Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16987 articles
Browse latest View live

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

$
0
0
ராய் மாக்ஸம்

ராய் மாக்ஸம்

 

லண்டனில் மிக மையமான ஓர் இடத்தில் ராய் மாக்ஸம் வசிக்கிறார். அவர் ஆப்ரிக்காவிலிருந்து திரும்பிவந்து கையிலிருந்த பணத்துக்கு வாங்கிப்போட்ட இடம் அது. இன்று அது மிக மதிப்பு மிக்கது. கீழே கடைகள். மேலே அவருடைய இல்லம். அவர் மணம் செய்துகொள்ளாதவர். அவருடைய முன்னாள் தோழிகள் அன்றி இப்போது துணை எவருமில்லை. தானாகவே சமையல்செய்துகொள்கிறார். சன்னல்களில் வளர்ந்திருக்கும் செடிகளுக்கு நீரூற்றுகிறார். நாகரீகமான, பிரிட்டிஷ்த்தனமான, பிரம்மசாரி அறை. நிறைய ஒலிநாடாக்களைக் கண்டு நான் புன்னகைத்துக்கொண்டேன். பெரிசுகள் உலகமெங்கும் ஒரே வார்ப்புதான், சேர்த்துவைத்தவற்றை விட்டுவிட மனமிருக்காது

 

லண்டனின் தெருக்கள் நெரிசலானவை. நகர்மையத்தின் கட்டிடங்கள் பொதுவாக மிகப்பழையவை. குறுகலான படிகள் கொண்டவை. நகருக்கு வெளியே அமைதியான பெரிய புல்வெளிகளும் அழகிய மாளிகைகளும் உள்ளன. ஆனாலும் நகர்மையத்திற்குத்தான் சந்தை மதிப்பு அதிகம். ஏனென்றால் அங்கே தங்குவது கௌரவம்.

 

நானும் அருண்மொழியும் சிறில் அலெக்ஸ் மற்றும் அவர் மனைவி சோபனாவும் அவரைப் பார்க்கச் சென்றபோது ராய் உவகை அடைந்தார். ராய் எப்போதுமே குடும்பத்துடன் இருக்க விரும்புவர். நாங்கள் ஏற்பாடு செய்த தமிழகப் பயணத்தின்போது அவர் விடுதிகளில் தங்க மறுத்துவிட்டார். வீடுகளில் குடும்பத்துடன் தங்கினார், எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும். வெளியே போய்விட்டு வந்தால் ‘ஏருனா’ என்று அழைத்தபடி நேராக சமையலறைக்கே சென்று அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருப்பார். மென்மையான நகைச்சுவை கொண்ட ராய் பெண்களிடம் பேசும்போது குறும்பாக கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருப்பார். சிறில் அலெக்ஸின் மனைவி சோபனா அவருக்காக சமைத்துக் கொண்டுவந்த உணவை வாங்கி குளிர்பெட்டிக்குள் வைத்தார் எங்களுக்கு தேநீர் போட்டுத்தந்தார்.

 

Jeyamohan UK visit 008

 

 

ராய் சரியான பழையபாணி பிரிட்டிஷ் சார்புகள் கொண்டவர். கிரிக்கெட் மோகம். காபி குடிப்பதில்லை, டீதான். காபி அமெரிக்கர்கள் குடிக்கும் பானம் என்று நக்கல்வேறு. கால்பந்து நுணுக்கமில்லாத முரட்டு ஆட்டம்.  இந்தியாவிற்கு பலமுறை வந்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மக்களுடன் செல்வதை விரும்புபவர். நான் குளிர்சாதன  பெட்டியில் பதிவுசெய்தமைக்காக வருந்தினார். ரயில் பயணிகளுடன் ஓரிரு நிமிடங்களில் ஒண்ணுமண்ணாக ஆனார். ‘கல்யாணமாயிற்றா?” என்ற கேள்விக்கு மட்டும் “இந்தியாவில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கண்களைச் சிமிட்டியபடிச் சொல்வார். பெண்கள் கேட்டால் ‘உங்களைப்போல ஒருவரை’ என்று சேர்த்துக்கொள்வார்.

,

ராய் மாக்ஸம் [Roy Moxham ] பிரிட்டிஷ் எழுத்தாளர். 1939 ல் இங்கிலாந்தில் வொர்ஸெஸ்டர்ஷயரில் எவெஷம் என்னும் ஊரில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். 1961ல் இன்றைய மலாவியிலுள்ள ந்யாஸாலேண்டுக்கு ஒரு தேயிலைத் தோட்டத்தின் நிர்வாகியாகச் சென்றார். 1973ல் லண்டன் திரும்பி  ஆப்ரிக்க கலைப்பொருட்கள் மற்றும் பழைய இதழ்களுக்கான ஒரு விற்பனைநிலையத்தை தொடங்கினார். 1978ல் கேம்பர்வெல் கலைக்கல்லூரியில் சேர்ந்து பழைய நூல்களைப் பராமரிக்கும் பணியைக் கற்றுக்கொண்டார். காண்டர்பரி தேவாலயத்தில் பழைய ஆவணங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார்.  லண்டன்பல்கலையில் நூல்பராமரிப்பாளராக பணியாற்றி 2005ல் ஓய்வு பெற்றார்

 

ராயின் முதல் நூல் தேயிலையின் வரலாறு பற்றியது. இந்தியா வந்து மறைந்த கொள்ளைக்காரியான பூலன்தேவியுடன் தங்கி அவருடைய வரலாற்றை எழுதினார். [Outlaw: India’s Bandit Queen and Me,2010]  இவ்விரு நூல்களும் அவருக்குப் பெரும்புகழை ஈட்டித்தந்தவை. ஆனால் அவர் பெரிதும் கவனிக்கப்பட்டது அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் வேலி குறித்து எழுதிய The Great Hedge of India என்ற நூலுக்காகத்தான்.

Jeyamohan UK visit 320

 

பிரிட்டிஷ் இந்தியாவின் தொடக்க நாட்களில் இந்தியநிலத்தின்மேல் அவர்களுக்கு நேரடிக் கட்டுப்பாடு இருக்கவில்லை. ஆகவே நிலவரி பெரிய அளவில் கிடைக்கவில்லை. அவர்களுக்கிருந்த முதன்மையான வருவாய் வணிகம் மூலம் வந்ததும் மன்னர்களிடம் பெற்ற கப்பமும் சுங்கமும்தான். சுங்க வருவாயை பெருக்கும்பொருட்டு அவர்கள் உப்புக்கு வரிவிதித்தனர். உப்பு இந்தியாவின் தெற்கே கடற்கரைப்பகுதிகளில் உருவாகி வண்டிப்பாதைகளினூடாக வடக்கே விரிந்திருந்த கங்கைவெளிக்கும் இமையமலைப்பகுதிகளுக்கும் செல்லவேண்டியிருந்தது. அன்று அரிசிக்கு நிகரான விலை உப்புக்கு இருந்தது. வெண்தங்கம் என்றே அழைக்கப்பட்டது.

 

உப்புவண்டிகளுக்கு சுங்க வரி விதிக்கும்பொருட்டு பிரிட்டிஷார் இந்தியாவுக்குக் குறுக்கே முள்மரங்களை நட்டு அவற்றை இணைத்து மிகபெரிய வேலி ஒன்றை அமைத்தார்கள். மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. 12 அடி உயரம் உடையது அன்று உலகிலிருந்த மாபெரும் வேலி அது. அதில் வாயில்களை அமைத்து காவலர்களை நிறுத்தி சுங்கம் வசூலித்தார்கள். ஏறத்தாழ 2,500 கி.மீ. நீளமிருந்த அந்த வேலியில் 1872ல் கிட்டத்தட்ட 14000 காவல் நின்றார்கள்.

Jeyamohan UK visit 004-COLLAGE

 

இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை.    ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது.  . அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்லியிருந்தார். ராய் வியப்படைந்து அந்த வேலி பற்றிய ஆவணங்களைத் திரட்டினார்.  அதற்காக பயணம் செய்தார். அப்பயணமும் அவ்வேலி குறித்த கண்டடைதலும்தான் உப்புவேலி [தமிழில் சிறில் அலெக்ஸ்]

 

பிரிட்டிஷார் 1803  முதல் இந்த வேலியை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை 1843 ல் கட்டிமுடித்தார்கள். பிரிட்டிஷார் இந்தியாமேல் முற்றதிகாரத்தை அடைந்து நிலவரியை ஒழுங்குபடுத்தி கடற்கரைகளை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது உப்புவேலி தேவையில்லாமலாகியது. கைவிடப்பட்டு அழிந்தது. சிலருடைய நினைவுகளில் மட்டும் அது எஞ்சியிருந்தது.  மத்தியப்பிரதேசத்தில் அவ்வேலியின் எச்சங்களை ராய் கண்டுபிடித்தார். இன்று அங்கே ஓர் உணவகம் உள்ளது, உலகமெங்கும் இருந்து ஆய்வாளர்கள் வருகிறார்கள்.

south-kensington

 

ராயின் நூலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் அந்த வேலி உண்மையில் இந்தியாவுக்குச் செய்த அழிவு என்ன என்று அவர் சொல்லியிருப்பதுதான். உப்பு மட்டுமல்ல உணவுத்தானியமும் இந்தியாவில் வண்டிகள் வழியாகவே உள்நாடுகளுக்குச் சென்றது. 1870களில் இந்தியாவில் வந்த மாபெரும் பஞ்சத்தில் மேற்குப்பகுதியில் தேவைக்கும் மேலாக உணவுத்தானியம் விளைந்தது. மறுபக்கம் கிழக்கில் மழைபொய்த்து பெரும்பஞ்சம் வந்தது. உப்புவேலி உணவு மேற்கிலிருந்து கிழக்கே செல்லவிடாமல் தடுத்துவிட்டது. கூடவே உப்பின்விலையும் தாறுமாறாக ஏறியது. மக்கள் பட்டினியாலும் உப்புக்குறைபாடாலும் கோடிக்கணக்கில் செத்து அழிந்தனர். அவர்களைப்பற்றிய முறையான கணக்குகள் கூட இன்றில்லை. இந்திய வரலாற்றாசிரியர்கள் அவர்களைப்பற்றி பெரிதாக எழுதியதுமில்லை.

 

 

ராயின் The Theft of India: The European Conquests of India, 1498-1765 இந்தியாவில் ஐரோப்பிய ஆதிக்கம் தொடங்கிய காலம் முதல் காலனியாதிக்க முடிவு வரை நிகழ்ந்த தொடர்ச்சியான சூறையாடலின் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. இன்று உலகமெங்கும் வலுவடைந்துள்ள காலனிய – பின்காலனிய ஆய்வுகளில் மிகமுக்கியமான ஒரு பாய்ச்சல் இந்நூல். ஆகவே ஏகாதிபத்தியத்தின் நல்ல பக்கங்களை முன்னிறுத்த விழைபவர்களுக்கு எரிச்சலை ஊட்டியதும்கூட. ராயின் நூல் முக்கியமான ஒரு பார்வையை உருவாக்குகிறது. இந்தியாமேல் படையெடுத்துவந்த போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் நேரடியாக மானுட அழிவையும் செல்வ இழப்பையும் உருவாக்கியவர்கள். ஆனால் இருநூறாண்டுக்கால பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவான உயிரிழப்பும் பொருளிழப்பும் பற்பல மடங்கு.

 

அமர்த்யா சென்

அமர்த்யா சென்

இந்தியப் பஞ்சங்களைப்பற்றி இந்திய ஆசிரியர்கள் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பலகாரணங்கள். ஒன்று, முதன்மை ஆவணங்கள் அனைத்தும் லண்டனில் இருந்தன என்பது. இன்னொன்று, பொதுவாக ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் பிரிட்டிஷாரை எதிர்மறை வெளிச்சத்தில் காட்ட விரும்பியதில்லை. அது ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களை எரிச்சலூட்டி இவர்களுக்குக் கிடைக்கும் சர்வதேசக் கவனிப்பை இல்லாமலாக்கும். இவர்கள் தேசியவெறியர்கள் என முத்திரைகுத்தப்படுவார்கள். அது கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு மிகப்பெரிய தடை. மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களுக்கு எப்போதுமே ஐரோப்பிய வழிபாட்டு நோக்கு உண்டு. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் ஆங்கிலேய ஐரோப்பிய வாசகர்களுக்கு எரிச்சலூட்டும் எதையும் எழுத இயலாது.

 

ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிற காலனிநாடுகளிலும் உருவாக்கப்பட்ட செயற்கைப்பஞ்சங்களைப்பற்றிய ஆய்வுகள் வர தொடங்கின. இந்தியச் சூழலில் அமர்த்யா சென் 1998ல் நோபல்நினைவுப் பரிசு பெற்றபின் அவர் பஞ்சங்களைப் பற்றி எழுதிய நூல்கள் பேசப்படலாயின. தொடர்ச்சியாக கல்வித்துறை சார்ந்த ஆய்வுகள் வெளிவந்தன.

 

1933ல் தாகூரின் சாந்தி நிகேதனத்தில் பிறந்தவர் அமர்த்யா சென். அவருடைய தாத்தா க்ஷிதிமோகன் சென் சாந்திநிகேதனத்தின் ஆசிரியராக இருந்த புகழ்மிக்க இந்துஞான அறிஞர். [இந்துஞானம் எளிய அறிமுகம்- க்ஷிதிமோகன் சென். தமிழாக்கம் சுனீல் கிருஷ்ணன்]. கல்கத்தா பல்கலையிலும் கேம்பிரிட்ஜிலும் பயின்ற அமர்த்யா சென் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பொருளியல் ஆசிரியராக இருந்தார். ஹார்வார்ட் பல்கலையில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். வளர்ச்சிநிலைப் பொருளியலின் நிபுணர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இந்தியப்பஞ்சங்கள் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டவை என்று அமர்த்யா சென் விரிவாக விளக்குகிறார். அப்பார்வை இந்தியாவில் ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது.

 

சர்ச்சில் பொம்மையுடன்  மதுஸ்ரீ

சர்ச்சில் பொம்மையுடன் மதுஸ்ரீ

இந்திய அறிவுச்சூழலில் ஆழமான பாதிப்பை உருவாக்கிய நூல் மதுஸ்ரீ முகர்ஜி எழுதி 2010 ல் வெளிவந்த  Churchill’s Secret War: The British Empire and the Ravaging of India during World War II . மதுஸ்ரீ முகர்ஜி வங்காளத்தில் பிறந்தார். ஜாதவ்பூர் பல்கலையில் இயற்பியலில் பட்டம்பெற்றார். சிகாகோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றபின் கலிஃபோரினியா தொழில்நுட்ப கல்விநிலையத்தில் மேலதிக ஆய்வை மேற்கொண்டார். அறிவியல், பொருளியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இப்போது ஜெர்மனியில் ஃப்ராங்பர்ட் நகரில் வசிக்கிறார்.

 

மதுஸ்ரீயின் நூல் பொருளியல் மாணவர்களுக்குரியதல்ல, பொதுவாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே சீண்டும் தலைப்பும் விறுவிறுப்பான நடையும் கொண்டிருந்தது. அத்துடன் உறுதியான ஆதாரங்களுடன் திட்டவட்டமான கருத்துக்களைச் சொன்னது. இரண்டாம் உலகப்போரில் வங்கம்,பிகார் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பஞ்சங்களில் முப்பதுலட்சம் பேர் வரை உயிரிழந்தனர். ஏற்கனவே நிகழ்ந்த இரு மாபெரும் பஞ்சங்களில் கோடிக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்த பின்னர் இப்பஞ்சம் உருவாகியது. முந்தைய பஞ்சங்களிலிருந்து அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதோடு மேலும் அலட்சியமான நிலைபாட்டையே சென்றடைந்தது. பஞ்சம் அந்த அலட்சியத்தின் விளைவு

Jeyamohan UK visit 025-COLLAGE

எப்படியாவது உலகை வென்றாகவேண்டும் என்னும் கனவில் இருந்த ஏகாதிபத்தியம் பட்டினிச்சாவுகளை பொருட்டாக நினைக்கவில்லை, அதை போர்ச்சாவுகளின் ஒரு பகுதியாகவே நினைத்தது.வின்ஸ்டன் சர்ச்சில் ’இந்தியாவில் பஞ்சத்தில் மக்கள் சாகிறார்கள் என்று குறைசொல்கிறார்கள். முந்தைய பஞ்சங்களில் பல லட்சம் பேர் செத்தார்கள். அப்படியென்றால் மீண்டும் சாவதற்கு எங்கிருந்து ஆட்கள் வந்தார்கள்? இந்தியர்கள் எலிகளைப்போல. ஒவ்வொரு இந்தியனும் பல குழந்தைகளைப் பெற்று பெருகுவார்கள்’ என்றார்.

 

இரண்டாம் உலகப்போரின் பொருட்டு இந்தியாவிலிருந்து ஏராளமான உணவுத்தானியம் ஏற்றுமதியானதே பஞ்சத்திற்கான முதன்மைக் காரணம். அந்த ஏற்றுமதியைக் குறைக்க சர்ச்சில் உறுதியாக மறுத்துவிட்டார். அது சர்ச்சில் இந்திய மக்கள்மேல் நிகழ்த்திய ரகசியப்போர் என்று மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் குற்றம்சாட்டுகிறது. பொதுவாக பொருளியல்நூல்களுக்கு இருக்கும் பற்றற்ற நடை இல்லை என்றாலும் மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் எவராலும் ஆதாரபூர்வமாக மறுக்கமுடியாததாகவே இன்றுவரை உள்ளது. கூடவே பல்லாயிரம்பேரால் படிக்கப்பட்டு பிரிட்டிஷ்காலப் பஞ்சங்களைப்பற்றி இந்திய அறிவுலகம் பேசியே ஆகவேண்டும் என்னும் நிலையை அது உருவாக்கியது. இன்று ஏராளமான நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

 

ராயுடன் லண்டனில் உலவச்செல்வது ஒரு துன்பியல் அனுபவம். அவர் அங்குள்ள பப்களை தவிர எதைப்பற்றியும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஒவ்வொரு பப்புக்கும் தனித்தனியான சமூகப்பின்புலமும் பண்பாட்டு வேறுபாடுகளும் அதன் விளைவான தனித்தன்மையும் உண்டு என்றார். மாலையில் அன்றைய மனநிலைக்கேற்ப பப்பை தெரிவுசெய்து சென்று அமர்ந்து இரவில் திரும்புவது அவருடைய வாழ்க்கை.

ukd

ராய் சொன்னபின்னர்தான் பப் என்பதை அறியும் யோகமில்லாதவனாகிய நான் செல்லும் வழியிலுள்ள மதுவிடுதிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவற்றின் முகப்பில் சாலையோரமாகவே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அனைவருமே மிக ஓய்வான மனநிலையில் காணப்பட்டனர். கண்முன் ஒரு பீரோ ஒயினோ விஸ்கியோ இருக்கையில் ஓய்வாகத் தளர்த்திக்கொள்ளவேண்டும், அர்த்தமில்லாத சின்னப்பேச்சுக்களை பேசவேண்டும் என அவர்கள் உளம்பழகியிருக்கிறார்கள்

 

உண்மையில் ஐரோப்பிய நகரங்களில் நாம் காணும் புறப்பகுதி வாழ்க்கை தமிழகத்திலென்றல்ல இந்தியநகரங்கள் எதிலும் இல்லாத ஒன்று. இந்தியாவில் நகரம் என்றால் அங்கே வணிகநிலைகளும் அலுவலகங்களும் தொழில்முறைவிடுதிகளும் உணவகங்களும் தேனீக்கூடு போல மக்கள் செறிந்து பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். சாலைகள் அனைத்துமே நெரிசலானவை. சென்னைபோன்ற நகர்களில் பூங்காக்களோ சதுக்கங்களோ இல்லை. மெரினாவை மாபெரும் சந்தைக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். ஓய்வாக மக்கள் அமர்ந்திருக்கும் ஓர் இடத்தை இங்கே எங்கும் காணமுடியாது. ஏனென்றால் அதற்கென்ற இடங்களே இல்லை. சென்னையில் நட்சத்திரவிடுதிகளின் மதுக்கூடங்களைத் தவிர அமர்ந்து பேச இடம் என ஏதுமில்லை.

 

pub

ஒரு மாநகர் இப்படி இடைவெளியே இல்லாமலிருப்பதுபோல மூச்சுத்திணறும் அனுபவம் ஏதுமில்லை. இந்தியாவில் எந்த வெற்றிடத்தைக் கண்டாலும் அங்கே கட்டிடங்களைக் கட்டவே நம் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். பெருநகர்களுக்கு வெற்றிடம் நுரையீரல்போல என அவர்கள் உணர்வதில்லை. நம் நகரங்கள் உண்மையில் நகரங்களே அல்ல, மக்கள்செறிந்த கட்டிடக்குவியல்கள்.நான் சென்னையை நாடாமலிருப்பதற்கு முதற்காரணம் இதுவே.

 

ஐரோப்பிய நகரங்கள் அனைத்திலுமே மிகப்பெரிய பூங்காக்கள் உள்ளன.  பெரும்பாலான நகரங்களின் மையங்களில் மிகப்பெரிய நகர்ச்சதுக்கங்கள் உள்ளன. அங்கே வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே புகை இல்லை. சதுக்கங்களில் மக்கள் சட்டையை கழற்றிவிட்டு படுத்து வெயில்காய்வதை, புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பதை, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பல நகர்களில் நகரின் மையப்பகுதியிலுள்ள தெருக்களில் வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை, மின்சாரத்தால் ஓடும் டிராம்களைத் தவிர. இதனால் புகையும் தூசியும் கிடையாது. எல்லா விடுதிகளுக்கும் தெருவோரத்தில் திறந்தவெளி உணவக அமர்விடங்கள் உள்ளன. மக்கள் சாலைரமாக அமர்ந்து உண்ண விரும்புகிறார்கள்.

sq

லண்டனின் சதுக்கங்கள் ஐரோப்பிய நகர்களை ஒப்புநோக்க நெரிசலானவை. ஏனென்றால் பெரும்பாலானவை ஏற்கனவே புகழ்பெற்ற சுற்றுலா மையங்களாக ஆகிவிட்டவை. எங்குபார்த்தாலும் தலைகள். ஆனால் ஐரோப்பிய உள்ளம் ஒழுங்கு என்பதை நோன்பாகக் கொண்டது. இன்னொருவருக்கு நாம் தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதிலிருந்து வரித்துக்கொண்டது அவ்வொழுங்கு. எனவே கூச்சல்கள், முட்டிச்செல்லுதல்கள், ஆக்ரமித்தல்கள் இல்லை. அத்தனை நெரிசல்களிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் தனியுலகில் இருக்க இயன்றது. சாலையோரங்களில் உண்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் அச்சாலைகள் நிறைந்து பெருகுவது தெரியாதென்றே தோன்றியது

 

வெஸ்ட்மினிஸ்டர் நகர்ப்பகுதியிலுள்ள டிரஃபால்கர் ஸ்குயர் முன்பு சேரிங் கிராஸ் என அழைக்கப்பட்டிருக்கிறது. 1805ல் ல் பிரிட்டிஷ் கடற்படை நெப்போலியனை ஸ்பெயினில் உள்ள டிரஃபால்கர் கடல்முனையில் வென்றதன் நினைவாக டிரஃபால்கர் சதுக்கம் என பெயர்மாற்றம்செய்யப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு முதலே இச்சதுக்கம் நகரின் மையமான இடமாக இருந்திருக்கிறது. புகழ்பெற்ற சிற்பியான ஜான் நாஷ் இச்சதுக்கத்தைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களையும் சிற்பங்களையும் புதுப்பித்து அமைத்தார்.

nel

நெல்சன்

 

சதுக்கத்தின் மையத்திலுள்ளது நெப்போலியனை வென்ற தளபதி நெல்சனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெற்றித்தூண். 169 அடி உயரமானது இது 1854ல் வில்லியல் ரால்ட்டன் என்னும் சிற்பியால் அமைக்கப்பட்டது. இ.எச்.பெய்லியால் அமைக்கப்பட்ட நெல்சனின் சிலை தூணின்மேல் அமைந்துள்ளது. 1867ல் சர் எட்வின் லாண்ட்ஸீரால் அமைக்கப்பட்ட நான்கு வெண்கலச் சிம்மங்கள் தூணைச் சுற்றி இருக்கின்றன. ஏழு டன் எடையுள்ளவை இவை. டிரஃபால்கர் போரில் கைப்பற்றப்பட்ட பீரங்கிகளை உருக்கி அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் அடித்தளத்திலுள்ளன. அவற்றில் பிரிட்டிஷாரின் போர்வெற்றிகளும், வெற்றித்தளபதிகளும் பொறிக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல எந்த ஐரோப்பிய வரலாற்றுச்சின்னத்திற்கும் உரிய மிக விரிவான நுணுக்கமான வரலாறு இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது.

Heliodorus pillar

Heliodorus pillar

இந்தியா முழுக்க பல்வேறு வெற்றித்தூண்கள் உள்ளன. பெரும்பாலானவை ஏதேனும் ஆலயத்துக்குக் கொடிமரங்களாகச் செய்து அளிக்கப்பட்டவையாக இருக்கும். உதாரணம், கிருஷ்ண தேவராயர் தன் தென்னாட்டு வெற்றிக்காக நிறுத்தியதுதான் அஹோபிலம் நரசிம்மர் ஆலயத்தின் முன்னால் உள்ள கல்லால் ஆன கொடித்தூண். அரசர்கள் ஓர் ஆலயத்திற்குச் செல்வதை ஒட்டி அங்கே தூண் ஒன்றை செய்தளிப்பதுண்டு. இந்தியாவிலுள்ள அத்தகைய தூண்களில் பழைமையானது விதிஷாவில் உள்ள வாசுதேவர் ஆலயத்துக்கு கிரேக்க மன்னரின் தூதரான ஹிலியோடோரஸ் [Heliodorus] வழிபட வந்ததை ஒட்டி அளித்தது. அதன் உச்சியில் கருடன் செதுக்கப்பட்டுள்ளது. கிமு 113 ஆம் ஆண்டைச்சேர்ந்தது இத்தூண். சுங்க வம்ச மன்னராகிய பகபத்ரரின் ஆட்சியிலிருந்தது இப்பகுதி. இந்தியாவில் வைணவம் குறித்து கிடைக்கும் மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது என்கிறார்கள்.

 

கீர்த்தி ஸ்தம்பம்,சித்தூர்கர்

கீர்த்தி ஸ்தம்பம்,சித்தூர்கர்

 

ஆனால் இந்தியாவிலுள்ள தூண்களில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கர் கோட்டையில் சமண வணிகரான ஜீஜா பாகேர்வாலா [Jeeja Bhagerwala ]  பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டிய புகழ்த்தூண்தான். சித்தூரை ராவல்குமார் சிங் ஆட்சி செய்தபோது இது கட்டப்பட்டது. சமண மதத்தின் உண்மையை நிறுவும்பொருட்டு இது அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் அழகான ஒற்றைச்சிற்பம்.பூத்த மலர்மரம்போல நோக்க நோக்க தீராதது. இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் இந்து நாகராபாணி கட்டிடக்கலைக்கும் இடையேயான உரையாடலின் விளைவு.

 

li

சிம்மம், நெல்சன் சிலையருகே

 

இந்த வெற்றித்தூண்கள் அந்நாட்டினருக்கு பெருமிதத்தை அளிக்கக்கூடும், உண்மையில் ஜனநாயக யுகத்தில் சென்றகாலப் போர்வெற்றிகள் அப்படியேதும் பெருமிதத்தை அளிப்பதில்லை. பிறநாட்டினருக்கு அவை வெறும் சுற்றுலாக் கவற்சிகளே. டிரஃபால்கர் தூணின் பிரம்மாண்டம்தான் என்னை ஆட்கொண்டது. ஓர் அரசரை நேரில் பார்ப்பதுபோன்ற பிரமிப்பும் விலக்கமும் கலந்த உணர்வு. சென்ற நூற்றாண்டிலென்றால் அது பணிவை உருவாக்கியிருக்கக் கூடும். இத்தகைய பெருங்கட்டிடங்கள், வெற்றிநிமிர்வுகள் சாமானியர்களான நம்மை நோக்கி அதட்டுகின்றன. நாம் நம்மையறியாமலேயே அமர்ந்து அவர்களின் பூட்ஸ்களின் நாடாக்களை கட்டிவிடத் தொடங்குகிறோம்.  ஆனால் சித்தூர் புகழ்த்தூண் அந்த விலக்கத்தை உருவாக்கவில்லை. அதை நோக்கியபடி அமர்ந்திருக்கையில் உளவிரிவும் அமைதியும்தான் உருவானது. ஏனென்றால் அது எந்த உலகியல் வெற்றியையும் அறிவிப்பதல்ல.

 

 

எனக்கு ஒரு பெருங்கட்டுமானம் தெய்வத்திற்குரியதாக இருக்கையில் மட்டுமே உள்ளம் அமைதிகொண்டு அதை ஏற்கமுடிகிறது. அரண்மனைகளும் வெற்றித்தூண்களும் எனக்கு எதிரானவை என்றே என்னால் எண்ணமுடிகிறது. ஒரு மாபெரும் சிலை சென்றகால மாவீரனுடையதென்றால் அது எனக்குப் பொருளிழந்த ஒன்றே. அது ஒரு தெய்வத்துடையது என்றால் அத்தெய்வம் என்னை நோக்குவதை உணர்வேன். இருபதாம்நூற்றாண்டில் உருவான மாபெரும் தெய்வச்சிலை அமெரிக்காவின் சுதந்திரதேவி.

 

நெல்சன்

நெல்சன்

நெல்சன் நெப்போலியன் மேல் கொண்ட வெற்றி பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. உலகின்மீதான ஆதிக்கம் எவருக்கு என்னும் போட்டியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மேல் பிரிட்டன் கொண்ட வெற்றி அது. அதுவே பிரிட்டனின் கடலாதிக்கத்தை உருவாக்கியது. இந்தியா மீதான பிரிட்டனின் பிடி இறுகியதும் அதன்பின்னரே.

 

 

அட்மிரல் நெல்சன் [Horatio Nelson, 1st Viscount Nelson 1758 –1805 ] பிரிட்டிஷ் வீரத்தின் அடையாளமாக கருதப்படுபவர். பிரிட்டிஷ் பேரரசின் சோதனையான காலம் நெப்போலியனுடனான போர்களின் காலகட்டம்தான். அப்போது நெப்போலியனை எதிர்த்து வென்றவர் நெல்சன்.

 

நெல்சன் போர்முனையில் பலமுறை காயம்பட்டிருக்கிறார். ஒரு கண்ணையும் கையையும் இழந்தபின்னரும் தளராமல் களத்தில் இருந்தார். இயற்கையின் அடிப்படைச்சக்தியின் மானுடவெளிப்பாடு என கதே வர்ணித்த நெப்போலியனை டிரஃபால்கர் போரில் வென்று தான் மடிந்தார். இன்றும் பிரிட்டனில் மிக நினைவுகூரப்படும் மனிதராக நெல்சன் இருக்கிறார்.

statue

வெண்கலச்சிலைகள் நெல்சன் தூணில்

 

நெல்சனை அடிக்கடி நினைவுகூர்ந்த தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில். பிரிட்டன் உலகை ஆளும் பேரரசாக உயர்ந்து, தொழிற்புரட்சி உச்சத்தை அடைந்து, புதிய பொருளியல் விசைகள் உருவாகி வந்து, குடியாட்சிக்கருத்துக்களும் தனிமனித விடுதலை சார்ந்த விழுமியங்களும் வலுப்பெற்று, பேரரசின் வெற்றிமுழக்கங்களுக்கு அடியில் எளியவர்களின் அவநம்பிக்கைகள் திரண்ட இருபதாம்நூற்றாண்டில் பிரிட்டனை ஆட்சிசெய்தவர் சர்ச்சில். ஆனால் நெல்சனின் அதே பேரரசுக் கனவை தானும் கொண்டிருந்தார். நெல்சன் முன்வைத்த வீரவிழுமியங்களை மீண்டும் எழுப்பி நிலைநாட்ட முயன்றார். இரண்டாம் உலகப்போர்  அவருக்கான வாய்ப்பாக அமைந்தது. உலகப்போரில் மிகப்பெரிய இழப்புகளுடன் பிரிட்டன் வென்றதற்கு சர்ச்சிலின் ராணுவநுட்பம் அறிந்த தலைமையும் அவருடைய ஓங்கி ஒலித்த குரலும் முக்கியமான காரணம். ஆனால் போருக்குப்பின் பிரிட்டன் தன் நிலப்பிரபுத்துவகால சுமைகளை இறக்கிவைக்க முடிவுசெய்தது. சர்ச்சில் பதவியிழந்தார்.

 

 churchil

சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill  [1874 -1965] அடிப்படையில் ஒரு ராணுவவீரர். பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி போன்ற முகங்களெல்லாம் அதற்குமேல் அமைந்தவையே. பிரிட்டனைப்பற்றி, உலகைப்பற்றி, எளிய மக்களைப்பற்றி அவருடைய எண்ணங்கள் அனைத்தும் ராணுவ அதிகாரிக்குரியவை.  வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்பென்ஸர் குலத்தின் கிளை வழியான  மார்ல்ப்ரோ டியூக்குகளின் குடும்பத்தில் பிறந்தார். சர்ச்சிலின் தந்தை  ராண்டால்ஃப் சர்ச்சில் பிரபு. தாய் ஜென்னி ஜெரோம் அமெரிக்கச் செல்வந்தர் லியனோர்ட் ஜெரோம் என்பவரின் மகள்.  இளமையிலேயே பிரபுக்களுக்குரிய முறையில் குடும்பத்துடன் தொடர்பில்லாமல் கல்விநிலையங்களில் வளர்ந்தார். ராணுவத்தில் சேர்ந்த சர்ச்சில் கியூபா, இந்தியா, சூடான் போன்ற நாடுகளில் போரில் பங்கெடுத்தார்.

 

அரசியலில் ஈடுபட்டு பிரிட்டிஷ் பிரதமரான சர்ச்சில்  இனவாத வெறுப்பரசியலை, பிரிட்டிஷ் தேசியவாத பெருமிதத்துடன் கலந்து ஆக்ரோஷமாகப் பேசுவதற்காகப் புகழ்பெற்றவர். ஒருவகையில் ஹிட்லரின் பிரிட்டிஷ் வடிவம் அவர். ஹிட்லரைப்போலவே தன் இனம் உலகை ஆளவேண்டிய பொறுப்பும் தகுதியும் உண்டு என நம்பியவர். காந்தியை ‘அரைநிர்வாண பக்கிரி’ என்றமைக்காக இன்றும் இந்தியர்களால் நினைவுகூரப்படுபவர். சமீபத்தில் ராய் மாக்ஸமின் நூல் லண்டனில் வெளியிடப்பட்டமையை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் சர்ச்சிலை ஹிட்லரின் இன்னொரு வடிவம் என இந்திய எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சசி தரூர் குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

மேற்குலகுக்கு ஹிட்லரைப் போரில் வென்றவர் என்பதனால் சர்ச்சில் ஒரு கதாநாயகன். சோவியத் ருஷ்யாவின் இறுதிநாள் வரை அதே காரணத்துக்காக ஸ்டாலினும் கதாநாயகனாகக் கருதப்பட்டார். மேற்குலகை வழிபடுபவர்களுக்கும் சர்ச்சில் அவ்வாறு தோன்றக்கூடும். ஆனால் கறாரான வரலாற்றுந் நோக்கில் நவீன ஜனநாயக எண்ணங்கள் அற்ற, பிரிட்டிஷ் இனவெறிநோக்கு கொண்டிருந்த, வேண்டுமென்றே லட்சக்கணக்கான இந்தியர்களின் இறப்புக்குக் காரணமாக இருந்த, அதற்காக எள்ளளவும் வருந்தாத சர்ச்சிலுக்கு ஹிட்லர் சென்றமைந்த அதே வரலாற்று வரிசையில்தான் இடம். வரலாறு அத்திசை நோக்கிச் செல்வதை தடுக்கவியலாது.

par

லண்டனின் பாராளுமன்றச் சதுக்கம் அங்கிருக்கும் சிலைகளுக்காகப் புகழ்பெற்றது. நாங்கள் பல இடங்களில் நடந்து களைத்து அங்கே செல்லும்போது அந்தி. ஆனால் லண்டனில் அது கோடைகாலம் என்பதனால் வெளிச்சமிருந்தது. மத்தியலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை அருகே உள்ளது இந்தச் சதுக்கம். முக்கியமான ஒரு சுற்றுலா மையம். வெஸ்ட்மினிஸ்டர் அபே, லண்டன் பாராளுமன்றம், லண்டன் தலைமை நீதிமன்றம் ஆகியவை இதற்குச் சுற்றும் உள்ளன. 1868ல் இச்சதுக்கம் அமைக்கப்பட்டது.பொதுவாக இது பிரிட்டனின் அரசியல் நடவடிக்கைகளின் மையம்

 

இச்சதுக்கத்தின் மையமான சுவாரசியம் இங்கே நிகழும் அரசியல்போராட்டங்கள். சின்னச்சின்ன கூடாரங்கள், தட்டிகள் வைத்து வெவ்வேறு அரசியல்குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். செசென்யாவுக்கு நீதிகோரி முஸ்லீம்களின் ஒரு புகைப்படக் கண்காட்சி, செர்பியர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றது இன்னொரு தரப்பு. தன்பாலின மணம் அனுமதிக்கப்படவேண்டும் என ஒரு சிறுகுழு. இங்கே 2014லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டதே என்று பார்த்தால் அவர்கள் கோருவது அது துருக்கியில் அனுமதிக்கப்படவேண்டும் என்று.

 

வழக்கம்போல திபெத்துக்கான தன்னாட்சி உரிமைகோரி ஒரு தட்டிக்குமுன் திபெத்திய பாரம்பரிய உடையில் சிலர் நின்று துண்டுப்பிரசுரம் அளித்தனர். 1995ல் ஆறு வயதில் சீனர்களால் கடத்தப்பட்டு இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாத 11 ஆவது பஞ்சன் லாமாவின் இளமையான பதைப்பு நிறைந்த புகைப்பட முகம்.

dis

டிஸ்ரேலி

 

 

பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது ஒரு சுற்றுலாச் சடங்கு. அங்கிருந்த ஜப்பானிய சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும்பாலானவர்கள் எவரென்றுகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கே கூட பெரும்பாலானவர்களைத் தெரியாது. டேவிட் லியோட் ஜார்ஜ்,  ஹென்றி ஜான் டெம்பிள்,  எட்வர்ட் ஸ்மித் ஸ்டேன்லி, ராபர்ட் பீல் ஆகியோர் பிரிட்டிஷ் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். என் நினைவில் அப்பெயர்கள் எதையும் சுண்டவில்லை.

 

ஆனால்  பெஞ்சமின் டிஸ்ரேலி இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் அடிக்கடி காதில்விழும் பெயர். பிரிட்டிஷ் பழைமைவாதக் கட்சியின் தலைவராக இருமுறை பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார். 1868 முதல் 1880 வரை இவர் பிரிட்டிஷ்  பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் இரண்டாவது பெரும் பஞ்சத்தால் இந்தியா கிட்டத்தட்ட அழிந்தது. பாராளுமன்றத்தில் ஜனநாயகவாதிகள் இந்தியாவைக் காக்கவேண்டுமென கோரி கண்ணீருடன் மன்றாடியதை அலட்சியமாகக் கடந்துசெல்ல அவருடைய பழைமைவாதமும் இனமேட்டிமை நோக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் சர்ச்சிலுக்கு இணையாக வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர் டிஸ்ரேலி.

smuts

smuts

சிலையாக நின்றிருக்கும் இன்னொருவர் ஜான் ஸ்மட்ஸ் [Jan Smuts]. காந்தியின் சுயசரிதையில் வரும் பெயர். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதமராக இருந்தவர். போயர் போரில் முதன்மைப் பங்கெடுத்தவர். காந்தி ஜான் ஸ்மட்ஸைப்பற்றி இரண்டு வகையாகவும் குறிப்பிடுகிறார். முதலில் ஸ்மட்ஸ் நேர்மையான நாணயமான அரசியலாளர் என்று சொல்லும் காந்தி பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியலாடல்களுக்குப்பின் ஸ்மட்ஸ் வழக்கமான தந்திரம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர், இனவெறி நோக்கு கொண்டவர் என்கிறார்.

 

 

1914ல் ஜான் ஸ்மட்ஸுக்கு காந்தி சிறையில் தன் கையால் தைத்த ஒரு தோல் செருப்பை பரிசாக அளித்ததை காந்தி சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். காந்தியின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது ஸ்மட்ஸ் அதை ஒரு குறிப்புடன் திருப்பியனுப்பினார். “நான் இதை ஒரு கோடைகாலத்தில் அணிந்தேன். ஆனால் ஒரு மாமனிதரின் கையால் உருவாக்கப்பட்ட இதை அணியும் தகுதி தனக்கில்லை’. அச்செருப்பு இப்போது ஆப்ரிக்காவில் Ditsong National Museum of Cultural History யில் அரும்பொருளாக உள்ளது.

 

 

காந்திமேல் ஸ்மட்ஸ் கொண்ட மதிப்பு உண்மையானது. ஆனால் இந்தியர்களுக்கான மனித உரிமைகளை அளிப்பதிலும் முழுமையான நிறவெறிப்போக்குடனேயே ஸ்மட்ஸ் நடந்துகொண்டார். அதைப்புரிந்துகொள்வது மிக எளிது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்தப் பொதுக்குணம் இனவாதமும், ஈவிரக்கமற்ற சுரண்டலும். தனிமனிதர்களாக அவர்கள் செய்நேர்த்தி, பண்பு, மென்மையான நடத்தை மற்றும் கலையார்வம் கொண்டவர்கள். இந்த முரண்பாட்டை காந்தி ஸ்மட்ஸுடனான பழக்கம் வழியாகவே கண்டடைகிறார். பின்னர் அவர் பிரிட்டிஷ் உயர்பதவியினரை இயல்பாகக் கையாள இந்த அனுபவம் கைகொடுத்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை இந்த இரட்டைப்பண்பை உணராமல் எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மானுடம் கண்ட மோசமான நிறவெறி அரசை நடத்திய ஸ்மட்ஸ் ஒரு சிந்தனையாளர், தத்துவவாதி. ஸ்மட்ஸ் முதல் உலகப்போருக்குப்பின்  உலக ஒற்றுமைக்காக  League of Nations என்னும் அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். அது பிற்கால ஐக்கியநாடுகள் சபை உருவாவதற்கான முன்னோடி அமைப்பு.

ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்

ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்

இந்த இரட்டைநிலைக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம். [Allan Octavian Hume  1829 –  1912)    இன்று அவர் வரலாற்றில் வாழ்வது இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவனர் , ஒருவகையில் இந்திய விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டவர் என்றவகையில். இந்தியர்களுக்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள உரிமைகளைப் பெற்றுத்தரும்பொருட்டு அவர் 1885ல் இந்திய தேசியக் காங்கிரசை நிறுவினார். இந்திய பறவையியலின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்த காலம் முழுக்க இந்தியப் பறவைகளை கவனித்து பல்லாயிரக்கணக்கான மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றின் சிறகுகளையும் வடிவங்களையும் கவனித்து வரைந்து இயல்புகளைக் குறித்துவைத்தார். Stray Feathers  என்னும் பறவை ஆய்விதழை நடத்தினார். இன்னொரு பக்கமும் உண்டு. இந்தியாவில் பேரழிவை உருவாக்கிய உப்புவேலியை 1867 முதல் 1870 வரையிலான தன் பணிக்காலத்தில் முழுமையாக நிறுவி அதன் நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்தவர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்தான்.

 

 

பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளில் அதிகாரத்தில் இல்லாதவரான பிரிட்டிஷ்காரர் என்றால் அது  மில்லிசெண்ட் ஃபாசெட் [Millicent Fawcett]. இங்குள்ள ஒரே பெண் சிலை இது. பெண்ணிய நூல்களில் இப்பெயரை கேள்விப்பட்டிருக்கலாம். பிரிட்டனில் பெண்ணுரிமைக்காக போராடியவர். மில்லிசெண்ட் [ 1847 –1929 ] மில்லி வழக்கமான புரட்சியாளர் அல்ல. தன் கருத்துக்களால் குடிமைச்சமூகத்தில் கருத்துமாற்றம் உருவாவதற்காக தொடர்ச்சியாக, பொறுமையாகப் பாடுபட்டவர்.  பெண்களின் கல்வியுரிமை, அரசியல் பங்கேற்புரிமை ஆகியவற்றை இலக்காக்கியவர். பெட்ஃபோர்ட் கல்லூரியின் ஆளுநராக பணியாற்றினார்.  1875  ல்  கேம்பிரிட்ஜ் நியூஹாம் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

 

Millicent Fawcett

Millicent Fawcett

 

பிரிட்டிஷாரல்லாதவர்கள் மேலும் ஆர்வமூட்டுபவர்கள். ஆபிரகாம் லிங்கன் சிலை அங்கிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நெல்சன் மண்டேலா ,காந்தி இருவரின் சிலைகளும் வியப்பூட்டுபவை. இருவரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி வென்றவர்கள். நெல்சன் சிலை போல வெற்றிச்சிலைகள் வைக்கும் மரபிலிருந்து பிரிட்டிஷ் மனநிலை மெல்ல முன்னகர்ந்து நெல்சன் மண்டேலா போல தங்களை வென்றவர்களுக்குச் சிலை வைத்திருக்கிறது. மிகச்சாதாரணமானதாக இது தோன்றலாம். ஆனால் மிகமிக மெல்லத்தான் இந்தச் சமூக மாற்றம் உருவாகும். நீண்ட கருத்துப்போராட்டம் பின் அதன் நீட்சியான  அரசாடல்கள் இதற்குத்தேவைப்படும்.

mandela

நெல்சன் மன்டேலாவின் சிலை அழகியது. நெல்சன் மண்டேலா உயிருடன் இருக்கையிலேயே இச்சிலைக்கான பணி தொடங்கப்பட்டது. ‘பிரிட்டிஷ் பாராளுமன்ற வாசலில் ஒரு கறுப்பினத்தானுக்கு சிலை இருப்பது தேவைதான்’என நெல்சன் மண்டேலா அதற்கு அனுமதி அளித்தார். தென்னாப்ரிக்க அரசியல்வாதியும் இனவெறி எதிர்ப்புப் போராளியுமான டொனால்ட் வுட்ஸ் இச்சிலையை நிறுவவேண்டும் என முன்முயற்சி எடுத்தார். அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவுடன் திரைப்பட ஆளுமையான ரிச்சர்ட் அட்டன்பரோ இணைந்து எடுத்த முயற்சியால் இச்சிலை 2007ல் நிறுவப்பட்டது. இயால் வால்ட்டர்ஸ் என்ற சிற்பியால் உருவாக்கப்பட்டது இது.

 

நெல்சன் மண்டேலாவின் சிலையருகே நின்று பேசிக்கொண்டிருக்கையில் இரண்டு தகவல்களைக் குறிப்பிட்டேன். ஒன்று , இந்தியாவிலுள்ள அசட்டு இடதுசாரித்தரப்பு ஒன்றுண்டு. உலகப்போர் உருவாக்கிய நெருக்கடிகள் காரணமாக தானாகவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகிச் சென்றார்கள் என்றும் அதில் காந்திக்கும் நேருவுக்கும் பெரிய பங்கு ஏதுமில்லை என்றும், அது வெறும் வரலாற்றுவிளைவு மட்டுமே அவர்கள் வாதிடுவார்கள். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷாரின் மறைமுக ஆட்சியான வெள்ளையர்களின் இனவெறி அரசு 1994 வரை வெவ்வேறு அடையாளங்களுடன், வெவ்வேறு ரகசிய ஆதரவுகளுடன் நீடித்தது.

 

இன்னொன்று, உலகஜனநாயகத்தின் மடித்தொட்டிலான பிரிட்டன் 1995 வரை தென்னாப்ரிக்க அரசின் வெளிப்படையான இனவெறியை நுட்பமான பசப்புச் சொற்களுடன் ஆதரித்தது.  பிரிட்டிஷ் பிரதமரான மார்கரட் தாச்சர் 22 ஆண்டுக்காலம் இனவெறியர்களின் சிறையிலிருந்த நெல்சன் மண்டேலாவை தீவிரவாதி , சமூக விரோதி என கருத்துத் தெரிவித்தார். பிரிட்டனில் ஜனநாயகவாதிகள் ஆப்ரிக்காவின் இன ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக கடுமையாகப் போராடினாலும்கூட பிரிட்டனில் தொடர்ச்சியாக  தென்னாப்ரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு இருந்துகொண்டேதான் இருந்தது. நெடுங்காலம் ஆகவில்லை, அந்த உணர்வுகள் முற்றாக மறைவதுமில்லை.

Gandhi_statue_2

 

நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை வைக்கப்பட்டு மேலும் எட்டாண்டுகள் கழித்துத்தான் பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தியின் சிலை நிறுவப்பட்டது.  1931ல் காந்தி பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக் டொனால்டின் அலுவலகத்துக்கு முன் நின்றிருக்கும் ஒரு புகைப்படத்திலிருந்து உருவாக்கப்பட்ட சிலை இது. பிலிப் ஜாக்ஸன் இதன் சிற்பி. மண்டேலாவின் சிலை அங்கே வைக்கப்பட்டபின்னர்தான் காந்திக்கும் சிலை வேண்டும் என்ற எண்ணமே எழுந்திருக்கிறது. 2105ல் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதைத் திறந்துவைத்தார். பிரிட்டிஷ் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.மற்ற சிலைகளைப்போல உயர்ந்த பீடத்தில் நிமிர்ந்த நோக்குடன் நிற்காமல் தரைமட்டத்தில் இயல்பாக நின்றிருக்கிறார் காந்தி. தோழரைப்போல நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக.

 

காந்தி சிலைக்கு நேர் மறுமுனையில் நின்றிருக்கிறது வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை. இவோர் ராபர்ட் ஜோன்ஸ் வடிவமைத்த சிலை இது. சர்ச்சில் அவருக்கு பாராளுமன்றச் சதுக்கத்தில் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்று விரும்பியமையால் 1950ல் உருவாக்கப்பட்ட சிலை அது. 1973ல் திறந்து வைக்கப்பட்டது. இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினியின் சாயல் இச்சிலைக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சர்ச்சிலின் ஆணவமும் நிமிர்வும் கலந்த உடல்மொழி கொண்ட சிலை இது

ch

பிரிட்டனின் இன்றைய அறச்சிக்கலை, எப்போதும் அதன் பண்பாட்டில் இருந்து வந்த இரட்டைநிலையைக் காட்டும் இடம் இந்தச் சதுக்கம். எந்த நாட்டையும்போல பிரிட்டன் அதன் கடந்தகாலப் பெருமைகளை தேசிய அடையாளமாகத் தூக்கிப்பிடிக்கிறது. அது நெல்சனை தன் தலைக்குமேல் கொடிபோல ஏந்தி நின்றிருக்கிறது. மறுபக்கம் நவீன ஜனநாயகப் பண்புகளை அது ஏற்றுப் பேணியாகவேண்டியிருக்கிறது. அதன் சென்றகால நாயகர்கள் பலர் ஏகாதிபத்தியத்தின் படைப்பாளிகள்,  காவலர்கள். ஆகவே அவர்களை போற்றி அதைச் சமன் செய்ய அவர்களை எதிர்த்தவர்களையும் போற்றவேண்டியிருக்கிறது

 

இச்சிலைகள் வழியாகச் செல்லும்போது நாமறிந்த வரலாற்று அடுக்கை வேறொரு கை வந்து கலைத்து அமைத்ததுபோல திகைப்பு ஏற்படுகிறது. காந்தியும் , டிஸ்ரேலியும், சர்ச்சிலும் ஒரே நிரையில் நிற்கும் வரலாறு. ஸ்மட்ஸும்  மண்டேலாவும் அருகருகே நிலைகொள்ளும் வரலாறு. அவர்கள் சிலைகளிலிருந்து உயிர்கொண்டால் என்ன செய்வார்கள்? திகைப்பார்கள்,  ஒருகணம் குழம்புவார்கள். அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள், அல்லது பிரிட்டிஷ் பண்புகளால் ஆனவர்கள் ஆதலால் ஒருவரோடொருவர் மென்மையாக முகமனுரைத்து வணங்கி சம்பிரதாயமான கைகுலுக்கல்களுடன் பிரிந்துசெல்வார்கள். மீண்டும் சிலையான பின் வேறு எங்கோ இருந்து வெடித்துச்சிரிப்பார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திருட்டுத்தரவிறக்கம், இரவல் -கடிதங்கள்

$
0
0

ille

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு,

 

சொன்னால் நம்ப மாட்டீர்கள் ‘பொன்னியின் செல்வன்’ ஆயிரம் பக்கங்கள் அதைத் தொடர்ந்து ‘உடையார்’ கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் தங்களின் ‘வெண்முரசு’ பிரயாகை வரை கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் ‘அறம்’ சிறுகதைகள் ‘செம்மீன்’ ‘ ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ ‘தண்ணீர்’, ‘கோபல்ல கிராம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள் ‘ மற்றும் பல சிறுகதைகள் கட்டுரைகள் அனைத்தும் pdf வடிவில் (கைபேசியில்) படித்தவை.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் வாசித்தவை. இதில் இலக்கியத்தின் மீது ஏற்பட்ட உந்துதல் காரணமாக சில புத்தகங்களை வாங்க முயற்சித்து தங்களின் ‘விஷ்ணுபுரம்’, ‘இடக்கை’, ‘சிவப்பு சின்னங்கள்’,’, ‘ராசலீலா’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்,’, ஆகியவை அனைத்தும் வாங்கி வாசித்து முடித்தவை. இதில் ‘இடக்கை’ தவிர மீதி அனைத்துமே கழிவு விலைக்காக காத்திருந்து  வாங்கியவை தான். எனது மாத ஊதியம் 12000 வாடகை வீடு என்னால் இயன்றவரை புத்தகங்களை வாங்க முயற்சிக்கிறேன், தற்போது பூமணியின் அஞ்ஞாடி, சிதம்பர சுப்ரமணியன் மண்ணில் தெரியுது வானம், வாங்குவதற்கு முயற்சியில் இருக்கிறேன்.(அஞ்ஞாடி வாங்குவது கனவு தான்) சரி நூலகத்தில் புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று அருகில் உள்ள நூலகத்திற்கு (பல்லடம்) சென்றேன் அங்கு முதலில் நீங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து அந்த உறுப்பினர் அட்டையை கொண்டு வந்தால்தான் இங்கு புத்தகங்கள் எடுக்க முடியும் என்று சொன்னார்கள் ஆனால் நான் இருக்கும் பகுதியில் நூலகம் ஒரு நாள் கூட திறந்து இருந்து நான் பார்த்ததில்லை. சிங்கப்பூரில் sms செய்தால் புத்தகம் வீடு தேடி வருவதாக நீங்கள் சொல்கிறீர்கள், இலக்கியம் வாசித்தால் அரசு பணம் தருவதாக சொல்லுகிறீர்கள் ஆனால் நம் நாட்டின் நிலையோ புத்தகங்களை தேடி போனாலும் விரட்டி விடுகிறார்கள்.

 

( கடந்த கடந்த 5 ஆண்டுகளாக தொலைக்காட்சியோ திரையரைபடமோ பார்ப்பதில்லை). ஆடு மாடு மேய்க்கும் சாதாரண விவசாயிக்கு எதற்கு இலக்கியமெல்லாம் என்றுகூட ஒரு சமயம் தோன்றுகிறது. “தங்களின் மாடன் மோட்சம்  படித்ததில் இருந்து எந்த ஒரு சுவையான உணவை உண்ணும் போது மனதில் வரும் முதல் வரி “அமிர்தமாட்டும் இருக்குடா அம்பி ” என்பது தான். சரி இப்படி இருக்கிறது நிலைமை இதனால் இயல்பிலேயே ஒரு பிச்சைக்காரன் அருகில் இருக்கும் பிச்சைக்காரனின் திருவோட்டில் எட்டி பார்க்க தானே செய்வான்.

 

ஏழுமலை

 

அன்புள்ள ஏழுமலை

 

உங்கள் நிலை புரிகிறது. ஆனால் இப்படி நூல்களுக்காக தேடும் பலரும் அறியாத ஒன்றுண்டு. தமிழகத்தின் எந்த ஊரிலும் நல்ல நூலகங்கள் உண்டு. அங்கே நல்ல நூல்கள் பெரும்பாலும் கிடைக்கும். அங்கே என்ன இருக்கப்போகிறது என்னும் அவநம்பிக்கையைக் களையவேண்டும். அங்கே கொஞ்சம் காத்திருக்கவேண்டியிருக்கலாம். நேரம் கணித்து செல்லவேண்டியிருக்கலாம். பலநூலகங்களில் கொஞ்சம் தேடவேண்டியிருக்கும். ஆனால் கண்டிப்பாக நூல்கள் உண்டு. பெரும்பாலான நூலகங்கள் கைவிடப்பட்டு கிடக்கின்றன தமிழ்நாட்டில். வாசிக்க விழைபவர்கள் ஒரு கட்டத்தில் நூலகங்களைத்தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வாசிப்புவெறிக்கு நூல்களை காசுகொடுத்து வாங்குவது கட்டுப்படியாகாது, எவருக்கும். இன்னும் கொஞ்சம் முயலலாம் என நினைக்கிறேன்.

 

ஜெ

 

 

அன்பின் ஜெ,

 

வணக்கம்!.

 

திருட்டுத்தரவிறக்கம் குறித்தான பதிவினை தளத்தில் கண்டேன். புத்தகங்களை இரவல் பெற்று வாசிப்பதிலும் எனக்கு ஒவ்வாமை உண்டு. இரவல் புத்தகங்களை படித்தபின் திருப்பிகொடுக்கையில் அப்புத்தகம் அளித்த உணர்வுகளும் இரவல் உணர்வுகளாய் அதனுடன் சென்றுவிடுவதாக எண்ணுவதுண்டு.

 

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்களை  சொந்தமாக வாங்கியபிறகே வாசிக்க துவங்குவது வழக்கம்.

 

இரவல் கொடுக்கையில் “வாசித்த பின் மறக்காமல் திருப்பி கொடுத்துவிடவும்” என்று புத்தகத்தில் எழுதிவிடுவேன்.

 

– யோகேஸ்வரன் ராமநாதன்.

 

 

அன்புள்ள யோகா

 

நூல்களை இரவல்கொடுக்கையில் ஒன்று செய்யவேண்டும். சின்ன நூல்களை கொடுக்கவேண்டும். மெய்யாகவே வாசித்துவிட்டு உரிய நேரத்தில் சிரமம் எடுத்து திருப்பிக்கொண்டுவந்து கொடுக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். வாசிப்பவர்கள் மேலும் வாசிக்க விரும்புவார்கள், ஆகவே திரும்பக்கொண்டுவந்து தந்துவிடுவார்கள். வாசிப்புப்பழக்கம் அற்றவர்கள், தொடர்ச்சியாக வாசிக்காதவர்களே வாங்கிய நூல்களை ஊறப்போட்டு திரும்பத்தராமல் வைத்திருப்பார்கள். ஆச்சரியமென்னவென்றால் இவர்கள்தான் முக்கியமான, பெரிய நூல்களை இரவல் கேட்பார்கள். வாசிக்காதவர்கள் என்பதனால் இவர்களுக்கு அந்நூலை தங்களால் வாசிக்கமுடியுமா, என்பதுகூட தெரிந்திருக்காது.

 

எந்த நூலும் 15 நாட்களுக்குமேல் இன்னொருவர் கையில் இருக்கக்கூடாது. அந்நூல் சேதமடைந்தே திரும்பி வரும். திருப்பிக்கொண்டுவருவதற்கான தேதியை கடைப்பிடிப்பவர்களுக்கே மேலும் நூல்களை அளிக்கவேண்டும்.  ‘சும்மா இந்தவழி வந்தேன், அதான் புக்கை திருப்பிக்குடுக்கலாம்னு நினைச்சேன்’ என்று சொல்பவர்களுக்கு நூலை இரவல் அளிக்கக்கூடாது. அதன்பொருட்டே வருபவர்களுக்கே அளிக்கவேண்டும்

 

ஜெ

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பாதையில் பதிந்த அடிகள்

$
0
0

pathaiyil-padintha-adikal

 

அஞ்சலி -ராஜம் கிருஷ்ணன்

 

அன்புநிறை ஜெ,

 

நலமாக இருக்கிறீர்களா?

 

ஈராண்டுகளுக்கு முன் தங்களது நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் வாசித்தது முதல், அதில் சிபாரிசு செய்யப்பட்டு இதுவரை வாசிக்காதவற்றை வாசிக்கும் முயற்சியின் வரிசையில் ராஜம் கிருஷ்ணனின் ‘பாதையில் பதிந்த அடிகள்’ நேற்று வாசித்து முடித்தேன்.

 

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை அதிகாரத்தைத் தக்கவைத்து ஆட்சியை நிறுவிட, ஆண்டைகளாய் அது வரை இருந்த, அவ்வப்பகுதியின் நிலஉரிமையும், அதன் வகையில் மிகு செல்வபலமும் அதிகாரபலமும்  தலைமுறைகளாகப் பெற்றிருந்தோரையே மீண்டும் தலைவர்களாக சேர்த்துக்கொண்டது குறித்து கம்போடிய பயணத்தின் போது  குறிப்பிட்டிருந்தீர்கள்.

 

இந்த நாவலில் வரும் மணலூர் மணியம்மையின் கதையின் களத்தை, பிண்ணனியில் நிகழும் அரசியல் மற்றும் சமூகவியல் மாற்றங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அந்த சித்திரம் உதவியது.

 

இல்லையெனில் ஒரு வறண்ட கதை என இதை நான் கடந்திருக்கக்கூடும். இது ஒரு வாழ்க்கைச் சித்திரமென அறியாதே இக்கதையை வாசித்தேன். எனவே ஆரம்பப் பகுதியில் சனாதன தர்மத்தின் அடக்கு முறைகளிலிருந்து வெளியேறி,  விதவை எனும், பெண் எனும் அடையாளங்களை இரவோடிரவாகத் துறந்து, ஆண் போல உடையையும், தோற்றத்தையும் மாற்றி களப்போராட்டங்களில் இறங்கும் மணியம்மை ஒரு மிகு கற்பனை என்று கூடத் தோன்றியது.

 

வெளிப்பார்வைக்கு அத்தனை கடினமாய்த் தெரியாவிடினும் பெண் என அறியப்படுவதன் சமூக அடையாளங்களைத் துறந்து விடுதல் இன்று கூட அவ்வளவு எளிதல்ல. அப்படியிருக்க எழுபது வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்!! எனில் எளிதான பாதை எனில் அதில் பதிந்த அடிகளுக்கு சுவடிருக்காது.

 

மிகுந்த கள ஆராய்ச்சிகள் செய்து ஒவ்வொரு நூலையும் எழுதுபவர் என்று ராஜம் கிருஷ்ணன் குறித்து வாசித்தேன். அவர் மீதான உங்கள் அஞ்சலிக் குறிப்பை வாசித்தபோது, இவரது வாழ்வின் பாதையில் பதிந்த அடிகளும் ஆழமானவையே எனத் தோன்றுகிறது.

 

மிக்க அன்புடன்,

சுபா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஐரோப்பா 8- காலத்தின் விழிமணி

$
0
0

kohinura

இந்தியத் தொன்மங்களில் வரும் அருமணி சியமந்தகம். இது ஒரு வைரம் என்பதை வர்ணனைகளிலிருந்து உணரமுடிகிறது. சூரியன் தன் கழுத்திலணிந்திருந்த இந்த வைரம் சத்ராஜித் என்னும் யாதவனுக்குக் கிடைத்தது. அங்கிருந்து அது கிருஷ்ணனின் கைக்கு வந்தது. இந்த மணியைப்பற்றிய வரலாற்றுக்குறிப்பு ஏதுமில்லை. பாகவதத்திலும் பின்னர் விஷ்ணுபுராணத்திலும் இதைப்பற்றிய கதைகள் உள்ளன. இந்த வைரம் எது, எங்குள்ளது என்பதைப்பற்றி ஏராளமான கதைகள் உள்ளன.

 

இத்தகைய ஒர் அரிய வைரம் அப்படி தொலைந்துபோய்விடாது, எங்காவது இருக்கும் என்று சிலர் வாதிடுகிறார்கள். கோகினூர் வைரம்தான் அது என்று கதை உள்ளது. இன்னொருநாட்டில் என்றால் பல நாவல்கள், சினிமாக்கள் வந்திருக்கும். உண்மையில் இதற்கிணையான பல வைரங்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கிருஷ்ணதேவராயர் அணிந்திருந்த பல வைரங்களைப் பற்றி பர்ப்போஸா [Duarte Barbosa] பயஸ்  [Dominigo Paes] போன்ற அக்காலப் பயணிகளின் குறிப்புகளில் காணமுடிகிறது. அவருடைய குதிரையின் நெற்றியில் ஒரு பெரிய வைரம் அணிவிக்கப்பட்டிருந்தது என்கிறார் பர்போஸா. அவ்வைரங்கள் எவை என பெரும்பாலும் அடையாளம் காணப்படவில்லை.

lon1

பொதுவாக அவ்வைரங்களைப்பற்றிய அறிவார்ந்த உரையாடல்களே இந்தியாவில் இல்லை. அவை எங்கோ தேடப்படுகின்றன, கண்டடையப்படுகின்றன, பொது அறிவுத்தளத்துக்கு வருவதேயில்லை. கிருஷ்ணதேவராயரின் வழிவந்தவர் என சொல்லப்படும் ஜி.வைத்யராஜ் என்பவரிடம் மிக அரிய வைரங்கள் பல உள்ளன என்றும் அவற்றில் ஒருபகுதி சர்வதேச ஏலத்துக்கு வந்தது என்றும் ஒரு வதந்தி காற்றில் அடிக்கடி உலவிக்கொண்டிருக்கிறது. விஜயநகரத்தின் வைரங்களைப்பற்றி அவ்வாறான கதைகள் அடிக்கடி செவியில் விழுவதுண்டு. வைரங்களைத் தேடி விஜயநகர் சார்ந்த பகுதிகளில் கோட்டைகளையும் ஆலயங்களையும் உடைப்பவர்கள் அடிக்கடி கைதாகிறார்கள்

 

இன்றைய ஆந்திர-கர்நாடக எல்லையில் ஹோஸ்பெட் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருந்தது விஜயநகரம். 1336 ல் ஹரிஹரர் ,புக்கர் என்னும் இரு படைத்தலைவர்களால் உருவாக்கப்பட்ட நகரம். டெல்லி சுல்தான்களின் ஆட்சி வலுவிழந்தமையால் தெற்கே ஒரு பேரரசாக எழுந்தது. பல குலங்களால் ஆளப்பட்டாலும் பொதுவாக இவர்களை நாயக்கர்கள் என்பது வழக்கம். கிருஷ்ணதேவராயர் இவர்களில் மிகச்சிறந்த மன்னர். அவர் காலத்தில் தென்னகமே விஜயநகரின் ஆட்சியில் இருந்தது

lon4

1565ல் தலைக்கோட்டை என்ற இடத்தில் நிகழ்ந்தபோரில் அன்றிருந்த பாமினி சுல்தான்களால் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. [பிஜப்பூர், பீரார் ,பீதார் ,அஹமதுநகர், கோல்கொண்டா] விஜயநகரம் அழிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சி அங்கிருந்து தெற்கேவிலகி கூத்தி என்னுமிடத்திலும் பின்னர் அனந்தபூரிலும் நீடித்து 1646 வரை நீடித்தது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நாயக்கர் ஆட்சிகள் தஞ்சை, மதுரை, செஞ்சி, அனந்தபூர், துவாரசமுத்திரம், சித்ரதுர்க்கா ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட வெள்ளையர் ஆட்சி வருவதற்கு முன்புவரை நீடித்தன. ஹைதர் அலி, திப்பு சுல்தான், சந்தாசாகிப் ஆகியோரால் 1730ல் அவை வெல்லப்பட்டன.

 

இன்று விஜயநகரம் ஹம்பி என அழைக்கப்படுகிறது. ஒரு மாபெரும் இடிபாட்டுக்குவியல் அது. நான் பலமுறை அங்கே சென்றிருக்கிறேன். 1982ல் முதல்முறையாகச் சென்றபோது உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகி மயங்கிவிழுந்திருக்கிறேன். ஹம்பியில் விரூபாக்ஷர் ஆலயத்திற்கு முன்னால் அந்நகரின் மாபெரும் வைரவணிகர் வீதி உள்ளது. இந்த சந்தையைப்பற்றி பர்போசா எழுதியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட எடைக்குமேல் உள்ள வைரங்களை அரசர்களுக்கு மட்டுமே விற்கவேண்டும் என்றும், பிறர் அதை வாங்கினால் தண்டனை என்றும் சட்டமிருந்தது என்கிறார். அரசகுடியினர் அரிய மணிகளை விற்பதில்லை. அவற்றை அவர்கள் அணிகலன்களாகவும் தெய்வங்களுக்குரிய காணிக்கைகளாகவும் கருதினர்

 

ஹம்பி வைரச்சந்தை

ஹம்பி வைரச்சந்தை

கோஹினூர் இந்தச் சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனென்றால் அநத அருமணி அன்றைய கோல்கொண்டாவில் கிடைத்திருக்கலாம் என்பது நிலவியலாளர் கூற்று. அது அப்போது விஜயநகரத்தின் ஆட்சியில் இருந்தது. ஆந்திராவில் ஹைதராபாத் அருகே, பழைய கோல்கொண்டா நாட்டுக்குள், கிருஷ்ணா நதி பலவகையான பாறைகளை அரித்துக்கொண்டு ஓடும் கொள்ளூர் வைரச்சுரங்கம் நெடுங்காலமாகவே வைரங்களுக்குப் புகழ்பெற்றது. அங்கேதான் இந்தியாவின் புகழ்பெற்ற பல வைரங்கள் கிடைத்தன. கோஹினூர் அங்கே கிடைத்திருக்கலாம். அது கிருஷ்ணதேவராயரிடம் இருந்தது என்றும் விஜயநகர் வீட்சிக்குப்பின் பிஜப்பூர் சுல்தானின் கைக்குச் சென்றது என்றும் அங்கிருந்து பீஜப்பூரை வென்ற முகலாய ஆட்சியாளரான அக்பரிடமும் பின்னர் ஷாஜகானிடமும் சென்றது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

 

அன்று ஆப்ரிக்கா பிற உலகத்தால் கண்டடையப்படவில்லை. ஆகவே தரமான வைரங்கள் இந்தியாவில் மட்டுமே கிடைத்தன. மிகத்தொல்காலத்தில் எரிமலைக்குழம்புக்குள் அகப்பட்டு அழுத்தமும் வெப்பமும் கொண்டு இறுகும் கரியே வைரம். தென்னிந்தியா தொன்மையான எரிமலைப்பாறைகளாலானது. அந்தப்பாறைகளை நதி ஒன்று ஆழமாக வெட்டிச்செல்கையில் வைரம் வெளியே வருகிறது. கிருஷ்ணா ஆவேசமான ஆறு. பெருவெள்ளம் வடிந்தபின் அதன் கூழாங்கற்பரப்பு விரிந்துபரந்து கிடக்கும். அதில் அரிதாக வைரங்கள் கிடைத்தன. வாழ்நாளெல்லாம் அந்த மணலை அரித்துக்கொண்டிருப்பவர்களில் மிகச்சிலருக்கு மட்டும் அவை அகப்பட்டன. பின்னர் ஆப்ரிக்காவில் நிலக்கரிப்படிவங்களில் வைரங்கள் கிடைக்கத் தொடங்கியபோது  வைரம் மதிப்பிழந்தது. இன்று கருவிகளைக்கொண்டு இருக்குமிடத்தை அறிந்து ஆழத்தில் தோண்டி அவற்றை எடுக்கிறார்கள். அருமணிகளில் எவற்றுக்கும் இன்று விலைமதிப்பு பெரிதாக இல்லை. வைரத்துக்கு மட்டும் அதன் மதிப்பு செயற்கையாக உருவாக்கி நிலைநிறுத்தப்படுகிறது

 

கிருஷ்ண தேவராயர்

கிருஷ்ண தேவராயர்

 

b1

ஷா ஜகான்

 

நாதிர்ஷா

நாதிர்ஷா

 

அகமது ஷா துரானி

அகமது ஷா துரானி

 

ரஞ்சித் சிங்

ரஞ்சித் சிங்

 

 

vic

விக்டோரியா

 

கோஹிநூர் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுகள் ஏதுமில்லை. ஆனால் முகலாய ஆட்சியாளரான பாபர்  187 காரட் எடையுள்ள ஒரு அரிய வைரத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். கோகினூர் 186 காரட் எடையுள்ளதென்பதனால் அது கோகினூர்பற்றிய குறிப்பே என சில ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் 1307ல் தென்னகப்படையெடுப்பின்போது கைப்பற்றிக் கொண்டுவந்த செல்வங்களில் ஒன்று அது என்றும், பெரும்பாலும் வரங்கலை ஆண்ட காகதீயர்களின் கையிலிருந்து கொள்ளையிடப்பட்டிருக்கலாமென்றும் அவர்கள் கூறுகிறார்கள். 1526 ல் சுல்தான்களை பாபர் வென்றபோது அவருக்கு பரிசாக இந்த வைரம் அளிக்கப்பட்டது. காகதீயர்களின் ஆட்சியில்தான் அன்றைய கோல்கொண்டா இருந்தது. வரலாற்றுக்கு முன்பாக கோகினூர் தோன்றுவது ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில்தான். அலங்காரப்பித்து கொண்டிருந்த ஷாஜகான் அமைத்த மயிலாசனத்தில் அவருடைய தலைக்குமேல் பதிக்கப்பட்டிருந்தது கோகிநூர்.

 

கோகி நூர் 196 மெட்ரிக் காரட் எடைகொண்டது.[38.2 கிராம்] ஷாஜகான் அவருடைய மைந்தரான ஔரங்கசீபால் சிறையிலடைக்கப்பட்டார். வைரங்களை அணியவிரும்பாதவரான ஔரங்கசீப் கோகிநூரை கருவூலத்தில் வைத்தார். 1739 ல் பாரசீக ஆட்சியாளரான நாதிர் ஷா டெல்லிமேல் படையெடுத்துவந்தார். டெல்லியை ஆண்ட முகம்மது ஷாவைத் தோற்கடித்து கருவூலத்தைக் கைப்பற்றினார். கோகிநூர் அவர் கைக்குச் சென்றது. அவருடைய அவைப்புலவர் ஒருவர் இவ்வாறு சொன்னதாகச் சொல்லப்படுகிறது. “ஒரு கல்லை நான்கு திசைகளுக்கும் எறிந்து முழுவிசையுடன் வானிலும் எறிந்து நடுவேயுள்ள இடத்தை முழுமையாக தங்கத்தால் நிரப்பினாலும் இந்த வைரத்தின் மதிப்புக்கு நிகராகாது” அந்த அருமணிக்கு பாரசீக மொழியில்  மலையின் ஒளி அல்லது ஒளிகொண்ட மலை என்ற பொருளில் கோகி நூர் என பெயரிட்டதும் நாதிர்ஷாவின் அவையில்தான்

lon

நாதிர்ஷாவின் மகனிடமிருந்து ஆப்கன் மன்னர் அகமது ஷா துரானியிடம் இந்த வைரம் சென்றது. அவருடைய மகன் ஷூஜா ஷா துரானி ரஷ்யாவால் தாக்கப்பட்டபோது பஞ்சாபுக்கு தப்பி ஓடிவந்தார். அவருக்கு அடைக்கலம் அளித்த சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்குக்கு நன்றிக்கடனாக அந்த வைரத்தை அளிக்கவேண்டியிருந்தது. மகாராஜா ரஞ்சித் சிங் பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு கோகினூர் அளிக்கப்படவேண்டும் என இறுதிச்சாத்து எழுதியிருந்தார். ஆனால்  1849 ல் சீக்கிய அரசை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தோற்கடித்து தன் நிலத்துடன் சேர்த்துக்கொண்டது. அவர்கள் அந்த வைரத்தையும் சீக்கிய அரசின் கருவூலத்தையும் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள். விக்டோரியா மகாராணிக்கு சீக்கிய அரசர் அதை அன்பளிப்பாக அளிப்பதாக போருக்குப்பின் எழுதப்பட்ட லாகூர் உடன்படிக்கையில் எழுதி கைச்சாத்து பெறப்பட்டது. 1850ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவரால் பக்கிங்ஹாம் அரண்மனையில் நிகழ்ந்த விழாவில் கோகினூர் விக்டோரியா மகாராணிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அவ்வாறு கோகினூர் பிரிட்டிஷ் அரசின் உடைமையாக ஆகியது.

 

கோகினூரை துரதிருஷ்டங்களின் கல் என்று சொல்வதுண்டு. அதை ஒருவர் அணிந்தால் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் அவரோ அவர் வாரிசுகளோ  பெருந்துயரை அல்லது அழிவைச் சந்திப்பார்.அதை வைத்திருந்த காகதீயர்கள் அல்லது நாயக்கர்களின் அரசு முற்றாக அழிந்தது. ஷாஜகான் மகனால் சிறையிடப்பட்டு நோயாளியாகி இறந்தார். அகமதுஷா அப்தாலி படையெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். துரானி நாடிழந்து ஓடினார். சீக்கியர்கள் அரசிழந்தனர். அதைக் கைப்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆறாண்டுகளில் அதிகாரமிழந்தது. அந்தக் கல்லை லண்டனுக்கு கொண்டுபோன கப்பல் காலராவாலும் விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டது. அந்நம்பிக்கையால்தான் பிரிட்டிஷ் அரசியின் மணிமுடியில் சூட்டப்பட்ட அக்கல் அங்கிருந்து அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

download

சென்ற 2011ல் திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்திற்குள் இருக்கும் நிலவறைகளில் உள்ள பெருஞ்செல்வம் நீதிமன்ற ஆணைப்படி திறந்து கணக்கிடப்பட்டது. சமீபகாலத்தில் பெரிய வியப்பலைகளை உருவாக்கியது இந்நிகழ்வு. இச்செல்வம்  சேரன் செங்குட்டுவன் காலம் முதலே இருந்துவரும் கருவூலம் என்றும் அதை 1731ல் இன்றைய ஆலயம் கட்டப்படும்போதே  உருவாக்கப்பட்ட  ஆலயத்தின் அடித்தள அறைகளில் பாதுகாத்து வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 1789ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர்மேல் படையெடுத்துவந்தபோது மேலும் செல்வம் அவ்வறைகளில் ஒளித்துவைக்கப்பட்டது. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசகுடி மட்டுமே அறிந்த ரகசியமாக இருந்தது அச்செல்வம். ஆகவே பாதுகாப்பாகவும் இருந்தது, பிரிட்டிஷார் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. கப்பத்துக்காக திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கசக்கிப்பிழியப்பட்டது. ஆனால் அரசகுடியினர் அச்செல்வத்தைப்பற்றி மூச்சுவிடவில்லை.

 

பத்மநாப சாமியின் செல்வம் பற்றிய செய்திகள் வெளியானபோது இந்தியா முழுக்க இருக்கும் ஆலயங்களைப்பற்றிய ஆர்வம் கிளம்பியது. ஸ்ரீரங்கம் , திருச்செந்தூர் உள்ளிட்ட ஆலயங்களில் அதேபோல அறைகள் இருந்தன. எதிலும் எந்தச் செல்வமும் இல்லை. அவை முழுக்கவே தொடர்ச்சியான படையெடுப்புகளாலும் பிரிட்டிஷாரின் திட்டமிடப்பட்ட முறையான சுரண்டலாலும் முழுமையாகவே கவர்ந்துசெல்லப்பட்டன. பத்மநாபசாமியின் கருவூலம் இன்று உலக அளவில் ஓரிடத்தில் இருக்கும் பெருஞ்செல்வங்களில் ஒன்று.ஏராளமான வைரங்கள், அருங்கலைப்பொருட்கள். அந்தக் கணக்கில் பார்த்தால் இந்தியா முழுக்க இருந்து கொள்ளைபோன செல்வத்தின் அளவு என்ன?

lon2

2014ல் நியூயார்க் சென்றிருந்தபோது அங்கு அருங்காட்சியகத்தில் முகலாயர்களின் நகைகள், வைரங்கள் ஆகியவற்றாலான தனிக்கண்காட்சி ஒன்றைக் காண வாய்ப்பு கிடைத்தது. [Treasures from India: Jewels from the Al-Thani Collection]மறைந்த கத்தார் இளவரசர் ஷேக் ஹமீது பின் அப்துல்லா அல்தானி[Sheikh Hamad bin Abdullah Al-Thani]  யின் தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள நகைகள் அவை. அவர் உலகமெங்குமிருந்து ஏலத்தில் வாங்கிய நகைகள்.  ‘சட்டபூர்வமான’ சிக்கல்களால் அக்கண்காட்சி இந்தியா தவிர பிறநாடுகளில் மட்டுமே நடந்துவருவதாக அறிவிப்பு தெரிவித்தது  . அருண்மொழி ஐந்தே நிமிடத்தில் “நான் வெளியே போயிடறேன். எனக்கு கைகாலெல்லாம் நடுங்குது… ஏன்னே தெரியலை” என்றாள். நான் சுற்றிச்சுற்றி வந்து அந்த வைரங்களையும் அருமணிகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரமைபிடித்ததுபோலிருந்தது. உறைந்த எரிதழல்கள், கல்மலர்கள், வெறித்த விழிகள், இறுகிய நீர்த்துளிகள், சொட்டுக்குருதிகள்…

 

இந்த அருமணிகளின் பொருள்தான் என்ன? ஏன் இவற்றை மானுடர் இத்தனை ஆர்வத்துடன் சேர்த்தனர்? இவற்றை செல்வமாகக் கருதினர்? இவற்றுக்காக பேரரசுகள் போரிட்டிருக்கின்றன. ராணுவங்கள் செத்து அழிந்திருக்கின்றன. அழகா? எளிய கண்ணாடிக்கல்லுக்கு இதே அழகு உண்டு. அரிதென்பதனாலா? ஆனால் அரிதான எத்தனையோ இப்புவியிலுள்ளன. அழகானதும் அரிதானதுமான ஒன்று நிரந்தரமானதாக இருப்பதன் விந்தையால்தான் என தோன்றுகிறது. அதிகாரத்தின் அடையாளமாக  அவை மாறின. பின் உலகை ஆளலாயின. எண்ண எண்ண விந்தைதான். உலகமே கூழாங்கற்களாலானது. அவற்றில் சில கூழாங்கற்கள் உலகை ஆள்கின்றன!

towr

சிறில் அலெக்ஸ் குடும்பத்துடன் கோகினூர் வைக்கப்பட்டிருக்கும் லண்டன் கோபுரத்திற்கு [The Tower of London] சென்றோம். லண்டன் நகருக்கு நடுவே தேம்ஸ் நதியின் கரையில் இந்த தொன்மையான கோபுரக்கோட்டை [castle] அமைந்துள்ளது. கிபி 1066ல் நார்மன் படையெடுப்பாளர்களால் அமைக்கப்பட்டது இக்கோட்டை. இதிலுள்ள வெள்ளைக்கோபுரம் வில்லியம் மன்னரால் 1078ல் கட்டப்பட்டது. இங்கிலாந்தின் மீதான படையெடுப்பாளர்களின் அடையாளமாக அன்றைய பிரிட்டிஷ் மக்களால் இது கருதப்பட்டது. நெடுங்காலம் நார்மன் மன்னர்களின் அரண்மனையாக இது இருந்தது. பின்னர் சிலகாலம் சிறையாகச் செயல்பட்டது. கடைசியாக 1950களில் குற்றக்கும்பலின் தலைவர்களான கிரே சகோதரர்கள் என்னும் இரட்டையர்   இங்கே சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். அரசர்களான முதலாம் ரிச்சர்ட், மூன்றாம் ஹென்றி மற்றும் முதலாம் எட்வர்ட்  காலகட்டங்களில் ,பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை, இந்த கோபுரக்கோட்டை விரிவாக்கிக் கட்டப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு கட்டிடம் அமைப்பே இன்றுள்ளது.

 

தொன்மையான கோட்டைகளில் உருவாகும் மெல்லிய படபடப்பை இங்கும் உணர முடிந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்திரா காந்தியின் இல்லத்துக்கு புபுல் ஜெயகருடன் சென்றபோது மயக்கம் வருமளவுக்கு பதற்றத்தை உணர்ந்தார் என்றும், அது அங்கே அவர் உணர்ந்த வன்முறையால்தான் என்றும் வாசித்திருக்கிறேன். எல்லா அதிகார மையங்களிலும் வன்முறை நுண்வடிவில் உறைந்திருக்கிறது. பலசமயம் உச்சகட்ட வன்முறை என்பது மென்மையானதாக, அமைதியானதாக மாற்றப்பட்டிருக்கும். சமயங்களில் அது உயர்கலையின் வடிவிலும் இருக்கும். லண்டன் கோபுரம் நெடுங்காலம் பலவகையான போர்களின், அரண்மனைச் சதிகளின் களமாக திகழ்ந்தது. அது அதிகாரச்சின்னம் என்பதனாலேயே அதைக் கைப்பற்ற தொடர்ச்சியான முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அத்துடன் அது ஒரு சிறை. சித்திரவதைகளும் மரணதண்டனைகளும் நிகழ்ந்த இடம். ‘டவருக்கு அனுப்புதல்’ என்ற சொல்லாட்சியே பிரிட்டிஷ் வரலாற்றில் இருந்திருக்கிறது.

lonaa

நான் பார்த்த முதல் ஐரோப்பியக் கோபுரக்கோட்டை இதுதான். இதற்குமுன்பு அமெரிக்காவில் சிகாகோ அருகே டியர்போர்ன் [ Fort Dearborn ] கோட்டையை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஐரோப்பியக் கோபுரக்கோட்டைகளின் பாணியில் கட்டப்பட்ட  பிற்கால அரண்மனைகள் சிலவற்றை  ஐரோப்பாவில் பார்த்ததுண்டு. லண்டன் டவர் முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது. இப்பகுதிக் கட்டிடங்கள் நதிகளில் உருண்டுவந்தமையால் உருட்சி பெற்றுள்ள சிறியகற்களை சேறுடன் கலந்து அடுக்கி கட்டப்பட்டவை. அடித்தளங்களும் பெருஞ்சுவர்களும் சேற்றுப்பாறை அல்லது சுண்ணப்பாறைகளை வெட்டி அடுக்கி எழுப்பப் பட்டவை. உருளைக்கற்கள் சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில்லை. ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் உருண்டு ஒவ்வொரு தனியாளுமையை அடைந்த கற்கள், அவற்றை ராணுவமாக்க முடியாது. ஆகவே சுவர்கள் பெரும்பாலும் மிகத்தடிமனானவை. இத்தகைய கற்களுக்கு வளைவுகள் மிக உகந்தவை. ஒன்றை ஒன்று கீழே தள்ள முயன்று அவ்விசையாலேயே அவை நிரந்தரமாக நின்றிருக்கும். இதுவே ஐரோப்பிய கோபுரக்கோட்டைகளின் அழகியல்.

 

தடித்த தூண்கள் எழுந்து வளைந்து கிளைபோல விரிந்து கோத்துக்கொண்டு வளைவாக ஆகி கூரையமைத்த கூடங்கள், இடைநாழிகள். குளிர்ந்த காற்று அச்சுறுத்தும் நினைவுபோலத் தோன்றியது. அரசர்களின் ஆடைகள், அவர்களின் படைக்கலங்கள். அங்கே வாழ்ந்த மன்னர்களை மானுடர் என்று நம்புவது மிகவும் கடினம். விந்தையான ஏதோ உயிர்வகை, தேவர்களும் அரக்கர்களும் கலந்த ஒன்று. ஆனால் அரசர்களும் அரசிகளும் சிறுகுழந்தைகளாக இருந்தபோது விளையாடிய பொருட்கள் அங்கே காட்சிக்கு உள்ளது. அவர்கள் விளையாடிய சிறு பொம்மை வீடு. அது அவர்களை மானுடர் என்று காட்டியது. அவர்கள் மானுடர்களாக இருப்பது சிற்றிளமையில் மட்டும்தான்.

 

முதலாம் ரிச்சர்ட்

முதலாம் ரிச்சர்ட்

மேலே வெள்ளைக்கோபுரத்தில் ஏறும்படிகள் குறுகலானவை. அங்கே பல அறைகள் சிறைகளாகவும் தண்டனைக் கொட்டடிகளாகவும் பயன்பட்டவை. இரும்பு வளையங்கள், தளைகள். அதற்குள் எப்போதைக்குமாக வந்துசேரும் மனிதர்களின் உள்ளம் எப்படி இருக்கும்? எதிர்காலம் என்பது முற்றிலும் இல்லாமலாவதே மிகப்பெரிய வதை. மறு எல்லை இல்லாத இருண்ட சுரங்கங்களில் சென்றுகொண்டே இருப்பதுபோல. அதைவிட சகமனிதன் இரக்கம் அற்றவன் என உணர்வது, மானுடம் மீதான நம்பிக்கையை முற்றாக இழப்பது. அந்தக்கோடையிலேயே அந்த அறைகள் ஈரமாக இருட்டாக குளிராக இருந்தன. லண்டனின் புகழ்பெற்ற குளிர்காலத்தில் அவர்கள் உருவகம் செய்து வரைந்து வைத்திருக்கும் நரகங்களைப்போலவே இருந்திருக்கும்

 

சுற்றிலும் அகழி. ஆழத்தில் லண்டனின் காட்சி. அப்போது கோடையானதனால் உற்சாகமான சூழல் நிலவியது. ஜப்பானிய, சீனப்பயணிகள் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கிருக்கும் எந்தக்குறிப்பையும் வாசிப்பதை நாம் பார்க்கமுடியாது. சற்று மண்ணுக்குக் கீழே செல்லும் அடித்தளத்தில் ஒரு ஒயின்கடையும் நினைவுப்பொருட்கள் விற்கும் கடையும் இருந்தன. ஒரு கோப்பை வரலாற்றை விழுங்கி ஒரு துண்டு வரலாற்றை வாங்கிக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். வரலாற்றுத் தலங்களுக்கு மேல் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக பேசியபடிச் சுற்றிவருவதைப் பார்க்கையில் வெடிமருந்துக்குமேல் ஈ ஏதுமறியாமல் அமர்ந்து எழுந்து அமர்வதுபோல ஒரு கற்பனை எழுந்தது.

Tower_of_London,_south,_Buck_brothers

வெளியே கோட்டைவாயிலில் ஒரு இசைக்குழு அக்காலத்தைய ஆடைகளை அணிந்து இசைத்துக்கொண்டிருந்தது. எதிர்பாராமல் ஒரு கூச்சல். ஒரு பெண் வாளை உருவியபடி ஓடிவந்தாள். ஒருவர் வாளை உருவியபடி எதிர்த்துச் சென்றார். இருவருமே பழங்கால ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு திறந்தவெளி நாடகக் காட்சி. அக்காலத்தைய வரலாற்று நிகழ்வொன்றை நடிக்கிறார்கள் எனத் தெரிந்தது. அந்த நாகரீகச் சுற்றுலாப்பயணிகளின் திரளில் வந்துசேர்ந்த அந்தக் கடந்தகாலம் சிலகணங்களுக்குப்பின் கேலிக்கூத்தாக மாறியது. சின்னக்குழந்தைகள் சில பயந்து அலறின.

 

லண்டன் டவர் அருங்காட்சியகத்தில்தான் கோகினூர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அரையிருள் பரவிய காட்சிக்கூடத்தில் பிரிட்டிஷ் அரசர்கள், அரசியரின் மணிமுடிகளும் அணிகளும் வைக்கப்பட்டுள்ளன. மணிமுடிகளிலிருந்து நகைகள் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தால் அவற்றின் மாதிரிவடிவங்கள் செய்துவைக்கப்பட்டிருந்தன. அந்த இருளில் வைரங்கள் நம்மை ஒளிரும் விழிகள் போலச் சூழ்ந்துகொள்கின்றன. எவை எங்கிருந்தவை என்றெல்லாம் அறியமுடியவில்லை. கோகினூர் பற்றி மட்டும்தான் என் சிந்தை குவிந்திருந்தது. எலிசபெத் ராணியின் மணிமுடியில் 1937 வரை அது இருந்திருக்கிறது.

Queen_Mary's_Crown

கோகினூர் கண்ணாடித்துண்டுபோலத்தான் இருந்தது. உண்மையில் அது 1852ல் அதை மக்களுக்குக் காட்சிக்கு வைத்தபோது அது எவரையும் பெரிதாகக் கவரவில்லை. ஆகவே அதை மறுவெட்டு செய்து இன்றைய அமைப்புக்குக் கொண்டுவந்தார்கள். ஒரு கண்ணாடிப்பேழைக்குள் தெரிந்த கோகினூர் மிகச்சிறிய விளக்கால் கச்சிதமாக ஒளியூட்டப்பட்டிருந்தது. அருகே சென்ற ஒருவரின் சிவப்புநிற ஆடை அதில் பல்லாயிரம் மடிப்புகளாக மாறி உள்ளே சென்று சுழன்றது. சூழ்ந்திருக்கும் அத்தனை காட்சிகளையும் தன் பட்டைகளால் அள்ளி பலகோடி உள்ளடுக்குகளுக்குள் செலுத்தியபடி இருந்தது. நாம் அங்கிருந்து விலகினாலும் உள்ளே எங்கோ அவையனைத்தும் இருக்கும், துளியாக, அணுவாக. வைரம் வெறும் படிகம் அல்ல, அது நாம் அறியமுடியாத ஒரு நிகழ்வு.

 

ஆனால் அங்கிருந்தது கோகினூர்தானா? அது கோகினூரின் கண்ணாடியாலான தத்ரூப நகல் என்றார் நண்பர். இருக்கலாம், வரலாற்றை நாம் எங்கே பார்க்கிறோம்? நாம் அறிவதெல்லாம் புனைவைத்தானே?வெளியே வந்து அமர்ந்தபோது வாசித்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. கோகினூரை பஞ்சாபிலிருந்து விக்டோரியாவின் அவைக்குக் கொண்டுவரும் பொறுப்பில் இருந்தவர் ராணுவ அதிகாரியும் பஞ்சாப்பகுதி ஆளுநருமான சர் ஹென்றி லாரன்ஸ். அவர் அதை தன் கோட்டுப்பையில் வைத்திருந்தார், பத்திரமாக இருக்கட்டுமே என்று. அல்லது முடிந்தவரை கையிலேயே வைத்திருப்போமே என்று. அவர் தன் கோட்டை கவனக்குறைவாக வைரத்துடன் சலவைக்குப்போட்டுவிட்டார். அதன்பின் உயிர்பதைக்க அதைத்தேடி அலைய சலவைக்காரர் அது என்ன என்று தெரியாமல் திரும்பக்கொண்டுவந்து கொடுத்துவிட்டார். எனக்கு அத்தனை ஆட்சியாளர்களைவிடவும் ஹென்றி லாரன்ஸ்தான் அணுக்கமானவராகத் தோன்றினார். முயன்றிருந்தால் அவர் நல்ல நாவல்களை எழுதியிருக்கக் கூடும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புனைவின் வழித்தடம்

$
0
0

punai

 

அன்புள்ள ஜெயமோகன்

 

 

நீண்ட நாட்களுக்குப் பின் கடிதம் எழுதுகிறேன்.

 

 

எனது எழுத்துக்கள் அனைத்தையும் மின்நூல்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

 

 

புதிதாக வாசிக்க இயலாமலிருப்பது கவலையைத் தருகிறது.

 

 

தங்கள் சிறுகதைகளைக் குறித்து தனி மின்நூல் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளேன்.

 

நூலைப்பற்றி கேசவமணி முன்னுரை

அமேசானில் நூல் வாங்க

https://www.amazon.in/Kesavamani/e/B0771662XG/ref=sr_ntt_srch_lnk_1?qid=1534993575&sr=1-1

 

அன்புடன்,

கேசவமணி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்

$
0
0

ch

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

 

வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய உங்கள் கருத்தை வாசித்தேன். சர்ச்சிலையும் ஹிட்லரையும் ஒப்பிடுவது அபத்தம் என்பது என் எண்ணம். சர்ச்சில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவர் இடத்தில் ஹிட்லர் இருந்திருந்தால் காந்தியின் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியிருப்பார். காந்தியை மரியாதையாக ஆகாகான் மாளிகையில் சிறைவைத்தவர் சர்ச்சில். காந்திக்கும் கஸ்தூர்பாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவர். சர்ச்சில் போரில் ஹிட்லரை வெல்லாமல் இருந்திருந்தால் உலகை ஹிட்லர் பேரழிவுக்கு உள்ளாக்கியிருப்பார்.

 

சர்ச்சில் கடுமையான கருத்துக்கள் கொண்ட பழைமைவாதி. ஆனாலும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகவும் மாற்றுக்கருத்துக்களுக்குச் செவிகொடுப்பவராகவும்தான் இருந்தார். ஹிட்லரை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். ஹிட்லரைப்பற்றிப் படிக்க ஏராளமான நூல்கள் உள்ளன. ஹிட்லரைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஹிட்லர் நேரடியாகவே இனப்படுகொலைகளை நிகழ்த்திய கொடூரமான மனிதர். ஹிட்லர்போன்ற கொடியவர்கள் வரலாற்றில் அரிதாகவே எழுவார்கள்.

 

சர்ச்சில் இந்திய சுதந்திரப்போராட்டத்தை ஹிட்லர் யூதர்களை அடக்கியதுபோல அடக்கியிருக்கலாம். கொலைவெறியாடியிருக்கலாம். அதைச்செய்யாததே அவரை ஹிட்லரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதெல்லாம் இன்றைக்கு சர்ச்சிலை திட்டுபவர்களுக்குத்தெரிந்திருக்காத விஷயங்கள். சர்ச்சில் ஒரு பிரிட்டிஷ் ஆட்சியாளர். அவர் மனசுக்கு சரியென்று பட்டத்தைச் செய்தார். அவர் ஒரு பிரதமராக பிரிட்டனுக்கு நல்லது செய்தார். வெற்றி தேடித்தந்தார். அவர்தான் காந்தியை புகழ்ந்தும் அஞ்சலி செலுத்தினார்.

 

உங்கள் கருத்துக்களை நீங்கள் மேலும் வாசித்து தெளிவுபடுத்திக்கொண்டு எழுதவேண்டும். இணையத்திலிருந்து  தகவல்களை எடுத்து  கருத்துக்களை எழுதுகிறீர்கள். வரலாற்றைச் சற்றுப் புரிந்துகொண்டு எழுதுங்கள்

 

ஆர். சத்யநாராயணன்

 

 

அன்புள்ள சத்யநாராயணன்,

 

உங்கள் சிறு கடிதத்துக்குள் எத்தனை முன்முடிவுகள். அனைத்தையும் ஒவ்வொன்றாக மறுக்கவேண்டும். ஒன்று , எவ்வகையிலும் ஹிட்லரை ஏற்கவோ மழுப்பவோ அக்கட்டுரை முயலவில்லை. ஹிட்லர் தோற்றார் என்பதனால் அவரைப்பற்றிய சரித்திரம் உலகமெங்கும் தெளிவாகத் தெரிகிறது. சர்ச்சிலும் ஸ்டாலினும் வென்றவர்கள் என்பதனால் அவர்களுக்குச் சாதகமான சித்திரம் உலகமெங்கும் உருவாக்கப்பட்டது. ஸ்டாலின் இன்று வெளிப்பட்டுவிட்டார். இன்னமும் ஐரோப்பிய அறிவியக்கத்தால் சர்ச்சில் நிலைநிறுத்தப்படுகிறார். கீழைநாட்டினரான நாம் சர்ச்சிலைப்பற்றிய நமது நோக்கை  நம் வரலாற்று அனுபவங்களிலிருந்து உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

 

இக்கருத்துக்கள் எதுவும் புதியவை அல்ல. நான் சர்ச்சிலைப்பற்றியும் அவருடைய மறைமுகப் பங்களிப்புள்ள பஞ்சங்களைப்பற்றியும் முதல் விரிவான கட்டுரையை எழுதியது 1991ல். என் புரிதல் உரிய நூல்களின் வழியாக மட்டுமல்ல உரியமுறையில் வரலாற்றை வாசித்த பேரறிஞர்களுடனான நேரடி உரையாடல்களின் வழியாகவும்கூட. ஆனால் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் கழைக்கூத்துகளுடன் போரிடுவது என் நோக்கம் அல்ல.

 

நீங்கள் பல நூல்களை படிக்கிறீர்கள், பாராட்டுக்கள். ஆனால் ஓர் எளிய பயணக்கட்டுரை நேரடியாகச் சொல்லும் மையக்கருத்தைப் புரிந்துகொள்ள இத்தனை இடர்கொள்கிறீர்கள். அக்கட்டுரையின் மையமே பிரிட்டிஷ் பண்பாட்டிலுள்ள இரட்டை அம்சம்தான். ஹிட்லரை அல்லது போல்பாட்டைப் புரிந்துகொள்வதுபோல பிரிட்டிஷாரைப் புரிந்துகொள்ளக்கூடாது என்றும் அது மிகப்பெரிய பிழை என்றும்தான் அக்கட்டுரை சொல்கிறது.

 

பிரிட்டிஷாருக்குப் பொதுவாகவே இரண்டுமுகங்கள் உள்ளன. ஒருபக்கம் ஜனநாயகவாதிகளாக, பேச்சுவார்த்தையில் நம்பிக்கைகொண்டவர்களாக, அறிவார்ந்தவர்களாக, தனிப்பட்ட பண்புநலன்கள் கொண்டவர்களாக அவர்கள் இருப்பர்கள். அது நடிப்பல்ல, உண்மையான இயல்பு. ஏனென்றால் அவர்கள் பிரிட்டன் என்னும் வளர்ந்த பண்பாட்டின் உறுப்புகள்.  மறுபக்கம் ஈவிரக்கமற்ற சுரண்டல்காரர்களாகவும் இனவாதிகளாகவும் பேரழிவை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் பிரிட்டன் எனும் பேரரசின் உறுப்புகள்.

 

பிரிட்டிஷ் அரசுக்கே அந்த இரட்டைமுகம் உண்டு. இந்தியக்கலைச்செல்வங்களைக் காத்தவர்கள், இந்தியாவில் சட்ட ஒழுங்கை உருவாக்கியவர்கள், இந்தியாவில் பொதுக்கல்வி முதலியவற்றை அறிமுகம் செய்தவர்கள் அவர்கள். மறுபக்கம் இந்தியாவை மாபெரும்பஞ்சங்களை நோக்கித் தள்ளி கோடானுகோடிபேரைக் கொன்றழித்தவர்கள். இந்த இரட்டைநிலையைத்தான் பல்வேறு உதாரணங்கள் வழியாக அந்தக்கட்டுரையில் குறிப்பிடுகிறேன். சர்ச்சில் எழுத்தாளர், ஜனநாயகவாதி என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கே அவர் பேரழிவின்சிற்பி என்பதும் உண்மை. ஒன்றைச் சொல்லும்போது இன்னொன்றைக் காட்டி மறுப்பது பிழை. இதைப்புரியவைக்கவே நான் முயல்கிறேன்.

 

ஹிட்லரையும் சர்ச்சிலையும் இக்கட்டுரை ஒரே நிரையில் நிறுத்துவது அவர்கள் ஒரே குணாதிசயம் கொண்டவர்கள் என்பதற்காக அல்ல, அவர்கள் உருவாக்கிய ஒட்டுமொத்த விளைவு ஒன்றே என்பதற்காக. ஹிட்லரும் முசோலினியும் போல்பாட்டும் ஸ்டாலினும் மாவோசே துங்கும் ஒரே நிரையில் வருவது அவ்வாறுதான்.இதேபோல போல்பாட்டையும் ஹிட்லரையும் ஒப்பிட்டால் எவராவது கிளம்பி வந்து ஹிட்லர் ஜெர்மானியக் கலையையும் இலக்கியத்தையும் போற்றியவர், வாக்னரின் ரசிகர் ஆனால் போல்பாட் கெமர் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டிருந்தாலும் கம்போடியாவின் பண்பாட்டை முற்றழிக்க முயன்றவர் , ஆகவே அவர்கள் வேறு வேறு என்று வாதிடமுடியும்.

 

இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான குணாதிசயம் கொண்டவர்கள் முற்றிலும் மாறுபட்ட  கொள்கை கொண்டவர்கள். ஆனால் அவர்கள் உருவாக்கிய விளைவும் அவர்கள் அதை எதிர்கொண்ட மனநிலையும் ஒன்றே. அக்கட்டுரையில் இருந்து அதையாவது புரிந்துகொள்ளுங்கள்.

 

ஒரு குற்றம் என்பது செய்வது மட்டும் அல்ல,  செய்யவேண்டியதைச் செய்யாமலிருப்பதும் கூடத்தான். அதுவும் தெரிந்தே, விளைவுகளை முற்றிலும் புரிந்துகொண்டே செய்யாமலிருப்பது பெருங்குற்றம். அப்பேரழிவுக்குப்பின்னர் அதைப்பற்றிய குற்றவுணர்வு சற்றுமின்றி  இனவாத நோக்குகொண்டிருத்தல் மேலும் பெரிய குற்றம். சர்ச்சிலை அவருடைய ‘நல்ல ஆங்கிலத்துக்காக’ மன்னித்துவிடலாம் என்று சொல்வதைப்போன்றது அவருடைய பிரிட்டிஷ் ஜனநாயகப் பண்புகளைப்பற்றிப் பேசுவது. அவருடைய குற்றங்களைப்பற்றிய பேச்சு இந்தியச்சூழலில் இருந்தே எழுந்து வரமுடியும். ஐரோப்பிய நூல்களை மேற்கோள்காட்டித்தான் அது மறுக்கவும்படும் – பெரும்பாலும்  தோலைமட்டும் உண்ணத்தெரிந்த அரைகுறை வாசிப்பாளர்களால்.

 

நீங்கள் சொல்லும் இந்த  ‘ஒண்ணாம் வகுப்பு’ கருத்துக்களெல்லாம் இந்தியச் சூழலில்  முக்கியமான அரசியல்சிந்தனையாளர்களால் ஏற்கனவே பக்கம் பக்கமாக பேசி விவாதிக்கப்பட்டவைதான். எளிமையான செய்திகளும் அரட்டைக் கருத்துக்களும் அல்ல வரலாறு. அது நுட்பமான ஊடுபாவுகளால் பின்னப்பட்டது. அதை அறிவதற்கு நீங்கள் விவாதிக்கும் இந்த சலசலப்பு மனநிலை எவ்வகையிலும் உதவாது.

 

முதல் விஷயம், காந்தி பிரிட்டிஷ்காரர்களின் ‘கருணையால்’ போராடியவர் அல்ல. அன்று பிரிட்டிஷ்காரர்களுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு இன்றியமையாதது. இந்தியா மீதான தங்கள் ஆதிக்கமென்பது ‘அறத்தின்பாற்பட்டது’ ‘வெள்ளையனின் பொறுப்பு’ சார்ந்தது என்ற சித்திரத்தை உலகளாவ உருவாக்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் அனைத்து பிரச்சாரங்களும் அதனடிப்படையிலேயே அமைந்தன.இந்தியாவை இருண்டநிலமாக கட்டமைத்தனர். அவ்வெண்ணத்தை உறுதிப்படுத்தவே காதரீன் மேயோ போன்றவர்களை கொண்டு மதர் இந்தியா போன்ற நூல்களை எழுதச்செய்தனர்.

 

பிரிட்டிஷார்.  காந்தியையோ இந்திய சுதந்திரப்போராட்டத்தையோ நேரடி வன்முறையால் எதிர்கொள்வது பிரிட்டிஷார் இருநூறாண்டுகளாக உருவாக்கிக்கொண்டிருந்த பிம்பத்தை அவர்களே உடைப்பதற்குச் சமம். காந்தியின் போராட்டங்கள் அனைத்துக்கும் அமெரிக்க ஊடகங்களின் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. அவர் இடைவிடாது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார், அனைத்துப்போராட்டங்களையும் சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் நடத்தினார்

 

இன்னொன்று பிரிட்டிஷாரே ஒருமுகம் கொண்டவர்கள் அல்ல. அவர்களிலேயே வலுவான ஜனநாயகவாதிகள் இருந்தனர். அவர்களின் தரப்பு ஒவ்வொருநாளுமென ஓங்கிக்கொண்டிருந்த ஒன்று. இறுதியாகச் சர்ச்சிலை தூக்கி எறியவும் அவர்களால் முடிந்தது. காந்திக்கு பிரிட்டனின் எளிய மக்களிடையேகூட பெரும் செல்வாக்கு இருந்தது. சர்ச்சில் ராணுவபலத்துடன் ஆட்சிக்கு வந்தவர் அல்ல, ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் அவருடைய குடிகளின் எண்ணங்களை மதித்தே ஆகவேண்டும்.

 

கடைசியாக இந்தியா அல்லது கீழைநாடுகள் மேல் பிரிட்டிஷார் கொண்டிருந்த ஆதிக்கம் என்பது நேரடியான ராணுவமேலாதிக்கம் அல்ல. அது ஒருவகையான கருத்தியல் ஆதிக்கம். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நல்லது செய்பவர்கள் என இந்தியர்களிலேயே கணிசமானவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தமையால் அவர்களின் துணையுடன் உருவாக்கிக்கொண்ட ஆதிக்கம் அது. இந்திய ராணுவத்தின் 90 சதவீதம் இந்தியர்களால் ஆனது.  இந்தியர்கள் பிரிட்டன் மேல் கொண்ட நம்பிக்கையை உடைக்காமலேயே ஆதிக்கத்தை தக்கவைப்பதே பிரிட்டனின் அனைத்து அரசியல்சூழ்ச்சிகளையும் வடிவமைத்தது. அதை ஒருபோதும் சர்ச்சிலோ அவருடைய அரசோ உடைக்கமுடியாது. [இப்படியே சென்றால் தென்னாப்ரிக்காவின் நிறவெறி அரசும் பி.டபிள்யூ,.போத்தாவும்  ஜனநாயக சக்திகளே என வாதிடத் தொடங்குவீர்கள். அவர்களும் நெல்சன் மண்டேலாவை கொல்லவில்லையே?]

 

சர்ச்சிலும் அவருடைய ஏகாதிபத்தியமும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தை, ஜனநாயக உலகை அஞ்சவேண்டியிருந்தது. ஆனால் ஹிட்லர் அப்படி எதையும் சார்ந்து அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. அவருடைய ஆதிக்கம் என்பது அவருடைய நாடு அவருக்களித்த முழுமூச்சான ஆதரவு மற்றும் நேரடி ராணுவ வல்லமை சார்ந்தது. வரலாற்றை ஒற்றைத்தகவல்களாக புரிந்துகொள்ளாதீர்கள், கருத்துக்களாக, ஒட்டுமொத்த் சித்திரமாகப் புரிந்துகொள்ள முயலுங்கள். இல்லையேல் நீங்கள் வாசித்ததாகச் சொல்லிக்கொள்ளும் நூல்களுக்கே பொருளில்லை.

 

இத்தகைய ஒரு புதிய கருத்து சொல்லப்படும்போது பொதுவான வாசகர்களுக்குப் புரிகிறது. தாங்கள் ஏராளமாக வாசித்திருக்கிறோம் என்று நம்பி, தனக்கும் ஏதேனும் தெரியும் என எல்லா சந்தர்ப்பத்திலும் சொல்லவேண்டும் என முயல்பவர்களுக்குத்தான் அதைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. எங்கும் நிரந்தரமாக ஒரேவகைக் கருத்தை மட்டுமே பார்க்கும் பாடப்புத்தக வாசிப்பின் பயிற்சி இது. இக்கருத்துடன் ஒருவர் முரண்படலாம், வாதிடலாம். ஆனால் அக்கருத்தையே வந்தடையாமல் தகவல்களை மட்டும் வாசிப்பதென்பது ஒருவகை பரிதாபம்.

 

இது பயணக்கட்டுரை. கண்ணுக்குத்தெரியும் காட்சிகளிலிருந்து எண்ணியவை மற்றும் வாசித்தவற்றினூடாக ஒரு வலைப்பின்னலை உருவாக்கிக்கொள்ளும் வடிவம் கொண்டது. ஆய்வுக்கட்டுரை அல்ல. அரிய செய்திகளை கண்டடைந்து சொல்வதுமல்ல. கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் இடங்கள் பெரும்பாலானவை உலகப்புகழ்பெற்றவை, பலநூறுபேர் எழுதியவை. ஆகவே அவ்விடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள் மற்றும் எளிய அடிப்படைச் செய்திகளை மட்டுமே கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். அவை எந்நூலிலும், இணையத்தின் எப்பகுதியிலும் கிடைப்பவைதான். அவற்றினூடாக ஒவ்வொரு கட்டுரையும் சென்றடையும் ஓர் தனிப்பார்வை உள்ளது. அதைச் சென்றடைபவர்களுக்காகவே அவை எழுதப்பட்டுள்ளன

 

ஜெ

 

ஹிட்லரும் காந்தியும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்

$
0
0

Jeyamohan UK visit 320

உலகத்தில் தொலைந்துபோனவை எல்லாம் கடலடியில் இருக்கும் என்பார்கள், இல்லாதவை அனேகமாக பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கும். பிரிட்டிஷார் இருநூறாண்டுக்காலம் உலகை ஆண்டனர். உலகைக் கூர்ந்து நோக்கும் கண்கள் கொண்டிருந்தனர். அரியவை அனைத்தும் தங்களுக்கே என்னும் தன்முனைப்புடனும் இருந்தனர். ஆகவே லண்டனின் அருங்காட்சியகங்களில் உலகக் கலைச்செல்வங்களில் பெரும்பகுதி வந்து சேர்ந்தது.

 

லண்டன் புளூம்ஸ்பரி பகுதியிலுள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் 80 லட்சம் அரும்பொருட்கள் உள்ளன. உலகில் உருவான முதல் தேசியப் பொது அருங்காட்சியகம் இது . 1753ல் அயர்லாந்து மருத்துவரனான   சர் ஹான்ஸ் ஸ்லோன் [Sir Hans Sloane]அவர்களின் சேமிப்புகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இது  1759ல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.  பிரிட்டிஷ் அரசு உலகமெங்கும் பரவுந்தோறும் இவ்வருங்காட்சியகம் கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. இயற்கைவரலாற்று அருங்காட்சியகம் போன்று பல தனி அருங்காட்சியகங்களாகப் பிரிக்கப்பட்டது. 1972 வரை தொல்நூல்களுக்கான காப்பகமும் நூலகமும் இதனுடன் இணைந்திருந்தன, அவை தனியாகப்பிரிக்கப்பட்டன.

Jeyamohan UK visit 232

எகிப்து, கிரேக்கம் , ரோம். மத்தியகிழக்கு, ஆசியா, தென்கிழக்காசிய பகுதிகளுக்கான தனித்தனியான வைப்புக்கூடங்கள், வரலாற்றுக்கு முந்தைய ஐரோப்பாவுக்கான கூடம், ஆப்ரிக்கா மற்றும் தென்னமேரிக்காவுக்கான கூடம் வரைச்சித்திரங்கள் மற்றும் அச்சுக்கான கூடம்,  , நாணயங்கள் மற்றும் பதக்கங்களுக்கான கூடம், ஆவணக்காப்பகங்கள் நூல் சேகரிப்புகள் என பல பகுதிகளாகப் பரந்திருக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஒரு மாபெரும் கலைக்களஞ்சியத்துக்குச் சமானமானது. அதை எந்த மானுடனும் எவ்வகையிலும் பார்த்து முடிக்கமுடியாது. நமக்கு ஆர்வமுள்ள சிறிய பகுதியை முன்னரே வரையறுத்துக்கொண்டு அவற்றை மட்டும் பார்த்துவிட்டு வருவதே உகந்தது. அதைக்கூட பலநாட்கள் சென்று பார்த்துத்தான் சற்றேனும் நிறைவுற அறியமுடியும்.

 

நான் ஆப்ரிக்கா, எகிப்து, ரோம் மற்றும் கிரேக்க வரலாறு சார்ந்த பொருட்களை பார்த்தேன்.  ஐரோப்பிய வரலாறு நமக்கு இந்திய வரலாற்றுக்குச் சமானமாகவே கற்பிக்கப்பட்டிருப்பதனால் பெரும்பாலான காலகட்டங்களை மிக அணுக்கமாக உணரமுடிந்தது. கிரேக்கப் பளிங்குச்சிலைகளின் எளிமையான நேர்த்தி, ரோமாபுரிச் சிலைகளின் மாண்பும் அலங்காரமும், மறுமலர்ச்சிக்கலைகளில் இருந்த சுதந்திரமும் தத்துவ உள்ளடக்கமும் என ஏற்கனவே வாசித்தவற்றை பொருட்களாக பார்த்துச்செல்வது கனவினூடாகக் கற்பதைப்போன்ற அனுபவம்.  எகிப்த்ய கலைப்பொருட்கள் ஏராளமாக இருந்தன. மிகத் தொடக்க காலத்திலேயே எகிப்தை பிரிட்டன் கைப்பற்றி துல்லியமாகப் புரட்டிப்போட்டு ஆராய்ந்துவிட்டிருக்கிறது. விதவிதமான தொன்ம முகங்கள் விழித்து நோக்கி அமர்ந்திருந்தன. தங்கள் இருப்பாலேயே இருக்குமிடத்தை ஆலயமாக ஆக்கவல்லவை.

Jeyamohan UK visit 245

அருங்காட்சியகங்களை சுற்றிநோக்குவதென்பது ஒரு பயனற்ற செயல் என்று சிலசமயம் தோன்றும். ஏனென்றால் நாம் முதலில் கிளர்ச்சி அடைகிறோம். ஆர்வத்துடன் பார்க்கிறோம். மெல்லமெல்ல உள்ளம் சலிக்கிறது. பின்னர் அரைக்கவனத்துடன் பார்த்துச்செல்கிறோம்.  முன்னரே நாம் பின்னணியை அறிந்து பார்க்கவிரும்பிய பொருளைப் பார்த்தால் மட்டுமே நினைவில் நிற்கிறது. பெரும்பாலானவை மிக விரைவிலேயே நினைவிலிருந்து அகன்றுவிடுகின்றன. ஏனென்றால் உள்ளம் தகவல்களை பதிவுசெய்துகொள்வதில்லை, அதனுடன் ஏதேனும் உணர்வு கலந்திருக்கவேண்டும். அதாவது சொல்வதற்குக் கதை இல்லாத எப்பொருளுக்கும் நம் அகத்தில் இடமில்லை.

 

ஆனால் அருங்காட்சியகங்கள் மீதான மோகம் ஏறித்தான் வருகிறது. அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் போன்ற பெருநகர்களில் மட்டுமல்லாமல் ராலே போன்ற சிற்றூர்களில் கூட நல்ல அருங்காட்சியகங்களைக் கண்டிருக்கிறேன். சிங்கப்பூர் அருங்காட்சியகமேகூட ஒரு பெரிய கலை-வரலாற்றுத் திரட்டுதான். இந்தியாவின் முக்கியமான அருங்காட்சியகங்கள் அனைத்துக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலானவை வெறும்பொருட்குவைகள் என்றாலும் பலமுறை சென்று நோக்கியிருக்கிறேன். அருங்காட்சியகங்களை நம் ஆழம் நோக்கிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கு அது ஒரு ரகசியக் கிடங்கு. நான் கண்ட அருங்காட்சியகங்களிலிருந்து பொருட்களைப்பற்றிய நுண்மையான சித்திரங்கள் வெண்முரசு போன்ற ஒரு பெருநாவல்தொடரை உருவாக்கும்போது எங்கிருந்தோ எழுந்துவருவதைக் கண்டிருக்கிறேன். நவீனநாவலை ‘கலைக்களஞ்சியத்தன்மைகொண்டது’ என விமர்சகர்கள் சொல்வதுண்டு. அது ஒருவகை அருங்காட்சியகம் என்றும் சொல்லலாம்.Jeyamohan UK visit 216

விரிந்துபரந்த அருங்காட்சியகத்தில் எத்தனைக் கூட்டமிருப்பினும் நாம் தனியாக இருக்கமுடியும். எகிப்தியப் பிரிவில் கல்லால் ஆன சவப்பெட்டிகளில் இருந்த மம்மிகளுடன் தனித்து நின்றிருந்தபோது என்னுள் ஒரு நுண்திரவம் நலுங்கியது. ஆப்ரிக்க முகமூடிகளில் காலத்தை கடந்து உறைந்த வெறியாட்டு. செவியறியாமல் அவை எழுப்பும் கூச்சல். ரோமாபுரிச் சக்கரவர்த்தி டைபீரியஸின் மார்புருவச் சிலை அருகே நின்றிருந்தேன். நேரில்பார்ப்பதுபோன்ற சிலை. நரம்புகள்கூடத்  துல்லியமாகத் தெரியும் வடிப்பு. நோக்கி நின்றிருந்தபோது ஈராயிரமாண்டுகளைக் கடந்து அவரும் நானும் விழியொடு விழி நோக்கினோம். இன்றுவரை கனவில் வந்துகொண்டே இருக்கிறார் [இதை ஒரு பயிற்சியாகவே செய்துபார்ப்பதுண்டு. சிலைகளை பத்துநிமிடம் தனியாக மிக அண்மையில் நின்று முகத்துடன் முகம் நோக்கினால் கனவில் அந்த முகம் எழுவது உறுதி]

 

டக்ளஸ் ஆடம்ஸின் [Douglas Adams] புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரின் நூல்வடிவமான Hitchhiker’s guide to the galaxy என்னிடம் உள்ளது. அவ்வப்போது வாசிப்பது அந்நூல். அறிவியல்புனைகதைகளை பகடிசெய்யும் அக்கதைத் தொடரில் பிரபஞ்சச் செய்திகள் அனைத்தையும் தொகுத்தளிக்கும்  Encyclopedia galaxia என்னும் நூலை தயாரிக்கிறார்கள். பலகோடிப் பக்கங்கள் கொண்டது, ஆகவே பெரும்பாலும் பயனற்றது. அதில் ஒவ்வொரு கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோள்களுக்கு லட்சம் பக்கங்களுக்குமேல் அளிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு இரண்டு வார்த்தை- mostly harmless. லண்டன் அருங்காட்சியகத்தின் இந்தியப்பகுதி ஒப்புநோக்க பெரிதுதான். அதில் தென்னகத்தின் இடமும் குறிப்பிடும்படி உள்ளது. ஆனால் குறிப்புகள் பெரும்பாலும் சுருக்கமானவை, மேலோட்டமானவை

amaravati_stupa-759

அமராவதி ஸ்தூபம்

 

இந்தியப்பகுதியில் ஒரு சிறு கற்கோயிலையே பெயர்த்துக் கொண்டுசென்று வைத்திருக்கிறார்கள். கற்சிலைகள், செப்புச்சிலைகள். நடராஜர்கள், உமாமகேஸ்வரர்கள், நின்ற அமர்ந்த பெருமாள்கள். ஒவ்வொரு சிலையும் கைமுத்திரைகளாலும் உடல்நெளிவாலும் விழிகளாலும் பேசிக்கொண்டிருந்தது. காற்றில் நிறைந்திருந்தது உளமறியும் மொழி ஒன்று. உண்மையில் நம்மில் பெரும்பாலானவர்கள் உலகில் எங்கு சென்று நம் சிலைகள் அங்கிருப்பதைப் பார்த்தாலும் கொதிப்பதுண்டு. எனக்கு அவை அங்கே பாதுகாப்பாக இருப்பதும், கலைஆர்வலர்களால் பார்க்கப்படுவதும் நன்று என்றே தோன்றுகிறது. குப்பைக்குவியல்கள் போல இங்கே அவை போட்டுவைக்கப்பட்டிருப்பதைத்தான் அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

 

உதாரணமாக சென்னை அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற அமராவதி ஸ்தூபியின் பளிங்குச்சிலைப் பகுதிகள் பல உள்ளன. புத்தர் தென்னகத்தில் அமராவதி வரை வந்தார் என்பது வரலாறு. நான் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது ஓர் அதிகாரியின் அறை அச்சிற்பங்களை வரிசையாக அடுக்கிஉருவாக்கப்பட்டிருந்ததை, அவற்றின்மேல் பொருட்கள் சாத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். லண்டன் அருங்காட்சியகத்தில் உலகுக்கே ஒரு செய்தியைச் சொல்ல அமர்ந்ததுபோல அமராவதியின் ஸ்தூபியின் சிலை இருப்பதைக் கண்டபோது எஞ்சியதும் இங்கே இருந்திருக்கலாம் என்ற எண்ணமே எழுந்தது.பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி காலின் மெக்கின்ஸி இடிந்துகிடந்த இந்த ஸ்தூபியை ஆராய்ந்து பதிவுசெய்தார். 1845ல் சர் வால்டர் எலியட் அதன் பகுதிகளை சென்னைக்குக் கொண்டுவந்தார். 1859ல் அதன் பல பகுதிகள் லண்டன் அருங்காட்சியகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவை சென்னையில் இருந்தால் அழிக்கப்படும் என வால்டர் எலியட் எழுதியிருந்தார். இந்தியர்களை வெள்ளையர்கள் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

 

 

டைபீரியஸ்

டைபீரியஸ்

 

 

இந்தியர்  பலரும் தேசிய உணர்வுடன் திப்புசுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு பொம்மையை  பார்த்துச்செல்வதைக் கண்டேன். ஒரு வெள்ளையனை புலி கொல்வதுபோன்ற பொம்மை. அழகோ நுட்பமோ அற்றது. அதற்கு ஒரு கேலிக்குரிய வரலாற்றுப்பின்புலம் மட்டுமே உள்ளது

 

ஆனால் ஐரோப்பியச் சாமானியர்களுக்கு இந்தியக்கலை எவ்வகையிலும் பிடிகிடைக்கவில்லை என்றும் தெரிந்தது. அவர்கள் எகிப்து பற்றி நிறையவே அறிந்திருப்பார்கள். எகிப்தைப்பற்றி வரலாற்று நோக்கில் மட்டுமல்லாமல் திகில்,சாகசக் கதைகளாகக்கூட நிறைய எழுதப்பட்டுள்ளது. பிராம் ஸ்டாக்கர் கூட எகிப்து பற்றிய பரபரப்பு நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதைவிட மம்மி வரிசை சினிமாக்களின் பாதிப்பு. ஆகவே அங்கே அவர்களுக்கு ஒரு பரபரப்பு இருந்ததைக் கண்டேன். இந்தியச் சிற்பங்கள் கல்லால் ஆன பொம்மைகள், வெறும் அணியலங்காரப் பொருட்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள்போல. அங்கே நாங்கள் மட்டுமே நின்று நோக்கி நடந்தோம்.

 

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள கலைச்செல்வம் விலைமதிப்புக்கு அப்பாற்பட்டது. இருநூறாண்டுகள் உலகை எடுத்து இங்கே கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.  அதைத் திருட்டு எனச் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் அவர்கள் அப்படிக் கொண்டுவர முடியாத அனைத்துக் கலைமையங்களையும் பெரும்பொருட்செலவில் பாதுகாத்திருக்கிறார்கள். தங்கள் ஆட்சிக்குட்பட்ட இந்தியா, பர்மா,தாய்லாந்தில் உள்ள ஆலயங்களையும் விகாரங்களையும் பழுதுநோக்கியிருக்கிறார்கள். மட்டுமல்ல, தங்கள் ஆட்சிக்குக் கீழே வராத டச்சு இந்தோனேசியாவிலுள்ள பரம்பனான் ஆலயவளாகத்தை சீரமைக்கவேண்டும் என கடும் அழுத்தத்தை அளித்து தாங்களும் மீட்புப்பணியில் பங்கேற்றிருக்கிறார்கள்

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

 

கீழைநாட்டுச் செல்வம் தங்களுக்குரியது, அது தங்கள் சாகசம் வழியாகத் தேடி அடையவேண்டியது, வரலாற்றின் ஆழத்தில் தங்களுக்காகக் காத்திருப்பது என்னும் எண்ணம் பிரிட்டிஷாருக்கு உண்டு. அவர்களிடமிருந்து அது அமெரிக்கர்களுக்குச் சென்றது. அந்த எண்ணம் ஐரோப்பாவுக்கே பொதுவானது என்றாலும் போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் சென்ற இடங்களை சூறையாடி அழித்தபின்னரே கொள்ளைப்பொருட்களை கொண்டுவந்தனர். பிரெஞ்சுக்காரர்களின் உளநிலையும் ஏறத்தாழ அதுவே. இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சிசெய்ய நேரிட்டது ஒரு பெருங்கொடைதான், ஐயமில்லை.

 

ஆர்.எல்.ஸ்டீவன்ஸனின் Treasure Island இளமையில் பலராலும் படிக்கப்பட்ட நூல். இளைஞர்கள் புதையல்நிறைந்த ஒரு தீவைக் கண்டடையும் கதை. பிரிட்டிஷ் உளவியலின் மிகச்சரியான உதாரணம் அந்நாவல். சொல்லப்போனால் அந்த ‘கொள்ளை-சாகச’ மனநிலையை  ‘உலகை உரிமைகொண்டாடும்’ மனநிலையை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது. அதை முன்னோடியாகக் கொண்டு நூற்றுக்கணக்கான நாவல்கள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பெரியவர்களுக்கான நாவல் என்றால்  King Solomon’s Mines (1885). சர். ரைடர் ஹகார்ட் அவர்களால் எழுதப்பட்டது [  Sir H. Rider Haggard.] சினிமாவாகவும் வந்துள்ளது.

 

அமெரிக்காவில் இன்றும் அந்த உளமரபு மேலும் மூர்க்கமாகத் தொடர்கிறது, ஜார்ஜ் லூக்காஸின் இன்டியானா ஜோன்ஸ் மிகச்சிறந்த உதாரணம். ‘புதையலைத் தேடி’ச் செல்லும் வெள்ளைக்கார ‘தொல்லியலாளர்’ [அவரை திருடர் என்று மேலும் கௌரவமாகச் சொல்லலாம்] அந்த பாரம்பரியச் சொத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யும் கீழைநாட்டு மக்களையும் தென்னமேரிக்கர்களையும் கொக்குகுருவிகளைப்  போல சுட்டுத்தள்ளி வெற்றிகரமாக ‘பொருளுடன்’ மீள்வதைப்பற்றிய படங்கள் அவை.

ki

புதையல்வேட்டை இன்றும் ஐரோப்பா, அமெரிக்காவில் வணிகசினிமா, வணிக வாசிப்பு, விளையாட்டுக்களில் மிகப்பெரிய கரு. ஆனால் இந்தியாவில் அதற்கு பெரிய மதிப்பில்லை. எந்தக் கதைக்கருவையும் நகல்செய்யும் தமிழ்சினிமா பலமுறை புதையல்கதைகளை எடுத்துள்ளது. பெரும்பாலும் வணிகத் தோல்விதான், மணிரத்னத்தின் திருடா திருடா வரை. அந்த உளவியலை நம் சினிமாக்காரர்களால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஆனால் அதை எடுத்தால் ஓடாது என அறிந்திருக்கிறார்கள். இன்னொருவர் சொத்தான புதையலுக்காக உயிரைப்பணயம் வைப்பதெல்லாம் நம் உள்ளத்துக்கு ஏற்புடையதாக இல்லை எனத் தோன்றுகிறது.

 

டிரஃபால்கர் சதுக்கத்தில் உள்ள தேசிய கலைக் காட்சியகம் [The National Gallery is an art museum]  இதைப்போல கலைப்படைப்புகளின் பெருங்களஞ்சியம். 1824 ல் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் 2,300 ஓவியங்கள் உள்ளன. சென்ற அறுநூறாண்டுகளில் ஐரோப்பாவில் உருவான ஓவியங்களில் பெரும்படைப்புகள் கணிசமானவை இங்குள்ளன. ஐரோப்பாவின் பெரும்பாலான அருங்காட்சியகங்கள் அரசர்களின் சேமிப்புகளிலிருந்து உருவாகி வந்தவை. இந்தக் கலைக்கூடம் பிரிட்டிஷ் அரசு 1824ல் கலைசேகரிப்பாளரான  ஜான் ஜூலியஸ் ஆங்கர்ஸ்டைன் [ John Julius Angerstein] அவர்களிடமிருந்து 38 ஓவியங்களை விலைகொடுத்து வாங்கி உருவாக்கியது. டைடன், ராஃபேல்,ரெம்பிராண்ட் போன்றவர்களை ரசிக்க குழந்தைக்குரிய விரிந்த கண் போதும். பழகிய அழகியல் கொண்ட அவை நேரடியாகவே கனவை விதைப்பவை. கிறித்தவ இறையியலும் ஓவிய அழகியலும் ஓரளவு தெரிந்திருந்தால் மேலும் அக்கனவு விரியும். குளோட் மோனே போன்ற ஓவியர்கள் நிலக்காட்சிகளுக்குள் நம்மைக் கொண்டுசெல்பவர்கள்.

j

John_Julius_Angerstein

 

இம்ப்ரஷனிச ஓவியங்களைப் பார்க்கையில் நாம் மீள மீள உணரும் வியப்பு ஒன்றுண்டு, நாம் இயற்கைக்காட்சிகளை எப்போதுமே பலவகையான விழித்திரிபு நிலைகளாகவே காண்கிறோம். காலையின் சாய்வெயில், உச்சிவெயிலின் வெறிப்பு, தூசுப்படலம், மழைத்திரை என. ஒருபோதும் நேர்விழிகளால் நாம் இயற்கையை ‘தெள்ளத்தெளிவாக’ பார்க்கும் தருணம் அமைவதில்லை. உண்மையில் அந்த திரிபை அல்லது திரையைத்தான் நாம் அழகு என உணர்கிறோம்.

 

ஆனால் சில ஓவியர்களை தனியாகப் பயின்றுதான்  அறியவேண்டியிருக்கிறது பால் செசான் நித்ய சைதன்ய யதிக்கு மிகப்பிரியமான ஓவியர். குருகுலத்தில் பல இடங்களில் செசானின் ஓவியங்களின் நகல்களைக் காணலாம். அவரைப்பற்றி நித்யா பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். செசானின் ஓவியங்களில் ஒருவகையான  ‘நோட்டுப்புத்தகப் படங்களின் தன்மை’ எனக்குத் தோன்றியதுண்டு. அவை மிக அந்தரங்கமானவை, உணர்வுகளுக்கேற்ற வண்ணக்கலவையும் எளிமையான கற்பனையும் கொண்டிருப்பதனால் கலைத்தன்மை கொள்பவை என்பதை அறிந்தபின்னரே அவை நமக்கு  மெய்யாகத் திறப்பு கொள்கின்றன

 

மூல ஓவியங்களைப் பார்ப்பது மிகப்பெரிய அனுபவம், குறிப்பாக அவற்றின் பேருருவம். நம்மை முழுமையாக உள்ளே ஆழ்த்திக்கொள்கின்றன அவை. ஓர் ஓவியத்தின் முன் சொல்லடங்கி அமர்ந்திருப்பதை ஊழ்கம் என்றே சொல்லமுடியும். ரெம்ப்ராண்டின் மாபெரும் நாடகக்காட்சியோ குளோட் மோனேயின் பூத்தமலர்களின் நிலவெளியோ நமக்களிப்பது ஒரு கனவை. வாழ்தல் இனிது என காட்டுபவை கலைகள்.

dug

Douglas Adams

 

 

முதலில் இத்தகைய மாபெரும் ஓவியத்தொகை உருவாக்குவது மன எழுச்சி. பெரும்படைப்பாளிகளின் அரிய படைப்புகளை நேரில் காண்பதன் விரிவு. மெல்லமெல்ல உள்ளம் பிரமிக்கிறது. அனைவருமே பெரும்படைப்பாளிகள். மானுடத்தின் கலைவெளியில் மைக்கேலாஞ்சலோகூட மிகச்சிறிய குமிழிதான். அது உருவாக்கும் சோர்வு மீண்டும் ஒட்டுமொத்தமாக அந்தப்பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் ஒரு தரிசனமாக எழுகிறது. மானுடப் படைப்பூக்கம் பலதிசைகளில் திறந்துகொண்டு உருவாக்குவது ஒரு பெரும் ஓவியத்தை, ஓவியங்களால் ஆன ஒரு பேரோவியப் படலத்தை.

 

ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் [ஸ்பானிஷ் உச்சரிப்பு ஹோர்ஹே லுயிஸ் போர்கெஸ்]   எழுதிய அறிவியலின் துல்லியத்தன்மை என்ற சிறுகதை குறித்து நண்பர்களிடம் சொன்னேன். ஒரு நாட்டில் வரைபடக்கலை உச்சத்தை அடைகிறது. ஊரிலுள்ள எல்லாவற்றையும் வரைபடத்திலும் கொண்டுவர முயல்கிறார்கள். வரைபடம் வளர்ந்து ஊரளவுக்கே பரப்பு கொண்டதாக ஆகிவிடுகிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த அருங்காட்சியகமும் கலைக்கூடமும் அளித்த திகைப்பிலிருந்து விடுபட அச்சிரிப்பு உதவியாக இருந்தது. சும்மா “இந்த உலகமே ஒரு மாபெரும் அருங்காட்சியகம்தானே?” என்று சொல்லி வைப்போமா என யோசித்தேன். அருண்மொழிக்கு முதிராத்தத்துவம் எரிச்சலூட்டும் என்பதனால் சொல்லவில்லை.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு

$
0
0

kiraa

 

 

துரைசாமி நாயக்கர் என்ற கதை நாயகரின் வழியே பயணிக்கிறது இந்த நெடுங்கதை. கிரா  கதை  சொல்லும்   இலக்கிய வடிவின் முன்னோடி. .அவரின்  குரலின் மூலம்  இந்தக்கதை சொல்லப்படுகிறது  கடும்  உழைப்பாளியான   நாயக்கரின்தெளிவான திட்டமிடலும் முன்னோக்கு சிந்தனைகளும்  வியாபார  நுணுக்கங்களும்   அவரை   பணக்காரராக ஆக்குகின்றன.

 

வெறும் ஐந்து ஏக்கர் கம்மம்புல் மட்டுமே  விளையும்  மானாவரி நிலம். பொக்கை மண்  என்று குறிப்பிடுகிறார்.  நாத்துக்கூளம் மட்டும் விளைவிக்க முடியும். அதாவது கம்புப்பயிர் கதிர் பிடிக்காமல் வெறும்புல்லாகவே வளர்ச்சி குன்றிவிடும். நாயக்கரின் அண்டை நிலங்களிலும் சாலைகளிலும் இருக்கும் சாணிகளை  பொறுக்கிச்  சேர்த்து நிலத்தில் போடுகிறார்.கோடை உழவு முறையாக செய்யப்படுகிறது. மண்  அரிப்பைத் தடுக்கிறார்.  மண்வளம் மேம்பட்டு கம்புப் பயிரில்  கதிர்கள் உருவாகி  மணிகள் விளைகின்றன. விரைவிலேயே ஒரு ஏக்கருக்கு  இரண்டு  கோட்டை என்ற  அளவில் மகசூல் எடுக்கிறார். சற்றேறக்குறைய  இரண்டு  டன்களுக்கு அதிகம் என புரிந்துக்கொள்கிறேன்.

 

இன்றுவரை  கம்புப் பயிரில் ஒரு ஏக்கருக்கு  இந்த அளவே அதிகபட்ச  மகசூல் என்று பதிவாகியிருக்கிறது.  இந்த உயர் விளைச்சலுக்கு  மண்வளம்  மேம்பட்டதே  மிகமுக்கிய காரணம் காரணங்களை  யூகிக்க முடிகிறது.  மண் அரிப்பினால்  மேல் மண் முழுவதுமாக  அடித்துச்  செல்லப்பட்டிருக்கும்.  மேலும் களர் நிலமாக  இருந்திருக்க வேண்டும்.  இந்த  இரண்டு  காரணங்களால்   மண்ணில்  கரிமச்  சத்துக்கள் குறைவாகவும்  நுண்ணுயிர்களின்   செயல்பாடுகள்  இல்லாமலும்  இருந்த காரணங்களினால்   மண்ணில் கரைய முடியாத உப்புக்களான  கார்பனேட் பைகார்பனேட்களின்   அளவு மிகும்போது  மண்ணில் இரும்பு,   துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற  சத்துக்கள் பயிருக்குக்  கிடைக்காது. குறிப்பாக  கம்பு  போன்ற தானியப்  பயிர்களுக்கு இவை  மூன்றும் இன்றியமையாதவை.  அதனால்தான்  பயிர்  வளர்ச்சி குன்றி கதிர்கள்  வளராமல்  வெறும்  நாத்துக்கூளம்   மட்டும்  விளைந்திருக்கிறது. கதையினை படிக்குபோது ஏற்படாத   கிளர்ச்சி, பயிர்களில்  சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி  செய்து  காரணங்களை அறிந்தபோது, ஏற்பட்டது.  நாயக்கர் எனக்கு  மானசீக வழிகாட்டியாக திகழ்கிறார்.

 

பொதுவாகவே  நவீன இலக்கியம் விவசாயிகளின் வாழ்க்கை விவசாயம்  நொடித்துப் போனதால் ஏற்படும் துயரங்களை  மட்டுமே குறிப்பிடுகிறது.  ஆனால் கிரா  மட்டும் வேறுபடுகிறார். நாயக்கர்  எதிர்மறைத்தன்மை இல்லாமல் இயல்பானவராக இருக்கிறார். குறைவான மகசூல் எடுக்கும்  விவசாயிகளின்  செயல்முறைகளை  ஒப்பீடு செய்கிறார்.  ஒரு  தேர்ந்த இசைவல்லுனர் போல  ஒத்திசைவாக  ஒவ்வொரு  செயல்முறைகளையும்  செய்கிறார். அப்படிச் செய்யும் விவசாயிகள்  இன்னும் இருக்கிறார்கள்.  உழவு மாடு பராமரிப்பு,  களை நிர்வாகம்,  காவல்  வைத்தல், விற்பனை  நுணுக்கம்   என ஒவ்வொன்றிலும்   தனித்தன்மையுடன்  இருக்கிறார். தன் சாதனைகளை வெளிப்படுத்துவதே இல்லை. யாருக்கும் சொல்லிக் கொடுப்பதும் இல்லை.  இவர் சொல்லியிருந்தாலும்   மற்ற  விவசாயிகள்  ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியிருப்பார்களா  என்பது  சந்தேகமே .  மனிதாபிமானம் அற்றவர் என்று  எளிதில்  வகைப்படுத்த  முடியாதவராக  இருக்கிறார்.

 

 

சரி, கதையின் இலக்கிய சாராம்சம் தான் என்ன? நிலத்தை பெண்மையுடன் உருவகப்படுத்தியிருக்கிறார்  கிரா.   நிலத்தைப்  பண்படுத்துவது  போல பெண்மையைப்  போற்றுவதும்  ஆண்மையின் அடையாளமாக  எழுதாப்  பொருளில் உணர முடிகிறது.  நுண்ணுணர்வு  உள்ளுணர்வு  மிக்க  கிட்டத்தட்ட  ஒரு முற்றும்  துறந்த முனிவரைப்  போல நாயக்கரின்  வாழ்க்கையை  கிரா எழுதியிருக்கிறார்.  அவரின் இறப்பையே  உணரும்  உள்ளுணர்வு  வெளிப்படுகிறது.  அவருக்காக ஏற்றி  வைத்த தீபம்  அணையாமல்  பிரகாசமாய் எரிகிறது.

 

ஐபோனில்  எழுத முயற்சித்தேன்.  பிழைகள் குறைவாகவும்  விரைவாகவும்  எழுதமுடிந்தது.  சுரேஷ் பிரதீப் ஒரு முக நூல்  விவாதத்தின் போது,   போனிலேயே   எழுதலாமே என்று சில குறிப்புகளை  அளித்தார்.  அவர் கதைகள்   நாவல் என அனைத்தையும் போனிலேயே  எழுதுவதாக  கூறியபோது    வியப்பாக  இருந்தது.  முயற்சித்ததில் எளிதாகவே இருக்கிறது .  இளையவர்களுடன்  நட்பு பேணுவதன்  அவசியத்தை உணர்ந்தேன்.

 

 

அன்புடன்

தண்டபாணி

970225_10204195453764858_160073027844960754_n

 

அன்புள்ள தண்டபாணி,

 

 

இக்கதை பற்றி நான் கிரா அவர்களைப்பற்றிய என் கட்டுரையில் மிக விரிவாக விவாதித்திருக்கிறேன். அது ஒரு விவசாயி உருவாவதன் சித்திரம் மட்டுமல்ல, விவசாய மிச்சம் மூலதனமாகத் திரள்வதன் கதையும்கூட. நாயக்கரிடம் விவசாயிக்குரிய விழுமியங்கள் ஏதுமில்லை, லாபநோக்கு மட்டுமே உள்ளது. நாயக்கர் நடந்தே போடும் புதிய ஒற்றையடிப்பாதை முக்கியமான ஒரு படிமம்

 

ஒரு வேளாண் அறிவியலாளராக உங்கள் வாசிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. இப்படித்தான் பலகோணங்களில் கதைகள் வாசிக்கப்படவேண்டும்

 

போனில் தட்டச்சு செய்வதன் பெரிய இடர் அதிலுள்ள தானியங்கி சொல்லமைப்புதான். அனைத்துவயல்களில் இருந்தும் என உத்தேசித்து அன்னைவயல்களில் இருந்தும் என தட்டச்சு செய்திருந்தீர்கள். கூகிள் பெரிய கவிஞராகவும் அவ்வப்போது ஆகிவிடும்

 

ஜெ

 

 

நெல்லும் தண்டபாணியும்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அலெக்ஸ் நினைவுப் பிரார்த்தனை

$
0
0

இன்று அலெக்ஸ் நினைவாக அவருடைய குடும்பத்தினர் நடத்தும் நினைவுப்பிரார்த்தனை மாலை 630 மணிக்கு. நிகழ்கிறது. பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் [Pasumali CSI Church Community Hall] நான் காலையில் மதுரை வந்துள்ளேன்.

IMG_20180831_131215

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நடையின் எளிமை- கடிதம்

$
0
0

sujatha

 

நடையின் எளிமை

சார்

 

வணக்கம்.

 

‘நடையின் எளிமை’ கட்டுரை வாசித்தேன். அது குறித்து சில கருத்துகளை சொல்லத் தோன்றுகிறது.

 

எளிய வார்த்தைகளால் இலக்கியம் சொல்லப்படும் வேண்டும் என்பதே சற்று நெருடலாக தோன்றுகிறது.  பொதுவாக,  ஒன்றை சொல்லி பிறவற்றின் மீதான மனத்திறப்பை உண்டாக்கும் இலக்கியத்திற்கு, வார்த்தை நுட்பம்தேவையாகதானிருக்கிறது.  வார்த்தை நுட்பங்கள் படைப்பின் தரத்தோடு சம்பந்தப்பட்டவை.  அவை  படைப்பின் உத்திக்கான அழகியலை  எடுத்தியம்புகிறது.

 

முன்பெல்லாம் தங்கள் படைப்புகளை வாசிக்கும்போது,  நீங்கள் உருவாக்கும் கலைச்சொற்கள் ஆரம்பக்கட்ட வாசகர்களை விலக்கி விடுமே என்று கூட எண்ணியிருக்கிறேன்.   ஆனால் அதன் முக்கியத்துவம் இன்று புரிகிறது.  கற்பிதம் செய்யப்பட்ட வாழ்விற்குள்ளிருந்து கருப்பொருளை எடுத்தாளுவதை விட, கனவுகளை, அது காட்டும் நினைத்தே பார்த்திராத மனதின் நுட்பங்களை, மனம் செல்லும் வழியோடு பின்தொடரும்போது,  படைப்பு,  சுற்றிக் கொண்டிருக்கும்  நுாற்று சொச்சம் சொற்ப வார்த்தைகளிலிருந்து விலகி, மொழியின் ஆழத்திலிருந்து தனக்கானதை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

 

மஞ்சுக்குட்டி  என்ற என்னுடைய கதையொன்று… மூன்று வருடங்களுக்கு முன் எழுதியது. (இப்போது எழுதியிருந்தால் அதன் மொழியில் நிச்சயம் வேறுபாடிருக்கும். அது வேறு விஷயம்).   அதன் இறுதி வரிகளில்  “இந்த இரண்டு நாட்களுக்கு எங்கு தங்குவது என்பதுதான் அவளது அப்போதைய சிந்தனையாக இருந்தது.“ என்று முடித்திருப்பேன். இப்போது வாசிக்கும்போது “சிந்தனை“ என்பது அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தாத வார்த்தையாக தோன்றுகிறது. “யோசனையாக..“ என்று எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.

 

உங்கள் தளத்தின் மற்றெல்லாக் கட்டுரையையும் போல, இதுவும் எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான கட்டுரைதான்.

 

 

 

அன்புடன்

கலைச்செல்வி.

 

 

அன்புள்ள ஜெ

 

 

நடையின் எளிமை பற்றிய கட்டுரை அருமை. ஏனென்றால் இந்தக்கட்டுரையிலுள்ள விஷயங்களை வாசிக்க ஆரம்பிக்கும் என் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. பொதுவாகவே நம்மவர்களுக்கு நீண்ட புத்தகங்களை வாசித்துப்பழக்கமில்லை. அடிக்கோடிட்டு பத்திகளாக வாசிப்பதே பழக்கம். கல்விநிலையங்களில் அதைத்தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆகவே புத்தகமென்றாலே மிரள்கிறார்கள். எளிமையான நூல்களைத்தான் தேடிச்செல்கிறார்கள். கொஞ்சம் எளிமையான நூல்களை வாசித்ததுமே தங்களை வாசகர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

 

இவர்கள் கொஞ்சமேனும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அடைப்பது இதைப்போல எதையுமே எளிமையாகச் சொல்லலாம், சுருக்கமாகச் சொல்லத்தெரியாதவன்தான் நீளமாக எழுதுகிறான், கடினமான மொழிகொண்ட படைப்புக்கள் போலியானவை என்றெல்லாம் சிலர் எழுதிக்கொண்டிருக்கும் ஒற்றைவரிகள். இவர்கள் தாங்கள் வாசிப்பதே நல்ல முழுமையான வாசிப்பு, மேற்கொண்டு வாசிக்கவே வேண்டாம் என்றும் நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அனைத்துக்கும் சரியான பதிலாக அக்கட்டுரை இருந்தது

 

செந்தில்குமார்

 

ஜெ

 

இப்போது உங்களுக்கு ஆல்டைம் பேவரைட் எழுத்தாளர் எவர் என்று சமூக ஊடகங்களில் ஒரு பேச்சு ஓடியது. மிகப்பெரும்பாலானவர்களுக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா. சமீபத்தில் மனம் சோர்வடைந்த சந்தர்ப்பம். நம்மவர்களின் வாசிப்பு இப்போதும் கணேஷ் வசந்த் லெவலில்தான் இருக்கிறது. ‘அவன் தீக்குச்சி கிழித்ததுபோல சிரித்தாள்’ என்றெல்லாம் வாசித்து மகிழ்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பள்ளி கல்லூரி வகுப்புக்குமேல் எதையுமே வாசிக்கவில்லை. அந்த வாசிப்பிலிருந்து மேலே செல்லவுமில்லை. அந்த பழைய புத்தகவாசிப்பையே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதையே திருப்பி வாசிக்கிறார்கள். அந்த தேக்கநிலையை கடப்பவர்கள் சிலர்தான். அப்படிக் கடப்பவர்களுக்கு தேவையான கருத்துக்கள் இக்கட்டுரையில் உள்ளன

 

எஸ்.சுதாகர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஐரோப்பா 10- ஒரு திருப்புமுனைப்புள்ளி

$
0
0

ves1

 

சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட நாகர்கோயில் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஒரு நுண்செய்தியை அறிந்திருப்பார்கள், லண்டன்மிஷன் ஃபாதர்களிடம் நாம் ஹிந்து என்றுகூட சொல்லலாம், கத்தோலிக்கர் என்று சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்கு ஹிந்துக்கள் மீட்புக்கு வாய்ப்புள்ள அஞ்ஞானிகள். கத்தோலிக்கர்கள் அவ்வாய்ப்பே இல்லாத திரிபுவாதிகள். சாத்தானுக்கு தங்களை அளித்துக்கொண்டவர்கள். அன்றெல்லாம் எங்களுக்கு கிறித்தவ சபைகளுக்குள் உள்ள போராட்டங்களெல்லாம் தெரியாது, லண்டன்மிஷன் சாமியார்களை கத்தோலிக்க சாமியார்கள் ஏதோ செய்துவிட்டார்கள் என்று புரிந்துகொண்டோம்.

 

உலக வரைபடத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வுகளில் ஒன்று என சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் [Protestantism]பிறப்பைச் சொல்லமுடியும். உலக கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 40 விழுக்காடு சீர்திருத்தக் கிறித்தவர்கள்தான். வெவ்வேறு சபைகளாக உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள். தமிழகத்தில் சி.எஸ்.ஐ [Church of south india ] சபை முக்கியமான சீர்திருத்தக் கிறித்தவ சபை. லுத்தரன் மிஷன், இரட்சணிய சேனை போன்றவை குறிப்பிடத்தக்க சபைகள். இப்போது ஒன்றிலிருந்து ஒன்றென பிரிந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மிஷனும் ஒரு தனி திருச்சபையாக மாறிக்கொண்டிருக்கிறது. தனியார் போதகர்கள் தங்களுக்கென்று சபைகளை அமைத்துக்கொள்கிறார்கள்

 

download (1)

வெஸ்ட்மினிஸ்டர் அபே உட்பக்கம்

 

ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் 1517 ல் அன்றைய கத்தோலிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக தன்னுடைய புகழ்பெற்ற அறிக்கையை [The Ninety-five Theses ] வெளியிட்டபோது சீர்திருத்தக் கத்தோலிக்க மதத்தின் கருத்தியல் தொடக்கம் உருவானது எனப்படுகிறது. அதற்கு முன்னரே பீட்டர் வால்டோ [ Peter Waldo] ஜான் வைகிளிஃப் [, John Wycliffe] ஜான் ஹுஸ்[ Jan Hus] போன்றவர்கள் கத்தோலிக்க மேலாதிக்கத்தை எதிர்த்திருந்தாலும் அரச ஆதரவும் மக்களாதரவும் கொண்டு கத்தோலிக்க திருச்சபையின் மாபெரும் அதிகாரத்தை எதிர்த்து நின்றவர் மார்ட்டின் லூதர் மட்டுமே. குமரிமாவட்டச் சூழலில் இந்தச் சபைகளில் தெளிவான சாதியடையாளம் இன்று உண்டு, எந்தச் சபை என்று கேட்பது கிட்டத்தட்ட சாதிகேட்பதேதான்.

 

கிபி பதினைந்தாம் நூற்றாண்டுவரை பிரிட்டனின் அதிகாரபூர்வ மதம் கத்தோலிக்கக் கிறித்தவம்தான். வேல்ஸ், அயர்லாந்து பகுதிகளும் கத்தோலிக்க நம்பிக்கை கொண்டிருந்தன. ஸ்காட்லாந்தில் மட்டும் கெல்ட் [Celt] இனக்குழுவினரின் பாகன் மதநம்பிக்கைகள் இருந்தன. கான்ஸ்டண்டீன் கிறித்தவ மதத்தைத் தழுவியபோதே பிரிட்டனில் ரோமாபுரியின் படைநிலைகள் இருந்தன. ஆனாலும் ஐந்தாம் நூற்றாண்டில் புனித அகஸ்டின், புனித பாட்ரிக் ஆகியோர் வழியாகவே பிரிட்டனில் கத்தோலிக்க மதம் வேரூன்றியது.

 

download

நான் முப்பதாண்டுகளுக்கு முன் cruzified என்னும் நாவலை வாசித்தேன். பிரிட்டனில் கத்தோலிக்க மதம் நுழைந்ததைப் பற்றிய நாவல் அது. ஆசிரியர் பெயர் ஓப்ரியன் என முடியும். அந்நாவலை தொண்ணூறுகளில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அ.எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்களுக்கு அன்பளிப்பாக தபாலில் அனுப்பினேன், அவர் ஒரு நாவல் எழுதும் பெருமுனைப்புடன் இருந்தார் அப்போது. அன்று அவருக்குப் பார்வை குறைந்துகொண்டிருந்தது. இப்போது பார்வை மீண்டுவிட்டது, ஆனால் இலக்கிய ஆர்வம் மறைந்துவிட்டது என சொன்னார்கள்

 

ஆச்சரியம்தான், பொதுவாக நூல்கள் எனக்கு மறப்பதில்லை. இந்நூலை எத்தனை தேடியும் இணையத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாவலை என்னால் நினைவிலிருந்தும் மீட்கமுடியவில்லை, ஒருகாட்சியைத் தவிர. புனித அகஸ்டின் [St.Augustine] அயர்லாந்துக்கு கிறித்தவத்தைக் கொண்டுவருகிறார். அங்கே அப்போது பேகன் மதம் பெரும் செல்வாக்குடன் இருக்கிறது. கல்லால் ஆன பெரிய ஆலயங்கள் இருந்தன. அகஸ்டின் அவற்றில் சாத்தான் குடியிருப்பதாக அம்மக்களிடம் சொல்கிறார். அதற்குள் விறகுகளைக் குவித்துத் தீயிடுகிறார். அதன்பின் குளிர்ந்த நீரை அதன்மேல் அள்ளி ஊற்றச்சொல்கிறார்கள். பேரிரைச்சலுடன் ஆவிகள் வெளியேறுகின்றன. கல்தூண்கள் வெடிக்க ஆலயம் இடிந்து சரிகிறது.

vest2

 

இன்றும்கூட பாகன் மதத்தின் அழிவைப்பற்றி [மதச்சார்பற்ற] பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் மொழி  இப்படித்தான் இருக்கிறது .  பிரிட்டனில் கிறித்தவம் என்னும் கட்டுரையில் பிபிசி நிறுவனம் இவ்வாறு குறிப்பிடுகிறது In the 1st Century AD, Britain had its own set of religious icons: Pagan gods of the earth and Roman gods of the sky. Into this superstitious and violent world came a modern, fashionable cult from the east: Christianity.  அதாவது ஏழுநாட்களில் இறைவன் உலகைப்படைத்தான் என்பதோ, ஏவாளை சாத்தான் ஆப்பிள் தின்னவைத்ததோ, இறந்தவர் மூன்றாம் உயிர்த்தெழுந்ததோ ‘மூடநம்பிக்கை’ அல்ல. அது மதம். அதற்குமுன்பிருந்த வழிபாடுகள் குரூரமான மூடநம்பிக்கைகள். ஐரோப்பியர்களின் மொழியில் பெரும்பாலும் கிறித்தவ மதத்தின் அனைத்து முன்முடிவுகளும் ஒளிந்திருக்கும். அதன் செல்வாக்கு அத்தகையது.  இந்தியாவுக்கு மதப்பிரச்சாரத்திற்காக வந்த முன்னோடிகள் முதல் இன்றுள்ள பிரச்சாரகர்கள் வரை இந்துமதம் பற்றி இதே வரிகளைத்தான் சொல்கிறார்கள் என்பதைக் காணலாம்.

 

பதின்நான்காம் நூற்றாண்டில் ஜான் வைக்கிளிஃப்  [John Wycliffe] பைபிளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தபோது பிரிட்டனில் சீர்திருத்தக் கிறித்தவம் விதையிடப்பட்டது. மதநூல் ஆய்வு மரபினரும் போதகரும் ஆக்ஸ்போர்ட் இறையியல் கல்லூரி ஆசிரியருமான வைக்கிளிஃப் ஒரு புதிய அலையைத் தொடங்கிவைத்தார்.கத்தோலிக்க மதத்தின் மையப்படுத்தப்பட்ட அதிகாரம், மதகுருக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அவர்களின் ஊழல்கள் அனைத்துக்கும் மேலாக அதிலிருந்த இத்தாலிய ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக பிரிட்டனில் மதசிந்தனையாளர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றபடியே வந்தது.

 

எட்டாம் ஹென்றி

எட்டாம் ஹென்றி

 

இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி [ Henry VIII  1491 – 1547] தன் மனைவி கேதரைன் [Catherine Aragon  1485 –1536] விவாகரத்து செய்ய விரும்பி போப்பாண்டவரின் அனுமதியைக் கோரினார். கேதரைன் ஹென்றியின் சகோதரர் ஆர்தரின் மனைவியாக இருந்தவர். ஸ்பெயினின் அரசி இசபெல்லாவின் மகள். விவாகரத்துக்கு போப் ஏழாம் கிளெமெண்ட் அனுமதி மறுக்கவே எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மதத்தைத் துறந்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றார். 1529ல் சீர்திருத்த கிறித்தவம் இங்கிலாந்தின் அதிகாரபூர்வ மதமாக அறிவிக்கப்பட்டது. சர்ச் ஆஃப் இங்கிலாந்து தோற்றுவிக்கப்பட்டது.

 

சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் மதத்தலைமை ஆர்ச் பிஷப் ஆஃப் காண்டர்பரியிடமும் நிர்வாகப் பொறுப்பு பிரிட்டிஷ் அரசரிடமும் இருந்தது. உலகமெங்கும் உள்ள ஆங்கிலிகன் சர்ச்களின் மைய நிர்வாக அமைப்பு இதுவே. இந்தியாவுக்கு வந்த லண்டன்மிஷனின் மூல அமைப்பு இது. இதன் சடங்குகளும் நிர்வாக முறைகளுமெல்லாம் ஆரம்பத்தில் கத்தோலிக்க மதத்தின் அதே பாணியில்தான் இருந்திருக்கின்றன. பின்னர் மெல்லமெல்ல மாற்றமடைந்தன. இன்றுகூட கிறித்தவர்கள் அல்லாதவர்கள் பெரிய வேறுபாட்டைக் கண்டுபிடிக்கமுடியாது

vest 3

 

பதினாறாம் நூற்றாண்டுவரை இங்கிலாந்தில் மதப்பூசல் உச்சத்தில் இருந்தது. எட்டாம் ஹென்றியின் காலம் வரை சீர்திருத்தக் கிறிஸ்தவர்களை கத்தோலிக்க மதம் வேட்டையாடியது. தொடர்ச்சியாக மதவிசாரணைகளும் கொலைத்தண்டனைகளும் அளிக்கப்பட்டன. எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மதத்தைத் தடைசெய்தார். பாதிரியார்களைச் சிறையிலடைத்தார். தவச்சாலைகளும் துறவியர் மடங்களும் மூடப்பட்டன. கத்தோலிக்கர்கள் மதவிசாரணைக்குள்ளாகி கொல்லப்பட்டனர். ஆனால் பின்னர் ஆட்சிக்கு வந்த முதலாம் மேரி கத்தோலிக்க நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே கத்தோலிக்க மதம் திரும்ப வந்தது. சீர்திருத்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.அவர்களில் முக்கியமான மத அறிஞர்களும் போதகர்களும் இருந்தார்கள்

 

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் எலிசபெத் சீர்திருத்தக் கிறித்தவ நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே மீண்டும் கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டு நம்பிக்கையாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். தேவாலயங்கள் சிதைக்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான் சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள் தங்கள் வழிபாட்டுமுறைகளை கத்தோலிக்க முறைகளிலிருந்து வேறுபடுத்திக்கொண்டன. முதலாம் ஜேம்ஸின் காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் உறுதியாக வேரூன்றியது. பைபிளின் புதிய ஏற்பாட்டை முறைப்படுத்தியவர் அவரே. அவரால் அங்கீகரிக்கப்பட்ட பைபிள்தான் கிங் ஜேம்ஸ் பைபிள் என்றபேரில் உலகமெங்கும் புகழ்பெற்றுள்ளது. பெரும்பாலான தங்கும் விடுதிகளில் இது வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

Tombeau_@

 

லண்டனின் பெரும் தேவாலயங்கள் கத்தோலிக்கர் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டவை. அவை சீர்திருத்தக் கிறித்தவத்தின் எழுச்சியின்போது கைப்பற்றப்பட்டன. ஏராளமான தேவாலயங்களில் புனிதர்களின் உருவங்கள் சிதைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னர் பலமுறை அவை பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. என் லண்டன் பயணத்தில் இரண்டு தேவாலயங்களைத்தான் குறிப்பாகப் பார்க்கமுடிந்தது. செயிண்ட் பால் கதீட்ரல் குவைக்கோபுர முகடு கொண்டது. கிபி 604 ல் கட்டப்பட்டது. பலமுறை திருப்பிக் கட்டப்பட்டிருக்கும் போலும், புதியதாகவே தோன்றியது.

 

 

ஆர்வமூட்டிய தேவாலயம் வெஸ்ட்மினிஸ்டர் அபே. புனித பீட்டருக்கான கத்தோலிக்க தேவாலயம் இது. இன்று சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆல்ட்ரிச் என்னும் மீனவன் இந்த இடத்தில் புனித பீட்டரின் தோற்றத்தைக் கண்டதாகவும் ஆகவே இங்கே வழிபாட்டிடம் ஒன்று உருவாகியதாகவும் கதைகள் சொல்கின்றன.  கிபி 1080ல் இந்த தேவாலயம் இங்கே முதலில் கட்டப்பட்டது. இப்போதிருக்கும் தேவாலயம் கிபி 1245ல் மூன்றாம் ஹென்றியின் ஆணைப்படிக் கட்டப்பட்டது. இது பிரிட்டிஷ் அரசர்களின் அதிகாரபூர்வ சடங்குமையம். இங்கே 16 அரச திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. ஏராளமான அரசர்கள் இங்கே மாபெரும் கல்சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Opactwo_Westminster_w_Londynie

குமரிமாவட்டத்தில் பிறந்தவனாதலால் நான் தொடர்ச்சியாக கிறித்தவ தேவாலயங்களை பார்த்துவருபவன். கன்யாகுமரி முதல் டாமன் வரை அமைந்திருக்கும் தேவாலயங்களில் முக்கியமான அனைத்தையும் பார்த்துவிடும்பொருட்டு ஒரு பயணத்தையும் முன்பு நண்பர்களுடன் மேற்கொண்டதுண்டு. பொதுவாகச் சுற்றுலாவிலும் கலைமரபிலும் ஆர்வமுடைய நண்பர்கள் இந்தியாவின் மாபெரும் தேவாலயங்களை தவறவிட்டுவிடுவதுண்டு. கோவாவின்  பாம் ஜீஸஸ் தேவாலயம் அதன் தொன்மையான வடிவுக்காக முக்கியமானது. டாமனில் சிறியதேவாலயங்களில் கூட அற்புதமான ஆல்தாரைகள் உண்டு.மங்களூரில் புனித அலாய்ஸியஸ் தேவாலயத்தில் பதினேழாம்நூற்றாண்டு இத்தாலியச் சுவரோவியங்கள் உள்ளன. கேரளத்தில் ஏழரைப்பள்ளி என்று சொல்லப்படும் எட்டு தொன்மையான கிறித்தவதேவாலயங்கள் குறிப்பிடத்தக்கவை

 

 

தேவாலயங்களில் பழக்கமுள்ளமையால் என் உணர்வுகளைக் குழப்பியது வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம். அது ஒரு தொன்மையான கத்தோலிக்க தேவாலயம் என்று விழிக்கும் உள்ளத்திற்கும் தோன்றியது. ஆனால் சீர்திருத்த கிறித்தவத்திற்குரிய உட்சபை அமைப்பு. மத்திய காலகட்டத்துத் தேவாலயங்களின் அமைப்பு அலையை கீழிருந்து நோக்குவதுபோன்ற கூரைவளையங்களால் ஆனதாக இருக்கும். இரு பெரும்தூண் நிரைகள் சுவர்கள் போல நீண்டு நிற்க அவற்றுக்கு நடுவே மையநீள்சதுர அவை அமைந்திருக்கும். அத்தூண்நிரைகள் இருபக்கமும் வளைந்த கூரைகள் கொண்ட கட்டிட அமைப்பால் தாங்கப்பட்டிருக்கும். நடுவே உள்ள பகுதி மிக உயரத்தில் வளைகூரை கொண்டிருக்கும். நேர் எதிரில் ஆல்தாரை. பெருந்தூண்களில் சிறு உப்பரிகைகள்.  பின்பக்கம் மிகப்பெரிய ஆர்கன். இதுதான் கத்தோலிக்க தேவாலயத்தின் மாறா வடிவம்.

 

Replica_of_the_Stone_of_Scone,_Scone_Palace,_Scotland_(8924541883)

Replica_of_the_Stone_of_Scone,_Scone_Palace,_Scotland_(8924541883)

 

நடுக்காலத்தைய கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்துமே பொன்மின்னும் அலங்காரங்களுடன் பரோக் பாணியில் அமைந்தவை. கண்கூசச்செய்யும் பொன்னலங்காரம் கொண்டது மையச்சபைமேடை. அங்கே அரசச்சடங்குகள் செய்யப்படும்போது அரசர் அமரும் அரியணை மேற்குவாயில் அருகே இருந்தது.  இதிலுள்ள நல்லூழின்கல் [  Stone of Scone] தொன்மையான ஒன்று. இதுதான் உண்மையான அரியணை. தொல்குடிகளின் தலைவர்கள் அமரும் கல்லரியணையேதான். அந்தக்கல் மரத்தாலான நாற்காலிமேல் போடப்பட்டு பிரிட்டிஷ் அரசர்களின் அரியணையாகிறது. அரசதிகாரம் தொல்குடி அதிகாரத்தின் நீட்சி என்பதற்கான சான்று அக்கல். ஸ்காட்லாந்தில் ஸ்கோன் என்னும் ஊரிலிருந்து அந்தக்கல் கொண்டுவரப்பட்டதனால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

 

ஆலயத்தில் வந்தமர்ந்து வழிபட்டவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள், கத்தோலிக்க வழக்கப்படி வழிபடுகிறார்கள் என்று தோன்றியது. அப்போது ஒன்று தோன்றியது, சீர்திருத்தக் கிறித்தவம் தன்னை பெருமளவுக்கு மாற்றிக்கொண்டு உருவவழிபாடு, மரபான ஆராதனைமுறைகள் அனைத்தையும் துறந்துவிட்டிருந்தாலும் கூட அதற்குள் கத்தோலிக்கம் ஏதோ ஒருவடிவில் இருந்துகொண்டேதான் இருக்கும் என்று. குமரிமாவட்டத்தில் சி.எஸ்.ஐ சபைகளுக்குள் இருந்துதான் புதிய சபைகள் உருவாகின்றன. அவையனைத்துமே கத்தோலிக்க மதத்தின் ஏதேனும் ஒரு அம்சத்தை எடுத்து வளர்த்துக்கொண்டவையாகவும் தெரிகின்றன. பிரிட்டிஷ் அரியணைக்குள் தொன்மையான பழங்குடிப் பீடம் அமைந்திருப்பதைப்போல.

 

SanktEdvardsstol_westminster

அரியணை

 

 

லண்டனின் நடுப்பகுதியில், பாராளுமன்றத்திற்கு அருகில், பல்லாயிரம் பயணிகள் ஒவ்வொருநாளும் வந்துசெல்வதாக இருந்தாலும்கூட வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயம் சற்றே பாழடைந்த தன்மையை காட்டியது. பல இடங்களில் புழுதி படிந்திருக்கக் கண்டேன். 1760 வரை பெரும்பாலான அரசகுடியினர் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டனர்.  மன்னர்களின் கல்லறைகள் ஒவ்வொன்றும் சிறிய கல்வீடுகள் என்றே தோன்றின. அவற்றுக்குள் அவர்களின் சடலம் வைக்கப்பட்டு வெளியே அவர்களின் உடல்தோற்றம் சிலையாகப் பொறிக்கப்பட்டிருந்தது. லண்டன் மியூசியத்தில் கண்ட எகிப்திய மம்மிகளின் கல்சவப்பெட்டிகள் நினைவுக்கு வந்தன.

 

சவப்பெட்டிக்குமேல் சிலையாக அரசத் தோற்றத்துடன் படுத்திருப்பது விந்தையானதாகத் தோன்றியது.  மூன்றாம் ஹென்றியின் முகத்தைப் பார்த்தபோது சாவை அவர் இன்னமும் கூடபுரிந்துகொள்ளவில்லை என்றும் அத்திகைப்பு நிரந்தரமாக அவர் முகத்தில் இருப்பதாகவும் ஒரு உளமயக்கு. ஆறாம் ஹென்றி, நாலாம் எட்வர்ட்  என அந்தப்பெட்டிகளைப் பார்த்துக்கொண்டே  சென்றோம். அத்தகவல்களால் மூளை எங்கும் சொடுக்கப்படவில்லை. ஆனால் மீளமீள பேரரசர்கள் அஞ்சும் கொடிய எதிரி காலம்தானோ என்று தோன்றியது.  என்ஐ  முன் நில்லன்மின் தெவ்விர்பலர்,என்ஐ முன் நின்று கல் நின்றவர். முன்னின்றவர்களை எல்லாம் கல்நின்றவராக்கும் அந்த மாபெரும் எதிரியை அஞ்சித்தான் எவரென்றே அறியாத தொல்குடி அரசன் தனக்கென பெருங்கற்களை நாட்டிக்கொண்டான். எத்தனை நடுகற்கள், பள்ளிப்படைகள், தூபிகள், ஆலயங்கள். பிடிவாதமாக வந்து புழுதியாக மேலே படிந்துகொண்டிருக்கிறது காலம்.

 

சாஸர்

சாஸர்

இந்தியாவில் இப்போது இறந்தவர்களை தேவாலயத்திற்குள் புதைப்பதில்லை. ஆனால் கோவாவின் தொன்மையான தேவாலயங்களில் ஏராளமான திருத்தந்தையர் ஆலயங்களுக்குள் அடக்கம்செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். அவர்களின் பெயர்கள் செதுக்கப்பட்ட கற்களாலானது தரை. அதன்மேல் நடந்துதான் நாம் தேவாலயத்திற்குள் செல்லவே முடியும். பழைய அரசர்கள் ஆலயத்திருப்பணிக்குப் பின் குப்புற விழுந்து வணங்கும் வடிவில் தங்ககள் சிலைகளை ஆலயமுகப்பு வாயிலின் தரையில் செதுக்குவதுண்டு. தங்களை பிறர் மிதித்து இறைவழிபாட்டுக்குச் செல்லும்போது பாவங்கள் கழுவப்படும் என்பது தொல்நம்பிக்கை.

 

மத்தியகாலகட்டத்தில் முக்கியமானவர்களை தேவாலயங்களுக்குள் அடக்கம் செய்வது பிரபலமாக இருந்திருக்கிறது. வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அரசர்களல்லாத பிரபலங்களில் ஒருவர் சாஸர் [Geoffrey Chaucer 1343 –1400] அவருடைய சமாதி இருக்குமிடம் கவிஞனின் மூலை [Poets’ Corner] என்று சொல்லப்படுகிறது. காண்டர்பரி கதைகள் என்னும்  அவருடைய நூல் ஆங்கில இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்பு. ஆங்கிலம் லத்தீன், கிரேக்க மொழிகளின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு தனக்கென இலக்கிய மரபொன்றை உருவாக்கிக்கொண்ட தொடக்கம் சாஸர் வழியாகவே என்று சொல்லப்படுவதுண்டு. அன்று ஆங்கிலம் எளியமக்களின் பேச்சுமொழி. அதில் சாஸர் தன் கதைகளை எழுதினார். காண்டர்பரி தேவாலயத்திற்கு புனிதபயணம் செல்பவர்கள் பேசிக்கொண்ட கதைகள் என்னும் வடிவில் உள்ளது இந்நூல்.

 

alte

உருவங்கள் அகற்றப்பட்ட ஆல்தாரை

 

 

 

ஆங்கில இலக்கியத்தைக் கல்லூரியில் படிப்பவர்களுக்கு இந்நூல் பாடமாக  அமைவது ஒரு கொடுமை. ஆங்கில இலக்கியத்தின் தோற்றத்திற்கு வழிகோலிய ஆக்கம் என்பதும், கத்தோலிக்க மதத்திற்குள் எளியமக்களின் வினாக்களும் ஐயங்களும் எழுவதை சாட்சியப்படுத்தும் நூல் என்பதும் எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு இது ஒரு தட்டையான எளிமையான கதைத்தொகுதி என்பதும் உண்மை. இலக்கியவாசகர்களுக்கு இன்று இதில் வாசிக்க ஏதுமில்லை. நான்காண்டுகளுக்கு முன் சைதன்யா சாஸரை ஏன் வாசிக்கவேண்டும் என்று சீற்றத்துடன் கேட்க அவருடைய வரலாற்று இடத்தை நான் விளக்கியதை நினைவுறுகிறேன். எனக்கு அதே விளக்கத்தை என் ஆசிரியர் அளித்தார்.

 

கவிஞனின் மூலை ஒரு சிறிய சிற்பமேடை. சற்றே பழுப்பேறிய பளிங்காலான சாஸரின் சிற்பம் நின்றிருக்கிறது. காவியதேவதை அவருக்காக இரங்கி அமர்ந்திருக்கும் சிற்பத்தை அங்கே கண்டேன். கவிஞர்களுக்கென்று ஓர் இடம் இருப்பது மகிழ்ச்சியூட்டியது. 1556ல் சாஸர் மறைந்து பதினாறாண்டுகளுக்குப்பின் வழக்கறிஞரான நிகோலஸ் பிரிகாம் [Nicholas Brigham] என்பவரால் இந்த மேடை கட்டப்பட்டது. சாஸரின் எலும்புகள் இதற்குள் வைக்கப்பட்டன. 1699ல் எட்வர்ட் ஸ்பென்ஸரின் உடல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அங்கே அடக்கம் செய்யப்படுவதோ அவர்களின் நினைவுநிகழ்வுகள் அங்கே கூடுவதோ வழக்கமாக ஆகியிருக்கிறது.

(c) Newstead Abbey; Supplied by The Public Catalogue Foundation

 

ஆனால் இங்கே இடம் மறுக்கப்படுவது ஒரு சமூக ஒறுப்பாகவும் செயல்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற கவிஞராக இருந்தாலும் 1824 ல் மறைந்த லார்ட் பைரன் அவருடைய சர்ச்சைக்குள்ளான வாழ்வொழுக்கம் காரணமாக இங்கே இடம் மறுக்கப்பட்டு 1969 ல்தான் இங்கே நினைவகம் அமைக்கப்பட்டார். 1616,ல் மறைந்த ஷேக்ஸ்பியருக்கும் இடமளிக்கப்படவில்லை. வில்லியம் கெண்ட் என்னும் சிற்பி அமைத்த நினைவுச்சின்னம் அவருக்கு இங்கே   1740ல் தான் அமைக்கப்பட்டது. சார்ல்ஸ் டார்வின், ஐசக் நியூட்டன் ஆகியோரும் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்குள்தான் புதைக்கப்பட்டனர். கடைசியாக ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்.

 

நான் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்குள் முக்கியமாகப் பார்த்தது கவிஞர்களின் நினைவுச்சின்னங்களைத்தான்.இப்பகுதி இன்று ஒரு மாபெரும் இடுகாடு. சார்ல்ஸ் டிக்கன்ஸ், ராபர்ட் பிரௌனிங், ருட்யார்ட் கிப்ளிங், ஜான் டிரைடன், பென் ஜான்சன், தாமஸ் ஹார்டி, என எழுத்தாளர்கள் கவிஞர்களின் பெயர்களை தரைமுழுக்க வாசிக்கலாம்.

 

பைரன் எனக்கு பிடித்தமான கவிஞர். என் படைப்புகளில் பெயர் சொல்லப்பட்டும், உருமாற்றப்பட்ட வடிவில் பெயரில்லாமலும் அவருடைய கவிதைவரிகள் வருவதுண்டு. அவருடைய நினைவுச்சின்னத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது பெரும் மன எழுச்சியை உணர்ந்தேன். பைரன் பிரபு [George Gordon Byron, 6th Baron Byron  1788 –1824] பிரிட்டிஷ் கற்பனாவாத கவிஞர்களில் முதன்மையானவர் [வேர்ட்ஸ்வெர்த் முதன்மையானவர் என்று சொல்லும் ஒரு மரபுண்டு. பைரன் கவிதைகளிலுள்ள தரிசனமுழுமையை வேர்ட்ஸ்வெர்த் அடையவில்லை என்று தோன்றுகிறது] பைரனின் தந்தை காப்டன் ஜான் பைரன் கிறுக்கு ஜாக் என்று பெயர் பெற்றவர். கவிஞர் பைரன்  அவர் காலகட்டத்தவராலும் மனைவியாலும் முழுக்கிறுக்கு என்றே கருதப்படார்

 

கவிஞர் மூலை

கவிஞர் மூலை

 

பைரன் அக்கால பிரபுக்களுக்குரிய வாழ்க்கையையும் மிஞ்சிய ஆர்ப்பாட்டமான வாழ்க்கைமுறை கொண்டவர்.   ஆணவம், காமம், கட்டற்றசினம் ஆகியவற்றாலான ஆளுமை அவர். சூதாட்டத்தில் பெரும்பணத்தை இழந்து கடனாளியானார். பல பெண்களை வென்று துய்த்து துறந்தார். தன் சகோதரி முறையுடைய ஒரு பெண்ணிடமே அவருக்குத் தொடர்பிருந்ததாகச் சொல்லப்பட்டது. மனைவியை உச்சகட்ட கொடுமைக்குள்ளாக்கி அவரால் துறக்கப்பட்டார். கடைசிக்காலத்தில் துருக்கியரால் கைப்பற்றப்பட்டிருந்த கிரீஸை வெல்லும்பொருட்டு படைகொண்டு சென்று அங்கே நோயுற்று இறந்தார்.

 

ஆங்கில வகுப்புகளில் பைரனைப்பற்றி பேசத்தொடங்குகையில் இக்கதைகளைத்தான் ஆசிரியர்கள் ஆர்வமாகச் சொல்வார்கள். வகுப்பில் ஒரு பெரிய கவனத்தை இது உருவாக்கும். அதன்பின்னரே அவர்கள் கவிதைகளுக்குள் செல்வார்கள். பைரனின் She Walks in Beauty என்ற அழகிய கவிதை ஒருகாலத்தில் பெரும்பாலான பாடநூல்களில் இடம்பெற்றிருக்கும். அக்கவிதையினூடாக பைரனின் உணர்ச்சிகரமான உலகுக்குள் நுழைய முடியும். பைரன் ஒரு மானுடவெறுப்பாளர் என்று சொல்லமுடியும், மானுடனை கடந்த சிலவற்றின்பொருட்டு மானுடனை வெறுத்தவர் என்று மேலும் குறிப்பாக.

 

பைரன், ஷேக்ஸ்பியர் நினைவிடங்களில் நின்றிருந்தது என் வாழ்க்கையின் ஆழ்ந்த அனுபவங்களில் ஒன்று. நினைவுகள் தொட்டுத்தொட்டுச் சென்றன. இதேபோல இங்கே கவிஞர்களுக்கு நினைவகங்கள் உண்டா? நம்மாழ்வாரையும் ஆண்டாளையும் கவிஞர்கள் என்று சொல்லலாம், அவர்களுக்கு ஆலயங்கள் உண்டு. ஆழ்வார்களும் சைவக்குரவர்களும் மதத்தின் ஒருபகுதியாக படிமங்களாகியிருக்கின்றனர். கம்பனுக்கு சேக்கிழாருக்கோ அருணகிரிநாதருக்கோ இங்கே பழைய நினைவிடங்கள் இல்லை. இருப்பவை நவீன ஜனநாயக யுகத்தில் உருவாக்கப்பட்டவை. கவிஞனை கவிஞனாகவே ஏற்பதில் மரபுக்கு பெருந்தயக்கம் உள்ளது.

இஸ்லாமிய பெருங்கவிஞர் உமறுப்புலவரை எண்ணிக்கொண்டேன். தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்த உமறுப்புலவர் மார்க்க அறிஞர் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் இஸ்லாமியக் கல்வியும் எட்டயபுரம் கடிகைமுத்துப் புலவரிடம் தமிழும் கற்றார். நபிகளின் வாழ்க்கையை சீறாப்புராணம் என்னும் காவியமாக இயற்றினார். 1703 ல் எட்டையபுரத்திலேயே மறைந்த அவருக்கு பிச்சையாக் கோனார் என்ற தமிழ் ஆர்வலர் 1912ல்தான்  எட்டையபுரம் இஸ்லாமிய இடுகாட்டில் ஒரு சமாதியை உருவாக்கினார். அது காலப்போக்கில் ஒரு தர்காவாக ஆகியது. 2006ல் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இன்று மக்கள் அங்கே சென்று வழிபட்டு மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்கிறார்கள். கவிஞன் உருகி உருமாறி மதத்திற்குள் நுழையாமல் இடம் கிடைப்பதில்லை.  காவிய ஆசிரியனின் தாயத்து!

 

வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம்தான் நான் நுழைந்த தொன்மையான ஐரோப்பிய தேவாலயங்களில் முதலாவது. அதன்பின் மீண்டும் மீண்டும் பேராலயங்களைப் பார்த்துக்கொண்டே சென்றிருக்கிறேன். எல்லா ஆலயங்களின் காட்சிகளும் என் அகத்தில் உருகியிணைந்து ஒன்றென்று ஆகிவிட்டிருக்கின்றன. வெஸ்ட்மினிஸ்டர் ஆலயத்தை எண்ணிப் பார்க்கையில் கத்தோலிக்க மதத்தில் இருந்து சீர்திருத்தக் கிறிஸ்தவம் நோக்கி ஐரோப்பா திரும்பியதன் கீல் அது என்று தோன்றியது. உரசல்களும் துருவும் கொண்ட பழைமையான கதவொன்றின் கீல்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குருதிச்சாரல் செம்பதிப்பு

$
0
0

Kuruthicharal - Classic

 

வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் அன்னையர். ஆகவே அவர்கள் தங்கள் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு போரைத் தவிர்க்க முயல்கிறார்கள். குருதிச்சாரலின் கதையின் பேரொழுக்கு இதுவே.

அன்னையரின் பார்வைக்கோணத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மேற்கொள்ளும் மூன்று தூதுகள் இந்நாவலில் காட்டப்படுகின்றன. போருக்கான அணிசேரல்கள், அரசவைக்கூடல்கள், வேள்விகள். ஊழுக்கு எதிராக ஒருபக்கம் அன்னையரும் மறுபக்கம் மெய்ஞானியும் துயரமும் கனிவுமாக நின்றிருக்க அது எறும்புகளை அறியாத யானை என நடந்து செல்கிறது.

குருதிச்சாரல் – வெண்முரசு நாவல் வரிசையில் பதினாறாவது நூல்.

இதில் வண்ணப் புகைப்படங்கள் கிடையாது.

இந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 30, 2018.

முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:

* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.

* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.

* ஆசிரியரின் கையெப்பம் வேண்டுமெனில் குறிப்பில் தெரிவிக்கவும்.

* முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.

* அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.

* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.

* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.

* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது nhm-shop@nhm.in என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.

* Paytm மூலம் வாங்க 95000 45609.

* Paypal மூலம் பணம் அனுப்ப விரும்புவர்கள் badri@nhm.in என்ற paypal அக்கவுண்ட்டுக்கு பே பால் மூலம் பணம் அனுப்பவும். பணம் அனுப்பிய விவரத்தை nhm-shop@nhm.in என்ற முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.

* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.

* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் nhm-shop@nhm.in என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.

* FAQ – https://www.nhm.in/shop/FAQ.html

 

 

கிழக்கு இணையப்பக்கம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஷேக்ஸ்பியர்- கடிதங்கள்

$
0
0

shak

ஐரோப்பா-6,மேற்குமலைமுடி

 

ஜெ வணக்கம்

 

 

 

நான் அனுப்பிய புகைபடங்களின் தொகுப்பு பயணங்களில் பங்கேற்றவர்கள் எடுத்த புகைபடங்களின் ஒட்டு மொத்த தொகுப்பு. Stratford-upon-Avon புகைபடங்கள் எப்படி விட்டு போயிற்று என்று தெரியவில்லை. எடுத்தவர்கள் இந்த தொகுப்பில் இணைக்காமல் இருந்து இருக்கலாம். அன்று மாலையில் சென்ற Broadway Tower படங்கள் தொகுப்பில் இருக்கின்றன. நீங்கள் இந்த கட்டுரை எழுதிய பிறகுதான் படங்கள் விட்டு போனது உரைத்தது

 

 

 

நீங்கள் Stratford-upon-avonல் Shakespeare பற்றி சொன்னது நினைவில் இருக்கிறது. எப்படி அவர் இளமையில் எழுதிய நாடங்கள் உத்வேகத்துடனும், இறுதியில் எழுதிய நாடங்கள்  sceptical இருந்ததாக சொன்னீர்கள்.

 

மேற்குமலைமுடி தலைப்பு புரியவில்லை.

 

சதீஷ்

 

 

அன்புள்ள சதீஷ்

 

ஸ்டிராட்போர்டு புகைப்படங்கள் ஒன்றிரண்டே இருந்தன. பயணம் நடந்து நான்கு ஆண்டுகளாகின்றன. ஆகவே பல புகைப்படங்கள் கிடைக்கவில்லை. நண்பர்கள் எடுத்தார்களா என்றும் தெரியவில்லை. அன்று நாம் அவான் நதிக்கரைக்கும் சென்றோம்

 

நீங்கள் உடனிருந்த நினைவு இனிதாக உள்ளது. ஷேக்ஸ்பியர் ஆக்கங்களில் உள்ள நுண்கசப்பு பற்றி அப்போது பேசிக்கொண்டோம். வியாசனை இமைய மலைச்சிகரம் என்பார்கள். ஷேக்ஸ்பியர் மேற்கின் சிகரம்

 

ஜெ

 

 

 

 

வணக்கம் ஜெ

 

ஷேய்க்ஸ்பியரை பார்க்காமல் படிப்பது நாம் தொடர்ந்து செய்து வரும் தவறு. நீங்கள் சொல்வது போல ஒரு நாடகத்தை படிக்கையில் அது வெறும் வசனங்களாக மட்டுமே நம் கண் முன் தெரிகிறது, இதை எப்படி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொடர்ந்து பார்க்க முடியும் என்ற ஐயம் நிச்சயம் எழும். பெர்னார்ட் ஷாவின் man and superman படிக்கையில் நான் அடைந்த ஐயம் அதுவே. இந்த நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சாக சலிப்பு வரமால் பாக்க முடியுமா என்ன என்று நினைத்தேன். பிறகு நேஷனல் தியேட்டர் தயாரித்த ரால்ப் பிஎன்னஸ் ஜாக் டேன்னராக நடித்த நாடகத்தை பார்த்த பிறகு நான் எவ்வளவு தவறான நினைப்பில் இருந்தேன் என கண்டு கொண்டேன்.

 

 

ஷாவின் ஒவ்வொரு வசனமும் அது சொல்லப்படும் விதத்திலேயே செறிவு பெறுகிறது. ஒரு முறை நாடகத்தை பார்த்த பிறகு அதை படிக்கையில் இன்னும் நுண்ணியமாக அதனுள் செல்ல முடியும்.

 

 

டால்ஸ்டாய் ஷேய்க்ஸ்பியரை நிராகரித்தது அவரின் நாடகங்களை ஒரு இலக்கியமாக கருதி மட்டுமே என நான் எண்ணுகிறேன். உதாரணமாக ஜூலியஸ் சீசர் இல் ஆண்டனி பேசுவதற்கு முன் கூட்டத்தில் இருப்பவர்கள் சீசரை கொன்றதே நல்லது, ரோம் சீசர் இல்லாமல் நன்றாக செயல் படும் என்றவாறு பேசுகின்றனர். ஆண்டனி சீசர் ரோம் மக்களுக்கு விட்டு சென்றதை விளக்கியதுமே மக்கள், ஐயோ ஒரு கொடூரமான செயல் இங்கு நிகழ்ந்துவிட்டது, சீசர்க்கு துரோகம் செய்ய பட்டுள்ளது என கலவரத்தில் இறங்குகின்றனர். டால்ஸ்டாய் இந்த வகையில் எங்காவது மக்கள் மாறுவர்களா என கேட்கிறார். அதற்கு கோரியலேன்னுஸ் நாடகத்தில் வரும் மற்றொரு காட்சியையும் உதாரணமாக குறிப்பிடுகிறார். இந்த காட்சிகளை படிக்கையில் டால்ஸ்டாய் சொல்வது சரிதானென தோன்றும். ஆனால் நாடக ஓட்டத்தில் பார்க்கையில் அது கவித்துவம் நிறைத்த ஒரு உச்ச புள்ளி என கண்டடைவோம்.

 

 

ஷேய்க்ஸ்பியர் ஒருபோதும் படிப்பதற்காக நாடகங்களை இயற்றவில்லை, நடிப்பதற்காகவும் அதை பார்த்து ரசிப்பதற்காகவும் தான். பள்ளிகளில் ஷேய்க்ஸ்பியரை படிக்கும் முன் ஒரு முறையேனும் அந்நாடகத்தை பார்க்கவைத்தால் என்றும் மனதில் நிற்கும்.

 

 

மரீனா என்ற புனைபெயர் கொண்ட டீ. ஸ். ஸ்ரீதர் தன் ‘சின்ன வயதினிலே’ நூலில் அண்ணா என அவர் அழைத்த அவரின் தந்தை, வீட்டின் மாடியில் மாலை நேரங்களின் ஷேய்க்ஸ்பியர் வகுப்புகள் எடுப்பார் என்பதை படித்து நான் ஆச்சரியப்பட்டேன். தனி வகுப்புகள் கவனிக்கும் அளவிற்கு மாணவர்கள் ஷேய்க்ஸ்பியர் மேல் ஆர்வம் கொண்டிருந்தனர் அந்நாளில். அதன் மூலமே இயல்பான உரையாடல்களில் கூட சகஜமாக ஷேய்க்ஸ்பியர் வசனங்களை பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இன்று ஷேய்க்ஸ்பியரை இலக்கியமாகவும் படிக்காமல் நிகழ்த்து கலையாக நாடகத்தையும் பார்க்காமல் மூச்சுக்கு மூச்சு சினிமா வசனங்களை மட்டுமே மேற்கோள்காட்டி பேசி மீம் போடு வருகிறோம்.

 

 

ஷேய்க்ஸ்பியர் வசனங்களை பார்ப்பதும் கேட்பதும் எழுச்சி ஊட்டும் ஒரு அனுபவம். உதாரணத்திற்கு இந்த இணைப்பை பார்க்கவும் அண்டோனியின் பேச்சு உயிர் பெற்று வருவதை ஒவ்வொரு முறையும் வியந்து வியந்து பார்த்திருக்கிறேன்.

https://youtu.be/q89MLuLSJgk

 

ஸ்ரீராம்

 

அன்புள்ள ஸ்ரீராம்

 

பொதுவாக இன்றைய ஆங்கிலமே ஒரு வகை எளிய சுருக்கமான ஆங்கிலமாக ஆகிவிட்டிருக்கிறது – தி ஹிந்து ஆங்கிலம் தவிர. சமீபத்தில் ஒரு மாறுதலுக்காக ஜார்ஜ் எலியட் படித்தபோது அது தோன்றியது. அதற்குக் காரணம் ஆங்கிலம் உலகளாவியதாக, ஆகவே தனிநிலம் அற்றதாக மாறிவிட்டதா என எண்ணிக்கொண்டேன்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பேட்டிகள், உரையாடல்கள்

$
0
0

jeyamohan41a

 

 

அன்புள்ள ஜெ

சமீபத்தில் கேரளத்தில் உங்கள் பேட்டிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. உங்கள் வாசகனாக எனக்கு அவை மிகவும் மனநிறைவை அளிக்கின்றன. மலையாளத்தில் பொதுவாக எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் இடம் மிக முக்கியமானது. ஆயினும் உங்களுக்கு அளிக்கப்படும் இடம் எம்.டி போன்ற மேஜர் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுவது. எ

ல்லா பேட்டிகளும் மிக விரிவான தயாரிப்புகளுடன் மிக நீளமாக முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முக்கியமாகவும் வெளியிடுகிறார்கள். போட்டோக்களும் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் வாழ்க்கைச்சூழலில் எடுக்கப்பட்டவையாக உள்ளன.

இந்த அளவுக்கு ஓர் இடம் உங்களுக்குத் தமிழில் அளிக்கப்பட்டதே இல்லை. உங்களை இங்கே பத்தோடு பதினொன்றாகவே நினைக்கிறார்கள். எல்லாரையும் போல வழக்கமான கேள்விகளைக்கேட்டு வெளியிடுகிறார்கள். பெரும்பாலான பிரபல இதழ்கள் உங்களை எதிரியாகவும் நினைக்கின்றன என நினைக்கிறேன்.

ஓணம்நாள் போன்ற பிரைம் டைமிலேயே மாத்ருபூமி டிவியில் ஜயமோகனம்- நாஞ்சில்நாடு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. உங்கள் எழுத்தின் சூழலாக உள்ள நிலத்தை அடையாளம் காட்டும் அற்புதமான டாக்குமெண்டரி. எழுத்தாளராக நீங்கள் கேரளாப்பக்கம் நகர்ந்துவிடுவதே நல்லது என நினைக்கிறேன். தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்

ஆர்.ராஜகோபால்

 

அன்புள்ள ஜெயமோகன்
மூன்று மாதங்களுக்குள் மலையாளத்தில் மாத்யமம், மாத்ருபூமி நாளிதழ் இணைப்பு, பாஷாபோஷிணி ஆகிய பிரபல இதழ்களில் உங்கள் பேட்டிகளைக் காணமுடிந்தது. எல்லாமே விரிவான பேட்டிகள். நல்ல படங்கள். உங்கள் வீட்டுச்சூழலைக்கூட வாசகர்களுக்குக் காட்டுவதாக இருந்தது அது.

மாத்ருபூமி, ஏசியானெட் தொலைக்காட்சிகளில் உங்கள் பேட்டிகள். அவற்றில் மாத்ருபூமி ஜயமோகனம்- நாஞ்சில்நாடு நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தூரதர்சன் திருவனந்தபுரம் வெளியிட்ட நிகழ்ச்சிதான் மிகவும் பிடித்திருந்தது. கல்பற்றா நாராயணனும் நீங்களும் அமர்ந்து காமிரா சென்ஸே இல்லாமல் உரையாடிக்கொண்டிருந்ததும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும் அமைந்த சூழலும் மிகச்சிறப்பாக இருந்தது

ராஜேந்திரன்

 

மாத்ருபூமி பேட்டி மொழியாக்கம்

கல்பற்றா நாராயணன், நான், தொலைக்காட்சி

மாத்ருபூமி பேட்டி -கடிதங்கள்

மாத்ருபூமி பேட்டி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆன்மிக வாசிப்பில் நுழைதல்

$
0
0

a

திரு ஜெயமோகன்,

 

என் பெயர் சு.வள்ளிராஜன், சென்னையில்  வசித்தது வருகிறேன். உங்களை பற்றி திரு பாலாகுமரன் அவர்களின் ஒரு உறையடலில்  குறிப்பிட்டு இருத்தார். அதன் பிறகு  யூடூப்பில் உங்களது சில வீடியோவை பார்த்தேன் பிறகு உங்கள் இணையம் ,www.jeyamohan.in, வழியாக சில பதிவுகள் படித்தேன்.

 

உங்களை எழுத்துக்களில் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துகள் உள்ளது, வாசகனுக்கு ஒரு முழுமையை அறிமுகப்படுகின்றது. என்னுடைய வசிப்பு அதிகமாக ஆன்மீக புத்தகங்கள்தான், அதிலும் ஓஷோவின்    புத்தகங்கள் அதிகம். “ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம்” மிகவும் அருமை, எனது  பல எண்ண ஓட்டங்களை அது பிரதிபலித்தது.

 

உங்கள் திருக்குறள் சொற்பொழிவு   யூடூப்பில் கேட்டு மிகவும் மகிழிச்சி அடைத்தேன். பொதுவாக  நான் ஒரு சொற்பொழிவை  திரும்ப திரும்ப கேட்க விரும்புவது இல்லை, ஆனால் உங்கள் திருக்குறள் சொற்பொழிவை    கடந்த வாரம் மட்டும் இரண்டு முறை பார்த்து ரசித்தேன், மீண்டும் பார்க்க துண்டுகிறது. உங்கள் திருக்குறள் ஆராய்ச்சி்யை நீங்கள் புத்தகமாக வெளியிட்டு இருத்தால் அதை வாங்க மிகவும் ஆவலாக உள்ளேன். எனது இரு மகன்களுக்கும் அதை வாழ்வின் பொக்கிஷமாக அளிக்க விரும்புகிறேன்.

aa

80′ களில் பிறந்த  என்னை போன்ற பலருக்கு தமிழ்/ ஆங்கிலம் (தெரிந்து) இரு மொழிகளும் 100% எழுத/படிக்க சரியாக வருவதில்லை. எனது மொழலியில் ஏதாவது பிழை  இருத்தால் பொறுத்தருள்க.

 

எனக்கு ஆன்மீக மற்றும் வரலாறு சம்பத்தப்பட்ட உங்கள் புத்தகங்கள், எதை படிக்கலாம் என்று ஆலோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

எஸ்.வள்ளிராஜன்

hindu-books-3

அன்புள்ள வள்ளிராஜன்,

 

ஆன்மிகம் என்று பொதுவாகச் சொல்வதற்குள் பல உளப்போக்குகள் அடங்கியிருக்கின்றன. ஓங்கியிருக்கும் போக்கு என்பது பக்தி மற்றும் வழிபாடு சார்ந்ததுதான். என்னுடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை.

 

இன்னொரு ஆன்மிகம் என்பது தத்துவசிந்தனை, ஊழ்கம் [தியானம்] ஆகியவற்றைச் சார்ந்தது. அவற்றையே நான் முன்வைக்கிறேன். இந்து மெய்யியல் சார்ந்து எழுதியிருக்கிறேன். அதன் ஒரு பகுதி என ஆலயங்களையும்,படிமங்களையும் மூலநூல்களையும் குறித்து எழுதுகிறேன்.

 

இவை ஒன்றையொன்று எதிர்த்துச் செயல்பட்டாகவேண்டும் என்பதில்லை. இவையிரண்டுக்குமான இணைப்பு பற்றி இந்துமரபில் நிறையப் பேசப்பட்டுள்ளது. ஆனால் என் நோக்கில் பக்திக்கு பெரிய இடமில்லை

 

நீங்கள் ஓஷோ வாசிப்பதாகச் சொல்லியிருப்பதனால் உங்கள் ஆர்வமும் நான் செல்லும் பாதை சார்ந்தே என ஊகிக்கிறேன். இந்தப் பாதையில் ஆன்மிகம் சார்ந்த வாசிப்பு என்பது மூன்றுவகை. அ. இந்துமெய்யியலை வரலாற்று ரீதியாக அறிந்துகொள்ளுதல் ஆ. அடிப்படையான வினாக்களை எழுப்பி தேடலை உருவாக்கிக்கொள்ளுதல் இ. மூலநூல்களை கற்றல்

 

மேலே சொன்ன மூன்று வகைக்கும் சில நூல்களை சுட்டுகிறேன். அவற்றிலிருந்து நீங்கள் மேலே செல்லலாம்

அறிமுகநூல்கள்

 

அ. இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம், ஆசிரியர் க்ஷிதிமோகன் சென். [தமிழாக்கம் சுனீல் கிருஷ்ணன்] வெளியீடு சொல்புதிது பதிப்பகம்

 

ஆ. இந்துமதம் விவேகிக்கான வழிகாட்டி. ஆசிரியர் குரு நித்யசைதன்ய யதி. வெளியீடு சொல்புதிது பதிப்பகம்

 

இ. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள். ஆசிரியர் ஜெயமோகன். வெளியீடு கிழக்கு பதிப்பகம்

 

அடிப்படை வினாக்களுக்கான நூல்கள்

 

அ. தத்வமசி  ஆசிரியர் சுகுமார் அழிக்கோடு. சாகித்ய அகாடெமி

 

அ. இந்துமதம் சில விவாதங்கள். ஆசிரியர் ஜெயமோகன். வெளியீடு சொல்புதிது பதிப்பகம்

 

ஆ.இந்திய ஞானம், ஆசிரியர் ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம்

 

 

மூலநூல்கள்

அ. கீதை மூவர் உரையுடன். ஆசிரியர் க.ஸ்ரீதரன்  வெளியீடு  நர்மதா பதிப்பகம்

 

ஆ. பிரம்ம சூத்திரம்.  ஆசிரியர் அ.சுகவனேஸ்வரன் உரையுடன்  வெளியீடு கலைஞன் பதிப்பகம்

 

மேலும் இத்தளத்திலேயே ஏராளமான கட்டுரைகள் , நூல்களின் இணைப்புக்கள் உள்ளன. கட்டுரைகளுக்குக் கீழே உள்ள இணைப்புகளைத் தொடர்ந்து சென்றால் நீங்கள் சில ஆண்டுகள் வாசிப்பதற்கானவை உள்ளன. ஆன்மிகம் என்னும் பகுதியைச் சொடுக்கி தேடினால்போதும். பார்க்க இணைப்பு

 

inthiya

ஆன்மிகம் சார்ந்த கட்டுரைகளை நூல்களை வாசிப்பவர்களுக்கு சில தடைகள் நம் சூழலில் உள்ளன. அவை குறித்த ஒரு நுண்புரிதல் முன்னரே இருப்பது நல்லது

 

அ. ஆன்மிகம் என்றால் அது  நன்னெறியாக எப்போதும் இருக்கவேண்டுமென்பதில்லை. ஏற்கனவே ஊறிப்போன சிந்தனைகளை உடைக்கக்கூடியதாக இருக்கலாம். நம் மூளையைச் சீண்டி புதிய கோணங்களை திறக்கக்கூடியதாக  இருக்கலாம்

 

ஆ. ஒற்றைவரிகள், துணுக்குக் கதைகள் [பொதுவாக வாட்ஸப் புழுக்கைகள்] ஆன்மிக வாசிப்புக்குரியவை அல்ல. ஒட்டுமொத்தமாக ஒரு முழுப்பார்வையை முன்வைப்பவையே நம்மில் அழுத்தமான பதிவை உருவாக்க முடியும். அவை நூல்களும் கட்டுரைகளும்தான்.

 

இ.மூலநூல்களில் சொல்லாராய்ச்சி செய்தல், பொழிப்புரை ஆய்வுசெய்தல் ஆகியவற்றை மிதமிஞ்சி செய்வது வெறும் ஆணவ விளையாட்டு. கடந்த ஆயிரமாண்டுகளாக இந்தியாவை பீடித்திருக்கும் நோய் அது. அவர்களை முழுமையாக நிராகரியுங்கள். மூலநூல்களை நம் அனுபவத்தால், அறிவால், ஊழ்கத்தால் உணர்வதே தேவையானது. அதற்கான வழிகாட்டியாகவே நாம் வாசிப்பது அமையவேண்டும்

 

ஈ. பழைய ஆன்மிக, மத இலக்கியங்களை வாசிக்கையில் அவற்றுக்குரிய கலைச்சொற்களை அறிந்துகொள்ளவேண்டும்– உதாரணம் ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி துரியம் போன்று. அதேபோல இன்றைய ஆன்மிக உரையாடல்களைப் புரிந்துகொள்ள இன்றைய கலைச்சொற்களையும் கொஞ்சம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் இன்றைய ஆன்மிக உரையாடல்கள் இன்றைய சிந்தனைகளை கருத்தில்கொண்டு அவற்றுடன் உரையாட முயல்கின்றன. உதாரணம் படிமம், தொன்மம்

 

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆங்கிலேயரின் இரட்டைப்பண்பு -கடிதங்கள்

$
0
0
நெல்சன்

நெல்சன்veL

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

 

அன்புள்ள ஜெ

 

கலைத்தடுக்கப்பட்ட வரலாறு நீண்ட கட்டுரை. அத்தனைப் புகைப்படங்கள் மற்றும் தகவல்களுடன் அதை வாசிக்கும்போது அது நீண்டுகொண்டே போவதுபோலத் தோன்றியது. வாசித்தபின் ஒரு வடிவமும் மனசில் வரவில்லை

 

அதன்பின்னர் மீண்டுமொருமுறை வேகமாக வாசித்தேன். அதன் வடிவம் புரிந்தது. பிரிட்டிஷ் பண்பாட்டிலிருக்கும் இரட்டைத்தன்மையைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். ஜனநாயகத்தின் மடித்தொட்டிலான நாடுதான் சர்ச்சிலையும் படைத்தது என்ற முரண்பாடுதான் மைய இழை.

 

வரலாற்றின் இரண்டு பக்கங்களும் தெளிவாகத் தெரியும் லண்டன் பாராளுமன்ற வீதியில் கட்டுரை அழகான சிறுகதை மாதிரி முடிவடைகிறது

 

 

கே. அருணாச்சலம்

 

 

 

ஜெ வணக்கம்

 

முதன் முதலாக இங்கே [லண்டன்] வந்த பொழுது, எனக்கு அதிசயமாக பட்டது, இங்கே உள்ள இந்தியர்களின் உலக வகைகள். காலனியாதிக்கத்தின் எச்சமாக, மேற்கு இந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, மௌரிஷீயஸ், ஃபிஜி, கென்யா, உகாண்டா மற்றும் தெற்காசியா  என்ற அனைத்து பிரதேசங்களில் இருந்து இங்கே வாழும் இந்தியர்களை சந்திக்கலாம். இந்திய உணவை தாண்டி, அனைவரிடமும் காணும் பொது அம்சம், இங்கிலாந்து vs காலனிய நாடு ( India, Pakistan, Srilanka, Westindies), கிரிக்கட் போட்டிகளில், இங்கிலாந்தை தவிர்த்து மற்றொரு நாட்டை ஆதரிப்பது. என் மகனின் தலைமுறையில் மாற்றம். எங்கள் வீட்டில் இங்கிலாந்து vs இந்தியா போட்டியென்றால் சற்றே யுத்த சூழ்நிலை.

 

காமன்வெல்த், காலனிய நாடுகளின் கூட்டமைப்பு. அரசிதான் இதன் தலைவி. அவருக்கு வயதாகிவிட்டதால் இப்பொழுது இளவரசர் சார்ல்ஸ். காமன்வெல்த் நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு குடிபுகுபவர்கள், பிரித்தானிய குடியுரிமை பெறாவிட்டாலும், இங்கே வசிக்கும் பொழுது அனைத்து தேர்தல்களிலும் வாக்குரிமை உண்டு.

 

இப்படியிருந்தும், இன்னும் பள்ளிகூட வரலாற்றில் காலானியாதிக்கம் இடம் பெறுவதில்லை. “Sun never sets in the empire” என்பது எப்பேற்பட்ட ஒரு ஆதிக்கம். ஆனால் அதை கற்று கொடுத்தால் காலனியாதிக்கதின் மாபெரும் அழிவுகளையும் கற்று கொடுக்க வேண்டியிருக்கும்.

 

விளைவு, ஒரு குட்டித் தீவுச்சமூக மனபான்மையுடனே உள்ளது இன்றைய பிரித்தானிய சமூதாயம். பிரமாண்டாக கடைசியாக கனவு கண்டதெல்லாம் விக்டோரியா இராணியின் காலத்தில்தான். இலண்டனின் இன்றயை பாதாள சாக்கடை அப்பொழுது கட்டபட்டது.  2016ல் தான் புதிதாக திட்டம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள்.

 

அன்புடன்

 

 

சதீஷ்

 

 

ஜெ

 

வகுப்பில் வரலாறு எடுக்கும்போதுள்ள பெரிய பிரச்சினை பிரிட்டிஷார் நல்லவர்களா கெட்டவர்களா என்று சொல்வது. அவர்களின் மிகப்பெரிய சுரண்டலையும் அநீதியையும் பற்றிச் சொன்னால் உடனே முல்லைப்பெரியார் அணையைக் கட்டினானே என்று எவராவது கேட்பார்கள். அதிலும் கொஞ்சம் வயதானவர்களின் சிக்கல் பயங்கரமான ஒன்று. வெள்ளைக்காரன் நல்லவன், வல்லவன். பஞ்சம் சுரண்டல் எதற்கும் அவன் காரணம் அல்ல. காந்தியும் நல்லவர், நேருவும் நல்லவர். அப்படியென்றால் அவர்கள் ஏன் வெள்ளையருக்கு எதிராக போராடினார்கள் என்றால் பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் இந்த இரட்டைத்தன்மைதான். மோனியர் விலியம்ஸும் வெள்ளையர்தான் லார்ட் கர்சானும் வெள்ளையன்தான். அதைப்புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

 

எஸ்.சுவாமிநாதன்

 

 

அன்புள்ள ஜெ

 

வெள்ளையரின் இரட்டைநிலை லண்டனைப்புரிந்துகொள்ள மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் புரிந்துகொள்ள உதவியானது. இடதுசாரிகள் சுரண்டலை மட்டும் பார்ப்பார்கள். வலதுசாரிகள் அங்குள்ள ஜனநாயகத்தை மட்டும் பார்ப்பார்கள். இரண்டுமே அவர்களின் சிருஷ்டிதான். இரண்டும் கலந்ததே அவர்களின் முகம்

 

மகாதேவன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியத்துள் நுழைதல்…

$
0
0

nave

 

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் வாங்க

 

ஜெ,

 

ஒரு சாதாரண முதல் நிலை வாசகன் நான். சுஜாதா எழுத்துக்களை மட்டுமே புரிந்துகொள்ளக் கூடியவன். தங்களை நெருங்கும் அறிவுக்கூர்மை என்னிடம் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பே புதுமைப்பித்தன், ஜெயமோகன் என்று வாசிக்க வந்துவிட்டாழும் கூட முழுமையாக புரிந்துகொண்டு ரசிக்க முடியவில்லை. என் இலக்கியத் தரம் என்பது சுஜாதாவோடு நின்றுவிட்டதாகப் படுகிறது. சுந்தர ராமசாமி ஓரளவிற்கு நெருக்கமாகிறார். வாழ்வின் அன்றாட பிரச்சினைகளில் உளன்று எதிலும் அடுத்த நிலைக்கு செல்ல இயலவில்லை. உறுதி எடுத்துக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் எதாவது பிரச்சினையால் தொடர இயலாமல் போகிறது. இலக்கியமும் புரியவில்லை, இலக்கியப் போலிகளையம் இனங்கானத் தெரியவில்லை.

 

 

மெய்ஞ்ஞான தேடலோடு, அறிவுப்பூர்வமான தர்க்கங்களோடு, முதல் தர இலக்கிய வாசகனாக தங்களை நெருங்க விரும்புகிறேன்.

 

 

ஆர்.எஸ்.லிங்கம்

 

அன்புள்ள லிங்கம்,

 

முதல் முக்கியமான நல்ல விஷயம் நீங்கள் உங்களை ஆரம்பகால வாசகன் என தன்னுணர்வது. அவ்வுணர்வு இருந்தால் அதிகம்போனால் ஈராண்டுக்குள் குறிப்பிடத்தக்க வாசகனாக ஆகிவிடமுடியும். மிகப்பெரிய பிரச்சினை ஆரம்பகால வாசகனாக உள்ளே நுழைகையிலேயே ஏற்கனவே எல்லாம் அறிந்துகொண்டுவிட்டேன் என்னும் எண்ணத்துடன், அதன் விளைவான உறுதியான முன்முடிவுகளுடன் இருப்பது.

 

முன்பெல்லாம் அப்படி உள்ளே நுழையும் புதியவாசகன் முதிர்ந்த வாசகர்களையோ எழுத்தாளர்களையோ சந்திக்கவும், உரையாடவும் வாய்ப்பிருந்தது. அங்கே அவனுடைய முன்முடிவுகள் உடையும். தன்முனைப்பும் பழுதுபடும். கற்றல் நிகழும், விளைவான முன்னகர்வும் இருக்கும். துரதிருஷ்டவசமாக இன்று அந்நிலை இல்லை. சமூக ஊடகங்களின் காலம். உள்ளே நுழைந்து ஓரிரு விஷயங்களில் நக்கலாகோவோ ஆக்ரோஷமாகவோ கருத்துச் சொல்லிவிட்டால் எந்த தொடக்கநிலையாளனும் தன்னை எழுத்தாளன், சிந்தனையாளன் என்றெல்லாம் எண்ணிக்கொள்ள முடியும். எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வது, அவர்களை கண்டிப்பது என செயல்பட முடியும். ஒவ்வொரு நாளுமென தன்னிலை உறுதிப்பட்டு ஆணவமாக மாறுவதனால் இவர்கள் பத்திருபதாண்டுக்காலம் இத்தளத்தில் செயல்பட்டாலும் எந்தவகையான கற்றலும், முன்னகர்தலும் நிகழ்வதில்லை. உடன் ஒர் அரசியல்நிலைபாடும் இருக்குமென்றால் அந்த அடையாளத்தை சூடிக்கொண்டு ஆடுவதற்குண்டான வாய்த்தாரிகளையும் அடவுகளையும் சமூகவலைத்தளங்களிலேயே கற்றுக்கொள்ளலாம். ஆதரவுக்கும்பல் ஒன்றும் அமையும்.

 

நீங்கள் இரண்டுவகையானவர்களை அறிவுத்தளத்தில் சந்திக்கலாம். உங்கள் அறியாமையை, நீங்கள் கற்கவேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து உங்களுக்குக் காட்டுபவர்கள். உங்கள் அறியாமையையே புகழ்ந்து உங்களை ஏற்றிவிடுபவர்கள். முதல்வகையினர் மட்டம்தட்டுபவர்களாகவும் இரண்டாம் வகையினர் தோழமையானவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். ஆனால் இரண்டாம்வகையினர் உண்மையில் தங்கள் அரசியலுக்கும், குழுத்தேவைக்கும் உங்களைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் அன்றி வேறல்ல. நீங்கள் மேலே கற்றுவிடலாகாதென்பதில் அவர்கள் கவனமாக இருப்பதைக் காணலாம்.

 

நீங்கள் தொடக்கநிலையாளர் என்பதில் நாணுவதற்கேதுமில்லை. எல்லாருமே அப்படித்தான் உள்ளே நுழைகிறார்கள். எந்த அறிவுத்துறையிலும் முதலில் நுழைகையில் ஒரு தயக்கமும் பதற்றமும்தான் உருவாகும். கலைகளில் திட்டவட்டமான பாடங்களோ, புறவயமான நெறிகளோ இல்லை என்பதனால் மேலும் திகைப்பு இருக்கும். இலக்கியம் கலையும் அறிவுத்துறையும் ஒன்றான ஒரு செயல்பாடு

 

எந்தக்கலையையும் அறிவதற்கு ஒரே வழிதான். சிலகாலம் தொடர்ச்சியாக, சலிக்காமல் அதில் ஈடுபடுதல். எந்த இசையையும் ஆறுமாதம் நாள்தோறும் கேட்டீர்கள் என்றால் அதன் அழகியல் பிடிபடும். இலக்கியமும் அப்படித்தான். தொடர்ச்சியாக வாசியுங்கள். நல்லபடைப்புக்கள் என ஏற்கனவே அறியப்பட்டவற்றை. உங்கள் இயல்பான சுவைத்தரம், அறிவுத்தரத்தை விட ஒரு படிமேலானவற்றை. மிக எளிதிலேயே உங்களுக்கு வாசல்கள் திறக்கும்.

 

இலக்கியம் அறிவுத்துறை என்பதனால் அதில் இயங்கும் நெறிகளை கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். ஓர் இலக்கியப்படைப்பைப் படித்தபின் அதைப்பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க விமர்சனங்களை வாசித்துப்பாருங்கள். நீங்கள் அந்தப்படைப்பில் எதை கண்டீர்கள், எதைக் காணவில்லை என்பதை குறித்துக்கொள்ளுங்கள். இலக்கியக் கலைச்சொற்களையும், இலக்கிய இயக்கங்களையும் கற்று உளத்தில் நிறுத்திக்கொள்ளுங்கள். நான் எழுதிய ‘நவீன இலக்கியம் ஓர் அறிமுகம்’ உங்களுக்கு உதவும்

 

இலக்கியவிவாதங்கள் மிக உதவிகரமானவை. ஆரம்பநாட்களிலாவது இலக்கியநிகழ்வுகள், குறிப்பாக விவாத நிகழ்வுகளில் கலந்துகொள்ளுங்கள். ஆனால் மூன்று விஷயங்களில் கவனமாக இருங்கள்

 

1.  இலக்கியம் என்பது அரசியலின் இன்னொரு வடிவம் அல்ல. அதற்கு அரசியலும் ஒரு பேசுபொருள்தான். ஆனால் அது அரசியலையும் உள்ளடக்கிய முழுமைநோக்கை நாடுவது. மானுட உள்ளத்தின் அலைவுகள், மானுட உறவுகளின் சிடுக்குகள், வரலாற்றின் அடுக்குகள், தத்துவம், மெய்யியல் என அதன் எல்லைகள் விரியும். அரசியலை நம் தலைக்குள் ஏற்றி பாறையாக இறுகவைக்கவே இன்றுள்ள சூழல் முயல்கிறது. அதற்கு இடம் கொடுப்பவன் எப்போதைக்குமாக இலக்கியத்தை இழந்துவிடுவான். என்றென்றைக்கும் இலக்கியத்தில் எளிய அரசியலை மட்டுமே பெற்றுக்கொண்டிருப்பான்

 

2  இலக்கியம் சமகாலத்தில் எழுதப்படலாம். ஆனால் அது சமகாலத்தில் நிலைகொள்வதில்லை. அதற்கு ஒரு காலம்கடந்த தன்மை உண்டு. அன்றாடக் கருத்துலகு சமகாலச் செய்திகளையும் உணர்வுகளையுமே அலம்பிக்கொண்டிருக்கும். இலக்கியம் அவற்றின் ஆழத்திலுள்ள மானுட இயல்புகளின், வரலாற்றுப்போக்குகளின் மாறாத தன்மையையே தேடிச்செல்லும். சமகால விஷயங்களில் மூழ்காதவனே இலக்கியவாசகனாக முடியும்

 

3. இலக்கியப்பூசல்களில் மையப்பேசுபொருள் மட்டுமே முக்கியமானது. இலக்கியத்தில் ஆணவப்பூசல்களும் தனிநபர்க் காழ்ப்புகளும் எப்போதுமுண்டு. இவற்றில் பெரும்பகுதியை உருவாக்குபவர்கள் இலக்கியவாதியாக ஆகமுடியாமல் போன அரை அறிவுஜீவுகளும் எழுதமுடியாத அரை எழுத்தாளர்களும்தான். அவற்றைப் புறக்கணிக்கவும், மெய்யான விவாதங்களில் பேசப்படும் பொருளை மட்டுமே கவனிக்கவும் பழகுங்கள்.புது வாசகர்கள்  இலக்கியவம்புகளில் ஈடுபட்டு அவ்வழியே அழிந்துபோவது சிற்றிதழ்ச்சூழலில் அடிக்கடிக் காணக்கிடைப்பது என்பதனால் இந்த எச்சரிக்கை

 

தொடர்ந்து ஈடுபடுங்கள். வாழ்த்துக்கள்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அமிஷ் நாவல்கள்

$
0
0

Meluha

அன்புள்ள ஆசிரியருக்கு,

அண்மையில் அண்ணன் அமீஷ் புத்தகங்களின் வரிசையை வாங்கி வந்திருந்தான்.அதில் ஒருபுத்தகத்தையும் முழுதாக வாசிக்க முடியவில்லை.எடுத்து எடுத்து வைத்துக் காெண்டிருக்கிறேன்.அண்ணன் என்ன பெரிசா வாசிக்கற நீ? காேடி புத்தகங்கள் மேல விற்பனையாகி இருக்கு என்கிறான்.அவ்வளவு ஆட்கள் வாசித்ததை ஏன் என்னால் வாசிக்க முடியவில்லை.அந்தப் புத்தகங்கள் அவ்வளவு வாசிக்கப்பட,விற்பனையாக என்ன காரணம்? நான் ஒரு புத்தகப்ப்ரியை என்ற காரணத்தால் இதை கேட்கத் தாேன்றுகிறது.வியப்பாக இருக்கிறது இவ்வளவு வாசகர்களா!

அன்புடன்,
கமலதேவி

 

 

அன்புள்ள கமலதேவி

அமிஷ் வரிசை நூல்களில் ஒன்றை ஒரு விமானப்பயணத்தில் ஐம்பது பக்கம் அளவுக்கு படித்திருக்கிறேன். என்னால் அவற்றை எவ்வகையிலும் ரசிக்கமுடியவில்லை

சமீபத்தில் இந்திய ஆங்கில எழுத்துக்களில் சில ‘பெஸ்ட்செல்லர்’ நாவல்களை சினிமாக்காரர்கள் அளித்து அவற்றின் சினிமா வடிவத்துக்கான வாய்ப்புகளைப்பற்றிப் பேசினார்கள். சில நாட்களுக்கு முன் அதற்காக வாசித்த நாவல் ரவீந்தர் சிங்கின் I Too Had a Love Story. அந்நாவலை வாசிக்க பெருந்தொகை ஊதியம் பெற்றேன், ஆகவே வாசித்து முடித்தேன். எழுபதுகளில் இங்கே புஷ்பா தங்கத்துரை போன்றவர்கள் எழுதிய நாவல்களைபோன்றது – அந்த அளவுக்குக்கூட நுட்பங்கள் அற்றது.

முன்பு ஷோபா டே எழுதிய Socialite Evenings என்னும் நாவலை வாசித்திருக்கிறேன், நூறுபக்கம் வரை. அத்தகைய நாவல்களின் வாசகர்கள் இந்தியாவின் உயர்குடி மக்கள். அவர்களுக்கு ஆழமான அனுபவ உலகம் இல்லை. வரலாறு, தத்துவம், மெய்யியல் எதிலும் அறிமுகம் இல்லை. அவர்களின் மொழி ஆங்கிலம். அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல்களை அவர்கள் வாசிக்க விரும்புகிறார்கள். அதற்கென்றே இங்கே நூல்கள் எழுதப்பட்டன

தொண்ணூறுகளுக்குப்பின் நிலைமை மாறியுள்ளது. சென்ற இருபதாண்டுகளாக இந்தியாவின் மையமான கல்விமொழி ஆங்கிலம். இந்தியா முழுக்கவே தாய்மொழியில் சரளமாக எழுதப்படிக்கத் தெரியாத தலைமுறை உருவாகியிருக்கிறது. ஆனால் ஆங்கிலமும் அவர்களுக்கு நன்றாகத்தெரியாது. ஏனென்றால் அவர்களின் கல்விப்புலம் மொழிக்கு அதிக இடமில்லாத தொழில்நுட்பத்தளம்.

அவர்களின் வாசிப்புத்தேவைக்கான நூல்களுக்கான சந்தை இங்கே உருவாக்கப்பட்டது. மிக எளிமையான ஆங்கிலத்தில், மிக எளிமையான கதையோட்டத்தில் எழுதப்படும் நாவல்கள். ரவீந்தர் சிங்கின் நாவல் அத்தகையது. சாதாரணமாக எவரும் அதை தங்களுடன் அடையாளம் காணமுடியும். சில்லறைக்காதல், சில்லறைக் காமம், சில்லறை மெல்லுணர்ச்சிகள்.

இந்திய ஆங்கில வணிக எழுத்து விரிந்த சந்தை அல்ல. அது இந்திய அளவில், முப்பது கோடி மக்களை, சந்தையாகக் கொண்டிருப்பதனால்தான் விற்பனை இந்திய மொழிகளுடன் ஒப்பிட பெரிதாகத் தெரிகிறது. உச்சகட்டமாக இரண்டு லட்சம் பிரதிகள் வரை ஒரு விற்பனைவெற்றி நாவல் சென்றடையக்கூடும். இந்தியாவில் அதுவே மிகப்பெரிய விஷயம்.

இந்தப் பரவலான சந்தையே அதன் பெரிய பலவீனம். ஏனென்றால் இந்த இந்திய ’பல்ப்’ நாவல்உலகுக்கு மிகப்பெரிய கலாச்சாரத் தடை ஒன்றுண்டு. அது இந்தியா முழுக்க இருக்கும் பண்பாட்டு வேறுபாடுதான். கர்நாடகப்பின்புலம் கொண்ட நாவல் தமிழக வாசகனுக்கு உவப்பதில்லை. வட இந்தியாவின் வாழ்க்கை என்னவென்று தென்னகத்து பொதுவாசகனுக்குத் தெரியாது. இலக்கியவாசகன் அக்கறை எடுத்து வாசிப்பான். பொழுதுபோக்கு வாசகன் ‘ஒட்டமுடியவில்லை’ என்று தூக்கிப்போட்டுவிடுவான்.

ஆகவே இங்கே இரண்டுவகையான பின்புலங்கள் கையாளப்படுகின்றன. ஒன்று, இந்திய உயர்குடியின் வாழ்க்கைப்பின்புலம். இது கலாச்சார அடையாளம் அற்றது. அத்தனை நடுத்தர இந்தியர்களும் ஆவலுடன் கவனிப்பது. இந்திய உயர்கல்வித்துறை மற்றும் தொழில்துறையின் பின்புலம். இதுவும் இந்தியா முழுக்க ஏறத்தாழ ஒன்றே. சேதன் பகத் போன்றவர்களின் புலம் இது.

இச்சூழலில் புதிதாகக் கண்டடையப்பட்டதுதான் இந்தியப்புராணங்களின் உலகம். அதுவும் இந்தியா முழுக்க ஒன்று. இதன் வாசகர்களான இளைய தலைமுறை தொலைக்காட்சி வழியாக புராணங்களை மேலோட்டமாக தெரிந்து வைத்திருக்கிறது. கூடவே மேலைநாட்டு லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போன்ற நவபுராணங்களை இளமையிலேயே பார்த்துப் பழகியிருக்கிறது

அமிஷ் நாவல்கள் இந்த இரண்டு பொது அம்சங்களின் கலவை. இந்திய வாசகர்களுக்குரிய உயர்நிலைப்பள்ளித் தரத்திலான ஆங்கிலம். ஆழமற்ற, வேகமான கதை. ஆகவே வாசகர்களுக்கு அவை உவப்பானவையாக உள்ளன. அந்தச் சந்தை இன்று மிகப்பெரியது. ஆனந்த் நீலகண்டன் அவருடைய அசுரா, கௌரவா போன்ற நூல்வரிசைகளை எனக்கு அளித்தார். மேலோட்டமாக வாசித்தேன். கதை ஒழுக்கை தக்கவைக்கும் திறன்கொண்ட எழுத்து. அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள், குணச்சித்திரத் திருப்புதல்கள். அவரைப்போல பல எழுத்தாளர்கள் வெற்றிகரமாகச் செயல்படுகிறார்கள்.

இந்த வாசகர்கள் அந்த வாசிப்பிலிருந்து இலக்கியவாசிப்புக்கு பெரும்பாலும் வருவதில்லை. ஏனென்றால் அந்த மேலோட்டமான வாசிப்புக்குப் பழகிவிடுகிறார்கள். அது மேலான வாசிப்பு என்னும் மனநிலையிலும் இருக்கிறார்கள். அதைக்கடந்துசெல்ல அவர்களுக்கு மிகப்பெரிய உடைப்பு ஒன்று தேவை. அது நிகழ்வதில்லை. கல்வித்துறையிலோ, சமூக வலைத்தளத்திலோ அதற்கான இயல்பான வாய்ப்புகள் இல்லை.

ஏனென்றால் இவர்கள் கல்வி, வேலை போன்ற நிலைகளில் நிலைபெற்றவர்கள் என்பதனால் தாங்கள் வெற்றிகரமானவர்கள், ஆகவே உயர் அறிவுத்திறன் கொண்டவர்கள் என நம்புகிறார்கள். ஆகவே அவர்களை விடமேலான அறிவுத்தளம் ஒன்று அவர்களை உடைக்க முடியாது. தங்கள் ஆணவத்தால் மிகமிகத்தீவிரமாக அதை எதிர்ப்பார்கள். தங்களுக்கு மேல்நிலையிலிருந்து ஒன்று சொல்லப்படுகையில் எள்ளல் நக்கல் வழியாக அதை எதிர்கொள்வார்கள். எள்ளலைப்போல ஒருவனை ஆணவத்தின் சிறையில் அடைத்துப்போடும் ஆற்றல்கொண்டது வேறில்லை.

இவற்றை எவரும் இலக்கியமல்ல என்று இன்று சொல்லி நிறுவ முடியாது. சமூகவலைத்தளச் சூழலில் ஒன்றும் ஒன்று இரண்டு என்றாலும் அதை ஆவேசமாக எதிர்த்து வாதிட முடியும். ஆகவே எந்த வகையான வழிகாட்டுதலும் பொதுச்சூழலில் இருந்து கிடைப்பதில்லை. ஆகவே இவர்கள் ஒருபோதும் தங்களை மீறிச்செல்லமாட்டார்கள். இவர்களின் வலைப்பதிவுகளில் இருக்கும் அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கையைக் காண்கையில் இரும்புக்கூட்டுக்குள் இருக்கும் விலங்குகள்தான் நினைவுக்கு வரும்.

இலக்கியம் என்பது பண்பாட்டின் அகத்தால் எழுதப்படுவது. அதற்கு புறவயத்தன்மை மிகக்குறைவு. சொல்லப்போனால் அந்த புறவயத்தன்மை ஒரு புனைவுப்பாவனை மட்டுமே. அது அகவயத்தன்மையால் ஆனது. ஒரு பண்பாட்டின் உள்ளூர ஆழ்ந்திறங்கும்போதே இலக்கியம் மதிப்பு கொண்டதாகிறது. ஆகவே மிகமிக வட்டாரத்தன்மை [ regionality] கொண்டதே மிகமிக உலகப்பொதுத்தன்மை [universality] கொண்டதாகிறது இலக்கியத்தில்.

இக்காரணத்தால்தான் மிக அதிகமாக விற்கப்படுவது இலக்கியமாவதில்லை. ஏனென்றால் அது மிக அதிகமாக விற்கப்படும்பொருட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. நுகர்வோர் பரந்து விரிந்திருக்கையில் அவர்களின் பொதுக்கூறுகளை மட்டுமே கருத்தில்கொண்டு சமைக்கப்படுகிறது. வாசிப்பை ஒரு மோஸ்தராக, சமூக அடையாளமாகக் கொள்பவர்கள் இலக்கியவாசிப்பாளர்கள் ஆவதில்லை. வாசிப்பை மிக அந்தரங்கமாக, தன் தனித்தேடலுக்குரிய பாதையாக, கொள்பவர்களுக்குரியது இலக்கியம்

அமிஷ் நாவல்கள் இந்தியாவில் 90 களில் உருவான நான்குவழிப்பாதை போன்றவை. அவற்றில் வேகமாகச் செல்லமுடியும். பெருவாரியானவர்களுக்குரியவை. ஆனால் அவை எவ்வகையிலும் இந்தியாவை நமக்குக் காட்டித்தருவன அல்ல. இலக்கியம் கிராமச்சாலை, ஒற்றையடிப்பாதை.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நூறுநாற்காலிகள்- விமர்சனம்

$
0
0

நூறு நாற்காலிகளின் மலையாள வடிவத்தைப்பற்றி தொலைக்காட்சி விமர்சனம். சந்த்யா. குறுநாவலின் பல கோணங்களை அறிமுகம் செய்து பேசுகிறார்

 

 

https://youtu.be/nqe1P2QdXrg

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முடிவடையாத கலைக்களஞ்சியம்- கடிதங்கள்

$
0
0

amaravati_stupa-759

 

ஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்

அன்புள்ள ஜெ

ஐரோப்பா-9: பிரிட்டிஷார் உலகம் முழுதிலுமிருந்து கலைப்பொருட்களை எடுத்துச் சென்றது பற்றி எழுதியிருந்தீர்கள். ஐரோப்பியர்கள், தங்களுக்குள் நாசி ஜெர்மனிக்கு மட்டும் அந்த உரிமை இல்லை என்று நினைத்திருக்கிறார்கள் போல.

ஹிட்லர் தன் கனவு சாம்ராஜ்யத்தின் தலைநகரான பெர்லினுக்காக பெரும் திட்டங்கள் வைத்திருந்தார். தன் சொந்த ஊரான லின்ஸ்-ல் பெரிய கலைஅருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஜெர்மனி தன் கீழிருந்த பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருங்கொள்ளை நிகழ்த்தியது. மற்ற அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் அரண்மனைகளிலிருந்து கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு ஜெர்மனியில் பதுக்கப்பட்டன. 2007-ல் எழுதப்பட்ட Monuments Men நூலும் அதைத் தழுவி 2014-ல் எடுக்கப்பட்ட திரைப்படமும் இந்தக் கதையை சொல்கின்றன.

போரின் இறுதியில் ஜெர்மனி தோற்கும் தருவாயில் ஹிட்லரின் படைத்தளபதிகள் பொக்கிஷங்களை தங்களுக்காக திருடிக்கொள்கிறார்கள் அல்லது எரித்துவிடுகிறார்கள். முன்னேறி வரும் சோவியத் ரஷ்யப் படைகளும் இதையே செய்கின்றன.

அமெரிக்க பிரிட்டிஷ் படைகளில் இருக்கும் சில கலை ஆர்வலர்கள் இதை தடுக்க முனைகிறார்கள். கலைப்பொருட்கள் திருடப்பட்டால் மேலை சமூகமே வீழ்ந்துவிடும் என்று சொல்லி மேலிடம் வரை அழுத்தம் தந்து நிதி ஏற்பாடு செய்து முன்னூறு பேர் கொண்ட தனிப்படைப்பிரிவு அமைக்கிறார்கள். அதில் பெரும்பாலும் போர் அனுபவமற்ற அருங்காட்சியக காப்பாளர்கள் கலை ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் ஐரோப்பாவில் ஊடுருவிச் சென்று கலைப்பொக்கிஷங்களை மீட்கிறார்கள். கலைக்காக ரத்தம் சிந்தியவர்கள் என்ற வரலாறு பதிவாகிறது.

நாசிக்கள் அடித்த பெருங்கொள்ளை உலகம் முழுவதும் பதுக்கப்பட்டிருக்கிறது என்பதால் கலைப்பொருட்களை மீட்டு மற்ற ஐரோப்பியர்களிடம் ஒப்படைப்பதற்கும் ஆவணப்படுத்துதலுக்கும் தனி பவுண்டேஷனே ஏற்படுத்தப்பட்டுள்ளது, எழுபது ஆண்டுகளாக அந்தப்பணி இன்னும் தொடர்கிறது.

ஆனால் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் தங்கள் மியுசியத்தில் அதே போன்ற பொருட்கள் இருப்பதைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இன்று பிரிட்டிஷ் மியுசியம் தன்னிடம் உள்ள லட்சக்கணக்கான கலைப்பொருட்களை டிஜிடல் முறைகளில் ஆவணப்படுத்தி இணையத்தில் வெளியிடுகிறது. அதன் மூலம் நாசிக்களும் தாங்களும் வேறுவேறு என்று காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

மதுசூதன் சம்பத்

Jeyamohan UK visit 232

அன்புள்ள ஜெ

லண்டன் பயணக்கட்டுரையில் லண்டன் மியூசியத்தைப்பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கும் அங்கே சென்றபோது அந்த பிரமிப்பும் பின்பு சலிப்பும்தான் ஏற்பட்டது . அங்கே சென்று அனைத்தையும் பார்ப்பது நீங்கள் சொல்வதுபோல கலைக்களஞ்சியத்தைப் படிப்பதுபோலத்தான் . பயன் கிடையாது

அங்குள்ள கலைப்பொருட்களில் பெரும்பகுதி அவர்களின் உலக ஆதிக்கத்தால் திரட்டப்பட்டவை. ஆகவே அவை ஆதிக்கத்தின் கதையையும்தான் சொல்கின்றன. ஆனால் உலகிலுள்ள எல்லா பெரிய நாகரீகங்களும் அவ்வாறு ஆதிக்கம் வழியாகத் திரட்டப்பட்டவைதான். அவ்வாறு திரட்டப்படாவிட்டால் அவையெல்லாம் அப்படி ஒரே இடத்தில் திரண்டிருக்க வாய்ப்பில்லை

அங்கே நீங்கள் சொல்வதுபோல பெரிய அனுபவம் என்பது வெவ்வேறு கலைப்பள்ளிகளை வரிசையாகப்பார்ப்பதுதான். அவை ஒன்றுடன் ஒன்று வேறுபாடுகளைத் தெளிவாகக் காட்டுகின்றன

ராமச்சந்திரன்

Jeyamohan UK visit 320

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஐரோப்பா பதிவுகள் அற்புதமாய்; ரம்மியமாய் செல்கிறது. மெதுவாக ஊர்ந்து செல்லும் நத்தையின் பாதையோ, அதி வேகத்தில் செல்லும் ஐரோப்பிய பறவையோ ; உங்களுடைய பயணக்கட்டுரைகள் அனைத்தும் கலை, இலக்கியம், மதம், பண்பாடு, அரசியல், சரித்திரம் , அறிவியல், தொன்மம் என பல்வேறு துறைகளை தொட்டு விரிந்து, எங்களுக்கு பல திறப்புகளை, திருப்புமுனைகளை காண்பித்தபடி செல்கிறது.

குறிப்பாக லண்டன் பற்றிய பதிவுகள் அனைத்திலும் இந்தியாவையும் இணைத்தே எழுதியுள்ளீர்கள். நமது காந்தியை திரைப்படமாக இயக்கி காண்பிக்க ரிச்சர்ட் அட்டன்பரோ தேவைப்படுகிறார். எலிசபெத் ராணியை

திரைப்படமாக இயக்கி காண்பிக்க நம்மூர் சேகர் கபூர் தேவைப்படுகிறார். இந்தியாவும் இங்கிலாந்தும் பின்னி பிணைந்து விட்டதை, அதன் சிக்கல்களை , சரடுகளை அழகாக பிரித்து காண்பிக்கிறீர்கள்.

ரோம் வாட்டிகன் சபையிடமிருந்து துண்டித்துக்கொண்ட இங்கிலாந்து, ரோமன் கத்தோலிக்கம் (48%), சீர்திருத்த கிருத்துவம் (48%) என இரண்டாக உடைகிறது. நம்மூர் எம்எல்ஏக்களை கடத்துவதை போல் நாலு முக்கிய ஓட்டுக்களை கடத்தி சென்று, எலிசபெத் மகாராணியை (சீர்திருத்த கிருத்துவம்) அரியணையில் ஏற்றிவிடுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் ஐநூறு வருடங்கள் கழித்து ஐரோப்பாவிடமிருந்து துண்டித்து கொள்ள இங்கிலாந்து சமீபத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தியது. அதே நாலு சதவீதம் ஊசலாடி, கடைசியில் துண்டித்துக்கொள்ளலாம் (52%) என்று BREXIT முடிவாகிவிட்டது. History Always Repeats. கலைகிறதா ஒற்றை மானுடத்தின் கனவு? என்று நீங்கள் தமிழ் ஹிந்துவில் ஒரு அருமையான கட்டுரை எழுதியதாக ஞாபகம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பைரன் மற்றும் கவிஞர்கள் பற்றிய பதிவுகள் அருமை. யானை டாக்டர் சிறுகதையில் டாக்டர் கே சொல்லுவார் ”Man, Vain Insect” என்று. வெள்ளை யானை நாவல் நெடுக்க பைரன் கவிதைகள் வரும்.

பைரன் மகள்தான் Ada Lovelace. கவிஞனின் மகள் கணிதத்தில் புலி. உலகின் முதல் பெண் கணிப்பொறியாளர். கணிப்பொறியின் தந்தை எனப்படும் Charles Babbage உடன் சேர்ந்து கணிப்பொறித்துறையின் எதிர்காலத்துக்கு அடித்தளமிட்டவர். ”Poetic Science” என்று அறிவியலை கவிதை மூலமாகவும் அணுகலாம் என்று சொன்னவர்.

அதன் பிறகு நூறு வருடங்கள் கழித்து Alan Turing கணிப்பொறி கனவுகளை சாத்தியமாக்கினார். இன்றைய உலகம் java, python என்று வந்துவிட்டாலும், எண்பதுகளில் அமெரிக்கா, பைரன் மகள் நினைவாக ஒரு கணிப்பொறி மொழிக்கு ADA என்று பெயர் வைத்தது. விமானக் கருவிகளில், Satellite தொலைத்தொடர்புகளில் ADA மொழியின் பயன்பாடு அதிகம்.

நீங்கள் சொல்வது போல், அறிவும், ஞானமும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் அழைத்து செல்கிறது. அதன் பிறகு சிகரங்களை உச்சங்களை கனவுகளை அடைவதற்கு கவிதையால் மட்டுமே முடிகிறது. கணிப்பொறியில் இன்று நாம் சாதிப்பதற்கு, ஒரு கவிதையோ, கவிஞரோ, கவிஞரின் மகளோ அன்று தேவைப்பட்டிருக்கிறது.
நன்றி.

அன்புடன்,

ராஜா.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16987 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>