Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16875 articles
Browse latest View live

உணர்ச்சியும் அறிவும்

$
0
0

 

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்ற தருணத்தில் அவரது தாயாரின் மனநிலையை ப்ரதிபலிக்கும் காணொளியின் சுட்டியை இணைத்துள்ளேன். ஒரு அன்னையின் தியாகங்களை, சரணாகதியின் மகத்துவத்தை, பராசக்தியின் விளையாட்டை, பக்திமார்க்கம் என்பதை ஒரே நிமிடத்தில் இந்த காணொளி விளக்குகிறதோ என தோன்றுகிறது.

நான் என்னை ஞானமார்க்கம் என்றே நினைக்கின்றேன் . ஆனால் சில திரைப்பட காட்சிகளில், இது போன்ற காணொளிகளில் என்னையும் மீறி ஏதோ ஒன்று பொங்கி , தொண்டையை அடைத்து , கண்கள் கலங்கி விடுகிறேன். ஞானமார்க்கத்தில் இருப்பவர்கள் கலங்குவார்களா? ஞான மன நிலையில் தொடர்ச்சியாக இருப்பது சாத்தியமா? அல்லது எனக்கு பக்திமார்க்கம்தான் சரியான வழியா? ”பாசமலர் பாத்து அழாதவன்லாம் மனுசனாலே? ” – என்ற பாபநாசம் வசனம் வேறு நினைவுக்கு வருகிறது.

நேரமும் மனமும் அனுமதித்தால் ஒரு வழி சொல்லுங்கள்.

அன்புடன்,

ராஜா

 

swapna

அன்புள்ள ராஜா

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? ஒருவர் தான் எவ்வகைப்பட்டவர் என அந்தரங்கமாகத் தானே அறிவார். அதை பாவனைகள் தன்நடிப்புகள் இல்லாமல் உணர்ந்துகொண்டால் போதும்

பொதுவாக, உணர்ச்சிகளில்லாத எவரும் இல்லை. அவை நம் குழந்தைப்பருவத்திலேயே நம்முள் கடந்துவிட்டவை. நம்மை வாழ்நாளெல்லாம் நடத்துபவை. முற்றிலும் உணர்ச்சிகள் இல்லாத எவருமில்லை. ஆகவே அறிவின்வழி என்பது உணர்வெழுச்சிகள் இல்லாதவருக்கு மட்டுமே உரியது என்று பொருள் இல்லை

சிலரால் உணர்ச்சிகளை ஐயமே இன்றி, முழுமையாக ஈடுபட்டு, பின்தொடர முடியும். அவர்களுக்குரியது பக்தி. அவ்வுணர்ச்சிகளை அடைந்த உடனேயே அதை பகுப்பாய்வும் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் அறிவுத்தளம் மேலோங்கியிருக்கிறது என்று பொருள். தூய பாவபக்தி உங்களுக்கு உரியது அல்ல

ஒருவரின் இயல்பில் ஓங்கியிருப்பது உணர்ச்சியா அறிவாண்மையா என நோக்கி அதைக்கொண்டு அவருடைய வழியில் ஓங்கியிருப்பது பக்தியா அறிவுநிலையா என முடிவுசெய்யலாம். முற்றான அறிவுநிலை என்பது அழகியலை அழிக்கும். அழகியலும் ஓர் அறிவுவழி என்பதனால் முற்றாகவே உணர்வுநிலைகள் இல்லாதவர்களுக்கு அவர்கள்நாடும் அறிவின் வழியே குறைபட்டதாக இருக்கும்.

அறிவுநிலை என்பது உணர்வுநிலைகளையும் உள்ளடக்கியதே. அவ்வுணர்ச்சிகளையுமே கூர்ந்தறிய முயல்வதுதான் அவர்களை வெறும் உணர்வுநிலையாளர்களிலிருந்து வேறுபடுத்துகிறது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அழகியபெரியவன்,நூறுநாற்காலிகள், தலித்தியம்

$
0
0

azaki

 

சாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி

 

அன்புள்ள ஜெமோ

அழகியபெரியவனின் இந்தப்பேட்டியைப்பற்றி உங்கள் கருத்து என்ன? குறிப்பாக இதில் நூறுநாற்காலிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தால்தான் இதைக்கேட்கிறேன். ஏற்கனவே இன்னொரு தலித் எழுத்தாளரும் இதைச் சொல்லியிருக்கிறார். இதிலுள்ள பல வரிகளை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தலித் அல்லாதவர்கள் தலித் வாழ்க்கையை எழுதினால் அது இரட்டைவேடமாகவே அமையும் என்பது ஒரு கருத்து. எழுத்தில் நேரடியாக அப்பட்டமாக ஒரு குரல்தான் இருக்கவேண்டும் என்பது இன்னொரு குரல். இந்த இரண்டு பிரச்சினைகளாலும்தான் இங்கே தலித் இலக்கியமே சூம்பிநின்றுவிட்டிருக்கிறது என்பது என் கருத்து. உங்கள் எதிர்வினை என்ன என அறியவிரும்புகிறேன்

சந்திரசேகர்

 
அன்புள்ள சந்திரசேகர்,

அழகியபெரியவன் நெடுங்காலமாகவே எனக்கு தனிப்பட்ட முறையிலும் அறிமுகமான படைப்பாளி. ஒரு காலகட்டத்தில் அவர் ஒரு முதன்மையான எழுத்தாளராக எழுந்து வருவார் என நம்பி எழுதியிருக்கிறேன். தலித்துக்களின் நிலவுடைமை பற்றியும், அது ஒரு நாவலுக்கான கருவாக ஆகமுடியும் என்பதைப்பற்றியும் அவரிடம் பேசிய நினைவு வருகிறது. தமிழினி பதிப்பகத்துக்கு அவருடைய தொடக்க நூலை வெளியிடும்பொருட்டு பரிந்துரைசெய்துமிருக்கிறேன்.

பின்னாளில் பொருட்படுத்தும்படியான ஓர் இலக்கியவாதியாக அவரால் ஆகமுடியவில்லை. ஏன் என்பதற்கான காரணங்கள் அனைத்தும் அவருடைய இந்தப்பேட்டியில் உள்ளன. இந்தப்பேட்டி ஓர் அரசியல்வாதியின் பேட்டி, எழுத்தாளனின் பேட்டி அல்ல. எழுத்தாளனை அடையாளம் காட்டும் ஒரு வரியைக்கூட அவரால் சொல்லமுடியவில்லை. அரசியல்வாதி பொதுவாக அனைவரும் பார்க்கும் பார்வையையே தானும் கொண்டுள்ளான், அந்த அனைவருக்குமான குரலாக பேசிப்பேசி தன்னை ஆக்கிக்கொள்கிறான். எழுத்தாளன் என்பவன் அனைவரும் காணாமல்கடந்துபோகும் ஆழங்களை நோக்கிச் செல்பவன். ஆகவே பொதுவான பார்வையுடன் முரண்படுபவன், பொதுவான ஆழ்மனத்தின் பிரதிநிதியாக ஒலிப்பவன்.

பேச்சாளராகவும் அரசியல்செயல்பாட்டளராகவும் தன்னை மாற்றிக்கொண்ட அழகியபெரியவன் தன்னை அறியாமலேயே இலக்கியத்துக்கான உளச்சூழலில் இருந்து அகன்றார். அகத்தாலும் அரசியல்வாதியாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். இலக்கியம் அவரிடமிருந்து முற்றாக நழுவியது. இந்தப்பேட்டி முழுக்க எல்லா தலித் அரசியல்வாதிகளும் சொல்லும் தேய்வழக்கான வாதங்கள் மட்டுமே உள்ளன. அந்தரங்க அனுபவத்திலிருந்து எழும் ஒர் அவதானிப்புகூட இல்லை.

இந்தப்பேட்டியின் தலைப்பில் இருந்தே ஆரம்பிக்கிறது அந்த அரசியல்வாதித்தனம். ’சாதியம் மேலும் கூர்மையடைந்துள்ளது’இது எவ்வகையிலேனும் உண்மையா? உண்மை என்றால் அயோத்திதாசர், இரட்டைமலைச் சீனிவாசன் ,எம்.சி.ராஜா முதலான தலித் சிந்தனையாளர்கள், காந்தி அம்பேத்கர் ஈ.வே.ரா முதலான அரசியல்முன்னோடிகள் அனைவருமே முற்றிலும் வீண்பணிதான் ஆற்றினார்களா? இல்லை என எவரும் அறிவார். இருந்தும் இக்கூற்று எப்படி வருகிறது?

அரசியல்வாதிகள் இதைச் சொல்வார்கள். எப்போதுமே பிரச்சினையை நிகழ்காலத்தில் மட்டும்  வைத்துப்பார்த்து, செயற்கையாக ஒருமுனைப்படுத்தி, உச்சகட்டவிசையுடன் முன்வைப்பது அவர்களின் வழிமுறை. எழுத்தாளனுக்குத் தேவை இரண்டு அளவுகோல்கள். ஒன்று வரலாற்றுநோக்கு. இன்னொன்று தன் சொந்தவாழ்க்கையைக் கொண்டு ஆராய்ந்து நோக்கும் அகவய நோக்கு. இதில் ஏதாவது மேலேசொன்ன கூற்றில் உள்ளதா? அரசியல்மேடையில் அடைந்த வரியை, அது ஒருவகையான உடனடி எதிர்வினையை பெற்றுத்தரும் என கற்றுக்கொண்டு, சொல்வதுமட்டும்தான் இது.

உண்மைதான், சாதியம் இன்றும் உள்ளது. ஆனால் இன்று ஒவ்வொரு தருணத்திலும் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக எழுந்துவரும் முதற்குரல் தலித் அல்லாத, முற்போக்கு எண்ணம்கொண்டவர்களுடையதுதான். தலித்துக்கள் இன்று அனைத்து நிலைகளிலும் உரிமைகளை, அதிகாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். சாதியநோக்கு சென்ற தலைமுறையில் இருந்து இந்தத் தலைமுறையில் எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என எவருக்கும் தெரியும்.

என் கல்லூரிக்காலம் முதல் இன்றுவரை பார்க்காஇயில் இப்படி ஒரு மாற்றம் இத்தனை விரைவில் நிகழுமென எண்ணியதே இல்லை. சாதியப் பழமைவாதிகளின் தரப்பிலிருந்து எழும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் இத்தனைவிரைவாகச் சாதியக்கட்டமைப்பு சரிவதைக் கண்டு எழுவதுதான். இன்னும் செல்லவேண்டிய தொலைவு உள்ளது. ஆனால் வந்தடைந்த தொலைவு மிகமிக அதிகம். இலக்கியவாதி அல்ல இலக்கியவாசகனே உணரக்கூடிய ஒன்றுதான் இது. இலக்கியவாதி இத்தகைய யதார்த்தத்திலிருந்து மேலும் நுட்பமான அடித்தளங்களை நோக்கிச் செல்பவனே ஒழிய பொத்தாம்பொதுவாக அரசியல்கூச்சல்களை எழுப்புபவன் அல்ல.

அழகியபெரியவன் இலக்கியத்திலும் கையாளும்  வழிமுறையை அரசியல்வாதிகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். முதலில் எதிரியைக் கட்டமைத்துக்கொண்டு பேசத் தொடங்குவது. இந்தப் பேட்டியை வைத்தே இதைப்பார்ப்போம். அழகியபெரியவனின் எழுத்தின் அழகியல் குறைபாடுகளைப்பற்றி, வெளிப்பாட்டுப்போதாமைகளைப்பற்றி, முழுமைநோக்கின்மையைப்பற்றி எவரேனும் ஏதேனும் சொன்னால் அவருடைய எதிர்வினை என்னவாக இருக்கும்? அவர் சாதியமேட்டிமை நோக்கில் பேசுகிறார் என்பார். ‘யோக்கியதை பல்லிளிக்கிறது’ வகையான சொற்றொடர்கள் வரும். அந்நிலையில் இலக்கியவாசகர் எவரேனும் எதிர்வினையாற்றுவார்களா?

ஒரே ஒருவகை எதிர்வினைதான் எழுந்துவரும். பொதுவெளியில் பொய்யான புரட்சிகரத்தை நடிக்கும் சிலர், தலித்துக்களுக்காக நெக்குருகி கண்ணீர்மல்கும் பாவனை கொண்டவர்கள், ’ஆகா ஓகோ அய்யய்யோ’ என்பார்கள். அதுவும் மேடையில் மட்டும். அந்த பொய்யர்களின் உரைகளுக்கு எந்த இலக்கியமதிப்பும் இல்லை. இதுதான் அழகியபெரியவன் இன்று சென்று நின்றிருக்கும் இடம்.

எழுதவரும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாக ஆகவேண்டிய விஷயம் இது. நீங்கள் எவராகவும் இருங்கள், இங்கே வாசகன் என்று வந்து நிற்பவனின் அறிவையும் மனசாட்சியையும் நோக்கிப் பேசவே வந்துள்ளீர்கள். இலக்கியம் என்பது ஆழமான, அந்தரங்கமான ஓர் உரையாடல். படைப்புக்கு முன்னதாகவே ”அடேய் தலித் விரோதிகளா’ என்ற ‘போஸ்’ எடுத்துவிட்டால் அவமதிக்கப்படுபவன் வாசகனே. அவன் அப்படைப்பாளியை அணுகமாட்டான். ஊடகங்களில் ஒரு புரட்சியாளப்பிம்பத்தைப் போலியாகக் கட்டமைக்கலாம், வாசகனின் ஆழத்துடன் பேசும் எழுத்தாளனின் பிம்பம் அல்ல அது.

வாசகன் ஒரு தனிமனிதனாக சாதிக்குள் மதத்துக்குள் அன்றாடச்சிறுமைகளுக்குள் இருப்பவனாக இருக்கலாம். ஆனால் வாசிக்கையில் அவன் திறந்து வைக்கப்பட்ட ஆழ்மனம். அதனுடன் நீங்கள் பேசுகிறீர்கள். அவனுடைய அறவுணர்ச்சியுடன் நுண்ணுணர்வுடன் கைகோர்க்கிறீர்கள். உங்கள் எழுத்தை ஏற்று உங்களாக மாறி உடன்வருவது அதுதான்.

இதை ஒரு லட்சியக்கருத்து என்று சொல்லலாம். ஆனால் இதை நம்பித்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. ஆகவேதான் தலித் இலக்கியம் உயர்சாதியினனுக்குள்ளும் ஊடுருவுகிறது. அதை அவமதித்து முத்திரைகுத்தும் அரசியல்வாதி இலக்கியவாதி அல்ல. அந்த ஆழ்மனத்தை, மனசாட்சியை நம்பி அதனுடன் உரையாடியமையால்தான் பூமணியும் இமையமும் சோ.தருமனும் இலக்கியவாதிகள்.

 

*

நூறுநாற்காலிகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பாருங்கள். முதலில் நூறுநாற்காலிகள் தன்னை தலித் இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அது ஆசிரியனின் உள்ளம் ஈடுபட்ட ஒரு வாழ்க்கைமுடிச்சு. அவன் தன் கற்பனையால் அதை அறிய முயல்கிறான். இன்னொரு எழுத்தாளன் என்றால் அதை வேறுவகையில் எழுதியிருப்பான். அந்த எழுத்தாளனே இன்னொரு முறை இன்னொரு கோணத்தில் எழுதக்கூடும்

எல்லா நல்ல கதைகளும் இப்படித்தான் எழுதப்படுகின்றன. தலித் பிரச்சினையை பேசுவதற்காக, தலித் பிரச்சினையின் அனைத்துதளங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்து  அதை நிறுவுவதற்காக ,ஓர் அரசியல்பிரகடனமாக எழுதப்பட்ட  ‘உதாரணகதை’ அல்ல நூறுநாற்காலிகள். அப்படி எழுதப்பட்டால் அதற்கு இலக்கிய மதிப்பு ஏதுமில்லை.

இதேபோல இஸ்லாமியர்கள், பழங்குடிகள் என பலருடைய வாழ்க்கையை நான் எழுதியிருக்கிறேன். ஒரு வாழ்க்கையை இன்னொருவர் எழுதமுடியாது என இலக்கியம் அறிந்த எவரும் சொல்லமாட்டார்கள். இன்னொருவரின் வாழ்க்கையை ஒருவர் எழுத முடியும் என்ற அடிப்படைமீதுதான் இலக்கியம் என்னும் அறிவியக்கமே எழுப்பப்பட்டுள்ளது.. இன்னொருவரின் வாழ்க்கையை எழுதமுடியாது என்றால் எழுதப்பட்ட இன்னொருவரின் வாழ்க்கையை வாசிக்கவும் உணரவும் மட்டும் முடியுமா என்ன? அழகியபெரியவன் தலித்துகளுக்காக மட்டுமா எழுதுகிறார்?

அழகியபெரியவனுக்கு இதைப்புரியவைக்கவே முடியாது. ஆனால் இதை வாசிக்கும் நல்ல வாசகன் அந்தரங்கமாக நான் சொல்வதை உணர்வான் ’பிறிதின்நோய் தன்னோய் போல் தோன்றும்’ ஓர் இலட்சியநிலை உள்ளது. அனைத்து நல்ல படைப்புகளும் அந்நிலையின் ஏதேனும் ஒரு படியில்தான் உள்ளன. அழகியபெரியவைன் அந்த வரியை ஒருமுறையேனும் இலக்கிய அனுபவத்தை அடையாதவர்கள்தான் சொல்வார்கள். உளம்வரண்ட எளிய அரசியல்வாதிகள் அவர்கள்.

நூறுநாற்காலிகள் ஒரு வாழ்க்கை முடிச்சின் பல கோணங்களை திறக்கும் கதை. அக்கதையில் சாதியச் சமூக அமைப்பின் ஒடுக்குமுறை பேசப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் உக்கிரமான சித்திரங்கள் வழியாக. ஆனால் இவர்கள் எழுதும் மேடைப்பிரச்சாரக் கதைகளிலுள்ளதுபோல உரத்த கூச்சலாக அல்ல. உதாரணமாக, ஒருபக்கம் குரூரமான ஒடுக்குமுறையும் மறுபக்கம் குறியீட்டு ரீதியான வணக்கமுமாக இச்சமூகம் கொள்ளும் பாவனை அதில் சொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம்..

வாசித்த எவருக்கும் தெரியும், கல்விநிலையம் முதல் அரசுநிர்வாகம் வரை ஒவ்வொரு படியிலும் காப்பன் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு மாறுவேடங்கள்தான் கதையே. அதில் சுட்டப்பட்டிருப்பவர்களே அதை உருவாக்கி அதன்மேல் அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் மீதான எதிர்ப்பே காப்பன் கோரும் நூறுநாற்காலிகள். அவர்களிடமுள்ள பசப்பல்கள், பாவனைகள் கதை முழுக்க பல்வேறு கோணங்களில் வெளிவருகின்றன . அழகியபெரியவன் எழுதுவதுபோல வெற்றுக்கூச்சல்களால் ஆனது அல்ல நூற்நாற்காலிகள். ஆகவேதான் அவரைப்போன்றவர்கள் எழுதும் எந்தக்கதையையும் விட பற்பலமடங்கு தீவிரப் பாதிப்பை அது உருவாக்குகிறது. எழுதப்பட்டபின் எட்டாண்டுகளாக ஒவ்வொரு நாளும் பேசப்படுகிறது. அதுதான் கலையின் ஆற்றல்.

காப்பனுக்கும் அவன் அன்னைக்குமான உறவு, காப்பனுக்கும் அவன் ஆசிரியனுக்குமான உறவு , காப்பனுக்கும் அவன் மனைவிக்குமான உறவு என பல தளங்களாக பரவும் கதை அது. ஏதேனும் ஒன்றைச் சுட்டிக்காட்டி இதுதான் தீர்வு என்று அறைகூவுவதில்லை. அது இலக்கியத்தின் பணி அல்ல. அழகியபெரியவனின் உள்ளத்தில் இருப்பது கட்சியரசியலின் துண்டுப்பிரசுரத்தை கதையாக மாற்றும் ஒர் அணுகுமுறை. நூறுநாற்காலிகள் போன்ற பலமுகம் கொண்ட , ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் கதையை அவரால் வாசித்தறியக்கக்கூட முடியவில்லை. .

இந்த நிலையில் இருந்துதான் இப்பேட்டியின் மனநிலை உருவாகிறது.அழகியபெரியவன் தலித், ஆனால் அவரால் பொருட்படுத்தும்படியாக எதையும் எழுதமுடியவில்லை. ஆகவே நாங்கள்தான் எழுதுவோம், எங்களால்தான் எழுதமுடியும் என்ற கூச்சல் எழுகிறது. ஒருவகையான ஆதங்கம் மட்டும்தான் இது.

முன்பு இதைப்பற்றி ஓர் அறை உரையாடலில் அலெக்ஸ் சொன்னார். “தலித்துகள் மட்டும் அல்ல, மொத்த தமிழகமே தலித்துக்களின் மீதான ஒடுக்குமுறை பற்றி தங்கள் நோக்கில் பேசவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுவேன். இந்தச் சாதியச் சூழலில் இருந்து எழுந்து வரும் எந்தக்குரலும் எங்களுக்கு ஏற்புடையதே. நாங்கள்தான் எழுதுவோம், மற்றவர்கள் எழுதினால் அது இரட்டைவேடம் என்றெல்லாம் பேசுபவர்கள் தலித் இயக்கம் மீதோ தலித்துக்கள் மீதோ கரிசனை கொண்டவர்கள் அல்ல, அவர்கள் தங்களுக்கான இடத்தை இப்படி கோரிப்பெற முயலும் எளிய எழுத்தாளர்கள் மட்டும்தான்” இதுதான் உண்மையான தலித் களப்பணியாளனின் குரல்.

வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு குரல்களாகவே இலக்கியம் செயல்படும். இலக்கியம் என்பதே அதன்பொருட்டுத்தான். தான் கொண்டுள்ள ஒற்றைநோக்கு தவிர அனைத்துமே தவறு, சூழ்ச்சி என்றெல்லாம் பேசுவது களப்பணியாளனின் குரல் அல்ல, மேடைவீராப்பு காட்டும் அரசியல்வாதியின் குரல்

*

நான் எழுதியது தலித் இலக்கியம் அல்ல. நான் எழுதியது என்னைத்தான். காப்பனாக மாறி நான் தேடிச்செல்லும் ஓர் அறக்கேள்வி. நான்தான் ஏசுவைத்தேடி சமேரியாவுக்குச் சென்றவன்[வெறும்முள்] மகாபாரதச் சூழலில் அறத்தடுமாற்றத்துடன் சார்வாகனைச் சந்தித்தவன் [திசைகளின் நடுவே] இதை உணர இலக்கியவாதியின் உள்ளம் தேவை

நூறுநாற்காலிகளை வாசிக்கும் அத்தனைபேரும், அந்தணர் முதல் அயல்நாட்டவர் வரை அவ்வாறு காப்பனாக மாறி அதை வாசிக்கிறார்கள், வாழ்கிறார்கள். அது அவர்களுக்கு காப்பனின் பிரச்சினை அல்ல, அவர்களின் பிரச்சினை, மானுடப்பிரச்சினை.எல்லா நல்லஎழுத்தும் அப்படித்தான். அழகியபெரியவனால் அதைப்புரிந்துகொள்ள இன்றைய உளநிலையில் இயலாது. எழுத்தாளனின் வீழ்ச்சி என்பது இதுதான். ஒவ்வொரு எழுத்தாளனும் கவனமாக இருக்கவேண்டியது தன்னையறியாமலேயே இவ்வீழ்ச்சி, இந்த உருமாற்றம் நிகழும் தருணத்தைத்தான்.

ஜெ

நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1

நூறுநாற்காலிகள் [சிறுகதை] -2

நூறுநாற்காலிகள் [சிறுகதை] 3

நூறுநாற்காலிகள் [சிறுகதை] 4

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது –திசைதேர் வெள்ளம்-18

$
0
0

bowஉணவுக்குப் பின் சகுண்டனும் உத்துங்கனும் கைகளை நக்கியபடியே எழுந்துசென்று உடல்நீட்டி சோம்பல்முறித்தபடி சுற்றுமுற்றும் நோக்கினர். “நீங்கள் ஓய்வுகொள்ளலாம். அரசரும் இளையோரும் முற்புலரியில் அவையமர்வார்கள். அப்போதுதான் நீங்கள் செல்லவேண்டும்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அவ்வாறுதான் சொல்லப்பட்டது. ஆனால் எங்கே துயில்வது?” என்றான். “இங்குதான். கூடாரங்களுக்குள் துயிலலாம். அல்லது வெளியே நிலத்தில் பாய்விரித்து…” என்றான் அசங்கன். “நாங்கள் தரையில் துயில்வதில்லை” என்றான் கடோத்கஜன்.

“இங்கே மரங்கள் இல்லையே?” என்றான் அசங்கன். “குருக்ஷேத்ரத்தில் மரங்கள் முளைப்பது அரிது… ஆகவேதான் இது தொன்மையான போர்நிலமாக உள்ளது.” கடோத்கஜன் சூழ நோக்கி “மெய்தான்… மரங்களெல்லாம் மிகச் சிறியவை” என்றான். உத்துங்கன் “நன்று, நாங்கள் அப்படியே அமர்ந்துகொள்கிறோம்” என்றான். அசங்கன்  “மூத்தவரே, நான் ஒன்று செய்கிறேன்” என்று எழுந்துசென்று கூடாரத்தின் மேலிருந்த யானைத்தோல்பரப்பை அழுத்திநோக்கி “இதன்மேல் படுத்துக்கொள்ளலாம்” என்றான். உத்துங்கன் அழுத்தி நோக்கி “ஆம், தழைக்கூரை போலவே உள்ளது” என்றபின் மூங்கில் வழியாக ஏறி மேலே சென்றான். படுத்துநோக்கி “மெய்யாகவே மரங்களின்மேல் தழைப்பரப்பில் படுத்திருப்பதுபோல” என்றான்.

சகுண்டனும் மேலேறி படுத்தான். “நீங்களும் படுத்துக்கொள்ளலாம், மூத்தவரே. நான் இங்கேயே நிலத்தில் மரவுரியில் ஓய்வெடுக்கிறேன்” என்றான் அசங்கன். “நானும் தரையிலேயே அமர்ந்திருக்கிறேன். தேவையென்றால் மேலே செல்கிறேன்” என்றான் கடோத்கஜன். அசங்கன் மரவுரியை விரித்து படுத்துக்கொண்டான். “அசையாத தரையில் படுத்தால் துயில்வது கடினம்” என்றான் கடோத்கஜன். “ஆம், சில மாலுமிகளும் அவ்வாறு பழகியிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். “அதைவிட மண்ணில் நாகங்கள் மிகுதி. எங்கள் முதலெதிரிகள் அவையே” என்றான் கடோத்கஜன். “இங்கே நாகங்கள் இல்லை” என்று அசங்கன் சொன்னான். “அவை இல்லாத இடமே இல்லை” என்றான் கடோத்கஜன்.

அவர்கள் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார்கள். கடோத்கஜனின் விழிகள் வானில் நிலைத்திருக்க முகம் மட்டும் அசைந்துகொண்டிருந்தது. அவ்விழிகளில் விளங்கவியலா துயர் ஒன்றை அசங்கன் கண்டான். கட்டுண்ட அனைத்து விலங்குகளிலும் அதை அவன் கண்டிருந்தான். மானுடருடன் கலந்து அரைமானுடராகவே ஆகிவிட்டிருந்தாலும்கூட புரவிகளின் விழிகளில் தனிமையும் துயரும் நிறைந்திருக்கும். யானைவிழிகளுக்குள் அத்துயர் மிகமிக ஆழத்திலென மின்னிக்கொண்டிருக்கும். அவன் அப்போது கடோத்கஜனிடமிருந்து மிக விலகிவிட்டிருந்தான். மீண்டும் அணுக விரும்பினான். எதையாவது பேசவேண்டும். அவன் ஆளும் அரசை. அவன் குடியை. ஆம், அவற்றைப்பற்றிய பேச்சே அவனை அருகே கொண்டுவருகிறது.

கடோத்கஜனுக்கு மைந்தர்கள் இல்லையா என்ற எண்ணம் அசங்கனின் உள்ளத்தில் எழுந்தது. அவனறிந்த கடோத்கஜனின் கதைகள் அனைத்துமே அவனுடைய சிற்றகவையிலேயே நின்றுவிட்டிருந்தன. காட்டுக்குள் பதினான்காண்டுகள் அலைந்தபோது நினைத்தபோதெல்லாம் தோன்றி குந்தியையும் ஐந்து தந்தையரையும் தன் தோளில் சுமந்து விழைவிடம் நோக்கி கொண்டுசென்ற பேருருவனாகிய சிறுவன். அவன் முன் அமர்ந்திருந்த கடோத்கஜன் முதிர்ந்தவனாக இருந்தான். அவ்வண்ணமென்றால் மைந்தர் இருக்கவேண்டும். அவர்கள் போருக்கு வந்திருக்கிறார்களா?

அதை நேரடியாக கேட்கலாமா என்று தயங்கி “உங்கள் குடியில் மணச்சடங்குகள் உண்டா?” என்றான். “என்ன?” என்று கடோத்கஜன் திரும்பி நோக்கினான். “இல்லை, கதைகளில் இளைய பாண்டவர் பீமசேனர் உங்கள் அன்னையை கொள்மணம் புரிந்ததாக வருகிறது. பல தொல்குடிகளில் முறையான மணச்சடங்குகள் இல்லை என்பார்கள். நான் எவரையும் இதற்குமுன் சந்தித்ததில்லை” என்றான் அசங்கன். “நான் மணம்புரிந்துகொண்டவன்” என்றான் கடோத்கஜன். “ஆனால் என் குடியில் அல்ல. என் குடியில் அரசர்கள் எல்லா குலக்குழுவிலிருந்தும் ஒரு பெண்ணை மணக்கவேண்டும். நான் அவ்வாறு மணம்புரிந்துகொள்ளவில்லை. நான் மணந்தவள் அரசமகள்.”

அசங்கன் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் கடோத்கஜன் பேச விரும்பினான். “நான் என் குடியிலேயே மணம்புரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் மூதன்னை குந்திதேவி அதை விரும்பவில்லை” என்றபின் “எந்தையின் அன்னை. இளஅகவையிலேயே என் மூதன்னை என நெஞ்சிலமர்ந்தவர். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியாயினும் எனக்கு களித்தோழி என்றே ஆனவர்” என்றான். அசங்கன் “அவர் உங்களை தன் குடியின் முதல் மைந்தனாக ஏற்றுக்கொண்டதாக கதைகள் கேட்டிருக்கிறேன்” என்றான். கடோத்கஜன் முகம்மலர்ந்து “ஆம், என்னை அவர் பைமி என்றும் பைமசைனி என்றும்தான் அழைப்பார்கள். என் அன்னையிடம் தன் குலத்தின் முதல் மாற்றில்மகள் அவரே என்றும் மூத்தவரால் மணக்கப்பட்டிருந்தால் அஸ்தினபுரியின் பட்டத்தரசியென அவரை அமரச்செய்திருப்பேன் என்றும் சொன்னார்.”

தன் ஆடையிலிருந்து அருமணி பதித்த கணையாழி ஒன்றை காட்டினான். “இது பாண்டவ அரசகுடியினருக்குரியது. இடும்பவனத்திலிருந்து கிளம்பும்போது இதை மூதன்னை என் அன்னையிடம் அளித்தார்.” அதை திருப்பிக்காட்டி “அருமணி… மலர்மொட்டுபோலவோ குருதித்துளிபோலவோ தெரிவது. இதை என் கைகளில் அணிந்திருக்கவேண்டும் என்பார்கள். எப்போதும் இதை அணிந்திருப்பது கடினம். மரங்களினூடாக செல்லும்போது எங்கேனும் தவறி விழுந்துவிடும். ஆகவே இதை சரடில் கட்டி என் இடையில் அணிந்திருக்கிறேன். அரியணை அமரும்போது மட்டும் விரலில் அணிந்துகொள்வேன்” என்றான்.

அதை வாங்கி நோக்கிய அசங்கன் “பாண்டவ மைந்தர் அனைவரும் இத்தகைய கணையாழியை வைத்திருக்கிறார்கள். அவையனைத்தும் இதைவிட சிறியவை. இந்த அருமணிக்குள் விழிகளால் நோக்கமுடியாதபடி சிறிதாக அமுதகல முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது” என்றான். அதை அப்பாலிருந்து வந்த விளக்கொளியில் காட்டி அதன் ஊடொளியை தன் உள்ளங்கையில் ஏந்தினான். அதில் சிறிய நிழலுருவாக அமுதகலம் தெரிந்தது. கடோத்கஜன் “ஆம், அதில் கதிரொளி பட்டால் அமுதகலம் எழும்… அதை சுவரில் காட்டினால் பேருருவாகும்” என்றான். “உங்களில் பீமசேனர் என இது இந்த அருமணிக்குள் அமைந்துள்ளது, மூத்தவரே” என்றான் அசங்கன்.

“இது முதல் மைந்தனுக்குரியது” என்றான் கடோத்கஜன். “இந்த அருமணியால்தான் எனக்கு அரசமகள் மணமகளாக வந்தாள்.” அசங்கன் “அரசமகளா?” என்று கேட்டான். “ஆம். என் காடு நாடாகவேண்டும் என்றும் நான் வேள்விச்செயல் முடித்து அந்தணர் அரிமலரிட்டு வாழ்த்த முடிசூடவேண்டும் என்றும் அரசமகளை மணம்புரிந்து பட்டத்திலமர்த்தவேண்டும் என்றும் குந்திதேவி ஆணையிட்டார். ஆனால் நூல்கள் எதையும் நான் சென்று கற்கலாகாதென்றும் அனைத்து மெய்மையையும் என் காட்டுக்குள் அமர்ந்தே கற்றறியவேண்டும் என்றும் சொன்னார்.”

நான் கற்றுத்தேர்ந்தேன். படைதிரட்டினேன். நகர் சமைத்து கோட்டைகட்டி செல்வம் பெருக்கினேன். என் நகரில் குடியேற அந்தணர் ஒருங்கவில்லை. ஆகவே விந்தியனுக்கு அப்பாலிருந்து அனற்குலத்து அந்தணரை குடியமர்த்தி வேள்விகள் செய்தேன். அவர்களின் நூல்நெறிப்படி குடித்தலைமை கொண்டேன். முடிசூடி அமர எனக்கு அருகே அரசி அமையவேண்டும். அந்தணரே என் பொருட்டு அரசர்களிடம் தூது சென்றனர். ஆயினும் எனக்கு பெண் தருவதற்கு அரசர்கள் எவரும் சித்தமாகவில்லை. பலமுறை முயன்றும் பயனின்றிப் போயிற்று. அப்போது அவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். அரசகுடி மணமகள் அமையாமையால்தான் நான் இந்திரப்பிரஸ்த பெருவேள்விக்கு செல்லவில்லை. அதை அன்னைக்கு செய்தியாக அனுப்பினேன்.

அன்னை எனக்கு செய்தி அனுப்பினார். “நீ பாரதவர்ஷத்தின் பெருவீரனின் மைந்தன். உனக்கு நிகரான வீரர்கள் இந்நிலத்தில் மிகக் குறைவே. ஆயினும் உன் குருதியின் தோற்றமோ அரக்கர்களுக்குரியது. அரக்கர் குடிக்கு மகற்கொடை நிகழ்த்த அரசர் சித்தமாக மாட்டார்கள்” என்றார். “நான் விழைந்தால் என் மைந்தர் வென்று அடியறைவு செய்யவைக்கும் அரசர்களின் மகளிர் எவரையாவது உனக்கு மணமுடிக்க முடியும். ஆனால் நீ உன் தோள்வல்லமையால் வென்ற அரசமகளை மணப்பதே பெருமை. ஏனென்றால் நாளை உன் குடியினர் அதன்பொருட்டு பெருமைகொள்ளவேண்டும்” என்றார்.

என் குடியின் மூத்தவர்கள் நான் படைகொண்டு சென்று அரசமகள் எவரையேனும் கவர்ந்து வந்து மணமுடிக்கலாம் என்றார்கள். அரக்கர்குலத்துக்கு கொள்மணம் உகந்த நற்செயல்தான் என்றனர். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அன்னை எனக்கிட்ட ஆணை முறைப்படி ஷத்ரிய குடியொன்றிலிருந்து பெண்கொள்வதும் அவளுக்குப் பிறக்கும் மைந்தர்களுக்கு எனது நாட்டை உரிமையாக்குவதும்தான். எனக்கு பெண்கொடுக்கும் ஷத்ரியர் என்னை அரசன் என ஏற்கவேண்டும். தன் மகளை அரக்கன் கவர்ந்தான் என்று சொல்லி அவர் அந்தணரை அழைத்து கொல்வேள்வி செய்தால், அதற்கு பிற அரசரை அழைத்தால் அரசமகளை மணந்தமையின் நலம் ஏதும் எனக்கோ என் குடிக்கோ பிறக்கவிருக்கும் மைந்தருக்கோ அமையாது போகும்.

என் தந்தையர் காடேகி மறைந்தனர். அஸ்தினபுரி துரியோதனரால் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் சிந்து மலையிறங்கி நிலம்பரவும் காட்டில் இருந்த அஷ்டதச ஃபீகரர் என்னும் அரக்கர்களுக்கும் அங்கு குடியேறிய யாதவக்குடி ஒன்றுக்கும் பூசல்கள் நிகழ்வதாக அறிந்தேன். அவர்கள் முரு என்னும் தொல்மூதாதையின் வழிவந்தவர்கள் என்பதனால் மௌரியர் என அழைக்கப்பட்டார்கள். அவர்களின் அன்றைய அரசரின் பெயரும் முரு என்பதே. நாற்பத்தெட்டாவது முரு பதினெட்டு அரக்கர்குடிகள் இணைந்த படையிடம் தோற்று படைவீரர்களையும் குடிகளையும் இழந்து மேலும் மேலும் ஆற்றங்கரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவர்களின் பசுக்கள் அரக்கர்களால் தொடர்ந்து கவரப்பட்டன. ஊர்கள் கொளுத்தப்பட்டன. மகளிரும் இளமைந்தரும் சிறைபிடிக்கப்பட்டனர்.

முரு தனித்திருந்தார். ஏன் அவர்களுக்கு பிற யாதவர்களின் உதவி கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்தேன். கூர்ஜரத்துக்கு மேற்கே இருக்கும் வெண்பாலை நிலத்தில் வாழ்ந்த தொல்யாதவக்குடியிலிருந்து முன்பு விலக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒருமுறை பெரும்பஞ்சம் வந்து பாலை நிலத்தில் தனிமைப்பட்டபோது அவர்கள் தங்கள் மாடுகளைக் கொன்று தின்றதாகவும், இறுதியாக கன்றுதங்கிய வயிற்றுடன் சினைப்பசு ஒன்றை கொன்றதாகவும் அதனால் பிற யாதவர்களால் விலக்கப்பட்டதாகவும் கதைகள் கூறின.

அவர்களின் முது மூதாதையாகிய முரு தன் குலத்தாருடன் சிந்துவை அடைந்து ஆயிரம் தெப்பங்களில் நீர்ஒபெருக்கினூடாக வடக்கே வந்து இக்காட்டை அடைந்தார். அது அன்று புல் ஒழியா பெருவெளி. ஆகவே கன்றுகள் பெருகின. ஊர்களும் நடுநகரும் கோட்டையும் காவலும் மாளிகையுமென அவர்கள் நிலைகொண்டனர். நெடுங்காலத்துக்குப் பின் சிந்துவினூடாக அங்கு வந்த பரசுராமரை சென்றுகண்டு தலை தாள்வைத்து வணங்கி முருகுலத்து அஜன் தன்னை அளித்தார். அவருடன் வந்து நகரில் தங்கிய பரசுராமர் பன்னிரு நாட்கள் நீண்ட வேள்வியொன்றை நிகழ்த்தி அதன் இறுதியில் அவரை அனல்குலத்து ஷத்ரியராக ஆக்கி செங்கோல் சூடவும் மணிமுடியணியவும் அரியணை அமரவும் உரிமையளித்தார். வஹ்னி என்னும் பெயர்கொண்டு அவர் அரசரானார்.

ஷத்ரிய நிலையை அடைந்த பின்னர் தன் யாதவக் குடிகளுடன் எத்தொடர்பையும் வைத்துக்கொள்ள வஹ்னி எண்ணவில்லை. பிற அனற்குலத்து ஷத்ரியக் குடிகளிலிருந்தே மகற்கொடை பெற்றார். மேலும் அவர் குடி பெருகியபோது காடுகளுக்குள் ஊடுருவிப் பரந்தனர். புதிய சிற்றூர்களை அமைத்தனர். சிந்துவிலிருந்து தங்கள் நகர்வரை படகுகளில் சென்றுவரும் கால்வாய் ஒன்றை வெட்டிக்கொண்டார்கள். வணிகர் வந்து செல்வதனால் அங்காடியும் வணிகர் குடியிருப்புகளும் உருவாயின. பிற அனற்குலத்து அரசர்களுடன் தொடர்புகொண்டமையால் படைவல்லமை பெருகியது.

நாற்பத்திரண்டாம் முருவாகிய தேவபர் திரைகொள்ளும் பொருட்டு காடுகளுக்குள் படைகளை அனுப்பி அரக்கர் குடிகளை தாக்கினார். அவர்கள் மேலும் மேலும் காடுகளுக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். மேலும் செல்ல இடமில்லாதபோது நூறாண்டுகளுக்கு முன் சிதறி அழிந்திருந்த அரக்கர்கள் கூட்டமைப்பு ஒன்றை மலையடிவாரத்தில் தொல்குகையொன்றில் கூட்டினர். அங்கு அக்குடிகள் அனைவருக்கும் தலைவராக தொல்லரக்கர் குடியைச் சார்ந்த கீகடரை தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமையில் அரக்கர் குடிகள் முரு குடிகளை திருப்பி தாக்கத் தொடங்கினர்.

முதலில் அரக்கர்களின் கட்டுப்பாடற்ற படைகளை முரு குடியினர் எளிதில் வென்றனர். ஆனால் தோல்வியிலிருந்து மேலும் வெறிகொள்வதற்கு கற்றவர்கள் அரக்கர். உயிரிழந்தவர்களின் ஆத்மாக்கள் தங்கள் உடல்களில் வந்து அணைந்து ஆற்றல் அளிப்பதாக நம்புகிறவர்கள். இறந்தோரின் துளியுடலை உண்டு தானாக மாற்றிக்கொண்டு இருவராக ஆற்றல்கொண்டு எழுவார்கள். மழைக்காலம் வந்தபோது முருக்களின் ஆற்றல் குறைந்தது. மழையின் மறைவு அரக்கர்களுக்கு மிக உகந்தது. குளிரும் நீரும் அவர்களுக்கு இனிதானவையும் கூட. மழைக்காலப் போரில் மௌரியர்களின் மௌரியபுரியை தாக்கி கோட்டையை சிதறடித்து உட்புகுந்தனர். மாளிகைகளை உடைத்தெறிந்தனர். மகளிரை சிறைப்பிடித்தனர். இளையோரை கொன்று குவித்தனர். எஞ்சிய படைகளுடனும் குடிகளுடனும் அரசர் முரு ஊர்களை ஒவ்வொன்றாக கைவிட்டு சிந்துவின் கரைவரை சென்றார்.

அரக்கர்கள் மேலும் தாக்கக்கூடுமென அஞ்சி சிந்துவின் கரையிலேயே தங்கியிருந்தார். சிந்துவினூடாக கிளம்பி மீண்டும் அவர் வந்த மேற்குப் புல பாலைக்கே சென்றுவிட எண்ணினார். அதன்பொருட்டு தெப்பங்கள் கட்டப்பட்டன. உதவும்படி தொல்குடி யாதவர்களை நோக்கி தூதர்களை அனுப்பினார். ஆனால் கன்றுண்டவன் என்னும் பெரும்பழி இருந்ததனால் யாதவர்கள் அவரை ஏற்கவில்லை. கூர்ஜரரும் சைந்தவரும் சைப்யரும் காந்தாரரும் முரு தன்னை அரசர் என சொல்லிக்கொண்டதனால் சினம்கொண்டிருந்தனர்.

கூர்ஜரர் முரு தன் மணிமுடியையும் செங்கோலையும் களைந்து, அரியணை அமரும் உரிமையைத் துறந்து, யாதவ குடிக்குரிய வளைகோலையும் மரவுரியையும் அணிந்து அவருடைய நகருக்கு வந்து அனல் தொட்டு தானும் தன் கொடிவழியும் இனி ஒருபோதும் முடிகோரப் போவதில்லை என ஆணையிட்டு தன் அரசுக்குக் கீழ் ஒரு குடியென அமைய முடியுமெனில் தன் நிலத்திற்குள் புக இடமளிப்பதாகவும் அவ்வாறில்லையென்றால் ஒருவர்கூட எஞ்சாது கொன்றொழிப்பதாகவும் செய்தி அனுப்பினார்.

முரு அனலுக்கும் சிம்மத்துக்கும் நடுவே என நின்றிருந்த பொழுது அது. அதுவே உகந்ததென்று கண்டு நான் என் தூதர்களை அனுப்பினேன். அரக்கர்களை வென்று அவர் நகரத்தை நான் காப்பேன் என்றும் அதற்கு ஈடாக என்னை அரசனென ஏற்று அவர் மகளை எனக்கு மணமுடித்தளிக்க வேண்டுமென்றும் கோரினேன். என் தூதராகச் சென்றவர் முதிய அந்தணரான ஆக்னேயர். தன் அவையில் சுற்றத்துடன் அமர்ந்திருந்த முரு அச்செய்தியைக் கேட்டு உறுமியபடி கைகளை அறைந்து ஓசையிட்டுக்கொண்டு கல்லரியணையிலிருந்து எழுந்து “என்ன சொல்கிறீர்? இதென்ன சூழ்ச்சி?” என்று கூவினார். “இவர் அந்தணர் என்பதனால் பொறுத்துக்கொள்கிறேன். இவரை நாடுகடத்துக! இவருடன் வந்த அரக்கர்களை கழுவேற்றுங்கள்” என்று தன் படைநிரைகளுக்கு ஆணையிட்டார்.

ஆனால் அவருடைய அமைச்சராகிய மூர்த்தர் “பொறுங்கள், அரசே. உங்களிடம் மணம்கோரி வந்திருப்பவர் வெறும் அரக்கரல்ல” என்றார். “வெறும் அரக்கரோ ஆடையணிந்த அரக்கரோ, அரக்கர் குடியினரிடம் மணம்கொண்டோமெனில் அதன் பின் பாரதவர்ஷத்தில் நம் இடம் என்ன? என் மூதாதையர் பரசுராமரின் முன் அமர்ந்து பன்னிரு நாட்கள் பெருவேள்வி செய்து ஈட்டியது இச்செங்கோலும் மணிமுடியும். கூர்ஜரன் முன் இதை துறக்கமாட்டோம் என்று தயங்கியே இங்கு அமர்ந்துள்ளோம். துறந்துசென்று கூர்ஜரத்தில் தொல்குடியாக அமைவது இங்கு இவ்வல்லரக்கனின் மாதுலனாக அமைவதைவிட எத்தனையோ மடங்கு மதிப்புடையது” என்றார் முரு.

“நாம் இதைப்பற்றி மேலும் கூர்ந்து எண்ணுவோம், பொறுங்கள்” என்று மூர்த்தர் மீண்டும் மீண்டும் கூறினார். “என்ன சொல்கிறீர்கள்? என்னை குலமிலி என நீங்களும் எண்ணுகிறீர்களா?” என்று முரு கூச்சலிட்டார். சினத்தால் நிலையழிந்து அவையில் அலைமோதினார். ஆக்னேயர் அதை எதிர்பார்த்துச் சென்றிருந்தமையால் உளமழியவில்லை. தருணம் நோக்கியிருந்தார். முரு “சேற்றில் சிக்கிய யானைமேல் தவளைகள் ஏறி விளையாடுகின்றன. தெய்வங்களே, மூதாதையரே, என்ன பிழை செய்தேன்!” என நெஞ்சுலைந்தார். அதுவே இடம் என கண்டு ஆக்னேயர் எந்தையின் அடையாளமாக இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி அளித்த இக்கணையாழியை எடுத்துக்காட்டி “இது என் அரசரின் கணையாழி. இதை தன் வலக்கை ஆழிவிரலில் அணிந்து அரியணை அமர்பவர் அவர்” என்றார்.

மூர்த்தர் அதை வாங்கி பார்த்த பின் ஒன்றும் சொல்லாமல் அரசரிடம் அளித்தார். அதை முரு கையிலேந்தி சற்றே திருப்பியபோது எதிரே சுவரில் அமுதகலம் பேருருவாக எழுந்தது. “அஸ்தினபுரியை ஆளும் தேவனின் வடிவம்” என்று மூர்த்தர் சொன்னார். அதை திகைத்து நோக்கிய பின் “இதை எவர் அளித்தது?” என்று முரு கேட்டார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி குந்திதேவி அளித்தது இது. தங்களைப்போலவே யாதவ குடியிலிருந்து எழுந்து ஷத்ரிய அரசுகளின் தலைமைக்கு வந்தவர் அவர்” என்று ஆக்னேயர் சொன்னார். “அவர்களின் குடியின் முதல் மாற்றில்மகளாக ஏற்கப்பட்டவர் என் அரசரின் அன்னை. அரசரோ பாண்டவ மைந்தர்களில் மூத்தவர் என நிலைகொள்பவர். இந்தக் கணையாழியே சான்று.”

முரு மீண்டும் அரியணையில் அமர்ந்து அக்கணையாழியை திருப்பி நோக்கிக்கொண்டிருந்தார். மூர்த்தர் “இப்போது நமக்கு வந்துள்ள உதவி சிறிதல்ல, அரசே. வெறுமொரு அரக்கர் குடியின் உதவியல்ல இது. இந்திரப்பிரஸ்தத்தின் பாண்டவ குலத்தின் உதவி இது. நாட்டிலிருந்தாலும் காட்டிலிருந்தாலும் அர்ஜுனரின் வில்லும் பீமசேனரின் கதையுமே பாரதவர்ஷத்தை ஆள்பவை” என்றார். “நாளை இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியே இந்நிலத்தை ஆளும். ஐயமே தேவையில்லை. இனி ஆயிரம் ஆண்டுகள் அக்கொடியே இங்கு பறக்கும். அவரது குடியின் ஒரு குருதித்தொடர்பு நமக்கு உருவாவது அனைத்து வகையிலும் நம்மை நிலைநிறுத்தும்” என்றார்.

“நமது அரசுக்கு அரக்க மகளை நாம் எடுக்கவில்லை. நமது இளவரசரின் குருதி தூயதே. அவருக்கு மகள் தேடுகையில் தூய ஷத்ரியக் குடியிலிருந்தே நாம் பெண் தேடமுடியும். மறுப்பார்களென்றால் இந்திரப்பிரஸ்தத்தின் வாளையே அவர்களிடம் காட்டி பெண் கோரமுடியும்” என மூர்த்தர் சொன்னார். “நமது குடி இங்கு வாழும். கூர்ஜரத்துக்கோ யாதவ நிலத்துக்கோ சென்றால் நாம் மேலும் மேலும் இறங்குவோம். எழுகுடி எழ வீழ்குடி வீழ வரலாறு ஒழுகுகிறது என கொள்க!” என்று மூர்த்தர் தொடர்ந்தார்.

“எண்ணுக அரசே, நிமித்திகர் கூறிய மாறாச் சொல் ஒன்று உண்டு! ஒருநாள் மௌரியப் பெருங்குலம் பாரதவர்ஷத்தை முற்றாளும். காமரூபம் முதல் காந்தாரம் வரை, காஷ்மீரம் முதல் திருவிடத்துக்கும் அப்பால் முக்கடல் முனைவரை நாவலந்தீவு முழுக்க நம் குருதிவழியில் வந்த அரசர்களின் கொடி பறக்கும். ஆற்றலும் அறமும் கொண்ட பேரரசர்களின் பெயர் இந்நிலத்தில் என்றுமிருக்கும். இன்று உருவாகியிருக்கும் இவ்வாய்ப்பு அதற்கான தொடக்கம் போலும். அருமணிகள் தெய்வத்தின் விழிகள். நம்மை நோக்கி தெய்வம் ஒன்று திரும்பியுள்ளது என்பதையே இந்த மணி காட்டுகிறது. மகற்கொடை அளிப்போம், தயங்க வேண்டாம்” என்றார் மூர்த்தர்.

முரு “ஆனால் இக்குலக் கலப்பு…” என சொல்லத் தொடங்க “குலக் கலப்பிலிருந்தே ஷத்ரியப் பெருங்குடிகள் பிறக்கின்றன. அரக்கர்குருதியோ அசுரர்குருதியோ இல்லாத தொல்குடி ஷத்ரியர் யார்? அஸ்தினபுரியின் குடியே அசுர மூதன்னை சர்மிஷ்டையிலிருந்து உருவானது என அறிக! மீனவப் பேரன்னை சத்யவதியால் குருதிகொண்டது அது. அரசே, உலோகக் கலவைகளே வலுமிக்கவை. ஷத்ரியர் என்னும் படைக்கலம் உருவாக அவையே ஏற்றவை. பொன்னுடன் இரும்பு கலந்து புதிய பெருங்குடி எழுக…” என்றார் மூர்த்தர்.

முரு பெருமூச்சுவிட்டு “என்றும் என் குடி அந்தணர் சொல்லை அடிபணிந்திருக்கும் என்று பரசுராமருக்கு எம்மூதாதை சொல்லளித்துள்ளார். தங்கள் சொல்லை தெய்வ ஆணை என்று ஏற்கிறேன், ஆசிரியரே” என்றார். ஆக்னேயர் “அந்தணர் சொல் மீறாதோன் அழிந்ததில்லை. இந்தக் கருவூலங்களில் இருந்து ஒரு செம்புநாணயத்தைக்கூட கொள்ள எண்ணாதோர் நாங்கள். தர்ப்பையே எங்கள் பொன். எங்கள் சொல்லை ஓம்புக, சிறப்புறுக!” என்றார். கைகூப்பி “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் முரு. அவை வாழ்த்தொலி எழுப்பியது.

மௌரிய குலத்து முருவின் முதல் மகள் அகிலாவதியை நான் மணந்தேன். வெற்றியுடன் திரும்பிவந்து முருவின் ஏற்புச் செய்தியை ஆக்னேயர் சொன்னபோது என் குலத்தாரால் அதை நம்ப இயலவில்லை. ஆனால் நான் அது நிகழுமென்றே கணித்திருந்தேன். என் குடியில் முதலில் குழப்பமும் விளக்கவியலா கலக்கமும்தான் நிலவியது. பின்னர் பதினெட்டு நாள் நீண்ட பெருங்களியாட்டு தொடங்கியது. அன்னை இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். நான் செய்தி அனுப்பி வாழ்த்து கோரினேன். அன்னை எட்டு சகடங்களில் பொன்னும் பட்டும் வெள்ளிக்கலங்களும் பரிசென அனுப்பினார். “நான் நகர்நீங்கா நோன்புகொண்டிருக்கிறேன். ஆகவே அங்கு வரவில்லை. நீ நுழைய இந்நகரில் உனக்கு உரிமை இல்லை. உன் மைந்தர் வழியாக என் குடி வாழ்க!” என அவருடைய சொல் வந்தது.

நான் அஸ்தினபுரிக்கு திருதராஷ்டிரருக்கும் துரியோதனருக்கும் செய்தி அனுப்பினேன். “உங்கள் குடி என நான் என்னை எண்ணுவதால் பெருந்தந்தையாகிய உங்களுக்கு இச்செய்தியை அனுப்புகிறேன். உங்கள் சொல்லன்றி ஏதும் வேண்டேன். உங்கள் காலடியில் என் தலை அமைக!” என பொறிக்கப்பட்ட என் ஓலையுடன் என் தூதராக அவையந்தணர் ஜ்வாலர் சென்றார். அச்செய்தியை கேட்டதும் திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டார். “விரிகிறது என் குடி! காடுகளிலும் என் குருதி பரவுகிறது… விதுரா, என் பெயர்மைந்தனின் மணநிகழ்வுக்கு அரசமுறைப்படி அனைத்தும் செய்யப்படவேண்டும். இது என் ஆணை” என்றார்.

அச்செய்தியைக் கேட்டதும் அரசவையில் அரியணையமர்ந்திருந்த துரியோதனர் எழுந்து “என் குடியின் முதல் மைந்தன் மணம்கொள்கிறான். அனைத்து முறைமைகளும் நிகழ்க! நானே மணநிகழ்வுக்குச் செல்கிறேன்” என்றார். “அரசே, அது இன்னும் நாடென வகுக்கப்படாதது. நமக்கும் மகதத்திற்கும் பாஞ்சாலத்திற்கும் நடுவே உள்ளது. முறைமைப்படி அவ்விரு அரசர்களின் ஒப்புதலின்றி நீங்கள் அங்கே செல்வது உகந்தது அல்ல” என்றார் கனகர். “அவ்வண்ணமென்றால் என் இளையோர் செல்லட்டும். நானே செல்வதற்கு அது நிகர்” என்றார் துரியோதனர். அங்கிருந்து நாற்பத்தெட்டு வண்டிகளில் அருஞ்செல்வம் எனக்கு சீர்பரிசிலாக வந்தது. என் மணநிகழ்வுக்கு துச்சாதனரும் துச்சலரும் துர்முகரும் சுபாகுவும் சுஜாதரும் வந்திருந்தார்கள்.

முரு குலத்து அரசமகளுக்கு என் மூதன்னை அளித்த பீதர்நாட்டு பொன்னிழைப் பட்டும் அஸ்தினபுரியின் பட்டத்தரசி அளித்த அருமணி பதித்த பதினெட்டு சங்கு வளைகளும் வந்து சேர்ந்தன. அஸ்தினபுரியின் அரசிளையோர் முன்னிலையில் அந்த மணநிகழ்வு நடந்தது. அரக்க குடிக்கு அரசமகளைக் கொடுப்பதில் மௌரிய குடிகளுக்கு பெரும் தயக்கமிருந்தது. அவர்கள் பேசிய அலர் அரசரையும் சோர்வுறச் செய்தது. ஆனால் பதினெட்டு சகடங்களில் நான் அனுப்பிய சீர்நிரை மௌரிய நகரிக்கு வந்திறங்கியபோது அவர்கள் சொல்லடங்கினர். அவற்றின் பெருமதிப்பை வணிகர்கள் சொன்னபோது மறு எண்ணமில்லாதாயினர். அஸ்தினபுரியின் அரசரின் இணையான துச்சாதனரே வருகிறார் என்றபோது களிவெறி கொண்டனர்.

நான் திருமண அணிகொண்டு அந்நகருக்குள் நுழைந்தபோது மௌரியர்களின் பெருந்திரள் என்னை எதிர்கொள்ள நகர் வாயிலில் மங்கலங்களுடன் காத்து நின்றது. அன்றும் இவ்வாறே சென்றிருந்தேன். வேங்கைத் தோலணிந்து இரும்பு அணிகள் பூண்டு என்னைக் கண்டதும் அவர்கள் நகைக்கலாயினர். ஆனால் எவரோ வாழ்த்தொலி எழுப்ப சற்று நேரத்தில் அந்நகரமே வாழ்த்தொலிகளால் நிறைந்தது. அரிமலர் மழையெனப் பெய்ய அதன் நடுவே என் அன்னையரும் குலமூத்தாரும் தோழரும் உடன்வர சென்றேன். மாளிகை முகப்பில் கட்டப்பட்ட அணிப்பந்தலில் பேரரசி அளித்த அனல்மணி ஆழியை அகிலாவதியின் கையிலணிவித்து மணந்தேன்.

கைபற்றி அவளை அழைத்துவந்து குடிமக்கள் முன் நின்றபோது வாழ்த்தொலிகள் நெடுநேரம் எழுந்து ஓய மறுத்தன. உளம் பொறாது மீண்டும் எழுந்து அலையடித்தன. துச்சாதனரின் கால்களைத் தொட்டு வாழ்த்து பெற்றபோது எங்கோ அறியாக் காட்டில் அலையும் என் தந்தையை வணங்குவதாகவே உணர்ந்தேன். வஞ்சத்துக்கும் வெறுப்புக்கும் அப்பால் அவருடைய குருதி அதை மகிழ்ந்து ஏற்றிருக்கும் என எண்ணிக்கொண்டேன். மௌரியர்களின் தொல்தெய்வமாகிய அஜமுகி அன்னையின் ஆலயத்தின் முன் சென்று நின்றோம். குறும்பாட்டை பலிகொடுத்து குருதி காட்டி பூசகர் அன்னைக்கு படையலிட்டார்.

அப்போது வெறியாட்டெழுந்த பூசகன் நாவில் ஒரு சொல்லெழுந்தது. “அறிக, குடிகளே! அறிக, மானுடரே! இவ்வரசியின் வயிற்றில் மாவீரர்கள் பிறப்பர். அவர்களே முருக்களின் குடிக்கும் கொடிவழியாவர். அவர்களின் குருதிவழியில் எழுபவன் ஒருவன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான். சைந்தவமும் காங்கேயமும் தட்சிணமும் அவனால் ஒரு கொடிக்கீழ் ஆளப்படும். இது ஊழி வரை கணம் கணமென அணு அணுவென இவ்வுலகை வகுத்துள்ள தெய்வங்களின் ஆணை! ஆம், இதுவே ஆணை!” என்று கூவி, பலிகுருதி அள்ளி முகத்தில் அறைந்து, துள்ளிச் சுழன்றாடி, தன் வேலை தன் தொடையில் குத்தி, அக்குருதியை தானே அருந்தி விடாய் தீர்ந்து விழுந்து உறைந்தான். எழுந்து சென்ற தெய்வம் சொன்ன அச்சொற்கள் மட்டும் எஞ்சியிருந்தன.

“என் நகரியில் அகிலாவதியுடன் அரியணை அமர்ந்தேன். அந்தணர் அதர்வ வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தி கங்கைநீர் முழுக்காட்டி என்னை அரசனாக்கினர்” என்றான் கடோத்கஜன். “முருக்களின் முத்திரையாகிய பீடத்திலமர்ந்த சிம்மத்தை என் குடிச் சின்னமாக நான் ஏற்றுக்கொண்டேன். அவ்வடையாளம் பொறிக்கப்பட்ட பொன் நாணயத்தை என் நகரில் எங்கள் அச்சில் வார்த்து வெளியிட்டேன். ஆயிரத்தெட்டு பொன் நாணயங்களை அந்தணருக்கும் புலவருக்கும் சூதருக்கும் அளித்து என் ஆட்சியை தொடங்கி வைத்தேன்.”

அசங்கன் “தெய்வச்சொற்களில் பிழை வருவதில்லை” என்றான். கடோத்கஜன் “நான் நாகர்குலத்து அரசன் வக்ரனின் மகள் லக்ஷ்மணையையும் மணந்துகொண்டேன். அகிலாவதியில் எனக்கு இரு மைந்தர்கள் பிறந்தனர். மூத்தவனாகிய பார்பாரிகனுக்கு பதின்மூன்று அகவை ஆகிறது. இளையவன் மேகவர்ணனுக்கு பத்து. லக்ஷ்மணையில் பிறந்தவள் இடும்ப இளவரசி மேகவதி” என்றான். முகம்மலர்ந்து “என் மைந்தர் இருவரும் என்னைவிடப் பேருருவர்கள். என்னை வெல்லும் போர்த்தொழில் அறிந்தவர்கள். அவர்களின் குருதியில் வெல்ல முடியாத அரசநிரையொன்று எழுமென்பதை ஐயமின்றி உணர்கிறேன்” என்றான்.

அசங்கன் “அவர்கள் இடும்பவனத்தில் இருக்கிறார்களா?” என்றான். “இல்லை” என்றபின் சற்று தயங்கிய கடோத்கஜன் “இளையவன் மேகவர்ணன் அன்னையுடன் இருக்கிறான். மூத்தவன் பார்பாரிகன் பாதிப்பங்கு இடும்பர் படையுடன் கௌரவப் படைகளுக்கு ஆதரவாக போரிடும்பொருட்டு சென்றிருக்கிறான். நாங்கள் சேர்ந்தே கிளம்பினோம். குருக்ஷேத்ரத்தை அணுகியபோது பிரிந்தோம்” என்றான். அசங்கன் திகைப்புடன் “ஏன்?” என்றான். “அது என் மைந்தனின் முடிவு. தந்தைக்காக நான் இங்கே வந்து நின்றிருக்கவேண்டும். ஆனால் எங்கள் முடியை ஆதரித்த நாடு அஸ்தினபுரி. எனவே இடும்பர்கள் அங்கு செல்லவேண்டும் என்றான்” என்று கடோத்கஜன் சொன்னான்.

அசங்கன் சிலகணங்கள் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் இமைகளை மூடித்திறந்து எண்ணம் மீண்டு “இதை என்னால் உளம்கொள்ள இயலவில்லை. ஆனால் நீங்கள் சொல்கையிலேயே அதில் பொருள் உள்ளது என்றும் தோன்றுகிறது” என்றான். “மறுபக்கம் இவ்விரவில் விண்மீன்களை நோக்கியபடி என் மைந்தன் என்னை எண்ணிக்கொண்டிருக்கிறான்.”

தொடர்புடைய பதிவுகள்

குளிர்ப்பொழிவுகள் -கடிதங்கள்

$
0
0

Day3-05613

 

பயணத்தின் படங்கள்

ஏ வி மணிகண்டன்

 

அன்புநிறை ஜெ,

 

 

வணக்கம், தங்களின் குளிர்ப் பொழிவுகள் கட்டுரை படித்தவுடன் முதலில் இன்பதிர்ச்சியும், பிறகு ஆதங்கமும் தான் ஏற்பட்டது. ஏனென்றால், நான் ஈரோடு வெண்முரசு சந்திப்பில் கலந்துக்கொள்ள வரும்பொழுது  தங்களை அழைத்துவந்த காரிலேயே தான் நானும் இடையில் வந்து தங்களுடன் கலந்து ஒன்றாக வந்தோம். அப்பொழுது தங்கள், நண்பர் கிருஷ்ணனிடம், தங்களுடைய தளத்தில் வெளிவந்த சிற்பங்களுக்காக ஒரு பயணம் கட்டுரையைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினீர்கள், அவரும் மிக்க ஆர்வமாக என் பயண விபரங்களை கேட்டுவிட்டு, வெளியே வேடிக்கைப் பார்த்து வந்தவர், திடீரென்று தங்கள் பக்கம் திரும்பி, ஒரு நாள் இந்தியாவின் முக்கிய அருவிகளை நாம் காண பயண திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். அப்பொழுது அதற்கு தாங்களும், ஆ செய்யலாம், நன்றாகத் தான் இருக்கும் என்று ஒரு வரியில் முடித்துவிட்டீர்கள் (அப்பொழுது தங்கள் மனம் ஈரோட்டின் திடீர் பரிணாம வளர்ச்சியின் அதிர்ச்சியில் லியித்திருந்தது. அதன்  வியப்பை அனுபவித்து அதுபற்றி பேசிவந்தீர்கள்).

Day3-05626

 

நான் கூட அப்பொழுது இந்த அருவி பயணத்தை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறார் போல என்று என் உள்ளத்தை அமைதிபடுத்திய அடுத்த நொடி யாருக்குத் தெரியும் இவர்கள் ஒருவேளை இப்படித்தான் அனைத்து பயணத்திட்டத்தையும் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கிறார்கள் போலும் என்று சமாதானமும் செய்துக்கொண்டேன். அப்பொழுது நானும் தங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விசித்திர கற்பனையும் செய்துக்கொண்டேன். பிறகு அப்படியே அந்த பேச்சு விட்டு ஈரோடு பாலம் கட்டுமானம், அரசியல் என பொது பேச்சுகள் வழி சென்றது.

 

Day5-06141

ஆனால் இன்று தங்கள் கட்டுரை கண்டபின் நிஜமாகவே மிக அதிர்ச்சிதான் அடைந்தேன். மற்ற எவரையும் விட இதில் நான் தான் அதிக அதிர்ச்சியடைந்திருப்பேன் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் என் முன்னால் ஒரு நிமிடம் கூட நீடிக்காத அந்த பேச்சு இப்பொழுது தாங்கள் நண்பர்களுடன் நடைமுறைப்படுத்தியே விட்டீர்கள். அப்படியென்றால் தாங்கள் மேற்கொண்ட அனைத்து முக்கிய பயணங்களும் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும் என்று நான் முடிவுசெய்துவிட்டேன். நான் அத்தகைய குளிர்ப் பொழிவுகளில் இல்லாததை நினைத்து வருந்துகிறேன். ஆனால் அந்த ஏக்கத்தை தங்கள் எழுத்துக்கள் மூலம் நிவர்த்தி செய்துக்கொள்கிறன். தங்கள் பயணம் மிக்க திருப்திகரமாக முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

 

 

அன்புடன்

ரா. பாலசுந்தர்

Day5-40

 

அன்புள்ள ஜெ

 

குளிர்ப்பொழிவுகள் அருமையான தலைப்பு. அருவிகள் வழியாக அந்தப்பயணம் மிகச்சிறப்பான காலநிலையில் அமைந்திருந்தது. அருவிகள் எனக்கு எப்போதுமே பிடிக்கும். நான் அடிக்கடி இவற்றில் சில அருவிகளுக்குச் செல்வதுண்டு. ஜோக் அருவியில் பலசமயம் நீர் இருக்காது. சிவசமுத்திரம் ஏமாற்றாது

 

 

குளிக்காத அருவியைப்பற்றி சொல்லியிருப்பது அழகாக இருந்தது. அது நாம் அறியாத மொழியில் பேசும் ஒருவரை பார்த்துக்கொண்டிருப்பதுபோலத்தான். அழகான குறிப்புகள்.

 

 

மனோகர்

 

குளிர்ப் பொழிவுகள் -1

 

குளிர்ப்பொழிவுகள் – 2

 

குளிர்ப்பொழிவுகள் – 3

 

குளிர்ப்பொழிவுகள்- 4

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

$
0
0

judas-jesus-hulton-getty

 

கிறிஸ்துமஸ் எப்போதும் எனக்கு அந்த காட்சியை நினைவுபடுத்தும். ஒரு ஏழெட்டு வயது இருக்கும். பள்ளி நண்பன் அந்த திருவிழாவிற்கு அழைத்து போனான். அது தாழ்த்தப்பட்டோர் வாழும் சேரியென அப்போது தெரிந்திருக்கவில்லை. தேவாலயம் முழுக்க சீரியல் விள‌க்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது. உள்ளே ஒரு குள்ளமான கரிய மனிதர் கத்தி போன்று விறைத்து நின்றிருக்கும் பேண்ட், சட்டைக்குளிருந்து தன் தடித்த கண்ணாடியணித விழிகளால் நோக்கியபடி தன் கிட்டாரை சரிசெய்து கொண்டிருந்தார்.

 

சுற்றியிருக்கும் தேவாலயத்தின் உட்புறத்தை அதிர்ச்சியும், கிளர்ச்சியுமாக பார்த்துக் கொன்டிருந்தேன். அந்த சூழல் உருவாக்கும் புதிய மனோநிலையில் லயித்து கொண்டிருந்தபோது சட்டென கிட்டாரின் பல தந்திகள் அதிர்ந்து உருவாக்கிய சப்தத்தின் பிண்ணணியில் அவர் பாட ஆரம்பித்தார். தமிழும், ஆங்கிலமுமாக பாடல்கள் அடுத்து அடுத்து வந்துகொன்டேயிருந்தன. பாடியபடியே இடையிடையில் ஆடிக்கொண்டு குழந்தைகளையும் இழுத்து ஆடவைத்தபடியே இருந்தார். மெல்ல சூழல் நெகிழ்ந்து அனைத்து குழைந்தைகளிடமும் ஒரு உற்சாக மனநிலை வந்து அனைவரும் ஆட்டத்திலிணைந்தனர். இயல்பாகவே மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட நான் என்னை சுற்றி ஆடிக்கொண்டிருந்த அந்த பிள்ளைகளின் நடனத்தைக் கண்டுகொண்டிருந்தேன். கரிய முகங்களின் பற்கள் ஒளிவிட நாற்புறமும் நிகழும் நடனச்சுழல் அடிக்கடி என் நினைவிலெழும் ஒன்று.

 

அதுவரை குடும்பச் சூழலில் இருந்து வந்த பண்டிகைகள் பெரும்பாலும் அனைவரும் இணைந்து கொண்டாடுவது. பூஜைகள், கோயிலுக்கு செல்லுதல், பட்டாசு வெடித்தலென எதோவொரு வகையில் ஒரு வரையறை, சடன்குத்தன்மை கொண்டிருந்தது. ஆனால் இதுவோ முற்றிலும் குழந்தைகளை மட்டும் முன்னிறுத்தி எந்த வரையரையுமின்றி கொண்டாட்டம் மட்டுமேயென நிகழ்ந்தவொன்று.

LastTemptation

நிகாஸ் கஸாண்ட்காஸிஸ் எழுதிய ‘கிறுஸ்துவின் இறுதி சபலம்’ நாவலை வாசித்தபின் இக்காட்சியின் மேலும் அந்தரங்கமாகிவுள்ளது. இதில் வரும் கிறிஸ்து அதிமானுடர் இல்லை. பெரிய அறிஞரோ, தத்துவவாதியோ கிடையாது. எளிய மனிதர். தன் பதின் பருவத்தில் அனைவரையும் போல எளிய, இனிய குடும்ப வாழ்க்கையை விரும்பியவர். இம்மணிண் பற்றில், அதன் கததப்பில் வாழ நினைத்தவர். ஆனால் விண்ணின் திட்டங்களோ வேறாக இருந்தன. இந்த இரண்டிற்குமான ஆடலே இந்த நாவலின் மைய நீரோட்டம்.

 

இந்நாவல் கிறிஸ்துவின் வாழ்க்கையை, அதன் காலகட்டத்தை இந்த உலக யதார்த்ததிலிருந்து மீறாமல் சித்தரிக்கிறது. சுவிசேஷங்கள் ஏற்றி வைத்த புனித படிவங்களை, அதிமானுடத் தன்மைகளைத் தவிர்த்து, ஆனால் அதில் வரும் மையமான சம்பவங்களை பின்பற்றி அதை மானுட இயல்பிலிருந்து முடிந்தவரை விலகாமல் சித்தரிக்க முயல்கிறது. சுவிசேஷங்களில் வரும் இயேசுவின் பலவகையான குரல்களைக்கிடையே ஒரு தொடர்ச்சியை உருவாக்கி, அதன் மூலம் ஒரு மாற்று வரலாறை முன்வைக்கிறது. இதில் தெளிந்து வரும் கிறிஸ்து நமக்கு மேலும் அணுக்கமானவர். நம்மை போலவே சஞ்சலங்களாலும், பலவீனக்களாலும் அலைக்ககளிக்கப்படுபவர். நம்மில் ஒருவர். அதனாலேயே நம்மில் இருக்கும் கிறிஸ்துவை அவரால் சுட்டிக்காட்ட முடிகிறது.

 

எளிய தச்சனாக நாவலில் இயேசு அறிமுகமாகிறார். நொய்மையான உடலுடன், எப்போதும் மனரீதியான‌ பலவீனத்துடனே இருக்கிறார். எப்போதெல்லாம் உலக இச்சைகளின் திசைக்கு அவர் திரும்புகிறாரோ அப்போது பேருருவக் கழுகு தன் கூருகிர்களால் அவர் தலையைப் பற்றுகிறது. தன் தோலைக் கடந்து, மண்டையோடு, மூளைச்சதையை ஊடுருவி எலும்புகள் வரை வலி படர்ந்திறங்குகிறது. தன் அன்னையின் சகோதரனாகிய சைமனின் மகளாகிய மேரி மக்தலீனை பெண் பார்க்க செல்லும் போதும் இதே வலி வந்து வாயில் நுரை தள்ள சரிகிறார்.

nikas

அவருக்கு தெரிந்திருக்கிறது இந்த வலி விண்ணால் அளிக்கப்படுகிறதென. எளிய உலகியலின் பால் அவர் சாய்ந்து விடக்கூடாதென்பதற்காகவென. ஆனாலும் அவர் இறைஞ்சுகிறார். தன் சக்திக்கு மீறிய எடையை தன் மேல் எற்றி வைக்க வேண்டாமெனவும் தன்னை விட்டுவிடும்படியும் விண்ணின் இறைவனிடம் மன்றாடுகிறார். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிகிறார்.

 

பொதுவாக பெரும்பான்மையான செவ்விலக்கியங்களின் ஆரம்பமும் முடிவும் நிதானமாகவும், பெரிய உச்சங்களோ, நாடகத் தருணங்களோ அற்றவையாகவே இருக்கும். ஆனால் இந்நாவலின் ஆரம்பமும் முடிவும் பெரும் கொந்தளிப்பானவை. நாவலின் ஆரம்பப் பகுதி ஒரு வாலிபனான இயேசுவின் கனவுடன் தொடங்குகிறது. பல்வேறு உதிரிக் காட்சிகளினூடாக இஸ்ரேல் மக்களின் வேதனைகளும் மண்ணில் உதிக்க வேண்டிய தேவதூதனுக்கான மன்றாட்டுக் குரல்களும் கேட்கிறது. அப்போது மறுபடியும் அவன் இல்லக்கதவு பயங்கரமாக தட்டப்படுகிறது. திறக்காமல் எவ்வளவு மறுத்த போதும் பல காலங்களாக தொடர்ந்து தட்டப்படுகிறது. தன்னுடைய தச்சு வேலைகள் செய்யும் மேசை, கருவிகள், கடைசியாக தான் செய்த சிலுவை என அனைத்தையும் கதவிற்கு முட்டுக் கொடுக்கிறான். சற்று நேரத்தில் கதவு வெடிப்போசையுடன் திறக்க, கருவிகளும், சிலையும் பறந்து சிதற அதன் பின்னே வாசலில் ஒரு செந்தாடிக்காரன் உரக்க சிரித்தவண்ணம் நிற்கிறானென அப்பகுதி நிறைவடைகிறது.

 

இதில் வரும் இயேசு தன் கடமையை சுமையாக நினைக்கிறார். தேவன் தன்னை நிராகரிக்க வேண்டுமென தன் எல்லக்களை மீறுகிறார். இஸ்ரேலில் ரோம அரசுக்கெதிராக எழும் புரட்சியாளர்களை கைது செய்து சிலுவையேற்றுவது வழக்கம். அப்படி ஒரு புரட்சியாளரை தண்டிப்பதற்கான சிலுவையை செய்து தருகிறார். ஒவ்வொரு புரட்சியாளர் தோன்றும் போதும் இவரே நமது மீட்பராக இருப்பவர் என நம்புவதைப் போலவே இவரையும் நம்புகின்றனர். அங்கு வேறெவரும் சிலுவை செய்ய முன்வராத நிலையில் இயேசு அதை செய்கிறார். இத்தகைய பாவச் செயல் மூலம் தேவனின் ‘பிடியில்’ இருந்து விடுபட்டு விடலாமென நினைக்கிறார்.

 

அங்கு ஆரம்பிக்கும் அவரது பயணம் அவரை எப்படி அவரது சிலுவை நோக்கி கொண்டு செல்கிறது என்பதை பேசுவதே இந்நாவல். அதன் மூலம் அவரது குணநலன்கள் எப்படி மாறுகிறது என்பதையும் சுவிசேஷங்கள் கூறும் சம்பவங்களின் துணை கொண்டு சித்தரிக்கிறது. தான் செய்த சிலுவையில் மரித்த உயிரைக் கண்டு அதன் உதிரத்தில் தோய்ந்த துணியை தன் தலையில் கட்டிக் கொண்டு தன் வீட்டிலிருந்து கிளம்புகிறார்.

 

முதலில் தூரத்து பாலைவனத்திலிருக்கும் மடாலயத்தில் சேர்ந்து துறவியாவதே தன் நோக்கமாக அவருக்கு இருக்கிறது. அனைவரின் பார்வையிலிருந்தும் விடுபட்டு ஒரு தனித்த வாழ்கையை வாழவே தன் பயணத்தை துவக்குகிறார். ஆனால் பயணத்தினூடே அவரது இயல்பில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

Rembrandt_Temptation_of_Christ_700

தன் பயணத்தை துவக்கியதும் அருகிலிரும் மாக்தலா ஊரில் வாழும் மேரி மாக்தலீனாவை காண நேர்கிறது. அங்கு ஒரு வேசியாக தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறாள். இயேசுவின் ஸ்பரிசத்தை ஏங்கும் தன் மனதின் உடலின் தவிப்பை நூறு நூறு உடல்களைத் தழுவதன் மூலம் அழிக்க முற்படுகிறாள். இயேசு அவளைக் கண்டு மன்னிப்புக் கோருகிறான். தன்னால் தான் அவளுக்கு இந்த நிலமையெனவும் தன்னை மன்னிக்கும் படியும் கூறுகிறான். அப்போது முதல் அடி அவனுக்கு விழுகிறது. அந்த நிலையிலும் தன் மேலிருக்கும் ஈர்ப்பை சொல்லி ஒப்புக் கொள்ள முடியாமல் வசதியாக அவன் கொள்ளும் பெருந்தன்மைத் தோற்றத்தை கடைப்பிடிப்பதை அவனின் முகத்திற்கெதிரே உரைக்கிறாள். அவனுடைய அந்த செயலுக்குப் பின்னலுள்ள கோழைத்தனத்தை முன்னெடுத்துக் காட்டுகிறாள்.

 

பிறகு சற்று நேரத்தில் இயல்பாகி அவனுடன் உரையாடுகிறாள். வெளியே பலத்த மழையினால் அன்றிரவு அங்கு தங்க நேரிடுகிறது. ஒரு தாயைப் போல அவல் காட்டும் பரிவு மனிதர்கள் கணங்களில் கொள்ளும் மேன்மையை அவனுக்கு காட்டுகிறது.அங்கிருந்து கிளம்பும் இயேசுவின் இயல்பில் மெல்லிய மாற்றம் நிகழ்கிறது. அதுவரை மனிதர்களை தவிர்த்து வந்த அவன் பயணம், மெல்ல சக மனிதர்கர்களிடம் காட்டும் பிரியத்திற்கு அவனை நகர்த்துகிறது.

வழியில் தன் பயிர்களை இழந்து தவிக்கும் பெண்களுக்கு நல்வார்த்தை கூறுகிறான். அவன் வார்த்தைகள் அவர்களுக்கு பெரிய ஆசுவாசத்தை அளிக்கின்றன. தன் பயணத்தை தொடர்ந்து மடாலயத்தை அடைகிறான்.

 

அடுத்த மாற்றம் நிகழ்வது மடாலயத்தில் சைமனுடன் உரையாடிய பிறகு. அங்கு அவரிடம் தன் மனக்குமுறலை, தன் இயலாமையை, தன் சஞ்சலங்ளைத் தெரிவிக்கிறான். ஒரு சமயம் தன் இயலாமையையும், கடவுள் தன்னைத் துன்புறுத்துவதாகவும், மறு சமயம் தான் கடவுளின் மைந்தன் என்ற நினைப்பு சாத்தான் உருவாக்குவதெனவும் கூறுகிறான். இந்த இரு முனைகளில் அவனுக்கு நிகழும் துன்பம் கண்டு அவர் ஒரு கேள்வி எழுப்புகிறார். ‘மக்களை சந்திக்கும் போது உனக்கு என்ன நிகழ்கிறது?’ அதற்கு இயேசு ‘அவர்களது நிலையை நினைத்து துயர் அடைகிறேன்’என்கிறான். சைமன் ‘அப்படியென்றால், நீ அவர்களிடம் செல். நீ இருக்கவேண்டியது அவர்கள் மத்தியில். நீ பேசினால் அவர்களின் துயரத்தின் கணம் விடுபடும். அதை நீ எடுத்துக்கொள்வதால்’ என பதிலளிக்கிறார். உடனே இயேசு “என்ன பேசவேண்டும். என்னிடம் வார்த்தைகள் இல்லை”எனக் கூற, சைமன் புன்னகைத்து ‘நீ வாயைத்  திறந்தல்ல் போதும். கடவுள் உன் வழியாக பேசுவார்’ என்கிறார்.

 

இந்நாலின் மையப்பார்வை இதுதான். கிறிஸ்து தன்னை விட பெரிய சக்தியால் கொண்டு செல்ல பட்டவர். அவர் ஒரு ஊடகமாகவே இருக்கிறார். அவரை சிலுவையை நோக்கி கொண்டு சென்று தன் நோக்கத்தை அது நிறைவேற்றிக் கொள்கிறது. மதத்தில் இருப்பவர்கள் அதை தேவன் என்கின்றனர். இறை மறுப்பாளர்கள் அதை இயற்கை எனலாம். மார்க்சியவாதிகள் அதை வரலாற்றின் விசை என்பர்.

 

அதே அளவுக்கு அதன் எதிர் பக்கம் நின்று பார்க்கும் வாய்ப்பையும் நாவல் தருகிறது. அறியமுடியாமைக்கு எதிராக மானுடனின் தவிப்பு என இந்நாவலை வாசிக்கலாம். தூரத்திலிருந்து கேட்கும் குரல் கடவுளா, சாத்தானா என அறிய முடியாத ஞானதாகியின் துயரம் அது. தன் சமகால மனநிலைகளின் குரல்களிடையில் காலாதிதமான விளியைக் கண்டுகொள்ள முற்படுபவனின் மன அலைச்சலது. இறுதியில் அவரால் செய்யக் கூடியவை அந்தப் புயலுக்கு தன்னை ஒப்புக் கொடுப்பது மட்டுமே.

threetemptations (1)

இன்றைய காலகட்டத்திலிருந்து பார்த்தால் அது வரலாற்றின் சுழிப்பு நிகழ்ந்த தருணம். அதுவரை இறையம்சம் என்பது பேராற்றலுடன் தொடர்புடையது. வலிமையே அதன் இயல்பு. மோசசும், ஜெஹோவாவும் அவர்களது முன்னோர்கள். ஆனால் தேவகுமாரனின் வருகைக்கு பிறகு அது கண்ணீராலும், தியாகத்தாலும் நிறைந்தது. அதற்கு வலிமையும், அறிவுத்தன்மையும் இரண்டாம் பட்சமே. அது அன்பையும், ஞானத்தையும் முன்னிறுத்துவது. அனைத்தாலும் கைவிடப்பட்டோருக்கானது. நோயாளிகளுக்கும், வறுமையிலுள்ளோருக்கும், பாவம் இழைத்தோருக்குமான வெளிச்சமது. அது வரவேண்டிய‌து இயேசு மாதிரியான ஒரு எளிய தச்சனிடமிருந்து தான். தன்னால் மீட்கப்படுபவர்களின் அதே துயரிலிருந்தும் வாதைகளிருந்தும் பலவீனங்களிருந்தும் தானவர்களுக்கான தேவன் எழ முடியும்.

 

மடாலயத்திலிருந்து கிளம்பி அவர் பயணம் மக்களை நோக்கி நகர்கிறது. தன் அத்தனை பலவீனங்களையும் வெளிப்படையாக கூறியதினாலேயே அது தன் வீரியத்தை இழந்து மனம் இலகுவாவதை உணர்கிறான். இப்போது அவன் மனதில் மக்களை நோக்கிய பரிவும், அன்பும் மட்டுமே நிரம்பியிருக்கிறது.

 

செல்லும் இடங்களில் மக்களுக்கு நல்வார்த்தைகள் சிறிய கதைவடிவில் கூறுகிறார். மலையுச்சியில் நடைபெறும் அவருடைய முதல் நல்லுபதேச நிகழ்வு பெரும் மனயெழுச்சியுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும். கூடிய அனைவரும் பசியாலும், நோயாலும் வாடிக்கொண்டிருக்கும் எளியர்கள். அவருடைய இனிய வார்த்தைகளுக்காக காத்துக்கொண்டிருப்பவர்கள். கிறிஸ்து தன்னுள் எழும் குரலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தூரத்தில் சூரியன் உருவக்கும் ஒளியிருள் முயக்கத்தைக் கண்டு லயித்திருக்கும் அவரிடமிருந்து முதல் வார்த்தை பிறக்கிறது. ‘அன்பு’. அவ்வார்த்தை நேரடியாக இயற்கையின் ஆடல் என்றான ஒன்று அவருக்கு தருகிறது. கருத்தாக அல்ல கவித்துவத்தின், எளிமையின் வெளிச்சத்தில் அது தன்னை வந்தடைகிறது. அங்கிருந்து தனது முதல் நல்லுபதேசத்தைக் கூறுகிறார்.

 

தனது உபதேசங்களை கூறி மக்களிடம் உறையாடிக்கொண்டிருக்கையில் தூரத்திலிருக்கும் அந்த செந்தாடிக்காரனைக் கண்டதும் துணுக்குறுகிறான். யூதாசு என்ற பெயர் கொண்ட அவனைக் காணும்போதெல்லாம் தன் ஆழம் துணுக்குறுவதைக் கண்டு வியப்புறுகிறார். தான் செய்த அந்த முதல் சிலுவையிலிருந்து அவர்களுக்கான உறவு ஆரம்பமாகிறது. புரட்சியையும் அடுக்குமுறைக்கெதிறான ஆற்றலையும் நம்பும் யூதாசு இயேசுவை மிரட்டுகிறான். ஆனால் இயேசுவின் கண்ணில் அவன் காணும் அந்த சிலுவையும், சமயங்களில் அவன் உடல் கொள்ளும் ஒளியும் இஸ்ரேல் மக்களுக்கு விடுதலையைக் கொண்டுவரும் தூதன் இவனோ என சந்தேகமும் கொள்கிறான். மடாலயத்தில் ஒருமுறை இயேசுவைக் கொல்ல முயன்று முடியாமல் அவனை வெறுத்து அங்கிருந்து வெளியேறுகிறான்.

 

ஆனால் உள்ளூர ஒரு நம்பிக்கை ஒளி அவனுள் இருந்துகொண்டேயுள்ளது. ஒருநாள் இயேசுவின் இந்த பூஞ்சையான சுபாவம் மாறும் எனவும் இதற்கு முன் மண்நிகழ்ந்தவர்களைப் போல ஆற்றலும், வார்த்தைகளில் கணலும் தெறிக்குமென நினைக்கிறான். இயேசுவின் சீடர்களில் ஒருவனாக இணையும் யூதாசு சமயங்களில் இயேசுவோடு தனக்கு அன்புவழியிலிருக்கும் அவநம்பிக்கையை சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.

 

ஒரு நாளிரவு வாக்குவாத்ததின் முடிவில் ஞானஸ்நானகரான ஜானிடம் செல்லலாமென முடிவெடுக்கின்றனர். ஜான் உக்கிரமான போதகர். தான் உபதேசிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் கனலை பொழிபவர். இயேசு அவரை சந்திக்கும் போது ரௌத்திரமே கடைப்பிடிக்க வேண்டிய வழியெனவும் கோடாரியே முதலில் பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதம் எனவும் கூறுகிறார்.

 

கருணை மிகுந்த இயற்கை தான் பேரழிவுகளையும் நிகழ்த்துகிறது. தீமை எல்லை கடக்கும் போது நீதி அழிவை ஆயுதமாக எடுக்கிறது என்கிறார். முடிவெடுக்க முடியாமல் குழப்பத்துடன் வெளிவரும் இயேசு பாலைவனத்தை நோக்கி  கடவுளின் செய்தியை கேட்க தனியே பயணிக்கிறார்.

jesus_

பாலைவனத்தில் அவருக்கு நிகழும் அனுபவங்களை விவரிக்கும் அந்தப் பக்கங்கள் மீண்டும் மீண்டும் வாசித்து நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது. அவருடைய சஞ்சலங்கள் ஒவ்வொன்றாக அங்கு அனுபவித்து தன் எல்லைகளை உணர்கிறார். உடலிச்சை சர்ப்பத்தின் வடிவிலும், அதிகார விருப்பம் சிம்மத்தின் வடிவிலும், நித்தியத்துவத்தின் ஆசை தேவதூதன் வடிவிலும் வந்து உரையாடுகிறது.

 

அங்கிருந்து வெளிவரும் அவர் அனைத்தையும் காணும் நோக்கு இப்போது மாறிவிடுவது உணார்த்தப்படுகிறது. இயற்கையின் தண்டிக்கும் போக்கை அவர் உள்ளம் ஏற்கொண்டுவிட்டது. அதுவும் விண்ணின் ஒரு பகுதிதான் என உணருகிறார். அதைக் காணும் அவரது பின்பற்றாளர்கள் ஜானும் அவரில் கலந்து விட்டதாகவும் ஒரு உடலில் இருவர் குடிகொண்டிருப்பதாகவும் அவரில் சமயத்தில் ஜானின் தோற்றம் தோன்றி மறைவதாகவும் கூறுகின்றனர்.

 

அதிலிருந்து அவர் உபதேசங்களில் இறைவன் உலகத்தை அழிக்க இருப்பதாகவும் அவர்கள் அழிவிலிருந்து மீட்க தன்பின் தொடருமாறும் கூறுகிறார். பேச்சில் புதிய அனல் தோன்ற யூதாசு மகிழ்கிறான். மெல்ல இயேசுவின் இயல்பு மாறுவதாக நினைக்கிறான். ஆனால் கூடவே அவர் பேச்சில் இன்னும் அன்பைப் பற்றிய பிதற்றல்கள் இருப்பதாகவும் எண்ணி இருவித உணர்வுகளிலும் அவன் உழல்கிறான். உண்மையான விடுதலை ஆத்மாவிலிருந்து விடுபடுவதுதானெனவும் அது அன்பு மூலமே சாத்தியமெனவும் கூறுகிறார். பதிலுக்கு யூதாசு விடுதலை முதலில் உடலிலிருந்து தொடங்க வேண்டும் உடல்தான் அடிப்படை என வாதிடுகிறான்.

 

இந்நாவலில் சித்தரிக்கப்படும் இயேசுவின் சீடர்கள் ஒரு சாதாரண லௌகீக மனநிலையிலிருந்து எந்த வகையிலும் மேலானதாக இல்லை. ஜானும் ஆண்ட்ரூவும் மட்டும் இயேசுவை தொடர்வதற்கு முன்பே இறையியல் நாட்டம் கொண்டு மடாலயங்களில் இருந்துள்ளதால் கொஞ்சம் விடுதலை நாட்டம் கொண்டிருக்கிறார்கள். மத்தேயூ ஒரு அரசூழியனாக இருந்து இயேசுவின் அழைப்பின் பேரில் இணைகிறான். ஆனால் முற்றிலும் வேறொரு வகையில் அவனுக்கு ஒரு திறப்பு நிகழ்கிறது. இயேசுவின் நல்வார்த்தைகளை கேட்டு அதை ஆவணப்படுத்த எண்ணுகிறான். அதை எழுத தன் எழுதுகோலை தொட்டவுடன் ஒரு தேவதூதன் வந்து அவனை வழிநடத்துகிறது. இயேசுவின் மேலான உண்மையை சொல்ல இவ்வுலக வறட்டு உண்மை தடையாக உள்ளது எனக்கண்டு அவனுடய உள்ளம் வேறொரு பாதையை துணைக்கிறது. அதில் இயேசு தேவனின் மகன். மூன்று தேவதைகளால் ஆசிகளால் பூமிக்கு அருளப்பட்டவன். அவனுடைய அன்னை ஒரு கன்னி. இயேசுவின் வாழ்க்கையை சொல்ல முனைந்து ஹீப்ரூ மக்களின் ஆதியிலிருந்து தொடங்குகிறான்.

 

எழுத்தில் எழும் தேவன் அவனை முழுதாக ஆட்கொள்கிறான். ஒரு கட்டத்தில் இயேசுவே அவனது எழுத்தைப் படித்து இந்த அற்புதங்களெல்லாம் எனதல்ல என கூறும் போதும் அதை அவன் விடவில்லை. சிதறிய தாள்களை மீண்டும் எடுத்து நெஙஞ்சோடு அணைத்துக் கொள்கிறான். அக்கணத்தில் இயேசுவே அவனை நீங்கும்படி வற்புறுத்தியிருந்தாலும் அவ்வெழுத்திலிருந்து ஒரு இயேசுவை தொடர்ந்து கட்டி எழுப்பியிருப்பான். இறுதி அவருடனே இருந்து அவன் எழுதியதே புதிய எற்பாட்டிலிருக்கும் ‘மத்தேயுவின் பார்வையில் சுவிசேஷம்’ (Gospel according to St.Matthew).

 

சீடர்களில் ஒருவன் மட்டுமே இலட்சியவாத உந்துத‌ல் கொண்ட மேலான வாழ்வை நோக்கிய கணவு கொண்டவன். அவன் யூதாசு. கிட்டத்தட்ட இயேசுவிற்கு சமானமானவன். இயேசுவிற்காவது தேவனின் விளி இருந்து அவனை தொடர்ந்து செலுத்தியது. அத்தனை சஞ்சலங்களுடன் அவரின் வெளிச்சத்தில் தன் சிலுவையை நோக்கி சென்றார். இந்நாவலில் வரும் யூதாசோ தன் இலக்கின் மேல் சஞ்சலமற்ற தீரா வேட்கை கொண்டவன். தன் இலக்கையே தவம் செய்தவன். ஒருவேளை இயேசுவை விட ஒரு படி மேலானவன். நாவலில் ஒரிடத்தில் அதை இயேசுவே சொல்கிறார்.

 

ஜெருசெலேத்தின் மையக் கோவிலில் நின்று கொண்டு மக்களிடம் பெரும் ஆவேசத்துடன் கூறுகிறார். இந்த அரசும் அதன் அதிகாரத்தின் முகமான இந்த கோவிலும் தரைமட்ட்மாகுமென. அதைக்கேட்ட அரசு ஆதரவாளர்கள் இயேசுவை சிலுவையேற்ற வேண்டுமென ‍‍‍‍பிளாட்டேவிற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

 

ஒரு கட்டத்தில் இறைவனின் குரலுக்கேற்ப தன் உயிரைக் அர்ப்பணமாக்கி தன் செய்தியை நிலைநிறுத்த எண்ணுகிறார். அதை யூதாசிடம் கூறி தானிருக்கும் இடத்தை ரோமக் காவல் படையிடம் காட்டிக் கொடுக்க சொல்கிறார். சீற்றத்துடனும் கண்ணீருடனும் ‘ஏன் நான்?’ எனக் கேட்கிறான். அதற்கு இயேசு ஏனென்றால் அது உன்னால் தான் முடியும் என்கிறார். உடனே யூதாசு நீங்கள் அவ்விடத்திலிருந்தால் செய்வீர்களா என வினவ இயேசு மெல்லிய சவலை தோய்ந்த குரலில் தலையசைத்து என்னால் முடியாது என்கிறார்.

 

இந்த இடத்தில் யூதாசுவின் பாத்திரம் கொள்ளும் உயர்வு தன்னிகரில்லாதது. கிட்டத்தட்ட அவனும் ஒரு இயேசு தான். கண்ணுக்குத் தெரியாத சிலுவையை சுமப்பவன். இயேசுவின் சிலுவை இன்று ஒவ்வொரு தேவாலயத்திலும் உள்ளது. அவரது தியாகம் மீண்டும் மீண்டும் கண்ணீருடன் நினைவு கூறப்படுகிறது. ஆனால் யூதாசு முற்றிலும் வரலாற்றின் இருட்டுக்குள் தள்ளப்படுகிறான். அவனுடைய அர்ப்பணிப்புக்கும் தியாகத்திற்கும் வெறுப்பும் தூற்றலும் மட்டுமே எதிர்வினையாகிறது.

 

ஆனால் இன்று நின்று யோசிக்கையில் கிறித்துவத்தில் இயேசுவுடன் இணைந்து நினைவுக்கு வரும் பெயர் யூதாசு. இந்நாவலைப் படித்து முடித்தவுடன் ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. இயேசுவின் தடுமாற்றங்களும் சங்சலங்களும் இருளென மாறி யூதாசுவுடன் இணைந்து கொண்டது என. தராசுவின் மறுபக்கத்தையும் யாரவது தாங்க வேண்டும் தானே! இயேசுவின் புகழ் இருக்கும் வரை அவ‌ருடய மறுபக்கத்தின், மானுடனாக பிறந்ததாலேயே அவரால் மீற இயல்லாதவற்றின் சிலுவையை சுமப்பவனாக யூதாசு இருந்துகொன்டே இருப்பான். தேவாலய‌ங்களின் ஒளியில் பல்லாயிர துதிகளின் துதிபாடல்களின் நடுவே இயேசு இருக்கையில் அங்கிருக்கும் மனித அக இருளின் ஒரு மௌன இருப்பாக யூதாசுவும் இருப்பான். ஒன்றின் இருபக்கங்கள் அவர்கள்.

 

நாவலில் ஒரு இடம் வரும். வழக்கம் போல் இரவு முழுக்க இயேசுவுக்கும் யூதாசுவுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும். அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் ஜான் சப்தம் கேட்டு அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என அறிய அவர்களறியாமல் வர எண்ணுவான். சப்தம் கேட்டு யாரென யூதாசு வினவ இயேசு ஜானை திரும்பிப் போய் உறங்கச் சொல்வார். மறுநாள் அதிகாலை வந்து பார்க்கும் போது அந்த இளங்காலைப்பாலையில் மரத்தடியில் ஒருவர் கையில் மற்றொவர் தலை வைத்து துயின்று கொண்டிருப்பார்கள். இந்நாவலில் முக்கிய படிமங்களில் ஒன்று இது. அன்று மட்டுமல்ல அவர்கள் சந்தித்த நாள் முதல் மேற்பரப்பில் எப்போதும் உரசிக் கொண்டேயிருந்த இரு உள்ளங்கள். ஆழத்தில் ஒன்றாகி கண்மயங்கியுள்ள இச்சித்திரம் தரும் திறப்பு மிகவீரியமானது. இருவரை இயக்கும் அடிப்படை விசை ஒன்றுதான். ஒரு இயேசு உருவாக ஒரு யூதாசு தேவைதான் போலும். ஒன்று இரண்டாகி ஆடும் ஆடலது.

 

ஆரம்பத்தில் கூறியதுபோல இந்நாவலின் இறுதி பகுதியின் கலைத்தன்மையும் அதன் நிகழ்வுகள் உருவாக்கும் மனத்திறப்புகளின் பல்வேறு சாத்தியங்களும் பெரும் வியப்பளிப்பது. தான் மலையுச்சியில் சிலுவையேற்றப் பட்டு கைகால்களில் ஆணிகள் அறைப்பட்டு உச்சகட்ட வலியில் விழிநோக்கு மங்க சட்டென கண்விழித்துக் கொள்கிறார். அருகில் ஒரு தேவதூதன் இருக்கிறான். என்ன நிகழ்ந்தது என அவனிடம் வினவ அவன் தன்னை விடுவித்துவிட்டதாகவும் இனி அவருக்கு வலியில்லை என்கிறான். விடுதலை என்பது இவ்வுலக அழகிலும் களிப்பிலும் கனிவிலும் திளைத்து வாழ்ந்து நிறைவதே என்கிறார்.

 

அதற்கேற்ப அவர் மாக்தலீனாவுடன் இணைந்து வாழ்கிறார். வாழ்க்கை ஒவ்வொரு கணுவும் தித்திக்கிறது. எதிர்பாரா ஒரு சம்பவத்தில் அவள் முந்தைய நடத்தைகளால் ஆத்திரமடைந்த மக்களால் தாக்கப்படுகிறார். சால்(Saul) என்ற ஒரு கூனனால் கல்லெறிபட்டு மரணமடைகிறாள். இச்சம்பவத்தால் துயறுரும் இயேசுவிற்கு அந்த தேவதூதன் ஆறுதலளிக்கிறான். இவ்வுலகிலுள்ள அனைத்து பெண்களிலும் இருப்பது மாக்தலீனவின் முகமே.  மாக்தலீனவில் குடியுள்ளதே அனைத்து பெண்ணழகுகளிலும் உறைந்துள்ளது எனக் கூறி அவனை தேற்றி அவனது பின்பற்றாளர்களான மேரி மற்றும் மார்த்தாவின் இல்லத்திற்கு அழைத்துத் செல்கிறான். விசித்திரமாக இருக்கக் கூடாதென்பதற்காக ஒரு கறுப்பின சிறுவனாக அந்த தூதன் உடன்வருகிறான்.

je

அந்த இரு பெண்களையும் மணந்து குழந்தைகள் பெற்றுப் பெருகி வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவிற்கு தன் இறுதி காலத்தில் அடுத்தடுத்து மூன்று அதிர்ச்சிகள் நிகழ்கின்றன.

 

தான் சிலுவையில் அறையப்பட்டுருந்தால் உருவாகும் விளைவுகள் அதன் மூலம் சொல்லப்படுகின்றன. முதல் விளைவு தன்னை சிலுவையேற்றத்திற்கு ஆனையிட்டவன் தன்னை வதைத்துக் கொண்டு தனக்கு முட்கிரீடம் சூட்டிக்கொள்கிறான். இறுதியில் சிலுவையிலறையப்படுகிறான். அதைத் தொடர்ந்து சிலுவையேறிய இயேசு மூன்றாம் நாள் மீண்டும் உயிர்தெழுகிறார்.

 

அடுத்தது, தனக்கு கிடைத்த இறைவனின் ஆணையைப் போல, சாலுக்கு இயேசுவின் விளி கிடைக்கிறது. அதிலிருந்து தான் இயேசுவின் சீடனாகி உலகெங்கும் அவரின் சொற்களை பறப்பப்போவதாக கூறுகிறான்.

 

இறுதியாக அவருடனிருந்த சீடர்களை பார்க்கிறான். அனைவரும் அதிகாரத்தால், வறுமையால் ஒடுக்கப்பட்டு இழிந்த நிலையிலுக்க. யூதாசு மட்டும் அருகில் வராமல் ஒதுங்கி இருக்கிறான். அவனிடம் போய் பேச முற்பட யுதாசு சீறி எழுகிறான். ஆற்றாமையுடன் ‘ நீ சிலுவை ஏந்தியிருக்க வேண்டும். அதற்காகவே நீ வந்துள்ளாய். உன் சிறிய வாழ்வின் இச்சைக்காக நீ அடகு வைதுள்ளது எதைத் தெரியுமா’ என பொங்குகிறான். அவன் தன் வார்த்தைகளை அவர் உணர உணர கைகளிலும் கால்களிலும் ஆணி அறைந்த இடத்தில் ரத்த ஊற்றுகள் எழுகின்றன. கால்கள் மண்ணை விலக்கி மேலெழுகிறது. நெஞ்சில் உதிரம் வடிய மீண்டும் கண்விழிக்கிறார். அதே மலையுச்சியில் தான் சிலுவையிலுருப்பதை அறிந்து நிறைவுடன் ‘ நான் கடந்துவிட்டேன்’ எனக் கூறி தன் உயிரை அர்பணிக்கிறார். நாவல் முடிகிறது.

 

அக்கனவில் அவருடனே வரும் அந்ததூதன் உண்மையில் ஒரு சாத்தான் அல்ல. முழுக்க முழுக்க இம்மண்ணின் நிறைவுகளை, அருளப்பட்டவையை விரும்பும் உள்ளத்தின் தேவவடிவம் அவன். அதில் வாழ்ந்து நிறைவதும் முழுமையானதுதான். ஆனால் அது தனிமனிதனுக்கானது. தன் நிறைவை மட்டுமே இலக்காக கொண்டது. இயேசு இதுவரை நேர் நோக்காமல் தவிர்த்துவந்தவைகளின் தொகுப்பு அவன். அவன் மூலம் அந்த அனைத்து இன்பங்களையும் உள்ளார்ந்து வழ்ந்து கடந்து முழு விடுதலையுடன் சிலுவையேறுகிறார். முழு விடுபட்டவானாக. தலைமுறைதோறும் பெறப்போகும் துதிகளுக்கும், அவர் நோக்கி சிந்தப்படும் கண்ணீர்களுக்கும், இறைஞ்சல்களுக்கும் தகுதியுள்ளவராக உயிர்நீக்கிறார்.

Paradise_Lost_10

அதே சமயம் அவர் காணும் அக்கனவு மூலம் அவர் தாண்டி நிகழும் பிரம்மாண்டமான விளைவுகள் உணர்த்தப்படுகிறது. அவருக்கு வரும் அந்த விளியின் ஆதிஊற்று மிகத் தொன்மையானது. அதற்கு இயேசுவும் ஒரு குமிழியே. அவருக்கானது மட்டுமல்ல. இங்கு மனித குலம் செழித்து வாழ தன் அடுத்த கட்டத்தை அடைய எழுந்து வருவது அது. பூமியின் ஆதி காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பெருக்கு அது. கிருஷ்ணனுக்கும் புத்தருக்கும் வெவ்வேறு வகையில் அதன் அழைப்பிருந்துருக்கும். அந்த தொடர் வரைகோட்டில் இயேசுவும் ஒரு நிலைப்புள்ளி.

 

எந்த ஒரு சிறந்த படைப்பையும் போல இந்நாவலும் மையத்துடன் சேர்த்து விளிம்புகளையும் சித்தரிக்கிறது. இயேசுவின் ஆன்மீகத் தேடல்களுக்கு நடுவே அது அதற்கு நேரெதிரான கொண்டாட்டமும் களியாட்டமும் நிறைந்த மது விடுதி நடத்தும் சிமோனையும் இணைத்துப் பேசுகிறது. இயேசு அலைந்து தவிக்கும் விடுதலை மனநிலை சிமோனுக்கு இயல்பாக தன் வாழ்வில் வாய்க்கிறது. கிட்டத்தட்ட ஒரு குட்டி ஸோர்பா அவன்.

 

அதே போல் உயர்ந்த லட்சியமெனும் யானையால் நசுக்கப்படும் எறும்புகளின் துயரத்தையும் அது காட்டுகிறது. தன் மகங்களான ஆண்ட்ரூவும் பீட்டரும் இயேசுவின் ஈர்ப்பில் அவருடன் சீடர்களாக சென்றது அறியாமல் வீட்டில் உணவை சமைத்து வைத்துவிட்டு தன் மீன்வலையின் சிடுக்குகளை விடுவித்துக் கொண்டு காத்திருக்கும் தந்தையின் துயரமும் சேர்த்ததுதான் இந்நாவல்.

 

இன்னொரு சுவாரஸ்யமான கதாபாத்திரம் ஜெபீதீ. வினயமான வணிகபுத்தி கொண்டவர். தன்னிடம் வேலை செய்யும் ஆட்களிடம் ஒரு ரூபாய் விரயமாகாமல் வேலை வாங்குபவர். தன் மகன்கள் துறவு பூண்டு செல்லும்போதும் பெரிதாக கவலை கொள்ளாதவர். அப்படியென்றால் அவர் சேர்த்து வைக்கும் பணம் தன் வாரிசுகளுக்காக அல்ல. சேர்த்துவைக்கும் அந்த செயலுக்காக மட்டுமே. அண்டை வீட்டுக்காரர் கடனில் மூழ்கும் சமயம் வரை காத்திருந்து அவரது மொத்த நிலத்தையும் வீட்டையும் அபகரிக்க எண்ணுபவர். ஆனாலும் மாக்தலீனை அனைவரும் கல்லாலடிக்க வருகையில் அவர்களுக்கெதிராக இயேசுவோடு நிற்கும் ஒரே மனிதர். மனிதனின் இயல்பான சாம்பல் தன்மையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் பாத்திரம் ஜெபீதீ.

 

இப்படைப்பு மனிதர்களைப் பற்றி எவ்வளவு ஆழமாக பேசுகிறதோ அதே அளவு விரிவாக புற இயற்கைச்சூழழையும் படிமங்களையும் சித்தரிக்கிறது. நாவல் முழுக்க பாலைவனக் காற்றும் மழையும் சூரியனும் நட்சத்திரங்களும் விவரிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. சிலசமயம் மனிதமனவுணர்வுகளின் ஒரு பகுதியாக, சிலசமயம் அறியவொண்ணா பேரியர்கையின் இருப்பாக, சிலசமயம் எளியவர்களின் வாழ்வின் குறீயீடாக என வெவ்வேறு பகுதிகளில் வந்து அச்சம்பவங்களை அந்த காலயிடத் தளையிலிருந்து வெட்டி எக்காலகட்டதிற்கும் உரிய அடிப்படை கேள்விகளாக மாற்றுகிறது. உதாரணத்திற்கு இரு இடங்களை சொல்லலாம். இயேசு மக்தலீனாவுடன் தங்கும் அந்த இரவில் பெய்யும் மழை இவ்வாறு சொல்லப்படுகிறது. வானம் உடைந்து பெய்யும் கோடானுகோடித் துளிகளை பூமி தன் கிளுக்கல் சிரிப்புடன் தொடைவிரித்து வாங்கிக்கொள்கிறது. இன்னொரு இடத்தில் இயேசு தன் இறுதி நாட்களை நெருங்கும் வேளையில் இயற்கை தன் அளப்பரிய சௌந்தர்யதால் அவரை சீண்டிக் கொண்டேயிருக்கும்.

jesus

இந்த புற வர்ணனைகளுக்கு நிகராக நாவலின் முகமாக முக்கிய படிமங்களையும் தன்னுள் வைத்திருக்கிறது. முதன்மையாக கழுகு. இரண்டு விதமான குறீயீட்டுப் பொருள் அதற்கு கொடுக்கப்படுகிறது. ஒன்று அது இயேசுவைக் கட்டுப்படுத்தும் இயற்கையின் நெறியாக. அவர் வழிதவரும் போதெல்லாம் உறுத்து நோக்கும் விழியாகவும் தன் கூருகிர்களால் அவரை வதைக்கவும் செய்கிறது. அதேசமயம் அது அதிகாரத்தின் குறீயிடாகவும் வருகிறது. ரோமப் பேரரசின் கொடியிலும், தான் இல்லத்தைவிட்டு மடாலயம் நோக்கி கிளம்பும் போது தன் நிழலாகவும் உடன்வரும் உருவத்தின் தலையாகவும் அது வருகிறது. காட்டுமிராண்டித்தனமான பெண் உடலுடன் கால் நுணிமுதல் கழுத்துவரை கவசவுடையால் மூடப்பட்டு கழுகுத் தலையுடன் வாயில் ஒரு ஊண் துண்டுடன் அந்த உருவம் தொடர்கிறது, அதை தன்னுடைய சாபமென இயேசு ஓரிடத்தில் சொல்வதைத் தவிர எந்த குறிப்பும் அதை பற்றி தரப்படுவதில்லை. எனக்கு அவர் பாலைவனத்தில் தேவனின் சொல்வேண்டி காத்திருக்கையில் அவர் உணரும் தன் எல்லைகளின் குறீயீட்டு வடிவென நான் எடுத்துக் கொள்கிறேன்.

 

அதேபோல் மற்றொரு வலிமையான படிமம் பாலைவனத்தில் குடல் வெளிவந்து கழுத்தில் பல்வேறு பாவச்செய்திகளின் வளையங்களுடன் இறந்து கிடக்கும் ஆடு. இஸ்ரேலிய மக்கள் தாங்கள் செய்த பாவங்களை ஒரு ஆட்டில் வளையத்தில் கட்டி அதை பாலைவனத்திற்கு துரத்தி விடுவர். அந்த ஆடு அவர்கள் செய்த பாவத்திற்கான விளைவுகளைப் சுமந்து கொண்டு துளி நீரோ உணவோ இல்லாமல் பாலையில் தன் உயிரை விடும். நாவல் முழுக்க பல இடங்களில் இயேசு தன்னை அதனுடன் ஒப்பிட்டு கொள்வார்.

 

நாவலின் அழகியலில் கையாண்டுள்ள உத்தி மிக முன்னுதாரனமானது. இரண்டு வகையில் இதன் கூறுமுறை இயங்குகிறது. ஒரு கோணத்தில் இது ஒரு மனிதனின் ஆன்மீக அலைக்கழிப்புகளை கூறுவது. அதேசமயம் மற்றவர்களின் கண்கள் மூலம் அவரது புதிர்தன்மையும் கடவுள்தன்மையும் காட்டப்படுகிறது. இந்த இரண்டில் எது இல்லையென்றாலும் இந்நாவல் கீழிறங்கி விடும். ஒன்று இன்னொன்றுடன் சமமாக நிகர் செய்யப் பட்டுள்ளது.

 

இந்நாவலை படித்த பிறகு இயேசுவின் முகம் வேறொரு வடிவம் கொள்கிறது. அந்த முகம் எப்போதும் எளியவர்களின் பக்கமிருக்கும் முகம். கடையரிலும் கடையரோடு தன்னை பொருத்திக் கொள்ளும் முகம்.

நம்முடைய கீழ்மைகளையும் சஞ்சலங்களையும் நோக்கி முகம் சுழித்து அதை வெறுத்து மனதின் ஆழத்திற்குத் தள்ளாமல் அதை நேர்நோக்கும் வலிமையை இந்நாவல் தருகிறது. இந்த இயேசு நம்முடைய சிலுவையைக் கண்டுகொண்டு அதை சுமக்கும் தைரியத்தை நமக்கு தருகிறார்.

 

பாலாஜி பிருதிவிராஜ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மாந்தளிரே!

$
0
0
ஷ்யாம்

ஷ்யாம்

 

இசைகேட்க மிக உகந்த பருவம் என்பது இரண்டுதான் என்பார்கள். முதிராஇளமையின் கனவு நிறைந்த காலகட்டம். சிந்தை அணைந்து தனிமைசூழத் தொடங்கும் முதுமை. நான் இளமையில் கேட்ட நல்ல பாடல்கள் அனைத்தும் எங்கோ சேமிக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் இசையார்வம் கொண்டவனோ, நல்ல பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டவனோ அல்ல.என் ஆர்வம் முழுக்க அன்று வாசிப்பிலும் காட்டில் சுற்றியலைவதிலும்தான் இருந்தது. ஆனால் எல்லா நல்ல பாடல்களையும் நான் கேட்டிருக்கிறேன், நினைவில் வைத்திருக்கிறேன் என்பது நண்பர் சுகா , ஷாஜி போன்று பாடல்களே வாழ்வாகக் கொண்டவர்களுடன் பேசும்போது தெரியவரும். அது விந்தையாகவே இருக்கும். நான் கேட்காத ஓர் அரியபாடலை அவர்களால் சொல்லமுடிந்ததில்லை.

வழியோரம் கல்லெனக் கிடக்கும் தெய்வம் அறியாமல் கால்தொட்டால் எழுந்து வந்து வழிமறித்து நின்றுவிடும் என்பார்கள். அதைப்போல இரவின் தனிமையில் சில பாடல்கள் நினைவில் தட்டுப்படும். தேடித்தேடி சலித்து அவற்றை எடுத்துக்கேட்டால் இறந்துபோன ஒருவரை உயிருடன் மீண்டும் சந்திப்பதுபோன்ற பரவசம். காலத்தை கடந்து சென்றுவிட்டதுபோல. இளமையில்கேட்ட ஒரு பாடலில்தான் என்னென்ன இருக்கிறது. அதை முதலில் கேட்ட அந்தக் காலத்துளியே மீண்டும் வந்து நின்றிருக்கிறது. மாறிவிட்ட நிலத்துடன், மறைந்த மனிதர்களுடன், இல்லாதொழிந்த அனைத்துடனும்.

 

இன்று இப்பாடல். மாந்தளிரே மயக்கமென்ன, உன்னை தென்றல் தீண்டியதோ. ஷ்யாம் இசையமைப்பில் வந்தபாடல். மலையாளக் காதுகளுக்கு ஷ்யாம் நன்றாகவே அணுக்கம். எழுபதுகளின் இறுதியும் எண்பதுகளின் தொடக்கமும் மலையாளத்தில் ஷ்யாமின் உச்சகட்ட படைப்பூக்கக் காலம். சலீல் சௌதுரியின் இசைப்பள்ளியைச் சேர்ந்தவர். ஆகவே இந்திய மரபிசையின் இலக்கணங்களுக்குள் நிற்கும் பாடல்கள் அல்ல. மேற்கத்திய இசைக்கு அணுக்கமானவை. நாட்டாரிசைக்கூறுகள் பெரிதாக கிடையாது.விந்தையான திருப்பங்கள்கொண்ட மெட்டுகளும் இசையொழுக்கும் கொண்டவை அவருடைய பாடல்கள். அது இளையராஜாவின் பொற்காலம் என்பதனால் தமிழில் ஷியாமின் பல நல்ல பாடல்கள் கவனிக்கப்படவே இல்லை. ‘மழைதருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்” போன்ற சில பாடல்களே சிலரால் நினைவில் வைக்கப்பட்டுள்ளன.’

இந்தப் படத்தை இணையத்தில் தேடிப்பார்தேன். படம் பெயர் தேவதை. யூடியூபில் முழுப்படமும் கிடைக்கிறது. மொத்த குழுவுமே மலையாளிகள் என தோன்றுகிறது. நெசவாளர் பின்னணியில் எடுக்கப்பட்டது. இயக்கியிருப்பவர் பெயரைப் பார்த்தால் ஆச்சரியம், பி.என்.மேனன். அவரேதானா என சிலமுறை உறுதிசெய்துகொண்டேன்.

பி.என்.மேனன்

பி.என்.மேனன்

 

பி.என். மேனன் என்னும் பல்லிச்சேரி நாராயணன்குட்டி மேனன் [1928 – 2008]மலையாளத்தின் முதல்தலைமுறையின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இயக்குநர் பரதனின் தாய்மாமன். கடம்பாகேரளத்தில் கொச்சி அருகே வடக்காஞ்சேரி என்னும் ஊரில் பிறந்தார். திரிச்சூரில் ப்ள்ளிக்கல்வியை முடித்தபின் சென்னைக்குச் சென்று சென்னை ஓவியப்பள்ளியில் கே.சி.எஸ் பணிக்கரின் மாணவராக ஓவியம் கற்றார். வேலைதேடி அலைந்து சேலம் மாடர்ன் தியேட்டரில் எடுபிடிப்பையனாகச் சேர்ந்தார். அங்கே சில மாதங்களிலேயே ஓவியராக பணியாற்றினார். சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து நாகிரெட்டியின் திரைப்பட நிறுவனத்தில் ஓவியராகச் சேர்ந்தார்.

அக்காலத்தில் சினிமாவுக்கான சுவரொட்டிகளை வரைவதில் தேர்ந்தவராக அவர் அறியப்பட்டார். ஏராளமான நூல்களுக்கும் வார இதழ்களுக்கும் அட்டை வரைந்திருக்கிறார். பின்னர் கலை இயக்குநராக ஆனார். மலையாளத்தில் வெளிவந்த ‘நிணமணிஞ்ஞ கால்பாடுகள்’ படத்தில் முதல்முறையாக கலை இயக்குநராகப் பணியாற்றினார். அவர் இயக்கிய முதல்படம் ரோஸி. [1965] 1970ல் வெளிவந்த ஓளவும் தீரவும் தான் பி.என்.மேனனை மலையாளத்திரையின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவராக ஆக்கியது. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய படம் அது

பி.என்.மேனன் இயக்கிய ‘செம்பருத்தி’ [எழுத்து மலையாற்றூர் ராமகிருஷ்ணன்] ‘காயத்ரி’ [எழுத்து மலையாற்றூர் ராமகிருஷ்ணன்] குட்டியேடத்தி [எழுத்து எம்.டி.வாசுதேவன் நாயர்] போன்ற படங்கள் மலையாள கிளாஸிக்குகளாகக் கருதப்படுகின்றன. கடம்பா, மலைமுகளிலே தெய்வம் போன்ற கலைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். ஐந்துமுறை மாநில அரசு விருதையும் இரண்டுமுறை தேசியவிருதையும் பெற்றிருக்கிறார்.

ஆனால் தேவதை படம் சுமாராகவே எடுக்கப்பட்டுள்ளது. அதன் கதை நன்று. திரைக்கதை மிகச் சம்பிரதாயமாக உள்ளது. பி.என். மேனனின் படம் என்றே சொல்லமுடியாது.ஆனால் மலையாளத்தனம் நிறையவே உள்ளது. படுதோல்விப்படமாக இருந்திருக்கவேண்டும். அந்தப்பாட்டு கூட எவர் நினைவிலும் இல்லை. அதன் ஒலிப்பதிவுவடிவமும் சரியில்லை. ஆனால் மெட்டில் நம்மை பாதிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது

shyam-philips-3
ஷ்யாமின் இயற்பெயர் சாமுவேல் ஜோசஃப். தமிழ்நாட்டில் மைலாப்பூரில் 1937ல் பிறந்தார். தந்தை தங்கராஜ் ஜோசப் ஆசிரியர். தாய் மேரி தங்கராஜ். ஆசிரியரான அன்னை தேவாலயத்தில் ஆர்கன் வாசிப்பவர். அன்னையிடம் இசை கற்றார். எட்டுவயது முதல் பாடகராகவும் வயலின் கலைஞராகவும் புகழ்பெற்றார். தன்ராஜ் மாஸ்டரின் மாணவர். தன்ராஜ் மாஸ்டரின் நண்பரான ஆர்.கே. சேகர் [ஏ.ஆர் ரஹ்மானின் தந்தை]யுடன் அறிமுகமானார். எம்.பி.சீனிவாசனின் ஒருநாடகத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை ஆர்.கே.சேகர் வாங்கித்தந்தார்.

இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷின் தந்தை பழனி அந்நாடகத்தில் மாண்டலின் வாசித்தார். அவர் அறிமுகப்படுத்த இசையமைப்பாளர் சி. என் பாண்டுரங்கனிடம் சென்றுசேர்ந்தார். அவர் இசையமைத்தபாடலுக்கு வயலின் வாசித்தார் வி.தட்சிணாமூர்த்தி, எம்.எஸ்.பாபுராஜ்ம் ஜி.தேவராஜன் போன்ற மலையாள இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அணுக்கமானவரானார். விஸ்வநாதன் அவர் பெயரை ஷியாம் என்று மாற்றினார். சலீல் சௌதுரியின் அறிமுகம் அவர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. சலீல் சௌதுரியின் செம்மீன் படத்தில் முக்கியமான வயலின் இசை பகுதிகள் முழுக்க ஷ்யாம் வாசித்தவைதான். சலீல் சௌதுரியை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். 12 ஆண்டுக்காலம் சலீல் சௌதுரியின் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.

கூடவே சட்டமும் பயின்றார் ஷ்யாம். ஆனால் படிப்பை முடிக்காமல் திரையிசையில் மூழ்கினார். 1968ல் எதிரிகள் ஜாக்கிரதை என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 232 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஷ்யாமின் பாடல்களில் பல மலையாளப் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டவை. கேரளத்தில் இன்றும் பெரிதும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராகத் திகழ்கிறார். தமிழில் மனிதரில் இத்தனை நிறங்களா, தேவதை , கள்வடியும்பூக்கள் போன்ற சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இப்பாடல் சென்றகாலம் வழியாகக் கொண்டு சென்றது.பி.என்.மேனனின் படங்கள், சியாமின் பாடல்கள் வழியாக ஓர் இரவு

 

கலைஞனின் தொடுகை

இணைகோட்டு ஓவியம்

புலி!

பிச்சகப் பூங்காட்டில்

 

அன்றுகண்ட முகம்

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்

$
0
0

SOLVALAR_KAADU_EPI_36

 

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

 

 

செப்டெம்பர் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

 

இந்த கலந்துரையாடலில் சொல்வளர்காடு  குறித்து ஜா.ராஜகோபாலன் உரையாற்றுவார்

 

இது சொல்வளர்காடு பற்றி முன்பே நிகழந்த உரையாடலின் தொடர்ச்சியாக இருக்கும். முந்தைய கலந்துரையாடல் குறித்து

முத்துகுமார் எழுதிய கட்டுரை இங்குள்ளது

 

 

https://muthusitharal.com/2018/03/22/சொல்வளர்-காடு-dharmans-sabbatical-leave/

 

 

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

 

நேரம்:-  வரும் ஞாயிறு (30/09/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

 

இடம்

 

சத்யானந்த யோகா மையம்

 

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

 

வடபழனி

 

சென்னை

 

அழைக்க:- 9952965505 & 904319521

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது –திசைதேர் வெள்ளம்-19

$
0
0

bowமுற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அவனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை.

கடோத்கஜன் “நான் நீண்டபொழுது எடுத்துக்கொள்ளவில்லை அல்லவா?” என்றான். “இல்லை, மூத்தவரே” என மூச்சிரைத்து பின் மீண்டு “இங்கு குடித்தலைவர்கள் இந்த ஆடையை அணிந்தே வருகிறார்கள்” என்றான் அசங்கன். “நீங்கள் அவர்களை அரசர்களென ஒப்பாவிட்டாலும் தங்கள் குடிக்கு அவர்கள் அரசர்களே” என்ற கடோத்கஜன் அவன் தோளில் எடைமிக்க கைவைத்து “செல்வோம்” என்றான். வெறும் தொடுகையிலேயே எப்படி பேராற்றலை உணரமுடிகிறது என அசங்கன் வியந்தான். யானையின் துதிக்கை மிக மெல்ல தோளில் படிகையில் அவ்வாறு பேராற்றலை அவன் உணர்ந்ததுண்டு என எண்ணிக்கொண்டான்.

யுதிஷ்டிரரின் அவைமாளிகைக்குச் செல்லும் பாதையின் முகப்பிலேயே பிரதிவிந்தியன் தன் உடன்பிறந்தாருடன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அசங்கன் “உங்கள் உடன்பிறந்தார், மூத்தவரே” என்றான். கடோத்கஜன் “தெரிகிறது, முதலில் நிற்பவன் பிரதிவிந்தியன், அவனுக்குப் பின்னால் நிற்பவன் யௌதேயன். இருவரும் மூத்த தந்தையைப் போலவே இருக்கிறார்கள். அவர் எங்கள் காட்டுக்கு வந்திருந்தபோது இதே போன்ற முகத்துடன் இருந்தார்” என்றான். “அவனுக்குப் பின்னால் நிற்பவர்கள் நகுலரின் மைந்தர்கள் சதானீகனும் நிர்மித்ரனும். அவர்கள் இளைய தந்தை சகதேவரின் வார்ப்புத் தோற்றம் கொண்டுள்ளனர்.”

கடோத்கஜனின் உடலே மகிழ்ச்சியிலாடி நகைப்பதுபோல அசங்கனுக்கு தோன்றியது. “நானே சொல்கிறேன். அதோ பின்னால் நிற்பவன் சுருதகீர்த்தி, இன்னொருவன் சுருதசேனன்” என்றான். விலகி பின்னால் நின்றிருந்தவர்களை நோக்கி “அப்பெருந்தோளர்களை சொல்லவே வேண்டாம். அவர்களில் முன்னால் நிற்பவன் சுதசோமன், பின்னால் நிற்பவன் சர்வதன்” என்றான். “அடுமனை வாழ்க்கை தெரிகிறது உடலில்” என்று சொல்லி தலையை அசைத்து சிரித்தான்.

கடோத்கஜனுடன் உத்துங்கனும் உடன்வந்தான். தொலைவிலேயே அவர்களை பார்த்த பிரதிவிந்தியன் கைகளைக் கூப்பியபடி இருபுறமும் சதானீகனும் சுருதகீர்த்தியும் நிர்மித்ரனும் சுருதசேனனும் வணங்கியபடி உடன்வர அருகணைந்தான். “நீங்கள் முறைமைச்சொல் உரைக்கவேண்டும், மூத்தவரே. அவர்கள் உங்களை வணங்கினால் புகழும் செல்வமும் நல்வாழ்வும் அமைக என வாழ்த்தவேண்டும்” என்றான் அசங்கன். “இன்னொருமுறை சொல்” என்றான் கடோத்கஜன். “புகழும் செல்வமும் நல்வாழ்வும் அமைக என்று…” என்றான் அசங்கன்.

பிரதிவிந்தியன் அரசமுறைப்படி சீரான நடையுடன் வர கடோத்கஜன் சிறிய வளைந்த கால்களில் தாவித்தாவி சென்றான். இரு கைகளையும் விரித்து உரக்க நகைத்தபடி பிரதிவிந்தியனை அணுகினான். பிரதிவிந்தியனை தூக்கி தலைக்கு மேல் வீசப்போகிறான் என்று எண்ணியதுமே திகைப்பெழ அசங்கன் நின்றுவிட்டான். பிரதிவிந்தியன் குனிந்து கடோத்கஜனை கால்களைத் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், மூத்தவரே. தங்கள் காலடிகளை வணங்கும் பேறு வாய்த்தது” என்றான்.

கடோத்கஜன் அவன் இரு தோள்களையும் பற்றி மேலே தூக்கி தன் நெஞ்சோடணைத்துக் கொண்டான். பிரதிவிந்தியனின் கால்கள் காற்றில் தவித்தன. கடோத்கஜன் அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு நிலத்தில் நிறுத்திவிட்டு பிற உடன்பிறந்தாரை நோக்கி கைவிரித்தான். அவர்கள் குனிந்து வணங்கி முறைச்சொல் உரைப்பதற்குள்ளாகவே ஒவ்வொருவராக பாய்ந்து பற்றி இழுத்து உடலுடன் சேர்த்துக்கொண்டு முத்தமிட்டான். அவன் விட்டதுமே உத்துங்கனும் பிரதிவிந்தியனையும் இளையவர்களையும் அள்ளி அணைத்து முத்தமிட்டான். பிரதிவிந்தியன் திகைத்தாலும் உடனே புரிந்துகொண்டு நகைத்தான்.

கடோத்கஜன் நிர்மித்ரனை அவன் எதிர்பாராத கணம் தூக்கி மேலே வீசிப்பிடித்து சுழற்றினான். சதானீகனை உத்துங்கன் தூக்கி வீசிப் பிடித்தான். அவர்கள் கூவி கைவிரித்து நகைத்தனர். அனைத்து முறைமைகளும் அகல அவர்களனைவருமே கடோத்கஜனின் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்க விழைந்தார்கள். அவர்களை அவன் வீசிப்பிடித்தான். குடுமியைப்பற்றிச் சுழற்றினான். தூக்கி உத்துங்கனை நோக்கி எறிய அவன் பற்றிக்கொண்டு திரும்ப வீசினான். மூச்சிரைக்க சிரிப்பு முகத்தில் அசையாச் சுடர் என நின்றிருக்க அவர்கள் ஓய்ந்தனர்.

நிர்மித்ரன் “தாங்கள் மூதன்னை குந்திதேவியை இப்படி தூக்கி வீசி விளையாடுவீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அது நெடுங்காலம் முன்பு… அன்று நான் இளமையாக இருந்தேன். என் தலையில்கூட புன்மயிர் இருந்தது” என்று அவன் சொன்னான். “அன்றே தாங்கள் பேருருவர் என்றார்கள்” என்றான் சதானீகன். “அரக்கர்கள் அனைவருமே பேருருவர்கள். உங்கள் தோழர்களும் தங்களைப்போல இருக்கிறார்கள்” என்றான் சுருதசேனன். “ஆம், இன்று படைகளில் எங்களைத்தான் அனைவரும் பார்த்தார்கள்” என்றான் கடோத்கஜன். “போர்க்களத்தில் கௌரவர்கள் உங்களை பார்க்கப்போகிறார்கள்” என்றான் சுருதசேனன். கடோத்கஜன் “ஆம்! ஆம்! பார்ப்பார்கள்… முழு உருவை பார்ப்பார்கள்” என்று கூவி தன் தோள்களில் அறைந்துகொண்டு நகைத்தான்.

சதானீகன் “இப்போது தாங்கள் வந்திருப்பது ஏக்கத்தையே அளிக்கிறது, மூத்தவரே. முன்னரே இந்திரப்பிரஸ்தத்திற்கு தாங்கள் வந்திருந்தால் மகிழ்ந்து கொண்டாட எத்தனையோ தருணங்களிருந்தன” என்றான். “போரும் மகிழ்ந்து கொண்டாடுவதற்கு உரியதுதானே?” என்று சொன்ன கடோத்கஜன் “நாம் போரை கொண்டாடுவோம்! போரிலாடுவோம்!” என்றான். சுருதகீர்த்தி “ஆம், போரை கொண்டாடுவோம்!” என்றான். “நம் இளையோர் அனைவரும் இங்குள்ளனரா?” என்றான் கடோத்கஜன். “இல்லை, அபிமன்யூவை நாங்கள் பார்ப்பதே இல்லை. அவன் தனக்கான தனி வழிகள் கொண்டவன்” என்றான் பிரதிவிந்தியன்.

கடோத்கஜன் திரும்பி அப்பால் நின்றிருந்த சுதசோமனையும் சர்வதனையும் பார்த்து “எந்தையின் மைந்தர்… என்ன ஆயிற்று அவர்களுக்கு?” என்றபின் குரல் தாழ்த்தி “முறைமையா?” என்றான். பிரதிவிந்தியன் “அவர்கள் தாங்கள் பெருந்தோளர்கள் என்னும் எண்ணம் கொண்டிருந்தார்கள். தங்களை பார்த்ததுமே உளம் சுருங்கிவிட்டனர்” என்றான். கடோத்கஜன் புரியாமல் “ஏன்?” என்றான். “தங்கள் தோள்களை பார்த்தால் தேவர்களே பொறாமை கொள்வார்கள், மூத்தவரே” என்றான் சதானீகன். கடோத்கஜன் நகைத்தபடி அவர்கள் அருகே செல்ல நாணத்தால் முகம் சிவந்த சர்வதன் “அவ்வாறல்ல, மூத்தவரே. ஆனால்…” என்றான். சுதசோமன் “எனக்கு எவரிடமும் பொறாமை இல்லை” என்றான்.

கடோத்கஜன் அவன் தோளை வெடிப்போசை எழ ஓங்கி அறைய சர்வதன் இரண்டடி பின்னால் நகர்ந்தான். மற்போருக்கு நிற்பதைப்போல் சற்றே குனிந்து இரு கைகளையும் விரித்து நின்றான் கடோத்கஜன். சர்வதன் பாய்ந்து கடோத்கஜனை மார்பில் தலையால் அறைய கடோத்கஜன் பின்னால் சரிந்தான். அதே விசையில் சர்வதன் கடோத்கஜனின் கால்களை தன் கால்களால் அறைந்தான். கடோத்கஜன் பின்னகர்ந்து நிலை தடுமாறி தரையில் பேரோசையுடன் வீழ்ந்தான். மறுகணமே கையூன்றி தாவி எழுந்து நின்றான். சிரித்தபடி “தரையில் நான் ஆற்றல் குறைந்தவன், இளையோனே. உங்களுடன் எதிர்நிற்க என்னால் இயலாது” என்றான்.

“ஆம், தங்கள் கால்கள் ஆற்றலற்றவை. தரையில் அழுந்த ஊன்றுவதுமில்லை” என்றான் சர்வதன். சுதசோமன் அப்போதுதான் அதை நோக்கியவன்போல முன்னால் வந்தான். “ஆம். விந்தையானவை” என்றான். “மூத்தவரே, தங்கள் கால்கள் குரங்குகளின் கால்கள் போலுள்ளன” என்று நிர்மித்ரன் சொன்னான். “குரங்குகளைப்போல மரங்களைப் பற்றும் கால்கள்!” என்றான் சதானீகன். குனிந்து நோக்கிய நிர்மித்ரன் “இன்று போர்க்களத்தில் எவ்வாறு செல்வீர்கள்?” என்றான். “நாங்கள் பறக்கும் அரக்கர்கள். தேர்களுக்கு மேல், யானைகளுக்கும் புரவிகளுக்கும் மேல்” என்றான் கடோத்கஜன். பின்னர் சுதசோமனை நோக்கி “உன் தோள்வல்லமையை பார்ப்போம்” என்றான். அவன் “ஆம்” என்றான்.

கடோத்கஜன் இரு கைகளையும் விரித்து வரும்படி அழைத்தான். சுதசோமன் மற்போர் முறையில் நிலைமண்டிலமாக நின்று இரு கைகளையும் விரித்து கூர்ந்துநோக்கியபடி மெல்ல அணுகினான். ஒருகணத்தில் அறைவோசையுடன் இருவரும் பாய்ந்து உடல்முட்டிக்கொண்டனர். ஒருவர் ஒருவரை கவ்வியபடி பெருந்தோள்கள் பின்னி முறுகி தசையதிர விசைநிகர் கொண்டு சுற்றிவந்தனர். இரு உடல்களும் ஒன்றையொன்று உந்தி தசைகள் இழுபட்டு தெறிக்க மெல்ல சுழன்றன. ஓசையில்லாமல் வெறும் விழிகளாலேயே உள்ளம் உடைந்து தெறிக்குமளவுக்கு பெருவிசையை உணரமுடிவது அசங்கனை வியப்பிலாழ்த்தியது.

தசைகள் உரசிக்கொள்ளும் முறுகலோசை எழுந்தது. ஒருகணத்தில் தன் காலால் கடோத்கஜன் காலை தடுக்கி அவனை பின்னால் தள்ளி விழவைத்தான் சுதசோமன். அவன் மல்லாந்து விழ அவன் மேல் தான் விழுந்து அவனுடைய இரு கால்களையும் தன் கால்களால் பின்னிக்கொண்டு தோளை நிலத்துடன் அழுத்திக்கொண்டான். கடோத்கஜன் நகைக்க சுதசோமன் எழுந்து நின்று கைநீட்டி அவனை தூக்கினான். சர்வதன் பாய்ந்து கடோத்கஜனை தழுவிக்கொள்ள அவர்கள் மூவரும் உடல் தழுவி மாறி மாறி தோள்களில் தட்டிக்கொண்டு நகைத்தனர். பிரதிவிந்தியன் “இப்போது இருவரும் நிறைவுற்றிருப்பார்கள். இனி இப்புவியில் அவர்களை வெல்ல எந்தையும் பால்ஹிகரும் மட்டும் உள்ளனர்” என்றான். கடோத்கஜன் “ஆம், பெருந்திறலோர் இவர்” என்றான்.

சர்வதன் “நான் அகன்று நின்று நோக்குகையில் தெரிகிறது மூத்தவரே, நீங்கள் எங்களை வெல்லவிடுகிறீர்கள்” என்றான். “ஏன் சொல்கிறாய்?” என்று கடோத்கஜன் கேட்டான். “உங்கள் பெருங்கைகளுக்கு எங்கள் உடல்கள் ஒரு பொருட்டே அல்ல. உங்களுடன் போரிட வேண்டுமென்றால் ஒன்றே வழி. உங்கள் கைகளுக்கு சிக்கக் கூடாது. நீங்கள் அறைவதை ஒழிந்துகொண்டே இருக்கவேண்டும்” என்றான். கடோத்கஜன் அவன் தோளை அறைந்து நகைத்தான். சுதசோமன் “ஆம், நானும் இப்போது அதை உணர்கிறேன். முழு வல்லமையையும் கைகளுக்கு அளிக்காமல் ஒழிந்தீர்கள்” என்றான். “நாம் பிறிதொருமுறை மெய்யாக போரிடுவோம்” என்றான் கடோத்கஜன்.

“மூத்தவரே, நீங்கள் தந்தை பீமசேனரை வெல்லக்கூடுமா?” என்றான் சர்வதன். “அவரை எவரும் வெல்லமுடியாது…” என்றான் கடோத்கஜன். “அவரை வெல்லற்கரியவராக ஆக்குவதே என் கடமை.” “அவரை இன்னும் முதுதந்தை பால்ஹிகர் களத்தில் சந்திக்கவில்லை. அவர்களின் போரை அனைவரும் எண்ணி நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சர்வதன். “நீங்கள் இன்று களத்தில் பால்ஹிகரை எதிர்கொள்க, மூத்தவரே!” என்றான் சுதசோமன். “நாங்களும் வருகிறோம். மூவரும் சேர்ந்து அவரை சூழ்ந்து கொள்வோம்” என்றான். “ஆம், அவரை களத்தில் எதிர்ப்போம்” என்றான் கடோத்கஜன்.

“நேற்றும் இன்றும் களத்தில் அவராடிய கொலையாடல் எண்ண எண்ண மெய்ப்புகொள்ளச் செய்வது. அசைக்க முடியத பெரும் கதாயுதம் ஒன்றை சங்கிலியால் கட்டித் தூக்கி யானை மேல் அமர்ந்திருக்கிறார். ஒரே அறையில் தேர்களை சிம்புகளாக தெறிக்கவிடுகிறது அது. யானைகள் எலும்புடைந்து விழுந்து குருதி பெருகுகிறது. புரவிகள் சிறு பேன்களைப்போல் நொறுங்கித் தெறிக்கின்றன. அவர் இருக்கும் இடத்தை எவரும் அணுக இயலவில்லை. எடைமிக்க கவசங்கள் அணிந்திருப்பதால் அம்புகள் எவையும் அவரை வீழ்த்துவதுமில்லை. ஒரு நிறைவுறா மூதாதை விண்ணிறங்கி பலிகொள்ள வந்ததுதான் அவர் என்று வீரர்கள் சொல்கிறார்கள்” என்றான் சுருதகீர்த்தி.

“மூதாதையை களத்தில் எதிர்கொள்வது என்பது ஒரு பேறு” என்றான் கடோத்கஜன். பிரதிவிந்தியன் “அவை கூடியிருக்கிறது. வருக!” என்றான். அவர்கள் யுதிஷ்டிரரின் அவைமாளிகை நோக்கி செல்கையில் பிரதிவிந்தியன் “தங்கள் வேங்கைத்தோலாடை பேரழகு கொண்டிருக்கிறது. மூத்தவரே, தொலைவிலிருந்து பார்க்கையில் சிறிய தந்தைக்கு பாசுபதம் அளித்த வெள்ளிமலை கிராதனே எழுந்து வருவதுபோல் தோன்றியது” என்றான். சதானீகன் “கிராதனுக்கு சடைத்தொகை உண்டு அல்லவா?” என்றான். கடோத்கஜன் அவன் தோளை மெல்ல அறைந்து உரக்க நகைத்தான்.

bowயுதிஷ்டிரரின் அவைக்குள் கடோத்கஜன் உத்துங்கன் தொடர நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் சேர்ந்தெழுப்பிய வியப்பொலி வாழ்த்துபோல் ஒலித்தது. கடோத்கஜன் அவையை நோக்கி வணங்கி “என் பெயர் கடோத்கஜன். நான் என் தந்தைக்கு உதவும்பொருட்டு போரிட வந்தேன்” என்றான். யுதிஷ்டிரர் சிரித்து “எங்கே முறைமைச்சொல் எதையாவது உனக்கு பயிற்றுவிப்பதில் சாத்யகியின் மைந்தன் வெற்றிபெற்றிருப்பானோ என அஞ்சினேன்… நன்று. அமர்க!” என்றார். கடோத்கஜன் அமர்ந்து கால்களைத் தூக்கி இருக்கைமேல் மடித்து வைத்துக்கொண்டான். இரு கைகளும் இருபக்கமும் தொங்கின. அவனருகே தரையில் உத்துங்கன் அமர்ந்தான்.

“இருக்கை உள்ளது” என ஏவலன் மெல்ல சொல்ல உத்துங்கன் “இல்லை, எனக்கு தரையிலமர்வதே உகந்தது” என்றான். யுதிஷ்டிரர் “மைந்தா, இன்று நிகழவேண்டிய போரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய போரில் நாம் வென்றுள்ளோம். அவர்களுக்கு பேரிழப்பு. அவர்களின் சூழ்கையை இளையோன் உடைத்துவிட்டான் என்பதே அவர்களுக்கான செய்திதான். இன்றும் நாம் வென்றாகவேண்டும்… அதன்பொருட்டே நாம் படைசூழ்கை அமைத்துள்ளோம்” என்றார்.

“படைசூழ்கை என்றால் என்ன?” என்றான் கடோத்கஜன். அவை நகைக்க பீமன் “உனக்கு கல்வி கற்பிக்கும் இடமல்ல இது. அமைதியாக இருந்து பேசுவதை செவிகொள்க!” என்றான். கடோத்கஜன் தலைவணங்கினான். யுதிஷ்டிரர் “சொல்லும் திருஷ்டத்யும்னரே, இன்றைய சூழ்கை என்ன?” என்றார். “இன்றும் அவர்கள் பருந்துச்சூழ்கை அமைக்கவே வாய்ப்பு” என்றான் திருஷ்டத்யும்னன். “ஏனென்றால் பீஷ்மரை மையமாகக் கொண்ட சூழ்கையையே அவர்கள் அமைக்கவியலும்… ஆனால் நாரைச்சூழ்கை அமைத்து பீஷ்மரை நம் படைகளுக்குள் ஊடுருவ விடமாட்டார்கள்… பீமசேனர் நேற்று பருந்தின் கழுத்தையே உடைத்துவிட்டபின் நீள்கழுத்துள்ள சூழ்கையை அமைப்பது அறிவின்மை.”

“அவர்கள் இம்முறை பருந்தின் கழுத்தை மும்மடங்கு வலுவாக அமைப்பார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “சென்றமுறை ஆற்றல்குறைவான கலிங்கர்களை அங்கே நிறுத்தியதுபோன்ற பிழையை செய்யமாட்டார்கள்.” அவன் தன் கையிலிருந்த தோல்சுருளை நீட்ட அதை ஏவலன் வாங்கி யுதிஷ்டிரருக்கு அளித்தான். “நாம் கழுகை பிடிக்கும் வலுவான வலை ஒன்றை அமைப்போம். நம் படைக்கு அரைநிலவுச் சூழ்கையை அமைத்திருக்கிறேன். அணைக்க விரிந்த மல்லனின் கைகளைபோல அது விரிந்திருக்கும். நம் வீரர்கள் அனைவருமே முன்னணியில் இருப்பார்கள். நாம் இலக்காக்குவது ஒன்றே, முடிந்தவரை அனைவரும் சேர்ந்து தாக்கி பீஷ்ம பிதாமகரை இன்றே வெல்வது…”

“ஆம், அவரை வெல்லாமல் இனி நாம் படைநடத்தவே இயலாது. நம் படைகள் பாதிப்பங்கு அவரால் கொல்லப்பட்டுவிட்டன” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “இனி எவரும் தனித்தனியாக பிதாமகரை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அது இயலாதென்பது உறுதியாயிற்று. நம் படையின் அனைத்து வில்லவரும் இணைநிரையாக நிற்கட்டும். வலை விரிந்து விரிந்து அவரை உள்ளே இழுத்துக்கொண்டு சுருங்கிச் சூழ்ந்து அழிக்கட்டும்” என்றான். குந்திபோஜர் “ஒரே ஒருவரை முன்வைத்த போர்” என முனகினார். திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி திரும்பி “ஆம், மெய். ஆனால் அவர்கள் எடுப்பதும் ஒற்றை ஒருவரை மையமாக்கிய சூழ்கையே” என்றான்.

யுதிஷ்டிரர் சுருளைச் சுருட்டி பீமனிடம் அளித்துவிட்டு “நன்றாகவே உள்ளது. இது வெல்லவேண்டும்” என்றார். பீமன் நோக்கிவிட்டு “ஆம், இதைவிடச் சிறந்த சூழ்கை இயல்வதல்ல” என்றான். சாத்யகி “படைமுகப்பில் நிற்பவர்களில் வில்லவர் அல்லாதோர் எவர்?” என்றான். “நான் நிற்கிறேன்” என்றான் பீமன். பின்னர் “என் மைந்தனும் முன்னிரையில் நிற்கட்டும்…” என்றான். திருஷ்டத்யும்னன் “அவர்களை பார்த்தேன்… அவர்களிடம் படைக்கருவிகள் இல்லை. விற்களை கேட்டும் அறியாதோர் போலிருக்கிறார்கள். தேரிலோ புரவியிலோ ஊர்வதற்கும் பயிற்சியில்லை. அவர்களை எப்படி முன்னணியில் நிறுத்துவது?” என்றான்.

“அவர்களைப்பற்றி நான் நன்கறிவேன்” என்றான் பீமன். “இப்போரில் அவர்களே முதன்மை வீரர்கள் நம் தரப்பில். அவர்களின் விசையை நாம் தேரிலேறியும் அடையமுடியாது.” திருஷ்டத்யும்னன் “எங்ஙனம்? அதை சொல்லுங்கள்” என்றான். “அவர்கள் காற்றின் மைந்தர்… காற்றே அவர்களின் ஊர்தி” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “நீங்கள் சொன்னால் மறுசொல்லில்லை. ஆனால்…” என்றான். “களத்தில் காண்போம்” என்றான் பீமன். அசங்கன் திரும்பி கடோத்கஜனை நோக்கினான். அந்தப் பேச்சே தன்னைப்பற்றியதல்ல என்பதுபோல் அவன் அமர்ந்திருந்தான். மெய்யாகவே அங்கு பேசப்படுவன அவனுக்கு புரியவில்லை என்று தெரிந்தது.

“சூழ்கைக்கான ஆணைகள் எழுதப்பட்டுள்ளன எனில் அவற்றுக்கு அமைச்சர்களே அரசச்சாத்து அளிக்கட்டும்… அவை கலையலாம்” என்றபடி யுதிஷ்டிரர் எழுந்தார். அவையினரும் எழுந்தார்கள். நிமித்திகன் எழுந்து சங்கொலி எழுப்பி யுதிஷ்டிரரின் புகழ்கூறி அவை கலைவதை அறிவித்தான். யுதிஷ்டிரர் கைகூப்பியபடி நகுலனும் சகதேவனும் தொடர நடந்து வெளியே சென்றார். பீமன் அவைமேடையில் இருந்து கீழிறங்கி வந்து கடோத்கஜனை அணுகி அவனை நோக்காமல் கடுமையான குரலில் “சென்று இளைய யாதவரை வணங்கி வாழ்த்து கொள்க!” என்றான்.

கடோத்கஜன் இளைய யாதவரை சில கணங்கள் நோக்கிவிட்டு “தாங்கள் சொன்னால் நான் வாழ்த்து கொள்கிறேன், தந்தையே. ஆனால் நான் இவரிடம் வாழ்த்து கொள்ள விரும்பவில்லை” என்றான். பீமன் சினத்துடன் கையை ஓங்கியபடி திரும்பி “என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்று கூவினான். இளைய யாதவர் புன்னகையுடன் நோக்க பீமன் தன்னை அடக்கி “நீ சொல்வதென்ன என்று அறிவாயா?” என்றான். கடோத்கஜன் “நான் இங்கு வந்த பின்னர்தான் அறிந்துகொண்டேன். இந்தப் போரே இவருக்காகத்தான். இவர் சொல்லும் எதையோ இங்கே நிலைநாட்டத்தான்” என்றான். பீமன் உரக்க “ஆம், அவருடைய சொல் நிலைகொள்ளும்பொருட்டே இப்போர்” என்றான்.

“தந்தையே, எவருடைய சொல்லும் மானுடரின் அழிவுக்கு நிகரானதல்ல. சொல்லுக்காக மானுடர் சாவதைப்போல் வீண்செயல் வேறில்லை” என்றான் கடோத்கஜன். “அவ்வாறென்றால் நீ ஏன் இங்கே வந்தாய்?” என்று பீமன் கூவியபடி மீண்டும் கடோத்கஜனை அறைய கையோங்கினான். அவனை அஞ்சாமல் நோக்கி கடோத்கஜன் “தங்களுக்காக” என்றான். “நான் என் மூதன்னைக்கு அளித்த சொல்லுக்காக. அதன்பொருட்டு கொல்கிறேன். ஆனால் ஒரு மானுடன் இன்னொருவனை கொல்லவேண்டுமென்றால் அது தனிப் பகைக்காகவும் தனிப் போரிலும் மட்டுமே நிகழவேண்டும். பிற இறப்புகள் அனைத்தும் வீண்கொலையே.”

“நீ எனக்காக வரவேண்டியதில்லை… கிளம்பு… என் ஆணை, கிளம்பு!” என்று பீமன் கூவினான். கடோத்கஜனின் தோளைப்பற்றி தள்ளி “செல்… இப்போதே செல்!” என்றான். “அதை சொல்லவேண்டியவர் உங்கள் மூத்தவர், பாண்டவரே” என்றார் இளைய யாதவர். “அல்லது நான்.” பீமன் தளர்ந்து “இவன், இந்த அறிவிலி…” என்று கைசுட்டி நடுங்கினான். அவன் முகம் சிவந்து மூச்சிரைத்தது. சுடரொளியில் முகம் வியர்வையால் மின்னியது. “அவர் தன் தொல்மரபிலிருந்து பெற்ற மெய்மையை சொல்கிறார்” என்றார் இளைய யாதவர். “ஆனால் இப்போரில் ஒவ்வொரு படைக்கலமும் நமக்கு தேவை.”

பீமன் இருவரையும் மாறிமாறி நோக்கியபின் திரும்பி நடந்து வெளியே சென்றான். இளைய யாதவர் “நீங்கள் உங்கள் தந்தையின்பொருட்டு களம்நிற்க வேண்டும், அரக்கரே. உங்கள் தந்தை இப்போரில் வென்றாக வேண்டும்” என்றார். “அவர் இக்களத்தில் வெல்வார்” என்றான் கடோத்கஜன். “ஆனால் முழுமையாகவே தோற்பார்.” இளைய யாதவர் அதே புன்னகையுடன் நோக்கிநிற்க “பெரியவர்கள் தோற்றாக வேண்டும். மிகப் பெரியவர்கள் முற்றாக தோற்கவேண்டும். அதுவே இவ்வுலகின் நெறி” என்றான் கடோத்கஜன். இளைய யாதவர் “ஆம், மெய்” என்று அவன் தோளில் தட்டியபின் வெளியே நடந்தார். கடோத்கஜன் திரும்பி அசங்கனை நோக்கி பெரிய பற்கள் தெரிய புன்னகைத்தான்.

தொடர்புடைய பதிவுகள்


பெருங்கனவின் வெளி

$
0
0

kotravai_FrontImage_201

கொற்றவை வாங்க

 

 

கருமை ஔிகொண்டு நீலமாவதைப் போல இந்தநாவல் வாசிப்பிற்கு பிறகு நம் அறியாமைக்குள் ஒருஔி விரிகிறது.காலாதீதத்தை உணரும் ஒரு தருணம்.இயற்கையின் முன் நாம் கட்டியெழுப்பியவைகள் மீது வியப்பும்,ஆர்த்தமின்மையும் ஒரே நேரத்தில் எழுகிறது. இந்தவயதில் பற்று குறைவது குறித்து சிந்திக்கையில், தமிழ் என்னும் பேருண்மை வந்து அணைத்து இயற்கையை,வாழும் கணம் என்ன என்பதன் பொருளை சொல்லித்தர தொடங்குகிறது.மொழி அன்னையாகும் தருணம்.அவள் தருவது வாழ்வென்னும் அமுதம்.

 

 

கொற்றவை – ஒரு விமர்சனம்  பெருங்கனவின் வெளி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அகம்

$
0
0

பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய -ராக் இசைக்குழு அகம் அமைத்த பாடல்கள். மிகச்சிறந்த மரபிசைக்குரல்கள் உருவாக்கும் அதே அகக்கொந்தளிப்பையும் அமைதியையும் இப்பாடல்கள் உருவாக்குவது ஆச்சரியமானதுதான். ஹரீஷ் சிவராமகிருஷ்ணனின் குரல் அற்புதமானது

 

 

 

 

 

https://youtu.be/oESni03J8h8

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வாசிப்பில் ஓர் அகழி

$
0
0

book-stalls1

இனிய ஜெயம் ,

அமிஷ் நாவல்கள் குறித்த வினாவுக்கு உங்களது பதில் வாசித்தேன் . அதில் ஒரு விளங்காத இடம் கிடந்தது உறுத்திக்கொண்டே இருக்கிறது . எந்த ஒரு பெஸ்ட் செல்லரும் தன்னளவில் ஒரு வாசிப்பு இயக்கத்தை உருவாக்குகிறது .அதன் படி பார்த்தால் உங்களது தேவை டான் ப்ரௌன்கள் கட்டுரையில் நீங்கள் சொன்னபடி, சேத்தன் பகத்தையும், டான் ப்ரௌனையும் ஒரு நூறு பேர் வாசிக்கும் நிலை இருந்தால்தான் அதிலிருந்து நுண்ணர்வு கொண்ட பத்து பேர் , ஓரான் பாமுக் , முரகாமி நோக்கி வருவார்கள் .

அதே சமயம் அமிஷ் நாவல்கள் மீதான பதிலில் நீங்கள் சொன்னது போல

//இந்த வாசகர்கள் அந்த வாசிப்பிலிருந்து இலக்கியவாசிப்புக்கு பெரும்பாலும் வருவதில்லை. ஏனென்றால் அந்த மேலோட்டமான வாசிப்புக்குப் பழகிவிடுகிறார்கள். அது மேலான வாசிப்பு என்னும் மனநிலையிலும் இருக்கிறார்கள். அதைக்கடந்துசெல்ல அவர்களுக்கு மிகப்பெரிய உடைப்பு ஒன்று தேவை. அது நிகழ்வதில்லை. கல்வித்துறையிலோ, சமூக வலைத்தளத்திலோ அதற்கான இயல்பான வாய்ப்புகள் இல்லை.
ஏனென்றால் இவர்கள் கல்வி, வேலை போன்ற நிலைகளில் நிலைபெற்றவர்கள் என்பதனால் தாங்கள் வெற்றிகரமானவர்கள், ஆகவே உயர் அறிவுத்திறன் கொண்டவர்கள் என நம்புகிறார்கள். ஆகவே அவர்களை விடமேலான அறிவுத்தளம் ஒன்று அவர்களை உடைக்க முடியாது. தங்கள் ஆணவத்தால் மிகமிகத்தீவிரமாக அதை எதிர்ப்பார்கள். தங்களுக்கு மேல்நிலையிலிருந்து ஒன்று சொல்லப்படுகையில் எள்ளல் நக்கல் வழியாக அதை எதிர்கொள்வார்கள். எள்ளலைப்போல ஒருவனை ஆணவத்தின் சிறையில் அடைத்துப்போடும் ஆற்றல்கொண்டது வேறில்லை.//

இதுவும் உண்மை .

எனில் ஒரு வாசகனாக இந்த நிலை எனக்கு பெரிதும் அச்சமூட்டுகிறது . இத்தனை பொழுது போக்கு வாசிப்பும் எவரையோ பணக்காரர் ஆக்குவதன்றி வேறு எதற்காகவும் இல்லையா ? பொழுது போக்கு வணிகசினிமா ,பொழுது போக்க சமூகநட்புவெளி ,தொலைக்காட்சி சீரியல்கள் போல , கேளிக்கை வாசிப்பும் , [ வாசிப்பு பயிற்சி வழியே தீவிர இலக்கியத்துக்கு வாசகனை கொண்டு சேர்க்கும் பாதையாக இல்லாமல் ] தடுப்பு சுவராக இருக்கிறதா ?

கடலூர் சீனு

 

NSP_2640a

 

அன்புள்ள சீனு

 

 

எனக்கே இந்தக் குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக வணிக எழுத்துக்களின் வாசிப்பிலிருந்து நுண்ணுணர்வு கொண்டவர்கள் இலக்கியம் நோக்கி வந்தாகவேண்டும். இளமையில் ஒரு குறிப்பிட்ட காலம் தொடர்ந்து வாசிப்பவர்கள் அங்கே வந்துவிடுவது இயல்பானது. ஆனால் இப்போது அப்படி நிகழ்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே பதில்

’நமக்குத்தேவை டான் பிரவுன்கள் ’ என்னும் கட்டுரையில் நான் சொன்ன முக்கியமான விஷயத்தைல் இப்போதும் வலியுறுத்த விரும்புகிறேன். வணிகரீதியான எழுத்துக்கு சில அறிவுத்தளப் பயன்பாடுகள் உண்டு. அதன் வணிகப்பேரமைப்பு – விளம்பரம் காரணமாக அது பரவலாகப் போய்ச் சேர்கிறது. ஆகவே இளமையிலேயே அது வாசகர்களை கண்டடைகிறது. அந்த வாய்ப்பு இலக்கியத்திற்கு இல்லை.

வணிக எழுத்து மொழிவழி அறிதலை, மொழிவழி கேளிக்கையை பயிற்றுவிக்கிறது. ஆகவே ஒரு நூலைப் பொறுமையாக வாசிக்கும் பயிற்சியை வாசகன் அடைகிறான். அது இன்றைய சூழலில் முக்கியமானது. மொழியை கற்பனை வழியாக காட்சியாக, வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளும் உளப்பயிற்சியை இவ்வாசிப்பு அளிக்கிறது. வாசிப்பை ஒரு சமூக இயக்கமாக நிலைநிறுத்த வணிக எழுத்தால் இயலும். ஆகவே நமக்கு டான் பிரவுன்கள் தேவைதான்.

அப்படியென்றால் இந்தத் தடை எதனால்? நான் இரண்டு கோணங்களில் யோசிக்கிறேன். ஒன்று, நுகர்வோர் உளநிலை. எழுத்து – வாசிப்பை ஒருவகை நுகர்வோர் என அணுகுவது, நூலை நுகர்பொருளாக பார்ப்பது, எழுதுபவனை தனக்கு ஒரு சேவையை அல்லது உற்பத்திப்பொருளை அளிப்பவனாக நினைப்பது இன்றைய வழக்கமாக உள்ளது. எனக்கே நான் இன்னும் ‘நுகர்வோருக்கு அணுக்கமானவனாக’ இருக்கலாமே என வாரம் ஒரு கடிதம் வருகிறது.

நுகர்வுப் பண்பாட்டின் நெறிகள் சில உண்டு. அங்கே நுகர்வோரே முக்கியமானவர், முடிவுசெய்பவர். அவருடைய ரசனை, நம்பிக்கை, கருத்துநிலைக்கு ஏற்ப உற்பத்தி செய்து அவருக்கு உகந்த வகையில் கொண்டுசென்று சேர்ப்பது சேவையாளன் – உற்பத்தியாளனின் கடமை. அதற்குப் நிகராக அவன் லாபத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த உளநிலையே இலக்கியத்திற்கு எதிரானது. எந்நிலையிலும் இலக்கிய எழுத்தாளன் உற்பத்தியாளனோ, சேவையாளனோ அல்ல. அவனுக்கு வாசகனுக்குமான உறவு நுகர்வுப்பண்பாடு சார்ந்ததும் அல்ல. இலக்கியத்தில் வாசகமையச் சிந்தனைகள் , ஏற்புக்கோட்பாடுகள் பல வந்துகொண்டிருக்கின்றன. ஆசிரியன் முக்கியமல்ல பிரதியே மையம் என்ற கோணம் உள்ளது. ஆனால் எந்நிலையிலும் படைப்புக்கு முதன்மையான கூறு ஆசிரியனே. ஆசிரியனின் வெளிப்பாடே இலக்கிய ஆக்கம். அதிலிருந்து ஆசிரியனை விலக்கவே முடியாது.

ஆசிரியன் எழுதும்போது அங்கே வாசகன் இல்லை. அவன் எழுதுவது எழுத்தினூடாகத் தன்னைக் கண்டடைய. தன்னை ஒளித்து தன்னிலிருந்து வேறொன்றை எடுக்க. அது ஒரு முடிவிலா விளையாட்டு. ஒருநிலையிலும் புனைவெழுத்தின் ஆக்கத்தில் வாசகனின் ரசனைக்கோ , எதிர்பார்ப்புக்கோ இடமில்லை. தன்னை வாசிப்பவர்களின் அறிவுத்தகுதியோ ஏற்போ கூட எழுதுபவனுக்கு பொருட்டல்ல. எந்த இலக்கிய எழுத்தாளனும் தன் சமகாலச் சூழலுக்காக எழுதுவதில்லை.

எழுத்து எழுத்தாளனிலிருந்து வெளிப்பட்ட பின்னர் அதை வாசகன் அடைகிறான். தன் கற்பனையினூடாக அப்புனைவை விரிக்கிறான். ஆசிரியனுடன் ஓர் உரையாடலில் ஈடுபடுகிறான். அது அப்புனைகதை உருவாக்கி அளிக்கும் ஆசிரியப் படிமம் மட்டுமே. எத்தனைக் கோட்பாட்டாளர்கள் என்னென்ன பேசினாலும் நூலாசிரியன் வாசகனுக்கு அவ்வாசிப்பின், விவாதத்தின் தருணத்தில் கற்பிப்பவனாகவே இருக்கிறான்.

அவ்வாறு இருக்கையில் மட்டுமே வாசிப்பு ஒரு அறிவுப்பரிமாற்றமாக, மெய்த்தேடலாக ஆகிறது. அந்த மதிப்பை வாசகன் ஆசிரியனுக்கு அளிக்கவில்லை என்றால் ஆசிரியன் மறைந்துவிடுகிறான். கூடவே நூலும் வாசிப்பும் பொருளிழந்துவிடுகிறது.எஞ்சியிருப்பது மொழியாலான ஒரு சடலம். அதைக் கூறுபோட்டு ஆராயலாம். கல்வித்துறைச் சழக்குகளுக்கோ ஆணவவெளிப்பாட்டுக்கோ உதவும். இலக்கியத்திற்கே உரிய கற்பனை சார்ந்த அறிதல்முறை, நுண்ணுணர்வுசார்ந்த அறிதல்முறை இல்லாமலாகிவிடும்.

நுகர்வுப்பண்பாட்டில் இருப்பது இதுவே. அங்கே ஆசிரியன் கற்பிப்பவன் அல்ல. அவன் வாசகனுக்கு சேவை செய்பவன், வாசகன் விரும்புவதை சமைத்தளிப்பவன். இன்றைய பெரும்பிரசுர நிறுவனங்கள் தங்கள் தொழிலை வேறு நுகர்பொருள் வணிகம் போலவே செய்கின்றன. வாசகர்களை நுகர்வாளர்களாகவே பயிற்றுவிக்கின்றன. அந்தப் பயிற்சியை உடைத்து வெளியே வந்து ஆசிரியனை கற்பிப்போனாக, நூலை ஒரு மெய்த்தேடல் வடிவமாகக் காணவேண்டியிருக்கிறது.

அதற்கு வாசகனின் ஆணவத்தை உடைக்கும் ஆற்றல்மிக்க வழிகாட்டிகள் தேவை. அல்லது வலுவான வாழ்க்கையனுபவங்கள் தேவை. இல்லையேல் அதே சுழற்சியில் உழலவேண்டியதுதான். நுகர்வுக்கே உரிய பல கொள்கை வரிகள் உள்ளன. ‘எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? எல்லா எழுத்தும் யாரோ ஒருவருக்கு நல்ல எழுத்துதான்’ என்பது அவற்றில் ஒன்று. அப்படி பல. இவ்வரிகள் இலக்கிய விழுமியங்களை உடைக்கின்றன. அவ்வாறாக இலக்கியம் என்பதையே உடைக்கின்றன. வாசிப்பை வெறும் கேளிக்கையாக மாற்றிவிடுகின்றன. இதைக் கடக்காமல் இலக்கியத்தை அடையவே முடியாது.

அடுத்த தடை என்பது நான் முன்னரே சொன்னதுபோல இன்றைய இணைய வலைத்தள வாய்ப்புகள். அனைவருமே எதையாவது எழுதலாம். எழுதுபவரெல்லாம் எழுத்தாளராகச் சொல்லிக்கொள்ளலாம். அந்த சூழல் மெல்ல மெல்ல எதையுமே தேடாத ஒரு தன்னிறைவு நிலையை, இறுகிய அறிவின்மையை உருவாக்கிவிடுகிறது.

இன்று ஒரு கடிதம். ஒருவர் இணையத்தில் எவரோ எழுதியதை வெட்டி ஒட்டி ஐயம் கேட்டிருந்தார். காடு நாவலில் ‘மீன் விழுங்கிய பறவை எழுந்து பறக்க’ என ஒரு வரி வருகிறது. ‘மீன் விழுங்கிய பறவை எப்படி ஆசானே எழுந்து பறக்கும்? “மீனை” என்று சரியாக எழுதினால் என்ன கெட்டு போகும்?’என்று யாரோ அறிவுக்கொழுந்து சமூக வலைத்தளத்தில் சொல்ல இவர் அதை ஐயமாகக் கேட்டிருக்கிறார். நல்லவேளை அதைக் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டும் என்றாவது இவருக்குத் தோன்றுகிறது. இவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை எழுதியவருக்கு தனக்குத் தெரியாமலிருக்கக்கூடும் என்ற ஐயம்கூட இல்லை. எவரிடமும் கேட்கவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. நூலில் பார்க்கவும் முனையவில்லை. நேரடியாக நக்கல்.அந்த உளநிலை அக்கணமே ஆசிரியனைக் கொன்று வெற்றுச்சடலத்தை அளிக்கிறது. அதன்பின் இருப்பது பிண ஆராய்ச்சி.

அறிந்த எவரிடமேனும் கேட்டிருந்தால் எத்தனை விளக்கங்கள் கிடைத்திருக்கும். தமிழிலக்கணத்தின்படி அச்சொல்லாட்சி முற்றிலும் சரியானதே. ’தேன் உண்ட வண்டு’என்றால் வண்டை உண்ட தேன் என்று பொருள் இல்லை. மையுண்ட கண்கள் என்றால் மை கண்களை உண்டது என்று பொருள் இல்லை.அந்தத் தருணமே சொற்பொருளை உருவாக்குகிறது. எந்த மொழியிலும் சொற்தருணத்திலிருந்து விலக்கி சொற்பொருள் கொள்ள இயலாது.

ஐ விகுதி, செயப்பாட்டு வினை போன்றவை தமிழில் பிற்பாடு வந்தவஒதான். தமிழின் தொன்மையே அதற்கு மாறாத இலக்கணநெறிகள் அமைவதை தடுக்கிறது.செய்திக்கட்டுரைக்குரிய தெள்ளத்தெளிவான மொழிநடை இலக்கிய ஆக்கத்திற்குப் பொருந்தாது. அந்த இலக்கணத்தைக்கொண்டு படைப்புகளை அணுகவுமியலாது.

தமிழ் தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கிறது. சொற்கள் நடுவே இடைவெளி விடுவதென்பது சென்ற நூறாண்டுகளில் உருவானது. சொல் நடுவே இடைவெளிகள் விடுவது மேலும் மேலும் கூடிக்கொண்டே செல்கிறது. இச்சொல்லிடைவெளிகளே தமிழை ஒரு நவீனமொழியாக நிலைநிறுத்துகின்றன. இந்த மாற்றங்களினூடாக தமிழைப் புரிந்துகொள்வதற்கு உரைநடையில் தொடர்ந்து வாசித்துச் செல்லும் வழக்கம் தேவை. எட்டாம்வகுப்பு இலக்கணத்தை வைத்து நவீன இலக்கியவாசிப்பை நிகழ்த்தமுடியாது

இத்தனை விஷயமும் அந்த தன்னம்பிக்கையாளருக்குச் சொல்லவேண்டும். எனக்கு எழுதியவரிடம் எவரேனும் அந்த வலைத்தளச் சிந்தனையாளருக்கு அதைச் சொன்னார்களா என்று கேட்டேன். இல்லை என்றார். அங்கே அதற்கு வாய்ப்பே இல்லை. ஆகவே அந்த அறியாமை சில ஆண்டுகளிலேயே உடைக்கமுடியாத ஆணவமாக ஆகிவிடும். அதன்பின் இலக்கியம் அல்ல எந்தப் புதிய அறிவும் சாத்தியமல்ல. இதுவே இன்றைய நிலை

இத்தனைக்கும் அப்பால் இருப்பது ஒரு நம்பிக்கை, மானுடனின் அறிவுவேட்கையும் மெய்த்தேடலும் அழியாதது. அது குறையலாம், ஒழியாது. தனக்குரிய உள்ளங்களை அது கண்டடைந்தபடியேதான் இருக்கும்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது –திசைதேர் வெள்ளம்-20

$
0
0

bowதுரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து களைப்புடன் உடலை நீட்டிக்கொண்டு அருகே வந்து தலைவணங்கிய விகர்ணனிடம் தாழ்ந்த குரலில் சில ஆணைகளை பிறப்பித்துவிட்டு அவையை சிவந்த கண்களால் நோக்கினான். ஒருகணம் அவன் விழி வந்து தன்னை தொட்டுச்செல்வதைக் கண்டு லட்சுமணன் உளம் இறுகி மீண்டான். அவ்வப்போது அவனை அவையிலும் பொதுவிலும் துரியோதனனின் விழிகள் வந்து தொட்டுச்செல்வது அண்மைக்கால வழக்கமாகிவிட்டிருந்தது. முன்பெல்லாம் துரியோதனன் அவன் இருப்பதையே அறியாதவன் போலிருப்பான். அரிதாகவே விழிதொடுவான். அவனை அதுவரை மிகச் சில முறையே உடல்தொட்டிருக்கிறான்.

லட்சுமணன் தந்தையை நோக்கியபடி அவையை முற்றிலும் மறந்து அமர்ந்திருந்தான். துரியோதனன் மிகவும் உடல் தளர்ந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது. முந்தைய நாளிரவு அவன் இயல்பான துயிலை அடைந்திருக்க வாய்ப்பில்லை. நெடுநாட்களாகவே நற்துயில் இல்லாமை அவனது கண்களைச் சுற்றி கருமையையும் தோல்சுருக்கத்தையும் உருவாக்கியிருந்தது. இமைகள் தடித்து உதடுகள் கருகியிருந்தன. பிறர் பேசிக்கொண்டிருக்கையில் அவன் விரல்கள் பொறுமையிழந்து அசைந்துகொண்டிருப்பதை, காற்றில் எதையோ எழுதி அழிப்பதை லட்சுமணன் கண்டான். துர்மதன் துரியோதனனை அணுகி ஏதோ சொல்ல முகம் சுளித்து வேண்டாம் என்று தலையசைத்து விலகிச்செல்லும்படி கைகாட்டினான். அமைச்சர் அவை தொடங்கலாமா என விழிகளால் வினவ துச்சாதனன் ஆம் என தலையசைக்க அமைச்சர் வாழ்த்துரையுடன் அவை தொடங்கவிருப்பதை அறிவித்தார்.

அவை அமைதியாகவே இருந்தது. துச்சாதனன் பூரிசிரவஸை நோக்கி விழிகளால் பேசத்தொடங்கும்படி கோரினான். மேலாடையை இரண்டுமுறை சீரமைத்தபடி பூரிசிரவஸ் எழுந்து “அரசே, இன்றைய படைசூழ்கையை ஆசிரியர் துரோணர் வகுத்துள்ளார். இன்றும் பருந்துச்சூழ்கையே உகந்ததென்பது அவரது எண்ணம். ஒற்றை வீரரை முன் நிறுத்தி முழுப் படையும் போரிடுவதற்கு உகந்த வடிவம் அது. இன்றும் நமது முதன்மை படைக்கலம் பீஷ்ம பிதாமகரே. அவரை வெல்ல அவர்களில் எவராலும் இயலாதென்பது இரு நாட்களில் நிறுவப்பட்டுவிட்டது” என்றான். “அவர்களும் இன்று நாரைச் சூழ்கையை அமைக்கக்கூடும் என்றனர்” என்றார் சல்யர். பூரிசிரவஸ் “ஆம், அவர்களுக்கும் அர்ஜுனனே முதன்மை படைக்கலம்” என்றான்.

ஜயத்ரதன் “அல்ல, நேற்றைய போரில் பீமன் காட்டிய பெருவிசையையும் நிலைபெயரா உறுதியையும் அர்ஜுனன் வெளிப்படுத்தவில்லை. இன்னமும்கூட படைமுகப்பில் சற்றே கைதளர்பவனாகவே அவன் இருக்கிறான்” என்றான். “ஏன்?” என்று கிருதவர்மன் கேட்டான். “நேற்று பிதாமகரிடம் அவர் புரிந்த போரை நானும் பார்த்தேன். எவ்வகையிலும் கைத்தளர்வும் உளச்சோர்வும் தென்படவில்லை.” ஜயத்ரதன் புன்னகைத்து “கைகளிலோ அம்புகளிலோ அத்தளர்வு தென்படாது. அது உள்ளத்தின் ஆழத்தில் இருப்பது. மிக அகன்றிருந்து நோக்கினால் அது தெரியும். அம்புக்கு கைசெல்வதில், நாண் இழுப்பதில் தெரியும் மிகுவிரைவு தொடுப்பதற்கு முன் அரைக்கணம், அரைக்கணத்தில் ஆயிரத்திலொரு அளவு தயங்குவதை காணலாம். அதைக்கூட முகவிழியால் அல்ல மெய்விழியால்தான் காண இயலும்” என்றான்.

அவை ஜயத்ரதனை நோக்கியது. சல்யர் “அது வெறும் உளமயக்கு” என்றார். “அகன்றிருப்பவனுக்கு உளமயக்கும் விழிமயக்கும் ஏற்படுவதில்லை” என்ற ஜயத்ரதன் “அவ்வாறென்றால்கூட தாழ்வில்லை. பீஷ்ம பிதாமகரை ஏன் அர்ஜுனன் வெல்ல இயலவில்லை என்பதற்கான விளக்கம் இதுவே” என்றான். “சொல்க!” என்றான் துரியோதனன். “அரசே, இன்னமும் அர்ஜுனன் போரில் அருங்கொலை எதையும் செய்யவில்லை” என்றான் ஜயத்ரதன். பூரிசிரவஸ் “அவர் கொன்று குவித்த நம் படைவீரர்களின் எண்ணிக்கை…” என சொல்ல ஜயத்ரதன் கைகாட்டி தடுத்து “அவர்கள் முகமில்லாதவர்கள். போரில் இறப்பதற்கென்றே பிறவி கொள்ளும் படைவீரர்கள். எதிர்த்து வரும் படைக்கலங்களேந்திய கைகள் மட்டுமே போரில் நம் விழிக்கு தெரியும். எதிரிவீரனின் விழிகளை எவரும் நோக்குவதில்லை” என்றான்.

“ஆம், படைவீரனை போரில் கொல்வதில் எந்த உளத்தடையும் ஏற்படுவதில்லை” என்றான் கிருதவர்மன். “போரில் மெய்யாகவே ஓர் அருங்கொலை நிகழ்வது கொல்பவன் தன்னாலும் பொறுத்துக்கொள்ள இயலாத ஒன்றை நிகழ்த்துகையில்தான்” என்றான் ஜயத்ரதன். “தன் அனைத்து எல்லைகளையும் மீறிச்சென்று அதை அவன் ஆற்றவேண்டும். அத்தருணத்தில் அவனுள் ஏதோ ஒன்று உடைவதை காண்கிறான். பிறகு ஒருபோதும் திரும்பிச்செல்ல முடியாத இடத்திற்கு வந்துவிட்டதை திகைப்புடன் திரும்பிப்பார்க்கிறான். அதை அவன் மீண்டும் எண்ணிப்பார்க்க விரும்புவதில்லை. அது இயல்பாக எழுந்துவரும்போது உடலும் உள்ளமும் தவிக்கிறான். அதை வெல்ல ஒரே வழிதான் உள்ளது, மேலும் மேலுமென அதையே செய்து உள்ளத்தை அதற்கு பழக்கப்படுத்துதல். அவ்வழியே நெடுந்தொலைவு சென்று மேலும் மேலும் நிகழ்வுகளால் முதற்கணத்தை மூடி புதைத்துவிடுதல்.”

லட்சுமணன் ஏனென்றே தெரியாமல் மெய்க்கூச்சம் அடைந்தான். உடல் தவிக்க கைகளை இறுகப்பற்றிக்கொண்டு தலைதாழ்த்தி பற்களை நெரித்தான். அங்கிருந்து எழுந்து ஓடிவிடவேண்டும் என்றே அகம் தவித்தது. ஜயத்ரதன் இவற்றை ஏன் சொல்கிறான்? அவன் அவ்வெல்லையை கடப்பதைப் பற்றி எண்ணி எண்ணி உளம்உருட்டிக்கொண்டிருக்கிறான். அவன் அவ்வெல்லையை உறுதியாக கடப்பான். பெரும்பழி ஒன்றை செய்வதற்கு முன் மானுடர் உளம்கிளர்கிறார்கள். அவர்களின் அகம் கொண்ட சலிப்பு முற்றாக விலகிவிடுகிறது. அதை அஞ்சித்தயங்கும் ஆழமே அவர்களை கொந்தளிக்கச் செய்து அதை அருநிகழ்வாக ஆக்கிவிடுகிறது. பெரும்பழிகளைச் செய்தவர்கள் தங்கள் கட்டுகளை மீறிவிட்டதாக, ஆற்றல்பெற்றுவிட்டதாக உணர்கிறார்கள். தெய்வங்களால் அறைபட்டு விழும்வரை தருக்கி நின்றிருக்கிறார்கள்.

“போர்க்களத்தில் முதல் அருங்கொலையை செய்த பின்னரே வெல்ல முடியாதவனாக இயலும். நேற்று பீமன் அதை செய்துவிட்டான்” என்று ஜயத்ரதன் சொன்னான். “தன் கைகளால் தன் குருதிமைந்தர் எண்பத்தைந்து பேரை தலையறைந்து கொன்றான். அக்குருதியை அள்ளி தன் முகத்தில் பூசி வெறியாடினான். எங்ஙனம் அவன் திரும்பி தன் பாடிவீட்டுக்குச் சென்றான் என்பதை என்னால் உய்த்துணர இயலவில்லை. குற்றஉணர்வும் தன்கசப்பும் கொண்டு தனிமையில் ஆழ்ந்து சென்றிருக்கலாம். அல்லது இதுநாள்வரை தன்னை கட்டி வைத்திருந்த பெருந்தளையொன்றிலிருந்து விடுபட்டதன் கொண்டாட்டத்தை உணர்ந்திருக்கலாம். அல்லது இவ்விரு உணர்வுகளுக்குமிடையே இடைவிடா ஊசலாட்டமாகி நேற்றிரவை கழித்திருக்கலாம்.” தன் எண்ணங்களே சொற்களென ஒலிப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.

“ஆனால் அவன் நெடுந்தொலைவு வந்துவிட்டான்” என ஜயத்ரதன் தொடர்ந்தான். “அர்ஜுனன் இன்னமும் கிளம்பவே இல்லை. ஆகவே சொட்டுவதற்கு முந்தைய துளி என ததும்பிக்கொண்டிருக்கிறான்.” புன்னகைத்து “ஆனால் இது பெருங்களம். இது கடல். துளிகளனைத்தையும் இழுத்து தன்னில் சேர்த்துக்கொள்வதே கடலின் பேராற்றல். அவன் மீறி எழுவான். ஏனென்றால் ஒவ்வொரு கணமும் அவன் அகம்சீண்டப்படுகிறான். சிறுத்து ஆணவம் அழிந்து மறைந்துகொண்டே இருக்கிறான். நான் நான் என அவனுள் நின்று திமிறும் ஒன்று அவ்வில்லை ஏந்தவேண்டும். அது நிகழ்ந்தே தீரும். எப்போது எங்கு என்பதே நம் வினா” என்றான்.

சுபாகு “நாம் எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்?” என்றான். அதுவரை ஜயத்ரதனின் சொற்களில் ஒழுகிச்சென்றுகொண்டிருந்த அவை திகைப்புடன் கலைவுகொள்ள துச்சாதனன் “ஆம், நாம் செய்யவேண்டியதென்ன என்று பேசவந்தோம்” என்றான். “அவர்கள் இனிமேல் எந்த தனி வீரரையும் முன்னிறுத்தமாட்டார்கள். ஆகவே நாரைச்சூழ்கையோ அன்றி பிற அலகுள்ள வடிவுகளையோ தெரிவுசெய்ய மாட்டார்கள். பீஷ்மரை சூழவும் சேர்ந்து அழிக்கவும்தான் முயல்வார்கள். பெரும்பாலும் நண்டு அல்லது தேள்சூழ்கை… அதையே நான் எதிர்பார்க்கிறேன்.”

“ஆம், இன்று பீமனும் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் அர்ஜுனனுக்கு இணையான வீரத்துடன் களத்தில் நின்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்தமையும் சூழ்கைக்கே வாய்ப்பு” என்றார் சல்யர். சகுனி மெல்லிய கனைப்போசை எழுப்ப அவர்கள் அனைவரும் திரும்பி அவரை நோக்கினர். “அவர்கள் பிறைச்சூழ்கை அமைக்கிறார்கள். ஒற்றுச்செய்தி நான் கிளம்பும்போது வந்தது” என்றார். அவை மெல்லிய ஓசையுடன் எளிதானது. “அவர்கள் பீஷ்ம பிதாமகரை முழுப் படையாலும் சூழ எண்ணுகிறார்கள். அவர்களின் பெருவீரர்கள் அனைவருமே இணைநிரையென படைமுகம் நிற்பார்கள்.” துரியோதனன் “ம்ம்” என முனகி தன் கைகளால் இருக்கையின் பிடியை நெருடினான்.

“அத்துடன் நேற்று அந்தியில் பீமனின் மைந்தன் கடோத்கஜன் வந்து அவர்களுடன் இணைந்திருக்கிறான். இன்றைய போரில் அவன் ஆற்றவிருப்பதென்ன என்பதை இனிமேல்தான் பார்க்கவிருக்கிறோம்” என்றான் ஜயத்ரதன். “வெறும் காட்டுமனிதன். இத்தகைய பெரும்போரை முன்னர் பார்த்திருக்க மாட்டான். இங்கே நிகழ்வதென்ன என்று அவன் உணர்ந்துகொள்வதற்குள் நெஞ்சை பிளந்துபோட இயலும்” என்றான் கிருதவர்மன். அஸ்வத்தாமன் “அல்ல யாதவரே, அவன் நாம் அனைவரும் கொண்டிருக்கும் அந்த உளத்தடைகள் எதுவும் இல்லாதவனாக இருக்கலாம். இயல்பிலேயே நாம் சற்று முன் பேசிய அனைத்து உளத்தடைகளையும் கடந்தவனாக இருக்கலாம்” என்றான்.

சல்யர் “ஆம், போர்க்களங்களில் அரக்கர்கள் பேரழிவை உருவாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து வெளிவரும் குருதி வெறிகொண்ட தொல்விலங்கொன்று எளிதில் வெல்லப்பட இயலாதது” என்றார். சலன் “நம்மிடமும் ஆற்றல் மிக்க அரக்கர்கள் இருக்கிறார்கள். அவனை எதிர்கொள்ள அலம்புஷனை அனுப்புவோம்” என்றான். ஜயத்ரதன் “அலம்புஷன் வெறும் அரக்கன். அவனிடமிருப்பது கண்மூடி எழும் காற்றுவிசை மட்டுமே. கடோத்கஜன் அரக்கனின் குருதியில் ஷத்ரியன் முளைத்தெழுந்தவன். அவனை எதிர்கொள்வது மேலும் கடினம்” என்றான். சகுனி “அவர்கள் விந்தையான திறன்கள் கொண்டவர்கள் என்று ஒற்றர்கள் சொல்கிறார்கள். இடும்பவனத்திலிருந்து எந்த ஊர்திகளும் இன்றி கிளம்பி ஓரிரவில் குருக்ஷேத்ரம் வந்திருக்கிறார்கள்” என்றார்.

அவையில் வியப்பு ஒலித்தது. சல்யர் “எப்படி வந்தனர்?” என்றார். “அவர்களால் பறக்கவியலும். பறக்கும் அரக்கர் என்றே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்” என்றார் சகுனி. துர்மதன் “அவர்கள் மரங்களிலிருந்து மரங்களுக்கு தாவுவார்கள். குரங்குகள் பறப்பதுபோல காற்றில் செல்லும் அவர்களின் வடிவம் இன்னும் என் விழிகளில் உள்ளது” என்றான். “அவர்களின் உடல்களும் அதற்காகவே தெய்வங்களால் அருளப்பட்டவை. குரங்குபோல சிறிய எடையற்ற கால்கள் கொண்டவர்கள். நமக்கெல்லாம் உடலின் எடையில் பெரும்பகுதி இடையும் கீழும்தான் உள்ளது. அவர்களுக்கு அது உடலெடையின் ஐந்திலொன்று மட்டுமே.” துச்சாதனன் “இயல்புக்கு மாறான உடல்கொண்ட எவரும் படைகளில் குலைவையும் அழிவையும் உருவாக்குவார்கள்” என்றான். “நான் கடோத்கஜனுடன் மற்போரிட்டிருக்கிறேன். என்னால் அவன் தோள்களை நிலைகொண்ட பாறை என்று மட்டுமே உணர முடிந்தது.”

“நாம் இக்களத்தில் வெல்ல இயலாதென்பதையா பேசிக்கொண்டிருக்கிறோம்?” என்றான் ஜயத்ரதன் எரிச்சலுடன். “அனைத்தையும் பேசித்தான் ஆகவேண்டும்” என்று சீற்றத்துடன் துர்மதன் சொன்னான். “நாம் பருந்துச்சூழ்கையை அமைப்பது தவிர்க்க இயலாது. அவர்கள் நம்மை சூழ்ந்துகொள்ளாமலிருக்க என்ன செய்யவிருக்கிறோம்?” லட்சுமணன் மெல்ல அசைந்து “அவர்கள் அனைவரும் இணைந்து சூழ்ந்துகொண்டால் நாம் பிதாமகரை மட்டும் முன்னிறுத்துவது…” என்று மெல்ல தொடங்க துரோணர் “நாம் பருந்துச்சூழ்கையை முன்பு அமைத்ததுபோல் எளிமையாக அமைக்கவில்லை. இந்தச் சூழ்கையை போர்த்தருணத்திலேயே கலைத்து நண்டோ தேளோ நாகமோ ஆக மாற்றிக்கொள்ள நம்மால் இயலும். இம்முறை பருந்தின் சிறகுகளில் முட்களும் கால்களில் கூருகிர்களும் உள்ளன. அதன் அலகின் இருபுறமும் கால்கள் எப்போதுமிருக்கும்” என்றார். “அவர்கள் ஒற்றை வீரனை நம்பி இல்லை என்பதை உளம் கொள்வோம். நாம் ஒற்றை வீரரை முன் நிறுத்துகிறோம். அவர்கள் பலர் என்பதையும் மறக்காமலிருப்போம்” என்றார்.

“பிதாமகர் பீஷ்மர் வெல்ல முடியாத களவீரர் என்பதை எவரும் மறுக்கவில்லை. ஆனால் நம் தரப்பிலும் மாவீரர் பலர் உள்ளனர். சைந்தவர் இருக்கிறார். பால்ஹிகர் இருக்கிறார். நாம் ஏன் மீள மீள இச்சூழ்கையை அமைக்கிறோம்?” என்றார் சல்யர். “ஏனெனில் பிதாமகரை மட்டுமே அவர்கள் அஞ்சுகிறார்கள். பிதாமகரிடம் மட்டுமே அர்ஜுனனின் வில் ஒருகணமேனும் தாழ்கிறது. அவரை நிறுத்தியே நாம் இப்போரை முன்னெடுக்க இயலும்” என்றார் துரோணர். சல்யர் மேற்கொண்டு பேசவிரும்பவில்லை என்பதுபோல் கையசைத்தார்.

பூரிசிரவஸ் “ஒரு படைவீரருக்குப் பின் மொத்தப் படையும் தன் ஆற்றலை செலுத்துவதற்குரியது பறவைச்சூழ்கைகள். பிதாமகரை நேற்று பருந்தின் அலகுமுனையென நிறுத்தினோம். இன்று அலகுக்குக் காவலென உகிர்களாக ஜயத்ரதரும் பால்ஹிகரும் தாங்களும் நானும் நின்றிருப்போம். கூர்கொண்டு புகுந்து பாண்டவப் படைகளுக்குள் சென்று பிளந்து கிழித்து அழிப்போம். இன்றைய போரில் பாண்டவப் படை மூன்றிலொன்றாக குறையவேண்டும். அவர்கள் எண்ணி பெருமிதம் கொள்ளும் சிலரேனும் களம்பட்டாக வேண்டும்” என்றான்.

துரியோதனன் “இன்று நாம் நிகர்நிலையில் நின்றிருக்கிறோம். முதல்நாள் போர் நமக்கு உகந்ததாக முடிந்தது. இவ்விரண்டாம் நாள் போர் அவர்களுக்கு வெற்றியாகியது. மூன்றாம் நாள் போரில் நாம் வென்றாக வேண்டும். இன்று நம்மை பார்த்தனோ பாஞ்சாலனோ ஊடுருவுவான் என்றால் நமது படைகளின் உளவிசை அழியும். நாம் எழ இயலாது” என்றான். சகுனி “மருகனே, நேற்று நம்மை ஊடுருவி துண்டுபடுத்த பீமனால் இயன்றதென்பது உண்மை. ஆனால் பீஷ்மர் கொன்று குவித்த பாஞ்சாலர்களின் எண்ணிக்கையை இன்று காலைதான் அறிந்தேன். அவர்கள் படை எண்ணியிரா அழிவுகளை கண்டுவிட்டது. இன்றும் பிதாமகரின் விசை குறையாது தொடருமென்றால் பாண்டவப் படையில் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கும்” என்றார்.

bowவெளியே கலைவோசை கேட்டது. அணுக்கக் காவலன் உள்நுழைந்து “பிதாமகர் பீஷ்மர்!” என்றான். அவையினரும் துரியோதனனும் எழுந்து கைகூப்பியபடி நிற்க வணங்கியபடி பீஷ்மர் உள்ளே வந்தார். எவரையும் பார்க்காமல் துரோணரின் அருகிலிருந்த பீடத்தில் சென்று அமர்ந்து கால்களை மடித்து வைத்துக்கொண்டார். கைகள் தாடியை நீவத் தொடங்கின. விழிகள் தழைந்திருந்தன. அவருடைய தாடி குருதிச்செம்மை கொண்டு முடியிழைகள் தடித்து பொற்கம்பிச் சுருள்கள்போல் இருந்தது. தோளில் கிடந்த குழலும் செந்நிறச் சடைத்திரிகளாகத் தெரிந்தது.

அவை பீஷ்மருக்கு வாழ்த்தொலி எழுப்பி வணங்கி மீண்டும் அமர்ந்தது. பூரிசிரவஸ் தலைவணங்கி “பிதாமகரே, இன்றும் பருந்துச்சூழ்கை அமைத்துள்ளோம். அலகென தாங்கள் நின்றிருக்க வேண்டுமென்றும் பருந்து தன் அலகால் பாண்டவப் படைகளை கிழித்து துண்டுபடுத்தி அளிக்கவேண்டுமென்றும் ஆசிரியர் துரோணர் விழைகிறார். அவ்வழியே பருந்தின் கால் உட்புகும்” என்றான். “ஆகுக!” என்று பீஷ்மர் எந்த உணர்வும் இன்றி சொன்னார். ஜயத்ரதன் “பிதாமகர் இன்னும் தன் முழு உருவை கொண்டு போரிடத் தயங்குகிறார் என்று அவையிலோர் எண்ணம் உள்ளது” என்றான்.

பீஷ்மர் சினத்துடன் “எவருக்கு அவ்வெண்ணம்?” என்றார். ஜயத்ரதன் “எனக்கு உள்ளதென்றே வைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “அறிவிலி” என்றபடி பீஷ்மர் கசப்புடன் முகம் திரும்பிக்கொண்டார். “நான் அறிவிலி என்பது இன்னொரு பக்கம் அமைக! பிதாமகரே, இந்த இரு நாட்களும் தாங்கள் ஆற்றல்மிக்க படைக்கருவிகளுடன் பொருதினீர்கள், பேரழிவை விளைவித்தீர்கள், ஐயமில்லை. ஆனால் நீங்கள் பயின்ற அரிய அம்புகள் எவையும் நேற்றும் முன்னாளும் களத்தில் எழவில்லை. உங்கள் நீண்ட வாழ்நாள் முழுக்க தேடியலைந்து ஈட்டிய அம்புகளெல்லாம் எங்கே? அனலெழுப்பவும் இடிமின்னல் உருவாக்கவும் ஒலியால் செவிதுளைக்கவும் விழியும் உளமும் மயங்கச்செய்யவும் ஆற்றல்கொண்ட அம்புகள் உங்களிடம் உள்ளன என்று கேட்டிருக்கிறேன்” என்றான்.

“அவையெல்லாம் வெறும் பேச்சுகள். அம்புவித்தைகள் பல உண்டு. அவை இத்தகைய அறப்போருக்குரியவை அல்ல. மாயங்கள் கோழைகளுக்குரியவை” என்றார் பீஷ்மர். துரியோதனன் பற்கள் நெரிபட, ஆனால் முகம் சிரிப்பென நீள “அறப்போரா? அது எங்கு நடக்கிறது, பிதாமகரே? இன்னும் அச்சொற்களை என் முன் உரைக்காதீர்கள்” என்றான். இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியை அறைந்து “என் இளமைந்தர் தலையறைந்து விழுவதை என் கண்ணால் கண்டேன். அவர்களின் குருதியை முகத்தில் பூசி நின்றாடிய வெறியனை நேற்றிரவெல்லாம் என் கனவில் கண்டு விழித்தெழுந்துகொண்டிருந்தேன். மதுவருந்தி மயக்கமருந்து உண்டு அவன் முகத்தை மறைக்க முயன்றேன்” என்றான். அவன் உளவிசையால் எழுந்துவிட்டான். “எது அறம்? இன்னும் நீங்கள் சொற்களால் உங்களை ஏன் தளையிட்டுக் கொள்கிறீர்கள்?” என்றான்.

பீஷ்மர் “நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும். உன் அவையில்தான் அந்தணர் வந்து ஆணையிட்டனர், நஞ்சும் நீரும் விழிசெவிச் சூழ்ச்சிகளும் உளமாயங்களும் இப்போரில் இடம்பெறலாகாது என்று. ஆம் என்று சொல்லளித்தவன் நீ” என்றார். “ஆம், ஆனால் அச்சொற்கள் அனைத்தும் நேற்றே இறந்தன. என் குடி மைந்தர் இறந்தபோதே அனைத்து நெறிகளும் அழிந்தன. இனி எதற்கும் நான் கட்டுப்பட்டவன் அல்ல. அந்தணர் அல்ல, தேவர்களும் கந்தர்வர்களும் அல்ல, புடவியாளும் மூன்று தெய்வங்களும் எழுந்து வந்தாலும் அவர்களிடம் சொல்ல எனக்கு இனி ஒன்றே உள்ளது. இனி எனக்கு நெறிகள் இல்லை. நஞ்செனில் நஞ்சு, நெருப்பெனில் நெருப்பு ,வென்று இக்களம்விட்டுச் செல்வதொன்றே என் இலக்கு” என்றான்.

பீஷ்மர் “நான் என் நெறிகளை நானே வகுத்துக்கொண்டவன்” என்றார். “அதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நெறியென்ற பேரில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள். ஆகவே அவர்கள் எழவும் நம் மைந்தரை நம் கண்முன்னில் தலையுடைத்துக் கொல்லவும் வழிவகுக்கிறீர்கள். பிதாமகரே, நேற்று நம் களத்தில் நிகழ்ந்த அருங்கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் நீங்கள் மட்டுமே” என்றான். துரோணர் “என்ன பேச்சு இது?” என்றார். “பிதாமகர் அல்ல, இங்கே அவையமர்ந்திருப்பவர் நம் முதன்மை வீரர்.”

பீஷ்மர் அவரை கையமர்த்திவிட்டு “ஆம், நானே பொறுப்பு. அதை மேலும் மேலும் உணர்கிறேன். இவ்வழிவெல்லாம் என்னால்தான். ஆம், மெய்தான்” என்றார். அவர் குரலில் எவ்வுணர்வும் இருக்கவில்லை. “இப்போரில் நெறிநின்றமைக்காக பழி கொள்கிறேன் எனில் அவ்வாறே ஆகுக! நெறிக்குமேல் எழுவது ஷத்ரியனின் வீரம் என்று எண்ணியிருந்தேன் எனில் இப்போரே நிகழ்ந்திருக்காது. என் குருதிவழியினர் மோதி களம்படும் காட்சியைக் கண்டு இரவெலாம் துயிலழிந்து விண்மீன்களை நோக்கி வெறுமைகொண்டு நிற்கவும் நேரிட்டிருக்காது.”

கைகளைத் தூக்கி ஏதோ சொல்லவந்து சொல்சிக்காது உழன்று மீண்டு “இந்த மணிமுடி என்னிடம் வந்தபோது சௌனகரின் தந்தை காதரர் சொன்னார், ஷத்ரியனின் கடன் முடிகொள்வதே என்று. நல்லாட்சியே அனைத்தறம் என்று. எளிய மானுடரின் நெறிகளால் ஷத்ரியனின் தனியறத்தை மீறவேண்டாம் என்று. நான் என் தந்தைக்கும் தாய்க்கும் அளித்த சொல்லை கடக்கவில்லை. நான் காத்து நின்ற நெறியால்தான் இவையனைத்தும் நிகழ்கின்றன. நன்று, இத்தனை நாள் காத்த அந்நெறியை இனியும் காத்து நிற்கிறேன். அதன்பொருட்டு களம்படுவேன் என்றால் அதுவும் ஆகுக!” என்றார்.

சல்யர் “நாம் இவற்றைப் பற்றியெல்லாம் பேசி பொழுது கழிக்க வேண்டியதில்லை. இன்றைய படைசூழ்கையை முடிவு செய்வோம்” என்றார். “அதில் பேச ஒன்றுமில்லை. அந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்று துரியோதனன் சொன்னான். “இன்னும் முடிவெடுக்க வேண்டியது பிதாமகர் பீஷ்மர் தன் அனைத்துத் தடைகளையும் கடந்து முழு விசையுடன் போரிடுவாரா என்பதொன்றைத்தான்.” பீஷ்மர் “இல்லை, எனது நெறிகளுக்குள் நின்றே போரிடுவேன்” என்றார். துரியோதனன் மேலும் பேசுவதற்குள் பூரிசிரவஸ் “தாங்கள் கொள்ளும் முழு விசை எங்களுக்கு உதவட்டும், பிதாமகரே. தங்களை நம்பி களம் வருகிறோம். எங்களுக்கு வெற்றி ஈட்டித் தருக!” என்றான். “நான் போரிடுகிறேன். வெற்றியும் தோல்வியும் தெய்வங்களின் முடிவு” என்றார் பீஷ்மர். அவர் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தார்.

பூரிசிரவஸ் “இதுவே அவையின் ஆணை. இந்த அவையை இப்போதே முடிவு செய்வோம். இன்னும் அரைநாழிகைக்குள் புலரவிருக்கிறது” என்றான். பூரிசிரவஸ் கைகாட்ட அவை நிறைவை அறிவிக்கும்பொருட்டு அமைச்சர் எழுந்தார். அவையினர் தங்கள் வாள்களையும் வேல்களையும் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். துரியோதனன் எழுந்து தலைவணங்கி அவையிலிருந்து வெளியே சென்றான். பீஷ்மர் எழுந்துகொள்ள துரோணர் அவர் அருகே சென்று தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டு உடன் நடந்தார். லட்சுமணன் பெருமூச்சுடன் அவையை நோக்கி நின்றான். அவை மூலையிலிருந்து அவனை நோக்கி வந்த துருமசேனன் அவன் அருகே நின்றான். அவனை நோக்கிவிட்டு லட்சுமணன் வெளியே நடந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

தரிசனங்களின் தலைவாயிலே இலக்கியம்

$
0
0

 

 

அன்பு ஜெயமோகன்,

தல்ஸ்தோய் விழாவில் நீங்கள் பேசியதைக் காணொலியாய்க் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஸ்ருதி வலைக்காட்சி கபிலனுக்குக் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும். நன்றி, கபிலன்.

தல்ஸ்தோய் குறித்த உங்கள் கருத்துக்களில் ’நேர்மையான இலக்கிய வாசிப்பின்’ அக்கறையே மிகுந்திருந்தது. சமீபமாய், படைப்புகளைக் காட்டிலும் வாசிப்பைப் பற்றியே அதிகம் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது அவசியமானதாகவும் படுகிறது. படைப்பாளனுக்கும், வாசகனுக்குமான உறவைப் படைப்பே நிறுவுகிறது என்றே துவக்கத்தில் கருதி இருந்தேன். வாசிப்புதான் படைப்பையே வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறது என்பதைப் பிற்பாடுதான் தெரிந்து கொண்டேன். வாசிப்பை விரித்துக் கொள்ளும் வாசகனிடமே படைப்பின் பெறுமதி இருக்கிறது என்பதை விளங்கிக் கொண்ட கணத்தில் வாசகன் பிறக்கிறான்.

நம் வாழ்வியலை அல்லது வாழ்ந்த காலகட்டத்தை ஒட்டி இலக்கியத்தை வகைப்படுத்தி இருக்கின்றனர். அவையே நமக்கு இலக்கியங்களாகவும் அறிமுகமாகி இருக்கின்றன. சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், சித்தர் இலக்கியம், நவீன இலக்கியம் என இலக்கிய வகைமைகளைத் தெரிந்து வைத்திருந்தாலே ஒருவன் இலக்கிய வாசகன் எனும் தகுதியைப் பெற்றுவிடுகிறான்(கலிகாலக் கொடுமை!). தமிழ்ச்சமூகச் சூழல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்படித்தான் இருப்பதாக நான் அனுமானிக்கிறேன். மற்றொரு கூத்து என்னவென்றால், இலக்கியங்கள் இளங்கலை அல்லது முதுகலை தமிழ் படிப்பவர்களுக்கானது; மற்றவர்களுக்கானது அன்று. இப்படியான தோற்றத்தைத் தமிழ்க்கல்விச்சூழலில் இன்னும் சில நூறாண்டுகளுக்கு நாம் காண்போம் என உத்தேசிக்கிறேன்(அதற்குப் பிறகும் தொடரலாம்). சமீபமாய், முகநூல் மற்றும் வலைப்பக்கங்களில் வருகிற இலக்கியக் கட்டுரைகளைப் படிக்கும்போது என் தீர்மானம் இன்னும் வலுப்படுகிறது.

இலக்கியத்தின் பா வடிவங்களையும், உள்ளடக்கத்தையும் ஒட்டி வகைமைகளை உருவாக்கி இருக்கின்றனர். சங்க இலக்கியம் என்பது சங்ககால வாழ்க்கையைச் சொல்கிறது என்பதாகவும், நீதி இலக்கியம் என்பது அறக்கருத்துக்களைப் போதிப்பதற்கானதாகவும், பக்தி இலக்கியம் கடவுளை வழிபடுவோருக்கே உரியதென்றும், நவீன இலக்கியம் வாழ்க்கையை வெறுத்தோருக்கு ஆனதென்றும் நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தவகையில், இலக்கியம் என்பது எவ்வகைமையில் சொல்லப்பட்டிருந்தாலும், அதன் உயிராக இருப்பது அதற்குள்ளிருக்கும் வாழ்வின் தரிசனமே.

ஒரு படைப்பின் சொல்வடிவம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; அர்த்தவடிவம் மிக முக்கியமானது. தன் அர்த்தவடிவில் குறிப்பிட்ட வாழ்வியல் தரிசனத்தை ஒரு வாசகனுக்கு நினைவூட்டும் படைப்பு இலக்கியமாகிறது; இல்லாவிடில், அது ஒரு கருத்தாக்கமாக மட்டுமே தேங்கி நிற்கிறது. அக்ககருத்தாக்கமும் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே தாக்கு பிடிக்கும். இலக்கியங்களோ காலந்தாண்டிய பெறுமதிகள் கொண்டவை. வானின் மேகங்கள் கருத்தாக்கங்கள் என்றால், அதன் நட்சத்திரங்களே இலக்கியங்கள்.

சங்க இலக்கியத்தின் புறநானூற்றில் ஒரு பாடல். ”நாடா கொன்றோ; காடா கொன்றோ / அவலா கொன்றோ; மிசையா கொன்றோ / எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை; வாழிய நலனே”(புறம் 187) – இது ஒளவையார் பாடியது. இதன் பொருள் :”நிலமே! நீ நாடே ஆகுக அல்லது காடே ஆகுக. பள்ளமே ஆகுக அல்லது மேடே ஆகுக. நீ எப்படி இருப்பினும் உன்னிடத்தில் வசிக்கும் மக்களின் குணநலன்களையே நீ பிரதிபலிக்கிறாய். அவர்கள் நல்லவர்கள் என்றால் உனக்கு நல்ல பெயர்; இல்லையெனில் கெட்ட பெயர். உனக்கென்று தனியான குணநலன்கள் இல்லை”. கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் இப்பாடலைப் பாடி பதிவேற்றி இருந்தார். அதைக்கேட்ட நாளில், இப்பாடலை அடைந்தேன். மிகச்சுருக்கமான வரிகளில் நான் அதுகாறும் கண்டிராத வாழ்வின் தரிசனம் ஒன்றை இப்பாடல் எனக்களித்தது. நவீன கால மனதின் இடுக்குகளில் வெளிச்சம் பாய்ச்சிய இப்பாடல் போன்று சங்க இலக்கியத்தில் இன்னும் பல பாடல்கள் உள்ளன. நமக்குத்தான் வாசிக்க வாய்ப்பதில்லை. நிலத்தின் குணம் என்பது அந்நில மக்களின் குணம். நிலத்தை இலக்கியமாகவும், வாசகனை மக்களாகவும் யோசிக்கும் ஒருவனுக்கு தரிசனம் என்பதன் சூட்சுமம் பிடிபட்டே தீரும்.

நீதி இலக்கியமான நாலடியாரில் ஒரு பாடல். ”உறுபுனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும் / கல்ஊற்று உழியும் ஆறே போல்..”(நாலடியார் 185) என்று துவங்கும் பாடல். ஒரு நதியைக் குறியீடாகக் கொண்ட இப்பாடல் என்முன் வைத்த இருகாட்சிகள் : கரைபுரண்டோடும் ஆற்றில் நீரருந்தும் மக்கள், நீரற்ற காலத்தில் ஊற்று தோண்டும் மக்கள். ஆறாகவும், ஊற்றாகவும் நதியின் இரு பரிமாணங்கள். இரண்டிலும் அது மகிழ்வோடு நீரை உவந்தளிக்கிறது. கொடுக்கும் நீரின் அளவில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், கொடுப்பதில் அது குறைபட்டுக்கொளவதில்லை. என் வாழ்வின் சம்பவங்களை நதிகளாக உருமாற்றிய இப்பாடலின் தரிசனம் இன்றளவும் நான் கொண்டாடுவது.

பக்தி இலக்கியமான கந்தரலங்காரத்தில் ஒரு பாடல். ”வெயிற்கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல் / கையில் பொருளும் உதவாதுங் காணும் கடைவழிக்கே” (பாடல் எண் 18)எனும் அருணகிரிநாதரின் விளிப்பு என்னை உலுக்கி எடுத்து விட்டது. வாழ்வை வெயிலாகவும், உடம்பை நானாகவும் உருவகித்துக் கொண்டு என் சிந்தனை விரியத்துவங்கியது. வெயிலின் வாட்டத்திற்காக நிழல் தேடினேன்; எங்கும் இல்லை. என் நிழலிலேயே நிற்க முனைந்தேன். இயலவில்லை. என் அகங்காரம் புரிபட்டது. அக்கணம் வாழ்வு வெயிலாகவும், பணம் உடம்பாகவும் உருக்கொண்டது. அததரிசனத்தின் வழி பணத்தின் அகங்காரமும் விளங்கியது. அருணகிரிநாதருக்கே தெரியாமல் இருவரிகளுக்குள் அமர்ந்திருந்த தரிசனங்கள் அவை என்பது என் கருத்து; உங்களுக்கு மேலும் சில தரிசனங்கள் கிட்டக் கூடும். தன்னைத் திறந்து வைத்து வாசகனையும் திறக்க முயல்வதே இலக்கியம்.

சிற்றிலக்கியத்தின் வகைகளில் ஒன்று பிள்ளைத்தமிழ். குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் சிறப்பானது. ”தசைந்திடு கொங்கை இரண்டு அல என உரைதரு திருமார்பாட” எனும் செங்கீரைப்பருவத்தின் துவக்க வரி இன்றளவும் என் வியப்புக்குரியது. கொங்கைகள் இரண்டு அல என குமரகுருபரர் சொல்கிறார். அதாவது, அம்மைக்கு மூன்று கொங்கைகள் என்பதாக உரை இருக்கிறது. மூன்று கொங்கைகளைக் கொண்டிருக்கும் விசித்த்ர அம்மையை ஆணவமுள்ள மனிதனாக உருவகித்துக் கொள்ளலாம்; ஆணவத்தைப் புரிந்து கொள்கிற மனிதன் இரு கொங்கைகள் கொண்ட சாதாரண அம்மையாகிறான். இங்கு ஆணவத்தைப் புரிந்து கொள்ள சிவன் எனும் குறியீடு உதவுவதாகச் சொல்லப்படுகிறது. சிவனையே நான் வாசிப்பின் திறப்பான தரிசனமாகச் சொல்ல விரும்புகிறேன். இரண்டு கொங்கைகள் என்பது உடலுக்கானது; மூன்றாவது கொங்கையே உயிர். கண்ணுக்குத் தெரிகிற உடலில் இருந்து, கண்ணுக்குப் புலப்படாத உயிரை யோசிக்கத் தூண்டும் பாடலாகவும் இது எனக்கு இருக்கிறது. உங்களின் வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உங்களுக்கான தரிசனங்களையும் இப்பாடலின் உருவகம் கொண்டிருக்கும் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்; அளவுகடந்த நிதானத்தோடான கவனிப்பு அவசியம்.

சித்தர் இலக்கியத்தில் பட்டினத்தாரும், சிவவாக்கியரும், பாம்பாட்டிச் சித்தரும் எனக்கு உவப்பானவர்கள். ”உள்ளங்கையில் கனிபோல் உள்ள பொருளை / உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவை”(பா.சித்தர் 13) எனும் பாடல் வரியில் என்னைத் திகைக்கச் செய்து விட்டார் பாம்பாட்டிச் சித்தர். முதல் வரியைக் காட்டிலும் இரண்டாவது வரியைக் கவனமாக நோக்க வேண்டும். ”உண்மையுடன் காட்டவல்ல” எனும் சொல்லாட்சி முன்வைத்த தரிசனம் மிக எளியது; ஆனால் நுட்பமானது. அதனால்தான் தொடர்ந்து “உண்மைக்குரு” என்றொரு வார்த்தையையும் அடிக்கோடிடுகிறார் அவர். நவீன மனங்களை ஆட்டிப்படைக்கும் பொய்க்குருக்களைக் கண்டு கொள்ள பா.சித்தரின் உண்மைக்குரு எனக்கு உதவுகிறார். இப்போது முதல்வரிக்கு வருவோம். “உள்ளங்கையில் கனி” – அற்புதமான எளிய உருவகம். நாம் தேடும் கனியானது நம் உள்ளங்கையிலேயே இருக்கிறது; அதைச் சுட்டிக் காட்டுபவனே உண்மைக்குரு. நம் வாசிப்பின் தரிசனமானது நம் வாழ்விலேயே இருக்கிறது. அதைத் தூண்ட முனைவதே இலக்கியம். இரண்டு வரிகளில் ஒளிந்திருக்கும் வாழ்வியல் தரிசனங்களை விரிக்கும் வாய்ப்பை சித்தர் பாடல்களும் கொண்டிருக்கின்றன. பொய்க்குருக்களின் கோவணத்தைப் பொச்சுக்குப் போட்டு உட்கார்திருக்கும் வரை, கையிலிருக்கும் கனி நம் கண்களுக்குத் தெரியவே வாய்ப்பில்லை(பொய்க்குருக்களின் கிச்சிடுக்குகளில் மட்டுமே அவை பூத்திருக்கும்).

நவீன இலக்கியத்துக்கு வருகிறேன். நகுலனின் கவிதை ஒன்று. ”நினைவு ஊர்ந்து செல்கிறது / பார்க்க பயமாய் இருக்கிறது / பார்க்காமலும் இருக்க முடியவில்லை” எனும் கவிதையில் நினைவு அழுத்தம் பெற்றிருக்கிறது. நம் அனைவருக்கும் கடந்த காலம்(நினைவு) இருக்கிறது. அதுவே நம் வரலாறாக இருக்கிறது. நிகழ்காலச் சம்பவம் ஒன்று நம் வரலாற்றைத் திடுக்கிடச் செய்யலாம் அல்லது கேள்வி கேட்கலாம். நிகழ்காலம் தொந்தரவு செய்யாதவரை நினைவுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், இயல்பில் நினைவைத் தொந்தரவு செய்வதே நிகழ்காலத்தின் பணி. அதனால்தான் அதைப் பார்க்கப் பயப்படுகிறோம். இது பொதுவான கோணம். நினைவை உங்கள் முன்னாள் காதலியாக உருவகித்துக் கொள்ளுங்கள். இப்போது இந்தக்கவிதை இன்னும் தெளிவாகத் துலங்கும்.

குளத்தில் நீந்த விரும்புபவர்களுக்கு இலக்கியம் துடுப்புகளைக் கூட அளிப்பதில்லை; கடலில் நீந்த விழைபவர்களுக்கு அது தனது கரங்களையே வழங்குகிறது. குளங்கள் அடைபட்ட கருத்துக்களையே கொண்டிருக்கும். கடல் மட்டுமே விசாலமான தரிசனங்களைச் சுமந்து நிற்கும். ஒரு நல்ல வாசகன் கடலையே நேர்ந்து கொள்கிறான்.

நல்லது கெட்டதைச் சொல்வதும், அவற்றைக் கொண்டு அவனை நெறிப்படுத்துவதும் அல்ல தரிசனத்தின் பணி. வாழ்வின் விசித்திரங்களால் விதிர்த்துப் போயிருக்கும் ஒரு தனிமனிதனை, அவனில் இருந்து ஆசுவாசப்படுத்த முயல்வதே தரிசனம். அதற்காக அவனுக்குத் துணைசெய்பவையே இலக்கியங்கள்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்.

கோபிசெட்டிபாளையம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தல்ஸ்தோய், அறம், கலை

$
0
0

tolstoy1

தல்ஸ்தோய் உரை

அன்புள்ள ஜெ,

 

நலமா? தல்ஸ்தாய் பற்றிய தங்கள் உரையை கேட்டேன். புனைவெழுத்தாளர்/அறச்சிந்தனையாளர் என்று தல்ஸ்தாயின் இரு அம்சங்களையும் தெளிவாக வகுத்துக் கூறியிருந்தீர்கள். புனைவெழுத்தாளராக தன்முனைப்பு கொண்ட நவீன எழுத்தாளரைப்போலவும் அறச்சிந்தனையாளராக புனித அகஸ்தின் காலகட்டத்தவரைப்போலவும் தால்ஸ்தாய் இருந்தார் என்ற கருத்து மேலும் சிந்திக்க வைத்தது. ஆம், தால்ஸ்தாயின் பெருந்தந்தைத்தனம் என்று நமக்கு வந்ததெல்லாம் ஒரு புனிதரின் மரபை அவர் அகம் தாங்கி வந்தமைந்ததால் தானோ என்று தோன்ற வைத்தது. இந்த இரு கூறுகளையும் ஒட்டி சில எண்ணங்களும் கேள்விகளும் எழுதியிருக்கிறேன்.

 

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எனக்கு தால்ஸ்தாய் அறிமுகம் ஆகியது அவர் பின்வாழ்க்கையில் எழுதிய எளிய கதைகள் மூலம் தான். மொழியா அதன் பின்னால் இருந்த புனைவெழுத்தாளரின் நம்பிக்கையா என்று தெரியவில்லை, ஆனால் சிறுவயதில் வாசித்தபோது அந்தக்கதைகளில் கண்ட அன்பின் வடிவமான கடவுள் என்ற உருவகம் என்னில் பெரிய பாதிப்பை செலுத்தியதாக உணர்ந்தேன். கடவுள் என ஒன்று இருக்கவே முடியாது, அடியாழமற்ற பாழ்கிணறு தான் வாழ்வு என்று தீவிரமாக நிலைப்பாட்டில் இருந்த நாட்களிலும் மறுமுனையில் சமனுக்கு இழுத்தது தால்ஸ்தாயின் மானுட அன்பின் ரூபம் கொண்ட இறைவடிவம். அதை ஒரு ‘பதிலாக’வே கண்டேன். ஒரு மெய்மையாக.

 

ஆனால் அவருடைய பெரிய நாவல்களை வாசிக்கும் போது மீண்டும் முதலிலிருந்து கேள்விகளின் திரிகளை பிடித்துக்கொண்டு, ஆசிரியரின் ஆய்வுகளை மறுபரிசோதனை செய்தபடி, எங்கே செல்கிறார் என்று நடந்து ‘கண்டடையும்’ பயணங்கள் சுத்தமான வேறொரு அறிதல்முறையாக இருந்தது. உதாரணம், அன்னா கரீனினாவில் லெனினுக்கு நாவலின் இறுதியில் புயல் முடிந்து ஒரு பேரனுபவம் ஏற்படும். எல்லாமே தெளிவடைந்துவிட்டதாக ஒரு மிதப்பில் இருப்பான். கிறிஸ்துவை, மதத்தை ஏற்றுக்கொள்வான். ஆனால் உடனே அவனுடைய இயல்பான சிடுசிடுப்பு, கோபம் என்று சிறுமைகள் தலைதூக்கும். அப்போது அவனுக்குத் தோன்றும், வாழ்க்கை என்பது இதுதான். இந்த தடுமாற்றங்கள் வழியாகவே அறத்தின் பாதையை பற்றிக்கொண்டு மனிதன் நடக்கவேண்டும் என்று. இங்கு தாத்தா போதனை செய்யவில்லை, சொல்லக்கூடவில்லை, காட்டிவிட்டுச் செல்கிறார். இது பதில் அல்ல. முடிவு அல்ல. ஒரு அனுபவம், ஒரு அவதானிப்பு. இதை ஆம், என்று நாம் உணரும் போது நீங்கள் சொன்னது போல இது நமக்காக நாம் வகுத்துக்கொள்ளும் இன்னொரு வகையான உண்மை.

 

 

ஆக இரண்டு வகையான உண்மைகள். ஒன்று புனைவெழுத்தாளனின் கவித்துவமான, உள்ளுணர்வு சார்ந்த உண்மை. புனைவெழுத்தாளன் (தால்ஸ்தாயைப்போன்றவர்) ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டு பதிலை கண்டடையத்தான்  புனைவின் உடைகளுக்குள் சென்று நடித்துப்பார்க்கிறார். என்ன நிகழ்கிறதோ அதுவே உண்மை என்பது போல. அல்லது ஒரு கவித்துவமான தருணத்தில் வண்ணாத்தியென விரல் மேல் உண்மை வந்து அமர்ந்து சிறகு விரிப்பதைப்போல.

 

இன்னொன்று சமரசங்கள் இல்லாத, மாற்றுப்பார்வைகள் இல்லாத ஆன்மீக உண்மை. அனுபவம் மூலம் ‘இதுதான்’ என்று கொண்டு வந்து சேர்ந்த ஒன்று. அதற்கு மேல் உண்மையில் புனைவு தேவையில்லை. ஏனென்றால் கண்டடைய ஏதும் இல்லை. ஆன்மீகக்கண்டடைதலுக்கு உண்மை என்பது ஒரு தத்துவார்த்தமான ஆழம். கலை எல்லாமே அவரவர் ஆசைக்கேற்ப அதற்கு மேலே கட்டிக்கொள்வது தான். அந்த உண்மையை விளக்கவோ, அதில் திளைக்கவோ, அதை விரித்துரைக்கவோ, எளிமைப்படுத்தவோ, பிரச்சாரம் பண்ணவோ அதை ஒட்டி கலை உருவாக்கப்படுகிறது.

 

ஆக வாழ்வின் கேள்விகளிலிருந்து, அல்லது வாழ்வனுபவங்களிலிருந்து கேள்விகளுடன் எழும் கலை என்றும், முன்னரே உணரப்பெற்ற ஆழமான உண்மைகளை விரித்தெடுக்கும் கேள்விகளற்ற கலை என்றும் கலையை இரண்டாக பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. (இரண்டாவதை கலை என்று கூட சொல்லலாமா என்று தெரியவில்லை – அதன் கலம் முன்பே  நிறைந்திருக்கிறது என்பதால்கண்டடைய ஏதும் இல்லை, அப்படியென்றால் அது கலை ஆகுமா?) வாக்னரின் ஓபெராவோ அன்னா கரெனீனாவோ முதல் வகைக்கான உதாரணம் என்றால் சௌந்தர்யலகரியோ பெரியபுராணமோ இரண்டாம் விதக்கலைக்கான உதாரணம் என்று கொள்ளலாம். மதம் சார்ந்த கலைகள் எல்லாவற்றையும் இரண்டாம் வகையில் சேர்க்கவேண்டுமா என்று இயல்பாக அடுத்த கேள்வி வருகிறது. முதல் வகைக்கலை இரண்டாம் வகைக்கலையை விட மேலானதா என்ற கேள்வியும்.

 

காந்தி பெரும்பாலும் புனைவெழுத்து வாசித்தவர் அல்ல என்று முன்பு ஒருமுறை பேசும்போது சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் காந்திக்கு வாழ்வு சார்ந்த தேடல்கள், கேள்விகள், அலைக்கழிப்புகள் இல்லை என்று இல்லையே. பின் ஏன் அவர் புனைவு வாசிக்கவில்லை? அதே நேரத்தில் “அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார்” போன்ற தால்ஸ்தாயின் கதைகளை – இரண்டாம்வகை கலையை – வாசிக்கையில் அவர் கண்ணீர் மல்கியிருப்பார் என்று தான் தோன்றுகிறது. தான் முன்பே உணர்ந்த, உள்ளுணர்வால் தொட்ட உண்மையை வாசிக்கும் போது மட்டுமே அந்த வாசிப்பு காந்தி போன்றவர்களின் உள்ளத்தை தொடுகிறது என்று நினைக்கிறேன். (அது கதை என்று இருக்கவேண்டியதில்லை, ஒருவருடைய நேர் அனுபவமாகக் கூட இருக்கலாம்). அப்படியென்றால் அவருக்கு தான் உணர்ந்த உண்மையை திரும்ப சொல்லும், வலியுறுத்திச் சொல்லும் படைப்புகளே போதும் என்று தோன்றியதா? எது உண்மை, ஒரு வேளை இது உண்மையாக இல்லாமலிருந்தால், வேறு உண்மைகள் உண்டா என்பது போன்ற புனைவு வாசிப்பாளரின் அலைக்கழிப்புகள் அவருக்கு இருந்திருக்காதா? தால்ஸ்தாயும் கடைசி காலத்தில் இந்த சர்வநிச்சயத்துக்கு வந்து சேர்ந்தாரா?
AVT_Sofia-Tolstoi_8381

ஐரோப்பா பயணம் முடிந்து வந்த சில நாட்களில் தால்ஸ்தாயை பற்றின ‘The Last Station’ என்ற திரைப்படம் காண வாய்த்தது. தால்ஸ்தாய் என்ற புனைவெழுத்தாளருக்கும் அறச்சிந்தனையாளருக்குமான தொடர்பை, ஆழ்ந்த வேறுபாடுகளை, இந்தத் திரைப்படத்தை கண்ட அனுபவத்தின் பின்னணியில் வைத்து சிந்தித்துப்பார்த்தேன்.

 

இந்தப்படம் பார்க்கும்போதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணம், பாவம் இவர் எவ்வளவு துன்பப்படுகிறார் என்று தான். வீடு, மனைவி, காமம், குழந்தைகள், மாணவர்கள், இலட்சியங்கள் என்று இவருக்கு எல்லாமே இறுதிக்கட்டத்தில் வலைகளாகத்தான் இருந்தது. கடைசி வரை ஒரு பிரபுவாக சொகுசுகளுடன் வீட்டுக்குள்ளையே வாழ்ந்ததாகத்தான் சித்திரம் வருகிறது. அவர் தன்னை உண்மையிலேயே விடுவித்துக்கொண்டது போல எனக்குத்தோன்றவில்லை. கடைசிவரை கட்டுண்டே இருந்தார். அவர் வீட்டை விட்டு வெளியேறியபோதும் வெறுப்பில் மனைவியை விட்டு விலகிய கணவராகவே தெரிந்தாரொழிய வாழ்ந்து நிறைவடைந்து பற்றறுத்து வீட்டைத்துறந்த மனிதராக அல்ல.

 

அந்த படத்தில் ஒரு வசனம். தல்ஸதாயும் புதிதாக வந்திறங்கிய இளம் காரியதரிசி புல்ககோவும் காட்டுக்குள் நடை சென்றிருப்பார்கள். திரும்பும்போது அந்தி சாய்ந்திருக்கும். காட்டுக்குள் லைலக் பூ மணம் எழும். “அந்திவேளையில் தான் இந்த பூவின் வாசம் அதிகமும் கமழும்” என்று தால்ஸ்தாய் சொல்கிறார். கடைசிவரைக்கும் அந்த மணங்களின் புகைச்சுருள் கொடிகளாக அவர் கால்களில் படர்ந்து பற்றி இழுத்தது, அவரால் விலகமுடியவில்லை. அவர் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது இதையே நான் உணர்வது. அவரை ஒரு புனைவெழுத்தாளராக கலைஞராக மட்டும் பார்த்தால் இதை புரிந்துகொள்ளமுடிகிறது. இதை நேர்மையாக புனைவாக்கியிருந்தார் என்றால் வேறு திறப்புகள் வந்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. திட்டவட்டமான ஆன்மீகம் சார்ந்த தரிசனத்தை தன் பதிலாக முன்வைத்தார். அதன் படி வாழ முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. துன்பத்தில் தான் இறந்தார். அப்படியென்றால் அவர் அடைந்த தரிசனத்திற்கும், சொல்லிக்கொண்டிருந்த சித்தாந்தங்களுக்கும் என்னதான் பொருள்?

 

நமக்கு ஆழ்ந்த பொருள் தரக்கூடிய கலைகளை படைக்கும் படைப்பாளிகள் பலரும் தனிவாழ்வில் மிகமோசமான மனிதர்களாக வாழ்ந்திருப்பதை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். கலையில் எந்தளவுக்கு உன்னதம் உள்ளதோ நேர்வாழ்வில் அந்தளவுக்கு வீழ்ச்சியடைந்த கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். பிக்காஸோ போல. கலையை உளவாங்குபவரோ வாசகரோ செய்வது சற்று குரூரமானது தான். சுயநலம் வாய்ந்தது தான். அவர்கள் கலைஞனின் தனிவாழ்வை, அந்த மனிதனின் வலிகளை, கீழ்மைகளை, சரிவுகளை உண்மையில் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு கலை தரும் உன்னதமும் அங்கிருந்து அவர்கள் சென்று சேரும் இலக்கும் தான் முக்கியம். கலைஞன் இழந்தவற்றை உண்மையில் எந்த ரசிகனும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. அவனுடைய கீழ்மைகளுக்கு இவன் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை, அதற்கான அவசியமும் இல்லை. அதில் விளைந்த கனியை மீள மீள சுவைத்தாலும். கனி மட்டுமே உண்மை என்று எடுத்துக்கொள்கிறான்.

 

தால்ஸ்தாயின் தனிவாழ்வின் கீழ்மைகளையும் கண்டடைதல்களையும் விட அவர் புனைவே எனக்கு முக்கியமாக்கப்படுகிறது. அவர் புனைவில் வருவதையெல்லாம் என் வாழ்க்கையில் போட்டுப்பார்க்கிறேன், ஆம் இது உண்மை, இதுவும் உண்மை என்று கண்டடைகிறேன். அந்த தால்ஸ்தாயை வழிபடுகிறேன். அவருடைய ஆன்மீக தரிசனத்தையும் அப்படி வாழ்க்கை பரப்பில் போட்டுப்பார்க்கிறேன். உண்மை என்று தான் படுகிறது. ஆனால் தால்ஸ்தாயின் தனி வாழ்விலேயே அது செல்லுபடியாகவில்லையே? அன்பே கிறிஸ்து என்ற அதிரும் முடிவை அவர் உள்ளார்ந்து அடைந்திருந்தாரென்றால் அவரை சுற்றியிருப்பவர்கள் மீது, முக்கியமாக தன் மீது, அந்த கனிவு இளமழையென்று பொழிந்திருக்கவேண்டும் அல்லவா? தன்னுடைய கீழ்மைகளை தானே மனித்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்த அமுதம் அல்லவா அவர் கண்டடைந்த அன்பு? புத்துயிர்த்து தளிரென எழுந்திருக்கவேண்டும் அல்லவா? இருந்தாலும் துன்பத்தில் இறந்தாரே? அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன? அவர் கண்டடைந்த தரிசனம் ஒரு சுய ஏமாற்று தானா? அதை ‘வாழ’ அவருக்குத் தெரியவில்லையா?
tolstoy

சோபியாவும் அதிகம் துன்பப்படுகிறாள். தன்னுடைய எதிர்பார்ப்புகள், முன்முடிவுகள், ஆசைகள், கோபதாபங்கள் என்று அவளுக்கு ஒரு வலை. கிராயட்சர் சொனாடா படிக்கும் போது ஒன்று புரிந்தது. தால்ஸ்தாய் இசையை நிராகரிப்பது தன்னுடைய சுயத்தின் நிராகரிப்பாக சோபியா எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அடியாழத்தில் புண்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பற்ற தன்மைக்கான ஒரு விதையாக அது இருந்திருக்கலாம். சோபியாவின் டைரிக்குறிப்புகள் டாரிஸ் லெஸ்ஸிங்கின் முன்னுரையுடன் புத்தகமாக வெளிவந்துள்ளது. வாசித்துப்பார்த்தேன். மனம் உடைந்தபோது மட்டுமே டைரி எழுதும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். என்னால் அதிகம் படிக்கமுடியவில்லை. அவ்வளவு வலி, அவ்வளவு துன்பம், நிறைய குமுறல். நமக்கு வரலாற்றின் தொலைநோக்கு உள்ளது. அதன்வழியே மனிதர்களையும் தருணங்களையும் மதிப்பிடுகிறோம். தால்ஸ்தாய் தன் நூல்களை நாட்டுடமை ஆக்க நினைத்தது சரியா, சோபியா அவருக்கு அளித்த மனஉளைச்சல் நியாயமா என்ற கேள்விகள் வழியாக ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆனால் வாழ்க்கையை பற்றி இவ்வளவு சிந்தித்து இவ்வளவு ஆய்வுசெய்த தால்ஸ்தாயும் போரும் அமைதியும் நாவலை ஆறு முறை கைப்பிரதி எடுத்த சோபியாவும் இப்படியொரு துன்பவலைக்குள் சுழன்று சுழன்று வாழ்ந்தவர்கள் தானா என்ற துக்கத்தை மீளமுடியவில்லை.

 

 

-எஸ்

 

தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்

==================================================================

தல்ஸ்தோயின் மனைவி

கனவுபூமியும் கால்தளையும்

சோபியாவின் தரப்பு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

$
0
0
ஹாவ்லக் எல்லிஸ்

ஹாவ்லக் எல்லிஸ்

 

சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார்.  ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து  “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள்.

 

தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கிறார்கள். அவர்களில் சிலரே அடுத்தகட்ட வாசிப்புக்கு வருகிறார்கள்

 

இன்று எழுதுபவர்கள் தாங்கள் துணிச்சலாக எழுதுபவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா காலகட்டத்திலும் எழுத்தாளர்கள் அவ்வாறு  ‘துணிந்து’ எழுதுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. அத்துணிவான எழுத்து இருபதாண்டுகளுக்குள் சாதாரணமாக ஆகிவிடுகிறது, அடுத்த தலைமுறை வந்து மேலும் துணியவேண்டியிருக்கிறது.

 

உண்மையில் இதில் துணிவென்று ஏதும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் சமூகவெளியில் பாலியல்வெளிப்பாட்டுக்கு ஒர் எல்லை ஒருவகையான பொதுப்புரிதலாக உருவாகி நிலைகொள்கிறது.. அந்த எல்லையை எந்த அளவுக்கு மீறவேண்டும் என்பதை அந்தப்படைப்பின் ஆசிரியன் முடிவெடுக்கிறான். அதற்கு அளவீடாக இருப்பது அந்தப் படைப்பு எந்த அளவுக்கு பாதிப்பை உருவாக்கவேண்டும், எப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கவேண்டும் என்ற கணிப்புதான்.

 

உதாரணமாக, மென்மையான உள்ளமோதல்களைச் சொல்லும் ஒரு காதல்கதையில் அப்பட்டமான உடலுறவுக்காட்சி விரிவாக விவரிக்கப்பட்டிருந்தால் அதன் அழகியல் ஒருமை சிதையும். வாசகனிடம் உருவாக்கும் அதிர்வு அந்த படைப்பை அந்த பாலுறவுக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு யோசிக்கவைக்கும். அவனுக்கு அதிர்ச்சியை அளித்து அதிலுள்ள நுண்மையான காட்சிகள் அவனுடன் தொடர்புறுத்தமுடியாமல் செய்யும். மென்மையான வண்ணங்கள் நடுவே அடர்வண்ணங்களைச் சேர்ப்பதுபோலத்தான் அது. எந்த வண்ணத்தையும் ஓவியத்தில் பயன்படுத்தலாம். எவ்வாறு கலக்கிறோம் என்பதே கேள்வி.  இ

 

இந்த அளவீடு மாறிக்கொண்டே இருக்கும் விதம் வியப்பூட்டுவது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள கவிதைகளில் உடல்வர்ணனைகளும் உடலுறவு வர்ணனைகளும் ஏராளமாக உள்ளன. தமிழிலும் சரி, சம்ஸ்கிருதத்திலும் சரி பெண்ணுடலின் வர்ணனைகள் கட்டற்று சென்றிருக்கின்றன. மானின் குளம்புபோல என பெண்குறியை வர்ணிக்கும் இடம்வரை. ஆனால் எங்கும் ஆண்குறி வர்ணனை இல்லை. ஏனென்றால் அது அன்றைய சமூகத்திற்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம். சுவைத்திரிபு உருவாகியிருக்கலாம்.

 

நவீன இலக்கியம் உருவானபோது பாலியலெழுத்து கடுமையான தணிக்கைக்கு உள்ளானது – வாசகனாலும் எழுத்தாளனாலும். ஆகவே இடக்கரடக்கல்கள் உருவாயின. அன்றைய விக்டோரிய ஒழுக்கவியல் ஒரு காரணம் என்றாலும் அதைவிட முக்கியமான காரணம் நவீன இலக்கியம் அச்சு வழியாக மேலும் பரவலாகச் சென்றது, இன்னும் பெரிய மேடையை அடைந்தது என்பதுதான். பழங்காலக் கவிதைகள் சிறிய அரங்குகளுக்கும், அவைகளுக்கும் உரியவை. அங்கே கவிச்சுவை நுகரவந்த அறிஞர்களே இருந்தனர். நவீன இலக்கியத்தில் பொதுமக்கள் வாசகர்களாக அமைந்தனர். ஆகவே ‘தெருவில்நின்று’ பேசுவனவே இலக்கியத்திலும் அமையவேண்டும் என்ற உளநிலை அமைந்தது.

 

ஆனால் ஒவ்வொரு படைப்பும் அந்த எல்லையை முட்டி விரிவாக்கிக் கொண்டே இருந்தது. தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் பாலுறவை எப்படி எழுதியிருக்கிறார் [விபரீத ஆசை] தி.ஜானகிராமன் எப்படி எழுதியிருக்கிறார் [அம்மா வந்தாள், தண்டபாணி- அலங்காரம் உறவு] ஜி.நாகராஜன் எப்படி எழுதியிருக்கிறார் [நாளை மற்றுமொருநாளே கந்தன்- வள்ளி உறவு] என்று கூர்ந்து வாசிப்பவர்களால் அந்த எல்லை தள்ளித்தள்ளி வைக்கப்படுவதைக் காணமுடியும்.

 

ஏன் தள்ளிவைக்கப்படுகிறது என்றால் ஒரு காட்சி சற்று அழுத்தமான பாதிப்பை உருவாக்கவேண்டும் என்று விரும்பும் எழுத்தாளன் முன்பு எழுதப்பட்டு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட சற்றே முன்னகர்ந்து அதைச் சித்தரிப்பான். மிகவும் முன்னகர்ந்துவிட்டால் அது சுவைத்திரிபு ஆகிவிடுமென்றும் அறிந்திருப்பான். நம் சமூகத்தின் அளவுகோல் மேலைநாடுகளை விட இன்னும் இறுக்கமானது. ஆகவே நாம் பாலியலை எழுதும்போது மேலைநாடுகள்போல எழுதுவதில்லை. எழுதினால் அது அதைமட்டுமே பேசும் நாவலாக ஆகிவிடும். ஒரு ஓவியத்திரைச்சீலையில் நீலமோ. கருமையோ கையாளப்பட்டால் அந்த ஓவியத்தின் மையநிறமே அதுவாக இருக்கவேண்டும் என்பதுபோல. ஆகவே பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது என்பதொன்றும் சிறப்பல்ல. எல்லா எழுத்தாளர்களும் தேவையான துணிச்சலுடன்தான் எழுதுகிறார்கள்

 

ஆனால் அவ்வாறு எழுதுபவர்களில் எத்தனைபேர் அதை நுட்பமாக, மெய்யாக எழுதுகிறார்கள்? கணிசமான தமிழ் எழுத்தாளர்கள் பாலியல்வரட்சியால் அவதிப்படுபவர்கள். பூஞ்சையான உள்ளமும் அதற்கேற்ற சம்பிரதாயமான வாழ்க்கையும் கொண்டவர்கள். ஆகவே அனுபவத்திலிருந்து எவரும் எழுதுவதில்லை. பெரும்பாலும் அவை பகற்கனவின் சித்தரிப்புகள். தஞ்சைப் பிரகாஷ் எழுதியதைப்போல. ஆகவே பகற்கனவுகளை நாடுபவர்களால் வாசிக்கத்தக்கவை

 

உதாரணமாக ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலில் கந்தன் மீனாவுடன் உறவுகொண்டு முடிந்ததும் மீனா சுருண்டு கிடந்து அழுகிறாள். உளஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு அது. அந்த அழுகைக்குப்பின் அவள் அதற்கான காரணமாக காணாமல்போன தன் மகனைப்பற்றி நினைத்துக்கொள்கிறாள். இது ஆசிரியரின் நுண்ணிய அனுபவ அவதானிப்பின் வெளிப்பாடு. இத்தகைய இடங்கள் தமிழிலக்கியத்தில் மிகக்குறைவே.

 

ஆனால் பாலியல் அறியாமையின் வெளிப்பாடுகள் நிறைய. சமீபத்தில்  கர்நாடகத்தில் அருவிப்பயணத்தின்போது காரில் இதைப்பற்றிப் பேசிக்கொண்டு சென்றோம். நான் ஜெயகாந்தனிடம் பேசிக்கொண்டிருந்தபோது  அவர் சொன்னதைச் சொன்னேன். ‘பெண்களுக்கு காமத்தில் உடலின்பம் கிடையாது, உள்ளத்தால்தான் இன்பம் அனுபவிக்கிறார்கள்’ என்றார் ஜெயகாந்தன். அவரை நேரில் மறுக்கமுடியாது. நான் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் ஓர் இடம் வரும். பெண்களுக்குப் பாலியல் இன்பம் என்பது உடலில் அல்ல ‘அய்யோ இந்த ஆம்புளைக்கு என்னாலே எவ்ளவு சந்தோஷம்’ என்று நினைப்பதில்தான் என்கிறார் ஆசிரியர்.

 

இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எண்பதுகள் வரை பரவலாக இருந்த எண்ணம். எழுபதுகளில் டாக்டர் பிரமிளா கபூர் என்ற ஆய்வாளர் தன் மாணவிகளைக்கொண்டு ஒரு பாலியல் கணக்கெடுப்பை நிகழ்த்தினார். இந்தியப்பெண்களில் மிகப்பெரும்பான்மையின பாலுறவுச்சம் குறித்து ஏதும் அறியாதவர்கள் என்றது அந்த ஆய்வு. பலர் வாழ்நாள் முழுக்க ஒருமுறைகூட அதை அடையாதவர்கள். ஆண்களில் அனேகமாக எவருக்கும் அப்படி ஒன்று பெண்களுக்கு உண்டு என்றே தெரியாது.அன்று மிக அதிகமாகப் பேசப்பட்ட ஓர் ஆய்வுமுடிவு அது

Alfred_Kinsey_1955

கின்ஸி

 

இன்றும் அதே அறியாமை நிலவுகிறது. சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி நாவலில் ஒரு  ‘பாலியல்வித்தகன்’ ஒரு ‘கள்ளமில்லா’ பெண்ணுக்கு தன்னின்பம் செய்துகொள்ள தொலைபேசி வழியாகக் கற்றுக்கொடுக்கிறான்.அவன் சொல்லும் அந்த  ‘நுட்பமான’ வழி என்பது சுட்டுவிரலை உள்ளே விட்டு அசைப்பதுதான்.பெண்களுக்கு பெண்குறியின் உட்பகுதியில் நுண்ணுணர்வே இல்லை என்றும், பெண்கள் தன்னின்பம் கொள்ளும் வழிகளே வேறு என்றும் அந்த திறனாளனுக்குத் தெரியவில்லை. இதை அப்போது அந்நூலுக்கு எழுதிய மதிப்புரையிலேயே சுட்டிக்காட்டியிருந்தேன்.

 

பெரும்பாலும் எளிமையான பாலியல்புனைகதைகளில் இருந்தே தமிழ் இளைஞன் பாலியலறிவை அடைகிறான். அவை ஆண்களின் பகற்கனவை சீண்டும்பொருட்டு எழுதப்படுபவை.  எழுத்தாளன் என்பவன் சற்றேனும் முறையாக பாலியலைக் கற்றிருக்கவேண்டும். எண்பதுகளில் நான் வாசிக்கவந்தபோது மலையாளத்தில் இ.எம்.கோவூரின் உரைகள் வழியாக பாலுறவியல் [sexology] வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தது. அவர் வழியாகவே ஹாவ்லக் எல்லிஸ், ஆல்ஃப்ரட் சார்ல்ஸ் கின்ஸி இருவரைப்பற்றியும் அறிந்தேன். என் உலகப்புரிதலில் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவர்கள் இருவரையும், அறியாதபோதுதான் நமக்கு தஞ்சைப் பிரகாஷ் பரபரப்பை அளிக்கிறார்

 

அந்த இருபெயர்களையுமே இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தமையால்தான் இந்தக்குறிப்பு.அவர்களைப்பற்றி எவரும் தமிழில் எழுதியும் நான் வாசித்ததில்லை. எண்பதுகளின் இறுதியில்நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இணையத்திலேயே அவர்களின் நூல்களை தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேன்.

 

ஹென்றி ஹாவ்லக் எல்லிஸ் [Henry Havelock Ellis 1859 – 1939] உளவியலுக்கு ஃப்ராய்ட் எப்படியோ அப்படி பாலுறவியலுக்கு முன்னோடியான அறிஞர். லண்டனில் பிறந்தவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்தவர். பொதுவாக இடதுசாரி எண்ணங்கள் கொண்டிருந்தார்.கார்ல். மாக்ர்ஸின் மகள் எலியனேர் மார்க்ஸ் எல்லிஸின் அறிவுலகத் தோழமைகளில் ஒருவர். பெர்னாட் ஷாவுடனும் தொடர்பிருந்தது.ஒருபாலுறவைப் பற்றிய தன் முதல் நூலை இன்னொருவருடன் சேர்ந்து ஜெர்மன் மொழியில் எழுதினார். பின்னர் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது

 

பாலுறவு குறித்து அன்றுவரை இருந்த பெரும்பாலான நம்பிக்கைகளும் புரிதல்களும் மதத்தலைவர்களால் உருவாக்கப்பட்டவை. ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்டவை. அது ஒரு மானுடச் செயல்பாடு என்றவகையில் தரவுகளின் அடிப்படையில் புறவயமாக அதை அணுகவேண்டும் என்ற கண்ணோட்டமே எல்லிசை ஒரு மாபெரும் முன்னோடியாக ஆக்கியது. தரவுகளைச் சேர்த்து அறிவியல் முறைமைப்படி ஆராய்ந்தபோது ஏராளமான பழைய நம்பிக்கைகள் சிதைந்தன. குறிப்பாக பெண்களின் பாலுணர்வு, பாலுறவுச்சம் குறித்த புதிய கொள்கைகள் வெளியாயின.

 

உதாரணமாக கந்து [ clitoris] பெண்களின் பாலுறவுவிருப்பத்தின் மையம் என்ற நம்பிக்கை அன்று இருந்தது. அது ஓர் நரம்பு முடிச்சே ஒழிய மையமல்ல என்று எல்லிஸின் ஆய்வுகள் காட்டின. பெண்களின் பாலுணர்வில் அவர்களின் பெண்ணுறுப்பின் உட்பகுதிகள் எவ்வகையிலும் பங்கெடுக்கவில்லை என்று நிறுவின. ஒருபாலுறவு போன்றவை உளப்பிறழ்வுகளோ தீயபழக்கங்களோ அல்ல, இருபாலுறவுபோலவே இயல்பான மூளைசார்ந்த தனிவிருப்பங்கள்தான் என்றும், புறத்தே தெரிவதைவிட ஒருபாலுறவு சூழலில் அதிகம் என்றும் அவருடைய ஆய்வுகள் காட்டின. அக்காலத்தில் எல்லிஸின் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆபாச இலக்கியம் படைத்தமைக்காக அவர் சட்டநடவடிக்கைக்கும் உள்ளானார்.

 

எல்லிஸின் ஆய்வுகளை நிறுவன உதவியுடன் மிகவிரிவான முறையில் ஆய்வுசெய்து அறிக்கைகளை உருவாக்கியவர் ஆல்ஃப்ரட் கின்ஸி. Alfred Charles Kinsey  [ 1894 –  1956] . அமெரிக்க உயிரியலாளர்.  1947 இவர் இண்டியானா பல்கலையில் நிறுவிய பாலுறவியல் ஆய்வு நிறுவனம் மானுடரின் பாலியல்பழக்கவழக்கங்களைப் பற்றி மிக விரிவான ஆய்வுகளை தொடர்ந்து வெளியிட்டது. இது  Kinsey Institute for Research in Sex, Gender, and Reproduction என அழைக்கப்பட்டது. தன் மாணவர்களையும் தொழில்முறை தகவல்சேகரிப்பாளர்களையும் கொண்டு பெருமளவில் தரவுகளைச் சேகரித்து ஒருங்கிணைத்து தன் கொள்கைகளை உருவாக்கி முன்வைத்து  நிறுவினார் கின்ஸி.

 

Sexual Behavior in the Human Male (1948) மற்றும்  Sexual Behavior in the Human Female (1953) ஆகிய இரு நூல்களும் கின்ஸி அறிக்கைகள் என்றபேரில் பொதுவாக சமூக, மானுடவியல் அறிஞர்கள் நடுவில்கூட பெரிதாக வாசிக்கப்பட்டன. அன்று திருவனந்தபுரம் தெருக்களிலேயே போலிப்பதிப்பாக இவை வாங்கக்கிடைத்தன. உலக அளவில் மானுடப் பாலியல்பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான முன்னோடி வழிகாட்டிகளாக இவை கருதப்படுகின்றன. சட்டம், ஒழுக்கவியல், இலக்கியம், சமூகவியல், மானுடவியல் ஆகியவற்றில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின

 

 

கின்ஸியின் கணக்கெடுப்புகளைப் பற்றி பலவகையான ஐயங்களும் மறுப்புகளும் பின்னர் உருவாயின. அவர் நோயாளிகளையும் குற்றவாளிகளையும் தனியாகப்பிரித்து கணக்கிடவில்லை. பெரும்பாலும் வித்தியாசமான பாலுணர்வும் பழக்கங்களும் கொண்டவர்களை நேர்காணல் செய்தார். பாலுறவு குறித்த செய்திகளை அளிப்பவர்கள் நேர்மையாக சொல்லவேண்டுமென்பதில்லை, பலசமயம் அவர்கள் மிகையாக்கவோ நியாயப்படுத்தவோதான் பேசுவார்கள் – இவ்வாறெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றுவரை மானுடப்பாலுணர்வு குறித்து அறிவியல்நோக்கில் உருவாகியிருக்கும் பெரும்பாலான புரிதல்களுக்கான தொடக்கம் கின்ஸிதான்.

 

இன்று இவ்வறிதல்கள் வெகுவாக முன்னேறிவிட்டன. உடற்கூறியலில் பல்வேறு நவீன கருவிகள் வந்துவிட்டன. நரம்பியல் மிகப்பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பாலியல்கல்வியின் தேவை உலகளாவ உணரப்பட்டிருக்கிறது. பாலியல் நிபுணர்கள் ஊடகங்களில் தோன்றி விளக்குகிறார்கள். பாலியல் அறிதல் பரவலாகியிருக்கிறது. ஆனால் மறுபக்கம் பாலியல்தளங்கள் பெருகிவிட்டிருக்கின்றன. இவை பாலுறவியலுக்கு நேர் எதிரான பகற்கனவு சார்ந்த புரிதலை உருவாக்குகின்றன. அவற்றைத்தான் இளைஞர்கள் மிகுதியாக பார்க்கிறார்கள். வருத்தமென்னவென்றால் எழுத்தாளர்களும் அவற்றையே பார்த்துக் கற்றுக்கொண்டு எழுதுகிறார்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது –திசைதேர் வெள்ளம்-21

$
0
0

bowலட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி, மூத்தவரே?” என்றான். லட்சுமணன் தலையசைத்தான். துருமசேனன் “இன்று படைவீரர்கள் சோர்ந்திருக்கிறார்கள். நேற்றும் அவர்களை கனவுகள் அலைக்கழித்தன என்கிறார்கள்…” என்றான். லட்சுமணன் “உம்” என்றான். “அதே கனவுகள்தான். பேயுருக்கொண்ட ஆழத்துதெய்வங்களும் விண்வாழ்தெய்வங்களும் மண்ணிலிறங்கி பூசலிட்டன” என்றான் துருமசேனன்.

“அவர்கள் சொல்வதை கேட்டால் இதுவரை மண்ணில் உருக்கொண்ட அத்தனை தெய்வங்களும் இங்கு வந்துள்ளன என்று தோன்றுகிறது. பல்லாயிரக்கணக்கான குலதெய்வங்கள், லட்சக்கணக்கான அன்னைதெய்வங்கள், பலகோடி மூதாதைதெய்வங்கள். இங்கே தெய்வங்களுக்குப் போக எஞ்சிய இடமே மானுடருக்கு” என்று துருமசேனன் தொடர்ந்தான். லட்சுமணன் “தெய்வங்களுக்கு ஊசிமுனைமேல் நூறு நகர் அமைக்கும் ஆற்றல் உண்டு” என்றான். “ஆம்” என்றான் துருமசேனன். லட்சுமணன் என்ன சொல்கிறான் என அவனுக்கு புரியவில்லை. “உணவுண்டாயா?” என்றான் லட்சுமணன். “ஆம்” என அவன் நாணத்துடன் சொன்னான். “நீங்கள் உணவருந்தவில்லை என அறிவேன். ஆனால் என்னால் காலையில் எழுந்தவுடன் உண்ணாமலிருக்க இயல்வதில்லை.”

லட்சுமணன் புன்னகையுடன் அவன் முதுகில் கைவைத்து “அதிலென்ன? நீ அடுமனையில் வாழ்பவன் என அறியாதவனா நான்?” என்றான். துருமசேனன் “நான் அடுமனைக்கே செல்லவில்லை” என்றான். “உணவை கூடாரத்தில் கொண்டுவந்து வைத்திருந்தாயா?” என்றான் லட்சுமணன். “எப்படி தெரியும்?” என்று துருமசேனன் கேட்டான். லட்சுமணன் புன்னகை செய்தான். துருமசேனன் குற்றவுணர்ச்சியுடன் “ஆனால் நான் உங்களுக்கான உணவை கொண்டுவந்து வைத்துள்ளேன். சென்றதுமே நீங்கள் உண்ணலாம்” என்றான். லட்சுமணன் “நன்று” என்றான்.

அவர்கள் படைகளின் நடுவே நடந்தார்கள். முந்தையநாள் களம்பட்ட இளையோர் எண்பத்தைந்து பேர் வரிசையாக சிதைக்கு முன் அடுக்கி போடப்பட்டிருந்ததை அவன் பார்த்திருந்தான். அவர்களின் உடல்கள் சிதைந்திருந்தமையால் செந்நிற மரவுரியால் சுருட்டி உருளையாக வைக்கப்பட்டிருந்தனர். “மலைப்பாறைகளால் உருட்டி சிதைக்கப்பட்டவர்கள் போலிருந்தன உடல்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். லட்சுமணன் சீற்றத்துடன் “வாயை மூடு!” என்றான். ஆனால் அவனால் அந்த உளஓவியத்திலிருந்து மீளவே முடியவில்லை.

கௌரவ மைந்தர் சிலரே வந்திருந்தார்கள். “எஞ்சியவர்கள் உண்டு துயிலச் சென்றாகவேண்டும் என ஆணையிட்டேன், மூத்தவரே” என்றான் துருமசேனன். “அவர்கள் அனைவரும் துயரில் இருக்கிறார்கள். இங்கு வந்தால் தாளமாட்டார்கள். அவர்கள் ஓர் உடல்போல. ஒவ்வொருவரின் இறப்பும் தங்கள் இறப்பென்றே தோன்றும்.” லட்சுமணன் புன்னகையுடன் “நன்று, ஆயிரம்முறை இறப்பதற்கு நல்லூழ் வேண்டும். இனி பிறப்பும் இறப்பும் இல்லை போலும்” என்றான். அவன் சொல்வது புரியாமல் துருமசேனன் விழித்து நோக்கினான்.

சத்யனும் சத்யசந்தனும் அவர்களுக்குப் பின்னால் வந்தனர். நாகதத்தன், சம்பு, கன்மதன், துர்தசன், சுப்ரஜன் ஆகியோர் ஒரு சிறு குழுவாக நின்றனர். அப்பால் துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோர் கூடி நின்றனர். சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோர் இன்னொரு குழுவாக நின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஒற்றை உடலென நின்றனர். அவர்கள் எப்போதுமே அப்படித்தான் நிற்பது வழக்கம், ஆகவே அவர்களை ஆலமர விழுதுகள் என பிறர் களியாடுவதுமுண்டு. ஆனால் அப்போது இழுத்துச்செல்லவிருக்கும் ஏதோ சரடு ஒன்று அவர்களை கட்டி நிறுத்தியிருப்பதுபோலத் தோன்றியது.

தனியாக நின்றிருந்த இருவரை நோக்கி லட்சுமணன் நின்றான். “அவர்கள் இளைய தந்தை குண்டாசியின் மைந்தர்கள் அல்லவா?” என்றான். “ஆம், தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும். அவர்கள் எப்போதும் தனித்தே நிற்கிறார்கள். ஒருவருக்கொருவர்கூட பேசிக்கொள்வதில்லை” என்றான் துருமசேனன். லட்சுமணன் “தந்தையிடமிருந்து நோய்களை தவறாமல் பெற்றுக்கொள்கின்றனர் மைந்தர்” என்றான். கைநீட்டி அவர்களை அருகே அழைத்தான். அவர்கள் அவன் அழைப்பை விழிகடந்து உளம் பெற்றுக்கொள்ளவே சற்று பிந்தியது. இருவருமே எதையும் நோக்காத முகம் கொண்டிருந்தனர். அருகே வந்ததும் தீர்க்கநேத்ரன் சொல்லின்றி வணங்கினான். சுரகுண்டலனின் வாயில் ஒரு சொல் எழுவதுபோல ஓர் அசைவு வந்து மறைந்தது.

லட்சுமணன் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே கைநீட்டி அவர்களின் தோளை மட்டும் தொட்டான். சுரகுண்டலன் பெருமூச்சுவிட்டான். ஏதாவது சொல்லவேண்டும் என லட்சுமணன் எண்ணினான். ஆனால் அவர்களிருவரிடமும் அவன் பேசுவதே அரிது. அவர்களின் கைகளை மட்டும் மெல்லப் பிடித்து அழுத்தினான். அங்கிருந்து நடந்தபோதும் அவர்களின் கைகளை தன் கையிலேயே வைத்திருந்தான். அவர்களும் சொல்லின்றி உடன் நடந்தார்கள். ஒவ்வொரு உடலாக பார்த்தபடி மெல்ல நடந்து சிதையை அணுகியபோது உள்ளம் வெறுமைகொண்டு எடையற்றிருந்தது.

முந்தையநாள் இறந்தவர்களுக்கான செல்கைச் சடங்குகள் அரசர்களின் பாடிவீடுகளின் முற்றங்களிலேயே நிகழ்ந்தன. களத்திலிருந்து அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு முற்றங்களில் நிரையாக வைக்கப்பட்டிருந்தன. ஷத்ரிய முறைப்படி வெண்கூறைக்குமேல் வாளும் வேலும் சாத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவ்வுடல்களுக்கு இறந்தவர்களின் தந்தையர் வாய்க்கரிசியிட்டு வணங்கினர். அவர்களின் களப்போர்த்திறத்தையும் வெற்றியையும் போற்றி பாணர் எருமைமறம் பாடினர். அங்கிருந்து உடன்பிறந்தார் தொடர அவ்வுடல்கள் எரிகளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.

ஆனால் மறுநாளே அரசர் உடல்கள் எவையும் படைகளுக்குள் கொண்டுவரப்படலாகாது என்று ஆணையிட்டுவிட்டார். அவ்வுடல்கள் படைகளின் உளச்செறிவை அழிக்கின்றன என்று அவருக்கு சொல்லப்பட்டிருந்தது. அது உண்மை என லட்சுமணன் படைகளில் இருந்து உணர்ந்திருந்தான். போருக்குப் பின் படைகள் களைப்பையும் உயிருடனிருப்பதன் மகிழ்வையும் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் தழைந்த தோற்பரப்பில் விரல்கள் குழைந்தாட பருபருத்த குரலில் பாணர் பாடிய எருமைமறப் பாடல்கள் கேட்டவர்களை விழிநீர்விடச் செய்தன. அத்துயர் சொல்லில்லாமல் கடுங்குளிர் என படையில் பரவியது.

சிதையருகே இளைய தந்தை குண்டாசி நின்றிருந்தார். அவர் ஏன் அங்கே வந்தார் என்னும் திகைப்பை அவன் அடைந்தான். பின்னர்தான் முந்தையநாளே அவர்தான் கௌரவப் படைத்தரப்பின் ஈமநிகழ்வுகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டது நினைவு வந்தது. அவனுடைய மெலிந்த சிற்றுடல் காற்றில் சருகு பறப்பதுபோல அங்கே தத்தி அலைந்தது. கைகளை வீசி ஆணைகளை பிறப்பித்தபடி சுற்றிவந்தான். லட்சுமணனைக் கண்டதும் அருகணைந்து “என்ன? உன் தந்தை எங்கே?” என்றான். “அரசர் வரவில்லை என செய்தி…” என்றான் லட்சுமணன். “ஆம், அது இங்கு வந்துள்ளது. வாய்க்கரிசிச் சடங்குகளுக்காக இறந்தோரின் தந்தையர் வரவேண்டும்…” என்றான் குண்டாசி. “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று லட்சுமணன் சொன்னான். குண்டாசி தன் மைந்தர் அங்கிருப்பதை அறியாதோன்போல “பொழுதில்லை… இச்சிதை கொளுத்தப்பட்ட பின்னரே பிற சிதைகள்… இன்று மட்டும் நாநூற்று எழுபது சிதைகள். அவை முழு இரவும் எரிந்தாலே இன்று வீழ்ந்தவர்கள் விண்ணேறமுடியும். மின்னலும் தூறலும் உள்ளது, மழைவருமென்றால் இடர்தான்” என்றான்.

குண்டாசி சற்று மிகையான ஊக்கத்துடன் இருக்கிறானோ என்னும் ஐயம் அவனுக்கு எழுந்தது. அங்கே நிரையென நீண்டுசென்றிருந்த இளையோரின் உடல்களை அவன் ஒருகணத்துக்கு மேல் நோக்கவில்லை. ஆனால் அவன் உள்ளம் குளிரை உணர்ந்து நடுங்குவதுபோல் அவ்வப்போது சிலிர்ப்புகொண்டது. குண்டாசி எதையுமே எண்ணுவதுபோல தெரியவில்லை. படைப்புறப்பாட்டுக்கு முந்தைய ஏற்பாடுகளை செய்பவன்போல பரபரப்பாக இருந்தான். அவன் உடல் மெலிந்து கூன்விழுந்திருந்தமையால் அது வில்மூங்கில் நிலத்தில் ஊன்றப்படுகையில் என சற்று துள்ளுவதுபோலத் தோன்றியது.

எண்பத்தைவருக்கும் ஒற்றைச் சிதை அடுக்கப்பட்டிருந்தது. அங்கே ஆலயம் ஒன்று எழுப்பப்படவிருப்பதாகவும் மரங்கள் அடுக்கப்பட்டு அடித்தளம் ஒருக்கப்பட்டிருப்பதாகவும் தோன்றியது. அரக்கும் மெழுகும் நெய்யும் பொழியப்பட்ட விறகுகள் நனைந்தவை போலிருந்தன. குண்டாசி ஒருவனை உரக்க அதட்டி கீழ்மொழியில் ஏதோ சொன்னான். துருமசேனன் “எப்போதுமே சிறிய தந்தையை செயலூக்கத்துடன் பார்த்ததில்லை” என்றான். “இத்தருணத்துக்காகத்தான் அவர் அப்படி இருந்தார் போலும்” என்ற லட்சுமணன் எண்ணிக்கொண்டு குண்டாசியின் மைந்தர்களை பார்த்தான். அவர்கள் சொல்கேளாதோர்போல அணைந்த விழிகளுடன் இருந்தனர்.

தேர்கள் ஒலிக்க அனைவரும் திரும்பிப்பார்த்தனர். “வந்துவிட்டார்களா?” என்று கேட்ட குண்டாசி “விரைக… பொழுதணைகிறது!” என ஏவலரை ஊக்கினான். ஏழு தேர்களில் இருந்து சித்ராங்கனும், பீமவேகனும், உக்ராயுதனும், சுஷேணனும், மகாதரனும், சித்ராயுதனும், நிஷங்கியும், திருதகர்மனும், சேனானியும், உக்ரசேனனும், துஷ்பராஜயனும், திருதசந்தனும், சுவர்ச்சஸும், நாகதத்தனும், சுலோசனனும், உபசித்ரனும், சித்ரனும், குந்ததாரனும், சோமகீர்த்தியும், தனுர்த்தரனும், பீமபலனும் இறங்கி வந்தனர். ஒருவரே மீண்டும் மீண்டும் வருவதுபோல் விழிச்சலிப்பு ஏற்பட லட்சுமணன் நோக்கு விலக்கிக்கொண்டான்.

அவர்கள் வந்து நின்றதும் குண்டாசி “இறந்தவர்களின் தந்தையர் மட்டும் நிரையாக வந்து தனியாக நிற்கவேண்டும். ஒருவர் சிதையேற்றினால் போதும்” என்றான். அருகே நின்றிருந்த அந்தணர் ஏதோ சொல்ல தலையசைத்து “ஆம், ஒரு கொள்ளியை அனைவரும் கைமாற்றி இறுதியில் ஒருவர் சிதையில் வைக்கலாம்…” என்றான். கௌரவர்களில் பன்னிருவர் உடல்களில் கட்டுகள் போட்டிருந்தனர். துஷ்பராஜயனும், திருதசந்தனும் தடி ஊன்றி காலை நீட்டி வைத்து நடந்தார்கள். அவர்களின் முகங்கள் இருண்டு ஆழ்நிழல் போலிருந்தன. “விரைவு… சடங்குகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. வாய்க்கரிசியிட்டு, நீரூற்றி, மலர்பொழிந்து சிதையேற்றுவதே எஞ்சியுள்ளது” என்றான் குண்டாசி.

இறந்தவர்களின் உடல்கள் நிரையாக கொண்டுவரப்பட்டன. இறந்த மைந்தனின் தந்தை மட்டும் முன்னால் சென்று அரிசியை அள்ளி மும்முறை வாய்க்கரிசி இட்டு, நீர் தெளித்து வணங்கினான். மலரிட்டு தலைதாழ்த்தியபோது அவன் விம்மியழ அவன் துணைவர் இருவர் விழிநீர் வழிய தூக்கி அகற்றினர். சடங்குகள் முடிந்ததும் சடலங்கள் சிதைமேல் பரப்பப்பட்டன. இருபது சடலங்கள் பரப்பப்பட்டதும் அரக்கும் மெழுகும் கலந்து இறுக்கப்பட்ட பலகைகள் அவர்களுக்குமேல் அடுக்கப்பட்டு மென்விறகு செறிவாக பரப்பப்பட்டது. அதன்மேல் மீண்டும் இருபதுபேர். நான்கு அடுக்குகளாக அவர்களின் உடல்கள் அடுக்கப்பட்டபின் மேலே மீண்டும் மெழுகரக்குப் பலகைகளும் விறகும் குவிக்கப்பட்டன. அவர்கள் விழிகளிலிருந்து மறைந்ததுமே லட்சுமணன் ஒரு விடுதலையுணர்வை அடைந்தான். ஆனால் கௌரவத் தந்தையரிடமிருந்து விம்மலோசைகளும் அடக்கப்பட்ட அழுகைகளும் எழுந்தன.

தீப்பந்தம் கௌரவர் கைகளுக்கு அளிக்கப்பட்டது. பீமவேகன் அதை வாங்கத் தயங்கி பின்னடைந்தான். துஷ்பராஜயனும் பின்னடைய குண்டாசி “எவரேனும் வாங்குக… பொழுதாகிறது!” என்றான். உபசித்ரன் அதை வாங்கிக்கொண்டான். அவனிடமிருந்து சித்ரன் பெற்றுக்கொள்ள கைகள் வழியாகச் சென்ற தழல் மகாதரனை அடைந்தது. “தழல் மூட்டுக, மூத்தவரே!” என்றான் குண்டாசி. மகாதரன் தன் பெரிய வயிற்றுடன் மெல்ல கால்வைத்து நடந்தான். இருமுறை நின்றபோது “செல்க!” என்றான் குண்டாசி. சிதையருகே சென்று அவன் நின்று விம்மியழுதான். நிஷங்கியும் சுஷேணனும் அருகே சென்று அவன் தோள்களை பற்றிக்கொண்டார்கள். அவன் விழப்போகிறவன்போல காலை நீட்டி வைத்து நடந்தான். சிதையருகே சென்றதும் எதிர்பாரா விசையுடன் பந்தத்தை வீசி எறிந்தான். சிதையின் அரக்கும் நெய்யும் கலந்த ஈரம் நீலநிறமாக பற்றிக்கொண்டது. நூறாயிரம் நாக்குகள் என நீண்டு எழுந்த தழலால் சிதை கவ்வப்பட்டது. வெடித்து நீலத்தழல் துப்பி நின்றெரியலாயிற்று.

குண்டாசி “திரும்பிச்செல்லலாம். இது களமென்பதனால் இனி நீராட்டு முதலிய சடங்குகள் ஏதுமில்லை” என்றான். பின்னர் “சாவு தொடர்ந்து வந்துவிடக்கூடும் என அஞ்சவேண்டியதில்லை. அது எப்போதும் உடனுள்ளது” என்று சொல்லி புன்னகைத்தான். ஒடுங்கிய முகமும் துறித்த விழிகளும் எழுந்த பற்களுமாக அச்சிரிப்பு அச்சுறுத்தியது. மகாதரன் ஏதோ சொல்ல வாயெடுக்க சித்ரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். கௌரவர்கள் கால்களை தள்ளித் தள்ளி வைத்து தேர்களை நோக்கி நடந்தார்கள்.

சடங்குகளை முடித்து தம்பியருடன் திரும்பி பாடிவீட்டுக்குச் செல்கையில் லட்சுமணன் எதையும் உணரவில்லை. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று மட்டுமே அகம் தவித்தது. முற்றத்தில் சென்றமர்ந்து கைகளை கழுவிக்கொண்டதும் கள்ளும் ஊனுணவும் கொண்டு வரப்பட்டது. உணவை கையிலெடுத்த கணம்தான் உடலுக்குள்ளிருந்தென ஓர் அலை வந்து அவன் நெஞ்சை அறைந்தது. தம்பியர் அனைவரும் உணவு அருந்தியாயிற்றா என்னும் சொல்லன்றி நினைவறிந்த நாள் முதல் அவன் ஒருபோதும் உண்டதில்லை. பற்கள் உரசிக்கொள்ளும் ஓசை தலைக்குள் வெடித்தது. அவன் அதிர்வதை நோக்கி “என்ன? என்ன, மூத்தவரே?” என்றான் துருமசேனன். ஒன்றுமில்லை என அவன் தலையசைத்தான். உடல் உலுக்கிக்கொண்டே இருந்தது. ஊன் துண்டை மீண்டும் தாலத்தில் வைத்துவிட்டு எழுந்து சென்றான்.

துருமசேனன் “மூத்தவரே!” என்றான். அவனை கையை காட்டி விலக்கிவிட்டு லட்சுமணன் நடக்க துருமசேனன் பின்னால் வந்து “உணவுண்ணாவிட்டால் நாளை களைத்திருப்பீர்கள். உண்க, மூத்தவரே!” என்றான். “இல்லை, என்னால் உண்ண இயலாது” என்றான் லட்சுமணன். “மூத்தவரே!” என்று அவன் மீண்டும் கூற “என்னை தனிமையில் விடு” என்றான். துருமசேனன் பேசாமல் நின்றான். லட்சுமணன் விண்மீன்களை பார்த்தபடி சாலமரத்தடியில் சரிவான பீடத்தில் சென்று அமர்ந்தான். விண்மீன்களின் பொருளின்மை அவனை திகைக்க வைத்தது. உளம் பதைத்து அதிலிருந்து விலகிக்கொள்ள முயன்றான். ஆனால் பிறிதொரு விசை விழிகளை அதிலிருந்து விலக்கவும் விடவில்லை.

நெடுநேரம் கழித்து பெருமூச்சொன்று எழ உளம் கலைந்தபோது அருகே துருமசேனன் நின்றுகொண்டிருந்ததை கண்டான். “நீ துயிலவில்லையா?” என்றான். “இல்லை” என்று அவன் சொன்னான். “இளையவர்கள் துயின்றுவிட்டார்களா?” என்றான் லட்சுமணன். “அனைவருக்கும் இருமடங்கு அகிபீனா அளிக்கும்படி ஆணையிட்டேன். பெரும்பாலானவர்கள் துயின்றுவிட்டார்கள்” என்றான் துருமசேனன். “நீ சென்று துயில்கொள்” என்று லட்சுமணன் சொன்னான். “இல்லை, மூத்தவரே” என்று துருமசேனன் சொன்னான். “நீ உணவுண்டாயா?” என்று லட்சுமணன் கேட்டான். அவன் மறுமொழி சொல்லவில்லை. பெருமூச்சுடன் “சரி, உணவை கொண்டுவா. நாமிருவரும் இணைந்து உண்போம்” என்றான் லட்சுமணன்.

தலைவணங்கியபின் துருமசேனன் சென்று தாலத்தில் ஊன் துண்டுகளை கொண்டுவந்தான். ஒரு துண்டை எடுத்தபின் இன்னொன்றை எடுத்து அவனுக்கு அளித்தான் லட்சுமணன். ஆனால் துருமசேனன் அதை கையிலேயே வைத்திருந்தான். அவன் கடித்து உண்ணத்தொடங்கிய பின்னரே உண்டான். உண்டு முடித்து கைகளைக் கழுவியதும் லட்சுமணன் “எனக்கும் அகிபீனா வேண்டும். இரண்டு உருளை” என்றான். “மூன்று வைத்திருக்கிறேன்” என்றான் துருமசேனன். “ஆம்” என்றபின் அவன் அவற்றை எடுத்துக்கொண்டான். கையிலிட்டு உருட்டிக்கொண்டே இருந்தான். அதிலிருப்பது என்ன? அது ஒரு சிறு ஊற்று. அது ஊறி ஊறிப் பெருகி பெருவெள்ளமாகி அனைத்தையும் மூடிவிடுகிறது. முழுமையாக தன்னுள் அமைத்துக்கொண்டு மெல்ல அலைகொண்டு முடிவிலாது பெருகி நிற்கிறது.

மூன்று உருண்டைகளையுமே வாயிலிட்டு கரைந்துவந்த சாற்றை விழுங்கிக்கொண்டு விண்மீன்களை பார்த்துக்கொண்டு லட்சுமணன் படுத்திருந்தான். சற்று நேரத்தில் துருமசேனனின் குறட்டையொலி கேட்கத் தொடங்கியது. விண்மீன்கள் சிலந்திகள் வலையில் இறங்குவதுபோல நீண்ட ஒளிச்சரடொன்றில் தொங்கி கீழிறங்கி வந்தன. மிக அருகே வந்து அவனைச் சுற்றி ஒளிரும் வண்டுகள்போல் பறந்தன. பறக்கும் விண்மீன்களின் சிறகோசையை அவன் கேட்டான். அந்த ரீங்காரம் யாழ்குடத்திற்குள் கார்வை என அவன் தலைக்குள் நிறைந்தது. புலரிக்கு முன் அவன் விழித்துக்கொண்டபோதும் அது எஞ்சியிருந்தது.

லட்சுமணன் படைகளை நோக்கியபடி நின்றான். அவனால் நடக்கமுடியவில்லை. “நம் இளையோர் எங்கிருக்கிறார்கள்?” என்றான். “அவர்கள் எட்டு படைப்பிரிவுகளிலாக இணைந்து பணியாற்றுகிறார்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். “இப்போது கிளம்பினால் எட்டு படைப்பிரிவுகளிலும் சென்று அவர்களை நாம் பார்த்துவர முடியுமா?” என்றான் லட்சுமணன். துருமசேனன் அவனைப் பார்த்து ஒருகணம் தயங்கி “ஆம், சற்று விரைந்து சென்றால் இயலும்… ஆனால்” என்றான். “சொல்” என்றான் லட்சுமணன். “அது அமங்கலப்பொருள் அளிக்கக்கூடும்” என்றான். லட்சுமணன் “ஆம், ஆனால் அது கைநெல்லி என துலங்கும் உண்மை. அவர்களை நோக்காதொழிந்தால்…” என்றபின் “நேற்று சென்றவர்கள் என் கனவில் வந்தனர். பலரை நான் அருகணைந்து ஒரு சொல் உரைத்தே பல ஆண்டுகளாகின்றன என்று உணர்ந்தேன்” என்றான். துருமசேனன் “அழைத்துவரச் சொல்கிறேன்” என தலைவணங்கினான்.

bowலட்சுமணன் காவல்மாடத்தருகே புரவியை நிறுத்திவிட்டு இறங்கி அதன் கணுமூங்கில் வழியாக மேலேறிச் சென்றான். அங்கிருந்த ஒரு காவலன் இறங்கி அவனுக்கு இடமளித்தான். புதிய முரசின் சிவந்த தோலில் கழி விழுந்த தடம் நிறமாற்றமாக தெரிந்தது. லட்சுமணன் தன்னை நோக்கி தலைவணங்கிய காவலனிடம் “மறுபால் படைகள் எழுந்துள்ளனவா?” என்றான். “ஆம் இளவரசே, இன்று அவர்கள் மேலும் ஊக்கம் கொண்டுள்ளனர்” என்றான்.

அவன் மேலே சொல்லும்பொருட்டு லட்சுமணன் காத்து நின்றான். “அங்கே பீமசேனரின் மைந்தர் கடோத்கஜன் வந்துள்ளார். பேருருவ அரக்கர்” என்றான் காவலன். “நம்மவரும் அச்செய்தியை அறிந்துகொண்டிருக்கிறார்கள். அது அனைவரையும் அஞ்சவைத்திருப்பதையும் காணமுடிகிறது. இன்று களத்தில் பெரும் கொலைவெறியாட்டு நிகழுமெனத் தோன்றுகிறது.”

லட்சுமணன் தலையாட்டியபின் பாண்டவப் படைகளை நோக்கிக்கொண்டிருந்தான். அங்கே வாழ்த்தொலிகளும் வெறிக்கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. போர்க்களத்தின் இயல்பான உளநிலை சோர்வே என்று அவனுக்கு தோன்றியது. அதை அவர்கள் வெவ்வேறு நிமித்தங்களால் ஊக்கமென மாற்றிக்கொள்கிறார்கள். மிகையாக்கி களியாடுகிறார்கள். சிரித்துக்கொண்டே சாவுக்குச் செல்வதே மேலும் எளிதானது.

துருமசேனன் வருவதை அவன் ஓரவிழியில் அசைவாகக் கண்டு திரும்பி நோக்கினான். முன்னால் துருமசேனனின் புரவி பலகைப்பாதையில் பெருநடையில் வந்தது. தொடர்ந்து அவன் தம்பியர் நிரை வந்தது. கருமணி மாலை ஒன்று நீண்டுகொண்டே இருப்பதுபோல. ஒருவரே மீளமீள வருவதைப்போல. அவர்களின் முகங்களும் தோற்றங்களும் வெவ்வேறு என்பதை விழிநிலைத்தால் காணமுடியும். ஆனால் அவர்களை ஒற்றைத்திரளெனக் காணவே உள்ளம் விழையும். அவ்வாறு ஒன்றென அவர்களைத் திரட்டும் ஏதோ ஒன்று அவர்களிடமிருந்தது.

லட்சுமணன் மேலிருந்து கீழிறங்கினான். அவன் நிலத்தை அடைந்தபோது புரவியில் அணுகி வந்த துருமசேனன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி இறங்கி தலைவணங்கினான். பிறர் ஒவ்வொருவராக இறங்கினர். அவர்கள் ஆயிரத்தவராக இருந்தமையாலேயே அந்தத் திரள்தன்மை அவர்களுக்கு உருவாகிறது என லட்சுமணன் எண்ணினான். கலைந்துபரவும் கட்டின்மையை அவர்கள் எப்போதும் கொண்டிருந்தாலும் அது புகை என, நீர்ப்பாசி என தனக்குரிய ஒரு வடிவையும் கொண்டிருந்தது. அவர்களில் எவரும் தொலைந்து தனித்துச் செல்வதில்லை. அதை எண்ணியதுமே அவன் குண்டாசியின் இரு மைந்தரை நினைவுகூர்ந்தான். அவர்கள் எப்போதும் தனியர். அவர்கள் அத்திரளில் இருக்கிறார்களா என்று அவன் பார்த்தான். இல்லை என்று கண்டதும் அவன் தலையசைத்து ஆம் என எண்ணிக்கொண்டான்.

துருமசேனன் “நாங்கள் எங்களுக்கென ஒரு முரசொலியை உருவாக்கிக்கொண்டோம், மூத்தவரே. அதை எழுப்பினால் எளிதில் இணைந்துகொள்ள இயல்கிறது” என்றான். விப்ரசித்தியும் நமுசியும் நிசந்திரனும் குபடனும் அகடனும் சரபனும் வந்து அவன் அருகே நின்றார்கள். அஸ்வபதியும் அஜகனும் சடனும் சவிஷ்டனும் தீர்க்கஜிஹ்வனும் மிருதபனும் நரகனும் அவர்களுக்குப் பின்னால் நின்றனர். லட்சுமணன் அவ்வாறு அவர்களை வரச்சொன்னதை எண்ணி கூச்சமடைந்தான். அதில் மங்கலமின்மை இருந்தது. அதை அகம் உணர்ந்தது.

“நான் உங்களைப் பார்த்து சிலநாட்களாகின்றது. நலமாக இருக்கிறீர்களா என்று அறிய விழைந்தேன்” என்றான் லட்சுமணன். அவன் உள்ளத்தை அச்சொற்களிலிருந்தே உணர்ந்த துருமசேனன் “நாம் உடன்பிறந்தார் போரில் நமக்கென படைச்சூழ்ச்சிகள் சிலவற்றை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை சொல்ல மூத்தவர் விழைகிறார்” என்றான். ஆனால் பின்னால் நின்றிருந்த அஸ்வசங்கு “நானும் மூத்தவர் எங்களை சந்திப்பது நன்று என்று எண்ணினேன். ஏனென்றால் நேற்று மட்டும் எண்பத்துமூன்றுபேர் இறந்துள்ளனர். முதல்நாள் போரில் பன்னிருவர். அறுவர் புண்பட்டுக் கிடக்கின்றனர். இப்போது ஆயிரத்தவரில் நூற்றுவர் குறைகிறோம்…” என்றான். அவனை துருமசேனன் தடுப்பதற்குள் அவனருகே நின்றிருந்த கேசி “இன்றும் நூற்றுவருக்குக் குறையாமல் இறப்போம். எங்களை முழுமையாக மூத்தவர் பார்ப்பது நன்று என தோன்றியது” என்றான்.

துருமசேனன் அலுப்புடன் தலையசைத்தான். லட்சுமணன் அப்பேச்சை நேரடியாக எதிர்கொள்வதே நன்று என உணர்ந்து “ஆம், நாம் எஞ்சியோர் இன்றே சந்தித்துக்கொள்வதே நன்று. இப்போரில் நான் விழுந்தால் உங்கள் முகங்கள் நினைவில் எஞ்ச விண்புகுவேன்” என்றான். “இங்கிருந்தாலும் மேலுலகில் இருந்தாலும் ஒன்றென்றே இருப்போம், இளையோரே.” அதை சொன்னதும் அவன் தொண்டை இடறியது. அந்த உணர்வெழுச்சியை அவனே நாணி தலையை குனித்துக்கொண்டான். கைகளால் விழிகளை துடைக்க முயன்று அசைவு நிகழ்வதற்குள்ளே உள்ளத்தால் அடக்கினான்.

துருமசேனன் அந்த இடைவெளியை நிறைக்கும்பொருட்டு “மூத்தவரை வணங்குக!” என்று இளையோரிடம் சொன்னான். அவர்கள் ஒவ்வொருவராக வந்து லட்சுமணனை வணங்கினர். அவன் அவர்களை நெஞ்சோடு அணைத்து வாழ்த்துரைத்தான். அணைக்க அணைக்க தம்பியர் பெருகுவதுபோல் உணர்ந்தான். இறந்தவரும் இவர்களுக்குள் இருப்பார்கள்போலும் என்று எண்ணி மெய்ப்புகொண்டான். ஆயிரத்தவர். கார்த்தவீரியனின் ஆயிரம் தம்பியர். அவன் கண்களில் இருந்து நீர் வழியத்தொடங்கியது. இளையோரும் விழிசொரிந்தனர். பின்னர் அடக்கவேண்டியதில்லை என்றாக அவர்கள் விம்மலோசை எழ அழுதனர். அழுகை ஏதோ இடத்தில் நின்றுவிட சிரித்தனர்.

“மூத்தவரே, அவனை இருமுறை வாழ்த்திவிட்டீர்கள்” என்றான் சம்பிரமன். “சிலர் கூட்டத்தில் புகுந்து மீண்டும் மீண்டும் வாழ்த்து பெறுகிறார்கள். இப்படி போனால் அந்திவரை இந்த வாழ்த்துரை தொடரக்கூடும்.” லட்சுமணன் வாய்விட்டு நகைத்து “வாழ்த்து பெற்றவர்களெல்லாம் அப்பால் செல்க!” என்றான். “வாழ்த்து பெற்றவர்களின் முகத்தில் ஏதேனும் அடையாளம் வைக்கலாம்” என்றான் சத்ருதபனன். “முகத்திலா? ஓங்கி அறையலாம். சிவந்த தடம் எஞ்சும்” என்றான் துருமசேனன். சிரித்துக்கொண்டே அவர்கள் வணங்க அவர்களின் தோள்களில் அறைந்தும் முதுகைத் தட்டியும் லட்சுமணன் தழுவிக்கொண்டான்.

“மூத்தவரே, நேற்று சிறிய தந்தை பீமசேனரின் போராடலை கண்டேன். எனக்கு மெய்ப்பு எழுந்தது. போர்த்தெய்வம் எழுந்தது போலிருந்தார்” என்றான் கிரதன். தரதன் “அவருடைய கைகளையும் கால்களையும் பெருங்காற்றுகள் எடுத்துக்கொண்டன என்று சூதர் பாடினர். அவர் காற்றின் மேலேயே ஊர்வதை பலமுறை கண்டேன்” என்றான். “அவர் கையால் சாவதென்பதே நற்பேறு. நம்குடியின் மாவீரர் அவர். ஒருமுறையேனும் அவருடன் கதைபொருதி களத்தில் வீழ்ந்தால் நான் பிறந்தது ஈடேறும்” என்றான் குகரன். ”ஆம், அவருடைய தோள்தசைகளையே நோக்கிக்கொண்டிருந்தேன். கதை அவரைச் சூழ்ந்து பறக்கும் மெல்லிய இறகு போலிருந்தது” என்றான் ஆஷாடன்.

லட்சுமணன் முதலில் சற்று திகைப்படைந்தான். ஆனால் அவர்களின் முகங்களை பார்க்கையில் அவன் உள்ளம் மலர்ந்தது. “ஆம், போர்க்கலைகளில் கதைப்பயிற்சியே உச்சமென நேற்று நானும் எண்ணினேன்” என்றான். துருமசேனன் அச்சொல்லால் ஊக்கம் பெற்று “நான் அவருடன் இருமுறை கதைபொருதினேன். என் கதையை தட்டித்தெறிக்கச் செய்தார். யானைக்குப் பின் சென்று உயிர் தப்பினேன். பின்னர் எண்ணினேன், பெருங்காற்றுகளின் மைந்தனுடன் நின்று பொருதி மீண்டிருக்கிறேன். நானும் கதைத்திறலோன் என்று ஆனேன் என்று…” என்றான்.

“இளமையில் அவருடைய தோளில் தொற்றி களிநீராடியிருக்கிறோம், மூத்தவரே. அதைப்போல ஒரு விளையாட்டுதான் இது என்று எனக்கு பட்டது” என்றான் உத்வகன். லட்சுமணன் “ஆம், இது வெறும் விளையாட்டு. நாம் எஞ்சுவோம். அழியாது வாழும் ஓர் இடத்திலிருந்து இவை அனைத்தையும் எண்ணி எண்ணி மகிழ்வோம்” என்றான். துருமசேனன் “பொழுதணைகிறது, மூத்தவரே” என்றான். அவர்கள் தனி முகங்களை இழந்து மீண்டும் திரளென்றாகி தங்கள் புரவிகளை நோக்கி சென்றார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

நூறுநிலங்கள் -கடிதங்கள்

$
0
0

 

nuru

 

நூறுநிலங்களின் மலை வாங்க

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

 

மனது சற்றே சலிப்புறும்போது  தங்களின் பிரயாணக் கட்டுரைகளை மீள்வாசிப்பு செய்வது ஒரு பழக்கமாகியிருக்கிறது.

 

//வெள்ளிமுடி சூடிய மலைச்சிகரங்கள் காலமின்மையில் அமைந்திருந்தன. மிகமெல்ல ஒரு தியானநிலை கைகூடி வந்தது. நானும் காலமற்றவனானேன். என் சிந்தனை கரைந்தழிய கண் மட்டும் உயிருடன் எஞ்சியது. ஏதோ ஒன்று நிகழ்ந்து மெல்ல மெல்ல மறைந்தது. // நூறு நிலங்களின் மலை…

 

அந்த கட்டுரைத் தொகுப்பிலேயே நானும் மறைய முற்பட்ட இடமாக இந்த வரிகளை மீண்டும் மீண்டும் என்னுள் நிகழ்த்திக்கொண்டிருந்தேன்.  பயணம் செய்த களைப்பில் கண்ணில் மாலை வெயிலில் ரங்தூன் மடாலயம் தெரிய குளிரில் போர்த்தியபடி படுத்திருந்த கணத்தை, மனிதர்கள் அருகிய வெளியில் மனதில் ஒரு பிரமாண்ட மௌனத்தை  வெகுவாக அருகில் உணர்ந்தேன்.  ஒரு சௌந்தர்ய சொப்பன சாயங்காலம்!  மலைகளின் சரிவில் பெரும் விரிப்புபோல  நிழல்களின் அழகு.  ஒருமை மனதில் தானே அமைவதற்கான வெகு நெருக்கமான சூழல்.

 

 

இளம்வயதில் ஞாயிற்றுக்கிழமைகளில் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்று ஒரு ஆங்கிலத் தொடர் வரும்.  மேலிருந்து வரும் ஒருகருவியின் ஒளிக்கற்றைகளில் சென்று நின்றால் அப்படியே கலைந்து மறைந்து வேறு ஒரு இடத்தில் தோன்றுவார்கள்.  அதற்கு இணையான அனுபவத்தை தவறாமல் தங்கள் பயணக்கட்டுரைகள் அளிக்கின்றன.  சட்டென்று சூழலினின்று விலகி வேறுஒரு இடத்தில் பொருத்திக்கொள்ளும் தருணம்.

 

அந்த வகையில் என் மனதுக்கு மிகவும் அணுக்கமான ஒரு பதிவு ” நூறு நிலங்களின் மலை”.  குளிர்மலைப் பிரதேசங்களின் மீதான என் ஆழ்மனது நெருக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.  புத்தகம் படுத்துக்கொண்டே படிக்க மிகவும் உகந்ததென்றாலும் ( கனவு எளிதில் வசப்படுமல்லவா) அதில் கறுப்பு வெள்ளை படங்கள்தானிருந்தன.  இணையத்தில் தங்கள் பதிவில் வண்ணப்படங்கள் மேலும் அந்த அனுபவத்தை அணுக்கமாக்கின.

 

படித்துக்கொண்டே வரும்போது  நீங்கள் பயணிக்கும் இடங்களின் பெயர்களை இன்னொரு விண்டோவில் திறந்து  இந்திய வரைபடத்தில் குறித்துக்கொண்டே வருவேன்.  பிறகு அதைச்சார்ந்த காணொளிகளை இணையத்தில் தேடிப்பார்ப்பேன்.  உங்கள் எழுத்தைச் சார்ந்து வரும் என்று எனக்குத் தோன்றும் காணொளியைத் தேர்வுசெய்து அதன் ஒலியை முழுமையாகக் குறைத்துவிடுவேன்.  மனதில் உங்கள் எழுத்துகள் ஓட அந்தக் காணொளியைப் பார்ப்பது உங்கள் வார்த்தைகளின் நிகழ்சித்திரமாக  மேலும் அந்த  விவரிக்க இயலாத அனுபவத்தை எனக்கு சிறப்பாக்குகிறது.  கிட்டத்தட்ட அருகில் அமைந்ததென்று நான் நினைத்த ஒரு இணைய  காணொளி சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

 

https://www.youtube.com/watch?v=7oYSVUM0bwQ

 

திருதராஷ்ட்ரன் கண்ட குருஷேத்திரமாக எனக்கே எனக்கான அனுபவத்தை தங்கள் எழுத்தின்மூலம் நிகழ்த்தியமைக்கு நன்றி!

 

 

அன்புடன்

நா. சந்திரசேகரன்

அன்புள்ள ஜெ

 

நூறுநிலங்களின் மலை  கட்டுரைகளை உங்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக வாசித்திருந்தேன். ஆனால் அதை நூல்வடிவில் வாசித்தது வேறொரு அனுபவமாக இருந்தது. இணையத்தில் வாசிக்கையில் உங்களுடனேயே வந்துகொண்டிருக்கும் அனுபவம் அமைந்தது. ஆனால் நூலில் ஓர் ஒன்றுதல் ஏற்பட்டது

 

இமையமலை என்றாலே பொதுவாக பக்திப்பயணமாகத்தான் எழுதுவார்கள். பக்தி ஏதுமில்லாமல், தலபுராணங்களோ வரலாரோ இல்லாமல் வெறும் இயற்கைவர்ணனையாகவே அமைந்திருந்தது இந்நூல். ஆகவே ஒரு காலமில்லாத கனவு போல் இருந்தது

 

எஸ்.ராஜ்சேகர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா

$
0
0

nara

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

 

அன்பின் ஜெ,

 

முதலில் எழுதிய கட்டுரை, பாதியிலேயே நிற்கிறது; ஒரு கட்சி சார்பாக இருப்பது போல் உள்ளது என்னும் பின்னூட்டம் வந்த்து. அந்தக் கட்டுரையை எழுதும் போது, 1980 துவங்கிய பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் என்ன என எனக்குள் தொகுத்துக் கொள்ளும் முயற்சிதான் அது.

 

ஆனால், சீர்திருத்தங்களும், திட்டங்களும் 1991 க்குப் பின்னும் நிகழ்ந்தன என்பதையும் தொகுப்பதுதான் சரியாக இருக்கும்.

 

1996 முதல் 2004 வரை ஒரு காலகட்டம் – காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி.

 

இந்தக் கட்டுரை காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் பங்களிப்பின் தொகுப்பு.

 

உங்கள் பார்வைக்கு

 

பாலா

vaj

 

 

1996 முதல் 2004 வரை – பொருளாதாரத் திட்டங்கள், சீர்திருத்தங்கள், வளர்ச்சி..

 

1996 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத ஒரு நிலையை உருவாக்கியது. பாஜக 140 இடங்களைப் பெற்று, பெரும் கட்சியாக உருவெடுத்தது.  பாஜக வை ஆட்சியமைக்க அழைத்த குடியரசுத்தலைவர் சங்கர் தயாள் ஷர்மா, பெரும்பான்மையை நிரூபிக்க, வாஜ்பேயி அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்தார். ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கை இல்லாமல், வாஜ்பேயி, ராஜினாமா செய்தார். அதற்கடுத்த பெரும்பான்மைக் கட்சியான காங்கிரஸ் ஆட்சியமைக்காமல், ஜனதா தளம் உருவாக்கியிருந்த, ஐக்கிய முண்ண்ணிக்கு, வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. ஐக்கிய முண்ணனி ஆட்சியமைத்தது.  கர்நாடகத்தைச் சேர்ந்த தேவே கௌடா பிரதமரானார். அவர் 1997 ஆம் ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். அதன் பின்,  ஐ.கே குஜ்ரால்,  1998 மார்ச் வரை பிரதமராக இருந்தார். இந்தக் காலத்தில், தமிழகத்தின் ப.சிதம்பரம் (தமிழ் மாநில காங்கிரஸ்) நிதியமைச்சராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்திலும், முந்தைய நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்ந்தன.

 

கனவு பட்ஜெட்:

 

1997-98 ஆம் ஆண்டு, ப.சிதம்பரம் தாக்கல் செய்த  பட்ஜெட், 1991 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு அடுத்த படியாக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. 1991 போல் பொருளாதாரச் சிக்கல்கள் இல்லை. அந்நியச் செலாவணிக் கையிருப்பு 19.5 பில்லியன் டாலர்கள்; முந்தய மூன்று ஆண்டுகளில், இந்தியா சாரசரியாக 7% வளர்ச்சி; தொழில்துறை 10.6% வளர்ச்சி என ஒரு சாதகமான பொருளாதாரச் சூழல். நிதிமையச்சர் மிகத் துணிவுடன், அடுத்த நிலை பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்தார்.

பொருளாதாரத் தளங்களில், லாஃபர் வளைவு (Laffer Curve) என்னும் கருதுகோள் உண்டு. இது, ஆர்தர் லாஃபர் (Arthur Laffer) என்னும் பொருளியல் நிபுணர் முன்வைத்தது. குறைவான வரிவிகிதம், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, நாட்டின் வரி வருவாயை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமான வரிவிகிதம் பொருளாதார நடவடிக்கையை முடக்கி, வளர்ச்சியைக் குறைத்து, மொத்த வரி வருவாயைக் குறைக்கும் என்பதே அது.

அந்தத் திசையில், பட்ஜெட்டில், நிறுவன மற்றும் தனிமனித நேர்முக வரிகள், பெருமளவு குறைக்கப்பட்டன.

தனியார் நிறுவனங்களுக்கான வருமான வரி 40% லிருந்து, 35% ஆகக் குறைக்கப்பட்டது. வரிமீது விதிக்கப்பட்ட 7.5% கூடுதல் வரி முற்றிலுமாக விலக்கப்பட்டது. நிறுவனப் பங்குகளில் வரும் ஈவுத் தொகை (Dividend) மீதான வருமான வரி விலக்கப்பட்டது. அதன் மீது, நிறுவனங்கள், 10% வரி கொடுக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டது. அதாவது நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரும் ஈவுத் தொகை வருமானத்துக்கு வரி முற்றிலும் கிடையாது.

தவிர, தொலைத்தொடர்புத் துறை மற்றும் எண்ணெய், எரிவாயு, தனியார் தொழிற்பேட்டைகள் போன்ற முக்கியத் துறைகள், கட்டமைப்புத் (infrastructure industries) தொழில்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்குக் கொடுக்கப் பட்டது.

மறைமுக வரிகளான இறக்குமதி வரி (Import Duty) அதிகபட்ச வரி 50% லிருந்து 45% ஆகவும், கலால் வரி (Excise Duty) அதிக பட்ச வரி, 20% லிருந்து 18% ஆகவும் குறைக்கப்பட்டன.

இந்தக் குறைப்பைச் சரிசெய்ய, சேவை வரிகள் பல புதுத் துறைகள் (போக்குவரத்து, மனித வள மேம்பாட்டுத் துறை..) மீது விதிக்கப்பட்டன.

தனிமனித நேர்முக வரிவிகிதங்கள், 15%, 30%, 40% லிருந்து, 10%, 20%, 30% என மாற்றியமைக்கப்பட்டன.

இந்த அளவு, ஒரு ஒட்டு மொத்த, வரியளவுக் குறைப்பு, மிகத் துணிச்சலான முன்னெடுப்பு எனக் கருதப்படுகிறது. தனிமனித மற்றும் நிறுவன வரிவிகிதங்கள், இந்த பட்ஜெட்டில், மற்ற உலகநாடுகளுக்கு இணையாக மாற்றப்பட்டன.

இது ஒரு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தப்பட்டது என்பதால் இது அதிக முக்கியத்துவம் பெருகிறது.

 

வாஜ்பேயி ஆண்டுகள்:

 

ஐக்கிய முண்ணனி ஆட்சி கவிழ்ந்ததன் பின் 1998 ஆண்டு தேர்தலில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து, வாஜ்பேயி, கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைத்தார்.  அந்த ஆண்டு மே மாதம், அணுகுண்டுப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள், இந்தியா மீது தொழிநுட்பத்தடைகளை விதித்தார்கள். 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாஜ்பேயி அரசுக்கு அளித்து வந்த, தன் ஆதரவைத் திரும்பப் பெற்று விட, ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்த முறை, பல அரசியல் வேறுபாடுகள் இருந்தும், கூட்டணி ஆட்சி நீடித்தது.

வாஜ்பேயியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட பெரும் பொருளாதார நடவடிக்கை, தங்க நாற்கரமாகும். இது, நாட்டின் நான்கு பெரும் நகரங்களை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலைத் திட்டம். இது தவிர, கிராமிய சாலை இணைப்புத் திட்டம், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை போன்றவை வாஜ்பேயி காலத்தில் நிகழ்த்தப் பட்ட தனித்துவப் பொருளாதாரத் திட்டங்கள். தவிர, நரசிம்ம ராவ் காலத்தில் துவங்கப் பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேலும் வலுப்படுத்தப் பட்டன.

 

தங்க நாற்கரம்:

 

தில்லி, மும்பை, சென்னை கல்கத்தா ஆகிய இந்தியாவின் நான்கு பெரும் நகரங்களை இணைக்கும் 5846 கிலோமிட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம், இந்தியாவின் மிகப் பெரும் நெடுஞ்சாலைத் திட்டமாகும். உலகின் ஐந்தாவது பெரிய நெடுஞ்சாலையும் கூட. 1999 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம், இந்தத் திட்டம் 2000 ஆண்டு துவங்கியது. இது முதலில், நான்கு வழிச் சாலையாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் 2009 ஆம் ஆண்டு 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு, 35000 கோடி செலவில் முடிக்கப்பட்டது.

இந்த நெடுஞ்சாலை, 13 மாநிலங்கள் வழியே, 84 பெரும்/சிறு தலைநகர்கள், வணிகத் தொழில் நகரங்களை இணைத்தது.  இந்தத் திட்டத்தின் பெரும் பயனாளிகள் ஆந்திரம் (1014 கி.மீ), உத்திரப்பிரதேசம் (756 கி.மீ), ராஜஸ்தான் (725 கி.மீ), கர்நாடகம் (623 கிமீ) ஆகும்.

90 களில் துவங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின்னர், தொழில் மற்றும் வணிகக் கொள்கைகள், தனியார் துறையை பெருமளவு ஊக்குவித்தன. அவற்றின் கொள்திறனும், செயல் திறனும் அதிகரித்தது. ஆனால், அந்தக் உற்பத்தியைக் கொண்டு செல்லும் சாலைக்கட்டமைப்பு இல்லாமல், நேரம் மற்றும் நிதி விரயங்கள் தனியார் துறையைப் பெரிதும் பாதித்தன. இந்தத் திட்டம், அந்தச் சிக்கலைப் பெருமளவு போக்கியது எனச் சொல்லலாம்.

இந்தக் கட்டமைப்பினால், பெரும் கொள்ளளவு திறன் கொண்ட வாகனங்கள் புழக்கத்துக்கு வந்தன. 9 டன் லாரிகளே இருந்த காலத்தில் இருந்து 16-25 டன் வரை ஏற்றிச் செல்லும் கன ரக வாகனங்கள் புழக்கத்துக்கு வந்தன. நீண்ட தொலைவுத் தடங்களில், பயண நேரம் 15-20% வரை குறைந்தது. தரமான சாலைகளால், வாகனங்களின் தேய்மானம், உதிரிப் பாகங்கள் தேவை கணிசமாகக் குறைந்தது. வண்டிகளின் மைலேஜ் அதிகரித்தது.

இதனால், இந்தச் சாலைகளின் அருகில் இருந்த தொழிற்சாலைகளின் கொள்திறன் மற்றும் செயல்திறன் அதிகரித்தது என, “High way to Success: The impact of the Golden quadrilateral Project for the Location and performance of Indian manufacturing என்னும் தலைப்பில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது. இது, உலக வங்கி பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் எஜஸ் ஹனி (Ejaz Ghani) மற்றும் ஆர்த்தி க்ரொவரும் (Arti Grover), ஹார்வர்ட் மேலாண் பள்ளியைச் சார்ந்த  வில்லியம் ஆர் கெர் (William R. Kerr) என்பவரும் இணைந்து, National Bureau of Economic research என்னும் அமெரிக்க நிறுவனத்துக்காக மேற்கொண்ட ஆராய்ச்சியாகும்.

மேலும், நிலக்கரி, சிமெண்ட், மின் உற்பத்தி நிறுவனம் போன்ற கச்சாப் பொருட்களை அதிகம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள், தங்கள் கச்சாப் பொருள் இருப்பை குறைக்க முடிந்தது என்றும் இன்னும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  இதை சௌகதோ தத்தா (saugato Datta, World Bank group, 2008) என்னும் ஆய்வாளர் விரிவாக ஆராய்கிறார்.  தங்க நாற்கரச் சாலையோடு தொடர்புடைய நகரங்களில் (19) உள்ள நிறுவனங்களையும், தொடர்பில்லாத நகரங்களில் (18) உள்ள 1091 தொழில் நிறுவனங்களின் புள்ளிவிவரங்களை, இந்தத் திட்டத்துக்கு முன்பும் (2002) பின்பும்(2005) ஆராய்ந்து அவர் முடிவாக வைக்கும் அவதானிப்புகள் இவை:

  1. தங்க நாற்கரச் சாலையினால் இணைக்கப்பட்ட தொழிற்சாலைகளில், கச்சாப் பொருள்களின் அளவு 7 நாட்கள் வரை, தங்க நாற்கரச் சாலைகள் வந்த பின் குறைந்திருக்கிறது. இது கிட்ட்த் தட்ட 15 – 25% சேமிப்பு. இந்த அளவுக்கு, நிறுவனம், கச்சாப் பொருட்களை வாங்க ஆகும் நிதியைக் குறைத்திருக்கிறது.
  2. சாலையினால் இணைக்கப் பட்ட தொழிற்சாலைகள், தங்களுக்கு கச்சாப் பொருட்கள் அளிக்கும் சப்ளையர்களை மாற்றும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. புது சப்ளையர்கள் வரும் போது, கச்சாப் பொருள் வாங்கும் விலை குறையும் வாய்ப்புகள் மிக அதிகம்.

மேலும், நெடுஞ்சாலை அமைத்தலும், மேலாண்மையுமே ஒரு பெருந்தொழிலாக எழுந்து வந்ததும், அதனால் உண்டான வேலைவாய்ப்புகளும் இன்னுமொரு நேர்மறை விளைவு.

 

பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைத்திட்டம்:

 

இது, வாஜ்பேயியின் ஆட்சியில் துவங்கப்பட்ட இன்னுமொரு முக்கியமானதிட்டம் ஆகும். சமவெளிகளில், 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், 1.7 லட்சம் கிராமங்களை நகரங்களோடு இணைக்கும் சாலைகளை இணைக்கும் திட்டம். இது, 2017 டிசம்பர் மாதம் வரை 82% நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பயனை அடைந்தன. இதை ஆய்வு செய்த, திட்டக் கமிஷன், கீழ்க்கண்ட அவதானிப்புகளை முன்வைக்கிறது.

(https://rural.nic.in/sites/default/files/Study%20of%20PMGSY.pdf)

  1. இணைக்கப் பட்ட கிராமங்களில், 50% மேற்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்
  2. 68% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள்.
  3. வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு, வாகனப் பேருந்துகள் 31% கிராமங்களில் துவங்கியிருக்கிறது.
  4. 40% சதவீத கிராமங்களில், சிறு சரக்கு வாகனப் போக்குவரத்து துவங்கியிருக்கிறது.
  5. உணவு தானியங்கள் விளைவது குறைந்து காய்கறிகள்/ பழங்களின் சாகுபடி அதிகரித்து இருக்கிறது.
  6. உர உபயோகம், ட்ராக்டர் / டில்லர் உபயோகம் அதிகரித்து இருக்கிறது.
  7. உழவர்கள் தங்கள் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பது அதிகரித்திருக்கிறது. அவர்களது வருமானமும் அதிகரித்திருக்கிறது.

புதிய தொலைத் தொடர்புக் கொள்கை:

 

80 களில் சாம் பிட்ரோடா துவங்கிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி, 90 களில் பெரும் வளர்ச்சி அடைந்திருந்த்து. 1990 ஆம் ஆண்டு, 0.6 ஆக இருந்து தொலை பேசி இணைப்புக் குறியீடு, 1996 ல் 1.54 ஆக வளர்ந்த்து. இது லேண்ட் லைன்களுக்கான குறியீடு. 1995 ஆம் ஆண்டு கைபேசி இணைப்பு இந்தியாவில் துவங்கப்பட்ட்து. இந்தியாவில் உள்ள பல் வேறு மாநிலங்களிலும், கைபேசித் தொடர்புக்கான லைசென்ஸ்கள் தனியாருக்குத் தரப்பட்டன.  4 மெட்ரோ நகரங்கள், 18 மாநிலங்கள் எனப் பிரிக்கப்பட்டு, இதற்கான உரிமங்கள் ஏலத்தில் விடப்பட்டன.

ஆனால், 90 களின் இறுதியில் எதிர்பார்த்தது போல, கைபேசிச் சேவைகள் எல்லா மாநிலங்களிலும், குறிப்பாக ஊரகத் தொடர்பு எதிர்பார்த்தது போல பரவலாக நிகழவில்லை. தொலைபேசித் துறையின் தொழில்நுட்பமும் மாறியிருந்தது. 94 ல் ஏலம் விடப்பட்ட தொகைக்கேற்றார் போல, தொழில் வளர்ச்சி நிகழவில்லை.

1999 ஆம் ஆண்டு, புதிய தொலைத் தொடர்புக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. அதிக ஏலத்தொகை ஒரு பாரமாக இருப்பதை மாற்றி, குறைந்த பட்ச நுழைவுக்கட்டணம், அதன் பின் வரும் வருவாயில் பங்கீடு, லேண்ட் லைன், கைபேசிச் சேவை, இணையச் சேவை போன்றவை இணைப்பு, கைபேசிச் சேவையில் அரசு நிறுவனங்களின் நுழைவு, தொலைபேசிச் சேவையில் 49% அந்நிய முதலீடு, தொலைத் தொடர்பு கருவிகள் உற்பத்திக்கும் 100% அந்நிய முதலீடு அனுமதி போன்ற முதலீட்டுக்கு அணுக்கமான கொள்கைகள் கொண்டு வரப்பட்டன.  இதனால், இத்துறையில், பல நிறுவனங்கள் உள்ளே நுழைந்தன.  1999 ஆம் ஆண்டு 3430 கோடியாக இருந்த அந்நிய முதலீடு, 2007 ஆம் ஆண்டில் 45970 கோடியாக உயர்ந்தது.

நிறுவனங்களின் போட்டி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால், தொலைபேசிக் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்தன. உள்நாட்டுத் தொலைதூரக் கட்டணங்கள் நிமிடத்துக்கு 30 ரூபாயிலிருந்து(1997), 2.40ரூபாயாகக்(2007) குறைந்தது. வெளிநாட்டுத் தொலைபேசிக் கட்டணம், நிமிடத்துக்கு 75 ரூபாயிலிருந்து (1997), 6.40 ரூபாயாகக் குறைந்தது.  இது, இத்துறையில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம்.

தகவல் தொலைத்தொடர்புத் துறை நவீனமயமாக்கம், 80 களில் துவங்கி, 95 ல் கைபேசிச் சேவைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், அரசின் கொள்கையைக் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து, அதை முன்னெடுத்த வகையில், 1999 ஆம் ஆண்டில், புதிய தொலைத்தொடர்புக் கொள்கை ஒரு முக்கியமான கொள்கைச் சீர்திருத்தம் ஆகும்.

 

man

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பத்தாண்டுகள் (1991-2011)

 

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன்பான (1981-1990) பத்தாண்டுகளின் பொருளாதார வளர்ச்சியை (5.7%) விட, பின்பான (1991-2001) பத்தாண்டுகளின் வளர்ச்சி (6%), சற்றே அதிகம்.

பொருளாதாரச் சீர்த்திருத்தங்களுக்குப் பின்பான ஐந்தாண்டுகளில் (1991-96), வளர்ச்சி 6.7% ஆக இருந்தது. அடுத்த ஐந்தாண்டுகளில், (1996-2001), இந்த வளர்ச்சி 5.4% ஆகக் குறைந்து விட்டது.

அதிலும், 1994-97 வரையான மூன்று ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி 7+% சதவீதமாக இருந்தது.  அதற்கு முக்கிய காரணம்,  பொருளாதாரத்தில் அரசும், தனியார் துறையும் இணைந்து செய்த அதிக முதலீடு தான் (பொருளாதாரத்தில் 23%) காரணம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் திட்டக் கமிஷனின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா. அரசு முடிவு செய்த இலக்கான 7.5 – 8% சதவீத வளர்ச்சிக்கு, பொருளாதாரத்தில் இன்னும் அதிக முதலீடு செய்யப்பட்டால் ஒழிய,  7-8% வளர்ச்சியை அடைவது கடினம் என்பது அவரது கருத்து.

1996-2004 வரையான காலகட்டத்தில் முதலீடுகள் தனியார் துறையிலும், அரசுத் துறையிலும் வந்தன. ஆனால், அவற்றின் பலன் 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னரே பொருளாதார வளர்ச்சி வடிவில் வெளிப்பட்டது.

1997-98 பட்ஜெட்டில், சிதம்பரம், தனியார் துறை வருமான வரியை 8 சதம் குறைத்தார். அதுமட்டுமல்லாமல், லாபத்தில் தரப்படும் ஈவுத் (dividend) தொகைக்கான வரியை விலக்கினார். இந்த நடவடிக்கை,  தனியார் நிறுவனத்தின் நிகர லாபத்தை அதிகரித்தது. முதலீட்டாளர்களிடம் சேரும் ஈவுத் தொகை லாபமும் அதிகரித்தது. இது பெரும்பாலும், மீண்டும் தொழில் முதலீடாக, கொள்திறனை அதிகரிக்கவோ அல்லது, புதுத் தொழில் துவங்கவோ வந்தது.

அந்தப் பட்ஜட்டில், தொலைத் தொடர்புத் துறை, தனியார் தொழிற்பேட்டைகள் முதலானவற்றுக்கான முதலீட்டிற்கு 10 ஆண்டுகள் வரிச்சலுகை கொடுக்கப்பட, அவற்றில் தனியார் துறையினர் பெருமளவில் முதலீடு செய்தனர்.

அதே பட்ஜட்டில் அதிக பட்ச தனிநபர் வருமான வரியையும், 10% குறைத்தார். இதனால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கையில் அதிகப் பணம் கிடைத்தது. இந்தச் சமயத்தில், மிகப் பெரும் எழுச்சியைக் கண்ட மென்பொருள் துறையும், தொலைத் தொடர்புத் துறையும், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நல்ல  ஊதியத்தை வழங்கினர்.  இந்த பணம், வீடுகள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றின் தேவைகளைப் பன்மடங்கு அதிகரித்தது.

1999 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட புதிய தொலைத் தொடர்புக் கொள்கை, தொலைத்தொடர்புத் துறை பல மடங்கு வளர உதவியது. தொலைத் தொடர்புக் கருவி உற்பத்தியில் அந்நிய முதலீடு, 2007 ஆம் ஆண்டில் 45970 கோடியாக உயர்ந்தது.

2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தங்க நாற்கரச் சாலையில், அரசு 35000 கோடி முதலீடு செய்தது. தொழில்துறையில் செயல் திறனும், கொள்திறனும் அதிகரித்தன. போக்குவரத்துச் செலவும் நேர விரயமும் பெரிதும் குறைந்தன.

இந்த முதலீடுகளும், பொருளாதாரச் சீர்திருத்தங்களும், 1991-2001 காலகட்டத்தில் இருந்த 6% பொருளாதார வளர்ச்சியை, 2003-2008 காலகட்டத்தில், 8% ஆக முன்னெடுக்கப் பெரும் உந்துசக்தியாக இருந்தன.

Reference:

  1. Budget Speech, P.Chidambaram, 1997-98
  2. Highway to Success: The impact of the Golden Quadrilateral Project for the location and performance of Indian Manufacturing – Ejaz Ghani Arti Grover Goswami William R. Kerr,

National Bureau of Economic Research,  Cambridge.

  1. Economic Reforms in India since 1991 – Has gradualism worked? –Montek Singh Ahluwalia, Journal Of economic perspectives, Summer,2002
  2. The Impact of Policy and Regulatory decisions on Telecom Growth in India – Stanford University, July-2008
  3. New Telecom Policy,1999 – Ministry of Telecommunications.
  4. Impact Assesment of Pradhan Mantri Gram sadak yojana for the planning commission.

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ரகசியச் சலங்கை

$
0
0

isai

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்,இசை …வாங்க

ஒரு கவிதைத் தொகுதிக்குரிய தலைப்பு அல்ல இசையின் புதிய தொகுப்புக்கு. ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ சமூகசீர்திருத்தக் கருத்துக்களின் குவியல் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அட்டையும் விந்தையானது. வழக்கமாக கவிதைத் தொகுதிகளின் அட்டையிலுள்ள குறியீட்டுநவீன ஓவியம் இதில் இல்லை. ஓவியமும் முகநூல்பக்கமும் ஊடுபாவாக அமைந்த க்லவைச்சித்திரம். கிறிஸ்துவுக்கு பின்பக்கம் காட்டிப் படுத்திருக்கும் சிறுமியின் கோட்டோவியம் அளிக்கும் உணர்வு தனித்துவமானது

 

இசையின் கவிதைகள் மெல்லிய தற்கேலியையும், கள்ளமின்மையையும் தன் புனைவுப்பாவனையாகக் கொண்டவை. பகடி என அவற்றை வகைப்படுத்தலாகாது, பகடிக்குள் இருப்பது எப்போதுமே விமர்சனம். பகடிக்கலைஞர்கள் மிகமிக நுட்பமாக தங்கள் ஆணவத்தை மறைத்துக்கொள்பவர்கள். ஆகவேதான் பகடிக்கலைஞர்களை பிறர் பகடி செய்தால் மிக மெல்லிய கிண்டலுக்கே கடுமையாகப் புண்பட்டுவிடுவார்கள். அது ஏற்கனவே புண்பட்டுவிட்டமையால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் தன்னிலை

 

இசையின் கவிதைகளுக்குள் விமர்சனம் இல்லை, அதற்கான உறுதியான தன்நிலையும் இல்லை. அவை தன்னை மெய்யாகவே எளிதாக உணரும் கணங்களை எழுதிக்காட்டுபவை. உண்மையான பிரியத்தை உள்ளுறையாகக் கொண்டவை. என்னளவில் பகடி என்பது இலக்கியவகைமையில் ஒருபடி கீழானது. மேலான கவித்துவத்தை விட பலமடங்கு குறைவானது. இக்கவிதைகளிலுள்ளது புன்னகை. பிரியத்தின் புன்னகை. கசப்பையும் பிரியமாக வெளிப்படுத்துவது. துயரை உள்ளே வைத்துக்கொள்வது.

 

 

வல்லதே 

 

எல்லாம் வல்லதுவே…

எல்லாம் வல்லதைப் போன்ற அரசே…

அரசைப் போன்ற காதலியே…

நான் உன் விளையாட்டுச் சாமானம்தான்

ஆயினும்,

அவ்வளவு வேகமாக சுவற்றில் அடிக்காதே.



என தன்னை அறையும் அக, புற விசைகளுடன் புன்னகையுடன் சொல்லும் பாவனை அனைத்துக் கவிதைகளிலும் உள்ளது. மீண்டும் மீண்டும் இக்கவிதைகளுக்குள் செல்லத்தூண்டுவது அப்புன்னகைதான்.

 

vaz

தமிழ்க்கவிஞர்களில் இருவர் முற்றிலும் துயரற்றவர்கள். நவீனக் கவிதை என்பதே கசப்பின், தனிமையின், துயரின் வெளிப்பாடு என்று இருந்த சூழலில் எழுந்தவர்கள். நவீனக்கவிதையின் தலைமகன்களாகவும் திகழ்பவர்கள். தேவதேவனிடம் துயரில்லை. எளியமானுடத் துயர்களை வானளாவும் உள எழுச்சியால் பேருவகையாக மாற்றிக்கொண்டவர் அவர்.  ‘இந்த  பப்பாளிப்பழம்’ இன்றைய சூரியன் என உணரும் உளவிரிவு அவரை துயரற்றவராக்கியது. கோயில்பட்டியின் மண்டைபிளக்கும் உச்சிவெயிலை ‘மத்-தியான வெயிலின் தித்திப்பாக உணர்ந்தமையால் தேவதச்சன் துயர்களை கடந்தார்.

 

தேவதச்சனின் புன்னகையுடன் ஒப்பிடத்தக்கது இசையின் கவிதைகளிலுள்ள சிரிப்பு. ‘இந்தக் கொடும் பனிக்காலம் இப்படிக் கொட்டித்தீர்ப்பதெல்லாம் நம் தேநீரை இன்னும் கொஞ்சம் சுவையூட்டத்தான் தம்பி’ என உணரும்போது அவர் மத்தியான்ன வெயிலைச் சுவைக்கும் தேவதச்சனுக்கு மிக அருகே சென்றுவிடுகிறார். ‘ஓடும் நீரில் எது என் நீர்?” என்று கேட்ட சுகுமாரனின் கவிதைகளிலிருந்து ‘ சம அளவுள்ள தேநீருடன் என்னை நோக்கிச் சிரிக்கும் இந்த இரண்டு டம்ளர்களில் எந்தடம்ளர் எனது டம்ளர்?’ என்று கேட்கும் இசையின் கவிதைக்குள்ள தூரம் இந்தக்காலகட்டத்தின் உளமாற்றம் என தோன்றுகிறது

 

இத்தொகுதி முழுக்க என்னைக் கவர்ந்தது அன்றாடம்தான். அன்றாடத்தின் ஒவ்வொரு துளியையும் பிறிதொன்றாக மாற்றுபவை தேவதேவன் கவிதைகளும் தேவதச்சன் கவிதைகளும். அன்றாடத்திலிருந்து எழுந்தபின்னர் அஞ்சி மீண்டும் வந்தமையும் எளிமையின் அழகால் கவிதையாகின்றன இசையின் வரிகள்

 

மனையாட்டி

 

மனையாட்டி ஊருக்கு போயிருந்த நாளில்
தன்னிச்சையாக
மொட்டை மாடிக்குப் போனான்
கருநீல வானத்தில் கரைந்து நின்றான்
குறைமதிக்கும் நெஞ்சழிந்தான்
நட்சத்திரங்களில் மினுமினுத்தான்
அவள் வீட்டில் இருக்கையில்
இவ்வளவு பெரிய வானம்
இத்தனை கோடி விண்மீன்கள்
இப்படி  ஜொலிக்கும் நிலவு
இவையெல்லாம் எங்கே ஒளிந்துகொள்கின்றன என்று
ஒருகணம் யோசித்தான்
மறு கணம்
அஞ்சி நடுங்கி
miss u  என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்

 

ஒருமுறை பார்வதிபுரம் பேருந்தில் அமர்ந்திருக்கையில் என் அருகே ஒல்லியான ஒருவர் இருந்தார். புருவத்தையும் மீசையையும் நன்கு மழித்திருந்தார். முகத்தில் எஞ்சியிருந்த அரிதாரத்தின் செம்மை அவர் நடனக்கலைஞர் என்று காட்டியது. உள்ளூர் திருவிழாக்களில் ஆடவந்தவர். அவருடைய கையிலிருந்த தோல்பைக்குள் சலங்கை இருந்தது. நாகர்கோயில் வட்டச்சுற்றுப்பேருந்து சாலையில்லாத வழியின் கற்களின்மேல் துள்ளித்துள்ளிச் செல்ல மெல்லிய சலங்கை ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. முதலில் அது என்ன என்று வியந்து பின் அறிந்ததும் வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன். என் கற்பனையில் ஒரு நடனம் எழுந்தது

 

தன்னுள் எப்போதும் நடனச்சலங்கையைக் கொண்டிருக்கும் கவிஞனுக்கு வாழ்த்து

 

 

இசையின் இணையதளம்

இசையின் வரிகள்

ஒரு செல்லசிணுங்கல்போல….

இசையும் மணிகண்டனும் – கடிதங்கள்

இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்

இசைக்கு மெய்ப்பொருள் விருது

ஞானக்கூத்தன் பற்றி இசை

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22

$
0
0

bowபுரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது தோன்றுகிறது, மூத்தவரே” என்றான். லட்சுமணன் திரும்பி நோக்க “அவர்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். முகங்கள் உயிரிழந்தவை போலிருந்தன. திரும்பிச்செல்கையில் ஒவ்வொருவரும் மீண்டிருப்பதை கண்டேன்” என்றான். லட்சுமணன் “நானும் மீண்டுள்ளேன்” என்றான்.

“அவர்களுக்கு வேண்டியிருந்தது உங்கள் தொடுகை… உங்கள் கை அவர்கள்மேல் பட்டபோதே சுடரேற்றப்பட்ட விளக்குகள்போல ஆகிவிட்டார்கள்” என்றான். லட்சுமணன் புன்னகைத்தான். “தந்தையரின் தொடுகை ஏன் மைந்தருக்கு தேவைப்படுகிறது என எண்ணிக்கொண்டேன்” என்று துருமசேனன் சொன்னான். “அது நம்மிடம் நீ இருக்கிறாய் என்று சொல்கிறதா? இரு என வாழ்த்துகிறதா?” லட்சுமணன் “நான் தந்தையை தொட விழைகிறேன். இருமுறை அவர் அருகே சென்றேன். அவர் இயல்பாக என என் தோள்மேல் கைவைப்பதுண்டு. ஆனால் போர் தொடங்கியபின் ஒருமுறைகூட தொடவில்லை. கை நீள்கிறது. அஞ்சியதுபோல் அகல்கிறது” என்றான்.

துருமசேனன் “ஏன்?” என்றான். லட்சுமணன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. அவர்கள் படைகளின் நடுவே எண்ணத்தில் மூழ்கியவர்களாக புரவிகளில் சென்றனர். “தேர்கள் ஒருங்கியிருக்கும்” என துருமசேனன் பொதுவாக சொன்னான். அதற்கு லட்சுமணன் ஒன்றும் சொல்லவில்லை. “அங்கே சிறிய தந்தை பீமசேனரின் மைந்தர் போர்முகப்புக்கு வந்திருக்கிறார். பெருமல்லர் என்றார்கள். தம்பியர் அவரைப்பற்றி உள்ளக்கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள்” என்றான் துருமசேனன். லட்சுமணன் “நம் படைகளில் ஓர் பேருருவ அரக்கன் உளன் என்றார்களே?” என்றான். “ஆம், அவன் பெயர் அலம்புஷன்…” என்றான் துருமசேனன். “உண்மையில் நானும் இன்னமும் அவனை பார்க்கவில்லை.”

“அவனை நான் பார்க்க விழைகிறேன்” என்றான் லட்சுமணன். “அவனை நம் வழியில் வந்து சந்திக்க ஆணையிடுகிறேன்” என்றபடி துருமசேனன் அருகிருந்த முரசுமாடம் நோக்கி சென்றான். அங்கே விந்தையான சிறிய முரசு ஒன்று நாய்க்குரைப்பின் ஓசையில் முழங்கத் தொடங்கியது. லட்சுமணனுடன் வந்து சேர்ந்துகொண்ட துருமசேனன் “அவன் மிகச் சிறிய படையுடன் வந்துள்ளான். ஆனால் விந்தையான பேருருக் கொண்டவர்கள் அவர்கள் என்றனர்” என்றான். லட்சுமணன் “இன்றைய போரில் கடோத்கஜன் தடுத்து நிறுத்தப்படவேண்டும், இளையோனே” என்றான். துருமசேனன் ஒன்றும் சொல்லவில்லை. லட்சுமணன் “நம் இளையோருக்காக” என்றான்.

தொலைவில் அவர்களை எதிர்கொள்ளும் கையசைவு எழுந்தது. அங்கே நின்றிருந்த காவலனை நோக்கி துருமசேனன் கையசைத்த பின் “வந்துள்ளான்” என்றான். பாதையின் வலப்பக்கம் இரும்புக் கவசங்கள் அணிந்த ஒருவன் அவர்களுக்காக காத்திருந்தான். முதலில் அவன் எதன் மேலோ அமர்ந்திருப்பதாகத்தான் லட்சுமணனுக்கு தோன்றியது. மீண்டும் விழிகூர்ந்தபோதுதான் அவன் நின்றிருப்பவன், உயரமற்றவன் என்பதனால் அத்தோற்றம் என்று தெரிந்தது. அவன் கால்கள் ஆமைக்கால்கள்போல பருத்து குறுகி இருபக்கமும் வளைந்து பெரிய நகங்களுடன் தெரிந்தன. ஆனால் பருத்த உடலும் நீண்ட பெருந்தோள்களும் கொண்டிருந்தான்.

“அவனா?” என்றான் லட்சுமணன். “ஆம், மூத்தவரே. அவன் பெயர் சாலகண்டகன், அலம்புஷர்கள் என்னும் அரக்கர்குலத்தை சேர்ந்தவன்” என்றான் துருமசேனன். அவனருகே அவனைப்போலவே உடல்கொண்ட நால்வர் நின்றிருந்தனர். இரும்புக்கவசங்களில் படையின் அசைவுகள் நீரலைகளென நெளிய சிறுசுனை என தெரிந்தனர். “விந்தையான உடல்கள்” என்றான் லட்சுமணன். “தேள்போன்ற தோள்கள் கொண்டவர்கள் என்பதனால் இவர்களை துரூணர்கள் என்றும் அழைக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவென்றாலும் காடுகளில் இவர்களை மிக அஞ்சுகிறார்கள் என்று காவலன் சொன்னான்.”

அவர்கள் அருகே சென்றதும் அலம்புஷன் தலைவணங்கி “சுயோதனரின் மைந்தரும் அஸ்தினபுரியின் இளவரசருமான லட்சுமணரை வாழ்த்துகிறேன். தங்கள் ஆணைப்படி வந்துள்ளேன்” என்றான். லட்சுமணன் “நலம்பெறுக!” என்றபின் அவன் அருகே நின்றிருந்தவர்களை  பார்த்தான். அவன் திரும்பி நோக்கிய பின் “என் குடியினர் நாற்பத்தெட்டுபேர் என்னுடன் வந்துள்ளனர்” என்றான். லட்சுமணன் “நீ புரவியூர்வாயா? வில்பயின்றுள்ளாயா?” என்றான். “இல்லை, என் படைக்கலங்கள் பாசமும் கதையும்தான்” என அவன் தரையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சுருள்கயிற்றையும் கல்லால் ஆன பெரிய கதையையும் காட்டினான்.

“இக்கயிற்றை எளிதில் வாளால் அறுத்துவிட முடியுமே?” என்றான் லட்சுமணன். “இல்லை அரசே, இது இரும்புக் கம்பிகளுடன் சேர்த்து முறுக்கப்பட்டது. இதைக்கொண்டு யானையைக் கட்டி இழுப்பேன். கோடரியாலும் இதை வெட்ட முடியாது” என்றான் அலம்புஷன். “இதன் முனையிலுள்ள இரும்புக்கூர் எடைமிக்கது. இதை நாங்கள் நாகப்பல் என்கிறோம். பறந்துசென்று அம்பெனத் தாக்கும்.” அந்தக் கூர்முனை ஒளியுடனிருந்தது. அதற்குக் கீழே நான்கு இரும்புக் கொக்கிகள் இருந்தன. “முன்பு கழுகின் நகத்தால் இதை செய்திருந்தனர் என் முன்னோர். இப்போது உருக்கி கரியுடன் சேர்த்து சிறுகச்சிறுக ஓராண்டு குளிரச்செய்த இரும்பால் செய்கிறோம்.”

அவனுடைய முகம் பேருடல் ஒன்றுக்குமேல் அமையவேண்டியது என லட்சுமணன் எண்ணினான். கண்கள், மூக்கு, உதடுகள் அனைத்துமே மானுடரைவிட இருமடங்கு பெரியவையாக இருந்தன. மிகப் பெரிய பற்கள் மிக வெண்மையாக, சீரான நிரையாக வெளித்தெரிய அவன் பேசும்போதே சிரிப்பவன்போல தோன்றியது. “நீ எதில் ஊர்வாய்? உன் கால்கள் மிகச் சிறியவை” என்றான் லட்சுமணன். “ஆம், ஆனால் மிக வலுவானவை. என்னால் யானைக்கு நிகராக எதிர்விசை அளிக்கவியலும்” என்றான் அலம்புஷன். “நான் தனியாக ஊர்திகளில் ஏறுவதில்லை. என் பாசக்கயிற்றில் சிக்கும் விலங்குகளும் தேர்களுமே எனக்கான விசையை அளிக்கும்.” அவன் புன்னகைத்து “நம்புங்கள் என்னை. என்னை களத்தில் பார்க்கையில் நான் மறுபக்கத்தில் இல்லை என்பதற்காக மகிழ்ச்சிகொள்வீர்கள்” என்றான்.

“அதையே நானும் எண்ணினேன். நீ ஏன் இங்கு வந்தாய்? மறுநிரையில் அல்லவா உன் குலத்தோர் அனைவரும் நின்றுள்ளனர்?” என்றான் லட்சுமணன். “ஆம். ஆனால் என் குலத்தைவிட பெரிது என் வஞ்சம்” என்றான் அலம்புஷன். லட்சுமணன் விழிசுருக்கி நோக்க அவன் “இளவரசே, முன்பு உசிநாரத்தின் எல்லைக்குள் அமைந்த சிருங்கபுரிக்கு அருகே கிருஷ்ணசிலை மலைச்சாரலில் ஊஷரர்கள் என்னும் நூறு அரக்கர்குடியினர் வாழ்ந்தனர். வறுநிலத்தோர் என்று அச்சொல்லுக்கு பொருள். ஆற்றலற்ற கால்களும் மங்கலான விழிகளும் கொண்டிருந்தவர்கள் அம்மக்கள். அடர்காடுகளுக்குள் குகைகளில் வாழ்ந்தனர். கைக்கு சிக்கும் அனைத்தையும் உண்டனர். ஒவ்வொருநாளும் உசிநாரத்தின் நிலம் விரிந்து காட்டை உண்டு உடலாக்கிக்கொண்டது. காட்டுக்குள் ஊடுருவிய யாதவர்களாலும் அவர்களுக்குத் துணைவந்த ஷத்ரியர்களாலும் ஊஷரர் வேட்டையாடப்பட்டு புழுக்களைப்போல கொன்று அழிக்கப்பட்டனர்” என்றான்.

“அக்குடியில் குலத்தலைவராகிய தூமருக்கும் அவர் துணைவியாகிய யமிக்கும் பிறந்த பன்னிரண்டு மைந்தர்களில் இளையவர் என் மூத்தவராகிய பகன். யமியின் தங்கை சூர்ணையின் எட்டு மைந்தர்களில் இளையவன் நான். நாங்கள் தொல்லரக்கர் குடியினர். பெரும்புகழ்கொண்ட ராவணப்பிரபுவின் குருதியினர். ராகவகுலத்து ராமனால் எங்கள் குலம் அழிந்தது. சிதறுண்டு காடுகளுக்குள் பரவி உளம் தேங்கி உடல் நலிந்து சிறுகுடியினரானோம். விலங்குக்கும் கீழென்று அமைந்தோம்” என்றான் அலம்புஷன். விழிகள் சிவக்க, கன்னத்தசைகள் இழுபட்டு அசைய அவன் கனல்கொண்டான். அவ்வுணர்ச்சியாலேயே அவன் உயர்ந்தெழுவதுபோல் உளமயக்கு எழுந்தது.

“அறிக, பிரம்மனிலிருந்து பிறந்த ஹேதியும் பிரஹேதியும் எங்கள் முதல் மூதாதையர்! அவர்களின் கொடிவழியில் வந்த சுகேசருக்கும் தேவவதிக்கும் மூன்று மைந்தர்கள் பிறந்தார்கள். மாலி, சுமாலி, மால்யவான். அவர்களில் சுமாலி கேதுமதியை மணந்து பெற்ற பகைதேவி எங்கள் மூதன்னை. அன்னை பெயரால்தான் என் மூத்தவர் பகன் என்று பெயர் பெற்றார். அன்னை பெற்ற பன்னிரு குடிகளில் இருந்து பிறந்தவர்கள் ஊஷரர்களின் கொடிவழியினர்” என்றபோது அவன் பிறிதொருவனாக இருந்தான். “அக்குருதிவழியில் வந்த அன்னை கைகசியை விஸ்ரவஸ் என்னும் முனிவர் மணந்து ஈன்ற மைந்தரே அசுரகுலத்துப் பேரரசர் ராவண மகாபிரபு. அவரை அழித்தவர் ராகவகுலத்து ராமன். வென்றவனைவிட தோற்றவன் பெரும்புகழ்கொண்டு பன்னிரண்டாயிரம் தொல்குடிக்கு தெய்வமென்று அமர்ந்தான்.”

“இளவரசே, அஸ்வத்தாமரால் ஊஷரர் குடி அழிக்கப்பட்டது. எஞ்சிய குடிகளுடன் ஏகசக்ரபுரிக்குச் சென்று அங்கே ஒரு சிற்றூர் அமைத்து தங்கிய என் மூத்தவராகிய பகனை கொன்றவர் இளைய பாண்டவராகிய பீமசேனர். பிறந்த நாள்முதல் அவர் கொல்லப்பட்ட கதைகேட்டு வளர்ந்தவன் நான். கைவளர கால்வளர என் பகையும் வளர்ந்தது. ஒருநாள் பீமசேனரின் குருதிகொள்வேன் என எங்கள் குடிமூதன்னை பகைதேவியின் கிடைக்கல் அருகே குருதிதொட்டு வஞ்சினம் உரைத்தேன்” என்றான் அலம்புஷன்.

லட்சுமணன் “அது எங்கள் குடிக்கு எதிரான வஞ்சம்” என்றான். “ஆம், இன்று அவர்கள் உங்கள் எதிரணியில் நின்றிருக்கிறார்கள். என்னால் தனியனென அவரை எதிர்கொண்டு கொல்லவியலாது. இப்பெரும்போரில் அவர் சூழப்படுகையில் என் வஞ்சத்துடன் எதிர்கொண்டு செல்வேன். என் பாசத்தால் அவரை வளைப்பேன். கதையால் தலைபிளப்பேன். அக்குருதியில் ஒரு துணிச்சுருளை முக்கிச் சுருட்டி எடுத்து என் படைவீரன் ஒருவனிடம் அளித்து காட்டில் நடுகல்லென நின்றிருக்கும் என் மூத்தவர் பகனுக்கு படைக்கச் சொல்வேன்” என்றான் அலம்புஷன். “அரசே, இறந்த நாள் முதல் இன்றுவரை என் மூத்தவர் எந்தப் பலியையும் ஏற்றதில்லை. ஆண்டுதோறும் அவர் வீழ்ந்த நாளில் நாங்கள் அந்நடுகல்லுக்கு குருதியும் அன்னமும் கள்ளும் மலரும் படைத்து வணங்குவோம். ஒருமுறைகூட காகமென்றோ காட்டுநாய் என்றோ உருக்கொண்டு அவர் பலிச்சோறு கொள்ள வந்ததில்லை.”

“இக்குருதியே முதற்பலி… அவர் நிறைவுற்று வந்து இதை ஏற்றுக்கொள்வார். எங்கள் கொடிவழியினர் அவருக்கு அன்னமூட்டி மண்ணுக்கு அடியில் வேர்வெளியென விரிந்துள்ள எங்கள் மூதாதையருடன் நிலைநிறுத்துவார்கள்” என்றான் அலம்புஷன். “என் பிறவிநோக்கமே இதுதான் போலும். அஸ்வத்தாமரால் அழிக்கப்பட்ட குடியில் எஞ்சிய என் அன்னையும் ஏழு ஊஷரகுடியினரும் பன்னிரு மைந்தருடன் வடக்கே மலையேறிச்சென்று திரிகர்த்தத்தின் ஆழ்காட்டுக்குள் குடியேறினர். அங்கே என் அன்னை அளித்த இவ்வஞ்சத்தையே ஆற்றலெனக் கொண்டு நான் வளர்ந்தேன். என் உடலின் அனைத்து விசைகளும் அப்பழியால் ஊறி எழுபவையே. அவரை கொல்லும்பொருட்டே இப்படையில் சேர்ந்திருக்கிறேன்.”

துருமசேனன் “ஆனால் உன் குடியின் முதல் வஞ்சம் அஸ்வத்தாமருடன் அல்லவா?” என்றான். “ஆம், ஆகவேதான் நூற்றெட்டு ஊஷரகுடியினரும் மறுபக்கம் பாண்டவர்களுடன் சேர்ந்து நின்றுள்ளனர். என் வஞ்சம் இளைய பாண்டவர் பீமசேனரிடம் மட்டும்தான்” என்றான் அலம்புஷன். லட்சுமணன் புன்னகைக்க அலம்புஷன் “எங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியாது, ஷத்ரியரே. இங்கே எங்கள் குலத்தான் பிறிதொருவன் வந்திருக்கிறான். அவன் தந்தை மறுபக்கம் நின்று போரிடுகிறான், அவன் இங்கு வந்துள்ளான்” என்றான். லட்சுமணன் “யார் அவன்?” என்றான். “இடும்ப குலத்தவன், அவன் தந்தை இளைய பாண்டவர் பீமசேனரின் மைந்தன். அவன் பெயர் பார்பாரிகன்” என்றான் அலம்புஷன்.

லட்சுமணன் திரும்பி துருமசேனனை நோக்கி “இங்கு வந்துள்ளானா?” என்றான். “தெரியவில்லை, மூத்தவரே” என்றான் அவன். “எங்குள்ளான்?” என்று அலம்புஷனிடம் லட்சுமணன் கேட்டான். “இங்குதான். மிக இளையவன், ஆனால் பேருருவன். தாங்கள் விரும்பினால் அவனை வரச்சொல்கிறேன்” என்று தன்னருகே நின்றிருந்தவனிடம் முழவொலிக்கும் மொழியில் ஆணையிட்டான். அவன் தன் கையிலிருந்த கதையைச் சுழற்றி ஊன்றி அதன் விசையில் தவளைபோல எழுந்து தாவி காலூன்றி மீண்டும் சுழற்றித் தாவி விரைந்து அகன்றான். “சகடம்போல் உருள்கிறான்” என்றான் துருமசேனன். அலம்புஷன் நகைத்து “அது எங்கள் வழிமுறை” என்றான். “நாங்கள் புரவிகளையே கடந்து விரைவோம்… மரங்களில் என்றால் குரங்குகள் எங்களிடம் பிந்தும்.”

துருமசேனன் அவன் கைகளை நோக்கி “விந்தையான கைகள்” என்றான். அவன் விரல்கள் உள்ளங்கையிலிருந்து மிக நீண்டு காக்கையலகு போன்ற கரிய நகங்களுடன் இருந்தன. அவன் தன் கைகளைக் காட்டி “ஆம், இக்கைகளால் எங்களால் மரக்கிளைகளை நன்கு வளைத்துக்கொள்ள முடியும். அலம்புஷர்கள் என்றால் நீள்விரலர் என்று பொருள்” என்றான். “இவை கழுகுக்கால்கள் போன்றவை என்பதனால் எங்களுக்கு ஃபாசர்கள் என்றும் பெயருண்டு.”

“நீ இன்று களத்தில் கடோத்கஜனை எதிர்கொள்” என்றான் லட்சுமணன். “நானும் உடனிருப்பேன். என் இளையோரை நாம் அவரிடமிருந்து காக்கவேண்டும்.” அலம்புஷன் “அது என் கடமை” என்றான். “என்னால் அவரை எதிர்கொள்ள முடியும். ஊழிருப்பின் கொல்லவும் கூடும்.” லட்சுமணன் “நன்று. போரில் என் அருகே நீ எப்போதுமிருக்கவேண்டும்” என்றான். அலம்புஷன் “உண்மையில் சற்றுமுன் அதைப்பற்றி நான் பார்பாரிகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் தந்தையை களத்தில் எதிர்கொள்ளப்போவதைப்பற்றி” என்றான்.

bowதுருமசேனன் அப்பால் நோக்கி “அவனா?” என்றான். அலம்புஷன் “ஆம், அவனே. அவனை எவரும் விழிதவற இயலாது” என்றான். தொலைவில் பார்பாரிகன் வருவதை லட்சுமணன் கண்டான். கைகளை நிலத்தில் ஊன்றி நடந்து வருகிறானா என்ற ஐயம் ஏற்பட்டது. பின்னர்தான் அவன் கால்களும் நீளம் குறைவானவை என்று தெரிந்தது. ஆனால் அலம்புஷனின் கால்களைப்போல அவை தடித்திருக்கவில்லை. குரங்குக்கால்களைப்போல பக்கவாட்டில் வளைந்திருந்தன.

அணுகுந்தோறும் பார்பாரிகனின் உருவம் அகன்று பெரிதாகிக்கொண்டே இருந்தது. பெரிய தோள்களும், தசையுருளைகள்போல நீண்ட கைகளும், உந்திச்சரிந்த வயிறும், இரு உருளைகளாக அசைந்த மார்புகளும் கொண்டிருந்தான். அவன் அருகணைந்தபோது விலங்குகளிலிருந்து எழும் மயிர்மணம் எழுந்தது. அவனுடைய பெரிய முகத்திலிருந்தும் கொழுத்து விரிந்த தோள்களிலிருந்தும் வியர்வை வழிந்தது. லட்சுமணன் அருகே வந்து மூச்சுவாங்க நின்று அரசர்களை வீரர் வணங்கும் முறைப்படி தலைதாழ்த்தி “இடும்பர் குடியினனாகிய பார்பாரிகன் நான். கௌரவ இளவரசரை வணங்குகிறேன்” என்றான்.

லட்சுமணன் அவனிடம் சினத்துடன் “என் கால்தொட்டு வணங்கு, அறிவிலி. நீ என் குருதியினன், எனக்கு மகன் முறையானவன்” என்றான். அவன் அச்சொற்கள் புரியாமல் தத்தளித்து ஒருமுறை அலம்புஷனை நோக்கியபின் “ஆம், ஆனால்” என்றான். அலம்புஷன் நகைத்து “அவர் உன் தந்தையின் குலமைந்தர்” என்றான். “ஆம்” என்றபின் பார்பாரிகன் நீள்மூச்செறிந்து முன்னால் வந்து எடைமிக்க உடலை மூச்சொலிக்க வளைத்து லட்சுமணனின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நீள்வாழ்வும் புகழும் செல்வங்களும் அமைக!” என லட்சுமணன் அவன் தலைதொட்டு வாழ்த்தினான்.

பார்பாரிகன் எழுந்தபோது மேலும் வியர்வை வழிந்தது. மழைபெய்யும் பாறைச்சரிவுபோல இருந்தது அவன் உடல். மயிரற்ற கரிய தோல்பரப்பு ஈரமாக மின்னியது. “இவன் உன் சிறிய தந்தை துருமசேனன்” என்றான் லட்சுமணன். “ஆம்” என்றபின் பார்பாரிகன் துருமசேனனின் கால்களையும் தொட்டு வணங்கி வாழ்த்துகொண்டான். முகம் மலர பார்பாரிகனின் தோள்களை பற்றிக்கொண்ட துருமசேனன் “பேருடலன்… ஆனால் கால்கள்தான் விந்தையானவை” என்றான். “எங்கள் குலத்தின் கால்கள் இவ்வாறுதான் அமைந்துள்ளன” என்றான் பார்பாரிகன்.

அலம்புஷன் “அவர்கள் மரங்களுக்குமேல் மீன் என நீந்துபவர்கள்” என்றான். “நீ எப்போது வந்தாய்?” என்றான் லட்சுமணன். “நான் நேற்று மாலையே வந்துவிட்டேன், தந்தையே. இளைய கௌரவர் துர்மதர் என்னை வரவேற்றார். இளைய கௌரவராகிய சுபாகுவிடம் அழைத்துச்சென்றார்.” லட்சுமணன் “என்ன சொல்கிறாய்? அவர்கள் உன் தாதையர்” என்றான். பார்பாரிகன் “ஆம், தாதையர்” என மெல்ல சொன்னான். துருமசேனன் “பலமுறை தாதையர் என உள்ளத்திற்குள் சொல்லிக்கொள்” என்று புன்னகையுடன் சொல்ல பார்பாரிகன் “ஆம், தாதையர்” என்றான். அவனுடைய கொழுத்த பேருடலில் வியர்வை வழிந்து ஓடைகளாக இறங்கியது.

லட்சுமணன் பரிவுடன் அவன் தோளில் கைவைத்து “சொல்” என்றான். “என்ன சொல்ல?” என்றான் பார்பாரிகன். லட்சுமணன் சிரித்துவிட்டான். துருமசேனன் “நீ என்ன செய்கிறாய் என்று சொல்” என்றான். “நான் ஒன்றுமே செய்யவில்லை. காலையில் உணவருந்தினேன்” என்றான் பார்பாரிகன். “அதை நீ சொல்லவேண்டிய தேவையே இல்லை” என்றான் லட்சுமணன். துருமசேனன் “நீங்கள் எத்தனைபேர் வந்தீர்கள்?” என்றான். “நாங்கள் பாதிப்பேர் இங்கு வந்துள்ளோம். எஞ்சியோர் அங்கு சென்றனர்” என்றான் பார்பாரிகன். “நான் போரிடவேண்டிய படைப்பிரிவு எதுவென்று இன்று கூறுவதாக சொன்னார் இளைய கௌரவர் சுபாகு” என்றபின் குரல் தாழ்த்தி “தாதை” என்றான்.

லட்சுமணன் “நீங்கள் எத்தனைபேர்?” என்றான். பார்பாரிகன் “நாங்கள் இருநூறுபேர் வந்துள்ளோம். இன்று காலைதான் முகப்புப்படையில் கழுகின் கழுத்தென அமையும்படி ஆணை வந்தது. போருக்கெழ ஒருங்கிக்கொண்டிருந்தேன்” என்றான். பேருருக்கொண்ட அரக்கர்களின் குலத்தில் பிறந்த கைக்குழந்தை அவன் என லட்சுமணன் நினைத்துக்கொண்டான். “நீ ஏன் இங்கே போர்புரிய வந்தாய்? உன் தந்தை அங்குள்ளார். பீமசேனர் உன் குருதித்தாதை” என்றான் துருமசேனன்.

“ஆம், எங்கள் நாட்டுக்கு முதலில் ஆதரவளித்தவர் கௌரவப் பேரரசர் துரியோதனர். எங்கள் நகருக்கு துச்சாதனர் வந்து என் தந்தைக்கு மணம்புரிந்து வைத்தார். நாங்கள் அரசமுறைப்படி அஸ்தினபுரிக்கு கடமைப்பட்டிருக்கிறோம்” என்ற பார்பாரிகன். “எங்கு போருக்குச் செல்வது என்ற வினா எழுந்தபோது இதை நான் அவையில் சொன்னேன். எங்கள் குடிமூத்தார் நான் சொன்னது உண்மை என ஏற்றனர். ஆகவே நாங்கள் இங்கே வந்தோம்” என்றான் பார்பாரிகன். “நான் என் தந்தையிடம் ஒப்புதலும் வாழ்த்தும் பெற்றேன்.”

துருமசேனன் “நீ உன் குடியுடன் போரிடுவாயா?” என்றான். “என் தந்தையுடனும் போரிடுவேன். எதிர்கொண்டு மோதினால் கொல்வேன். அது களநெறி” என்றான் பார்பாரிகன். “அவரை வெல்ல இவனால் எளிதில் இயலும்” என்று அலம்புஷன் நடுவே புகுந்தான். “இவன் நகரில் நிகழும் அனைத்துப் போர்களிலும் தன் தந்தையை கைக்குழவி என தூக்கி அறைந்திருக்கிறான். இவன் வல்லமை அவரைப்போல நால்வருக்கு நிகர்.” துருமசேனன் “மெய்யாகவா?” என்றான். “ஆம், தந்தையே. என்னால் எந்தையை மிக எளிதில் வெல்லமுடியும். தாதை பீமசேனரையும் இடரின்றி வெல்வேன். நேர்ப்போரில் என்னிடம் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவர் பால்ஹிகர் மட்டுமே. இளைய யாதவரும் அங்கநாட்டரசர் கர்ணனும் மட்டுமே என்னை வெல்லக்கூடும் என எந்தை சொன்னார்” என்றான் பார்பாரிகன்.

லட்சுமணன் முகம் சுளித்து தலையை திருப்பிக்கொண்டு “உன் அகவை என்ன?” என்றான். “பதின்மூன்று, ஆனால்…” என அவன் தொடங்க “நீ களம்புகலாகாது. இது என் ஆணை!” என்றான் லட்சுமணன். “தந்தையே, நான்…” என அவன் சொல்லத்தொடங்க “என் சொல்… அதை என் மைந்தர் மீறலாகாது” என்று லட்சுமணன் உரக்க சொன்னான். “நீ மேற்குமூலை காவல்மாடத்தில் அமர்ந்துகொள்க! அங்கிருந்து போரை நோக்கு. ஒவ்வொருநாளும் போரில் என்ன நிகழ்கிறதென்பதை உள்ளத்தில் பதித்து அன்று மாலை என்னிடம் வந்து விரிவாக சொல்.”

பார்பாரிகன் நிறைவின்மையுடன் உடலை அசைக்க அவன் தசைத்திரள்கள் நெளிந்தன. “என்ன?” என்றான் லட்சுமணன். “ஆணை” என்றான் பார்பாரிகன். லட்சுமணன் தன் புரவிமேல் ஏறிக்கொண்டு மறுசொல் இல்லாது அதை செலுத்தி முன்னால் சென்றான். துருமசேனன் பார்பாரிகனை நோக்கி புன்னகைத்து அவன் தலைமேல் கையை வைத்து “உன் மண்டை விந்தையானது… பெருங்குடம்போல” என்றான். பின்னர் “நன்று சூழ்க, மைந்தா!” என்றபின் லட்சுமணனை தொடர்ந்துசென்றான்.

லட்சுமணன் எதனாலோ துரத்தப்பட்டவன்போல புரவியை விரைவுகொள்ளச் செய்தான். துருமசேனன் அவனுக்குப் பின்னால் விரைந்தான். பின்னர் மூச்சிரைக்க கடிவாளம் தளர்த்தி குதிரையை பெருநடைக்கு இறக்கிய லட்சுமணன் பெருமூச்சுவிட்டான். துருமசேனன் அருகணைந்து மூச்சிரைக்க நின்றான். லட்சுமணன் அவனை திரும்பி நோக்கவில்லை. கண்கள் சுருங்க போர்முனையை நோக்கிக்கொண்டு புரவிமேல் நெடுநேரம் அமர்ந்திருந்தான். பின்னர் பெருமூச்சுடன் புரவியை செலுத்தினான்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16875 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>