களையும் இன்றைய அகழ்வாய்வுகள் வெளிப்படுத்தும் புதியசெய்திகளையும் ஆசிரியர் தொகுத்துச் சொல்கிறார். பழையாறையின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருக்கும் நந்திவர்மன், ராஜராஜன், ராஜேந்திரன், இரண்டாம் ராஜராஜன் ஆகியோரின் வரலாறுகளுடன் இந்நகரில் வாழ்ந்த அமரநீதிநாயனார் என்னும் சைவக்குரவர்,  பின்னாளில் இந்நகர் மீண்டெழக் காரணமாக அமைந்த திருமலைத்தேவ மகாராஜ மண்டலராயன் என்னும் படைத்தலைவர், அமைச்சரான கோவிந்த தீட்சிதர், இந்நகரை மறுகட்டமைப்பு செய்த தஞ்சை ரகுநாதநாயக்கர் ஆகியோரைப்பற்றிய குறிப்புகளையும் அளிக்கிறார்.

ஒரு மகத்தான காவியப்புலம் என வியப்பூட்டுகிறது பழையாறையின் வரலாறு. என்று எனத் தெரியாத தொல்காலத்தில் தோன்றி, வரலாற்றிலேயே பழையநகர் என புகுந்த ஒரு நகரம் ஓங்கி மெல்ல வீழ்ச்சியடைந்து சற்றே மீண்டு தொன்மமாகவும் வரலாறாகவும் நின்றிருப்பதன் சித்திரம். இந்நூல் வெறும் செய்திகளை மட்டுமே அளிக்கிறது. பழையாறை நகரின் இன்றைய நிலப்பகுதிகளின் விளக்கம். இங்குள்ள ஆலயங்களின் பட்டியல், பழையாறை குறித்த கல்வெட்டுச்செய்திகள், இலக்கியச் சான்றுகள், வரலாற்றுப்பின்புலம் ஆகியவற்றைப் பற்றிய ஆதாரபூர்வச் செய்திகளை ஒழுங்குபடுத்தி சொல்லிச்செல்லும் நூல் இது.

இந்நூலில் ஆசிரியர் ஓர் ஆவணத்தொகுப்பாளராகவே செயல்படுகிறார். தன் கருத்து அல்லது முடிவு என எதையும் சொல்வதில்லை. வரலாற்றுநூல்களுக்குரிய நேரடியான கணக்குவழக்கு நடை. ஆயினும் வரலாற்றுநூல்களை வாசிப்பவர்களுக்கு பழையாறை என்னும் பெருஞ்சித்திரத்தை உருவாக்கியளிக்கிறது இந்நூல்.

வரலாற்றில் பழையாறை மாநகர் புலவர் வே. மகாதேவன்

 ===========================================================================================

தஞ்சை தரிசனம் – 5

தஞ்சை தரிசனம் – 4

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-24

$
0
0

ele1துச்சாதனன் வெளியே படையானை ஒன்றின் பிளிறலைக் கேட்டதுமே துரியோதனனின் வருகையை உணர்ந்தான். அதன் பின்னரே அரச வருகையை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது. அவையிலிருந்தவர்கள் தங்கள் ஆடைகளையும் அணிகளையும் சீரமைத்துக்கொண்டனர். பீடத்தில் சற்றே உடல் சாய்த்து விழிசரிய துயில் கொண்டவன்போல் அமர்ந்திருந்த கர்ணனிடம் மட்டும் எந்த அசைவும் ஏற்படவில்லை. துச்சாதனன் அறைவாயிலுக்குச் சென்று நின்றான். அப்பால் தேரிலிருந்து இறங்கிய துரியோதனன் அவை நோக்கி வந்த நடையிலேயே அவன் உளம் உவகையில் துள்ளிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் துச்சாதனனை அது மகிழவைக்கவில்லை.

தன்னைத் தொடர்ந்து வந்த துர்மதனிடமும் துச்சகனிடமும் விரைந்த சொற்களாலும் சுழலும் கையசைவாலும் பேசிக்கொண்டே வந்தவன் துச்சாதனனை நெருங்கியதும் அவன் தோளில் ஓங்கி ஓர் அறைவிட்டு “அனைவரும் வந்துவிட்டார்களா?” என்றான். துச்சாதனன் “ஆம் அரசே, தங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். கைகளைக் கூப்பியபடி துரியோதனன் அவைக்குள் நுழைந்தபோது அங்கிருந்தோர் எழுந்து வாழ்த்துரைத்தனர். வணங்கியபடி சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். அவைமுறைமைகள் தொடங்குவதற்குள் திரும்பி துச்சாதனனிடம் அவை தொடங்கலாம் என்று கைகாட்டினான்.

துச்சாதனன் தன்னிடம் அவன் அவ்வாறு சொல்லும் வழக்கமில்லையென்பதனால் திகைத்து பின்னர் அவை நோக்கி கைகூப்பி “அரசர் வாழ்க! வாழ்க அமுதகலக்கொடி! அவை நிகழ்க!” என்றான். தன் குரல் அவனுக்கே அயலாக ஒலித்தது. வழக்கமாக முதற்சொல் எழுவதற்காகக் காத்திருக்கும் அவை அன்று புத்துணர்ச்சியுடன் இருந்தது. அஸ்வத்தாமன் எழுந்து “இந்நாளில் நம் போர்களில் குறிப்பிடும்படியான வெற்றி ஒன்றை அடைந்த மகிழ்வுடன் நாம் கூடியிருக்கிறோம். இளைய பாண்டவர்கள் அர்ஜுனரும் நகுலரும் சகதேவரும் அவர்களின் மைந்தர்களும் பீமனின் மைந்தர்களும் புண்பட்டு மருத்துவநிலைகளில் படுத்திருக்கிறார்கள் என்ற செய்தி இப்போது வந்துள்ளது” என்றான்.

அவையினர் கைகளைத் தூக்கி ஆர்ப்பரித்தனர். துரோணர் மட்டும் தாடியை நீவியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அஸ்வத்தாமன் “அர்ஜுனரின் நிலை இன்னும் எதுவும் கூறவொண்ணாதபடியே உள்ளது. மருத்துவர்கள் அவர் விளிக்கு மறுவிளி அளிப்பது வரை காத்திருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அங்கே மருத்துவநிலைக்கு வெளியே யுதிஷ்டிரரும் பிறரும் நின்றுகொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும் நாளை போருக்கு அர்ஜுனர் எழப்போவதில்லை. அவர்கள் தோல்வியின் முதற்சுவையை அறிந்துவிட்டார்கள். நாம் வெற்றியின் சுவையை” என்றான். சல்யர் கைகளைத் தூக்கி “வெற்றி தொடங்கிவிட்டது. நாளையே நாம் போர்நிறைவு செய்வோம்” என்றார்.

“நமது படைகள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன” என்று அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “நேற்று மாலை நம்பிக்கையிழந்து சோர்ந்து மீண்டார்கள். இரவெல்லாம் அங்கர் வருவார் என காத்திருந்தனர். அவரை எண்ணி படைமுகம் எழுந்தார்கள். ஒளிமிக்க உருவுடன் அவர் படைமுகப்பில் எழுந்தபோதே உளம்மீண்டனர். இப்போது வெற்றிபெற்றுவிட்டோம் என்றே எண்ணி ஆர்ப்பரிக்கிறார்கள்.” ஜயத்ரதன் “ஆம், நான் இங்கு வரும்போது பார்த்தேன். நமது படைகளில் புத்தூக்கம் நிறைந்துள்ளது. விழியோட்டிய திசையெங்கும் மதுக்கிண்ணங்களுடன் களிகொண்டாடும் படைவீரர்களையே பார்த்தேன்” என்றான்.

அருகில் நின்ற பகதத்தர் “என்னுடைய படைகளை ஒட்டி அசுரர்களின் படைப்பிரிவுகள் உள்ளன. அவர்கள் அங்கே தவ்வையின் கல்வடிவம் ஒன்றை வைத்து வழிபடுவதைக் கண்டேன்” என்றார். அனைவரும் அவரை நோக்கி திரும்ப அஸ்வத்தாமன் “தவ்வையா?” என்றான். சுபாகு “அசுரர்களும் அரக்கர்களும் தவ்வையை தங்கள் அமுதுக்குரிய தெய்வமாக வணங்குகிறார்கள். முன்பு பாற்கடலை தேவரும் அசுரரும் கடைந்தபோது அசுரருக்கு அருளும் இன்னமுதுடன் எழுந்தவள் என்று தவ்வை அவர்களால் கருதப்படுகிறாள். உண்டாட்டுகளிலும் மதுக்களியாட்டுகளிலும் தவ்வையை நிறுவி அவளுக்கு முதற்கலம் அளித்துக் கொண்டாடுவது அவர்களின் வழக்கம்” என்றான்.

துரியோதனன் “ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய வகையில் கொண்டாடட்டும்” என்றான். சுபாகு “நமது படைகளிலும் தவ்வையின் அமுதை உண்டு களியாடுகிறார்கள். நான் வரும்போது பார்த்தேன்” என்றான். ஜயத்ரதன் நகைத்தபடி கைகளைத் தூக்கி “கௌரவப் படைகளில் தவ்வை எழுக! அவள் அமுது நம்மை ஆற்றல் கொண்டவராக்குக!” என்றான். அவையினர் அனைவரும் கைகளைத் தூக்கி வாழ்த்துரை கூவிச் சிரித்தனர். சற்றுநேரம் அவை நகையாட்டும் சிரிப்புமாக நிறைந்திருந்தது.

துரியோதனன் “கூறுக அஸ்வத்தாமரே, நாளை நம் படைசூழ்கை என்ன?” என்றான். அஸ்வத்தாமன் “இன்று நமது படைசூழ்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து பாண்டவப் படைகளை சிதறடித்திருக்கிறோம். இன்றைய வெற்றியை நான் கூர்ந்து நோக்கியபோது உணர்ந்தது ஒன்றே. இன்று போரில் முதன்மைப் பெருவீரராகிய அங்கர் வென்று முன் சென்றார். அவரது அம்புகளுக்கு நிகர் நிற்க பாண்டவர் தரப்பில் எவரும் இருக்கவில்லை. ஆனால் எந்நிலையிலும் அவர் நம் சூழ்கையின் ஒரு பகுதியாகவே இருந்தார். பீஷ்மர் களம் நின்று போரிட்டபோது நம் சூழ்கையை அவருக்கிணையாக கொண்டு செல்வதற்காகவே நமது ஆற்றலின் பெரும்பகுதியை செலவழித்தோம். இன்று தெய்வத்தின் பீடமென அமைந்திருந்தது நமது சூழ்கை. இனியும் அவ்வண்ணமே அமைக!” என்றான்.

துச்சாதனன் துரோணரை பார்த்தான். துரோணர் தன் தாடியை கைகளால் நீவியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவன் விழியசைவினூடாக துரோணரை நோக்கிய துரியோதனன் “ஆசிரியரே, இன்றைய போரில் தாங்கள் ஆற்றிய பெரும்பணியால் நாம் வெற்றிமுகம் நோக்கி செல்கிறோம். அதன்பொருட்டு நான் தங்கள் அடிபணிய கடமைப்பட்டுள்ளேன்” என்றான். கைநீட்டி அவன் பேச்சைத் தடுத்து தலைதூக்கி, வெறுப்பால் உள்மடிந்து இறுகிய வாயும் நீர்மை படிந்த கண்களுமாக துரோணர் சொன்னார் “வீண்சொற்கள் வேண்டியதில்லை. நமது படைகள் வென்றன. நான் தோற்றேன்.” துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுக்க அவர் கைவீசி அவனை நிறுத்தி மேலும் கசப்புடன் சொன்னார்.

“எனக்கு இப்படை அளித்திருந்தது ஒரே பணி. அதை நான் தவறவிட்டேன். யுதிஷ்டிரனை சிறையெடுத்து வந்திருந்தால் இன்று நாம் போர் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருப்போம். நாளை அஸ்தினபுரியின் மும்முடி உங்கள் தலையில் அமைந்திருக்கும். பல்லாயிரம் படைவீரர்கள் இறப்பொழிந்து தங்கள் குடிகளுக்கு மீண்டிருப்பார்கள். என்னால் இயலவில்லை.” அவர் குரல் தழைந்தது. அவையினர் உளநிலை மாறி அவரை நோக்கி அமர்ந்திருக்க விம்மல் கலந்த குரலில் துரோணர் சொன்னார் “நான் தோற்று நின்றிருக்கிறேன். என் விற்தொழில் தவம் பொருளிழந்ததாகிறது.” தன்னைச் சூழ்ந்திருந்த அமைதியைக் கண்டு அவர் விழிதூக்கினார். ஷத்ரியர்களின் விழிகளை சந்தித்ததும் சீற்றம்கொண்டார்.

“என் திட்டங்களை நொறுக்கியவன் அவன். அந்த இளைய யாதவன். பிற எவருக்கும் தோன்றாத ஒரு வழி எப்போதும் அவனுக்குத் தோன்றுகிறது. பிறர் துணியாதபோதும் அவன் எழுகிறான். பிற எவருக்கும் தோன்றாதது என்பதனாலேயே அங்கு எதிர்ப்புகள் எதுவும் இருப்பதில்லை. அவ்வாறு நமது படைகளை குறுக்காக வெட்டி அவன் என்னை நோக்கி குறுக்காக வரக்கூடுமென்று ஏன் எண்ணாமல் போனேன் என்று நூறுமுறை என் தலையில் அறைந்துகொண்டேன். இந்தத் தன்னிழிவிலிருந்து இனி ஒருபோதும் என்னால் மீள முடியாது.”

அஸ்வத்தாமன் ஏதோ சொல்ல முயல “நில்!” என்று அவனை நிறுத்தி துரோணர் சொன்னார் “நிகழ்ந்தது ஒன்றே. அவன் நான் ஆடிய ஆட்டத்தையே திருப்பி என்னிடம் ஆடினான். அவர்கள் படைமுகப்பில் அனைத்து ஆற்றலையும் குவித்ததனால் படைகளுக்குப் பின் பக்கம் எவருமிருக்கவில்லை. ஆகவே நான் வளைந்து சென்று படைகளுக்குப் பின்புறத்தைத் தாக்கி யுதிஷ்டிரனை சிறைபிடித்தேன். யுதிஷ்டிரனை நமது படைப்பிரிவுக்குள் கொண்டு வந்ததுமே வென்றுவிட்டோம் என்ற உணர்வு நமக்கு ஏற்பட்டது. ஆகவே நாம் அவனை காத்துக்கொள்ள எதுவும் செய்யவில்லை. யுதிஷ்டிரனை அவர்கள் வந்து மீட்பது அதற்குப் பின் இயல்வதல்ல என்று நாமே எண்ணிக்கொண்டோம். அவ்வெண்ணத்தால் ஆற்றலிழந்த நம் படைகளை ஊடுருவி வந்து அவன் கைபற்றிச் சென்றான்.”

“ஆசிரியரே, உங்கள் வீரம் உலகறிந்தது” என அவரிடம் ஆறுதல் சொல்ல முற்பட்டான் துரியோதனன். அவனைத் தடுத்த துரோணர் “வீரமின்மையால் நான் தோற்கவில்லை என நானும் அறிவேன். நான் தோற்றது நெறியால். அர்ஜுனன் தன் தமையனை நாடி வந்துவிட்டதை அறிந்தபோது என்னருகே தேரில் வெறும் கையுடன் யுதிஷ்டிரன் நின்றிருந்தான். அக்கணமே திரும்பி அவன் தலையை கொய்தெறிந்திருந்தால் அப்போதே இந்தப் போர் முடிந்திருக்கும்” என்றார். அவை சொல்லணைந்து நோக்கி அமர்ந்திருக்க சல்யர் “என்ன சொல்கிறீர்கள்?” என முனகினார்.

“நான் அதை செய்யவில்லை. செய்ய என்னால் இயலவில்லை. ஏன்? அவன் செய்திருப்பான் அல்லவா? சொல்க, பீமன் அதை செய்திருப்பான் அல்லவா? ஏன் நான் செய்யவில்லை? ஏனென்றால் எனக்கு நானே முதன்மையானவன். என் நெறிகள். என் மரபு. என் புகழ். அதற்குமேல் நின்றிருக்கும் ஒன்றும் என்முன் இல்லை. அவன் முன் அவனுக்கு இளைய யாதவன் கற்பித்த பேரறம் ஒன்று இருந்தது. அவனுக்கு அவன் உயிரைப்போலவே புகழும் ஒரு பொருட்டல்ல. என்னுடைய தயக்கத்தை அறமென்று நான் சொல்லிக்கொள்ளலாம். அது வெறும் ஆணவம் மட்டுமே.”

துரோணரின் குரல் ஓங்கியது. “அவன் எனக்கொரு சொல் உரைத்திருக்கிறான். ஆணவத்தால் நான் அழியப்போகிறேன் என்று. ஆம் ஆம் என்று என் உள்ளிருந்து என் தெய்வங்கள் உரைக்கின்றன” என்றார் துரோணர். அவர் தொண்டை இடற அழுகையில் முகம் இழுபட்டது. அவை துரோணரின் கண்ணீரை பார்த்தபடி அமர்ந்திருந்தது. அடக்க அடக்க விழிநீர் பெருகி வர துரோணர் தன் இரு கைகளாலும் கண்களை அழுத்தி அதை நிறுத்தினார். அதே கைகளால் தாடியை நீவி உடல் உலுக்கிய விம்மல்களை அடக்கினார். பின்னர் நிமிர்ந்து “ஆனால் நான் என் ஆணவத்தை ஒழியப்போவதில்லை. ஆணவம் ஒழிந்தபின் எவன் போர்புரிய முடியும்? இக்களத்திற்கு நான் வந்ததே என் ஆணவத்தால்தான்” என்றார்.

“நேற்று உரைத்தேன் என் விழைவால் கீழிறங்கினேன் என்று. இன்று உணர்கிறேன் அவ்விழைவால்தான் நான் போர்வீரன் என. அவ்விழைவு இல்லையேல் களத்திற்கே வந்திருக்க மாட்டேன். என் விழைவையும் ஆணவத்தையும் மேலும் பெருக்கவே எண்ணுகிறேன். என்னை கட்டுப்படுத்தும் எதுவேனும் இருந்தால் அதை நாளை களையவிருக்கிறேன். அது தெய்வங்களும் மூதாதையரும் ஆசிரியரும் எனக்களித்த நற்கொடைகளாக இருப்பினும் சரி, நாளை கட்டற்றவனாக களம் நிற்பேன். இனி வெற்றியொன்றே எனக்குரியது. இல்லையேல் வாழ்வதில் பொருளில்லையென்றே ஆகும்” என்றார் துரோணர். எழுந்து தன் கையை தூக்கி  “அரசருக்கு நான் ஒன்று சொல்கிறேன், இன்று விட்டதை நாளை செய்வேன். நாளை யுதிஷ்டிரனைச் சிறைப்பிடிப்பேன். அதன்பொருட்டு மட்டுமே போர்புரிவேன்” என வஞ்சினம் உரைத்தார்.

துரோணரின் உணர்வுகளைப் பார்த்தபடி அவை பேசாமல் அமர்ந்திருந்தது. அவரை உறுத்துநோக்கியபடி இருப்பதை உணர்ந்து ஒவ்வொருவராக விழிதாழ்த்தி உடலசைத்து தலை திருப்பி நிலை மீண்டனர். துரியோதனன் இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை தட்டியபடி “நாம் நமது சூழ்கைகளைப் பற்றி பேசுவோம்” என்றான். ஜயத்ரதன் “அங்கரை எதிர்கொள்ள அர்ஜுனனாலும் அபிமன்யுவாலும் பிறராலும் இயலவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நம் படைகளை அதை ஒட்டியே நாம் அமைப்போம். நாளை அர்ஜுனன் களத்திற்கு வரவில்லையெனில் அவர்களில் எவர் எழுந்தாலும் எவ்வகையில் படைசூழ்கை அமைத்திருந்தாலும் நாம் வெல்வோம்” என்றான்.

“அர்ஜுனன் களம்வருவது அரிதினும் அரிது என்றே செய்திகள் சொல்கின்றன” என்று சுபாகு சொன்னான். அஸ்வத்தாமன் “ஆயினும் அவர் அர்ஜுனர். காண்டீபம் ஏந்திய பாரதர். நாம் அவரை எவ்வகையிலும் குறைத்துக்கொள்ளவேண்டியதில்லை” என்றான். “ஆகவே நமது படைசூழ்கையை இரு வாய்ப்புகள் கொண்டதாக அமைப்போம். அர்ஜுனர் வருவார் எனில் என்ன செய்வோம், வராதொழிந்தால் எவ்வண்ணம் கடந்து சென்று அமைப்போம் என திட்டமிடுவோம்.” ஜயத்ரதன் “ஆம், அதுவே உகந்தது” என்றான். துரியோதனன் “அவன் மீளவும்கூடும்… அதையும் கருத்தில் கொள்வோம்” என்றான்.

அஸ்வத்தாமன் “அரசே, நாம் நாளை வென்றாகவேண்டும். இன்று அவர்களின் படையின் அடித்தளங்களை நொறுக்கியிருக்கிறோம். நொறுங்கிய அடித்தளங்கள் அவ்வகையிலேயே அமைவு கொண்டு உறுதி அடையவும் வாய்ப்புண்டு என்கிறார்கள். அது நிகழலாகாது. அர்ஜுனன் இல்லாதபோது படைநடத்தும் தன்னம்பிக்கையும் திறனும் சாத்யகிக்கோ திருஷ்டத்யும்னருக்கோ வந்துவிடலாகாது. ஆகவே, நாளை அப்படையை ஒட்டுமொத்தமாக சரித்து இடும் பெரும்படைசூழ்கையை நாம் அமைக்கவேண்டும். என் உள்ளத்தில் ஓர் எண்ணம் உள்ளது” என்றபடி அவன் தன் தோற்சுருளை எடுத்தான்.

அவையின் பின்நிரையிலிருந்து திரிகர்த்தனாகிய சுசர்மன் எழுந்து முகப்புக்கு வந்தான். கைகளைத் தூக்கியபடி அவை நோக்கி திரும்பி “எங்களுக்கு பாண்டவர்களுடன் ஒரு கணக்கு இருக்கிறது. அதை ஆசிரியரும் அவையோரும் அறிவீர்கள். இந்தக் களத்திற்கு சம்சப்தர்களாகிய நாங்கள் வந்ததே அக்கணக்கை தீர்க்கத்தான். நாங்களும் வஞ்சினம் உரைக்கிறோம், திரிகர்த்தர்களாகிய நாங்கள் நாளைய போரில் அர்ஜுனனை கொல்வோம். நாளை அந்த ஒற்றை இலக்குடன் நாங்கள் களம்நிற்கவிருக்கிறோம்” என்றான்.

அவன் தம்பியரான சத்யரதன், சத்யவர்மன், சத்யவிரதன், சத்யேஷு, சத்யகர்மன் ஆகிய ஐவரும் எழுந்து அவை முகப்புக்கு வந்தனர். சத்யரதன் “ஆம், அது எங்கள் வஞ்சினம். நாங்கள் இன்று அந்த உறுதியை பூண்ட பின்னரே இந்த அவைக்கு வந்தோம்” என்றான். சுசர்மன் “அவையோர் அறிக! எங்களுக்கும் பாண்டவர்களுக்குமான போர் தொடங்கி நெடுநாட்களாகின்றன. இளைய மைந்தனாகிய அர்ஜுனன் எங்கள் நாட்டினூடாக தன் வடபுலப் பயணத்தை நிகழ்த்தியபோது என் தந்தை சென்று வணங்கி கப்பம்கட்டி தன் பணிவை அறிவித்தார். மலைநில மக்களாகிய எங்களால் அஸ்தினபுரியின் பெரும்படையை எதிர்கொள்ள இயலாதென்று அவர் அறிந்திருந்தார்” என்றான்.

“நாங்கள் அஸ்தினபுரிக்கு கப்பம்கட்டும் நாடாகவே இருந்தோம். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்குமான பூசலில் எங்களுக்கு பங்கில்லை. ஆனால் இந்திரப்பிரஸ்தம் அமைந்ததும் நகுலன் படைகொண்டு வந்து எங்கள் நிலத்தை வென்று கப்பம் பெற்று சென்றான். அஸ்தினபுரியின் படைத்துணை இல்லாமல் நகுலன் ஆற்றலின்றி இருப்பான் என எண்ணிய என் மூத்தவராகிய சுரதர் படைகொண்டுசென்று நகுலனின் படைகளை எதிர்த்தார். ஆனால் அவர்கள் யாதவப் பெரும்படையுடன் வந்திருந்தனர். களத்திலேயே நகுலன் அவரை கொன்று வீழ்த்தினான்.”

“வஞ்சம் நோக்கியிருந்த நாங்கள் விராடபுரியில் பாண்டவர்கள் மறைந்திருந்ததை உணர்ந்து படைகொண்டுசென்றோம். அர்ஜுனன் எங்களை துரத்திவரவேண்டும் என்பதற்காக விராடரின் ஆநிரைகளை கவர்ந்து சென்றோம். அவனை எளிதில் வெல்லலாம் என எண்ணினோம். ஆனால் அவனை நாங்கள் குறைத்து எண்ணிவிட்டோம். விராடபுரியின் படைகளைத் திரட்டி துரத்திவந்த அர்ஜுனன் எங்கள் நாட்டுக்குள் புகுந்து எரியூட்டினான். எங்கள் குடிகளை அழித்தான். எங்கள் நாட்டை சாம்பலும் இடிபாடுகளும் கண்ணீரும் நிறைந்ததாக ஆக்கிவிட்டு திரும்பிச்சென்றான்.”

“விராடப் படைகள் என்னை சிறைபிடித்துச் சென்றன. அகுரம் என்னும் மூங்கில்கோட்டையில் என்னை சிறையிட்டன. பன்னிரு நாட்கள் அங்கே நான் சிறையிலிருந்தேன். என் குடியினர் வந்து பொன்னும் பொருளும் வைத்து அடிபணிந்து, ஏழுமுறை வணங்கி, முடிநிலம் வைத்த பின்னரே விடுவிக்கப்பட்டேன்” என சுசர்மன் சொன்னான். “அன்று ஒன்று உணர்ந்தோம். எங்களால் அர்ஜுனனையோ நகுலனையோ பழிவாங்க முடியாது. அவர்களுக்கு நிகரான எதிரி உருவாகும்போது எதிர்ப்புறம் சேர்வதொன்றே வழி. அதற்காக காத்திருந்தோம். அவையோரே, அரசே, நாங்கள் குருக்ஷேத்ரம் வந்தது அதற்காகவே.”

“இப்போரில் மீளமீள பாண்டவர்களை நாங்கள் தாக்கினோம். ஒருபோதும் அவர்களை வெல்ல எங்களால் இயலவில்லை. இன்றும் நாங்கள் களத்தில் சிதறடிக்கப்பட்டோம். புண்பட்டு சோர்ந்து குடிலுக்குத் திரும்பினோம். சற்றுமுன்பு நாங்கள் அதையெண்ணி துயர்கொண்டிருந்தோம். என் இளையோர் கூறினர், அவர்களை வெல்ல இயலாதென்றால் அவர்கள் கையால் இறப்போம். அந்தப் புகழேனும் எஞ்சட்டும் நமக்கு என்று. நான் துயருற வேண்டாம், நம் தெய்வங்கள் நம்மை கைவிடுவதில்லை என்றேன். நாங்கள் கள்ளருந்தி துயில்கொண்டிருந்தபோது ஒரு பெண் குடிலுக்குள் வந்து எங்களை எழுப்பி கையிலிருந்த மொந்தையை நீட்டினாள்.”

துச்சாதனன் மெய்ப்பு கொண்டு ஓர் அடி முன்னெடுத்து வைத்தான். “அவள் கரியவள். நீள்மூக்கும் எருமைவிழிகளும் கொண்டவள். அவள் எங்கள் குடித்தெய்வமான தமக்கை. நான் கனவிலோ நனவிலோ என அவளை கண்டேன். என் தம்பியரை எழுப்பினேன். மெய்யாகவே என் அறைக்குள் ஒரு குடுவையில் கடுங்கள் இருந்தது. அதை மாந்தினோம். அங்கிருந்து எழுந்து இங்கே வந்தோம்” என்று சுசர்மன் சொன்னான். “அவையினரிடம் நாங்கள் கோருவதொன்றே. இன்றுவரை உங்கள் படைசூழ்கையில் எங்களை அமைத்தீர்கள். இன்று எங்களுக்கு ஒரு தனி வாய்ப்பு கொடுங்கள். கொல்கிறோம், அன்றி சாகிறோம். இனிமேலும் பொறுத்திருக்க எங்களால் ஆகாது.”

“இன்று இங்கே வருவதற்கு முன்னர் போர்வீரர்களுக்குரிய அந்தத் தொன்மையான வஞ்சினத்தை நாங்கள் எடுத்தோம். கரிய ஆடை அணிந்து படைக்கலங்களில் குருதி தோய்த்து எங்கள் குடிதெய்வத்தின் முன்வைத்து வணங்கினோம். நாளை அர்ஜுனனை கொல்வோம். இல்லையேல் அங்கேயே களத்தில் உயிர்விடுவோம். அவனைக் கொல்லாது எந்நிலையிலும் படைமுகத்தில் இருந்து மீளமாட்டோம். அறிக தெய்வங்கள்! அறிக மூதாதையர்! அறிக அவை!” என்றான் சுசர்மன். திகைப்படைந்த அவை அவர்களை நோக்கி அமர்ந்திருக்க வாளை உருவி மும்முறை அசைத்தபின் அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

வெடித்தெழுந்ததுபோல் அவை ஓசையிட்டது. கையமர்த்தி அவர்களை நிறுத்திய பின் துரியோதனன் “நமது படைசூழ்கை என்ன என்று சொல்லுங்கள், அஸ்வத்தாமரே” என்றான். அஸ்வத்தாமன் தோல்சுருளை எடுத்து துரியோதனனிடம் அளித்துவிட்டு அவை நோக்கி திரும்பி “இம்முறை நம் இலக்கென்ன, அவர்களின் காப்புமுறை என்ன என இரண்டையும் நோக்கவேண்டியிருக்கிறது. நாளை அவர்களின் முதன்மைக் கவலை யுதிஷ்டிரரை காப்பதாகவே அமையும். இன்று நாம் அவரை கவர முயன்றதை அவர்களின் படைகள் நன்கு அறிவார்கள். ஆகவே அவர்களால் நாளை யுதிஷ்டிரரை ஒளித்து நிறுத்த முடியாது. அது அவருக்கு இழிவை உருவாக்கும்” என்றான்.

“அவரை அவர்கள் அணிசெய்து நடுக்களத்தில் கொண்டுவந்து நிறுத்தியாகவேண்டும். அவரைக் கண்டு பாண்டவப் படையினர் வஞ்சினக்குரல் எழுப்பியாகவேண்டும். அவர் படைமுகப்பில் இல்லையேல் அவர்கள் உளம்சோர்வார்கள். நாளை அர்ஜுனர் எழுவதும் ஐயத்திற்குரியது என்கையில் இதை தவிர்க்கவே முடியாது” என்றான் அஸ்வத்தாமன். “அதற்குரிய சிறந்த சூழ்கை என்பது அரைநிலவுச்சூழ்கையே. அரைவட்டவடிவிலானது அது. அதன் இரு முனைகளிலும் அவர்களிடமிருக்கும் தேர்ந்த வில்லவர்படையை நிறுத்துவார்கள். விசைகொண்ட தேர்களில் அவர்கள் இருப்பார்கள். பிறைநிலவின் இருமுனைகளும் இரு கூரிய வாள்களைப்போல.”

“பிறையின் மையத்தில் அவர்கள் யுதிஷ்டிரரை நிறுத்தினால் முழுப் படையினரும் அவரை காணமுடியும். அவர் படைமுகப்பில் நிற்பதாகவும் தோன்றும். ஆனால் அவர் உண்மையில் படைகளுக்கு உள்ளேதான் நின்றிருக்கிறார். அவரை நாம் தாக்கமுயன்றால் அரைநிலவின் இருமுனைகளும் வளைந்து முன்னெழுந்து அவரை கவரப்போகும் படைகளை சூழ்ந்துகொள்ளும்” என அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “அவரை அவர்கள் நமக்கு ஒரு பொறியாகவும் வைக்கலாம். அவரை காட்டிவிட்டால் நம்மால் கவராமலிருக்க இயலாது. அது நம் படைகளுக்கு முன் நாம் இழிவுகொள்வது. பன்றிக்கு வைக்கப்படும் பொறி அது. கவரச்சென்றால் இருபுறமும் இழுவிசை கொண்டு நின்றிருக்கும் வாள்களால் வெட்டப்படுவோம்.”

“நம் சூழ்கை என்ன?” என்று சல்யர் கேட்டார். “அதை நன்கு ஆராய்ந்தபின் நான் நமக்கு வகுத்துள்ளது கருடச்சூழ்கை” என அஸ்வத்தாமன் சொன்னான். “கருடனின் சிறகுகளும் வலுவான படைக்கலங்களே. கருடன் கூரலகை நீட்டி யுதிஷ்டிரரை கொத்தி எடுக்கட்டும். இருபக்கமும் எழுந்து அணையும் பிறையின் முனைகளை கருடனின் இரு சிறகுகளும் தடுக்கட்டும்.” சுசர்மன் “கருடனின் கழுத்தும் அலகும் நாங்கள்…” என்றான். “ஆம், அலகென ஆசிரியர் அமைக! நீங்கள் அவருக்கு துணைசெல்க!” என்றான் அஸ்வத்தாமன். “அர்ஜுனர் எழுந்தால் அவரை அங்கர் எதிர்கொள்ளட்டும். இல்லையேல் அபிமன்யுவை.”

துரியோதனன் சூழ்கையை நோக்கிவிட்டு “பழுதற்றிருக்கிறது” என்றான். சல்யர் அதை வாங்கி நோக்கிவிட்டு பிற படையினருக்கு அளித்தார். அவையிலிருந்து “ஆம், இதை இறுதி செய்வோம்! கருடச்சூழ்கை அமைக!” என்று குரல்கள் எழுந்தன. அஸ்வத்தாமன் “நாளை நம் ஆசிரியர் உரைத்த வஞ்சினமும் இதனூடாக நிறைவேறும்” என்றான். துரியோதனன் கையசைத்து “அவ்வண்ணமே ஆகட்டும். நாளை நாம் கருடச்சூழ்கை அமைத்து களமெழுவோம்” என்றான். பின்னர் திரும்பி அவைக்கு வெளியே இடைநாழியில் நின்றிருந்த துச்சகனிடம் “ஒற்றுச்செய்திகள் ஏதேனும் வந்துள்ளனவா?” என்றான். துச்சகன் “மூத்தவரே, சற்று முன் வந்த செய்திகளின்படி இளைய பாண்டவர் இன்னும் உயிர்மீளா நிலையிலேயே படுத்திருக்கிறார். அபிமன்யுவும் சுருதகீர்த்தியும் கட்டுகளுடன் தங்கள் குடில்களுக்குத் திரும்பி அகிஃபீனா உண்டு ஓய்வெடுக்கிறார்கள். நகுலனும் சகதேவனும்கூட நலம் பெற்றுவிட்டார்கள்” என்றான்.

துரியோதனன் “இளைய யாதவர் என்ன செய்கிறார்?” என்றான். “அவர் இன்னும் தன் தோழரை சென்று பார்க்கவில்லை. தன் குடிலுக்குள் ஓய்வெடுக்கும் பொருட்டு சென்றார். அங்கு அவரைக் காத்து அவரது அணுக்கர்கள் இருவர் நின்றிருந்தனர். அவர்கள் மரவுரியால் அவர் உடலை தூய்மை செய்தனர். தன் குடிலுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். வழக்கம்போல் இன்றும் காவிய ஆய்வில் மூழ்கிவிட்டாரென்று தொலைவிலிருந்து நோக்கும் நமது ஒற்றன் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றான் துச்சகன்.

“விந்தைதான்!” என்று துரியோதனன் சொன்னான். “தன் தோழனை அவர் ஏன் கைவிட்டார்? ஏன் சென்று அவனை பார்க்கவில்லை? அவர் சென்று நோக்கினாலேயே அவன் நலம் பெறக்கூடும் என்று சொல்லப்படுவதுண்டே?” “நோக்கி பயனில்லை என்று எண்ணியிருக்கலாம். அர்ஜுனன் களமெழவில்லை எனில் எவ்வண்ணம் போரை நிகழ்த்துவோம் என்று சூழ்கை வகுத்துக்கொண்டுமிருக்கலாம்” என்று ஜயத்ரதன் சொன்னான். அவையில் குழப்பமான பேச்சொலிகள் எழுந்தன.

துரியோதனன் “ஒருவேளை…” என்றபின் கைவீசி அதை விலக்கி “அவ்வாறு எளிதாக இது முடியுமென்று எனக்கு தோன்றவில்லை. எப்போதுமே இது இவ்வாறு நம்முடன் விளையாடுகிறது. அண்மையிலெனக் காட்டுகையில் நாம் நம்பிக்கை கொள்கிறோம். நம் ஆற்றலைக் குவிக்க தயங்குகிறோம். அர்ஜுனன் நாளை படையில் முழுவிசையுடன் எழுவான், வஞ்சம் தீர்க்கும் வெறியுடன் வில்லெடுப்பான் என்று நம்பியே நாம் களச்சூழ்கையை அமைப்போம்” என்றான்.

கர்ணன் எழுந்து “ஆம், அதுவே எனது எண்ணமும்” என்றான். அனைவரும் தலைதூக்கி வானிலெனத் தெரிந்த அவன் முகத்தை பார்த்தார்கள். “நான் ஓய்வெடுக்க விழைகிறேன்” என்றபடி தலைவணங்கி கர்ணன் வெளியே சென்றான். துரியோதனன் துச்சாதனனை நோக்கி கர்ணனுடன் செல்லும்படி விழி காட்டினான். துச்சாதனனும் தலைவணங்கி கர்ணனுக்குப் பின்னால் சென்றான்.

தொடர்புடைய பதிவுகள்

வரைகலை நாவல்கள் –கடிதம்

$
0
0

gra

மங்காப் புகழ் புத்தர்

இனிய ஜெயம்

மங்காப் புகழ் புத்தர் பதிவில்

//வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் அவையே முற்றாக வகுத்து முடிவெடுத்துவிடுகின்றன. நாம் செய்வதற்கொன்றுமில்லை.

ஆனால் பிறிதொரு தருணத்தில் எனக்கு வரைகலைநாவல்கள் தேவைப்பட்டன. மூளை வேறொரு புனைவில் வேர் அமிழ்ந்து சிக்கியிருக்கையில் வாசிப்பது கடினமாக ஆகியது. ஆனால் அவ்வப்போது எளிய வாசிப்பும் தேவைப்பட்டது. ஆகவே படக்கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் முத்து காமிக்சின் டெக்ஸ் வில்லர். அவை நான் பெரிதும் நாடிய எளிய இளைப்பாறலை அளித்தன.//

முதல் பத்தியாக நீங்கள் எழுதிஉள்ளவை மேற்கண்ட வரிகள் .  அவ்வபோது நானும் தமிழ் படக்கதைகளின் வாசகன் எனும் நிலையில் இது    உண்மை . நான் வாசித்த வரையில் தமிழில் பெரும்பாலான கிராபிக் நாவல்கள் ‘பெரியவங்களுக்கான ‘காமிக்ஸ் எனும் நிலையில்,டெக்ஸ் வில்லரை விஞ்ச இயலா நிலையில்  தான் நிற்கின்றன . அபூர்வமாக மிக சில கிராபிக் நாவல்கள் . கிராபிக் நாவல் எனும் ‘கலை ‘ வழியே வாசகனை அணுகுவதாக அமைந்து விடுகிறது .

மிக சிறந்த உதாரணம் இரண்டாயிரத்து பதினைந்தில்  வெளியான லே ரிப்போர்ட் தே ப்ரொடக் [ ப்ரொடக் அறிக்கை ] எனும் கிராபிக் நாவல் . எழுதியவர் பிலிப் க்லாடேல் . ஓவியர் மனு லார்ஸநெட் . போர் சூழல் .வதை முகம் ஒன்றினில் இருந்து தம்பி ,கண் மறைவாக பனி மலை கிராமம் ஒன்றினில் கூடி வாழும் மக்கள் . அவர்களை கட்டி மேய்க்கும் ஆர்ஷியர் எனும் அதிகாரி . அந்த கிராமத்துக்குள் ஊடுருவும் ஒரு அந்நியன் யாரும் அறியா வண்ணம் மாயமாக மறைந்து போகிறான் . அங்கே நடந்தது என்ன என மக்கள் மத்தியில் விசாரித்து அறிக்கை சமர்பிக்கும் பனி ப்ரோடெக் வசம் ஒப்படைக்கப் படுகிறது .  இந்த அடிப்படைக் கதைக் கட்டுமானம் மனுவின் ஓவியங்கள் வழியே , மக்களும் ,நிலமும் ,பொழுதும் உயிர் கொண்டு உலவ ,வாசகனும் அந்த கிராமத்தில் அவர்களில் ஒருவனாக சிக்கிக்கொண்ட ஆயாசத்தை முதல் வாசிப்பில் அளிக்கிறது .

போர் சூழல் ,வதைமுகாம் நாவல்களுக்கே உரிய உளநிலை. சொற்களை இழந்த ,எதிர்கால நம்பிக்கை இழந்த ,இக்கால பீதியில் உறைந்த  அமுங்கிய கதா பாத்திரங்கள்.  இந்த காலத்தில் ,இந்த சூழலில் ,இந்த மனிதர்கள் இப்படித்தான் என வரையறை செய்தபடியே செல்லும் ,குறைவான கூரிய உரையாடல்கள் .

இந்த அடிப்படைகளுக்கு வெளியே நின்று ,ஒரு கலையாக கிராபிக் நாவல் கையாள வேண்டிய சவாலை தொட்டுப்பார்த்திருக்கிறது இந்த நாவல் . முதல் அலகாக இந்த நாவல் நிகழும் இரண்டாயிரம் ஓவியச் சட்டகங்களில் சரி பாதி , வாசகனின் ஆழ்மனத்தின் காய்ச்சல் நேர கொடுங்கனவுகளின் சித்திரங்களில் ,அவை உறைந்திருக்கும்  ஆழத்தில் இயல்பாக சென்று   அமைந்து விடுகிறது .  உதாரணமாக குதிரை ஒன்று, பனி மழையில், கழுத்தில் சுருக்கிட்டு ,தூக்குமரத்தில் சடலமாக தொங்கும் சித்திரம் . கதைக்குள் அந்த குரிரை முதன் முதலாக காட்சிப்படும் போது,அண்மைக் காட்சியாக அதன் விழி அத்தனை உயிர் கொண்டு துலங்கி வரும் சித்திரத்துடன் ,இந்த காட்சி இணைகையில் , கோதிக் காலக்கட்டத்தை சேர்ந்த முதல் தர ஓவியம் ஒன்று அளிக்கும் இருண்மை உணர்வு அகத்தை தைக்கிறது .நாவல் அது பேசும் ஆழத்தை    ஓவியங்கள்  மீது பார்வையாளனின் அகம் நின்று நிலைபெருவதன் வழிமுறை கொண்டு மட்டுமே தொடர்புறுத்துகிறது .

மிக சில கோடுகள் வழியே ,இந்த நாவல் நிகழும் களமான பனி வெளியும் ,குளிர் இரவுகளும் , நிழல் படிந்த முகங்களும் ,கருப்பு வெள்ளை சித்திரங்களில்  அந்த நிலத்தில் அந்த மனிதர்களுடன் நாம் சிக்கிக்கொண்டு விட்ட மூச்சுத் திணறும் அனுபவத்தை .ஒவ்வொரு சட்டகத்தின் வழியாகவும் , ஒரு தைல தாரை போல சீரான ஒழுக்கில் அகத்தில் படியச்செயகிறது .

அடுத்ததாக இந்த நாவலை கலைக்கு அருகே சென்று நிறுத்தக் கூடிய [சப் டெக்ஸ்ட் ] ஆழ்பிரதி .அதுவும் இந்த நாவலில் உரையாடலை தவிர்த்து ,முற்றிலும் ஓவியங்களின் மொழி வழியே மட்டுமே துலங்கி வருகிறது . உதாரணமாக நாவலில் பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் பேதமே இல்லை எனும் வகையில்  நிகழும் ஓவியச் சித்தரிப்பு .  மிருகங்கள் போல கொடூர அகம் கொண்டு எஞ்சி இருக்கும் உயிர்கள் . அவர்கள் நடுவே ஒரு ஓவியன் வருகிறான் .அவர்கள் ஒவ்வொருவரையும் ஓவியமாக வரைகிறான் .ஒரு விசேஷ நாளில் . மக்கள் அனைவரையும் அழைத்து அவர்கள் முகத்தை வரைந்த ஓவியங்களை காட்டுகிறான் . ஒரு கணம் மூச்சடைத்து ஸ்தம்பித்து நிற்கும் கூட்டம் ,மறு கணம் வெறி கொண்டு அந்த ஓவியச்சாலையை அடித்து உடைத்து ,ஓவியனையும் கொன்று போடுகிறது .

அவலட்சணமாக காட்சி தரும் ஒவ்வொரு மனிதரும் அந்த ஓவியத்தில் அழகாக காட்சி தருகிறார்கள் . எது இருளோ ,எது தீமையோ ,எது குரூரமோ ,அது கொண்டு மட்டுமே நிகழும் ,காட்சி ஓட்டத்தில்,அதன் ஆழத்தில்   ஒவ்வொன்றும் எது ஒலியோ ,எது நன்மையோ , எது அழகோ அது உறைந்திருப்பதை அந்த ஓவியங்கள் காட்டுகிறது .  வெளியே நீங்கள் குரூபி ஆழத்தில் நீங்கள் அழகன் , வெளியே நீங்கள் சுயநலப் பொய்யன் உள்ளே ஆழத்தில் நீங்கள் உண்மை , வெளியே ஒருவரை ஒருவர் கொன்று உயிர் வாழும் தீயவர் ,உள்ளே கூடி ஆழத்தில் அன்பின் பொருட்டு கூடி வாழும் நல்லவர் . இந்த ஆழத்தை அந்த ஓவியன் அவர்களுக்கு திரை விலக்கி காட்டுகிறான் .  அந்த அழகை,நன்மையை ,உண்மையை உணர இயலாமல் ,அல்லது அந்த இழப்பை பொறுக்க இயலாமல்,  வன்முறையின் இருள் மீண்டும் அந்த மக்களை சுருட்டி விழுங்கி விடுகிறது .

மானுடம் இருளில் விழுந்து  மிருகத்தின் இயல்பை கைக்கொள்ளும் போதெல்லாம் அங்கே கலைஞன் ஒருவன் தோன்றி ,ஒளியைக் கொண்டு வருகிறான் . நீங்கள் உயிர் கொண்டு உலவ வந்த மந்தைகள் அல்ல ,வாழ வந்த மனிதர்கள் என்பதை தனது கலை கொண்டு அடிக்கோடிடுகிறான்.இங்கே இந்த நாவலில் அந்த கலைஞன் ஒரு ஓவியன் . ஆகவே இந்த நாவல் தன்னியல்பாக அது கோரும் சவால்களை தவிர்க்காமல் நேரடியாக தொட்டு கையாளுகிறது .என் நோக்கில் வெற்றியும் பெற்றிருக்கிறது .

gra

சாம்பிள் ஓவியங்கள் இந்த நாவலில் இருந்து 

இந்த நாவல் ஆங்கிலத்திலும் அமேசானில் கிடைக்கிறது .இந்த ஓவியங்கள் சென்று  தைக்கும் கொடுங் கனவின் ஆழத்து சித்திரம் எனும் அழகியலுக்காகவே அவசியம் இந்த நாவலை வாசிக்கலாம் .சித்திரங்கள் எனும் மொழி கொண்டு மட்டுமே இந்த நாவல் பேசும் ஆழ் பிரதிகாகவும்.

சில மாதங்கள் முன்பு அழகிய மொழிபெயர்ப்பில் தமிழில் கிராபிக் நாவலை வாசித்தேன் . வேறு யார் முத்து காமிக்ஸ் தான் .இந்த நாவலை எனக்கு அளித்தவர் புதுவை நண்பர் கவிஞர் ஓவியர் ரமேஷ் சுப்ரமண்யன் : ) இப்போது பதிப்பில் இருக்கிறதா தெரியவில்லை . அந்த லயன் கிராபிக் நாவலின் தலைப்பு நிஜங்களின் நிசப்தம் .

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

எஸ்.ரா. –கடிதங்கள்

$
0
0

esra

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

அன்புள்ள ஜெ,

எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றிய உங்கள் தடம் இதழ் கட்டுரை அருமையானது. என் ஆதர்ச எழுத்தாளர் அவர். அவரைப்பற்றி முன்பும் நீங்கள் நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தீர்கள். தமிழில் சமகால எழுத்தாளர் ஒருவரைப்பற்றி இப்படி விரிவான ஆய்வாக இன்னொரு எழுத்தாளர் எழுதியதில்லை. இந்தக் கட்டுரைகளை மட்டுமே திரட்டினால் ஒரு சிறிய நூல் வடிவில் வெளியிட்டுவிடமுடியும்

தடம் இதழில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை எஸ்.ராமகிருஷ்ணனை விரிவாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முன்வரைவாக உள்ளது. இந்தக்கட்டுரையை முன்னுரையாக எடுத்துக்கொண்டு தனித்தனி நாவல்கள் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளை வாசிப்பது ஒரு முழுமையான பார்வையை அளிக்கும்

எஸ்.ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

எஸ்.ரா பற்றிய தடம் கட்டுரை சிறப்பாக இருந்தது. உங்கள் வழக்கப்படி எழுத்தாளர்களை மூன்று அடிப்படைகளில் மதிப்பிடுகிறீர்கள். ஒன்று அவர்கள் எழுதும் வாழ்க்கைப்புலத்தை அறிமுகம் செய்து அவர்களை அங்கே பொருத்துகிறீர்கள். அதன்பின் அவர்கள் தமிழின் இலக்கியப்பரப்பில் எங்கே வருகிறார்கள் என்பதை வகுத்து அங்கே பொருத்துகிறீர்கள்.

இதை அந்த எழுத்தாளரின் பொதுக்கூறுகளின் அடிப்படையிலே செய்கிறீர்கள். அதன்பின் அவருடைய தனித்தன்மைகளைப்பற்றிப் பேச ஆரம்பிக்கிறீர்கள். பூமணி முதலிய முன்னோடிகளைப் பற்றிய கட்டுரையிலும் இந்தபாணி இருந்தது. அப்போது என்ன இது இவர் இந்த எழுத்தாளர் இவர்கலைப்போல என்று சொல்கிறார், பின்னர் இவர்களைப்போல அல்ல என்று மறுக்கிறார் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் இப்போது உங்கள் ஆய்வுமுறையே நன்றாகத் தெரிந்துவிட்டது.

எந்த எழுத்தாளரும் ஒரு பொதுவான களத்தில் இருந்தே எழுகிறார்கள். அந்தக் களத்தை அறிந்தால்தான் அவருடைய தனித்தன்மை என்ன என்று புரியமுடியும். ஓர் எழுத்தாளரின் முன்னோடிகளை அறியாமல் அவரை வாசிக்கமுடியாது. வண்ணதாசனிடம் இருக்கும் அசோகமித்திரனையும் ஜானகிராமனையும் அறியாமல் அவரை மதிப்பிட முடியாது. ரசனை விமர்சனத்தின் உலகளாவிய வழிமுறையே ஒப்பீடும் மதிப்பீடும்தான்

எஸ்.ராவின் தனித்தன்மையை அழகான ஒரு அட்டவணைபோல சுருக்கமாக அளித்துவிட்டீர்கள் இறுதியில். அவருடைய படைப்புகளை படிப்பவர்களுக்கெல்லாம் சிறந்த வழிகாட்டியாக அமையும் என நினைக்கிறேன். என்னைப்போன்ற கல்வித்துறையினருக்கு மிக உதவிகரமானது

ஜெகதீசன்

அன்புள்ள ஜெ

எஸ்.ரா பற்றிய கட்டுரை வாசித்தேன். நீண்ட கட்டுரை, ஆனால் மிகச்செறிவானது. எஸ்ராவின் வேர்நிலம், அவருடைய இலக்கியமுன்னோடிகள், அவருடைய தனித்தன்மை என்று மூன்று கட்டமைப்பாக அமைந்துள்ளது கதை. ஓர் எழுத்தாளன் எழுதும் நிலத்தைப் புரிந்துகொள்ளாமல் அவன் பாவிக்கும் படிமங்களை புரிந்துகொள்ள முடியாது

ஆனால் பிற்கால படைப்புகளில் எஸ்ரா அடையும் தோல்விகளைப் பற்றிச் சொல்லாமலேயே கடந்துசென்றுவிட்டீர்கள். அல்லது குறைவாக உணர்த்திச் செல்கிறீர்கள். இன்று மனம் ஒன்றாமலேயே எழுதுகிறார் என நினைக்கிறேன். இது அவர் விருதுபெற்றிருக்கும் தருணம் ஆகையால் நீங்கள் அப்படித் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதையும் சொல்லாமல் கட்டுரை முழுமையாகாது

எஸ்.நவீன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மொழியை பெயர்த்தல்

$
0
0
கான்ஸ்டென்ஸ் கார்னெட்
கான்ஸ்டென்ஸ் கார்னெட்

தமிழில்’ பேயோன்

க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன் ‘ஆமா! ஆமா!’ என்று சொல்லிக்கொண்டேன். [தமிழில்… பேயோன் ]

ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் என்னும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுதியின் தமிழாக்கம் இந்நூல். இதை மொழியாக்கம் செய்த க.ரத்னம் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். கல்லும் மண்ணும் என்னும் நாவலையும் கதைகளையும் எழுதியவர். அரைநூற்றாண்டாக பறவை ஆய்வு செய்பவர். தமிழகத்துப் பறவைகளைப் பற்றி கோட்டோவியங்களுடன் இவர் வெளியிட்டுள்ள தமிழகத்துப் பறவைகள் [தமிழினி] ஒரு முக்கியமான நூல். எல்லாம் சரிதான், ஆனால் மொழியாக்கம் நெஞ்சை அடைக்கச்செய்வது.

என்ன சிக்கல்? இலக்கணப்பிழைகளோ மொழியாக்கப்பிழைகளோ அல்ல. உண்மையில் அவை ஒரு பிரச்சினையே அல்ல. ஆசிரியரின் அகவெளிப்பாட்டுடன் இணைந்துகொள்ளும் மொழி என்றால் நாம் அவற்றை கவனிக்கவே போவதில்லை. மொழியில் கல்பொறுக்கிக் கொண்டிருக்கும் சில்லறைத்தனமெல்லாம் வாசகனாக எனக்கு கிடையாது. நான் ஒரு நூலை எடுத்ததுமே தீவிரமாக அதன் மொழியுலகுக்குள் நுழையவே முயல்வேன். சொற்றொடர்களிலிருந்து காட்சிகளையும் உணர்வுகளையும் உருவாக்கிக்கொள்ள முடிந்தவரை முயல்வேன். அந்த ஆசிரியனுக்கு மொழிசார்ந்த எல்லா சலுகைகளையும் அளிப்பேன்.

ஏனென்றால் அந்த உளநிலை இன்றி எவரும் நவீன இலக்கியத்தை வாசிக்கமுடியாது. இலக்கியம் நாளிதழ் அல்ல. காரணம், அன்றாடமொழியில், சராசரி மொழியில் ஒருபோதும் படைப்பூக்கம் வெளிப்பட முடியாது. அனைவருக்குமென தரப்படுத்தப்பட்ட மாறாமொழியமைப்புபோல வாசகனுக்கு சலிப்பூட்டுவதும் வேறில்லை. ஆகவேதான் நம்மால் ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஜாய்ஸையும் தமிழில் லா.ச.ராவையும் வாசிக்க முடிகிறது. இலக்கணப்பிழைகள் மலிந்த வைக்கம் முகமது பஷீரின் மொழி அந்த மொழியின் தலைசிறந்த புனைவுமொழியாக கருதப்படுகிறது.

paavannan

’டப்ளின் நகரத்தார்’ என்னும் நூலின் புனைவுமொழியில் உள்ள சிக்கல் இதில் அகஒழுங்கு இல்லை என்பதே. புறஒழுங்கின்மையை அகஒழுங்கு முழுமையாகவே நியாயப்படுத்திவிடும். வாசகனாக நாம் தேடுவதே மொழியின் அகஒழுங்கைத்தான். அதை இப்படி சொல்கிறேன். நாம்  ‘சும்மா’ இருக்கும்போது நம்முள் ஓடும் மொழிக்கு ஓர் ஒழுங்கு, தாளம் இருக்கிறது அல்லவா? அதேபோல அந்த ஆசிரியனின் அகத்துள் ஓடும் மொழிக்கு இருக்கும் ஒழுங்கும் தாளமும்தான் அந்த அகஒழுங்கு. அது தன்னியல்பாக வெளிப்படுவது. அதைத்தான் உரைநடையின் ஒழுக்கு என்கிறோம்.

அந்த அகஒழுங்கை மொழியினூடாக நாம் அடையும்போதே எதிரில் ஒரு மனிதன் இருந்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறான் என நாம் உணர்கிறோம். அந்த ஆசிரியனின் அகவுலகுக்குள் நுழைகிறோம். அந்த அகஒழுங்குக்கு ஏற்ப மொழியின் புறஒழுங்கு எத்தனை சிதைந்திருந்தாலும் பொருட்படுத்துவதில்லை. அந்த அகமொழியின் நுட்பங்கள், பாய்ச்சல்கள் மட்டுமல்ல தயக்கங்கள், குழப்பங்கள், சிடுக்குகள், முரண்பாடுகள், பிழைகள்கூட  படைப்பூக்கத்தைச் சார்ந்தவையே என உணர்கிறோம். நாம் வழிபடும் பெரும்படைப்பாளிகளின் மொழிவெற்றிகளை மட்டுமல்ல மொழிச்சிக்கல்களைக்கூட நாம் நினைவில் வைத்திருக்கிறோம். மேலும், அறிந்தும் அறியாமலும் நிகழும் மொழிமயக்கங்கள் என்பவை கலையின் இன்றியமையாத பகுதிகள்.

மொழியாக்கங்களை எடுத்துவைத்துக்கொண்டு சொல் சொல்லாக சரிபார்த்து தங்களை அறிஞர்களாக காட்டிக்கொள்பவர்களை ஒருவகை அற்பர்களாகவே எண்ணுவேன் – அவர்களால் புனைவுகளுக்குள் நுழைய முடியாது. நம் சூழலில் மொழியாக்கங்களைப் பற்றி அவ்வப்போது கருத்து சொல்பவர்கள் இவர்களே. இவர்கள் மீதான அச்சத்தால் சொல்லுக்குச் சொல் ‘அப்படியே’ மொழியாக்கம் செய்யும் அசட்டுத்தனம் மொழிபெயர்ப்பாளர்களிடம் உருவாகியிருக்கிறது

paru

ரஷ்ய இலக்கியங்களை முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த திருமதி கான்ஸ்டன்ஸ் கார்னெட் [Constance Garnett] பல சொற்பிழைகளுடன், சொற்றொடர்பிழைகளுடன், சிலவற்றை விட்டுவிட்டுத்தான் மொழியாக்கம் செய்தார் என்று இன்று சொல்கிறார்கள். இடைவிடாது வெறியுடன் மொழியாக்கம் செய்தவர் அவர். ஆங்கிலவாசகர்களுக்கு ரஷ்ய இலக்கிய மேதைகள் அவர் வழியாகவே அறிமுகமானார்கள். உலக இலக்கியப் பரப்பை கார்னெட்டின் ஆங்கில மொழியாக்க வடிவம் வழியாகவே அந்த மேதைகள் பாதித்தார்கள், மாற்றியமைத்தார்கள்.

ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் பலர் கார்னெட்டை மொழியாக்கங்களின் அரசி என புகழ்ந்திருக்கிறார்கள். அவர் மொழியாக்கம் செய்தமையால்தான் ரஷ்யாவின் இலக்கியம் ஆங்கில உலகில் அத்தனை வாசிக்கப்பட்டது. ஏனென்றால் ரஷ்ய நிலம் அவர்களுக்கு  அன்னியமானது. ரஷ்யாவிலிருந்த கீழைத்தேயச் சாயல்கொண்ட ஆன்மீகம் மேலும் அன்னியமானது. சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்த ஒரு மனித இயந்திரம் அப்படைப்புக்களை மேலும் அன்னியமாக்கியிருக்கக்கூடும். கார்னெட் தன் ஆன்மாவை அந்த ஆசிரியர்களுக்கு அளித்தார். அந்தப்படைப்புகளில் வாழ்ந்தார். நாம் வாசிப்பது கார்னெட்டின் அகமொழியை.

அதன்பின் இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ‘சரியான’ மொழியாக்கங்கள் வந்துவிட்டன. சமீபத்தில் கார்னெட் மொழியாக்கம் செய்த டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவை வாசித்தேன். கார்னெட் மொழியாக்கம் அளிக்கும் மொழிஒழுக்கும் உணர்வின் அணுக்கமும் பிறகு வந்த எந்த மொழியாக்கத்திலும் இல்லை என்றே சொல்வேன். தமிழில் அவ்வாறு ஓர் ஆசிரியருக்கு தன் ஆன்மாவை அளித்த மொழிபெயர்ப்பாளர் என்றால் காண்டேகருக்காகவே வாழ்ந்த கா.ஸ்ரீ.ஸ்ரீயை சொல்லவேண்டும்.

க.ரத்னம் மொழிபெயர்த்திருக்கும் நடை இப்படி இருக்கிறது. “உள்ளே நுழைந்து நான் அவரை பார்க்கவிரும்பினாலும் கதவைத் தட்டும் தைரியம் இல்லாததனால் நான் மாலைவெயில் காயும் தெருவின் மறுபக்கமாக கடை ஜன்னல்களில் தொங்கும் பலகைகளின் விளம்பரங்களைப் படித்தபடி நடந்தேன்.’ இதில் ஒரு நான் மிகுதி என்பதைத்தவிர பெரிய பிழை ஏதுமில்லை. ஆனால் ஒழுக்கு இல்லை. இத்தகைய சொற்றொடர்கள் வழியாக செல்லும்போது நம் மூளை சலிப்புறுகிறது. மெல்லமெல்ல பொறுமையின்மையும் எரிச்சலும் கொண்டவர்களாகிறோம்.

c.mohan

சமீபத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் பெரும்பாலான மொழியாக்கநூல்கள் அகஒழுங்கு அற்ற உரைநடையால் மிகப்பெரிய துன்ப அனுபவங்களாக மாறிவிடுபவை. நான் பணம்கொடுத்து வாங்கி படிக்கமுடியாமல் வைத்திருக்கும் இத்தகைய நூல்களின் ஒரு பட்டியலே உள்ளது. எவரிடமாவது கொடுக்கலாம் என்றால் எவருக்கு மனமறிந்து அந்தக் கொடுமையை செய்வது? நூலகங்களுக்கு அளிக்கலாம், எவரும் படிக்காமல் சுவரில் செங்கல் போல கட்டுமானத்தின் பகுதியாக அங்கேயே இருந்துகொண்டிருக்கும்.

மொழியாக்கத்தில் அகஒழுங்கு எப்படி அமையமுடியும்? அதில் இருப்பது மூலஆசிரியனின் அகமொழி. அதை தமிழுக்கு எப்படி கொண்டுவரமுடியும்? மொழியாக்கம் செய்பவனுக்குக் கிடைப்பது அந்த மொழிக்கட்டுமானம் மட்டும்தானே? அதை அப்படியே தமிழுக்கு மாற்றுவதைத்தானே செய்யமுடியும்? சொல்லுக்குச் சொல், சொற்றொடருக்குச் சொற்றொடர் சரியாக இருக்கிறதா, இலக்கணம் அமைந்துள்ளதா என்று மட்டும்தானே நாம் பார்க்கமுடியும்? – இப்படி கேட்கலாம். ஆனால் அது உண்மை அல்ல.

என்னதான் சொன்னாலும் மொழியாக்கம் செய்பவனும் அப்படைப்புக்கு ஓர் ஆசிரியனே. அவனை இணையாசிரியன் என்றே சொல்லலாம். நாம் வாசிக்கும் மொழியாக்கப் படைப்பில் முதன்மையாக வெளிப்படவேண்டியது அந்த மொழிபெயர்ப்பாளனின் அகமொழிதான். நாம் அவனுடன்தான் உளம் பரிமாறிக்கொள்கிறோம். நாம் வாசிப்பது அவனுடைய மொழியொழுங்கைத்தான். மூலஆசிரியனை நாம் நேரடியாக அணுகவே முடியாது.

மூலஆசிரியனின் அகமொழி எப்படி அப்படைப்பில் வெளிப்படும்? அந்த மொழிபெயர்ப்பாளனின் அகமொழியில் அது ஒரு செல்வாக்கை செலுத்தியிருக்கும், அச்செல்வாக்காகவே நாம் அதை உணரமுடியும்.

onaay

உதாரணமாக இரு நூல்கள். பாவண்ணன் மொழியாக்கத்தில் வெளிவந்த எஸ்.எல்.பைரப்பாவின் கன்னட நாவலான பர்வா. இன்னொன்று சி.மோகன் மொழியாக்கத்தில் வெளிவந்த ஜியாங் ரோங் எழுதிய சீன நாவலான ‘ஓநாய்குலச்சின்னம்’. இரு ஆசிரியர்களுமே சொந்தமாக அகமொழி கொண்டவர்கள். நாம் அந்த மொழியை வேறுபடைப்புகள் வழியாகவும் அறிவோம். இந்த மொழியாக்கநாவல்களில்  முதன்மையாகத் திகழ்வது அந்த மொழிபெயர்ப்பாளர்களின் அகமொழியின் ஒழுங்கே. ஆனால் அதில் மூல ஆசிரியர்களின் அகமொழியின் செல்வாக்கு வலுவானது என்பதை அவர்களின் வேறு ஆக்கங்களுடன் இவற்றை ஒப்பிட்டால் உணரமுடியும்.

ஆகவே மொழியாக்கம் என்பது மொழிக்கு மொழியை நேர்வைப்பது அல்ல. மூல ஆசிரியனின் அகமொழிக்கு மொழிபெயர்ப்பாளன் தன்னை ஒப்படைப்பதே. அதன்வழியாக தன் அகமொழி மாற அவன் அனுமதிக்கவேண்டும். அதன்பின் தன் அகமொழி தெளிவாக வெளிப்படும்வண்ணம் அவன் அம்மொழியாக்கத்தை நிகழ்த்தவேண்டும். அவனால் அவனுடைய ஒரு படைப்பு எப்படி எழுதப்படுகிறதோ அப்படி அவன் அதில் வெளிப்படவேண்டும். அதுவே நல்ல மொழியாக்கம்.

மொழிபெயர்ப்பாளன் இயந்திரம் அல்ல. அவன் மூல ஆசிரியனை நோக்கி நம்மை கொண்டுசெல்லும் இன்னொரு ஆசிரியன். அவனுடைய புனைவுமொழி மூல ஆசிரியன் ஏறி நம்மை வந்தடையும் ஊர்தி. நல்ல மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனை திருத்தியமைக்க மாட்டான், எதையும் சேர்க்கவும் மாட்டான். ஏனென்றால் அவன் மூலஆசிரியனுக்கு தன்னை ஒப்பளித்தவன்.

இது பல மொழியாக்கங்களில் நிகழ்வதில்லை. முதன்மைக்காரணம் பலர் சரிவர புரிந்துகொள்ளாமலேயே மொழியாக்கம் செய்கிறார்கள். மூலத்தை புரிந்து உணர்ச்சிகரமாக உள்வாங்காதவரால் செய்யப்படும் மொழியாக்கம் உடனடியாகவே உயிரிழந்துவிடும். இன்னொன்று, மொழியாக்கச் சோம்பல். ஏராளமான மொழியாக்கங்கள் எப்படிச் செய்யப்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். ஆங்கிலப்படைப்பை ஒருபக்கம் வைத்துக்கொண்டு பார்த்து தமிழில் எழுதிக்கொண்டே செல்வார்கள். அந்தத் தமிழ்வடிவை அப்படியே அச்சுக்கு கொடுத்துவிடுவார்கள். அதில் இலக்கணப்பிழைகள் மட்டும் திருத்தப்படும். பலசமயம் அதுவும் நிகழாது. விரைந்து மொழியாக்கம் செய்ய விரும்புபவர்களின் வழி இது.

இதில் என்ன நிகழ்கிறதென்றால் அந்த மொழியாக்கதின்போது மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனின் மொழிக்கு அண்மையில் செல்கிறான். மூலப்படைப்பின் மொழியின் சொற்றொடர் அமைப்பு, சொல்லாட்சிகள் ஆகியவை அவன் உள்ளத்தில் இருக்கின்றன. ஆகவே அப்போது அவன் செய்வது ஒரு நகலெடுப்பு மட்டுமே. அந்த மொழியாக்கத்தின் மொழிநடை மூலப்படைப்பு அமைந்த மொழியின் அதேவடிவில் இருக்கும். சோற்றை சப்பாத்தி மாதிரி பரத்திக்கொண்டு வைப்பதுபோலிருக்கும் அந்த நடை.

ஆங்கிலம் நமக்கு மிக அயலான சொற்றொடர் அமைப்பு கொண்டது. அதில் எழுவாய் பயனிலை அமைப்பு தலைகீழாக நிற்கக்கூடியது. ஆகவே அதை அப்படியே எழுதினால் தமிழே தலைகீழாக நிற்பதுபோலிருக்கும். ஆங்கிலம் கூட்டுச்சொற்றொடர்கள் அமைக்க ஏற்ற மொழி. தமிழில் அந்த அமைப்பு இல்லை. ஆங்கிலத்தை அப்படியே மொழியாக்கம் செய்தால் ஒன்றோடொன்று ஒட்டாத பகுதிகளை அள்ளி இணைத்ததுபோல, பிக்காஸோவின் பெண் ஓவியம்போல, இருக்கும்.

மலையாளம், கன்னடம் போன்ற தமிழுக்கு மிக அணுக்கமான மொழிகளிலுள்ள சிக்கல் இன்னொன்று. அவற்றிலுள்ள சொல்லாட்சிகள், சொற்கள் தமிழிலும் இருப்பவை. ஆனால் வேறுபொருளில். வேறு தொனியில். அப்படியே தமிழாக்கம் செய்தால் மொழியே உருகி உருக்குலைந்ததுபோல் இருக்கும். அதை நம்மால் வாசிக்க முடியாது. நாம் புனைவுக்குள் செல்லமுடியாதபடி அந்த மொழிச்சிக்கல் நம்மை மேலே தள்ளும்

முதலில் மூலத்திலிருந்து சொல்சொல்லாக, சொற்றொடர் சொற்றொடராக  மொழியாக்கம் செய்துவிட்டு மூலத்தை தூக்கி அப்படியே விலக்கி வைத்துவிடவேண்டும். அந்த மூலப்படைப்பு நம்மிடமிருந்து அகல, நாம் அதன் நடையை மறக்க ஒரு காலஇடைவெளி விடவேண்டும். நம் கையிலிருக்கும் அந்த மொழியாக்கப் பிரதியிலிருந்து சற்று சுதந்திரமாக, நம் நடையில், நம்மில்கிளரும் உணர்ச்சிகளுடன் ஓர் இலக்கியப்பிரதியை நாமே ‘படைக்கவேண்டும்’ அதுவே மெய்யான மொழியாக்கம். அந்த மறுஆக்கம் நிகழாதபோது மொழிபெயர்ப்பாளனின் அகமொழி அப்படைப்பில் வெளிப்படாது. உரைநடை உள்ளொழுங்கு சிதறியதாக அமையும். அதை வாசிக்கமுடியாது

நான் சொல்வது உண்மையான மொழியாக்க முயற்சிகளைப் பற்றி. திறனற்ற, பயிற்சி அற்ற, எந்த அக்கறையும் இல்லாத மொழியாக்கங்கள் இங்கு வந்து குவிகின்றன.  “Well, now I am on my way sir!” என்பதை “நல்லது இப்போது நான் என் பாதையில் உள்ளேன் ஐயா!” என மொழியாக்கம் செய்பவர்களைப்பற்றி அல்ல. எந்த மொழியாக்கமாக இருந்தாலும் அதை வாங்கி புரட்டி ஏதேனும் இரண்டுபக்கத்தை படித்துப்பாருங்கள். இயல்பான ஓட்டம் இருந்தால் மட்டும் வாங்குங்கள். நான் ஏமாந்த புத்தகங்களின் ஒரு பட்டியலை போடலாம்தான், தொலைபேசி அட்டவணைபோலிருக்கும்.

மொழிபெயர்ப்பாளனின் பாவங்கள். பாரீஸ் ரிவியூ

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25

$
0
0

ele1துச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன் கால்களை சேற்றிலென சிக்க வைத்தது. உடலின் அத்தனை தசைகளும் நனைந்த ஆடைகள் என எலும்புகள் மேல் தொங்கிக்கிடந்தன. உள்ளமும் ஒரு நனைந்த மென்பட்டாடை என படிந்திருந்தது. நாக்கு உலர்ந்த மென்தளிர் என வாய்க்குள் ஒட்டியிருந்தது. ஒரு சொல்லை எடுப்பதென்றால்கூட முழுதுடலாலும் உந்தி ஊறச்செய்து நாவுக்குக் கொண்டுவந்தாகவேண்டும். நா அச்சொல்லை தன்னதென்று ஏற்கவேண்டும். அச்சொல் நாவை பற்றவைக்கவேண்டும்.

கர்ணனும் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. சீரான காலடிகளுடன் அவன் நடந்துகொண்டிருந்தான். அவனுக்குரிய வழக்கமான நடை அல்ல அது என்பதனால் துச்சாதனன் உடன் செல்ல முடிந்தது. அவர்களைச் சூழ்ந்து கௌரவப் படைகள் கொண்டாட்டமிட்டுக் கொண்டிருந்தன. கேடயங்களிலும் தலைக்கவசங்களிலும் அடித்துத் தாளமிட்டபடி நெருப்பைச் சுற்றி படைவீரர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். நிழல்கள் எழுந்து வானிலாடின. துச்சாதனன் பெருமூச்சுவிட்டான். கர்ணன் நின்று அந்தச் செந்நிற அலைகளை நோக்கினான். பின்னர் விண்ணிலெழுந்திருந்த மீன்களை பார்த்தான். மீண்டும் திரும்பும்போதுதான் அவன் துச்சாதனனை பார்த்தான். “நீ சென்று ஓய்வெடு, இளையோனே” என்றான்.

“இல்லை, தங்களை குடில்வரை கொண்டுசென்று ஆக்குகிறேன்” என்றான் துச்சாதனன். “வா” என்றபடி கர்ணன் நடந்தான். இம்முறை அவன் நடை விசைகொண்டிருந்தது. “மூத்தவரே” என்று துச்சாதனன் மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்” என்றான் கர்ணன். “இன்று களத்தில் உங்கள் கையிலிருந்தது பாதாளநாகம் என்றனர். மணிகர்ணன் என்னும் பாதாளநாகமே உங்கள் கையில் எழுந்து நடனமிட்டது என்றும் நாகங்களே உங்கள் அம்புகளாகச் சென்று பாண்டவர்களை வென்றது என்றும் சொல்கின்றனர்” என்றான். கர்ணன் புன்னகையுடன் அவன் தோளில் தட்டினான். “நான் உங்கள் போரை பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் சொல்வதில் மெய்யுள்ளது என்றே எனக்கும் படுகிறது” என்றான் துச்சாதனன்.

“பிறகென்ன?” என்றான் கர்ணன். “அதை நீங்களும் சொல்லவேண்டும். உண்மையிலேயே உங்கள் ஆவமும் வில்லும் நாகங்களா என்ன?” என்றான் துச்சாதனன். “இளையோனே, இந்த மண்ணில் எதுவும் புதிதாக நிகழ இயலாது என்று உணர்க! இங்கு நிகழும் எந்தப் போரும் முன்பு நிகழ்ந்த போரின் நீட்சிகளே. ஏனென்றால் இங்கு நிகழும் அத்தனை வேள்விகளும் முன்பு நிகழ்ந்த வேள்விகளின் எச்சங்கள்தான்” என்று கர்ணன் சொன்னான். “நாகர்கள் இங்கே வெல்லப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் வஞ்சத்தால் வெல்லப்பட்டார்கள். பின்னர் ஒருங்கிணைவால் வெல்லப்பட்டார்கள். இறுதியாக மெய்யறிவால் வெல்லப்பட்டார்கள். வரலாற்றில் எப்போதுமே வெற்றி அம்மூன்று நிலைகளில் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது.”

“ஆம், நாகர்களின் வஞ்சத்தைப் பற்றி நான் அறிவேன்” என்றான் துச்சாதனன். மேலும் அவன் சொல்லத் துடித்தான். ஆனால் முதற்சொல் எழுந்ததுமே சொல்லவேண்டாம் என்னும் எண்ணத்தை அடைந்தான். அதை உணர்ந்த கர்ணன் “சொல்” என்றான். துச்சாதனன் நிலையழிந்து “எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, மூத்தவரே. நான் எவரிடமும் எதையும் பகிர்ந்து அறியேன்” என்றான். “சொல்” என கர்ணன் மீண்டும் சொன்னான். “நான் இன்று காலை ஒரு கனவு கண்டேன்… சில நாட்களாகவே துயில் நீப்பு. நீங்கள் வருகிறீர்களா என்னும் பதற்றத்தில் நேற்றெல்லாம் அமரக்கூட இல்லை. களைப்பில் விழித்திருக்கையிலேயே எனக்கு கனவுகள் வந்துசெல்கின்றன.”

“ஆம்” என்று கர்ணன் சொன்னான். “இப்போது களத்தில் நின்றிருக்கும் அத்தனைபேரும் அப்படித்தான் இருப்பார்கள். இப்போர் நனவிலும் கனவிலுமாகவே நிகழும்…” சிரித்து “செல்லச் செல்ல முழுக் கனவென்றே ஆகும். தெய்வங்களும் பேய்களும் நாகங்களும் விளையாடும் வெளியில் நிகழும்” என்றான். துச்சாதனன் “என் கனவில் இதுவரை நான் காணாத தெய்வமொன்றை கண்டேன். பின்னர் உணர்ந்தேன், அவள் மூத்தவள் என” என்றான். கர்ணன் “தவ்வை அரக்கர்களின் களியாட்டுத்தெய்வம். இன்று அவையில் சுசர்மர் அவளைப்பற்றி சொன்னார்” என்றான். “ஆம், ஆனால் அவளை அவர்கள் நாட்டப்பட்ட கல்லாக மட்டுமே வழிபடுகிறார்கள். முழுதுருவில் நான் கண்டதேயில்லை” என்றான் துச்சாதனன். “அரிதாகவே அவள் முழுதுருவை வரைகிறார்கள்” என்றான் கர்ணன். “அவ்வன்னையின் கையிலிருந்து நானும் அவர்கள் சொன்ன அந்த அமுதை உண்டேன்” என்றான் துச்சாதனன்.

கர்ணன் வெறுமனே நோக்கினான். “அதற்கு என்ன பொருள் என எனக்குத் தெரியவில்லை. எதுவானாலும் ஆகுக மூத்தவரே, தெய்வங்களை நோக்கத் தொடங்குவது ஒருவன் இங்கிருந்து செல்லும் தருவாய் அணுகிவிட்டது என்பதற்கான சான்று என்பார்கள். எனக்கும் அவ்வாறே என தோன்றுகிறது. அதில் எனக்கு மாற்று விழைவும் இல்லை. இப்போரிலிருந்து உயிருடன் மீளமாட்டேன் என்பது நான் எனக்கே சொல்லிக்கொண்ட வஞ்சம். இப்போர் வென்று என் மூத்தவர் மீளும்வரை மட்டுமே உடனிருப்பேன். குருக்ஷேத்ரத்திலிருந்து அவர் கிளம்பும்போது நான் இங்கேயே விழுந்திருப்பேன்.”

“ஏனென்றால் அதுவே முறை” என்று துச்சாதனன் தொடர்ந்தான். “இனிவரும் தலைமுறைகளிலும் அஸ்தினபுரியின் அவை பேசப்படும். அங்கே குலமகள் சிறுமைசெய்யப்பட்டதை சூதர்கள் பாடிப்பெருக்குவார்கள். அதை கேட்கும் நம் குலக்கொடியினர் அவர்களுக்கு அறம் காப்பென எழுந்து வரும் என உணரவேண்டும். நான் கிளம்பும்போது அசலையிடம் அதைத்தான் சொல்லிவிட்டு வந்தேன்.” கர்ணன் “இது களத்திலெழும் சோர்வு. இத்தகைய உளநிலைகளை வெல்வதும் போரின் பகுதியே” என்றான். “இருக்கலாம். ஆனால் நான் சோர்வடையவில்லை. அன்னையைக் கண்டதை ஒரு நல்லூழ் என்றே நினைக்கிறேன்” என்றான் துச்சாதனன்.

“ஏனென்றால், நான் அன்று அவையில் திரௌபதியை சிறுமைசெய்து மீண்டு என் அறைக்குச் சென்று நீராடும்பொருட்டு ஆடைகளை கழற்றிக்கொண்டிருந்தபோது அவளை கண்டேன்” என்று அவன் தொடர்ந்தான். “நான் களைத்திருந்தேன். என் அறைக்குச் செல்கையில் நடக்கவே இயலவில்லை. என் உள்ளத்தில் வினாக்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நின்றன. ஏன் நான் அதை செய்தேன்? என் மூத்தவரின் ஆணைக்கு மாறாக நான் எதையும் எண்ணுபவன் அல்ல. என் அன்னையையோ மனைவியையோ அவ்வண்ணம் இழுத்துவந்து அவைச்சிறுமை செய்ய அவர் ஆணையிட்டிருந்தாலும் அதை செய்திருப்பேன் என்பதில் எனக்கு ஐயமே இருக்கவில்லை. ஆனால் அது மட்டும் அல்ல. பிறிதொன்றும் இருந்தது.”

“மூத்தவரே, நான் அச்செயலில் ஆழத்தில் எங்கோ மகிழ்ந்தேன். மிக மிக ஆழத்தில். ஏன் என்று தெரியவில்லை. அந்த மகிழ்ச்சியை எண்ணவும் எனக்கு கூசுகிறது. அமிலம்போல் எரிக்கிறது என்னை. ஆனால் நான் மகிழ்ந்தேன்” என்றான் துச்சாதனன். “கையுறைகளை கழற்றிக்கொண்டிருக்கையில் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வண்ணம் அசைந்தது. திரும்பி நோக்கியபோது என் அறையிலிருந்து ஒருத்தி வெளியே செல்வதை கண்டேன். பேரழகி. முதற்கணமே அவள் மானுடப்பெண் அல்ல என புரிந்தது. யார் என நடுங்கும் குரலில் கேட்டேன். நில் நில் எனக் கூவியபடி பின்னால் சென்றேன். ஆனால் அவள் வெளியே சென்று மறைந்துவிட்டாள். என் குரலைக் கேட்டபடி ஏவலன் மட்டும் அங்கே வந்து நின்றிருந்தான்.”

“நான் செயலிழந்து அமர்ந்தேன். அந்நிகழ்வை எவரிடமும் சொல்லவில்லை. நூறுநூறுமுறை எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன். அந்நிகழ்வின் பொருள் என்ன? அந்த தேவி எவர்? எவரிடமாவது கேட்கவேண்டுமென நினைப்பேன். அஞ்சி தவிர்ப்பேன். பின்னர் அதை திட்டமிட்டே மறந்தேன். இன்று அக்கையைக் கண்டபோது ஒன்றை உண்ர்ந்தேன், அவள்தான் அன்று என்னைவிட்டுச் சென்றவள். அன்று சென்றபோது அவள் பேரழகியாக இருந்தாள். இன்று கொடுந்தோற்றம் கொண்டிருந்தாள், ஆனால் அவள்தான். ஐயமே இல்லை. அவள் எனக்களித்த அமுதின் பொருள் என்ன? அந்த அமுது குளிர்ந்திருந்தது. முதற்சுவை கடும்கசப்பு. கடுமையால் கசப்பே இனிப்பென்றும் தோன்றுமே அப்படி அதை உணர்ந்தேன். அதன் பொருள் என்ன?”

கர்ணன் “நான் இத்தகைய உளஓட்டங்களை கூர்ந்து நோக்கி ஆராய்வதில்லை” என்று சொன்னான். “ஏனென்றால் புகையை நாழியால் முகக்கும் பணிக்கு நிகர் உள்ளப்பெருக்கை மதிப்பிடுவது என என்னிடம் ஒருமுறை பரசுராமர் சொன்னார். அன்று உதறிய வழக்கம் இது. என் உள்ளம் ஓடிக்கொண்டே இருப்பதை எப்போதேனும் உணர்வேன். துணுக்குற்று விழித்தெழுந்து அக்கணமே என்னை விலக்கிக்கொள்வேன்” என்றான் கர்ணன். பின்னர் நின்று “அங்கே சென்று அவர்களுடன் கலந்துகொள்வோம்” என்றான். அவன் கைசுட்டிய இடத்தை நோக்கிய துச்சாதனன் “எளிய வேல்படைவீரர்கள்… அனைவருமே முழுக் களிமயக்கில் இருக்கிறார்கள்” என்றான். “அது நன்று. நாமும் களிமயக்கடைவோம். கொதிக்கும் சித்தத்தை மதுவிட்டு நனைக்காமல் இனி குடிலுக்குச் சென்று துயில முடியாது” என்றான் கர்ணன்.

ele1அவர்கள் அனலைச் சூழ்ந்தமர்ந்து குடித்து நகையாடிக்கொண்டிருந்த குழுவை நோக்கி சென்றபோது ஒரு வீரன் களிமயக்கில் சரிந்த விழிகளுடன் “யார்? நெட்டையனா?” என்றான். இன்னொருவன் கர்ணனை உணர்ந்து பாய்ந்தெழுந்து “அரசே!” என்றான். “குடிக்கலாமென வந்தோம்… சற்றுநேரம் களியாடலாமென்று” என்றபடி கர்ணன் அமர்ந்தான். துச்சாதனன் தயங்கி நிற்க “அமர்க!” என்றான் கர்ணன். அவனை கைபற்றி இழுத்து அமரச்செய்தான். துச்சாதனன் நிலையழிந்தவனாக உடல் கோட்டி அமர்ந்தான். “என்னை நினைவிருக்கிறதா, அங்கநாட்டரசே? முன்பு மகதப்போரில் நீங்கள் எங்களுடன் மதுவாடினீர்” என்றான் ஒரு வீரன். “ஆ! நினைவுறுகிறேன். பூதநாதரே, நலம்தானே? இன்னுமா உயிருடன் இருக்கிறீர்?” என்றான் கர்ணன். “இந்தப் போரில் சென்றுவிடுவேன். செல்வதற்கு உகந்த போர்” என்றான் பூதநாதன்.

“செல்லும் போரை கொண்டாடும்பொருட்டு ஒரு மொந்தை!” என்றான் கர்ணன். படைவீரர்கள் வெடித்து நகைத்தார்கள். கர்ணன் தன்னிடம் அளிக்கப்பட்ட மொந்தையை துச்சாதனனிடம் அளித்தான். “குடி… இன்றிரவு நன்றாகத் துயில்வாய்.” துச்சாதனன் அதை தயக்கத்துடன் வாங்கிக்கொண்டான். கர்ணன் மூன்று மொந்தைக் கள்ளை அருந்தி ஏப்பம்விட்டு மீசையை நீவியபடி “நல்ல கள். குளிர்ந்தது” என்றான். “இது அங்கே அரக்கர்களிடமிருந்து வந்தது. அவர்கள் அக்கையை நிறுவி இதை அருந்துகிறார்கள்” என்றான் பூதநாதன். “அக்கை! அஹஹஹஹா! அக்கை!” என்று ஒருவன் தொடையிலறைந்து வெடித்துச் சிரித்தான். கர்ணன் ஏப்பங்கள் விட்டபடி “இவனுக்கு ஒரு சிக்கல்… இவன் மூத்தவளை பார்த்துவிட்டான்!” என்றான். “அவருமா! ஆஹாஹாஹா!” என அவன் நகைக்க பூதநாதன் “அரசே, இங்கே பலர் அவளை பார்த்திருக்கிறார்கள்” என்றான்.

“அவள் தோன்றுவதன் பொருளென்ன?” என்று கர்ணன் கேட்டான். “அவள் அனைவரையும் அள்ளிக் கொண்டு செல்லப் போகிறாள். வேறென்ன?” என்று ஒருவன் சொன்னான். கர்ணன் இன்னொரு மொந்தைக்கு கைநீட்டி “அது எவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவன் முன்னர் ஒருமுறை அவளை பார்த்திருக்கிறான். அன்று அவள் இவனிடமிருந்து கிளம்பிச்சென்றுகொண்டிருந்தாள்” என்றான். பூதநாதன் “மெய்யாகவா? அக்கை செல்வதுபோல் கனவு வரக்கூடாது. அத்தனை செல்வங்களும் உடன் செல்லும். செல்பவள் பேரழகியெனத் தெரிவாள்” என்றான். சற்றே மயக்கு ஏறியிருந்த துச்சாதனன் பாய்ந்து கையூன்றி முன்சென்று “ஆம், பேரழகி! அப்படித்தான் இருந்தாள்” என்றான்.

“அவளை மீண்டும் கண்டீர்களா? ஒருமுறை சென்றபின் அவள் காட்சி கொடுப்பதே இல்லையே?” என்றான் பூதநாதன். “வீரரே, நான் அவளை மீண்டும் கண்டேன். என்னை நோக்கி வந்து எனக்கு அமுதளித்துச்சென்றாள்.” பூதநாதன் “நன்று… அவள் உங்களுக்கு அருளியிருக்கிறாள். முன்பு நீங்கள் ஆற்றிய அறமின்மை ஒன்றின்பொருட்டு உங்கள்மேல் முனிந்தவள். இன்று உங்களுக்கு மீண்டும் அருளியிருக்கிறாள். நீங்கள் அவளால் மீட்கப்பட்டுவிட்டீர்கள்” என்றான். துச்சாதனன் உரத்த கேவலோசையுடன் அழுதான். கர்ணன் அவன் தோளைத்தட்டி “என்ன இது? அறிவிலி…” என்றான். “இல்லை… இல்லை” என துச்சாதனன் உடல்குலுங்க அழுது முகத்தை நிலம்நோக்கி தாழ்த்தினான்.

கர்ணன் கைகாட்ட மேலும் மது வந்தது. “குடி… குடி இதை. நான் சொல்கிறேன்” என கர்ணன் அதை துச்சாதனனுக்கு நீட்டினான். அவன் இரு கைகளாலும் அதை வாங்கி இளங்குழவிபோல் அருந்தினான். ஏப்பம் விட்டபின் “என் அன்னை! என் குலமகள்!” என்றான். பூதநாதன் “கதைகளின்படி இரணியனின் துணைவி கியாதி, இராவணப்பிரபுவின் அரசி மண்டோதரி என பேரரக்கர் அனைவருக்கும் துணைவியென எழுந்தவள் அக்கையே” என்றான். துச்சாதனன் “என் குலமகள்… என் குலமகள் அசலை” என விசும்பினான். “ஒன்று செய்யலாம். இவருடைய முற்பிறப்பு நிலை என்ன என்று உசாவலாம். இங்கு அதற்கு ஒருவர் இருக்கிறார். சாதர் என்று பெயர். ஊரில் இவர் காளிகை அன்னையின் பூசகராக இருந்தார்.”

“அவரால் எழமுடியுமெனத் தோன்றவில்லை. அரசநாகத்தால் கடியுண்டவர்போல் நஞ்சேறிக் கிடக்கிறார்” என்று ஒருவன் சொன்னான். “அது நன்று… எழுப்புக!!” என்றான் பூதநாதன். இருவர் சாதரை உலுக்கி எழுப்ப அவர் எழுந்தமர்ந்து உரக்க ஏப்பம்விட்டு மீண்டும் கள்ளுக்காக கை நீட்டினார். “சாதரே, எழுக! அங்கநாட்டரசர் கர்ணன் வந்துள்ளார். உங்களிடம் சில வினாக்களை எழுப்புகிறார்” என்றான் பூதநாதன். “அவரை நான் அறிவேன். நாங்கள் இணைந்து வங்கப்போர்க்களத்தில் மதுவருந்தி…” என்றபின் கர்ணனைப் பார்த்து “வணங்குகிறேன், அரசே” என்றார் சாதர்.

“சாதரே, உங்களை நினைவுறுகிறேன். அன்று நீங்கள் இன்னொருவனிடம் பூசலிட்டீர்கள். அவன் பெயர் சம்பு” என்றான் கர்ணன். “ஆம், நல்லவன். இறந்துவிட்டான்” என்ற சாதர் “என்ன கேட்கவிருக்கிறீர்கள்?” என்றார். “இவன் கேட்கிறான். இவன் யார்? இவனை ஏன் அக்கை தொடர்கிறாள்?” என்று கர்ணன் கேட்டான். “என் குலமகள்… அவளை நான் தொடவே இல்லை” என்று துச்சாதனன் விசும்பி அழுதான். சாதர் “உசாவுகிறேன். என் தெய்வங்களை எழுப்புகிறேன்” என்றபின் கையூன்றி தவழ்ந்து நெருப்பருகே வந்தார். நன்கு அமர்ந்து நெருப்பொளியில் சிவந்து தெரிந்த தரையில் ஒரு களத்தை சுட்டுவிரலால் வரைந்தார். அதில் ஏழு கூழாங்கற்களை வைத்தார். மிக மெல்ல அவற்றை நகர்த்தினார். அச்செய்கையாலேயே மயக்குற்றவர்போல அதை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தார்.

பின்னர் “ஆம்” என்றார். “எவர்? எவர்?” என்றார். கர்ணன் துச்சாதனனின் ஒரு மயிரிழையைப் பறித்து அந்தக் களத்தில் வைத்தான். அவர் உடலில் ஒரு சிறிய விதிர்ப்பு கடந்துசென்றது. பின்னர் ஆழ்ந்த மூச்செறிதல்கள் வெளிப்பட்டன. குரல் பிறிதெங்கிருந்தோ என ஒலித்தது. “இவர் விண்ணிலிருந்து ஆளும் கலிதேவனின் கொடியாக அமைந்த காகம். தன் விழைவால் காகன் என்னும் அசுரன் எனப் பிறந்தார். மண்ணில் ஆயிரமாண்டுகாலம் அரசனாக ஆண்ட பின்னர் காகமென்று வடிவுகொண்டு காட்டில் வாழ்ந்தார்.”

“முன்பு விண்பேருருவன் இங்கே ராகவராமனாக அயோத்தியில் பிறந்து மிதிலையின் இளவரசியை மணந்து தந்தையின் சொல்கேட்டு கானேகி மந்தாகினி என்னும் ஆற்றின் கரையில் அவளுடன் தனித்திருந்தான். இனிய காற்றில் அவன் அவள் மடிமேல் தலைவைத்து துயின்றான். அப்போது காற்றில் ஆடை விலக சீதையின் இடத்தொடை வெளிப்பட்டது. தொடையின் அழகை மேலே மரக்கிளையில் இருந்து இடதுவிழியால் கண்ட காகாசுரன் கீழிறங்கி வந்து அந்த மென்தொடையை தன் கூரிய கரிய அலகால் கொத்தினான்.”

“தன் கணவனின் துயில் கலையலாகாது என்று அன்னை அதை பொறுத்துக்கொண்டாள். குருதி வழிந்து கன்னத்தை நனைக்க விழித்தெழுந்த ராமன் என்ன நிகழ்ந்தது என்று அறிந்து சினம்கொண்டான். காகத்தை நோக்கி அவன் சினந்தபோது அது இருள்விரிந்ததுபோல் எழுந்து பேருருக் காட்டியது. ராமன் அருகிருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அதை நோக்கி வீசினான். அது பெரும்புயலென பெருகி வருவதைக் கண்டு காகாசுரன் பறந்து தப்பினான். அந்த தர்ப்பபாசம் அவனை ஏழுலகங்களுக்கும் துரத்தியது. எங்கும் நிலைகொள்ளாமல் அவன் பறந்தான். அவன் வழிபட்ட குலதெய்வங்கள் அனைத்தும் அவனை கைவிட்டன. வேறுவழியில்லாமல் அவன் வந்து ராமனின் காலடியில் விழுந்து தன்னை காக்கும்படி கோரினான்.”

“அடியார்க்குநல்லானாகிய பெருமான் காகாசுரனின் பிழைபொறுத்து ஏற்றுக்கொண்டான். தன் தேவியின் காலடியில் மும்முறை வணங்கி அருள்பெறும்படி கோரினான். காகாசுரன் வணங்க அன்னை அவன் கழுத்தை தடவினாள். அவள் கையிலிருந்த குருதியின் ஈரம் பட்ட அந்த இடம் மட்டும் மென்வண்ணம் கொண்டது. அன்னையின் அழகை நோக்கிய அவன் ஒருகண் மட்டும் நோக்கிழந்தது. அன்றுமுதல் காகங்கள் கழுத்து வெளிறி, அரைநோக்கு கொண்டன” என்றார் சாதர். “காகன் மீண்டும் விண்ணேகி கலிதேவனின் துணைவனாக அமர்ந்தான். கலி மண்பிறக்க முடிவெடுத்தபோது தானும் உடன்வந்தான். அஸ்தினபுரியின் அரசன் என கலிதேவன் எழுந்தான். உடன் துச்சாதனன் என்னும் பேரில் காகன் பிறந்தான்.”

“அரசே, முற்பிறப்பில் செய்தவற்றையே மீண்டும் அவன் செய்தான். எப்பிழையும் ஏழுமுறை செய்யப்படும் என்று உணர்க! முதல்முறை அது பொறுத்தருளப்படும். பின்னர் அறிவுறுத்தப்படும். அதன்பின்னர் தண்டிக்கப்படும். ஏழுமுறை இயற்றப்பட்டு அதனூடாக ஏழுவகை அறிதல்களாக அது மாறும். ஏழாம்முறை விண்ணிலுறையும் தூய மெய்யறிவென்று தெளியும். அதனூடாக அப்பிழைசெய்பவன் வீடுபேறடைவான். பிழைகளனைத்தும் தவங்களே. பிழைகளினூடாகவே உயிர்கள் நிறைவடைந்து விண்மீள்கின்றன” என்றார் சாதர்.

துச்சாதனன் “என் குலமகள்! என் அரசி!” என விசும்பிக்கொண்டிருந்தான். கர்ணன் அவன் தோளை மெல்ல தட்டினான். பின்னர் எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன். நாளை போரில் எழுவோம்” என்றான். ஒற்றைக்கையால் துச்சாதனனின் எடைமிக்க பேருருவை சிறுகுழவி என தூக்கினான். அவனை நோக்கிக்கொண்டிருந்த சாதர் “நீங்கள் நாகர்” என்றார். துச்சாதனன் அரைவிழிப்பில் “ஆம், அவர் நாகபாசர். பாதாளனாகிய மணிகர்ணன் அவர் வில்லென்று நின்று நடமிடுகிறது” என்றான். சாதர் “நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும், அங்கரே” என்றார். அவர் விழிகள் நாகங்களுக்குரிய இமையா மணித்தன்மையை அடைந்துவிட்டிருந்தன. “சொல்க!” என்றான் கர்ணன். சாதரின் குரல் சீறலென மாறிவிட்டிருந்தது.

நாகர்களிடம் ஒரு கதை உள்ளது. முன்பு இங்குள்ள அத்தனை நாகங்களும் வான்நிறைத்து பறந்துகொண்டிருந்தன. காசியபரின் குருதியில் தட்சனின் மகள்களில் பிறந்த மாநாகங்கள் அனைத்தும் பெருஞ்சிறகுகள் கொண்டிருந்தன. அவை முதலில் வருணனாலும் பின்னர் சூரியனாலும் இறுதியில் இந்திரனாலும் முற்றாக தோற்கடிக்கப்பட்டன. மேலும் மேலும் அவியூட்டி வருணனையும் சூரியனையும் இந்திரனையும் ஆற்றல்மிக்கவர்களாக ஆக்கினர் அந்தணர். நூற்றெட்டுமுறை விண்ணிலும் நூற்றெட்டுமுறை மண்ணிலும் நாகர்கள் வெல்லப்பட்டனர். அஞ்சி அஞ்சி நிலையொழிந்து அவை பின்வாங்கின. ஆகவேதான் மண்நாகங்கள் இன்றும் மழையையும் வெயிலையும் ஒழிகின்றன. இடியோசையை அஞ்சுகின்றன.

மூன்று தேவர்களிடமும் நாகங்கள் இறுதி எல்லை வரை என நின்று போரிட்டன. ஒருமுறை போரின் உச்சகணத்தில் அவை கண்டன வருணனே பிரம்மன் என. சூரியனே சிவன் என்றும் இந்திரனே விண்வடிவன் என்றும் அவை அறிந்தன. உளம்நடுங்கிச் சுருண்டு அவை இருளுக்குள் சென்று பதுங்கின. அங்கே ஆழங்களுக்குள் இருந்து ஆழங்களுக்குள் அவை சென்றன. தங்கள் உடலை நீரென நீட்டி பாதாளங்களுக்குச் சென்று பந்தெனச் சுருட்டி அமைந்தன. அவற்றின் சிறகுகள் உதிர்ந்தழிந்தன.

முன்பு அவை வானளந்த காலத்தில் இடியின் ஓசையில் பேசிக்கொண்டிருந்தன. பாதாள இருளில் ஒன்றுடன் ஒன்று உடலொட்டி ஒற்றைச்சுருளென ஆகிக் கிடந்தபோது ஒன்றோடொன்று மூச்சொலியில் பேசிக்கொண்டன. அப்பேச்சே அவற்றின் குரலென்று பின்னர் மாறியது. அவற்றின் நீண்டு பறக்கும் உடல் உருமாறி பதுங்கும் வடிவை அடைந்தது. வானில் இருக்கையில் அவற்றின் செவிகள் பருந்துக்குரியவையாக இருந்தன. பாதாளத்தில் அசைவே ஒலியுமென்பதனால் அச்செவிகள் மறைந்து விழிகளையே அவை செவிகளாகக் கொண்டன.

நாம் இனி எந்நிலையிலும் வெல்லவியலாது என்று மாநாகங்கள் ஒன்றோடொன்று சொல்லிக்கொண்டன. நாம் நம்மை ஆக்கிய தெய்வங்களால் கைவிடப்பட்டுள்ளோம். அவிபெற்று வளர்ந்து வருணனும் சூரியனும் இந்திரனும் மூன்று முதற்தெய்வங்களுக்கு நிகரென்று ஆகிவிட்டிருக்கிறார்கள். இனி நாம் மேலெழுவது இயல்வதல்ல. நாம் நம் அன்னையிடம் சென்று கேட்போம். தன் மைந்தர்களுக்கு அவள் சொல்வதென்ன என்று உசாவுவோம் என்றது முதிய நாகமான கார்க்கோடகன்.

மாநாகர்கள் கிளம்பி மேலும் மேலும் ஆழத்திற்குச் சென்று ஆழமும் ஆன வானிலெழுந்தனர். அங்கே மாமலைத்தொடர்களை சிறுசெதில்கள் எனக்கொண்டு விண்மீன் மினுக்குகளால் ஆன கரிய திசைப்பெருக்கென உடல்விரித்துக் கிடந்த அன்னை கத்ருவை அணுகின. இடியோசைகளும் மலர்வெடிக்கும் ஒலியென்றாகும் கடுவெளி அது. ஆனால் அன்னைக்கு மைந்தர்குரல் எண்ணமாக இருக்கையிலேயே சென்றடையும். அவர்களின் மன்றாட்டை அன்னை கேட்டாள்.

அன்னையே, நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். இனி இப்புடவிப் பெருநெசவில் எங்களுக்கு இடமே இல்லையா என்று நாகங்கள் கேட்டன. அன்னை கண்கனிந்து எழுந்தாள். மைந்தர்களே, உங்கள் சிறகுகள் உதிர்ந்து பாதாளம் எங்கும் நிறைந்திருப்பதைக் கண்டீர்கள் அல்லவா? அச்சிறகுகளை உண்ணுங்கள். அவை உங்கள் உடலில் நஞ்சு என ஊறிச்சேரும். இனி அதுவே உங்களை ஆற்றல்கொண்டவர்களாக்கும். உலகறிய விரிப்பவை சிறகுகள் ஆகின்றன. கரப்பவை நஞ்சாகின்றன.

ஒளிந்திருக்கும் வஞ்சம், மறைத்துக்கொண்ட சினம், அடக்கிக்கொண்ட விழைவு, ஒலியாகாத சொல், திரளாத எண்ணம், திரிபடைந்த தவம் அனைத்தும் நஞ்சே. மைந்தர்களே, ஒளிக்குரியது சிறகு. நஞ்சு இருளின் விசை. இரவுகளை ஆளுங்கள். ஆழங்களில் நிறையுங்கள். இப்புவியில் இனி கரந்துறையும் அனைத்தையும் உரிமைகொள்ளுங்கள். காத்திருக்கும் அனைத்திலும் சென்று குடியேறுங்கள். அடங்காத அனைத்திலும் ஆற்றலென்றாகுங்கள். நீங்களில்லாமல் புடவியில் எந்நெசவும் முழுமையடையாமலாகுக

அன்னையின் சொற்களுடன் நாகர்கள் திரும்பி வந்தனர். அதன்பின் அவர்கள் தங்கள் பாதாளத்தில் இருந்து ஏழுலகுக்கும் கரவுப்பாதைகளை அமைத்துக்கொண்டார்கள். மண்ணுக்கு எழுந்துவந்து இங்குள்ள மலைக்குடிகளில் தூயவர்களாகிய பெண்களைக் கவர்ந்து அவர்களின் கருக்களில் நாகர்குடிகளென எழுந்தனர். நாகர்கள் காடுகளின் இருளில் கரந்துவாழ்ந்தனர். பெருநகரங்களின் அடியில் அவர்களின் ஊடுபாதைகள் அமைந்தன. அரண்மனைகளின் அடித்தளங்கள் அவர்கள்மேல் அமைந்திருந்தன. கோட்டைகளும் காவல்களும் அவர்களை தடுக்காமலாயின. அவர்களை பெரும்படைகளும் அஞ்சின. இப்பாரதவர்ஷம் நோக்குக்கு ஷத்ரியர்களாலும் உணர்வுக்கு நாகர்களாலும் ஆளப்படுவதாகத் தெரியும் என்றனர் மூத்தோர்.

கர்ணன் அவர் சொற்களை கேட்டுக்கொண்டு நின்றான். பூதநாதன் துயில்கொண்டிருந்தான். தழல் அணைந்து கங்காக மாறிவிட்டிருந்தது. “நான் உடனிருப்பேன்” என்று சாதர் சொன்னார். “நான் என்றும் உடனிருக்கிறேன்.” கர்ணன் மேலும் சிலகணங்கள் அவரை நோக்கியபின் துச்சாதனனைத் தூக்கியபடி நடந்தான். அவன் தோளில் தொங்கியபடி துச்சாதனன் சொன்னான். “அன்னையின் இனிய மது! அன்னை!”

அவர்கள் செல்வதை படைவீரர் நோக்கி அமர்ந்திருந்தனர். சாதர் தன் தலைக்கவசத்தில் விரலோட்டி தாளமிட்டார். “தோழர்களே, தொல்லரக்கர் குடியினரே, அருந்துக நம் அன்னையின் இன்னமுதை. கரியது, குளிர்ந்தது, ஆற்றல் அளிப்பது. அருந்துக இதை! இது நம்மை அழியாதவர்களாக ஆக்கும். எண்ணுக, இடும்பர் குடி எழும்! இங்கு நம் குருதி நிலைகொண்டு வாழும்!” முன்னும் பின்னும் உடலசைத்து சன்னதம் கொண்டு குரலெழுப்பினார் “நான் இடும்பன்! தொல்லிடும்பர் குடியின் குடாரன்! என் சொற்கள் இவ்விருளில் பெருகியெழுக! ஆம், எழுக!”

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விழா- கடிதம் – 17

$
0
0

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு

விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலம் அறிய ஆவல்.

அது ஒரு கனா அல்லது லட்சியம் என்று சொல்லலாம். ஜூன் 2016-ல்சோற்றுக்கணக்கு கதை படிக்கப்போய், உங்கள் எழுத்துக்களில் ஈடுபாடு ஏற்பட்டு, ஒவ்வொருநாளும் உங்கள் எழுத்துக்களை தேடி படித்து, பழைய விஷ்ணுபுரம் விருது விழாக்களின் காணொளிகளை ,உங்கள் உரைகளை, யூடுயூபில் கேட்டு, உங்களை நேரில் சந்திக்கவும், விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொள்ளும் ஆவலையும் வளர்த்துக்கொண்டேன். உங்களுக்கு கடிதங்கள் எழுதி, உங்கள் இணையதளத்தை மேற்பார்வை பார்க்கும் நண்பர்களுடன் தொடர்புகொண்டு என, என்னுடைய நட்பு வட்டத்தை வளர்த்துக்கொண்டேன்.

உங்களின் வாசகர்கள் என்ற வகையில் மட்டும் அணுக்கமாகிவிட்ட, முகமே பார்த்திராதநண்பர்கள், நீண்டநாள் பழகிய நண்பர்கள் போல் , எனக்கு அன்றாடும் குறுஞ்செய்திகள் அனுப்பியும், மின்கடிதங்கள் எழுதியும் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்களை நேரில்பார்க்கும் ஆர்வமும் வளர்ந்துகொண்டே இருந்தது. விஷ்ணுபுரம் விருது விழாவின் உரைகளைவேண்டுமானால், யூடுயூபில் கண்டுவிடலாம். புனைவுகளையும், கவிதைகளையும் படைக்கும்படைப்பாளிகளை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு , நேரில் வந்து விழாவில்கலந்துகொள்ளும் வாசகர்களுக்குத்தானே உண்டு?

எனது ஆசை கனவாக உருஎடுத்துக்கொண்டிருந்தது. எப்பொழுதும் குழந்தைகள் படிப்பு, விடுமுறை என்று பார்த்து, ஜூன்அல்லது ஜூலை மாதங்களில் சொந்த ஊரான கரூருக்கு வருபவன், கல்லூரி முடித்துவிட்டுவேலைக்குப் போகலாம் என குழந்தைகள் வளர்ந்துவிட, இந்த வருடம், விஷ்ணுபுரம் விருதுவிழாவில் வந்து கலந்துகொள்ளும் டிசம்பர் பயணம் என்று ஆக்கிக்கொண்டேன்.

விழாவிற்குஒரு புரிதலுடன் வரும்பொருட்டும், விவாதத்தில் கலந்துகொள்ளும் பொருட்டும், ஊருக்கு வந்தமுதல் நாளே, udumalai.com கடைக்கு நேரடியாகச் சென்று ராஜ் கெளதமனின் இரண்டுபுத்தகங்கள் – பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் , சுந்தரராமசாமி கருத்தும் கலையும் வாங்கிக்கொண்டேன். வாசிக்கத்தான் இல்லை.

உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் நானும், என் மனைவி ராதாவும், ஆங்கில எழுத்துக்களைஅதிகமாக படித்து எழுதுவதில் ஆர்வம் உள்ள எனது மகன் ஜெய்ந்தரும், படித்து பட்டம்பெறுவதற்காக மட்டும் புத்தகம் எடுக்கும் எனது மகள் பார்கவியும் டிசம்பர் 22 அன்று காலைகலைச்செல்வி அவர்களின் அமர்வின் பொழுது அரங்கில் நுழைந்ததும், எங்களைஎதிர்பார்த்திருந்த செந்தில்குமாரும், அரங்கசாமியும், ஷாகுல் ஹமீதும் ஒரு திருமணநிகழ்ச்சியில் வரவேற்பதைப்போல வரவேற்க, எங்கள் இலக்கியத் தேடலின் இன்னொருபரிமாணம் ஆரம்பமானது.

கரூரிலிருந்து, காலையில் எழுந்து நேராக வந்ததால் கொஞ்சம் தாமதமாக வந்தோம். மன்னிக்கவும். அதற்கு அப்புறம் இரண்டு நாட்களும், ஒரு அமர்வு விடாமல் கலந்துகொண்டோம். ஒவ்வொரு இலக்கிய அமர்விலும் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும், எனக்கு அல்லதுஎங்களுக்கு என்று இருந்த இலக்கியம், கதைகள், எழுத்து பற்றிய கேள்விகளுக்கு விடைகளும் கிடைத்தவண்ணம் இருந்தன. கலைச்செல்வி அவர்கள் , எழுத ஆரம்பித்தால் அப்புறம் அதுவேஎடுத்துக்கொண்டு சென்றுவிடும் என்று சொன்னதும், சரவணக் கார்த்திகேயன் அவர்கள்முதலில் பேஸ்புக்கில் எழுத ஆரம்பித்தபொழுது ஒரு தற்காலிக புகழுக்காக எழுதியதாகவும், இப்பொழுது பிடித்ததைத்தான் எழுதுவதாகவும் சொன்னது, அவ்வப்பொழுது வாழ்வியல்நிகழ்வுகளையும், வாசித்ததையும், ரசித்ததையும் எழுதும் எனக்கு ஊக்கமளிப்பவையாகஇருந்தன.

சரவணன் சந்திரன் அவர்கள், ஒரு நாள் எழுதாமல் இருந்தால் அவரால் நிம்மதியாகஇருக்கமுடியாது என்றும், எழுதுவதே அவருக்கு மிக நிம்மதி என்று சொன்னது எங்கள் மகன்சொல்வதுபோல் இருந்தது. சில கேள்விகளுக்கு அவரது உளவியல் ரீதியான அகம் திறந்தபதில்கள், என்னையும் என் மனைவியையும், எங்கள் மகன் பக்கம் திரும்பி உந்தன் பிம்பம்என்று பார்வையால் பரிமாறச் செய்தது. கல்லூரிப் பாடங்களைவிட, மற்ற புத்தகங்களைவாசிப்பதிலும், எதையாவது யோசித்து எழுதுவதிலும் ஆர்வமாக இருக்கும் எங்கள் மகனின்நிலைப்பாட்டை, மேலும் நன்முறையில் புரிந்துகொள்ள இந்த அமர்வு உதவியாக இருந்தது.

நாங்கள் சரியான வீட்டுப்பாடம் எதுவும் செய்யாமல் வந்திருந்தாலும், ஸ்டாலின் ராஜாங்கத்தின்செறிவான உரை, அவரது ஆளுமையையும் , ஞானத்தையும் எங்களுக்குள்கடத்திக்கொண்டுதான் இருந்தது. பண்பாட்டையும், தலித் சமுதாயத்தையும் பார்ப்பதற்குபிறிதொரு பார்வையை கொடுத்துச் சென்றது. நிகழ்வு முடிந்ததும், ‘ஆணவக்கொலைகளின்காலம்’ புத்தகத்தை வாங்க வைத்தது. சாம்ராஜின் பேச்சு அவையை சிரிக்க வைத்த வண்ணம்இருந்தது. இனிமேல் நான் மறந்தும்கூட ‘அற்புதம்’ என்ற வார்த்தையை உபயோகிக்கப்போவதில்லை. முடிந்தளவு புதிய வார்த்தைகளை உபயோகம் செய்ய வேண்டும் என்பதைஅவரது பகடியில் புரிந்து கொண்டேன்.

சுனில் கிருஷ்ணனும், தேவி பாரதியும், நான் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ளாத, அவசியம்தெரிந்துகொள்ளவேண்டிய ஆளுமைகள் என உணர்ந்தேன். அவர்களை அறிந்துகொள்ளும்பொருட்டு. ‘அம்பு படுக்கை’, ‘நட்ராஜ் மகராஜ்’ புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.

வாசகர்கள் ஆர்வமுடன் பங்குகொள்ளுமளவு , குயிஸ் செந்தில் அவரது நிகழ்வை நடத்தினார். அவர் கேட்ட நாற்பது கேள்விகளுக்கு, எனக்கு இருபது கேள்விக்களுக்கு அடிப்படைவிஷயங்கள் இருந்தாலும், வந்திருந்த மற்றவர்களுடன் போட்டிபோடும் அளவு என்னிடம் வேகம்இல்லை. எனக்கு மிகவும் பிடித்த, இரண்டு மூன்று முறை வாசித்த , ஒரு புளியமரத்தின் கதை, புயலில் ஒரு தோணி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரிந்தும் , உள்ளுக்குள் இருந்தது அதிவேகத்தில் வெளியில் வரவில்லை. சுஜாதா கதைகள் அதிகம் படித்தவன் என்ற மெத்தினம்எனக்கு உண்டு.

செந்திலின், கணேஷ் படிக்கும் அந்த இன்னொரு நாவல் என்ன என்ற சாப்பாட்டுகேள்விக்கு கூட என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தலை தொங்கி போச்சு. நேராக வெளியே சென்றேன். ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ புத்தகம் வாங்கி வந்தேன். புத்தகம் எல்லாம் கொடுத்து முடித்திருந்த உங்களிடம் வந்து, புத்தகத்தில் ஒரு கையெழுத்து வாங்கிக்கொண்டேன். (நாங்க, கு. அழகர்சாமியின் , அன்பளிப்பு கதை படிச்சிருக்கோம்).

தமிழை பேசும், எழுத்து கூட்டி வாசிக்கும் மகன் ஜெய், அமர்வுகளில் கலந்துரையாடலை முழுதாக உள்வாங்கிக்கொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டான். லீனா மணிமேகலையின்அமர்வையும் , அனிதா அக்னிஹோத்ரியின் அமர்வையும் ரசித்ததாக சொன்னான். லீனாமணிமேகலையின் அமர்வின்போது பெண்ணியத்தையும், தூமி பற்றிய பழைய / புதியஎண்ணங்களை விவாதித்ததையும் கவனித்து கேட்டான். நீங்களும் லீனாவும் கவிதை பற்றியமுரணான கருத்துக்கள் கொண்டு உரையாடினாலும், நிகழ்வு முடிந்து இருவரும் கைகுலுக்கிபேசிக்கொண்டிருந்ததை பார்த்து சந்தோஷப்பட்டான். லீனாவின் புத்தகமான பெண்ணாடியில்அவனும், அந்தரக்கண்ணி புத்தகத்தில் எனது மகளும் அவரது கையெழுத்தைவாங்கிக்கொண்டார்கள்.

முதல் நாள் மதியம் சாப்பிட்டு முடித்த கையோடு, அரங்காவும், ஷாகுலும் அவரவர் பங்குக்குஎன்னையும் என் குடும்பத்தாரையும் உங்களுக்கு எங்களை அறிமுகப்படுத்தினார்கள்.நீங்களோ , இவரைத் தெரியுமே என்றீர்கள். உங்களோடு பல புகைப்படங்கள் ‘கிளிக்’ ஆகிவிட்டது. சுற்றி பார்த்தால் நாஞ்சில் நாடனும், தேவதேவனும். நாஞ்சில் நாடனிடம் “உங்கள்பாஷையில் சொன்னால், சொல்லாழியில் அதிகம் சொற்கள் இல்லாதவன். நீல வேணி டீச்சரும், காவலாளி சுந்தர் சிங்கும் என் நினைவில் இருந்துகொண்டே இருப்பார்கள்” என்று என்னைஅறிமுகப்படுத்திக்கொண்டேன். ‘அட , இவன் கொஞ்சம் நம்மளை படிப்பான் போல’ என்றுபுரிந்துகொண்ட புன்னகை அவரது முகத்தில் வந்து போனது.

தேவதேவனும், நாஞ்சில் நாடனும், நானும் , குடும்பமும் என புகைப்படம் எடுத்துக்கொள்ள , தோழி லோகமாதேவி உதவி செய்தார். சொல்ல மறந்துவிட்டேன். அவரையும், நாங்கள் இதுவரை பாராமுகமாக குடும்பம் சகிதமாகபழகியிருந்தோம். இந்த விழாவில்தான் அவரையும் முதல்முறை நேரில் சந்திக்கிறோம். சுரேஷ்பிரதீப், விஷால் ராஜா, சுசித்ரா, யோகேஸ்வரன், தாமரைகண்ணன் என அனைவரையும் நேரில்சந்தித்து கை குலுக்கி, அவர்களது புன்னகையை பரிசாக பெற்றுக்கொண்டேன். கடலூர்சீனுவிடம், “தளத்தில் உங்களின் விமர்சனக் கடிதங்கள் அனைத்தையும் படிப்பேன்” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். டிசம்பர் 28, கி. ரா-வை பார்க்கச் செல்கிறேன், உங்களால் என்னுடன் இணைந்து கொள்ளமுடியுமா என்று சீனுவிடம் கேட்டேன். அவர் , அன்றுவீடு மாற்றும் வேலை இருக்கும் என்று சொன்னார்.

. ஒவ்வொரு நிகழ்வும் , நேரப்படி ஆரம்பித்து நேரத்தில் முடிந்தது ஆச்சரியப்பட வைத்தது. நான்வேலை பார்க்கும் நிறுவனத்தில் , GalaxZ என்று வாடிக்கையாளர்களை வரவைத்துஆண்டுதோறும் ஒரு மாநாடு நடத்துவோம். அதற்கு இணையாக இது இருந்தது. சாப்பாட்டுவிஷயத்திலும் அப்படித்தான். அந்த நிகழ்ச்சிக்கு சென்றால் மூன்று நேர சாப்பாடும், இடைஇடையே நொறுக்குத் தீனியும் குடிக்கும் பானங்களும் இருந்துகொண்டே இருக்கும். எனக்குத்தெரிந்து கடந்த இருபத்தைந்து வருடங்களில், நான் பொறுப்பு ஏற்காமல், ஒரு வாடிக்கையாளனாக பங்கேற்கும் ஒரு பொது நிகழ்வு இதுதான். எந்த விதமான கவலையும் இல்லாமல் (சாப்பிட்டிற்கு கூட எங்கு சென்று என்ன சாப்பிடுவது என்று அலையாமல்), பிடித்த இலக்கியம் மட்டும் பேசி , கலந்தோலசித்து, மகிழ்ந்திருந்த நாட்காளாக இந்த இரண்டு நாட்கள் இருந்தன. அமைப்பாளர்களுக்கும் , உங்களுக்கும், நண்பர்களுக்கும் மிக்க நன்றி

விருது வழங்கும் நிகழ்வில், பங்குகொண்டு வாழ்த்துரை கூறிய எழுத்தாளர்கள் – ஸ்டாலின் ராஜாங்கம், சுனில் கிருஷ்ணன், மதுபால், தேவி பாரதி, சிறப்பு விருந்தினர் அனிதாஅக்னிஹோத்ரி, நீங்கள், விருது கொடுத்து சிறப்பிக்கப்பட்ட ராஜ் கெளதமன் என அனைவரதுஉரைகளும் மிகச் சிறப்பு. அன்று விழாவில் கேட்டதல்லாமல் , ஊருக்கு வந்ததும் யூடுயூபிலும்கேட்டு அனைத்தையும் உள் வாங்கிக்கொண்டேன்.

காலமும் சமயம் அமைந்தால், நான் குடும்ப சகிதமாக அடுத்து அடுத்து வந்து விஷ்ணுபுரம்விருது விழாவில் கலந்துகொள்வதாகவே உள்ளேன்

குறிப்பு

நல்லஒருங்கமைப்புடன் நடத்தும் விழா இது என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. நேற்று , Netflex-ல் Ellen Degeners ஷோ பார்க்கும் பொழுது ஒரு எண்ணம் வந்தது. அமெரிக்காவில் நடக்கும்அமர்வுகளில் , ஒருவர் கேள்வி கேட்கும்பொழுது ஒரு முறையை கடைபிடிப்பது உண்டு. கேள்விகேட்பவர், தங்கள் பெயரையும், செய்யும் வேலை, ஊர் போன்றவற்றை சுருக்கமாகசொல்லிவிட்டு கேள்வி கேப்பார்கள். விஷ்ணுபுரம் விழாவிலும், அந்த முறைகடைபிடிக்கப்பட்டால், என்னைப்போன்ற புதிய பங்காளிப்பாளர்களுக்கு , மற்ற வாசகர்களைஅறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஒருவரே, திரும்ப திரும்ப கேள்வி கேட்டால், சுயஅறிமுகத்தை தவிர்க்கலாம். இன்னொரு முறையும் சில பேச்சாளர்களால் கடைபிடிக்கப்படும். அதாவது, கேட்டகேள்வியையே , பார்வையாளர்களுக்கு , அவர் சுருக்கமாக , இன்னொரு முறை சொல்லிவிட்டு , அதற்கு பதில் சொல்வார். நண்பர் ராம் அவர்கள் , அனிதா அக்னிஹோத்ரி அவர்களிடம்கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மொழி பெயர்க்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால், இதுகடைபிடிக்கப்பட்டது. இந்த முறை , மற்ற எழுத்தாளர்களுக்கும் பின்பற்றினால் நன்றாகஇருக்கும். உங்களுக்கு இதுவெல்லாம் தெரியாமல் இருக்காது. நேரம் விரயம் இவற்றில் ஆவதைநினைத்து, நீங்கள் தவிர்க்கவும் செய்யலாம். உங்களின்

விழாகுழு அமைப்பாளர்களின் தீர்வுக்கு விட்டுவிடுகிறேன்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

அன்புள்ள சௌந்தர்

முதல் விஷயம் ஓர் அரங்குக்கு ஒரு மணிநேரம் என்பது. அதில் கூடுமானவரை அந்த ஆசிரியரே பேசவேண்டும். கேள்விகேட்பவர் தன்னைப்பற்றிச் சொல்லலாம் என்றால் அந்த அறிமுகத்தையே இருபது நிமிடம் நீட்டிவிடுவார்கள் நம்மவர். கேள்விகள் சுருக்கமாக இருப்பதே நல்லது

அறிமுகங்களை எளிதாக ஓர் அரங்குக்கும் இன்னொரு அரங்குக்கும் இடையேயான இடைவெளியில் செய்துகொள்ளலாம் அல்லவா?

ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை

விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை

விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை

விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை

விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை

விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘நீள’கண்டப் பறவையைத் தேடி

$
0
0

a (2)

அன்புள்ள ஜெ.,

நலமா? ‘மார்கழித்திங்கள் பனி நிறைந்த நன்னாளாம் நீராடப் போகாதீர்’ பாட்டு கோயில்களிலோ ரேடியோ டீவியிலோ ஒலிக்கும் போது தான் சென்னையில் மார்கழி என்பதே ஞாபகத்திற்கு வரும். இந்த முறை அப்படியல்ல. பல நாட்கள் போர்வையின் துணை தேவைப்பட்டது. அப்படியாகப்பட்ட ஒரு விடிகாலை நேரத்தில் 05/01/2019 அன்று சனிக்கிழமை காலை கிண்டி ரயில் நிலைய வாசலிலிருந்து பேருந்தில் புறப்பட்டோம் புலிக்காட் ஏரி நோக்கி. நோக்கம் இந்த சீசனில் மட்டுமே காணக்கிடைக்கிற ‘பிளெமிங்கோ’ (பூநாரை) பறவைகளை தரிசிப்பது மற்றும் நெல்பேட்டா பறவைகள் சரணாலயம் காணுதல். ‘ஹிந்து’வில் சில நாட்களுக்கு முன்தான் விளம்பரம் பார்த்தேன் . நான் நீண்ட நாட்களாக பார்க்கவேண்டும் என்று  நினைத்த விஷயம். உடனே முன்பதிவு செய்து கொண்டேன். சுற்றுலா நடத்துனர் keyterns – ஸ்ரீனிவாசன். ‘பிளமிங்கோ ட்ரிப்’ என்ற வாட்சப் குரூப்பில் வரிசையாக அது சம்பந்தமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதனால் சுற்றுலாவிற்கு முதலிலேயே அதற்கான மனநிலை அமைந்து விட்டது.

இதற்கு முன் நண்பர்களுடன் புலிக்காட் போயிருக்கிறேன். ஆனால் எதுவும் பார்க்கக்கிடைக்கவில்லை. எங்கெல்லாம் ‘போர்டிங் பாயிண்ட்’  என்று முதலிலேயே வாட்சப் பில் பகிரப்பட்டிருந்ததால் குழப்பமில்லை. உப்பிய கன்னத்தோடு அந்த விடிகாலை நேரத்தில் கிண்டியில் ஒரு பத்து பேர் பேருந்தில் ஏறியிருப்போம். ஸ்ரீனிவாசன், பாலாஜி  அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பயண ஏற்பாட்டின் படி எங்களோடு ஒரு பறவையியலாளரும்(birder) வந்திருந்தார். என் பக்கத்து சீட்டில் அமர்ந்த பாடியில்  ஏறிய  கிருஷ்ணா ஒரு மல்லு இளைஞர். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். சாப்ட்வேர் காரர். கன்னியாகுமரி ஊர். உற்சாகமாகப் பேசியபடி வந்தார். அவருடைய உற்சாகத்தை மேலும் அதிகரிக்கு முகமாக தங்களுடைய தளத்தைப் பற்றிப் பேசினேன்.ஜெயகாந்தனா என்றார். ஜெயமோகன் 2.0, சர்க்கார் என்று அவர் கவனத்தைக் குவித்தேன். வெண்முரசை’ப் பற்றி ஒரு ‘இண்ட்ரோ’ கொடுத்தேன். ஆனால் இதையெல்லாம் அறிமுகமான அரை மணி நேரத்திலேயே செய்து முடித்து விட்டேன் என்று உறைத்தபோது அடடா.. தப்பு பண்ணிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் கடைசி வரை உற்சாகமிழக்காமலேயே இருந்தார். அவருக்கு keyterns ஸோடு இது ஆறாவது சுற்றுலா. அது போக நண்பர்களோடு சுற்றுலா வேறு. தொடர் பயணத்தில் இருக்கிறார். சாப்ட் ஆக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து பின் தமிழுக்கு மாற்றிக்கொண்டார். எங்களுக்கிடையேயான குறைந்த பட்ச பறவையியல் அறிவைப் பரிமாறிக்கொண்டோம்.

ஸ்ரீநிவாசன் ஒலிபெருக்கியில் அன்றைய நிகழ்ச்சி நிரலைப் பகிர்ந்து கொண்டார் ஒரு பொறுப்புத் துறப்போடு. அதாகப்பட்டது ‘பிளமிங்கோ’ க்கள் இந்த பருவத்தில் அதிகமாக வரும் என்றாலும் , அவற்றைக் காண்பதென்பது அன்றன்றைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே. நல்ல sighting கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார். நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்ந்தோம். இதற்கிடையே birder  பூநாரைகளைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுத்தார். பூநாரைகள் பொதுவாக அதிக கூச்ச சுபாவமுள்ளவை. எனவே மற்ற பறவைகளைப் போல் எளிதாகப் பார்த்துவிட முடியாது. அநேகமாக அவை உள்நாட்டுக்குள் வலசை போகக்கூடியவை. மிகக் குறைந்த அளவிலேயே வெளிநாட்டிலிருந்து வருவதாகவும், அவையும் மும்பைக்கு அருகே மட்டுமே வருவதாகவும் கூறினார். சென்னையில் பள்ளிக்கரணை மற்றும் கேளம்பாக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதாகவும், மிக அதிக எண்ணிக்கையில் காணக்கிடைப்பது புலிக்காட்டில் தான் என்றும் கூறினார். ‘உமது வாக்கு பலிக்கக் கடவது’ என்று சபிப்பதைத் தவிர வேறெதுதுவும் செய்வதற்கில்லை.பைனாகுலர், கேமரா சகிதம் வந்திருந்த ‘சஹ்ருதயர்’கள் விரைவிலேயே கூடிக் கும்மியடிக்கத் தொடங்கி விட்டனர். வந்தவர்களிலேயே பறவையியலை ‘சீரியஸ் ஹாபி’ யாகக் கொண்டவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் birder ஐ துளைத்தெடுக்க ஆரம்பித்தனர். அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

சென்னையிலிருந்து ஒரு மணி நேர பஸ் பயணத்திலேயே ஆந்திர கிராமப் புரங்களுக்குள் நுழைந்து விடுகிறோம். அங்கங்கே கிராமங்களில் சேவல்களை  சண்டைக்கு பழக்கிக்கொண்டிருந்தார்கள் சங்கராந்தியை ஒட்டி நம்ம ஊரு ஜல்லிக்கட்டு போல அங்கு நடத்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். சூலூர்பேட்டை ரவுண்டானாவிலேயே ஆளுயரக் ‘கட்டவுட்’களிலிருந்து ஆந்திரவாடுகள் முறைத்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். ஊரே ‘கட்டவுட்’களால் மறைக்கப்பட்டிருந்தது. சூலூர்பேட்டையில் காலைச் சிற்றுண்டியை எல்லோருக்கும் வாங்கிக்கொண்டு புலிக்காட் போய் சாப்பிடுவதாக திட்டம். அங்கு சற்று தாமதம் ஆகிவிட்டது. காலை எட்டரை மணிக்கே அவ்வளவு பனி இருந்தது. மிகக் குறைவான தூரமே காணக்கிடைத்தது. ஏற்கனவே பொறுப்புத் துறப்பு வேறு பயமுறுத்தியது.

b

சூலூர்பேட்டையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா செல்லும் சாலை இருபத்தியிரண்டு கிலோ மீட்டர் . நடுவில் எந்த கிராமமோ ஊரோ இல்லையாகையால் பேருந்து போக்குவரத்து இல்லை. தனியார் வாகனங்கள் வந்தால்தான் உண்டு. வேடந்தாங்கலுக்கும் செங்கல்பட்டிலிருந்து ஒரு நாளைக்கு ரெண்டோ மூன்றோ பேரூந்துகள்தான். புளியோதரையைத்  தின்றுவிட்டு கூச்சப்படாமல் தெருவில் வீசியெறிந்துவிட்டுப் போகிற தலைமுறை இருக்கிறவரை அரசு இந்த மாதிரி இடங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்காமல் இருப்பதே நல்லது. ஸ்ரீஹரிகோட்டா ‘ஸ்பேஸ் சென்டர்’ ராணுவப் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாதலால் பறவைகளுக்கு உச்சகட்ட பாதுகாப்பு. சரியான இடத்தையே தேர்வு செய்திருக்கின்றன. நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் புலிக்காட் ஏரி ஆரம்பிக்கிறது. முக்கால் பகுதி ஆந்திரா கால் பகுதி தமிழ்நாடு. இருமங்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பளீரென்று நீர்ப்பரப்பு. இதை brackish water என்று கூறுகிறார்கள். அதாவது  உப்புநீரும் நன்னீரும் கலந்த கலவை. இரண்டு ஆறுகள் அங்கு கலப்பதாகக் கூறுகிறார்கள்.  பூநாரைகள் விரும்பி வர அது ஓர் காரணம். இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆங்காங்கே சென்னையிலிருந்து பைக்கில் வந்த இளைஞர்களைப் பார்த்தோம். திடீரென்று ஸ்ரீநிவாசன் அதோ…லெப்ட்ல பாருங்க..என்றார்.

லேசான இள நீலத்தில் இருந்த நீர்ப்பரப்பு திடீரென்று வெள்ளைப் போர்வை போர்த்தியது போல இருந்தது. பூநாரைகள்….நூறு..ஐநூறு …கொஞ்சம் முன்னால போங்க என்றார் டிரைவரிடம். இல்லை இது மிகப்பெரிய கூட்டம்…எங்கள் birder குறைந்தது மூவாயிரம் இருக்கும் என்றார். Greater Flamingos. ‘தேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்’  பாடல் மனதில் எழுந்தது. பறவைகள் மிக உள்ளே தள்ளியே இருந்தன. அதாவது ஒரு கிலோமீட்டர் தூரத்தில்.சற்றே ஏமாற்றமாக இருந்தது. It doesn’t matter என்றார் எங்கள் birder  எல்லோரையும் இறங்கச் சொன்னார்கள். எங்களுடைய birder மிகச் சிறந்த பெரிய தொலைநோக்கி ஒன்றைக் கொண்டு வந்திருந்தார (கடைசி வரை அதன் விலையைச் சொல்லவே இல்லையே?)  ஸ்டாண்டில் முடுக்கி செட் செய்யவே சற்று நேரம் பிடித்தது. அதில் பார்த்தபோது….ஆஹாஹா….பறவைகளெல்லாம் காலடியில் நடந்து கொண்டிருந்தன. என்ன தெளிவு…என்ன அழகு…தன்னுடைய தொரட்டி மூக்கை – கசடுகளை வடிகட்ட வடிகட்டியும் மூக்கிலேயே உண்டு –  தண்ணீருக்குள் விட்டு தலையைப் பிரட்டி பிரட்டி குடைசல். பல நிமிடங்களுக்கு தலையை எடுப்பதில்லை. அங்கே படிந்துள்ள நீர்தாவரக் கசடுகள் மற்றும் படிவுகள்தான் முதல் முக்கிய உணவு. காலை முன்னும் பின்னும் நடனம் போல் அசைத்துக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த நடனத்தில்தான் மண்ணைக் கிளறி கசடுகளை மேலே கொண்டு வருகிறது. சிறிது நடனம்…சிறிது நடை…சிறிது தலைப்பிரட்டல்….அதாவது உண்டாட்டு..நடுநடுவே தலையைச் சுழற்றி இறகுகளைக் கோதல்..ஒரு பார்வை.. நன்கு வளர்ந்த பறவை நிமிர்ந்தால் சாதாரணமாக நான்கடி உயரம் இருக்கிறது. இதை விட  நீண்ட கழுத்துள்ள பறவையை நான் பார்த்ததில்லை.  அடுத்தாற்போல் பாம்புதாராவைச் சொல்லலாம். இணையைக் கவர நடனம் புரியுமாம். எதுவும் கண்ணில் அகப்படவில்லை.

இறகின் மீது இளஞ்சிவப்பு நிறத் தீற்றல். மூக்கின் நுனியிலும் இளஞ்சிவப்புதான். இளஞ்சிவப்பு நிறத்தின் அடர்த்தி பறவைக்குப் பறவை வேறுபடுகின்றது. அவைகள் சாப்பிடுகிற Algae யைப் பொறுத்து நிற மாறுபாடு இருக்கும் என்றார் எங்கள் birder. இப்போது தெரிந்தது  நாங்கள் நண்பர்களோடு வந்திருந்தபோது  எங்கள் கண்முன் இருந்திருந்தால் கூட ஏன் பார்த்திருக்க முடியாது என்று. கண்களால் முடிந்த அளவு அள்ளிப்பருகி விட்டு சிறிய தொலைநோக்கிகளுக்கு மாறிக்கொண்டோம். எல்லோரும் பார்க்க வேண்டுமல்லவா? அவைகளும் சிறந்த தொலைநோக்கிகளே. திடீரென்று ஒரு கலைசல். பட பட படவென நூற்றுக்கணக்கான பூநாரைகள் பறக்க ஆரம்பிக்கின்றன. வானத்தில் தீப்பிழம்புகளை  வரிசையாக விசிறியடித்தாற்போல….ரெக்கையின் விரிப்பசைவில் இளஞ்சிவப்பு சுடர் விடுகிறது ..சுடர் கண்ணிலிருந்து மறையும் வரை தொலைநோக்கிக் கொண்டிருந்தேன்….என்ன ஒரு உன்னதமான நாள் இன்று…..

வருகிற வழியில் திரும்ப ஒரு முறை பார்ப்பதாக முடிவு செய்து கொண்டு காலைச் சிற்றுண்டியை பூநாரைகளுடனேயே(அதாவது அவைகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே…நீங்க வேற) முடித்துக் கொண்டோம். பயணம் தொடர்ந்தது. சரியாக அடுத்த ஐந்து கிலோமீட்டருக்குள்ளாகவே அடுத்த ‘மூவாயிரத்தோரை’ கண்டோம். மிகப் பெரிய பூநாரை மந்தை. எங்களுடைய birder தன்னுடைய அடிபட்ட  காலையும் பொருட்படுத்தாது நீண்ட தூரம் நடந்து பெரிய தொலைநோக்கியை ‘செட்’ செய்து கொடுத்தார். அங்கே பார்த்த அதே காட்சிகள். அலுக்கவேயில்லை. கண் நிறையப்பருகி மனம் நிறைய சேர்த்துக் கொண்டோம். இங்கு ஒரு ஒரு மணிநேரம் நன்கு கழிந்தது. பூநாரையை போகஸ் செய்யும் போதே ‘அலாஸ்க்கா’ விலிருந்து வந்த ஒரு அபூர்வப் பறவையை கண்டு விட்டார் ‘பட்சிராஜன்’. Striated Green  Heron என்று ஞாபகம். சில painted stark கள், சில Pelicon கள், வேறு சில நாரைகள். மேலும் பயணித்து சதீஷ் தவான் space centre க்குள்- இந்தியா விண்வெளிக்கு செலுத்துகிற செயற்கைக்கோள்கள் எல்லாம் இங்கிருந்துதான் ‘ராக்கெட்’டின் மூலம் செலுத்தப்படுகின்றது –  நுழைந்து தலை வாசலோடு திரும்பி விட்டோம். முறையான அனுமதி வேண்டும். மேலும் அது எங்கள் ‘அஜெண்டா’ விலேயே இல்லை. புலிக்காட் சரணாலயம் தகவல் மையத்திற்கு வந்தோம். அங்கு பூநாரைகள் பற்றிய குறும்படம் கண்டோம். பார்த்ததைத் தொகுத்துக்கொள்ள ஏதுவாக இருந்தது.

பின்னர் மெதுவாகப் பயணித்து முன்னர் கண்ட ‘மூவாயிரத்தோரை’ மறுபடியும் கண்டோம். அலுக்காமல் சலிக்காமல் Algae யை மொசுக்கித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். பறவைகள் கூட்டம் சற்றே நகர்ந்திருந்தது கரையை நோக்கி. ஆர்வக்கோளாறில் சற்றே முன் சென்றோம். பூநாரைகள் பின் செல்ல ஆரம்பித்தன.  அவைகளைக் காலடியில் கொண்டு வர இருக்கவே இருக்கிறார் birder. நிறையப் பேர் என்னைப்போல் ஏகாங்கிகள் தான். மூன்று பேர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். ஒரு எழுபது வயது முதியவர் தனியாக வந்திருந்தார். வாயில் snacks ஐயும் கண்ணில் camera வையும் வைத்து நொறுக்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ‘நான் kenya ல நாப்பது ஐம்பது பார்த்திருக்கேன். இப்படி ஆயிரக்கணக்குல இப்பதான் பாக்கறேன்’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்.இன்னொரு சக பயணி அமெரிக்காவிலும் கனடாவிலும் பதினைந்து வருடம் வேலை செய்து விட்டு இந்தியா வந்து தொழில் தொடங்க இருக்கிறார். இந்தியாவைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். Keyterns வாடிக்கையாளர்.

கிராமங்களில் ஈரச் சேலையின் இரு புறமும் பிடித்துக்கொண்டு சுழற்றிச் சுழற்றி காயவைப்பார்களே அது போல பறவைகள் கூட்டமாகச் சேர்ந்து சமயங்களில் வானில் சில சமயங்களில்  நொடி தோறும் மாறும் ஓவியம் மற்றும் சிலை வடித்துக் காண்பிக்கும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் (குப்பை மேடுகள் மீது புல் முளைத்து சும்மா வாகமன் புல்மேடுகள் போல நிமிர்ந்து நிற்கின்றன. சுற்றுலா மையமாக்காமல் இருக்க வேண்டும்   )அலுவலகம் செல்லும் வழியில் பார்த்திருக்கிறேன். Birder யிடம் கேட்டேன். அதற்குப் பெயர் ‘முர்முரேஷன்’ (Murmuration). நெட்டில் காணக்கிடைக்கிறது.  கேட்டு அரை மணி நேரத்திலேயே காணக்கிடைத்தது ஆச்சரியம். பூநாரை அல்ல வேறு கொக்குகள் நூற்றுக் கணக்கில். வெள்ளைப் போர்வையை நீட்டி மடக்கி சுருட்டி ஆதாளி பண்ணிக்கொண்டிருந்தன.

சூலூர்பேட்டையில் மதிய உணவை வாங்கிக்கொண்டு நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் வந்து சேர்ந்தோம். அங்கு மதிய உணவு உண்டுவிட்டு பறவைகளைக் காண ஆரம்பித்தோம். open billed stork , Ibis, spoon billed stork, Pelicons கொத்துக்கொத்தாக மரந்தோரும் ஒவ்வொரு வகை. வேடந்தாங்கலைப் போன்றே இருந்தது. Birder இடம் பேசிக்கொண்டிருந்த போது ‘செம்போத்துவோட கண்ணை வாழைப்பழத்துக்குள்ள வெச்சி சாப்பிட்டா பிறக்கற குழந்தை கண்ணு அழகா இருக்குமாம். எங்க அம்மாவும் சாப்பிட்டாங்க, நானும் சாப்பிட்டேன்’ என்று ஒரு பெண் ஒரு பத்திரிகைப் பேட்டியில் கூறியிருந்ததைச் சொன்னேன். காதைப்  பொத்திக்கொண்டார். ‘ நான் என்னுடைய profession மூலமா birds க்கு கஷ்டம்தான் கொடுக்கிறேன். என்ன செய்ய?’ என்றார்.

keyterrns பற்றிச் சொல்லவேண்டும். விதம் விதமாக tour ஒருங்கு செய்கிறார்கள். Thematic tours. மஹாபலிபுரம், காஞ்சிபுரம், ஹம்பி, அங்கோர்வாட் என்று. ஒரு Archialogistஉம் கூட வருவார். குடும்பங்களுக்கு, அலுவலகங்களுக்கு (Corporate) என்று வேறு. ஆற்காட்டிற்கு ஒரு Callinary tour (சமையல் கலை) போகப் போவதாகச் சொன்னார் ஸ்ரீனிவாசன். கோத்தகிரி, மூணாறு trekking tour. சக பயணியரிலேயே இருந்த அவர்களின் வாடிக்கையாளர்கள் அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

எல்லோரும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். எனக்கு அலுவலகத்தில் Camera mobile அனுமதி இல்லாததால் என் செல்பேசியில் Camera வை செயலிழக்கச் செய்திருந்தேன். படம் பிடிப்பது பெரிய கவனச் சிதறலைக் கொடுப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் ஸ்ரீனிவாசன் மற்றும் சௌந்தர் வாட்ஸப்பில் பகிர்ந்த படங்களை அனுப்பியுள்ளேன்.

நான் birder யிடம் மிமிகிரி செய்யும் பறவை உண்டா என்று கேட்டேன். Black Drongo என்றார். நம்ம கரிச்சான் தான். சங்கத் தமிழில் ஆனைச் சாத்தான் என்று வழங்கப்பட்டதாக காட்டியல் நிபுணர் மா கிருஷ்ணன் கூறுகிறார். மைனாதான் நாகணவாய் என்று ஒரு சொல்வனம் கட்டுரையில் சொல்லியிருந்தார் நாஞ்சில் நாடன்.  birder  ஒரு ‘சைட்’ சொன்னார் www.xeno-canto.org. அநேகமாக உலகிலுள்ள அனைத்து பறவைகளின் குரலும்  பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் நீங்கள் பறவையின் ஆங்கிலப்பெயரை அடித்துத் தேட வேண்டும். தி.ஜானகிராமன் சொல்லுகிற வலியன் குருவி, தினைக்குருவி, ஊசிவால் குருவி, மிளகாய் குருவிக்கெல்லாம் ஆங்கிலப் பெயர் என்னவோ? வரும்போது பேருந்தில் பறவைகள் சம்பந்தப்பட்ட வினாடி வினா நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நீங்கள் சொல்வது போல இசை விழா, திரைப்பட விழா போல இன்று பறவைத்திருவிழா.  பறவைகளைத் தவிர வேறு நினைப்பில்லாமல் கழிந்தது. தகுந்த நேர இடைவெளி

களில் உணவு,தேநீர் மற்றும் கழிப்பறை க்கான நிறுத்தம் கொடுத்து சுற்றுலா மிகச் சிறப்பாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது.   இந்த மாதத்திற்குள் இன்னொரு முறை ‘பிளமிங்கோ ட்ரிப்’ இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாசன். அவரவர் ஏறிய இடங்களில் இறக்கி விடப்பட்டோம்  இனிமேல் சுற்றுலாவிற்கு வந்தவர்கள் பறவைகளைப் பார்க்கும் பார்வை ‘பறவைப்பார்வை’யாக இருக்கப் போவதில்லை.

www.keyterns.com   Srinivasan    7550042234

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கேசவமணி சுந்தரகாண்டம்

$
0
0

kesavamani

அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறேன்.
கடந்த காலத்தில் நல்லவை கெட்டவை இரண்டும் நடந்திருக்கின்றன.எனவே மீண்டுவர கால அவகாசம் தேவைப்பட்டது.
என்னுடைய “சுந்தர காண்டம்” என்ற சிறுநூல் நற்றிணை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
அன்புடன்,
கேசவமணி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

உல்லாலா!

$
0
0

 

ரயிலில் நான் ஏறி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டதுமே பக்கத்தில் இருப்பவர் அறிமுகம் செய்வார். “சார் சாப்பாடு வாங்கலையா?”. அவர் கையில் பிளாஸ்டிக் பையில் சாப்பாடு பொட்டலம் இருக்கும். அதை பதமாக எடுத்து அப்பால் வைப்பார். “இல்லசார், நான் இட்லி கொண்டுவருவான். வாங்குவேன்”. ரயிலில் பழம் சாப்பிடுவதில்லை. ஏன் பழம் சாப்பிடுகிறேன் என விளக்கவேண்டியிருக்கும்.அதற்கு வெண்முரசு ஒரு அத்தியாயம் எழுதலாம்

 

அவர் ஆரம்பிப்பார்.  “நான்லாம் வீட்டிலே இருந்து கொண்டுவந்துடறது சார். நமக்கு சுகர் இருக்கு. அதனால ராத்திரிக்கு இம்பிடுபோல கீரை சேத்து ஒரு சப்பாத்தி. பின்ன காணத்தொவையல்…” அருகிருப்பவர் “சக்கர வியாதிக்கு நீங்க சப்பாத்தி சாப்பிடக்கூடாது. எதுக்குச் சொல்றேன்னா… இப்ப பாத்தீங்கன்னா” என்று ஆரம்பிப்பார். அப்பாலிருந்தவர் “அப்டிச் சொன்னா நாம இப்ப பிரஷருக்கு என்ன சாப்புடுறோம்? பிரஷருக்கு உப்ப குறைக்கிறதிலே அர்த்தமே இல்ல…” என தொடங்குவார்.

 

சாப்பாடு பற்றிய உரையாடல் ஆரம்பிக்கும். நான் டிரைனோஸரஸிடம் டி-ரெக்ஸை மோதவிட்டுவிட்டு மெல்லக் கழன்றுகொள்வேன். மதுரை வரும்போது படுக்கை போட்டு “முருகா செந்திலாண்டவா!” என்று படுப்பார்கள். அதுவரை சாப்பாட்டுவிவாதம். சாப்பாடு வழியாகவே ஆன்மிகம், அரசியல், பண்பாடு.

 

என் வயதானவர்கள் வேறெதையும் பேசுவதில்லை என்பதை கண்டபின் அதைப் பேசவே கூடாது என முடிவெடுத்தேன். என்னிடம் சாப்பாடு பற்றிப் பேச வருபவர்கள் அதன் சுவை பற்றிப் பேசுகிறார்களா என்று கவனிப்பேன். “நம்ம எறச்சகுளம் முக்கிலே ஒரு பாய் கடைவச்சிருக்காரு.. ரத்தப்பொரியல் போட்டார்னா என்னான்னு கேக்கும்!” என ஒருவர் ஆரம்பித்தால் “என் இனமடா நீ” என பாய்ந்து அணைத்துக்கொள்வேன். என்னைச்சூழ்ந்திருப்பவர்கள் பெரும்பாலும் இந்த ரகம்தான். நாஞ்சில்நாடன் முதல் செல்வேந்திரன் வரை. விஜயராகவன் முதல் ராஜகோபாலன் வரை.

 

நம் சூழலில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு பழக்கநெறிமுறை பயின்று வந்துள்ளது. ஒரு கெத்துக்காக ஆங்கிலத்தில் behavioral template என்கிறேன். அடுத்தமுறை எவரிடமாவது பேசும்போது உங்களுக்கும் உதவியாக இருக்கும். அதில் வயோதிகத்துக்கு என சில உண்டு. ஐம்பது கடந்தால் , இப்போதெல்லாம் நாற்பது கடந்தாலே, அது வந்து ஒட்டிக்கொள்கிறது. நாம் விழிப்பாக இல்லையேல் நம் மனதில் அது குடியேறிவிடும். வாயில் எழுந்துவந்தபடியே இருக்கும். எண்ணி எண்ணி அகற்றவேண்டும்.

 

“காலம்பற டீ குடிச்சேன் சார், சூப்பர்!” என்றால் அது ஒரு மனநிலை. அதை நாற்பதுதாண்டினால் நாம் சொல்வதில்லை. “காலம்பற ஒருமாதிரி படபடான்னு வந்திச்சு… அப்டியே ஒரு டீயக் குடிச்ச அப்றம்தான் சமாதானமாச்சு” என்று சொல்லவேண்டும். டீ குடித்தபின்னர்கூட நெஞ்சைப்பிடித்து ஏப்பம் விட்டு “என்னத்த பாலோ என்னன்னு காச்சுதானோ, டீயக்குடிச்சா ஒருமாதிரி ஏப்பமாட்டுல்லா வருது” என்று சொல்லலாம். அமரும்போது “யப்பா செந்திலாண்டவா, முடியல. முதுகுலே ஒரு பிடிப்பு” என்று சொல்வதும் எழும்போது “அய்யோ… காலு ஒருமாதிரி இருக்கே…” என்று சொல்வதும் மரபு. இரண்டுமில்லாமல் சும்மா இருந்தால் “எந்திரிச்சு நடக்கமுடியுதா? சனியன் நாற வெயிலுல்லா அடிக்கி?” எனலாம்

 

உடல்நலம் குறித்த சலிப்பு என்பது உயர்குடிப் பண்பாடு. அதாவது நாம் உடலுழைப்பில்லாத முந்திய வாழ்க்கை வாழ்பவர்கள். “காலம்பற எந்திரிச்சா ஒரு கெறக்கம் மாதிரி… அந்தால மெள்ள எந்திரிச்சு ஒக்காந்து ஒரு காப்பியக் குடிச்சாத்தான் செரியாவும்”. படுக்கும்போது “பத்து பத்தரைக்கெல்லாம் என்னென்னு கெறக்கீட்டு வருதூங்கிய? ஒண்ணும் செரியில்ல” என்று சொல்லலாம். “நல்லா இருக்கேளா?” என எவராவது கேட்டுவிட்டால் “என்னத்தச் சொல்ல… கெடக்கோம். ஆண்டவன் அருள் பாக்கணும்…” என்று சொல்லத் தொடங்க அவர் “ஆண்டவன் இருக்கானே… வரட்டா, சோடக்காரன் வந்து நிக்கான்” என நகர முற்பட அவரை பிடித்து நிறுத்தி “எதுக்குச் சொல்லுதேன்னா நாலஞ்சுநாள இந்த இடத்தே காலுல ஒரு வெறயலு…” என ஆரம்பிக்கவேண்டும்

 

உடல்நலம் இல்லை என்பதை நாளும் சொன்னால் உடலே அதைப் புரிந்துகொண்டு நலமில்லாமல் ஆகிவிடும். நோயாளியாக ஆக மிக எளியவழி அது. உடல்நலம் இல்லை என்னும் சலிப்பு பலசமயம் நாம் உணர்ந்தே சொல்வதில்லை. நாம் அதை “சொவமாருக்கேளா? இப்பம் அங்கதானா?” போன்ற சமூகத்தேய்வழக்காகவே கற்றுக்கொள்கிறோம். “உஸ்ஸப்பாடா!” போன்ற வெற்றொலியாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் அதை நம் ஆழம் நேர் பொருளில் எடுத்துக்கொள்கிறது.

 

அந்தக்காலத்து கிழவாடிகளுக்கு இளவட்டங்கள் தங்களைக் கவனிக்கின்றனவா என்று சந்தேகம். கவனிக்கவேண்டும் என கட்டாயம்.  [“கல்லுக்குண்டு மாதிரி இருக்காரே. எளவு வயசாகியிருக்கும்லா பத்து அறுவது?” என] கண் போட்டுவிடுவார்களோ என்று பயம். ஆகவே இந்தவகையான ஆரோக்கியப் பிலாக்காணங்களை பயின்று வைத்திருந்தனர். அவை நம்மிடம் செவிச்செல்வமாக உலவுகின்றன. சொல்லப்போனால் வைரஸ் , அமீபியா அளவுக்கு நம் காற்றில் இவை உள்ளன. தப்புவதற்கு நிறைய எதிர்ப்புசக்தி தேவை.

 

இன்னும் சில சொல்முறைகள் கிழட்டுத்தனத்திற்கென உண்டு. எந்த உணவு சாப்பிடுவதென்றாலும், அது தானே சமைத்தது என்றாலும், முதல்துளி வாயில் பட்டதுமே “உப்பு கம்மி” என்றோ “அடி பொகைஞ்சிருச்சோ?” என்றும் கருத்து தெரிவிப்பது. ”இம்மிணி சுக்கு தட்டி போட்டிருக்கலாம்” என்பதும் “நம்ம சரசு நல்லா சமைப்பா” என வேறெதையோ நினைவுகூர்வதும் “மிளகுரசம்னா நாணாவய்யர் வைக்கணும் ,சாப்பிடணும். பாவம் போயிட்டான்” என உருகுவதும் இவ்வகை நிராகரிப்பேயாகும். உணவு நன்றாக இருந்தால்கூட அதை “நல்லாத்தான் இருக்கூஊ” என இழுத்து நிறுத்தவேண்டும்.

 

நித்ய சைதன்ய யதி உணவை உணவின் முன் அமர்ந்து பழிப்பதுபோல் பழிசேர்வது வேறில்லை என்பார். அது எந்த உணவாக இருந்தாலும் எதிர்மறையாக ஏதும் சொல்லாமலிருப்பதே நற்பண்பு. பிடிக்காவிட்டால் சாப்பிடவேண்டாம். எவரேனும் கருத்து கேட்டால்கூட உணவின்முன் இருந்து எழுந்தால்தான் சொல்லவேண்டும்.

 

இன்னொன்று ‘இப்பல்லாம் யாருசார் அதேமாதிரி!” என அலுப்பது. அதற்குப் பல அர்த்தங்கள். அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் உயர்கலையில் நுண்ணிலக்கியத்தில் நல்லுணவில் இயற்கையின் மடியில் சிறந்த உறவுகளில் திளைத்தோமாக்கும். அப்படித் திளைத்தவர் ஏன் இந்த லட்சணத்தில் இருக்கவேண்டும் என சூழ இருப்பவர்கள் எண்ணாமலிருக்க மாட்டார்கள். இருந்தாலும் “இப்பல்லாம் என்னா சார் பாட்டு போடுதான். உல்லாலாலா உல்லாலான்னுட்டு. அந்தகாலத்திலே சந்திரபாபு போட்டான்  பம்பரக்கண்ணாலேன்னு… அது பாட்டு, என்ன சொல்றீய?” என்று ஆரம்பிக்கலாம். “எளவு, அதுதானே இது” என்று பிறர் வாய்க்குள் முனகினால் நமக்கென்ன?

 

முதுமைக்கு இந்தியாவில் அந்தக்காலத்தில் பெரிய மரியாதை இருந்தது. “சார், வாங்க. டேய் அய்யாவுக்கு சேர் போடு” என ஒரு காலம். ஆகவே அனைவரும் வயதானவர்களாக ஆக ஆசைப்பட்டார்கள். நாற்பது கடந்தாலே வயோதிகம்தான். [ஐம்பது வயது முதியவர் சாவு!!!! தினத்தந்தி] வயோதிகம்போல நடித்தாலேகூட ஒரு பெரியமனித இடம் கிடைக்கும். இன்று அப்படி இல்லை. விரைவுயுகம். இளமையே மதிப்பிற்குரியது. “யோவ் பெரிசு அந்தால போ. ஊட்ல யாருமில்லியா?”. இன்றும் நாம் நம்மையறியாமலேயே கிழவாடிவேடம் கட்டவைக்கின்றன இந்த தேய்வழக்குகளும் தேய்ந்த மனநிலைகளும். தள்ளுபவர்கள் தப்பமுடியும்.

 

ஆகவே மனசுக்குள் எப்போதும் உல்லால உல்லாலாதான்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 17024 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>