Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17093 articles
Browse latest View live

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–31

$
0
0

பகுதி நான்கு : அலைமீள்கை – 14

நான் சிந்துவின் வழியாக வடபுலம் சென்று இமையமலையின் அடிவாரத்தில் பருஷ்னி நிகர்நிலத்தை தொடும் இடத்தில் அமைந்திருந்த காட்டில் கிருதவர்மன் தங்கியிருந்த குருநிலைக்கு ஏழு நாட்களுக்குப் பின் சென்றுசேர்ந்தேன். அங்கே இருந்த முனிவர்கள் எவரென்று கிளம்பும்போது நான் அறிந்திருக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்த செய்திகள் அனைத்தும் குழப்பமாகவே இருந்தன. அது விஸ்வாமித்ரரின் குருநிலை என்று அங்கு சென்ற பின்னரே அறிந்தேன். விஸ்வாமித்ரர் குறித்து துவாரகையில் அச்சமும் குழப்பங்களும் இருந்தன. அவர் ஷத்ரியர்களின் தலைமுனிவர், அந்தணர்களுக்கு எதிரானவர். யாதவர் முதலியவர்களுக்கும் உகந்தவர் அல்ல.

ஆனால் அங்கே சென்ற என்னை அவர்கள் வரவேற்று அமரச்செய்தனர். அங்கிருந்த விஸ்வாமித்ரரின் முதன்மைக்குடிலுக்குச் சென்று அவரை சந்தித்தேன். அவர் சடைமகுடமும் நீண்ட தாடியும் மணிக்குண்டலங்கள் ஒளிரும் காதுகளும் கொண்டிருந்தார். அவர்களுக்கு படைக்கலம் ஏந்தும் நெறி உண்டு. அந்தக் குடிலுக்குள் சுவர்களில் வாள்களும் வேல்களும் மழுக்களும் விற்களும் தொங்கின. அவர் புலித்தோல் விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்திருந்தார். புலித்தோல் ஆடை அணிந்திருந்தார். நான் அவரை வணங்கி கிருதவர்மனை சந்திக்கும்பொருட்டு வந்திருப்பதாக சொன்னேன்.

அவர் எவ்வுணர்வையும் காட்டவில்லை. “யாதவரே, ஓராண்டுக்கு முன்பு இங்கு வந்தவர் கிருதவர்மன் என நான் அறிந்திருக்கவில்லை. வெந்து உருகிய உடலுடன் வந்துநின்று இங்கே தங்கவிழைவதாகச் சொன்னார். இது குருநிலை, இங்கு நீங்கள் தங்குவதற்கான தகுதி என்ன என்று கேட்டேன். நான் மகாருத்ரனுக்கு அணுக்கமானவன், அதை நீங்கள் உசாவி அறிந்துகொள்ளலாம் என்றார். எனில் இங்கிருக்கும் மகாருத்ரரின் ஆலயத்தின் தீப்பந்தத்தை தொடுக என்றேன். மகாருத்ர உபாசனை கொண்டவர்களின் வெறுங்கையில் பந்தத்தின் தழல் எரியும். அவர் அந்தத் தழலை தன் கையில் நீர் என அள்ளி எடுத்தார். மலரிதழ் என கைகளில் நிறுத்திக் காட்டினார். மகாருத்ரரே, இங்கு தங்குக என்று அழைத்தோம்.”

“அவருக்கு தனிக்குடில் வேண்டும் என்றும், எந்த மானுடரும் அவரை காணலாகாது என்றும் சொன்னார். ஆகவே இங்குள்ள புறங்காட்டில் ஓடையருகே சிறுகுடில் ஒன்றை அவருக்கு அமைத்துக்கொடுத்தோம். அங்கு சென்றவர் இன்றுவரை தன்னை வெளிக்காட்டவில்லை. அவருக்கான உணவு நாளுக்கு ஒருமுறை அந்த ஓடைக்கரையில் கொண்டுசென்று வைக்கப்படுகிறது. அதை வைக்கும் இளைய மாணவர்கூட அவரை பார்த்ததில்லை. சில நாட்களுக்கு முன்புதான் துவாரகையில் இருந்து வந்த ஓர் ஒற்றனிடமிருந்து என் மாணவர்கள் அவர் கிருதவர்மன் என்று அறிந்தனர். என்னிடம் அவர்கள் அதை சொன்னபோது நான் அடையாளங்களைக் கொண்டு அதை உறுதிசெய்துகொண்டேன். அவர் உருத்திரவழி தேர்ந்தவர் என அறியேன்” என்றார்.

“ஆம், அவரும் அவர் நண்பரும் ஆசிரியருமான அஸ்வத்தாமனும் மகாருத்ர உபாசனையை மேற்கொண்டவர்கள் என்று நான் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு எரிவிழி அண்ணல் எழுந்த குரலுக்கு அணைவார் என்று சூதர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன்” என்று நான் சொன்னேன். “குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் துரோணரின் மைந்தர் மகாருத்ரனாகவே எழுந்தார். அவரை வெல்ல அர்ஜுனனால் இயலவில்லை. ஏழுநிலை எரி எழுந்து சூழ்ந்த பின்னரும் கிருதவர்மனை அழிக்க முடியவில்லை. அவருள் எரிந்த ருத்ரனின் அனல் அனலுக்கு அனல்நின்று அவரைக் காத்தது என்கிறார்கள்” என்றேன்.

“அவரை நாங்கள் சந்திப்பதில்லை. அவர் எங்களிடம் கோரியது அது. ஆகவே அவரை நீர் சந்திக்க எந்த ஒருக்கத்தையும் நாங்கள் செய்ய முடியாது. நீர் உமது விழைவுப்படி சென்று அவரை சந்திக்க முடியுமென்றால் சந்திக்கலாம்” என்றார் விஸ்வாமித்ரர். “ஆனால் கருதுக, சிவருத்ர நோன்பு கொண்டவர்கள் முக்கண் திறக்கும் ஆற்றல் கொண்டவர்கள்! முனிந்தால் அழித்து நீறாக்க அவர்களால் இயலும்.” நான் “நான் அவர் குடியில் பிறந்தவன். அவருடைய குருதி. அதை நம்பி அவர் முன் செல்கிறேன்” என்றேன். “அன்றி அவரால் அழிக்கப்படுவேன் என்றால் அதை என் நல்லூழ் என்றே கருதுவேன்.” விஸ்வாமித்ரர் “ஆகுக!” என என்னை வாழ்த்தி ஒப்புதல் அளித்தார்.

நான் புறக்காட்டுக்குள் நுழைந்தேன். என்னை அழைத்துச்சென்ற மாணவன் அந்த ஓடைக்கரை வந்ததும் நின்று “நீங்களே இனிமேல் செல்லவேண்டியதுதான், யாதவரே” என்றான். அவனை “செல்க!” என்று அனுப்பிவிட்டு நான் ஓடையை கடந்தேன். நான் அச்சம்கொள்ளவில்லை. ஏன் என்று இப்போது எண்ணினாலும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குட்டி நாய் பெரிய நாயை நம்பிக்கையுடன் அணுகுவதுபோல அவரை நோக்கி சென்றேன். அவர் பகல் முழுக்க தன் குடிலின் இருளுக்குள் இருப்பது வழக்கம். இரவில்தான் வெளியே சென்று காட்டில் உலாவினார். ஆகவே நான் குடில்நோக்கி கூப்பிய கைகளுடன் மெல்லடி எடுத்துவைத்து சென்றேன்.

குடில்முற்றத்தை நான் அடைந்தபோது “அங்கேயே நில்” என்று குடிலுக்குள்ளிருந்து அவர் குரல் கொடுத்தார். என்னை அவர் தொலைவிலேயே பார்த்துவிட்டிருந்தார், நான் யாதவன் என்றும் அறிந்துவிட்டார் என்று தோன்றியது. நான் குடிலுக்கு வெளியே முற்றத்தில் நின்றேன். அரையிருள் படிந்த குடிலுக்குள் அமர்ந்து கதவின் விளிம்பினூடாக என்னை நோக்கியபடி அவர் “எதன் பொருட்டு வந்தாய்?” என்றார். நான் யார் என்று கேட்கவில்லை. எனில் நான் எவர் என அவர் அறிவார். அது எனக்கு நம்பிக்கை அளித்தது. தலைதாழ்த்தி வணங்கி “அருள்க, மூதாதையே!” என்றேன். அவர் உறுமலோசை எழுப்பினார்.

நான் அவர் முகத்தை பார்க்க முயன்றேன். அது என் பார்வை வட்டத்திற்கு அப்பால் இருந்தது. இருளில் ஒரு மெல்லிய நிழல் தீற்றலென தெரிந்தது அவர் முகத்தின் ஒரு கீற்று. ஒரு விழி. அந்தத் துளிக் காட்சியிலிருந்து ஒரு முழு வடிவை உருவாக்கிக்கொள்ள முயன்றேன். எவ்வண்ணமேனும் மானுடரின் உடல் போன்ற ஒன்றை அங்கு உருவாக்கிக்கொள்ளாமல் என்னால் உரையாட முடியாது. நான் நெடுநாட்களுக்கு முன் அவரை பார்த்திருந்தேன். அன்று உளம்தெளியாச் சிறுவன். அதன்பின் சூதர்கள் அவரைப்பற்றி பாடியதைத்தான் கேட்டிருக்கிறேன். பதினெட்டு வீரகதைப் பாடல்களின் பாட்டுடைத்தலைவன் அவரே. துவாரகையில் அவரைப்பற்றிய பாடல்கள் விருஷ்ணிகளின் அவைகளில் இருந்து விலக்கப்படவில்லை. யாதவப் பெருவீரர் எழுவர் எனும்போது அவரும் எப்போதுமே சொல்லப்பட்டார்.

அப்பாடல்களில் அவருடைய தோற்றம் பற்றி அவர்கள் ஒரு சொல்லுருவை அளித்திருந்தார்கள். ஆனால் அது சூதர்கள் அனைத்து வீரர்களுக்கும் அளிக்கும் ஒரு பொதுச்சித்திரம் மட்டுமே. உயர்ந்த தோள்கள், விரிந்த நெஞ்சு, நீண்ட கைகள், ஒளிமிக்க கண்கள். மூத்த யானை என தலை உயர்ந்தவர். அச்சொற்களால் எப்பயனும் இல்லை. ஏனெனில் அவை மீள மீளச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வெறும் சொற்களென மாறிவிட்டிருந்தன. அவற்றைக்கொண்டு கற்பனையை எழுப்பியபோது அர்ஜுனனும், கர்ணனும், அபிமன்யுவுமெல்லாம்தான் தோன்றினார்கள். அவர்கள் அல்ல இவர் என்று அறிந்திருந்ததனால் அந்த உளச்சித்திரம் உடனே அழிந்தது. நான் அவருக்கு ஒரு முகம் கொடுக்க முயன்றேன். ஆனால் அப்போது எழுந்த முகம் அர்ஜுனனும் கர்ணனும் அபிமன்யுவும் கலந்து உருவான ஒன்றே என்று கண்டேன்.

அப்போது எனக்கு தேவையாக இருந்தது சற்றேனும் கிருதவர்மன் என்று நான் எண்ணிக்கொள்ள வேண்டிய ஒரு முகம். நான் அவருடைய முந்தைய பழைய முகத்தை நினைவுகூர முயன்றேன். அது சற்றும் நினைவில் எழவில்லை. அப்போது நான் சிறுவனாக இருந்தேன். அவரை ஒரு தேரில் கட்டி தெருவினூடாக இழுத்து வந்ததை நான் பார்த்ததாகவே என்றும் உணர்ந்திருந்தேன். அவர் அடைந்த வஞ்சம் அவர் உரைத்த சூளுரை அனைத்தும் அருகிருந்து கண்டதுபோல. ஆனால் உண்மையில் நான் காணவில்லை. ஒரு மாளிகை முகப்பில் நின்று அந்தத் தேர் வருவதை நான் கண்டது உண்மை. அதில் அவர் முகம் தெளிந்ததும் உண்மை. ஆனால் அது அக்கணமே என்னுள்ளிருந்து மறைந்தும்விட்டது. பின்னர் சூதர்களின் பாடல்களினூடாக, வெவ்வேறு கதைகளினூடாக அது எனக்கு அளிக்கப்பட்டு என்னால் கற்பனையில் நிலைநிறுத்தப்பட்டது.

நான் அவரை எவ்வண்ணம் பார்ப்பது என்று எண்ணினேன். எங்கிருக்கிறார்? அவரை அந்த சிறுதீற்றலிலிருந்து எப்படி உருவாக்கிக்கொள்வது? இருண்ட சுனையின் கரிய நீருக்குள் அசையாமல் நின்றிருக்கும் ஒரு மீன்போல அவருடைய ஒரு கண் மட்டும் அங்கே தெரிந்துகொண்டிருந்தது. நான் அதை பார்க்க முயலும்தோறும் எனது சித்தம் மயங்கியது. அந்த அலைக்கழிவிலேயே அவரை சந்தித்தபோது எழுந்த அனைத்து ஊக்கத்தையும் இழந்தேன். அவரிடம் சொல்ல வேண்டிய சொற்கள் அனைத்தையும் மறந்தேன். “சொல்க, எதன் பொருட்டு என்னை பார்க்க வந்தாய்?” என்று அவர் என்னை கேட்டார். அந்த ஒற்றைவிழியிலிருந்து என் விழியை விலக்கினேன். சுவரில் படிந்திருந்த ஒரு விரிசலை நோக்கினேன். அதில் ஒரு முகம் எழுந்தது. திடுக்கிட வைப்பதுபோல. மெய்யாகவே அங்கு ஒருவர் தோன்றியதுபோல. மேலும் சில கணங்களில் அவ்வுரு நன்கு தெளிந்தது. கூரிய கண்கள் கொண்ட முனிவரின் உருவம் அது.

அது உருவழிந்த உரு கொண்டிருந்தாலும் தன் உணர்வெழுச்சியாலேயே மானுடத்தன்மையை திரட்டிக்கொண்டது. அதை என்னால் பார்க்க முடிந்தது. அதிலிருந்து என் நோக்கை விலக்க முயன்றேன். பின்னர் அவ்வண்ணம் ஒரு நோக்கு இருப்பது நன்று, அதனுடன் என்னால் உரையாட முடியும் என்று கண்டுகொண்டேன். “தங்களை நேரில் கண்டு துவாரகைக்கு அழைக்க வந்தேன், மூதாதையே” என்றேன். “நான் இளைய யாதவராகிய கிருஷ்ணனின் மைந்தன். சத்யபாமையில் பிறந்த எட்டாமவனாகிய பிரதிபானு. குருதிவழி உடன்பிறப்பின் மைந்தன் நான் என்பதனால் தங்கள் மைந்தன் என என்னை கொள்க! தங்கள் அந்தகக் குடிபிறந்த சத்யபாமையின் மைந்தன் என்பதனால் என்னை உங்கள் கொடிவழி எனக் கொள்க!” என்றேன்.

அவர் முகம் மாறுவதை கண்டேன். “துவாரகையை விட்டு நெடுநாட்களாகிறது” என்றபோது குரலும் மென்மையாகிவிட்டிருந்தது. “ஆம், தாங்கள் தங்களை துவாரகையின் முதன்மை எதிரியென அறிவித்துவிட்டுச் சென்றவர். துவாரகையை அழிப்பது தாங்கள் கொண்ட வஞ்சம் என்றும் அறிவேன். தாங்கள் என் தந்தையை தோல்வியுறச் செய்வதை வாழ்வின் இறுதி இலக்கெனக் கொண்டவர். இன்றும் அவ்விலக்கை உள்ளே வைத்திருப்பவர்” என்றேன். “ஆம், அது என் வாழ்வு” என்றார் . “இத்தருணத்தில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், தந்தை அங்கில்லை, நகரம் முற்றாக கைவிடப்பட்டிருக்கிறது, அவர் முன்னரே மும்முறை தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். தன் மூத்தவரால், தன் மைந்தரால், தன் குடியால். மீண்டும் அவரை நீங்கள் வெல்ல வேண்டியிருக்கும்” என்றேன்.

“ஆம், அவர் தன்னைத்தானே தோற்கடித்திருக்கிறார்” என்று கூறி மெல்ல நகைத்தார். “அவர் தன்னெதிரே அவர் நம்பிய அனைத்தும் வீழ்ந்து அழிவதை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் இயற்றிய அனைத்திற்கும் ஈடென அவர் அளித்துக்கொண்டிருப்பது அது. அவ்வண்ணம் அளிக்காது எவரும் இங்கிருந்து செல்ல இயலாது. மண்ணில் மானுட வடிவென தெய்வம் எழுந்தாலும் அதுவே நெறி.” அவரது உள்ளம் என்ன என்பதை உணர்ந்துகொண்டேன். அந்தச் சிரிப்பில் இருந்தது சற்றும் குறையாத யாதவ வஞ்சம். “அரசே, தாங்கள் என்னுடன் துவாரகைக்கு எழுந்தருள வேண்டும். எந்தையின் தோல்வியை முழுமைப்படுத்தும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது” என்றேன்.

குரல் கூர்கொள்ள “அங்கு வந்து உங்கள் மூன்று தரப்பையும் முற்றழித்தால்தான் அத்தோல்வி முழுமையடையும்” என்று அவர் கூறினார். “ஆம், நீங்கள் வராவிடில் அதில் ஒரு தரப்பு வெல்லும். அது ஷத்ரியர்கள் தரப்பு” என்றேன். அவர் அமைதியாக இருந்தார். என் சொல் சென்று தைத்துள்ளது என உணர்ந்தேன். “அதை பாரதவர்ஷம் முழுதிலுமிருந்து பிற ஷத்ரியர்கள் அங்கு நிலைநிறுத்துவார்கள்” என்றேன். “அது நன்று. ஷத்ரியர்கள் நிலைகொள்வது என்பது இளைய யாதவரின் தோல்விதான்” என்றார். நான் மிகமிக நுட்பமாக சொல்லெடுத்தேன். “நான் கூற் விழைவதை என்னால் சரியாக சொல்ல இயலவில்லை, தந்தையே. நான் மிக இளையோன். இவ்விதம் எண்ணி நோக்குக!” என்றேன்.

அச்சொற்களை சொல்லும்போதே என்னுள் சொல் கோத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அத்தருணம் வரை அங்கு எதை சொல்லவேண்டும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. எவ்வாறு உரைப்பதென்றும் தெரியவில்லை. விழுந்துகொண்டிருப்பவன் கைகளால் துழாவி அகப்பட்ட அனைத்தையும் பற்றிக்கொள்வதுபோல் பற்றிக்கொண்டேன். எப்போதும் உயிரின் பதைப்பு உளம் அறிந்ததைவிட, அறிவு அறிந்ததைவிட மேலும் அறிந்திருக்கிறது. வலுவாக ஒன்றை பற்றிக்கொண்டேன். “நீங்கள் வந்தால் யாதவர்களின் ஆற்றல் நிகர்நிலை அடையும். நிகர்நிலையடைந்த ஆற்றலே துவாரகையை அழிக்கும்” என்றேன்.

“நீங்கள் வராவிடில் ஷத்ரியர்கள் போர்முகம் கொள்வார்கள். இன்னும் சில நாட்களில் ருக்மி தன் பெரும்படையுடன் துவாரகைக்குள் நுழைவார். மலர் கொய்வதுபோல் துவாரகையை எடுத்து தன் மருகருக்கு அளிப்பார். பிரத்யும்னனை முடிசூட்டிவிட்டு அவர் செல்வார்” என்றேன். “பிரத்யும்னனை எண்ணுக, அவர் ருக்மிணியின் மைந்தர்! ஷத்ரியக் குருதி கொண்டவர். ருக்மியின் மருகர். ஆகவே ஷத்ரியர்கள் அவரை கொண்டாடுவார்கள். அவரை நிலைநிறுத்துவார்கள்.” அவர் “ஆம்” என்றார். நான் தொடர்ந்தேன். “ஆனால் பிரத்யும்னன் அசுரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் அணுக்கமானவரும்கூட. சம்பராசுரரின், வஜ்ரநாபரின் மகள்களை மணந்தவர். தன் மகனுக்கு பாணாசுரரின் மகளை மணம்முடித்தவர்.”

“இன்று அவர்கள் எதிர்தரப்பில் இருக்கலாம், முரண் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களின் தேவை என்ன, அதை எவ்வண்ணம் அவர்களுக்கு அளிப்பது என்பதை அவர் கற்றுக்கொண்டாரென்றால் மிக விரைவிலேயே அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்வார். அவ்வண்ணம் நிகழ்ந்திருக்கிறது. அரசுசூழ்தலென்பது அறுதியாக எவருக்கு என்ன அளிக்கப்படுகிறது, நிகராக என்ன பெறப்படுகிறது என்பதை சார்ந்தது. அசுரர்கள் அவரை ஆதரிப்பார்கள். அவரை ஆற்றல் மிக்க மன்னராக அரியணையில் அமரச்செய்வார்கள். ஐயமே வேண்டியதில்லை” என்றேன். “பிரத்யும்னன் துவாரகையின் அரசர் ஆனார் என்றால் ஆயிரம் ஆண்டுக்காலம் அங்கே அவருடைய கோல் நின்றிருக்கும்.” கிருதவர்மன் ஒருகணம் கழித்து “மெய்” என்றார்.

“மூதாதையே, எண்ணிப்பாருங்கள்! அவ்வாறு அசுரர்கள் பிரத்யும்னனுடன் ஒத்துப் போகும்போது சாம்பனுக்கு வேறு வழியில்லை. அசுரர்கள் ஷத்ரியர்களை முரண்பட்டு எதிர்த்து நின்றிருக்கும் வரை மட்டுமே தனிக்கோல் கொண்டு சாம்பன் அங்கே அமர்ந்திருக்க இயலும். ஆகவே ஒத்திசைவு நிகழுமென்றால் சாம்பன் பிரத்யும்னனின் கீழ் படைகொண்டு நிற்பார். அவருக்கும் ஏதேனும் அளிக்கப்படும். பெரும்பாலும் இணை அரசொன்று சற்று அப்பால் அளிக்கப்பட வாய்ப்புண்டு. அவ்வண்ணம் அவர்கள் ஒருங்கிணைந்தால் அதன் பிறகு யாதவர்களின் இடமென்ன?” என்றேன். “ஒவ்வொன்றும் அதை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் அதற்கான வாய்ப்புகள் பெருகிக்கொண்டிருக்கின்றன.”

“நீங்கள் வந்துவிடுவீர்கள் என்ற ஐயம் எழுந்ததுமே இருதரப்பும் பதற்றம் கொண்டுவிட்டனர். உங்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் உங்களை கண்டடைந்தவர்கள் அவர்களே. அவர்கள் ஒருங்கிணைந்தால் யாதவர்கள் அங்கே இல்லை என்றுதான் பொருள். அவர்கள் யானை முன் சிறு முயலென்றாகிவிடுவார்கள்” என்றேன். “இன்றுவரை அங்கே ஆற்றலில் முத்தரப்பிற்கும் நிகர்நிலை இருப்பதனால்தான் போர் எழாமல் இருக்கிறது. அழிவு நிகழாமல் இருக்கிறது. எங்கும் ஒரு தரப்பு மிகச் சிறிதாகுமெனில் அதன் பிறகு அங்கு தோல்விதான் நிகழும், அழிவு அல்ல. வென்ற தரப்பு தன்னை மேலும் திரட்டிக்கொள்ள முடியும். வெற்றி அவர்களுக்கு என அறிந்தபின் தோற்பவர்கள் தங்களை காத்துக்கொள்ளும்பொருட்டு அடங்கி அவர்கள் அளிப்பதை பெற்றுக்கொள்வார்கள்.”

“எனினும் அது ஷத்ரியர்களின் வெற்றி அல்ல” என்றேன். அவர் அடைந்த எண்ணத்தை உடனே அடையாளம் கண்டு அதை தொட்டு தொடர்ந்தேன். “அது ஷத்ரியர்களின் வெற்றிதான், அதை நான் மறுக்கவில்லை. பிரத்யும்னன் தான் ஷத்ரியக்குருதி கொண்டவர் என்பதையே பிற ஷத்ரியர்களிடம் காட்டுவார். அவரை ஆதரித்தெழுபவர்கள் அனைவருமே இளைய யாதவர் மேல் வஞ்சம் கொண்ட ஷத்ரியர்களாகவே இருப்பார்கள். இன்று பாரதவர்ஷத்தில் ஷத்ரிய அரசுகள் அனைத்தும் ஆற்றல் இழந்துள்ளன. அதனால் எழுந்து நிலைகொள்ள இயல்பவர் எவரோ அவர் அனைத்து ஷத்ரிய அரசுகளையும் இணைக்கவேண்டும் என அனைவரும் விழைகிறார்கள். அவருடன் ஒத்துழைத்து எவ்வண்ணமேனும் ஷத்ரிய அரசு ஒன்றை எழுப்பி நிறுத்திவிடவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். மகதத்தை, கலிங்கத்தை, வங்கத்தை, காமரூபத்தை இன்று எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். முளைக்க வாய்ப்புள்ள ஒவ்வொரு விதைக்கும் நீரூற்றப்படுகிறது. அவ்வாறே துவாரகைக்கும் ஊற்றப்படும். துவாரகை எழும், பிரத்யும்னன் வெல்ல முடியாதவர் ஆவார். அசுரரும் நிஷாதரும் ஆதரிக்கும் ஒரு ஷத்ரியரை எவராலும் வெல்ல இயலாது.”

“ஆனால் அவர் இளைய யாதவருக்கு எதிரான ஷத்ரிய அரசர் என்ற தோற்றத்தை அவர் ஷத்ரியர்கள் நடுவே மட்டும் கொடுப்பார். இல்லையேல் அவரால் அரசமைக்க இயலாது. ஆனால் ஓர் அரசர் என்ற நிலையில் எண்ணிப்பாருங்கள், இளைய யாதவரை அவர் துறப்பாரா? அவருக்கு படை வல்லமையை வெளியிலிருந்து ஷத்ரியர்கள் அளிக்கலாம். அரியணையை வென்று அவருக்கு அளிக்கலாம். ஆனால் இன்றும் நாளையும் எந்நாளும் குடிகளென அவருக்கு அமையப்போகிறவர்கள் எவர்? அவர்கள் யாதவர்களே. யாதவ நிலத்தை அவர் ஆளப்போகிறார். ஷத்ரியராக அரசர்களுக்கு தன்னை காட்டிக்கொள்ளும் அவர் குடியினராக தன்னை யாதவர் முன் காட்டியே ஆகவேண்டும். அவருடைய அன்னை யாதவப்பெண் அல்ல என்பது அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பு! அதை எவ்வண்ணம் ஈடுகட்டுவார்?”

“தன் தந்தை யாதவர் என்பதைக்கொண்டு!” என்று தொடர்ந்தேன். “ஆகவே தன் குருதிவழி இளைய யாதவருடையது என்பதை அவர் வலியுறுத்தியே தீரவேண்டும். தன் அரியணையில் ஆழ அமர்வது வரை அவர் அதை செய்யாமலிருக்கலாம். அதன் பின் தன்னை இளைய யாதவரின் மைந்தர் என்றே குடிகள் முன் முன்வைப்பார். ஏற்கெனவே எங்கள் மைந்தர் எண்பதின்மரில் இளைய யாதவரின் தோற்றம் மிக அணுக்கமாக இருப்பது அவரிடம் மட்டுமே” என்றேன். “ஆம்” என்று கிருதவர்மன் சொன்னார். அந்த ஒரு முனகலிலேயே நான் அவர் உள்ளத்தை புரிந்துகொண்டேன். பிரத்யும்னனிடம் எழும் தந்தையின் தோற்றம் அவரை ஒவ்வாமையை நோக்கி செலுத்துகிறது.

“பிரத்யும்னன் ஷத்ரியர் என்பது ஒன்றுதான் ஷத்ரியர்கள் அவரை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. ஆனால் கண் தெரியும் தோற்றம் என்பது எளிதாக மறுக்கக்கூடியதல்ல. அது மீள மீள அவர் எவர் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆகவே ஷத்ரியர் அவர்மேல் ஐயம் கொள்வார்கள். அந்த ஐயத்தை எதிர்கொள்ள தன் குடிகள் மேல் முழு செல்வாக்கை அடைவதே பிரத்யும்னன் செய்யவேண்டியது. அதற்குரிய சிறந்த கருவி அவருடைய உடல். தந்தையை விழிக்குமுன் நிறுத்தும் தன் தோற்றம்.” நான் எனக்குள் புன்னகைத்தேன். “அத்தோற்றத்தை அவர் குடிகள் முன் முன்னிறுத்துவார். அதை முன்னிறுத்துவதற்கு எளிய வழி என்ன என்பதை எண்ணிப்பாருங்கள்.”

அவர் எண்ண சற்று இடம் கொடுத்து நான் மீண்டும் தொடர்ந்தேன். “அவர் தந்தையின் தெய்வத்தோற்றத்தை உருவாக்குவார். இன்றுள்ள முதிய தோற்றத்தை அல்ல, முடிசூடி துவாரகையை உருவாக்கியபோது இருந்த அந்த இளம் தோற்றத்தை. ஏனெனில் அத்தோற்றத்திற்கு இணையானது பிரத்யும்னனின் தோற்றம். எந்த அரசரும் தெய்வத்தின் தோற்றத்தில் தன்னை அமைத்துக்கொள்வார். தனக்குரிய தெய்வத்தை படைத்துக்கொள்வார். நாளடைவில் தன்னை தெய்வம் என்றாக்கிகொள்வார். இளைய யாதவரை தெய்வம் என்று நிலைநிறுத்தினால் பிரத்யும்னன் தெய்வவடிவம் கொண்ட அரசர். அதை எந்நிலையிலும் பிரத்யும்னன் தவிர்க்க முடியாது. அது மிகச்சிறந்த அரசியல் சூழ்ச்சி.”

“ஆகவே துவாரகையில் பிரத்யும்னன் அமர்ந்தால் இளைய யாதவருக்கு எங்கும் சிலைகள் அமையும். ஆலயங்களில் அவர் வழிபடப்படுவார். அவருடைய பிறந்த நாளும் முடிசூட்டு நாளும் பெருவிழவென கொண்டாடப்படும். அவரைப் பற்றிய காவியங்கள் எழுதப்படும். பாடல்கள் புனைந்து பாடப்படும். கூத்துகள் நடக்கும். அவ்வண்ணம் இளைய யாதவரை தெய்வமெனக்கொண்டு நிலைநிறுத்தி அதன் நீட்சியென தன்னை காட்டிக்கொள்வார். தன் மைந்தரையும் அவ்வண்ணமே நிலைநிறுத்துவார். அவ்வாறுதான் துவாரகையில் எந்தை மீண்டும் பேருருக்கொண்டு எழப்போகிறார். இதுவே நடக்கும், ஐயம் வேண்டியதில்லை” என்றேன். “நீங்கள் இங்கு அமர்ந்து செயலொழிந்தால் எந்தையை அவருடைய காலத்திரையிலிருந்து மீட்டு தெய்வமென்றாக்கி நிலைநிறுத்தும் அரசியல்சூழ்ச்சியொன்றுக்கு வழிகோலுகிறீர்கள் என்றே பொருள்.”

தொடர்புடைய பதிவுகள்


ஆட்டக்கதை,குருவி- கடிதங்கள்

$
0
0

ஆட்டக்கதை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

‘ஆட்டக்கதை’ என்றால் கதைகளிக்கான நாடகவடிவம்- சரிதானே? விக்கியில் சிலவிஷயங்களைச் சரிபார்த்துக்கொண்டேன்.

 

ஒரு முழுநாவலுக்கான கதை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுக்கால முழுவாழ்க்கை. அதிலுள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளும் எல்லா சரிவுகளும் மகிழ்ச்சிகளும் பதிவாகியிருக்கின்றன. கூடவே கதகளி என்ற கலையின் மறுபிறப்பும், அதன் உள்விவகாரங்களும். ஒரு கதைக்குள் இத்தனை விரிவான வாழ்க்கை என்பது ஆச்சரியம்தான்

 

இரட்டைப்பெண்களில் ஒருத்தியை மணந்தவனின் அலைக்கழிப்பு என்பது ஆச்சரியமான கரு. இதுவரை தமிழில் எவரும் இந்தவகையில்கூட ஒரு கதை எழுதியதில்லை என நினைக்கிறேன் [இந்த வரிசையில் வந்துகொண்டிருக்கும் கதைகளில் அனேகமாக எல்லாமே புத்தம்புதிய கருக்கள்தான்]

 

அவன் அவளை வெறும் உடலாக பார்க்கிறான். ஆகவேதான் அதேபோன்ற இன்னொரு உடல் அப்படி அலைக்கழியச் செய்கிறது. ஆனால் அவள் ஒரு பெர்ஸனாலிட்டியாக மாறியதுமே அந்த அலைக்கழிப்பு இல்லாமலாகிவிடுகிறது. அவளை unique ஆக மாற்றிக்கொள்கிறான். அவள் வேறு யாருமல்ல, அவளேதான். அவளுக்கு சமானமாக யாருமில்லை

 

ஆனால் அந்த கிளைமாக்ஸ்தான் அபாரம். அவளுடைய பழைய படங்களைப் பார்க்கையில் அந்த unique அம்சம் என்பது போய் கன்னித்தன்மை என்ற கள்ளமில்லாத விஷயத்தின் வடிவங்களாக ஆகிவிடுகிறார்கள்

 

ராமச்சந்திரன்

 

 

அன்புள்ள ஜெ,

’ஆட்டக்கதை’ வாசித்தேன். நுட்பங்கள் அடர்ந்த கதை. நுட்பங்களை நோக்கும்போது கதையின் முழுமை கிடைப்பதில்லை. முழுமையை அப்ஸ்டிராக்ட் செய்து எடுக்கப்போனால் நுட்பங்கள் மாயமாகிவிடுகின்றன.

கதையின் மைய இழையின் snapshot தான் சரஸ்வதி மற்றும் லக்‌ஷ்மி இருவரின் புகைப்படம் என்று நான் நினைக்கிறேன். அந்த புகைப்படத்தில் ஸ்ரீகிருஷ்ணபுரம் ராஜசேகரன் நாயருக்கு இருவரும் ஒன்றாகத் தெரிகிறார்கள்.  முதலில் ஒன்றாக தெரியும் ஒரு கோடு ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து சிறிது தூரம் தனித்தனியாக ஓடி மீண்டும் ஒன்றுடன் ஒன்று இணைவது போன்ற ஒரு வடிவம் கதையில் உள்ளது.  கோடு முதலில் பிரியும்போது அவரின் வாழ்க்கையில் ஒரு கடந்துசெல்லல் நிகழ்கிறது. மீண்டும் இணையும்போது இன்னொரு கடந்துசெல்லல்.

எஸ் ஆர் என்னின் இளவயது பகற்கனவுகள் கலையும்போது சரஸ்வதி-லக்‌ஷ்மி ஒற்றைப்பிம்பம் இரண்டாகிறது. சரஸ்வதியின் தனித்தன்மைகள் தெரிகின்றன. காதல் ரசம்தான். ஆனால் அவர் மனம் அப்போதும் ஒருபுறம் எடையேற்றப்பட்ட தராசு தட்டு போலத்தான் உள்ளது. இன்னொரு தட்டில் அவர் எடைவைப்பது லக்‌ஷ்மியின் மீதான் வெறுப்பு. அருவருப்பு. பீபத்ஸம். தன் முதியவயதில் மீண்டும் அதையும் கடக்கும்போது இன்னொரு ஆழமான equilibrium நோக்கிச் செல்கிறார்.  நிறப்பிரிகை அடைந்த கதிர்கள்  முப்பட்டகம் வழியே பின்னோக்கிச்சென்று மீண்டும் ஒளியாவது போல ஒரு பிரகாசமான equilibrium அவரின் வாழ்கையிலும் நிகழ்கிறது.  கதகளியின் முழுமையும்  கலைஞனின் வாழ்க்கையின் முழுமையும் ஒன்றைஒன்று பிரதிபலிப்பது போல உள்ளது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ‘குரங்காட்டம்’ என்ற சொன்ன ஆணவக்காரியான சரஸ்வது ‘குரு சாபம்’ என்று சொல்லி அவரை காப்பது எப்படி நிகழ்கிறது?  இப்படி சரஸ்வதியின் கேரக்டர் ஆர்க் ஏன் அவளின் மொத்த வாழ்க்கையையே ஒரு சிலவரிகளில் சொல்லப்பட்டுவிடுகிறது. வெறிகொண்ட அன்னையாக இருந்த சரஸ்வதி மீண்டும் அவரிடம் வந்துச் சேரும் சித்திரமும் அவளுள் நிகழும் அக மாற்றங்களும் இவ்வளவுதான் மனித வாழ்க்கையா என்று அதிரச்செய்கிறது.

கடைசியில் ஸ்ரீகிருஷ்ணபுரம் ராஜசேகரன் நாயர் வெறுமையில் இருந்து மலர்வுக்கு செல்வது அபாரமான காட்சி. சலங்கையைக் கட்டி மெல்ல தட்டிப்பார்க்கும் காட்சி. அது ஒரு பிரம்மாண்டமான குளோசப் காட்சி. அந்தக் காலும் கேட்கும் சலங்கை ஒலியும். உதிர்வதற்கு முன் நிகழும் மென்மையான அசைவு.  முத்தாய்ப்பு.  முழுமை. கலைஞனின் முழுமை கலையின் முழுமையும் கூடத்தானே!

எத்தனை சொன்னாலும் கதையறியாமல் ஆட்டத்தைப் பார்க்கும் தத்தளிப்புதான். நெடு நாட்கள் கூடவே வரப்போகிற உங்களின் இன்னொரு கதை.

அன்புடன்,
ராஜா.

குருவி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு

 

வணக்கம். நேற்றிரவு வாசித்த குருவி சிறுகதையின் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

மாடன் பிள்ளை அவர்களின் கதாபாத்திரம் மனதில் இருந்து நீங்க முடியாத அளவிற்கு அருமையாக உள்ளது.

 

பஸ்சை மறியல் செய்யும், போலீஸின் மீது துப்பும், தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும், போலீஸ் அடித்தால் கிக் ஏறும் , தண்ணி அடித்தால் மட்டுமே நிதானத்திற்கு வரும், மற்றவர்களின் அறிவுரைகளை கேட்டு கோபப்படும், உயர் அதிகாரியை மன்னிப்பு கேட்க வைக்க விரும்பும், அனைத்திற்கும் மேல் தன்னை ஆர்ட்டிஸ்டாக கருதிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரம்.

 

கலைநயம் மிக்க வேலையை செய்வதற்காக மாவட்ட நிர்வாகமே தேடக்கூடிய ஒரு நபராக மாடன்பிள்ளையின் செய்நேர்த்தி உள்ளது.

 

மீதமான வயர்களை கொண்டு ஒரு தூக்கணாங்குருவி கட்டிய கூட்டை பார்த்த பின்பு, டி.இ. மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை எனக்கூறி தன்னுடைய பணி நோக்கி செல்லும் கணத்திலேயே உண்மையான ஆர்டிஸ்ட் மாடன்பிள்ளை பிறக்கிறான் என உணர்கிறேன்.

 

எப்பொழுது நம் விருப்பத்தினை நோக்கிய வலுவான பயணம், உண்மையான பயணம் தொடங்குகிறதோ அப்பொழுதே நம் மனம் சமநிலையை பெறுகிறோம் என நினைக்கிறேன்.

 

நன்றிகளுடன்

தே குமரன்.

தர்மபுரி.

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களது ‘கொரோனா ‘ சிறப்பு சிறுகதைகள் ஒவ்வொன்றையும், மிக ஆழ்ந்த அமைதியுடனும்  நிம்மதியுடனும் படித்து வருகிறேன்.  இந்த கதை சிறந்தது, அந்த கதை சிறந்தது என்ற சிறுபிள்ளைத்தனத்திற்கெல்லாம் போகமாட்டேன்.  உங்களால் உலக தரமான தலைசிறந்த கதைகளை தவிர வேறு எதையும் எழுத முடியாது. உங்களை புகழ்வதற்காக எழுதப்பட்ட வரிகள் அல்ல இவை .  கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தங்களது படைப்புகளையும், இணைய தளத்தையும் படித்துவருபவன் என்ற முறையிலும், தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை ஓரளவேனும் படித்தவன்  என்ற முறையிலும், தகுதியிலுமே இவ்வாறு கூறுகிறேன்.

இன்று (11.04.2020) வெளியாகியுள்ள ‘குருவி ‘ ஒரு அற்புதமான கதை.  மனிதனுக்கும் ஆர்டிஸ்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி மாடன் பிள்ளையின் உளறல்கள் அல்லது தத்துவங்கள் மிக அருமை.  அப்பேர்ப்பட்ட ஆர்டிஸ்டு,  DE பப்ளிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டிசன் வைக்கிறான்.  ஆனால் குருவி ஆர்டிஸ்டு முன்னாள் தான் ஒன்றுமே அல்ல என்று உணர்கிறான்.  தன்னுடைய ஆர்டிஸ்டிக் ஒர்க் டிவியில் வருவதை விட, அந்த தூக்கணாங்குருவி கூடு மெட்ராஸிலே ராஜீவ்காந்தி செண்டரிலே வைக்கணும் என்று கோரிக்கை வைக்கிறான், அகம்பாவமற்ற உண்மையான “ஆர்டிஸ்டு “.

தங்களது கதைகள்தான் இன்றைய வீட்டிற்குள் அடைந்து கிடைக்கும் சூழலில் என்னை உணர்வுபூர்வமாகவும் உயிர்ப்புடனும் வைத்துள்ளன.  மலைபாம்பிற்கு இல்லாத உரிமையா காட்டின் மேல் மனிதனுக்கு உள்ளது.  துவரன்களும், கூட்டுக்களும் பொரியல்களும் பிரதமன்களும், குழம்புகளும் என் கனவில் வருகின்றன.

நீங்கள் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட  ஆயுளுடனும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் (இது கூட தங்கள் தீவிர வாசகர்களின் ஒரு வித சுயநலம் தான் )

மிகுந்த வணக்கங்களுடன்

பா . சரவணகுமார்
நாகர்கோவில்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

லூப், பெயர்நூறான் -கடிதங்கள்

$
0
0

லூப் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ஒரு தொழிற்சூழலில் இருந்து இத்தனை கதைகள் தொடர்ச்சியாக வெளிவருவது தமிழில் இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். ஒரு தொழிற்சூழலில் உள்ள வாழ்க்கையைச் சொல்லும் சில நாவல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை குறியீடாக ஆக்கி கவித்துவமாக எழுதப்பட்ட கதைகள் பெரும்பாலும் இல்லை. நான் கட்டுமானத்துறையில் வேலைபார்க்கிறேன். இந்த தளத்தின் குறியீட்டுத்தன்மையைப் பற்றி நான் நிறையவே யோசித்திருக்கிறேன். குறிப்பாக எடையை ஒவ்வொரு பொருளும் தாங்குவது, அதன் எல்லை இதையெல்லாம் அற்புதமான கதைகளின் கருக்களாக ஆக்கமுடியும். எழுதிப்பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

 

இந்த லூப் கதையில் உள்ள அழகான அம்சம் என்பது அந்த உற்சாகமான வேலைச்சூழல். என் அப்பா 26 ஆண்டுகள் தொலைபேசியில் வேலைசெய்தார். அதில் 23 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில்தான் இருந்தார். அவருடைய எல்லா நண்பர்களும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள். ஒரே ஆபீசில் வேலைசெய்தவர்கள். அவர்கள் வேலை முடிந்து ஆப்பிஸிலேயே ரிக்ரியேஷன் கிளப்பிலேயே 9 மணிவரை டிவி பார்த்து பேசி சிரித்து அதன்பிறகுதான் வீட்டுக்கே வருவார்கள். அந்த வாழ்க்கையே வேறுதான். இந்தக்கதையில் ஊழியர்கள் நடுவே உள்ள கொண்டாட்டமான உறவு அழகாக இருந்தது

 

செல்வராஜ் கே.

 

அன்பார்ந்த ஜெயமோகனுக்கு

 

வணக்கம், நலம்தானே?

 

லூப் சிறுகதை படித்தேன். மீண்டும் தொலைப்பேசித் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு கதை. ஆனால் இதில் மிகக்கனமான விஷயத்தை மிகவும் எளிதாகச்சொல்லி மறைமுகமாய் விளங்க வைத்திருக்கிறீர்கள். இதுபோன்ற கதைகளில் எள்ளலும் நகைச்சுவையும் இல்லாவிடில் வாசிக்கக் களைப்பாயிருக்கும். கூத்துகளில் கட்டியங்காரன் போல, சர்க்கஸில் பஃபூன் போல நகைச்சுவை அளவோடு தேவை.

 

தொடக்கத்திலேயே ’நான் என்ன சர்ச்சில பாவமன்னிப்பா கேக்கறன் பொய் சொல்றதுக்கு” என்பதில் தொடங்கும் நகைச்சுவை கதை முழுதும் பரவலாக ஓடி வருகிறது. அதுவும் ‘அவர் கூப்பிடமுயன்றது பரமபத்திலிருக்கும் ஏசுவை”  என்பதும் ”அவரு எடுக்காட்டாலும் மாதா எடுக்க வேண்டியதுதானே” என்பதும் உச்சம் ”திருச்சபை உள்ள நாம் பாக்காத ஆனையா, கடுவாயா, கருநாதமா” ”கத்தோலிக்க மதத்துல சேத்துடுவோம், ஆறு மாசத்துல சகல கள்ளமும் படிச்சுடுவான்” ”பிஷப் என்னும் சொல்லை ஆடுமேய்யபவனுக்குப் பயன்படுத்தல்” போன்றவை படித்தபின்னும் மனத்தை விட்டு அகலாதவை.

 

துரை பாம்பைச் சுட்டுவேன் என்று சொன்னவுடன் வரும் ஆவேசம்தான் கதையின் முக்கியத்துவத்தை அப்பொழுதுதான் உணர வைக்கிறது. காடுகளை அழித்து நாம் மாளிகைகள் கட்டுவோம், அணைக்கட்டுகள் அமைப்போம். பாதைகள் போடுவோம், கல்லூரிகள், அவற்றுக்கான விடுதிகள் கட்டுவோம். இதெல்லாம் தவறு என்பதைச் சொல்லாமல் சொல்லும் கதை இது. கம்பி மேல் நடக்கும் வித்தைதான். துளி தவறினாலும் பிரச்சாரக் கதையாகிவிடும் சாத்தியம். கடைசியில் கதை சொல்லி சில ஆண்டுகள் கழித்து வரும்போது காட்டையே காணவில்லையே?

இதுதான் யதார்த்தம்.

 

வளவ. துரையன்

பெயர்நூறான் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

இந்த ஊரடங்குக் காலத்தில் உங்கள் தளத்தில் வரும் கதைகள் மிகமிக ஆசுவாசமான அனுபவத்தை அளிக்கின்றன. சிறுவயதில் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று மீண்டும் வாழ்வதுபோல ஒரு அனுபவம். இன்றைய கதை பெயர்நூறான் ஓர் அற்புதம். என் பையனுக்கு பத்து பெயர். நான் ஒரு பெயர். என் மனைவி ஒரு பெயர். பாட்டிகள் தாத்தாக்கள் வேறுவேறு பெயர். அவனே அவன் பெயரை ஒன்று சொல்லிக்கொள்வான். பெயரிட்டு நமக்கு போதவே இல்லை இல்லையா?

என் மகன் வாணியம்பாடி அருகே ஒரு ஊரிலே பிறந்தான். வாணியம்பாடியில்தான் அவன் அம்மாவை காட்டிக்கொண்டிருந்தோம். ஒரு வேலைவிசயமாக வந்தபோது சட்டென்று குழந்தை பிறந்துவிட்டது. அந்த அனுபவமெல்லாம் இந்தக்கதையில் வந்துசெல்கின்றன

 

மலைச்சாமி

 

 

அன்பு ஆசிரியர்,

பெயர்நூறான் இன்று வாசித்து முடித்ததும் (நிச்சயமாக) மற்ற வாசகர் போலவே பல்வேறு எண்ணங்கள் மனதில் ஓடின. என் மகன் பிறந்த நினைவுகளை நினைத்துக்கொண்டே படியிறங்கியபோது அவன் மேலேறி வந்தான். “உன்னத்தான் நெனச்சேன்” என்றேன். “That’s the connection “ என்றான்.

என் மனைவி பிரசவ வார்டில் இருந்தபோழுது அதே நேரம் மற்றொரு மருத்துவமனையில் என் அம்மாவிற்கு மார்பக புற்றுநோய் ஆபிரேஷன்.

மனைவியை நினைத்து மகன் வர சந்தோசபடுவதா அம்மாவை நினைத்து கலங்குவதா? இரண்டும் கெட்டான் நிலையில் பிரசவ அறை வாசலில் நின்றிருந்தேன். நர்ஸ் “ஏன் உன் கணவர் இப்படி பயந்திருக்கிறார்” என்று என் மனைவியை கேட்குமளவுக்கு.

என் மகனை நர்ஸ் கொண்டு வந்து நான் நின்ற வாசலருகே இருந்த தொட்டிலில் (5 மீட்டர் தூரம்) போட்டுச்சென்றாள்- அவன் எதிர்த்திசை பார்க்க.

இன்றும் எனக்கு பிடிபடாதது- அக்கணம் அவன் பின்பக்கமாய்  தலை திருப்பி சரியாக என்னைப் பார்த்தான். என் கண்களில் கண்ணீர். (இக்கதையில் அப்பனும் மகனும் பேசும் தருணம் போல அது). எதேச்சையா அல்ல உண்மையாகவே என்னைப் பார்த்தானா? என்ன சொல்லியிருப்பான் என்னிடம்? புரியல! இதை யாரும் நம்பும்படி இருக்குமா, தெரியல!! பெயர்நூறான் படித்தபின் அது சாத்தியமே என்று கூட தோன்றுகிறது.

இதை அவனிடம் அடிக்கடி ‘connection at birth’ என்று கதை போல சொல்வேன்.

அனைவர் நெஞ்சுக்கருகிலும் நின்று பேசும்படியான கதையிது. எதோ ஒரு சிறு புள்ளியில் நம் வாழ்வை தொடும் கதைகளே மனதில் எஞ்சும்.

அந்த மலரும் நினைவுகளுக்காக நன்றி.

இளங்கோவன் பரமசிவன்

குறிப்பு: அம்மா அடுத்த ஒரு மாதத்தில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். (அப்பா இறந்த 7வது மாதம்)

தொடர்புடைய பதிவுகள்

ஆயிரம் ஊற்றுக்கள், ஆடகம் -கடிதங்கள்

$
0
0

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

சூழ்ச்சிகள் நிறைந்த சூழலில் ஆள்வோருக்கு அவ்வப்போது ஓர் அலையென தனிமை வந்து தாக்குகிறது போலும். கைவிடப்பட்டிருக்கிறோமோ என்னும் ஐயம் எழுகிறது. அதற்கு மறுமொழி என நாங்கள் இணைந்து பின்குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.

 

இது வெண்முரசில் வந்த வரி. மிகமுன்னால் எங்கோ வந்தது. சும்மா குறித்து வைத்திருந்தேன். ஆனால் மோடியின் கைத்தட்டல் விளக்கேற்றல் சம்பவங்களில் இந்து ஞாபகம் வந்தது. வெண்முரசு தரும் அனுபவம் என்பது இதுதான். அரசியலில் மக்களின் மனநிலையில் தனிப்பட்ட உறவுகளில் என்றும் மாறாமலிருக்கும் சிலவிஷயங்கள அதில் காணமுடிகிறது

 

அவ்வாறு வாசித்த ஒரு கதை என்று ஆயிரம் ஊற்றுக்களைச் சொல்வேன். என்ன ஒரு கதை. அந்த அரசியல்சூழலின் அபத்தம் மெய்யான தகவல்கள் வழியாகவே சொல்லப்படுகிறது. வழியே போன ஒருவரை இழுத்து வந்து பலிகொடுக்கிறர்கள். அதுதான் உலக அரசியலில் பெரும்பாலும் நடக்கிறது என்று தோன்றுகிறது. அரசியல்பலிகள் அந்த குழந்தைகள். ஆனால் அவர்கள் இறந்தபின் அன்னையை மன்னித்துவிட்டார்கள்

 

ரா.கிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

ஆயிரம் ஊற்றுக்கள் கதையை முதலில் வாசிக்க கொஞ்சம் கடினமாக இருந்தது. அந்த மொழியும் அந்த அரசியல்சூழலின் புதுமையும் காரணமாகச் சொல்லலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகவே வாசித்தேன். அந்த வேறுபட்ட தன்மையால்தான் அந்தக்கதை மனசுக்குள் மிக ஆழமாகச் சென்று பதிந்தது. அந்த பெருந்துன்பத்தை நானும் அணுக்கமாக அறிந்தேன்

 

அந்த ‘களிப்பான்குளம்’ இன்றைக்கும் திருவனந்தபுரம் அருகிலே இருக்கிறது என்றும் அந்தக்குழந்தைகளுக்கு சடங்குகள் செய்கின்றனர் என்றும் கேள்விப்பட்டேன். சரித்திரம் முழுக்க அப்படி எவ்வளவு துயரங்கள். எத்தனை கண்ணீர், எத்தனை ரத்தம்

 

செந்தமிழ் முருகேசன்

ஆடகம் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

ஆடகம் கதையை கொஞ்சம் பிந்தித்தான் வாசித்தேன். நஞ்சு- அமுது என்ற முரண்பாடுதான் கதை என்பதை புரிந்துகொள்ள கடிதங்களையும் வாசிக்க வேண்டியிருந்தது. அமுது செறிவானால் நஞ்சு. நஞ்சு இளகினால் பொன். ஒரு கட்டத்தில் அந்த நாகம் கனிவதுதான் கதையின் கணம். அது ஒரு பரிசை அளிக்கிறது அந்த இளைஞனுக்கு இல்லையா?

 

பொன்னாலான தொடுகை என்று அந்த நஞ்சைச் சொல்லலாம். அந்தப்படத்தில் நாக நஞ்சு பொன் போலவே சுடர்விடுகிறது

 

செல்வி ராஜேஷ்

 

ஆடகம் கதை நிகழும் மழை மிகு ஊர் , காடு , நாகம் ஆகியவை இயற்கையின் மடியில் மனிதன் என்ற மனச்சித்திரத்தை உருவாக்கியது

 

ஐரோப்பிய அமெரிக்க தேசங்கள்  ஆரோக்கியம் வாழ்க்கைத்தரம் கல்வி என செழிப்பாக இருக்கின்றன. ஆப்ரிக்க தேசங்கள் வறுமையில் வாடுகின்றன..  இப்படி சில தேசங்களுக்கு அனுகூலமாக உலகம் எப்படி மாறியது என ஆராயும் நூல் guns germs  and steel.  சமமாக படைகக்கப்பட்ட மனிதர்களிடம் இந்த ஏற்றத்தாழ்வை உருவாக்கியது கிருமிகள்தான்.  அவற்றின் பாதிப்புகளால்தான் உலக சரித்திரமே படைக்கப்பட்டுள்ளது என்பது நூலின் துணிபு

 

இவ்வளவு விஷம்போதும் என அந்த நாகம் முடிவெடுத்த கணத்தின் ஒரு துளி நேரத்தில்தான் உலக சரித்திரமும் இயற்கை சக்திகளால் முடிவு செய்யப்பட்டது போலும்

 

http://www.pichaikaaran.com/2020/04/blog-post_7.html?m=1

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

தொடர்புடைய பதிவுகள்

நகைமுகன் [சிறுகதை]

$
0
0

 

 

ஆறுமுகம் போனை லொட் லொட் லொட் என்று தட்டினார். “எளவெடுத்தவனுக ஒரு நாலுவார்த்தை பேசவும் விடுதானுக இல்லியே” என்று சலித்துக்கொண்டார்.

 

மறுமுனையில் டி.இ சதாசிவம் தோன்றினார். “டேய் ஆறுமுகம், கேட்டுட்டுத்தான் இருக்கேன். பாத்துப்பேசு”

 

“உங்களச் சொல்லேல்ல சார்…”

 

“பின்ன ஆரைச்சொன்னே? ஆரைடே சொன்னே?”

 

“சார், பொதுவாட்டு சொன்னேன்… பொதுவா சொல்லப்பிடாதா?”

 

“சொல்லப்பிடாது டே. அப்டிப் பொதுவாச் சொல்லப்பிடாது. பொதுவாச் சொன்னேன்னா ஆரை? டிப்பார்ட்மெண்டையா? இல்ல சர்க்காரையா? சொல்லு”

 

“நான் சாமியச் சொன்னேன், இப்டி நம்மள படைச்சு கொண்டு வந்து இங்க சேத்திருக்குல்லா? அந்த கோரோயில் முருகனைச் சொன்னேன்”

 

“கோரோயில் முருகன் குடுத்ததனாலேதான் நீயும் உன் குடும்பமும் கஞ்சி குடிச்சு கெடக்கு பாத்துக்க. உனக்க அப்பன் சீரங்கன் வேளிமலையிலே மாடுமேய்ச்சவனாக்கும்… அத மறக்காதே”

 

“செரி செரி… விடுங்க… அப்பன் வரைக்கும் போகவேண்டாம். நான் சொன்னத திருப்பி எடுத்தாச்சு”

 

“திருப்பி எடுக்குறப்ப நினைச்சுக்க, அத நான் உனக்கு திருப்பிக்குடுத்தேன்னு”

 

“எனக்க தப்பு…. நான் மூணுவட்டி நாலுவட்டியோட திரும்ப எடுத்தாச்சு… போருமா? வேணுமானா பேங்கிலே டெப்பாசிட்டு பண்ணி வைக்கேன்…. இப்பம் நான் சொல்லவா?”

 

“சொல்லு”

 

“இங்க ஸ்டாஃப் போதாது… இருக்கது நான் ஒரு டெக்னீசியனாக்கும். ரெண்டு டெம்பரவரி மஸ்தூருங்களை வச்சு உள்ள சமாளிச்சிட்டிருந்தேன்… ரெண்டுபேரையும் இப்ப லைனுக்கு அனுப்பியாச்சு. இங்க உள்ள எக்ஸேஞ்சப் பாத்துக்கிடுயதுக்கு ஆளில்லை” என்றார் ஆறுமுகம் “நாளைக்கு எலக்சன், இப்பம் இப்டி கெடக்கு”

 

”அதுக்கு நான் என்ன செய்ய? எல்லா எடத்திலயும் ஸ்டாஃபு குறவாக்கும்”

 

“அப்டி சொன்னாமுடியுமா? நீங்கள்லா சீனிய ஆப்பீசர்?”

 

“அப்ப நான் வரட்டா? நான் வரட்டாடே?”

 

“அப்டி கேட்டா எப்டி?”

 

“பின்ன? பின்ன நான் என்ன செய்ய? சொல்லு? எனக்கு இங்க பியூன் இல்ல. தெரியுமா? அவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அவனையும் லைனுக்கு அனுப்பியாச்சு. சாய கொண்டுவாறான் ஒருத்தன் அவனையும் லைனுக்கு அனுப்பலாமான்னு பேசிட்டிருக்கோம்…டேய் இங்க ஆளில்ல… ஒரு ஆளில்ல. லைனுக்கு இன்னும் ஆளுவேணும்… இங்க நான் இருக்க முடியல்ல. இந்நா நாலு போனாக்கும் மாறிமாறி அடிச்சிட்டிருக்கு… இங்க லைன் ஃபால்ட் எவ்ளவுங்குதே? எம்பத்தேளு… டேய் எம்பத்தேளு”

 

“இருக்கதிலே நாலிலே ஒண்ணு ஃபால்டா?”

 

“ஆமா, அதுவும் எல்லாம் முக்கியமான அரசியல்வாதிகளுக்க நம்பர். நேரா மெட்ராஸுக்கு விளிக்கான். அப்டியே டெல்லிக்கு விளிக்கான். இனியிப்ப ஆரு ஐநா சபைக்கு விளிக்கப்போறான்னு தெரியல்ல…”

 

“செரி, என்ன செய்ய?” என்றார் ஆறுமுகம் “இவனுகளே அத்துவிடுதானுகளோ?”

 

“பின்ன ? இத புரிஞ்சுகிட இம்பிடு நேரமா? டேய் ஒருத்தன் நம்பரை இன்னொருத்தன் கள்ளத்தனமாட்டு கம்பிபோட்டு ஒட்டு கேக்கான். ஒருத்தன் லைனை இன்னொருத்தன் ஆள வச்சு அத்துவிடுதான். ரெண்டுபேரும் மாறிமாறி இங்க வந்து கம்ப்ளெயிண்ட் செய்யுதானுக…”

 

ஆறுமுகம் “எளவு, இந்த எலெக்சன் முடியுயதுக்குள்ள பொளப்பு சீண்டிரமா போயிருமுன்னுல்லா தோணுது” என்றார். “எப்டியும் இந்திராகாந்தி ஜெயிப்பா. அதுக்கென்னத்துக்கு எலக்சன்? சும்மா மனுசன போட்டு சோலிமெனக்கெடுத்திட்டு?”

 

“நீ என்ன நெனைக்கே? நம்ம பொளைப்பா சீரளியுது? இந்தா எல்லா சர்க்காராப்பீஸும் அடுக்களையிலே ஆனை நுளைஞ்ச மாதிரி கெடக்கு… என்னமாம் செய்டே, நமக்கு இனி ஒண்ணும் சொல்லுகதுக்கில்ல”

 

ஃபோனை வைத்தபின் ஆறுமுகம் பெருமூச்சுவிட்டார். அவரைச்சுற்றி பெரிய ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்ச். அதன் ரிலேக்கள் ரீ ட்ட்ட் ரீஇ ட்ட்ட் என்று ஓடிக்கொண்டிருந்தன. ஒரு நோக்கில் அது ஒரு பெரிய இயந்திரம். ஆனால் ஒன்றல்ல, தேனீக்கூடு போல. நூற்றுக்கணக்கான ரிலேக்களும் சர்க்யூட்டுகளும் தனித்தனியாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அவை ஒன்றாகச் சேர்ந்து ஒற்றை இயந்திரமாகவும் செயல்பட்டன. ஒவ்வொன்றின் பேச்சும் தனி. அதை ஒரு ரிலேயின் அருகே சென்று நின்றால் உணரமுடியும். சற்று அப்பால் நின்றால் ஒட்டுமொத்தமாக அந்த இயந்திரம் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதுபோல தெரியும்

 

ஃபோன் அடித்துக்கொண்டே இருந்தது. எடுத்து “அல்லோ என்றார்

 

“சார், இது போனு ஆப்பீஸு தானே?”

 

“ஆமா”

 

“234 நம்பரு கிட்டல்ல… இந்நா இப்ப கிட்டிட்டு இருந்தது… அறுந்துபோச்சு”

 

“செரி, நாங்க பாக்குதோம்”

 

“எனக்கு இப்ப செரியாவணும்… இப்ப”

 

“வாறோம்”

 

“எப்ப வருவிய?”

 

“சார் ஆளுவரணும்லா? வாறோம்”

 

“வே, இது எலெக்சன் நேரமாக்கும். நமக்கு கட்சி பொறுப்பு உண்டு… போன் அறுந்தா பின்ன நம்மள கட்சியிலயும் அத்துப்போடுவானுக”

 

“நான் என்ன செய்ய? எல்லா லைனும் இப்டித்தான் கெடக்கு. செரியாக்கித்தாறோம்..”

 

“நாளைக்கு எலக்சன்… எனக்கு இப்ப ஒருமணிக்கூருக்குள்ள செரியாக்கி கிட்டணும்”

 

“ஒரு மணிக்கூருக்குள்ள செரியாக்கிக் கிட்டாது சார்”

 

“டேய், நான் ஆரு தெரியும்ல?”

 

“ஆண்டோ சாமுவேல்… பெருவட்டர். ரெட்டைக்காளைக் கட்சி… அதுக்குமேலே என்னமாம் தெரியணுமா?”

 

“வெளையாடுதியா? ஏலே வெளையாடுதியா?”

 

“வெளையாடல்ல… உள்ளதச் சொன்னேன். இந்த எக்ஸேஞ்சிலே இப்ப எளுவத்தெட்டு நம்பர் அறுந்து கெடக்கு. இருக்கது முந்நூறு நம்பர். அதை செரிபண்ணுகதுக்கு எட்டு லைன்மேன். வேலியிலே ஏறுத ஓணானையெல்லாம் பிடிச்சு லைனுக்கு அனுப்பியிருக்கு… இதுக்கு மேலே நாங்க என்ன செய்ய?”

 

“ஆரு இதையெல்லாம் வெட்டிப்போடுகது?”

 

“உங்க ஃபோனை அவனுக வெட்டுகானுக. அவனுக போனை நீங்க வெட்டுதீக… ரெண்டுபேரு ஃபோனையும் நாங்க கெட்டணும்”

 

“நான் டிஇ கிட்ட பேசுதேன்”

 

“பேசுங்க… அவருக்க ஃபோனு இப்பம் வேலைசெய்யுது. எப்பம் அது அறுந்துபோவும்னு தெரியல்ல”

 

“நான் பாத்துக்கிடுதேன்… இது ஆருக்க வேலைன்னு தெரியும்… உம்மைப்பத்தியும் விசாரிக்கேன்”

 

ஆறுமுகம் ஃபோனை வைத்தபோது அடுத்த அழைப்பு. “அல்லோ”

 

“சார், நான் லாரன்ஸு. இங்க 284 நம்பர பாக்க வந்தேன். முன்னாள் எம்.எல்.ஏக்க நம்பரு”

 

“சொல்லு… லூப்புல்லா?” என்றார் ஆறுமுகம்

 

“இல்ல. கம்பியே இல்ல…”

 

“எங்க போச்சு?”

 

“நான் என்ன கண்டேன்? ஒரு ஃபர்லாங்குக்கு கம்பியே காணல்ல”

 

“அய்யோ…  எம்.எல்.ஏக்க நம்பருல்லா?”

 

“ஆமா, அவரு ஆளு விட்டிருக்காரு. புடுக்குமயிரு மாதிரி மீசைய வச்சுக்கிட்டு ஒருத்தன் ஒப்பம் வந்து நிக்கான்”

 

“அவன் இங்க வந்தாம்லே… ஆறாம்முளை செல்லம்மை, அதாவது எனக்க அம்மை, அவளுக்க இடுப்புக்கு கீள இருக்கதைப்பத்தி நுணுக்கமா பேசினான்…. என்னமாம் செய்டே… அவன் இங்க திரும்ப வந்தா செத்துப்போன கிளவியை எடுத்துப்போட்டு ரேப்பு செய்வான்”

 

“நான் என்ன செய்ய? கம்பி இருக்கா?”

 

“கம்பியா? இருந்த கம்பிய நாராயணன் வைத்தியருக்க லைனிலே கெட்டியாச்சே… இனி ஏதாவது வேலிக்கம்பிய அவுத்தாத்தான் உண்டு…” என்றார் ஆறுமுகம்

 

‘எனக்க அர்ணாக்கொடிய வச்சு கேட்டுதேன்”

 

‘நீ அஞ்சுரூவா மஞ்சக்கயிற கெட்டியிருக்கே, நான் கண்டிடுண்டு” என்றார் ஆறுமுகம் “ஒண்ணு செய், அம்புரோஸ் பெருவட்டன் லைனு பக்கம்தானே?”

 

“ஆமா”

 

“அத அவுத்து இங்க கெட்டு”

 

“அய்யோ”

 

“கெட்டுலே… அந்த போன நான் ஃபால்டு போடுதேன்…கெட்டு கெட்டு”

 

ஃபோனை வைத்தபோது பெருமூச்சு வந்தது. முக்காலியில் விரிந்த புன்னகையுடன் அமர்ந்திருந்த முருகனை பார்த்தார். அவன் வாயின் அமைப்பே அப்படி. சர்க்கஸ் கோமாளிகளின் வாய்போல விரியத் திறந்த உதடுகள், உள்ளே நிறைய பற்கள். புருவமும் மெலேறி வளைந்து இருக்கும். சற்றுமுன் அவன் ஏதோ மாபெரும் வேடிக்கையை கேட்டது போல தோன்றும். அவன் தூங்கும்போதும் அப்படித்தான்

 

“பய சிரிச்சு கொண்டாக்கும் உள்ளே இருந்து வெளிய வந்தான்… வயற்றாட்டி பிள்ளையப் பாத்ததும் கெக்கெக்கேன்னு சிரிச்சுப்போட்டா… அப்ப தொடங்கின சிரிப்பு…” என்றாள் முருகனின் அம்மா.

 

ஆனால் முருகன் அவனாகச் சிரிப்பதில்லை.யார் என்ன பேசினாலும் அவனுக்கு புரியாது. யாராவது வழுக்கி விழக் கண்டால்கூட சிரிக்கமாட்டான், வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். அவனுடைய ஆத்தாள் ஆறுமுகத்தின் வீட்டில் சாணிவழிக்க வருபவள். அவள்தான் “பயல எங்கிணயாம் இருத்துங்க கோனாரே… அவனுக்கொரு வாயி சோறு கிட்டணும்” என்று கேட்டாள். அவர் ஆபீஸ் வரச்சொல்லிவிட்டார். டீ கொண்டுவருவான். குப்பை கொண்டு கொட்டுவான். அதைவிட ஆள் என ஒரு உருவம் அங்கே இருக்கும்

 

“லே மக்கா, பாத்துக்க. ஆராம் வந்தா டெக்னீசியன் இப்ப வந்திருவாருன்னு சொல்லு. என்னா?”

 

அவர் மணிகண்டனின் டீக்கடைக்குச் சென்றபோது அங்கே கிட்டத்தட்ட நெரிசல். மணிகண்டனின் தம்பி ஐயப்பன் பெரிய ஏனத்தில் பருப்பு வடைகளை கொண்டுவந்து கண்ணாடிப்பெட்டிக்குள் கொட்டினான். மணிகண்டன் தீவிரமாகச் சுழன்றுகொண்டிருந்தான். பாய்லரில் பெருமாள் ஒரே கோப்பையில் பத்து டீயை சுழற்றி ஆற்றினார்

 

ஆறுமுகம் பெஞ்சில் அமர்ந்தார். அப்போதுதான் நெடுநேரமாக நின்றுகொண்டிருந்ததே தெரிந்தது

 

“என்னவே ஆறுமொகம், எப்டி வே போவுது? எலக்சன்லா?” என்றார் கிருஷ்ணசாமி

 

“உமக்கு எலக்சன், நமக்கு தாலியறுப்பு” என்று ஆறுமுகம் சொன்னார்.  “பாதி போனு அத்து கெடக்கு. எல்லா லைன்மேனும் வெளியே இருக்கானுக. ஒத்த ஒருத்தன் இங்கிண கெடந்து சாவுதேன்”

 

“எலக்ஸன்லா!” என்றார் கேசவபிள்ளை “ஜனநாயகமாக்குமே”

 

அதிலிருந்த கேலி சகாவு நேசப்பனை சீற்றமடையச் செய்தது. “என்ன ஒரு சிரிப்பு? இல்ல கேக்கேன். என்ன சிரிப்பு? இப்ப பாவங்களுக்கும் ஓட்டு உரிமை வந்திருக்கு. மாடனும் கோரனும் ஓட்டுபோடுதான்… அதானேவே உம்ம சிரிப்பு? முப்பத்திநாலுலே முதல் எலக்ஸன் வந்தப்ப உம்ம தாத்தன் தாணப்பன் பிள்ளை தானேவே முதல்ல கோமணத்தை இறுக்கிட்டு போயி நின்னாரு…”

 

“ஆமா, ரெண்டு அண்டியும் ஒரு கோலும் தவிர எல்லாத்தையும் எலக்சனுகாக வித்தாரு. அதனாலத்தான் இந்நா இங்கிண இருந்து உனக்கக்கூட பேசிட்டிருக்கேன். டீ குடிச்சபிறவு மணிகண்டன்கிட்ட கடன் சொல்லணும்”

 

“சொல்லும் சொல்லும், ரூபா நாப்பத்தெட்டு நிக்குது”

 

“அதுக்கு நடுவில அவனுக்க செவி… ஏலே மணிகண்டா, நீ பாம்பு சென்மம்லே” என்றார் கேசவ பிள்ளை

 

“எலெக்ஸன் நல்லதாக்கும்… ஆனா இப்ப நடக்குதது ஒரு யுத்தம்லா? அவனைப்பத்தி இவன் பள்ளு சொல்லுதான். இவனைப்பத்தி அவன் பள்ளு சொல்லுதான். ஒருத்தன் சொல்லுகதிலயும் உண்மை கிடையாது. அடிச்சு சொல்லுதானுக, அளுதுகிட்டு சொல்லுதானுக, சொல்லிச்சொல்லி உண்மையா நம்பிச்சொல்லுகானுக..” என்றார் குமாரசாமி நாடார்

 

“கேக்கவனுக்கு மதியிருக்குல்லாவே?”

 

“மக்களே கொளுந்து கம்மூனிஸ்டு, சாதாரணக்காரனுக்க மனசுங்கியது சுண்ணி மாதிரியாக்கும். நாள் முளுக்க அது சுருங்கி இல்லேண்ணு கெடக்கும். தேவையானா ஒரு அஞ்சு நிமிசம் எங்கே எங்கேன்னு நிக்கும், அம்பிடுதான்… அதை எளுப்பத்தெரிஞ்சவன் ராஜ்ஜியம் ஆளுவான்” என்றார் குமாரசாமி நாடார்.

 

”இது ஒருமாதிரி மத்த பேச்சு” என்றான் சகாவு நேசையன்

 

“சாமானியனுக்கு என்னடே தெரியும்? அவனுக்கு என்ன படிப்பா வெவரமா? இனியிப்ப படிப்பும் வெவரமும் இருந்தா என்ன பிரயோசனம்? ஓரோருத்தனுக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கு. அதுக்கு காரணம் முதல்ல சாதி, பிறவு மதம், பிறவு அவனுக்க சொந்தக் கணக்குகள். அம்பிடுதான். நீ என்ன நியாயம் சொல்லு, எப்டி தர்க்கம் சொல்லு, அவன் அவனுக்க நம்பிக்கையைத்தான் சொல்லுவான். பூனை நாலுகாலிலேதான் மண்ணிலே விளும்”

 

“அப்டி மக்களை ஏமாளிகளா நான் சொல்லமாட்டேன்” என்றான் சகாவு நேசப்பன்

 

“மக்கள் ஏமாளிகள் இல்ல… கணக்காளிகளாக்கும். அம்பிடு பயக்களுக்கும் கணக்கு இருக்கு. இப்ப என்ன, ஓரொருத்தனும் கணக்குபாத்து கேட்டு வாங்குதான்லாவே?” என்றார் குமாரசாமி நாடார்

 

“இந்த எலக்சன் வந்ததோட எங்கயும் சண்டை பெருத்துப்போச்சு” என்றார் மாடசாமிப் பிள்ளை. “ஒரு ஊர ஒரு பகவதிக்க தட்டகம்னு சொல்லுவா. ஒரு தட்டகத்திலே நூற்றெட்டு தெய்வங்கள் உண்டுண்ணாக்கும் பேச்சு. அதுகளுக்கு சமானமா ஆயிரத்தெட்டு வாதைகளும் உண்டு. தெய்வங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் சண்டை. வாதைகளுக்கு அம்பிடு பேருகிட்டயும் சண்டை… அத்தனைபேரையும் கெட்டி இருத்தி ஒரு அமைதியை உண்டாக்கி வச்சிருக்குதது பகவதிக்க அருளாக்கும்… இப்பம் எலக்சன் வந்ததோட பகவதிக்க பவர் போச்சு. கெட்டெல்லாம் அவுந்தாச்சு…எல்லா தெய்வங்களும் பேய்களும் பூதங்களும் வாதைகளும் இறங்கி அலையுது”

 

“உள்ளதாக்கும்” என்றார் ஏசுவடியான். “கண்ணாம்பொத்தையிலே முந்தாநாளு இந்துக்களுக்கும் வேதக்காரனுகளுக்கும் பொரிஞ்ச அடி…நேத்து சி.எஸ்.ஐக்காரனுகளுக்கும் கத்தோலிக்கனுகளுக்கும் அடி. இந்நா இண்ணைக்கு காலம்பற கோயிலிலே சி.எஸ்.ஐக்காரனுக அவனுகளுக்குள்ள அடி…”

 

“பெந்தேகொஸ்தேக்கு அடியுண்டோ?”என்று மைக்கேல் ஆவலாக கேட்டான்

 

அவனை அர்த்தமில்லாமல்  ஒருகணம் பார்த்துவிட்டு ஏசுவடியான் சொன்னார் “கெட்டவார்த்தைன்னா அப்டி ஒரு ஒரு கெட்டவார்த்தை. படிச்ச புலவனுக ஓடீருவானுக. தனி பைபிளுதான் அதுக்கு எளுதணும்”

 

“நேத்து இங்கிண பிரம்மபுரத்திலே நாயன்மாருக்கும் குறுப்பன்மாருக்கும் சினிமா ஸ்டைலு அடியில்லா? சாடிச்சாடி சவிட்டுதானுக” என்றான் மணிகண்டன் “ஏன் அடிச்சானுகன்னு தெரியுமா? முத்தாம்பொத்தை நாடான்மாருகிட்ட இவனுக ரெண்டுபேரும் சேந்து சண்டைக்கு போயிருக்கானுக… அந்தச் சண்டையிலே நாடான்மாருக்கு கூடுதல் அடி குடுத்தது இவனுக ரெண்டுபேருக்குள்ள யாருன்னு இவனுகளுக்குள்ள சண்டையா போச்சு… வெளங்குமா?”

 

“வதந்தியாக்கும் பிரச்சினை. அந்தாலே அவனை இவன் அடிக்கான் இவனை அவன் அடிக்கான்னு எங்கபாத்தாலும் வதந்தி…ஒரு நியூஸ் பொய்னு தெரிஞ்சாலும் அது தனக்கு சாதகமானா அதை நம்பிடுதானுக”

 

“அண்ணாச்சி அது எப்பமும் அப்டியில்லா? நாயிக்கெல்லாம் புண்ணுவந்தா அதை நக்கி நக்கி பெரிசாக்கி அதுவே செத்திரும். மனுசனும் மிருகமாக்குமே… ஒரு பிரச்ச்னை வந்தா அம்பிடு பேருக்கும் உற்சாகம் ஏறிடும்… அதை எப்டியெல்லாம் பெரிசாக்குததுண்ணு நினைப்பானுக. எண்ணி எண்ணி வளப்பானுக”.

 

“ஒரு ஊருக்கே கிறுக்குல்லா பிடிச்சிருக்கு?”

 

“எலே கிறுக்கு எப்பமும் அப்டித்தான் இருக்கு… அதை நம்மாளுக பேசாத நாளு இல்லை. இப்ப என்னான்னா இந்த மைக்கும் ரேடியோவும் வந்துபோட்டு. பேசுதது எல்லாம் பத்து நூறு எரட்டியாச்சு. வீட்டுக்குள்ள குசுவிடுதது நாலுமுக்கு சங்சனிலே சங்குமாதிரி கேக்குது… ஒருபேச்சு கூடினா அது மத்த பேச்சை கூட்டும்… பேசிபேசி ஆகாசத்தை கிறுக்காலே நிறைச்சுப்போட்டான்…”

 

“ஆமாண்ணாச்சி, ரோட்டிலே பாத்தா எல்லாவனும் வெறிபிடிச்ச மாதிரி பேசிட்டிருக்கானுக… சிரிக்கானுக, அளுவுதானுக, அலறி சத்தம்போடுதானுக…இந்நா வாறப்ப நம்ம சுண்டன் பய நின்னு தொண்ட கீறுதான்.. இங்குலாப் சிந்தாபாத்துன்னு” என்றார் மாணிக்க நாடார்.

 

“ஏன் இங்குலாப்புதானா வே உமக்கு பிரச்சினை? கம்மூனிஸ்டைக் கண்டா உமக்கு கிருமிகடி, இல்லவே?” என்றார் சகாவு

 

“அவன் ஆருலே கம்மூனிஸ்டா? குடிகார நாயில்லா அவன்?’

 

“அவன் உளைப்பாளி, குடிக்கான். நீரு குடிக்கல்லியா? இங்க உயர்சாதி மட்டும் குடிச்சா போருமா?”

 

“சாதிப்பேச்சு வேண்டாம்”

 

“இந்த நாயி பேசுனதில்லா வே சாதிப்பேச்சு? என்னிய சொல்லுதேரா?” என்று நேசப்பன் சகாவு கூச்சலிட்டான்.

 

“லே பாத்துப்பேசு… பல்லை அடிச்சு பேத்துப்போடுவேன்”

 

“அடிலே பாப்பம். ஏலே நீ ஆம்புளைன்னா அடிலே பாப்பம்”

 

ஆறுமுகம் டீக்கான காசை சந்தடிக்கு நடுவே கொடுத்துவிட்டு எக்ஸேஞ்சுக்கு வந்தார். இரண்டு போன்களும் மாறி மாறி அடித்துக்கொண்டிருருந்தன

 

“ஆராம் வந்தானுகளாலே”

 

முருகன் இல்லை என தலையாட்டினான்

 

அவர் போனை எடுத்து “அல்லோ” என்றார்

 

“எலே அங்க என்ன எடுக்கிய? தலைவருக்க போனு கட்டாயிக் கெடக்கு? வெட்டி விடுதியளா? சவிட்டி கொடலை எடுத்திருவேன்… இப்ப வாறேம்லே… ஏலே இப்ப வாறேம்லே”

 

“சார், நம்பரச் சொல்லுங்க… இங்க ஏகப்பட்ட நம்பர் முறிஞ்சு கிடக்கு… நம்பரச் சொல்லுங்க”

 

“நம்பரை நீ பாருலே… வக்காவோளி… அம்புரோஸு பெருவட்டருக்க வீட்டிலே எங்க கட்சி கூட்டம் நடந்துகிட்டிருந்தப்ப கம்பிய எவன்லே வெட்டினது?

 

ஆறுமுகம் “இல்ல… அது …இப்ப …உங்க மாத்துக்கட்சிக்காரனுக” என்றார்

 

“அவனுகளா? லேய், அவனுகளாம்லே… செரி நாங்க பாத்துக்கிடுதோம்”

 

“இல்ல இல்ல, நாங்க இப்பச் செரியாக்குதோம்… ஒரு அர மணிக்கூர்”

 

“அப்டி விடப்பிடாதுல்லா? சூறத்தாயளிக”

 

“சார்! சார்!”

 

ஃபோன் வைக்கப்பட்டது. ஆறுமுகம் படபடப்பாக சிலகணங்கள் நின்றார். திரும்பி முருகனை நோக்கி “சிரிக்காதேலே நாயே” என்றார் “சிரிக்கான் பாரு. இங்க மனுசன் நாய நக்கி ரோட்டிலே கெடக்கான்”

 

பலமுறை முயலவேண்டியிருந்தது. டயல் செய்ய முடியாமல் வியர்த்த விரல் வழுக்கியது.

 

“அல்லோ” என்றான் லாரன்ஸ்

 

”லாரன்ஸு மக்கா, அம்புரோஸு பெருவட்டருக்க வீட்டிலே அருவாக் கச்சி கூட்டம் நடக்குதாம்லே… இப்ப விளிச்சானுக…வெட்டீருவேன்னு சொல்லுதானுக”

 

“அய்யோ… நான் அந்த ஒயர வெட்டுகத பத்துபேரு பாத்தானே… அவனுக சொன்னா எனக்க தலையில்லாவே தரையிலே கெடக்கும்?”

 

“ஒண்ணுமில்லலே… நீ சர்க்காரு எம்ப்ளாயியாக்கும்… பேசாம போயி அத செரிபண்ணி குடுத்திரு”

 

“அதுக்கு ஒயருக்கு என்ன செய்ய?”

 

“அங்க வேற யாராவது நம்பர் இருந்தா அந்த ஒயர வெட்டீருடே”

 

“இங்க இனி இருக்குத நம்பரு பஞ்சாயத்தாப்பீஸாக்கும்…அங்கயாக்கும் நாளைக்கு ஓட்டுப்பெட்டி வைக்குதது”

 

“அது நாளைக்குல்லா? இப்ப வெட்டு நீ”

 

“சார்!”

 

“வெட்டுலே… இல்லேன்னா உன்னைய அவனுக வெட்டுவானுக. பிறவு தலையில்லாம இங்க ஏறி வராதே”

 

லாரன்ஸ் “கட்டேலே போவ என்றான் அவன் ஃபோனை அறைந்து வைத்தது செவியில் முட்டியது.

 

நன்றாக வியர்த்துவிட்டது. எழுந்துசென்று கூஜாவை தூக்கி தண்ணீர் குடித்தார்.

 

ஃபோன் அலறிக்கொண்டே இருந்தது. எடுத்தார். நாகர்கோயிலில் இருந்து சீனியர் டெக்னீஷியன் மகாதேவன் பேசினார்

 

“ஆறுமுகம் அங்க என்ன செய்யுதீக? ரெஸிஸ்டென்ஸ் நெறைய காட்டுதே… ஏகப்பட்ட லூப்பு கெடக்கு போல. வெட்ஜ் பண்ணி வைங்க“

 

“அதுக்கு எங்க நேரம்? இங்க அத்துல்லா அலையுதானுக?”

 

“அதச் சொன்னா மிசின் கேக்காது…. ஆஃப் ஆயிரும்… மொத்த சிஸ்டத்தையும் இளுத்து கிடத்தீரும் பாத்துக்கிடும்”

 

ஆறுமுகம் உள்ளே சென்று பார்த்தார். டெலிஃபோன் எக்ஸேஞ்சுக்கே கிறுக்கு பிடித்ததுபோல் இருந்தது. மிகமிகச் சீரான ஒரு இயந்திரம் அது. அதன் ஓசையே ஒரு ராகம் போல இருக்கும். “லே இது அமைதியான ஒரு ஊரு போலயாக்கும். அமைதியான ஊரிலே ஒரு சங்கீதம் உண்டு பாத்துக்கோ” என்று ஓய்வுபெற்ற மாதவன் நாயர் சொல்வதுண்டு. ஆனால் அப்போது ஏகப்பட்ட சிவப்பு விளக்குகள் எரிந்தன. ஏகப்பட்ட எண்கள் கிரீச்சிட்டன

 

பல எண்களில் கம்பிகளுக்குக் குறுக்காக மின்னிணைப்பு ஏற்பட்டால் டெலிஃபோன் எக்ஸேஞ்சின் பேட்டரி மின்சாரம் முழுக்க வீணாகும். மின்னெதிர்ப்பால் கருவிகள் சூடாகும். மொத்த எக்ஸேஞ்சே டவுன் ஆகிவிடக்கூடும். ஆகவே எண்களின் ரிலேக்களை ஆப்பு வைத்து விலக்கி துண்டித்து வைக்கவேண்டும். ஆனால் அதற்கு அரைமணிநேரமாவது பொறுமையாக உழைக்கவேண்டும்.

 

வெளியே ஃபோன் அடித்துக்கொண்டே இருந்தது. மாறிமாறி இரட்டைப்பிள்ளைகள் அழுவதுபோல.

 

முருகன் “ஆ ஆ ஆ ஆளு வ்வ வ்வ வந்திருக்கு” என்றான்

 

ஆறுமுகம் வெளியே சென்றார். கதர் ஆடையுடன் ஒரு கூட்டம் நின்றிருந்தது. எல்லாமே தொப்பைகள்.

 

”இவன் ஆருவே? ஒருமாதிரி  சிரிக்கான் நம்மளப்பாத்து?”

 

“அவன் ஒரு மாதிரியாக்கும்…” என்றார் ஆறுமுகம் “இங்க ஓட்டு இல்ல. இது சர்க்காராப்பீஸாக்கும்”

 

“நக்கலா வே உமக்கு?”என்றார் மீசைக்காரர் “வே, அம்பிடு லைனும் அந்து கெடக்கு…எங்க மேலிடத்திலே இருந்து நேரிலே ஆளு விட்டிருக்கு”

 

“இப்ப செரி பண்ணுதோம்”

 

“செரி பண்ணல்லேன்னா என்ன செய்யுகதுன்னு எங்களுக்க் தெரியும்”

 

“தலைவிளும்!” என்று ஒரு கீச்சுக்குரல்காரன் கத்தினான், அவன் தான் இருப்பதிலேயே பெரிய தொப்பை.

 

“லே சும்மாரு” என மீசைக்காரர் அதட்டிவிட்டு “நாங்கதான் எப்டியும் சர்காரு… எடதும் வலதும் ஒண்ணும் இல்ல… உம்மைய அளிச்சிருவோம்… புரியுதா?”

 

“புரியுது”

 

“பாத்துக்கிடும்”

 

அவர்கள் சென்றதும் மீண்டும் சிலநிமிடங்கள் செயலற்றிருந்தார். போன் அடித்துக்கொண்டே இருந்தது

 

“இப்ப என்ன தாலியறுக்கச் சொல்லுதிய?”என்று சீறினார்

 

“அங்க வெட்ஜ் வைக்குதியளா இல்லியா? இங்க ரெசிஸ்டென்ஸ் கூடிட்டிருக்கு” என்று மகாதேவன் கூச்சலிட்டார்

 

”வைக்கேன் வைக்கேன்…அய்யா வைக்கேன் அய்யா”

 

“என்னமாம் நாசமாப் போங்க” என்று மகாதேவன் போனை வைத்தார்

 

”முருகா!” என்றார் ஆறுமுகம், முருகன் இளித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்

 

“முருகன், லே மக்கா. இங்க வா. மாமன் ஒரு சோலி சொல்லித்தாறேன்… அத மட்டும் செய்லே… செய்வியாலே? உனக்கு நான் மிட்டாயி வாங்கி தருவேன்”

 

“ச்ச் ச்ச் ச்ச் செய்வேன்”

 

“வா வா வா” என அழைத்து சென்றார். ஒரு இஞ்ச் நீளமான சிறிய மர ஆப்புகள் ஒரு காகிதப்பெட்டி நிறைய இருந்தன. “இஞ்ச பாத்தியா, இதாக்கும் வெட்ஜ். வெட்ஜுன்னாக்க ஆப்பு… ஆப்பு…இந்த போர்டை பாரு… இந்தா இப்டி சிவப்பு லைட்டு எங்கல்லாம் எரியுதோ அதைப்பாரு… பாத்தியா”

 

“ப்ப் ப்ப் பாத்தேன்”

 

“அந்த லைட்டுக்க நேர் கீள ,இந்தா இந்த ரெண்டுக்கும் நடுவிலே, இந்த ஆப்பைச் செருகிடு…அவ்ளவுதான். எங்கெல்லாம் செவப்பு எரியுதோ அங்கல்லாம் செருகு… என்னலே மக்கா?”

 

“ச்ச் ச்ச் செரி”

 

அவனிடம் அட்டைப்பெட்டியை கொடுத்துவிட்டு வந்து ஃபோனை எடுத்தார். எட்டு எண்கள் பழுது. இன்னொரு ஃபோனில் சுப்ரமணியன் “சார், இங்க ஒரு பிரச்சினை” என்றான்.

 

‘பிரச்சினையை நீங்க வச்சு தாலியறுங்கலே” என்று ஆறுமுகம் ஃபோனை ஓங்கி அறைந்தார்.

 

டி.இ கூப்பிட்டார் “ஆறுமுகம் நீ எந்த நெலையிலே இருக்கேன்னு தெரியும்… இங்கபாரு, ஒரு சின்ன வேலை. இல்ல பெரிய வேலை. இதை நீயே செய்யணும் கேட்டியா? பிளாக் டெவலெப்மெண்ட் ஆபீஸ்லே ஃபோனிலே ஒரு நாய்ஸ்….நீ போயி என்னன்னு பாரு”

 

“நானா?”

 

“போடே… போயி பாத்தா நீயே வந்தேன்னு ஒரு நெறைவு அவனுகளுக்கு இருக்கும்”

 

“சார் அது அவனுக பலபேரு ஒரே லைனிலே ஃபோனை கனெக்ட் பண்ணுறதனாலே வாறது. இல்லீகல் இன்ஸ்டுருமெண்டு வச்சிருக்கானுக”

 

“அதாக்கும் நான் சொல்றது, நீ போனதும் எல்லாவனும் களட்டீருவான். லைன் செரியாயிடும். பாத்து செரியாச்சுன்னு சொல்லிட்டு வந்திரு… அவனுக மெட்ராஸுக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணிப்போட்டானுக, பாத்துக்க”

 

”சார்”

 

“டேய் பிளீஸ்டே”

 

“செரி”

 

“கோவிச்சுகிடாதே”

 

“இல்ல”

 

ஆறுமுகம் போனை வைத்தபின் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். பின்பு டி.வி.எஸ்-50 ஐ எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

 

செக்யூரிட்டி ஆரோக்கியம் “சார், மணிகண்டன் சாயக்கடையிலே அடிபிடி… ஒருத்தனுக்க மண்டைய உடைச்சிட்டானுக…”

 

“ஆரு?”

 

“உடைச்சவன் நாராயணன்… இடும்பன் நாராயணன்… மண்டை உடைஞ்சது யாரோ கீரைவிக்கப் போனவனுக்காக்கும்… “

 

“அவன் எதுக்குலே உள்ள வந்தான்?”

 

“ஆருக்கு தெரியும்… அடிபிடி தொடங்கினா பின்ன ஆருண்ணு பாக்கமுடியுமா? பக்கத்திலே நிக்கவன அடிக்கவேண்டியதுதான்”

 

ஆறுமுகம் பஸ் ஸ்டாண்ட் வழியாக  பிடிஓ ஆபீஸ் போனார். செல்லும் வழியிலேயே ஜங்ஷனில் போஸ்டில் ஏறி இணைப்பு இருக்கிறதா என்று பார்த்தார். இருந்தது. ஆனால் ஆபீஸில் இணைப்புகள் இரைச்சலிட்டன. ஒவ்வொரு ஒயராகத் தேடினார். நடுவே பிடிஓ வந்து “சீக்கிரம் வே” என்றார்

 

‘செய்யுதேன்லா” என்றார்

 

அவர் சென்றதும் அவருடைய பெர்சனல் கிளார்க் “வே சீக்கிரம் வே” என்றார்

 

“இந்நா செய்யுதேன்ல?”

 

அடுத்து பிடிஓவின் ஆர்டர்லி வந்து “என்னவே செய்யுதீரு? பிடிஓ அங்க சத்தம்போடுதாரு” என்றான்

 

ஆறுமுகம் மொத்த டூல்பாக்ஸையும் எடுத்து அவன் மண்டையை அறைந்தார்.  “தாயோளி உன்னைய வெட்டிட்டு நானும் சாவுதேன்ல” என்று கூவியபடி அவனை உதைத்தார்.

 

அவன் உருண்டு எழுந்து  அலறியபடி வெளியே ஓட ஸ்பானரை எடுத்தபடி அவனை துரத்தினார். பி.டி.ஓ அலுவலக ஊழியர்கள் அவரை பிடித்துக்கொண்டார்கள்.

 

“வே என்னது இது? போலீஸு கேசாயிரும்… இது சர்க்கார் ஆப்பீஸாக்கும்”

 

“நான் சாவுதேன்.. இவனை கொன்னுட்டு நான் சாவுதேன்… இவன் ஆரு? என்னை திட்ட இவன் ஆரு?”

 

“டேய் நீன் எதுக்குடே அவருகிட்ட பேசினே?”

 

அழுகையுடன் “நான் சும்மா கேட்டேன்” என்றான் ஆர்டர்லி

 

“உனக்க வேலை என்னலே? நீ ஏன் அங்க போனே? உள்ள போ…வாங்கின அடி உனக்கு போராது” என்றார் ஹெட்கிளார் நமச்சிவாயம். “ஆறுமுகம் நீரு இரியும்… வெள்ளம் குடியும்… லே ஒரு சாயை கொண்டுவரச்சொல்லு”

 

“சாயை வாங்க ஆளில்லல்லா?“ என்றார் கிளார்க்

 

“அந்த ஆர்டர்லியை விளி… அவனே வாங்கிட்டு வரட்டு”

 

“வேண்டாம் ,அவன் துப்பி கொண்டாந்திருவான்” என்றார் ஆறுமுகம்

 

“செரி வேண்டாம்… நீரு அடங்கும்”

 

அவர் வியர்வை ஆறியபின்பு எழுந்து மீண்டும் வேலையை தொடங்கினார். “அங்க டெலிஃபோன் எக்ஸேஞ்ச் கிறுக்குபிடிச்சு கெடக்கு… இந்தாலே இவன்”

 

“இந்த ஆபீஸு அதைவிட கிறுக்கு பிடிச்சு கெடக்குவே” என்றார் ஹெட்கிளார்க் “பத்துவருசம் பளைய ஃபைலுகளாக்கும் கையிலே கிட்டிட்டு இருக்கு….”

 

வேலை முடிய இரண்டு மணிநேரமாகியது. பிடிஓ அறைக்குள் சென்று “சார் பாத்தாச்சு… ஒரு எக்ஸ்டென்ஷனுக்குமேலே லோடு தாங்காது பாத்துக்கிடுங்க” என்றார்

 

“சொல்லுதேன்…ஆனா இங்க எல்லாவனுக்கும் மேஜைமேலே ஃபோனு வேணும்… “

 

அவர் திரும்பி வரும்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கூட்டம். அவர் டிவிஎஸ்-50 ஐ நிறுத்தி  “என்னவாக்கும் சங்கதி?” என்று விசாரித்தார்

 

“அம்புரோஸு பெருவட்டருக்க மகன் ஸ்டீபன் பத்து அருவாக் கச்சிக்காரனுகள விளிச்ச்சுகிட்டு வந்து காங்கிரச்காரனை அடிச்சுப்போட்டான்… நல்ல அடியாக்கும். ரெத்தம் உண்டு”

 

“என்னத்துக்கு அடிச்சான்?”

 

“இவனுக போயி அவனுகளுக்க  போன அத்திருக்கானுக”

 

ஆறுமுகம் ஒன்றும் சொல்லாமல் கிளம்பினார். மீண்டும் டெலிஃபோன் எக்ஸேஞ்ச் வந்தார். முக்காலியில் முருகன் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

 

“முருகன், மக்கா மாமனுக்கு ஒரு சாயை வாங்கிட்டுவாலே”

 

அவன் வெளியே போனான். அவர் நாற்காலியில் அமர்ந்து காலரை இழுத்து விட்டுக்கொண்டு மின்விசிறிக் காற்றில் இளைப்பாறினார். அப்போதுதான் எந்த ஃபோனும் அழைக்கவில்லை என்று தெரிந்தது.

 

அதெப்படி அத்தனைபேரும் ஒட்டுமொத்தமாகத் திருந்திவிட்டான்களா?

 

செக்யூரிட்டியும் முருகனும் வந்தனர். செக்யூரிட்டி ஆரோக்கியம் “சார், மணிகண்டன் கடைய மூடியாச்சு. அவனை போலீஸு கொண்டு போயிருக்கு”

 

“எதுக்கு?”

 

“ஒருத்தனுக்க மண்டை உடைஞ்சிருக்குல்லா? அவன் மக்கள் ஜனதாக் கச்சியாக்கும்”

 

“அப்டி ஒரு கச்சி இருக்கோ?”

 

”நாசமா போவும்…”என்றார் செக்யூரிட்டி “ஊளலை வேரறுப்போம்னுல்லா சொல்லுகான்?”

 

”அப்ப வேர கண்டுபிடிச்சிட்டானுக. பதியம் போட்டுட்டுதானே அறுப்பானுக” என்றார் ஆறுமுகம் “ஒரு சாயைக்கு என்னடே வளி?”

 

“நான் சைக்கிளிலே போயி வாங்கிட்டு வாறேன். முருகன் அங்க வாசலிலே இருக்கட்டு”

 

அவர்கள் சென்றார்கள். அவர் கண்களை மூடிக்கொண்டார். ஏன் ஒரு ஃபோனும் அழைக்கவில்லை. லாரன்ஸ் என்ன ஆனான்?

 

ஃபோனை எடுத்துப் பார்த்தார். டயல்டோன் இல்லை. தட்டிப்பார்த்த பின் இன்னொரு ஃபோனை எடுத்துப் பார்த்தார். அதிலும் டயல்டோன் இல்லை. ஆச்சரியமாக இருந்தது.

 

எழுந்துசென்று டெஸ்ட் லைனைப் பார்த்தார். அதிலும் டயல்டோன் இல்லை. ஓடிப்போய் டெலிஃபோன் எக்ஸேஞ்ச்சை பார்த்தார். அது ஒளியும் ஓசையும் இல்லாமல் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. மொத்தமாக டவுன்!

 

ஆறுமுகம் தலையில் கையை வைத்துக்கொண்டார். கண்ணுக்குள் ரத்தம் சுழன்றது. மிக மெல்ல மீண்டார். நேராகச் சென்று நாகர்கோயில் மெயினைப் பார்த்தார். அது வேலைசெய்துகொண்டிருந்தது

 

அதில் இணைப்பு செலுத்தி அழைத்தார். மறுமுனையில் மகாதேவன் கூச்சலிட்டார். “என்னவே செய்யுதீக?தெரியாம கேக்கேன், என்ன அங்க செய்யுதீக? எல்லா லைனும் போச்சா?”

 

“சார், டெலிஃபோன் எக்ஸேஞ்ச் மொத்தமா போச்சு”

 

“வே, என்னவே சொல்லுதீரு?”

 

“சார், வர்க் ஆவல்ல சார்”

 

“அய்யோ… நாளைக்கு எலக்சன் வே”

 

“நான் என்ன செய்ய? சாவணுமா?” என்று ஆறுமுகம் கூச்சலிட்டார்.

 

“முதல்ல போயி பேட்டரிய பாரும்…அது டிரெயின் ஆயிருக்கும்”

 

ஆறுமுகம் பேட்டரி அறைக்குப்போய்ப் பார்த்தார். பாதி சார்ஜ் இருந்தது. இருந்தாலும் முழு சார்ஜ் போட்டுவிட்டு வந்து லைன்களை சோதனை செய்தார். லைன்களில் இணைப்பு இருந்தது.

 

லாரன்ஸ் “சார் என்னச்சு? ஒண்ணுமே கிட்டல்ல?” என்றான்

 

“டவுன் ஆயிருக்குலே…என்னாண்ணு தெரியல்ல”

 

அதற்குள் டீயுடன் செக்யூரிட்டி வந்தார். “என்னாச்சு?”

 

“டெலிஃபோன் எக்ஸேஞ்ச் ஃபெயிலு”

 

“அய்யோ”

 

“பாக்குதேன்” என்றார் ஆறுமுகம்

 

டீ குடித்தபோது கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தார். மகாதேவனை கூப்பிட்டார். அவர் கொஞ்சம் நிதானமாக இருந்தார். அது அவரையும் கொஞ்சம் நிதானப்படுத்தியது

 

“இங்கபாருங்க, டென்ஷன் ஆகாதீங்க…எல்லா ஃப்யூசையும் செக்பண்ணுங்க… மொத்தம் நாப்பத்தெட்டு இருக்கு இல்ல?” என்றார் மகாதேவன்

 

“ஆமா” என்றார் ஆறுமுகம்

 

“ஒண்ணொண்ணா பாருங்க”

 

நாற்பத்தெட்டு ஃப்யூஸுமே ஒழுங்காகத்தான் இருந்தன. இம்முறை அழைத்தபோது டிஇ இருந்தார். அவர் காட்டுக்கூச்சல்போட்டார்

 

“எவனேலே நீ பழிவாங்குதே? நீ அழிஞ்சே… ஏல , இனி நீ அந்த ஆப்பீஸிலே வேலைபாக்கமாட்டே”

 

“என்னைய கொல்லுங்க.. இல்ல வேணுமானா நான் இந்த டெலிபோன் ஆபீஸிலே தூங்கிச் சாவுதேன்”

 

“என்னமாம் செய்லே…இல்ல ஒரு கயித்த வாங்கி இங்கிண அனுப்பு… நான் தூங்கிச்சாவுதேன்…”

 

“செரி”

 

“வெளையாடுதியா..எங்க லூப்புன்னு கண்டுபிடிடே”

 

மகாதேவன் “இங்கபாருங்க. அப்ப இனி ஒரு காரணம்தான் இருக்கு. நம்பர்களிலே எதிலயோ கடுமையா லூப் ஆகுது… இல்லேன்னா இபி லைன் கிராஸ் ஆவுது… ஒவ்வொரு நம்பரா எடுத்து செக் பண்ணுங்க”

 

“முந்நூறு நம்பரையுமா?”

 

“வேற வளி? கடைசியா ஃபால்ட் ஆன நம்பரை முதல்ல பாருங்க”

 

நூறு நம்பர் முடிந்தபோது அந்தியாகிவிட்டிருந்தது. செக்யூரிட்டி வந்து “இந்த முருகன் பயல அனுப்பீரவா? அந்தியாவுதுல்ல?”என்றார்

 

“செரி” என்றார்

 

மேலும் நூறு எண்கள். லைனுக்குப் போனவர்கள் எல்லாம் திரும்பி வந்து ரிப்போர்ட் செய்தார்கள்.

 

“என்னசார் ஆச்சு?”என்றான் மாதவன்

 

“ஆ, எனக்க அம்மை தாலி அறுத்தா… போவியா? வெட்டீருவேன்… ஓடிரு”

 

இரவானபோது முந்நூறு எண்ணையும் சோதனை போட்டிருந்தார். எதிலும் மிகையான மின்சாரம் ஏதுமில்லை

 

இரவு ஒன்பது மணிக்கு டி.இ கூப்பிட்டார். “ஆறுமுகம், கேக்கவேண்டிய எல்லாத்தையும் கேட்டாச்சுடே. எனக்க அம்மைக்கு ,ஆயாவுக்கு, அவளுக்க அம்மைக்கு யாருக்கும் கற்பு இல்லேன்னு நிரூபிச்சிட்டானுக…இனி நாம என்ன செய்ய? பேசாம விட்டிரு… இனி ராத்திரி நாம ஒண்ணும் செய்யுகதுக்கில்லை. ஆனா நீ டெலிஃபோன் எக்ஸேஞ்ச்லே இரு… நாம வேலைபாத்தோம்னு காட்டணும் இல்ல”

 

“செரி சார்”

 

செக்யூரிட்டியை அனுப்பி இரண்டு பரோட்டா வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார். தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. ஆனால் படுத்ததும் இருட்டான குகைக்குள் விழுந்ததுபோல தோன்றியது. அப்படியே தூங்கிவிட்டார்

 

காலையில் எழுந்தபோது மழை பெய்துகொண்டிருப்பதைக் கண்டார். நீர் விழும் ஓசை குளுமையாக இருந்தது.

 

செக்யூரிட்டி “ராத்திரி நல்ல மளையாக்கும்” என்றான் “நல்லவேளை கரெண்டு போகல்ல”

 

மணிகண்டன் கடையைத் திறப்பதைக் கண்டு குடையை எடுத்துக்கொண்டு ஓடிச்சென்று பெஞ்சில் அமர்ந்தார். “ஒரு சாய எடுடே”

 

“பாலு கொதிக்கணும் பாத்துக்கிடுங்க”

 

“செரி…”

 

இரண்டு போலீஸ்காரர்கள் மஃப்ளர் கட்டிக்கொண்டு ஒரே குடையில் உள்ளே வந்தனர். ஒருவரை ஆறுமுகம் அடையாளம் கண்டுகொண்டர். மீசை ராமன்

 

“வே மீசே, நைட் டூட்டியாவே?” என்றார் ஆறுமுகம்

 

‘ஆமா, சங்சனிலே… எலக்சன்லா?” என்று அவர் அமர்ந்தார். ‘நீரு?”

 

“நமக்கு கடவுள் போட்ட டூட்டி…டெலிஃபோன் எக்ஸேஞ்ச் டவுனாப்போச்சு…என்னான்னு கண்டுபிடிக்க முடியல்ல”

 

“இடி விளுந்திருக்குமோ?”

 

“விளலியே”

 

மீசைராமன் “நல்லவேளை ஒரு மளை அடிச்சுது. வே, நேத்து மத்தியான்னம் கிடந்த கிடைக்கு ஊரிலே ஒண்ணுரெண்டு தலை உருளும்னாக்கும் நினைச்சோம்… மளை காப்பாத்திப்போட்டுது. ஊரு குளுந்து கெடக்கு… எலக்சனும் மரியாதையா நடந்திரும்னு நினைக்கேன்”

 

மணிகண்டன் “போனும் செத்து கிடக்கு… இனி மனுசன் சமாதானமா சீவிக்கலாமே” என்றான்

 

மீசை ராமன் முந்தையநாள் அந்திவரை நடந்த அடிதடிகளின் பட்டியலை சொல்லிக்கொண்டிருந்தார்.ஒரு கிழவிக்கும் அடி விழுந்திருந்தது

 

“அவ எதுக்குவே அடிவாங்கினா?”

 

“இந்திராகாந்திய திட்டின கம்யூனிஸ்டுகாரன் மேலே வெத்திலய துப்பிப்போட்டா”

 

“செய்வாளுக… இந்த காதுவடிச்ச கிளவிக முளுக்க இந்திராகாந்திக்க ஆளுகளாக்கும்”

 

மணிகண்டன் “நேத்து ஏவாரம் போச்சு… போலீஸ் ஸ்டேஷன்லே நான் என்னமோ கொலைக்குத்தவாளி மாதிரி கேள்வி கேக்குதாக…. நான் என்னத்த கண்டேன். பேசினவன் ஒருத்தன். சண்டை போட்டவன் வேற சிலபேரு. கடைசியில் அடிச்சவனும் அடிபட்டவனும் ஒரு சம்பந்தமும் இல்லாத வேற சிலபேரு… சண்டை போட்டவனுக்கு என்ன சண்டையின்னு தெரியாது. இனியிப்ப மேலே இருக்குத தெய்வத்துக்கும் இதெல்லாம் என்னான்னு தெரியுமோ என்னமோ”

 

விடிந்ததும் ஆறுமுகம் டெலிஃபோன் எக்ஸேஞ்ச்லேயே பல்தேய்த்து குளித்தார். பழைய சட்டையையும் பாண்டையும் அணிந்துகொண்டார். என்ன செய்வதென்று தெரியவில்லை. டெஸ்ட் எக்யுப்மெண்டுகளுடன் நாகர்கோயிலில் இருந்து ஆள்வந்தால்தான் இனி வேலை நடக்கும்

 

பத்து மணிக்கு அவர் டீஇயை கூப்பிட்டார். “டேய் அதுக்கு நான் கேக்கவேண்டிய வார்த்தையை எல்லாம் கேட்டாச்சு. இனி அதிலே மெனக்கெட எனக்கு நேரமில்லை. மத்த எடத்திலே எல்லாம் ஒளுங்கா போயிட்டிருக்கு… எலக்சன் நடக்கட்டும்… நீரு சும்மா இரும்”

 

“எலக்சனுக்கு ஃபோனு வேணுமே?”

 

“எலக்சனுக்கு பணம் மட்டும்போரும்… வேற ஒண்ணும் வேண்டாம். புரியுதா?”

 

“இப்ப என்ன செய்ய?”

 

“எல்லாவனும் ஆடி அடங்கிட்டானுக. இப்ப வேற வழிகளை கண்டுபிடிச்சாச்சு… போலீஸுக்கு வயர்லெஸ் இருக்கு. பிடிஓ அதிலே பேசிக்கிடுவாரு… ஒண்ணும் பிரச்சினை இல்லை. அங்கிண மழை உண்டுமா?”

 

“ஆமா, பெய்யுது”

 

“பெய்யட்டுவே… நாயிங்க மண்டை குளிரட்டு”

 

ஆறுமுகம் மணிகண்டனின் கடைக்குச் சென்று தோசை தின்றுவந்தார். அங்கே எல்லா முகங்களும் சிரிப்புடன் இருந்தன

 

“என்னவே எல்லாவனும் முருகன் மாதிரி ஆயிட்டானுக?”

 

“மளைல்லா அண்ணாச்சி? சித்திரை மாச மளைன்னா ஒரு ஐசரியமில்லா?”

 

“பத்துநாளு இனி வாளைக்கு வெள்ளம் கோரவேண்டாம்” என்றான் கோரன்

 

“மாடு கடிக்க புல்லும் வரும்லா?” என்றார் ஞானமுத்து

 

“எலக்சன் எப்டி போவுது?”

 

“லைனிலே நின்னு ஓட்டு போடுதானுவ. கிளவிகள் ஓட்டுபோட எறங்கிட்டாளுகள்னா நாடு நல்லாருக்குண்ணுல்லா அண்ணாச்சி அதுக்க அர்த்தம்?”

 

”கிளவிக இந்திராகாந்திய ஏத்தி இருத்திப்போடுவாளுக”

 

ஆறுமுகம் திரும்ப டெலிஃபோன் எக்ஸேஞ்ச் வந்தார். அங்கே முருகன் வந்திருந்தான். புன்னகையுடன் இருந்தான்

 

“ஏம்லே மக்கா, காலம்பற என்ன தின்னே?”

 

“த் த் த் த்தோசை”

 

“விக்கி விக்கி தின்னிருக்கே” என்றபடி அமர்ந்து தந்திபேப்பரை வாசித்தார். அறைகூவல்கள். எதிர் அறைகூவல்கள். வஞ்சினங்கள். கண்டனங்கள்.

 

எழுந்து கொட்டாவி விட்டபடி டெலிஃபோன் எக்ஸேஞ்ச் அறைக்குள் சென்று பார்த்தார். ஓசையே இல்லாமல் ஆழமான அமைதியில் இருந்தது டெலிஃபோன் எக்ஸேஞ்ச்.

 

“என்னா பேச்சு ராப்பகலா? இப்பம் என்ன, வாயடைஞ்சுபோச்சோ?”என்றார் ஆறுமுகம்

 

சட்டென்று அவர் அந்த வெட்ஜ்களைப் பார்த்தார். திகைப்புடன் அருகே சென்று பார்த்தார். வரிசையாக எல்லா எண்களிலும் ஆப்புகள் செருகப்பட்டிருந்தன. எல்லா எண்களிலுமா? ஆமாம், முந்நூற்றி எட்டு எண்களிலும்

 

சற்றுநேரம் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. முதல் சிரிப்பொலி வெடித்ததுமே அவர் சிரிக்க ஆரம்பித்தார் சிரித்துக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் விழுந்தது. வயிற்றைப்பிடித்துக்கொண்டு முக்காலியில் அமர்ந்துவிட்டார்

 

“மக்கா முருகா, இங்க வாலே” என்றார்

 

முருகன் வந்து புன்னகை மலர்ந்து நின்றான்

 

“நீயாலே இந்த ஆப்பையெல்லாம் வச்சே?”

 

“ஆமா, ம்ம் ம்ம் முரிகின்… முரிகின் வச்ச ஆப்பு”

 

“எப்டி வச்சே? சிவப்பு லைட்ட பாத்துத்தானே வச்சே?”

 

“ம்ம் ம்ம் ம்ம் முரிகின்… லைட்டு ப்ப் ப்ப் பாத்து வச்ச ஆ ஆ ஆப்பு!”

 

“தெய்வமே!”என்றார் ஆறுமுகம்  “நீதாம்லே அந்த கோரோயில் முருகன். கண்கண்ட தெய்வம்லே நீ!”

 

டீஇயை கூப்பிட்டபோதும் அவர் சிரித்துக்கொண்டிருந்தார். “சார், இங்க ஒரு சம்பவம் நடந்துபோச்சு” என்றார்

 

எல்லாவற்றையும் சொல்லி முடிப்பதற்குள் டிஇ சிரிக்க ஆரம்பித்தார். அப்பால் மகாதேவன் சிரிப்பது தெரிந்தது

 

“அவன் எல்லா லைட்டுக்கும் ஆப்ப செருகிட்டான் சார்.. பச்சை செவப்பு மஞ்சள் எல்லாத்துக்கும்” என்றார் ஆறுமுகம்

 

“எல்லாம் ஒண்ணுதான் வே, போவப்போவ தெரிஞ்சுகிடுவே” என்று பக்கத்தில் இருந்த மகாதேவன் ஃபோனில் கூவினார்.

 

ஆறுமுகம் சிரித்தார்.கண்களில் இருந்து நீர் வழிந்தது. கையால் துடைத்துக்கொண்டார்.

 

“ஆறுமுகம் நம்ம செல்லக்குட்டிப் பயலுக்கு ஒரு நல்ல சாயையும் வடையும் வாங்கிக்குடுடே… இந்தா எக்ஸேஞ்சே சிரிச்சிட்டிருக்கு அவனாலே ” என்றார் டி.இ

 

மகாதேவன் ஃபோனை வாங்கி சிரித்தபடியே “ஆறுமுகம், பய சாதாரணமான ஆளு இல்ல கேட்டியா? அவனுக்கு என்னமோ தோணியிருக்கு பாத்தியா?” என்றார். “உள்ளதைச் சொல்லணுமானா எனக்கும் நேத்து அப்டி செய்யணும்னுதான்வே ஆசை”

 

ஆறுமுகம் “செரி சார், இப்ப என்ன செய்ய?”

 

“வெட்ஜுகளை எடுத்து விடு… வால்டேஜ் ஃபெயிலியர்னு மினிட்லே எளுது… வேற என்ன செய்ய?”

 

ஆறுமுகம் ஃபோனை வைத்துவிட்டு பார்த்தார். முருகன் முகப்பில் அவனுடைய குட்டி முக்காலியில் சிரிப்பு மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.

 

=============================================================

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பொற்கொன்றை!

$
0
0

 

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையின் புனைவுக் களியாட்டு

 

கோவிட் நோய்த்தொற்று, ஊரடங்கு குறித்து எதுவும் எழுதவேண்டாம் என்பதே என் எண்ணம், இனிமேலும் எழுதப்போவதில்லை. என்னை ஒவ்வொருநாளும் கருத்துரைக்க, விவாதிக்கவும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு “இல்லை, நான் பேச விழையவில்லை” என்பதே என் பதில்.

 

இந்த விஷு நன்னாளில் ஒருசில சொற்கள்.

 

ஒரு குடும்பச்சூழலில் அக்குடும்ப உறுப்பினர்களிடையே உச்சகட்ட வன்முறை எப்போது நிகழும் என்றால் அக்குடும்பமே ஒரு நெருக்கடியை சந்திக்கையில், வீழ்ச்சிநோக்கிச் செல்கையில்தான். பெரும்பாலும் பணக்கஷ்டம் உள்ள குடும்பங்களில் குடும்பவன்முறை உச்சத்தில் இருக்கிறது.

 

இதுவே சமூகத்திற்கும் பொருந்தும். போர், கொள்ளைநோய் போன்ற இடர்க்காலகட்டங்களில் அனைவருமே பதற்றநிலையை அடைகிறார்கள். அனைவருமே அனைத்து எதிர்மறை உணர்வுகளையும் பெருக்கிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் ஐயங்கள், கசப்புகள், வெறுப்புகள் வளர்ந்து பேருருக்கொள்கின்றன

 

அதில் எந்த தர்க்கமும் பேணப்படுவதில்லை. ஆகவே எந்த விவாதத்தினாலும் ஒருவரின் ஐயம்,அச்சம், பதற்றம், வெறுப்பு ஆகியவற்றிலிருந்து எழும் கருத்துக்களை மாற்றிவிட முடியாது. அச்சூழலில் கருத்துவிவாதங்களுக்கு எந்த இடமும் இல்லை. அவை மேலும் கசப்புகளையும் வெறுப்பையும் வளர்க்கும். அதனால் முதல் இழப்பு நமக்கே. இந்தத் தனிமையில் கசப்பு நிறைந்தவர்களாக நீடிப்பதைப்போல துன்பம் வேறில்லை.,

 

இந்த நெருக்கடி காலகட்டத்தில் உச்சகட்ட வெறுப்புகள் எழுந்து நின்றுள்ளன.வெறுப்பு நம்மை கறைபடியச்செய்வது. வெறுப்பை உருவாக்கிக்கொள்பவர்களே முதன்மையாக இருளில் விழுகிறார்கள். நம் வீட்டுக்குள் ஒரு மலினத்தை ஒருவன் வீசிவிட்டுச் செல்கிறான் என்பதுபோன்றதே ஒருவன் தன் காழ்ப்பை நம்மேல் ஏற்றிவிட்டுச் செல்கிறான் என்பது.  வெறுப்பை எழுப்பும் ஒரு சொல்லுக்கும் செவிகொடுக்காமல் இருப்போம்.நம்மில் எவர் மீதும் எவர் உமிழும் கசப்பையும்.

 

அத்துடன் வழக்கமான பொது எதிர்ப்பு மனநிலை, அரசியல் நிலைபாடுகள்,அதன் விளைவான எள்ளல்கள் கசப்புகள் கொந்தளிப்புகள்.அவை நம்மை நாமே கீழ்மையாக வெளிப்படுத்திக்கொள்பவை அன்றி வேறல்ல.

 

எங்கும்  பொய்ச்செய்திகள், திரிபுச்செய்திகள், உள்நோக்கம்கொண்ட கருத்துக்கள், மிகையான உணர்ச்சிகள். ஒவ்வொருவரும் தங்கள் வழக்கமான அரசியலை,வழக்கமான காழ்ப்புகளை இந்த தருணத்தில் மேலும் ஆவேசமாக முன்வைக்கிறார்கள். அதை உடனடியாக தெரிந்துகொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. தேவையில்லாமல் நாம் அகத்தே எதிர்வினையாற்றுவோம். நம் உள்ளத்தை இருளாக்கிக்கொள்வோம். அவர்கள் இங்கேதான் இருப்பார்க்ள். மூன்றுமாதம் கழித்து என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்

 

இந்நாளில் ஓர் உறுதி எடுத்துக்கொள்வோம். எந்த காழ்ப்புச்செய்திகளையும் எந்த வெறுப்புச்செய்திகளையும் செவிகொடுக்க மாட்டோம், எதிர்வினையாற்ற மாட்டோம் என்று நாம் செவிகொள்ளும் ஒரு செய்தி அது எந்த ஊடகத்திலாயினும் அத்துறைசார் நிபுணரால் அரசியல் சார்புகள் அற்று சொல்லப்படுவதாக மட்டும்தான் இருக்கவேண்டும்

 

இந்தக் காலம் கடந்துபோகும். இதை அகத்தே ஒளியுடன் கடந்துவந்தோம் என்று நாமே திரும்பிப்பார்த்து நிறைவுகொள்ளவேண்டும். அதுவே முக்கியமானது.

 

இந்நாளில் நல்ல இசை கேட்போம். எளிய இனிப்பு செய்து உண்போம். வீட்டில் இருந்தாலும் நல்ல ஆடை அணிவோம். இந்த நாளில் இனிமையையும் நல்லுணர்வுகளையும் மட்டும் நிறைத்துக் கொள்வோம்.இந்நாளை கொன்றையில் பொன் எழும் நாள் என மூவாயிரமாண்டுகளாக நம் முன்னோர் கொண்டாடி வருகிறார்கள்.

 

பொன் எழுக!

 

 

 

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–32

$
0
0

பகுதி நான்கு : அலைமீள்கை – 15

கிருதவர்மனின் உள்ளத்துள் என் சொற்களை செலுத்திவிட்டேன் என்றே உணர்ந்தேன். “தந்தையே, நீங்கள் எங்கள் குலமூதாதை ஹ்ருதீகரின் மைந்தர். ஒவ்வொரு நாளும் பொழுதிணைவு வணக்கங்களில் நாங்கள் சொல்லும் பெயர்களில் ஒன்று அது. ஒவ்வொருநாளும் அவருக்கு நீர் அளிக்கும் நிலங்களில் ஒன்று துவாரகை” என்றேன். அவர் என்னை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார். “களம்பட்ட உங்கள் மைந்தர் பாலிக்காக நீர் அளித்தவர்களில் ஒருவன் என நின்று இதை உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றேன். “என்றும் அது அவ்வண்ணமே நீடிக்கும். நாம் முரண்படலாம், போரிடலாம், அழியலாம், குலம் நம்மைக் கடந்து என்றுமிருப்பது.”

“நீ சொல்வது இயல்வதே, பிரத்யும்னன் தன் கோல் நிலைகொள்ள உன் தந்தையை தெய்வமாக்கலாம்” என்றார் கிருதவர்மன். “ஆனால் நீங்கள் முடிசூடினாலும் அதுதானே நடக்கும்? உங்கள் தந்தையின் அடையாளமின்றி எதன் பொருட்டு நீங்கள் அரசமைக்க முடியும்?” என்றார். “மெய், எங்கள் தந்தையின் அடையாளத்தை நாங்கள் விடமாட்டோம். அதை கூறுவோம். ஆனால் அதை முதன்மைப்படுத்த மாட்டோம். முதன்மைப்படுத்தவும் இயலாது. எங்கள் செயல்பாடு அவர்களுக்கு நேர் எதிரானது. நாங்கள் முடிசூடும்போது தந்தை எங்களுக்கு தேவைப்படுகிறார், சூடியபின் தேவைப்படமாட்டார். அதன் பின் நாங்கள் எங்களை யாதவர் என்றே முன் வைப்போம். எங்களை தூய யாதவர் என்றும், தொன்மையான யாதவர் என்றும் முன் வைப்பதற்கு தடையாக இருப்பது எந்தை இளைய யாதவரின் அடையாளமல்லவா?” என்றேன்.

“நாங்கள் எங்களை கார்த்தவீரியரின் குடி என்போம். சூரசேனரின் குருதி என்போம். பலராமர் வரை ஒரு கொடிவழியை உருவாக்குவோம். அதில் ஒரு பெயராக மட்டும் இளைய யாதவரை நிலைநிறுத்துவோம். அரசே, பெருவீரர்களின் இயல்பு ஒன்றுண்டு, அவர்கள் தங்கள் வீரத்தால் வெல்வது எதிரிகளை மட்டுமல்ல, தங்கள் முன்னோடிகளையும் கூடத்தான். என்று இளைய யாதவர் எங்கள் குடியில் எழுந்தாரோ அன்றே கார்த்தவீரியரின் புகழ் மங்கிவிட்டது. இனி நாங்கள் எங்கள் குடிமூதாதையரின் பெயரை முன் நிறுத்தவேண்டுமெனில் மாவீரர் கம்சரின் பெயரையும் சொல்லித்தான் ஆகவேண்டும். கம்சரின் பெயரை சொல்லவேண்டுமெனில் இளைய யாதவரின் பெயரை சற்றே குறைத்தாக வேண்டும்.”

“எண்ணி நோக்குக, நாங்கள் வென்றால் தந்தை உரு சிறுத்து மூதாதை நிரையில் நூற்றில் ஒருவர் என்றே அமைவார்! அவருக்கு இடப்பக்கம் சூரசேனரும் வலப்பக்கம் பலராமரும் அமர்ந்திருப்பார்கள். அவரை தனிப் பெருவீரராக காட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அது எங்களுக்கு இடரும்கூட. எங்கள் மாவீரர் நிரையில் நீங்களும் இருப்பீர்கள். அந்தகக் குடியின் அனைத்துப் பெருவீரர்களும் இருப்பார்கள். போஜர்களும் குக்குரர்களும் இடம்பெறுவார்கள். அவ்வண்ணம்தான் நாங்கள் யாதவர்களின் குடியொற்றுமையை பேணிக்கொள்ள முடியும்” என்றேன்.

“ஆனால் பிரத்யும்னன் அதை செய்யமாட்டார். பிரத்யும்னன் யாதவர்களை தன்னுடன் நிறுத்திக்கொள்ள தந்தையுடனான தனது குருதிஉறவை மேலும் மேலும் நிறுவிக்கொள்ளவேண்டும். அதற்கு எந்தையை மேலும் மேலும் புகழ்ந்து தெய்வமாக்கி நிலைநிறுத்தவேண்டும். அதனூடாக எந்தை யாதவ குடித்தலைவர் அல்ல என்பதையும் அவர் எவ்வண்ணமோ நிலைநிறுத்துவார். ஏனென்றால் தந்தையை யாதவ குடிமூத்தவராக நிலைநிறுத்துகையில் மறைமுகமாக யாதவ ஆற்றலை அவர் சொல்வதாக ஆகிவிடும். யாதவர்களே துவாரகையில் இயல்பான குடிகள் என்று சொல்வதுபோல் அது தோன்றும். அது எந்நிலையிலும் அவருடைய கோன்மைக்கு எதிரானதே. அவர் யாதவர்களை குடிகளாக நிறுத்த விழைவார், அவர்கள் கோன்மைகொண்டு எழ ஒப்பமாட்டார்.”

“தந்தையே, கோல்கொண்டு அமர்ந்தால் பிரத்யும்னன் சில ஆண்டுகளில் அஸ்தினபுரிபோல வரவுக்குடிகளைக்கொண்டு துவாரகையை நிறைப்பார். அவ்வண்ணம் வருபவர்கள் எந்தை இளைய யாதவரை தெய்வம் என்று வழிபடவேண்டும். அப்போதுதான் அவர்கள் பிரத்யும்னனையும் தெய்வநிரையினர் என ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறு எந்தை இளைய யாதவரை வழிபடவேண்டுமென்றால் இளைய யாதவர் அவருடைய யாதவ அடையாளத்தையும் மீறிய தெய்வமாகவேண்டும். அதற்கு அவரை யாதவர் அல்லாதாக்குவது ஒன்றே வழி. அதற்கு அவரை யாதவ அடையாளத்தை மீறிய தெய்வமாக்கியாகவேண்டும். யாதவக் குடியில் தோன்றிய விண்ணவனாக அவரை காட்டவேண்டும்.”

“அதன்பொருட்டு அவரை தெய்வத்தின் மானுடப்பிறப்பு என்பார்கள். அவருடைய இளமைக்கால கதைகளை விதந்து பெருக்குவார்கள். அவர் யாதவர் என்பது ஒரு தற்செயல் நிகழ்வே என்பார்கள். யாதவர் என்பது அவருடைய அடையாளம் அல்ல, அந்த தெய்வம் வந்தெழுந்த பீடம் மட்டுமே எனக் காட்டுவார்கள். ஐயம் தேவையில்லை, பிரத்யும்னன் அதையே செய்வார்” என்றேன். “அது மிகச் சிறந்த உத்தி. எந்த விருஷ்ணியும் எந்த யாதவரும் இளைய யாதவர் என்ற பெருவீரரை, முனிவரை புகழ்வதை மறுக்க முடியாது. புகழப்புகழ அவர் தெய்வமாகி யாதவரல்லாமலாகி அகல்கிறார் என்பதை அவர்களில் எளியோர் உணரவே போவதில்லை. உணர்ந்தோர் அதை சொன்னால் அவர்களை இளைய யாதவரின் புகழை விரும்பாதோர், யாதவக் குடிமேன்மையை கருதாதோர் என்று பழி சுமத்தி அழித்தும்விடலாம்.”

“பிரத்யும்னன் முடிசூடினால் அவர் சில பத்தாண்டுகளுக்குள்ளேயே மதுராவையும் மதுவனத்தையும் வென்றாகவேண்டும். யாதவ நாடுகள் அனைத்தையும் தன்னுடன் சேர்த்தாகவேண்டும். யாதவ நிலத்தை ஒருங்கிணைக்க வாளேந்திய இளைய யாதவராக தன்னை அவர் காட்டிக்கொண்டாரென்றால் மட்டுமே அதை செய்ய முடியும். எங்களுக்கு அப்படி அல்ல. நாங்கள் எந்நிலையிலும் குலத்தின் அமைப்பை அழிக்க இயலாது. ஏனெனில் அதுவே எங்கள் ஆற்றல். குலத்தின் அமைப்பு நீடிக்க நீடிக்க விருஷ்ணிகள் மட்டும் பேருருக்கொள்ளவும் இயலாது. போஜர்களிலும் அந்தகர்களிலும் உள்ள பெருவீரர்களையும் நாங்கள் முன்னிறுத்தியாகவேண்டும்.”

“ஆகவே இளைய யாதவரை வரலாற்றின் ஒரு பெயரென குறுக்கவேண்டுமெனில் நீங்கள் எங்களுடன் நின்றாகவேண்டும். நாங்கள் வென்றாகவேண்டும். இளைய யாதவர் பேருருக்கொண்டு அங்கு நிலைநிற்கவேண்டுமெனில் நீங்கள் இங்கேயே இருங்கள். உங்கள் விலக்கத்தால் பிரத்யும்னன் முடிசூடட்டும், அநிருத்தன் முடி தொடரட்டும்” என்றேன். என் தரப்பை வலுவாகச் சொல்லிவிட்டேன் என்று உணர்ந்தேன். இந்த மூதாதையரின் அவைத்திறனை மெய்யாகவே நான் அறியேன். அவர்கள் தங்கள் மைந்தரின் உள்ளத்தை நன்கு அறிவார்கள். ஆகவே சொல்கடந்து வந்து எங்கள் அகத்தை நுண்ணிதின் உணர்வார்கள். தந்தையர் உள்ளங்களை மைந்தர் அறிய இரண்டு வழிகளே உள்ளன. அவர்களின் குருதிப்பற்றை தூண்டுதல், அவர்களின் ஆணவத்தை வளர்த்தல். நான் இரண்டையும் இணைத்துச் செய்துவிட்டேன் என்று எண்ணிக்கொண்டேன்.

கிருதவர்மன் மெல்ல சிரிப்பதை கேட்டேன். அவர் உள்ளம் செல்வதெங்கே என எனக்கு புரிந்தது. என் சொற்கள் அவரை நகர்த்திவிட்டன. ஆனால் அவ்வண்ணம் நகர்ந்தது குறித்து அவர் நாணுகிறார். “அதாவது, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறீர்கள். பிரத்யும்னன் இளைய யாதவரை தெய்வமாக்குவான், நீங்கள் தந்தையென நிலைநிறுத்துவீர்கள். இரண்டில் ஒன்றை நான் தெரிவுசெய்யவேண்டும், இல்லையா?” என்று கிருதவர்மன் சொன்னார். அவருடைய அந்தச் சொற்களுக்காகவே நான் காத்திருந்தேன். “இல்லை, நான் இங்கு வந்தது மூன்றாவது ஒரு வாய்ப்பை தங்களுக்கு அளிப்பதற்காக” என்றேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. குழம்பி “கூறுக!” என்றார்.

“தந்தையே, நான் வந்தது மேலும் ஒன்றை உங்களுக்கு உரைப்பதற்காக. அங்கு மூன்று தரப்புகள் இருப்பது புறத்தோற்றம். ஒரு தரப்புக்குள்ளும் பல்வேறு துணைத்தரப்புகள் உண்டு. எண்பது பேரில் என்றேனும் ஒரு நாள் துவாரகையின் மணிமுடியை சூடலாம் என்று எண்ணாத ஒருவரேனும் உளரா என்று கேட்டால் இல்லை என்றே மறுமொழி கூற இயலும்” என்றேன். அவர் “நீ உட்பட?” என்றார். “ஆம், இத்தனை தொலைவு வந்து இத்தனை உணர்வெழுச்சியுடன் நான் பேசிக்கொண்டிருப்பது என் தமையனுக்காகவோ யாதவ குலத்திற்காகவோ அல்ல என்பதை தாங்களும் உணர்ந்திருப்பீர்கள். ஏனென்றால் நாம் யாதவராயினும் உணர்வால் ஷத்ரியர்கள்” என்றேன். அவர் ஒன்றும் கூறவில்லை.

“நான் இம்மூன்று தரப்பிலும் எதையும் வென்றெடுத்து அமர்ந்து ஆட்சி செய்ய இயலாது. மூவரும் என்னை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார். “ஆனால் மூன்று தரப்புகளுக்கிடையே நிகர்வல்லமையுடன் போர் நிகழுமெனில், அதில் மூன்று தரப்பினருமே மாறி மாறி முழுமையாக தோற்கடித்துக்கொள்வார்கள் எனில், எஞ்சியோருக்கு நான் தலைமை தாங்க முடியும். அவர்களுக்கு வேறு வழியில்லை. நான் அவர்களை அழைத்துக்கொண்டு துவாரகையிலிருந்து வேறெங்கேனும் சென்று ஒரு அரசை உருவாக்க முடியும். அல்லது உடைந்து சிதைந்தழிந்த துவாரகையை பிறிதொரு பெயரில் கட்டி எழுப்பி அங்கு முடிசூட முடியும்” என்றேன்.

அவர் “இடிபாடுகளில் இருந்து முளைத்தெழுதல்” என்றார். “ஆம், அவ்வண்ணம் மீண்டும் முளைத்தெழும்போது அதில் இளைய யாதவரின் பெயர் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற சொல்லை நான் உங்களுக்கு அளிப்பேன் எனில் நீங்கள் என்னுடன் வர இயலுமா?” என்றேன். “உன்னுடன் நான் வரவேண்டுமா?” என்றார். “இப்போது என்னுடன் வந்து யாதவ தரப்பிற்கு படைத்தலைமை கொண்டு நில்லுங்கள். அவர்கள் எண்ணுவதுபோல் எளிதில் யாதவர்களை வென்றுவிடமுடியாது என்ற எண்ணத்தை அவர்களுக்கு அளியுங்கள். அசுரரும் ஷத்ரியரும் ஒன்று திரண்டால்கூட யாதவர்கள் வென்று நிற்பார்கள் என்பது நீங்கள் வரும்போதே தெரிந்துவிடும். ஒவ்வொன்றும் மாறத்தொடங்கிவிடும்… ஷத்ரியப் படைகள் துவாரகைக்குள் நுழைவதை பத்துமுறை எண்ணிச்சூழ்வார்கள்” என்றேன்.

“நீங்கள் வந்தால் சாத்யகியும் களம் வராமல் இருக்கமாட்டார். உங்கள் கையில் யாதவர்களின் முழுத் தலைமையையும் கொடுத்துவிட்டு நிற்க அவரால் இயலாது. ஆம், உறுதியாக அவரும் வருவார். நீங்கள் இருவரும் சேர்ந்து படைமுகம் நின்றீர்கள் என்றால் யாதவர்களை வெல்ல அவர்களால் இயலாது. இணையான போர்த்தரப்புகள் ஏற்படும், முனைகள் கூர்கொள்ளும். மேலும் இறுக்கம் நீடிக்கும். ஏதோ ஒரு இடத்தில் வெடிக்கும். போரென்றாகும். போரில் யாதவர்களும் பெருமளவுக்கு அழிவார்கள். நீங்கள் ஷத்ரியர்களை முற்றழிப்பீர்கள், அசுரர்களை அகற்றுவீர்கள். தந்தையே, அந்தப் போரில் அந்தகர்கள் குறைந்த அளவே மடியும்படி நான் சூழ்கை வகுக்கிறேன். அந்தச் சொல்லை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”

“நீ சாத்யகியை சந்தித்தாயா?” என்றார் கிருதவர்மன். “ஆம்” என்றேன். “அவனிடமும் இதையே பேசினாயா?” என்றார். “ஆம்” என்றேன். “நீங்கள் மூதாதை, உங்களிடம் எதையும் மறைக்க நான் விழையவில்லை. இதே சொல்லுறுதியை அவரிடமும் பெற்றேன்.” கிருதவர்மன் “அவனிடம் என்ன சொன்னாய், விருஷ்ணிகளின் சாவை குறைக்க முயல்வதாக, அல்லவா?” என்றார். “அல்ல, அவர் வருவதாக ஒப்பவில்லை. ஆகவே இப்பேச்சு எழவில்லை” என்றேன். “தந்தையே, நான் அந்தகக் குலத்து அன்னையின் மைந்தன். அந்தகர்களின் அரண்மனையில் வளர்ந்தவன். நீங்கள் என்னை அந்தகனாக அன்றி எவ்வகையிலும் சேர்க்கக்கூடாது.” கிருதவர்மன் “எனில் நன்று!” என்றார்.

அதை மேலே வளர்க்கக்கூடாது என எண்ணி நான் தொடர்ந்தேன் “என் கணிப்பு இது. பிழை எனில் கூறுக! போருக்குப் பின் எஞ்சும் யாதவர்கள் வல்லமை அற்றவர்களாகவும், துயருற்று தனித்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு நான் அரசனாகிறேன். அவர்களைக் கொண்டு ஓர் அரசை அமைக்கிறேன். ஆற்றலற்ற அரசு. ஆகவே கப்பம் கட்டி ஒளிந்திருக்கும் எளிய அரசு. அது எனக்கு போதும்.” அவர் சில கணங்களுக்குப் பின் “உன் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்க என்னால் இயலாது என்று எண்ணுகிறாயா?” என்றபின் உரக்க நகைத்து “ஒவ்வொரு படைவீரனின் உள்ளத்தையும் இன்னொரு படைவீரன் எண்ணி எண்ணி சொல் சொல் என எடுக்க முடியும். ஏனெனில் படைவீரர்கள் ஒன்றே போன்றவர்கள்” என்றார்.

நான் அவர் சொற்களுக்காக காத்திருந்தேன். “நீ இப்போது எண்ணுவது என்னவென்றால் அவ்வண்ணம் மூன்று தரப்பினரும் முற்றழிந்தபின் எஞ்சிய யாதவக் குடியில் இருந்து நீ அரசன் என எழுந்தால் முடிசூடும் வரைக்கும் மட்டுமே நீ அனைவருக்கும் கட்டுப்பட்டவன். அதன் பிறகு நீ ஒரு தனி மன்னனென எழுவாய். துவாரகையை இளைய யாதவர் உருவாக்கியதுபோல நீ அதை மீட்டெழுப்புவாய். அவர் கொடிவழியென அங்கு அமர்ந்திருப்பாய்.” அவர் குரல் மேலும் சிரிப்பை கொண்டது. “அப்போது நான் சாத்யகியால் கொல்லப்பட்டிருப்பேன், அவன் என்னால் கொல்லப்பட்டிருப்பான். அப்படி கணித்துள்ளனர் நிமித்திகர், இல்லையா?”

நான் உறுதியாக “அல்ல” என்றேன். “இளம் அகவையிலிருந்தே நான் எண்ணியது எந்தையைப்போல் ஆகவேண்டும் என்றுதான். அதை மறுக்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக எந்தையைக் கடந்துசெல்ல வேண்டும் என்ற கனவு என்னுள் இருக்கிறது. அரசே, இந்த நீண்ட பாலைவனத்தைக் கடந்து வந்த இந்த நாட்களில் எந்தை இல்லாது நான் மட்டும் நின்றிருக்கவேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தேன். எந்தையை நான் ஒருபோதும் சென்றடைய இயலாது. அவருடைய புகழும் பெருமையும் என்னை சிறியவன் என்றே ஆக்கும். போருக்குப் பின் எப்படி நான் முடிசூடினாலும் என் மேல் பழியே குவியும். போரில் எஞ்சியிருப்பதே பழி என எண்ணுவர் வீரர்.”

“அத்துடன் சூதர்களை எவரும் ஏமாற்ற இயலாது. பிறர் இல்லாமையால் வேறு வழியின்றி நான் அரசனானேன் என்று கூறுவார்கள். பின்னர் மெல்லமெல்ல மூவரையுமே நான் அழித்தேன் என்பார்கள். எவ்வண்ணம் அழித்தேன் என கதைகளை உருவாக்குவார்கள். மூன்று பேரின் போருக்குப் பின் சூழ்ச்சி செய்து குருதியுண்டு எழுந்த நரி எனும் பழி என்மேல் இருக்கும். ஒருவேளை எந்தையையே நான்தான் துவாரகையை விட்டு விரட்டினேன் என்றுகூட புனைந்துகொள்வார்கள்” என்றேன். “எந்தையின் மைந்தன் என என்னை முன்னிறுத்தும் தோறும் அப்பழி பெருகும். எந்தையை அவர்கள் மறந்தால் மட்டுமே நான் எழ முடியும். எந்தை இயல்பாக காலத்தில் மறையவேண்டும்.”

“மாவீரர்களை அழிக்க முடியாது. கதைகளாக்கி விலக்க முடியும். கதைகளை பெருக்கி மேலும் பெருக்கி அவரை தொலைவுக்கு கொண்டுசெல்வேன். யதுவும் மைந்தர்களும் கார்த்தவீரியரும் வாழும் உலகுக்கு. அங்கிருந்து அவர்கள் வாழும் உலகுக்கு வரமுடியாது. என்னைப் பற்றிய கதைகளை என் முதுமையில் நான் உருவாக்கிக்கொள்வேன். அவை முற்றிலும் வேறு கதையாக இருக்கவேண்டும். முந்தைய கதைகளின் நீட்சியாகவும் அவற்றிலிருந்து வேறுபட்டவையாகவும் ஆகும் கதைகள்” என்றேன். “அவற்றை உருவாக்குவது மிக எளிது. கதைகளின் ஆற்றல் அவை சுவையானவை என்பது. கதைகளின் நோய் என்பதும் அவை சுவையானவை என்பதே. எந்தப் பொய்யையும் சுவையானதாக சமைத்தால் எந்த மெய் மேலும் ஏற்றிவிடலாம் என்பதே கதைகளின் சிறுமை.”

“மூதாதையே, இங்கு வரும் வழியில் எண்ணினேன், எந்தையை மறக்கச் செய்ய என்னால் இயலாது. பாரதவர்ஷத்தின் நினைவில் அவர் பதிந்துவிட்டார். அப்பெரும்போரை அவர் இயற்றியமையாலேயே இனி ஆயிரமாயிரம் ஆண்டுகள் அவரை எவரும் மானுட நினைவிலிருந்தே அகற்ற இயலாது. ஆனால் ஒன்று செய்யலாம், அவரை அவர் அல்லாமல் ஆக்கலாம். அவர் பலமுகம் கொண்டவர். அதில் ஒன்றை மேலெழச் செய்யலாம். அவர் மேல் எதையும் புதிதாக ஏற்ற இயலாது. ஆனால் அவரில் இருக்கும் ஒன்றை மிகையாக்கி பெருக்கிக்கொள்ளலாம். கோகுலத்தில் பெண்களுடன் ஆடும் எளிய களியாட்டுச் சிறுவனாக அவரை காட்டலாம். குழலூதி உளம் மயக்கும் குறும்பனாக விரிக்கலாம். அதைப் பற்றிய பாடல்களை உருவாக்கலாம். அதைப் பற்றி கதைகளை உருவாக்கலாம்.”

“அவ்வாறாக இப்போர்ச்செய்திகள், வீரகதைகள், அரசியலாடல்கள், குலவரலாறுகள் அனைத்திலிருந்தும் அவர் விலக்கப்படுவார். பெண்களுடன் ஆடி மகிழ்ந்திருக்கும் சிறுவன், அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று ஆவார்” என்றேன். கிருதவர்மன் எண்ணுவது எனக்குத் தெரிந்தது. “நீங்கள் எண்ணுவது எனக்கு புரிகிறது. ஏன் அதை தெரிவுசெய்கிறேன் என்று. மூதாதையே, அவரது புகழை அழிப்பதற்கு ஒரு எதிர்ப் பெயரை உருவாக்குவதல்ல உகந்த வழி. அவருடைய நற்பெயர்களில் ஒன்றை பெரிதுபடுத்துவது. தன்போக்கில் பெருகி வளரும் இயல்புகொண்ட ஒன்றையே அவ்வாறு சொல்லமுடியும். இப்போதே அவருடைய மூன்று அடையாளங்களில் ஒன்று அது.”

“அவர் பெருவீரர், பேரறிஞர், பெருங்களியாட்டர். சூதர்கள் அவ்வண்ணமே அவரை பாடுகின்றனர். அவரை நான் களியாட்டர் என்று முன் வைக்கிறேன். அது புதிய சித்திரம் அல்ல. இங்கே அவர் இந்திரவழிபாட்டை நிறுத்தியதும் அவரை இந்திரன் என்றே வழிபடத் தொடங்கினர். அவருக்கு பதினாறாயிரத்து எட்டு மனைவியர் இருப்பதாக சூதர் கதைகள் பாடுகின்றன. நான் ஒருவகையான இந்திரன் என்றே காட்டுகிறேன். பெண்களுடன் ஆடுபவர். இல்லங்களுக்குள் அறியாது காற்றென புகுந்து கன்னியரை கவர்பவர். கனவுகளில் நுழைந்து அவர்களை காமம் கொள்ளச் செய்பவர். இந்திரனின் எல்லா கதைகளையும் அவர்மேல் ஏற்றிவிடுகிறேன். அது வளரும் சித்திரம். அதை பெண்கள் வளர்ப்பார்கள்.”

“அதுவே அம்மூன்று சித்திரங்களில் அந்தக் கதைக்கு மிக உகந்தது. அறிஞரென அவரை முன்வைத்தால் புலவர்களே ஏற்பார்கள். ஆட்சியாளர் என மாவீரர் என முன்வைத்தால் அவரைப்பற்றி பாடாண் திணை மட்டுமே எழ இயலும். அகத்துறையின் அனைத்துத் திணைகளையும் அவர் நிரப்பி அமர்வார். முல்லையும் குறிஞ்சியும் மருதமும் பாலையும் நெய்தலும் ஆவார். அச்சித்திரமே இசைக்கு உகந்தது. ஆடலுக்கு இயைவது. காவியச்சுவை கொண்டது. கன்னியருக்கு அவர் அகக்காதலர். அன்னையருக்கு அவர் இளமைந்தர். ஆண்களுக்கு அவர் தங்களுள் வாழும் அழியா இளைஞன். அவர் களியாட்டர் என்று ஆகும்போது அவர் பேருருக்கொண்டு எங்கோ இருப்பார். நாம் அவருக்கான எளிய பூசனைகள் வழியாக அவரை மேலும் ஆழப் புதைப்போம்.”

“இச்சொல்லை நான் உங்களுக்கு அளிக்கிறேன். நான் வென்றால் மக்கள் நினைவில் அவ்வாறே அவரை எழுப்புகிறேன். அதைக்கொண்டே பிற அனைத்தையும் மறைக்கிறேன். நூறாண்டுகளுக்குப் பின் அவர் போர் புரிந்தாரா என்ன, நூல் நவின்றாரா என்ன என்று அவருடைய கதையை நாளெல்லாம் கேட்டு வளர்ந்தவர்களே வியக்கும் வண்ணம் ஆக்கிவிடுகிறேன். அவ்வாறு அவரையே மறைக்கிறேன். தோகையைக்கொண்டு மயிலை மூடுகிறேன். அவரை மறைத்தபின் அந்த இடத்தில் என்னை நிறுத்துகிறேன். என்னை களியாட்டற்றவன் என்றும் கலைகளில் ஆர்வமற்றவன் என்றும் காட்டுகிறேன். அரசுசூழ்தலும் ஆட்சியும் மட்டுமே அறிந்த முடிமன்னனாக நிலைநிறுத்துகிறேன்.”

“அவ்வுரு மெல்ல மெல்ல அவருக்கு மேலெழும். அவர் தன் களியாட்டால் அழியவிட்ட துவாரகையை, யாதவப் பெருங்குலத்தை தன் கனவுகளையும் சிரிப்பையும் படையலிட்டு காத்தவன் என்று என்னை காட்டுகிறேன். அவரில் இல்லாதிருந்த ஒன்று என்னில் பேருருக்கொண்டதென்றும் என்னில் அது பேருருக்கொண்டதனாலேயே துவாரகை நிலைநின்றதென்றும் அவருடைய தோல்விகள் அனைத்திலிருந்தும் நான் வென்று எழுந்தேன் என்றும் நிறுவுகிறேன். அதுவே அவரை அழிக்கும் வழி” என்று நான் சொன்னேன். “மூதாதையே, ஒன்றை உணர்க! நீங்கள் இனி களத்தில் அவரை வெல்ல இயலாது. ஏனென்றால் அவர் எந்தக் களத்திலும் இல்லை. உலகக் களங்கள் அனைத்தையும் அவர் கடந்துவிட்டார். அவர் இன்றிருப்பது புகழின் களத்தில். அதில் அவரை வெல்ல வேண்டும். அதற்கு ஒரே வழி இதுதான்” என்றேன்.

“அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு மூதாதையே, பெருந்தந்தையரை மைந்தர் அன்றி எவரும் வெல்லமுடியாது. இது மீள மீள நிறுவப்பட்ட உலகியல் உண்மை. நீங்கள் அவரை என் வழியாகவே வெல்லமுடியும் என்று உணர்க! எந்தையின் மைந்தர்கள் எண்பதின்மர். அவர்களில் ஒவ்வொருவரும் அவருடைய ஒவ்வொரு இயல்பை கொண்டிருக்கிறார்கள். அவருடைய சொல்சூழ் திறனின் நீட்சி என்னிடமே. அதை இப்போதே உணர்ந்திருப்பீர்கள். அவரை எந்த மைந்தனாவது வெல்லமுடியும் என்றால் அது நானே” என்றேன்.

கிருதவர்மன் “உன் சொற்களை நான் செவிகொள்வது அதனாலேயே” என்றார். “நீ அங்கே தோன்றிய முதற்கணம் இளமைத் தோற்றத்துடன் உன் தந்தை எழுந்ததாகவே எண்ணினேன். என் அகம் நடுங்கியது. உன்னில் எந்த உடற்சாயலும் இல்லை. அசைவுகளும் வேறு. குரலும் வேறே. ஆனால் நீ அவரென்று ஒரு கணம் தோன்றினாய். பின் மறைந்தாய். ஆனால் பேசப்பேச உன்னில் அவர் தோன்றித்தோன்றி மறைகிறார்.”

“ஆம், அவர் நானே” என்று நான் சொன்னேன். “என்னில் என்றும் எழும் கனவு அவரை நான் கொல்வதாகத்தான். அதைப் பற்றிய பதற்றம் எனக்கு இருந்தது. பின்னர் தெளிந்தேன். அது ஊழ் என்று. எந்தையும் தந்தைக்கொலை செய்தவரே. தாய்மாமன் கம்சரைக் கொன்ற பழி அவர்மேல் என்றும் இருக்கும். அது உருத்துவந்து ஊட்டும். அதுவே என்னில் எழுகிறது” என்றேன்.

தொடர்புடைய பதிவுகள்

ஏகம் -கடிதங்கள்

$
0
0

ஏகம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ஏகம் இந்தவரிசைக் கதைகளில் இன்னொரு பாணி. நீங்கள் உண்மையான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக வைத்து எழுதிய கதைகளில் ஒன்று இது. இதை நீங்கள் எழுதிய இரு கலைஞர்கள் கதையின் வரிசையில் வைக்கலாம் என நினைக்கிறேன்.

 

நேரடியான கதை. கதையில் முதலில் எழும் கேள்வி இரண்டு மனிதர்கள்- ஆணானாலும் பெண்ணானாலும்- நடுவே ஒரு அந்தரங்கமான இணைப்பு நிஜம்மாகவே சாத்தியம்தானா? அது ஒரு லௌகீகமான கேள்வி. லௌகீகத்தில் அதற்கான பதில் சாத்தியமே இல்லை என்பதுதான். ஆனால் கலையில் ஆன்மிகத்தில் சாத்தியம்தான். அதைத்தான் ஜேகே, புல்லாங்குழல் மணி இருவர் நடுவே நடக்கும் அந்த ஆழமான அந்தரங்க உரையாடல் காட்டுகிறது. அந்த பதில்தான் கதை. அந்தக்கருத்தை முன்வைக்கும் கதை, கருத்து கதையாக எப்படி மாறுகிறது என்பதையும் கதைக்குள்ளேயே சொல்லிவிடுகிறது.

 

ராமச்சந்திரன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

ஏகம் ஒரு அழகான சிறுகதை. அதன் அளவு சிறியதாக இருப்பதால் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுவது. காரில் திருமணத்திற்கு செல்லும் ஒரு சிறு எழுத்தாளர் கூட்டத்தின் உரையாடலிலிருந்து கதை தொடங்குகிறது. ஜே.கே மீது அவர்களுக்கு ஒரு aversion உள்ளது. ‘கருத்துநிலை கதைகள்’ என்று கோபாலன் சொல்கிறான்.

 

அவர்கள் வேறொரு உலகில் வாழ்கிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு வரும் மக்களின் மனநிலை, உரையாடல் ஆகியவற்றை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஜே.கே – திருமணம் – பெருமாள் என இவர்கள் உரையாடல் நீடிக்கிறது.

 

இவர்கள் தான் புல்லாங்குழல் வாசிக்கும் மணியை சற்று நேரத்தில் கவனிக்கிறார்கள். சுற்றி உள்ள பொன்வண்டுகளுக்கும் பட்டுவேட்டிகளுக்கும் அவ்விசை ஒரு பொருட்டே அல்ல.

 

ஆனால் ஜே.கே வந்த உடனே அந்த இசையை அடையாளம் காண்கிறார். யானையின் வழித்தடம் உருவாகி , அனலென அமர்கிறார். ‘கருத்துநிலை எழுத்தாளரும்’ புல்லாங்குழல் இசைஞனும் சந்தித்து, உரையாடி, விடைபெருவது ஒரு கவித்துவ நிகழ்வு.

 

அந்நிகழ்வு கூட சுற்றியுள்ள கூட்டத்திற்கு புரிய வில்லை. வண்ணவிளக்குகள் ஒளிர்ந்த நகரத்தெரு. முட்டிமோதும் மனிதர்கள். மிதந்தலையும் முகங்கள். வண்டிகளின் கிரீச்சிடல்கள். முட்டல்கள்,மோதல்கள். ஒலித்திரள். காட்சித்திரள்.

 

இவற்றின் நடுவே ஒருசொல் இன்றி சென்றுகொண்டிருந்தது அவர்கள்தான், அந்த ஐந்து பேர்.

 

தங்கள்,

கிஷோர் குமார்.

 

 

அன்பின் ஜெ,

ஏதேதோ மன உளைச்சல்கள் மூளையை, மனதை குடைந்தது. கொரோனா கதைகளிடம் சரணடைந்தேன். எப்போதும் போலவே, உங்கள் கதைகளில் வந்த மனிதர்கள் என்னை உயிர்ப்பிக்க தவறவில்லை. சில பாத்திரங்களும் அவர்களது இடியோஸினசிரசி, அவர்களது எண்ண ஓட்டங்கள்  பல இடங்களில் வெடித்து சிரித்துவிட்டேன். அதுவும் ஆறுமுகம் (நகைமுகன்) வரும் தருணங்களும், அவரது இம்ப்ரொவிஷஷன், இயலாமை அதனால் வரும் சிக்கல்களும் அருமை. உங்களது humour sense நிகர் யவருமில்லை.

 

 

பொதுவாக நகைச்சுவை என்று நாம் இனம்கண்டு வகுத்திருப்பது ஒன்று ஸெல்ப்-டேப்ரெக்காடிங் ,அல்லது இன்னொருவரது உடல், நிறம் வைத்து நக்கலடிப்பது என்று பெரும்பாலும் எண்ணுகிறார்கள் தவறாக. நீங்கள் எழுதும் ஹுமாயூர் தான் பெஸ்ட் நான் தமிழில் படித்ததில். இன்னும் படித்து விரிவாக எழுதுகிறேன் !

நீங்களும், உங்களது அன்பிற்கு உரியவர்களும் – உடல், மன நலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.

பேரன்புடன்
கோபி

 

அன்புள்ள ஜெ எம்

 

பகடியும் நகைச்சுவையும் நக்கலுமாக இரு கதைகளும் சிரிப்பை வரவழைத்தன .

 

ஆனால்,  லூப் முடிவில் என்னைக் கொஞ்சம் அழ வைத்தது.  மறைந்து போன ரிசெர்வ் காடு.   நான் பிறந்து வளர்ந்த நெல்லையிலும் இப்படி ஒரு காணாமற் போன அழகு உண்டு.  கோரி கோபுரம் தாண்டினால் கொக்கிரகுளம் வரும் வரை சில இடங்களில் இருபுறமும் சில இடங்களில் இடது புறமும் ஆக பசுமையான வயல்கள்.வண்ணாரப்பேட்டை வளைவினுள் தேசிகர் மண்டபம் தாண்டினால் இருபுறமும் மாமரங்களும் புளிய மரங்களுமாக ஒரு சோலைதான். மாலை ஆறு மணிக்கு அப்புறம் குயில்களும் கிளிகளும் எழுப்பும் இன்னிசை. எல்லாம் மறைந்து விட்டன.  கடைகளும் ஹோட்டல்களும் மருத்துவ மனைகளும் என.  ஒவ்வொரு முறையும் பார்க்கும் தோறும், இயற்கைக்கு மனிதன் செய்து விட்ட பாவம் துரோகம் என மனதுள் உறுத்துகிறது.

 

அன்புடன்

சிவா சக்திவேல்

தொடர்புடைய பதிவுகள்


லூப்,சுற்றுக்கள் –கடிதங்கள்

$
0
0

லூப் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

பகடிக்கதைகளுக்குரிய வரிக்குவரி கொண்டாட்டத்துடன் ஆரம்பித்து சட்டென்று வேறெங்கோ சென்று ஆவேசமான ஒரு குரலாக மாறி ஒரு நீண்ட பெருமூச்சாக முடிந்தது லூப் கதை.

 

ஞானம் – ஆரோக்கியம் இருவருக்கும் நடுவே நடக்கும் உரையாடல் அன்றைய தொழில்சூழலை காட்டியது. என் அப்பா மின்வாரிய ஊழியர். அவர் டேய் என்று கூறி தன் சக ஊழியர்களை அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்று அலுவலகச் சூழலே மாறிவிட்டது. இன்று பல அலுவலகங்களில் ரிட்டயர்மெண்ட் பார்ட்டி கூட கிடையாது. ஒரு நிலையில் ஞானத்தை ஆரோக்கியம் மாமா என்று அழைக்கிறார்

 

எங்கள் வீட்டில் இருந்த டெலிஃபோனுக்குள் எறும்பு கூடுகட்டி அது வேலைசெய்யாமல் போனது ஞாபகம் வருகிறது. அது அன்றெல்லாம் சாதாரண நிகழ்வு. ஆனால் இப்போது அது ஒரு அடையாளம் என்று தோன்றுகிறது

 

நான் ஊட்டி செல்லும்போது மின்சார கம்பிகளில் கொடிகள் பற்றிப்படர்ந்து ஏற முயன்றுகொண்டே இருப்பதை பார்ப்பேன். அதை தவறாமல் வெட்டிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். அது காடு அந்த கம்பியை கைநீட்டி பிடிக்க முயல்வதுதான். நாம் வெட்டி வெட்டி விலக்கிக்கொண்டே இருக்கிறோம்

 

கார்த்திக் ராஜ்

 

ஜெ

 

போன் இணைப்பை பாம்பு தடை செய்கிறதே என நமக்கு கோபம்.

 

உண்மையில் நாம்தான் இயற்கையின் மாபெரும் பின்னல்களை இணைப்புகளை அறுக்கிறோம் .

 

தனது இடம் என்ற உரிமையில் பாம்பு மீண்டும் மீண்டும் அந்த இடத்தை தேடி வருகிறது.  அப்படி வருவதுதான் நியாயம்

 

அவற்றை எல்லாம் அழித்துவிட்டதுடன் கதை முடிகிறது

 

அழிக்கப்பட்டவை மீண்டும் அவற்றின் இடத்தை என்றாவது தேடி வரும். தமது இடங்களில் மீண்டும் மனிதனென்ற வைரசின் பயமின்றி வாழத்தொடங்கும் அதுதான் இயல்பு. அதுதான் நடக்கப்போகிறது என்ற அறிவியல் யூகத்துடன் கதை மனதில் ஆரம்பிக்கிறது

 

 

என்றென்றும் அன்புடன்

 

 

பிச்சைக்காரன்

 

சுற்றுகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

சுற்றுக்கள் சிறுகதையை முதலில் வாசித்தபோது பிடிகிடைக்கவில்லை. ஏனென்றால் எனக்கும் தொழில்நுட்பத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் பிறகு சர்க்யூட் என்று பலரும் எழுதியபிறகு புரிந்துகொண்டேன். மின்சாரம் ஓடி முடிக்கும் ஒரு வட்டம். அதேபோல இருவரிடையே ஒரு வட்டம் பூர்த்தியாகிறது. அதில் அந்த ஆபீஸ், வானம், போன்பேசும் முழுச்சமூகம் எல்லாம் இணைந்திருக்கிறது

 

ஆண் பெண்ணை ஜெயிப்பது இங்கே அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் திறமையானவன் என்றால் பெண் அவனை சட்டென்று அடையாளம் கண்டுகொள்கிறாள். ஆண் அந்த திறமையை அடைந்ததுமே தன்னம்பிக்கை கொண்டுவிடுகிறான்.

 

ஜெயச்சந்திரன்

 

 

வணக்கம் ஜெ

 

 

சுற்றுகள் சிறுகதையை வாசித்தேன். இனிய காதல் கதை. ஒரு தொலைபேசி இணைப்பில் பாயும் வெவ்வேறு அலைகளின் பிரமிப்பு எழுகிறது. ஏற்கனவே இருக்கும் அலைகளை மின்காந்த அலைகளாக்கித் தொலைபேசி கடத்துகிறது. அது போல மனிதனுள்ளும் இருக்கிற அலைகள் எவ்வாறு அன்பு என்றும் காதல் என்றும் விழைவு என்றும் கடத்தப்படுகின்றன என நன்கு புலப்பட்டது.

 

 

அரவின் குமார்

தொடர்புடைய பதிவுகள்

சூழ்திரு, குருவி -கடிதங்கள்

$
0
0

சூழ்திரு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

சூழ்திரு கதையை வாசித்தேன். வீட்டில் அனைவருடன் அமர்ந்து இன்னொருமுறை சத்தமாக வாசித்தேன் [என் வீட்டின் பெயர் ஸ்ரீனிவாசம். சூழ்திருவின் ஏகதேச மொழிபெயர்ப்புதான்]

 

டீடெயில்கள்தான் கதையின் பலம். அப்பா டீயை சுவைத்துக் குடிப்பதில் தொடங்குகிறது. அவருடைய சுவையில் தொடங்கி நூல்பிடித்ததுபோல செல்கிறது. அவருடைய ருசி நுட்பமானது. நுட்பத்தை தேடுவது. அவியலில் எங்கே எப்போது தயிர் விடவேண்டும் என்று அவர் சொல்கிறார். இடைக்கா தாளம் எப்படி சோபானப்பாட்டில் கலக்கவேண்டும் என்று சொல்கிறார். [ஃபைபர் வந்ததும் நல்ல தவில் சத்தம் காதில் விழுவதே இல்லாமலாகிவிட்டது]

 

அந்த ரசனைதான் அவர். அழகான ரசனை. எல்லாவற்றையும் ரசிக்கிறார். கார் அவருக்கு பொருட்டே இல்லை. மாடைத்தான் பார்க்கிறார். மாடு கம்பீரமாக இருக்கவேண்டும். வேகமெல்லாம் தேவையில்லை. நாதஸ்வரம் கேட்கவேண்டும் என்றால் சீவல் வேண்டும். சாப்பாட்டில் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய சுவை.

 

ருசியாகத்தான் தெய்வம் மனிதனுக்குமுன் வரவேண்டும் வேறு வழியே இல்லை என்ற வரிதான் கதையின் மையம். எந்த ருசிரா ராம ஏமிருசிரா ராம ஓ! ராம என்ற தியாகையரின் வரிதான் ஞாபகத்திற்கு வந்தது

 

 

ஸ்ரீதர்

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

இலக்கியத்தின் நுணுக்கமான,நுட்பமான இயல்புகளையும்,ருசிகளையும் தெரிந்து கொண்டு அனுபவிக்க வாசகர் முகாம் அனுபவங்கள் கூடுதல் உதவியாக இருக்கும் என்று விரும்பியது கைகூடாத நிலையில் கொரோனா புண்ணியத்தில் வாசகர்களுக்கு ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது.

 

ஊரெல்லாம் வாசிப்பு சுவையறியாதவர்கள் வீட்டை சிறையென எண்ணிப் புலம்பும் போது நம் இணையதளத்தில் ஒரு இலக்கியக் கொண்டாட்டம் நடக்கிறது.தினம் வெண்முரசுடன் ஒரு குதூகலக் கதை.ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் வித விதமான கோணங்களில் ஆய்ந்து எழுதும் கடிதங்கள் முகாமின் பணியைச் செய்கின்றன.பல கடிதங்கள் பொறாமையைக் கிளப்புகின்றன.நாம் யாரின் அருகாமையில் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

கரடிநாயரின் தலைமையில் பெருவட்டர்,டீக்கனார், தவளைக்கண்ணன்,அனந்தன் கும்பல் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.  ஆனை,குரங்கு,நாகம்,மலைப் பாம்பு,நாய்,பூனை போன்ற புலி எல்லாம் உறவினர்கள் போல் ஆகி விட்டன.அதுவும் ஆனையில்லாக் கதையே இல்லை.ஆனை  பாத்திரமாக இல்லாத ‘லூப்’,இன்று வெளியான ‘சூழ்திரு’ கதைகளில் கூட ஓரிரு வரிகளில் தலை காட்டி விட்டுச் செல்கிறது.

 

நேரடி அனுபவக் களத்திலிருந்து உருவான கதைகளை இலக்கியம் தீண்டும் போது பெறும் விளைச்சல்களை வானில் அலைகின்றன குரல்கள்,சுற்றுகள்,லூப்  என்ற தொலை தொடர்புக் கள கதைகள்  நிரூபிக்கின்றன.வேட்டு போன்ற கதைகள் நேரடி அனுபவம் தேவையில்லை என்றும் சொல்கின்றன. கொரோனாவால் விளைந்த நன்மைகளில் ஒன்று இந்த இலக்கியக் கொண்டாட்டம்.நன்றி.

 

 

சாந்தமூர்த்தி

மன்னார்குடி.

 

குருவி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

குருவி சிறுகதையை வாசித்தேன். எங்கள் வாட்ஸப் குழுமத்தில் இதை ஆடியோவாக பதிவுசெய்து பகிர்ந்துகொண்டேன். பலபேர் அதைக் கேட்டால்தான் ரசிக்கிறார்கள்.

குருவி கதையின் அழகு அதன் ஒட்டுமொத்தமான அமைப்புதான். மாடன்பிள்ளை கலைஞன். ஆகவே அவன் தன்னை கோமாளியாகவே ஆக்கிக்கொள்கிறான். மேமாசம் தண்ணீர் விடாததற்கு டிசம்பரில் கேரள பஸ்ஸை மறிப்பதும், போலீஸ் ஸ்டேஷனில் சலம்புவதும், அடிவாங்குவது நல்ல போதை என்றும் சொல்வதும் எல்லாம் அவனை நினைத்து புன்னகைக்க வைக்கின்றன

 

அதிலும் ஆறுமுகம் அவனிடம் ஒவ்வொன்றாகச் சொல்கிறார். அப்பா என்கிறார். அம்மா என்கிறார். சாமி என்கிறார். அவன் எல்லாவற்றையுமே வசைபாடுபவன். அவனுக்கு ஒன்றுமே பொருட்டு இல்லை. அவனுடைய கலை மட்டும்தான். நானே பிரம்மம் நானே கடவுள் என்கிறான். அந்தக்கலைஞனுக்கு கர்வபங்கம் குருவியால் நடைபெறுகிறது.

 

குருவியால் கர்வபங்கம் அடைந்தாலும் இந்த பூமி முழுக்க நிறைந்திருக்கும் கலையை குருவியாக அவன் கண்டுகொள்கிறான். அந்தக்குருவியாக தன்னை உணரும்போது நிறைவடைகிறான்

 

எம்.சந்திரசேகர்

 

 

ஜெ.வணக்கம்

 

 

 

குருவி கதை படித்தேன். மீண்டும் தொலைப்பேசித்துறை தொடர்பான ஒரு கதை.இந்த வகையில் இது மூன்றாவது என எண்ணுகிறேன்.

 

மாந்தருக்கு அழகால்.செல்வத்தால் ஞானத்தால் செருக்கு வரும் என்பார்கள் மாடன் பிள்ளைக்கு அவனிடம் மட்டுமே இருக்கும் ஞானத்தால் செருக்கு உள்ளது. அதனால்தான் தன்னை மிஞ்சி யாரும் இல்லை என்னும் உணர்வு ஆழ் மனத்தில் படிந்துள்ளது. அதனால்தான் தந்தை.தாய். கடவுள் மற்றும் அதிகாரிகள் என எல்லாரையும் துச்சமாக மதிக்கிறான். இதை அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் வழி நன்கு வாசகர் மனத்தில் படியும்படி உணர்த்தியிருக்கிறீர்கள். அதே நேரத்தில் கலைஞனை மனிதன் என்னும் வட்டத்தில் அடைக்காதீர்கள் என்கிறான் மாடன் பிள்ளை.

 

ஆமாம்.நேர்மையான கலைஞனிடத்தில் ஏதோ ஒரு கிறுக்குத்தனம் உள்ளதைப் பரவலாக உலகில் பார்க்கிறோம். அதையும் மாடன் சிறையில் அடைபடுவதையும், அங்கு அடிபடுவதையும் நீங்கள் காட்டித் தெரிவிக்கிறீர்கள்.ஆனால் ஒரே நொடியில் அவன் செருக்கு காணாமல் போகிறது. கூட்டைப் பார்த்தவுடன் தான் செய்வதெல்லாம் சாதாரணம் என்று அவனுக்குத் தோன்றுகிறது. தன் செயல் அவனைத் தாழ்த்தும் கழிவிரக்கமே அவன் அழுகை. இதை எழுதாமல் மறைமுகமாக அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்.

 

தன்னைப் பெரிதாக நினைத்தவன் அதே துறையில் ஒரு சிறு குருவி தன்னை விடத் திறமையாக இருப்பதைப் பார்க்கிறான். தன்னை மிகச் சாதாரணம் என்றெண்ணிக் கடைசியில் மன்னிப்பும் கேட்க வேண்டாம் என்கிறான்.கதையில் சொல்லியிருப்பதை விட வாசகரை நிறைய ஊகிக்கவைப்பதே தங்கள் வெற்றி என நான் எண்ணுகிறேன்.

 

வளவ.துரையன்

 

தொடர்புடைய பதிவுகள்

எழுகதிர் [சிறுகதை]

$
0
0

இது ஒரு மிகப்பெரிய கொள்ளையின் கதை. ஐம்பதாண்டுகளுக்கு முன், அதாவது 1971 ல் நடந்தது. மிகச்சரியாகச் சொல்லப்போனால் பிப்ரவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி. அன்றைய செய்தித்தாள்களில் மிகப்பெரிதாகப் பேசப்பட்டது. குகையுறைநாதர் கோயிலில் நடந்த கொள்ளை. இன்று அது ஓரளவு அறியப்பட்டுவிட்டது. அன்று அப்படியொரு கோயில் அங்கே இருப்பது எவருக்குமே தெரியாது. புதர்கள் நடுவே கைவிடப்பட்டு கிடந்த மிகச்சிறிய கல் கட்டிடம். எங்கள் கொள்ளையால்தான் அது பரவலாக அறியப்பட்டது

அன்று நான் இருபத்திரண்டு வயதான இளைஞன். வேலையேதும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். படிப்பு எட்டாம் வகுப்புடன் நின்றுவிட்டது. அப்பா கொஞ்சம் வசதியானவர், கஷ்டம் தெரியாமல் வளர்த்துவிட்டார். அதுதான் என்னை கட்டுப்பாடில்லாதவனாக ஆக்கியது. அதற்குள்ளாகவே நிறைய பெண் அனுபவங்கள்.நிறைய செலவு. செலவுக்காக நிறைய திருட்டுகள். பெரும்பாலும் சொந்த நிலத்திலும் சொந்த வீட்டிலும்.

வடக்குப்புரையிடத்தின் ஆதாரபத்திரத்தை திருடி மாங்குளம் அப்புப் பெருவட்டரிடம் அடகுவைத்தேன். அந்தக்காசில் சங்கைப்பிடித்த கடன்களை அடைத்துவிட்டு எஞ்சிய பணத்துடன் திருவனந்தபுரம் சென்று அங்கே புகழ்பெற்றிருந்த செங்கல்சூளை என்னும் சேரியில் பெண்களுடன் கொண்டாடினேன். ஆறுமாதம் போனதே தெரியவில்லை. திரும்பிவந்து இன்னொரு திருட்டுக்கு திட்டமிடும்போது அப்பா ஆதாரபத்திரம் காணாமல்போனதை கண்டுபிடித்துவிட்டார். அப்புப்பெருவட்டரே கூப்பிட்டு சொல்லிவிட்டார்.

நான் வீட்டுக்குச் சென்றபோது அப்பா கருக்குப் பனைமட்டையால் என்னை அடித்தார். என் தசை கிழிந்து ரத்தம் தெறித்தது. ஒரு கட்டத்தில் எகிறி அப்பாவின் நெஞ்சில் உதைத்தேன். அவர் மல்லாந்து விழுந்தார். ‘நாறத்தாயோளி, கொன்னிடுவேன்!” என்று கூவி அருகே கிடந்த கல்லை எடுத்து அவர் தலையில் போடப்போனேன். அவர் இருகைகளையும் கூப்பி கண்மூடி அசையாமல் கிடந்தார். கொஞ்சம் கூட பயம் இல்லாமல். பிரார்த்தனை செய்பவர் போல.

என் கை நடுங்கிவிட்டது. கல்லைப்போட்டுவிட்டு அவரை திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். செல்லும் வழியெல்லாம் துப்பிக்கொண்டே இருந்தேன். வாயில் ஏதோ அசிங்கமான கசப்பு ஊறி ஊறி வருவதைப்போல. அருமனையிலிருந்து மார்த்தாண்டம் வந்தேன். அங்கிருந்து எங்கே போவது என்று தெரியாமல் கன்யாகுமரி வந்தேன். கன்யாகுமரியில் அலைந்தேன். வீட்டைவிட்டு கிளம்பியபோது இருந்த கசப்பு கன்யாகுமரிக்கு வந்தபின் பெருகியது. எல்லாவற்றின்மீதும் கசப்பு.

கன்யாகுமரியின் மறுஎல்லையில் கோவளம் பீச் அருகே கொஞ்சம் தனிமையான இடத்தில் ஒதுங்கி முத்தமிட்டுக்கொண்டிருந்த வட இந்திய ஜோடியை தாக்கினேன். அந்த இளைஞனை கல்லால் அடித்து துரத்திவிட்டு அந்தப்பெண்ணின் செயினை பறித்துக்கொண்டேன். அந்தக்காசில் வயிறுமுட்ட தின்றேன், குடித்தேன். குடித்தபின் கைகூப்பி கண்மூடி மண்ணில் கிடந்த செல்லங்காடு பெருவட்டர் என்ற மதிப்பும் மரியாதையும் மிகுந்த என் அப்பாவை நினைவுகூர்ந்து அழுதேன்.

இப்போது ஐம்பத்தெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுகூட அதே நடுக்கம் அப்படியே நீடிக்கிறது. எத்தனை நதிகளில் நீராடினாலும் எத்தனை தெய்வங்களை தொழுதாலும் என் பாவம் தீராது. அன்று அவர் என்னை சாபமிட்டுவிட்டதாக நினைத்தேன். அந்த அச்சமும் கழிவிரக்கமும் வளர்ந்துகொண்டே இருந்தது. மிகமிகக் கடுமையான வாழ்க்கையினூடாகச் செல்லும்போதெல்லாம் அவருடைய சாபம் அது என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் இன்று தெரியும், அப்படி அல்ல. அவர் என்னை சாபமிடவில்லை. அவரைப்போல என்னை நேசித்த இன்னொருவர் இல்லை. இந்த பூமிவாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மாபெரும் ஆசி அவருக்கு மகனாகப்பிறந்தது.

ஆனால் அதுவே என் சாபமும் ஆகியது, காரணம் முழுக்க முழுக்க நான்தான். சரி, அது வேறுகதை. அதை சொல்லித்தீராது. நல்லவேளை, இன்று நினைத்து நினைத்து ஆறுதலடையும் ஒன்று, எனக்கு மகன்கள் இல்லை. என் பழி அவர்களின் மேல் படியாது. அப்பாவின் சாபத்துக்குச் சமானமாக பிள்ளைகளின் சாபத்தையும் நான் ஈட்டிக்கொள்ளவில்லை. என் வாழ்க்கையில் நான் விபச்சாரிகள் அல்லாதவர்களிடம் உறவுகொண்டதே இல்லை.

நான் கொள்ளையின் கதையை சொல்லிக்கொண்டிருந்தேன். கன்யாகுமரியில் சில ஆண்டுகளிலேயே நான் அறியப்பட்ட கொள்ளையனாக ஆகிவிட்டேன். எதற்கும் துணிந்தவன். நான்குமுறை கைதுசெய்யப்பட்டேன். சிறிய சிறைத்தண்டனைகள். ஆனால் அவை என்னை மேலும் உறுதியானவனாக ஆக்கின.மேலும் கசப்படைந்தவனாக மாற்றின. என் முகமே மாறிவிட்டது. நான் எவரையும் மிரட்டவேண்டியதில்லை. ஒரு கேள்விபோதும், நான் யார் என ஒரு சாமானியன் புரிந்துகொள்வான். பத்தடி தொலைவிலேயே போலீஸ்காரர் என்னை அடையாளம் கண்டுகொள்வார். இன்னொரு கிரிமினல் என்னை ஐம்பதடிதொலைவிலேயே அறிந்துவிடுவான்.

அப்போதுதான் ஸ்ரீகண்டன்நாயர் எனக்குப் பழக்கமானான். அவன் திருவனந்தபுரம் அருகே நேமம் என்ற ஊரைச்சேர்ந்தவன் திருவனந்தபுரத்தில் ரௌடியாக அலைந்தவன். அங்கே ஏதோ செய்துவிட்டான், அனேகமாக மிகப்பெரிய எவர் மேலோ கைவைத்துவிட்டான். பெரும்பாலும் பெண் விவகாரம். அல்லது நம்பிக்கைத் துரோகம். அவன் கன்யாகுமரியில் கிட்டத்தட்ட ஒளிந்துதான் இருந்தான். திருட்டும் வழிப்பறியும் செய்வான். குடிப்பான், ஏதாவது சிறிய விடுதியில் இரவு தங்குவான். ஆனால் எங்கே எப்படி இருக்கிறான் என்று திட்டவட்டமாகச் சொல்லவே முடியாது.

தற்செயலாக அறிமுகமாகி சீக்கிரமாகவே ஒருவரை ஒருவர் அணுகினோம். இருவரும் சேர்ந்து திருடினோம், குடித்தோம், பெண்களிடம் புழங்கினோம். அவனிடம் என்னைக் கவர்ந்தது அவனுடைய தயங்காத தன்மை. எங்கும் எதற்கும் கூசுபவன் அல்ல. எந்தக் கீழ்மையையும் செய்பவன், எந்தச் சந்தர்ப்பத்திலும் மிகமிக இயல்பாக திகழ்வான். அவன் ஒரு மாபெரும் நடிகன். அவனால் எவருடைய உடல்மொழியையும் அப்படியே நடிக்க முடியும். அப்படியே பேசிக்காட்ட முடியும்.

தன்னை ஒரு கான்ஸ்டபிள் என இன்னொரு கான்ஸ்டபிளை நம்பவைக்க முடியும். ஃபுட் இன்ஸ்பெக்டர் என்று சொல்லி ஓட்டலில் நுழைந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். பிராமணன் என்று சொல்லி கோயில் கருவறைக்கு வெளியே மண்டபம் வரைச் சென்றுவிடுவான். சட்டென்று பூணூலை மாட்டிக்கொண்டு நீத்தார்ச் சடங்குகள் செய்து தட்சிணை வாங்குவான், யாருமில்லை என்றால் மிரட்டி நகைகளையும் பிடுங்கிக்கொள்வான். கன்யாகுமரி வந்த ஒரு பெண்ணிடம் தன்னை ஒரு கல்லூரி ஆசிரியர் என்று சொல்லி நம்பவைத்து அவள் தங்கியிருந்த லாட்ஜுக்குள் சென்று இரவு அவளுடன் தங்கிவிட்டு வந்தான்.

அவன் கட்டற்றவன். அத்தனை சுதந்திரமான ஒரு மனிதனை அதற்குமுன் நான் பார்த்ததே இல்லை. அந்தச் சுதந்திரத்தால்தான் அவன் கிரிமினல் ஆனான். கிரிமினலுக்குத்தான் முழுமையான சுதந்திரம் சாத்தியம். ஸ்ரீகண்டன் நாயர் சமூகமரபு, ஒழுக்கம், அறம் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. எந்த அடையாளத்திலும் பொருந்துபவன் அல்ல. அவனை ஒரு புகைப்படம் எடுத்தால்கூட அதில் அவன் இருக்கமாட்டான், அப்போது அக்கணத்தில் அவன் எப்படி தன்னை வெளிக்காட்டுகிறானோ அதுவே அந்தப்படத்தில் பதிவாகியிருக்கும். எதுவுமே அவன் அல்ல.

அவனுடைய அந்த கட்டற்ற தன்மை மற்ற கிரிமினல்களை அவனிடமிருந்து விலக்கியது. அவர்கள் அவனை அஞ்சினார்கள். அவனை அடிக்கவும் கொல்லவும்கூட முயன்றார்கள். ஆனால் அவன் பூனைபோல. ஆபத்து இருக்குமிடத்தை முன்னதாகவே எப்படியோ உணர்ந்து மறைந்து விடுவான். அவனை கொல்ல நினைத்த கச்சேரி லாரன்சும் உழப்பன் சண்முகமும் கடலில் பிணமாக ஒதுங்கினார்கள். அதன்பின் அவனை எதிர்கொள்ள அத்தனைபேரும் அஞ்சினார்கள்.

நான் அவனுடைய அடிமைபோல் ஆனேன். அப்படி ஒரு மனிதன் என்னை ஆட்கொள்ள முடியும் என்று ஒரு ஆண்டுக்குமுன் எவரேனும் சொல்லியிருந்தால் அடித்திருப்பேன். அவனுடைய பேச்சுத்தான் என்னைக் கவர்ந்தது. எதைச்சொன்னாலும் வெடித்துச் சிரிக்கவைக்க அவனால் முடிந்தது. ஒவ்வொன்றையும் கொஞ்சம் திருப்பி வைப்பான். நாம் சாதாரணமாக சொல்லும் ஒரு வார்த்தையையே கொஞ்சம் அழுத்தி அதை ஒரு காட்சியாக ஆக்கினால் வேடிக்கையாக மாறிவிடும் என்பதை அவன்தான் காட்டினான்.

அவனுடன் இருக்கும்போது என் முகம் மலர்ந்திருக்கும். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். காதலியைப்போல அவனையே நினைத்துக் கொண்டிருப்பேன். அவனுக்கு பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தேன். சேர்ந்து சாப்பிட்டால் அவனுக்குப் பரிமாறுவேன். அவனுக்கு நானே நல்ல ஆடைகளை வாங்கிக்கொண்டு சென்று கொடுத்தேன். அவன் அணிந்து வந்தால் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

அவன் நல்ல சிவப்புநிறம். சிவந்த உதடுகள். கெட்டியான கன்னங்கரிய மெழுகுபோன்ற மீசை. பெரிய மலர்ந்த கண்கள். அழகானவன். பெண்ணாக இருந்திருந்தால் மிகப்பெரிய அழகியாக இருந்திருப்பான். அவன் யார், அவனுடைய பின்னணி என்ன எதுவும் எனக்குத்தெரியவில்லை. ஒரே ஒருமுறை அவன் பேச்சிலிருந்து அவன் திருவனந்தபுரத்தின் செயிண்ட் ஜோசப் பள்ளியில் படித்தவன் என்று தெரிந்தது. உயர்குடியினர் படிக்கும் பள்ளி அது. அப்படியென்றால் அவன் வசதியான குடும்பப்பின்னணி கொண்டவன். எப்படி பொறுக்கியாக ஆனான்?

அவனுக்கு பெண்பித்து இல்லை. விபச்சாரிகளை அவன் அணுகவே விடமாட்டான். அவன் சில பெண்களை குறிவைப்பான். நம்பவே முடியாத இலக்குகள். ஆனால் சிலநாட்களிலேயே வென்றுவிடுவான். ஒரேநாளில் சொல்லிவைத்து சுற்றுலாவந்த கல்லூரிமாணவி ஒருத்தியை மயக்கி தன்மேல் பித்தாகச் செய்து அவன் விடுதிக்குக் கூட்டிவந்தான். அவனிடம் ஏதோ வசியம் இருப்பதுபோல. அவன் சூதாடுவதில்லை. வாழ்க்கையை வைத்துச் சூதாட திறமை இல்லாதவர்களின் ஆட்டம் அது என்று அவன் சொல்வான். சொல்லப்போனால் பெரிய பணச்செலவே இல்லை. சாப்பாடு, சினிமா, கொஞ்சம் குடி, அவ்வளவுதான். குடிகூட அவன் நிலைமறக்கும் அளவுக்கு இல்லை.

ஆனால் கையில் பணமிருந்தால் அள்ளி இறைப்பான். கேட்டவர்களுக்கெல்லாம் கொடுப்பான். வழியில் காணும் பசித்தவர்கள் அனைவருக்கும் கொடுப்பான். ஏழைக்கிழவிகளின் மடியில் ரூபாய் சுருள்களை பின்னாலிருந்து வீசிவிட்டு மறைவது அவனுடைய வேடிக்கைகளில் ஒன்று. ஒரு கொள்ளைக்குப்பின் நாலைந்து நாட்களிலேயே ஒரு பைசாகூட இல்லாமல் அவன் பலிமண்டபத்தின் அருகே நின்றிருப்பான். அவனை நான் புரிந்துகொள்ள முயன்றேன், ஆனால் அவனை அணுகவே முடியவில்லை.

அவன் தமிழ் நன்றாகப் பேசுவான். ஆனால் என்னிடம் முழுக்க முழுக்க மலையாளத்திலேயே பேசினான். நானும் மலையாளத்தை கொஞ்சம் தமிழ்நெடியுடன் பேசுவேன். அவன் என்னிடம் மலையாளத்தில் பேசுவதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று நினைத்தேன். அது எங்களுக்கு நடுவே ஓர் அந்தரங்கமான உணர்வை உருவாக்கியது. அவ்வப்போது தமிழ்ச்சொற்றொடர்கள் பேசிக்கொள்வோம். அது ஏன் அப்படி நிகழ்கிறது என்றும் புரிந்ததே இல்லை.

ஒருநாள் அவன் ஒரு திட்டத்தைச் சொன்னான். அவன் உண்மையில் மிகப்பெரிய கொள்ளை ஒன்றைச் செய்துவிட்டு கிளம்பிச் செல்வதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். அவனுடைய எதிரிகள் அவன் அங்கே இருப்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு காலம் ஆகிவிட்டிருந்தது. அவன் கன்யாகுமரியைச் சூழ்ந்திருக்கும் இடங்களை வேவுபார்த்துக்கொண்டே இருந்திருக்கிறான். பணக்காரர்களை, பெரிய கடைகளை. அப்போதுதான் குகையுறைநாதர் கோயிலைக் கண்டுபிடித்தான்.

கன்யாகுமரியிலேயே அதுதான் மிகப்பழைய கோயில். சோழர்காலத்தில் கட்டப்பட்டது. ஆனால் அப்படியே மறக்கப்பட்டுவிட்டது. ஒரு வயதான ஐயர் இரண்டுவேளை பூசை செய்வார். ஒரு கிழவி நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை முன்பகுதியை மட்டும் கூட்டிப்பெருக்கி வைப்பாள். வேறு ஊழியர்கள் இல்லை. பக்தர்கள் என எவருமே வருவதில்லை. திருவிழா ஏதும் இல்லை. புதர்மூடி பாதிப்பங்கு மணலில் புதைந்து கிடந்தது கோயில். இரண்டு ஆள் உயரமான கல்கட்டிடம், அதில் ஒர் ஆள் அளவுக்குத்தான் வெளியே தெரிந்தது. கற்பலகைகள்மேல் அமைந்த சுதைக்கூரை சிதைந்து மண்மூடி அதன்மேல் புல்செறிந்து காய்ந்து பரட்டைத்தலைபோல் நின்றிருந்தது.

கோயிலில் நகைகள் இருக்க வாய்ப்பே இல்லை என்று நான் ஸ்ரீகண்டனிடம் சொன்னேன்.

“என்ன இருக்கிறது என்று எனக்குத்தெரியும், பேசாமல் வா” என்று அவன் என்னிடம் சொன்னான்.

பித்தளைப்பாத்திரங்கள் சில இருக்கலாம். ஒருவேளை சிலைகள் இருக்கலாம். ஆனால் சிலைகளை எளிதாக விற்கமுடியாது, அதற்கான தொடர்புகள் எங்களுக்கு இல்லை. அவன் என் பதற்றங்களை பொருட்படுத்தவில்லை, “பேசாமலிரு, எனக்குத்தெரியும்” என்றான்.

கோயிலில் எப்படி நுழைவது என்று எனக்குப்புரியவில்லை. அதன் கதவு மிகத்தடிமனானது. வெண்கலப் பூட்டும் கனமானது, மிகப்பழையது. கூரையும் தடிமனான கல்லால் ஆனது. ஆனால் ஸ்ரீகண்டன் ஒவ்வொன்றையும் மிகமிக கவனமாக திட்டமிட்டுச் செய்தான். கோயிலை பலநாட்கள் தொடர்ந்து நோட்டமிட்டான். எல்லா வாய்ப்புகளையும் பரிசீலித்தான்

அந்த அர்ச்சகர் கோயிலை திறந்தபின் சாவியை கோயிலின் உள்ளே கருவறைக்கு வெளியே ஒரு ஆணியில் தொங்கவிடுவார். அவன் ஒருநாள் அவர் மடப்பள்ளியில் இருக்கையில் சென்று அதைப் பார்த்து அதன் வடிவத்தை மனதில் பதியவைத்துக்கொண்டான் . அதைப்போல ஒன்றை செய்து எடுத்துக்கொண்டு சென்றான். அவர் கிணற்றில் நீர் மொண்டுவரச் சென்ற இடைவெளியில் அதை அங்கே மாட்டிவிட்டு அசலை எடுத்து வந்துவிட்டான்.

அருகே இடிந்த பழைய கட்டிடம் ஒன்றுக்குள் நான் மெழுகுக் கட்டைகளுடன் காத்திருந்தேன். அதை விதவிதமாக பதித்து அச்சு செய்தோம். ஒருமணிநேரத்தில் அசலை திரும்ப கொண்டு மாட்டிவிட்டு அவர் கண்களை ஏமாற்றும் பொருட்டு மாட்டிய டம்மியை திரும்ப எடுத்து வந்துவிட்டோம். மொத்த நடவடிக்கைகளையும் அய்யர் எங்களை பார்க்காமலேயெ செய்தோம்.

ஒரு விடுதியில் தங்கி அந்தச் சாவிக்கு நகலை செய்தான் ஸ்ரீகண்டன். அவன் அந்த வேலைக்கு எவரையும் நம்பவில்லை. நாகர்கோயில் வடசேரியில் மிக எளிதாக அதற்கு நகல் செய்து தருவார்கள் என்று நான் சொன்னேன். ஆனால் பழைய பூட்டு என்பதனால் அவர்கள் சந்தேகம் கொள்ளக்கூடும், போலீஸுக்கு தெரிவிக்கலாம், அல்லது பங்கு கேட்கலாம் என்று ஸ்ரீகண்டன் சொன்னான். அவனே ஒரு செம்புத் தாம்பாளத்தை கட்டரால் வெட்டி உரசி உரசி அந்த சாவியின் நகல்களைச் செய்தான்.

“எதற்கு இரண்டு நகல்கள்” என்றேன்.

“சிலசமயம் உள்ளே சென்றபின் விளிம்பு மழுங்கிவிடலாம்” என்றான்.

எந்த வாய்ப்பையும் அவன் விட்டுவைக்கவில்லை. பாழடைந்த கட்டிடத்தின் அருகே ஒரு கடப்பாரையைக் கொண்டுசென்று மண்ணில் புதைத்து போட்டேன். முழநீளத்தில் வெட்டப்பட்ட  துத்தநாகப் பூச்சுள்ள எட்டு இரும்புப் பைப்புகளையும் கொண்டுசென்று புதைத்துப் போட்டேன். அவை எதற்கு என நான் கேட்கவில்லை. எல்லாமே அவனுடைய திட்டங்கள்.

பிப்ரவரி இருபத்திரண்டாம் நாள் இரவு ஒரு மணிக்கு நாங்கள் கிளம்பினோம். பாழடைந்த கட்டிடத்தை அணுகியதும் நானும் அவனும் நீலநிறமான உடைகளை மாற்றிக்கொண்டோம். பைக்குள் கொண்டுவந்த உயரமான கம்-பூட்டுகளை பைக்குள் எடுத்து காலில் அணிந்து கொண்டோம். நான் ஒரு பட்டன் கத்தியும் ஒர் அரிவாளும் வைத்திருந்தேன். அவன் ஒரு காக்கித்துணிப்பை வைத்திருந்தான். அதற்குள் ஒரு கட்டரும், சுத்தியலும் இருந்தன. பாழடைந்த கட்டிடத்திற்கு அருகே முந்தையநாளே புதைத்துப்போட்ட கடப்பாரையையும் பைப் உருளைகளையும் எடுத்துக்கொண்டோம்

பூட்டு எளிதில் திறக்கவில்லை. ஒரு சாவி முழுமையாகவே முனைமடிந்துவிட்டது. இரண்டாம்சாவிதான் பூட்டை திறந்தது. ஓசையில்லாமல் உள்ளே சென்றோம். உள்ளே வௌவால்கள் பறந்துகொண்டிருந்தன. நாங்கள் எந்த விளக்கையும் பயன்படுத்தவில்லை. அந்த இடம் கிட்டத்தட்ட ஆளில்லாத திறந்த வெளி. ஒரு வெளிச்சம் நெடுந்தொலைவுக்கு காட்டிக்கொடுக்கும். இருட்டுக்குப் பழகிய கண்களால் வழிகண்டு பிடித்து சென்றோம். கருவறையும் பூட்டியிருந்தது. ஆனால் சிறிய காத்ரெஜ் பூட்டு. அதை அவன் கட்டரால் வெட்டி திறந்தான்.

வாசல்நடையாக அமைந்த பெரிய கற்பாளத்துக்கு அப்பால் பள்ளமாக இருந்த கருவறையின் தரையில் பாவியிருந்த கற்பலகைகள் பலவகைகளிலும் பெயர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் குத்துச்செடிகளின் வேர்கள் எழுந்திருந்தன. நாங்கள் உள்ளே நுழைந்தபோது ஏராளமான பெருச்சாளிகள் உள்ளிருந்து சிதறியோடி பொந்துகளுக்குள் சென்றன.

பென்-டார்ட்ச்சை அடித்து பார்த்தோம். ஒரு பெரிய பெருச்சாளி உடலெங்கும் புண்ணுடன் மயிர்களைச் சிலிர்த்து குறுகி நின்றது. தாக்கவரும் பன்றிபோல் தலையை தாழ்த்தியிருந்தது. அந்த அறைக்குள் ஒன்றுமே இல்லை. இரண்டு சிறிய பித்தளைவிளக்குகள் தவிர.

“இங்க ஒண்ணுமில்லை” என்று நான் சொன்னேன்.

இரு என அவன் கைகாட்டினான். அங்கே தாழ்வான சிவலிங்கம் இருந்தது. ஒன்றரை சாண் உயரமிருக்கும். தேய்ந்து பளபளவென்றிருந்தது. அதைப்பொருத்தியிருந்த ஆவுடை என்னும் பீடம் கல்தரையில் பதிந்து கீழே அழுந்திப் புதைந்திருந்தது.

அவன் என்னிடம் கையசைவால் கதவை மூடும்படிச் சொன்னான்

“உள்ளிருந்தா?” என்றேன்

“கதவைமூடினால் சத்தம் கேட்காது”

அந்த சிவலிங்கத்தை அணுகி அதை பிடித்து அசைத்துப்பார்த்தான். “இது கல்லு” என்றேன்

பேசாமலிருக்கும்படி அவன் கைகாட்டினான். சிவலிங்கத்தை பலமுறை அசைத்தபோது அது அசைந்தது. அது அங்கே நிறுவப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவன் என்னிடம் பிடிக்கும்படிச் சொன்னான். நானும் அவனும் சேர்ந்து அதைப்பிடித்தோம். இழுத்து இழுத்து அசைத்து பின்னர் பிடுங்கி எடுத்துவிட்டோம். ஸ்ரீகண்டன் அதை தூக்கி ஓரமாகப் போட்டான். அந்த சிவலிங்கம் பதிக்கப்பட்டிருந்த குழியை கூர்ந்து பார்த்தான். அது சதுரவடிவமான ஒரு வெட்டு மட்டும்தான்

அதன்பின் அவன் கடப்பாரையால் ஆவுடைப்பீடத்தை நெம்பி பெயர்த்து எடுக்க தொடங்கினான். அவன் மூட்டைக்குள் பழைய துணிகளை வைத்திருந்தான். அவற்றை அந்தப்பாறையின் இடுக்கில் விட்டு அதன்மேல் ஓசையே இல்லாமல் கடப்பாரையால் அறைந்தான். மிகச்சரியாக கல்பொருத்துக்களில் கடப்பாரையை விழச்செய்தான். அதை அசைக்கவே முடியாது என்று தோன்றியது. ஆனால் கடப்பாரை நுழையும் இடைவெளி வந்ததும் அதில் அதன் நுனியை பொருத்திவிட்டு என்னிடம் நெம்பும்படி சொன்னான். நான் முழு எடையுடன் நெம்பினேன். கல் பெயர்ந்து வந்தது,

மிகமெல்ல அது எழுந்து வருவது ஒரு வாய் திறப்பது போல இருந்தது. அதை ஒரு இஞ்ச் மேலே தூக்கி அதன் அடியில் கல்லை வைத்து நிறுத்தினோம். மீண்டும் ஒரு இஞ்ச். அதையும் கல்லைவைத்து நிறுத்தியபின் மறுபக்கம் நெம்பி ஒருஇஞ்ச் தூக்கினேன். மேலுமொரு இஞ்ச். அவன் அருகே அமர்ந்து கல்லை வைத்தான். நாற்புறமும் நெம்பி நெம்பி அந்தக்கல்லை மேலே எழுப்பினோம். அது ஒரு முழம் தடிமன் கொண்ட, மூன்றடிக்கு மூன்றடி அளவுள்ள சதுரமான மிகப்பெரிய கல். நெம்புகோல்முறையால் மட்டும்தான் அதை அசைக்க முடிந்தது.

அது முழுமையாகவே எழுந்து மேலே வந்ததும் அதற்கு அடியில் அந்த ஜிஐ பம்புகளின் துண்டுகளை உருளைகளாக கொடுத்தோம். கடப்பாரையால் மிகமிக மெல்ல உந்தி விலக்கி அந்த பெரிய பாறைவெட்டை அப்பால் கொண்டுசென்றோம். முடிந்தபோது நான் வியர்த்திருந்தேன். மூச்சுவாங்க நின்றேன்.

அவன் பென்.டார்ச்சை அடித்து உள்ளே பார்த்தான். உள்ளே மேலும் பெரிய ஒரு கல்லமைப்பு இருந்தது. கவிழ்த்துவைக்கப்பட்ட தாமரைபோல. அல்லது அதன் ஏதோ ஒரு வடிவம். அவன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான்.

 “என்ன?” என்றேன்.

 “சிலசமயம் பாம்பு இருக்கும்” என்றான்.

 “ஏன்?” என்றேன்.

 “பாம்பு குடியேறுவதற்காகவே பொந்துவழிகள் விட்டு இதை கட்டியிருப்பார்கள்”

அந்த ரகசிய அறை பாம்புவாழ மிக ஏற்றது. எலிகள் நிறைந்தது, காற்றோட்டம் உண்டு, இருட்டானது.

 “இல்லை, நான் நல்லாவே பாத்தேன்” என்றேன்.

ஆனால் அவன் வெளியே நின்றபடியே கடப்பாரையால் உள்ளே பலமுறை தட்டினான். கீழே இருந்து நாகம் ஒன்று படமெடுத்து சீறியது. நான் மெய்விதிர்த்து பின்னால் சென்றுவிட்டேன். அவன் கடப்பாரையால் சட்டென்று அதை குத்தி அழுத்தி கொன்று தூக்கி வெளியே கொண்டுபோட்டான். அதன்பின்னரும் தட்டிக்கொண்டிருந்தான். நினைத்ததுபோலவே இன்னொரு நாகம்.

நாங்கள் அந்தக் குழியிலிருந்து ஏழு நாகப்பாம்புகளை எடுத்தோம். அவை மேலே கருவறைக்குள் வராமல் அடித்தளம் வழியாகவே உள்ளே வந்து சென்றுகொண்டிருந்திருக்கின்றன. பாவம் அய்யர் இத்தனை பாம்புகளுக்குமேல் அவர் நாளெல்லாம் புழங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அவன் மீண்டும் இறங்க தயங்கினான். பின்னர் அந்த துணியை எடுத்து தீப்பெட்டியை உரசி பற்றவைத்து உள்ளே போட்டான். அது பற்றி எரிந்து புகையுடன் உள்ளே நெளிந்தபோது கல்லிடுக்குகளில் இருந்து இரண்டு விரற்கடை நீளமுள்ள சிறிய நாகப்பாம்புகள் புழுக்களைப்போல நெளிந்து மேலே வந்தன. அவன் “டார்ச், டார்ச், விட்டிராதே” என்றான். ஒவ்வொன்றையும் மிகமிகத் திறமையாக அவன் கடப்பாரையால் குத்திக் கொன்றான். மொத்த இருபதுக்கும் மேல்.

“இதெல்லாமே விஷம் உடையவையா?” என்றேன்.

“இவற்றில் எத்தனை நச்சுப்பாம்புகள் என்று சொல்லமுடியாது…ஆனால் எதற்கு ரிஸ்க்?”என்றான்.

மீண்டும் துணிகளை கொளுத்தி உள்ளே போட்டோம். புகை எழுந்தபின்னரும் பாம்புகள் எவையும் வெளியே வரவில்லை. “பொரிக்காத முட்டைகளும் இருக்கும். ஆனால் அவை ஆபத்தில்லை” என்றான்

அதன்பின் அவன் உள்ளே இறங்கினான்.அவனுடைய இடைவரை ஆழம் இருந்தது. கடப்பாரையால் தட்டித்தட்டிப்பார்த்தான். பலமுறை தட்டியபோது அந்த தாமரையின் நடுவில் வட்டமாக ஒரு கல் அசைவுகொண்டு விளிம்பு காட்டியது. அப்படி ஒரு கல் பொருத்தப்பட்டிருப்பதே தெரியவில்லை. அவன் சுத்தியலால் பலமுறை தட்டினான். பின்னர் ஓங்கி ஒரே அறை. மெல்லிய மணியோசையுடன் அது வெடித்தது. அவன் அதை கடப்பாரையால் நெம்பி இரு துண்டுகளாக தூக்கி மேலே போட்டான்.

உள்ளே குனிந்து டார்ச் அடித்தான். அங்கே ஒரு மண்கலம் இருந்தது. அது மூடப்பட்டிருந்தது, முதலில் ஏதோ கிழங்கு போல தோன்றியது. பின்ன்ர் ஒரு உருண்டைபோல. அவன் அதை நன்றாகக் கூர்ந்து பார்த்தான். பிறகு என்னிடம் கட்டரை தரும்படிச் சொன்னான். கட்டரைக்கொண்டு அதைப்பிடித்து கைதொடாமல் தூக்கினான் நான் அதை வாங்க கைநீடினேன். “தொடாதே, இதில் விஷம் இருக்கலாம்” என்றான்.அதை மேலே வைத்துவிட்டு அவன் தொற்றி மேலே வந்தான்.

“இதை எடுக்கவா வந்தோம்?” என்றேன்.

பேசாதே என்று அவன் கைகாட்டினான். “உன் சட்டையைக் கழற்று” என்றான்

என் சட்டையை அதன்மேல் மடித்துப் போட்டு அதன்மேல் கைவைத்து அந்த கலத்தை பிடித்துக்கொண்டான்

“மண்கலமா?”

”இல்லை செம்பு… ஆனால் மேலே நவச்சாரக்கலவை போல ஏதோ பூசப்பட்டிருக்கிறது. நஞ்சாக இருக்கலாம்”

அவன் அதை கட்டரால் உடைத்தான். ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கி அதற்குள் கடப்பாரையை செலுத்தி பிளந்தான். அந்த கலத்தின் மூடியின் விளிம்புகள் உருக்கி ஒட்டப்பட்டிருந்தன. அது திறந்துகொண்டபோது உள்ளிருந்து மண் பொழிந்தது

“மண்ணா?” என்றேன்

அவன் பேசாமலிருக்கும்படி கைகாட்டினான்

நான் ஒரு பொசுங்கும் மணத்தை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன். அவன் கைபிடித்துணியாகப் பயன்படுத்திய என் சட்டையில் கலத்தில் பட்ட பகுதிகள் அமிலம் பட்டதுபோல் பொசுங்கியிருந்தன

அவன் அந்த மண்ணை கட்டரால் கிண்டினான். அது மண்ணல்ல ஏதோ தானியம் என்று தெரிந்தது

“தானியமா?” என்றேன்

”நவதானியம்..” என்றான்

ஆனால் அதில் அரிசி இல்லை. மிகச்சிறிய மணிகள் கொண்ட தவசங்கள் அவை. அவன் அவற்றில் இருந்து சிறிய ஓட்டுச்சிப்பிகள் போன்றவற்றை கட்டரையே கிடுக்கியாகப் பயன்படுத்தி பொறுக்கி அப்பால் விரித்து வைத்த தன் பையின்மேல் போட்டான்.சிறிய கூழாங்கற்களையும் எடுத்து வைத்தான்

துணியை சுற்றி பொட்டலமாக்கி எடுத்துக்கொண்டு “போவோம்” என்றான்

“என்ன எடுத்தோம்? இதுவா? இது என்ன?”

“வா பேசாமல்”

அவன் வெளியே சென்றான். நான் அவனை தொடர்ந்து சென்றேன். இம்முறை அவன் மிகமிக விரைவான நடைகொண்டிருந்தான். பாழடைந்த கட்டிடத்தில் ஆடைகளை மாற்றிக்கொண்டோம். அங்கிருந்து நேராக பஸ்ஸ்டாப் சென்றோம். முதல் பஸ்ஸில் நாகர்கோயில். மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டுவிட்டு நெல்லைக்கு பஸ் ஏறினோம். நெல்லையில் இறங்கி ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம்.

“நாம் எடுத்தது என்ன?” என்றேன்

“சொல்கிறேன்” என்று அவன் சொன்னான். நாங்கள் கடைக்குச் சென்று ஆடைகளும் இரண்டு ஏர்பேக்குளும் வாங்கிக்கொண்டோம். ஒரு சிறு விடுதியில் வாடகைக்கு அறை எடுத்தோம்.

அதன்பிறகுதான் அவன் அந்தப்பொட்டலத்தை எடுத்தான். எனக்கு அப்போதுகூட அந்த சில்லுகளும் கற்களும் என்ன என்று தெரியவில்லை. மண் ஓடுகள், கூழாங்கற்கள் என்றே நினைத்தேன். அவன் அவற்றை கழிப்பறையில் நீரில் நன்றாகக் கழுவிக்கொண்டுவந்து காட்டினான். நான் திகைத்து விட்டேன்

அவை பொற்காசுகள், வைரங்கள் உட்பட அரிய கற்கள். நூற்றெட்டு பொற்காசுகள் இருந்தன. ஒவ்வொன்றும் இருபது கிராம் எடைகொண்டவை. பதினெட்டு கற்கள். என்னால் அவற்றை தொட முடியவில்லை. என் நெஞ்சு படபடத்துக்கொண்டே இருந்தது

அவன் “இவை நவமணிகள். பிறமணிகளும் மதிப்புள்ளவைதான். ஆனால் வைரக்கற்களின் விலையை நம்மால் மதிப்பிடவே முடியாது. மிகச்சரியாக மதிப்பிட்டு இவற்றை விற்கும் ஓர் இடத்திற்கு நாம் சென்றாகவேண்டும்” என்றன்

“ஆம்” என்றேன்

“நல்லவேளையாக நம்மிடம் தங்கமும் இருக்கிறது. நமக்கான இடத்தை நாம் கண்டடைவதுவரை நம்மால் செல்லமுடியும்”

அவன் தங்கத்தை தனியாக எடுத்து நான்கு சிறு பைகளுக்குள்ளாக போட்டான். அவற்றை எங்கள் பைகளில் வெவ்வேறு இடங்களில் பிரித்து வைத்துக்கொண்டோம்.

கற்களில் இருந்து அவன் வைரங்களை மட்டும் பிரித்தெடுத்தான். உப்புக்கல் போன்ற வெண்ணிற வைரங்கள் நான்கு. நீலநிற ஓட்டம் கொண்ட வைரங்கள் மூன்று. ஒரு வைரம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. எடுத்துப்பார்த்தால் அதற்குள் ஓடிக்கொண்டிருந்த சிவப்புத்தீற்றல் சுடர்கொண்டது. அதுதான் மிகப்பெரியது, சிறிய நெல்லிக்காய் அளவு.

“இது கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளது என நினைக்கிறேன்” என்றான்

“கோடியா?”என்றேன்

“பலகோடி” என்றான்.”இவற்றின் தொல்மதிப்புதான் முக்கியமானது. இதைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். திருவனந்தபுரம் அருகே ஒரு கோயிலை நாங்கள் முன்பு கொள்ளையடித்தோம்”

“நாங்கள் என்றால்?”

அவன் ஒன்றும் சொல்லாமல் அதை திருப்பிப்பார்த்தான். “இதை இளஞ்சூரியன் என்கிறார்கள். அருணபிந்து. இது இந்திரனுக்குரியது, கிழக்கு திசைக்கு உரியது. இது எவரிடமிருந்தாலும் தன் வழியை தானே தீர்மானிக்கும். கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும் என்கிறார்கள்”

“அப்படியா?”என்றேன்

“நாம் இங்கே இருக்கக் கூடாது. கோயில் கொள்ளையிடப்பட்ட செய்தி இதற்குள் போலீஸுக்கு தெரிந்துவிட்டிருக்கும். நம்மை எவரேனும் பார்த்திருக்கலாம். பார்க்காவிட்டாலும் போலீஸ் ஊகித்துவிட வாய்ப்புண்டு. அங்கே உள்ள சல்லிப்பயல்களை இதற்குள் பிடித்து சுளுக்கு எடுப்பார்கள். அவர்கள் நம்மைப்பற்றிச் சொல்லியிருப்பார்கள்”

நாங்கள் உடனே அறையைக் காலிசெய்துகொண்டு மதுரை பஸ்சை பிடித்தோம். பகல் முழுக்க பயணம் செய்து நள்ளிரவில் சென்னையைச் சென்றடைந்தோம்

நான் சென்னையில் “களைப்பாக இருக்கிறது, எங்காவது தங்கி தூங்கவேண்டும்” என்றேன்

“எங்கு தங்கினாலும் ஆபத்து. சென்றுகொண்டே இருக்கவேண்டும்.தூங்குவதற்குச் சிறந்த இடம் ரயில்தான்” என்றான்

அப்போது படுக்கை வசதி கிடைத்த ரயில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ்தான். அதில் ஏறிப் படுத்துக்கொண்டோம். என் மனம் குழம்பிக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. ஆனால் களைப்பு மிகுதியாக இருந்தது. ஆகவே தூங்கிவிட்டேன். காலையில் கண்விழித்தபோது ஸ்ரீகண்டன் நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான். எங்கள் திருட்டு பற்றிய விரிவான செய்தி இருந்தது. எங்களை அடையாளம் கண்டுகொண்டதாக ஏதுமில்லை

“நம்மை இரண்டுபேர் தேடுவார்கள்” என்று ஸ்ரீகண்டன் சொன்னான். “திருவனந்தபுரத்தவர்கள் தேடுவதும் ஆபத்து நிறைந்தது. அவர்களுக்கு நாம் எங்கெங்கே செல்லக்கூடும் என்று தெரியும். இந்தத் திருட்டை கேள்விப்பட்டதுமே நான் என்று கண்டுபிடித்துவிடுவார்கள்”

“நாம் என்ன செய்வது?”

“சென்றுகொண்டே இருப்பது, வேறு வழியே இல்லை. முதலில் இந்த தங்கத்தை விற்கவேண்டும்”

காக்கிநாடாவில் இறங்கினோம். நடுத்தரமான ஒரு நகைக்கடையை பார்க்கவேண்டும் என்றான் ஸ்ரீகண்டன். சிறியவர்களிடம் காசு இருக்காது, பெரியவர்களிடம் போலீஸ் தொடர்பு இருக்கும். நடுத்தரக்கடைகள் பெரும்பாலும் திருட்டுநகை வாங்குபவை. அவனே கடை ஒன்றை தேர்வுசெய்து சொன்னான். தங்கக்காசு ஒன்றை என்னிடம் அளித்து விற்று வரும்படி சொன்னான். “அவன்கிட்ட சொல்லு…அவன் பணம் ஏற்பாடு செய்தான்ன்னா இன்னும் பத்து காசுகளோட சாயங்காலம் வாரேன்னு” என்றான்

நான் அந்தக் கடையை அடைந்தேன். அந்தப் பொற்கொல்லன் என்னைப்பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டான். அவன் கண்கள் மாறின. நான் தங்கத்தைக் காட்டியதுமே அவன் திகைத்தான். “இது புதையல்!” என்றான்.

“ஆமாம் இன்னும் இருபது காசு இருக்கிறது… இதை நீ வாங்கினால் சாயங்காலம் வருகிறேன்” அவன் எனக்கு பணம் தந்தான்.

மேலும் ஒரு கடையில் இன்னொரு காசை விற்றோம். உடனே பேருந்தைப்பிடித்து விசாகப்பட்டினம் செல்லலாம் என்று அவன் சொன்னான்

“நாம் தங்கத்தை விற்கப்போவதில்லையா?”என்றேன்

“இல்லை மொத்த தங்கமாக கொடுத்தால் மிகமிகக்குறைவாக விலைபேசுவார்கள். நம்மை பிடித்து தங்கத்தை பிடுங்கிக்கொள்ளவும் முயல்வார்கள். வைரம் பறிபோய்விடும்”என்று அவன் சொன்னான். “நாம் மேலும் தங்கத்துடன் வருவோம் என்பதனால்தான் அவன் உரிய விலை தருகிறான். நாம் தப்பிவிடவேண்டும்”

நாங்கள் அங்கே தங்கவில்லை. நேராக ரயில்நிலையத்திற்குச் சென்றோம்

”நாம் எங்கே செல்கிறோம்?” என்றேன்

“சூரத். அங்கேதான் வைரங்களை விற்கமுடியும்” என்றான். “எனக்கு சிலரை தெரியும்..”

ஆனால் ரயில்நிலையத்திற்கு வந்ததும் அவன் புவனேஸ்வர் போகும் ரயிலில் ஏறினான். நான் “என்ன செய்கிறாய்!?”என்று கூவினேன். ‘மூன்றாம் பிளாட்பாரத்தில் நாக்பூர் ரயில் நிற்கிறது…”

”இல்லை இதுதான் பாதுகாப்பானது… நம்மை சூரத்தில் எதிர்பார்ப்பார்கள்”

எனக்கு ஏனோ சரியாகத்தெரியவில்லை. புவனேஸ்வர் ரயிலில் டிடியிடம் லஞ்சம் கொடுத்து பெர்த் வாங்கிக்கொண்டோம். ஆழ்ந்து தூங்கினோம்.நான் கனவில் அந்த ஒளிவிடும் வைரத்தைக் கண்டேன். ஆனால் அது ஒரு மலைச்சரிவில் இரு மலைகளுக்கு நடுவே கிடந்தது. அந்த வைரம்தான், ஆனால் அது வளர்ந்தபடியே மேலெழுந்து வந்தது. விழித்துக்கொண்டபோது எனக்கு என்னவோ படபடப்பாகவே இருந்தது

ரயிலிலேயே பல்தேய்த்து கழிப்பறையில் குளித்தோம். அங்கேயே உடைகளை மாற்றிக்கொண்டோம்.

புவனேஸ்வரிலும் நாங்கள் தங்கவில்லை. ரயில் நிலையத்தில் இறங்கியதுமே அவன் அடுத்த ரயிலுக்காகப் பரபரக்க ஆரம்பித்தான்.

“கல்கத்தா ரயில் ஆறுமணிநேரத்தில் வரும்… நான் போய் ரிசர்வ் செய்துவிட்டு வருகிறேன். நீ இங்கே இரு. அதன்பின் நாம் சாப்பிடலாம்” என்றான்

“இதோபார், நாம் கிளம்பி நீண்டநாள் ஆகிறது. நாம் இன்னும் ஏன் ஓடவேண்டும். எங்காவது ஓர் அறை எடுத்து பதுங்கிக்கொள்வோம். பணம் இருக்கிறது… என்னால் இனி ஓடமுடியாது”

“முட்டாள் எங்கே தங்கினாலும் யாராவது கவனிப்பார்கள். எவர் நம்மை கவனித்தாலும் ஆபத்து”

“நாம் குளிக்கவில்லை. சரியாகப் படுத்து தூங்கினே பலநாட்கள் ஆகின்றன”

“இந்த ரயில்நிலைய காத்திருப்பு அறை வசதியானது. குளிக்கலாம்.”

“என் ஆடைகளை துவைக்கவேண்டும்”

“ஏன், வேறு ஆடைகள் வாங்கிக்கொள்ளலாம்… இங்கே பழைய ஆடைகளை விற்கும் கடைகள் உண்டு. துவைத்துக் காயவைப்பதற்காக தங்குவது மிகப்பெரிய அபாயம்”

“நீ இத்தனை பயப்படுவாய் என நான் நினைக்கவில்லை”

“வாயை மூடு!” என்று அவன் என்னை அறைய வந்தான். “பயமா? எனக்கா? அறிவுகெட்டவனே”

“பிறகு எதற்காக ஓடுகிறாய்?”

“நான் எனக்கான இடத்தை அடையவேண்டும்… அங்கேதான் நிம்மதியாக தங்கமுடியும்”

“அது எந்த இடம்?”

“தெரியவில்லை… அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்”

நான் பெருமூச்சுவிட்டேன். பிறகு ஒன்றும் சொல்லவில்லை. நகருக்குள் சென்று நாலைந்து சட்டை பாண்டுகள் வாங்கிக்கொண்டோம்,

அழுக்குச்சட்டைகளை வீசினோம். திரும்பி ரயில்நிலையம் வந்தோம். அங்கேயே குளித்து உடைமாற்றினோம். நான் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்

கல்கத்தா ரயிலில் நான் ஆழ்ந்து உறங்கினேன். அங்கே இறங்கியபோது புத்துணர்ச்சியுடன் இருந்தேன். அவன் களைத்திருந்தான். சரியாகத் தூங்கவில்லை என்று தெரிந்தது.

“இந்த ரயில்நிலையமே சரியில்லை. பெருங்கூட்டமாக இருக்கிறது. நாம் இனிமேல் ரயிலில் பயணம்செய்யவேண்டியதில்லை. பஸ்ஸில் போகலாம்” என்றான்

“நாம் எங்கே போகப்போகிறோம்” என்றேன்

“நாம் இங்கிருந்து சென்றுவிடவேண்டும். இங்கே தங்கக்கூடாது, அதுதான் முக்கியம்”

“ஆனால் நாம் போதுமான அளவுக்கு விலகி வந்துவிட்டோம். இந்தப்பாதையை எவரும் ஊகிக்கவே முடியாது”

“இல்லை நாம் கிழக்கே செல்லலாம். அது இந்திய அரசுக்கே சம்பந்தமில்லாத பகுதி”

“சொல்வதைக்கேள்… அங்கே அத்தனைபேரும் சீனர்கள் போல் இருப்பார்கள். நாம் தனித்து தெரிவோம்”

“நாம் அரசாங்கத்து ஆட்கள் என்று சொல்வோம்… ஒன்றும் ஆகாது”

“அங்கே நம்மை தெளிவாகச் சோதனை செய்வார்கள்…”

“அதனால்தான் சொல்கிறேன். அத்தனை சோதனைகள் இருந்தால் எவருக்கும் தெரியாமல் போகும் வழிகள் கண்டிப்பாக இருக்கும்”

“நீ கிறுக்கன்போல பேசுகிறாய்”

“வாயைமூடு… நான் கிளம்புக்கொண்டிருக்கிறேன். நீ வருவதென்றால் வா”

“இதோபார்”

‘“சரி நீ கிளம்பு… தான் தனியாகப் போகிறேன். நாம் பங்கிட்டுக்கொள்வோம்”

‘“இல்லை நானும் வருகிறேன்”

கல்கத்தாவில் மீண்டும் தங்கத்தை விற்றோம். கல்கத்தாவிலிருந்து பஸ்ஸில் பாட்னா சென்றோம். அங்கிருந்துதான் அன்றைக்குச் சிலிகுரிக்கு பஸ் இருந்தது.சிலிகுரியிலிருந்து குவாஹாத்தி. அங்கே மேலும் கொஞ்சம் பொன்னை விற்றோம்.

குவாஹாத்தியிலிருந்து ஷில்லாங் சென்றோம்.அவன் நிலைகொள்ளமலேயே இருந்தான். அன்றெல்லாம் அங்கே சாலை என்பதே கிடையாது. எல்லாமே மண்தடங்கள். வண்டிகள் இடுப்பெலும்பை முறிப்பவை. ஊர்ந்து ஊர்ந்து மலைப்பாதைகளில் சுற்றிச் சுற்றிச் செல்லும். “இவர்கள் என்ன ஆமையில் சவாரிசெய்து பழகியவர்களா?”என்று அவன் கேட்டான். ஷில்லாங் வழியில் ஒருமுறை டிரைவரை விலகி அமரச்செய்துவிட்டு அவனே ஓட்டினான்

ஷில்லாங்கிலிருந்து இம்பால் செல்ல அவன் முடிவுசெய்தபோது நான் கொந்தளித்தேன். அப்போதே மணிப்பூர் பிரிவினை இயக்கங்கள் வலுவாக வேரூன்றிவிட்டிருந்தன. பழங்குடிகள் நடுவே மிகப்பெரிய கலவரங்கள் நடந்துவிட்டிருந்தன. “இம்பாலுக்கு எதற்காகச் செல்கிறோம்? அங்கே தங்கத்தை விற்கக்கூட ஆளிருக்காது”

“இல்லை எங்கும் தங்கத்திற்கு ஆளிருக்கும்”

“ஆனால் ஏன் அங்கே செல்லவேண்டும்?”

“பார், இங்கே போலீஸ் என்பதே இல்லை. இந்த மலைப்பாதைகளைப்போல ரகசியமான வழிகளே இல்லை”

“ஆனால் எங்காவது நாம் செல்லவேண்டும் அல்லவா?” என்றேன் “இப்படியே போய்க்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்?

“இனி வேறுவழியில்லை. இம்பால் செல்வோம்”

“நம்மிடம் வைரமும் பொன்னும் இருக்கிறது… அதை வைத்துக்கொண்டு அத்தனை தூரம் அன்னிய நிலத்திற்குள் செல்வதென்பது…”

“நீ வருவாயா மாட்டாயா?”

நான் கண்ணீர் மல்கினேன். “இதோபார் உன்னுடன் சேர்ந்து சாகவும் நான் தயார். ஆனால் ஏதாவது அர்த்தமிருக்கவேண்டும். சும்மா கிறுக்குத்தனமாக…”

“என் கிறுக்குத்தனம்தான் இது. வருவதென்றால் வா”

“நான் சொல்வதைக்கேள்”

“வருவதென்றால் வா!”என்று அவன் கூச்சலிட்டான். கண்களில் வெறும் கிறுக்குத்தனம்”

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவனுடன் சென்றேன். நாங்கள் இம்பாலுக்குச் சென்றோம். அன்று அது ஒரு சிறிய மலையூர். டான்போஸ்கோவைச் சேர்ந்த கிறித்தவப் போதகர்கள் சிலர் அங்கே இருந்தனர். ஸ்ரீகண்டன் அதை உடனே கண்டுபிடித்தான். எவர் கேட்டாலும் “டான்போஸ்கோ” என்றான். ராணுவமும் துணைராணுவமும் மட்டுமல்ல பழங்குடியினரும் எங்களை தடுக்கவில்லை.

இம்பாலில்கூட நாங்கள் ஒரு பகலில் நான்கு மணிநேரம் மட்டும்தான் இருந்தோம். அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மாருக்குள் நுழையும் வழியை அவன் கண்டுபிடித்தான். அன்று அது பர்மா என அழைக்கப்பட்டது

“பர்மாவா? அது மூடப்பட்ட நாடு அல்லவா?” என்றேன்

“ஆம், ஆனால் அங்கே மூன்றில் ஒரு பங்கு கூட அரசுக் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்”

நான் தடைசொல்வதையே விட்டுவிட்டிருந்தேன். அவனுக்குள் இருந்து ஏதோ ஒன்று இயக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. நாங்கள் கிளம்பி ஒருமாதம் கடந்துவிட்டது. ஒருமுறைகூட ஓர் ஊரில்கூட அவன் தங்கவில்லை. அவன் கண்கள் அலைமோதிக்கொண்டே இருந்தன

ஆனால் அவனுடைய உருமாறும் திறன் அவனை காப்பாற்றியது. அந்தந்த இடத்தில் அப்படியே அவன் மாறினான். சிறுவியாபாரியாக, ரயில்வே போர்ட்டராக, போலீஸ்காரராக. அதை அவனை எதிர்கொண்ட அனைவருமே நம்பினார்கள். அவன் காற்று போன்றவன், அவனைத் தடுக்கும் வேலி ஏதுமில்லை. அதை ஏற்கனவே நான் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆகவே அவனால் மியான்மார் எல்லையைக் கடக்கமுடியுமா என்றெல்லாம் சந்தேகப்படவில்லை

நாங்கள் மியான்மார் எல்லையை காட்டுப்பாதை ஒன்றின் வழியாக மிக எளிதாகக் கடந்தோம். உலகப்போர் காலத்தைய பழைய ஜீப்புகளிலும் டிரக்குகளிலுமாக மண்டாலே என்னும் ஊரைச் சென்றடைந்தோம். செல்லும் வழி எங்கும் சின்னஞ்சிறிய ஊர்கள். அல்லது காட்டுத்தங்கல்கள். அங்கும்கூட அவன் எங்கும் தங்கவில்லை. ஓர் ஊரில் இறங்கியதுமே அடுத்த ஊருக்கான வண்டியைத் தேடிச்செல்வான். ஏதாவது ஊருக்கு ஒரு வண்டி நின்றிருக்கும். ஏறிவிடுவான்.

நான் நாட்கணக்கு காலக்கணக்கு அனைத்தையும் இழந்தவனாக ஆனேன். பித்துபிடித்த கண்களுடன் அவனுடன் சென்றுகொண்டிருந்தேன். அவனும் நானும் பேசிக்கொள்ளவே இல்லை. சொல்லப்போனால் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பியபின் நானும் அவனும் அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டோம். தேவையானவற்றை மட்டுமே பகிர்ந்துகொண்டோம். இருவரும் உடனிருந்தோம், அவ்வளவுதான்

மண்டாலேயிலிருந்து நாய்பிடாவ் என்னும் ஊருக்குச் சென்றோம். மேலும் எங்கே செல்வது என்று அங்குதான் அவனிடம் நான் கேட்டேன். ஆனால் என் குரல் தாழ்ந்திருந்தது. ரகசியம்போல ஒலித்தது

“தாய்லாந்துக்குள் செல்வோம்” என்றான்

“சரி” என்று நான் சொன்னேன்

இப்போது சொன்னால் நம்பமுடியாது. ஆனால் அன்றெல்லாம் எந்த நாட்டின் எல்லையும் இந்த அளவுக்கு பாதுகாக்கப்படவில்லை. ஏனென்றால் உலகளாவிய தீவிரவாதம் அன்றில்லை. அதேசமயம் கஞ்சா, அபின் போன்றவற்றின் ரகசிய வியாபாரம் உச்சநிலையில் இருந்தது. ஆகவே ரகசியப்பாதைகள் நிறைந்திருந்தன

சியாங் மாய் என்னும் நகரை அடைந்தோம். அங்கிருந்து சம்பாங் என்னும் நகரை. அங்கிருந்து பிட்சௌனுலோக். இவை ஒவ்வொன்றுமே வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள். சுற்றுலாப்பயணிகள் கொண்டாடவேண்டிய இடங்கள். பார்க்கவும் மகிழவும் ஏராளமானவை இருந்தன. ஆனால் எங்கும் நாங்கள் சிலமணிநேரம் கூட தங்கவில்லை. மிகமிக வசதிக்குறைவான வண்டிகளிலேயே தூங்கப் பழகிவிட்டிருந்தோம். வண்டிகளுக்காகக் காத்திருக்கும்போதும் தூங்கினோம்.

எங்களிடம் வைரங்கள் இருப்பதையே மறந்துவிட்டிருந்தோம். ஆகவே எவருமே எங்களை சந்தேகப்படவில்லை. எங்களை மியான்மாரிலிருந்து தப்பி தாய்லாந்துக்குச் சென்றுகொண்டே இருந்த பலநூறு இந்தியவம்சாவளியினரில் ஒருவராக எண்ணிக்கொண்டார்கள். நாங்களும் அதற்கேற்ப பிச்சைக்காரத் தோற்றம் கொண்டுவிட்டிருந்தோம்.

பாங்காங்கில் நுழைந்தபோது அவன் அரவானியாக மாறினான். மிக இயல்பாக. அவனுடைய முகம் கண்கள் நடை அசைவுகள் எல்லாமே மாறின. முதலில் எனக்கு திகைப்பாக இருந்தது. “என்ன இது” என்றேன்.

“தாய்லாந்தில் அதிகமாக கண்காணிக்கப்படாதவர்கள் அரவானிகள்தான்” என்றான்

நான் “ஆனால்…” என்றேன். மேற்கொண்டு சொல்லமுடியவில்லை

ஆனால் ஓரிரு மணிநேரங்களுக்குள்ளாகவே என் கண்கள் வழியாக என் மனமும் அவன் அரவானிதான் என நம்பத்தொடங்கியது. ஒருகணம்கூட அவன் பிறிதொன்றாக இருக்கவில்லை. அப்படியே இருந்தான். முழுமையாக. ஏனென்றால் அவன் முதலில் மாற்றிக்கொள்வது உள்ளூரத்தான்.

“கிழக்கே வந்தபோது அர்ஜுனன் பெண்ணாக மாறியதாக சொல்வார்கள்” என்று ஒருமுறை அவனிடம் சொன்னேன்

அவன் என்னை திரும்பிப் பார்த்தான். கண்கள் போதை கொண்டவை போல தோற்றம் தந்தன.

பாங்காங்கை அடைந்தபோது நான் அதுவரை இருந்த உறைநிலையிலிருந்து மீண்டேன். தெருவிலேயே  ஒரு பார்பரிடம் சவரம் செய்துகொண்டேன். புதிய ஆடைகளை வாங்கிக்கொண்டோம். நீண்ட காலத்திற்குப் பின் ஓர் அறையை அமர்த்திக்கொண்டோம். ஸ்ரீகண்டன் அன்றுபகல் முழுக்க நகரில் சுற்றினான். நான் ஒரு தூக்கம்போட்டு எழுந்து அமர்ந்திருந்தேன்.

அவன் வந்ததுமே “நாம் சாயங்காலம் கிளம்புகிறோம்… கொலாலம்பூருக்கு டாக்ஸியில் செல்கிறோம்” என்றான்

என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. நான் எழுந்து அவனை ஓங்கி அறைந்தேன். அவன் பின்னால் சரிந்து கீழே விழுந்தான். அவனை ஓங்கி மிதித்தேன். அவன் என் காலைப்பிடித்து சுழற்றி என்னை விழச்செய்தான். என்னைத் தூக்கி மண்ணில் அறைந்தான். அவனுடைய உடலாற்றல் எனக்குத்தெரியும். என்னைவிட எடைகுறைவானவன். ஆனால் மிக உறுதியான தசைகள். அதோடு பூனைபோல நெகிழ்வானவை அவன் எலும்புகள்

என்னை அறைந்து வீழ்த்தி என்மேல் ஏறி அமர்ந்து அவன் சொன்னான். “நீ என்னுடன் வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை… எனக்கு ஒன்றும் வேண்டாம். அந்த அருணபிந்து மட்டும் போதும். மிச்சத்தையெல்லாம் நீயே வைத்துக்கொள். நான் கிளம்புகிறேன்”

அவன் பெட்டியை திறந்து தங்கத்தையும் வைரங்களையும் எடுத்து என்முன் போட்டான். அருணபிந்து என்ற அந்த இளஞ்சிவப்புக் கோடுள்ள வைரத்தை மட்டும் எடுத்து தன் பைக்குள் வைத்துக்கொண்டான்.

அவன் கிளம்பியபோது நான் ஓடிச்சென்று அவன் கால்களைப் பிடித்தேன். ”என்னை விட்டுவிட்டுச் செல்லாதே… என்னை உதறிவிடாதே” என்று கெஞ்சினேன். “நான் உன்னுடன் வருகிறேன்…எங்குவேண்டுமென்றாலும் வருகிறேன். நான் உன் அடிமை… எனக்கு நீதான் வேண்டும்… வேறெதும் வேண்டாம்!”

அவன் என்னை உதைத்து உதறினான். “இல்லை, இனி நீ என்னுடன் வரவேண்டியதில்லை. நீ இங்கேயே இரு. இங்கே எல்லாவற்றையும் விற்கமுடியும்… நான் போகிறேன்”

“நீ எங்கே போகிறாய்… இதோபார்..”

“கொலாலம்பூர். அங்கிருந்து சிங்கப்பூர், அங்கிருந்து…”

“நானும் வருகிறேன்… எந்த எல்லைவரையானாலும் நானும் வருகிறேன்”

“வேண்டாம்…” என்று சொல்லி அவன் வெளியே சென்றான். நான் அவனுக்குப்பின்னால் ஓடினேன். என் அறையெங்கும் தங்கமும் வைரமும் சிதறிக்கிடப்பதை உணர்ந்து திரும்ப அறைக்குள் சென்று அவற்றை அள்ளி பைக்குள் போட்டுக்கொண்டு ஷூக்களை மாட்டிக்கொண்டு அவனை தொடர்ந்து ஓடினேன்

தெருவில் பைத்தியம்போல அவன் பெயரைச் சொல்லி கூவியபடி நான் ஓடினேன். “ஸ்ரீ ஸ்ரீ! என்னை விட்டுவிடாதே… நானும் வருகிறேன்… நான் செத்துவிடுவேன்!”

அவனை நான் டாக்சி நிலையத்தில் கண்டுபிடித்தேன். ஓடிச்சென்று அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதேன்.

அவன் சலிப்புடன் “சரி, நீயும் வா” என்றான்

டாக்ஸியில் நாங்கள் ஏறிக்கொண்டோம். அது கொலாலம்பூரை நோக்கிச் சென்றது. மலேசிய எல்லையை சட்டவிரோதமாகக் கடத்திவிடுவதற்கு அவன் பெருந்தொகைபேசி முன்பணமும் கொடுத்திருந்தான்

நான் ஒரு தவறுசெய்துவிட்டேன். அவசரத்தில் என் அறையில் ஒரு தங்கக்காசை விட்டுவிட்டேன். அறையை சோதனையிட்ட உரிமையாளர் அதைக் கண்டுபிடித்தார். அந்த விடுதி தாய்லாந்தின் மற்ற பல விடுதிகளைப்போல ஒரு மாபெரும் கிரிமினல் குழுவின் சங்கிலியில் ஒரு கண்ணி. உரிமையாளர் தன் மேலிடத்திற்குத் தெரிவித்தார். அவர்கள் எங்களைத் தேடத்தொடங்கினார்கள்

இரண்டே மணிநேரத்தில் எங்களைக் கண்டுபிடித்தனர். எங்கள் டாக்ஸியும் அவர்களின் வலைப்பின்னலைச் சேர்ந்ததுதான். டாக்சி வழிவிலகிச் செல்வதை ஸ்ரீகண்டன்தான் முதலில் கண்டுபிடித்தான். அவன் கேட்ட எந்தக்கேள்விக்கும் டிரைவர் பதில் சொல்லவில்லை. ஒருகணத்தில் ஸ்ரீகண்டன் அவனை அடித்து கதவைத்திறந்து வெளியே வீழ்த்திவிட்டு காரை கைப்பற்றிக்கொண்டான்.

ஆனால் நாங்கள் நெடுந்தொலைவு செல்லமுடியவில்லை. எங்களை அவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். ஸ்ரீகண்டன் காரை மிகத்திறமையாக திருப்பி சிறிய காட்டுப்பாதைகளில் ஓட்டினான். ஊடுவழிகளினூடாக திருப்பித்திருப்பிக் கொண்டுசென்றான்

ஆனால் அது அவர்களின் ஊர். அவர்கள் நன்கறிந்த வழி. அவர்கள் எங்களை மறித்துக்கொண்டார்கள். எதிரிலும் அவர்களின் கார்கள் தெரிந்தபோது ஸ்ரீகண்டன் “இறங்கு… ஓடிவா” என்று கூவியபடி காரிலிருந்து இறங்கி காட்டுக்குள் ஓடினான்

நான் அவனை தொடந்ந்து ஓடினேன். கார்கள் கிரீச் ஓசையுடன் நின்றன. அவற்றிலிருந்து இறங்கி ஓடிவந்தார்கள். அதனைபேரும் துப்பாக்கி வைத்திருந்தார்கள். சுட்டுக்கொண்டே துரத்தினார்கள்.

நான் தோளில் குண்டுபட்டு குப்புற விழுந்தேன். அந்த விசையில் ஒரு பள்ளத்தின் சரிவில் உருண்டு கீழே ஆழத்திற்குச் சென்றுவிட்டேன். அங்கிருந்து எழுந்து நின்று பார்த்தபோது அவர்கள் ஸ்ரீகண்டனைச் சுடுவதைக் கண்டேன். அவன்மேல் குண்டுகள் பாய்ந்தன. அவன் உடல் துள்ளி துள்ளி முன்னால் சென்று மறைந்தது

அதை நான் தெளிவாகக் கண்டேன். அல்லது அப்படி நினைத்துக்கொண்டேன். நால் அலறினேன். அவனை நான் கடைசியாகக் கண்ட கணம் அவன் வெறியுடன் ஓடிக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் சூரியன் இருந்தமையால் அவன் ஒரு சிவந்த நிழலுரு போலத் தோன்றினான்.

என்னை அவர்கள் தூக்கி மேலே எடுத்தார்கள். என் தங்கத்தையும் வைரங்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள். அவை எனக்கு எங்கிருந்து கிடைத்தன என்று அவர்கள் அறிய விரும்பியமையால் என்னைக் கொல்லவில்லை. அவர்களின் மருத்துவரைக் கொண்டே என்னை காப்பாற்றினார்கள்.

என்னை அவர்கள் நாட்கணக்கில் சித்திரவதை செய்தார்கள். அவனைச் சுட்டுக்கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அவனிடமிருந்து அவர்கள் எடுத்தது ஒரு துணியில் பொதிந்து பையில் வைத்திருந்த ஒரு சிறு கூழாங்கல்லும் கொஞ்சம் தாய்லாந்து, மலேசிய கரென்ஸிகளும் மட்டும்தான்.

அந்தக்கல்லை அவர்கள் என்னிடம் காட்டினார்கள். அது என்னவென்று சொல்லமுடியுமா என்றனர். அது அவனிடமிருந்த அந்த வைரம்போலவே இருந்தது, ஆனால் வெறும்கூழாங்கல். அதிலிருந்த ஒளி முற்றாகவே மறைந்துவிட்டிருந்தது. நான் அதை வெவ்வேறு வெளிச்சங்களில் வைத்து பார்த்தேன். கூழாங்கல்லேதான்.

“இதை எங்கே எடுத்தீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள் சொன்னதைப் பார்த்தால் அவன் தன் பையில் அந்த வைரத்தை வைத்த அதே இடத்தில்தான் இருந்திருக்கிறது. அதுவேதான், ஆனால் அது அல்ல.

“அந்த உடலை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அங்கே காட்டில் ஒரு பள்ளத்தில் வீசிவிட்டதாகச் சொன்னார்கள். ஆழமான மண்வெடிப்பு அது. அவனை நரிகள் தின்றுவிட்டிருக்கும்.

என்னை அவர்கள் அடித்துக்கொண்டே இருந்தனர். அந்த புதையல் எங்கே இருக்கிறது என்றனர். நான் அது இந்தியாவின் தெற்கே கன்யாகுமரியில் என்றபோது அவர்களால் நம்பமுடியவில்லை. அத்தனை தொலைவு ஏன் வரவேண்டும்? எப்படி எவராலும் தடுக்கப்படாமல் வரமுடியும்?

நான்கு வாரங்களுக்குப்பின் அவர்கள் சற்று கவனக்குறைவாக இருந்தபோது நான் அவர்களிடமிருந்து தப்பினேன். மீண்டும் மியான்மாருக்கே சென்றேன்.நான் கொலாலம்பூர் செல்வேன் என நினைத்து அவர்கள் அந்தவழிகளில் தேடியிருக்கலாம். நான் தப்பிவிட்டேன்.

பர்மா வழியாக் இந்தியாவுக்குள் நான் வந்து சேர ஏழு ஆண்டுகளாயின. நடுவே பர்மாவில் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தேன். பல்வேறு குற்றக்குழுக்களுடன் இருந்தேன். நான் அடைந்த சித்திரவதைகளைச் சொல்லப்போனால் அது வேறு ஒரு கதை. ஒன்றுமட்டும் சொல்கிறேனே, கைகூப்பி மண்ணில் கிடந்த செல்லங்காட்டு பெருவட்டர் சித்தன் நாடாரை நினைத்து நினைத்து ஆயிரம் முறையாவது கண்ணீர் விட்டிருப்பேன். அவரை நான் என் அப்பா என்று சொல்வதில்லை. அதற்கான தகுதியை நான் இழந்துவிட்டேன்.

ஒவ்வொரு அடி விழும்போதும், ஒவ்வொரு வலியிலும் “நான் ஈடு செய்துவிட்டேன். பரிகாரம் செய்துவிட்டேன்” என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். அந்த வார்த்தைதான் என்னை அனைத்திலும் வீழாமல் நிற்கச் செய்தது. என்னைக் கவசமாக காப்பாற்றி இங்கே இதுவரை கொண்டுவந்திருக்கிறது. செல்லங்காட்டு பெருவட்டர் எனக்கு அளித்த பெரும்கொடை என்றேனே, அது இதுதான். இந்த மாபெரும் குற்றவுணர்ச்சி. என் வாழ்க்கைக்கே ஆதாரமான பிடிப்பு இதுதான்.

நூறுமுறையாவது தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருப்பேன். தற்கொலை செய்துகொள்ளும் உரிமை எனக்கு இல்லை என்று எண்ண வைத்தது இந்தப் பிழையுணர்ச்சிதான். முழுக்க அனுபவித்து இந்தப் பிறவியிலேயே கணக்கை தீர்க்கவேண்டும் என்றே நினைத்தேன். ஒவ்வொருமுறை சாவின் விளிம்புவரைச் சென்று திரும்பும்போதும் கடனில் ஒரு பகுதியை கட்டிவிட்டேன் என்றே நினைப்பேன்

இந்தக்கதையை நான் சொல்ல வந்தது வேறொன்றுக்காக. நான் மீண்டும் கல்கத்தா வந்து அங்கே ஓர் ஓட்டலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு நாளிதழில் செய்தி ஒன்றைப் பார்த்தேன். இந்தியாவின் தூதர் அந்நகருக்கு விஜயம் செய்த செய்தியுடன் வந்த புகைப்படம். உடன் ஜகார்த்தாவின் ஒரு தெரு. அதில் ஸ்ரீகண்டன் சென்றுகொண்டிருந்தான். அவனேதான். அது என் பிரமை அல்ல, முழுக்க முழுக்க உண்மை. இந்தப்பூமியில் எவரையேனும் எனக்கு மிகமிக நன்றாகத் தெரியும் என்றால், ஒரு விரலைக்கொண்டே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றால் அது அவனைத்தான்.

மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் மணிலாவை டிவியில் காட்டினார்கள். காமிரா சுழன்று வந்தபோது அந்தத் தெருவில் ஒரு டிரக்கில் அவன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவனேதான். அவன் சாகவில்லை. அவனிடம் அந்த மணி இருக்கிறது. அருணபிந்து. அல்லது அதன் ஒளி மட்டுமாவது அவனிடம் இருக்கிறது.

அவன் கிழக்குநோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறான். இதோ ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன. ஒருவேளை அவன் இன்னும் சென்றுகொண்டேதான் இருப்பான்.

===========================================================================

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–33

$
0
0

பகுதி நான்கு : அலைமீள்கை – 16

நீண்டநேரம் கிருதவர்மன் அமைதியாக இருந்தார். பின்பு “நான் அவரை சந்திக்கும் களங்கள் முடியப்போவதே இல்லை என்றே எப்போதும் உணர்கிறேன். என் இருப்பு என்பதே அக்களங்களில் எதிர்நிலையாக உருவாவதுதான். அந்தக் களங்கள் இல்லையேல் நான் இல்லை” என்றார். “மூதாதையே, உங்கள் களங்கள் பிறவிபிறவியென நீள்வனவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் இனி அவரை இங்குள்ள களத்தில் சந்திக்கப்போவதில்லை” என்று நான் சொன்னேன்.

“அவர் முற்றாக விலகிவிட்டார். சாத்யகி சென்று அவரை சந்தித்து மீண்டதை விரிவாக சொல்கிறேன். அவர் எந்தையின் காலடியில் விழுந்து மன்றாடினார். அன்னையர் எண்மரின் கண்ணீருடன் சென்றிருந்தார். அவரை எந்தை திருப்பி அனுப்பினார். ஆனால் சாத்யகி செல்லும்போதே நான் அறிந்திருந்தேன், அவர் வரப்போவதில்லை என்று. சாத்யகி திரும்பிவந்தபோது மைந்தர் எண்பதின்மரில் எவரும் மெய்யான ஏமாற்றம் அடையவில்லை. அப்போது அறிந்தேன், எவருக்குமே அந்த எதிர்பார்ப்பு இருக்கவில்லை என்று. மைந்தர் அவரை அறிந்திருக்கிறோம்” என்றேன். “இக்களம்போல் அவர் எழுந்தாகவேண்டிய பிறிதொன்று இல்லை. இங்கே அவர் விலகி நிற்கிறார் என்றால் இனி எங்குமில்லை என்றே பொருள்.”

“நீங்கள் அவரை களத்தில் சந்தித்ததாக எண்ணிக்கொள்வதுகூட மாயையே” என்று நான் தொடர்ந்தேன். “இங்கு வாழும் எவரும் அவரை களத்தில் சந்தித்ததில்லை. ஏனெனில் எந்தக் களத்திலும் அவர் நின்றதில்லை. இங்கு இத்தனை காலம் அவர் திகழ்ந்திருந்தாரென எண்ணிக்கொள்வதைப்போல் மாயை பிறிதில்லை. அவர் இங்கில்லை, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தருணத்திற்கும் உரிய தன் உருவொன்றை அவர் படைத்தார். அதனுடன் உங்களை விளையாடவிட்டார். எட்டு அன்னையர் அவருடைய உருவொன்றுடன் முயங்கி எங்களை பெற்றனர். நாங்கள் எண்பதின்மரும் எங்களுக்குரிய உருவொன்றை படைத்து அதனுடன் உறவாடினோம். விரும்பியும் வெறுத்தும் முயங்கியும் விலக்கியும்.”

“நீங்கள் அவர் எதிரிகள், உங்களுக்குரிய உருவை நீங்கள் படைத்துக்கொண்டீர்கள். அவற்றுடன் போராடும்போது நீங்கள் ஒருபோதும் வெல்ல இயலாது. ஏனெனில் அது உங்களுக்குள்ளிருந்து நீங்கள் படைத்துக்கொண்டது. அவற்றுடன் போராடுகையில் நீங்கள் உங்களுடன் போராடுகிறீர்கள். தன்னை தான் வெல்லுதல் எளிதா? யோகிகளுக்கும் அரிய செயல் அல்லவா அது? எவருடன் நீங்கள் போரிட்டீர்கள் கூறுக?” என்றேன். சொல்லிச்சொல்லி நான் உருவாக்கிய சித்திரத்தை முழுமை செய்துவிட்டிருந்தேன். அதை தொட்டுத்தொட்டு பெரிதாக்க என் அகம் துள்ளியது.

கிருதவர்மன் வெறுமனே முனகினார். “இளமையில் இளைய யாதவரென்று உங்களுக்கு வந்து சேர்ந்த ஒரு வடிவின் மேல் பெருங்காதல் கொண்டிருந்தீர்கள். கோகுலத்தில் ஆடியவன், பெண்டிருக்கு இனியவன். பேராற்றல் கொண்டு எழுந்து கம்சனை வென்றவன். மதுராபுரியின் புகழ்மிக்க அரசன். யாதவ குலத்தலைவன். இந்த யுகத்தின் வெற்றிக்கொடி. நீங்கள் அவன் மேல் மோகம் கொண்டீர்கள். அவனை வழிபட்டீர்கள். ஒவ்வொரு நாளுமென நீங்களும் உளத்தில் அவனை பெருக்கினீர்கள். பேருரு அடையச்செய்தீர்கள். அதன் காலடியில் அமர்ந்திருந்தீர்கள். யாதவரே, அவ்வுருவுடன் நீங்கள் துவாரகைக்கு வந்தீர்கள். அங்கிருந்த அரசரைக் கண்டு மேலும் விம்மிதம் கொண்டீர்கள்.”

“மேலும் மேலும் அவரை வளர்த்தீர்கள். பாரதவர்ஷத்தைவிட பெரிய ஒருவராக ஆக்கினீர்கள். நீங்கள் அறியாமலேயே உங்களை அதற்கிணையாக பெருக்கிக்கொண்டிருந்தீர்கள் என்று உணர்ந்தீர்களா? ஒன்றை பெருக்கி கனவு காண்பவன் தன் சிறுமை உணர்வால் அதை செய்யவில்லை. தன் பெருமையுணர்வால் அதை செய்கிறான். ஒவ்வொரு கணமும் அதற்கிணையாக தன்னையும் பெருக்கிக்கொள்கிறான். தெய்வத்திற்கு இணையானது பக்தனெனும் ஆளுமை. தெய்வத்தை அள்ளுவது பக்தனெனும் ஆணவம். நீங்கள் உங்களுக்குள் பெருக்கி வைத்திருந்த அவர் உருவுக்கு நிகராக அதன் ஆடிப்பாவையென நீங்கள் உருவாக்கி நிறுத்தியிருந்தது உங்கள் பேருரு.”

“எங்கோ ஒரு கணத்தில் நீங்கள் உணர்ந்தீர்கள், அப்பேருருவை அவர் அடையாளம் காட்டவில்லை என. அவர் அதை பொருட்டெனக் கருதவில்லை. அத்தருணத்தில் அனைத்தும் நஞ்சாகியது. நீங்கள் கசந்தெழுந்தீர்கள். காழ்ப்பும் பகைமையும் கொண்டவரானீர்கள். எரிந்து எரிந்து எரிந்து இதுநாள் வரை வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு களம் கிடைத்திருக்கலாம், அவருடன் எதிர் நின்று சமராடுவதற்கு. ஓர் அம்பையேனும் அவர் உங்கள் மேல் எய்திருக்கலாம், அது நிகழவில்லை. குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் நீங்கள் எதிர்நின்று போரிட்டது அவருடன்தான். படைத்திரள் என விற்பெருவீரர் என அரசர் என பிதாமகர் என பெருகி உங்கள் முன் வந்த அனைவரும் அவர்தான். ஆனால் அவர் அப்பால் எதையும் ஆற்றாமல் அமைந்திருந்தார்.”

“அங்கே வென்றீர்கள், தோற்கடிக்கப்பட்டீர்கள், எரிந்தழிந்து உடலுருகி இங்கு வந்து அமர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் படைக்கலன்கள் அனைத்தும் தொடப்படாது துருப்பிடிக்கின்றன. உங்கள் உளஆற்றல் இலக்கின்றி அலைமோதுகிறது. எண்ணுக, நீங்கள் அவரை வெல்லாது இறக்க இயலாது! உடல் அழியலாம், உடலாகி வந்தது, உடலை இயக்கியது, உடல் கடந்து தருக்கியது, உடலில் அனலென இயல்வது ஒருபோதும் இறக்க இயலாது. அழிவின்மை கொண்டு இங்கு நின்றிருக்கும் உங்கள் பெருவஞ்சம். ஏனெனில் இது இங்கு ஊதி எழுப்பப்பட்ட ஓர் அனல். தன் பணி முடித்து தானே தன்னை அது அணைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மேலும் மேலும் பெருகுவதே அதன் இயல்பு.”

“அனலுக்கு ஓர் பிறவிப்பண்பு உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள். பெருகிக்கொண்டிருக்கும் வரைதான் அதனால் திகழவே முடியும். வஞ்சமும் பகைமையும் அவ்வாறுதான். நீங்கள் உங்கள் வஞ்சத்தையும் பகைமையையும் பெருக்கி நிலைநிறுத்தும்போது மட்டுமே இங்கிருக்கிறீர்கள். அவை அழிகையில் நீங்களும் அழிவீர்கள். எனில் உங்களை ஒருபோதும் எதிர்கொள்ளாத ஒருவரை எவ்வண்ணம் வெல்வீர்கள்? அவரிடம் எவ்வண்ணம் போரிடுவீர்கள்? வெல்லலாம் தோற்கலாம், போரிடவே இயலாதென்றால் உங்களுக்கு எஞ்சுவதென்ன?”

“இங்கு நீங்கள் அமர்ந்திருக்கையில் அடைந்திருக்கும் பெருவெறுமை எதுவென்று உணர்கிறீர்களா என்ன? நீங்கள் கொண்டிருப்பது ஒரு பொருளின்மை. உங்கள் வஞ்சத்தை என்ன செய்வதென்றறியாது அமர்ந்திருக்கிறீர்கள். பேருருக்கொண்ட வளர்ப்பு விலங்கொன்றை கொஞ்சுவதுபோல அருகே வைத்துக்கொண்டு இங்கே ஒடுங்கியிருக்கிறீர்கள். மூதாதையே, ஒரு வழியே உள்ளது. எழுக! அவருடன் போர்புரிக! போர் ஒன்றே உங்களை நிலைநிறுத்துவது. போர் ஒன்றே உங்களுக்கு புகழ் அளிப்பது. போர் ஒன்றே உங்களுக்கு வீடுபேறளிப்பது.”

மானுடர் எவ்வண்ணம் பழைய உடைகள் களைந்து புத்தாடை அணிகிறார்களோ அவ்வண்ணமே உடல்கொண்டு வந்து உள்ளிருப்பது நலிந்த உடல்களை உதறி புதியவற்றை கொள்கிறது. வஞ்சம் ஆற்றல் அளிப்பது, வஞ்சம் நிலைபேறளிப்பது, வஞ்சம்கொண்டோர் வெல்கிறார்கள். ஆனால் அவ்வஞ்சம் செயலாக ஆகும்போது உணர்வுநிலைகளை கடந்தாகவேண்டும். இருத்தல் இல்லை என்னும் இருநிலை கடந்து ஒன்றாகவேண்டும். உள்ளத்தால் அல்ல தன்னுணர்வால் போர்புரிக! உள்ளத்தை அடக்காதவருக்கு ஆழ்ந்த அறிவு இல்லை. அவருக்கு தன்னிறைவும் இல்லை. தன்னிறைவற்றவருக்கு அமைதி இல்லை. அமைதியற்றவருக்கு வெற்றியின் இன்பங்களும் இல்லை.

போரின்றி வெற்றிச் சிறப்பில்லை என்பதை அறிக! செயல்களை செய்யாதொழிவதனால் எவரும் செயலற்ற நிலையை அடைவதில்லை. செயலை நாம் ஒழியலாகாது, செயல் நம்மை ஒழியவேண்டும். நிறைவடைந்த செயலே செய்பவனை விடுவிக்கிறது. செயலால் கைவிடப்படாதவர் துறவை அடைவதில்லை. புலன்களை வலிந்து அடக்கிக்கொண்டு ஆழத்தில் அப்புலன்களை ஆளும் அனலை ஓம்பியபடி இருக்கையில் எப்படி விடுதலை நிகழ முடியும்? அது தன்னைத்தானே ஏய்த்தலன்றி வேறென்ன? புலன்களை ஆள்பவர், தனக்குரிய செயலை தன்னை அளித்துச் செய்பவரே செயல்நிறைவடைந்து வீடுபேறடைகிறார். இங்கு உங்களுக்கென அமைந்த தன்னறத்தை செய்க! செயலின்மையைவிட மேலானது செயல். செயலின்றி இருந்தால் நீங்கள் இவ்வுடலையே சுமையென உணரலாகும், ஆகவே எழுக, போர்புரிக!

எண்ணுக மூதாதையே, இங்கிருந்து அனைத்தையும் தனக்குள் திருப்பி எடுத்தபடி அவர் எங்கோ சென்று ஒடுங்கிவிட்டார்! இனி அவருடன் நீங்கள் போரிட இயலாது. அவருடையதென்று ஒரு துளி இனி எங்கும் எஞ்சாது. ஐயமே தேவையில்லை, இனி எந்தக் களத்திலும் அவர் தோன்றப்போவதில்லை. நீங்கள் அவரை இனி ஒருபோதும் முகத்தோடு முகம் நோக்கப்போவதுமில்லை. இங்கிருந்து அவ்வண்ணம் ஒரு வாய்ப்பை எண்ணி நீங்கள் பொழுது கழித்தீர்கள் எனில் முடிவிலிக்கணம் வரை எரிந்தெரிந்து அழிவின்மை கொள்ளும் பெருந்துயரொன்றை உங்களுக்கென ஈட்டிக்கொள்வீர்கள்.

அரசே, நீங்கள் வெல்ல வேண்டிய எதிரி ஒருவர் பேருருக்கொண்டு இங்கு நின்றிருப்பதை நீங்கள் உணரவில்லையா? தன் உருவங்களை ஆயிரம் பல்லாயிரம் என பெருக்கி இந்நிலத்தில் நிறைந்தவன் அவற்றை எல்லாம் இங்கு விட்டுச் சென்றிருக்கிறான். அம்முகங்கள் இங்கு வாழும். நிலங்கள்தோறும் தெய்வங்கள் என அமர்ந்து வெண்ணையும் இனிப்பும் கொள்ளும். பீலி சூடி, விழி மலர்ந்து விளையாடும். குழலூதி கனவுகளுக்குள் வந்து அமரும். இனி நீங்கள் போரிட வேண்டியது அப்பேருருவுடன்தான்.

ஒவ்வொன்றாக அவ்வுருவங்களை நீங்கள் அழிக்கலாம். அது கடல்நுரையை ஒவ்வொரு குமிழியாக உடைப்பதற்கு நிகர். நீங்கள் போரிடுவதற்கு அலையலையென எழுந்து வந்துகொண்டிருக்கும் ஆயிரம் பல்லாயிரம் இளைய யாதவர்களை பாருங்கள். ஒருகணம்கூட இங்கு நீங்கள் ஓய்ந்திருக்க பொழுதில்லை என்று உணருங்கள். எழுக, உங்கள் இறுதிக்களம் ஒருங்கியிருக்கிறது! இதை தவறவிட்டால் இங்கு நீங்கள் அமைதிகொள்ள இயலாது. அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஆயிரம் பல்லாயிரம் காதம் அலைவீர்கள். உங்களை நோக்கி அறைகூவுவது காலவடிவம் கொண்ட பரம்பொருளே என்றுணர்க! எழுக! போர்புரிக!

கிருதவர்மன் விழிகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. அவர் நெடுநேரம் கழித்து தணிந்த குரலில் “உண்மை” என்றார். “நான் இங்கு இருக்கையில், வெளியிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் நூறு முறை தடுக்கும் கதவுகள் என்னை சூழ்ந்திருக்கையில்கூட எவ்வண்ணமும் சில நாட்களுக்கு ஒருமுறை அவர் பெயர் என்னை நோக்கி வந்தபடி இருக்கிறது. வெளியே சிறுபனித்துளி உதிர்வதென ஒலிக்கும் அவர் பெயர் என்னுள் இடியோசையாகிறது.” நான் “அப்பெயரை நீங்கள் அழிக்க இயலாது. ஒன்றை அழிப்பதற்கு மிகச் சிறந்த வழி அதை திரிப்பதே. அதனுடன் பிறிதொன்றை இணைத்துவிடுதல். முதல் வடிவை சுமைகொள்ளச் செய்வது அது. நோயுறச் செய்வது. அறுதியாக வீழ்த்துவது” என்றேன்.

“நமது படைக்கலங்கள் நமது உயிராற்றலால் இயங்குவன. நோயை அவ்வுயிர் தனது உயிராற்றலால் இயக்கிக்கொள்கிறது. எதிரியை நோயுறச்செய்க! ஒவ்வொரு உயிருக்கும் நோயை பெருக்கிக்கொள்ளும் விழைவும் உண்டு. அது ஒவ்வொன்றையும் உடைத்து அழிக்கும் காலத்தின் ஆணை. உடல் தன் உயிருடன் நோயையும் கலந்துவிடும். உயிர் எவ்வளவு பெருகுகிறதோ அவ்வளவு நோயும் பெருகும்” என்றேன். “பெருமானுடரின் புகழை, மாபெரும் கருத்துக்களை, யுகக்கனவுகளை வெல்ல எளிய வழி அவற்றை திரிப்பதே. அவற்றின் எல்லையற்ற உயிராற்றலால் அவை நம் எதிர்ப்புக்கு அப்பாற்பட்டவையாகின்றன. நாம் அவற்றை திரித்தால் தங்கள் உயிராற்றலாலேயே அவை தங்களை மேலும் மேலும் திரித்துக்கொள்கின்றன. திரிபால் பிரிவினை அடைகின்றன. பிரிவுகள் மோதிக்கொள்கின்றன. ஒவ்வொன்றையும் வீழ்த்த விழையும் காலத்தை நாம் துணைகொள்வோம்.”

“நாம் இளைய யாதவரை திரிப்போம். அவர் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் அத்திரிவுகளும் சென்றமையும். அவற்றை உருவாக்குவதற்கு நமக்கு ஓர் அரசு தேவை. அரசே, துவாரகையில் இன்று அரசு சூடி அமர்ந்திருப்பவர்களில் நான் மட்டுமே அவருடைய பாவையை பெரிதாக்க வேண்டியதில்லை என்ற தெளிவை அடைந்திருக்கிறேன். அந்தப் பாவையை பெரிதாக்குவதைவிட அழிப்பதே உதவுவது என்றும் எண்ணுகிறேன். வெவ்வேறு வகையில் அங்கிருக்கும் அனைத்துத் தரப்பினரும் அவரது உருவைப் பெரிதாக்கி அதை தன் பீடமாகக் கொள்ளவேண்டும் என்னும் தேவை உடையவர்கள். அங்கு வந்து என்னுடன் நின்று எனக்கு மணிமுடியை அளித்தீர்கள் எனில் அவருக்கு எதிரான போரில் மிகப் பெரிய தேர் ஒன்றை நீங்கள் அடைவீர்கள்.”

“என் மேல் ஏறி நில்லுங்கள். என்னை கருவியாக்கிக் கொள்ளுங்கள்” என்று நான் சொன்னேன். “அவர் புகழை அழிப்பதற்கான வழிகளில் முதன்மையானது அவர் மைந்தர் தங்களுக்குள் போரிட்டு அழிய வேண்டும் என்பது. உலகைக் காக்க வேதம் உரைத்தவன் தன் குடி காக்க இயலாது ஒழிந்தான் என்னும் அவப்பெயர் நிலைகொள்ள வேண்டும். தன் கண்முன் மைந்தர்கள் போரிட்டு அழிவதைக் கண்டு நெஞ்சு பதைத்து துடித்து விழிநீர் சிந்தினான் என்று உலகு எண்ண வேண்டும். குருக்ஷேத்ரத்தில் அவன் இழைத்த அனைத்திற்கும் துவாரகைக் களத்தில் நிகர்வைத்தான் என்று சொல் எழவேண்டும். உளமுடைந்து அவன் அழுதான் என்றும் பெரும்பழிகொண்டு அகன்றான் என்றும் வீணில் இறந்தான் என்றும் கதை நிலைகொள்ளவேண்டும்.”

“அதன்பின் குருக்ஷேத்ரத்தை நாம் மாற்றி வனைய இயலும். அங்கு வீழ்ந்தவர் அனைவரையுமே நாம் சொல்லில் மீட்டெடுக்கலாம். ஒளியுடன் பீஷ்மர் எழவேண்டும். ஏழு புரவித் தேரில் கர்ணன் எழவேண்டும். நூறு தோள்களுடன் துரியோதனன் தம்பியருடன் எழவேண்டும். அஸ்வத்தாமன் அழிவற்ற அறச்சீற்றத்துடன் நிலைகொள்ள வேண்டும். நிஷாதர்களின் முகமென கடோத்கஜன் இல்லந்தோறும் நிலைகொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் தெய்வங்களென இங்கு நிலைகொள்கையில் அவர் சுருங்கிச் சிறுப்பார். அதை செய்வதற்கு நமக்கு அரசு தேவை.”

“அரசே, துவாரகை அவர் விட்டுச்செல்லும் தடம். நம் கோல் கீழ் அந்நகர் பிறிதொன்றாகவேண்டும். அது அவரின்றி நிலைகொள்ள இயலாது. எனில் அவ்வாறு நிலைகொள்ளும் அவர் எவ்வகையிலும் அவரன்று என்றிருந்தால் அதுவே அவரை மறைக்கும் ஒன்றாகும். முற்றிலும் புதிய ஒரு இளைய யாதவரை அங்கு நிறுவுவோம். துயர்கொண்டு தனித்து கைவிடப்பட்டு தன் ஒவ்வொரு சொல்லையும் எண்ணி வருந்தி வாழ்ந்தவர். தன் சொற்கள் அனைத்தையும் தானே மறுத்து, தான் கொண்டு வந்த அனைத்தையும் திரும்ப எடுத்துக்கொண்டு இங்கிருந்து மறையும் ஒருவர். அத்தகைய இளைய யாதவரை உருவாக்குவோம். அரசே, அதன் பொருட்டு எழுக!”

கிருதவர்மன் “மைந்தா, உனது சொல்வலிமை ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. இதுவரை துவாரகையில் யாதவரில் எவரும் இவ்வாறு பேசியதில்லை. அதற்கான ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பதை எவரும் சொன்னதில்லை. மெய்யாகவே இது நீதானா? ஏதேனும் மாய உருவா என்று ஐயுறுகிறேன்” என்றார். “ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ப நாம் நம் ஆற்றலை கண்டடைகிறோம். ஒருபோதும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை” என்று நான் சொன்னேன். “நன்று! உன்னுடன் இருக்கிறேன், உனக்கென எழுகிறேன்” என்றார் கிருதவர்மன். “வருக! என்னுடன் வந்து யாதவர்களுக்கு தலைமைகொள்க! தாங்கள் அங்கு இயற்றவேண்டியது என்ன என்பது இப்போது சொல்லற்கரியது. அங்குள்ள ஒவ்வொரு தருணத்திலும் அதற்கான தேவையும் வாய்ப்பும் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. அதை நாம் அடைவோம்” என்று நான் சொன்னேன்.

 

விஸ்வாமித்ரரின் தவக்குடிலில் இருந்து கிளம்புகையில் என்னை எண்ணி நானே தருக்கிக்கொண்டேன். ஒவ்வொரு தருணத்திற்கும் என்னுள்ளிருந்து புதிய ஒருவனை நான் வெளியே எடுக்க இயல்கிறது. மானுடர் இரு வகை. மாறாத உருக்கொண்டவர்கள். கல்லிலும் இரும்பிலும் சமைக்கப்பட்டவர்கள் போன்றவர்கள். அவர்கள் அமரும் பீடங்கள் முன்னரே ஒருங்கிவிட்டிருக்கின்றன. ஆற்ற வேண்டிய பணி வகுக்கப்பட்டிருக்கிறது. இங்கு வந்து திகழ்ந்து மறைபவர்கள் அவர்கள். துரியோதனனைப்போல, கர்ணனைப்போல. ஆனால் அவர்கள் வெல்வதில்லை. எத்தனை எடைகொண்டவர்கள் எனினும் விசைகொண்டவர்கள் எனினும் இரும்பாலும் கல்லாலும் ஆனவர்கள் பிளந்தே ஆகவேண்டும். ஏனெனில் காலம் என்றும் வெளி என்றும் இங்கு திகழ்வது ஒரு முடிவிலி. முடிவிலிக்கு முன் எதுவும் இன்மையே.

ஒவ்வொரு கணமும் தன்னை மாற்றிக்கொள்பவன், அத்தருணத்திற்கென புதிதாக எழுபவன் மட்டுமே வெல்பவன். கணந்தோறும் மாறிக்கொண்டிருந்தார் என் தந்தை, அவருடன் மாறிக்கொண்டிருந்தனர் பாண்டவர்கள். வென்றது அம்மாற்றமே. நானும் அவ்வாறே. என் நத்தைச் சிறு கூட்டிலிருந்து வெளிவந்திருக்கிறேன். வீசப்பட்ட விதைகளென ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வடிவு கொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறேன். ‘கிருதவர்மனை வென்றுவிட்டேன். அவரை அழைத்துவருகிறேன்’ என்று செய்தி ஒன்றை அனுப்பினேன். பின்னர் என் சிறு குடிலுக்குள் சென்று ஓய்வெடுத்தேன்.

மறுநாள் என்னுடன் கிருதவர்மன் கிளம்பிவருகிறார் என்று முடிவு செய்யப்பட்டது. அச்செய்தியை குருகுலத்தின் தலைவரிடம் சென்று சொல்லும்படி ஏவலனை அனுப்பினேன். அவர் என்னை பார்க்க விழைவதாக சொன்னார். நான் சென்று அவரை வணங்கி அமர்ந்தேன். விஸ்வாமித்ரர் அவருடைய வழக்கமான நிகர்நிலையில் அன்று இல்லை. முகமன்களுக்குப் பின்னர் “நீங்கள் அவரை சந்தித்ததை அறிந்ததேன். உங்களுடன் அவரை அழைத்துச் செல்லவிருப்பதை ஏவலன் சொன்னான். நன்று, இங்கிருந்து அவர் செல்வது எங்கள் அனைவருக்குமே மகிழ்வளிக்கிறது” என்று அவர் சொன்னார்.

என்னிடம் சொல்ல அவரிடம் ஏதோ இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். “யாதவரே, இங்கு அவர் வந்தபோது தவக்கோலத்தில் இருந்தார். எங்களுடன் இருக்க விழைவதாகவும், எஞ்சியிருப்பதென்ன என்று கணிக்கவிருப்பதாகவும் சொன்னார். குருக்ஷேத்ரப் பெருநிலத்திலிருந்து அவ்வண்ணம் பல்லாயிரம்பேர் வீடுபேறு நோக்கி சென்றிருக்கிறார்கள் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்நிலத்தை நேரில் கண்டவர்கள், சொல்லில் கேட்டவர்கள், உணர்ந்தவர்கள் துறந்து குருநிலைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். பாரதவர்ஷமே அவர்களால் நிறைந்திருக்கிறது, பால் நிறைந்த கலம் நுரைப்பதுபோல் குருக்ஷேத்ரம் மெய்யறிவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்று இங்கு ஒரு சொல் உண்டு.”

“இங்கு வந்தபோது அவர் எவர் என அறிந்திருக்கவில்லை. ஆயினும் அவர் குருக்ஷேத்ரத்திலிருந்து வந்தார் என்று அறிந்திருந்தேன். மெய்மை நாடி துறந்தெழுந்தவர் என்று எண்ணினேன். அவ்வாறே ஆகுக என்று நிறைவுற்றேன். அவர் தனி தவக்குடிலமைத்து தனித்து தங்கினார். எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று எவரும் அறியவில்லை. தன்னை தான் கடந்து ஒவ்வொன்றாக எடுத்து அவர் பார்க்கட்டும், தன்னை மீண்டும் இங்கு கட்டி அமைத்துக்கொள்ளட்டும், எழுந்து வரட்டும் என்று கருதினேன்.”

“அவர் எவரென்று அறிந்திராவிட்டாலும்கூட என் மாணவர் ஒருவர் அவர் வஞ்சம் கொண்டிருக்கிறார். தனிமையில் வஞ்சம் பெருகவே செய்யும் என்றார். ஆம், ஆனால் வஞ்சத்தைவிட பெரியது தனிமை. சிறு தனிமை வஞ்சத்தை பெருக்குகிறது. பெருந்தனிமை அழிக்கும். தனிமை பேருருக் கொள்ளுமெனில், நெடுநாள் நீளுமெனில் அது அனைத்தையும் சிறிதாக்கி தான் மட்டுமே எஞ்சும், தனிமைக்கு மறுபெயரே மெய்மை என்று நான் சொன்னேன்.”

“முற்றிலும் தனிமையில் அவர் அங்கிருந்தார். அவருடன் ஒருபோதும் எவரும் விழியாலோ ஓசையாலோ உடனிருக்கலாகாதென்று ஆணையிட்டிருந்தேன். அத்தனிமை நீடிக்குமெனில் அவர் விடுபட்டிருக்கக்கூடும். அவர் பற்றியிருக்கும் சிலவற்றிலிருந்து விடுபட்டால் இங்கிருந்து அவருக்கு ஒரு நற்செலவும் அமையக்கூடும். ஆனால் அது நிகழவில்லை” என்றார் விஸ்வாமித்ரர். “அவருடைய ஊழ் அதுவல்ல. அவர் செல்லவிருக்கும் திசை முன்னரே வகுக்கப்பட்டுவிட்டிருக்கிறது.”

“ஒருமுறை தொலைவில் அவர் மிகத் தனிமையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அவருடைய முகத்தின் தசையசைவு அவருக்குள் எதையோ பேசிக்கொண்டிருக்கிறார் என்று காட்டியது. அவர் இங்கு வந்து ஓரிரு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. அத்தனை மாதங்கள் தனித்திருந்த ஒருவர் தனக்குள் பேசிக்கொள்வது அரிது. தனிமை கொள்பவரின் அகம் கூச்சலாகிறது. குரல் பெருக்குகிறது. தனக்குள் தான் பிரிந்து பேசிப் பேசி சொல்லிழந்து சொல்லிழந்து பேச்சவிந்து முகம் சிலை என்றாவதே வழக்கம். தனிமையின் விளைவு உறைவுதான். ஏனென்றால் தனிமை என்பது ஓர் அகஅமைவு. அவர் கொந்தளித்துக்கொண்டிருந்தார். விரைந்துகொண்டிருந்தார்.”

“அத்தனை காலம் அவர் எவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்? அதை எண்ணி எண்ணி வியந்தேன். அத்தனை தூரம் தன்னைப் பிளந்து தன் எதிரியை உருவாக்கிக் கொள்வதற்கு அத்தனை பெரிதென்று தன்னை கற்பனை செய்துகொண்டிருந்தாரா? நான் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் வெவ்வேறு இடங்களில் அவர் முகத்தை கூர்ந்து பார்த்தேன். ஏன் அவர் அத்தனை உரையாடுகிறார்? எவருடன்? தன்னுள் இருந்து மொண்டு அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் பிறிதொருவர் எவர்? உச்சிப்பொழுதில் அவர் நிழல் விழுந்திருப்பதை கண்டேன். நீர் அள்ள சுனையை நோக்கி குனியும்போது தன் ஆடிப்பாவையை நோக்கி நெடுநேரம் நின்றிருப்பதை கண்டேன். என்னில் ஆவல் பெருகியது. அவ்வண்ணம் பெருந்தனிமையிலும் விடாது உடனிருக்கும் ஒருவரை அவர் எவ்வண்ணம் தனக்கென உருவாக்கிக்கொண்டார்?”

“ஒருநாள் அதை அறியும்பொருட்டு தனிமையில் அவரை பார்க்கச் சென்றேன். அவர் குடிலுக்குள் துயின்றுகொண்டிருந்தார். அவர் அருகே எவரோ இருப்பதை கண்டேன். அணுகிச் சென்றேன். அவருடைய எதிரி அது என்று எனக்கு தோன்றியது. ஏனெனில் என் மாணவர்கள் திரும்பத் திரும்ப அதை சொல்லியிருந்தார்கள். தன் வாழ்நாள் எல்லாம் எதிரியை சொல்லிலும் கற்பனையிலும் நிரப்பிக்கொண்டவர் அவர் என்று. ஆனால் அருகணைந்து குடில்முற்றத்தை அடைந்தபோது அங்கிருந்தவர் எவரென்று கண்டேன். அங்கிருந்தவர் பீலி சூடியிருந்தார். உதடுகளில் குழல் சேர்த்து மீட்டிக்கொண்டிருந்தார்.”

“அது என் உளமயக்கென்று சற்று நேரத்திலேயே தெரிந்தது. ஆனால் உளமயக்கின் வடிவிலேயே எனக்கு மெய்மைகள் அமைகின்றன. அங்கு நான் கேட்ட அவ்விசையை என் ஊழ்கங்களின் உயர்நிலையிலேயே அறிந்திருக்கிறேன். மலைகளை முகில்களென எழுந்து பறக்கச்செய்வது அது. அத்தகைய பேரிசை. அதன் மடியிலென கிருதவர்மன் படுத்திருந்தார். அவர் முகத்திலிருந்தது குழந்தை அன்னையின் மடியில் படுத்திருக்கையில் எழும் கனவு. பெருங்கனவின் இனிமை நிறைந்த புன்னகை.”

“அன்று உளம் பதைத்து நான் திரும்பி வந்தேன். இங்கு அமர்ந்து ஒவ்வொன்றாக அணைத்து ஊழ்கத்தினூடாக நாம் சென்றடைந்த ஒரு துளியை தூய வஞ்சத்தினூடாக அடைந்து அவர் அமர்ந்திருக்கிறாரா? அதுவும் வழிதானா? இப்புடவிப் பெருவெளியில் எங்கும் எதுவும் செல்லும் வழிகள்தானா? அவரை அவ்வஞ்சத்திலிருந்து மீட்கவேண்டுமென்று நான் எண்ணியது எனது வீழ்ச்சியா? ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான விதைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை அவர்களின் அகத்தெழும் விண்நீரால் முளைக்கின்றன.”

“யாதவரே, அவர் யோகி, முனிவர். வஞ்சம் அவர் தவம். தவம் தெய்வங்களுக்கு இனியது” என்றார் விஸ்வாமித்ரர். “அழைத்துச்செல்க! உங்களுடன் வருபவர் ஒரு வெறும் போராளி அல்ல, தவமுனிவர் என்றுணர்க! ஆம், அவ்வாறே ஆகுக!” நான் அவரை வணங்கினேன். அன்று மாலை நாங்கள் பருஷ்னி வழியாக துவாரகைக்கு கிளம்பினோம்.

தொடர்புடைய பதிவுகள்

தங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்

$
0
0

தங்கத்தின் மணம் [சிறுகதை]

அன்புள்ள ஜெமோ

 

தங்கத்தின் மணம் என் வாழ்க்கையில் ஒரு அம்சமாக இருந்த ஒன்றைப்பற்றியது. என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நுழைவுபோல ஒரு நாகம் நுழைந்தது. அந்த நாகத்தின் வட்டத்திற்குள் இருந்தபோது வாழ்க்கையே பொன்னிறமகாத்தான் இருந்தது. என்னைச் சூழ்ந்திருந்தவர்கள் அடைந்த நாற்றம் எனக்கு தெரியவில்லை. ஒழுக்கம் எனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. அந்த காலம் ஒரு கனவு மாதிரி

 

அதன்பின் அந்த நாகத்திலிருந்து வெளியே வந்தேன். இன்றைக்கும் என் மனசின் அழுக்குக்குழிக்குள் அதை போட்டு வைத்திருக்கிறேன். ஆனால் இழந்த நாட்கள் இழந்ததுதான். இன்றைக்கு பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் படித்திருக்கலாம் என்ற ஆதங்கம் உண்டு

 

இப்போது யோசிக்கும்போது தோன்றுகிறது, அது நாகநஞ்சகாவே இருந்தாலும்கூட இனிமையான ஒரு கனவு என்று. பொன்தான் அது என்று. அதிலிருந்து மீண்டாலும் வாழ்க்கையில் ஒரு நல்ல கனவுதேவைதான் இல்லையா

 

எஸ்

 

 

வணக்கம் ஜெ.

 

 

தங்கத்தின் மணம் சிறுகதையை வாசித்தேன். சிறந்த மாய யதார்த்தவாத கதை.சிறுவர்களின் உலகில் இருக்கும் தெரிந்து கொள்க வேண்டிய விழைவும் இயல்பான அச்சமும் நன்கு புலப்பட்டிருக்கிறது.  நாகத்தில் நஞ்சு முத்தாகத் திரள்கிறது. மனிதனில் இருக்கும் கீழ்மைகளும் சிறுமைகளும் மெல்ல கனிந்து அருமணிகளாக மாறக்கூடும்.

 

 

அரவின் குமார்

 

 

குருவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ.

 

குருவி படித்து முடித்த கையோடு இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஃபைபர் கேபிள் நெட்வொர்க் தொடர்பான பிராஜக்ட் நிர்வகித்துள்ளதால் கதை எனக்கு மிக அணுக்கமானதாய் இருந்தது.

 

பல அலுவலகங்களில் மாடன் பிள்ளை போன்று பிரச்சனைகள் இருப்பினும் குறிப்பிட்ட சிறப்புத் திறன்களுக்காகவே ஒரு சிலரை வைத்துக் கொண்டிருப்பதுண்டு. பிறவித்திறன், பயிற்சியால் மேலும் மெருகேரிய கைத்திறன் இருந்தும் போதுமான அங்கீகாரம் கிடைக்காதவர்களின் குரலாக மாடன் பிள்ளையின் குரல் ஒலிக்கிறது. இறுதியில் அவனது இறுமாப்பு நொறுங்கி அவன் நெகிழும் இடம் உன்னதம்.

 

இயற்கை,பறவைகள், விலங்குகள் மனிதனை தொடர்ச்சியாகப் பண் படுத்தியபடியே உள்ளன. இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகவும் அமைந்த கதை.

 

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

 

குருவி கதையில் அந்த குருவிக்கூடு பற்றி முன்னர் ஒருமுறை பேசும்போது சொன்னீர்கள். மலைப்பாம்பு இன்ஸிடெண்டும் சொல்லியிருக்கிறீர்கள். மலைப்பாம்பு வந்ததுமே குருவிக்கூடும் வ்ந்துவிடும் என்று நினைத்தேன்.

அந்தக்குருவிக்கூடு ஓர் அடையாளம். உண்மையிலேயே தூக்கணாம்குருவிக்கூடு போல ஒரு இயற்கை அற்புதம் வேறு கிடையாது. அது ஒரு சின்ன கயிற்றில் தொங்கிக்கிடக்கும். வலுவான காற்றில்கூட போகாது. ஓக்கிபுயலிலேயே தூக்கணாம்குருவிக்கூடு அப்படியே இருப்பதைப் பார்த்திருக்கிறேன்

எல்லா கலையும் இயற்கையை மைம் செய்வதுதான். இயற்கையின் ஒரு அம்சமாக மனிதன் மாறிவிடுவதுதான்

ஸ்ரீனிவாஸ்

தொடர்புடைய பதிவுகள்

நகைமுகன், பூனை -கடிதங்கள்

$
0
0

 

நகைமுகன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

ஒரு தமிழ்ப்புத்தாண்டில் படிக்கவேண்டிய முதல்கதையே நகைமுகன் தான். எனக்கு லாஃபிங் புத்தா தான் நினைவுக்கு வந்தார். முருகன் ஒரு சிரிப்புப்புத்தர். எந்தக்கவலையும் இல்லாமல் கையை விரித்து நிற்பவர். அவர்தான் புத்தாண்டின் மிகச்சரியான அடையாளம்.

 

அந்தக்கதை முழுக்க ஓடும் பகடி, உரையாடல்கள் வழியாக மிக எளிமையாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எவ்வளவு வேடிக்கை. கெட்டவார்த்தையை வேண்டுமென்றால் பேங்கில் டெபாசிட் போடுகிறேன் என்பதில் ஆரம்பித்து ‘அவன் டீயிலே எச்சில் துப்பி கொண்டுவருவான்’ என்று அந்த சோகத்திலும் ஆறுமுகம் சொல்வது வரை

 

கடைசியில்  ‘மிரிகன்’ மொத்த நவநாகரீகத்திற்கே ஆப்பு வைத்துவிட்டு அப்பாவியாக சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான். அந்த இடத்தில் அவன் அவ்வளவு பொறுமையாக, சீரியஸாக அந்த 320 நம்பருக்கும் ஆப்பு வைக்கும் காட்சியை நினைத்து சிரித்து கொப்பளித்துவிட்டேன்

 

சிவராமன்

 

அன்புள்ள சிவராமன்

 

சிரிக்கும்பூதங்கள் இந்து சிற்பமரபின் முக்கியமான அடையாளங்கள். எல்லா கோயில்களிலும் காணலாம். நகைமுகன் என்றால் அந்த பூதத்தையே குறிக்கிறது.

அவை மானுடனை நோக்கி சிரிப்பவை. எனேன்றால் மானுடன் அத்தனை எளியவன் சிறியவன். ஆனால் அவை நன்மை தருபவை, அருள்பவை. நம் மரபில் கொடூரமான பூதம் கிடையாது.  சதுக்கப்பூதம் சங்ககாலம் முதல் வழிபடப்படுகிறது

குமரிநிலம் பூதங்களுக்குரியது. பூதத்தான் என்று இங்கே நிறைய பெயர்களே உண்டு. பூதலிங்க சாமி அமர்ந்திருக்கும் நிலம். இங்கே பல்லாயிரக்கணக்கான பூதத்தான் கோயில்கள் உள்ளன. உருவம் இல்லாத திண்டுகளாக இருக்கும். சைவப் படையல். சில இடங்களில் சிலைகள் இருக்கும்

சிரிக்கும்பூதங்கள் கிரேக்க – ரோமானிய மரபில் உண்டு. சீன மரபில் உண்டு. அவை மங்கலத்தின் அடையாளங்கள். வளம் தருபவை. நோயை அகற்றுபவை

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

‘முருகன் வைத்த ஆப்பு’ என்ற ஒரு சொலவடையையே உருவாக்கிக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த ஒருநாளிலேயே என் மூளைக்குள் ஒரு ஐம்பது அறுபது சர்க்யூட்களில் அப்படி எவராவது ஆப்பு வைத்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கிவிட்டேன். சமூகவலைத்தளங்கள் செய்திச்சானல்களில் உழன்று மண்டை வீங்கிப்போய் அமர்ந்திருக்கிறேன். புத்தாண்டிலாவது கொஞ்சம் ஆப்புகள் வைக்கவேண்டும். ‘மிரிகன்’ அருள் தேவை

 

அந்த டெலெபோன் எக்ஸேஞ்சை மனம் என்று உருவகிக்கிறீர்கள். அது தனித்தனியாகவும் சேர்ந்தும் பேசிக்கொண்டே இருக்கிறது. வெளியே உலகம் கூச்சலிட்டு கொப்பளிக்கிறது. இந்த மனம் அதனுடன் இணைணந்து அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. அதர்குத்தானே முருகன் ஆப்பு வைக்கிறான். அது ஒரு யோக நிலை. மனம் அடங்கும் நிலை.

 

எல்லா சர்க்யூட்டுகளுக்கும் ஆப்புவைத்து மூளையை அமைதியடையச் செய்கிறான் முருகன். குளிரக்குளிர மழைபெய்து எல்லா முகமும் முருகன் முகம்போலவே ஆகிவிடுகிறது

 

ராஜசேகர்

பூனை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

பூனை கதையை நான் மீண்டும் சென்று வாசித்தேன். இங்கே முருகன் ஆப்பு வைத்த கதையை வாசித்த பிறகு அங்கே சென்றேன். அங்கேயும் நத்தானியேல் முருகன் போல இருக்கிறான். ஆனால் அவன் புலியை பார்த்துவிடுகிறான். அந்த பயத்துக்குத்தான் முருகன் பதில் சொல்கிறான். ஆப்பை வைடா, அது பூனையாக ஆகிவிடும்

 

ஜெ சில கதைகளில் இருந்து அற்புதமான ஒன்லைன் கிடைக்கிறது. ‘நாம என்னத்துக்கு இன்னொருத்தருக்க பூனையை புலியாக்கணும்?” என்ற வரி ஒரு அபாரமான பழமொழி போல இருக்கிறது

 

செந்தில்வேல்

 

அன்பின் ஜெ வணக்கம்.

பூனை கதையை வாசித்தேன். நத்தானியல் தான் அடையும் உளச்சீண்டலைக் கடக்கவே பூனையைப் புள்ளிப்புலி ஆக்கியிருக்கிறான். சிறியதைப் பெரிதாகவும் பெரியதைச் சிறிதாகவும் பொம்மையை உண்மையாகவும் எண்ணும் குழந்தைகளுக்கே உரிய மனநிலையின் வெளிபாடுதான் இந்தக் கதை.

 

அரவின் குமார்

 

 

தொடர்புடைய பதிவுகள்

பொற்கொன்றை –கடிதங்கள்

$
0
0

பொற்கொன்றை!

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையின் புனைவுக் களியாட்டு

அன்புள்ள ஜெ.

 

கோவிட் நோய்த்தொற்று. ஊரடங்கு குறித்து எதுவும் எழுத வேண்டாம் என்ற உங்கள் நிலைப்பாடு இந்த இக்கட்டான சூழலில் மிகவும் ஆரோக்கியமானது என தோன்றுகிறது . இந்த நாட்களில் வீட்டிலிருந்தே வேலை செய்தாலும் . பெரும்பாலான நேரத்தை செய்திகளை பார்ப்பதில்தான் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்.

 

இன்று எத்தனை பேருக்கு புதிதாக நோய்த்தொற்று வந்திருக்கிறது , இறப்பு எத்தனை, எந்த மாநிலங்களில் நோய்த்தொற்று மற்றும் இறப்பு அதிகம் , எந்த நாடுகளில் நிலைமை மிகவும் மோசம் இது போன்ற 24×7 செய்திகள் . அது ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டாக்கி வாட்சப் . முகநூல் பார்க்கலாம் என்று போனால் அங்கும் அதுவே . எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல எங்கு சென்றாலும் இந்த செய்திகள், வாதங்கள்  , தேவையில்லாத கருத்து மோதல்கள் என இந்த தனித்திருக்கும் நாட்களை மேலும் சுமையாக்கியது. இரண்டு வாரங்களுக்கு முன் இதுதான் என் நிலைமை.

 

பிறகு உங்கள் தளத்தில் ” தனிமைநாட்கள் . தன்னெறிகள்” என்னும் பதிவை வாசித்துவிட்டு நானும் அதை பின்பற்றுவது என உறுதிமொழி எடுத்து அதை செயல்படுத்த தொடங்கினேன் . ஒரு நாளைக்கு 10 நிமிடங்களுக்கு மேல் செய்திகளை பார்ப்பதில்லை. என்னுடைய முகநூல் கணக்கை தற்காலிகமாக செயலிழக்க வைத்தேன் .

 

இப்படி செய்த முதல் நாளே மனம் தெளிவுற்றது . தேவையற்ற பயம்,வெறுப்பு , மன உளைச்சல்கள் 90% குறைந்துவிட்டது . பிறகு என்னிடம் இருக்கும் புத்தகங்களை மீள்வாசிப்பு செய்வது , நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவது என நாட்கள் கொஞ்சம் இனிமையாக தொடங்கி.இப்போது தனித்திருக்கிறோம் என்ற எண்ணம் நீங்கி அந்திசாயும் வேளையில் மொட்டைமாடி தென்றல் காற்றுடன் தனிமையை கழிப்பது  மெதுவாக பிடிக்கத்தொடங்கிவிட்டது

 

நீங்கள் பொற்கொன்றை பதிவில் சொன்ன உறுதிமொழியை 15 நாட்களுக்கு முன்னரே நான் எடுத்தது நல்ல பலன் கிடைத்திருக்கிறது . நான் என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெங்களூரில் என்னுடைய நண்பருடன்தான் தங்கியிருக்கிறேன் ,அவர் கேரளத்தை சேர்ந்தவர் . இன்று அதிகாலை 5 மணிக்கே என்னை எழுப்பினார் . “கண்களை நான் சொல்லும் வரைக்கும் திறக்காதே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என்று சொன்னார் . தூக்க கலக்கத்திலும் ஒரு ஆவல் உண்டானது . இரண்டு நிமிடம் கழித்து கண்களை திறக்க சொன்னார் .

 

கண்களை திறந்து பார்த்தபோது கண்ணெதிரே மொபைல் திரை . நண்பருடைய அம்மா வீடியோகால்  மூலம் பூஜையறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய கிருஷ்ணர் சிலை முன்பு ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் ,இனிப்பு, புத்தாடை , கண்ணாடி, தானியங்கள் , காசு ,எல்லாம் வைக்கப்பட்டிருந்தை காட்டினார் . விஷு நன்னாளில் இப்படி கண் விழித்தால் அந்த வருடம் முழுவதும் பொன் . பொருள் . ஆரோக்கியம் அனைத்தும் கிடைக்க கடவுள் அருள் புரிவார் என்று சொன்னார் நண்பரின் அம்மா .

 

என்னுடைய நண்பரிடம்  என்னையும் எழுப்ப சொல்லி  அதிகாலையிலேயே என்னை நெகிழவைத்து விட்டார் . இந்த  கஷ்டமான சூழ்நிலையில் இதுபோன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் மனதை நிறைத்துவிடுகிறது .

 

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் விஷு நல்வாழ்த்துக்கள்.

 

 

பாலசுப்ரமணியம் மூர்த்தி

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

 

வணக்கம். முன்பு “துளி” சிறுகதை பற்றி எழுதியிருந்தேன். அதன் பின் வந்த பல கதைகள் மேலும் உச்சத்தை தொட்டன. மனதை மென்மையாக்கின. மனித மனத்தின் ஆழ்ந்த உள் அறத்தை பிரதிபலித்தன. உண்மையிலேயே நாளின் சில கணங்களை பரவசமாக்கின.

 

தங்களது இந்த படைப்புகளுக்கு வாசகர்கள் சார்பில் நன்றி.

 

எழுந்து தொடர. நலமுடன் வாழ வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

 

அன்புடன்

பா.ரவிச்சந்திரன்

 

பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு.

 

வணக்கம்.

 

சில வாரங்களுக்கு முன்பான ஒரு திங்கள்கிழமையின் மதிய வே ளை.  அது வாகனங்கள் நிறுத்திவைக்கவென ஒதுக்கப்பட்ட பகுதி. அந்த வெட்டவெளியில். அதற்கு முந்தைய கணம் வரை இன்றியமையாதது என கருதப்பட்டதும். மிகவும் பாதுக்காக்கப்பட்டதுமான எங்கள் கணிப்பொறிகள் வெறும் தரையில் வைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியே மானிட்டர். கீபோர்ட். மவுஸ். கூடவே இணைக்கும் வெவ்வேறு ஒயர்கள் என நிறைந்து கிடந்தது. அங்கிருந்த எவரும். முன் எப்போதும் கண்டிராத மட்டுமல்ல கனவிலும் நினைத்திடாத அக்காட்சியால் கொஞ்சம் பரபரப்பும் சமவிகிதத்தில் மிரட்சியும் கலந்த பயத்தை செரிக்க முயன்றுகொடிருந்தார்கள்.

 

நான் மட்டும் கொஞ்சம் தள்ளி நின்று அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்தேன். ”ஆனையில்லா”. “வருக்கை”. “பூனை” மூன்று கதைகளையும் திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருந்ததால் வந்த வினை அது. உண்மையில் நல்வினை. ஆனையில்லா வெளிவரும் முன்னர் உள்ளத்தில் ஓரத்தில் வெறுமை படரத்துவங்கியது. உலக நாடுகளில் கொரானா பரவும் வேகம். உறுதியாக நம்மையும் வீட்டுக்குள் சிறைவைக்கும் என்பது புத்திக்கு புரிந்த நாட்கள் அவை.

 

நல்லவேளையாய் இந்தச் சிறுகதைகள் அமைந்தன. அவ்வாரத்துவக்கத்தில். எங்கள் மென்பொருள் நிறுவனத்தில். நான் பயன்படுத்திய நாற்காலி மற்றும் மேசையைத் தவிர வீட்டிலிருந்தே வேலை செய்யத் தேவைப்படும் கணிணி சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் என்னுடன் அனுப்பி வைத்துவிட்டார்கள். எப்படியும் அனைவரையும் வீட்டிலிருந்தே வேலை செய்யச்சொல்வார்கள் என்ற கணிப்பு இருந்ததாலோ என்னவோ அவ்வாரம் முழுவதும் மனது மிகவும் பாரமாய் உணர்ந்தது.

 

ஒரு நாளில் எப்படியும் மூன்று முறையாவது நண்பர்களுடன் உணவுக்கும் தேநீருக்கும் என அமையும் இடைவேளைகள். எவ்வளவு அழுத்தமேற்பட்டாலும் களிப்பின்றி முடியாத உடையாடல்கள். பயணத்தோழமைகள். இவை அனைத்தையும் மறக்கடிக்கும் வல்லமை கொண்ட வைரஸ் என இவையெல்லாம் மனதில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும்.

 

இதைச் சமன்செய்யும் வண்ணம் மனதின் இன்னொரு பகுதியை உங்களது எழுத்து உற்சாகமாக வைத்திருக்கிறது. நம் கண்முன்னே மிகப்பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் யானைக்குள்ளிருந்து ஒரு கொச்சன் எழுந்துவரும் தருணத்தையும். உண்மையில் சிறுத்தையாகவே இருந்தபோதும் அதை பூனை என்றெண்ணுவதால் வெகு இலகுவாக சமாளிக்கும் மனித மனத்தை இப்போதைய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கமுடிகிறது.

 

பல தரப்பட்ட கதைக்கருக்கள்.  நாலாவித கதாப்பாத்திரங்கள். புதிய சூழல்கள் என மிக அற்புத அனுபவத்தை தரும் கதைகள் ஒவ்வொன்றுமே. குறிப்பாக. இந்நாட்களில் உங்கள் கதைகளில் வெளிப்படும் பகடி. ஒரு முழுநாளின் சோர்வையும் கரைத்துவிடும் வல்லமை கொண்டது. வெற்றுக் கூச்சல்களிலிருந்தும் அல்லது உண்மையா பொய்யா எனத்தெரியாத செய்திகளிலிருந்தும் என்னை நானே தற்காத்துக்கொள்ள இக்கதைகளும் உங்கள் கட்டுரைகளும் பேருதவி புரிகின்றன.

 

அதிலும் இன்றைக்கு எழுதிய பொற்கொன்றை கட்டுரை மனதுக்கு நல்லூக்கம் அளித்தது. தர்க்கமற்ற. வெறுமனே வெறுப்பும் காழ்ப்பும் நிறைந்த காலத்தை நாங்கள் கடப்பதற்குரிய நற்சொற்கள் எங்களுக்கு விதிக்கப்பட்டிருப்பது வரம். அவ்வகையில் எங்களுக்கான பொற்கொன்றை. அன்றாடம் நம் தளத்திலே எழுகின்றது.

 

மனம் நிறைந்த நன்றிகளுடன்.

காளீஸ்வரன்.

 

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

 

தொடர்புடைய பதிவுகள்


வான்கீழ் [சிறுகதை]

$
0
0

 “ஏல நொண்டி, அப்ப நீயும் கைக்கு சீட்டு எறக்கியாச்சு என்னலே?”  என்று அருணாச்சலம் நாடார் கேட்டார்.

குமரேசன் தஙகிய் புன்னகைத்து “இல்லண்ணா, சும்மா” என்றான்

“என்ன சும்மா? நீ அந்த குட்டிக்க கிட்ட பேசிட்டிருக்கிறத பாத்தாலே தெரியுமே… ஏலே கெந்தர்வனை கண்ணைப்பாத்துக் கண்டுபிடிக்கலாம்னாக்கும் சொல்லு, தெரியுமா?”

“இல்லண்ணே அப்டி ஒண்ணும் இல்லை…”

“லே, நீ ஒரு கண்ணாடியை எடுத்து உனக்க முகத்தை பாரு… உனக்கே தெரியும்”

குமரேசன் சிரித்தபடி விலகிச் சென்றான்.  அப்பால் ராஜம்மை தங்கனிடம் பேசிச் சிரித்துக்கொண்டு விலகிச் சென்றாள். அவளுடைய நீண்ட பின்னல் பின்பக்கம் ஆடி நெளிந்தது. கையில் டீ கொண்டுவந்த பெரிய போணியும் பலகாரப்பையும் இருந்தன. அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய கன்னங்கரிய மென்மையான கால்கள் பாவாடையின் அலைகளுக்குக் கீழே தெரிந்தன.

“லே டிஸ்கோ, போரும்லே வெள்ளம் இறக்கினது… போய் சோலியப்பாருலே”

அவன் இடக்கால் ஒல்லியானது ஆகவே அதில் காலை ஊன்றி ஊன்றி நடக்கும்போது அவன் ஒரு நடனத்தை ஆடுவதுபோலிருக்கும். ஆகவே அவனுக்கு டிஸ்கோ என்று தோழர்கள் பெயரிட்டிருந்தார்கள். அவனுடைய சொந்தப்பெயரைச் சொல்லி கூப்பிடுபவர் அருணாச்சலம் நாடார் மட்டும்தான்

மூன்று வாரங்களாக நடந்துகொண்டிருந்த டவர் எரக்‌ஷன் வேலைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டிருந்தன. மேலே இருக்கும் கிரேனிலிருந்து கீழிறங்கி வந்த இரும்புக்கயிற்றில் ராடுகளும் பிளேட்டுகளும் மாட்டப்பட்டன. அவை சீராக மேலேறிச்சென்றன. இரும்புக்கயிறு மேலேறுவதை பார்த்தால் தெரியாது. ஆகவே அந்த பொருட்கள் வண்டுகள் போல டவரின்மேல் ஊர்ந்து ஏறுவதாகத் தோன்றும். அவன் அண்ணாந்து பார்த்தான். மிகமிக உயரத்தில் ஒரு பறக்கும் கூண்டு போல டவரின் உச்சி நின்றிருந்தது. அங்கே மஞ்சள்நிறமான சிறுபூச்சிகள் போல கண்ணன், சிவபாலன், ஆப்ரகாம், பஷீர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அங்கே வெல்டிங் நடந்துகொண்டிருந்தது. அதன் பொறிகள் பறப்பது ஒளியற்று சிறிதாகத் தெரிந்தது

“லே டிஸ்கோ, எங்கலே போனே…நம்பர் போட்டியாலே?” என்றார்  ஏசையா

”இந்நா போடுதேன்… பாதிபோட்டாச்சு”

“இஞ்சபாரு, வேலைமுடியல்லைன்னா எடுத்துப் போட்டு சப்பீருவேன்.. என்னைய உனக்குத்தெரியும்”

குமரேசனுக்கு ஏசையாவை நன்றாகவே தெரியும். ஏசையா அன்பானவர். பிறர் பசித்திருக்க விடாதவர். சந்தைமுக்கு கடையில் வேலைக்கு இருந்த அவனை முதலாளி போகச்சொல்லிவிட்டதும் அவர் ஒருவர்தான்  “ஏன்லே அளுவுதே?” என்று கேட்டார்.

அவன் கண்ணைத்துடைத்துக்கொண்டு இல்லை என்று தலையசைத்தான்.

“சொல்லுலே” என அதட்டினார்

அவன் ”வேலைக்கு வராதேன்னு சொல்லிப்போட்டாரு”

“ஏன்”

“நிக்கமுடியல்ல”

“உனக்கு காலு வெளங்காதுல்லா ,அது தெரியாதா அவனுக்கு?”

“அவரு சொன்ன சாமானை ஓடிப்போயி எடுக்கல்லே… அதனாலே என்னைய அடிச்சு…” என்று அவன் மீண்டும் விம்மினான்.

அவர் அவன் தலையை தொட்டு “போட்டுலே மக்கா… நீ எனக்க கூட வா… ” என்றார்.

அவர் டெலிஃபோன் டவர் எரக்‌ஷன் காண்ட்ரக்டர் பாலசுந்தரத்திடம் வேலைபார்த்தார். முதன்மையாக வெல்டர். எல்லா வேலைகளையும் செய்வார். அவன் அவருடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் ஊரைவிட்டு கிளம்பியபோது அவனும் கிளம்பினான். பிறகு அவன் ஊருக்குச் செல்லவே இல்லை. அங்கே அவனுக்கு யாருமே இல்லை

டவர்களுக்கான கான்கிரீட் அடித்தளத்தை வேறு கட்டுமான நிறுவனம் கட்டி அவர்களிடம் கையளிக்கும். அவர்கள் சென்று அங்கேயே முகாமடித்து ஒருமாதத்தில் கட்டி மேலெழுப்பி அதை டிபார்ட்மெண்டுக்கு கையளித்துவிட்டுச் செல்வார்கள். ஒரே மாதத்தில் ஆயிரம் அடி உயரம் வரை இரும்புக்கோபுரம் எழுந்துவிடும். அது முழுக்கமுழுக்க முன்னரே டிசைன் செய்யப்பட்டு தனித்தனி உறுப்புகளாக வார்க்கப்பட்டு நீளமான லாரிகளில் அங்கே வந்து சேரும். அதை இறக்கி அடுக்கி அப்பகுதியெங்கும் நிறைத்து வைத்திருப்பார்கள்.

ஒரு டவருக்கு உரிய இரும்புப்பொருட்கள் ஒரு ஏக்கர் நிலம் அளவுக்கு ஆளுயரக் குவியல்களாக பரவியிருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண் உண்டு. அவற்றுக்கு மூன்றாம் குழு எண்ணும் இரண்டாம் குழு எண்ணும் முதலாம் குழு எண்ணும் உண்டு.  அவற்றின் அடிப்படையிலேயே அவை அடுக்கப்பட்டிருக்கும் அவற்றை தூக்கி அவற்றின் எண்ணை நோக்கி அதற்குரிய இடத்தில் பொருத்தி ஸ்க்ரூவால் இறுக்குவதும் வெல்டிங் செய்து பொருத்துவதும்தான் வேலை. தானாகவே கோபுரம் எழுந்துவிடும். ஸ்க்ரூவை இறுக்குவதற்கு இயந்திரங்கள் இருந்தன.

கீழிழுருந்து மேல்மேலாக அடுக்கிக்கொண்டே செல்வார்கள். மஞ்சள்குருவிகள் போல ஊழியர்கள் அதன் இரும்பு பட்டைகள் மேல் தொற்றி அமர்ந்திருப்பார்கள். அவர்களின் இடுப்பிலிருந்து நைலான் பட்டைகள் கோபுரத்தின் கம்பிகளில் கட்டப்பட்டிருக்கும். எல்லா கருவிகளும் அவ்வாறு கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். ஆனாலும் விபத்துக்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

அவன் வந்து இரண்டு ஆண்டுதான் ஆகிறது. அதற்குள் ஏழுமுறை வெவ்வேறு பொருட்கள் விழுந்து கீழே நின்றிருப்பவர்களுக்கு அடிபட்டிருக்கிறது. தலையில் ஹெல்மெட் எப்போதும் தேவை என்பது சட்டம். ஆகவே பெரும்பாலும் தோளிலோ கையிலோதான் அடிபடும். எலும்பு முறிந்துவிடும். மீண்டுவர பலமாதங்களும். ஒரே ஒருமுறை டீகொண்டுவந்த சுப்பராமன் என்ற பையனின் தலைமேல் விழுந்து அவன் அங்கேயே இறந்திருக்கிறான்.

டவர்கள் ஒருதுளி குருதியை வாங்காமல் முழுமை பெறுவதில்லை என்று அருணாச்சலம் நாடார் சொல்வதுண்டு. எவருக்காவது ஒரு சிறு காயமாவது வரும். ஒரு சொட்டு ரத்தம் அந்த உலோகக் கோபுரத்தில் படும். அது நிகழ்ந்ததும் “ரெத்தம் பாத்துப்போட்டே” என்று அருணாச்சலம் நாடார் சொல்வார். சிறிய காயம் என்றால்  “நல்லவேளைடே, இம்பிடு போதும்னு நினைச்சுப்போட்டு” என்பார்.

அது ஒரு தெய்வம், மாடன் கூமன் காளன் போல. கரும்பனை போல உடல் பெருக்கி தலைக்குமேல் எழுந்து நிற்கும் விஸ்வரூப தெய்வங்களைப்பற்றி அவன் கேட்டிருக்கிறான். டவர் அவற்றையெல்லாம் காலடியில் சிறிய செடிகளை போல ஆக்கி அனைத்துக்கும் மேல் எழுந்து நிற்கும் பெரிய தெய்வம்.  “இரும்புமாடன்” என்று அருணாச்சலம் நாடார் சொல்வார்

குமரேசன் எண்களை பெயிண்டால் பெரிதாக எழுதினான். அவை அந்த உலோகப்பட்டையில் சிறிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். கண்ணுக்கு நன்றாகத் தெரியும்படி மஞ்சள் பெயிண்டால் எழுதுவது அவன் வேலை. அவை ஒரே இடத்தில் தெளிவாக எழுதப்படவேண்டும். எழுதிய ராடுகளை தூக்கி  தண்டவாளம் போல போடப்பட்டிருந்த இரண்டு ஜி.ஐ பைப்புகள் மேல் வைத்து உருட்டிக் கொண்டுசென்று வெளியே  வைத்தான். அவற்றை அங்கிருந்து எடுத்து அடுக்கினர் கணபதியும் கிறிஸ்துதாஸும்.

அவை அங்கிருந்து இன்னொரு அடுக்குக்குச் செல்லும். அங்கிருந்து கிரேன்களில் பொருத்தப்படும். கிரேன்களின் கொக்கிகளில் அவற்றை பொருத்த எட்டுபேர் நின்றனர். அவர்களை மேற்பார்வையிட ஜோசப் சார் நின்றார். தன் கையிலிருந்த பேடில் அந்த எண்ணை அவர் குறித்துக்கொண்டார்.

அத்தனை வேலைகளும் திரும்பத்திரும்ப செய்யப்படுவன என்பதனால் பெரிய குழப்பங்கள் இல்லாமல், பேச்சுக்களோ கூச்சல்களோ இல்லாமல், இயல்பாக நடைபெறும். ஆனால் வேடிக்கைப்பேச்சு அனுமதிக்கப்படுவதில்லை. கவனச்சிதறல் ஏற்பட்டால் மேலே சென்ற பொருளை திரும்ப கீழே கொண்டுவர வேண்டியிருக்கும். அதன்பிறகுதான் அடுத்த பொருள் மேலேற வேண்டும். அந்த இடத்திற்கு எந்தபொருள் தேவையோ அது மட்டும்தான் செல்லமுடியும். அங்கே வேறொன்று அமையவே முடியாது. வரிசை மாறமுடியாது

அந்த எண்ணம் வந்த நாட்களில் குமரேசனை திகைக்க வைத்திருக்கிறது. அந்த இடத்தில் பற்பல அடுக்குகளாக பரவியிருக்கும் இரும்பு ராடுகளில் ஒவ்வொன்றுக்கும் ஓர் இடம் உள்ளது. பிற ஒன்று அமைய முடியாத இடம். அங்கே செல்வதற்காக அது காத்திருக்கிறது. அங்கே சென்றதும் அப்படியே அமைந்து விடுகிறது.

எழுதி முடித்து அவன் கைகளைக் கோத்து வளைத்து சொடக்குவிட்டான். அருணாச்சலம் நாடார் கைகாட்டினார். வேலைகள் நின்றன. அனைவரும் மதிய உணவு உண்ணும்பொருட்டு சென்று அமர்ந்தார்கள். மேலிருந்தவர்களுக்கு சாப்பாட்டை ஒரு கூடையில் வைத்து கட்டி கிரேனிலேயே அனுப்பினார்கள் மேலே செல்வதும் இறங்கி வருவதும் கடினமானவை. ஒருவரின் உடல் மட்டும் கொள்ளும் கூண்டு அமைக்கப்பட்ட இரும்பு ஏணிப்படி செங்குத்தாக மேலே உச்சிவரைக்கும் செல்லும். ஒவ்வொரு படியாக காலெடுத்துவைத்து மேலேறிச்செல்லவேண்டும். நான்கு இடங்களில் நின்று இளைப்பாற சிறிய தளங்கள் உண்டு. அனைவரும் பழகியவர்கள்தான் என்றாலும் கடுமையானது அது.  சில கிரேன்களில்தான் மனிதர்களுக்கு லிஃப்ட் அமைக்கப்படும். அது பெரும்பாலும் டவர் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சீனியர்கள் மேலே செல்லவேண்டிய நிலை வரும்போது மட்டும்தான்.

குமரேசன் தின்னர் விட்டு கைகளை கழுவினான். அதன்பின் துணிசோப்பு போட்டு மூன்றுமுறை கழுவினான். கொஞ்சம் வாடை மிஞ்சியிருக்கும். ஆனால் அவன் அதை விரும்ப பழகியிருந்தான். அருணாச்சலம் நாடாருடன் அங்கே அந்த வேலைக்கு வந்த சிலநாட்களில் அவனுக்கு உணவே இறங்கவில்லை. திரும்ப ஓடிவிடலாமா என்றுகூட தோன்றியது. அவர்தான் “லே, இது உனக்க சோறாக்கும்… ஒவ்வொருத்தன் சோறிலயும் ஒரு மணம் உண்டு. வேலைக்க மணமுள்ள சோறு கடவுளுக்க ஆசீர்வாதம் உள்ளதாக்கும் கேட்டுக்க” என்றார்.

அவன் வெல்டிங் கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டிருந்தான். சிறிய சிறிய பொருட்களை உருக்கி இணைப்பான். பெரும்பாலும் டவர் வேலை தொடங்குவதற்கு முன்னரே அதை அவனும் அருணாச்சலம் நாடாரும் சேர்ந்து அமர்ந்து செய்வார்கள். கண்ணப்பனும் லாரன்ஸும் அவனுடன் இருப்பார்கள்.

அவர்களுக்கு அவர்களின் முகாமிலேயே சமையல் . அங்கிருந்து டிபார்ட்மெண்ட் வேனில்  சோறும் கறியும் பெரிய கலங்களில் வந்தன. சமையற்காரர் குமாரன் அண்ணன் பரிமாறினார். பசிநேரம் தாளித்த குழம்பின் மணம் இனிமையாக இருந்தது. கொட்டகையில் அவனும் ஐசக்க் அண்ணனும் தனியாக தட்டுகளுடன் அமர்ந்தனர்.

ஐசக் ‘என்னவாக்கும் அருணாச்சலம் நாடார் கேட்டாரு?” என்றான்

“என்ன?’ என்றான் குமரேசன்

“லே, நான் கேட்டேன் பாத்துக்க”

“கேட்டேல்ல? பிறவு என்ன?”

“நீ எதுக்குலே அந்தக்குட்டிய வளைக்க பாக்குதே? ஏல உனக்கோ சட்டுகாலு. உன்னைய நாங்க டிஸ்கோன்னு விளிக்குதோம். அவ பாக்க நல்ல எருமைக்கண்ணு மாதிரி இருக்கா… இங்கிண இப்பம் எட்டுபேரு அவளை பாக்குதாக.. எஞ்சீனியருக்கு கூட ஒரு நோட்டம் உண்டு”

அவன் ஒன்றும் சொல்லவில்லை

“சத்தியமாட்டு. நேத்து அவ சாயை கொண்டுவந்தப்பம் இவரு தனியாட்டு நாலஞ்சு வார்த்தை பெசுறத பாத்தேன்… கண்ணு மின்னிட்டிருந்தது”

”கெட்டுவாரா?”

“சேச்சே, சாதிமாறி கெட்டமாட்டாரு. அவரு வெள்ளாளராக்கும்… ஆனா நல்ல அமௌண்டு குடுப்பாரு… வேணுமானா. அவளுகளுக்கு அதுவும் பார்வை இருக்கும்”

“நாறப்பேச்சு பேசாதே என்ன?” என்றான் குமரேசன்

”நான் பலதும் கண்டவனாக்கும்” என்றான் ஐசக். “அவளுகளுக்கு தோலு வெளுப்பும் மினுப்பும் பிடிக்கும். பின்ன இந்தமாதிரி மண்ணில பொரளுத குட்டிகளுக்கு நல்ல சட்டைபோட்டவனுகள்னா ஒரு இது… அதுவும் கண்ணாடிபோட்டிருந்தா பிறவு சொல்லவே வேண்டாம்”

குமரேசன் “போரும்… நான் அப்டி ஒண்ணும் நினைக்கல்ல… ஏன் கால நொண்டுதேன்னு கேட்டேன். முள்ளு குத்திச்சுன்னு சொன்னா , அம்பிடுதான்”

“நாம ரெண்டாளும் இப்பம் நல்ல ஜோடி, சேந்து நொண்டுவோமான்னு கேக்கவேண்டியதுதானே?”

குமரேசன் ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய ஊனம் பற்றிய பேச்சு அங்கே எப்போதும் உண்டு. அதற்கு பதிலே சொல்லக்கூடாது

“நாராயணனுக்கு அவளைக் கெட்டினா என்னான்னு ஒரு ஐடியா உண்டு. எனக்க கிட்ட கேட்டான். அவன் நல்ல உறப்புள்ள ஆணாக்கும். நல்ல வேலையும் இருக்கு. ஊரிலே அவனுக்கு வீடும் ஒண்ணரை ஏக்கர் மண்ணும் உண்டு… செரி கேட்டுப்பாருன்னு சொன்னேன். அவளுக்க கிட்ட அவன் பேசி வச்சிருக்கான்னு நினைக்கேன்”

“அவ என்ன சொன்னா?”

“பாத்தியா கேக்குதே பாத்தியா? அப்ப உனக்கு கண்ணு உண்டு” என்று ஐசக் அண்ணன் சிரித்தார்.

“இல்ல, சும்மா”

”அவளுக்கு பிடிச்சிருக்குன்னாக்கும் நாராயணன் சொல்லுகது… ஆனா இடையிலே ஏறி சந்திரனும் முட்டுதான். அவளுக்க கிட்ட அவனும் சிரிக்கான்… முத்துநாயகமும் அவளை சினிமாவுக்கு வாறியாடின்னு விளிச்சிருக்கான்… எல்லாவனும் அவளுக்கு தூண்டில் போட்டிருக்கானுக… எப்டீன்னாலும் ஒருத்தன்கிட்ட அவ விளுவா”

விசில் ஓசை கேட்டது. அவன் கைகளை கழுவிக்கொண்டு ராடுகளை எடுக்கச் சென்றான்

அருணாச்சலம் நாடார் அவனிடம் “எஸ் வரிசைய செக்பண்ணி இந்தாலே போடுலே” என்றார்

டவர் முழுமையாகவே கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இரும்பு மேலே சென்றுகொண்டே இருந்தது. அன்று வெயில் இறங்குவதற்குள் முடிந்துவிடும் என்று சொன்னார்கள். அவன் கையை கண்மேல் வைத்து மேலே பார்த்தான். அது வானில் குத்துவதுபோல எழுந்து நின்றது

ராஜம்மை சாயங்காலம் அனைவருக்கும் டீ கொண்டுவந்தாள். அருகில்தான் அவளுடைய அம்மா நடத்திவந்த டீக்கடை. அவள் அப்பா பனையிலிருந்து விழுந்து எழமுடியாமல் ஆன பின்னர் அம்மா அதைத் தொடங்கி நடத்திவந்தாள். டீ பலகாரத்திற்கு மட்டும் அங்கே சொல்லியிருந்தார்கள். அதை நான்கு கிலோமீட்டர் அப்பாலிருக்கும் கூடாரத்திலிருந்து கொண்டுவர முடியாது.

அவள் டீயும் பச்சரிசி சுறுக்காவும் உளுந்துவடையும் பரிமாறியபோது ஒவ்வொருவரும் கேலியாக ஒவ்வொன்று சொன்னார்கள். அவள் எல்லாவற்றுக்கும் சிரித்தபடி பதில் சொன்னாள். வேடிக்கைப்பேச்சில் அவளை எவரும் மடக்கிவிடமுடியாது. டீக்கடையில் வருபவர்களிடம் பேசிப்பேசி பழகிவிட்டிருந்தாள்

“லே நம்ம கோணை செல்லப்பன் ஒரு பிரச்சினை சொன்னான்… அவனுக்க எருமைக்க மடியும் காம்பும் உடம்பும் ஒரே மாதிரி கறுப்பா இருக்கதனாலே கண்டுபிடிக்க முடியல்லியாம்”

அனைவரும் சிரித்தனர். அவள் “வடை வைக்கவா?” என்றாள்

“நீ என்னடி சொல்லுதே?”

“அண்ணா, எருமைக்கு கொம்பும் நல்லா கறுப்பாத்தானே இருக்கும்?”

“செத்தாம்லே!”

அதற்கும் சிரிப்பு. அவள் அப்பால் சென்றுவிட்டாள்

“அவள பேசி மடக்க முடியாது மக்கா. நாளைக்கு நல்லா வேற யோசிச்சு கொண்டுவா என்ன?

குமரேசன் அவள் நாராயணனிடமோ சந்திரனிடமோ கண்களால் பேசுகிறாளா என்று பார்த்தான். அவள் அவர்களிடம் அனைவரிடம் பேசுவதுபோலத்தான் சிரித்து ஓரிரு சொற்கள் சொன்னாள். பந்தி விருந்தில் நெய்விடுவதுபோல அவளுடைய பேச்சு. மிகச்சரியாக இரண்டு துளி, ஒவ்வொருவருக்கும். ஆனால் சந்திரனும் நாராயணனும் பரவசநிலையில்தான் இருந்தனர். அவர்களின் முகங்கள் மலர்ந்திருக்க கண்கள் கஞ்சா அடித்ததுபோல விரிந்திருந்தன.

குமரேசன் சோர்வாக உணர்ந்தான். அவர்கள் இருவருமே எல்லா தகுதியும் கொண்டவர்கள். சந்திரன் கொஞ்சம் மாநிறமும் கூட. சுருட்டை முடிக்காரன். அவர்களுடன் அவனுக்கு ஒப்புமையே இல்லை. அவன் ஒல்லியானவன், இன்னும் வேலை நிலைக்கவில்ல, வேண்டியவர்கள் என்று யாரும் இல்லை, நொண்டியும்கூட.

“ஏம்லே சடைஞ்சு போயிட்டே?”என்றான் ஐசக் அண்ணன்

“இல்ல”

“நான் சொன்னதைக்கொண்டா? லே, பாக்க நல்லாருக்க குட்டின்னா எல்லாரும் முட்டத்தான் செய்வானுக. நாமளும் முட்டலாம். வந்தா லாபம். வரேல்லன்னா ஒரு நல்ல இனிப்பு நாக்கிலே நுணையுத சுகம் இருக்குல்லா?”

நான் அப்படி இல்லை என்று குமரேசன் சொல்லிக்கொண்டான். நான் செத்துப்போய்விடுவேன். நான் இங்கிருந்து எங்கேயாவது ஓடிப்போய்விடுவேன். அவனுக்குக் கண்ணீர் வந்தது

“ஒண்ணு செய், அவளுக்க கிட்ட அவளுக்க அழகை புகழ்ந்து என்னமாம் சொல்லு… அப்ப அவ கண்ணு எப்டீன்னு பாரு. பிடிச்சிருந்தா ஒரு சந்தோசம்தெரியும்லே… எரிச்சல் தெரிஞ்சா விட்டிரு. சும்மா திரும்பிட்டு போனாள்னா மறுக்கா முட்டிப்பாரு”

அவன் அவளிடம் என்னால் கண்களை நோக்கி பேசவே முடியாது என்று எண்ணிக்கொண்டான். அங்கே வந்தபின்னர் ஒவ்வொருநாளும் அவளைப் பார்த்தான். பலநூறுமுறை மனதால் பேசினான். அன்றுதான் ஒரு வார்த்தை கேட்டான். அவள் சாதாரணமாக ஒரு சொல் பதில் சொன்னாள். அவ்வளவுதான். அதற்குள் அவன் கால்கள் தளர்ந்துவிட்டன. கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன.

அந்தியில் வேலை முடிந்தது. படிகள் வழியாக மேலிருந்தவர்கள் இறங்கிவந்தனர். எஞ்சீனியர் எல்லா கணக்குகளையும் சரிபார்த்து ஏசையா, குமரேசன் ஜோசப் சார் மூவரிடம் கையெழுத்துக்கள் வாங்கிவிட்டு பைக்கில் கிளம்பிச்சென்றார். மேலிருந்து இறங்கியவர்கள் நன்றாகக் களைத்திருந்தனர். ஒருவருக்கொருவர் முனகலாகப் பேசிக்கொண்டனர் . பீடிகளை வாங்கி பற்றவைத்தனர்.

“இண்ணையோட வேலை முடிஞ்சாச்சா?” என்று அவன் ஐசக்கிடம் கேட்டான்.

“முடிஞ்சாச்சு…நாளைக்கு சில்லறை பணிகள் இருக்கும். எஞ்சீனியர் மேலே போயி பாப்பார். பெரிய எஞ்சீனியர் வரணும்… கைமாறுகதுக்கு ஏளெட்டுநாள் ஆயிடும்”

அதுவரை அவர்களுக்கு ஓய்வுதான்.  ஆனால் கூலி உண்டு. அப்போது பெரும்பாலும் குடித்துவிட்டு படுத்தே கிடப்பார்கள். சினிமா பார்ப்பார்கள்

அனைவரும் தின்னர் டப்பாவில் கைவிட்டு கழுவிக்கொண்டார்கள். பின்னர் சோப்பு போட்டு கழுவினர். ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்றார்கள். குமரேசன் அங்கேயே இருக்கவேண்டும். அவன்தான் ஸ்டோர் காவல். வேறு ஒரு செக்யூரிட்டியும் உண்டு, ஆனால் அவர்களின் குழுவில் இருந்தும் ஒருவர் இருந்தாகவேண்டும்

அனைவரும் சென்றபின் குமரேசன் அங்கே கட்டப்பட்டிருந்த கூடாரத்தின் முன்னால் போடப்பட்ட நாடா கட்டிலில் அமர்ந்தான். உடல் அசதியாக இருந்தது. செல்பவர்கள் அனைவரும் இன்னும் சற்றுநேரத்தில் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அவன் ஒரு பீடி பற்றவைத்தான். அதை இழுத்து நீலப்புகையை விட்டுக்கொண்டிருந்தபோது தொலைவில் அவன் ராஜம்மையின் அசைவைக் கண்டான். உள்ளம் திடுக்கிட்டது. பீடியை கீழே போட்டுவிட்டு எழுந்து நின்றான்

ராஜம்மையேதான். அவள் அருகே வந்து “நான் இங்க என்னமாம் போட்டுட்டுப்போனேனா?” என்றாள்

“என்னது?”

“சாவி… டீஈ சாருக்க அறைக்க சாவி… கீள விளுந்துபோட்டு”

“பாக்கல்லியே”

அவள் தேட ஆரம்பித்தாள். அவள் முன்பு சென்ற இடங்களில் எல்லாம் பார்த்தாள். அவன் அவளுடைய அசைவுகளையே பார்த்துக்கொண்டிருந்தான். என்ன ஒரு மின்னும் கருமை. உதடுகள் கூட நல்ல கருப்பு. கண்கள் மட்டும் சிப்பிகள் போல வெண்மை. அந்தியின் வெளிச்சத்தில் அவள் கன்னங்களும் கழுத்தும் விளைந்த நாகப்பழத்தின் மென்மையான பளபளப்பைக் கொண்டிருந்தன

“அய்யோ அம்மை வந்தா நான் என்ன சொல்வேன்…” என்று அவள் ஏங்கினாள். கண்களில் கண்ணீர் துளித்தது

“இரு நான் தேடித்தாறேன்…” என்றான். “நீ அதை எங்க வச்சே?”

“நான் டீயும் வடையும் கொண்டு வாரப்ப டீ.ஈ சார் போனபிறவு பியூன் ரூமை பூட்டி சாவிய எனக்ககிட்ட குடுத்தாரு”

“ஆரு ?”

“பியூன் கிருஷ்ணபிள்ளை”

“செரி”

“அதை நான் கொண்டுவந்தேன்…”

“நீ டீ கொண்டுவந்தேல்லா? அப்ப சாவிய எங்க வச்சே?”

“இங்க” என்று அவள் தன் தாவணியின் முடிச்சை காட்டினாள். இங்க முடிச்சுபோட்டு இப்டி செருகி வச்சேன்”

“ஓ” என்று அவன் சொன்னான். “நீ கை களுவினேல்லா?”

”ஆமா போறதுக்கு முன்னாலே”

“அப்ப முகம் துடைச்சியா”

“ஆமா”

“அங்க கெடக்கும்… வா காட்டுதேன்”

அவள் முகம் கழுவிய இடத்தில் சேறு காய்ந்திருந்தது. பித்தளைச் சாவி பாதி புதைந்து கிடந்தது

“அய்யோ!” என்று பாய்ந்து எடுத்துக்கொண்டாள்.  “யப்பா! என்னமா இருக்கு தெரியுமா?”

“ஏன்? ஜங்சனுக்கு போனா வேற சாவி கிடைக்கும். இல்லேன்னா வெல்டரிட்ட சொன்னா உடைச்சு குடுப்பான்”

“உடைக்கிறதா? அது டிஇ ஆபீஸ் தெரியுமா? நானாக்கும் துடைச்சு கிளீன் செய்து வைக்குதது. நாலாம் மாடியிலே… அங்க பாத்தியா, அங்க”

“ஆமாம்” என்றான் குமரேசன் “அந்த நரைச்சதலை ஆளுதானே டிஇ?”

“அவருதான்… அவராக்கும் இந்த எடத்துக்க ராஜா… இந்த எடம் முளுக்க அவருக்க காலுக்க கீளயாக்கும். அம்மை அவருக்க காரைப்பாத்தாலே கும்பிடுவா”

“அது உங்களுக்கு… இங்க பாத்தியா இந்த டவராக்கும் எங்க சாமி… இரும்புமாடன்”

அவள் அண்ணாந்து பார்த்தாள். அவன் அவளுடைய குருத்து போன்ற அழகான கழுத்தை பார்த்தான்

அவள் அவனிடம் திரும்பி “மேலே போகலாம் இல்லியா?” என்றாள்

“போலாமே”

“நீ போவியா?

“பின்ன?”

அவன் ஒரே ஒருமுறைதான் மேலே போக முயன்றான். அவனால் ஏற முடியவில்லை.

“நான் போலாமா?”

“மேலயா?”

“ஆமா”

அவன் ஒரு கணத்தில் துணிந்தான். “நான் கூட்டிட்டுப்போறேன்… வாறியா?” என்றான்.

“அய்யோ… இப்பமா?”

“இப்பம் போகமுடியாது. வெளிச்சமில்லை” என்றான். “நாளைக்கு காலம்பற ஒரு நாலரை மணிக்கு வா… அஞ்சு அஞ்சரைக்கு மேலே போகலாம்… ஆறரை ஏளுக்குள்ள கீளே வந்திடலாம்…”

“அய்யோ”

“இந்த செக்கூரிட்டி காலம்பற அவருக்க வீட்டுக்குப் போயிட்டு எட்டுமணிக்குத்தான் வருவாரு… எங்காளுக எட்டரை ஒம்பதுக்குத்தான் வருவாங்க”

கண்கள் விரிய “வரட்டா?”என்றாள்

‘வா” என்றான்

”சத்தியமாட்டு வருவேன்

”வான்னு சொன்னேன்ன்லா?”

“செரி வாறேன்”

“நான் காத்திருக்கேன்”

“செரி ”என்றபின் மெல்ல குதித்து “அய்யோ!” என்றாள்  “சத்தியம்தானே? வெளையாட்டு இல்லல்ல?”

“சத்தியமா”

“அய்யோ!” என்று மீண்டும் கைகொட்டி குதித்தாள்

“டீயெல்லாம் குடிக்க நிக்கவேண்டாம்…”என்றான்

“அய்யோ இல்ல, அடுப்ப பத்தவச்சா அம்மைக்கு தெரியும்… நான் தெரியாம வாறேன்”

“சரி…” என்றான்

அவள் பெருமூச்சுகளாக விட்டாள். மீண்டும் டவரை அண்ணாந்து பார்த்தாள் பிறகு அவனிடம் “நீ எதுக்கு பீடி பிடிக்கே?” என்றாள்

“சும்மா”

“நாத்தம்” என்றாள் பிறகு “சத்தியமா மேலே போறம்ல?” என்றாள்

“சத்தியமாட்டு” என்றன் குமரேசன்

அவள் சென்றபோது தளர்ந்த நடைகொண்டிருந்தாள். இருமுறை திரும்பிப்பார்த்தாள் இருட்டு பரவிய நேரம் அவளுடைய புன்னகை வெண்ணிறமாக துலங்கித்தெரிந்தது

குமரேசன் மீண்டும் கட்டிலில் படுத்தான். இரவுக்கு அவனுக்கு அங்கேயே ரொட்டி வைத்திருப்பான். அன்றைக்குச் சப்பாத்திச் சுருள். அதை சாப்பிட்டான். மூச்சு திணறுவதுபோல் இருந்தது. அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து ஸ்டோர் யார்டைச் சுற்றி நடந்தான். பெரும்பாலும் காலியாகிவிட்டிருந்தது. டார்ப்பாய்களும் கட்டுகம்பிகளும் உதிரி இரும்புச்சாமான்களும் மட்டும்தான் எஞ்சியிருந்தன

செக்யூரிட்டி அலக்ஸாண்டர் வந்தார். பழைய மிலிட்டரிக்காரர். பெரிய புஸ்தி மீசையில் கன்னங்கரிய சாயம் பூசியிருந்தார். அழுக்குப்பச்சை யூனிஃபாம். அவனை அவர் பொருட்டாக நினைப்பதோ பேசுவதோ இல்லை. கொசுவத்தி கொளுத்தி வைத்து லைட் போட்டு அமர்ந்து காலை நாளிதழை கூர்ந்து படிப்பார். கொஞ்சநேரம் ரேடியோவில் பாட்டு கேட்பார். இரவு கொஞ்சம் கவிந்ததும் பையில் இருந்து ரம் எடுத்து தண்ணீர் கலந்து குடிப்பார். அதன் பின் வீட்டிலிருந்து கொண்டுவந்த சோற்றை சாப்பிடுவார். பிறகு விடியற்காலை நான்குமணிவரை தூக்கம். நான்கு மணிக்கு ஆபிரகாம் மில்லின் சங்கு ஊதியதுமே கிளம்பிவிடுவார். ஏழுமணி கழிந்து திரும்பி வந்து டியூட்டியில் இருப்பதுபோல கெத்தாக அமர்ந்திருப்பார். எல்லா வண்டிகளுக்கும் சல்யூட் அடிப்பார்

குமரேசன் கொசுவத்தி ஏற்றிவைத்தான். வானைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். நட்சத்திரங்கள் பெருகிப் பரவியிருந்தன. வானம் ஒரு பெரிய நதிபோல ஒழுகிச் செல்வதாக அவனுக்குப் பட்டது. அது நிலைத்திருப்பதாக தோன்றியபோது அவன் ஒழுகிச்சென்றான்

இரவின் ஓசைகளும் காற்றும் வெப்பமும் மாறிக்கொண்டே இருந்தன. அவன் அப்படி இரவெல்லாம் விழித்திருந்ததே இல்லை. வழக்கமாக  எல்லாரும் சென்றபின் கயிற்றுக்கட்டிலில் படுத்தால் விடியற்காலை சங்கு கேட்கும்வரை ஒரே தூக்கம்தான். செக்யூரிட்டி அலக்ஸாண்டர் சென்றபின் மீண்டும் ஒரு தூக்கம், வெயில் வரும்வரை.

இந்த இரவு இப்படியா, இல்லை எல்லா இரவுகளும் இப்படி உருமாறிக்கொண்டே இருக்கின்றனவா? வண்டிகளின் ஓசை நின்றது. எப்போதாவது ஒரு லாரியின் இரைச்சலும் வெளிச்சமும் கடந்துசென்றன. சீவிடுகளின் ரீங்காரம்.

வடக்கே மலைப்பகுதியில் இருந்து வந்த காற்று இளங்குளிருடன் இருந்தது. தென்மேற்கே கடலில் இருந்து வந்த காற்றில் மென்மையான நீராவியும் வெப்பமும். ஆனால் சற்றுநேரத்திலேயே காற்று சுழன்று எதிர்த்திசையில் வீசத்தொடங்கியது. மிக அருகே ஒரு மரத்தில் ஏதோ பறவை வந்து அமர்ந்து நாய் குரைப்பதுபோல ஓசையிட்டது. வானில் காகங்கள் பறந்துகொண்டே இருந்தன. காகங்களா? இல்லை வௌவால்களா?

நட்சத்திரங்கள் நடுங்கின. உதிர்ந்து விழுந்துவிடும்போல. அவற்றுக்கு நடுவே டவரின் உச்சியில் அமைக்கப்பட்ட சிவப்பு விளக்கு. ஒரு தனி நட்சத்திரம்போல. அது விமானங்களுக்கு தெரிவதற்காக என்றார்கள். விமானங்கள் பார்க்கையில் என்ன தெரியும்? மண்ணில் ஒரு நட்சத்திரமா?. அவன் அண்ணாந்து அந்தச் சிவப்பு விளக்கை பார்த்துக் கொண்டே இருந்தான். அது எழுந்து வானில் பறப்பது போலிருந்தது. அரைத்தூக்கத்தில் தன் தலை அசைந்ததனால் என்று கண்டான்

நட்சத்திரங்கள் இடம் மாறின. காற்றில் குளிர் கூடிக்கூடி வந்தது. கூடாரத்தின்மேல் அத்தனை பனி படர்ந்திருக்கும் என அவன் நினைக்கவில்லை. கையால் தொட்டால் ஈரமாக இருந்தது. தட்டினால் நீர் தெறித்தது. உலோகப்பரப்புகள் அரையிருளில் மின்னிக்கொண்டிருந்தன. ஒரு லாரி சென்றபோது அனைத்தும் தீக்கனல்போல ஆகி அணைந்தன.

நான்குமணிக்கு சங்கொலி எழுந்தது. அருகே ஒரு யானை நின்று பிளிறியது போல. அவன் உடல் நடுங்கி அதிர்ந்தது. எழுந்து ஓடிவிடலாம் என்று எண்ணினான். அவனால் அத்தனை படிகளை ஏறமுடியாது. அதில் ஏறுவதற்கு ஒரு பயிற்சி தேவை. பிடியை விட்டு விழுந்துவிட்டால் கீழிருப்பவர்மேல் விழநேரிடும். எத்தனை தொலைவு! ஆயிரத்துநூறு அடி. அவன் அண்ணாந்து நோக்கினான், நெஞ்சு திடுக்கிட்டு அதிர மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அலக்ஸாண்டர் எழுந்து பையை தூக்கிக்கொண்டு கிளம்பிச் சென்றார். நாய்கள் அவரைக்கண்டு குரைக்கும் ஒலி அப்பால் கேட்டது. மீண்டும் ஒரு லாரி கடந்துசென்றது. லாரி அல்ல, பால்வண்டி. திருவனந்தபுரம் செல்வது.

அவள் ஆசைப்பட்டாள்,ஆனால் வரமாட்டாள். வரமுடியாது. வந்தாலும் அதில் கொஞ்சதூரம் ஏறிவிட்டு இறங்கிவிடுவாள். அல்லது ஏறவே துணியமாட்டாள். அதுவே நடக்கப்போகிறது. அவளை அவனுக்குத் தெரியும். ஆனால் உள்ளூர தெரிந்திருந்தது, அப்படி அல்ல என்று.

ஆகவே அவளைக் கண்டதும் அவன் ஆச்சரியம் அடையவில்லை. அத்தனை பதற்றத்தையும் முன்னரே அடைந்திருந்தமையால் அவன் உடல் முழுக்க களைப்பே இருந்தது. அவளிடம் எரிந்து விழுந்து விடுவோம் என்றுதான் எண்ணினான். அவள் முந்தையநாள் அணிந்திருந்த அதே நீல தாவணியும் பாவாடையும் வெள்ளை ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். கழுத்தில் அதே  வெண்ணிறப் பாசிமணிமாலை.

அவள் அருகே வந்து ரகசியக்குரலில் “செக்கூரிட்டி போயாச்சா?”என்றாள்

“ம்” என்றான்

“போலாமா?”

“ம்”

“டீ குடிக்கிறியா?”

“டீயா?”

“ஆமா, நான் போட்டேன்”

“எப்டி?”

“வெளியே வெந்நீர் அடுப்பிலே காகிதத்த எரிச்சு போட்டேன்… இந்தா”

செம்பில் இருந்த டீ சூடாக இருந்தது. பழைய எருமைப்பாலின் மணம். அவன் குடித்துவிட்டுத்தான் அவளைப்பார்த்தான். ‘நீ குடிச்சியா?”

“இல்ல, என்னால குடிக்க முடியல்லை”

“ம்”

“போலாமா?”

“வா” என எழுந்துகொண்டான்

”உனக்கு கஷ்டம்னா வேண்டாம்”

“ஒண்ணுமில்லை”

“போலீஸ் பிடிக்குமா?”

“எதுக்கு? இது என்னோட எடம்ல? வா”

அவன் அவளைக் கூட்டிச்சென்று டவர் அருகே நிறுத்தினான். அவள் அண்ணாந்து பார்த்து “ய்ய்யம்மோ” என்றாள்

“இங்கபார், சில ரூல்ஸ் இருக்கு. ஒண்ணு நிக்கவேண்டிய தடம் தவிர எங்கயும் நிக்கப்பிடாது. கீழே பாக்கக்கூடாது. மேலேயும் பாக்கக்கூடாது. படிய மட்டும்தான் பாக்கணும். ரெண்டு கையாலயும் பிடிச்சுகிடணும். முகம் துடைக்கவோ தும்மவோ எதுக்காகவும் கைப்பிடிய விட்டிரப்பிடாது…”

“சரி”

“போ”

அவள் தயங்கினாள்

“ஏறு” என்றான். அவனுக்கு அத்தனை செய்திகள் எப்படி தெரிந்திருந்தன என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் கேட்ட கவனித்த எல்லாமே அவனுக்கு தெரிந்தவையாக இருந்தன. அவன் மானசீகமாக நூற்றுக்கணக்கான முறை மெலே ஏறியிருந்தான்.

அவள் முதல் காலை எடுத்து வைப்பதற்கு முன் படியை தொட்டுக் கும்பிட்டாள். பிறகு பாவாடையை நன்றாக தூக்கி செருகிக்கொண்டு ஏறினாள்

அவள் மூச்சுவாங்குவாள் என அவன் நினைத்தான். ஆனால் மிக மிக எளிதாக அவளால் ஏறமுடிந்தது. ஒருநாளுக்கு நூறுகுடம் தண்ணீர் சுமப்பவள் என நினைத்துக்கொண்டான்

அவன் தன் வலுவான காலை ஊன்றி மேலேறினான். முன்பு செய்த பிழை என்னவென்றால் அவனால் அடுத்த காலை வைக்க முடியவில்லை என்பதுதான். வலுவான காலை எடுத்து வைக்கவேண்டுமென்றால் மெலிந்த காலை ஊன்றவேண்டும். மெலிந்த காலை எடுத்து வைத்தால் அதைக்கொண்டு உந்தி எழமுடியவில்லை. அது பத்துப்பதினைந்து படிகளுக்கு அவனுக்கு மரணவலியாக இருந்தது. அதன் பின் கண்டுகொண்டான். ஒவ்வொரு முறையும் வலுவான காலையே எடுத்து வைத்தான். வலதுகாலை உந்தி துள்ளி முழுமூச்சாக கைகளால் எம்பி உடலை தூக்கி மேலேறினான். தன் கைகள் ஆற்றல் மிக்கவை என அவனுக்கு தெரிந்திருந்தது

முதல் தட்டில் நின்றபோது அவள் சிரித்துக்கொண்டிருந்தாள் “ஏறி வா ஏறி வா” என்று அவனை கைநீட்டி அழைத்தாள். இருட்டில் அவள் பற்களும் கண்களும் வெண்மையாகத் தெரிந்தன

அவன் மூச்சுவாங்க அவள் அருகே நின்றான். அப்போதே எக்ஸேஞ்ச் கட்டிடம் கீழே சென்றுவிட்டிருந்தது. அதன் விளக்குகள் தரையில் எனத் தெரிந்தன.

“சின்னதா ஆயிடுச்சு” என்று சுட்டிக்காட்டினாள்.  “ரோடு வீடு எல்லாமே சின்னதா ஆயிடுச்சு”

“இப்பதானே ஏற ஆரம்பிச்சிருக்கோம்…”

“ஆமா இன்னும் எட்டு தட்டு இருக்கு இப்டி நிக்கிறதுக்கு”

“களைப்பா இருக்கா?

இல்லை என்று தலையை அசைத்தாள். அவள் வியர்வையின் மணம் அருகே எழுந்தது. இனிமையான சிறிய விலங்கொன்றின் வாசனை

அவர்கள் மீண்டும் மேலேறிச் சென்றனர். மெல்லமெல்ல அவள் அந்தக் கிளர்ச்சியெல்லாம் அடங்கி அமைதியானவள் ஆனாள். கனவில் செல்பவள் போல மேலே சென்றுகொண்டே இருந்தாள். இரண்டு தட்டுகளில் அவள் இளைப்பாறவே இல்லை

“அய்யோ பஸ்ஸு… பஸ்ஸூ தீப்பெட்டி மாதிரி”

“கீழே பாக்காதே”

காற்று அவர்களின் ஆடைகளை சிறகுபோல படபடக்கச் செய்தது. வியர்வையே இல்லை, உடனே அது ஆவியாகிவிட்டது. குளிரில் உடம்பு சிலிர்த்துக்கொண்டே இருந்தது.

மேலும் சென்றபோது அவன் தன்னந்தனிமையை உணர்ந்தான். சுற்றிலும் வெறும் வானம் மட்டும். டவர் மெல்ல ஆடியது

“ஆடுது” என்றாள்

“காத்திலே கொஞ்சம் ஆடும்… ஆடினாத்தான் பலமா இருக்குன்னு அர்த்தம்”

“கீழே ஆடுமா?”

“இல்ல கீழ உறுதியா இருக்கும் மேலே கொஞ்சம் ஆடும்”

மேலும் ஏறிச்சென்றபோது கைகள் நன்றாகவே களைத்திருந்தன. தோள்தசைகள் வலித்தன

“களைப்பா இருக்குன்னா உக்காரலாம்”

“வேண்டாம், போவோம்”

அவள் முதலில் இறுதித்தட்டில் ஏறி நின்றாள். அங்கே டவர் ஊசல் போலவே ஆடியது. அவன் ஏறி வந்து அவளருகே நின்றான்

அவள் இருகைகளாலும் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சுற்றிலும் நோக்கினாள். சுரியன் எழத்தொடங்கவில்லை. ஆனால் வானம் துலங்கியிருந்தது. மணிவெளிச்சம் என்பார் அருணாச்சலம் நாடார். ஒளி கண்ணுக்குள் இருந்து சென்று பொருட்களை தொட்டது

பச்சைவிரிப்பு போல சூழவும் நிலம் தெரிந்தது. மிகச்சிறிய பெட்டிகள் போல வீடுகள். பஸ் ஒன்று சிறியபெட்டியாக மிகமெல்ல ஊர்ந்து சென்றது. வானம் வளைந்து வந்து மண்ணில் படிந்திருந்தது. மிகத்துல்லியமான வட்டம்.

அவள் சுற்றிச்சுற்றிப்பார்த்தாள்.  “வானம் இம்பிடு வட்டமா இருக்கு” என்றாள் “கண்ணாடிக் கிண்ணிய கவுத்து வச்ச மாதிரி”

வடக்கே இருந்த வேளிமலை அடுக்குகள் மிக அருகே வந்துவிட்டிருந்தன. குறைவான வெளிச்சத்தில் அவை துலங்கித்தெரிந்தன. ஒவ்வொரு பாறையும் புடைத்து எழுந்திருந்தது. மலையின் விளிம்புக்கோட்டில் மரங்களைக்கூட பார்க்க முடிந்தது

“மலைக்க மேலே மரம்!”என்று அவள் அந்த மலையைச் சுட்டிக்காட்டினாள். “ஆனை முதுகிலே முடி மாதிரி இருக்கு”

அவனுக்கும் உடனே அப்படி தோன்றியது. நெருக்கமாக நின்றிருக்கும் யானைகள்

“நம்மள கீழே நின்னா பாக்கமுடியுமா?”

“முடியும்…சின்னதா தெரியும்”

“நான் எப்டி தெரிவேன்?”

“சின்ன நீலக்குருவி வந்து ஒக்காந்திட்டிருக்குத மாதிரி”

அவள் “ஸ்ஸ்ஸ்ஸ்” என்றாள்

சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டே நின்றாள். “எவ்ளவு எடமிருக்கு… வானம் வரை” என்றாள் “கடல் அந்தப்பக்கமா?”

“அந்தாலே… அங்க நீலமா தெரியும்… ஆனா இப்ப தெரியாது”

காலடியில் மிகக்கீழே பறவைகள் பறந்துசெல்லத் தொடங்கின. காகங்கள் வெண்கொக்குகள்

“அய்யோ எல்லாமே கீழே பறக்குது”

“நாம மேலே நின்னுட்டிருக்கோம்”

“வானத்திலயா?”

“ஆமா, மேகங்கள்கூட இங்க வரும்”

“இங்க வருமா?”

“மழைக்காலத்திலே வரும்”

அவள் பெருமூச்சுவிட்டாள். மீண்டும் மீண்டும்  அவளிடமிருந்து பெருமூச்சுக்கள் வந்துகொண்டிருந்தன

“நாம செத்துப்போனா இதுக்கும் மேலே போயிருவோம் இல்ல?” என்றாள்

“எங்க?”

“சொற்கத்துக்கு”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

கிழக்கே வானம் சிவப்பாக தொடங்கியது. அவள் திரும்பி அதை பார்த்துக்கொண்டிருந்தாள். உலைமுன் நிற்பவள்போலிருந்தது அவள் முகம்

அவன் அவள் கண்களுக்குள் சிவப்புநிறம் தீப்பொறி போல தெரிவதை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் தலைமுடி பறந்துகொண்டிருந்தது. ஆடைகள் பறந்துகொண்டிருந்தன. பின்னணியில் வானம்.அவளே வானில் பறந்துகொண்டிருப்பவள்போல

மிகமெல்ல ஒளி கூடிக்கூடி வந்தது. மேகங்கள் ஒளிகொள்ளத் தொடங்கின. நிறைய இடங்களில் அவை சிவந்து எரிந்துகொண்டிருப்பதுபோல தெரிந்தது. அவற்றின் நடுப்பகுதி கருமையாக இருக்க ஓரங்கள் ரத்தம்போலிருந்தன. அந்த மேகங்கள் அங்கே இருப்பது முன்பு கண்ணில்படவே இல்லை.

பின்னர் அவை பொன்னிறம் கொண்டன. அவற்றின் விளிம்புகள் பிளேடு நுனிகள்போல மின்னின. அவன் சூரியனைக் கண்டான். மிகச்சிறிய ஒரு விளிம்பு. உருகி உருகி நெளிந்துகொண்டிருந்த பொன்னிறமான தாம்பாள வட்டம்

அவன் அவளுடைய விசும்பலோசையை கேட்டான். திடுக்கிட்டு அவளை பார்த்தான்

“ஏட்டி என்ன?”

அவள் தலையசைத்தாள்

“என்னட்டி?”

அவள் உதடுகளை இறுகக் கடித்தாள். கழுத்தில் தசை இறுகி அசைந்தது

“பயமா இருக்கா?”

அவள் இல்லை என தலையசைத்தாள்

“எறங்கிரலாமா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவள் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. முகம் சிவந்து எரிவதுபோலிருக்க, கண்ணீர் பளபளத்து கன்னங்களில் ஓடியது

அவள் கைப்பிடியை பிடித்திருந்தாள். கரிய கைகள், குழந்தைகளுக்குரிய மென்மையான சருமம் கொண்டவை. அவள் நகங்களும் சற்றே கருமை கலந்த செம்மை. வாழைப்பூ நிறம்போல.

அவளுடைய விசும்பலோசை அவனை பதறச்செய்தது.  “ஏம்டி?”என்றான். அப்போது இயல்பாக அவள் கைமேல் தன் கையை வைத்துவிட்டான்

அவள் திரும்பி அவனை அள்ளி அணைத்துக்கொண்டாள். தன் முகத்தை அவன் மார்பில் பதித்து உடலை இறுக்கி ஒண்டிக்கொண்டாள். அந்த விசையில் அவன் சற்றே பின்னடைந்தபின் அவளை கைகளால் தழுவி இறுக அணைத்தான். குனிந்து அவளுடைய தலையின் வகிட்டில் முத்தமிட்டான். உழுதுபோட்ட புதுமண்ணின் மணம்.

***

தொடர்புடைய பதிவுகள்

அஞ்சலி: மருத்துவர் ஜெயமோகன்

$
0
0

 

இன்றைய செய்தி ஒன்று துயரத்தை அளித்தது. நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் திரு.ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

 

தெங்குமரஹடாவுக்கு நான் நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் குடியேறியவர்களால் ஆனது, ஆகவே அதை காலிசெய்யவேண்டும் என நீதிமன்றமும் அரசும் ஆணையிட்டுவிட்டன. மக்கள் அதை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே சாலை உள்ளிட்ட எந்த்த வசதியும் இல்லை.அங்கே மருத்துவப் பணி என்பது கிட்டத்தட்ட ஒரு போர்ச்சூழல் பணிதான்.

 

மருத்துவர் ஜெயமோகன் அப்பகுதிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்.MMC யில் 2007ல் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர். மருத்துவக் கல்வியில் உயர்நிலை தகுதியுடன் வென்ற அவர் அத்தகைய பிற்பட்ட ஊருக்குச் சென்று பணியாற்றியது சேவைநோக்கத்தால்தான். அவருடைய பணியை நண்பர்கள் நினைவுகூர்கிறார்கள்.29 வயதான ஜெயமோகன் அவர் பெற்றோரின் ஒரே மகன். அவர் அன்னை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகச் செய்தி அறிந்தேன்.

 

மருத்துவருக்கு அஞ்சலி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–34

$
0
0

பகுதி நான்கு : அலைமீள்கை – 17

துவாரகைக்கு நான் கிருதவர்மனுடன் வந்துகொண்டிருக்கிறேன் என்ற செய்தியை முன்னரே மூத்தவரிடம் தெரிவித்திருந்தமையால் நகருக்கு நெடுந்தொலைவிலேயே எங்களை வரவேற்கும் பொருட்டு சுஃபானுவும் மூன்று உடன்பிறந்தாரும் அணிப்படையினருடன் வந்திருந்தார்கள். அவர்கள் பாலை நிலத்தில் துவாரகையின் செம்பருந்துக்கொடி உயர்ந்து பறக்கும் மூங்கிலுடன் நின்றிருப்பதை தொலைவிலேயே நாங்கள் கண்டோம். இணையாக யாதவக்குடியின் பசுக்கொடியும் பறந்தது. என்னுடன் வந்திருந்த சிறிய காவல்படையினர் கொம்பொலி எழுப்பி எங்கள் வருகையை அறிவித்தனர். அங்கிருந்து முரசுகளும் முழவுகளும் சங்கும் மணியும் ஒலித்தன. கிருதவர்மனுக்கான வாழ்த்தொலிகள் எழுந்தன.

கிருதவர்மன் அந்த வாழ்த்துகளை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்று பார்ப்பதற்காக நான் திரும்பி அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகம் இறுகியிருந்தது. எந்த உவகையும் அதில் தெரியவில்லை. அது அவ்வாறே இருக்கும் என்று எனக்கு தெரிந்திருந்தது. அவர் உணர்வுகளை வெளிக்காட்டுபவர் அல்ல. நான் அவருடைய கண்களை நோக்கிக்கொண்டிருந்தேன். நான் அவருக்கு இணையாக வந்துகொண்டிருந்தமையால் என்னால் அவர் விழிகளை சற்று அப்பாலிருந்தே பார்க்க இயன்றது. உணர்வுகளுக்கு அப்பால் ஒன்று மானுடரின் கண்களில் எழுவதுண்டு. தன்னிலை என்று அதை சொல்லலாம். தன்னை அவ்வண்ணம் அக்கணத்தில் அவ்வாறு அந்த ஆத்மா வைத்துக்கொள்ளும் நிலை அது. கண்களை ஆத்மாவை நோக்கி போடப்பட்ட சிறுதுளைகள் என்று என் ஆசிரியர் ஸ்ரீகரர் கூறுவதுண்டு. கூர்ந்து நோக்கினால் எவரும் அதை பார்த்துவிடமுடியும்.

நான் அவருடைய விழிகளை முதல்முறையாகக் கண்டது அந்தச் சிறுகுடிலில் இருந்து அவர் வெளியே வந்தபோதுதான். அதுவரை அவர் என நினைத்திருந்த சுவரிலிருந்து எழுந்தவர் போலிருந்தார். உண்மையில் அங்கே தோன்றிய உரு போலவே அவர் இருந்தது என்னை திகைப்புறச் செய்தது. நான் அவரை நடுக்குடன் நோக்கிக்கொண்டிருந்தேன். அது ஒரு மானுட உடலென்றே தோன்றவில்லை. வெந்து உருகிய தசைகள் உறைந்த மெழுகுருவென்றாகியிருந்தன. இழுபட்டு கோணலாகத் திறந்த வாயில் பற்கள் புடைத்திருந்தன. செந்நிறத் தோல் மூடிய தலையில் ஒரு பகுதியில் மட்டும் சற்றே முடியிருந்தது. ஒரு செவியும் கழுத்தும் தோளும் உருவழிந்து ஒற்றைச் சதைக்குழைவெனத் தெரிந்தன.

ஆனால் அவர் விழிகள் உயிருடனிருந்தன. அவர் என்னை கூர்ந்து நோக்கினார். “செல்வோம்” என்று அவர் சொன்னபோது அவை ஒரு கணம் புன்னகைத்தன. பின்னர் கண்டுகொண்டேன், அவருடைய முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டுவது விழிகள் மட்டுமே. முகம் என்பது நாம் அறிந்த பொது அமைப்பு ஒன்றை கொண்டது. அதில் மிகச் சிறிய மாறுதல் ஏற்பட்டால்கூட உணர்ச்சிகளை அது தொடர்புறுத்துவதில்லை, பிழையாக உணர்ச்சிகளை காட்டிவிடுகிறது. விழித்தசை சற்று கீழிறங்கியமையால் ஒருவர் சோர்வும் சலிப்பும் உற்றவராகத் தெரிகிறார். வாய் சற்று கோணலாகிவிட்டமையால் ஒருவர் ஏளனம் மிக்கவராகத் தெரிகிறார். கிருதவர்மனின் முகம் உணர்வுகளுக்கு அப்பால் சென்றுவிட்டது. ஆனால் விழிகள் அந்தத் திரைக்கு அப்பாலிருந்து எழுந்து வந்தன.

மூத்தவர் சுஃபானுவும் இளையவர்களும் கைகூப்பியபடி வந்தனர். தேரிலிருந்து இறங்கிய கிருதவர்மன் நிமிர்ந்த தலையுடன் என்ன நிகழ்கிறது என்ற அறிதல் இல்லாதவர்போல் அங்கு நிற்க அவர்கள் அருகணைந்து கால்தொட்டு வணங்கி “வாழ்த்துக, தந்தையே!” என முகமன் உரைத்தனர். அச்சொற்களைக் கேட்டு அவருடைய உடல் சற்றே மாறுகிறதோ என்று நான் ஐயுற்றேன். ஒரு மெல்லிய குறுகல், அல்லது விதிர்ப்பு. அவர் சற்று கம்மிய குரலில் “நன்று! நலம் சூழ்க!” என்று சொல்லி சுஃபானுவின் தோளில் தட்டினார். அக்கணம் அவர் கண்களை நான் நேருக்கு நேர் பார்த்தேன். எந்த மறைவுமின்றி அவர் ஆத்மாவை சென்று சுட்டின அவை. அவர் தன்னை ஒரு பிதாமகர் என்று எண்ணிக்கொள்கிறார் என்று அறிந்தேன்.

ஆனால் அது நான் எண்ணியதே என்று அப்போது உணர்ந்தேன். எனினும் அது ஏமாற்றத்தை அளித்தது. தந்தையே, அங்கு அவர் உங்கள் இடத்தில் தன்னை வைத்துக்கொண்டார். தன்னை எங்கள் அனைவருக்கும் தந்தையென நிறுத்தினார். அக்கணம் அவரில் வந்த கனிவு அவர் ஒருபோதும் துவாரகையின் முற்றழிவை, உங்கள் மைந்தர்களின் சாவை விரும்பமாட்டார் என்று எனக்குக் காட்டியது. இத்தனைக்கும் சுஃபானுவும் இளையவர்களும் மிகமிக வழக்கமான சொற்களை, பெரிய உணர்வெழுச்சி ஏதுமின்றித்தான் சொல்லியிருந்தார்கள். அவர் அதை எதிர்பாராதவர்போல தோன்றினார். அல்லது அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாரா?

எனில் துவாரகையின் முற்றழிவைப்பற்றி நான் கூறுகையில் எல்லாம் அவர் அதை பிறிதொரு பொருளில்தான் எடுத்துக்கொண்டிருக்கிறாரா? அப்போது அறிந்தேன் தந்தையே, ஒருபோதும் அவர் உங்கள் எதிரி அல்ல. உங்கள் அணைப்பை, வெறும் தொடுகையை எதிர்பார்த்திருக்கும் உடன்பிறந்தான். இந்த நாடகத்தில் ஒருபோதும் அது நிகழப்போவதில்லை என்று அறிந்து அதே விசையில் மறுமுனை கொள்பவர். நான் அவரை அதன் பின்பு பார்க்கவில்லை. அந்த ஒரு கணநேர கண்ணை என்னுள் விரித்து விரித்துப் பெருக்கி அவரென்று ஆக்கிக்கொண்டேன்.

அவர் அங்கு வந்திருப்பது உங்கள் உருவில். அங்கு உங்கள் மைந்தர்களுக்கு நடுவே ஒற்றுமையை உருவாக்கவே அவர் முயல்வார். அனைவருக்கும் முதன்மைத் தந்தையென அங்கு அமர்ந்திருப்பார். துவாரகை முந்தைய பொலிவைவிட மிகுந்தெழுவதையே அவர் விழைகிறார். அவ்வண்ணம் ஒன்றை நிகழ்த்தவும் அவரால் இயலும். அவர் உங்களை வெல்வது துவாரகையை உங்கள் காலத்தைவிட பொலிவுற்றதாக ஆக்கும்போது மட்டும்தான். உங்களைக் கடந்து செல்வது உங்களின் புகழையும் நிலைநிறுத்தும் ஒருவனாக தன்னை ஆக்கிக்கொள்வதனூடாக. உங்களுக்கு புகழ் அளித்து உங்களை சிறிதாக்குவதனூடாக அவரது ஆணவம் நிறைவுறும்போது. தந்தையே, நீங்கள் வேறெங்கு எவ்வண்ணம் பேருருக்கொண்டிருந்தாலும் அவர் அகத்தில் சிறுத்து அவர் அளிக்கும் அன்னத்தை உண்ணும் இளம்சிறுவன்போல் அமர்ந்திருப்பீர்கள். அதைத்தான் அவர் விரும்புகிறார்.

அதற்கப்பால் ஒன்று, தந்தையே. அது அவர் என் அன்னைமேல் கொண்ட வெற்றி அது. கிருதவர்மனை அந்நாள் வரை இயக்கியது உங்கள்மேல் கொண்ட வஞ்சம் என்று எண்ணியிருந்தேன். அந்த வஞ்சத்தின் உள்ளென அமைந்திருந்தது எங்கள் அன்னைமேல் கொண்ட காதல். அவ்வஞ்சம் மிக உயரிய ஒன்றின் கருநிழல். இன்று மைந்தர் வந்து அடிபணிகையில் அவர் காண்பது அன்னையை, இம்மைந்தர் அவர் மைந்தரும் என ஆகும் தருணம் அமைவது அவ்வண்ணம்தான். தந்தையே, மெய்க்காதலில் இருந்து வஞ்சமும் கசப்பும் காழ்ப்பும் எழக்கூடும். ஆனால் அவை அனைத்தும் காதலின் வடிவாகவே ஆழத்தில் திகழும். தன் முதன்மை இனிமையை ஒருபோதும் காதல் இழந்துவிடுவதில்லை.

நான் என்னுள் ஏமாற்றம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஏமாற்றம் என்றும் அதை கூற இயலாது. ஒன்று ஊகிக்கலாம். அது ஒரு சிறு உவகையால் ஈடுகட்டப்பட்ட ஏமாற்றம். அவரை நான் வகுத்துவிட்டேன். இனி அதைக்கொண்டு நான் அவரை ஆள இயலும். அதுவரை அவர் எவர் என என் அகம் பதைத்துக்கொண்டிருந்தது, அதை கடந்துவிட்டேன். விஸ்வாமித்ரரின் குடிலில் இருந்து கிளம்பியது முதல் நான் அகம் பதறிக்கொண்டுதான் இருந்தேன். என்னிடம் விஸ்வாமித்ரர் சொன்ன சொற்கள் நான் கொண்ட அனைத்து உருவகங்களையும் சிதைத்துவிட்டன. பிறிதொன்றை என்னால் உருவாக்கிக்கொள்ள முடியவுமில்லை.

ஏனென்றால் அவை உண்மை என நான் அறிந்திருந்தேன். விஸ்வாமித்ரர் பேசப்பேச நான் அகநடுக்குடன் அதை உணர்ந்துகொண்டிருந்தேன். தந்தையே, கிருதவர்மனுடன் குடிலுக்கு வெளியே நின்று உரையாடுகையில் நான் உணர்ந்தது உங்கள் இருப்பைத்தான். ஆனால் அங்கிருந்து கிளம்பியதுமே அது மறைந்துவிட்டது. அதன்பின் நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. அவர் முற்றாக தன்னில் ஆழ்ந்திருந்தார், அவர் அருகே நான் இருக்கையில்கூட அங்கே எவருமில்லை என்னும் உடலுணர்வையே அடைந்தேன். அது என்னுள் இருந்து புலன்களை ஆளும் விலங்கை பதற்றம் கொள்ளச் செய்தது. அப்பதற்றம் அடங்கிவிட்டது.

 

துவாரகையின் முகப்பில் யாதவர்கள் அத்தனை பெருங்கூட்டமாக வந்து நின்றிருப்பார்கள் என்று கிருதவர்மன் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் முதலில் அதை உணரவில்லை. தொலைவிலேயே முழவுகளும் கொம்புகளும் ஒலிப்பதை கேட்டோம். அவர் அத்தகைய ஓசைகளுக்கு அயலாகிவிட்டிருந்தார். ஆகவே அதை உணரவில்லை. சுஃபானுதான் “தங்களுக்காக காத்திருக்கிறார்கள், தந்தையே” என்றார். அதன் பின்னரே அவர் அதை உணர்ந்தார். ஏதோ சொல்லவருபவர்போல கைகளை உயர்த்தினார். எண்ணம் நிலைக்க அந்தக் கை அப்படியே நின்றது. அவர் கனவுகாண்பவர்போல துவாரகையின் தோரணவாயில் நோக்கி சென்றார்.

துவாரகையின் தோரணவாயிலின் நிழல் பாலை மணலில் பெரிய வில்போல விழுந்துகிடந்தது. மாந்தளிர் என மின்னிய உடல்களுடன் தேர்ப்புரவிகள் ஒவ்வொன்றாக அந்நிழலை தம் உடலில் வாங்கி இருண்டு பின் கடந்து ஒளிர்ந்து மறுபக்கம் சென்றன. தோரணவாயிலில் இருந்த சிற்பங்களின் நிழல்வடிவங்கள் குளம்புச்சுவடுகளும் கால்சுவடுகளும் கலந்து அசைவற்ற அலைப்பரப்பு என கிடந்த மென்மணலில் விழுந்திருந்தன. சிறகுவிரித்த கருடனின் மேல் புரவி ஒன்று நடந்து செல்ல அதன் முதுகில் கருடனின் சிறகு வருடிச் சென்றது.

தேர்கள் அருகே சென்றதும் தோரணவாயிலின் தூண்முகப்பில் இருந்த வாயிற்காவலர் சிற்பங்களின் கால்கள் பேருருக்கொண்டு தலைக்கு மேல் எழுந்தன. அவற்றிலணிந்திருந்த கழல்கள் மட்டுமே விழிகளுக்குத் தெரிந்தன. அண்ணாந்து நோக்கியபோது வளைவின் நடுவே கட்டப்பட்டிருந்த பெரிய கண்டாமணியின் நாக்கின் இரும்பு உருளை கோபுரக் கலசமெனத் தெரிந்தது. அங்கே குளவிக்கூடுகள் அன்னைப்பன்றியின் அகிடுகள்போல தொங்கின. நான் விந்தையானதொரு உளத்துடிப்பை உணர்ந்தேன். தந்தையே, எங்களுடன் இன்னொருவரும் விழிக்குத் தெரியாமல் இருந்துகொண்டிருப்பதுபோல.

எவர்? எவர்? நான் தொட்டுத் தொட்டுச் சென்று அதை தெளிவுடன் அறிந்தேன். எங்களுடன் வந்துகொண்டிருந்தவர் திருஷ்டத்யும்னன். என்னருகே, அல்லது என் உடலுக்குள்ளா? அருகே திறந்த தேரின் தட்டில் இடத்தூணில் கைகள் சேர்த்து பின்னால் கட்டப்பட்டு இடையில் ஒற்றை ஆடையுடன், கலைந்த குழலுடன், உடலெங்கும் புழுதியும் உலர்ந்த குருதியும் வியர்வையில் கலந்து கரைந்து வழிய, தலை குனிந்து நின்றிருக்கிறாரா கிருதவர்மன்? அத்தருணத்தின் எடை எண்ணமுடியாத அளவு மிகுதியானது. அது அத்தருணத்தை நசுக்கிப் பரப்பிச் சிதைக்கிறது. எந்தச் சொல்லொழுங்கும் அற்றதாக்குகிறது. ஒவ்வொரு எண்ணத்தையும் அத்துமீறச் செய்கிறது.

யாதவர்கள் நெடுங்காலத்திற்குப் பின்னர்தான் அத்தனை பெரிய கேளிக்கை ஒன்றை அடைகிறார்கள் என்று தோன்றியது. முன்பு இந்நகரில் அவ்வப்போது நகர்நுழைவு நடந்துகொண்டிருக்கும். நீங்கள் இந்நகரிலிருந்து பிரிந்து செல்வீர்கள். இங்கிருந்து உங்களைத் தேடி பல்லாயிரம் உள்ளங்கள் அலைந்து கொண்டிருக்கும். நீங்கள் எவ்வண்ணம் எங்கிருக்கிறீர்கள் என்பதை கற்பனை செய்துகொள்வார்கள். சிறு தகவல்கள், செய்திகள் வந்துகொண்டிருக்கும். பின்னர் நீங்கள் வரும் செய்தி வரும். அணுகிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற செய்தி வரும். நாள் நாளாக துளித்துளியாக நகர் ஒருங்கும். முரசில் கோல் விழுந்ததென ஒருகணத்தில் பொங்கி எழும். பின்னர் நீங்கள் நகர்நுழைவது வரை இந்நகர் திருவிழா கொண்டாடிக்கொண்டிருக்கும். நீங்கள் நகர் நுழையும் கணம் பித்தெடுத்துத் துள்ளி அலைப்புறும். அந்நாட்களை அவர்கள் நினைவிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தார்கள்.

நீங்கள் துவாரகையின் தெருக்களினூடாக அரண்மனை நோக்கி செல்லும் காட்சியை பலநூறு முறை கண்டதுபோல் உள்ளது. ஒன்று கண்டால் பலநூறை எண்ணிக்கொள்வதுபோல. நகரின் இருபுறங்களிலும் களிவெறிகொண்ட மக்கள் ஆர்ப்பாட்டமிடுவார்கள். அழுது, சிரித்து, கூவி, நெஞ்சில் அறைந்து மகிழ்வு கொண்டாடுவார்கள். விலங்குகள்போல, பறவைக்கூட்டம்போல. தந்தையே, அன்று அதற்கும் மேலாக அவருக்கு வரவேற்பிருந்தது. நீங்களே திரும்பிவந்திருந்தால்கூட அந்த வரவேற்பு இருந்திருக்காது. இருபுறமும் யாதவக் குடிகள் அவரது தேரை தொடுவதற்கு முண்டியடித்தனர். மண்ணில் விழுந்து அவருடைய தேர் சென்ற மண்ணை முத்தமிட்டனர். அவரது தேர்த்தடம் பல்லாயிரம் கைகளால் மூச்சால் அக்கணமே கலைந்தது. அழுகையும் விம்மலும் ஏக்கமும் என துவாரகை அவர் சென்ற வழியெங்கும் உணர்வழிந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அத்தகைய களியாட்டை முன்பு நான் கண்டதில்லை. அவர்கள் மெய்யாகவே உங்களை அவர் வடிவில் காண்கிறார்களா? ஆனால் ஒருபோதும் உங்களுக்கு அத்தனை வரவேற்பு கிடைத்ததில்லை. அவர்கள் காத்திருந்த மீட்கும் தெய்வம் யார்? நீங்களா இல்லை கிருதவர்மனேதானா? எவ்வகையிலேனும் ஒரு வடிவில் தாங்கள் எழுந்தருளவேண்டும் என்று எண்ணினார்கள் போலும். அவ்வாறு வந்தவரை தாங்கள் என்று எண்ணிக்கொண்டார்களா? நான் அவர் அருகே தேரில் நின்றிருந்தேன். அவர் என்ன எண்ணுகிறார்? அதே தெருக்களினூடாக அவர் இழுத்துச் செல்லப்பட்டார். அன்னைமுன் சென்று நிற்பதை அவர் சாவென உணர்ந்தார். அப்போது எவ்வகையில் உணர்கிறார்? வென்று எழுந்துவிட்டாரா?

இரட்டைத்தூண்களின் அருகே இருந்த தேர்நிலையை அடைந்தோம். அவர் இயல்பாக மேலே நோக்கினார். அங்கே அன்னை நின்று நோக்கிக்கொண்டிருப்பதாக ஒருகணம் என் அகம் திடுக்கிட்டது. அரண்மனை முகப்பில் அவரை வரவேற்பதற்காக மூத்தவர் ஃபானுவும் பிறரும் காத்திருந்தனர். அந்தணர் வேதம் ஓதி அவரை வாழ்த்தினர். மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் முறைமை செய்தனர். ஃபானு கிருதவர்மன் தேரிலிருந்து இறங்கியதும் அவரை வரவேற்பதற்காக கைநீட்டியபடி வந்தார். கிருதவர்மனின் கால்தொட்டு சென்னி சூடும்போது அறியாமல் விம்மி அழுதுவிட்டார். கிருதவர்மன் அவரை இரு கைகளாலும் அள்ளி தன் தோளோடு அணைத்தார். “நன்று! சூழ்க நலம்!” என்றார்.

“இனி நான் எதுவும் துயரடைவதற்கில்லை. இனி என் கொடிவழிகள் சிறப்புறும். நான் மாண்புறுவேன்” என்று ஃபானு சொன்னார். “துவாரகை மாண்புறும்” என்று கிருதவர்மன் கூறினார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றோம். செல்லும் வழியிலேயே அவர் திரும்பி என்னிடம் “பிற மைந்தர்கள் இந்த அரண்மனையில்தான் இருக்கிறார்கள் அல்லவா?” என்றார். நான் “ஆம்” என்றேன். “அவர்கள் ஏன் என்னை வரவேற்க வரவில்லை?” என்றார். நான் ஃபானுவை பார்க்க அவர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “இந்நகருக்கு நான் யாதவனாக வரவில்லை” என்றார். பின்னர் “எனில் நான் சென்று அவர்களை பார்க்கிறேன்” என்றார்.

ஃபானு “அல்ல, அது முறையல்ல” என்றார். “தாங்கள் எங்கள் தந்தையின் இடத்தில் இருப்பவர்.” நான் ஃபானுவிடம் “அல்ல, மூத்தவரே. அவர் விரும்பியதை செய்யட்டும். தந்தையருக்கு அறிவுரை கூறவும் வழிநடத்தவும் நாம் இங்கு அழைத்து வரவில்லை. தந்தையரின் பாதையை நாம் தொடர்வோம்” என்று சொன்னேன். ஃபானு பல்லைக் கடித்து “என்ன சொல்கிறாய்?” என்றார். நான் விழிகளால் நிகழட்டும் என்று காட்டினேன். அவர் அடங்கினார். கிருதவர்மன் அண்ணாந்து அரண்மனையை நோக்கினார். “நெடுங்காலம்” என்றார். “ஆம்” என்று அவரே சொல்லிக்கொண்டார். திரும்பி என்னிடம் “சததன்வாவை அறிந்திருக்கிறீர்களா?” என்றார். “ஆம்” என்றேன். “தந்தையால் கொல்லப்பட்டவர்.” அவர் “ஆம்” என்றார். நீண்ட பெருமூச்சுடன் “இன்று நகர்நுழைகையில் அவரும் என்னுடன் இருந்ததாகவே உணர்ந்தேன்” என்றார்.

எங்கள் விழிகள் மாறிவிட்டிருந்தன. கிருதவர்மன் என்னிடம் “என்னை பிரத்யும்னனிடம் அழைத்துச் செல்க!” என்று சொன்னார். “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்று சுஃபானு சொன்னார். “இல்லை, ஓய்வெடுத்தபின் நான் சென்று சந்திப்பது வேறு. நகரணைந்ததும் முதலில் உங்களை சந்தித்ததுமே அவர்களை சந்திக்கிறேன் என்பது வேறு. என் எண்ணமென்ன என்று அவர்கள் தெளிவுறுவதற்கு ஒரு வாய்ப்பு” என்று கிருதவர்மன் கூறினார். சுஃபானு “அவர்கள் எவ்வகையில் அதை எதிர்கொள்வார்கள் என்பது…” என்றார். “அதை எண்ணாமலேயே அவனை சந்திக்கச் செல்கையிலேயே என் நோக்கம் கூர்கொள்கிறது” என்றார் கிருதவர்மன். “ஆனால்…” என்று ஃபானு சொன்னார். “என் விழைவு இது” என்று கிருதவர்மன் சொல்ல ஃபானு தலைவணங்கினார்.

நான் அமைச்சரிடம் “தந்தையை அங்கே அழைத்துச் செல்க!” என்றேன். இன்னொரு அமைச்சரிடம் “முன்னால் சென்று கிருதவர்மன் வந்துகொண்டிருப்பதை பிரத்யும்னனுக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டேன். என்னருகே ஓடிவந்த சுஃபானு “என்ன எண்ணுகிறாய் நீ? அவர் தந்தைக்கு நிகரான இடத்திலிருக்கும் யாதவ மூதாதை. அவரே சென்று பிரத்யும்னனை சந்திப்பதென்றால் தலைவணங்குவதுபோல் அல்லவா?” என்றார். “அல்ல, அவர் செல்லட்டும். பிரத்யும்னனை சந்திக்க அவர் இரு கைகளையும் விரித்துக்கொண்டு தானே தேடிச்சென்றார் என்பது இன்று துவாரகையில் அவரைப்பற்றி எழுந்திருக்கும் எண்ணத்தை மேலும் பெரிதுபடுத்தும். அவர் பேருருக்கொள்வது நமக்கே நல்லது” என்றேன்.

“அவரை வாழ்த்தி வரவேற்பதென்றால் பிரத்யும்னன் அரியணையிலிருந்து எழுந்து வந்து கால்தொட்டு சென்னி சூடியாகவேண்டும். அவரை அவர் அவைச்சிறுமை செய்வாரெனில் துவாரகையில் அதன்பொருட்டே பெரும் பழியை ஏற்றுக்கொள்பவர் ஆவார். இரண்டுமே அவரை படியிறக்கம் செய்வதுதான். ஷத்ரியர் நோக்கில் அவரை யாதவ மைந்தராக நிறுத்துவதுதான். இரண்டில் ஒன்றை தெரிவு செய்யும் நிலையை அவருக்கு நான் அளித்துவிட்டேன்” என்றேன்.

இடைநாழியினூடாக கிருதவர்மன் செல்கையில் அரண்மனையின் ஏவலர்கள் அனைவரும் கைகூப்பி வணங்கியபடி வந்து நின்றிருப்பதை கண்டேன். ஒவ்வொருவரும் கண்கனிந்து மெய்ப்புகொண்டவர்கள்போல் இருந்தார்கள். உடல் ஒடுங்கி கைகூப்பியிருந்தார்கள். அவர் எவரையும் பார்க்கவில்லை. அவர் சென்ற வழியில் காலடியில் அத்தனை உள்ளங்களும் சென்று படிகின்றன என்று கண்டேன். தலைவரில்லாது செயல்பட்டவர்கள் அவர்கள். தந்தையே, தலைவரென்று ஒருவர் இலாது செயல்படும் திறன் கொண்டவர்கள் இப்புவியில் சிலரே. அவர்கள் தந்தையென்றும் தலைவரென்றும் ஆகிறவர்கள். எஞ்சியோர் தந்தையும் தலைவரும் இல்லாத நிலையில் கைவிடப்படுகிறார்கள். தந்தையென்றும் தலைவன் என்றும் தெய்வ வடிவென்றும் ஒன்றை உருவாக்கி அதன் நிழலில் இளைப்பாறுகிறார்கள். துவாரகை எப்படி கைவிடப்பட்டிருந்தது என்பது அப்போது தெரிந்தது. எத்தனை ஏக்கத்துடன், துயருடன் அது தங்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தது என.

எத்தனை விரைவாக கிருதவர்மன் தங்கள் வடிவென மாறிக்கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு நான் வியந்தேன். அவர் ஒன்றும் செய்யவில்லை, அவரை அவ்வண்ணம் ஆக்கியது அச்சூழல். கிருதவர்மனின் முகம் தங்களுடையது அல்ல. நடை தங்களுடையதல்ல. ஆனால் நான் ஓரக்கண்ணால் கண்ட அசைவு தங்களுடையது. ஒருகணத்தில் அவரை நிழலென தரையிலோ சுவரிலோ கண்டால் அது நீங்களே என்று தோன்றியது. தந்தையே, பீலித் திருமுடி சூடிய குழல்கொண்டிருப்பதைப் போலவே!

கிருதவர்மன் அங்கு செல்வதற்குள்ளாகவே அரண்மனையில் தங்கள் பகுதியிலிருந்து பிரத்யும்னனும் அவர் மைந்தர் அநிருத்தனும் இளையோரும் பெருங்கூட்டமாக கைகூப்பியபடி இடைநாழியில் எதிரே வந்தார்கள். பிரத்யும்னன் அருகணைந்து வந்த விசையிலேயே குனிந்து கிருதவர்மனின் கால் தொட்டு சென்னி சூடினார். உடைந்த குரலில் “தந்தையே, தங்கள் வருகைக்காக நான் நல்லூழ் கொண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். “உன்னை அங்கு எதிர்பார்த்தேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “நான் வந்திருக்கலாம். அதை யாதவர்கள் விரும்புவார்களா என்று ஐயுற்றேன். தங்களுக்கு மட்டுமே உரியவர் நீங்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அவ்வெண்ணத்தால் அங்கு பூசல் உருவானால் அந்நிலையின் மங்கலத்தன்மை குறைந்துவிடுமென்று ஐயுற்றேன். ஆகவேதான் நான் ஒழிந்தேன்” என்றார்.

“நான் அனைவருக்கும் உரியவன், இக்குடியின் மூதாதை” என்று அவர் சொன்னார். “ஆம், ஆகவேதான் தங்கள் வருகை என்பது எங்கள் குடிக்கு பேரருள்” என்றார் பிரத்யும்னன். ”மைந்தா, வணங்குக!” அநிருத்தன் அவரை வணங்க அவர் அள்ளி எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரையாக தழுவினார். ஒவ்வொரு தோளையும் தலையையும் அவர் தொட்டார். கனிந்த குரலில் ஒவ்வொருவரிடமும் நலம் உசாவினார். ஒவ்வொருவரும் கண்கள் கனிந்தனர். அவர் தொடுகையில் உடல் உருகினர்.

“வருக தந்தையே, தங்களை எங்கள் அரண்மனைக்கு அழைத்துசெல்கிறேன்” என்று பிரத்யும்னன் சொன்னார். “இல்லை, என்னை சாம்பனிடம் அழைத்துச் செல்” என்று அவர் சொன்னார். பிரத்யும்னன் “ஆம், அதுவே முறை” என்று கூறி “வருக, நானே அழைத்துச்செல்கிறேன்” என்றார். பிரத்யும்னனும் இளையோரும் சூழ அவர் சாம்பனின் அரண்மனைப் பகுதி நோக்கி நடந்தார். அவர்கள் செல்லச் செல்ல சாம்பனின் அரண்மனைக்கு அச்செய்தி சென்றிருக்கலாம். அங்கிருந்து சாம்பனும் இளையோரும் கிளம்பி எதிரே வந்தனர். சாம்பன் அங்கிருந்து வருகையிலேயே இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிக்கொண்டிருந்தார். அருகணைந்து கால் தொட்டு வணங்குகையில் கிருதவர்மன் அவர் தோளைத் தொட்டு தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டார்.

கிருதவர்மன் ஏதேனும் சொல்வதற்குள்ளாகவே சாம்பன் விம்மி அழத்தொடங்கினார். அவரது இளையோரும் அழத்தொடங்கினர். அவரது கைகளைப் பற்றியபடி “என்ன இது? நீங்கள் இளையோர். ஒற்றைக் குருதியினர். பெருமானுடன் ஒருவனின் மைந்தர். அந்நிலையிலிருந்து சிறு வழுவல் இருந்திருக்கலாம், அது இல்லை என்றாவதில்லை” என்று கிருதவர்மன் கூறினார். சாம்பன் “தாங்கள் வந்துவிட்டீர்கள். இனி தங்கள் காலடியில் அமர்ந்திருப்போம்” என்றார். பிரத்யும்னனை நோக்கி “இளையோனை தழுவிக்கொள்க, மைந்தா!” என்றார் கிருதவர்மன். பிரத்யும்னன் இரு கைகளையும் விரிக்க சாம்பன் பாய்ந்துசென்று தழுவிக்கொண்டார். அவர்கள் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் இறுக்கிக்கொண்டார்கள்.

இளையோர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர். அங்கு நின்றிருந்த என் உள்ளம்கூட அனைத்தையும் மறந்து உவகை கொண்டது. என் கண்களிலிருந்தும் நீர் வழிந்துகொண்டிருந்தது. “வருக! நாம் சென்று ஃபானுவை பார்ப்போம்” என்றார் கிருதவர்மன். “ஆம், அவர் மூத்தவர். நாம் சென்று பார்த்தாகவேண்டும்” என்று பிரத்யும்னன் சொன்னார். சாம்பனையும், பிரத்யும்னனையும், அனைத்து இளையோரையும் அழைத்துக்கொண்டு கிருதவர்மன் திரும்பி யாதவப் பகுதிக்கு வந்தார். அவரது வருகையைக் கண்டதும் யாதவர்கள் அரண்மனையின் பல பகுதிகளிலிருந்தும் ஓடிவந்து இடைநாழியின் இரு பகுதிகளிலும் செறிந்தனர். அவர்கள் செல்லச்செல்ல வாழ்த்தொலி எழுந்தது.

தன் அவைமுகப்பில் கைகூப்பி உடல் நடுங்கியபடி நின்றிருந்தார் ஃபானு. கிருதவர்மன் சாம்பனின் தோளிலும் பிரத்யும்னனின் தோளிலும் இரு கைகளை போட்டபடி நடந்து வருவதைக் கண்டு கைகூப்பி நின்றார். அருகணைந்த கிருதவர்மன் “இளையோரே, உங்கள் மூத்தவரை வணங்குக!” என்றார். சாம்பனும் பிரத்யும்னனும் வந்து ஃபானுவை கால் தொட்டு வணங்கினர். அவர் இரு கைகளையும் தூக்கி அவர்களை அணைத்துக்கொண்டார். மூவரும் ஒன்றாக தழுவிக்கொண்டனர்.

எங்கிருந்தோ முதிய யாதவ வீரன் ஒருவன் “எழுக மாமன்னர்! எழுக துவாரகை! எழுக பெரும்புகழ்! எழுக பேரறம்! திகழ்க தெய்வங்கள்! நிறைவுறுக மூதாதையர்!” என்று கூவினான். அங்கிருந்த அத்தனை வீரர்களும் பெருங்குரலெடுத்து வாழ்த்தொலி எழுப்பினர். அரண்மனையிலிருந்து அக்குரல் எழுந்து பரவி முற்றத்தை அடைந்து நகரமெங்கும் நிறைந்தது. நகர் கடலோசை என வாழ்த்தொலி எழுப்பியது. மெல்லிய ஆடைபோல் அரண்மனை அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளுக்குள்ளும் அவ்வுணர்வு சென்று நிறைந்தது. ஒலியே ஒளியென்றாக முடியும் என்று அன்று கண்டேன்.

தொடர்புடைய பதிவுகள்

ஏகம், ஆனையில்லா -கடிதங்கள்

$
0
0

“ஆனையில்லா!” [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

ஆனையில்லா ஒர் அற்புதமான சிறுகதை. அந்தச் சிறுகதை இதற்குள்ளாகவே எங்கள் குடும்ப வாட்ஸப்குழுமத்தில் ஒரு தொன்மக்கதை போல புழங்க ஆரம்பித்துவிட்டது 82 வயதான என் அத்தை அதை குழந்தைக்கதை போல சிரிக்கச் சிரிக்க குழந்தைகளுக்குச் சொன்னார்கள். அதை அப்படியே பதிவுசெய்து சுற்றவிட்டிருக்கிறார்கள்.

 

எவ்வளவு அற்புதமான கதை என்று அந்த பலவகையான வடிவங்களைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அதை ஒரு குட்டி நாடகமாக நானே எழுதினேன். [அதாவது ரெக்கார்ட் செய்தேன்] நான் ஆனையாக மேஜைக்கு அடியில் மாட்டிக்கொண்டேன். என் பிள்ளைகளும் அக்கா பிள்ளைகளும் சேர்ந்து என்னை வெளியே எடுக்க முயன்றார்கள். கடைசியில் என் மகள் பூசாரியாக நடித்து என்னை ‘ஆனைக்குட்டி’ ஆக மாற்றி வெளியே எடுத்தாள். சிரிப்பு என்றால் அப்படி ஒரு சிரிப்பு

 

நன்றி ஜெ

 

அருண்குமார் பத்மநாபன்

 

 

அன்பின் ஜெ,

 

எப்படி இருக்கிறீர்கள்.இந்த நாட்களில் நீங்கள் எழுதும் சிறுகதைகள் அத்தனையும் அற்புதமான வை.சூழ்ந்திருக்கும் செய்திகளுக்கு நடுவில் உங்கள் எழுத்துகளை மட்டுமே வாசிக்கின்றேன்.இந்நாட்களில் நீங்கள் ஆரம்பத்திலேயே எழுதியதை பின்பற்றியே வாசிப்பு எழுத்து இசை திரைப்படங்கள் என்று என் முறைமைகளை வகுத்து பின்பற்றுகிறேன்.இல்லையென்றால் நானும் இந்த எதிர்மறைகளில் கரைந்திருப்பேன்.

 

 

ஒவ்வொரு நாளும் ஒரு சிறுகதை என்பதே எத்தனை பெரியது.நினைக்கும்போதே பிரம்மிப்பாய் இருக்கிறது.உங்கள் எழுதுதுகளே உங்கள் பலம்.இத்தனை உயிர்ப்பான சிறுகதைகள் எனக்கு மிகுந்த நிறைவளிக்கின்றன.தினமும் அதிகாலையில் முதலில் வாசித்து விடுகிறேன்.அதைப்பற்றி எழுதுவதற்கே எனக்கு சோம்பல்.அதனால் தான் உங்கள் எழுத்து வேகத்தை பார்த்து ஆச்சரியம் கொள்கிறேன்.

 

 

ஆனையில்லா மிகச்சிறந்த சிறுகதை.மரவீட்டில் ஆனை நுழைவது என்பதே ஒரு பதற்றமான குதூகலம் தான்.அதனச்சுற்றி நிகழும் ஒவ்வொரு வார்த்தையாடல்களும் பகடிகளும் உயிரோட்டமானவை.யானக்கு கிரீஸ் தடவுவதை யெல்லாம் சிரித்து சிரித்து வாசித்தேன்.என் பிள்ளைகளும் மிகவும் ரசித்தார்கள்.வீட்டில் மூன்று பேருக்கும் கதைகளை சொல்லி விடுவேன்.என் சிறு வயதில் இது போன்ற வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து நாங்கள் கூடி நின்று பார்த்ததையெல்லாம் நினைத்தேன்‌.

 

 

அனைத்து சிறுகதைகளையும் மீண்டும் முழுமையாக வாசித்து விட்டு விரிவாக எழுத வேண்டும்.

 

 

இந்த தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை உற்சாகமாக கடந்து செல்ல உங்கள் எழுத்துக்களே காரணம்.மிக அற்புதமான சிறுகதைகளுக்கு

 

நன்றி ஜெ.

அன்புடன்

மோனிகா மாறன்.

 

ஏகம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ஏகம்- அதுதான் எங்கும் இருக்கிறது. பலவாக இங்கே பெருகி நீ நான் என்றெல்லாம் நிறைந்திருப்பது ஒன்றே. ‘அந்த ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம்’ கதையும் அதைத்தான் சொல்கிறது

 

ஆனால் ‘யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி’ நிற்பதும் அவனே. ஆகவேதான் மனிதன் எப்படியானாலும் தனிமையானவன், ஒரு மனிதனுக்குள் இன்னொரு மனிதன் நுழையவே முடியாது என்றெல்லாம் பேச்சு வருகிறது. அந்த ஆணவம் அறிவிலிருந்து வருவது .அதை அறிவை அழிக்கும் இசை மிக இயல்பாக கடந்துசெல்கிறது. ஒருவர் இருவராகலாம். இருவர் பல்லாயிரம் ஆகலாம். ஒருவர் கிடந்து இருவர் அமர்ந்து மூவர் நின்றால் அனைவரையும் ஒன்றாக்கும் நாலாவது அங்கே வந்துவிடுகிறது

 

சிவக்குமார் செல்வராஜா

 

 

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

புத்தாண்டு வாழ்த்துக்கள்.  அத்துடன் நன்றி.  பெரும் புயலில் மலையை குடையெனத் தூக்கி நின்ற கண்ணன் நினைவுக்கு வருகிறான்.  எழுத்தின் ஆற்றலை வாசிப்பின் பயனை மீண்டும் நீருபிக்கக் கூடிய இச்சிறுகதைகள்.  உவகையுடன் கூறுவேன் ஆம் அவ்வாறே.  ஜேகேவின் கதைகள் “கருத்துநிலை கதைகள்” என்கிறார் கோபாலன்.  அதற்கு எதிராக சொல்லப்படும் ”கருத்துக்களை எப்டி சொல்லியிருக்குங்கிறதுதான் இலக்கியத்தோட அளவுகோல்” என்பதன்படி நல்லதொரு கதைக்கு உதாரணமாகவும் ஏகம் சிறுகதை விளங்குகிறது.

 

இலக்கியம் கலை ஆன்மிகம் எல்லாமே தனிமையைப் போக்கத்தான் என்று கூறும் ராகவன் ஜேகேவுடன் மணிக்கு வாய்த்த தனிமை கண்டு ஏங்கி கண்ணீர் கொள்கிறார்.  கொல்லைபுறமான நுழைவல்ல தாங்கும் நிலமே அவை தாமென்று சொல்லாமல் சொல்கிறது ஏகம்.  ஜேகேவும் மணியும் இறைவனும் பக்தனும் அல்லது குருவும் சீடனும்.  எது தனிமை? எது நேச்சுரல் அன்நேச்சுரல்? என்று கேள்விகள் தோற்றுவிக்கிறது.  தனிமை அருளப்பட்டவருக்கே உண்மையான தனித்தன்மையும் மெய்மையென்னும் பொதுமையும் அமைகிறது என்று காட்டுகிறது ஜேகேவின் பாத்திரம்.

 

 

அன்புடன்

விக்ரம்

கோவை

 

தொடர்புடைய பதிவுகள்

ஆட்டக்கதை, எழுகதிர் -கடிதங்கள்

$
0
0

ஆட்டக்கதை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ஆட்டக்கதை போன்ற ஒரு சிறுகதை ஓர் இணையதளத்தில் வந்தால் குறைந்தது 15 நாட்கள் கடந்துதான் அடுத்த கதை வரவேண்டும். ஆனால் அடுத்தடுத்த கதைகளாக வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு களம். இத்தனை மாறுபட்ட களங்களில் கதைகள் வந்து குவியும்போது வாசிப்பது மட்டுமல்ல நினைவில் வைத்துக்கொள்வதும் உள்வாங்கிக்கொள்வதும் பெரிய சவாலாக ஆகிவிடுகிறது.

 

ஆட்டக்கதையை நான் இன்னொரு முறை படித்த பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தக்கதையை என்னுடைய சொந்த அனுபவத்தை வைத்து புரிந்துகொள்கிறேன். அந்த இரட்டைப் பெண்கள் என் வாழ்க்கையில் இல்லை. ஆனால் ஒரு பெண் என் வாழ்க்கையில் வந்தாள். இன்னொருத்தியின் இடத்தில் இந்த உலகத்திலுள்ள அத்தனை பெண்களும் கலந்த ஒரு கற்பனைப்பெண் இருந்தாள். இவள் கையில் கிடைத்தாள், அவள் கிடைக்கவில்லை. இரண்டுபெண்களுக்கும் நடுவே அலைக்கழிந்தேன்

 

இந்தக்கதையில் அந்த கதைசொல்லி அந்தப்பெண்ணை படிப்படியாக அறிந்துகொண்டே செல்லும் ஒரு பரிணாமம் இருக்கிறது. முதல்நாளில் உடலாக, காமமாக அறிகிறார். அதன்பிறகு முதல் சண்டை. அதில் அவளுடைய நஞ்சு என்ன என்று தெரிந்துகொள்கிறார். அவர்களின் இடங்கள், கடக்கக்கூடாத கோடுகள் தெளிவாகின்றன. அடுத்து அவளுடைய ஸ்பிரிச்சுவல் ஸ்ட்ரெங்த் அல்லது மாரல் ஸ்டிரெங்த் பிடிகிடைக்கிறது. அதோடு அவள் முழுமையாக மனைவி ஆகிறாள். அவள் மடியில் கிடந்து அழும்போது அந்த பரிணாமம் முழுமை ஆகிறது

 

ஆனால் அதன்பின் அவளுடைய மரணம். அந்த மரணத்தை உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் அவளுடைய இளமைக்கால படம். அதில் அவள் திருமணத்திற்கு முந்தைய நிலையில் இருக்கிறாள். இந்தக்கதையின் மிக ஆர்ட்டிஸ்டிக்கான இடம், மிகமிக நுட்பமான இடம் இது. உண்மையில் நான் இதுவரை வாசித்த கதைகளிலேயே மிக அணுக்கமாக உணர்ந்த ஒரு இடம். இந்த இடத்தில் ஒரே கணத்தில் அவள் மொத்த தாம்பத்திய வாழ்க்கையையும் கடந்து ரிவர்ஸில் சென்றுவிடுகிறாள். அவர் பெண்பார்க்கச் செல்வதற்கு முந்தைய இடத்தை அடைந்துவிடுகிறாள். அதன்பிறகுதான் அவருக்கு விடுதலை. அவர் நிறைவடைகிறார்

 

அவள் ஓர் இடத்திலிருந்து முளைத்து எழுந்து பெரிதாகி பின்னர் அப்படியே சுருங்கி மீண்டும் பழைய புள்ளிக்குச் சென்று முடிகிறாள். ஆச்சரியமான ஒரு கர்வ் இது. இந்தக்கதையை பலமுறை படிக்கவேண்டும். இதன் ஒட்டுமொத்த வடிவத்தை உள்வாங்கிக்கொள்ளவேண்டும்

 

எஸ்.ஆர்.ஸ்ரீதர்

 

வணக்கம் ஜெ.

 

ஆட்டக்கதை சிறுகதையை வாசித்தேன். கதகளியை முன்னர் பார்த்த அனுபவமோ அதனை உள்வாங்கும் பயிற்சியும் எனக்கு இல்லை. இருப்பினும், இந்தக் கதையில் ‘பலசமயம் பதம் நாலுவரிதான் இருக்கும் சொல்லியாட்டம் நான்கு மணிநேரம் ஓடும். இது ஒரு சொல்லியாட்டம்…” என வரும் வரிகளே முக்கியமானவை. கதகளியினைப் பற்றிய முதற்திறப்பாக இருக்கிறது.

 

அதுபோலவே ராஜசேகரன் நாயருக்குத் திருமணத்துக்கு முன்னால் ஏற்படும் ஐய உணர்வு மெல்ல இரச மாற்றம் அடைந்து வாழ்நாளெல்லாம் பல ஆட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. கருவுறுதல் வரையில் நான் என்ற சுயம் அழியாமல் இருக்கிறது. அதன் பின் ஆண் பெண் இருவருமே தம் சுயத்தை மெல்ல விட்டொழியத் தொடங்குகின்றனர். இந்தக் கதையின் சொல்லியாட்டம் அங்கிருந்தே தொடங்குகிறது.

 

அரவின் குமார்

எழுகதிர் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

 

எழுக்கதிர் ஒரு மாபெரும் கேன்வாஸில் நிகழும் கதை.

 

கதாநாயகனின் நண்பன் வழியாக கதை சொல்லப்படுவதால் ஒரு சிறுகதை வடிவத்தை அடைந்துள்ளது. ஸ்ரீ யின் பார்வையில் நிகழ்ந்தால் எத்தனை சாகசங்கள், எத்தனை ததள்ளிப்புகள், எத்தனை அழைகளைப்புகள். அது ஒரு நாவலின் களமாக விரிய கூடியது. ஸ்ரீ யின் பார்வையில் நினைக்கவே திகிலாக உள்ளது. {பின்தொடரும் நிழல் வீரபத்ரனை போல்!}

 

வாசிக்கும் போதே இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முற்படும் போது கதையில் ஒரு திருப்பம் வருகிறது. ஸ்ரீ இடம் உள்ள அருண பிந்துவை பறித்து கொள்கிறார்கள், அது வெறும் கூழாங்கல்லாக உள்ளது(அர்ஜுனன் எடுத்த அஸ்வத்தாமனின் நுதல் மணி போல்). ஸ்ரீ யே அம்மணியாக மாறி கிழக்கே சென்று கொண்டே இருக்கிறான்.

 

கதையின் முடிவு ஒரு உச்சம். அவன் மலேசிய, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் என்று சென்று கொண்டே இருக்கிறான்.கிழக்கே அருணனை நோக்கி! (ஏழு எட்டு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ ஜகார்த்தாவில் தென்படுகிறான். ஒருவேளை அது இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்றாக இருக்குமோ??!!)

 

தங்கள்,

 

கிஷோர் குமார்.

 

 

ஜெ. வணக்கம் நலம்தானே

 

“எழுகதிர்” படித்தேன். ஒரு திரைப்படமாக எடுக்கக்கூடிய எல்லாவித சாத்தியமும் இக்கதையில் உள்ளது. கொள்ளயடித்தவர்கள் யாரென்று தெரிவித்தபின் கதையை நகர்த்திக்கொண்டுபோவது ஒரு பெரிய கலை.தாங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஸ்ரீகண்டனும் கதைசொல்லியும் போன பாதையை ஒரு வரைபடமாக்கினால் மிகச் சரியாக இருக்கும். அதுவே கதையின் நம்பகத்தன்மை யைக் கூட்டுகிறது.ஸ்ரீகண்டனிடம் இருக்கின்ற பாதுகாப்புணர்வு, தப்பிக்கும் வழிகள் எல்லாம் பிரமிக்கவைக்கின்றன. ஒரு கைதேர்ந்த கள்ளனைப் படம்பிடித்துக் காட்டி உள்ளீர்கள்.

 

ஒரு பத்திரிகைச் செய்தி என்று கூறி அதன் அடிப்படையில் ஒரு கதையை எழுதி வாசகரை அதனுள்ளே இழுப்பது மிகப்பெரும் சவால்.எல்லாரும் கொள்ளையைக் கதையாக எழுதிக் கள்ளர்கள் பிடிபடும்போது கதையைச் சுபம் என முடித்து விடுவார்கள்.

 

ஒரு கட்டத்தில் கதைசொல்லிக்கு வெறுப்பு வந்து ஸ்ரீகண்டனைத் தாக்குவது யதார்த்தம். ஏனெனில் இது அவனுக்குப் பழக்கமில்லாத வழி.எனவே அச்சம் வருகிறது

 

அந்தத் தாக்குதல் மூலம்தான் அவன் தன்னால் தனியாகப் போகமுடியாது என்று உணரமுடிகிறது. எந்தத் திருட்டிலும் அல்லது கொலையிலும் ஈடுபடுபவர்கள் ஏதேனும் ஒரு தடயத்தைத் தாங்கள் அறியாமல் விட்டுவிடுவார்கள் என்று சொல்வார்கள். அப்படித்தான் தங்கிய அறையில் ஒரு காசைவிட்டுவிட்டு வந்ததால் பிடிபடுவது காட்டப்படுகிறது. ஆனாலும் மீண்டும் ஸ்ரீகண்டன் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறான் என்றால் அவன்தான் எழுகதிரா?  மீண்டும் பிரகாசமாகிப் பெரும் கொள்ளைக்குத் திட்டமிடுகிறானா. இல்லை சமூகத்தில்பெரிய் அந்தஸ்த்தில் இருந்துகொண்டு உயர்நிலைக்கு எழும் கதிரா என் வாசகருக்குப் பல கதவுகளைத் திறக்கும் அற்புதமான கதை இது.

.

வளவ துரையன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 17093 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>