Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16982 articles
Browse latest View live

ஐயையா, நான் வந்தேன்

$
0
0

jessuஅய்யய்யா நான் வந்தேன் என்னும் பாடல் பேராசிரியர் ஜேசுதாசனைப்பற்றிய நினைவுகளைப் பீரிடச்செய்தது. அவருக்கு மிகப்பிடித்தமான பாடல் இது. அவர் முகம், சிரிப்பு என நினைவுகள் எழுந்துவந்தபடியே இருந்தன. பாடலை கேட்கும்தோறும் மிக அருகே இருப்பதைப்போல உணர்ந்தேன். தாய்தந்தையர்,, உற்றார் மறையலாம். குருநாதர்கள் மறைவதே இல்லை

 

மிகச்சிறிய உடல். மிகச்சிறிய பாதங்கள். காற்றால் கொண்டுசெல்லப்படுவதுபோன்ற நடை. குழந்தைச்சிரிப்பு.மனம் நெகிழ்கையில் முகச்சுருக்கங்களில் வழியும் கண்ணீர். பேராசிரியர் இலக்கியம் மானுடனை எங்கு கொண்டுசெல்லமுடியும் என்பதற்கான சான்று

 

இந்த வயதில் மெல்ல முற்பிறப்பு குறித்த நம்பிக்கைகள் ஆழம்கொள்கின்றன. நாம் எதையோ ஈட்டியபடியே இங்கு வருகிறோம். இல்லையேல் வாழ்நாளெல்லாம் விழியீரமின்றி நினைக்கமுடியாத மாமனிதர்களை நாம் சந்திப்பது நிகழ்வதில்லை.

 

இந்தப்பாடல் பி.சுசீலாவின் குரலால் இந்த அழகைப்பெறுகிறது. ஆனால் அதைவிட இதன் மொழி. பைபிள் மொழி என்பதனாலேயே இதிலுள்ள பத்தொன்பதாம்நூற்றாண்டு மணம். துஷ்டன் போன்ற வடமொழிச் சொற்கள். முற்றிலும்புதிய சொல்லிணைவுகள். இசையுடன் இணைந்து வரிகளைக் கேட்டால் பல இடங்களில் வியப்பும் பரவசமும் உள்ளது

 

துய்யன் நீர், பாவி எனக்காய் சோரி சிந்தி தயைசெய்வோம் என்றே துஷ்டன் எனை அழைத்தீர்; இதை அல்லாது போக்கில்லை – என்று கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளவேண்டும்

 

இதில் சோரி என்ற சொல் வருகிறது. குருதி என்று பொருள். கம்பராமாயணத்தில் வரும் சொல்லாட்சி. தூயன் என்பது துய்யன் என்பதும் கம்பராமாயணச் சொல்லாட்சிதான்.இதனால்தான் பேராசிரியர் ஜேசுதாசனுக்கு மிகப்பிடித்தமான பாடலாக இது அமைந்ததுபோலும்

 

இந்த வரிகள் எனக்கு எனக்குரிய பொருள் அளிக்கின்றன. ஆசிரியனிடம் சென்று சேரும் எளிய மாணவன். ஆட்டுக்குட்டி என அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொள்கிறார் அவர். அவனுடைய அறியாமையே அவர் கைகளில் அமரும் தகுதியை அளிக்கிறது

 

இந்த இரவில் நூறுதடவை இப்பாடலை கேட்கவேண்டும். தெய்வவடிவென அமைந்த பேராசானின் அடிகளை எண்ணி வணங்கவேண்டும்

 

 

ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

சரணங்கள்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தி
துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா

உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால்நான் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா

 

எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியேனை  ரட்சியும் ,
தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா
ஏற்றுக்கொண்டு மன்னிப்பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் -மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா

மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே – இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா

======================\

===========================================================

சில கிறித்தவப்பாடல்கள்

கிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்

 

=================================================
குருபீடம்
குரு என்னும் உறவு 
மத்துறு தயிர் [சிறுகதை]-1
மத்துறு தயிர் [சிறுகதை] -2

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58

$
0
0

57. குருதி நாற்களம்

flowerஅவைக்கு தன்னை கூட்டிச்செல்ல சுநீதர் வருவார் என்று நளன் எண்ணினான். மாலையிலேயே நீராடி ஆடையணிந்து காத்திருந்தான். சாளரம் வழியாக நோக்கிக்கொண்டிருந்த நாகசேனர் “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசே. குடித்தலைவர்கள் ஒவ்வொருவராக வந்து அவைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

நளன் “பார்ப்போம், முறைமைப்படி குடித்தலைவர் வருவார்” என்றான். “முறைமைப்படி குடித்தலைவர்கள் அனைவரும் வந்தாகவேண்டும். கோல்தாழ்த்தி அழைத்து அவைக்கு கொண்டுசெல்லவேண்டும். செல்லும் வழியில் படைத்தலைவர்கள் அனைவரும் நின்றிருக்கவேண்டும். அப்படைத்தலைவர்களில் ஒருவராக இளவரசர் வாள்தாழ்த்தி நிற்கவேண்டும்” என்றார்.

நளன் ஒன்றும் சொல்லவில்லை. “அரசே, அந்தணனாக நான் இதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்றார் நாகசேனர். “அன்னசாலையில் நீங்கள் வாளெடுத்தது அத்துமீறல். அது முதற்பிழை. அந்தக் குற்றவுணர்ச்சியால் இப்போது உங்கள் நிலைமீறி தணிகிறீர்கள். இது அதைவிடப் பெரும்பிழை. அரசர்கள் மீறல் செய்யலாகாது. செய்தால் அதற்கான பொறுப்பை ஏற்று தன் தெய்வத்தின் முன்பும் குலமூத்தார் முன்பும் பிழையீடு செய்யவேண்டும். ஒருபோதும் குடிகள் முன்பும் ஊழியர் முன்பும் எதிரிகள் முன்பும் ஆற்றலின்மையாக அதை வெளிப்படுத்தலாகாது.”

நளன் “ஆம், ஆனால் நான் அவ்வாறு உணரவில்லை. இது என் கடமை. இத்தருணத்தில் சற்று பொறுமைகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்” என்றான். “இது பொறுமை அல்ல. நாம் இவர்களின் வலையில் வந்து சிக்கிக்கொண்டிருக்கிறோம். அரசுசூழ்தலில் செயல்களுக்கு இரு பொருள்கள் உண்டு. நேர்ப்பொருள் ஒளி என்றால் குறிப்பொருள் நிழல். நிழலே பெரிது. நாம் இன்று இங்கு செய்வதன் குறிப்பொருள் நாம் தோற்கிறோம் என்பதே” என்றார். “இதுவரை வந்துவிட்டோம். இந்த மாலையை கடந்துவிடுவோம். நாளை ஆவன எண்ணுவோம்” என்றான் நளன்.

அந்தி மயங்கியபோது அவனே பொறுமையிழந்தான். கூடத்தில் நிலையழிந்து உலவியவன் நின்று ஏவலனை அழைத்து “நீ சென்று அங்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வா” என்றான். “வேண்டாம்” என்றார் நாகசேனர். “செல்லலாகாது. பொறுப்போம்.” நளன் அவரை நோக்க “அரசே, அங்கே அவை கூடிவிட்டது. சொல்லுசாவல் நிகழ்கிறது” என்றார். நளன் “எப்படி தெரியும்?” என்றான். “அவைக்குச் செல்லும் ஏவலரின் உடல்மொழியைக் கொண்டு உணர்கிறேன்.” நளன் “நான் செல்லாமல் எப்படி அவை கூடலாம்?” என்றான். “அவைக்கு நீங்கள் விருந்தினர்தான் என்றால் கூடலாம். அவையின் தலைவர்களில் ஒருவர் என்றால் கூடமுடியாது” என்றார் நாகசேனர். நளன் பெருமூச்சுடன் மீண்டும் வந்து பீடத்தில் அமர்ந்தான்.

அவனை அழைத்துச்செல்ல அவைச்செயலர் பிரவீரர் இரு ஏவலருடன் வந்தார். அவர் வருவதை சாளரத்தினூடாகக் கண்டதுமே நாகசேனர் “அவைச்செயலர் வருகிறார். அவர் அந்தணர்கூட அல்ல” என்றார். நளன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை, கிளம்புவோம்” என்றான். “இப்போதுகூட நீங்கள் மறுத்துவிடலாம், அரசே. உங்களுக்கு உடல்நலமில்லை என்று சொல்லிவிடுகிறேன். இந்த அவைமுறைமையை ஏற்று நான் செல்கிறேன். அங்கே சொல்லவேண்டியதை சொல்கிறேன்.”

நளன் “வேண்டாம். அது மோதலென்று பொருள்படும். இப்போது நான் வந்தது அமைதிக்காக” என்றான். “அது நிகழுமென நினைக்கிறீர்களா?” என்றார் நாகசேனர். “ஆம், நான் அவனை நேருக்குநேர் பார்த்தால் போதும். இளையோனே, உன்னிடம் நேரில் பேசவேண்டும். அவை கலையும்போது நாம் சேர்ந்து உணவருந்துவோம் என்று சொல்வேன். அதை அவன் மறுக்கவியலாது.” நாகசேனர் “தாய்மடம் என்று ஒன்றுண்டு. தந்தைமடம் அதைவிடப் பெரிது” என்றார்.

ஏவலன் பிரவீரர் வருகையை அறிவித்தான். மூன்று பணிப்பெண்கள் மங்கலத் தாலங்களுடன் வந்தனர். தொடர்ந்து மூன்று சூதர்கள் முழவும் கொம்பும் சங்குமாக வந்தனர். மங்கல இசை முழங்கி அமைந்தது. பிரவீரர் முறைப்படி வணங்கி “இந்திரபுரியின் அரசரை விஜயபுரியின் காவலர், கலியின் அடியவர், நிஷதகுடிகளின் தலைவர், புஷ்கரர் வரவேற்கிறார். அவரது அவைக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று பணிந்து கோருகிறார்” என்றார். நளன் கண்கள் சினத்தால் எரிந்து அணைந்தன. மீசையை நீவியபடி “நன்று” என்றான்.

நாகசேனர் “விஜயபுரியின் படைத்தலைவரை சந்திக்க நிஷாதர்களின் பேரரசர் உளம் கனிகிறார்” என்றார். நளன் செல்வோம் என கைகாட்டி மேலாடையை எடுத்து அணிந்தபடி எழுந்தான். இசைச்சூதர் மங்கலம் முழங்கி முன்செல்ல நளன் நடந்தான். அவனுடன் நாகசேனர் நடந்தார். பிரவீரர் “இவ்வழி, அரசே” என்றார். இடைநாழிகளில் எவருமே இல்லை. வீரர்களை நிறுத்தியிருந்தால் அவர்கள் வாழ்த்துக்கூவவேண்டியிருக்கும் என்று எண்ணி தவிர்க்கப்பட்டார்கள் என தெரிந்தது. அவைமுகப்பில் ஒற்றைக் காவலன் நின்றிருந்தான். பிரவீரர் “இந்திரபுரியின் அரசர் வருகை” என்றார். அவன் தலைவணங்கி உள்ளே அவையறிவிப்பு செய்தபின் வெளியே வந்து “அவைநுழைவொப்புதல்” என்றான்.

கதவு திறக்க நளன் உள்ளே சென்றான். அவையிலிருந்த காவலர்கள் மட்டும் வாள்தாழ்த்தி அவனை வணங்க அவைச்சூதரின் இசை முழங்கியது. அவையிலிருந்த எவரும் எழவில்லை. அரசமேடையில் அரியணையில் அமர்ந்திருந்த புஷ்கரன் அவனை நோக்காததுபோல அமர்ந்திருந்தான். அமைச்சர் பத்ரர் புஷ்கரனிடம் சென்று “இந்திரபுரியின் அரசர் நளன் அவை வருகை” என்றார். புஷ்கரன் திரும்பி நோக்கி மிகச் சிறிதாக தலைவணங்கி பீடத்தில் அமரும்படி கைகாட்டினான். நளன் அவையை ஒருமுறை நோக்கிவிட்டு சென்று தனக்கான பீடத்தில் அமர்ந்தான்.

அவனுக்கான இருக்கை அயல்நாட்டு வருகையாளர்களுக்கான நிரையில் போடப்பட்டிருந்தது. இந்திரபுரியின் மின்கதிர்க்கொடி அதற்குப் பின்னால் பறந்தாலும் எளிய மரப்பீடம் அது. தங்கள் இறகுத்தலையணிகளும் தோல்போர்வைகளும் குடிக்கோல்களுமாக அமர்ந்திருந்த குலத்தலைவர்கள் அனைவரும் அவனை நோக்காமல் இறுக்கமாக அமர்ந்திருந்தனர். சுநீதர் எழுந்துசென்று ரிஷபனிடம் ஏதோ சொன்னார். புஷ்கரன் தன்னருகே அமர்ந்திருந்த மாலினியிடம் சற்று சரிந்து மெல்ல பேசினான். அவை முழுக்க பேச்சொலிகள் இணைந்த மெல்லிய ரீங்காரம் பரவியிருந்தது.

அமைச்சர் கைகாட்ட நிமித்திகர் எழுந்து சென்று அறிவிப்புமேடையில் நின்று “அவையீரே, இன்று இந்த அவையில் நம்மை சிறப்புறுத்தவும் நம் குடிகளை வாழ்த்தவும் நம் முடிகொண்ட தலைவர் புஷ்கரரின் மூத்தவரும், இந்திரபுரியின் அரசருமான நளன் வந்துள்ளார். அவரை இந்த அவை தலைவணங்கி வரவேற்கிறது” என்றார். அவையினர் கோல்களைத் தூக்கி ஒப்புகை ஒலியெழுப்பினர். “இந்த அவைக்கு அவர் உரைக்கும் நற்செய்திக்காக அரசரும் குலத்தலைவர்களும் பிறரும் காத்திருக்கிறார்கள். நன்று சூழ்க!” என்றபின் அவர் வணங்கி இறங்கினார்.

நளன் சில கணங்கள் அவையை நோக்கியபின் “விஜயபுரியின் படைத்தலைவருக்கும் குடிகளுக்கும் என் வணக்கம். நலம் சூழ்க!” என்றான். “இங்கே அவையறிவிப்பில் விஜயபுரியின் படைத்தலைவன் என்று என் இளையோனை கூறினர். இனி அவனை விஜயபுரியின் அரசன் என்று சொல்லவேண்டுமென்ற அறிவிப்பை இந்த அவையில் வெளியிடுகிறேன். என் வருகையின் முதல் நோக்கம் அதுவே” என்றான். அவை எந்த ஓசையையும் வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தது.

நளன் அதை எதிர்பாராததனால் சற்று திகைத்தான். “என் இளையோன் முடிசூடி அமரும் இந்நிலம் கிழக்கே காஞ்சிவரை பெருகும். அதற்கு என் படைவல்லமை உடனிருக்கும். இது இந்திரபுரிக்கு நட்புநாடாகவும் உறவுநிலமாகவும் என்றும் நீடிக்கும்” என்றான். அவையின் அமைதி அவனை படபடப்பு கொள்ளச்செய்தது. “இந்திரபுரியின் அஸ்வமேதநிறைவு விழவுக்கு என் இளவலாகவும் விஜயபுரியின் தனியரசனாகவும் புஷ்கரன் வரவேண்டும் என்று அழைக்கவும்தான் நான் வந்தேன்” என்றான். அவையில் மெல்லிய குரல்கள்தான் ஒலித்துக்கொண்டிருந்தன.

நளன் சினம் கொள்வது தெரிந்தது. நாகசேனர் அதை உணர்ந்ததும் எழுந்து “மாமன்னர் நளன் தன்னால் கைப்பற்றப்பட்டதும் தன் ஆட்சிக்குரியதுமான இந்நிலத்தை தன் இளவலுக்கு அளிக்கும் விழவையும் அஸ்வமேதநிறைவு நாளிலேயே நடத்தலாமென்று எண்ணுகிறார். அதற்கு இந்த அவையொப்புதலை எதிர்பார்க்கிறார்” என்றார். அவை புஷ்கரனை நோக்கியது. அவன் ரிஷபனை நோக்க அவன் தன் மேலாடையின் பொன்னூல் முடிச்சு ஒன்றை இழுத்து சீரமைத்துக்கொண்டிருந்தான்.

அவையின் அமைதியில் நளன் நிலையழிந்தான். உரத்த குரலில் “அவையோரே” என்றபடி எழுந்தான். ஆனால் அவர்களை திரும்பி நோக்கியதுமே அவன் குரல் தழைந்தது. “என் குடியினர் நீங்கள். என் குருதி. நான் உங்களிடம் அரசனாக வரவில்லை, உங்கள் குடியைச் சேர்ந்தவனாக மட்டுமே வந்துள்ளேன். ஆம், பெரும்பிழை ஒன்றை செய்துவிட்டேன்…” அவன் குரல் இடறியது. கைகூப்பி “என்னை இந்தக் குலப்பேரவை பொறுத்தருளவேண்டும். நான் இயற்றவேண்டிய பிழைநிகர் என்னவென்று உரைக்கவேண்டும். நான் சித்தமாக உள்ளேன்” என்றான்.

அவையில் ஒரு ததும்பல் உருவாவதை காணமுடிந்தது. அது ஒரு சொல்லென துளிக்கும் முன்னர் ரிஷபன் எழுந்தான். “சீர்ஷரின் இறப்புக்கு நிகர் என்ன என்பதை குடியவை முடிவுசெய்யட்டும். அதற்குமுன் முடிசூடுவது குறித்த செய்திக்கு அரசர் மறுமொழி சொல்வார்” என்றான். புஷ்கரன் பேசுவதற்குள் மாலினிதேவி உரத்த குரலில் “விஜயபுரி இப்போது உங்களிடம் இல்லை, இந்திரபுரிக்கரசே. இந்திரபுரி உங்களிடம் இருக்குமா இல்லையா என்பதைப்பற்றித்தான் நாம் பேசவேண்டியுள்ளது” என்றாள்.

அந்த நேரடியான சிறுமைச்செயல் நளனை சொல்லிழக்கச் செய்தது. அவன் அறியாமல் நாகசேனரை நோக்க அவர் அமைதியாக “அரசி, விஜயபுரியை பேரரசர் நளன் படைகொண்டு வென்று சதகர்ணிகளிடமிருந்து கைப்பற்றி நெடுநாட்களாகின்றன. அப்போது தாங்கள் சிறுமியாக இருந்திருப்பீர்கள். விஜயபுரியை வென்றபின் மூன்றாண்டுகளுக்குப் பின்னர்தான் பேரரசர் கலிங்கத்தை வென்றார். தங்கள் தந்தை இந்திரபுரிக்கு வந்து பணிந்து கப்பம் அளித்தமையால் தண்டபுரம் அவருக்கு அளிக்கப்பட்டது. அதை நீங்கள் நினைவுறுவீர்கள் என நினைக்கிறேன்” என்றார். “இப்போது பரிவேள்வி முழுமையடைந்துள்ளது. பாரதவர்ஷத்தில் நளமாமன்னரின் புரவிப்படையால் வெல்லப்படாத அரசுகள் சிலவே.”

மாலினிதேவி முகம் சிவந்து திரும்பி பல்லைக் கடித்தபடி புஷ்கரனிடம் ஏதோ சொன்னாள். அவள் கண்கள் இடுங்கி பற்கள் வெளித்தெரிய முகம் சீறும் ஓநாயின் தோற்றம் கொண்டது. புஷ்கரன் ஒருமுறை கனைத்தபின் “நான் அரசுசூழ்தல் அறியாதவன். நேரடியாகவே சொல்கிறேன். விஜயபுரியில் இன்றிருக்கும் படைகளும் குலங்களும் என்னை அரசனாக ஏற்கின்றன. நான் இங்கே இன்னும் சில நாட்களில் முடிசூட்டிக்கொள்வதாக இருக்கிறேன். எவ்வகையிலும் விதர்ப்பினியின் செங்கோலை நிஷாதர்களாகிய நாங்கள் எங்கள்மேல் ஏற்றுக்கொள்ள முடியாது. அவள் எங்கள் அரசியாக பரிவேள்வி நிறைவுசெய்வதையும் ஒப்பமாட்டோம். அந்நிகழ்வு நடக்குமென்றால் படைகொண்டுவந்து இந்திரபுரியை தாக்குவோம்…” என்றான்.

நளன் “உன் சினம் புரிகிறது, இளையோனே. நாம் அதைப்பற்றி பேசுவோம். நான் உன்னுடன் சிறிது தனித்தமரவேண்டும். நீ விழைவதை சொல்” என்றான். “நாம் தனித்துப்பேச ஏதுமில்லை. நீங்கள் இங்கே என் பகையரசராகவே வந்திருக்கிறீர்கள். தூதராக வந்தமையால் அவ்வண்ணமே ஏற்று உங்களிடம் இதை சொல்கிறேன். அரசி தமயந்தி பதவி துறக்கவேண்டும். நிஷதகுடிகளின் அரசனாக நான் முடிசூடி அரியணை அமர்வேன். இது நிஷதகுடித்தலைவர்கள் குலதெய்வம் கலிமேல் தொட்டு எனக்கிட்ட ஆணை” என்றான்.

“நான் சொல்வதை கேள்” என்றான் நளன். “நீங்கள் மூத்தவராக பேசவேண்டியதில்லை. உங்களை நிஷதகுடியினரென்று இனிமேல் கருதுவதில்லை என மூத்தோர் முடிவெடுத்திருக்கிறார்கள். நீங்கள் எனக்கு அயலவர். அரசுமுறையாக ஏதேனும் சொல்வதற்கிருந்தால் சொல்க!” நாகசேனர் “அவ்வாறு முடிவெடுக்க எவர் இவர்களுக்கு உரிமை அளித்தது? அங்குமிருக்கிறார்கள் நிஷதகுடித்தலைவர்கள்” என்றார். “ஆம், அங்கிருக்கும் குலக்கேடர்களுக்கு நெறி கற்பிப்போம்” என்றார் சுநீதர். “சபரர்களுக்கு நிலம் தேவை என்றால் அவர்கள் அதை விதர்ப்பத்தின் அருகே எங்காவது அமைத்துக்கொள்ளட்டும். சபரர்களில் ஏழு குடிகள் எங்களுடன் உள்ளன, எஞ்சியவர்கள் இனி நிஷாதர்கள் அல்ல.”

“நீங்கள் குடிப்போர் ஒன்றுக்கு களமொருக்குகிறீர்கள். போர் நிகழுமென்றால் நம் குடியே அழியும். நம்மை சூழ்ந்திருக்கின்றன குருதிப்பசி கொண்ட நாடுகள். நம்மால் வேட்டையாடப்பட்டு அடிமைகொள்ளப்பட்டவை அவை” என்றார் நாகசேனர். “இது குடிப்போரேதான். ஆனால் உறுதியாக நாங்கள் வெல்வோம். நிஷதகுடிகளில் ஆற்றல்மிக்கது காளகக்குடி. எங்கள்மேல் ஏறி சபரர்கள் அடைந்த வெற்றிகளை இதுகாறும் குடிப்பூசல் வேண்டாமென்று எண்ணியே தாங்கிவந்தோம். இனி அது நடக்காது. போர் நிகழட்டும். காளகர்களை எவர் வெல்வார் என்று பார்க்கிறோம்” என்றார் சுநீதர். காளகக்குடியினர் எழுந்து கோல்களைத் தூக்கி உரக்க உறுமலோசை எழுப்பினர்.

நாகசேனர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை கையமர்த்திவிட்டு நளன் உரத்தகுரலில் சொன்னான் “உங்களுக்கு நம்பிக்கையளிப்பது எதுவென்று அறிவேன். பகைநாட்டரசரின் உதவிகளை நம்பியிருக்கிறீர்கள். அவர்கள் நம் குலத்தை பிளக்கிறார்கள். பிளந்தபின் அவர்கள் நம்மை முற்றழிப்பார்கள். நாம் அவர்களிடம் சென்ற காலங்களில் இரக்கம் காட்டவில்லை என்று உணர்க! இந்த எளிய சூழ்ச்சியைக்கூட உணரமுடியாமல் உங்களைத் தவிர்ப்பது எது?” என்றான். ரிஷபன் “நட்பும் பகையும் அரசியலில் மாறுபடும். இப்போது நாங்கள் அவர்களுக்கும் அவர்கள் எங்களுக்கும் தேவைப்படுகிறார்கள்” என்றான்.

மாலினிதேவி “குலப்பூசலைத் தவிர்க்க எளியவழி உள்ளது, இந்திரபுரியின் அரசே. நீங்களும் உங்கள் விதர்ப்ப அரசியும் முடிதுறக்கலாம். நிஷத குடிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளையவரை அரசராக்கலாம். வாளேந்தி அவருக்கு படைத்துணை நிற்கலாம்” என்றாள். நளன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து “வாயைமூடு, இழிமகளே! இவையனைத்தும் உன் சூழ்ச்சி. உன் களவுத்துணைவனாகிய இவனுடைய திட்டம். இன்று நீ செய்வதற்காக உன்னை ஒருநாள் கழுவேற்றுவேன்” என்றான்.

அவள் சினவெறியுடன் நகைத்து “இதைத்தான் வெறுக்கிறது நிஷதகுடி. நீங்கள் தலைவெட்டி வீழ்த்திய சீர்ஷரின் குருதி இங்கே மணக்கிறது. இதோ இங்கே இருக்கிறது மூத்தவரின் மீளா உயிர். இந்திரபுரியை வென்று அங்கிருக்கும் இந்திரன் ஆலயத்தை இடித்து அங்கே கலிதேவனை மீட்டமரச் செய்த பின்னரே அவர் விண்ணேகுவார்… அவரே வெறியாட்டனில் எழுந்து சொன்னது இது…” என்றாள். எழுந்து அவை நோக்கி “சொல்லுங்கள்… உங்கள் குருதிப்பழி இது. இனி எந்த பேச்சுக்கும் இடமில்லை என்று சொல்லுங்கள். குருதியை நீரால் கழுவ முடியாதென்று இவர் அறியட்டும்” என்றாள்.

அவை முழுமையாக எழுந்து கைகளையும் கோல்களையும் நீட்டி கூச்சலிட்டது. முழக்கத்திற்குள் வசைச்சொற்களும் இருப்பதை நளன் கேட்டான். நாகசேனர் “கிளம்புவோம், அரசே” என்றார். சுநீதர் “நீ யாரென்று எண்ணினாய்? குடிமூத்தாரை தலைவெட்டி வீழ்த்திய உன் குருதியால் எங்கள் கலிதேவனின் பீடத்தை கழுவுவோம்…” என்று கூச்சலிட்டார். வெறிகொண்ட நீர்விழிகள். இளித்த பற்கள். புடைத்த தொண்டைநரம்புகள். நளன் வெறித்த விழிகளுடன் நோக்கி நின்றான்.

பின்னர் மீண்டு புஷ்கரனை நோக்கி “இளையோனே…” என்று கைநீட்டினான். புஷ்கரன் “இதோ அறிவிக்கிறேன், நாளையே படைகள் எழுக! சதகர்ணிகளும் கலிங்கர்களும் நம்முடன் வருவார்கள். நாம் இந்திரபுரியை தாக்கும் அதேநாள் வடக்கிலிருந்து மகதமும் வங்கமும் சேதியும் இணைந்து தாக்கும். மேற்கே அவந்தியும் மாளவமும் தாக்கும். விதர்ப்பினியின் ஆணவத்தை அழிப்போம். அவள் கட்டிய அந்த வேள்விப்பந்தலை எரியூட்டுவோம். அவள் வேள்விப்பரியை கொன்று சமைத்து உண்டாட்டு நடத்துவோம். இது அரசாணை” என்றான்.

அவை வெறிக்கூச்சலிட்டது. சூழ்ந்திருந்த அத்தனை வீரர்களும் கூவி ஆர்ப்பரித்தனர். சிலர் ஏளனச் சிரிப்புடன் நளனை நோக்கி வந்தனர். நாகசேனர் “செல்வோம், அரசே” என்று கூவி அவரே முதலில் வெளியே நடந்தார். நளன் அவருக்குப் பின்னால் செல்ல ஊளைகளும் ஏளனக் கூச்சல்களும் வசைகளும் பின்னால் முழங்கின.

flowerதன் அறைக்குள் நுழைந்ததுமே நளன் “ஆடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். புரவிகள் ஒருங்கட்டும்” என ஆணையிட்டான். “நாம் தெற்குவாயிலினூடாகச் செல்வோம். மையச்சாலையில் நகர்மக்கள் நடுவே சென்றால் நாம் இழிவுபடுத்தப்படுவோம்” என்று காவலர்தலைவன் சொன்னான். “அவைச்செய்திகள் நகரில் பரவிவிட்டன. தெருக்களெங்கும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். நள்ளிரவிலும் நகர் ஓயவில்லை.” நாகசேனர் “படைமுரசு கொட்டத் தொடங்கிவிட்டது, அரசே” என்றார். “உண்மையாகவே படையெழுச்சிக்கு ஆணையிட்டிருக்கிறார் இளவரசர்.”

நளன் காலோய்ந்து பீடத்தில் அமர்ந்தான். காவலர்தலைவன் “நாம் தெற்குவாயிலினூடாகச் செல்வோம் என்பதையும் வீரர் சிலர் உய்த்தறிந்துவிடக்கூடும். தெற்குவாயில் இருட்டாக இருக்கவும் வாய்ப்பில்லை. மூடுதேர் ஒன்றை கொண்டுவரச் சொல்கிறேன். அதை ஓட்டியபடி நான் மையச்சாலை வழியாக செல்கிறேன். அதை அவர்கள் சிறுமை செய்யட்டும். அப்பொழுதில் தாங்கள் தெற்குவாயில் வழியாக செல்லலாம்” என்றான். நாகசேனர் “இந்திரபுரியின் அரசர் அப்படி ஒளிந்து ஓடலாகாது. மையச்சாலை வழியாகவே செல்வோம். எத்தனையோ முறை குடிகளின் வாயால் வாழ்த்தும் அரிமலரும் பெற்றிருக்கிறார் அரசர். இதுவும் அவர்களின் கொடையே. இதையும் அவர் அறியட்டும்” என்றார்.

ஏவலன் வந்து வணங்கி “குடித்தலைவர்கள்” என்றான். நளன் வியப்புடன் நாகசேனரை நோக்க “வரச்சொல்” என்றார் அவர். நளனிடம் “ஏதேனும் மாற்றுவழி கண்டிருப்பார்கள். குடிப்பூசலை தவிர்ப்போம் என கலிதேவனின் முன் குருதிதொட்டு ஆணையிட்டுத்தான் அவர்கள் கோலெடுக்கிறார்கள்” என்றார். நளன் பெருமூச்சுவிட்டான். குடித்தலைவர்கள் எழுவர் தங்கள் அவைக்கோலத்திலேயே வந்திருந்தார்கள். முறைப்படி நளனை வணங்கி முகமன் உரைத்தனர்.

“நாங்கள் அவையில் நிலைமீறியது உண்மை. சீர்ஷரின் பெயர் அவ்வாறு எங்களை கொந்தளிக்கச் செய்தது” என்றார் சீரகுலத்தலைவராகிய பணிதர். “ஆனால் அவை முடிந்து வெளியே சென்றதுமே போர்முரசுக்கான ஆணைகளை படைத்தலைவர்கள் கொண்டுசெல்வதை கண்டோம். எங்கள் உள்ளம் அஞ்சிவிட்டது. பல நூறாண்டுகள் நிஷாதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் போரிட்டு அழிந்தோம். நம்மை அயவலர் அடிமைகளாக பிடித்துக்கொண்டுசென்று சந்தைகளில் விற்றனர். வயல்களில் நுகங்களில் கட்டி உழுதனர். துறைநகர்களில் சுமை எடுத்தோம். கலங்களில் துடுப்பு வலித்தோம். நம் குடியில் மகாகீசகர் தோன்றியமையால் நாம் எழுந்தோம். அது நம் குடித்தெய்வங்களின் அருள். அடிமைகளாக அழிந்த  நம் மூதாதையரின் தவம்…”

நளன் “ஆம், அதை எண்ணியே நான் அஞ்சுகிறேன்” என்றான். “போர்முகத்தில் நான் கொன்றழிக்க வேண்டியவர்கள் என் குருதியினர், என் இளையோர், மூத்தோர்.” சூரர்குடித்தலைவரான இகடர் “அதை தவிர்த்தாகவேண்டும் என்று பேசிக்கொண்டோம். இளவரசரிடம் நேரில் சென்று போரைத் தவிர்ப்பதைப்பற்றி பேசலாமென முடிவெடுத்தோம். அவர் உணவருந்திக்கொண்டிருந்தபோது நேரில் சென்று கண்டோம். நாங்கள் பேசவே அவர் ஒப்பவில்லை. போருக்கு முடிவெடுத்துவிட்டதாக சொன்னார்” என்று பணிதர் தொடர்ந்தார்.

“அருகே அமர்ந்திருந்த மாலினிதேவி போர்முரசு கொட்டியபின் தயங்குவது அச்சமென்று பொருள்படும் என்றார். அரசர் வெறியுடன் உரக்க நகைத்தபடி எழுந்து போர் தொடங்கிவிட்டது. இனி பின்வாங்குதலே இல்லை என்றார். அவையில் வஞ்சினம் உரைத்தபின் போரை எண்ணித்தயங்க அவர் சித்தமாக இல்லை என்றும் சீர்ஷரின் குருதிதொட்டு உரைத்த அந்த வஞ்சினம் தெய்வங்கள் மேலிட்ட ஆணை என்றும் சொன்னார். எங்கள் சொல் செவியேறவேயில்லை.”

நாகசேனர் “போர் வருமென்றால் ஒழியவேண்டியதில்லை. இருபதாண்டுகள் போரை நடத்தும் ஆற்றல் நிஷதபுரிக்கு உண்டு. மொத்த பாரதவர்ஷத்தையும் வெல்ல எங்கள் அரசரால் இயலும்” என்றார். “நிஷதர்களின் குருதி நிலத்தில் விழவேண்டுமென்பது ஊழ் என்றால் அவ்வாறே நிகழ்க!” நளன் “ஆம், அஞ்சவேண்டிய இடத்தில் நானோ என் படைகளோ இல்லை. இவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதே அஞ்சுகிறார்கள் என்பதற்கான சான்று” என்றான்.

“இல்லை அரசே, ஒரு வழி திறந்துள்ளது” என்றார் பிருங்க குலத்தவராகிய சுருதர். “நாங்கள் சோர்ந்து திரும்பிவந்தோம். குலப்பேரழிவை கண்களால் பார்க்கவிருக்கிறோம் என்று உறுதிகொண்டோம். அப்போதுதான் அமைச்சர் பத்ரர் எங்களை நோக்கி வந்தார். என்ன நிகழ்ந்தது, என்ன சொன்னார் அரசர் என்று கேட்டார். போர் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்று அரசர் வெறிகொண்டிருக்கிறார் என்று நான் சொன்னேன். அவ்வாறென்றால் போர் நிகழட்டும், ஆனால் குருதிப்பொழிவு வேண்டாம் என்றார் பத்ரர்.”

நளன் புருவத்தை சுருக்க இகடர் “இத்தகைய சூழல்களுக்காக மூதாதையர் ஏதேனும் ஒரு வழி வைத்திருப்பார்களே என்று நூல்களில் தேடினேன், ஒரு வழி உள்ளது என்றார். நாங்கள் நம்பிக்கையுடன் நோக்க, நாற்கள ஆட்டம் என்றார்” என்றார். நளன் “சூதா?” என்றான். “ஆம், நாற்களம் என்பது நிகரிப்போர். நால்வகைப் படைகளும் எதிர்நின்றாடும் களம். குருதிப்போரைத் தவிர்க்க நிகரிப்போரை இரு சாராரும் ஏற்றுக்கொண்டால் நிகழ்த்தலாம் என்று பத்ரர் சொன்னார்.”

நளன் நாகசேனரை நோக்க அவர் “நிகரிப்போர் என்றால்…” என்று தொடங்க பணிதர் உரக்க “பாரதவர்ஷத்தில் குலப்போரும் குடிப்பூசலும் நிகழாத காலம் இல்லை. ஒருதாய்மைந்தரிடையே வஞ்சினம் உரைக்கப்பட்டால் நிகரிப்போரே தெய்வங்கள் விரும்பும் வழி என்று நூலுரை இருப்பதை பத்ரர் சொன்னார்” என்றார். இகடர் “இது ஒன்றே நாங்கள் காணும் வழி. நீங்கள் உங்கள் இளையோனுடன் அவைநடுவே நாற்களம் ஆடுங்கள். வென்றவர் முடிசூடட்டும்” என்றார். நளன் திகைத்தவன்போல அமர்ந்திருந்தான்.

நாகசேனர் “சூது பழிக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளது” என்றார். “ஆம், உடன்பிறந்தகுருதியை வீழ்த்துவது அதைவிடப் பெரும்பழிக்குரியது. வானிலுள்ளனர் முலையூட்டிய அன்னையர். நாம் மண் நீத்தால் சென்று அவர்கள் முன் நின்றாகவேண்டும். அதை மறக்கவேண்டியதில்லை” என்று இகடர் சொன்னார். “அவன் என்ன சொன்னான்?” என்று நளன் கேட்டான். “அவரிடம் பேசி ஒப்புதல்கொள்ள வைக்கமுடியும். ஏனென்றால் அனைத்துக் குலத்தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். போருக்கு நாங்கள் ஒப்பினால் மட்டுமே அவர் படையெழுச்சி கொள்ளமுடியும்” என்றார் பணிதர். “நம் குருதியினர்தான் மறுநிரையிலும் இருப்பார்கள் என்பதை சற்று பொழுது செல்லும்தோறும் நம் படைவீரர் உணர்ந்துகொள்வார்கள்… அவர்கள் எதிர்ச்சொல் முழக்கத் தொடங்கினால் அது இளவரசருக்கே இழிவு. அதற்குள் நிகரிப்போரை அறிவித்துவிடலாம்.”

நளன் “அவன் ஒப்புக்கொண்டால் நான் சித்தமே” என்றான். இகடர் முகம் மலர்ந்து “போதும், எஞ்சியதை நான் பார்த்துக்கொள்கிறேன். இதோ இங்கிருந்தே அரசரை சந்திக்கச் செல்கிறோம். உடன் எங்கள் குடியின் படைத்தலைவர்களும் வருவார்கள். முடிவுசெய்துவிட்டோம். நிகரிப்போர்தான், குலப்போர் அல்ல” என்றார். பணிதர் “நாளையே நேரம் குறிப்போம்” என்றார். “அவன் தயங்கக்கூடும், அவன் சூதில் வல்லவன் அல்ல” என்றான் நளன். “அவருக்கு வேறுவழியில்லை. எங்கள் மைந்தரின் குருதிமேல் நடந்து அவர் முடிசூடமுடியாது” என்றபின் இகடர் எழுந்து “விடைகொள்கிறோம்” என்றார்.

அவர்கள் செல்வதை நளன் வெறித்து நோக்கி சற்றுநேரம் அமர்ந்திருந்தான். நாகசேனர் “வேறுவழியில்லை என்பது சித்தத்துக்கு உறைக்கிறது. ஆனால் உள்ளம் பதறிக்கொண்டே இருக்கிறது, அரசே” என்றார். “அவனால் சூதில் வெல்லமுடியாது. அவன் எப்படி ஒப்புவான்?” என்றான் நளன். “அவருக்கு வேறுவழியில்லை. இப்போது பார்த்தால் நாளை மாலையே எல்லாம் இனிது முடியவேண்டும். ஆனால் நான் அஞ்சுவது அவனை” என்றார். யாரை என நளன் உணர்ந்திருந்தான். “அவன் கலிவடிவன்” என்றார் நாகசேனர்.

தொடர்புடைய பதிவுகள்

ரிஷான் ஷெரீஃப் நேர்காணல்

$
0
0

rishaan

 

“தமிழ் புத்தகங்களின் அட்டையிலும், உள்ளேயும் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என இப்போதும் சோதித்துப் பார்க்கிறார்கள். ‘இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன?, எதற்காக வாங்கினீர்கள்?’ போன்ற அவர்களின் கேள்விகளுக்கு நெடுநேரம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. புத்தகத்தை முழுவதுமாக வாசித்துப் பார்க்காமல் எவ்வாறு அதில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என விபரமாகச் சொல்ல முடியும்?

புத்தகத்தில் பிரபாகரனின் புகைப்படமோ, யுத்தம் சம்பந்தமான விடயங்கள் ஏதேனுமோ பிரசுரிக்கப்பட்டிருந்தால், தபாலகத்தில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள வந்தவரின் பாடு முடிந்தது. யாரும் எந்தத்தவறும் செய்யாமல் சிறைக்குச் செல்ல விரும்புவதில்லை அல்லவா?

ஆகவே, இலங்கையில் தமிழ் புத்தக வாசகர்களுக்கு தமக்குத் தேவையான புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து எடுப்பித்து தாம் விரும்பியவாறு வாசிக்க சுதந்திரமில்லை. அரசாங்கம் எவற்றை வாசிக்க அனுமதிக்கிறதோ அத்தொகுப்புக்களை மாத்திரமே வாசிக்க வேண்டியிருக்கிறது.”

அண்மையில் ‘ராவய’ சிங்களப் பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணலினை தமிழில் முழுமையாக இந்த இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

http://kalkudahnation.com/80479

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்

$
0
0

david bellows

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு

 

ஜெ,

 

டேவிட் பெல்லோஸ் இன்று உலக அளவில் மிகவும் கவனிக்கப்படும் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Is That A Fish In Your Ear?: Translation and the Meaning of Everything   .என்னும் நூல் மிகவும் கவனிக்கப்பட்ட ஒன்று.

 

இந்த இதழ் முக்கியமானது. அதைவிட முக்கியமானது இக்கதையை தேர்வுசெய்த எழுத்தாளர்.மிகப்பெரிய கௌரவம். தமிழுக்கும். அந்தப்பட்டியலில் அத்தனை நாடுகள் ,அத்தனை பண்பாடுகள் பேசப்பட்டிருக்கையில் முதல்பரிசு தமிழ் என்ற சொல்லை பார்த்தபோது தமிழனாக பரவசம் அடைந்தேன்.

 

அவருடைய குறிப்பில் இந்தப்போட்டிக்கு உலக அளவில் வந்த கதைகளின் சூழலை, கதைசொல்லும் முறைகளை விவரித்துவிட்டு பெரியம்மாவின் சொற்களைப்பற்றி இப்படிச் சொல்கிறார்

 

“There were several contenders for second place, but I have absolutely no doubt that the prize itself must go to the charming, wonderful, unusual story of “Periyamma’s Words” by the Tamil writer B. Jeyamohan in Suchitra Ramachandran’s translation. It tells of how an illiterate old lady from South India was taught some basic English before being sent to live in the USA—with word definitions being given out of traditional Indian stories in contrast and conjunction with classical stories from the West. By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed.”

 

இந்தக்கதை தமிழில் வெளிவந்த இத்தனை மாதங்களில் இதைப்பற்றி இங்குள்ள அறிவுஜீவிகளோ விமர்சகர்களோ ஒரு வார்த்தைகூட பேசி நான் கேட்டதில்லை.  நானே ஒரு கடிதம் எழுதி அதை அனுப்பாமல் விட்டுவிட்டேன். .

எஸ்.ஆர்,ராகவன்

ஜெ,

 

நான் டெல்லியில் இருக்கிறேன். இங்கே இலக்கியவாசகர்கள் தமிழிலக்கியம் பற்றிப்பேசும்போது போகிறபோக்கில் உதிர்க்கும் கருத்துக்கள் மிகவும் ஏமாற்றம் அடையச்செய்பவை. பெரும்பாலும்  எளிமையான சமூகசீர்திருத்தக் கதைகள்தான் தமிழில் இருந்து மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளன.

 

வங்க நண்பர் ஒருவர் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட நாவலை பரிவுடன்  ஹியூமனிஸ்டிக் கதை என்றார். ‘ஹ்யூமனிஸம்தான் இலக்கியம் என நினைக்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். ‘சேச்சே வங்கத்தில் நாங்கள் அதை ஸோத்தேஷ் சாஹித்ய என்போம். அதற்கு இலக்கியத்தில் இடமில்லை’ என்றார். ‘அப்படியென்றால் ஏன் இதை நல்ல கதை என்கிறீர்கள்?” என்றேன். “தமிழிலிருந்து இப்படி ஒரு கதை வருகிறதே என்றுதான்’ என்றார்.

 

அதாவது அவர்களுக்கு நாம் இன்னும் எழுத ஆரம்பிக்காதவர்கள். Naïve ஆனவர்கள். இதற்குக்காரணம் இங்கிருந்து மொழியாக்கம் செய்யப்படும் பெரும்பாலான படைப்புக்கள் இலக்கியமதிப்பில்லாதவை என்பதுதான்.அந்த அரசியலை பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு அவை பிடிக்கும். அவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். ஆனால் இலக்கிய வாசகர்கள் கொஞ்சப்பேரானாலும் உலகம் முழுக்க உண்டு. அவர்கள் தனி

 

இன்றைக்கு மிக மகிழ்ச்சியான நாள். என் இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் கதையை டேவிட் பெல்லோஸின் குறிப்புடன் அனுப்பியிருக்கிறேன்

மனோகர்

 

அன்புள்ள ராகவன்,மனோகர்,

என்னுடைய படைப்புக்களை ஆங்கிலத்திலோ மற்றமொழிகளிலோ மொழியாக்கம் செய்ய எந்த முயற்சிகளையும் நானே முன்னெடுப்பதில்லை என்பது நான் எடுத்த முடிவு. தமிழிலேயே என் படைப்புகள் மிகக்குறைவாக வாசிக்கப்படுகின்றன. அதைப்பற்றியும் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்த அளவுக்குக்கூட என் முன்னோடிகள் வாசிக்கப்பட்டதில்லை. என் இலக்கு எழுதி எழுதி என்னைக் காலிசெய்வதுதான். அது நிகழ்ந்தபின் விடுதலைகொள்வது மட்டும்தான்.

 

இந்தத்தேர்வில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் ஆச்சரியம் ஏதுமில்லை. எனக்கு ஐயமறத்தெரிந்த விஷயங்களில் ஒன்று இன்று உலகளவில் எழுதிக்கொண்டிருக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன் நான். இந்த அளவு தரமும் இந்த அளவு விரிவும் உலக இலக்கியத்தின்  குறைவான படைப்பாளிகளிடம் மட்டுமே வெளிப்பட்டவை.. அதை என்றாவது உலகம் உணரலாம், உணராமல் போனாலும் ஒன்றுமில்லை. ஒருவர் கூட வாசிக்காவிட்டாலும் குறைவில்லை.

 

எங்கிருந்தும் நான் என் சாராம்சத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. வடிவங்களை வாங்கிக்கொள்ளவுமில்லை. என்னிடம் என் மண்ணின் பண்பாட்டையும் வாழ்க்கையையும் தத்துவத்தையும் உலகம் பெற்றுக்கொள்ள முடியும். உரியமுறையில் முன்வைக்கப்பட்டால்.

 

நீங்கள் சொன்னதுபோலஇங்குள்ள ஆங்கிலமொழியாக்கங்கள் மிகச்சாதாரணமானவை. ஒன்று பழைய கற்று பெற்ற பாடப்புத்தகநடை கொண்டவை. அதைவிட முக்கியமானது கதைத்தெரிவு. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களின் ரசனை மிகச் சாதாரணமானது. பல்வேறு அமைப்புகள் சார்ந்து உந்தி முன்வைக்கப்படும் படைப்புகள் மட்டுமே இங்கிருந்து மொழியாக்கம் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் என்.ஜி.ஓ படைப்புக்கள் அவை.

 

அவை எளிய அரசியல் உள்ளடக்கம் கொண்டவை. பெண்ணியம் தலித்தியம் விளிம்புநிலை எழுத்து போன்ற சில காரணங்களுக்காக அவை மொழியாக்கம் செய்யப்பட்டு, அந்தந்த தளங்களில் சிலரால் கவனிக்கப்படுகின்றன. இலக்கியக் காரணங்களுக்காக அவை வாசிக்கப்படுவதில்லை. சமகால இந்தியாவை, தமிழகத்தை அறிவதற்கான சமூகவியல்  ‘சாம்பிள்’களாகவே அவை கருதப்படுகின்றன

 

என்னிடம் இதை பல அயல்வாசகர்கள் சொன்னதுண்டு. இலக்கியம் என்பது அது அல்ல. அது ஒரு பண்பாட்டின் சாரம்சமான ஆன்மிகம் [ spirituality ]. அது வெளியாகும் தமிழ்க்கதைகளை தமிழுக்கு வெளியே வாசகர்களில் மிகச்சிலர் கூட அறிந்திருப்பதில்லை. நவீனத்தமிழிலக்கியம் என்றாலே எளிமையான சமூகவியல்சித்திரங்கள் மட்டுமே என்றும் அதற்கப்பால் இலக்கியம் நோக்கி இன்னமும் தமிழிலக்கியம் செல்லவில்லை என்றும பலர் எண்ணுகிறார்கள்.

 

நீங்கள் சொல்வதுபோல பெரியம்மாவின் சொற்கள் தமிழில் வெளிவந்தபோது அதற்கு வந்த இலக்கியவாசிப்பு என்பது மிகச்சொற்பமே. நான் கடிதங்களைச் சென்று பார்த்தேன் . கடலூர் சீனு, மோனிகா மாறன் போன்ற என் வழக்கமான வாசகர்கள் மட்டுமே எதிர்வினையாற்றியிருந்தனர்.இலக்கியத்தின் மையமான ஆன்மிகத்தை – டேவிட் பெல்லோஸ் சுட்டிக்காட்டும் அந்த பண்பாட்டுப் பரிமாற்றத்தில் மையமாக உள்ள அம்சத்தை – உணரும் வாசகர்கள் மிகமிகக்குறைவு. உண்மையில் யோசித்துப்பார்த்தால் தமிழ்ச்சூழலில் அதை உணர்ந்து எழுதக்கூடிய நுண்ணுணர்வுகொண்டவர்களே மிகமிகச்சிலர்தான்.

 

இப்பரிசு கிடைத்தபின்னர்கூட எனக்கு தமிழகத்தில் இருந்து அனேகமாக வாழ்த்து என்று ஏதும் வரவில்லை. சுசித்ரா கூப்பிட்டு  ‘ஏன் இந்த மௌனம்? இந்தப்பரிசு எவ்வளவு முக்கியமானது என்று தெரியவில்லையா” என்றார். ஆசிய மொழிகளிலிருந்து முதல்முறையாக ஒரு கதை பரிசுபெறுகிறத் என்றார். நான்  ‘கவலைப்படாதே,மௌனமே பதிலாக இருக்கும், கொஞ்சநாள் கடந்து சில்லறை வம்புகளும் நையாண்டிகளும். மேலதிகமாக எதிர்பார்க்கவேண்டாம்’ என்றேன்

 

நீங்கள் சொல்லும் சிக்கல் ஆரம்பிப்பது இங்கிருந்துதான். நம் இலக்கியவெற்றிகளை உணரும் ரசனைகொண்டவர்கள் நம்மிடையே மிகக்குறைவு. ஒருபக்கம் ஒன்றும் அறியாத பெரும்கூட்டம். மறுபக்கம் நுண்ணுணர்வு அற்ற, வெற்று டம்பத்திற்காக மட்டும் வாசித்துவிட்டு அனைத்துமறிந்தவர்களைப்போல பேசிக்கொண்டிருக்கும் இன்னொரு சிறுவட்டம். நாம் வாசிக்காத ஒன்றை உலகு கவனிக்கவேண்டும் என நாம் எதிர்பாரக்கலாமா என்ன?

.

அத்துடன் மகிழ்ச்சி என்பது எப்போதும் நாணயத்தின் மறுபக்கம். டேவிட் பெல்லோஸின் வரிகளால் மகிழ்ச்சி அடைந்த ஒருமணிநேரத்தில் நண்பருக்கு நாளை சிக்கலான சிறுநீரக அறுவைசிகிழ்ச்சை எனச் செய்தி வந்தது. ஒட்டுமொத்தமாக அனைத்தும் அணைந்து ஒருவெறுமை மட்டும் மிஞ்சியது. அது துலாமுள்ளின் சமநிலை

 

ஜெ

 

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இன்று கோவையில்..

$
0
0

Coimbatore-Book-Festival-2017-1024x702

இன்று கோவையில் மாலை ஐந்து மணிக்கு புத்தகக் கண்காட்சியில் எனக்கு வாழ்நாள் சாதனைக்கான கொடீஷியா இலக்கிய விருது அளிக்கப்படுகிறது. அதில் ‘தமிழகத்தை மாற்றிய நூல்கள்’ என்னும் தலைப்பில் பேசவிருக்கிறேன். அதன்பின் என் நூல்களுக்கான அரங்கைத் திறந்துவைக்கிறேன். நண்பர்களை அழைக்கிறேன்

 

ஜெ

 

கோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு
கோவை புத்தகக் கண்காட்சி,விருது,சொற்பொழிவு
கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59

$
0
0

58. நிலைபேறு

flowerசூதரங்கு மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது. அரண்மனையிலிருந்த நீள்வட்டமான உணவுக்கூடத்தின் நடுவே சிறிய மரமேடை போடப்பட்டு அதில் சூதுக்களம் ஒருக்கப்பட்டிருந்தது. இருபக்கமும் தாழ்வான இருக்கைகள். சூதுக்காய்களை வைப்பதற்கான பீடங்கள் வலக்கை அருகே. இடக்கையருகே ஆட்டத்துணைவனுக்கான பீடம். அதை நோக்குபவர்கள் அமர்வதற்காக வட்டமாக பீடங்கள் போடப்பட்டிருந்தன. நான்கு வாயில்களிலும் காவலர் நின்றனர்.

காலையிலேயே ஆட்டம் குறிக்கப்பட்டிருந்தது. அரண்மனைக்கு வெளியே களமுற்றத்தில் மிகப்பெரிய ஆட்டக்களம் ஒன்று உள்ளிருப்பதன் அதேவடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் யானை, குதிரை, தேர், காலாள் கருக்களைப்போல முகமூடி அணிந்த வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அக்களமுற்றத்திற்கு நேர் மேலே உயர்ந்த மேடையில் முரசுடன் நிமித்திகன் ஒருவன் அமர்ந்திருந்தான். உள்ளே சூதுக்களத்தை நன்கு நோக்கியபடி நிரைகளின் பின்னாலிருந்த மரமேடையில் அமர்ந்திருந்த நிமித்திகன் ஆட்டத்திற்கு ஏற்ப தன் குறுமுரசை முழக்கினான்.

அவ்வொலியைக் கேட்டு காய்நகர்வை புரிந்துகொண்டு வெளியே மேடையில் இருந்த நிமித்திகன் தன்முரசை முழக்கினான். அதைக் கேட்டு நாற்களக்காய்கள் என நின்றிருந்த வீரர்கள் களங்களில் நகர்ந்தனர். உள்ளே நிகழும் ஆட்டம் வெளியே பேருருவில் தெரிந்தது. அதை நோக்க நகரின் ஷத்ரியர்களும் வணிகர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து சூழ்ந்திருந்தார்கள். அரண்மனை உப்பரிகைகளிலும் இடைநாழிமுகப்புகளிலும் பெண்கள் செறிந்து நின்று அந்த ஆட்டத்தை நோக்கினர்.

முரசின் ஓசையைக்கேட்டு அருகிருந்த காவல்மாடத்தின் உச்சியிலிருந்த காவலன் பெருமுரசை முழக்கினான். அந்த ஓசைக்கேற்க வெளியே கோட்டைமுகப்பில் இருந்த பெரிய களமுற்றத்தில் அமைந்த நாற்களத்தில் கருக்களாக தலையணிகள் சூடி நின்ற வீரர்கள் இடம் மாறினர். கோட்டையின் காவல்மாடங்களிலும் நடைபாதைகளிலும் நெருக்கி நின்று படைவீரர்கள் அந்த ஆடலைக் கண்டார்கள். அயல்நாட்டு வணிகரும் சூதர்களும் அக்களத்தை முகங்களால் வேலியிட்டு வளைத்திருந்தனர்.

நகரெங்கும் அவ்வாடல் ஒலியென சென்று சேர்ந்துகொண்டிருந்தது. திண்ணைகளில் கூடியிருந்த முதியவர்கள் தங்கள் முன் சுண்ணத்தாலும் கரியாலும் வரையப்பட்டிருந்த சிறிய நாற்களக்கட்டங்களில் கற்களையும் விதைகளையும் சோழிகளையும் பரப்பி வைத்து ஓசைக்கேற்ப காய்நகர்த்தி அந்த ஆடலை நிகழ்த்தினர். அடுமனைத்திண்ணைகளில் கொல்லைப்பக்க கொட்டில்களில் அகத்தளங்களில் பெண்கள் கூடியமர்ந்து அந்த ஆடலை தாங்கள் நிகழ்த்தினர். ஓசைகேட்டு தங்கள் உள்ளங்களை ஆடுகளமாக ஆக்கிக்கொண்டனர் பல்லாயிரவர்.

விஜயபுரி நகரமே தெரிவதும் தெரியாததுமான ஆடுகளங்களின் பெருந்தொகையாக ஆகியது. சுழியின் மையமென அச்சூதுகளத்தின் நடுவே மென்மரப்பட்டையில் பட்டுத்துணியை ஒட்டி அமைத்த அந்தச் சிறிய ஆடுகளம் அமைந்திருந்தது. அதைச்சூழ்ந்து இரவெல்லாம் காவலர் நின்றிருந்தனர். அதை அமைக்கும் சிற்பிகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. புலரியில்தான் பணிமுடிந்தது.

முந்தைய இரவிலேயே நாற்களத்தில் நிகரிப்போர் நிகழ்த்த புஷ்கரன் ஒப்புக்கொண்ட செய்தியை குடித்தலைவர்கள் வந்து சொன்னார்கள். கீகடர் அதைச்சொல்லும்போதே அழுதுவிட்டார். “இது நிகழுமென நான் எண்ணவில்லை. என் குடிகள் போரிட்டு அழியாமல் காத்தேன் என்று நான் என் மைந்தரிடம் சொல்லமுடியும். இனி என் குடிமூத்தாருக்கு அஞ்சாமல் கூசாமல் பலியளித்து வழிபடமுடியும்.” பணிதர் “உங்கள் இருவரில் எவர் வென்றாலும் நன்றே. இன்றைய பூசல் இப்போதே தீரும். பூசல் தீர்ந்தபின்னர் அனைத்தையும் அமர்ந்து பேசிக்கொள்ளமுடியும்” என்றார்.

மெல்லமெல்ல நளன் முகம் தெளிந்தான். புன்னகையுடன் “ஆம், அவன் தேடுவது ஒரு களப்போரை என்றால் அது நிகழ்க! என்றான். “நம் குடிகளுக்கும் போர் ஒன்று தேவையாகிறது. துலா இப்போதே ஆடி நிலைகொள்ளுமென்றால் நன்று.” நாகசேனர் மட்டும் ஐயமும் குழப்பமும் கொண்டவராக இருந்தார். குடித்தலைவர்கள் சென்றபின் நளன் “நீங்கள் அச்சம் கொள்கிறீர்கள், அல்லவா?” என்று நாகசேனரிடம் கேட்டான்.

“ஆம், அரசே. என் உள்ளம் நிலைகொள்ளவில்லை” என்றார் நாகசேனர். “எண்ணிநோக்கினால் போர் என்பது நேரடியானது. அதில் கரவு என ஏதுமில்லை. இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களும் போரிடுகின்றன. ஆகவே அது தெய்வங்கள் அமைத்தது. சூது அப்படி அல்ல. அது இப்புடவியை நோக்கி மானுடன் அமைத்தது. புடவியின் சிறுபோலி அது. புடவிச்செயலின் முடிவிலாத தற்செயல்பெருக்கை இக்களத்திலும் நிகழ்த்தி அதனுடன் ஆடுகிறான் மானுடன். போரில் மானுடன் தன் எதிரியை அறைகூவுகிறான். சூதில் தெய்வங்களை அறைகூவுகிறான்.”

நளன் “இப்படி எண்ணியபடியே செல்லமுடியும். ஆனால் உடன்பிறந்தார் குருதி பிழைத்தது என்பதைப்போல ஆறுதல் அளிப்பது பிறிதேதுமில்லை” என்றான். “ஆம், நான் அதையே எண்ணினேன். ஆனால் பராசரரின் புராணமாலிகையை, பலநூறு குடிக்கதைகளை இங்கே அமர்ந்து எண்ணிக்கொண்டேன். எந்தப்பூசலாவது சூதில் முழுமையாக தீர்வுகாணப்பட்டுள்ளதா? இல்லை, அரசே. சூது எப்போதுமே பூசலை ஒத்திப்போடுகிறது. சூதில் நிகழ்ந்தவை அப்பூசலை பெருக்குகின்றன. சூது நிகழ்ந்த பூசல்கள் அனைத்துமே மேலும் பெரிய போரில்தான் முடிந்துள்ளன. ஒருமுறைகூட விலக்கில்லை. ஆகவே இது ஒரு மாறாநெறியென்றே தோன்றுகிறது.”

நளன் புன்னகையுடன் “எதுவானாலும் இனிமேல் எண்ணிப்பயனில்லை. அனைத்தும் முடிவாகிவிட்டன. நாளை காலை கதிரெழுந்த இரண்டாம் ஜாமத்தில் ஆட்டம் நிகழ்கிறது. ஏழு களம் என முடிவாகியிருக்கிறது” என்றான். “இனி ஒன்றும் செய்யமுடியாதென்றில்லை. நான் இதை முறிக்கிறேன்… சிறுமைசெய்யப்பட்டதாக சினம்கொண்டு வஞ்சினம் உரைத்து கிளம்பிச்செல்லுங்கள். ஒரு நேரடிப்போரே நிகழட்டும்.”

“ஆம், சில ஆயிரம்பேர் இறப்பார்கள்” என்று நாகசேனர் தொடர்ந்தார். “அதில் பழுதில்லை. போர்களில் பல்லாயிரம் நிஷாதர் முன்னரும் இறந்துள்ளனர். போரில் வீரர் இறப்பது நன்று, வீரருக்குரிய விண்ணுலகை அவர்கள் அடைகிறார்க்ள். நேரடியான குருதிப்போரே நேர்மையானது. அப்போருடன் அனைத்தும் முற்றாக முடிவுக்கு வந்துவிடும்… அத்தனை போர்களும் அதைவிட பெரிய போர் நிகழாமல் தடுப்பவைதான்.”

நளன் “இல்லை, இப்போது களம்முறித்து நான் சென்றால் என் உடன்பிறந்தானை நான் வேண்டுமென்றே கொன்றேன், என் குடியை அழித்தேன் என்னும் பழியே எஞ்சும். இக்களமாடலில் நானே வெல்வேன். ஐயமே வேண்டியதில்லை, நாகசேனரே. இது நமக்கு சற்று பொழுதிடை அளிக்கும். இந்திரபுரியின் வேள்விநிறைவும் முடிசூட்டும் நன்முறையில் நிறைவுறும். அதன்பின் நாம் புஷ்கரனை அழைத்து பேசுவோம். தோற்று நிற்பவனுக்கு விஜயபுரியை அளித்து இங்கு தனிமுடிசூட்டச் செய்வோம்.”

நாகசேனர் “போரில் கொடைபோல முழுமடம் பிறிதில்லை. நல்லியல்பென்பது வெற்றிக்குமேல் நின்றிருக்காவிட்டால் சிறுமைபடுத்தப்படும். நேர்ப்போர், மாற்றில்லாத வெற்றி. வேறேதும் இங்கே பொருளுள்ளவை அல்ல” என்றார். நளன் “நான் முடிவுசெய்துவிட்டேன், நாகசேனரே” என்றபின் எழுந்து “பிந்திவிட்டது. துயில்கொள்ளவேண்டும். நாளை புதிதென கண் துலங்கவேண்டும்” என்றான். நாகசேனர் “நன்று நிகழ்க!” என்றார்.

அன்றிரவு நாகசேனர் துயிலவில்லை. நிகழ்வன குறித்து கருணாகரருக்கு நீண்ட ஓலைகள் இரண்டை அனுப்பிவிட்டு இரவெல்லாம் நிலையழிந்தவராக உலவிக்கொண்டிருந்தார். சூது அறிவிப்பை முழங்கிச்சொல்லும் முரசொலிகள் கேட்டன. நகர்மக்களின் ஒட்டுமொத்தமான பேச்சொலி எழுந்து கார்வையாக இருண்ட வானில் நெடுநேரம் நின்றது. பின்னிரவில் நகர் அமைதிகொண்டது. கூகைகளின் குழறல்கள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. நாழிகை மணிகளின் ஓசை. காவல்மாற்றத்தின் ஆணைகள். பின்னர் புலரிமுரசு. அவர் அவ்வோசையைக் கேட்டு திடுக்கிட்டார்.

எழுந்து சென்று விடிவெள்ளியை நோக்கவேண்டும் என விழைந்தார். ஆனால் சற்றுநேரம் அவ்வெண்ணங்களுடன் அமர்ந்திருந்துவிட்டு எழுந்து சென்று விடிவெள்ளியை நோக்கினார். கூரியவேல்முனைபோல் அது மின்னிக்கொண்டிருந்தது. நகரம் உயிர்பெறத் தொடங்கி சற்றுநேரத்திலேயே ஓசைகள் நிறைந்து அலைசூழ்ந்தன. அவர் பெருமூச்சுடன் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார். அவை எண்ணற்கரிய மாபெரும் சூதுக்களமொன்றின் காய்கள் என்ற பராசரரின் வரி நினைவிலெழுந்தது.

அக்கணமே அடுத்தவரி நினைவிலெழ அவர் துருவனை தேடிச்சென்று விழிதொட்டார், “நிலைபெயராமையே அந்தண அறம் எனப்படுகிறது. பிற எதன்பொருட்டும். தன்பொருட்டும். தன் மூதாதையர், தெய்வங்கள் பொருட்டும். நிலைக்கோளென அவனுடன் இருக்கவேண்டியவை வேதநெறிகள் மட்டுமே.” பன்னிரு அகவையில் அவர் வேதக்கல்வி முடித்து குருநிலையிலிருந்து கிளம்பும்போது ஆசிரியர் புராணமாலிகாவின் அந்தவரியை அவரிடம் சொன்னார்.

துருவனின் மின்னொளி மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்வது போலிருந்தது. மொத்தவானமும் விண்மீன் பெருக்கும் அதை உந்தித்தள்ள அது அசைவில்லாமல் அமைந்திருந்தது. அனைத்து நுண்சொற்களுடனும் இயல்பாக சென்று இணையும் ஓங்காரம் அது. நோக்கிக்கொண்டிருக்கையில் மெல்ல உள்ளம் தெளிவுகொண்டது. நீள்மூச்சுடன் திரும்பி ஏவலனிடம் “அரசரை எழுப்புக!” என்றார்.

நளன் அணிகொண்டு ஒருங்கி வந்தபோது அவர் தலைவணங்கி “அழைப்பு வரும் என்றார்கள், அரசே. காத்திருப்போம்” என்றார். நளனின் முகம் தெளிவுகொண்டிருந்தது. “அனைத்தும் நன்றெனவே முடியும், அமைச்சரே” என்றான். “இக்காலை எனக்கு அதை தெளிவுறக் காட்டுகிறது.” நாகசேனர் “அனைத்தும் முடிவில் நன்றே” என்றார்.

அவர்களை அழைத்துச்செல்ல அரண்மனைச்செயலர் # வந்தார். அவர் முகமனுரைத்ததும் வணங்கியதும் மிகையாக ஒத்திகைநோக்கப்பட்ட நாடகம்போல் இருந்தன. நளன் நாகசேனர் உடன்வர நடந்து இடைநாழிகளினூடாக சூதரங்கு நோக்கி சென்றான். திரும்பி நாகசேனரிடம் “முகத்தை அப்படி வைத்துக்கொள்ளவேண்டாம், அமைச்சரே. நாம் அஞ்சுகிறோம் என எண்ணுவார்கள்” என்றான். நாகசேனர் புன்னகைசெய்தார்.

ஆனால் சூதரங்கின் வாயில் கண்ணுக்குப்பட்டதும் நளனின் உள்ளம் திடுக்கிட்டது. படபடப்பை மறைத்துக்கொள்ள முகத்தை அங்குமிங்கும் திருப்பி அச்சூழலை நோக்கினான். ஏன் அந்தப் பதற்றம் என அவனுக்கு புரியவில்லை. அங்கிருந்தவர்கள் அனைவருமே அவனைத்தான் நோக்கிக்கொண்டிருந்தனர். ஆனால் விழிகளை திருப்பிக்கொண்டு வேறு பேச்சுகளை நடித்தனர்.

அவனை எதிர்கொண்டழைத்த அமைச்சர் பத்ரர் தலைவணங்கி முகமன் உரைத்தார். “இந்திரபுரியின் அரசருக்கு விஜயபுரியின் சூதரங்குக்கு நல்வரவு” என நிமித்திகன் அவைமேடையில் அறிவித்ததும் மெல்லிய வாழ்த்தொலி முழக்கம் எழுந்தது. அவனை அழைத்துச்சென்று ஒரு பீடத்தில் அமரச்செய்தார் அமைச்சர். நளனருகே அமர்ந்த நாகசேனர் “இங்கே ஆட்டத்துணைவருக்கு என ஒரு பீடம் போடப்பட்டுள்ளது” என்றார். “ஆம்” என்றான் நளன். “நம் காவலர்தலைவனை அழைத்துவரும்படி சொல்கிறேன். நான் அந்தணன், சூதாடக்கூடாது.” நளன் தலையசைத்தான். அவர் எழுந்துசென்றார்.

அவன் ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக நெஞ்சிடிப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். களத்தை சீரமைத்தனர். காய்களை கொண்டுவந்து வைத்தனர். இருக்கைகளில் புலித்தோல் விரித்தனர். அவை முன்னரே நிறைந்திருந்தது. அனைவரும் ஒருவரோடொருவர் பேசியபடியும் மெல்ல சிரித்தபடியும் இருந்தனர். அவர்கள் அனைவருமே போர்தவிர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி கொண்டிருந்தனர். ஆகவே சூதில் மேலும் ஆர்வம் கொண்டவர்களாக தெரிந்தனர். ஏவலர் அவர்களுக்குரிய இன்கடுநீரும் வாய்மணங்கள் நிறைந்த தாலங்களுமாக நடுவே உலவினர்.

வெளியே மங்கல இசை ஒலித்தது. நிமித்திகன் அவைக்குள் நுழைந்து புஷ்கரன் அவைநுழைவதை அறிவித்தான். தொடர்ந்து காகக்கொடியுடன் கொடிவீரன் உள்ளே வந்தான். இசைச்சூதரும் தாலமேந்திய சேடியரும் நுழைய புஷ்கரன் அருகே ரிஷபன் தொடர அரசணிக்கோலத்தில் நடந்துவந்தான். புன்னகையுடன் அவையை வணங்கியபடி நுழைந்து தனக்கான பீடத்தில் அமர்ந்தான். நளனை நோக்கவோ வணங்கவோ இல்லை. நாகசேனர் காவலர் தலைவனை அழைத்துவந்தார். அவன் நளன் அருகே அமர்ந்தான். நாகசேனரின் முகம் தெளிவுகொண்டிருப்பதை நளன் கண்டான். அவர் எதை உணர்ந்தார் என வியந்துகொண்டான்.

நிமித்திகன் அவைமேடையேறி தன் சிறிய கொம்பை முழக்கினான். முகமனுரைகளும் வாழ்த்துக்களும் கூறியபின் அறிவிப்பை கூவினான். “விஜயபுரியின் தலைவரும் காளகக்குடித் தோன்றலுமாகிய இளவரசர் புஷ்கரருக்கும் அவருடைய தமையனும் இந்திரபுரியின் அரசரும் சபரகுடிவழி வந்தவருமாகிய அரசர் நளனுக்குமிடையே குடிப்பூசல் எழுந்துள்ளது. முறைப்படி குடிமூத்தாரால் ஏற்கப்பட்ட தனக்கே நிஷதமண்ணின் ஆட்சியும் கொடியும் முடியும் உரிமைப்பட்டது என்றும் மூத்தவராகிய நளன் அரியணை ஒழியவேண்டும் என்றும் இளவரசர் புஷ்கரர் கோருகிறார். அதை மூத்தவர் எதிர்ப்பதனால் போர் அறைகூவப்பட்டது.”

“குடிப்பூசலில் உடன்பிறந்தோர் குருதிசிந்தலாகாதென்று எண்ணிய குலமூத்தார் எடுத்த முடிவை ஏற்று இப்பூசலை நிகரிப்போர் வழியாக தீர்த்துக்கொள்ள இருசாராரும் ஒப்புதல்கொண்டுள்ளனர். நிகரிப்போருக்குரியது நாற்களம் என்பதனால் இன்று இந்த அவையில் இளவரசரும் மூத்தவரும் நேருக்கு நேர் களமாடி வெற்றிதோல்வியை எதிர்கொள்ளவிருக்கிறார்கள். இந்த அவை அதை ஏற்றருளவேண்டுமென்று அரசர் சார்பில் கோருகிறேன்.” அவை கோல்களைத் தூக்கி ஒப்புதல் ஒலி எழுப்பியது. “இளவரசரையும் மூத்தவரையும் ஆடுகளத்தில் அமரவேண்டுமென்று அழைக்கிறோம்” என்றான் நிமித்திகன்.

புஷ்கரன் வணங்கியபடி சென்று பீடத்தில் அமர்ந்தான். அமைச்சர் தலைவணங்கி அழைக்க நளன் எழுந்து அவையை வணங்கியபடி சென்று களத்தருகே இடப்பட்ட பீடத்தில் அமர்ந்தான். “ஆட்டத்துணைவர்கள் அமர்க!” என்றான் நிமித்திகன். புஷ்கரன் அருகே ரிஷபன் வந்து அமர்ந்தான். அவனை நோக்கிய முதற்கணம் நளன் நெஞ்சதிர்ந்து நோக்கை விலக்கிக்கொண்டான். அவனருகே காவலர்தலைவன் வந்து அமர்ந்தான். “தொல்நெறிகளின்படி இந்தக் களமாடல் நிகழும். இதில் வெல்பவர் போரில் வென்றதாக தோற்றவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை இங்கு இருவரும் அனல்தொட்டு ஆணையுரைக்கட்டும்” என்றான் நிமித்திகன்.

இருவரிடமும் எரியும் அகல்விளக்கு கொண்டுவரப்பட்டது. தழல்மேல் கைநீட்டி “ஆம், நான் முழுதேற்கிறேன். ஆணை ஆணை ஆணை” என்றான் புஷ்கரன். நளனும் அவ்வாறே ஆணை ஏற்றான். “ஆட்டம் தொடங்கட்டும். ஆடல்காணவந்துள்ள தெய்வங்களும் மூதாதையரும் மகிழ்வுகொள்க” என்றான் நிமித்திகன். ஆட்டம் தொடங்குவதை அறிவிக்கும் முகமாக நிமித்திகன் தன் இடையிலிருந்த கொம்பை மும்முறை முழங்கினான். முரசு முழங்க அதை ஏற்று வெளியே பெருமுரசுகள் ஒலித்தன.

“நீங்கள் முதலில், மூத்தவரே” என்றான் புஷ்கரன். தன் முதற்கரு மேல் கை வைத்த நளன் திரும்பி ரிஷபனை பார்த்தான். முதற்கணத்தில் தலையில் இரு கொம்புகளுடன் எருதுமுகம் கொண்டு அவன் அமர்ந்திருப்பதாகத் தோன்றி மெய்ப்பு கொண்டான். அக்கணமே புஷ்கரனும் ரிஷபனை திரும்பி நோக்கினான். “காய்நகர்த்துக, அரசே” என்று ரிஷபன் சொன்னான்.

flowerதமயந்தியின் அணியறைக்குள் சேடி வந்து வணங்கி “பேரமைச்சர் கருணாகரர்” என்றாள். தமயந்தி வியப்புடன் “இங்கா? நான் வேள்விச்சாலைக்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று சொல்” என்றாள். அவள் “அவர் பதற்றத்துடனிருக்கிறார்” என்றாள். தமயந்தி புருவம் சுளித்து எண்ணிநோக்கியபின் “சரி, அவரை வரச்சொல். ஸ்ரீதரரிடம் சென்று நான் அவையேக சற்று பிந்தும், அதுவரை வேறேதேனும் சடங்குகள் நிகழவேண்டும் என்று சொல்” என்றாள். சேடி சென்றதும் பிற அணிச்சேடியர் செல்லலாம் என கையசைத்தாள்.

கருணாகரர் உள்ளே வந்து வணங்கியதுமே அவளுக்கு தீயசெய்தி என்று தெரிந்துவிட்டது. அமர்க என்று அவள் கைகாட்ட அவர் அமர்ந்தார். “வேள்விநிகழ்வு முடிய இன்னும் பொழுதிருக்கிறது அல்லவா?” என்றாள். “ஆம், அரசி. உச்சிப்பொழுதுக்குள் முடிந்துவிடும். நீங்கள் சென்று அமர்ந்து முடித்துவைக்கவேண்டும். அந்தணர்கொடைகளை உங்கள் கைகளால் நிகழ்த்தவேண்டும். அதன்பின்னர் அவைநிகழ்வுகள்.” அவள் அவர் முகத்தை கூர்ந்துநோக்கிவிட்டு “அரசர் இன்னும் வந்துசேரவில்லை அல்லவா?” என்றாள்.

“நீங்கள் ஒற்றர்கள் வழியாக அறிந்திருப்பீர்கள், அரசி. அரசர் விஜயபுரிக்குத்தான் சென்றார்.” தமயந்தி “ஆம்” என்றாள். “சற்றுமுன் பறவைச்செய்தி வந்தது. அரசரும் இளவரசரும் பிறரும் வந்துகொண்டிருக்கிறார்கள்.” அவள் அவர் முகத்தை கூர்ந்து நோக்கி “நல்ல செய்தி அல்லவா?” என்றாள். “இல்லை அரசி” என்றார் கருணாகரர் பின்னர் சொல்தேடித் தொகுத்து “ஊழின் ஆடலென்றே கொள்க! பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றார். “சொல்க!” என்றாள்.

“நிகரிப்போர் என்று ஒரு சூதாட்டம் நிகழ்ந்தது. அரசரும் இளவரசரும் ஆடினர்” என்றார் கருணாகரர். “அதில் அரசர் தோற்றார்.” தமயந்தி சிலகணங்கள் உறைந்தவளாக அமர்ந்திருந்தாள். பின் மெல்ல கலைந்து “அவ்வளவுதானே? அரசு இளவரசருக்கு. நான் முடிசூடமுடியாது. வேறென்ன?” என்றாள். “இல்லை, அரசி. அரசர் முற்றாகவே தோற்றிருக்கிறார்” என்றார் கருணாகரர். அவள் “முற்றாக என்றால்?” என்றாள். “முழுமுற்றாக. அரசரென்றும் நிஷதக்குடிமகன் என்றும் அவர் கொண்டுள்ள அனைத்தையும் துறந்திருக்கிறார்” என்றார் கருணாகரர்.

தமயந்தி அதை முழுக்க புரிந்துகொள்ளாததுபோலத் தோன்றியது. அவள் விழிகள் வெறுமையாக இருந்தன. கருணாகரர் “அரசி, இந்த ஆட்டத்தை முழுமையாகவே ரிஷபன் வழிநடத்தியிருக்கிறான். முதலில் நிஷதகுடியின் முடியுரிமையை வைத்து ஆடுவதாகவே இருந்தது. நாற்களம் முன் அமர்ந்த பின்னர் ரிஷபன் புஷ்கரர் தன் முடியுரிமையுடன் குடியுரிமையையும் வைத்து ஆடுவதாக அறிவித்தான். அரசர் என்ன எண்ணினாரென்று தெரியவில்லை. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.” தமயந்தி அதே நோக்குடன் இருந்தாள். “அவருக்கும் வேறுவழியில்லை. அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டிருந்தன போலும். அவையில் அமர்வது வரைதான் அவர் முடிவெடுக்கமுடியும்” என்றார் கருணாகரர்.

“முழுக்கத் தோற்பது என்றால்?” என்றாள் தமயந்தி. அதுவரை சொல்லப்பட்டவை அவள் உள்ளத்திற்குள் செல்லவில்லை என்று தோன்றியது. “அவருடைய அனைத்து உடைமைகளும் உரிமைகளும் இல்லாமலாகும்” என்றார் கருணாகரர். “அவருக்கு நிஷதகுடியின் ஆதரவோ அரசுகளின் காப்போ இனி இல்லை.” தமயந்தி பொருளில்லாமல் தலையசைத்தாள். அவள் தான் சொல்வதை புரிந்துகொண்டிருக்கிறாளா என்று ஐயம் கொண்ட கருணாகரர் “அரசி, நிஷதபுரியில் உங்களை அரசி என நிலைநிறுத்தியது பேரரசர் நளன் கொண்ட உரிமைகளே. அவையனைத்தும் இல்லாமலாகிவிட்டன” என்றார்.

அவள் தொடப்பட்ட நீர்ப்பாவை என அலைவுகொண்டு விழித்து “இனி நான் அரசி அல்ல, அல்லவா?” என்றாள். “ஆம்” என்றார் கருணாகரர். “பேரரசர் அரசிழக்கையிலேயே நீங்களும் அதை இழந்துவிடுகிறீர்கள். அவர் நிஷதர் என்னும் நிலையை இழக்கிறார். குடியிழந்தவர்கள் நான்கு வர்ணங்களிலிருந்தும் விலகி ஐந்தாவது நிலைக்கு சென்று சேர்கிறார்கள்.” அவள் அப்போதுதான் சினம்கொண்டாள். முகம் சிவக்க மூச்சு ஒலிக்க “இது எந்த நூல்நெறி?” என்றாள். “குடியுரிமையை எவரும் வைத்தாடுவதில்லை, அரசி” என்றார் கருணாகரர்.

“ஆனால் உங்கள் குடியுரிமையை நீங்கள் மீட்டுக்கொள்ளலாம்” என்று கருணாகரர் சொன்னார். “நளமன்னருக்குத் துணைவியாக நீங்கள் இருக்கும் வரை நீங்களும் உங்கள் மைந்தரும் ஐந்தாம் வர்ணத்தவரே. அந்த உறவை நீங்கள் வெட்டிக்கொள்ளலாம். மங்கலநாணையும் கணையாழியையும் கழற்றிவிட்டு அனல்சான்றாக்கி சான்றோர் எழுவர் முன் அந்தணர் வேதம் சொல்ல ஒழிந்தது உறவு என்றீர்கள் என்றால் நீங்கள் விதர்ப்ப அரசரின் மகளாக மீண்டுசெல்ல முடியும். இளவரசியென்றாக முடியும். ஷத்ரியகுடியினருக்கு மணவிலக்கும் மறுமணமும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று அறிவீர்கள்.”

“அம்முடிவை நான் எடுப்பேன் என நினைக்கிறீர்களா?” என்றாள் தமயந்தி. “அரசி, அம்முடிவை நீங்கள் எடுக்காவிட்டால் அனைத்து இழிவுகளுக்கும் ஆளாக நேரிடும். வர்ணமற்றவர் விலங்குகளைப்போல. ஆற்றலுள்ளோர் எவரும் அடிமைகொள்ளலாம். உடைமையென வைத்திருக்கலாம், விலைகூறி விற்கலாம். எவ்வகையிலும் தண்டிக்கலாம், கொல்லலாம். அவர்களுக்கு எவ்வகையான குடியுரிமைகளும் இல்லை. உடைமையுரிமையும் வாழ்வுரிமையும்கூட இல்லை.” தமயந்தி ஆம் என்று தலையசைத்தாள்.

“வேண்டுமென்றே உங்களை சிறுமைசெய்ய புஷ்கரர் தயங்கமாட்டார். அவர் ஒழிந்தாலும் நம் பகையரசர்களும் அவர்களின் ஒற்றர்களும் உறுதியாக அதற்கு முன்வருவார்கள். அறிந்தே நம்மை நாம் இழிநரகத்திற்கு இட்டெறிவது அது. வேண்டியதில்லை… இது ஓர் அரசியல்சூழ்ச்சி என்றே இருக்கட்டும். இன்று இது அறப்பிழையெனப் படலாம். அலர் சில எழலாம். நாம் ஒருநாள் வெல்வோம். அதன்பின் இதற்குரிய நெறிநிலைகளை சொல்லி நிறுத்துவோம்” என்றார் கருணாகரர்.

அவர் முகம் மலர்ந்தது, குரல் வலுக்கொண்டது. “இங்கு வருகையிலேயே இதைத்தான் எண்ணிக்கொண்டு வந்தேன். ஒன்றும் தட்டுப்படவில்லை. பேசிவந்தபோது அறியாது இந்த வழி திறந்துகொண்டது. இவ்வெண்ணம் தோன்றியது தெய்வச்செயலே.” அவர் மேலும் ஊக்கம் கொண்டு “ஒன்று செய்யலாம். அரசரை நீங்கள் மணவிலக்கு செய்த மறுகணமே நீங்கள் விதர்ப்ப இளவரசி ஆகிறீர்கள். இங்குள்ள விதர்ப்ப வீரர்கள் உங்கள் கணையாழிக்கு கட்டுப்பட்டாகவேண்டும். அவர்களிடம் அரசரை அடிமையென பிடிக்கச் சொல்லுங்கள். உங்கள் அரசுக்குறி ஒன்றை அவர் கழுத்தில் அணிவியுங்கள். அக்கணமே அவர் உங்களுக்கு அடிமைப்பொருளென்றாவார். அதன்பின் பிறர் அவரை அடிமைகொள்ள வேண்டுமென்றால் உங்களிடம் பொருதியாகவேண்டும். அரசருக்கும் அதுவே காப்பு.”

அவர் மேலும் உளவிரைவு கொண்டு எழுந்து கைகளை விரித்து “வர்ணமில்லாதவர்களை நான்காம் வர்ணத்தவர் பெண்கொடுத்தோ உடன்பிறப்பென குருதிச்சடங்கு ஆற்றியோ தங்கள் குடிக்குள் எடுத்துக்கொள்ளலாம். அவரை விதர்ப்பத்துக்கு கொண்டுசென்று அங்குள்ள குடிகள் ஒன்றில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் அங்கே படைத்தலைமை கொள்ளமுடியும். ஒருநாள் படையுடன் வந்து இந்திரபுரியை வென்று மீண்டும் முடிசூடிக்கொள்ளவும் முடியும்… ஆம் இளவரசி, இது ஒன்றே வழி” என்று கூவினார்.

தமயந்தி “கருணாகரரே, அமைச்சர்கள் அரசனுக்கு நல்லாசிரியர்களும் வைதிகர்களும் ஆவர் என்பது தொல்நெறி. ஆசிரியராக நான் உங்களிடம் கேட்பது இது. ஒரு மனைவி எதன்பொருட்டு கணவனை உதறிச்செல்லலாம்?” கருணாகரர் “நான்…” என்று குரல்தடுமாறினார். “நான் அரசியலுரைக்கும் ஸ்மிருதிகளை கேட்கவில்லை, அதை நானே கற்றுள்ளேன். வேதம்திகழும் நாகொண்ட அந்தணர் உரைக்கவேண்டியது அழியா ஸ்ருதிகளின் சொல்லை” என்றாள் தமயந்தி.

கருணாகரர் விழிமூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். நெற்றியில் நரம்புகள் புடைத்து அசைந்தன. விழிதிறவாமலேயே எவருடனோ என மெல்லியகுரலில் சொன்னார் “தொல்நெறிகளின்படி வேதம்பழித்தல், மைந்தர்க்கு ஊறுசெய்தல், நீத்தாரைக் கைவிடுதல், மூத்தார் சொல்மீறல், குடிப்பழி கொள்ளுதல், அரசவஞ்சம் இழைத்தல், தன் கற்பை சான்றோரவையில் இகழ்தல் என்னும் ஏழு செயல்களின் பொருட்டு துணைவி கணவனை கைவிடலாம். அவற்றின் முதன்மை வரிசையும் அவ்வாறே. அவ்வாறு கைவிட்ட மனைவி இல்லப்பழி கொண்டவள் ஆகமாட்டாள். அவள் அவனில் பெற்ற மைந்தர் இயல்பாக அவனுக்கு நீர்க்கடன் கொண்டவர்கள். அவள் விழைந்தால் அதையும் மறுக்கலாம்” என்றார்.

“ஆனால் எதன்பொருட்டும் கணவனை கைவிடாதவளே கற்பரசி எனப்படுவாள்” என்றார் கருணாகரர். “தெய்வங்களே அஞ்சும் பெரும்பழி சூடியவன் ஆயினும் கணவனுடன் இருந்து அவனைக் காப்பதன் பொருட்டு அப்பெண் அத்தெய்வங்களாலேயே தூயோள் என வணங்கப்படுவாள். அவளுக்கு எப்பழியும் சூழாது. அவள் அவனுக்கு அன்னையென்றே அமையக் கடன்கொண்டவள். அன்னை மைந்தனை கைவிடும் தருணம் ஒன்றை தெய்வங்கள் படைக்கவில்லை.”

“அறிக, தெய்வமெழுந்து வந்து பலிகொண்ட அரக்கர்களும் அசுரர்களும் இறுதிக்கணம் வரை உடனிருந்த மனையாட்டியரையே கொண்டிருந்தனர். மண்டோதரி சீதைக்கு நிகரானவள் என்கின்றன தொல்கதைகள்… பெரும்பழிகொண்ட கணவர்களைக் கொன்ற தெய்வங்கள் அவர்களை வணங்கி விண்ணேற்றிக்கொண்டன” என்றார் கருணாகரர்.

“ஏனென்றால் மண்ணில் எந்த மானுடனும் முற்றிலும் துணையற்றவனாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணினர் மூதாதையர். பெண்ணுக்கு அவள் கருவிலெழும் மைந்தரின் துணை என்றும் உண்டு. தான் அளித்த முலைப்பாலாலேயே அவள் மண்ணில் வேர்கொள்வாள். நீத்தபின் விண்ணில் இடம் பெறுவாள். ஆணுக்கு பெண் இல்லையேல் இப்புவியில் ஏதுமில்லை, விண்ணேறும் வழிகளுமில்லை.”

கருணாகரர் கைகூப்பியபடி கண்விழித்தார். “அறம் இது. நாமறியாத வழிகொண்டது அது. அறிந்த முன்னோரின் சொற்களைப் பணிந்து ஒழுகினாலொழிய நாம் அறியவும் இயலாதது. முற்றறிய முழுதும் துறந்தவர்க்கே இயலும்” என்றார். “பெரும்பாவிகளிடமும் கருணைகொண்டு நெறிகளை அமைத்தவர்களின் உளவிரிவை எண்ணும்போது தந்தையரே, தெய்வங்களே, இப்புவியில்தான் நீங்கள் பிறந்தீர்களா, இங்குதான் எளியேனும் வாழ்கிறேனா என நான் விழிநீர் உகுத்ததுண்டு. சென்றவர்களின் அடிகளை இத்தருணத்தில் சென்னி சூடுகிறேன்.”

தமயந்தி “நான் செய்யவேண்டியதென்ன என்று சொல்லிவிட்டீர், கருணாகரரே” என்றாள். “வேள்விச்சாலைக்குச் சென்று செய்தியைச் சொல்லி வேள்வி நிறுத்தத்தை அறிவியுங்கள். அவை கூட்டி அனைத்தையும் விளக்குங்கள். அரசர் எப்போது இங்கு வருகிறார்?” கருணாகரர் விழிகளைத் தாழ்த்தி “கிளம்பிவிட்டனர். நாளைமறுநாள் புலர்காலையில்” என்றார். தமயந்தி தலையசைத்தபின் எழுந்து கொண்டாள். இயல்பாக தன் ஆடையை அள்ளி சீரமைத்து குழல்நீவி அமைத்தபின் உள்ளறைநோக்கி  சென்றாள்.

தொடர்புடைய பதிவுகள்

ASYMPTOTE பரிசு -கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

பெரியம்மாவின் சொற்கள் சிறுகதை மொழியாக்கம் பெற்ற ASYMPTOTE  இலக்கிய இதழ் விருதினை பற்றி உங்கள் தளத்தில் அறிந்தேன்.

திரைப்படம் எடுப்பது தொடர்பான திரைப்படங்கள் பல உண்டு. எழுத்தாளர் கதை எழுதுவது பற்றிய கதைகளும் உண்டு. பெரியம்மாவின் சொற்கள் போன்ற மொழியாக்கம் பற்றிய கதை வேறு எங்கும் வாசித்ததில்லை. சுசித்ராவால் இந்த தனித்துவமான கதையை மொழியாக்கம் எப்படி செய்ய முடிந்தது என எண்ண ஆச்சரியமாக இருந்தது.
விருது பற்றிய David Bellos ன் குறிப்பு என்னைப் போன்ற மொழியாக்கம் செய்பவர்களுக்கு, உற்சாகமூட்டுவதாக இருந்தது.

எங்கள் மதுரை பெண் சுசித்ராவிற்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  உங்களுக்கு என் வணக்கங்கள்.

 

உங்கள் வாசகன்,

சிவமணியன்

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

இன்றைய நாள் இனிதாக மலர்த்திருக்கிறது!.’Asymptote’ சர்வேதேசநாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் உங்கள் கதைக்கு முதல் பரிசு கிடைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி! மற்றும் வாழ்த்துக்கள்!.இக்கதையை பரிசுக்கு தேர்ந்து எடுத்தது பற்றி David Bellos அவர்கள் … இரண்டாவது பரிசுக்கு தகுதியுடைய போட்டியாளர்கள் பலர் இருந்தாலும் முதல் பரிசுக்கு தகுதியுடையது தங்கள் கதை மட்டும்தான் என்பதில் தனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் இது அழகான  அசாதாரணமான  கதை   என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்!. இந்நிலையில் இந்த வித்தியாசமான கதையை சிறப்பாக மொழியாக்கம் செய்து பரிசு பெற காரணமாக இருந்த தங்கள் வாசகியும்,நண்பருமான சுசித்திரா ராமச்சந்திரன் அவர்களும் பாராட்டுதலுக்குரியவர் என்று கருதுகிறேன்.

 

அன்புடன்,

 

அ .சேஷகிரி.

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். இன்று காலையில் உங்கள் இணையதளத்தில் ‘பெரியம்மாவின் சொற்கள்’ கதைக்கு தைவான் நாட்டிலிருந்து Asymptote-‍ன்சர்வதேச இலக்கிய பரிசு கிடைத்திருக்கிறது என்பதை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதற்கு இரண்டுகாரணங்கள் ஒன்று உங்கள் கதைக்கு கிடைத்த பரிசு. இரண்டாவதாக நான் தற்பொழுது வாழ்கின்ற தைவான் நாட்டில் இருந்து என்பது கூடுதல் மகிழ்வு. ‘பெரியம்மாவின் சொற்கள்’ உங்கள் இணையதளத்தில் வந்த அன்றே படித்திருந்தாலும் இன்று மீண்டும்ஒருமுறை படிக்கும் போது என் அம்மவும் மகனும் எப்படிபேசிக்கொள்கிறார்கள் என்பது கண் முன் காட்சியாகவந்து சென்றது.

“You is Bond”

சர்வதேச இலக்கிய பரிசு பெற்ற உங்களுக்கு தைவான்நாட்டிலிருந்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
சு. பொன்முகுந்தன்.
தைவான்

 

அன்பின் ஜெமோ,
வணக்கம்.நலமா?நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன்.
பெரியம்மாவின் சொற்கள் “சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள்.எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை,எனவே மகிழ்ச்சியாக உள்ளது.
இச்சிறுகதை வெளிவந்த போதே இதைப்பற்றி எழுதியிருந்தேன்.மீண்டும் இன்று வாசித்தபோதும் அதே உணர்வு தான்.சொற்களின் மீது கட்டப்பட்ட உணர்வுகள்.சொற்கள் தீர்ந்துவிட்டால் இலக்கியமும்,இயக்கங்களும் நின்று விடும்.
ஆங்கில மொழிபெயர்ப்பில் சிறுகதை சரியான உச்சத்தை அடைந்திருக்கிறது.மீண்டும் மீண்டும் kind,mercy, mango,kuddai…என்றெல்லாம் சொற்கள் என்னைச்  சூழ்ந்திருக்கின்றன.சிறந்த இக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் மனதிற்கு நிறைவைத் தருகிறது.

 

அன்புடன்
மோனிகா மாறன்.

 

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு
டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்

 ஒரு சிறு வாழ்த்து

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ரஹ்மான்,மொழிப்பூசல்

$
0
0

rahman_2633264f

 

அன்புள்ள ஜெ

 

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் இந்திக்காரர்கள் தமிழ்ப்பாட்டு பாடியபோது எதிர்ப்பு தெரிவித்து எழுந்துசென்ற மொழிவெறியை எப்படிப்பார்க்கிறீர்கள்? இதைக்கண்டித்து மொழிவெறிக்கு எதிராக நிறையபேர் எழுதிவிட்டார்கள். உங்கள் கருத்து என்ன?

ஆர். மணிமாறன்

 

அன்புள்ள மணிமாறன்,

பொதுவாக இசைநிகழ்ச்சிகளில் ஒன்றை கவனித்திருக்கிறேன், ஏற்கனவே தெரிந்த பாடல்களைத்தான் சாமானியர்களால் ரசிக்கமுடியும். என்னையும் சேர்த்தே சொல்கிறேன். அந்தப்பாடல்கள் சினிமாக்காட்சிகளுடன் இணைந்து, நடிகர்களுடன் இணைந்து, வாழ்க்கையில் அப்பாடல் ஒலித்த பல தருணங்களுடன் இணைந்து நினைவில் எழுவதையே அவர்கள் ரசிக்கிறார்கள். இசையை மட்டுமே ரசிப்பவர்கள் நூற்றில் ஒருவரே.

 

சாமானியர்களைப்பொறுத்தவரை சினிமாப்பாடல் என்பது ஒருவகையில் நினைவைக்கொண்டாடுவதும் ஒருவகையான கூட்டுக்களியாட்டமும் மட்டுமே. அவர்களுக்குபெரிய அளவில் இசையனுபவமெல்லாம் அதில் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஏறத்தாழ எல்லாருமே அப்படிப்பட்டவர்களாகவே இருப்பார்கள். பெரிய அளவில் கட்டணமும் செலுத்தியிருப்பார்கள். தெரியாத பாடல், அது எத்தனை மகத்தானதாக இருந்தாலும், அவர்களுக்குச் சென்றுசேராது. கொடுத்தகாசுக்கு முதலாகவில்லை என்ற நுகர்வோர் மனநிலையே எரிச்சலாக வெளிப்படுகிறது. பாமரர்கள் எங்கும் ஒரேமாதிரித்தான் நடந்துகொள்கிறார்கள்..

 

இம்மாதிரி ஏதாவது ஒரு பரபரப்பான செய்தியை பிடித்துக்கொண்டு தங்கள் வழக்கமான அரசியல் திட்டங்களை சிலர் பேச ஆரம்பிப்பதும் எப்போதும் நடப்பதுதான். பக்தர்களுக்கு எங்கும் பெருமாளே தெரிவதுபோல. உலகநிகழ்ச்சிகள் அனைத்தும் இவர்களின் அரசியலை நிரூபிப்பதற்காகவே நடக்கின்றன இவர்களுக்கு.இது மொழிவெறியுடன் மொழிவெறியைக் கண்டித்தல், அவ்வளவுதான்

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவை புத்தகக் கண்காட்சி,விருதுவழங்கும் விழா

$
0
0

1

இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். ரயிலில் மேல் படுக்கையில் டிஷர்ட்டில் பணத்தையெல்லாம் வைத்துக்கொண்டு அசந்து தூங்கி அதில் பலவகையில் உருண்டு புரண்டு காலையில் எழுந்து தொற்றி இறங்கி போர்வையை இழுத்தால் கீழே இருந்த கவுண்டர் மீது ரூபாய் நோட்டுகள் கொட்டின. “ஏனுங் பணமழையா கொட்டுதுங்?” என்றார். அவரே பொறுக்கி என்னிடம் அளித்து “மேலே இன்னும் பணம் காய்ச்சிருக்குங்களா?” என்றார்

 

வரவேற்க புத்தகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜனும் நண்பர்கள் கதிர்முருகனும் விஜய் சூரியனும் வந்திருந்தார்கள். அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்தேன். ஒரு சின்ன கட்டுரை எழுதினேன். அதற்குள் நண்பர்கள் வந்துவிட்டனர். டைனமிக் நடராஜன் காரில் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன்.

2

இயககோ சுப்ரமணியம் அறிவிக்கை வழங்குகிறார்

 

புத்தகக்கண்காட்சி என்றாலே என்னை விலகச்செய்யும் அம்சம் புழுக்கம், மூச்சுத்திணறல். நெரிசலும் சேர்ந்தால் அது பெரிய அவஸ்தை. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்று பல ஆண்டுகளாகின்றன. கொடிஷியா புத்தகக் கண்காட்சி அரங்கு மிகப்பெரியது. உயரமான கூரை. ஆகவே உள்ளே குளிர்த்தென்றல் வீசியது. விரிவான அரங்குகள். வசந்தகுமாரைப் பார்த்தேன். உற்சாகமாக இருந்தது நெடுநாட்களுக்குப்பின் அவரைப் பார்த்தது

 

நேஷனல் புக்டிரஸ்டின் தலைவர் பல்தேவ் பாய் சர்மா வந்து சேர்ந்தபின் புத்தகக் கண்காட்சியை அவர் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். அதற்குள் அங்கே விற்பனை நடந்துகொண்டிருந்தது. என் நூல்களுக்கு மட்டுமான அரங்கை நாஞ்சில்நாடன் திறந்துவைத்தார். புவியரசுவைச் சந்தித்தேன்.நண்பர்கள் சு.வேணுகோபால், மரபின்மைந்தன் முத்தையா போன்றவர்கள் வந்திருந்தனர்

a

நாஞ்சில்நாடன் ஜெயமோகன் நூல்களுக்கான தனிஅரங்கைத் திறந்துவைக்கிறார்

 

ஆறுமணிக்கு தொடக்க விழா. எனக்கு இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருது அளித்தனர். கொடிஷியா துணத்தலைவர் ராமமூர்த்தி வரவேற்புரை அளித்தார். புத்தகக் கண்காட்சி அமைப்பாளர் சௌந்தர ராஜன், டாக்டர். ஏ.வி.வரதராஜன் [நிர்வாக இயக்குநர் CIPL] ,டி.பாலசுந்தரம் [தலைவர் கோயம்புத்தூர் கேப்பிடல் ]  காந்தி கண்ணதாசன் ஆகியோர் பேசினார்கள். தொழிலதிபரும் எழுத்தாளருமான இயக்ககோ சுப்ரமணியம் அவர்கள் விருது அறிவிக்கையை வாசித்து அளித்தார்.

 

பல்தேவ் பாய் சர்மா விருதை வழங்கி தலைமையுரை ஆற்றினார். ஆளுயர மலர்மாலை, பொன்னாடை என வழக்கமான மங்கலங்கள். இத்தகைய நிகழ்ச்சிகள் இனிய செயலின்மை ஒன்றை மனதில் நிறைக்கின்றன.

a

டி.பாலசுந்தரம் அவர்களிடம் நான் கோவையின் பெருமைமிக்க அடையாளங்களில் பெரியசாமித் தூரன், ஆர்.ஷண்முகசுந்தரம் போன்ற அறிஞர்கள், படைப்பாளிகள் முக்கியமானவர்கள். அவர்களை முக்கியப்படுத்தவேண்டும் என்று கோரியிருந்தேன். புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு படைக்கப்பட்டுள்ளது. முதல்நாள் பெரியசாமிதூரன் நினைவுக்கு.

 

ஏற்புரையில் நான் பெரியசாமித்தூரன் பற்றிய ஒரு நினைவூட்டலை நிகழ்த்தினேன். பாலசுந்தரம் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழகத்தை மாற்றிய பத்து நூல்கள் என்னும் தலைப்பில் பேசினேன். ஒருவகையில் பத்து நூல்களினூடாக தமிழக வரலாற்றை சுருக்கிச் சொல்லும் ஒரு முயற்சிதான் அது.

PeriasamyThooran

பெரியசாமித் தூரன்

 

கோவை என்றாலே டைனமிக் நடராஜனின் முகமும் நினைவிலெழுகிறது. அவருக்கு நான் எனக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.  விழா முடிந்து அனைவருக்கும் விருந்து. சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தேன். வாழ்நாள் சாதனை செய்து முடித்துவிட்ட நிறைவு. இந்நிறைவை கிழித்து வெளியே சென்றாகவேண்டும்.

b

கொடிஷியா வாழ்த்தறிக்கை

 

நவீனத்தமிழிலக்கியத்தின் ஊற்றுமுகம் புதுமைப்பித்தன் என்றால் பொங்குமாங்கடல் எழுத்தாளர் ஜெயமோகன். வெகுஜன வாசகர்கள் வணிகஇலக்கியங்களை  மட்டுமே வாசித்தும் கொண்டாடியும்  வந்த ஒரு சூழலில்  தனதுபடைப்புகளால்  தமிழ்ச்சமூகத்தை  தீவிரஇலக்கியம்  நோக்கித்திரும்ப வைத்தவர் ஜெயமோகன்.

 

அதிகம் எழுதினால்  படைப்புகள் நீர்த்துப்  போய்விடும் என்றொரு  நம்பிக்கை இலக்கிய உலகில் இருந்தது. அதைப் பொய்யாக்கியவர் ஜெயமோகன்.

 

சிறுகதைகள், நாவல்கள்,  இலக்கிய மதிப்பீடுகள், காவிய மறு உருவாக்கம்,  மொழிபெயர்ப்புகள், கட்டுரைத்தொகுப்புகள்,  பயணநூல்கள்  என  கடந்த முப்பதாண்டுகளாக அடுத்தடுத்து இவரிடமிருந்து  வரும்படைப்புகள் ஒவ்வொன்றும் தன்னளவில் தனிச்சிறப்பும், ஒட்டுமொத்த  தமிழ்ச்சமூகத்தின் அறிவியக்கத்தை ஓரங்குலமெனும் முன்னகர்த்தும் முனைப்பும்கொண்டவை.

 

இவர் தினம்  ஓர்  அத்தியாயம் என எழுதி வரும் மகாபாரத  மீள் உருவாக்க  நாவல்தொடர்  ’வெண்முரசு’ தினமும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்படுகிறது.  தமிழிலும்  மலையாளத்திலும்  தரமான  திரைப்படங்களின் உருவாக்கத்திற்குப்  பங்களிக்கும்  காத்திரமான  திரைக்கதையாசிரியராகத்  தன்னை  முன்னிறுத்திக்கொண்டுள்ளார்.

 

எழுத்தாளன் அச்சுஊடகங்களையோ பதிப்பகங்களையோ அண்டியிருக்கவேண்டும்  என்கிற நிலைமையை  தனது இணையதள எழுத்துக்களின்  வழியே  உடைத்தவர்  இவர். இலக்கியம்,  கலை, வரலாறு,  இந்திய ஞானமரபு,  காந்தியம்,  சூழியல், தத்துவம்  என நெடிய உரையாடல்களை  தன்  தளம்  மூலம்  நிகழ்த்தி  வருபவர். தமிழ்  அறிவியக்கத்தின் ஆகப்பெரிய இணையக் களஞ்சியமாக இவரது  தளம்  திகழ்கிறது.

 

முதிராக் கலை ரசனையும்,  மிகைப் பீற்றல்களும்  கொண்ட  பெருவாரி சமூகத்தை  தன் எழுத்துக்களால்  சீண்டிச் சீண்டி  தொடர் விவாதங்களை  உருவாக்குவதில்  விற்பன்னர்.  தகுதியற்றவர்களால்  விருதுகளும்  அங்கீகாரங்களும்  கைப்பற்றப்பட்டு  வந்த  சூழலில்  தகுதியான  ஆளுமைகள் கொண்டாடப்படவேண்டும்  என்பதில் உறுதியாக நின்று தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் ஆகிருதிகளை  எழுதிஎழுதியே  நிறுவியவர் ஜெயமோகன்.

 

இவர் தோற்றுவித்த விஷ்ணுபுரம்  இலக்கியவட்டம்  தமிழின் முன்னோடிப்  படைப்பாளிகளை அடையாளம் கண்டு கவுரவிக்கிறது.  தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு  இலக்கிய  அமர்வுகளை  ஒருங்கிணைக்கிறார்.  இவரால் துண்டப்பட்டு  இலக்கிய உலகத்திற்குள்  நுழைந்த  ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் தமிழின் அறிவியக்கத்தை  முன்னெடுத்துச்  செல்லும்  ஞான சபையாக உருமாறியுள்ளனர்.

 

தமிழிலக்கியத்தின் தலைமகன்  ஜெயமோகனுக்கு வாழ்நாள்சாதனையாளர்  விருது வழங்குவதில் கொடிசியா  பெருமை கொள்கிறது.

ோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு
கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60

$
0
0

59. அரங்கொழிதல்

flowerதமயந்தியின் அறைக்கதவை மெல்ல தட்டி சேடி “அரசி” என்றாள். அவள் கதவைத் திறந்ததும் “முரசுகள் ஒலிக்கின்றன. அவர்கள் அணுகிவிட்டார்கள்” என்றாள் சேடி. தமயந்தி “கருணாகரர் எங்கிருக்கிறார்?” என்றாள். “அவரும் சிற்றமைச்சர்களும் சிம்மவக்த்ரரும் படைத்தலைவர்களும் அனைவருமே கோட்டைவாயிலுக்கு சென்றுவிட்டார்கள்” என்றாள். தமயந்தி திரும்பி ஆடியில் தன்னை நோக்கியபின் “நான் முகம் கழுவிக்கொள்ளவேண்டும்” என்றாள். அவள் மிக எளிய ஆடையையே அணிந்திருந்தாள். அணிகொள்ளவேண்டுமல்லவா என்று நாவிலெழுந்த சொற்களை சேடி விழுங்கிக்கொண்டாள்.

சேடியுடன் சென்று முகம் கழுவி குழல் திருத்தியபின் தமயந்தி தலைமைச்சேடி சுபத்ரையிடம் “இந்திரசேனையை இங்கே வரச்சொல். இளவரசன் அமைச்சருடன் நிற்கவேண்டும் என்று சொல்லிவிடு” என்றாள். சுபத்ரையின் கண்கள் சிவந்திருந்தன. அவள் விழிகொடுக்காமல் “ஆணை” என்றாள். காவல்மாடத்தின் முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அந்த ஓசை அணுகி வருவது போலிருந்தது. தமயந்தி சாளரத்தருகே சென்று வெளியே நோக்கியபடி நின்றாள். முதற்காலை ஒளியில் அரண்மனைமுற்றம் கண்கூசும்படி மின்னியது. கூரைச்சரிவுகள் நீர்ப்படலம்போல ஒளியடித்தன. அவள் பொருளில்லாமல் நோக்கியபடி நின்றாள்.

அகத்தளத்தில் சேடியர் விரைவுகொள்ளும் ஓசைகள் எழுந்தன. அழைப்புகள், ஆணைகள், மந்தணப்பேச்சுக்கள், காலடிகள், வளையொலிகள், உடைச்சரசரப்புகள். எவரோ “வந்துவிட்டார்களடி” என்றனர். “பேசாதே… அரசி” என்றது இன்னொரு குரல். அவர்கள் எவரும் துயருறுவதாகத் தெரியவில்லை. துயரை வெளிக்காட்ட வேண்டுமென்ற கட்டாயம்கூட முதுசேடியருக்கே இருந்தது. இளையோர் ஓசையை தாழ்த்திக்கொண்டாலும் கண்களில் ஆவலும் குறுகுறுப்பும்தான் தெரிந்தன. அவர்கள் எதையோ அடக்கிக்கொண்டதுபோல தோள்கள் இறுகி உடல் குறுகியிருக்க சிற்றடி வைத்து நடந்தார்கள்.

அவர்கள் எதிர்பாராத ஒரு நிகழ்வு, அது அளிக்கும் பரபரப்பின் உவகை என்றுதான் முதலில் தோன்றியது. மாறாதது என அவர்கள் எண்ணும் ஒன்று தலைகீழாக மாறுவது அவர்களுக்குள் எப்போதுமிருக்கும் ஆழத்துக் கனவுகளை தூண்டிவிடுகிறதோ? சுபத்ரையிடம் மெல்லிய சிரிப்புடன் அதைப்பற்றி கேட்டாள். “அவர்களுக்குள் வாழும் கீழ்மை வெளிப்படும் தருணம் இது, அரசி” என்றாள் அவள். சிரித்தபடி “அனைவரிடமும்தான் அது உள்ளது” என்றாள் தமயந்தி.

சுபத்ரை சீற்றத்துடன் “கீழ்மைக்கும் எல்லையுண்டு. அவர்கள் உண்பது தாங்கள் அளித்த அன்னம். இங்கே உங்கள் முன் கண்கள் நீரோட நன்றி சொல்லி விதும்பாத எவருள்ளனர் இந்த அகத்தளத்தில்? உங்களை கண்முன் எழுந்த கொற்றவை என ஒருமுறையேனும் சொல்லி வணங்காதவர் உண்டா என்ன?” என்றாள். “ஆனால் இன்று மறுநிலை கொண்டுவிட்டனர். அவர்கள் குளக்கரையில் பேசுவதை நான் கேட்டேன். தூண்மறைவில் நான் நின்றமையால் என்னை அவர்கள் காணவில்லை. அனைவரும் இளம்சேடிகள்.”

“பேரரசி ஐந்தாம்வர்ணத்தவள் ஆனால் என்ன வேலை பார்ப்பாள் என்று ஒருத்தி கேட்டாள். கன்றுத்தொழு கூட்டலாம். சாணிபொறுக்கி உலரவைத்து எரிவட்டு செய்யலாம் என்றாள் இன்னொருத்தி. அதைவிட தோலுரித்து பதப்படுத்தலாமே என்றாள் அப்பால் ஒருத்தி. அரசிக்கு அதெல்லாம் தெரியுமா என இளையவள் ஒருத்தி கேட்டாள். என்னடி சொல்கிறாய், அவர்கள் யார்? சத்ராஜித் அல்லவா? அவர்களுக்குத் தெரியாத ஒன்று உண்டா என்றாள் இன்னொருத்தி. அனைவரும் சேர்ந்து நகைத்தனர். ஏன் நகைக்கிறார்கள் என்று பிறர் கேட்டுக் கேட்டு அவர்களும் நகைத்தனர்.”

“அங்கே நின்றிருந்த என் உடல் பற்றி எரிந்தது. என்னை அவர்கள் காணவில்லை. அப்படியே திரும்பி வந்துவிட்டேன். இந்த அரண்மனையில் பெண்டிரின் உணர்வுகள் இவைதான், அரசி” என்றாள் சுபத்திரை. “தாங்கள் சத்ராஜித் ஆனதற்காக எவரெல்லாம் பொறாமை கொண்டிருக்கக்கூடும் என எண்ணுகிறீர்கள்? மகதனும் அங்கனும் வங்கனும் மாளவனும் மட்டுமா? அல்ல அரசி, அதற்கிணையாகவே இங்கே அடுமனையில் கலம் கழுவும் சூதப்பெண்ணும் பொறாமை கொண்டிருக்கிறாள். மானுட உள்ளத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”

தமயந்தி “உள்ளூர எவர் எங்கிருக்கிறார் என நாம் எப்படி அறிவோம்?” என்று புன்னகை செய்தாள். “நான் தங்கள் முடிவை உசாவும் தகுதிகொண்டவள் அல்ல, அரசி. ஆனால் இவர்கள்முன் இப்படி இழிவுகொள்ளத்தான் வேண்டுமா என்றே என் உள்ளம் சொல்கிறது. விதர்ப்பத்தின் இளவரசியென நீங்கள் தலைநிமிர்ந்து தேரேறிச் சென்றிருந்தீர்கள் என்றால் நான் என் தெய்வங்கள் முன் சென்று விழுந்து தலையறைந்து நன்றி சொல்லியிருப்பேன்.”

தமயந்தி “இவை ஊழ் என்றால் அதனுடன் போரிடாமலிருப்பதே மேல்” என்றாள். “இவர்களுக்கும் ஒரு தருணத்தை அளிக்கவேண்டுமென்று தெய்வங்கள் எண்ணியிருந்தால் அவ்வாறே ஆகுக” என்றாள். சுபத்ரை பெருமூச்சுவிட்டு “தங்கள் நிலையை ஏன் என் மடிவளர்ந்த இளையோர் அடையவேண்டும்? அவர்கள் செய்த பிழை என்ன?” என்றாள். “தந்தையின் செல்வத்திற்கு உரிமையுள்ள மைந்தர்கள் பழிக்கும் பொறுப்பேற்றாக வேண்டும்” என்றாள் தமயந்தி.

சுபத்ரை திரும்ப வந்தபோது இந்திரசேனை அவளுடனிருந்தாள். அவள் புத்தாடை அணிந்து அணிபுனைந்திருந்தாள். தமயந்தி விழிதூக்க சுபத்ரை “ஆம், நானேதான் அணிபுனையச் செய்தேன். அங்கே குடிகள் முன் என் இளவரசி எளிய பெண்ணாகச் சென்று நிற்கவேண்டியதில்லை. தெய்வங்கள் அவ்வாறு எண்ணுமென்றால் அவ்விழிமகன் என் இளவரசியின் அணிகளை களையட்டும்” என்றாள்.

தமயந்தி மகளின் தலையைத் தொட்டு அருகழைத்து அணைத்துக்கொண்டாள். “இன்று என்ன நிகழவிருக்கிறது என்று அறிவாயா?” என்றாள். “ஆம்” என்று அவள் சொன்னாள். “அதில் உனக்கு துயர் உள்ளதா?” என்றாள். “ஆம், எனக்காக அல்ல. தந்தையின்பொருட்டு” என்று அவள் சொன்னாள். “இது அவர் ஆடிய ஆட்டத்தின் விளைவால் அல்லவா?” என்றாள் தமயந்தி. “அன்னையே, இதையே ஒரு சேடியும் என்னிடம் சொன்னாள். இந்த அரசும் அரண்மனையும்கூட அவர் ஆடிய ஆட்டத்தின் பெறுபயன்களே என்று நான் சொன்னேன்.” தமயந்தி முகம் மலர்ந்து “நன்று” என்றாள். சுபத்ரை “அவர்கள் சத்ராஜித் என அவையமர்ந்த அரசி தமயந்தியின் குருதி, பேரரசி. அதற்குரிய எண்ணமும் சொல்லுமே எழும்” என்றாள்.

flowerமுரசுகள் அரண்மனை வாயிலில் ஒலித்தன. தமயந்தி வெளியே எட்டிப்பார்த்தாள். காகக்கொடி பறக்க ஒரு தேர் முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து அணிச்சேடியர் ஏறிய திறந்த தேர் வந்தது. தொடர்ந்து மங்கல இசை எழுப்பியபடி சூதர் செறிந்த தேர். கவச உடையணிந்த வீரர்கள் ஏறிய காவல்புரவிகளின் நிரைக்குப்பின் புஷ்கரனின் அரசத்தேர் வந்தது. வாழ்த்தொலிகள் ஏதும் எழவில்லை. முரசொலி அடங்கியதும் சகட ஓசையும் குளம்போசைகளும் மட்டும் கேட்டன.

புஷ்கரனின் தேர் நின்றதும் காவலர் ஓடிச்சென்று படியை எடுத்து கீழே வைத்தார்கள். அவன் இறங்கியபோது அவனுடன் வந்த வீரர்கள் மட்டும் வாழ்த்தொலி எழுப்பினர். அரண்மனை முற்றத்தைச் சூழ்ந்து நின்றிருந்த இந்திரபுரியின் காவலர்கள் விழிகள் திறந்திருக்க அசையாமல் நின்றனர்.

“எவரும் வாழ்த்தொலிக்கவில்லை” என்றாள் சுபத்ரை. தமயந்தி புன்னகைத்து “விஜயபுரியில் சூதில் பேரரசர் தோற்றுக்கொண்டிருந்தபோது வெளியே ஒவ்வொரு காய்நகர்த்தலுக்கும் நகர்மக்கள் உவகைக்கூச்சலிட்டு நடனமிட்டனர். அவர் முற்றிலும் தோற்றபோது அந்நகரமே கொந்தளித்துக்கொண்டிருந்தது. இன்றும் அவர்கள் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள். சுபத்ரை “ஆனால்…” என்று சொல்ல அவள் மேலும் புன்னகைத்து “அவர்களே இங்குள்ள குடிகளும்” என்றாள்.

புஷ்கரன் இடையில் கைவைத்து நின்று சுற்றிலும் நோக்கியபின் கையசைத்தான். அவனைத் தொடர்ந்து வந்த மூடுதிரையிட்ட தேர் முற்றத்தில் ஏறி நின்றது. அதிலிருந்து நளன் இறங்கினான். எளிய வெண்ணிற ஒற்றையாடை மட்டும் அணிந்திருந்தான். கண்கள் ஒளிக்குக் கூச சற்றே தலைகுனிந்து நின்றான். கூடிநின்ற வீரர்களிடமிருந்து எழுந்த மெல்லிய பேச்சொலியின் கார்வை தவிர வேறெந்த குரலும் எழவில்லை. தொடர்ந்து வந்த தேர்களில் இருந்து கருணாகரரும் பிறரும் இறங்கி நின்றார்கள்.

தமயந்தி “அவன் அரண்மனை முற்றத்தை அரங்கென்று ஆக்க விழைகிறான்” என்றாள். சுபத்ரை அவளை திகைப்புடன் நோக்கினாள். மூடுதிரைத் தேர் ஒன்று வந்து சற்று வளைந்து அப்பால் நின்றது. அதை நோக்கி இரு வீரர் ஓடி படியமைக்க உள்ளிருந்து திரைவிலக்கி வெளியே வந்த மாலினிதேவி அவளை வாழ்த்தி குரல்கள் எழுப்பப்படும் என எண்ணியவள்போல சூழ நோக்கினாள். அங்கிருந்த அமைதியை அப்போதுதான் முழுதுணர்ந்து கைகளைக் கட்டியபடி விலகி நின்றாள். புஷ்கரனின் சிற்றமைச்சர் ஒருவர் பணிந்து ஏதோ சொல்ல கையசைத்து அவர் விலகிச்செல்ல ஆணையிட்டாள்.

தொடர்ந்து தேர்கள் வந்துகொண்டிருந்தன. சுநீதரும் ரிஷபனும் தேர்களில் இருந்து இறங்கி புஷ்கரன் அருகே வந்து சற்று விலகி நின்றனர். அவை ஒருங்குவதை தமயந்தி நோக்கி நின்றாள். அந்த இடத்தில் அது நிகழவேண்டுமென்ற திட்டம் எவருடையது? புன்னகையுடன் கைகட்டி நின்றிருக்கும் மாலினியிடமே முதல் விழி சென்றது. ஆனால் புஷ்கரனின் அருகே சற்று உடல் வளைத்து நின்றிருக்கும் ரிஷபனே அனைத்துக்கும் அடிப்படை என அரசுசூழ்தலறிந்தவர் உய்த்துவிட முடியும். அவன் நின்றிருப்பதிலேயே ஒரு பிழை இருந்தது. ஒரு கோணல். அவன் கால்கள் ஒன்றைவிட ஒன்று சிறிதாக இருக்கக்கூடும். அவன் உடலின் ஒரு பக்கம் இன்னொன்றைவிட சிறிதாக இருக்கலாம். அவன் உள்ளத்தின் இயல்பே உடலில் வெளிப்படக்கூடும்.

ஸ்ரீதரர் மேலேறிவந்து இடைநாழியின் மறுமுனையில் நின்று தலைவணங்கினார். அவள் ஏறிட்டு நோக்க “அரசி, தங்களை அரசர் அழைத்துவரும்படி ஆணையிட்டார்” என்றாள். அவள் எழுந்து இந்திரசேனையின் தலையைத் தொட்டு விழிகளால் வரும்படி சொல்லிவிட்டு முன்னால் சென்றாள். படிகளில் இறங்கி கூடத்தைக் கடந்தபோது அங்கே அரண்மனை ஊழியர்கள் தோள்முட்டிச் செறிந்திருப்பதை கண்டாள். அவர்கள் அமைதியாகப் பிரிந்து வழிவிட்டார்கள். அவள் அதனூடாக கடந்து சென்றபோது மெல்லிய பேச்சொலிகளின் முழக்கம் எழுந்தது.

முற்றத்தில் கண்கூசும் வெயில். அவள் முகத்தைச் சுளித்தபடி படிகளில் இறங்கியபோது அங்கே எழுந்த கலைவோசை முற்றத்தில் நின்று ஆடை சீரமைத்தபோது அவிந்தது. அமைதி எழுந்து சூழ அவள் விழிதூக்கி புஷ்கரனையும் அருகே நின்றிருந்த ரிஷபனையும் பார்த்தாள். புஷ்கரன் அவள் நோக்கை விலக்க ரிஷபன் எந்த உணர்வுமில்லாமல் வெறும் நோக்கை நிறுத்தினான். சுநீதர் கரவுப் புன்னகையுடன் புஷ்கரனிடம் ஏதோ சொன்னார். அவள் நளனை நோக்கினாள். அவன் ஒருகணம் விழிதொட்டபின் தலைகுனிந்தான். அமைச்சர்கள் கைகூப்பியபடி நின்றிருந்தனர். இந்திரசேனனை ஒரு காவலர்தலைவன் அழைத்துவந்து அருகே நிறுத்தியிருந்தான்.

இந்திரசேனை தமயந்தியின் மேலாடையைப் பற்றியபடி அவள் உடலில் பாதி மறைந்து நின்றாள். காலைவெயிலில் அனைவருமே வியர்வை வழிய முகம் சுளிக்க நின்றிருந்தனர். அந்த முகச்சுளிப்பே உள்ளத்தையும் சுளிக்க வைத்து அனைவரையும் எரிச்சல்கொண்டவர்களாக ஆக்கியது. சில சிற்றமைச்சர்களும் ஏவலர்களும் கண்ணீர் வழிய நின்றிருந்தார்கள். அமைதியில் எங்கோ ஒரு கலம் உருளும் ஓசை. ஆடை உரசும் ஒலியுடன் எவரோ அப்பால் நடந்தார்கள்.

“ரிஷபரே, சொல்லும்” என்றான் புஷ்கரன். ரிஷபன் “விதர்ப்ப அரசி, தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றான். தமயந்தி கைநீட்டி இடைமறித்து “நான் அறிந்தது இருக்கட்டும். நீ சொல்லவேண்டியதை முழுமையாக சொல்” என்றாள். அவன் “அவ்வண்ணமே” என எந்த உணர்வுமின்றி சொல்லி “நிஷதகுலத்தின் அரசராக சபரகுடிப் பிறந்த நளன் அமைந்து நாடாண்டது குடித்தலைவர்களின் கோலாணையின்படியே. குடித்தலைவர்கள் சபரனாகிய நளன் மீது மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். நிஷாதர்களின் குலதெய்வமாகிய கலியை இடநீக்கம் செய்து அங்கே அயல்தெய்வமாகிய இந்திரனுக்கு ஆலயம் அமைத்தது முதற்பிழை.”

“அப்பிழை நிகழ்ந்த பின்னர் பதினெட்டுமுறை அக்குடித்தலைவர்கள் பேரரசர் முன் கோல்தாழ்த்தியிருக்கிறார்கள்” என்றாள் தமயந்தி. “நான் சொல்லாடவில்லை, அரசி. நான் எளிய ஊழியன். எனக்கிடப்பட்ட ஆணைப்படி குடித்தலைவர் சொற்களை சொல்லவிருக்கிறேன்” என்றான் ரிஷபன். “நிஷதகுடியின் தலைவராக நளனையே குடித்தலைவர் தேர்ந்தெடுத்தார்கள். அவர் ஷத்ரிய இளவரசியாகிய உங்களை பரிவேள்வி செய்ய வைத்ததும் நீங்கள் நிஷாதநகரியில் சத்ராஜித் என அமைவதும் இரண்டாவது பிழை.”

தமயந்தி “அதை படைமுகத்தில் மட்டுமே சொல்லியிருக்கவேண்டும். புரவியை கடந்துபோக விட்டது அவர்களின் பிழை” என்றாள். அவளை கேட்காதவன்போல ரிஷபன் “மூன்றாவது பெரும்பிழை, காளகக் குடித்தலைவராகிய சீர்ஷரை உணவுக்கூடத்தில் வெட்டி வீழ்த்தியது. அதன்பொருட்டு காளகக்குடி நளன் மீது வஞ்சம் கொண்டுள்ளது” என்றான். தமயந்தி அவனை நோக்கியபடி நின்றாள். “இப்பிழைகளின்பொருட்டு நளன் குடித்தலைவர்களால் தொல்முறைப்படி முடிநீக்க்கம் செய்யப்பட்டார். அவர்கள் கோலேந்தி அவை அமர்ந்து இளையவராகிய புஷ்கரரை அரசர் என தெரிவுசெய்தனர்.”

“ஆகவே இனி காளகக்குடித் தோன்றலும் வீரசேனரின் மைந்தருமாகிய புஷ்கரன்தான் நெறிகளின்படி நிஷாதர்களின் அரசர். அதை முறைப்படி சபரகுலத்து நளனுக்கு தெரிவித்தோம். அதை அவர் ஏற்காமல் முடிதுறக்க மறுத்தமையால் அவரை நிஷத அரசர் புஷ்கரன் போருக்கு அறைகூவினார். குடிப்போரைத் தவிர்க்கவேண்டும் என்று குலமூத்தார் விழைந்தமையால் அது நிகரிப்போராக நடக்கட்டும் என முடிவெடுக்கப்பட்டது. சென்ற சனிக்கிழமை விஜயபுரிநகரில் குலத்தலைவர்களும் குடிகளும் முன்னிலையாக, அனல் சான்றாக நடந்த நாற்களப் போரில் நளன் முழுத்தோல்வி அடைந்தார். தன் முடியுரிமையுடன் குடியுரிமையையும் வைத்து ஆடி இழந்தார்.”

அவன் சொல்லி முடித்ததை இரு நிமித்திகர்கள் ஏற்று கூவினர். அது எதிரொலி என மேலும் மேலும் நிமித்திகர்களால் சொல்லப்பட்டு பரவிச்சென்றது. நகரெங்கும் அச்செய்தி பரவ குடிகள் எழுப்பிய ஓசை முழங்கியது. முரசொலி எழுந்தபோது மீண்டும் அமைதி உருவானது. “முடியுரிமையை இழந்த நளனின் அரசு, அரியணையுரிமைகள், கருவூலம் அனைத்தும் ஒரு பிடி மண்ணோ, ஒரு மணி அரிசியோ, ஒரு கந்தலாடையோ எஞ்சாமல் அரசர் புஷ்கரருக்கு உரிமையானவை என்று அறிக!” என்றான் ரிஷபன்.

உணர்ச்சியற்ற குரலில் அவன் தொடர்ந்தான் “குடியுரிமையை இழந்த நளன் நால்வர்ணத்திற்கும் வெளியே வர்ணமற்றவராக இனி கருதப்படுவார். அவர் மணந்த தேவியும் மைந்தரும் அவரைப்போன்றே வர்ணமற்றவராக ஆவார்கள். அரசர் அரண்மனை புகுந்து நிஷத அரியணையில் அமர்வதற்கு முன் அவர்கள் தங்கள் உரிமைகளை ஒழித்து நீங்கவேண்டும் என்று இதனால் ஆணையிடப்படுகிறது.” தலைவணங்கி அவன் கைகூப்பினான்.

தமயந்தி அங்கே கூடி நின்றவர்களை பார்த்தாள். அனைவரும் உடலில் வலிகொண்டவர்களைப்போன்ற முகத்துடன் மெல்ல அசைந்தனர். சிலர் கைகளையோ மேலாடையையோ கூர்நோக்கி எதையோ சீரமைத்தனர். தமயந்தி “எங்கள் அரசர் அனல் தொட்டு அளித்த ஆணைக்கு முழுக்க கட்டுப்படுகிறோம். கிளம்புகிறோம்” என்றாள். மாலினி அங்கிருந்தே உரக்க “அவ்வண்ணமே கிளம்ப முடியாது, கீழ்மகளே. நீ அணிந்திருக்கும் அணிகள் இவ்வரசுக்குரியவை. அவற்றை கழற்றிவிட்டுச் செல்…” என்றாள். அவள் தன் வஞ்சத்தையும் எக்களிப்பையும் மறைக்கவில்லை.

தமயந்தி “அவ்வாறே, அரசி” என தலைவணங்கினாள். பற்கள் தெரிய நகைத்தபடி “இங்கிருந்து நீ ஆடையெதையும் கொண்டுசெல்லக்கூடாது. அடிமைக்கு நல்லாடையணிய உரிமையில்லை. உனக்கும் மகளுக்கும் மரவுரி அளிக்க ஆணையிடுகிறேன். பத்மை…” என்றாள். மாலினியுடன் வந்த சேடி பத்மை “அரசி” என தலைவணங்க “அவளுக்கு பழைய மரவுரிஆடை ஒன்றை அளி. அவளுடன் சென்று அவளும் அவள் மகளும் இடையிலோ உடற்கரவிலோ எதையேனும் ஒளித்துக்கொண்டு செல்கிறார்களா என்று தேடிப்பார்” என்றாள். பத்மை “ஆணை” என்றாள்.

புஷ்கரன் கைநீட்டி அவளைத் தடுத்து “நளனின் மைந்தனையும் மகளையும் நான் இந்த விலக்கிலிருந்து தவிர்க்கிறேன். இது அரசாணை” என்றான். மாலினி திகைத்து பின் சினம் பற்றிக்கொள்ள “என்ன சொல்கிறீர்கள்?” என்று கைநீட்டிக் கூச்சலிட்டபடி முன்னால் வந்தாள், அவள் இளவரசி என்பதையே மறந்துவிட்டவள்போல. அருகே நின்றிருந்த சேடிப்பெண் “அரசி, இது முற்றம்” என்றதும் அவளை நோக்கித் திரும்பி “போடி” என சீறியபின் “எப்படி அவர்களை நீங்கள் விலக்க முடியும்? எந்த நெறிகளின்படி?” என்றாள்.

கருணாகரர் “அவர்கள் இருவரும் வர்ணமில்லாதவர்கள் ஆவதை எவரும் தடுக்கமுடியாது. ஆனால் அவர்களை அரசர் அடிமைகளாகக் கொள்ளமுடியும். அடிமைகளுக்கு விடுதலை அளிக்கவும் குடியுரிமை கொடுக்கவும் அரசருக்கு உரிமை உண்டு” என்றார். புஷ்கரன் “ஆம், இரு குழந்தைகளையும் நான் அடிமைகளெனக் கொண்டு விடுதலை அளித்துள்ளேன். அவர்களை இங்குள்ள விதர்ப்பநாட்டார் விதர்ப்பத்துக்கு அழைத்துச் செல்லட்டும். இங்கிருந்தே…” என்றான்.

சிம்மவக்த்ரன் தலைவணங்கி “அவ்வாறே” என்றான். “இல்லை, நான் ஒப்பமாட்டேன். அவர்கள் இங்கிருக்கவேண்டும். நம் அடிமைகளாக இருக்கவேண்டும்” என்றாள் மாலினிதேவி. “நாவடக்கு. இல்லையேல் உன் தலையை உருட்டுவேன்” என்றான் புஷ்கரன். அவள் திகைத்துப்போய் ரிஷபனை நோக்க அவன் விழிகளால் ஆணையிட்டான். அவள் பற்களைக் கடித்துக்கொண்டு பின்னடைந்தாள். பின் தரையில் காறித் துப்பினாள்.

புஷ்கரன் “விதர்ப்பநாட்டு அமைச்சர்களும் அரசுப்பணியாளரும் அனைத்துப் படைகளும் குடிகளனைவரும் இப்போதே கிளம்பி நகரிலிருந்து அகல வேண்டும். நாளைமாலை இந்நகருக்குள் இருக்கும் விதர்ப்பர் எவராக இருப்பினும் கொல்லப்படுவார்கள்” என்றான். சிம்மவக்த்ரன் ஒன்றும் சொல்லாமல் வந்து நளனின் அருகே நின்றிருந்த இந்திரசேனனிடம் “விதர்ப்ப இளவரசே, வருக. நம் நாட்டுக்குச் செல்வோம்” என்றான். அவன் திகைத்த விழிகளுடன் நின்றான்.

தமயந்தி “செல்க. அங்கே நற்பொழுதொன்றில் காண்போம்” என்றாள். பின் இந்திரசேனையிடம் “செல்க!” என்று சொல்லி தலையை வருடினாள். சுபத்ரை கண்ணீர் வழிய “சென்றுவருகிறோம், அரசி” என்றாள். “மைந்தரை உன்னிடம் அளிக்கிறேன், சுபத்ரை” என்றாள் தமயந்தி. சுபத்ரை கண்ணீரை வலக்கையால் மறைத்துக்கொண்டு இடக்கையால் இந்திரசேனையை அணைத்து முன்னால் நடந்தாள். சிம்மவக்த்ரன் “வருக, இளவரசே!” என்றபடி இளவரசனின் தோளில் கைவைத்தான். அவன் ஓடிவந்து குனிந்து தமயந்தியின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நலம் சூழ்க!” என அவள் வாழ்த்தினாள்.

இந்திரசேனன் சிம்மவக்த்ரனுடன் பாதிவழி நடந்து பின் நின்று திரும்பி நளனை நோக்கி ஓடினான். அவன் நளனின் கால்களை நோக்கி குனிய அவன் மைந்தனை கைவிரித்து வாரி எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான். முகத்தை தந்தையின் மார்பில் புதைத்து இந்திரசேனன் மெல்ல விசும்பினான். “ஆண்மகன் என்றிரு. எதுவும் முடியவில்லை” என்றான் நளன். அவன் விடுவித்துக்கொண்டு குனிந்து நளனின் கால்களைத் தொட்டு வணங்கியபின் சிம்மவக்த்ரனுடன் சென்றுசேர்ந்துகொண்டான். அவர்களுடன் விதர்ப்ப வீரர்கள் அனைவரும் வாள்களையும் வேல்களையும் தாழ்த்தியவர்களாக சேர்ந்துகொண்டார்கள்.

தமயந்தி அவர்கள் செல்வதை மாற்றமில்லாத முகத்துடன் நோக்கி நின்றாள். பத்மை “வா” என்று அவள் தோளைத் தொட்டாள். அவள் திரும்பி பத்மையுடன் உள்ளே சென்றாள். புஷ்கரன் நளனிடம் “நீ அணிந்திருக்கும் ஆடையும் இவ்வரசுக்குரியது. இங்குள்ள எவரிடமேனும் ஒரு மரவுரியை இரந்து பெற்று அணியலாம்” என்றான். நளன் தலைவணங்கியபின் இரு கைகளையும் விரித்து நீட்டி நின்றான். கருணாகரர் அருகே நின்ற ஒருவனிடமிருந்து மரவுரியை வாங்கியபடி ஓடி அவனருகே சென்றார். பின்னர் தயங்கி சுற்றுமுற்றும் நோக்கி அங்கே நின்ற ஒரு படைவீரனிடம் அளித்து “அவரிடம் கொடு” என்றார்.

அவன் திகைத்து “நானா?” என்றான். “ஆம், அளி” என்றார் கருணாகரர். அவன் இடம்பொருள் புரியாமல் இளித்தபடி “இதோ” என அதை வாங்கி நளனிடம் அளித்தான். நளன் அதை அங்கே நின்றபடியே உடுத்துக்கொண்டான். தன் வெண்ணிற ஆடையைக் கழற்றி மடித்து நிலத்தில் வைத்தான். “பொன்னோ நாணயமோ உன்னிடம் இல்லை அல்லவா?” என்றான் புஷ்கரன். “இல்லை, அரசே” என்றான் நளன். ஒற்றை மரவுரி ஆடை அணிந்து தமயந்தி வெளியே வந்தாள். அவளுக்கு அவ்வாடை பழக்கமில்லாததனால் அதை மார்புடன் இரு கைகளாலும் அள்ளிப் பற்றியிருந்தாள். அவளுடைய குதிகால்கள் வரைதான் அந்த ஆடை இருந்தது.

புஷ்கரன் நளனிடம் “நீங்கள் இருவரும் கிளம்பலாம்… இந்த அரண்மனை வளாகத்திலிருந்து நீ செல்ல நான் ஒப்புகிறேன். அதன்பின் ஆற்றலுள்ள எவரும் உன்னை அடிமைகொள்ளலாம்” என்றான். நளன் தமயந்தியை நோக்க அவள் அவனருகே வந்து நின்றாள். அவன் அவளிடம் தலையசைத்துவிட்டு தலைகுனிந்து நடந்தான். கருணாகரர் கண்ணீருடன் அவர்களைத் தொடர்ந்து சென்றார். அவருக்குப் பின்னால் ஸ்ரீதரரும் நாகசேனரும் சென்றனர். நளன் “அந்தணரே, உங்கள் கடமை அரசுடனோ அரசனிடமோ அல்ல. குடிகளிடமும் அறத்திடமும் வேதத்திடமும்தான். அது இங்கு தொடரட்டும்” என்றான். “ஆம்” என்றார் கருணாகரர். அவர்கள் கைகூப்பியபடி நின்றுவிட்டனர்.

நளன் அரண்மனை முற்றத்தை நடந்து கடப்பதை அனைவரும் ஓசையில்லாமல் நோக்கி நின்றனர். அவர்களின் காலடியோசை மட்டும் ஒலித்தது. மூச்சொலிகள், ஓரிரு தும்மல்கள். புரவி ஒன்று குளம்பு மாற்றியது. ஒருவர் இருமினார். இரு வாள்கள் முட்டிக்கொண்டன. அரண்மனைக்குள் ஒரு கலம் விழுந்து உருண்டது. காலைவெயில் வெம்மைகொண்டிருந்தமையால் அனைவரும் வியர்த்திருந்தனர். சிறுகாற்று வந்து சுழன்றபோது வியர்வை வாடையும் குதிரைச் சிறுநீர் வாடையும் கலந்து வீசியது.

அவர்கள் அரண்மனையின் கோட்டைவாயிலைக் கடந்ததும் பின்னாலிருந்த திரளில் ஒருவன் “சத்ராஜித் வெல்க!” என்று கூவினான். அந்த ஓசையிலிருந்த கேலி அனைவரையும் நகைக்கச் செய்தது. அக்கணம்வரை இருந்த இறுக்கம் அச்சிரிப்பால் அவிழ கூட்டம் உரக்க பேசிச் சிரிக்கத்தொடங்கியது. “அந்த வேள்விப்பரியையும் கூடவே அனுப்புங்கள்” என்று ஒருவன் கூவினான். “விரும்பினால் இந்திரன் சிலையையும் கொண்டுபோகட்டும்” என்றது ஒரு குரல். கூச்சலும் சிரிப்புகளும் எல்லா திசைகளிலிருந்தும் எழுந்தன.

உப்பரிகைகளில் நின்றிருந்த பெண்களில் ஒருத்தி “தொழுவப் பணிக்கு எனக்கு ஒரு விதர்ப்ப அடிமை தேவை” என்றாள். அங்கிருந்த பெண்கள் கூவிச்சிரித்தனர். ஒருத்தி தன் தலையிலிருந்த வாடிய மலர்மாலையை எடுத்து மலர்களை உருவி அவர்கள் மேல் வீசி “அரசி ஊர்வலம்!” என்று சொன்னாள். மற்ற பெண்களும் அதையே செய்யத் தொடங்கினர். பின்னர் கூடிநின்றவர்கள் கையில் அகப்பட்டவற்றை எல்லாம் எடுத்து அவர்கள்மேல் வீசினர். பழைய துணிகள், இலைச்சருகுகள், தோரணங்கள் என அவர்கள்மேல் வந்து விழுந்தபடியே இருந்தன.

நளன் உடல்குவித்து குனிந்து நிலத்தை நோக்கியபடி நடந்தான். தமயந்தி தலைநிமிர்ந்து தன்னைப் பார்த்து இளிநகை புரிந்த கூட்டத்தினரை நேருக்குநேர் நோக்கியபடி உறுதியான காலடிகளுடன் சென்றாள். கூவிச்சிரித்தபடி எதையாவது அவள்மேல் வீச வந்தவர்களில் அவள் விழிகளை சந்தித்தவர்கள் திகைத்து கைதளர பின்வாங்கினர்.

அவர்கள் கோட்டைவாயிலை அடைவதற்குள் நகர்மக்களில் பெரும்பகுதியினர் சாலைமருங்குகளில் கூடிவிட்டனர். கூச்சலும் பழிப்பும் கலந்த முழக்கமாக நகரம் அறைந்துகொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் “சக்ரவர்த்தி, நில்லுங்கள்”, “ஐந்தாம்வர்ண சத்ராஜித் இதோ” என்று கூவியபடி வீணர்கூட்டம் ஒன்று வந்தது. ஒருவன் “தொழுப்பணிக்கு வாடி” என்றான். இன்னொருவன் “தொழுவத்தில் இரவில் குளிருமே” என்றான். “இரவு என் படுக்கையறையில் படுத்துக்கொள்” என்றான் அவன். அவர்கள் கைகளை அறைந்து துள்ளிக்குதித்து சிரித்தனர்.

அங்காடிமுகப்பை அடைந்தபோது ஒருவன் கள்மொந்தை ஒன்றை வாங்கிக்கொண்டு ஓடிவந்து அதை அவர்கள்மேல் வீசினான். “இனிய கள்! கள்ளில் ஊறிய காட்டாளர்கள்”! என்று கூவினான். மேலும் சிலர் கள்ளை வாங்கிக் குடித்தபடியே வந்து எஞ்சியதை அவர்கள்மேல் வீசினர். நளன் கால்தடுக்கி பலமுறை விழப்போனான். அவன் தோளை தமயந்தி தன் கைகளால் வலுவாகப் பற்றியிருந்தாள். தெருநாய்க் கூட்டம் எல்லையில் நிற்பதுபோல அவர்கள் அனைவரும் கோட்டைவாயிலில் நின்றுவிட்டனர். ஊளைகள் சிரிப்புகள் பின்னால் ஒலித்தன.

கோட்டைவாயிலைக் கடந்தபோது நளன் கால்தளர்ந்து அமரப்போனான். அவன் தோளை தமயந்தி பற்றிக்கொண்டாள். “செல்வோம், அமரக்கூடாது” என்றாள். “என்னால் நடக்கமுடியவில்லை” என்று அவன் சொன்னான். அவள் அவனை மெல்ல தாங்கிச் சென்றபடி “அருகேதான் காடு… அதற்குள் நுழைந்துவிடுவோம்” என்றாள். அவன் தழைந்த குரலில் “நான் உணவருந்தி மூன்று நாட்களாகின்றன” என்றான். “விடாய் என்னைக் கொல்கிறது” என்றபோது குரல் மேலும் தளர்ந்து அழுகையென்றே ஒலித்தது.

“காட்டுக்குள் உணவும் நீரும் உண்டு” என்று அவள் சொன்னாள். நிஷதபுரியின் அரசர் அரண்மனை புகுவதை அறிவிக்க கோட்டையின்மேல் காவல்மாடங்களில் பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. நகர்மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி அவ்வோசையை மூழ்கடித்தபடி பெருகியெழுந்தது.

தொடர்புடைய பதிவுகள்

ASYMPTOTE பரிசு -கடிதங்கள்-2

$
0
0

q

ஜெ அவர்களுக்கு

வணக்கம்..

மனமார்ந்த வாழ்த்துகள்..

பெரியம்மாவின் சொற்கள் படித்தேன்..மிக எளிமையானது போல் தோற்றம் கொள்ளும் ஆழமான கதை..

ஆற்றின் நீரோட்டக்குளுமையில் கை வைப்பது போல் படிக்க படிக்க, நானும் அப்பெரிய வீட்டில் அமர்ந்து உரையாடலை கவனிப்பது போல் உணர்ந்தேன்..

“Thankful என்று சொல்லலாமா? நாய்களைப்பற்றி அப்படிச் சொல்வதுண்டா? இல்லை grateful? ஆனால் அதெல்லாம் நாயின் குணமா? அச்சொற்களை நான் என் விண்ணப்பக் கடிதங்களில்தான் கையாண்டுவந்தேன்.” இவ்வரிகள் உங்களின் முத்திரை..

“அவ அங்க உள்ள குட்டியில்லா? அந்த ஊரிலே பொம்புளைக மனசுக்குப் பிடிச்சவன கெட்டிகிட்டு மானம் மரியாதயா சந்தோசமா இருக்காளுக” என்றாள்.”

இவ்வரிகள் போகிற போக்கில் சொல்வதைப் போல் இருந்தாலும், மிகப் பெரிய உண்மையை படிப்பவர் மனதில் விசையுடன் இறக்குகிறது..

பெண்ணின் மன உணர்வுகளை, பெண்கள் புரிந்து கொள்ள மொழி தேவையில்லை.. எந்த சமூகக் கட்டுப்பாடும், பெண் மனதை ஒன்றும் செய்து விட முடியாது.. அவர் மண ஊர்வலத்துக்குப் பின் காரில் ஏறவேயில்லை என்பது, கொள்ளுப் பேத்தியின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள எந்த விதத்திலும் தடையாய் இல்லை..

மிக அழகு ஜெயமோகன்..

மற்றொரு முறை பெண்ணின் மன உணர்வுகளை நுட்பமாய் சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்..

பவித்ரா

***

அன்புள்ள பவித்ரா,

நன்றி. இன்று இங்கே இலக்கியச்சூழலில் இலக்கியவாசிப்பு மிகமேலோட்டமானதாக மாறிக்கொண்டிருக்கிறது. படைப்பின் அர்த்தவிரிவை நோக்கிச் செல்பவர்கள் குறைந்துவருகிறார்கள். பெரியம்மாவின் சொற்களே கோவையில் ஒர் இலக்கியச்சந்திப்பில் ’ஆங்கிலத்தில் அருமையான சொற்கள் உள்ளன, அது தெரியாமல் எழுதப்பட்ட கதை’ என ஓர் இளம் விமர்சகரால் விமர்சிக்கப்பட்டதாக அறிந்தேன். அந்த வகையில் இந்தப்பரிசு முக்கியமானது. வாசிப்பு என்றால் என்ன என்று ஓர் அடிக்கோடு போடப்பட்டுள்ளது

ஜெ

***

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

பெரியம்மாவின் சொற்கள் சர்வதேச விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ரசித்துப் படித்த சிறுகதை. நகைச்சுவைக்கு அப்பால்அது உணர்த்துகின்ற அர்த்தங்கள் பல. மொழி வெளிப்படுத்துகிற அர்த்தங்கள் பண்பாட்டுடன் எவ்வளவு பிணைந்திருக்கிறதுஎன்பதையும் ,அதே சமயம் மனித உணர்வுகள் மொழி கடந்து அனைவரையும் இணைக்கின்றன என்பதையும் அழகாக சொல்லும் கதை. என் எழுத்தாளர் சர்வதேச விருது பெருவதும், தமிழ் கதைகள் சர்வதேச.கவனம்.பெருவதும் மிகுந்த உவகை அளிக்கிறது. வாழ்த்துக்கள்
அன்புடன்
A.ராமகிருஷ்ணன்

***

அன்புள்ள ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,

நன்றி. பரிசு என்பதைக்காட்டிலும் அக்கதை நுட்பமாகப் புரிந்துகொள்ளப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. அது எழுத்தின் சர்வதேசத்தன்மை குறித்த ஓர் உறுதிப்பாட்டை அளிக்கிறது

ஜெ

***

அன்புள்ள ஜெ.மோ அவர்களுக்கு,

பெரியம்மாவின் சொற்கள் சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு கிடைத்திருக்கிறது என்பதை வாசித்த கையோடு இதை எழுதுகிறேன்.

உலகத்தில் தன் துறையில் இவ்வளவு காதலோடு ஈடுபாடோடு உழைக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதுவும் பத்துப்பைசா லாபம் பெறாத தமிழிலக்கியத்திற்கு உடல்,உயிர் உருக்கி ஆன்மாவையே இறக்கி வைத்து எழுதும் உங்கள் இலக்கியத்தின் மீதான காதலை என்ன சொல்ல‌.

எங்கிருந்து இந்த சலியாத ஊக்கம் கைவரப் பெறுகிறது என்பது நினைத்து புருவமுயற்றி இருக்கிறேன். சில மாத‌ங்களுக்கு முன்பு உங்களுக்கு ‘சோம்பல் களைவது எப்படி ‘ என்ற மின்னஞ்சல் எழுதியிருக்கிறேன்.

உங்கள் உழைப்பையும் ஈடுபாட்டையும் எங்கள் ஐடி துறையில் தர‌ முடிந்தால், உங்கள் சம்பளத்தை எண்ண மெஷின் தேவை.

என்ன சொல்ல தலைவா, நீ லாம் வேற லெவல். இமயமலையில் காலைச் சூரியனில் முதல் கதிர்கள் விழும்போது ஓர் அத்வைத நிலை மனதில் பூக்குமே அதே மகோன்னதத்தோடே எப்பொழுதுமே உங்களை காண்கிறேன்.

உங்கள் உழைப்புக்கு விருதுகள் இணையா என்ன? இது அத்வைதம் இது. ஆதி சங்கரர் பல நூறு வருடங்களுக்கு முன் வெற்றுப் பாதங்களோடு காஞ்சியில் இருந்து காஷ்மீரம் போனாரே அதே காதல் இருந்தால் மட்டுமே இத்தகைய உழைப்பு சாத்தியம்.

அன்புடன்,

கார்த்திக்.

***

அன்புள்ள கார்த்திக்

நன்றி.

தமிழின் இன்றைய சூழலில் இலக்கியம் என்பது அந்தரங்கமான சில குறிப்புகளோ அன்றாட நிகழ்ச்சிகளின் தொகையோ அல்ல என்றும், அது ஓரு பண்பாட்டுத்தேடல் என்றும் சொல்லவேண்டியிருக்கிறது. இப்பரிசு அதற்கு ஒரு வழியாக அமைந்தால் நன்று

ஜெ

***

அன்புடன் ஆசிரியருக்கு

பொதுவாக உங்கள் புனைவுகளில் எப்போதுமே ஒரு சர்வதேச தன்மையை அல்லது மானுடம் தழுவிய பார்வையை உணர முடியும். சமகாலத்தை பிரதிபலிக்கும் உங்களது புனைவுகள் பெரும்பாலானவற்றில் கன்னியாகுமரியின் வழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிருப்பதால் உங்கள் எழுத்தின் விரிவை தேர்ந்த வாசகர்கள் மட்டுமே உணர முடிகிறது. உலகம் யாவையும் யானைடாக்டர் வெள்ளையானை போன்ற படைப்புகளில் வெளிப்படையாகத் தெரியும் தீவீரமும் கரிசனமும் பெரியம்மாவின் சொற்கள் போன்ற படைப்புகளில் மிக ஆழத்தில் பொதிந்துள்ளது.

ஒரு பக்கம் பெரியம்மாவுக்கும் கதை சொல்லிக்குமான காதல். அதாவது பெரியம்மா ஒத்து கொள்ள மறுக்கும் காதல் அல்ல! Bond போன்ற காதல். பிறகு இரண்டு மொழிகளும் தழுவிக்கொள்ளும் அழகு. கொசுவும் மஸ்கிட்டோவும் குடையும் அம்ப்ரல்லாவும் போல. அதன்பின் கிறிஸ்துவும் ராமனும் ஹெலனும் திரௌபதியும் அக்கிலிஸும் அர்ஜுனனும் ஹெக்டரும் கர்ணனும் என ஒவ்வொருவரும் தழுவியபடியே உள்ளனர். சுசித்ராவின் மொழிபெயர்ப்பு மூலத்தை வாசிக்கும் உணர்வைத் தருகிறது.

பெருமிதமாக உணர்கிறேன்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள சுரேஷ்,

இந்த விருது எனக்கு முதலில் எழுப்பிய எண்ணம் ஒன்றுண்டு. தமிழ்ச்சூழலின் பெரிய கேடுகளில் ஒன்று நுண்ணுணர்வில்லாத டம்ப வாசகர்கள், உள்ளீடற்ற விமர்சகர்கள். இங்கு வரும் ஒரு நல்ல கதையை மிக எளிய அளவிலேகூட புரிந்துகொள்ள அவர்களால் இயலாது. ஆனால் உலக இலக்கியம் வாசிக்கிறோம் என்று பாவனைகாட்டுவார்கள். இங்குள்ள படைப்புக்களை மட்டம்தட்டுவது வழியாக, அதற்குச் சில வெளிநாட்டுப்பெயர்களை உதிர்ப்பதன்வழியாக, தங்களை மேலே நிறுத்திக்கொள்ள முயல்வார்கள்.

என்னைப்போல இப்படிப்பட்டவர்களின் இரண்டு தலைமுறைகளைக் கண்டவர்களுக்கு கேலிக்குரிய முயற்சியாகவே இது தெரியும். ஆனால் உங்களைப்போன்ற இளம்படைப்பாளிகளுக்கு இவர்கள் ஆழமான தாழ்வுணர்ச்சியை உருவாக்கிவிடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேலைநாடுகளில் இலக்கிய உச்சங்கள் நிகழ்கின்றன போலும், நாமெல்லாம் ஒன்றுமே இல்லையோ என்ற பதற்றம் ஏற்படுகிறது அவர்களிடம்

இது மேலைநாட்டுப் பாணிகளை நகல் செய்யும் இடத்துக்கு நம்மைக் கொண்டுசெல்லும். நாம் மட்டுமே எழுதக்கூடிய தனித்தன்மைகொண்ட படைப்புக்களை நாம் எழுதத் தயங்குவோம். இந்தப்போலிகள் நுண்ணுணர்வற்றவர்கள் என்பதனால் இங்குள்ள போலி எழுத்துக்களை முன்வைக்கவும் செய்வார்கள். உளம்சோர்ந்து நாம் எழுதவேண்டியதை நாம் கைவிட நேரிடும்.

இத்தகைய அங்கீகாரங்கள் நமக்கு அளிப்பது ஒரு செய்தியை—நாம் எழுதும் நல்ல படைப்புக்கள் உலகளவில் எழுதப்பட்ட எந்த மிகச்சிறந்த படைப்புகளுக்கும் நிகரானவையே. நாம் மட்டுமே எழுதக்கூடிய நமது படைப்பை மட்டுமே ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ உள்ள நிபுணர்கள் மதிப்பார்கள். அவை உடனே அவர்களிடம் சென்றுசேராமல் போகலாம், இங்குள்ள சூழல் அத்தகையது. ஆனால் நாம் நமது தன்னம்பிக்கையை இங்குள்ள போலிகளைக் கண்டு இழந்துவிடக்கூடாது.

பெரியம்மாவின் சொற்கள் வெளிவந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. இங்கே எவராவது அதைக் கவனித்தார்களா,புரிந்துகொண்டார்களா என்று பாருங்கள். நாம் நின்றிருப்பதற்கு மிகமிகக்கீழே நின்றிருப்பவர்கள் இவர்கள். இவர்களை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் முன்செல்லும் விசை இளைய எழுத்தாளர்களிடம் எப்போதுமிருக்கவேண்டும்

ஜெ

***

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு
டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்
ASYMPTOTE பரிசு -கடிதங்கள்


தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு புதுவைக் கூடுகை -6

$
0
0

ven

அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம் .

 

நிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல் ”  .புதுவையில் மாதம் தொரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

 

இந்த மாதத்திற்கான கூடுகை ( ஜூலை 2017 ) இதில் வெண்முரசு முதற்கனல் - மணிச்சங்கம் என்கிற தலைப்பில் நண்பர் திரு.திருமாவளவன் அவர்கள்  உரையாடுகிறார் .

 

கூடுகை – 6 

 

நாள்:-  வியாழக்கிழமை (27-07-2017) மாலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை நடைபெறும்

 

 

இடம்:-

 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

” ஶ்ரீநாராயணபரம்”,

முதல்மாடி,

27, வெள்ளாழர் வீதி ,

புதுவை-605001

 

Between MG Road & Bharathi Street,

 

Next to

Madhan traders

 

Upstair to

Srima plastics store

 

Contact no:- 99-43-951908 , 98-43-010306.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மன்மதன் [சிறுகதை]

$
0
0

rathi

காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த செம்மண் சாலையில் நின்று கண்களின் மீது கைவைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான். சுதைச்சிற்பங்கள் தங்கள் காலடியில் நிழல் சிந்த ஒன்றுமீது ஒன்று ஏறிச்சென்று கலசங்களை அடைந்த சரிவுப்பரப்பாக கோபுரம் கருகிய நிறத்தில் எழுந்து நின்றது. தேவகோட்டங்களில் பெருமாளின் பல்வேறு மூர்த்தங்கள் கைகள் பரப்பி விழித்து நிற்க அவற்றில் மாடப்புறாக்கள் ஒண்டியமர்ந்திருந்தன.

கிருஷ்ணன் சட்டையை இழுத்துவிட்டபடி கோபுரவாசலை நோக்கிச்சென்றான். மிகப்பழைய கோயில், திருப்பணிகள் நடந்தும் பல வருடங்களாகியிருக்கலாம். எல்லா கோபுரங்களையும்போல அதுவும் மண்ணுக்குள் புதைந்திருந்தது. கோபுரவாசலின் கால்பட்டு அம்மி போல தேய்த கல்படிகள் சாலையைல் விடக் கீழே இருந்தன. கனத்த இரும்புச்சங்கிலிகளும் பித்தளைக்குமிழ்களும் வரிவரியாக விரிசலிட்ட மரச்செதுக்குச் சிற்பங்களும் கொண்ட உயரமான மரக்கதவுகள் இரும்புக் கீல்களில் சிக்கி கற்சட்டத்தில் தொற்றிக்கொண்டு சாய்ந்து நின்றன. புஷ்பயட்சி காவல்காத்த கல்நிலையில் நிறைய வெற்றிலைச்சுண்ணாம்பு தீற்றப்பட்டிருந்தது. ஒரே ஒரு பிச்சைக்காரக் கிழவர் உள்ளே உயரமான கற்திண்ணையில் பொக்கணத்துடன் அமர்ந்து எதையோ மென்றுகொண்டிருந்தார். ஆர்வமே இல்லாத பழுத்த கண்களால் அவனை பார்த்தார்

கோயில் திறந்துதான் கிடந்தது. அதை மூடவே முடியாது என்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது. கருவறையையும் உள்மண்டத்தையும் மட்டும் மூடுவார்கள் போல. தென்பாண்டிநாட்டு கோயில்களில் சிற்பங்கள் எப்போதும் முகமண்டபத்திலும் வசந்தமண்டபத்திலும்தான் இருக்கும். அவை மூடபட்டிருக்க வாய்ப்பில்லை. கம்பிவேலி போடப்படாமல் இருக்க வேண்டும். இல்லை என்றுதான் சண்முகம் சொல்லியிருந்தான். செருப்பை கழட்டிப்போடும்போது திரும்பவரும்போது அது இருக்குமா என்ற எண்ணம் மெல்லிதாக எழுந்தது. கிழவரிடம் சொல்லலாமா, வேண்டாம்.

கோயிலுக்குள் மனிதநடமாட்டமே இருப்பதாகத்தெரியவில்லை. அவன் தன் நிழல் மௌனமாகக் கூடவர சரிந்தெழுந்த கற்பாளங்களாலான தரை மீது மெல்ல நடந்தான். சிலநாட்களுக்கு முன்பு மழைபெய்திருக்கவேண்டும், கல்லிடுக்குகளில் புற்கள் பசுமையாக பீரிட்டிருந்தன. கற்பாதை ஓரங்களில் எழுந்த நெருஞ்சியும் பசுமையாகவே இருந்தது. கிருஷ்ணன் நிழல்கள் செறிந்து தூண்களின் காடாக விரிந்துகிடந்த கோயிலுக்குள் கண்ணோட்டி நோக்கினான். யாருமே இல்லை. அத்தனை காலியாக அது இருப்பது பிரமிப்பாகவும், கூடவே அது அப்படித்தான் இருக்கமுடியும் என்பதுபோலவும் இருந்தது. அந்த அமைதியின் ஒரு பகுதிபோல குர்ர் குர்ர் என்று புறா குறுகும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

பிரம்மாண்டமான் கோயில். ஏழெட்டு ஏக்கர் பரப்பு இருக்கும். நான்கு திசைக்கோபுரங்கள். யானைவரிசை போல கருங்கல்லாலான நாலாள் உயர சுற்றுமதில். உள்ளே மங்கிப்போன நாமங்களுடன் சிறுமதில். இரு மதில்களுக்கும் நடுவே கோணலாக வளைந்து நடடமிட்டு நின்ற தென்னைமரங்களும் கீழே அவற்றின் ஓலைகளும் மட்டைகளும் சிதறிக்கிடக்க ஊடே சில அரளிப்புதர்களும் மந்தாரைகளும் கொண்ட நந்தவனம். இடதுபக்கம் ஒரு பெரிய தெப்பக்குளம். ஏரிக்கரை பனைமரக்கூட்டம் போல தூண்கள் எழுந்து வரிசையமைத்த கல் மண்டபம் சூழ பிளாஸ்டிக் குப்பைகள் அடித்தரையின் பச்சைப்பாசி வண்டலில் மிதக்க, நீரோடிய கறைகள் உலர்ந்த படிக்கட்டுகளுடன் வெறிச்சிட்டுக் கிடந்தது அது.ஒரு சிறிய பறவை சிர்ர்ர் என்று சிறகதிர தென்னையில் இருந்து காற்றில் சறுக்கி இறங்கி குளத்து மதிலில் அமர்ந்தது.

கிருஷ்ணன் நின்றான். சுற்றி வருவதில் பொருளில்லை. உள்ளே சென்று சிலைகளைப் பார்க்கவேண்டியதுதான். அவன் திரும்பி முகமண்டபத்தருகே வந்தான். ஒளியைப்பார்த்து வந்ததனால் உள்ளே நிறைந்திருந்த இளம் இருட்டு கண்களை மறைத்தது. கண்கள் பழகியபோது நீருக்குள் இருந்து பெரிய மீன்கள் எழுந்து வருவது போல கரிய சிலைகள் இருட்டிலிருந்து எழுந்து தெரிந்தன. இரண்டாளுயரமான பெரிய வழவழப்பான கற்சிலைகள். அவன் எந்தச்சிலையையும் பார்க்காமல் மொத்தமாக அந்தச் சிற்ப வெளியை பார்த்தபடி ஒருசில கணங்கள் பிரமித்து நின்றிருந்தான்.

”யாரு?” என்ற பெண்குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். குதிரைக்காரன் சிலைக்கு அப்பாலிருந்து அந்தப்பெண் இறங்கி இடுப்பில் செருகிய முந்தானையை எடுத்து இழுத்துவிட்டுக்கொண்டு, நெற்றியில் சரிந்த கூந்தலிழையை ஒருகண நேர நளினமான அசைவால் சரிசெய்தபடி கேட்டாள். கிருஷ்ணனுக்கு கண்டா மணியோசை போல மனம் அதிர்ந்தது. அச்சிலைகளில் ஒன்று இறங்கியது போல் இருந்தாள் அவள்.

அவளுடைய கன்னங்கரிய நிறத்துக்கிணையாக கிருஷ்ணன் கண்டதில்லை. தீட்டப்பட்ட கருங்கல்லில் மட்டுமே உருவாகும் உறுதியான பளபளப்பான கருமை. அவனளவுக்கே உயரமாக திடமான தோள்களும் நிமிர்ந்த தலையுமாக நின்றாள்.

”இல்ல…இங்க சிலைகள்…” அவன் கண்கள் பரபரப்பு கொண்டு அவளை அள்ள முயன்றன. நல்ல சிற்பத்தைப் பார்க்கும்போது எப்போதுமே உருவாகும் பரபரப்பு அது. பின்னர் சொல்லிக்கொள்வான், இல்லை பதற்றப்படாதே, மெதுவாகப்பார், அணுவணுவாகப்பார், பார்த்தவற்றை நினைவில் நிறுத்தியபின்னர் ஒரு புள்ளியிலிருந்து கண்களை விலக்கு. குறுக்காக சிந்தனைகளை ஓடவிடாதே. சிற்பத்துக்கு உன் மனதை அளித்துவிடு….ஆனால அந்த முதற்பரவசப் பரபரப்பே சிற்பம் அளிக்கும் பேரனுபவம். அதன்பின் உள்ளது அந்த ஒட்டுமொத்த அனுபவத்தை சிறிய துண்டுகளாக ஆக்கி விழுங்கும் முயற்சி மட்டுமே.

அவனால் அவளை பார்க்கவே முடியவில்லை. கண்ணிலிருந்து அவள் வழுக்கி வழுக்கி விழுவதுபோல, அல்லது கண்ணை நிறைந்து பெரும்பகுதி மிச்சம் இருப்பதிபோல. எத்தனை பேரழகி! அவளுடைய மூதாதையர் இந்த கோயிலில் இருந்திருப்பார்கள். இச்சிலைகளை அவர்களைப் பார்த்தே வடித்திருப்பான் சிற்பி.

அப்பழுக்கற்ற வடிவ கச்சிதம் கொண்ட மகத்தான உடல். துதிக்கை என உருண்டு கனத்த தொடைகள். இரு மடிப்புவளைவுகள் கொண்ட ஒடுங்கிய வயிறு. இறுக்கமான உருண்ட சிற்றிடையில் வியர்வையின் மெல்லிய ஈரம். அவன் கண்களை நிறைத்து அவன் பிரக்ஞையை நிறைத்து அவனை முழுமையாக்கிய மார்புகள். இரு இளநீர்க்காய்களைப்போல. நெருக்கமாக, உருண்டு ஒன்றை ஒன்று மெல்ல முட்டி ஒரு மென்மையான குழியை உருவாக்கியபடி. மெல்ல அதிர்ந்த ஈரமான குழி.

எத்தனை அற்புதமான முலைகள. மூங்கில்போன்ற கைகளால் இரு பக்கமும் எல்லையிடப்பட்டு, பாலைநில மணல்வரிகள் போலத்தெரிந்த விலாவெலும்புகளுக்கு மேலே மெல்ல தொற்றியமர்ந்தவை …மென்மையையும் ஈரத்தையும் கொண்டு செய்யப்பட்ட, உருண்ட ,மூன்றுவரி ஓடிய நீள் கழுத்து…

சிற்பங்களைக் காண ஆரம்பித்த இந்த இருபதாண்டுகளில் அவன் அவை கலைஞனின் இலட்சியக் கற்பனைகள், அத்தகைய பெண்கள் ஒருபோதும் பூமியில் இருக்க முடியாதென்றே எண்ணியிருந்தான். ஆனால் அவன் கண்முன் ஒரு பரிபூரண இலக்கணம் கொண்ட சிற்பம் உயிருடன் நின்றுகொண்டிருந்தது. நீள்வட்ட முகத்தில் மையமாக கூர்மைபெற்ற சிறுநாசி. அதன் கீழே வாடிய மலரிதழ்போல சிறிய கருஞ்சிவப்புக் குமிழுதடுகள். மேலுதட்டின் மென்மையான ஒடுங்கலுக்குக் கீழே கீழுதட்டின் சிறிய பிதுங்கல். ஒளி பிரதிபலித்த கன்ன வளைவு.

என்ன கருமை! சில பண்டாரங்களின் பழமையான திருவோடுகளுக்கு மட்டுமே அந்த பளபளக்கும் கருமையைக் கண்டிருக்கிறான். சிறந்த ஓவியன் அனாயசமாக இழுத்த கோடுபோல மூக்கும் புருவமும் இணைந்த வளைவு. பளபளக்கும் தகடாக நெற்றி. அலையலையக இறங்கி பனங்குலைபோலத் தோளில் கனத்த குழல்த்தொகுதி. என்ன பிழை, என்ன குறை…இல்லை ஏதுமில்லை. முழுமை….பிசிறற்ற முழுமை.

அவள் ”இன்னமே சாயங்காலம் அஞ்சுமணிக்குத்தான் கோயில தொறப்பாங்கய்யா” என்றாள். அந்த திண்ணையில் அவள் அரும்புகளை பெரிய வாழையிலையில் குவித்துக் கட்டிக்கொண்டிருந்தாள்.யாழினிச் சிற்பங்களுக்குரிய நீள்விரல்கள்.. உள்ளங்கைக்கு வாழைப்பூவின் உட்பக்க நிறம். மணிப்புறாவின் அலகு நிறத்தில் நகங்கள். முழங்கையின் கரிய சருமத்தில் ஒரு நரம்போ எலும்புமுண்டோ தெரியவில்லை. கனத்த தாமரைக்கொடிபோல அவை குளிர்ந்த வழவழப்புடன் உருண்டிருந்தன. அவள் அவன் பார்வையைக் கண்டு தன் முந்தானையை மேலும் நன்றாக இழுத்து விட்டாள். அவளுடைய மார்புகள் மெல்ல அசைந்தபோது அவன் அகத்தில் கட்டிடங்களும் கோட்டைகளும் அதிர நிலம் நடுங்கும் அனுபவம் ஏற்பட்டது. அவை சாதாரணமாக பெண்முலைகள் அசைவதுபோல மென்மையாகத் ததும்பவில்லை, இரு செப்புகள் அசைவதுபோல் இறுக்கமாக அசைந்தன.

அவள் அவன் பார்வையால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. பொது இடத்திலேயே புழங்குபவளாக இருக்கவேண்டும். பூ கட்டி விற்கிறாள் போல. ”இல்ல, சிற்பங்களை பாக்கணும்தான் வந்தேன்…சாமி கும்பிடணும்னு இல்லை… சிலைகள் இருக்கிற மண்டபங்கள் தெறந்துதானே இருக்கும்?”

அவள் ”ஆமாங்கய்யா” என்று தலையசைத்தாள். எந்த நகையுமே இல்லை. கழுத்தில் ஒரு மஞ்சள்கயிறு மட்டும்தான். காதுகளில் இரு பிளாஸ்டிக் கம்மல்கள். ”செலைகளை பாக்கலாமா” அவள் ”இருங்க சாமி” என்று திரும்பி ஓடினாள். அவளுடைய பின்பக்கத் திரட்சி அவள் ஓடியபோது குதிரையின் புட்டங்கள் போல இறுகி அசைந்தது. எளிதாக மான்போல தாவி கல் மேடையேறி மறைந்தாள்.

எங்கே செல்கிறாள்? எங்காவது சாவி வாங்கச் செல்கிறாளா? மெல்ல அவன் பிரமையில் இருந்து மீண்டான். எப்பேற்பட்ட பெண்! தோளில் கிடந்த காமிரா குறித்த பிரக்ஞை அப்போதுதான் வந்தது. அவளை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும். ஆனால் புகைப்படத்தில் இந்த பரிபூரணம் ஒருபோதும் பதியப்போவதில்லை. அது நிழலையும் ஒளியையும்தான் காட்டும்.அவள் சருமத்தின் கருமையை சூழலே விழுங்கிக்கொள்ளும். அதைப் பதிவுசெய்ய ஓவியனின் தூரிகை வேண்டும். சருமத்தில் வெளிப்பட்ட அந்த ஒளியை இலைக்குருத்துக்களில் மட்டுமே அவன் கண்டிருக்கிறான். அதை எபப்டி காமிரா பதிவுசெய்யும்? ஒருகணம் அவளை அவன் நிர்வாணமாகக் கண்டான். அவனுடைய பிரக்ஞை ஸ்தம்பித்துவிட்டது. முழுமை என்ற தனிச்சொல்லாக அகம் அப்படியே நின்றுவிட்டிருந்தது. பின்னர் படபடப்புடன் மெல்ல திண்ணையில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்.

அவளுடைய முழுமையான உடல் மேல் பட்டுத்துணிபோல பரவிப்பரவி வழிந்தாலும்கூட அவளுடைய மார்புகளில் இருந்து ஒருகணம்கூட தன் பிரக்ஞையின் மையம் விலகவில்லை என உணர்ந்தான்.சிற்பங்களில் எப்போதுமே செப்புகவிழ்த்ததுபோல பெரிதாக திரட்சியாக செதுக்குவார்கள். இணைக்குவைகளாக, ஒன்று பிறிதொன்றுபோல அவை நெருங்கியிருக்கும். மனிதப்பெண்களின் முலைகள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை. அவை மேலிருந்து சற்றே வழிந்து இரு பெரிய நீர்த்துளிகள் ததும்பி நிற்பது போலத்தான் இருக்கும். பெரும்பாலும் வலது முலை பெரிதாக சற்றே கீழிறங்கியிருக்கும். ஆனால் எளிய நீல ஜாக்கெட்டுக்குள் அவளுடைய முலைகள் சிற்பக்கல்முலைகள் போலவே இருந்தன.

பேச்சொலி கேட்டது. அவள் எவரையோ கூட்டிவருகிறாள் என்று எண்ணியதுமே அவனுக்குப் புரிந்துவிட்டது. ’கைடு’ என்று யாரையோ கொண்டுவருகிறாள். எரிச்சலுடன் இது ஏன் தனக்கு தோன்றாமல் போயிற்று என எண்ணினான். இனி அவள்மீது பெய்து கொண்டிருக்கும் அவனுடைய உள்ளம் சிதறிக்கொண்டேதான் இருக்கும். ஒரு ஆண் கூடவே இருப்பதென்பது முற்றிலும் வேறு விஷயம். கசப்புடன் எழுந்தான். ஒரு கரிய இளைஞனுடன் அவள் புஜங்களைப் பற்றி சிரித்துப்பேசிக்கொண்டு கூடவே வந்தாள். அவர்களின் உறவு அப்போதே தெரிந்துவிட்டது. அவள் கழுத்தின் தாலியை அவன் நினைவுகூர்ந்தான்.

அந்த இளைஞன் சிற்பங்கள் செறிந்த தூண்கள் வழியாக வந்தபடியே ”கும்பிடறேன் சாமி” என்றான். அவன் கூறிய முறையில் ஏதோ தவறிருந்தது. ”வணக்கம்…” என்றான் கிருஷ்ணன் ”நான் சும்மா சிற்பங்களை பார்த்துட்டு போலாம்னுதான் வந்தேன்…” இவன் வாட்ச்மேனா கைடா?

”எங்கூட்டுக்காரரு சாமி”என்றாள் அவள் ”நல்லா எல்லாத்தையும் சொல்லுவாரு” அவள் இதழ்களுக்குள் இருந்து உப்புப்பரல்கள்கள் போல வெண்பற்கள் மின்னிச்சென்றன. அந்த சாதாரணச் சொற்களுக்கே ஏன் அந்த நாணமும் புன்னகையும் என்று தெரியவில்லை. அவன் மேல் அவளுக்கு அபாரமான காதல் இருக்கவேண்டும், அவன் புஜங்களை அப்போதும் லேசாக தொட்டிருந்தாள். அவனுடன் இருக்கையில் அவனைத் தொட்டுக்கொண்டே இருப்பாள் போல. அவனே அந்த தொடுகையால் கொஞ்சம் சங்கடமடைந்தவனைப்போல ”எல்லாத்தையும் காட்டிடறேன் சார்” என்றான்.

”இல்லப்பா…நான்…” என்றான் கிருஷ்ணன். அவனது தயக்கத்தைப் பார்த்து அவன் ”தொழிலைப்பாத்துட்டு நீங்க விருப்பப்பட்டா காசுகுடுத்தாபோரும் சார்” என்றான். என்ன ஒரு தன்னம்பிக்கை. பெரும்பாலான கைடுகளுக்கு நூறு சொற்றொடருக்குள் தெரிந்திருக்கும். அவற்றை அப்படியே ஒப்பிப்பார்கள். பெரும்பாலான கதைகள் அபத்தமாக இருக்கும். கிருஷ்ணன் ”சரி… சாவி வேணுமா?” என்றான்

”இல்லசார், இங்கெல்லாம் பூட்டறதே கெடையாது” என்றான். கிருஷ்ணன் முன்னே சென்றான். அந்த இளைஞனின் முகவாய் அமைப்பில் ஏதோ சின்ன பிழை. அல்லது கழுத்திலா? மிகவும் சாதாரணமான முகம்தான் ஆனால் ஒரு வசீகரமிருந்தது. கன்னங்களில் புகைபடிந்தது போல மென்மையான தாடி. சுருண்ட கலைந்த தலைமயிர். மையத்தில் பூனைமயிராக இருந்து வாயோரங்களில் கொஞ்சம் கனத்த மென்மீசை. ஆனால் அவன் முகத்தில் ஏதோ ஒன்று இல்லை.

கிருஷ்ணன் சட்டென்று திரும்பியபோது அவள் அவன் நெற்றியை தன் முந்தானையால் ஒற்றுவதைக் கண்டான். அவள் அவன் திரும்பியதும் சுதாரித்து ”ம்ம்” என்றாள். அவன் கிருஷ்ணனை நோக்கி வந்தபடி ”இது பதினொண்ணாம்நூற்றாண்டிலே ஜடாவர்மன் குலசேகரன் கட்டின கோயில்சார்…… கிபி ஆயிரத்து நூத்து தொண்ணூறு முதல் ஆயிரத்து எரநூத்து பதினேளு வரைக்கும் மதுரையை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் தென்பாண்டிய நாட்டிலே கட்டின கோயில்கள் மொத்தம் ஏழு. இது அதிலே ரெண்டாவது…அதுக்குப்பின்னாடி திருமலைநாயக்கரோட தம்பி ரங்கப்பநாயக்கன் இதுக்கு ராயகோபுரம் எளுப்பி மகாமண்டபம் கட்டி சுத்துமதிலும் கட்டினார்…” என்றான்.

கிருஷ்ணன் அவர்கள் புதுத் தம்பதிகளா இருக்கும் என எண்ணிக்கொண்டான். இளைஞன் கிருஷ்ணன் அருகே வந்துகொண்டு ”என் பேரு ராஜு சார்.. நமக்கு இந்த கோயில்தான் எல்லாமே…நமக்கு தெரியாம இங்க ஒண்ணுமில்ல..” என்றான்.

கிருஷ்ணன் அதிர்ந்து அனிச்சையாக பக்கத்துச் சிலையின் கால்களை பற்றிக்கொண்டான். அந்த இளைஞனுக்கு கண்கள் தெரியாது என அப்போதுதான் தெரிந்தது. அவனுடைய இமைகளுக்குள் இரு சிறிய சோழிகள் போல கலங்கிய வெள்விழிகள் அலைந்தன. ஆனால் மிக இயல்பாக நடந்தபடி ”இங்க உள்ள சிற்பங்களெல்லாம் நாயக்கர்பாணி சிற்பங்களோட சரியான உதாரணம்னு படிச்சவங்க சொல்றாங்க. ஹிண்டு பத்திரிகையிலேகூட நல்ல போட்டோல்லாம் வந்திருக்கு சார்” என்றான்

”உனக்கு கண் தெரியாதா?” என்றான் கிருஷ்ணன். அவன் சிரித்தபடி ”இப்பதானா கண்டுபிடிச்சீங்க? தெரியாது சார் ” கிருஷ்ணன் அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான். பார்வையிலாது ஏதோ விசித்திர வண்டு போல துள்ளிய வெள்விழி தொந்தரவு செய்தது. கையில் சாமரத்துடன் நின்ற பெண்சிலையைப் பார்த்தபடி ”பிறவிலேயே தெரியாதா?” என்றான். ”பாக்கிறதுன்னாலே என்னான்னு தெரியாது சார்”

கிருஷ்ணனுக்கு சொற்கள் நழுவி நழுவிச் சென்றன. ”…அது யாரு?” என்றான். அதன்பின்னர்தான் ஏன் அந்தக்கேள்வி என்று அவன் மனம் வியந்தது ”ஊட்டுக்காரி சார்…இங்கதான் அவளும். அவங்கம்மா மார்க்கட்டுலே பூ கட்டிக்கிட்டிருந்தா…நான் பொறந்து வளந்தது எல்லாமே இங்கதான்…எங்கம்மா இங்கதான் பிச்சை எடுத்தா… அவங்கம்மா போயிட்டாங்க. அதான் கட்டிகிட்டேன்” அவன் கண்களை இழந்தவர்களுக்குரிய அந்த கோணலுடன் மோவாயை தூக்கி மெல்லிய வெட்கத்துடன் சிரித்தான் ”அதாச்சுசார் நாலுவருசம்.. ஒரு பொம்புளைப்புள்ளை இருக்கு…ரெண்டுவயசுலே”

கிருஷ்ணன் திரும்பி அவளைப்பார்த்தான். அவள் மறுபடியும் பூகட்ட ஆரம்பித்திருந்தாள். தொங்கவிடப்பட்ட ஒரு கால் மட்டும் தெரிந்தது. ”மல்லின்னு பேரு சார். நல்ல பொண்ணு…” கிருஷ்ணன் ”குழந்தை எங்க?” என்றான் ”வீட்ல அம்மாகூட இருக்கு சார். அம்மா இப்ப பிச்சைக்கு போறதில்லை. நமக்கு ஏதோ சுமாரா வருது சார்…போரும். வாங்க…”

கிருஷ்ணன் அவனைப்பார்த்தபடி மெல்ல பின்னால் சென்றான். ”சார் இத பாத்தீங்கன்னா தெரியும். குறவன் செலை…தென்பாண்டிய நாட்டிலே நாயக்கர்கள் திருப்பணிசெஞ்ச எல்லா கோயில்களிலேயும் குறவன் குறத்தி செலை இருக்கும். குறவன் ஒரு ராஜகுமாரிய தூக்கிட்டு போறதுமாதிரி இருக்கும். குறத்தி ராஜகுமாரனை தூக்கிட்டு போவா….இதை எதுக்கு வச்சாங்கன்னு நெறைய ஆராய்ச்சிகள் இருக்கு சார். சும்மா அழகுக்காக வைக்கலை. அப்டீன்னா எல்லா கோயிலிலேயும் வச்சிருக்க மாட்டாங்க. குறவனைப் பாத்தீங்கன்னா அவன் சாதாரண மலைக்குறவன் மாதிரி இல்லை பாத்தீங்களா? அவன் இடுப்பிலே கட்டியிருக்கிற சல்லடம்கிற ஆபரணக் கச்சைய பாருங்க…என்ன ஒரு வேலைப்பாடு. சின்ன மணிகளை கோத்து கட்டியிருக்கிற மாதிரி இருக்கு. அந்த மணிகளை கோத்திருக்கிற கயித்த பாருங்க சார் மூணுபிரிக் கயிற முறுக்கினதுமாதிரி இருக்குல்ல…அதான்சார் நாயக்கர்காலத்து சிற்பக்கலை….”

கிருஷ்ணன் அத்தனை நுட்பமாக சிலைகளை பார்த்ததில்லை. அவன் விரல்களால் தடவிப்பார்த்தான் ”சார் இதுக்கே மலைச்சிராதீங்க, இடுப்பிலே தொங்கவிட்டிருக்கான் பாருங்க உடுக்கு, அதுலே இழுத்துக்கட்டியிருக்கிற கயித்துலகூட மூணுபிரி முறுக்கு இருக்கு பாருங்க…குறவனோட கையிலே இருக்கிற குத்துவாளைப்பாருங்க சார். எவ்ளவு வேலைப்பாடு. அதோட பிடியிலே வைரங்கள் பதிச்சிருக்கிற மாதிரி செதுக்கியிருக்காங்க சார். அவனோட இடுப்பிலே கச்சமா கட்டியிருக்கிற வேட்டியோட நெளிவைப்பாத்தா அந்த துணி அவ்ளோ ஒசத்தீன்னு தெரியுதுல்ல சார்? கழுத்திலே அர்த்தசந்திர ஹாரம் போட்டிருக்கான் சார். அதிலே பதக்கங்கள் வரிசையா தொங்குது…ஆமா சார், அவன் குறவனில்லை. குறவ ராஜா. அவன் தலைப்பாகைய பாருங்க. என்ன ஒரு கம்பீரமா கட்டியிருக்கான்னு…”

கிருஷ்ணன் குறவனையே பார்த்துக்கொண்டு நின்றான். சில கணங்கள் கூர்ந்து நோக்கினால் அப்படியே உயிருடன் வந்து நிற்கும் சிற்பம் அது. ”…இதுலே என்ன விசேஷம்னாக்க சார், தெய்வரூபங்களைச் செதுக்கிறப்ப பொதுவா எலும்புகள் தெரியிற மாதிரி செதுக்க மாட்டாங்க. ஆனா இந்தச் செலையிலே விலாவெலும்புகள் எவ்ளவு வரிவரியா தெரியுது பாத்தீங்களா? குறவன் ரொம்ப மெலிஞ்சு ஆனா உறுதியான உடம்போட இருக்கான் சார். அந்தக்காலத்திலே குறவராஜாக்களுக்கு பாண்டிய குலத்துலே களவுமணம் பண்றதுக்கு என்னமோ ஒரு உரிமை இருந்திருக்கு…” குறவனின் தோளில் சிறிய உருவமாக இளவரசி வெயிலுக்கு தன் முந்தானையை விரித்துப்பிடித்து அமர்ந்திருந்தாள்.

குறவனின் கண்கள் விரிந்து எருமைவிழிகள் போல விழித்தன ”…குறவனோட பார்வைய பாத்தீங்களா சார்?” என்றான் ராஜு ” உருட்டி மிரட்டுற மாதிரி பாக்கிறான். இதுக்கு சாஸ்திரத்திலே மகிஷ நயனம்னு பேரு..ஆனா அவன் நின்னுட்டிருக்கிறத பாத்தீங்களா, ஒரு காலை முன்னாடி வச்சு மத்த காலை பின்னுக்கு வச்சு மெல்ல குனிஞ்சு பதுங்கிறாப்ல நிக்கிறான்…இதுக்கு வியாஹ்ர பாவம்னு பேருசார்.. அதாவது புலிப்பதுங்கல்னு அர்த்தம்”

”இதெல்லாம் யாரு சொல்லித்தந்தாங்க?” என்றான் கிருஷ்ணன். ராஜு ”இங்க முன்னாடி அய்யங்காருசாமி ஒருத்தரு வருவாரு.. நார்ணசாமி ஆச்சாரியாருனு சொல்வாங்க. பெரியபடிப்பு படிச்சவரு… டேய் இந்தாடான்னு தினமும் எதாவது திங்கக்குடுப்பாரு.. அவரு சொல்லிகேட்டதுதான் சார். பாவம் பெரிய மனுஷன். போனவருஷம் தவறிட்டாரு ” என்றான் ”இந்தப்பக்கம் நிக்கிறவ குறத்தி… பதினொரு அடி எட்டிஞ்சு உசரம்சார்…”

குறத்தியின் கனத்த கொண்டை தோளில் சரிந்திருந்தது. ஆண்மை ததும்பும் பெண்ணுடல். திடமான பெருமுலைகள். குடக்கழுத்து இடுப்பு. பிடிவாதமும் கர்வமும் தெரியும் முகபாவனை. இடுப்பில் நார்ப்பெட்டி பனைநாரால் முடையப்பட்டதுபோலவே பின்னல் தெரிய இருந்தது.”குறத்தி புள்ள பெத்த நடுவயசுக்காரி சார். அடிவயித்தப்பாருங்க… அலையலையா பிரசவவரி தெரியுது பாத்தீங்களா…கிட்டக்க போயி பாருங்க. அப்பதான் தெரியும்… முலைகள பாத்தா கன்னி கணக்கா இருக்கா. அது அவ எப்டிப்பட்ட ராஜச ரூபம்னு காட்டுதுசார்..இளவரசனைப்பாத்தீங்கன்னா சின்னப்பையனை மாதிரி இருக்கான். அம்மாதோளிலே இருக்கிற மாதிரி ஜாலியா இருக்கான் பாத்தீங்களா…சிரிப்பைப் பாருங்க…”

கிருஷ்ணன் குறத்தி சிலையை நன்றாகப் பார்க்க பின்னால் நகர்ந்தான். ”வழக்கமா பொண்ணுகளுக்கு முலை ஒண்ணு ஒசிஞ்சு ஒண்ணு வெலகி இருந்தாத்தான் சார் யதார்த்தமா இருக்கும். ஆனா சாமுத்ரிகா லட்சணப்படி சிலையச்செஞ்சா அப்டி செதுக்க முடியாது. சமமா பொண்ணு நின்னாக்க அதுல அழகு இல்ல. அந்தால வெளக்குநாச்சி செலைகள பாருங்க பொம்மைகணக்காத்தான் இருக்கும். அதுக்குத்தான் இப்டி செஞ்சிருக்கான். இதுக்கு சந்த்யாபத்ம நிலைன்னு பேருசார். அந்தியிலே தாமரைப்பூவு இதழ்மூடி கொஞ்சம் வாடி குழைஞ்சு நிக்கிறாப்ல நிக்கிறா பாத்தீங்களா? அப்டி வளைஞ்சு நின்னா ஒருமுலை முன்னால வந்து இன்னொண்ணு ஒசிஞ்சுடுது பாத்தீங்களா? அதான் அழகு..ஆனா இவ கன்னி இல்ல. அதான் முலைக்காம்பை இவ்ளவு பெரிசா செதுக்கியிருக்கான்….”

”இதெல்லாம் உனக்கு ஆச்சாரியார் பாத்து சொன்னாரா?” என்றான் கிருஷ்ணன் சிரித்தபடி. ”சீச்சீ அவரு பெரிய மனுஷர் சார்… இதெல்லாம் நானே பாத்து தெரிஞ்சுகிட்டதுதான்”

”பாத்தா?” என்றான் கிருஷ்ணன். ராஜு சிரித்தபடி ”என்ன சார், பாத்துன்னா தொட்டுப்பாத்துதான். நான் வளாந்ததே இந்த கோயிலிலேதான். இங்க நான் ஒரு நூறுவாட்டியாவது தொடாத ஒத்தக் கல்லு கெடையாது. இந்தச்செலையை எல்லாம் ராத்திரிமுச்சூடும் தொட்டு தொட்டுபாத்திருக்கேன் சார். ஓரு ஆயிரம் பத்தாயிரம் வாட்டி. ஒரு கீறல் விழுந்தாகூட சொல்லிருவேன்…”

கிருஷ்ணன் ராஜுவின் முகத்தையே பார்த்தான். கண்ணுக்குப் பழகி அந்த முகத்தில் முதலில் தெரிந்த வெறுமை இல்லாமலாகிவிட்டிருந்தது.”இதான் சார் அகோர வீரபத்ரன்… அந்தப்பக்கம் அக்னி வீரபத்ரன். நேர் எதிரிலே ஊர்த்துவ வீரபத்ரன்….மூணுபேருமே கொடூரமான கொலைசெய்ற நெலையிலே நிக்கிறாங்க. பதினாறு கையிலேயும் ஆயுதங்கள். கட்கம்,கதை, மழு,சாபம்… ஆனா இது நெஜமான கொலைவெறித்தாண்டவம் கெடையாது சார். பாருங்க ஒரு டேன்ஸ் மாதிரித்தானே இருக்கு… ஒரு நிருத்யம்சார் இது..பீபத்ஸத்தையும் வீரத்தையும் எல்லாம் வெறும் ரஸமா மாத்தியிருக்கான்…”

அவனுக்கு அந்தச்சிலைகளைப்பற்றி தெரிந்தவற்றை பலநூறு பக்கங்கள் கொண்ட ஒருநூலாக எழுதிவிடலாமென தோன்றியது. கிருஷ்ணன் அந்த ஐயங்காரை நினைத்துக் கொண்டான். மூளை நிறைய சிற்பசாஸ்திர ஞானத்துடன் குடும்பத்தாலும் ஊராலும் உதாசீனப்படுத்தப்பட்டு இந்த கோயிலில் வந்து அமர்ந்திருப்பார் போல. கோயிலில் அலைந்த பிச்சைக்காரக்குழந்தையில் அனைத்தையும் ஏற்றிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் ஒருவகையில் தகுதியான சீடனுக்குத்தான் வித்தையை கொடுத்திருக்கிறார்.

”இது ரதி அந்தப்பக்கம் மன்மதன் சார்…தென்பாண்டிநாட்டுக் கோயில்களிலே எல்லாம் ரதிமன்மதன் சிலை இருக்கும். ஒருகாலத்திலே தாந்த்ரீகர்கள் தனி கடவுள்களா இவங்களை கும்பிட்டிருக்காங்க. அதனாலத்தான் இப்டி செதுக்கி வைச்சிருக்காங்க…இந்த கோயிலிலேயே அழகான செலைகள்னா இந்த ரதியும் மன்மதனும்தான் சார்…பெண்ணழகோட உச்சம்னா ரதி. ஆணாழகோட உச்சம் மன்மதன். பாருங்கசார், ரதி என்ன ஒயிலா அன்னப்பறவை மேலே அமர்ந்திருக்கான்னு. அவ உடம்பிலே எத்தனை நகையிருக்கு தெரியுமா? கழுத்திலே ஆரம் மட்டுமே பதினெட்டு போட்டிருக்கா சார். கைவளையும் கடகமும் தோள் வளையும் எல்லாம் உண்டு…நம்ம சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற எல்லா நகையும் போட்டிருக்கா…ஆனா அவ உடம்பு நகையால மறையல பாருங்க…அவ உடலழகு நகைகளால ஜாஸ்திதான் ஆகுது…மார்பைப்பாத்தீங்கன்னா நகைகள்லாம் முலைவளைவிலே சரியா வளைஞ்சு வர்ரதினாலே அவளோட அழகான முலைகளோட வடிவம் மறையல..”

ராஜு அவள் கால்களை தொட்டுக் காட்டினான் ”நகங்களைப் பாருங்க சார், பளபளன்னு சிப்பி கணக்கா இருக்கு. புலியோட கண்ணுமாதிரி சுதட்சிணையோட நகம் இருந்ததுன்னுட்டு காளிதாசன் சொல்றான் சார். அந்தமாதிரி நகம்…மின்னுது சார்…ஏன் நகத்தைப்போயி இப்டி செதுக்கியிருக்கான்? சார், நீங்க பாத்தீங்கனா எப்பேற்பட்ட அழகிக்கும் கால்நகம்தான் சார் அழுக்கா இருக்கும். உடம்பிலே ஒரு சத்து குறைஞ்சாக்கூட நகத்திலே தெரிஞ்சிரும். நகம் இப்டி இருந்தா அவளுக்கு அழகு பரிபூரணம்னு அர்த்தம்… கொஞ்சம் தள்ளி நின்னு பாருங்க… ”

ராஜு மறுபக்கம் போனான் ”இது மன்மதன்.நம்ம செலைகளிலே மீசை வச்ச செலைகள் கம்மி. மன்மதன் அதிலே ஒருத்தன். உடம்புலே எப்டி ஒரு திமிரு பாத்தீங்களா? நல்ல திமிலு குலுக்கி வார பொலிகாளை மாதிரி இருக்கான்…காலை முன்னால தூக்கி வச்சிருக்கான். அதுல ஆசை தெரியுது பாத்தீங்களா? என்னிக்குமே ஆம்பிளதான்சார் முதல் ஸ்டெப் வைக்கணும்… நல்லா பாருங்கசார், மன்மதன் பார்வை ரதிமேலே. ஆனா ரதி அவனைப்பாக்கலை. அவ கண்ணு வெட்கி கீழே சரிஞ்சிருக்கு… மன்மதனோட இடது கையிலே கரும்புவில்லு. வலதுகையிலே முல்லைமலரம்பு…அந்த அம்பை அவன் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் சேத்து பிடிச்சிருக்கிற விதத்தைப் பாருங்க…எவ்ளவு மெல்லிசா பிடிச்சிருக்கான்…பூவைபிடிக்கிறதுன்னா அப்டித்தான் சார் பிடிக்கணும்…பூ கசங்கப்படாது…”ராஜு புன்னகையுடன் ”…அவன் கையோட நேரா கண்ணை வச்சு பாருங்க சார்… ரதியோட முலைக்காம்பு தெரியும்…”

ஆமாம். கிருஷ்ணன் வியந்து நின்றுவிட்டான். ”அவன் கை சூட்சுமமா அந்த நுனியைத்தான் சார் பிடிச்சிருக்கு. முல்லை அரும்பை பிடிக்கிற மாதிரி அதை பிடிக்கணும்னு சொல்றதுசார் இந்தச் செலை” கிருஷ்ணன் மன்மதனின் கண்களைப் பார்த்தான். அவற்றில் அடங்காபெருங்காமம் ஒரு மென்சிரிப்பாக ஒளிவிட்டது. ‘காமம்’ என்று உச்சரிப்பதுபோல் உறைந்த கல் உதடுகள்.

”மாமா”என்று அவள் குரல் கேட்டு கிருஷ்ணன் திரும்பிப்பார்த்தான். ”என்னம்மா?” என்றான் ராஜு. ”அரும்பு கட்டி தூண்பக்கத்துல வச்சிருக்கேன். போறப்ப எடுத்திட்டு போயிடு. நான் செல்வக்காகூட சந்தைக்குபோயிட்டு வந்திடுறேன்”. அவள் ஏன் காதலில் துவளும் கன்னிப்பெண் போல தயங்கி குழறி அதைச் சொல்கிறாள்? அவள் வலக்கை தலைமயிரை தள்ளி கழுத்தை வருடி இன்னொருகையில் பிளாஸ்டிக் வளையை உருட்டியது. உடல் மெல்லக்குழைந்தது.

கிருஷ்ணன் திரும்பி ராஜுவைப் பார்த்தான். அவன் புன்னகையுடன் முகவாயைத்தூக்கி ”நான் பாத்துக்கறேன்மா…போய்ட்டு பத்ரமா வா” என்றான். அவள் கண்கள் ஒருகணம் கூட எங்கும் விலகவில்லை என்பதை கிருஷ்ணன் கவனித்தான். அவள் அவனைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ மேலும் சொல்ல வருவது போல அரைக்கணம் தயங்கிவிட்டு திரும்பிச் சென்றாள்.

”மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்…அந்தக் கரும்புவில்லும் மலரம்பும் மட்டும்தான்… இதோ அவன் காலிலே பாத்தீங்கன்னா..” ராஜு தொட்டுக்காட்டி சொல்ல ஆரம்பித்தான்.

***

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம்Jan 19, 2010

தொடர்புடைய பதிவுகள்

மாலை மரியாதை

$
0
0

a

எங்கள் நண்பர் சந்திப்பின் கொண்டாட்டங்களில் ஒன்று இது. எனக்கு போர்த்தப்பட்ட பொன்னாடையையும் மாலையையும் நண்பர்களுக்கு முறைப்படி அணிவித்து கௌரவிப்பது. வேடிக்கைதான். ஆனால் முழுக்க வேடிக்கையும் அல்ல. நண்பர் யோகேஸ்வரன் மாயவரத்தைச் சேர்ந்தவர். வெண்முரசு நாவல்களை மூன்றே மாதத்தில் அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு முதற்கனலில் தொடங்கி மாமலர் வரை வாசித்துமுடித்தார். அதற்கான மாலை மரியாதை. கூடவே கைத்தட்டல் கூச்சல் சிரிப்பு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…

$
0
0

a

கோவை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள், மற்றும் நான் பரிந்துரைத்த நூல்களுக்கான தனி அரங்கு ஒன்றை திருக்குறள் அரசியும் கடலூர் சீனுவும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.நேற்று நாஞ்சில்நாடன் அதைத் திறந்துவைத்தார்

 கொடிசீயா B ஹாலில் ஸ்டால் எண் 233

தொடர்புக்கு: 9787050464, 9442110123

நேற்று இரண்டுமூன்று மணிநேரம் அரங்கில் அமர்ந்திருந்தேன். புத்தகம் வாங்கிச்சென்றவர்களில் கல்லூரி மாணவர்கள் நிறையபேர். “என்னசார் குழந்தை இலக்கியம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கிருஷ்ணன் நக்கலடித்தார். ஒரே அரங்கில் என்னுடைய அத்தனை நூல்களையும் பார்ப்பது ஒரு பரவசத்தையும் பயத்தையும் அளித்தது. அத்தனை நூல்களில் மிகக்குறைவாகவே திரும்பச்சொல்லல் நிகழ்ந்திருக்கிறது என நினைக்கிறேன்

அரங்கில் என்னுடைய அனேகமாக எல்லா நூல்களும் உள்ளன. வெண்முரசு ஒரே தொகுப்பாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

நேற்று மாலை எழுத்தாளர் விவாத அரங்கில் நாஞ்சில்நாடன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகீர்ராஜா ஆகியோர் நானும் என் காலமும் என்னும் தலைப்பில் பேசினார்கள்.

சு.வேணுகோபால்

Nanjil still

ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணத்தில் அமைந்தவை. கீரனூர் ஜாகீர்ராஜா ஓர் எழுத்தாளராக அவர் உருவகித்துக்கொள்ளும் மரபு, பின்புலம் என்ன என்பது குறித்து பேசினார். கண்மணி குணசேகரன் விவசாயம் சார்ந்த கிராமியப் பின்புலத்தில் இருந்து அவர் எழுந்து வந்ததன் சித்திரத்தை அளித்தார். சு.வேணுகோபால் எப்படி அவருடைய விவசாயப்பின்புலம் மெல்லமெல்ல அழிந்தது என்றும், எப்படி அவர் இலக்கியத்திற்குள் தன் மரபுத்தொடர்ச்சியை கண்டடைந்தார் என்றும் பேசினார். நாஞ்சில் மூன்று உரைகளையும் தொகுத்தளித்தார்

kanmani

கண்மணி குணசேகரன்

 

கீரனூர் ஜாகீர் ராஜா

கீரனூர் ஜாகீர்ராஜா

இன்று மதியம் அரங்குக்குச் செல்வேன். இன்று மாலைவரை அரங்கில் இருக்க உத்தேசம். நண்பர்கள் விரும்பினால் அரங்கில் வந்து சந்திக்கலாம்.

நாளை ஊட்டி சென்று வியாசப்பிரசாத் சுவாமியை சந்தித்து நிதியை அளித்துவரவேண்டும். ஊட்டிக்கு என்னுடன் வர ஆர்வமுள்ள நண்பர்கள் இருந்தால் மின்னஞ்சல் செய்யலாம். காரில் இடமிருக்குமாயின் சேர்த்துக்கொள்வோம். அல்லது காருடன் வரவேண்டும்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61

$
0
0

60. நிழலியல்கை

flower“சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது ஆடப்படுகிறது, ஷத்ரியர்களுக்குரிய கலைகளில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது” என்றார்.

“ஆம், கையருகே பேருருவம் கொண்டு நின்றிருக்கும் ஒன்றைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார் ஆபர். “அத்துடன் ஊழ்வடிவமான தெய்வத்துடன் களமாடுவது ஷத்ரியனின் குலஅறமேயாகும். துணிவதும், துயர்களை எதிர்கொண்டு மீள்வதும் வேண்டியிருந்தால் தணியாமல் தன்னைக் கொடுப்பதும் அவன் கற்றுக்கொண்டாக வேண்டியவை. ஒவ்வொன்றும் ஒரு நூறாயிரத்துடன் பிணைந்துள்ளமையால் வைசியன் ஆடும் களமும் தெய்வங்களுக்குரியதே. ஆகவே ஷத்ரியனுக்கும் வைசியனுக்கும் மட்டும் சூது ஒப்பப்பட்டுள்ளது. அது மருந்து என, ஆசிரியர் அளித்த அளவுக்குள் மட்டும். துணிவைக் கற்றுக்கொள்ள துணியும் உளநிலையை நிலைநிறுத்த மட்டுமே சூது பயில்க என்கின்றன நூல்கள்.”

“தன்னைக் கடந்து சூதாடுபவனை நாற்களம் தன்னில் ஒரு காய் என அமர்த்திவிடுகிறது. அவன் ஆடுவதில்லை, ஆடப்படுகிறான் என அவன் அறிவதே இல்லை. புவியின் இருள்நிழல் ஊடாட்டங்களனைத்தையும் பரப்பிக் காட்டும் வல்லமை கொண்டிருப்பதனால் ஒருவன் வாழ்நாள் முழுமையையும் இக்களத்தை நோக்கிக் குனிந்தே கழித்துவிடமுடியும். அரசே, சூதில் மறந்து மீண்டெழுந்தவர் அரிதிலும் அரிது.”

“ஏனென்றால் சூது வெளியே நிகழ்வது மட்டும் அல்ல. விரிக்கப்பட்டிருக்கும் இக்களம் ஆடுபவனின் அகம். அகத்தை இப்படி ஏதேனும் புறப்பொருளில் ஏற்றிக்கொள்ளாமல் நம்மால் பார்க்க முடியாது. அந்தணரின் வேள்விச்சாலையும், நிமித்திகர்களின் பன்னிருகளமும் வணிகர்களின் துலாக்கோலும் உழவர்களின் வயலும் உள்ளமே என்றறிக! நாற்களமென இருண்டும் ஒளிர்ந்தும் முடிவிலியை மடித்துச் சுருட்டிவைத்து இதோ பரவியிருப்பது உங்கள் இருவரின் உள்ளம். இக்காய்களை நகர்த்தி நகர்த்தி நீங்கள் கண்டுபிடிப்பது உங்களையேதான்.”

“வாழ்க்கையின் நிகழ்வுகளை அறிய உள்ளத்தை நோக்குக! உள்ளே அறிந்ததைக்கொண்டு வெளியே வென்றடைக! உள்ளத்தை மட்டுமென உலகியலான் நோக்கலாகாது. அறியுந்தோறும் ஆழம் மிகும் அந்தக் கருஞ்சுனையில் இறங்க அறிதலையே வாழ்வெனக் கொண்டவர்களுக்கன்றி பிறருக்கு முன்னோர் ஒப்புதல் அளிக்கவில்லை” என்றார் ஆபர்.

“அக்களத்தின் முன் அமர்ந்த நளன் ஆடியது எதைக் கொண்டு? அரசே, ஒன்றறிக! சூதுக்களத்தில் எதுவும் திசைகளுக்கு அப்பாலிருந்து வருவதில்லை. கைவிரல்களென வந்தமைவது ஆடுபவனின் ஆழமே. அனைத்தும் அங்கிருந்தே எழுகின்றன. விழையப்படாத தோல்வியை எவரும் அடைவதில்லை” என்றார் ஆபர். “அவன் விழைந்தானா அரசை இழக்க? அரிய துணைவியுடன் இழிவுபட்டு கானேக?” என்றார் விராடர் சினத்துடன். “ஆம்” என்று ஆபர் சொன்னார். “ஏனென்று அறிய நளதமயந்தியின் கதையை மீண்டும் கேட்கவேண்டும்.”

விராடர் கொந்தளிப்புடன் “வீணுரை. நீங்கள் அந்தணர் என்பதனால் நான் இதை பணிந்து கேட்டாகவேண்டும். ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை” என்றார். இகழ்ச்சியுடன் “அந்தணருக்கு இருக்கும் உளச்சிக்கல் இது. அவர்கள் வாழ்வதில்லை. பெருக்கு நோக்கி கரையிலமர்ந்திருப்பவர்கள். நீந்துபவர்களின் கையசைவை கால்விசையைக் கண்டு கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்று தொடர்ந்தார்.

ஆபர் புன்னகையுடன் “ஆம், அவர்களால்தான் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் மூழ்கிச் சாவோம் என்னும் அச்சம் அவர்களுக்கில்லை. தன் நீச்சலை மட்டுமே கொண்டு அனைத்தையும் கணிக்கும் எல்லையும் கட்டுப்படுத்துவதில்லை” என்றார். விராடர் திரும்பி “குங்கரே, நீங்கள் சொல்லுங்கள். உங்கள் சொற்களை நான் நம்புகிறேன். சூதில் தான் தோற்கவேண்டுமென நளன் விரும்பினானா?” என்றார்.

குங்கன் தாடியைத் தடவியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “ஆம், அவரால் சொல்லமுடியும்” என்றார் ஆபர். குங்கன் நிமிர்ந்து ஆபரை நோக்கினான். இருவர் விழிகளும் சந்தித்தன. சில கணங்களுக்குப்பின் குங்கன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “சொல்லுங்கள் குங்கரே, அவர் சொல்வது உண்மையா?” என்றார் விராடர். குங்கன் “ஆம்” என்றான்.

flowerஉச்சி உணவு உண்டு சுதேஷ்ணை துயில்கொண்டபின் திரௌபதி மெல்ல வெளியே வந்தாள். அரண்மனை அறைகளுக்குள் இருப்பது அவளுக்கு சலிப்பூட்டியது. வெளியே சென்றுவரவேண்டும் என்ற எண்ணம் எழுந்தபின்னர்தான் எப்போதும் அவள் அரசியல்ல, சேடி என்னும் தன்னுணர்வை அடைந்தாள். நீள்மூச்சுடன் இடைநாழியில் நடந்தாள். காவலர்கள் அவளைக் கண்டு நட்புடன் புன்னகைத்தனர். அரண்மனைத்தோட்டத்தில் நிழல் செறிந்து கிடந்தது. மரக்கூட்டங்களுக்குமேல் கதிர்வெளி பெருகியிருப்பதை கீழே நின்றிருக்கும் எவரும் உணரமுடியாது.

அவள் சோலைக்குள் சென்றாள். உதிர்ந்து கிடந்த மலர்களை மிதிக்காமல் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த கற்களில் கால்வைத்து உள்ளே சென்றாள். மலர்கள் வெயிலில் வாடிய மணம் நிறைந்திருந்தது. காலையில் மலர்மணத்திலிருக்கும் புத்துணர்வுக்கு மாற்றாக இனிய சோர்வொன்றை அளித்தது அந்த மணம். பறவைகள் கிளைநிழல் செறிவுகளுக்குள் புகுந்து சிறகோய்ந்து அமர்ந்திருந்தன. அவற்றில் சில பறவைகள் எழுந்து அமர்ந்து கலைந்து ஓசையிட்டன. மிகத் தாழ்வாக வந்து வளைந்து மேலேறியது ஒரு சிறிய குருவி.

அவள் அங்கிருந்த ஒரு கற்பீடத்தில் அமர்ந்தாள். கைகளை மார்பில் கட்டியபடி மரக்கிளைகளை அண்ணாந்து நோக்கிக்கொண்டு வெறுமனே உள்ளத்தை ஓடவிட்டாள். தொலைவில் முதுவிறலியான சாலினி கூன்கொண்ட உடலுடன் முலைகள் தொங்க, இரு கைகளையும் நிலம் நோக்கி வீசி, நான்குகால் விலங்கென அங்கிருந்தே புன்னகைத்தபடி வருவது தெரிந்தது. அவள் தன்னை தேடித்தான் வருகிறாள் என்று தெரிந்ததும் அவள் சலிப்புடன் கால்களை நீட்டிக்கொண்டாள்.

சாலினி அருகே வந்து “நலமாக இருக்கிறீர்களா, தேவி?” என்றாள். திரௌபதி “ஆம், சேடியருக்குரிய நலம்” என்றாள். சாலினி அவளருகே நிலத்தில் அமர்ந்து அங்கிருந்த சிறிய பாறை ஒன்றில் சாய்ந்து முதுகை நிமிர்த்திக்கொண்டாள். “அன்னையே, தேவீ” என அலுப்பொலி எழுப்பியபின் “சேடியருக்கென்ன? மேலோர் அளி இருந்தால் அரண்மனை வானுலகு” என்றாள். அவள் ஏன் வந்திருக்கிறாள் என்று திரௌபதி புரிந்துகொண்டாள். சாலினி “நான் அகத்தளத்திற்குச் சென்றேன். அங்கே அந்தச் சிறுமிக்கு மீண்டும் ஒரு சிறு தேவாட்டு பூசை நிகழ்த்தினேன்” என்றாள்.

“எப்படி இருக்கிறாள்?” என்றாள் திரௌபதி. சாலினி “நான் அப்போதே சொன்னேன், ஒன்றுமில்லை என்று. கன்னியர் இவ்வாறு கந்தர்வர்களால் கொள்ளப்படுவது எப்போதும் நிகழ்வதுதான். நான் என் நீண்ட வாழ்நாளில் எவ்வளவோ பெண்களை பார்த்துவிட்டேன்” என்றாள். “அவள் உள்ளம் நிலையழிந்திருப்பதுபோலத் தோன்றியது” என்றாள் திரௌபதி. “நான் ஒருமுறை நோக்கும்போது அழுதுகொண்டிருந்தாள். ஒருமுறை இருளில் உடலை ஒடுக்கி சுருண்டுகிடந்தாள். ஒருநாள் மாலையில் அணியும் ஆடையும் புனைந்து விழிபொங்கி நகைகொண்டிருந்தாள். அவள் பேசுவன எதுவும் இங்குள்ள சூழலுடன் பொருந்தவில்லை. இங்கில்லாத எவரையோ நோக்குபவள்போல விழிகொண்டிருக்கிறாள்.”

சாலினி கிளுகிளுப்புடன் நகைத்து “அனைத்தும் கந்தர்வர்களால் கொள்ளப்படுவதன் இலக்கணங்கள்” என்றாள். “தேவி, கந்தர்வர்களைக் கண்டதும் கூடியதும் அல்ல பெண்களை நிலையழியச் செய்வது. கந்தர்வர்கள் அப்பெண்ணின் உள்ளே விதைவடிவில் உறையும் கந்தர்வக் கன்னியை வெளியே எடுத்து அதனுடன்தான் கூடிக்களிக்கிறார்கள். தன்னை தானல்லாத ஒன்றென காணும் அதிர்ச்சியே பெண்களை உளம்சிதறச் செய்துவிடுகிறது. பெரும்பிழை இழைத்துவிட்டதாகவும், உடலும் உள்ளமும் கறை கொண்டுவிட்டதாகவும் உணர்கிறார்கள். இழிவுணர்வும் குற்றவுணர்வும் கொண்டு துவள்கிறார்கள். பின்னர் அக்கேளியை நினைவுகூர்ந்து மலர்ந்தெழுகிறார்கள்.”

குறுஞ்சிரிப்புடன் சாலினி தொடர்ந்தாள் “மெல்ல அவர்கள் உணர்வார்கள் அது பிறிதொருத்தி என. அப்பிறிதை ஒடுக்கி உள்ளே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள். தேவி, முற்றிலும் சீரானவர்கள் பிழையின்றி இரண்டாகப் பிரிந்தவர்கள்.” திரௌபதி அவளை நோக்கியபின் “நான் சுபாஷிணியை நன்கறிந்திருப்பதாக எண்ணியிருந்தேன்” என்றாள். “என்ன அறிந்திருந்தீர்கள்?” என்றாள் சாலினி. “எளிய பெண். இனியவள். கனவுகள் கொண்ட அகவையள். இன்னும் குழந்தைமை மாறாதவள்” என்றாள்.

“ஆம், ஆனால் அவள் விழிகளை நோக்கியிருந்தீர்கள் என்றால் அவை எப்போதும் பிறிதொன்றையும் நோக்கிக்கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். நம்முடன் உரையாடுகையில் அவள் தன்னுடனும் உரையாடிக்கொண்டிருந்தாள், நம்மை நோக்குகையில் நம்மைக் கடந்தும் பார்வைகொண்டிருந்தாள். தேவி, அவள் ஏன் எளிதில் புண்படுபவளாக இருந்தாள்?” திரௌபதி சொல் என்பதுபோல நோக்கினாள்.

“அவள் மிகுந்த தன்முனைப்பு கொண்டிருந்தாள். இப்புவியையே தன்னை மையமாக்கி அறிந்தாள். அவளுக்குள் புவியாளும் சக்ரவர்த்தினிகளை விடவும் மேலான பீடத்தில் அவளே அமர்ந்திருந்தாள்.” சாலினி கண்களைச் சுருக்கி “அத்தகையோரே கந்தர்வர்களுக்கு விருப்பமானவர்கள். தேவி, குரங்குகள் தேடித்தேர்ந்த இளநீரை அவற்றை துரத்திவிட்டு பறித்துக்கொண்டுவருவார்கள். அவை சுவை மிக்கவையாக இருக்கும். கந்தர்வர்களால் சுவைக்கப்பட்ட பெண்ணே மானுடருக்கு மிகமிக இனியவள்” என்றாள்.

திரௌபதி புன்னகைத்தாள். “ஆம், தேவி. ஆணுக்கு ஒருபோதும் சலிக்காத பெண் எவள்? குன்றாத காமம் கொண்டவள். பெண்காமம் உடலில் மிக எளிதில் வற்றிக்கொண்டிருப்பது. குருதிவிலக்கின் சுழற்சிக்கு ஏற்ப. உடற்களைப்புக்கு ஏற்ப. சூழலின் உணர்வுநிலைகளுக்கு ஏற்ப. அத்துடன் அது தன்னைத்தானே பற்றவைத்துக்கொள்ள இயலாதது. கந்தர்வர்களுக்குரிய பெண்கள் தங்கள் குன்றாக் கற்பனையால் காமத்தை அணையாது காத்துக்கொள்பவர்கள். எரி என தான் தொட்ட ஆணை சூழ்ந்து அணைத்து உள்ளே அமைத்துக்கொள்ள அவர்களால் இயலும்.”

திரௌபதி “அத்தகைய பெண்களுக்கு ஏதேனும் உடற்கூறு சொல்லப்பட்டிருக்கிறதா உன் நூல்களில்?” என்றாள். “ஆம், அவர்களின் உதடுகள் எப்போதும் ஈரம் கொண்டிருக்கும். கண்களில் உலகை ஏளனம் செய்வதுபோன்ற நகைப்பிருக்கும்” என்றாள் சாலினி. “நகைக்கவும் நகையூட்டவும் தெரிந்தவர்கள் என்பதனால் தோழியர் சூழவே இருப்பார்கள். ஆனால் பிறர்குறித்த மன்றுபேசுதலில் ஆர்வம் கொள்ளமாட்டார்கள். காவியமும் இசையும் கற்றுத்தேரும் திறன்கொண்டிருப்பார்கள். ஆனால் மிக எளிதில் இவற்றிலிருந்து அகன்று வேறெங்கோ சென்று நின்றிருப்பதும் அவர்களின் இயல்பாக இருக்கும். சுவை நுண்மை கொண்டிருப்பர். அணிகொள்ள விழைவர். ஆனால் சுவையாலோ அணியாலோ ஆட்டுவிக்கப்படாதவர்களாக இருப்பர்.”

சாலினி தனக்கே என தலையசைத்து “சுருங்கச்சொல்லின் இங்குள்ள சிறந்ததை எய்த விழைவர். ஆனால் இங்குள்ள எதையும் இலக்கெனக் கொள்ளமாட்டார்கள்” என்றாள். திரௌபதி கைகளை மார்பில் கட்டியபடி விழிகள் தொலைவில் தெரிந்த கொடிமுல்லையில் நிலைக்க அசைவிலாது அமர்ந்திருந்தாள். “நான் சொல்வது அவளைப்பற்றி மட்டும் அல்ல என்று அறிந்திருப்பீர்கள், தேவி” என்றாள் சாலினி. திரௌபதி “ஆம்” என்றாள். “அவளை மூன்று கந்தர்வர்கள் ஆண்டனர். ஐந்து கந்தர்வர்களை ஆள்பவர் நீங்கள்” என்றாள் சாலினி. “உச்சிக்கிளையில் பழுத்த கனி, அது வீரர்களுக்கு மட்டுமே உரியது.”

திரௌபதி “நீ கருதி வந்ததைச் சொல்” என்றாள். “என்னை கீசகர் அழைத்தார். மலைபோல் மேனியுடன் நான் கண்டிருந்த மாவீரர். கண் களைத்து தோள் சடைத்து சோர்வுற்றிருந்தார். அவளிடம் சொல், நான் உருகி அழிந்துகொண்டிருக்கிறேன் என என்று என்னிடம் சொல்லும்போது குரல் உடைந்து அழுதார். என்னிடம் அவள் வேண்டுவதென்ன என்று கேள் என்றார்.”

“நான் வேண்டுவதொன்றும் இல்லை, நான் என் வாழ்க்கையை கந்தர்வர்களுக்கு அளித்துவிட்டவள்” என்றாள் திரௌபதி. “ஆம், அதை நான் அவரிடம் சொன்னேன். அது மறு உலகம். அங்கே அவர் வரமுடியாது. அவர் அவ்வாறு பிறிதொரு கந்தர்வக் கன்னியை கண்டிருக்கிறார். அந்த உலகம் வேறு என அவர் உணர்ந்துமிருக்கிறார்” என்றாள் சாலினி. ”தேவி, அவர் அங்கு கண்ட அக்கந்தர்வப் பெண்ணும் உங்களைப்போலவே பெருந்தோள் கொண்டவள்.”

“அவருக்கு என்ன வேண்டும்? மற்போருக்கான மறுதரப்பா?” என்று திரௌபதி எரிச்சலுடன் கேட்டாள். “தேவி, நேரடியாகச் சொல்வதில் எத்தயக்கமும் இல்லை. ஆணையும் பெண்ணையும் இணைப்பது முதன்மையாக உடலே. வேறெந்த இயல்புகளையும் உணர்வுகளையும்விட உடற்பொருத்தமே மெய்க்காதலை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. உங்களை தன் மறுபாதி என்று உணர்ந்து தவிப்பது கீசகர் அல்ல, அவரது உடல். உள்ளம் மொழிகொண்டது, கல்வியறிவது, நெறிகேட்பது. உடல் நாம் ஒருபோதும் அறியமுடியாத ஊர்தி. அது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்தான் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. நாம் அதை அறிவது அதை நாம் கட்டுப்படுத்த முயன்று தோற்கும்போது மட்டுமே.”

“நான் அவரை ஏற்கமுடியாது. எந்நிலையிலும்” என்றாள் திரௌபதி. “நீ பெண் என்பதனால் அது ஏன் என்று கேட்கமாட்டாய் என நினைக்கிறேன். ஆண் உடலைவிட நுண்மைகொண்டது பெண் உடல். ஒருவரைக் கண்டதுமே ஒவ்வாதென நம் உடல் சொல்லிவிடுகிறது. அதற்குமேல் அதனிடம் நாம் எதையும் உசாவ முடியாது.” சில கணங்கள் சாலினி அசைவிலாது அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்துகொண்டு “ஆம், இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை” என்றாள். முதுகை நிமிர்த்தி “அன்னையே…” என முனகியபின் “ஆனால் தேவி, புறக்கணிக்கப்பட்ட காமமே புவியில் பெரும் நஞ்சு. எச்சரிக்கையுடன் இருங்கள்” என்றாள். திரௌபதி புன்னகைத்து “நான் கந்தர்வர்களால் காக்கப்படுகிறேன்” என்றாள்.

flowerஅடுமனைப் பணிகள் முடிந்து அனைத்தும் ஒழுங்கமைந்தபின் சம்பவன் ஈரக்கையுடன் சுற்றிலும் நோக்கினான். கலங்கள் அனைத்தும் ஈரம் வழிந்துலர சாய்ந்தும் சரிந்தும் வாய்திறந்து நின்றுகொண்டிருந்தன. அடுமனைத் தரையை நன்றாக கழுவித்துடைத்து பூச்சிகள் படியாமலிருக்க புல்தைலமிட்டிருந்தனர். அவன் புன்னகையுடன் நோக்கியபடி அடுமனையின் கூடத்தை சுற்றிவந்தான். அஸ்வகன் “நாம் படுத்துக்கொள்ளலாமா? இப்போதே பொழுது கடந்துவிட்டது. காலையில் எழுந்து தொடங்கிய பணி. தசைகள் உடைந்துவிடப்போகின்றவைபோல் வலிகொண்டிருக்கின்றன” என்றான்.

“அடுதொழிலுக்கு இணையான உவகை அளிப்பது கழுவி நாள் களைந்து நாளைக்கென ஒருங்கியிருக்கும் அடுமனை” என்றான் சம்பவன். “கலங்களும் இரவுறங்கவேண்டும் என்று சொல்கிறது நூல். ஆகவே அடுமனை மிச்சிலுடன் எந்தக் கலத்தையும் இரவில் விட்டுவைக்கலாகாது. நாளின் எச்சம் இருக்கையில் அவை விழித்திருக்கும். துயில் நிறைந்து மறுநாள் விழித்தெழும் கலம் புன்னகைக்கும். அதில் சமைக்கையில்தான் அது உளம் நிறைந்து அமுது விளைவிக்கும்.”

அஸ்வகன் “நிசி கடந்தபின் தத்துவம் பேசுவது நல்லதல்ல. பேய்கள் வந்து அவற்றை கேட்கத்தொடங்கினால் அவை தத்துவத்திற்குள் புகுந்துவிடும்” என்றபின் “ஏற்கெனவே வேண்டிய பேய்கள் அங்கே உள்ளன” என்றான். அவர்கள் அடுமனைக் கதவை இழுத்துப் பூட்டியபின் வெளியே சென்றனர். விண்மீன்கள் செறிந்த வானத்தின் கீழே காற்றில் சருகுகள் அசைந்துகொண்டிருந்தன. குளிர்பட்டு பிடரி சிலிர்த்தது. “நல்ல குளிர்” என்றான் அஸ்வகன். “நான் இங்கேயே படுத்துக்கொள்கிறேன். அடுமனை வெப்பத்தை இக்குளிர் நிகர்செய்யும்” என்றான்.

“அதோ” என்றான் அஸ்வகன். அப்பால் ஒரு ஈச்சம்பாயை எடுத்து திண்ணையில் விரித்து வலவன் துயின்றுகொண்டிருந்தான். “மூச்சொலி இல்லை என்பதனால் அவர் துயிலுமிடமே தெரிவதில்லை” என்றான் சம்பவன். “அருகிலேயே நானும் படுத்துக்கொள்கிறேன். அவர் அருகே படுப்பதைப்போல நான் மகிழ்வுகொள்ளும் தருணம் பிறிதில்லை.” அஸ்வகன் “தந்தையருகே படுக்க மைந்தர் விழைவதுண்டு” என்றான். “தந்தை நம்மை ஒரு பொழுதில் இறக்கி விட்டுவிடுகிறார். நாம் தந்தையிடமிருந்து அகன்றும் விடுகிறோம்” என்றான் சம்பவன்.

ஈச்சம்பாய் ஒன்றை விரித்து அவன் படுத்துக்கொண்டான். “நான் உள்ளே சென்று படுக்கிறேன்” என்று அஸ்வகன் சென்றான். திண்ணையில் மென்முருக்கு மரத்தாலான தலையணை இருந்தது. அதை எடுத்து வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்து நிலவை நோக்கியபடி மெல்ல விழிசொக்கினான். நிலவெழுந்த காடு திறந்துகொண்டது. மரங்களுக்குள் தேங்கிய நிலவொளி ஒரு பெண்ணென உருக்கொண்டு எழுந்து வந்தது. பாம்பென சீறிய மூச்சு. விழி மின்னொளி. அவன் அவளிடம் “எங்கு சென்றிருந்தாய்?” என்றான். அவள் “நான் வேறு என்கிறார்கள்” என்றாள். “யார்?” என்றான். “முதுமகள், என்னைப் பிளந்து இரண்டாக ஆகிவிடும்படி ஆணையிடுகிறாள்.”

மெல்லிய முழவோசை கேட்டு அவன் எழுந்தபோது முன்னரே வலவன் எழுந்து நின்றிருந்தான். இருளில் அடுமனை முற்றத்திற்கு அப்பால் நிழலுருவென சூதர் ஒருவர் நின்றிருந்தார். சடைத்தலையின் மயிர் மூன்றாம்பிறை ஒளியில் மெல்லப்பிசிறி பரவியிருந்தது. மரவுரி அணிந்த நீண்ட மேனி. தாடி நிழல் மார்பில் விழுந்திருந்தது. “நெடுந்தொலைவிலிருந்து வருகிறேன். இப்பின்னிரவில் இல்லங்களின் கதவைத் தட்டத் தோன்றவில்லை. அன்னசாலை என உசாவியபோது ஒருவன் இதை சுட்டிக்காட்டினான்.”

“வருக, உத்தமரே!” என்றான் வலவன். “உரிய இடத்திற்குத்தான் வந்துள்ளீர்.” “நான் மாகத சூதன், திரயம்பகன். பாடியலைபவன். நேற்று முன்னாள் உண்டேன். இந்நகரை தெற்கு மயானவாயில் வழியாக வந்தடைந்தேன்” என்றார். “எனக்கு உணவில் நெறியென ஏதுமில்லை. எவ்வுணவும் ஏற்பேன். கலத்தைச் சுரண்டிய வண்டலோ மிச்சிலோகூட உகந்ததே.” வலவன் “ஆனால் வந்து அமர்ந்தவருக்கு அளிக்கும் உணவு அமுதென்றிருக்கவேண்டும் என்பது எங்கள் கொள்கை” என்றான்.

சம்பவன் “நான் கலம்கழுவி வைத்துவிட்டேன், ஆசிரியரே” என்றான். “நன்று. இவருக்கு மிகச் சிறிதளவு உணவே போதும். நான் சமைக்கிறேன்” என்றான் வலவன். சம்பவன் “இல்லை, நீங்கள் அமருங்கள். நான் விரைவிலேயே சமைத்துவிடுவேன்” என்றான். வலவன் அவன் தோளை அழுத்தி புன்னகைத்தபின் உள்ளே சென்றான். “நான் கைகால்களை கழுவிக்கொள்கிறேன்” என்றார் திரயம்பகர்.

அவர் அமர்ந்துகொண்டு கண்களை மூடி சீராக மூச்செறிந்து துயில்பவர்போல அமைந்தார். தாலத்தில் மூன்றுவகையான உணவுடன் வலவன் வெளியே வந்தான். “உத்தமரே, அருந்துக!” என்றான். “நான் சுவையறிந்து உண்ணலாகாதென்ற நெறிகொண்டவன். இது எதற்கு?” என்றார் திரயம்பகர். “நான் சுவையை உருவாக்கியாகவேண்டும் என்னும் நெறிகொண்டவன்” என்றான். அவர் உணவை சீரான அசைவுகளுடன் உண்டார்.

கைகழுவி அவர் அமர்ந்ததும் வலவன் “துயில்கொள்க, உத்தமரே!” என்றான். அவர் “அடுமனையாளனின் அறம் உன்னில் வாழ்கிறது, பேருடலனே” என்றார். “உன் தோள்களைக் கண்டால் நீ அஸ்தினபுரியின் பீமனுக்கும் விராடபுரியின் கீசகனுக்கும் நிகரானவன் என்று தோன்றுகிறது.” வலவன் “நான் விரும்பி உண்பவன், உத்தமரே” என்றான். அவர் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். வலவன் அவருக்கும் பாய் ஒன்றை விரித்துவிட்டு தான் படுத்துக்கொண்டான்.

அவர் தன் கையிலிருந்த முழவை மீட்டிக்கொண்டு கீற்றுநிலவை நோக்கிக்கொண்டிருந்தார். “எதை எண்ணிக்கொண்டிருக்கிறீர், சூதரே?” என்றான் வலவன். “பகை தேடிவரும் தோள்கள்” என்றார் சூதர். “இம்முறை அருகிலுள்ளது பகை. பெரும்பகை, ஆனால் மிக எளியது.” வலவன் “கீசகரை சொல்கிறீர்களா?” என்றான். “ஆம்” என்றார் சூதர்.

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் ஒரு கடிதம்

$
0
0

 

vish

பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் விஷ்ணுபுரம் எனும்  மிகப் பெரும் காவியத்தை வாசித்து முடித்து விட்டு இந்த கடிதம் எழுதுகிறேன்.படிக்க ஆரம்பிக்கும் போது  உண்மையில் இதன் உள்ளே செல்ல முடியுமா என்ற பெருத்த சந்தேகத்துடன் தான்

தொடங்கினேன். விஷ்ணுபுரம் போன்ற செவ்வியல் (கிளாசிக்) படித்து எனக்கு அனுபவம் இல்லாதது ஒரு காரணம் ஆக இருக்கலாம். பொதுவாக, முதல் 20-25 பக்கங்களில் ஒரு புத்தகத்திற்குள் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை எனறால் அதை படிக்க மாட்டேன். ஆனாலும் விஷ்ணுபுரத்தை பொறுத்த வரையில், அதனை வாசிப்பதையே ஒரு பெருமையாகவும் தகுதியாகவும் எண்ணியதால் , அற்புதமான ஒரு அனுபவமாக இருக்க போவதை எதிர் பார்த்து , எளிதாக விட்டு விட கூடாது என்று  நினைத்து தொடர்ந்தேன். என் எண்ணம் வீண் போக வில்லை. எவ்வளவு விஷயங்கள், உணர்வுகள், கிளர்வுகள் , கதைகள், தத்துவங்கள் ,வரலாறுகள் – ஒரே புத்தகத்தில். ஒட்டு மொத்த இந்திய தத்துவ ஞான மரபையும், சில நூறு ஆண்டுகளில் நடக்கும் நிகழ்வுகளை காவியமாக, செவ்வியலாக தொகுத்து அளித்து உள்ளீர்கள். பல தத்துவ வினாக்களை இந்த ஒரே நூலில் நாம் காண முடிகிறது .இதை எழுதும் பொழுது உங்களின் மன நிலை எப்படி  இருந்திருக்கும் என ஊகிக்கிறேன் .ஒரு மிகச் சிறந்த படைப்பாளிக்கு  கூட எளிதில் சாத்தியம் இல்லாத ஒரு படைப்பு என நினைக்கிறேன். என்னுடைய கருத்து,  தமிழில் உங்களின் இந்த ஒரு படைப்பு போதும்.  கால காலத்திற்கும் இது நிலைத்து இருக்கும். நூல் பற்றி எதோ ஓரளவு  நான் எழுதவேண்டும் என்றால்  பல முறை  நான் வாசித்தால் மட்டுமே சாத்தியம் . நிச்சயம் வாசித்து கொண்டே இருப்பேன். இரண்டாம் முறை வாசிக்க தொடங்கி விட்டேன்.

ஆங்கில புதினங்களை பொறுத்த வரை, அது அளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை மிக எளிதாக விரைவில் முடித்து விடுவது எனது வழக்கம். இது நாள் வரையில் நான் அதிக காலம் எடுத்து கொண்டு வாசித்தது விஷ்ணுபுரம் தான்.  பல வித மன நிலைகளை எனக்கு அது கொடுத்தது. சில குறிப்பிட்ட  பகுதிகளை  வாசிக்கும் பொழுதும் சரி, வாசிப்பை முடித்த பிறகும் சரி ஒரு விவரிக்க முடியாத , இனம் புரியாத மன நிலையில் இருந்தேன் என சொல்ல முடியும் . தொண்டையில் எதோ இருந்து கொண்டே இருந்தது. உங்கள் எழுத்து வாசகனின் ஆன்மாவோடு பேசும் என்று ஒரு கட்டுரையில் படித்ததாக நினைவு. அது தானா என்று தெரிய வில்லை. எனக்கு  இருந்தது துக்க மன நிலை இல்லை என்று மட்டும் சொல்ல

முடியும். இப்படி ஒரு மன நிலை ஒருவருக்கு கதை படித்து வரும் என்று சில காலம் முன்பு சொல்லி இருந்தால் நான் நம்பியே இருக்க மாட்டேன். உங்களின் சில கதைகளை படித்த பிறகு எதுவும் சாத்தியம் என புரிந்தது. பித்து மாதிரியான மனநிலை உள்பட…  வார்த்தைகளை வைத்து கொண்டு உணர்வுகளோடும், உள்ளங்களோடும் சுழன்று, விளையாட்டு நடத்துகிறீர்கள்.  நான் வாசித்த உங்களின் மற்ற புனைவுகளையும் சேர்த்தே சொல்கிறேன் .

 

விஷ்ணுபுரத்தை மேலும் நுட்பமாக  படித்து விட்டு அந்த அனுபவங்களையும் நான் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். எனது தத்துவ வாசிப்பில் மிக முக்கிய இடத்தில அதை வைத்திருப்பதால், என்றென்றும் நினைவில் வைக்க அது உதவும் என நான் கருதுகிறேன். அதனுள் நான் உள் செல்ல உதவிய நூல் என்று இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்களை நான் குறிப்பிடவேண்டும்.

 

விஷ்ணுபுரம் பொறுத்த வரையில் மற்றொரு முக்கியமான விஷயம்,  வாசிக்கும் நாட்களில் முழுமையாக கதை களத்தோடு  நான் பயணித்ததால், கனவில் கூட கதை வாசிக்கும் உண ர்வோடு இருந்து கொண்டிருந்தேன். தூக்கத்தில் தெளிவாக எனக்கு விஷ்ணுபுரம் வாசிக்கிறோம் என்ற உணர்வும்,  புத்தகத்தில் உள்ள வாக்கியங்களை கூட என்னால் படிக்க முடிந்ததும் ஆச்சர்யம் அளிக்கும் உண்மை. இப்படி  மிகவும் அரிதாகவே நிகழக்கூடியது என்று நான் நினைக்கிறேன்.  எனக்கு இதுவே முதல் அனுபவம், பிறகு கூகுளில் தேடிய பொழுது அறிவியல் ரீதியாக இது சாத்தியம் இல்லை எனவும் lucid dream  -இல் மட்டுமே இது ஏற்படுகிறது என படித்தேன். என்னை பொறுத்த வரை, என்னுடைய அனுபவம் நிச்சயம் பாதி விழிப்பு நிலையோ அல்லது கனவை கனவாகவே அறிந்த உறக்கமாகவோ இல்லை. எனது அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பரிடம் இதை சொன்ன பொழுது அவர் இப்படி எல்லாம் நிகழ்வது மிக மிக அரிது என்றே கூறினார். இதை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இங்கே குறிப்பிடுகிறேன்.

 

உங்களின் புனைவுகளில் காட்சி படுத்துதல் மிக தெளிவாக வருகிறது. பொதுவாக புனைவுகளில் கதை கருவோ,போக்கோ, நிகழ்வுகளோ கொஞ்ச காலம் நினைவில் நிற்கும். உங்களின் பல கதைகளில் அவைகளோடு காட்சிகளும் (visuals )நினைவில் உள்ளது என்பது மிக அதிசயமான உண்மை.கதை கருவை விட அதன் காட்சியை சொன்னால் உடன் கதை நினைவுக்கு வருகிறது . இந்த தெளிவாக காட்சி படுத்தல் என்பது எல்லா கதை ஆசிரியர்களுக்கும் சாத்தியப்படுகிறது என்று என்னால் சொல்ல முடிய வில்லை அல்லது எனக்கு அந்த அனுபவம் இல்லை. மற்ற கதைகளை படிக்கும் பொழுது இப்படி யோசித்ததும் இல்லை.  இந்த காட்சி படுத்துதல் என்பது மிக அற்புதமான ஒரு அனுபவமாக இருந்த புனைவுகள்,  கன்னி நிலம்., இரவு.  இப்பொழுது கூட என்னால் கதையில் உள்ள காட்சிகளை நினைவில் கொண்டு வர முடிகிறது. உங்கள் கட்டுரைகள், கதைகள் பற்றி நிறைய எழுதி கொண்டே இருக்கலாம். உங்கள் இணைய தளத்தில் மேலும் மேலும் வாசித்து கொண்டே இருக்கிறேன். உங்கள் கட்டுரைகள் மிகவும் பயன் அளிப்பவையாக உள்ளது. சீக்கிரம் பல விஷயங்களை பற்றி படிக்க வேண்டும் என நான் நினைத்தாலும், பல்வேறு பணிகளுக்கு இடையில் முழு நேரத்தையும் ஒதுக்க சற்று சிரமமாகவே உள்ளது. உங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்ததால் ஒரு நாளில் 24 மணி நேரம் போத வில்லை. படித்த கட்டுரைகள் பற்றியெல்லாம் பகிர விஷயம் ஏராளம் இருக்கிறது என்றாலும் உங்களின் நேரத்தை அதிகம் வீணாக்க விரும்பாததால் நான் எதுவும் உங்களுக்கு எழுதி அனுப்பவில்லை. நீங்கள் அனுமதி அளித்தால், எனக்கு ஏற்படும் சந்தேகங்கள் மட்டும் அனுப்புகிறேன்.

 

மனமார்ந்த நன்றிகளுடன்

 

சுப்ரமணியன் எஸ் .

 

அன்புள்ள சுப்ரமணியம்

 

நான் எழுதிய நூல்களில் திரும்பி புரட்டிக்கூட பார்க்காத நூல் விஷ்ணுபுரம். அன்று நானிருந்த அவஸ்தைகளின் பதிவு. நெடுந்தொலைவுக்கு வந்துவிட்டேன் என உணர்கிறேன் – அல்லது உண்மையிலேயே வந்துவிட்டேனா என்று ஐயுறுகிறேன்

 

அந்த அவஸ்தைகளாக, தேடலாக அதை வாசிக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஆகவே அதை மீண்டும் அணுகலாம்

 

ஜெ

 

விஷ்ணுபுரம் கடிதம்
விஷ்ணுபுரம்- இருபதாண்டுகள்
விஷ்ணுபுரம்- அற்புதமான உலகம்
விஷ்ணுபுரம் என்னும் அறிதல்
என்றுமுள ஒன்று… விஷ்ணுபுரம் பற்றி
கனவுகளின் அழிவின்மை: விஷ்ணுபுரம் நான்காம் பதிப்பின் முன்னுரை
வாழும் கனவு: விஷ்ணுபுரம் மூன்றாம் பதிப்பின் முன்னுரை
கனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை
கனவுகளின் முதற்படியில்- விஷ்ணுபுரம் முதல் பதிப்பின் முன்னுரை
விஷ்ணுபுரம் மீண்டும்…
விஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு
விஷ்ணுபுரம் வாசிப்பு -கடிதம்
புனைவின் ஆடி- விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம் 1
விஷ்ணுபுரம் முன்னுரை -கேசவமணி
விஷ்ணுபுரம் இன்னொரு கடிதம்
விஷ்ணுபுரம் இரு புதியவர்கள்
விஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி
வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?
விஷ்ணுபுரம் வரைபடம்
விஷ்ணுபுரம்-கடிதம்
விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்
விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்-2
விஷ்ணுபுரம் முதல்வாசிப்பு – ஒரு கடிதம்
விஷ்ணுபுரம் – யார் வாசகர்கள்?
விஷ்ணுபுரம் ஒரு கேள்வி
விஷ்ணுபுரம் கடிதம்
விஷ்ணுபுரம்-கடிதம்
விஷ்ணுபுரம் உதவி
விஷ்ணுபுரம் கடிதங்கள்
விஷ்ணுபுரம் -கடிதம் 
நான் கண்ட விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் – ஒருகடிதம்
விஷ்ணுபுரம்,விவாதம்
விஷ்ணுபுரம்:கடிதங்கள்
விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்
விஷ்ணுபுரம்: கடிதங்கள்
விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்
தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.
விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்
காடு, நிலம், தத்துவம்
நுழைதல் –ஒரு கடிதம்
விஷ்ணுபுரம்:ஓர் இணையப்பதிவு
விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 4, ஜடாயு
விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 3, ஜடாயு
விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு
விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு
விஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-2
விஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-1
விஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ASYMPTOTE பரிசு -கடிதங்கள்-3

$
0
0

 

அன்புள்ள ஜெ.

 

எனக்கு மிகவும் பிடித்து பல நண்பர்களிடம் பகிர்ந்த, ஒரு சிறுகதை.  மொழியை தெரிந்து கொள்வது முதல் பிரயாணம் என எண்ணினேன்.  வார்த்தைகளின் அர்த்தங்களை கதைகள் மூலம் ஒரு மெல்லிய நகைச்சுவையுடன் என்பது, உலக அளவில் பலரைத் தொடக்கூடும் எனத்  தோன்றியது. அதனை ஒரு சிறப்பான மொழி பெயர்ப்பின் மூலம் சுசித்ரா அவர்கள் நடத்திக் காட்டி உள்ளார்கள். நட்பு கலந்த நன்றி.

 

உங்களுக்கும், சுசித்ரா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 

நீங்களே படித்த கதையையும் கேட்டேன். அலுவலத்திற்கு 30 நிமிடம் தாமதம் :) நீங்கள் அருகிலிருந்து படிப்பது போன்ற உணர்வு. அதுவும் மிக சிறப்பாக இருந்தது.

 

எனது நண்பர் (திருமதி, உஷா)  – தமிழ் மெதுவாகத்தான் படிக்க முடியும். ஆனால் உங்கள் ஒளிப்பதிவு கேட்டு, பின் மீண்டும் ஆங்கிலத்தில் படித்து விட்டு உடனே குறுஞ்செய்தி. இரண்டும் மிக அற்புதமென்று. சுசித்ராவிற்கென்று விசேஷ வாழ்த்துக்கள் – அற்புதமான மொழி பெயர்ப்பிற்கு. இப்போது தமிழில் மெதுவாக படித்துக் கொண்டு இருக்கிறார்.

 

தற்போது, வெண்முரசின் நீர்க்கோலம் பற்றி எழுத நினைத்து கொண்டு இருந்தேன். இந்த நிகழ்வின் உற்சாகம் அதனை பின்னே தள்ளிவிட்டது. பிறகு எழுதுகிறேன்.

 

எனக்கு தெரிந்த எல்லோரிடமும் உற்சாகத்துடன் – தமிழ், ஆங்கில, மற்றும் ஒலிப்பதிவை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறேன்.

 

மீண்டும் வாழ்த்துக்கள்

 

அன்புடன் முரளி

 

அன்புள்ள முரளி,

 

நான் அந்த வாசிப்பைக் கேட்டபோது இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்திருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டேன்

ஜெ

 

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

 

இந்தியா தைபே அசோசியேசனின் (India Taipei association – like இந்திய தூதரகம்) முகப்புத்தகத்தில் இன்றய பதிவில் உங்கள் படைப்புக்கு கிடைத்தஅங்கிகாரம் பற்றிய செய்தி குறிப்பு வெளியாகியிருக்கிறது.

 

அதன் லிங் உங்கள் பார்வைக்கு

 

https://www.facebook.com/ITATW/posts/1419576921456375

 

இந்திய தைபே அசோசியேசனின் தற்போதய முதன்மைஇயக்குனர் திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்கள்இலக்கியத்தில் சிறந்த ஈடுபாடு கொண்டவர், சிறந்தஎழுத்தாளர். சீன சங்க இலக்கியத்தை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

 

அவரை பற்றிய குறிப்புகள்

https://en.wikipedia.org/wiki/Sridharan_Madhusudhanan

 

அன்புடன்,

சு. பொன்முகுந்தன்.

 

அன்புள்ள பொன் முகுந்தன்,

ஸ்ரீதரையும் அவர் மனைவி வைதேகியையும் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத்தெரியும். அப்போது ரயில்வேயில் பணியாற்றியபடி நாடகம் போட்டுக்கொண்டிருந்தார். [சூரியனின் கடைசிக்கிரணம் முதல் முதற்கிரணம் வரை] இந்திய ஆட்சிப்பணிக்கு படித்துக்கொண்டுமிருந்தார். பின்னர் தொடர்புகள் இல்லை

 

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் பெரியம்மாவின் சொற்கள் சிறுகதைக்கு சர்வதேச விருது கிடைத்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியம்மாவின் சொற்கள் ஒரு அபாரமான கதை என்பதிலோ, மொழிகளைத் தாண்டியும் வாசிக்கப்பட வேண்டிய கதை என்பதிலோ எந்தச் சந்தேகமுமில்லை.

இந்தக் கதையை நான் முதல் முதலாக வாசித்த போதே, It is such a wonderful classic என்ற முடிவுக்குத்தான் வந்தேன். அதன் தாக்கத்தால்தான் 2015-ல் கதை வெளியான போதே அதைக் குறித்து எழுதியுள்ளேன். இன்று மீண்டும் அதை வாசித்தபோது சரியாகவே சொல்லியிருப்பதாகப் பட்டது.

வாழ்த்துக்களும், விருதுகளுமே சிறந்த படைப்புகளை முன்னெடுத்துச் செல்லும் என்ற வகையில் தங்களின் பெரியம்மாவின் சொற்கள் தேசம், மொழி கடந்து சென்றிருப்பது பெருமைக்குரியது.

http://kesavamanitp.blogspot.com/2015/11/3.html
அன்புடன்,

கேசவமணி

 

அன்புள்ள கேசவமணி,

கோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

ஜெ

 

ஜெ வணக்கம்

 

உங்களுக்கும், சுசித்ராவுக்கும் பாராட்டுக்கள். மொழியாக்கத்தை பற்றிய கதை. அதன் ஆங்கில மொழியாக்கத்திற்கு, மொழியாக்கத்தை ஆராய்ச்சி செய்யும் டேவிட் பெல்லோஸின் தேர்வு.

 

ஆங்கில மொழியாக்கம் ஒரு வகையில் reverse translation, ஆங்கிலத்தில் வாசிப்பவர்க்கு தமிழை அறிமுகம் செய்கிறது. இந்திய புராண கதைகளையும்.

 

முக்கியமயாக சுசித்ராவின் நேர்காணல் சிறப்பாக இருக்கிறது.

 

http://www.asymptotejournal.com/podcast/episodes/2017/2017-06-16-asymptote-podcast-ep0022-interview-with-ramachandran.mp3

 

மொழியாக்கம் செய்வதற்கு இது இன்னும் உத்வேகம் அளிக்கிறது.

 

சதீஷ் கணேசன்

 

அன்புள்ள சதீஷ் கணேசன்,

நலம்தானே?

இந்த விருது குறித்த செய்தி மலையாளத்தில் 5 செய்தித்தாள்களில் வந்துள்ளது. வங்க,இந்தி, கன்னட மொழி நாளிதழ்களிலும் வந்துள்ளதாகச் சொன்னார்கள். தமிழில் இதுவரை எங்கும் எந்தச் செய்தி ஊடகங்களுக்கும்  இது ஒரு செய்தியாகவே தெரியவில்லை.

இது நம் சூழலின் ஒரு சித்திரம். அறிவார்ந்த வறுமை. வம்புகளுக்கு அப்பால் பண்பாட்டு நடவடிக்கைகள் எதிலும் ஆர்வமில்லாமை. இப்பின்னணியில் எழுதுவதென்பது தனக்குத்தானே செய்துகொள்ளவேண்டிய ஒரு செயல். கனவுகாண்பதுபோல. அதன் இன்பத்திற்காக மட்டுமே

எழுதவரும் ஒவ்வொருவருக்கும் இதையே சொல்லவேண்டியிருக்கிறது. சுந்தர ராமசாமி என்னிடம் இதைச் சொன்னார். அடுத்தலைமுறை எழுத்தாளர்களுக்கு நான் சொல்கிறேன்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச்சித்திரம்

$
0
0

C9Wpss1UMAA4fn6

 

ஜெ

 

இந்த படம் வாட்ஸப்பில் வந்தது. முதற்கணம் ஒரு பெரிய பெருமிதம் எழுந்தது. நானெல்லாம் சரித்திரத்தைச் சரியாகப் படிக்காதவன். ஆனால் பின்னர் இப்படி இல்லையே என்றும் தோன்றியது. இந்தவகையான பிரச்சாரங்களின் உண்மை என்ன?

 

ஜெயக்குமார்

 

அன்புள்ள ஜெயக்குமார்

 

முதலில் இந்தவகையான பிரச்சாரங்களின் உளவியல் என்ன என்றுதான் பார்க்கவேண்டும். இரண்டு அம்சங்கள் இதிலுள்ளன. ஒன்று பரிபூர்ணமான அறியாமை. மிக எளிய அளவில் வரலாற்றை புரட்டிப்பார்த்தால்கூட கண்டுகொள்ளக்கூடியவற்றை அறியாமலிருப்பது.

 

அதைவிட தாழ்வுணர்ச்சி. இவ்வகையில் பொய்யான செய்திகளை பரப்புவதும் பார்த்துப் புல்லரிப்பதும் உள்ளூர உறைந்த தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடுகள். எவரேனும் ஏதேனும் நம்மைப்பற்றிப் பாராட்டிச் சொல்லிவிட்டால் அவருடைய தகுதி என்ன, அச்செய்தி என்ன என்றெல்லாம் யோசிக்காமல் புல்லரிப்பது இன்னொரு வெளிப்பாடு.

 

இதேபோல எவ்வளவு செய்திகள் கொரியாவின் அரசி ஒரு தமிழ்ப்பெண். எகிப்திய மொழி உண்மையில் தமிழ்தான், உலகிலேயே மிகப்பெரிய கோயில் தஞ்சைபெரியகோயில், நான்குலட்சம் வருடங்களுக்கு முந்தைய தமிழ்ப்பண்பாடு கண்டெடுப்பு என வந்துகொண்டே இருக்கின்றன. இதை நம்பி பல அரசியல்கட்சிகளே இன்று செயல்பட்டுவருகின்றன. படித்த இளைஞர்கள்கூட இதை நம்புகிறார்கள்.

 

கீழடியை வைத்து நான் பார்க்கநேர்ந்த செய்திகளை தமிழரல்லாதவர் பார்க்கலாகாது என பதறுகிறேன். இணையம் அழியாதது என்கிறார்கள். இந்தக்கேனத்தனங்களை நாளை நம் வாரிசுகள் பார்ப்பார்களே என்று நினைத்து கசப்பு கொள்கிறேன்.

 

இவ்வகையான செய்திகளைப் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். மூடநம்பிக்கை நிறைந்த செய்திகளே வாட்ஸ்அப்பில் அதிகமும் பரவுகின்றன. அது இந்தியக்குணம். ஆனால் அதில் நாம் மட்டுமே இந்தவகையான வரலாற்றுப்பீலாக்களுக்காக ஏங்குகிறோம்

 

கேரளத்தில் அதிகமும் வருவன ‘போராட்ட’ செய்திகள். பெரும்பாலும் பொய்யானவை. கோயில்நிலங்களை, சர்ச் நிலங்களை, மசூதி நிலங்களை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிவிட்டார்கள் போராடுங்கள் என்றவகைச் செய்தி. 90 சதவீதம் பொய். கர்நாடக நண்பர் ஒருவரிடம் கேட்டேன். பெரும்பாலும் மதம்சம்பந்தமான மூடநம்பிக்கைகள். பல்வேறு ஸ்தலங்களின், மனிதக்கடவுள்களின் அற்புதங்கள். ஆந்திராவிலும் அப்படியே.

 

தமிழில் நமக்கு இரண்டாவது வகை மூடநம்பிக்கைகளுக்குக் குறைவில்லை. ஆனால் அதே அளவுக்கு இந்த வகையான வரலாற்று மூடநம்பிக்கைகள். நம் இணையத்தில் பொதுத்தளத்தில் தமிழக, இந்திய வரலாறு குறித்துப்பேசப்படும் அனைத்துமே முற்றிலும் பொய் என துணிந்து சொல்லிவிடலாம். தேடிப்போனால் லட்சத்தில் ஒரு செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.

puli

புலிகேசியின் அவை

 

 

சரி, மேலே சொன்ன செய்திக்கு வருகிறேன். நமக்குத் தமிழ் வரலாறு கிடைக்கத் தொடங்கும் காலத்தில், இந்தியவரலாறு குறைந்தபட்ச ஆதாரங்களுடன் எழுதத்தொடங்கப்படும் காலத்தில் .த

சங்ககாலம் எனச் சொல்லப்படும் நிலையற்ற அரசியல்குழப்பங்கள், உட்போர்கள் முடிவுற்றதும், தமிழகம் களப்பிரர் ஆட்சிக்குள் வந்துவிட்டது.. களப்பிரர் சாதவாகனப்பேரரசின்  சிற்றரசர்கள். கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் முந்நூறாண்டுக்காலம் அவர்கள் தமிழகத்தை ஆண்டனர்

 

அதன்பின்னர் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் தமிழகத்தை தோற்கடித்தனர். கிபி 620 வாக்கில் இரண்டாம் புலிகேசியும், பின்னர் 740 வாக்கில்  இரண்டாம் விக்ரமாதித்யனும் பல்லவர்களை தோற்கடித்து தமிழகத்தை கைப்பற்றினர். அதன்பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் ஹொய்ச்சாளர்கள் மதுரைவரை கைப்பற்றி சிலகாலம் ஆண்டனர்

malik

மாலிக் காபூர்

 

1311 ல் மாலிக் காபூர் தலைமையில் சுல்தானியப்   மாலிகாபூரின் தலைமையில்தமிழகத்தை வென்று மதுரையை கைப்பற்றின.    மாலிக் காபூரின் தளபதிகள் சுல்தான்களாக பட்டம்சூட்டிக்கொண்டு மதுரையை ஆண்டனர்.திருவனந்தபுரத்திலும் அவர்களின் படைத்தளபதி ஒருவனின் தலைமையில் நேரடியாக ஆட்சி நடந்தது.

 

1378ல் அவர்களிடமிருந்து மதுரையை கைப்பற்றி பாண்டியர்களுக்கு அளித்து கப்பம்கட்ட வைத்தவர் விஜயநகரப்பேரரசின் குமார கம்பணர்.1528 ல் விஜயநகர தளபதி நாகமநாயக்கர் மதுரையை வென்றார். 1529 அவரது மகன் விஸ்வநாத நாயக்கர் பாண்டிய நாட்டை முழுக்க கைப்பற்றி நாயக்கப்பேரரசை அமைத்தார். . நடுவே முகமது பின் துக்ளக்கும், ஔரங்கசீபும் தங்கள் படைகளை அனுப்பி தமிழகத்தை வென்று நாயக்கர்களிடம் கப்பம் பெற்று சென்றனர்.

 

1736 ல் நாயக்க அரசி மீனாட்சி சந்தாசாகிப்பால் வெல்லப்படுவது வரை நாயக்க ஆட்சி மதுரையில் நீடித்தது. நாயக்கர்கள்தான் தமிழகத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறையைக் கொண்டுவந்தனர். பாளையக்காரர்கள் பெரும்பாலும் அனைவருமே தெலுங்குச்சாதியினர்.

1

ஷாஜி பான்ஸ்லே

 

தமிழகம் பலமுறை மராத்தியர்களால் கைப்பற்றப்பட்டது. சிவாஜியின் தந்தை ஷாஜி பான்ஸ்லே பீஜப்பூர் சுல்தானின் தளபதியாக 1638ல் தஞ்சைவரை வந்து கப்பம் பெற்றுச் சென்றார். அவருக்குப்பின்னால் சிவாஜி 1674ல் தஞ்சையைக் கைப்பற்றினார். தமிழகத்தின் பெரும்பகுதியை பிடித்து தன் தம்பி ஏகோஜியை தஞ்சை மன்னராக நியமித்துச்சென்றார். தஞ்சை மராட்டிய அரசு அவ்வாறு தொடக்கமிடப்பட்டது.

 

நடுவே தஞ்சை மராட்டியர் கையிலிருந்து சென்றது. மீண்டும் சிவாஜியின் மகன் சம்பாஜியால் கைப்பற்றப்பட்டது. செஞ்சியும் தஞ்சையும் மராட்டியரின் தலைமையகங்களாக இருந்தன. வெள்ளையர் ஆட்சி வரும்வரை தஞ்சை மராட்டிய ஆட்சியிலேயே இருந்தது. தஞ்சை மராட்டிய அரசகுலம் [சரபோஜிகள்] இன்றும் உள்ளனர்

1

சிவாஜி

 

1748 முதல் மெல்ல தமிழகம் பிரிட்டிஷ் ஆட்சிக்குக்கீழே சென்றது.ராபர்ட் கிளைவ் தமிழகத்தில் வெள்ளையர் வேரூன்றுவதற்கான அடித்தளத்தை அமைத்தார்.. அவர்கள் சென்னையை மையமாகக் கொண்டு ஆண்டாலும் பழைய பாளையக்காரர்களை ஜமீன்தார்களாக ஆக்கி ஆட்சியை ஒப்படைத்திருந்தனர். அவர்களில் தமிழர்கள் மிகச்சிலரே.

 

மௌரியப்பேரரசு முதல் பெரும்பாலான பேரரசுகளின் வரைபடத்தில் தமிழகம் காட்டப்படுவதில்லை. அதைப்பார்த்து சில அப்பாவிகள் உருவாக்கும் பீலாதான் தமிழகம் வெல்லப்படவில்லை என்பது. உண்மையில் தமிழகம் அனைவராலும் வெல்லப்பட்டது. அனைவருக்கும் நாம் கப்பம் கட்டினோம். அல்லது அவர்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டோம். ஆகவே நேரடியாக நாம் அவர்களின் ஆட்சிக்குக் கீழே செல்லவில்லை.

visva

விஸ்வநாத நாயக்கர் சிலை

 

[எந்தப் பேரரசின் வரைபடத்திலும் கேரளம் இருப்பதில்லை. ஏனென்றால் அது மலைகள் சூழ்ந்த வெறும்காடு அன்று. அனைவருக்கும் கப்பம் கட்டி வாழ்ந்தனர். அதைக்கண்டு எந்த மலையாளியும் இப்படி தாண்டிக்குதித்ததை நான் கண்டதில்லை]

 

உதாரணமாக, விஜயநகர ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலேயே குமார கம்பணனால் தமிழகம் கைப்பற்றப்பட்டது. கடைசிவரை அவர்கள் ஆட்சியிலேயெ இருந்தது. ஆனால் மதுரைநாயக்கப் பேரரசு தனியாகக் குறிக்கப்படுவதனால் விஜயநகரப்பேரரசின் வரைபடத்தில் தமிழகம் இருப்பதில்லை.

 

அதேபோல கில்ஜியின் பேரரசின் கீழ் மதுரை இருப்பதில்லை. ஆனால் மதுரையை கைப்பற்றிய மாலிக் காபூர் தன் பிரதிநிதியை அங்கே ஆட்சியாளனாக ஆக்கிச்சென்றான். அவர்கள் மதுரை சுல்தான்களாக ஆனார்கள்.

 

ஏனென்றால் இந்தியப்பெருநிலத்தில் தமிழகம் மிகச்சிறிய பகுதி. அன்றைய தமிழகம் வளமானதோ பெரிய அளவில் வருமானம் உள்ளதோ அல்ல. அதை நேரடியாக ஆட்சிசெய்யவேண்டிய அவசியமுண்டு என பெரிய அரசுகள் எண்ணவில்லை.

 

மாலிக் காபூர்  மதுரைக்குச் சுல்தானாக ஆக்கிவிட்டுச் சென்ற குஸ்ரவ்கான்  மாலிக் காபூரின் வாளை தூக்கிக்கொண்டு உடன்செல்லும் உதவியாளர். மதுரை நாயக்க அரசை அமைத்த  விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயரின் அடைப்பக்காரர்.

 

தமிழகம்மீது வந்த படையெடுப்பாளர்களில் அனேகமாக எவருமே தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டதில்லை. அன்னியருடனான போரில் தமிழகம் அடைந்த வெற்றிகள் சாளுக்கியர்களையும் ஹொய்ச்சாளர்களையும் ஒருமுறை தோற்கடித்தது மட்டுமே.

clive

ராபர்ட் கிளைவ்

 

ப.சிங்காரம் அவருடைய ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் “தன்மேல் படைகொண்டு வந்த எவரையுமே தோற்கடித்துத் திருப்பியனுப்பாத பெருந்தன்மைகொண்டது தமிழர் வீரம்” என நக்கலடிக்கிறார்.

 

தமிழகம் தமிழகத்து அரசர்களால் ஆளப்பட்டது தெளிவாக வரலாறு உருவாகிவராத காலகட்டமாகிய சங்ககாலத்தில். ஒரு இருநூறாண்டுக்காலம். அப்போதே மௌரியர்கள் காஞ்சிவரை வந்ததற்குச் சான்று உள்ளது. அதன்பின் பல்லவர்களின் நூறாண்டு [பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்றாலும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்]

 

அதன்பின் பிற்காலச் சோழர்களின் இருநூறாண்டுக்காலம். [சோழர்களும் முழுக்க தமிழர்கள் அல்ல என்றாலும்] அதன்பின்  பிற்கால பாண்டியர்களின் ஐம்பதாண்டுக்காலம். அவ்வளவேதான். ஈராயிரம் ஆண்டுகளில் வெறும் ஐநூறாண்டுக்காலம் மட்டும்

 

இதை சுயஇழிவு கொள்வதற்காகச் சொல்லவில்லை. இந்த உண்மை நமக்கு உள்ளூரத் தெரியும் என்பதனால்தான் நாம் பொய்யான பெருமிதங்களை உருவாக்கிக் கொள்கிறோம் என்கிறேன். இதிலிருந்து விடுபட்டால் மட்டுமே நாம் மெய்யான பெருமிதங்களை அடையமுடியும்

 

*

 

வரலாற்றை இவ்வகையான அசட்டு இனம், மொழி, மதம் சார்ந்த பெருமிதங்கள் வழியாக அறிவது போல அபத்தம் வேறில்லை. அதை அறிவதற்கு வரலாறு இயங்கும் முறை, அதன் பொருளியல் அடிப்படைகள், புவியியல் அடிப்படைகள் மற்றும் பண்பாட்டுக்கூறுகளையே கருத்தில்கொள்ளவேண்டும்.

 

தமிழகம் எப்போதும் எளிதில் தாக்கி வெல்லக்கூடிய நிலமாக இருந்தது ஏன்? நிலவியல், பொருளியல், பண்பாட்டு விளக்கங்கள் அதற்குச் சாத்தியம்.

 

ஒன்று நிலவியல். அன்றைய தமிழகத்தில் காவேரிக்கரை தவிர எங்குமே பெரிய அளவில் வேளாண்மை இல்லை. கணிசமானநிலம் அரைப்பாலை [இன்று இத்தனை ஏரி, கால்வாய் பாசனத்திற்குப்பிறகும் இப்படி உள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள்] ஆகவே மக்கள்தொகை மிகக்குறைவு. அன்றைய படைகளின் ஆற்றல் என்பது முதன்மையாக எண்ணிக்கைதான்

 

இந்திய நிலப்பகுதியில் இரு நதிப்படுகைகளே வேளாண்மைக்கு உகந்தவை அன்று. சிந்து—கங்கைச் சமவெளி. கோதாவரி முதல் கிருஷ்ணா வரையிலான நிலம். இப்பகுதியில்தான் மக்கள்தொகைப்பெருக்கம் நிகழ்ந்தது. ஆகவே அங்கே பெரிய படைகள் உருவாயின. பேரரசுகள் பிறந்தன. அவை மக்கள்தொகை குறைவான நாடுகளை எளிதில் வென்றன

 

இரண்டு பொருளியல்..பேரரசுகள் வளர்வதற்கு உகந்த பொருளியல்சூழல் என்ன என்று பார்க்கவேண்டும். கங்கையும் சிந்துவும் மகாநதியும் கிருஷ்ணாவும் கோதாவரியும் மிகப்பெரிய நதிகள். பெரிய கப்பல்கள் அவற்றில் சென்றிருக்கின்றன. அவற்றால் பெரிய துறைமுகங்கள் வளர்ந்தன. பொருளியல் உபரி உருவானது.

 

அது வலிமைவாய்ந்த பேரரசுகளை நிலைநிறுத்தியது. தமிழகத்தில் சங்ககாலத்தில் இச்சிறுநிலப்பகுதிக்குள் மூன்று முதன்மை அரசர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய அரசர்களும் இருந்தனர். ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொண்டிருந்தனர். அதே காலகட்டத்தில் வடக்கே மைய இந்தியா முழுக்க சாதவாகனப்பேரரசின் ஆட்சிக்குக் கீழே இருந்தது., இன்றையஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய நிலங்கள் .

 

மூன்றாவதாக பண்பாடு. இந்தியாவில் போர்ச்சாதியினர் சிலரே. பிறர் போர் அறியாத தொழில்சாதியினர். ஆகவே படைகளின் எண்ணிக்கை ஓர் அளவுக்குமேல் பெருகமுடியாது. சாதிமுறை இவ்வாறு இந்தியச் சமூகத்தை தேங்கவைத்தது. அதேசமயம் வரண்ட பாலைநில மக்கள் அனேகமாக அனைவருமே படைவீரர்கள்தான். ஆகவே ஜெங்கிஸ்கான் உலகை வெல்லமுடிந்தது. ஆப்கானியரும் துருக்கியரும் இந்தியாவை வெல்லமுடிந்தது.

 

தமிழகத்தை நாயக்கர்கள் ஏன் வென்றார்கள்? நாயக்கசாதியினரில் அனைவருமே போர்வீரர்கள். தீண்டப்படாதவர்கள் எனக் கருதப்பட்ட பகடைகள்கூட.அதேசமயம் தமிழகத்தில் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் தீண்டப்படாத சாதியினராக பொதுச்சமூகத்தில் இருந்து ஒதுக்கி வயல்வெளியில் அடிமைகளாக வாழ்ந்தனர்.  ஆகவே அவர்களின் படைபலத்தை தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளமுடியவில்லை.

 

தமிழகம் இந்தியாவின் மையநிலங்களில் இருந்த அரசுகளுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய நிலப்பகுதி. குறைவான வளங்கள் கொண்டது. சோழர்காலத்தில்தான் நமக்கு பெரிய அளவில்பாசன வசதிகள் உருவாயின. ஏரிகள் வெட்டப்பட்டன. விளைச்சல் பெருகியது, மக்கள்தொகை வளர்ந்தது. ஆகவேதான் சோழர்கள் சற்றுப்பெரிய அரசை உருவாக்கமுடிந்தது. ஆனால் நம்மால் மிகப்பெரிய நதிகள் பாயும் மையநிலத்தின் அரசுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கவில்லை. இதுவே வரலாற்றுச்சித்திரம்

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவையில் ஒருநாள்..

$
0
0
9

கே.என்.செந்திலுக்கு நினைவுப்பரிசு

10

இன்று காலை நானும் அரங்கசாமியும் கிருஷ்ணனும் கதிர்முருகனும் கோவை ஞானியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம். முன்னர் பார்த்ததுபோல் இல்லாமல் உடல்நிலை தேறி நன்றாக இருக்கிறார்.. சற்றுநேரம் அரசியல், இலக்கியம்,சமகாலப் பொருளியல் என பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் செந்தமிழ்த்தேனீ சந்திப்புக்கு ஏற்பாடுசெய்திருந்தார்

7

கவிஞர் இசைக்கு நினைவுப்பரிசு நாஞ்சில்நாடன்

 

6

கார்த்திகைப் பாண்டியனுக்கு போகன்

 

நேராக புத்தகக் கண்காட்சி. பகல் முழுக்க அங்குதான் இருந்தேன். என் நூல்களுக்கான அரங்கில். காலை இலக்கிய அரங்கில் ஜடாயுவின் பேச்சைக்கேட்க முடியாமலாகிவிட்டது. பவா செல்லத்துரை பேசினார். செவ்விலக்கியங்கள் வாழுமா என்பது தலைப்பு. பவா நவீன இலக்கியத்திலும் செவ்விலக்கியங்கள் உண்டு என்று சொன்னார்

 

மதியம் இலக்கிய உரையாடலில் மரபின் மைந்தன் முத்தையா ,போகன் ஆகியோரின் பேச்சுக்களைக் கேட்டேன் நவீன இலக்கியம் பழைய இலக்கியம் குறித்த உரையாடல்.

11

 

தி ஹிந்து ஏற்பாடு செய்திருந்த அரங்கில் கே.என்.செந்திலுடன் ஒரு வாசகர் சந்திப்பு. அவருடைய சமீபகாலப்பேட்டி குறித்துத்தான் கேள்விகள். அதிலிருந்து இலக்கியமதிப்பீடுகள் நோக்கி சென்றது பேச்சு. பின்னர் இசை, போகன், கார்த்திகைப்பாண்டியன் ஆகியோரும் வந்து கலந்துகொண்டார்கள்.

 

மாலைகோவையின் சமூகசேவகரான ஜெகன்னாதன் வந்திருந்தார். உடல்நலக்குறைகள் இருந்தாலும் குன்றா ஊக்கம் கொண்டவர். இலக்கியவாசகரும்கூட. அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதுவானதி ஸ்ரீனிவாசன் அரங்குக்கு வந்தார். இன்றைய காந்தி நூலை அவருக்கு அளித்தேன்.

13

ஏராளமான வாசகர்கள், குட்டிக்குட்டி உரையாடல்கள். மகிழ்ச்சியான ஒரு நாள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16982 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>