Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16764 articles
Browse latest View live

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 14

விருந்தினர் இல்லமாக இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டிருந்தது ரைவதமலையில் இருந்தவற்றிலேயே பெரிய இல்லம். ஆனால் துவாரகையின் மாளிகையுடன் ஒப்பிடுகையில் அதை சிறிய குடில் என்றே சொல்லவேண்டும் என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அதன் வாயிலில் நின்ற ஏவலன் தலைவணங்கினான். இளைய யாதவர் இயல்பாக “உள்ளே வருக” என்றபின் நுழைந்து குறடுகளை காலாலேயே உதறிவிட்டு துள்ளி மஞ்சத்தில் விழுந்து மல்லாந்து படுத்து ஒரு தலையணையை எடுத்து மார்பின்மேல் வைத்துக்கொண்டார். அவரிடம் எப்போதுமிருக்கும் அந்தச் சிறுவனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் புன்னகை செய்தான்.

“பிரபாசதீர்த்தத்திற்கு வந்தவர் என் அணுக்கரான கதர். ஆனால் அவரை நான் ஒரே ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “வரலாற்றின் முன் திகைத்து நிற்கும் ஓர் எளியவர் என தன்னை உணர்வதாக சொன்னார்” என்றான் அர்ஜுனன். “வரலாற்றை அறிந்தவர்கள் அதன் முன் திகைத்து நிற்பதில்லை. அதன் பொருளின்மையைக் கண்டு அயர்ச்சிதான் கொள்கிறார்கள். பின்னர் சிறுநகைப்பாக அதை முதிரச்செய்து அதிலிருந்து தப்புகிறார்கள்” என்றார் இளைய யாதவர். “வரலாறு என்று ஒன்று உண்டா என்ன? இருப்பது நினைவு மட்டுமே. அடிக்கடி தீப்பிடிக்கும் காடுகளில் தீப்பிடிக்காத நீரிலைக் கற்றாழைகள் வளர்ந்து காட்டுக்கு அரணிட்டிருப்பதை கண்டிருக்கிறேன். மரங்களுக்கும் வரலாற்று நினைவு உள்ளது.”

“சொல்லில் அமைந்த வரலாற்றையே நாம் அறிகிறோம். அது மிக மிக மேலோட்டமானது. கனவுகளிலும் சுஷுப்தியிலும் படிந்துள்ள வரலாற்றின் மேல் ஜாக்ரத்தில் மானுடன் செதுக்கி வைக்கும் வரலாறு அது. பலசமயம் ஆழத்து வரலாற்றை அஞ்சியோ கூசியோ அதை மறைப்பதற்காக இதை எழுதுகிறான். இது பொய் என அவன் அறிந்தமையாலேயே இதை நிலைநாட்ட சொல்லடுக்குகளை குவிக்கிறான். சொல்லுக்கு அருகே வாளையும் காவல் வைக்கிறான்” என்று இளைய யாதவர் சொன்னார். “அத்தனை வரலாறுகளும் குன்றுமேலிருந்து நோக்கும்போது மானுடரின் மாளிகைகள் எளிய சிதல்புற்றுகளாகத் தெரிவதுபோல பொருளிழந்து தெரிகின்றன.”

அர்ஜுனன் “அன்று என்ன நிகழ்ந்தது?” என்றான். “தாங்கள் அரிஷ்டநேமியுடன் போரிட்டீர்களா?” இளைய யாதவர் “ஆம்” என்றார். “ஆனால் துவாரகையின் வரலாறுகளில் அப்போர் இல்லை. வேறேதோ வரலாற்றில் அது இருந்துகொண்டும் இருக்கும். அக்ரூரர் அவ்வரலாற்றை அழிக்க முயல்கிறார். அதை முற்றாக அழிக்க வேண்டுமென்றால் கம்சரைப் போல கருக்குழந்தைகளை தேடித்தேடி கொல்லவேண்டும். அதைவிட அதுவும் என் புகழென நீடிக்கட்டும் என விட்டுவிட்டேன்.”

இளைய யாதவர் கைகளை நீட்டி உடலை நெளித்து “நீண்டபயணம்… இங்கு வருவது எளிதல்ல. புரவிப்பாதை மட்டுமே சீராக உள்ளது” என்றார். பின்பு “நானும் அவரும் போரிட்டோம். துவாரகையின் செண்டுவெளியின் நடுவே எங்கள் இருவரின் மற்போருக்கென களம் அமைக்கப்பட்டிருந்தது” என்று சொன்னார். “நாங்கள் தோள்பொருதும் செய்தி முதலில் துவாரகையெங்கும் பரவியபோது எழுந்த உணர்வுகளை ஒற்றர்கள் எனக்கு தெரிவித்தனர். எளிய மக்கள் பதற்றமும் தீவிரமும் அடைந்து பாம்பு நுழைந்த மரத்தின் பறவைகள் போல ஓசையிட்டு பேசிக்கொண்டிருந்தனர். முதியவர்கள் கைகூப்பி தெய்வங்களுடனும் மூதாதையர்களுடனும் வேண்டிக்கொண்டிருந்தனர். பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். காலை முதலே நகரம் வேண்டியவர்களின் இறப்புக்கு துயர் கொள்வதுபோல் அமைந்திருந்தது. என் உப்பரிகை முகப்பிலிருந்து நகரை நோக்குகையில் நனைந்த மரவுரி ஒன்றால் துவாரகையை மூடி வைத்திருப்பது போல் ஒலிகள் அடங்கி ஒலிப்பதை கேட்டேன்.”

போருக்கு ஃபால்குன மாதம் கருநிலவுநாளின் பிற்பகலை குறித்திருந்தனர். ஏழுநாட்கள் அதற்காக காத்திருந்தேன். முதல் நாள் இருந்த உணர்வெழுச்சிகள் மெல்லமெல்ல மாறுவதை கண்டேன். நான் தோற்றுவிடுவேனோ என்னும் ஐயமும் அச்சமும் துவாரகையினருக்கு இருந்தது. அவர்கள் தங்களுக்குள் பிரிந்து பேசப்பேச அவை அகன்றன. மூத்தவர் வெல்லக்கூடுமோ என்னும் ஐயத்தில் அப்போரை தங்கள் உள்ளங்களில் மீளமீள நிகழ்த்திக்கொண்டனர். அப்போரில் அவர் தன் தூய தசைவல்லமையால் வெல்வதை கற்பனையில் கண்டனர். அதை வியந்து பின்னர் அதை விரும்பத்தொடங்கினர். அவர் வெல்லவேண்டுமென்ற விழைவாக அது மாறியது. பின்னர் நான் தோற்கவேண்டுமென்னும் விழைவென அது உருக்கொண்டது.

பார்த்தரே, எளிய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அம்மாற்றத்தால் தங்கள் வாழ்வு தலைகீழாகுமென்றாலும் சரி. முந்தைய கணம் வரை சார்ந்திருந்த ஒன்று சரிவதைக்கூட அதன் பொருட்டு விழைவார்கள். ஏதேனும் ஒன்று நிகழ்ந்து தாங்கள் கொண்டாடிய ஒன்று வீழ்ச்சியடையுமென்றால் அதில் அவர்களின் அகம் களிக்கும். எழுந்தவை அனைத்தையும் நிலம் இழுப்பதுபோல எளியோர் வென்றவரையும் நின்றவரையும் பற்றிச்சரிக்க ஒவ்வொரு கணமும் தவிக்கிறார்கள். இப்புவியை ஆளும் வல்லமைகளில் ஒன்று எளியோரின் வஞ்சம். அதை நன்கறிந்திருந்தபோதும்கூட அன்று நான் என் நகர்மக்களின் விழிகளைக் கண்டு அஞ்சினேன். ஒவ்வொருவரும் என் விழிகளைத் தவிர்த்து மிகையாக வணங்கி கடந்துசென்றனர். என் முதுகில் நோக்கு நட்டு தங்கள் உள்ளவிழைவை உணர்ந்து பின் பிறர் விழிகளை நோக்கி அவ்விழைவை அவர்கள் அறிகிறார்களா என்று கூர்ந்தனர். அங்கும் அதையே காணும்போது தங்கள் பேருருவை தாங்களே கண்டு திடுக்கிட்டனர்.

ஆனால் நாள் நெருங்க நெருங்க அவர்களின் தன்னடக்கமும் கரவும் மறைந்தன. தாங்களனைவரிலும் நுரைப்பது ஒரே விழைவு என அவர்கள் உணர்ந்தபோது ஒற்றைப் பெரும்பரப்பென ஆயினர். அந்த விராடவடிவம் மானுடர் எவருக்கும் அஞ்சாதது. கரப்பதற்கோ நாணுதற்கோ ஏதுமில்லாதது. பேருருக்கொண்ட அம்முகத்திலிருந்த கசப்பும் இளிப்பும் என்னை பதறச்செய்தன. சத்யபாமையை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். முதலில் அவள் நானே வெல்வேன் என எண்ணியிருந்தாள். பின் நகர்மக்களிடமிருந்து நான் வெல்லமுடியாதென்னும் உணர்வை அவள் அடைந்தாள். அவள் அடைந்த அனைத்தையும் இழக்கப்போகிறாள் என்னும் எண்ணம் அவளை துவளச்செய்ததை கண்டேன். அவ்வெண்ணம் வலுப்பெறுந்தோறும் என் மீதான கசப்பாக மாறியது. கசப்பு மூப்படைகையில் ஏளனமாகிறது. ஏளனம் பழுத்து புறக்கணிப்பாகிறது. என்னை அவள் விழிகள் நோக்குவதேயில்லை என்னும் நிலை வந்தது.

குறித்த நாளில் மற்போருக்குரிய தோலாடையை அணிந்து அணிகளைந்து அரங்குக்கு சென்றேன். அங்கு விழிகளால் ஆன வேலி போல மக்கள் சூழ்ந்திருந்தனர். செண்டுவெளியின் செம்மண் முற்றத்தில் மண்ணை கிளைத்து கூழாங்கல் அகற்றி பொடிப்புழுதி சமைத்து வைத்திருந்தனர். அக்ரூரரே போர் நடுவராக இருக்க ஆணையிட்டிருந்தேன். வெண்கச்சையும் வெண்தலைப்பாகையும் அணிந்து அவர் அங்கு நின்று ஏவலருக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தார். நான் மேடைக்குச் சென்றதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. ஆனால் அவையும் மிகத்தயங்கி ஆங்காங்கே தனிக்குரல்களாகவே ஒலித்தன. என்னைக் கண்டு நிலவெழுகையில் கடலலைகள் போல் ஒலிக்கும் துவாரகையின் உவகைக்குரல் எழவில்லை.

அதைக்கண்டு என் வீரர் கைகளை வீசி வாழ்த்தொலி எழுப்பும்படி மக்களை ஊக்கினர். உடனே வாழ்த்தொலி மும்மடங்கு பெருகி எழுந்தது. இயல்பாக எழும் வாழ்த்தொலி பல்லாயிரம் குரல்கள் கூடிய வெற்று முழக்கமாக இருக்கும். ஆணைக்கேற்ப எழுந்த வாழ்த்தொலி சீரான அலைகளாக இருந்தது. பெருங்கூட்டத்திற்கும் ராணுவத்திற்கும் இடையேயான வேறுபாடு போல தோன்றியது. நான் என் மக்களின் முகங்களை ஒவ்வொருவராக அணுகி நோக்க விரும்பினேன். ஒவ்வொருவருடனும் எனக்குள்ள உறவு ஒவ்வொரு வகையானது. பிறிதொன்றிலாதது. ஆயிரம் உளநாடகங்களால் அமைக்கப்பட்டது. அணுக்கமும் விலக்கமுமாக அலைபாய்வது.

மல்லர்களுக்குரிய தாழ்வான பீடத்தில் அமர்ந்தேன். இரு ஏவலர்கள் என் தசைகளை நீவி விரல்களை சொடுக்கெடுத்து உடலை போருக்கு சித்தமாக்கினர். என் விழிகளை சந்தித்த அக்ரூரர் தலையசைத்து திரும்பி ஏவலரிடம் ஆணையிட்டுக் கொண்டு விலகிச்சென்றார். சத்யபாமா வருவதற்கான மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் கேட்டன. ஆள்கூட்டம் அவளுக்கு வழக்கமான வாழ்த்தோசையை எழுப்புவதை கண்டேன். அரசி முகம்காட்டும் நாள் அல்ல அது என்பதனால் பட்டுத்திரைச்சீலையை மூங்கில்சட்டங்களில் பற்றிய சேடியர் அவளை மறைத்து சூழ்ந்து வந்தனர். அரசியருக்குரிய மேடையும் வெண்பட்டால் மறைக்கப்பட்டிருந்தது. அவள் உள்ளே அமர்ந்ததும் திரைமறைவுக்கு மேல் வெண்சாமரம் எழுந்து அடங்கியது. அது வரை வாழ்த்தொலிகள் எழுந்தன. அந்த வெண்பட்டுத்திரைச்சீலை அவளாக மாறி அரங்கை நோக்கத் தொடங்கியது.

மறுபக்கமிருந்து அரிஷ்டநேமி நடந்து வந்தார். அவர் அவை நுழைந்ததும் துவாரகையின் குடிகள் அனைவரும் பெருங்குரலெடுத்து அவரை வாழ்த்தினர். அவ்வொலி சூழ்ந்திருந்த மாளிகை முகடுகள் அனைத்திலிருந்தும் திரும்பி வந்தது. நகரின் பருப்பொருட்கள் அனைத்தும் குரல் கொண்டவை போல் தோன்றின. ஆனால் அவ்வோசை எதையும் கேளாதவர் போல முற்றிலும் வேறெங்கோ இருப்பவர் போல நடந்து வந்து எனக்கெதிரே கற்பீடத்தில் அமர்ந்தார். அவர் அணிந்திருந்த பழைய மரவுரியாடையை ஏவலர் கழற்றினர். களைவதற்கு அவர் அணியேதும் அணிந்திருக்கவில்லை. அவரது பெருந்தோள்களில் இறுகிய தசைகளை வீரர்கள் நீவி சீரமைத்தனர். உள்ளங்கால் முதல் முடி வரை அவரது உடலை ஒவ்வொரு தசையாக நோக்கினேன்.

பார்த்தா, ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒரு முறையே பழுதில்லாத பேருடலை தெய்வங்கள் சமைக்கின்றன என்பார்கள். தலை முறைகளுக்கு ஒரு தசையை முழுமை பெறச்செய்கின்றன தெய்வங்கள். பின் அத்தனை திசைகளையும் கூட்டி ஒரு மனிதனை படைக்கின்றன. அவன் தெய்வங்களுக்குரிய சிறந்த படையல். அவன் அழகு மானுடர் துய்ப்பதற்குரியதல்ல. அதை அவனும் அறிந்திருப்பான். ஆகவே அவன் உள்ளம் மண்ணில் எங்கும் தோய்வதில்லை. அவன் மண்ணில் மலர்ந்து விண் நோக்கி உதிரும் மலர் என்கின்றன நூல்கள். முரசு முழங்கி என் உடல் அதிர்ந்து விழிப்பதுவரை அவரையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

அக்ரூரர் குறுமேடையில் ஏறி நின்று கைகாட்ட ஓசைகள் அடங்கின. போர் முரசு முத்தாய்ப்பாக மும்முறை விம்மி அமைய கொம்புகள் பிளிறி ஓய்ந்தன. அக்ரூரர் உரத்த குரலில் அங்கு நிகழும் மற்போரின் முறையை அறிவித்தார். அது வெறும் உடல்வல்லமையால் மட்டுமே வெற்றிதோல்விகள் முடிவாகும் வன்யம் என்னும் போர்முறை. ஐந்து தடைகள் மட்டுமே அதன் எல்லைகள். இடைக்கு கீழ் தாக்கலாகாது. தலைக்கு மேல் கை தூக்கலாகாது. தசைகள் அன்றி பிற படைக்கலங்கள் பயன்படுத்தலாகாது. அவமதிக்கும் சொற்கள் எழலாகாது. விழிகளை நோக்கலாகாது.

அக்ரூரர் எங்களிடம் “வீரர்களே, போர்முறைகள் இப்புவியில் பல்லாயிரம். போர்களுக்கெல்லாம் அன்னை என்று மற்போரை சொல்கிறார்கள், ஏனெனில் கைகளற்ற புழுக்களும் செய்யும் போர் அது. தெய்வங்களுக்கு மிக உகந்தது. மானுடர் கண்டறிந்த எப்படைக்கருவியும் அதில் இல்லை. தெய்வங்கள் சமைத்த படைக்கருவிகளான கைகள் மட்டுமே உள்ளன. இரு மானுடர்களின் ஆற்றலை எடை போடுவதற்கு மற்போருக்கு நிகரான பிறிதொரு வழிமுறை இல்லை. இங்கு நிகழ்வது போரல்ல வழிபாடென்றே ஆகட்டும். நமது மூதாதையரும் குடித்தெய்வங்களும் இங்கெழுந்து இப்படையலை ஏற்றுக்கொள்ளட்டும். வெற்றி தோல்வி எவையாயினும் அவை நம் குடிசிறக்கவே பயன்படட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

நான் தலைவணங்கி எழுந்து அரங்கின் நடுவே சென்று நின்றேன். எனக்கென ஓரிரு குரல்களே அங்கு ஒலிக்கக் கேட்டேன். நான் செல்வதை பொருளிலாது நோக்கி அமர்ந்திருந்த அரிஷ்டநேமியை வீரர் ஊக்க ஆம் என தலையசைத்து எழுந்து அரங்கை நோக்கி தலைவணங்கி பெருங்கால்களை எடுத்துவைத்து வந்தார். என் முன்னால் அவர் வந்து நின்றபோது புயல்பட்ட புதர்க்கூட்டம் போல துவாரகையின் மக்கள் கொந்தளித்து கைவீசி கூச்சலிட்டனர். நாங்களிருவரும் பொடிகிளைத்துக் கிடந்த மல்லரங்கில் எதிரெதிர் நின்றோம். அக்ரூரர் கைகாட்ட முரசு இமிழ்ந்து அடங்கியது. போர் தொடங்குவதற்கான கொம்புக்குரல் எழுந்தது.

இருகைகளையும் விரித்து கால் பரப்பி என் முன்னால் அவர் நின்றார் . நண்டுக்கொடுக்கு போல கைகள் விரிந்திருக்கும் அந்நிலைக்கு கடகஸ்தானம் என்று பெயர். போர்க்கலை பயிலாதவர் என்றாலும் அவர் இயல்பாகவே அந்நிலையை கொண்டிருந்தார். ஏனென்றால் அது கையுள்ள விலங்குகளுக்கு இயல்பானது. தாக்குதலை எதிர்கொள்கையில் கரடியும் குரங்கும்கூட அந்நிலையில் நிற்பதை கண்டிருக்கிறேன். அதற்கு நிகரென இருகைகளையும் நீட்டி விருச்சிக ஸ்தானத்தில் நான் நின்றேன். என் ஒருகால் தேளின்கொடுக்கென பின்னால் நீண்டிருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்காது உடலால் நோக்கியபடி இணையடி எடுத்து வைத்து சுற்றி வந்தோம். சூழ்ந்திருந்த ஓசைகள் அடங்கி மூச்சொலிகளும் ஆடைகளில் காற்றோடும் ஒலிகளும் கேட்கும் அளவு அமைதி நிரம்பியது. ஒவ்வொரு தசையும் எதிர்உடலில் அதற்கிணையான பிறிதொரு தசை இருப்பதை உணரும் கணம். ஒவ்வொரு கையசைவும் எதிர்கையசைவை உருவாக்கும் தருணம். உடல் உடலை முழுதறியும் தருணம் மற்போரில் அன்றி வேறெங்கும் நிகழ்வதில்லை.

நுண் உடலை நுண்உடல் அறிந்தபின்னரே பருவுடலை பருவுடல் சந்திக்கிறது. அப்போது எழும் முதல் திடுக்கிடல்தான் மற்போரின் உச்சம். தெய்வங்கள் வகுத்த கணத்தில் இடியோசை போல் இருவருக்குள்ளும் எழுந்த தசைமோதும் ஒலியை கேட்டோம். புழுதி எழுந்து எங்களை மூடிக்கொண்டது. எங்கள் கைகள் பிணைந்திருந்தன. கால்கள் மண்ணை உதைத்து விசை கொண்டன. இரு நாகங்கள் தழுவி இறுக்கி ஒன்றையொன்று நிகர் செய்து அசைவிழந்தன. இரு புழுக்கள் ஒன்றை ஒன்று உண்ணமுயன்றன.

அவரது கால்கள் என் கால்களுக்கு அருகே வந்தன. விருச்சிகமுறைப்படி என் கைகளால் அவர் கைகளைப்பற்றி நிறுத்தியபின் வலக்காலை நீட்டி அவரது இடக்காலை மண்ணிலிருந்து விலக்க முயன்றேன். அவை நெகிழ்ந்தால் அக்கணமே அவரைப்புரட்டி நான் மேலேறிக்கொள்ள முடியும். ஆனால் ஆயிரம் ஆண்டுகால அடிமரம் போல அவை மண்ணில் வேரோட்டி இறுகியிருந்தன. ஒரு கணமேனும் என்னால் அவற்றை அசைக்க முடியவில்லை. அவரது விலா எலும்புகளுக்குக் கீழ் மடிந்திருந்த குருத்தெலும்பில் என் தலையை வளைத்து ஓங்கி முட்டினேன். பாறை மேல் தலை முட்டி எலும்பு அறைபடும் வலியை மட்டுமே உணர்ந்தேன்.

மற்போரின் போர்சூழ்ச்சிகள் எதையும் அவர் செய்யவில்லை. வெறும் தசைக்குவியலாகவே என்னை எதிர்கொண்டார். நான் கற்ற முறைமைகள் அனைத்தும் முற்றிலும் பயனற்றுப் போயின. என் கைகளும் கால்களும் ஆலமரத்து வேர்களால் கவ்வப்பட்ட கல்மண்டபம்போல் அசைவிழந்தன. நிமிர்ந்து அவர் முகத்தை நோக்கியபோது என் அகம் அதிர்ந்தது. அவர் என்னை கனிந்து நோக்கிக்கொண்டிருந்தார். முலைகனிந்த அன்னை மார்போடு அணைப்பதுபோல் என்னை இறுக்கியிருந்தார். என் உள்ளம் தவிக்கத்தவிக்க உடல் நெகிழ்ந்துகொண்டே சென்றது. அவரது அணைப்பில் நான் குழந்தையாக ஆனேன்.

என் இருகைகளையும் பற்றிச் சுழற்றி தலைக்கு மேல் தூக்கி மண்ணில் ஓங்கி அறைந்தார். பேருடலுடன் என் மேல் சரிந்து முழங்கால்களால் என் கால்களை மண்ணுடன் அழுத்தி இடக்கையால் என் வலத்தோளை பற்றிக் கொண்டார். என் வலக்கால் மேல் அமர்ந்து இடக்கையை பற்றி முகத்தை பார்த்தார். இனி அவர் செய்வதற்கொன்றே எஞ்சியிருந்தது. யானை மத்தகத்திற்கு நிகரான பெருந்தலையால் ஓங்கி என் நெஞ்சில் முட்டுவது. என் இதயம் உடைந்து குருதியும் சலமுமென வாயில் மூச்சுடன் கலந்து சிதறும். தேர்ச்சகடத்தில் சிக்கிய எலி என நான் சிதைந்து உயிர்துறப்பேன்.

சில கணங்கள் அங்கே அசைவற்றிருந்தபின் என்னை விட்டு அவர் எழுந்தார். இருகைகளாலும் தன் உடலில் படிந்த புழுதியைத் துடைத்தபின் திரும்பி அவை நோக்கி கை கூப்பினார். நான் எழுந்து கை கூப்பியபடி அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என்னை யாரிவன் என்பது போன்ற பார்வையுடன் சிலகணங்கள் விழிகூர்ந்தபின் குனிந்து துவாரகையின் ஒரு பிடி மண்ணை அள்ளி எனக்கு நீட்டினார். இருகைகளையும் நீட்டி அதை நான் பெற்றுக்கொண்டேன். என் தலைமேல் தன் வலக்கையை வைத்து வாழ்த்தியபின் ஒரு சொல் சொல்லாமல் திரும்பி நடந்து மேடையேறி மறுபக்கம் சென்று மறைந்தார்.

அதுவரை ஓசையற்றிருந்த துவாரகையின் மக்கள் பெருங்குரலில் வெடித்தெழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். யாருக்கான வாழ்த்து அது என என்னால் கணிக்கமுடியவில்லை. ஆனால் அது அவர்கள் விழைந்த முடிவு. அவர்கள் எதையும் இழக்காமல் விரும்பியதை அடைந்ததன் மகிழ்வா அது? இல்லை, அவர்களின் சிறுமைகளை கோடைகாலத்துமுதல்மழை புழுதியை அடித்துக்கொண்டு செல்வதுபோல அவரது பெருமை கழுவியகற்றியதன் நிறைவா? பட்டுத்திரையை நோக்கினேன். அது அசைவற்றிருந்தது.

“அந்தப் பிடி மண்ணை என் தலையிலும் நெஞ்சிலும் வைத்து வணங்கியபின் அவையை சூழநோக்கி தலை வணங்கி நான் அரங்கு விட்டகன்றேன்” என்றார் இளைய யாதவர். “மூத்தவர் துவாரகையிலிருந்து வெளியேறி பாலையின் விளிம்பிலிருந்த சுஸ்ருதம் என்னும் சோலையிலிருந்த சிறிய குடிலில் குடியேறினார். அங்கு மக்கள் அவரைத் தேடிச்சென்று அடிபணியத்தொடங்கினர். அங்கிருந்து மீண்டும் விலகி சுபார்ஸ்வம் என்னும் தொலைதூர முட்காட்டில் குடியேறினார். அங்கும் மக்கள் செல்லத்தொடங்கவே மீண்டும் விலகி பாலையில் இருந்த அறியாத பாறைவெடிப்பு ஒன்றுக்குள் தங்கினார். துவாரகையிலிருந்து அவருக்கு உணவு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தேன்” இளைய யாதவர் சொன்னார்.

மீண்டும் அவரைச்சென்று பார்த்தபோது அவர் மிகவும் அமைதியிழந்திருப்பதை கண்டேன். அவரது விரல்கள் அசைந்துகொண்டே இருந்தன. உதடுகளில் ஏதோ சொல் கசங்கிக்கொண்டிருந்தது. எதையும் நிலைத்து நோக்காமலிருந்தன விழிகள். “மூத்தவரே, தாங்கள் நிலையழிந்திருக்கிறீர்கள்” என்றேன். “ஆம், எங்கும் என்னால் அமரமுடியவில்லை. என் உள்ளத்தில் ஊழ்கம் நிலைக்கவில்லை” என்றார். “ஏன்?” என்றேன். “அறியேன்” என்று சொல்லி எழுந்துகொண்டு “நீ விலகிச்செல். நான் மானுடர் எவரையும் நோக்க விழையவில்லை” என்றார்.

“நான் தங்களை சந்திப்பதை விலக்காதீர் மூத்தவரே. தங்கள் அண்மையில் நான் அறிவதை வேறெங்கும் அடையவில்லை” என்றேன். “அந்த மற்போர் நான் அமைந்த ஊழ்கங்களில் தலையாயது. தங்கள் கையில் அமைந்த அக்கணங்களில் நான் அனைத்திலிருந்தும் விடுபட்டு எழுந்தேன்.” அவர் அப்பால் நோக்கியபடி நின்று “ஆனால் உன்னை தூக்கி அறைந்த அக்கணம் நான் அனைத்திலும் ஒருகணம் சிக்கிக்கொண்டேன்” என்றார். “அப்போது நான் துவாரகையை வென்றேன். சத்யபாமையை மணந்து சக்ரவர்த்தியாக பாரதவர்ஷத்தை ஆண்டேன்.”

நான் சொல்லின்றி அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். “நான் முழுமையாக தோற்றுவிட்டேன் இளையோனே. நான் அடைந்த அத்தனை கல்வியையும் ஊழ்கவல்லமையையும் இழந்து தொடங்கிய புள்ளிக்கே மீண்டு வந்துவிட்டேன்.” நான் என்ன சொல்வதென்று தெரியாமல் “ஆம், ஆனால் இது வழுக்குமரம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது…” என்றேன். “வழுக்குமரம்” என்று அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். தலையை அசைத்தபின் “இருக்கலாம். ஆனால் நான் மீண்டும் புதியதாக தொடங்கவேண்டியிருக்கிறது. முற்றிலும் புதிய ஒன்று. இவையெல்லாம் அல்ல என்று என் உள்ளம் அனைத்தையும் விலக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்கு செல்வதென்று அறியாமல் தவிக்கிறது” என்றார்.

மூன்றுமாதகாலம் அவர் அங்கே தனிமையில் இருந்தார். அப்போதுதான் இங்கே ரைவதமலையில் ரைவதகருக்கான விழவுநாள் வந்தது. யாதவர்கள் கிளம்பியபோது நான் அவரிடம் சென்று ரைவதமலைக்கு வரும்படி அழைத்தேன். பயணங்களில் ஆர்வமில்லை என மறுத்துவிட்டார். “ரைவதகரின் கதையும் தங்கள் கதைக்கு நிகரானதுதான் மூத்தவரே” என்றேன். “மண்ணில் நிகரற்ற படைக்கலம் ஒன்றை அடைந்தவர். அதைத் துறக்கும் முடிவுக்கு வந்ததை நான் ஒவ்வொருநாளும் எண்ணுவதுண்டு” என்று நான் சொன்னபோது அவர் தளர்ந்த விழிகளுடன் என்னை நோக்கினார். “வாருங்கள்” என்றேன். பெருமூச்சுடன் “சரி கிளம்புவோம்” என்றார்.

சென்றஆண்டு இதே நாளில் இங்கு நானும் அவரும் வந்தோம். முற்றிலும் தனித்தவராக ஒரு சொல்கூட பேசாது அவர் உடன் வந்தார். அஞ்சிய காளை ஒன்றை மெல்ல தேற்றி கொண்டுவருவதுபோல இருந்தது அப்பயணம். இந்த மலைக்கு வந்தபோது அவர் முற்றிலும் ஆர்வமிழந்தார். “நான் மலையேற விழையவில்லை இளையோனே. இங்கே இருந்துகொள்கிறேன்” என்றார். “இல்லை, மலைமேல் உள்ள ரைவதகரின் ஆலயம் வரை வாருங்கள்… வந்த பின்னர் அங்கு செல்லாமலிருப்பது முறையல்ல” என்று அழைத்தேன். என்னுடன் மலையேறும்போது அவர் எதையும் நோக்கவில்லை. அருகர் ஆலயங்களும் அடிகள்பாறைகளும் அவரை எவ்வகையிலும் கவரவில்லை.

ரைவதகரின் ஆலயத்தின் முகப்பில் அயலவர் போல விழித்து நோக்கிக்கொண்டு நின்றார். உடனே திரும்பிச்செல்லத்தான் அவர் விழைகிறார் என்று தோன்றியது. அரசமுறைமைகளுக்கெல்லாம் வெற்றுச்சிலைபோல நின்று எதிர்வினையாற்றினார். இரவில் என்னுடன் இதே மாளிகையில் இதே படுக்கையில் படுத்திருந்தார். பெருமூச்சுவிட்டுக்கொண்டும் புரண்டுகொண்டும் இரவை கழித்தார். “என்ன எண்ணுகிறீர்கள் மூத்தவரே?” என நான் பலமுறை கேட்டேன். இல்லை என தலையை மட்டும் அசைத்தார்.

காலையில் அவர் படுத்திருந்த மஞ்சம் ஒழிந்து கிடந்தது. அதைக் கண்டதும் என் உள்ளம் அதிர்ந்தபோதே அதை எதிர்பார்த்திருந்ததையும் உணர்ந்தேன். ஏவலர்களை அனுப்பி தேடச்சொல்லிவிட்டு நானும் மலையில் தேடத்தொடங்கினேன். அவர் துவாரகைக்கு திரும்பியிருக்கமாட்டார் என உறுதியாகவே தெரிந்தது. ரைவதகரின் ஆலயத்தின் அருகிலோ பிற அருகர் ஆலயங்களிலோ அவர் இருக்கவில்லை. உச்சிவெயில் எழத்தொடங்கிய நேரத்தில் ஓர் ஏவலன் அவரை கண்டடைந்தான். மலையின் மறுசரிவில் ஒரு பாறைக்கடியில் தனிமையில் அமர்ந்திருந்தார். நான் அருகே சென்று “மூத்தவரே” என்றேன். என்னை நோக்கி “நான் இங்கேயே இருக்கிறேன் இளையோனே. நீ திரும்பிச்செல்” என்றார்.

“அன்று சென்றபின் இன்றுதான் திரும்பி வந்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “அன்றிருந்தவர்தான் இன்றிருக்கிறாரா என்று தெரியவில்லை.”

தொடர்புடைய பதிவுகள்


டம்மி

$
0
0

இரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு குறைவான ஆயுள்தான். அபூர்வமாகவே சில படங்கள் காலம் கடந்து நினைக்கப்படுகின்றன. நான் கடவுளில் உள்ள பாடல்கள் என்றும் நீடிக்கும். கூடவே அப்பாடல்கள் நினைவூட்டும் அந்த நாட்கள் எங்கள் மனங்களில்.

காசி என்பது ஒரு நகரமல்ல, ஒரு படித்துறை. வரணாசி என்று மகாபாரதம் குறிப்பிடும் அந்த புராதன கங்கைக்கரை பிறைவளைவு. பனாரஸ் என்ற பெருநகரம் எங்கோ கிடக்கிறது. அங்கே நான் சென்றதே இல்லை. மீண்டும் மீண்டும் இந்தப்படித்துறைக்கே நான் செல்கிறேன். பனாரஸில் உள்ளது வாழ்க்கை. காசியில் உள்ளது மரணம் ஊடறுக்கும் வாழ்க்கை.

ஒவ்வொரு நாளும் மரணத்தை நினைவு கூராமல் காசியில் வாழ முடியாது. பிணங்கள் மக்கள் பெருக்கில் மிதந்து மணிகர்ணிகா கட்டம் நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே தங்கி இளைப்பாறுகின்றன. எரியும் சிதையருகே தங்கள் இடத்துக்காகக் காத்துக் கிடக்கின்றன. பிணங்களின் அபாரமான தனிமையை காசியில் உணர முடியும். கூடவே கதறி அழும் உறவினர் இருக்கலாம். நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கால வடிவமான கங்கையின் கரையில் பிணம் தன்னந்தனியாகவே கிடக்கும்

பிணங்கள் ஏன் அச்சுறுத்துகின்றன? வெறும் ஒரு பொருளாக மாறிவிட்ட உடம்பை நம் பிரக்ஞை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அது ஒரு மனிதன். ஆனால் மனிதனுமல்ல. அது வேறு ஒன்று. முதன் முதலாக காசியில் என்னருகே ஒரு சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட பிணத்தின் கால் என்மீது மோதியபோது அடைந்த அச்சமும் அருவருப்பும் நினைவிருக்கிறது.

சிங்கப்புலியும் நானும், ஆர்தர் வில்ஸனின் உதவியாளர் ரதீஷ் எடுத்த படம்

ஆனால் பார்க்கப் பார்க்க அந்த அருவருப்பு விலகியது. படுக்க வைக்கப்பட்டிருந்த ஒரு பிணத்தின் சரிகைப் போர்வை விலகி தொடை தெரிந்த போது கையில் டீக்கோப்பையுடன் எழுந்து போர்த்திவிட்டிருக்கிறேன்.படிப்படியாக பிணம் ஒரு யதார்த்தமாக நம் நெஞ்சுக்குள் இடம்பிடித்துவிடும் காசியில்

நான் கடவுள் படத்துக்காக ஏராளமான டம்மி பிணங்கள் செய்தோம். அவற்றைத்தான் படத்தில் சுமக்கிறார்கள். ஆரம்பத்தில் அந்த டம்மி பிணங்களும்  படப்பிடிப்புக் குழுவினரை அச்சுறுத்தின. அவற்றின் அருகே வரமாட்டார்கள், அமர மாட்டார்கள். டம்மி பிணம் என்று தெரிந்தால் கூட தொடமாட்டார்கள்.

பின்னர் மெல்ல மெல்ல அச்சம் விலகியது. டம்மி பிணத்தருகே அமர்ந்து டீ சாப்பிட்டார்கள். டிபன் சாப்பிட்டார்கள். அரட்டை அடித்தார்கள். அதன் பின் நிஜமான பிணத்தருகே சாதாரணமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டார்கள். டீ குடித்தார்கள். போர்த்தப்பட்டிருப்பது ஆணா பெண்ணா என்று சாதாரணமாக அவதானித்தார்கள்.

உண்மையில் அதைத்தான் தந்திரீகம் செய்கிறது. பிணங்களுக்கு நிகரான டம்மி பிணங்களை உருவாக்குகிறது அது. வைக்கோலில் மண்ணில்செய்யப்பட்ட உடல்களை வைத்து சடங்குகளைச் செய்கிறது. அச்சம் அகன்ற பின்னர் பிணங்களை வைத்தே செய்கிறது. பிணங்களை அகமனதுக்கு அறிமுகம் செய்கிறது.

ஆனால் பிணம் என்பதேகூட ஒரு டம்மிதானே? மரணத்தின் போலி வடிவம்தானே? அதை பழகிக்கொண்டால் மரணத்தைப் பழகிக்கொள்ளலாகாதா? அதுதான் தாந்த்ரீகத்தின் வினா.

அதிகாலை வேளையில் சூடான டீயைக் குடித்த பின் இயக்குநர் சிங்கம் புலியும் நானும் சுடுகாட்டு பின்னணியில் ஒரு டம்மிப் பிணமருகே அமர்ந்து சுவாரஸியமாக எதைப் பேசிக் கொண்டிருப்போம்? சிங்கம்புலி எதையுமே வேடிக்கையாக ஆக்கக்கூடியவர். அனேகமாக ஏதாவது சினிமா வேடிக்கையாக இருக்கும். சினிமா என்பது வாழ்க்கையின் டம்மி அல்லவா?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 8, 2009

தொடர்புடைய பதிவுகள்

வெண்முகில் நகரம்

$
0
0

1

வெண்முரசு நாவல் வரிசையில் வெண்முகில்நகரம் கிழக்கு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 1200 ரூ விலையுள்ளது இந்நூல். பாஞ்சாலிக்கும் ஐவருக்குமான உறவையும் அவ்வுறவிலிருந்து கிளைக்கும் அதிகாரப்போட்டியையும் சித்தரிக்கிறது

கேசவமணி வெண்முகில் நகரத்திற்கு எழுதிய குறிப்பு

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 15

ரைவத மலையின் பின்பக்கமாக சென்ற செம்மண் பாதை, சுட்டுவிரல் தொட்டு நீட்டிய செங்காவிக்கோடு போல கரும்பாறைகளைச் சுற்றியும் செம்மலைச்சரிவுகளில் இறங்கியும் வளைந்தேறியும் சென்றது. இருபக்கமும் முட்கள் செறிந்து சாம்பல் நிறம் கொண்டு நின்ற செடிகள் பகைமையுடன் சிலிர்த்திருந்தன. உச்சிப்பாறைகளின் மேல் வரையாடுகளின் நிரை ஒன்று மெல்லிய தும்மலோசை எழுப்பியபடி கடந்து சென்றது. காலையில் அவ்வழி சென்ற அருகப் படிவர்களின் காலடிகள் செம்மண் புழுதியில் படிந்து அப்போதும் அழியாமல் எஞ்சியிருந்தன.

அவற்றின் மேல் கால் வைக்காமல் நடந்த இளைய யாதவர் அர்ஜுனனிடம் “கீழ்த்திசை எங்கும் இவ்வருகப்படிவர்கள் சென்றுள்ளார்கள். தெற்கில் தண்டகாரண்யத்தை கடந்தும் சென்று விட்டிருக்கிறார்கள். இங்கு இப்பாலை மண்ணில் விழியும் உளமும் பழகியதனால் செல்லுமிடங்களிலும் முட்புதர்களும் பாறைகளும் நிறைந்த வெறும் வெளியையே இவர்கள் நாடுகிறார்கள். எங்கும் அரைப்பாலை நிலங்களிலேயே இவர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ளன” என்றார். “வளம் என்பது இவர்களுக்கு ஒவ்வாததா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அங்கு வாழ்வு செழிக்கிறது. செழிப்பின் திசைக்கு எதிர்த்திசையே துறவின் திசையென்று இவர்கள் எண்ணுகிறார்கள். துறந்து துறந்து சென்று துறக்க ஒண்ணாததென எஞ்சுவதே தங்கள் இருப்பென்றும் அதை நிறைவழியச்செய்யும் முறைமையே ஊழ்கமென்றும் இவர்களின் நெறிவழி வகுத்துள்ளது” என்றார் இளைய யாதவர்.

மலைப்பாறை ஒன்றின் இடுக்கில் பெரிய அரசவெம்பாலையின் சட்டை தொங்கி பட்டுச் சால்வை போல் காற்றில் நெளிந்தது. அர்ஜுனன் அதைப் பார்த்ததும் யாதவரை நோக்கினான். “குகைகளில் இவர்கள் அரசப் பெருநாகத்துடன் தங்குகிறார்கள் என்று எளியமக்கள் நம்புகிறார்கள். ஆகவே செல்லும் இடங்களிலெல்லாம் நாகர்கள் இவர்களை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள். தென்திசையில் அருகர் ஆலயங்களைச் சுற்றிலும் நாகர்களின் அரவாலயங்கள் அமைந்துள்ளன” என்றார். அர்ஜுனன் “தங்கள் தமையனார் முற்றிலும் அருக நெறியை சார்ந்துள்ளாரா?” என்றான். “அதை அறியேன். சென்றமுறை வந்தபின் அவரை நான் காணவுமில்லை. அவர் இங்கு அருகநெறியினருடன் இருக்கிறார் என அறிந்தேன். அவர் இருக்கும் நிலையை உணரக்கூடவில்லை” என்றார்.

சில கணங்கள் எண்ணிவிட்டு “நான் அவரிடம் விடைபெறும்போது இங்கிருங்கள் மூத்தவரே இவ்வழிச்செல்கையில் தன் முழுத்தோற்றத்தை சுருக்கி தன் கைகளுக்குள் அடங்கும் நாள் ஒன்று வரும். அப்போது விரல்களை விரித்துப் பார்த்தால் அங்கும் ஒரு வினாவை மட்டுமே காண்பீர்கள். அன்று திரும்புவதற்காக உங்களுக்கு ஒரு நகரம் உண்டென்று உணருங்கள். துவாரகை உங்களுக்குரியது. நீங்கள் விழைந்தால் என் மணிமுடி தங்கள் பாதங்களுக்கு உரியது என்றேன். புன்னகைத்து சென்று வா என்றார்” என்றார் இளைய யாதவர். “உண்மையில் அன்று இம்மலை இறங்கி செல்லும்போது ஒரு முழுநிலவு நாளுக்குள் அவர் திரும்பி வருவாரென்றே எண்ணினேன். முன்பு ராகவ ராமனுக்காக அனுமன் இலங்கையை நோக்கி கடல் தாவி சென்றது போல் நெடுந்தொலைவுகளை கணத்தில் தாவிக் கடப்பவர் அவர். இன்று ஓராண்டு நிறைகிறது. இன்னமும் இங்குதான் அவர் இருக்கிறார் என்பதே என்னை வியப்புறச் செய்கிறது” என்றார்.

தொலைவில் எருதுக்கொடி பறக்கும் மலைக்குகை முகப்பு ஒன்றிருந்தது. இரு பெரிய பாறைகளால் மறிக்கப்பட்ட குகையின்முன்னால் இருவர் கையூன்றி சரிந்து செல்வதற்கு இடமிருந்தது. அதனருகே சென்றதும் உள்ளிருந்து வந்த குகையின் குளிர்மூச்சு அர்ஜுனனின் விலாத் தசைகளை சிலிர்க்க வைத்தது. இளைய யாதவர் உள்ளே சென்று உருளைப்பாறைகளை கடந்து தாவி கீழே இறங்கி “வருக” என்றார். அர்ஜுனன் தொடர்ந்தான். “இயற்கையான குகை… உள்ளே நீரூற்று ஒன்றுள்ளது” என்று இளைய யாதவர் சொன்னபோது குரலுடன் குகைமுழக்கமும் கலந்திருந்தது.

இருண்ட குகைக்குள் தொலைவில் என தெரிந்த நெய்யகல் சுடர் வெளிச்சத்தில் இரு கைகளையும் மடியில் அமர்த்தி கால் மடித்து விழிமூடி ஊழ்கத்திலிருந்த ரிஷபரின் பெருஞ்சிலை பாறைப்புடைப்பென செதுக்கப்பட்டிருந்தது. நன்கு தீட்டபட்டு எண்ணெய் பூசப்பட்ட சிலையின் கரிய வளைவுகளில் செவ்வொளி குருதிப்பூச்சு போல மின்னிக் கொண்டிருந்தது. அங்கு எவரும் இருப்பது போல் தெரியவில்லை. அவர்களின் காலடி ஓசையை குகை எங்கெங்கோ எதிரொலித்து திருப்பி அனுப்பியது. இருளுக்கு விழி பழகியபோது அங்கு ஊழ்கத்திலிருந்த ஏழு படிவர்களை அர்ஜுனன் கண்டான். அவர்களில் ஒருவர் பிறரைவிட அரை மடங்கு பெரிய உடல் கொண்டிருந்தார். அக்கணமே அது அரிஷ்டநேமி என்று அவன் தெளிந்தான்.

சுரிகுழல் கற்றைகள் தோளில் விழுந்து கிடக்க பெரிய கூர்மூக்கின் இருபுறமும் கடற்சிப்பிகள் போல் மூடிய இமைகளுடன், மெல்லிய நகை ஒன்று சூடிய குவிந்த இதழ்களுடன், மடிமேல் மலர்ந்த கைகளும் தாமரை இதழென மடிக்கப்பட்ட கால்களுமாக நிமிர்ந்து தசைச்சிலையென அமர்ந்திருந்தார். இளைய யாதவர் ஓசையின்றி சென்று அரிஷ்டநேமியின் கால்களுக்கு அருகே அமர்ந்து அவர் பாதங்களைத் தொட்டு மும்முறை சென்னி சூடினார், சற்று விலகி அதே போல ஊழ்கத்தில் அமர்ந்தார். அர்ஜுனன் கைகளை மார்பில் கட்டியபடி இருவரையும் நோக்கி நின்றான்.

அவர்கள் வந்ததையோ இளைய யாதவர் அருகே அமர்ந்ததையோ அரிஷ்டநேமி அறிந்தது போல் தெரியவில்லை. ஆனால் அவர் இருந்த கனவுக்குள் இளைய யாதவர் நுழைந்துவிட்டார் என்பதை அர்ஜுனன் உணர்ந்தான். சில கணங்கள் கழித்து திரும்பி நோக்கியபோது அசைவற்ற சிலையாக இளைய யாதவர் மாறியிருப்பதை கண்டான். இருவரையும் மாறி மாறி நோக்கியபடி அவன் அங்கு நின்றான். மூச்சு ஓடுகிறதா என்று ஐயமெழுப்பும் அசைவின்மை. இரு ஆடிப்பாவைகள். ஒன்றை ஒன்று நோக்கும் இரண்டு முடிவின்மைகள். இரண்டு வினாக்கள். அல்லது இரண்டு விடைகள். ஒரு பொருள் கொண்ட எதிரெதிர் சொற்கள். இரண்டு முடிவிலா பெருந்தனிமைகள். பொருளின்றிப் பெருகிய சொற்கள் பதற்றம் கொண்ட வெள்ளாட்டு மந்தைகளென ஒன்றையொன்று நெரித்து முட்டிச் சுழல தன் சித்தம் பித்து கொள்வதை உணர்ந்து அர்ஜுனன் இமைகளை மூடிக்கொண்டான். இமைகளுக்குள் அவன் குருதிக் குமிழிகள் மிதந்தலைந்தன. அவன் எண்ணியது என்ன? குந்தி. பின்பு பாஞ்சாலி. உலூபி. பின்பு சித்ராங்கதை. அவர்கள் வழியாக சென்றடைந்த எண்ணம் எவ்வண்ணம் கர்ணனை சென்றடைந்தது? யாரவன் இந்நிரைக்குள் நுழைய? வில்லேந்தியவன். தெளிந்த பெரிய விழிகள் கொண்ட கருவண்ண மேனியன். யாரவன்?

விழிகளைத் திறந்து நோக்கியபோது மிக அருகிலென ரிஷபரின் கரியசிலை தெரிந்தது. சுடர் அசைவில் இதழ் நெளிய அவர் ஏதோ சொல்ல விரும்புவது போல. கைகள் கால்கள் அனைத்திலும் எழுந்த ஒளியசைவு அவர் எழுந்துவிடப் போகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கை நீட்டி தனக்குப் பின்னாலிருந்த குகைச் சுவரை தொட்டான். நீரில் கிடக்கும் பாறை போல் அது குளிர்ந்திருந்தது. மலை உச்சியில் ஊற்றுகள் அனைத்தும் அப்பாறைகளை எங்கோ நனைத்துச் செல்கின்றன. அப்போதுதான் குகைக்குள் எங்கோ கொட்டிக் கொண்டிருந்த நீரோசையை அவன் கேட்டான். சொட்டிய நீர் வழிந்தோடும் ஓசை இருளில் சுரந்து இருளுக்குள்ளே வழிந்தோடுகிறது. ஒருபோதும் ஒளியை அறியாதது. ஆகவே இருளென்றே ஆனது. இருள் நீர் குளிர்ந்திருக்கும், தன்னந்தனிமையின் கண்ணீரென.

அரிஷ்டநேமி விழிகளை அப்போது திறந்திருக்காவிட்டால் தன் சித்தம் கீழே விழுந்த நீர்த்துளிபோல் சிதறி பரந்து மறைய, பித்தனாகி வெளியே சென்றிருப்போம் என அர்ஜுனன் உணர்ந்தான். அவர் புன்னகையுடன் எதிரே அமர்ந்திருந்த இளைய யாதவரை நோக்கி “வணங்குகிறேன் இளையோனே” என்றார். இளைய யாதவர் புன்னகைத்து “தங்களைப் பார்ப்பதற்காகவே வந்தேன் மூத்தவரே” என்றார். “ஆம், உனது வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஏழு நாட்களுக்கு முன்னரே கரிக்குருவி ஒன்று அதை சொன்னது” என்றார். கால்களை நீட்டி அவர் எழுந்தபோது அவரது தலை உச்சிப் பாறை வளைவை தொட்டது. இளைய யாதவர் எழுந்து அவரருகே நின்றபோது அவரது குழல்சூடிய பீலி அரிஷ்டநேமியின் மார்பு அளவுக்கே இருந்தது.

தன் பெரிய கைகளால் இளைய யாதவரின் தோள்களைத் தொட்டு “உன் வருகை இத்தனை மகிழ்வளிக்கும் என்று நான் எண்ணவில்லை. நீ வருவாய் என்ற செய்தி வந்தபிறகு ஒவ்வொரு நாளும் காலையில் நினைவெழும்போது உன் புன்னகையே உள்ளே விரிந்தது. நீ எனக்கு எப்படி பொருள்படுகிறாய் என்று புரியவில்லை. இளையோனே, இங்கு வந்தபிறகு அங்கு கொண்டிருந்த ஒவ்வொன்றையும் உதிர்த்துவிட்டேன். நகரையும் உறவுகளையும் குலத்தையும் பெயரையும்கூட. இங்கென்னை நேமி என்றே அழைக்கின்றனர். அது என் குலச்சின்னமாயினும் அறவாழியின் பெயரென அதை மட்டும் ஏற்றுக்கொண்டேன். அதற்கப்பால் ஏதுமில்லை என்றே இருக்கிறேன். ஆயினும் நீ என்னிடம் முழுமையாக இருந்து கொண்டிருக்கிறாய் எனும் விந்தையை சில நாட்களாக திரும்பத் திரும்ப எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றார் அரிஷ்டநேமி.

இளைய யாதவர் “அது என் நல்லூழ். தங்கள் பாதங்களை வணங்கும் பேறு எனக்கு உள்ளது என்பது அதன் பொருள்” என்றார். “முகமன்கள் எதற்கு?” என்றபின் அரிஷ்டநேமி நீள் மூச்சுவிட்டார். “இந்நாட்களில் நான் எண்ணிக்கொண்டது ஒன்றே. நான் துறந்தவை அனைத்தாலும் ஆனவன் நீ. உன் வடிவில் என் வாழ்க்கையை பிறிதொருவனாக மாறி நடித்துக் கொண்டிருக்கிறேனா? கிளைகள், இலைகள், மலர்கள் அனைத்தும் வேர் மண்ணுக்குள் ஒளிந்துகொண்டு காணும் கனவுகள்தானா?” இளைய யாதவர் “அறியேன் மூத்தவரே. ஆனால் ஒன்று உரைப்பேன்… தாங்கள் என் கனவு” என்றார்.

சற்றே திகைத்தவர் போல் அரிஷ்டநேமி திரும்பி இளைய யாதவரை பார்த்தார். ஏதோ சொல்லெடுக்க விழைபவர் போல் அசைந்தார். அர்ஜுனனை திரும்பிப் பார்த்தபின் “செல்வோம்” என்றார். அவர் முன்னால் செல்ல இளைய யாதவர் பின்தொடர்ந்தார். அர்ஜுனன் அவர்கள் இருவரையும் நோக்கியபடியே தொடர்ந்து சென்றான்.

தன் பெரிய கால்களை களிறு போல் தூக்கி வைத்து அரிஷ்டநேமி முன்னால் செல்ல பாறைகளில் தாவி இளைய யாதவரும் அர்ஜுனனும் அவரை தொடர்ந்தனர். முட்கள் செறிந்த பாதையை அவர் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. அர்ஜுனனின் கால்கள் முழுக்க முட்கள் கீறி குருதிக்கோடுகள் எழுந்து ஊறி வழிந்தன. திரும்பி தன் குருதி சூடி நின்ற அம்முள்முனைகளை நோக்கியபின் அவன் அவர்களை தொடர்ந்தான். மலைச்சரிவில் சிறிய பாறை இடுக்கு ஒன்றை நோக்கி சென்ற அரிஷ்டநேமி “இங்குதான் நான் தங்கியுள்ளேன்” என்றார். அர்ஜுனன் இளைய யாதவரை நோக்க அவர் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

மலையின் கருவறைத்திறப்பு போல தெரிந்த அவ்விடுக்குக்கு அருகே சென்று அமர்ந்து பின்பு தன் உடலை நீட்டி கால்களை உள்ளே விட்டு மெல்ல நாகம்போல உடலை உள்ளிழுத்துக்கொண்டார். குனிந்து நோக்கியபோது அங்கிருந்த இருண்ட சிற்றறை ஒன்றுக்குள் கால் மடித்து அமர்ந்திருப்பதை காணமுடிந்தது. இளைய யாதவர் அதேபோல உள்ளே சென்று அமர அர்ஜுனன் சற்று தயங்கியபின் தன்னையும் உள்ளே நுழைத்து மூலையில் உடல் ஒடுக்கி அமர்ந்தான். சில கணங்களுக்குப் பின் விழிபழக வெளியே இருந்து வந்த ஒளியின் கசிவில் அந்தப் பாறைக் குடைவு தெளிவடைந்தது.

“இங்கு வஜ்ரநந்தி அடிகள் என்னும் படிவர் பதினெட்டு ஆண்டுகாலம் வாழ்ந்தார். அவர் விண்ணேகியபின் எட்டு மாத காலம் இது ஒழிந்து கிடந்தது. அப்போதுதான் நான் வந்தேன். இவ்வறையை எனக்குரியதாக்கிக் கொண்டேன்” என்றார் அரிஷ்டநேமி. “இளையோனே, நீ என்னை தேடி வந்தது ஏன் என்று அறிய விழைகிறேன்” என்றார்.

“எவ்வண்ணம் ஆயினும் நான் வரவேண்டும் மூத்தவரே. இன்னும் நான்கு நாட்களில் இங்கு ரைவதகரின் விண்ணேற்று நாள் வரப்போகிறது. விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் விரும்பிக் கொண்டாடும் நாள் அது. அதற்கு முன் நான் வந்தது தங்களிடம் என் சார்பிலும் தங்கள் தந்தை சார்பிலும் ஒரு மன்றாட்டை முன் வைக்கவே. தாங்கள் நகர்புக வேண்டும். மதுராவின் அரசர் உக்ரசேனரின் மகள் தங்கள் மணமகளாக அங்கு சித்தமாக இருக்கிறார்.”

அவர் விழிகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை. “இங்கு நான் வாழும் வாழ்வை பார்த்தபின்னும் இதை சொல்வதற்கான உறுதிப்பாடு உன்னிடம் உள்ளதா இளையோனே?” என்றார். இளைய யாதவர் “தாங்கள் மூத்தவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தும் முறைமை உள்ளவர். தங்கள் குருதியிலிருந்து மைந்தர்கள் பிறக்கவேண்டும். அவர்கள் தந்தையையும் தந்தையை ஈன்ற முதுமூதாதையர்களையும் நீரும் உணவும் அளித்து மூச்சுலகில் நிலை நிறுத்தவேண்டும். மண்ணில் பிறந்த எவரும் முற்றிலும் தவிர்க்கமுடியாத கடனென்பது நீத்தாருக்குரியதே. அதன் பொருட்டு தாங்கள் வரவேண்டும்” என்றார்.

“அவ்வாறு நெறிநூல்கள் சொல்கின்றன என்று அறிவேன் இளையோனே. ஆனால் எனக்கு முன் ஏழு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களில் மூத்தவராகிய ஸினி இன்று சௌரிபுரத்தின் பட்டத்தரசர். அவர்கள் நம் தந்தையருக்குரிய கடன்கள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பும் தகுதியும் உடையவர்கள் அல்லவா?” என்றார்.

இளைய யாதவரின் முகம் எவ்வுணர்வை காட்டுகிறது என்று அர்ஜுனன் கூர்ந்து நோக்கினான். அதில் உணர்வுகள் எதுவும் தெரியவில்லை. மிக எளிய அன்றாட விவாதமொன்று நிகழ்ந்து கொண்டிருப்பதற்கான மெய்ப்பாடுகளே தெரிந்தன. “மூத்தவரே, நான் உரைப்பது நாளையை பற்றி.” சிலகணங்களுக்குப் பிறகு அரிஷ்டநேமி “நிமித்திகர் அவ்வண்ணம் உரைத்தனரா?” என்றார். “ஆம், தங்கள் மூத்தவர்கள் அனைவரும் களம்படுவது உறுதி. அவர்களின் குருதிகளில் மைந்தர்களும் எழப்போவதில்லை. தங்கள் மூதாதையருக்கு நீர்க்கடன் செலுத்தப்படவேண்டுமென்றால் தங்கள் குருதி முளைத்தாக வேண்டும். வேறு வழியில்லை” என்றார் இளைய யாதவர்.

அரிஷ்டநேமியின் முகத்தில் எழுந்த வலியை அர்ஜுனன் கண்டான். “என் தசைகளை அறுத்துக் கொண்டுதான் நான் என்னை இங்கிருந்து விடுவிக்கவேண்டும். இளையோனே, இன்று நான் கன்றுச்செடியல்ல, வேர் விட்டு கிளை எழுந்துவிட்ட மரம்” என்றார். “தங்கள் விழைவும் தேடலும் எனக்குத் தெரிகிறது. நான் சொல்வதற்கு ஏதுமில்லை. இனி முடிவெடுக்கவேண்டியது தங்கள் உள்ளம். இங்கிருந்து கிளம்புவது தங்களுக்கு ஒரு மறுபிறப்பென்றே உணர்கிறேன். குருதி வழிய தொப்புள் சரடு அறுத்து தாங்கள் அங்கு வந்து விழவேண்டும். ஆனால் வேறு வழியில்லை மூத்தவரே. மண்ணில் உள்ள அத்தனை பேருக்கும் உள்ள கடமை தங்கள் குலக்கொடியை நிலைநிறுத்துவது. அதிலிருந்து விலகிச்செல்லும் ஒருவர் தன் மூதாதையரின் நீட்சிமுடிவிலிக்கு பெரும் பழியொன்றை செய்தவராகிறார். அவர்களின் கண்ணீர் அவரை தொடரும். அச்சுமையை ஏற்றபின் அவர் செல்லும் தொலைவென்ன?”

அரிஷ்டநேமி சொல்லுக்கென தத்தளிப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். இருகைகளாலும் தன் குழலை நீவி பின்னுக்கு சரித்தார், கண்களை மூடி சில கணங்களுக்குப் பிறகு நீள்மூச்சுடன் திறந்து “என்ன சொல்வதென்றே தெரியவில்லை இளையோனே. நான் கற்ற அனைத்து நூல்களையும் நீயும் கற்றிருக்கிறாய். நான் சென்ற தொலைவெல்லாம் சென்றவன் நீ. நீயே உரை. பிறப்பின் கணம் ஒருவனிடம் வந்து தொற்றிக்கொள்ளும் இந்த பவச்சுழல் சரடை அறுக்கவே கூடாதென்றா நீ சொல்வதற்குப் பொருள்? பிறந்ததனாலேயே வீடுபேறற்றவனாகிவிட வேண்டுமென்றா சொல்கிறாய்? ஒருவனின் ஊழ் பிறவியிலேயே முற்றிலும் வகுக்கப்படுமென்றால் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவும் உணர்வும் எதற்காக? அவ்விரண்டின் அடியில் அணையாது எரியும் மீட்புக்கான தவிப்பின் பொருளென்ன?”

இளைய யாதவர் முகத்தில் மெல்லிய துயர் ஒன்று படிந்தது. “இதற்கெல்லாம் இறுதி விடை என ஒன்றை என்னால் சொல்லிவிட முடியுமென்று நான் எண்ணவில்லை மூத்தவரே. ஒருவேளை இவற்றை இயற்றி ஆடி கலைத்து மீண்டும் இயற்றும் அப்பெரு நெறி கூட இதற்கு விடையளிக்க முடியாமல் இருக்கலாம். பிறந்திறந்து செல்லும் இச்சுருள் பாதையில் ஒரு கண்ணி அறுந்தால் நம்மால் எண்ணி முடிக்கப்படாத பல்லாயிரம் கண்ணிகள் எங்கெங்கோ அறுபட்டு துடிதுடிக்கச் செய்கிறோம். பல ஆயிரம் கோடி நுண்சமன்களால் ஆன இந்த ஆட்டத்தை எப்போதைக்குமாக குலைக்கிறோம். அதற்கான உரிமை மானுடனுக்கு இல்லை. ஆனால் அச்சமன் குலைவை நிகழ்த்தாமல் எவரும் தானிருக்கும் இடத்திலிருந்து ஒருகணமும் எழப்போவதுமில்லை.”

“இப்பெரிய வலையை சமைத்து இதை மீறும் துடிப்பை அதன் ஒவ்வொரு துளியிலும் அமைத்து இங்கு ஆடவிட்ட அது அலகிலாத விளையாட்டு கொண்டது. அது ஒன்றையே என்னால் சொல்ல முடியும். முடிவெடுக்கவேண்டியது தாங்கள்” என்றார் இளைய யாதவர். அதன் பின் இருவரும் உரையாடவில்லை.

அரிஷ்டநேமி ஒவ்வொரு சொல்லாக எடுத்து கூர்நோக்கி தன்னுள் அமைத்துக் கொள்கிறார் என்பதை அவரது முகம் காட்டியது. சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி முற்றிலும் விடுபட்ட அமைதியை இளைய யாதவர் அடைந்திருப்பதை அவர் முகம் வெளிப்படுத்தியது. அர்ஜுனன் அந்தப் பாறையிருளில் குளிர்ந்து வெளியே செல்ல விழைந்தான். ஒளிமிக்க வானம் விரிந்து கிடக்கும் மலைப்பாறை உச்சியில் ஏறி இரு கைகளையும் சிறகுகளென நீட்டி நிற்க வேண்டுமென தோன்றியது. முடிவெடுக்கும் பொறுப்பால் மானுடனை மண்ணுடன் கட்டிப்போட்டிருக்கின்றன தெய்வங்கள். எங்கு செல்வதென இல்லாமல் காற்றுக்கு சிறகை கொடுத்திருக்கும் எளிய பூச்சிகள் மட்டுமே திளைக்கின்றன.

திரும்பி அரிஷ்டநேமியை நோக்கினான். அவனுக்கு இரக்கமே சுரந்தது. என்ன முடிவை எடுக்கப்போகிறார்? எம்முடிவென்றாலும் அதன் பொறுப்பை அவர் ஏற்றாக வேண்டும். அதுவோ அவர் சற்றும் புரிந்து கொள்ளாத முடிவின்மை. இன்னதென்றே அறியாத ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஒருவன் எங்கு நிறைவுடன் அமரமுடியும்? எதை எண்ணி தன்னை நிறுவிக்கொள்ள முடியும்? இளைய யாதவரை நோக்கினான். இத்தகைய தருணத்தில் இவர் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?

அவர் தன்னுள் அறக்கேள்வி எதையும் கேட்டுக்கொள்ள மாட்டார் என்று எண்ணினான். தன்னுள் இருந்து கொப்பளிக்கும் தொன்மையான ஊற்றொன்றின் விசையாலே இயக்கப்படும் மனிதர். இரண்டு வயதுக்குழந்தையை இயக்கும் அதே பேராற்றலே அதையும் இயக்குகிறது. உண்ண வெல்ல வளர இருக்க விழையும் ஒன்று. இம்மண்ணில் சிறகு சிறகென்று தவமிருக்கும் கூட்டுபுழுக்களும் உணவு உணவென்று தாவும் புலிக்குருளைகளும் வானம் வானம் என்று எம்பும் முளைச்செடிகளும் கொண்டுள்ள முதல் விசை அதன் ஒருதுளி. பிறிதொன்றுமல்ல.

இளைய யாதவர் எழுந்து “பார்த்தா, நாம் செல்வோம். தன் முடிவை அவர் எடுக்கட்டும்” என்று சொன்னபின்பு கைகூப்பினார். அரிஷ்டநேமி வாழ்த்துவதுபோல கைகாட்டினார். இளைய யாதவர் பாறை வெடிப்பில் கையூன்றி வெளிவந்தார். அர்ஜுனன் அவரைத் தொடர்ந்து வெளிவந்து வெளியே எழத்தொடங்கியிருந்த காலை இளவெயிலில் கண்கள் கூச கைகளால் மறைத்துக்கொண்டான். அப்பாலிருந்த இரு பாறைகளின் இடைவெளி வழியாக சரிந்து வந்த காற்று அவன் குழல்களை நீவி தோளில் பறக்கவிட்டது.

“நாம் செல்வோம்” என்றார் இளைய யாதவர். “அவர் எந்த முடிவை எடுப்பார்?” என்றான் அர்ஜுனன். “அறியக்கூடவில்லை. பார்த்தா, ஊழின் துலா நிகர் நிலையில் நின்று தயங்கும் அருங்கணங்களை வாழ்வில் அவ்வப்போது காண்கிறோம். முடிவின்மை என்பது நம் நெஞ்சை தன் மத்தகத்தால் முட்டும் தருணம் அது. யோகி இங்குள்ள ஒவ்வொரு கணத்திலும் அதை காண்பான். இதோ இந்தச் சிறு எறும்பின் மறுகணம் என்பது முடிவின்மையே” என்றார் இளைய யாதவர். அவ்வெறும்பு ஒரு சிறு இலை நுனி ஒன்றில் ஏறமுயன்றது. சுழன்று வீசிய காற்று அதை பறக்க வைத்தது. அது எங்கு சென்று விழுந்தது என்று அர்ஜுனன் நோக்கினான். காணமுடியவில்லை. “இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றை மானுடனால் விளக்க முடியாது. முற்றிலும் அறிதலால் ஆனது மானுட உள்ளம். முற்றிலும் அறிதலுக்கு அப்பால் இருப்பது அது” என்றார் இளைய யாதவர்.

இருவரும் பாறைகளில் கால்வைத்து கைகளால் கூர்முட்களை ஒதுக்கி மெல்ல நடந்தனர். எண்ணிக்கொண்டபோது எங்கோ சித்தம் பதைத்து நின்றுவிட்டது. ஒன்றுடன் ஒன்று பின்னி செல்லும் ஒரு பெரு நீட்சி. குகையிலிருந்து அவர் வெளிவரலாம். ஒரு பெண்ணுக்கு மணமகனாவதும், அவள் கருவறையில் உடல் கொண்டு உயிர் பெறாது துயின்றிருப்பது மண்நிகழ்வதும் நிகழலாம். உவகைகள் வஞ்சங்கள் துயரங்கள் வெற்றிதோல்விகள் என வாழ்வுப்பெருக்கு இங்கிருந்து எழலாம். பேரரசுகள் எழலாம். பெரும்போர்கள் நிகழலாம். குருதி வெள்ளம் பெருகலாம். நோக்கி முடிக்க முடியாத எதிர்காலம் வரை செல்லும் ஒரு குலச்சரடு இக்கணத்தில் ஒரு சொல்லில் பிறக்கலாம். அதை நிகழ்த்துவது எது?

அவன் தலைமேல் பறந்து வந்து கிளையில் அமர்ந்த காகம் முட்கிளையை ஊசலாட்டியபடி “கா” என்றது. ஏன் என்ற சொல். ஒரு பறவைக்கு அதன் மொழியாக ஒற்றைச் சொல்லை அளித்து அனுப்பியிருக்கிறது பிரம்மம். காகம் இருமுறை முட்கிளையை ஊசலாட்டியபின் எழுந்தது. மீண்டும் “கா! கா!” என்றது. மீண்டும் எழுந்து பிறிதொரு மரக்கிளைமேல் அமர்ந்து கரைந்தது. “தாங்கள் விழவு முடிந்ததும் ஊர் திரும்புகிறீர்களா?” என்று அர்ஜுனன் கேட்டான். அப்பெரும் வெறுமையை வெல்ல விழைந்தான். வெறுமையை கலைப்பதற்கென்றே ஆனவை சொற்கள். பொருளற்ற சொற்கள் மேலும் அதற்கு பொருத்தமானவை.

“ஆம், என்னுடன் நீரும் வருக!” என்றார் இளைய யாதவர். அவர் சுபத்திரையைப் பற்றி என்ன சொல்லவிருக்கிறார் என்று அர்ஜுனன் உணர்ந்து கொண்டான். அவன் எண்ணுவதை உணர்ந்தது போல் “சுபத்திரையை துரியோதனனுக்கு அளிக்க என் தமையன் எண்ணியிருக்கிறார். அவருக்கெதிராக எதுவும் செய்ய நான் எண்ணக்கூடாது” என்றார் இளைய யாதவர். அச்சொற்களை நூறு முறை திருப்பி நூற்றொன்றாவது புறத்தை நோக்கியபின் அர்ஜுனன் தலை அசைத்து “ஆம்” என்றான். அதன் பின் அவர்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.

மேலும் பாறைகளைக் கடந்து இறங்கியபோது அர்ஜுனன் இளைய யாதவர் தன்னைக் கண்டபோது சொன்ன முதல் சொற்றொடரை நினைவுகூர்ந்து திடுக்கிட்டு திரும்பி நோக்கி “துறவியாகவா?” என்றான். இளைய யாதவர் அவன் விழிகளை நோக்காமல் “ஆம். இத்தோற்றத்தில் உம்மை யாதவர்கள் அறிந்து கொள்ள முடியாது” என்றார். அர்ஜுனன் “நான் துறவிக்கோலம் பூணுவது அக்கோலத்துக்கு இழுக்கல்லவா?” என்றான். “உம்முள் ஒரு துறவி இல்லையென்றால் அது இழுக்கே. உண்டென்றால் அத்துறவியை எழுப்பி அவரை துவராடை அணியச்செய்யும்” என்றார் இளைய யாதவர். அவனை நோக்கித் திரும்பி அவர் பேசவில்லை. சுருள் குழல் படிந்த கரிய தோள்களை சில கணங்கள் உற்று நோக்கியபின் “நான் துறவிக்கோலம் கொள்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

இளைய யாதவர் கீழே தெரிந்த உருளைப்பாறையில் குதிக்க அர்ஜுனன் தொடர்ந்து குதித்தான். இரு பாறைவளைவுகளைக் கடந்து அவர்கள் மீண்டும் செம்மண் பாதைக்கு வந்தபோது மேலே கைதட்டும் ஒலி கேட்டது. இளைய யாதவர் திரும்பி நோக்கி “தமையன்” என்றார். அர்ஜுனன் திரும்பியபோது அங்கொரு மலைப்பாறை மேல் எழுந்த அரிஷ்டநேமியை கண்டான். “நான் வருகிறேன் இளையோனே, அது மூதாதையரின் ஆணை” என்றார் அரிஷ்டநேமி. இளைய யாதவர் “நன்று மூத்தவரே” என்றார். “இப்போது என் குகைக்குள் ஒரு காகம் வந்தது. அது என்னிடம் சொல்வதென்ன என்று உணர்ந்தேன்.”

இளைய யாதவர் வெறுமனே நோக்கினார். “ஊன் என்று அது கூவியது” என்றார் அரிஷ்டநேமி. “நான் எளிய மனிதன், வெறும் ஊன்தடி. ஒன்றிலிருந்து ஒன்றென தன்னை பெருக்கி இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் முடிவிலா ஊன்சரடின் ஒரு கண்ணி. பிற அனைத்தும் என் வெறும் ஆணவங்கள். அவற்றைத் துரத்தாமல் என்னை நான் உணர்வதற்கில்லை. யாதவனே, நீ கொண்டுவந்த செய்திக்கு உடன்படுகிறேன். என் மூதாதையர் எழட்டும். பிறந்து பிறப்பித்து மடிவதற்கப்பால் மானுடர்க்கு ஆவதொன்றும் இல்லையென்றால் அதுவே ஆகட்டும்” என்றார் அரிஷ்டநேமி.

தொடர்புடைய பதிவுகள்

எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்

$
0
0

1

 

1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு இதில் இருந்தது.

எம்.சி.ராஜா

இந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்க இயக்கமே குழந்தை நிலையில்தான் இருந்தது. மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற ஊர்களில் உள்ள ஆலை ஊழியர் நடுவேதான் அது அரும்பியிருந்தது.

 

இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அதற்கே உரிய பல பிரச்சினைகள் இருந்தன. இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களில் கடுமையான நில அடிமை முறையில் இருந்து தப்பி வந்தவர்கள். அவர்களுக்கு தொழிற்சாலை உழைப்பு எளிதானதாக இருந்தது. மேலும் அவர்களுக்கு கிடைத்த பொருளியல் சுதந்திரத்தை அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். ஆனால் தொழிற்சாலை உழைப்பு அவர்களின் ஆரோக்கியத்தை அழிக்கிறது என்றும் கடுமையான சுரண்டலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

 

அத்துடன் அந்த ஊழியர்கள் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த காலகட்டத்தின் சாதி மத நம்பிக்கைகள் அனைத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். தொழிலாளர் என்ற அடையாளத்துடன் ஒருங்கிணைவது அவர்களுக்கு அனேகமாக சாத்தியப்படவில்லை.

 

மூன்றாவதாக, அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கம் கொண்டு அழிந்தனர். அடிதடிகள், கள்ள உறவுகள், விபச்சாரம் போன்றவற்றில் மூழ்கியிருந்தனர்.

 

கிட்டத்தட்ட ஒரு மதத்தைப் பரப்புவது போல உக்கிரமான அறப்பிரச்சாரம் வழியாகவே இந்தியாவில் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க முடிந்தது. அந்த இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் திரு.வி.க.போல துறவு மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தார்கள்.

 

1921 பின்னி மில் வேலை நிறுத்தம் இந்திய அரசியல் சூழலில் உள்ள முக்கியமான முரண்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இந்திய தலித்துக்களில் ஒரு சாரார் நிலப்பிரபுத்துவ அடிமை வாழ்வில் இருந்து வெளியே வரமுடிந்தது, பிரிட்டிஷார் ராணுவத்திலும் ஆலைகளிலும் அவர்களைச் சேர்த்துக் கொண்டதன் விளைவாகவே. ஆகவே பிரிட்டிஷார் மீது விசுவாசத்துடன் அவர்கள் இருந்தார்கள்.

 

அத்துடன் இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சாதிய உணர்வுடன் இருந்தார்கள். அவர்கள் தலித் ஊழியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஆரம்ப கால தொழிற்சங்க முன்னோடிகள் தலித்துக்களை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

 

பின்னி ஆலை வேலை நிறுத்தத்தில் தலித்துக்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் வெள்ளையர் ஆட்சிக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தார்கள். இது கருங்காலித்தனம் என்று தொழிலாளர்கள் கொதித்தார்கள். தலித் தொழிலாளர்களுக்கும் பிறருக்கும் கடுமையான மோதல்கள் நடைபெற்றன.

 

இந்த நிகழ்வுகளை திரு.வி.க. அவரது வாழ்க்கை வரலாற்றில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். திரு.வி.க. தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். மிக எளிமையான காந்தியவாதி. கால்நடையாகச் செல்பவர். அவரைத் தாக்கவும் பழியை தலித்துக்கள் மீது போடவும் பிரிட்டிஷ் அரசு சதி செய்தது.

 

இந்த நிலையில்தான் புளியந்தோப்பு கலவரம் என்று புகழ்பெற்ற நிகழ்ச்சி நடந்தது. தலித்துக்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் பெரிய மோதல் வெடித்தது. துணிச்சலுடன் கலவரப்பகுதிகளுக்குப் போன திரு.வி.க. தாக்குபவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அவர்களை நோக்கிப் பேசினார். அந்தக் கலவரத்தை பரவலாக்கி அதன்மூலம் போராட்டத்தை ஒடுக்க ஆங்கில அரசு செய்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தார்.

 

அந்தப் போராட்டத்தில் திரு.வி.க.வுக்கு எதிர்த்தரப்பில் தலைமை ஏற்றிருந்தவர் எம்.சி.ராஜா. தலித் தலைவரான எம்.சி.ராஜா உறுதியான பிரிட்டிஷ் ஆதரவாளர். பிரிட்டிஷார் அதன் பொருட்டு அவருக்கு இராவ் பகதூர் உள்ளிட்ட பட்டங்களைக் கொடுத்து கௌரவித்தார்கள். திரு.வி.க.வும் எம்.சி.ராஜாவும் இராயப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள். வெஸ்லி கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். இருவருமே வெஸ்லி கல்லூரியில் வேலை பார்த்தார்கள். அங்கே ராஜா முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள பகுதியின் மேற்பார்வையாளர் ஆனார். திரு.வி.க. தமிழ்ப் பேராசிரியர்.

 

பின்னர் ராஜா 1916 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆதரவுக்காக உருவான ஜஸ்டிஸ் கட்சியில் இணைந்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். திரு.வி.க.வின் மனம் காங்கிரஸ் பால் சென்றது. ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்துவதற்காக அவர் கல்லூரிப் பணியை உதறியபோது, எம்.சி.ராஜா வேலையை விட்டுவிட வேண்டாம் என்று திரு.வி.க.வை விலக்கினார். திரு.வி.க. அதைப் பொருட்படுத்தவில்லை.

 

நண்பர்கள் இருவரும் போரிடும் இருதரப்பையும் வழிநடத்தும் நாடகீயமான வரலாற்றுத் தருணம். ஆனால் இருவரிடையே நட்பு மட்டும் வலுவாகவே நீடித்தது. போராட்டத்தின் தொடக்கத்தில் திரு.வி.கவை எம்.சி.ராஜா வந்து பலமுறை சந்தித்து நட்புடன் விலக்கினார். பிரிட்டிஷ் ஆட்சி உங்களையும் குடும்பத்தையும் கடுமையாகத் துன்புறுத்தும். ஆகவே  வீண் சாகசங்கள் வேண்டாம் என்றார்.

 

ஒருநாள் இதைப்பற்றி திரு.வி.கவும் ராஜாவும் பூசலிட்டுக் கொண்டார்கள். ‘என்னை அரசாங்கம் சார்பில் நிற்கச் செய்திருப்பது எனது சமுகம். எனது சமூகம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. அதை முன்னேற்ற அரசின் துணை தேவையாக இருக்கிறது’ என்றார் ராஜா. ‘தொழிலில் சாதி பேதம் கொண்டு வரப்படக்கூடாது. ஆதிதிராவிடர் தங்கள் உரிமைகளை போராடித்தான் பெறமுடியும்’ என்றார் திரு.வி.க.

‘நீங்கள் எங்கள் இனத்தாரைக் கொண்டு புரட்சி செய்வித்தால் அதன் பலனை உயர்சாதியினர் மட்டுமே அனுபவிப்பார்கள். ஆகவே நீங்கள் மூட்டும் தீயை அணைப்பது எனது கடமை’ என்றார் எம்.சி.ராஜா. ‘தொழிலாளர் இயக்கம் வளரும்தோறும் சாதி பேதங்கள் மறையும். அது மட்டுமே நம்முன் உள்ள வழி’ என்றார் திரு.வி.க.

 

சிரித்தபடி ராஜா சொன்னார், “நீங்கள் இலக்கியம் படித்தவர். ஊடல் இருந்தால்தான் கூடல் சிறக்கும் என்பார்கள். இது நமக்குள் கூடலுக்கான ஊடலாக இருக்கட்டும்’ அதன்பின் அவர்கள் பிரிந்தார்கள்.

 

கலவரம் உச்சத்தை அடைந்து திரு.வி.க தாக்கப்படக்கூடும் என்ற நிலை நிலவியபோது எம்.சி.ராஜா திரு.வி.கவைப் பார்க்க வந்தார். ”எனக்கு போலீஸ் துணை, இராணுவத் துணை, கார் துணை இருக்கிறது. கையில் துப்பாக்கியும் உண்டு. உங்களுக்கு ஒரு துணையும் இல்லை. குழப்பத்திற்கு இடையே நடமாடுகிறீர்களே” என்று வருந்தினார். “நேற்று இரவு இந்த எண்ணம் ஏற்பட்டபோது என்னால் தூங்கவே முடியவில்லை” என்றார்.

 

‘எனக்கு தொழிலாளர் துணை உண்டு. உங்கள் பக்கத்தில் உள்ள தலித் தொழிலாளர்களின் மனசாட்சியும் எனக்குத் துணையே’ என்றார் திரு.வி.க.

 

பிரச்சினை முற்றியபோது எம்.சி.ராஜா பாதுகாப்புக்காக ராயப்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு சென்றுவிட்டார். அதனால் திரு.வி.க அவரைப் பார்ப்பது குறைந்தது. ஒருநாள் காலை திரு.வி.கவின் வீட்டு முற்றத்தில் எம்.சி.ராஜாவின் கார் வந்து நின்றது. ‘உங்களுக்குத் தொல்லை நெருங்கி வருகிறதே’ என்று சொன்னபோது சட்டென்று ராஜா கண்கலங்கி விட்டார்.

 

அவர் கண்களில் இருந்த நீரைக் கண்டு கலங்கிய திரு.வி.க சொன்னார், ‘நாடு கடத்தும் விஷயம்தானே, இந்நிலையில் என்ன செய்வது. நடப்பது நடக்கட்டும்’.

 

பிரச்சினை பிற்பாடு மெல்ல சமரசமாகியது. பின்னர் இரட்டைமலை சீனிவாசனின் மணிவிழா நடைபெற்றபோது தலைமை தாங்கி பேசினார் திரு.வி.க. அப்போது ஒரு பேச்சாளர் ராஜாவும் திரு.வி.கவும் முரண்பட்டதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு எம்.சி.ராஜா பதில் கூறினார்.

 

‘இப்போது இன்னும் ஒரு தொழிலாளர் போராட்டம் நடந்ததே, அதில் நான் தலித் தொழிலாளர்கள் தனித்து முரண்பட்டு நிறகும்படிச் சொன்னேனா என்ன? இல்லை. ஏனென்றால் இப்போது இயல்பாகவே தொழிலாளர் ஒற்றுமை உருவாகியிருக்கிறது. தீண்டாமை குறைந்திருக்கிறது. எங்கள் இனத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. 1921இல் நிலைமை அப்படி இருக்கவில்லை. அன்றைய சூழலுக்காகவே நான் எதிர்வினையாற்றினேன். எந்தத் தவறும் நான் செய்யவில்லை.’

 

திரு.வி.க.வுடன் தன்னுடைய நட்பு அப்போதும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறது எனுறு உணர்ச்சிகரமாகக் கூறிய எம்.சி.ராஜா ‘தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக நான் பிணங்கிய முறையில் உழைத்தேன். திரு.வி.க இணங்கிய முறையில் உழைத்தார். அப்பிணக்கம் இப்போது என்னாலும் எவராலும் பிரிக்கமுடியாத இணக்கமாக பரிணாமம் கொண்டுள்ளது’ என்றார்.

 

இரு பெரும் தலைவர்களின் மன விரிவை காட்டும் சந்தர்ப்பம் இது. வரலாறு உருவாக்கும் சவால்களை மிகவும் சிக்கலானவை. அவற்றை சந்திக்கையில் தலைமைப் பண்பும் சிந்தனை வீச்சும் கொண்ட பெருமனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கில் எதிர்வினையாற்றுகின்றன. ஒருவர் கண்டதை ஒருவர் காணாமல் போகலாம். ஒருவர் போகும் வழியை ஒருவர் எதிர்க்கலாம். அவர்களிடையே முரண்பாடுகள் உருவாகலாம். மோதல்களும் நிகழலாம். அத்துடன் இயல்பாகவே தலைமைப்பண்பு கொண்டவர்கள் நடுவே அகங்கார மோதலும் இருக்கும். அதை தவிர்க்க முடியாது.

 

ஆனாலும் அவையெல்லாம் வரலாற்று நாடகத்தின் சில தருணங்களே என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். எது சரி எது தவறு என்பதை காலமே தீர்மானிக்கும் என்று உணர்ந்திருப்பார்கள். முற்றிலும் சரியான வழி என்றும் முற்றிலும் தவறான வழி என்றும் ஏதும் இல்லை என்றும் அவர்கள் உள்ளுர அறிந்திருப்பார்கள்.

 

இதே முரணியக்கத்தினை நாம் அம்பேத்கார்-காந்தி உறவிலும் காணலாம். அவர்கள் முரண்படுவதன் மூலம் ஒருவரை ஒருவர் சரிசெய்து கொண்டார்கள். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டார்கள். அம்பேத்கார் காந்தியப் போராட்டங்களை நெருங்கி வந்தார். காந்தி சாதி ஒழிப்பை நோக்கி வந்தார்.

 

 

ஆனால் வரலாற்றை எளிமைப்படுத்தி வெறும் ‘சண்டை’ களாகவும் ‘சதி’களாகவும் பார்க்கும் எளிய மனங்களுக்கு இது புரிவதில்லை. அவர்கள் கறுப்பு வெள்ளைகளை உருவாக்குகிறார்கள். வில்லன்களையும் கதாநாயகர்களையும் உருவாக்குகிறார்கள். அந்த எளிமைப்படுத்தல் எப்போதும் வரலாற்றுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கிறது.

இரட்டைமலை சீனிவாசன்

அப்படிப்பட்ட அநீதி இழைக்கப்ட்ட மனிதர் எம்.சி.ராஜா.  இந்திய அரசியலில் அறுபதுகளுக்குப் பின்னர் அம்பேத்கார் ஒரு மாபெரும் கதாநாயகனாக ஆக்கப்பட்டார். அம்பேத்காருடன் முரண்பட்ட அத்தனை பேரையும் எதிர்நாயகர்களாக சித்தரித்தனர் அம்பேத்கார் பக்தர்கள். அம்பேத்காரிடம் எப்போதுமே உரையாடிய, அவரை இந்திய அரசியல் சாசனத்தை எழுதும் இடத்தில் அமர்த்திய காந்தி அம்பேத்காரை ஒழிக்கப் போராடுபவராக,  ஒற்றைக் கண்ணும் கன்னத்தில் மருவும் புஸ்தி மீசையும் கடகட சிரிப்பும் கொண்ட வில்லன் ஆக, மாறினார். அம்பேத்காரை கடைசிவரை தன் சகாவாக நினைத்த, அவருக்குப் பின்புலமாக நின்ற நேரு அம்பேத்காரின் எதிரியானார்.

 

அந்த வரிசையில எம்.சி.ராஜா சேர்க்கப்பட்டார். அவர் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு கதாநாயகனை காட்டிக் கொடுத்த துரோகியாகச் சித்தரிக்கப்பட்டார். அவரை ஒரு விபீஷனனாக எண்ணும் தலித் தலைவர்கள் பலர் இன்றும் உண்டு. அந்த எண்ணத்தை வலுப்பெறச் செய்யும் அம்சமாக இருந்தது கடைசிவரை இந்துவாக இந்து மதத்திற்குள்ளேயே இருககவேண்டும் என்று ராஜா கூறியது. இதற்காகவே இந்து வெறுப்பாளர்களால் அவர் தூஷிக்கப்பட்டார். முத்திரை குத்தப்பட்டு வரலாற்றின் இருளுக்குத் தள்ளப்பட்டார்.

 

இன்று எம்.சி.ராஜாவை எந்த மக்களுக்காக அவர் தன் மொத்த வாழ்நாளை செலவிட்டாரோ அந்த மக்களில் கணிசமானோர் வெறுக்கிறார்கள். அவரைப்பற்றி பேசுவது குறைவு. அவரது நல்ல வாழ்க்கை வரலாற்று நூல் கூட இன்று கிடைப்பதில்லை. ‘பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வே.அலெக்ஸ் தொகுத்து வெளிவந்துள்ள நூல் எம்.சி.ராஜா அவாகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க அறிமுகத்தை அளிக்கக்கூடியது.

 

இந்த நூல் 1930 இல் கே.சிவசண்முகம் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள ‘எம்.சி.ராஜாவின் வாழ்க்கையும் தெரிவு செய்யப்பட்ட எழுத்தோவியங்களும் உரைகளும்’ என்ற நூலின் தமிழாக்கம். 1927இல் வெளிவந்த ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற நூலுக்கு 1968இல் வெளிவந்த தமிழாக்கம் ஆகியவற்றை முதல் பிரிவாகக் கொண்டது. ராஜாவின் சட்டமன்ற உரைகள், அவரைப் பற்றிய நாளிதழ் குறிப்புகள், அவரைப்பற்றி பலர் கூறிய கருத்துக்கள் ஆகியவை அடுத்த மூன்று பகுதிகளாக உள்ளன. உண்மையில் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுக்கான கச்சாப்பொருள் இந்த நூலில் உள்ளது. அத்தகையதோர் நூல் எழுதப்பட்டால் நல்லது.

 

இந்நூலுக்கான சிறப்புரையாக காலஞ்சென்ற தலித் சிந்தனையாளரான அன்பு பொன்னோவியம் அவர்களின் ஒரு நீளமான கடிதம் உள்ளது. அறவுரை என்ற இதழில் ‘மூத்தவர் மூவர்’ என்ற பேரில் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக பள்ளி கொண்டா திரு.கி.கிருஷ்ணகுமார் எழுதிய கடிதத்துக்கு அந்த இதழின் ஆசிரியராக இருந்த அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய பதில் கடிதம் இது. 10.7.1992இல் எழுதப்பட்டுள்ளது.

அயோத்திதாச பண்டிதர்

தன் கடிதத்தில் கிருஷ்ணகுமார் எம்.சி.ராஜா குறித்து அன்றும் (இன்றும்கூட) அவரது சமூகத்தினரிடம் இருக்கும் ஐயங்களைப் பட்டியலிட்டு விவாதிக்கிறார். அதில் அம்பேத்கார் மைய அணுகுமுறை தெளிவாகவே தெரிகிறது, ”ஒரு மனிதரை அதிலும் பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மனிதரைப்பற்றி பாராட்டுவதோ புகழ்வதோ எழுதும் முன் அவரது வாழ்வு முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதே அவரைப்பற்றி சரியான கணிப்பினை வெளியிட உதவும் என்று எண்ணுகிறேன்.

 

அந்த அளவுகோலின்படி பார்ப்போமென்றால் திரு.எம்.சி.ராஜா அவர்களின் முற்பகுதி வாழ்வு போற்றுதலுக்குரியதே. ஐயமில்லை. ஆனால் வட்டமேஜை மாநாடுகளில் தாம் பங்குகொள்ள இயலாமல் போனதற்குக் காரணம் நமது இரட்சகர் பாபாசாகிப் அம்பேத்கார் அவர்கள்தான் எனத் தவறாக ஒரு கருத்தினை தனது மனதிற் கொண்டு நம் சமுதாய நலன் கருதி அணணல் எடுத்த ஒவ்வொரு முடிவினையும் எதிர்ப்பதையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த திருமிகு ராஜா அவர்களின் வாழ்வை எப்படி போற்றமுடியும், புகழமுடியும்?

 

நான் இந்துவாகவே பிறந்தேன்-நான்இந்துவாகவே இறப்பேன் என அண்ணலின் மதமாற்ற உரைக்கு எதிர்த்து மறுப்பு அறிக்கை கொடுத்த தோடல்லாமல் மாற்று அரசியல் இயக்கத் தலைவர்களைக் காட்டிலும் மாற்று சமுதாயத்தினரைக் காட்டிலும் அதிகமாக அண்ணலுக்கு சிரமம் கொடுத்த பெருமை இவரையே சாரும்’‘ என்று சாடுகிறார் கிருஷ்ணகுமார்.

 

என்னுடைய பார்வையில் கிருஷ்ணகுமாரின் பிரச்சினை மிக எளிமையானது. அம்பேத்காரை விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட ஆளுமையாகக் காண்கிறார். மாற்றுத் தரப்பினர்கூட அவரை எதிர்க்ககூடாது என்று நினைக்கிறார். அம்பேத்காரில் பிழையோ, புரிதல் போதாமையோ நிகழமுடியும் என்பதை அவர் நம்பப்போவதில்லை. அம்பேத்கார் கூறியவற்றை வேறு ஒரு கோணத்தில் பேறு ஒருவர் அணுகமுடியும் என்றே நினைக்கவில்லை.

 

அம்பேத்காரை கேள்விக்கு அப்பாற்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட ஒரு நபி போல அமர்த்தியபிறகு பிறரைப் பார்க்கும்போது அவருடைய பார்வையில் அவர்களெல்லாம் மிகச் சாதாரணமாக ஆகிவிடுகிறார்கள். அம்பேத்காரின் மறுதரப்பாக ஒலிக்கும் தகுதியே அவர்களிடம் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார் கிருஷ்ணகுமார். அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை எல்லாம் குறைத்தும் தீர்த்தும் மதிப்பிட்டு விடுகிறார். அதாவது அம்பேத்காரை எம்.சி.ராஜா எதிர்த்தமைக்கு பதவியாசை தவிர வேறு காரணங்களே இருக்கமுடியாது என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார்.

 

வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தை அணுகும் இரண்டு தலைமைப் பண்புள்ள மனங்கள் ஒரே வகையான அணுகுமுறையைக் கொண்டிருக்கமுடியாது. அவர்களின் மனம் செயல்படும்முறை அவர்கள் தங்கள் கல்வி, அனுபவம் மூலம் தாங்களே அடைந்த ஒன்றாக, தனித்துவம் மிக்கதாகவே இருக்கும். ஆகவே அவர்களுக்குள் முரண்பாடுகள் இருக்கும். உலகம் முழுக்க அத்தனை அரசியல், சமூக, மத இயக்கங்களிலும் இதுவே நிகழ்கிறது. நபியால் நிறுவப்பட்டதும் அவர்கூற்றுக்கு மறு கூற்று இல்லாததுமான இஸ்லாம் மதத்தில்கூட அவருக்குப்பின் முரண்பாடுகளே எழுந்துவந்தன.

anbu-ponnovium01

அன்பு பொன்னோவியம்

முரண்பாடுகளை இயல்பான அறிவியக்கமாகக் கருதுவதே முறை. முரண்பட்டு விவாதிக்கும் இரு தலைவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தவில்லை, பலப்படுத்துகிறார்கள். முரண்பாடும் விவாதமும் இல்லாமல் ஒற்றைப்படையான முறையில் தலைமை வழிபாட்டுடன் இயங்கும் இயக்கம் அமைப்பை மட்டுமே உருவாக்கும். கருத்தியலியக்கமாக வலுப்பெறாது. இதுவே வரலாறு காட்டும் பாதையாகும்.

 

எம்.சி.ராஜாவின் ஆளுமை அம்பேத்காருக்கு இணையானது என்று நம்பினாலே இந்த வினாக்களுக்கு விடை எளிதில் கிடைத்துவிடும். அம்பேத்கார் அவர் பிறந்து வளர்ந்த வட இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்தார். எம்.சி.ராஜா தெற்கை. அவர்கள் இருவர் நடுவே பார்வைகளில் தூரம் வருவதற்கு இதுவே போதிய காரணமாகும்.

 

இன்னும் பல விஷயங்களை நாம் யோசிக்கலாம். இந்தியாவின் தலித் தலைவர்களில் ஏறத்தாழ அனைவருமே நகர்ப்புறம் சார்ந்தவர்கள். நகர்ப்புறத்து தலித்துக்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைத்தது, அவர்களே தலைமைக்கு வரமுடிந்தது. ஆனால் முற்றிலும் கிராமம் சார்ந்தவரான, கல்வியே கற்காதவரான அய்யன்காளி (கேரள புலையர் மகாசபை தலைவர்) போன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் எழுந்து வந்திருந்தார் என்றால் அவருக்கும் பிறருக்கும் இடையே இன்றும் வலுவான முரணபாடுகள் உருவாகியிருக்கும். அய்யன் காளி தேசிய அளவில் செயல்பட்டிருந்தால் அம்பேத்காருக்கு முற்றிலும் எதிரான தரப்பில் இருந்திருப்பார். அப்போது அம்பேத்காரை முன்வைத்து பிற அத்தனை தலித் தலைவர்களையும் துரோகிகள் என்று வரலாறு எழுதப்பட்டிருக்கும்.

 

இன்னும் ஒன்று, இந்த கட்டுரையில் அன்பு பொன்னோவியம் அவர்களால் மூன்று தலித் முன்னோடிகளாகக் குறிப்பிடப்படும் மூன்று தலைவர்கள்-இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா ஆகியோர்- பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஒட்டுமொத்த தலித்துக்களின் தலைவர்களாக ஏற்க பிற தலித்சாதியினர் ஒத்துக்கொள்வார்களா என்ன? மகாராஷ்ட்டிரத்திலேயே அம்பேத்காரை மஹர்கள் அன்றி பிற சாதியினர் ஏற்றுக்கொள்ளவில்ல. அவரது தேர்தல் தோல்விகளுக்கு அதுவே காரணம்.

 

ஆகவே ஒற்றைப்படையாக்குவது, அதிகார மையங்களை உருவாக்குவது, தலைமை வழிபாடு மூலம் இன்றைய ஜனநாயக யுகத்தில் அரசியலே சாத்தியமல்ல. தொடர்ச்சியாக விரிவடையக் கூடிய, அனைவருக்கும் இடமளிக்கக்கூடிய, முரண்பாடுகளை ஏற்கக்கூடிய, ஒரு ஜனநாயக அரசியலே அதற்குத்தேவை. தலித் தலைமை என்பது எந்நிலையிலும் கூட்டுத் தலைமையாகவே இருக்கமுடியும். அதன் வரலாறு கூட்டுவரலாறாக, விவாதங்களின் கதையாக மட்டுமே இருக்க முடியும்.

 

தன் பதிலில் கிட்டத்தட்ட அதைத்தான் அன்பு பொன்னோவியம் அவர்கள் கூறுகிறார். ‘நிகழ்காலச் சூழ்நிலையை எதிர்கால விளைவுகளோடு இருவர் வெவ்வேறு கோணங்களில் நோக்கினார்கள். அவர்கள் கண்ட முடிவு ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மாறுபடலாம் மாறுபட்டது. தவறு அவர்களுடையது அல்ல. அதை வைத்துக்கொண்டு கணக்குபோடும் நம்முடையது ஆகவும் இருக்குமல்லவா?’

 

வரலாற்றுச் சந்தர்பபங்களை மதிப்பிடவும். சாராம்சப்படுத்தவும் ஒரேவழிதான் என்றில்லை. எத்தனையோ வழிகள் இருக்கலாம். அதில் எது சரி எது தவறு என்று காலம்தான் தீர்மானிக்கமுடியும். ராஜா எடுத்த முடிவுகள் தேசிய இயக்கம் தன் உச்சத்தை அடைந்தபோது அந்த வேகத்துடன் ஒத்துப்போவதன் வழியாக தனது சமூகத்தின் நலனைக்காக்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. அதையே பின்னர் அம்பேத்காரும் செய்தார், காஙகிரஸ் அரசில் அவர் அமைச்சரானார்.

 

இதே போன்ற முரண்பாடும் மோதலும் எம்.சி.ராஜாவுக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்கும் இடையேயும் இருந்தது. அத்தகைய முரண்பாடுகள் எந்த இயக்கத்திலும் தவிர்க்க முடியாதவை. காங்கிரஸ் இயக்கத்திலும் கம்யூனிச இயக்கத்திலும்கூட அவை இருந்தன. ராஜா அதன்பேரில் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டு இன்று மீட்கப்பட்டிருக்கிறார்.

 

ஜே.சிவசண்முகம் பிள்ளை பி.ஏ. அவர்கள் எழுதி பித்தாபுரம் மகாராஜாவின் அணிந்துரையுடன் வெளிவந்த எம்.சி.ராஜாவின் வரலாற்றுக் குறிப்பின்படி ராஜாவின் வாழ்க்கையின் வரைகோட்டுச் சித்திரத்தை அறியமுடிகிறது. ராஜாவின் தாத்தா முன்னாள் இந்திய ராணுவ வீரர். அவரது அப்பா திரு.சின்னத்தம்பிப் பிள்ளை சென்னை லாரனஸ் அஸைலம் அச்சகத்தின் துணை மேலாளராகவும் கணக்கராகவும் உயர்பதவி வகித்தார். சென்னை ஆதிதிராவிட மகாஜன சபாவின் கவுரவச் செயலாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.

 

1883 ஜுன் 17ஆம் நாள் ராஜா பிறந்தார். வெஸ்லி கல்லூரியிலும் கிறித்தவக் கல்லூரியிலும் படிக்கும் நாட்களில் ராஜா மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காராக கல்லூரியால் போற்றப்பட்டவராக இருந்தார். கிறித்தவக் கல்லூரி முதல்வர் முனைவர் மில்லரின் அன்புக்குரிய மாணவராக இருந்தார். படிப்பு முடித்து ஆசிரியரானார். அக்காலத்தில் சென்னை ராஜதானியில் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடமாக அமைந்த பல நூல்கள் ராஜாவால் எழுதப்பட்டவை. 1917இல் ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவால் ஆரம்பப் பள்ளிக் கல்விக்குழுவுக்கு நியமனம் செய்ப்பட்ட எம்.சி.ராஜா 1919இல் ஆரம்பக் கல்வி மசோதாவிற்கான பொதுக்குழுவிலும் பணியாற்றினார். உயர்நிலைப்பள்ளி கல்வி மறுசீரமைப்புக்குழுவிலும் செயல்பட்டார். சாரணர் இயக்கத்திலும் ஈடுபட்டார்.

 

1916 முதல் சென்னையை மையமாக்கி இயங்கிய ஆதிதிராவிட மகாஜன சபாவை மறுசீரமைப்புச் செய்து துடிப்பான இயக்கமாக ஆக்கினார். பிரிட்டிஷ் இந்திய அரசு சமூக சீர்திருத்தத்திற்காக அமைத்த குழுக்களில் உறுப்பினராக இருந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடினார். 1917இல் மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தக் குழுவினரை சந்தித்த ஆதிதிராவிடர் தூதுக்குழுவை வழிநடத்தினார். 1923இல் சென்னை ஆளுநர் விலிங்டன் பிரபுவை சநதித்த தூதுக்குழுவிலும் இருந்தார். 1929இல் இர்வின் பிரபுவைச் சந்தித்த தூதுக்குழுவிலும் பங்கெடுத்தார். இந்தியா முழுக்க நடந்த ஏராளமான சமூக சீர்திருத்த மாநாடுகளில் பங்கெடுத்து ஆதிராவிட மக்களின் நிலைமையைப் பற்றி எடுத்துரைத்தார்.

 

எம்.சி.ராஜா இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் மாநில கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர். விலிங்டன் பிரபு அவரை 1919இல் மாநில சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்தார். 1921, 1925, 1926 ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். 1922இல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு இராவ் பகதூர் பட்டத்தை அளித்தது.

 

எம்.சி.ராஜா சட்டமன்ற உறுப்பினராக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவராக இருந்தாலும் பொதுவாக சென்னை மக்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு அனைவருக்குமாகப் போராடுபவராகவே இருந்திருக்கிறார். அக்காலகட்டத்து செய்திகளைப் பார்க்கையில் அவர் பொதுவான மக்கள் தலைவராக மதிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

 

ஜஸ்டிஸ் கட்சியின் தொடக்க காலம் முதலே தன் உறுப்பினராகவும் தலைவராகவும் பணியாற்றிய் எம்.சி.ராஜா  கடுமையான காங்கிரஸ் எதிர்ப்புப்போக்கு கொண்டிருந்தார். காங்கிரஸின் போராட்டங்களக்கு எதிராக ஹிந்துமகாசபை போன்ற இயக்கங்களுடனும் ஒத்துழைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியே இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரின் நலன்களை காக்கக்கூடியது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி இந்நம்பிக்கையிலேயே சென்றது.

 

எம்.சி.ராஜாவைப் பற்றிய  இந்த நூலின் வழியாக நாம் காணும் ஆளுமை கல்வியிலும் இயல்பான அறிவுத்திறமையிலும் தலைமைப் பண்பிலும் முன்னிலையில் இருந்த ஒரு மனிதருடையது. வரலாற்றுப் பெருக்கு அவருக்கு அளித்த சந்தர்ப்பங்களில் தன்னுடைய கொள்கைகள் மற்றும் நம்பிக்கைளில் அவர் உறுதியாகவே இருந்திருக்கிறார். அதன் மூலம் தன்னுடைய மக்களுக்கு முடிந்தவரை பங்களிப்பாற்றியிருக்கிறார். அவரது ஆளுமை எந்த அளவுக்கு பெரியதோ அந்த அளவுக்கு அவரது அரசியல் வாழ்க்கை சிறப்புக்குரியதாக அமையவில்லை. அவருக்குத் தகுதியான இடங்களை அவர் பெறவில்லை. அதற்கு வரலாற்றின் தன்னிச்சையான ஊடுபாவுகளையே காரணம் கூறவேண்டும்.

 

இந்நூலின் பின்னிணைப்பாக அம்பேத்காரின் வரலாற்றை எழுதிய தனஞ்சய்கீர் ராஜாவைப் பற்றிக் கூறும் பகுதிகள் வருகின்றன. அம்பேத்கார் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையை காந்திக்கு எதிராக முன்னெடுத்தபோது ராஜா தனித்தொகுதி முறையே போதுமானது என்று முடிவெடுத்தார். இதில் என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் அதற்கு முன்னர் அம்பேத்கார் தனித்தொகுதி போதும் என்றும் ராஜா இரட்டை வாக்குரிமைதேவை என்றும் கோரி வந்தார்கள். இந்த நிலை மாற்றத்தை ராஜா எடுப்பதற்கான காரணம் என்று அவரது நடைமுறை சார்ந்த அரசியல் அணுகுமுறையையே கூறவேண்டும். எப்போதுமே மிதமிஞ்சிய இலட்சியவாதம் பேசுபவராக அவர் இருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் எது அதிகபட்சம் சாத்தியமோ அதை தன் மக்களுக்காக ஈட்ட முனைபவராகவே இருந்திருக்கிறார்.

 

ராஜாவின் நிலைமாற்றம் அம்பேத்காரை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. இராஜாவை கண்டித்தும் அம்பேத்காரை ஆதரித்தும் இந்தியாவெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீண்டத்தகாத மக்களின் சங்கங்கள் அறிக்கைவிட்டனர். போராட்டங்களில் ஈடுபட்டார்கள். 1932இல் அம்பேத்கார் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்கு கிளம்பினார். எம்.சி.ராஜாவும், இந்து மகாசபையின் டாக்டர் முஞ்சேயும் லண்டனுக்குக் கிளம்புகிறார்கள் என்று கூறப்பட்டது.

 

‘தன்னை இடர்பாட்டுக்கு உள்ளாக்கிய இராஜாவை அம்பேத்கார் வெறுத்தார். ஆதலால் இராஜா பம்பாயிலிருந்து இலண்டனுக்குப் புறப்படுவாரானால் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி வழியனுப்புமாறு பம்பாயில் இருந்த தன் தோழர்களுக்கு அம்பேத்கார் எழுதினார். பம்பாயில் இராஜா நடத்த முயன்ற மாநாட்டை தம் தொண்டர்கள் கட்டாயம் முறியடித்திருப்பார்கள் என்று உறுதியாக நம்புவதாக அம்பேத்கார் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

 

பல தொல்லைகளுக்கிடையே  ராஜாவின் கட்சியர் பம்பாயில் கூடிய  அம்பேத்காரின் தொண்டர்கள் கலைந்தோடச் செய்தனர். அதில் அம்பேத்காரின் தொண்டர் ஒருவர் இறந்தார். ஐம்பது பேருக்கு அடிபட்டது. ராஜாவின் மீது கொண்டிருந்த கடும் வெறுப்பால் ‘நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அளவுக்கு ராஜா முக்கியமானவர் அல்ல’ என்று அம்பேத்கார் கூறினாலும் ராஜாவின் முயற்சிகளை எல்லா முனைகளிலும் முறியடிக்க வேண்டும் என்பதில் அவர் பதற்றமான முனைப்புடன் இருந்தார்’ என்று தனஞ்செய்கீர் பதிவு செய்கிறார்.

 

இன்றைய வாசிப்பில் எம்.சி.ராஜாவின் கோணத்தில் பார்ப்பவர்களுக்கு அம்பேத்காரின் செயல்பாடு ஜனநாயக விரோதானது என்று படக்கூடும். அம்பேத்காரின் சொற்களை மட்டும் வைத்து வரலாற்றை எழுதும் தமிழகத்திற்கு வெளியே உள்ள தலித்தியர்கள் ராஜாவை துரோகி என்று கூறக்கூடும். உண்மையில் ராஜா குறித்து அந்தக் கருத்தே வலுவாக உள்ளது. ஆனால் அக்காலகட்டத்தின் பதற்றங்கள், ஐயங்கள், உணர்வுநிலைகள் ஆகியவற்றை ஒட்டியே இவற்றை புரிந்து கொள்ள முடியும். இன்று அந்த வரலாற்றுத் தருணம் நமது ஊகங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகையால் வரலாற்று மனிதர்களை அவர்களின் ஒட்டு மொத்தப் பங்களிப்பை ஒட்டியே மதிப்பிடமுடியும்.

 

எம்.சி.ராஜாவை அவர் மீதான வரலாற்றுப் புழுதியில் இருந்து அவதூறின் சருகளில் இருந்து மீட்பதற்கு அவரது சரியான வாழ்க்கை வரலாறு ஒன்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவர வேண்டியுள்ளது. அதற்கு அடித்தளமிடும் ஆவணத் தொகுப்பாக உள்ளது அலெக்ஸின் நூல்.

இந்நூல் தமிழுக்கு ஒரு முக்கியமான வரவு. இதனூடாக ஒரு பொதுவாசகன் அடையும் சித்திரங்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம்.

 

1. எம்.சி.ராஜா என்ற தலைவரின் நாவன்மை, அர்ப்பணம்,சேவை ஆகியவற்றையும் அவரது சமூகப்பங்களிப்பையும்.

 

2.தமிழ்கத்தில் நவீன ஜனநாயக அரசியல் எழுச்சி உருவகியபோதே தலித் எழுச்சி தோன்றிவிட்டிருந்தது என்ற வரலாற்று உண்மை. சொல்லப்போனால் தமிழ்கத்தின் மிக ஆரம்பகால அரசியல் இயக்கம் தலித் இயக்கமே என இப்போது படுகிறது. அவ்வியக்கத்தின் கோட்பாடுகளும் இலட்சியங்களும் அப்போதே தெளிவாக உருவாகி வந்திருப்பதை இந்நூல் காட்டுகிறது

 

3. தலித் வரலாற்றை முற்றிலும் புதிய கோணத்தில், ஒரு மாபெரும் வீழ்ச்சி மற்றும் அடக்குமுறையின் கதையாக அணுகும் கோணம் இக்காலகட்டத்திலேயே உருவாகியிருந்தது. அதை அன்றைய அறிஞர்கள் ஏற்றும் கொன்டிருக்கிறார்கள். தலித்துக்கள் சரித்திரகாலம் முதலே அடிமைகளாக இருந்தார்கள் என்ற வரலாறு பிற்காலத்தையது. அதிகமும் மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது. எம்.சி.ராஜாவின் உரைகளில் மூலவரலாற்றை தெளிவாகவே காண்கிறோம்

 

இந்நூலை பதினைந்து வருடக்கால உழைப்பால் கொண்டு வந்திருக்கிறார் அலெக்ஸ். வரலாறுகள் அழிவதில்லை, அவை விதைகளில் இருந்து முளைக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் கையில் வரலாறு இருந்துகொண்டிருக்கும், காலகட்டத்தின் தேவையைக் காத்து! திரு அன்பு பொன்னோவியம், கமலநாதன் போன்றவர்களுக்கும் அலெக்ஸ் அவர்களுக்கும் தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது

(பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.  எழுத்து பிரசுரம் Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004).

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 9, 2009

 

http://www.keetru.com/kavithaasaran/jul06/mc_raja.php

 

 

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6

 

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3

 

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1

 

 

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்  7

 

 உரை ஒலிவடிவம்

தொடர்புடைய பதிவுகள்

நுண்வரலாறும் டாக்டர் எஸ்.ராமச்சந்திரனும்

$
0
0

1

ஜெ,

ஆயிரம் பேர் குறைகூறினாலும், கருத்து அடிப்படைவாதி என்று முத்திரை
குத்தினாலும், தவிர்க்கவே முடியாத படைப்பாளியாக, சிந்தனையாளராக நான்
வாசிக்கத்தொடங்கியது முதல் இன்று வரை இருந்துவந்துள்ளீர்கள். எஸ்
ராமசந்திரன் அவர்களின் வரலாற்றுப்பார்வை சிந்திக்க வைப்பதாய்
இருந்தாலும், கீழுள்ள பதிவின் வசவுகளை நீக்கி அதன் விளக்கத்தைப்பற்றி
உங்கள் கருத்து என்ன? எஸ் ராமசந்திரன் அவர்களை பரிந்துரைத்தவர் என்னும்
முறையில் பதில் அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை சாதி
அடிப்படைவாதம் என்று நினைப்பவர்கட்கு, நான் வெள்ளாளர் இல்லை, கள்ளர்
சேதிராயர் என்பதையும் கூறவிழைகிறேன். எழுதியவரும் கள்ளர் தான்.
http://vanathirayar.blogspot.in/2014/11/blog-post.html

ராஜாமனோரஞ்சன்

அன்புள்ள ராஜா

வரலாற்றெழுத்தின் முதல்தளம் என்பது பொதுவரலாற்றை அல்லது மொத்த வரலாற்றை எழுதுவது. இதை macro history என்கிறார்கள். அதற்கடுத்த தளம் நுண்வரலாற்றை, பகுதிகளின் வரலாற்றை எழுதுவது . இது micro history எனப்படுகிறது

தமிழ் வரலாற்றெழுத்தில் பொதுவரலாறுதான் இதுவரை எழுதப்பட்டுள்ளது. நுண்வரலாறு இப்போதுதான் ஆங்காங்கே எழுதப்படுகின்றன. அதில் சாதிகள், குலங்களின் வரலாறு மிக முக்கியமானது. அந்த நுண்வரலாறுகளின் மூலம் நாம் பொதுவரலாற்றை மேலும் விரிவாக்கமுடியும்

ஆனால் இன்றைய சூழலில் சாதிவரலாறு என்பது சாதிய அரசியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது. சாதியக்குழுக்களால் அது எழுதப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது. திட்டவட்டமான தரவுகளுடன் சரியான வரலாற்றியல் தர்க்கங்களுடன் அதை எழுதுவது அனேகமாக சாத்தியமில்லை என்னும் நிலை உள்ளது.

ஆயினும் தவிர்க்கமுடியாத ஒரு சமகால அறிவுச்செயல்பாடு அது. எஸ்.ராமச்சந்திரன் தமிழினி இதழில் எழுதிய வேளாளர் யார் என்னும் கட்டுரை ஓர் உதாரணம்

இந்தக்கட்டுரை எனக்கு பெரியதாக ஒன்றும் பிடிகிடைக்கவில்லை. நான் வாசித்துள்ள பகுதியே அல்ல. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை

இவ்வகைக் கருத்துக்களை முன்ஊகங்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். இன்றுகிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் இந்த ஊகங்களை வெவ்வேறு கோணத்தில் வரலாற்றாசிரியர்கள் விவாதித்து மெல்ல ஒரு பொதுமுனை திரண்டு வந்தபின்னரே நம்மைப்போன்ற பொதுவாசகர்கள் உறுதியான எதையேனும் பெற முடியும்.

இன்றைய சூழலில் இப்படியெல்லாம் நோக்க இடமிருக்கிறது என்பதை மட்டுமே இக்கட்டுரையிலிருந்து நான் பெற்றுக்கொள்கிறேன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 16

ரைவதகர் விண்ணேகிய நாளை கொண்டாடுவதற்காக யாதவர்கள் கஜ்ஜயந்தபுரிக்கு முந்தையநாளே வந்து குழுமத் தொடங்கியிருந்தனர். துவாரகையை சுற்றியிருந்த பன்னிரு ஊர்களிலிருந்தும் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் தனித்தனி வண்டி நிரைகளாக வந்தனர். தொலைதூரத்தில் மதுராவில் இருந்தும் மதுவனத்தில் இருந்தும் கோகுலத்திலிருந்தும் மார்த்திகாவதியிலிருந்தும்கூட யாதவர்கள் வந்திருந்தனர்.

வலசைப்பறவைகளின் தடம்போல கஜ்ஜயந்தபுரியில் அவர்கள் வருவதற்கும் தங்குவதற்கும் நெடுங்காலம் பழகிப்போன பாதைகள், தங்குமிடங்கள், உபசரிப்பு முறைமைகள் உருவாகியிருந்தன அவர்களுக்கென கட்டப்பட்ட ஈச்சை ஓலை வேய்ந்த கொட்டகைகளில் தனித்தனிக் குலங்களாக பயணப்பொதிகளை அவிழ்த்து தோல்விரிப்புகளை விரித்து படுத்தும் அமர்ந்தும் உண்டும் உரையாடியும் உறங்கியும் நிறைந்திருந்தனர்.

வறண்ட அரைப்பாலை நிலத்தில் உடல்குளிர நீராடுவது இயல்வதல்ல என்று யாதவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே நீராடுவதற்கென்று விடுதிகளில் அளிக்கப்பட்ட ஒற்றைச் சுரைக்குடுவை நீரை வாங்கி அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கி “இது எதற்கு?” என்றனர். “இங்கு இவ்வளவு நீரால் உடல் கழுவுவதே நீராட்டெனப்படுகிறது” என்று முதிய யாதவர் விளக்கினார். “கைகளையும் முகத்தையும் கழுவி ஈரத்துணியால் உடம்பின் பிற பகுதிகளை துடைத்துக் கொள்வதுதான் இங்கு வழக்கம்.” ஒரு இளையவன் “இந்நகருக்குள் வரும்போதே இத்தனை நறுமணப்பொருட்கள் ஏன் எரிகின்றன என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. இப்புகை இல்லையேல் இங்கு பிணந்தின்னிக் கழுகுகள் வானிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்திறங்கி விடும்” என்றான். சூழ்ந்திருந்தோர் நகைத்தனர்.

யாதவகுடியினர் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய கொடி அடையாளத்தை தங்கள் தங்குமிடம் அருகிலேயே கழை நட்டு பறக்கவிட்டனர். ஒரு குடி அருகே அவர்களின் பங்காளிக் குடியினர் தங்குவதை தவிர்த்தனர். ஆகவே கொட்டகையில் இடம் பிடிக்க அவர்கள் மாறி மாறி கூச்சலிட்டபடி சுற்றி வந்தனர். தோல்விரிப்புகளை விரித்து பொதிகளை அவிழ்த்து உடைமைகளை எடுத்த பின்னர் அருகே பறந்த கொடி பங்காளியுடையது என்று கண்டு மீண்டும் அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு இடம் மாறினர்.

அவர்களுக்குத் தேவையானவற்றை ஒருக்கிய குஜ்ஜர்களில் ஒருவன் “இவர்கள் அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். பங்காளிகளை இவர்கள் பகைவர்கள் என எண்ணுகிறார்கள். ஆகவே எங்கு சென்றாலும் பகைவர்களையும் உடனழைத்தே செல்கிறார்கள்” என்றான். அவன் தோழன் “அது நன்று. வெளியே பகைவர்களுக்காக தேடவேண்டியதில்லை. நம்முடைய பகைவர்கள் நம்மை நன்கறிந்தவர்களாகவும் நாம் நன்கறிந்தவர்களாகவும் இருப்பது எவ்வளவு வசதியானது!” என்றான். அவன் நகையாடுகிறானா என்று தெரியாமல் நோக்கியபின் அவனிலிருந்த சிறுசிரிப்பைக் கண்டு நகைத்தான் முதல் குஜ்ஜன்.

சிறிது சிறிதாக கஜ்ஜயந்தபுரியின் ஊர்கள் அனைத்திலும் யாதவர்கள் பெருகி நிறைந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டுவந்த உலர்ந்த அப்பங்களை உடைத்து கொதிக்கும் நீரில் இட்டு மென்மையாக்கி வெண்ணெய் தடவி உண்டனர். அந்த உலர்ந்த அப்பங்களை கஜ்ஜயந்தபுரியின் மக்கள் தொலைவிலிருந்து நோக்கி வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மரக்கட்டைகள் போலிருக்கின்றன” என்றான் ஒருவன். “ஆம். நான் ஒருவரிடம் ஒரு துண்டை வாங்கி மென்று பார்த்தேன். மென் மரக்கட்டை போலவே தோன்றியது. என்னால் விழுங்கவே முடியவில்லை” என்றான் இன்னொருவன்.

“இவர்கள் நாட்கணக்கில் கன்று மேய்க்க காடு செல்லக்கூடியவர்கள். உலர் உணவு உண்டு பழகிப்போனவர்கள்” என்றான் முதிய குஜ்ஜன். “கெட்டுப்போன உணவையே சுவையானதென எண்ணுகிறார்கள். கெடவைத்து உண்ணுகிறார்கள்.” குஜ்ஜர்கள் அவர்களை அரைக்கண்ணால் நோக்கி புன்னகை செய்தனர். “இந்த குஜ்ஜர்கள் நம்மைப் பார்க்கும் வகை சீரல்ல. இவர்கள் ஊனுண்ணிகள் அல்ல என்பதே ஆறுதல் அளிக்கிறது” என்று ஒரு யாதவன் சொன்னான். “பெண்வழிச்சேரல் பெரும்பாவம் இவர்களுக்கு. ஆகவே ஆண்களை நோக்குகிறார்கள்” என்றான் ஒருவன். கொட்டகையில் வெடிச்சிரிப்பு எழுந்தது.

கொட்டகைகளில் இரவு நெடுநேரம் பேச்சுகளும் பாட்டுகளும் சொல்லுரசி எழுந்த பூசல்களும் நிறைந்திருந்தன. யாதவர்களின் பேச்சுமுறையே தொலைவிலிருந்து பார்க்கையில் பூசல்தான் என்று தோன்றியது. நகையாட்டு எப்போது பகையாடலாக ஆகுமென்றும் அது எக்கணம் கைகலப்பென மாறுமென்றும் எவராலும் உய்த்துணரக்கூடவில்லை. ஆனால் கைகலப்புகள் அனைத்துமே ஓரிரு அடிகளுக்கு மேல் நீடிக்கவில்லை. அடி விழும் ஓசை கேட்டதுமே சூழ்ந்திருந்த அனைத்து யாதவர்களும் சேர்ந்து பூசலிடுபவர்களை பிரித்து விலக்கி அதை முடிவுக்கு கொண்டு வந்தனர். பூசலிடுபவர்களும் அதை விலக்கி விடுபவர்களும் சேர்ந்து மேலும் கூச்சல் எழுப்பி சொற்கள் என எவையும் பிரித்தறிய முடியாத பேரோசையை எழுப்பினர்.

அர்ஜுனன் தன் விருந்தினர் மாளிகையிலிருந்து ரைவத மலையின் படிகளில் இறங்கி அதைச் சூழ்ந்திருந்த அரைப்பாலை நிலத்தின் புதர்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கொட்டகைகளில் தங்கியிருந்த யாதவர்களை பார்த்தபடி நடந்தான். அவர்கள் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒருவன் அவனை நோக்கி “தாங்கள் யோகியா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அரசரின் விருந்தினரா?” என்று அவன் மேலும் கேட்டான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இளைய யாதவர் மேலே தங்கியிருக்கிறாரா?” என்றான். “அறியேன்” என்றான் அர்ஜுனன்.

“அரசிகள் வந்துள்ளனரா?” என்றான் இன்னொருவன். “மூடா, அரசிகள் வருவதென்றால் அதற்குரிய அணிப்படையினரும் அகம்படியினரும் அணித்தேர்களும் வரவேண்டுமல்லவா? அவர்கள் வரவில்லை. வரவில்லை அல்லவா யோகியே?” என்று அர்ஜுனனிடம் கேட்டான் இன்னொரு யாதவன். “ஆம்” என்று அவன் மறுமொழி சொன்னான். “ரைவத மலையின் விழவுக்கு அரசிகள் வரும் வழக்கமில்லை. இது துறவைக்கொண்டாடும் விழவு. இதில் பெண்களுக்கென்ன வேலை?” என்றார் ஒரு முதியயாதவர். “ஆனால் இம்முறை மதுராவிலிருந்து இளவரசி சுபத்திரை வருவதாக சொன்னார்களே?” என்று ஒருவன் சொன்னான்.

சுபத்திரை என்ற சொல் அர்ஜுனனை நிற்க வைத்தது. இன்னொருவன் “அது வெறும் செய்தி. இங்கு பெண்கள் வரும் வழக்கமில்லை” என்றான். அர்ஜுனன் முன்னால் நடந்தான். அந்த யாதவர்குழு அதையே ஒரு பூசலாக முன்னெடுத்தது. அடிவாரத்தில் அருகர் ஆலயங்களைச் சூழ்ந்து குஜ்ஜர் அமைத்திருந்த பெருமுற்றங்களில் யாதவர் தலைகளாக நிறைந்து அமைந்திருந்தனர். நறுமணப்பொருட்களை மென்று அங்கிருந்த செம்மண் புழுதியில் துப்பினர். ஒருவரை ஒருவர் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டு அழைத்தனர். வெடிப்புற பேசி நகைத்தனர்.

யாதவர்களிடம் எப்போதும் பணிவின்மை உண்டு என்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். ஏனெனில் அவர்களுக்கு அரசு என்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கன்றுகளுடன் தன்னந்தனியாக காடுகளில் வாழ்பவர்கள். தன் காட்டின் அப்பகுதியில் தானே அரசனென்று ஒரு யாதவன் உணர முடியும். எனவே யாதவர்கள் ஒன்று கூடுமிடத்தில் மேல்கீழ் முறைமைகள் உருவாவதில்லை. ஆகவே முகமன்கள் அவர்களிடையே வழக்கமில்லை. சொல்தடிப்பது மிக எளிது. மிகச்சில கணங்களுக்குள்ளேயே அவர்களுக்குள் பெரும் பூசல்கள் வெடித்துவிடும். யமுனைக்கரையில் அவர்களின் மாபெரும் உண்டாட்டுகள் அனைத்தும் கைகலப்பிலும் போரிலும் பூசலிலுமே முடியுமென்று அவன் கேட்டிருந்தான்.

துவாரகை உருவாகி மதுரை வலுப்பெற்று யமுனைக்கரையிலிருந்து தென்கடற்கரை வரை அவர்களின் அரசுக்கொடிகள் பறக்கத்தொடங்கியபோது யாதவர்களின் பணிவின்மையும் துடுக்கும் மேலும் கூடி வந்தன. பல இடங்களில் முனிவர்களையும் வைதிகர்களையும் அயல்வணிகர்களையும் அவர்கள் கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சாலையில் அவனைக்கண்ட யாதவர்கள் பலர் இளிவரல் கலந்து “வாழ்த்துங்கள் யோகியே” என்றனர். “உத்தமரே, தாங்கள் புலனடக்கம் பயின்றவரா?” என்று ஒருவன் கேட்டான். அர்ஜுனன் கேளாதவன் போல கடந்துசெல்ல “அதற்குரிய சான்றை காட்டுவீரா?” என்றான். அவன் தோழர்கள் நகைத்தனர்.

கண் தொடும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பற்ற எண்ணமொன்றால் நிகர் வைத்த அகத்துடன் அர்ஜுனன் நடந்து கொண்டிருந்தான். அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் முதுகை வளைத்து வயிறு தொங்க புதர்களின் அருகே ஒண்டி நின்று கண்மூடி துயிலில் தலைதாழ்த்தி திகைத்து விழித்து மீண்டும் துயின்றன. குதிரைகள் மூக்கில் கட்டப்பட்ட பைகளுக்குள்ளிருந்து ஊறவைத்த கொள்ளை தின்றபடி வால்சுழற்றிக் கொண்டிருந்தன, மாட்டு வண்டிகளின் அருகே வண்டிக்காளைகள் கால்மடித்து அமர்ந்து கண்மூடி அசைபோட்டன. தோல் விரிப்புகளிலும் மரவுரிகளிலும் ஈச்சை ஓலைப் பாய்களிலும் படுத்திருந்த யாதவர்கள் பலர் பயண அலுப்பினால் வாய்திறந்து குறட்டை எழ துயின்று கொண்டிருந்தனர்.

புழுதிபடிந்த உடலுடனும் இலக்கடைந்த உள எழுச்சியுடனும் மேலும் மேலும் சாலைகளினூடாக உள்ளே வந்துகொண்டிருந்த யாதவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை கூவி அழைத்து தங்குமிடமும் உணவும் பற்றி உசாவினர். ஒன்றிலிருந்து ஒன்று என தொட்டுச் சென்ற தன் எண்ணங்கள் சுபத்திரையை வந்தடைந்து கொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். ஆனால் மிக எளிய ஒரு தகவல் போலவே அது எண்ணத்தில் எழுந்தது. ஏதோ ஒரு வகையில் தனக்கு பெண்கள் சலித்துவிட்டனர் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. பெண்கள் அளிக்கும் மாயங்களின் எல்லைகள் தெளிவடைந்துவிட்டதைப்போல. அவர்களை வெல்வதற்கான தன் ஆணவத்தின் அறைகூவல்கள் மிக எளிதாகி விட்டதைப்போல. அல்லது பெண்களின் வழியாக அவன் கண்டடையும் தன் முகம் மீண்டும் மீண்டும் ஒன்றைப் போலவே தோன்றுவது போல.

சுபத்திரை என்னும் பெயரை முதன்முதலாக கதன் சொல்லி கேட்டபோதுகூட எந்தவிதமான உள அசைவையும் அது உருவாக்கவில்லை என எண்ணிக்கொண்டான். ஒரு பெண் பெயர் போலவே அது ஒலிக்கவும் இல்லை. ஒரு செய்தியாக ஒலித்தது. அல்லது ஒரு ஊரின் பெயர். அல்லது ஒரு பொருள். அல்லது என்றோ மறைந்த ஒரு நிகழ்வு. உயிருள்ள உணர்வுகள் உள்ள உள்நுழைந்து உறவென ஆகும் ஒரு பெண்ணின் பெயரல்ல என்பதைப்போல. கஜ்ஜயந்தபுரிக்கு வரும்போதே அதைப்பற்றி எண்ணி வியந்து கொண்டிருந்தான். முதன் முறையாக ஒரு பெண்ணின் பெயர் எவ்வகையிலும் உள்ளக்கிளர்ச்சியை அளிக்கவில்லை. எளிய பணிப்பெண்கள் பெயர்கூட விரல் நுனிகளை பதறச்செய்யுமளவுக்கு நெஞ்சில் தைத்த நாட்கள் அவனுக்கிருந்தன. ஒரு வேளை முதுமை வந்தடைந்துவிட்டதா?

ஆம், முதுமையும் கூடத்தான். அவனைவிட இருபத்தி ஐந்து வயது குறைவானவள் சுபத்திரை. அவனுடைய இளவயது உறவில் மைந்தர்கள் எங்கேனும் பிறந்திருந்தால் அவளுடைய வயது இருந்திருக்கக் கூடும். உடனே இவ்வெண்ணங்களை இப்போது எதற்காக மீட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும் எண்ணினான். சுபத்திரை ஒரு பொருட்டே அல்ல என்றால் ஏன் அவ்வெண்ணத்திலேயே திரும்பத் திரும்ப தன் அகப்பாதைகள் சென்று முடிகின்றன?

சற்று முன் சுபத்திரை இங்கு வந்திருப்பதாக ஒரு யாதவன் சொன்னான். இங்கு வந்திருக்கிறாளா? இங்கு வரவில்லை. வந்திருக்கக்கூடும். வந்திருக்கிறாள் என்று அவன் அறிந்ததை சொன்னான். அப்போது தோன்றியது அவள் வந்திருக்கிறாள் என்று. அதைச்சொன்ன அந்த யாதவனின் முகம் அவன் அகக்கண்ணில் எழுந்தது. அதில் எழுந்த நூற்றுக்கணக்கான விழிகளை தன் நினைவில் எழுப்பினான். அவற்றில் ஒன்றில் சுபத்திரையைப்பற்றி அவர் சொல்லும்போது எழுந்த தனி ஒளியை கண்டான். ஆம், வந்திருக்கிறாள். ஆயினும் அவன் உள்ளம் எழவில்லை. வந்திருக்கக் கூடும் என்ற உறுதியை அடைந்தபின்னும் அது ஓய்ந்தே கிடந்தது.

கஜ்ஜயந்தபுரியின் எல்லை வரை நடந்து வந்திருப்பதை உணர்ந்தான். முழங்கால்வரை செம்மண் புழுதி ஏறியிருந்தது. நாளெல்லாம் கதிரவன் நின்று காய்ந்த மண்ணிலிருந்து எழுந்த வெம்மையால் உடல் வியர்த்து வழிந்திருந்தது. பாலைவனத்தின் விளிம்பில் நெடுந்தொலைவில் செங்குழம்பென உருவழிந்த சூரியன் அணைந்து கொண்டிருந்தான். நான்கு திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்துகொண்டிருந்த யாதவர்களின் புழுதியால் கஜ்ஜயந்தபுரி மெல்லிய பட்டுத்திரை என போர்த்தப்பட்டிருந்தது.

சூரியன் நீரில் விழுந்த குருதித்துளியென மேலும் மேலும் பிரிந்து கரைந்து பிரிந்து மறைவது வரை அவன் பாலை விளிம்பிலேயே நின்றிருந்தான். ஒருபோதும் இப்படி விழைவறுந்து தன் உள்ளம் மண்ணில் கிடந்ததில்லையே என்று எண்ணிக் கொண்டான். பெருவிழைவுடன் அணைத்த பெண்டிர்களுக்குபின் சற்றும் விருப்பின்றி ஒரு பெண்ணை மணக்கப் போகிறோமோ? அதுதான் இப்பயணத்தின் இயல்பான முடிவோ?

பின்பு நீள் மூச்சுடன் எழுந்தான். ஆம், அரசர்கள் நடத்தும் மணங்களில் பெரும்பாலானவை வெறும் அரசியல் மதிசூழ்கைகளின் விளைவுதான். பெண்களை விரும்புவதோ உள்ளத்தில் ஏற்றுவதோ ஷத்ரியனுக்குரிய பண்புகள் அல்ல. அவர்கள் அவன் ஆடிக்கொண்டிருக்கும் பெருங்களத்தின் கருப்பாவைகள் மட்டுமே. திரும்புகையில் ஒரு விந்தையை அவன் அறிந்தான். அவ்வெல்லை வரை வந்துகொண்டிருக்கும்போது எழுந்த அனைத்து எண்ணங்களும் நேர் எதிர்த்திசையில் திரும்பி ஓடத்தொடங்கின. திரும்புகிறோம் என்ற உணர்வாலா, அல்லது உடல் உண்மையிலேயே எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதாலா அதை நிகழ்த்துகிறது அகம்?

இதுவரை அவன் எப்பெண்ணையும் உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளவில்லை. ஆகவே தான் குளித்து ஆடை மாற்றுவது போல பெண்களை மறந்து புதிய நிலம் நோக்கி செல்ல முடிந்தது. இப்போதுதான் ஒரு கணத்திலும் அவன் துறக்கமுடியாத ஒருத்தியை பார்க்கவிருக்கிறான். அவனுள் இருக்கும் அறியாத துலா ஒன்று நிலை குலைந்துள்ளது. அவனை அவள் வீழ்த்தத் தொடங்கிவிட்டாள். அதை அவனுக்கே மறைத்துக் கொள்ளும் பொருட்டுதான் அந்தப் பொருட்டின்மையை நடித்துக் கொள்கிறான். இரு கைகளாலும் அவள் பெயரை தள்ளித் தள்ளி விலக்கியபடி முன் செல்கையில் ஓரக்கண்ணால் அது தன்னை பின் தொடர்கிறதா என்று உறுதி செய்து கொள்கிறான்.

ரைவத மலையின் உச்சியிலிருந்த இந்திரபீடம் என்னும் கரிய பெரும்பாறையின் மீது விளக்கேற்றுவதற்கான பணிகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை தொலைவிலேயே பார்க்க முடிந்தது. நூலேணி ஒன்றைக்கட்டி அதன் வழியாக சிறிய வண்ண எறும்புகள் போல வீரர்கள் ஊர்ந்து மேலே சென்றனர். அங்கு சிறிய குளம் போன்று வெட்டப்பட்ட கல் அகல் ஒன்று உண்டு என்று அவன் அறிந்திருந்தான். அதில் நெய்யும் அரக்கும் கலந்து சுற்றப்பட்ட பெரிய துணித் திரியை சுருட்டி குன்றென வைத்து தீயிடுவார்கள். கதிரவனுக்கு நிகராக அந்நகரில் எழுந்து அவ்விரவை பகலென ஆக்குவது அது. அப்பகலில் வெளியே வந்து தெருக்களில் நடக்கவும் உணவு உண்ணவும் அருக நெறியினருக்கு மரபு ஒப்புதல் உண்டு.

குன்றுக்கு அப்பால் கிழக்கு இருண்டு எஞ்சிய செவ்வெளிச்சமும் மெல்லிய தீற்றல்களாக மாறி மறைந்து கொண்டிருப்பதை பார்த்தபடி அவன் நடந்துகொண்டிருந்தான். மலையுச்சியில் புகை எழுந்து சிறிய வெண்தீற்றலாக வானில் நின்றது. மேலும் எழுந்து கரிய காளானாக மாறியது. அதனடியில் செந்நிறத் தழல் எழுந்தது. அவன் நோக்கிக் கொண்டிருக்கவே தழல் தன்னை பெருக்கிக் கொண்டது. ஒரு சிறிய மலரிதழை அப்பாறையின்மேல் வைத்தது போல. செஞ்சுடர் எழுந்ததனால் சூழல் இருண்டதா? குருதி தொட்டு நெற்றியில் இடப்பட்ட நீள்பொட்டு போல சுடர் எழுந்தபோது வானம் முற்றிலும் இருண்டுவிட்டிருந்தது. அச்சுடர் மட்டும் வானில் ஒரு விண்மீன் என அங்கு நின்றது.

கீழே ரைவத மலையின் மடிப்புகளில் இருந்த பல நூறு அருகர் ஆலயங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. பல்லாயிரம் அடிகள்பாறைகளில் அகல்கள் எழுந்தன. வளைந்து அடிவாரம் நோக்கி வந்த படிக்கட்டு முழுக்க கல்விளக்குகள் கொளுத்தப்பட்டன. நகரெங்கும் இல்லங்களில் சுடர்கள் மின்னத்தொடங்கின. வானிலிருந்து ஒரு சிறு துளை வழியாக செந்நிறத்தழல் ஊறிச்சொட்டி மலையடிவாரத்தை அடைவதுபோல. அவன் மலையின் கீழிருந்த அருகர் ஆலயத்தை அடைவதற்குள் பல்லாயிரம் நெய் அகல்களால் ஆன மலர்க்காட்டுக்குள் இருப்பதை உணர்ந்தான்.

அடிவாரத்தில் இருந்த ரிஷப தேவரின் ஆலயத்தில் மணிமண்டபத்தின் மேல் கட்டப்பட்டிருந்த கண்டாமணி பன்னிருமுறை ஒலித்தது. உள்ளிருந்து அருகர் ஐவரையும் வாழ்த்தும் ஒலி எழுந்தது. வெள்ளுடை அணிந்து வாய்த்திரை போட்ட படிவர்கள் வலது கையில் மண்ணகலில் நெய்த்திரிச் சுடரும் இடது கையில் மயிற்பீலித் தோகையுமாக வெளிவந்தனர். தங்கள் இரவலர் கப்பரைகளை தோளில் மாட்டிக் கொண்டனர். மயிற்தோகையால் மண்ணை நீவியபடி அருகர் புகழை நாவில் உரைத்தபடி மெல்ல நடந்தனர். விளக்கொளித் தொகையாக அவர்கள் ரைவத மலையில் ஏறத்தொடங்க அவ்வொலி கேட்டு அருகநெறி சார்ந்த இல்லங்களிலிருந்து பெண்களும் குழந்தைகளும் கைகளில் நெய்யகல்களுடன் வெளியே வந்து நிரைவகுத்து மேலேறி செல்லத் தொடங்கினர். செந்நிற ஒளியென செதில் சுடரும் நாகம் ஒன்று மலைச்சரிவில் வளைந்து உடல் நெளித்து மேலெழுவது போல் தோன்றியது.

அந்த விளக்குகளின் அணியூர்வலம் கண்டு யாதவர்கள் எழுந்து கைகூப்பி நின்றனர். அருக நெறியினர் அனைவரும் ரைவத மலைமேல் ஏறிச் சென்றதும் கஜ்ஜயந்த புரியின் தெருக்களில் நிறைந்திருந்த யாதவர் உரத்த குரலில் ரைவதக மன்னரை வாழ்த்தி பேரொலி எழுப்பினர். மருத்தனின் வாளை ஏந்தி விண்ணை இரு துண்டென வெட்டிய ரைவதகரின் வெற்றியை புகழ்ந்து பாடியபடி மலையேறிய சூதனைத் தொடர்ந்து அர்ஜுனன் மேலேறினான். உருளைப்பாறைகளில் தன் கால்கள் நன்கு தடம் அறிந்து செல்வதை உணர்ந்தான் இருபுறமும் நின்ற மூங்கில்தூண்களில் நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அருகே நெய்க் கொப்பரையுடன் சுடர்க்காவலர் சிலை போல் நின்று கொண்டிருந்தார்கள். விண்ணிலிருந்து இறங்கி அவ்விழவுக்காக வந்த தேவர்கள் போல் அவர்கள் அசைவின்மை கொண்டிருந்தனர்.

ஆலயங்கள்தோறும் எரிந்த குங்கிலியமும் அகிலும் கொம்பரக்கும் கலந்த நறுமணப்புகை இருளுக்குள் ஊடுருவிய இன்னொரு இருளென நிறைந்திருந்தது. சுடரொளி விழுந்த இடங்களில் செந்நிறநீர் விழுந்த பட்டுத்துணி போல் அப்புகை நனைந்து வட்டங்களாக தெரிந்தது. அரண்மனை முகப்பிலிருந்த ரிஷபர் ஆலயமுகப்பின் பெருமுற்றத்தில் அருகநெறியினர் பன்னிரு சுடர் நிரைகளாக அணிவகுத்து நின்றிருந்தனர். உள்ளே ஐந்து அருகர் சிலைகள் முன்னால் பரப்பப்பட்ட ஈச்ச இலைகளில் அரிசிச்சோறும் அப்பங்களும் காய்கனிகளும் மலரும் படைக்கப்பட்டிருந்தன.

அர்ஜுனன் அருகநெறியினரின் நீண்ட நிரையின் பின்வரிசையில் நின்று உள்ளே எழுந்த தெய்ய உருவங்களை நோக்கி நின்றான். மணியோசை எழுந்த போது இருகைகளையும் தலைக்கு மேல் குவித்து அருகரை வணங்கினான். அங்கிருந்த அனைவரும் ஒருங்கிணைந்த பெருங்குரலில் அருகர்களை ஏத்தினர். உள்ளிருந்து வெண்ணிற ஆடை அணிந்த படிவர் விளக்குடன் வெளியே வந்து தம் கையிலிருந்த நீரை அங்கு கூடியிருந்தவர்கள் மேல் வீசித்தெளித்து இரு கைகளையும் தூக்கி அவர்களை வாழ்த்தினர். அவர்களிடமிருந்து நீரைப்பெற்று பிற பூசகர் அனைவர் மேலும் படும்படி நீரை தெளித்தனர்.

தன் மேல் தெளித்த நீர்த்துளி ஒன்றால் உடல் சிலிர்த்தான் அர்ஜுனன். கோடைமழையின் முதல்துளியென அது தோன்றியது. ஒரு துளி நீர் ஒருவனை முற்றாக கழுவிவிடக்கூடுமா? ஒரு துளி நீரால் கழுவப்பட முடியாதவன் பெருங்கடல்களால் தூய்மை கொண்டுவிடுவானா என்ன? அங்கு கூடி நின்ற ஒவ்வொருவர் விழிகளிலாக மாறி மாறி நோக்கிச்சென்றான். மானுட அகத்தின் வேர்ப்பற்றுகள் என்றான வன்முறையை அவர்கள் எப்படி வென்றார்கள்? சிங்கத்தில் நகங்களாக, எருதில் கொம்புகளாக, ஓநாயில் பற்களாக, முதலையில் வாலாக, ஆந்தையில் விழிகளாக, வண்டில் கொடுக்காக எழுந்த ஒன்று. புவியை ஆளும் பெருந்தெய்வமொன்றின் வெளிப்பாடு. அதை இம்மக்கள் கடந்து விட்டனரா என்ன?

மீண்டும் மீண்டும் அம்முகங்களை நோக்கினான். வெள்ளாட்டின் விழிகள். மான்குட்டியின் விழிகள். மதலைப்பால்விழிகள். கடந்து விட்டிருக்ககூடும். தனியொருவனாக கடப்பது இயல்வதல்ல. ஆனால் ஒரு பெருந்திரளென அதை கடந்துவிட முடியும். இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கும் இனிமை ஒன்றுடனொன்று ஒட்டிக்கொண்டு துளித்துளியாக தன்னை திரட்டிக்கொண்டு பேருருவம் கொள்ள முடியுமென்றால் அத்தெய்வத்தை காலடியில் போட்டு மண்ணோடு அழுத்தி புதைத்துவிட முடியும். நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ்ந்தாக வேண்டும். ஐந்து சுடரென எழுந்த கரிய உடல்களின் முன் நின்ற போது “அதை நிகழ்த்தியிருப்பீர் கருணையின் தெய்வங்களே. அதை நிகழ்த்துக! அதை நிகழ்த்துக! ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்று வேண்டிக் கொண்டான்.

அவன் உள்ளத்தை ஒலிப்பதுபோல் அப்பால் மணிமேடையில் கண்டாமணி மும்முறை ஒலித்தது. நீள் மூச்சுடன் அரண்மனை நோக்கி செல்லத் திரும்பியபோது கீழே பெருமுரசங்கள் ஒலிப்பதை கேட்டான். அருகராலயங்களில் பூசனைகள் முடிவுற்றதற்கான அறிவிப்பு அது. கஜ்ஜயந்தபுரி ஒற்றைப் பெருங்குரலில் “அருகர் சொல் வாழ்க!” என்று முழங்கியது. மேலிருந்து அனைத்துப் பாதைகளின் வழியாகவும் யாதவர்கள் கூட்டமாக மலைமேல் ஏறத்தொடங்கினர். ரைவதக மன்னரை வாழ்த்தி கூட்டமாக நடனமிட்டபடி பாறைகளிலிருந்து பாறைகளுக்குத் தாவி மேலே வந்தனர்.

அர்ஜுனன் அரண்மனை முற்றத்தில் இடைமேல் கைகளை வைத்தபடி நோக்கி நின்றான். இருளுக்குள் யாதவர்கள் வருவது பெரு வெள்ளம் ஒன்று பாறைகளை உருட்டிக்கொண்டு சருகுகளையும் முட்களையும் அள்ளிப் பெருக்கி எழுந்து குன்றை மூழ்கடிப்பது போல் தோன்றியது. அதுவரை அங்கிருந்த அமைதி குன்றின் மேலிருந்து தன்னை இழுத்துக்கொண்டு மேலேறி உச்சிப்பாறை மேல் நின்று ஒருமுறை நோக்கியபின் முகில்களில் பற்றி ஏறி ஒளிந்து கொண்டது.

ஒளிப்பரப்புக்குள் வந்த முதல் யாதவக்கூட்டத்தில் இருந்த களிவெறியை கண்டபோது தன் முகம் அறியாது மலர்ந்ததை எண்ணி அவனே துணுக்குற்றான். சற்று முன் ஐவர் ஆலயத்தின் முன் கைக்கூப்பி நின்ற மக்கள் எவர் முகத்திலும் இல்லாதது அக்களிவெறி. தன்னை மறந்த பேருவகை அவர்களுக்கு இயல்வதல்ல. உள்ளுறைந்த அவ்வன்முறை தெய்வத்தை ஒவ்வொரு கணமும் கடிவாளம் பற்றி தன்னுணர்வால் இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் விடமுடியாது. கடும் நோன்பு என முழு வாழ்க்கையும் ஆக்கிக் கொண்டவர்கள் எவரும் இடைக்கச்சையை அவிழ்த்து தலைமேல் வீசி கூத்தாடி வரும் இந்த யாதவனின் பேருவகையை அடைய முடியாது. இக்களிவெறியின் மறுபக்கமென இருக்கிறது குருதியும் கண்ணீரும் உண்டு விடாய் தணிக்கும் அத்தெய்வம்.

பந்த ஒளிப்பெருக்கின் உள்ளே யாதவர்களின் வெறித்த கண்களும் கூச்சலில் திறந்த வாய்களும் அலையடித்த கைகளும் வந்து பெருகி எங்கும் நிறைந்தபடியே இருந்தன. கைகளை தட்டியபடியும் ஆடைகளை தலைமேல் சுழற்றி வீசி குதித்தபடியும் தொண்டைநரம்புகள் அடிமரத்து வேர்களென புடைக்க, அடிநா புற்றுக்குள் அரவென தவிக்க கூச்சலிட்டபடி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். தொலைதூரத்தில் “யாதவ இளவரசி வெல்க!” என்றொரு குரல் கேட்டது. அர்ஜுனன் அந்த ஒளிவட்டத்தையே நோக்கி நின்றான். “யாதவ இளவரசி வாழ்க! மதுராவை ஆளும் கோமகள் சுபத்திரை வாழ்க!” என்று மேலும் மேலும் குரல்கள் பெருகின.

அப்பால் இருந்த இருளுக்குள் இருந்து செவ்வொளிக்குள் வந்த சுபத்திரையை அர்ஜுனன் கண்டான். அவள் அணிந்திருந்த வெண்பட்டாடை நெய்ச்சுடர் ஒளியில் தழலென நெளிந்து கொண்டிருந்தது. அவள் நீண்ட குழலும் வெண்முகமும் பெருந்தோள்களும் செந்நிறத்தில் தெரிந்தன. குருதியாடி களத்தில் எழுந்த சிம்மம் மேல் நிற்கும் கொற்றவையென அவள் தோன்றினாள்.

தொடர்புடைய பதிவுகள்

குகை ஓவியங்கள் -கடலூர் சீனு

$
0
0

1

இனிய ஜெயம்,

நேற்றைய கனவில் மசான காளி எழுந்து வந்தாள். பன்னிரு கைகளிலும் படைக்கலம் ஏந்திய பேய்ச்சி. இடதுகை சுண்டு விரல் நகத்தை கடித்தபடி சிருங்கார இளிப்பு. விழித்த நிமிடம் முதல் தொண்டை வறண்டு, கண்கள் எரிந்தபடி காய்ச்சல் போல ஒரு உணர்வு. ஏதேனும் ரத்த காவு வாங்கினால்தான் அடங்கும் போல.

ஹளபேடு கோவில் மொத்தமும் மானுட உள்ளுணர்வின் கலை வடிவம். இந்த செவ்வியலின் தீவிரம் உண்மையில் பித்துக் கொள்ள வைக்கிறது. கோவிலின் ஒரு படிமை விஸ்வரூபம் கொண்ட சிவனின் ருத்ர தாண்டவம். அவர் பாதம் அருகே மிக சிறிய உருவில் அதே மசான காளி.

கோவிலின் ஒரு மூலையில் சிறியதாக ஜேஷ்டா , எங்கெங்கு காணினும் நடமிடும் சரஸ்வதி. ஜேஷ்டா வுடன் உங்கள் சேட்டை கதையும், நடமிடும் சரஸ்வதியுடன் வெண்முரசு எழுதும் உணர்வு நிலையும் இணையும்போது சமகாலத்தில் உங்கள் படைப்புத் திறன் எனும் எழுச்சியின் எரிமலை வாய் குறித்து ஏதேதோ எண்ணம் எழுகிறது.

எழுந்ததும் முதல் வாசிப்பாக அமியின் குகை ஓவியங்கள் கதையை தேடி வாசித்தேன். வெளிநாடு. சுற்றிலும் கண் தொடும் தொலைவு வரை பொட்டல்வெளி. யாரோ அங்கே கொண்டு வந்து போட்டது போல நிலத்துக்கு சம்பந்தமே அற்றது போல ஒரு குன்று. அதன் அடிவாரத்தில் ஒரு குகை உள்ளே சில ஓவியங்கள். அடிவாரத்திலிருந்து இரண்டாயிரம் படிகள் மேலே ஏறினால் உச்சியில் ஒரு குகை அங்கே சில ஓவியங்கள்.

சுற்றுலா பயணிகளுடன் கதையின் நாயகன் [பெயரற்ற தமிழன்] அந்த குகை ஓவியங்களை காண அங்கு வருகிறான். அவன் இருக்கும் குழுவை வழிகாட்டி அழைத்து செல்கிறார். அடிவார குகை ஓவியங்களைக் கண்டதும், கதை சொல்லிக்கு பல்வேறு குழப்பங்கள். அந்தக் குகை முடிந்ததும் மலை ஏற்றம். அந்தக் குழுவில் அனைவரும் அடிவாரத்திலேயே தங்கி விட. [பயணத்தில் பலர் வழி தவறி தொலைந்து பிணங்களாக, எலும்புக் கூடுகளாக கண்டடையப் பட்டார்கள் என வழிகாட்டி சொல்கிறார்] நாயகன் உட்பட ஒரு ஐவர் மட்டும், சிகரம் தொட உடன் வருகிறார்கள்.

சிகர முனை குகையைஅடைவதற்குள் வழிகாட்டி கிட்டத்தட்டநாயகனின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் மௌனமாகி விடுகிறார். உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் அந்த ஓவியங்கள் மட்டுமே பதிலளிக்கும் என்கிறார். குகையை அடைந்ததும் அதற்குள் இருக்கும் ஓவியங்கள் மீது தனது விளக்கை கொண்டு ஒளி பாய்ச்சுகிறார். குரூரத்தின் உச்சமான ஓவியங்கள். நாயன்கன் ஓவியத்தில், சுற்றி உள்ள பயணிகளில், தன்னில் அந்த ஓவியங்களின் சாரத்தை காண்கிறான்.

குகையை விட்டு வெளியே வந்த கணம் முதல் ஒருவரும் பேசுவதற்கு ஏதும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

அமியின் அறியப்படாத கதைகளில் ஒன்றாக இது இருக்கும் என நினைக்கிறேன். துளி மிகை வார்த்தை இன்றி சூழல் வர்ணனையில் துலங்கி வரும் இக் கதை மொத்தமும், ஒரு ஆத்மீக சாதகன் கொள்ளும் பயணத்தின் குறியீடு தானே.

அந்த மலை நமது அல்லது ஒவ்வொரு தனி மனித அகம்.நமது மனத்தை தொடர்ந்து அவதானித்து காணும் முதல் சித்திரமே ,அமைதியே அந்த அடிவாரக் குகை. அடிவாரக் குகையில் அதை கண்டதே போதும் என பலர் தங்கி விடுகிறார்கள்.

வெகு சிலர் மட்டுமே தொடர்ந்து பயணிக்கும் பாதை இது. வழிகாட்டிதான் குரு வழிகாட்டி இல்லாவிட்டால் வழி தவற மட்டுமே வாய்ப்பு. குரு எதை காண வேண்டுமோ அங்கு ஒளி பாய்ச்சுகிறார். ஆம் அத்துடன் அவர் பணி முடிந்தது. பின் பயணிகள் காண்பதெல்லாம் அவரவர் மனக் குகை ஓவியங்களைத்தான்.

அந்த ஓவியங்கள் என்ன? அதைக் காண ஏன் இத்தனை சிரமமான பயணம்? அதை கண்டே ஆக வேண்டும் என ஒருவனை உந்துவது எது? கண்டதும் ஒருவன் எய்துவது என்ன?

இனிய ஜெயம், இன்று அந்த நாயகன் அடைந்த சொல்லின்மையே என்னுடையதும். இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் இக் கணம் வரை நான் செய்த எதற்கும் எந்தப் பொருளும் இல்லை , என்று அப்பட்டமாக முகத்தில் அடித்து சொல்லி விட்டது ஹளபேடு.

இந்த நொடி நான் உணர்ந்துகொண்டிருக்கும் வெறுமையை, ஒரு பேரிடருக்குப் பின்னான அமைதியை அளித்த அந்த சிற்பிகள் மட்டும் என் கையில் சிக்கினால், கிழித்து குடல்மாலை சூடிய பின்பே ஓய்வேன்.

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்


இருவர்

$
0
0

1

மேரி மக்தலீன் குறித்து தேவாலயங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவளைப்பற்றி மதகுருக்கள் மேடையில் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அவளைப்பற்றிச் சொன்னவர் ஒரு மதகுரு. எங்களூரின் கத்தோலிக்க தேவாலயத்தில் அவர் சிறிதுகாலம் பணியாற்றினார். அந்த ஆலயத்தின் அத்தனை மதச்சடங்குகளுக்கும் அப்பால் நிற்பவராக தோன்றினார் அவர். கீழே லௌகீக லாபங்களுக்காக காணிக்கைகளுடன் வந்திருக்கும் மக்களுக்கு மேலே வானைத்தொட எழுந்து நிற்கும் சிலுவையின் தூரமும் தனிமையும் அவருக்கிருந்தது.

அவர் பெயரை எழுதி அந்த தனிமையைக் கலைக்க விரும்பவில்லை என்றாலும் என்னுடைய ‘பூமியின் முத்திரைகள்’ என்ற குறுநாவலில் அவரது சித்திரத்தை உருவாக்கி எனக்காக நிரந்தரப்படுத்திக்கொண்டேன். அவரது அறைக்கு சிலசமயம் நான் செல்வதுண்டு. பைபிள் எப்போதும் அவரது மேஜைமேலிருக்கும் என்றாலும் அதை அவர் வாசித்து நான் கண்டதில்லை. பஷீர், தகழி, தேவ், காரூர் என இலக்கியநூல்கள் மட்டும்தான் இருக்கும். வாஷ்பேசினில் நீர் நிறைத்து பிராந்திப்புட்டியைப் போட்டிருப்பார். துணியாலான சாய்வுநாற்காலியில் வெள்ளை பனியனுடன் அமர்ந்து படித்துக்கொண்டே இருப்பார்.

தகழியின் ‘பதிதபங்கஜம்’ என்ற நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர் தன்னிச்சையாக மேரி மக்தலீனைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். அவள் கிறிஸ்துவின் தோழி என்றார். அந்தக்கூற்று எனக்கு முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவள் விபச்சாரி அல்லவா என்றேன். ”அதைப்பற்றி என்ன? அவள் கிறிஸ்துவின் தோழி. கிறிஸ்துவை அவள்தான் கடைசிக்கணம் வரை பின் தொடர்ந்து வந்தாள்.. அவள் உயிர்த்தெழுவதைப் பார்க்கும் வரம் அவளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது” என்றார்.

”மேரி மக்தலீன் அவனை நிழல்போலப் பின்தொடர்ந்தாள். அவன் செல்லுமிடங்களில் எல்லாம் அவளும் சென்றாள். அவன் சொன்ன சொற்களை எல்லாம் அவளும் கேட்டாள். அவனைச் சிலுவையில் அறையும்போதும் கூட இருந்தாள். அவன் விண்ணகம் செல்லும்போது அவனைக் கண்டாள்” என்றார் அவர்.

”கிறிஸ்துவைப் பின்தொடர்வது எளிய விஷயமல்ல. அது உடைகளில் தீ பற்றும் அனுபவம் போன்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவளைத்தவிர பிறரால் அவனுடைய உக்கிரத்தை தாங்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவளுடைய காதல். அளவிலாத காதலால் மேரி கிறிஸ்துவின் தெய்வீகத்தை முழுக்க தானும் உள்வாங்கிக் கொண்டாள். காதலின் சுயசமர்ப்பணம் எத்தனை மகத்தானது என்பதற்கு அவளே ஆதாரம். உலகம் முழுக்க ஞானியரையும் தெய்வமகன்களையும் காதல்கொண்ட பெண்களன்றி பிற எவருமே கடைசிவரை பின்தொடர்ந்துசென்றதில்லை…”

நான் பின்பு பலமுறை அவரது சொற்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கல்லூரி நாட்களில் கிறிஸ்துவை பார்க்கும்போது அவருக்கு ஒரு தோழி இருந்திருக்கிறாள் என்ற எண்ணமே இன்னும் நெருக்கமானவராக அவரை ஆக்கியது.  அவருடன் தனிமையில் இருந்தால் முகம் பார்த்துப் புன்னகை செய்ய முடியும் என்பது போல. பின்னர் நிகாஸ் கஸந்த் ஸகீஸின் ‘கிறிஸ்துவின் கடைசி சபலம்’ நாவலில் மேரி மக்தலீனை மிக நெருங்கிக் கண்டறிந்தேன். அவள் வழியாக புதிய ஒரு கிறிஸ்துவை உணர்ந்தேன்.

கிறிஸ்துவின் வாழ்க்கையின் இருபெண்களுக்கும் மேரி என்றே பொதுப்பெயர் என்பது என்னை பலசமயம் விசித்திரமான முறையில் ஆழ்ந்துபோகச் செய்திருக்கிறது. அதில் மர்மமான ஏதோ ஒன்று இருப்பது போல. எங்களூரில் மக்தலீனாவுக்குச் சிலைகள் இல்லை. அவள் ஓவியங்களை நான் கண்டதில்லை. ஆகவே இளமையான மேரியின் முகமே மக்தலீனாவின் முகமென என் நெஞ்சில் வடிவம் கொண்டது. இன்று இரு முகங்களும் மனத்தில் ஒன்றுபோலத்தான் தெரிகின்றன. ஒருவரை விலக்கி இன்னொருவரை எண்ண முடிவதில்லை. கஸந்த் ஸகீஸின் மகத்தான நாவல் உண்மையில் இருபெண்களுக்கும் ஒரு தேவமகனுக்கும் இடையேயான உறவின் கதை.

மேரி மக்தலீன் கிறிஸ்துவின் சீடர்களில் முதலாமிடத்தில் இருப்பவள் என்று நூல்கள் சொல்கின்றன. எல்லா கிறித்தவ குழுக்களிலும் அவள் புனிதவதிதான். ஆனால் அவளுடைய இடம் கிறித்தவம் ஒருமைவடிவம் கொள்ளும்தோறும் குறைந்தது. ஆதிக்கிறித்தவத்தில் கிறிஸ்துவின் தோழியாக, அவர் சொற்களை முற்றுணர்ந்த முதல் ஞானியாக அவள் வழிபடப்பட்டாள். அன்று கிறித்தவம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே மதமாக இருக்கவில்லை. கிறிஸ்துவின் சொற்கள் ஒற்றை அர்த்தத்தில் முறைப்படுத்தப்படவுமில்லை. ஏன் கிறிஸ்து ஞானியாக கருதப்பட்டாரே ஒழிய கடவுளின் ஒரே குமாரராக எண்ணப்படவில்லை.

ஞானவாத கிறித்தவம் என்று சொல்லப்பட்ட அந்த மரபுகள் கிபி 388 முதல் கத்தோலிக்க அதிபர் பாப்பரசரின் ஆணைப்படி கடுமையான ஒடுக்குதலுக்கு ஆளாகி கிட்டத்தட்ட பூமியின் மீதிருந்தே ஒடுக்கப்பட்டன. பைபிளின் பல பகுதிகள் புறனடையாகக் கருதப்பட்டு விலக்கப்பட்டு புதிய ஏற்பாடு உருவாகி வந்தபோது மக்தலீன் வெறும் ஒரு பெயராக பைபிளில் உருவம் கொண்டாள். நான்கு மைய நற்செய்திகளிலும் மேரி மக்தலீன் குறித்து ஒரு சில வரிகளே உள்ளன.

ஆனால் ஞானவாத கிறித்தவத்தில் மேரி பேரொளியுடன் திகழும் ஞானவதி. அவளுடைய சொற்களே உண்மையில் கிறிஸ்துவின் ஞானத்தைப் பதிவுசெய்தன. மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தி கிபி மூன்றாம் நூற்றாண்டுவரைக்கூட புழக்கத்தில் இருந்திருக்கிறது. 1896ல் செங்கடல் தாள்கள் என்று சொல்லப்படும் பாப்பிரஸ் ஆவணங்கள் கிடைத்தன.  அவற்றில் ஒன்று மேரி எழுதிய நற்செய்தி. அதன்பின்னர் 1945 ல் எகிப்தில் நாக் ஹமாதி என்ற இடத்தில் புதைபொருட்களாக தாமஸின் நற்செய்தி உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன. இவை கிபி இரண்டு,மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் மிகச்சிதிலமடைந்த வகையில் ஓரளவே கிடைக்கின்றன

இந்த அழிக்கப்பட்ட பைபிள் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று சரிவரப் பொருந்திப்போகின்றன. இவை கிறிஸ்துவை மாபெரும் ஞானகுருவாக எண்ணிய ஒரு கிறிஸ்தவ மரபு இருந்திருப்பதற்கான சான்றுகள். இந்த நற்செய்திகளில் வரும் கிறிஸ்து மண்ணில் செய்யும் நன்மைகளுக்கு விண்ணில் ஊதியம் அளிக்கும் கடவுள் அல்ல. விண்ணகத்தில் மீட்பு உள்ளது என்று சொல்லும் மதநிறுவனரும் அல்ல. வாழ்வாங்கு வாழ்ந்தால் மண்ணிலேயே  இறைவனின் உலகம் அமையும் என்று சொல்லக்கூடிய புரட்சியாளர்.  அந்த விண்ணகத்தை மண்ணில் அமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு என்று சொன்னவர்

ஒருபோதும்  எந்த ஓர் அமைப்பாலும் உள்ளிழுத்துக்கொள்ள முடியாத உக்கிரத்துடன் இருக்கிறார் ஞானவாத கிறிஸ்து. அமைப்புகளும் அரசுகளும் வைக்கோல்போர்கள், அவர் அனல். அவரை கடவுளாக்கி, எதிர்பார்ப்புகளை வானுக்குத் திருப்பி, நம்பிக்கையை உரிமைக்கான வாளாக ஆக்குவதற்குப் பதில் கீழ்ப்படிதலுக்கான பத்திரமாக ஆக்கி , கான்ஸ்தண்டீனின் ரோமப்பேரரசு இன்றைய கிறிஸ்தவத்தை உருவாக்கியது. கிறிஸ்துவின் அணையாத கனலை ஆவணமாக்கிய மேரி மக்தலீன் பின்னகர்ந்தாள். பின்னர் கிறிஸ்து இறைமகனாக, மானுடர் அண்டமுடியாத தூய வடிவமாக ஆனபோது மக்தலீன் விபச்சாரியானாள். வரலாற்றில் தன் சொற்களுடன் புதைந்து மறைந்தாள்.

கிறிஸ்துவின் ஞானத்தை ‘பிரபஞ்சத்தின் பெண்மைஞானம்’ என்று சொல்லலாம். கிருஷ்ணனின், புத்தரின் மெய்ஞானம் பிரபஞ்சத்தை ஞானத்தால் வென்று மூடும் ஆண்மைத்தன்மை கொண்டது. வீரியத்தால் வேகத்தால் ஆனது. மூளைத்திட்பம் கொண்டவர்களால் மட்டுமே அணுகத்தக்கது. கண்ணனின் சொற்களில் வீரமே முதல் விழுமியம். அனைத்தும் தொடங்குவது அங்கிருந்தே. அச்சமின்மையே ஞானத்தின் ஆரம்பம் என்றார் புத்தர். புறத்துக்கும் அகத்துக்கும் அஞ்சாமை. ஒருபோதும் பின்னகராத விழிப்புணர்வு. ஆகவேதான் அவர் அஜிதர் எனப்பட்டார்.

நேர் மாறாக கிறிஸ்துவின் மெய்ஞானம் கீழ்ப்படிதலை முதல் விழுமியமாக வைக்கிறது. மகத்துவத்திற்கு முன்னால் அகங்காரத்தை கழற்றி வைத்து மண்டியிடும் எளிமையில் இருந்து ஆரம்பிக்கிறது அது. களங்கமின்மையையும் கருணையையும் ஆயுதங்களாக கொண்டது. மனம் கனியும் வல்லமை கொண்ட எவருக்கும் உரியது அது. பாவத்திற்கு அஞ்சுதலை, துயரங்களைப் பொறுத்துக்கொள்ளுதலை முன்வைக்கிறது. அது பெண்மைத்தன்மை கொண்ட ஞானம்

ஆகவேதான் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் கடவுளின் மனையாட்டிகளாக தங்களை நிறுத்திக்கொண்டார்கள். சகித்துக்கொள்ளுதல் மூலம் அடையும் வெற்றியில், கசப்புகளை உள் வாங்குவதன் மூலம் அடையும் இனிமையில் , சோதனைகள் மூலம் பெறும் தூய்மையில் நம்பிக்கை கொண்டார்கள். உலகமெங்கும் ஆறுதல் அளிக்கும் சொற்களுடன், இளைப்பாற்றும் தோள்களுடன். கண்ணீர் படர்ந்த பிரார்த்தனைகளுடன் அவன் செய்தியைக் கொண்டு சென்றார்கள்.

அவன் வாழ்ந்தபோது அச்செய்தியை பெண்மனம் புரிந்துகொண்ட அளவுக்கு வேறெவராவது புரிந்துகொண்டிருப்பார்களா என்ன? மேரி மக்தலீன் மீது பிற சீடர்கள் காழ்ப்பு கொண்டிருந்தார்கள் என்று ஞானவாத நூல்கள் குறிப்பிடுகின்றன. அவளை கிறிஸ்து நெருங்கிய அளவுக்கு பிறரை நெருங்கவில்லை. ஏனென்றால் அவர்கள் ஆண் மகன்கள். அவரோ அவர்களிடம் திரும்பவும் குழந்தைகளாகும்படி அறிவுறுத்தினார்.

‘மிக அழகான விண்மீனை விட அழகானவள்’ என்று வேர்ட்ஸ்வர்த் கன்னிமரியைச் சொன்னார். எளிய யூதகுலப்பெண், வெயிலிலும் மணற்புயலிலும் அடிபட்டவள், எப்படி பேரழகுடன் இருந்திருக்க முடியும்? தன் தவத்தாலும் பொறுமையாலும் மனுக்குலத்துக்கு அவள் அளித்த பெரும் தியாகத்தாலும் அந்த பேரழகை அவள் பெற்றாள். கவிஞனின் கண்கள் மட்டுமே தொட்டெழுப்பும் அழகு அது.

கிறித்தவ நூல்களில் மரியன்னை மீண்டும் மீண்டும் நட்சத்திரமாக உருவகிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கடல்களின் விண்மீன் என்று அவளைச் சொன்னார்கள். வழிகாட்டும் விண்மீன் என கடற்பயணங்களில் அடையாளம் கண்டார்கள். கிறித்தவ மரபின் தொடக்கத்தில் மரியன்னை கிறிஸ்துவை அவரது ஞானத்துடன் பெற்றுக்கொண்ட தூயவளாக வழிபடப்பட்டிருந்தாள். பின்னர் அவளுடைய இடம் மெல்ல மெல்ல பைபிளில் குறைந்தது.  புதிய ஏற்பாட்டு பைபிளில் இருந்து நாம் பெறுவது மேரியின் வெறும் ஒரு கோட்டுச்சித்திரம் மட்டுமே

ஆனால் கிறித்தவத்தைப் பின்பற்றிய கோடிக்கணக்கானவர்களில் அவள் நிலைமாறா விண்மீன் என நின்றமையால் பின்னர் திருச்சபை அவளை அங்கீகரித்தது. மனிதகுமாரனைக் கையில் ஏந்திய அன்னை உலகமெங்கும் வழிபடு சின்னமாக ஆனாள். ஒருவேளை உலகில் மிக அதிகமான பேர் வழிபடுவது கிறிஸ்துவை விட அன்னையைத்தான் என்று தோன்றுகிறது.

ஆரம்பகால பைபிளில் மரியன்னை எந்த வகையில் இருந்தாள் என்பதற்கான தடையங்கள் குர் ஆனில் உள்ளன. குர் ஆனின் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் ஈசா நபியின் பிறப்பை வருணிக்கும் போது பெண்களுக்கு முதல்வி என மரியத்தை நபியின் சொற்கள் சிறப்பிக்கின்றன. இறைபக்தியால் தன்னுடைய குடும்பத்தைவிட்டு நோன்பு நோற்றபடி தனித்து வசிக்கும் மரியத்தை இறைவனின் தூதனாகிய மலக்கு வந்து சந்திக்கிறது. இறைமகன் பிறக்கப்போவதை அறிவிக்கிறது. தான் கன்னி என்று மரியம் சொல்கிறாள். கன்னியின் வயிற்றிலேயே அவன் பிறப்பான் என்று மலக்கு சொல்லி விலகுகிறது.

மரியம் மக்களிடமிருந்து ஏளனத்தையும் வசைகளையும் எதிர்கொள்ள நேர்கிறது என்று குர் ஆன் சித்தரிக்கிறது. அப்போது நிலைமாறாத விசுவாசத்துடன் ‘எனக்கு வேதம் அருளப்பட்டுள்ளது’ என்று அவள் சொல்கிறாள். சமூகம் அளித்த வசைகளையும் ஒதுக்குதலையும் அரசின் வேட்டையையும் தன் கண்ணீர் நனைந்த பிரார்த்தனையால் அவள் வென்று தாண்டிச்செல்கிறாள்.

ஜெருசலேம் தேவாலயத்திற்கு மகனுடன் செல்லும் மேரியிடமிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டு இறைவனின் பெருங்கருணையை வாழ்த்திய சிமியோன் தீர்க்கதரிசி சொன்னார் ‘ …மரியமே உன் இதயம் வழியாக ஒரு வாள் துளைத்துச் செல்லும்’  குரூரமான சொற்கள். ஆனால் அந்தக்குழந்தை பிறந்ததுமே அன்னைக்கு உள்ளூரத் தெரிந்திருக்கும், அதுதான் அந்த பொன்னாலான வாள் என்று. அந்த கணத்தை நோக்கி அவள் வாழ்நாள் முழுக்கச் சென்றுகொண்டிருந்தாள்.

கிறிஸ்துவுக்காக மேரி அலைந்துகொண்டே இருந்தாள். கர்ப்பிணியாக இருந்தபோது பெத்லகேமுக்குச் சென்றாள். பிறகு எகிப்துக்கு தப்பி ஓடினாள். வேட்டையாடிய எரோது மன்னன் இறந்தபின்னர் அவள் மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவந்தாள். பிறகு கலீலியில் நசரேத்துக்குச் செல்கிறாள். பின்னர் ஏசு சென்ற இடங்களுக்குச் சென்றாள். கல்வாரிமலை வரை அப்பயணம் நீடித்தது.

கிறிஸ்துவின் வாழ்க்கை முழுக்க அவரை மரியத்தின் பிரக்ஞை பின் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. ஒரு கணம்கூட அவனை விட்டு அவள் ஆத்மா விலகியிருக்காது. பைபிளின் குறைவான சொற்களிலேயே மீண்டும் மீண்டும் தன் மகனிடம் வந்துசேரும் அன்னையை நாம் காண்கிறோம். ஜெருசலேம் நகரில் தேவாலயத்தில் மதபண்டிதர்கள் நடுவே விவாதித்துக்கொண்டிருந்த குழந்தை ஏசுவைக் கண்டு அச்சமும் பீதியும் கொண்டு அவள் சொன்னாள் ”நானும் உன் தந்தையும் உன்னை பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்தோம்”

மேரிக்கு அவன் பிறக்கும்முன்னரே அவன் யார் என சொல்லப்பட்டுவிட்டது. ஆனாலும் அவள் தாயாகவே இருந்தாள். தாயின் பெரும்பிரியத்தால் அவனை மூடிக்கொண்டாள். அந்தப்பிரியமே அவன் யாரென அவளுக்குக் காட்டாமல் மறைத்தது. அவனுக்கு சித்தப்பிரமை என்று சொல்லிக்கேட்டபோது கடுந்துயர் கொண்டாள்.

அந்த தாய்ப்பாசத்தில் மூடிய கண்களுடன்தான் அவள் தன் சீடர் நடுவே இருந்த அவனைத் தேடிச் சென்றாள். அவள் பிரியம் வெறும் தாய்ப்பாசமா என்று அறிய விரும்பிய கிறிஸ்துவே ”என் உறவினர்கள் என் சொற்களை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே”  என்று அவளை நிராகரித்தார். நீ என்னை உன் மகன் என எண்ணியிருந்தால் அந்த மகன் இறந்து விட்டான் என உணர்வாயாக என்று அவளிடம் அவர் சொல்லியிருக்கலாம். ஒவ்வொரு கணமும் சிலுவையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கிறிஸ்து இறைவனுக்கு மட்டுமே மகன். மனிதகுலத்துக்கு முழுக்க சொந்தமானவன். தன் மார்புகளின் மீது அவரை அணைத்துக்கொள்ள மரியத்திற்கு உரிமை இல்லை.

அதை மரியம் உணர்ந்திருப்பாள் என்றே பைபிளைக் கொண்டு ஊகிக்க முடிகிறது. அவளும் கடைசிக்கணம் வரை இறைமகனை பின் தொடர்ந்து சென்றாள். சிலுவைப்பாட்டின் இறுதிக்கணம் வரை அவளும் இருந்தாள். அவளுக்காக தயாராகி இருந்த அந்த வாள் அவள் ஆத்மாவில் பாய்ந்தது. அவளை துயரத்தின் சிகர நுனிகள் வழியாக அவளை தூயவளாக்கி மானுடத்தின் அன்னையாக்கியது.

அவனுடைய தூய உடலை தன் கைகளில் பெற்றுக்கொண்டாள். கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப் பின்னர் சீடர்கள் நடத்திய பிரார்த்தனைகளில் மரியம் கலந்துகொண்டாள் என்று பைபிள் சொல்கிறது. கல்வாரியில் அவன் தியாகம் முழுமை பெற்றபின்னர் அவள் அவனை முழுதுணர்ந்திருக்கலாம்.

ஜார்ஜ் ஹென்றி டவார்ட் எழுதிய கன்னி மேரியின் ஆயிரம் முகங்கள்  [ The thousand faces of the Virgin Mary, George Henry Tavard] என்ற நூல் ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் கிடைத்தது எனக்கு. அதை பத்திபத்தியாக ஒருவருடம் முழுக்க வாசித்தேன். ஒரு மனப்பிம்பமாக அதை இன்று நினைவுகூர்கிறேன். கிறிஸ்து உலகமெங்கும் சென்றபோது கூடவே மேரியும் பெருகிக்கொண்டே இருக்கிறாள். தமிழ்நாட்டிலேயே எத்தனை அன்னைகள். நமது கடற்கரை வழியாகச் சென்றால் ஐந்து கிலோமீட்டருக்கு மேரியின் ஒரு முகம் தெரிகிறது.கிறிஸ்து ஓர் ஆடிபோல, அவள் அதில் பிரதிபலித்துப்பெருகுகிறாள்.

இரு பெண்கள். ஒரு சுடருக்கு இருபக்கமும் பொத்திக்கொண்டிருக்கும் இரு கைகளைப்போல. பேரழகு கொண்ட ஒரு பறவையின் இரு சிறகுகளைப்போல. இரண்டு மேரிகள். நான் கற்பனைசெய்வதுண்டு, மேரி தன் மகனை நோக்கிச் சென்று அவனை தன்னுடன் அழைக்கும்போது அவன் காலடியில் மேரி மக்தலீன் இருந்திருப்பாளா என.  இருந்திருந்தால் அன்னையில் இல்லாத தோழியில் இருந்த எது அவளை மேலும் அருகே கொண்டுசென்றது?

அதற்காகத்தான் மேரி மக்தலீன் மனம் திரும்பிய பாவி என்று சொல்லப்பட்டிருக்கிறதா? பாவிகளுக்கும் துயரம் கொண்டவர்களுக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் மட்டுமே புரியும் செய்தியைத்தான் அவன் சொன்னான் என்பதா? அன்னையின் பேரன்பு உணராத ஒன்றை கண்ணீர் நிறைந்த காதல் புரிந்துகொண்டதா என்ன?

மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தியில் பீட்டர் சினத்துடன் ஆண்ட்ரூவிடம் கேட்கிறார்”அவர் நம்மிடம் பொதுவாகப் பேசாமல் ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசினார் என்பது உண்மையா? இனி நாம் அவளை நோக்கிச் சென்று அவள் வாயிலிருந்து ஞானமொழிகளைக் கேட்க வேண்டுமா? எங்களை விட்டுவிட்டு அவர் அவளையா தேர்ந்தெடுத்தார்?”

கண்ணீர் விட்டு மேரி மக்தலீன் சொன்னாள் ”பீட்டர் என் சகோதரனே நீ என்ன நினைக்கிறாய்? என் இதயத்தால் நான் இந்த அளவுக்கு சிந்திக்க முடியுமா? அல்லது என் மீட்பரைப்பற்றி நான் பொய் சொல்வேனா?”

பீட்டரை லெவி சமாதானம்செய்கிறார். ”பீட்டர் நீ எப்போதுமே சினம் கொண்டவனாக இருக்கிறாய். இந்தப்பெண்ணை எதிரியைப்போல  நீ நடத்துகிறாய். நம்முடைய மீட்பர் அவளே தகுதியானவள் என்று எண்ணினால் அதை மறுக்க நீ யார்?”

பீட்டர் உருவாக்கிய திருச்சபையை ஏசுவின் மணவாட்டி என்று சொல்லும் ஒரு மரபு உண்டு. அந்த ஒரே ஒரு தோழிக்கு நிகராகவா அத்தனை பெரிய அமைப்பை அவர் உருவாக்கினார் என்று தோன்றுகிறது

ஏசு உயிர்த்தெழுந்ததைக் கண்டு மகிழ்ந்து பிறருக்குச் சொல்ல ஓடும் மேரி மக்தலீன் முன்னால் திடீரென்று ஏசு தோன்றி அவர்களை வாழ்த்தினார். அவள் அவரை நோக்கி ஓடி அவரது காலடிகளைப்பற்றிக் கொண்டு பணிந்து நின்றாள் என்கிறது பைபிள். என்றும் தன் ஆத்மா அறிந்திருந்த ஓர் உண்மையை அப்போது மேரி மக்தலீன் தன் கைகளாலும் உணர்ந்திருப்பாள்.

நெடுந்தூரத்துக்கு அப்பால் இளமையின் ஒளிமிக்க நாட்களில் நான் குன்னத்துக்கல் அச்சனின் முகத்தையும் கண்களையும் காண்கிறேன். அவர் என்ன சொன்னார் என்று இப்போது புரிகிறது. தோழியாக ஆகும்போது அன்னையும், அன்னையாக மாறும்போது தோழியும் கண்டுகொள்ளும் அழியாத மெய்மை ஒன்று உண்டு.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 4, 2009

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 17

ரைவத மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின் கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென அது பெருகி வர அதன் விளிம்புவட்டம் குறுகிக்குறுகி மலைமுடி நோக்கி சென்றது. அவர்கள் எழுப்பிய பேரோசை எதிரொலிக்க மலைப்பாறைகள் அனைத்தும் யானைகளென எருமைகளென பன்றிகளென பெருச்சாளிகளென உயிர்கொண்டு ஓசையிடத் தொடங்கின. எக்கணமும் அவை பாய்ந்து எழுந்து பூசல் கொள்ளுமென்று தோன்றியது.

அர்ஜுனன் கைகட்டி அருகர் ஆலயமுற்றத்தில் நின்றபடி அப்பெருந்திரளை நோக்கிக் கொண்டிருந்தான். திரண்டெழும் எதுவும் நீர்மைகொள்வதன் விந்தையை எண்ணிக்கொண்டான். மணலாயினும் விலங்குகளாயினும் மக்களாயினும். அவை விளிம்புகளில் விரியத்தவிக்கின்றன. அனைத்துத் திசைகளிலும் சூழ்ந்து நிறைக்கின்றன. நிரப்புகின்றன. அந்த முகங்களையே மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முகத்திலும் கணத்திலொரு துளியே கண் நிலைக்கமுடிந்தது. ஆகவே முகங்களின் உள்ளுறையும் வெளிப்பாடுமான ஒன்றையே அறியமுடிந்தது. அதுவே அத்திரளென இருந்தது. அனைத்து முகங்களும் கலந்து உருவான ஒற்றை அலைப்பரப்பு. பல்லாயிரம் கோப்பைகளில் நிறையும் ஒரு நதியின் நீர். விராடவடிவம் கொள்ளும் எதுவும் உலகமே வேண்டுமென்று வெறிகொள்கிறது. அனைத்து எல்லைகளையும் முழு ஆற்றலுடன் தாக்குகிறது.

திரளாவதற்கான அகநிலை ஒன்று யாதவர்களிடம் முன்னரே இருந்ததென்று தோன்றியது. ஒவ்வொரு தருணத்திலும் தனித்து தனித்து காட்டில் அலைந்தவர்களுக்குள் அந்தத் தனிமையை முற்றிலும் உதறி தழுவும் தோள்களுடன் தசைகள் முட்டிப் பிணைந்து தசைப்பெருக்காக மாறும் விழைவு இருந்திருக்கும். எப்போதோ பெருந்திரள் என தன்னை உணரும்போது யாதவன் திடுக்கிட்டு விழித்து அண்டையனை வெறுத்து விலகிக்கொள்வான். வேடிக்கையான எண்ணம் ஒன்று எழுந்தது. சாங்கியம் என்ன சொல்லும்? இந்த யாதவர் முக்குணமும் நிகர்நிலையில் இருக்க ஒற்றைப்பேருடலாக எங்கோ இருந்திருக்கின்றனர். நிலையழிந்த குணங்கள் ஒன்றையொன்று நிறைசெய்ய முட்டி மோதிப்பெருகி பல்லாயிரங்களென மாறிக்கொண்டிருக்கின்றன. மீண்டும் அவை நிகர்நிலையடைந்து அமைதிகொள்ளக்கூடும்.

யாதவர் அருகர் ஆலயங்களின் சுற்றுவளைப்புகளை தாவிக் கடந்து வந்தனர். அடிகள் பதிந்த பாறைகளை அவர்களின் உடல்திரள் முழுமையாக மூடி மறைத்தது. சிந்திக்கிடந்த செவ்வொளி வட்டங்களில் தெரிந்து சென்ற அவர்களின் முகங்கள் வெறிகொண்டு விழித்த தெய்வங்கள் போல் இருந்தன. அவர்கள் நடுவே புதுவெள்ளப் பெருக்கில் சுழற்றிக் கொண்டு வரப்படும் மரத்தடியைப் போல சுபத்திரையின் புரவி உலைந்தது. அதை பின்நின்று வாலை முறுக்கி ஊக்கினர் யாதவ இளைஞர். அது முன்னால் எம்பித் தாவ முயன்றபோது சிலர் கழுத்தைப் பிடித்து நிறுத்தினர். அவளை புரவியிலிருந்து பிடித்து இழுத்து கீழே தள்ள சில இளைஞர் முயன்றனர். கூவிச்சிரித்து ஆர்ப்பரித்து அவளை சூழ்ந்துகொண்டனர். சவுக்கை சுழற்றி அவர்களை மாறி மாறி அடித்து அவள் உரக்க சிரித்தாள். அவர்கள் அந்த அடியை தழுவல் போல முத்தங்கள் போல கொண்டனர்.

அக்கூட்டத்தின் களிவெறியில் அவளும் முழுமையாக தன்னை மூழ்கடித்திருப்பதை அர்ஜுனன் கண்டான். புரவியை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்திச் சுழற்றி பின்னால் அதன் வாலைப் பற்றியவர்களை கால்தூக்கி உதைத்தாள். குதி முள்ளால் அதன் விலாவை குத்தி சுண்டி உந்த அது முன்குளம்பு தூக்கி கூட்டத்தின் நடுவே பாய்ந்து மேலும் பாய முடியாமல் தவித்து சுழன்றது. அதன் காலடியில் விழுந்த யாதவர்கள் எழுந்து அதை உதைத்தனர். அவள் அணுகி வரும்தோறும் அர்ஜுனன் அவளை மட்டுமே நோக்கலானான். அவளது கழுத்தெலும்பு எழுந்த பெருந்தோள்கள், விரிந்த நெற்றி கொண்ட பரந்த முகம், சிரிக்கும் சிறிய கண்கள். கள் மயக்கிலிருப்பது போல் சிவந்திருந்தன அவை.

அவனை அவள் அணுகியதும் சூழ்ந்திருந்தவர்களில் ஒருவன் “அதோ அவன் யோகி! சிவயோகி என்று எண்ணுகிறேன். அவனிடம் கேட்போம்” என்றான். ஒருவன் “யோகியே! நீர் சொல்லும்! யாதவ இளவரசியை மணம் கொள்ளும் தகுதி எனக்குண்டா?” என்றான். பிறிதொருவன் “ஷத்ரியர் எங்கள் இளவரசியை மணம்கொண்டு செல்கையில் இடைக்கச்சை இறுக்கி காட்டில் அலையும் இழிவு எங்களுக்கு என்றால் அதை எப்படி பொறுக்கமுடியும்?” என்றான்.” இந்தச்சித்திரை முடிந்து வைகாசி மாதம் முழுநிலவுநாளில் மணத்தன்னேற்பு… அதற்குப்பின் இவள் எங்களுக்குரியவள் இல்லை” என்று ஒருவன் கூவியபடி முன்னால் வந்தான்

அர்ஜுனன் புன்னகைத்தபடி “முற்பிறவியில் அவள் ஒரு வண்ணத்துப்பூச்சியாகவும் நீங்கள் அவளை இழுத்துச்செல்லும் எறும்புகளாகவும் இருந்தீர்கள் யாதவர்களே” என்றான். “என்ன சொல்கிறான்?” என்று பின்னால் ஒருவன் கேட்டான். “சொல்லும்” என்றான் ஒருவன். “பாதியிலேயே யானை ஒன்று உங்களை மிதித்துக்கூழாக்கி கடந்துசென்றது. முடிவடையாத அச்செயலை இப்பிறவியில் மீண்டும் செய்கிறீர்கள்.” பின்னால் நின்றவன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “மணத்தன்னேற்பில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாமே?” என்றான் அர்ஜுனன்.

சுபத்திரை “ஆம். அதையே நானும் சொல்கிறேன். சைப்யரே, நீர் கதாயுதமேந்தி வந்து களத்தில் நில்லும்” என்றாள். “வருகிறேன், உனக்காக களத்தில் என் தலை உடைந்து தெறித்தால்கூட உவகையுடன் விண்ணேறுவேன். ஷத்ரியன் முன் வெறுந்தடியென நிற்பதைவிட அது மேல்” என்றான் சைப்யன். “ஆகா! அவன் ஆண்மகன்” என்று ஒரு முதியவன் கைநீட்டி சொன்னான். சுபத்திரை அர்ஜுனனை நோக்கி “உமது பெயரென்ன?” என்றாள். அர்ஜுனன் “ஃபால்குனன். சிவ யோகி” என்றான். “உம்மை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள். “இருக்கலாம். பிறப்பால் நான் ஷத்ரியன். ஷத்ரியர்களின் முகங்கள் ஒன்று போலுள்ளன என்று சொல்வார்கள்” என்றான் அர்ஜுனன். “இல்லை, உமது விழிகளை வேறெங்கோ பார்த்திருக்கிறேன்” என்றபின் அருகே வந்தாள்.

அவள் புரவியை பற்றியபடி வந்த யாதவர்கள் அவனை நோக்கி கூச்சலிட்டனர். அவர்களை பின்னாலிருந்து நெருக்கிய கூட்டத்தால் மொத்தமாக அடித்துச்செல்லப்பட்டனர். “உம்மைப் பார்த்தால் சிவயோகி போல் தோன்றவில்லையே” என்றான் ஒருவன். “இளைஞரே, உமது தாடியை நான் பிடித்திழுத்துப் பார்க்கலாமா?” என்று ஒரு முதிய யாதவன் எட்டி அர்ஜுனன் தாடியை பிடித்துக் கொண்டான். அர்ஜுனன் அவன் கையை வளைத்து எளிதாக தூக்கி அப்பால் இட்டான். திரும்பி சுபத்திரையை நோக்கி “இவ்விழவில் யாதவப் பெண்கள் வருவதில்லை என்று அறிந்தேனே” என்றான். “ஆம். வழக்கமாக வருவதில்லை. இம்முறை நான் வந்துள்ளேன். அது என் மூத்தவரின் ஆணை” என்றாள் சுபத்திரை.

“அவளுக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது” என்று ஒரு யாதவன் கைநீட்டி கூறினான். மேலும் மேலும் பெருகி வந்து கொண்டிருந்த யாதவர்களின் திரள் அவர்களை தள்ளி முன்னால் கொண்டு சென்றது. அர்ஜுனன் ஏராளமான தோள்களால் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டான். கூச்சல்களிடையே அவன் குரல் கேட்கவில்லை. “அவளுக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது. அஸ்தினபுரியின் அரக்கன் வந்து அவளை கொள்ளவிருக்கிறான். மூடன்!” என்றான் ஒருவன். அர்ஜுனன் “ஊழ் அவ்விதம் இருந்தால் எவர் என்ன செய்ய முடியும்?” என்றான். சுபத்திரை “ஊழ் நடத்துபவர் என் தமையன். அவர் ஆணைப்படி நான் இங்கு வந்தேன்” என்றாள்.

“இங்கு அவளுக்கு மணமகன் கிடைக்கவிருக்கிறான் என்று நிமித்திகன் ஒருவன் சொன்னான்” என்று ஓர் இளைஞன் கூவினான். “இளைய பாண்டவனாகிய பார்த்தன் இங்கு வரப்போகிறான். அவளை சிறைபற்றிக்கொண்டு செல்லவிருக்கிறான்.” கடும் சினத்துடன் பின்னால் இருந்து ஒரு யாதவன் தலைதூக்கி “அதை சொன்னவன் யார்? இப்போதே அவன் நாவை வெட்டுகிறேன். சொன்னவன் யார்?” என்றான். “ஏன்? நான் சொன்னேன். வெட்டு பார்க்கலாம்” என்றபடி சொன்னவன் முன்னால் வந்தான். அவனை நோக்கி பாய்ந்தவனை பிறர் அள்ளிப் பற்றி விலக்கினர்.

திமிறியபடி “விருஷ்ணி குலத்தில் ஒரு யாதவன் இருக்கும்வரை இளைய பாண்டவன் எங்கள் இளவரசியை கொள்ள மாட்டான்” என்றான் அவன். “ஏனெனில் அஸ்தினபுரியின் அரசருக்கு அவளை கொடுக்க வேண்டும் என்பது விருஷ்ணி குலத்து பலராமரின் விருப்பம். அதை மீற இளைய யாதவருக்கும் உரிமையில்லை.” அவனுடைய எதிரி “அதை யாதவர்கள் முடிவெடுப்பார்கள். போஜர்களுக்கு விருஷ்ணிகள் பாடம் எடுக்கவேண்டியதில்லை” என்றான்.

வசைகள் வெடிக்க பூசல் ஒன்று தொடங்கவிருந்தது. “விலகுங்கள். இதை பேச இப்போது நேரமில்லை” என்று அவர்களைப் பிடித்து விலக்கினர். “விலகுங்கள் விலகுங்கள்” என்று அருகே பாறைமேல் எழுந்த குஜ்ஜர் குலத்துக் ஏவலன் ஒருவன் கூவினான். அவன் குரல் இரைச்சலில் மறையவே தன் கையில் இருந்த கொம்பை உரக்க ஒலித்து கைவீசி விலகிச் செல்ல ஆணையிட்டான். பெருகி வந்த யாதவர்கள் ஐந்து அருகர் ஆலயத்தை அடைந்தனர். முற்றத்தை நிறைத்திருந்த அருகநெறியினருக்கு சுற்றும் பெருகி அலைபாய்ந்தனர். “ஐந்து அருகர்களுக்கு வெற்றி! ஐந்தவித்தவர்களுக்கு வெற்றி! ஐந்துபருக்களை வென்றவர்களுக்கு வெற்றி” என்று அவர்கள் கூவினர். வெள்ளுடை அணிந்த ஐந்து படிவர்கள் உள்ளிருந்து வந்து நீரையும் மலர்களையும் அள்ளி யாதவர்கள் மேல் வீசி வாழ்த்தினர்.

“விலகிச் செல்லுங்கள். அப்பால் விலகிச் செல்லுங்கள்” என்று மூங்கில் மேடைகளில் ஏறி நின்று குஜ்ஜர்கள் கூவினர். “நிரை வகுத்து மலை நோக்கி செல்லுங்கள்” என்றனர். ஒருவரை ஒருவர் முட்டி கூச்சலிட்டபடியும் எம்பி குதித்து ஆர்ப்பரித்தபடியும் அரண்மனையை வளைத்து மறுபக்கம் சென்ற பாதையில் பரவி இறங்கினர் யாதவர். அங்கே சுடர்கள் ஒளிவிட்ட சிறிய விமானத்துடன் நின்றிருந்த ரைவதகரின் ஆலயத்தின் முன் கட்டப்பட்டிருந்த மணிமண்டபத்தின் முன் கண்டாமணி முழங்கத்தொடங்கியது. “நிரை வகுத்துச் செல்லுங்கள். நிரை வகுத்துச் செல்லுங்கள்” என்று ஆணை எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தபோதும் எங்கும் நிரை என ஏதுமிருக்கவில்லை. ஆனால் மண்ணின் மேடுபள்ளங்களும் அவற்றை அறிந்த கால்களின் விருப்பமும் இணைந்து அதற்கென ஓர் ஒழுங்கு அமைந்தது.

நெடுந்தொலைவில் தன்னைவிட்டு விலகிச் சென்றிருந்த சுபத்திரையை நோக்கியபடி வெள்ளத்தில் எழும் நெற்றுபோல அர்ஜுனன் சென்றான். உடலை அப்பெருக்குக்கு விட்டுக்கொடுத்தபோது விழிகளை முழுமையாக அக்காட்சிகளில் ஈடுபடுத்த முடிந்தது. பல்லாயிரம் கால்கள் கொண்ட பெரும் புரவியொன்றின்மேல் ஏறியவன் போல். கூட்டத்தை நோக்கி மலர்களையும் மஞ்சள் அரிசியையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தனர் அருகநெறிப் பூசகர். முட்டித் ததும்பி கூட்டத்தில் நின்று ஒரு கணம் ஆலயக் கருவறைக்குள் எழுந்த ரைவதகரின் சிலையை நோக்கினான் அர்ஜுனன்.

நெடுந்தொலைவில் என விழித்து பதிந்திருந்தன விழிகள். வலது கையில் மருத்தன் அளித்த வாளும் இடது கையில் மொக்கவிழாத சிறு தாமரையும் இருந்தன. அவரது காலடியில் கனிகளும் காய்களும் அன்னமும் அப்பமும் இன்னுணவும் எட்டு மங்கலங்களும் படைக்கப்பட்டிருந்தன. சூழ்ந்திருந்த நெய்விளக்குகளின் வெளியில் அக்காட்சி திரைச்சீலை ஓவியமென அலையடித்தது. விழிகள் ஒரு சுற்று அக்காட்சியை தொட்டு வருவதற்குள் நெடுந்தொலைவுக்குள் அவனை தூக்கிச் சென்றுவிட்டது கூட்டம்.

இந்திரபீடத்தின் அருகே கூட்டம் சென்றபோது அங்கு பாறைகளின் உச்சியில் நின்றிருந்த குஜ்ஜர்கள் கைகளில் ஏந்திய பந்தங்களை சுழற்றியும் கொம்புகளை முழக்கியும் அக்கூட்டத்தை வழிப்படுத்தியும் குன்றைச் சுற்றி அமரவைத்தனர். தொன்மையான ஆணை ஒன்று அவர்களின் அகப்புலனில் உறைவதுபோல யாதவர் மண்ணில் புதர்களுக்கும் உருளைப்பாறைகளுக்கும் ஊடாக அமர்ந்தனர். பின் நிரையில் வந்துகொண்டிருந்தவர்கள் அந்த அமைதியைக்கேட்டே அமைதிகொண்டனர். அந்தப்பெருங்கூட்டம் ஓசையின்மையின் இருளுக்குள் பெய்தொழிவது போல தோன்றியது.

கீழிருந்து வந்தவர்கள் வந்து முடிந்ததும்  மலைப்பகுதியெங்கும் யாதவர்கள் முற்றிலும் படிந்து ஓசை அழிந்தனர். இருளின் திரை மேலும் தடித்தது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த குரல்பெருக்கு ஓசையற்ற ஒன்றாக மாறி எப்போதும் செவிகளை சூழ்ந்திருப்பதுபோல அர்ஜுனன் உணர்ந்தான். கீழே அருகர் ஆலயத்திலிருந்து மணிகளின் ஓசைகள் எழுந்தன. அங்கிருந்து ஒற்றை விளக்கு ஒன்று இருளுக்குள் கண்காணா நீர்ப்பெருக்கொன்றால் கொண்டு வரப்படுவது போல மெல்ல அலை பாய்ந்தபடி வந்தது. அருகணைந்தபோதுதான் அதைத் தொடர்ந்து பெரிய அணி நிரையாக அருக நெறியினர் ஓசையின்றி நடந்து வருவதை அர்ஜுனன் கண்டான்.

கைகூப்பி நடந்துவந்த அவர்கள் யாதவர்கள் நடுவே பிளந்திருந்த பாதை வழியாகச் சென்று இந்திரபீடத்தை அணுகி அதன் அடிவாரத்தில் பெரிய வளையமாக சுற்றி அமர்ந்தனர். ஒருவரை ஒருவர் முட்டி மோதாமல் பல்லாயிரம் முறை பயிற்சி செய்யப்பட்ட ஓரு படை நகர்வு போல மிக இயல்பான ஒழுங்குடன் அவர்கள் சென்றனர். இருளுக்குள் கூட்டம் பெருகிச் சென்றுகொண்டிருந்த காலடிகளிலிருந்து அவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. பெண்களும் குழந்தைகளும் முதியவரும் அடங்கிய அப்பெருங்கூட்டம் ஓருடலும் பல்லாயிரம் கால்களும் கொண்ட அட்டை போல மாறியிருந்தது.

அவர்கள் அமர்ந்து முடிந்ததும் அங்கிருந்த பாறை ஒன்றின் மேலிருந்து ஏவலர் தலைவன் பெருங்கொம்பை முழக்கினான். அதை ஏற்று மலை முழுக்க இருந்த பல்வேறு பாறைகளில் இருந்து ஏவலர்கள் கொம்போசை எழுப்பினர். மலை முற்றிலும் அமைந்துவிட்டது என்று தோன்றியது. யாதவர் சூழ தரையில் அமர்ந்திருந்த அர்ஜுனன் தலைக்கு மேல் இருந்த இந்திரபீடத்தை நோக்கிக் கொண்டிருந்தான். இளைய யாதவரும் அரிஷ்டநேமியும் அக்கூட்டத்தில் எங்கோ இருக்கிறார்கள் என்று எண்ணினான். அவர்கள் இருவர் அகத்தையும் மிக அருகே என பார்க்க முடிந்தது.

இருவர் முகமும் ஒரே உணர்வு நிலையில் இருக்குமென்று நினைத்தான். ஒரு கோப்பையிலிருந்து அதேஅளவுள்ள இன்னொரு கோப்பைக்கென அவர்களின் உள்ளங்களை துளிததும்பாமல் குறையாமல் ஊற்றிவிட முடியும். இருமுனைகள். முற்றிலும் ஒன்றை ஒன்று அறிந்தவை. தன்னை அறிவதற்காக மறுமுனையை கூர்ந்து நோக்குபவை. முற்றிலும் ஒன்றை ஒன்று நிறைப்பவை. சாங்கியம் என்ன சொல்லும்? இரண்டும் இணைகையில் முக்குணங்களும் முழுதமைய முதல்அசைவின்மை நிகழ்கிறதா? அல்லது வைசேடிகம் என்ன சொல்லும்? இன்மையை முழுதும் நிரப்புவது இன்மைதானா? பொருண்மை எதுவும் பிறிதொன்றாக ஆக முடியாது. பொருண்மை என்பதே தனித்தன்மைதான். இன்மையின் விசேஷமென்பது இன்மையே. இன்மை என்பது எந்நிலையிலும் நிகரானது.

புன்னகையுடன் துவராடை அணிந்து தத்துவத்தில் இறங்கிவிட்டோமா என்று எண்ணிக்கொண்டான். அருகிருந்த யாதவனிடம் மெல்ல “இங்கு நிறைந்துநிற்கும் அமைதியை இப்பாறைகள் யுக யுகங்களாக பேணி வந்தன அல்லவா?” என்றான். திகைத்த நோக்குடன் அவன் “ஆம்” என்று சொல்லி விழிகளை திருப்பிக் கொண்டான். பின்பு அறியாமல் தன் உடலை சற்று அசைத்து விலகினான். அர்ஜுனன் சிரிப்பை அடக்கிக்கொண்டு மறுபக்கம் திரும்ப அவனை நோக்கிக் கொண்டிருந்த யாதவன் ஒருவன் பதறி விழி திருப்பினான். “நாம் பாறைகளைப் போல் ஆக முடியாது யாதவரே?” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம்” என்றான் அவன் நிலையழிந்த விழிகளுடன். “ஏனென்றால் பாறைகள் எண்ணங்களால் தங்கள் உடலை அசைக்கும் வலுவற்றவை.”

அவன் உடைந்த குரலில் “உண்மைதான்” என்றான். “மானுடர் தங்கள் உள்ளங்களை உருமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே உருமாறிக்கொண்டே இருக்கிறார்கள். நீர்த்துளிகளைப் போல. நீர்த்துளியை அவ்வடிவில் நிறுத்துவது அதன் உள்விழைவு அல்லவா?’’ அவன் “ஆம்” என்றான். அருகே இருந்தவர்களை பதற்றமாக நோக்கினான். “முள் முனையில் நின்றிருக்கும் நீர்த்துளியே அவர்கள் உள்ளம்” என்றான். “ஆம்” என்ற பின் யாதவன் தலைகுனிந்து கண்களை மூடிக்கொண்டான். அர்ஜுனன் இருளுக்குள் சிரித்துக் கொண்டான். யாதவனின் உடல் பூனையை கட்டிப்போட்ட பை போல அசைந்துகொண்டிருந்தது.

இந்திரபீடத்தைச் சூழ்ந்து அமர்ந்திருந்த அருகநெறியினரில் எவரோ குழலிசைத்து பாடத்தொடங்கினார்கள். அவர்களின் தொன்மையான குலப்பாடல் .ஒவ்வொருவருக்கும் அந்த இசையொழுங்கும் வரிகளும் தெரிந்திருந்தன.. எனவே மிக இயல்பாக ஆணும் பெண்ணும் அதில் இணைந்து கொண்டனர். ஒற்றைக்குரலென. காட்டை நிறைக்கும் சீவிடுகளின் பாடல் போல அவ்விசை இந்திரபீடத்தை சூழ்ந்து ஒலிக்கத் தொடங்கியது. ‘நாங்கள்’ என்று சொல்வது போல் இருந்தது. ‘நாங்கள்! நாங்கள்!’ என்று அலையடித்தது. ‘இங்குளோம்! இங்குளோம்!’ என்று தன்னை உணர்ந்து ‘இவையனைத்தும்! இவையனைத்தும்!’ என சூழலை நோக்கி பரவத்தொடங்கியது. ‘எங்கு? எங்கு?’ என அதன் வினா எழுந்தது. ‘எவ்வண்ணம்? எவ்வண்ணம்?’ என்று அது வியந்தது. பின்பு ‘வருக! வருக!’ என்று அழைத்தது.

அவ்வழைப்பு மன்றாட்டாகியது. அம்மன்றாட்டு நீண்டு இருளென்றாகிய வானில் நெளிந்து துடித்தது. மலை விளிம்பில் பற்றிக் கொண்டிருப்பவனின் கைதுழாவல் போல. நீரில் மூழ்குபவனின் இறுதி கையசைப்பு போல. ஒரு சொல்கூட விளங்காமலே அப்பாடலை அத்தனை தெளிவாக உள்வாங்க முடிந்தது. அத்தனை பெருங்கூட்டம் ஏற்றுப்பாடுவதென்றால் பாடல் மிக எளிமையானதாக இருக்கவேண்டும். மிகக்குறைவான சொற்களே சொல்லப்பட்டிருக்க வேண்டும். தனி மனிதர்கள் கற்பவை விரிவானவை. சிக்கலானவை. புரிந்துகொள்ள கடினமானவை. பெருந்திரளான மனிதர்களை நோக்கி அறிவு விரிவடையுந்தோறும் அது எளிமையாகிறது. ஆனால் பெருவிசையும் பொருட்செறிவும் கொண்டதாக மாறுகிறது.

அர்ஜுனன் அந்த மலைஉச்சியின் பெருவிளக்கன்றி வேறெதையும் பார்க்க முடியாதிருப்பதை எண்ணிக் கொண்டான். இருளில் ஒற்றைவிளக்கு மட்டுமே தெரியும்போது விழிக்கு வேறு வழியே இல்லை. சூழ்ந்திருந்த விண்மீன்களின் நடுவே செந்நிறமான தீற்றல். மானுடர் அமைத்த விண்மீன். தூண்டிலில் சிறு புழு. விண்ணில் ஏதோ ஒன்று பசித்த வாய்திறந்து அருகணையலாம். பாடல் ஓய்ந்தது. அதன் செவிமீட்டலும் பின் நினைவுமீட்டலும் எஞ்சியிருந்தன. பின்னர் மெல்ல அவையும் அடங்கின. காலம் என்ற உணர்வு மட்டுமே ஒவ்வொருவருள்ளும் எஞ்சியிருந்தது.

இங்கிருக்கிறோம் என்ற உணர்வாக இருந்தது காலம். இன்னும் எத்தனை நேரம் என்று பதற்றமாக தன்னை உருமாற்றிக் கொண்டது. நெடுநேரம் அங்கிருக்கிறோமோ என்னும் சலிப்பாக தன்னை விரித்துக் கொண்டது. தெரிந்த ஒவ்வொன்றாக அள்ளி அப்பெரும் சலிப்பை நிரப்ப முயன்றது. அத்தனை எண்ணங்களை அள்ளிப் போட்டாலும் அப்பெரும் இன்மையின் ஒரு பகுதிகூட நிரம்பாததைக் கண்டு சலித்து மீண்டும் எழ விரும்பியது. அவ்வெண்ணங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக ஒருகணத்துளி போல மாற அத்தகைய கணங்களால் ஆன முடிவிலி ஒன்று கண்முன் இருப்பதைக் கண்டு அஞ்சி நின்றது.

காலம் சூழ்ந்திருந்த இருட்டாக விண்மீன் வெளியாக அதன் நடுவே எழுந்து நின்றிருந்த சிவந்த சுடராக இருந்தது. சென்ற நினைவுகளாக நொறுக்கி படிமத்துளிகளாகி பொருளின்றி கலந்து அருவி என அகத்துள் எங்கோ பெய்து கொண்டிருந்தது. வானில் அந்த தனிச்சுடர் மெல்ல தவித்தாடிக் கொண்டிருப்பதை அர்ஜுனன் நோக்கி அமர்ந்திருந்தான். எங்கிருந்தோ காற்று ஒன்று கடந்துசெல்ல அது சரிந்து கீழ்நோக்கி இழுபட்டு வளைந்து மேலெழுந்து துடித்தது. மீண்டும் தழைந்து கீழ் நோக்கி சுழன்று எழுந்தது. கரிய பசுவின் நாக்கு போல. பிறிதொரு காற்று அதை பிடுங்கி பறக்கவிட்டது. வானில் அலையடித்து இழுபட்டு பின்பு அறுபட்டதுபோல அணைந்தது.

சூழ்ந்திருந்த அனைவரிலுமிருந்தும் ஒற்றைக் குரலென ஓர் வியப்பொலி எழுந்தது. பெரியதோர் உறுமல் போல எழுந்து ரீங்காரமாக மாறி மறைந்தபின் மௌனமாக ஓசையின்மையாக ஆகி இருளுக்குள் எஞ்சி விம்மி அணைந்தது. முற்றிருளுக்குள் பெருந்திரளெனப் பெருகிய ஒற்றை உடலாக ஒவ்வொருவரும் மாறுவது போல் இருந்தது. தசைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முன்னும் பின்னும் என நெசவாகி ஒரு படலமாயின. சுருக்கி இறுக்கி ஒரு துளியாயிற்று அது. அங்கே இருந்தது ஒரு மானுடம்.

இந்திரபீடத்தின் மேல் செந்நிறமான விண்மீன் ஒன்று வந்து அமைவதை அர்ஜுனன் கண்டான். அது விழிமயக்கா என்று எண்ணியபோது அக்கூட்டத்திலிருந்து தான் தனித்திருப்பதை அறிந்தான். குஜ்ஜர் என யாதவர் என ஆகாத ஒருவன். எங்கோ அரிஷ்டநேமியும் இளைய யாதவரும் அவ்வண்ணம் விலகி தனித்திருக்கக்கூடும்.

இந்திரபீடத்தின் நேர் மேலாக விண்ணில் அதை கூர்ந்து நோக்குவதுபோல நின்று நடுங்கியது. இந்திரபீடத்தை ஒரு மெல்லிய சரடால் கட்டி வான் நோக்கி தூக்க முயல்வதுபோல நகர்ந்தது. அப்போது மிகத்தொலைவிலென ஓர் இசையை அவன் கேட்டான். அவன் அறிந்திராத இசைக்கருவி. அது குழலா யாழா என்று அறிய முடியாதது. ஒற்றைச் சொல். ஆணையென கொஞ்சலென அருளென அது நின்றது. தான் அதைக் கேட்டதையே அது அவிந்தபின்னர்தான் அவன் அறிந்தான். வெறும் உளமயக்கா என அகம் வியந்தது. இல்லை இல்லை என நினைவு எழுந்து கூவியது.

சில கணங்களுக்குப் பின் அங்கிருந்த அனைவரும் ஒற்றைக் குரலில் வாழ்த்தியபடி விழித்தெழுந்தனர். ரைவத மலை குரல் எடுத்துக் கூவியது. “காற்றை ஏந்தியவன் புகழ் வாழ்க! குஜ்ஜர் குலத்தலைவர் புகழ் வாழ்க! ரைவதகர் புகழ் என்றென்றும் வாழ்க!” மலையின் குரலை முதல்முறையாக கேட்கிறோமென அர்ஜுனன் எண்ணிக் கொண்டான். வான்சரிவில் முகில்களிலிருந்து முழுநிலவு எழத்தொடங்கியது.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

பிராமணர்களின் தமிழ்

$
0
0

1

அன்புள்ள ஜெயமோகன் ஐயா,

ஒரு வருடத்திற்கு முன்பு வரை உங்கள் பெயரைக் கூட கேட்டதில்லை. நான் முதன்முதலில் படித்த உங்கள் கட்டுரை, பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பத்ரி சேஷாத்ரி எழுதிய கட்டுரையில் இருக்கும் உண்மை பற்றி நீங்கள் அலசிய கட்டுரை.

நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் நான்கு வகை எழுத்தாளர்களில், சில காலம் முன்பு வரை முதல் வகை எழுத்தாளர்கள் எழுதிய படைப்புக்களையும், ராமகிருஷ்ணா மடத்தின் பதிப்புக்களில் சிலவற்றையும் தவிர வேறு எதையும் படித்ததில்லை. இப்பொழுது மற்ற பிரிவு படைப்புக்களையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.

Facebook இல் யாரோ ஒருவர் முன்பு கூறிய பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை குறித்த உங்கள் கட்டுரையை பகிர்ந்திருந்தார். அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது முதல் நீங்கள் எழுதிய சில கட்டுரைகளை அவ்வப்போது உங்கள் தளத்தில் படித்து வருகிறேன். தாமதிக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்…

Quora.com என்ற கேள்வி பதில் தளத்தில் ஒருவர் இவ்வாறு ஒரு கேள்வி கேட்கிறார் —
Why are Tamil Brahmins using an unconventional Tamil dialect?

இதற்கு நானும் என் சிற்றறிவிற்கு எட்டியவாறு ஒரு பதில் அளித்திருந்தேன். பலரும் பதில் அளித்திருந்தார்கள். ஆனால் எந்த பதிலும் உண்மைக்கு அருகில் கூட வரவில்லை. பலரும் கேள்வி கேட்டவர் கேட்ட தொனிக்கே (பிராமணர்களை தாக்கும் தொனிக்கே) பதில் அளித்ததாகத் தோன்றியது, என்னை உட்பட. அந்தக் கேள்விக்கு உண்மையான பதில் யாரிடமிருந்தாவது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன், இன்னும் வரவில்லை. இணையத்தில் தேடியும் இங்கும் அங்குமாக விடை சிதறிக்கிடந்தது. எதை ஏற்பது எதை புறக்கணிப்பது என்று தெரியவில்லை. நான் ஒரு பிராமணன், சற்று உணர்சிவசப்படுபவனே. இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி உண்மையை அறியும் ஆர்வம் இருப்பதால் அந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அன்புடன்,
பாலாஜி ராமகிருஷ்ணன்.

அன்புள்ள பாலாஜி

கடல் சினிமா வெளிவந்தபோது பல பிராமணர்கள் அந்த வட்டார வழக்கு ‘அன்னியமாக’ இருப்பதாக எழுதியிருந்தனர். படம் முழுக்க இம்மாதிரி அன்னியமாகப்பேசுவது தேவையா என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். இவ்வகையான அன்னியமான மொழியை கடற்கரை மக்கள் பேசுவதற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தனர். ஆக, ஒருவருக்கு அவரது சொந்த வழக்கு இயல்பானது,மற்றவை வேடிக்கையானவை, unusual ஆனவை, அவ்வளவுதான்

குமரிப்பகுதியில் பேசப்படும் மொழி தமிழ்நாட்டின் பிறபகுதியினருக்கு வேடிக்கையான அயல்மொழி. குமரிமாவட்டத்தினருக்கு கோவை மாவட்டத்தினர் பேசுவது என்ன என்றே தெரியாது. நாம் அனைவருக்குமே மலைமக்கள் பேசும் தமிழ் ஒரு சொல் கூட சாதாரணமாகப்புரியாது. நெல்லைமாவட்ட இஸ்லாமியத் தமிழுக்கு தனி அகராதியே தேவைப்படும்.

தமிழகத்தில் தனியான மொழிவழக்கைப்பேசுபவர்கள் பிராமணர்கள் மட்டும் அல்ல என்று கொஞ்சமாவது பயணம்செய்தவர்கள், மக்களைச் சந்தித்தவர்கள் அறிவார்கள். எல்லா சாதியினரும், எல்லா வட்டாரத்தினரும் தங்களுக்கென தனி மொழிவழக்கைக் கொண்டிருக்கிறார்கள். அவை அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டவை அல்ல. எவரும் மொழியை அவ்வாறு உருவாக்கிக்கொள்ள முடியாது. அவை நீண்டகால புழக்கத்தினூடாக மெல்லமெல்ல உருவாகி வருபவை. கால்ந்தோறும் மாறிக்கொண்டிருக்கக்கூடியவை.

என்ன காரணம்? இம்மாதிரி எந்த ஒரு வினா எழும்போதும் அதற்கு நம் வரலாற்றிலும் பண்பாட்டுப்புலத்திலும் சென்று விடைதேடவேண்டும். அதற்குரிய எளியவாசிப்புகூட இல்லாதவர்கள்தான் இங்கு அதிகம். ஆகவேதான் வெற்று அரட்டையாக கருத்துக்களையும் விமர்சனங்களையும் அள்ளிவைக்கிறார்கள். ஒவ்வொரு தளத்திலும் இந்தப்பொதுப்புத்திப்புரிதல்களை எதிர்கொண்டுதான் எதையும் பேசவேண்டியிருக்கிறது. அதிலும் இணையமும் ஃபெஸ்புக்கும் வந்தபின்னர் எந்த அசட்டுத்தனமும் அச்சிலேறி பரவி நிலைக்கும் அபாயம் மிகுந்திருக்கிறது. மிக எளிமையான இந்த விஷயங்களைக்கூட விவாதித்துப்பேசவேண்டிய கட்டாயம் உருவாகிறது.

செய்தித்தொடர்பு, போக்குவரத்து ஆகியவற்றின் உருவான பெரும்வளர்ச்சியே நவீன காலகட்டத்தை உருவாக்கியது என நாம் அறிவோம். பொதுக்கல்வி அதற்குப்பின் வந்தது. பொது அரசியல் அடுத்து. இவற்றின் மூலம் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றைச்சமூகமாக ஆனார்கள். இன்று நாமறியும் தமிழ்ச்சமூகம், இந்தியச்சமூகம் இவ்வாறு நவீனகாலகட்டத்தில் கட்டமைக்கபட்டது. இன்றுள்ள பொதுவான பேச்சுமொழி, பொதுவான அடையாளங்கள், பொதுமனநிலைகள் அனைத்தும் நவீனகாலகட்டம் உருவானபின்னர் மெல்லமெல்ல உருவாகித்திரண்டு வந்தவை மட்டுமே.

நவீன காலகட்டத்திற்கு முந்தைய சமூகத்தை வேளாண்மைச்சமூகம் என்கிறோம். அன்று இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சமூகம் இருக்கவில்லை. பல தனி அலகுகளாக சமூகத்தைப்பிரித்து ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட சமூகம் அது. பொதுவாக நிலவுடைமைச்சமூகம் [Feudalism] என்று அதைச் சொல்வது வழக்கம்

அன்றைய சமூகத்தில் ஒவ்வொரு இனக்குழுவும் மதக்குழுவும் தங்களுக்குள் உரையாடிக்கொண்டு தங்கள் சொந்த சமூகவிதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகளின்படி வாழ்ந்தன. தொழில் சார்ந்த தேவைகளுக்காக மட்டுமே பிறசமூகங்களுடன் உரையாடின. குடியிருப்புகள் கூட தனித்தனியாகவே அமைந்திருந்தன. ஆகவே ஒவ்வொரு குழுவும் தனக்கென தனி மொழிவழக்கை அடைந்தது.

இதில் சில சமூகக்குழுக்கள் மிககுறைவான அளவுக்கு பிற சமூகக்குழுக்களுடன் தொடர்புடையனவாக இருந்தன. அவர்களின் மொழிவழக்கு பெரிய அளவில் வேறுபட்டிருந்தது. இவ்வாறு தனிமைப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, நிலம். மீனவர்கள் வாழும் கடல்சார் நிலம் பிற நிலங்களில் இருந்து முற்றிலும் தனித்தது. ஆகவே அவர்களின் மொழி வேறுபட்டிருந்தது.

இன்னொன்று மதம். தமிழ் இஸ்லாமியரின் மொழிவழக்கு மிகவேறுபட்டிருப்பதற்குக் காரணம் இதுதான்.[நெல்லைப்பகுதியில் இஸ்லாமியரின் தனிவழக்கை நையாண்டி செய்யும் நூற்றுக்கணகான வேடிக்கைக்கதைகள் புழக்கத்திலுள்ளன] மூன்றாவதாக, ஆசாரங்கள். பிராமணர் தங்களுக்கென தனி ஆசாரங்கள் கொண்டவர்கள். ஆகவே அவர்கள் மேலும் தனித்து வாழ்ந்தனர். கடைசியாகத் தொழில். ஐம்பதாண்டுகளுக்கு முன் ஆசாரிகள் போன்ற சிறிய தொழிற்குழுக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது பிறருக்கு புரிவதே கடினம் என்னும் நிலை இருந்தது

இந்த தனிவழக்குகளில் அக்குழுவின் ஆசாரங்கள் சார்ந்த தனிச்சொற்கள் இருக்கும். அவர்களின் மதம் சார்ந்த கலைச்சொற்கள் இருக்கும். தொழில்சார்ந்த குழூக்குறிகளும் குறியீட்டுச் சொற்களும் இருக்கும். அவை அந்த வழக்கை பிறருக்கு அயலானவையாக ஆக்குகின்றன

தமிழகத்தில் ஆரம்பத்திலேயே நவீனக் கல்விகற்றவர்கள் பிராமணர்கள். ஆகவே நவீன எழுத்துக்கும் அவர்களே முதலில் வந்தனர். ஆகவே ஆரம்பகால எழுத்துக்கள் அவர்களின் பேச்சுமொழியை அதிகமாகப் பதிவுசெய்வனவாக இருந்தன. ஆரம்பகால சினிமா, நாடகங்கள் அனைத்திலும் அவையே இடம்பெற்றிருந்தனஆகவே பிறர் அதிகமாக அறிந்த அயலான மொழிவழக்கு பிராமணவழக்குதான். ஆகவேதான் பெரும்பாலானவர்கள் அவர்கள் மட்டும் மாறுபட்ட மொழியை பேசுவதாக நினைக்கிறார்கள்.

பின்னர் பிற சமூகக்குழுக்களின் தனிவழக்குகளும் இலக்கியத்தில் பதிவாகத் தொடங்கின. புதுமைப்பித்தனே பலவகையான மொழிவழக்குகளை இலக்கியத்தில் கையாண்டிருக்கிறார். தோப்பில் முகமது மீரானும் நாஞ்சில்நாடனும் குமாரசெல்வாவும் நானும் எழுதுவது குமரிமாவட்ட வட்டார வழக்கு. ஆனால் நான்கும் நான்கு மொழிவழக்குகள் என்பதை வாசகர் காணமுடியும். காடு நாவலில் மலைமக்களின் மொழியென முற்றிலும் மாறுபட்ட ஒரு மொழிவழக்கு இருப்பதைக்காணலாம்

சென்றகாலத்தில் நாம் இப்போது பேசும் , எழுதும் பொதுமொழி என ஒன்று இருக்கவில்லை என்பதைக் காணலாம். அன்றிருந்தது செய்யுள்நடையும் பல்வேறுவகையான பேச்சுவழக்குகளும்தான். தமிழில் உரைநடை உருவாகி வந்தது 1850 களில் நிகழ்ந்த ஒரு வளர்ச்சி. ஆரம்பகட்டத்தில் எழுதப்பட்ட சைவநூல்கள் செய்யுள்நடையையே உரைநடையாக எழுதின. அதேசமயம் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு வட்டாரவழக்கையே உரைநடையாக எழுதியிருப்பதைக் காணலாம்

இவ்விருவகை நடைகளும் கலந்து மெல்லமெல்ல உருவாகி வந்ததே நம்முடைய பொதுமொழி. அது முதலில் அச்சில்தான் வந்தது. நாளிதழ்கள் வழியாகவே அது பரவியது. அதன்பின்னர் மேடைப்பேச்சுக்கள், நாடகங்கள் வழியாக பரவலாயிற்று.

1900 ங்களில் இந்தியாவில் அரசியலியக்கங்கள் பெரும் அலையாக எழுந்தபோதுதான் இங்கு பொது ஊடகங்கள் பெரிதாக வளர்ந்தன. மக்கள் அச்சிட்ட மொழியை வாசிக்கத்தொடங்கினர். மேடைப்பேச்சைக் கேட்க ஆரம்பித்தனர். ஒரே இடத்தில் கூடவும் பிறருடன் உறவாடவும் தொடங்கினர். தங்கள் சிறிய வட்டங்களுக்கு வெளியே வந்து இன்னொரு மொழியை அறியத்தொடங்கினர். அவ்வாறுதான் பொதுவான பேச்சுமொழி மிகமெல்ல உருவாகத்தொடங்கியது

அந்தப்பொதுமொழியை உருவாக்குவதில் பள்ளிக்கூடங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பொதுக்கல்வி என்பது இந்தியாவில் 1900ங்களில்தான் பரவலாக வரத்தொடங்கியது. பள்ளிகள் அனைவருக்குமான மொழியை கட்டாயமாக்கின. நான் சிறுவனாக இருந்தபோது பிள்ளைகளை ஒரு பொதுமொழி பேசுவதற்குப் பயிற்றுவதை ஆசிரியர்கள் முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தனர். ‘அவிய, இவிய’ என்று பேசியதற்காகவே நான் அடிபட்டிருக்கிறேன்.

இன்றுகூட பொதுமொழியின் உருவாக்கத்தில் கல்விக்கூடங்கள் பெரும் பங்காற்றுகின்றன. என் மகள் படிக்கும் பள்ளியில் ஒருமுறை இதைக் கவனித்தேன். கடற்கரை மக்களின் பிள்ளைகள் அங்கு அதிகம். கடற்கரையில் மிக நல்ல பள்ளிகள் இருந்தாலும் அவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். காரணம் அவர்கள் அந்த வட்டாரவழக்கில் இருந்து பிள்ளைகள் வெளியே வரவேண்டும் என்று விரும்புவதுதான்.

ஆரம்பகாலத்தில் நாடகங்களில் கதைநாயகனும் நாயகியும் மட்டும் பொதுமொழி பேச பிறர் அவரவர் சாதிகளுக்குரிய வட்டார வழக்கைப் பேசுவது வழக்கமாக இருந்தது. ஏனென்றால் பொதுமொழி என்பது படித்தவர்களுக்குரியதாக இருந்தது அன்று. மேடையிலேயேகூட முக்கியமான விஷயங்களை மட்டும் பொதுமொழியிலும் பிறவற்றை வட்டார வழக்கிலும் பேசினர்

உண்மையில் பொதுவழக்கு இன்றிருப்பதுபோல மையப்போக்காக ஆனது தொலைக்காட்சி வந்தபின்னர்தான். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், கல்லூரிப்படிப்பை முடிப்பது வரை நான் குமரிமாவட்ட, குலசேகரம் வட்டார, நாயர் -வேளாளர்களின் தமிழைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். என்னால் பொதுமொழியில் பத்துநிமிட பேசமுடியாது. பாடங்களை மட்டுமே அச்சுமொழியில் படித்து எழுதுவோம். மேடைப்பேச்சு அந்த பாடப்புத்தக மொழியை ஒப்பிப்பதாக இருக்கும். பேச்சு என்றால் வட்டார வழக்கு மட்டுமே

தொலைக்காட்சி ஒரு பொதுவான பேச்சுமொழியை கட்டமைத்தது. உயர்குடிகளாகிய பிராமணர், வேளாளர், முதலியார் போன்றவர்களின் மொழிவழக்குகளையும் பாடப்புத்தகமொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து அந்த மொழி கட்டமைக்கப்பட்டது. நம் பொதுமொழியில் இந்த அளவுக்கு ஆங்கிலம் இருப்பதற்குக் காரணமே இதுதான். சாதிய, வட்டார அடையாளம் இல்லாத பொதுமொழியை உருவாக்குவதற்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.

இன்று நாம் இந்தப்பொதுமொழியை நோக்கி செல்லத்தொடங்கியிருக்கிறோம். வட்டாரவழக்குகளும் சாதியவழக்குகளும் மங்கலடைந்தபடியே வருகின்றன. என் இளமையில் நான் பேசிய குமரிமாவட்ட வட்டார வழக்குகளை இன்று முதியவர்கள், அதிலும் கிழவிகள், மட்டுமே பேசுகிறார்கள். கடற்கரை வழக்கும் முஸ்லீம் வழக்கும்கூட மாறிவிட்டன.

ஆனாலும் சில குலக்குழுக் கூடுகைகளில் அந்த தனிவழக்கை வலுக்கட்டாயமாகப் பேசுகிறார்கள். அது ஒரு சொந்த உணர்வை அளிக்கிறது. அவ்வளவுதான். நான் என் அண்ணாவிடம் குமரிமாவட்டத்துக்கே உரிய விசித்திரமான ஒரு மலையாளத்தில்தான் பேசுவேன். வற்கீஸிடம் விளவங்கோடு தமிழில்.

சுந்தர ராமசாமி பிராமண வழக்கைத்தான் பேசுவார். ஆனால் அது குமரிமாவட்டத்திற்குரிய பிராமணத்தமிழ். அது அவரது குடும்ப வளர்ப்பிலிருந்து அவர் பெற்றது. [ஒருமுறை திராவிட இயக்கத்தைச்சேர்ந்த ஓவியா என்பவர் அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்து சாலையில் அதைப்பற்றி சத்தம்போட்டு விவாதித்ததை நினைவுகூர்கிறேன். அதற்கு லட்சுமி மணிவண்ணன் நல்ல நாடார்த்தமிழில் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்]

சுந்தர ராமசாமி இலக்கியம் பேச ஒரு சீரான அச்சுமொழியை கையாள்வார். பொது உரையாடலுக்கு பொதுவான பேச்சுமொழிக்கு கொஞ்சம் சிரமப்பட்டு வருவார். ஆங்கிலம் அதிகமாக கலந்திருக்கும், காரணம் அவர் பொதுமொழிக்கு மிகப்பிந்தி வந்த தலைமுறை

சுந்தர ராமசாமியும் நானும் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் இருந்த சதங்கை ஆசிரியர் வனமாலிகையைப் பார்க்கச் சென்றோம். ‘இப்பம் கொள்ளாமா?’ என்று ராமசாமி கேட்டார். முகம் மலர்ந்த வனமாலிகை “ஓம்,கொறவுண்டு” என்றார்

திரும்பும்போது நான் சுந்தர ராமசாமியிடம் அவரது மொழி பற்றி கேட்டேன். “அது கன்யாகுமரி பாஷை. நான் அதில இப்ப வழக்கமா பேசுறதில்லை. ஆனா நானும் அவரும் சந்திச்சுக்கிட்டது அம்பது வருஷம் முன்னாடி. அப்ப இந்த பாஷையிலதான் பேசிகிட்டோம். அந்த பாஷை எங்கள கிட்டக்க கொண்டு வந்திடுது” என்றார்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

இருபுரிச்சாலை

$
0
0

1

தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட வேதாந்தம் என்ற சொல் பெரும்பாலான சாதாரணக் காதுகளுக்கு எதிர்ம்றையாகவே ஒலிப்பதைக் கவனித்திருக்கிரேன். அதற்குக் காரணம் ‘வரட்டுவேதாந்தம்’ என்ற சொல்லாட்சி. வேதாந்தியான நாராயணகுருவின் மாணவரும் வேதாந்தியுமான குமாரன் ஆசான் கூட வரட்டு வேதாந்தம் என்ற சொல்லாட்சியை கையாண்டிருக்கிறார். நடைமுறைக்குப் பயன்படாத உயர்தத்துவங்களை தர்க்கபூர்வமாக பேசுவது என்று இச்சொல்லுக்குப் பொருள்.

இந்தச் சொல்லாட்சி எப்போது உருவாகியிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். இந்திய தேசம் அதன் அனைத்து அறிவார்ந்த மரபுகளும் அறுபட்டு அரசியலும் பண்பாடும் சிதறி கஞ்சிக்குப் பறந்த ஒரு நீண்ட காலகட்டம் உண்டு. அன்று, பட்டினியால் பரிதவித்தலைந்த மக்களுக்கு இந்திய ஞானமரபின் தத்துவ உச்சங்கள் எப்படி பொருள்பட்டிருக்கும்? வரட்டு வேதாந்தம் என்பதில் உள்ள கசப்பு அப்போது உருவானதாகவே இருக்க வேண்டும்.

வேதாந்தம் நம் ஞான மரபில் ஆழமாக வேரூன்றியதாகையால் அது அத்தனை எளிதாக நம் சூழலில் இருந்து சென்றிருக்காது. பட்டினி கிடந்தும் வேதாந்தம் பேசியவர்கள் கண்டிப்பாக இருந்திருப்பார்கள். அவர்கள் இந்த வசைச்சொல்லால் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்டு மறைந்திருப்பார்கள். இன்று வேதாந்தம் என்றால் என்ன என்ற எளிய அறிமுகம் உடைய மதப்பேச்சாளர்களை அல்லது மதச்சிந்தனையாளர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். வேதாந்தமே இந்து ஞானமரபின் உச்சம் என்ற போதிலும்கூட !

இன்று தென்னிந்தியாவில் அத்வைத வேதாந்தத்துக்கு என்று இரு பெரும் மடங்கள் உள்ளன.  சிருங்கேரி சங்கர மடம் சங்கரரால் நிறுவபப்ட்டதென்று சொல்லப்படுகிறது. காஞ்சி சங்கர மடம் சிருங்கேரியின் கிளையாக உருவானது. வைஷ்ணவ வேதாந்தம் பேசும் இரு பெரும் மரபுகள் உள்ளன. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் ராமானுஜ மடங்கள். கர்நாடகத்தில் மாத்வ மடங்கள்.

ஆனால் நானறிந்து எங்குமே வேதாந்தம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை. நம்முடைய பிரபலமான சைவ, வைணவ ஆசாரியர்களையும் பேச்சாளர்களையும் பார்க்கையில் அவர்கள் பக்தியை மட்டுமே பேசுகிறார்கள் என்றுதான் புரிந்துகொள்கிறேன். மாபெரும் வேதாந்த நூலான கீதையைக்கூட சரணாகதியை மட்டுமே முன்வைக்கும் எளிய பக்திநூலாக விளக்கும் போக்குதான் நம்மிடையே பிரபலமாக இருக்கிறது.

வரட்டு வேதாந்தம் என்ற சொல்லால் இந்து ஞான மரபின் அறிவார்ந்த பகுதி ஒதுக்கப்பட்டபின்னர் எஞ்சியது இந்த லௌகீக பக்தி மட்டுமே. இன்று பேசப்படும் பக்தியின் கீழ்நிலை என்பது சடங்குகள் வழிபாடுகள் மூலம் கடவுளிடம் கோரிக்கை விடுப்பது. உச்சநிலை என்பது லௌகீகமான அனைத்தையும் உதறிவிட்டு கடவுளைச் சரண் அடைவது. இந்த இரு எல்லைக்குள் இன்று இந்து ஞானமரபு முழுமையாகவே நிறுத்தப்படுகிறது.

ஆனால் பக்தி என்பதேகூட இந்து மரபில் ஒரு முதல்படி மட்டுமே. பக்திக்கும் அப்பால் செல்லும் ஞான வழியையும் தியான வழியையும்தான் இந்து மரபு விரிவாகப்பேசியிருக்கிறது. வேதங்களையே கர்மகாண்டம் ஞான காண்டம் எனப்பிரித்து ஞானத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மேலே சென்றது இந்து மரபு. வேதங்களின் இறுதியே வேதாந்தம்.

வேதாந்தம் இந்து சிந்தனையின் உச்சம். வேத அந்தம்  என்ற சொல்லாட்சியே அதைத்தான் குறிக்கிறது. இந்து மெய்ஞானமரபின் தத்துவார்தமான சாரமாகச் சொல்லப்படும் முத்தத்துவம் [பிரஸ்தானத் திரயம்] வேதாந்தத்தை விவாதிக்கும் நூல்களே. கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம். வேதாந்தம்தான் பௌத்த சிந்தனைகளை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்ற மூல விசை. அத்வைதம் விசிஷ்டாத்வைதம் துவைதம் போன்ற பிற்கால வேதாந்த மரபுகளே இந்து மரபை மீட்டெடுத்த சக்திகள்.

இந்துமரபில் பக்திக்கும் ஞானத்துக்கும், சடங்குகளுக்கும் தத்துவத்துக்கும் இடையேயான முரணியக்கம் என்றும் உள்ளது. ஒன்று இன்னொன்றுக்கு எதிரானது என்று முதல் தோற்றத்தில் படும். ஒன்று இன்னொன்றை உருவாக்கும் முரணியக்கமே நடந்துகொண்டிருக்கிறதென்பது ஓரளவு அவதானித்தாலே தெரியவரும்.

கிபி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் பக்தி இயக்கம் உருவாக ஆரம்பித்தது. பௌத்த சமண மதங்களின் ஆதிக்கத்தில் இருந்து இந்துமரபு வெளிவந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த காலம் இது. பக்தி இயக்கமே அந்த மாற்றத்தை நிகழ்த்தியது. ஆனால் கூடவே இக்காலகட்டத்தில் உருவான பிற்கால வேதாந்த மரபுகளும் அதில் பங்களிப்பாற்றின. வேதாந்தமானது பௌத்த மெய்யியலை உள்ளிழுத்துக்கொண்டு அடைந்த அடுத்த கட்ட நகர்வு என பிற்கால வேதாந்தங்களைச் சொல்லலாம்.

ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ஒருபக்கம் இந்தியாவில் உள்ள பலநூறு நாட்டார்வழிபாட்டு மரபுகளையும் சடங்குகளையும் ஏன் சிறுதெய்வங்களையும் உள்ளிழுந்த்துக்கொண்டு சைவ வைணவ மதங்கள் பேருவம் கொண்டெழுந்தன. பக்திமுறை அம்மதங்களை நிறுவும் அடித்தளமாக அமைந்தது. இதே காலகட்டத்தில் ஏராளமான பிற்கால வேதாந்தமரபுகளும் உருவாகி உயர்தத்துவதளத்தில் பௌத்தத்தை எதிர்கொண்டன.

கறாராக நோக்கினால் இந்த இரு போக்குகளும் ஒன்றை ஒன்று மறுப்பவை. ஒரு வேதாந்தியால் பக்தியை ஏற்க முடியாது. ஒரு பக்தனுக்கு அகம்பிரம்மாஸ்மி என்ற வரி இறைநிந்தனை அன்றி வேறல்ல. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு அபாரமான முரணியக்கத்தால் இவ்விரு போக்குகளும் ஒன்றை ஒன்று வலுவூட்டும் விதமாகவே செயல்பட்டன.

சைவ வைணவ மதங்களை நோக்கினால் இந்த அற்புதமான முரணியக்கத்தைக் காணலாம். அம்மதங்களின் ஒருநுனியில் பக்தி இயங்கிக்கொண்டிருக்கும். மறுநுனியில் தூய வேதாந்தம் ஒளிவிடும். பக்தி அளிக்கும் விவேகஞானம் ஒருவரை வேதாந்தம் நோக்கி கொண்டுசெல்லும். ஞானம் அளிக்கும் கனிவு ஒருவரை பக்தி நோக்கிக் கொண்டுசெல்லும்.

ஒவ்வொரு பக்தித்தோத்திரத்துக்குள்ளும் வேதாந்தமே பேசப்படும். ஒவ்வொரு வேதாந்த ஞானமும் பக்தியை ஒரு வழிமுறையாக அங்கீகரிப்பதாகவே இருக்கும். சமகாலம் வரை  இந்த முரணியக்கத்தைக் காணலாம். ராமகிருஷ்ணபரமஹம்சர் ஒரு மாபெரும் பக்தர். உருவ வழிபாடு செய்தவர். வேதாந்தியும்கூட. அவரது முதல் மாணவரான விவேகான்ந்தர் தூய வேதாந்தி. ஆனால் பக்தியை ஏற்றுக்கொண்டவர்.

அதேபோலத்தான் நாராயணகுருவும். ‘அறிவில் அறிவாய் அமர்ந்திருத்தலை’ முக்தி என்று சொல்லும் நாராயணகுரு ‘ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்’ என ஞானவழியைச் சொன்ன நாராயணகுரு சாரதா அஷ்டகமும் காளி நாடகமும் சுப்ரமணிய ஸ்துதியும் எழுதினார்.

அந்த முரணியக்கத்துக்குச் சிறந்த உதாரணம் அவரது பெரும்புகழ்பெற்ற தெய்வ தசகம் என்ற பத்து செய்யுட்கள். தன்னை வந்தடைந்த தன் மக்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப குரு எழுதிக்கொடுத்த ‘தெய்வ தசகம்’ என்ற பிரார்த்தனை ஒன்றும் பல லட்சம்பேரால் ஒவ்வொருநாளும் வீடுகளில் பாடப்படுகிறது. ‘தெய்வமே காத்துகொள்க எங்களை’ என்றாரம்பிக்கும் அந்த பிரார்த்தனை அதன் இறுதியில் ‘அறிவும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாகும்’ நிலையையே வரமெனக் கேட்கிறது. பக்தியின் நுனி வேதாந்தமாக நிற்கிறது!

பக்தி இயக்கத்தின் ஆகச்சிறந்த நூல்களில் எல்லாமே இந்த முரணியக்கத்தைக் காணலாம். வேதாந்தம் பக்தியை தன் ஒளிர்சிம்மாசனமாக ஆக்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறது. நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் உள்ள இந்த கம்பராமாயணப்பாடல் என் காதில் விழுந்தது. பக்தி இயக்கத்தின் முதல் சிற்பிகளில் ஒருவரான கம்பன் எழுதும் வரி இது…

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின் அன்றே ஆம்
ஆமே என்னின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

[ஒன்று என்றால் ஒன்றுதான். பல என்றால் பல. அல்ல என்றால் அல்ல. ஆம் என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. உண்டு என்றால் உண்டு. இவற்றில் எது நலம் பயக்குமோ அதை நம்பி நம் வாழ்க்கை செல்கிறது. இதைவிட வேறென்ன வழி மானுடனுக்கு?]

எத்தனை  மகத்தான பன்மைத்தரிசனம்! ‘ஒன்றே, இதுவே, பிறிதெல்லாம் பிழை’ என வாதிட்டு, அதன் விளைவாகச் செல்லுமிடமெல்லாம் பேரழிவை விதைத்த எத்தனையோ வழிகளுடன் ஒப்பிடுகையில் இந்நிலத்தின் கோடானுகோடி மக்கள், தொல்லினங்கள் மீதான வரலாற்றின் பெருங்கருணையே இந்த தரிசனமாக வந்தது என்றே படுகிறது.

பக்திநூல்களில் எல்லாம் இதே வேதாந்த தரிசனம் மீண்டும் மீண்டும் விளங்கிநிற்கிறது.  ‘உருவென அருவென உளதென இலதென அருமறை இறுதியும் அறிவரு நிலையென’ [ உருவமாக அருவமாக உள்ளதாக இல்லாததாக வேத இறுதி அறிந்துரைக்கும் நிலையென] என்று திருவரங்கக் கலம்பகம் சொல்கிறது.

வேதாந்த தரிசனத்தை ஒற்றைவரியில் சொல்லப்போனால் ‘ஒன்றே அனைத்தும், அனைத்தும் அதுவே’ என கூறிவிடலாம்.  ஆனால் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை, திட்டவட்டமான ஒரு வழிபாட்டு முறையை முன்வைக்கும் மதங்களும் வேதாந்தத்தில் சென்று முடிவதைக் காண்கிறோம். அதன் வழியாகத்தான் இந்திய ஞானமரபின் சாராம்சமான சமரசத்தன்மை, அணைத்து உள்ளிழுக்கும் தன்மை உருவாகி வருகிறது. வேதாந்தம் இந்திய பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் அளித்த கொடை அதுவே.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 13, 2009
 

இங்கிருந்து தொடங்குவோம்…

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்

பண்பாட்டை ஏன் சுமக்கவேண்டும்?

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2

 

  • இந்திய சிந்தனை மரபில் குறள் 3 இந்திய சிந்தனை மரபில் குறள் 4
  • இந்திய சிந்தனை மரபில் குறள் 5
  •  

    3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

    2.மறைந்து கிடப்பது என்ன?

    1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

    வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

     

     

  • தொடர்புடைய பதிவுகள்

  • ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53

    $
    0
    0

    பகுதி ஐந்து : தேரோட்டி – 18

    காலைவெயில் ஒளி கொண்டுவிட்ட போதும் வானத்தில் மங்கலாக நிலவு தெரிந்தது. அர்ஜுனன் தரை முழுக்க விண்ணிலிருந்து உதிர்ந்து பரவியது போல கிடந்த யாதவர்களை மிதிக்காது ஒவ்வொருவராக தாண்டி காலெடுத்து வைத்து நடந்தான். இரவு நெடுநேரம் களிவெறியும் கூச்சலுமாக திளைத்து உடல் சோர்ந்து படுக்கும்போது அவர்கள் அங்கு முள்ளும் கல்லும் இல்லாமல் இருப்பதை மட்டுமே பொருட்டென கொண்டிருந்தார்கள். வெயிலில் புழுதியிலும் சருகிலுமாக அவர்கள் கிடந்ததை காணும்போது போர்க்களம் ஒன்றின் அந்தி போல தோன்றியது.

    எச்சில் ஒழுகிய திறந்த வாய்களில் உதடுகளை அதிரவைத்து வெளிவந்த மூச்சொலியும் அவ்வப்போது சிலர் முனகியபடி கைகளை அசைத்ததும் புரண்டு படுத்ததும்தான் உயிருள்ளவர்கள் என்று காட்டியது. அர்ஜுனன் காலால் மிதிபட்ட ஒருவன் “நூறு கன்றுகள்” என்று சொன்னபடி தன் தோளை தட்டிக் கொண்டு மேலும் சுருண்டான்.

    உடல்களால் நிரம்பியிருந்தது ரைவதமலையின் மேலெழுந்து சென்ற கூழாங்கல்பரப்பு. அதன்மேல் வளைந்து சென்ற உருளைக்கல் பாதையில் எவரும் இருக்கவில்லை. வாடிய மலர்களும் மஞ்சள் அரிசியும் கனிகளும் சிதறிய படையல் உணவுகளும் மிதிபட்டு மண்ணுடன் கலந்திருந்தன. அதன் மேல் காலை எழுந்த சிறிய மைனாக்கள் அமர்ந்து இரைதேடிக் கொண்டிருந்தன. தூங்கும் மனிதர்கள் மேல் சிறகடித்துப் பறந்து அவர்கள் உடல்களின் இடையே அமர்ந்து சிறகு ஒதுக்கி சிறுகுரலில் பேசிக்கொண்டன.

    முந்தையநாள் இரவு அங்கு நிகழ்ந்தவை எழுந்து மறைந்த ஒரு கனவு போல் ஆகிவிட்டிருந்தன. அங்கிருந்த அனைவரும் ஒருவரோடொருவர் உடலிணைத்து ஒற்றை ஊன்பரப்பென ஆகி ஒற்றை அகம்கொண்டு கண்ட கனவு. அவன் அந்த இசையை நினைத்துக் கொண்டான். அது முந்தைய நாளிரவு அளித்த உள எழுச்சியை அப்போது எவ்வகையிலும் அளிக்கவில்லை. அந்த இசை எப்படி எழுந்திருக்கக்கூடும் என்று உள்ளம் வினவிக்கொண்டே இருந்தது. அங்கு அதை எழுப்பும் கருவிகள் நிறுவப்பட்டிருக்கலாம். சூதர்களை வைத்து அதை எழுப்பியிருக்கலாம். ஆனால் அத்தனைபேரும் கேட்கும் இசை என்றால் அங்கு பலநூறு சூதர்கள் இருந்தாக வேண்டும். அவர்களை இந்திரபீடத்தின் மொட்டை உச்சி மேல் ஒளித்து வைப்பது இயலாது. இயற்கையாக எழுந்த இசை அது. அங்குள்ள பாறைகளால் காற்று சிதறடிக்கப்பட்டிருக்கலாம். அங்கே ஏதேனும் மலைப் பிளவுகளோ வெடிப்புகளோ இருந்து காற்றை பெருங்குழலிசையாக மாற்றியிருக்கலாம்.

    துயில்நீப்பினால் அவன் உடல் களைப்படையவில்லை. ஆனால் முந்தையநாள் இரவு முழுக்க சித்தத்தில் கொப்பளித்த காட்சியலைகள் சலிப்புறச் செய்திருந்தன. எந்த எண்ணத்தையும் முன்னெடுத்துச் செல்லமுடியாத அளவுக்கு அவை எடையுடன் அழுத்தின. எங்காவது படுத்து நீள்துயிலில் அமிழ்ந்து புதியவனாக விழித்தெழுந்தால் மட்டுமே அவற்றிலிருந்து மீளமுடியும் என்று தோன்றியது. ஆனால் வேட்டை விலங்குகளுக்கு ஆழ்துயில் அளிக்கப்படவில்லை.

    ரைவதமலையின் உச்சியில் இருந்த அருகர் ஆலயத்தின் முற்றம் ஒழிந்து கிடந்தது. புலரிக்கு முன்னரே அதை நன்கு கூட்டியிருந்தார்கள். மூங்கில் துடைப்பத்தின் சீரான வளைகோடுகள் அலையலையென படிந்த மணல்முற்றத்தில் அங்கு நின்ற வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பொன்னிறப் பழங்கள் புதிதென கிடந்தன. ஓரிரு பறவைக்கால்களின் தடம் தெரிந்தது. ஐவர் ஆலயத்தின் வாயில்கள் திறந்திருக்க உள்ளே மலரணியும் மங்கலஅணியும் பூச்சணியும் புகைத்திரையும் இன்றி கரிய வெற்றுடல்களுடன் ஐந்து அருகர்களின் சிலைகள் நின்றிருந்தன.

    உள்ளே சென்று வழிபட வேண்டுமென்று எண்ணினான். அந்த அலைஓவியம் காற்றில் கரைவதுவரை அப்படியே இருக்கட்டுமென்று தோன்றியது. அந்தக்காலை முடிந்தவரை கலையாமலிருக்கட்டும். கைகளை மார்பில் கட்டிக்கொண்டு ரிஷபரின் ஓங்கிய பெருந்தோள்களை நோக்கிக் கொண்டு நின்றான். ஐந்து கரிய பளபளப்புகள் நேற்றிரவு இங்கு நடந்த எவற்றுடனும் தொடர்பற்றவை.

    முன்பு கலிங்கத்துக் கொல்லர்கள் இரும்பையும் கரியையும் கலந்துருக்கி உருவாக்கும் ஒருவகை படைக்கலன்கள் அஸ்தினபுரியில் விற்பனைக்கு வந்திருந்ததை எண்ணிக் கொண்டான். கன்னங்கரியவை, உறுதியானவை. அவற்றின் பரப்பை கண்மூடி கைகளால் தொட்டால் பளிங்கு என்றே உளமயக்கு ஏற்படும். வேல்முனைகளாக, வாட்களாக அடிப்பதற்குரியவை என்றான் கொல்லன். அவற்றை வேட்டைக்கு கொண்டு சென்றபோதுதான் தனித்தன்மை தெரிந்தது. அவை எலும்புகளை உடைத்து ஊன்கிழித்து குருதிநீராடி மீளும்போது சற்றும் முனைமடியவில்லை. ஒரு சொட்டு செந்நீர்கூட இன்றி புத்தம் புதியவை என தோன்றின.

    தன் உள்ளத்தில் எழுந்த அந்த ஒப்புமையைக் கண்டு அவன் திகைத்தான். அதை வேறெவரும் அறிந்திருப்பார்களோ என்பதுபோல் இருபுறமும் பார்த்தான். நீள்மூச்சுடன் கைகளை தலைக்குமேல் தூக்கி ஐந்து அருகர்களையும் வணங்கினான். இரண்டு படிவர்கள் பெரிய பூக்குடலைகளுடன் நடந்து வந்து ஆலயத்திற்குள் நுழைந்தனர். மூவர் சற்று அப்பால் மண் குடங்களில் நீருடன் வந்தனர். அவர்களுக்கும் நேற்றிரவு ஒரு கணக்குமிழியென வெடித்து மறைந்திருக்கும். இன்று புதியவர்களென மீண்டிருக்கிறார்கள். படிவர் ஒருவர் அவனை நோக்கி வாழ்த்துவது போல் புன்னகைத்து சற்றே தலை சாய்த்து உள்ளே சென்றார்.

    அர்ஜுனன் திரும்பி அரண்மனைக்குச் செல்லும் பாதையில் நடந்தான். ரைவத குலத்து அரசர்களின் மாளிகைமுற்றத்தில் நான்கு புரவிகள் மட்டும் சேணமோ கடிவாளமோ இன்றி காலை வெயிலில் மின்னிய வெண்ணிற தோற்பரப்புடன் நின்று ஒற்றைக்கால் தூக்கி துயின்றுகொண்டிருந்தன. காவலற்ற வாயிலில் பட்டுத்திரைச்சீலை ஆடியது. அவனது காலடி ஓசையைக்கேட்டு ஒரு வெண்புரவி கண்களைத் திறந்து திரும்பி அவனை நோக்கி மூச்சுத் துளைகள் விரிய மணம் பிடித்தது. தொங்கிய தாடையை அசைத்து தடித்த நாக்கை வெளிக்கொணர்ந்து துழாவி மீண்டும் பெருமூச்சு விட்டது. அரண்மனைக்குள் ஏவலர்களின் மெல்லிய பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.

    அரண்மனைக்குள் நுழையாமல் வலதுபக்கமாக திரும்பிச்சென்ற பாதையில் நடந்து விருந்தினர் இல்லங்கள் அமைந்த இணைப்புப் பகுதி நோக்கி சென்றான். அவ்வேளையில் இளைய யாதவர் அங்கு இருப்பாரென அவன் அறிந்திருந்தான். அவரை சந்திக்கச் சென்ற ஒரு தருணத்திலும் முன்னரே அவர் அங்கு சித்தமாக இல்லாமல் இருந்ததில்லை. அதை எண்ணி ஒருமுறை வியந்திருக்கிறான். முன்னரே சொல்லாமல்கூட அவரை பார்க்க சென்றிருக்கிறான். அப்போதும் அவன் வருவதை முன்னரே அறிந்தவர்போல் காத்திருக்கும் இளைய யாதவரையே கண்டான். “நான் வருவதை அறிந்தீரா யாதவரே?” என்று ஒருமுறை கேட்டான். “இல்லை, ஆனால் எவரேனும் வருவார்கள் என்று எப்போதும் சித்தமாக இருப்பது என் இயல்பு” என்றார் அவர்.

    மாளிகைப்படிகளில் ஏறி மரவுரித் திரைச்சீலை தொங்கிய வாயிலைக்கடந்து உள்ளே சென்று, கட்டுக்கயிறுகள் முறுகி ஒலிக்க மூங்கில்படிக்கட்டில் கால்வைத்து ஏறி மரப்பலகைகள் எடையில் அழுந்தி ஓசையிட்ட இடைநாழியில் நடந்துசென்று இளைய யாதவரின் அறைவாயிலை அடைந்தான். திரைச்சீலையை விலக்குவதற்கு முன் “வணங்குகிறேன் இளைய யாதவரே” என்றபடி குறடுகளை சற்று அழுந்த மிதித்து கழற்றினான். “உள்ளே வருக!” என்று இளைய யாதவர் குரல் கேட்டது. திரைச்சீலையை விலக்கி உள்ளே சென்றான். அங்கு இளைய யாதவருடன் சுபத்திரையும் இருக்கக்கண்டு ஒரு கணம் சற்று குழம்பி இளைய யாதவரின் கண்களைப் பார்த்தபின் மீண்டான்.

    “இளவரசிக்கு வணக்கம்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை “உங்களை நான் நேற்று பார்த்தேனே” என்றாள். இளைய யாதவர் “ஆம், இவர் பெயர் ஃபால்குனர். பிறப்பால் ஷத்ரியர். ரைவதகரின் பெருமை கேட்டு விழவு கொண்டாட வந்தவர். நெறிநூலும் படைக்கலமும் கற்றவர் என்பதனால் எனக்கு நண்பரானார்” என்றார். சுபத்திரை அவன் கைகளைப் பார்த்து “வில்லவர் என்பது ஐயமற தெரிகிறது” என்றாள். “ஆம், வில்லும் தெரியும்” என்றான் அர்ஜுனன். இளைய யாதவர் அவனை அமரும்படி கைகாட்ட அருகிலிருந்த பீடத்தில் அமர்ந்து நீண்ட தாடியை நீவி விரல்களால் சுழற்றியபடி சுபத்திரையை நோக்கினான்.

    அவன் கண்களை மிக இயல்பாக சந்தித்து விழிதிருப்பி இளைய யாதவரிடம் “இவரை முன்னர் எங்கோ பார்த்தது போல தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. “நேற்றே அதை இவரிடம் சொன்னேன்.” இளைய யாதவர் அர்ஜுனனை நோக்கிவிட்டு சிரித்தபடி “சிவயோகிகளின் கண்கள் ஒன்றுபோல தோன்றும். ஏனெனில் அவர்கள் பயிலும் ஊழ்கநெறி அவ்வகையானது. அதற்கு மகாதூமமார்க்கம் என்று பெயர்” என்றார். “இவரை துவாரகைக்கு அழைத்திருக்கிறேன் இளையவளே.” “ஏன்?” என்றாள் சுபத்திரை. “விற்பயிற்சியிலும் புரவியாடுதலிலும் நாமறியாத பல நுண்மைகளை இவர் அறிந்துளார். அவற்றை நம்மவர் கற்கட்டுமே என்று எண்ணினேன்.”

    சுபத்திரை சற்று ஏளனமாக கையை வீசி சிரித்து “இவரல்ல, கயிலையை ஆளும் முக்கண் முதல்வனின் முதற்படைத்தலைவர் வீரபத்ரனே வந்து ஆயிரம் வருடம் தங்கி போர்க்கலை கற்பித்தாலும் யாதவர் எதையும் கற்றுக் கொள்ளப்போவதில்லை மூத்தவரே. நேற்றிரவு அவர்கள் இந்நகரில் நடந்துகொண்ட முறையைக் கண்டு நான் திகைத்துவிட்டேன். ஒழுங்கென்றும் முறைமை என்றும் ஏதாவது எஞ்சினால் அதைத் தேடிக் கண்டடைந்து மீறிவிட முயல்பவர்கள் போல தோன்றினர். விலங்குகளுக்குக் கூட அவற்றின் தலைமுறைகள் வகுத்தளித்த கால்நெறியும் நிரையொழுங்கும் உண்டு. இவர்கள் வெறும் ஊன்திரள்” என்றாள்.

    “நீ பேசிக்கொண்டிருப்பது துவாரகையை தலைமைகொண்டு யாதவப்பேரரசை அமைக்கவிருக்கும் மக்களைப்பற்றி” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் அவர் கண்களை நோக்கினான். அவற்றில் சிரிப்பு இருப்பதை அவன் மட்டுமே அறிந்துகொண்டான். சுபத்திரை சீற்றத்துடன் “எந்நிலையிலும் யாதவரால் ஷத்ரியப் படைகளை எதிர்கொள்ள முடியாது என நேற்று தெளிந்தேன்” என்றாள். “வெறும் திரள். இந்த மலைமக்கள் அருகநெறியைக் கற்று அடைந்துள்ள ஒழுங்கை இதனருகே கண்டபோது நாணத்தில் என் உடல் எரிந்தது.”

    “ஆனால் நீங்கள் அத்திரளில் மகிழ்ந்தீர்கள்” என்றான் அர்ஜுனன். “ஆம், இளவரசியாக அது என் கடன். நான் விலகி நிற்க இயலாது” என்றாள் சுபத்திரை. இளைய யாதவர் புன்னகைத்து “அதை நீ இத்தனை பிந்தி புரிந்துகொண்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்றார். “இவர்களை வைத்துக்கொண்டு அரசை அல்ல ஒரு நல்ல மாட்டுப்பட்டியைக்கூட அமைக்க முடியாது. பூசலிடுவதற்கென்றே கிளம்பிவரும் மூடர்கள்” என்றாள் சுபத்திரை.

    “இளையவளே, கன்று மேய்க்கும் தொழிலை முற்றிலுமாக கைவிடாமல் யாதவர்களால் போர்வீரர்களாக முடியாது. எதையேனும் படைப்பவர்கள் எந்நிலையிலும் போர் புரிய முடியாது.” வகுத்துரைத்த இறுதிச் சொல் போன்ற அக்கூற்றைக் கேட்டு சுபத்திரை ஒரு கணம் திகைத்தாள். திரும்பி அர்ஜுனனை நோக்கி “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றாள். “ஆம். இவர்களை பயிற்றுவிக்கமுடியாது” என்றான் அர்ஜுனன். “இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தவர்கள். எனவே ஆணைகளை ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல. இவர்களின் ஆணவம் பிறரை தலைவரென ஏற்க மறுக்கிறது. நூற்றுவர் குழுக்களாகக்கூட இவர்களை தொகுக்க முடியாது.”

    சுபத்திரை கணநேரத்தில் அவளில் எழுந்த சினத்துடன் பீடத்தைவிட்டு எழுந்து “ஆனால் அவர்கள் அனைவரும் மறுக்கமுடியாத தலைவராக என் தமையனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்பு கார்த்தவீரியன் தலைமையில் அவர்கள் ஒருங்கிணைந்திருந்தனர் என வரலாறும் உள்ளது” என்றாள். ஆனால் அவன் சொன்னது உண்மை என்று அறிந்தமையால் எழுந்த சினம் அது என அவளுக்கு உடனே தெரிந்தது.

    “ஆம், அறிவேன்” என்றான் அர்ஜுனன். “அவர்களுக்குத் தேவை தலைவனல்ல. தந்தை. தந்தையை வழிபடுவார்கள், தெய்வ நிலைக்கு கொண்டு சென்று வைப்பார்கள். அதற்குரிய அனைத்துக் கதைகளையும் சமைப்பார்கள். ஆனால் தந்தை என்று ஆன பிறகு அவரை மறுக்கத் தொடங்குவார்கள். அவரை மீறுகையில் உள்ளக்கிளர்ச்சிக்கு ஆளாவார்கள். அவர் குறைகளை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவரை இழிவுசெய்ய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வார்கள். இவர் அவர்களுக்கு இன்று ஒரு வாழும் மூதாதை மட்டுமே.”

    சுபத்திரை அவன் விழிகளைப் பார்த்தபடி ஏதோ சொல்ல வாயசைத்தாள். பின்பு இடை இறுகி அசைய உறுதியான காலடிகளுடன் சென்று சாளரத்தருகே சாய்ந்து நின்றாள். இளைய யாதவர் “இவர் சொல்வதில் ஐயமென்ன இளையவளே? இன்று உன் திருமணத் தன்னேற்பை ஒட்டி என்ன நிகழ்கிறது? ஒரு களத்திலேனும் என்னைத் தோற்கடித்து விடுவதற்கல்லவா யாதவர் அனைவரும் முயல்கிறார்கள்?” என்றார்.

    சுபத்திரை “இல்லை, அவ்வாறல்ல” என்றாள். “நான் யாதவப் பெண் என்பதனால் என்னை ஷத்ரியர் கொள்ளலாகாது என்கிறார்கள்.” மெல்ல சிரித்து “என் மேல் அகக்காதல் கொள்ளாத யாதவ இளைஞனே இல்லையென்று தோன்றுகிறது” என்றபின் அர்ஜுனனை நோக்கித் திரும்பி “நேற்று நீங்களே பார்த்தீர்கள் அல்லவா?” என்றாள். “அது உண்மையே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் உங்களை தங்கள் உடைமை என நினைக்கிறார்கள்.”

    “வேறொன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் கண்டது அதன் வெளிப்பாடே” என்றார் இளைய யாதவர். “இவள் விருஷ்ணிகுலத்தின் இளவரசி. துவாரகையில் விருஷ்ணிகளுக்கும் அந்தகர்களுக்கும்தான் முதன்மை இடம் உள்ளது. குங்குரர்களும் போஜர்களும் தாங்கள் ஒதுக்கப்படுவதாக நினைக்கிறார்கள். பெரும்புகழ்கொண்ட ஹேகயர்கள் தங்கள் வரலாற்றை எவரும் எண்ணுவதில்லை என்னும் ஏக்கம் கொண்டிருக்கிறார்கள். இவளை மணப்பதன் வழியாக துவாரகையால் தவிர்க்க முடியாதவர்களாக ஆகிவிடலாமென்று அவர்கள் எண்ணுகிறார்கள்.”

    “இயல்பான வழிதானே அது?” என்றான் அர்ஜுனன். “ஆகவே யாதவர்களுக்குள் மட்டும் நிகழும் ஏறுதழுவல்போட்டியில் இவள் மணமகனை தேர்வுசெய்யவேண்டும் என யாதவர்கள் வாதிடுகிறார்கள். அந்தக் கோரிக்கையுடன் அவர்கள் சூரசேன பிதாமகரை அணுக அவர் அவர்களை திருப்பியனுப்பிவிட்டார்” என்றார் இளைய யாதவர். “விருஷ்ணிகளிலேயே ஒரு சாரார் இவளை சேதிநாட்டு சிசுபாலன் மணக்கவேண்டும் என விழைகிறார்கள். அவன் யாதவக்குருதி கொண்டவன் என்கிறார்கள்.”

    “யாதவர்களை  பார்த்துக்கொண்டு நேற்று இவ்வூரில் உலவினேன். ஒவ்வொருவரும் இந்த மணத்தன்னேற்பை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தன்னேற்பு விழாவுக்கு வந்து நின்று வென்று உங்கள் கைபற்றும் தகுதி தனக்கு இருப்பதாக எவரும் எண்ணவில்லை. ஆயினும் அந்தப் பகற்கனவில்லாத இளைஞர் எவரும் இல்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் அவர்களின் உள்ளம் செயல்படுவதன் அடிப்படை அந்த எளிய கனவுமட்டும் அல்ல.” அவள் அவன் சொல்வதைக் கேட்பதற்காக விரிந்த விழிகளுடன் அவன் முகத்தை நோக்கி நின்றாள்.

    “இன்று நிகழ்ந்துள்ள இவ்விணைவு அரியது. சூரசேனரும் வசுதேவரும் பலராமரும் இயல்பாக ஒருங்கிணைந்து ஒரு தரப்பாக நிற்க மறுதரப்பாக இளைய யாதவர் நிற்கும் ஒரு சூழல் அமைந்துள்ளது. இளைய யாதவர் வெல்வது அரிது என்னும் நிலையும் உள்ளது. சூரசேனரின் தரப்பைச் சார்ந்து நின்று பேசும்போது இளைய யாதவரை எதிர்க்க முடியும். அவர் தோற்கையில் மகிழ்ந்து கூத்தாட முடியும். ஆனால் யாதவர் குடிநன்மைக்காகவும் யாதவர்களின் மூதாதை சூரசேனரின் சொல்லுக்காகவும் நிலை கொள்வதாக தங்களை விளக்கிக் கொள்ளவும் முடியும். குற்ற உணர்வின்றி ஒரு அத்துமீறல். யாதவர்கள் இன்று கொண்டாடுவது அதைத்தான்” என்றான் அர்ஜுனன்.

    சுபத்திரை சில கணங்கள் கடந்தபின் நெடுநேரமாக அவனை உற்று நோக்கிவிட்டோம் என உணர்ந்து கலைந்து விழிவிலக்கினாள். தன் பீடத்தில் அமர்ந்து கைகளை முழங்கால் மேல் வைத்து விரல்களை கோத்துக்கொண்டு “இவர் யாதவர்களை நன்கு அறிந்திருக்கிறார்” என்றபின் இளைய யாதவரை நோக்கி “ஷத்ரியர்களால்தான் யாதவர்களை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது போலும்” என்றாள். ஏளனத்துடன் இதழ்கள் வளைய “அவர்கள் தங்கள் எதிரிகளை புரிந்துகொள்வதுபோல தங்களை புரிந்துகொள்வதில்லை” என்றாள்.

    அர்ஜுனன் ஒருகணத்தில் சினந்து கனன்றான். அதை புன்னகையாக மாற்றிக்கொண்டாலும் கண்கள் சுடர்ந்தன. “ஷத்ரியர்கள் பிறர் மீதான வெற்றியினூடாக உருவாகிறவர்கள்” என்றான். “இவர் முற்றிலும் ஷத்ரியர் அல்ல. யாதவ குருதியும் கொண்டவர்” என்றார் இளைய யாதவர். “அப்படியா?” என்று அவள் அவனிடம் கேட்டாள். அப்போது வேடிக்கைக் கதையைக் கேட்டு விழிவிரியும் சிறுமியின் தோற்றம் கொண்டிருந்தாள். அவள் தன்னுள் நிகழ்வனவற்றை நுட்பமாக மறைத்துக்கொள்கிறாள் என்று அர்ஜுனன் எண்ணினான்.

    ”ஷத்ரிய குருதி என்பது கங்கை போல. அதில் பாரதவர்ஷத்தின் அத்தனை குருதிகளும் கலந்துள்ளன” என்றான். அவள் உரக்க நகைத்தாள். கழுத்து நரம்புகள் தெரிய முகவாயை மேலே தூக்கி பறவையொலி போல ஓசையிட்டு அவள் சிரிப்பதை பார்த்தபின் அவன் இளைய யாதவரை நோக்கினான். அவர் விழிகளும் நகைத்துக்கொண்டிருந்தன. அவனுக்கு மட்டுமான நகைப்பு. “கங்கையில் கங்கையே குறைவு என்பார்கள்” என்று சொன்னபடி சுபத்திரை மீண்டும் நகைத்தாள்.

    அவளே சிரித்து ஓய்ந்து மேலாடையால் கண்களைத் துடைத்தபின் “பொறுத்தருள்க யோகியே. நான் தங்கள் குலத்தைப்பற்றி நகைத்துவிட்டேன்” என்றாள். “யோகி என்பவன் முதலில் துறக்கவேண்டியது குலத்தை அல்லவா?” என்றான் அர்ஜுனன். அவள் பெருமூச்சுடன் தமையனை நோக்கி “நான் இயல்பாகத்தான் சொன்னேன் மூத்தவரே” என்றாள். அர்ஜுனன் “தாங்கள் மகிழ்வதற்கு ஒரு வாய்ப்பானமைக்கு மகிழ்கிறேன் இளவரசி” என்றான்.

    இளைய யாதவர் “மணத்தன்னேற்பு ஒருங்கமைந்த நாள்முதல் ஷத்ரியர்களின் எதிரி ஆகிவிட்டாள்” என்றார். “அதெல்லாமில்லை. ஷத்ரியர்கள் இல்லையேல் யாதவர்கள் அரசமைக்கமுடியாது. இன்றுகூட அஸ்தினபுரியின் படைத்துணை உள்ளது என்பதனால்தான் மதுரா தனித்து நிற்க முடிகிறது” என்றாள் சுபத்திரை. “தாங்கள் அறிவீரா யோகியே? நான் இளைய பாண்டவனின் வில்லால் காக்கப்படுபவன் என்று எண்ணும் யாதவர்களும் உள்ளனர்” என்றார் இளைய யாதவர்.

    அந்தச் சொல்விளையாட்டுக்கு நடுவே கண்ணுக்குத் தெரியாமல் பகடை உருண்டுகொண்டிருந்தது. அர்ஜுனன் திடீரென்று சலிப்படைந்தான். இளைய யாதவரின் விழிகளைப் பார்த்தான். அவை அவனை அறியாதவைபோல முழுமையாக வாயில் மூடியிருந்தன. அவள் “இவர் அரசுசூழ்தலை யோகமெனப் பயில்கிறார் போலுள்ளது” என்றாள். இளைய யாதவர் “அதுவும் யோகமே. ஏனென்றால் அதில் பொய்மைக்கு நிறைய வாய்ப்புள்ளது” என்றார்.

    இளைய யாதவரின் அணுக்கரும் அமைச்சருமாகிய ஸ்ரீதமர் உள்ளே வந்து தலைவணங்கினார்.  இளைய யாதவர் ஏறிட்டு நோக்க அவர் மெல்லிய குரலில் “அரசரிடமிருந்து செய்தி வந்துள்ளது. துவாரகையின் அரசராக தாங்கள் இம்முறைதான் வந்துள்ளீர்கள். ஆகவே முறைப்படி விடையளித்து வழியனுப்பும் சடங்கு ஒன்று பேரவையில் நிகழவேண்டும் என்றார்” என்றார். அர்ஜுனன் அவரது வருகையை இனிய காற்றுபோல இளைப்பாற்றுவதாக உணர்ந்தான்.

    புருவம் சுருங்க “எப்போது?” என்றார் இளைய யாதவர். “ஒரு நாழிகைக்குள் சடங்கு தொடங்கினால் நன்று என்று நான் சொன்னேன். உச்சிவெயில் எழுவதற்குள் இங்கிருந்து நாம் கிளம்பியாக வேண்டும். சடங்கு ஒரு நாழிகை நேரம் நிகழக்கூடும். என்ன முறைமைகள் உள்ளன என்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதமர்.

    “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் இளைய யாதவர். “அதற்கு தாங்கள் அரசணிக்கோலம் கொள்ள வேண்டும் அரசே.  நாம் கஜ்ஜயந்தபுரியின் அரசருக்கு நம் அரசுக்கு உரிய முறையில் பரிசில்களும் அளிக்கவேண்டும்” என்றார் ஸ்ரீதமர். “அத்துடன் நாம் அவருக்கு வாக்களித்துள்ள சில உதவிகளையும் முறைப்படி அவையில் அறிவிக்கவேண்டும்.” இளைய யாதவர் எழுந்து அர்ஜுனனிடம் “சைவரே, நான் இதைப்பற்றி பேசி உரிய ஆணைகளை இட்டுவிட்டு மீள்கிறேன்” என்றபின் ஸ்ரீதமரிடம் “விடைகொள்ளும் சடங்கிற்கு இவளும் வரவேண்டியிருக்குமா?” என்றார்.

    “இல்லை. இளவரசி இனிமேல் முழுதணிக்கோலம் கொண்டால் மீண்டும் பயணக்கோலம் கொள்ள நெடுநேரமாகிவிடும். நாம் உடனே கிளம்பவேண்டும். வெயில் சுடத்தொடங்குவதற்குள் நாம் முதல் சோலையை சென்றடையவேண்டும். இச்சடங்கு துவாரகையின் ஆட்சியாளருக்கு உரியது மட்டுமே” என்றார் ஸ்ரீதமர். இளைய யாதவர் “அவ்வண்ணமே ஆகுக!” என்றபின் திரும்பி “இளையவளே, நான் உடனே நீராடி அணி புனைகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்” என்றார்.

    சுபத்திரை “நானும் கிளம்புகிறேன்” என்றபடி எழுந்தாள். “இல்லை, உனக்கு நேரமிருக்கிறது” என்றபின் புன்னகைத்து “நாமறியாத போர்க்கலை ஏதேனும் இவரிடமிருந்தால் அதை கற்றுக்கொள்வோம் என்று எண்ணினேன். நாமறியாத உள ஆய்வுக்கலையும் இவரிடமுள்ளது என்று இப்போது அறிந்தேன். இவர் சொற்களினூடாகவே நம் மூதாதையரை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது” என்றார். சுபத்திரை சற்று தத்தளித்து அவனை நோக்கியபின் தமையனை நோக்கி “ஆம்” என்றாள்.

    “இவர் பாரதவர்ஷத்தை நடந்தே பார்த்தவர். இவர் கண்டவற்றை கேட்கவே முழுநாளும் தேவைப்படும்” என சொன்னபின் ஸ்ரீதமரிடம் “செல்வோம்” என்றார் இளைய யாதவர். அவள் மேலும் பதைப்புடன் தலையசைத்தாள். இளைய யாதவர் அர்ஜுனனுக்குத் தலைவணங்கி வெளியே சென்றார். இருவரும் எழுந்து விடைகொடுத்தனர்.

     வெண்முரசு அனைத்து விவாதங்களும்

    வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

    தொடர்புடைய பதிவுகள்

    இங்கிருந்து தொடங்குவோம்…

    $
    0
    0

    1

    கொஞ்சநாள்முன்னர் நானும் நண்பர்களும் வட தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது ஒரு விவசாயி சொன்ன வசனம் காதில் விழுந்தது ”…அப்பாலே சடங்கு சாங்கியம்லாம் செஞ்சு பொண்ணைக் கூட்டிட்டு வந்தாச்சு…” நண்பர் கேட்டார், ”சடங்கு சரி, அதென்ன சாங்கியம்?”

    இந்து ஞான மரபில் பரிச்சயம் உள்ள ஒருவருக்கு சாங்கியம் என்ற சொல் மிக அறிமுகமானதாகவே இருக்கும். அது நம் சிந்தனை மரபில் உள்ள ஒரு முக்கியமான பிரபஞ்ச தரிசனத்தின் பெயர். சாங்கிய தரிசனத்தை கபில ரிஷி தொகுத்தளித்தார். அவர் எழுதிய நூல் சாங்கியகாரிகை.

    சாங்கிய தரிசனம் கடந்த காலத்தில் மிக முக்கியமான சிந்தனையாக இருந்திருக்கிறது. ‘முனிகளில் நான் கபிலன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான். கபிலர் பிறந்த ஊர் கபில வாஸ்து. அந்த ஊரில்தான் புத்தர் பிறந்தார். பௌத்த சிந்தனையில் சாங்கியத்தின் செல்வாக்கு அதிகம். சாங்கியத்தின் துணைத் தரிசனமாகத்தான் யோகம் உருவாகி வந்தது. இன்று யோகம் இந்து,சமண,பௌத்த மதங்களுக்கு பொதுவான ஒரு ஞான வழிமுறையாக உள்ளது.

    சாங்கியம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஜெக்கோபி என்ற இந்தியவியல் அறிஞர் ‘சங்கிய’ என்ற சொல்லில் இருந்து வந்தது என்று ஊகிக்கிறார். கறாரான கணிதத் தன்மை கொண்ட ஒரு சிந்தனை என்ற பொருளில் வந்திருக்கலாம் என்கிறார். அது ஒரு ஊகம்தான்.

    சாங்கியம் ஒரு ஜடவாத தரிசனம். ஜடவாதம் என்றால் இன்றைய அர்த்தத்தில் பொருள்முதல்வாதம். இப்பிரபஞ்சம் பொருளால் ஆனது, பொருளின் இயல்புகளினால் செயல்படுவது, இதன் அடிப்படை விதிகள் பொருண்மைவிதிகளே என்று வாதிடுவது.

    ஆதியில் எல்லா பொருளும் ஒரே பொருளாக இருந்தன என்று சாங்கியம் சொல்கிறது. அந்த ஒற்றைப்பெரும் பொருளில் மூன்று குணங்கள் உருவாயின. அதை சத்வ குணம் ரஜோ குணம் சாத்வீக குணம் என்று சொல்லலாம்.  ரஜோகுணம் என்பது செயலூக்க நிலை. தமோகுணாம் என்பது செயலில்லா நிலை. சத்வ குணம் என்பது இரண்டுக்கும் நடுநிலை. இந்த மூன்று குணங்களின் சமநிலை என்றோ எப்போதோ இல்லாமலாகியது. அந்தக் கணம் முதல் ஒன்றாக இருந்த பிரபஞ்சப்பொருள் பலவாக மாறி பிரிந்து வளர்ந்து இன்றைய பிரபஞ்சம் என்ற நிலையை அடைந்தது. இது கிட்டத்தட்ட பெருவெடிப்பு என்ற கொள்கைக்கு நிகரானது

    இந்தசிந்தனைக்கு ஆதாரமாக இருந்த மூதாதை தரிசனம் எது? ஒரு தத்துவ தரிசனம் என்பது மிக மிக சிக்கலானது. வளர்ச்சி அடைந்தது. ஆனால் அந்த தரிசனம் மிக எளிமையான ஓர் அனுபவ உண்மையாக மனித மனத்தில் தோன்றியிருக்க வேண்டும். அதன்பின்னர்தான் அது ஒரு பெரிய பிரபஞ்ச தரிசனமாக வளரும்.

    சாங்கியத்தின் அடிபப்டை தரிசனம் நிலத்தை வழிபட்ட தொல்குடி மனத்தில் இருந்ந்து வந்திருக்கலாம். மண் பொருண்மையானது. எல்லாவற்றையும் அது உருவாக்குகிறது. விதை மூலம் அதன் சமநிலை இல்லாமலாகும்போதுதான் அது முளைத்து முளைத்து காடாக ஆகிறது. நம் நாட்டில் இன்றும் கூட விவசாயிகள் மண்ணின் சமநிலையை குலைப்பதற்காக மண்ணிடம் மன்னிப்புகோரும் சடங்குகள் உள்ளன. விவசாயம்செய்ய ஆரம்பித்த பழங்குடிகள் மண்ணை முழுமுதல் தெய்வமாக கண்டிருக்கலாம். மண்ணின் பேருருவமாக அவர்கள் பிரபஞ்சத்தை கண்டிருக்கலாம்.

    நம்முடைய பெரும்பாலான சடங்குகள் மண் சார்ந்தவை, வேளாண்மை சார்ந்தவை. உழுவதற்கு முன் உள்ள சடங்குகள், உழுதபின் விதைப்புக்கான சடங்குகள், பூச்சிகளை கட்டுவதற்கும் பின்னர் நீர் பெருக்குவதற்கும் உரிய சடங்குகள். அறுவடை சடங்குகள். பின்னர் நெல்லை படையலிடும் சடங்குகள். பொங்கல், விஷு போன்ற நம் பண்டிகைகள் கூட வேளாண்மை சார்ந்தவை. ஆகவே புராதனமான வேளாண்மை சார்ந்த மதம் சாங்கியமாக இருந்திருக்கலாம். சாங்கியமே சடங்குகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம். சாங்கிய மதம் பலவாறாக வளர்ந்து மறைந்தபின்னரும் சடங்குகளுக்கு சாங்கியம் என்னும் பெயர் நீடிக்கிறது என்று படுகிறது.

    இன்று நாம் நம் மொழியை கூர்ந்ந்து பார்க்கும்போது எத்தனை சொற்கள் வழியாக சென்று கொன்டிருக்கிறோம். ‘அவரு சொன்னா அது வேதவாக்கு’ என்கிறோம். வேதங்களின் சொல் மாற்ற முடியாத அடிப்படை என்றா பொருளில்.’ யோகம் இருந்தா நடக்கும்’ என்கிறோம். ‘அதில ஒரு நியாயம் வேண்டாமா? ‘என்கிறோம். இந்தச் சொற்களுக்கான பொருள் நமக்கு தெரியுமா? இவற்றின் ஊற்றுமூலம் தெரியுமா?

    நாம் ஒரு மொழியில் ஒரு சிந்தனைச்சூழலில் பிறந்து விழுகிறோம். ஆனால் அந்த மொழியையும் சூழலையும் நாம் முறைப்படி கற்பதில்லை. அதற்கான எந்த கல்வி அமைப்பும் இன்று நம் மண்ணில் இல்லை. ஆகவே நாம் நம் மரபின் சிந்தனைத் தொடர்ச்சி அறுபட்டவர்களாக இருக்கிறோம். இன்னொரு சிந்தனை மரபின் நுனியில் இரண்டாம்தர மக்களாக சென்று ஒட்டிக்கொள்கிறோம். நம் மரபில் நமக்கு பயிற்சி இருக்கும் என்றால் அதை நாம் உலகின் எந்த சிந்தனை மரபுடனும் இணைத்துக்கொண்டு வளர்த்தெடுக்க முடியும். அது நமக்கு தனித்தன்மையையும் நமக்கே உரிய சிந்தனைவழிகளையும் அளிக்கும். நம்மை உலகில் முன்னிலைப்படுத்தும். உலகின் புத்தம்புதிய சிந்தனைகள் எல்லாமே இப்படித்தான் உருவாகியிருக்கின்றன.

    இப்போது நாம் அடிக்கடிக் கேட்கும் ஒரு வரி உண்டு, இந்திய சிந்தனை என்று ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்று ஒன்று இல்லை. அதெல்லாம் வெள்ளைக்காரன் வந்து உருவாக்கியது. பல தளங்களில் இந்த கூச்சல் எழுந்துகொன்டே இருக்கிறது. இந்தக் குரல் பெரும்பாலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் தயாரிக்கப்பட்டு நமக்கு அனுப்பப்படுகிறது. அதாவது உங்கள்சிந்ந்தனைகளையும் நாங்கள்தான் உருவாக்கினோம் என்ற குரல்

    இந்தக்குரலை எவர் எதிரொலி செய்கிறார்களோ அவர்களுக்கே இந்தியாவில் இன்று வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். அவர்களாஇ மேலைநாட்டு பல்கலைகள் அழைத்து கௌரவிக்கும். பட்டங்களும் நிதிக்கொடைகளும் அளிக்கும். அவர்களுக்கு அதை ஒட்டி உயர்பதவிகள் கிடைக்கும். ஆங்கில இதழ்களில் முக்கியத்துவம் கிடைக்கும். இந்தவலையை விரும்பி ஏற்றுக்கொண்டவர்களின் குரல்களையே நாம் அதிகமும் இந்திய ஊடகங்களில் கேட்கிறோம்.  அசலான குரல்கள் மிக மிக அபூர்வாமானவை.

    உண்மையில் அப்படித்தானா? உதாரணமாக இந்து ஞான மரபு என்ற ஒன்று எப்போதிருந்து இருக்கிறது? அதற்கு இந்து ஞானமரபு என்ற பெயர் பத்து நூற்றாண்டுகளாக புழங்கி வருவது. அதற்கு முன்னர் அது சனாதான தர்மம் [புராதனமான வழிமுறை] என்று சொல்லப்பட்டது. நமக்கு எப்போது முதல் நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போது முதல் இதற்கு ஒரு பாடத்திட்டம் [கரிக்குலம்] தெள்ளத்தெளிவாகவே கிடைக்கிறது.  இருந்ந்தும் இப்படி ஒரு அமைப்பே இல்லை என்று நம்மிடம் வாதிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.

    இந்த பாடத்கிட்டம் எல்லா இந்து ஞான வழிகளுக்கும் பொதுவானது. நீங்கள் திருவாவடுதுறை மடம் சென்று சைவம் கற்றாலும் சரி, அகோபிலம் சென்று வைணவம் கற்றாலும் சரி இதை கற்றாக வேண்டும்.  செவ்வியல்  இலக்கியங்களை விடுங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் கூட அப்படித்தான். ஒரு கதாநாயகன்  சகல கலா வல்லவன் என்றால் உடனே அவன் இந்த பாடத்திட்டத்தை கற்றவன் என்பார்கள். நீங்களே கேட்டிருக்கலாம். சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள். ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…”  அதுதான் இந்து மெய்ஞான மரபு.

    அந்த பாடத்திட்டம் இதுதான்.

    1.வேதங்கள்

    2. மூன்று தத்துவங்கள் . அதாவது பிரஸ்தான திரயம். கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்.

    3. ஆறு தரிசனங்கள். சாங்கியம் யோகம் நியாயம் வைசேடிகம் பூர்வமீமாம்சம் உத்தர மீமாம்சம்

    4 ஆறு மதங்கள். சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணபத்யம் சௌரம்

    இவைவற்றை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு நூல்வரிசையாக எண்ணிவிடக் கூடாது. இவை ஒன்று இன்னொன்றை மறுத்து விவாதித்து வளர்ந்த ஒரு பெரிய ஞானத்தொகுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு இன்னொன்றுடன் உள்ள உறவும் முரண்பாடும் முக்கியமானவை.

    முதல் பெரும் பிரிவினை வைதீகம் அவைதீகம் என்ற பகுப்புதான். எந்த தரப்புகள் வேதங்களை அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொள்கின்றனவோ அவை வைதீகம். எவை அப்படி ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனவோ அவை அவைதீகம்.

    ஆறு தரிசனங்களில் சாங்கியம், யோகம்,நியாயம், வைசேஷிகம் ஆகிய நான்குமே அவைதீக மரபைச் சேர்ந்ந்தவை. அவற்றில் சங்கியத்தில் ஒரு பகுதி பின்னாளில் வேதத்தை ஏற்றுக்கொண்டது.

    அதேபோல இன்னொரு பகுப்பு என்பது ஜடவாதம்– ஆன்மவாதம் என்பது. பொருள்முதல்வாதம், கருத்துமுதல் வாதம் ஏன்ற பிரிவினைதான் இது. இந்த பிரபஞ்சம் அதன் பொருள்சார்ந்த விதிகளால் செயல்படுகிறதா  அல்லது அதற்கு அடிபப்டையில் ஒரு கருத்து உள்ளதா என்ற கேள்வி.

    வேதமே கூட முழுக்க ஒரே தரப்பை சேர்ந்தது அல்ல. அதுவே இந்த இருவகை சிந்தனைகளுக்கும் இடமளிக்கிறது. ரிக் வேதத்தில் உள்ள பிரகஸ்பதி ரிஷியும் அவரது சீடர்களான கணாதன் பரமேஷ்டி போன்றவர்களும் ஜடவாதிகள்தான்.ரிக்வேதத்தில் இருந்தே பொருள்முதல்வாத தரப்பு வளர்ந்ந்து வந்தது. அதாவது எளிமையாகச் சொல்லப்போனால் நாத்திக வாதம். ச்சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் போன்ற தரிசனங்கள் ஜடவாதம் சார்ந்தவைதான்.

    இன்னும் ஒரு பிரிவினை உள்ளது. அதை கர்ம வழி  மற்றும் ஞான வழி என்று பிரிக்கலாம்.  ரிக் வேதத்தின் பெரும்பகுதி சடங்குகளைப் பற்றியது. இன்ன சடங்குக்கு இன்ன பலன் என்று சொல்வது. ஆகவே அது கர்ம காண்டம் என்று சொல்லபப்ட்டது

    ஆனால் அதன் பத்தாவது பகுதி தூய மெய்ஞானத்தை மட்டுமே முன்வைக்கிறது. ஆகவே இது ஞான காண்டம் என்று சொல்லப்படுகிரது. இது சடங்குகளுக்கு எதிரானது. இதைத்தான் பாரரதியார் ‘சுத்த அறிவே சிவமென பாடும் சுருதி’ என்றார்

    வேதத்தின் இறுதிப்பகுதி வேதாந்தம். வேத- அந்தம். அதுவே பின்னர் உபநிடதங்களாக வளர்ந்தது. உபநிடதங்கள் வேதத்தின் சடங்குகளை அதாவது கர்மகாண்டத்தை நிராகரிக்கின்றன. அவை பேசுவது தத்துவத்தை மட்டுமே.

    அந்த தத்துவ அமைப்பை மூன்று பகுதிகளாகச் சொல்கிறது மரபு. உபநிடதங்கள் ஒரு பகுதி. பல்வெறு ஞான வழிகள் விவாதிக்கப்பட்ட காலகட்டம் இது. இந்த விவாதத்தின் ஒரு உச்சம் கீதை. இன்னொரு உச்சம் பிரம்ம சூத்திரம்.

    இவையெல்லாம் சேர்ந்ததே இந்து ஞான மரபின் தத்துவ கட்டுமானம்.

    இந்து ஞான மரபை நாம் இன்னும் இரண்டாக பிரிக்கலாம். ஒன்று தத்துவம். இன்னொன்று புராணம். தத்துவார்த்தமாக ஒரு உயர் தளத்தில் நின்று ஒரு தரிசனத்தை அடைகிறது இந்து மதம். அந்த தரிசனத்தை கதைகளாக, நம்பிக்கைகளாக ,வழிபாட்டு முறைகளாக முன்வைத்து எளிய மக்களிடம் பேசுகிறது.

    உண்மையில் இந்த இரு தரப்புக்கும் நடுவே முரண்பாடே இல்லை. பாம்பின் தலை தத்துவம் என்றால் வால் புராணம். இரண்டும் ஒன்றே. தலை போன வழியேதான் வால் போகும். மெய்ஞானம் அடைபவன் நெஞ்சில் தன் வாலை தானே விழுங்கி சுருண்டு கிடக்கும் அந்த பாம்பு.

    சாதாரணமாக நாம் கடவுள் தெய்வம் இறைவன் போன்ற சொற்களை பொத்தாம் பொதுவாக பயன்படுத்துகிறோம். உண்மையில் பிற மதங்கள் இச்சொற்களை பயன்படுத்துவதற்கும் நமக்கு இடையே  வேறுபாடு உன்டு. உதாரணமாக கிறித்தவ மதத்தில்  கடவுளை பிதா என்கிறார்கள். அவர் ஒரு மாபெரும் தந்தை. பூமியை அவர் படைத்தார். மனிதனை உருவாக்கினார். அதன்பின் வானத்தில் இருந்து கொண்டு மண்ணில் உள்ள மனித வாழ்க்கையை கண்காணிக்கிறார். காக்கிறார்

    ஆனால் வேதங்களில் காணும் இறை உருவகம் இதெல்லாம் அல்ல. வேதங்கள் இறை ஆற்றலை பிரம்மம் என்கின்றனா. பிரம்மம் என்றால் ஒரு வியப்பு ஒலிதான். அதற்கு மேல் அதைப்பற்றி ஒன்றுமே சொல்ல முடியாது. அதற்கு உரிய குணங்களாக வேதங்கள் சொல்வது எல்லாமே எதிர்ம்றை குணங்களைத்தான். அதாவது  எந்த சொல்லாலும் சொல்ல முடியாதது, எந்த அடையாளமும் இல்லாதது. எந்த விவரணைக்கும் அப்பாற்பட்டது– இப்படி. அதை ‘தத்’ அது என்றே சொல்கின்றன.

    இந்த இறை உருவகம் மிக மிக தத்துவார்த்தமானது. அது உலகை சிருஷ்டிக்கும் ஒரு சக்தி அல்ல. அது உலகை காக்கவும் இல்லை. அது ஒரு பிரபஞ்ச சக்தி.அதுவேதான் பிரபஞ்சம். அதுவேதான் முடிவற்ற வெளி. காஸ்மோஸ் அதுதான். ஆற்றல் அதுதான். ஏராளமான வரிகள் வழி வேதங்கள் அந்த முடிவிலா ஆற்றல்வெளியைப் பற்றிச் சொல்கின்றன.

    அந்த ஞானத்தை உபநிடதங்கள் தர்க்க பூர்வமாக வளர்த்தெடுக்கின்றானா. ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் [இவை அனைத்திலும் இறை உறைகிறது] தத்வமசி [அது நீதான்] அகம் பிரம்மாஸ்மி[ நானே பிரம்மம்] என்றெல்லாம் அதை விளக்குகின்றன உபநிடதங்கள்.

    இங்கே நாம் காண்பதெல்லாமே பிரம்மம் என்றால் காணும் எதை வணங்கினாலும் அதெல்லாமே பிரம்மத்தை வணங்கியதுதானே? இந்த ஞானத்தில் இருந்து உருவானதே இந்து மரபின் பலதெய்வ வணக்கம். அதாவது ஒற்றைப்பரம்பொருளின் பலமுகத் தோற்றமே இங்குள்ள எல்லாம். நாயில் நன்றியாக, பறவையில் வேகமாக, பாம்பில் விஷமாக , மரத்தில் உயிராற்றாலாக அலைகடலில் கொந்தளிப்பாக ,அதிகாலையில் சிவப்பாக,  இரவில் இருளாக தெரிவதேல்லாமே பிரம்மம்தான். எல்ல்லாமே தெய்வம்தான். அப்படித்தான் இந்து மரபில் தெய்வங்கள் முடிவிலாது உருவாயினா. உங்களால் முடிந்தால் நீங்கள் கூட ஒரு தெய்வத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

    இந்த இடத்தில் இன்னொரு பிரிவினை உருவானது.  இறை அல்லது பிரம்மம் என்பது இருவகையாக பார்க்கபட்டது. நிர்குண பிரம்மம் என்பது ஞானத்தால் அறியப்படுவது. எந்தவகையான குணங்களும் இல்லாத பிரம்மம் அது. அதைத்தான் உபநிடதங்கள் பேசுகின்றன.பிரம்மசூத்திரம் பேசுகிறது

    அந்த நிர்குண பிரம்மத்தை அன்றாடவாழ்க்கையில் நம்மால் உணர முடியவில்லை என்றால் நாம் சகுண பிரம்மத்தை வழிபடலாம். இது எல்லா குணங்களும் கொண்ட பிரம்மம். ஏனென்றால் எல்லா குணங்களும் அதனுடையாது அல்லவா?

    இவ்வாறு சகுண பிரம்மம் ஆக வழிபடப்படும் தெய்வங்கள் தன் நம்முடைய எல்லா தெய்வங்களும்! சாலையோர மாரியம்மன் கோயிலில் ஒரு கல் கண் தீட்டப்பட்டு சாமியாக இருக்கும். ஆனால் என்ன மந்திரம் சொல்லப்படுகிறது என்று பாருங்கள். ஆயிரம் கண் கொண்டவளே. முடிவற்றவளே. ஆற்றல் வடிவானவளே. அறியப்படவே முடியாத பெரும் சக்தியே…

    இதுதான் இந்து வழிபாட்டுமுறை. அறியப்படாததை  அறியபப்ட்ட ஏதேனும் ஒரு வடிவில் வழிபடுவது. இவ்வாறு உருவான பல தெய்வ வழிபாடுகள் பொதுவாக ஆறு மதங்களாக தொகுக்கப்பட்டன

    சிவனை வழிபடுவது சைவம். அதற்குள் பல வழிபாடுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல விஷ்ணுவை வழிபடுவது வைணவம். சக்தியை வழிபடுவது சாக்தேயம். முருகனை வழிபடுவது கௌமாரம். கணபதியை வழிபடுவது காணபத்யம். சூரியனை வழிபடுவது சௌரம்.

    இவற்றில் சைவமும் வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தன. சாக்தம் கேரளத்திலும் வங்காளத்திலும் மட்டும் நீடித்தது. மற்ற மதங்களில் காணபத்யமும் கௌமாரமும் சைவத்தில் இணைந்தன. சௌரம் வைணவத்தில் கலந்தது.

    பெருமதங்கள் பக்தியை முதல் தளத்தில் முன்வைக்கும். சைவ மதம் சிவ வழிபாட்டையே முதல் தளத்தில் சொல்லும். ஆனால் உச்சிக்குச் சென்றால் அது பேசுவது சைவ சித்தாந்தமாக இருக்கும். அந்த சிந்தனைகள் நம் பல்லாயிரம் வருட மரபில் இருந்து உருவானவையாக இருக்கும்

    ஒரு சாதாரணமான பாடலிலேயே கூட நாம் உயர்தத்துவமும் பக்தியும் கலந்திருப்பதைக் காணலாம். சகுண பிரம்ம வழிபாட்டில் நிர்குண பிரம்ம வழிபாடு கலந்திருக்கக் காணலாம்.

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவுலாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

    முதல்வரியில் நிர்குண பிரம்மம். ஞானத்தால் உணரப்படும் தத்துவார்த்தமான கடவுள். உலகையே உணர்ந்தாலும் உணர முடியாதவன். அடுத்த வரி சகுண பிரம்மம். புராண சித்திரம். நிலவு உலாவிஅ நீர் மலிந்த கூந்தல் கொண்டவன். அதற்கடுத்தவரி மீண்டும் தத்துவ உருவகம். அலகில்லா- எல்லையற்ற- சோதியானவான். அடுத்த வரி மீண்டும் புராணம். அம்பலத்தில் ஆடுபவன்.

    இவ்வாறு இரு வழிகளும் நம் மரபில் மிக இணைந்து ஒரு அழகிய முரணியக்கத்தை நிகழ்த்தியுள்ளன.
    இந்த மரபுதான் இந்து ஞான மரபு என்று சொல்லபப்டுகிரது. இது வெறும் மத வழிபாடு மட்டும் அல்ல. இதில் தத்துவம் உள்ளது. அழகியல் உள்ளது. இலக்கியம் உள்ளது. உங்களுக்கு மத நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட இதுவே உங்கள் பல்லாயிரம் ஆண்டுக்கால சிந்தனை மரபு. பல்லாயிரம் ஆண்டுக்கால அழகியல் மரபு.  நீங்கள் நாத்திகரானாலும் இதில் உங்களுக்கு வேர் உண்டு.

    அந்தவேரில் இருந்ந்தே நீங்கள் அசலாக முளைக்கமுடி யும். அப்போதே நீங்கள் புதிகாக சிந்திகவும் முடியும்.மரபில்லாமல் சிந்தனை இல்லை. சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைபவை ஊகங்கள். Hypothesis-   அவற்றை உருவாக்குவது வாழ்க்கைத்தரிசனம்.பிரபஞ்ச தரிசனம். அவை பண்பாட்டால் உருவாக்கபப்ட்டு நெடுங்காலமாக மெல்லமெல்ல வளர்ந்ந்து வந்தவையாகவே இருக்கும்.

    நாம் காணும் மொத்த மேலைச் சிந்தனையும் கிரேக்க மரபு அல்லது செமிட்டிக் மரபு என்ற இரு பெரும் மரபின் வளர்ச்சி நிலையே. நம் மரபு அவற்றுக்கு இணையானதோ மேலானதோ ஆன ஒரு பெரும் செல்வம். அந்தச்செல்வத்தை நம் மொழியில் நம் வாழ்க்கையில் வைத்திருக்கிறோம். ஆனால் கற்காமல் உதாசீனம் செய்கிறோம்

    எதிர்காலத்திலாவது இந்நிலை மாற வேண்டும்

    மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 6, 2009 .

    தொடர்புடைய பதிவுகள்

    சங்கரர் பற்றி மீண்டும்

    $
    0
    0

    sankarar
    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

    கடந்த நான்கு வருடங்களாக உங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். தங்களது பதிவுகளில் என்னை மிகவும் ஈர்ப்பது இந்தியத் தத்துவ மற்றும் ஞான மரபு பற்றியவைதாம். தமிழ்நாடு இன்றிருக்கும் சூழலில் அறிவார்ந்த நிதானமான வாதம் என்பதே தமிழகத்தில் வழக்கொழிந்துபோய்விட்ட நிலையில் நீங்கள் செய்து வருகிற அறிவுப்பணி உண்மையில் தமிழகம் செய்த மஹா பாக்கியமாகும்.

    ஆதி சங்கரர் பற்றிய தங்களது சில பதிவுகளை அண்மையில் படித்தேன். பல சங்கரர்கள் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். சனாதனி என்ற முறையில் சில மாற்று வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன். சங்கரர் ஏன் ஒருவராக இருந்திருக்க முடியாது என்று எனது சொந்த நம்பிக்கையால் அல்ல, (தனிப்பட்ட முறையில் சங்கரர் ஒரே சங்கரர்தான் என்றே நம்புகிறேன். பல சங்கரர்கள் இருப்பதாக நீங்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்தாலும் கவலையில்லை, அவர்களும் அந்த ஆதி சங்கரரின் அம்சமே என்றே உறுதியாக நம்புகிறேன். ஆகவே நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு) எனக்குத் தெரிந்த சில தர்க்கங்களின் அடிப்படையிலேயே விவாதிக்கிறேன்.

    எனது முதல் கேள்வி:

    ஞான மார்க்கத்தை உபதேசித்தவரும் சடங்குகளை வகுத்தவரும் ஏன் ஒரே ஆளாக இருக்க முடியாது?

    சநாதன மதத்தின் சிறப்பு அதன் பன்முகத்தன்மை மட்டுமல்ல, அதற்குள்ளே இருக்கிற எதிரெதிர் துருவங்களாகக் காணப்படும் கருத்தாக்கங்கள். மேற்கத்தியர்களால் இதை ஜீரணிக்கவே முடியாது.

    அவர்களுக்கு இதை சமாளிக்கத் தெரிந்த ஒரே வழி : இது வேவ்வேறு காலகட்டத்தில் செய்யப்பட்டது, இடைச்செருகல், வேவ்வேறு ஆளால் எழுதப்பட்டது, இவரும் அவரும் வேறு என்று சிக்கலான கேஸைப் போலீஸ் இழுத்து மூடுவதுபோல் முடித்து விடுவதுதான்.

    இந்திய ஞான மரபின் வாசல் என்று சொல்லத்தக்க கீதை- அவ்வளவு தத்துவங்களையும் உள்ளடக்கிய கீதையே கர்மம் செய் என்று அர்ஜுனனை முன்வைத்து உபதேசித்து அதன்மூலம் சடங்குகள் இன்றியமையாதவை என்று நமக்கு வலியுறுத்தத்தானே?

    தாங்கள் சொல்வதில் ஒன்று உண்மை. ஆதி சங்கரர் புத்த, சமண சமயங்களை விட அதிகம் எதிர்த்தது பூர்வ மீமாம்ஸகர்களையே. ஆனால் அதற்காக அவர் வேதம் வேண்டாம், சடங்குகள் வேண்டாம் என்று கூறியதாக இதற்குப் பொருள் கொள்வது தவறென்று நினைக்கிறேன். பூர்வ மீமாம்ஸகர்களை அவர் குறிப்பாக எதிர்த்தது ஒரு அம்சத்தில் மட்டுமே. அதாவது:

    கர்மங்கள் கர்மங்களுக்காகவே; கர்மங்கள் தாமே பலனைத் தருகின்றன, ஈஸ்வரன் என்று ஒருவன் தேவையே இல்லை என்பது சங்கரர் காலத்தில் வாழ்ந்த அடிப்படைவாத (!?) பூர்வ மீமாம்சகர்களது Extreme puritan வாதம்.

    கர்மங்கள் ஈஸ்வரப்ரீதிக்காகவே. கர்மங்கள் தாமே பலன் தருவதில்லை, பலன் தர ஈஸ்வரன் உண்டு, சடங்குகளின் இறுதி நோக்கம் அந்த ஈஸ்வரனை அடைவதாகவே இருக்க வேண்டும் என்பது சங்கரரது வாதம்.

    ஆனால் அதே நேரம் அந்த ஈஸ்வரனுக்கு நான் சொல்கிற ஒரே ரூபம்தான் என்று பிடிவாதம் பிடித்து மற்றொரு Extreme நிலையில் நின்ற அடிப்படைவாதிகளையும் பலி போன்ற பூஜை முறைகளை மேற்கொண்டவர்களையும் கண்டித்தார். ஈஸ்வரனை ஆறு ரூபங்களில் வழிபட ஆறு மதங்களையும் சௌம்யமான பூஜை முறைகளையும் வகுத்தும் கொடுத்தார். அதாவது ஈஸ்வரன் தேவையே அல்ல என்ற தரப்புக்கும் ஒரே ஈஸ்வரன், அது நான் சொல்கிற வடிவம்தான் என்ற தரப்புக்கும் சமநிலை உண்டாக்கவே அவர் வாழ்நாள் முழுதும் உழைத்ததும் சுற்றியலைந்ததும் வாதப்பிரதிவாதங்கள் செய்ததும். இந்த சமநிலைக்காக, சமரசத்துக்காக இரு வெவ்வேறு நிலைகளில் அவர் நின்று பேசியதை உண்மையில் முரண்பாடு என்று சொல்வது கூடத் தவறுதான்.

    சங்கரர் கர்மங்களின் நோக்கம் மற்றும் இயல்பு பற்றித்தான் பூர்வ மீமாம்சகர்களுடன் முரண்பட்டாரே தவிர கர்மம் வேண்டுமா வேண்டாமா என்றல்ல. கர்மாக்களே போதும், மோக்ஷம், சந்நியாசம் எதுவும் வேண்டாம் என்று அவர்கள் ஞான காண்டத்தை நிராகரித்ததை எதிர்த்தாரே தவிர அவர் தாம் கர்ம காண்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவில்லை. அவர் வலியுறுத்தியது வேதம் பற்றி Wholistic approach வேண்டும் என்பது. வேதத்தின் எந்தப் பகுதியும் தேவையற்றதல்ல, எல்லாவற்றையும் ஒரு நடைமுறைக்கு உகந்த சட்டகத்துக்குள் பொருத்தி வகுக்க வேண்டுமென்பதே அவரது Mission. மோக்ஷமும் சந்நியாசமும் வேண்டாம் என்றால் உபநிஷதங்கள் எல்லாம் பொருளற்றதாகிவிடும் அதாவது வேதங்களின் ஒரு பகுதியே ஊனமாகிவிடும் என்பதே அவரது நிலைப்பாடு. அப்படிப்பட்டவர் சடங்குகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்து கர்மகாண்டம் முழுவதையும் பொருளற்றதாக்க அனுமதித்திருப்பாரா?

    சங்கரர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை (தங்களது மற்றொரு கட்டுரை- வாசிப்பின் நாட்டிய சாஸ்திரத்தில் நீங்கள் கூறியுள்ள) தெரிதாவுக்கு நேர்ந்ததுடன் ஒப்புநோக்கலாம். எழுத்தாளனின் மரணம் பற்றிப் பேசிய தெரிதாவுக்கு இந்தியர்களால் நடந்ததுதான் சடங்குகளின் நோக்கம் பற்றிப் பேசிய சங்கரருக்கு வெளிநாட்டவர்களால் நடந்தது.

    அடுத்த விஷயம், ஸ்தோத்திர நூல்கள்.

    தத்துவங்களை நிலைநாட்டியவர் ஸ்தோத்திர நூல்கள் செய்திருக்க முடியாது என்ற வாதம். ஞான மார்க்கம் என்பது சிலரால் மட்டுமே முடிந்த விஷயம். மற்ற கோடானுகோடி சாதாரண ஜனங்களை எப்படி மதத்துக்குள் accommodate செய்வது? அவர்கள் மதத்திலிருந்து அந்நியப்பட்டுப் போய்விடக்கூடாதே, அவர்களுக்கென்று ஏதேனும் மத நடவடிக்கைகளைத் தர வேண்டுமே என்பதற்காகவே ஒரே ப்ரம்மம், ஞானம் என்ற நிலையிலிருந்து கீழிறங்கிவந்து பிரம்மத்தின் அம்சமான ஒரு இறை உருவத்திடம் வெளியிலிருந்து பக்தி செய்ய உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே ஸ்தோத்திர நூல்களை அவர் செய்தார். மடங்கள், கோவில் வழிபாடுகளை வகுத்தார்.

    உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் அவரும் கடைசீல பக்திக்கு வந்துட்டார் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அது தவறு. அவர் எங்கும் போகவுமில்லை, வரவுமில்லை. வேவ்வேறு நிலையிலிருக்கிற உபாசகர்களுக்கு அவரவருக்கான மார்க்கங்களைக் காட்டினார், அவ்வளவே. ஞானத்தை விழைபவர்களுக்கு செல்வம் மாயை (அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்) என்றவர் உலக வாழ்வை வாழ்ந்தாக வேண்டிய நிலையிலுள்ள ஒருவருக்குக் கனகதாராஸ்தோத்திரம் செய்து தங்கமழை பொழிய வைத்தாரென்றால் அதை என்னாலும் அவரை வழிபடும் பல கோடிப் பேராலும் எந்தக் குழப்பமும் இன்றி ஏற்றுக்கொள்ள முடியும். 1000 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படித்தான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம்.

    இந்த முரண்பாட்டிலுள்ள உள்ளார்ந்த அழகை ஒரு வைதீக மதத்தவரால் –(ஏன், சமண, பௌத்தர்களாலும் கூட) மிக எளிதாக ஏற்றுக்கொண்டு புரிந்துகொள்ள முடியும்- அவர் நடைமுறையில் மதம் (அ) தத்துவம் பற்றிய அறிவே இல்லாதவராக இருந்தால்கூட எடுத்துச் சொன்னால் உடனே புரிந்துகொள்ள முடியும். என்னதான் நான்கு வேதங்களையும் உபநிஷதங்களையும் தத்துவங்களையும் கரைத்துக் குடித்தாலும் வெளிநாட்டவரால் இந்த மதத்துக்குள் இருக்கும் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெவ்வேறு காலம், வெவ்வேறு ஆள் பல்லவிதான்.

    உதாரணமாக ஒன்று சொல்கிறேன். என் தந்தை ஒரு கணிதப் பேராசிரியர். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என் அண்ணன் B.Sc கணிதம் படித்துக்கொண்டிருந்தார். படிக்கும்போது இருவரும் அப்பாவுக்கு இரு புறமும் அமர்ந்திருப்போம். என் அண்ணன் கணக்குப் போட சிறிது தாமதமானால் என்னடா, எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பே? எல்லாத்தையும் மனசாலே பண்ணினா லேட் ஆகும், சட்டுன்னு கால்குலேட்டரால போடுடா! என்பார் பொறுமையில்லாமல். அதே நேரம், நான் கால்குலேட்டரைத் தொட்டாலே டென்ஷனாகிவிடுவார். (எனக்கு வர்க்க மூலம் கண்டு பிடிப்பதில் எப்போதும் தகராறு. அப்பா கொஞ்சம் அசந்தால் நைஸாக அண்ணனிடமிருந்து கால்குலேட்டரை உருவி அதிலயே போட்டுவிடுவேன்.) என் பக்கம் திரும்பி பப்ளிக் எக்ஸாம்ல உனக்கு யார் கால்குலேட்டர் தருவா? என்று கத்துவார். ஒரே கணிதம், ஒரே வீட்டில் உடன்பிறந்தவர்கள் படிக்கும்போது (B.Scக்கு arithmetic ability முக்கியமல்ல. Concept தான் முக்கியம். பரீட்சையில் கால்குலேட்டர் உபயோகிக்கலாம். ஆனால் பத்தாம் வகுப்பு பரீட்சையில் கால்குலேட்டருக்கு அனுமதி கிடையாது என்ற காரணத்தால்) இரு விதமான நிலைகளை ஒருவர் எடுக்க வேண்டியிருந்தால் என்ன பொருள்? என் அண்ணா B.Sc படித்த காலம் வேறு, நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வேறு என்பதா? அந்த கணிதப்பேராசிரியர் என்பவர் ஒரே ஆள் அல்ல, இரண்டு நபர்கள் என்பதா?

    அதுபோல் இரு வேறு வர்க்கங்களுடைய ஆன்மீக நிலைகள் மற்றும் தேவைகளைக் கணக்கில் கொண்டு ஞானத்தை போதித்தவர் பக்தி ஸ்தோத்திரங்களும் செய்யக் கூடாதா?

    மூன்றாவது விஷயம் மேற்கத்தியர்கள் சங்கரர் ஒரே நபரல்ல என்பதற்கு ஆதாரங்கள் தேடக் காரணம் அவர்கள் வேதத்தை உபநிஷதங்களுக்கு விரோதமாகப் பார்த்தது.

    ஆனால் எந்த ஒரு சநாதனிக்கும் வேதமும் உபநிஷதமும் ஒன்றுக்கொன்று விரோதமாக அல்ல, முரண்பாடாகக் கூடத் தோன்றுவதில்லை. அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லை என்பதற்குச் சான்று ஆயிரக்கணக்கான வருடங்களாக பாடசாலைகளில் ஒரே நபர்களால் ஒன்றாகத்தானே கற்றுத்தரப்படுகின்றன? அது மட்டுமல்ல உபநிஷதுக்கள் மொத்தம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஆனாலும் எதுவும் தனியாக அந்தரத்தில் நின்றவை அல்ல. ஒவ்வொரு உபநிஷதமும் ஒரு வேத சாகையுடன் சேர்ந்ததாகவே அதற்குச் சொந்தமானதாகவே அதன் ஒரு அங்கமாகவே இருக்கின்றது. மேற்கத்தியர்களின் முக்கியமான Fallacy தனியாக வேத காலம் ஒன்று இருந்தது, அது முடிந்து உபநிஷத் காலம் வந்தது என்றது. இது நமது பாடப்புத்தகங்கள் உட்பட எல்லாவற்றிலும் அப்படியே பதிவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    ஆனால் சநாதன மரபில் வந்தவர்கள் வாதப்படி எந்த உபநிஷதும், வேத காலம் முடிந்துவிட்டது, வாங்கப்பா இப்போ உபநிஷதம் எழுதலாம் என்று எழுதப்பட்டதல்ல. ஒரு வேத சாகையை முழுதும் கற்றுத் தேர்வதென்பது அதற்கான உபநிஷதத்தைக் கற்பதையும் உள்ளடக்கியதே. எல்லாம் ஒரே நேரத்தில் (ரிஷிகள் தெய்வீக சக்தியால் கண்டுணர்ந்தது என்பது ஆய்வு நோக்கில் பார்க்கும்போது ஒப்புக்கொள்ளமுடியாவிட்டாலும் ஒரே காலத்தில் ஒரே நபரால் அல்லது ஒரு குழுவால்) எழுதப்பட்டிருக்கலாம் என்று எடுத்துக்கொள்வதில் என்ன கஷ்டம்?

    வேத காலத்துக்குப்பிறகே உபநிஷத காலம் என்பதற்கு மொழியியல் தவிர வேறு சான்று இருக்க நிச்சயம் வாய்ப்பு இல்லை. அந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு நமது பாரம்பரியத்தின் வாதத்தை முழுதாக நிராகரிக்க வேண்டியதன் கட்டாயம் என்ன? மொழி நடை மாறுபட்டு இருந்தால் மட்டும் ஒரு எழுத்து வெவ்வேறு காலத்தில் அல்லது வெவ்வேறு நபரால் எழுதப்பட்டதாகிவிடுமா? தீவிர இலக்கியவாதியான ஒரு எழுத்தாளர் குழந்தைகளுக்கான இலக்கியமும் படைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதன் நடை முற்றிலும் வேறு மாதிரிதானே இருக்கும்? அதற்காக இரண்டும் எழுதப்பட்ட காலமே வேறு, அந்த நபரே இரண்டு ஆள் என்பதா?

    ஆகவே உபநிஷதத்தை ஆதரித்தால் வேதத்தை எதிர்த்தாக வேண்டும் உபநிஷதங்களுக்கு பாஷ்யம் எழுதியவர் வேத சடங்குகளுக்கு நிச்சயம் விரோதமானவராகத்தான் இருப்பார் என்பது மேற்கத்தியர்களின் (கிறிஸ்துவத்தின் ஒற்றைப்படைத்தன்மையால் விளைந்த) கற்பனைக் குறைபாடு மற்றும் இந்திய ஞானம் பற்றிய புரிந்துகொள்ளலில் உள்ள பிரச்சினையால் (சிலருக்கு வேண்டுமென்றே நமது மதத்தின் இரு கூறுகளை ஒன்றுக்கொன்று விரோதமானவையாகக் காட்டி அவற்றை சிதைக்க வேண்டுமென்ற உள் நோக்கத்தாலும்) வலிந்து திணிக்கப்பட்ட கருத்து என்பது என் அபிப்பிராயம்.

    உண்மையில் சங்கரர் ஒரே ஆளா இல்லையா வேத காலமும் உபநிஷத காலமும் வெவ்வேறா என்பது பெரிய பிரச்சினை அல்ல, அதற்குப்பின் இருக்கிற வேத உபநிஷத்துக்களைப் பற்றிய மேற்கத்தியத் தாக்கத்தால் ஏற்பட்ட அரைகுறைப்பார்வையே பிரச்சினை.

    உங்களது விஷய ஞானத்துக்கு முன் எனக்குத் தெரிந்தது சொற்பமே. மேற்கண்டவற்றில் பல தகவல்கள் நீங்கள் அறிந்ததாகவே இருக்கும். உங்களுக்குத் தெரியாததை நான் புதிதாகச் சொல்லிவிடவில்லை. தெரிந்த தகவல்களின் அடிப்படையில் எனது தர்க்கங்களை மட்டுமே முன்வைத்திருக்கிறேன்.

    சநாதன மதத்தில் நம்பிக்கை உள்ளதால் அந்தக் கருத்துகளில் ஊறி அவற்றை உள்வாங்கிக்கொண்டதால், என்னால் எளிமையாக ஒப்புக்கொள்ள முடித்ததால், அவர்களது தரப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே தர்க்கம் செய்கிறேன்.

    மேற்கண்ட கருத்துகளில் அநேகம் காஞ்சிப்பெரியவர் தெய்வத்தின் குரலில் கூறியுள்ளவையே. தெய்வத்தின் குரல் நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். படிக்காவிட்டால் நீங்கள் அவசியம் படித்தே ஆக வேண்டும். குறிப்பாக சங்கர சரிதம் பற்றிய ஐந்தாம் பாகம். அத்வைதத்துக்கு உள்ளிருந்தே அதைப்பற்றி எழுதியவர்தானே என்று அவரது கருத்துகளை சுலபமாக நிராகரித்துவிட முடியாது. இன்றைய Socalled நவீன நடுநிலை முற்போக்கு ஜனநாயகவாதிகள் பலரைவிட மிகப்பொறுமையாகப் பல தரப்புகளையும் அலசி ஆராய்ந்தவர் பெரியவர்.

    இந்து மதம் என்பதே அதை அரைகுறையாகப் புரிந்துகொண்ட வெளிநபர்களால் வைக்கப்பட்ட பெயர் என்பதாலும் இந்துத்துவ அரசியலின் கருவியாக ஆகிவிட்டதாலும் எனது சார்புநிலையைக் காட்ட சநாதனி என்ற சொல்லை உபயோகித்தேன். இந்து, சநாதனி இரண்டுமே தமிழ்நாட்டில் கெட்ட வார்த்தை ஆகி விட்ட நிலையில் அவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து அவர்களது தரப்புக்கு செவிகொடுக்கவும் தேவைப்பட்டால் எடுத்துச் சொல்லவும்கூடிய விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரில் நீங்கள் இருப்பதாலேயே இந்தக் கடிதத்தை எழுதத் துணிந்தேன். கடிதம் நீண்டு உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக்கொண்டதைப் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்,

    பூர்ணம்

    அன்புள்ள பூர்ணம் அவர்களுக்கு

    இவ்வினாக்களுக்கு நான் விரிவாகவே எழுதிவிட்டேன்

    சங்கரப்புரட்சி

    சங்கரமதம் அத்வைதம் மாயாவாதம்

    தூய அத்வைதம்

    சங்கரம்


    பக்தியும் சங்கரரும்

    இவ்விவாதங்களில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதைப்பொறுத்து விவாதம் அமைகிறது. நம்பிக்கை சார்ந்து நிற்கிறீர்கள் என்று சொல்லிவிட்டபின் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அது விவாதித்து நிறுவவேண்டியது அல்ல.

    பொதுவாக சங்கரரே ஸ்தோத்திரங்களை எழுதினார் என வாதிடும் தரப்புகளில் இரு முக்கியமான குரல்கள் உள்ளன. ஒன்று எதையும் எப்படியும் பக்திக்குள் கொண்டுவந்தாகவேண்டும் என்னும் பிடிவாதம் கொண்டகுரல். பக்தி அன்றி எல்லாமே தேவையற்றவை, தத்துவம் பக்தியை ஆதரிப்பதாக அமையாவிட்டால் அது நாத்திகம் என்னும் நம்பிக்கை கொண்டது அது

    இன்னொன்று இந்துமதம் என்னும் அமைப்புக்குள் சங்கரரை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றால் அவரை வழிபாடுகளுடன் பிணைத்தாகவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது. தூய அத்வைதம் ஒரு தத்துவத்தரப்பாக நிலைகொள்கையில் மதத்தைவிட்டு வெளியே சென்றுவிடும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அது ஓரளவு உண்மையும் கூட

    மூன்றாவது ஒரு தரப்பு உண்டு, அது பொருட்படுத்தவெண்டியது அல்ல. இன்றுள்ள மடங்களை சங்கரருடன் இணைத்துக்கொண்டு சாதிரீதியாக அவரை அடையாளப்படுத்தி சொந்தம் கொண்டாடுவது அது. வெறும் பிழைப்புப்பிராமணியம்.

    வரலாற்றுரீதியாக, மொழிரீதியாக ஆராய்பவர்கள் விவேகசூடாமணியும் சௌந்தரிய லகரியும் கொண்டுள்ள மொழிவேறுபாட்டை முக்கியமாகச் சுட்டிக்காட்டி அந்த சங்கரருக்கு காலத்தால் மிகப்பிந்தியவர் ஸ்தோத்திரங்களை எழுதியவர் என வாதிடுகிறார்கள்.

    நான் அந்த வரலாற்று ஆய்வாளார்களின் குரலை கருத்தில்கொண்டு சங்கர வேதாந்தத்தைப்புரிந்துகொள்ள முயல்கிறேன். கிடைப்பவற்றில் இருந்து ஒரு சங்கரரை தொகுத்துக்கொள்ள முயல்வதில்லை

    சங்கரர் போன்ற ஒரு வேதாந்தி தோத்திரநூல்களை எழுதியிருக்கமுடியுமா என்றால் முடியும், அதுவும் வேதாந்தத்துக்கு உட்பட்டதே. நடராஜகுரு அதைத்தான் சொல்கிறார். அழகுணர்வு அறிவுக்கூர்மைக்கு எதிரானதல்ல. பித்துநிலை தர்க்கத்துடன் பிசிறின்றி முயங்கமுடியும்

    ஆனால் தோத்திரங்களை எழுதியவராக எடுத்துக்கொண்டே ஆகவேண்டும் என்னும் பிடிவாதம் அத்வைதத்தின் தூய அறிவுசார்ந்த நிலைபாட்டை மறுக்கிறது. மீண்டும் அதை எளிய பக்தி நோக்கி திசைதிருப்புகிறது. அதை என்னால் ஏற்கமுடியாது

    ஜெ

    தொடர்புடைய பதிவுகள்

    • தொடர்புடைய பதிவுகள் இல்லை

    ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54

    $
    0
    0

    பகுதி ஐந்து : தேரோட்டி – 19

    இளைய யாதவரும் ஸ்ரீதமரும் அறைவிட்டு அகன்றபின் வாயிலை மூடி மெல்ல அசைந்த திரையை சிலகணங்கள் அர்ஜுனனும் சுபத்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “போர்க்கலை கற்பதில் இளவரசிக்கு ஆர்வம் உண்டா?” என்றான். எத்தனை எளிதாக முற்றிலும் பொருட்டில்லாத ஒன்றை பேசி உரையாடலை தொடங்கமுடிகிறது என வியந்தான். ஆனால் எளிய மனிதர்கள் கூட அதை அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    “எனக்கு விற்கலையில் மட்டும் ஆர்வமில்லை” என்றாள் சுபத்திரை. “அது அனைத்தையும் வெறும் இலக்குகளாக மாற்றிவிடுகிறது.” புன்னகையுடன் “இலக்குகளாக மாறுவதில் என்ன பிழை?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஒரு மானை பன்னிரு நரம்புச்சுழிகளாக மட்டுமே அது பார்க்கிறது. மனிதன் நூற்றெட்டு வர்மமுனைகள் மட்டுமே” என்றாள் சுபத்திரை. “ஆகவே நான் விரும்புவது மற்போரைத்தான். கதைப்போர் என்பது சற்று இரும்பு கலக்கப்பட்ட மற்போர்தான்.”

    “படை நடத்துவதும் வெல்வதும் உங்கள் கனவுகளில் இல்லையா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அதில் எனக்கு ஆர்வமுள்ளது. படைகொண்டு சென்று நாடுகளை வெல்வதற்காகவோ புரங்களை வென்று அரியணை அமர்ந்து ஆள்வதற்காகவோ அல்ல, இங்குள மக்கள்பெருக்கை எங்ஙனம் ஒரு விராட வடிவாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை அறிவதற்காக. அவர்களை வழிநடத்திச் சென்று விடுதலையின் நிறைவை அவர்களுக்கு அளிக்கமுடியும் என்பதற்காக” என்று சுபத்திரை சொன்னாள். “இளமையில் இருந்தே கதைப்போர் கலையை மூத்தவரிடமும் படைநடத்தும் கலையை இளையவரிடமும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.”

    அர்ஜுனன் புன்னகைத்தபடி “போர்சூழ்கைகளை நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதில் மிகப்பெரிய இடர் ஒன்றுண்டு. நாம் போர்களை நம் உள்ளத்தில் இடைவிடாது நிகழ்த்தத் தொடங்கிவிடுவோம். அவை நாம் நிகழ்த்தும் போர்கள் என்பதால் நாம் வென்றாக வேண்டியது முதல்தேவையாக ஆகிவிடுகிறது. அவ்வெற்றியிலிருந்தே அனைத்து போர்சூழ்கைகளும் திட்டமிடப்படுகின்றன. உண்மையான போர்சூழ்கை என்பது தோல்வியிலிருந்து தொடங்கி திட்டமிடப்படவேண்டும். எனென்றால் தோல்வி ஊழின் முகம். அத்தனை போர்களும் ஊழுடன் நிகழ்த்தப்படும் ஆடல்களே” என்றான்.

    “வெற்றியை எண்ணி எதையும் தொடங்கவேண்டும் என்பார்கள்” என்றாள் சுபத்திரை. “ஆம், அப்படி சொல்வதுண்டு. ஆனால் தோல்வியை எண்ணியே எதையும் நடைமுறை வாழ்வில் தொடங்குகிறோம். வெற்றியை மட்டும் எண்ணி நாம் தொடங்குவது பகற்கனவுகளில் மட்டுமே” என்றான் அர்ஜுனன். “மறுமுனையில் இருப்பது நாம் அறியமுடியாததும் எந்நிலையிலும் முற்றாக கடக்கமுடியாத பேருருக் கொண்டதுமான ஊழ் என்று அறிந்தவன் இத்தகைய உள ஓட்டங்களை முதிராத கன்னியரின் காமக்கனவுகள் என்றே எண்ணுவான்.”

    சுபத்திரையின் முகம் சிவப்பதைக் கண்டு அர்ஜுனன் வியந்து அவளை நோக்கினான். அவள் விழிகளை விலக்கி சாளரத்திற்கு அப்பால் தெரிந்த ஒளிமிக்க முற்றத்தை நோக்கியபடி “ஆம், நானும் அவ்வண்ணம் கனவுகளை கண்டதுண்டு. ஒருமுறை வேண்டுமென்றே நான் தோற்பதுபோல் கனவு கண்டேன். அப்போதுகூட தோல்வியிலிருந்து நான் மீண்டெழுவதே அக்கனவின் தொடக்கம் என்று உணர்ந்து சலிப்புற்றேன்” என்றாள்.

    ஆனால் அவள் அதை வேறெதையோ மறைக்கும்பொருட்டு சொல்கிறாள் என்று அவள் வெண்கழுத்திலிருந்து தோளுக்குப் பரவிய செம்மை அவனுக்கு சொன்னது. அறைக்குள் வந்த கணம் முதல் அவள் உடலை நோக்கலாகாது என்று அவன் தன் விழிகளுக்கு ஆணையிட்டிருந்தான். அதற்காக அவளுடைய வலது காது முனையில் தொங்கிய குழை மேல் தன் விழிகளை நட்டிருந்தான். ஆயினும் அவள் விழிகள் அவனைப் பார்க்காதபோது இயல்பாக அவன் பார்வை அவளுடைய பெரிய தோள்களையும் வெண் தந்தக் கைகளையும் அதில் ஓடிய நீலநரம்புப் பின்னல்களையும் பார்த்து மீண்டன. அவளுடைய தோள்கள் தன் விழி மூடினாலும் கண்ணுக்குள் நிற்பதை உணர்ந்தான்.

    அவள் எப்போதும் அவனை நேர்விழியால்தான் நோக்கினாள். ஆனால் அதற்கு ஓர் அளவு வைத்திருந்தாள். யாதவர்களைப் பற்றி அவன் பேசியபோது அறியாமல் நெடுநேரம் அவன் முகத்தை நோக்கிவிட்டாள். அதன்பின் அவள் பாவனைகள் மாறிவிட்டிருந்தன என்பதை அவன் அப்போது புரிந்துகொண்டான். அவன் இரண்டாகப் பிரிந்திருந்தான். ஒருவன் கண்முன் திகழ்ந்த அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். இன்னொருவன் கரந்து விளையாடும் அவளை அள்ளிப்பற்ற முயன்றுகொண்டிருந்தான்.

    சுபத்திரை நாவின் நுனியால் இதழ்களை மெல்ல வருடியபடி ஏதோ சொல்ல எழுவதுபோல வாயசைத்தாள். தலையில் பால்குடத்துடன் தடிப்பாலம் கடந்துசெல்லும் ஆயர்மகளின் முகம் அது என தோன்றியது. அவர்கள் இருவருக்கும் நடுவே அறியமுடியாத ஏதோ ஒன்று வந்து தேங்கியது போல. பிசின் போன்ற ஒன்று. நீரென விலக்கவோ திரையென கிழிக்கவோ முடியாதது. தொடும் கைகளில் எல்லாம் கவ்விப் பரவும் ஒன்று. எட்டு வைத்து பின்னகர்ந்து அதை விட்டு விலகிவிட முயன்றான். ஆனால் எந்தத்திசையில் நகர்ந்தாலும் அது அணுகுவதாகவே தெரிந்தது.

    எத்தனை எளிதாக ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே அந்த புரிந்து கொள்ளமுடியாத ஒன்று நிகழ்ந்து விடுகிறது என்று எண்ணியபோது உள்ளம் முடிவிலி ஒன்றைக் கண்டு திகைத்தது. அவள் மெல்ல அசைந்தபோது அணிகள் எழுப்பிய ஒலி ஒரு சொல்லென அவனை தொட்டது. எண்ணங்கள் திசையழிந்து அலைந்துகொண்டிருந்தபோது சட்டென்று முதிரா பெண்ணின் கனவுகள் என்று அவன் சொன்ன சொல்தான் அவளை சிவக்க வைத்தது என்று அவன் உணர்ந்தான். அகம் படபடக்கத் தொடங்கியது. எதைச் சொல்ல எண்ணி எதை சொல்லியிருக்கிறோம் என்று வியந்தான்.

    அங்கிருந்து திரும்பிச் சென்றுவிடலாம், பிறிதொரு தருணத்தில் அச்சந்திப்பை நீட்டலாம் என்று எண்ணினான். அவ்வெண்ணத்தை அவன் உடல் அறிவதற்குள்ளேயே அவள் அறிந்ததுபோல் திரும்பி “இன்னும் சில நாட்களில் என் மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது” என்றாள். தன் உடலெங்கும் குருதிக்குழாய்கள் துடிப்பதை அறிந்தபடி “ஆம், அறிவேன். இன்னும் ஒருமாதம். வைகானச பூர்ணிமை” என்றான் அர்ஜுனன். அவள் மேலும் ஏதோ சொல்ல விரும்பி அதை சொல்லாக உணராமல் தவித்ததுபோல உதடசைத்தாள்.

    தாழ்ந்த குரலில் “முழுநிலவு நாளில்” என்றாள். பொருளில்லாத சொல் பொருளை அந்தத் தருணத்திலிருந்து அள்ளிக்கொண்டது. “ஆம்” என்றான் அர்ஜுனன். “மதுராவின் இளவரசி என்று என்னை சொல்கிறார்கள். எனவே எனக்கு ஷத்ரிய முறைப்படி மணத்தன்னேற்பு ஒருங்கு செய்திருக்கிறார்கள்” என்றாள் சுபத்திரை. ஆர்வமில்லாமல் எதையோ சொல்பவள் போலிருந்தது முகம். ஆனால் குரல் கம்மியிருந்தது.

    “அது நன்றல்லவா? உங்களுக்கு உகந்த ஆண்மகனை நீங்கள் கொள்ள முடியுமே?” என்றான் அர்ஜுனன். சினத்துடன் அவள் திரும்பியபோது தலையில் சூடிய முத்துச்சரம் காதில் சரிந்து கன்னத்தில் முட்டி அசைந்தது. “இல்லை. ஷத்ரியப் பெண்கள் போல தளைகளில் சிக்குண்டவர்கள் வேறில்லை. இந்த மணத்தன்னேற்பில் அரசர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அதில் எவர் வெல்ல வேண்டுமென்பதையும் மதி சூழ்கையாளர்கள் முன்னரே முடிவு செய்கிறார்கள்” என்றாள்.

    அவளுடைய சீற்றம் எதன் பொருட்டென்று அவனுக்கு புரியவில்லை. ஏன் அப்போது அதைச் சொல்கிறாள் என்றும். “எனக்கென தேர்வு எதுவுமில்லை. தன் எளிய விழைவுடன் ஆண்மகனை தேடிச் செல்லும் மலைக்குறமகள் கொண்ட உரிமையின் ஒரு துளிகூட எனக்கில்லை” என்றாள் சுபத்திரை. அவள் மூச்சு எழுந்தடங்குவதை அவன் நோக்கி நின்றான். அப்போது அவன் என்ன சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறாள் என எண்ணினான். ஒன்றும் தோன்றவில்லை.

    அவன் உள்ளத்தில் குருதி விடாய் ஒன்று எழுந்தது. உதடுகளில் அது புன்னகையாக கசியாமல் இருக்கும் பொருட்டு தன்னை இறுக்கிக்கொண்டு விழிகளை அவள் விழிகள் மேல் நாட்டி “யாதவர் பேசுவதைக் கேட்டேன் இளவரசி. இம்மணத்தன்னேற்பு அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் தங்களை மணக்கும் பொருட்டே என்றனர்” என்றான்.

    முதுகில் சவுக்கடி விழுந்ததைப்போல அவள் முகத்தில் தோன்றி மறைந்த வலியைக் கண்டதும் அவன் உள்ளம் துள்ளியது. அதை மறைக்க பணிவு ஒன்றை முகத்தால் நடித்தான். “நான் பிழையாக ஏதும் சொல்லியிருந்தால் பொறுத்தருள்க இளவரசி” என்றான். சுபத்திரை “என் மூத்தவரின் ஆணை அது என்றால் அதுவே என் கடமை” என்றாள். முலைகளை சற்றே எழுந்தமையச் செய்த பெருமூச்சை அவளால் அடக்க முடியவில்லை.

    அர்ஜுனன் மேலும் வழுக்கும் விளிம்பை நோக்கி மெல்ல எட்டுவைத்துச் சென்று “அவர் அஸ்தினபுரியின் பேரரசர். ஒரு நாள் இப்பாரதவர்ஷத்தை ஒரு குடைக்கீழ் நின்று அவர் ஆள்வார் என்று சொல்கிறார்கள்” என்றான். அவள் அருவருப்பு கொண்டதுபோல முகம் சுளித்தாள். “உங்கள் குலம் அதை விரும்பக்கூடும்” என்று அர்ஜுனன் மேலும் சொன்னான். இல்லை என தலையசைத்த  சுபத்திரை அவன் கண்களை நோக்கி “நீங்கள் யோகியாயிற்றே, உங்கள் நோக்கில் சொல்லுங்கள்! என்னை மணம் கொள்ளும் தகுதி கொண்டவரா அவர்?” என்றாள்.

    அர்ஜுனன் அந்த ஒரு கணத்தை பின்வாங்காமல் எதிர்கொள்ள தன் முழுப் போர்த்திறமையும் தேவைப்படுவதை உணர்ந்தான். “இல்லை” என்றான். ஆனால் அவன் குரல் சற்றே தழுதழுத்தது. “எவ்வகையிலும் அவர் தங்களுக்குரியவரல்ல. அவர் தங்களை மணம் புரியப்போவதில்லை என்று சொல்கிறார்கள்” என்றான். அவள் முகம் அறியாது மலர்ந்ததைக் கண்டு அவனும் அறியாது புன்னகைத்தான்.

    “ஆம். என் உள்ளமும் அவ்வாறே சொல்கிறது. திரும்பத் திரும்ப அதையே என் அகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. அதை என் இளைய தமையனும் அறிவார் என்று தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. “எதன் பொருட்டு என்னை இங்கு ரைவத மலைக்கு அவர் வரச்சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் எவ்வகையிலோ இது என் மணத்தன்னேற்புடன் தொடர்புடையது என்று தோன்றியது.”

    அர்ஜுனன் “ஆம். மணத்தன்னேற்பு குறிக்கப்பட்ட பெண்கள் அரண்மனைவிட்டு வெளியே செல்லும் வழக்கமில்லை” என்றான். “வழக்கமில்லைதான். ஆனால் இங்கு ரைவதகர் முன் நான் ஆற்ற வேண்டிய நோன்பு உள்ளது என்று இளையவர் சொன்னபோது எந்தையோ மூத்தவரோ மறுக்கவில்லை” என்றாள். அவள் உள்ளம் எடையிழந்து மீள்வதை முகம் காட்டியது.

    அர்ஜுனன் “நீங்கள் எங்கு திரும்பிச் செல்கிறீர்கள் இளவரசி?” என்றான். “மதுராவுக்குத்தான். என் மணத்தன்னேற்பு நிகழ்வதற்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ளன. நான் அங்கிருந்தாக வேண்டும்” என்றாள் சுபத்திரை. “அங்கே ஆயிரம் சடங்குகள். குலபூசனைகள். நான் அங்கு வெறும் ஒரு பாவை.”

    அப்போது அவள் விழிகளைப் பார்த்த அர்ஜுனன் அவை அச்சொற்களுக்கு தொடர்பற்ற பிறிதொன்றை சொல்வதுபோல் உணர்ந்தான். தன் உள்ளம் கொள்ளும் இந்த பதற்றங்களும் குழப்பங்களும் வெறும் விழைவின் வெவ்வேறு நடிப்புகள்தானா என்று வியந்து கொண்டான். சுபத்திரை “நான் திரும்பிச் சென்றாக வேண்டும். ஆனால் மதுராவுக்குச் செல்வதை எண்ணும்போதே என் உள்ளம் மறுக்கிறது. இங்கே இளைய தமையனுடன் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் உடனே திரும்பி வரும்படி மூத்தவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றாள்.

    அதை ஏன் தன்னிடம் சொல்கிறாளென்று அர்ஜுனன் எண்ணினான். விடைபெறுவது போலவோ மீண்டு வருவேனென்று வாக்களிப்பது போலவோ அவள் அச்சொற்களை சொல்வதாகத் தெரிந்தது. அக்குரலில் இருந்த ஏக்கம் தன் உளமயக்கா என்ன? ஒரு கணம் தான் யார் என்று அவளுக்குத் தெரிந்துவிட்டதோ என்ற ஐயத்தை அவன் அடைந்தான். அவ்வெண்ணம் வந்ததுமே அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் திரும்ப எடுத்து கூர்நோக்கியது அவன் உள்ளத்தின் பிறிதொரு பகுதி.

    அதை அவள் எவ்வண்ணமோ உணர்ந்திருந்தாள். ஆகவே அதை பொருளில்லாச் சொற்களை அள்ளிப்போட்டு முழுமையாக மூடினாள். “இளவரசியாக இருப்பது பெரிய நடிப்பு. யாதவர்கள் இன்னும் அரசகுலமே ஆகவில்லை. அதற்குள் இத்தனை சடங்குகள், முறைமைகள், முகமன்கள். சிலநாட்களில் நான் சலிப்புற்று கிளம்பி மதுவனத்திற்கே சென்று மூத்ததந்தையரின் மைந்தர்களுடன் காட்டுக்குச் சென்று கன்றுமேய்க்கத் தொடங்கிவிடுவேன்.”

    பெண்கள் சிறியவற்றை பேசிக்கொண்டிருப்பதை விரும்புபவர்கள் என அவன் அறிந்திருந்தான். ஆனால் அது அவர்கள் தங்கள் உள்ளம் பொங்கிக் கொண்டிருப்பதை மறைக்கும்பொருட்டுதான். அந்தச் சிறிய பேச்சு அவர்களை இளமையானவர்களாக, கவலையற்றவர்களாக, பொறுப்புகளும் சுமைகளுமற்றவர்களாக காட்டுகிறது. ஆனால் அணுக்கமானவர்களிடம் மட்டுமே அவற்றை பேசுகிறார்கள். அவள் தன்னை எப்படி எண்ணுகிறாள்?

    அவளிடம் மேலும் நெருங்க வேண்டுமென்றும் அந்த மாறுதோற்றம் கலையாது அப்படியே விலகிவிட வேண்டுமென்றும் ஒரேசமயம் உள்ளம் எழுந்தது. அந்தத் தடுமாற்றத்தை உடல் தாளாததனால் சாளரத்தை நாடி அதன் விளிம்பில் கை வைத்து சரிந்தபடி “தங்களுக்கு உகந்த ஆண்மகன் எவரென்பதை எப்போதேனும் எண்ணியிருக்கிறீர்களா இளவரசி?” என்றான். அப்படி ஒரு நேரடிக் கேள்வியை அவளிடம் கேட்க அவன் எண்ணவில்லை. எழுந்து சென்ற அவ்வசைவால் அதுவரை உள்ளத்தில் குவித்திருந்த அனைத்தும் சிதற அது மொழியில் எழுந்துவிட்டது.

    அவள் ஒரு சிறு உளமாறுதலைக்கூட காட்டாது “இல்லை” என்றாள். ஏமாற்றத்தால் அவன் உள்ளம் சுருங்கியது. தாடியை நீவியபடி “விந்தைதான்” என்றான். “ஏன்?” என்றாள். “அப்படி எண்ணாத பெண்கள் இல்லை என நான் கேட்டிருக்கிறேன்.” அவள் “நான் அவ்வண்ணம் எந்த ஆண்மகனையும் பார்க்கவில்லை” என்றாள். தொலைவில் புயல் எழும் ஓசை போல் தன்னுள் சினம் எழுவதை அக்கணம் அறிந்தான். வேண்டுமென்றே சொல்கிறாளா? “அதாவது நேரில் பார்க்கவில்லை, இல்லையா?” என்று தொலைதூரத்து வெயில் முற்றத்தை பார்த்தபடி கேட்டான்.

    “ஆம். அத்தகைய தகுதி கொண்ட எவரையும் நான் கேட்டிருக்கவும் இல்லை” என்றாள். ஆம் வேண்டுமென்றேதான் சொல்கிறாள். நான் யாரென அறிந்திருக்கிறாள். “வெறும் புகழ்மொழிகளால் வீரர்களை கன்னியரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் சேடிப்பெண்கள். சூதர்களின் பாடல்களோ பொய்யில் புடமிட்டவை. அவற்றை நம்பி அந்த ஆண்மகன்மேல் காதல்கொள்வதில் ஒரு கீழ்மை உள்ளது. அவர்கள் என்னிடம் காதலை உருவாக்கமுடியும் என்றால் நான் யார்?”

    இல்லை, இவள் இங்கு சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் அவள் அறிந்த அர்ஜுனனைப்பற்றி. பாரதவர்ஷத்தின் பெண்கள் அனைவரும் காதல்கொண்டிருக்கும் ஒருவன் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்கிறாள். ஆனால் அதை அவள் அவனிடம் சொல்லவில்லை, அயலானாகிய சிவயோகியிடம்தான் சொல்கிறாள். ஆனால் அயலானிடம் சொல்வதென்பதே  ஓர் இழிவுதானே?

    அர்ஜுனன் தலை திருப்பி அவளை நோக்கி “மண்ணில் எவரும் தங்களுக்கு தகுதியற்றவர்கள் என்று எண்ணுகிறீர்கள் போலும்?” என்றான். அப்போது தன் முகத்தில் எழுந்த ஏளனச் சிரிப்பை தானே உணர்ந்து எத்தனை கீழ்மை தன்னுள் உறைந்துள்ளது என்று வியந்து கொண்டான். அந்தக் கீழ்மை இல்லாத ஆண்மகன் எவனுமிருக்கப்போவதில்லை.

    அவள் அவன் விழிகளை நோக்கி “அப்படி நான் எண்ணவில்லை. ஏனெனில் எனக்குரிய ஆண்மகன் புகழ் பெற்ற குடியில் உதித்திருக்க வேண்டுமென்று உண்டா என்ன? யாரென்றே அறியாத அயலவனாக ஏன் இருக்கக் கூடாது?” என்றாள். அர்ஜுனன் அவள் கண்களை நோக்கினான். அவள் அவனை அறியவில்லை என உறுதிப்பட்டது.

    “இவையெல்லாம் கற்பனைக்கே உகந்தவை” என்றான். “அறியாப்பெண்ணின் கனவுகள், இல்லையா?” என்றாள். அவள் அச்சொல்லால் குத்தப்பட்டிருக்கிறாள் என தான் உய்த்தறிந்தது எத்தனை உண்மை என அவன் எண்ணினான். சற்றே சீற்றத்துடன் “ஆம்” என்றான். “அறியா வயதில் பெண்கள் அவ்வாறு பலவகையாக எண்ணிக்கொள்கிறார்கள். இளைஞர்கள் வாளேந்தி புதுநிலத்தை வென்று பேரரசு ஒன்றை அமைப்பதைப்பற்றி கனவு காண்பதற்கு இதுவும் நிகர்தான்.”

    “ஏன்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “ஏன் இது உண்மையாக இருக்கமுடியாது?” அர்ஜுனன் “அறியாத மண்ணின் நாடோடியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்போகிறீர்களா? மேழி பற்றி வருபவனோ பொதி சுமந்து அலைபவனோ கன்றோட்டி காட்டில் வாழ்பவனோ கைபற்றினால் அவனுடன் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா தங்களால்?” என்றான்.

    “ஆம், இயலும்” என்றாள். “இயலுமா என்றே திரும்பத் திரும்ப என்னுள் கேட்டுக் கொண்டிருந்தேன். இயலும் என்ற ஒரு சொல்லை அன்றி வேறெந்த விடையும் என் உள்ளம் சொல்லவில்லை. வேறெதையும்விட அது எனக்கு எளிது. ஏனெனில் நான் இளவரசியல்ல. எளிய பெண். பெண் மட்டுமே” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கினான். இமைகள் தாழ்ந்திருக்கையிலும் பெண்விழிகள் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகின்றன! எதையெதையோ கடந்துசென்று அவள் இளமகளாக நின்றிருந்தாள். ஆண்மகன் மிகவிரும்பும் பெண்ணின் தோற்றம். முழுமையாக தன்னை படைக்க முற்பட்டவள்.

    “அவனை கண்டடைந்துவிட்டீர்களா?” என்றான். அவள் சொல்லப்போவதை எண்ணி அவன் உள்ளம் படபடத்தது. அவள் திரும்பி வாயிலை நோக்கினாள். அப்பால் காலடியோசை கேட்டது. “அதற்குள்ளாகவா சித்தமாகிவிட்டார் இளைய தமையன்?” என்றாள். “இல்லை, அது ஸ்ரீதமரின் காலடியோசை” என்றான் அர்ஜுனன். அவள் அந்த ஒலியை மிக இயல்பாக பயன்படுத்திக்கொண்டாள் என தோன்றியது. அத்தனை உணர்வுநிலையிலும் சூழலின் ஒலிகளில் முழுதும் சித்தம் பரப்பியிருக்க பெண்களால் மட்டுமே முடியும்.

    ஸ்ரீதமர் உள்ளே வந்து “வணங்குகிறேன் இளவரசி. இங்கு நடக்கும் இந்த விழவில் இளைய யாதவரை முழுமையாக முறைமை செய்து அனுப்பவேண்டும் என்று ரைவதகத்தின் அரசர் விரும்புகிறார்.  பன்னிரு குடிகளும் நேற்றுதான் அவர் இளைய யாதவர் என அறிந்திருக்கின்றன. அவர்களின் குடிமுறைமைகள் செய்யப்படவேண்டும். எனவே விழவு முடிய இரவு ஆகிவிடும். தாங்கள் கிளம்பிச்செல்ல வேண்டுமென்று தங்கள் தமையனார் ஆணையிடுகிறார்” என்றார். “அவர் தன் அகம்படிகளுடன் நாளை மாலை கிளம்புவார்.”

    “நான் அதையே விழைந்தேன். இங்கிருக்க என்னால் முடியவில்லை” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “உண்மை, விழவு முடிந்த களம் போன்ற வெறுமைகொண்டது வேறு ஏதுமில்லை” என்றான். அவன் வேறேதோ சொல்லவேண்டுமென அவள் விழைந்ததைப்போல இருந்தது முகம். ஆனால் அதை மறைத்தபடி  “எத்தனை விரைவில் இங்கிருந்து செல்ல முடியுமோ அத்தனை விரைவில் செல்ல விழைகிறேன் மாதுலரே”  என்றாள். ஆனால் அச்சொற்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதபடி அவள் விழிகள் அவன் முகத்தை ஓரக்கண்ணால் நோக்கிச் சென்றன. அப்பார்வையை தன் முகத்தில் உணர்ந்த அர்ஜுனன் உடல் திருப்பி ஸ்ரீதமரை பார்த்தான்.

    ஸ்ரீதமர் “தங்களுக்கு பிறிதொரு பணியையும் இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார் இளவரசி” என்றார். சுபத்திரை விழிகளில் சினம் ஒளிவிட்டு அணைவதை அர்ஜுனன் கண்டான். ஆனால் அவள் “ஆணை” என தலைவணங்கினாள். “அந்தகவிருஷ்ணிகளின் இளவரசரான அரிஷ்டநேமி அருக நெறி நோற்று சென்ற ஓராண்டாக இங்கே தங்கியிருக்கிறார் என்பதை அறிந்திருப்பீர்கள் இளவரசி. அவருக்கு மறைந்த உக்ரசேனரின் மகள் ராஜமதியை  மணம் முடிக்க ஆவன செய்யுமாறு அவரது தந்தை சமுத்ரவிஜயர் கோரியிருக்கிறார். துவாரகையில் அதற்கான விழவுக்கு ஆவன செய்யும்படி இளைய யாதவர் நேற்றே செய்தி அனுப்பியிருந்தார்.”

    “ஆம், என்னிடம் சொன்னார்” என்றாள் சுபத்திரை. “அரிஷ்டநேமி அவர்களை இங்கிருந்து துவாரகைக்கு அழைத்துச் செல்லும்படி தங்களுக்கு இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார் ஸ்ரீதமர். “துவாரகைக்கா?” என்று கேட்டபோதே அறியாது அவள் முகம் மலர்ந்தது. “ஆம், துவாரகைக்குத்தான். இன்னும் நான்கு நாட்களில் அங்கு அந்த மணவிழாவை நிகழ்த்தலாமென்று இளையவர் சொன்னார்.” அர்ஜுனனை நோக்கி “அரிஷ்டநேமிக்கு வழித்துணையாக தாங்களும் செல்ல வேண்டுமென்று இளையவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார்.

    அர்ஜுனன் தலைவணங்கி “ஆணை” என்றான். “நான் அவரை இளைய யாதவருடன் சென்று கண்டிருக்கிறேன். ஆனால் கொல்லாமை உறுதிகொண்ட அவரால் என்னைப் போன்ற போர்பயின்ற யோகியிடம் நட்புறவு கொள்ளமுடியுமா?” என்றான். “கொல்லாமையை கைவிட்டு இல்லறத்தையும் செங்கோலையும் கைக்கொள்வதற்காகவே அவர் வருகிறார். இங்கிருந்து துவாரகைக்குச் செல்வதற்குள் அருகநெறிப் படிவரை கொல்வேல் கொற்றவராக மாற்றும் பொறுப்பு தங்களுக்கு” என்றார் ஸ்ரீதமர்.

    அர்ஜுனன் புன்னகைத்தான். “தங்கள் பயணங்களுக்கான ஒருக்கங்களை செய்ய ஆணையிடுகிறேன்” என்றபின் ஸ்ரீதமர் வெளியே சென்றார். புன்னகைத்து மூடிய இதழ்களைப்போல இணைந்து அசைந்து கொண்டிருந்த திரைச்சீலையை நோக்கியபடி அர்ஜுனன் ஒருமயிர்க்கால் கூட அசையாமல் அமர்ந்திருந்தான். பின்பு அவ்வண்ணமே அத்திரைச் சீலையை நோக்கியபடி உறைந்து நின்றிருந்த சுபத்திரையை உணர்ந்தான். நெடுநேரத்திற்குப் பின் என ஓரிரு கணங்களைக் கடந்து விழிதிருப்பி அவளை பார்த்தான். அவள் விழிகள் அவனை சந்தித்து உடனே விலகிக்கொண்டன.

    அர்ஜுனன் புன்னகைத்து “எஞ்சியதை வழிநீள பேச முடியும்” என்றான். அவள் புன்னகைத்து “ஆம்” என்றாள். “போர்க்கலைகளை நான் கற்பிக்கிறேன். தாங்கள் பேரரசி ஆகப்போவதனால் அவை உதவும்” என்றான். ஏன் அந்தப்புண்படுத்தும் சொற்றொடரை சொன்னோம் என உடனே உள்ளம் வியந்தது. ஏதோ சிறிய எரிச்சல் உள்ளே இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்த எரிச்சலை அவள் புரிந்துகொண்டு மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றியது. புன்னகையுடன் “ஆம், அது உதவும்” என்றாள்.

    வெண்முரசு அனைத்து விவாதங்களும்

    வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

    தொடர்புடைய பதிவுகள்

    நேமிநாதர்,கிருஷ்ணன்,காந்தி

    $
    0
    0

    1

    இனிய ஆசிரியருக்கு,

    என் பெயர் லெட்சுமிபதி ராஜன். நான் மதுரையில் தங்களை சந்தித்தது நினைவிருக்கலாம்.

    வெண்முரசு என் ஒவ்வொரு நாளையும் செறிவு மிக்கததாக்குகிறது. இதுவே என் முதல் மின்னஞ்சல். (அனுப்ப உத்தேசித்த சில மின்னஞ்சல்கள் அனுப்பபடாமல் உறங்குகின்றன.) இந்த மின்னஞ்சலுக்கான காரணம் வெண்முரசில் கிருஷ்ணன் அரிஷ்டநேமி சந்திப்பு ஏனோ எனக்கு தங்களின் “காந்தியின் பலிபீடம்” கட்டுரையை நினைவு படுத்தியதே. இவ்விரு சந்திப்புகளில் உள்ள ஒற்றுமைகள் திகைக்க வைக்கின்றன.

    “ஆற்றுவனவற்றுக்கு முடிவிலாதிருந்தன எனக்கு. அவரோ செயலின்மையை ஊழ்கமென கொண்டிருந்தார்.” என்ற அரிஷ்டநேமியை பற்றிய கண்ணனின் சொற்கள் எனக்கு “காந்தியின் பலிபீடம்” கட்டுரையின் “ஒருவர் கர்மயோகி. இன்னொருவர் ஞானயோகி.” என்ற வரிகளை நினைவு படுத்தியது.

    காந்தியும் கண்ணனை போலவே கர்ம யோகி. இருவரும் கண்ணெதிரே தெரியும் தர்மம் ஒன்றுக்காக, சாத்தியமான வரை போராடுபவர்கள். கண்முன்னே கொலைக் களங்களில் மனிதர்கள் பலிபீடங்களில் ஆடுகள் போல் மடிவதை காணப் போகிறார்கள். மறுபுறம் அரிஷ்டநேமியும், காந்தி காளிகோயிலில் சந்தித்த சாதுவும் அனைத்தையும் துறந்து ஞான மார்க்கியாக அனைத்துக்கும் சாட்சியாக மட்டும் அமர வேண்டியவர்கள்.

    கண்ணன் அரிஷ்டநேமியை சந்தித்து அவரைக் கல்யாணம் செய்து கொண்டு கர்ம மார்க்கத்திற்கு திரும்ப அழைக்கிறான். காந்தி, சாது ஏன் ஆடுகள் பலியிடப்படுவதை எதிர்த்துப் பிரச்சாரம்செய்யக்கூடாது என்று கேட்கிறார். வேறு வார்த்தைகளில் அவரை கர்ம மார்க்கத்திற்கு அழைக்கிறார்.

    ஒரு முரண். கர்ம யோகியான காந்தி அதன் எல்லையை உணராமல், பலிபீடங்களை கண்டு குழம்புகிறார். அரிஷ்டநேமி தனக்கான பாதை கர்மமா, ஞானமா என்ற குழப்பத்தின் விடையை பலிபீடங்களில் பெறப் போகிறார். தாங்கள் உத்தேசித்தே இதை எழுதி இருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. ஆனால் இவ்வாறு சிந்தித்ததில் காந்தியிடம் முயங்கிய கீதையின் கர்ம யோகமும், அருகர்களின் கொல்லாமையும் மின்னல் ஒளியில் தெரிந்த காட்சி என என்னை சிலிர்க்க வைத்தது.

    நன்றி. என்றும் உங்களிடம் கற்க விரும்பும் மாணவன்.
    லெட்சுமிபதி ராஜன்

    2

    அன்புள்ள லெட்சுமிபதி ராஜன்,

    என் வாசகர்களைப்பற்றிய பெருமிதம் எப்போதும் எனக்குண்டு. அற்புதமான கடிதங்கள் எனக்கு வருகின்றன. விஷ்ணுபுரம் வெளிவந்த நாள்முதலே அரிய வாசகர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இணையத்தில் எழுதத் தொடங்கியபின்பு அது மேலும் பலமடங்காகியிருக்கிறது

    முக்கியமான காரணம், என் வாசகர்களை நான் இணையம் மூலம் தொடர்ந்து சந்திப்பதனால் என் மொழிநடை, மனம்செயல்படும் விதம் ஆகியவை அவர்களுக்கு மேலும் நெருக்கமாக ஆகின்றன. என் படைப்புகள் மொத்தமாகவே அவர்களுக்குக் கிடைக்கின்றன.

    இன்று இந்தோனேசியாவில் யோக்யகர்த்தா என்னும் ஊரிலிருக்கையில் இந்தக் கடிதத்தைப் பார்த்தேன். பெரிய மனஎழுச்சி ஏற்பட்டது. எழுத்தாளனாக நான் நல்ல வாசகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    நேமிநாதரின் கதை சமணமகாபாரதத்தில் உள்ளது. அவர் அந்தக விருஷ்ணிகுலத்தில் பிறந்தவர். கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட சகோதரர். அவர்கள் இருவரும் சந்திப்பதென்பது எந்தப்புனைகதையாளனையும் உள்ளம்பொங்கவைக்கும் தருணம்

    ஒருவர் கொல்லாமை என்னும் விழுமியத்தின் அடையாளம். பிறிதொருவன் ஆகவே கொலைபுரிக என்றவன். இரு தரிசனங்கள். இரு உச்சங்கள். அதுவே வெண்முரசில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

    அந்த இடத்தை கூடுமானவரை பூடகமாகவே கொண்டுசெல்கிறேன். அதை முழுமையாகவே தொட்டு எடுத்திருப்பது மட்டுமில்லாமல் அது செல்லும் திசையையும் சரியாகவே ஊகித்திருக்கும் உங்கள் வாசிப்பு நான் எவருக்காக எழுதுகிறேன் என்பதைக் காட்டுகிறது

    3

    நேமிநாதரில் இருந்து கிருஷ்ணனுக்கு வரும் பாதையே கிருஷ்ணனில் இருந்து காந்திக்கு வரும் பாதை. நேமிநாதரின் மண்ணில் பிறந்தவர் காந்தி. அவரது போர்பந்தர் துவாரகைக்கு மிக அருகேதான். கிர்நார் மலை [ரைவத மலை] அருகேதான். நேமிநாதர் மீண்டும் வந்து கிருஷ்ணனை கண்டடைகிறார் என்று படுகிறது

    அகிம்சைக்கும் அறத்தின் கூரிய வாளுக்குமான முரண்பாடு. நீங்கள் சுட்டிக்காட்டியபின்னரே ஏதோ ஒருவகையில் முன்னரே சென்று தொட்டிருக்கிறேன் என அறிந்தேன். நன்றி

    ஜெ

    வெண்முரசு அனைத்து விவாதங்களும்

    வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்


    வெண்முகில்நகரம் கேசவமணி

    தொடர்புடைய பதிவுகள்

    எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்

    $
    0
    0

    1

    சுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு
    பத்தாயிரம் ஞானிகளை
    ; நிற்கவைத்துச் சுடுகிறார்கள்

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு ஓவியர், ஹிந்துக்கள் வழிபடும் ஒரு தெய்வத்தை நிர்வாணமாக வரைவார், அதை கண்டிக்காமல், என்ன செய்ய சொல்கிறீர்கள்?

    உடனே வரும் ஒரு கேள்வி, எவ்வளவு மடத்தனமாக இருந்தாலும், இதே ஓவியர், மற்ற மத நம்பிக்கைகளை, இப்படி சிதைக்க முன் வருவாரா? இதை கேட்டால், அவர்கள், ஹிந்து பாசிஸ்டுகள்?

    கோபிநாத் வெங்கட் ரமணன்

     

    அன்புள்ள கோபிநாத் வெங்கட் ரமணன்,

    பொதுவாக மதவெறியர்களிடம் இந்து ஞானமரபைப்பற்றியோ இந்தியதேச வரலாறைப் பற்றியோ பேசுவதில் பொருள் இருப்பதாகப் படவில்லை. அவர்களின் மனம் எப்போதுமே விரிவதில்லை, மேலும் மேலும் குறுகுவதே அவற்றின் இயல்பு.ஆனாலும் சில வரிகள்.

    இந்துமதம் என்று நாம் இன்று பொதுவாகக் காணும் படிமங்கள், சடங்குகள், வழிபாட்டுமுறைகள்,நம்பிக்கைகள் போன்றவை அனைத்துமே இன்றைய தோற்றத்தை பக்தி இயக்கத்தின்போது உருவாக்கி கொண்டவை. ஆனால் இவை மட்டும் அல்ல இந்து மரபு. பக்தி இயக்கத்தால் வேற்றுப்பொருள் கொள்ளப்பட்டு உள்ளிழுக்கப்பட்ட பல ஞான மரபுகள்  இந்து மரபில் உண்டு. பக்தி இயக்கத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்ட மரபுகளும் உண்டு. அவை இப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளன.

    முதல் உதாரணம் சுத்தஅத்வைதம். நீங்கள் வழிபடும் சரஸ்வதியின் சிலையும் நமீதாவின் படமும் எனக்கு ஒன்றுதான் என்று ஒர் அத்வைதி சொல்ல முடியும். பரந்தாமனின் சிவந்த கண்ணும் நாயின் சிவந்த குதமும் ஒன்றே என்று சொன்ன யமுனாச்சாரியார் போன்ற வேதாந்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரத்தைநூறு வருடங்களாக அந்த ஞானமரபு இந்நிலத்தின் சிந்தனையின் சாராம்சமாக விளங்கி வந்துள்ளது. அவர்களை பாமர பக்த வெறியர்கள் கல்லால் அடிக்கவோ கழுவில் ஏற்றவோதான் துடிப்பார்கள்.

    அதேபோன்றதே தாந்த்ரீக மரபும். இந்தியாவின் தாந்த்ரீக மரபு பக்தி இயக்கத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒன்று.  தாந்த்ரீகத்தின் சடங்குகளும் ஆசாரங்களும் சாதாரணமான ஒரு ஆசார இந்துவுக்கு அதிர்ச்சியையும் கசப்பையும் அளிக்கக்கூடும். கன்னிபூஜையும், யோனிசேவையும், சகசயனமும் பஞ்சமகார வழிபாடும் [மது,மாமிசம்,மந்திரம், மாவு, மங்கை] பாமர மனத்த்தால் உள்வாங்கிக்கொள்ளக்கூடியவை அல்ல

    இந்து ஞான மரபின் உள்வழிகளில் ஒன்றில் புனிதம் எனப்படுவது இன்னொன்றில் புனிதம் அல்ல. ஒன்றில் அபச்சாரம் எனப்படுவது இன்னொன்றில் ஓர் வழிபாட்டு முறையாகவே இருக்க முடியும்.

    கொடுங்கல்லூர் பகவதி கோயிலில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் [மீன பரணி உற்சவம்] நாற்பதுநாள்  கடும் நோன்பிருந்து, பூரப்பாட்டு என்னும்  பச்சைபச்சையான கெட்டவார்த்தைகளால் தேவியை வாழ்த்திப்பாடியபடி பலநூறு கிலோமீட்டர் தூரம் பிச்சை எடுத்து உண்டபடி, நடந்து வந்து வழிபடும் வழக்கம் உண்டு. தாந்த்ரீக மரபு உருவாக்கிய முறை அது. அந்தவழக்கம் நெல்லை சங்கரன்கோயில் ஆலயத்திலும் முன்பு இருந்திருக்கிறது.

    பாலியல் இந்து மரபில் எக்காலத்திலும் அருவருப்பானதாக, ஆபாசமானதாக, ஏன் மறைக்கப்பட வேண்டியதாக க்கூட கருதப்பட்டதில்லை.  மானுட உடல் என்பது பிரபஞ்ச ஆற்றலின் ரகசியங்கள் உறையும் இடம் என்றும், ஆகவே அது ஓர் ஆல்யம் என்றும் அது எண்ணியது. ஆகவே மானுட உடலே பிரபஞ்சத்தின் மாபெரும் குறியீடு என்றது. மானுட உடல்களை உருவாக்கும்  பாலியல் ஆற்றலை மூலாதார சக்தி  என்று, பிரம்மத்தின் விசையாக பூமியில் இயங்கும் மகாசக்கரம் என்று, வகுத்தது தாந்த்ரீக மரபு.

    நம் ஆலயங்கள் முழுக்க உள்ள பாலியல் சிற்பங்களின் காரணம் இதுவே. நாம் ஆண் குறியை செயலாற்றலாக, பெண்குறியை விளைவாற்றலாக  வகுத்துக்கொண்டு பிரபஞ்சத்தின்  கருத்து  X ஆற்றல்  என்னும் மகத்தான முரணியக்கத்தை புரிந்துகொண்ட ஒரு பண்பாட்டைச் சேர்ந்தவர்கள்

    கோயில்களுக்குப் போய் கும்பிடுவதும், சோதிடம் பார்ப்பதும் ,பரிகாரங்கள் செய்வதும், சடங்குகளைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே அல்ல இந்து மதம். பக்தி நெகிழ்வு மட்டுமல்ல இந்து மதம். பிராமணச்சடங்குகள் மட்டுமல்ல இந்து மதம். அது பலலயிரமாண்டுகாலமாக உருவாகிவந்த பலநூறு வழிபாட்டுமுறைகள் பலநூற்றாண்டுக்கால மகத்தான தத்துவ , மெய்ஞான விவாதம் மூலம் தொகுக்கப்பட்டு உருவானது. இதை பன்மையாக அணுகும் நோக்கு மட்டுமே இதை புரிந்துகொள்ள உதவும். இதில் புகுத்தப்படும் ஒற்றைமைய நோக்கு இதைஅ ழிக்கும்.

    பசுவைக் கும்பிடுவது மட்டும் இந்து மரபல்ல என்று உணருங்கள். பசுவைப்பலிகொடுக்கும் இந்து மரபுகளும் உண்டு. அதர்வ வேதம் முதல் இன்றுவரை நீடிக்கும் மரபு அது. இந்து மரபு இதுவே என சிலர் மேலே அமர்ந்து தீர்மானித்துவிட முடியாது    . அது மிகப்பிரம்மாண்டமான ஒரு பண்பாட்டு வெளி.

    இத்தனைநாள் இந்த மூர்க்கம் மூலம் நீங்கள் உருவாக்கிய பேரழிவுகள் போதும், இனியாவது இந்த மரபின் பன்மையை புரிந்துகொள்ள முயலுங்கள். உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பன்மை மதமான இந்து மதத்தை வாழவிடுங்கள். இதையும் ஒற்றைப்படையான வழிபாட்டமைபபக ஆக்கி அழித்துவிடாதீர்கள்.

    அதுவும் பாமர மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அந்த மக்களின் அளவுகோல்களைக் கொண்டு நுண்மையும் விரிவும் கொண்ட இந்து மரபை வரையறுக்கவும் மாறானதை அழிக்கவும் நினைக்கும் செயல் அப்பட்டமான  ·பாஸிசம் மட்டுமே.

     

    மானசா தேவி,பன்னிரண்டாம் நூற்றாண்டு

    உங்களுக்கு தெரிந்திருக்காது, இந்து மதத்தின் பெரும்பாலான சிலைகள் தாந்த்ரீகத்தால் உருவாக்கப்பட்டவையே. தாந்த்ரீகம் மேலெழுந்த ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில்தான் இன்று நாம் வழிபடும் பல்லாயிரம் சிலைப்படிமங்கள் உருவாயின. தாந்த்ரீகத்தின் கருத்துக்களை முன்வைக்கக்கூடிய, ஆழ்மனதுக்கு எடுத்துச்செல்லக்கூடிய குறியீட்டுமொழியின்  அலகுகள் அவை பெரும்பாலான அன்னை தெய்வங்களின் வடிவங்கள் தாந்த்ரீக உட்பொருள் உடையவை.

     நிர்வாணம் என்பது நமது மரபில்  முழுமையாக, பூரணமாகவே கருதப்பட்டத. நிர்வாணதேவியர் இந்நாட்டின் கோயில்கள் தோறும் நிறைந்திருக்கிறார்கள். பாடல்கள் தோறும் விளங்குகிறார்கள். உங்கள் ஒழுக்கவியல் என்பது விக்டோரிய யுகத்து தூய்மைவாத கிறித்தவர்கள் இங்கே கொண்டுவந்தது. அதை அளவுகோலாகக் கொண்டால் சௌந்தரிய லஹரியையும் அஷ்டபதியையும் உடனடியாக எரித்தாக வேண்டும். யார்கண்டது, ஒருவேளை உங்கள் அடுத்த நடவடிக்கை அதுவாகவே இருக்கும

    ஹ¤செய்னின் சரஸ்வதி அழகிய ஒரு கலைப்படைப்பு. புகைபோலக் கரையும் நளினமும் எழிலும் கொண்ட ஓவியங்கள் அவ்வரிசையில் உள்ளன. முழுக்க முழுக்க அவை இந்திய கலைமரபின் அழகியல் தர்க்கத்திற்குள்ளேதான் அமைந்துள்ளன. இந்துக் கலைமரபின் சிறந்த அம்சங்களை நவீனக்கலைப்பானீக்குள் இணைத்த படைப்புகள் அவை.

    ஹ¤செய்னின் ஓவியங்களில் எந்த விதமான ஆபாசமும் இல்லை. மாறாக இந்துக் கலைமரபின் அமைதி பரிபூரணமாகக் கூடிவந்திருக்கிறது. அவர் பிறந்த போரா முஸ்லீம் குலம் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களை சுவீகரித்துக்கொண்டது. இந்திய சமூகத்துடன் பண்பாட்டு ஒருமையுடன் வாழ்வது. இந்துப்பண்பாட்டுக்கே ஆழமான கொடைகளை அளித்தது.

    இந்தியாவிற்கு அதற்கே உரிய ஒரு கலைமரபு இருந்தது. அஜந்தாவில் அது உச்சம் கண்டது. ஆனால் மேலைக் கலைமரபு அதை வெறும் அலங்காரக்கலை என்று சொல்லி புறக்கணித்தது. இந்தியக்கலைகளின் தத்துவ அடிப்படைகளை முன்வைத்து அந்த எண்ணத்தை உடைத்தவர் ஈழ சைவ அறிஞர் ஆனந்தக் குமாரசாமி. அக்கால கலை எழுச்சியால் இந்தியக் கலையை மீட்கும் முயற்சிகள் எழுந்தன. தேவேந்திர நாத் தாகூர் அதன் முதல்வர்

    நாளடைவில் அந்த மரபு தேங்கியது. படைப்பூக்கமே இல்லாமல் இந்தியாவின் வரைகலைப்பாணியை அப்படியே திருப்பிசெய்வதாக அது மாறியது. ஒரு வகை இந்தியத்தூய்மைவாதமாக அது ஆகியது. அந்த தேக்கத்தை உடைத்த பம்பாய் முகாமைச் சேர்ந்தவர் ஹ¤செய்ன். தன் ஓவியங்களில் நவீன ஐரோப்பிய ஓவியங்களின் அழகையும் இந்தியக்கலையின் தனித்தன்மையையும் கலந்து இந்திய ஓவியங்களுக்கு சர்வதேச மரியாதையை உருவாக்கியவர். ஐயமின்றி இந்தியக் கலைமேதைகளில் ஒருவர். இந்துக்கலை வடிவங்களை நவீனக்கலைக்குள் கோண்டுசென்றவ்ரும்கூட.

    இந்து மரபின் இயல்பே அது தன்னில் இருந்து மேலும் மேலும் புதியவற்றை உருவாக்கும், ஓயாமல் படைப்புக்கற்பனையைத் தூண்டும் என்பதுதான். தியான மரபில் எளீய அறிமுகம் உடைய ஒருவருக்குத்தெரியும் இது. ஒரு ஞானி சீடனுக்கு தியானம்செய்ய  சிலை ஒன்றை சுட்டிக்காட்டினாரென்றால் அவர் அவனிடம் ‘இந்தப்படிமத்தை உன் அகத்தில் வளரவிடு’ என்றே சொல்வார். இதைக் கும்பிடு என்றல்ல.  இதுதான் கடைசிச்சொல் அல்லது வடிவம் என்று வரையறை செய்யும் இறுக்கத்திற்கு இந்து மரபில் இடமில்லை. அத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது இந்து மரபு

     

     

    .இந்துமரபின் சிற்பங்கள் எவையுமே நிர்ணயிக்கப்பட்ட வடிவம் கொண்டவை அல்ல. அவை ஒரு மொழியின் சொற்களைப்போல. ஒரு கவிதையின் படிமங்களைப்போல. அச்சொற்களைக்கொண்டு நாம் உரையாடலாம். புதிது புதிதாக படைக்கலாம். நம் தேடலை அதனூடாக முன்னெடுக்கலாம். அதற்குத்தான் அவை உள்ளன.

    இந்தியாவெங்கும் கோயில்களில் சிலைகளைப்பார்ப்பதற்கென்றே இருபத்தைந்துவருடங்களாக அலைந்து திரிபவன் நான். இந்தியாவில் எந்த ஒருசிலையையும் நாம் அதுவரை பார்க்காத கோணத்தில் பார்க்க வாய்ப்புள்ளது. சேலம் அருகே கந்தகோட்டம் என்ற மலைக்குச் சென்றிருந்தபோது நான் அதுவரைப் பார்க்காத சிலைகளை அங்கே பார்த்தேன். தாந்த்ரீக நூல்களில் இருந்து புதியசிலைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

    நமது சிலைகள் தியானத்துக்குரியவை. கற்பனையாலும் உள்ளுணர்வாலும் அகத்தில் வளர்த்தெடுத்துக்கொள்ளப்படவேண்டியவை.அதற்கு திராணியற்றவர்கள் தொட்டுக்கும்பிட்டுவிட்டு போகட்டும். ஆனால் நான் தொட்டு கும்பிட்டுவிட்டேன் இனி எவனும் இதை கையாண்டால் கையை வெட்டுவேன் என்று சொல்லும் பாமரத்தனமே ·பாசிசம் என்பது

     

    உங்களுக்குத்தெரியுமா நமது தேவியர் அமர்ந்திருக்கும் கோலம் என்பது தாந்த்ரீகர்களின் கண்டுபிடிப்பு. கன்னியரும் அன்னையரும் தங்கள் குறி பிளந்திருக்கும் கோணத்தில் நிர்வாணமாக அமரச்செய்து வழிபடுவது தாந்த்ரீக மரபு. அந்தச்சிலைகளே பின்னர் பக்திமரபின் முறைகளுக்குள் புகுந்து பொது வழிபாட்டுருவங்களாக ஆனபோது ஆடைகளுடன் அமர ஆரம்பித்தன. சரஸ்வதியும் லட்சுமியும் அம்பிகையும் எல்லாமே அப்படித்தான்…

    அந்தக் கோலத்தில் தரையில் களமெழுதப்பட்டு வழிபடப்பட்ட சரஸ்வதியை நான் கண்டிருக்கிறேன், குமரிமாவட்ட தாந்த்ரீக பூஜை ஒன்றில். சரஸ்வதி நிர்வாணமாக பிரம்மனைப் புணரும் களவரைபடத்தைக்கூட ஒரு தாந்த்ரீக பூஜையில் கண்டிருக்கிறேன்.

    மேலே அமர்ந்து சிவனைப் புணரும் காளியின் சிலைகள் இன்றும் வங்கம் முழுக்க உள்ளன.  கங்கை கரையில் நீங்கள் குறிபிளந்து படுத்திருக்கும் பெண்தெய்வங்களைப் பார்க்கலாம். அந்தக்குறிகளை தொட்டுவணங்கிச் செல்லும் பெண்களைக் காணலாம்.

    இன்றும் இந்தியா முழுக்க தாந்த்ரீகம் பல முறைகளில் செயலில் உள்ளது. அந்த மரபை அதற்குள் செல்லாமல் புரிந்துகொள்ள முடியாது. ஓர் இஸ்லாமிய நாடு அல்லது கிறித்தவ நாடு அவர்களை வேட்டையாடலாம். ஆனால் அத்தனை ஞானமரபுகளுக்கும் இடமளித்த நாடு இது. இடமளித்தாக வேண்டிய ஒரே நாடும் இதுவே. அதனால்தான் இது ஞானபூமி.

    ஞானத்தை நிறுவனங்களின் சொத்தாக ஆக்காமல் தனிமனிதத்தேடலின் இறுதிப்புள்ளியாக வகுத்தது இது. ஆகவேதான் நமது சான்றோர்  உடன்பாடில்லா நிலையிலும் அவர்களை அனுமதித்தார்கள். ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்றனர்.

     

     

    ஏன் முழுமையான மதமறுப்பாளர்களான இறைமறுப்பாளர்களான சார்வாகர்களும் இந்துக்களே. உங்கள் அசட்டு ஒழுக்கவாதம் அத்வைதிகளை தாந்த்ரீகர்களை சார்வாகர்களை உங்கள் மதத்தை அவமதிப்பவர்கள் என்று சொல்லும்.

    இந்து தெய்வங்களை ஏன் வரைகிறார் என்றால் இந்துமரபு அதை அனுமதிக்கிறது என்பதனால்தான். அந்த மரபை அவமதிக்கும் விதத்தில், அந்தப்படிமங்களின் சாரங்களை அழிக்கும் விதத்தில் அந்த ஓவியங்கள் இல்லாத நிலையில், அவை கலைபப்டைப்புகளாக இருக்கும் நிலையில், அவை ஏற்கத்தக்கவையே. ஏன் இஸ்லாமிய சின்னங்களை வரையவில்லை என்றால் அந்த மதம் அதை அனுமதிக்கவில்லை என்பதனால்.

    இஸ்லாமியமதம் செய்வதே சரி, இந்துமதத்தையும் அதேபோல ஆக்கவேண்டும் என்கிறீர்களா என்ன?  நான் அப்படி நினைக்கவில்லை. இந்து மதம் இதே நெகிழ்தன்மையுடன், பன்மைத்தன்மையுடன், தனிப்பட்ட ஞானத்தேடலுக்கும் கலைச்செயல்பாடுகளுக்கும் முழுச்சுதந்திரம் அளிப்பதாக, உலக மதங்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீடிக்கவேண்டுமென்றே நினைப்பேன். என் மனதில் உள்ள இலட்சிய இந்து நாராயணகுருவே.

    இன்று ஹ¤சேய்னுக்கு எதிராக திரும்பும்  நேற்று நீங்கள் ஆனந்தமார்க்கத்தை வேட்டையாடினீர்கள். தலைச்சேரி சித்தாசிரமத்தை வேட்டையாடினீர்கள்.

     

    நீங்கள் முன்வைக்கும் இந்த ஒழுக்கவியல் இந்திய ஞானமரபின் மாபெரும் ஞானிகள் பலரை குற்றவாளிகளாக்கும் என்றாவது உங்களுக்கு தெரியுமா? தாந்த்ரீகம் பயின்ற ராமகிருஷ்ண பரமஹம்ஸரை, நாராயணகுருவை, அரவிந்தரை நீங்கள் என்ன செய்வீர்கள்?

    பல்லாயிரம் நூல்களும் கொள்கைகளும் விவாதங்களும் கொண்ட ஒரு மரபை தெருக்குண்டர்களா தீர்மானிப்பது? இதுதான் இந்துமதம் என வரையறை செய்ய நீங்கள் யார்? உங்களுக்கு அதிகாரமளித்தது யார்? யாருமில்லை. கல்லையும் கம்புகளையும் பயன்படுத்தி, தெருக்குண்டர்களை திரட்டி நீங்கள் அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்.  அந்தக் குண்டர்களுக்குப் புரியக்கூடிய மத தத்துவமோ கலையோ வழிபாட்டுமுறையோ இருந்தால் போதும் என்கிறீர்கள். இதற்குப்பெயர்தான் தாலிபானியம் என்பது.

    இஸ்லாமிய தாலிபானியத்தை விட இந்து தாலிபானியம் அருவருக்கத்தக்கது. ஏனென்றால் பலநூறு ஞானமார்க்கங்கள் வன்முறையின்றி ஒருங்கிணைந்து ஞானத்தேடலை நிகழ்த்திய ஒரு மாபெரும் வரலாற்றின் மீது தொடுக்கப்படும் வன்முறை இது.

    மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 13, 2009

    தொடர்புடைய பதிவுகள்

    அவதூறான தகவல் -கடிதம்

    $
    0
    0

    மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன்,

    வணக்கம். ‘எம்.எஃப்.ஹுசைன் இந்து தாலிபானியம்’ என்கிற தலைப்பில் நவம்பர் 13 2009 அன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை நீங்கள் நவம்பர் -7-2015 அன்று மீள் பிரசுரம் செய்திருக்கிறீர்கள்.

    //இன்று ஹ¤சேய்னுக்கு எதிராக திரும்பும் நேற்று நீங்கள் ஆனந்தமார்க்கத்தை வேட்டையாடினீர்கள். தலைச்சேரி சித்தாசிரமத்தை வேட்டையாடினீர்கள். ஏன், பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த திகம்பரச் சமணமுனிகள் மீது பச்சைமலத்தை பொட்டலம் கட்டி வீசியவர்கள் உங்கள் இந்துமுன்னணி இயக்கத்தினர்.//

    இந்த கட்டுரை முதலில் பிரசுரிக்கப்பட்ட போதே இது தவறான தகவல் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. திகம்பர சமண முனிவர்கள் இங்கு வந்த போது எதிர்த்தவர்கள் திகவினர். அப்போது இந்து இயக்கத்தை சார்ந்தவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள் என்பது அப்போது செய்தியாகவே வந்தது. ’அப்படியா ஏதோ ஞாபகத்தில் எழுதிவிட்டேன்’ என்று அப்போது தனிப்பட்ட தொலைபேசி உரையாடலில் கூறினீர்கள். ஆனால் இந்த தவறான அவதூறு தகவலை திருத்தமில்லாமல் அப்படியே மீள் வெளியிட்டிருப்பது அவ்வளவு நேர்மை நிறைந்த விஷயமல்ல என கருதுகிறேன். விசாரித்த போது இந்து முன்னணியின் நிறுவன தலைவர் திரு. ராம.கோபாலன் அவர்களும் இப்படி எவ்வித நிகழ்ச்சியும் நடக்கவில்லை என மறுத்திருக்கிறார். எனவே இந்த தவறான உண்மைக்கு புறம்பான தகவலை அகற்றுவது நேர்மையான செயலாக இருக்கும். உங்கள் எழுத்தரசியல் தேவைக்கு ஏற்பவும் தங்கள் இஷ்டப்படியும் மாற்றுவதோ மாற்றாமலிருப்பதோ தங்கள் உரிமை.

    பணிவுடன்
    அரவிந்தன் நீலகண்டன்

    பெருமதிப்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு,

    அந்தத்தகவல் முன்னரே மறுக்கப்பட்டதனால் அது நீக்கப்பட்டிருந்தது. அக்கடிதமும் பிரசுரமாகியிருந்தது. மறுபிரசுரம் முந்தைய வடிவங்கள் ஒன்றாக அமைந்தது தொழில்நுட்பச்சிக்கல். பல கட்டுரைகள் அவ்வாறு முந்தைய வடிவங்கள் மீட்டு அமைக்கப்பட்டன

    மன்னிக்கவும்

    ஜெ

    தொடர்புடைய பதிவுகள்

    • தொடர்புடைய பதிவுகள் இல்லை

    வலைதளத் தொடக்கவிழா

    $
    0
    0

    அன்பிற்கினியீர்

    வணக்கம்.
    என் வலைதளத் தொடக்கவிழா அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன்.
    உங்கள் வருகையை எதிர்பார்த்து வாசல் பார்த்திருப்பேன்
    வாருங்கள்

    அன்புடன்

    மரபின் மைந்தன் முத்தையா

    invitation front

    invitation back

    தொடர்புடைய பதிவுகள்

    Viewing all 16764 articles
    Browse latest View live


    <script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>