Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16971 articles
Browse latest View live

அனோஜனின் யானை –கடிதங்கள் – 6

$
0
0

anojan

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

ஒருதுளி இனிமையின் மீட்பு

அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

பொதுவாக ஈழ இலக்கியம் மலேசிய இலக்கியம் ஆகியவற்றை இங்கே பேசும்போது ‘இதோடு அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்’ என்ற பாணியிலேயே சொல்வார்கள். ஆகா ஓகோ என புகழ்வார்கள். ஆனால் விமர்சனப்பார்வை இருக்காது. ஒரு சலுகை காட்டும் பாவனைதான் இருக்கும். ஆனால் உங்கள் தளத்தில் கடுமையான விமர்சனப்பார்வை உள்ளது. அதோடு தொடர்ச்சியாக ஈழ இலக்கியம், மலேசிய இலக்கியம் ஆகியவற்றை அறிமுகம் செய்து விவாதிக்கச் செய்கிறீர்கள். மலேசியா நவீன், இலங்கை அனோஜன் போன்றவர்கள் இங்கே எழுதும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குச் சமானமாக பேசப்படுகிறார்கள். இதற்கு முன்னால் இப்படி ஒரு பரிமாற்றம் நடந்ததே இல்லை. உங்கள் தளத்தின் முக்கியமான கொடை இது என நினைக்கிறேன்

ஆர். ராதாகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

ஈழ இலக்கியம் பற்றிய சண்டைகள் அங்குள்ள எழுத்தாளர்களை ஆழமாக நம் மனதில் நிறுத்துகின்றன. இந்தச் சண்டைகளும் பூசல்களும் இல்லாவிட்டால் அங்குள்ள எழுத்தாளர்களை நாம் இந்தளவுக்கு நினைவில்கொள்வோமா என்று சந்தேகம்தான். அனோஜனுக்கு வாழ்த்துக்கள்

எஸ்.அருண்

அன்பின் ஜெ,

‘யானை’ சிறுகதை பரவலான கவனத்திற்கு உள்ளாகியதில் மகிழ்ச்சியே. இத்தளத்தில் வெளியாகிய வாசகர் கடிதங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவையாக இருந்தன. முகம் தெரியாத நுட்பமான வாசகர்களிடம் சென்று சேர்ந்திருப்பது மிகுந்த திருப்தியைத் தந்திருக்கின்றது. மிகப் புத்துணர்ச்சியாக உணர்கிறேன். இன்னும் வாசிக்க வேண்டியவையும், எழுதிச் சென்றடைய வேண்டிய இடங்களும் தூரங்களும் இன்னும் அதிகம் என்பதிலும், நம் முன்னோடிகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன என்பதிலும் தெளிவாகவே இருக்கிறேன். படைப்பூக்கத்தை இன்னும் துலங்கச் செய்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

கிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் குறித்து

அ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியச் சண்டைகளின் சாரம்

$
0
0
லக்‌ஷ்மி மணிவண்ணன்
லக்‌ஷ்மி மணிவண்ணன்

வணக்கம் ஜெ,

தமிழ்ச்சமூகம் அறிவார்ந்த சமூகமாக வளர்வதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் எனக்குத் தட்டுப்படவில்லை. பல்வேறு துறைகளில் இதற்கான உதாரணத்தை முன் வைக்கலாம். தற்போதைய இலக்கிய சூழலில் நடைபெறும் சர்ச்சைகளிலிருந்து சில உதாரணங்களை முன் வைக்கிறேன்.

கோவையில் இயங்கி வரும் இலக்கிய அமைப்பு சாகித்ய அகாதெமியுடன் இணைந்து ‘சமகாலத் தமிழ் கவிதைகள்’ எனும் நிகழ்வை நடத்தியிருக்கிறது. இந்நிகழ்வுக்கு நாஞ்சில் நாடன், இசை, சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் என முக்கியமான இலக்கியப் படைப்பாளிகள் யாரும் அழைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தார் கவிஞர் லக்‌ஷ்மி மணிவண்ணன். தனிப்பட்ட அமைப்பு நடத்தும் கூட்டமாக இருந்தால் இந்தக் கேள்வியைத் தான் எழுப்பப் போவதில்லை என்றும், சாகித்ய அகாதெமி நிறுவனத்துடன் இணைந்து நடத்துவதால் மட்டுமே தான் இந்தக் கேள்வியைக் கேட்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கேள்வி மிகவும் நியாயமானது. ஒரு படைப்பாளியாக மட்டுமல்ல உண்மையான இலக்கிய வாசக மனநிலையிலிருந்து இக்கேள்வியை எழுப்பினார் லக்‌ஷ்மி மணிவண்ணன். ஆனால் அதற்கு உரிய பதில் அளிக்கப்படாமல் அவர் மீது வசைகளையே பொழிந்தனர். மட்டுமல்லாமல், லக்‌ஷ்மி உங்களின் எழுத்துகளைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறவர் என்கிற முறையில் உங்கள் மீதும் சில வசைகள் வந்தன.

லக்‌ஷ்மி மணிவண்ணனின் கேள்வியின் நியாயத்தை உணர்த்தும் விதமாக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஒரு பதிவிட்டார். அங்கும் வந்து குழுமி விட்டார்கள்.

அடுத்ததாக ஒரு பெண் கவிஞரின் பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடக்க இருக்கிறது. அதைப் பகிர்ந்த லக்‌ஷ்மி மணிவண்ணன் மிகவும் வன்மமான ஒரு வார்த்தையை வெளிப்படுத்தியிருந்தார். பிறகு அதை திருத்தியும் விட்டார். அதைக் கண்டித்து அந்தப் பெண் கவிஞர் இட்ட பதிவில் இலக்கிய உலகை மீட்க வந்த ஆபத்பாந்தவன்களெல்லாம் மொய்த்திருந்தார்கள்.

அந்தப் பெண் கவிஞர் இலக்கியத்துக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறார்? இவரிடம் உரையாடுவதன் வாயிலாக மாணவர்கள் எதனைக் கற்க முடியும் என கல்விப்புல ஊழலை விவரித்து மீண்டும் ஒரு பதிவிட்டார் லக்‌ஷ்மி மணிவண்ணன்.

எப்படியான சூழலிலும் அவர் வன்மமான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக்கக் கூடாது. ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் வெளிப்படுத்திய விதம் கண்டனத்துக்குரியதாக இருந்தாலும் அவரது நோக்கம் மிக நியாயமானதாகவே படுகிறது.

லக்‌ஷ்மி மணிவண்ணனின் பதிவைக் கண்டித்து அதில் குறிப்பிடப்பட்ட பெண் கவிஞரின்  பதிவில் இடப்பட்டுள்ள கருத்துகளைப் படிக்கையில் மிகப்பெரிய அவ நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவர் லக்‌ஷ்மி மணிவண்ணனை யார்? என்று கேட்கிறார். அதற்கு இன்னொருவர் ‘சொல்லிக்கிற மாதிரியான ஆள் இல்லை. சர்ச்சையைக் கிளப்பி ஃபேமஸ் ஆகப் பாக்குறான்” என்று பதிலுரைத்திருக்கிறார். அதாவது  குறிப்பிடத்தகுந்த படைப்பு ஏதும் எழுதாத ஒரு பெண் கவிஞரை வசைபாடுவதன் வாயிலாக தனக்கான இடத்தை லக்‌ஷ்மி மணிவண்ணன் தேடிக் கொள்கிறார் என்பது எவ்வளவு அபத்தம். அரைவேக்காட்டு இலக்கியவாதிகளும் வந்து குழுமியிருந்தார்கள். சிலர் பெண்ணிய நோக்கில் ஆணாதிக்க செயல் என்றும், ஒருவர் இந்துத்துவ மனநிலை என்றும் பதிவிட்டிருந்தார்கள்.

பெண் என்கிற அடையாளத்தை முன் நிறுத்தியே படைப்புலகில் அவர்கள் வெளிச்சம் பெறுகிறார்கள் என்பதைத் தொடர்ச்சியாக நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அது கடுகளவும் பொய்யல்ல என்பதையே மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் பள்ளியில் படிக்கையில் இலக்கிய மன்றக் கூட்டத்துக்கு ‘கவிதாசன்’ என்ற ஒருவரை கவிஞர் என அழைத்து வந்து பேச வைத்தார்கள். இன்று யோசிக்கையில் அவருக்கும் கவிதைக்கும் என்ன சம்மந்தம்? என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. வாசிப்பின் வழியே முன்னகர்கிறவன் உண்மையான படைப்பாளியை அடையாளம் காண்பான். அதற்கான வாசலைத் திறந்து விடுகிறவர்களாக அங்கு பேசுபவர்கள் இருக்க வேண்டும். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின், தமிழ்த்துறை முன்னெடுக்குமளவுக்கு அப்பெண் கவிஞர் என்ன செய்து விட்டார்? என்பது கேள்விக்குறியே. மேலும் அதற்குத் தகுதியான படைப்பாளிகள் மறுக்கப்படுவது குறித்து ஆதங்கப்படுவதும் கேள்வி கேட்பதும் இலக்கிய உணர்வுள்ளவரின் கடமை என்றே சொல்லலாம்.

லக்‌ஷ்மி மணிவண்ணனின் வன்மமான சொல்லாடலைக் கண்டிப்பதோடு மட்டும் நிற்கிறவர்கள், இக்கேள்வியைப் பொருட்படுத்தவில்லை. முகநூலில் அறிவுத்துறையில் இயங்குவதாக நம்பிக் கொண்டிருக்கும் அரைவேக்காடுகளின் அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல… ஏதோ தனக்குத் தோன்றியதை கவிதை எனப் பதிவிட்டு, அதற்குக் கிடைக்கும் விருப்பக் குறிகளைக் கண்டு குதூகலிக்கும் பெண்களை தொகுப்பு கொண்டு வாருங்கள் என தூண்டி விடுவது இந்த அரைவேக்காடுகள்தான். இதில் சில மூத்த இலக்கியவாதிகளும் அடக்கம். ஒரு தொகுப்பு வெளியாகி விட்டால் இலக்கிய பீடத்தில் அமர்ந்து விட்ட மிதப்பில் திரிய ஆரம்பித்து விடுவார்கள். ஓர் ஆண் படைப்பாளி பல கட்டப் போராட்டத்துக்குப் பிறகு அடையும் இடத்தை இவர்கள் இரண்டு உதவாக்கரை தொகுப்புகள் மூலமே எட்டி விடுவார்கள்.

இது பற்றி எதிர்க்கேள்வி எழுப்பினால் பெண்கள் முன்னேறுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆணாதிக்க மனோநிலை என்கிற சப்பைக்கட்டு பதில் வரும். இன்றைக்கு அறிவார்த்தமான விவாதம் எதனையும் முன்னெடுக்க முடியாத சூழலே இருக்கிறது. ஏனென்றால் அரைவேக்காட்டு கருத்தியல் சூழலுக்கு எதிராக மூச்சு விட்டாலே ஆணாதிக்கவாதி, இந்துத்துவா, பார்ப்பான் என எதாவது ஒன்றைத் தூக்கிப் போட்டு சாகடித்து விடுவார்கள்.

அறிவுத்துறையில் தீவிரமாக இயங்கி வருகிறவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இது போன்ற அரைவேக்காடுகளே தங்களை முன் நிறுத்திக் கொள்வதுதான் துயரமாக இருக்கிறது.

- நன்மாறன்  

ela
இளங்கோ கிருஷ்ணன்

அன்புள்ள நன்மாறன்,

சமீபத்தில் கேரளத்தில் நான் கலந்துகொண்ட ஒரு கவிதைவிழாவில் பேச்சாளர்களில் ஒருவர் இரு தமிழ்க்கவிஞர்களை மேற்கோள்காட்டினார். இசை, இளங்கோ கிருஷ்ணன். அவர்களின் நல்ல கவிதைகளை. மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் பேசினேன். [கூடுதல் செய்தி, அவர் விழியிழந்தவர். ஆனால் அரிய வாசகர்]

அவர் இசை, இளங்கோ கிருஷ்ணன் ஆகிய இருவரை எப்படி அறிமுகம் செய்துகொண்டார் என்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஷொரனூரில் நிகழ்ந்த ஒரு தேசியக் கவிதையரங்குக்கு என்னை பேச அழைத்தனர் அமைப்பாளர்கள். அழைத்தவர் நான் பெரிதும் மதிக்கும் கவிஞர். இருந்தாலும்  மிகக்கடுமையாக எதிர்வினையாற்றினேன். ஏனென்றால் அதில் தமிழின் பிரதிநிதிகளாக கலந்துகொள்வதாக அழைப்பிதழில் கண்ட இரு தமிழ்ப்பெண் கவிஞர்களுக்கும் தமிழ்கவிதையின் மைய அழகியலுக்கும் தொடர்பே இல்லை. வழக்கமான பெண்ணிய அரற்றல்களை எழுதுபவர்கள். அவை கருத்தரங்க உரைகள் போல உலகமெங்கும் ஒரேவகையான சொற்கள் கொண்டவை.

“ஒரு தேசிய அரங்கில் தமிழின் சார்பில் இக்கவிதைகளை முன்வைப்பது தமிழின் இலக்கியச்சூழலையே சிறுமைசெய்வது. கன்னடமும், வங்கமும், மலையாளமும் எத்தகைய கவிதைகளை முன்வைக்குமென அறிவேன். அவற்றின்முன் இந்தக்கவிதைகளை முன்வைப்பது என் மொழியை நானே இழிவுபடுத்துவது, நான் வரமுடியாது” என்றேன். [என்னை மலையாள எழுத்தாளராக அழைத்திருந்தனர்.] கவிஞர் சமாதானம் சொல்ல வந்தார். எனக்கிருந்த வேகத்தில் “இது திட்டமிட்டு தமிழர்களை தேசிய அரங்கில் இழிவுசெய்யும் திட்டம்” என்றேன்.

கவிஞர் புண்பட்டார். “நாங்கள் ஓர் தேசிய அமைப்பு. ஆகவே சாகித்ய அகாதமியிடம் முறையாக கோரினோம். இவர்களை பரிந்துரை செய்தனர். இவர்களை பரிந்துரை செய்தவர் சாகித்ய அகாதமியின் ஒருங்கிணைப்பாளரான சிற்பி” என்றனர். சிற்பி இன்றைய தமிழிலக்கியம் மீது ஊழ் விடுத்த தீச்சொல்,  ஒர் அழிவுசக்தி என்பது என் எண்ணம். தமிழண்ணல், பாலா, சிற்பி இப்போது மாலன் என நமக்கு எப்போதுமே இத்தகைய சிறுமதியாளர்களே வாய்க்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் உருவாக்குவது ஒரு பண்ணையடிமைமுறையை. அதை ஏற்று செருப்புதாங்குபவர்களின் ஒரு படையை இலக்கியவாதிகளாக முன்வைக்கிறார்கள்.

மறுநாள் கவிஞர் என்னை அழைத்தார். “நீங்கள் வேறு இரு கவிஞர்களை பரிந்துரை செய்யுங்கள்” என்றார். “இல்லை, நீங்கள் பட்டியலை முழுமைசெய்துவிட்டீர்களே” என்றேன். “நான் எம்.டி.வாசுதேவன் நாயரிடம் பேசினேன். கூடுதலாக அழைக்க அனுமதி கிடைத்துவிட்டது… அவர் வருத்தம் தெரிவிக்கிறார்” என்றார்.

isai
இசை

நான் இசை, இளங்கோ கிருஷ்ணன் இருவரையும் பரிந்துரை செய்தேன். கூடுதலாக அவர்கள் இருவரும் அழைக்கப்பட்டார்கள். இருவரின் கவிதைகளையும் முகையூர் அசதாவிடம் கொடுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தேன். நான் எண்ணியதுபோலவே அந்தக் கருத்தரங்கிலேயே கொண்டாடப்பட்ட கவிதைகள் அவர்கள் இருவரும் வாசித்தவைதான். இந்தியாவின் பிறமொழிக் கவிதைகள் எவையும் அவற்றின் கூர்மையுடன், நுட்பத்துடன் இருக்கவில்லை. தமிழ் நவீனக்கவிதை இன்று உலகில் எப்பகுதியிலும் எழுதப்படும் நவீனகவிதைகளுடன் இணைநிற்கத்தக்கது என அவர்கள் அங்கே காட்டினார்கள்.

டி.பி.ராஜீவன் அரங்கிலிருந்தே  என்னை அழைத்து “யார் இந்த இசையும், இளங்கோ கிருஷ்ணனும்?  இவர்கள்தானே கவிஞர்கள்! இன்றைக்கு இந்தியாவில் இவர்களுக்குச் சமானமாக வேறு இளம்கவிஞர்கள் இல்லை” என்றார். [அவர்கள் இருவரையும் அவர் சகட்டுமேனிக்கு முத்தமிட்டதாக பின்னர் செய்திகள் வந்தன]. பல ஆண்டுகளுக்குப்பின் கோவைக்கு வந்த எச்.எஸ்.சிவப்பிரகாஷ் “கோவையில் இரண்டு நல்ல கவிஞர்கள் இருப்பதாக என்னிடம் சொன்னார்களே? ஹூ இஸ் இஜை?” என்று கேட்டார். [இசையை அவருக்கு அறிமுகம் செய்ய ஆளனுப்பித் தேடினால் அவர் வண்ணதாசன் அறையில் நண்பர்கள் சூழ நிறைந்த மனநிலையில் இருப்பதாக செய்தி வந்தது].

இதை ஏன் சொல்கிறேன் என்றால் எவர் முன்னிறுத்தப்படுகிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்கள் முன்னிறுத்தப்படுவதன் வழியாக எவர் மறைக்கப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத்தான். எல்லாமே கவிதைதான், நல்லகவிதை என எவர் வரையறுப்பது, இலக்கியம் என்ன உங்களுக்கு பட்டா போடப்பட்டதா, இலக்கியத்தில் ஜனநாயகம் தேவை  என்பதுபோன்ற மொண்ணைக்கேள்விகளைக் கேட்கும் அறிவிலிகள் எப்போதுமுண்டு. இலக்கியம் தீவிரமான விமர்சனம் வழியாகவே எப்போதும் எங்கும் செயல்பட்டு வருகிறது. அவ்விமர்சனத்தால் வெளித்தள்ளப்படும் அறிவிலிகளின் குரல்கள் அவை. வாசகன் ஒருபோதும் அவற்றை பொருட்படுத்தமாட்டான்.

தேசிய அளவில் க.நா.சு., வெங்கட் சாமிநாதன் இருவரும்தான் தொடர்ச்சியாக தமிழின் நல்ல இலக்கியங்களை அறிமுகம் செய்தனர். அமைப்புக்கு வெளியே நின்று தங்கள் தனித்தொடர்புகளால் அவர்கள் இதை செய்தனர். அவர்களால்தான் இங்கே நவீன இலக்கியம் இருக்கிறதென்பதையே இந்தியா அறிந்தது. இல்லையேல் நமக்கு அகிலனும் சிவசங்கரியுமே உச்சங்கள் என அவர்கள் நினைத்திருப்பார்கள். நம் கல்வித்துறையும் அமைப்புக்களும் அவர்களைப் போன்றவர்களையே முன்னிறுத்தினர். இன்று மு.கருணாநிதியும் சி.என்.அண்ணாதுரையும்தான் தமிழிலக்கிய உச்சங்கள் என நிறுவ பலகோடி ரூபாய் செலவில் கூலிப்படையைக்கொண்டு அமைப்புரீதியாக முயன்றுவருகிறார்கள். இச்சூழலில் விமர்சனக்குரல் மேலும் சமரசமற்றதாக எழுந்தாகவேண்டும்.

சாகித்ய அகாதமி ஓர் அரசமைப்பு. அது இப்படி தகுதியற்றவர்களை பிரதிநிதிகளாக முன்னிறுத்துகையில் மிக மோசமான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. தமிழிலக்கியத்தை இந்தியச்சூழலில் சிறுமைசெய்கிறது. அந்த சராசரிகளைக் கொண்டு தமிழின் இலக்கியச் சாதனைகளை முழுமையாகவே இந்தியச்சூழலில் இருந்து மறைத்துவிடுகிறது. இது ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழும் ஒரு மோசடி.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ‘இந்திய நவீன இலக்கியங்களில் மகாபாரதத்தின் தாக்கம்’ என ஒரு கருத்தரங்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சாகித்ய அகாதமியால் நடத்தப்பட்டது. அதன் தலைவர் மாலன். அதில் அவரோ கலந்துகொண்ட பிறரோ ஒரு வார்த்தைகூட வெண்முரசு என்னும் நாவல் இங்கே எழுதப்படுவதைப்பற்றி பேசவில்லை. உண்மையில் பலருக்கு தெரிந்திருக்கவுமில்லை. மாலன் மகாபாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டதாக குறிப்பிட்ட அ.மாதவையாவின் ‘கண்ணன் பெருந்தூது’ என்னும் சிறுகதை  மகாபாரதம் பற்றியதே அல்ல – அது ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் பிராமணப்பெண்களை பகடி செய்யும் ஒரு கதை. இந்தக்கும்பல் சொல்லாததனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை, எக்காலமும் அந்த வட்டத்திற்குள் நான் செல்லப்போவதுமில்லை. ஆனால் அரசின் நிதியுதவியுடன் நடக்கும் ஒரு நிகழ்வில் பங்கெடுக்கும் ஒருவரின் அறிதலுரிமைக்கு நிகழ்த்தப்படும் சிறுமை இது.

இந்த வகைச் செயல்பாடுகள் ஏன் மலையாளத்திலோ கன்னடத்திலோ நிகழ்வதில்லை? நிகழ்ந்ததுண்டு, மிக அரிதாக. பிரபா வர்மா என்ற சுமாரான கவிஞருக்கு 2016-இல் கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டபோது விமர்சகர்கள் கிழித்த கிழியில் அவர் விருதை துறப்பதாக ஊடகங்களில் அறிவிக்கவேண்டியிருந்தது. [ஆனால் பின்னர் ஏற்றுக்கொண்டார்] நடுவர்கள் ஆறுமாதகாலம் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்கள்.

இத்தகைய ‘தரம் மறந்த’ நிகழ்வுகள் நிகழும் என்றால் உருவாகும் சூழலின் கோபமே அமைப்புகளை கட்டுப்படுத்தும் விசை. கன்னடத்திலும் மலையாளத்திலும் வங்கத்திலும் அது மிகத்தீவிரமானது. இங்கே அந்த வகையான எதிர்ப்பே இல்லை. ஒருசிலர் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து விமர்சனம் செய்தால் உடனே ஒரு கும்பல் கிளம்பி வந்து “சரிதான், அவர் எழுதறது அவருக்கு. எல்லாருமே எழுத்தாளர்தானுங்களே” என சமாதானம் செய்ய முன்வரும்.  “சண்டை புடிக்காம சமாதானமா போங்கப்பூ’ என வாசிக்கும் பழக்கமே இல்லாத தலைக்கட்டுகள் கிளம்பிவரும். இப்போது இது பெண்கள் சம்பந்தமான சர்ச்சை என்பதனால் ‘சூப்பர் டோலி! சாட்டையடி தோளி!’ வகையறா சலங்கை கட்டி ஆடும். இந்தப் பாமரக்கூட்டம்தான் இலக்கியம் சார்ந்த விழுமியங்களை அழிப்பது. இலக்கிய அமைப்புக்களை, கல்விநிறுவனங்களை வெறும் காக்காக்கூட்டங்களாக மாற்றுவது.

tpr
டி பி ராஜீவன்

இலக்கியச் ‘செயல்பாடுகள்’ எங்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கவிதை சார்ந்த நிகழ்ச்சிகள். சிறுகதை எழுத அதை எழுதும் உழைப்பாவது தேவை. கவிதைக்கு அதுவும் தேவையில்லை அல்லவா? இத்தகைய ‘செயல்பாடுகளை’ப்போல இலக்கியத்திற்கு எதிரானவை எதுவுமில்லை. இவர்களால்தான் ஒரு கவிஞன்  ‘நான் ஒரு கவிஞன்’ என வெளியில் சொல்லவே நாண வேண்டியிருக்கிறது.

இவர்கள் ஆண்டுக்கணக்கில் எழுதுவார்கள், கூட்டங்கள் கூட்டி பேசுவார்கள். ஆனால் அழகியல்சார்ந்து இம்மிகூட முன்னகர்வு இருக்காது. ஏனென்றால் எதையுமே வாசிக்கமாட்டார்கள். எதையுமே புதிதாக தெரிந்துகொள்ள மாட்டார்கள். சொற்களை வைத்து வழக்கமான கருத்துக்களை சுற்றிச்சுற்றி எழுதி, ஒருவரைப்பற்றி இன்னொருவர் பேசி அப்படியே காலத்தில் உறைந்து அமர்ந்திருப்பார்கள். இத்தகைய ஒரு சின்னக்கூட்டம் தொடர்ச்சியாக செயல்படாத ஊரே இல்லை. இலக்கிய வாசகர் எவராக இருந்தாலும் தங்களூரில் நிகழும் இத்தகைய ‘கவிதை’ நிகழ்வு ‘இலக்கிய நிகழ்வு’ களுக்குச் சென்று நொந்து மீண்ட அனுபவம் இருக்கும். சாகித்ய அகாதமி இவர்களை பேணிப் பராமரிக்கத்தான் என்றால் அந்த அமைப்பின் நோக்கம்தான் என்ன?

அதே சமயம் இவ்வாறு ஊருக்கு ஊர் நிகழும் ‘எல்லா’ இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் சாகித்ய அகாதமி சீராக ஒரு தொகையை அளிக்கும் என்றால் அது நல்லதுதான். ஏனென்றால் ஆயிரம் உதவாத நிகழ்ச்சிகள் வழியாக ஒன்றிரண்டு விளைந்து வர வாய்ப்புண்டு. இலக்கியம் என்ற பேரில் எது நடந்தாலும் அதனால் ஒரு சிறு பலன் உண்டு.

அ.ராமசாமி
அ.ராமசாமி

திருமதி நவீனாவின் நூலை வாசித்தேன். அது ஆரம்பநிலை கல்லூரி மாணவர்களுக்காக எழுதப்பட்ட ஓர் எளிய நூல். சாதாரணமான கருத்துக்கள். அவர் சிறப்பு அழைப்பாளராக மாணவர் முன் நிறுத்தப்பட்டால், கவிஞராக காட்டப்பட்டால் அது பிழை. அவர் எழுதி இணையத்தில் கிடைக்கும் ‘கவிதைகள்’ வைரமுத்து  எழுதும் நாட்டார்பாணி சினிமாப்பாடல்களின் நகல்கள். இது ஒரு மாதாந்தர கூட்டம் என நினைக்கிறேன். இந்த நூலைவிட தாழ்ந்த தரத்திலேயே நம் பல்கலை மாணவர்கள் இருப்பார்கள். ஆகவே அவர் அழைக்கப்படுவது விமர்சனத்திற்குரியது அல்ல. லக்ஷ்மி மணிவண்ணன் சற்று அவசரப்பட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன்

அத்துடன் திரு. அ.ராமசாமி மனோன்மணியம் பல்கலையில் நம் சூழலின் பொதுவான பொருட்படுத்தாமைக்கு எதிராக நின்று பொருதுபவர், அதில் ஓரளவு வெற்றிகளையும் அடைந்தவர் என்பதே என் எண்ணம். மனோன்மணியம் சுந்தரனார் விருதுகள் இதுவரை தகுதியானவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. சோ.தருமன், இமையம், கலாப்ரியா, வண்ணதாசன், என தொடர்ச்சியாக தகுதியான படைப்பாளிகள் அங்கே மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறார்கள். எந்த அமைப்புக்குள்ளும் இயங்குபவர் உரிய ஒத்திசைவுகளுடன் மட்டுமே செயல்பட முடியும்.

லக்ஷ்மி மணிவண்ணன் எப்போதும்  மிகையாக எதிர்வினையாற்றுபவர்தான். அவருடைய சொற்கள் கடுமை மிக்கவையாக இருந்திருக்கலாம். அது கண்டிக்கப்படவேண்டியதே. அவர் அச்சொற்களை திரும்பப் பெற்றுக்கொண்டதும் உகந்ததுதான். ஆனால் அவருடைய உணர்ச்சிகள் என்றும் சிற்றிதழ்ச்சூழலில் இருந்து எழுந்துகொண்டிருப்பவை. இலக்கிய அழகியலுக்காக, மதிப்பீடுகளுக்காக எழும் குரல் அது.

உண்மையில் அந்தக்குரலுக்கு எதிராக எழும் சில்லறைகளின் சொற்கள்தான் அருவருப்பானவை. பண்பாடான சொற்கள் தேவைதான். ஆனால் ஒரு பண்பாட்டையே சுரணைகெட்டதனத்தால், கால்கை பிடிக்கும் சிறுமையால் அழிப்பது அதைவிட ஆயிரம் மடங்கு பெரிய வன்முறை.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

சந்திப்பு, உரையாடல் –கடிதங்கள்

$
0
0

ko2

கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்

எழுதுக!

அன்புள்ள ஜெ, வணக்கம். நான் தங்களது புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன். பள்ளி பருவதிலேஆர்வமாக புத்தங்களை படித்த எனக்கு,நான் படித்த சுசீந்திரம் பள்ளியில் சிறந்த புத்தங்களையாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை.எனக்கு கிடைத்த சில நாவல்கள் பொழுதுபோக்குஅம்சம் நிறைந்தவைகளாக மட்டுமே இருந்தன. பள்ளி பருவத்தில் அதன் மீது மிகப் பெரியஈர்ப்பு ஏற்ப்பட்டது.

நன்றி,பள்ளியில் நான் பல பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளிலும் கலந்து கொண்டு பலபரிசுகளைப் பெற்று உள்ளேன். ஆயினும், என்னை முறையாய் வழி நடத்திச் செல்லகுடும்பத்தினரோ ஆசிரியர்களோ முன் வரவில்லை. ஏனெனில், நான் நன்றாய் படிக்கும்மாணவி ஆதலால் படிப்பின் மீதான கவனம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக.‌ வாசிப்பின்மீதான என்னுடைய ஈர்ப்பை யாரும் ஊக்குவிக்கவில்லை. இது புத்தகங்களுக்கும் எனக்கும்மிக பெரிய இடைவெளியை உருவாக்கியது.

நான் தற்போது பணிபுரியும் அலுவலகத்தின் நிறுவனர் இலக்கிய ஆர்வமுள்ளவர். இலக்கியக் குழு ஒன்றை அமைத்துப் பல புத்த‌கங்களை வாங்கி எங்களிடையே வாசிக்கும் பழக்கத்தைஉருவாக்கியுள்ளார். அதன் வழியே தங்களின் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு அமைந்தது. நான் படித்த உங்களின் புத்தகங்கள் எனக்குள் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பு எனக்குள் ஒரு தேடலையும் புத்தக வாசிப்பைப் பற்றிய தெளிவையும் ஏற்படுத்தியது. உங்களின் அபரிமிதமான தன்னம்பிக்கையும்,சக்தியும்(Energy) என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

மாதவி சிவதாணுபிள்ளை

kolli5

அன்புள்ள ஜெமோ,

மிக்க நன்றி. உங்களுக்கு ஒருக் கடிதம் எழுதி நேரடி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது நெடுநாள் கனவு. மாதவன் உங்களுக்கு எழுதத் தொடங்கியிருந்த காலத்தில் தங்கள் எதிர்வினையை எதிர்பார்த்து அவரை விட நானே அதிகம் பரபரப்புடன் காத்திருப்பேன். உங்கள் தளத்தில் அவரின் முதல்  கடிதத்தை பார்த்தவுடன் கிடைத்த மகிழ்ச்சியை சொல்லி  மாளாது. இப்பொழுது எனக்காகவே பிரத்யேகமாக வந்துள்ள (அதிலும் 24  மணி நேரத்திற்குள்ளாகவே)  இப்பதில் கடிதம் அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.

நவம்பர் 13, 2014 –  ல் மறுபிரசுரமான ஒவ்வொருநாளும் அனுபவக் கட்டுரையில் (முதல் பிரசுரம் ஆகஸ்ட் 2008)<<ஒருநாளைக்கு சராசரியாக காலையில் முப்பது மாலையில் ஐம்பது மின்னஞ்சல்கள் இருக்கும். பதில்கள் போடுவேன். அதிகபட்சம் மூன்றுநாட்களுக்குள் பதில்போடுவதென்று ஒரு கணக்கு. >>

என்று கூறியிருந்தீர்கள். இந்த அளவு கணினி மயமாகவும், இணைய சேவையும் இல்லாத நாட்கள் அவை. அப்பொழுதே எண்பது மின்னஞ்சல்கள் என்றால் இப்பொழுது வரும் கடிதங்களின் அளவை நினைக்க பிரமிப்பாய் உள்ளது.

தங்களுக்கு வரும் எல்லாக்  கடிதங்களுக்கும்  எதிர்வினையாற்ற வேண்டுமென்ற கட்டாயம்  உங்களுக்குக்  கிடையாது. இதை நீங்கள் தவிர்த்திருந்தால் கூட யாருக்கும் அதுத்  தெரிய போவதில்லை. ஆனால் தீவிர வாசகர்கள் முதல் என்னை போன்ற கத்துக்குட்டிகள் வரை எல்லோரையும் ஒரு சேர பாவித்து நடத்துகிறீர்கள். இதுதான் உங்களின் மீதான ஈர்ப்பையும் மதிப்பையும் அதிகரிக்கச்  செய்கிறது. மற்றவர்களிடமிருந்து உங்களை தனித்துக்  காட்டுகிறது.

நீங்கள் உங்கள் துறையில் சாதித்து எட்டியிருக்கும் உயரமென்பது அசாதாரணமானது. தங்களின் அயராத உழைப்பைப்  பற்றி நானும் மாதவனும் எண்ணி எண்ணி மாய்வோம். ஒரு மாபெரும் அறிவியக்கம் உங்கள் தளத்தின் மூலம் நிகழ்ந்துக் கொண்டுள்ளது. வேறெங்காவது இந்த அளவு ஆசிரிய-வாசகர்கள் உரையாடல்கள் நடந்துள்ளதா என  தெரியவில்லை.

இது வரை நான் படித்த எந்த எழுத்தும் இந்த அளவு சிந்தனை திறனை தூண்டியதே இல்லை. “நான் யார்?” என்றக் கேள்வியை சர்வ சாதாரணமாக எழுப்பி, அதற்க்குண்டான பதிலை எவ்வாறுக்  கண்டுபிடிப்பதென்பதையும் சொல்லிக் கொடுத்து, வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வதென்ற தெளிவையும் கொடுக்கும் ஒரே எழுத்து உங்கள் எழுத்து. நம்மை சிறந்ததொரு ஆளுமையாக, செயலூக்கம் மிக்கவனாக வடிவமைத்துக் கொள்ள “எழுதலின் விதிகள்” கடிதத்தை படித்தாலே போதுமானது.

நீங்கள் அனுப்பியிருக்கும் பதில் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். பல முறை மீண்டும் மீண்டும் வாசித்து அசைப் போட்டு மனதினுள் பதிய வைத்துக்  கொண்டேன். ஒரு வாரக் காலமாக இதை குடும்பத்தாரிடமும், நட்புக்களுடனும் பகிர்ந்து மகிழ்ந்திருந்தேன்.

<<ஆகவே எவருக்காகவும் இல்லாமல் பிரியா பிரியாவாக வெளிப்பட, நிலைகொள்ள எழுதுங்கள்  >> 

இந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஜெமோ !

ப்ரியா இளங்கோ

kolli9

அன்புள்ள ஜெ

நாமக்கல் மற்றும் ஈரோடு சந்திப்புகளில் கலந்துகொண்ட பெண்கள் எழுதிய குறிப்புக்களைப் பார்த்தேன். நீங்களும் இப்போதெல்லாம் நிறையப் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். இங்கே குடிக்கொண்டாட்டம் இல்லை என்பதும் உங்கள் மீதான நம்பிக்கையும்தான் காரணம் என நினைக்கிறேன்

ஆனால் என்னைப்போன்ற ஒருவருக்கு இன்னமும்கூட ஒர் இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொள்வது கனவுதான். என்ன சிக்கல், வரவேண்டியதுதானே என்று கேட்கலாம். எனக்குத் தோன்றும் பெண்கள் மேல் பேப்பர் வெயிட் போல குழந்தைகள் இருக்கின்றன என்று. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும். இங்கே குழந்தைகளுக்கு இண்டிப்பெண்டன்ஸியே இல்லை. அவர்கள் அனைவருமே பிறர் பார்த்துக்கொண்டால்தான் வாழ்வார்கள். என் தோழிகள் கூட என் பிள்ளை சோறு ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவான் என பெருமையாகச் சொல்வார்கள். அது பெருமை இல்லை. அது பெரிய தளை. அதைச்சொன்னால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. என் குடும்பத்திலும் குழந்தைகள் பெரிய சுமைகள். எதையுமே செய்யமாட்டார்கள். தாங்களாக பள்ளிக்குச் செல்லத் தெரியாது

அதேசமயம் எவரும் எதையும் பகிர்ந்து கொள்வதுமில்லை. எவரையும் ஒப்படைத்துவரமுடியாது. அப்பா கூட அப்படித்தான். எல்லாமே பெண்ணின் வேலை. அதைச்செய்யாவிட்டால் குற்றவுணர்ச்சியை அளிக்க ஆயிரம்பேர் வருவார்கள். வாசிப்பு எழுத்து பயணம் எல்லாமே இதனால் ஒடுங்கிவிடுகிறது. அதையெல்லாம் கடந்துசெல்ல நெடுநாட்கள் ஆகிவிடும். அதற்குப்பிறகு பார்த்தால் வாழ்க்கையே கிட்டத்தட்ட முடிந்துவிட்டிருக்கும்

கலந்துகொண்டவர்கள் அதிருஷ்டம் செய்தவர்கள். அந்த வாய்ப்பு எவ்வளவு அரிதானது என அவர்களுக்குத்தெரியவேண்டும். அதை அவர்கள் சரியாகப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

ஆர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஈழத்திலிருந்து ஒரு குரல்

$
0
0

karuna

தமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி அவர்களுக்காக இங்கிருந்து அல்லது புலம்பெயர் நாடுகளில் இருந்து கம்பு தூக்குவது வேறு.

ஜெயமோகன்: சர்ச்சைகளும் விமர்சனப்பண்புகளும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

$
0
0

kiraa

திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி

கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என புரிந்துகொண்டிருக்கிறார். அதை பேட்டி என்பதை விட மனுவை வாசித்துக்காண்பித்து கையெழுத்து வாங்குவது என்று சொல்லலாம்.  கிரா கொஞ்சம் மழுப்பி, ஊடே கொஞ்சம் தன் கருத்தையும் சொல்லி, கடந்து சென்றிருக்கிறார்.

கி.ரா கூடுமானவரை சி.என்.அண்ணாத்துரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக சமஸே ஒரு முன்கருத்துக் கேள்வியைக் கேட்டு பெரியவர் ஆமாம் என்றதும் அதையே பேட்டியின் மையத்தலைப்பாக ஆக்கிவிட்டார். இந்தவகை இதழியலை நாம் காண ஆரம்பித்து நெடுநாட்களாகின்றது

இனி திராவிட ஆதரவாளர்கள் தங்கள் தகர முரசுகளை ஒலிக்க ஆரம்பிக்கலாம். நடுவே கி.ரா திராவிட இயக்கம் பற்றி சுழற்றிச் சுழற்றி சொல்லியிருக்கும் ஒவ்வாமைகளை, அவர்களின் மொழிநுண்ணுணர்வின் மீதான விமர்சனங்களை எல்லாம் அப்படியே சொற்களைக்கொண்டு மூடிவிடலாம். ஆறுமாதம் கழித்து கிரா அண்ணாதுரைதான் தமிழிலக்கியத் தலைமகன் என்றார் என திரித்தும் வரலாறு சமைக்கலாம்.

சென்ற சில ஆண்டுகளாகவே பெரும்பணச் செலவுடன், மிகப்பெரிய நிறுவன ஆதரவுடன் சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகியோரை தமிழகத்தின் முதன்மைச் சிந்தனையாளர்களாக, முன்னோடி இலக்கியவாதிகளாக நிறுவும் பணி நடந்துவருகிறது. விலைக்கு வாங்கப்படத்தக்க அறிவுஜீவிகள் அதற்காக அமர்த்தப்பட்டு அவர்கள் தீவிரமாக களமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்  அது இத்தனை எளிதாக பணத்தாலும் அமைப்பாலும் நிறுவப்படக்கூடியது என நான் நினைக்கவில்லை. எனக்கு அறிவியக்கத்தின் ஆற்றலில், அதன் உண்மையில் நம்பிக்கை இருக்கிறது. இதைப்போல அமைப்பு வல்லமையுடன் இங்கே மு.வரதராசனாரும் அகிலனும் ஒரு காலகட்டத்தில் நிலைநாட்டப்பட்டார்கள். அவர்களுக்குரிய இடங்களைச் சென்றடைந்தார்கள்.

தெருத்தெருவாக ஈ.வே.ராமசாமி,  சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டாயிற்று. பேருந்துநிலையங்கள் விமானநிலையங்கள் இவர்கள் பெயரில்தான். தெருவெல்லாம் இவர்களின் பெயர்கள். நூலகங்களில் இவர்கள்தான் நிறைந்து கிடக்கிறார்கள். இவர்களின் தரப்பே இன்றைக்கு தமிழின் ஊடகங்களில் 90 சதவீதத்தை நிறைத்துள்ளது. சமூகவலைத்தளங்களில் கூச்சலிடும் கும்பல் புதிய வரவு.

மறுபக்கம், தமிழுக்காகவே வாழ்ந்த, பெருஞ்சாதனைகளைச்செய்த் நவீன சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இன்றும் ஐந்தாண்டுக்கு ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு நூலக ஆணை பெறாமல் காத்துக்கிடக்கிறார்கள். எந்த அங்கீகாரமும் பெறாமல் செத்தார்கள். எவ்வண்ணமும் பொருட்படுத்தப்படாமல் வாழ்கிறார்கள்.

ஆனால் சி.என்.அண்ணாதுரையும் மு.கருணாநிதியும் ‘இருட்டடிக்கப்படுவதாக’ தி ஹிந்து வகையறா சொல்கிறது. சரி, இருட்டடிப்பது யார்? வெறும் பத்தாயிரம் வாசகர்கள்கூட இல்லாத சிற்றிதழ்சார் இலக்கியச் சூழல்!  இப்போது தெரிகிறதல்லவா, எவர் உண்மையான அறிவியக்கம் என? என்னென்ன தாவினாலும்  எவரிடம் அறிவியக்க ஒப்புதலுக்காக வந்து நின்றிருக்கவேண்டும் என? [சி.என்.அண்ணாத்துரை மீதான ஆங்கில ஹிந்துவின் இருட்டடிப்புக்கு என்ன காரணம் என ஓர் ஆய்வை ஏன் சமஸ் ஊடே நிகழ்த்தக்கூடாது?]

புதுமைப்பித்தன் மரபினரால் ‘ஒடுக்கப்பட்ட’ சி.என்.அண்ணாதுரையையும்   மு.கருணாநிதியையும் இலக்கியத்தில் நிறுவ தி ஹிந்து பணத்தை அள்ளி இறைக்கிறது. திடீரென என்ன ஆகியது, எவர் பணம், என்ன பின்னணிப் புரிதல், என்னென்ன கணக்குகள் என இப்போது எவராலும் சொல்லிவிடமுடியாது — அல்லது மிக எளிதாக சொல்லிவிட முடியும்.

pupi

இங்கே புதுமைப்பித்தன் பெயரில் ஒரு சாலைகூட இல்லை. தமிழ் நவீன இலக்கியத்தின் தலைமகனுக்கு ஒரு சிலைகூட இல்லை. அதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட இன்றைக்கும் ஐந்தாயிரம் பிரதிகளுக்குமேல் அச்சிடப்படும் ஒரு இதழும் தமிழில் இல்லை.

ஆனாலும் அவன் ஒரு வாழும் மரபு. பணத்தால் அல்ல. அமைப்புவல்லமையால் அல்ல. அவனை நம்பி ஏற்று அவன் வழிச் செல்லும் நூறுபேர் தலைமுறைக்கு தலைமுறை தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதனால். அவர்களுக்கு உங்கள் எச்சிலிலைகள் தேவையில்லை என்பதனால். அது நாளையும் அவ்வண்ணமே இருக்கும்.

கி.ராஜநாராயணன் சொல்கிறார், சி.என்.அண்ணாதுரை ‘பார்ப்பன’ விமர்சகர்களால், சிற்றிதழ்ச்சூழலில் விளங்கிய பார்ப்பன மனநிலையால் புறக்கணிக்கப்பட்டாராம். தன்னையும் புறக்கணித்துவிடுவார்கள் என ஐயம் கொண்டு அவர் பேசாமலிருந்தாராம்.

கி.ராஜநாராயணன் எழுதவந்து அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. இக்கணம் வரை அவரை ஓர் இலக்கியவாதியாக கொண்டாடி வருபவர்கள் சிற்றிதழ்சார் வாசகர்களே ஒழிய அவர் இன்று புதிதாக கண்டுகொண்ட திராவிட இயக்க வாசகர்கள் அல்ல. அவர் இன்று எவரை பிராமணிய மதிப்பீடுகள் கொண்டவர்களாக சொல்லவைக்கப்பட்டிருக்கிறாரோ அவர்களால்தான் அவர் இலக்கியவாதியாக நிறுவப்பட்டார். நாளை அவர் பெயரை சொல்லப்போகிறவனும் சிற்றிதழ்சார் வாசகன் மட்டுமே.

அவருக்கு அந்த திராவிட இயக்கம் அளித்த அங்கீகாரம்தான் என்ன? அவரே சொல்கிறாரே, வரிசையில் நிறுத்தி பரிசை தூக்கி போட்டார்கள் என. சி.என்.அண்ணாதுரை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டாராம்.  ‘தெற்கிலிருந்து வந்த சூரியன்’ நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவராகிய கி.ராவை அப்படி நடத்தினாராம். ஏன், சி.என்.அண்ணாதுரை இருந்தபோது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நவீன எழுத்தாளர் யார்? அவர் தன் பேச்சில் ஒருமுறையேனும் சுட்டிய அன்றைய இலக்கியவாதியின் பெயர்தான் என்ன?

அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். அனைத்து அதிகாரங்களையும் கையாண்டார்கள். கி.ரா சென்று அவர்களிடம் தனக்கு அங்கீகாரம் அளிக்கக் கோரியிருக்கலாமே? அணுகவிடமாட்டார்கள் என அவர் அறிந்தே இருந்தார். தன் எழுத்துக்கு எங்கே இடம் என அவருக்கு நன்றாகவே தெரியும்.சரி இனிமேலாவது ஏதாவது செய்வார்களா? இந்த வரியைச் சொன்னமைக்காவது கிராவுக்கு ஏதாவது அங்கீகாரம் கிடைக்குமா?

சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலில் அழகியல் அளவுகோல்கள் மிகத்தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. மறுத்தும் ஏற்றும் விவாதிக்கப்பட்டுள்ளன. இனியும் விவாதிக்கப்படும். அந்த அளவுகோல்கள் விரிவாக்கப்படக்கூடியவை. நான் அந்த அழகியல் அளவுகோல்களை ஏற்று விவாதித்து முன்னெடுப்பவன்.

என் நோக்கில் முன்னோடிகள் மௌனிக்கும் கு.ப.ராஜகோபாலனுக்கும் லா.ச.ராமாமிருதத்திற்கும் அளித்த இடத்தை ஒரு படி குறைக்கிறேன். கு.அழகிரிசாமிக்கும் ஜெயகாந்தனுக்கும் அளிக்கப்பட்ட இடத்தை மேலே கொண்டுசெல்கிறேன். அவர்களால் பொருட்படுத்தப்படாத ப.சிங்காரத்தையும் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தையும் அழுத்தமாக மீட்டு முன்வைக்கிறேன்.

kanasu_thumb4

அழகியல் அளவுகோல்களுக்கு அரசியல் இல்லை. தனிநபர்களுக்கு சாதிப்பற்று இருக்கலாம், இலக்கிய இயக்கத்தில் அது இயல்வதில்லை. ஆகவேதான் க.நா.சு. முற்போக்காளரான கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலை முன்வைத்தார். பூமணியை வெங்கட் சாமிநாதன் கொண்டாடினார். [இதில் திராவிட இயக்கத்தவர் செய்வது மேலும் மலினமான ஒரு செயலை. பிராமண விமர்சகர்கள் ஒருவரை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அவரை விலைபோய்விட்டவர் என வசைபாடி, அவருடைய ஆளுமையையும் நேர்மையையும் சிறுமைசெய்வார்கள். சின்னப்பபாரதியும் பூமணியும் இவர்களுக்கு பார்ப்பனியர்கள் ஆகிவிடுவார்கள்]

நான் சி.என.அண்ணாதுரையையோ மு.கருணாநிதியையோ அழகியல்கோணத்தில் பொருட்படுத்துவதில்லை. ஆனால் எஸ்.எஸ்.தென்னரசு பொருட்படுத்தப்படவேண்டியவர் என எழுதுகிறேன். திராவிட இயக்கக் கவிஞர்களில் முடியரசன், வேழவேந்தன் இருவரையும் தெரிவுசெய்து முன்னிறுத்துகிறேன். அவர்கள் பெயரை திராவிட இயக்கத்தவர்கூட மறந்துவிட்டனர் என ஓர் உரையாடலில் என்னிடம் தமிழச்சி தங்கபாண்டியன் சொன்னார். சு.வெங்கடேசனின் காவல்கோட்டத்தை பாராட்டி முன்வைக்க எனக்கு அவருடைய அரசியல் தடையாக இருந்ததில்லை.

நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் பிராமணர்கள் மிகுதி. அது இந்தியா முழுக்க அன்றிருந்த கல்விச்சூழலின் விளைவு. க.நா.சு.வும் சுந்தர ராமசாமியும் பிராமண மதிப்பீடுகளை கொண்டிருந்தனர் என்று சொல்வது ஒட்டுமொத்தமாகவே இந்த இலக்கியமரபை சிறுமைசெய்வது.  அவர்களின் ருசிகளில் பிராமணிய அம்சம் இருக்கலாம், அண்ணாதுரையிடம் இருந்த முதலியாரிய அம்சம் போல. அது இயல்பானது, தவிர்க்கமுடியாதது. ஆனால் அதற்கு அப்பால் அவர்கள் தங்கள் அழகியலை தெளிவாக முன்வைத்தனர். அந்த அழகியலை தொடங்கிவைத்தவர்களாகிய புதுமைப்பித்தனோ, மு.தளையசிங்கமோ பிராமணர்கள் அல்ல.

அந்தப்  ‘பார்ப்பனிய’ தரப்புதான் திட்டவட்டமான மொழியில் கல்கியை நிராகரித்தது.சுஜாதாவையும் பாலகுமாரனையும் மறுத்தது. ஒரு போதும் அது தன் மதிப்பீடுகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. அது தலித் முற்போக்கு இலக்கியத்தின் உண்மையான சாதனைகள் அனைத்தையும் முதன்முதலாக ஓடிச்சென்று அங்கீகரித்திருக்கிறது. சின்னப்ப பாரதி முதல் சு.வெங்கடேசன் வரை. தலித் இலக்கியம் தோன்றியபோது தலைமேல் கொண்டாடியிருக்கிறது. ஆனால் அதன் நிராகரிப்புகளும் கூரியவை. சின்னப்ப பாரதியை ஏற்ற க.நா.சு கே.முத்தையாவை நிராகரித்தார்.

[சந்தடி சாக்கில் பிராமணரும் வேளாளரும் சேர்ந்துகொண்டு முதலியார்களை ஒடுக்கியதே திராவிட இயக்கம் மீதான சிற்றிதழ்தரப்பின் விமர்சனத்தின் அடிப்படை என சொல்லவருகிறார் சமஸ் என்று தோன்றுகிறது. படுபயங்கரமான சாதிஊடாட்டமாக இருக்கிறது. ராஜன்குறைகள்  புகுந்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்ய பெரிய இடுக்கு இது]

நவீன இலக்கியத்தால் ‘கண்டெடுக்கப்பட்டு’ முன்வைக்கப்பட்ட படைப்பாளிகளின் பட்டியலை ஒரு புதியவாசகன் கவனிக்கவேண்டும். ஓர் உதாரணம், 1967-இல் இலக்கியச்சூழலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஹெப்ஸிபா ஜேசுதாசன் ’புத்தம்வீடு’ என ஒரு நாவல் எழுதினார். நாடார்சாதியின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு, அச்சாதியின் பண்பாட்டுக்குள் நுட்பமாகச் செல்லும் நாவல் அது. அந்தக் கைப்பிரதியை அவருக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் வழியாக சுந்தர ராமசாமியிடம் கொண்டுவந்து காட்டினார். சுரா அதை வெளியிட ஏற்பாடு செய்தார். அதை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்தார். நவீன இலக்கிய உலகமே ஹெப்ஸிபாவை நோக்கி திரும்பியது. அங்கே சாதி அளவீடாக கொள்ளப்படவில்லை.

1985-இல் நான் ஆ.மாதவனை சந்திக்கும்போது தன்னிடம் ஒரு மிளகுவியாபாரி கொண்டுவந்த கைப்பிரதியை வாசித்ததாகவும் நன்றாக இருப்பதாகவும் சொன்னார். அதை எம்.எஸ். அவர்களிடம் காட்டும்படி சொல்லி அனுப்பினார் மாதவன். தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை அவ்வாறுதான் வெளியாகியது. அவர் இலக்கிய அங்கீகாரம் பெற்றார். அங்கே மதம் அளவுகோலாக இருக்கவில்லை.

ஆர்.ஷண்முகசுந்தரம், பூமணி  முதல் இமையம், சோ.தருமன், ஜோ டி குரூஸ் வரை வெவ்வேறு ஒடுக்கப்பட்ட சாதியப்பின்னணியில் இருந்து புதிய எழுத்தாளர்கள் தோன்றியபோது அவர்களை உடனே சென்று அடையாளம் கண்டு முன்னிறுத்தியது நவீன இலக்கிய இயக்கமே. அதை செய்த இலக்கியவாதிகளில் பெரும்பாலானவர்கள் பிராமணர்களே.

சொல்லப்போனால் ஆர்.ஷண்முகசுந்தரத்தை முன்னுதாரணமாகக் காட்டி ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கள் மொழியில் தங்கள் வாழ்க்கையை எழுதவேண்டும் என ஆணித்தரமாக வாதிட்டுக்கொண்டிருந்தவர் க.நா.சுதான். அவரிலிருந்து தொடங்கிய அந்த எண்ணம்தான் இன்று அத்தனை சாதியினரும் தங்கள் வாழ்க்கையை நவீன இலக்கியத்திற்குள் கொண்டுவருவதற்கான முன்வரைவாக ஆகியிருக்கிறது.

கி.ராஜநாராயணன் அணுக்கமாக இருந்தது இடதுசாரி இலக்கியமரபுடன். திராவிட இயக்க எழுத்துக்களை முழுமூச்சாக நிராகரித்தவர்கள் அவர்கள்தான். கி.ரா இப்போது நா.வானமாமலையையும் கைலாசபதியையும் சிவத்தம்பியையும் சி. கனகசபாபதியையும் தி.க.சிவசங்கரனையும் வல்லிக்கண்ணனையும் ஒட்டுமொத்தமாக பிராமணிய/ வேளாள நோக்கு கொண்டவர்கள் என்கிறாரா?  பேச்சு நடுவே பிராமணிய நோக்கு இருந்தது என்று சொல்லமுடியாது என்று வேறு சொல்கிறார். அவர் உண்மையில் என்ன சொன்னார் என்பது சமஸுக்கே வெளிச்சம்.

முன்பு அசோகமித்திரனையும் ஞானக்கூத்தனையும் இழுத்துச்சென்று மேடையில் நிற்கவைத்து மொத்த சிற்றிதழ்சார் இலக்கியமரபையே அவர்கள் வாயால் மறுக்கச் செய்தனர். இன்று கி.ராஜநாராயணன் நாவில் அதை நட்டுவிட்டார்கள். இன்னும் பலியாடுகள் வந்தபடியேதான் இருக்கும். முதுமை.

ஆனால் இந்தக் குரல்களினால் சி.என்.அண்ணாதுரை இலக்கிய மதிப்பு பெற்றுவிடுவாரா என்ன? மு.கருணாநிதி இலக்கியவாதி ஆகிவிடுவாரா என்ன? அவர்களுக்கான அரசியல் இடம் உண்டு. அவர்களுக்கான சமூகசீர்திருத்த இடம் உண்டு. அவர்களின் எழுத்துக்கள்  எது சீரிய இலக்கியமென நேற்றும் இன்றும் கருதப்படுகிறதோ அதன் அளவுகோல்களின்படி இலக்கியப்பெறுமானம் கொண்டவை அல்ல. அவர்களின் அரசியல் தரப்பிலிருந்து எழுதவந்தவர்கள்கூட அவர்களின் பாணியில், அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, எழுதியவர்கள் அல்ல. அவர்கள் புதுமைப்பித்தனையோ ஜெயகாந்தனையோதான் முன்னுதாரணமாக கொண்டார்கள்.

நவீன இலக்கியத்தரப்பு இங்கே ஒரு மாற்று இயக்கமாகவே செயல்பட்டது. அதற்கு இங்கு ஊடகங்கள் இல்லை. சிற்றிதழ்களைச் சார்ந்தே அது இயங்கியது. ஆண்டொன்றுக்கு அது வெளியிட்ட அச்சுப்பக்கம் ஒட்டுமொத்தமாகவே இரண்டாயிரம் தாண்டாது. அதற்குள் புனைவிலக்கியத்திற்கே அது முக்கியத்துவம் அளித்தது. இலக்கியவிமர்சனத்திற்குக் கூட அதற்கு பக்கம் போதவில்லை.

அத்துடன் தொடக்ககால நவீன இலக்கியவாதிகளுக்கு இலக்கியம் ஒரு தூயகலை என்னும் நம்பிக்கை இருந்தது. அவர்கள் ஓவியம், சிற்பம் ஆகியவற்றைப்பற்றிப் பேசுவதைக்கூட ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல.சத்யஜித் ரே பற்றி பேசுவதே எல்லைமீறல் என்னும் நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கடுமையான விவாதம் வழியாகவே அது தன் எல்லைகளை மீறியது.

எழுத்து இதழில் நவீன ஓவியம் பற்றிய கட்டுரை ஒன்றை போடுவதற்காக வெங்கட் சாமிநாதன் பூசலிட்டார். பின்னர் நாட்டாரியல் பற்றிய கட்டுரையை வெளியிட அக்காலச் சிற்றிதழ்கள் மறுத்தமையால் தானே யாத்ரா என்னும் சிற்றிதழ் ஒன்றை தொடங்கினார். ஆனால் அவரே படிகள் இதழ் கே.கே.பிள்ளையின் வலங்கை இடங்கைப்போர் பற்றிய வரலாற்றாய்வுநூலைப்பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டபோது அதை ஏற்கவில்லை.

மேலும் பல ஆண்டுகள் கடந்து 1985ல் எஸ்.வி.ராஜதுரை நடத்திய இனி என்னும் சிற்றிதழில்தான் சினிமாப்பாடல் பற்றி ஒர் ஆய்வுக்கட்டுரை வெளிவந்தது. சிலுவைப்பிச்சை என்னும் புனைபெயரில் தியோடர் பாஸ்கரன் எழுதியிருந்தார். அதைப்பற்றி கடுமையான எதிர்ப்புகள் வந்தன

இது இங்கு நிகழ்ந்த கருத்தியல் – அழகியல் விவாதங்களின் வரலாறு. எல்லாச்சூழலிலும் இப்படித்தான் பண்பாட்டு விவாதங்கள், இலக்கியவிவாதங்கள் நிகழும். அதற்கான காரணங்கள் பண்பாட்டில் வேரோடியவை. ஆகவே சிற்றிதழ்ச் சூழலுக்குள் அரசியல் விவாதங்களுக்கு எப்போதுமே இடமிருந்ததில்லை. ஏனென்றால் வெளியே அரசியலும் சினிமாவும் வணிகக்கேளிக்கை எழுத்தும்தான் நிறைந்திருக்கின்றன. அந்த மையப்பெரும்போக்கால் பேசப்படாமல் விடப்பட்டவற்றைப் பற்றி மட்டுமே சிற்றிதழ்கள் பேசின.

ஆகவேதான் தமிழ்ச்சிற்றிதழ்களில் தமிழகத்தின் மகத்தான சிற்பங்களைப் பற்றி எதுவும் எழுதப்பட்டதில்லை. ஏனென்றால் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் போன்றவர்கள் ஏற்கனவே அவற்றை விகடன்போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தனர். சிற்றிதழ்களின் மையமான பேசுபொருள் இலக்கியம் மட்டுமாகவே இருந்தது. இன்றும் அவ்வாறுதான்.

ஆனால் அந்த எல்லைக்குள் சிற்றிதழ்கள் தமிழக அரசியலைப்பற்றிப் பேசியிருக்கின்றன. அதற்குள் எல்லா தரப்பும் ஒலித்திருக்கிறது. மு.தளையசிங்கமும், பிரமிளும் திராவிட இயக்கம் குறித்தும் சி.என். அண்ணாத்துரையின் அரசியல் இடம் குறித்தும் நல்லெண்ணம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமிக்கும் ந.முத்துசாமிக்கும் அவ்வெண்ணம் இருந்தது. அவை பதிவாகியிருக்கின்றன

அதேசமயம் அழகியல் ரீதியாக கடுமையான விமர்சனமும் இருந்தது. ஏனென்றால் சிற்றிதழ்கள் நிலைகொண்டதே திராவிட இயக்கமும் வணிக எழுத்தும் உருவாக்கிய மையப்போக்குக்கு எதிரான மாற்றுச்சிந்தனை, மாற்று அழகியலை உருவாக்கும்பொருட்டுதான். அவற்றின் வரலாற்றுப் பாத்திரமே அதுதான். அந்த வரலாற்றுப் பங்களிப்பைத்தான் சமஸ் போன்ற இலக்கியமென்றால் உப்பா புளியா என்று கேட்கும் இதழியலாளர்கள் பார்ப்பனியம் என முத்திரை குத்துகிறார்கள்.

சி.என்.அண்ணாத்துரையும் மு. கருணாநிதியும் எழுதியது இலக்கியமதிப்பு கொண்டது அல்ல. அதை அவர்கள் எழுதத்தொடங்கிய தொடக்க காலத்திலேயே புதுமைப்பித்தன் சொன்னார். அடுத்த தலைமுறையில் க.நா.சுவும் ஜெயகாந்தனும் சொன்னார்கள். பிரபஞ்சனும் கந்தர்வனும்  நாஞ்சில்நாடனும் சொன்னார்கள். [பிரபஞ்சன் மு.கருணாநிதியின் முழுச்சிறுகதைத் தொகுதிக்கு இந்தியா டுடே இதழில் ஒரு மதிப்புரை எழுதினார். மிகச்சரியாக அதுதான் சிற்றிதழ்சார் இலக்கிய மரபின் கருத்து] நானும் இனி வரும் தலைமுறையினரும் சொல்வோம்.அது ஒன்றும் சிறு குழு உருவாக்கிய மதிப்பீடு அல்ல. அது இங்கே நவீன இலக்கியம் என ஒன்று உருவாகி வந்தபோது இயல்பாகவே திரண்டு வந்தது.

sun

சி.என்.அண்ணதுரையையும் மு.கருணாநிதியையும் நிராகரிப்பது எந்த தனிவிமர்சகனும் அல்ல. நவீன இலக்கியம் என்னும் இயக்கம்தான். அவர்களை ஏற்கவேண்டும் என்றால் ஒட்டுமொத்த நவீன இலக்கியத்தையும் நிராகரிக்கவேண்டும். அரசியல்நோக்கு கொண்ட சிலர் அவ்வாறு நவீன இலக்கியத்தையே நிராகரித்து அவர்களை இலக்கியவாதிகளாக ஏற்கிறார்கள்.  ஒருவாசகர் கி.ராவையே நிராகரித்தால்தான் சி.என்.அண்ணாதுரை இலக்கியவாதி என ஏற்கமுடியும். கி.ரா அவருடைய பேட்டியிலேயே அந்த அழகியல் வேறுபாட்டை சொல்கிறார்.

தமிழ் ஹிந்து உருவாக்கும் போற்றிப்பாட்டுக்கும் அறிவியக்கத்திற்கும் தொடர்பில்லை. இலக்கியம் என்பது எப்போதும் கூரிய விமர்சனங்கள் வழியாக நிலைகொள்வது. நவீன இலக்கியத்தின் முன்னோடிகளையே கடுமையாக, சமரசமே இன்றி விமர்சனம் செய்துகொண்டுதான் இவ்வியக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் மௌனி பற்றி கடுமையான எதிர்மதிப்பிட்டை எழுதியபோது எவரும் வந்து அதில் அரசியலைக் கண்டுபிடிக்கவில்லை. சாதியரசியல் மட்டுமே அறிந்தவர்களுக்கு அதை மட்டுமே எங்கும் காணமுடியும்.

இன்று தமிழ்ஹிந்து உருவாக்கும் பேரோசையுடன் மோத இந்த இணையதளத்தால் முடியாது. சமூக ஊடக வசைகளுக்கு எதிர்நிற்பது என்பது ஒருவகையில் சேற்றுநீராட்டு. அன்று வார இதழ்களுக்கு எதிராக சிற்றிதழ்கள் நிலைகொண்டதுபோல ஒரு தற்கொலைத்தனமான முயற்சிதான் இதுவும். ஆனால்  உண்மையிலேயே இலக்கிய வரலாற்றை, இங்கிருந்த இலக்கியச் சூழலை அறிய விரும்பும் ஒரு சிறு வட்டம் இங்கிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அது எப்போதுமே சிறுபான்மையானது. எண்ணிக்கையாலோ பரப்பாலோ அன்றி தன் தீவிரத்தாலும் உண்மையாலும் மட்டுமே நிலைகொள்வது. இன்னும் பலதலைமுறைக்காலம் அப்படித்தான் இங்கே சூழல் இருக்கும். ஊர்வலத்தில் கோஷமிடச் செல்பவர்கள் செல்லட்டும். எஞ்சிய சிலருக்காக இச்சொற்கள்.

இந்த அழகியல்மதிப்பீட்டை அழகியல் என்றால் என்னவென்று அறியாத அரசியல் உள்ளங்களுக்கு முன்  ‘நிரூபிக்க’ முடியாது. ‘அதெப்படி, எங்களுக்கு அவர்களே பேரிலக்கியவாதிகள்’ என அரசியலுள்ளங்கள் சொன்னால் ‘சரி கொண்டாடுங்கள்’ என்று மட்டுமே பதில் சொல்லமுடியும். அரசியல்நிலைபாடாக ஒருவர் அதை சொல்கிறார் என்றால் அவருடன் பேசுவது இலக்கியவிவாதம் அல்ல.  அவர்களின் எழுத்தை உண்மையிலேயே ஒருவர் இலக்கியம் என எண்ணி ரசிக்கிறார் என்றால் அவருடைய அறிவுத்திறனும் ரசனையும் அவ்வளவுதான். அவரிடம் பேசுவதற்கே ஒன்றுமில்லை.

எஞ்சி வரும் சிலருடன் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. உண்மையான அறிவியக்கம் என்பது வேறு. அரசியல் பரப்பியக்கங்கள் அறிவியக்கங்கள் அல்ல, அவற்றின் பணியும் இயல்பும் நேர் எதிரான போக்கு கொண்டவை. இலக்கியம் என்பது முற்றிலும் வேறு. அது பரப்புக்கருத்துக்களை சொற்குவியல்களாக ஆக்குவதில்லை. எழுதுபவனின் ஆழுள்ளத்திலிருந்து, அவன் அனுபவ தளத்திலிருந்து வாசிப்பவனின் ஆழுள்ளத்திற்கு அவன் அனுபவ தளத்திற்குச் செல்லும் ஒர் அந்தரங்கமான நிகழ்வு அது. மொழியின் அடுக்குகளினூடாக தொடர்புறுத்துவது. இதை நவீன விமர்சனத்தின் பல்வேறு கலைச்சொற்களுடன் சொல்லமுடியும், ஒற்றைவரிச் சாரம் இவ்வளவே.

இது ஒரு தனிப்பட்ட கருத்து. இதன் மதிப்பு இதை வாசிக்கும் ஒரு நல்ல வாசகர் ‘ஆம், இதை நானும் உணர்ந்துள்ளேன்’ என்று சொல்லும்போதுதான். அவ்வாறு நூறுபேர் உணர்கையில் அது ஒரு வலுவான பொதுக்கருத்தாகிறது. அப்படி சிலர் உள்ளனர் என்பதனால் இது சொல்லப்படுகிறது. அவர்கள் இந்தத் தலைமுறையிலும் சிலர் எழட்டும். ஊரெங்கும் முழங்கும் டமாரங்கள் நடுவே அவர்கள் தங்கள் யாழையும் மீட்டட்டும்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

சீ.முத்துசாமியின் மலைக்காடு –காளி பிரசாத்

$
0
0

cmu3

எழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு

சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா

அன்புள்ள ஜெ,

ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள்.  அவரின்  ஒரு புதிய நாவலான மலைக்காடு நாவலை வாசித்தேன். சீ.முத்துசாமியின் சிறுகதைகள் 1977ல் எழுதப்பட்டு காலத்தால் பல்லாண்டுகள் முந்தியிருந்தாலும், நான் படித்தது என்னவோ நாற்பதாண்டுகள் கழித்து 2017ல் விஷ்ணுபுரம் விருது சமயத்தில்தான். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் ஒரு குறிப்பிட்ட மனநிலைகளில் சொல்லப்படுபவையாகவே முதலில் எனக்குத் தோன்றின. சில சமயங்களில்  அவை ஒரு புகார் போல ஒலிக்கும். சில சமயங்களில் இறுதிவரி திருப்பம் வரை வந்து அதை உரைக்காமல் முந்தைய வரியிலேயே நின்று விடும். அவரது படைப்புகளை வாசிக்கையில் ஏன் இந்த உத்தியை கையாள்கிறார் என யோசித்திருக்கிறேன். உடல் நலமிலாத கணவன் மற்றும் சிறுவயது குழந்தைகளின் வயிற்றுப்பாட்டிற்காக தோட்ட வேலைக்குச் செல்லும் பெண்ணைப் பற்றிய சிறுகதையின் இறுதிவரி அவனைக்காண வந்த அந்தக் கணவனின் நண்பன் கிளம்புவதற்கு முன் அவன் முன் வந்தமர்ந்து  “அக்காளப்பத்தி ஒண்ணு சொல்லனும்..” ( கவச குண்டலம் )  என்று சொல்வதோடு முடிந்துவிடும். முதல் வாசிப்பில் அது ஒரு சிறுகதைக்கான உத்தியோ என எண்ணியிருந்திருக்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில் அதை அவர்  இன்னும் சுவாரசியமாகவும் எழுதியிருக்காலாமே. அந்தளவிற்கு சிறுகதை தருணங்கள் நிறைந்த இடம்தானே இது. காவியங்கள் முதல் சீரியல்கள் வரை அலசிப்போட்ட ஒரு லட்சியப் பெண்ணின் வாழ்வு ஒன்றை முழுமையாக  சொல்லி இறுதியில் ஒரு திருப்பத்தை இங்ஙனம் வைப்பது  ஒரு வித வாசிப்பின்பத்திற்காக கற்பனை செய்து எழுதப்படுபவை. அவ்வகைக் கதைகள் சராசரி எழுத்தாளர்களாலேயே போதுமானதளவு எழுதப்பட்டும் இருக்கின்றன. உண்மையில் பிற்காலத்தில் வந்த அத்தகைய வெகுஜனக் கதைகளைப் படித்தபின் இவரின் கதைகளைப் படிப்பதாலேயே கூட இந்தச் சிக்கல் எனக்கு எழுந்திருக்கலாம்.

ஆனால் அவ்வருட இறுதியில் சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகளை முழுமையாக வாசித்தபின் நோக்கியபோதுதான், அவர் இங்ஙனம் ஒரு உத்தியைக் கையாளுவது  வெறும் இறுதிவரி திருப்பத்திற்காக மட்டுமல்ல எனப்புரிந்தது. அதற்கான முதன்மைச் சான்றாக இருப்பது அந்த கதைகளில் உள்ள கதை சொல்லியின் இடம்தான். அது தன்மையில் எழுதப்பட்டிருக்கும். அல்லது வீட்டுக் குழந்தைகளின் பார்வையில் இருக்கும். முதன்மை பாத்திரம் கதைசொல்லியின் ரத்த உறவாக இருக்கும்.உதாரணமாக மலைஉச்சிபங்களா கதையை சொல்லலாம். அது பெற்றோரின் வாழ்க்கைப்பாட்டைச் சொல்லும் பிள்ளைகளின் பார்வையில் சொல்லும் கதை. அதானாலேயே பிள்ளைகளுக்குப் பிடிபடாத விஷயங்கள் பூடகமாக இருக்கும்.  இந்தப்பார்வை பிடிபட்டபிறகு அவரது படைப்புகளை மனம் சற்று படபடக்காமல் வாசிப்பது என்பதே இயலாது..ஆம்.  தன் மக்களின் கதையை எழுதுகிறார். பெரும்பாலும் உள்ளதைச் சொல்கிறார். அவருக்கு, தோட்ட வாழ்க்கை வாழும் கதை மாந்தர்கள் அனைவருமே அவரின் குடும்பத்தினர் போலத்தான். ஒரு கதையை அக்குடும்பத்தில் வாழ்ந்து முடித்து சலித்த பாட்டனார் போல சொல்வார். அதில் நீ செய்வது சரியா என்ற ஆதங்கம் இருக்கும். ஒரு  சீற்றம் இருக்கும். சில இடங்களில் கையறு நிலையில் இருக்கும் தலைவனாக, தலைவியாக அல்லது ஒன்றும் அறியாத பாலகர்களாக சொல்வார். அவற்றில் சில பூடகங்களே ஏஞ்சியிருக்கும்.  இது தவிர வெகு சில கதைகளில் மட்டும்  கூரிய அங்கதமும் புரட்சிப் போராட்டங்களும் வெளிப்படுகின்றன. இதில் கையறு நிலை என்ற இடத்திலிருந்தே பல கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக அவர் கதைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அவை பிடிபட்டுவிடும்.  இரைகள், இருளில் அலையும் குரல்கள், மண்புழுக்கள், விளிம்பு, அகதிகள், பாலைவனத்தில் விதைகள் முளைப்பதில்லை –  என தலைப்புகளே அந்த உள்ளடக்கத்தின் துயரம் அல்லது ஆங்காரத்தை சொல்லிவிடுகின்றன. ( ஒரு சிறு உட்குறிப்பு:- சீ.முத்துசாமி அவர்களின் பேட்டியை வல்லினத்தில் பார்த்தபின், இந்த ”பாலைவனத்தில் விதைகள் முளைப்பதில்லை” என்ற தொகுப்பு மட்டும் பண்டைய  மலேசிய இலக்கிய உலகத்துடன் அவர் பூசலிட்டு விலகிய காலத்தில் எழுதிய கதைகளா என்ற என் ஐயத்தை நவீனிடம் தனியாக கேட்க வேண்டும் என நினைத்திருந்து பின் நேரில் காணும்போது கேட்க மறந்துபோனேன் :-)  )

malai

சிறுகதைத் தொகுதிகள் வழியாக வெளிப்பட்டவர் இருபதாண்டுகள் இடைவெளிக்குப்பின் தன் மண்புழுக்கள் நாவல் வழியாக மீண்டும் மலேசிய இலக்கிய உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறார். முதல் தலைமுறையாக மலேய மண்ணிற்கு தோட்ட வேலைக்காக வந்த மனிதர்களின் வாழ்க்கைப்பதிவு அது.  1940களில் அங்கு சென்றமைந்த மக்கள் குறித்த ஒரு ஆவணமாகவே மண்புழுக்கள் நாவல் கருதப்படுகிறது. ஒரு கருப்பு வெள்ளை ஆவணப்படமாக. அதற்கடுத்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து எழுதி அதே பின்புலத்தில் வந்திருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறைக்கான நாவலாக மலைக்காடு இருக்கிறது.  ( ஈஸ்ட்மெண் கலர் ? ) அவரது மற்றநாவல்களுடன் ஒப்பிடுகையில் இது தலைப்பிலிருந்தே வேறுபட்டிருக்கிறது.  மலைக்காடு  நாவலை வாசிக்கையில் முதலில் உணர்ந்த ஒன்று எப்பொழுதும் அவருடன் இருக்கும்அந்த ’துர்வாசர்’ இந்த நாவலில் காணப்படவில்லை என்பதுதான். மாறாக அனைத்தினையும் தள்ளிநின்று கூர்ந்து கவனிக்கும்  ஒரு ’பாணன்’ தான் தென்படுகிறார்.

தர்மபுரியிலிருந்து நாகப்படிணம் சென்று அங்கிருந்து கப்பலில் பிணாங்கு செல்லும் மாரியிடமிருந்து துவங்குகிறது நாவல். காஞ்ச பூமியில இருந்து என்ன சுகத்தைக் கண்ட? என்னோட மலேசியா வந்துரு.. அது பசுமையான பூமி.. சொர்க்கம்பாங்களே அது அந்த ஊருதான் என்று சொல்லும் கங்காணியின் வார்த்தையில் மயங்கி கொத்தடிமையாகப் போகப்போகிறோம் என்று அறியாமல் பயணிக்கிறார்கள். கப்பலிலேயே சூழ்நிலை பிடிபட்டுவிடுகிறது. காலரா நோயில் இறந்தவர்களை அப்படியே கடலில் தூக்கி வீசுகிறார்கள். விரைவில் இறக்கப்போகிறவரையும் தான்…மலேயா மண்ணைத் தொட்டதும் கங்காணியின் ரூபமே மாறிவிடுகிறது. ஒருபுறம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காட்டை பார்த்து பிரமிப்பும் மறுபுறம் தன் விதியை எண்ணி நொந்தபடியும் வாழத்துவங்குகிறார் மாரி. மாரியுடன்கூட பதினைந்தே வயதான அவரது மகன் உண்ணாமலையும் பிழைக்க வந்திருக்கிறான். அவர்களின் மூன்றாம் தலைமுறைக்கதை இது. உண்ணாமலையின் மகள் வயிற்றுப் பேரனும், தோட்ட மக்களுக்காக  தண்ணீர் லாரியை மடக்கி இட்டுவந்த  சாகசக்காரர்களில் ஒருவனுமான குட்டி என்னும் குட்டியப்பன், ஒருநாள் இரவில் காட்டில் தொலைந்து போன தன் ஊரைச் சேர்ந்த இருவரைத் தேடி தன் இன்னொரு நண்பனான நெட்டமணியுடன் சைக்கிளில் காட்டுக்குள் செல்கிறான். பின் அவர்கள் திரும்பவே இல்லை. அவர்கள் என்னானார்கள் என்பதே இந்நாவலின் கதையோட்டம்.  நாவலின் நாயகனாக வரும் குட்டியப்ப்பன் ஒரு சிறு கதாபாத்திரம்தான். அவனைச் சுற்றி, அவனுக்காக நிகழும் கதையில் வந்து போகும் ஒவ்வொரு மாந்தர்களின் வழியேதான் கதை விரிகிறது. மாந்தர் மட்டிமன்றி மலைமேட்டு முனீஸ்வரனின் வழியாகவும்

நாவலில் இந்த தலைமுறை கதை, டிரசர் பாலையா தலைமையில் லாரித்தண்ணீரை மடக்கும் அந்த சாகசத்திலிருந்து துவங்குகிறது. தொடர்ந்து தோட்ட நிர்வாகம் அறிமுகமாகிறது. பெரியதுரை ஜேம்ஸ் கோனல்லியும்,  துரைக்கு சலாம் போட்டுக்கொண்டு,  ”நீங்க திரும்பி வர்றதுக்குள்ள அந்த நாலு பசங்களையும் காணாம அடிச்சுடறேன்” என குழையும் சின்னதுரை மலபார் வர்கீஸும்,  அந்த வர்கீஸ் தன் அதிகாரத்தைக் காட்டும் பெரிய தண்டலும், ”ஆமாம்!  எனக்கு பெரிய தண்டல்ங்கிற பேருதான் முக்கியம் என எந்தளவிற்கும் இறங்கத்துடிக்கும்  சுப்பராயனும், அந்த தோட்டத்தில் ’தமிழர் கட்சி’ யின் தலைவரான ’இங்கிலீஸ்’ மணியமும் என ஒவ்வொருவராக அறிமுகமாகி, அவற்றின் ஊடே மீண்டும் முன்னும் பின்னும் சென்று அந்த மண்ணின்  தனித்தன்மையும் வரலாறும் சொல்லப்பட்டுச் சென்று கொண்டேயிருக்கின்றன. ஒருவகையில் இந்த நாவலின் இந்த உத்தி அதை மிகவும் விறுவிறுப்பாக்குவதோடு ஆங்காங்கு அவர் அளிக்கும் அதிர்ச்சியும் அதை தொடர்ந்த அதன் விளக்கமும் வாசகனுக்கு பெரும் வியப்பையும் அளிக்கின்றன. உதாரணமாக, குட்டியின் தாயான முத்தாயி தன் கணவன் கோவாலுவை ஏசும் ஓரு இடமும் அதைத் தொடர்ந்து வெளிப்படும் கோவாலுவின் இன்னொரு கோணத்தையும் சொல்லலாம்.  இவ்வாறான சித்தரிப்புகள் வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. மேலும் சுவாரசியமாக்குவது அவரது வர்ணனைகளும், சில உருவகங்களும். பெரியதுரை அடக்கியாளும் குதிரை, மாரி, லட்சுமி, கிருஷ்ணன், கோப்ரேல் மணியம் என அவரவர்க்கு ஆங்காங்கு தென்படும் ராஜநாகம் எனச் செல்லும் புனைவலங்காரங்கள் அவரது முந்தைய நாவல்களில் கண்டிராத ஒன்று.

அனால், மக்கள் மறந்துவிடக்கூடாத மனிதர்களையும் சம்பவங்களையும் சரியான வருடத்தினைச் சொல்லி அதை ஆவணப்படுத்தவும் செய்கிறார். தம்பிக்கோட்டை கணபதி என்னும் பெருந்தலைவர் முதல் டிரசர் பலையா என்னும் ஒரு தோட்டப்போராளிவரை சில சீனர்கள் உள்ளிட்ட அனைவர்களின் பெயரையும் போராட்டம் நிகழ்ந்த வருடங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். மாவோ மற்றும் காந்தி குறித்த கருத்துகளும் ஆங்காங்கு வெளிப்படுகின்றன.  அதிலும் நாவலின் துவக்கத்தில் மக்களின் போராட்டம் துவங்கி  முன்னேறுகையில்  “ அடக்கமாய் கைகட்டி ஏவிய வேலையை தன் தலைமேல் சுமந்து செய்து முடிக்கும் அடிமை இயல்பு கொண்ட மக்கள் எங்கிருக்கிறார்கள் என உலகெல்லாம் தேடி பின் அவர்களை தமிழ்நாட்டில் கண்டுபிடித்து அவர்களைத் தங்கள் பரவசம் குறையாமல் கப்பலில் ஏற்றி..” என்ற வர்ணனையில் ஒரு அடிவைக்கவும் அவர் தயங்குவதில்லை. மக்கள் போராட்டத்தினூடே அதிகாரத்தைக் கைப்பற்ற சீனர்களும், தமிழர்களும் முண்டியபடியிருக்க ஆங்கில அரசும் தோட்டநிர்வாகமும் அதை எதிர்க்க அவர்கள் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் கெப்ரேல் மணியம் அந்தக் களேபரத்திற்கிடையே அம்மண்ணின் பூர்வகுடிகளான சக்காய்களைக் காணும் தருணமும் அவர்கள் சிரித்தபடியே கடந்து போவதும் அவரின் அங்கதத்தின் ஒரு சான்று. இந்நாவலைப் படித்தபின் உங்களின் முன்னுரையை வாசித்தேன். அது வேறொரு தளத்தில் இந்நாவலை எனக்கு அடையாளம் காட்டியது. அதற்காக  உங்களுக்கும் நன்றி

சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகள் தமிழகத்தில் கிடைக்காமல் இருந்தன. அவருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் கூட அவரின் ஒரு சிறுகதை தொகுப்பும் குறுநாவல் தொகுப்புமே கடைசி நேரத்தில் அச்சில் கிட்டின. மற்ற புத்தகங்களை நூலகம் மூலமாகவும் மற்ற வாசகர்கள் படித்துவிட்டு தந்தவுடன் படிப்பதும் என தேடிதேடித்தான் வாசித்தேன். அவ்வாறு வாசிக்கையில் எனக்கு சில சிக்கல்கள் இருந்தன. ஆரம்ப பத்திகளில் சொன்னது போல ஒரு புகாராகவோ அல்லது கறாராகவோ அல்லது ஒரு ஆவணம் போலவோ அந்தக் கதைகள் இருந்தன. அதை உள்வாங்கிச் செல்கையில்தான் அவை எனக்குபிடிபடத் துவங்கின. ஆனால் மலைக்காடு உடனடியாகவே நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. ஒருமுறை நாவலைத் திறந்து உள்ளே சென்றுவிட்டால்,  அதன்பின் அதைப் படித்து முடிக்காமல் நம்மை அது கடக்கவும் விடாது

அன்புடன்,

காளி ப்ரஸாத்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குரு நித்யா சந்திப்பு –கடிதங்கள்

$
0
0

ootty

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி

அன்புள்ள ஜெயமோகன்,

2013ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தாண்டு மட்டும் காவிய அரங்கு ஏற்காட்டில் நடந்தது. அதில்தான் உங்களுடன் 2 நாட்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று திரும்பிப் பார்க்கையில் அதன் மதிப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டே வருகிறது. அந்தந்த கணங்களில் வாழ்ந்த உங்கள் ஆளுமையை நேரில் உணர்ந்த தருணங்களை எண்ணும் போதெல்லாம் மனம் பெரும் கிளர்ச்சி அடைகிறது. வாசகர்களாகிய எங்களுக்கு அதெல்லாம் பெரும் பேறு. குறிப்பாக இலக்கியத்தில் நுழையும் புதிய வாசகர்களுக்கு. பின்பு ஊட்டி முகாமிலும் ஒரு முறை கலந்து கொண்டுள்ளேன். அந்த கணங்களையெல்லாம் நினைக்காமல் நாட்கள் கடப்பதில்லை.

நடுவில் பணி நிமித்தமாக சில ஆண்டுகள் வெளி நாட்டில் இருந்து விட்டு கடந்த ஜனவரியில் தான் கோவை வந்தேன். வருகிற 30,31 விவாத பயிற்சி பட்டறைக்கு பெயர் கொடுத்துள்ளேன். உங்களை மீண்டும் சந்திக்க மிகுந்த ஆவல். நடுவில் ஒரு முறை உங்களை சந்தித்து மணிக்கனக்கில் உரையாடியதாக கனவும் வந்து விட்டது. :‍) இத்தகைய சந்திப்புகளெல்லாம் வாசகர்களாகிய எங்களுக்கு எவ்வளவு பெரிய கொடை என தெரியப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

என்னளவில் இச்சந்திப்புகளின் முதன்மையென்பது உங்கள் ஆளுமையை அருகிருந்து உணர்வது தான். தனக்கானவற்றை மட்டும் வாழ்வில் செய்யும் ஒருவரின் அருகிருப்பதும் தன்னுடையதை அவர் அணுகுவதையும் வெளிப்படுத்துவதையும் காண்பதுதான் எனக்கு முக்கியமாது. அக்கணங்கள் தான் என்னிடம் எஞ்சியுள்ளது.

அன்புடன்,

பாலாஜி பிருத்விராஜ்

அன்புள்ள ஜெ

ஊட்டி சந்திப்பு குறித்த கட்டுரையை வாசித்தேன். நான் வெளியூரில் இருப்பதனால் ஊட்டி சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை இணையத்தில் வாசிப்பதுடன் சரி. இங்கே பல்கலைகழகங்களில் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் சிபிர்கள் நிறையவே நடக்கின்றன. தலாய்லாமா வந்திருந்தபோது நான் சென்றிருந்தேன். மிகச்சிறப்பாக சில நிகழ்ச்சிகள் நடக்கும். சில நிகழ்ச்சிகள் சராசரியாகவே இருக்கும். ஏனென்றால் அமைப்புகளைச் சார்ந்து உருவாக்கும்போது இந்தவகையான சிக்கல்கள் இருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும் நடந்துகொண்டிருக்கிறது

ஒரு சூழலில் உள்ள எழுத்தாளர்கள் சந்திப்பதற்கும் பேசுவதற்கும் ஆண்டுக்கு ஒருமுறையாவது இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறெங்கும் தமிழகத்தில் இப்படி நடப்பதில்லை. தமிழகத்தில் எங்கும் இப்படி இலவசமாக ஓர் ஆசிரமத்தையே விட்டுத்தர மாட்டார்கள். விட்டுத்தந்தாலும் எந்த நிபந்தனையும் இல்லாமல் கண்டிப்பாக இருக்காது. இது ஒரு பெரிய நல்வாய்ப்பு. அதை நீங்கள் திறமையாக நடத்திச்செல்கிறீர்கள் என நினைக்கிறேன்

ஆனால் நீங்கள் பெரிய அமைப்பு என்பதும் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்கிறீர்கள் என்றும்தான் நான் நினைத்திருந்தேன். இந்தக்குறிப்பு வழியாகத்தான் உங்களுடன் இருக்கும் பழைய நண்பர்கள் எல்லாரும் கொஞ்சம் சலிப்படைந்துவிட்டார்கள், அவர்களுக்குப் பெரிய ஆர்வம் இல்லை என்று தெரிந்தது. அது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் எதிர்பார்க்கக்கூடியதுதான். பத்தாண்டுகளாக இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பத்தாண்டுகளில் கொஞ்சம் வளர்ந்து வேறு மனநிலைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஆகவே அடுத்த தலைமுறை வந்து பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிடவே வாய்ப்பு என்று தோன்றுகிறது. நடப்பது வரை நல்லது, தமிழுக்கு இலாபம் என்று நினைக்கவேண்டியதுதான்.

நீங்கள் உங்களுடைய ஊக்கத்தால்தான் இதை நடத்திச் செல்கிறீர்கள். இதில் உண்மையான ஆர்வம் கொண்ட புதியவர்கள் உங்களை தேடிவரவேண்டும் என்று விரும்புகிறேன். பிரார்த்தனைகளுடன்

செல்வி. ஆர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிவவடிவங்கள்

$
0
0

Nandi-Bull-Vehicle-of-Lord-Shiva-Signifiance-1

இனிய ஜெயம்

பயணமொன்றில், நண்பர் அனுப்பி வைத்திருந்த ஈஷா மகா  சிவராத்திரி கொண்டாட்டம் கண்டேன். ‘இன்றைய காலத்துக்கான’ மதக் கொண்டாட்டம் இது என நினைக்கிறேன்.  நடிகையர்கள் ஆட்டம் பாட்டம் பங்களிப்புடன்,  அந்த சூழலுக்கு சம்பந்தம் அற்ற சினிமா பாடல்கள் [நான் கடவுள் படத்தின் சிவோகம் பாடல் சூழலுக்கு சம்பந்தம் உள்ள  பாடல் அந்த வகையில்]  உச்ச கதியில் முழங்கிக் கொண்டிருந்தன.   அவ்வப்போது பிரபல பாடகர்கள் அல்லாவின் அருள்,கர்த்தரின் கருணை எல்லாம் வேண்டிப் பாடி, சாதகர்கள் பக்தர்கள் இவர்களுடன் இணைந்து நடனமாடினார்கள். பின்னணியில் ஜக்கி அவர்களால் ஆதி சிவன் [அல்லது ஆதி யோகி]  என பெயர் சூட்டப்பெற்ற, பிரும்மாண்ட மார்பளவு  சிவன் சிலை. கழுத்தில் பாம்பணி. சிரசில் சந்திரன். [ கொஞ்சம் உருவ இலக்கணம் குறைந்தாலும்  எனக்கு அவர் சந்திர சேகரர்] நுதலில் வெண் சுடர் வடிவில் நாமம் தரித்து,ஒளி மழை மையத்தில் த்யானத்தில் உறைந்து நின்றிருந்தது.

இந்த உருவம் கொண்டு சிவனை பதிட்டை செய்த வகையில் நிச்சயம் ஜக்கி ‘ஆச்சாரமான’ இந்துத்துவர்களால் கண்டிக்கப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். [பிரதமரின் வருகை அதை சமாதனம் செய்திருக்கும் :) ]  ஆதி சிவன் எனும் கருதுகோளே,மரபார்ந்த சைவ நோக்கிலிருந்து வேறுபட்ட ஒரு ‘கலகக் குரல்’ போலத்தான் ஒலிக்கிறது. சிவன் பிறப்பிலி அல்லவா . திருவிளையாடல் புரிய ‘தோன்றுபவர்’ தானே அவர். எனில் ஆதி சிவன் எனும் கருதுகோள், சிவனை பிறப்பிறப்பிலா யாக்கைப் பெரியோன் எனும் நிலையில் இருந்து இறக்கி,சிவனை மண்ணுடன் தளைக்கிறது.

வெறும் கலகம் என்று இல்லாமல்,ஜக்கி அவர்கள் இதன் பின்னே வளர்த்தெடுக்க ஏதேனும் நெறியை வகுத்திருக்கக் கூடும். இதே போன்றதொரு கலகத்தை வள்ளலார் முன்னெடுத்தார். துவக்கத்தில் தீவிர முருக பக்தராக இருந்த அவர், வளர்ந்தது அல்லது விலகி, சிதம்பரத்துக்கு இணையாக உத்தர சிதம்பரம் உருவாக்கும் நிலைக்கு வருகிறார்.  லிங்கம் என்பது சைவத்தில் அரு வடிவம். அந்த அரு வடிவத்துக்கு மாற்றாக ஜோதி எனும் அரு வடிவத்தை வைத்தார் வள்ளலார். அந்த ஜோதி எனும் அரு வடிவத்தை மையமாக வைத்து சன்மார்க்கத்தின் நெறிகளை வகுத்தார்.

shiva-and-samba-on-indo-brazil-cosmic-dance-seshadri-sreenivasan

வல்லாரின் ஜோதி மரபார்ந்த சைவம் பேசும் அரு வடிவை புறக்கணித்தது போலவே, ஜக்கி அவர்களின் ஆதி சிவன் வடிவம் மரபார்ந்த சைவம் பேசும் உரு வடிவை புறக்கணிப்பதாக இருக்கிறது. வடிவங்களை அடையாளம்காணத் துவங்கி இருக்கும்  எனது பயணத்தில், மிக மகிழ்ச்சியான தருணம் என நான் உணர்ந்த கணங்கள், விஷ்ணுபுரம் நாவல் வாசிப்புக்குப் பிறகு, கல்வடிவங்களின் குவியலாக இருந்த கோவில் வளாகங்கள் எல்லாம், கலைவடிவங்களின், தத்துவங்களின், மரபுச்செல்வங்கள்  என உருமாறத் துவங்கிய பொழுதுகளை சொல்வேன். அங்கே துவங்கி எண்ணிறந்த மூர்த்தங்கள் அவற்றின் பெயர்களுடன் ஒவ்வொன்றாக எனக்கு அறிமுகமாகி, கருங்கடல் மேல்,முழுநிலவின் பித்தொளி தளதளத்துப் பரவுவது போல,  என் அறியாமைக் கடல் மேல் முழு நிலவின் ஒளியாக இந்த கலைச் செல்வங்கள் சார்ந்த புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதில் கற்றவனவற்றில்,சிற்ப வடிவங்கள் குறித்து , அடிப்படையில் சிவ வடிவங்கள் மொத்தமாக மூன்று அடிப்படை வடிவங்களில் அடங்கி விடும். அங்கிருந்தே சிவ வடிவங்களை புரிந்து கொள்ள முயலும் பயணத்தை துவங்க வேண்டும் என்பதை நான் அறியவரவே கனகாலம் தேவைப்பட்டது.அடிப்படையில் சிவ வடிவங்கள் மூன்று. ஒன்று அரு வடிவம் அதாவது லிங்கம். இரண்டு உரு வடிவம் அதாவது நடராஜர் போல. மூன்றாவது அரு உரு வடிவம் லிங்கோத்பவர் போல. என் போல தவிக்காமல் சரியான இடத்தில் துவங்கி சிவனின் உருவங்கள் என பாரதம் முழுக்க நிறைந்து செழித்திருக்கும் கலை வெளிக்குள் மூழ்கி மறைய,ஒரு அடிப்படை கையேடு என  பரிந்துரைக்கத்தக்க  நூல், வித்துவான் சிவகுருநாதப் பிள்ளை எழுதி 91 இல் வெளியான சிவ வடிவங்கள் எனும் நூல்.

அக்காலக் கட்டத்தில் முதல் நூல் எனும் வகையில் இந்த நூலில்,குறைவான விளக்கப்படங்கள் போல, சிறிய போதாமைகள் உண்டு. குறிப்பாக இன்று போல இணையமோ புகைப்பட வசதிகளோ பெருகி நிற்க வில்லை. ஆயினும் கடினமான முயற்சி வழியே [ அந்த சிவ வடிவங்களின் ஓவியங்களை அந்த வடிவம் இடம்பெற்ற மூல நூல் பெயரை குறிப்பிட்டு,பல வடிவங்களை  ஓவியமாக வரைந்து இணைத்திருக்கிறார்]. இரண்டாவதாக ஒரு சிவச்செல்வர் எழுதிய நூல் என்பதால் ஆங்காங்கே சில [ஆதி சப்பானியர்கள் வணங்கியது சிவக் குறியே என்பது போல] ஆய்வுக்கு வெளியிலான சில பல விதந்தோதல்களும் நூலில் உண்டு.

இருப்பினும் சிவ வடிவங்கள் எனும் உலகுக்குள் நுழைய அனைத்து அடிப்படைகளையும், வகுத்தளிக்கிறது இந்த நூல். பெரும்பாலான சிவ வடிவங்களை,அதன் உருவ அமைதியை, சிற்ப இலக்கணத்தை, அதை வணங்க வேண்டிய முறைகளை, வணங்க உருவான ஆகம முறைகளை, அப்படி வணங்கினால் அடையும் பலன்களை  அவை அமைந்திருக்கும் கோவில் வரை, முழுமையான அடிப்படை அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.

siv

இணையம் அளிக்காத ஒரு முழுமையான அடிப்படை புரிதலை அளிக்கிறது இந்த நூல். மேலதிகமாக இந்த நூல் பேசும் மூர்த்தங்களின் பெயர்களை,[இந்த நூலில் விடுபட்டிருக்கும் வடிவங்களை] இணையத்தில் தேடி இன்று கண்டடைய முடியும். இவை போக மலைகளை சிவனின் உருவமாக வணங்குவதை நாமறிவோம், இதற்குள்ளும் வண்ண பேதங்கள் உண்டு, சோமாஸ்கந்தர் வடிவமாக [சிவன் பார்வதி பாலமுருகன் இணைந்த கோலம்] மலைகளை காண்பது,நதிகளை காண்பது குறித்த மரபு சார்ந்த நோக்கெல்லாம் இந்த நூலில் சிறு குறிப்பாக வருகிறது. இவற்றுக்கு வெளியே கோவில் வடிவங்களில் இடம்பெறாத சிவ வடிவங்களின்  தோற்றங்களை, நூலுக்குள்  இலக்கிய வடிவங்கள் எனும் தனிப் பிரிவு தொகுத்தளிக்கிறது. நாம் வேர்கொண்டு நிற்கும் மரபு சார்ந்த அடிப்படைகள் மீது காதல் கொண்டோர் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு பெருவெளி சார்ந்த அடிப்படை அறிமுகத்தை அதன் கலைச் சொற்களுடன்  சரியாக தொடர்புர்த்தும்  இலகுவான  மொழியில்  அளிக்கும்  சிவ வடிவங்களுக்கான  அறிமுக நூல்  இது.

கடைவாய் இதழ்கோண அத்வைதத்தை கிண்டலடித்தபடி மேடைகளில்  சைவத்தை பேசுவோர் ஒரு புறம், ஆதி சிவனை முன்வைத்து சினிமா பாடல்கள் வழியே சைவத்தை முன்னெடுக்கும் ஜக்கி போன்றோர் மறு புறம். இந்த இரண்டுக்கும் மத்தியில் நின்று, சைவத்தை அறிமுகம் செய்துகொள்ள விரும்பும் மனங்களுக்கான நூல் இது. சிவ வடிவங்களை மட்டுமே மையம் கொண்ட நூல்தான் என்றாலும், அறிமுக வாசிப்பில் இந்த நூலை மையமாகக் கொண்டு சைவப் பெருவெளியின் செல்திசைகள் சார்ந்து ஒரு வரைபடத்தை வாசகர்கள் உருவாக்கிக்கொள்ள இயலும்.

உதாரணமாக நான் எப்போதும் சுட்டும், தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானம் தன்னளவில் ஒரு சதாசிவ லிங்கம் எனும் குடவாயில் பாலசுப்ரமண்யம் அவர்களின்  குறிப்பினை  இந்த நூல்  அதன் அடிப்படைகள் என்ன என்று இயம்புகிறது.  கிட்டத்தட்ட சிவ வடிவங்களுக்கான ஒரு குட்டி கலைக்களஞ்சியம் என்று இந்த நூலை சொல்லிவிடலாம்.

தரவிறக்கிக்கொள்ள சுட்டி கீழே.

https://archive.org/details/Acc.No.22751SivaVadivangal1991

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்


திரைப்படம் –ஏற்பின் இயங்கியல்

$
0
0

ang

கட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்..! அங்காடித் தெரு சுவாரஸ்யம் – #9YearsOfAngadiTheru

24 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி வெவ்வேறு ஊர்களிலாக அலைந்துகொண்டிருந்தேன். தனிமை. எவரிடமும் பேசாமல் வாயின் தசைகள் கிட்டத்தட்ட உறைந்துவிட்டிருந்தன. செல்பேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருந்தேன். நேரம் பார்க்க செல்பேசியை இயக்கியபோது வசந்தபாலனின் குறுஞ்செய்தி வந்தது.  #9YearsOfAngadiTheru. விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அது ஓர் விந்தையான சரடால் என்னை மீண்டும் இவ்வுலகுடன் இணைத்தது.

சிலநாட்களுக்கு முன்னர் நான்கடவுள் படத்தின் ஒன்பதாண்டு நிறைவும் இவ்வாறு நினைவுகூரப்பட்டது. சில கட்டுரைகளும் குறிப்புகளும் வந்தன. இவை நினைவுகூரப்படுவதன் அடிப்படை இன்றுள்ள வெவ்வேறு கட்டணத்தளங்களில் இருந்து இந்தப்படங்கள் தரவிறக்கம் செய்ய்ப்படுவதன் எண்ணிக்கையைக் கொண்டே. நான் கடவுளும் அங்காடித்தெருவும் தொடர்ச்சியாக பார்க்கப்படும் படங்கள்.

மலையாளத்தில் ஒழிமுறி பற்றி மாத்யமம் இதழ் இந்த ஆண்டு ஒரு தனி விமர்சன மலர் வெளியிட்டது. இரு கட்டுரைகள் இருந்தன. ஒழிமுறி பற்றி ஐம்பது கட்டுரைகளுக்குமேல் எழுதப்பட்டுள்ளன. நான் இதுவரை தமிழிலும் மலையாளத்திலுமாக 15 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். காலம் க்டந்து தொடர்ந்து  நினைவுகூரப்படும் படங்கள் இம்மூன்றும் மட்டுமே.

ஒரு படம் ஏன் நினைவில் நீடிக்கிறது? அதன் அடிப்படைத் தர்க்கம் என்ன?  வாரம்தோறும் படங்கள் வந்து குவிகின்றன. அவற்றில் ஐம்பதுக்கு ஒன்றுதான் வெற்றி பெறுகிறது. வெற்றிபெறும் படைப்புகளிலேயே நூற்றுக்கு ஒன்று மட்டுமே சில் ஆண்டுகள் கடந்தும் நினைவுகூரப்படுகிறது. பார்வையாளர்களால் மட்டும் அல்ல, படத்தை எடுத்தவர்களாலும்கூட. மிகப்பெரும்பாலான படங்கள் மிக இயல்பாகக் கடந்துசெல்லப்படுகின்றன.

சினிமா ஒவ்வொருநாளும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் துறை. இங்கே திரும்பிப்பார்க்க எவருக்கும் பொழுதில்லை. புதிதாக வரும் படங்களைப் பார்க்கவே இங்கே கண்கள் இல்லை. அதைப்பற்றிப் பேச்வேண்டும் என்றால் பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே பழைய படங்கள் எல்லாம் அவ்வப்போது தனிநபர்கள் தங்கள் அரட்டைகளில் சொல்லிக்கொண்டால்தான் உண்டு. அவர்கள் கூட பெரும்பாலும் தங்கள் சொந்த வாழ்க்கை நிகழ்வுகளுடன் இணைத்துக்கொண்டு கடந்தகால ஏக்கமாகவே சினிமாக்களை நினைவுகூர்வார்கள்.   ‘நான் காலேஜ்லே சேர்ந்த அதே வருசம்தான் மௌனராகம் ரிலீஸ். அப்பல்லாம் படம் பாக்க காசிருக்காது’ என்ற் பாணியில்.

மிக அரிதாகவே ஒரு படம் காலம் கடந்தும் பேசப்படுகிறது. ஏன் பேசப்படுகிறது என்பதற்கான காரணங்களை அறிவுஜீவிகள் ஆராய முடியும், பேசப்பட வைக்கவோ தடுக்கவோ முடியாது. முன்னர் ஊகித்துச் சொல்லவும் இயலாது. விமர்சகர்களின் பேச்சுக்களுக்கும் மக்களின் எண்ணங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உண்டு. [தமிழ்ச்சூழலில் ஏன்  அவ்வாறு ஒரு படம் பேசப்படுகிறது என்று பார்க்கக்கூட சினிமா ஆய்வாளர்கள் இல்லை. இங்கே பெரும்பாலும் அரசியல் நிலைபாடுகள் தனிநபர்க் காழ்ப்புகள் பார்வையை வடிவமைக்கின்றன] ஒரு சினிமா அப்படி காலம்கடந்து நிலைகொள்ளும்போது அதை வைத்து சமூகத்தின் கூட்டு உளவியலை, பொது ரசனையை, உள்ளார்ந்த அரசியலை உய்த்து எழுதுவது ஓரு முக்கியமான அறிவுச்செயல்பாடு.

இதில் தேர்ந்த ரசிகர்களுக்காக எடுக்கப்படும் கலைப்படங்களை நான் கருத்தில்கொள்ளவில்லை. அவை ஒரு சமூகத்தின் சொத்தாக, அப்பண்பாட்டின் மிகச்சிறந்த வெளிப்பாடாக கருதப்படுகின்றன. ஆகவே தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் அவை நிலைநிறுத்தப்படுகின்றன. உதாரணம் சத்யஜித் ரே படங்கள். அல்லது மலையாளத்தில் ஜி.அரவிந்தனோ அடூர் கோபாலகிருஷ்ணனோ எடுக்கும் படங்கள். நான் இங்கே பேசுவது பெருவாரியான மக்களுடன் நேரடியாகப்பேசும் வணிகத்தன்மைகொண்ட ‘மக்கள்ரசனை’ சார்ந்த படங்களை. சமூகத்தால் தன்னியல்பாக நினைவில் நிறுத்தப்படும் படங்களை…

பல படங்கள் பாடல்களுக்காக நினைவுகூரப்படுகின்றன. சினிமாக்களில் பாடல்கள் மட்டும் ஒருவகையான ‘சாகாவரம்’ கொண்டவை. ஏனென்றால் அது சினிமாவில் இருந்தாலும் சினிமா அல்ல. அது வேறுகலை. பாடல்களுக்காக நினைவுகூரப்படும் சினிமாவை சினிமாவாக கருத்தில்கொள்ளவேண்டியதில்லை.

ஒரு சினிமா பேசப்படுவது அது வெற்றிப்படம் என்பதனால் மட்டும் அல்ல. மாபெரும் வெற்றிப்படங்கள் அப்படியே மறக்கப்படுவதுதான் மிகுதி. பெரும்பாலும் அவை வெறும்தகவலாகவே நினைவுகூரப்படும். நினைவில் நீடிக்கும் படங்கள் கலைப்பெறுமதி கொண்டவையாக இருந்தாகவேண்டும் என்பதும் இல்லை. அவை கலையம்சம் கைகூடியவை என்பதனால்தான் செல்வாக்கைச் செலுத்துகின்றன, ஆனால் அது கட்டாயம் இல்லை என பல படங்களைப் பார்த்தால் தெரிகிறது. அவை பெரும்பாலும் சமூகப்பிரச்சினைகளை பாதிக்கும்படிப் பேசி, தொடர்ச்சியாக விவாதிக்கச்செய்த படங்களாகவே உள்ளன. ஆனால் அப்படி அல்லாத படங்களும் பேசப்படுகின்றன.

ஒரு வணிகப்படம் காலம் கடந்து  பேசப்படுகையில் அதை ஒரு  பரப்புச் செவ்வியல் [popular classic] என்று வரையறை செய்வதுண்டு. அதைப்போன்ற மேலும் பல படங்களை உருவாக்கும் தொடக்கமாக அமையும் என்றால் அது தனிமரபுச் செவ்வியல் ஆக்கம் [cult classic] எனப்படுகிறது. தில்லானா மோகனாம்பாள் ஒரு பரப்புச்செவ்வியல் படைப்பு. பராசக்தி ஒரு தனிமரபுச் செவ்வியல் ஆக்கம்.

ஒரு படைப்பு பரப்புச்செவ்வியல் ஆக்கமாக ஆவது மெல்லமெல்ல அதன்மேல் நம் சமூகத்தின் கூட்டுநோக்கு திரண்டு வரும்போதுதான். வெளிவந்தபோது அப்படங்கள் மேல் பலவகையான பார்வைகள் உருவாகியிருக்கும். ஆனால் ஒரு காலகட்டம் கடந்தபின்னர் ஒற்றைப்பார்வையாக சமூகநோக்கு திரண்டிருக்கும். கலைப்படங்களுக்கான பார்வை எழுதி விவாதித்து திரட்டப்படுகிறது. பரப்புப்படங்களுக்கான பார்வை மக்களின் அரட்டை வழியாக தன்னிச்சையாக உருவாகி வருகிறது.

பொதுவாகவே கதைக்கரு, வெளிப்பாடு ஆகியவற்றில் வலுவான கட்டமைப்பு கொண்ட படங்கள் மீதே அந்தச் சமூகக் கூட்டுநோக்கு உருவாகிறது. ஆகவே அவை பெரும்பாலும் வணிகவெற்றிப்படங்களே. ஆனால் அரிதாக வெளிவந்த போது வெற்றிபெறாத படங்களும் காலப்போக்கில் அவ்வாறு கூட்டுநோக்கை பெற்று நினைவில் நீடிக்கும் படங்களாகின்றன.

உதாரணமாக, தமிழில் மணி ரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வெளிவந்தபோது ஓடாத படம். ஆனால் அவர் படங்களில் நாயகனும் கன்னத்தில் முத்தமிட்டாலும்தான் நினைவில் நின்றிருக்கின்றன. மலையாளத்தில் வெளிவந்த படங்களில் பி.பத்மராஜனின்  ‘தூவானத்தும்பிகள்’ சியாமப்பிரசாத்தின் ‘ரிது’ போன்ற சினிமாக்கள் வெளிவந்தபோது தோல்வியடைந்து ஒரு தலைமுறைக்குப்பின் பரப்புச்செவ்வியல் ஆக்கங்களாக மாறின.

இதன் தர்க்கங்களை மதிப்பிட  தொடர்ச்சியான, முறைமைசார்ந்த ஆய்வு தேவை. இங்கே பரப்புகலைகளைப் பற்றிய ஆய்வுகள் கல்விக்கூடங்களில்கூட கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அப்படி ஒர் ஆய்வு இன்றுவரை என் பார்வைக்கு வந்ததில்லை. ஆய்வாளர்களின் இந்த பர்வைக்குறுகலுக்கு முதன்மைக்காரணம் அவர்கள் தங்கள் அரசியலை படம் மீது மட்டுமல்ல, பார்வையாளர் மீது திணிக்க முயல்வதுதான். அந்த அரசியல் அவர்களை குருடர்களாக ஆக்கிவிடுகிறது.

அரசியல்பற்று ஒருவனை ஒருவகையான மிதப்பு கொண்டவனாக ஆக்கிவிடுகிறது. உலகையே சீர்திருத்தும், வழிகாட்டும் பொறுப்பை அவன் எடுத்துக்கொள்கிறான். அதற்கான தன் தகுதி பற்றி எண்ணிப்பார்ப்பதில்லை படைப்பாளி எப்படி படம் எடுக்கவேண்டும், பார்வையாளர் எப்படிப் பார்க்கவேண்டும் என்று வகுப்பெடுக்கும் எழுத்துக்களை எழுதும் விமர்சகர்கள் உருவாவது இப்படித்தான். மிக எளிய அன்றாட அரசியல்நிலைபாடுகள், அரசியல்சரி சார்ந்த அணுகுமுறைகள் இவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன. சமூகஏற்பு போன்ற நுண்மையான ஆய்வுகளுக்கு அதன்பின் அவர்களின் மூளை வளைவதில்லை

உதாரணமாக மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஈழம் குறித்த அதன் அரசியலுக்காகவே இங்கே விமர்சகர்களால் பேசப்பட்டது, வசைபாடவும்பட்டது. ஆனால் பார்வையாளர்கள் ஈழ அரசியலுடன் உளத்தொடர்பு கொள்ள முடியாததனால் அது தோல்விப்படமாக அமைந்தது. இன்று அது பெண்பார்வையாளர்களால் முழுமையாக அரசியல்நீக்கம் செய்யப்பட்டு குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவைச் சொல்லும் படம் மட்டுமாக பார்க்கப்படுகிறது. இன்று அது பிடிவாதமான, புத்திசாலியான, தனிப்போக்கு கொண்ட ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவைப்பற்றிய படம், அவ்வளவுதான்.

இன்று, திரும்பி நின்று என் பங்களிப்புள்ள மூன்று படங்களையும் பார்க்கையில் நினைவுகள்தான் உள்ளூர கொப்பளிக்கின்றன. அவை எப்படி பார்க்கப்படுகின்றன என பார்வையாளரின் கோணத்தில் நின்று மதிப்பிட இயலவில்லை.எதிர்வினைகளிலிருந்து தெரிவது சில பொதுவான கருத்துக்கள். ஒழிமுறி அதிலுள்ள பெண் கதைமாந்தர்களுக்காகவே பேசப்படுகிறது. நூறாண்டுகளில் கேரளப்பெண்களின் குணச்சித்திரம் எப்படி மாறிவந்துள்ளது என்பதை மூன்று தலைமுறைப் பெண்கள் வழியாக அது காட்டுகிறது. அதையொட்டியே பார்வைகள் அமைகின்றன.

நான்கடவுள் அதன் அழுத்தமான காட்சிக்கோவைகளாகவே நினைவுகூரப்படுகிறது, அதற்காகவே பார்க்கப்படுகிறது.  அதன் ‘கதை’ இன்று பெரும்பாலானவர்களின் கவனத்திலேயே இல்லை. அதிலுள்ள சுரண்டல் குறித்த சித்தரிப்புகள் கூட பெரிதாகப் பேசப்படுவதில்லை. காட்சிகள் வழியாக அது இன்னொரு சினிமாவை காட்டுகிறது. தெய்வங்கள் எள்ளி நகையாடப்படுகின்றன. பிச்சைக்காரர்களின் சிரிக்கும் முகங்கள். பாதாளம்போன்ற் இன்னொரு உலகம்.அகோரிகளின் உலகின் சுதந்திரத்திற்கும் பிச்சைக்காரர் உலகின் அடிமைத்தனத்திற்கும் இடையேயான முரண்பாடு. அப்படம் எடுக்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட உச்சகட்டம் இன்று பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை

அங்காடித்தெரு இன்று அதிலுள்ள சின்னச்சின்னக் கதைமாந்தர்களுக்காகவே பெரிதும் நினைவுகூரப்படுகிறது. அது வெளிவந்தபோது ஒரு காதல்கதையாகவே உத்தேசிக்கப்பட்டது. கூடவே சுரண்டலின் பின்னணியும் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று அது எளிய மனிதர்கள் தங்கள் வாய்ப்புகள் வழியாக தொற்றி மேலேறுவதன் கதையாக பார்க்கப்படுகிறது. மாதம் ஒருமுறையாவது முன்பின் தெரியாத ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அந்தப்படம் தங்களுக்கு அளித்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் பற்றிப் பேசுகிறார்கள். அந்தக் காதலையே கூட ஒரு தங்கிவாழ்தலின் கதையாகவே பார்க்கிறார்கள்.

இவ்வாறு படம் ஏற்பின் வழியாக தனக்கென ஒரு பிரதியை ஈட்டிக்கொள்வதால்தான் அது நினைவில் நீடிக்கிறது. அது வெளிவந்தபோது உருவான விமர்சனங்களை எல்லாம் இப்போது வாசித்தால் வியப்பாகவும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கிறது. இந்தக்கூறுகள் எதையுமே அன்றைய விமர்சகர்கள் காணவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் அங்காடித்தெரு அவர்களால் அழுவாச்சிப்படமாக வசைபாடப்பட்டது. மக்களால் நம்பிக்கையூட்டும் ‘பாஸிட்டிவ்’ படமாக ஏற்கப்பட்டது. விமர்சகர்கல் அவசரகதியில் , அன்றைய பொதுவான உளச்சூழலில் நின்று வழக்கமான டெம்ப்ளேட் விமர்சனங்களையே சொன்னார்கள். ஒழிமுறி விதிவிலக்கு. படம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இன்றும் மதிப்பிற்குரியதாக நீடிக்கும் வலுவான விமர்சனங்கள் வந்துவிட்டன.

ஏற்பை மதிப்பிடுகையில் ஒரு படத்தின் வசனங்களில் எது அந்தப்படத்தின் மையவரியாக நீடிக்கிறது என்பதையே கூட படைப்பாளிகள் முடிவுசெய்ய முடியாது என்று தோன்றுகிறது. எப்போதுமே ஒரு கவித்துவமான வரியும் கூடவே போகிறபோக்கில் வரும் ஒரு வரியும் அந்தப்படமாக நிலைகொள்கின்றன. நான்கடவுளின் மையவரியாக ‘நெருப்பிலே என்னட சுத்தமும் அசுத்தமும்” நின்றுள்ளது. ஆனால் ‘கடவுள் புளுத்தினாரு’ என்ற வரி அதேயளவு அப்படத்தை நினைவுகூர்வதாக நிலைகொள்கிறது

அங்காடித்தெருவில் ‘யானை வாழுற காட்டில்தான் எறும்பும் வாழ்கிறது’ மைய வரி. அந்தப்படம் அளிக்கும் நம்பிக்கை அந்த வரியில் வெளிப்படுகிறது. ஆனால் ‘விற்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ என்றவரி கூடவே வலுவாக நினைவில் நீடிக்கிறது.

இந்த வசனங்கள் இன்று திரைவசனங்களாக இல்லை என்பதும் வியப்பு. நெருப்பில் என்னடா சுத்தமும் அசுத்தமும் என்பது ஒரு சித்தர் வாக்காக பல ஆன்மிக உரைகளில் சொல்லப்பட்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். யானை வாழுற காட்டில்தான் எறும்பும் வாழ்கிறது’ ‘விற்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ ஆகியவற்றை பழமொழிகளாக பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்.

மக்களின் ஏற்பு ஒரு மிகமிகச் சிக்கலான ஊடாட்டங்கள் கொண்ட ஒரு பெருஞ்செயல்பாடு. அதை எளிய கொள்கைகல் வழியாக வகுத்துக்கொள்ள முடியாது. அக்கறையும் முன்முடிவுகளும் இல்லாத ஆய்வாளர்களால் அது இயலக்கூடும்

அலாவுதீன்

செங்காடு

கதாநாயகன் தேர்வு

வசந்தபாலனின் வெற்றி

அங்காடித்தெருவுக்கு விருது

அங்காடித்தெரு கேரளத்தில் …

அங்காடித்தெரு, நூறாவது நாள்.

அங்காடித்தெரு கடிதங்கள்

அங்காடி தெரு,கடிதங்கள் 3

அங்காடி தெரு கடிதங்கள் 2

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

உகவர் –கடிதங்கள்

$
0
0

ugavar-chennai

உகவர் வாழ்க்கை

ஜெ,

வணக்கம். உகவர் வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்த கடிதங்களைப் படிப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

இன்று ‘வி’யின் கடிதத்தினை காலையில் படித்தேன். பின்பு அலுவலகம் வந்து நாளிதழ் வாசிக்கையில் ‘மிண்ட்’ பத்திரிக்கையில் கண்ட செய்தி மேலும் வருத்தமளித்தது. அந்தக் கட்டுரைக்கு ஆன்லைன் லின்க் கிடைக்காததால், அதன் சாரத்தினை ஒரு படமாக இணைத்துள்ளேன்.

அவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இந்திய நகரங்களில் உகவர்களை ஏற்கும் மனப்பான்மை இன்னமும் குறைவாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மிகக்குறைவாக இருக்கிறது. ‘முழுமையாக ஏற்கக்கூடியது’ என்று சொல்பவர்கள் 20%மும், ‘ஒருபோதும் ஏற்க முடியாது’ என்று சொல்பவர்கள் 40%மும் உள்ளனர். பிந்தைய எண் மும்பை, டெல்லியை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகம். மேலும் சில தகவல்கள் படத்தில்.

இக்கடிதங்களுக்கு ஆதுரமாகவும் வழிகாட்டுதலுடனும் பதில் சொல்லும் உங்களுக்கு என் நன்றிகள்.

 

ஸ்ரீகாந்த் மீனாட்சி

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

உகவர்களைப் பற்றிய குறிப்புகள், கடிதங்களை வாசித்தேன். நம் சாமானிய ஒழுக்கவியலால் அவர்கள் எவ்வாறு துன்புறுகிறார்கள் என்பதைக் கண்டபோது ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்வாறு பாலியல் சார்ந்த ஒடுக்குமுறை இருந்துள்ளது என்பதை உணரமுடிகிறது. சென்றகாலகட்டத்தில் இவ்வாறுதான் விதவைகள் ஒடுக்கப்பட்டார்கள். அதற்கு முன் பெண்கள் ஒட்டுமொத்தமாகவே பாலியல் ஒடுக்குமுறையில் இருந்தார்கள். பாலியல் நாட்டம் கொண்ட பெண்ணை சமூகம் வெறுத்த்து. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாம் பாலினத்தின் உரிமைகளைச் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. உகவர்களைப் பற்றிய பார்வையிலும் மாற்றம் வரும் என நினைக்கிறேன்

சரவணக்குமார். டி.எம்

 

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் உகவர்கள் பற்றி வந்த கடிதங்கள் எனக்கு மிகப்பெரிய திறப்பை அளித்தன. நான் இதுவரை நினைத்திருந்த்தே வேறு. அவர்கள் ஒரு திரிந்த சுவை காரணமாக ஒருபால் உறவை நாடுகிறார்கள் என நினைத்திருந்தேன். அதாவது ஒரு வக்கிரமாகவே எண்ணியிருந்தேன். அது அவர்களின் பயாலஜிகல் இயல்பு , அவர்களால் அதை மாற்றிக்கொள்ள முடியாது என்பதெல்லாம் எனக்கு இப்போதுதான் தெரிந்த்து. அவர்களால் பிறபால் உறவை அனுபவிக்க முடியாது என்பது அதிர்ச்சியாகவே இருந்த்து. அவர்கள் அதை ரகசியமாகக் கொண்டாடவில்லை. அவர்கள் அந்த உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது. அவர்களைப் பார்க்கும் பார்வையே மாறிவிட்டது. எந்தக் கட்டுரையும் அளிக்காத தெளிவை இப்படிப்பட்ட தனிப்பட்ட கடிதங்கள் அளிக்கின்றன. ஏனென்றால் எழுதுபவருடன் நாமும் அடையாளம் காண முடிகிறது

ராஜீவ்குமார்

படைப்பு முகமும் பாலியல் முகமும்

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

ஒருபாலுறவின் உலகம்

ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017

ஒருபாலுறவு, தீர்ப்பு

ஒருபாலுறவு, தீர்ப்பு- கடிதங்கள்

படைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்

ஓரினச்சேர்க்கை-கடிதங்கள்

ஓரினச்சேர்க்கை- அனுபவக்கட்டுரை

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வானோக்கி ஒரு கால் -1

$
0
0

ku12

சும்மா பாறையடி மலைவரை ஒரு காலைதான் சென்றேன். அங்கிருந்து இருபது கிமீ நடந்து பூதப்பாண்டி வரை சென்றேன். தாடகை மலை அடிவாரத்தில் அமைந்த கோயில். கருவறை குடைவரையாலானது. அங்கே சிற்பங்களை நோக்கி நின்றபோது தோன்றியது, இவ்வாறு நிலையழிந்திருக்கும் ஒவ்வொருமுறையும் கோயில்களுக்குத்தானே செல்கிறேன் என்று. ஒவ்வொரு முறை இந்தப் பெருந்தனிமையை சுமக்கும்போது கிளம்பிச்செல்வது ஆலயங்களுக்கே. தூண்டுதல்களுக்காக. ஆறுதலுக்காக. வெண்முரசின் ஒவ்வொரு நாவலுக்கும் இவ்வாறு சென்ற ஆலயங்களை தனியாக பட்டியலிடவேண்டும்.

ஒவ்வொரு தொடக்கத்தையும் கோயில்களிலிருந்தே பெறுகிறேன். சொல்வளர்காடு கிராதம் கேதார்நாத்திலிருந்து. மாமலர் குடஜாத்ரியில் மூகாம்பிகை அன்னையிடமிருந்து. வெவ்வேறு சிலைகள் கனவிலெழுந்து முதல் படிமத்தை அளித்திருக்கின்றன. வெவ்வேறு நிலங்கள் ஆழ்ந்த பரவசத்தை அளித்து சொல்லெடுத்துத் தந்துள்ளன.

j

மீண்டும் மீண்டும் கோயில்களுக்குச் செல்வதனால் நான் பக்தன் என்று பொருள் அல்ல. அந்த பாவபக்தியை நான் உணர்ந்த்தே இல்லை. ஒருமுறைகூட ஓர் ஆலயமுகப்பில்கூட உளமுருகியதில்லை. வெறுமனே விழிமலைத்து நோக்கி நின்றிருப்பேன். வணங்கி திரும்புவேன். உண்மையிலேயே நான் யார்? இந்த ஆலயங்கள் எனக்கு எதைத்தான் அளிக்கின்றன?

என்னை எப்படி வரையறை செய்துகொள்வது என்பது எப்போதுமே எனக்கு சிக்கலானதுதான். என் வாசகர்கள் மட்டுமல்ல விமர்சகர்களும் நண்பர்களும்கூட அதைத்தான் உண்மையில் கேட்கிறார்கள். எதிரிகள் நான் அவர்களை ஏமாற்றும்பொருட்டு பச்சோந்தி வேடமிடுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். நண்பர்கள் நான் நிலைமாறிக்கொண்டே இருப்பவன் என்று மதிப்பிடுகிறார்கள்.

ku11என்னை வரையறை செய்துகொள்ள ஆசைதான், அவ்வாறு வரையறை செய்துகொண்ட மறுகணமே அந்த வரையறைக்குள் நின்றாகவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதன்பின் அதை மீறுவது எப்படி என்று மட்டுமே என் மண்டை துருதுருக்கிறது. ஒவ்வொருவரிடமும் “நீங்கள் நினைப்பதுபோல் நான் இல்லை” என்று ரகசியமாக சொல்லிக்கொள்வதன் உற்சாகமே எழுதவைக்கிறது. ஏனென்றால் நான் எழுதும் ஒரு புதிய கதை நான் எழுதக்கூடுவது என எவரும் எண்ணாததாகவே இருக்கவேண்டும். அதுவே எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

மாறாமலிருப்பது என் ரசனையும் தேடலும்தான். என் வழியை முன்னரே வகுத்துக்கொள்ளவில்லை. அதுவே ஒழுகிச்செல்லட்டும் என விட்டுவிடுகிறேன். ஆகவே அவ்வப்போது நின்று ‘அடாடா இங்கே வந்திருக்கிறேனா?” என நானே வியந்துகொள்கிறேன். அதுவே வாழ்க்கையையும் ஆர்வத்திற்குரியதாக்குகிறது.

kur0

நான் எவ்வகையிலும் இறைவழிபாடு செய்பவன் அல்ல. உருவவழிபாட்டில் ஈடுபடாதவர் என் ஆசிரியர். நானும் சடங்குகள் செய்வதில்லை. பூசைகள் வேண்டுதல்கள் வழக்கமில்லை. நானும் அத்வைதியே. நான் கோயில்தோறும் செல்வதைப்பற்றி அவரிடமே கேட்டிருக்கிறேன். ”நீ எழுத்தாளன். கலைஞர்களுக்கு உருவங்களிடமிருந்து மீட்பில்லை” என்று நித்யா சொன்னார். “பசுவை ஒட்டக்கறப்பதுபோல பிரம்மத்தை உருவங்களாக கறந்து வைத்திருப்பவர்கள் உன்னைப்போன்றவர்கள்தான்” என சிரித்தார்.

ஆலயச்சிலைகள் மேல் எனக்கு பெரும் மோகம் உண்டு. இந்த நாற்பதாண்டுகளில் நான் சிலைகளைக்காண பயணம் செய்யாத ஒரு மாதமாவது இருந்திருக்குமா? இந்தியா முழுக்க அலைந்து திரிந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஆலயங்களுக்கு நான் செல்வது சிலைகளிலிருந்து கலையின் தொடர்ச்சி ஒன்றை கண்டுகொள்ளவா? என் ஆழுள்ளத்தை அவை திறக்கின்றனவா?

சென்றமுறை அஜ்மீர் செல்ல எண்ணியிருந்தேன். இருமுறை அஜ்மீர் கனவில் வந்தது. நானும் ஷாகுலும் கிளம்ப டிக்கெட் போடுவது வரை சென்றோம். பின்னர் அது ஒத்திப்போடப்பட்டது. இந்தத் தேடல் எப்போதுமே உந்திச்செல்கிறது.  நான் செல்வது சிற்பங்களுக்காக என்றால் ஏன் அஜ்மீர் செல்லத்தோன்றவேண்டும்?

kur3

பூதப்பாண்டியிலிருந்து நேராக குற்றாலம் கிளம்பிச்சென்றேன். ஏன் குற்றாலம் சென்றேன் என்றால் தென்காசி பேருந்து நின்றதனால்தான். உச்சகட்ட வெயில். பேருந்தே தகித்துக்கொண்டிருந்தது. குற்றாலத்தில் எந்த அருவியிலும் தண்ணீர் இல்லை. பேரருவி வெறும் பாறையாக பகீரிடச் செய்தபடி எழுந்து நின்றது. கடைகள் மூடிக்கட்டப்பட்டிருந்தன. டீக்கடைகள் கூட இல்லை. மானுட நடமாட்டமே குறைவு. நான் குற்றாலத்தில் தங்கவிரும்பினேன். ஆனால் வெறும்கையுடன் வந்திருந்தேன். நல்லவேளையாக என் வங்கிஅட்டை கையிலிருந்தது.

விடுதிகளில் தங்கவேண்டும் என்றால் கையில் பை இருக்கவேண்டும். ஆகவே தென்காசியில் ஒரு தோள்பை, ஒரு சாயவேட்டி, ஒரு துண்டு வாங்கிக்கொண்டேன். குற்றாலத்தில் விடுதிகள் ஓய்ந்து கிடந்தன. ஐநூறு ரூபாய்க்கு ஒரு விடுதியை எடுத்துக்கொண்டேன். எந்தக் கேள்வியும் இல்லை. விடுதியில் என்னைத்தவிர எவரும் இல்லை என்று தோன்றியது. ஆனால் ஒர் அறையில் எவரோ இருந்தார்கள். பெண்களும். பேச்சுக்குரல் கேட்டுக்கொண்டே இருந்த்து. எவரையும் வெளியே பார்க்கமுடியவில்லை.

ku6

ஆடை அணிந்த நந்தி

பகல் முழுக்க அலைந்துகொண்டிருந்தேன். பழைய குற்றாலத்தில் மிகக்கொஞ்சமாக நீர். அதில் நாலைந்து குடிகாரர்கள் ஊளையிட்டபடி நனைந்துகொண்டிருந்தார்கள். மாலையில் குற்றாலநாதர் கோயிலை சென்று பார்த்தேன். அதுவும் முற்றாக ஓய்ந்து கிடந்தது.  இருள்பரவத்தொடங்கிய சுற்றுமாளிகை வழியாக சிலைகளை பார்த்தபடி நடந்தேன்.

ஓர் இடத்தில் நாதஸ்வரம் கேட்டது. தாங்கொணா அபஸ்வரம். ஆனால் மண்டப மறைவில். அங்கே சென்று பார்த்தேன். நாலைந்து இளைஞர்கள் அமர்ந்து நாதஸ்வரம் பயின்றனர். ஒருவர் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். நாதத்திற்கு கந்தர்வர்கள் வருவதுண்டு போல. அபஸ்வரத்திற்கு வரும் தெய்வங்களும் இருக்குமோ? தேடிச்சென்று எட்டிப்பார்த்த நான் அதுதானா?

நமது பேராலயங்கள் எல்லாம் கோட்டம் என்றும் சொல்லப்படும் ஆலயத்தொகைகள். மையத்தெய்வங்கள் அமைந்த கருவறையைச் சூழ்ந்து ஏராளமான துணைக்கருவறைகள் உண்டு. எல்லா சிவன் கோயில்களிலும் காசிவிஸ்வநாதரின் சிற்றாலயம் ஒன்று இருக்கும். அன்றெல்லாம் அங்கே கங்கைநீர் வைத்திருப்பார்கள். எவரேனும் இறக்கும் தருவாயிலிருந்தால் அங்கிருந்து கொண்டுசென்று உடைத்து நாவில் விடுவார்கள். கங்கை நுண்வடிவில் இந்தியாவெங்கும் பாய்கிறது.

kur6

அம்மனுக்கு ஜிகினா

ஆளொழிந்த ஆலயமண்டபங்களில் சிற்பங்கள் கண்தெறிக்க நோக்கி நின்றிருந்தன. கன்னங்கரிய உருவங்கள். அத்தனை சிற்பங்களும் என்னையே நோக்குவதாக உணர்ந்தேன். எல்லா தெய்வங்களும் தூண்சிலைகளும் கந்தல் அணிந்து பிச்சைக்காரர்கள் போல அமர்ந்தும் நின்றும் இருந்தன. பிச்சைக்காரர்களுக்கு வீசி எறிவதுபோல சில தெய்வங்கள் முன் ஒருரூபாய் நாணயங்களை போட்டிருந்தார்கள். ஒரு ரூபாய்க்குமேல் எங்கும் கண்ணுக்குப் படவில்லை.

முன்பெல்லாம் மூலவர் சிலைகளுக்கும் விழாவர் சிலைகளுக்கும் மட்டும் அணியாடை சுற்றப்பட்டிருக்கும். பின்னர் விழாவர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகளை அப்படியே ஆண்டுமுழுக்க விட்டுவைக்கும் வழக்கம் வந்தது. பின்னர் அத்தனை வழிபாட்டுச் சிலைகளுக்கும் ஆடை அணிவித்தனர். இன்று கோயில்முழுக்க அத்தனை சிலைகளையும் அழுக்குக் கந்தல் சுற்றி வைத்திருக்கிறார்கள்.

kur8

முழுக்கமுழுக்க ஆகம மீறல் இது. தெய்வச்சிலைகளுக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாக மாலைகளும் ஆடைகளும் அணிவிக்கலாம். அவற்றை உடனடியாக நீக்கிவிடவும் வேண்டும். நிரந்தரமாக தெய்வச்சிலைகளுக்கு கந்தலாடையைச் சுற்றி வைப்பது போல கீழ்மை வேறில்லை. நம் உளச்சிறுமை தெய்வங்களை பிச்சைக்காரர்களாக ஆக்கி வைத்திருக்கிறது.

தமிழகத்திற்கு வெளியே இப்பழக்கம் இல்லை. இங்கே சென்ற பத்தாண்டுகளாகத் தொடங்கிய இப்பழக்கம் இப்போது பெருகி கோயில்களே கந்தலாடைக் குவியலாக கண்ணுக்குபடுகின்றன. பெரும்பாலான ஆடைகள் பலமாதங்களாக அப்படியே விடப்பட்டு எண்ணையும் அழுக்கும் கலந்து செல்லரித்து காணப்படுகின்றன.  மாகாளைக்குக்கூட ஆடை அணிவிக்கிறார்கள். அம்மனுக்கு நாலாந்தர ஜிகினாத்துணியை போர்த்தி வைத்திருக்கிறார்கள்.

kur7

இதிலுள்ள அழகுக்குறைவு எவருக்கும் தெரியவில்லை. குறைந்தது வழிபாட்டு முறைமீறலாவது எவராலாவது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று ஆலயவழிபாடு உட்பட அனைத்தையுமே ஒன்றும்தெரியாத சவடால் சோதிடர்கள் முடிவெடுக்கிறார்கள்.

தெய்வச்சிலைகள்  நிர்வாணமாக நிற்பதாக இந்தப் பாமரர்களுக்கு நினைப்பு. சிற்பங்களிலேயே ஆடைகள் செதுக்கப்பட்டுள்ளன.அவை உரிய ஆகமமுறைப்படி செதுக்கப்பட்டவை. இன்ன சிலைக்கு இன்ன ஆடை என நெறிகள் உண்டு. ஆகவே சிலைகளுக்கு ஆடைகள் அணிவிக்கக்கூடாது, அது பாவம் என ஸ்தபதிகள் பலர் எழுதிவிட்டனர். வழிபாட்டுக்காக ஆடை அணிவித்தால் அதை நீக்கிவிடவேண்டும். [பட்டும் பருத்தியும் அன்றி வேறு ஆடைகள் அணிவிக்கக்கூடாது. ஆனால் இங்கே கண்ணுக்குப்படுபவை முழுக்க கண்கூசும் நாலாந்தர ஜிகினாத் துணிகள்] மலர்மாலைகள் கருகும் முன்னரே அகற்றிவிடவேண்டும். சில இடங்களில் மட்டும் சில சிலைகளுக்கு சந்தனம் முதலிய காப்புகளை மாறாமல் போடவேண்டும் என தொல்நெறி உள்ளது. அவை கடைபிடிக்கப்படவேண்டும். ஸ்தபதிகள் சொல்லுக்கெல்லாம் எவருக்கும் செவி இல்லை. அறிவுடையோரால் கைவிடப்பட்ட ஆலயங்கள் அறியாமையின் விளைநிலங்கள் இன்று.

kut1

குறும்பலாவீசனை வணங்கி வெளியே வந்தேன். டீக்கடை தேடிச்சென்று ஒரு டீ குடித்தேன். குரங்குகள் ஓய்வாக அமர்ந்திருந்தன. அவற்றுக்கும் இது சீசன் இல்லை என தெரியுமோ என்னவோ. வணிகர்கள் சிலர் கூடி அமர்ந்து “ஏல அவன்தான் முதல்ல அடிச்சான் தெரியுமா?” என்று வம்பளந்துகொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் கூர்ந்து பார்த்தார்கள். நீரில்லா அருவிக்கு வருபவர்கள் இரண்டு வகை. கெட்டகாரியத்திற்காக வருபவர்கள், தற்கொலை செய்ய வருபவர்கள். இரண்டு நோக்கமும் இல்லை என எப்படி அவர்களிடம் சொல்வது?

ஐந்தருவியில் தண்ணீர் இருக்கும் என்றார் ஒருவர். சரிதான் என ஆட்டோ பிடித்து ஐந்தருவிக்குச் சென்றேன். பாறைமேல் மெல்லிய கசிவு. அதை அருவி என்றால் இலக்கணப்பிழை. பாறையைத் தழுவியபடி நின்று  கையால் தடுத்து எழுந்துவிழச்செய்து தலையில் விட்டு நாலைந்துபேர் குளித்துக்கொண்டிருந்தார்கள். நித்யா சொன்னதுபோல பசுவை ஒட்டக்கறக்கிறார்கள். என்னால் குளிக்கமுடியும் என தோன்றவில்லை. இரண்டு முறை பச்சைமாங்காய் கீற்றுக்கள் வாங்கி உப்பு தோய்த்து தின்றேன். ஒரு குரங்கு என்னைப் பார்த்து கண்ணை சுருக்கியது. ஏற்கனவே பச்சை மாங்காயை உப்புடன் தின்று பார்த்த அனுபவம் இருக்கும்போல.

ku

இரவில் மீண்டும் பேரருவிக்குச் சென்றேன். அப்போது கொஞ்சம் நடமாட்டம் இருந்தது. ஏழெட்டு பெண்கள் தட்டுபட்டார்கள். என்னைக் கூர்ந்து பார்த்தனர். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. இல்லாத பேரருவியை பார்த்துக்கொண்டிருந்தேன். கரிய பாறையே கருவறைபோலிருந்தது. அருவியில் செதுக்கப்பட்டிருந்த சிவலிங்கங்கள்  தெரிந்ததன. பாறைப்புடைப்புக்களில் சிற்ப உருவங்கள். கிட்டத்தட்ட முழுநிலவு ஒளியுடன் வானில் நின்றது. காடு சூழ்ந்திருந்தாலும் காற்றே இல்லை. ஆகவே எந்த ஓசையும் இல்லை.

இல்லாத அருவி. ஆனால் அதை உடனே பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. அதனுடன் தனித்திருக்கையில் அருவி பிறிதொன்றாவதை முன்னரே அறிந்திருக்கிறேன். அதன் அறுபடாத ஒற்றைச் சொல்லை கேட்டிருக்கிறேன். இல்லாத அருவியை முதல்முறையாக பார்க்கிறேன். அது பன்மடனக்கு பேருருக் கொண்டது. விண்ணளாவ எழுவது. “போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழ, கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்!”  மலர்ப்பொடியும் பொன்னும் அள்ளி பெருகிப்பொழியும் பேரருவி புடைசூழ கூதல்மாரியின் நுண்துளி புல்நுனியில் ததும்புகிறது. பெருக்கும்பொழிவும் துளிப்பும் சொட்டும்  ஒன்றான ஒரு வெளி.

ilan4

இலஞ்சி

பதினொரு மணிக்கு திரும்பி வந்து படுத்துக்கொண்டேன். சென்ற சில நாட்களாகவே முதுகுவலி. வெறுந்தரையில் படுக்கலாம் என்று மருத்துவர் ஆலோசனை. நான் செல்லும் விடுதிகளில் எல்லாம் இரண்டடி உயரமான உள்ளே சுருள்வில் வைத்த சொகுசு மெத்தை. ஆனால் அதில் படுத்தால் காலையில் எனக்கு முதுகை நிமிர்த்த முடியாது. தரையில் படுத்தால் உண்மையிலேயே முதுகுவலி குறைகிறது என்பதை கவனித்தேன்.

காலை ஐந்தரை மணிக்கு ஆட்டோக்காரரை வரச்சொல்லியிருந்தேன்.நேராக இலஞ்சி சென்றேன். குற்றாலத்தின் ஒரு பகுதியாகவே இலஞ்சியை சொல்லவேண்டும். ஐந்து கிமீதான். ஆனால் குற்றாலத்தின் சுற்றுலாத்தன்மை இல்லை – ஆங்காங்கே பழைய வீடுகள் வாடகைக்கு கிடைக்கும் என்னும் அறிவிப்புகளை தவிர்த்தால். இலஞ்சிக்கு பலமுறை வந்திருக்கிறேன். 2008-இல்  ஒரு சினிமா முயற்சிக்காக அங்கே வந்து ஒரு பழைய இல்லத்தில் சிலநாட்கள் தங்கியுமிருக்கிறேன்.

ilan1

இலஞ்சியும் காலையில் துயிலெழவில்லை. மலைகள் குளிர்ந்து நீலமாகி சூழ்ந்திருந்தன. தென்னைமரங்களை ஓலையசையச் செய்யும் அளவுக்கு காற்று இல்லை. கோயிலைச்சுற்றி காலை உடற்பயிற்சி செய்வோர் நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர். ஒரு 16 வயதுச் சிறுமி ஓடுவதை பார்த்தேன். ஓட்டப்பந்தய வீரர்களின் ஓட்டம் முற்றிலும் வேறுவகையானது, பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. அவர்கள் காற்றில் தென்னையோலை அசைவதுபோல இயல்பான விசையுடன் செல்கிறார்கள்.

கோயிலில் சிற்பங்களை பார்த்துக்கொண்டு சுற்றிவந்தேன். அரையிருள் நிறைந்திருந்த மண்டபங்கள். நாதஸ்வரம் மூச்சுவல்லமை இல்லாமல் இருமல் போல எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது. தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் தெய்வங்கள். ஊரிலிருந்து கிளம்பியபின்னர் தன்னந்தனியான தெய்வங்களையே பார்த்துக்கொண்டு வருகிறேன். ஆலயங்களின் சுற்றுவழிகளில் எவருமே இல்லை. காட்டில் இருக்கும் தனிமையும் ஓசையின்மையும். கல்லால் ஆன காடு. தெய்வங்கள் அதற்குள் புலிகள்போல் யானைகள்போல் மான்கள்போல் மறைந்திருக்கின்றன. குரங்குகள்போல தூண்களில் சிற்பங்கள்.

ila

வாசலில் யானை நின்றிருந்தது. காலையிலேயே நீராட்டப்பட்டு நெற்றியில் பொட்டு அணிந்திருந்தது. குற்றாலம் பகுதிகளில் யானைகள் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் எல்லா கோயில்யானைகளும் மிகுஎடை கொண்டவை. வயிறு தாழ்ந்து தொங்கும். சிலநாட்களிலேயே அவற்றுக்கு காலில் வீக்கமும் வலியும் வந்து விரைவில் முடமாகிவிடும். குருவாயூர் போன்ற யானைக்கொட்டில்களில் நிலைமை சற்று மேல். கேரளத்தில் யானைப்பராமரிப்புக்கென்றே மரபான மருத்துவர்கள் உண்டு. பருவகால நெறிகளும் உண்டு.,

இலஞ்சியிலிருந்து பதினைந்து கிமீ தொலைவிலிருந்த திருமலை சென்றேன். அங்கும் நான் மட்டுமே இருந்தேன். காலை ஏழரைக்கு மலையேறவேண்டிய தேவை வேறு எவருக்கும் இல்லை போல. எந்தத் துணையும் இல்லை. தன்னந்தனியாக ஏறி இறங்கினேன். மலை முழுக்க குரங்குகள். தனியாக நான் சென்றதனால் அவை பெரிய ஆர்வம் காட்டவில்லை. எவரும் ஏறியிறங்காதபோது படிகள் கூட வேறு பொருள்கொண்டு விடுகின்றன. பலர் ஏறியிறங்கும்போது ஒவ்வொரு படியும் தனித்தனியாக தெரிவதுபோலவும் எவருமே இல்லாதபோது படிகள் ஒற்றை துணியின் மடிப்புகள் போல தெரிவதாகவும் கற்பனை செய்துகொண்டேன்

il

வெயில்மூத்து வியர்வை கொட்டியது. சுற்றிலும் விரிந்திருந்த  பசுமையை நோக்கிக்கொண்டு நின்றிருந்தேன். அத்தனை உயரம் வரை கீழிருக்கும் ஒரு சொல்லும் வந்தடையவில்லை.  செவியில் ஒரு ரீங்காரம் இருந்துகொண்டிருப்பதுபோலிருந்தது.

குற்றாலம் திரும்பினேன். கடைத்தெரு அப்போதுதான் சோம்பல்முறித்து எழுந்துகொண்டிருந்தது. ஒரே ஒரு கடையில் இட்லிக்குண்டான் நீராவிமூச்சு விட்டது.  காலை உணவுக்குப்பின் அறையை காலிசெய்துவிட்டு தென்காசிக்கு கிளம்பினேன்.

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்

சிவ இரவு- கடிதம்

$
0
0

lord-of-dance-chan-siva

 

சிவஇரவு

 

அன்புள்ள ஜெ.,

உங்கள் ‘சிவ இரவு’ சிறப்பாக இருந்தது. இதில் திருவாலங்காடு மட்டும் பார்த்திருக்கிறேன். அங்கு என்னை ஆச்சரியப்படுத்தியது கோயில் குளம். கோயிலளவோ அல்லது அதை விடவோ பெரியது. என்றாவது பகலில் போனால் பாருங்கள். காரைக்கால் அம்மையாரைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது கோயிலை இன்னொரு முறை பார்க்கத் தூண்டுகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறித்து எழுதியிருந்தீர்கள். அந்தச் செப்பேடுகள் நெதர்லாந்தில் ஏதோ ஒரு காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக எங்கோ படித்த ஞாபகம். அது இந்தத் திருவாலங்காடுதானா? ஏனென்றால் கும்பகோணத்திற்குப் பக்கத்தில் திருவலங்காடு என்று இருக்கிறது. ஒருவேளை அதுவாக இருக்கலாமா? காரைக்காலம்மையார் அவருடைய திருவாலங்காட்டுத் திருப்பதிகத்தில் இறைவனின் ஊழித் தாண்டவத்தை (Cosmic Dance of Lord Shiva)

கீழ்கண்ட வரிகளில் வடிக்கிறார்.

‘அடி பேரின் பாதாளம் பேரும்

முடிபேரின் மாமுகடு பேரும்

கைகள் பேரின் எண்திசைகளும் பேரும்

அறிந்தாடும் அய்யா – ஆற்றாது அரங்கு’

‘எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னை தலையே நீ வணங்காய்…’.என்கிறார் அப்பர்.

https://www.youtube.com/watch?v=suYEMncv9-M

‘திருச்செந்தூரான் கடலாடான்’ என்பதற்கேற்ப இந்த இடங்களையெல்லாம் சென்னைவாசிகளான நாங்கள் பார்க்கவே போவதில்லை என்று நினைத்தபோது மனதில் தோன்றிய பாடல் ‘காணவேண்டாமோ…..  ‘ அடிக்கடி கேட்கிற பாடல்தான்.  இயற்றியவர் பாபநாசம் சிவன். பாடியவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். படம் ‘நந்தனார்’. ஜெமினி வாசனின் 1942ல் வெளிவந்த படம். எண்பதுகளில் ஒரு மழை பெய்கிற ‘ப்ரிண்ட்டில்’ தூர்தர்ஷன் ஒளிபரப்பியதைப் பார்த்த ஞாபகம். சுஜாதா அவருடைய கட்டுரையில் எழுதியிருப்பார் ‘இந்தப்படத்தை இப்படியே இன்று திரையிட்டால் தியேட்டரைக் கொளுத்தி விடுவார்கள்’ என்று. எனக்கு படத்திலிருந்து ஞாபகம் இருக்கிற வசனம் நந்தனிடம் மக்களில் ஒருவர் சொல்வது ” தம்பி இது பாப்பாருங்க தெய்வம்,பறையனுக்குப் பலிக்காது’ என்று. வசனம் எழுதிய கி .ராமச்சந்திரன் புதுமைப்பித்தன் மற்றும் அசோகமித்திரனின் நண்பர்.

தண்டபாணி தேசிகர்தான் நந்தனார். கிட்டத்தட்ட ‘காமெடி’ நடிகர் செந்தில் மாதிரி இருப்பார். நடிப்பு அந்தக்கால நாடகபாணி நடிப்புதான் – இந்த இடத்தில் ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடலான ‘ஆடும்வரை அவர் ஆடட்டும் … ‘ என்ற மகாராஜபுரம் சந்தானத்தின் பாடல் (மனதிலிருந்து அந்த மயக்கும் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.)  ஞாபகத்திற்கு வருகிறது. தலைவனைப் பற்றி தோழியிடம் குறை சொல்கிறாள் தலைவி. அதில் ஒரு வரி ‘இங்கிதம் என்றாலே என்ன விலை என்று கேட்பாராடி அந்த மன்னன்…..சங்கீதம் அவரிடம் தேனில் கரும்பாக இனிக்குதே என் சொல்ல இன்னும்… ”இங்கிதத்திற்குப் பதிலாக நடிப்பைப் போட்டுக்கொள்ளவும் – ஆனால் பாடல்கள் முத்து முத்தாகக் கொட்டும். அந்தப் படத்திலேயே வேதியராய் நடித்த செருகளத்தூர் சாமா இயல்பான நடிப்பை வழங்கியிருப்பார். கர்நாடக இசையரங்கில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கிய பிறகு பல மேடைகளில் பாடப்படுகிற பாடல் காணவேண்டாமோ… (‘ரெண்டு பல்லிருக்கும்போதே பதார்த்தங்கள் ஏதாவதைப் பார்க்க வேண்டாமோ’ என்பது இதன் அடியொட்டிய அடியேனின் சொந்த சாகித்யம். O Lord, forgive me)

ஒவ்வொரு பாடகரும் அவரவர் தன்னியல்பில் சிறப்பாகவே பாடியிருக்கிறார்கள்.

தண்டபாணிதேசிகர்

https://www.youtube.com/watch?v=jcDVrX0g8t4

சஞ்சய் சுப்ரமணியன்

https://www.youtube.com/watch?v=liOtpSMyd80

டி எம் கிருஷ்ணா

https://www.youtube.com/watch?v=-5Gw52nAKLM

காணவேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே

விண்ணுயர்க் கோபுரம் காணவேண்டாமோ

வீணில் உலகைச் சுற்றிச்சுற்றி வந்தால்

மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் காண வேண்டாமோ

வையத்திலே கருப்பையில் கிடந்துள்ளம்

நய்யப்பிறவாமல் அய்யன் திருநடம் காணவேண்டாமோ

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டை

விட்டுயிர் ஓட்டம் பிடிக்குமுன் காணவேண்டாமோ

என் தந்தையும், மாமனாரும் இரவு முழுவதும் சாளக்கிராமம் வைத்து பூஜை செய்வார்கள். அதை நினைத்துக் கொண்டு, அலுவலகத்திலிருந்து பன்னிரண்டு மணிக்குத் திரும்பியவன் ‘சிவ சிவா’ என்று படுத்துத் தூங்கிவிட்டேன்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

உகவர் வாழ்க்கை –உளவியலாளர் கடிதம்

$
0
0

gay

 

உகவர் வாழ்க்கை

திரு ஜெ அவர்களுக்கு,

உங்கள் இணைய தளத்தில் உகவர் வாழ்க்கை கடிதத்தை வாசித்தேன். மனநல மருத்துவர் என்ற முறையில் என் கருத்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். இது திரு வி  அவர்களுக்கோ மற்றும் இது சம்பந்தமாக தெரிந்துகொள்ள விழைபவர்களுக்கோ உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினைத்தால் ஆர்வமுள்ளவர்களுக்கு இதை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

முரளி சேகர்

உகவர் வாழ்க்கை!

திரு ஜெ,

உகவர் வாழ்க்கை என்ற கடிதத்தில் திரு வி அவர்கள் எழுதி இருந்ததையும் அதற்கான உங்கள் பதிலையும் பார்த்த பின்னர் இதை எழுதுகிறேன். திரு வி  அவர்கள் தங்களை தவிர இந்த விஷயத்தை வேறு எவரிடமும் சொல்ல முடியாத தயக்கத்தில் இருப்பதனால் இந்த கடிதத்தை உங்களுக்கே பதிலாக எழுதுகிறேன்.

பொதுவாக மனநல துறையில் மருத்துவர்கள் முதலில் கேள்வியை தான் அதிகம் கேட்ப்பார்கள். இதன் மூலமாக தனக்கு முன் அமர்ந்திருக்கும் நபரின் பிரச்சினையின் முழு பரிமாணத்தை உணர்ந்து கொள்வதற்காகவும் அந்த நபரின் பின்புல வாழ்க்கையை அறிவதற்காகவும் இவ்வாறு இந்த கவுன்சிலிங் முறை கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் கேள்வி கேட்கப்படுபவர் அந்த கேள்விகள் வழியாக தன்னுடைய பிரச்சனைகளை மேலும் ஆழமாக உணர்ந்துகொள்வதற்கு இந்த கேள்வி முறை பயன்படும். ஒரு சில நேரங்களில் இது மட்டுமே அந்த நபரின் பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமையும். அதாவது கேள்விகள் மூலம் அவர்கள் மனதில் தோன்றும் கேள்விகளே விடையாகலாம். அல்லது அவர்கள் எந்த திசை நோக்கி செல்ல வேண்டும் என்ற தெளிவை அவர்களுக்கு கொடுக்கலாம்.

ஆனால் அனைத்து மனநல மருத்துவர்களும் இவ்விதமாக திரு வீயின் பிரச்சனைகளை அணுக மாட்டார்கள் என்பதும் உண்மை. குறிப்பாக இந்தியா போன்ற நாட்டில் வெளியில் முப்பது பேர் காத்துக்கொண்டிருக்கும்பொழுது ஒரே நபரிடம் 45 நிமிடங்கள் செலவு செய்வது முடியாது அவர்களுக்கு அதற்கான திறமையும் ஆர்வமும் இருந்தாலும் கூட.

இப்பொழுது திரு வீயின் கேள்விகளுக்கு வருவோம். அவர் எழுதியதிலிருந்து நான் புரிந்து கொண்டது இதுதான். நல்ல அன்பான குடும்ப சூழலில் தான் அவரின் சிறு பிராயம் இருந்திருக்கிறது. குக்கிராமம் அன்பான சூழல் என்று அவர் எழுதியதில் இருந்து இவர் மன உளைச்சலினாலோ அல்லது வேறு சில தகாத சம்பவங்களினாலோ உகவர் மனநிலையை வந்தடையவில்லை என்று அனுமானிக்கிறேன். தவறு என்றால் அவர் தான் திருத்த வேண்டும் மேலும் விவரங்கள் அளிப்பது மூலமாக. இவர் வளர்ந்த சூழல் எந்த அளவிற்கு இவருக்கு சாதகமாக இருந்தது என்றால் இந்த மன உளைச்சலை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து தன் வாழ்வை எந்த வித குழப்பமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வயது மற்றும் சூழல் நிகழும் வரை வாழ்ந்து விட்டார். ஒரு மஞ்சள் பத்திரிக்கையின் ஒரு வாக்கியம் போதுமாக இருந்தது அவரின் குழப்பங்களை தற்காலிகமாக தள்ளி வைக்க. கவனிக்கவும். தாற்காலிகமாகவே.

வேற்று இடத்து வாழ்க்கை. தன்னுடைய அடையாளத்தை சுலபமாக மறைக்க உதவும் பெரு நகரம் அளிக்கும் முகமூடி , ஹார்மோன்கள் மற்றும் உடலின் பரிணாம வளர்ச்சியும் இதனுடன் இணைந்து இவரை தற்போதைய மனநிலைக்கு அழைத்து வந்துவிட்டதாகவே கருதுகிறேன். முதல் காதல். அதன் தோல்வி. அது தந்த பயம். மேலும் சில சொல்லாக்காதல்கள். அது தரும் வேதனை, நிர்வாண பெண் அங்கங்கள் ஏற்படுத்தும் வெறுப்பு இதெல்லாம் இவரின் உகவர் மனநிலை தற்காலிகமானதோ அல்லது சந்தர்ப்பவசத்தால் மட்டும் ஆனதோ இல்லை என்பதை விளக்குகிறது.

இது ஒரு பக்கம்.  இதையெல்லாம் தாண்டி இங்கே தன் சுயம் வெளிப்படக்கூடாது எக்காரணத்தை கொண்டும் என்ற ராட்சச தடுப்பு சுவர். இதில் தான் இவர் இப்பொழுது முட்டிக்கொண்டு நிற்கிறார்.  இது இன்னொரு பக்கம். இதில் தான் மனப்போராட்டம். இங்கே தான் இவருக்கு conflict .

இந்த மனப்போராட்டதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதை தான் இவர் இப்படி கேள்விகள் எழுப்புவதன் மூலமாக சாதிக்க பார்க்கிறார். காற்று அடைப்பட்ட பந்து. வெளியே வரத்தான் செய்யும். இதை இல்லை என்று இனி மேலும் மறைக்க முடியாது. சரி. இந்த மனப்போராட்டத்தில் இருந்து எப்படி மீள்வது?

பல வழிமுறைகள் உள்ளன. இரண்டு அதி தீவிர extreme end வழிகளை பார்ப்போம். முதலாவது- சமூகம் என்ன சொன்னால் என்ன? என்னுடைய தொழில் முறை வெற்றி எப்படி பாதித்தால் என்ன? என் சொந்தங்கள் என்னை விட்டு சென்றால் என்ன? எனக்கு என் பாலுணர்வு முக்கியம் என்றும் இவர் முடிவெடுக்கலாம். அல்லது இரண்டாவதாக முற்றிலும் மாறுபட்டு என்னால் என் சூழலில் உகவர் வாழ்க்கையை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆதலால் அதை துறந்து மற்றவர்களுக்காக என் பாலுணர்வை தியாகம் செய்கிறேன் என்பது இன்னொரு வழிமுறை. இந்த இரண்டு முடிவிற்கும் நடுவே பலவித வழிமுறைகள்- இரட்டை முறை வாழ்க்கை, கொஞ்சம் வயதான பின் தன் உண்மையான விருப்பத்தை தேடி போவது என்று பல. ஜெ சொன்னது போன்று திருமணம் செய்து கொள்ளக்கூடாது இந்த குழப்பத்திற்கு முடிவு கிடைக்கும் வரையில். மேலும் இவர் எடுக்கும் முடிவில் அடுத்தவர் குறிப்பாக அவரின் வருங்கால மனைவி என்று ஒருவர் அதில் இடம் பெறுவார் என்றால் அவர் நிச்சயமாக பாதிப்பு அடைய கூடாது என்பதில் இவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவர் வாழ்வில் இந்த கட்டத்தில் இந்த கேள்வி முக்கியமா? பதின் பருவத்தில் செய்ததை போல இந்த கேள்வியை  இதை பற்றி முடிவெடுப்பதை தள்ளி வைக்க முடியுமா? இவற்றை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம். இவரின் எழுத்தில் மேலோங்கி இருப்பது வலி தான். வெறுப்பு, எதிர்காலத்தை பற்றிய பயம், வெளியே சொல்ல முடியாத காம உணர்வு என்று இவரின் வாழ்க்கை ஒரு ரணமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. இவர் எழுதியதிலிருந்து தான் சிக்கி கொண்டுள்ள சக்கர வியூகத்தில் இருந்து வெளியே வர முயற்சியை தொடங்கி விட்டார் என்றுதான் தோன்றுகின்றது. இவர் தொடர்ந்து இந்த பயணத்தை மேற்கொண்டால் திரும்பவும் ஆரம்பித்த புள்ளிக்கு செல்ல முடியாது என்பதை இவர் மனதில் கொள்ள வேண்டும். மேலும் இவர் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றில் காம்ப்ரமைஸ் செய்து தான் போக வேண்டி இருக்கும். ஆனால் இதற்காகவெல்லாம் மேலும் தள்ளிப்போடாமல் இவர் இதனை எந்த விதத்திலாவது முடிவுக்கு கொண்டு வருவது மிக முக்கியம். இல்லாவிட்டால் மன அழுத்தம் மனப்பதட்டம் போன்ற வேறு பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பிக்கலாம்.

சரி இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வாரேயானால் இந்த கீழ்க்கண்ட விஷயங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்:

– முதலில் இவரின் குழப்பம் பாலுறவு சம்பந்தப்பட்டதா அல்லது தான் ஆண் என்பதில் உள்ள அடிப்படை குழப்பம் பற்றியதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.   அதாவது இது ஒரு sexual  preference  பற்றிய விஷயமா அல்லது Gender  ஐடென்டிட்டி பற்றிய விஷயமா என்று புரிந்துக்கொள்ள வேண்டும். நளினமான ஆண்களைப்பற்றி இவர் எழுதி இருப்பது  இந்த விஷயத்தில் இவரின் மனநிலையை காட்டுகிறது. ஆனாலும் மேலும் சில பரிசோதனைகள் தேவைப்படலாம்.

– மற்ற விஷயங்களான Genderqueer , transexual , other LGBT போன்றவையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

– அறுவை சிகிச்சை (Gender  Reassignment  Surgery), Hormone  therapy போன்றவற்றுக்கான தேவைகளும் இவரிடம் இருந்து கண்டறியப்பட வேண்டும்.

– அடுத்தபடியாக இவர் உகவர்கள் குழு எதற்காவது சென்று மற்றவர்களுடன் பழக வேண்டும். இந்த அனுபவம் அவருக்கு சில புதிய அனுபவங்களை தோற்றுவிக்கலாம். அவரின் ஆணித்தரமான அடிப்படைகள் கேள்விக்குள்ளாக்கப்படலாம் அல்லது நிரூபிக்கப்படலாம்.

– இவர் கூறியதில் இருந்து இவர் இது வரை எந்த ஒரு ஆணுடனும் உடலுறவு வைத்துக்கொண்டதில்லை என்று தெரிகிறது. அப்படியானால், பாதுகாப்பான முறையில் மனதுக்கு பிடித்தவருடன் ஒரு அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். இது அவருக்கு அவரின் கற்பனைகள் ( fantasy ) உண்மையா என்று பரிசீலிக்க உதவும்.

– இதிலும் அவர் மனம் உறுதியாக இருக்குமானால் அடுத்தபடியாக ஏதாவது நெருங்கிய நண்பருடனோ ( ஆண்  அல்லது பெண் நண்பர்) அல்லது உறவிடனருடனோ தன்னை பற்றிய விஷயத்தை கூறி அவர்களின் புரிதலையும் அரவணைப்பையும் பெறலாம். ஒவ்வொரு முறை இவர் இது சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கும்போது இவர் சாய்வதற்கு ஏதுவான தோள் கட்டாயம் தேவைப்படும். இது மிகவும் முக்கியம்.

– இவருக்கும் இவரின் அம்மாவிற்கும் எந்த அளவுக்கு புரிதல் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. இவர் அம்மா புரிந்து கொள்வார் என்றால் தாராளமாக இவர் அம்மாவிடமே இதை பற்றி பேசலாம். அம்மாக்கள் தன் பிள்ளைகளை , பிள்ளைகள் நினைத்துப்பார்ப்பதை விட அதிகம் அறிந்து வைத்திருப்பார்கள். இவர் கூறும் விஷயம் இவரின் அம்மாவிற்கு அதிர்ச்சியாக இல்லாமல் ஏற்கனவே சந்தேகித்த விஷயத்தை மகன் மூலமாக தெரிந்து கொள்ளும் ஒரு சம்பவமாகக்கூட இது அமையலாம். இது திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுவதை தடுக்கும். இவரும் இவர் குடும்பத்தின் உறுப்பினர்களும் ஏதாவது ஒரு காரணத்தை கேட்பவர்களுக்கு சொல்லி விடலாம்.

மேல் கூறியவற்றிலிருந்து இவர் ஆரம்பிக்கலாம். நான் இங்கே கூறி இருப்பது ஒரு பொதுவான அணுகு முறை தான். ஒரு நல்ல மனநல மருத்துவரோ ஆலோசகரோ இவருக்கு இவர் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் கவனித்து அதற்கு தகுந்தாற் போல ஆலோசனை வழங்க கூடும்.

என்னுடைய வாழ்த்துக்களும் புரிதலும் திரு வி அவர்களுக்கு.

முரளி சேகர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

என்ன அளவுகோல்?

$
0
0

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

அன்புள்ள ஜெ

 

சமீபத்தில் ஈழ எழுத்தாளர்களைப் பற்றி நீங்கள் சொன்னதை ஒட்டி ஒரு விவாதம் நிகழ்ந்தது. அதன்பின்னர் இப்போது திராவிட எழுத்தாளர்களான அண்ணா கலைஞர் பற்றிச் சொன்னமைக்காக விவாதம் நிகழ்கிறது. என்னுடன் வாசிப்பு சம்பந்தமான சர்ச்சைகளில் ஈடுபடும் ஒரு நண்பர் ‘இவருக்கு இப்படி தரம்பிரித்து அடையாளப் படுத்தும் அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்று கேட்டார். “இது நாட்டாமைத்தனம்” என்று சொன்னார்.

 

நான் இதற்குப் பதில் சொல்லவில்லை. எனக்கு தெரிந்த பதில் என்பது ஒருவருக்கு அவருடைய எழுத்துக்கள் சார்ந்து அந்த மதிப்பு கிடைக்கிறது என்பதுதான். அந்த மதிப்பு இருப்பதனால்தான் அவர் சொல்வது சர்ச்சை செய்யப்படுகிறது. அதே வரியை நூறுபேர் சொல்லியிருப்பார்கள். அதை எவரும் கவனிப்பதில்லை என்று நினைத்தேன். உங்கள் பதில் என்ன?

 

செல்வன்

 

அன்புள்ள செல்வன்,

 

ஒரு சுற்று முகநூலிலும் இணையத்திலும் உலவிவிட்டு வாருங்கள். தரம்பிரித்து அடையாளம் சொல்லாமல் இலக்கியம், அரசியல், சினிமாவில் எவரேனும் எந்தக்கருத்தையேனும் எங்காவது சொல்லியிருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு எனக்குச் சொல்லுங்கள்.நான் எவரையும் இதுவரை பார்த்ததில்லை. அப்படி எவரேனும் இருந்தால் அவர் உளநோய் கொண்டவர் அல்லது ரமணருக்கு நிகரான ஞானி.

 

அத்தனை கருத்துக்களிலும் விமர்சனம் அடங்கியிருக்கிறது. அத்தனை விமர்சனமும் தரம்பிரித்தலை அளவுகோலாகக் கொண்டது. ஒவ்வொருவரின் தெரிவுகளும் வேறு. அதற்கான அளவுகோல்களும் வேறு. ஒருவர் அரசியலை அடிப்படையாகக்கொண்டு தரம்பிரிக்கலாம். ஒருவர் இன,மொழி, மத அடையாளம்கொண்டு பிரிக்கலாம். நான் இலக்கியங்களை அழகியல் அடிப்படைப்படி தரம்பிரித்து அடையாளப்படுத்துகிறேன். இலக்கியவாசிப்பின் அடிப்படையே அதுதான். அவ்வாறு வாசிக்கும் ஒவ்வொருவரும் செய்வதனால்தான் சிலநூல்கள் சிறந்தவை என மேலெழுந்து வருகின்றன. சில நூல்கள் அப்படி அல்ல என நிராகரிக்கப்படுகின்றன. சினிமா, ஓட்டல்சாப்பாடு எல்லாமே இப்படித்தான் தெரிவுசெய்யப்படுகின்றன.

 

இது இல்லாத துறை உண்டா என்ன? விடுதியில் தங்கியிருக்கையில் சற்றுமுன் கார்நிபுணர் ஒருவர் 2018ல் வெளியான கார்களில் எது சிறந்தது என சொல்லிக்கொண்டிருப்பதை பார்த்தேன். அவர் கார்களின் இயந்திர அமைப்புக்கும்  விசை மற்றும் விரைவுக்குமான உறவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அந்த முடிவுகளுக்கு  வருகிறார். அவற்றை விளக்கிக் கொண்டிருந்தார். இவ்வுலகில் திறனாய்வு செய்யப்படாத பொருளோ கருத்தோ இல்லை. அந்த தெரிவில் அவர் என்னென்ன கார்களை நிராகரிக்கிறாரோ அந்த நிறுவனத்தின் முகவர்களிடம் பேசினால் அவர்கள் தனிப்பட்ட முறையில் அந்த நிபுணரை வசைபாடக்கூடும். அந்த தெரிவே தவறு என்றும் தெரிவுசெய்ய அவருக்கு என்ன அதிகாரம்  என்றும் தெரிவில் அவருடைய தனிப்பட்ட சார்புகள் உள்ளன என்றும் சொல்லக்கூடும். ஆனால் பொதுவெளியில் சொல்லமாட்டார்கள் – தொழிலறம் என ஒன்று உண்டு, அது தடையாகும். ஆனால் இலக்கியத்தில் அதையே பொதுவெளியிலும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதுதான் வேறுபாடு.

 

என் மீதான கடும்விமர்சனங்களை முன்வைப்பவர்களை கவனியுங்கள். அவர்கள் “இவன் யார் விமர்சிக்க?” என்றுதான் கூவிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சினிமா, இலக்கியம் ,அரசியல் எல்லாவற்றிலும் பல்வேறு விமர்சனங்களை நாள்தோறும் கக்கிக்கொண்டுமிருப்பார்கள். அந்த விமர்சனங்களை காழ்ப்புகலந்து வெறும் வசையாக உதிர்ப்பார்கள். அதற்கான அளவுகோல்களை சொல்லத் தெரிந்திருக்காது. ஆக, அவர்கள் எதிர்ப்பது விமர்சனம் என்பதை அல்ல. அவர்களின் தரப்பு விமர்சனம் செய்யப்படுவதை மட்டுமே.

 

நான் முன்வைப்பவை அழகியல்விமர்சனங்கள். அழகியல்விமர்சனங்களின் அடிப்படைகள் மூன்று.

அ. இதுவரை எழுதப்ப்பட்ட செவ்விலக்கியங்கள். அவற்றை இதுவரை வாசித்தவர்களின் நோக்குகளிலிருந்து திரட்டி எடுக்கப்பட்ட பார்வைகள், மற்றும் ஒப்பீடுகள்

ஆ. இலக்கியவடிவம் சார்ந்த கொள்கைகள். இலக்கியத்தின் கட்டமைப்பு உணர்ச்சிகள் கதைமாந்தர் வரலாற்றுடனான உறவு என பல தளங்களில் இக்கொள்கைகள் உள்ளன. இவை பலநூறாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வளர்ந்து வருப்வை

ஈ. இலக்கியம் மீதான தனிப்பட்ட வாசிப்பனுபவங்கள்.

 

இவற்றில் மூன்றாவது முழுமையாகவே அகவயமானது. நான் சரவணன் சந்திரனின் ‘சுபிட்சமுருகன்’ நல்ல நாவல் எனச் சொல்கிறேன். ஏன் என்று விளக்கி எழுதுகிறேன். அதற்கு இலக்கியக்கொள்கைகள், முந்தைய இலக்கியங்களுடனான ஒப்பீடு ஆகியவற்றை அளவீடாக கொள்கிறேன். என் விமர்சனத்தை மட்டும் வாசிக்கும் வாசகன் ஒருபோதும் சுபிட்ச முருகன் நல்லநாவல் என்று சொல்லப்போவதில்லை. அவனும் சுபிட்சமுருகன் வாசிப்பான். நான் சொன்னதை அகவயமாக அவனும் உணர்வான். நான் சொன்ன விளக்கங்களை அவனும் ஏற்றுக்கொள்வான். விளைவாக அவன் மனதில் நான் ஒரு நல்ல விமர்சகன் என நிறுவப்படுகிறேன்

 

இவ்வாறு நான் சொன்ன கருத்துக்கள் வழியாக எனக்கு உருவாகும் முக்கியத்துவமே என் குரலை கவனிக்கச் செய்கிறது. ‘யார் அதிகாரம் கொடுத்தது?’ என்றால் என் வாசிப்புடன் ஒத்துப்போகும் சில ஆயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வெறுமே கூச்சலிடாமல் நூல்களை மெய்யாகவே வாசிக்கிறார்கள் என்பதனால்தான். ரா.ஸ்ரீ.தேசிகனுக்கும் க.நா.சுவுக்கும், வெங்கட் சாமிநாதனுக்கும் ,சுந்தர ராமசாமிக்கும் உருவான அதிகாரம் இதுவே.

 

அதை மறுப்பவர்கள் தங்கள் தரப்பை, தெரிவை முன்வைக்கிறார்கள். உதாரணமாக, திராவிட இயக்கம் பற்றி நான் சொல்லும் விமர்சனங்களை கவனியுங்கள். அந்நூல்களை வாசிக்கிறேன். அவற்றில் நான் முதன்மையானவை என நினைப்பவற்றை எந்த தனிப்பட்ட உளவிலக்கமும் இல்லாமல் முன்வைக்கிறேன். எனக்கு ஏற்பில்லாதவற்றை நிராகரிக்கிறேன். ஏன் என்று விளக்குகிறேன். வசைபாடுவதில்லை, உகந்தவை அல்லாத சொற்களைப் பயன்படுத்துவதில்லை.க.நா,சு முதல் நவீனத்தமிழிலக்கியத்தின் அணுகுமுறை இது.

 

ஆனால் திராவிட இயக்கத்தவர் சென்ற முக்கால்நூற்றாண்டாக நவீனத்தமிழிலக்கியத்தை வாசிக்காமலேயே பொத்தாம்பொதுவாக நிராகரிக்கிறார்கள். சாதிய முத்திரை குத்துகிறார்கள். எந்த அளவுகோலையும் தெரிவையும் முன்வைப்பதில்லை. இந்த விவாதத்திலேயே எத்தனை கீழ்த்தரவசைகள் என்று பாருங்கள். தங்கள் விமர்சனம் நியாயமானது என்றும் தங்கள்மேல் விமர்சனம் வரும்போது விமர்சனம் என்பதே ஆதிக்கம், அது தவறானது, எவருக்கு விமர்சிக்க அதிகாரம் என்றும் கூச்சலிடுகிறார்கள்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வானோக்கி ஒரு கால் – 2

$
0
0

th

தென்காசிக்குச் சென்று ஸ்டேட் வங்கியைத் தேடி கொஞ்சம் அலைந்தேன். ஒருவருக்கு கல்விச்செலவுக்கு வாக்களித்திருந்த பணத்தை அனுப்பவேண்டும் என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஸ்டேட் வங்கியில் தினகரனின் உள்ளூர் நிருபரை சந்தித்தேன். என் தளத்தை வாசிக்கிறார் என்றார். ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

நான் கிளம்பியது முதலே பலர் அடையாளம் கண்டுகொண்டார்கள். நாகர்கோயில் பேருந்துநிலையம் ஆரியபவனில் சாப்பிடச்சென்றால் என் நண்பரும் ஈஷா யோகமையத்தின் உறுப்பினருமான உரிமையாளர் ரமேஷ் வந்து பார்த்தார். பேருந்தில் ஒருவர் நீங்கள் ஜெயமோகன் அல்லவா என்றார். நெல்லையில் ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு வாசகர் அறிமுகம் செய்துகொண்டார்.

thenkasi1

நான் திடீரென பிரபலமாகிவிட்டேனா என்ற ஐயம் ஏற்பட்டது. தென்காசியில் இன்னொருவர் என்னசார் நடந்து வருகிறீர்கள் என்றார்.  டிவியில் நாள்தோறும் வருபவர்கள்  எப்படி சமாளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. காரில்செல்லுமளவு காசும் தரப்படுவதில்லை, நடந்துசெல்லமுடியாத அளவுக்கு புகழும் இருக்கும்.

தென்காசி கோயிலில் முன்னுச்சிப் பொழுதின் அரைத்தூக்கம் நிறைந்திருந்தது. பிரம்மாண்டமான சிற்பங்கள் முன் நெடுநேரம் நின்றிருந்தேன். காலால் வான்சுட்டி நின்றாடும் சிவன். அந்தக் கொடியபேரழகு என்னை ஆறுதல்படுத்தியது. அலைகள் அனைத்தும் அடங்குவதுபோல. இதைத்தான் தேடி வந்தேனா?

நேர் எதிரில் குழலூதும் கண்ணன். ஆனால் கையில் கரும்புவில். மன்மதனும் ஆனவன். அழகும் இனிமையும் மட்டுமேயான திருவுரு. இரு வடிவங்களும் எதிரெதிரே நின்றிருப்பதன் தீராத விளையாட்டைத்தான் அந்தப் பெருங்கலைஞர்கள் கல்லில் காட்டுகிறார்களா?

ten2

தென்காசி கோயிலின் பின்புறமும் எவருமில்லை. நூறாண்டுகளாகக் கூட அங்கே எவரும் வந்திருக்க மாட்டார்கள் என்பதுபோல. வெளியே அப்போது வெயில் அடிக்கிறதென்று சொன்னால் நம்ப முடியாது. அங்கே இனிய இருள் சூழ்ந்திருந்தது. மிகப்பெரிய சிற்பத்தூண்களின் சாரலில் நடந்துகொண்டே இருந்தேன். சுற்றிச்சுற்றி. பன்னிரண்டு முறை சுற்றி வந்திருப்பேன். அதன்பின் கல்லில் அமர்ந்துகொண்டேன்.

தென்காசி விஸ்வநாதரை வணங்கிவிட்டு வெளியே வந்தேன். வெயில் நிறைந்து கிடந்த நகரம் கண்கூச வைத்தது. பேருந்தில் கூட்டமில்லை. இந்த வெயிலில் பலரும் பகல்பயணங்களை தவிர்ப்பார்கள்போலும். விரைவிலேயே தாமிரவருணிப் பசுமை மறைய இருமருங்கும் காய்ந்து கிடந்தது நிலம். புழுதியும் வெங்காற்றும். செவிகள் எரிந்தன. ஆனால் அந்த வெம்மை எனக்கு எவ்வகையிலோ வேண்டியிருந்தது.

te5

ரதி. தென்காசி

நெல்லைக்கு பின்மதியம் வந்துசேர்ந்தேன். என் வாசகர் சிவமீனாட்சி செல்லையா அவர்களின் விடுதியில் தங்கினேன். சற்றுநேரம் ஓய்வெடுத்தபின் நெல்லையப்பர் ஆலயத்திற்கு சென்றேன். நண்பர் சுகாவின் வீட்டுமுகப்பினூடாக சென்றபோது அவரை நினைத்துக்கொண்டேன். கூப்பிட்டுப் பேசவேண்டும் எனத் தோன்றியது. பேசி நெடுநாட்களாகின்றன. ஆனால் கிளம்பியது முதல் எவரிடமும் பேசவில்லை. செல்பேசியை அணைத்து வைத்திருந்தேன்.

நெல்லையப்பர் கோயில்முன் பெருங்கூட்டம். வண்டிகளும் மனிதர்களும் முட்டி மோதி கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆலயத்திற்குள் அமைதி. இருநூறுபேர் அவ்வேளையில் ஆலயத்திற்குள் இருந்திருப்பார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் மிகப்பெரிய பரப்புக்கு அது ஆளே இல்லாத வெறுமைக்கு நிகர்தான். மதுரை பேராலயத்தைவிட பரப்பில் பெரியது நெல்லையப்பர் ஆலயம்.

nelli3

மன்மதன்

சிற்பங்களின் வழியாக, தன்னந்தனிச் சுடர்கள் நலுங்கிக்கொண்டிருந்த கருவறைகள் வழியாக, ஆளில்லாத சுற்றுப்பாதை வழியாக நடந்தேன். நெல்லையப்பர் ஆலயத்தில்தான் எத்தனை எவருமறியாதவைபோன்ற இடங்கள். நானும் பி.ஏ.கிருஷ்ணனும் சென்று அமர்ந்து பேசும் குளக்கரையில் ஒருவருமே இல்லை.

தூண்களில் நாயக்கர்களின் சிற்பங்கள். துணைவியருடன் எதிர்காலத்தை நோக்கி கைகூப்பி நின்றிருந்தனர். பெருஞ்செயல்களைச் செய்தவர்களுக்குரிய அடக்கமும் பெருமிதமும் கலந்த நோக்கு. காந்திமதி அம்மனின் கருவறைக்குச் செல்லும் வழியில் நின்றிருந்த முழுதணிக்கோலம்கொண்ட மன்மதன். சிறிய அம்புடன் அர்ஜுனன்.சிலைகளின் சொற்கள். ஆனால் கால்தூக்கி நின்றாடும் சிலைதான் கண்களுக்குள் மீண்டும் மீண்டும் எழுந்து வந்தது.

nella1

அர்ஜுனன்

பத்துமணிக்குத்தான் வெளியே வந்தேன். தெரு அடங்கிவிட்டிருந்தது. எதிரே உள்ள சரவணபவனில் சாப்பிட்டேன். பொதுவாக இப்படி தனிமையில் கிளம்பும்போதெல்லாம் இனிப்பு நிறைய சாப்பிடுகிறேன். ஏனென்று தெரியவில்லை. அசைவம் உண்பதில்லை. துயில் மிகமிகக்குறைவு. ஒருநாளில் நான்கு மணிநேரம் இருந்தால் மிகுதி. சாதாரணமாக நான் ஏழு மணிநேரம் ஆழ்ந்து உறங்குபவன்.

வெயிலில் அலைவதைப்போல் இன்று நான் வெறுக்கும் ஒன்று இல்லை. வெப்பத்தில் உடல் மிகவும் களைத்துவிடுகிறது. காரணம் பெரும்பாலான நேரம் குளிரூட்டப்பட்ட அறையிலேயே இருக்கிறேன். ஆனால் இப்போது பெரும்பாலும் பகல் முழுக்க கொதிக்கும் வெயிலில்தான் இருக்கிறேன். வெயிலின் சூடு உவப்பாகவும் இருக்கிறது. நம்மை யாரோ தொடர்வதுபோல. நன்றாகக் களைத்துப் போய் படுக்கவேண்டும் என்று தோன்றுவதனாலும்கூட அப்படி இருக்கலாம்.

nel

இரவு 12 மணி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். வசதியான குளிரூட்டப்பட்ட அறை. ஆனால் தூங்க முடியவில்லை. தொலைக்காட்சி பார்த்து நெடுநாட்களாகின்றது. ஒருமணிவரை பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. எல்லாமே செயற்கையான நிகழ்ச்சிகள். எல்லாமே ஒரே போல. எல்லா அறிவிப்பாளர்களுக்கும் ஒரே முகம் ஒரே குரல் ஒரே உடல்மொழி. சற்றேனும் ஆர்வமூட்டும் ஒரே தொலைக்காட்சி நேஷனல் ஜியோகிராஃபிக் மட்டும்தான். இந்த இணைய யுகத்திலும் இதையெல்லாம் மக்கள் பார்க்கிறார்களா என்ன?

காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்துவிட்டு கிளம்பிவிட்டேன். பேருந்து நிலையம் சென்றேன். நான்குநேரிக்குச் செல்லுமா என ஒரு ஓட்டுநரிடம் கேட்டேன். ஏறிக்கொள் என்றார். இன்னொருவர் வந்து 67 ரூபாய்க்கு பயணச்சீட்டும் கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார். பேருந்து கிளம்பியது. நான்குநேரிக்கு 67 ரூ இருக்குமா என ஐயம் வந்தது ஒரு கிலோமீட்டர் கடந்து. அருகிருந்தவரிடம் கேட்டேன். நான்குநேரிக்குச் செல்லாது என்றார் .நேராக நாகர்கோயிலாம், இடைநில்லா பேருந்து. பயணச்சீட்டு கொடுக்கக்கூட ஆளில்லை.

nanku3ஓட்டுநரிடம் கேட்டபோது இங்கேயே இறங்கிக்கொள்ளுங்கள் என்று இறக்கிவிட்டார். நான் இறங்கிக்கொண்டு திரும்ப நடந்து பேருந்துநிலையம் வந்தேன். அங்கிருந்த ஓர் போக்குவரத்து அதிகாரியிடம் சொன்னேன். அவர் பயணச்சீட்டை வாங்கிப்பார்த்தார். நடத்துநர் ஒருவரை அழைத்து விசாரித்தார். சட்டென்று அந்தப்பணத்தை அந்த நடத்துநரிடம் பிடித்துக்கொள்ளப்போகிறாரோ என்ற சந்தேகம் வந்தது. எனக்குத்தான் சரியாக வாயில் குரல் எழவில்லை. நான் பேசியே நெடுநேரமாகிறது. நான் தெளிவாகச் சொல்லவில்லை, அவர் செவியில் நாகர்கோயில் என கேட்டிருக்கும், பணமெல்லாம் திரும்ப வேண்டாம் என்றேன்.

இல்லை, அந்த ஓட்டுநர் ஃபோனில் சொல்லிவிட்டார். யார் தவறாக இருந்தாலும் நீங்கள் போகாத பயணத்துக்கு பணம் கொடுக்கக்கூடாது அல்லவா என்றார். அது எவர் கணக்கிலும் பிடித்தம் ஆகாதல்லவா என்றேன். இல்லை, சரிசெய்துகொள்கிறோம் என்றார். அதன்பின் சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொண்டார். என் அண்ணாவின் கீழ் பணியாற்ற்றியவர்.

nanku2

நான்குநேரிக்குச் சென்று அங்கிருந்த கூரைக்கடையில் காலைச்சிற்றுண்டி உண்டேன். அங்கே இரண்டு உள்ளூர் கான்ஸ்டபிள்கள் அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். சீருடை இல்லை, கால்சட்டை மட்டும் காக்கி. உள்ளூர் ஆள் ஒருவனை வரச்சொல்லியிருந்தார்கள் போல. அவன் வந்து கும்பிட்டு நின்றான். கான்ஸ்டபிள் அவன் தன் மனைவியை முந்தையநாள் குடிக்கப் பணம்கேட்டு அடித்தானா என்று கேட்டு அதட்டினார். அவன் தலைகுனிந்து முனகினான். பலமுறை அடிக்கப்போனார். ஆனால் அடிக்கவில்லை.

“தாளி இதான் லாஸ்ட் வானிங். இனிமே பொம்புள மேலே கைய வச்சா குண்டாஸிலே உள்ள போவே” என எச்சரித்து “போடா” என்றார். அவன் எலிபோல வெளியே சென்றான். அதன்பின் இருவரும் மீண்டும் உள்ளூர் அரசியலில் இறங்கினர். ஓட்டல்காரர் இன்னொருவனும் குடித்துவிட்டு மனைவியை அடிப்பதாக சொன்னார். அவனை நாளை வரச்சொல்லுங்கள் என்றார் கான்ஸ்டபிள்.

nanku4

நான்குநேரிக்கு முன்பொருமுறை வந்தபோது இரவு. வானமாமலை சப்பரத்தில் எழுந்தருளிக்கொண்டிருந்தார். உள்சுற்று வழியாகவே ஓர் அணிவலம். அதற்கே ஐம்பதுபேர்தான். எப்போதுமே அங்கே கூட்டம் குறைவு. இப்போது பேருந்துகள் பெருஞ்சாலை வழியாக சென்றுவிடுவதனால் கங்கைகொண்டான், நான்குநேரி எல்லாம் மைய வரலாற்றிலிருந்து ஒதுங்கிவிட்டிருக்கின்றன.

அப்போது காலைநேரம்தான். ஆனால்  கோயில் எங்கும் ஆளே இல்லை. உள்ளூர்காரப் பெண்கள் இருவர் வணங்கிவிட்டு அர்ச்சகரின் தட்டில் இரண்டுரூபாய் நாணயங்களை போட்டனர். ஐந்துரூபாய் கூட இல்லை. இது தமிழகமெங்கும் ஒரு வழக்கமாக உள்ளது. இன்று தமிழர்கள் மிகமிகக் குறைவாக எங்கேனும் காசு போடுகிறார்கள் என்றால் அர்ச்சகரின் தட்டில்தான். பிச்சைக்காரர்களுக்கு இரண்டுரூபாய் போட்டால் மொட்டை வசை கிடைக்கும் என அனைவருக்கும் தெரியும்.

nan

நான் அர்ச்சகரின் முகத்தில் ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்தேன். அவர் கருத்தில்கொள்ளவே இல்லை. நான் வழக்கமாக அர்ச்சகரின் தட்டில் நூறுரூபாய் போடுவேன். மிகப்பெரிய ஆலயத்தில் பெரும்கூட்டம் என்றால் ஐம்பது ரூபாய். சிறிய ஆலயத்தில் நான் மட்டுமே அன்றைய வழிபாட்டாளன் என்றால் ஐநூறு ரூபாய். இது பெருந்தொகையாகத் தெரியலாம். நான் மாதம்தோறும் ஆலயங்களுக்குச் செல்பவன். ஒட்டுமொத்தமாக கூட்டிப்பார்த்தால்கூட இந்தத் தொகை என் வருமானத்தில் மிகச்சிறிய பங்குதான். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அப்படித்தான் என நினைக்கிறேன்.

இந்துப் பண்பாடு அழியவேண்டும் என நினைக்கும் கும்பலால் தொடர்ந்து அந்தணர் வசைபாடப்படுகிறார்கள். தட்டில் விழும் பணத்தைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரக் கிண்டல்கள் இங்கே. ஊர் ஊராக பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்கும் நாலாந்தரக் கும்பலின் இந்த வசைகளை நாமும் அனுமதிக்கிறோம். அவை எப்படியோ நம் செவிகள் வழியாக உள்ளத்திலும் குடியேறியிருக்கின்றன. அர்ச்சகர்கள் நம் மதத்தின் அடிப்படைத் தூண்கள். நெடுங்காலம் நீடிக்கும் வழக்கத்தால் அதற்கான உளநிலை அந்தணர்களுக்கே அமைகிறது. பிறசாதியினர் பூசனைசெய்து வந்த ஆலயங்களில்கூட ஒரு தலைமுறைக்குள் அவர்கள் கைவிட்டு ஒதுங்க அந்தணர்களை பூசைக்கு தேடிக்கொண்டுவந்து அமைக்கவேண்டிய கட்டாயம் நிகழ்வதை நீங்கள் சற்றே சுற்றிப்பார்த்தால் காணமுடியும்.

nan

இந்துமதம் வேண்டும் என்றால் ஆலயங்கள் வேண்டும். அங்கே சடங்குகள் நிகழவேண்டும் என்றால் பூசகர்களும் வேண்டும். நான் பிற சாதியினர் பூசனைசெய்வதை வரவேற்பவன். உரிய பயிற்சியும் உரிய உளநிலையும் இருந்தால் எவரும் பூசனைசெய்யலாம். ஆனால் அவ்வாறு பூசனை செய்ய வருபவர் தமிழகத்தில் மிகமிக அரிது. அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். காரணம் கொஞ்சம்கூட வருமானம் இல்லாத தொழில் இது. பிராமணர்களிலேயேகூட இன்று முறையான பயிற்சி இல்லாதவர்களே அதிகமும் இதற்கு செல்கிறார்கள்

வேறெந்த மதத்தின் பூசகர்களுடனும் ஒப்பிட்டுப்பார்க்கலாம், இந்து மதத்தின் பூசகர்களே மிகப் பரிதாபநிலையில் இருக்கிறார்கள். இதைப்பற்றி நாம் நாணவேண்டும். இவ்வாறு ஊதியமற்ற, சமூக மதிப்பற்ற பணியாக இது இருப்பதனால் கல்வித்தேர்ச்சியற்றவர்கள் இத்தொழிலுக்கு வருகிறார்கள். காலப்போக்கில் இது இந்துமதத்தின் சடங்குகளை முறைமையில்லாமலாக்கும். கேரள ஆலயங்களின் பூசகர்களின் நிலைமையை, அவர்கள் பூசை செய்வதிலுள்ள ஒழுங்கையும் முறைமையையும் தமிழகத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். அங்கே பூசகர்கள் அரசூழியர்கள். முறையான ஊதியம் பெறுபவர்கள். இங்கே ஆலயச்சொத்தை அரசியல்வாதிகளும் அரசும் சூறையாடுகின்றன.

nankuneri1

சங்கிலி பிணைக்கப்பட்ட நாயக்கர்கள்

இங்கே ஆலயத்தின் அனைத்து நிர்வாகிகளும் அரசூழியர்கள். அவர்களுக்கு ஊதியம் உண்டு. ஆலயவழிபாட்டின் அச்சாணிகளான பூசகர்கள் தொகுப்பூதியம் பெறுபவர்கள். ஆலயத்தை நடத்தும் காவலர், இசைக்கலைஞர் போன்ற ஊழியர்கள் மேலும் கீழே பேருக்கு சிறு தொகை பெறுபவர்கள். அவர்களுக்கு ஊதியம் அளிக்கவும், ஆலயச்சடங்குகளுக்குச் செலவிடவும்தான் கோயில்களுக்கு அரசர்களாலும் செல்வந்தர்களாலும் மாபெரும் நிலக்கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை கையகப்படுத்திக்கொண்டிருக்கும் அரசு பூசகர்களுக்கும் பூசைக்கும் தவிர பிற அனைத்துக்கும் பணத்தை செலவிடுவதன் அநீதி நமக்கு உறைப்பதே இல்லை.

பூசகர்கள், பிற ஆலயஊழியர்கள் முறையான அரசூழியர்களாக ஆக்கப்படவேண்டும். அது நிகழும் வரை இந்துச்சமூகம்தான் பூசகர்களை பேணவேண்டும்.  என் பார்வையில் ஒரு ஆலயப்பூசகர் மாதம் ஒருலட்சம் ரூபாய் வரை ஊதியம்பெறும் காலம் வருமென்றால் மட்டுமே உண்மையில் ஆலயங்களில் தொன்மையான சடங்குகள் அனைத்தும் முறையாக பிழையின்றி நிகழமுடியும். அது மிக எளிது. ஒருபோதும் உண்டியலில் பணம் செலுத்தாதீர்கள். அது அரசியல்வாதிகளின் கைக்கு செல்கிறது. அடுத்தமுறை ஆலயத்தட்டில் பணம் போட சில்லறையைத் தேடி உங்களை இறைவன்முன் சில்லறையாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்.Capture2

இந்துசமூகம் செல்வம் அற்றது அல்ல. இங்கே மதத்திற்குச் செலவிடப்படும் தொகை மிகமிகப்பெரியது. அதில் ஒரு சிறுபகுதி அர்ச்சகர்கள், ஆலய ஊழியர்களுக்குச் சென்றாலே போதும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களின் நாலாந்தர சாதிக்காழ்ப்புகளுக்கு செவிகொடுக்கும் இந்துக்களே இந்த மதத்தை முற்றழிக்கும் பழியை கொள்பவர்கள். இவ்வாலயங்களை அமைத்த நம் முன்னோர்களின் தீச்சொல்லுக்கும் உரியவர்கள்.

ஆலயத்தில் ஏதோ திருப்பணி நிகழ்கிறது.முகப்பு மண்டபத்தில் பெரிய சங்கிலியை அங்கே வணங்கியபடி நின்றிருக்கும் நாயக்க அரசர்களின் கைகளில் கட்டி வைத்திருக்கிறார்கள். அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு பூசகரிடம் “இது என்ன? உடைஞ்சு போயிருமே” என்றேன். “நாம என்ன சொல்றது? நாம அவாளை கும்பிட்டு நிக்கவேண்டியவா” என்றார். எவரிடம் சொல்வதென்று தெரியவில்லை. நம் ஆலயங்கள் முழுக்க அரிய சிற்பங்கள் இப்படித்தான் அழிந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் அருண்மொழி சிலைத்திருடன் என்னும் நூலை படித்து கொதித்துக்கொண்டிருந்தாள். ”நம்ம சிலையை எல்லாம் எப்டி திருடியிருக்கானுங்க!” என்றாள். ”திருடி பத்திரமா மியூசியத்திலேதானே வைக்கிறான். இங்க இருந்தா நம்மூர் அயோக்கியனுங்க உடைச்சு போட்டிருப்பாங்க. என்னைக்கேட்டால் மிச்சமிருக்கிற நல்ல சிலைகளையும் அவன்கிட்டேயே குடுத்திடலாம். அவனுக்கு மதிப்பு தெரிஞ்சிருக்கு” என்றேன்.nn

நான்குநேரியிலிருந்து மீண்டும் வீட்டுக்குச்சென்று உடனே பெட்டியுடன் மீண்டும் கிளம்பினேன். முப்பது முப்பத்தொன்றாம்தேதிகளில் ஈரோடு நிகழ்ச்சி. ஆகவே எப்படியும் திரும்பியாகவேண்டும். அதுவரை சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான்.  ஆனால் இம்முறை அகத்தில் ஓர் உருவம் எஞ்சியிருக்கிறது. கால்தூக்கி நின்றாடும் பைரவம். ஒருகால் இங்கிருந்து எழுந்துவிட்டது.

[நிறைவு]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திராவிட இயக்க இலக்கியம் –ஒரு வினா

$
0
0

புதுமைப்பித்தன்

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

கி.ரா உடனான சமஸின் அந்தப் பேட்டி, தமிழ் சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களால் அண்ணாவும், திராவிட இயக்க கருத்தியலும் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை பற்றி பேச முயல்கிறதேத்  தவிர தமிழ் இலக்கியத்தில் அண்ணாவிற்கான இடத்தைப் பற்றி பேசுவதாக இல்லை. பிறகு ஏன் சமஸ், தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கியவாதிகளால் அண்ணா புறக்கணிக்கப்பட்டதைப் பற்றி பேச விரும்புகிறார் என்பது தான் இங்கு அடிப்படைக் கேள்விகளில் ஒன்றாக  இருக்க முடியும்.

தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கிய மரபும் சரி, திராவிட  அரசியல் மரபும் சரி மாற்றத்தை நோக்கிய தீவிரமான லட்சியக் கனவுகளை அடிப்படையாகக் கொண்டவைகள். ஒரு அரசியல் இயக்கமாக திராவிட இயக்கத்திற்கு புறவயமான சமூக மாற்றம் தான் அடிப்படை நோக்கமாக இருக்க முடியும். ஆனால் ஒரு சூழலின் இலக்கியத் தரப்பு, சமூக அரசியல் நிகழ்வுகளை  புறந்தள்ளிவிட்டு வெறும் பிரதி சார்ந்து மட்டும் தன் எல்லைகளை வகுத்துக் கொள்ள முடியாது. அரசியல் இயக்கத்திற்கு இலக்கியத் தரப்பு என்பது பிரதானமான ஒன்று அல்ல. ஆனால் இலக்கியத்திற்கு சமூக மாற்றம் என்பது பிரதானமானது மட்டுமல்ல அதன் அடிப்படைக் கடமைகளில் ஒன்றும்கூட. அதன் அடிப்படையில் தான் சமஸின் அந்தக் கேள்வி தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதியான ஒரு மூத்த இலக்கிய ஆளுமையை நோக்கி வைக்கப்படுகிறது.

மட்டுமல்லாமல் அண்ணாவின் காலகட்டம் என்பது வழமையான அரசியல் நிகழ்வுகள் உள்ளடங்கிய ஓரு  காலகட்டமாக கடந்து செல்லக்கூடியதும் அன்று. அதன் சாரத்தில் கம்யூனிஸ கருத்தியலுக்கு நிகரான அடர்த்தியை கொண்டது திராவிட இயக்கத்தின் கருத்தியல். ஒரு கருத்தியல் வெகு மக்களால் சுவகரிக்கப்படும் போது அது அதன் நோக்கத்திற்கு மாற்றான விருப்பத்தகாத  விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். அந்த இயங்கு முறைகளைத் தான் இலக்கியம் பேச முயல வேண்டும்.

அக்காலச் சூழ்நிலையில் தமிழ் எழுத்தாளன் சாமானியன், குரலற்றவன். அவனுடைய அடிப்படை நோக்கமாக பொதுப்பார்வைக்கு மாற்றான ஒரு இலக்கியத் தரப்பினை உருவாக்கக் கூடியதாக மட்டுமே  இருக்க முடியுமே தவிர அவன் அப்போது அரசியல் சார்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க முடியாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகலாமாக தமிழ் இலக்கியச் சூழலில் சமூக அரசியல் என்பது பேசா பொருளாகவே இருந்து வருகிறது. இன்னுமும் தமிழ் இலக்கிய உலகம் ஆண் – பெண் பாலியல் சிக்கலைத் தாண்டி சிந்திக்க மறுக்கிறது.

அண்ணா ஏன் இப்போது பேசப்பட வேண்டியவராகிறார் என்பது இங்கு அடுத்த கேள்வி. தற்போதைய இந்தியா அதன் அரசியல் விழுமியங்களில் சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது. தற்போதைய தமிழக அரசியல் நிலவரமும் அதுவே. சமூக அக்கறை என்பது தற்போதுள்ள எவ்வரசியல் கட்சிகளுக்கும் ஒரு பொருட்டல்ல. இந்நிலையில் இதே தமிழ் நாட்டில் அறைநூற்றண்டிற்கு முன்னால் சமூக மாற்றத்தை அடிப்படையாக கொண்டு ஒரு புரட்சியே நிகழ்ந்தேறியிருக்கிறது.

இந்நிலையில் இன்று அண்ணாவை, திராவிட இயக்க கருத்தியலைப் பேசுவது என்பது அவற்றை மட்டும் பேசுவதாக இல்லாமல் அவற்றை  முன்னிறுத்தி சமூக அரசியல் மீதான உரையாடலை நிகழ்த்தச் செய்வதாகவே அமையும். தற்போதைய திராவிட கட்சிகளுக்கே திராவிட இயக்க வரலாற்றை மீள் கூற வேண்டியத் தேவை உருவாகியிருக்கிறது. இன்று அண்ணா காலத்து தன்மையிலான சமூக மைய  அரசியல் நோக்கினை  தற்போதுள்ள ஸ்டாலினிடமோ, அவருடைய அன்புக் குழந்தை உதயநிதியிடமோ தேடுவதற்கில்லை. அது திருமாவளவனிடம் குடி கொண்டுள்ளது.

அண்ணாவைப் பற்றி ஒரு நூல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நான் கேள்வியுற்றபோது அதில் அண்ணா குறித்தான ஜெயகாந்தனின் கட்டுரை இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். எதிர்த் தரப்பின் வழியேயும் அண்ணா அறியப்பட வேண்டியவராகிறார்.

க. நா.சு

 

அன்புள்ள ஜெயமோகன் இவையாவையும் நீங்கள் அறியாதவர் அல்ல. நான் இவற்றை மேற்கூறியதற்கு காரணம் இத்தலைமுறையைச் சார்ந்த ஒருவனாக அண்ணாவையும் திராவிட இயக்கத்தின் கருத்தியல் தரப்பையும் நான் இவ்வாறே உள்வாங்கிக்கொள்கிறேன்  என்பதை விளக்குவதற்காகத்தான். சமஸ் கட்டுரையையும் நான் இதனடிப்படையில் தான் புரிந்துகொள்கிறேன். சமஸின் அந்தப் பேட்டியில் நான் பிழையெனக் கருதுவது அதன் தலைப்பைத் தான். அந்த தலைப்பு வாசகனுள் ஒரு திணிப்பை நிகழ்த்துகிறது. திராவிட இயக்கத்தின் மீதான தமிழ் இலக்கிய உலகின் விலக்கத்திற்கு தன் நோக்கிலான வண்ணத்தை பூசுவதாக அமைந்து விடுகிறது. தவிர்த்து சமஸின் தரப்பை விமர்சிப்பதற்கில்லை. தன்னளவிலான அடிப்படை நேர்மையே சமஸை முன்னகர்த்தி செல்கிறது.

சமஸின் குரல் ஒரு அறிவுஜீயின் குரலல்ல. அது ஒரு குடிமகனின் தார்மீகக் குரல். அவருடைய எழுத்துக்கள் சூழலின் மீதான விமர்சனத்தை முன்வைத்து  விட்டு நகர்ந்து செல்லக் கூடியவைகள் அல்ல. அவைகள்  சூழலுடன் உரையாடலை நிகழ்த்த முயல்பவைகள். சமஸ் பத்திரிக்கையாளராக அல்ல, தமிழ் இலக்கியத்தரப்பின் முகமாக அடையாளப்படுத்தப்பட வேண்டியவர். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியம்சார் அறிவுச் சூழலில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று சமஸின் வருகை.

சமஸ் பேட்டி குறித்து நீங்கள் எழுதிய கட்டுரையை வாசிக்கும்போது, திராவிட இயக்கத்தின் மீதான உங்களது ஒவ்வாமையும்,தமிழ் தி இந்து மீதான எரிச்சலையும் தான் உணர முடிந்தது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல் வெளிவர இருந்த சமயமும் நீங்கள் இத்தன்மையிலேயே எதிர்வினையாற்றி இருந்தீர்கள். இரண்டிலும் உங்கள் குரல் நியாயமான மாற்றுத் தரப்பின் குரலாக வெளிப்படவில்லை என்பதே வருத்ததிற்குரிய ஒன்று.

அன்புடன்

ரியாஸ்

சி சு செல்லப்பா

 

அன்புள்ள ரியாஸ்,

ஓர் வாசகராக உங்கள் குரலை புரிந்துகொள்கிறேன். ஆனால் தமிழ் நவீன இலக்கியச் செயல்பாட்டாளராக நீங்கள் இதை சொன்னீர்கள் என்றால் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே. இதில் உங்கள் எளிய சார்புநிலைகள் மட்டுமே வெளிப்படுகின்றன. என்னிடம் வெளிப்படுவது திராவிட இயக்க ஒவ்வாமை என நான் நினைக்கவில்லை – அவ்வியக்கத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளைப் பற்றி சற்றேனும் படித்து பேசிக்கொண்டிருப்பவன் நான் மட்டுமே.

அதன்மேல் கடுமையான விமர்சனம் உண்டு, அவ்வாறு விமர்சனம் கொண்டிருக்க எனக்கு உரிமையும் உண்டு, ஒரு சூழலில் அத்தனைபேரும் ஒன்றை ஆதரித்தாகவேண்டும் என்றில்லை. ஆனால் அதை காழ்ப்பு என நான் நினைக்கவில்லை. அவ்வாறு காழ்ப்பு என முத்திரைகுத்தித்தான் என் எதிர்த்தரப்பை எதிர்கொள்ள அதன் ஆதரவாளர்களால் இயலும் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

சமஸ் மீதோ அவருடைய இதழ்மீதோ காழ்ப்பு எனக்கிருப்பதாகவும் நான் எண்ணவில்லை. அவ்விதழில் எழுதியிருக்கிறேன். அவருடைய தொகுதிக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். பிணக்கு ஏதும் இதுவரை நிகழவுமில்லை. பகைமையோ காழ்ப்போ ஏன் வரவேண்டும்?

இவ்வண்ணம் தனிப்பட்ட முத்திரை குத்தியபடி வரும் எதிர்வினைகளை முற்றாக தவிர்ப்பதும், அவர்களை கடந்துசெல்வதுமே இதுவரை என் வழி. இந்த மறுமொழி நீங்கள் இப்போதுவரை என் நண்பர் என்பதனால், இளையவாசகர் என்பதனால்.

கைலாசபதி

*

முதலில் சமஸ் பற்றி. சமஸின் வினா ‘திராவிட இயக்கத்தை சிற்றிதழ்சார் நவீன இலக்கியவாதிகள் புறக்கணித்தார்கள் என நினைக்கிறீர்களா? ஆம் என்றால் ஏன்?” என்று இருந்து அதற்கு கி.ரா அப்பதிலை சொல்லியிருந்தால் அதுவேறு. சமஸ்ஸின் வினாவிலேயே திராவிட இயக்கத்தை சிற்றிதழ்சார் இலக்கியவாதிகள் புறக்கணித்தனர் என்னும் முடிவும், அதற்கு பிராமணியநோக்கு காரணம் என்னும் முடிவும் உள்ளது.

அதற்கு கி.ரா சொல்லும் மறுமொழி திட்டவட்டமானது அல்ல. இருக்கலாம் என்னும் அளவிலேயே உள்ளது. அந்த மறுமொழியிலேயே இரண்டு நிலைபாட்டையும் சொல்கிறார். அந்தக் குழப்பமான மறுமொழியை கி.ராஜநாராயணனின்  கொள்கைஅறிவிப்பாக மாற்றி அக்கட்டுரைக்கு தலைப்பு அளிக்கிறார் சமஸ். இது கீழ்மையான இதழியல். மிகமிக எளிய உத்தி. கொஞ்சம் தரமான இதழாளர்கள் இதை செய்யமாட்டார்கள். கடும் எதிர்வினை இங்கிருந்தே தொடங்குகிறது.

சமஸ் ஓர் இலக்கியவிமர்சகரோ ஆய்வாளரோ அல்ல. அத்தகுதியை அவர் இன்னமும் நிறுவவில்லை. அவர் இதழாளர். அவருடைய இதழியல்செயல்பாடுகள் மேல் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் உண்டு. தமிழகம் வெவ்வேறு வகைகளில் சுரண்டப்படுவதைப் பற்றிய அவருடைய கட்டுரைகள் முக்கியமானவை. மேஜையிலமர்ந்து எழுதுபவர் அல்ல.

வெங்கட்சாமிநாதன்

ஆனால் இதழாளரின் எல்லைகளை அவர் புரிந்துகொள்ளவேண்டும். இதழாளர் அரசியல் ஆய்வாளராக தன்னை எண்ணிக்கொள்வதே கொஞ்சம் மிகை. ஆனால் இதழாளர் முதிர்ந்து, நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் அவ்வாறு ஆக முடியும். ஆனால் இலக்கியவிமர்சனம், இலக்கிய வரலாறு என்பது முற்றாகவே வேறு. தனக்கு ஊடகம் இருப்பதனால் தன்னால் எல்லாவற்றிலும் கருத்துருவாக்கம் நிகழ்த்த முடியும், அதற்கான உரிமை உண்டு என இதழாளர் நினைப்பாரென்றால் அது கண்டிக்கப்படவேண்டியது.

சமஸ் கி.ராஜநாராயணனிடம் ‘பேட்டி’ எடுக்கவில்லை. அவர் கி.ராஜநாராயணனை சாக்காகக் கொண்டு தமிழ் நவீன இலக்கிய மரபின்மேல் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும்பழியை சுமத்துகிறார். அது ஒரு பெரும் திரிபு. அது வெளியாகும் ஊடகம் மிகப்பெரிது. பல்லாயிரம் இளைஞர்களை அது சென்றடையும். தொடக்கநிலையில், இலக்கிய அறிமுகமே இல்லாத வாசகர்களிடம் மிகஎதிர்மறையான உளப்பதிவை உருவாக்கும்.

ஏற்கனவே நவீனத்தமிழிலக்கியம் மீது சூழலால் ஒவ்வாமையும் விலக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் நுழைபவர்களே குறைவு. இத்தகைய  பொய்யான முத்திரைகுத்தல்கள் வழியாக அது மேலும் அயன்மைப்படுத்தப்படும். அதை சாதியமுன்முடிவுகளுடன் நோக்கத் தொடங்கும் ஒருவர் அந்தத்தடையைக் கடந்து உள்ளே நுழைவது மிக அரிது.

எனக்கு தமிழ்நவீன இலக்கிய மரபில், சிற்றிதழ்மரபில் நம்பிக்கை உண்டு. இதில் உருவாகிவந்து இங்கே நிலைகொள்பவன் நான். பொய்மொழிகளும் மிகையுணர்ச்சிகளும் இல்லாத சிந்தனைக்கும், கூரிய அளவீடுகளுக்கும், மெய்யான அழகியலுக்கும் இன்றைய தமிழ் அறிவுச்சூழலில் இது ஒன்றே களம் என நான் எண்ணுகிறேன். இதை கூடுமானவரை கொண்டுசெல்ல என் வாழ்க்கையை செலவிட்டுக்கொண்டிருக்கிறேன்.

மு தளையசிங்கம்

இந்நிலையில் தகுதியற்ற ஒருவர் ஒரு வகை சதி வழியாக அதை முத்திரைகுத்தி, பெரிய ஊடகத்தின் வாய்ப்பு வழியாக பிரச்சாரம் செய்து இளைய வாசகர்களிடமிருந்து விலக்க முயல்வார் என்றால் அது எனக்கு கடும் எதிர்ப்புக்குரிய செயலே. கூரிய விமர்சனம் வழியாக அச்சதியை, அதிலுள்ள உள்ளீடற்றதன்மையை சுட்டிக்காட்டுவதே என் பணி.

இந்த விவாதம் வழியாக சமஸ் உருவாக்கும் பொய்த்திரையை இலக்கியவாசகரில் ஒருசாரார் உணரக்கூடும். இதன்வழியாக இப்படி ஒரு மறுப்பும் அதற்கு எழுந்தது என்றாவது அவர்கள் அறியக்கூடும். நான் செய்யமுடிவது அதை மட்டுமே. அதைத்தான் செய்திருக்கிறேன். எந்த இலக்கியவாசகனுக்கும் எளிதில் புரியும்.

தமிழ்ச்சூழலில் பொதுவாக எந்த ஊடகவியலாளருக்கும் அவருடைய ஊடகநிறுவனங்களின் அரசியலை, பொருளியல்நலன்களைக் கடந்த அரசியல் நிலைபாடோ செயல்பாடோ கொள்ள உரிமை இல்லை. இதை அறியாதவர்கள் குழந்தைகளாகவே இருக்கக்கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் திரு.மு.கருணாநிதி அவர்களின் ஆக்கங்கள் இலக்கியத் தகுதி கொண்டவை அல்ல என எழுதினேன். அப்போது மிகமிகக் கடுமையாக எதிர்வினையாற்றி, என்னை எதிர்த்து கருணாநிதி அவர்களுக்காக வாதிட்டவர் மாலன். அன்று அவர் சன் டிவி ஊழியர்.

சமஸின் இந்தச்செயல் அவருடைய தனிப்பட்ட ஆர்வத்தால் முயற்சியால் நிகழ்கிறது என்றால் அதன்பொருள் வேறு. இதற்குப்பின் உள்ள பெருமுதலீடு, தொடர்புகள், வெளியீட்டு வசதி ஆகியவை அந்நிறுவனத்திற்குரியவை. அதற்கு எதிரான கருத்துச்செயல்பாடுகளை கண்காணாமல் ஆக்கிவிடும் ஆற்றல் அதற்குண்டு. அந்த நிறுவனத்தைத் தவிர்த்து இதை ஆராயவே முடியாது. ஆகவே இது கருத்துத் தரப்பு அல்ல, ஒரு மாபெரும் பரப்புப் பிரச்சாரம் மட்டுமே.

நா வானமாமலை

அதாவது நவீனத்தமிழிலக்கியத்தை ஒட்டுமொத்தமாக இழிவுசெய்து முத்திரைகுத்தி ஒரு மாபெரும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதை மறுத்து அது பிழை, அதன்பின் ஒரு ஊகக்கேள்வியின் மோசடியே உள்ளது என்று மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. உங்களுக்கு அந்த மறுப்பு காழ்ப்பின் வெளிப்பாடு என தெரிகிறது என்றால் நீங்கள் நின்றிருக்கும் இடம் என்ன? இதற்கு எவர் எதிர்வினையாற்றுகிறார்கள், அவர்களின் மொழித்தரம் என்ன என்று நீங்களே பார்க்கலாம்.

சி.என்.அண்ணாதுரையின் அரசியல் பற்றி அல்ல இங்கே பேச்சு, அவருடைய இலக்கிய இடம் பற்றி மட்டுமே. அது ஓர் எழுத்தாளரிடம் கேட்கப்படுகிறது. அண்ணாதுரையின் அரசியலைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளுக்கு நான் இத்தகைய எதிர்வினையை ஆற்றியதிலை. நான் எழுதினால் அவருடைய கலாசாரப் பங்களிப்பைப் பற்றி மட்டுமே எழுதுவேன். அரசியலை முழுமையாக ஆராய்ந்து எழுதும் தரவுகள் என்னிடமில்லை. என் துறை அது அல்ல.

ஏன் அந்த எதிர்ப்பு? ஓர் ஊகக்கேள்வி. புதுமைப்பித்தன் நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்கம். ஆனால் ‘நவீனத்தமிழிலக்கியத்தின் மாபெரும் ஞானசூரியன்! விடிவெள்ளி! புதுமைப்பித்தன்!” என தலைப்பிட்டு ஒரு மலர் வருமென்றால் அதை நவீன இலக்கியவாதிகள் எப்படி எதிர்கொள்வார்கள்? அப்படியே கிழித்து குப்பைக்கூடைக்குள் செலுத்துவார்கள்.

சுந்தர ராமசாமி என் ஆசிரியர். அவர் பெயரைச் சொல்லாமல் இந்தத் தளம் ஒருவாரத்தை கடப்பதில்லை. ஆனால் அவருடைய பதிப்பக நிறுவனம் அவருக்குப்பின் ‘பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராம்சாமி’ என ஒரு கருத்தரங்கை நடத்தியபோது கடுமையான கண்டனங்களை நான் எழுதினேன். ஏனென்றால் அமைப்புசார்ந்து அப்படி ஒரு கருத்து நிறுவப்படலாகாது. விமர்சன உரையாடல் வழியாகவே நிறுவப்படவேண்டும்.

சுந்தர ராமசாமி

புதுமைப்பித்தனையே ஏற்பும் மறுப்புமாகத்தான் க.நா.சு. முதல் நான் வரை சிற்றிதழ்தரப்பில் விமர்சனம் செய்திருக்கிறோம். அதுதான் சிற்றிதழ் மரபு. அந்த மரபிலிருந்துகொண்டு பார்க்கையில் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’  ‘மாபெரும் தமிழ்க்கனவு’ தலைப்புக்கள் ஒவ்வாமையையே அளிக்கும். அந்த நுண்ணுணர்வை உருவாக்கி நிலைநிறுத்தவே அவை செயல்பட்டு வருகின்றன. இன்று அந்நூல்கள் மேல் எளிய விமர்சனம் வந்தால்கூட அவற்றின் ஆதரவாளர் எழுதும் மிகையுணர்ச்சிக் கொந்தளிப்புகளை பாருங்கள். அடிப்படையில் அந்த உளநிலைக்கு எதிரான இயக்கம் சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியம்.

தமிழகத்தில் அனைவரும் கருணாநிதியையும் அண்ணாதுரையையும் ‘சூரியநமஸ்காரம்’ செய்யவேண்டியதில்லை, அந்த உளநிலைக்கும் அந்த மிகைச்செயற்கைக்கும் எதிரான தரப்பும் இங்கே இருக்கலாம்,அவர்கள் எதிர்வினை ஆற்றலாம்,அது சாதிக் காழ்ப்பு மட்டுமாக இருக்கவேண்டியதில்லை, அது ஓர் அறிவுத்தரப்பாக இங்கே நீடிக்க முடியும் என்றுகூட இந்தக் கும்பலால் நம்ப முடியவில்லை, நீங்கள் அவர்களின் குரலாக பேசுகிறீர்கள்.

இவ்விரு நூல்களும் சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி இருவரின் அரசியலை திறனாய்வுசெய்து மதிப்பிடுவனவாக இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை. அவற்றுக்கு எதிர்வினையாற்றி உரையாடலாம். இந்தியச்சூழலில் அவர்களின் இடத்தை நிறுவ முயல்வதுகூட அறிவியக்கச் செயல்பாடே. ஆனால் இவை மாமனிதர்களாக, மாபெரும் அரசியல்தலைவர்களாக, குறைகளே அற்ற சூரியன்களாக அவர்களை முன்னிறுத்துகின்றன.

நான் இன்றைய காந்தி என ஒரு நூல் எழுதியிருக்கிறேன். நீங்கள் நேரம்கிடைத்தால் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காந்தியின் அனைத்துக்குறைபாடுகளையும் விரித்துப் பேசி அவரை மதிப்பிடும் நூல் அது. சிற்றிதழ்சார்ந்த அறிவியக்கம் உருவாக்கிய மரபு அது. அந்த மரபுக்கு மேலே சொன்ன நூல்கள் ஒவ்வாமையையே உருவாக்கும். அந்த ஒவ்வாமை பதிவாகவும் செய்யும்.

மேலே சொன்ன நூல்கள் சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி இருவரையும் மேற்கொண்டு நவீன இலக்கியச் சிற்பிகளாகவும் முன்னிறுத்த முயல்கின்றன. அவர்களை ஏற்காதவர்கள் சாதியநோக்கில்தான் அவ்வாறுசெய்கிறார்கள் என முத்திரைகுத்துகின்றன. அதை நிறுவன வல்லமையால் நிறுவுகின்றன.

ஜெயகாந்தன்

சிற்றிதழ்சார்ந்த எழுத்தாளர் எவராயினும் அதைத்தான் கண்டித்தாகவேண்டும். அந்த நிறுவனத்தாக்குதல்களில் இருந்து நவீன இலக்கியம் என்னும் இந்தச்சின்னஞ்சிறு அறிவியக்கத்தை காத்தாகவேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் பேசமாட்டார்கள். ஏனென்றால் இங்கே ஆற்றலற்றவர்களை எதிர்த்து நின்று கலகம், அதிகார எதிர்ப்பு எனப் பேசுபவர்களே மிகுதி. மெய்யான அதிகாரத்துடன் உடனடியாக சமரசம் செய்துகொள்வார்கள்.

ஆனால் புதுமைப்பித்தன் சொன்னதுபோல வாழையடி வாழையாக வந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை நோக்கியே பேசவேண்டியிருக்கிறது. முன்பு சிற்றிதழ்ச்சூழல் எதிர்கொண்டது நிறுவனங்களின் புறக்கணிப்பை. இது நிறுவன எதிர்ப்பை, திரிபை எதிர்கொள்ளவேண்டிய காலம்போலும். நீங்கள் நின்றிருக்க விரும்பும் இடம் தெரிகிறது. உங்களுக்கு அது வழங்கவிருப்பது நிகழட்டும்.

 

*

தமிழ் நவீன இலக்கியம் சமூகமாற்றத்தை எழுதவில்லை, ஆகவே திராவிட இயக்கத்தை கண்டுகொள்ளவில்லை, ஆண்பெண் உறவை எழுதியது என்பதெல்லாம் மெய்யான இலக்கியவாசகன் சொல்லும் வரிகள் அல்ல. சமூகவலைத்தளங்களில் எழுதும் வாசிப்பில்லாத நபர்களின் கருத்துக்களின் எதிரொலிகள். அவர்கள் நவீன இலக்கியம் ‘சமூக அக்கறை’ அற்றது என்ற பொய்யை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.

அத்தகைய ஒருவர் நவீன இலக்கியம் நெருக்கடி நிலைபற்றி எழுதவே இல்லை என ஒருமுறை சொன்னார். தமிழில் நவீன இலக்கியத்தில் மட்டும்தான் நெருக்கடிநிலை பற்றிய பரந்துபட்ட நுண்ணிய பதிவுகள் உள்ளன என நான் சான்றுகளுடன் விளக்கி எழுதினேன். இவ்வாறு எழுதிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது இன்று.

உண்மையில் திராவிட இயக்க எழுத்துக்களை  மெய்யாகவே வாசிக்கும் என்னைப்போன்ற ஒருவர் அறிந்த ஒன்று உண்டு, அவற்றில்தான் மிகப்பெரும்பாலானவை காமத்தை மட்டுமே பேசியவை. அவற்றிலிருந்து அன்றைய சமூகச்சூழலின் உண்மையை வாசிக்கவே முடியாது. அவை கட்டமைக்கப்பட்ட பொய்யான ஒரு நாடகத்தன்மைகொண்ட சூழலில் தங்கள் கருத்துக்களை பேசியவை. அவற்றின் மிகையழகியலுக்கு அந்த செயற்கை சமூகச்சூழலே உகந்ததாக இருந்தது.

மாறாக நவீன இலக்கியச்சூழலிலேயே அழுத்தமான நுட்பமான சமூகமாற்றச் சித்திரம், சமூகத்தின் அகவயச் சித்திரம் உள்ளது. எவரேனும் சென்ற நூறாண்டுக்கால தமிழ்ச்சமூக மாற்றம் பற்றி ஆராயவேண்டும் என்றால் நவீன இலக்கியத்தை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளமுடியும்.

சென்ற நூறாண்டில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்த களங்கள் மூன்று. அ. குடும்பம் மற்றும் தனிநபர் உறவுகள். ஆ. அரசியல் மற்றும் சமூகச்சூழல் இ. ஆன்மீகம் மற்றும் மதச்சூழல். இந்த வரிசைப்படியே நவீன இலக்கியம் பேசியிருக்கிறது.

ஒப்புநோக்க மிகுதியாகப் பேசப்பட்டது குடும்பம் மற்றும் தனிநபர் உறவுகள். ஆனால் சமூக, அரசியல் சூழலை வலுவாகப் பேசும் படைப்புகள் இங்கே ஏராளமானவை. புதுமைப்பித்தனின் துன்பக்கேணி முதல் செல்லப்பாவின் சுதந்திர தாகம், சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, பூமணியின் பிறகு என இந்திய-தமிழ்ச் சமூகவரலாற்றின் சித்திரங்கள் என சொல்லத்தக்க ஐம்பது முக்கியமான படைப்புக்களை எவரும் சுட்டிக்காட்டமுடியும். குறைவாகவே ஆன்மிக மாற்றத்தை நவீன இலக்கியம் பேசியிருக்கிறது.

இலக்கியம் எப்போதும் புறவயமான ‘ஆவணப்படுத்தல்’ மற்றும் ‘விவாதித்தல்’களில் ஈடுபடாது. அதற்குரிய மொழிவடிவங்கள் வேறு. இலக்கியம் மானுட அகத்தைப் பேசுவதற்கான மொழிவடிவம். ஆகவே அரசியலையும் சமூகவியலையும்கூட மானுட அகம் எதிர்கொண்ட வகையிலேயே அது பேசியிருக்கும்.

அந்தவகையில் திராவிட இயக்கத்தின் மிகைமொழித்தன்மை, அதன் போலிப்புரட்சிகரம் ஆகியவற்றை அது விமர்சனம் செய்திருக்கிறது. இன்னொரு பக்கம் அது சமூகவியலில் குறிப்பாக சாதியச் சூழலில் உருவாக்கிய மாற்றங்களையும் அங்கீகரித்துள்ளது.

என் கட்டுரையில் நவீன இலக்கியம் சி.என் அண்ணாதுரையையோ திராவிட இயக்கத்தையோ பொருட்படுத்தவில்லை என்பது பொய் என்றும் அவர்களின் அரசியலை கருத்தில்கொண்டிருக்கிறது, அழகியல்சார்ந்து விமர்சன நிராகரிப்பை முன்வைத்தது என்றும் ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் அது திராவிட இயக்கத்தின் மிகையழகியலுக்கு எதிரான இயக்கம், அவ்வாறுதான் இருக்கமுடியும். இவர்கள் இன்று உருவாக்கும் போற்றிப்பாடடி பாட்டுக்கு நவீன இலக்கியம் வராது. ஆனால் அதை நீங்கள் கருத்திலேயே கொள்ளாமல் மீண்டும் புறக்கணித்தது நியாயமா என ஆரம்பிக்கிறீர்கள். இதுதான் பெருநிறுவனப் பிரச்சாரத்தின் ஆற்றல்.

வாசித்துப்பாருங்கள். காலப்போக்கில் உங்களுக்கே புரியக்கூடும். எளிய அரசியல்லாப நோக்குக்காக பெருநிறுவனம் ஒன்றால் ஓர் இன்றியமையாத அறிவியக்கம் முத்திரைகுத்தி அழிக்கப்படுவதற்கு துணைநிற்காதீர்கள் என்று மட்டுமே என்னால் கோரமுடியும்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஈரோடு- விவாதப்பட்டறை –படங்கள் அய்யலு ஆர் குமாரன்

$
0
0

 

 

 

சிவா – அமைப்பாளர்

 

செந்தில்குமார்

சந்திரசேகர்

பாரி அமைப்பாளர்

 

அய்யலு குமாரன் மற்றும் தன்னறம் கூட்டத்தினருடன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

உகவர், ராமச்சந்திர சிரஸ்

$
0
0

Siras

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் தன்பால்-ஈர்ப்பு பற்றி தங்கள் தளத்தில் நிகழ்ந்துவரும் பரிமாறல்களை, ஆரோக்கியமான விவாதங்களை, என் நண்பர் ஒருவர் மூலம் அறிந்து, படித்தேன். தமிழ்ச்சூழலில் இதுபோன்ற அரிதான வெளிப்படையான விவாதங்கள் உண்மையிலேயே உவப்பளிக்கிறது. தன்பால்-ஈர்ப்பை மையமாகக் கொண்ட ‘அலிகார்’  என்ற ஹிந்தி திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். ஹன்சல் மெஹ்தா இயக்கத்தில் 2016 ல் இத்திரைப்படம் வெளியானது.

 

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மராத்தி இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றிய ராமச்சந்திர சிரஸ்-ன் உண்மைக்கதையின் தழுவல் இத்திரைப்படம். ராமச்சந்திர சிரஸ் மராத்தியில் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். “Paya Khalchi Hirawal”   (Grass under my feet) என்ற கவிதைத் தொகுப்பிற்காக 2002 ம் ஆண்டு மஹாராஷ்ட்ர அரசின் சாஹித்ய பரிஷத் இலக்கிய விருது பெற்றவர். 2010ல் இவர் அலிகார் பல்கலையின் ‘நவீன இந்திய மொழிகள்’ துறையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவிருந்த நிலையில், இவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றார். 2010 ஏப்ரல் ஒன்றாம் தேதி இவருக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது. ஏப்ரல் ஏழாம் நாள் மரணமடைந்தார். இவரது மரணம் தற்கொலை என்றும் கொலை என்றும் சில முரணான தகவல்களுண்டு. இவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியாக எடுக்கப்பட்ட அற்புதமான திரைப்படம் ‘அலிகார்’. இத்திரைப்படத்தை தங்கள் மூலம் அறிவுலகினரின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக இக்கடித்த்தை எழுதுகிறேன்.

என்றும் அன்புடன்,

ஆனந்த்.

The locked door – The life and death of Dr. Srinivas Ramchandra Siras | Rishi Majumder

 

அன்புள்ள ஜெயமோகன் ஐயாவுக்கு,

மிக்க நன்றி.  உண்மையில் என் கடிதத்தை எழுதி அனுப்பிய பின்னர்  இதை அனுப்பியிருக்க கூடாதோ என்று கூட யோசித்தேன்.

ஆம். எஸ்ஸின் நிலையும் என் நிலையும் வேறுவேறு என்று நன்கு அறிவேன்.  என் சிக்கல் என்னவென்றால் திருமண நச்சரிப்பால் பாலியலை மாத்திரமே சில நாட்களாக வெகுவாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது தான். வேறு விதத்தில் சொன்னால் அதைத்தவிர வேறெந்த கவலையும் எனக்கு இல்லை.

அதிகம் சடங்கு சம்பிரதாயத்தில் ஊறிய பின்னணியை கொண்டவன் என்பதால் தான் என்னால் இன்னொரு ஆணை நெருங்க முடியவில்லை. அதே காரணத்தால் தான் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை சிதைப்பதற்கும் அஞ்சினேன்.

அன்றாடத்துக்கு ஒவ்வாத எனது இருமையை வெறுத்ததும் அதனாலேயே.

உங்கள் பதிலை படித்த பின்னர் தெளிவடைந்து விட்டேன்.  கடினமாகத் தான் இருக்கும்.  இருந்தாலும் இயன்ற விரைவில் மீள்வேன். ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வேன். அப்படி அர்த்தப்படுத்திய பின்னர் உங்களை வந்து சந்திக்கிறேன்.

முதல் கடிதத்தில் என்னை நீங்கள் இனங்காணக்கூடாது என்ற தயக்கம் இருப்பதைச் சொன்னேன். இப்போது ஆசையாக இருக்கிறது, சாதித்த பின்னர் உங்களை சந்திக்கும் போது, அந்த வி நான் தான் என்று  நீங்கள் மட்டுமே கேட்கும் மொழியில் உங்களிடம் சொல்லி மகிழ வேண்டுமென்று.

உங்களுக்கு என் முதல் கடிதத்தை எழுதவும், அதன் மூலம் ஒரு தெளிவை பெற்றுக்கொள்ளவும் காரணமான நண்பர் எஸ்ஸிற்கு என் நன்றிகள். அவர் மேலுயர்க.

மிக்க நன்றி ஐயா.

மகிழ்வுடன்,

வி.

படைப்பு முகமும் பாலியல் முகமும்

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

ஒருபாலுறவின் உலகம்

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை

$
0
0

கண்டபடி வெயிலில் அலைந்து சோர்ந்து சென்னை சென்று அங்கிருந்து ஈரோட்டுக்குச் செல்லும்போது என்னால் விவாதப்பயிற்சிப் பட்டறையை நிகழ்த்த முடியுமா என்று ஐயமாக இருந்தது. உள்ளம் சுருங்கி ஒரு புள்ளியாக எங்கோ தத்தளித்துக்கொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு ஈரோட்டுக்கு சென்றேன். அந்தியூர் மணி, சந்திரசேகர் ஆகியோர் ரயில்நிலையம் வந்திருந்தார்கள். கிருஷ்ணனும் பின்னர் வந்தார்.

காரில் ஈரோட்டிலிருந்து பத்துகிமீ தொலைவில் இருந்த நண்பர் செந்திலின் திருமண மண்டபத்துக்கு சென்றோம். நவீன வசதிகள் கொண்ட விரிவான மண்டபம். மிகப்பெரிய திருமணங்களுக்கும் உகந்தது. நகருக்கு வெளியே என்பதனால் கார் நிறுத்த வசதிகளும் உண்டு. புதியதாக கட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக எங்களுக்கு இலவசமாக அவரால் அளிக்கப்பட்டது.

ராஜகோபாலன் ஜானகிராமன்

இரவே 30 பேர் வந்துவிட்டிருந்தார்கள். சிறிதுநேரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு பன்னிரண்டு மணிக்கு தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் ஆறுமணிக்கு எழுந்தபோது கல்யாணமண்டபக் கூடம் முழங்கிக்கொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டிருந்தார்கள். மொத்தம் பதிவுசெய்துகொண்டவர்கள் 150 பேர். மேற்கொண்டு நண்பர்களாக பத்துபேர். பெரிய கூட்டம்தான். விஷ்ணுபுரம் விவாத அரங்குகளைப்போலவே நிறைந்திருந்தது. பத்துமணிக்குள் அனைவரும் வந்துவிட்டனர். காலையுணவுக்குப்பின் அரங்குக்குச் சென்றோம்.

இந்த அரங்குக்கான முதல் விதை கிருஷ்ணன் போட்டது. ஏழாண்டுகளுக்கு முன்பு பயணத்தில் நான் ஏன் பெரும்பாலான விவாதங்களை தவிர்க்கிறேன் என்று என்னிடம் கேட்டார். நான் அது நித்யா குருகுலத்தில் பெற்றுக்கொண்ட பயிற்சி என்று மறுமொழி சொன்னேன். எது என் விவாதத்திற்குரிய கருத்து என்பதை நானே முடிவுசெய்வேன். எவருடன் விவாதிப்பது, எப்போது விவாதத்தை தொடங்குவது, எப்படி நிறுத்திக்கொள்வது என்பதை எப்போதுமே தெளிவாக வைத்திருக்கிறேன். தகுதியற்றவர்களுடனான விவாதங்களில் ஒருபோதும் இறங்குவதில்லை. தகுதியற்ற முறையில் ஆற்றப்படும் எதிர்வினைகளை வாசிப்பதோ கேட்பதோ இல்லை. விவாதநெறிகளில் அது முதன்மையானது.

அதேசமயம் நான் தத்துவவாதிகளுக்குரிய நிதானம் கொண்டவன் அல்ல,  கொஞ்சம் நிலையற்ற உணர்ச்சிகொண்ட எழுத்தாளன். ஆகவே இரட்டைக் கவனத்துடன் இருக்கிறேன். அதைக்கடந்தும் அவ்வப்போது செல்வதுண்டு. அப்போது உடனே பின்னெட்டு வைத்துவிடுவேன். இந்தப் பயிற்சியால்தான் இத்தனை வசைமழைகளுக்கு அப்பாலும் என் இயல்பான நேர்நிலை உள்ளம் குன்றாமல் நீடிக்கிறேன்.

ஒரு விவாதம் எப்படி நிகழவேண்டும் என்பதற்கான நித்யா குருகுலத்தின் முறைமைகளைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலான பழைய குருகுல முறைமைகளில் கடைப்பிடிக்கப்படும் வழிகள்தான் அவை. கூடவே ஊட்டி குருகுலத்திற்கு மேலைநாட்டு ஒழுங்கும் உண்டு, அதன் பங்கேற்பாளர்களில் பெரும்பாலானவர்கள் மேலைநாட்டினராக இருந்தனர் என்பதனால்.

ஊட்டி குருகுலத்தில் நிகழ்ந்துவரும் இலக்கியவிவாதங்களிலும் விஷ்ணுபுரம் அரங்குகளிலும் பெரும்பாலும் அந்நெறிகளைத்தான் கடைபிடிக்கிறோம். அவை கற்பிப்பவையாகவே இருக்கும், எந்நிலையிலும் கசப்பூட்டுவனவாக அமையாது. அதை ஒரு வகுப்பாக நிகழ்த்தினாலென்ன என்று கிருஷ்ணன் சொன்னார். இன்று உண்மையில் விவாதங்களே இல்லை. காழ்ப்பு நிறைந்த நக்கல்கள், வசைகள், திரித்தல்கள், உள்நோக்கம் கண்டடைதல்கள் போன்றவையே விவாதங்களாக நிகழ்கின்றன. ஆகவே எளியமுறையிலேனும் ஒரு பயிற்சி தேவைதான்.

ஆனால் ஒரு வகுப்பாக அதை நடத்தமுடியுமா என்னும் ஐயம் இருந்தது. ஆகவே அதை பல்வேறு தயக்கங்களுடன் ஒத்திப்போட்டுவந்தேன். ஏழாண்டுகளுக்குப்பின் இப்போது ஒரு கல்யாணமண்டபம் அகப்பட்டமையால் நடத்திவிடலாமென தீர்மானித்தோம். நிதி எப்போதுமே பெரிய பிரச்சினை. இலவச இடம் கிடைக்காமல் எதையுமே நிகழ்த்தமுடியாது. இங்கே பங்கெடுப்பவர்கள் செல்வந்தர்கள் அல்ல, கணிசமானவர்கள் மாணவர்கள். அத்துடன் அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாகவேண்டும்.

இந்த நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட வகையில் வடிவமைத்திருந்தோம். நண்பர் ராஜகோபாலன் சென்னையில் காப்பீட்டு ஊழியர்களுக்கான பயிற்சியாளராக பணியாற்றுபவர். நண்பர் செந்தில்குமார் தொழில்துறைப் பயிற்சியாளர், மற்றும் வினாடிவிடை நடத்துநர். இன்று முறையான விவாதம் ஓரளவேனும் நிகழ்ந்தேயாகவேண்டிய துறை சேவை மற்றும் தொழில்துறைதான். ஏனென்றால் அங்கே விளைவை எட்டியாகவேண்டும். நிதியும் நேரமும் வீணாகக்கூடாது. அந்தப்பயிற்சி வெளியே அறிவுலக விவாதங்களிலும், பொதுவான விவாதங்களிலும்கூட உதவிகரமானது.

முதல் அரங்கில் ராஜகோபாலன் ஒரு கருத்தை எப்படி முன்வைப்பது, எப்படி அதை வளர்த்தெடுப்பது என்னும் தலைப்பில் பேசினார். காணொளிகள், சிறு செய்முறைகள் ஆகியவற்றுடன் கலகலப்பான ஓர் அரங்காக அமைந்திருந்தது அது. செந்தில்குமார் ஒரு விவாதத்தை எப்படி நிகழ்த்துவது, அதில் உருவாகும் இடர்கள் என்னென்ன என்பதை காணொளிகள், செய்முறைகளுடன் விளக்கினார். இருவருமே தொழில்முறையாளர்கள். அதற்கான தெளிவான பேச்சும் உடல்மொழியும் கொண்டவர்கள். அரங்கை முழுக்கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்கள். மிகவிரிவான தயாரிப்பு இருந்தது.

உண்மையில் நான் அவர்கள் இருவரின் வகுப்புகளினால் உளம் தூண்டப்பட்டுதான் என் வகுப்பை நடத்தினேன். இதை விவாதத்திற்கான ஆரம்ப வகுப்பு, தர்க்கவியல் சார்ந்த தொடக்கப் பாடம் என்று வரையறுத்திருந்தோம். ஆகவே பங்குகொண்டவர்களுக்கு பெரும்பாலும் அவர்களுக்கு தெளிவற்று ஏற்கனவே தெரிந்திருப்பவையாகவே சொல்லப்பட்டவை இருக்கும். ஆனால் அவற்றை தெளிவாக வரையறை செய்துகொள்ள முடியும். அவற்றை விவாதங்களில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதேசமயம் சில கருத்துக்கள் மெல்லிய அதிர்வை அளித்து புதிய கோணத்தில் யோசிக்கவும் வைக்கும். அதை பின்னர் பலர் சொன்னார்கள்.

தர்க்கவியல்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை இன்று இணையத்திலேயே பெற முடியும். [சுட்டிகள் பின்னர் அளிக்கப்பட்டன.] ஆனால் தத்துவத்தின் அடிப்படைகளை நூல்வடிவில் வாசித்து புரிந்துகொள்ள முடியாது என்பது ஓர் நடைமுறை உண்மை. அவற்றை வகுப்பில் உதாரணங்கள் வழியாகக் கற்கவே முடியும். விவாதித்துத் தெளிவுகொள்வது மட்டுமே ஒரே வழி. அதற்கான அமைப்புக்கள் இங்கில்லை. ஆகவே இதை ஒழுங்குசெய்தோம்.

தத்துவத்தைக் கற்பதிலுள்ள இருவழிகளை பலர் உணர்ந்திருப்பதில்லை. தத்துவப்பாடம் என்பது முற்றிலும் வேறு. எந்தெந்த தத்துவமுறைகள் உள்ளன, அவற்றின் துணைப்பிரிவுகள் என்னென்ன, எந்தெந்த தத்துவஞானிகள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றிய கல்வி அது. கல்லூரிகளில் அதுவே கற்பிக்கப்படுகிறது. அது தகவலறிவை உருவாக்கும். ஆனால் தத்துவம்பற்றிய அறிவு தத்துவ அறிவு அல்ல.

[செந்தில்குமார் ]

தத்துவக்கல்வி பிரச்சினைகளை  ‘தத்துவப்படுத்துவதன்’ வழியாகவே தொடங்குகிறது. அதற்குரிய கருவியே தர்க்கம். தத்துவப்படுத்தி அதை விவாதித்து விரித்தெடுக்கவேண்டும். அதன் மிக எளியபிழைகள் ஆரம்பத்திலேயே களையப்பட்டாலொழிய தத்துவக்கல்வி வெறும் அறிவுப்பயிற்சியாக காலப்போக்கில் ஆணவச்செயல்பாடாக ஆகும். நித்யா குருகுலத்தின் விதிமுறைகளில் ஒன்று, சிரிக்காமல் கற்கும் தத்துவம் தத்துவமே அல்ல.

நான் பொதுவாக விவாதங்களின் வகைகள், அவற்றிலுள்ளஇடர்கள் எல்லைகள் ஆகியவற்றைப் பற்றி ஒரு வகுப்பை நடத்தினேன். விவாதங்களை வகைபிரித்துக்கொள்வதும் அதன் கூறுகள் என்னென்ன என எளிமையாக அறிந்துகொள்வதுமேகூட நாம் பேசுவதைப்பற்றிய மிகப்பெரிய தெளிவை அளிக்கும்.

அதன் பின்னர் மூன்றரை மணிநேரம் இரு அமர்வுகளாக பங்கேற்பாளர்களே இரு அணிகளாகப் பிரிந்து ஒருவரோடொருவர் விவாதித்தனர். அவ்விவாதத்தில் இருந்த பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு அவை முன்னர் அரங்கில் பேசப்பட்டன  என்பது நினைவுறுத்தப்பட்டது. இரண்டாவது அமர்வில் சட்டென்று விவாதம் பெரும்பாலான பிழைகளை கடந்துவிட்டிருந்தது வியப்பளித்தது. ஆனால் அனுபவம் கொண்டவரான செந்தில் மூன்றாவது அரங்கில் அவ்வாறு பெரிய வேறுபாடு தெரியாது. அதற்கு மீண்டும் பல வகுப்புகள் தேவையாகும் என்றார்.

அன்று இரவு பன்னிரண்டு மணிவரை பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் ஆறுமணிக்கு  ஒரு காலைநடை. அதன்பின் ஒன்பதுக்கே முதல் வகுப்பு. மேலைதர்க்கவியலின் அடிப்படைக் கொள்கைகள், பொதுவிவாதத்தில் உருவாகும் பிழைத்தர்க்கங்கள் [fallacies] பற்றி ஓர் அரங்கு. ஒவ்வொரு அரங்குக்குப் பின்னரும் ஒரு கேள்விபதில். பங்கேற்பாளர்களே விடைகளை எழுதி மதிப்பிட்டுக்கொள்ளலாம். இறுதியாக இந்திய நியாயவியல் பற்றிய எளிய அறிமுகம். பெரும்பாலும் முனி.நாராயணப் பிரசாத் அவர்களின் நியாயவியல் சார்ந்த நூலில் இருந்து. ஓர் அறிமுகநூல் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் காணொளிகளை போடலாமே, நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாமே என நண்பர்கள் கோரினர். மீண்டும் அந்தப் பிழையான புரிதல்தான் இதில் தெரிகிறது. வகுப்பு-செய்முறை- விவாதம் வழியாக வரும் கல்வி வேறு. அதை வாசித்தோ கேட்டோ பார்த்தோ ‘தெரிந்துகொள்வது’ முற்றிலும் வேறு. தெரிந்துகொள்வது வெறும் செய்திகளையே. தெரிந்துகொள்ள நூல்கள் குவிந்து கிடக்கின்றன. இணையத்திலேயே அறிமுகநூல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் தெரிந்துகொண்டவற்றையே புரிந்துகொள்ள இத்தகைய அமர்வுகள் தேவையாகின்றன.

நான் ஊட்டி குருகுலத்திற்குச் சென்றபின்னரே அவற்றை கற்றுக்கொண்டேன். அதற்கு முன் மேலைத்தர்க்கவியல் சார்ந்து ஒரு நூலை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன். நியாயவியல் சார்ந்து ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறேன். பின்னர் அதன் தெளிவான வடிவம் என் நூல் ஒன்றில் சேர்க்கப்பட்டது. ஆனால் நான் புரிந்துகொண்டது வகுப்புகளில்தான். நானே ஆற்றியபிழைகளை இன்னொருவர் – அன்புடன் – சுட்டிக்காட்டியபின்னரே அதை என்னால் காணமுடிந்தது.

இந்த அரங்கின் நோக்கம் ஒரு தொடக்கத்தை உருவாக்குவதே. இத்தகைய தத்துவ வகுப்புகள் உடனடியாக உருவாக்குவது சிந்தனைக் குழப்பங்களை. ஏனென்றால் நாம் எண்ணிவைத்தவை குலைந்துவிடுகின்றன. அந்தக்குழப்பம் என்பது ஆக்கபூர்வமானது. அது நம்மை சிந்தனைசெய்ய வைக்கிறது. அந்த வகுப்பிலேயே அதை தெளிவுபடுத்திக்கொண்டு திரும்ப இயலாது. அந்தக்குழப்பத்தை நாமே யோசித்து தெளிவடையும்போதுதான் உண்மையான புரிதல் நிகழ்கிறது. அந்தத் தொடக்கம் நிகழ்ந்திருக்குமென நினைக்கிறேன்.

விவாதங்கள் வீண்விவாதங்களாவது அவற்றில் நம் ஆணவம் கலக்கும்போது. கடைசிச்சொல்லை நாம் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கும்போது. சொல்லிவிட்டு விலகிவிடமுடியாதபோது. விவாதத்தை ஒரு பயிற்சியாக காண ஆரம்பிக்கும்போதே எங்கே விலகவேண்டும் என்றும் தெரிந்துவிடும். கொஞ்சம் விலகிநின்று நோக்கத்தெரிந்தாலே போதுமானது.

விழாவை ஈரோடு நண்பர்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள். நண்பர்கள் பாரி, மணவாளன், அந்தியூர் மணி, சந்திரசேகர், சிவா ஆகியோரின் உழைப்பால் இது நிகழ்ந்தது. செந்தில்குமாரின் மண்டபம் கிடைத்தமையால் குறைந்த செலவில் நடத்த முடிந்தது. எல்லாவகையிலும் உற்சாகமான பயனுள்ள சந்திப்பு.

 

நிகழ்ச்சி மதிய உணவுடன் முடிந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றனர். சும்மா அமர்ந்து வழக்கமான கேலிகிண்டல்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். மாலை ஐந்து மணிக்குக் கிளம்பி அருகிலிருந்த வெள்ளோடு பறவைச்சரணாலயம் சென்று கதிரணைதலை பார்த்தோம். பின்னர் ஈரோடு. நான் நாகர்கோயில் ரயிலில் எட்டரை மணிக்கு ஊர் திரும்பினேன். விஷ்ணுபுரம் விழா முடிந்து வீடு திரும்பும்போது உருவாகும் இனிய சோர்வு எஞ்சியிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவை கட்டண உரை

$
0
0

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற  21-4-2019  ஞாயிறு  மாலை 6  முதல் 8.15 வரை தேநீர்க் இடைவேளையுடன்  இரு பகுதிகளாக  ‘வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ என்கிற தலைப்பில்  ஜெயமோகன்  உரை   நிகழ்த்துகிறார்.   .

 

இக்கூட்டத்திற்கு வர விரும்புவோர் கிழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- செலுத்தி உங்கள்

 

பெயர்:

 

தற்போதைய ஊர் :

 

வயது :

 

தொழில் :

 

தொலைபேசி :

 

மின்னஞ்சல் :

 

 

ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல்  இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும்.  உங்களது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள்  சுமார்  முன்னதாகவே வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

ஜி.எஸ்.வி.நவீன்

 

தொலைபேசி : 74023 89276

navingssv@gmail.com

navingssv@gmail.com

 

Account details :

Account Number: 50100028676498

Name: Navin G

IFSC Code: HDFC0000354

Branch: Sarjapur Road

 

UPI ID: gssvnavin@okhdfcbank

 

இடம் : சேம்பர் ஹால், இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரி,

சேம்பர் டவர்ஸ்,

8/732 அவினாசி ரோடு, கோவை-641018.

 

நாள் & நேரம் : 21-4-2019 ஞாயிறு, மாலை சரியாக 6. 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16971 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>