Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16948 articles
Browse latest View live

லங்காதகனம் –கடிதம்

$
0
0

hanuman-ramesh-gorjala-

Hanuman Painting by Ramesh Gorjala

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன்  அவர்களுக்கு 

சிவப்பு நிறம் முழுமையாக  உயிர்பெற்ற அறை , அதில் பச்சை , சிவப்பு , கருமை , நீளம் , என்று  பல்வேறு நிறத்திலான வேஷ  முகங்கள் , அவற்றுள்  உயிர்கொண்டு திரும்பும் ஒரு மனித முகம் ,என்று , நிகரற்ற கலையான கதகளியின் தீவிரத்தையும்  , அதன் அழகியலையும் , அதில் ஒன்றற கலந்த ஒரு உன்னத கலைஞனின் இருப்பையும் , அழுத்தமாக  நம் மனதில் பதிவு செய்து , தொடங்குகின்றது கதை .

 

லட்சியவாதம் உச்சம் பெற்ற காலகட்டத்தில் , ஆற்றல்மிக்க  கதகளி கலையின்  அணைத்து நுட்பங்களையும் , வித்தையையும், அக்காலத்தின் உன்னத கதகளி கலைஞர்களிடம் கற்று தேர்ந்த கலைமைந்தன்  லங்காதகனம்  திரு.அனந்தன் நாயர் . அதே லட்சியவாதம்  கிட்ட தட்ட  முழுமையாக  வீழ்ச்சியடைந்த  இச்சமகாலத்தில் தானும் , தன் கலையும் , இச்சமூகத்தாரால்  அடையும் , அவமானம் , நிராகரிப்பு , வலி , கோபம் , போன்றவற்றை  ராமன்குட்டியிடம் மனவலியுடன் பகிர்ந்துகொள்கிறார் .

 

ஆசான்  40  ஆண்டுகளாய் அனுமனை  உபாசனை  செய்து வருகிறார்.

ஆசான் அவரை அக்கலைக்கும் , அதன்மூலமாக அம்மூர்த்திக்கும்  முழுமையாக  அர்ப்பணித்து , அம்மூர்த்தியை தன் உயிரில் , உடலில்  முழுமையாக ஆட்கொள்ள செய்து விட்டார் . அவர் இன்று இவ்வுலகில் வாழ்த்து கொண்டிருப்பது , கதகளி யில்  அனுமனுக்கு போடப்படும் 2 வேஷம் மூலமாக தான். ஒன்று  கோமாளியாகவும் , பக்தனாகவும்  வரும்  கரிவேஷம், மற்றொன்று  அனுமன் உக்கிரரூபியாக , அனுமன் தூதில் வரும் லங்காதகனம் காட்சி வேஷம் .

 

உக்கிரரூப  அனுமன் தான்  அனந்தன்  நாயரின்  இஷ்டதெய்வம் , அப்படிப்பட்ட உக்கிரமூர்த்தியாகவே  வாழ தீர ஆசை கொள்கிறார் , அது கதகளி மேடைகளில்  தான் சாத்தியப்படுகிறது , அதனால் தான்  உக்கிரரூபியாக  அவர் உருவெடுக்கும்  லங்காதகனக்  காட்சி  மேடைகளிலேயே  அவர்  உயிர்த்தெழுகிறார் . அந்த மேடை தான் அவர்  வாழும் இடம் , அந்த க்ஷணம்  தான் அவர் பிறப்பு  அர்த்தம் கொள்ளும் இடம் , அந்த உக்கிரரூபி வேஷத்திலேயே அவர் ஒரு மனிதனாக  உச்சம் பெறுவதை உணர்கிறார் .

 

அனால் அது அவர் அறிந்து போடும் வேஷம் , அதனாலேயே  ஆந்த உக்கிரரூபி வேஷத்தில்  அவர் அவரை அவராகவே உணர்கிறார் , அந்த உணர்வு அவர் மனதில் நீஙகா வெற்றிடத்தையும் , ஏமாற்றத்தையும் , தன் மூர்த்தி தன்னை இன்னும் ஆசிர்வதிக்கவில்லை  என்ற பெரும் மனக் குறையை   உருவாக்குகிறது , ஆசான் மனநிம்மதியற்று  உழல்கிறார் . அந்நிலையிலும் ஆசான்  காத்துகொண்டுஇருக்கிறார் ,என்றோ ஒரு நாள்  முழுமனதுடன் , முழுஆற்றலுடன் , தன் மூர்த்தியின் அனுக்ரகம் பெற , பூரணம் பெற்ற உக்கிரரூப அனுமனாக மாற காத்துகொண்டுஇருக்கிறார் .

 

அனால் நிஜவாழ்வில் , சமகால வாழ்க்கையில் , அனந்தன் நாயர், ஒரு சம்பிரதாய மனிதனாக வாழவில்லை , இங்கு அவர்  கரிவேஷ அனுமனாக வாழ்கிறார் , உடல் அசைவுகளையே  வேஷமாக கொள்கிறார் , அசைவுகளற்று  எப்படி  ஒரு பிறவிக்கு கதகளி கலைஞனால் வாழ முடியும் ,அதுவும் ஆசானால் எப்படி வாழ முடியும் .

ஆனால் அவ்வசைவுகளாலேயே  ஆசான் கேலி செய்யப்படுகிறார் , ஆழமான சீண்டலுக்கு ஆளாகிறார் , குரங்கு என்று ஏளனம் செய்யப்படுகிறார் .

 

அவரை அறியாமலேயே  கரிவேஷ அனுமனாக  வாழும் அவரை , அனைவரும் மரியாதையற்றே  நடத்துகின்றனர் , அவருக்கே அவர் மீது  வெறுப்பும் , கீழ்மையும்  உண்டாகிறது .  ஆனால் தன்னை அறியாமலேயே , தன்  உடல்மொழியாகிபோன  கதகளியின் ஆதாரமான  அசைவுகள் மூலம் , குரங்கு கடவுளின்  அனுக்ரகம்   பெற்றவராய்  நம்மை உணர வைக்கிறார் , ஆசான் .

 

மடத்தில் உள்ள  அனைவராலும்  ஆசான் ஏளனமாகவே  நடத்த படுகிறார் , குறிப்பாக இரவு உணவுக்காக  கையில் வாழை இலையுடன்  ஆசான் நின்றிருக்கும் காட்சி எவரையும் சலனப்படுத்தும் இடம் ,

 

உண்மையில் ஆசானுக்கு  அவர்  இப்படி நடத்த படுவது குறித்து வருத்தமும் , வலியும்  இருந்திருக்கலாம் , ஆனால் அவர் ஒருபோதும் அதை  மனதின் சோகமாக சேர்த்து வைப்பவர் இல்லை . அவர் இந்த கீழ்மை  மனிதர்களின் குணங்களை எல்லாம் என்றோ  தாண்டிவந்தவர் , அவருக்கு தெரியும் , அவர் கலைத்திறனுக்கு  முன் , இந்த காரியஸ்தனோ ,சுந்தரையரோ , சாம்பசிவனோ , இன்னும் எவரெவரோ , ஒரு பொருட்டே  இல்லை என்று, அதனால் தான் இத்தனை சீண்டல்களுக்கு பிறகும் ,அவர் அவராகவே வாழ்கிறார் , கரிவேஷதாரியாகவே வாழ்கிறார் , ஆம் ஆசானாகவே வாழ்கிறார் . அந்த சுய உணர்வு இருப்பதாலேயே,  திருவாதிரை  கதகளி ஆட்டத்திற்கு  அவர் வெறிகொண்டு தயாராகிறார் , ஊரார் கேலிக்கு , வெற்று பேச்சுக்கும்  செவிகொடுக்காமல் தன் கலையை  மேலும்  மகத்துவப்படுத்த  தவமேற்று   தயாராகிறார் , கரிவேஷ  அனுமன்  உக்கிரரூபியாக உருமாற  தயாராகிறார் , சிறு ஆட்டக்குறையும் அவரை அண்டாமல்  தயாராகிறார் , எவரையும் நம்பாமல் தன்னை தானே  சரிசெய்து  உன்னதத்திற்காக  தயாராகிறார் .

 

 

தன்னை உக்கிரரூப மூர்த்தியாக அவர் உணர்ந்த  நொடியில் , வானத்திற்கும் , நிலத்திற்கும்  பாய்ந்தபடி வாயுபுத்திரனாக  மேடையை அடைகிறார் , மேடையின் முன் யாரும் இல்லை , இருக்க வேண்டிய அவசியமும் இல்லை , அதை அவர் கவனிக்க போவதும் இல்லை , அங்கு

நிகழப்போவது , பூரணம் தவறாமல்  , தன் மூர்த்தியின்  அனுக்ரகம் வேண்டி  ஒரு மகா கலைஞன்  நிகழ்த்தும் , தாண்டவம் , பூர்ணசமர்பணம் .

 

மேடையை அடைந்ததும், தான் வாழ்வனைத்தும்  எண்ணற்ற களியரங்கங்களில்  ஆடிய லங்காதகனத்தை  அதன் முழு  தீவிரத்துடன்  ஆடிக்கொண்டிருக்கிறார் , மேடை முழுவது தாவி , குதித்து ,பாய்ந்து ,,,ஓடி,,, அம்மேடையையே   பரவசம் கொள்ள வைக்கிறார் , அப்படி ஒரு உச்ச தருணத்தில் , ஆசானின்  ஆடையின்  ஒரு நுனியில் நெருப்பு பற்றிவிடுகிறது , அந்நெருப்பு அவர் ஆடும் தீவிரத்தில் ,பக்கத்திலுள்ள ,பந்தல்கள் ,அதை தொடர்ந்து  வைகோல் போர் ,மடம் என்று பெரும் ஜுவாலை ஆக அக்னி பேருருவம் கொள்கிறது , அது லங்காதகனத்தின்  முழுமைபெற்ற காட்சி. ஆசான் அந்த அக்கினிஜுவாலையை பேரின்பத்துடன்  காண்கிறார் , அந்த பிரளயாகினியில் , செந்தழல் கிரீடமும் ,கதையும் ,ஜுவலிக்கும்  கவசமும் கொண்ட  அவர் மூர்த்தியின் உக்கிர திருவுருவத்தை காண்கிறார் ,அடுத்த நொடி , பூமியில் இருந்து விண்ணுக்கு தாவுவது போல , ஒரே தாவில் ,அந்த அக்னி மூர்த்தியிடம்  ஐக்கியமாகிறார் , அத்துணை வருடமாக ஆசானின் மனதில் சூழ்ந்திருந்த  சூனியத்தை செந்தழல் நெருப்பால்  இட்டு நிரப்பி , அவ் உக்கிரமூர்த்தி ஆசானுக்கு அனுக்ரகம்  அருள்கிறார் ,அஜ் ஜுவாலையிலேயே ஆசான் முக்தி அடைந்து ,  பூரணத்திற்கு உதாரணமாய் , சாகாவரம்  பெற்ற எண்ணற்ற கதகளி மேடைகளில் இனி ஏற்றப்படும் தூங்கா விளக்கின்  தீபஒளியில்  உயிர்கொள்கிறார் ,செந்தழல் மூர்த்தியாக ,லங்காதகனம் அனந்தன் நாயராக  , ஆசானாக ..

 

 

*

 

லங்காதகனம் கதையில் , ஆசான் மேடையை நோக்கி வருவதுடன் கதை முடியும் , அங்கு   இருந்து, ஒரு வாசகனின் கற்பனையும் , சிந்தனை வெளியும் கட்டற்று விரியும் , விஷ்ணுபுரத்தின் ஸ்ரீசக்கரம் போல , கொற்றவையில் தீராப்பசியுடன் பொங்கிவரும் ,தென் குமரி கடலலை போல.

 

அது போல  , லங்காதகனத்தின்  முடிவு ,ஆசான் இறந்தாரா , இல்லையா ,ஏன் இறக்க வேண்டும் , என பல்வேறு யூகங்கள் இருக்கலாம் ,,, அனால் உண்மையான கற்பனையும் ,யூகமும் விரிய வேண்டிய இடம் , அவர் இறந்தபின் உருவாகும்  சூழ்நிலைகள்  பற்றியதாக  இருக்க வேண்டும் .

 

 

நன்றி

வே .அழகு மணிகண்டன்

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அட்டைப்படங்களின் வரலாறு

$
0
0

devadevan1

தேவதேவனின் மின்னற்பொழுதே தூரம் தொகுப்புக்கு பிரமிள் வரைந்த பின்னட்டை

1992 ல் என்னுடைய திசைகளின் நடுவே சிறுகதைத் தொகுதியை அன்னம் மீரா [அகரம்] வெளியீடாக கொண்டுவந்தார். அதற்கு முன்னர் ரப்பர் நாவல் தமிழ்ப்புத்தகாலய வெளியீடாக வந்திருந்தது. அந்நூல் வெளிவர பவா செல்லத்துரை காரணம். திருவண்ணாமலை கலையிலக்கிய இரவில் அந்நூல் வெளியிடப்பட்டது.

அதன் அட்டையைப்பார்த்த இந்திரா பார்த்தசாரதி “இப்படி ஒரு அட்டையும் கட்டமைப்புமாக நூல் வெளிவருவதற்கு யோகம் வேண்டும்” என்றார். இன்று பார்ப்பவர்களுக்கு பெரிதாகத் தோன்றாது. அன்று மிக வசீகரமான அட்டையாக இருந்தது அது. காவடி கட்டி எடை தூக்கிச் செல்லும் ஒருவரின் படம் புகைமூட்டமாக தெரியும்.

devadevan2

அப்போதே வண்ண ஆப்செட் வந்துவிட்டிருந்தது. ஆனால் ஐம்பதாயிரம் பிரதிகளுக்குமேல் அச்சிட்டால்மட்டுமே அது கட்டுப்படியாகும்.. குமுதம் விகடன் அட்டைகள் வண்ண ஆப்செட்டில் வெளிவரும். ராணி வாராந்தரி அதன் ஆண்டுமலர்களை மட்டும் ‘ஆறுவண்ண ஆப்செட் அட்டைப்படம்’ என்று சொல்லி வெளியிடும். தொட்டுப்பார்த்தால் ஆறுவண்ணமும் கையிலேயே வரும். சாவி, இதயம்பேசுகிறது அட்டைகளில் இனிய வார்னீஷ் மணம் இருக்கும்.

அன்று புத்தகங்கள் சாதாரணமாக ஆயிரம் பிரதிகள் அச்சிடுவார்கள். ஐந்து ஆண்டுகளில் அவை விற்கும். பொதுவாக நூல்கள் ஆயிரம். சிற்றிதழிலக்கியம் என்றால் முந்நூறு. அதற்கு வண்ண அட்டை கட்டுப்படியாகாது.  நூலை அச்சிடுவதற்கு கட்டை அச்சுதான். அதாவது ஈய எழுத்துரு ஒட்டப்பட்ட விரல்நீளக் கட்டைகளை ஒரு தட்டில் எழுத்துவரிசையாக அடுக்கி இறுக்கி அதை அச்சியந்திரத்தில் பொருத்தி தாள்மேல் ஒற்றி அச்சுப்பதிய வைப்பார்கள். காலால் மிதித்து ஓட்டப்படும் அச்சியந்திரம் டிரெடில் எனப்பட்டது. மின்விசையால் இயங்குவதற்கும் அதே அச்சுமுறைதான்.

de

பிரமிள் வரைந்த அட்டைப்படம்

ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை டிரெடில். காலால் அச்சியந்திரத்தை மிதித்து ஓட்டி உழைத்துச்சாகும் தொழிலாளி பற்றிய ’முற்போக்குக்’ கதை.ஆனால் அந்த அச்சியந்திரத்தின் மாற்றமில்லாத ஓசை, ஒன்றே திரும்பத்திரும்ப நிகழ்வதன் சலிப்பு, தான் அச்சிடுவது என்ன என்றே தெரியாத பரிதாபம் என  அந்த டிரெடில் இயந்திரத்தை குறியீடாக ஆக்குவதன்மூலம் அக்கதையை பலதளங்களுக்குக் கொண்டு சென்றிருந்தார் அன்று சின்னப்பயலாக இருந்த ஜெயகாந்தன். [இருபத்தொரு வயது].

அன்று அச்சகங்களிலேயே அமர்ந்து மெய்ப்பு பார்க்கவேண்டும். அச்சுக்கோப்பவர்களிடமிருந்து வாங்கி அந்த எழுத்துத்தட்டை தாளில் ஒற்றி மெய்ப்புநோக்குபவரிடம் அளிப்பார்கள். மெய்ப்பு நோக்கியதும் அந்த தட்டை சற்று தளர்த்தி பிழையான எழுத்துக்களை எடுத்து அகற்றி சரியாக அமைத்து மீண்டும் அச்சு எடுப்பார்கள். மூன்றுமுறை பிழைபார்க்கப்படும். அச்சுக்கோப்பதும் பிழைநோக்குவதும் கடுமையான உழைப்புள்ள பணி.

அச்சு முடிந்ததும் எழுத்துக்களை தனித்தனியாகக் கழற்றி அடுத்த அச்சுக்குக் கொடுத்துவிடுவார்கள். ஆகவே மொத்த நூலையும் ஒரேயடியாக அச்சிட்டுவிடுவார்கள். இன்றுபோல தேவைக்கேற்ப அச்சிட முடியாது.டிரெடில் அச்சில் 8 பக்கங்களாக தாளை மடிப்பார்கள். மின்னச்சு எந்திரத்தில் 16 பக்கங்கள். இது ஒரு ஃபாரம் எனப்பட்டது. பதினாறின் மடங்குகளாகவே அன்று நூலின் பக்கங்கள் அமைந்திருக்கும்.

அந்த அச்சுக்கூடத்திலேயே பெரும்பாலும் அட்டைகளும் அச்சிடப்படும். ஆகவே அட்டை ஒற்றைநிறம்தான். நீலம், சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் அட்டைத்தாளை வாங்கி அதில் வேறு ஏதேனும் வண்ணத்தில் தலைப்பையும் படத்தையும் அச்சிடுவார்கள். படங்கள் அன்று பிளாக் எடுத்தல் என்னும் முறைப்படி  படங்கள் அச்சுக்குரிய வடிவாக ஆக்கப்படும். படத்தின்மேல் விழுந்த ஒளி ஓர் ரசாயனக்கலவையில் விழும். படத்தில் வெண்மையாக இருந்த இடங்கள் ஒளியை பிரதிபலிக்கும். அந்த ஒளிபட்ட இடங்களில் அந்த ரசாயனக்கலவையில் உள்ள ஈயம் பூமுட்களாக சென்று படியும். அதற்கு எதிர்பிரதி எடுப்பார்கள்.

athi

சு ரா ஆதிமூலம் வரைந்தது

பிளாக் என்பது ஒரு ஈயத்தகடு. அதில் அந்த படம் முள்முள்ளாக அமைந்திருக்கும். தொட்டுப்பார்க்கமுடியும். அதை எழுத்துரு போலவே தட்டில்வைத்து இறுக்கி மையில் ஒற்றி தாளில் அழுத்தினால் முட்கள் மையை பதியவைக்க சிறிய புள்ளிகளாக ஓவியம் தாளில் பதிந்திருக்கும். படங்கள்: புல்லரித்த சருமம் போல புள்ளிகளாகத் தெரியும்.. தரமான தாளும் மையும் இல்லையேல் புகைப்படங்கள் கரிப்படங்களாக இருக்கும். தினதந்தி கரிப்படங்களுக்கு புகழ்பெற்றது.

ஆனால் கோட்டோவியங்கள் தெளிவாக அமையும். ஆகவே அன்றெல்லாம் புத்தக அட்டை கோட்டோவியங்கள்தான். ஈஸ்வர் என்ற ஒருவர் ஒரே மாதிரி வரையும் மூக்குமுழி ஓவியங்கள்தான் பெரும்பாலான வணிக எழுத்துக்களின் அட்டைகளை அலங்கரிக்கும். லதா, மாருதி போன்றவர்களின் கோட்டுப்படங்களும் புகழ்மிக்கவை.

கோட்டோவியத்தை ஒருவண்ணத்திலும் தலைப்பை இன்னொரு வண்ணத்திலும் அமைக்க அட்டையை இருமுறை அச்சிடவேண்டும். அதிகபட்சம் மூன்று வண்ணங்கள் அட்டையில் இருக்கும்.திசைகளின் நடுவே உண்மையில் சிவப்பு, நீலம் என இரு வண்ணங்கள் மட்டும் கொண்ட அட்டை. ஆனால் ஒரே படத்தை இருவண்ணங்களில் பிளாக் செய்து இருமுறை மேல்மேலாக அச்சிட்டு ஒரு நவீனக் கலையழகை உருவாக்கியிருந்தனர். அத்துடன் அதற்கு பாலிதீன் மேலொட்டும் இருந்தது. அன்று அட்டைகளில் அது மிக அரிது. ஆகவே அட்டை பிரமிப்பூட்டியது.

adhi

கே.எம்.ஆதிமூலம்

அன்றெல்லாம் சிற்றிதழ் எழுத்தாளர்களின் நூல்கள் மிக எளிமையாக இருக்கும். அட்டைத்தாள் ஒருவண்ணம், அச்சிடும் எழுத்து இன்னொரு வண்ணம்- அவ்வளவுதான். பலநூல்கள் எளிமையான கருப்புவெள்ளை நிறம்தான். அதற்குள் அன்று சோதனைகள் செய்தார்கள். கையாலேயே மரத்திலும் பழைய ரப்பர்செருப்பிலும் ஓவியங்களைச் செதுக்கி அச்சிடப்பட்ட அட்டைகள் வந்தன. ஸ்கிரீன்பிரிண்டிங் என்னும் முறையில் அட்டைகள் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன.

சமீபத்தில் என் நூலகத்தின் பழைய அட்டைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று சற்று வியந்த அட்டைகள் சில. மிகச்சாதாரணமாக தோன்றியவை பல. இன்று அதற்குள் அவை வரலாற்றுத் தடையங்களாக, சிந்துவெளி மண்சிலைகள் போல தொன்மையானவையாக ஆகிவிட்டிருக்கின்றன.

pramil

பிரமிள்

அன்றைய அட்டைகளில் ஆதிமூலம் வரைந்தவற்றை இன்று எவராவது சேமித்து ஆவணப்படுத்துவது நன்று. பல வகையான சோதனைமுயற்சிகளை எழுத்துருக்களிலும் ஓவியங்களிலும் ஆதிமூலம் செய்திருக்கிறார். அவை ஒரு காலகட்டத்தின் காட்சிப்பதிவுகள். அதேபோல பிரமிள் வரைந்த அட்டைகள். அவற்றைப்பார்த்தாலே பிரமிள் எனத் தெரியும். ஒருவகை மூர்க்கமும் பயிலாததன்மையும் அவற்றில் இருக்கும். லயம் வெளியீடாக வந்த பலநூல்களுக்கு பிரமிள் வரைந்துள்ளார். குறிப்பாக தேவதேவன் நூல்களுக்கு.

நாம் எளிதில் வரலாற்றை குப்பைக்கூடைக்குள் செலுத்தும் மக்கள். இந்த பத்தாண்டுகளுக்குள் இந்த அட்டைகள் ஆவணப்படுத்தாவிட்டால் அவை ஆய்வுக்கும் எஞ்சாமலாகிவிடும். ஏனென்றால் அன்று முந்நூறு பிரதி அச்சிடப்படும் நூல்களில் நூறுபிரதிகளே விற்கும். எஞ்சியவை எங்கோ சென்று மறையும். அது ஒரு காலக்கருஞ்சுழி.

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54

$
0
0

53. உடனுறை நஞ்சு

flowerமீண்டும் ஒரு தோல்வி. ஆனால் விராடருக்கு அது உவகையளிப்பதாகவே இருந்தது. மீசையை நீவியபடி “தோல்வியை நான் முன்னரே உணர்ந்திருந்தேன், குங்கரே. ஆனால் இவ்வண்ணம் தோற்பேன் என நினைக்கவில்லை. இது ஒரு கல்வியே” என்றார். குங்கன் சிரித்து “தோல்விகளை அவ்வாறு எண்ணிக்கொண்டால் துயரில்லை” என்றான். “நான் இந்த நாட்டில் எவரிடமும் சூதில் இனி தோற்கப்போவதில்லை. அது என் வெற்றி. நான் எத்தனை முயன்றாலும் உங்களை வெல்லப்போவதில்லை, ஆகவே அது தோல்வியும் அல்ல” என்றார் விராடர்.

ஏவலன் வந்து வணங்கி “அமைச்சர் ஆபர்” என்றான். விராடர் குங்கனைப் பார்க்க அவன் “வரச்சொல்” என்றான். ஏவலன் வணங்கி திரும்பிச்செல்ல “அவரைப்பார்த்தே நெடுநாட்களாகின்றன. கடந்த சிலநாட்களாக நான் அரண்மனைவிட்டு அவைக்குச் செல்லவே இல்லை” என்றார் விராடர். “ஆம், அறிவேன்” என்றான் குங்கன். “எப்படி செல்ல? இங்கே நம் ஆட்டம் முடிவதற்கே விடியலாகிவிடுகிறது. அதன்பின் சற்று ஓய்வெடுத்தால் மற்றொருநாள்… நான் உத்தரையையும் உத்தரனையும் பார்த்து அதைவிட நாளாகின்றது” என்றார் விராடர். மீசையை நீவி அறைவாயிலை நோக்கி “எதற்காக வருகிறார்?” என்றார்.

“ஏதேனும் அவைச்செய்தி உரைத்து ஓலைச்சாத்து பெறவேண்டியிருக்கும்” என்றான் குங்கன். “ஓலைச்சாத்தே இப்போது தேவைப்படுவதில்லை. கீசகனிடமே முத்திரைக்கணையாழியை கொடுத்துவிட்டேன்” என்றார் விராடர். “அதற்கு அரசி என்னை வசைபாடினாள். அவள்தான் இளையவனை அங்கே அமர்த்தும்பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இரவெல்லாம் பேசியவள். பெண்களின் உள்ளங்கள் எளிதில் மாறிவிடுகின்றன.” குங்கன் “அவர்களின் மைந்தனை எண்ணி அஞ்சுகிறார்கள் போலும்” என்றான். “ஆம், ஆனால் அவனை என்ன செய்யமுடியும்? ஆணிலி” என்றார் விராடர்.

அமைச்சர் ஆபர் வந்து வணங்கி முகமனும் வாழ்த்தும் சொன்னார். அவரை அமரும்படி விராடர் கைகாட்டினார். அவர் அமர்ந்து களம்வரைந்த மென்பலகையை மடித்து அப்பால் வைத்து காய்களைத் திரட்டி சிறுபேழையில் வைத்துக்கொண்டிருந்த குங்கனைப் பார்த்தார். “அவர் இருக்கட்டும், அவரில்லாமல் நான் எதையும் எண்ணுவதே இல்லை” என்றார் அரசர். “இல்லை…” என அவர் தயங்க “சொல்லும், அமைச்சரே” என்றார். ஆபர் துணிவுகொண்டு “இதை அமைச்சர்கள் கூடி தங்களிடம் வந்து சொல்ல விழைந்தோம். ஆனால் அவ்வண்ணம் சொல்வது கீசகர் காதுகளுக்கு செல்லும் என்பதனால் என்னை மட்டும் அனுப்பினார்கள். நான் இதைச்சொல்ல பலநாட்கள் காத்திருந்தேன்” என்றார்.

ஆர்வமில்லாமல் ஏப்பம் விட்டு “என்ன?” என்றார் விராடர். “அரசே, தாங்கள் அவைமறந்து நெடுநாட்களாகின்றன.” விராடர் “மறக்கவில்லை, இங்கே எனக்கு பொழுதில்லை. மேலும் அங்கு நிகழ்வன அனைத்தையும் நான் கீசகனிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றார். “அதைப்பற்றித்தான் பேசவந்தேன்” என்றார் ஆபர். “அரசே, நேற்றுமுன்னாள் நம் அரசவைக்கு கலிங்க அரசர் ருதாயுவிடம் இருந்து ஓர் ஓலை வந்தது. அதை தாங்கள் அறிவீர்களா?” விராடர் “நாள்தோறும் நூறு ஓலைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்கமுடியுமா?” என்றார்.

“அரசே, இது முதன்மைச்செய்திகொண்ட ஓலை. உங்கள் நேர்விழிக்கு மட்டும் என மேலரக்கு போடப்பட்டது.” விராடர் “என்ன சொல்லவருகிறீர்? எல்லா ஓலைகளையும் கீசகனே நோக்கட்டும் என ஆணையிட்டவனே நான்தான்” என்றார். “அரசே, அந்த ஓலையின் கருத்தை நான் அறிவேன். இளவரசர் உத்தரருக்கு கலிங்க இளவரசியை மணமுடித்து அளிக்க அவர்கள் விழைவதைச் சொன்னது அது.” விராடர் “அது முன்னரே பேசப்பட்டுக்கொண்டுதானே உள்ளது?” என்றார். “ஆம். முன்பு பேசப்பட்டது கலிங்க அரசர் ருதாயுவுக்கு நிஷாதகுலத்து அரசி சௌமினிதேவியின் மகள் பத்மினியை. அதனால் நமக்கு அரசியல் நேட்டம் ஏதுமில்லை. இப்போது அவர்கள் சொல்வது அரசருக்கு வங்கநாட்டு பட்டத்தரசி குசுமவதிக்கு பிறந்த மகள் சாலினியை. அது நம்மை அவர்கள் நிகரென்று அறிவிப்பது. நம் அரசுடன் அழியாத குருதியிணைப்பை அவர்கள் தொடங்குகிறார்கள்.”

“ஆம், ஆனால் அவர்கள் இதுவரை நமக்கு செவிகொடுக்கவில்லை. நம் இளவரசர் கரியபுரவியில் நகர்வலம் வந்த செய்தியை ஒற்றர்வழி அறிந்து இம்முடிவை எடுத்துள்ளனர்.” விராடர் சிரித்து “அந்த குதிரைக்காரன், அவன் பெயர் என்ன…? கிரந்திகன், அவன் இருக்கும் வரைதான் இவன் புரவியூர்வான். அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா?” என்றார். ஆபர் பொறுமையை இழக்காமல் “அரசே, அவர்களின் எண்ணம் பிறிதொன்று. கலிங்க இளவரசன் ஆதித்யதேவனுக்கு நம் இளவரசியை மணம்புரிந்து கொடுக்கவேண்டும். இரு மணங்களும் ஒரே வேள்விப்பந்தலில் நிகழவேண்டும்…” என்றார்.

விராடர் குங்கனை நோக்கிவிட்டு “அப்படியெல்லாம் சொன்னால்…” என்றார். ஆபர் “நமக்கு வேறு வழியே இல்லை… கலிங்கத்துடனான உறவு நம்மை வலுப்படுத்தும். நம் இளவரசரின் முடியுரிமை உறுதியாகும்” என்றார். “அப்படியென்றால் நிகழட்டுமே… ஓலை அனுப்ப கீசகனிடம் சொல்வோம்” என்றார் விராடர். “அந்த ஓலையை கீசகர் நேராக இளவரசியிடம் அனுப்பி அவர் எண்ணத்தை கோரினார். அவர் சினந்து ஓலையைக் கிழித்துவீசி அதை கொண்டுசென்ற தூதனை அடிக்க கையோங்கினார்… கீசகர் நேரில் சென்று இளவரசியிடம் அவர் எண்ணத்தை கேட்டார். கலிங்க இளவரசனுக்கு துணைவியாவதைவிட உயிர்விடுவேன் என்று இளவரசி சொன்னார். தங்கள் விழைவைமீறி ஒன்றும் நிகழாது இளவரசி என்று சொல்லி இளவரசி உத்தரைக்கு கலிங்க இளவரசனை ஏற்பதில் ஒப்புதலில்லை என்று மறுமொழி அனுப்பிவிட்டார் படைத்தலைவர் கீசகர்.”

விராடர் முகவாயின் மயிர்க்குச்சத்தை அளைந்தபின் குங்கனை ஒருமுறை நோக்கிவிட்டு “ஏன் அப்படி சொன்னாள்? கலிங்க இளவரசன் ஷத்ரியன், நாடாளவிருப்பவன்” என்றார். “அரசே, உங்களுக்கு இன்னமும் இச்செய்தி வந்துசேரவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இளவரசி அந்த ஆணிலி மேல் காதல்கொண்டிருக்கிறார்.” விராடர் சிரித்து “ஆணிலி மேல் காதலா? விந்தையாக இருக்கிறதே” என்றார். திரும்பி குங்கனிடம் “ஆணிலிமேல் பெண்கள் காதல்கொள்வதுண்டா? நீர் என்ன எண்ணுகிறீர், குங்கரே?” என்றார்.

குங்கன் “ஆணிலிகளை பெண்டிர் விரும்புவர். அது அவர்கள் விரும்பும்படி சமைக்கப்பட்ட உணவு” என்றார். விராடர் உரக்க நகைத்தார். ஆபர் பொறுமையிழந்து “நான் சொல்ல வந்தது என்னவென்றால்…” என்றார். “நீர் சொன்னதை முழுமையாகவே புரிந்துகொண்டேன். செல்க! நான் இதை குங்கரிடம் பேசி என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கிறேன்” என்றார் விராடர். “அரசே…” என்று ஆபர் மேலும் சொல்லத் தொடங்க “செல்க” என்றார் விராடர். குங்கனிடம் “நாம் இன்னொரு முறை அமர்வோம். இம்முறை நீங்கள் களிறு” என்றார்.

ஆபர் முகம் சிவக்க சிலகணங்கள் அமர்ந்திருந்துவிட்டு “நான் செல்வதற்கு முன் ஒரு நீண்ட கதையைச்சொல்ல விரும்புகிறேன்” என்றார். “கதையா?” என்ற விராடரின் முகம் மாறியது. “என் ஆணையை மீறுகிறீரா?” என்றார். ஆபர் எழுந்து தன் தலைப்பாகையைக் கழற்றி அருகே வைத்தார். இடைக்கச்சையையும் கைகளில் இட்டிருந்த கங்கணத்தையும் கணையாழியையும் கழற்றி அதனருகே வைத்தார். “பொறுப்பு துறக்கிறீரா? கானேக எண்ணமா?” என்றார் விராடர் ஏளனத்துடன். “நான் உங்கள் ஆணையை மீற இனி தடையில்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டாக வேண்டும்” என்றார் ஆபர். பொறுமையிழந்து எழுந்து “கேட்கவில்லை என்றால்? எனக்கு வேறு பணி உள்ளது. வெளியேறுக!” என்றார் விராடர்.

ஆபர் தாழ்ந்தகுரலில் “தீர்க்கபாகு, அந்த இருக்கையில் அமர்க!” என்றார். விராடர் நடுங்கி “நான்…” என்றார். “அந்தணன் மொழி இது. பாரதவர்ஷத்தை ஆளும் வேதங்களின் சொல். அமர்க!” விராடர் உடல்நடுங்க அமர்ந்துகொண்டார். “நான் சொல்லப்போவது அறிவுரை. என் முன் மாணவன் நீ. எடு உன் தலைப்பாகையை. உன் கணையாழியையும் கச்சையையும் அகற்று!” விராடர் கணையாழியை உருவியபோது அது இறுகியிருந்தது. குங்கனை நோக்கி திரும்பி “அகற்று!” என்று ஆபர் உரத்தகுரலில் சொன்னார். “இதோ” என்று சொன்ன குங்கன் ஒரு பட்டுத்துணியை அவர் விரல்மேல் போட்டு கணையாழியை அதனூடாக இழுத்து எடுத்தான். “நீ சூதனா?” என்றார் ஆபர். “ஆம்” என்றான் குங்கன். “என் காலடியில் தரையில் அமர்ந்துகொள். இருவருக்குமான சொற்கள் இவை.” குங்கன் தரையில் அமர்ந்தான்.

“நளமாமன்னரின் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்… அவர்கள் காடேகியதை உங்களுக்கு சொல்லப்போகிறேன்” என்றார் ஆபர். “நான் முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றார் விராடர். “நீ கேட்டிருப்பாய். இவன் முழுமையாக கேட்டிருக்கமாட்டான். இவன் கேட்டாகவேண்டிய கதை இது” என்ற ஆபர் குங்கனை கூர்ந்து நோக்கி “இப்புவியில் எக்கதையும் புதியதல்ல என்று அறிவாயா?” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். “ஆகவே, எதுவும் மீண்டும் நிகழும் என்றறிக!” என்றார் ஆபர்.

flowerகோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் நடுவே விரிந்துள்ள பெருநிலத்தை வானில் கருமுகில் வடிவில் நின்று ஆண்டவள் பேரன்னை ஒருத்தி. அவளை அவர்களின் மூதாதையர் நூறுமுலைக்காம்புகள் கொண்ட அடிவயிறும் செங்கனல்போன்ற விழிகளும் இருபிறைநிலவுகள் போன்ற தேற்றைகளும் கொண்ட பெரும்பன்றி என்று வழிபட்டனர். காளி, கூளி, கராளி என்று நூறுபெயர்கள் அவளுக்கு இடப்பட்டன.

வானில் அவள் உறுமலோசை எழுந்தபோது அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து நின்று மேல்நோக்கி கைகூப்பி வாழ்த்தினர். மண்ணில் நெற்றிபட விழுந்து வணங்கினர். அன்னையின் நூறுமுலைக்கண்களும் சுரந்து பெய்த அமுதை இருகைகளாலும் அள்ளி தங்கள் மைந்தருக்கு ஊட்டி அருந்தினர். அன்னையின் கருணை அவர்களைச் சூழ்ந்து காடென்று பசுமைகொண்டது. ஓடைகளும் சுனைகளுமாயிற்று. காடுகளில் கனியும் ஊனும் விளைந்தன. நீரில் மீன்கள் பெருகின. அவர்கள் அன்னைக்கு மட்டுமே கடன்பட்டிருந்தனர்.

அன்னையின் குரலைக்கேட்ட காதுகள் கொண்டவர்கள் என்பதனால் அவர்கள் தங்களை கர்ணிகள் என்றனர். நூறுகுலங்களாகப்பிரிந்து மலைச்சரிவுகளிலும் செறிகாடுகளிலும் பெருநீர்ச்சதுப்புகளிலும் மணல்வெளிகளிலும் கடலோரங்களிலும் அவர்கள் பரவினர். கடல் அலைமேல் ஏறிச்சென்று மீன்கொண்டனர். நதிகளில் படகுகள் ஓட்டினர். மண்திருத்தி விளைபெருக்கினர். நாளடைவில் நூறுகுலங்களும் ஒருவருக்கொருவர் பூசலிடலாயினர். பொருள்கொண்டு செல்லும் படகுகளை வேட்டுவர் தாக்கி கொள்ளையிட்டனர். விளை அறுத்து களஞ்சியம்நிறைத்த கர்ணிகளை பாலைநிலத்தவர் வந்து சூறையாடிச் சென்றனர். ஒருவருக்கொருவர் போரிட்டழிந்த அவர்களை தெற்கில் திருவிடத்திலிருந்தும் வடக்கே தண்டகத்திலிருந்தும் அயலவர் படைகொண்டுவந்து வென்று கொள்ளையிட்டுச் சென்றனர்.

அள்ளிக்கொடுக்கும் அன்னைமுலைக்குக் கீழே பசியும் நோயும் கொண்டு அம்மக்கள் வருந்தினர். நூறாண்டுகாலம் அன்னையர் வீழ்த்திய கண்ணீரை விண்நிறைந்திருந்த அவர்களின் பேரன்னை கேட்டாள். அவள் கனிந்தமையால் அவர்களின் குடிகளில் ஒன்றில் சிஷுகன் பிறந்தான். தன் வீரத்தால் அவர்களில் முதல்வனானான். ஷத்ரியகுலங்களை வென்று குருதியாடியபடி பாரதவர்ஷத்தை அளந்துகொண்டிருந்த பரசுராமரைப்பற்றி அறிந்து அவரைத் தேடிச்சென்று அடிபணிந்தான். அவர் அவனை அனல்முன் நிறுத்தி அந்தணன் ஆக்கினார். சதகர்ணிகள் ஷத்ரியப்பெருங்குடிகளுக்கு எதிரான அந்தண அரசர்களாகத் திகழவேண்டும் என அவர் ஆணையிட்டார்.

தர்ப்பைப்புல்லில் அனலும் நாவில் வேதமுமாக வந்த அவனை அவன் குடியினர் முழுமையாக பணிந்து ஏற்றுக்கொண்டார்கள். தன் கருணையாலும் கருணையின்மையாலும் சிஷுகன் நூறு குலங்களை இணைத்தான். கர்ணிகளில் முதன்மையான குடியான பிரீதர்கள் வடக்கே இன்று மாளவத்தில் இருக்கும் பிரீதகிரி என்னும் குன்றின் அடிவாரத்தில் வாழ்ந்தவர்கள். பிரீதகிரியின் உச்சியில் அவர்களின் குடித்தெய்வமாகிய மாகாளையின் பெருஞ்சிற்பம் ஒன்றிருந்தது. பன்னிரு ஆண்டுகளுக்கொருமுறை அங்கே கர்ணிகள் கூடி தலையெண்ணிப் பலியிட்டு அக்காளையை வழிபடுவதுண்டு.

அங்கே ஒரு குலக்கூடலை சிஷுகன் ஒருங்கிணைத்தான். அதில் நூறுகுலங்களின் தலைவர்கள் கூடி வாள் ஏந்தி அவனை தங்கள் அரசன் என்று தேர்ந்தெடுத்தனர். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தங்கள் குடிக்கோல் தாழ்த்தி அரசனைத் தேர்ந்தெடுக்கும் முறை அவ்வாறு உருவானது. நூறுகுலங்களின் தலைவனாகிய அவன் சதகர்ணி என அழைக்கப்பட்டான். அவ்வூரே சதகர்ணிகளின் முதல்தலைநகர் என்றானது. அதை பிரதிஷ்டானபுரி என்றழைத்தனர். சதகர்ணிகளின் குலமுத்திரையாக மாகாளைவடிவமே நிறுவப்பட்டது. அவகளின் கொடியிலும் தேர்நெற்றியிலும் கால்மடித்தமர்ந்த மாகாளை பொறிக்கப்பட்டது.

சதகர்ணிகள் ஒருங்கிணைந்தபோது சூழ்ந்திருக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் சென்றன. வடக்கே பரசுராமனால் அனல்குலத்து அந்தணர்கள் என்றாக்கப்பட்டு வத்ஸகுல்மத்தை ஆண்ட வாகடகர்கள் முதல் தெற்கே வெண்கல்நாட்டை ஆண்ட பல்லவர்கள் வரை அவர்களுக்கு கப்பம் கட்டினார்கள். அஸ்மாகர்களும் சாளுக்கியர்களும் அவர்களிடம் பணிந்தனர். தான்யகடகமும் இந்திரகீலமும் ராஜமகேந்திரபுரியும் அவர்களுக்குரியதாயின. அந்நகர்முகப்புகளில் மாகாளையின் பேருருவச்சிலைகள் அமைக்கப்பட்டன. சிந்துகன், ஷிப்ரகன் செஸ்மாகன், சூத்ரகன், சுரகன் என தொடர்ந்த மாவீரர்களின் நிரையால் அவர்களின் கொடி கடல்முதல் கடல்வரை பறந்தது.

பின்னர் வடக்கே மகதமும் மேற்கே மாளவமும் கிழக்கே கலிங்கமும் ஆற்றல்கொண்டபோது சதகர்ணிகள் தெற்கே சென்றனர். அவர்களின் இரண்டாவதுதலைநகராக இருந்த வெண்கல்நாட்டு அமராவதியை மையமாக்கினர். அவர்களின் அரசனான பதினெட்டாவது சிந்துகரை மாமன்னர் நளன் வென்றார். அவர்கள் அங்கிருந்து பின்வாங்கி தெற்கே ரேணுநாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். சிந்துகரின் மைந்தர் சுகர்ணர் ஏழுமுறை வாகடர்களையும் பல்லவர்களையும் திரட்டியபடி படைகொண்டுவந்தாலும் மீண்டும் மீண்டும் நளனின் புரவிப்படையால் தோற்கடிக்கப்பட்டனர்.

flowerசுகர்ணனின் பேரமைச்சர் சுசீலர் மறைந்தபோது அவர் மைந்தர் சுமத்ரர் கங்கணம் சூடினார். தென்னாட்டில் காஞ்சியில் பதினெட்டாண்டுகள் அரசநூலும் நெறிநூலும் காவியமும் கற்றுவந்த அவர் ஒவ்வொரு நாளுமென தென்னாட்டு அரசியலை கூர்நோக்கிக் கொண்டிருந்தார். “ஒவ்வொரு அரசுக்கும் வீழ்ச்சியின் தருணமொன்று உள்ளது அரசே, அதை கண்டடைந்து அப்போது தாக்கினாலொழிய நாம் அவர்களை வெல்லமுடியாது” என்றார். “மிகப்பெரிய கட்டடங்கள் வீழ்வதெப்படி என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. கட்டி எழுப்பப்படும் அனைத்துக்குமே அந்நெறிகள் பொருந்தும்.”

“ஏழுநெறிகள் அவை” என்று சுமத்ரர் சொன்னார். “அடித்தளம் தாளாத மேற்கட்டு. அடித்தளம் இடும்போது எத்தனை பெரிதாக அக்கட்டு எழுமென்று எண்ணியிருப்பவர் சிலரே. ஏனென்றால் தங்கள் பெருவிழைவையும் ஆணவத்தையும் எவராலும் அளவிட்டுக்கொள்ள இயலாது. எங்கு நிறுத்தவேண்டும் என்று அறிதலும் எளிதல்ல. ஏனென்றால் விரிசல் எழுவதற்கு முந்தைய கணம் வரை ஆயிரமாண்டுகாலம் விந்தியமலைமுடிகள் என நிற்கும் அக்கட்டு என்றே தோன்றும்.”

“அதன் உடல்கட்டு அதன் பொருண்மையை தாளமுடியாது விள்ளலிடுவது இரண்டாவது” என்றார் சுமத்ரர். “இங்குள்ள ஒவ்வொருபொருளையும் ஒன்றெனக் கட்டியுள்ளது அப்பொருளுக்குள் உறையும் விசைகளே. நீர்த்துளியை பாறைகளை மலைகளை. கல்லின்மேல் கல்லையும் சுவர்கள்மேல் கூரையையும் அவையே நிலைநிறுத்துகின்றன. அவ்விசைகள் எத்தனை எடைதாங்குமென்று எவராலும் அறியக்கூடுவதில்லை. ஏனென்றால் முதலில் ஒவ்வொரு முறையும் எண்ணியதைவிட கூடுதல் எடைதாங்குவது அது என்றுதான் தோன்றும். எடைமீறி அவ்விசைச்சரடு அறுபடும் கணம் வரை.”

“உள்ளிருந்து பிறிதொன்று எழுவதனால் கட்டமைவுகள் சிதையும் என்பது மூன்றாம் நெறி. அரசே, அரண்மனைகளையும் கோட்டைகளையும் மட்டுமல்ல பெரும்பாறைகளையும் சிதைக்கின்றன ஆலமரவேர்கள்” என்றார் சுமத்ரர். “அருகே பிறிதொன்று சரிவதன் அதிர்வால் கட்டமைவுகள் வீழும் என்பது நான்காம் நெறி. அக்கட்டடத்தை அமைத்த பொருட்களின் நிகரின்மையால் அவை சரியும் என்பது ஐந்தாம் நெறி. அரசே அறிந்திருப்பீர்கள், கருங்கல் கட்டடத்தில் அமைந்த மணல்கல் எடைதாளாமல் உதிர்ந்தழியும். அக்கட்டடத்தை இழுத்துச்சரிக்கும்.”

“ஆறாவது நெறி கால உருவம்கொண்டு வரும் நீரும் காற்றும். எளிய நீர்த்துளி ஊறி ஆழ்ந்துசென்று தன் வழியை அமைக்கிறது. அவ்வழி பிளவென்று பெருகுகிறது” என்றார் சுமத்ரர். “ஏழாவது நெறியே முதன்மையானது. தன்மேல் எதையும் எப்போதைக்குமென சூடியிருக்க மண்மகள் விரும்புவதில்லை. பெருமலைகளே ஆயினும் எழுந்தவை அனைத்தும் சரிந்தே ஆகவேண்டும்.”

அவை அவர் சொல்லப்போவதைக் கேட்டு அமர்ந்திருந்தது. “நிஷாதர்களின் இவ்வரசின் ஆற்றல்குறைகள் எவை? இறுதிக்குறை எவருக்கும் உள்ளது. முதல்குறையே முதன்மையானது. அவையோரே, அதன் அடித்தளம் நிஷாதனாகிய நளனால் உருவாக்கப்பட்டது. அதன் மேற்கட்டு ஷத்ரிய அரசியால் எழுப்பப்படுகிறது. நிஷாதனுடையது விழைவு. ஷத்ரியர் பெருவிழைவால் ஆனவர்கள்.” அரசன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“இரண்டாவது குறை எழுந்துகொண்டிருக்கிறது நிஷதபுரியில்” என்றார் சுமத்ரர். “குலங்களை ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பாரதவர்ஷத்தின் பேரரசுகள் அனைத்தும் தோன்றின. ஜனபதங்கள் என அவை அழைக்கப்பட்டன. குலசேகரர்கள் கோல்கொண்டு ஆளும் எந்நாடும் உறுதியுடன் அமைந்ததில்லை. குலப்பூசல்களை குலப்பூசலால் தீர்க்கும் முறையையே அங்கே ஆட்சி என்கிறார்கள். பாறைகளுக்கு மாறாக ஆமைகளை அடுக்கி கோட்டை எழுப்புவது அது.” குலத்தலைவர்கள் சிலர் மெல்ல ஏதோ சொன்னார்கள். அதை செவிமடுக்காமல் சுமத்ரர் தொடர்ந்தார்.

“எந்த அரசு குலத்தலைவர்களால் நீக்கப்பட முடியாத அரசனை அடைகிறதோ அதுதான் பாரதவர்ஷத்தை வென்று ஆள்கிறது. மகதம், அஸ்தினபுரம், பாஞ்சாலம் அனைத்தும் அவ்வாறே. நிஷதபுரியின் அரசன் தன்னை முற்றரசன் என்று ஆக்கிக் கொள்ளாமல் நாட்டை விரிக்கிறான். அவையோரே, அந்நாட்டை கட்டிவைத்திருந்த விசைகள் எதிரிகள்மீதான அச்சம், குடிப்பெருமை, வெற்றியால் வந்துசேரும் செல்வம் ஆகிய மூன்றும். இன்று அந்த விசைகளை மீறிச்செல்கிறது நிஷதகுடிகளின் ஆணவம். அங்கே குடிப்பூசலெழுந்துள்ளது. அது நிஷதபுரியை பிளந்து சரியச்செய்யும்.”

அவை மெல்ல அசைந்தது. பெருமூச்சுகள் ஒலித்தன. “நாம் அதற்கு காத்திருக்கவேண்டுமா?” என்றான் அரசன். “ஆம். விரிசல்களுக்கு மாறா இயல்பென்று ஒன்று உண்டு, அவை வளர்ந்தேயாகவேண்டும். விரிசல் கண்டு அரசி அஞ்சுவார். அதை சீரமைக்க முயல்வார். அம்முயற்சிகளால் விரிசல் பிளவென்றாகும். நாம் நுழைய இடைவெளி திறக்கும்வரை பொறுத்திருப்போம்” என்றார் சுமத்ரர். “நிஷதமன்னன் நளன் செய்த பிழை தெற்கே நம்மை முற்றழிக்காமல் வடக்கே படைகொண்டு சென்றது. எதையும் முழுமையாக வெல்லாமல் எஞ்சவிடுவது. ஷத்ரியர்கள் நஞ்சையும் எரியையும் எஞ்சவிடுவதில்லை. நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் விலங்குகளைப்போல. அவை புல்லையும் மரத்தையும் இரைவிலங்குகளையும் முற்றழிப்பதில்லை.”

“இன்று மாளவனும் மகதனும் கலிங்கனும் வங்கனும் அவனுக்கு எதிரிகளென்றாகி விட்டனர். அவர்களின் சூழ்ச்சியால் புஷ்கரன் உளம்திரிந்துள்ளான். அவனுள் செலுத்தப்பட்ட நஞ்சு அரசி என்றும் அவைத்துணைவன் என்றும் உடனுறைகிறது” என்று சுமத்ரர் தொடர்ந்தார். “இனி தமயந்தி செய்வதற்கொன்றே உள்ளது. நளனை பேரரசன் என்று இந்திரபுரியில் கோல்கொண்டு அமரச்செய்யவேண்டும். நிஷதகுடிகள் அனைத்தும் அவனை முற்றரசன் என, மறுசொல்லற்ற மண்ணிறை என ஏற்கவைக்கவேண்டும்.”

“அது எளிதா என்ன?” என்றான் அரசன். “ஆம், தொன்றுதொட்டு வரும் வழிமுறைகள் சில உள்ளன. அஸ்வமேதம் ஒன்றை முடிப்பது. அது குடிகளின் குலப்பெருமையைத் தூண்டும். ஒவ்வொருநாளும் புரவியின் வெற்றிச்செய்தி நகர்நுழையவேண்டும். தெருக்களில் வாகைவிழா நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். செவிகளில் சூதர்பாடல்கள் ஓயலாகாது. குடிகளின் ஆணவம் பெருகிப்பெருகி உச்சத்தை அடையும்போது அஸ்வமேதம் முடிந்து ராஜசூயம் தொடங்கவேண்டும். அரசக்கருவூலம் திறந்து பொன்னும் பொருளும் மக்களைநோக்கி பாயவேண்டும். தற்பெருமையும் தன்னலமும் கலந்து மக்களை அரசனுக்கு அடிமைகளென்றாக்கும்.”

“அதை அவள் செய்வாள், ஐயமே இல்லை” என்றான் அரசன். “ஆம், அஸ்வமேதம் குறித்த கருணாகரருடன் அவள் பேசினாள் என்பதை நான் அறிந்தேன். ஆனால் அவளால் சத்ரபதி என்று தானே அமரத்தான் முடியும்” அவையில் வியப்பொலி எழுந்தது. “ஆம், அவள் உள்ளத்தில் அவன் எளிய நிஷாதனே. அவளுள் ஓடும் ஷத்ரியக்குருதி அவன் சத்ரபதியென்று அமர்வதை ஏற்காது. எத்தனை சொற்களிட்டு அடுக்கெழுப்பி மூடினாலும் அவன் பரசுராமனின் ஷத்ரியக் குருதிபடிந்த மழுவால் உருவாக்கப்பட்டவன் என்னும் மெய் அவளுக்குள் மறைந்துவிடாது.”

சிலகணங்கள் அவையில் அமைதி நிலவியது. சுகர்ணன் பெருமூச்சுடன் எழுந்தமைந்து கால்களை நீட்டியபடி “அவள் பரிவேள்வியைத் தொடங்கும்போது புஷ்கரனின் தரப்பினர் எரிபற்றி எழுவர் என்கிறீர்களா?” என்றான். “ஐயமே தேவையில்லை. அவள் நிகழ்த்தும் வேள்வி பெருகும்தோறும் தன் அடித்தளம் கரைவதாக புஷ்கரன் எண்ணுவான். அச்சத்தைப்போல ஐயத்தையும் காழ்ப்பையும் பெருக்குவது பிறிதொன்றில்லை.”

சுகர்ணன் “ஆனால் அவனால் தமையனை எதிர்கொள்ள முடியாது. குலங்களில் பெரும்பகுதியினர் இன்று அவனைத்தான் ஆதரிக்கின்றனர். ஆனால் அவனுக்கு உள்ளூரத்தெரியும், நளனுக்கு முன் நான்குநாழிகைகூட அவனால் களம்நிற்க இயலாது என்று” என்றான். “அவன் குடிகளுக்கும் அது தெரிந்திருக்கும். ஒரு களத்தில் புஷ்கரன் தோற்றால் அக்குடிகளே அவன் தலையை வெட்டிக்கொண்டுசென்று நளன் காலடியில் வைப்பார்கள்.” சுமத்ரர் “ஆம், ஆனால் புஷ்கரனை நாம் ஆற்றல்கொள்ளச் செய்யமுடியும்” என்றார்.

திகைப்புடன் “நாமா?” என்றான் சுகர்ணன். “ஆம், அவனுடன் இன்று கலிங்கனும் மாளவனும் மகதனும் வங்கனும் சேர்ந்திருக்கிறார்கள். நாமும் இணைந்துகொள்வோம். நம் ஆதரவு அவனுக்கு துணிவளிக்கும். தமையனுக்கு இளையோன் எதிர்நிற்கட்டும். கட்டிடம் விண்டு சரிகையில் நாம் எழுவோம். நம் கொடியை குருதியால் நனைப்போம்” என்றார் சுமத்ரர். சிலகணங்கள் அவை ஓசையற்றிருந்தது. பின் ஒற்றைக்குரலென “நூறுசெவிகளுக்கிறைவன் வாழ்க! தென்னகத்தின் தலைவன் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பியது.

தொடர்புடைய பதிவுகள்

பனிமனிதன் -கடிதங்கள்

$
0
0

pani-manidhan-38363

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். இந்த வாரம், அமெரிக்காவின் சுதந்திர தினத்தைமுன்னிட்டு (ஜூலை 4), தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. இப்படிப்பட்ட நாட்களில்தான் உங்களின் நாவலில் ஒன்றைப் படித்துவிடுவேன். நேற்று ‘பனி மனிதன்’ படித்தேன்.

“ஒளியைக் குறைத்துக்காட்டும் கறுப்புக் கண்ணாடிகள் போட்டிருந்தார்கள்” என்று அழகு தமிழில் கதையோடு கதையாக அறிவியலைக் கற்பிக்கும் நாவல். குழந்தைகளுக்கான நாவல் என்றாலும், நீங்கள் முன்னுரையில் கூறியிருப்பதுபோல, பெரியவர்களும் அறிந்துகொள்ளும் அளவு நிறைய விஷயங்கள் பொதிந்துள்ள நாவல். தமிழில் இருக்கும் ஆளுமை அல்லாமல், சொல்லும் விஷயத்தை பிசகு இல்லாமல் சொல்வது. நல்ல அழுத்தத்துடன் சொல்லுவது என்பது தங்களின் தனித்தன்மை., இமையமலை கடலுக்குள் இருந்ததையும், அது நிலத்தைப் பிளந்து உயர்ந்த காரணத்தையும், ஷிவாலிக் கால கட்டத்தையும், ஜுராசிக் கால கட்டத்தையும், தாங்கள் அவைகளை விளக்கும் புலமையை, ஜியாலஜி படித்தவன் மற்றும் அதை மூன்று வருடங்கள் போதித்தவன் என்ற முறையில் ஆமோதிக்கிறேன். ஜியாலஜி அல்லாமல் குளிரில் உடம்பும் உடம்பில் இருக்கும் உறுப்புக்களும் எப்படி மாறும் என்று விளக்குவது, பனி மனிதனைத் தேடிச் செல்லும் கிம், பாண்டியன், டாக்டர் எப்படி ஐஸ்க்ரீம் கொட்டிவைத்ததை போல் இருக்கும் மலைகளில் நடக்கும் முறையை விளக்குவது என்று ஒவ்வொன்றிலும் அப்படி ஒரு தெளிவு. ஞானம்.

தங்களின் படிமங்களையும், கதாப்பாத்திரங்களின் உருவ அமைப்புகளை விளக்குவதையும் வெகுவாக ரசிப்பவன். அவைகளுக்குள் லயிப்பவன். இது குழந்தைகளுக்கான நாவல் என்ற மனநிலையில் படித்து, குழந்தையின் மனநிலையில் லயிக்கவேண்டியதில் கொஞ்சம் இயல்பாக இருக்கமுடியவில்லை (அது நாவலின் குறைபாடு இல்லை, என்னுடைய குறைபாடு). குழந்தைகள் இந்த நாவலைப் படித்தால், இதில் வரும் தத்துவார்த்தமான கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்ளும் என்று தெரியவில்லை. அதுவும் நான் என்ற நிலையற்று இருப்பது என்பதெல்லாம் குழந்தைகளுக்கு கொஞ்சம் அலுப்புத் தட்டாதா?.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்தைத்தான் நான் படித்தேன். படங்கள் மிக அருமை. படங்கள் வண்ணத்தில் இருந்தால், பொன்னிறமான தாமரை மலருடன் நிற்கும் கிம்மும், ஆர்கியோடெரிகிஸ்ஸும் குழந்தைகள் வாங்கிப் படிக்க மேலும் தூண்டுதல் ஏற்படுத்தும். படங்கள் வண்ணத்தில் இல்லாததற்கான காரணத்தை ஒரு புத்தக ஆர்வலனாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் என்றாவது ஒரு நாள் உங்களைச் சந்திக்க நேர்ந்தால் இந்தக் கேள்வி நிச்சயம் உண்டு.

நான் எங்கள் குடும்பத்தைச் சார்ந்த இரு குழந்தைகளுக்கு, ஆளுக்கு ஒன்றாக இந்தப் புத்தகத்தை பரிசளிக்கலாம் என்று உள்ளேன். அவர்களுக்கு தங்களை அறிமுகம் செய்தது போலவும் இருக்கும். நாவலில் பொதிந்துள்ள அறிவியல் விஷயங்களை அவர்கள் கற்றது மாதிரியும் இருக்கும். தத்துவார்த்தமான கருத்துக்களை பற்றி அவர்களின் எண்ணத்தை நான் அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

 

soun

அன்புள்ள ஜெ

பனிமனிதன் நாவலை இப்போதுதான் வாசித்தேன். மிகவும் பிந்தி. என் மகளுக்கு தமிழ் சரியாக வாசிக்க வராது. வாசிப்போம் என்று வாங்கினேன். எனக்கே மிகவும் ஆர்வம் வந்துவிட்டது. என் இளையவளுக்கும் ஆர்வம் வந்து அவளும் கேட்டாள். இரண்டுமுறை வாசித்தோம்.

இமையமலையின் காட்சிகள் அற்புதம். கூடவே அடிக்கடி வந்துகொண்டிருக்கும் சாகசங்களும்தான். ஆனால் தொடர்ச்சியாக பரிணாம அறிவியலின் எளிமையான விளக்கம் ஒன்று ஓடுவதுதான் இந்நாவலின் சிறப்பு.

இது சுற்றுச்சூழல் பற்றிய மிகப்பெரிய ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்கும் நாவல். சந்தேகமே இல்லை

விஸ்வநாதன்

***

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவை புத்தகக் கண்காட்சி,விருது,சொற்பொழிவு

$
0
0

koovai

கோவையில் 21-7-2017 முதல் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சிறப்பு விருந்தினராக நான் கலந்துகொள்கிறேன்.

21 ஜூலை மாலை ஆறுமணிக்கு  நிகழும் விழாவில் விழாவில் கொடீஷியா வழங்கும் வாழ்நாள்சாதனைக்கான இலக்கிய விருது எனக்கு அளிக்கப்படுகிறது.

இவ்விருது எனக்கு ஒருவகையில் முக்கியமானது. சென்ற சிலநாட்களாக நான் இரண்டு விஷயங்களுக்காக நண்பர்களிடம் நிதிகோரியிருந்தேன். ஊட்டி நித்யா குருகுலத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக. இன்னொன்று சிறுநீரகக் கோளாறால் அவதிப்படும் இலக்கிய நண்பருக்காக. நண்பர்களின் உதவிகள் போதிய அளவில் இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டியிருக்கிறது. என் சொந்தப்பணம் நிறைய கொடுக்கும்படி ஆயிற்று.நானும் பெரிய அளவில் கொடுக்கும்நிலையில் இன்று இல்லை. இவ்விருதுத் தொகையையும் இரண்டாகப்பிரித்து இருவருக்கும் அளிக்கலாமென முடிவுசெய்திருக்கிறேன்.

விருது ஏற்புரையாக ஒரு தனியுரை ஆற்றவேண்டும் என்று கோரினார்கள். தமிழகத்தை மாற்றிய ஐந்து நூல்கள் என்னும் தலைப்பில் பேசவேண்டும் என்பது நண்பர்களின் கோரிக்கை. பேசலாமென எண்ணுகிறேன்.

20 மாலை நாகர்கோயில் கோவை ரயிலில் கோவை வருவேன். 25 மாலை இன்னொரு நிகழ்ச்சியில் பேசுகிறேன். 26 மாலை திரும்புகிறேன். நண்பர்களைச் சந்திக்க ஆவல்

 

ஜெ .

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புழங்குதல்

$
0
0
aruna2

இந்தோனேசியாவில் அருண்மொழியிடம் பேசிச் சிலையானவர்கள்

 

கடந்த ஏழுநாட்களாக அருண்மொழி டெல்லியில் இருக்கிறாள். சைதன்யாவும் உண்டு. அவள் தோழி இன்னொரு சைதன்யாவும் அவள் அம்மாவும் என மொத்தம் நான்குபேர். நான்கு பெண்கள் மட்டும் என்பதற்கான அனைத்துக்கொண்டாட்டங்களும். சின்னப்பதற்றங்களுடன் நான் ஃபோனில் அழைத்தால் “என்னை தொந்தரவு செய்யாதே…நான் சுதந்திரப்பறவை” என்கிறாள். ஆகவே நான் அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்புவதுடன் சரி

 

அருண்மொழிக்கு கொஞ்சம் பெரிய கண். அந்தக்காலத்தில் நான் கண்ணாத்தா என்றெல்லாம் அழைப்பதுண்டு. புதியவிஷயங்களைக் கண்டால் இன்னும் கொஞ்சம் பெரிதாகும். அயல்நிலங்களில் திருதிருவென்றே விழிப்பாள். ஆனால் எப்படியோ எல்லாவற்றையும் தலையைத்தலையை ஆட்டி விசாரித்து மீண்டும் உறுதிசெய்துகொண்டு சரியாகச்செய்துவிடுவாள். அவளை நான் விடாப்பிடியாக வெளியூர் அழைத்துச்செல்வதற்கு காதலை தவிர முக்கியமான காரணம் நான் கண்ட இடங்களில் தடுமாறவேண்டியதில்லை என்பதுதான்.

 

நான் தனியாகச் சென்றபோதெல்லாம் பிரச்சினைதான். சிங்கப்பூர் செல்லும்போது விசா நகலை தொலைத்துவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. மின்னஞ்சலில் இருந்தது. அதைப்பார்க்கவேண்டுமென்றால் வெளியே செல்லவேண்டும். நுழைவுச்சீட்டு போட்டுவிட்டதனால் வெளியே செல்ல சிறப்பு அனுமதி தேவை. என் பெட்டிகள் வேறு உள்ளே சென்றுவிட்டன. அங்கே இங்கே பதறி பரிதவித்து வெளியே சென்று அங்கே ஒரு டிராவல்ஸில் கெஞ்சி மின்னஞ்சலைத் திறந்து பிரதி எடுத்து உள்ளே நுழைந்தேன். வெளிநாடுகளில் கைவிடப்பட்ட குழந்தை போலத்தான் இருப்பேன்.

 

ஆனால் அமெரிக்காவில் ஒரு விமானநிலையத்தில் எங்கள் பெட்டிகளுக்கு ஐம்பதுடாலர் கட்டணம் வேண்டும் என்றார்கள்.டாலர் நோட்டுஏற்புடையதல்ல, கார்டில்தான் கட்டவேண்டும் என்றுவிட்டாள் கருப்பினக்குண்டழகி. எங்கள் இந்திய மாஸ்டர்கார்ட் வேலைசெய்யவில்லை. கருப்பழகி நாங்கள் மேலே மேலே சொல்வதைக்கேட்காமல் மென்றுகொண்டிருந்தாள். விமானம் கிளம்பிக்கொண்டிருந்தது
அருண்மொழி பக்கத்தில் நின்ற வெள்ளையின மாதரசியிடம் பேசி அவளிடம் டாலரை அளித்து அவள் கார்டில் பணம் கொடுத்து உள்ளே சென்றோம். அப்படி தோன்றியது நல்ல விஷயம். ஆனால் அந்தப்பெண்ணை எப்படி தேர்ந்தெடுத்தாள். ஆச்சரியத்துடன் கேட்டபோது “பாத்தாலே தெரியுதே, அவங்களும் என்னை மாதிரின்னு” என்றாள். “அவங்க திருதிருன்னு முழிக்கலையே” என்று சொல்லி முறைக்கப்பெற்றேன்.

 

ஆகவே டெல்லியில் செல்போனில் கூகிளில் இந்திச்சொற்களைத் தேடி இணைத்து பேசி புழங்கிக்கொண்டிருக்கும் அருண்மொழியை கற்பனைசெய்து நான் ஆச்சரியப்படவில்லை. என்னால் அதைச்செய்யமுடியாது, கண் தெரியாமல் ஹீப்ரு என தேடி அச்சொற்களைப்பேசி “ஸாலா…” என அழைக்கப்படுவேன்,. முன்பின் தெரியாதவர்களுக்கு அவள் டெல்லியில் பிறந்தவள் என இதற்குள் தோன்ற ஆரம்பித்திருக்கும். அவள் தமிழே கொஞ்சம் கீச் என்றுதான் இருக்கும் என்பதனால் இந்திபேசிக்கேட்டால்தான் சிலையாகிவிடுவார்கள்.

 

எனக்குத்தான் இந்த  ஐந்து அறைகளுக்குள் அடிக்கடி வழிதவறிவிடுகிறது. நேற்று பகலில் பெரும்பகுதி கண்ணாடிதேடுவதில் செலவழிந்தது. இத்தனைக்கும் ஒன்றுக்கு மூன்று கண்ணாடி வைத்திருக்கிறேன், தொலைந்துவிடக்கூடாதே தேடினால் அகப்படவேண்டுமே என்று.கடைசியில் மூன்று கண்ணாடிகளும் ஒரே இடத்தில் இருந்தன.

 

கண்ணாடியை தேடியது எங்காவது காசு இருக்கிறதா என்று தேட. இல்லை என்றால் ஏடிஎம் கார்டைத் தேடவேண்டும்.  ஆனால் அதற்குமுன் ஒரே இடத்தில் எப்படி மூன்றுகண்ணாடிகளும் சென்றுசேர்ந்தன என்று கண்டுபிடிக்கவேண்டும். அந்த இயங்கியலை மட்டும் ஒரு கொள்கையாக வகுத்துக்கொண்டால் அதைபயன்படுத்தி இனிவரும் சந்ததிகள்கூட மனைவி இல்லாத வீட்டில் பொருட்களைக் கண்டுபிடிக்கமுடியும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அஞ்சலி. ஆர்.பி.சாரதி

$
0
0
20108228_1494718823882815_4702967623841714030_n

ஆர்,பி.சாரதி

 

தமிழில் பொதுவாக மொழியாக்கங்கள் சகிக்கமுடியாமலிருப்பதே வழக்கம். என் வீட்டில் அப்படி ஆசைப்பட்டு வாங்கி வாசிக்கமுடியாமல் வைத்திருக்கும் பல நூல்கள் உள்ளன. ஆங்கிலம் நம்மவருக்கு ஓரளவேனும் தெரிகிறது, தமிழ்தான் தெரியவில்லை. ஆங்கிலத்தின் கூட்டுச்சொற்றொடர்களை எழுவாய்- பயனிலையுடன் தமிழில் எழுத முடிவதில்லை. மூலத்தைப்புரிந்துகொள்ளாமல் மொழியாக்கம் செய்வது இன்னொரு காரணம்.

 

தமிழில் பொதுவாக முந்தையதலைமுறையினரே நன்றாக மொழியாக்கம் செய்கிறார்கள். வயது குறையக்குறைய மொழியாக்கத்தின் தரம் வீழ்ச்சி அடைகிறது. இது நம் கல்வியில் வந்த வீழ்ச்சியினால் என நினைக்கிறேன்.

 

தமிழில் மிகநல்ல மொழியாக்கங்களில் ஒன்று ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியா இரண்டு பகுதிகளும். அவற்றை சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் எழுத்தாளர் பா. ராகவனின் தந்தை ஆ.பி.சாரதி. அவர் இன்று இறந்துவிட்டதாகச் செய்திவந்தது. அவருக்கு என் அஞ்சலி.

 

காந்தியின் கையில் இருந்து நழுவிய தேசம்- இந்திய வரலாறு-காந்திக்கு பிறகு பகுதி ஒன்று

 

காந்தியின் தேசம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு

$
0
0

books

கோவை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இலக்கியச் சாதனையாளர் விருது ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனையொட்டி கோவை புத்தகத் திருவிழாவில் ஜெயமோகன் ஆக்கங்களுக்காக ஒரு பிரத்யேக ஸ்டால் அமைக்கப்படுகிறது.

 

ஜெயமோகனின் அனைத்து நூல்களும் கூடவே இலங்கை, சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கிறது. ஜெயமோகன் தளத்தில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய இலக்கிய நூல்களும் கிடைக்கும்.

 

திருக்குறள் அரசியும், கடலூர் சீனுவும் இந்த முயற்சியை முன்னெடுக்கிறார்கள். D ஹாலில் ஸ்டால் எண் 233

 

தொடர்புக்கு: 9787050464, 9442110123

 

கோவை புத்தகக் கண்காட்சி,விருது,சொற்பொழிவு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55

$
0
0

54. பரிஎழுகை

flowerசதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரர் எண்ணியதுபோலவே அனைத்தும் முன்சென்றன. ஓரிரு நாட்களுக்குள்ளாகவே பேரரசி தமயந்தி அஸ்வமேதம் நிகழ்த்தவிருப்பதாக உளவுச் செய்தி வந்தது. நிஷதபுரியின் அவையில் அதைப்பற்றி அவள் பேசியபோது கருணாகரர் மட்டும் தயக்கத்துடன் “இன்றைய சூழலில் பிற அரசர்கள் அதற்கு ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அவர்கள் மோதவேண்டுமென எண்ணினால் நாம் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இல்லை. நம் குலங்கள் பிரிந்துள்ளன. இளையவர் உள்ளமாறுபாடு கொண்டிருக்கிறார்” என்றார்.

தமயந்தி உறுதியுடன் “ஆம், அதை நான் எண்ணினேன். ஆனால் இப்போது நம்முன் உள்ளது இவ்வழி ஒன்றே” என்றாள். “நம் குலங்கள் உள்ளமாறுபாடு கொண்டுள்ளன. அவ்வண்ணம் திரிபு தொடங்கும்போதே மும்மடங்கு ஒற்றுமையை வெளிக்காட்டியாக வேண்டியதுதான் அரசியல் சூழ்ச்சி. நம் பிளவுகள் பிறருக்கு தெரியலாகாது, அதை நம் எதிரிகள் வளர்க்கலாகாது” என்றாள். “அஸ்வமேதம் தொடங்கும் செய்தியே நம் குடிகளை கிளர்ந்தெழச் செய்யும். நாம் நிஷாதர் என்னும் உணர்வை உருவாக்கும்.”

நாகசேனர் “உண்மை அரசி, துயர்கவ்வும்போது உவகைகொண்டவர்களாக நடிப்பது மெய்யாகவே உவகையை கொண்டுவரும். நாம் நாம் என இம்மக்கள் பேசத்தொடங்கிவிட்டாலே நாம் வென்றோம்” என்றார். முகம் மலர்ந்த தமயந்தி “அத்துடன் ஒரு சில போர்கள் நிகழ்வதும் நல்லது. முதலில் சில சிறுதோல்விகள். நம் படைகள் தோற்கிறார்கள் என்ற செய்தி வரும்போது இங்குள்ளவர்கள் பதற்றம் கொள்வார்கள். மேலும் சில தோல்விச் செய்திகள் வருமென்றால் அது வெறியென்றாகும். பொதுவெளியில் சில அயல்நாட்டு ஒற்றர்களை கழுவேற்றுவோம். போர்முரசும் கொலைக்காட்சிகளும் மக்களின் உள்ளங்களை மடைமாற்றும்” என்றாள்.

கருணாகரரிடம் “அமைச்சரே, மக்கள் மாறா சலிப்பில் வாழ்பவர்கள். சலிப்பை வெல்லும்பொருட்டே அவர்கள் தங்களை குலமென்றும் குடியென்றும் பிரித்துக்கொள்கிறார்கள். வஞ்சமும் காழ்ப்பும் வளர்த்துக்கொண்டு பூசலிடுகிறார்கள். விழவும் களியாட்டும் அவர்களின் சலிப்பை சில நாட்களுக்கே அகற்றுகின்றன. வெறுப்பும் வெறியும் கலையாமல் நீடிப்பவை, கணம்தோறும் வளர்பவை. நம் எதிரிகள் திரண்டு இருண்டு நம்மை சூழட்டும். நிஷதகுடிகள் அச்சத்தாலும் வெறுப்பாலும் ஒருங்கிணைவார்கள். ஒரு கட்டத்தில் அரசவஞ்சம் செய்தவர்கள் என சிலரை கழுவேற்றுவோம். மக்கள் திரண்டு அவர்களைச் சூழ்ந்து கூடி கற்களை விட்டெறிந்து ஆர்ப்பரிப்பதை காண்பீர்கள்” என்றாள் தமயந்தி.

“அதன்பின் முதல் வெற்றி. அது அவர்களை களிவெறி கொள்ளச்செய்யும். ஆனால் அடுத்த வெற்றிக்காக ஐயத்துடன் காத்திருப்பார்கள். மேலும் சில வெற்றிகள். மக்கள் நிலைமறந்து பித்தெடுத்து துள்ளுவதை காண்பீர்கள். அவ்விசையில் அஸ்வமேத வேள்வி முடிந்து ராஜசூயத்தை அறிவிப்போம். சத்ராஜித் என நான் அமர்ந்திருப்பதை அவர்கள் தங்கள் குலங்களின் வெற்றி என்றே எண்ணுவார்கள். தாங்கள் ஒவ்வொருவரும் நிலையுயர்ந்துவிட்டதாக பொங்குவார்கள்.”

கருணாகரர் அவள் முகத்தின் தன்னம்பிக்கையை சற்று திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். “இன்றிருக்கும் உளப்பிளவை எளிதில் சீரமைக்கமுடியும். கலிதேவனுக்கு மாபெரும் குருதியாட்டு ஒன்றை நிகழ்த்திவிட்டு நம் படைகள் கிளம்பட்டும். கலிதேவனுக்கு இங்கே கோதையின் மறுகரையில் ஒரு பேராலயம் எழுப்புவோம். நான் சத்ராஜித் என அமர்கையில் அவ்வாலயமும் நடைதிறக்கட்டும்” என்றாள்.

கருணாகரர் தாழ்ந்த குரலில் “நாம் அரசரை சத்ராஜித் என்று அமரச்செய்வது நம் குலங்களை ஒருவேளை மேலும் மகிழ்விக்கக்கூடும்” என்றார். தமயந்தியின் விழிகள் ஒருகணம் சுருங்கி மீண்டன. “ஆம், அதுவே வைதிக முறைமை. ஆனால் அப்படி நளமாமன்னர் சக்ரவர்த்தியானால் அதைச் சொல்லியே ஷத்ரியர்கள் வடக்கிலுள்ள அத்தனை தொல்குடி ஷத்ரியர்களையும் ஒருங்குதிரட்டிவிடமுடியும்… அந்தப் படைப்பெருக்கை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கில்லை” என்றாள். நாகசேனர் “ஆம், அத்துடன் நம் படைகளில் இன்றுள்ள முதன்மைத் தலைவர்கள் அனைவருமே விதர்ப்பர்கள். அவர்களுக்கும் அது ஏற்புடையதாகாது” என்றார்.

தலையசைத்து அவரை ஆதரித்தபின் “அமைச்சரே, நான் சத்ராஜித்தாக முடிசூடியதுமே அத்தனை ஷத்ரிய அரசர்களுக்கும் இது ஒரு எளிய வைதிகச் சடங்குதான் என்று சொல்லி தூதனுப்புவேன். என் மைந்தன் இந்திரசேனன் எனக்குப்பின் இங்கே சக்ரவர்த்தியாக அமர்வான் என்ற செய்தியை அதில் கூறுவேன். அதன்பொருள் அவனுக்கு அவர்கள் தங்கள் மகளிரை பட்டத்தரசியாக அளிக்கமுடியும் என்பதே. அவ்வழியாக நாளை நிஷாதர்களின் நாட்டுக்கும் அவர்களின் குருதியே அரசகுடியென்றாக முடியும் என அவர்கள் எண்ணுவார்கள். அந்த எதிர்பார்ப்பே அவர்களை அமைதிகொள்ளச்செய்துவிடும்” என்றாள் தமயந்தி.

கருணாகரர் “அரசி, அது சிறந்த சூழ்ச்சி என்பதில் ஐயமில்லை. ஆனால் பரசுராமரால் ஷத்ரியர்கள் என்றும் அந்தணர் என்றும் அனல் அளிக்கப்பட்ட எவரும் இன்றுவரை சத்ரபதி என்றானதில்லை. அவர்களில் ஒருவர் அவ்வண்ணம் வெண்குடையும் கோலும் கொள்வாரென்றால் அவர்கள் அனைவரின் படைத்துணையையும் கோரலாமே?” என்றார்.

“ஆம், அதையும் எண்ணினேன். ஆனால் அனல்குடி ஷத்ரியர்களின் மாபெரும் கூட்டமைப்பு ஒன்று உருவாகிறது என்ற எண்ணத்தை ஷத்ரியர் அடைவதற்கே அது வழிவகுக்கும். ஷத்ரியர்களைப்பற்றி நான் நன்கு அறிவேன், அமைச்சரே. அவர்கள் முதலைகளைப்போல, தங்கள் ஆணவம் என்னும் குட்டையிலிருந்து வெளியே வர இயலாதவர்கள். எவர் தலைமைகொள்வது என்ற பூசலினாலேயே அவர்கள் படையென இணைய முடிவதில்லை. ஆனால் அவர்களை இணைக்கும் அச்சம் ஒன்று உருவாகுமென்றால் எவரேனும் அவ்விணைப்பை நிகழ்த்திவிடக்கூடும். அது நிகழ நாம் இடமளித்துவிடக்கூடாது.”

கருணாகரர் தலையை அசைத்தார். அவர் முகத்தை நோக்கி புன்னகைத்து “சத்ரபதியென்று அமர்ந்து அரியணை நிலைகொண்டபின் நாம் ஷத்ரியர்களையும் முழுதாக வெல்வோம். அதன்பின் பிறிதொரு அஸ்வமேதமும் ராஜசூயமும் நிகழ்த்தி அரசரை அதில் அமரச் செய்வோம்” என்றாள். கருணாகரர் அந்த எளிய ஆறுதலை தனக்காக அவள் சொன்னதன்பொருட்டு உளச்சிறுமைகொண்டார். முகம் சிவக்க விழிதிருப்பி “நன்று, அவ்வாறே நிகழட்டும்” என்றார்.

அஸ்வமேதத்தின் நெறிகளின்படி பாரதவர்ஷத்தின் நீர்வழிப் பிரிவுகளால் ஆன சாரஸ்வதம், காங்கேயம், சைந்தவம், பஞ்சதட்சிணம், மேருதீர்த்தம் என்னும் என்னும் ஐந்து நாடுகளில் மூன்றை வென்று புரவி கடந்தாகவேண்டும். அல்லது நிலம்சார் நாடுகளான ஹிமவம், கோவர்தனம், கௌடம், காமரூபம், வேசரம், நாகரம், திராவிடம் என்னும் ஏழில் நான்கை அது கடக்கவேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணை, துங்கபத்ரை, காவேரி என்னும் ஐந்து பேராறுகள் ஓடும் பஞ்சதட்சிணம் முன்னரே தமயந்தியின் ஆட்சியின்கீழ் இருந்தது. வேசரமும் நாகரமும் திராவிடமும் அதில் அடங்கின. வங்கனை வென்று கௌடத்தையும் மாளவனை வென்று கோவர்த்தனத்தையும் கடக்கமுடிந்தால் சத்ராஜித் என முடிசூட்டிக்கொள்ள முடியும்.

கருணாகரரும் நாகசேனரும் இரு தூதுக்குழுக்களாக கிளம்பிச்சென்றனர். கருணாகரர் வங்கனையும் பௌண்டரனையும் அங்கனையும் சந்தித்து புரவி கடந்துசெல்ல அவர்களின் ஒப்புதலை பெற்றார். மாளவத்திற்கும் அவந்திக்கும் சேதிக்கும் சென்ற நாகசேனர் அவர்களிடமிருந்தும் ஒப்புதல் பெற்றார். சிம்மவக்த்ரன் நிஷதத்தின் அடிதொழு நாடுகள் என்றிருந்த கலிங்கத்திற்கும் மகதத்திற்கும் சென்று அவர்கள் நாடுகளின் வழியாக புரவி செல்லும் பாதையை வகுத்தளித்தான். நிஷதத்தின் படைப்பெருக்கை அஞ்சிக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் மாற்றுச்சொல் உரைக்காமல் தலைவணங்கினர்.

அஸ்வமேதப் புரவியை வரவேற்கும் முறைகள் இரண்டு உண்டு என்றன நூல்கள். வாள்தாழ்த்தி முடிவளைத்து அதை வணங்கி அரண்மனைக்கு கொண்டுசெல்வது அடிபணிபவரின் வழி. மங்கல இசையுடன் வந்து எதிர்கொண்டு சென்று வேள்விச்சாலையில் நிறுத்தி அவிமிச்சம் ஊட்டி அந்தணர்களுடன் எல்லைவரை சென்று கடந்துபோகச் செய்வது நட்புளோரின் வழி. தங்களுக்கு நட்புநாடுகளின் இடம் அளிக்கப்பட்டதையே வெற்றி என வங்கனும் பௌண்டரனும் அங்கனும் மகதனும் எண்ணிக்கொண்டார்கள்.

flowerநிஷதபுரியின் கொட்டிலில் பிறந்த இரண்டு வயதான வெண்ணிறப் பெண்புரவி கிரிஷையை பரிவேள்விக்காக நளமன்னரும் நிமித்திகர்களும் இணைந்து தேர்ந்தெடுத்தனர். ஐந்து நற்சுழிகளும் பதினாறு இலக்கணங்களும் முற்றமைந்த அப்புரவி செந்நிற மயிரடர்ந்த இமைகளும் நீலவிழிகளும் செந்நிற மூக்கும் பூமயிர் செறிந்த சிறிய இதழ்ச்செவிகளும் வாழைப்பூநிற நாக்கும் கொண்டிருந்தது. நீண்ட முகத்தில் மூக்குத்துளைகள் அகன்று திறந்திருக்க முள்மயிர்க்கீழ்த்தாடை சற்றே திறந்து வெண்கூழாங்கற்களின் நிரை என பற்களைக் காட்டி அது கனைத்தபோது அவ்வொலி கூரிய அகவலோசை கொண்டிருந்தது.

“புரவியுருக்கொண்ட வெண்நாகம்” என்று அதை சூதர்கள் பாடினர். வெண்ணிறக் குஞ்சிமயிர்க்கற்றைகள் சரிந்துகிடந்தன. நீள்கழுத்தைவிட உடல் இருமடங்கு மட்டுமே பெருத்திருந்தது. நரம்புகள் தெரியாத மென்மயிர் விலாவிலும் வயிற்றிலும் நூறுமுறை சுற்றிவந்த பின்னரே வியர்வை துளித்தது. இளஞ்செந்நிற அடிவயிறு ஓசைகளுக்கெல்லாம் சிலிர்க்க ஈச்சங்குலையென வாலைக் குலைத்தபடி அது எப்போதும் எச்சரிக்கையுடனிருந்தது. மெல்லிய வெள்ளிக்கழிபோன்ற கால்களில் வெண்கல் போன்ற குளம்புகளின் இரு பிளவுகளும் ஒற்றைக்கூம்பென குவிந்திருந்தன. “பிழையற்றது, பிறிதொன்றில்லாதது” என்று நளன் அதை சுற்றிவந்து சொன்னான். அவனை திரும்பி நோக்கி நாக்கை நீட்டிய புரவியின் முதுகைத் தட்டியபடி “அச்சமே புரவிக்கு அழகு” என்றான்.

இலக்கணம் திகைந்த பெண்புரவிகளை சேணமிட்டுப் பழக்காமல், மானுடர் எவரும் மேலேறாமல் வளர்த்து மகவீனச் செய்வது வழக்கம் என்பதனால் கிரிஷை கடிவாளத்தையோ சவுக்கையோ அறியாமல் வளர்ந்திருந்தது. நற்பொழுதில் கொட்டில்பூசனையிட்டு அதை அழைத்துச்சென்றனர். ஐந்துமங்கலங்கள் கொண்ட தாலமேந்திய சேடியர் ஐவர் முன்னால் வர மங்கல இசையெழுப்பி சூதர் தொடர அன்று மலர்ந்த அல்லி என ஒளிகொண்ட கிரிஷையை பார்க்க அரண்மனை மகளிரும் வீரரும் இருமருங்கும் கூடியிருந்தனர். அதன் கழுத்திலணிவிக்கப்பட்டிருந்த செந்தாமரை மாலை உலைந்தது. குளம்புகள் மண்ணைத் தொட்டு எழுவது நான்கு புறாக்கள் விளையாடுவதுபோலத் தோன்றியது.

கூடியிருந்தவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். பெண்டிர் குரவையிட்டனர். புதிய மணங்களுக்கு மிரண்ட கிரிஷை விழிகளை உருட்டி “ர்ர்ர்” என்றது. நளன் “ஒன்றுமில்லையடி, கண்ணே” என்றான். அரண்மனையின் முற்றத்தில் எழுந்த ஏழு மாட வேள்விப்பந்தலின் முன்னால் வைதிகர் நின்றிருந்தனர். அவர்கள் கங்கைநீர் தெளித்து வேதமோதி வாழ்த்த கிரிஷை நீருக்கு பிடரி சிலிர்த்து தலையை உதறியபடி வேள்விச்சாலையை பார்த்தது. மெல்ல தும்மியபின் இருமுறை பொய்யடி வைத்து மெல்ல உடலூசலாட்டியது. பின் உள்ளே நுழைந்து அனல் குளங்களை சுற்றிக்கடந்து அரியணை அருகே சென்று நின்றது. அனைவரும் உவகைக்குரலெழுப்பினர். வாழ்த்தொலிகள் பெருகிச்சூழ்ந்தன.

விதர்ப்பத்திலிருந்து தமயந்தியின் தந்தை பீமகர் பட்டத்து இளவரசன் தமனுடனும் இளையவர்களான தண்டனுடனும் தமனனுடனும் வந்திருந்தார். விதர்ப்ப மணிமுடி சூடி அவர் வேள்விப்பந்தலில் அமர்ந்திருக்க இரு பக்கமும் மைந்தர் நின்றனர். நளன் அரசனுக்குரிய பீடத்தில் அமர்ந்திருக்க பட்டத்து இளவரசன் இந்திரசேனன் அருகே வாளேந்தி நின்றான். மறுபக்கம் படைத்தலைவன் சிம்மவக்த்ரன் கவச உடையுடன் வாள்சூடி நின்றான். அமைச்சர் கருணாகரர் வெண்ணிற ஆடையில் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். வேள்வியை அமைப்பவரான நாகசேனர் மூச்சிரைக்க ஓடி ஆணைகளை இட்டும் திரும்பிவந்து கருணாகரரிடம் குனிந்து ஆணைபெற்றும் எங்கும் தெரிந்தார்.

நிமித்திகன் வெள்ளிக்கோல் சுழற்றி வந்து பேரரசி தமயந்தி வேள்விச்சாலைக்கு வருவதை அறிவித்தான். விதர்ப்பத்தின் கொடியுடன் முகப்புவீரன் வர தாலப்பெண்டிரும் இசைச்சூதரும் தொடர முழுதணிக்கோலத்தில் தமயந்தி நடந்துவந்தாள். செந்நிறப்பட்டு அணிந்து, செவ்வைரங்கள் பதித்த அணிகள் பூண்டு அனலென அவள் வந்தபோது எழுந்த வாழ்த்தொலிகளும் குரவையோசையும் காற்றென அவளைச் சூழ்ந்து கனல வைத்தன என்று தோன்றியது. அவளுக்குப் பின்னால் அரசணித்தோற்றத்தில் இளவரசி இந்திரசேனை வந்தாள். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவளை எதிர்கொண்டு அழைத்துச்சென்றனர்.

அந்தணர் வேதமோதி கங்கைநீர் தெளித்து தூய்மை செய்த அரியணையில் குடிமூத்தார் எழுவர் அவளை வழிகாட்டி கொண்டுசென்று அமர்த்தினர். ஏவலர் கொண்டுவந்து அளித்த மணிமுடியை மூதன்னை ஒருத்தி அவளுக்கு சூட்டினாள். மூத்தவர் ஒருவர் செங்கோல் எடுத்துக்கொடுத்தார். நிமித்திகன் கோல்சுழற்றியதும் வாழ்த்தொலிகள் அடங்க அவன் பரிவேள்வி தொடங்குவதை அறிவித்தான். நிஷதகுடிகளின் முழுவெற்றியை வான்வாழும் மூத்தோருக்கு அறிவிக்கும்பொருட்டே அந்த வேள்வி என்று அவன் கூறினான். விண்முகில்களை ஆளும் இந்திரனின் அருளாலும் இருண்டகாடுகளை ஆளும் கலியின் கொடையாலும் அவ்வேள்வி முழுமைபெறவேண்டும் என அவன் சொன்னபோது நிஷதகுடிகள் வாழ்த்தொலி எழுப்பினர்.

வேள்வி தொடங்கியது. அதர்வணவேதம் தாமிரமணியோசைபோல, குறுமுழவோசைபோல, குட்டியானைப்பிளிறல்போல, குதிரைக்கனைப்போசைபோல, புலிமுரலல்போல எழுந்து அப்பந்தலை நிறைத்தது. வைதிகர் கிரிஷையை வேள்விப்புகை காட்டி தூய்மைப்படுத்தினர். அவிமிச்சத்தை முதலில் அரசிக்கு அளிக்க அவள் அதை இரண்டாகப் பகுத்து ஒரு பகுதியை கிரிஷைக்கு அளித்து எஞ்சியதை தான் உண்டாள். வாழ்த்தொலிகளுடன் குடிகள் வந்து கிரிஷையை தொட்டு வணங்கிச்சென்றனர். வெறியாட்டெழுந்த பூசகனின் நோக்கு அதன் விழிகளில் வந்துவிட்டிருந்தது. வேறெங்கிருந்தோ அறியாக் குரலாணை ஒன்றை பெறுவதுபோல செவிகூர்த்து ஒற்றைக்குளம்பு சற்றே தூக்கி உடல்சிலிர்த்து வால்சுழற்றியபடி அது நின்றது.

நாளில் நான்குமுறை அதை பயிற்சிக்கு கொண்டுசென்றனர். தசைகளை ஏழுமுறை உருவிவிட்டனர். அளவிட்ட உணவு அளிக்கப்பட்டது. நகர்க்குடிகள் அனைவரும் வந்து அதை வணங்கி அருள்பெற்றனர். ஒவ்வொருநாளும் காலையில் மலைமேலிருந்த இந்திரனின் ஆலயத்திலும் மாலையில் கலியின் ஆலயத்திலும் அரசனும் அரசியும் தலைமைகொள்ள பரியின் நாளும் பெயரும் சொல்லி பூசனை நிகழ்த்தப்பட்டது. அந்த மலரும் நீரும் கொண்டுவந்து அதற்கு படைக்கப்பட்டன. வணங்கும்தோறும் அது தெய்வமாகியது. எக்கணமும் எழுந்து விண்ணில் பாய்ந்தேறி வான்புகுந்துவிடும் என உளம்மயங்கச் செய்தது.

விஜயபுரியிலிருந்து புஷ்கரனும் காளகக்குடித் தலைவர்களும் முதல்நாள் பரிதேர்வின்போதே வந்து வேள்வியில் அமர்வார்கள் என்று நகரில் பேச்சிருந்தது. பின்னர் ஒவ்வொருநாளும் அவர்கள் வந்துவிட்டார்களா என்பதே அனைவரும் கேட்டுக்கொள்வதாக அமைந்தது. “அவர் சிறுமைசெய்யப்பட்டார். உளம்திரிந்திருக்கிறார்” என்றார்கள். “ஆயினும் தமையனின் செயல். இத்தருணத்தில் அனைத்தையும் மறப்பதே பெரும்போக்கு” என்றனர் சிலர். “ஆம், ஆனால் குருதியை எவரும் கழுவிவிட இயலாது. சீர்ஷரின் சொல் புஷ்கரனை ஆள்கிறது” என்றார் காளகக்குடியினர் ஒருவர்.

பரிஎழுகை நாளன்று புஷ்கரனும் காளகக்குடித் தலைவர்களும் வருவார்கள் என்றனர் மூத்தோர். வரமாட்டார்கள் என்று அரசி அறிந்திருந்தாள். “பரிவேள்விக்கான அறிவிப்பையே தங்களுக்கு எதிரான அறைகூவல் என்று அவர்கள் எண்ணுகிறார்கள், அரசி” என்றார் கருணாகரர். “நிஷாதர்களுக்குமேல் ஷத்ரியர்களின் சவுக்கோசை அது என்று சூதனொருவன் பாடுவதை ஒற்றன் கேட்டான். அவ்வாறு பலநூறு சூதர்கள் நாடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறார்கள்.”

தமயந்தி “அதுவும் நன்றே… நாம் மேலெழுந்தோறும் மக்கள் இப்பெருநிகழ்வில் சிறுமையைச் சேர்க்கும் புஷ்கரன்மேல் கசப்பு கொள்வார்கள். மக்களின் களிப்பும் காழ்ப்பும் நம்முடன் இணைந்துள்ளதா என்று மட்டுமே நாம் பார்க்கவேண்டும். அவர்கள் நம்முடனிருந்தால் புஷ்கரனுக்கு வேறுவழியில்லை” என்றாள்.

பரிஎழுகையின்போதும் புஷ்கரன் வரப்போவதில்லை என்று செய்தி வந்தது. அவன் விஜயபுரியை புரவி சென்றடையும்போது படையுடன் வந்து உடன்சேர்ந்துகொள்வான் என்று கருணாகரர் நகரில் செய்தி பரப்பினார். ஆனால் மக்களின் ஐயம் வளர்ந்துகொண்டே இருந்தது. நாகங்களுக்கு உகந்த ஆவணி மாதம் ஆயில்யம் நாளில் பரிஎழுகை நிகழ்ந்தது. இந்திரபுரியின் குடிகளனைவரும் வேள்விச்சாலைமுதல் கோட்டைமுகப்புவரை இரு மருங்கும் மானுடமணல்கரை என பெருகிச்செறிந்திருந்தனர். புலரியிலேயே வேள்விப்புகை பந்தலுக்குமேல் எழுந்து நின்றது. வேதச்சொல் ஒலித்துக்கொண்டிருந்தது.

வேள்வி முடிந்ததும் அவிமிச்சத்தை தமயந்தி புரவிக்கு ஊட்டினாள். புரவி அரண்மனை முற்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் குளம்புகளில் இரும்பு லாடங்களுக்குமேல் பொற்கவசம் அணிவிக்கப்பட்டது. முழங்கால்களில் பொற்பூண்கள். விலாவில் பொன்னூல்பின்னல் செய்த பட்டுப்படாம். கழுத்தில் அருஞ்செம்மணி பதிக்கப்பட்ட பதக்கம் தொங்கிய ஆரம். அலைநெளிவு மாலைக்குள் இலையடுக்கு மாலை. அதன் நடுவே சுழலடுக்கு மாலை. காதுகளில் நீர்மணிவைரங்கள் சுடர்ந்த மலரணிகள். நெற்றிச்சுட்டியில் அனலென சுடர்ந்தது விதர்ப்பநாட்டின் தொன்மையான அரசவைரமான அருணம்.

அந்த அணிகளனைத்தையும் அது அறிந்திருந்ததென்று தோன்றியது. கனவிலென அது நடந்தது. வழியில் தடை கண்டால் மூச்சால் ஊதிப்பறக்கவிடுவதுபோல உயிர்த்தது. கொம்புகளும் முழவுகளும் ஒலித்து அவிந்த அமைதியில் நிமித்திகன் வெள்ளிக்கோலுடன் அறிவிப்புமேடையில் எழுந்து நாளும் பொழுதும் சுட்டி புரவிஎழுகையை அறிவித்தான். அப்பரிவேள்வியின் நெறிகளை இன்னொரு நிமித்திகன் விளக்கினான்.

நளன் துணைவர அமைச்சர்களால் அழைத்துவரப்பட்ட தமயந்தி புரவியை அணுகி அதன் காதில் வைதிகர் உரைத்த சொற்களை ஏற்று சொன்னாள். “எழுக, என் புரவியே! என் வாள் நீ. என் குலத்தின் விழைவு நீ. என் மூதாதையரின் சொல் நீ. என் தெய்வங்களின் அருள் நீ. செல்க! விரிநிலத்தை வென்று மீள்க! உன்னைத் தடுப்பவர் எவராயினும் என் வாளுக்கு எதிரிகள். என் குலத்திற்கு எதிரிகள். என் கொடிவழியினரின் பழிகொள்பவர்கள். நீ கால்தொடும் நாடெல்லாம் என்னுடையதாகுக! என்னுடையவை எல்லாம் என் குலம்கொள் செல்வமாகுக! என் மூதாதையருக்கு படையலாகுக! என் தெய்வங்களுக்கு பலியென்றே ஆகுக! ஆம், அவ்வாறே ஆகுக!”

அந்தணப்பூசகர் இந்திரன் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் களபத்தை புரவியின் நெற்றியில் மாவிலையால் தொட்டு வெற்றிக்குறியிட்டார். கலியின் ஆலயத்தில் மோட்டெருமையை வெட்டி பலியளித்த குருதிச்சாந்தை குடிப்பூசகர் தன் கட்டைவிரலால் தொட்டு அதன் நெற்றியில் அணிவித்தார். சிம்மவக்த்ரன் முன்னால் வந்து பணிந்து அரசியிடமிருந்து அவள் உடைவாளை பெற்றுக்கொண்டான்.

“செல்க!” என அரசி அறிவித்ததும் புரவி நின்ற இடத்திலேயே ததும்பியது. நளன் அதன் பிடரியைத் தொட்டு மெல்ல பேசியதும் நடனமேடையேறும் விறலி என காலெடுத்துவைத்து முன்னால் சென்றது. இந்திரபுரியின் மக்கள் களிவெறிகொண்டு ஆடைகளையும் தலைப்பாகைகளையும் வானில் வீசி கைவிரித்து துள்ளிக்குதித்து வாழ்த்தொலி எழுப்பினர்.

கிரிஷை கோட்டைமுகப்புக்குச் சென்றபோது அங்கே முன்னரே கொண்டுவந்து தளையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிறைப்பட்ட குற்றவாளர் எழுவரை கொலைதொழிலர் வெட்டி தலையுருட்டினர். பீரிட்ட குருதி செம்மண்புழுதியில் ஊறி சேறாகியது. கைகள் கட்டப்பட்ட உடல்கள் கால்களை உதைத்தபடி எழுந்தெழுந்து துள்ளிவிழுந்தன. தலைகள் விழித்த நோக்குடன் பற்கள் தெரிய புரண்டு கிடந்தன. புரவி அக்குருதியில் கால்வைத்து அப்பால் சென்றபோது கோட்டைமேல் எரியம்புகள் எழுந்து வெடித்தன. அக்குளம்புத் தடங்களைத் தொட்டு குருதியை தங்கள் வாள்களிலும் வேல்களிலும் தேய்த்துக்கொண்டு கூச்சலிட்டு வெறிநடனமிட்டனர் வீரர்கள்.

ஒரு வீரன் கைவிரித்து ஆர்ப்பரித்தபடி முன்னால் ஓடிவந்து ஒரு கையால் தன் நீள்முடியை தான்பற்றி இழுத்து மறுகையின் உடைவாளால் தன் கழுத்தை அரிந்து சுழன்று விழுந்து துடித்தான். அவனை ஒருபொருட்டென்றே கருதாமல் அப்பால் காலெடுத்துவைத்துச் சென்றது புரவி. வீரர்கள் ஓடிவந்து தற்பலியானவனின் செங்குருதியைத் தொட்டு தங்கள் நெற்றியில் குறியணிந்தனர். குருதிதோய்ந்த வாள்களை உருவி வானில் ஆட்டி “வெற்றிவேல்! வீரவேல்! வெல்க இந்திரபுரி! வெல்க நிஷதகுடி! வெல்க பேரரசி” என்று முழக்கமிட்டனர்.

நிஷதர்களின் பதினெட்டு புரவிப்படைகள் கோட்டைக்கு வெளியே குறுங்காடுகளில் காத்து நின்றிருந்தன. முன்னால் நிஷதர்களின் மின்படைக்கொடியுடன் ஒரு வீரன் புரவியில் சென்றான். தொடர்ந்து காகக்கொடி ஏந்திய வீரன் சென்றான். முழங்கும் போர்முரசுகளுடன் தட்டுத்தேர் ஒன்று அதைத் தொடர்ந்து சென்றது. கொம்புகள் முழக்கியபடி நிமித்திகர்களின் தேர் அதன்பின் சென்றது. உருவிய வாள்களும் ஏந்திய வேல்களுமாக நூறு படைவீரர்கள் சீர்நடையிட்டுச் செல்ல தொடர்ந்து அரசியின் வாளேந்தி சிம்மவக்த்ரன் சென்றான். அவனுக்குப் பின்னால் வேள்விப்பரி சென்றது. புரவிக்குப் பின்னால் நிஷதர்களின் புரவிப்படை சென்றது.

அன்றே சிற்றமைச்சர் ஸ்ரீதரர் வழிகாட்ட நாலாயிரத்தலைவன் வஜ்ரகீர்த்தியின் தலைமையில் ஒரு நிஷதப்படை ராஜமகேந்திரபுரி நோக்கி சென்றது. அப்போரில் அப்படை தோற்று பின்வாங்கவேண்டும் என்றும் அதில் வஜ்ரகீர்த்தி களப்பலியாகவேண்டும் என்றும் ஸ்ரீதரருக்கு அரசி ஆணையிட்டிருந்தாள். வஜ்ரகீர்த்தியின் முதல் படைத்தலைமை அது. ஸ்ரீதரருக்கு இடப்பட்ட ஆணையை அவன் அறிந்திருக்கவில்லை. அப்போரில் வென்று அவைநின்று பரிசுகொள்வதைப்பற்றியும் பன்னிரண்டாயிரத்தலைவனாக ஆகி நகரில் மாளிகையும் அவையில் முதல்பீடமும் பெற்று அமைவதைப்பற்றியும் அவன் எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தான்.

பிறிதொரு நாலாயிரத்தவர் படை சிற்றமைச்சர் சூக்தர் வழிகாட்ட படைத்தலைவன் பகுஹஸ்தன் தலைமையில் வடக்கே கிராதர்நிலம் நோக்கி சென்றது. அதுவும் தோல்விச்செய்தியுடன் மீளவேண்டுமென ஆணையிடப்பட்டிருந்தது. சூக்தர் அவ்வாணையால் சோர்வுற்றிருந்தார். உள்ளம் கொப்பளிக்க பகுஹஸ்தன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றைச் சொல்லில் அவர் மறுமொழி இறுத்தார். “தாங்கள் ஐயுறுகிறீர்களா, அமைச்சரே? நாம் வெல்வோம்!” என்று பகுஹஸ்தன் சொன்னான். “ஆம், வெல்வோம்” என்றார் சூக்தர். “ஏன் சோர்வுற்றிருக்கிறீர்கள்?” என்றான் அவன். “பகடையாடுபவர்கள் தாங்களும் பகடைக்காய்கள் என அறிந்திருப்பதில்லை” என்றார் சூக்தர். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் கேட்டான். “எல்லா போர்களும் பகடையாட்டம் அல்லவா?” என்றார். அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் பகுஹஸ்தன் “ஆம், போர் என்றே பகடைக்களம் அமைக்கப்பட்டுள்ளது” என்றான்.

அன்று பகலுக்குள் பகுஹஸ்தன் நிகழவிருப்பதை புரிந்துகொண்டான். புரவியில் எண்ணங்கள் அலைபாய சென்றுகொண்டே இருக்கையில் அத்தனை கதவுகளையும் திறக்கும் சுழற்காற்றென அனைத்தையும் புரியவைத்ததபடி அவ்வுண்மை உள்நுழைந்தது. “ஆம்” என உடல்நடுங்க சொன்னபடி அவன் விழிப்புகொண்டான். அவன் உடலில் அந்த அறைதலின் விசை நடுக்கமாக எஞ்சியிருந்தது. “ஆம் ஆம் ஆம்” என்றது உள்ளம். புரவியிலிருந்து விழுந்துவிடுவோம் என அஞ்சி சேணத்தை காலால் கவ்விக்கொண்டான். நெடுநேரம் சொல்லற்ற ஒரு உளவிரிவாக அவ்வறிதல் அவனுடனிருந்தது.

கிராதர்களை முற்றழிக்க நாலாயிரம்பேர் போதாது. அவர்கள்மேல் போர்தொடுத்து வென்று கப்பச்சாத்து இடுவதில் பொருளில்லை. அத்தகைய நெறிகளெவையும் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை. அவர்களிடம் தோல்வியுறுவதென்பது அவர்களை மிகைநம்பிக்கை கொண்டவர்களாக ஆக்கும். அவர்களின் குலவழக்கப்படி வெல்லப்பட்டவர்களை முழுமையாகக் கொன்று அழிப்பார்கள். வெட்டித் துண்டுகளாக்கி காடுகளில் விலங்குகளுக்கு வீசுவார்கள். குருதியை கலங்களில் பிடித்து சேர்த்துக்கொண்டுசென்று தலையில் ஊற்றி நீராடுவார்கள். கலங்களில் ஏந்தி குடிப்பார்கள். எதிரித்தலைவனின் ஊனை சமைத்து உண்டு களியாடுவார்கள்.

அச்செயல்கள் செய்தியாக நிஷதபுரியை சென்றடையும். நிஷாதர் வெறிகொள்வார்கள். கிராதர்களை முற்றழிக்க, அவர்களின் ஊர்களை எரியூட்ட, அவர்களின் மைந்தர்களை அடிமைகளாக தளைத்துக்கொண்டுசென்று மரக்கலக்காரர்களுக்கு விற்க, அவர்களின் நிலங்களில் உப்பும் சுண்ணமும் பரப்ப அதுவே போதிய தூண்டுதலாக ஆகும். பன்னிரு ஆண்டுகளாக எல்லைகளை மீளமீளத் தாக்கி ஊர்களைச் சூறையாடி குடிகளைக் கொன்று ஆநிரைகளைக் கவர்ந்துவந்த கிராதர்களை அழிக்க அரசி உளம்கொண்டுவிட்டாள்.

பெரும்போர்களுக்கு முன்னால் வேண்டுமென்றே சிறு தோல்விகளை நிகழ்த்துவதுண்டு என அவன் அறிந்திருந்தான். அது வீரர்களின் ஆணவத்தைச் சீண்டி பழிவெறி கொள்ளச்செய்யும். அத்தோல்வி கடுமையாக இருக்கும்தோறும் வெறிபெருகும். வேள்விப்பரி எழுந்தபோது கோட்டைமுகப்பில் எதிரே ஓடிவந்து தன் தலையை வெட்டிவிழுந்த தற்பலியனின் முகம் அவன் நினைவுக்கு வந்தது. அந்த விழிகளிலிருந்த வெறியை மிக அருகிலெனக் கண்டான். “ஆம்” என்ற சொல்லுடன் நிலைமீண்டான். புன்னகை செய்து “ஆம்” என்று தலையசைத்தான்.

வேள்விப்பரி நிஷதநாட்டின் தேர்ச்சாலை வழியாக தெற்கு நோக்கி சென்றது. காடுகளிலிருந்து படைப்பிரிவுகள் கிளம்பி வந்து சேர்ந்துகொண்டே இருக்க நிஷதபுரியின் எல்லையைக் கடக்கும்போது அது மறுமுனை தெரியாத பெருக்காக மாறிவிட்டிருந்தது. வழியெங்கும் சிற்றூர் மக்கள் மரங்களின்மேல் ஏறிச் செறிந்தமர்ந்து அவ்வொழுக்கை நோக்கினர்.

புலர்காலையில் தொலைவில் மின்கதிர்க்கொடி தெரிந்தபோது அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். புரவி கடந்துசென்ற பின்னர் அன்று பகலிலும் இரவிலும் மறுநாள் புலரியிலும்கூட படை சென்றுகொண்டே இருந்தது. இறுதியாக குதிரைத் தீவனமும் அடுமனைப் பொருட்களும் ஏந்திய வண்டிகள் சென்று முடிந்தபோது அன்று மாலை ஆகியது. படைசென்ற பாதையில் உறுதியான மண் மென்புழுதியாக மாறியிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

இடங்கை இலக்கியம் -கடிதங்கள்

$
0
0

yavanika

ஜெ,

நேற்று நண்பர்சந்திப்பில் உங்கள் இடங்கை இலக்கியம் பற்றி பேச்சுவந்தது. முழுக்க முழுக்க ஒரே விஷயத்தைச் சுற்றிச்சுற்றியே வந்தது பேச்சு. இடதுசாரி எழுத்து என்று சொல்லாமல் ஏன் இடங்கை இலக்கியம் என்று சொல்லவேண்டும்? இதில் அரசியல் உள்ளது- இவ்வளவுதான். அப்புறம் சில விடுபடல்களைப் பற்றிய ஒற்றைவரிகள்.ஆச்சரியமாக இருந்தது.

மனோகர்

 

அன்புள்ள மனோ,

 

இத்தகைய ஒரு முன்வரைவை யார் போட்டிருந்தாலும் அதில் விடுபடல்கள் இருக்கும். மறுபரிசீலனைகள் இருக்கும். அவற்றை விவாதம் மூலம் செழுமைசெய்தே ஒரு துல்லியமான சித்திரத்தை அளிக்கமுடியும். அத்தனைபேரையும் வாசித்தவர்கள் எத்தனைபேர் இருக்கமுடியும்? இடதுசாரிகளிலேயே பலர் என்னில் கால்வாசிகூட வாசித்திருக்கமாட்டார்கள். நான் இதே வேலையாக கால்நூற்றாண்டை கடந்திருக்கிறேன். [அதோடு பெரும்பாலானவர்கள் எனக்கு நூலை அனுப்பியும் விடுகிறார்கள்] அவர்களில் எவர் பட்டியல்போட்டாலும் பிற மார்க்சிய கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுவார்கள். ஆகவே ஓர் அன்னியர்தான் ஓரளவேனும் பட்டியலிடமுடியும். ஆகவே இந்த முதல் தொகுப்புரை என்னால் எழுதப்பட்டுள்ளது

 

இடங்கை இலக்கியம் என்றெல்லாம் பெயர் மாற்றப்படவில்லை. இடதுசாரி இலக்கியம் என்றே கட்டுரை முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கட்டுரைகளுக்குத் தலைப்பு வைக்கும்போது கவனத்தை ஈர்க்கும்படி, நினைவில்நிற்கும்படி தலைப்புவைப்பது இலக்கியவழக்கம். அத்தகைய நூற்றுக்கணக்கான தலைப்புக்களை என் கட்டுரைகளில் காணலாம். அலங்காரமாக, அல்லது சற்றுவேடிக்கையாக, அல்லது ஏதேனும் வரலாற்றுக்குறிப்பை நினைவுறுத்தும்படியாக. இது மூன்றாவது வகை தலைப்பு

 

அது வித்தியாசமாக ஒலிப்பதனாலும், வரலாற்றுக்குறிப்பு ஒன்று இருப்பதனாலும்  கொஞ்சம் இலக்கியரசனையும் வாசிப்பும் உள்ள எவருக்கும் அத்தலைப்பு. சுவாரசியமான ஒரு சொல்லாட்சியாகவே தோன்றியது.இந்த எளிய விஷயத்தைக்கூட உணராதவர்கள் என்னதான் இலக்கியம் வாசிக்கிறார்கள்?

 

இவர்கள் ஏன் இப்படி தலைப்பை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்? வேறு எதையும் பேசுவதற்கான வாசிப்புத்தகுதி அல்லது அறிவுத்தகுதி இல்லை என்பதனாலேயே. இது ஒருவகை புறணிப் பேச்சு. இதுதான் இவர்களால் இயலும். சூழலின் துரதிருஷ்டம் இது

 

ஜெ

 

அன்புள்ள ஜெ,

இடங்கை இலக்கியம் கட்டுரையில் சமகாலத்தின் முக்கியமான இடதுசாரிக்கவிஞரான நீங்கள் யவனிகா ஸ்ரீராமை குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது. முக்கியமான கவிஞர். ஆனால் கட்சிச்சார்பு இல்லாதவர். கட்டுகள் அற்ற வாழ்க்கை. ஆகவே அவரை இடதுசாரிகள் கூறுவதில்லை. நன்றி

மாரிராஜ்

 

அன்புள்ள மாரிராஜ்

 

ஏதேனும் ஒரு தருணத்தில் விரிவாக எழுதவேண்டும். பார்ப்போம்

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

இடதுசாரி இலக்கியம் பற்றிய கட்டுரைக்கு வலது இடது ஒட்டுமொத்த  எதிர்வினையும் இந்த லட்சணத்தில் இருக்கிறதே. உங்களுக்குச் சோர்வாக இருப்பதில்லையா?

 

அருண்

 

அன்புள்ள அருண்

இல்லை. இவ்வளவுதான் எதிர்பார்ப்பேன்

ஜெ

இடங்கை இலக்கியம்
இடதிலக்கியம் கடிதங்கள் 2
இடதிலக்கியம் – கடிதங்கள்
சிறிய மனங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இச்சையின் சிற்றோடைகள்

$
0
0

raje

 

இனிய ஜெயம்,

 

அன்று பவாவின் கதை கேட்கலாம் வாங்க நிகழ்வில் இருந்தேன்.   ராஜேந்திர சோழன் கதைகள் அன்று பவாவின் தேர்வாக இருந்தது.  ரா சோ வின்  கதைகளில் உயிர்த்துடிப்பு  துலங்கும் கணங்களை அழகாக தொட்டெடுத்து  கதை சொன்னார்.  நிகழ்வின் இறுதியில் என்னை ரா சோ கதைகள் குறித்து சில வார்த்தைகள் பேச அழைத்தார்.  நான் மறுத்துவிட்டேன். காரணம் அக் கதைகளுக்குப் பிறகு நான் அதுவரை என்னுள்  முகிழ்ந்திருந்த ஒரு அமைதி சிதறப்பெற்றவனாக ஆகி இருந்தேன்.  மிகுந்த தத்தளிப்பில் இருந்தேன்.  ஆம்  அன்று மதியம் முதல் மாலை வரை ரமணனின் சன்னதியில் அமர்ந்திருந்தேன். அங்கிருந்து நேராக ராஜேந்திர சோழனின் உலகில் வந்து விழுந்தேன்.

 

ரமணன் .   என் அகம் சரியும்  கணங்களில் எல்லாம்  இதோ  இதுவும் மானுட சாத்தியமே என்று என் முன் வந்தமரும் உருவம்.  ரமணன் மானுட சாத்தியம்.  அது இறுதி. கனி..ஆனால் முதன்மையாக  மானுடமாக விதையாக  இங்கே வந்து முளைப்பது எது? இச்சை. கருணை,அறம் ,ஒழுக்கம்  அனைத்தின் கடிவாளத்தினின்றும்  உதறி விலகி  திமிறி நிற்கும் சாரமான இச்சையின் கணங்களை தொட்டு நிற்பவை [ எட்டு கதைகள்  வம்சி வெளியீடு  தொகுதியை முன்வைத்து] ராஜேந்திர சோழனின் கதைத்தருணங்கள்.

 

ரா சோ போல நடுநாட்டின் மொழியை, வாழ்வை முன்வைத்த மற்ற இருவர் கண்மணி குணசேகரன் மற்றும் இமையம். கண்மணி குணசேகர்ணனின் அஞ்சலை பசிக்கு உணவு போலும் ,தனது காமத்துக்கு தீர்வைத் தேடுபவன். உறவோ நியதிகளோ ஒரு பெரிய பொருட்டில்லை. அக்காள் தங்கமணியின் கணவனை எந்த தயக்கமும் இன்றி அக்கா இருக்கும்போதே மணக்க சம்மதிக்கிறாள். அக்கா அஞ்சலையை தற்கொலை மிரட்டல் வழியே அந்த முடிவை மாற்ற வைக்கிறாள்.

 

இமையத்தின் கொலை சேவல் கதை.  கோகிலா கணவனை இழந்தவள். கணவனின் கடையில் ஒத்தாசைக்கு இருந்த அநாதை செல்வத்துடன் பிறகு கோகிலாவுக்கு  தொடர்பு ஏற்பட்டு, செல்வத்தை அவள் வீட்டுக்குள் அனுமதிக்கிறாள். மாதங்கள் செல்ல  செல்வம் கோகிலாவின் முதல் மகளுடன்  உறவில் விழுகிறான்.  தகராறுகளுக்குப் பிறகு  கோகிலா முதல் மகளை அவனுக்கு கட்டி வைத்து கடையையும் தந்து விடுகிறாள்.  மாதங்கள் செல்ல இப்போது செல்வம் பதினைந்தே வயதான கோகிலாவின் இரண்டாம் மக்களுடன் ஓடி விடுகிறான்.   பழிவாங்கும் முகமாக  செல்வத்துக்கு சூனியம் வைப்பது போல அய்யனாருக்கு கொலைசேவல் நேர்ந்து விட பூசாரியை சந்திக்கிறாள் கோகிலா. பூசாரி சொல்கிறான். இதோ இந்த சேவல்தான் உன் எதிரி நீ சொல்றது நியாயம்னா ,அத அய்யனார்க்கிட்ட சொல்லி இந்த சேவலை வேலில் குத்தி நிற்க வைப்பேன். இந்த சேவல் துடித்து அடங்கும் போது உன் எதிரியின் கை கால் இழுத்துக் கொள்ளும். மாறாக உன் பக்கம் நியாயம் இல்லாவிட்டால்  அது பலிக்காது. அல்லது அது உன் பக்கம் திரும்பிவிடும்.   கோகிலாவுக்கு ஏதேதோ யோசனைகளை. நடந்தவைகளில் எதுதான் நியாயத்துக்கு உட்பட்டது.  செல்வம் அவளது கணவனின் கடைக்கு வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் செல்வத்தின் அம்மா இறந்து போகிறாள். அநாதை செல்வத்துக்கு கோகிலா தம்பதிதான் அடைக்கலமாக இருக்கிறார்கள்.  ஒரு முடிவுடன் எழும் கோகிலா கொலைசேவலை குத்துங்க பூசாரி என்கிறாள். ”என் கையால போட்ட சோத்துக்கு நன்றி இல்லாம நடந்துக்கிட்டானே அதுக்கு ” என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறாள்.  [கதையில் இது  மையம் இல்லை எனினும் அவளது முடிவுக்கு இந்த நினைவும் ஒரு காரணியே ] . அஞ்சலை, போன்ற கோகிலா போன்ற பெண்களை இயக்க,  கட்டுப்படுத்த இருக்கும் காரணிகள் எதுவும் ரா சோ வின் பெண்களுக்கு இல்லை. எட்டு கதைகள் தொகுப்பின்  ஊனம் கதையின்  நாயகி ஏன் அவ்வாறு இருக்கிறாள்? அவளை இந்த லௌகீக ஒழுக்க நியதிகளுக்குள் கொண்டு வர இயலாமல் தற்கொலை செய்து கொள்கிறான் அவளது கணவன்.  ஏன் அவளை உதறி அவனால் வேறு வாழ்க்கை தேற இயலவில்லை?  இத்தககைய நாயகி கணவன் இறந்ததும் அனைத்தையும் பறிகொடுத்தவளின் உணர்வில் கிடப்பது ஏன்?  இந்த கதைக்குள் எங்கே இறங்கி உழன்றாலும் ஏன் என்ற கேள்வியில்தான் முட்டி திகைத்து நிற்க வேண்டும். விதி. ஊழ்  என்றுமட்டுமே கொள்ள முடியும்.

 

இத் தொகுதியின் பெண்கள் தனபாக்கியம் ,பார்வதி  எல்லோருமே  அடி உதைக்கு தங்களை ஒப்புக்கொடுத்து புலம்புகிறார்கள்.  பாத்து பாத்து வடிச்சு போட்டனே, என்னை அடிச்சே கொல்றானே என ஒப்பாரி வைக்கிறார்கள்.  புற்றில் உறையும் பாம்புகள் கதையின்  நாயகி வனமயிலுக்கு  நேர் எதிரானவள்  ஊனம் கதையின் நாயகி.  புற்றில் உறையும் பாம்புகள் கதையில்  வனமயில் கணவன் கந்த சாமி. ஊனம் கதையில் தற்கொலை செய்து கொள்ளும் கணவனுக்கு நேர் எதிர் குணநலம் கொண்டவன்.

 

எனது நண்பர் கிருஷ்ணகிரியில் வசிக்கும்போது அவரது அறைத்தோழன் கல்லூரி நண்பனின் கள்ளக்காதல் குறித்து சொன்னார். திருமணம் ஆகி குழந்தை உள்ள பெண்ணுடன் உறவு .காதல்.  அந்த பெண் மீது கொண்ட காதல் அளவே அவன் அந்த குழந்தை மீதும் பிரியத்தை வைத்திருந்தான்.  இந்த விசித்திரமான தனித்துவமான உளவியல் மீது நிலைகொள்கிறது எதிர்பார்ப்புகள் சிறுகதை.

 

இந்த தொகுதியில்  வடிவ அழகில்  முற்றிலும் புறம் சார்ந்த கதைகளில் ரா சோ கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு  [புற உலக வர்ணனை கூட பெரிதாக சொல்லப்படவில்லை] கதையின் நிகழ்வு, பாத்திரங்களின் உரையாடல்  வழியே முற்றிலும் அருவமான ஒன்றின் இருப்பை தொடுகிறார்.

 

மாறாக முற்றிலும் அகம் சார்ந்த கதைகளில் குறிப்பாக இச்சை கதையில் வரும் கனவு சித்தரிப்பில்  மிக விரிவான வர்ணனைகள் இடம் பெறுகின்றன.  காமம் கொண்டு அலைக்கழியும் ஒருவன். அவனது இச்சையே அவனை வழி தவறவைத்து , அபாயகரமான தற்கொலை முனைக்கு அவனை அழைத்து வருகிறது. அவனுக்கு முன்னாளல்  ஒரு தாய். அவளது நிறைசூலி மகளை  [ ஒழுக்கம் தவறி பெற்ற சூல் ]  மல்லாந்து படுக்கவைத்து , மகளின் தலைக்கு மேலாக  எடை கூடிய பெரிய கல் ஒன்றினை தூக்கி, அவளை கொல்லும் நிலையில் நிற்கிறாள்.

 

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா எனும் விளம்பரம் போல இந்தக் கதையில் சோஷியலிச யதார்த்தவாதம் இருக்கிறதா? என்று முன்பெல்லாம் முற்போக்கினர் குடுமிப்பிடி நடத்துவர்.  அவர்களுக்கு  ராஜேந்திர சோழன் எனும் மார்க்சியர் எழுதிய இந்தக் கதைகள் [ இது என்ன பண்டம் என கடித்துப் பார்த்த பின்னும் ] எந்தப் பிடியும் கொடுத்திருக்காது.

 

பவா. பேசுகையில் . மார்க்சியத்தின் அங்கீகார அலகுகள் எதற்கும் இந்தக் கதைகளுக்குள் இடம் இல்லை. என்றார்.  ஆனால் உண்மையில் இக் கதைகள் ராஜேந்திர சோழனின் ”மார்க்சிய” மெய்ஞ்ஞான தேட்டத்தின்  கலா சிருஷ்டிகள்என்பேன்  . விதி,அல்லது ஊழ் ,  துக்கம், அனைத்தும் மேல் இங்கு காணும் அனைத்துக்கும் , அது இருப்பதற்கும் , செயல்படுவதற்கும் காரணமான ”இச்சை ”   இவற்றுக்கு மார்க்சியத்தில் எந்த விடையும் இல்லை. விடையற்ற அந்த விதியின் , துயரின், இச்சையின்  தூல வெளிப்பாடுகளே ராஜேந்திர சோழனின் கதாபாத்திரங்கள்.

 

இந்த நூல் சங்க செயல்பாடுகளுக்கான பிழைப்பு வாதிகளுக்கான நூல் அல்ல.  தத்துவம் அறிந்து மயிர் பிளக்கும் வாதங்களில் இறங்கி ஜெயித்து தருக்கி நிற்பவர்களுக்கு அல்ல.  அநீதி கண்டு பொறுக்காத, சமநிலை சமுதாயம் நோக்கி அணையாத தீவிரமும் லட்சியமும் கொண்டு நடப்பவர்களுக்கானது என்கிறார் தனது மார்க்சிய மெய்ஞ்ஞானம் நூலின் முன்னுரையில் ராஜேந்திர சோழன்.

 

ஆக ஒரு கோட்பாட்டாளராக ராஜேந்திர சோழன்  கட்சிக்கு தேவையற்றவர். கலைஞனாக பிடிபடாதவர் .  மேலாண்மை பொன்னுசாமியையும் , செல்வராஜ் ஐயும் வந்து தொட்ட விருதுகள் இவரை தொடும் வகையற்ற இருளில் நின்று பேசிக்கொண்டு இருப்பவர்.

 

பவாவின் மைந்தன் வம்சி ராஜேந்திர சோழன்  குறித்த ஆவணம் ஒன்றினை இயக்கும் பணியில் இருக்கிறார். அப் பணிகளுக்காக ரா சோ சிலநாட்கள் பவாவின் பத்தாயத்தில் தங்க வருவதாக பவா சொன்னார்.  வாய்ப்பு இருப்பின் ஒரு முறை அவரை சந்தித்து அவரது கைகளை பற்றிக்கொள்ள வேண்டும்.

 

 

கடலூர் சீனு

 

புற்றிலுறையும் பாம்புகள் –ராஜேந்திர சோழன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பக்திப்பெருக்கு

$
0
0

speaker

 

ஞாயிற்றுக்கிழமை காலையின் சோதனைகளில் ஒன்று சொர்க்கத்தைக் கூவி அழைக்கும் குரல்கள். திடுக்கிட்டு அரைத்தூக்கத்தில் எழுந்து அமர்ந்தால் நியாயத்தீர்ப்புநாள்தான் வந்துவிட்டதோ என்ற பீதி ஏற்படும். எழுதிக்குவித்த  எழுத்துக்கு என்னை லூசிபரிடம் ஏசுவே அழைத்துக்கொடுத்து  ‘கூட்டிட்டு ஓடீரு கேட்டியாலே?” என்றுதானே சொல்வார்

 

எங்கள் வீட்டைச்சூழ்ந்து இருபதுக்கும் மேற்பட்ட கிறித்தவ தேவாலயங்கள். ஆகவே ஏசுவைப்பற்றியும் பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவைப்பற்றியும் நான் எண்ணிக்கொண்டே இருக்கிறேன். எண்ணாமல் விடமாட்டார்கள். ஒவ்வொரு தேவாலயமும் மணிக்கொருதரம் பைபிள் வசனத்தை மணியோசையுடன் சொல்கின்றனர். இதற்கென்றே ஒரு ‘ஆப்’ உள்ளது.

 

இனிய, ஜெபத்தால்கனத்த பெண்குரல். “நேரம் மணி பன்னிரண்டு, உங்கள் தாய்தந்தையரை கனம்பண்ணுங்கள்”. உச்சிப்பொழுதில் அதற்கு பெற்றோர் ஓய்வாக அகப்படவேண்டுமே. “நேரம் மாலை ஆறுமணி, எதை தின்போம் எதைக்குடிப்போம் என்று எண்ணாதேயுங்கள்” மிகச்சரியாக நம் உணர்வுகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நள்ளிரவு ஒன்றரை மணி “என் தாய் என்னை பாவத்தில் கருத்தரித்தாள்” வாஸ்தவம்

 

ஒரு தேவாலயம் சொல்வதைப் பிறிதொரு தேவாலய ஓசை மறைக்கலாகாதென்பதனால் இரண்டிரண்டு நிமிடம் தள்ளிவைத்திருப்பார்கள். ஆகவே இறுதி தேவாலயத்தின் வசனம் அரைமணிநேரம் கழிந்துதான் வரும். அப்பாடா என மூச்சுவிட்டால் அடுத்த மணி அடிக்கும். ஆகவே இருபத்துநான்கு மணிநேரமும் நம்முள் பைபிள் வசனம் மேலே ஓடிக்கொண்டிருக்க அன்றாடச்செயல்கள் எல்லாம் ஆழ்மன ஓட்டமாகவே இருக்கவேண்டியிருக்கிறது.வங்கிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை ஃப்ராய்ட் வந்துதான் தோண்டி எடுக்கவேண்டும் என்றால் என்ன செய்ய? அந்தக்காலத்தில் பத்மினி அக்கா குளிப்பதை ஒளிந்திருந்து பார்த்ததும் உடன்கிளம்பி வருமென்றால் எவ்வலவு கொடுமை அது?

 

ஞாயிறன்று விடிகாலையில் ”ஏசப்பா!” என அலறல். யாரோ வழுக்கி விழுந்துவிட்டதாக கனவு. அப்பென்டிக்ஸ் நடுநடுங்க பாய்ந்து எழுந்தால் “ஏசுவே நீ ஒரு சூப்பர் ஸ்டார்! ஏசுவே நீ ஒரு லக்கி ஸ்டார்” என்று கட்டைக்குரல் கானம். அதிலும் புத்தாண்டு அன்று ”ஏசப்பா இரக்கமே இல்லையா? என்னப்பா இது? ஒரு இது வேண்டாமா?” என்றவகையிலானஒரு கண்ணீர்க் கதறலுடன்தான் கண்விழித்தேன். “புத்தாண்டுக்கான மன்றாட்டு”

 

இங்குள்ள கிறித்தவ ஆன்மீகம் யதார்த்தவாதம் சார்ந்தது. எந்த மேஜிக்கல் ரியலிசமும் கிடையாது. ஏசுவிடமும் யகோவாவிடமும் பிதாவிடமும் ஏன் பரிசுத்த ஆவியிடமுமே கூட மிக எளிமையான கோரிக்கைகள்தான். பெரும்பாலானவை வங்கிமேலாளர், அலுவலக மேலதிகாரி, உள்ளூர் தாசில்தார் ஆகியோரிடம் முன்வைக்கவேண்டிய மன்றாட்டுக்கள் “ஏசுவே காசு கொடும் ஏசுவே. வீடு கொடும் ஏசுவே. ஏசுவே கார்வாங்க லோன் கொடும் கர்த்தாவே, ஏசுவே பரிச்சையிலே பாஸ்போடும் ஏசுவே” உருக்கமான ஜெபம்.

 

”குடுத்திடும் ஏசுவே. குடுத்திடும் ஏசுவே. குடுக்காம இருந்திராதியும் ஏசுவே. ஏசுவே ப்ளீஸ் ஏசுவே” மனிதகுமாரன் கிருஷ்ணனாக மாறி கூரைமேல் ஏறிநின்றுகொண்டு சிரிப்புடன் “மாட்டேன் போ” என்று சொல்வதுபோல ஒரு மனப்பிராந்தி. ”ஏசுவே அவளுக்குக் குடுத்தீரே. எனக்கு குடுக்க மாட்டீரா? ஏசுவே குடும் ஏசுவே” சங்கப்புலவன் மட்டுமே இந்த அளவுக்கு வேண்டிக்கேட்டிருக்க முடியும்.

 

ஞாயிற்றுக்கிழமை பாடல்கள் தனிவகை. ஃபாதர் பெர்க்மான்ஸ் கிறித்தவ பாடல் இலக்கியத்தில் பெரும்புரட்சியாளர். “மக்களுக்கான பாடல்கள்’ அவருக்குப்பின் அவரை முன்மாதிரியாகக்கொண்டு எழுந்தன. பழையகாலத்தில் நான் கேட்டு நெக்குருகிய ‘அய்யய்யா நான் வந்தேன்” பாடலை சமீபத்தில் கேட்டபோது “என்ன இது ரொம்ப கவிதையா இருக்கே’ என நானே கொஞ்சம் மனம்சுளித்தேன்.

 

இன்றெல்லாம் பாடல்கள் ஏசுவுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் நோக்கம் கொண்டவை. “ஏசுவே நீர் நல்லவர் . ஏசுவே நீர் வல்லவர். ஏசுவே நீர் எல்லாம் அறிந்தவர். உம்மால் எதுவும் முடியும். நீர் நினைத்தால் முடியாதது இல்லை.” அதோடு அவருடைய பொறுப்புகளையும் கடமைகளையும் நினைவூட்டுபவை. “ஏசுவே நீர் எங்கள் தகப்பன். ஏசுவே நீர் எங்கள் மேய்ப்பன்’இவ்வளவு சொல்லியும் ஏசு அடாமத்தாக இருக்கிறார் என்றால் அது மிகவும் தவறு. பைபிள் பாஷையின் அர்த்த விபரீதங்கள். “ஆவியானவரே, ஆவியானவரே” என உச்சக்குரல் வீரிடல். ’வெயிலில் நின்னுட்டாராமா? என்று சின்னப்பிள்ளைகள் ஐயுறவாய்ப்பு.

 

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுவரை ஏசு. பின் ஓர் அரிய நிம்மதி. ஆனால் வியாழன் பின்னிரவு வரைத்தான். வெள்ளிக்கிழமை அம்மன்கள் கிளம்பிவிடுவார்கள். புற்றீசல்! அம்மன்பாடல்களில் இப்போதெல்லாம் அனுராதா ஸ்ரீராம்தான். எல்.ஆர்.ஈஸ்வரி பாடியபோது எனக்கெல்லாம் கிராமத்தில் மஞ்சளாடை கட்டியபெண் ஒருத்தி கையில் வேப்பிலையுடன் ஆடுவதுபோல ஒரு மனச்சித்திரம். அனுராதா ஸ்ரீராம் கேட்கும்போது ஜீன்ஸ் அணிந்த பெண் கையில் செல்பேசியுடன் அம்மன் வந்து ஆடுவதுபோல ஒரு நவீனத்துவ உணர்வு. ‘ஸொல்லடி ஸொல்லடி ஸிவஸக்தி!”

 

அம்மன்பாடல்களை எழுதுவது மிக எளிது. அம்மனின் பெயர்களை அடுக்கினால் போதும். ”மாரியம்மா காளியம்மா கூளியம்மா நீலியம்மா பேச்சியம்மா ஆச்சியம்மா” அம்மன்களின் ஊர்களையே பாட்டாக பாடியிருக்கிறார்கள். ”சமயபுரத்திலே மாரியம்மா, சாமிவிளையிலே முத்தாலம்மா, கொல்லங்குடியிலே கருப்பாயியம்மா மதுரையிலே மீனாட்சியம்மா.. ”

 

மேற்கொண்டு முழுவிலாசத்துடன் எழுதலாம். “அருப்புக்கோட்டை ஆசாரிமார்தெரு நாலாம்நம்பர் கதவிலக்கத்திலே கருமாரியம்மா, அழகியபாண்டிபுரம் அசம்புரோட்டிலே ஆறாம்சந்திலே அற்புதவள்ளியம்மா! உலகளக்கும் தாயே, இப்படி தெருத்தெருவாய் நீயே!” பட்டியலை வைத்துக்கொண்டு கிளம்ப வாகாக இருக்கும்.

 

நான் என் பட்டியலில் “திருவாரூரிலே சரோஜாம்மா பார்வதிபுரத்திலே அருண்மொழியம்மா” இரண்டு அம்மன்களையும் சேர்த்திருக்கிறேன். முன்னது உக்கிரதெய்வம். பின்னது அன்னலட்சுமி.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

$
0
0

IMG-20170716-WA0061

 

கோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்று அமைப்பாளர்கள் திட்டமிட்டார்கள். வழக்கமாக புத்தகக் கண்காட்சிகளில் மிகப்பிரபலமான சொற்பொழிவாளர்களின் உரைகள் அமைக்கப்படும். அதற்கு தனி கூட்டம் உண்டு. ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் நூல்களுடன் சம்பந்தமற்றவர்கள். புத்தகக் கண்காட்சியை எட்டிக்கூட பார்க்காதவர்கள் அவர்களில் மிகுதி.

 

கோவையில் இலக்கிய உரையாடல்களாக அந்நிகழ்ச்சி அமையவேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். ஆகவே பெரிய பேச்சாளர்கள் இலக்கியவாதிகள் என ஒரு கலவையாக, அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த முறையில் உரையாடலை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். தமிழின் முக்கியமான ஆளுமைகள் இதில் கலந்துகொள்கிறார்கள். நண்பர்கள் பங்கெடுக்கவேண்டுமென விழைகிறேன்

கோவை புத்தகக் கண்காட்சியில் நான்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56

$
0
0

55. ஆடியுடன் ஆடுதல்

flowerதமயந்தியின் புரவி தடையேதுமில்லாமல் தண்டபுரத்தைக் கடந்து ராஜமகேந்திரபுரியை அடைந்தது. தான்யகடகத்தையும் இந்திரகீலத்தையும் வென்றது. அஸ்மாகர்களும் வாகடர்களும் பல்லவர்களும் அதை வணங்கி வாள்தாழ்த்தினர். திருமலாபுரத்தை வென்றபின் அமராவதியை அது அடைந்தபோது சதகர்ணிகள் ரேணுநாட்டையும் கடந்து தென்காவேரிக் கரைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர். கிருஷ்ணையை அடைந்தபின் அது வடக்கே திரும்பியது.

“அதை இப்போது நாம் ஒன்றும் செய்யமுடியாது, அரசே” என்றார் சுமத்ரர். “புரவி கிளம்பும்போது விதர்ப்பினி ஐயத்துடன் இருப்பாள். நம்மை வென்று கடப்பதுவரை அவள் முழு விசையும் படைகளுடன் இருக்கும். தென்னகத்தை வென்றதுமே நம்மை முழுதும் அடக்கிவிட்டதாக எண்ணுவாள்.” சுகர்ணன் “அவளை அத்தனை எளிதாக எண்ணவேண்டாம்” என்றான். “ஆம், பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசியல்சூழ்ச்சியாளர் அவள். சுக்ரரின் மகள் தேவயானியின் மறுபிறப்பு என்கிறார்கள். ஆனால் ஆணவம் எவரையும் மழுங்கச்செய்யும். நம்மை எளிதில் வென்றமையாலேயே மீண்டும் எளிதில் வென்றுவிடலாம் என்னும் உளப்பதிவிலிருந்து தப்ப அவளால் இயலாது” என்றார் சுமத்ரர்.

“அவளுடைய வேள்விக்குதிரை வடக்கே மச்சர்களையும் கிராதர்களையும் வென்று மேலெழட்டும். அவந்தியையும் மாளவத்தையும் வெல்லட்டும். அதன்பின்னர்தான் நாம் தொடங்கவேண்டும்” என்று அவர் சொன்னபோது சதகர்ணியாகிய சுகர்ணன் “அப்போது அவள் பாரதத்தை பெருமளவு வென்றிருப்பாள்” என்றான். “ஆம், அவள் வெல்ல வெல்லத்தான் புஷ்கரனின் ஐயமும் வஞ்சமும் பெருகும்… அவள் சத்ராஜித் என அமர்ந்துவிடுவாள் என்றாகும்போது அவன் எரிகொள்வான்.”

சுகர்ணன் அவரை நோக்கியபடி மீசையை நீவிக்கொண்டு அமர்ந்திருந்தான். “ஐயம் கொள்கிறீர்கள், அரசே” என்றார் சுமத்ரர். “ஆம், இவையெல்லாம் உங்கள் விழைவுக்கற்பனைகளோ என்ற எண்ணம் எழுகிறது.” சுமத்ரர் சிரித்து “எட்டுபுறமும் எண்ணியே அனைத்தையும் சூழ்கிறேன். அரசே, தண்டபுரத்தின் கலிங்க அரசன் பானுதேவனிடமும் புஷ்கரனின் அணுக்கன் ரிஷபனிடமும் ஒவ்வொரு நாளும் தொடர்பிலிருக்கிறேன்.”

சுகர்ணன் “ரிஷபனைப்பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அவன் கலிங்க ஒற்றன், அப்பால் என்ன?” என்றான். “நானும் முதலில் அவ்வண்ணமே எண்ணினேன். ஆனால் அவனைப்பற்றி ஒற்றர்கள் சொன்ன செய்திகள் ஐயமூட்டின. அவன் கலிங்க அரசி மாலினிதேவிக்கே அணுக்கன்” என்றார். மீசையை நீவிக்கொண்டிருந்ததை நிறுத்தி கூர்ந்து நோக்கியபின் “அதுவும் அரண்மனைகளில் புதிதல்ல” என்றான். “ஆம், ஆனால் பெரும்பாலும் அவர்கள் ஏவலர்களாகவே இருப்பார்கள். ரிஷபன் அரசகுடியினன்” என்றார்.

விழிசுருங்க “எக்குடி?” என்றான் சுகர்ணன். “வங்கஅரசி பிரதிபையில் கலிங்கமன்னர் சூரியதேவருக்குப் பிறந்தவன்” என்றார் சுமத்ரர். அவையிலிருந்த படைத்தலைவன் மகாபாகு “என்ன இது? அவர்களிடையே உறவு…” என சொல்ல முற்பட “அதுவும் அரண்மனையில் வழக்கமே” என்றான் சுகர்ணன். சற்றுநேரம் அமைதி நிலவியது. மகாபாகு மெல்ல அசைந்து பெருமூச்சுவிட்டதும் அது கலைந்தது. “அவன் வழிநடத்துகிறான் அனைத்தையும். அவனுடன் இணைந்தே நான் இவற்றை வகுத்துள்ளேன்” என்றார்.

சில நாட்களிலேயே தெற்கு நோக்கிச்சென்ற வஜ்ரகீர்த்தியின் படையை கிருஷ்ணை நதிக்கரையின் நாகர்குடிகள் எதிர்கொண்டு தோற்கடித்தார்கள் என்ற செய்தி வந்தது. வஜ்ரகீர்த்தியைக் கொன்று ஒரு மூங்கில் தெப்பத்தில் கட்டி அவர்கள் கிருஷ்ணையில் ஒழுக்கினார்கள். ஓரிரு நாட்களுக்குப்பின் வடக்கு நோக்கிச்சென்ற பகுஹஸ்தன் கிராதர்களால் கொல்லப்பட்டான் என்றும் அவனை நூறு துண்டுகளாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக்கினார்கள் என்றும் அவன் குருதியை தங்கள் குடித்தெய்வமான கூளிக்கு முழுக்காட்டி தாங்கள் நெற்றியில் பூசிக்கொண்டார்கள் என்றும் செய்தி வந்தது.

“தோல்விக்கு திட்டமிடுவதிலும் அரசியின் நுட்பம் வியக்கச் செய்கிறது!” என்றார் சுமத்ரர். “அரசர்களிடம் போரில் வேண்டுமென்றே தோற்றால்கூட அது இழிவு. அவர்கள் அதை கதைகளாக சூதர்நாவில் நிறுத்துவார்கள். அவர்களின் படைகள் நிஷதப்படைகள் வெல்லப்படக்கூடியவையே என்னும் உணர்வை அடைந்து அச்சமழியவும் வாய்ப்பாகும். ஆகவேதான் தொல்குடிகளிடம் தோற்க வைக்கிறாள். அவர்களுக்கு சொல்லில் வரலாற்றை நிறுத்தத் தெரியாது.” சுகர்ணன் “அதைவிட அவர்களை வேருடன் அழிக்க அவளுக்கு ஒரு அடிப்படை கிடைக்கிறது” என்றான்.

நிஷதபுரியின் படைகள் கிளம்பிச்சென்று நாகர்களையும் கிராதர்களையும் தோற்கடித்து அவர்களின் குலங்களை ஆண்வேர் இல்லாமல் அழித்து அவர்களின் ஊர்களை எரித்தன. அவர்களை மேலும் மேலும் காடுகளுக்குள் துரத்திவிட்டு மீண்ட அப்படைகளை இந்திரபுரியின் மக்கள் நாட்டின் எல்லையிலேயே வந்து எதிர்கொண்டு சூழ்ந்து நடனமிட்டு வெற்றிக்களிப்புடன் நகருக்கு கொண்டுசென்றனர்.

ஏழு நாட்கள் நகரெங்கும் வெற்றிக்கொண்டாட்டம் நிகழ்ந்தது. நூற்றெட்டு எருமைகளை கலிதேவனுக்கு வெட்டி குருதியாட்டு நிகழ்த்தினர். நூற்றெட்டு அருமலர்களால் இந்திரனுக்கு பூசெய்கை நிகழ்ந்தது. நகர் மக்கள் கடந்தவை அனைத்தையும் மறந்தனர். ஒவ்வொருவரும் அவ்வெற்றிக்கு தாங்களும் உரியவர்களென எண்ணினர். காமமும் கள்ளும் நகரில் இரவுபகல் ஒழியாமல் கொப்பளித்தன. சூதர்கள் கதைகளைச் சுமந்தபடி நிஷாதர்களின் சிற்றூர்களெங்கும் சென்றனர்.

“அவள் ஒவ்வொன்றையும் எண்ணியிருப்பதிலுள்ள கூர் என்னை அச்சுறுத்துகிறது, அமைச்சரே” என்றான் சுகர்ணன். “அவள் ஏன் கிராதர்களையும் நாகர்களையும் தேர்ந்தெடுத்தாள்? அவர்களை குருதியும் தீயும் கொண்டு அழித்தாள். அதை ஷத்ரியர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாளை அந்த வாள் உங்களுக்கும் வரும் என எச்சரிக்கிறாள். அதே சமயம் ஷத்ரியர்களிலோ பிற அரசர்களிலோ எவருக்கேனும் அவ்வண்ணம் அவள் செய்திருந்தால் அதுவே அவர்களை ஒருங்கிணைய வழிவகுத்திருக்கும். அதை தவிர்த்துவிட்டாள். இவளை வெல்லுதல் எளிதல்ல.”

சுமத்ரர் “ஆம், ஆனால் அவள் நகரில் எழும் அக்களிவெறியே அவளுக்கு எதிரானது…” என்றார். “அது எங்கே எல்லை மீறுமென சொல்லமுடியாது. உட்பூசல்கள் கொண்ட ஒரு குலம் கட்டற்ற விழவை பன்னிரு நாட்கள் நீட்டிக்கக்கூடாது.” ஆனால் ஒவ்வொருநாளும் நிஷாதர்களின் கொண்டாட்டம் மிகுந்துகொண்டிருப்பதையே செய்திகள் சொல்லின. களியாட்டு சிற்றூர்களுக்கும் சென்று சேர்ந்தது. எங்கும் உண்டாட்டும் விழவுக்கூடலும் மூத்தோரூட்டும் தெய்வமாட்டும் நிகழ்ந்தன.

“மக்கள் வெற்றியை விழைகிறார்கள். ஏனென்றால் வெற்றி என தன் வாழ்க்கையிலிருந்து ஒன்றைச் சொல்ல அவர்களிடம் ஏதுமில்லை” என்றார் சுமத்ரர். “நான் என சொல்லத்தெரியாதவர்கள், நாம் என்று சொல்லி கொந்தளிக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் மறுக்கமுடியாத அரசக் குருதியால் அன்றி குடிகளை ஒருங்கிணைக்க முடியாது. சென்ற காலங்களில் நிஷதநாடுபோல் எழுந்துவந்த எத்தனை அரசுகள் இருந்திருக்கின்றன! அவையனைத்தும் மறைந்தன. அஸ்தினபுரியும் மகதமும் பாஞ்சாலமும் வங்கமும் கலிங்கமும் எத்தனை வீழ்ச்சிக்குப் பின்னரும் நீடிக்கின்றன. ஏனென்றால் அவர்களின் அரசகுடி தெய்வ ஆணை பெற்றது. மாற்றற்றது. அது கருவறைத்தெய்வம், அது இருக்கும் இடமே ஆலயமென்றாகும்.”

flowerஒவ்வொருநாளுமென வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பின்னர் களியாட்டே நிஷாதர்களின் அன்றாட வாழ்க்கை என்றாயிற்று. வேள்விப்பரியாகிய கிரிஷை மகதத்திற்குள் நுழைந்து கங்கையை அடைந்தது. அதை கங்கைநீரில் நீராட்டினர். அதன் திசைச்செலவு நிறைவடைந்ததை அறிவிக்கும்பொருட்டு வைதிகர் பதினெட்டு பொற்கலங்களில் கொண்டுவந்திருந்த கிருஷ்ணை நதியின் நீரை கங்கைநீர்ப்பெருக்கில் கரைத்தனர்.

நிமித்திகன் வலம்புரிச்சங்கை ஊத முரசுகளும் கொம்புகளும் மணிகளும் பெருகி உடனெழுந்து வானை அறைந்தன. “பேரரசி தமயந்தி வாழ்க! நிஷதகுலத்தரசி வாழ்க! சத்ராஜித் என அமரும் விதர்ப்பினி வெல்க!” என வாழ்த்தொலிகள் எழுப்பினர் கங்கைக்கரையை நிறைத்தபடி சூழ்ந்திருந்த நிஷதப்படைவீரர். கங்கைநீரை பதினெட்டு பொற்குடங்களில் அள்ளிக்கொண்டு வைதிகர்கள் கரையேறினர். மலரிட்ட பாதையில் நடந்து அவர்கள் முன்னே செல்ல வேள்விக்குதிரை அவர்களைத் தொடர்ந்து சென்றது.

புரவி திரும்பிவருவதை அறிந்ததும் தமயந்தி வேள்விநிறைவுக்கு ஆணையிட்டாள். ஆயிரத்தெட்டு வைதிகர்கள் கூடி வேள்விக்கு நாள்குறித்தனர். வேள்விக்குரிய பொருட்களை சேர்த்தனர். அரண்மனைமுகப்பில் பன்னிரு நிலைகொண்ட வேள்விப்பந்தல் அமைந்தது. சாரஸ்வதம், காங்கேயம், சைந்தவம், பஞ்சதட்சிணம், மேருதீர்த்தம் என்னும் ஐந்து நாடுகளிலும் இருந்து வந்துசேர்ந்த வைதிகர்கள் நகரில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட குடில்களில் நிறைந்தார்கள். எரிகுளங்கள் அமைக்கப்பட்டன. புரவி மகத எல்லையைக் கடந்ததும் வேள்வி தொடங்கியது. நாற்பத்தொன்றாம் நாள் அது நகருள் நுழைந்து வேள்விப்பந்தலை அடையும் என்று கணித்தனர்.

வேள்வி முழுமைக்குப்பின் தமயந்தி சத்ராஜித் என முடிசூட்டிக்கொள்ளவிருந்தாள். அவளுக்காக கலிங்கப் பொற்சிற்பியான ஜயந்தன் அமைத்த ஏழு அடுக்குகொண்ட பசுந்தளிர் மணிமுடி அரண்மனையில் குடித்தெய்வங்களான ஏழு மூதன்னையர் அமர்ந்த நிலவறைக்குள் பூசெய்கைக்கு வைக்கப்பட்டது. ஆயிரத்தெட்டு மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட அந்த முடி காலைக்கதிர்பட்ட தளிர்க்குலை என சுடர்விட்டது. நிஷதகுடியின் முதல் மாமன்னர் மகாகீசகர் சூடியிருந்த பச்சைக்கற்கள் பதிக்கப்பட்ட பிடி கொண்ட உடைவாளும் அன்னையர்முன் வைக்கப்பட்டது. ஒவ்வொருநாளும் குருதிபலி கொடுத்து அதிலுறைந்த கொலைத்தெய்வங்கள் விடாய்நிறைவு செய்யப்பட்டன.

ஜயந்தனும் எட்டு உதவியாளர்களும் அரண்மனையை ஒட்டியிருந்த சப்தமாளிகையில் தங்கி எவருமறியாமல் ஹரிதமாயூரம் என்னும் அரியணை ஒன்றை வடித்துக்கொண்டிருந்தார்கள். பீதர்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரம் தூய மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட அது மயில்கால்களும் தோகைவிரித்த சாய்விடமும் இருபுறமும் எழுந்த இறகுகளும் கொண்டிருந்தது. வேள்விநிறைவன்று அரசமண்டபத்தில் அரசி சத்ராஜித் என முடிசூடுவாள். அவளுக்கு மூன்றடுக்குள்ள வெண்குடை பிடிக்கப்படும். அது பாரதவர்ஷத்தில் அவளுக்கு மட்டுமே உரிய அடையாளமாகும்.

பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரிய அரசர்களுக்கும் நூற்றெட்டு பிற அரசர்களுக்கும் முறைப்படி அழைப்புகள் அனுப்பப்பட்டன. முதன்மை அரசர்களை அமைச்சர்கள் நேரில் சென்று அழைத்தனர். பிறருக்கு தூதர்களும் சூதர்களும் செய்தி கொண்டுசென்றார்கள். அரசர்கள் வந்தால் தங்குவதற்காக இருநூறு புதிய மாளிகைகள் நகரைச்சுற்றிய சோலைகளுக்குள் எழுப்பப்பட்டன. அரசர்களுடன் வரும் அகம்படியினரும் ஏவலரும் காவல்படைகளும் தங்குவதற்காக மரத்தாலான ஈராயிரம் பாடிவீடுகள் இந்திரக்குன்றுக்கு கிழக்குச்சரிவில் காடு திருத்திய வெளியில் கட்டப்பட்டன.

நகரின் அனைத்துக் கட்டடங்களும் பழுதுநோக்கி புதுப்பிக்கப்பட்டன. தாழ்வாரங்களில் வண்ணக்கொடிகள் கட்டப்பட்டன. குவையுச்சிகளில் கொடிகள் அசைந்தன. சூழ்ந்திருப்பவற்றை செம்மை செய்கையில் உள்ளம் செம்மைகொள்வதை உணர்ந்த பெண்கள் மேலும் மேலும் வெறிகொண்டு பணியாற்றினர். கலங்களெல்லாம் தேய்க்கப்பட்டு பொன்னும் அனலும் வெள்ளியும் மின்னின. கலவறையில் மறந்திட்டவற்றைக்கூட எடுத்து துலக்கி அடுக்கினர். காவல்நிலைகளும் கோட்டைகளும் வெள்ளையும் அரக்கும் பூசப்பட்டு அன்று கட்டப்பட்டவை என எழுந்தன. நகரம் ஒவ்வொருநாளும் உருமாறிக்கொண்டே இருந்தது. எவ்வளவு செய்த பின்னரும் பணிகள் எஞ்சியிருந்தன.

“வசந்தமெழுந்த ஆலமரம் இந்நகரம். இலையெல்லாம் தளிராக தளிரெல்லாம் மலராக பொலிந்தெழுகிறது” என்றான் நகர்மன்றில் பாடிய சூதன் ஒருவன். “மணநாளுக்கு முந்தைய இரவின் மணப்பெண் இந்நகரம். நாணிச் சிவக்கிறது. உடல்பொலிந்து ஒளிகொள்கிறது” என்றான் அவனருகே நின்ற சூதன். கூடிநின்ற நகர்மக்கள் கூவிச்சிரித்து வெள்ளி நாணயங்களை அவனுக்கு அளித்தனர். “பலிகொண்டு நிறைந்த தெய்வத்தின் அமைதி இந்நகர்மேல் பரவுகிறது. நிறைந்த பெருங்குளத்தின் மெல்லிய அலையோசை மட்டும் எழுந்துகொண்டிருக்கிறது.”

ஒவ்வொன்றும் முன்னரே திட்டமிட்டு வகுக்கப்பட்டன. கருணாகரரும் நாகசேனரும் இரவும்பகலும் துயில்நீத்து அப்பணிகளை ஒருங்கிணைத்தார்கள். கலியின் ஆலயத்திலும் இந்திரனின் கோட்டத்திலும் வழிபட்டு வேள்விமாடத்திற்கு வந்தமர்வாள் பேரரசி. அங்கே வந்துசேர்ந்திருக்கும் வேள்விப்புரவிக்கு பூசனைகள் செய்வாள். கோல்கொண்டு அரியணை அமர்ந்து வேள்விக்காவல் செய்வாள். சடங்குகள் அனைத்தும் முடிந்தபின் வேள்வியிலமர்ந்த அந்தணர்களுக்கு அடிவணக்கம் புரிந்து காணிக்கையளித்து வாழ்த்து பெறுவாள். குடிவாழ்த்து பெற்றபின் வாழ்த்தொலிகள் சூழ கிளம்புவாள்.

வேள்விப்பந்தலில் இருந்து பேரரசியை குடிமூத்தார் எழுவர் வழிநடத்தி அரண்மனைக்குள் அரசமண்டபத்திற்கு கொண்டுசெல்வார்கள். அங்கே வேள்வித்தலைவராகிய சுப்ரப கஸ்யபரும் ஐந்து நிலங்களைச்சேர்ந்த தலைமை வைதிகர்களான கௌதம பிரீதரும், சாண்டில்ய சப்தமரும், வசிஷ்ட சம்விரதரும், விஸ்வாமித்ர உபகுப்தரும், பார்க்கவ சுப்ரரும் சேர்ந்து அவளை எதிர்கொண்டழைத்து அரசமேடைக்கு கொண்டுசெல்வார்கள். கங்கைநீர் தெளித்து வேதம் சொல்லி தூய்மைசெய்யப்பட்ட அரியணையில் அவளை அமரச்செய்வார்கள். அரசநிரை சான்றாக, குடிப்பெருக்கு சூழ்ந்து வாழ்த்த அவள் முடிசூடிக்கொள்வாள்.

ஒன்றுமட்டும் அவர்களுக்கு ஐயத்தை அளித்துக்கொண்டே இருந்தது. புஷ்கரனும் காளகக்குடியினரும் பிற குலங்களில் புஷ்கரனை ஆதரிக்கும் குடித்தலைவர்களும் எவ்விழவிலும் கலந்துகொள்ளவில்லை. வேள்விப்புரவி விஜயபுரியை கடந்துசென்றபோது புஷ்கரன் தன் படைத்தலைவன் ஜம்புகன் தலைமையில் ஒரு படையை உடன் அனுப்பினான். வெற்றிகள் அனைத்துக்கும் விஜயபுரியிலிருந்து வாழ்த்துச்செய்தி வந்தது. ஆனால் வெற்றிக்குரிய செந்நிறக்கொடி விஜயபுரியில் பறக்கவிடப்படவில்லை.

புஷ்கரன் முடிச்சூட்டுவிழாவிற்கு வந்தாகவேண்டும் என்று தமயந்தி சொன்னாள். நாகசேனர் முதலில் சென்றழைத்தபோது உடனே வருவதாக புஷ்கரன் சொன்னான். அவன் வராதபோது கருணாகரர் நேரில் சென்றழைத்தார். “வேள்விதொடங்கும் நாளில் இளவரசர் அங்கிருப்பார். அவருக்கு இப்போது உடல்நிலை நன்றல்ல. ஓய்விலிருக்கிறார்” என்றான் ரிஷபன். வேள்விதொடங்கிய அன்று “இளவரசர் மேலும் சில நாட்களில் அங்கே இருப்பார். விழாவன்று வாளேந்தி உடனிருப்பார்” என்று செய்தி வந்தது. ஒவ்வொருநாளும் என நிஷதபுரி புஷ்கரனுக்காக காத்திருந்தது.

flowerபுஷ்கரன் தனிமையில் தன் அறையில் இருந்தான். நெடுநாட்களாகவே அவன் தனிமையிலிருப்பதை பழகிவிட்டிருந்தான். உடனிருப்பவர் எவராக இருந்தாலும் சற்றுநேரத்திலேயே எரிச்சலூட்டி தாங்கமுடியாதவர்களாக ஆனார்கள். அவன் எப்போதும் சினமும் எரிச்சலுமாக பேசுவதை உணர்ந்து அமைச்சர்கள் உட்பட அனைவருமே அவனிடமிருந்து விலகிக்கொண்டார்கள். ஆனால் அணுக்கர்களிடமும் சேடிகளிடமும் அவன் சினம்கொண்டான். அவர்கள்மேல் எச்சில் துப்பினான். வசைபாடினான். சில தருணங்களில் அடிக்கப் பாய்ந்தான்.

மெல்ல தன் தனியறைக்குள்ளேயே பெரும்பாலும் அவன் நாளை கழித்தான். புலரியில் எழுந்து உடற்பயிற்சிக்காக களமுற்றத்திற்குச் சென்று, அங்கிருந்து நீராட்டு முடித்து கலிதேவனின் ஆலயத்திற்கும் சென்று, முதற்கதிரொளிக்கு முன்னரே அவன் தன் அறைக்குள் மீண்டான். பின்னர் அந்திசாய்ந்தபின் இருளில் தோட்டத்தில் தன்னந்தனிமையில் உலவிவந்தான். விண்மீன்களை நோக்கியபடி அங்குள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான். பகல் முழுக்க அறைக்குள் நூல்களை படித்துக்கொண்டிருந்தான்.

அவை அரசுசூழ்தலின் நெறிகளைக் குறித்த எளிய நூல்கள். அவற்றை அவன் உள்ளம் வாங்கிக்கொள்ளவில்லை. எனவே மீண்டும் மீண்டும் அவற்றை வாசித்தான். சொற்கள்மேல் அவன் உள்ளம் தொடாமல் ஒழுகிச்சென்றுகொண்டிருக்க நெடுநேரம் அமர்ந்திருப்பான். அப்படியே துயில்கொண்டு மஞ்சத்தில் சரிவான். அவன் உணவருந்துவது மிகமிகக் குறைந்தது. மதுவருந்துவது மிகுந்து வந்தது. அரசியை அவன் எப்போதேனும் அவளே அவனைத் தேடிவந்தால் மட்டும் சந்தித்தான். அவள் பேசப்பேச அதை செவிகொள்ளாமல் அலையும் விழிகளுடன் அமர்ந்திருந்தான். அவள் அவனிடம் அரசுசூழ்தலின் புதிய திட்டங்களை சொன்னாள். தமயந்தியை இறுதியாக தளைப்பதற்குரிய வழிகளை ஒவ்வொருநாளும் புதிதாக சமைத்துக்கொண்டிருந்தாள்.

பல நாட்களில் சில கணங்களிலேயே அவள் சலிப்புற்று குரலெழுப்பத் தொடங்கினாள். “என் விழிகளைப் பார்த்து பேசுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா?” என்று கூவினாள். “ஆம், கேட்கிறேன். சொல்” என அவன் முனகினான். “சதகர்ணிகளிடம் இருக்கிறது இறுதிச்சொல்… அவர்கள் ஓர் உறுதி அளித்தால் நாம் வென்றோம்.” அவன் அச்சொற்களை விழிகளால் நோக்கி அமர்ந்திருந்தான். “என்ன நினைக்கிறீர்கள்?” அவள் அதை பலமுறை கேட்டபின் அவன் விழித்துக்கொண்டு அவன் “யார் நானா?” என்றான். “இல்லை, இந்தத் தூண்” என்று அவள் பல்லைக் கடித்தபடி சொன்னாள். அவள் எழுந்துசெல்வதுவரை பதறும் உடலும் நடுங்கும் விரல்களுமாக அமர்ந்திருந்தான். பின் உடல்தளர்ந்து பெருமூச்சுவிட்டான்.

அவர்கள் சந்திப்பதே அரிதாயிற்று. ஒவ்வொருமுறையும் சலிப்புற்று அவள் எழுந்து விலகிச்சென்றாள். எப்போதேனும் அவள் அவனருகே அணுகி அவன் குழலை கைவிரல்களால் அளைந்து தலையை தன் முலைகளுடன் சேர்த்துக்கொண்டு “என்ன ஆயிற்று உங்களுக்கு? என்னை வெறுக்கிறீர்களா?” என்றாள். “இல்லை” என்று அவன் சொன்னான். “பின் என்ன?” அவன் பெருமூச்சுவிட்டு “ஒன்றுமில்லை, நான் நலமாக இருக்கிறேன்” என்றான். “இல்லை, நீங்கள் இயல்பாக இல்லை. இந்த அறையிலேயே இருக்கிறீர்கள். அவைநுழைவதே இல்லை. வெளியே செல்வதில்லை.”

அவன் “நான் அவையை வெறுக்கிறேன். அங்கே மீண்டும் மீண்டும் ஒரே சொற்கள். சலிப்பூட்டும் சடங்குகள்” என்றான். “மனிதர்களை வெறுக்கிறீர்கள். எவரையும் விழிநோக்கிப் பேசுவதில்லை. விழிகள் தொட்டுக்கொண்டாலே சினம்கொண்டு கூச்சலிடத் தொடங்குகிறீர்கள் என்றார்கள்.” அவன் “எவர் சொன்னது இதையெல்லாம்? சுநீதரா? ரிஷபனா?” என்றான். “எவர் சொன்னால் என்ன? நீங்கள் இருக்கும் நிலை இயல்பல்ல. அரசர்கள் இப்படி அறைக்குள் முடங்கக்கூடாது.” அவன் “நான் இங்கே நூல் நவில்கிறேன்” என்றான். “என்ன நூல்கள்? ஆறு மாதங்களுக்கும் மேலாக இரண்டே நூல்கள்…” என்றாள். அவன் மெல்ல முனகினான்.

“எப்படி இருக்கிறீர்கள் தெரியுமா? நேற்று முன்னாள் அமைச்சர் ஓர் ஓலையை கொண்டுவந்தார். அதில் நீங்கள் கைச்சாத்திடவேண்டும். ஒவ்வொருநாளும் மும்முறை வந்து மன்றாடினார். கைச்சாத்திடுகிறேன் என்று சொன்னீர்கள். கண்ணெதிரே ஓலை இருந்தது. ஆனால் செய்யவே இல்லை. இறுதியில் அவர் உங்கள் கையில் ஓலையை எடுத்துக்கொடுத்து கணையாழியையும் அளித்தார். அதன்பின்னரே கைச்சாத்திட்டீர்கள்.” அவள் அவன் முகத்தை குனிந்து நோக்கி “நீங்கள் கைச்சாத்திட மறுத்திருந்தால் அது வேறு. உங்களால் அச்சிறிய செயலைச்செய்ய உளம்குவிக்க முடியவில்லை. அதுதான் சிக்கல்” என்றாள்.

அவன் “விடு என்னை” என்றபடி எழுந்தான். அவள் “நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஒரு சொல்லும் உங்களுக்குள் நுழையவில்லை” என்றாள். “நீயே சொல்லிக்கொண்டிருக்கிறாய். நீ என்னை பித்தன் என்றும் பயனற்றவன் என்றும் நிறுவ விழைகிறாய். நீ திட்டமிட்டு உருவாக்குவது இந்த சித்திரம்.” அவள் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “போ இங்கிருந்து, நான் நூல் பயிலவேண்டும்.” அவள் சீற்றத்துடன் “நான் கேட்பதற்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றாள். “என்னை எரிச்சலூட்டாதே. செல்!” அவள் “நான் கேட்டதற்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றாள்.

அவன் அந்த நெருக்குதலால் சீற்றமுற்றுத் திரும்பி “உனக்கு என்ன வேண்டும்? நான் சாகவேண்டும், அவ்வளவுதானே? என்னைக் கொல்லத்தானே வந்தாய்? நான் சோர்ந்திருக்கிறேன் என்றால் நீதான் ஏதாவது செய்திருப்பாய். என் உணவை மருத்துவர்களிடம் காட்டவேண்டும். மென்நச்சு அதில் கலந்திருக்கும்… நீதான் அதை கலந்தாய்… ஆம், நீதான்” என்று கூச்சலிட்டான் அந்தக் கூச்சல் அவனுக்கு ஆற்றலையும் இலக்கையும் அளித்தது. “நான் என்னை பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன். இந்த அறைக்குள் என் உயிருக்கு அஞ்சி ஒளிந்திருக்கிறேன். நீ என்னை கொல்லமுடியாது.”

அவள் சினத்துடன் “வாயை மூடுங்கள்…” என்று கூவினாள். அவன் கைநீட்டி அருகணைந்து “நீ எவரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா? நிஷத இளவரசனிடம், உன் அணுக்கனிடம் அல்ல. வாளை உருவினால் உன் தலை விழும்” என்றான். “எங்கே உருவுங்கள் பார்ப்போம்… உருவுங்கள்” என அவள் அவனை நோக்கி வந்தாள். வெறுப்பில் அவள் முகம் இழுபட்டு வஞ்சமும் கீழ்மையும் கொண்டதாக ஆகியது. வாய்க்குள் இருந்து பற்கள் வெளிவந்து ஓநாய்களின் சீறல் தோன்றியது. “கோழை… நீ ஆண் என்றால் எடு அந்த வாளை… வாள் உன் கையில் நிற்கிறதா என்று பார்க்கிறேன். எடு வாளை!”

அவன் கைகால்கள் வலிப்பு வந்ததுபோல உதறிக்கொள்ள “போ போ… போய்விடு” என்று கூச்சலிட்டான். எழுந்து அறையின் மறு எல்லைக்குச் சென்று “கொன்றுவிடுவேன்… செல்… சென்றுவிடு” என்று உடைந்த குரலில் வீரிட்டான். அணுக்கன் உள்ளே வந்து “அரசி” என்றான். அவள் இளிப்பதுபோல வாயை நீட்டி “இழிமகன்” என்றபின் குழலை அள்ளி பின்னாலிட்டு ஆடையை இழுத்து தோளில் அமைத்து திரும்பிச்சென்றாள். கால் தளர்ந்தவனாக அவன் மஞ்சத்தில் விழுந்தான்.

அவ்வறையை அவ்வாறு சொன்னது வாய்நிகழ்வுதான் என்றாலும் அது அவனுக்கு மெல்ல மெல்ல காப்பென்றும் கவசமென்றும் ஆகியது. அறைக்குள் கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டான். காற்றுக்காக சாளரத்தை திறந்து வைத்தாலும் அதனருகே செல்வதையே தவிர்த்தான். ஒருமுறை தன் ஆடிப்பாவையைக் கண்டு திகைத்தபின் ஆடிகள் அனைத்தையும் அகற்ற ஆணையிட்டான். பின்னர் பாவை தெரியும் உலோகக் கலங்களைக்கூட அறைக்குள் கொண்டுவரலாகாதென்று ஆணையிட்டான்.

ஆனால் அறைக்குள் உடனிருந்த அவன் நிழல் அவனுக்கு உவகையூட்டியது. அகல்விளக்கின் முன் நின்று தன் நிழல் எதிர்ச்சுவரில் பெருந்தோற்றமாக எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். கைகால்களை வீசி அதன்முன் நடித்தான். அதனுடன் போரிட்டு நகைத்தான். விரல்களால் புலியையும் நரியையும் காகத்தையும் நிழலுருவெனக் காட்டி விளையாடினான். பெரும்பாலான தருணங்களில் மஞ்சத்தில் படுத்தபடி சுவரிலும் கூரையிலும் உள்ள வெடிப்புகளையும் கறைவடிவங்களையும் நோக்கிக்கொண்டிருந்தான். அவை புலியென்றும் பன்றியென்றும் பறவைகளென்றும் உருக்கொண்டன. ஒவ்வொரு தடமும் நன்கறிந்தவையென்றாயின. ஒவ்வொன்றுக்கும் அவன் பெயரும் இயல்பும் அளித்தான். அவற்றுடன் உரையாடினான்.

எப்போதேனும் அமைச்சர் அல்லது குடித்தலைவர் சுநீதர் அவனைப் பார்க்க வந்தனர். நாளில் மும்முறை ஏவலர் வந்தனர். கதவு தட்டப்படும்போது அவன் விழித்துக்கொண்டான். கதவையே நோக்கிக்கொண்டு படுத்திருந்தான். எழுந்துசென்று கதவை திறக்கவேண்டுமென எண்ணினாலும் எழும்செயலென தன்னை ஆக்கிக்கொள்ளமுடியவில்லை. ஒருநாள் பலமுறை தட்டி பகலெல்லாம் காத்து பின்னர் அச்சம்கொண்டு கதவை உடைத்து உள்ளே வந்த சுநீதர் அதற்குப்பின் கதவுக்கு புதுத்தாழ் ஒன்றை அமைத்தார். அதை அவன் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் அதை வெளியே இருந்தும் திறக்கமுடியும்.

கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்றபோது அவன் மஞ்சத்தில் வெறித்த விழிகளுடன் கிடந்தான். ஓசையில் அவன் உடல் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. அவனை நோக்கிய மருத்துவர் அவனுக்கு நோய் என ஏதுமில்லை என்றனர். நிமித்திகர் அவனிடம் மூதேவி கூடியிருக்கலாம் என்றனர். “அக்கை நம்மை எப்போதும் நிழலுருவாகத் தொடர்பவள். நின்று சோர்ந்தால் நம்மை வந்து பற்றிக்கொள்பவள். கடமை, கல்வி, கலை, கனவு, காமம் என்னும் ஐந்தும் அவளிடமிருந்து நம்மைக் காக்கும் அமுதுகள். வஞ்சம், சினம் என்னும் இரண்டும் அவளிடமிருந்து நம்மை அகற்றும் நஞ்சுகள். ஏழுமில்லாத நிலை ஒருகணம் அமைந்தாலும் அவளுக்கு அடிமையாகிவிடுவோம்.”

அவன் மென்மையான இனிய புதைசேற்றில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவனே அறிந்திருந்தான். எப்போதேனும் அத்தன்னுணர்வு வலுவாக எழும்போது உளம்பதறி எழுந்து நிற்பான். கதவைத்திறந்து வெளியே ஓடவேண்டும் என துடிப்பான். ஏவலரை அழைத்து புதிய ஆடைகள் கொண்டுவர ஆணையிடுவான். சமையப்பெண்டிரிடம் அணிசெய்ய பணிப்பான். முழுதணிக்கோலத்தில் எவரும் எதிர்பாராதபடி அவைக்கு வருவான். அரியணையில் அமர்ந்து அத்தனை செய்திகளும் உடனே தன் முன் வந்தாகவேண்டும் என கூச்சலிடுவான்.

அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வெந்நீர் விழுந்த எறும்புப்புற்று என தவித்து அங்குமிங்கும் ஓடுவார்கள். ஓலைகளும் தோற்சுருள்களும் வந்து அவன்முன் நிறையும். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும். மன்றாட்டுடன் அன்று வந்தவர்கள் அனைவரும் உசாவப்படுவார்கள். அன்று மாலை அறைமீள்கையில் உள்ளம் நிறைந்து உடல்தளர்ந்திருக்கும். “ஆம், மீண்டுவிட்டேன். மீட்சிதான் இது. மீள்வது இத்தனை எளிதுதான்” என்று சொல்லிக்கொள்வான்.

ஆனால் மறுநாள் காலையில் கைகால்கள் இனிய குடைச்சலுடன் சோர்ந்துகிடக்கும். கண்கள் ஒளியை நோக்க உளைச்சல்கொள்ளும். உள்ளம் மிகப் பெரிய புழு என தன்னுடலுக்குள் தானே அசைந்தபடி அங்கேயே கிடக்கும். உச்சிப்பொழுதுக்குப் பின்னரே எழுந்து உணவுண்பான். மேலும் வெறியுடன் தமக்கை அவனை வந்து அணைத்து தன் இருண்ட குழிக்குள் கொண்டுசென்றிருப்பாள்.

ஆனால் அது அப்படி முடியாது என்றும் ஏதோ ஒன்று நிகழும் என்றும் அவன் எதிர்பார்த்திருந்தான். “ஒருவேளை அவர் தன் ஆழம் தயங்கும் எதையோ செய்யவிருக்கலாம். அத்திசை நோக்கி அவர் செல்வதை அவருள் வாழும் தெய்வங்கள் பின்னிழுக்கின்றன. ஆகவேதான் இந்தச் செயலின்மை” என்றார் நிமித்திகர். “என்ன ஆகும்?” என்று சுநீதர் கேட்டார். “தயங்கப்பட்ட நன்மை செய்யப்படுவதில்லை. தயங்கப்பட்ட தீமை தவிர்க்கப்பட்டதே இல்லை” என்று நிமித்திகர் சொன்னார்.

தொடர்புடைய பதிவுகள்

அறம் -ராம்குமார்

$
0
0

ram

ஒரு பொழுதுபோக்கு நாவல் நாம் வாசிக்கும் போது அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல் கடந்து செல்லும். மானுட அறத்தைப் பற்றிப் பேசும் புத்தகங்களை நாம் வாசிக்கும் பொழுது நம் மனநிலை என்ன என்பது முக்கியம். சில கதைகளை நாம் முதல்முறை வாசிக்கும் போது நமக்கு பிடிக்காமலும் அதில் நாம் ஒன்றும் புரிபடாமலும் போகலாம். அதே கதையை வேறு தளத்தில் காலத்தில் வாசிக்கும் போது அது நமக்கு பிடிபடும். அந்த வகை சார்ந்தது ‘அறம்’…

 

அறம் மதிப்புரை -ராம்குமார்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்திய வரைபடத்தின் இதிகாசம்

$
0
0

 

kadaisiஇனிய ஜெயம்,

 

இத்துடன் மூன்று நெருங்கிய நண்பர்கள் கேட்டு விட்டார்கள்.  உங்களுக்கு ஒண்ணுமே பண்ணாதா?  அடப்பாவிகளா என்றிருந்தது.  இந்திய நிலப்பரப்பில்  எங்கெங்கோ சுற்றுகிறேன். ஆனால் பெரும்பாலும் நான் கடையில் கிடைக்கும் பாட்டில்  குடிநீருக்காக காத்திருப்பதில்லை  அங்கே  அந்த நிலத்தில் குடிநீருக்கான பயன்பாட்டில் என்ன நீர் கிடைக்கிறதோ அதையே அருந்துவேன்.  பெரும்பாலான நதி நீர்களை,கடந்த பயணத்து சௌபர்ணிகா நதி நீர் வரை, அதில் குளிக்கையில் மூழ்கி எழும் சாக்கில் ருசி பார்த்து விடுவேன்.  கிடைத்த இடத்தில், கிடைத்த உணவை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி விடுவேன்.  நண்பர் சொன்னார் குடிநீர் விஷயத்தில் மட்டுமாவது ஜாக்கிரதையாக இருங்கள் என.  முயற்சிக்க வேண்டும்.

 

மேலும் பல்லாண்டுகளாக என் உடலை நான் ”எனக்காக ”இவ்விதம் பழக்கி இருக்கிறேன். இது சொப்லாங்கி உடல். இரண்டு நாள் ஒரு சிறிய சொகுசை அதற்க்கு அளித்து விட்டால். மூன்றாம் நாள் அந்த சொகுசிலிருந்து இந்த உடலை விடுவிப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்.  பசித்து உணவு, [பற்களின் போதாமையால் எந்த உணவையும் நன்கு வாய்க்குள் கூழான பின்பே உள்ளே அனுப்ப வேண்டும் இல்லையேல் செரிமான கோளாறு வரும் ] , வாத்துக்கால்  போதும் என்று சொல்லும் வரை நடை, [சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து கிலோமீட்டர் நடக்காத நாளொன்று எனக்கில்லை ]  கிடைத்த இடத்தில் எந்த வசதியும் உடலுக்கு அளிக்காத இடம் எனினும் உறக்கம்.

 

இதுதான் இதுவரை என்னை இந்த உடலை  தாக்குப்பிடித்து இருத்தி வைத்திருக்கிறது.  இன்னும் சில வருடங்கள் தாக்குப்பிடிப்பேன் என நினைக்கிறேன்.   மற்றொரு நண்பர் தமாஷாக சொன்னார் ”அலெக்சாண்டாரே இந்தியா வந்து கழிச்சல்ல போய்ட்டாரு நீ இன்னமும் லாந்திக்கிட்டு கிடக்கியே” என்றார். விதிதான்  வேறென்ன. கடந்த மாதம் எதிரில் இருந்த மரவாடி நில கேஸ் முடிந்து ,ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது. அனைத்தையும் இடித்து முடித்து பார்த்தால் பின்னால் மூன்று கல்லறை. ஆயிரத்து எண்ணூற்று என்பதில் , இங்கு பரவிய காய்ச்சல் ஒன்றினில் பலியான வெள்ளைக்காரர் குடும்பம்.  முதல் கணம் கண்டதும் விவரிக்க இயலா துயரம் உள்ளே எழுந்தது.

ramanan

ரமணன்

 

ஜான் கே எனும் எழுத்தாளர்   ஒரு சிறு குறிப்பை அடிப்படையாக கொண்டு இந்தியா வந்து தேடி ,நாக்பூர் அருகே ஹன்காட் எனும் சிற்றூரில்  முகமதியர்கள் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருந்த வில்லியம் லாம்ப்டன் கல்லறையை கண்டு பிடிக்கிறார். வில்லியம் லாம்ப்டன்  உண்மையாகவே இந்தியாவை நூறடி நூறடியாக அளந்து ட்ரிக்நாமன்றி முறையில் முதல் முழுமையான பிழையற்ற இந்திய வரைபடத்துக்கான சர்வேயை செய்தவர்.  லாம்ப்டன் பதின்வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து , அன்றைய அமெரிக்க பிரிட்டன் போரில் பங்கு கொண்டு ,போர் கைதியாக அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் சிறையில் கழிக்கிறார். அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகு விடுதலை அடைந்து இன்றைய கனடாவின் பகுதியாக இருக்கும் நியூ இங்கிலாந்து நிலத்தில் சர்வேயர் பணிக்கு நியமனம் பெறுகிறார்.

 

 

ஆயிரத்து எண்ணூறுகளை எட்டப்போகும் நூற்றாண்டு. பூமி உருண்டை என அறியப்பட்டு, ஒவ்வொரு நிலமும் எங்கெங்கு அமைந்திருக்கிறது என அறிய கற்பனை அட்ச ரேகை தீர்க்க ரேகை கோடுகள்  , வானில் வின் மீன்களின் இருப்பு இரண்டையும் கொண்டு   அந்தந்த நாட்டின்சர்வேயர் இடையே அறிவார்ந்த உரையாடலும் தேட்டமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம். இந்த இயலின் மேதையாக இந்த இயலின் அறிஞர்களால் அன்று மதிக்கப்பட்டவர் பிரான்ஸை சேர்ந்த வில்லியம் ரே. அவரை  அவர் அளித்த வகைமைகளை கல்வியாகக் கொண்டு ,இந்த இயலில் தனது ஈடுபாட்டை வளர்த்துக் கொள்கிறார் லாம்ப்டன். பணியில் இருக்கும் லாம்ப்டனுக்கு  இந்தியாவுக்கு திப்புவுக்கு எதிரான போரில் இருக்கும் ஆர்தர் வெஸ்லிக்கு உதவியாளராக செல்லும் பணி வழங்கப் படுகிறது. லாம்ப்டனின்  திறமையும் .வேட்கையையும் அறிந்த வெஸ்லி  கல்கத்தா தலைமை அகத்துக்கு கடிதம் எழுதி [ எங்கெங்கே எவ்வளவு வரி வசூல் செய்யலாம் என வசதி  எனும் அடிப்படையில் ]  லாம்ப்டன் இந்திய சர்வே  செய்ய பரிந்துரை செய்கிறார்.  முதல்கட்டமாக சென்னை ராஜதானியை அடிப்படையாகக் கொண்ட தென் இந்தியாவை அளக்கும் பனி லாம்ப்டனுக்கு வழங்கப்படுகிறது. ஆயிரத்து எண்ணூற்று இரண்டில் துவங்கிய பணி , ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து இரண்டில் இங்கிலாந்தில் மேப் தயாரிக்கும் நிறுவனமான ஜான் வாக்கர் நிறுவனம் தயாரித்து அளிக்கும் முதல் இந்திய மேப் வெளியாகும்போது நிறைகிறது.

suvey

இந்திய மேப் தயாராகும் இந்த வரலாற்று நிகழ்வை ஒரு கதையாக சொல்கிறது  ரமணன் எழுதி கவிதா வெளியீடாக ஐந்து வருடங்கள் முன்பு வெளியான கடைசிக் கோடு கதை.  பொது வாசகர்களுக்காக எழுதப்பட்ட கதை.  இந்தப் பணிக்கு தேவையான கருவி  தியோடோ லைட்  அன்று அது உலகியேலே நான்குதான் இருக்கிறது. அதில் ஒன்றினை இங்கிலாந்திலிருந்து வரவழைக்கிறார் லாம்ப்டன். கருவி வரும் கப்பல் பிரெஞ்சு காரர்களால் சிறைபிடிக்கப் படுகிறது. அதன் சரக்குக்கள் சோதனையில் இக் கருவி வில்லியம் ரே வின் எப்படி பயன்படுத்துவது எனும் குறிப்புடன் காணக் கிடைக்க, ரே எனும் அந்த நாட்டின் மேதையை மதிக்கும் அந்த நாட்டின் அரசு ,அரசியல் காரணங்களுக்கு வெளியே அந்த கருவியை பத்திரமாக லாம்ப்டனுக்கு அனுப்புகிறது.

 

வேலையாட்கள் பிழையால் அரை டன் எடை கொண்ட அக் கருவி தஞ்சை கோவில் முதல் தள உச்சியில் இருந்து விழுந்து உடைந்து விடுகிறது. நஷ்ட்டத்தை லாம்ப்டன் தானே ஏற்றுக்கொண்டு அரசுக்கு பிழையீடு  அளிக்கிறார்.  திருச்சி பொன்மலை கருமார்களை கொண்டு கருவியை மீண்டும் சீரமைக்கிறார்.  அவர்க்கு பதவி உயர்வு கிடைக்கிறது.  இந்தியா முழுவதையும் துல்லியமாக சர்வே எடுக்கும் பணி அவருக்கு கிடைக்கிறது. தென்னிந்தியா வை சேர்ந்த பெண் ஒருவரை மணந்து கொள்கிறார்.

William_Lambton

லாம்ப்டன்

 

இந்த தியோடோ லைட் கருவியை சிறிய அளவாக மாற்ற பெண்டுலத்தை கண்டுபிடித்த ஹென்றி கேட்டர் இவருடன் இணைந்து கொள்கிறார். கனி வளங்களை கண்டுபிடிக்கும் நிபுணர் ,மருத்துவர் ,வேலையாட்கள் என நாற்பது பேருடன் இருபது வருடங்கள் பணி புரிந்து ,பணியின் மத்தியில் நாக்பூர் அருகே ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்றில்   ஹான்காட் எனும் கிராமத்தில் [இன்னும் அங்கே ஆங்கிலேயர் செல்வாக்கு நுழையாத எல்லை ]  நோய்வாய்ப்பட்டு கவனிப்பாரற்று இறக்கிறார்.

 

அவரது பணி அவரது உதவியாளர் எவரெஸ்டுக்கு அளிக்கப்படுகிறது.  எவரெஸ்டின் சீடர் ஆண்ட்ரு ஸ்காட் வாக். எவரெஸ்டுடன் முடிந்த சர்வே பணியின் மேஜைப் பணிகளை ராதாநாத் சிக்கந்தர் என்பவருடன் இணைந்து பூர்த்தி செய்கிறார். அந்த இருத்திக்கட்ட  பணியில் டார்ஜிலிங்கில் டைகர் ஹில் இல் இருந்து கணக்கிடப்பட்டு கண்டு பிடிக்க பட்டதே எக்ஸ் இன் சிகர உயரம். இந்த சர்வே பணியின் தலைவரும், அதை கண்டுபிடத்தவருமான ஆண்ட்ரு ஸ்காட் வாக்குக்கே  அதற்க்கு பெயரிடும் உரிமை உண்டு என பிரிட்டன் ராயல் சொசைட்டி தெரிவிக்க , ஆண்ட்ரு அந்த சிகரத்துக்கு தனது குருவின் பெயரை இடுகிறார் . எவரெஸ்ட் .

 

பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள், வண்ணமயமான காட்சிகள்.  தனது தியோ லைட் கருவி கொண்டு நோக்கும் எல்லைக்குள் இடைஞ்சலாக ஏதோ தூண் நீட்டிக்கொண்டிருக்க அதை உடைக்க ஆணை இடுகிறார் எவரெஸ்ட். உடைக்கிறார்கள். கலவரம் வெடிக்கிறது. அது அவ்ரங்கசீப் நிறுவிய வெற்றி ஸ்தூபி.  பிறகென்ன அதை புனர்நிர்மாணம் செய்து தந்த பிறகே எவரெஸ்ட் குழுவினர் விடுவிக்கப் படுகிறார்கள்.  இருபதாண்டுகள் நீண்ட இப் பணியில் ,இக் குழுவின் பணியாளர்கள் இதன் மூலவர் லாம்ப்டன் உட்பட பலியானோர் அறுபது பேர்.  லாம்ப்டன், எவர்ஸ்ட் எழுதிய அத்தனை குறிப்புகளும், இன்று மிசௌரி இந்திய  சர்வே அலுவலகத்திலும்  தியோ லைட் கருவியும் இன்று டேரா டூன் அருங்காட்சியகத்திலும் இருப்பதாக அந்த கதை சொல்கிறது.

GeorgeEverest

ஜார்ஜ் எவெரெஸ்ட்

 

இக் கதை எழுத உதவிய நூல்களும் குறிப்புகளும் நூலடைவில் இணைக்கப்பட்டிருக்கிறது.  இப் பனியின் லாம்ப்டன், எவரெஸ்ட் இரண்டு நாயகர்களும் பசி நோக்காத ,மெய்வருத்தம் பாராத கர்ம வீரர்களாகவே கதையில் வருகிறார்கள்.  பொது வாசகரை நோக்கி எழுதப்பட்ட கதை ஆகையால் ,  இந்திய நிலப்பரப்பின் லாம்ப்டன் கடந்து சென்ற  அன்றைய நிலக்காட்சி, அரசியல்  சமூக சித்திரம் ,  எதுவும் விரிவாக அன்றி   செயல்பாட்டு இடர்களை மட்டும் சுட்டி செல்கிறது கதை.

 

ஒரு வாசகனாக கையில் கிடைக்கும் எதையும் வாசித்து தள்ளும் பலபட்டறை நான். ஆனால் ரசிகனாக ஆகசிறந்தவற்றை மட்டுமே நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன்.  இந்த கடைசி கோடு  தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் அடிப்படையில் [இந்திய வரைபடம் உருவான வரலாறு ]  தனித்துவமான ஒன்று. இந்த எல்லையில் இதுதான் தமிழில் முதல் நூல். தீவிர தளத்தில் வேறு நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் வரும் வரையில் இந்த எல்லையில் இதுவே ஒரே நூல்.

 

இந்தியாவை அடி அடியாக அளந்து பார்த்த ஆட்கள் ,இங்கே கிடந்தது மரித்திருக்கிறார்கள் , எனக்கென்ன இங்கே வாழ்வதும் .மரிப்பதும் ,காட்டிலும் இனிய வாழ்வு வேறு இருக்கிறதா என்ன?

 

கடலூர் சீனு

இனிய ஜெயம்,

 

இந்த கடைசி கோடு நூல் குறித்து இங்கே கடலூர் நண்பர்கள் வசம் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு நண்பர் இது பத்தி முன்னமே எஸ்ரா எழுதிட்டாரே.என்றார்.

 

அவரது மறுப்பு சந்தோசம் அளித்து .  ஒரு போதும் உங்களுக்கான கடிதங்களை நான் பிரசுர நோக்கம் கொண்டு எழுதுவதில்லை. நான் எழுதுகிறேன்.அதை நீங்கள் வாசிக்கிறீர்கள் அந்த தொடர்பு தரும் மகிழ்வுக்காகவே எழுதுகிறேன்.  ஆனால் கடைசிக்கோடு பதிவு பிரசுரம் ஆனால் நிச்சயம் இப்படி ஒரு பதிவும் வரும்.

 

நண்பருக்கு பதிலளித்தேன் ஆம்.  எஸ்ரா எழுதி இருக்கிறார். இந்த சர்வே குறித்து  ஜான் கே எழுதிய தி கிரேட் ஆர்க்  நூல் குறித்து விகடனில் அறிமுகம் செய்திருக்கிறார். சென்னையில் துவங்கப்பட்ட சர்வே பணிகள் குறித்து யாமம் நாவலில் எழுதி இருக்கிறார்.   நான் சொன்னது  கடைசிக்கோட்டின் கருப்பொருள்  இந்திய வரைபடம் உருவான வரலாறு,  யாமம் நாவலின் கரு அத்தர் குறித்தது. நாவலின் மையம் ”இது ”அல்ல.

 

அந்த க்ரேட் ஆர்க் மொழிபெயர்க்கப்பட்டால் அது தீவிர தளத்தில் இந்த இயலின் முதல் நூலாக இருக்கும். அல்லது  இந்த கருப்பொருளை வைத்து தீவிர இலக்கியத்தில் ஒரு முழுமையான புதினம் வந்தால் ,அதற்கு முன்பாக  ரமணனின் இந்த கதை பொது வாசக தளம் எனினும் முதல் நூலாக இருக்கும்.

 

கடைசி கோடு கதையின் லாம்ப்டன் அனைவரையும் அணைத்து வேலை வாங்குபவராக இருக்கிறார்.  தென் இந்திய பெண்ணை மணம் செய்து கொள்கிறார். பெரும்பாலும் பிரென்ச் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுவையில் வசிப்பதை விரும்புகிறார். தனது பன்னிரண்டு வயது மகனை தனது பணிகளுக்கு ஒத்தாசையாக அழைத்து செல்கிறார். உடல்நலம் பற்றி கவலை இன்றி பணிசெய்தவாரே நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.

 

எவரெஸ்ட் நேரெதிர் குணம் தியோடோலைட் கருவியை இழுக்கும்   மட்டக்குதிரை மெதுவாக நடைபோடுவது கண்டு பொறுக்காமல் அதை சுட்டு கொள்ளுகிறார். கிருஷ்ணா நதிக்கரையில் அந்தக் கருவி இருக்கும் வண்டியை யானையைக் கொண்டு இழுத்து செல்கிறார்.  மூர்க்கமாக அந்த வண்டியுடன் யானையைக் கொண்டு கிருஷ்ணா நதியை கடக்க முனைகிறார். மழையோ வெயிலோ முன்னேறிக்கொண்டே இருக்கிறார். கலக்கம் செய்யும் வேலையாட்களை சுடுகிறார். தான் நோய் வாய்ப்படும்போது விடுப்பு கொண்டு சொந்த நிலம் செல்கிறார். பூரண நலத்துடன் திரும்பி அதே மூர்க்கத்துடன் இந்திய நிலத்தை அளக்கிறார் .

 

ஒரு தீவிர இலக்கிய கர்த்தா   கையாள  அனைத்து சவால்களையும் தன்னுள் கொண்டுள்ள களம் .  பிற ஆங்கிலேயர்கள் எல்லாம் ”பயன்பாட்டுக்கு ” இங்கே பெண்களை  சேர்த்துக்கொள்ளும் போது லாம்ப்டன் திருமணம் செய்து கொள்கிறார்.

 

அன்றைய இந்திய சமூக சூழல், அரசியல்,  உலக நாடுகளின் வேட்கைகள் , முகிழ்த்து வரும் அறிவியல், இந்த சர்வேக்கு பெரிதும் துணை செய்யும் லாகிருதம் கணக்குகளின் வளர்ச்சி,  இதனை பெரிய கேன்வாஸில் வரைந்து பார்க்க மானுட நாடகம்  என  தீவிர இலக்கியகர்த்தாவுக்கான தனித்துவமான களம் ஒன்று இன்னும் இங்கே தொடப்படாமலே இருக்கிறது என்றேன்.

 

கடலூர் சீனு

 

ரமணன் இணையதளம்

ரமணன் நூல்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திரும்புதல்

$
0
0

arunaடெல்லி சென்ற இரண்டாம் நாள் அருண்மொழிக்கு தோசைமாவு எங்கே இருக்கிறது என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். “எனக்குத்தெரியாது. நான் அதையெல்லாம் நினைக்க விரும்பவில்லை. என்னை மகிழ்ச்சியாக இருக்க விடு” என்று ஒரு பதில்.மிகக்கறாராக. நான் ஒன்றும் சொல்லாமலிருக்கவே “எங்க போனாலும் வீட்டை கட்டிட்டு அழணுமா? நான் பாட்டுக்கு ஓட்டலிலே சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருக்கேன். உனக்கு அது கடுப்பா இருக்கா?”

 

நான் சரிதான் சுதந்திரப்பறவை சிறகு விரிக்கட்டுமே என்று  தேடினேன். குளிர்ப்பெட்டியில் இருக்கும் என்பதை கணக்கிட மறந்துவிட்டதனால் ஒருமணிநேரம் கழித்து கண்டுபிடித்தேன். அருண்மொழி வீட்டில் பாதுகாப்பாக இருக்கவேண்டிய அனைத்தையும் குளிர்ப்பெட்டிக்குள் வைப்பதுண்டு, சமயத்தில் நகைகளைக்கூட

 

தோசைமாவு எம்பியிருந்தது..உப்பு போட மறந்துவிட்டதனால் தோசை ஒருமாதிரியாக இருந்தது. அது ஏன் அப்படி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கூர்ந்து நோக்கினால் நான் என்ன செய்வேன் என்ற பாவனையில் இருந்தது. கண்டுபிடித்து தெளிவடைய  பாதித்தோசையை தின்னவேண்டியிருந்தது.

 

எஞ்சிய தோசைமேல் உப்புநீரை  நீவி சாப்பிட்டேன். நாமே சமைத்தால் ருசியாகத்தான் இருக்கிறது. மங்கையர் மலருக்கு ஒரு சமையல்குறிப்பு எழுதினால் என்ன? ‘தோசைமாவில் உப்புபோட மறந்துவிட்டீர்களா? சிமிட்டா உப்புத்தூளை எடுத்து நன்றாகக் கரைத்து…”.

 

அதன்பின் மாநிலத்தில் இருந்து எந்த அழைப்புக்கும் டெல்லியில் இருந்து பதில் இல்லை. நள்ளிரவுவரை அசைவு இல்லாததனால் நான் சற்று கோபமாக குறுஞ்செய்தி அனுப்பினேன். “எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். நாங்கள் இங்கே உல்லாசமாக இருக்கிறோம். நீ உன் வேலையைப்பார்” என்று மறுஞ்செய்தி.

 

இந்தக் குறுஞ்செய்திகளுக்கு ஆங்கிலம் உகந்த மொழி அல்ல. அன்பாகக் கொஞ்சினால் க்ளீஷே ஆகவும் திட்டினால் சங்கைப்பிடிப்பதுபோலவும் தோன்றுகின்றது.குடும்பவாழ்க்கைக்கு க்ளீஷேக்களே ஆதாரம் என்றாலும் அவற்றை நாம் உணர்ச்சிகரமாக நேரில்தான் சொல்லவேண்டும்

 

ஆக இரண்டுநாட்களாக ரத்தினச்சுருக்கச் செய்திகள் மட்டும். ? என்றும் ! என்றும் .நானே இங்கே ஒருமாதிரி தட்டுத்தடுமாறி ஏதோ செய்ய ஆரம்பித்துவிட்டேன். டோராவுக்கு கோழியிறைச்சியை கேழ்வரகு மாவுடன் வேகவைத்து கிண்டி ஆற்றி கொடுக்கவேண்டும். எளிய சமையல். ஆனால் அடிப்பிடித்தால் சாப்பிடாது. ‘அடப்பாவி’ என்பதுபோல ஒரு பார்வை. ஆகவே அடுப்படியில் நின்றாகவேண்டும். அப்போது கிருஷ்ணன் கூப்பிட்டு “சார் இந்த கலையிலே மணிகண்டன் என்ன சொல்றார்னா…”

 

இன்றுகாலை குறுஞ்செய்தி சற்றே நீளமாக வந்தது. ‘ஜெயன் தோசைமாவை ஃப்ரிட்ஜிலே வைக்கிறப்ப மூடாம வச்சிராதே. கேஸ் அடுப்பை யும் சிலிண்டரையும் மூடியாச்சான்னு எப்பவும் செக்பண்ணிரு. கொல்லைப்பக்கம் பூட்டியாச்சான்னு பாத்துட்டு படுக்கப்போ. சீனிடப்பா மொளகாப்பொடி டப்பா எல்லாத்தையும் மூடியே வை. எறும்பு வந்திடும்” அப்படியே அருண்மொழிகுரலில்

 

ஓக்கே என்று குறுஞ்செய்தி அனுப்புவதற்குள் அடுத்த குறுஞ்செய்தி. “அரிசிடப்பாவை மூடியே வை. எலி வருது. டோராவுக்குச் சூடா வைக்காதே. வாயை வச்சிரும். கொல்லையிலே காயப்போட்ட துணிகளை எடுத்து மடிச்சு உள்ளே வச்சாச்சா? ஃப்ரிட்ஜை திறந்தா சரியா மூடியாச்சான்னு பாத்திரு” அப்பாடா ஒருவழியாக எல்லாம் இயல்புநிலைக்கு மீள்கின்றன

 

“மசமசன்னு எழுதிட்டிருக்காம சாயங்காலமாவது குளி. டீ டம்ளர் அங்கங்கே செதற்க்கிடக்கும். எடுத்து கழுவி வை. பாத்திரங்கள அப்டியே போட்டிராதே. பூசணம் பிடிச்சிரூம்” என்ன ஒரு நிம்மதி. பார்வதிபுரம் ஏரியாவில் சட்டம் ஒழுங்கே மீண்டுவிட்டதுபோல் ஓர் உணர்வு.

 

அதாவது பறவை நிலத்தில் இறங்கிவிட்டது. உளம்வந்துசேர்ந்துவிட்டது. ஆள்வந்துசேர நாலைந்துநாள் ஆகும். ஆனால் இங்கே ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அங்கே தெரிந்துவிடும். சீனிடப்பா உருண்டு தரையெல்லாம் சீனி. இதோ குறுஞ்செய்தி ரீ ரீ என்கிறது. “அங்கே என்ன சத்தம்?” என்றுதான் இருக்கும். சந்தேகமே இல்லை.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு

$
0
0

q

ASYMPTOTE என்னும் இலக்கிய இதழ் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. தைவானிலிருந்து வெளிவரும் அவ்விதழ் உலக இலக்கியத்தை மொழியாக்கங்களினூடாக அறிமுகப்படுத்துவது. சர்வதேச அளவில் முக்கியமான இலக்கிய இதழுக்கான விருதுகளைப்பெற்றது அது

 

அவ்விதழ் நிகழ்த்தும் சிறுகதைப்போட்டிக்கு என்னுடைய பெரியம்மாவின் சொற்கள் என்னும் சிறுகதையை என் வாசகியும் நண்பருமான சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கம் செய்து அனுப்பியிருந்தார். அது முதற்பரிசுக்குரியதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது

 

என்னுடைய குரலிலேயே மூலத்தில் கதையை வாசிக்கச்செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.  கதையும் பிரசுரமாகியிருக்கிறது

 

இந்த போட்டிக்கு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அனுப்பப் பட்டஅனுப்பப் பட்ட 215 கதைகளில் இருந்து இச்சிறுகதை தேர்வுசெய்யப்பட்டது. அடுத்த நிலையில் வந்த எரிக்கா கோபயாஷியின் See என்னும் கதையையும் எல்விரா டோன்ஸ்-ன் Burnt Sun என்னும் கதையையும் பிரசுரித்திருக்கிறார்கள்.

 

என் கதையை விமர்சகரான டேவிட் பெல்லோஸ் [David Bellos] தேர்வுசெய்திருக்கிறார்.

ANNOUNCING THE WINNERS OF THE 2017 CLOSE APPROXIMATIONS CONTEST!

Periyamma’s Words

 

=======================================
பெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை]
பெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3
பெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57

$
0
0

56. முள்விளையாடல்

flowerஅன்று காலையிலேயே அது அந்த நாள் என புஷ்கரனின் உள்ளாழம் அறிந்திருந்தது. அறியா பதற்றமொன்று அவனுடன் புலரியிலேயே இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அவன் கருக்கிருட்டிலேயே விழித்துக்கொண்டான். மஞ்சத்தில் படுத்திருக்கையில் ஏன் விழித்தோமென எண்ணி அக்கனவை சென்றடைந்தான். அவன் கண்டது ஒரு காளையை. அதன்மேல் கரிய காகம் அமர்ந்திருந்தது. காளை வாய் திறந்து கா கா என ஓசையிட்டது. காகத்தின் கண்கள் சிவந்திருந்தன. அவன் கையில் ஒரு வாள் இருந்தது. கல்லால் ஆன வாள். அதில் குருதி வழிந்தது. “இதை தூக்கமுடியவில்லை” என்று அவன் சொன்னான். “மிகுந்த எடை… தூக்கமுடியவில்லை.”

அவன் அக்கனவைப்பற்றி எண்ணிக்கொண்டே நெடுநேரம் படுத்திருந்தான். பின்னர் எழுந்து ஏவலனை அழைத்து நீராட்டறைக்குச் செல்லவேண்டும் என்றான். அவன் விழிகளில் வியப்பு தெரிந்தது. நீராட்டறை ஏவலரும் குழப்பம் கொண்டிருந்தனர். ஆடையணிந்துகொண்டு அவைக்குச் செல்லவேண்டுமா என எண்ணி அவன் பீடத்தில் அமர்ந்திருக்கையில் சுநீதர் வந்து வணங்கினார். அவன் சித்தமாகியிருப்பதைக் கண்டு அவர் விழிகளிலும் வியப்பு தெரிந்தது. அவரைக் கண்டதுமே அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. அவன் அப்போது அத்தருணத்தை அப்படியே தவிர்த்து பின்னகர்ந்து மீண்டும் பழைய செயலின்மைக்கு சென்றுவிட விரும்பினான்.

“சதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரரின் தூதன் வந்துள்ளான், இளவரசே” என்றார் சுநீதர். “நம்முடன் முழுமையான படைக்கூட்டுக்கு அவர்கள் ஒப்புகிறார்கள். சுகர்ணரின் சொல்லை ஓலையில் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். நம் சொல்லை இன்றே அனுப்பிவிட்டால் ஐநூறாண்டுகளாக நிகழ்ந்துவரும் போர் முடிவுக்கு வருகிறது.” அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். “இதுவே தருணம். கலிங்கர் முன்னரே மகதரிடமும் வங்கரிடமும் மாளவரிடமும் பேசிவிட்டார். அவர்களும் நம் பக்கமே. வரலாற்றுமுனை நம்மை எதிர்கொள்கிறது.”

“என்ன செய்யவேண்டும் நான்?” என்று அவன் கேட்டான். “நிஷதகுடியின் மணிமுடிக்குரியவன் நீங்களே என்று அறிவியுங்கள். ஷத்ரியகுலத்தவளாகிய தமயந்தி சத்ராஜித்தாக நிஷதபுரியின் அரியணையில் அமர்வதை நிஷதகுடித்தலைவர்களின் துணையுடன் நீங்கள் எதிர்ப்பதாக ஓலை அனுப்புங்கள்.” அவன் நெஞ்சு விம்ம தொண்டைமுழை அசைய பேசாமல் அமர்ந்திருந்தான்.

“உங்கள் தமையனை போருக்கழைப்பது அது. குடிப்போர். ஆனால் வேறுவழியில்லை. நம் குலத்தைப் பிடித்த அப்பீடையை ஒழிப்போம். படைபெருகிச்சென்று நம் தலைநகரை கைப்பற்றுவோம். அதன் உச்சியில் அமைந்துள்ள இந்திரனின் ஆலயத்தை இடித்து நம் குடித்தெய்வமாகிய கலியை அங்கே நிறுவுவோம்” என்று சுநீதர் சொன்னார். “இவ்வறிவிப்புகளை நாம் அவர்களுக்கு அனுப்பும்போதே நம் குடித்தலைவர்கள் அனைவருக்கும் தெரிவிப்போம். நம் ஓலை அங்கு செல்வதற்குள் நம் குடிகள் அனைவரும் எரி பற்றிக்கொள்வார்கள்.”

அவன் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து “ஆம், செய்யவேண்டியது அதுவே” என்றான். “நளனின் படைகள் நம் மீது எழுமென்றால் சதகர்ணிகளும் வாகடர்களும் பல்லவர்களும் நம்மை துணைப்பார்கள். அவர்களுக்கு அமராவதியையும் ராஜமகேந்திரபுரியையும் அளிக்கவேண்டும். கலிங்கத்துக்கு தண்டபுரத்தையும் தாம்ரலிப்தியையும் அளிக்கவேண்டும். வடக்கே மகதமும் அவந்தியும் மாளவமும் வங்கமும் இணைந்து எல்லைகளை தாக்குவார்கள். அவர்களுக்கு நாம் தன்னுரிமையை அளிக்கவேண்டும்.”

புஷ்கரன் “இறுதியில் நமக்கு எஞ்சுவது மூத்தவர் படைத்தலைமை கொள்வதற்கு முன்பு இருந்த எளிய நிஷதநாடு மட்டும்தான், இல்லையா?” என்றான். சுநீதர் சற்று குன்றி பின் மீண்டு “மெய். ஆனால் நம் தலைநகர் நம் கைகளுக்கு வருகிறது. நம் குலங்களனைத்தும் ஒன்றென நம்முடன் அணிவகுக்கின்றன. நம் குடி நிஷதர்களின் தலைமைக் குடியென்றாகிறது. இது இனியொருபோதும் நிகழக்கூடும் என நான் எண்ணவில்லை” என்றார். “ஆம், இழப்புகள் உண்டு. ஆனால் அதை நாம் மீண்டும் வெல்லலாம். பாரதத்தை வென்ற நிஷதகுடிகளின் வீரம் நம்முடன்தான் இருக்கிறது. நாளை நம் கொடிவழிகள் வெல்லலாம்…”

புஷ்கரன் புன்னகைத்து “எப்படி வேண்டுமென்றாலும் விளக்கிக்கொள்ளலாம், மூத்தவரே. இதைவிடக் கடந்தும் நான் எண்ணி நோக்கிவிட்டேன்” என்றான். “அனைத்தும் முடிவுசெய்யப்பட்டுவிட்டன. தங்கள் ஒப்புதலுக்காக இளவரசி காத்திருக்கிறார். தாங்கள் தலையசைத்தால் சதகர்ணிகளுக்கும் காங்கேயத்து அரசர்களுக்கும் ஓலைகள் செல்லும். அவை சென்றுசேர்ந்து அவர்களின் ஒப்புதல் செய்தி வந்ததுமே நாம் போர்முரசு கொட்டுவோம்.” புஷ்கரன் “நடக்கட்டும்” என்றபடி எழுந்துகொண்டான்.

“நீங்கள் சோர்வுற்றிருக்கிறீர்கள். இளவரசே, எண்ணிப்பாருங்கள். மகாநதி முதல் கோதை வரையிலான நிலம் நம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கலிங்கம் நம் உறவுநாடு. பத்தாண்டுகாலம் சதகர்ணிகளுடன் நாம் போரை தவிர்த்தோமென்றால் நம் கருவூலம் நிறைந்து வழியும்.” புஷ்கரன் “ஆம், அதையும் நான் முன்னரே எண்ணிக்கொண்டேன்” என்றான்.

“நீங்கள் கொள்ளும் சோர்வு எனக்கு புரிகிறது. ஆம், இது மூத்தவருக்கு எதிரான போர். ஆகவே குருதிப்பழி. ஆனால் குருதிப்பழி இல்லாத அரசென ஏதும் உண்டா? பாரதவர்ஷத்தில் எத்தனைமுறை உடன்பிறந்தார் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்று நான் சொல்லவா?” புஷ்கரன் புன்னகையுடன் “வேண்டாம், அப்பட்டியலும் என்னிடம் உள்ளது” என்றான்.

“நான் எவரையும் வற்புறுத்தவில்லை. என் குடிக்கு நன்மை எதுவோ அதையே நான் செய்கிறேன்” என்று சுநீதர் சொன்னார். “இது உங்களுக்கான ஆறுதல்… நன்று” என்று சொன்ன புஷ்கரன் “ஆணைகள் செல்லட்டும்” என்று சொல்லி புன்னகை பூத்தான். அப்புன்னகையிலிருந்த கசப்பை அவர் செல்லும் வழியெல்லாம் எண்ணிக்கொண்டார். எவர் மீதான கசப்பு? ஒருகணம் அவர் எதையோ எண்ணி திடுக்கிட்டு நின்றார். அந்தக் கசப்பை அவர் முன்னர் எங்கோ கண்டிருந்தார். எங்கே எங்கே என தன் நினைவுக்குள் துழாவிக்கொண்டு நடந்தார்.

flowerஅன்று மாலை புஷ்கரனைத் தேடிவந்த மாலினி “உங்கள் மூத்தவர் நளன் நம்மிடம் போருக்கு வரமாட்டார் என்றே எண்ணுகிறேன்” என்றாள். “ஏனென்றால் நம் படைவல்லமை மிகப் பெரிதென அவர் அறிவார். சதகர்ணிகளுக்கும் வடக்கரசர்களுக்கும் நமக்குமிடையே நடந்த கைச்சாத்துக்களை நாமே அவருக்கு தெரிவிப்போம். இப்போரில் அவர் வெல்லாவிடில் அது பேரிழிவு. ஆகவே அவர் நம்மிடம் சொல்சூழ்வதற்கே வருவார்” என்றாள். “ஆனால் அதை அவர் அவளிடம் கலந்துகொள்ளமாட்டார். இது உங்கள் குருதிப்பூசல். குடிப்போர். அவள் மீது நீங்கள் கொண்ட கசப்பையும் அவர் அறிவார். ஆகவே அவளை வெளியே நிறுத்துவார். அது மிக நன்று.”

அவன் அவளிடம் “அனைத்தையும் எண்ணிச்சூழ்ந்திருப்பீர்கள் என அறிவேன்” என்றான். அவனிடம் கூடியிருந்த அந்தக் கசப்புச் சிரிப்பை அவள் விந்தையென நோக்கினாள். ஒருபோதும் அவனிடம் அதை அவள் கண்டதில்லை. அவனிடம் எப்போதுமிருந்த தயக்கத்தையும் அறியாமையையும் அகற்றி ஆழமும் கூர்மையும் கொண்டவனாக ஆக்கியது அக்கசப்பு. அவள் அதை முன்னரே கண்டிருந்தாள். நன்கறிந்திருந்தாள். எங்கே எங்கே என அவள் தன் உள்ளத்துள் துழாவினாள். ஆகவே விழிகள் மங்கலடைய “ஆம், நோக்கித்தானே துணியவேண்டும்?” என்று பொதுவாக சொன்னாள். “சொல், மேலும் என்ன திட்டங்கள்?” என்றான்.

அவள் “அவர் உங்களிடம் நேருக்குநேர் பேசினால் அனைத்தும் சீரடைந்துவிடும் என நம்புவார். இங்கு வந்து உங்களிடம் பேசவேண்டுமென தூதனுப்புவார்” என்றாள். “அவ்வலையில் வீழாமலிருப்பது உங்கள் கையில் இருக்கிறது. மூத்தவரென உங்களுக்கு அவர் ஆணையிடலாம். வளர்த்தவர் என நயந்து பேசலாம். உடனாடியவர் என கனிவு கோரலாம். குலநன்மையையும் குடியொருமையையும் சொல்லி சொல்லடுக்கலாம். எதற்கும் வளையாமலிருக்கையிலேயே நீங்கள் உங்கள் குருதியில் எழவிருக்கும் மைந்தருக்கு நலன் செய்கிறீர்கள். உங்கள் குடிமூதாதையரை மகிழ்விக்கிறீர்கள்.”

புஷ்கரன் “நான் வளையமாட்டேன் என இப்போது சொல்கிறேன். ஆனால் தருணங்களை தெய்வங்கள் வடிவமைக்கின்றன” என்றான். “ஆம், அதை ரிஷபர் சொன்னார்.” அவன் எரிச்சலுடன் “என்ன சொன்னான்?” என்றான். “உங்களால் உறுதிகொள்ள முடியாது என. ஆகவே முடிந்தவரை உங்களையும் அவரையும் சந்திக்கவிடலாகாது என. அதுவே நன்று என நானும் எண்ணுகிறேன்.” சில கணங்களுக்குப்பின் அவன் “என்னைப்பற்றி என்னைவிட நன்றாக அவன் அறிந்திருக்கிறான்” என்றான்.

அச்சொல்லில் இருந்த நஞ்சை உணர்ந்தாலும் அவள் அதை புறந்தள்ளி “நாம் அவரை பேச அழைப்போம். ஆனால் அதற்கு முன் நாம் விழைவதை சொல்லிவிடுவோம். நிஷதகுலத்திற்கு அந்த ஷத்ரியப்பெண் சத்ராஜித் என அமரக்கூடாது. காளகக்குடி முடிசூடவேண்டும். இந்திரபுரி தலைநகராக உங்களுக்கு அளிக்கப்படவேண்டும். மூத்தவர் நளனுக்கு வேண்டுமென்றால் வடக்கே உள்ள சோமகிரியையும் சூழ்ந்துள்ள ஊர்களையும் அளிப்போம். அவர் நிஷதர்களின் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாக அங்கே ஆளட்டும்” என்றாள்.

புஷ்கரன் புன்னகையுடன் “அவர் அதற்கு ஒப்புக்கொள்வாரா?” என்றான். “மாட்டார். ஆனால் அவருக்கு வேறுவழியில்லை… போர் நிகழுமென்றால் நிஷதகுடிகள் ஒன்றுடனொன்று போரிட்டு அழியும். அவர்களை பிற அரசர் முற்றழிப்பார்கள்.” புஷ்கரன் “நான் அதை செய்யவேண்டுமா என்ன?” என்றான். “அது நிகழாது. நிஷதகுடிகளின் அழிவை ஒருபோதும் நளன் ஒப்புக்கொள்ளமாட்டார். அதன்பொருட்டு தான் சிறுமைகொள்ளவும் தயங்கமாட்டார்.” புஷ்கரன் “ஆம்” என்று பெருமூச்சுவிட்டான். “தான் முடிசூடி ஆள்வதற்காக குலத்தை அழிப்பதா என அவரை எண்ணச்செய்தால் மட்டும் போதும்” என்றாள் மாலினி. “அவர் அவ்வாறு மட்டுமே எண்ணுவார்” என்றான் புஷ்கரன்.

“அத்துடன் அவர் சின்னாட்களாகவே அரசு, நகர் எதிலும் ஆர்வமிழந்தவராக இருக்கிறார். வெறியுடன் படைகொண்டு தென்னகத்தையும் காங்கேயத்தையும் வென்ற பழைய நளன் இன்றில்லை” என்றாள் மாலினி. “நிகழ்க!” என்று சொல்லி அவன் தன் சால்வையை எடுத்தான். அவள் காமம் நிறைந்த சிரிப்புடன் அவன் கையைப்பற்றி “இது நன்னாள். இப்போதுகூட நாம் இனிதிருக்கலாகாதா?” என்றாள். நடிக்கப்படும் காமம்போல முகத்தை அழகிலாமலாக்குவது பிறிதில்லை. அவன் உள்ளம் குமட்டல்கொண்டது. “எனக்கு உடல்நிலை நன்றாக இல்லை” என்றான்.

“ஏன்?” என அவள் கொஞ்சினாள். “என்ன செய்கிறது என் அரசருக்கு?” அவன் அவளை நோக்கி “குமட்டல்” என்றான். அவள் முகம் மாறி மீண்டும் சீரமைந்தது. உரக்க நகைத்து “சேடியை அனுப்புகிறேன். இஞ்சிநீர் அருந்துக!” என்றாள். அவன் தலையசைத்தபின் வெளியே சென்றான். அவள் அவனிடமிருந்த அக்கசப்பை மீண்டும் எண்ணிக்கொண்டாள். அது ரிஷபனிடமிருக்கும் கசப்புச் சிரிப்பு என திடுக்கிடலுடன் எண்ணிக்கொண்டாள். அதற்கு முன்னரும் அவள் அதை கண்டிருந்தாள் என வெளியே செல்லும்போது எண்ணிக்கொண்டாள். கலிங்கத்தின் சிறைக்கொட்டடியின் கொலைத்தொழிலரிடம் எப்போதும் அச்சிரிப்பு இருந்தது.

flowerகருணாகரர் ஒற்றர்களின் ஓலைகளுடன் வந்து நளன் அறைக்குமுன் நின்றார். அறிவிப்பதற்கு முன் ஒருமுறை தயங்கினார். ஏவலன் அவரை நோக்கிக்கொண்டு நின்றான். அறிவிக்கும்படி அவர் தலையசைக்க அவன் உள்ளே சென்று ஒப்புதல் பெற்று வெளியே வந்தான். அவர் தன்னைத் திரட்டியபடி உள்ளே சென்று தலைவணங்கினார். நளன் “செய்தி வந்துவிட்டதா?” என்றான். “ஆம், ஒற்றர்கள் முன்னரே சொன்னார்கள். முறைப்படி இளவரசரின் ஓலையே வரட்டும் என்று காத்திருந்தேன். வந்துவிட்டது.” நளன் என்ன செய்தி என்று கேட்காமல் காத்திருந்தான்.

“அனைத்தும் அவருக்கு வேண்டும். நமக்கு ஓரிரு ஊர்களை ஒதுக்குவார்கள்” என்றபின் ஓலையை நீட்டினார் கருணாகரர். அவன் அதை வாங்கி ஒரே விழியோட்டலில் படித்துவிட்டு அருகே இருந்த பீடத்தில் வைத்தான். “நாம் எவ்வகையிலும் ஒத்துப்போகலாகாது என நினைக்கிறார்கள்” என்றார் கருணாகரர். “ஆம், அவர்களுக்குரிய தருணம் இது” என்று நளன் சொன்னான். “சதகர்ணிகளின் ஆட்டம் இதற்குப் பின்னால் உள்ளது. சுமத்ரர் நாம் எதிர்கொள்பவர்களிலேயே மிகப் பெரிய எதிரி.” நளன் “எதிரிகளல்ல, எதிர்ச்சூழல்களே அஞ்சத்தக்கவை” என்றான். கைகளை மார்பில் கட்டியபடி தலைகுனிந்து எண்ணத்திலாழ்ந்தான்.

“என் கருத்து இதுவே. இத்தருணத்தில் நாம் என்ன செய்தாலும் முதலில் பேரரசியின் வேள்விநிறைவும் முக்குடைசூடலும் நின்றுவிடும். அவர்கள் விழைவதும் அதுவே. நாம் இவர்களை ஒருபொருட்டென்றே எண்ணக்கூடாது” என்றார் கருணாகரர். “உண்மையில் அது நல்ல போர்ச்சூழ்ச்சியும்கூட. நாம் என்ன எண்ணுகிறோம் என எண்ணி அவர்கள் குழப்பம் கொள்ளவேண்டும். அவர்கள் அறியாத படையாற்றலோ சூழ்ச்சியோ நம்மிடமிருக்கிறதா என்று தயங்கவேண்டும். அதற்குள் பேரரசி சத்ராஜித் என்று அமர்ந்துவிடுவார். அந்நிகழ்வுக்குப்பின் நம் குடிகள் நமக்கெதிராக திரும்பமாட்டார்கள். அது நிகழக்கூடாதென்று அஞ்சியே இவர்கள் இத்தருணத்தில் இச்சூழ்ச்சியை செய்கிறார்கள்.”

“அது ஒரு நல்ல முறை என்பதில் ஐயமில்லை” என்று நளன் சொன்னான். “ஆனால் அவர்களின் ஆற்றலை நாமும் அறியோம். என் இளையவனின் முதிர்ச்சியின்மையை நான் நன்கறிவேன். தன் படைவல்லமையை நம்பி அவன் போர்தொடுப்பான் என்றால் உடன்பிறந்தோர் படைமுகம்கொண்டு குருதி சிந்துவோம். நம் குடி உட்போரிட்டு அழியும். அதை நான் ஒப்ப முடியாது.” கருணாகரர் அதற்கு மறுமொழி சொல்ல முடியாமல் நோக்கி நின்றார். “உங்களுக்கே தெரியும் புஷ்கரனை” என்றான் நளன். “மெய்தான்” என்றார் கருணாகரர்.

“ஒன்றே செய்வதற்குள்ளது. சென்று பேசுவோம்” என்றான் நளன். “நானே செல்கிறேன்” என்று கருணாகரர் சொன்னார். “நீங்கள் செல்வதனால் பயனில்லை. நான் செல்கிறேன். நான் செல்வதென்பது என் பிழைக்குப் பொறுப்பேற்று ஈடுசெய்ய தலைகுனிவதாகவும் பொருள்படும். என்னை வரவழைத்ததையே வெற்றி என அவர்கள் எண்ணக்கூடும்.” கருணாகரர் “அவர்கள் எளிதில் ஒப்பமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் இது இளவரசரின் எண்ணம் அல்ல. இதற்குப் பின் சதகர்ணிகள் இருக்கிறார்கள். வடவர் இருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக இம்முடிவுகளை எடுப்பவர்கள் கலிங்க அரசியும் அவள் அணுக்கனாகிய ரிஷபனும்தான். நாம் செய்யக்கூடுவது பொழுதை ஈட்டுவதே. அதற்கு நான் முதலில் செல்வதே நன்று” என்றார்.

“வேள்விநிறைவுநாள் வரை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நான் சென்று பேசுகிறேன். அவன் விழைவதை அளிக்கிறேன். கூடவே அவனை எப்படி அவர்கள் கைப்பாவை என வைத்திருக்கிறார்கள் என விளக்குகிறேன். மெய்யான ஆற்றலின் மேல் ஏறியே அரசமரவேண்டும், மாற்றரசர் தோள்மேல் ஏறி அமர்ந்தால் அவர்களின் கைப்பாவை என்றே ஆக நேரிடும் என அவனுக்கு விளக்குகிறேன். என்ன இருந்தாலும் அவன் என் தோளில் வளர்ந்தவன். என்னை தந்தையென எண்ணுபவன்.” கருணாகரர் ஏதோ சொல்ல எண்ணியபின் தலையசைத்தார்.

“நேரில் நானே பேச வருகிறேன் என அவனிடம் சொல்லியனுப்புங்கள். நான் அவனிடம் தனியாகப் பேசினாலே அனைத்தும் சீரமைந்துவிடும்.” கருணாகரர் “அவர்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார். “இச்செய்தி இங்கே எவருக்கும் தெரியவேண்டியதில்லை. அரசியின் ஒற்றர்களும் அறியாமல் நான் கிளம்பவேண்டும். இங்கு வேள்வியும் விழாக்களியாட்டும் தொடர்ந்து நிகழட்டும்” என்றான்.

“ஆனால் தாங்கள் கிளம்புவது…” என கருணாகரர் சொல்ல அவன் கையமர்த்தி “சில பயிலாப் புரவிகளுடன் காட்டுக்குச் செல்கிறேன். அதை எவரும் ஐயப்பட மாட்டார்கள்” என்றான். கருணாகரர் “நன்று” என நீள்மூச்செறிந்தார். “நாகசேனர் என்னுடன் வரட்டும். நீங்கள் இங்கே இருந்து பணிகளை நோக்குங்கள்” என்றான் நளன். “ஒருவேளை…” என்ற கருணாகரர் நிறுத்திக்கொண்டார். “என்னை அவன் சிறைபிடிப்பானா என்று எண்ணினீர்கள் அல்லவா? அவன் நிஷதகுடியினரின் சில நெறிகளை எந்நிலையிலும் மீறமுடியாது” என்றான் நளன்.

flowerவிஜயபுரிக்கு நளன் வந்த செய்தியை நகர்மக்கள் எவரும் அறியவில்லை. கருக்கிருட்டுக்குள் நளனும் நாகசேனரும் எட்டு காவல்படையினரும் கோட்டைக்குள் நுழைந்தார்கள். நளனை வரவேற்க கோட்டையில் கொடியேறவில்லை, வாழ்த்துமுரசும் எழவில்லை. அவனை எதிர்கொண்டழைத்த ரிஷபன் தலைவணங்கி வாழ்த்தும் முகமனும் உரைத்து “தாங்கள் அரண்மனையில் ஓய்வெடுக்கலாம், அரசே. காலையில் தங்களை இளவரசர் வந்து சந்திப்பார்” என்றான். நளன் அவனை கூர்ந்து நோக்கியபடி தலையசைத்தான்.

அவன் சற்று ஓய்வெடுத்து விழித்தபோது உள்ளம் மிகவும் அமைதியிழந்திருந்தது. கிளம்பும்போது மெல்லிய ஐயம் இருந்தது, அது கருணாகரரின் விழிகளில் இருந்து தொற்றிக்கொண்டது. பயணம் நீளநீள ஐயம் விலகி நம்பிக்கை உருவானது. புஷ்கரனுடன் அண்மையில் ஒரு நேருக்குநேர் உரையாடலே நிகழ்ந்ததில்லை என்று அவன் நினைவுகூர்ந்தான். அவனிடம் சொல்லவேண்டியவற்றை கோத்துக்கொண்டான். சொல்லவேண்டியதே இல்லை, என்றுமே அவனுடைய தொடுகையே புஷ்கரனை நெகிழச் செய்திருக்கிறது. தோளில் மெல்ல தட்டினால், தலையை வருடினால் கண்கலங்கி தலைகுனிபவன் அவன். ஒருவேளை இந்தச் சிக்கல்கள் அனைத்துமே அவர்கள் ஒருவரை ஒருவர் அணுகியறியவேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

அவன் ஆணவம் சீண்டப்பட்டிருக்கலாம். அவன் குடி தன் விழைவை அவன்மேல் ஏற்றியிருக்கலாம். அவனுக்குத் தேவை ஓர் அரசு என்றால் விஜயபுரியை தலைமையாக்கி இரண்டாவது நிஷதப்பேரரசை அவனுக்காக அமைக்கலாம். தெற்கே காஞ்சி வரை அவன் நிலம் விரியமுடியும். அவன் கொடிவழியினர் முடிசூடி ஆளமுடியும். அதைச் சொன்னாலே போதும், அனைத்தும் முடிந்துவிடும். அந்நாட்டை காளகநாடு என்றே அழைக்கலாம். அதை அவையில் அறிவித்தால் காளகர் எழுந்து நின்று கோல்தூக்கி வாழ்த்தொலி எழுப்புவார்கள்.

உறுதியான நம்பிக்கையுடன், புன்னகை நிறைந்த முகத்துடன் அவன் நகர்புகுந்தான். படுக்கையில் உடல்நீட்டும்வரை அந்த நம்பிக்கை நீடித்தது. துயிலில் ஆழ்கையில் ஏதோ ஒன்று உள்ளே தைத்தது. எது என எண்ணியபடியே துயின்றான். விழித்தபோது ஆழம் அந்த முள்ளை நன்கறிந்திருந்தது. அதை சொல்லென்றாக்கத் தவிர்த்து வேறெங்கோ அலைந்தது உள்ளம். எழுந்து நீராடி அணிகொண்டான். தான் சித்தமாக இருப்பதை புஷ்கரனிடம் அறிவிக்கும்படி ஏவலனிடம் சொன்னான். அதன்பின் அவன் வருகையை அறிவிக்கும் ஓசைகளுக்காக காத்திருந்தான்.

பின்காலை வரை புஷ்கரன் வரவில்லை என்று கண்டதும் ஏவலனை அழைத்து “என்ன நிகழ்கிறது? ஏதேனும் சிற்றமைச்சரை அழைத்து வா” என்றான். சிற்றமைச்சர் சம்புகர் வந்து பணிந்து “இளவரசர் அவையிலிருக்கிறார். தவிர்க்கமுடியாத சில பணிகள்… சந்திப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார். அவன் சினம்கொண்டு சொல்லெடுக்க வாயசைத்தபின் அடக்கிக்கொண்டு “நான் காத்திருக்கிறேன் என்று சொல்க” என்றான்.

உச்சிப்பொழுதில்தான் ரிஷபன் அவனைப் பார்க்க வந்தான். பணிவுடன் முகமனுரைத்து “இளவரசர் தங்களை மாலையில் அவையில் சந்திப்பதாக சொன்னார், அரசே” என்றான். “அரசவையிலா? நான் அவனை நேரில் பார்க்க வந்தேன்” என்றான் நளன். “ஆம், ஆனால் தாங்கள் அரசமுறைப்படி வந்திருக்கிறீர்கள். அவையில் சந்திப்பதே முறை என்றார்கள் குடிமூத்தார்” என்றான் ரிஷபன். “இது எனக்கும் என் இளையோனுக்கும் இடையேயான சந்திப்பு. இதில் குடிமூத்தார் ஏன் உட்புகவேண்டும்?” என்றான் நளன்.

“நான் அறியேன். ஒருவேளை நேரில் தங்களை சந்திப்பது குடிமூத்தாரிடம் ஐயத்தை உருவாக்குமென அவர் எண்ணியிருக்கலாம்” என்றான் ரிஷபன். “ஐயமா? என்ன ஐயம்?” என்று நளன் கேட்டான். “நான் அணுக்கன். எதையும் நான் சொல்ல முடியாது. அரசவையில் சந்திப்பு நிகழுமென்று சொல்லப்பட்டது. அறிவிக்கவே வந்தேன்” என்று ரிஷபன் சொன்னான்.

நளன் அவனை கூர்ந்து பார்த்தான். அவனை முதலில் சந்தித்தபோதுதான் அந்த அமைதியின்மை உள்ளத்தில் குடியேறியது என நினைத்தான். அழகிய இளைஞன். ஆனால் ஏதோ ஒன்று அவனை அழகற்றவனாக ஆக்கியது. அவன் விழிகளின் கரவுநோக்கு. ஆம், அது காகக்கண். நளன் “நான் அரச உடையில் அவைபுகவேண்டுமா? நான் அணிகளை கொண்டுவரவில்லை. மேலும் முகப்புக் கொடியோ மங்கலச் சூதரோ அணிச் சேடியரோ இல்லாமல் நகர்புகுந்திருக்கிறேன்” என்றான்.

“தங்கள் விருப்பப்படி அவைநுழையலாம், அரசே” என ரிஷபன் வணங்கினான். இவன் காகம் என நளன் எண்ணிக்கொண்டான். ஒன்றை நோக்குவதாக விழிகாட்டுகையில் ஓராயிரத்தை நோக்கும் விழிகொண்டது காகம். பெருமூச்சுடன் “நன்று, நான் அவனை அவையில் சந்திக்கிறேன்” என்றான் நளன். “அவையில் அனைத்துக் குடித்தலைவர்களும் இருப்பார்கள் அல்லவா?” என்று அவன் கேட்க ரிஷபன் தலைவணங்கி “ஆம்” என்றான்.

தன் உடல்முழுக்க இருந்த சினத்தை நளன் உணர்ந்தான். நிலையழிந்து அறைக்குள் சுற்றிவந்தான். “அரசே, நாம் வந்ததே பிழை என எனக்குப் படுகிறது. நம்மை தனியாக சந்திக்க விழையவில்லை என்று இளவரசர் அறிவித்திருக்கிறார் என்பதே இதன்பொருள். இங்கு நிகழ்வன எவையும் இயல்பானவை அல்ல. நன்கு திட்டமிடப்பட்டவை” என்றார் நாகசேனர். “தாங்கள் இந்நிலத்தின் பேரரசர். முறைப்படி தாங்கள் விஜயபுரிக்கு வந்திருந்தால் புஷ்கரர் கோட்டைமுகப்புக்கு வந்திருக்கவேண்டும், குடித்தலைவர்கள் கோல்தாழ்த்தி வணங்கி வரவேற்றிருக்கவேண்டும். நகர் விழாக்கோலம் பூண்டிருக்கவேண்டும். மக்கள் இரு மருங்கும் நின்று மலர்சொரிந்து வாழ்த்தியிருக்கவேண்டும். இப்போது எவராலும் வரவேற்கப்படாதவராக நகர்நுழைந்திருக்கிறீர்கள். ஓர் அயல்நகரியில் நீங்கள் நுழைந்தால் அளிக்கப்படும் வரவேற்புகூட இங்கில்லை. இதோ, அரசத்தோற்றம்கூட இல்லாமல் உங்களை அவைக்கு அழைக்கிறார்கள்… நாளை இவர்களின் சூதர்கள் பாடப்போவது என்ன?”

“நன்று, நிகழ்வதென்ன என்று பார்ப்போம்” என்று நளன் சொன்னான். “என்ன நிகழும்? அவையில் இளவரசர் எங்கு அமர்வார்? அரியணையிலா? நீங்கள் அவைப்பீடங்களில் ஒன்றிலா? அவருக்கு இந்நிலம் மேல் என்ன உரிமை? இந்நகருக்கு அரசரென எவர் அவருக்கு முடிசூட்டியது? தாங்கள் அவைபுகுந்தால் இவர்கள் செய்தவை அனைத்தையும் ஏற்றது போலாகும்” என்ற நாகசேனர் அணுகிவந்து “அரசே, நாம் செய்யவேண்டியது ஒன்றே. வந்ததுபோலவே இப்போதே நகர்நீங்கிவிடுவோம். நாம் வரவே இல்லை என ஆகட்டும். நமக்காக எதிர்பார்த்து அவர்கள் காத்திருப்பதனால் நாம் செல்வதை எதிர்பார்க்கமாட்டார்கள். நாம் இங்கு வந்தது இவர்கள் உருவாக்கிய பொய்க்கதை என்று சூதர்களைக்கொண்டு சொல்ல வைப்போம்” என்றார்.

“நாம் செய்யவேண்டியது அதுதான், ஐயமில்லை” என்று நளன் சொன்னான். “அவர்களின் நோக்கமும் புரிகிறது. ஓர் அயல்நாட்டிற்கு அவர்களின் அருள்கோரி வந்தவனாக என்னை ஆக்கிவிட்டார்கள். ஆனால் இதெல்லாம் புஷ்கரனின் சூழ்ச்சிகளல்ல. இது மாலினிதேவியின் திட்டம். அவளை ஆட்டுவிப்பவன் ரிஷபன்.” நாகசேனர் “தாங்கள் அவைக்குச் செல்வதாகவே முடிவெடுத்துவிட்டீர்களா?” என்றான். “ஆம், நான் வந்தது என் இளையவனை விழியொடு விழி நோக்கிப் பேச. அவையில் பேசுவதென்றால் அவ்வாறே ஆகட்டும்.”

“அங்கே அமர்ந்திருப்பவர்களும் நேற்று என் குடியினராக அமைந்திருந்தவர்களே. அவர்களிடமும் நேருக்குநேர் பேசுகிறேன். அவர்களுக்கு உளப்புண் என்ன? சீர்ஷரின் இறப்புதானே? அதன்பொருட்டு பிழைநிகர் செய்வதாக அறிவிக்கிறேன். குருதிப்பிழை செய்வதாக இருந்தாலும் ஒப்புகிறேன்” என்று நளன் சொன்னான். நாகசேனர் “நாம் அஞ்சி வந்திருப்பதாக அவர்கள் எண்ணினால் இப்படி இறங்கிச்செல்வது அவர்களை மேலும் தருக்கி எழவே செய்யும்” என்றார்.

“இல்லை, என் ஆற்றலென்ன என்று அவர்கள் உள்ளூர அறிவார்கள். போரை அவர்களும் விரும்பமாட்டார்கள். எங்கோ ஓரிடத்தில் ஒப்புநிலை செய்துகொள்ளவேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள்” என்றான் நளன். “இன்றே அவையில் அது முடிவாகட்டும். பேரரசி வேள்விநிறைவுசெய்து மும்முடி சூடுவதற்கு இவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டும் போதும். பிறவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்றான். நாகசேனர் பெருமூச்சுடன் “நன்று நிகழ்க!” என்றார். “நாம் நம்மால் இயன்றதைச் செய்வோம், நாகசேனரே. நம் குடி வாழவேண்டும். நம் ஆணவம் அதற்கு தடையென்றாகக்கூடாது. அதுவே என் எண்ணம்” என்றான் நளன்.

தொடர்புடைய பதிவுகள்

என்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!

$
0
0

Monsoon_Trip_Day_02-1200603அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். கண்கள் இப்போது தேவளையா?

 

நீண்ட அனுபவங்கள் எழுதவேண்டும் என்று சொல்லிக்கொண்ட ‘சோம்பி திரிந்துவிட்டேன்’ அத்தோடு தொடர்ந்துகொண்டேயிருந்த அடுத்தடுத்த வேலை மற்றும் வேளான் பணிகள் மேலும் மேலும் அழுத்தும் விதமாக தொட்டத்தில் இரண்டாவது முறையாக, முதல் முறை புது 100 அடி ஹோஸ் பைப், திருட்டு கொடுத்துவிட்டு மனதை தேற்றிக்கொண்டிருக்கிறொம்.

 

ஒரு வேளான் அடிப்படை அறிவு இல்லாமை, ஆதலால் பல தகவல் கிடைக்க எதை எடுப்பது எப்படி தொடுப்பது என்ற குழப்பம் இதன் இடையே இன்றைய இந்த கட்டுரையை வாசித்தேன் (http://www.jeyamohan.in/100321#.WWWiPceCnBs), ‘சோம்பி திரியேல்’ நினைவுட்டியது. எனது குறிக்கொளுக்கு, முதலில் வேளான் பழக,  அதை ஆரோக்கியமான் முறையில் பழகமுடிந்தால் இன்னும் நன்றே! கீழே தொடர்வதற்க்கு முன்னால், தாங்கள் உரைத்த இயந்திரங்கள் இன்றியமையாத்தாகயிருக்கும் என்பதை முழுமையாக ஆமோதிக்கின்றேன். வேலை ஆட்கள் கூலி என்பது தனி பெறும் செலவு! இது இன்றை நிலையில் அனைத்து துறைக்கும் பொருந்து.

 

மாசி கடைசியில் கணறு பணிகள் முடிவடைந்து அடுத்தாக மாற்று சூரிய சக்தி எற்பாடுகள் கவனித்தோம், அரசு வங்கி சார்ந்து பணிகள், தொடர் சிக்கல், முடியும் ஆனால் முடியாது என்ற இரீதியில் தான், பிறகு இணையத்தில் அலசியதில் நபார்டு இந்த வகை மானியத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்த கிராம்பபுறங்களில் மானிய தொழில்நுட்ப பணிகள் அமைத்து தரும் நபர் ஆரம்பம் முதலே அநேக உதவிகள் எங்களுக்கு,  அவர் வழியாக ஒரு மாற்று வழி ஏற்பாடாயிற்று, தனிப்பட்ட உடன்படிக்கையின், நபார்டு மிண்டும் திட்டத்தை தொடங்குகையில் (நம்பிக்கை தானே எல்லாம்) நிறுவனம் மானியத்தை பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் மானிய விலையிலேயே வேலைகள் முடிந்தது, அமைத்து தரும் நிறுவனம் முன் வர காரணம் அவர்களிடம் அதிக உபகரணங்கள் தேங்குகிறது. வேலைகள் முடிந்து விடுவிட்டது என்பதற்க்கு பின்னால் அதிக மனஉலைச்சல், இதுவும் அதிக ஒருங்கினைப்பு தேவைப்படும் வேலை தான், அனைத்து அவசியங்களும் கடைசியில் தான் சொல்லப்படும் அறக்கபறக்க ஏற்பாடு செய்யுபடி ஆகிவிடும். ஒரு உதாரணம், அவர்கள் சொல்லும் தேவை ஒரு கொத்தனார் இரண்டு சித்தாள், வேலை தொடங்கும் அன்று சித்தால் நாங்கள் வானம் தொன்டுவதில்லை என்பார்கள், பின் மெய்காட்டாள் அவர் வேலை மத்தியம் முடியும் அப்படி அடுத்த அடுத்த வேலை தள்ளும், இதற்க்கு பிறகு, கலவை இடத்தில் இருந்து அடித்தளம் அமைக்கும் இடம் நடக்கும் துழைவிலிருந்தால் ஆட்கள் அதிகம் வேண்டும் என்பார்கள் இப்படியாக நாம் பதம் பார்க்கப்படுவோம் ;). திட்டம் சித்தரை அக்னிதொடுப்பிற்கு முன்பாக அமைக்கவேண்டும் என்பது ஆனால் பணி முடிந்தது சரியாக தொடுப்பு முடிந்த பின்னால் தான். என்ன சொன்னாலும், முதன் முறையாக தண்ணீர் பாயந்த அழுகு அந்த கனம் அதுவரை நம்மை துளைத்த அனைத்து உலைச்சலும் அப்படியேன காற்றில் பறந்து விடுகிறது.

 

இப்போதல்லாம் என்ன வேண்டும் என்று கேட்டாலே, குழந்தைகள் விளையாடும் ‘டக் டக் யாரது திருடன் என்ன வேண்டும்..’ கேட்டாலும் வலிமை வேண்டும் என்று மனதில் சொல்லிக்கொள்கிறேன். என்ன வேண்டும் வலிமை வேண்டும்! காரியம் முடியும் வரை கனங்களை கடந்து வர, எதுவும் கடந்து போகும்!!

 

என் தந்தை மிகுந்த ஆர்வத்துடன் களபணியில் உள்ளார், காடு அமைத்து ஆறு மாதங்கள் முடிந்து தண்ணீர் வசதி ஏற்பாடானதும், என்ன பயிர் போடலாம் என்று விறுவிறுவேன விசிராக்க, அக்கம் பக்கம் தண்ணீர் இருந்தால் நெல்லு போடுங்க என்று பரிந்துரை. நெல் வளர்ப்பை சொல்லுவதை விட அதிகம், களைக்கொல்லி, உரம், புச்சிக்கொல்லி என்று தான் கிராமத்தினர் அறிவுரையிருந்தது ஒரு பீதியாகவே இருந்தது :). தனிப்பட்ட எண்ணம் அதற்கு தண்ணீர் அதிகம் வேண்டும் என்பது ஆனால் அதிகம் சொல்லி அதை வேண்டாம் என்று சொல்ல தொன்றவில்லை. முதலில் திரு. ஆர்.எஸ்.நாராயணனிடம் கேட்க அவர் செய்யுங்கள் எப்பதான் கத்துக்கிறது என்றார் ஆனால் அவர் பரிந்துரை நெல் அல்லாதவைகள், தானியம், பயறுகள், மூலிகைகள். மூலிகைகளுக்கேன்று தனி வாரியம் இருந்தால் நன்றாக இருக்கும், இப்பயிறுக்கு அதிகம் விசாரித்துவிட்டுங்கள் என்றார். அத்தொடு, இன்னொன்றும் கேட்டேன், தனிப்பட குழுமங்களாக இயங்கும் (வெகு நாட்களாக இருக்கிறார்கள் திட்டத்தொடு செயல்படுகிறார்கள் இணையமும் உண்டு) சிலரை தொடர்புகொண்டு அறிவுரை கேட்களாமா என்று அதற்கு கேட்ளாம் உங்கள் விருப்பம் ஆனால் அந்த குழுமங்கள் நிறவனங்கள் போல் இயங்குபவை அதாவது நீங்கள் சேவை கேட்பவர் அவர்கள் சேவை அளிப்பவர்கள் என்ற முறையில் தான் தொடர்பு இருக்கும் என்றார். அதற்கு உங்கள் அருகாமையில் இருக்கும் தோட்டங்கள், வேளான் அதிகாரி அவர்களிடம் தொடர்பில் இருங்கள் என்றார்.

 

அடுத்தாக, சேகரிப்புகளிலிருந்து தொடர்பு எண் கண்டு திரு. கிருஷ்ணகிரி தண்டபாணி அவர்களிடமும் பேசினேன், அருகாமையில் அறிவுரை பற்றியும் பேசினோம், பயண் படுத்துகிறவர்கள் பயப்படுவதில்லை அதை பற்றி அதிகம் தெரியாவர்கள் படித்ததை மட்டும் கொண்ட அறிவு ஆதலால் உங்கள் அந்த பயம் அத்தொடு அளவொடு பயண்படுத்தினால் நல்லது தான் என்றார், பியர் செய்யலாம் அடிப்படைகளை பற்றி பேசிவிட்டு ஆனால் நெல் உங்கள் ஊர்களில் உண்டா என்று கேளுங்குள் மற்றும் பிற விபரங்கள் கேட்டு மிண்டும் அழையுங்கள் என்றார். விசாரித்துக்கொண்டேயிருக்கிறொம், வேளான் அதிகாரி வந்தார் அவர் நிங்கள் முதல் முறை என்பதால் முதலில் நெல் பாதியாகவும், பாதி உளுந்து பயிரிடுங்கள் என்றார். சிறு விவசாயி சான்றிதழ் பெற்றிடுங்கள் என்றார்.  இங்கிருந்து பயணிக்கவேண்டும்.

 

இப்படி போய்க்கொண்டிருக்கையில் தான் தந்தை அழைத்து அந்த கேபிள் கூட 10 மீட்டர் வாங்கிருந்தோமே என்னாச்சு என்றார், அது அப்போதே முடிந்துவிட்டது, ஏன் என்றதும் என்ன தம்பி சொன்ன உங்களுக்கு புரியமாட்டேங்குது 10 கீ.மில இடத்த வாங்கி இருக்கவும்முடியல காவலுக்கு ஆளையும் இருக்கவிடமாங்க போல் முனியிருக்கு அது இருக்கு இது இருக்குனு, கேபிள திருடிட்டு போயிட்டாயிங்க 25 மீட்டர் தகடுகலயிருந்து மோட்டாருக்கு போரத அத்தொடு தகடுலிலிருந்து செயலிபேட்டிக்கு வரும் அனைத்து கேபிளையும் பிச்சு இணைப்பு கேபிள் 30 மீட்டர் இருக்கும் போல அனைத்தையும் தூக்கிட்டு போயிட்டாயிங்க. என்ன சொல்லுவது என்று தெரியவில்லை தந்தை பதிலையும் எதிர் பார்க்கவில்லை சரி பார்ப்போம் என்று அழைப்பை துண்டித்துவிட்டார். மனதில் ஒரு வித பதட்டம் வெளியில் அமைதி கடைபிடித்தேன். பின் அனைத்தும் முன்னரே அனைவரும் அறிவுறித்தியத்து தான் ஆள் வைக்கவேண்டும் வேற செய்யவதற்க்கு ஒன்றுமில்லை என்று தொன்றியது. இதுவும் கடந்து போகும்! முன்னோர்களை பிராத்தித்தேன்.

 

இந்த கடித்தை எழுதிமுடிக்கும் பொழுது தந்தை அழைத்து கேபிள் போட்டாச்சு, தானே அரை நாள் தண்ணீர் பாயிச்சியதாக சொன்னார், 40 ஆண்டு காலம் வங்கி மற்றும் கணக்கு பணிகள் மட்டுமே பார்த்தவர் இன்று முழு மனதொடு உடலால் உழைத்திருக்கிறார். ஆள் வரல எவ்வளவு நாள் தள்ளுரது அதான் நானே பார்த்துட்டேன் நம்மலும் பார்க்கத்தானே வேண்டும் என்றார். என்னப்பா சொல்லுரிங்க என்றேன் புன்முறுவல் மட்டும் கேட்க முடிந்தது.

 

முன் இணைப்பில் இருந்த திரு. பாலாஜி சங்கர் அவர்கள் இணைப்பை வாசிக்கவேண்டும். எத்தனை வாசித்தாலும் அனுபவம் மட்டுமே பாலபாடம் இத்தொழிலில்.

 

பாலபாடம் சிறு குறிப்புகளா ஒழுங்குபடுத்தலாம் என்று தொன்றுகிறது;

 

புதிதாக தோட்டம் வாங்குவதாயிருந்தால் பல விசயங்கிளில், முக்கியமாக – மின்சார வசதி இருந்தால் சால சிறப்பு!

 

புதிய விவசாய மானிய மின் இணைப்பு என்றால்(எந்த சலுகைகலும் இல்லாத வகையில்) – இணைப்பு கேட்ட பின், அதன் அடிப்படையில் விவசாய விலை (ரூ.4) இணைப்பு கோர வேண்டும் உடனடி இணைப்பிற்கு. அதன் வேகத்தில் தான் நடக்கும் முக்கியமாக அருகில் 100 ஆடியில் மின் கம்பம் இருந்தால் தான் அதுவும் நடக்கும்.

 

எந்த ஒரு வேலையும் கேட்பது போல படிப்பது போல அது ஒன்றாக மட்டும் இருப்பதில்லை, அதனினுள் பல படிகளாக வேலைகள் இருக்கும், நெருங்கையில் தான் தெரியும், ஆக தயாராகயிருக்கவேண்டும்.

 

சிறு விவசாயி – அங்கே சில ‘க்’குள் பாசனவசதியற்ற புஞ்சை (பாசன வசதியிருந்தால் 2.5 ஏக்கர்), தனி நபருக்கு 5 ஏக்கர் குறைவாக இருத்தல் வேண்டும், குடும்பத்தில் வெறு யாருக்கும் நிலம் இருக்ககூடாது.

 

 

நன்றி!

 

நாராயணன் மெய்யப்பன்

 

ஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்
கன்றுகள் காடாகவேண்டும்!
இயற்கைவேளாண்மை -கடிதம்
அப்பா, இயற்கைவேளாண்மை -கடிதங்கள்
கடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்
அறம்செய விரும்பு -தகவல்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16948 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>