Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16723 articles
Browse latest View live

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26

$
0
0

25. அழியாநாகம்

flowerமுக்தன் பகல் முழுக்க அந்தக் காவல்மேடையில் அமர்ந்து வெயில் பரவிய காட்டின் இலைப்பரப்பின் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதாவதுதான் புல்லிடைவெளிகளிலும் திறந்த பாறைகள் மீதும் இளவரசியின் சேடிகளிலொருத்தி வண்ணச் சிறுபூச்சியெனத் தோன்றி சிறகு என ஆடை பறக்க சுழன்று மீண்டும் மறைந்தாள். அவர்கள் அக்காட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் உயிர்ச்செயல்பாடுகளில் ஒன்றெனக் கலந்துவிட்டது போலவே மேலிருந்து நோக்கியபோது தோன்றியது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல, பொன்வண்டுகளைப்போல, புள்ளிமான்களையும் குழிமுயல்களையும் துள்ளும் வெள்ளிமீன்களையும் போல.

ஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் உச்சியில் அமர்ந்து காட்டின் பசுமையை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கற்பனையால் அவன் கீழே நிகழ்வனவற்றை தீட்டி விரித்துக்கொள்வதுண்டு. இலைத்தழைப்பின்மீது எழுந்து அமர்ந்து சுழன்ற பறவைகளை, உச்சிக்கிளையில் வந்திருந்து கதிரெழுவதையும் வீழ்வதையும் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் கருங்குரங்குகளை, கிளைகளுடன் ஒட்டி தேன்கூடுபோல அமர்ந்திருக்கும் மரநாய்களை, கம்பத்தில் கயிற்றில் இழுக்கப்படும் கொடி மேலேறுவதுபோல வந்துகொண்டிருக்கும் தேவாங்குகளை, உச்சிக்கிளை வரை வந்து வானம் நோக்கி மண்விழி சிமிட்டித் திகைக்கும் பழஉண்ணிகளை, காற்றிலாடும் கிளைநுனிகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்போல பறக்கும் அணில்களை அவன் விழிகள் தவறவிடுவதில்லை.

“இங்கு கிடைப்பது எப்போதும் வெள்ளிதான் அங்கிருக்கையில், பின் மீள்கையில் அது பொன்னென்றாகிறது” என்றொரு முறை அவன் தீர்க்கனிடம் சொன்னான். அவன் புன்னகையுடன் “நீ சூதர்பாடல்களை நிறைய கேட்கிறாய். பிழையில்லை… கேட்டவற்றை நினைவில் கொள்ளலாகாது” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “நதியென்பது நீர்ப்பெருக்கே. ஆனால் முகில்களும் இலைத்தழைப்புகளின் பாவைகளும் மூடியதாகவே அது எப்போதும் நம் கண்களுக்குப் படுகிறது. காடென்றும் விண்ணென்றும் நாம் அவற்றை ஒருபோதும் மயங்குவதில்லை” என்றான். “இதுவும் பிறிதொரு சூதர் சொல் போலிருக்கிறது” என்று முக்தன் புன்னகைத்தான்.

அங்கு அவர்கள் என்ன விளையாடுவார்கள் என்று முக்தன் எண்ணிக்கொண்டான். நகர்களில் அவர்கள் ஆடும் பலவகையான ஆடல் உண்டென்று அவன் கண்டிருக்கிறான். பட்டுநூல் சுருள்களை எறிந்தாடும் மலர்ப்பந்தாடல். ஒலிக்கும் அரிமணியுருளைகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து ஆடும் மணிப்பந்து. நீர்ப்பரப்பின் மீது சுரைக்காய்க் குடுவைகளை வீசி எறிந்தும் நீந்திப் பற்றியும் ஆடும் அலைப்பந்து. மரங்கள்மேல் கொடிகளைக் கட்டி பற்றித் தொங்கி ஆடி ஒருவரை ஒருவர் துரத்தும் குரங்காடல். அவையனைத்திலும் ஆடுநெறிகள் உண்டு. வெற்றி தோல்வியை வகுப்பதற்கென்று அமைந்தவை அவை. வெற்றி என ஒன்று இருப்பதனால் அதுவே உவகையென்று ஆகிறது. தோல்வி துயரமென்றும் தேர்ச்சி ஆற்றலென்றும் தவறுதல் வீழ்ச்சி என்றும்.

இக்காட்டிற்குள் வருகையில் அந்நெறிகளனைத்தையும் துறந்துவிடவேண்டும். அக்கணங்களில் எது தோன்றுகிறதோ அதை செய்யவேண்டும். மரங்களிலிருந்து நீருக்கு தாவலாம், புல்வெளிகளில் ஓடி கால்தடுக்கி விழுந்துருளலாம். அனைவரும் வெல்லும் ஓர் ஆடல். உவகையன்றி பிறிதில்லாத ஒரு களியாட்டு. அதை இப்பெண்டிருக்கு எவரேனும் கற்றுக்கொடுத்திருப்பார்களா? அங்கு நெறி வகுக்கப்பட்ட ஆடல் சலித்துத்தான் இங்கு வருகிறார்கள். இங்கு நெறிகளை அவர்கள் உதறிவிட்டாலே போதும். பிற அனைத்தும் கைகூடிவிடும். விளையாடுவதற்கு மனிதர்களுக்கு எவரும் கற்றுத்தர வேண்டியதில்லை. மனிதர்கள் குரங்கெனவும் முயலெனவும் மானெனவும் மீன் எனவும் அணில் எனவும் புள்ளெனவும் தாங்கள் மாறக் கற்றவர்கள். பிற எவ்வுயிரும் பிறிதொரு இருப்பென உளம் மாறுவதில்லை. மானுடன் அவ்வாறு மாறக் கற்றபின்னரே அவன் இன்று கொண்டிருக்கும் அனைத்தையும் அறிந்தான். ஊர்களை அரசுகளை குடிகளை அறிவை தவத்தை.

என்ன எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தபோது அவன் புன்னகைத்தான். எப்போதும் மூத்தவர்கள் அவனிடம் சொல்வது அதுதான். ஒரு காவலனாக பணிபுரியும் தகுதியை காவலனுக்கு மீறிய கல்வியாலும் எண்ணங்களாலும் இழந்தவன் அவன். ஒதுக்கு உன் எண்ணங்களை. காவலன் வெறும் கண். படைக்கலத்துடன் நுண்சரடால் பிணைக்கப்பட்ட கண் மட்டுமே அவன். ஆம், கண்ணென்றே இங்கிருப்பேன். நாள் செல்லச்செல்ல என் உடலில் கண் மட்டுமே செயல்படும். பிற அனைத்தும் அணைந்து இருளும். முதுகாவலர் அப்படித்தான் இருக்கிறார்கள். கண்களுக்கு அப்பால் காட்சியை அள்ளிக்கொள்ளும் ஏதுமில்லை.

தொலைவில் ஓர் அலறலைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். முதல் மெய்யுணர்விலேயே அது இளவரசியின் குரல் என்று அவனுக்கு எப்படி தோன்றியது என்பதை பிறிதொரு உள்ளத்துள் வியந்தான். அவள் தோழியர் கூவிக் கலைவதை சிலர் அங்குமிங்கும் ஓடுவதை காணமுடிந்தது. அவன் செய்ய வேண்டியதென்ன என்பதை சில கணங்களுக்குள் சித்தம் ஆணையிட கயிற்றுப்படிகளில் கால் தொற்றி ஏறி முரச மேடையை அடைந்து முழவுத்தடியை எடுத்து “இளவரசிக்கு இடர்… இளவரசிக்கு இடர்…” என்று அறையத் தொடங்கினான். அவ்வொலி கேட்டு மேலும் பல இடங்களில் முரசுகள் முழங்கின. காவலர் படையொன்று அம்புகளும் விற்களும் வேல்களும் ஏந்தி ஆணைக்கூச்சல்களுடன் அணிக்காட்டின் வெளிமுற்றத்திலிருந்து ஒன்றையொன்று தொடர்புகொண்டு சரடென நீண்டு வலையென வளைந்து காட்டுக்குள் சென்றது.

இறங்கி அவர்களுடன் செல்லவேண்டுமென்று அவன் விழைந்தாலும் காவல்சாவடியை விட்டுச்செல்லக்கூடாதென்ற கடமையை எண்ணி அங்கு நின்று தொலைகூர்ந்தான். அக்காட்டுக்குள் என்ன நிகழ்ந்திருக்கக் கூடும்? அங்கு கொலை விலங்குகளோ நச்சு நாகங்களோ இல்லை. ஆனால் காட்டில் எதுவும் நஞ்சாகலாம். நஞ்சு பிறப்பது கொம்புகளில், பற்களில், நகங்களில், அலகுகளில், கொடுக்குகளில், முட்களில், கற்களில், வேர்களில், மலர்களில் என நூற்றெட்டு இடங்களில். நாகத்தின் நச்சுப்பல் என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு முனையில் நஞ்சு கொண்டுள்ளன என்று அவன் கற்றிருந்தான். என்ன நிகழ்கிறதென்று தெரியாமல் அங்குமிங்கும் தெரிந்த அசைவுகளை விழியால் தொட்டு அறிய முயன்றபடி காவல் மாடத்திலேயே சுற்றி வந்தான்.

படையின் வலை காட்டுக்குள் ஊடுருவிச்சென்று மறைந்தது. தீர்க்கன் “என்ன? என்ன நிகழ்கிறது?” என்றபடி மேலேறி வந்து “என்ன நிகழ்ந்தது?” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது?” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன?” என்றான். “கந்தர்வர்களாயினும் போர் புரிந்து இறப்பது காவலர்களின் கடன்” என்றான் தொடர்ந்து ஏறிவந்த பிறிதொருவன்.

“நான் சென்று பார்க்கிறேன்” என்றபடி முக்தன் நூல்படிகளில் ஊர்ந்தவனாக இறங்கினான். “அதற்கு உனக்கு ஆணையில்லை” என்றான் தீர்க்கன். “ஆம். ஆயினும் இத்தருணத்தில் இங்கு வாளாவிருக்க என்னால் இயலாது” என்றபடி அவன் கீழிறிங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் நுழைந்தான். பாதை முனையில் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் அருகிலிருந்த நீண்ட வேலை கையிலெடுத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். அதன் கூர்விளிம்பால் முட்செடிகளை வெட்டி அகற்றியபடியும் சிறிய புதர்களை அதன் கோலை ஊன்றி தாவிக்கடந்தும் பாறைகளிலும் விழுந்த மரங்களிலும் காலூன்றி உள்ளே சென்றான். முற்றிலும் திசைமறக்கச் செய்யும் நிழலிருளுக்குள் செல்ல அங்கு கேட்ட பெண்களின் குரல்களே வழிகாட்டின. மீண்டும் மீண்டும் பசுந்தழைகள் அவன் முன் சரிந்து வழிமறிக்க கிழித்துக் கிழித்து முடிவிலாமல் சென்றுகொண்டே இருப்பதுபோல் தோன்றியது.

பின்னர் ஒரு சதுப்பு வளையத்தை அடைந்தபோது அங்கு தேங்கி நின்றிருந்த வெயிலொளியில் கண்கூசி விழி தாழ்த்தி ஒருகணம் நின்றான். குரல்களின் கலவை வந்து செவிசூழ நிமிர்ந்து நோக்கியபோது ஒரு பெண் இளவரசியை கைகளில் தூக்கியபடி வர அவளுக்குப் பின்னால் மற்ற பெண்கள் அலறியும் அழுது அரற்றியும் ஓடி வருவதைக் கண்டான். மறு எல்லையிலிருந்து ஒரே தருணத்தில் தோன்றிய விராடநாட்டுப் படைவீரர்கள் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்வதுபோல் நூற்றுக்கணக்கான அம்பு முனைகளாக எழுந்தனர்.

காவலர்தலைவன் வேலை நீட்டியபடி “யார் நீ? அரசியை கீழே விடு” என்றான். அவளுக்குப் பின்னால் ஓடி வந்த சேடி “இளவரசியை நாகம் ஒன்று தீண்டியது. இப்புதியவள் அந்த நச்சை முறித்து இளவரசியை காத்தாள். இளவரசி இன்னமும் மயக்கில் இருக்கிறார்” என்றாள். இளவரசியை கையில் வைத்திருந்தவள் “அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்றாள். அவளுக்குப் பின்னால் வந்த பிறிதொருத்தி காட்டுக்கொடியில் கட்டி சுருட்டி பொதிபோல் மாற்றப்பட்டிருந்த பெரிய நாகத்தை நீண்ட கழியொன்றின் நுனியில் கட்டித் தூக்கி வந்தாள். அது அப்பொதிக்குள் உடல் நெளிய வெட்டி எடுக்கப்பட்ட நெஞ்சுக்குலையின் இறுதி உயிரசைவுபோல் தோன்றியது.

வேலை தாழ்த்தாமல் “யாரிவள்? எப்படி உள்ளே வந்தாள்?” என்றான் காவலர்தலைவன். “நான் ஒரு அயலூர்ப்பெண். இவ்வழி சென்றேன். மலை உச்சியிலிருந்து இக்காட்டைக் கண்டபோது இது தவம் செய்ய உகந்ததென்று எண்ணி இங்கு வந்தேன்” என்றாள் இளவரசியை கையில் ஏந்தியிருந்தவள். இளங்கருமை நிறம் கொண்டிருந்தாள். வெண்செந்நிறத்தில் பட்டாடை சுற்றி கல்மாலைகளும் ஒளிரும் மணிக்குண்டலங்களும் அணிந்திருந்தாள். அவள் குரல் பெருங்குடம் கொண்ட யாழின் முதல் தந்திபோல இனிய கார்வை கொண்டிருந்தது.

“தவமா? இங்கென்ன தவம்?” என்று மேலும் ஐயத்துடன் கேட்டபடி தலைவன் முன்னால் வந்தான். “நான் ஆட்டக்கலை தேர்ந்தவள். அதையே தவமென கொண்டிருக்கிறேன். அதில் முழுமை அடையும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள் அந்தப் பெண். “இளவரசியை கீழே விடு. இரு கைகளையும் விரித்தபடி பின்னால் செல்” என்றபடி தலைவன் வேலை நீட்டிக்கொண்டு முன்னால் வர எண்ணியிராக் கணமொன்றில் ஒரு கையால் இளவரசியைச் சுழற்றி தோளுக்கு மேல் கொண்டு சென்று மறுகையால் அவ்வேல் முனையைப்பற்றி சற்றே வளைத்து அதன் கீழ் நுனியால் காவலர் தலைவனின் நெஞ்சுக்குழியில் ஓங்கிக் குத்தி அவனை மல்லாந்து விழச்செய்தாள். பிற படைவீரர்களின் விற்கள் நாணொலி எழுப்பியதும் வேலைத் திருப்பி அதன் நுனியை தலைவன் கழுத்தில் வைத்து “வேண்டியதில்லை. வில் தாழ்த்துக! இளவரசியையும் உங்கள் தலைவனையும் இழக்க வேண்டாம்” என்றாள்.

தேள்கொடுக்கென விழியறியா விரைவில் நிகழ்ந்து முடிந்த அவள் கைத்திறனைக் கண்டு வியந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். கீழே கிடந்த தலைவன் மூச்சொலியுடன் “வில் தாழ்த்துக!” என்றான். பின் “நீ எவராயினும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா!” என்றபடி அவள் முன்னால் நடந்தாள். அவளைச் சூழ்ந்து இறுகி கூர்கொண்டு நின்ற அம்புகளுடன் வீரர்கள் உடன் சென்றனர். இளவரசியின் கால்கள் நடையில் அசைய வெண்பரல் சிலம்பு குலுங்கும் ஒலி அவர்களின் காலடியோசையுடன் சேர்ந்து எழுந்தது.

அணிக்காட்டுக்கு வெளியே ஆற்றின் கரையில் நின்றிருந்தவர்கள் இளவரசியைத் தூக்கியபடி வந்த அவளைக் கண்டு வியப்பொலியுடன் மேலும் சூழ்ந்து கொண்டனர். இளவரசியை மென்மணலில் படுக்க வைத்து திரும்பி “அந்த பாம்பை கொணர்க!” என்றாள். கொடிகளில் கட்டப்பட்டு நெளிந்துகொண்டிருந்த பாம்பை வாங்கி அதன் முடிச்சுகளை அவிழ்த்தாள். சீறி படம் தூக்கி எழுந்த அதன் விரைவை மிஞ்சும் கைத்திறனுடன் அதன் கழுத்தை பற்றிக்கொண்டாள். அது வால்சொடுக்கி வளைந்து அவள் கைகளைச் சுற்றியது. அருகிருந்த இலையொன்றை பறித்து கோட்டிக்கொண்டாள். நாகத்தின் வாய்க்கு அடியில் சுருங்கி விரிந்துகொண்டிருந்த நச்சுப்பையை கட்டை விரலால் அழுத்தி சொட்டும் இளமஞ்சள் சீழ் போன்ற நஞ்சை இலைக்குமிழியில் எடுத்தாள்.

இயல்பாக கைசுழற்றி அந்தப் பாம்பை நீர்ப்பரப்பில் எறிந்தாள். நீர்மேல் அது சாட்டை சொடுக்கென நெளிந்து பின் ஒளிரும் பரப்பின்மேல் தலையை மட்டும் வெளியே நீட்டி சுட்டுவிரல்கோடு செல்வதுபோல் நீந்தி அகன்றது. அருகிருந்த மூங்கில் குவளையை எடுத்து அதில் நதிநீரை அள்ளி அந்த நஞ்சை அதில் கலந்து கொண்டு வந்தாள். இளவரசியின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தாள். அவள் விழிகள் பாதி விரிந்து வெண்மை காட்டின. உலர்ந்த உதடுகள் வெண்பல்முனைகளால் கடிக்கப்பட்டிருந்தன. இடையிலிருந்த சிறுகத்தியை எடுத்து இறுகியிருந்த அவள் பற்களுக்கு நடுவே செலுத்தி நெம்பிப் பிளந்து திறந்து அந்நச்சுக்கலவை நீரை ஊட்டினாள். மூன்றுமுறை அதை அருந்தியபின் மூச்சுவாங்கினாள் உத்தரை. மேலும் இருமுறை அவள் அந்நீரை ஊட்டினாள். இமைகளைத் திறந்து கண்களுக்குள்ளும் காதுகளிலும் மூக்கிலும் நச்சுநீரை சொட்டினாள்.

மணலைக் குவித்து தலை சற்று மேலே தூக்கி நிற்கும்படி செய்து படுக்கவைத்தபின் “இன்னும் சற்று நேரத்தில் எழுந்துவிடுவார். அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றாள். இளவரசி ஒருமுறை விக்கி நுரையை வாயுமிழ்ந்தாள். சேடியர் அருகே நின்று அவள் வாயை நீரால் கழுவினர். மீண்டுமொரு முறை அவள் வாயுமிழ்ந்தாள். அவள் காலில் நாகம் கடித்த இடத்திற்கு மேல் காட்டுக்கொடியால் கட்டப்பட்டிருந்த முடிச்சை அவிழ்த்து சற்று தள்ளி மீண்டும் கட்டினாள். கடிவாயை குறுக்கு நெடுக்காக அம்பு முனையால் கிழித்திருந்தாள். அதிலிருந்து வழிந்த குருதியை அவள் பிழிந்திருந்த பச்சிலைச்சாறு நிணமென்றும் நீரென்றும் தெளியவைத்திருந்தது.

இளவரசியின் கண்கள் அகன்று பின் விரிசலிட்டு திறந்தன. ஒளிக்குக் கூசி மீண்டும் மூடிக்கொண்டபோது இரு முனைகளிலும் நீர் வழிந்தது. பின்னர் ஓசைகளால் தன்னுணர்வு கொண்டு கைகளை ஊன்றி அமர்ந்து சுற்றும் நோக்கினாள். “அஞ்சவேண்டியதில்லை, இளவரசி. தாங்கள் நலமுடனிருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “யார் நீ?” என்று இளவரசி கேட்டாள். “என் பெயர் பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். ஆடற்தவத்தின்பொருட்டு இக்காட்டுக்குள் வந்தேன். நாகம் தீண்டி தாங்கள் எழுப்பிய குரல் கேட்டு வந்து காப்பாற்றினேன்” என்றாள். “நான் நாகர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் நச்சு முறிகளை அறிவேன்.”

உத்தரை “நாகர்களுடன் நீ எதற்கு இருந்தாய்?” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரசி?” என்று அவள் கேட்டாள். “நீ ஆண்மை கலந்தவள் போலிருக்கிறாய்” என்றாள் உத்தரை. “ஆம், நான் இருபாலினள்” என்று அவள் சொன்னாள். சுற்றி நின்றவர்களில் மெல்லிய உடலசைவாக வியப்பு வெளிப்பட்டது. முக்தன் அதை முன்னரே தன் அகம் அறிந்திருந்ததை உணர்ந்தான்.

காவலர்தலைவன் “இளவரசி, தாங்கள் அரண்மனைக்கு திரும்பலாம். தேரிலேயே படுத்து ஓய்வெடுத்தபடி செல்லலாம். அங்கு மருத்துவர்கள் சித்தமாக இருக்கும்படி சொல்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி உத்தரை எழுந்து தோழியரின் தோள் பற்றி நின்றாள். “சற்று தலைசுற்றும். விழிநோக்கு அலையடிக்கும். பொழுதுசெல்ல மெல்லிய வெப்பமும் உடலில் தோன்றும். அஞ்சவேண்டியதில்லை” என்றாள் பிருகந்நளை. உத்தரை தேரை நோக்கி நடந்தாள். படியில் கால்வைத்த பின்னர் திரும்பி “நீயும் அரண்மனைக்கு வருக!” என்றாள். “ஆம், வருகிறேன். தங்கள் நஞ்சுமுறி மருந்துகள் மூலிகைகள் சிலவற்றை இக்காட்டிலிருந்து எடுத்தாக வேண்டியிருக்கிறது” என்றாள் பிருகந்நளை.

தேர் சென்றதும் காவலர்தலைவன் “இளவரசியின் உயிர்காத்தமைக்காக நாங்கள் உனக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றான். “அதற்கான வாய்ப்பு அமைந்தது” என்றாள் பிருகந்நளை. அவள் திரும்பி முக்தனை நோக்கி “நீர் காவலரா?” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக!” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது?” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே! எந்தக் காடும் நாகமெழ வாய்ப்புள்ள ஒன்றே” என்றாள்.

flowerகாட்டுக்குள் புகுந்து பச்சிலைகளையும் சில வெண்காளான்களையும் பறித்து இலைப்பொதிக்குள் கட்டிக்கொண்டு வெளியே வந்த பிருகந்நளை முக்தனிடம் “தங்களிடம் புரவிகள் இருக்கின்றனவா, வீரரே?” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன் வருக! நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன?” என்றாள். “இத்தனை இயல்பாக புரவி மேல் ஏறும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் முக்தன். “இத்தனைக்கும் இது புரவிகளின் நாடென்று பெயர் பெற்றது.”

பிருகந்நளை புன்னகைத்து “சௌவீரமும் புரவிகளின் நாடே. இங்கு புரவிகள் சிட்டுக்களைப்போல. அங்கு அவை செம்பருந்துகள்” என்றாள். “ஆம், சௌவீரம் பெரும்பாலையும் மலைச்சரிவுகளும் கொண்டது என்று அறிந்திருக்கிறேன்” என்று முக்தன் சொன்னான். “அங்கு புரவியே கால்களென்றான மக்கள் வாழ்கிறார்கள்” என்றாள் பிருகந்நளை. அவர்கள் காட்டுப்பாதையில் இணையாகச் சென்றனர். பிருகந்நளையின் புரவி தன் மேல் எடையில்லாததுபோல சீரான தாளத்துடன் முன்னால் சென்றது. அவன் மீண்டும் வியப்புடன் திரும்பிப்பார்க்க “காவடியின் நெறியேதான். இருபுறமும் எடை நிகரென்றாகும் தோளில் எடை குறைவாக இருக்கிறது. உடலை முற்றிலும் சமன் செய்கையில் புரவிக்கு முழு விடுதலை அளிக்கிறோம்” என்றாள். “புரவிக்கலையை நீங்கள் ஏன் பயில வேண்டும்?” என்றான் அவன். “நடனம், போர், புரவியூர்தல் மூன்றும் ஒரு கலையின் மூன்று முகங்கள்தான். உடலை பயிற்றுவித்து முற்றிலும் நேர்நிலையும் சீரமைவும் கொள்ளச் செய்தல்” என்றாள் பிருகந்நளை.

அவர்கள் விராடநகரியின் கோட்டைக்குள் நுழைந்தபோது முன்னரே அவளைப்பற்றி கேட்டிருந்த வீரர்கள் கோட்டை வாயிலில் கூடி நின்று முட்டி மோதியபடி வியப்புடனும் உவகையுடனும் நோக்கினர். ஒரு முதியவர் “இருபாலினத்தவரில் இப்படி ஓர் அழகியை பார்த்ததில்லை” என்றார். அருகிலிருந்த சூதர் “இருபாலினமே தேவர்களுக்குப் பிடித்த மானுட உடல். பெரும்பாலான இருபாலினத்தோர் ஆணின் அழகின்மையும் பெண்ணின் அழகின்மையும் கலந்தவர்கள். சிலரில் இரு அழகுகளும் இருக்கும். ஒத்திசைவின்மையால் அவை அழகின்மையென்றாகியிருக்கும். ஓருடலில் ஈரழகுகளும் நிகரென அமைந்து முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தால் அதுவே மானுடப்பேரழகாகும்” என்றார். “ஆம், பூசகர் இதைச் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போதுதான் விழியால் பார்த்தேன்” என்றான் ஓர் இளைஞன். “இருபாலினத்தவர் இரு பக்கமும் நிகர்செய்யப்பட்ட காவடிகளைப்போல” என்று அப்பால் ஒரு குரல் எழுந்தது.

தன்மேல் இருந்த நோக்குகள் எதையும் பிருகந்நளை அறிந்ததுபோல் தோன்றவில்லை. சற்றே கள்மயக்கில் இருப்பதைப்போல் சிவந்த நீண்ட விழிகள். காற்றிலாடும் மரக்கிளையில் சிறகு குலையாமல் அமர்ந்திருக்கும் சிட்டுபோல தன்னியல்பான புரவியூர்தல். கலையும் ஆடையையும் குழலையும் சீரமைப்பதில் பயின்ற அசைவின் ஆடலழகு. நகரினூடாக அவள் சென்றபோது மாளிகைகள் அனைத்திலும் பெண்கள் முண்டி அடித்து ஒருவரையொருவர் உடலுரசிக்கொண்டு செறிந்தனர். “அவ்வுடலில் எதை பார்க்கிறோம்? பெண்ணையா? ஆணையா?” என்று ஒருத்தி கேட்டாள். “ஆண்கள் பெண்களையே நோக்குவர். பெண்கள் ஆணுடலையும் பெண்ணுடலையும் நோக்குவார்கள். இரண்டிலும் அவர்கள் மகிழும் அழகுகளுண்டு. இரண்டும் ஓருடலில் அமைந்திருக்கையில் நோக்கு விலக்குவதெப்படி?” என்றாள் விறலி ஒருத்தி.

“அவர்களில் அழகென வெளிப்படுவது எது?” என்று ஒருத்தி கேட்டாள். “பெண்ணின் உச்ச அழகென்பது பெண்ணென்ற அசைவுகொண்டு ஆண் இயல்பு வெளிப்படுவது. ஆணில் அவ்வண்ணம் பெண் வெளிப்படுவது. இவள் ஒருகணம் ஆணென்றும் மறுகணம் பெண்ணென்றும் ஒழியாத ஆடலொன்றை ஒவ்வொரு அசைவிலும் நிகழ்த்திச்செல்கிறாள்” என்றாள் விறலி.

அவர்கள் அரண்மனையின் மைய முகப்பை அடைந்ததும் முக்தன் பிருகந்நளையிடம் “நான் காவல் வீரன். இதற்கப்பால் வருவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்றான். “வருக, நான் அழைத்துச் செல்கிறேன்” என்று பிருகந்நளை சொன்னாள். அவன் அஞ்ச “என் ஆணையை ஏற்காதவர்களை நான் பார்த்ததே இல்லை, காவலரே. வருக!” என்று புன்னகைத்தாள். அவன் பிறிதொரு எண்ணமில்லாமல் அவளுடன் சென்றான். முதற்காவல்நிலையிலேயே உத்தரையின் இளமருத்துவன் ஒருவன் அவளைக் காத்து நின்றிருந்தான். “தங்களை மருத்துவர்கள் அங்கு அழைத்து வரச்சொன்னார்கள். இளவரசி நலமடைந்துவிட்டார். ஆயினும் கடித்த பாம்பும் நச்சு நிறைந்தது. நாளையோ பின்னாளிலோ நரம்புகள் அதிர்வுகொள்ளக்கூடும். பேச்சோ விரலசைவோ குறைகொள்ள வாய்ப்புண்டு என்கிறார்கள்.”

“ஆம், அதற்காகவே இம்மருந்துளை கொண்டு வந்தேன்” என்றாள் பிருகந்நளை. திரும்பி முக்தனிடம் “வருக!” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அவன் அவள் இடையின் அழகிய உலைவை, தோள்களின் அசைவை, கைவீசலை நோக்கி விழி பிறிதொன்றை அறியாமல் உடன்சென்றான். இளமருத்துவன் அவளை இட்டுச்சென்றான். இடைநாழிகளைக் கடந்து சிறுசோலை ஒன்றுக்கு அப்பாலிருந்த மருத்துவநிலைக்கு அவர்கள் சென்று சேர்ந்தார்கள். காவலர் இருவர் நின்றிருப்பதைக் கண்டு இளமருத்துவன் “அரசர் வந்திருக்கிறார் போலும்” என்றான். “நீங்கள் வெளியே நில்லுங்கள். நான் சென்று கேட்டு வருகிறேன்” என உள்ளே சென்றான். அவள் அடிமரத்தில் கொடி என இயல்பாக அத்தூணில் சாய்ந்து நின்றாள். இளமருத்துவன் அவர்களை உள்ளே அழைத்தான். உள்ளே விராடரும் அரசியும் பீடங்களில் அமர்ந்திருக்க நடுவே தாழ்ந்த மஞ்சத்தில் மான்தோல்மேல் உத்தரை படுத்திருந்தாள்.

பிருகந்நளை கைகுவித்து இடை வளைத்து வணங்கி “விராடப் பேரரசரை வணங்கும் பேறு பெற்றேன். நான் சௌவீர நாட்டைச் சேர்ந்த பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். கலைதேரும்பொருட்டு எப்போதும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். அவர் தன் பழுத்த விழிகளால் அவளை நோக்கியபின் “உன்னைப்பற்றி சொன்னார்கள்” என்றார். “என் மகளை காப்பாற்றியதற்காக நான் உன்மேல் அன்புகொண்டிருக்கிறேன். நீ விழைவதை கோரலாம்.” பிருகந்நளை “நான் விழைவது இங்குள்ள ஆடற்கலைகளை கற்றுத்தேர்ந்தபின் விட்டுச்செல்வதை மட்டுமே” என்றாள். “நன்று, அரண்மனையிலேயே நீ தங்கலாம்” என்றார் விராடர்.

அரசி “இவளுக்கு நாகக்குறை உண்டு என நிமித்திகர் பலர் சொல்லியிருந்தனர். இங்கு வந்த புதிய கணியர் அதற்கு மாற்றே இல்லை என்றார். அதையும் மீறி காட்டுக்குச் சென்றிருக்கிறாள். நல்லூழாக ஒன்றும் நிகழவில்லை” என்றாள். “நாகம் காட்டில்தான் இருக்கிறதென்றில்லை” என்றாள் பிருகந்நளை. “ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். அவள் பேரரசரைப் பெறுவாள் என ஊழ்நெறி உள்ளது என்றார் அமணக் கணியர். அவ்வூழ் அவளை காக்கும்” என்றார் விராடர். “ஊழை நம்பி இருப்பவர் அரசர் அல்ல” என்றாள் அரசி. “என்ன சொல்கிறாய்? நான் ஊழை நம்பி இருக்கிறேனா?” என அவர் சினத்துடன் அரசியை நோக்கி திரும்ப பிருகந்நளை “அரசரைப்பற்றி நான் நன்கறிவேன். தங்கள் வீரத்தையும் நெறியையும் உணர்ந்தே இந்நாட்டுக்குள் வந்தேன்” என்றாள்.

முகம் மலர்ந்த விராடர் “நீ இங்கு விரும்புவதை கற்கலாம். இவள்கூட ஆடல் கற்கிறாள். நீ அறிந்தவற்றை இவளுக்கு கற்பிக்கலாம்” என்றார். அரசி “இளவரசிக்கு எதற்கு ஆடல்? அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா? கலிங்கத்திலிருந்தா? அவர்கள் நம்மை கொல்லைப்பக்கம் கூடையுடன் வந்து நிற்பவர்கள் என்கிறார்கள்” என்றார் விராடர் சினத்துடன். “உங்களை அப்படி சொல்வார்கள்போலும். எங்கள் குலமென்ன என்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் அரசி. ஊடே புகுந்த மருத்துவர் சினம்கொண்டு பேசத்தொடங்கிய அரசரைக் கடந்து “இளவரசி சற்று ஓய்வெடுக்கவேண்டும். இவள் கொண்டுவந்த மருந்துகளை எப்படி அளிப்பதென்று பார்க்கிறேன்” என்றார்.

“ஆம், அதை நோக்குக!” என விராடர் எழுந்துகொண்டார். பிருகந்நளையிடம் “அவைக்கு வந்து நான் அளிக்கும் பரிசிலை பெற்றுக்கொள்க!” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்?” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா?” என்றார். “ஆம், நாளையே இளவரசியை முன்பென மீட்டுவிடும் இவை” என்றாள் பிருகந்நளை.

தொடர்புடைய பதிவுகள்


கலையும் அல்லதும் -கடிதங்கள்

$
0
0
rias
கலையும் அல்லதும்- ஒருகடிதம்
கலையும் அல்லதும் –ஒரு பதில்

ஜெ,

உங்கள் விரிவான பதில் கண்டதில் மகிழ்ச்சி. நான் அதனை எழுதும் போது நாவல்களையும் திரைப்படங்களையும் மையப்படுத்தியே எழுத ஆரம்பித்தேன். நாவல்களைப் பற்றி எழுதும் போது, அது நான் நினைத்திராத தளங்களுக்குச் சென்று வேறு சில புதிய சாத்தியங்களைக் காட்டியது. அதனை விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றியமையால், நண்பர்களுடனான அப்போதைய உரையாடலுக்காக திரைப்படத்தினை உதாரணம் கொள்ளும்படியாயிற்று.

ஆமாம், நீங்கள் சொல்வது போல் நான் முதன்மையாக திரைப்பட ரசிகன் அல்ல. ஆனால் சிலசமயம் சில வணிகத் திரைப்படங்களை எவ்வாறு மாற்றம் செய்தால் அது கலைப் படைப்பாக மாறும் என்பதை ஒரு விளையாட்டாக கற்பனை செய்வதுண்டு. நாவல்களுக்கு அவ்வாறு செய்வதில் மனம் ஒப்பவில்லை. உங்கள் பதிலையொட்டி எனக்கு தோன்றிய எண்ணங்களை சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்களுக்கு எழுத வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.

கூடுதலாக ஓர் விண்ணப்பம்.

உங்கள் தளத்திலுள்ள எண்ணுடைய அந்தப் புகைப்படம் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாலானது. அதில் பழம் மாதிரி இருக்கிறேன். இம்மடலுடன் இணைத்திருக்கும் புகைப்படத்தினையே இனிவரும் காலங்களில் பயன்படுத்துவதற்கு தாங்கள் ஆவணம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மின்னஞ்சல் முகவரியை இணைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.

ஒப்பம்,

ரியாஸ்

***

அன்புள்ள ரியாஸ்,

சிங்கப்பூர் மைனர் போலிருக்கிறீர்கள்.

சொந்த அனுபவங்களில் இருந்து வாசிப்பை மதிப்பிடுவதற்கான தொடக்கமாக அமையட்டும் இது. நல்ல விவாதம்

ஜெ

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

கலையும் அல்லதும் பதிலில் வரலாறு, பண்பாட்டு பின்புல சார்ந்த அறிவு பற்றி எழுதியிருந்தீர்கள்.அவை சார்ந்த அறிவுபெற எந்த நூல்களை வாசிக்கலாம்.அதே வகையில் தமிழகம், ஆந்திரகேரள தென்னிந்திய அறிதலுக்கு உதவும் நூல்கள் பற்றி தெரிந்து காெள்வது எப்படி?.எதிலிருந்து துவங்குவது அல்லது வாசிக்கும் நூல்களில் துவங்கிவிட்டேனா? எனத் தெரியவில்லை.உங்களுக்கு நேரமிருப்பின் நூல்களைக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

அன்புடன்,

கமல தேவி

***

அன்புள்ள கமலதேவி,

அவ்வாறு குறிப்பிட்ட சில நூல்களைச் சொல்லமுடியாது. ஆடு மேய்வதைப்போலத்தான். அது சுவைதேடித்தான் மேயும். ஆனால் அதன் நாவுக்குச் சுவையாக இருப்பது அதன் உடலுக்கு நல்லது

நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். வரலாறு, பண்பாடு சார்ந்து தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களை எல்லாம் என் தளத்தில் குறிப்பிட்டிருப்பேன். அவற்றை வாசித்தாலே போதுமானது என நினைக்கிறேன்

ஜெ

***

அன்புள்ள ஜெ

கலையும் அல்லதும் முக்கியமான கட்டுரை. எனக்கே நான் எதை கலை என்று எண்ணுகிறேன் என்ற சந்தேகம் இருந்தது. பெரும்பாலும் எனக்கு எதில் அதிக வேலை இருந்ததோ அதை கலை என நினைப்பது என் வழக்கமாக இருந்திருக்கிறது. நான் கலை எனக்கண்ட பல படைப்புகளுக்கும் நீங்கள் சொல்லும் critique of culture and history என்னும் அம்சம் மிகக்குறைவு என இப்போது உணர்கிறேன்

சரவணன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒரு கதைக்கருவி

$
0
0

mm01 @ TBSC12

அன்புள்ள ஜெ..

அவ்வப்பொழுது கண்டு பிடிக்கும் தொழில் நுட்பத்தின் பிரயோகம் (?), ஊக்குவிக்கும் கட்டில்லா கருவியாக…

http://jamesharris.design/periodic/

கதைகளுக்காக ஒரு அட்டவணை.

மெண்டலீவின் பீரியாடிக் அட்டவணையை கருத்தில் கொண்டு அமைத்தது. கதைகளின் மூலக்கூறுகளை இப்படியும் புரிந்தது கொள்ளலாமே என்று தோன்றியது.

மிக எளிய தளத்தில், கதை எழுதுபவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம் என்று தோன்றியது.

அன்புடன்.

முரளி

***

அன்புள்ள முரளி

இந்தக்கருவியை பயன்படுத்தி கதை எழுத முயல்வதைப்பற்றி ஒரு சோக கதை எழுதலாம். காமெடியாக வரும்

என்ன சிக்கல் என்றால் இந்தவகையான கணித முறைமைகளை மூளையில் ஏற்றிக்கொள்பவர்களால் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாது. அவர்கள் வேண்டுமென்றால் கோட்பாட்டுவிமர்சனம் எழுதலாம்

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியவாதி வளர்கிறானா?

$
0
0

deva

அன்புள்ள ஜெ,

வளரும் படைப்பாளி என்பது தவறு என்ற கான்செப்ட் பலருக்கு புரியவில்லை. போதுமான அளவு வளர்ந்து விட்டார் என்பது பாராட்டுதான் என்றாலும்வளர்ச்சிக்கு வழி இல்லை என்பது குழப்பமாகவே இருக்கிறது..

சற்று இந்த கருதுகோளை விளக்கவும்

அன்புடன் பிச்சை

 

el

அன்புள்ள பிச்சை,

சரி இந்தக் கருத்தை இப்படி மாற்றிச் சொல்கிறேன். ஓர் எழுத்தாளன் தான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று கண்டுகொண்டபின் வளர்வதில்லை.

வளர்வது என்றால் என்ன? மாறுவது அல்ல. கூர்மைப்படுவது அல்ல. தெளிவடைவது அல்ல. வளர்ச்சி என்பது வளர்சிதைமாற்றம். அவனில் சில கூறுகள் இல்லாமலாகின்றன. சிலகூறுகள் பெரிதாகின்றன. வளர்பவர் முழுமையாகவே மாறிக்கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டத்திற்குப்பின் பிறிதொருவராக ஆகிவிடுகிறார்.

அந்த மாற்றம் உண்மையில் நல்ல எழுத்தாளர்களிடம் இருக்கிறதா? தேவதேவனின் முதல் தொகுதி ‘குளித்துக்கரையேறாத கோபியர்கள்’ அதில் மிகையான ஒரு கற்பனாவாதமும் முழங்கும் சொல்லாட்சியும் இருக்கும். ஆனால் சில வரிகளில் தேவதேவனின் இயல்புகளும் தெரியும்

உடனே வந்த அடுத்த தொகுதி ‘மின்னற்பொழுதே தூரம்’. அதில் உள்ள கவிதைகளில் இன்றைய தேவதேவன் வெளிப்படுகிறார். அவரது மொழி, படிம அமைப்பு, பார்வை ஆகியவை முழுமைகொண்டுள்ளன

 “அசையும்போது தோணி
அசையாத போது தீவு
தோணிக்கும் தீவுக்கும் இடையே
மின்னற்பொழுதே தூரம்,

என்ற வரிதான் தேவதேவன்.பிரமிள் அத்தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் அவரை முழுமையாக மலர்ந்த ஒரு கவிஞராகவே குறிப்பிடுகிறார்

பின்னர் அவர் அடைந்தது என்ன? நெருப்பு ஒரு மூலையிலிருந்து பற்றி எரிந்து விரிவதுபோல அந்த வாழ்க்கைக்கோணத்தை அந்த மொழியில் அப்படிமங்களில் விரித்து பரப்பிக்கொண்டே இருக்கிறார். அதைத்தான் அத்தனை கலைஞர்களும் செய்கிறார்கள். நான் சொன்னது அதையே.

cn

எழுத்தாளனின் தரிசனம் என்பது படித்து ஆராய்ந்து தரவுகளைச் சேர்த்து அடுக்கி அடையப்படுவது அல்ல. அவ்வகையில் செயல்படும் மனம் கொண்டவர்கள் இலக்கியவாசகர்கள்கூட ஆகமுடியாது. இலக்கியம் என்பது கற்பனையில் நிகழ்வது. கற்பனை மிக இளம் வயதிலேயே அமைந்துவிடுகிறது. அதைக் கருவியாக்கி எழுத்தாளன் தன் தரிசனத்தைக் கண்டடையும் அலைக்கழிப்புக்காலம் ஒன்று உண்டு. அதன் பின் அவன் செய்வதெல்லாம் தொடர்ச்சியாக வெளிப்படுவது மட்டும்தான்

எழுதி எழுதி மேம்படும் எழுத்தாளர்கள் உண்டா? சிலர் இருக்கலாம். சிலருக்கு அந்த தத்தளிப்புக்காலம் மேலும் மேலும் நீடிக்கக்கூடும். உதாரணம் சி.என் ஸ்ரீகண்டன்நாயர். மலையாளத்தில் அவர் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுக்காலம். ஆனால் வாழ்வின் கடைசிக்காலகட்டத்தில் நாடகங்களைக் கண்டுகொண்டார். காஞ்சனசீதா, சாகேதம்,லங்காலட்சுமி என மூன்றுநாடகங்களை தொடர்ச்சியாக எழுதினார், இறந்தார். மலையாள நாடகங்களில் உச்சகட்ட சாதனைகள் அவை. சிறுகதைகள் எவையும் எவர் நினைவிலும் இல்லை. அதாவது அவர் தன் வடிவை கண்டடைய அத்தனை பிந்தியிருக்கிறது.

வெகுசிலர் தொடர்ச்சியாக எழுதி மேம்படக்கூடும். இலக்கியத்தில் மாறாநெறி என ஏதுமில்லை. ஆனால் அத்தகையவர்கள் பெரும்பாலும் தர்க்கபுத்தியை நம்பி எழுதுபவர்களாக, சற்று மேலோட்டமான எழுத்தாளர்களாகவே இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு

இது ஏன் என எண்ணிப்பாருங்கள் எழுத்தில் வளர்ச்சி உண்டு என்றால்,. எழுதி எழுதி மேம்பட முடியும் என்றால், எழுத்தாளர்கள் எழுதும் பிந்தைய ஆக்கங்கள்தானே முந்தையவற்றை விட மேம்பட்டவையாக இருக்கமுடியும்? லா.ச.ராவின் இதழ்கள், ஜனனி, புத்ர, அபித போன்றா பிற்கால எழுத்துக்கள் இருக்கின்றன? கணிசமான எழுத்தாளர்கள் தொடங்கிய இடத்தில் நின்றிருக்கிறார்கள், அல்லது பின்னுக்குச் செல்கிறார்கள் இல்லையா?

எழுதி அடையும் பயிற்சி, அனுபவம் இலக்கியத்தில் எவ்வகையிலும் பயன்படுவதில்லை. அது முழுக்க முழுக்க உள்ளுணர்வின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் நிகழ்வு. ஆழ்மனதை மொழியுடன் இணைப்பதற்கான ஆரம்பகட்டப் பயிற்சிக்கு அப்பால் அதற்கு எந்த தேர்ச்சியும் தேவையில்லை.

டி.எஸ்.எலியட் ‘கலை வளர்வதில்லை. கலையின் மூலப்பொருட்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன’ என்றார். முதல் வாசிப்பில் அதிர்ச்சியடையச்செய்யும் சொற்றொடர். ஆனால் அது உண்மை. நியூட்டனிடமிருந்து ஐன்ஸ்டீன் வளர்ந்திருக்கிறார். கம்பனிடமிருந்து சேக்கிழார் வளர்ந்திருக்கிறாரா என்ன? மானுட நாகரீகத்தின் தொடக்கத்திலேயே பல கலைப்படைப்புக்கள் உருவாகி இன்றுவரை கடக்கமுடியாத சாதனைகளாக நிலைகொள்கின்றன. கம்பனுக்குப்பின் வந்தவன் என்பதனால் நான் கம்பனைவிட மேலாக எதையும் அறிந்திருக்கவில்லை, அடையவுமில்லை. கம்பன் எழுதாத களங்களையே எழுதுகிறேன்

எண்ணிப்பார்த்தால் இந்தக்கூற்றுக்கள் இலக்கியம் என்னும் அசாதாரணமான வெளிப்பாட்டுமுறையை அடையாளம் காட்டும். நாம் சாதாரணமாக பிற அறிவுச்செயல்பாடுகளுடன் இலக்கியத்தையும் ஒன்றெனக் கருதுகிறோம். அதுவே இக்கூற்றுக்களை அறியத் தடையாக அமைகிறது. இதை அறிந்தால் இலக்கியத்தின் தனித்தன்மையை எளிதில் அறியமுடியும்

ஜெ

***


தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்

$
0
0
NEERKOLAM_EPI_21

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.

 இதில் மாமலர் நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெறும்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நேரம்:- வரும் ஞாயிறு (25/6/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

தொடர்புக்கு:-  9043195217 / 9952965505

Satyananda Yoga -Chennai
11/15, outh perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani
Chennai- 26

Thanks & Regards

SOUNDAR.G
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil 1st Street
Vadapalani
Chennai- 26
9952965505

***

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27

$
0
0

26. நிலைக்கோள்

flowerபுலரிக்கு முன்னர் முக்தன் சென்றபோதே பிருகந்நளை அணிபுனைந்து முடித்திருந்தாள். அவள் தங்கியிருந்த மூன்று அறைகள் கொண்ட சிறிய இல்லத்தின் முகப்பு வாயில் மூடப்பட்டிருந்தது. முக்தன் மூன்று முறை “தேவி” என்றழைத்தான். வாயில் உள்ளிருந்து திறக்கப்படும் ஓசையே அவளென்று அவனுக்கு காட்டியது. அவ்வோசையிலேயே அவள் முழுஉருவத்தைப் பார்த்து அதிர்வுகொண்ட அவன் உள்ளம் படபடக்கலாயிற்று.

இளஞ்செந்நிறப் பட்டாடையும் ஆரங்களும் குழைகளும் கொண்டைச்சரங்களுமாக முழுதணிக்கோலத்தில் தோன்றிய பிருகந்நளை “வருக, வீரரே!” என்றாள். முந்தைய நாள் இரவே அணிபுனைந்து அவனுக்காகக் காத்திருந்தவள் போலிருந்தாள். வெளியே அப்போதும் இருள் விலகியிருக்கவில்லை. இரவுச்சீவிடு நிலைக்கவில்லை. அவன் தன் இல்லத்திலிருந்து கிளம்பியபோது புரவியின் வெண்ணிறப் பிடரிமயிர்கூட தெரியாத கருக்கிருட்டு இருந்தது.

அவன் அவள் உடலில் இருந்து எழுந்த புதுமலர்களின் மணத்தையும் நீராடி ஈரம் முழுதுலராத உடலின் நீராவி கலந்த வியர்வையின் மணத்தையும் முகர்ந்தபடி உள்ளே சென்றான். ஆடை சரசரக்க கைவளைகளும் சிலம்பணிகளும் கழுத்தணிகளும் ஒலிக்க அவனுக்குப்பின்னால் வந்து “முன்னரே வந்துவிட்டீர்கள், வீரரே” என்றாள். அவன் திணறலுடன் “ஆம்” என்றான். “அமருங்கள். அருந்துவதற்கு ஏதேனும் கொண்டு வருகிறேன்” என்றாள். முக்தன் அவள் உடலிலிருந்து விழிகளை விலக்கி “நான் இல்லத்தில் இன்கூழும் அப்பங்களும் அருந்திவிட்டுத்தான் வந்தேன்” என்றான். அவள் மெல்ல சிரித்து “என் கையால் ஒரு குவளை இன்கடுநீர் அருந்தலாம். இது அன்னைகைச்சமையல் அல்ல. இதன் சுவை வேறு” என்றாள்.

அவள் சொன்னதென்னவென்று புரியாமலேயே முகம் சிவந்து குரல் பதற “ஆம், உண்மை” என்றான் முக்தன். விழிகள் பிறிதொரு மொழியில் ஒரு சொல்லுதிர்த்தனவென நொடிக்க அவள் எழுந்து சிலம்புகளும் கைவளைகளும் ஒலிக்க உள்ளே சென்றாள். மெல்ல அசைந்த அவள் பின்னழகுகளைப் பார்த்து பின்பு தன்னுணர்வுடன் விழிவிலக்கிக்கொண்டு “எப்போது எழுந்தீர்கள்? நீராடி அணிபுனைந்து சித்தமாக இருக்கிறீர்கள்?” என்றான்.

அவள் அடுமனைக்குள்ளிருந்து “நீங்கள் புலரிக்கு முன்னரே வந்துவிடுவீர்கள் என்று தெரியும்” என்றாள். “எப்படி?” என்று அவன் கேட்டான். அவள் தலையை நீட்டி சிரித்து “தெரியும்… அவ்வளவுதான்” என்றபின் மறைந்தாள். தன் உள்ளத்தின் ஓசையைக் கேட்டபடி மூச்சுத் திணறுவதை உணர்ந்து தசைகளை எளிதாக்கி இயல்புநிலைகொள்ள முயன்றபடி முக்தன் அமர்ந்திருந்தான்.

இரு உள்ளங்கால்களும் வியர்த்திருப்பதாகத் தோன்றியது. உள்ளங்கால்கள் வியர்க்குமா? முன்பெப்போதும் அதை உணர்ந்ததில்லை. குளிர் எஞ்சியிருந்த புலரியிலேயே இத்தனை வியர்வை! புரவியில் வந்ததனால்தான். ஆனால் புரவியை மிக மெல்லத்தான் செலுத்தினான். மூச்சிரைக்க வியர்வை மணத்துடன் வந்திறங்கலாகாதென்று எண்ணியிருந்தான். அறியாமல் குதிமுட்கள் புரவியை தூண்டியிருக்கலாம்.

புரவியென்பது ஓட்டுபவன் உள்ளம் பரு வடிவு கொண்டது என்று அவனுக்கு போர்க்கலை கற்பித்த சுஷமரின் சொற்களை நினைவு கூர்ந்தான். “எதிரியின் விழிகளை நோக்குவது உன்னை அவன் நோக்கும் வாயில் திறப்பது. அவன் புரவியை நோக்கு அது அனைத்தையும் கூறும். அவன் பதற்றத்தை அச்சத்தை வெறியை விரைவை.”

உள்ளே அவள் கைபட்டு கலங்கள் மணியொலியும் சிலம்பலோசையும் எழுப்புவதை கேட்டான். ஓசையிலேயே அவள் முற்றிலும் காட்சியெனத் தெரிந்தாள். தன் அன்னையின் காலடி ஓசையை அவனால் அறிய முடிந்தது. புரவியின் குளம்போசையை அவன் அறிந்திருந்தான். ஒவ்வொரு ஓசையிலும் இவளை உணர முடிகிறது.

நன்கு தேய்த்து பொன்னென ஆக்கப்பட்ட குவளையில் இன்கடுநீர் ஆவியெழ மரத்தாலத்தில் வைத்து ஏந்தியபடி அவள் நடந்து வந்தாள். ஒவ்வொரு அசைவும் ஆடல். நடையென்று ஒன்றை எப்போதும் அறிந்திருக்கமாட்டாள் என்பது போல. “என்ன பார்வை?” என்று புன்னகைத்தபடி கலத்தை நீட்டி “அருந்துக!” என்றாள். “ஆம்” என்றபடி அவன் அதை எடுத்துக்கொண்டான்.

தாலத்தை அப்பால் வைத்துவிட்டு எதிரிலிருந்த பீடத்தில் அமர்ந்து கால்களை அதன் மேல் மடித்துக்கொண்டாள். “அரண்மனையிலிருந்து தேர் வருமென்றார்கள் அல்லவா?” என்றாள். ஒரு மிடறு இன்நீர் குடித்துவிட்டு “ஆம். நீங்கள் செல்வது அரசிக்கு ஆசிரியராக அல்லவா?” என்றான். அவள் சிரித்து “அவளுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பது புரவிக்கு பறக்கக் கற்றுக்கொடுப்பது போல என்று முந்தைய ஆசிரியை என்னிடம் சொன்னாள்” என்றாள்.

அவன் சிரித்து “மெய்தான். நிஷத குடிகளில் எந்தப்பெண்ணுக்கும் ஆடல் அமைந்ததே இல்லை. இங்கு விறலியர் வந்து மேடையில் ஆடும்போதெல்லாம் ஒவ்வொருவரும் அதை உணர்வதுண்டு” என்றான். அவள் “ஆடலற்ற குடியென்று ஏதும் இல்லை” என்றாள். “ஆம், எங்களுக்கும் ஆடல்கள் உண்டு. விழவுகளிலும் குடிப்பண்டிகைகளிலும் நாங்கள் கூடி ஆடும் கலைநிகழ்வுகள் பல. ஆனால் அது தாளத்திற்கு உடலை ஒப்புக்கொடுப்பது மட்டுமே. அத்தாளத்தினூடாக ஒவ்வொருவரும் தாங்களெனும் உணர்வையிழந்து குடியென்று பெருக்கில் ஒழுகும் துளியாகிறார்கள். அதன் அலைகளில் தாங்களும் அசைகிறார்கள்” என்றான்.

அவள் சிரித்து “நடனமென்பதே அதுதான்” என்றாள். “ஆனால் இங்கு கலையென ஆடப்படும் நடனங்கள் அனைத்தும் ஒருவர் தன் உணர்வுகளினூடாகச் சென்று எங்கோ எதையோ எய்துவதுதான்” என்றான் முக்தன். அவள் தலைசரித்தபோது குழல் கற்றையில் சுருட்டிக்கட்டப்பட்டிருந்த முத்துச்சரம் சரிந்து கன்னத்தை தொட்டபடி ஆடியது. புன்னகையுடன் “நன்கு நோக்கி இருக்கிறீர்கள். கூர்ந்து எண்ணியும் இருக்கிறீர்கள்” என்றாள்.

அப்பாராட்டுரையால் அவன் முகம் சிவந்தது. விழிகளை விலக்கிக்கொண்டான். “இவ்வண்ணம் எண்ணி நோக்குங்கள்… அவ்வாறு தன்னை இழந்து தன் குலத்தின் அலைகளுக்கு உடலை ஒப்புக்கொடுத்த ஒருத்தி பின்னர் மெல்ல கனிந்து மேலும் முன்னெழுந்து வெறும் கற்பனையிலேயே அக்குலத்தை தன்னைச் சூழ உணர்ந்தாள் என்றால்? அவ்வாறு நிலையழிந்து பெருநிலை கொண்டாளென்றால்? அவளுக்கு அவ்வாறு தன்னிலையழிந்து பேருருக்கொள்ள குலமோ திரளோ தேவையில்லை என்றால்?” என்றாள்.

அவன் “ஆம், அது நிகழக்கூடுவதே” என்றான். “நடனமென்பது அதுவே… தன்னை தன் உடலை கற்பனையினூடாக பிறிது பலவாக ஆக்கி பெருக்கிக்கொள்ளுதல். தன் அன்னையாக தந்தையாக உடன் பிறப்பாக சுற்றங்களாக குடியாக குலமாக… மேலும் விரிந்து மரக்கிளைகளாக நீர்த்துளிகளாக புகையாக காற்றாக கனலாக வானாக” என்றாள் பிருகந்நளை “அவ்வெண்ணம் பிறிதாகி பெருகி முழுமை கொள்வதற்கு தடையென்றிருப்பது உடல் கொண்டிருக்கும் தன்னிலையே. ஒவ்வொரு உடலிலும் அவ்வுடலை உள்நின்று வடிவமைக்கும் தன்னுணர்வொன்று உள்ளது. பார்த்திவப் பரமாணு என கருவறைக்குள் நுழைகையிலேயே அவ்வுணர்வு உருவாகி விடுகிறது என்கிறார்கள்.”

“தானென்றும் பிறிதென்றும் உடல் கொள்ளும் இருமையும் விலக்கமுமே முதல் தன்னுணர்வு. தொப்புள்கொடியைப் பற்றி இது வேறு என விலக்குகிறது குழவி. கருவறைச்சுவர்களில் கால் வைத்து எம்புகிறது. தன் காலையும் கையையும் தானென்று எண்ணி முத்தமிடுகிறது. பின்பு பிறந்து வந்து காற்றையும் ஒளியையும் நீரையும் உணரும்போது பிறிதெனும் தானெனும் விலக்கே புவி என்ற அறிவாகி அதற்குள் நிறைகிறது. அயல்விழி தொடுகையில் அயல்கை படுகையில் அது கொள்ளும் தன்னுணர்வு அச்சமும் எச்சரிக்கையும் ஆகி இங்கு வாழவும் வெல்லவும் அதற்கு தேவையாகிறது. தன் உடலும் தன்னவர் உடலும் தொடுகையில் அளிக்கும் இன்பமே இப்புவியில் மானுட உடலுக்கு முதன்மைக்கொடை. இவ்விரண்டையும் முற்றிலும் களைவதினூடாகவே மூன்றாவது பேரின்பமாகிய பிறவாதலை பெருகுதலை சென்றடைய முடியும்.”

“நோக்குக, ஒவ்வொரு குழவியும் அன்னையர் மடியில், கைகளில், இடையில் அமர்ந்து உடலசைவுகளை பயின்று எடுப்பதை. சிறுகால் வைத்து நடந்தும் விழுந்தும் உணவுக்கலத்தில் அள்ளியும் துழன்றும் தன் அசைவுகளை தீட்டிக்கொள்கிறது. பின்பு விளையாடல்கள், பலநூறு பயிற்சிகள், அவைநிற்றல்கள். களம்காணல்கள். மானுட உடலென்று திரள்வது தன்னைச் சூழ்ந்திருக்கும் பிற அனைத்திற்கும் உடலுள் வாழும் உளம் கொண்டிருக்கும் எதிர்வினை மட்டுமே. காட்டில் நின்றிருக்கும் ஒரு மரம் அக்காட்டிற்குள் அது தனக்கெனக் கண்டடைந்த வெளி என்பது போல.”

“உங்கள் விழிகள் ஒவ்வொரு கணமும் பிற விழிகளால் பந்தென விளையாடப்படுகின்றன. மரக்கிளைகளை காற்று போல சூழ்ந்திருக்கும் புறவுலகு உங்கள் கைகளை சுழல வைக்கிறது. பிற என எழுந்து சூழ்ந்த அனைத்திற்கும் விளையாட்டுப் பாவையென நம்மை நாம் அளித்திருக்கிறோம். நடனக்கலை என்பது நம் தன்னிலையை இங்கிருந்து விலக்கி பிறவெனச் சூழ்ந்துள்ளவையாக முற்றிலும் ஆக்கிக் கொள்ளுதலே .மேடையில் ஆடுவதல்ல அது. நடனத்தின் முழுமையென்பது தானன்றி எவருமே இல்லாத இடத்தில் ஆட்டன் அடையும் நிறைவு மட்டுமே.”

அவள் குரலும் கூறுமுறையும் பலநூறு மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்குரியவை என முக்தன் எண்ணினான். “நோக்கற்கோ சுவைப்பதற்கோ அல்ல அது, பிரம்மம் புடவியை நிகழ்த்துவதுபோல ஆடற்கென நிகழும் ஆடல் அது. உடல் உருமாறி எழுந்து உடலின்மையை எய்தும் ஒரு கணம். ஏன், மேடையிலும் நிகழலாம் என்றால் அது தொடங்கும்போது சூழ்ந்திருக்கும் அனைத்தும் மறக்கப்பட்டுவிடுகின்றன என்பதனால்தான். ஆடல் எங்கு நிகழினும் ஆட்டன் முழுத்தனிமையில்தான் இருக்கிறான்” என்றாள்.

அவள் பேசப்பேச அவன் மகுடி ஒலியில் விழி கட்டப்பட்டு மெல்ல உடன்அசையும் பாம்பென முன்னால் அமர்ந்திருந்தான். செவ்விய உதடுகள் சுருங்கி விரிந்து, சிறுவெண்பற்களைக்காட்டி மறைந்து, கன்னக்கோடுகள் இழுபட்டு விரிந்து, கண்கள் ஒளிகொண்டு, காது மடல்களில் ஆடிய குழைகள் கழுத்தைத் தொட்டும் விலகியும் ஆட, புரிகுழல் தன் நிழல்களுடன் நெளிந்து பறக்க, கழுத்து ஒசிந்தும், தோள் விலகியும், கை நெகிழ்ந்தும் அவனை ஆட்கொண்டிருந்தது அவள் உடல். “உங்கள் விழிகளில் கனவைக் கண்டேன். ஆகவே உடன் சேர்த்தேன். இவ்வண்ணம் முழுக்கனவில் ஆழ்வீர்கள் என்று எண்ணவில்லை” என்றாள். அவன் விழித்துக்கொண்டு “இல்லை நான் எண்னிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “என்ன?” என்று அவள் கேட்டாள்.

“விறலியர் உடல்கள் இளமையிலேயே தன்னுணர்வைத் துறக்கும் பயிற்சி கொண்டிருக்கின்றன. சூதர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொஞ்சி தோளிலும் நெஞ்சிலும் சூடி வளர்க்கிறார்கள். பிற குலமகள்களோ இரண்டு வயதில் இடைத்தாலி அணிவது வரைதான் குழவிகளாக கருதப்படுகிறார்கள் பின்பு அன்னையரும் தோழியருமன்றி பிறர் அவர்களை தொட இயலாது. தந்தையர்கூட விழிகூர்ந்து நோக்க இயலாது. ஐம்படைத்தாலி அணிகையில் இற்செறிப்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விழிதொடுகையிலேயே உடல் சிலிர்க்கத் தொடங்குகிறார்கள். தன்னுடலுக்குள் அனைத்து வாயில்களையும் மூடி சிறைகொள்கிறார்கள். ஒவ்வொரு உடலசைவும் எண்ணி எண்ணி பயிற்றுவிக்கப்படுகிறது. அரசியரோ மேலும் பெரிய சங்கிலிகளால் தளைக்கப்படுகிறார்கள். அவைமுறைமைகள், குலச்சடங்குகள், குடிமுறைமைகள். ஒரு சொல்கூட உளம் தெளிந்து குமிழியென எழ இயலாது. ஓர் அசைவுகூட சித்தத்தால் தொட்டு அலையென எழுப்பப்பட முடியாது. அவர்கள் நடனம் கற்பதே ஒருபோதும் இயலாது” என்றான்.

பிருகந்நளை நகைத்து “கேட்கையில் அது மெய்தான் எனத் தோன்றும். ஆனால் என் அறிதல் வேறு. ஆம், விறலியர் உடலில் நெய்யில் அனலென ஆட்டம் பற்றிக்கொள்கிறது. ஆனால் உலர்ந்திறுகிய அரணிக்கட்டையிலும் அனல் உறைகிறது. அத்தனை சிறைகளுக்கு உள்ளே பெண்கள் தனித்திருக்கிறார்கள். சிறையறைக்குள் நாம் அடையும் விடுதலை என ஒன்று உண்டு, வீரரே. அதை ஆண்கள் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். பிறர் நம்மை உள்ளே அடைத்து மூடுகையில் மறுபக்கம் நாம் நம்மை உள்வைத்து முற்றிலும் மூடிக்கொள்ள முடியும். எவருமறியாத தனிமையில் அனைத்தையும் எடுத்து நாமென்று அமரமுடியும். குலமகள்கள் அத்தனிமையில் பற்றிக்கொண்டு பெருந்தழலென எழுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்” என்றாள்.

“அவ்வண்ணம்தான் உத்தரை எழவிருக்கிறாளா?” என்றான் முக்தன். தன் குரலில் எழுந்த ஏளனத்தை வெல்லும் பொருட்டு “என்ன இருந்தாலும் அவர் இளவரசி” என்றான். பிருகந்நளை “முந்தைய ஆசிரியர் அவள் கற்றிருக்கும் இளவரசியின் உடலசவுகளுக்கு மேல் கூடுதலாக நடனம் எனும் உடலசைவை கற்றுக்கொடுக்க முயன்றார். அவள் கற்ற ஒவ்வோர் அசைவும் இவர் கற்பித்த அசைவுகளுடன் முரண்பட்டன. பிடியானையின் துதிக்கைபோல கை தூக்கி வாழ்த்துகளை ஏற்கவேண்டுமென்று அரசமுறைமை கற்பிக்கிறது. மலைப்பாம்பு இரை நோக்கி இறங்குவதுபோல் அவைவணக்கம் அமையவேண்டுமென்று ஆட்ட நூல் சொல்கிறது. அவை ஒத்திசையவில்லை” என்றாள்.

“நான் அவளுக்கு உள்ளிருந்து பிறிதொன்றை எடுக்க கற்பிக்கப்போகிறேன். அரசியென அவள் இருக்கும்போது ஆடல் அவளுடன் உறையாது. அரசியல்லாதாகி அவளென்று எஞ்சும் தனியறைக்குள் ஆடல் மட்டும் அவளுடன் இருக்கும். அதை தடுக்கும் தன்னுணர்வொன்றும் அவளிடம் எஞ்சாது” என்றாள். அவன் நகைத்து “நன்று. அவைநடுவே அரியணை மேடையில் அவ்வாட்டம் எழாதிருக்கும்வரை அனைத்தும் நலமே” என்றான். அவள் நகைத்து “இரண்டாக பகுத்துக்கொள்வதைப்போல் பெருகும் வழி பிறிதொன்றில்லை. அவ்விரண்டில் ஒன்று பெருகி பிறிதொன்றை உண்ணுமென்றால் அமையும் முழுநிலைபோல் சிறந்த தவமும் இல்லை” என்றாள்.

flowerஉத்தரைக்கு பிருகந்நளை நடனம் கற்பிக்கும் இளவேனில் மண்டபம் அரண்மனைக்கு வடகிழக்காக அமைந்திருந்த அணிச்சோலைக்கு நடுவே இருந்தது. நீள்வட்ட வடிவமான அக்கூடத்திற்கு வெளியே இடைநாழியில் உடைவாளுடன் முக்தன் காவல்நின்றான். உள்ளே பெண்களின் சிரிப்பொலிகளும் அணியோசைகளும் நகையாடும் குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. அவன் அவற்றை ஒதுக்க முயன்றாலும் அவையன்றி எவையும் சித்தத்தில் நிலைகொள்ளவில்லை.

முதல்நாள் ஆடல் கற்க தன் ஏழு தோழியருடன் உத்தரை வந்தபோது அவன் கூடத்தின் விரிந்த திண்ணையில் இடையில் கை வைத்து இடை ஒசிய நின்று அவர்களை நோக்கிக்கொண்டிருந்த பிருகந்நளையிடம் “ஏழு பேருக்கும் கற்பிக்கப்போகிறீர்களா?” என்றான்.

அவள் திரும்பி “எந்தப்பெண்ணும் அறியாநிலையில் ஆடல்கற்க தனியாக வருவதில்லை. ஆடலை ஒரு விளையாட்டென்றே எண்ணுகிறார்கள். அதில் கூடி உவகை கொள்ள பிறருடன் வருவார்கள். எப்போது அவ்வாறு உடன்வருபவர்கள் வேண்டியதில்லை என்று அவளுக்குத் தோன்றுகிறதோ அப்போதே நடனம் அவளுக்குள் செல்லத் தொடங்குகிறது. இந்நகரின் அனைவரும் சூழ இருந்தாலும் முற்றிலும் தனிமையிலிருப்பதாக தோன்றுகையில் நடனம் நிகழத் தொடங்குகிறது” என்றாள்.

பட்டாடை உலையும் ஒலியுடன், வளையோசை மெல்ல குலுங்கி உடனிணைய, உத்தரை படியேறியபோது ஒரு தோழி அவள் காதில் ஏதோ சொல்ல அவள் திரும்பி அவள் கைகளை அடித்தாள். பிற பெண்கள் சேர்ந்து சிரிக்கும் ஓசை கேட்டது. அருகே வந்துநின்ற உத்தரை “வணங்குகிறேன், ஆசிரியையே” என்றாள். “அல்லது ஆசிரியர் என்று சொல்லவேண்டுமோ?” என்று இன்னொருபெண் கேட்க அனைவரும் சிரித்தனர்.

“ஆசிரியர் எப்போதும் ஆண்பால்தான்” என்று பிருகந்நளை சொன்னாள். “ஏன்?” என்று உத்தரை புருவம் சுளிக்க கேட்டாள். “அன்னை எப்போதும் பெண்பால் என்பதுபோல” என்றாள் பிருகந்நளை. புரியாமல் தன் தோழியரைப் பார்த்தபின் “நன்று” என்று உத்தரை கைநீட்டினாள். ஒரு தோழி தாலத்தில் அணிகளும் பட்டும் பொன் நாணயங்களும் வைத்து அளிக்க அதை பிருகந்நளைக்கு தலைவணங்கி “என் எளிய குருகாணிக்கை. ஏற்று அருளல் வேண்டும். கலையளித்து வாழ்த்துக!” என்று சொல்லி நீட்டினாள்.

பிருகந்நளை அதை வாங்கி அவனிடம் அளித்தபின் கைகூப்பி நின்றாள். உத்தரை முழந்தாளிட்டு அவள் கால்களைப் பணிய பிருகந்நளை அவள் தலையில் கைவைத்து “கலை தேர்க! கலையினூடாக பிற அனைத்தையும் தேர்க! அறிந்தவற்றினூடாக அறியவொண்ணாதவை அருகணைக! அதன் தொடுகை நிகழ்க! ஆம் அதன் தொடுகை நிகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றாள்.

அவர்கள் ஆடற்களத்திற்குள் சென்றபோது வாயிலில் நின்றபடி அவன் அவர்களை பார்த்தான். அவர்கள் எவரும் ஆடலை ஒரு பொருட்டென எடுத்தவர்களல்ல என்பது ஒவ்வொரு முகத்திலுமிருந்த சிரிப்பிலும், விழிகள் ஒருவரோடோருவர் தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டதிலும் தெரிந்தது. பிருகந்நளை “அமர்க!” என்றாள். “நான் சலங்கையை கட்டிக்கொள்ளட்டுமா?” என்றாள் உத்தரை. “முதலில் ஆடலை நோக்குவதை பயில்க!” என்று சொன்னாள் பிருகந்நளை. “ஆடலை வழக்கமாக விழிகளால் நோக்குவோம்” என்று ஒரு தோழி சொன்னாள். பிருகந்நளை அவளை நோக்கி திரும்பி “ஆம், ஆனால் விழிகளுக்குப்பின் பிறிதொரு ஆடற்பெண் வந்து அமரவேண்டும். உடன் ஆடாது எந்த ஆடலையும் எவரும் அறிய முடியாது” என்றாள்.

உத்தரை அங்கிருந்த சிறு பீடமொன்றில் அமர்ந்து மடியில் கைகோத்தபடி “இப்போது நீங்கள் ஆடப்போகிறீர்களா?” என்றாள். “ஆம்” என்றபின் பிருகந்நளை திரும்பி அவனிடம் கை அசைத்தாள். அவ்வசைவின் அழகில் அவன் இளவரசியையும் தோழியரையும் மறந்து முகமலர்ந்து கள்ளுண்டவன்போல் அருகணைந்தான். “அச்சலங்கைகளை அணிவி” என்றபடி பிருகந்நளை தன் காலைத் தூக்கி சிறுபீடம் மீது வைத்தாள்.

அவள் சுட்டிக்காட்டிய சிறு சந்தனப்பேழையைத் திறந்து அதிலிருந்த வெள்ளிச் சலங்கையை எடுத்தான். அது பேழையின் சிவந்த பட்டுமெத்தையில் ஓர் அழகிய சிரிப்பு போலிருந்தது. கைகளில் எடுத்தபோது சிணுங்கியது. அதை அவள் கால்களில் அணிவித்தான். ஆணியை முறுக்கி இரு கால்களிலும் சலங்கை கட்டியதும் அவன் விலகிச்செல்லலாம் என்று அவள் கைகாட்டினாள். ஊதி பஞ்சென தன்னை அவள் விலக்குவதாக உணர்ந்தான். எடையின்றி பறந்து சென்று அறைச்சுவர் அருகே மெல்ல படிந்தான்.

பிருகந்நளை இயல்பாக நடந்து சென்று கூடத்தின் நடுவே நின்றாள். உத்தரை “தாளமிடுவது யார்?” என்றாள். அவள் புன்னகைத்து “காற்றிலாடும் மரங்களுக்கோ நீர்பொழியும் அருவிக்கோ பிறிதொருவர் தாளமிடுவதில்லை” என்றாள். உத்தரை தன் தோழியரை நோக்கியபோது கண்களில் மெல்லிய நகைப்பிருப்பதை அவன் அறிந்தான்.

ஒரு கணத்தில் பிருகந்நளையின் உடலில் தாளத்தின் முதல் ஒலி எழுவதை அவன் கண்களால் பார்த்தான். அவ்வொலி அசைவின்மையின் கணம் என நிகழ்ந்தது. முழு உடலும் உறைந்து அக்கணம் திரைவிலக்கி வைக்கப்பட்ட சிற்பமென்றாகியது. பின்பு நுண்சிற்பங்கள் அவ்வுடலினூடாக ஒழுகத் தொடங்கின. அசைவென புறவுலகில் அவன் கண்ட அனைத்தும் தங்கள் தூயஉருவில் அவ்வுடலினூடாக நிகழ்ந்து சென்றன. அனலும், புனலும், மலர்மரமும், முகிலும். மானும் மயிலும் புரவியும் யானையும் சிம்மமும். குழந்தையும் கன்னியும் காளையும்.

மீண்டும் நிலை கொண்டு உடல் மீண்டாள். குனிந்து நிலம் தொட்டு வணங்கி இடையில் கைவைத்து நின்று உத்தரையிடம் “ஆடுவதென்றால் என்னவென்று அறிந்திருப்பாய்” என்றாள். “ஆம்” என்று அவள் கைகூப்பினாள். அங்கிருந்த ஒவ்வொருவரும் பிறிதெங்கிருந்தோ மீண்டு உடலில் வந்தமைந்தனர். கைநீட்டி “எழுக!” என்று பிருகந்நளை சொல்ல கூப்பிய கைகளுடன் எழுந்த உத்தரை “நான் உங்களுடன் ஆடினேன். உமை இறைவனுடன் ஆடுவதைப்போல” என்றாள் நடுங்கும் குரலில். “உங்கள் ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவிலும் எஞ்சியிருந்த ஒரு சிறு பகுதியை நான் நிறைத்தேன்” என்றாள்.

குரல் தழுதழுக்க உடல் துவள வேறேதோ சொல்ல நாவெடுத்தபின் கால் மடித்து அமர்ந்து பிருகந்நளையின் கால்களில் தன் தலையை வைத்து “எனக்கு அருள்க, தேவா! ஒருகணமேனும் இவ்வுடலால் அவ்வாடலை ஆடமுடிந்தேன் என்றால் பிறவி கொண்டதன் பொருளை அடைவேன்” என்றாள். “நன்று! அது நிகழ்க!” என்றாள் பிருகந்நளை. பெண்டிர் ஒவ்வொருவராக எழுந்து வந்து அவள் அருகே நின்றனர்.

ஒருத்தி கைகூப்பி “பிழை பொறுக்கவேண்டும்” என்றாள். “ஏன்?” என்று பிருகந்நளை கேட்டாள். “தாங்கள் உமையொருபாகன். நாங்கள் அதை உணரும் விழிகளற்றிருந்தோம்” என்றாள். பிருகந்நளை குனிந்து உத்தரையைத் தூக்கி எழுப்பி அவள் விழிநீரைத் துடைத்து “நாம் நாளை முதல் தொடங்குவோம்” என்றாள். “அல்ல, இன்று இக்கணம் ஒருமுறையேனும் ஒரு சுவடேனும் நான் கற்றாக வேண்டும். இன்று இரவு அதை என் நெஞ்சில் வைத்து துயில்வேன்” என்று உத்தரை சொன்னாள்.

குழலை பின்னால் தள்ளி இனிய பறவையொலி ஒன்று எழ வாய்விட்டு நகைத்த பிருகந்நளை “நன்று! முதற்சுவடு என்னவென்று இன்று கற்பிக்கிறேன்” என்று அவள் தோளைத் தொட்டு அழைத்துச்சென்று களம் நடுவே நிறுத்தினாள். “முதல் பாடம் என்பது நிற்பதே. அரைமண்டியில் அல்ல அரைஅளைவோ மூன்றொசிவோ அல்ல. மலரமைவோ கிளைவளைவோ அல்ல. இயல்பாக, எளிதாக” என்றாள்.

உத்தரையின் விழிகளை நோக்கி அவளுக்கு மட்டுமே என பிருகந்நளை சொன்னாள் “ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு நடையுண்டு என்று அறிந்திருப்போம். ஒவ்வொரு நிலை உண்டென்று அறிக! அது உங்கள் கால்கள் நிலத்தூன்றும் அமைப்பால், முழங்காலுக்கும் மூட்டுக்குமான தொலைவால், முழங்கால் வளைவால், தொடைகளின் பருமனால், பின்னழகின் குவிவால், முலைகளின் முழுப்புகளால். கைநீளத்தால் அமைக்கப்படுகிறது. உள்ளிருக்கும் தசைகளின் இழுவிசையால் இன்னும் நாம் அறியாத பலநூறு உடற்கூறுகளால் வழிவாகிறது. அத்துடன் ஒவ்வொரு தசையையும் இழுத்து இயக்கும் உள்ளத்தாலும் அது அமைக்கப்படுகிறது. நின்றிருக்கும் ஒருவனை பார்க்கையில் அவன் உடல் எண்ணங்களுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் என்பதை காணலாம். எப்போது உளம் கூர்கிறான், எப்போது கிளர்கிறான், எப்போது கருத்தழிகிறான் என்பதை தசைகள் காட்டும்.”

உத்தரை முலைகள் எழுந்தமைய பெருமூச்சுடன் “ஆம்” என்றாள். உத்தரையை மெல்ல அழைத்துவந்து அவள் நின்றிருந்த இடத்தில் நிலைகொள்ளச்செய்து “இங்கு நிற்கிறாய். உள்ளத்தின் பிடியிலிருந்து உடலை முழுமையாக விடுவிக்கிறாய்” என்றாள். உத்தரை இருகைகளையும் கோத்து மடிமேல் வைத்து நின்றாள். பிருகந்நளை “உன் முலைகளை எண்ணி நாணுகிறாய், ஆகவே இவ்வசைவை அடைகிறாய்” என்றாள். “கன்னியாக உணர்கையிலேயே முலை குறித்த உணர்வை பெண்டிர் அடைகிறார்கள். அது நோக்கப்பட வேண்டுமென்று விழைகிறார்கள். நோக்கப்படுகையில் கூசுகிறார்கள். உந்தி முன் நிறுத்துகிறார்கள். தோள் வளைத்து பின் இழுக்கிறார்கள். அவற்றை முற்றிலும் மறந்துவிடுக! அவை மரக்கிளையில் வந்தமர்ந்த இரு அயல்பறவைகள். முற்றிலும் அவற்றை காற்றுக்கும் வெளிக்கும் விட்டுவிடு” என்றாள்.

உத்தரை தோள்களை மெல்ல தளர்த்தினாள். “இடையை ஒசிக்கிறாய். எங்கு நிற்கும்போதும் அங்கிலாதிருப்பதே இடைவளைவில் வெளிப்படுகிறது. இங்கிருக்கையில் உள்ளம் பிறிதெங்கோ பிடிகொண்டிருக்கிறது. அதை விடு. மரங்களைப்போல் நின்றிருக்கும் இடத்தில் முழுமையாக நில்!” உத்தரை அச்சொற்களுக்கு ஏற்ப அறியாது உடல்மாறுபட்டுக் கொண்டிருந்தாள். அவள் சொற்களின் காற்று பட்டு அசையும் சுடர் போல.

அவன் அச்சொற்களை கேட்டுக்கொண்டிருந்தான். மிக இயல்பாக பிருகந்நளையின் கைகள் உத்தரையின் உடல் மேல் தொட்டுச் சென்றன. அவளுக்கு மட்டுமேயான குரலில் உடலை விடுவித்து பிறிதொன்றாக்கி அங்கு நிறுத்துவதைக் குறித்து அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். முக்தன் விழிகளை விலக்கி வெளியே பார்த்தான். தன் உள்ளம் பதைப்பு கொண்டிருப்பதை உணர்ந்தான். எங்கோ அரிய பொருளொன்றை வைத்துவிட்டு நினைவு கூர்ந்ததுபோல். பேரிழப்பொன்று அணுகுவதை முன்னரே அறிந்தவன்போல்.

அவ்வுணர்வுடன் தனித்து நின்று அவன் போராடினான். அதை வெல்லவும் கடக்கவும் முயன்றான். அதன் பொருட்டு அதை கூர்ந்து நோக்கினான். அந்நோக்கு சென்று தொட்ட ஒன்றை முழுதுணர்ந்ததும் அஞ்சி உடல் விதிர்க்க பலநூறு காதம் பின்திரும்பி ஓடி மீண்டு வந்தான். உடலில் வியர்வை சூழ்ந்திருக்க்க மரக்கிளையின் காற்றசைவை உணர்ந்தபின் மூச்சிழுத்து நேர்விட்டு நிலைகொண்டு நேரே பார்த்தான்.

நடனக்கூடத்தில் உத்தரை நின்றிருக்க சற்று தள்ளி இடையில் கைவைத்து பிருகந்நளை நோக்கி நின்றாள். அங்கு நின்றிருந்த உத்தரை முற்றிலும் பிறிதொருத்தியாக இருப்பதை அவன் கண்டான்.

தொடர்புடைய பதிவுகள்

யானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்

$
0
0

rishaan

யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்

அன்புள்ள ஜெ

ரிஷான் ஷேரிஃப் எழுதிய யானைகளின் மரணம் ஓரு தீவிரமான கட்டுரை போலிருந்தது. ஒரு கடிதத்துக்காகவே இத்தனை தரவுகளையும் படங்களையும் சேகரிக்கிறார். இந்த அளவுக்கான உழைப்பை இங்கே முகநூல் குறிப்பில் நிறைவடைந்துவிடும் கும்பல் செய்வதில்லை. ரிஷான் ஷேரிஃப் தொடர்ந்து எழுதவேண்டும் என விரும்புகிறேன். அவரை தமிழ் செய்தித்தாள்களும் இதழாளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

செல்வக்குமார்

***

அன்புள்ள செல்வக்குமார்

ரிஷான் ஷேரிஃப் இலங்கையின் முக்கியமான இளம்படைப்பாளிகளில் ஒருவர்.  முக்கியமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அவற்றை இந்த தளத்தில் வாசிக்கலாம்.

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

அவருடைய சிறுகதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன

ரிஷான் ஷெர்பி சிறுகதைகள்

குறிப்பிடத்தக்க மொழியாக்கங்களும் செய்திருக்கிறார். [ இறுதி மணித்தியாலம்]

ஜெ

***

அன்புள்ள ஜெ

ரிஷான் ஷேரிஃப் எழுதிய யானைகளின் மரணம் உலுக்கிய கட்டுரை. ஒரு பெரிய அதிர்வை இரண்டுநாட்களுக்கு நிலைநிறுத்தியது. எனக்கு நம் சூழியலாளர்கள் கொஞ்சம் ஜாஸ்தியாகச் சொல்கிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. அதாவதுயானைகளின் சிக்கல் மனித வளர்ச்சியில் தவிர்க்கமுடியாதது. மேலும் பஞ்சம் வரட்சி ஆகியவற்றை அவன் அறிந்திருக்கும். தங்கள் பரிணாம ஞானத்தால் கடந்துசெல்லும் என எண்ணினேன்.

ஆனால் நவீன வாழ்க்கை அவற்றை அழிப்பதை பார்க்கையில் பதைக்கிறது. உலகின் பலநாடுகளில் காட்டுவாழ்வே இல்லை. மலேசியா சீனா எல்லாம் அத்தனை காட்டுவிலங்குகளையும் அழித்துவிட்டு நிலத்தை ஃபேக்ட்ரி மாதிரி ஆக்கிவிட்டிருக்கின்றன. இந்தியாவில் இனியாவது விழிப்புணர்வு வரவேண்டும்

சாமிநாதன்

***

அன்புள்ள ஜெ

ரிஷான் ஷெரீப் எழுதிய யானைகளைப்பற்றிய கட்டுரை உலுக்கிவிட்டது. அதிலிருந்து சிந்தனையை விலக்கவே முடியவில்லை. அதிலும் செத்துக்கிடக்கும் யானையின் அருகே அதன் வயிற்றிலிருந்த பொருட்கள் கிடக்கும் காட்சி. ஒரு பெரிய குப்பைக்கூடை போலவே இருந்தது. காட்டை நம் குப்பைக்கூடையாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றிவிட்டது

ஜே. ராபின் ரோஸ்

***

அன்புள்ள ஜெமோ

ரிஷான் ஷேரிபின் கட்டுரை கூர்மையான அம்பு மாதிரி நெஞ்சில் நிலைத்துவிட்டது. என்ன ஒரு கொடூரமான நிலை. யானைகள் செய்த்துக்கிடப்பதைப் பார்க்கையில் ஒருவகையான பதற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் தோன்றியது தாமிரவர்னியும் இப்படித்தானே இருக்கிறது. அதிலும் இதேபோல குப்பைகள். அதுவும் செய்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இது நம் மூதாதையருக்கு நாம் வைக்கும் நஞ்சு. நாம் பலிச்சோற்றில் விஷம் கலந்தவர்கள்

நெல்லை சங்கர

வாசிப்பு – ஒரு கலை ! : எம்.ரிஷான் ஷெரீப்

ம்மாக்களின் நினைவுகள்எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப் வலைத்தளங்கள்

கவிதைகள்
சிறுகதைகள்
எண்ணச் சிதறல்கள்
சிந்திக்கச் சில படங்கள்
விமர்சனங்கள்
உலக நிகழ்வுகள் ஒரு பார்வை

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலேசியா கடிதங்கள்

$
0
0
l

அன்புள்ள ஜெமோ,

தங்களை சந்தித்து விடை பெறும்போது நிறைய நல்விதைகளைப் பெற்றுக்கொண்டு செல்வேன். அவ்விதைகள் அறிவுப்பரப்பில் தூவுவதற்காக மட்டும் அல்லாமல், பெற்றுக்கொள்பவரின் குறிப்பிட்ட பண்பு நலன்களின் மேம்பாட்டுக்கும் பெரிதும் தூண்டு கோலாக அமையும். ஏறத்தாழ தங்களை விரும்பி அணுகும் அனைவருக்குமே இப்படி ஒரு அனுபவம் இருக்கும்.

சிவப்புக்கண் தந்த தொடர் வேதனைகளை அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத்தான் நன்கு தெரியும், எந்த வலி வேதனையிலும் – அய்யா அப்துல் ரகுமானுக்கு அஞ்சலி குறிப்பு அனுப்ப தாமதமாகி விடக்கூடாது என்ற பரபரப்பு, கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வெண்முரசுக்குள் மூழ்கி விடுவது, உரையாற்ற அழைக்கும் நேரங்களில் வெகு சில நிமிடங்களில் I am ready என்று அங்கு தோன்றி விடுவது. கண்வலி உரைகளின் செறிவை கொஞ்சமும் பாதிக்க விடாமல் கவனமாக பார்த்துக்கொண்டது.

( ஒரு தொடர்ச்சியான Missed Call டார்ச்சரை சகித்துக்கொண்டது )

சிவப்புக்கண் – எனக்கு எதை உணர்த்தியது, தூண்டியது? தன்னை நம்பி அழைத்தவர்களை, தன்னைத் தேடி வந்தவர்களை ஒரு காலும் ஏமாற்றமடையச் செய்யக்கூடாது என்ற Extraordinary Commitment.

நிகழ்ச்சியில் யுவராஜ் சொன்னதுதான் நியாபகம் வருகிறது “ஜெயமோகன் பிறரினின்று வித்யாசமானவர் – டென்னிஸில் ரோஜர் பெடரர் மாதிரி, விரைவோட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட் மாதிரி என்று” கால்பந்தில் இத்தகைய அசாதாரணமானவர்களை குறிப்பிட ஒரு சொற்றொடர் பயன்படுத்துவார்கள் “Natural Footballer ” என்று.

எனக்குள் சொல்லிக்கொண்டேன் – நம்மவர் ஒரு Natural Writer என்று

நினைவுகளுடன்,

சபரி

சிங்கை

***

அன்புள்ள சபரி

கண்களுக்கு ஓய்வே கொடுக்கவில்லை என்பதனால் இன்னமும்கூட உறுத்தலும் நீர்வடிதலும் நீடிக்கிறது. சரியாகிவிடுமென நினைக்கிறேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

செயல் ஒரு தெப்பம் போல. அதைப்பற்றாமல் இவ்வலைகளைக் கடக்க முடியாது

ஜெ

***

வணக்கம் சார்.

எல்லா புகைப்படங்களையும் கீழே இணைத்துள்ளேன்.

1). குறுநாவல் பட்டறை – கோலாலம்பூர் ( 27-28 மே 2017 ) https://drive.google.com/drive/folders/0B1AWzZJ6RnIFTWJRY1gtRktwRjQ?usp=sharing

2). சுற்றுலா – கேமரன் மலை ( 30-31 மே 2017 )

https://drive.google.com/drive/folders/0B1AWzZJ6RnIFUW01d0pmRzZiMkk?usp=sharing
3). வழிபாடு – கூலிம் தியான ஆசிரமம் ( 01 ஜூன் 2017 )

https://drive.google.com/drive/folders/0B1AWzZJ6RnIFOGhUUHNLamM5RlE?usp=sharing
4). இலக்கிய கருத்தரங்கம் – கூலிம் ( 02-04 ஜூன் 2017 )

https://drive.google.com/drive/folders/0B1AWzZJ6RnIFMnIza1BYOElvdEk?usp=sharing

அன்புடன்,

இராவணன்.

***

அன்புள்ள ராவணன்,

நலம்தானே?

மலேசியா முழுக்க சாரதியாக உடன்வந்தீர்கள். ஆனால் நாம் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. உங்கள் புன்னகை நிறைந்த முகம் நினைவில் மாறாமலிருக்கிறது

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நத்தையின் பாதை 1

$
0
0

ahora

உணர்கொம்புகள்

உயிர்களின் வளர்மாற்றத்தில் உருவாகிவந்த மிகநுணுக்கமான உறுப்பு உணர்கொம்புதான். கண்களும்தான். ஆனால் பார்வையின் எல்லை குறுகியது. ஒளியை மட்டும் அறிபவை விழிகள்.  உணர்கொம்புகளைப்பற்றி வாசிக்கையில் நெஞ்சைப்பிடிதுக்கொண்டு  “கடவுளே!” என்று கூவிவிடுவோம்.

சில பூச்சிகளின் தலைமயிர் அளவே உள்ள உணர்கொம்புகள் கண்ணுக்கேத்தெரியாத பல்லாயிரம் நுண்ணிய சிற்றுப்புகளின் தொகைகள். பல கிலோமீட்டர் தொலைவுக்கு அவற்றால் மணங்களையும் ஒலிகளையும் அதிர்வுகளையும் நீர்ப்பதத்தையும் அறியமுடியும். புலியின் உணர்கொம்புகள் அதன் பாதையை வகுக்கின்றன. அதன் உடல்மொழியில் மீசை முக்கியமான கருவி.

இம்மண்ணில் உயிர்கள் வளர்மாற்றம் கொண்ட பெருஞ்செயலுடன் இணைந்தே  உருவானவை உணர்கொம்புகள். எது அவற்றின் சூழலை சமைத்ததோ அது கூடவே உணர்கொம்புகளையும் வடிவமைத்தது. தேனீக்களின் உணர்கொம்புகள் மலர்களின் உறுப்புகளே. புலியின் உணர்கொம்புகள் அக்காட்டின் ஒரு பகுதியே.

உணர்கொம்புகளை இழந்தால் அந்த உயிர் பறிகொடுப்பது எதை? அச்சூழலுடன் அதை இணைக்கும் அனைத்தையும். அதன் கோடிகோடி முன்னோர் வாழ்ந்து அடைந்த ஞானம் அனைத்தையும்..

1995 ல்  ஊட்டி நாராயணகுருகுலத்தில் நான் சந்தித்த ஜெர்மனியப் பேராசிரியர் ஒருவருடன் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். அகோரவீரபத்ரரின் சிலையை நோக்கி நின்றபின் என்னை நோக்கி “ஒரு பேரழிவுநடனம்” என்றார்.

Danse Macabre  என்பது ஐரோப்பிய நடுவரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு கலைக்குறியீடு. இறப்பு என்பது மண்ணில் நிகழ்வதாயினும் மண்ணிலுள்ள எதையும் பொருட்படுத்தாத ஒரு பெருநிகழ்வு என்பது அதன் பொருள். அது சார்ந்த குறியீடுகளை நான் மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன், உம்பர்ட்டோ ஈக்கோ வின் நேம் ஆஃப் த ரோஸ் போன்ற நாவல்களில் வாசித்தும் இங்க்மார் பர்க்மானின் செவந்த் ஸீல் போன்ற படங்களில் பார்த்தும் இருந்தமையால் அத்தருணத்தில் அந்தச் சொல் பெரிய திறப்பாக அமைந்தது.

நடராஜர் சிலையருகே வந்ததும் நான் “இது பிரபஞ்சப்பெருநடனம். அந்த பேரழிவுநடனம் இந்த ஆடவல்லானின் இடதுமேற்கையில் தழல் என அமைந்துள்ளது. மறுகையில் அதை வெல்லும் படைப்புசக்தி உடுக்கின் வடிவில் உள்ளது” என்றேன். அவர் ”ஆம், ஆனந்தகுமாரசாமியின் நூலை வாசித்திருக்கிறேன்” என்றார். இந்தியக்கலையின் தனித்தன்மையைக் குறித்த சிந்தனைகளைத் தொடங்கிவைத்த ஆனந்தக்குமாரசாமியின்  சிவநடனம் ஒரு முன்னோடி நூல்.

சற்றுநேரம் நோக்கிநின்றபின் நடக்கையில் அவர் என்னிடம் “இதைப்பற்றி இங்கு என்ன எழுதப்பட்டுள்ளது?” என்றார். நான் சொல்லத் தொடங்குகையில் “அதெல்லாம் பழையவரிகள். நவீன இலக்கியத்தில், தத்துவத்தில்?” என்றார். “இதுவரை சொல்லப்படாததாக என்ன உள்ளது?” நான்  எண்ணி எண்ணிப்பார்க்க ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

“கவிதைகூடவா?” என்றார் பேராசிரியர் ஏமாற்றத்துடன். நான் ஞானக்கூத்தனின் மேஜைநடராஜர் என்ற கவிதையைச் சொன்னேன். “அது ஒர் எளிய புறக்கணிப்பு. நான் கேட்டது இந்த தொல்படிமத்தைத் தொட்டு மேலும் முன்னே சென்ற ஒரு புத்தம்புதிய வெளிப்பாட்டை” அவருடைய பச்சைக்கண்கள் இரக்கமற்றவை என எனக்குப்பட்டன. நான் சலிப்புடன் ”அப்படி ஏதும்  இங்கில்லை” என்றேன்.

அவர் மேலும் சற்றுநேரம் சிலையை நோக்கிவிட்டு “நீங்கள் உணர்கொம்புகளை இழந்துவிட்டீர்கள்” என்றார். உண்மையில் முகத்தில் காறி உமிழப்பட்டவனாக உணர்ந்தேன். அதன் பின் என்னால் அவரிடம் பேசவே முடியவில்லை. அவர்மீது ஆழ்ந்த வெறுப்புதான் எழுந்தது. திரும்ப அவருடன் திருவனந்தபுரம் சென்று வற்கலை நாராயணகுருகுலத்தை அடைவதுவரை நான் பெரும்பாலும் ஒன்றும் பேசவில்லை.

ஆனால் அவர் சொன்னது உண்மை என நான் உள்ளூர உணர்ந்துகொண்டும் இருந்தேன். அன்று தமிழிலக்கியத்தில் பின்நவீனத்துவக் கோட்பாடுகள் உரக்கப்பேசப்பட்டுக்கொண்டிருந்தன. மேலைச்சிந்தனையை எப்பாடுபட்டேனும் கொஞ்சமாவது புரிந்துகொள்வதற்கான முயற்சிகள் என்று மட்டுமே அவற்றைச் சொல்லமுடியும். ஆனால் மேலைப்பண்பாட்டின் படிமங்களையும் உணர்வுகளையும் அதன் வரலாற்றையும் அறியாமல் அதை எய்துவது கடினமானதாகவும் இருந்தது.

ஆனால் நவீன எழுத்தாளர்களுக்கு அதைவிட இந்தியச் சிந்தனைமரபை அறிவதும் இந்தியப்பண்பாட்டுவெளியை உணர்வதும் கடினமானது என்று அப்போது தெரிந்தது. அதற்கான பயிற்சியே நம் சூழலில் இல்லை. ஒரு சாதாரண ஐரோப்பியச் சிறுவனுக்கு ஐரோப்பியக்கலை, இசை, இலக்கியம் ஆகியவை குடும்பச்சூழலில் இருந்தும் கல்விநிலையங்களில் இருந்தும் அறிமுகமாகின்றன. நமக்கு அப்படி எந்தப்பயிற்சியும் இல்லை. நமது கல்விமுறை என்பது மிகஎளிய தகவல்களை நினைவில்நிறுத்துவதற்கான பயிற்சி மட்டுமே. அதோடு உயர்நிலை வரை நம் கல்விமுறை ஐரோப்பியக்கல்வியின் தொலைதூர நிழல்தான்.

நம்மால் மதுரை ஆலயத்தின் சிற்பங்களை உணரமுடியாது. இந்தியாவின் தொன்மங்களின் ஆழத்தை கனவுகளில் எழுப்பிக்கொள்ள முடியாது. இந்தியப்பண்பாடு சார்ந்த ஓர் உள்ளுறையை இலக்கியங்களில் இருந்து விரித்து எடுக்கமுடியாது. தமிழ் நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியம் வாசிப்பவர்கள் எத்தனைபேர்?  நாம் வரலாற்றின் போக்கில் உணர்கொம்புகளை இழந்த பெருந்திரள்.

விளைவாக நாம் எழுதும் இலக்கியங்களும் ஐரோப்பிய இலக்கியமரபின் தொலைதூறல்கள் மட்டுமே. தந்தை ஓவியம் வரையும்போது அச்சாயங்களால் தானும் கிறுக்கிவிட்டு தந்தையிடம் காட்டி பாராட்டுக்கு ஏங்கிநிற்கும் சிறுவனைப்போலத்தான் இந்திய நவீனஇலக்கியங்கள் உள்ளன. குனிந்து நோக்கி அளிக்கப்படும் ஒரு பரிவான பாராட்டு பெரும் கொண்டாட்டமாகப் படுகிறது.

நுண்ணுணர்வுள்ள ஐரோப்பியர்களுக்கு இந்திய மரபின், பண்பாட்டின் விரிவும் வரலாறும் தெரியும். நம் எழுத்துக்களையும் கலையையும் பார்த்தும் “பாவம் உணர்கொம்பு இழந்தவர்கள்” என உதட்டைப்பிதுக்கிவிட்டுக் கடந்துசெல்கிறார்கள்.

 ***

தடம் ஜூன் 2017 இதழில் வெளிவந்தது

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28

$
0
0

27. இருளெழுகை

flowerவரும்போது தொலைவில் தெரிந்த அவளுடைய முதல் அசைவிலேயே அந்த மாறுதலை அவனால் மெல்லிய உள்ளதிர்வுடன் கண்டடைய முடிந்தது. தோழியரிடமிருந்து அது அவளை முழுமையாக பிரித்துக்காட்டியது. அசைவுகளிலேயே அந்த வேறுபாடு தெரிந்தது. பறவைக்கூட்டம் நடுவே பிறிதொரு பறவை என. இடையில் கைவைத்து திண்ணையில் நின்றிருந்த பிருகந்நளையை பார்த்துவிட்டாள் என்று தெரிந்தது. அதன் பின் அவள் விழிதூக்கவே இல்லை. காற்று அலைத்து நகர்த்தி வரும் புகைச்சுருள்போல எடையின்றி மெல்ல அசைந்து வந்தாள். அவள் முகத்தில் உணர்வுகள் மாறிக்கொண்டிருந்தன. இடைநாழிச் சுவரில் பதிந்து வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும் பித்தளைக் குமிழ்போல.

படிகளின்கீழ் வரும்வரை  ஒருமுறைகூட விழிதூக்கி அவள் பிருகந்நளையை நோக்கவில்லை. அப்படியென்றால் அவள் பிருகந்நளை தன்னை நோக்குகிறாள் என்பதில் ஐயமற்றிருக்கிறாள். அருகணைந்து விழிதூக்காமலேயே பிருகந்நளையின் கால்களைத் தொட்டு சென்னிசூடி “வணங்குகிறேன், ஆசிரியரே” என்றாள். “வருக!” என்று அவள் சொன்னாள். “உனது நடை மாறியிருக்கிறது. அதைத்தான் பார்த்தேன்” என்றாள். “ஆம், நேற்றிரவு முழுக்க நின்றிருப்பது ஒன்றையே பயின்றேன்” என்றாள் உத்தரை. “எதை கண்டடைந்தாய்?” என்றாள். “நான் அரசியல்ல. நிஷாத குலத்தவளல்ல. சபர குடியினளும் அல்ல. இவை அனைத்தும் என் மேல் சுமத்தப்பட்டவை. நான் பெண்” என்றாள். பிருகந்நளை உரக்க நகைத்து “நன்று! அவ்வுணர்வும் கலைய இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டும், பார்ப்போம்” என்றாள்.

அவர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். சந்தனப் பேழைகளில் இருந்து எடுத்த சலங்கைகளை கட்டிக்கொண்டபடி அதன் கரந்த குலுங்கலுடன் இணைந்து மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். பிருகந்நளையின் கை உத்தரையின் கைகளை பற்றியது. தோளில் தட்டியது. ஆடை திருத்தியது. அணிகளை சீரமைத்தது. குழலை சுருட்டி முடிந்தது. அவள் அத்தொடுகையால் குயவன் கை பசுங்கலம் என உருநெகிழ்ந்து உருக்கொண்டாள். அகன்று நின்று அவளை நோக்கி தலையசைத்து “நன்று” என்றாள் பிருகந்நளை. உத்தரை நாணத்துடன் புன்னகை செய்தாள்.

அவ்வசைவுகளை நோக்கி நின்ற அவன் ஒருகணத்தில் கூரிய ஊசியொன்று உடலில் பாய்ந்ததுபோல் ஓர் உணர்வை அடைந்தான். பிருகந்நளை என அங்கு நின்றிருந்தது பெண்ணோ இருபாலோ அல்ல. ஓர் ஆண். உடனிருந்த பெண் உடல் அதை அறிந்திருந்தது. மீண்டும் திரும்பி உள்ளே பார்த்தான். அவள் அசைவுகளில் எந்த மாற்றமும் இல்லை. பெண்ணழகின் முழுமை, அதை தானே அறிந்து கொண்டாடும் நடனம். எப்பெண்ணும் தன் கனவின் உச்சியில் நின்றிருக்கும் எழில் கொண்டிருந்த அசைவுகள். அவளைத் தொடும்போது மட்டும் ஆணாகிறாளா? அப்படியுமல்ல. தொடும் கை மட்டும் ஆணுக்குரியதாகிறதா? இல்லை. அக்கணம் மட்டும் உடலிலாத ஓர் ஆண் அங்கு நிகழ்ந்து மறைகிறானா?

என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்! விழிதிருப்பி மீண்டும் இடைநாழியில் வந்து சுவர்சாய்ந்து நின்றான். அந்நடனப்பயிற்சியை நோக்கலாகாது என்று எண்ணினான். ஆனால் நோக்காமலும் தன்னால் இருக்க முடியாது. அவ்வோசையே நடனமென விழிகளுக்குள் விரிகிறது. அதில் பிருகந்நளை மட்டும் இருந்திருந்தால் பிறிதொரு உவகையில் உளம் விரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் உத்தரையும் இருந்தாள். மிக அருகிலென உத்தரையை அவனால் பார்க்க முடிந்தது. உதடுகள் நீள, கன்னம் குழிய, முகம் விரிந்து. கண்களில் புறநோக்கு மங்கி கனவிலாழ்ந்து. செவ்வனலும் நீலஅனலும் என, ஒன்றென இரண்டென.

மீண்டும் அவன் தன்னுள் விழி திருப்பினான். அக்கணம் அவன் கண்டது ஓர் ஆணை. திடுக்கிட்டு பார்வையை விலக்கிக்கொண்டு என்ன நிகழ்கிறது எனக்குள் என்று கேட்டுக்கொண்டான். பின்னர் அவன் சித்தம் விரிந்தது. பிருகந்நளையுள் ஆணிருப்பதை ஏன் உளம் மறுக்க வேண்டும்? அந்த ஆண் அவ்வுடலில் ஒருகணம் வந்து மறைவது இயல்பல்லவா? என் விழிகளால் அதில் பெண்ணை மட்டும் வரைந்தெடுக்கிறேனா? நான் எடுத்தது போக எஞ்சும் ஆணை உத்தரை எடுத்துக்கொள்கிறாளா? அங்கிருந்து எழுந்து ஓடிவிடவேண்டும் என எண்ணி அங்கேயே அமர்ந்திருந்தான்.

பயிற்சி முடிந்து மூச்செறிதல் அமைந்து இயல்பான உரையாடல் தொடங்கியபோது பிருகந்நளை அவனை அழைத்தாள். அவன் சென்று மண்டியிட்டு அவள் கால்களில் இருந்து சலங்கையை அவிழ்த்தெடுத்தான். அவற்றை சிறு சந்தனப்பேழைக்குள் வைத்து மூடி கையிலெடுத்துக்கொண்டான். அவனை நோக்காமல் உத்தரையிடம் சிறுசொல்லாடி சிரித்துக்கொண்டிருந்தாள் பிருகந்நளை. “அவளுக்கு என்ன பயிற்றுவிக்கிறீர்கள்?” என்றாள் ஒரு தோழி. “அவளை விடுவிக்கிறேன்” என்று பிருகந்நளை சொன்னாள். பிறிதொருத்தி “அவள் சிக்கிக் கொள்கிறாள் என்று தோன்றுகிறது” என்றாள். அவர்கள் நகைத்தனர்.

உத்தரையின் பின்பக்கம் ஆடைச்சுருக்கத்தை நீவி “சென்று வருக! இனி நாளை” என்றாள் பிருகந்நளை. அவர்கள் விலகிச் செல்ல அவனை நோக்கி திரும்பி “நாம் செல்வோம், வீரரே” என்றாள். இருவரும் தங்கள் சிறிய தேர் நோக்கி நடக்கையில் “என்ன?” என்று பிருகந்நளை கேட்டாள். “ஒன்றுமில்லை” என்றான். “உங்கள் முகம் மாறியிருக்கிறது” என்றாள். “இல்லையே” என்றான். “அம்மாற்றத்தை நன்கு அறிகிறேன்” என்றாள் பிருகந்நளை. “இளவரசியின் முகத்தை பார்க்கிறேன். உங்களை அவர் ஒரு ஆண் என எண்ணுகிறார் என்று தோன்றுகிறது” என்றான்.

“நன்று! நீங்கள் பெண்ணென எண்ணுவதுபோல” என்றாள் பிருகந்நளை. அவன் சலிப்புடன் “அதுவல்ல” என்றான். “பிறகென்ன?” என்றாள். “தெரியவில்லை… பெரிய துயரொன்றை நோக்கி அவர் செல்லப்போகிறார் என்று தோன்றுகிறது” என்றான். “இருக்கலாம்” என்று வேறெங்கோ நோக்கியபடி பிருகந்நளை சொன்னாள். “அத்துயரை நோக்கி நீங்கள் அவரை கொண்டு செல்கிறீர்கள்” என்று அவன் சொன்னான். பிருகந்நளை “நானா?” என்றாள். “நீங்களல்ல, உங்கள் உருவில் இங்கெழுந்த ஊழ்.” பிருகந்நளை “அது ஊழென்றால் நான் என்ன செய்ய முடியும்?” என்றாள்.

“நீங்கள் அளிப்பதையல்ல அவர் பெற்றுக்கொள்வது” என்று சினத்துடன் முக்தன் சொன்னான். “வீரரே, எந்த ஆசிரியர் அளிப்பதையும் மாணவர்கள் அவ்வண்ணமே பெற்றுக்கொள்வதில்லை. ஆசிரியர் விதைகளை அளிக்க முடியும், முளைப்பது அவரவர் ஈரம்.” அவன் சினத்துடன் “இச்சொற்களை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். நான் சொல்ல வருவது இதுவல்ல” என்றபின் “நன்று! நான் எதையும் சொல்லவில்லை” என்றான். “உங்கள் சஞ்சலம்தான் என்ன?” என்று சொல்லி அவள் திரும்பிப்பார்த்து நகைத்தாள். “என்னிலொரு ஆணை பார்க்க நீங்கள் விழையவில்லை. பிறிதொருவர் என்னில் ஒரு ஆணை பார்க்கும்போது நான் ஆண்தானோ என்ற ஐயம் கொள்கிறீர். அந்த ஐயம் உங்களை அலைக்கழிக்கிறது அல்லவா?”

அவன் சினத்துடன் “ஏன் அலைக்கழிக்க வேண்டும்? நான் அறிவேன், நீங்கள் ஆணிலி. அதை அறிந்துதான் உடன் வருகிறேன்” என்றான். “அவ்வண்ணமெனில் நன்று” என்று அவள் சொன்னாள். பின்னர் அவர்கள் ஒரு சொல்லும் பேசவில்லை. தேர்த்தட்டில் பிருகந்நளை அமர்ந்துகொள்ள வெளியே காவலனுக்குரிய இடத்தில் தூண் பற்றி அவன் நின்றுகொண்டான். தெரு ஓடிச்சென்றது. அவன் நன்கறிந்த கட்டடங்கள், தெருமுனைகள். முகங்களைக்கூட நன்கறிந்திருந்தான். ஆனால் முற்றிலும் புதிய சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்தான்.

இல்லத்தை அடைந்து இறங்கியதும் “நான் நீராடி உணவருந்தி ஓய்வு கொள்ளவிருக்கிறேன். நீங்கள் இல்லம் சென்று மீளலாம்” என்றாள். “தாழ்வில்லை. நான் இங்கு இருக்கிறேன்” என்று அவன் சொன்னான். புன்னகையுடன் “அவ்வண்ணமே” என்றபின் அவள் உள்ளே சென்றாள். தொடர்ந்து வரும்படி அவள் அழைக்காததால் அவன் வெளியே திண்ணையில் நின்றுகொண்டான். தன் கையிலிருந்த சலங்கைப் பேழையை மெல்ல வருடினான். அதன் மேலிருந்த அன்னப் பறவைகளை. வருடியதில் அவன் விரல்கள் நெகிழ்ந்தன. அதைத் திறந்து சலங்கைகளை பார்க்கவேண்டுமென்று தோன்றியது. மெல்லக் குலுக்கி அதன் ஓசையை கேட்டான். மிக ஆழத்திலிருந்து ஒரு இனிய சிரிப்புபோல அவன் உள்ளம் மலர்ந்தது.

“மாமன்னர் நளனை அன்னம் என்று சொல்வதுண்டு” என்றான் முக்தன். பிருகந்நளை திரும்பி “ஆண்களை அவ்வாறு சொல்லும் வழக்கமில்லை” என்றாள். “அவர் பெண்மை நிறைந்தவர் என்கிறார்கள். அவர் உடல் அன்னம்போல அனைத்தும் வளைவுகளால் ஆனது. ஆகவேதான் பிறர் எண்ணவும்முடியாத புரவித்திறன்களை அவர் எய்த முடிந்தது. அவரைக் குறித்த சூதர் பாடலொன்று வெண்புகையால் ஆன உடல் கொண்டவர் என்று சொல்கிறது” என்றான். அவர்கள் படிகளில் ஏறிக்கொண்டிருந்தனர். முக்தன் தன் உடலின் எடையை அந்த செங்குத்தான படிகளில் எப்போதும் உணர்வதுண்டு. உத்தரையும் மூச்சிரைத்தாள். பிருகந்நளை மிதந்து ஏறிச்செல்பவள் போலிருந்தாள்.

உத்தரை இடையில் கைவைத்து நின்று நீள்மூச்சிரைத்து “இங்கு எங்கு நோக்கினும் மாமன்னர் நளனைப்பற்றிய கதைகள்தான். அவர் தொலைவில் நின்று நோக்குவதற்கு பெண்ணென்றும் அணுகுந்தோறும் ஆணென்றும் தோன்றுவார் என்கிறார்கள்” என்றாள். அவள் உடல் வியர்வையில் இளவாழைக்குருத்துபோல் ஒளிகொண்டிருந்தது. “யாருக்கு? ஆண்களுக்கா?” என்று பிருகந்நளை கேட்டாள். “பெண்களுக்கு” என்றாள் உத்தரை. பின்னர் நகைத்தபடி “ஆண்களுக்கு நேர்மாறாக தோன்றக்கூடும்” என்றாள்.

அவர்களின் நோக்குகள் தொட்டுக்கொண்டதை நகை பரிமாறிக்கொண்டதை அவன் கண்டான். அவற்றின் நடுவே சென்று சொல்லெடுக்கக் கூசி நடைதளர சில எட்டுகள் வைத்து பின்னடைந்தான். அவர்கள் பேசிக்கொண்ட ஒலி மட்டும் கேட்டது. மழுங்கிய சொற்களின் அறியா இனிமை. அவன் விலக்கத்தை உணர்ந்த பிருகந்நளை திரும்பி நோக்கி “இவ்வாலயம் புதியது அல்லவா?” என்றாள். முக்தன் “ஆம், கிரிப்பிரஸ்தத்தின் மீது இருந்த இந்திரனின் ஆலயம். இரண்டாம் கீசகரால் மீண்டும் எடுத்துக்கட்டப்பட்டது. மலைமேல் செல்லும் படிக்கட்டுகளையும் அவர் அமைத்தார்” என்றான். “இன்று பாரதவர்ஷத்திலுள்ள இரண்டாவது பெரிய இந்திரன் சிலை இது. முதற்பெரும்சிலை இருப்பது அஸ்தினபுரியில்.” உத்தரை “இந்திரப்பிரஸ்தத்தில்” என்றாள். “ஆம், அங்குதான்” என்றான்.

பிருகந்நளை மேலே நோக்கி “கரிய சிலை” என்றாள். முக்தன் “ஆம், இங்கு குன்றின் நடுவே எழுந்து நின்றிருந்த இந்திரனின் நெடுஞ்சிலை நீண்டகாலம் மழையிலும் வெயிலிலும் நின்று கறுத்து மானுட கைபடாமல் பாறையே தன்னை உன்னி எழுப்பிக்கொண்டதுபோல் தோன்றியது. தொலைவில் படகில் செல்கையில் தற்செயலாக விழிதிருப்பிப் பார்க்கையில் அதை ஒரு சிலையென்று உணர்வது கடினம். விந்தையானதோர் பாறை நீட்சி என்றுதான் விழி முதலில் சொல்லும். உடன்வரும் எவரோ ஒருவர் அது மாமன்னர் நளன் நிறுவிய சிலை என்பார். மின்படை ஏந்திய இந்திரன் என்று அவர் கூறுகையில் சித்தம் மின்னி அம்முகத்தை விழி பார்த்துவிடும். மறுகணமே நோக்கும் புன்னகையும் இதழில் எழுந்த சொல்லும் தெளியும்” என்றான்.

பிருகந்நளை திரும்பி “என்ன சொல்?” என்றாள்.  “மூன்று சொற்கள்” என்றான். “தத்த; தய; தம. இடியோசையில் எழுபவை.” பிருகந்நளை மேலே நோக்கியபின் “ஆம், நான் அவ்வண்ணமே எண்ணினேன்” என்றாள். “என் முதுதந்தை பலமுறை அந்த அருங்கணத்தை சொல்லியிருக்கிறார்” என்றான் முக்தன். “இன்றும் இது பாறையில் இயல்பாக உருவானது என்கிறார்கள் குடிகள். ஆகவே இதற்கு ஸ்வமுக்தம் என்று பெயர் உண்டு. சிலையை கந்தகத்தால் தூய்மை செய்யலாம் என்று கலிங்கச்சிற்பிகள் சொன்னபோது அரசர் மறுத்துவிட்டார்.” பிருகந்நளை “அது நன்று. இப்போது கருமுகில்களுடன் கலக்கும் நிறம் கொண்டிருக்கிறார் விண்ணரசர்” என்றாள்.

உத்தரை “நான் எண்ணுவதுண்டு, இந்திரனின் ஒரு கையில் தாமரை மலர் இருப்பது ஏன் என்று. மின்னல் அமைந்திருப்பதை புரிந்துகொள்கிறேன். இந்திரமலர் என்பது வேறு அல்லவா?” என்றாள். பிருகந்நளை “தொல்கதைகளே சிற்பவியலை அமைக்கின்றன. மின்னல் எருக்குழியில் பாய்ந்தால் புதையலென உள்ளே இருக்கும் என்றும் நூறாண்டுகளில் அதற்குள்ளிருந்து குளிர்ந்த மஞ்சள் ஒளிகொண்டு பொன்னென்றேயாகி வெளிவரும் என்றும் உழவர்கள் நம்புகிறார்கள். நீரில் விழுந்த மின்னல்தான் செந்தாமரையென மலர்ந்ததென்பது தொல்கவிஞர் கூற்று” என்றபின் “அது இனிய பொருள் கொண்டது. மின்னலில் நீண்டு திசைகள் தொட்டு நெளிவதே தாமரையில் வளைவுகளென சுழன்று மையம் கொண்டுள்ளது. மின்னலில் சுடுவது மலரில் குளிர்கிறது” என்றாள்.

படிகளில் ஏறி இந்திரனின் ஆலயத்தின் முகப்பை அடைந்தனர். ஓர் ஆள் உயரத்தில் செங்கல் அடுக்கி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவருக்குள் இந்திரன் சிலை கிழக்கு நோக்கி நின்றிருந்தது. உள் நுழைந்ததும் அதன் முழங்கால் உயரத்திற்கு மட்டும் கால்கள் விழிகளுக்குத் தெரிந்தன. பாறையில் பதிந்த இரு பாதங்களுக்கு நடுவே இருந்த பலிபீடத்தில் மலர்களும் கனிகளும் காய்களும் பூசெய்கைக்காக படைக்கப்பட்டிருந்தன. முன்னரே அங்கு வந்திருந்த வணிகன் அளித்த மலர்களை பூசகர்கள் வாங்கி இந்திரனின் கால்களுக்கு அணிவித்தார். இரு மைந்தருடன் வந்திருந்த அவ்வணிகன் மும்முறை குனிந்து வணங்கி அப்பால் சென்றான்.

திரும்பியதும் பூசகர் இளவரசியையும் பிருகந்நளையையும் பார்த்து முகம் மலர்ந்து கைகூப்பியபடி ஓடிவந்தார். “இளவரசி, தங்கள் வருகையை எவரும் அறிவிக்கவில்லை” என்றார். “ஆம், பேசிக்கொண்டிருக்கையில் இன்று இங்கு வரலாமென்று தோன்றியது. கிளம்பிவிட்டோம்” என்றாள் உத்தரை. “இளவரசி, இவர்தான் தங்கள் ஆசிரியை என்று எண்ணுகிறேன்” என்றார் பூசகர். “வருக!” என்று அழைத்துச் சென்றார். “இந்திரனுக்கு இருபாலர் உகந்தவர் என்று அறிந்திருப்பீர்கள், ஆசிரியரே. இந்திரன் பெண்ணுருவும் இருபாலுருவும் கொண்ட பல நிகழ்வுகள் தொல்கதைகளில் உள்ளன…” என்றபடி பூசகர் பூசெய்கை மேடைமேல் ஏறினார். “ஆம், வடக்கே பல ஊர்களில் இருபாலினத்தோரே இந்திரனுக்கு பூசகர்களாகவும் திகழ்கிறார்கள்” என்றாள் பிருகந்நளை. “இங்கு வந்து முதலில் நில்லுங்கள். அந்த வெண்தாமரை மலர் உங்கள் கைகளில் இருக்கட்டும்.”  பூசகரின் உதவியாளன் பலிபீடத்திலிருந்த மலர்களையும் கனிகளையும் அகற்றினான். தோழியர் கைகளிலிருந்து கனிக்கூடைகளை எடுத்து உத்தரை அவரிடம் கொடுத்தாள்.

பூசகர் பிருகந்நளையிடம் “இந்திரன்… நின்றகோலச் சிலை. பரசுராமரால் முதல் கீசகருக்கு அளிக்கப்பட்ட சிறிய சிலை இது. அவர் அதை இங்கு கொண்டு நாட்டி வழிபட்டார். நளமாமன்னரின் காலத்தில் இச்சிலைக்கு மாகேந்திர வேள்வி ஒன்று இயற்றப்பட்டது. அவ்வேள்வியின் அவி இங்கு படைக்கப்பட்டதும் சிலை வளரத்தொடங்கியது. இருபது அடி உயரத்தில் வளர்ந்த பின்னர் மேலும் வளர்வதை எண்ணி நகரத்து மக்கள் அச்சம் கொள்கையில் அமரேந்திர வேள்வி ஒன்று இயற்றி அந்நீரை இதற்கு முழுக்காட்டினர். வளர்ச்சி நின்றது” என்றார். “இந்திரன் விருத்திரனை கொல்வதன் பொருட்டு தவமியற்றுவதற்காக வந்து தங்கியிருந்ததனால் இந்த மலை கிரிப்பிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது. நளமாமன்னருக்குப் பிறகு இந்திரகிரியென்றும் பெயர் பெற்றது. அன்று இதைச் சூழ்ந்திருந்த காட்டுக்குள் நளமாமன்னரின் பெருநகராகிய இந்திரகிரி இருந்தது. அதன் இடிபாடுகள் இன்றும் புதர்களுக்குள்ளும் பூழிக்குள்ளும் மறைந்துகிடக்கின்றன.”

“மக்கள் குறைவாகவே இங்கு வருகின்றார்கள் போலும்” என்று பிருகந்நளை சொன்னாள். “இங்கு வருபவர்கள் பெரும்பாலும் வணிகக் குடிகளும் ஷத்ரியருமே. அனற்குலத்து அந்தணர்கள் இந்திரனைவிட தங்கள் இல்லங்களில் நிறுவப்பட்டிருக்கும் அனலோனையே வழிபடுகிறார்கள். வேள்வி என்றால் மட்டும் இங்கு வருகிறார்கள். நிஷதர்களின் பிற குடிகளுக்கு தென்மேற்குக் காட்டிலிருக்கும் கலியே முதல் தெய்வமென்கிறார்கள். இங்கு ஆண்டுக்கு மூன்று அரசவிழாக்கள் நிகழ்கின்றன. அப்போது நகர் மக்கள் திரண்டு வந்து இந்த மலையை தலைகளால் ஆனதாக மாற்றுவார்கள். ஆண்டு முழுக்க அவர்கள் செல்வது கலியின் ஆலயத்திற்கே. குடி வழிபாடுகள் எளிதில் மாறுவதில்லையல்லவா?” என்றார் பூசகர்.

இந்திரனின் கால்களுக்கு நீர் தெளித்து மலரிட்டு சுடராட்டி அவர் வழிபாடு செய்ய அவர்கள் கைகூப்பி வணங்கினார்கள். தாமரை மலரும் சிந்தூரமும் அளித்து அவர் அவர்களை வாழ்த்த அவரை வணங்கி மறுவாயிலினூடாக வெளிவந்தனர். “நீங்கள் விரும்பினால் கலிதேவனின் ஆலயத்திற்கும் சென்று மீளலாம்” என்றாள் தோழி ஒருத்தி. பிருகந்நளை திரும்பி “நன்று! அதை பிறிதொரு தருணத்தில் வைத்துக்கொள்வோம்” என்றாள். “இருபாலினத்தோரை கலி அணுகுவதில்லை. எப்பாலினம் என்றறியாது குழம்புவான் என்று ஒரு சொல் உண்டு” என்றான் முக்தன். “ஆம், அதன்பொருட்டே பல ஊர்களில் இருபாலினத்தோரை வணிகர் வழிபடுகிறார்கள்” என்று பிருகந்நளை சொன்னாள்.

flowerபடியிறங்குகையில் “நளமாமன்னர் ஆட்சி செய்யும்போதே இங்கு இந்திரனும் கலியும் முரண் கொள்ளத்தொடங்கிவிட்டனர்” என்று முக்தன் சொன்னான். பிருகந்நளை திரும்பி “எவ்வாறு?” என்றாள். “நளனின் இளையோன் புஷ்கரன் காளகக் குடியை சேர்ந்தவர். ஒருநாள் அவர் கனவில் கலி காளைத்தலையுடன் எழுந்து தன்னை வழிபடுமாறு ஆணையிட்டான். மறுநாள் காய்ச்சலில் அவர் உடல் கொதித்தது. நிலை மறந்து ‘காளை! காளையுரு!’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார். மருத்துவர்கள் பன்னிரு நாட்கள் போராடி அவர் உடலை மீட்டனர். தோல் கருகி முகம் ஒடுங்கி உலர்ந்த பிணமென்றாகி தன் குடிலுக்குள் கிடந்த அவர் எவர் அணுகினாலும் அவர் நிழலை நோக்கி ‘காளை, காளையுரு’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார்.”

“பின்னர்தான் நிமித்திகர்களை அழைத்து வந்து கவிடி பரப்பி களம் நிரத்தி காய் விரித்து நிமித்தம் நோக்க வைத்தனர். முதல் நிமித்திகர் சுந்தரர் அவர் கலியை கண்டுவிட்டதைக் கண்டு அறிவித்தார். அவர் உயிர்துறக்கக்கூடும் என்றும் அதைத் தடுக்க அவர் கலியை தன் முதற்றலைவனாக ஏற்கவேண்டும் என்றும் கூறினார். காளகக்குடி அவர்களின் இல்லத்தின் தென்மேற்கு மூலையில் கலியின் உருவை காளை வடிவில் நிறுவி ஊன்பலி அளித்து வழிபட்டனர். புஷ்கரன் உடல் தேறினார். முன்பை விட தோள்வலியும் உடல் ஒளியும் கொண்டவராக மாறினார்.”

“கலிதேவனுக்கு இங்கு நிஷாதகுடிகளில் அன்றுவரை பெருந்திரள் விழவென்று ஏதுமிருக்கவில்லை. ஆடிமாதம் முழுக்கருநிலவு நாளில் ஒரு பெரும் பலியாடலை காளகக் குடி அறிவித்தது. அதற்கு அவர்கள் அரசியிடம் ஒப்புதலேதும் பெறவில்லை. அரசி தமயந்தி இந்திரனை தன் முதல்தெய்வமாகக் கொண்டிருந்தவர். தன் இரு குழவிகளுக்கும் இந்திரசேனை என்றும் இந்திரசேனன் என்றும் பெயரிட்டிருந்தார் என்று அறிந்திருப்பீர்கள்” என்றான் முக்தன். “ஆம்” என்றாள் பிருகந்நளை. “முடிவு செய்து அறிவித்த பின்னரே அவர்கள் அவையில் அதை சொன்னார்கள். காளகக் குடியின் மூன்று மூத்தவர்கள் அவையில் எழுந்து கலி தங்கள் கனவில் வந்து விழவு கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் அரச ஒப்புதல் தேவையென்றும் கேட்டனர்.”

அரசவை அதை எதிர்பார்த்திருந்தது. அரசி சொல்லப்போவதை எதிர்நோக்கி அவர்கள் திகைப்புடன் அமைதியாக காத்திருந்தனர். அரசியின் விழிகளில் வந்த மாறுதலை அவைமூத்தவர் நன்கறிந்தனர். ஆனால் அமைதி விலகாத குரலில் “அவையீரே, ஒரு நகருக்கு முதன்மைத்தெய்வம் என ஒன்றே இருக்க இயலும். பிற தெய்வம் முதல் தெய்வத்தின் கோலுக்கு அறைகூவல் ஆகும்” என தமயந்தி அறிவித்தார்.

அவர்கள் கலைந்து எழுந்து உரத்த குரலில் “எங்கள் தெய்வத்தின் ஆணையை நாங்கள் மீற இயலாது” என்றனர். “அவ்வண்ணமென்றால் அதை உங்கள் குடிவிழவாக நடத்துங்கள். நகர் மக்கள் அதில் பங்கெடுக்க வேண்டியதில்லை” என்று தமயந்தி கூறினார். “பெருவிழவுகொள்ளும் தெய்வம் முதன்மைத்தெய்வத்திற்கு எதிர்நிற்கிறது. அதை ஒப்பினால் நகர் என்றேனும் இரண்டெனப் பிரியும். நாம் வென்று செல்லும் காலம் இது. இப்பிரிவை நம் எதிரிகள் பயன்படுத்திக்கொண்டால் நாம் அழிவோம்” என்றார்.

அவர்கள் அதை ஏற்கவில்லை. “இந்திரனின் வழிபாடு பாரதவர்ஷத்திற்கு ஒரு செய்தி சொல்கிறது. இந்நகரம் ஆரியநெறி நிலவுவது, எனவே வணிகத்திற்கு உகந்தது என்று. கலிவழிபாடு நேரெதிர் செய்தியை அளிப்பது. ஏனென்றால் அவ்வழிபாட்டை நாம் கொண்டிருந்த காலத்தில் வணிகர்களை கொள்ளையடித்தோம்” என்றார் அரசி. அது மெய்யென்றாலும் அவையில் இருந்த நிஷாதகுடிகள் அனைவரையும் புண்படச் செய்தது. அவர்களில் காளகர்கள் மட்டும் எழுந்து இது குடிச்சிறுமை செய்யும் சொல். இதை ஏற்க மாட்டோம் என்றனர். குடித்தலைவர் சீர்ஷர் எழுந்து “அரசி எண்ணிக்கொள்ள வேண்டியதொன்று உண்டு. நிஷாதர் விதர்ப்பத்தை படைவென்று நின்றவர்கள். கொடைகொண்டவர்கள் அல்ல” என்றார். அரசி சினமெழ சொல்லற்று அமர்ந்திருந்தாள்.

அப்போது நள மாமன்னர் ராஜகிருகத்தில் மகதஅரசின் புறக்குடிகளை ஒடுக்கும் போரொன்றில் இருந்தார். அன்று அவர் களத்திலிருந்து களத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அரசியின் விருப்பத்தை ஆராயாமலேயே அவை விட்டு எழுந்து வெளியேறிய காளகக் குடிகள் கலிக்கு விழவு என ஊர் அறிவிப்பு விடுத்தன. அமைச்சர்கள் வந்து அது பொதுவிழவென நிகழக்கூடாது என்ற அரசியின் ஆணையை சொன்னபோது அது குடிவிழவே என்றனர். ஆகவே அரசி படைகளுக்கு அதை நிறுத்தும்படி ஆணையிடவில்லை.

சினம்கொண்டிருந்த அரசியிடம் “அரசி, அது காளகக்குடியின் விழவு என்றால் அவ்வாறே நிகழட்டும். அவர்களுக்கு நாம் ஒரு வாய்ப்பை அளிப்போம். அவர்கள் எங்கெங்கோ அடைந்து எவ்வண்ணமோ நினைவில்கொண்டுள்ள சிறுமைகள் அனைத்தையும் இவ்விழவில் நிமிர்ந்து நிகர்செய்துகொள்ளட்டும்” என்றார் அமைச்சர் கருணாகரர். “இத்தகைய சிறிய மீறல்களுக்கு இடமளித்தே பெரிய எதிர்ப்புகளை நாம் கலைக்க முடியும்.”

“ஆனால் அதை குடிவிழாவாக அவர்கள் நடத்தவில்லை. அவ்விழா குறித்த செய்திகளை தங்கள் குடியினர் வழியாக பிறரறியாது பிறகுடிகள் அனைவரிடமும் பரப்பினர். சபரர்களிடம் ஐயுற்று அவர்களிடம் மட்டும் இச்செய்தியை தெரிவிக்கவில்லை. கருநிலவு நாளின் முதல் புலரியில் விழவு தொடங்கி காளகக்குடிகளின் முரசுகள் முழங்கத் தொடங்கியதுமே நகரெங்கிலுமிருந்து மக்கள் கலிதேவனுக்கு பூசனைப்பொருட்களும் பலிகளும் கொண்டு தெருக்களில் பெருகி தென்மேற்கு ஆலயத்தை நோக்கி செல்லத்தொடங்கினர்.

செய்தி அறிந்ததும் சபர குடிகளும் அங்கு திரண்டனர். அனைவரிடமும் தமயந்திமீது கசப்பு கரந்திருந்தது. விதர்ப்பம் மறைமுகமாக இந்திரபுரியை ஆள்கிறது என்னும் பரப்புரைக்கு அவர்கள் உளம் அளித்திருந்தனர். தெருக்களில் விதர்ப்பப் படையினருக்கும் பேரரசிக்கும் எதிராக சில குரல்கள் எழுந்தாலும் பெரியவர்களின் அடக்குதலால் அது மேலெழுந்து ஒலிக்கவில்லை. ஆனால் அவ்வெண்ணத்தாலேயே திரள் முன்னெடுக்கப்பட்டது.

இந்திரவிழவுக்குத் திரள்வதைப்போல மும்மடங்கு மக்கள் கலிதேவனின் ஆலயத்தை சூழ்ந்தனர். முந்தைய நாளே மலை ஆழங்களில் இருந்து கிளம்பிவந்து நகரைச் சுற்றிய புதர்வெளிகளில் தங்கியிருந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் முரசொலி கேட்டு எழுந்து வந்துகொண்டே இருந்தனர். இணைமுரசொலி கேட்டு விழவு தொடங்கிவிட்டதை அறிந்த தமயந்தி சினத்துடன் அமைச்சரை அழைத்து “குடிவிழவுக்கு இணைப்பெருமுரசு எப்படி ஒலிக்கலாம்? எவர் அளித்த ஒப்புதல் அது?” என்றார். அமைச்சர் கருணாகரர் “அரசி அவர்கள் எதற்கும் ஒப்புதல் கோரவில்லை. நகர்த்தெருக்களனைத்தும் கலிவழிபாட்டிற்குச் செல்லும் மக்களால் நிறைந்துள்ளன” என்றார்.

அரசி தமயந்தி சினம் பெருக கைவீசி பழிச்சொல் உரைத்தபடி உப்பரிகைக்கு வந்து நோக்கியபோது அனைத்து தெருக்களும் பெருவெள்ளம்போல் மக்கள் தலைகளால் நிறைந்திருப்பதை கண்டார். வண்ணத்தலைப்பாகைகளும் ஆடைகளும் கொண்டு மலர் பெருக்கிச் செல்லும் மழைக்கால நதிபோல் இருந்தது அரச வீதி. “எவரது ஆணை இது?” என்று அவர் கூவினார். “இனி எந்த ஆணையையும் அவர்களுக்கு தெரிவிக்க முடியாது” என்றார் கருணாகரர்.  “அவர்களை தண்டியுங்கள். யார் இதற்கு பொறுப்போ அவர்களை இழுத்து வாருங்கள்” என்றார் அரசி.

“பேரரரசி, இத்தனை பெருக்கென மக்கள் எழுந்தபின் உங்கள் சொல் அதற்குரிய மதிப்பை பெறாது. ஒருவேளை அது எதிர்ப்பை பெறக்கூடும். எதிர்ப்பை பெறுமென்றால் அது ஒரு தொடக்கம் என்றாகும்” என்றார் கருணாகரர். அதை நன்குணர்ந்த அரசி முலைகள் எழுந்தமைய உடல் பதற கைகள் அலைபாய அங்கு நின்று நோக்கிக்கொண்டிருந்தார். அத்திரளெழுச்சியின் பொருளென்ன என்று அவருக்கு நன்றாகவே தெரிந்தது.

அன்று உச்சிப்பொழுதில் அவரை விதர்ப்பநாட்டு ஷத்ரியப்படைகளின் தலைவன் மகாபாகு வந்து சந்தித்து படைகளில் நிலவும் பிளவைப்பற்றி சொன்னான். நிஷாதகுடிகள் அனைத்தும் கலிவழிபாட்டை கொண்டாடுவதாகவும் அவர்கள் நாவில் புஷ்கரனின் பெயர் திகழ்வதாகவும் கூறி “நெடுநாட்களாகவே இந்தக் கசப்பு ஊறிக்கொண்டிருக்கிறது, பேரரசி. நம்நாட்டுப் படைகள் இங்கே தெருக்களிலும் களங்களிலும் அயலோராகவே பார்க்கப்படுகிறார்கள். மதுக்கடைகளில்கூட சிறுமைசெய்யப்படுகிறார்கள்” என்றான்.

“எங்களுக்கு நீங்கள் எவ்வகை தனியிடமும் மிகையுதவிகளும் அளித்ததில்லை. நிஷாதர்களின் அடிமைகளென அவர்களின் நாட்டைக் காக்கும்பொருட்டு நாம் ஏன் இங்கிருக்கவேண்டும் என்றே விதர்ப்பப் படைகள் முணுமுணுத்துக்கொள்கின்றன. ஆனால் எங்களை நீங்கள் பேணி வளர்ப்பதாகவும் நிஷாதர்களுக்கு அவர்களின் நிலத்தில் இரண்டாமிடமே உள்ளது என்றும் இங்கே அத்தனை நிஷாதப் போர்வீரர்களும் எண்ணுகிறார்கள்” என்றான் மகாபாகு. “அந்த எண்ணம் அயல்நாட்டு ஒற்றர்களால் வளர்க்கப்படுவதா என்றே ஐயுறுகிறேன்.”

தமயந்தி அதற்குள் அனைத்தையும் கணித்து அமைதியடைந்துவிட்டிருந்தார். அவனை அனுப்பிவிட்டு அமைச்சர் கருணாகரரை அழைத்து “கலிவிழவுக்கு பேரரசி முறைமைப்படி சென்று பூசனைசெய்யவேண்டும். ஆவன செய்க!” என்றார். “அதையே நானும் எண்ணினேன். நல்ல நடவடிக்கை அது, அரசி” என்றார் கருணாகரர். அரசியின் வருகையை அறிவித்தபோது காளகக்குடியின் தலைவர்கள் ஐயுற்று குழம்பினர். ஆனால் அவள் வரவிருப்பதை கூடியிருந்த மக்களிடம் அறிவிக்கவும் செய்தனர். அவர்களில் சபரர்கள் தங்கள் ஆடைகளை வானில் வீசி எம்பிக்குதித்து வாழ்த்துரைகூவி அரசியை வரவேற்றனர். மெல்ல அவ்வாழ்த்தொலி அனைவரிடமும் பரவியது.

“வேறுவழியில்லை. அரசி வரட்டும். அவர் வந்ததையே நாம் அடைந்த வெற்றி என்று சொல்லிக்கொள்வோம்” என்றார் காளகக் குடியின் தலைவர் சீர்ஷர். “இவ்வெழுச்சியை அவள் வென்றெடுப்பாள்” என்றார் புஷ்கரன். “இல்லை மைந்தா, ஒருமுறை எழுந்த காழ்ப்பு வளர்ந்தே தீரும். பிற முயற்சி இல்லையேல் அன்பு தளரும் காழ்ப்பு வளரும் என்பதே மானுடநெறி” என்றார் சீர்ஷர்.

அன்று மாலை தன் வெள்ளித்தேரில் தமயந்தி மைந்தருடன் கலிவழிபாட்டுக்கு வந்தார். மக்கள் கூடி வாழ்த்தொலி எழுப்பி கொந்தளித்து அவரை வரவேற்றனர். புஷ்கரனும் சீர்ஷரும் குடித்தலைவர்களும் அவரை எதிர்கொண்டு கோல்தாழ்த்தி வரவேற்று அழைத்துச்சென்றனர். சிற்றாலயத்தின் உள்ளே இருட்டில் இருளுருவென்று விழிமின்ன அமர்ந்திருந்த கலிதேவனை அரசி கூர்ந்து நோக்கினார். அவன் கண்கள் வெண்பட்டால் கட்டப்பட்டிருந்தன. ஆயினும் நோக்கை உணரமுடிந்தது அவரால். அந்த முகத்தில் புன்னகை விரிவதுபோல் தோன்ற அவர் விழிதாழ்த்தி தன் குடலையில் இருந்த நீலமலர்களை கலியின் காலடியில் வைத்து வணங்கிவிட்டு விலகிச்சென்றார்.

“அதுவே தொடக்கம் என்கிறார்கள் தொல்கதைகளில்” என்றான் முக்தன். “அங்கிருந்தே நிஷதப்பேரரசு மெல்ல சரியத் தொடங்கியது.” பிருகந்நளை “ஆம், மானுடரின் வளர்ச்சிக்கு உச்சமென ஓர் அறியாப்புள்ளி உள்ளது. அது தெய்வங்களின் வேடிக்கை” என்றாள்.

தொடர்புடைய பதிவுகள்

ஆஸ்திரேலியா, சூடாமணி -கடிதங்கள்

$
0
0

index

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம், நான் உங்கள் இணையதளத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசிப்பவன் ஆனால் கடந்த ஆண்டு வரை உங்கள் எந்த கதைகளையும் வாசித்தது இல்லை , கடந்த ஆண்டு உங்களின் அறம் சிறுகதை தொகுப்பை வாங்கி வாசித்தேன் அந்த கதைகள் என்னை மிகவும் கவர்த்தந்து அதன் நினைவுகள் பலநாட்கள் என்னுள் உலவிக்கொண்டு இருந்தது அந்த கதை தந்த உற்சாகத்தில் உங்களின் விஷ்ணுபுரம் நாவல் வாங்கி வந்து படிக்க துவங்கினேன் என்னால் முழுதாக 10 பக்கங்கள் கூட படிக்க முடியவில்லை  சில மாதங்கள் அப்படியே போட்டுவிட்டேன் , மீண்டும் இப்பொழுதுதான் வாசிக்க துவங்கினேன் ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு முறை அதற்கு மேலும் கூட வாசிக்கவேண்டி உள்ளது இருந்தாலும் அலுவலக மதிய உணவு இடைவேளையில் அதை படிக்காமல் இருக்கவும் முடியவில்லை, ஆனால் இந்த கடிதம் அதைப்பற்றியது அல்ல.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் திரு.ஆராத்து அவர்களின் புத்தக வெளியிட்டு விழாவில் நீங்கள் திரு. சாரு அவர்களின் கேள்விக்கு அளித்த பதில்லில் எனக்கு உள்ள சந்தேகம் பற்றியது.

சாரு அவர்கள் உங்களிடம் உங்களை நாடு கடத்தினால் எந்த நாட்டுக்கு போவீர்கள் என்று கேட்டார் நீங்கள் சொன்ன பதில் ஆஸ்திரேலியா , அதற்கு விளக்கம் கொடுத்து கடைசியாக ஒன்று சொன்னீர்கள் அது என்னவென்றால் “ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது நான் அங்கு இருந்தால் நானும் அந்த இந்தியர்களை தாக்குவேன்” எனக்கு இந்த பதிலில் உள்ள நுண்ணரசியல் புரியவில்லை இத்தனை நாட்களாக அதற்கு விடை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்துதேன் முடியவில்லை, என் நண்பர்கள் சிலர் தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் அவர்களிடம்மும் விடை கிடைக்கவில்லை, நானும் அது சம்மந்தமான செய்திகளையும் புத்தகங்களையும் படித்தேன் என்னால் முடியவில்லை அதனால் தான் இந்த கடிதம் , என்னால் முடிந்தளவு முயற்சித்து பார்த்தேன் விடை கிடைக்கவில்லை நீங்கள் தான் அதன் பின் உள்ள நுண்ணரசியல் என்னவென்று விளக்க வேண்டும் . நீங்கள் இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்

M.ரகுவேலன்

***

அன்புள்ள ரகுவேலன்,

ஆஸ்திரேலியா பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். என்னுடைய அவதானிப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஆஸ்திரேலியாவின் கல்விநிலையங்கள் பெரும்பாலும் வணிக அடிபப்டை கொண்டவை.  ஆகவே இந்தியாவின் உயர்குடி, உயர்நடுத்தரகுடிகள் தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்புகிறார்கள். இங்கே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும் , கேளிக்கை என்பது ஒருவகை ரவுடித்தனம் என்னும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பவர்கள் அங்கும் அப்படி நடந்துகொண்டு கடும் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்கிறார்கள். இதை பலமுறை ஆஸ்திரேலியாவில் நேரில்கண்டேன்

ஆஸ்திரேலிய ஈழத்தமிழர்கள் சந்திக்காத வன்முறை இந்திய, குறிப்பாக வட இந்திய இளைஞர்கள் மேல் நிகழ்த்தப்படுவதை நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன். பல இடங்களில் அவர்களின் நடத்தையைக் கண்டு நான் கூசிச் சுருங்கினேன்

ஜெ

***

ஆஸ்திரேலியாவில் இனவெறித்தாக்குதல்

 

r.chuda

Dear jeyamohan,

I read Tamil books, but cannot write in Tamil without mistakes as I have not studied Tamil in school. I would love to read books of writer Chudamani. Kindly let me know where in online it is available or which publisher has published majority of her books and selling currently her books in online please.

Thanks,

Sheree

***

அன்புள்ள ஸ்ரீ

நீங்கள் இணையத்தில் சூடாமணி என தேடினாலே நூல்களும் இணையவிற்பனை நிலையங்களும் கண்ணில் படும்

ஆர் சூடாமணி விக்கி பக்கம்

ஆர் சூடாமணி பற்றி ஜெயமோகன்

ஆர் சூடாமணி அழியாச்சுடர்கள்

ஆர் சூடாமணி கதைகள்

ஆர் சூடாமணி கதைகளை கிழக்கு பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. நீங்கல் இங்கே வாங்கலாம்

ஆர் சூடாமணி கதைகள் கிழக்கு

ஜெ

***

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலையாளத்தில்…

$
0
0

ana

பெருமதிபெற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

தங்களது கட்டுரை ஒன்றில் மலையாளம் டைப் செய்ய வராது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கீழே ஒரு லிங்க் கொடுத்துள்ளேன். அதன்மூலம் மலையாளம் இங்கிலீஷ் கீபோர்ட் கொண்டு மலையாளம் டைப் செய்ய முடியும்.

https://www.youtube.com/watch?v=J9hSNiIP3po

மேலும், மொபைலில் தகவல் பரிமாறிக்கொள்ள Gboard என்றொரு ஆப் இருக்கிறது. அதன்மூலம் வாட்சப்பின் வழியாக மலையாளத்தில் தகவல் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.

மேலே உள்ள தகவல்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் தங்களது பொன்னான நேரத்தை விரயம் செய்தமைக்கு மன்னிக்கவும்.

தங்களது கருத்துக்கள் எங்கும் பரவி நன்மை பயக்கவேண்டும் என்று கருதியே இதனை அனுப்பினேன்.

நன்றி

குருநாதன்

***

அன்புள்ள குருநாதன்

என் பிரச்சினை மலையாளத்தில் விரைவாகத் தட்டச்சு செய்ய முடியாது என்பதே. என் கை தமிழுக்குப் பழகிவிட்டிருக்கிறது. அதுதான் தடை. பார்த்துப்பார்த்து அடிக்கலாம். அது மிகப்பெரிய உளத்தடை. அதை மீறி ஒரு கதையை ஒன்றிப்போய் எழுதமுடியாது.

ஜெ

***

அன்புள்ள ஜெ

மலையாளத்தில் யானை டாக்டர் வந்திருப்பதை செய்தியாக வாசித்தேன். பாஷாபோஷ்ணி ஆண்டுமலரில் அட்டையில் படம்போட்டு . பல இடங்களில் போஸ்டரும் பார்த்தேன். சிலநாட்களிலேயே தீர்ந்துபோய்விட்டது என்றும் காப்பிரைட் இல்லை என்பதனால் பலர் பதிப்பிக்கப்போகிறார்கள் என்றும் சொன்னார்கள். வாழ்த்துக்கள்.

என் மலையாள நண்பர் வாசித்துவிட்டு நூறுசிம்ஹாசனங்களைவிட முக்கியமான படைப்பு என்றார். மலையாளத்தில் நான் அறிந்த நிறையப்பேர் படித்துவிட்டனர். யானைகளின் அழிவு, யானைடாக்டரின் தியாகம் என்பதைவிடவும் புழு = யானை என்ற உருவகம்தான் நிறைய பேசப்பட்டது. பலர் உணர்ச்சிகரமான பாராட்டுக்களை தெரிவித்தார்கள்

அருண்குமார்

***

அன்புள்ள அருண்,

நன்றி

ஆம், யானை டாக்டர் நூறு சிம்ஹாசனங்களைவிடவும் அலையை உருவாக்கியிருக்கிறது. ஒன்பது பதிப்பகங்கள் வெளியிடுகின்றன

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன்

$
0
0

t_janakiraman_2

இனிய ஜெயம்,

உங்கள் மேல் எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. நீங்கள் அறிந்ததுதான். ஜெமோ அசோகமித்ரனை விதந்தோத ஏதேனும் எழுதப் புகுந்தால் சுந்தர ராமசாமியை மட்டம் தட்டுவார். அப்படித்தான் சி நே சி ம கட்டுரையில் ஜெயகாந்தனை விதந்தோத தி.ஜானகிராமனை மட்டம் தட்டி இருக்கிறார். நேற்று நள்ளிரவு வரை நடந்த விவாதத்தில் நண்பர்கள் அக்கட்டுரை குறித்து சொன்னது இது.

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் ஜெயகாந்தன் கங்காவின் பார்வையில் அமைத்த உரையாடல்களின் ஆழம் என்ன, மோக முள் நாவலில் தி.ஜானகிராமன் யமுனாவின் பார்வையில் அமைந்த உரையாடல்களின் ஆழம் என்ன என எனக்குள் உரசிப் பார்க்க நல்ல தருணமாக அமைந்தது அந்த உரையாடல்.

உதாரணமாக எட்டு வருடம் கழித்து பாபுவை தேடி யமுனாவே வருகிறாள் எனும் புள்ளியில் அனைத்துமே உணர்த்தப்பட்டு விடுகிறது ஆனாலும் அதற்கு மேல் திஜா போகிறார்.யமுனா பாபு வசம் சொல்கிறாள் ”இப்ப இல்ல. இருந்ததுண்டு. ஆனா ராவும் பகலுமா தவிச்சு நசுக்கிட்டேன். எல்லாத்தயும் அப்பிடி சுலபமா நசுக்கக்கூடிய சக்தி இல்லை. வேற என்ன செய்யுறது? தலையெடுத்து தலையெடுத்து மறுபடி ஆடுறதை பிடிச்சு நசுக்கி, காலால மிதிச்சு தேச்சு வந்தேன். இப்ப உசிர் இல்லாம கிடக்கும். நீதான் உயிர் குடேன்” இந்த உரையாடல் அங்கே நிகழ என்ன காரணம்? நாவல் மொத்தமும் பாபுவின் பார்வை எனும் குறுகிய சாலையில் ஓடுவதே காரணம். பாபுவின் யமுனா மீதான மேலான பக்தியும் கீழான காமமும் யமுனா மீது உருவாக்கிய விளைவு என்ன என யமுனாவின் கோணம் நாவலுக்குள் உருவாகி வரவில்லை. ஆகவேதான் இந்த ”தளுக்கான ” அந்த உரையாடலை அங்கே அமைப்பதன் வழியே திஜா அந்த நாவல் இயல்பாக எதிர்கொள்ள வேண்டிய முரண்களை தாவி சென்று விடுகிறார். நீங்கள் குறிப்பிட்ட இந்த ”தளுக்கு ” தான் எனது சில நண்பர்களை உணர்ச்சி வசப்பட செய்து விட்டது.

அடுத்து ஒரு எழுத்து ஆளுமையாக திஜாவின் எல்லை. ஒரு முறை உரையாடல் ஒன்றினில் வெள்ளைக்காரன் காலத்தில் சீட்டுக் கம்பெனியில் பணம் கட்டி அது திவால் ஆனதால் நடுத்தெருவுக்கு வந்த தஞ்சை கும்பகோண பகுதி பிராமண குடும்பங்கள் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தீர்கள். தூக்கு மாட்ட தெரியாமல் மாட்டி குற்றுயிராய் பிழைத்து துவண்ட கழுத்துடன் அன்று அலைந்த பல ”அரைத்தூக்கு” பிராமணர்கள் பற்றி சொன்னீர்கள். [தேடி வாசித்தேன் வா.வே.சு.அய்யர் அது குறித்து கதை ஒன்று எழுதி இருக்கிறார்] அந்த உரையாடலை இப்படி முடித்தீர்கள் ”அப்போ பாபு யமுனாவை மோந்து பாத்துக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இருந்தான் ”.

அன்று ஏனோ உள்ளே குமுறலாகவே இருந்தது. மோக முள் நாவலில் சாஸ்திரி சொல்வார் ”இந்த கும்பகோண ராமசாமி கோவில்ல ஒரு தூணை, ஒரு சிற்பத்தை பாத்தவன் அதுக்குப் பிறகு இந்த கும்பகோண அழுக்கையும் கீழ்மையையும் நினைச்சுக்கிட்டு இருப்பானா என்ன?” இந்த உரையாடலையே அன்று முழுதும் திஜா சார்பாக உள்ளே சொல்லிக்கொண்டு இருந்தேன்.

பின்னொரு சமயம் வாசிக்கையில் கண்டேன். அந்த நாவலில் திஜா அழகு குறித்து பேசும் தருணம் எல்லாம் அசிங்கம் குறித்தும் பேசிவிடுகிறார். உதாரணம் சாஸ்திரி குறித்த வர்ணனை அவர் நெற்றியின் தழும்பு போல அவரது புன்னகை என வர்ணிக்கிறார். இப்படி பல இடங்களை சுட்ட முடியும். ஆக திஜா அந்த நாவலில் இன்னும் ஆழம் சென்றிருந்தால் அவர் உருவாக்கிய மொத்த அழகு கனவையும், அன்றைய குரூர யதார்த்தம் கொண்டு அவரால் சமன் செய்திருக்க முடியும்.

எழுதியத்தைக் கொண்டு மட்டுமே எழுத்தாளரை மதிப்பிட வேண்டும். அந்த எழுத்தாளர் எழுதாததைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது.

உதாரணமாக புதுமைப்பித்தன் அவர் சமகால சுதந்திர வேட்கை குறித்து எதுவுமே எழுத வில்லை. இதுவே அடுத்த ”வாய பொத்து ” வாதமாக இருக்கும்.

புதுமைப்பித்தன் இரு உலகப் போர்களின் மத்தியில் ஆதிக்க வெறி கொண்டு இந்த உலகின் அனைத்து கூறுகளிலும் பாதிப்பு செலுத்திய ஹிட்லர் முசோலினி போன்ற கிராக் பாட்டுக்கள் குறித்து முக்கியமான பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். ஸ்டாலினுக்கு தெரியும் பதிவில் பொது உடமை ஒரு சித்தாந்தமாக இருக்க, அதை அரசியல் மூலம் நடைமுறைpபடுத்துவதில் உள்ள இடர்களை [என் நோக்கில்] கரிசனத்துடன் அணுகுகிறார். இது போன்ற பல கட்டுரைகள் வழியே புதுமைப்பித்தன் ”முன் முடிவுடன் ” இந்திய சுந்தந்திர வேட்கை குறித்து மௌனம் காத்தார் என்றே ஊகிக்க முடியும்.

ஆக புதுமைப்பித்தனின் அந்த விடுபடல் அவரது ஆளுமைக் குறைபாடல்ல என்றே சொல்வேன். திஜா வில் உள்ள விடுபடல் புதுமைப்பித்தன் போன்றது அல்ல.

மோக முள் வழியே அடுத்து முன் வைக்கப்படும் ”வாய பொத்து ” விவாதம். அந்த நாவல் மொழியனுபவம் வழியே அப்படியே இசை அனுபவத்துக்கு வாசகனை உயர்த்தி விடுகிறது. இசையறியா பேதைகள் இந்த நாவலின் உணர்வு உச்சத்துக்கு செல்ல இயலாது. ஆகவே ”அது ” உனக்கு இருந்தால் மட்டும் இந்த நாவலை மதிப்பீடு.

அதாவது வாசகனாகிய நான் விவசாயம் குறித்த அடிப்படைகளை தெரிந்து கொண்டே கண்மணி குணசேகரனையும், சு.வேணுகோபாலையும் வாசிப்பதைப் போல, மீன் பிடித்தல் அடிப்படைகளை அறிந்து கொண்டு ஜோ.டி.க்ரூஸ் ஐ வாசிப்பதை போல, இசையின் அடிப்படைகளை தெரிந்து கொண்டு மோகமுள்ளை வாசிக்க வேண்டும்.

இந்த நாவலில் மூன்று இழைகள். பாபுவின் யமுனா மீதான பிரேமை. பாபுவின் இசை ரசனை. பாபு அவனது தந்தை, குரு, நண்பன் ஆகியோருடன் கொள்ளும் உறவு. இந்த நாவல் இந்த மூன்று தளத்தில் அதன் தர்க்கம், கற்பனை, கடந்து உணர்வு நிலையில் இசையில்தான் நிறைவு கொள்கிறதா என்று வினவினால் [எனக்கு இசை அறிவு இன்மை காரணமாக] எனக்கு அதை மதிப்பிட வழி இல்லை.

இசையில் ஆழ்ந்த புலமையும், இலக்கிய வாசிப்பில் தேர்ச்சியும் கொண்ட சஞ்சய் சுப்ரமணியன் போன்றோர் மதிப்பீடு செய்ய வேண்டிய இடம் அது.

எனது வினா இதுதான்

இசை பயிற்சி அற்றவர்கள் காண இயலா உன்னத தளம் ஒன்று மோக முள் நாவலில் இலங்குகிறதா?

இசை பரியச்சம் அற்றவர்கள் அந்த உணர்வு உச்சத்தை எய்த இயலாது என்பது அந்த நாவலின் பலவீனம் தானே?

மேலும் ஒரு எழுத்தாளர் என்பவர், [அவரது ஆளுமை திறன் சார்ந்து] எக்காலத்திலும் அவர் எழுதியவற்றுக்கு ”மேலதிகமாக ” எதையேனும் அளிப்பவர்தானே. எனவே,

எழுதியத்தைக் கொண்டு மட்டுமே எழுத்தாளரை மதிப்பிட வேண்டும். அந்த எழுத்தாளர் எழுதாததைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது.

எனும் கூற்றிலுள்ள பலம் பலவீனங்களை ஒரு வாசகன் எவ்வாறு வகுத்துக் கொள்வது?

கடலூர் சீனு.

***

அன்புள்ள கடலூர் சீனு

உங்கள் கடிதத்தை படித்த போது மெல்லிய எரிச்சலொன்றை அடைந்தேன். கடந்த இருபத்தைந்தாண்டுகளாக நான் கேட்டுக்கொண்டிருக்கும் குரலொன்று அதில் உள்ளது. அதை தொடர்ந்து பலவகையாக மறுத்து விளக்கிக்கொண்டே இருக்கிறேன். இலக்கிய விமர்சனத்தை ஒருவகையான வம்பாக புரிந்துகொள்வதும் வம்பாகவே அதில் ஈடுபடுவதும் தான் அந்த மனநிலை.

ஆரம்பகாலத்தில் சுந்தர ராமசாமி இலக்கிய விவாதங்களில் வம்புக்கு ஒர் இடமுண்டு என்பதை ஏற்றுக்கொண்டார். ஏனெனில் இலக்கிய விவாதங்களில் இலக்கியவாதிகளும் அவர்களுடைய ஆசாபாசங்களும் ஓரளவுக்கு பேசப்பட்டுதான் ஆகவேண்டும் என்று அவர் எண்ணினார். அவை கருத்துக்களை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்றார். ஆனால் தேவதச்சன் அவருடைய உரையாடல்களில் இலக்கிய வம்புகளை முதலிலேயே ஓரிரு சொற்களில் வெட்டி அகற்றி விடுவதைக் கண்டேன். அவரைப் பொறுத்தவரை இலக்கிய வம்பு சார்ந்த ஒரு மனநிலை என்பது இலக்கியம் சார்ந்த பிற அனைத்தையும் பார்க்கும் பார்வையை முழுமையாகத் தடை செய்துவிடும். இத்தனைக்கும் அரசியல் சினிமா சார்ந்த வம்புகளில் மிகக்குதூகலமாக ஈடுபடுபவர் தேவதச்சன்.

பின்னர் சுந்தர ராமசாமியும் அதை ஒருவகையில் உணர்ந்தார். அவருடைய அவையிலிருந்து கிளம்பிச்சென்ற இளம் எழுத்தாளர்கள் சிலர் பிரபல ஊடகங்களை அடைந்த போது சிறுபத்திரிகை சார்ந்த செய்திகளை அங்கு கொண்டு சென்றனர். முதலில் எப்படியோ சிறுபத்திரிகை அங்கு பேசப்படுகிறது என்ற எண்ணத்தை சுந்தர ராமசாமி அடைந்தாலும் மிக விரைவிலேயே அது பயனற்றது என்பதை உணர்ந்தார். தொடர்ச்சியாக சிறுபத்திரிக்கை சார்ந்த வம்புகளை குமுதத்திலோ விகடனிலோ படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் ஒருபோதும் சிறுபத்திரிக்கை வாங்கிப்படிப்பதோ அதிலுள்ள கதைகளை, கட்டுரைகளைப்பற்றி ஆர்வம் கொள்வதோ கிடையாது.

எனக்குத் தெரிந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன். இலக்கியக் கருத்துக்களை தனிப்பட்ட ஆசாபாசங்களின் பகுதியாக, உள்நோக்கங்களின் வெளிப்பாடாக, ஒருவகைப்புரணியாக எடுத்துக்கொள்வதென்பது சிந்தனையின் மிகப்பெரிய தேக்க நிலையைக் காட்டுகிறது.

சரியான அர்த்தத்தில் இலக்கிய விமர்சனம் என்பது எவ்வகையில் நிகழ்த்தப்பட்டாலும் இலக்கிய படைப்பை நோக்கி வாசகனைக் கொண்டு செல்லும். அவன் இலக்கிய படைப்பை படித்துக்கொண்டிருக்கும் விதத்தை சற்று மாற்றும் அவன் பாராததை சுட்டிக்காட்டும். மிக எதிர்மறையான விமர்சனங்கள் கூட ஒரு படைப்பின் மீதான நம்முடைய பார்வையை மேலும் துலக்குவதை நாம் எப்போதாவது உணர்ந்திருப்போம். இலக்கியப்படைப்புகளைப்பற்றி முற்றிலும் பேசாமலிருப்பது தான் அவற்றை அழிக்கும் வழி. அதுதான் அனைத்து வகையிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.

உங்கள் வினாவுக்கு வருகிறேன். ஜெயகாந்தனைப்பற்றி பேசும்போது ஜானகிராமனையோ, அசோகமித்திரனையோ பேசும்போது சுந்தர ராமசாமியையோ, சுந்தர ராமசாமியைப்பற்றி பேசும்போது பிறிதொருவரையோ நான் கீழிறக்குகிறேன். இதை ஒரு விவாத உத்தியாக கடைப்பிடிக்கிறேன். இதுதான் நீங்கள் சொன்ன நண்பரின் கூற்று இல்லையா? இதை ஒருவர் சொல்லுபோது அவர் இலக்கியவாசகர் என்றால் முதலில் செய்ய வேண்டியது ஜானகிராமனைப் பற்றியோ சுந்தரராமசாமியைப் பற்றியோ அசோகமித்திரனை ப்பற்றியோ ஜெயகாந்தனைப் பற்றியோ நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை முழுமையாக வாசிப்பதுதான். அதைச் செய்யாதவரைத்தான் நான் புறணிபேசுபவர் என்கிறேன். தெருக்களில் குப்பை பொறுக்குவதுபோன்ற ஒரு தொழில் அது.

என்னுடைய கருத்துக்களை இந்த இலக்கிய முன்னோடிகளைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். இலக்கிய முன்னோடி வரிசை என்று ஏழு தொகுதிகளாக் நூல்கள் வெளிவந்துள்ளன. இவர்களைப் பற்றி தமிழில் மிக அதிகமாக எழுதிய படைப்பாளி நான். என்னுடைய வழிமுறை இலக்கிய ரசனை சார்ந்தது என்பதனாலேயே ஒப்பீடு அதில் தவிர்க்க முடியாது. ரசனை என்பதே ஒருவகையான ஒப்பீடு தான். ரசனை மதிப்பீடு என்பது ஒப்பீட்டில் இருந்து உருவாகும் மதிப்புதான். ஒரு படைப்பாளியின் ஒரு தனிச்சிறப்பை இன்னொரு படைப்புடன் ஒப்பிடாமல் அறிவதற்கு இலக்கிய விமர்சனத்தில் வழியேயில்லை.

ஜெயகாந்தனுடைய அறிவார்ந்த தன்மையை விவாதத்தில் எடுத்துக்கொள்ளும்போது ஜானகிராமனுடைய அறிவார்ந்த தன்மையற்ற உணர்ச்சிகரத்தை ஒப்பிட்டுத்தான் சொல்ல முடியும். ஜானகிராமனுடைய கட்டற்ற மொழி ஒழுக்கை பற்றி விவாதிக்கும்போது எண்ணிச் சொற்களை அடுக்கும் அசோகமித்திரனுடன் ஒப்பிட்டே அதை விளக்க முடியும். மிகச் சிறிய நுட்பங்களை தொட்டெடுக்கும் ஜானகிராமனின் எழுத்துமுறையைப்பற்றி எங்காவது விவாதிக்க நேர்ந்தால் தடித்த கோடுகளில் மட்டுமே சித்திரங்களை வரையும் ஜெயகாந்தனை அங்கே சுட்டிக்காட்டியிருப்பேன். அப்போது ஒருவர் அங்கு ஜானகிராமனைத் தூக்குவதற்காக ஜெயகாந்தனை மட்டம் தட்டுவதாக சொல்வாரேயானால் அவருக்கு இலக்கிய விமர்சனத்தில் அறிமுகமில்லை என்று தான் பொருள்.

ஜானகிராமனின் புனைவுகளைப்பற்றி நான் எழுதியவற்றை தொகுத்து இங்கு மீண்டும் சொல்ல விரும்புகிறேன். அவருடைய எழுத்துக்கள் வெளியாகி கால் நூற்றாண்டுகழித்துதான் நான் படிக்க ஆரம்பிக்கிறேன். அன்று வரை அவருடைய படைப்புகளைப்பற்றி பேசிய எவரும் சுட்டிக்காட்டாத நுட்பங்களை, அவர்கள் எவரும் கண்டடையாத உள்மடிப்புகளை, அவருடைய புனைவுகளில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவர் மீதான வாசிப்புகளை அவ்வாறு விரிவாக்கம் செய்திருக்கிறேன். அவ்வாறு ஜானகிராமன் எதை அளித்தாரோ அதை அனைத்தையும் பெரும்பாலும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் நிலையில் எழுந்த பிறகுதான் அவருடைய போதாமைகளை சுட்டிக்காட்டுகிறேன். அவருடைய எல்லைகளை வரையறுக்கிறேன். அதுவே அந்த எதிர்மறை விமர்சனம் வைப்பதற்கான தகுதியாகிறது.

அந்த எதிர்மறை விமர்சனங்கள் முற்றிலும் புதியவையும் அல்ல. வேறு வார்த்தைகளால் ஜானகிராமனின் சமகாலப்படைப்பாளிகளால் முன்வைக்கப்பட்டவைதான். கு.அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் ஜானகிராமனை உண்மையின்மேல் கனவில் திரையை விரித்த கலைஞன் என்று மதிப்பிடுகிறார்கள். இதற்கு நான் விரிவாக பதில் சொல்லியிருக்கிறேன். கனவின் திரையை அல்ல ஜானகிராமன் விரிப்பது. அவருடைய அனைத்து படைப்புகளிலும் அக்கனவு கிழிபடும் தருணங்கள் தான் உச்சமாக அமைந்துள்ளன. இதற்குத்தானா என்று யமுனா கேட்பதோ, நீயும் அம்மா பிள்ளைதான் என்று அலங்காரத்தம்மாள் சொல்வதோ ஒரு உதாரணம். ஆனால் அந்த முனை வரை செல்லும் போது பெரும்பாலும் சரளமான ஒழுக்கென்பதை அவர் முன் நோக்கமாகக் கொள்கிறார். வலுவான புனைவுதருணங்களை உருவாக்கும்போதே தத்துவார்த்தமான மோதலோ அறிவார்ந்த சிடுக்குகளோ விழுமிய மோதல்களோ வரும் தருணங்களை தவிர்த்து செல்கிறார்.

உதாரணமாக, யமுனாவுக்கும் பாபுவுக்குமான உறவு ரங்கண்ணாவுக்குத் தெரிந்தால் வரக்கூடிய முரண்பாடென்பது மரபின் இருபெரும் தரப்புகளுக்கிடையேயான அனல் தெறிக்கும் மோதலாக அமைந்திருக்கும். எந்த நாவலாசிரியனும் இயல்பாக சென்றடையும் அந்த இடத்தை ஜானகிராமன் தவிர்க்கிறார் என்பதை ஒர் உதாரணமாக சுட்டிக்காட்டியிருக்கிறேன். இப்படியெல்லாம் தான் நான் ஜானகிராமனை நான் விவாதிக்கிறேன் அவருடைய சாதனைகளுடன் எல்லைகளை மதிப்பிடுகிறேன்.

நான் இந்த விவாதத்தில் கேட்கும் கேள்வி அறிவார்ந்த தளத்தை முழுமையாகவே விலக்கி உணர்வு நிலைகளில் மட்டுமே சஞ்சரிக்கும் ஜானகிராமன் தமிழ்ச் சிற்றிதழ்களின் எழுபதுகளில் அவ்வாறு கொண்டாட்டத்துக்குரிய படைப்பாளியாக இருந்தபோது சமரசமற்ற அறிவார்ந்த தன்மை கொண்டிருந்த ஜெயகாந்தன் எப்படி ஒவ்வாமல் ஆனார் என்பதே. இன்று ஒரு தலைமுறைக்குப் பிறகு நின்று படிக்கையில் இந்த முரண்பாடு மேலும் கூர்மையாக எழுகிறது. அவை எழுபதுகளின் வாசகர்களிடம் ஆண்பெண் உறவு சார்ந்து இருந்த மென்மையான உணர்வுநிலைகளையும், சிலவகைச் சபலங்களையும் நோக்கித்தான் நம்மை கொண்டு செல்கின்றன.

நான் செய்ததுபோல வரலாற்றில் பண்பாட்டில் ஜானகிராமனை நிறுத்திப் பேசிய ஒருவரே என்னை எதிர்கொள்ளும் தகுதிகொண்டவர். அந்த வாசிப்பை நிகழ்த்திய ஒருவனுக்குத்தான் மேலதிகமாக ஜானகிராமனிடமிருந்து எதிர்பார்க்கவும் ஜானகிராமனின் எல்லைகளைத் தொட்டுப்பேசவுமான தகுதி அமைகிறது. வெறுமே ஜாதிப்பற்று, ஊர்ப்பற்று ஆண்பெண் உறவுநிலைகள் மீதான சபலம் போன்றவைதான் காரணம் என்றால் அது வாசிப்பு அல்ல.

இந்த விவாதங்கள் எதுவும் புதிதாக கிளம்பி வருபவை அல்ல. ஜானகிராமன் எழுதியிருந்த காலம் முதலே அவருடைய் படைப்புகள் மீது அவற்றின் தரிசனக்குறைவு சார்ந்து, அவற்றின் அறிவார்ந்த தன்மைக்குறை சார்ந்து கடுமையான விமர்சனங்கள் அவருடைய சகபடைப்பாளிகளாலும் விமர்சனங்களால் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. என்னுடையது அந்த விவாதத்தின் அடுத்த கட்டம். இந்த அவதானிப்புகள்கொண்ட ஒருவர் முரண்படலாம். மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கலாம் அவ்வாறு முன்வைக்கையில் தான் இலக்கியவிமர்சனம் முன் செல்கிறது.

மாறாக அதற்கு ஒரு சிறுமையைக் கற்பிப்பது சொல்பவரின் சிறுமையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இலக்கியத்தை மிக மிகச் சிறிய உள்ளத்துடன் அவர் எதிர்கொள்கிறார் என்பதற்கான சான்று மட்டும்தான் அது.

மோகமுள் நாவலின் இசைக்கூறு பற்றி எல்லாம்கூட விரிவாகவே முன்பு எழுதியிருக்கிறேன். அந்நாவலில் இசை பேசப்பட்டிருப்பதாகச் சொல்பவர்கள் இசை குறித்த சில நாவல்களை வாசிக்கவேண்டும். குறைந்தபட்சம் ழீன் கிறிஸ்தோஃபையாவது. இசை கேட்டான், கண்ணீர் வழிந்தோழியது, அஹ் அஹ் என்று விம்மினான் என எழுதுவதெல்லாம் இசை குறித்த எழுத்து அல்ல. அல்லது சாவேரி ஆறாக ஓடியது, சங்கராபரணத்தில் முடிச்சு விழுந்தது என்று எழுதுவதும் இசை குறித்த எழுத்து அல்ல.

இசையோ, ஓவியமோ, கட்டிடக்கலையோ வேளாண்மையோ, இயற்கையோ எதுவானாலும் இலக்கியத்தில் ஒருவகையான குறியீட்டுத்தன்மை கொண்டே வரமுடியும். இசை உணர்ச்சிகளின் புற அடையாளமாக ஆகலாம். சிற்பம் பெருந்தரிசனங்களைச் சுட்டலாம். புனைவுக்குள் அவையாக மட்டும் அவற்றுக்கு இடமில்லை. வாழ்க்கையின் உணர்வுகளை, தரிசனங்களை அவை சுட்டிநிற்கவேண்டும். அன்றி வெறும் இசையென வரும்போது அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இசையைப்பற்றிய நுண்மையான மதிப்பீடாக இருந்தாலும்கூட.

ழீன் கிறிஸ்தோப் நாவல் இசையினூடாக ஐரோப்பியப் பண்பாடு ஒருங்கிணைக்கப்பட்டதன் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. இசை நுண்மையைத்தேடும்போது செவ்வியலாகி ஆடம்பரமாகி ஒருபக்கம் இறுகிச்செல்ல மறுபக்கம் தன்னை அவிழ்த்துக்கொண்டு நாட்டுப்புறசியல் நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது. அது ஐரோப்பியப் பண்பாட்டின் என்றுமுள்ள அறச்சிக்கல். அதற்கும் அப்பால் இசைக்கும் ஒழுக்கநெறிகளுக்கும் இடையே உள்ள மாறாத போராட்டத்தைப் பேசுகிறது. காதலை, பிரிவை இசை இசையினூடாகவே அதில் முன்வைக்கிறார் ரோமெய்ன் ரோலந்து. அதில் பேசப்பட்டவை ஒரு வாழ்நாள் முழுக்க சென்று வாசிக்கத்தக்கவை.

மோகமுள்ளில் இசை பாபுவின் ஒர்உலகம் என்ற அளவிலேயே வருகிறது. பாபுவுக்கும் யமுனாவுக்குமான உறவை அது எங்கே பாதிக்கிறது? பாபுவின் ஆளுமையை எங்கே அது தீர்மானிக்கிறது? அதில் பேசப்படும் இசைசார்ந்த ஒரு தருணமாவது நீங்கள் இன்று நினைக்கையில் தொடர்ந்து அர்த்தங்கள் அளித்து விரியும் தன்மைகொண்டிருக்கிறதா?அந்நாவல் எழுதிச்செல்லும் பாலுறவின் சிக்கலை அது எப்படி முடிவுக்குக் கொண்டுவந்து தரிசனமாக உயர்த்துகிறது? அதில் இசை வகிக்கும் பங்கு என்ன?

ஆயுர்வேதம் அறிந்தால்தான் ஆரோக்கியநிகேதனம் வாசிக்கமுடியும் என எந்த இலக்கியவிமர்சகனும் சொல்வதில்லை. அதில் வரும் ஆயுர்வேதமும் அலோபதியும் வெறும் மருத்துவத்தகவல்கள் அல்ல. அவை இருவேறு காலகட்டங்களின் குறியீட்டுவடிவங்கள் இரு யுகங்களின் தோற்றங்கள். அவ்வாறு சொல்லப்படுவது மேலெழுவதற்குப் பெயர்தான் கலை. குறைந்தபட்சம் கண்மணி குணசேகரனின் கோரை நாவலில் வரும் கோரை ஒரு வெறும்செடியல்ல, அது வேளாண்மைச் செய்தி அல்ல, என்றாவது நாம் அறியவேண்டும்.

மோகமுள்ளின் நடையில் ‘இசை’ இருக்கிறது என்பதெல்லாம் நெடுங்காலம் இங்கே சொல்லப்பட்டுவந்த ஒரு ‘கூற்று’ மட்டுமே. சுந்தர ராமசாமி காலம் முதலே பேசிக் கடக்கப்பட்டுவிட்ட ஒன்று. அது ஜானகிராமனின் தேர்ந்த உரைநடை. அதேசமயம் சிந்தனையில், உணர்வுகளில் சிடுக்குகள் என எதையும் எதிர்கொள்ளாமல் செல்வதனால் உருவாகும் சரளம். அதிலுள்ளது பெரும்பாலும் செவிவழிப்பதிவுகளை, உரையாடல்களை நம்பிச்செல்வதன் ஒழுக்கு. அதை ரசிக்கலாம். அதற்கு ஓர் இலக்கிய மதிப்பும் உண்டு. ஆனால் அடுத்த வினா ‘இதெல்லாம் எதுக்கு?’ என்பதே. புதுமைப்பித்தன் கேட்டது அது. ஒருநாவலை உருவாக்கும் மொழிநடை என்பது தொடர்ந்து தன்னை உருமாற்றிக்கொண்டு சிந்தனைக்கும் உணர்ச்சிகளுக்கும் சித்தரிப்புகளுக்கும் செல்வது.

எந்த ஒரு படைப்பாளியிடமும் அவன் அளித்தவற்றை முழுக்க வாங்கிக்கொண்டு மேலுமென்ன என்று எதிர்பார்க்க வாசகனுக்கு உரிமை உண்டு. அதற்குப்பெயர்தான் இலக்கியவிமர்சனம் என்பது.

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இயல் விருதுகள்

$
0
0

Sukumaran 1

 

இவ்வருடத்திற்கான இயல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் சுகுமாரனுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. [சுகுமாரனுக்கு இயல் விருது – 2016 ]தமிழிலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் குரல். கவிதையில் ஒரு புதியபோக்கின் ஊற்றுக்கண். சுகுமாரனுக்கு அளிக்கப்படும் இவ்விருது தமிழ்ச்சூழல் பெருமைப்படவேண்டிய ஒரு நிகழ்வு

sanyanthan

புனைவிலக்கியத்திற்கான தமிழ்த்தோட்ட விருது சயந்தனின் ஆதிரை நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய இளைய படைப்பாளிகளில் அழுத்தமான இலக்கியப்படைப்புடன் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் சயந்தன். ஆதிரை குறித்து முன்பு சில குறிப்புகள் எழுதியிருக்கிறேன். விரிவாக எழுதவேண்டும்

கவிதைக்கான விருதை சங்கர ராமசுப்ரமணியன் ஆயிரம் சந்தோஷ இலைகள் தொகுதிக்காகப் பெறுகிறார். எளியநிகழ்வுகளை மெல்ல திருப்பி ஒளிக்குக் காட்டுவதனூடாக படிமமாக ஆக்கும் கலை நிகழும் கவிதைகள் அவருடையவை.

மொழியாக்கத்துக்கான விருதை சிங்கள மொழியிலிருந்து ’இறுதி மணித்தியாலம்’ என்னும் மொழியாக்கத்தைச் செய்தமைக்காக ரிஷான் ஷெரீஃப் பெறுகிறார்.

என் பிரியத்துக்குரிய மிஷ்கின் கலைத்துறை பங்களிப்புக்காக விருதுபெறுகிறார். அவருடைய தனித்துவம் கொண்ட திரைமொழி இவ்விருதை பெற்றுத்தந்துள்ளது

 

அனைத்துவகையிலும் நிறைவடையச் செய்யும் விருதுகள் இவை. விருதுபெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

ஜெயமோகன்

சுகுமாரன் பற்றி
பிரிவின் விஷம்
விஷம் தடவிய வாள்
பூனையும் புலியும்
கண்ணீருப்பின் கவிஞன்
சுகுமாரனுக்கு இயல் விருது – 2016

ஷங்கர ராமசுப்ரமணியன்

கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

ரிஷான் ஷெரீஃப்

அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29

$
0
0

28. அன்னநிறைவு

flowerஅடுமனை வாயிலில் பீமன் சென்று நின்றதுமே அடையாளம் கண்டுகொண்டனர். மடைப்பள்ளியர் இருவர் அவனை நோக்க ஒருவன் “உணவா?” என்றான். பீமன் “ஆம்” என்றான். “வருக!” என்று அவன் அழைத்துச்சென்று அடுமனை முற்றத்தில் அமரச்செய்தான். அரிசியும் காயும் அரிந்திட விரிக்கப்பட்ட பழைய ஈச்சம்பாயை எடுத்துவந்து அவன் முன் விரித்ததும் மேலும் இருவர் புன்னகையுடன் அவனை நோக்கினர். பீமன் கால்மடித்து அமர்ந்து அவர்கள் கலங்களில் அன்னமும் அப்பமும் சுட்ட கிழங்குகளும் கொண்டுவருவதை நோக்கினான். அவர்கள் உணவை கொண்டுவந்து அவன் முன் குவித்தனர்.

“குவிக்காதீர்… உண்ண உண்ண அளிப்போம்” என்றார் முதிய மடைப்பள்ளியரான பூர்ணர். “குவித்திட்ட உணவை ஒருவர் உண்ணக் காணும் இன்பத்தை ஏன் இழக்கவேண்டும்? அருள்கொண்ட வயிறு. அனலோன் குடியிருக்க தேர்ந்த ஆலயம்” என்றார் பிறிதொரு மடைப்பள்ளியரான சாலர். மெல்ல அவனைச் சூழ்ந்து அங்கிருந்த அனைவரும் வந்து அமர்ந்துகொண்டனர். “உங்கள் கைகள் காட்டுகின்றன நீங்கள் உணவுண்ணும் ஆற்றல்கொண்டவர் என்பதை” என்றார் சாலர். “அத்துடன் உங்கள் இறுகிய வயிறு காட்டுகிறது நாவில் சுவைகொண்டவர் என்று. உந்தி திரண்ட வயிற்றுக்குள் அனலால் உண்ணப்படாத கொழுப்பு எஞ்சுகிறதென்று பொருள். அது நாச்சுவையை மழுங்கச்செய்யும்.”

ஒவ்வொருவராக சென்று அங்கிருந்த மிகச் சிறந்த உணவுகளை கொண்டுவந்தனர். உச்சியுணவுப்பொழுது முடிந்துவிட்டிருந்தமையால் அப்பால் பந்திக்கூடத்தில் எவருமிருக்கவில்லை. எஞ்சிய உணவு சீறிக்கொண்டிருந்த அனலடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. “பருப்புக்குழம்பு… அதோ அந்தப் பெரிய அண்டாவில்” என்றார் பூர்ணர். “வறுத்தஊன் சற்று ஆறிவிட்டிருக்கிறது. அதை மீண்டும் ஒருமுறை அனலில் காட்டி கொண்டுவாருங்கள்” என்றார் சங்கதர். “சில உணவுகள் தீர்ந்துவிட்டன. நீர் சற்று முன் வந்திருக்கலாம்” என்றார் வச்சர்.

அனைவர் முகங்களும் அவன் உண்ண உண்ண மலர்ந்தபடியே சென்றன. ஒவ்வொருவரும் அவர்கள் சமைத்த மிகச் சிறந்த உணவை அவனுக்கென கொண்டுவந்தனர். “வீரரே, இது என் கைத்திறன். உப்புநோக்கி பாரும்” என்றார் சம்பவர். “இந்தக் கறியை முற்றிலும் புளியே இல்லாமல் சமைத்தேன். தயிர் மட்டுமே” என்றார் உரகர். பீமன் ஒவ்வொரு சுவைக்கும் தலையசைத்தான். அவன் உடலே நாவென்றாகி சுவையில் திளைத்தது. காரக்கறியை பரிமாறிய சுமரிடம் “காந்தார மிளகு!” என்றான். அவர் “ஆம், அதன் மணமெழலாகாதென்று ஒன்று செய்தேன்” என்றார். “மோரில் காய்ச்சி கறியில் விட்டிருக்கிறீர்” என்றான் பீமன்.

அவர் முகம் மலர்ந்து “நீர் அடுமனையாளரா?” என்றார். “அவர் உண்பதைக் கண்டாலே தெரியவில்லையா?” என்றார் சம்பவர். அவன் உண்டபடியே இருந்தான். “இதற்கு நிகராக உண்பவர் இங்குள்ள இளவரசர் கீசகர் மட்டுமே” என்றார் சுமர். “ஆனால் அவருக்கு இத்தனை சுவை தெரியாது. உணவை வென்று கடந்துசெல்ல முயல்பவர் போலிருப்பார்.” அவர்கள் விழி நீர்மைகொள்ள உளம் நெகிழ்ந்திருந்தனர். “தெய்வம் வந்து பலிகொள்வதைப்போல உண்கிறீர், வீரரே. நீர் எவரென்றாலும் சரி, அன்னத்தை ஆளும் தெய்வங்கள் உம்முடன் இருக்கும்” என்றார் சிருங்கர். “அன்னமிட்டு காய்த்த கைகளால் உம்மைத் தழுவி வாழ்த்தவேண்டும் போலிருக்கிறது. உண்பவரைப்போல் சமைப்பவருக்கு இனியவர் வேறில்லை.”

பீமன் “சற்று சோறு” என்று கேட்டான். அங்கிருந்த அனைவரும் வெடித்து நகைத்தனர். இருவர் “இதோ” என்று ஓடினர். சோறு அவன் முன் சரிக்கப்பட்டதும் பீமன் “அந்த ஊன்கறி… அது நல்ல ஆடு” என்றான். “இங்கு ஆடுகள் சுவையுடன் உள்ளன. இந்த ஆட்டின் தோல் மாந்தளிரென ஒளிவிட்டுக்கொண்டிருந்திருக்கும். இரு முன்னங்கால்களுக்கு நடுவே முழைதொங்கியிருக்கும். தொடை பெருத்து நடையில் ததும்பும். குழம்பில் மிதக்கும் கொழுப்பு அதை காட்டுகிறது.” அவர்கள் வியப்புடன் “ஆம், மெய்” என்றார்கள். “ஆடு மிகுதியாக உண்ணும் தழையின் மணத்தையே ஊனில் அறிந்துவிடமுடியும்” என்றான் பீமன். “இது இளங்கீரைகளை உண்ட ஆடு.”

கர்த்தகர் “இன்னும் சற்று கொண்டுவாரும்” என்றார். “நம் உணவுக்காக எடுத்துவைத்தேன்” என்றான் இளைய அடுமனையாளனாகிய சித்ரன். “மூடா, நாம் உண்பதா இப்போது பெரிது? உண்பதற்கென்று தெய்வங்களால் அருளப்பட்டவர் இவர்… கொண்டுவருக!” பீமன் அன்னத்தை குழம்புடன் உருட்டியபடி “இத்தனை சுவையான ஆடுகள் கூர்ஜரத்திலும் சிபிநாட்டிலும் உண்ணக்கிடைத்துள்ளன” என்றான். “கங்கைக்கரைகளில் மழை மிகுதி. ஆடுகளின் தோலில் முடியுதிர்கிறது. அந்த மணம் ஊனிலும் ஊடுருவுகிறது.”

சூரர் “சௌவீரத்தில் ஆட்டு ஊன் எப்படி?” என்றார். பீமன் “அங்குள்ளவை செம்மறியாடுகள். அவற்றின் ஊன் வேறுவகை மணம் கொண்டது. நார்களென நீள்வாட்டில் பிரியும். அவற்றை எண்ணை கலக்காது சுடவேண்டும்” என்றான். “ஆடு மிகுதியாக நடந்திருக்கக்கூடாது. ஆனால் அனைத்துவகை தழைகளையும் நாச்சுவையால் தேடி உண்டிருக்கவேண்டும். சுவையாக உண்ட ஆடு சுவையானது என்பது நெறி.” கூர்மர் உரக்க நகைத்து “பாரதவர்ஷத்தையே நக்கி நோக்கியிருக்கிறீர், வீரரே” என்றார்.

“இந்தக் குழம்பை நான் சமைத்தேன்” என்று மேலும் இரு அப்பங்களை வைத்து கரிய குழம்பை ஊற்றினார் சூரர். “ஆம், அவரைப்பருப்பை கருக்க வறுத்து அரைத்து சற்று பாலும் ஊற்றி ஊன்துண்டுகளுடன் சேர்த்து சமைத்திருக்கிறீர்” என்றான் பீமன். சூரர் நகைத்து “இதை எங்கு உண்டீர்கள் முன்பு?” என்றார். பீமன் “இப்போதுதான் உண்கிறேன். மணத்தால் அறிந்தேன்” என்றான். சூரர் “குழம்புமணத்திலிருந்து அதில் சமைத்துக் கலக்கப்பட்ட அனைத்தையும் அறிவீரோ?” என்றார். பீமன் “ஆம், இதுவரை பிறழ்ந்ததில்லை” என்றான்.

கூர்மர் “இதை உண்டு சொல்லும் பார்ப்போம்” என்று ஒரு வெண்ணிறக்குழம்பை கொண்டுவந்தார். “பச்சைமொச்சையை அரைத்த பாலில் சமைத்த முயலின் ஊன்” என்றான் பீமன் தொலைவிலேயே. “வீரரே, நீர் மூக்கால் முதலில் உண்கிறீர்” என்றார் சூரர். சங்கர் “அதற்கு முன் விழிகளால். அதற்கும் முன் ஆன்மாவால்” என்றார். அவர்கள் சிரித்து கூவினர். “உணவை உண்ணவேண்டியது உணவின் மறுவடிவமான உடல்” என்றார் பூர்ணர். “அன்னம் அன்னத்தை அறிவதே சுவை என்பது என்பார்கள்.”

பீமன் கையை நக்கியபடி அமர்ந்திருக்க பூர்ணர் “மேலும் அன்னமா?” என்றார். பீமன் நாணத்துடன் தலையசைத்தான். திகைப்புடன் “மேலுமா? அய்யோ!” என்றார்கள் அடுமடையர்கள். பூர்ணர் “முகக்குறி நோக்கத் தெரியவேண்டும் அடுதொழிலருக்கு… கொண்டுவருக!” என்றார். அன்னம் கொண்டுவந்து குவிக்கப்பட்டது. “மீண்டும் ஊன்கறியா?” என்றார் பூர்ணர். பீமன் தலையசைத்தான். “பச்சைப்பயிறுடன் சேர்த்து சமைத்த கறி இருக்கிறதா? அதை இவர் இதுவரை உண்ணவில்லை” என்றார் பூர்ணர். “அது உச்சிப்பொழுதிலேயே தீர்ந்துவிட்டது” என்றான் ஒருவன். “பொறுத்தருள்க, வீரரே, நாளை நானே அதை சமைத்து அளிக்கிறேன்” என்றார் பூர்ணர்.

மெல்ல அவர்களின் பேச்சு அடங்கியது. அவன் உண்ணும் ஒலிமட்டும் காட்டில் புலி நடக்கும் ஓசையென உட்செவி மட்டும் அறியும்படி ஒலித்தது. அவன் உண்பதை அவர்கள் விழிநிலைக்க நோக்கி நின்றனர். கை உணவை அள்ளுவதும் உருட்டுவதும் வாய்க்கு கொண்டுசெல்வதும் ஓர் அழகிய நடனம்போலிருந்தன. இதழ்பிரியாது மென்றான். நாவொலி கேட்காமல் விழுங்கினான். ஒவ்வொன்றுடனும் உகந்ததை மட்டுமே சேர்த்துக்கொண்டான். ஊனையும் கிழங்குகளையும் கலக்கவில்லை. காய்கறிகளுடன் ஊனை சேர்க்கவில்லை. வேள்விச்செயலின் ஒத்திசைவு கூடியிருந்தது அவனிடத்தில்.

விரித்த பாயில் பருக்கையும் எஞ்சாமல் உண்டபின் அவன் மெல்ல ஏப்பம் விட்டான். அவ்வோசை அவர்களனைவரையும் உடல்நெகிழ்ந்து அசைவுகொள்ளச் செய்தது. பூர்ணர் கைகூப்பி “எழுந்தருளிய தேவனே, நிறைவுகொண்டு நீர் அளித்த வாழ்த்தை பெற்றோம். எங்கள் குடியும் மைந்தரும் பொலிக!” என்றார். பீமன் கையூன்றாமல் எழுந்து சென்று அருகே இருந்த தொட்டி நீரில் கைகழுவினான். வாய்கழுவி ஓசையில்லாமல் துப்பிவிட்டு மரவுரியால் முகம் துடைத்தபடி வந்தான். பூர்ணர் “யானைபோல் உண்ணவேண்டும் என்பார் என் ஆசிரியர். அவர் சொன்னதை இன்றுதான் கண்டேன்” என்றார்.

பீமன் “நல்லுணவு மூத்தவர்களே, வணங்குகிறேன்” என்றான். “சுக்குநீர் அருந்துக!” என்று கூர்மர் பெரிய சுரைக்குடுவையை கொண்டுவந்து நீட்டினார். அதை வாங்கி உதடுதொடாமல் ஒருதுளியும் சிந்தாமல் அருந்தி முடித்து ஒழிந்த குடுவையை திருப்பி அளித்தான். “அமர்க!” என்ற பூர்ணர் “வெற்றிலையும் நறும்பாக்கும்” என்றார். சம்பவர் கொண்டுவந்த வெற்றிலைச்சுருளை வாங்கி அவன் மென்றான். “கிராம்பு வேண்டுமா?” என்றார் சுமர். “ஆம்” என்றான் அவன். அவர் எடுத்துத் தந்த கிராம்பை கையில் வைத்திருந்தான். “வெற்றிலை மணமறிந்தவர் அது உமிழ்நீருடன் கலந்து மூப்படைந்த பின்னரே கிராம்பு சேர்ப்பார்கள்” என்றார் சம்பவர்.

பூர்ணர் “வீரரே, உமது ஊர் எது? பதியும் குடியும் பெயரும் எவை?” என்றார். “என் பெயர் வலவன். பிறப்பால் ஷத்ரியனாயினும் சூதன் என்று வாழ்வை மேற்கொண்டேன். அடுதொழிலன். மல்லன். சிராவக குடியில் பால்ஹிக நாட்டில் பிறந்தேன்” என்றான் பீமன். “ஆம், உமது மஞ்சள் நிறத்தைப் பார்த்தபோதே நீர் பால்ஹிகர் எனத் தோன்றியது” என்றார் சம்பவர். “நீர் அடுதொழில் மேற்கொண்டது ஏன்?” என்றார் பூர்ணர். “அதை நான் நாளை இங்கு சமைக்கையில் அறிவீர்கள். நாரதர் ஏன் இசை தேர்ந்தாரோ நந்தி ஏன் முழவு தேர்ந்தாரோ அதே காரணத்தால் நான் அடுதொழில் கொண்டேன்.”

பூர்ணர் நகைத்து “நல்ல மறுமொழி… சொல்லெண்ணி உரைக்கப்பட்டது” என்றார். “எங்கள் மாமன்னர் நளன் அடுதொழிலராகவே இறுதிவரை இருந்தார். அறிவீரா?” என்றார் பூர்ணர். “ஆம், அவர் யாத்த நளபாகம், நளரசனா, நளபதார்த்தமாலிகா என்னும் மூன்று அடுகலைநூல்களையும் உளப்பதிவாக கற்றுள்ளேன். ஒவ்வொன்றையும் ஏழுமுறை செய்தும் நோக்கியிருக்கிறேன்” என்றான் பீமன்.

“அவருடைய அடுகலையைப்பற்றி நீர் என்ன எண்ணுகிறீர்?” என்று பூர்ணர் கேட்டார். “சமையலைப்பற்றி அவர் சொல்லும் அத்தனை செய்திகளையும் மிகச் சிறிய அளவுகளில் எடுத்துக்கொண்டு விளக்குகிறார். நளபாகம் என்பதே குறைவாக சமைப்பதன் நுட்பம்தான். அச்சமையலை பல மடங்காக்கலாம். ஆயினும் அது குறைவான அளவுகளால் கற்பனை செய்யப்பட்டதே” என்றான் பீமன்.

“மூத்தவரே, கைப்பிடி அளவு பருப்பு வேகும்போது எழும் மணமல்ல ஒரு மூட்டை பருப்பு வேகும்போது எழுவது. சிறிதளவு பருப்பு வேகும் மணத்தை உணர்ந்து மகிழ்பவர் பெருமளவு பருப்பு வேகும் மணம் கொண்டு வாயுமிழக்கூடும்” என்று அவன் தொடர்ந்தான். “மணமென்பது சுவையே. சமையலில் பொருட்களின் இயல்பு, கலவை, வேகும்முறை, வேகும் நேரம், கிளறும்முறை, கிளறும் நேரம், ஆறும்முறை, ஆறும் நேரம் என எட்டு முதன்மைநெறிகளும் கலத்தின் இயல்பு, நீரின் இயல்பு, அடுப்பின் இயல்பு என மூன்று இரண்டாம்நெறிகளும் கடைக்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நிகரான முதன்மைநெறி பொருளின் அளவு. அது சுவையிலும் மணத்திலும் வண்ணத்திலும் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.”

“விந்தை… இப்படி ஒருவர் சொல்லி இதுவரை கேட்டதே இல்லை” என்றார் பூர்ணர். “ஆனால் பருப்பைப் பற்றி நீர் சொன்னதை நான் ஏற்கிறேன்.” பீமன் “நளபாகத்தில் சொல்லப்பட்ட அதே உணவுகள் சிலவற்றை பீமபாகத்தில் நான் சமைத்துக்காட்டுகிறேன். உண்டபின் கூறுக, சுவையிலென்ன வேறுபாடு என்று” என்றான். “ஆம், நாளை சமையுங்கள் வீரரே. நாளை நாங்களும் சிலவற்றை கற்றுக்கொள்கிறோம்” என்றார் சுமர். சூழ்ந்து நின்றிருந்த அடுமனையாளர்கள் “ஆம்! நாளை!” என்று உவகைக்குரலெழுப்பினர்.

flowerமறுநாள் முதற்புலரியிலேயே பீமன் அடுமனைக்கு வந்தான். அப்போது சங்கதர் அடுமனையைத் திறந்து கலங்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்தார். குளித்து நீர் சொட்டும் குழலுடன் வந்த பீமனை புன்னையெண்ணை ஒளியில் பார்த்த சங்கதர் முதலில் ஏதோ தெய்வ உருவமென்றே எண்ணி மெய்ப்பு கொண்டார். பின்னர் “ஒருகணம் அஞ்சிவிட்டேன். இந்த முன்காலையில் இத்தனை பேருருவுடன் வந்து நிற்கிறீர்கள்…” என்றார். “நெடுநாட்களுக்குப்பின் இன்று பெருஞ்சமையல் செய்யவிருக்கிறேன்” என்றான் பீமன். அவர் புன்னகை செய்து “அதற்கு இத்தனை முற்பொழுதில் வரவேண்டியதில்லை. நம்மவர் எழுந்து வர இன்னும் பிந்தும்” என்றார்.

“நானே அனைத்தையும் செய்யவேண்டும் என்பதே என் விழைவு” என்றபடி பீமன் உள்ளே வந்தான். இடையில் கைவைத்து சுற்றிலும் பலவகையில் கவிழ்க்கப்பட்டிருந்த கலங்களை பார்த்தான். வாய்திறந்த அண்டாக்களும் சருவங்களும் நிலவாய்களும் அவன் பேசும்போது ரீங்கரித்தன. “சில தருணங்களில் இவை உணவுக்கு வாய்திறந்த குழவிகளென தோன்றும். சில சமயங்களில் அன்னைக் கருவறைகள் என” என்றான். “ஆனால் நன்கு கழுவிய கலங்களை நோக்குவதை நான் எப்போதும் விரும்புவேன். நானே கலங்களை கழுவி வைப்பதையும்.”

சங்கதர் புன்னகையுடன் “நான் பிற பணியாளர்களை அவ்வப்போது நோக்கி எண்ணுவதுண்டு, அவர்களுக்கு எப்படி அத்தொழில் சலிக்காமலிருக்கிறது என்று. அடுமனைத்தொழில்போல ஒவ்வொருநாளும் தெய்வமெழும் தொழிலை அவர்களுக்கு அறிய அருளில்லையே என வருந்துவேன்” என்றார். “ஆம், சிற்பத்தொழிலும் கலம்வனைதலும் கலைத்திறன்கள். புரவிபேணுதலும் ஆபுரத்தலும் உயிர்த்தன்மை கொண்டவை. அவை இனியவைதான். ஆனால் அடுமனைத்தொழிலில் அவ்விரண்டும் நிகரென கலந்துள்ளன. இது இணையற்றது” என்றான் பீமன்.

கோட்டையடுப்பு நிரையின் தெற்கு ஓரத்திலிருந்த சிறிய அடுப்பருகே சென்று சுள்ளிவிறகுகளை எடுத்து ஒன்றன்மேல் ஒன்றென வைத்தான். செம்புக்கலத்தில் நீர் அள்ளிவந்து கிழக்குநோக்கி நின்று “ஓம்…” என்றபடி அதை அடுப்பின்மேல் வைத்தான். அனற்கற்களை எடுத்து கைகளில் வைத்தபடி கண்மூடி ஊழ்கத்திலமைந்து அதை உரசினான். அனலெழுந்து மென்பஞ்சில் பற்றிக்கொள்ள அதை விறகுக்கு அடியில் வைத்தான். அடுமனையின் கதவு எவரோ உள்ளே நுழைவதுபோல மெல்ல முனக சங்கதர் திரும்பி நோக்கினார். இளங்காற்று ஒன்று வந்து சுழன்று சென்றது. அனல் மேலெழுந்து சிவந்த இதழ்களாக விரிந்தது.

ரிக்வேதத்தின் அன்னசூக்தத்தை தாழ்ந்த குரலில் பீமன் பாடினான். முழவை சுட்டுவிரலால் மீட்டுவதுபோன்ற அனுஷ்டுப்பு சந்தம். சொல் கேட்டு அன்னத்தின் தேவதை அங்கு வந்து நிற்பதாக சங்கதர் உணர்ந்தார். அறியா நெடுங்காலத்தில் பருப்பொருள் உடலும் உயிரும் எண்ணமும் ஞானமும் ஆக மாறும் பெருவிந்தையை எண்ணிய மூதாதையரின் நெஞ்சிலெழுந்த வரிகள். தொட்டு எடுக்கத்தக்க, உண்டு சுவைக்கத்தக்க, எரித்து எழத்தக்க பிரம்மம். “அளிக்காதவன் அடைவதெல்லாம் வீணே” என மையவரியை ஏழுமுறை சொல்லி கைகூப்பியபின் பீமன் எழுந்தான்.

மடைப்பள்ளி ஊழியர்கள் ஒவ்வொருவராக நீராடி ஈர ஆடையுடன் வரத்தொடங்கினர். சிறிய குழுக்களாக உரக்கப் பேசிச் சிரித்தபடி வந்தவர்கள் மடைப்பள்ளியில் சமையல்பணிகள் தொடங்கிவிட்டிருப்பதை கண்டார்கள். பீமன் ஏழு அடுப்புகளை பற்றவைத்து பெருங்கலங்களை ஏற்றியிருந்தான். “யார் ஏற்றியது பெரிய உருளியை?” என்றார் சூரர். “அவரே ஏற்றினார்… தோள்வலிமை மட்டுமல்ல உடனிணையும் சித்தக்கூரும் கொண்டவர்” என்றார் சங்கதர். “பெருங்கலங்களை எடுத்து உருட்டிச்சென்று உரிய இடத்தில் நிமிரச்செய்யலாம். மிக எளிது” என்றான் பீமன். “யானைகளுக்கு எளியது ஆடுகளுக்கு அல்ல” என்று சங்கதர் நகைத்தார்.

“இதென்ன, இத்தனை பருப்பு?” என்றார் கர்த்தகர். “இன்று ஊருக்கே உணவிடுவோம். அரண்மனை அடுமனையில் உணவுக்கா வறுதி?” என்றான் பீமன். “ஆம், இப்போதே ஊட்டுமணியை ஒலிக்கச் சொல்லுங்கள். இன்று எவரும் நகரில் அடுப்பு மூட்டவேண்டியதில்லை” என்றார் சங்கதர். “எதற்கென்று சொல்வது?” என்றார் கர்த்தகர். சங்கதர் சிரித்து “நேற்று இளவரசர் திருவிடத்தின் மாமல்லன் ஒருவனை வென்றார் அல்லவா? அதன்பொருட்டு…” என்றார். “ஆம், நாம் நிறைவடையச் செய்யவேண்டியது அவரை மட்டுமே. அவருக்காக என்றால் அரண்மனையையே பொளித்து விற்றாலும் ஒன்றும் சொல்லமாட்டார்” என்றார் சூரர். அடுமனையாளர்கள் கூச்சலிட்டு நகைத்துக்கொண்டு வேலைகளில் பரவினர்.

சற்றுநேரத்தில் அங்கே நூற்றுக்கணக்கான கைகள் வேலை செய்யத்தொடங்கின. ஓரக்கண்ணால் திரும்பி அக்கைகளை மட்டும் பார்க்கையில் புறாக்கூட்டங்கள்போல அவை குறுகியும் உறுமியும் சிறகுசரித்தும் தத்திநடந்தும் எழுந்தமர்ந்தும் சிறகடித்துப் பறந்து சுழன்றமைந்தும் அங்கே நிறைந்திருப்பதாகத் தோன்றியது. கிழங்குகளை தோல்சீவினர். காய்களை நறுக்கினர். தேங்காய்களை துருவினர். கீரைகளை ஆய்ந்தனர். பருப்பிலும் அரிசியிலும் கல்களைந்தனர். அப்பால் சிறுசகடமுள்ள வெண்கலத் தள்ளுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கப்பட்ட உரிக்கப்பட்ட ஊனை மரக்கட்டைகளில் வைத்து வெட்டினர். வேலை தொடக்கத்தில் பேச்சுக்கள் இருந்தன. பின்பு அவை மறைந்து பொருட்கள் தம்மைத்தாமே உணவென்று உருமாற்றிக்கொள்வதுபோன்ற ஒலி மட்டுமே அங்கு நிறைந்திருந்தது.

பூர்ணர் வந்து “அன்னமணி அடித்துவிட்டோம். பன்னிரு நகர்மையங்களில் அதை ஏற்று அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நகரொலியிலேயே அதை அறியலாம்” என்றார். சங்கதர் “ஆம், முரசுக்கார்வைபோல ஒலிக்கிறது நகர்” என்றார். “உணவுக்கு மட்டுமே இந்த ஓசை எழுகிறது. விழவுக்கும் களியாட்டுக்கும் எழும் ஓசை அலையலையென்று எழும்” என்றார் பூர்ணர். “ஏன்?” ஓர் இளைஞன் கேட்டான். “அது உண்மையான உவகை அல்ல. ஆகவே காற்றில் பறக்கும் பட்டம்போல அது இறங்குகிறது. மீண்டும் உளவிசையால் அதை மேலேற்றுகிறார்கள். மீண்டும் இறங்குகிறது. அன்னம் அப்படியல்ல. அது அனைவரையும் நாவென்றே ஆக்கிவிடுகிறது.”

பீமன் முற்றிலும் சொல்லிழந்து சமையல்பணியில் ஈடுபட்டிருந்தான். “தவமுனிவரின் முகம் கொண்டிருக்கிறார்” என்றார் சங்கதர். “யார் இவர்? அன்னத்திற்குரிய தேவர்களில் எவரேனும் மாற்றுரு கொண்டு வந்திருக்கிறார்களா?” பூர்ணர் புன்னகையுடன் “ஏன் கேட்கிறீர்?” என்றார். “பூர்ணரே, அவர் பொருட்களை எடுப்பதை பார்க்கிறேன். விழியாலேயே அளந்துவிடுகிறார். எதையும் பிறிதொருமுறை நோக்குவதில்லை. சரிபார்ப்பதே இல்லை. ஒவ்வொன்றையும் முன்னரே அறிந்திருக்கிறார்.” பூர்ணர் புன்னகையுடன் “இங்கு எங்கோ நுண்வடிவில் நளமன்னர் வந்து நின்று நோக்கிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்” என்றார்.

வெளியே ஓசைகளெழுந்தன. “கீசகர் அணைகிறார்” என்றார் சங்கதர். “இவ்வேளையில் இங்கு ஏன் வருகிறார்?” என்று பூர்ணர் சலிப்புடன் கேட்டார். வாழ்த்தொலிகள் எழுந்து ஒலித்தன. “அடுமனைக்கு வருகையிலும் வாழ்த்தொலி…” என்றார் சிருங்கர் சிரிப்புடன். “அவர் என்ன போர்க்களத்திற்கா செல்கிறார்? அவர் அடைந்த வெற்றிகளில் பெரிதும் இங்குதானே?” என்றான் ஓர் இளைஞன். “மூடா, உன் நாவை கட்டு. அது உன்னை கழுவிலமரச்செய்ய சூழ்ச்சி செய்கிறது” என்றார் பூர்ணர். “அங்கே நீங்கள் மென்குரலில் சொன்னதை நான் கேட்டேன்” என்றான் இளைஞன். “அடுமனையாளனாக வந்தபின் நான் கற்ற முதற்கலை உதடுகளை கூர்ந்து நோக்குவதுதான்.” பூர்ணர் நகைத்தார்.

இரு வீரர்கள் உள்ளே வந்தனர். முதலில் வந்தவன் ஒரு சங்கை ஊத தொடர்ந்து வந்தவன் “விராடபுரியின் பெரும்படைத்தலைவர், அரசமைந்தர் கீசகர்” என்று கூவினான். அடுமனையாளர்கள் எழுந்து கைவணங்கி நின்றனர். ஓங்கிய பேருடலுடன் கீசகன் உள்ளே வந்தான். இறுகிய தசைக்கோளங்களால் ஆன அவன் உடல் கரிய பாறைக்கூட்டம் போலிருந்தது. உடல் பெருத்திருந்தமையால் தலை மிகச்சிறிதாகத் தோன்றியது. தாடை தடித்து முகவாய் சற்றே முன்நீண்டு ஒரு குரங்குத்தன்மை அவனிடமிருந்தது. நெற்றி உந்தி வளைந்து முடிப்பரப்பு மேலேறியிருந்தது. சிறிய கண்கள் முதலைகளுக்குரியவைபோல மெல்லிய வெண்படலம் மூடி துயிலில் இருப்பவை போலிருந்தன.

வெண்பட்டாடை அணிந்து பொன்னூல் இழைத்த கச்சையில் அருமணிகள் மின்னும் கைப்பிடிகொண்ட குத்துவாளை செருகியிருந்தான். பெண்களின் முலைபோல புடைத்த மார்புகளின்மேல் நீர்த்துளிபோல் மணிமாலை நலுங்கியது. தோள்வளைகளும் கங்கணங்களும் கழல்களும் மணிபதித்த கிளிச்சிறைப் பசும்பொன்னாலானவை. கைகளைத் தூக்கி வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டபோது யானையின் துதிக்கை என தசை இறுகி நெகிழ்ந்தது. முதலில் அவன் விழிகள் பீமனைத்தான் நோக்கின. ஆனால் அவனை நோக்காதவன்போல விழிவிலக்கி சங்கதரிடம் “இன்று விழவென்று எவர் ஆணையிட்டார்கள்?” என்றான்.

“எவரும் ஆணையிடவில்லை. நேற்று நானே வந்து தங்கள் கைகளில் மலைப்பாம்பால் வெள்ளாடு என திருவிடத்துப் பெருமல்லன் நொறுங்குவதை கண்டேன். திரும்பிவந்தபோது ஏதேனும் செய்யவேண்டும் என்று தோன்றியது. மூத்தவரிடம் கேட்டேன். அவர் நம்மால் செய்யக்கூடுவது அன்னமளிப்பது மட்டுமே என்றார்” என்றார். பூர்ணர் “ஆம், மேலும் கொள்ளப்பட்ட உணவுப்பொருட்கள் நிறைய குவிந்துள்ளன. வீணாகக்கூடாதென்று தோன்றியது” என்றார். சிருங்கர் “அத்துடன் அன்னம் வழியாகவே மக்களின் உள்ளங்களுக்கு செல்லமுடியும் என்றும் எண்ணினோம். தங்கள் பெயரை அல்லவா இன்று பல்லாயிரம் பேர் பந்தியிலமர்ந்து உண்ணவிருக்கிறார்கள்?” என்றார்.

முகம் மலர்ந்ததை மறைக்க கீசகனால் இயலவில்லை. ஆனால் உடனே சிரிப்பை மறைத்து பீமனை நோக்கி “அடேய் தடியா, வா இங்கே!” என்றான். பீமன் வந்து வணங்கி நிற்க “எந்த ஊர் உனக்கு?” என்றான். அவன் விழிகள் பீமனின் இறுகிய வயிற்றைத்தான் நோக்கின. “நான் பால்ஹிகன். வலவன் என்று என் பெயர். பயணத்தான். வழியில் இங்கு தங்கினேன்” என்றான் பீமன். “அடுதொழில் அறிவாயா?” என்றான் கீசகன். “நன்கறிந்திருக்கிறார்” என்றார் கர்த்தகர். “என்ன அறிந்திருப்பான்? அடேய், இது அடுதொழிலில் மெய்கண்ட நளமாமன்னர் வாழ்ந்த நிலம். அவர் சொல்வாழும் குடி” என்றான் கீசகன். “ஆம், அறிவேன்” என்றான் பீமன்.

கீசகன் பூர்ணரிடம் “நன்று. உணவு சிறக்கவேண்டும். ஒரு குறையும் இருக்கலாகாது. அரசகுடியினருக்கான உணவு முன்பு எப்போதுமில்லாததாக அமையவேண்டும்” என்றபின் திரும்பிச்சென்றான். இயல்பாக நின்றதுபோல் தயங்கி “நீ மற்போரிடுவாயா?” என்றான். பீமன் “ஆம், ஆனால் அதில் தேர்ச்சி என ஏதுமில்லை” என்றான். “அல்ல, உன் தோள்கள் பெரியவை… அவை போர் பயின்றவை” என்றான் கீசகன். “கற்று மறந்தவை” என்றான் பீமன். “நாம் ஒருமுறை தோள்கோக்கவேண்டும்…” என்று கீசகன் சொன்னான். “அது என் நற்பேறு” என்றான் பீமன். கீசகன் தலையை அசைத்தபின் வெளியே சென்றான்.

பூர்ணர் “மற்போரிடுவதிலேயே வாழ்கிறார்” என்றார். “பாரதவர்ஷத்தில் பலராமர், துரியோதனர், பீமன் ஆகிய மூவர் மட்டிலுமே அவரை வெல்லும் தகைமை கொண்டவர்கள் என்கிறார்கள் சூதர்கள். இடும்பனும், பகனும், ஜராசந்தனும் நிகரானவர்கள் என்று பேச்சிருந்தது. அவர்கள் பீமனால் கொல்லப்பட்டார்கள்.” பீமன் “இம்மூவரையும் மிக எளிதாக வெல்பவரும் இருப்பர்” என்றான். “மூவரையும் வெல்பவர் எவர்?” என்றார் சங்கதர். “அங்கநாட்டரசன் கர்ணன்…” என்றான் பீமன். சிலகணங்கள் அமைதி நிலவியது. “அவனை சிபிநாட்டு பால்ஹிகர் வெல்லக்கூடும். அஸ்தினபுரியின் பீஷ்மர் பால்ஹிகரை வென்றவர்” என்றான் பீமன்.

“ஆம்” என்று பெருமூச்சுடன் பூர்ணர் சொன்னார். “பால்ஹிகரை ஒற்றைக்கையால் வென்றார் பலாஹாஸ்வ முனிவர்” என்றான் பீமன். “அது அப்படியே சென்றுகொண்டிருக்கும் போலும்” என்றான் இளைய அடுமனையாளன் ஒருவன். பீமன் “ஆம்” என்று புன்னகைத்தான். “வீரரே, பலாஹாஸ்வரின் மைந்தனே பீமன் என்கிறார்களே, அது உண்மையா?” என்றான். பீமன் “அதை ஒருவரே சொல்லமுடியும். அவர் சொல்லப்போவதில்லை. பிறர் சொல்லெல்லாம் வீணே” என்றான். “ஆம், அதை விடுவோம். பலாஹாஸ்வரை வெல்லக்கூடுபவர் எவர்?” என்றார் சங்கதர்.

பீமன் எண்ணம்சூழ்ந்தபின் “போர் நிகழ்ந்தால் துவாரகையின் இளைய யாதவன்” என்றான். “அவனா? அத்தனை பெரிய தோள்கள் கொண்டவனா?” என்றார் சம்பவர். “அல்ல. ஆனால் அவன் கைகள் அரவைவிட ஏழுமடங்கு விரைவுகொண்டவை” என்றான் பீமன். “சிறுகுழந்தைகள் தங்கள் கைகளுடன் ஒப்புநோக்க மிகப்பெரிய எடைகளை எடுப்பதை கண்டிருக்கிறீர்களா? ஒருவயதுக் குழந்தை செங்கல்லை தூக்குகிறது. என் கையுடன் ஒப்பிட அதற்கு நிகராக வேண்டுமென்றால் நான் ஓர் எருமையை ஒற்றைக்கையால் தூக்கவேண்டும்.” அவர்கள் “ஆம்” என்று வியப்பொலி எழுப்பினர். “ஏனென்றால் குழந்தை விளையாடுகிறது. இளைய யாதவனும் அவ்வாறே, அவன் தீராத விளையாட்டுப்பிள்ளை.”

அவர்கள் பெருமூச்சுவிட்டனர். பூர்ணர் “அவனை ஒரு நோக்கு காண வாய்க்குமோ என எண்ணிக்கொண்டதுண்டு” என்றார். “கண்டால் அவன் காலடியில் விழுந்து விழிநீர் உகுப்பதையே நம்மால் செய்யமுடியும்” என்றார் சங்கதர். “அவன் யார்? மானுடனேதானா? ஆழிசங்குகதையுடன் அலகிலியில் நிறைந்திருப்பவனே வந்து பிறந்தான் என்கிறார்களே?” என்றார் சம்பவர். “வீரரே, அவரையும் வெல்பவன் உண்டா?” என்றான் இளைஞன். “மூடா, மண்ணில் அவரை எவன் வெல்ல முடியும்?” என்றார் சங்கதர். “வென்றதுண்டு” என்றான் பீமன். அவர்கள் திகைப்புடன் திரும்பினர். “யார்?” என்றார் பூர்ணர்.

“அருகநெறியர்களின் மெய்ப்படிவரான நேமிநாதர். முன்வாழ்வில் அவரை அரிஷ்டநேமி என்றழைத்தனர்” என்று பீமன் சொன்னான். “அது எவ்வண்ணம்?” என்றார் பூர்ணர். “நம்ப முடியவில்லை.” பீமன் “அன்று நான் துவாரகையில் இருந்தேன். அப்போரை என் விழிகளால் கண்டேன்” என்றான். “எப்படி? அந்த வெற்றி நிகழ்ந்தது எவ்வாறு?” என்றார் சங்கதர். “விளையாடுபவன் வெற்றிகொள்வது ஏனென்றால் அப்போது அவன் முற்றிலும் அச்செயலில் இருக்கிறான் என்பதனால்தான். அவனை எதிர்கொண்ட அரிஷ்டநேமியோ முற்றிலும் அச்செயலுக்கு அப்பாலிருந்தார். நமது மெய்யுலகு அவருக்கு கனவென்றிருந்தது. கனவில் நம் ஆற்றல் எல்லையற்றது.”

“பெருந்தோளர் என்று அவரை அருகமுறைமையர் வழிபடுகிறார்கள்” என்றார் சம்பவர். “ஆம், அவர்களின் முழுமெய் உணர்ந்த படிவர்கள் அனைவருமே பெருந்தோளர்கள்தான்” என்றான் பீமன். “ஏனென்றால் உடல்முழுமையே உடலுறுவதன் முழுமை.” அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. சொல்லாடியபடி அவர்கள் விறகுதூண்டி எரிபேணியும் கொதிக்கும் குழம்புகளை கிளறியும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். “ஆற்றலின் முழுமையைச் சென்றடைந்தார் அருகமெய்யர். அதையே முடிவிலாப் பெருங்கருணை என்கிறார்கள் அவர்கள்” என்றான் பீமன்.

“ஆம், அடுநெறியில் ஒரு சொல் உண்டு. ஆற்றலாகும் உணவு நிறைவடைகிறது. அறிவென்றாகும் உணவு மேன்மையடைகிறது. கருணையென்றாகும் உணவே முழுமைகொள்கிறது” என்றார் பூர்ணர். மூடிதிறந்து முதல்பருப்புக்குழம்பு ஆவி உமிழ்ந்தது. வெந்த கறியின் நறுமணம் எழத்தொடங்கியது. கைகூப்பி “தெய்வங்களே, இங்கு எழுக!” என்றார் பூர்ணர்.

தொடர்புடைய பதிவுகள்


அம்மையப்பம், பிழை -கடிதங்கள்

$
0
0

siva

வணக்கம்,

நான் அவ்வப்போது உங்கள் சிறுகதைகளை படிப்பதுண்டு. அப்படி படித்த ஒரு கதை – அம்மையப்பம். அதில் இட்டிலியை அம்மா எடுத்து வைப்பதாக கதை ஆரம்பித்தது. அப்போது அவள் மீன் குழம்பு ஊற்றும்பொது, ‘குழிலே குழிலே’ என்று எழுதியிருந்தீர்கள்.

ஜென் கதைகள் ஒன்றில்…ஜென் ஞானி ஒருவர் மாணவர்களிடையே பேச ஆரம்பிக்கலாம் என்று துவங்கும்போது, ஒரு குயில் கூவும்… அப்போது, அவர் இன்றைக்கு உங்களுக்கான பாடம் முடிந்தது என்று கூறிவிட்டு கிளம்புவார்….

அதுபோல இருந்தது அந்த ‘குழிலே … குழிலே…’. என்னமோ தெரியவில்லை. மனம் நிறைத்திருந்தது. நானும் அதற்குமேல் படிக்கவில்லை.

நன்றி,

ஸ்ரீதர்

****

அம்மையப்பம் [புதிய சிறுகதை]

 

அன்புள்ள ஜெமோ,

நான் முன்பு வாசித்த கதை பிழை. அப்போது strange என்று மட்டும் நினைத்துக்கொண்டேன். பின்பு என் வேலையில் அதே போன்ற ஒரு சந்தர்ப்பம் வந்தபோது ஆச்சரியத்துடன் அந்தக்கதையை நினைவுகூர்ந்தேன். மிகமிக அபூர்வமான நுட்பமான ஒரு விஷயம். இதையெல்லாம் பொதுவாசகர்கள் தவறவிட்டுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். இலக்கியவாசகர்களும் அவர்கள் தேடும் சில ரெகுலர் விஷயங்கள் இல்லை என்று கடந்துசெல்லக்கூடும். மிக அபூர்வமான ஒரு எழுத்து இந்தக்கதை.

ஒரு பிழையில் இருப்பது முடிவின்மையின் கிரியேட்டிவிட்டி என்று நானே சொல்லிக்கொண்டேன். முக்கியமான சிறுகதை அது. பல கோணங்களில் இந்த பிரபஞ்சத்தின் செயல்முறை பற்றியே யோசிக்கவைத்தது.

உண்மையான செய்திகளைக்கோர்த்து செய்திக்கட்டுரை வடிவிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கொலாஜ் தன்மைதான் அதன் நுட்பம் என்று இன்று உணர்கிறேன். ஏனென்றால் இல்லை என்றால் அது வெறும் கற்பனை என்று ஆகிவிடும். அது உண்மையில் நிகழ்வதை நாம் கவனிக்காமல் ஆகிவிடுவோம். உண்மையில் பிழையின் கிரியேட்டிவிட்டி நம்மைச்சுற்றி நடந்துகொண்டே இருக்கிறது.

ஆனந்தன்

பிழை [சிறுகதை] 1

பிழை [சிறுகதை] -2

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒரு பதிவு

$
0
0

14523112_1115341355218551_1996447982702617932_n

அன்புள்ள ஜெ,

உங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

http://itzmeakhil.blogspot.in/2017/06/blog-post.html?m=1

அன்புடன்,
அகில் குமார்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வம்பும் விமர்சனமும்

$
0
0

 

C360_2016-05-06-12-37-25-417இனிய ஜெயம்,

ஒப்பீடுகளின் அழகியல் பதிவில்,  நீங்கள் என்னை எரிச்சல் பட்டு கடிந்து கொண்டதற்காக [அப்படி எண்ணிக்கொண்டு] , ஒய் , வாட் ஹேப்பண் , என்றெல்லாம் கேட்டு உள்வட்ட நண்பர்கள் அனுப்பிய  குறுஞ்செய்தி தாங்கி காலையில் நிரம்பி வழிந்தது எனது மொபைல்.  நண்பர்களுக்கு என் அன்பு.

 

 

கிராமங்களில் இருந்து கிளம்பி வாசிப்பிற்குள் வந்த பல நண்பர்கள் எனக்குண்டு. வாசிப்பு செத்த கடலூர் எல்லையில் வாசிக்கும் மனநிலை கொண்ட எவரையும் எனது உரையாடலில் இருந்து விலகுவதில்லை .

 

 

இங்கே வளவதுரையன் அவர்கள் நெடுங்காலமாக இலக்கியம் எனும் உரையாடலை பல சாதக பாதகங்களுடன் ஆர்வம் குன்றாமல் முன்னெடுத்து வருகிறார். [இம்முறை புதுவை வெண்முரசு கூடுகைக்கு மற்றும் கடலூர் நற்றிணை கூடுகைக்கு அவரது முன்னெடுப்பே  துவக்கம்]  எனது நடுவீரப்பட்டு நண்பர்கள் கடலூரில் மாதம் நான்காம் ஞாயிரு நடத்தும் நற்றிணை இலக்கிய கூடல் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

 

 

ஜி கனிமொழி, அவர்களும் யாழி கிரிதரன் அவர்களும் ஆம்பல் இலக்கியக் கூடல் எனும் நிகழ்வை கடலூரில் துவங்கி இருக்கிறார்கள்.  மனுஷ்ய புத்ரன், ஜி முருகன், கௌதம சன்னா, பிரபஞ்சன் என தொடர்ந்து வாசகர்கள் எழுத்தாளர்களுடனான உரையாடலை ஆம்பல் முன்னெடுத்து வருகிறது.

 

 

இந்த உரையாடல் துவங்கும் சூழலிலேயே, இங்கே உருவாகி வரும் ஆகப்பெரிய இடர், [மேம்போக்காக வாசித்துவிட்டு] இளம் நண்பர்கள்  நிகழ்த்த விரும்பும் முகநூல் அரட்டையை ஒத்த விவாதம்.  கடந்த முறை விவாதம் ஒன்றினில் ஒரு நண்பர் சாதி படிநிலையை உருவாக்கிய இந்து மதத்தை சாடினார். நான் அம்பேத்கரின்  சூத்ரன் என்போர் யார் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் பேசினேன்.  விவாதத்தின் எல்லை விரிவடையாமல் மனுவின் நால்வர்ண சதியிலேயே மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டு இருந்தது. நான் சொன்னேன் ”நண்பரே உங்களது வாசிப்பு குறைபட்டது. அல்லது நீங்கள் வாசிக்கவே இல்லை , அம்பேத்கரின் ஆசிரியர் ஒரு பிராமணர், அம்பேத்கரின் புரவலர் ஒரு சமஸ்தான ராஜா [சத்ரியன்]  நீங்கள் விரும்பும் இந்த சதி கோட்பாடுகள் அவ்வாறானது அல்ல ” என்றேன். நண்பர்  நான் அவரை வாசிக்காதவர் என்று சொல்லி விட்டதாக புண்பட்டு விட்டார்.

 

 

இங்கு கடலூரில் உருவாகிவரும் தீவிர அரசியல்,சமூக,இலக்கிய உரையாடல் எல்லாம்  தீவிரமோ ,சாரமோ ஆற்ற  வெற்று முகநூல் அரட்டைகளின் கழிவுகளாக மாறும் நிலை இருக்கிறது. ”இங்கே தம்பி இதெல்லாம் இலக்கியம் இல்ல, மொதல்ல போய் வாசிக்கிற வழிய பாரு ”  என்று சொல்லும் வலுவான இலக்கிய ஆசிரியனின் குரல் தேவை.

 

 

உங்களது பதிவை [இன்றைய வாசிப்பு சூழல் மொத்தத்துக்குமே தேவையான பதிவு அது]  நிச்சயம் இங்குள்ள நண்பர்கள் வாசிப்பார்கள். யார் வாசகனாக மிஞ்சப் போகிறார்கள், யார் வெறும் முகநூலர்களாக   உதிரப்போகிறார்கள் என அந்தப் பதிவைக் கண்டு சில நண்பர்களெனும் உள்ளே அந்தரங்கமாக சிந்திப்பார்கள் என நம்புகிறேன்.

 

கடலூர் சீனு

 

அன்புள்ள சீனு,

 

முதலில் அது உங்கள்மீதான எரிச்சல் அல்ல. அது பொதுவான வம்புப்பேச்சுக்கள் மீதான எரிச்சல் மட்டுமே. உங்களை எனக்குத்தெரியும். எரிச்சலிருந்தால் அதைச் சொல்லுமளவுக்கு உரிமையும் உங்களிடம் எனக்கு உண்டு. ஒன்றை கவனித்திருப்பீர்கள். இன்று பலவகை மனக்கசப்புகள் கொண்டு – குறிப்பாக சாதிசார்ந்த, அரசியல்சார்ந்த வேறுபாடுகள் அடைந்து – விலகிச்சென்று வசைகளில் ஈடுபடும் நம் முன்னாள் நண்பர்களிடம் நான் ஒருபோதும் சினமோ எரிச்சலோ கொண்டதில்லை. மிகச்சிறிய அளவில்கூட அவர்களின் கருத்துக்களை கடிந்து மறுத்ததோ திருத்தியதோ இல்லை. ஒருமுறைகூட. ஒரு பாவனையாகக்கூட. ஏனென்றால் அவர்களையும் நான் நன்கறிந்திருந்தேன். அது அணுக்கமான நண்பர்களுக்கும் தெரியும்.

 

நான் எவ்வகையிலேனும் கடிந்துரைத்திருக்கிறேன் என்றால் அவர்கள் என் நம்பிக்கைக்கு உரியவர்கள். நான் மிகவும் எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் நான் கடிந்துரைத்ததை கண்டு சினம்கொண்டு விலகிச்சென்றாலும் எனக்குக் கவலை இல்லை. அவர்களின் பங்களிப்பே எனக்கு முக்கியம். ஒரு தருணத்திலும் அவர்களை நான் உளம் விட்டு விலகுவதில்லை.  அவர்கள் எழுதும் அனைத்தையும் வாசிக்காமலிருக்க என்னால் இயல்வதில்லை.

 

இலக்கிய வம்புப்பேச்சுக்கள் இயல்பானவை. அவை நிகழாமலிருக்க நாமெல்லாம் முனிவர்கள் அல்ல. ஆனால் கூடுமானவரை நம் விவாதங்களை வாசிப்புப் பலத்துடன் முடிந்தவரை கூரிய மொழியில் முன்வைக்கவே முயலவேண்டும். நான் சொல்லவருவது அவ்வளவே

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி

$
0
0

u

அன்பான ஜெயமோகன்,

 

இன்று Republic TV கூடன்களம் உதயகுமார் பற்றின sting feature ஒளிபரப்பியதை அறிந்திருப்பீர்கள்.
அந்த வீடியோவும், அர்னப் கோஸ்வாமி உதயகுமாருடன் நடத்திய தொலைபேசி உரையாடலையும் இரண்டு முறைக்கு மேல் பார்த்தாயிற்று. இரண்டாவது வீடியோவில் உதயகுமார் வெகுவாகவே நிதானம் இழக்கிறார்.
உதயகுமாரை சந்தேகிக்கவா அல்லது இது ஒரு Media Hype என்று விட்டு விடலாமா.?
அன்புடன்
குமார் SR

 

http://www.republicworld.com/s/1705/number-activismforaprice-foreign-funds-used-during-kudankulam-anti-nuke-protests

 

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

இன்று ஐயா உதயகுமார் பற்றி அர்னாப் டிவி பரப்பிய காணொளியை நண்பர்கள் கட்டினார்கள். காணொளியில் உதயகுமார் பேசுவதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து மிகவும் செயற்கையாக இதை மிக பெரிய அளவில் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் உதயகுமார் பேசும்போது குரலை உயர்த்தி பேசி பேசி தன் கருத்தை திணிக்க முயற்சி செயகிறார். இதை பார்த்துவிட்டு நம் ஊர் அரைவேக்காட்டுகள் குதிக்கின்றன.

மிகவும் மனஉளைச்சலோடு எழுதுகிறேன். ஏன் இப்படி சேற்றை வரி நம் முகத்தில் இறைக்கிறார்கள்.

-திருமலை

 

அன்புள்ள குமார், திருமலை,

 

நான் உதயகுமாரை 1998ல் முதல்முறையாகச் சந்தித்தேன். என்னை என் வீட்டில் வந்து சந்தித்து அவரது கனவுகளைப்பற்றிப் பேசினார்

 

கடைசியாக பவா செல்லத்துரை நாகர்கோயில் வந்தபோது சென்ற ஏப்ரல் மாதம் சந்தித்தேன். ஓர் இரவுணவை சேர்ந்து உண்டோம். மறுநாள் நாகர்கோயிலில் பவாவின் நூல்வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்

 

அவரைப்பற்றி நான் இன்றும் உறுதியாகச் சொல்லத்தக்க செய்தி அவர் எளிய, நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழ்பவர் என்பதுதான். பணத்தின் மேல் இன்றும் அமராதவர். அவருடைய தனிப்பட்ட நேர்மைக்கு எனக்கு  எந்த தொலைக்காட்சியின் சான்றும் தேவையில்லை.என் சொந்த மூத்த சகோததரரைப்பற்றி கூறுவதற்கு நிகராக இதைச் சொல்கிறேன்.

 

அவருடைய பலகருத்துக்களுடன் எனக்கு முரண்பாடு உண்டு என்றாலும் அவர் மேல் நான் மதிப்பு கொண்டிருக்க இதுவே காரணம்.அணு உலைகள் மீது எனக்கு அவநம்பிக்கை உண்டு. அணு உலைகளுக்கு எதிரான சூழியல்போராட்டங்களில் 1986 முதலே பங்குகொண்டிருக்கிறேன். நான் கூடங்குளத்தில் உதயகுமார் தலைமையில் நிகழ்ந்த போராட்டத்தை ஆதரித்தமைக்கு இதுவே காரணம். என் ஆதரவை, அதற்கான நியாயங்களை விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

 

அப்போராட்டத்திற்கு பின்துணையாக சர்ச் இருந்தது வெளிப்படை. சர்ச் வளாகத்தில்தான் போராட்டமே நடந்தது. அந்த ஆதரவுக்கு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மக்கள் என்பதே காரணம். அங்கிகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அதை அனைத்து ஊடகங்களிலும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள். ஆதரவளிக்காமல் இருக்க சர்ச்சால் முடியாது என்பதே உண்மை. அதன் பின்னரும் அவர்கள்மேல் மக்களுக்கு புகார்கள்தான் என்பது நடைமுறை யதார்த்தம்.

 

அப்போராட்டத்திற்கு உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம் . அது எவ்வகை நன்கொடை என்பதே முக்கியம்.உலகமெங்கும் சூழியல் போர்களுக்கு நிதியுதவிசெய்யும் தனியாரும்,. அறக்கட்டளைகளும் ஏராளமாக உள்ளன. அவற்றிடமிருந்து உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம்.  அன்னிய அரசு, அல்லது தனியார்த்தொழில்துறை சார்ந்த உதவிகளை பெற்று அப்போராட்டத்தை நடத்தினார் என நிறுவப்பட்டிருந்தால் அது வேறு

 

ரிபப்ளிக் டிவியின் அந்த உரையாடலிலும் முன்பு வெஸ்டர்ன் யூனியன் வழியாக சட்டபூர்வமாக நன்கொடை பெற்றதாகவே சொல்கிறார். கண்காணிப்புகளும் வழக்குகளும் இருப்பதனால் கட்சி வழியாக அளிக்கும்படிச் சொல்கிறார். அதில் என்ன பிழை? அவர் நன்கொடைகள் பெற்றதில்லை என்று சொல்லியிருக்கிறாரா? நானே அவருக்கு நன்கொடை கொண்டு கொடுத்தேன். நேரில், கையில்

 

இந்தக் கண்காணிப்பு வழியாக எதை நிறுவியிருக்கிறார்கள் என உண்மையிலேயே புரியவில்லை. உதயகுமார் கூடங்குளம் போராட்டத்திற்கு ஒரு பேராசிரியர் சூழியல் செயல்பாடுகளில் ஈடுபாடு காரணமாக நன்கொடை அளிக்கச் சித்தமாக இருக்கிறார் என்றால் அதை கட்சி வழியாக சட்டபூர்வமாகப் பெற தயாராக இருக்கிறார் என்றுதானே?

 

எனக்கு கொஞ்சம் அரசியல் அறிவு கம்மி., அவர் சட்டவிரோதமாக வாங்கியிருக்கவேண்டும் என்கிறார்களா?

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30

$
0
0

29. சுவைத்தருணம்

flowerபீமன் ஒவ்வொரு அடுகலமாக நடந்து ஒருகணம் நின்று மணம் பெற்று அவற்றின் சுவையை கணித்து தலையாட்டி சரி என்றான். மிகச்சிலவற்றில் மேலும் சற்று அனலெரிய வேண்டும் என்றான். சிலவற்றை சற்று கிளறும்படி கைகாட்டினான். சிலவற்றில் உடனடியாக எரியணைத்து கனலை பின்னிழுக்கும்படி ஆணையிட்டான். ஒரு சொல்லும் எழவில்லை. சொல் அவன் உள்ளை கலைக்குமென்பதுபோல. கனவில் என அவன் முகம் வேறெங்கிருந்தோ உணர்வுகளை பெற்றுக்கொண்டிருந்தது. உடலெங்கும் மெல்லிய மயிர்ப்பு பரவியிருப்பது பிறர் விழிகளுக்கே தெரிந்தது. அஞ்சி ஓடுவதற்கு முந்தைய கணத்திலிருக்கும் புரவிபோல ஒரு விதிர்ப்புக்கு முந்தைய உணர்வுநிலை.

அனைத்துக் கலங்களையும் பார்த்து முடித்து அவன் திரும்பி வந்தான். அவன் உடலிலிருந்து அதுவரை இருந்த ஒரு தேவன் விலகிச்செல்வதை பூர்ணர் கண்டார். நீள்மூச்சுடன் அவன் மீண்டு அவரை நோக்கியபோது விழிகள் நெடுநேரம் நீராடி எழுந்ததுபோல் சிவந்திருந்தன. புன்னகையுடன் “நன்று! இன்று உணவுகள் அனைத்தும் அமைந்துவிட்டன” என்றான்.

பூர்ணர் புன்னகையுடன் “எப்போதாவது அது அமையாது சென்றிருக்கிறதா, வீரரே?” என்றார். “எண்ணியதை எய்தாமல் இருந்த தருணங்கள் பல. என் உணவு சுவையற்றதென்று எவரும் சொல்லி இதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் நான் சமைப்பது ஒவ்வொரு முறையும் அதுவரை சென்றிராத ஓர் இடத்தை அடையும் பொருட்டே. இன்று ஒரு கணு மேலேறியிருக்கிறேன்” என்றான் பீமன்.

அப்பாலிருந்த ஒருவன் “இன்னும் சில கணுக்களுக்கு அப்பால் தேவர்கள் குனிந்து நோக்கி ஆவலுடன் நின்றிருக்கிறார்கள். அவர்களின் நாச்சொட்டு கீழே உதிர்கிறது” என்றான். பீமன் புன்னகைத்தபின் “இதில் என் திறன் உள்ளதென்பதை மறுக்கவில்லை. அதைவிட இத்தருணத்தின் ஒருமை உள்ளது. மூத்தவரே, இங்கு நாம் புவியின் பல்வேறு பகுதிகளில் முளைத்தெழுந்து விளைந்து கனிந்த மாறுபட்ட உயிர்ப்பொருட்களிலிருந்து எடுத்தவற்றை ஒன்று கலக்கிறோம். ஒவ்வொன்றும் ஓர் இயல்பு கொண்டது. அவ்வியல்பு ஒவ்வொரு முறையும் மாறுபடுவது. ஒவ்வொரு தருணத்திலும் வளர்ந்து கொண்டிருப்பது. ஆகவே ஒவ்வொரு முறை சமைக்கையிலும் முன்பொருபோதும் இப்புவியில் நிகழ்ந்திராத ஒன்று உருவாகி வருகிறது. பின்பொருமுறையும் நிகழாதபடி எப்போதைக்குமாக மறைந்து போகிறது. சமையல் இப்புவி நிகழும் அதே விந்தையை தானும் கொண்டுள்ளது. ஒருமுறை உருவான சுவை மீண்டும் இங்கு எழுவதேயில்லை” என்றான்.

வெளியே இருந்த சம்பவர் உள்ளே வந்து “அடுமனை பொலிந்துவிட்டதா? வெளியே உணவுதேடி மக்கள் வந்து குழுமத்தொடங்கிவிட்டனர்” என்றார். குரல் தாழ்த்தி “விந்தை என்னவென்றால் இம்முறை இளவரசர் முன்னரே வந்துவிட்டார்” என்றார். பூர்ணர் “என்ன இது? உச்சிப்பொழுது உணவுக்கு இன்னும் இரு நாழிகை இருக்கிறதே?” என்றார். “ஆம், ஆனால் அடுமனைப்புகை அனைவரையும் அறைகூவிவிட்டது. நமது பதாகைபோல் இக்கூரைக்கு மேல் அது நின்றிருக்கிறது” என்றார் சம்பவர். “தாழ்வில்லை. முதற்பந்தியை அறிவித்துவிடலாம். நம்மவர்கள் பந்தி விளம்ப சித்தமாக இருக்கிறார்களா என்று மட்டும் ஒருமுறை பார்த்துவிடுங்கள்” என்றான் பீமன். பூர்ணர் “இங்கு பந்தி விளம்புபவர்கள் வேறு. சமைப்பவர்கள் விளம்பலாகாது என்பது நளன் அளித்த நெறிகளில் ஒன்று” என்றார். “ஏன்?” என்று பீமன் கேட்டான்.

“சமைப்பவன் தான் அடைந்துவிட்டேன் என்னும் பெருமிதத்திலிருப்பான். உண்பவன் அதை அறியவேண்டுமென்பதில்லை. அவன் தன் பசியாலும் சுவையாலும் இயக்கப்படுபவன். அவை ஆளுக்கொரு வகை. தருணத்திற்கொரு தன்மை. ஒருவேளை தன் நுண்மைகளை உணராது உண்பவனை நோக்கி சமைப்பவன் சினம் கொள்ளக்கூடும். அச்சினம் தகுதியானதே எனினும் விளம்புகையில் முகம் கோண எவருக்கும் உரிமையில்லை” என்றார்.

சூரர் “அதைவிட ஒன்று தோன்றுகிறது. சமைப்பவர் உணவுப்பொருட்களில் ஏதேனும் சிலவற்றை அவரே சமைத்திருப்பார். அனைத்தையும் சமைப்பவர் எவருமில்லை. பால்ஹிக பெருவீரரும் கூட இங்கு சிலவற்றை சமைக்கவில்லை. தான் சமைத்தவற்றுக்கு முன்கை அளிக்க பரிமாறுபவர் முயலக்கூடும். பரிமாறுபவன் அனைத்தையும் தான் சமைத்ததென்றே எண்ணி பரிமாற முடியும்” என்றார். “அவரது சுவை அங்கே வெளிப்படத்தான் செய்யும். ஆனால் அது பரிவென்று நிகழ்ந்தால் நன்றே” என்றார் பூர்ணர்.

சம்பவர் பூர்ணரிடம் “மூத்தவரே, விளம்புபவர்கள் நீராடி வந்துவிட்டனர். பந்தி அமர்த்தலாம் என்று நான் சென்று சொல்கிறேன். தாங்கள் ஒருமுறை பந்திக்கூடத்தை எட்டிப்பார்த்துவிடுங்கள்” என்றார். பூர்ணர் கைநீட்ட சூரர் அவர் கைபற்றி மெல்ல எழுப்பினார். முதிய எலும்புகள் நீர்த்துளிகள் உடைவதுபோல மெல்ல ஓசையிட அவர் நடந்து சென்று சிறு சாளரத்தினூடாக பந்தி மண்டபத்தை பார்த்தார். பதினாறு நீண்ட நிரைகளாக மணைப்பலகைகள் இடப்பட்டு இலைகளும் தொன்னைகளும் விரிக்கப்பட்டிருந்தன.

“முதலமர்வில் ஆயிரம் பேர். பத்து அமர்வுகள் தேவைப்படும்” என்றார் சம்பவர். “ஆம், ஒருவேளை இந்நகரில் இதுவரை அளிக்கப்பட்ட பெருவிருந்தாக இருக்கக்கூடும்” என்றார் சூரர். “நீர் சென்று ஊணறிவிப்பை எழுப்பும்” என்று பூர்ணர் சொன்னார். “தொன்னைகளில் நீரும் எளிய தொடுகறிகளும் மட்டும் முதலில் பரிமாறப்பட்டால் போதும். இம்முறை பொரித்தவற்றை ஊணோர் அமர்ந்தபின் வைக்கலாம்” என்றார்.

முதுமையில் ஒடிந்ததுபோல வளைந்த இடையைப்பற்றி நிமிர்த்தியபடி மெல்ல அவர் திரும்பி வந்தபோது கொல்லையில் நின்றிருந்த அத்திமரத்தின் கிளையினூடாக முதிர்ந்த பெரிய குரங்கொன்று இறங்கி வருவதை பார்த்தார். ஒருகணம் திகைத்து அதை நோக்கி நின்றபின் வியப்பொலி எழுப்பி பின்னால் வந்தார். சூரர் “என்ன? என்ன?” என்றார். “குரங்கு” என்றார் பூர்ணர். “குரங்கா? இங்கா?” என சூரர் வேறெங்கோ பார்த்தார். “ஆம், குரங்கு. இதுவரை இங்கு குரங்குகள் வந்ததே இல்லையே” என்றார் சம்பவர். அச்சத்துடன் “பெருங்குரங்கு” என்ற சிருங்கர் “அதோ பிறிதொன்று” என்றார்.

இடையில் சிவந்த முடிகொண்ட தளிர்மகவை அணைத்தபடி முலைக்கொத்து வெளுத்துத் தொங்கிய பெருத்த அன்னைக்குரங்கொன்று இறங்கிவந்தது. அதற்குப் பின்னால் மேலும் ஒரு குட்டி சிலிர்த்த மென்தலையும் சிவந்த நீர்த்துளி விழிகளும் ஆவலுடன் நெளியும் அழகிய நீண்ட வாலுமாக வந்தது. சூரர் உள்ளே நோக்கி “ஒரு குரங்குக் குடும்பம்! எப்படி வந்ததென்று தெரியவில்லை” என்றார்.

பீமன் உள்ளிருந்து பெரிய மரத்தாலமொன்றை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான். அங்கு சமைக்கப்பட்ட அனைத்து உணவுகளும் அதில் சிறிது பரிமாறப்பட்டிருந்தன. அப்பமும் அன்னமும் காய்களும் கனிகளும் மிகுதியாக இருந்தன. “குரங்குக்கா?” என்றார் பூர்ணர். “ஆம், இது என் வழக்கம்” என்று பீமன் சொன்னான். “முதல் உணவை தெய்வங்களுக்கு படைப்பதுதானே முறை?” என்றார் பூர்ணர். “நான் குரங்குகளை தெய்வமென எண்ணுபவன்” என்றபடி பீமன் பணிந்து அவ்வுணவை வைத்தான்.

“முன்னரே எடுத்து ஆறவைத்திருந்தீர்களா?” என்றார் சூரர். “ஆம்” என்றான் பீமன். “இவை வருமென்று உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று பூர்ணர் கேட்டார். அவன் திரும்பி “இதுவரை ஒருமுறையேனும் வராமல் இருந்ததில்லை” என்றான். இயல்பாக அவன் விழிகளை சந்தித்த பூர்ணர் மெல்லிய சிலிர்ப்பொன்றை அடைந்து “தெய்வங்களே” என்றார். அறியாது கைகூப்பி “தாங்களா?” என்று முணுமுணுத்தார். பீமன் விழிகளை திருப்பிக்கொண்டான். “என்ன சொல்கிறீர்?” என்றார் சூரர். “ஒன்றுமில்லை” என்றார் பூர்ணர். கூப்பிய கைகள் நடுங்கிக்கொண்டிருக்க கால் தளர்ந்து கைதுழாவி சுவரைத் தொட்டு அப்படியே கால் மடித்து நிலத்தில் அமர்ந்தார்.

தந்தைக்குரங்கு உணவை நோக்கியபின் குனிந்து மோப்பம் பிடித்தது. பீமனை நோக்கியபோது அதன் கண்கள் மின்னி மின்னி மூடித்திறந்தன. பின்னர் அது அன்னைக்குரங்கை நோக்கி கைகாட்ட அன்னை அவ்வுணவுகளனைத்தையும் மெல்ல தொட்டு நோக்கி இறுதியாக இருந்த இன்சோறை ஒரு பிடி அள்ளி தன் வாயிலிட்டது. சுவையை உறுதி செய்த பின் பிறிதொரு வாயள்ளி தன் குட்டியின் வாயில் வைக்கப் போனது. அதற்குள் குட்டி பாய்ந்து அன்னையின் தோள்மேல் கால் வைத்து எம்பி அதன் வாயை இரு கைகளாலும் பற்றித் திறந்து அன்னை தன்வாய்க்குள் மென்று கொண்டிருந்த இன்சோறை தன் சிறுகைகளால் தோண்டி எடுத்து தன் வாயிலிட்டு சப்பி சுவையில் முகம் விரிய கண் சிமிட்டி வாலை நெளித்தது.

அன்னை அதன் தலையை மெல்ல வருடியபின் தான் அள்ளிய உணவை அதற்கு ஊட்டியது. அவ்வுணவை இரு கைகளாலும் அன்னையின் கையைப்பற்றியபடி குனிந்து உண்டு இரு கடைவாய்களிலும் சிதற துப்பி ர்ர் என்றது குட்டி. பின்னர் கீழே பாய்ந்து உணவுக்கு முன் அமர்ந்து இரு கைகளால் இருவேறு உணவுகளை அள்ளி எடுத்தது. மாறி மாறி வாயில் வைத்தபின் ரீக் என ஒலி எழுப்பி அதை உதறிவிட்டு அன்னை மடியில் தாவி ஏறி சூழ நின்றவர்களை முறைத்து நோக்கி சிறிய வெண்பற்களைக் காட்டியது. சங்குபுஷ்பம் போன்ற செவி ஒளி ஊடுருவ தெரிந்தது. கையை விரித்து சிறிய நாக்கை நீட்டி நக்கியபின் அன்னையை தழுவிக்கொண்டு ஏதோ சொன்னது. அன்னை முனகலாக மறுமொழி உரைத்தது.

தந்தையின் அருகே சென்ற மூத்த மைந்தன் அதன் தோளை ஒட்டி நின்று உணவை கைநீட்டி எடுக்க முயன்றது. தந்தை இன்னுணவை அள்ளி அதன் கைகளில் வைக்க அது தன் வாய்க்குள் கொண்டு போவதற்குள் சிறுகுட்டி பாய்ந்து அந்தக் கையைப்பற்றி இழுத்து மலர்த்தி அதிலிருந்ததை தான் உண்ண முயன்றது. பெரிய குட்டி கிரீச் என்ற ஒலி எழுப்பி அதை உந்திவிட்டது. அன்னை சிறுகுட்டியின் வாலைப்பற்றி இழுத்து தன் மடியில் அமரவைத்து மீண்டும் அள்ளி ஊட்டியது. மூத்தவன் மறுபக்கம் வந்து தந்தையின் தொடை மேலேறி அமர்ந்தபின் உணவை எடுத்து இரு கைகளாலும் வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. தந்தை அதன் பின்னரே பெரிய கவளம் ஒன்றை எடுத்து உண்ணலாயிற்று. சுவையில் அதன் முகம் மலர பீமனை நோக்கி ர்ர்ர் என்றது.

அடுமனையாளர் அனைவரும் வெளியே வந்து குரங்குகள் உண்பதை பார்த்து நின்றனர். எவரோ “இவை இங்கு இதற்குமுன் வந்ததே இல்லை” என்றார். “அடுமனைப்புகையை மணம் கொண்டிருக்கின்றன” என்றார் பிறிதொருவர். “இனிய குடும்பம்” என்று இளைஞனொருவன் சொன்னான். “சிவபார்வதி எழுந்தருளியதுபோல.” குரங்குகள் சுவைத்து தலையசைத்து மென்றன. அவற்றின் வால்நெளிவில் சுவை தெரிந்தது. சுவைக்கென அவ்வப்போது நிறுத்தி விழிமூடி மயங்கி பின் மீண்டும் உண்டன.

குட்டிகள் தாவி தாலத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமர்ந்து கைகளால் அள்ளி வாயிலிட்டு மென்றும் இரு கைகளையும் ஊன்றி வாயால் கவ்வி உறிஞ்சியும் உண்டன. சிறிய குட்டி ஆர்வமிழந்து உணவைக்கடந்து தாவி வந்து பீமனைப்பார்த்து எழுந்து நின்றது. பீமன் அதை நோக்கி புன்னகைத்ததும் க்ரீச் என்ற ஒலியெழுப்பி துள்ளி திரும்பிச் சென்று தன் அன்னையின் மடியில் அமர்ந்து அவனை பார்த்தது. இருமுறை கண்களை சிமிட்டியபின் திரும்பி அன்னையின் முலைக்கண்ணை தன் வாயில் வைத்து சப்பியது. ‘நான் சின்னக்குழந்தை’ என்று அது பீமனிடம் சொல்வதுபோலிருந்தது.

முலையில் பால் ஏதும் வரவில்லை என தெரிந்தது. ஓரக்கண்ணால் பீமனையே நோக்கிக்கொண்டு சப்பியபின் மீண்டும் இறங்கி வந்து ஒரு அப்பத்தை எடுத்து நுனியை கரம்பி உண்டது. மீண்டும் அருகே வந்து பீமனைப் பார்த்தபின் எழுந்து நின்று அப்பத்தை அவனுக்காக நீட்டியது. அவன் கைநீட்டியதும் அப்படியே போட்டுவிட்டு திரும்ப ஓடி அன்னை மடியில் ஏறி அமர்ந்து அன்னையின் முகத்தைப் பற்றி திருப்பி அதனிடம் ஏதோ சொன்னது. அன்னை பீமனைப் பார்த்து பற்களைக் காட்டியபின் மீண்டும் அப்பம் ஒன்றை எடுத்து தின்னத் துவங்கியது.

“அவர்கள் தங்களை நன்கறிந்திருக்கிறார்கள், வீரரே” என்றார் சூரர். பீமன் “ஆம்” என்றான். “புலரியில் நீங்கள் அனல் எழுப்பியபோது மென்காற்றென வந்ததும் இவர்களே என்றொரு எண்ணம் எனக்கெழுகிறது” என்றார் சங்கதர். பீமன் அதை கேட்டதாகத் தோன்றவில்லை. ஊண்மணியின் ஓசை முழங்கத் தொடங்கியது. கூடி நின்ற மக்களிடமிருந்து எழுந்த முழக்கம் பரவி நெடுந்தொலைவுக்குச் செல்வது தெரிந்தது.

சிருங்கர் “அமரத் தொடங்குகிறார்கள்” என்றார். “இங்குள்ள முறைப்படி பரிமாறுங்கள்” என்று பீமன் சொன்னான். உணவுக்கான அழைப்புகள் சிறு கொம்பொலிகளாக எழுந்தன. அவை ஒவ்வொரு குலத்தையும் குடியையும் முறைப்படி தனித்தனியாக அழைத்தன. உணவு சமைக்கப்பட்டு எடுத்து வைக்கப்பட்ட கலவறையின் பதினாறு வாயில்களும் திறந்தன. பரிமாறுபவர்களின் தலைவனான சுப்ரதன் உள்ளே வந்து கைகூப்பி அன்னத்தை வணங்கும் அவர்களின் குலவாழ்த்தை சொன்னான். பின்னர் ஒரு பிடி அன்னத்தை எடுத்து உருட்டி பிள்ளையாராக ஆக்கி ஈசானமூலையில் இலைவிரித்து அதில் நிறுவினான். இன்னொரு பிடி அன்னத்தை உருட்டி அதற்குப் படைத்து வணங்கினான். “எழுக… அன்னம் நாம் அளிக்க அளிக்க பெருகுக!” என ஆணையிட்டான்.

சிறு சாளரத்தினூடாக அப்பால் உணவுக்கூடத்தில் பந்தி நிரைகள் நிறைந்து கொண்டிருப்பதை பீமன் நோக்கிக்கொண்டிருந்தான். மடை திறந்து நீர் புகுந்து கழனி நிறைவதுபோல் மக்கள் வந்து இறுதி மணையிலிருந்து அமர்ந்து கூடத்தை முழுமித்தனர். அவர்கள் முன் பரிமாறப்பட்டிருந்த சிறு தொடுகறிகளைக் கண்டு ஒவ்வொன்றையும் அது என்ன என்று விழிகளால் தொட்டறிந்தனர். ஒருவரோடொருவர் சிறுசொற்களில் பேசி பரிமாறுபவர்கள் வரும் திசையை அவ்வப்போது ஓரக்கண்ணால் நோக்கி காத்திருந்தனர்.

ஒற்றைச் சகடங்கள் கொண்ட சிறிய பித்தளை வண்டிகளில் உணவுக்கலங்களை ஏற்றி வைத்து ஒருவர் தள்ளி வர பிறிதொருவர் அதை பற்றிக்கொண்டு மறு கையால் அகப்பையை ஏந்தி இலைகள்தோறும் பரிமாறிக்கொண்டு வந்தார். கொட்டாங்கச்சிகளாலும் பனங்கொட்டைகளாலும் சுரைக்குடுவைகளாலும் செய்யப்பட்ட புதிய அகப்பைகள். ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு வகை அளவும் அமைப்பும் கொண்டவை.

உணவு பரிமாறி முடித்ததும் அவர்கள் அனைவரும் விலக குறைவனவற்றை நிறைக்கும் அடுத்த நிரை விளம்பர்கள் சிறு கலங்களில் உணவுடன் தோன்றினர். ஒவ்வொரு கறியும் அப்பமும் கனியும் முறையே பரிமாறப்பட இலைநிரை தூரிகை வண்ணம் தொட்டுத் தொட்டு வைக்க விரிந்தெழும் ஓவியப்பரப்பென தோற்றம் மாறிக்கொண்டே இருந்தது.

பரிமாறி முடிந்ததும் மூத்த விளம்பன் கைகளைக்கூப்பி அன்ன சூக்தத்தின் முதல் ஏழு வரிகளை உரக்க சொன்னான். “ஓம் ஓம் ஓம்” என்று அமர்ந்திருந்தவர்கள் ஒலியெழுப்பினார்கள். பின்னர் பரபரப்பின்றி உண்ணலாயினர். முறைப்படி முதலில் உப்பை தொட்டு நாவில் வைத்தனர். பின்னர் கசப்பையும் அதன் பின் இனிப்பையும் நாவுணர்ந்தபின் அப்பங்களையும் பருப்பையும் குழைத்து உண்ணத்தொடங்கினர். மெல்லும் ஓசைகள் காட்டுக்கிளைகளிலிருந்து பனித்துளிகள் சருகுமேல் உதிரும் ஒலிபோல கேட்டன.

flowerஒவ்வொரு பந்தியமர்வாக மாற்றமிலாது நிகழ்ந்து கொண்டிருந்தது. மீண்டும் அதே உணவுப்பந்தி அதே முகங்கள் என தோன்றியது. ஆனால் ஒவ்வொரு பந்தியும் ஒருவகையில் உண்டது. அந்தணர் பந்திகளில் மெல்லிய சலிப்போசையும் ஒருவரோடொருவர் நகையாடிக்கொண்ட பேச்சும் கலந்தொலித்தது. வைசியர் பொருள் நிறுத்து விற்பவர்கள் போலவும் அரும்பொருள் எதையோ விலை பேசி வாங்குபவர்கள் போலவும் முகம் கொண்டிருந்தனர். ஷத்ரியர் பிறிதெங்கோ உளம் நிலைத்திருப்பவர்கள் போன்ற அமைதியுடன் உண்டனர். வேளிர் குடிகளும் ஆயர்களும் கைவினைஞர்களும் சிரித்தும் சுவைத்தும் சுவைகுறித்து பிறிதொருவரிடம் சொல்லியும் உணவை களியாட்டென மாற்றிக்கொண்டனர்.

ஒவ்வொரு முகமும் ஒருவகையில் சுவையை அறிந்தது. முற்றிலும் சுவைக்கு தன்னை அளித்தவர்கள் இளங்குழவிகள் மட்டுமே. சுவையை நினைவென மீட்டினர் முதியோர். சுவைப்பரப்பில் தன் நாவுக்குப் பிடித்த சுவையை மீண்டும் மீண்டும் உண்டனர் இளையோர். பெண்கள் இனிப்பை நாட காரத்தை நோக்கி நீண்டன ஆண்களின் கைகள். விழிகள் மேலேறி உடல் சுவையில் மெல்ல தளர ஒருவர். விழி சுழல தனக்குத்தானே ஆமென தலையாட்டும் ஒருவர். விரல்கள் வாயில் பட நா வந்து தொட்டுச்செல்ல தான் என மட்டுமே அமர்ந்து உண்ணும் ஒருவர்.

உண்ணும் ஒவ்வொரு சுவையையும் தன்னருகே அமர்ந்திருக்கும் சுற்றத்திற்கு அளிக்கவேண்டும் என்று இருபுறமும் திரும்பி எடுத்தளித்தும் அள்ளி ஊட்டியும் உண்டனர் அன்னையர் சிலர். ஒவ்வொரு உணவை உண்ணும்போதும் அடுத்த உணவின் சுவையை எண்ணி தாவிக்கொண்டே இருந்தனர் சிலர். சுவையை உணர பொறுமையின்றி அனைத்தையும் மாறிமாறி எடுத்தனர் சிலர்.

பீமன் இறுதிநிரை உண்டெழுவதுவரை அச்சாளரத்திலிருந்து அசையவில்லை. அவனருகே வந்து நின்ற சூரர் “மூத்தவர் தங்களை அழைக்கிறார், வீரரே” என்றார். “ஆம்” என்று விழித்துக்கொண்டு கைதூக்கி சோம்பல் முறித்தபடி அவன் பூர்ணரை நோக்கி வந்தான். அடுமனையின் பின்புறத்திலிருந்த தாழ்ந்த ஈச்சையோலை கூரையிடப்பட்ட சிறு கொட்டகையில் இனிய காற்று வீசிக்கொண்டிருக்க சிறுபீடத்தில் சாய்ந்து அமர்ந்து சுரைக் குவளையில் அன்னநீர் அருந்திக்கொண்டிருந்த பூர்ணர் “வருக, வீரரே!” என்றார்.

பீமன் “பந்தி முடியவிருக்கிறது. இனி அரண்மனை ஏவலர் மட்டுமே” என்றான். “ஆம், அவர்கள் நல்லுணவுக்கு சலித்தவர்கள். தாங்கள் உண்பதை ஒருபொருட்டென எண்ணவில்லை என தங்களுக்கே காட்டிக்கொள்ள விழைபவர்கள்” என்றார் சங்கதர். “தாங்கள் சொன்னது மெய், வீரரே. பெருமளவில் சமைக்கையில் ஒவ்வொன்றும் பிறிதொன்றாகின்றன” என்றார் பூர்ணர். சம்பவர் “அவ்வேறுபாட்டை நானும் உணர்ந்தேன். அதை எங்ஙனம் சொல்வதென்று தெரியவில்லை” என்றார். பூர்ணர் பற்கள் உதிர்ந்த வாயைத் திறந்து சிறு குழவிபோல் முகம் இழுபட்டு சுருங்க சிரித்தபடி “நான் சொல்கிறேன்” என்றார். “மானுடனால் காதலிக்கப்படும் கன்னிக்கும் தெய்வத்தால் காதலிக்கப்படும் கன்னிக்கும் உள்ள வேறுபாடு.”

“ஆம், மெய்” என்று சூரர் நகைக்க சூழ்ந்திருந்த அடுமனையாளர்கள் சேர்ந்துகொண்டனர். சிறிய நாணத்துடன் பீமன் “அனைத்தும் ஆசிரியர்களின் அருள்” என்று சொன்னான். “உமது ஆசிரியர் யார்?” என்று பூர்ணர் கேட்டார். “இளமையில் அடுதொழில் பயிற்றுவித்தவர் கச்சர். உணவென்பது வேள்வியென்றும் சமைப்பது யோகமென்றும் எனக்கு கற்பித்தவர் மந்தரர்” என்று பீமன் சொன்னான். “நூற்றியிருபதாண்டுகாலம் வாழ்ந்து மறைந்தவர். என் நோக்கில் மாமுனிவர் என்பவர் அவரே. நான் ஞானநோக்கில் அவருடைய குருமுறையில் வந்தவன்.”

“ஆம், அவர் முழுமையடைந்திருப்பார். அத்திசை நோக்கி வணங்குகிறேன்” என்றார் பூர்ணர். அவர் திரும்பிப்பார்க்க அன்னநீரை மேலும் சற்று ஊற்றினான் இளைய அடுமனையாளன். “தாங்கள் உணவருந்தலாமே? பொழுது பிந்திவிட்டதே?” என்று பீமன் சொன்னான். “அனைத்துப் பந்தியும் முடிந்த பிறகன்றி அடுமனையாளர் எவரும் இங்கு உணவருந்தும் வழக்கம் இல்லை” என்றார் பூர்ணர். “நளன் வகுத்த நெறிகளில் இதுவும் ஒன்று. உணவருந்திவிட்டால் உணவிலிருந்து நாம் விலகிவிடுவோம். விலக்கம் மெல்லிய வெறுப்பையும் உருவாக்கிவிடும். அடுமனையாளருக்கும் அதில் விலக்கில்லை. உணவு அனைவருக்கும் சென்றாகவேண்டும் என்பதற்காக விலங்குகளின் உள்ளத்தை அவ்வாறு அமைத்திருக்கின்றன தெய்வங்கள். இன்று இத்தனை பேச்சுக்கு நடுவிலும் நம் அனைவர் செவிகளும் அப்பால் ஒலிக்கும் பந்தியில்தான் உள்ளன. நாம் உணவுண்டுவிட்டிருந்தால் அவ்வினிய ஓசை ஒவ்வாதொலிக்கும்.”

புன்னகையுடன் மெல்ல அசைந்தமர்ந்து “ஆனால் முதுமை பசி தாள முடியாமல் செய்கிறது. சற்றே அன்னம் கலந்த நீரை சிறிதளவாக அருந்திக்கொண்டிருந்தால் என்னால் காத்திருக்க முடியும்” என்றார் பூர்ணர். “அமர்க!” என்றார் சிருங்கர். பீமன் பிறிதொரு பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டான். “புலரியில் அடுப்பு மூட்டியபோது தாங்கள் நிற்கத்தொடங்கினீர்கள். இப்போதுதான் அமர்கிறீர்கள்” என்றார் சூரர். “அடுமனையில் அமர்வது வேள்வியில் நிற்பதற்கு நிகர் என்பார் எனது ஆசிரியர்” என்றான் பீமன். “ஆம், மிகச் சரியான சொல்லாட்சி” என்றார் சிருங்கர்.

பூர்ணர் “ஒன்று நோக்கியிருக்கிறீர்களா? எத்துறையிலாயினும் அதில் பெருந்திறன் கொண்டவர்கள் சரியான மொழியாளுமையும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தங்கள் அகம் அடைவதையும் கை வனைவதையும் மொழியில் காட்ட அவர்களால் இயலும்” என்றார். பீமன் “தங்கள் செயலை அவர்கள் உள்ளத்தால் கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பார்கள். தங்களுக்கே என பல நூறு முறை வகுத்துரைத்திருப்பார்கள்” என்றான்.

சூரர் “இங்கிருந்து அதற்குள் இளவரசருக்கு செய்தி போயிருக்கிறது. முதலுணவு குரங்குகளுக்கு வைக்கப்பட்டதென்று” என்றார். “குரங்கு உண்ட மிச்சிலை இளவரசருக்கு அளித்துவிட்டார்கள் என்று அமைச்சர் கலிகர் தூண்டிப்பேசினார். கீசகர் சினந்தார். அச்சினத்தை வெளிக்காட்டினால் அடுமனையில் சமைத்த அனைத்து உணவுகளும் வீணாகிவிடும் என்று அமைச்சர் சொன்னதனால் அடங்கினார். இவர்கள் அனைவரும் உண்டு முடித்த பின் உங்களை அழைத்து ஏன் என்று கேட்கக்கூடும்.”

பீமன் “நன்று! நானே சென்று அதை சொல்கிறேன்” என்றான். “பந்தியிலும் படுகளத்திலும் மட்டுமே மானுடர் உயிர் உச்சம்கொள்ள மோதிக்கொள்கிறார்கள்” என்று பூர்ணர் சொன்னார். “புரிந்துகொள்ள முடியாததொரு விந்தை இது. இங்கல்ல, பாரதவர்ஷம் முழுக்கவே பெரும் பூசல்கள் உணவைச் சான்றாக்கியே நிகழ்ந்துள்ளன. உண்மையில் மானுடர் உளம் நெகிழ்ந்திருக்கிறார்கள். உண்டு நிறைந்தவன் உளமுவந்து பிறருக்கு உணவளிப்பான். ஆனால் ஏன் குருதிப்போர்கள் உணவுக்கூடத்தில் நிகழ்கின்றன? எந்த தெய்வங்கள் இங்கு வந்திறங்குகின்றன?”

பீமன் “அது இயல்பே. போர்க்களத்திலும் உணவுக்களத்திலும்தான் மானுடர் விலங்குகள் போலிருக்கிறார்கள். கற்றவையும் பயின்றவையும் விலக தாங்கள் எதுவோ அதுவாக எஞ்சுகிறார்கள்” என்றான். “உண்மை” என்றார் பூர்ணர். “உணவுக்களத்தில் சிலசமயம் உணவு எஞ்சாதுபோய்விடும் என பேரரசர்கள் பதறுவதை நுட்பமாக உணர்ந்திருக்கிறேன்.” சூரர் நகைத்து “ஒருவருக்கு உணவளித்து இன்னொருவருக்கு அளிக்கையில் அதை தன் உணவுடன் ஓரக்கண்ணால் நோக்கி ஒப்பிடாதவர்களாக மிகச் சிலரையே கண்டிருக்கிறேன்” என்றார்.

அடுமனையாளர்கள் எழுந்து நின்ற அசைவுகளைக் கண்டு பீமன் திரும்பியபோது வாயிலில் கீசகன் வந்து நிற்பதை கண்டான். அவன் உடலால் வாயில் முழுமையாக மூடி அறை இருண்டது. அவனுக்குப் பின்னால் அமைச்சர் கலிகரின் தலை தெரிந்தது. பீமன் எழுந்து கைகட்டி பணிந்து நிற்க சூரரால் எழுப்பப்பட்ட பூர்ணர் “வணங்குகிறேன் இளவரசே, அடுமனையாளர் கொட்டிலுக்கு தங்கள் வருகை நிகழும் பேறு பெற்றோம். என்றும் இத்தருணத்தை எண்ணியிருப்போம்” என்றார். கீசகன் பீமனையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் அவன் விழிகளை சந்திக்கவில்லை.

“நீர்தான் இன்று சமைத்தீரோ?” என்றான் கீசகன். “ஆம், எனக்கு அவ்வாய்ப்பு அளிக்கப்பட்டது.” கீசகன் “நல்லுணவு” என்றான். பீமன் “என் நல்லூழ் இச்சொற்களை நான் கேட்க அமைந்தது” என்றான். “முதலுணவை குரங்குகளுக்குப் படைத்தீர் என அறிந்தேன்” என்றான் கீசகன். “ஆம், என் குலதெய்வம் காற்று வடிவான குரங்கு. நான் அவற்றுக்குப் படைக்காமல் எதையும் மானுடருக்கு அளித்ததில்லை.” சினத்துடன் “எதிர்த்தா பேசுகிறீர்?” என்றான். அமைச்சர் கலிகர் கீசகனுக்குப் பின்னால் நின்று “குரங்கு எச்சிலை உண்ண குறைந்துவிடவில்லை நிஷாத இளவரசர்” என்றார்.

“கன்றின் எச்சிலும் ஈயின் எச்சிலும் அமுதென கருதப்படுகின்றன” என்றான் பீமன். “வீண்சொல் எடுக்கிறாயா? என்னுடன் விளையாடுகிறாயா?” என்றான் கீசகன். இரு கைகளையும் சேர்த்து அவன் விசையுடன் அறைந்த ஓசை அங்கிருந்த அனைவரையும் திடுக்கிடச் செய்தது. நண்டுக்கொடுக்குகள்போல கைகளை விரித்தபடி பீமனை அணுகி “கிழித்து இரு துண்டுகளாக போட்டுவிடுவேன்…” என்றான்.

அஞ்சாமல் ஏறிட்டு நோக்கிய பீமன் “அதை பிறிதொரு தருணத்தில் செய்வோம், இளவரசே. நான் சமைத்த உணவு அவ்வுடலில் இப்போது ஓடுகிறது” என்றான். சிலகணங்கள் நோக்கு நிலைக்க அசைவிழந்த கீசகன் கைகள் மெல்ல தளர்ந்து தாழ “ஆம்” என்றான். பின்னர் முகம் மலர்ந்து “நல்லுணவு… நான் இப்படியொரு சுவையுணவை இதுவரை உண்டதில்லை” என்றான். இரு கைகளையும் கோத்து தசைகள் இறுகிநெளிய முறுக்கியபடி “அச்சுவைக்காக நான் உமக்கு கடன்பட்டிருக்கிறேன். உண்கையில் நான் மகிழ்ந்த அத்தருணங்கள் என்னுள் இருக்கையில் நான் உம்மை வெறுக்கமுடியாது” என்றான்.

“அது என் குருவருள்” என்றான் பீமன். “அருகே வருக! நாம் தோள்தழுவிக்கொள்வோம்…” என்றான் கீசகன். பீமன் “நான் சூதன்” என்றான். “நீர் மல்லர். அடுதொழில் வல்லுநர். அதையன்றி வேறெதையும் இத்தருணத்தில் நான் உணரவில்லை… வருக!” என்றான் கீசகன். பீமன் அருகே செல்ல அவன் தன் கைகளை விரித்து பீமனை அணைத்துக்கொண்டான். பீமனும் தயக்கம் கொண்ட கைகளுடன் அவனை தழுவினான்.

“நாம் மீண்டும் தோள்தழுவ வேண்டும். மற்களத்தில்” என்றான் கீசகன். “நீர் மாமல்லர். உம் தோள்களே சொல்கின்றன.” பீமன் “ஆம், அது நிகழ்க!” என்றான். “இப்புவியில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவதுபோல எவரும் அறியமுடியாது” என்றான் கீசகன். “நாம் வாழும் உலகங்கள் வேறு. நம்மை ஆள்வன வேறு தெய்வங்கள்.” பீமன் புன்னகைத்து “ஆம்” என்றான். “எனக்கு உகந்த சுவையுணவை நீர் அனுப்பி வையும். எனக்கு எது சுவை என நீர் அன்றி எவரும் உணர முடியாது. நான்கூட” என்றான் கீசகன். “பொழுதமைகையில் நீர் என் அரண்மனைக்கு வரலாம். நாம் களிப்போர் செய்யலாம்.” பீமன் “வருகிறேன்” என்றான்.

கீசகன் பூர்ணரிடம் “இவர் தெரிவுசெய்திருப்பது அடுமனை. ஆகவே அடுமனையிலிருக்கிறார். ஆனால் இங்கிருப்பவர் என் உடன்பிறந்தார் என்று கொள்க! இவர் சொற்கள் என் ஆணைகள் என்றே திகழ்க!” என்றான். பூர்ணர் “அவ்வாறே” என்றார். கீசகன் பீமனிடம் “மீண்டும் சுவையே என்னை உவகை கொள்ளச்செய்கிறது. நா அறிந்த சுவையை உள்ளம் பெருக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் சுவைப்பதை இப்போதுதான் அறிகிறேன். உம் கைகளில் குடிகொள்ளும் தெய்வங்களை வணங்குகிறேன்” என்று பீமனின் கைகளை எடுத்து தன் தலையில் வைத்தான்.

அவன் பின்னால் நின்றிருந்த அமைச்சர் கலிகர் “செல்வோம் அரசே, அவைப் பணிகள் பல உள்ளன” என்றார். “ஆம். மீண்டும் பார்ப்போம், வலவரே” என்ற பின் கீசகன் திரும்பிச்சென்றான். அவன் வெளியேறியதுமே அடுமனையாளர்கள் உவகைக் குரலுடன் பீமனை சூழ்ந்துகொண்டனர். சங்கதர் பீமனின் கைகளை பற்றிக்கொண்டு “செங்கோலுக்கும் மேல் செல்லும் அடுமனைக்கரண்டி என இன்று கண்டேன், வீரரே” என்றார். “அதற்கு அது வேள்விக்கரண்டி என்றாகவேண்டும்” என்றார் பூர்ணர்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16723 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>