Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16885 articles
Browse latest View live

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32

$
0
0

பகுதி ஐந்து : கனல்வோன்

bow

போர்ச்சூழ்கையை வகுப்பதற்காக துரியோதனனின் சிற்றவை முற்புலரியில் கூடியிருந்தது. கிருதவர்மன் தன் உடலெங்கும் சோர்வு படர்ந்து எடையென அழுத்துவதை உணர்ந்தான். பஞ்சால் ஆன தன்னுடல் துயிலெனும் நீரால் நனைக்கப்பட்டு ஊறிக் குழைந்து வடிவிழந்து எடைகொண்டு மண்ணில் அழுந்துவதாகத் தோன்றியது. பிறிதெப்போதும் கைவிரல்களில்கூட துயில் வந்து நின்றிருப்பதை அவன் உணர்ந்ததில்லை. அவையிலிருந்த அனைவருமே துயிலால் அழுத்தப்பட்டுக்கொண்டிருப்பதைப்போல் தோன்றியது. அவர்களில் சிலரே பேசிக்கொண்டிருந்தனர். நனைந்த மரவுரியால் மூடப்பட்டவைபோல அந்தச் சொற்கள் முனகலாக ஒலித்தன.

அவனருகே அஸ்வத்தாமன் கைகளை மார்பில் கட்டியபடி நிலைத்த நோக்குடன், நிமிர்ந்த முதுகுடன் அமர்ந்திருந்தான். ஒரு யோகநிலையில் தன்னில் ஆழ்ந்து பிறிதொன்றை நேர்கண்டு இருப்பவன்போல. அஸ்வத்தாமன் பெரும்பாலான தருணங்களில் ஒரு சில நொடிகளுக்குள் சூழ்ந்திருக்கும் அனைத்திலிருந்தும் தன்னை முற்றாக விடுவித்துக்கொண்டு தனிமைக்குள் சென்றுவிடுவதை அவன் பலமுறை கண்டிருக்கிறான். அப்போது அவனை நோக்க சிலை என்று விழியும் உயிர்க்குவை என்று உட்புலனும் சொல்லும் துணுக்குறல் எழும். ஆனால் அவன் அதை கலைப்பதில்லை. பெரும்பாலும் அவனருகிலிருந்து மெல்ல விலகிச் சென்றுவிடுவான்.

“பாஞ்சாலரே, தாங்கள் அவ்வாறு தனிமைப்படுவது ஏன் என்று நான் அறிந்துகொள்ளலாமா?” என்று ஒருமுறை அவன் அஸ்வத்தாமனிடம் கேட்டான். “அதை நீங்கள் என்னிடம் கேட்கலாகாது, யாதவரே. ஏனெனில் நான் எண்ணி முயன்று அவ்வாறு தனிமைப்படுவதில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “புகை கலைவதுபோல் இயல்பாக நான் இல்லாமலாகிறேன்” என்றான். அதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அஸ்வத்தாமன் புன்னகைத்து “என்னால் நான் என என்னை தொகுத்துக்கொள்வதற்கே முயற்சி தேவையாகிறது” என்றான். அவர்கள் போருக்குப் பின் கூடாரத்தின் முகப்பில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். அஸ்வத்தாமன் கால்களை நீட்டிக்கொண்டு “மிக இளமையில் எனக்கு தந்தை கற்றுத் தந்தது. அம்புக்கு கூர்கையில் குவிவதே நான். பிறபொழுதுகளில் நான் ஐம்பருக்களில் கலந்துள்ளேன்” என்றான்.

கிருதவர்மன் “நானும் தனிமைகொள்ள விழைபவனே. ஆனால் தனிமையை உருவாக்கிக்கொள்ள என்னை சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றையும் என்னிடமிருந்து அகற்றவேண்டியிருக்கிறது. சூழ்ந்திருக்கும் இவையனைத்திலிருந்தும் என்னை வந்து பற்றும் ஆயிரம் கைகளை அகற்றி அகற்றி என்னை மீட்பேன். அன்பும் அளியும் கொண்ட கைகள். சினமும் ஆற்றாமையுமாக என்னை பற்றுபவை. வினாக்களுடன், கோரிக்கைகளுடன், மன்றாட்டுகளுடன் என்னை கவ்வுபவை. தனிமைபோல் எய்த அத்தனை அரிதான பிறிதொன்றில்லை” என்றான்.

அஸ்வத்தாமன் “ஆம், ஊழ்கம் பயில்கையில் பிறர் அவ்வாறு சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால் முதிரா இளமைமுதலே இவ்வியல்பு என்னிடமிருக்கிறது. விழிதிறந்து அமர்ந்து துயில்பவன் என்று என்னை அர்ஜுனன் ஏளனம் செய்ததுண்டு. நான் ஒருமுறை என் தந்தையிடம் கேட்டேன், என்னில் இத்தனை தனிமை ஏன் எழுகிறது என்று. ஒருவேளை இத்தனிமையால் நீ காக்கப்பட்டிருக்கலாம், எளிதில் தனிமை கொள்பவர்கள் இங்குள்ள எதிலும் பெரிதாக உரசிக்கொள்வதில்லை, ஆகவே அவர்கள் அழிவற்றவர்களாகிறார்கள் என்று தந்தை சொன்னார்” என்றான்.

கிருதவர்மன் நீள்மூச்செறிந்தான். “ஒவ்வொருநாளும் போர் முடிந்த பின்னர் நம்மை மீட்டுக்கொள்வதென்பது எளிதாக இல்லை” என்றான். “போரென்பது நம்மை நாம் சிதறடித்து பல்லாயிரம் துகள்களாக ஆக்கி படையென்று உருவளித்து இக்களம் முழுக்க பரப்புவதுதான். போர் முடிந்து அந்தியில் கொம்பு முழங்குகையில் எதுவும் எஞ்சாத வெற்றுக்கலமாக நம் உடல் நின்று திகைக்கிறது. எட்டுத் திசைகளிலும் துளித்துளியாக நம்மை இழுத்துச்சேர்த்து ஒன்றென திரட்டிக்கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் வெடித்துப் பரவியவற்றில் ஒரு பகுதியை இழந்து எஞ்சியதை மட்டுமே திரட்டிக்கொள்கிறோம். அவையே நாம் என்று எண்ணி எண்ணி அமைதி கொள்கிறோம்” என்றான்.

“ஆனால் இரவு இவ்வாறு விண்மீன்களுக்குக் கீழே துயில்கையில் இழந்தவற்றை எண்ணி உளம் பதைக்கிறது. அஸ்வத்தாமரே, ஒவ்வொரு போருக்குப் பின்னரும் முற்றிலும் பிறிதொருவராகவே பாடிவீட்டுக்கு திரும்புகிறோம்” என்றான் கிருதவர்மன். “போர் கொடிதல்ல, போருக்குப் பின் விண்மீன்களை நோக்கி மல்லாந்து படுத்திருப்பதே கொடிது.” அஸ்வத்தாமன் “என்னில் ஒரு துளியும் சிதறுவதில்லை” என்றான். சிலகணங்கள் அவனை நோக்கியிருந்த பின் “ஒருவேளை அதுவும் ஒரு தீயூழ் போலும். அத்தனை எடையுடன் போருக்குப் பின் இருப்பது நன்றா என எனக்கு சொல்லத்தெரியவில்லை” என்றான் கிருதவர்மன்.

அஸ்வத்தாமன் அத்தகைய தருணங்களில் எப்போதும் அவனுள் எழும் அரைப்புன்னகையை அளித்து விழிகளணைய முகம் சிலையென்றாக உடல் கல்தன்மை கொள்ள தன்னுள் அமிழ்ந்தான். கிருதவர்மன் வானை நோக்கிக்கொண்டிருந்தான். அகிபீனா தன் தலையை கல்லுருளைபோல் ஆக்குவதை உணர்ந்தான். நிலம் நீர்மை கொள்ள தலை எடைமிகுந்து அமிழ்ந்து மூழ்கி முழு உடலையும் இழுத்துக்கொண்டு ஆழ்ந்து சென்றது. விடியலில் எழும்போது தலை எடையிழந்து மேலே வர உடல் ஆழத்தில் குளிர்ந்து உயிரற்றுக் கிடந்தது. தன் உறுப்புகள் ஒவ்வொன்றையும் இழுத்துப் பற்றி ஒன்றாக்கவேண்டியிருந்தது. கிருதவர்மன் தன் வாயின் கசப்பை உணர்ந்தான். வாய்மணம் எதையேனும் கோரலாம் என நோக்கியபோது ஏவலர் எவருமில்லை என்று கண்டு கண்களை மூடி உடலை தளர்த்திக்கொண்டான்.

வெளியே கொம்போசை எழுந்து துரியோதனன் வருகையை அறிவித்தது. நிமித்திகன் அவைமேடை ஏறி வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றி “அஸ்தினபுரியின் அரசர் தார்த்தராஷ்டிரர் துரியோதனர் அவைபுகுதல்!” என்று அறிவித்தான். அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். துரியோதனன் மிக மெல்ல இரு கால்களையும் இரும்பு உருளைகளால் கட்டப்பட்டவைபோல இழுத்து வைத்து நடந்து வந்தான். அவனைச் சூழ்ந்து வந்த துச்சலனும் துர்மதனும் அதேபோல தளர்ந்திருந்தனர். தம்பியர் அனைவருமே உடலில் குருதிபடிந்து உலராதிருந்த கட்டுகளை போட்டிருந்தனர். இரு கைகளையும் கைப்பிடியில் ஊன்றி எடைமிக்க உடலை மெல்ல தாழ்த்தி துரியோதனன் அமர்ந்தான். அரியணையில் அமர்ந்து வலிகொண்டவன்போல் பெருமூச்சுவிட்டு கால்களை நீட்டிக்கொண்டு முழங்கைகளை ஊன்றி கைக்குவிப்பில் முகம் பதியவைத்துக்கொண்டான்.

நிமித்திகன் “அவை நிகழ்வு தொடங்குக!” என்றான். முறைமைச்சொற்கள் ஒலித்தடங்கியதும் அவை அமைதியாக காத்திருந்தது. சில கணங்களுக்குப் பின் துரோணர் கனைத்துக்கொண்டு “இன்றைய படைத்தலைமையை அஸ்வத்தாமன் ஏற்கலாமென்று முடிவு செய்துள்ளோம். படைசூழ்கையை அவர் இந்த அவையில் அறிவிக்கட்டும்” என்றார். அஸ்வத்தாமன் அச்சொல் எழுந்த பின்னரே வேறெங்கிருந்தோ வந்து தன் உடலில் பொருந்தியவன்போல அசைவுகொண்டு எழுந்து வணங்கி “படைசூழ்கையை வகுத்து தோலேட்டில் வரைந்து அரசரின் நோக்குக்கு அளித்துள்ளேன்” என்றான். ஏவலன் கொண்டுசென்று நீட்டிய தோல்சுருளை கையால் வாங்காமல் பீஷ்மரிடம் அளிக்கும்படி துரியோதனன் தலையசைத்து ஆணையிட்டான்.

அஸ்வத்தாமன் “இப்படைசூழ்கையின் உணர்வுநிலை என்ன என்பதை சொல்லவிரும்புகிறேன். இதுவரை நம் படைசூழ்கைகள் அனைத்துமே எதிர்கொண்டு சென்று தாக்கும் தன்மை கொண்டிருந்தன. ஏனெனில் நாம் வெல்லும் உறுதியுடன், வெல்வோம் என்னும் நம்பிக்கையுடன், வென்றபின் அடைவன மீதான விழைவுடன் இருந்தோம். படைசூழ்கைகளை படையின் உணர்வுநிலைகளை ஒட்டி அமைப்பதே வழக்கம். இன்று அவ்வாறல்ல. நான் எதையும் குறைத்தோ மிகையாகவோ சொல்ல விழையவில்லை. நம் படைகள் உளம் சோர்ந்துள்ளன. படைத்தலைவர்களும் சோர்ந்திருக்கிறார்கள்” என்றான்.

“நாம் வென்றுகொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. வெல்வோம் என்பதில் எனக்கு அசையா நம்பிக்கையும் உள்ளது. பிதாமகர் பீஷ்மர் உடனிருக்கையில் எவரும் நம்மை வெல்ல இயலாது” என அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “ஆனால் வெற்றிகூட பேரிழப்புகள் வழியாகவே அடையப்பட இயலும் என்று இப்போர் நமக்கு காட்டியிருக்கிறது. நேற்று நம் அரசரின் இளையோர் எண்மர் களத்தில் கொல்லப்பட்டுள்ளனர்…” என்றதும் துரியோதனன் தன் இடக்கையை தூக்கி போதும் என்று கைகாட்டினான். அவன் முகத்தில் எழுந்த வலியைக் கண்டு உளம் பொறாது கிருதவர்மன் விழிதாழ்த்திக்கொண்டான்.

“இல்லை, நான் அதை விளக்கப்போவதில்லை” என்றான் அஸ்வத்தாமன். “ஆனால் நம் படைசூழ்கைகள் இனியும் குறைந்த இழப்புகளுடன் வெற்றியை நோக்கி செல்வதாகவே இருக்கவேண்டும். ஆகவே நான் வகுத்துள்ளது முதலைச்சூழ்கை. அசைவற்றதாக, மரக்கட்டையென காத்துக்கிடப்பது. இரை நம் வட்டத்துக்குள் வந்ததும் எதிர்பாராது பாய்ந்து தாக்குவது. முதலையின் விரைவு வேங்கைக்கு நிகரானது. முதலையின் பற்கள் கொண்டது விடாதவை. எவரும் எண்ணியிராத பெரும்படைக்கலம் என தன் வாலை பின்னிருந்து சுழற்றி முன்னெடுக்கத் தெரிந்தது அது. தன் இடத்தில் இருக்கையில் முதலை யானையை வெல்லும் ஆற்றல் கொண்டது.”

“அப்படியானால் நாம் முன்னேறி தாக்கப்போவதில்லையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஆம், இம்முறை நாம் படைசூழ்கை வகுத்து முற்றமைதிகொண்டு காத்திருப்போம். அவர்கள் வரட்டும், தாங்கள் விரும்பிய இடத்தை அவர்கள் தாக்கட்டும். முதலைக்கு தன் எல்லைக்கு அப்பால் பார்வை இல்லை. முதலையால் எத்திசையிலும் திரும்ப முடியும். கணப்பொழுதில் மீன்கொத்தியென எழவும் ஓசையின்றி பின்னகர்ந்து மூழ்கி விழிமறையவும் இயலும்” என்றான் அஸ்வத்தாமன்.

படைசூழ்கைகள் ஒவ்வொரு நாளும் அவையில் விளக்கப்படுகையில் எழும் கொந்தளிப்போ மாற்றுக்கருத்துக்களோ ஐயங்களோ எழவில்லை. அவையினர் பெரும்பாலும் வெற்று விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தனர். துரியோதனன் அதை செவி கொடுத்து கேட்டதாகவே தெரியவில்லை. அஸ்வத்தாமன் “பிதாமகர் பீஷ்மரின் எண்ணத்தை அறிய விழைகிறேன்” என்றான். பீஷ்மரின் விழிகளுக்குச் சுற்றும் உலர்சேறென வெடிப்புகள் பரவியிருந்தன. நடக்கட்டும் என்பதுபோல் கைகாட்டினார். துரோணர் “நன்று” என்றார். கிருபர் “ஆம், இயல்பானது” என்றார்.

அஸ்வத்தாமன் “இப்படைசூழ்கையின் முகப்பென முதலையின் வாயாக பிதாமகர் பீஷ்மரும் அவருக்குத் துணையாக பூரிசிரவஸும் சலனும் அமையட்டும். முதலையின் நான்கு கால்களாக எந்தையும் நானும் அஸ்தினபுரியின் அரசரும் தம்பியரும் அமைக! வால் என ஜயத்ரதரும் கிருதவர்மரும் நிலைகொள்ளட்டும். முதலை இரையை கவ்வியதுமே அதற்கு துணை வரும் பிற படையினரை சுழன்றெழுந்து வந்து வால் அடித்துச் சிதறடிக்கும்” என்றான். அவை எதுவும் சொல்லவில்லை. “இது வெல்லும் சூழ்கை… நம்புக!” என்றான் அஸ்வத்தாமன். “இன்று நாம் ஐவரில் ஒருவரையேனும் கவ்விக்கொண்டே நீருள் மூழ்கி மீள்வோம்.” கிருபர் “ஆம்” என்றார். அவை முனகலோசை எழுப்பியது.

துர்மதன் பெருமூச்சுடன் “நல்ல சூழ்கை, பாஞ்சாலரே” என்றான். தொண்டையை கனைத்து குரல்மீட்டு “ஆனால் படைகளின் நடுவே மழலைமாறா மைந்தரை இல்லத்திற்குள் பனிக்காலத்தில் பூட்டி வைப்பதுபோல் எங்களை வைத்திருக்கிறீர்கள் இல்லையா?” என்றான். “இல்லை, அவ்வாறல்ல. முதலையின் கால்கள் நீங்கள்” என்றான் அஸ்வத்தாமன். “அக்கால்கள் முதலை விரைந்தெழுந்து முன்செல்வதற்கு மட்டுமே உதவும். அவை படைக்கலங்களல்ல” என்றான் துச்சலன். “ஆம், ஆனால் அவை படைசூழ்கையின் வலுவான கூறுகள்” என்றான் அஸ்வத்தாமன். “எங்களிடம் சொல்விளையாட்டு தேவையில்லை, பாஞ்சாலரே” என்று துச்சலன் சொன்னான்.

உரத்த குரலில் அவன் தொடர்ந்தான். “எங்கள் உடன்பிறந்தார் எண்மர் இறந்திருக்கிறார்கள் என்பது உண்மை. என் மூத்தவர் துச்சாதனர் நேற்று பாடிவீட்டுக்கு வந்து படுத்தவர் இன்னும் எழவில்லை. இரவெல்லாம் துயிலிலாது அரற்றிக்கொண்டிருக்கிறார். அகிபீனாவின் மயக்கில் இன்னமும் உளம் ஓய்ந்திருக்கிறார் அரசர். ஆயினும் நாங்கள் இன்னமும் சோர்ந்துவிடவில்லை. ஆசிரியர் மைந்தரே, எங்கள் இளையோர் கொல்லப்பட்டதனால் களத்திலிருந்து நாங்கள் விலகுவோம் என்று பொருளல்ல. நூற்றுவர் ஆயிரத்தவராகி மேலும் களத்தில் நிற்போமென்று தெய்வங்கள் அறியட்டும். இறந்தவர்களுக்கு குருதிபலி அளித்து விண்நிறைவு செய்யவேண்டிய பொறுப்பிலிருக்கிறோம். இனி போர்க்களம் எங்களுக்கு எதையும் ஈட்டிக்கொள்வதற்கான இடம் அல்ல. இது வேள்வி. பலிக்களம். விண்ணில் தேவர்களாக அமைந்த எங்கள் இளையோருக்கு நாங்கள் அளிக்கும் அவியே இந்தக் குருதி. முகப்பில் எங்களை நிறுத்துக!”

அஸ்வத்தாமன் குரலெழா உறுதியுடன் “படைத்தலைவனென நான் அமர்ந்திருக்கிறேன். என் சொல்லுக்கு மாற்றெழுவதை நான் விழையமாட்டேன்” என்றான். “ஆனால்…” என்று துர்முகன் சொல்லெடுக்க பீஷ்மர் “நாம் சொல்லாடி முடிவெடுக்க இது ஒன்றும் அரசுசூழ்கை அல்ல, படைசூழ்கை. ஒருவர் இயற்ற பிறர் அதில் அமைவதே வழக்கம்” என்றார். “அவ்வாறே ஆகட்டும்” என்று துர்முகன் தலைவணங்கினான். துரியோதனன் ஏதோ சொல்லப்போவதுபோல அசைந்தான். அனைவரும் அவனை நோக்க அவன் ஒன்றுமில்லை என கைவீசினான். கிருபரிடம் துரோணர் ஏதோ சொல்ல பீஷ்மர் வாயை மென்றபடி வேறெங்கோ நோக்கி அமர்ந்திருந்தார்.

பூரிசிரவஸ் “தாங்கள் நேற்றிரவு நன்கு துயின்றீர்களா, பிதாமகரே?” என்றான். அந்த நேரடி வினாவை கேட்டு கிருதவர்மன் திகைத்தான். ஆனால் அவையில் பிறர் அதை கேட்டதாகத் தெரியவில்லை. விழிகள் சுருங்க “ஏன்?” என்று பீஷ்மர் சினத்துடன் கேட்டார். “தங்கள் விழிகள் மிகவும் தளர்ந்திருக்கின்றன. உடல் நீர் வற்றியதுபோல் தெரிகிறது” என்றான் பூரிசிரவஸ். “அதை மருத்துவன் நோக்கட்டும்” என்றார் பீஷ்மர். “நீங்கள் நேற்றிரவு முழுதும் துயிலாது முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்ததாக ஏவலர் கூறினார்கள். முதன்முறையாக நேற்று அகிபீனா அருந்தியிருக்கிறீர்கள்.”

பீஷ்மர் எரிச்சலுடன் கை தூக்கி ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் பூரிசிரவஸ் தொடர்ந்தான். “நேற்று மாலை களத்திலிருந்து திரும்புகையில் நான் உங்களை பார்த்தேன். முந்தைய போர்களில் களம் மீண்ட பிதாமகரின் முகம் அல்ல அது. ஒருபோதும் உங்களில் வஞ்சத்தையும் சினத்தையும் நான் கண்டதில்லை. விந்தையானதோர் உளப்பதிவு எனக்கேற்பட்டது, பிதாமகரே. உங்களிடமிருந்து ஒன்று விலகியிருப்பதாக.” பீஷ்மர் தணிந்த குரலில் “எது?” என்றார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை கிருதவர்மன் கண்டான். “அறியேன். அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் இயல்பா? அனைத்துக்கும் அப்பால் நிலைகொள்ளும் தன்மையா? அனைத்திலும் தனக்குரிய களிமயக்கொன்றைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் ஒன்றா? அல்லது இம்மூன்றுமேவா? அறியேன். ஆனால் தாங்கள் மாறிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான் பூரிசிரவஸ்.

பீஷ்மர் “இக்களத்தில் ஒவ்வொரு நாளும் ஒன்றை இழந்து பிறிதொருவராகி மாறாது மீண்டவர் எவரேனும் உளரா?” என்றார். “அனைவரும் அவ்வாறுதான் மீள்கின்றனர். ஆனால் அவர்களில் ஒருவரல்ல தாங்கள். தாங்கள் மாறுவதற்கேற்ப நம் படை மாறியாகவேண்டும். தங்களின் ஒவ்வொரு இழப்பும் இப்படையினர் ஒவ்வொருவருக்கும் பல மடங்கு பெரிய இழப்பு. பிதாமகரே தாங்கள் அறிவீர்கள், இப்போர் தங்களை முன்னிறுத்தி மட்டுமே” என்றான். “நான் தகுதியற்றுவிட்டேன் என்கிறாயா? புண்பட்டு செயலிழந்துவிட்டேன் என எண்ணுகிறாயா” என்றார். “புண் உடலில் நிகழவேண்டுமென்பதில்லை” என்றான் பூரிசிரவஸ். “உங்களிடமிருந்து விலகியதென்ன என்று என் உள்ளம் தவிக்கிறது.”

பீஷ்மர் பெருஞ்சினத்துடன் எழுந்து “சென்றவர்கள் உளர். ஆனால் எஞ்சினோர் என்னில் இன்னும் ஆற்றல்கொள்வர். நான் எட்டு வசுக்களின் வடிவம். எட்டில் எவர் சென்றாலும் எஞ்சியவர் போதும் எனக்கு இப்போர் முடிக்க. எவரிடமும் நான் அதை விளக்கவேண்டியதில்லை. என் மேல் நம்பிக்கை இருப்பின் உடன் திரள்க! அன்றேல் உங்கள் சூழ்கையை நீங்கள் அமைத்துக்கொள்க!” என்றார். “அவ்வாறல்ல, பிதாமகரே” என்று பூரிசிரவஸ் சொல்ல “இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றபின் பீஷ்மர் அவையிலிருந்து எழுந்து வெளியே நடந்தார்.

பூரிசிரவஸ் துரோணரைப் பார்த்து “ஆசிரியரே, நான் எண்ணியது அதுவல்ல” என்றான். “நான் சரியான சொற்களை கோக்கவில்லை. என் நா என் இயல்பில் இல்லை.” துரோணர் “இங்கு அனைவரும் எண்ணிய சொற்களே அவை. அவற்றை அவரிடம் கேட்கும் துணிவு எவருக்குமில்லை. மலைமகன்களுக்குரியது உன் துணிவு” என்றார் துரோணர். “கேட்பதனால் பயனொன்றும் இல்லை என்றும் அறிவோம்” என்றார் கிருபர். அங்கே பேசப்பட்டவற்றை பிறர் கேட்டதாகவே தெரியவில்லை. சிலர் மெய்யாகவே துயிலில் ஆழ்ந்திருக்கக்கூடும் என கிருதவர்மன் எண்ணினான். அஸ்வத்தாமன் ஏட்டில் தன் படைசூழ்கையை தானே மீண்டும் கூர்ந்துநோக்கிக்கொண்டிருந்தான்.

“முதலைச்சூழ்கை வகுத்துள்ளோம் எனில் அதை முன்னெடுப்போம். பிறிதெதுவும் சொல்வதற்கில்லை” என்று ஜயத்ரதன் கூறினான். துரியோதனன் இருமலோசை எழுப்ப அனைவரும் அவனை நோக்கினர். அவன் கைநீட்ட ஒரு வீரன் வாய்மணத்தை அளித்தான். அதை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு மீண்டும் இருமினான். பெருமூச்சுடன் நிமிர்ந்தமைந்து “இச்சூழ்கையில் என் இளையோர் எங்கிருப்பார்கள்?” என்றான். “படைசூழ்கையின் பின்நிரையில்… முதலையின் கால்களாக” என்றான் அஸ்வத்தாமன். துரியோதனன் “அவர்கள் காக்கப்படவேண்டும்” என்றான். துர்மதன் ஏதோ சொல்ல முயல துச்சலன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். “அவர்கள் சூழப்பட்டிருக்கவேண்டும்… அவர்கள் காவலுடன் இருக்கவேண்டும்” என்றான் துரியோதனன்.

பூரிசிரவஸ் “இச்சூழ்கை அதன்பொருட்டே அமைந்துள்ளது, அரசே” என்றான். “என் இளையோருக்கு நேற்று நான் எரிகடன் அளித்தேன்…” என்றான் துரியோதனன். “அவர்களை எரி உண்டது. என் குடியை எரி கவ்வத் தொடங்கிவிட்டது. அதன் பெரும்பசியை நேற்று கண்டேன்… எத்தனை பெரிய சிதை! ஒரு மாளிகை பற்றி எரிவதுபோல. உருகும் அரக்குமணம்… அரக்கு…” அவன் கைகளைத் தூக்கியபடி ஏதோ சொல்லவந்து மீண்டும் இருமினான். ஏவலன் நீர்க்குவளையை அளிக்க அதை வாங்கி அருந்தினான். அந்த ஓசை அவை முழுக்க கேட்டது. “என் குடியை எரிதொட்டுவிட்டது… எரியைப்போல் பரவும்வெறிகொண்டது பிறிதில்லை…”

துரியோதனனின் விழிகளிலிருந்து நீர்வழிவதை கிருதவர்மன் கண்டான். அவனால் ஒரு கணத்துக்குமேல் அதை நோக்க முடியவில்லை. தன்னை இறுக்கி நிலைப்படுத்திக்கொண்டான். பூரிசிரவஸும் ஜயத்ரதனும்கூட விழிநீர்கொள்வதை கண்டான். அஸ்வத்தாமன் “மிகவும் உளம்தளர்ந்திருக்கிறார். அகிபீனா துயிலாக மாறவில்லை என்றால் உளத்தளர்ச்சியை அளிக்கிறது” என்றான். துரியோதனன் இருமி அதிர்ந்து தலையை சாய்த்து விழிகளை மூடிக்கொண்டான். அவை அவனை நோக்கியபடி அமர்ந்திருந்தது.

சல்யர் மெல்ல அசைந்து தாழ்ந்த குரலில் “எனக்கு ஒன்று தோன்றுகிறது” என்றார். “இப்போர் இன்று ஐந்தாம் நாள். இது நிகழத்தான் வேண்டுமா என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்ததுபோல் உள்ளது. அனைவர் உள்ளமும் வெற்றியிலிருந்து விலகிச்சென்றுவிட்டது. நாம் இழப்பை மட்டும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இங்கு மட்டுமல்ல, அங்கே பாண்டவர் தரப்பிலும் எதன் பொருட்டு இப்போர் என்று எண்ணம் எழுந்துள்ளது. உண்மையில் இப்போரைக்குறித்து ஒரு மாற்றுச்சொல் திகழுமென்றால் அது இப்போதுதான். இதை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஒரு அமர்வு நிகழுமெனில் அதற்கான நல்வாய்ப்பு இத்தருணமே.”

கிருபர் “போருக்கு நடுவே உடன்பாட்டுப் பேச்சா?” என்றார். “இரு அரசர்களும் பேச அமர்கிறார்கள் என்ற செய்தி முதல்நாள் போரிலோ இரண்டாம்நாள் போரிலோ எழுந்திருந்தால் படைவீரர்கள் அனைவரும் உளம் சோர்ந்திருப்பார்கள். இன்று அவ்வாறல்ல, அவர்கள் ஒவ்வொருவரையும் உயிர்மீட்கும் அமுதமாக அது அமையும். நாம் பாண்டவர்களுக்கு ஒரு செய்தி அனுப்புவதில் பிழை என்ன?” என்று சல்யர் சொன்னார். அவையினர் அனைவரும் அவரை நோக்கினர். அஸ்வத்தாமன் தலைதூக்கி சல்யரை நோக்கியபின் தோல்சுருளை சுருட்டினான்.

பூரிசிரவஸ் “நானும் அவ்வாறே எண்ணினேன். இவ்வாறு ஒரு பேச்சு எழுவதென்றால் அது நலம் பயக்கும்” என்றான். துரோணர் “அவையின் எண்ணமென்ன என்று அரசரிடம் சொல்லலாம். அவர் முடிவெடுக்கட்டும்” என்றார். கிருபர் “நாம் முடிவெடுப்பது அனைவர் நலனுக்காகவும்தான்” என பொதுவாக சொன்னார். “நாம் என்ன செய்யக்கூடும்? எவருடைய பேச்சு அவைநிற்கும்?” என்றார் துரோணர். “பிதாமகர் பேசட்டும்… பால்ஹிகர் முன்னிலையில் உடன்பிறந்தார் பகைமறக்கட்டும்” என்றார் சல்யர்.

அவையில் கலைவாக குரல்கள் எழுந்துகொண்டிருந்தன. கிருதவர்மன் துரியோதனனை நோக்கினான். அவன் துயில்பவன் போலிருந்தான். துர்மதன் குனிந்து அவனிடம் ஏதோ சொல்ல ஜயத்ரதன் “போர்நிறுத்தம் என்றால் மீண்டும் அவைச்சொல்லாடல் தொடங்குமா? போருக்கு அஞ்சும் பேச்சுக்கு என்ன பொருள்?” என்றான். “நாம் அஞ்சவில்லை. போர் எனும் சொல்லுக்கு மெய்ப்பொருள் என்ன என்று இருவருமே இன்று உணர்ந்திருக்கிறோம்” என்றார் சல்யர். “ஆம், நம்மைவிட அவர்கள் உணர்வார்கள்” என்றார் துரோணர்.

அவை திடுக்கிடும் ஓசையெழ துரியோதனன் இரு கைகளாலும் இருக்கையின் பிடிகளை ஓங்கி அறைந்தபடி எழுந்து “இனி ஒரு சொல்லென இது இங்கெழலாகாது. எந்நிலையிலும், என் இறுதிக் குருதி இங்கு விழுவது வரையிலும், விழுந்த பின்னரும், என் குலக்கொடியின் ஒரு துளி எஞ்சுவது வரையிலும், ஒத்துப்போதலென்பது இனி இல்லை. முழுவெற்றியோ முற்றழிவோ அன்றி தெரிவென்று நம்முன் எதுவும் இல்லை” என்றான். உடைந்த குரலில் “சாவு! அதைமட்டுமே நான் அவர்களுக்கு அளிக்கமுடியும்… ஆம்” என்றான்.

சல்யர் “அரசே, நான் சொல்வதை கேளுங்கள்” என்றார். “என் இளையோர் மடிந்தது மண்ணுக்காக. வெறும் சொல்பெற்று அமைவதற்காக அல்ல” என்று துரியோதனன் கூச்சலிட்டான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. விழப்போகிறவன்போல அசைந்தான். துர்மதன் அவனை பிடிக்க வர அக்கையை உதறினான். “வேறெதைப் பெற்று நான் அமைந்தாலும் என் இளையோரின் பழிகொள்வேன்… என் இளையோர்!” அவன் குரல் அடைத்தது. இரு கைகளையும் விரித்து “இனி என் கடன் அவர்களிடம்… இருப்பவர்களிடமல்ல, இறந்தவர்களிடம்” என்றான்.

மேலும் பேச விழைந்து நெஞ்சு அதிர சொல்லிலாமல் தவித்து பின் இருமத் தொடங்கினான். இருமி ஓய்ந்து ஏவலன் நீட்டிய நீரை விலக்கி துச்சலனை நோக்கி கைகாட்டிவிட்டு மேலாடையை எடுத்து தோளிலிட்டு விரைந்து அவையிலிருந்து வெளிநீங்கினான். முரசுகள் மெல்ல முழங்கி அமைந்தன. வாழ்த்தொலிகள் வெளியே எழுந்து ஓய்ந்தன. கிருதவர்மன் நிலைமீண்டபோது தன் விழிகளிலிருந்து நீர்வழிந்து முகவாய்விளிம்பில் துளிசொட்டுவதை உணர்ந்தான். மேலாடையை எடுத்து முகத்தை மூடி அழுந்த துடைத்தான்.

எவரும் அறிவிக்காமலேயே அவை கலைந்தது. ஒரு சொல்லும் இல்லாது ஜயத்ரதனும் கிருபரும் துரோணரும் வெளியே சென்றனர். அஸ்வத்தாமன் “செல்வோம்” என்று சொல்லி தோல்சுருளை கையிலெடுத்தபடி நடக்க கிருதவர்மன் உடன் சென்றான். வெளியே செல்கையில் பூரிசிரவஸ் சிவந்த கண்களுடன் அணுகுவதை கிருதவர்மன் கண்டான். அவனும் விழிநீர் வடித்து அழுந்தத் துடைத்திருந்தான். அத்தருணத்தின் ஒவ்வாத்தன்மையை கடக்க விழைபவன்போல கிருதவர்மனை நோக்கி புன்னகைத்த பின் அஸ்வத்தாமனிடம் “முதலைசூழ்கை நன்று, ஆசிரியர் மைந்தரே. ஆனால் அவர்கள் எச்சூழ்கையை வகுக்கவிருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றான்.

அஸ்வத்தாமன் “ஒற்றர் சொல்லை வைத்து பார்த்தால் அவர்கள் மீண்டும் அன்னப்பறவை அமைக்கக்கூடும்” என்றான். பூரிசிரவஸ் “அன்னச்சூழ்கை நன்று. நீள்கழுத்து” என்றபின் “ஆனால் பறந்து அமர்ந்து அனைத்து திசைகளையும் சூழ்ந்து தாக்கும் சிறு பறவை ஒன்றின் வடிவை அவர்கள் அடையக்கூடும். ஒரு பேச்சுக்காக கேட்கிறேன், அவர்கள் வல்லூறின் வடிவில் சூழ்கை அமைக்க வாய்ப்புள்ளதா?” என்றான். “வல்லூறா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “முதலை வல்லூறை கவ்வ இயலாது. ஏனெனில் அவை காற்றிலெழும் விரைவுகொண்டவை” என்றான். அஸ்வத்தாமன் “இருக்கலாம், உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றான்.

கிருதவர்மன் “அவ்வாறெனில் இப்போர் இன்று இருதரப்பும் ஒருவரையொருவர் தவிர்த்தாடுவதாக அமையப்போகிறது” என்றான். பூரிசிரவஸ் கைவிரித்து “பார்ப்போம்” என்றபின் முன்னால் சென்று தன் புரவி வீரனை நோக்கி கைகாட்டினான். கிருதவர்மன் அவன் செல்வதை நோக்கி நின்றான். அஸ்வத்தாமன் “இன்றைய போர்தான் நமக்கான உலை. இதில் எரியாது மீளவேண்டும்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்


ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்

$
0
0

Stella Purus

 

ஸ்டெல்லா புரூஸின் அப்பா

 

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

 

வணக்கம்.

 

நீங்கள் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதியதைப் படித்தவுடன் எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது.  ஒரு எளிமையான மனிதர் தேவையில்லாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டாரே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.  ஸ்டெல்லா புரூஸ் மரணத்தைப் போல் எனக்கு வருத்தம் தந்த இன்னொரு மரணம் பிரமிள் மரணம்.  ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல் வறுமை ஒரு காரணம் இல்லை அவர் மரணத்திற்கு.

 

எளிமையான வாழ்க்கை முறையால் அவருக்குத் தேவையானது மட்டும் தேடிக்கொண்டு வாழ்ந்து விடுவார்.   ஆரம்பத்தில் அவருடைய தந்தையின் தொழிலை நடத்தி வந்தார்.பின்னால் அது சரிப்பட்டு வராது என்று தோன்றவே குடும்பத்திடமிருந்து பிரிந்து அவருடைய பங்கை தனியாக எடுத்துக்கொண்டு வந்து விட்டார்.

 

வங்கியில் அவருடைய சேமிப்புகளை வைத்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்தவர்.ஹேமாவுடன் இருந்தபோது அவருடைய சகோதரர் இடத்தைத்தான் வாடகை எதுவும் கொடுக்காமல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

 

உண்மையில் ஹேமா இல்லாதத் தருணத்தில் அவர் அந்த இடத்தை விட்டு காலி செய்து தனியாகப் போயிருக்க வேண்டும். ஹேமா போய் ஆறுமாதக் காலத்தில் அவர் மன அளவில் மிகவும் பாதிகக்பட்டிருந்தார்.  ஆன்மிகம் மூலம் சரி செய்து விடலாம் என்று அவர் கடைசி வரை நம்பியிருந்தார்.  இந்த நம்பிக்கûதான் அவரை வீழ்த்தி விட்டது.  அவருடைய சகோதரி குடும்பத்துடன் இருந்திருக்கலாம்.  அல்லது முன்புபோல் தனி அறை வாடகை எடுத்துக்கொண்டு தங்கியிருக்கலாம்.  அவர் எதையும் செய்யவில்லை. அவர் மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் போட நெருக்கமான நண்பரிடம் கொடுத்துவிட்டார்.  அந்தத் தருணத்தில் அவர் பித்த நிலையில் செயல்பட்டதாகத் தோன்றியது.

 

அவருக்கு ஞானக்கூத்தன், ஆன்ந்த், ராஜகோபால், வைத்தியநாதன் என்று பல நண்பர்கள் உண்டு.  ஆனந்தவிகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவரிடம் மிகுந்த  அன்பு கொண்டவர்.  வயது அதிகமாக ஆக நட்பு என்பது கேள்விக்குரியாக மாறி விடுகிறது.  ஒருவரை ஒருவர் சந்திப்பது குறைந்து விடுகிறது.  ஸ்டெல்லாபுரூஸ் விஷயத்தில் அப்படி நடந்து விட்டது.  ஆனால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற விதியை யாரால் மாற்ற முடியும்

 

 

அன்புடன்

அழகியசிங்கர்

 

அன்புள்ள அழகிய சிங்கர்

 

அவர் பணநெருக்கடியில் இருந்ததாக அவர் இறந்தபோது வந்த செய்திகளில் சொல்லப்பட்டிருந்தது. இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். ஏனென்றால் நான் சினிமாச்சூழலிலேயே அவரைச் சந்தித்தேன். அவருக்கு மிகக்குறைவான தொகையே அளிக்கப்பட்டது, அவருக்குக் கேட்கத்தெரியவில்லை என்று அறிந்தேன். அவர் சில படங்களின் வெற்றிக்குக் காரணமான எழுத்தாளர். ஆனால் அன்றையச்சூழலில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டது. அவருடைய பெயரும் தவிர்க்கப்பட்டது.

 

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ.,

 

 

வழக்கம்போல் அருமையான விரிவான பதில். விருட்சம் வெளியீடான அந்தக் கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் அழகியசிங்கர் சொல்கிறார் “அவர் கடைசி காலத்தில் வறுமையில் கஷ்டப்படவில்லை. அவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. ஹேமாவின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை தன் நண்பரிடம் கொடுத்து திருப்பதி உண்டியலில் போடக் கொடுத்தது தனக்குத் தெரியும்” என்று. நகைகளைப் பொதுவாக நாம் சாப்பாடு முதலிய லௌகீக காரணங்களுக்காகப் பிரிவதில்லை. விதிவிலக்குகள் தவிர.

 

 

என்  செட்டிநாட்டு நண்பர் பெரியகருப்பன் சொல்லுவார் அங்கு ஒரே ஒரு வேளை சாப்பிடும் வறியவர்களிடமும் நூறு பவுன் தங்கமாவது இருக்கும் என்று. பரம்பரை பரம்பரையாகக் கடத்தப் படுபவை. உயிரே போனாலும் விற்கப்படாதவை. “குந்தித் தின்றால் குன்றும் மாளும்” என்பார்கள். அதோடு நோய்களும் சேர்ந்துகொண்டால்… வறுமையில் கஷ்டப்பட்டிருக்கவோ, அல்லது அதை மறைக்க பெரிதாகக் கடன் பட்டிருக்கவோ மட்டுமே வாய்ப்புகள் அதிகம்.  “மேன்ஷன்” வாழ்க்கையை ஒட்டி அவர் படைத்த “அறை நண்பர்” போன்ற ஆக்கங்கள் நான் ரசித்தவை. தன் தோல்வியுற்ற பம்பாய் வாழ்க்கையையும், தன் மனைவி ஹேமாவின் வறுமை நிறைந்த இளமை வாழ்க்கையையும் என்றாவது எழுதவேண்டும் என்றிருந்தார். கை கூடவில்லை.  நீங்கள் காட்டும் சித்திரம் மிகப்பெரியது மிக நுண்ணியதும் கூட. நன்றிகள்.

 

அன்புள்ள,

 

கிருஷ்ணன் சங்கரன்

 

அன்புள்ள ஜெ

 

ஸ்டெல்லா புரூஸ் பற்றிய கட்டுரை வியக்கச் செய்தது. நான் அவருடைய நாவல்களின் தீவிர வாசகனாக இருந்தேன். அவருக்கு நிறைய  கடிதங்களும் போட்டிருந்தேன். என் அடலஸன்ட் வயசின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். காதல் என்ற உணர்வை தித்திப்பாக அவரால் ஆக்கமுடிந்தது என்பதே அவருடைய வெற்றி

 

ஆனால் அவருடைய இன்னொரு முகம் இப்போது நீங்கள் காட்டுவது. இத்தனை தீவிரமான வாசகராகவும் ஆன்மிக ஈடுபாடுகள் கொண்டவராகவும் அவர் இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியமானது. அவருடைய எழுத்துக்களில் இந்த அம்சம் இல்லை. ஒருவர் தன் எழுத்துக்களில் தன் ஆளுமையை வெளிப்படுத்தவில்லை என்பது, அதற்கான வாய்ப்பே அமையவில்லை என்பது எவ்வளவு சோகமானது

 

 

சந்திரசேகர்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்

$
0
0

azaku

குடும்பத்தில் இருந்து விடுமுறை

அன்புள்ள ஜெ

நலமா? நான் நலம். குடும்பத்தில் இருந்து விடுமுறை கட்டுரை வாசித்தேன்.

#ஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போசரியான குடும்பத்தலைவிகள் அப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக.# இந்தச்  சந்தேகம் எந்தப் பெண்ணையும் விட்டுவைப்பதில்லை போலும். தப்பித்தவறி யாராவது ஒருத்திக்கு இச்சந்தேகம் இல்லாமலிருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது சொல்லி அதை விதைத்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் நானும் இப்படித்தான். ஒருவிதமான குற்ற உணர்வு வந்து பாடாய்படுத்திவிடும். இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் வீட்டில் இல்லாதபோது கணவரும் குழந்தைகளும் என்னைப் பெரிதாக எதிர்பார்க்காமல் இயல்பாக இருந்துவிட்டால் அது நிம்மதி தருவதற்குப் பதிலாக ஒருவிதமான அழுத்தத்தைத் தந்ததுதான். ஆனால் இப்போது ஓரளவு தெளிவடைந்துவிட்டேன்.

நானும் தோழி பாரதி மூர்த்தியப்பனும் இதுவரை மேற்கொண்ட பயணங்கள் அளித்துள்ள புத்துணர்வும் அனுபவப் பாடமும் வாழ்க்கையை அதிகமாக காதலிக்கவும் கொண்டாடவும் சொல்லிக் கொடுத்துள்ளன. 2016 ஆம் ஆண்டு சென்னைப் புத்தக கண்காட்சி, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் மலேசியாவின் கெடா மாநிலம்,2017 ஆம் ஆண்டு டிசம்பரில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோயில்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை என ஒவ்வொரு பயணமும் அறிவை விசாலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இன்னும், இன்னுமென்ற தேடலையும் அதிகரித்துள்ளது.

முதல் முறை பயணம் சென்று வந்த பிறகு அந்த அனுபவங்களையும் புகைப்படங்களையும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அப்போது ஒரு நண்பர் நீங்கள் இத்தனை மகிழ்ச்சி அடைய அப்படி என்னதான் இருக்கிறது?” என்ற தொணியில் கேட்டிருந்தார். சமையலிலிருந்து, வீட்டிலிருந்து, குடும்பத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறி பெண்கள் தங்கள் தோழமைகளோடு பயணம் செய்கையில் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் குதுகலத்தையும் சில ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதோ எனத் தோன்றியது.

 

புத்தகக் கண்காட்சி, கெடா மாநிலம் இந்த இரண்டு பயணங்களைப் பற்றிய எனது பதிவுகள்.  

http://azhagunilaa.blogspot.com/search/label/பயணங்கள்

 

அன்புடன்

அழகுநிலா

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கட்டண உரை –ஓர் எண்ணம்

$
0
0

je

 

நான்காண்டுகளுக்குமுன்பு ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது உரைகளுக்குக் கட்டணம் வைப்பதைப்பற்றிச் சொன்னேன். உரைகேட்க வருபவர்கள் ஒரு கட்டணத்தைச் செலுத்தி நுழையவேண்டும். அதற்கு உடனடியாக எதிர்ப்பு வந்தது. அது ஒரு வகை அத்துமீறல் என்ற கருத்து உருவானது. பலர் ஆவேசமாக அது எழுத்தாளரின் நன்மதிப்பைக் குறைக்கும் என்றனர்.

 

என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என அவ்வெண்ணத்தை குழுமத்தில் இட்டேன். அங்கும் பெரும்பாலானவர்கள் ஒவ்வாமையையே குறிப்பிட்டார்கள். அவர்களின் உணர்வுகளை இப்படி தொகுத்துக்கொள்கிறேன்.

 

அ. எழுத்து, பேச்சு ஆகிய இலக்கியப்பணிகள் ஒருவகையான சேவைகள். எழுத்தாளன் ஆசிரியனின் இடத்தில் இருக்கிறான். அவன் கட்டணம் கோரும்போது அந்த உறவு வணிகமாக ஆகிவிடுகிறது. கேட்கவருபவன் நுகர்வோராக ஆகிறான். ஆகவே அவன் ஆணையிட ஆரம்பிக்கிறான். அது எழுத்தாளனுக்குக் கௌரவம் அல்ல

 

ஆ. கட்டணம் செலுத்தி உரைகேட்பது என்பது இன்னமும் இங்கே வழக்கத்தில் இல்லை. புதிய வழக்கமாக அதை உருவாக்க முடியாது. இலவசமாக உரைக்கு வருந்தி வருந்தி அழைத்தும்கூட கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. கட்டணம் என்றால் எவருமே வரமாட்டார்கள்.

 

இ. இலக்கியம் ஒரு கருத்துச் செயல்பாடு. அது மக்களை நோக்கிச் செய்யப்படவேண்டும். அதற்கு கட்டணம் போன்ற நிபந்தனைகள் இருக்கலாகாது

 

ஏன் கட்டணக்கூட்டம் என்ற எண்ணம் வந்தது என்றால் அதற்குச் சில காரணங்கள் உள்ளன. ஒன்று, இலக்கியக்கூட்டம் என்ற பேரில் இங்கே நிகழும் பொறுப்பின்மை. இதை சுதந்திரம் என்று அபத்தமாக விளங்கிக்கொள்கிறார்கள். எதிரே வந்து அமர்ந்திருப்பவன் தன் வேலையைவிட்டு, பயணம்செய்து வந்திருக்கிறான், அவனிடம் நமக்கு ஒரு கடப்பாடு உள்ளது, அவனுக்கு நம்மால் முடிந்த சிறந்த ஒன்றை அளிக்கவேண்டும் என்ற எண்ணமே பலருக்குக் கிடையாது. ஒரு நிகழ்ச்சியை நடத்தவேண்டும், அவ்வளவுதான். ஆகவே தோன்றியபடி கூட்டங்கள் நிகழ்கின்றன

 

பெரும்பாலான மேடைகளில் ஏராளமானவர்கள் பேசுகிறார்கள். அவர்களில் பலர் எந்தவகையான தயாரிப்பும் அற்றவர்கள். பொதுமேடையில் பேசுவதற்கான பொறுப்பும் இல்லாதவர்கள். கணிசமானவை பொறுமையைச் சோதிக்கும் உரைகள். பயிலா உரைகளைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், எந்தவிதமான அறிவார்ந்த தயாரிப்பும் இல்லாமல், அந்த மேடைக்குப் பொருத்தமும் இல்லாமல் ஆற்றப்படும் உரைகள் நம் மீதான வன்முறையாகவே ஆகிவிடுகின்றன. மேடையை அசட்டு விளையாட்டாக ஆக்கிக்கொள்ளுதல், மேடையிலிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்பாடுதல், வெற்றுச்சம்பிரதாயப்பேச்சுக்கள் என ஒரு கேலிக்கூத்து நிகழ்கையில் அந்த அரங்கில் சென்று அமரும் ஒருவர் பயனற்ற ஒன்றைச் செய்வதாக உணர்கிறார்.

 

இன்னொருபக்கம் இங்கே மேடையுரை என்பது பொதுவான அரங்குக்கான கேளிக்கையாக மாறிவிட்டிருக்கிறது. நகைச்சுவை வெடிகளை உதிர்த்தபடி, அவ்வப்போது நாடகீயமான சில கதைத்துணுக்குகளைக் கோத்தபடி, பெரும்பகுதி அரட்டையாகவே செல்லும் உரைகள். அவற்றுக்குப் பல்லாயிரம் கேள்வியாளர்கள் உள்ளனர். அது வேறு ஒரு பாதை. அதற்கும் அறிவியக்கத்துக்கும் தொடர்பில்லை. நான் குறிப்பிடுவது இலக்கியம், அழகியல், தத்துவம், ஆன்மீகம் சார்ந்து நிகழ்த்தப்படும் அறிவார்ந்த உரையை. அவை நிகழவே முடியாத சூழல் மெல்லமெல்ல உருவாகியிருக்கிறது.

 

கட்டணக்கூட்டம் என்பது இதற்கு ஒரு தீர்வு என நான் கருதினேன். ஏனென்றால் அங்கே கேட்கவருபவர் பணம் கொடுக்கிறார். ஆகவே அவருக்கு ஓர் உரிமை உள்ளது. அவர் வெறும் விருந்தாளி அல்ல. அந்த உரைக்கு அவரும் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அதேபோல உரையாற்றுபவரும் எதையேனும் சொல்லிவிட்டுச் செல்லமுடியாது. அது அவர் ஏற்றுக்கொண்ட பணி. அதற்காக அவர் சற்றேனும் உழைக்கவேண்டும். பொறுப்புடன் முடிந்தவரைச் சிறப்பாக உரையாற்றவேண்டும். இந்த ஒப்பந்தம் ஒர் உறுதிப்பாட்டை அளிக்கிறது. உரைகேட்கச் செல்வது வீணாகப்போக வாய்ப்பில்லை என்று.

 

இன்று கணிசமானோர் கூட்டங்களுக்கு வராமலிருப்பது கூட்டங்கள் எப்போது தொடங்கும் எப்போது முடியும் எனத் தெரியாமலிருப்பதனால்தான். கூட்டத்தில் உருப்படியாக ஏதேனும் பேசப்படுமா அல்லது வெற்றுச்சடங்காக முடிந்துவிடுமா என்ற ஐயம் எப்போதும் உள்ளது. கட்டணக்கூட்டங்கள் அந்த ஐயத்தை விலக்கும் வாக்குறுதி ஒன்றை அளிக்கின்றன.

 

ஆனால் அதற்கு எதிராகச் சொல்லப்பட்ட கருத்துக்களில் முதல்கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை.  இலக்கியவாதியை ஆசிரியனாக எண்ணுவதும் அதைச்சார்ந்த உரையாடலும் வேறு ஒரு தளத்தில் நிகழவேண்டியவை. மேடையில் அல்ல என்பது என் கருத்து.

 

ஆனால் இரண்டாவது கருத்துடன் எனக்கு உடன்பாடு உண்டு. ஏனென்றால் இணையதளங்களேகூட இங்கே கட்டணம் வைத்தால் அப்படியே படுத்துவிடுவதே வழக்கம். சினிமாவுக்கு மக்கள் செலவழிக்கிறார்கள் என்றால் அது கேளிக்கை. இலக்கியம் போன்றவற்றுக்குச் செலவழிப்பதை பொதுவாக தமிழர் வீண் என்றே நினைக்கிறார்கள். இலக்கியஆர்வம் கொண்டவர்கள்கூட.

 

இக்காரணத்தால் அன்றே இவ்வெண்ணம் ஒத்திப்போடப்பட்டது. ஆனால் நண்பர் கிருஷ்ணன் இதை ஒரு பிடித்தமான பேசுபொருளாக நெடுங்காலமாகக் கொண்டிருக்கிறார். சொல்லிக்கொண்டே இருந்தவருக்கு நெல்லை நண்பர் சக்தி கிருஷ்ணனின் ஆதரவு கிடைக்க ஒரு கட்டணக்கூட்டத்தைச் நெல்லையில் அமைத்தாலென்ன என்னும் எண்ணம் ஏற்பட்டது. உற்சாகத்துடன் என்னிடம் அதைச் சொன்னபோது நான் ஆர்வம் காட்டவில்லை. தமிழ்ச்சூழலில் அதற்கு ஆதரவிருக்காது என்பதே என் எண்ணம். ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள்

 

முதன்மையான பேச்சாளர்களை நாடலாம் என்பது என் எண்ணம். ஆனால் அதிலுள்ள சிக்கல் அவர்கள் கடல் அலைபோல கூட்டத்தை எதிர்பார்ப்பார்கள். தீவிரமாக ஓரு கரு குறித்துப் பேசவைக்கலாம் என்றால் இங்கே நிபுணர்கள் என அறியப்படும் பலருக்கு தெளிவாகப் பேசத்தெரியாது. ஒரு தொடக்கமாக நான் பேசலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு என் பேச்சு குறித்து கொஞ்சம் அவநம்பிக்கை உண்டு. என் உச்சரிப்பு தெளிவானது அல்ல. ஒலிப்பெருக்கியுடன் நான் இன்னமும் ஒத்திசையவுமில்லை. ஆனால் வேறுவழியில்லை

 

நவம்பர் 10 அன்று நெல்லையில் ஒரு கட்டணக்கூட்டத்தை முடிவுசெய்திருக்கிறார்கள். ரூ 150 கட்டணம். நான் சற்றேறக்குறைய ஒன்றரை மணிநேரம் பேசுவேன். ‘நமது இன்றைய சிந்தனைமுறை உருவாகி வந்தது எவ்வாறு?” என தலைப்பு. சென்ற இருநூறாண்டுகளில் நாம் இன்று சிந்திக்கும் முறையின் பொதுப்போக்குகளும், கருக்களும் எப்படி உருவாகிவந்தன என்று பேசலாமென நினைக்கிறேன். சமகால இந்திய சிந்தனையின் பரிணாமம் என்று சொல்லலாம் . நான் இலக்கியவாதி என்பதனால் இலக்கியத்தின்வழியாகவே இந்த உரை அமையும். ஒரே உரைதான். சரியான நேரத்தில் தொடங்கி முடியும்.

 

எந்த அளவுக்கு இம்முயற்சி வெல்லும் எனத் தெரியவில்லை. வருந்தத் தக்கதாக இருக்காதென நினைக்கிறேன். சொல்லும்படியான வெற்றி கிடைத்தால் தொடரலாம் என்று தோன்றுகிறது

 

தொடர்புக்கு

 

கிருஷ்ணன்  salyan.krishnan@gmail.com 

சக்தி கிருஷ்ணன் நெல்லை  sakthi.dna@gmail.com

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33

$
0
0

bowஅரசுசூழ் மாளிகையிலிருந்து புரவிகளை நோக்கி செல்கையில் அஸ்வத்தாமன் “என் பாடிவீட்டுக்கு வருகிறீர்களா, யாதவரே?” என்றான். “ஆம், வருகிறேன்” என்ற பின்னரே கிருதவர்மன் யாதவ குலத்தலைவர்கள் அப்பால் தனக்காக காத்து நிற்பதை கண்டான். “பொறுத்தருள்க பாஞ்சாலரே, என் குலத்தலைவர்கள். நான் அவர்களிடம் பேச வேண்டியிருக்கிறது. நான் சற்று பிந்தி அங்கு வருகிறேன்” என்றான். “பிந்துவதற்கு பொழுதில்லை. இன்னும் சற்று நேரத்தில் புலர்ந்துவிடும். நேராக களத்திற்கு வருக!” என்றபடி அஸ்வத்தாமன் தன் புரவி நோக்கி சென்றான்.

யாதவர்களை அணுகிய கிருதவர்மன் அவர்களின் தலைவணக்கங்களை ஏற்று “இன்று முதலைச்சூழ்கை. முதலையின் உடலென நாம் அமைக்கப்பட்டுள்ளோம்” என்றான். அவர்களிடம் ஒளியணைவதுபோல் ஓர் முகமாறுதல் ஏற்பட்டது. போஜர் குலத்தலைவர் பிரபாகரர் “நாங்கள் உங்களை நேரில் கண்டு பேசிப்போகவேண்டும் என்று வந்தோம், கிருதவர்மரே” என்றார். “பாடிவீட்டுக்கே வந்திருக்கலாமே?” என்று கிருதவர்மன் சொன்னான். “ஆம், அங்கு சென்றபோது நீங்கள் இங்கிருக்கிறீர்கள் என்றார்கள்” என்று ஹேகய குலத்தலைவர் மூஷிகர் சொல்ல குங்குர குலத்தலைவர் சுதமர் ஊடே புகுந்து “உண்மையில் அரசரிடம் பேசத்தான் வந்தோம். தயங்கி நின்றுவிட்டோம். அதை உங்களிடம் சொல்லலாம் என நினைத்தோம்” என்றார்.

அந்த வாயுதிர்தல் அனைவரையும் நிலையழியச் செய்ய ஒருவரை ஒருவர் நோக்கினர். பிரபாகரர் “ஒன்று கேட்டேன். நேற்று போரில் இளைய யாதவர் தேர்திருப்பி தப்பி ஓடினார் என்று சொல்கிறார்கள். மெய்யா?” என்றார். எரிச்சலுடன் “இளைய யாதவர் இப்போரில் இல்லை” என்றான் கிருதவர்மன். சுதமர் “யார் சொன்னது? இப்போரை நடத்துவது அவர்தான். இளைய பாண்டவனின் வில்திறனை நம்பி இதை முன்னெடுத்தார். இதோ களத்தில் அவன் கோழை என தெரிந்துவிட்டது. நேற்றிரவு துயின்றிருக்கமாட்டார்” என்றார்.

மூஷிகர் “பீஷ்மரின் முன் அவன் வில் தாழ்த்தி ஓடியதும் அவனை விட மாவீரன் என்று சொல்லப்பட்ட அவன் மைந்தன் அபிமன்யூ பீஷ்மரின் அம்பால் தேர்த்தட்டில் விழுந்து புண்பட்டு மருத்துவநிலையில் கிடப்பதும் அவருக்கு உணர்த்த வேண்டியதை உணர்த்தியிருக்கும்” என்றார். பிரபாகரர் “அவருக்கு ஓர் எண்ணமிருந்தது, பெருவீரர்கள் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றிருக்கிறார்கள் என்று. அவ்வெண்ணத்தால் எங்களை அவர் பொருட்படுத்தவில்லை” என்றார்.

கிருதவர்மன் அவர்களிடம் பேசிப் பயனில்லை என அமைதிகாத்தான். பிரபாகரர் “கிருதவர்மரே, எங்கள்பொருட்டு தாங்கள் நேரடியாக சென்று இளைய யாதவரிடம் பேசக்கூடுமா?” என்றார். “ஏன் பேசவேண்டும்?” என்றான் கிருதவர்மன். “இப்போரில் நமது குடிகள் இறந்துகொண்டிருக்கின்றனர். எளிய கன்றோட்டும் மானுடர். இத்தனை அழிவை நாம் எதிர்பார்க்கவில்லை. நம்மவருக்கு இத்தகைய பெரும்போர்கள் பழக்கமில்லை. உண்மையை சொன்னால் கால்தடுக்கி விழுந்தே யாதவர்கள் பலர் உயிர்துறக்கிறார்கள்” அந்தகக் குடித்தலைவர் சாரசர் சொன்னார்.

“நாம் வெல்வோம்” என்றான் கிருதவர்மன். “ஆம், நாம் வெல்வோம். ஆனால் எஞ்சுபவர் எவர் என்ற எண்ணம் எழுந்துள்ளது” என்றார் சாரசர். “ஆகவே இளைய யாதவரை மீண்டும் அரசனாக ஏற்க எண்ணுகிறீர்களா?” என்றான் கிருதவர்மன் சீற்றத்துடன். “அரசனாக அல்ல. இனி அரசனாக அவரை ஏற்க எங்களால் இயலாது. இனி யாதவக்குடியின் அரசர்கள் குடித்தலைமைக்கு முற்றாகவே கட்டுப்பட்டவர்கள். ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொருவர் அரசனாக அமையட்டும். அவர்களை குடித்தலைமையின் கூட்டுமுடிவுகள் ஆளட்டும். அவ்வாறுதான் இன்றுவரை நம் குடி பெருகிப்பரவியிருக்கிறது” என்றார் ஹேகய குலத்தலைவர் மூஷிகர்.

“இனி நமக்கு பேரரசர்கள் வேண்டாம். நம்மை மிதித்து நம் மீது ஏறும் பேரரசர்கள் நம்மை பலிகொண்டு மகிழ்கிறார்கள். நம் குருதியுண்ணும் பலித்தெய்வங்களை இனி நாம் உருவாக்கவேண்டாம்” என்றார் சுதமர். “கார்த்தவீரியர்களை இனி நம் குடி காணவேண்டியதில்லை!” என்றார் போஜர் குலத்தலைவர் சுஃப்ரர். “அவர் நம் அரசர்களில் ஒருவராக அமையட்டும். அல்லது அவர் மைந்தர்களுக்கு துவாரகையை அளித்து காடேகட்டும்” என்றார் அந்தக குடித்தலைவரின் இளையவரான சுதீரர். அவர்கள் உள்ளம் ஏகும் திசையெதுவென்று கிருதவர்மனால் ஊகித்துணர முடியவில்லை. அவன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்க மூஷிகர் “அவர் தன் ஆணவமழித்து தோற்றேன் என்று ஒரு சொல் சொன்னால் போதும். அவரை ஏற்க நாங்கள் சித்தமே. முற்றழிவு எங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

“யார் முன் அவர் தலை தாழ்த்த வேண்டும்?” என்று கிருதவர்மன் கேட்டான். அவர்களின் விழிகள் மாறுவதை கண்டான். சாரசர் “பசுவைவிட மந்தை பெரிது என்று சொல்லிக்கேட்டு வளர்ந்தவன் நான். நமது குலத்தில் தன்னை தருக்கி தலைதூக்கியவர் கார்த்தவீரியர். அவரை தன் முற்காட்டு எனக்கொண்டு எழுந்தவர் இளைய யாதவர். கார்த்தவீரியர் வேருடன் பிடுங்கி அகற்றப்பட்டார். அவருடைய ஆயிரம் கைகளும் பெருமரம் வெட்டிக்குவிக்கப்பட்டதுபோல் மாகிஷ்மதியின் வாயிலில் கிடந்ததென்கின்றன கதைகள். அந்நிலை இவருக்கும் வரக்கூடாது” என்றார்.

கிருதவர்மன் “அவர் அந்தணராகிய பரசுராமரால் கொல்லப்பட்டார். அவரை ஆதரித்து நின்றது நம் குலம்” என்றான். “அவர் அழிந்தது நம் குலத்தாலும்தான். அவருடைய ஆணவத்தால் குலம் அவரிடமிருந்து உளம்விலகிவிட்டிருந்தது. அவர்கள் களத்தில் அவருக்கு முற்றாதரவு அளிக்கவில்லை” என்றார் மூஷிகர். கிருதவர்மன் ஏளனப் புன்னகையுடன் “ஆக அப்போதும் குலத்தால் கைவிடப்பட்டுதான் அவர் அழிந்தார். இப்போதும் அதுவே நிகழ்கிறது” என்றான். “கைவிடப்பட்டு என்று ஏன் சொல்கிறீர்கள்? நாங்கள் எவருக்கும் வஞ்சமிழைக்கவில்லை. குலப்பெருமையன்றி பிறிதெதையும் நாங்கள் பெரிதென்று எண்ணவில்லை” என்றார் சுதமர்.

“மெய்யாகவா? உங்களில் எவராயினும் தெய்வங்கள்மேல் சொல்லூன்றி இங்கே சொல்ல முடியுமா, நீங்கள் குலத்திற்கு முழுத் தலைமை ஏற்கும் நாளொன்றை உள்ளாழத்தில் ஒருமுறையேனும் கனவு காணவில்லை என்று?” என்று கிருதவர்மன் கேட்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி தத்தளிக்க சாரசர் “இது வீண்சொல்” என்றார். “களத்தில் அவருடைய தோல்வியை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் ஈட்ட விரும்புவது பிறிதொன்றும் அல்ல, ஆணவமீட்சி மட்டுமே. அவரது அவையில் சென்றமர்ந்து பல்லாண்டுகாலம் வாழ்த்தொலி எழுப்பினீர்கள். அந்த ஒவ்வொரு வாழ்த்தொலிக்கும் உங்களுள் அமைந்த ஏதோ ஒன்று சீற்றம் கொண்டது. அவ்வெளிய வஞ்சத்தை சுமந்து இங்கு படை நடத்த வந்திருக்கிறீர்கள். இங்கு அதற்கு எப்பொருளும் இல்லை. இங்கு எந்த வஞ்சத்திற்கும் பொருளில்லை. இங்கு எதற்குமே பொருளில்லை என்று இப்போது உணர்ந்திருப்பீர்கள்” என்றான் கிருதவர்மன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்க கிருதவர்மன் கசப்பு நிறைந்த பெருஞ்சிரிப்புடன் “ஆனால் போருக்கெழுவது எளிது, மீள்வது கடினம்” என்றான். “இது இளைய யாதவர் பேசுவதுபோல் ஒலிக்கிறது” என்றார் சாரசர். “நீங்கள் இளைய யாதவராக ஆக முயல்கிறீர்கள் என்றால் நாங்கள் சொல்வதொன்றே, இன்னொரு இளைய யாதவர் எங்களுக்கு தேவையில்லை.” கிருதவர்மன் “ஆம், ஒவ்வொருவரும் இளைய யாதவராகவே எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒளிவென்ன மறைவென்ன?” என்றான். சாரசர் சீற்றத்துடன் “நீங்கள் எங்களை களியாடுகிறீர்கள்” என்றார். “இல்லை, நான் சொல்வது இயல்பாகவே அவ்வாறு ஆகிறது” என்றான் கிருதவர்மன்.

“கிருதவர்மரே, நீங்கள் எங்கள் தலைவர் அல்ல, எங்களில் ஒருவர் மட்டுமே. வெற்றிக்குப் பின் நீங்கள் உங்களை இளைய யாதவரென்று எண்ணிக்கொள்வீர்கள் என்றால் அன்று உங்களுக்கெதிராகவும் நாங்கள் எழுவோம்” என்றார் மூஷிகர். “அதை நான் நன்கறிவேன். நான் இளைய யாதவர் அல்ல. அவருக்கு எதிராக எழுந்த சிறுமை எனக்கெதிராகவும் எழுமென்று அறியாதவனும் அல்ல. ஆனால் ஒன்றுணர்க, இப்போருக்குப் பின் நான் யாதவர்களுக்கு அரசனாக ஆனேன் என்றால் குலத்தலைமையென்று கோல்கொண்டு ஒருவரும் என் முன் வந்து அமர ஒப்பமாட்டேன்! என்னை மீறி சொல்லெடுக்கத் துணிவீர்கள் என்றால் உங்களையும் உங்கள் மைந்தர்களையும் தலைவெட்டி கோட்டை முகப்பில் வைத்த பின்னரே அரியணையில் அமர்வேன்” என்றான்.

அவர்கள் ஒவ்வொருவரும் முகம் வெளிறி திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். கிருதவர்மன் புன்னகைத்து “சிறுமைகளை ஏற்றுக்கொள்வது பெருந்தன்மை. சிறுமைகளை பொறுத்தருள்வது மடமை. இப்பாரதவர்ஷத்தில் பேரரசுகளை உருவாக்கிய அனைவருமே தங்கள் குலத்தை முற்றடிமையாக கால்கீழ் வைத்திருந்தவர்கள். தேரிழுக்கும் புரவிகளுக்கு தங்களுக்கென்று எண்ணமும் இலக்கும் இருக்கலாகாது. அவை சவுக்கால் மட்டுமே செலுத்தப்படவேண்டும், கடிவாளத்தால் ஆணையிடப்படவேண்டும்” என்றான். அவர்கள் ஒவ்வொருவரையாக நோக்கியபின் “நன்று, என் சொற்களை உரைத்துவிட்டேன். முன்னரே சொல்லப்படவில்லை என்னும் குறை இனி வேண்டாம்” என்று திரும்பி நடந்தான்.

ஓர் யாதவ இளைஞன் உரக்க “நில்லுங்கள், கிருதவர்மரே!” என்றான். கிருதவர்மன் நிற்க “நான் விருஷ்ணி குலத்தலைவர் சசிதரரின் மைந்தன். என் பெயர் சேகிதானன்” என்றபடி அவன் அருகே வந்தான். “விருஷ்ணிகுலம் என்றும் பாண்டவர்களுக்கு கடமைப்பட்டது. ஏனென்றால் எங்கள் குலமகள் அங்கே அஸ்தினபுரியின் அரசியானாள். அவள் வயிற்றில் பிறந்தவர்கள் அரசமைந்தர் ஐவரும். எங்கள் குடிசெழிக்க வந்த இளைய யாதவரின் அணுக்கனாக என்றும் என்னை உணர்ந்தவன் நான். மயன் அமைத்த இந்திரப்பிரஸ்த மாளிகையில் பாண்டவர்கள் அணிக்கோலத்துடன் நுழைந்தபோது அவர்களுக்குப் பின்னால் வாளேந்தி சென்றவர்களில் நானும் ஒருவன். ராஜசூயப் பெருநிகழ்வில் அரசரைச் சென்று பணிந்து எங்கள் குலத்து வில்லை காலடியில் வைத்து முழுதளிப்பை அறிவித்தவன்.”

உளவிசையால் அவன் மூச்சிரைத்தான். “இன்று இதோ பாண்டவர்களுக்கு எதிர்நிரையில் நின்றிருக்கிறேன் எனில் அது என் குலமூத்தாரின் ஆணை என்பதனால் மட்டுமே. மூத்தோர் சொல் பசுத்திரளை ஒருங்கிணைக்கும் கழுத்துமணியோசைக்கு நிகர் என்று கேட்டு வளர்ந்தேன். இன்றும் நாவெடுக்காமல் இருந்தால் பின்னர் என்னை நானே பழிப்பேன் என்பதனால் இதை சொல்கிறேன். யாதவகுலத்தை நீங்கள் உங்கள் ஏவல்படை என எண்ணினீர்கள் என்றால் அது நடைபெறப்போவதில்லை. இதுகாறும் யாதவர்கள் குலத்திரள் என்றுதான் திகழ்ந்துள்ளனர். ஒவ்வொரு குடியும் தனித்தனியான அரசும் கொடியும் முத்திரைகளும் கொண்டு பிறரை சாராமல் தங்கள் நிலத்தில் தாங்களே என்று வாழ்கிறார்கள்.”

“நாங்கள் மலைகளைப்போல ஓங்கி உயர முடியவில்லை. நெருப்பென பிறவற்றை அழித்து நிலைகொள்ளவும் இயலவில்லை. ஆனால் நீரெனப் பரவி செல்லுமிடமெல்லாம் செழிக்க வாழ்கிறோம். குலங்களென விரிந்து குடிகளென பிரிந்து வாழ்ந்தால் நாங்கள் பேரரசென்று ஆகாவிட்டாலும் என்றுமழியாது இங்கிருப்போம். துவாரகைகளை உருவாக்கி நிலைநிறுத்தும் ஆற்றல் எழாது போகலாம். கன்றுபெருகி வாழ்வதற்கு அதுவே சிறந்த வாழ்க்கைமுறை” என்றான் சேகிதானன்.

“ஆகவேதான் என் குடி இளைய யாதவரை கைவிட்டபோது அதிலும் ஒரு நெறி உள்ளது என எண்ணினேன். எந்நிலையிலும் குலங்களும் குடிகளும் தங்கள் தனிப்போக்கை கைவிடாதிருப்பதில் தெய்வஆணை ஒன்று வாழ்கிறதென்று கருதினேன். ஒவ்வொரு உயிருக்கும் வாழவும் பெருகவும் தனக்குரிய வழிகள் உள்ளன. காலங்களாக ஆற்றித்தேர்ந்த வழிகள் அவை” சேகிதானன் சொன்னான். “பசுவை ஏரில் கட்டியது போன்றது யாதவரைக்கொண்டு படைசமைத்து பேரரசு அமைக்க இளைய யாதவர் முயன்றது என தெளிந்தேன். ஆகவே இவர்களின் அச்சமும், தயக்கமும், சிறுமையும், பூசலும் எனக்கு இயல்பானவையாகவே பட்டன.”

“அவை என்னிடமில்லை. ஆனால் என் தந்தையர் உடலே நான். ஆகவே இவர்களுடன் நின்று இவர்களுடன் மடிவதே என் கடன் என்று கொண்டேன். என் உள்ளத்தில் வாழும் தெய்வம் என்னை அறியும். எங்கு நின்று மடிந்தாலும் என்னை அது ஏற்கும் என்று சொல்லிக்கொண்டேன்.” நீண்ட சொல்லாடலால் உணர்வுகள் சிதறிப்பரவ அவன் தன்னை மீட்டு யாதவ குடித்தலைவர்களை நோக்கி “நன்று, இந்தப் போரில் இளைய யாதவரை கைவிட்டு நாம் இவரை ஏற்றது இதன்பொருட்டுதானா என முடிவெடுக்கவேண்டிய பொழுது இது” என்றான்.

“என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள்?” என்று கிருதவர்மன் இகழ்ச்சிச்சிரிப்புடன் கேட்டான். “படைதுறந்து மறுபக்கம் சென்று சேரப்போகிறீர்களா? அதற்கு கௌரவர்கள் ஒப்பமாட்டார்கள். படைதுறப்போரை சிறைப்பிடித்து கொல்ல கௌரவருக்கு உரிமை உண்டு.” அவன் சிரிப்பு மேலெழுந்தது. “சரி, வேண்டுமென்றால் நான் ஓர் உறுதியை அளிக்கிறேன். நீங்கள் கௌரவர்களை உதறி பாண்டவர்களிடம் சென்று சேர்வதாக இருந்தால் துரியோதனர் அதற்கு ஒப்புதல் அளிக்க நான் ஆணைபெற்றுத்தருகிறேன். செல்க!” அவர்களை மாறிமாறி நோக்கி “என்ன முடிவு கொள்ளப்போகிறீர்கள்?” என்றான்.

சேகிதானன் யாதவ குடித்தலைவர்களிடம் “இனி என்ன எண்ணவேண்டியிருக்கிறது? இங்கே வீண்போர் செய்து மடிவதைவிட நம் குடித்தலைவர் பொருட்டு போரிடுவோம். இவர்கள் நம்மை சிறைபிடிப்பார்களென்றாலும் நம் முடிவென்ன என்று அறிவித்துவிட்டுச் செல்லவே எழுவோம். இப்போது நாம் செய்யவேண்டியது அதுவே” என்றான். கிருதவர்மன் “நீங்கள் சென்றால் அவர் உங்களை ஏற்கவேண்டுமென்பதில்லை. அஸ்தினபுரியிலிருந்து கால்பொடி தட்டி கிளம்பிய கணமே மீளவியலாதபடி ஒவ்வொன்றும் முற்றமைந்துவிட்டன” என்றான்.

உளஎழுச்சியுடன் முன்னால் வந்து விழிகள் மின்ன “அவர் கனிவார். நாம் அவருடைய குடிகள். தந்தை மைந்தரை கைவிடமாட்டார். நம்மை அவர் ஏற்பாரா ஒறுப்பாரா என எண்ணுவதும் பிழை. நாம் செய்வதில் உகந்தது சென்று அடிபணிவதே” என்றான் சேகிதானன். கிருதவர்மன் இளமையின் விசையை அவனிடம் கண்டு அகம்வியந்தான். முகத்தில் ஏளனப் புன்னகை நிலைக்க “எனில் செல்க… நானோ கௌரவர்களோ ஒரு தடையும் சொல்லப்போவதில்லை” என்றான். “ஆம், கிளம்புகிறோம். இப்போதே கிளம்புகிறோம். தாதையரே, மூத்தவர்களே, இங்கிருந்தே கிளம்புவோம்” என்று சேகிதானன் கூவினான்.

போஜர் குலத்தலைவர் சுஃப்ரர் “ஆனால் நமது வஞ்சினங்கள் அவ்வண்ணமே இன்றும் நீடிக்கின்றன” என்றார். குங்குரர்களின் தலைவர் சுதமர் “எங்கள் குடிமூத்தார் வாகுகர் கழுவிலேற்றப்பட்டபோது நாங்கள் எடுத்த சூளுரை ஒன்றுண்டு… அது தெய்வங்களையும் மூதாதையரையும் முன்நிறுத்தி கொண்ட நோன்பு” என்றார். போஜர் குலத்தலைவர் பிரபாகரர் “எங்கள் தாதை சீர்ஷரையும் கழுவிலேற்றினார் அவர். அந்தக் கழுவை நாங்கள் கொண்டுசென்று எங்கள் கன்றுமேயும் காட்டில் நிறுத்தி தெய்வமென பலியிட்டு வணங்குகிறோம்” என்றார்.

குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. “வாகுகரின் குருதி உலராமல் நின்றுள்ளது. சரபரும் கூர்மரும் இன்னமும் விண்ணேகவில்லை” என்றார் ஒருவர். கிருதவர்மன் நகைத்து “சரபரும் கூர்மருமா? நன்று, எதிரிக்கு தன் படையை ஒற்றுக்கொடுத்தவர்கள்… அவர் அவர்களை மட்டுமே கழுவேற்றினார். நூல்நெறிகளின்படி அக்குடியின் அத்தனைபேரையும் அழித்து, எழுகுருத்தும் விதையும்கூட எஞ்சாமல் ஆக்கிவிட்டிருக்கவேண்டும். நூல்நெறி கற்ற இளைய யாதவர் அரசருக்கு ஒவ்வாத இரக்கத்தையும் சற்றே கொண்டுவிட்டார். ஆகவேதான் இக்குரல்கள் எழுகின்றன” என்றான்.

“எங்கள் குருதியை விழைகிறாயா நீ? இழிமகனே!” என்று முதியவரான விருஷ்ணிகுலத்து சதகர்ணர் கூவினார். கிருதவர்மன் அவர் விழிகளை நோக்கி “ஆம், உங்கள் குருதியை எதிர்பார்க்கிறேன். நீங்கள் முற்றழியவேண்டுமென்பதே ஊழ். இல்லையென்றால் உங்கள் குலத்தில் முலைப்பால் உலரா வாயுடன் குழவியர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். கைகொண்டு மெய் பொத்தி உங்கள் வளைகளுக்குள் ஒண்டியிருக்கும் கீழ்மை உங்களில் கூடியிருக்காது” என்றான்.

“கொல்லுங்கள் அவனை… நம்மை அழிக்க நினைக்கும் கீழ்க்குடியின நரி… கொல்க!” என்றார் குங்குரரான குவலயர். கிருதவர்மன் “கொல்லுங்கள் பார்ப்போம்… உங்களுக்கு உறுதிசொல்கிறேன். என் வாளை உருவமாட்டேன். துணிவிருப்போர் கொல்லுங்கள்” என்றான். விருஷ்ணிகுலத்தவராகிய சூரியர் “அஸ்தினபுரியின் படைத்தலைவர்களில் ஒருவர் நீர். உம்மை கொன்றால் எங்களை முற்றாக கொன்றழிப்பார் துரியோதனர்” என்றார். கிருதவர்மன் ஏளனம் நிறைந்த முகத்துடன் வெறுமனே நோக்கி நின்றான்.

“இனியும் என்ன தயக்கம்? நாம் இப்போதே கிளம்புவோம்” என்றான் சேகிதானன். பிரபாகரர் “இவருக்காக நாங்கள் இங்கே படைக்கு வரவில்லை. நமது சொல் கௌரவப் பேரரசருடன்தான். அதை போருக்குப் பின் பேசுவோம்” என்றார். சேகிதானன் “என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நாம் அரசுசூழ்தலைப் பேச இங்கு நிற்கவில்லை. அதற்கு நமக்கு இனி வாய்ப்பே இல்லை. நாம் இப்போதே கிளம்புவோம். நாம் செய்யவேண்டியது அதுமட்டுமே” என்றான். போஜர் குலத்தலைவர் சுஃப்ரர் “நாம் குடித்தலைவர்கள். எந்நிலையிலும் நம் கோல் தாழவேண்டியதில்லை” என்றார்.

சேகிதானன் எரிச்சலுடன் “இனியும் இந்தத் தன்முனைப்பு எதற்கு? நாம் எவரென்று இன்று நன்கறிந்துவிட்டோம். இதுவே இறுதித் தருணம்… இதை தவறவிட்டால் நம் குடிவழியினர் பழிக்கும் பேரழிவை ஈட்டிக்கொள்வோம்” என்றான். ஹேகய குலத்தலைவர் மூஷிகர் “நாம் அவருக்கு ஒரு தூது அனுப்பலாம்” என்றார். “நமது எண்ணங்களை அவரிடம் சொல்வோம். நாம் சொல்வனவற்றை அவர் ஏற்றுக்கொண்டு சொல்லளித்தால் அவரை ஏற்றுக்கொள்வோம்.” சேகிதானன் சலிப்புடன் பற்களைக் கடித்து தலையை அசைத்தான். “அவர் செய்த பிழைகளை உணர்ந்துகொண்டார் என ஒரு சொல் நம் அவையில் உரைத்தாரென்றால் தடையில்லை” என்றார் பிரபாகரர்.

கிருதவர்மன் சேகிதானனிடம் திரும்பி “அறிக, இவர்கள் தங்கள் வெற்றாணவத்தால் போருக்கெழுந்தவர்கள்! ஆணவம் விழிமறைக்க இவர்களால் இளைய யாதவரை நோக்க இயலவில்லை” என்றான். அவன் முகத்தில் புன்னகை மறைந்தது. “ஆனால் துயிலிலும் விழிப்பிலும் அவரையே எண்ணிக்கொண்டிருந்தவன் நான். பகைமையும் ஒரு தவமே. வெறுப்பினூடாக என்னை முழுதளித்தேன். அறிந்தறிந்து அவரென்றே நானும் ஆனேன். என் உடலை அப்பாலிருந்து காண்பவர்கள் அவரோ என ஐயுறுவதுண்டு. என் குரலும் சொல்லும் அவர்போலவே என பலர் சொன்னதுண்டு. ஒருவரை முழுதறிய அவரே என்றாவதே ஒரே வழி” என்றான்.

சேகிதானன் திகைப்புடன் நோக்கினான். “இந்த வீணர் உடனிருந்து வணங்கியும் அறியாதவர்கள். நான் அகன்றிருந்து அணுகியவன். இந்தப் போர் எங்கு எவ்வண்ணம் முடியுமென்று இன்று நான் நன்கறிவேன். ஆயினும் இதை நான் இயற்றியாகவேண்டும். என் நண்பன் சததன்வாவுக்கு நான் அளித்த சொல் அது. என் சொல்லை நான் மீறக்கூடாது.” சேகிதானனின் தோளில் கைவைத்து கிருதவர்மன் புன்னகைத்தான். “செல்க, இளைஞரே! உமது உள்ளம் ஆணையிடுவதை செய்க! இந்தக் களத்தில் ஒவ்வொருவரும் அவர்கள் அகம் நாடுவதை தயங்காது செய்யவேண்டும். அவர்கள் எவரோ அவராக நின்றிருக்கவேண்டும். ஏனென்றால் நாளை என்ற ஒன்று இங்கே இல்லை. செல்க!”

சேகிதானன் “நான்…” என்றான். கிருதவர்மன் அவன் தோளை அழுத்தி “எவராயினும் தன் குடியை, குலத்தை, உறவை, கற்றவற்றை கடந்துதான் எய்தவேண்டியதை சென்றடைய இயலும். உமது உளம் எனக்கு தெரிகிறது” என்றான். சேகிதானன் “ஆம்” என்றான். பெருமூச்சுடன் “இதுவே தருணம் என என் அகத்தே உணர்கிறேன்” என்றான். பிரபாகரர் “என்ன செய்யப்போகிறாய்? தனியாகக் கிளம்பி மறுபக்கம் செல்லப்போகிறாயா?” என்றார்.

“ஆம், எண்ணி எண்ணி இத்தனைநாள் என்னுள் எரிந்துகொண்டிருந்தேன். இனியில்லை. நான் செல்லத்தான் போகிறேன்” என்றான். “நீ குலமிலியாவாய்… எங்கள் அனைவரின் பழிச்சொல்லும் பெறுவாய்” என்றார் பிரபாகரர். “நான் இதுவரை கொண்டிருந்த அனைத்தையும் இங்கே துறக்கிறேன். என் பெயரையும் நான் அவர்மேல் கொண்டிருக்கும் பணிவையும் மட்டுமே சுமந்து அங்கே செல்கிறேன்” என்றான் சேகிதானன்.

யாதவர்கள் குழம்பிக்கலந்த முகங்களுடன் நிற்க சேகிதானன் தன் உடைவாளையும் குலமுத்திரை பொறித்த தாமிரவளையத்தையும் கீழே வைத்துவிட்டு அவர்களை வணங்கி கிளம்பினான். கிருதவர்மன் தன் கணையாழியை உருவி அவனிடம் அளித்து “இக்கணையாழி உடனிருக்கட்டும், உம்மை எவரும் தடுக்கமாட்டார்கள். எவரேனும் தடுத்தால் அரசாணை என்று சொல்க!” என்றான். சேகிதானன் அதை வாங்கிக்கொண்டான். “அங்கு சென்ற பின் இக்கணையாழியை அவரிடம் அளியும்” என்றபோது கிருதவர்மன் நோக்கு திருப்பியிருந்தான். “நான் என்ன சொல்லவேண்டும்?” என்றான் சேகிதானன். “ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. நான் சொல்லி அவர் அறிய ஒன்றுமில்லை” என்றான் கிருதவர்மன்.

சேகிதானன் யாதவர்தலைவர்களை திரும்பிப்பார்க்காமல் நடந்தான். அவனை நோக்கியபடி கிருதவர்மன் சென்றான். சேகிதானன் செல்வதை நோக்கி நின்றபின் புரவியிலேறிக்கொண்டான். தளர்நடையில் புரவி செல்ல தலை நிமிர்ந்து தொலைவில் நிலைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தான். அஸ்வத்தாமனின் குடில்முற்றத்தை அடைந்தபோதுதான் அங்கே செல்லும் விழைவை புரவிக்கு உடலே உணர்த்தியிருப்பதை உணர்ந்தான். அஸ்வத்தாமன் கவசங்கள் அணிந்துகொண்டிருந்தான். கிருதவர்மன் இறங்கி அவன் அருகே சென்று அமர்ந்தான்.

“யாதவரின் கவசங்களை இங்கே கொண்டுவரச் சொல்க!” என்றான் அஸ்வத்தாமன். ஆணையை முழவு ஒலியாக்கி காற்றில் செலுத்தியது. அஸ்வத்தாமன் அவன் ஏதேனும் சொல்வான் என எதிர்பார்த்தபின் “யாதவர்கள் அஞ்சியிருக்கிறார்களா?” என்றான். “ஆம், அவர்களுக்கு பெரும்போர் இத்தகையது என்று தெரியாது” என்றான் கிருதவர்மன். “இங்குள எவருக்குமே தெரிந்திருக்கவில்லை… இத்தகைய பெரும்போர் பாரதவர்ஷத்தில் முன்பு நிகழ்ந்ததுமில்லை” என்றான் அஸ்வத்தாமன். கிருதவர்மன் “அவர்கள் போரொழிய விழைகிறார்கள். அதன்பொருட்டு இளைய யாதவரிடம் பேச எண்ணுகிறார்கள்” என்றான்.

அஸ்வத்தாமன் புன்னகை செய்தான். “ஆனால் தங்கள் ஆணவத்தை கைவிடவும் அவர்களால் இயலவில்லை” என்றான் கிருதவர்மன். “எத்தனை எளிய மாந்தர் என்று என் உள்ளம் எண்ணி எண்ணி வியக்கிறது.” அஸ்வத்தாமன் “களிறுகளை எடைமிக்க சங்கிலிகளால் கட்டிப்பழக்கிய பின்னர் வெறுமனே சங்கிலி ஓசையை மட்டுமே காட்டிவிட்டு சென்றுவிடுவதுண்டு. அவை கட்டப்பட்டுவிட்டன என எண்ணி கந்தின் அருகிலேயே நின்றிருக்கும்” என்றான். அவன் சொல்வதென்ன என்று கிருதவர்மன் உள்ளம் கொள்ளவில்லை. “ஆனால் அஞ்சியோ சினம்கொண்டோ வலியாலோ அலறியபடி விலகிற்று என்றால் களிறு அங்கே கட்டு இல்லை என்று கண்டுகொள்ளும். மானுடர் அப்போதும் கற்றுக்கொள்வதில்லை” என்று அஸ்வத்தாமன் மீண்டும் சொன்னான்.

கிருதவர்மன் மீண்டும் “எளிய மானுடர்…” என்றான். “மிக மிக எளியவர்கள். இத்தனை எளிய உயிர்களை ஏன் படைத்தன தெய்வங்கள்? ஏன் இரக்கமில்லாது இவற்றுடன் ஆடுகின்றன?” அஸ்வத்தாமன் நகைத்து “அதற்கு மாற்றாக எளிய மானுடர் தங்கள் ஆணவத்தையும் சிறுமையையும் கொண்டு தெய்வங்களை பழிதீர்க்கிறார்கள்” என்றான். கிருதவர்மன் அவன் சொன்ன அனைத்தையும் ஒரே கணத்தில் புரிந்துகொண்டு நிமிர்ந்து நோக்கினான்.

கவசங்களுடன் எழுந்துகொண்ட அஸ்வத்தாமன் கைகளை நீட்டி மடித்து அவற்றை சீரமைத்தான். அக்கவசங்களுக்குள் தன் உடலை நன்கு அமைத்துக்கொள்பவனைப்போல. தொலைவில் புரவியில் தன் கவசங்கள் வருவதை கிருதவர்மன் கண்டான். தன்னைப்போன்ற பிறிதொருவனை துண்டுகளாக கொண்டுவருவதுபோல் தோன்ற அவன் புன்னகை செய்தான்.

தொடர்புடைய பதிவுகள்

கட்டண உரை- கடிதங்கள்

$
0
0

jeya

 

கட்டண உரை -ஓர் எண்ணம்

 

அன்பிற்குரிய ஆசிரியருக்கு,

 

தங்களது நீண்ட நாள் வாசகன் நான். அதிகம் உங்களிடம் கடித தொடர்பு இல்லையென்றாலும், உங்களுடன், உங்களை பற்றிய உரையாடல் இல்லாமல் என் நாட்கள் நகர்ந்தது இல்லை. உங்கள் எழுத்துக்களை போலவே, உங்கள் மேடை பேச்சையும், பேட்டிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். தற்போது கட்டண உரை பற்றிய அறிவிப்பை பார்த்தேன், மிகுந்த மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாய் நடக்க வேண்டும். மேலும் பல நல்ல பேச்சாளர்களை ஒருங்கிணைத்து இது ஒரு தொடர் நிகழ்வாக வளர வேண்டும் என விரும்புகிறேன். தாங்கள் இந்த முறை தேர்ந்து எடுத்த தலைப்பும் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. சிந்தனையை பற்றி பல இடங்களில் நீங்கள் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பத்தி என் மனதில் மிக ஆழமாக பதிந்து உள்ளது.

 

“ஆனால் மானுட அனுபவங்கள் மட்டுமே மனிதனை மேம்படுத்துமா? மகத்தான அனுபவங்கள் வழியாகச் சென்ற பின்னும் காலியான டப்பாக்களாக இருக்கும் பலரைக் கண்டிருக்கிறேன்.  அனுபவங்களை ஒருவனின் அகம் சந்திக்க வேண்டும். உள்ளே இழுத்துக் கொண்டு அக அனுபவங்களாக ஆக்க வேண்டும். செரித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான அனுபவங்களில் இருந்தே தீவிரமான ஆளுமை வளர்ச்சியைப் பெற்றவர்களும் உண்டு.

 

அனுபவங்களை உள் வாங்கிக் கொள்ளக் கூடிய, ஆராயக் கூடிய, சாராம்சப் படுத்தி தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளக் கூடிய அந்த அகச் செயல் பாட்டைத் தான் சிந்தனை என்கிறோம். அனுபவங்களை சிந்தனை இணையான வேகத்துடன் சந்திக்கும் போது சிறந்த ஆளுமை உருவாக்கம் நிகழ்கிறது எனலாம்”

 

என்னை போல் நேரில் வர வாய்ப்பில்லாது, வெளி ஊர்களிலும், நாடுகளிலும் வசிப்போருக்கு இந்தஉரையை கேட்க நீங்கள் ஆலோசிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தாங்கள் பேசிய பின் அதன் காணொளியையோ, அல்லது குறைந்தபட்சம் ஒளிப்பதிவு செய்தோ, கட்டணம் கட்டுவோருக்கு அனுப்பினால் மகிழ்ச்சி. இதில் உள்ள சிக்கல், அது இணையத்தில் இலவசமாக வெளியிடபடும் அபாயம் இருப்பது புரிகிறது. ஆனால், இதனால் பயன் அடைபவர்கள் அதிகம் என நினைக்கிறன்.

 

அன்புடன்,

மதன்.எஸ்

 

 

அன்புள்ள மதன்,

 

காணொளி இலவசமாக வரும் என்றால் கட்டணக்கூட்டத்துக்கு வரும் பத்துபேரும் வராமலாகிவிடுவார்கள் அல்லவா?

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

 

வணக்கம் .தங்களின் கட்டண உரை – ஒரு எண்ணம் படித்தேன் .இந்த முயற்சி மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஓன்று .இது குறித்த என் எண்ணங்களை உங்களிடம் பகிர விரும்புகிறேன்

 

 

ஏறத்தாழ இருபத்திஐந்து  வருடங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் (பொறியியல் ) ஆசிரியர் பணி என்ற அனுபவத்தில் இந்த கருத்துக்களை பதிவு செய்கிறேன் .முதலாவதாக ஒரு பொருளுக்கு மதிப்பு அதன் விலையை பொறுத்ததே .பெரும்பாலான மக்கள் அதன் தரத்தை விலையை வைத்து தான் மதிப்பிடுகிறார்கள் .உதாரணமாக எனக்கு வரதட்சணை வேண்டாம் என யாராவது சொல்லி பெண் தேடினால் ,அவனுக்கு என்ன குறையோ என்று தான் நினைப்பார்கள் .அவன் அப்பழுக்கில்லாத உத்தமன் என்றாலும் அவனை யாரும் நம்புவதில்லை.ஆதலால் இதை வணிக நோக்கு என்று பார்ப்பதை விட தரம் உயர்த்த ஒரு வழியாக கொண்டால் நன்று .இரண்டாவதாக இத்தகைய உரை நிகழ்த்தும் கூட்டம் நடத்த விரும்புவார்கள் – தங்களின் நண்பர்களை போல – தமிழ் இலக்கியத்தில் பற்றுள்ளவர்களாக சமூக மேம்பாடு நோக்கம் உள்ளவர்களாக தான் இதனை முன்வைப்பார்கள் .அத்தகைய கூட்டங்கள் நடத்தப்பட தேவைப்படும் பணம் தான் Registration fee என ஈட்டப்படுகிறது .நவீன கால கட்டத்தில் இத்தகைய முயற்சிகள் பணம் இன்றி சாதிக்க இயலாது என்பது தான் நிதர்சனம் .

 

 

மேலும் எந்த ஒரு கல்லூரியிலும் மாணவர்களின் திறன் /அறிவு மேம்பாட்டு பட்டறைகள் ( SKILLS/KNOWLEDGE ENHANCEMENT WORKSHOPS) நடத்தப்பட்டாலும் பதிவு கட்டணம் உண்டு .மேலும் அதனை கட்டணமில்லா பட்டறை என்றால் மாணவர்கள் அதனை தரமற்றதாக கருதவும் இடமுண்டு .மேலும் பட்டறையில் பங்கு கொள்பவர்களும் ஓசியில் தான் பங்கேற்பு என சிரத்தையின்றி இருப்பதை காணலாம் .ஆதலால் கட்டணம் என்றால் தான் மாணவர்களிடமும் சரி ,ஆசிரியர்களிடமும் சரி ஒரு பற்றுதல் /ஒரு ஈடுபாடு வருவது தவிர்க்க இயலாதது .நான் COURSERA ,NPTEL முதலிய  ONLINE PLATFORM களில் கோர்ஸ் செய்திருக்கிறேன் .மிகப்பெரும்பாலானவை கட்டணத்துடன் கூடியவை தான் .உங்களின் வெண்முரசு முயற்சி இத்தகைய MOOC (Massive Open Online Courses) முயற்சிகளை விட பெரியது .ஏனென்றால் வெண்முரசு படிப்பதால் ஏற்படும் அறிவு விரிவையும் /அறிவு விசாலத்தையும் வேறு எதனாலும் பெற்றுவிட முடியாது என்பது எனது நிலைப்பாடு .ஆனாலும் வெண்முரசு அறிமுகம் /உங்களின் இலக்கிய திறன் இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் சேர வேண்டும் .அதனால் நல்லதொரு இலக்கிய பார்வைகள் கொண்ட வாசகர்கள் வட்டம் அதன் ஆரங்களை நீட்டிக்க வேண்டும் .அதற்க்கு கட்டண உரை சால சிறந்தது .

 

 

தமிழகத்தில் பள்ளிகளில் /கல்லூரிகளில் உள்ள தமிழாசிரியர்கள் தங்களின் உரையை கவனித்து பின்பு தங்களுடன் உரையாடினாலே போதும் .அதன் மூலம் தமிழக இலக்கியங்கள் குறித்த அவர்களின் எண்ணங்கள் விரிவடையும் /பார்வைக்கோணம் மாறும் என்பது எனது நம்பிக்கை .மேலும் தமிழகத்தில்  ஒன்றும் அறியாதவர்கள் கூட EDUCATION CONSULTANCY என்ற பெயரில் EDUPRENEURS ஆக பணத்தை சம்பாதிக்கும் போது,அதனை நீங்கள் ஏன் குறைந்த செலவில் எடுத்து செய்யக்கூடாது என்பது தான் எனது தாழ்மையான கருத்து.இதனால் பலன் அடைய போவது வருங்கால சமுதாயம் தான் இதில் எனக்கு துளி கூட ஐயம் இல்லை .என்னை பொறுத்தவரை உரைகள் மூலமும் /எழுத்துக்கள் மூலமும் வாசகர்களின் மனதில் ஊடுருவும் சாதனை திறன் உள்ளவர் நீங்கள் தான் .நான் அதிகம் படித்தவன் அல்ல .சாண்டில்யன் கதைகள் தான் என் உச்சம் .

 

ஆதலால் தங்கள் நடத்தும் கட்டண உரைகள் ஒரே நாளில் மூன்று பேர் (90 minutes each ) என்ற அளவில் நடத்தி ,அதில் ஒரே ஒரு உரையாவது பள்ளி /கல்லூரி அளவிலான பாடத்திட்டத்தில் இருந்தாலே போதுமானது ( திருக்குறளில் இருந்து சங்க இலக்கியம் அகநானூறு ,கம்பராமாயணம் ,திருப்புராணம் என யாவும் இதில் அடக்கமே ). உங்களால் எத்தகைய preparation இன்றியும் இது குறித்து நாள் கணக்கில் எடுக்கமுடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன் .ஆதலால் இத்தகைய கட்டண உரைகள் ஒரு நாள்  அல்லது குறைந்தது ஐந்து நாட்கள் என்ற அளவில் நடந்து ,அதற்க்கு பதிவு கட்டணம் கட்டி பயில/கேட்க  வருபவர்களிடம் அதற்க்கான Certificate of Participation என்றால் அது கூடுதல் மகிழ்வை தான் தரும் .அறிவு விசாலத்தை இத்தகைய  Certificate of Participation  தான் பிற தரமதிப்பீட்டாளர்களிடம் /அங்கீகார அதிகார அமைப்பினரிடமும் விளக்க முடியும் ( Directorate of School Education ,Directorate of Collegiate Education  ,DOTE,UGC,AICTE ,NAAC ,NBA MHRD etc).எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே தாங்கள் இதற்க்கு மிகவும் பொருத்தமானவர் என்பதனாலே தான் இத்தகைய விளக்கம் .

 

நூலாய்ந்து ,சொல்லாய்ந்து ,மரபாய்ந்து ,நெறியாய்ந்து ,அறமாய்ந்து (தங்களின் சொல்லாட்சி தான் ) பேசும் உரைகளை மட்டுமே கட்டண உரையில் தாங்கள் இடம் பெற செய்விர்கள் .அதன் மூலம் அது எந்த அளவுக்கு சில ஆண்டுகளில் விரிவடையும் என்பதனை என் மனக்கண்ணில் கண்டுள்ளேன் .அது வருமாறு  – பள்ளி /கல்லூரி ஆசிரியர்கள் தங்களின் அறிவை பட்டை தீட்டிக்கொள்ள தங்களின் கட்டண உரை பட்டறைகளையே நாடுவார்கள் .( Example – For affiliated engg college faculty attending workshops at IITs,NITs like) .இரண்டாவது தங்களின் வெண்முரசுவில் வந்தது போல வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54  ‘மைத்ரியக்காட்டில் பேசப்படாத செய்தி’ என்ற சொல்லாட்சியே உருவாகி புழக்கத்திலிருந்தது.ஆம் அது போல எழுத்தாளர் ஜெயமோகன்  நடத்தும் கட்டண உரை பட்டறையில் பேசப்படாத செய்தி என்ற சொல்லாட்சி உருவாகும் .உங்களால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் /தமிழ் ஆர்வலர்கள் தங்களின் இலக்கிய தாகம் தீர்த்த சுனையை கண்டறிந்திருப்பார்கள் .

 

மேலும் வரும்காலங்களில் தமிழின் புலமை குறித்த அரசு தேர்வுகளுக்கு வெண்முரசு மட்டுமே பாடத்திட்டமாக இருக்கும் .ஆம் வரும்காலங்களில் தமிழின் புலமை குறித்த அரசு தேர்வுகளுக்கு வெண்முரசு மட்டுமே பாடத்திட்டமாக இருக்கும் . ஏனென்றால் வெண்முரசு அறிந்தவன் தமிழை முற்றிலும் அறிந்தவன் என திரு உரு மாற்றம் கொள்வது உறுதி .தங்களின் கட்டண உரை முயற்சி தற்போது ஒரு விதை என எழுந்தெழ முயற்சிக்கிறது .அதனை பல நூறு மீட்டர் சுற்றளவு கொண்ட ஆலமரமாக பார்க்க விழைந்தது என் மனம் . பதிவு நீண்டதால் சிரமத்திற்கு மன்னிக்கவும் .IT COMPANY களில் ஒரு நாள் /இரு நாள் பட்டறைகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பது சர்வ சாதாரணம் .தவிர்க்க முடியாததுவும் கூட .அது போன்றதொரு முயற்சியை தான் தங்களின் இந்த கட்டண உரையில் காண்கிறேன் .தங்களின் இலக்கிய அறிவு தற்போதைய ஆசிரிய சமுதாயத்திற்கும் அதன் மூலம் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடமும் சேர வேண்டும் என்பதே என் விருப்பம் .“பெரும்பசிக்காக தவம்புரிகின்றன அடுமனைகள்.அதுபோல பெரும் அறிவு பசிக்காக தவம் இயற்றுகின்றன அறிவு சாலைகள் /கல்விசாலைகள் என்றோரு நிலைக்கு உயர தங்களின் பங்களிப்பு வேண்டும் .இது என்னுடைய வேண்டுகோள் .தவறு என்றால் பிழை பொறுத்திடுக

 

நன்றி ஜெயமோகன் அவர்களே

 

தி .செந்தில்

ஸ்ரீவில்லிபுத்தூர்

 

அன்புள்ள செந்தில்

 

நாங்கள் இதைப்பற்றிப் பேசியதுமே எழுந்துவந்த ஒரு குரல் இது கல்விக்கு உகந்ததாக இருந்தால் நன்று என்று. உடனே அதை தவிர்த்துவிட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு, பொது அறிவு சார்ந்து மட்டுமே எதையும் தெரிந்துகொள்ளவேண்டும், பிற அனைத்துமே தேவையற்றவை என்ற எண்ணம் இங்கே இன்று உண்டு. அந்த எண்ணத்தை தவிர்க்கவேண்டும். அறிதலின்பொருட்டே அறிவது என்பதே அறிவியக்கத்தை உருவாக்குவது. அதை நோக்கியே நம் இலக்கு இருக்கவேண்டும் என முடிவெடுத்தோம்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ…
15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ‘மனிதத்தேனீ ‘ சொக்கலிங்கம் அவர்கள் (கண்ணதாசன் மன்றத்தின் தலைவர்) இந்த முயற்சியை மேற்கொண்டார். மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நெல்லை கண்ணன், தமிழருவி மணியன் மற்றும் சாலமன் பாப்பையா ஆகியோர் பேச்சாளர்கள். கட்டணம் ரூ.50. அரங்கம் நிறையவில்லை எனினும் பெருவாரியாக மக்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த முயற்சிகள் ஏனோ தொடரவில்லை.
அன்புடன்
ஜெயசீலன்
அன்புள்ள ஜெயசீலன்
அவர்களைப்போன்ற நட்சத்திரப் பேச்சாளர்களுக்குரியதல்ல கட்டணக்கூட்டம். ஏனென்றால் அவர்கலுளுக்கு பெருந்திரளான கூட்டம் தேவை. அவர்கள் ஒருவகையான கட்டுப்பாடற்ற கூட்டம். நேரந்தவறாமல் வருவதும் சரி சரியாக கேட்பதும் சரி அவர்களால் இயலாது. எழுந்துசென்றபடி, தின்றபடி, குடித்தபடி, பேசியபடி இருப்பார்கள். அது திருவிழா மனநிலை கொண்ட கூட்டம்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பேராசிரியர் சுந்தரனார் விருது கலாபிரியாவுக்கு

$
0
0

a
b
பேரா.சுந்தரனார் விருது எங்கள் பல்கலைக்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட ஆண்டு 2014. அவ்விருதுக்குத் தெரிவுசெய்யப்படுபவருக்குப் பல்கலைக்கழகம் ரூபாய் லட்சம் வழங்குகிறது. விருதுக்குரிய தகுதி தமிழ் இலக்கியம், மொழி, பண்பாட்டுத்தளங்களில் விரிவான பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் அதிகாரம் அதற்கான தெரிவுக் குழுவினரின் முடிவு. துணைவேந்தர் தான் அந்தக் குழுவின் தலைமை என்றாலும் இதுவரை எந்தத் துணைவேந்தரும் அவர்களது விருப்பத்தைத் திணித்ததில்லை. இதனை விருதுபெற்றுள்ள அறிஞர்கள், படைப்பாளர்கள் பட்டியல் வழி அறியலாம்.

 

 

பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன், பேராசிரியர், கவிஞர் எல் இளையபெருமாள், பேராசிரியர், இலக்கிய வரலாற்றாளர் ச.வே.சுப்பிரமணியம், எழுத்தாளர், வட்டார வழக்குச்சொல்லகராதி, நாட்டார் கதைகளின் தொகுப்பாளர் என அறியப் பெற்ற கி.ராஜநாராயணன் ஆகியோர் இதுவரை விருதுபெற்றுள்ளனர்.இப்போது கவிஞர் கலாப்ரியா விருதுபெற உள்ளார். அவர் முதன்மையாகக் கவிஞர். தனித்த உரைநடைக்காரர், இப்போது புனைகதைக்காரராகவும் இயங்கத் தொடங்கியிருக்கிறார். அவரால் நடத்தப் பெற்ற பதிவுகள் அமைப்பின் தாக்கம் தமிழ் நவீனப்பரப்பில் குறிப்பிடத்தக்கது.

 

விருது வழங்கும் விழா பல்கலைக்கழக வளாகத்தில் 12- 10-2018 காலை 11 மணிக்கு  நடைபெறவுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வருக

 

அ.ராமசாமி

 

கலாப்ரியாவுக்கு என் சார்பிலும் விஷ்ணுபுரம் நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சம்பத்தின் இடைவெளி பற்றி

$
0
0

sambath_thumb3

 

அன்புள்ள ஜெ…வணக்கம்.

 

சம்பத்தின் “இடைவெளி”யை சி.மோகன் புகழ்ந்து தள்ளுகிறாரே…நானும் படித்துத்தான் பார்த்தேன். சதா ஒருவன் சாவைப்பற்றியே நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதும், உடன் இருப்பவர்களைச் சங்கடப்படுத்திக் கொண்டும் எரிச்சலூட்டிக் கொண்டும், தத்துவ விசாரம் என்கின்ற பெயரில் தன் மனதைத் தானே சுணக்கிக் கொண்டும், முடங்கிக் கொண்டும், தானும் கெட்டு சுற்றியிருப்பவர்களையும் கெடுத்து சூழலையே குழப்பத்திற்குள்ளாக்கியும் நாவல் என்கின்ற பெயரில் ஒன்றை எழுதித் தள்ளியிருப்பது இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கக் கூடியதாய் நீங்கள் நினைக்கிறீர்களா?

 

எனக்கென்னவோ இடைவெளி அத்தனை மகத்தானதாய்த் தோன்றவில்லை.நிச்சயம் சொல்லுவேன்…சாவுபற்றிப் பேச வந்து என்னதான் முன் வைக்கிறார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியாது என்பதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தபோது எனக்குப் புலப்பட்ட ஒன்று. எது சரி? என் புரிதல் தவறா?

 

முடிந்தால் உங்கள் வலைத்தளத்தில் எழுதுங்கள். ஏற்கனவே எழுதியிருந்தால் தயவுசெய்து லிங்க் கொடுங்கள். நேரமில்லை என்றால் விடுங்கள். நன்றி

 

உஷாதீபன்

idaiveli-10004438-550x600

அன்புள்ள உஷாதீபன்,

 

நான் ஏற்கனவே இந்நாவலைப்பற்றி எழுதியிருக்கிறேன். நான் சம்பத்தின் இருகுறுநாவல்களையும் [சாமியார் ஜூவுக்குப் போகிறார், இடைவெளி] தமிழின் முதன்மையான இலக்கிய ஆக்கங்களாக நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் எண்ணுவதுபோல தவிர்க்கப்படவேண்டியவை என்றோ, குறைபட்டவை என்றோ நினைக்கவுமில்லை. அவை ஒரு காலகட்டத்தின் உளநிலையை இயல்பான மொழியில் நுட்பமான நகைச்சுவையுடன் உளவியல் அவதானிப்புகளுடன் கூறுபவை. ஆகவே தமிழுக்கு முக்கியமான இலக்கியப்படைப்புகள். இதுவே என் மதிப்பீடு

 

சம்பத்தின் புனைவுகள் வெளிப்படுத்தும் அந்த உளநிலை இருத்தலியல் ஓங்கியிருந்த காலகட்டத்தில் உலகமெங்கும் இருந்தது. வெறுமே ததும்பும் எண்ணங்களுடன், இருத்தல் சார்ந்த தத்தளிப்புடன் செயலின்றி அலையும் கதைமாந்தரின் நாட்களைச் சொல்லும் கதைகள் அன்று எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டன. நான் மலையாளத்தில் கே.பி.நிர்மல்குமார் எழுதிய அத்தகைய பல கதைகளை வாசித்தபின்னரே சம்பத்தை வந்தடைந்தேன். பார்வை,கூறுமுறை, இலக்கியவடிவம் ஆகியவற்றில் சம்பத்துக்குச் சமானமான எழுத்தாளர்களை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் எழுபதுகளில் கண்டடைய முடியும்.

 

ஆகவே சம்பத்தை மிக எளிதாக உலகளாவிய அப்பொதுப்போக்கில் வைத்து நோக்கி மதிப்பிட்டேன். அவரைச்சூழ்ந்து அன்றைய வாசகர்களிடமிருந்த மிகைமதிப்பீடு என்னுள் உருவாகவில்லை. ஆனால் அவருடைய உள்ளத்தையும் சென்றடைய முடிந்தது. முழுமையடையாதுபோன பயணம்தான் அவருடைய இலக்கிய வாழ்க்கை. அவருடைய படைப்புகளும் முழுமையடையாதுபோனவையே.

 

சம்பத் உருவாக்கும் அந்த உளநிலை இலக்கியத்தின் பேசுபொருள்தான். ஆனால் அது ஒரு முழுமையான வாழ்க்கைச்சித்திரத்தின் ஒருபகுதியாகவே நான் மதிக்கும் படைப்புக்குள் இடம்பெற முடியும். அதை மானுடநிலையின் உச்சம் என என்னால் எண்ணமுடியாது. அவ்வாறு உச்சமாக்கி முன்வைப்பதனால், அந்தத் தத்தளிப்பன்றி வேறேதுமே புனைவுக்குள் இல்லாமலிருப்பதனால், அந்தத் தத்தளிப்புக்கு உகந்தமுறையில் கதைமாந்தர் சற்றே செயற்கையாகப் புனையப்பட்டிருப்பதனால், அப்படைப்பு என் நோக்கில் ஒரு குறிப்பிட்ட நோக்கை வெளிப்படுத்தும், ஒரு குறிப்பிட்ட காலகட்ட எல்லைக்குள் மட்டுமே நின்றுவிடும் படைப்பாக ஆகிவிடுகிறது.

 

இவ்வடிவில் வெற்றிகரமான சிறுகதைகளை தமிழில் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். மிகச்சிறந்த உதாரணம்  ‘காலமும் ஐந்துகுழந்தைகளும்’.அதில் அவ்வடிவமும் மொழியும் பகடியும் தரிசனமும் சரியாகக் கலந்துள்ளன. சொல்லப்பட்ட தளம் விட்டு மேலெழுவதனால் அக்காலகட்டத்தையும் கடந்துவந்து இன்றும் முக்கியமான கதையாக நின்றிருக்கிறது.

 

சம்பத்தின் கதையிலுள்ள அவ்வுளநிலை அன்று ஒருவகை உச்சநிலையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. உதாரணமாக தர்கோவ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் சினிமாவின் கதாநாயகன் இருப்பது அந்த உளநிலையில்தான்.  அவ்வாறு நிறைய கதைமாந்தரை இலக்கியத்திலும் சினிமாக்களிலும் காணமுடியும். தங்களுக்கென ஓர் ஆளுமையைப் புனைந்துகொண்டு அதில் திளைப்பவர்கள் இவர்கள். இன்றைய நோக்கில் தன்மைய நோக்கை ஆளுமையாக கட்டமைத்துக்கொண்டவர்கள். இந்த காலகட்டத்தின் உளநிலையை இது தொடங்குவதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே எழுதிய நாவல் ஹெர்மன் ஹெஸ்ஸியின் ஸ்டெப்பன் வுல்ஃப். அந்நாவல் அக்காலகட்டத்தைக் கடந்து சிந்திப்பவனின் தனிமையைச் சொல்வதாக மேலும் வளர்ந்து இன்றும் நிலைகொள்கிறது.

 

ஒரு நோக்கும் ஓர் உளநிலையும் மட்டும் வெளிப்படும் வடிவம் சிறுகதை.  சிறுகதை என்பதைக் கடந்து ‘சாமியார் ஜூவுக்குச் செல்கிறார்’  ‘இடைவெளி’ ஆகிய கதைகள் விரியும்போது ஏற்படும் குறைவுகள் இரண்டு. ஒன்று அவை வரலாற்றை, சூழலை, பிறரை முழுமையாகவே தவிர்த்து ஒரு தனிமனிதனின் அக உச்சத்தினூடாகவே அலைகின்றன. இரண்டு, அவை கண்டடைபவற்றுக்கு தர்க்கபூர்வ மதிப்பு ஏதுமில்லை, அவற்றை கவித்துவப் படிமமாக அவை முன்வைக்குமென்றால் அப்படிமம் இலக்கியமதிப்பு பெறும். இல்லையென்றால் அக்கண்டடைதல் அக்கதாபாத்திரத்தின் உளநிலையின் ஒருவெளிப்பாடாக மட்டுமே நின்றுவிடும். இடைவெளியில் கவித்துவக்கூறுகள் இல்லை. பகடிகலந்த யதார்த்தச்சித்தரிப்புக்குள் கவித்துவத்துக்கான இடமும் அமையவில்லை

 

அதைமீறி அக்கதையை இலக்கியப் படைப்பாக ஆக்குவது அதில் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும் கதைமாந்தரின் இயல்புகளும், ஒழுக்குள்ள உரையாடல்கள் மற்றும் உளச்செயல்கள் வழியாக விரியும் சித்தரிப்பும்தான். அது ஏதோ ஆழ்ந்த உண்மையை நோக்கிச் செல்லும் ஆக்கம் என எண்ணாமல் ஒரு குறிப்பிட்ட உளநிலையின் அலைக்கழிப்பை முன்வைப்பது என்று எண்ணி வாசித்தால் அதை உங்களால் ரசிக்கமுடியும். இன்றைய காலகட்டத்தில் சம்பத்தின் நாவல் முன்வைக்கும் உளநிலை காலத்தால் பழையதாகி பொருளிழந்துவிட்டிருப்பதனால் ஏற்படும் அகல்வு உங்களுடையது. அந்த ஒவ்வாமை உங்களுடைய பிரச்சினை. அதைக் கடந்துசென்று அந்த உளநிலையை, அதன் சூழலை புரிந்துகொண்டு வாசிக்கவேண்டும்.

 

அறுபது எழுபதுகள் உலகளாவிய சோர்வுநிலை ஒன்றை சிந்திக்கும் அனைவரும் பகிர்ந்துகொண்டனர். தத்துவம் உருவாக்கியப் புத்துலகக் கனவுகளும் அதையொட்டிய அரசியல்திட்டங்களும் அர்த்தமிழந்தன. தனிமனிதன் வரலாற்றில் இடமற்றவனாகவும் தனியனாகவும் தன்னை உணர்ந்தான். பிறப்பு காமம் இறப்பு என்னும் மூன்றுகூறுகள் மட்டுமே எந்நிலையிலும் மாறாத உண்மைகள் என்றும் பிற அனைத்துமே வகைவகையான உளமயக்கங்கள் என்றும் எண்ணத்தலைப்பட்டான். அந்தச் சோர்வுநிலையின் தத்துவமே இருத்தலியல். அதன் விளக்கமாக அமையும் படைப்பு இடைவெளி. அவ்வகையில் தமிழில் ஒருகாலகட்டத்தின் இலக்கியவெற்றி அது.

 

இடைவெளி ஒரு அழுத்தமான நாவலாக ஆகாமல் முன்னரே நின்றுவிட்ட படைப்பு. அழுத்தமான நாவலாக ஆகியிருக்கக்கூடும் என்ற வாய்ப்பு அதிலிருப்பதனால் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆக்கம் என நான் சுருக்கி வகுத்துக்கொள்வேன்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-34

$
0
0

bowகௌரவர்களின் யானைப்படை பன்னிரண்டாவது பிரிவின் முகப்பில் சசக குலத்து யானைவீரனாகிய கம்ரன் தன் படையின் தலைப்பட்டம் ஏந்திச்சென்ற சுபகம் எனும் முதுகளிற்றின்மீது அமர்ந்திருந்தான். சுபகம் போர்க்களங்களில் நீடுநாள் பட்டறிவு கொண்டிருந்தது. எனவே படைநிரை அமைந்ததுமே முற்றிலும் அமைதிகொண்டு செவிகளை வீசியபடி தன்னுள் பிறிதொரு உடல் ததும்புவதுபோல் மெல்ல அசைந்து நின்றது. அதன் உடலிலிருந்த கவசங்கள் அவ்வசைவுகளால் ஒன்றுடன் ஒன்று மெல்ல உரசிக்கொண்டு அலைமேல் நின்றிருக்கும் படகில் வடங்களும் சுக்கானும் ஒலிப்பதுபோல மெல்லிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன.

கம்ரன் தனக்கு ஆணை வருவதற்காக விழிசெவி கூர்ந்து காத்து நின்றான். அவன் அன்று காலை சற்று பொறுமை இழந்திருந்தான். அந்தப் பொறுமையிழப்பு அவனை பதற்றம்கொள்ள வைத்தது. பாகன் பொறுமையிழந்தால் யானையும் அதை பெற்றுக்கொள்ளும். பொறுமையிழந்த யானை செய்வதறியாது திகைக்கத் தொடங்கும். அதன்பின் அதை யானைவீரன் ஆள முடியாது. “யானைமேல் அமர்ந்திருக்கையில் ஒன்று உணர்க, நீங்கள் பேருருவம் கொண்டுவிட்டீர்கள்! அவ்வுருவுக்குரிய உள்ளத்தை அடைக! மானுட உள்ளம் கொண்ட யானை மூங்கில்கழையால் செலுத்தப்படும் பெருங்கலம் போன்றது. கழை உடையும், கலம் நிலையழிந்து திசைமீறும்” என்பது அவன் குடிமூத்தாரும் ஆசிரியருமான குபேரரின் கூற்று.

சுபகம் எப்போதுமே ஆணைகளை எதிர்பார்ப்பதில்லை. அவன் எண்ணமென்று அது ஒரு கணத்திற்கு முன்னரே அறிந்திருந்தது. அவன் உடலசைவினூடாக அவன் உள்ளத்துடன் தொடர்பிலிருந்தது. பிறயானைகள் அதை அஞ்சின. காஞ்சனம் என்னும் முதிர்ந்த பெண்யானையால் ஆளப்பட்டுவந்த யானைக்கொட்டிலில் அது முற்றிலும் தனித்திருந்தது. மிக அரிதாகவே அதன் குரல் கொட்டிலில் எழுந்தது.  மிகத்தாழ்ந்த கார்வையுடன் அது ஒற்றைச் சொல்லுரைக்க பிற யானைகள் அதை அஞ்சியதுபோல் தலை நிலைக்க, செவிகோட்டி, துதிக்கை சரித்து ஏற்றுக்கொண்டன.

“தன் மேல் அமர்ந்திருப்பவனை முழுதேற்றுக்கொண்ட யானை பிற யானைகளைவிட ஆற்றல்மிக்கது. அவன் உள்ளத்தையும் தன் உள்ளத்துடன் சேர்த்துக்கொள்கிறது அது.மானுடரின் வஞ்சங்கள் விழைவுகள் அனைத்தையும் யானை பெற்றுக்கொள்கிறது. அறிக, அதனால் அது மானுட உள்ளத்தை அடைகிறதென்று பொருளில்லை. எந்நிலையிலும் மானுடனின் அச்சத்தையும் சிறுமையையும் யானை பெற்றுக்கொள்வதில்லை” என்று குபேரர் சொன்னார்.

அவன் அதை அறிந்திருந்தான். அவன் அறியாத பிறிதொன்று அதனுள் வாழ்வதை அதை ஓட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்லும்போதெல்லாம் உணர்ந்தான். காட்டுக்குள் நுழைவதுவரை அது அவனறிந்த யானையாக இருக்கும். புதர்களுக்குள் மூழ்கி ஊடுருவிச் செல்கையில் மெல்ல மெல்ல உருமாறிக்கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் அவன் அதன் மத்தகத்தின் மீதிருந்து இறங்கிவிடுவான். பின்னர் தன் துரட்டியும் குத்துக்கோலுமாக பின்னகர்ந்துவிடுவான். காட்டுக்குள் செல்லும் சுபகம் ஓரிருநாட்களுக்குப்பின் நினைவுமீண்டதுபோல் திரும்பிவரும். உடலெங்கும் மண்மூடி, சிறுசெடிகள் முளைத்திருக்க, குன்றுபோலிருக்கும்.

காட்டுக்கு வெளியே இருக்கும் சிறுகுடிலில் அவன் அதற்காகக் காத்திருப்பான். சுபகம் காட்டின் விளிம்பில் வந்து நின்றிருக்கும் காட்சிக்காக அவன் விழிகள் தேடிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் புலர்காலையின் முதல்வெளிச்சத்தில் அது தொங்கவிடப்பட்ட பட்டம் போல மெல்ல அசைந்தபடி நின்றிருப்பதைக் காண்பான். அது இரவில் எப்போதோ வந்திருக்கும். ஆனால் ஓசையெழுப்புவதோ வரவைத்தெரிவிப்பதோ இல்லை. அவன் உள்ளத்தில் முதலில் எழுவது அச்சம்தான். சென்ற யானைதான் திரும்ப வந்திருக்கிறதா? அதற்கு அது சுபகம் என்பது நினைவிருக்கிறதா?

குடில்வாயிலில் நின்று அவன் அதை நோக்கிக்கொண்டிருப்பான். அது அங்கிருந்து அவனை நோக்கியபடி அசைந்துகொண்டிருக்கும். மெல்ல அவன் அதை நோக்கி நடப்பான். வழியில் பலமுறை நின்று அதன் அசைவுகளை விழிகூர்வான். அது செவிகோட்டி ஒலிகூர்ந்தும் துதிக்கை நீட்டி மணம்பிடித்தும் அவனை அறியமுயலும். உறுமலோசை எழுந்தால், தலைகுலுக்கல் நிகழ்ந்தால் அவன் நின்றுவிடுவான். மீண்டும் நெடுநேரம் கடந்தே அதை நோக்கிச் செல்வான். அதை அணுகி கையெட்டும் தொலைவில் நின்று “மைந்தா!” என்று அழைப்பான். “என் தந்தை அல்லவா? என் தெய்வம் அல்லவா? நான் கம்ரன். உன் அணுக்கன்” மெல்லியகுரலில் திரும்பத்திரும்ப அதைச் சொல்லிக்கொண்டிருப்பான்.

பின்னர் கைநீட்டியபடி அடிமேல் அடி எண்ணி வைத்து அதை அணுகுவான். ஒருமுறை அவன் தொடுவதற்கு கைநீட்டியபோது சுபகம் அமறியது. அவன் அஞ்சிப் பின்னடைந்து மீண்டும் நெடும்பொழுது கடந்தே அதை அணுகினான். அதை மெல்ல தொட்டுவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டதென்று பொருள். அறியவொண்ணா இருள்குவையென நின்றிருக்கும் அது யானையென்று ஆகி சுபகம் என்று பெயர்சூடிவிட்டது. “காலெடு யானை” என்று அவன் சொல்வான்.  “யானை காலெடு!” என பலமுறை சொன்னபின் அது காலைத்தூக்கும். செவிபற்றி ஏறி மத்தகத்தின் மேல் அமர்ந்துகொள்ளும்போது மண் கால்கீழே ஆழத்திலெங்கோ இருக்கும்.

யானைக்குள் எல்லைகளும் கட்டுகளும் அற்ற காடு ஒன்று குடிகொள்கிறது. அனைத்துக் கல்விகளும் சொற்களும் வெளியே இருந்து அதற்கு அளிக்கப்படுபவை. உள்ளே யானை மிகமிக தனித்தது. மானுடர் எவரையுமே அடையாளம் காணும் ஆழம் அற்றது. யானை போர்க்களத்தில் தன் படை நோக்கி திரும்புதலும், தன் இணையானையை குத்திக் கவிழ்ப்பதும் எப்போதும் நிகழ்வதுதான். குபேரர் சொன்னார் “எந்நிலையிலும் யானையின் துதிக்கை காக்கப்படவேண்டும். அதனுடலில் மிக நுண்ணிய உறுப்பு துதிக்கை. தேக்கு மரங்களை பிழுதெடுக்கவும் தரையிலிருந்து பயறுமணி ஒன்றை பொறுக்கி எடுக்கவும் ஆற்றல் கொண்டது. மானுடருக்குள் எண்ணம்போல யானை முகத்தில் அது திகழ்கிறது. ஒரு கணமும் ஓயாதது, எப்போதும் எதையோ தேடுவது. யானையின் துதிக்கை புண்பட்டால் அது அனைத்தையும் உதறி அக்கணமே காட்டுக்கு மீண்டுவிடுகிறது”.

“அறிக! துதிக்கையால்தான் அது இவ்வுலகுடன் தொடர்பு கொண்டுள்ளது. தொட்டறிகிறது. முகர்ந்துணர்கிறது. மூச்சுவிடுகிறது. உண்கிறது. உரையாடுகிறது. துதிக்கை இழந்த யானை இவ்வுலகுடன் அதை பிணைக்கும் அனைத்தும் துணிக்கப்பட்ட ஒன்று. அதன் ஆழத்து தெய்வங்களால் அது பின்னர் ஆளப்படுகின்றது. அதன் செவியசைவில், வால்நெளிவில், கால்வைப்பில் தங்கள் திமிறலை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பவை அத்தெய்வங்கள். இளையோரே, அத்தெய்வங்கள் காட்டிலிருந்து பிடுங்கி கொண்டுவரப்பட்டவை. நகர்களில் பலியும் கொடையும் பெறாதவை. யானையுடலெனும் இருளறைக்குள் வாயில்கள் இன்றி அடைபட்டவை. அவை மானுடர் மேல் கொண்டிருக்கும் வஞ்சம் அளவிறந்தது” என்றார் குபேரர்.

யானையின் துதிக்கைக்கென அமைந்த கவசம் ஒன்றின்கீழ் இன்னொன்றென அமைந்த அரைவளையங்களின் அடுக்குகளால் ஆனது. பெருமுதலையொன்றின் எலும்புச்செதில் வால்போல. யானையின் துதிக்கை நிலையற்று சுழன்றுகொண்டிருக்க, நெரிபடும் பற்கள்போல் ஓசையெழுப்பி அக்கவசம் முனகிக்கொண்டிருந்தது. அவன் முன்நடத்திய நூற்றெட்டு யானைகளின் கவசஒலிகளாலும் ஒளியலைகளாலும் அந்தப் படை கொதித்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அல்லது கண்ணுக்குத் தெரியாத பேரெடை ஒன்று வந்து அமைய அழுந்தி நொறுங்கி மண்ணிலமர்ந்துகொண்டிருப்பதுபோல.

புலரியின் கொம்போசை எழுந்ததும் தொடர்ந்து போர்முரசுகள் முழங்கத் தொடங்கின. கம்ரன் தன்னுடலெங்கும் எழுந்த மெல்லிய விதிர்ப்பில் பற்கள் கூச, கண்கள் ஒளி மங்கி நீர் கொள்ள, உடலை இறுக்கி பின்பு தளர்த்தினான். ஒவ்வொரு முறையும் போர்முரசு அத்தகைய உடலுணர்வை அவனிடம் ஏற்படுத்தியது. உடலிலிருந்து அரிதான ஒன்று வெளியேறுவதுபோல. பெண்ணுறவின் உச்சம்போல. அது இறப்பின் தருணமா? உயிர் அகல்வதும் அவ்வாறுதான் இருக்குமோ? ஒவ்வொரு நாளும் இறந்தபின்புதான் போர் தொடங்குகிறதா? அவனுக்கான ஆணையை தொலைவில் கொடி சுழித்து அசைந்து அளித்தது. கைகளைத் தூக்கி அசைத்து தன் படைப்பிரிவுக்கு “முன்னேறுக! முன்னேறுக!” என ஆணையிட்டபடி அவன் படைமுகப்பில் ஊர்ந்தான்.

சுபகம் தன் துதிக்கையைத் தூக்கி பிளிறியபடி அதன் வலப்பக்கம் கீழே கிடந்த  தோதகத்தி அடிமரத்தில் இரும்புப் பூணிட்டு இறுக்கி உருவாக்கப்பட்ட நீண்ட தண்டை எடுத்துக்கொண்டு முன்னால் சென்றது. அலையிலெழும் கட்டுமரம்போல் தண்டு முன்னால் செல்ல “தாக்குக! எதிரிப்படைகளை பிளந்து செல்க!” என்று ஆணையிட்டபடி கம்ரன் முன்னால் சென்றான். அவனைச் சூழ்ந்து அவனுடைய படையின் நூற்றெட்டு யானைகளும் தண்டுகளேந்தி எடைக்கு உடல்குறுக்கி விரைவடி வைத்து முன்னால் சென்றன. சுபகம் தன் தண்டால் எதிரே வந்த தேர்நிரையை தாக்கியது. அதன் பெருவிசையால் தேர்கள் உடைந்தன. பொருளற்றுப்போன நுகங்களுடன் புரவிகள் திகைத்து முட்டிச்சுழித்தன. கனைப்புகளும் அலறல்களுமாக அவன் சூழல் கொந்தளிக்கலாயிற்று.

தண்டை பின்னிழுத்து மீண்டும் பிளிறியபடி விசைகூட்டி தாக்கி முன்சென்றது சுபகம். இருபுறமும் யானைகள் தண்டுகளால் தாக்கி தேர்ச்சூழ்கையை உடைத்தன. எதிரில் சிகண்டியின் கொடி தெரிந்தது. இடப்பக்கம் பாஞ்சாலத்தின் வில்லும் வலப்பக்கம் மண்டையோடும் பொறிக்கப்பட்ட சிவந்த கொடி அனலென படபடத்தது. அங்கிருந்து அவருடைய ஆணையை கொம்புகளும் முரசுகளும் அறிவித்தன. “முன்செல்க! முன்செல்க!” என்று கூவியபடி கம்ரன் தன் படையை எடுத்துச்சென்றான். உடல் அனைத்து பதற்றங்களையும் இழந்து குளிர்ந்து நீரடியில் பாறையென ஆயிற்று. கண்கள் பலவாகப் பெருகி இருபுறமும் நிறைந்தன. கவசஇரும்புகள் மின்ன தெளிநீர் அலையெழுந்து செல்வதுபோல் எதிரிப்படையை சென்று முட்டிய யானை நிரையின் எடையை ஒட்டுமொத்தமாகவும் ஒவ்வொன்றாகவும் கணக்கிட்டு கைகளும் வாய்களும் ஆணை பிறப்பித்தன. கீழே தாழ்வான வண்டியில் அமர்ந்து அவன் கைக்கும் வாய்க்குமென விழிகூர்ந்து வந்துகொண்டிருந்த கொம்பூதிகள் அவன் ஆணைகளை ஓசையாக்கி காற்றில் நிறைத்தனர்.

தான் சொல்வது தனக்கே திரும்ப வருவதை அவன் கேட்டான், மானுடக்குரலை தெய்வங்கள் எதிரொலிப்பதுபோல. அல்லது அவன் எண்ணுவதை அவை முன்னரே அறிந்திருக்கின்றன. அவை நுண்வடிவில் ஆணையிட அவற்றையே அவன் சொல்லென்றாக்கினான். விண் வளைவில் மோதி அது தேவர் மொழியில் எதிரொலிக்கிறது. இடியின் மொழி. புயல்காற்றின் மொழி. தன் சிறு கையசைவு ஒன்று வானிழியும் ஆணை என்று மாறும்போது முதல் நாள் எழுந்த உவகையை அவன் நினைவுகூர்ந்தான். விண்வாழும் பேருருவ இருப்பொன்று தன்னை அறிகிறதென்று முதலிலும், தானே ஒரு பேருருவ இருப்பென்று ஆகிவிட்டதாக மறுகணமும் தோன்றியது.

அப்பேருரு அவனுள் எப்போதும் ஒரு யானை வடிவிலேயே இருந்தது. ஆறு வயதில் அவனை தந்தை யானைக்கொட்டிலுக்கு பணிக்கு அழைத்துச் சென்றார். கைக்குழந்தையாக இருக்கையிலேயே அன்னையுடனும் தந்தையுடனும் அவன் வந்த கொட்டில். மானுடரை விடவும் அவன் கூர்ந்து நோக்கியது யானைகளைத்தான். அன்னை தந்தையெனும் சொற்களுக்கு முன்னதாகவே யானை எனும் சொல்லை அவனுள் சொல்லத் தொடங்கிவிட்டான். மாதங்கரின் குலத்தில் யானைகளைத்தான் மொழி முதலில் அறிகிறது. மிக எளிதாக சொல்லும்பொருட்டே அச்சொல் உருவாகியிருக்கிறது. இளமைந்தர் எவரேனும் அச்சொல்லை கண்டடைந்திருக்கலாம்.

அவனை தந்தை அழைத்துச்சென்று சுபகத்தின் அருகே நிறுத்தினார். அதன் கால் நகங்களிலெழுந்த அரக்கப்பெருஞ்சிரிப்பை பார்த்து அவன் திகைத்து ஒருகணம் பின்னடைந்தான். “அஞ்சுகிறான்!” என்று அன்னை நகைத்தாள். “யானைக்கு அணுக்கமாகி ஓருடலென அதனுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்போதுகூட இறுதிக்கணம் வரை பாகனிடம் எஞ்சுவது இந்த அச்சம். தன் ஆணைக்கிணங்கி தோழனென்றும் ஊர்தியென்றும் உடன்வரும் இவ்விலங்கு கனவுகளில் தெய்வமென்றும் கொலைவடிவென்றும் எழுந்து வந்துகொண்டிருக்கும் விந்தையை அவன் ஒருபோதும் கடக்க இயலாது” என்றார் தந்தை.

அவனை இரு தோள்களையும் பற்றித் தூக்கி சுபகத்தின் காதருகே கொண்டுசென்றார். “உன் பெயரை சொல்” என்றார். அவன் தந்தையை திரும்பிப்பார்த்தான். “சொல்! உன் பெயர் என்னவென்று சொல்!” என்றார். “கம்ரன்” என்று மிகத் தாழ்ந்த குரலில் அவன் சொன்னான். அன்னை “இன்னும் சற்று குரலெழுப்பு” என்றாள். தந்தை திரும்பி புன்னகைத்து “யானைக்கு முணுமுணுத்தாலே கேட்கும். பல தருணங்களில் நம்முள் எண்ணமென எழுவதே அதற்கு கேட்டுவிடும்” என்றார்.

அன்று யானையின் சாணியை அள்ளிக்கொண்டு சென்று குழியிடும் பணியை அவனுக்களித்தார். “யானைப்பிண்டத்தில் உழல்வதிலிருந்து தொடங்கு. அந்த மணம் அதற்கு தெரியும். அதனூடாகவே உன்னை அது ஏற்றுக்கொள்கிறது” என்றார். அன்று முதல்முறையாக அவன் அத்தனை அணுக்கத்தில் யானைச்சங்கிலியை பார்த்தான். மலைப்பாம்பொன்று சுருண்டு கிடப்பதைப் போன்றிருந்தது. அதில் கால் தட்டியபோதுதான் அங்கு அது இருப்பதை கண்டான். இரவில் வீசிய மண் புழுதியால் மண்குவியலென்றாகியிருந்தது. அவன் கால்பட்டு அது சற்றும் அசையவில்லை. எடைமிக்க இரும்புப் படைக்கலங்களை குவித்துப்போட்டதுபோல. அள்ளித் தூக்க முயன்றபோது ஒரு கண்ணியைக்கூட நகர்த்த முடியவில்லை.

தந்தை திரும்பிப்பார்த்து புன்னகைத்து “அதை எந்த மானுடராலும் அசைக்க இயலாது. யானை தன்னைத்தானே எடுத்து அதை பூட்டிக்கொள்ளும்” என்றார். அவன் விழிகளில் எழுந்த மாற்றத்தை பார்த்து “தன்னை நமக்கு அடிமையென அதுவே ஆக்கிக்கொள்கிறது” என்றார். “ஆனால் அச்சங்கிலி யானையால் உருவாக்கப்பட்டதல்ல. எந்த மனிதனாலும் உருவாக்கப்பட்டதல்ல. பல்லாயிரம் மானுடரின் உள்ளங்களை இணைக்கும் தெய்வம் ஒன்றால் உருவாக்கப்பட்டது. அத்தெய்வத்தையே மாதங்கி என நாம் வணங்குகிறோம். கொற்றவையின் நூற்றெட்டு உருத்தோற்றங்களில் ஒருத்தி. கைகளில் அங்குசமும் தாமரையும் கதாயுதமும் கோலும் கொண்டு யானைமேல் அமர்ந்து எழுந்தருள்பவள். அவளை வணங்குக!”

யானைப்படை பாண்டவர்களின் தேர்நிரையை உடைத்து உட்செல்ல அங்கிருந்து எழுந்த ஆணைகளால் தேர்கள் நீர் விலகுவதுபோல் உருமாறி இருபுறமும் அகன்றன. அவற்றுக்கு அப்பாலிருந்து விலகும் நீரிலிருந்து பாறைகள் எழுவதுபோல் பாண்டவர்களின் யானைப்படை எழுந்து வந்தது. தண்டுகளும் வீசுகதைகளும் ஏந்திய யானைகள் பிளிறியபடி விரைவடிகள் எடுத்து வைத்து தன் படை நோக்கி வருவதை கம்ரன் கண்டான். விசையில் அவை உருளைகள்போல் உடல் குறுக்கியிருந்தன. துதிக்கை சுருட்டி தலையை நிலம் நோக்கி தாழ்த்தி மத்தகத்தில் எழுந்த கூர்வேல்களும் கொம்புகளில் பொருத்தப்பட்ட நீள்வேல்களும் முனைமின்ன பிளிறியபடி வந்தன.

போர்க்களத்தில் யானை முரசுப்பரப்பில் மெல்ல கோலால் தடவுவது போன்ற ஓசையல்லா ஓசையுடன் மெல்ல உறுமி ஒன்றுடன் ஒன்று சொல் கோத்துக்கொள்ளும். அவ்வோசையின் திரள் முழக்கம் என ஆகும். அத்தனை ஓசைகளுக்கு நடுவிலும் அதை அவனால் தெளிந்து அடையாளம் காணமுடிந்தது. இருபத்தாறு ஆண்டுகளாக அவன் கேட்டுக்கொண்டிருக்கும் ஓசை. யானையின் எண்ணமே ஒலியென்றானதுபோல. ஒவ்வொரு தருணத்திலும் அது எழுப்பும் ஒலிமாறுபாடுகள் அவனுக்கு தெரியும். ஆயினும் முற்றிலும் அறியாத பிறிதொரு மொழியென்றே அது இருந்தது. நகரில் பிறந்து மானுடருள் வாழ்ந்து முதிர்ந்தாலும் யானைகள் அந்த மொழியை மானுடருக்கு அப்பால் கரந்து வைத்திருக்கின்றன.

சுபகத்தின் தண்டுடன் எதிரில் வந்த யானையின் தண்டு மோதியது. அதன் அதிர்வை அவன் உணர்ந்தான். இரு யானைகளும் பின்னகர்ந்து வெறியுடன் மத்தகங்களால் முட்டிக்கொண்டன. தண்டை கீழேவிட்டு துதிக்கையோடு துதிக்கை பிணைத்துக்கொண்டு ஒன்றையொன்று முட்டி முன்னும் பின்னும் நகர்ந்தன. உதறி பின்னகர்ந்து விசைகூட்டிப் பிளிறியபடி மீண்டும் மத்தகத்தால் ஒன்றையொன்று முட்டின. எதிரியானையின் மத்தகங்களில் பொருத்தப்பட்டிருந்த எடை மிக்க கூர்முனைகள் உடைந்து நசுங்கின. மீண்டுமொரு முறை சுபகம் பின்னகர்ந்து பாய்ந்து மத்தகத்தால் தாக்கியபோது அந்த யானை நின்று சற்றே அசைந்து பக்கவாட்டில் விழுந்தது. அதன் துதிக்கையை சுற்றிப் பற்றி வலக்காலைத் தூக்கி அதன் கழுத்தில் வைத்து ஒரு முறை இழுத்து கழுத்தை முறித்துவிட்டு சீற்றத்துடன் அடுத்த யானை நோக்கி சென்றது சுபகம்.

கீழே விழுந்து நான்கு கால்களும் மேலே தெரிய துடித்துக்கொண்டிருந்த அந்த யானையை அரைக்கணம் பார்த்து கம்ரன் தன் பார்வையை திருப்பிக்கொண்டான். கீழிருந்து வேல்களும் அம்புகளும் எழுந்து வந்துகொண்டிருந்தன. யானையின் மத்தகத்தின் மீது கவிழ்ந்து அதன் பாறைத் தோல்பரப்பை அணைப்பதுபோல் படுத்துக்கொண்டு அவன் அதற்கு ஆணைகளை இட்டான். சுபகம் ஆணைகளை விரும்புவதில்லை என்று அவன் அறிந்திருந்தான். அதற்கு இலக்கு அறிவிக்கப்பட்டபின் தன் உத்திகளையும் சூழ்ச்சிகளையும் அதுவே வகுத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் எதிர்வந்த யானையை வீழ்த்தி அதை முற்றாக கழுத்தை முறித்த பின்னரே அது அடுத்த யானையை நோக்கி சென்றது.

வயிற்றில் மிதித்தோ கொம்புகளால் குத்தியோகூட யானைகளை யானையால் கொல்லமுடியும். ஆனால் அதற்கு சற்று பொழுதாகும். வீழ்ந்த யானையின் கழுத்து முறிக்கப்படுவதை பிற யானைகள் பார்க்கவேண்டுமென்று சுபகம் விரும்புகிறது. சீற்றத்துடன் கொம்பு குலுக்கி அது முன்வரும்போதே எதிரியானை அறியாது அச்சமடைந்து ஓரடி பின்னால் வைத்து பாகனின் ஆணைக்கேற்ப மீண்டும் விசை திரட்டி வருவதை அவன் கண்டான். அந்த அச்சத்தாலேயே ஓரிரு முட்டல்களுடன் அது சுபகத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறது. கருங்குவியலென விழுந்து எழுந்த வயிற்றிலிருந்து மூச்சு துதிக்கைக் குழாயினூடாக சீறி புழுதிபறக்க அமைய, செவிநிலைத்து வாயிலிருந்து குருதி வழிந்துறைய உடல்துறக்கிறது.

கரிய அலைக்கொந்தளிப்பாக சூழ்ந்து நடந்துகொண்டிருந்த யானைப்போரை அவன் கண்டான். யானைகள் கொப்புளங்கள் வெடித்தழிவதுபோல மறைந்துகொண்டிருந்தன. தனது யானைப்படையில் இருபது யானைகளுக்கு மேல் விழுந்துவிட்டதைக் கண்டு “விரியவேண்டாம், குவிந்து தாக்குக! கூர்கொண்டு தாக்குக! ஒவ்வொரு யானைக்குப் பின்னாலும் இன்னொரு யானை இருக்கவேண்டும்! வீழ்ந்த யானையை வரும் யானை நிரப்ப வேண்டும்! முன்செல்லும் யானைகளுக்கு முன் நம் அம்புகள் சென்று விழுந்து ஒரு வெளி உருவாகவேண்டும்!” என்று அவன் ஆணையிட்டான்.

சிகண்டியின் படைக்குப் பின்னால் நின்று நெடுவில்லவர்கள் எய்த அம்புகள் கம்ரனின் தலைக்கு மேல் எழுந்துசென்று அப்பால் யானைமேல் அமர்ந்திருந்த பாகன்களை வீழ்த்தின. யானைகளின் மத்தகங்களிலும் உடல்களிலும் அமைந்திருந்த கவசங்களை அம்பு சென்று அறைய அவை சிலிர்த்துக்கொண்டன. கவசங்களின் இடைவெளிகளில் அம்பு தைத்திறங்க அவை உடல் அதிர்ந்து நின்றவாறே பக்கவாட்டில் சரிந்து விழுந்தன. “யானைகளை முகம் திருப்பச் செய்யுங்கள்! முகம் திருப்புக! யானைகள் சிகண்டிக்கு நேர் முகம் நிற்கவேண்டும்!” என்று அவன் ஆணையிட்டான். ஆனால் மிகவும் முன்னகர்ந்துவிட்டிருந்த அவன் படையால் பின்னால் வரவோ பக்கவாட்டில் திரும்பவோ இயலவில்லை.

அவன் யானைப்படைக்கு வலது பக்கமாக வந்துகொண்டிருந்த சிகண்டி ஒவ்வொரு அம்பிலும் ஒரு யானைப்பாகனையோ படைத்துணைவனையோ வீழ்த்திக்கொண்டிருந்தார். அவர் அம்புகள் பட்டு நான்கு யானைகள் வீழ்வதை கம்ரன் கண்டான். யானை தன் காதுகளை அசைக்கும் கணத்தில் ஒரு மின்னென தெரிந்து மறையும் அதன் நரம்புக்குழியை கணித்து அம்பு செலுத்துவது மானுடரால் இயல்வதா என அவன் அகம் வியந்தது. வானில் பறக்கும் பறவைகளின் சிறகுகளை மட்டுமே அரிந்து வீழ்த்தும் வில்லவர்களை அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் முன் மேலும் மேலுமென யானைகள் விழுந்துகொண்டே இருந்தன. “செல்க! செல்க! அவரை நோக்கி செல்க!” என்றான். “அவர் அம்புகளுக்கு இடைகொடுக்காதீர்கள். அவருடைய களிற்றுநிரையை உடைத்து அழியுங்கள்.”

சுபகம் அவனது ஆணையை கேட்டதுபோல தண்டை எடுத்துக்கொண்டு பிளிறியபடி சிகண்டியை நோக்கி சென்றது. சிகண்டியைச் சூழ்ந்திருந்த வில்லவர்களின் அம்புகள் அவன் மேலும் சுபகத்தின் கவசங்களின் மேலும் அறைந்து விழுந்தன. எதிரில் வந்த இரண்டு யானைகளை அறைந்து தூக்கி அப்பால் வீசியது சுபகம். மூன்று தேர்களை தண்டுகளால் அறைந்து உடைத்தது. சிகண்டியை மிக அருகிலென கம்ரன் கண்டான். சுபகத்திற்கு ஆணையிடலாகாது என்பதை மறந்து “கொல்க! கொல்க! அவ்விழிமகனை இக்கணமே கொல்க!” என்று கூவினான். “ஆணிலியே… இன்று உன் இறுதிநாள்… என் களிற்றுக் காலடி உனக்கு!” என்றான்.

சிகண்டியின் கண்களில் சினமோ சீற்றமோ தெரியவில்லை. அவை மங்கலாக இரு ஒளிப்புள்ளிகள் போலிருந்தன. அவர் கைகள் அம்பெடுப்பதை, நாண் இறுகி இழுபடுவதை, வில் வளைந்து தெறிப்பதை, கணம் கணமென கம்ரன் கண்டான். அம்பு வந்து சுபகத்தின் கவசத்தை உடைத்து அதன் தோளில் ஆழ்ந்திறங்கியது. அவன் திகைத்து யானையின் மத்தகத்தை பற்றிக்கொண்டான். யானையின் உடல் முழுக்க ஓடிய நடுக்கை உணர்ந்தான். யானை சரிந்து நிலத்தில் விழுந்தது. அவன் அதில் காலூன்றி தாவி அப்பால் இறங்கினான். அக்கணமே சிகண்டியின் அம்பொன்று வந்து அவன் முன் மண்ணிலூன்றியது. அவன் பாய்ந்து இன்னொரு களிற்றை நோக்கி ஓடினான். அவனுக்குச் சுற்றும் உறுமும் அம்புகள் சென்றுகொண்டிருந்தன.

சுபகம் துதிக்கையை சுழற்றியபடி பாய்ந்தெழுந்து பிளிறியபடி உடலை உதறிக்கொண்டது. எதிரே வந்த களிறொன்றை மத்தகத்தால் முட்டி அது நிலையழிந்த கணத்தில் தூக்கிச் சுழற்றி அறைந்து அதன் பள்ளையை மிதித்து வாயில் குருதி பீறிட சிதைத்து அடுத்த யானையை முட்டியது. அதன் விசையாலேயே மத்தகம் பிளக்க சுழன்ற துதிக்கையிலிருந்து குருதி வளைந்து தெறிக்க அந்த யானை வீழ்ந்தது. அடுத்த யானை அஞ்சி குரலெழுப்பியபடி பின்னடைந்தது. சுபகம் எவரும் கணிக்கவியலா விரைவுடன் சிகண்டியின் தேரை அணுகி அதன் மேல் ஓங்கி அறைந்து உடைத்தது. தேர்த்தூணை பற்றித் தூக்கி அப்பாலிட அதில் கட்டப்பட்டிருந்த புரவிகள் கால்கள் பின்ன கனைத்தபடி ஒன்றன்மேல் ஒன்றென விழுந்தன. அதன் அடியில் பாகன் சிக்கிக்கொள்ள சுபகம் தேரைத் தூக்கிச் சுழற்றியது.

தேரிலிருந்து பாய்ந்திறங்கிய சிகண்டி வாளை உருவியபடி சுபகத்தை எதிர்கொண்டார். கம்ரன் சுபகத்தை நோக்கி ஓடினான். சுபகம் பிளிறி, துதிக்கை சுழற்றி, தலைகுலுக்கியபடி சிகண்டியை நோக்கி பாய்ந்தது. சிகண்டி விட்டிலென பின்னால் தாவி அதன் அறையை தவிர்த்தார். துதிக்கைவீச்சு சென்று பட்ட தேர் ஆரம் முறிந்து கவிழ்ந்தது. காலால் புரவி ஒன்றை எற்றி எறிந்தபடி சுபகம் சிகண்டியை நோக்கி மீண்டும் பாய்ந்தது. தேர்த்தட்டு ஒன்றில் கால்வைத்து தாவி காற்றிலெழுந்த சிகண்டி தன் உடைவாளால் சுபகத்தின் துதிக்கையை ஓங்கி வெட்டினார். அவர் வாள் துதிக்கையின் கவசங்கள் நடுவே கடந்து தசையிலேயே பதிந்து நின்றது. வாளை விட்டுவிட்டு கீழே பாய்ந்து இரு தாவல்களில் தேர்களைக் கடந்து அவர் படைகளுக்குள் புகுந்துகொண்டார்.

துதிக்கையில் பதிந்த வாளுடன் அலறியபடி சுபகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. தலையை உலுக்கியபடி அங்குமிங்கும் அலைமோதியது. துதிக்கை துண்டாகி விழ வாளும் உதிர்ந்தது. உடைந்த கலமென குருதிச்சேறு கொட்டும் வெட்டுவாயுடன் சுபகம் திரும்பி கௌரவப்படை மேல் பாய்ந்தது. அங்கிருந்த யானை ஒன்றின் வயிற்றில் தந்தங்களை குத்தி இறக்கி தூக்கி அப்பாலிட்டது. வயிறு கிழிந்து குடல்திரள் குருதியுடன் வெளிப்பெருக அந்த யானை நிலத்தில் கிடந்து துள்ளியது. இரு தேர்களை உதைத்து உடைத்து மேலும் தன் படைக்குள் புகுந்த சுபகம் இன்னொரு யானையை குத்தி கீழே தள்ளி அதன் மேல் மீண்டும் மீண்டும் தந்தங்களைச் செலுத்தி சுழற்றித் தூக்கி கவிழ்த்து எழுந்தது. அதன் வெண்கோடு சிவந்து குருதிவழிய குடல்சரடுகள் தொங்கி வழுக்கி உதிர்ந்தன. பிளிறியபடி அது எதிர்வர அதன் தோழமை யானைகள் அலறியபடி பின்னகர்ந்தன.

கம்ரன் “என் தெய்வமே! என் தாதையே! பொறுத்தருள்க!” என்று கூவியபடி சுபகத்தை நோக்கி ஓடினான். அதன் நேர்முன்னால் சென்று இரு கைகளையும் விரித்துக்கொண்டு நின்றான். சுபகம் அவனை அறியவில்லை. தலைகுலுக்கி பிளிறியபடி அவனை நோக்கி பாய்ந்து வந்தது. அவன் நெஞ்சுகுலுங்கும் அச்சம் எழுந்தபோதும் நிலையூன்றி நின்றான். அவனை தன் காலால் எற்றி தெறிக்கவிட்டது சுபகம். அவன் விலாவுடைந்து நிலத்தில் விழுந்து இருமி குருதியுமிழ்ந்து உடல்ததும்பினான். நின்று இருமுறை அசைந்தபின் அதுவும் அவனருகிலேயே விழுந்தது. அவன் தன் உடலுக்குள் சிக்கியிருந்த மூச்சைத் திரட்டி குருதியுடன் உமிழ்வதற்கு முன் தனக்கு அருகில் கிடந்த அதன் பெரிய மத்தகத்தை இறுதியாக பார்த்தான்.

தொடர்புடைய பதிவுகள்

கட்டணக் கேட்டல் நன்று !

$
0
0

j

 

கட்டண உரை –ஓர் எண்ணம்

அண்ணன் ஜெயமோகனுக்கு,

 

நெல்லையில்  நவம்பர் 10ம் தேதியன்று நடைபெற இருக்கும் கட்டண இலக்கியக்  கூட்டம் வெற்றிபெற முதலில் வாழ்த்துகள்…

தேர்ந்த  வாசக ரசனைகளாலும் , அது சார்ந்து கட்டமைக்கப்படும் நண்பர் வட்டங்களாலும் , தெளிந்த தீர்க்கமாய் அலசலும் ஆராய்தலும் நீண்ட தொடர்தேடலின் கனமான பயணமாய் விவாதிக்கப்படக்கூடிய – அதன் வழி செழுமையான இலக்கியப் பிறத்தலுக்கும் தொடக்கத்திற்கும்  அடித்தளம் அமைக்கக்கூடிய , உரைகளின் வாசஸ்தலமாகிய விஷ்ணுபுரம் மற்றும் அது போன்ற   வேறு சில நல் இலக்கிய அமைப்புகளாலும் , தம் வாழ்நாட்களின் இறுதிவரை தமக்கென எதுவுமற்று படைப்பெனும் ஆனந்த அறிதலுடனும் , அதற்கெனவே பல்வேறு முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் காத்திரமான இலக்கியத் தெரிதலும் ஆர்வமும் மிகுந்த அமைப்புகளின் மூலமாகவும்  நடத்தப்பட்டுவரும் ஒவ்வொரு இலக்கிய உரை நிகழ்வும் , அது சார்ந்த அரங்க விவாத நிகழ்வுகளும் கட்டண இலக்கியக் கூட்டமாக நடைபெற வேண்டிய ஒன்றே.

ஒரு சிறந்த படைப்பாளியின் உரையின் மூலம் , இலக்கிய நேசிப்பும் ஆர்வமும் மிகுந்த நபர் ஒருவர் எவ்வளவோ… விஷய ஞானங்களை அறிதல் முடியும் என்பதே உண்மை. உதாரணமாய் தங்களது  உரைகளையோ, விஷ்ணுபுரம் விருது விழாவின் அரங்க உரைகளையோ, நிகழ்வின் முதல் நாள் காலை முதல் இரவு வரை நீடிக்கும் ஆரோக்கியமான இலக்கிய விவாதக் கலந்துரையாடல்களையோ  , எஸ்ரா , பவா  போன்றோரின் பேச்சுக்களையோ நேரிலோ அல்லது காணொளியிலேயோ  காணும் – கேட்கும் ஒருவர் அன்று ஏதாவதொரு புதிய அறிதலை அதன் வழி இன்னொரு முதல் தொடக்கத்தை அடையமுடியும் என்பதே உண்மை. தொடர்ந்து… சிங்கப்பூரிலிருந்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்களை தொலைபேசியில் அழைத்து நான் பேசிக்கொள்ளும் அந்தக் குறுகிய பொழுதுகளிலெல்லாம் ஜெயமோகன் எனும் வானம் விரிக்கும் நீள்… பெரிது… ஒரு தொலைபேசி உரைக்குள் , பல்வேறு  விஷயங்களை நான் நகரவேண்டிய பல்வேறு புதுத்தளங்களை அது சார்ந்த விசாலப் பார்வையினை எனக்குள் உணர்த்திவிடும்… இது போன்ற ஆழ்ந்த ஞானம் மிகுந்த எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் உரை நிகழ்வு மனதார , கட்டணத்துடன் கண்டு கேட்டு பயன்பெற வேண்டிய ஒன்று. ஒரு நேர்மையான படைப்பாளி , தன் உரையின் மூலம் தான் இதுகாறும்  தேடித் தேடித் தெரிந்த அனுபவக்கூறுகளின் ஆழ்ந்த ரசனையை நம் முன் விரிக்கிறான். அவனது பாரபட்சமற்ற இலக்கிய உழைப்பின் அவதானிப்புகளை நமக்காய் பரிமாறுகிறான். கற்றலின் கேட்டல் நன்றெனும் நீதிமொழியின் இரட்சகனாய் நமக்கு முன்னே நின்றுரைக்கிறான். அவ்வளவு எளிதில் கடந்துவிடமுடியாத அவனது ஞான விதைகளை கேட்பவரின் நிலமெங்கும் வீசி மகிழ்கிறான். நல் நிலமெங்கும் விளைச்சலின் குறுகுறுப்பு முளைவிட்டெழுவதற்கான சாத்திய உரத்தையும் சேர்த்தே பதிக்கிறான்.

nep

கட்டண உரையெனும் இப்புதிய திறவு, பல்வேறு இலக்கியக் களங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. களைகளற்று பொத்தாம்பொது கடந்து , ஒரு தேர்ந்த இலக்கின் வாசக அலை உருவாகலாம். ஹவுஸ்புல்களற்ற திடமான தெரிவுகளின் விருப்ப இருக்கைகளால் அரங்கம் அர்த்தமாகலாம். எந்தச் சூழலிலும் தேடலின் முனைப்புடன் ஆர்வமாய் அங்கு வந்து சேரும் இலக்கிய ருசும்பிகளின் வருகையால் கட்டண உரை மேலும் கவனம் பெறலாம்.

கவனித்து கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர்களின்,  படைப்பாளிகளின் எண்ணங்களும் சிந்தனைகளும் உரைகளும் என்றும் இலவசமல்ல எனும் தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கான முதல் நகர்வே இந்த கட்டண உரை. கட்டணக் கேட்டல் நன்று !

 

அன்புடன்

நெப்போலியன்

சிங்கப்பூர்.

 

அன்புள்ள ஜெ

 

நம்முடைய மேடைப்பேச்சை இன்னொருவகையான வரையறைக்குள் கொண்டுசெல்லும் முயற்சியாகவே இதைப்பார்க்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பெருவாரியான மக்கள் கட்டணக்கூட்டத்துக்கு வரமாட்டார்கள். செலவு செய்வது தேவையில்லை என்றே நினைப்பார்கள். ஆரம்பத்தில் பெரிய தயக்கமும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இது நிலைபெற்றால் மக்கள் வருவார்கள். மக்கள் கட்டணம் கட்டி பேச்சைக்கேட்கிறார்கள் என்ற செய்தியே பெரிய விஷயம்தான்

 

ஏனென்றால் இங்கே கேட்பவர்களுக்கு எந்த ஒழுக்கமும் இல்லை. பேச்சு ஆரம்பித்தபிறகுதான் வந்துகொண்டிருப்பார்கள். பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே எழுந்து செல்வார்கள். பேச்சுக்கு நடுவே நாலுபேர் அமர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பேச்சில் ஆர்வம்கொண்டவர்களை மட்டுமே வரவழைப்பதர்கான ஃபில்டர் இந்த வழி என தோன்றுகிறது

 

தீவிரமாக பல துறைகலில் இதேபோன்ற பேச்சுக்கள் நடக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். இலக்கியம், கலைவரலாறு போன்ற துறைகளில் முக்கியமானவர்கள் பேசுவது ஒரு அவசியமான பண்பாட்டு நடவடிக்கையாகும்

 

ராஜசேகர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்

$
0
0

me

#me too-இயக்கம்

’நானும்’ இயக்கம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ , நலமா ?

 

 

இ்ன்று metoo பற்றிய உங்கள் பதில் படித்தேன் , இதில் நிரந்தர தீர்வு வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது , ஆண்களின் பார்வையில் பெண்  அணைத்து இடங்களிலும் வெற்று உடலாக மட்டுமே பார்க்கப்படுவது வேதனைதான் …

 

என்வரையில் இந்த உடல் ஒரு பெரும் சிறை , இதை சுமந்துகொண்டு நான் தாண்டி ஓடிய தூரம் கொஞ்சமில்லை ,பெண் எத்தனை இயல்பாக பேசினாலும் ஆணுக்கு ஒரு தேடல் உள்ளுக்குள் இருந்துகொண்டேதான் இருக்கும் , தன் இரைக்காக காத்திருக்க அவன் வருதப்படுவதே இல்லை , …

 

நீங்கள் சொன்னதுபோல நேரடியான வன்முறைகள் எவ்வளவோ மேல் அதனை தைரியமாக எதிர்கொள்ள முடியும் ( நான் என்றுமே என்னுடன் சிறு கத்தி வைத்திருப்பேன் )ஆனால் பாசாங்கு கிழங்களின் எச்சில் ஒழுகும் பார்வை ஒரு கொலை செய்யக்கூட நம்மை தயார் செய்துவிடும் உண்மைதான் …

 

1997 ல் ஒரு கிழவன் எனது போனஸ் காசோலையை கையில் வைத்துக்கொண்டு முத்தத்துக்கு என்னிடம் பேரம் பேசிய கொடுமைகள் போல இன்றும் உண்டுதான் …

 

பெற்றோர் வளர்ப்பு ஒரு பக்கம் உண்டு என்றாலும் இது ஆணுக்குள் பிறப்பிலேயே வளரும் ஒரு மிகையூக்க குணம் , இங்கு நீங்கள் சொனதுபோல் குடும்ப அமைப்பு இதை மறைக்க மட்டுமே பார்க்கும், சட்டம் காவல் துறை நீதிமன்றம் எல்லாமே பாசாங்குதான் , குற்றம் அங்கு மேலும் தூண்டப்படுகிறது,

 

சிலநேரம் நான் நினைப்பதுண்டு குழந்தை திருமணம் சரியானதுதானோ என்று , ஆணுக்கு 15 வயதில் பெண்ணை தொட்டுவிட்டால் சரியாகி விடுவானோ ? சிரிப்புதான் வரும்..

 

இதுபோன்ற பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் பதவியில் இருக்கும் நடுவயது கடந்த ஆண்களால் நடக்கிறது அதுவும் இளம் பெண்கள் மற்றும் ஆளுமை மிக்க பெண்களுக்கு இது பெரிய வதை ..

 

என்னிடம் ஒரு துப்பாக்கி கொடுத்தால் 1000 ஆண்களை சிறு சலனமில்லாமல் சுட்டு வீழ்த்த முடியும் , இங்கு பெண்களுக்கு நடக்கும் அங்கீகார மீறல்கள் அனைத்தும் உடல் சார்த்தவைகளே …

 

இங்கு உடல் கொண்டு சாதிக்கும் பெண்களை பற்றி நான் எதுவும் கூறவில்லை ஆனாலும் அதுவும் உண்டு அப்படிப்பட்ட பெண்களால் இன்னமும் அதிகமாக நாங்கள் கீழ் இறக்கப்பட்டு ” நீ மட்டும் என்ன பெரிய ?!” என்பது போன்ற நேரிடை தாக்குதலுக்கு ஆட்படவேண்டி உள்ளது ..

 

நிறைய பேசியாகிவிட்டது ஆண் தானாக திருந்தினால் இது மாறலாம் அல்லது உச்ச பட்ச தண்டனைகள் ஒரு மாயத் திரையை உருவாக்கலாம் மற்றபடி,  என் பட்டி  சொல்வதுபோல  நழுவும்  மீனாக இந்த ஆண்களிடம்  இருந்து நழுவி ஓடும்  வித்தையை  கற்றுக்கொள்ள  வேண்டியதுதான் .

 

முதல்முறையாக ஒரு தெளிவில்லாத  பதிலை உங்களிடம்  இன்று படித்தேன் , ஒரு ஆணாகவும்  ,நல்ல தகப்பனாகவும்  உங்களுக்குள்  ஓடும் ஒரு விரக்தியை  காண  முடிந்தது  …

 

மாறும், நாங்களும்  வெல்வோம்  இதே  உடலோடு  …

 

நன்றி ஜெ

 

அன்புடன்

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

மிடூ இயக்கம் நன்மை செய்திருக்கிறதா என்றால் ஒரு நன்மையை செய்திருக்கிறது. இங்கே ஆண்களின் மனநிலை என்ன என்பதை பெண்களுக்குக் காட்டியிருக்கிறது. ஆண்களைக் காப்பாற்றுவது எது, எதை நம்பி இப்படி துணிந்து பாலியல் வேட்டைக்காரர்களாக ஆகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. நீதிமான்களும் நியாயவான்களும் தெளிவாகவே ஒரு நிலைபாடு எடுக்கிறார்கள். ஆண்கள் எல்லாரும் சாதி, மதம், கட்சி, கருத்து அடையாளம் கொண்டவர்கள். அவர்களை ஆதரிக்கவேண்டுமா நார் நாராகக் கிழிக்கவேண்டுமா என்பதெல்லாம் அவர்கள் எந்த நிலையில் இருப்பவர்கள் என்பதைக்கொண்டுதான் முடிவெடுக்கப்படுகின்றன.

 

வெட்கமே இல்லாமல் ஆம், அவர் எங்கள் கட்சி, ஆகவே அப்படித்தான் ஆதரிப்போம், குற்றம்சொல்லும் பெண்ணை நடத்தைகெட்டவள் என்போம் என்று சொல்கிறார்கள். இதில் எந்தத்தரப்பும் மாறுபட்டது அல்ல. பாலியல் வன்முறைகளை ஆதரித்து இவர்களால் எவ்வளவு எழுதப்படுகிறது என்று பார்ப்பது பதற்றம் அளிக்கிறது! இதை அஞ்சித்தான் பெண்கள் இத்தனைநாள் அடங்கிக்கிடந்தார்கள். பாலுறவுப்படங்களை பகிரும் ஆண்கள், வேடிக்கையாக ஆபாசம் பேசுபவர்கள் எல்லாரும் உள்ளூர இத்தகைய நகங்களுடன்தான் அலைகிறார்கள் என்பதை தெளிவாகவே காட்டிவிட்டது இந்த பிரச்சினை.

 

பெண்களுக்குப் பெண்கள் மட்டும்தான் காவலாக இருக்கமுடியும். பெண்கள் ஆண்களுக்கு வெறும் உடல்கள்தான். அவர்களுக்குச் சாதி, மதம், மொழி, கருத்து, கட்சி ஏதும் கிடையாது என்று தெரிந்துவிட்டது. ஏன் மிடூ இயக்கம் வருகிறது என்ற கேள்வியையே எவரும் கேட்டுக்கொள்ளவில்லை. எவருமே இங்கே ஆதரவு கிடையாது. வாழ்க்கையில் எல்லாவகையிலும் வெற்றிபெற்று நிலையாக நின்றுவிட்ட பெண் தான் எதையாவது சொல்லமுடியும். அதாவது பாதுகாப்பான காலம் கழித்து. அப்போது சொன்னால் அவளை அழிப்பார்கள்.

 

இப்போது சொல்லும்போதுகூட எத்தனை ஆண்கள் சப்பைக்கட்டு கட்ட வருகிறார்கள். ஆதாரத்துடன் நீதிமன்றம் போகலாமே என்பதிலிருந்து நீ யோக்கியமா என்பது வரை எவ்வளவு பேச்சு. ஆதாரத்துடன் கோர்ட்டுக்குப் போகமுடிகிற நிலை இருந்தால் மிடூ இயக்கமே வந்திருக்காதே. இது உலகளாவிய ஒரு நிகழ்வு. பண்பாட்டில் இதில் பங்களிப்பை காலம் சொல்லும். அப்படி காலம் பதிவுசெய்யும்போது இங்குள்ள முற்போக்குகளும் பிற்போக்குகளும் ஒன்று சேர்ந்து என்ன நிலைபாடு எடுத்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கும்

 

ஆர்.

 

அன்புள்ள ஜெ

 

metoo இயக்கமும் அதன் எதிர்வினைகளும் என்னைப்போன்ற பெண்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளன. முக்கியமாக இங்குள்ள புரட்சியாளர்கள் மற்றும் முற்போக்காளர்களின் பாவனைகள் வெளியே தெரிந்தது. பொதுவாக இந்த இயக்கத்தில் அதிகமாக மாட்டிக்கொண்டவர்கள் முற்போக்காளர்கள். ஏனென்றால் அவர்களைப் பெண்கள் கூடுதலாக நம்புகிறார்கள். பெண்களிடம் எப்படி நம்பிக்கையாகப்பேசவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அவர்கள் ஒரு பெண்ணின் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உடனே பயன்படுத்திக்கொள்ளவே முயல்வார்கள்

 

அந்த முற்போக்காளர்கள் ஒருவர் பிடிபட்டால் மற்ற அனைவரும் வெட்கமே இல்லாமல் அவரை ஆதரிக்கிறார்கள். எங்கே ஆதாரம் என்று குமுறுகிறார்கள். இதெல்லாம் ஊடகத்தில் கவனம்பெறுவதற்காகச் செய்வது என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஒரு பெண் தன்னை இழிவுசெய்யும் இந்தக்கும்பல் முன்னால் வந்து நின்று சொல்வது பெரிய விஷயம். இதில் என்ன விளம்பரம் கிடைக்கும்? அவமானம்தான் மிச்சமாகும். தொழில்வாய்ப்புகளும் இல்லாமலாகும். இருந்தாலும் இதை நம்மூர் முற்போக்குக்கும்பல் சொல்கிறது.

 

அதேபோல மதவாதிகள். நேற்றுவரை ஒழுக்கம் தர்மம் என்று கூச்சலிட்டவர்கள் அவர்களில் சிலர் சுட்டிக்காட்டப்பட்டபோது அப்படியே அமைதியாக ஆகிவிடுகிறார்கள். எவருக்கும் பெண்களின் நலன் மீது அக்கறை இல்லை. நாளை இவர்கள் வீட்டுப்பெண்ணுக்கும் இந்த நிலைவரலாம் என்பது பற்றி அக்கறை கிடையாது. தங்களைச் சார்ந்தவர்களைக் காப்பாற்றவேண்டும், அதற்கு குற்றம்சாட்டுபவரை அவதூறு செய்யவேண்டும். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் சொல்லவேண்டும். இதுதான் இவர்களிடம் காணக்கிடைக்கிறது

 

இப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள பெருந்தலைகள் எல்லாருமே செக்சுவல் பிரிடேட்டர்ஸ் என்று தெரியாத எவருமே ஊடகங்களிலோ பொதுவாக அறிவுச்சூழலிலோ இருக்கமுடியாது. ஏனென்றல் இதை மறைக்கவே முடியாது. இது கிசுகிசுவாக இருந்துகொண்டே இருக்கும். இப்போதுதான் இது ஒரு பொதுவான பேச்சாக ஆகிறது. ஆனால் உடனே எவ்வளவு பாசாங்குகளைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள்

 

பெண்களுக்கு பெண்கள் மட்டுமே காவல்.

 

எஸ்.

 

 

metoo இயக்கம் பற்றி பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முதல்தந்தையின்,மீட்சி

$
0
0

CSK

வரலாற்று ஆளுமைகளைப்பற்றி மட்டுமல்ல வரலாற்றைப்பற்றி எழுதும்போதே முதன்மையாக எழுந்துவரும் சிக்கலென்பது துருவப்படுத்திக்கொள்ளுதல் என்பதுதான். ஏற்கனவே சொல்லப்படும் கோணத்தை அப்படியே மீண்டும் உணர்ச்சிகரமாக விரித்து எழுதுவது ஒரு பாணி. பெரும்பாலும் இது வணிக எழுத்தின் வழிமுறை. இந்தியச் சுதந்திரப்போராட்டம் பற்றி எழுதப்பட்ட கல்கியின் அலையோசை, மகுடபதி அகிலனின் பெண்,நெஞ்சின் அலைகள் போன்ற நாவல்களை உதாரணமாகச் சுட்டலாம்.

 

மாறாக இலக்கியச் சூழலில் இருந்து எழுதவருபவர்கள் சொல்லப்படாத கோணத்தை முன்வைக்கவேண்டுமென்று எண்ணுவார்கள். ஆகவே மறு எல்லை எடுப்பார்கள். விடுபட்டவை, மறைக்கப்பட்டவை ஆகியவற்றைச் சொல்லவேண்டும் என்ற நோக்கில் எழுதமுற்படுகையில் மறுப்புநிலைபாட்டுக்கே சென்றுவிடுவார்கள். உதாரணம், கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமத்து மக்கள் அளிக்கும் இந்தியச் சுதந்திரப்போராட்டம் பற்றிய சித்திரம்.

 

இவ்விரு எல்லைகளையும் பொருட்டெனக் கருதாமல் உண்மை எதுவோ அதைச் சென்றடையவேண்டும் என்னும் உறுதியுடன் புனைவுக்குள் நுழைவதென்பது ஒரு பெரிய சவால்தான். ஏனென்றால் வாசகன் என முன்னாலிருப்பவன் மேலே சொல்லப்பட்ட இருநிலைகளில் ஒன்றைச் சார்ந்தவன். அவன் அப்புனைகதையை இருநிலைகளில் ஒன்றில் கொண்டுசென்று தளைத்துவிட முனைப்பாக இருக்கிறான். அவனுக்குள் இருக்கும் அந்த முயற்சியை நிலைக்கச்செய்து அதன்பின் அவனுடன் உரையாடவேண்டியிருக்கிறது.

 

புனைவுக்குள் ஆசிரியன் பலவகையான உத்திகள், வெளிப்பாட்டுமுறைகள் வழியாகவே இதை வெல்லவேண்டியிருக்கிறது. ஆனால் அனைத்தையும்விட மிகச்சிறந்த வழிமுறை என்பது வாசகனை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளாமல் தன் தேடலை முன்னெடுப்பதும் தன் நேர்மை ஒன்றையே நம்பி நேரடியாக முன்வைப்பதும்தான். கலைக்கு தன்னை நிறுவிக்கொள்ளும் ஆற்றல் உண்டு என்பதனால் நேர்மையும் உண்மையும் மெல்ல அப்படைப்பை வெற்றிகரமாக ஆக்கும். அவ்வாறு வெற்றிநோக்கிச் சென்ற ஆக்கம் என சி.சரவணக் கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’ என்னும் நாவலைச் சொல்லமுடியும்.

 

இந்நாவலின் எதிர்மறைக்கூறுகளை முதலில் சொல்லிவிட விழைகிறேன். நாவல் என்பது விவரணைகளின் கலை. விவரணைக்கு இருகூறுகள் அடிப்படையானவை. புறவய உலகம் தகவல்களால் கட்டமைக்கப்படவேண்டும். அக உலகம்  உணர்வுகளால் கூறப்படவேண்டும். இவற்றுக்கு அப்பால் நவீனநாவல் கவியுருவகங்கள், படிமங்களைப்பின்னி மேலதிக தளம் ஒன்றையும் உருவாக்கும்.

 

ஆகவே இன்றைய நாவலுக்கு எல்லையில்லாத தகவல்கள் தேவைப்படுகின்றன. உள்ளத்தை விவரிக்கும் நனவோடை உத்தி, நாடகீயத்தன்னுரை உத்தி, நீளுரையாடல் உத்தி என பல்வேறு முறைகள் வேண்டியுள்ளன. இவற்றுக்கும் அப்பால் செல்வனவற்றையே நாவல் படிமங்களாகச் சொல்ல முயல்கிறது

 

ஆப்பிளுக்குமுன் அவ்வகையில் மிக ஆரம்பநிலையிலேயே நின்றுவிட்ட நாவல். காந்தியின் பாலியல்சோதனைகளுக்கு களமாக அமைந்த அவருடைய ஆசிரமச்சூழல், அங்கிருந்த அன்றாட வாழ்க்கை, அங்கிருந்த மனிதர்கள் ஆகியவை நுண்தகவல்கள் வழியாக விரிவாகக் கட்டமைக்கப்படவில்லை என்பதே இந்நாவலின் முக்கியமான குறைபாடு.  கதைமாந்தரின் உள்ளம் நேரடியாக வெளிப்பாடு கொள்ளவில்லை.மறைமுகமாக உணர்த்தப்படும் இடங்களும் மிகக்குறைவு. அவர்களின் செயல்கள் வழியாக வாசகன் சென்றடையும் வாய்ப்புகளே உள்ளன.

 

அத்துடன் இந்நாவலில் அனேகமாக கவித்துவப் படிமங்களே இல்லை. இதிலிருந்து வெளியே எடுக்கத்தக்கப் படிமம் என்பது ‘உடல் நினைவில் காடுள்ள மிருகம்’ என்னும் கூற்று. ஆனால் அது நேரடியாகவே மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் புகழ்பெற்ற கவிதையின் முதல்வரி. அந்த வரி நேரடியாக சொல்லப்படுகிறது. அதுவே ஒரு காட்சிப்படிமமாக திரும்ப மாற்றப்பட்டிருந்தால் நாவலுக்குள் உயிரூட்டத்துடன் அமைந்திருக்கக்கூடும்.

 

உதாரணமாகச் சுட்டப்படவேண்டியது தாராசங்கர் பானர்ஜியின் கதை ஒன்றில் குற்றப்பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து ஒருவரால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படும் இளைஞனுக்குள் அவன் இயல்பான வன்முறை வெளிப்படுவது அங்கே குட்டியாக இருக்கையிலேயே எடுத்துவளர்க்கப்படும் நரி நாய்க்குட்டியாக இருந்து மெல்லமெல்ல நரியாக மாறும் காட்சியினூடாக காட்டப்படுகிறது. அதன் அனைத்துப் பழக்கங்களையும் அன்பையும் மீறி இரவு அதை கான்விலங்காக மாற்றுகிறது.

 

இவ்வியல்பால் ஆப்பிளுக்குமுன் நாவல் எழுதச் சாத்தியமான பெருநாவல் ஒன்று அவசரமான குறிப்புகளாக வெளிப்பட்டிருப்பதன் சித்திரத்தை அளிக்கிறது. எல்லா அத்தியாயங்களும் சிறியவை. அவற்றுக்குள் வாசகன் சென்று அமைந்து அதை ஒரு வாழ்வென எண்ணுவதற்குள் முடிந்துவிடுகின்றது. எல்லா அத்தியாயங்களிலும் ஒரு குறையுணர்வு உருவாவதால் அடுத்த அத்தியாயத்துக்கு வாசகன் செல்கிறான். அதன் விளைவாக ஒரே மூச்சில் வாசிக்கத்தக்க நூலாக உள்ளது

 

ஒரேமூச்சில் வாசிக்கத்தக்கது, வாசிக்கவேண்டியது சிறுகதையும் குறுநாவல்களுமே. நாவல்கள் அவ்வாறு வாசிக்கப்படுகையில் பக்கவாட்டுவிரிவுகள் இல்லாமலாகின்றன. ஒற்றைநேர்கோடென வாசகனின் கவனம் முடிவைநோக்கிச் செல்கிறது. உண்மையில் ஒரு நாவல் வாசகனுக்கு அளிக்கும் தடைதான் அதை அவன் தன் அறிவை, நுண்ணுணர்வை கொண்டு உந்தி உடைத்து முன்செல்லவைக்கிறது. அது செயற்கையாக மொழியாலோ வடிவாலோ உருவாக்கப்பட்ட தடையாக இருக்கக்கூடாது. உணர்வுகளாலும் சிந்தனையாலும் உருவாகும் தடையாக இருக்கவேண்டும். நாவலின் வடிவம் அதுவே.

 

சிறிய நாவல்கள் மிகச்சிறிய அத்தியாயங்களுடன் அமைவதுண்டு. நவீனத்துவ நாவல்களின் யுகத்தில் அத்தகைய ஆக்கங்கள் பல வந்தன. உதாரணம் கிழவனும் கடலும் [ஹெமிங்வே] சித்தார்த்தார் [ஹெர்மான் ஹெஸ்] அன்னியன் [அல்பேர் காம்யூ] .ஆனால் நவீனத்துவநாவல்கள் இரண்டு வகைகளில் தங்கள் சுருங்கியவடிவை நியாயப்படுத்திக்கொண்டன. அவை அடர்த்தியான, பாவியல்புகூடிய புனைவுமொழியினூடாகவும் அதிலுருவாகும் நவீனக் கவித்துவம் வழியாகவும் நீளத்தைச் செறிவாக ஆக்கிக் கொண்டன. அல்லது உணர்வுவெளிப்பாடற்ற,நேரடியான, நெகிழ்வற்ற மொழியின் வழியாகச் சுருக்கத்தை அடைந்தன. அந்நிலையில் கூறுபொருளும் ஆசிரியனின் கோணமும் மட்டுமே எழுந்து வாசகன்முன் நின்றது, கூறல்முறை முற்றிலும் மறைந்தது.

app

ஆப்பிளுக்கு முன் நவீனத்துவநாவல் அல்ல.நவீனத்துவ நாவலில் உள்ள விலக்கமும், உணர்ச்சிகலவாமையும், தர்க்கத்தன்மையும் இதிலில்லை. நவீனத்துவத்திற்குப் பிந்தைய புனைவெழுத்தின் நெகிழ்வுத்தன்மையும் பலகுரல்தன்மையும் கொண்ட ஆக்கம் இது. ஆகவே அவ்வடிவம் கோரும் விரிவை அடையாமலேயே நின்றுவிட்டதாகவே இந்நாவலை எண்ணவேண்டியிருக்கிறது.

 

நவீனத்துவநாவல்கள் எவ்வகையில் தங்கள் சுருக்கவடிவை அடைந்தன என்று நோக்குவது உகந்தது. அவை முதன்மையாக வரலாற்றை விலக்கின. ஒவ்வொரு வாழ்க்கைத்துளிக்கும் பின்புலமாக விரிந்து செல்லும் காலப்பின்னணியை தவிர்த்தன. நிகழ்காலத்தில், சொல்லப்பட்ட கதைமாந்தருக்குள் வைத்து மட்டும் தங்கள் நோக்கை முன்வைத்தன. உதாரணமாக காம்யூவின் அன்னியன் நாவல் எந்த வரலாற்றுப்பின்னணியில் நிகழ்கிறது? அல்ஜீரியனை மெர்சோ கொலைசெய்வதற்குப்பின்னால் அன்றைய பிரான்ஸின் இனப்பாகுபாடு சார்ந்த நோக்கு இருந்ததா? அதன் காலனியாதிக்கப் பின்புலம் அதில் பங்கு வகித்ததா?

 

அத்தகைய கேள்விகளுக்கு அந்நாவலில் இடமில்லை. அது மெர்சோவின் இருத்தலியல் சிக்கலை மட்டுமே பேசியது. அது அவன் தன்னுள்  ‘ஒரு மனிதனாக’ உணரும் தத்துவக்கேள்வி மட்டுமே. அந்த வரலாற்றுமறுப்பின் உள்ளீடின்மையை அப்போதே இடதுசாரிகள் சுட்டிக்காட்டினர். பின்னர் வேறுகோணத்தில் அதை பின்நவீனத்துவர் விரிவாக முன்வைத்தனர்.

 

இரண்டாவதாக, நவீனத்துவயுக நாவல்கள் ஆளுமைகளுக்கிடையேயான மோதல்களைத் தவிர்த்தன. அவற்றை மிகச்சிறிய உரசல்களாக மட்டுமே முன்வைத்தன. இறுதியாக, அவை மானுட அகத்தை தெளிவாக வரையறுக்கப்பட்ட அமைப்பாக முன்வைத்தன. ஆகவே எண்ணங்களும் எதிர்வினைகளும் திட்டவட்டமானவையாக, சுருக்கமானவையாக இருந்தன. மானுட உள்ளம் கணந்தோறும் உருமாறுவதை, வகைவகையான பாவனைகளினூடாக தன் ஆளுமையை புனைந்துகொண்டே செல்வதை நவீனத்துவத்தைக் கடந்துவந்த நாவல்களே சென்றடைந்தன. மெர்ஸோ உணரும் தன்னிலை எவ்வளவு உறுதியானது என்று நோக்குக. அது புனைவல்ல, அவன் ஆழம் என்றே ஆசிரியரும் நினைக்கிறார். எல்லா ஆழங்களும் புனைவுகளே என இன்றைய ஆசிரியன் எண்ணக்கூடும்.

 

இக்காரணத்தால்தான் இன்றைய நாவல்களுக்கு நீள்சித்தரிப்புகள் தேவையாகின்றன. சரவணக் கார்த்திகேயனின் இந்நாவலையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்நாவலில் அவர் பேசியிருக்கும் காந்தியின் பாலியல்சோதனை என்பது அன்றைய சுதந்திரப்போராட்ட இலட்சியவாதத்தின் பின்னணியில் என்ன பொருள்கொள்கிறது? ஒருவகையில் அது மொத்தச் சுதந்திரப்போராட்ட உளநிலைக்கும் நேர் எதிரான ஒன்று அல்லவா?

 

இன்னும் ஒரு கோணத்தில் நோக்கினால் அந்தச்சோதனைகள் வெளியே தெரிந்தபோது உருவாகும் அதிர்ச்சியும் பரபரப்பும்தான் இந்தியாவுக்கு அன்னியமானது. எல்லாவகையான ஆன்மிகச்சோதனைகளையும் ஏதோ ஒருவகையில் அங்கீகரிக்கும் தாந்த்ரீகப் பாரம்பரியம் கொண்டதேசத்தில் படித்த நடுத்தர வர்க்கத்திடம் நூறாண்டுகளுக்குள் உருவான விக்டோரிய ஒழுக்கவியல்தான் அந்த அதிர்ச்சியை உருவாக்கியது

 

அன்றைய இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது இரண்டு கருத்தியல்களின் முயக்கத்தால் உருவானது. ஒன்று, இந்துமதமறுமலர்ச்சியிலிருந்து உருவான இந்திய அரசியல்தேசிய உருவகம். இங்கிருந்த பண்பாட்டுத்தேசம் ஒன்றை அரசியல் தேசமாக உருமாற்றம் செய்துகொள்ளும் பரிணாமம் அது. தயானந்தசரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் என எழுந்து வந்த ஒரு பண்பாட்டு அலை. இன்னொன்று,ஐரோப்பிய சிந்தனைகளின் ஊடுருவலால் உருவான பண்பாட்டு அலை. அது ஆங்கிலக்கல்வி வழியாக இங்கே வந்தது.

 

இந்த இரண்டாவது அலை இரண்டு உட்சரடுகளால் ஆனது. முதல் ஐரோப்பா அறிவியல்நோக்கு, பெருந்தொழில், நுகர்வோர் பண்பாடு, தாராளவாதக் கருத்துக்கள் ஆகியவற்றால் ஆனது. இன்னொரு ஐரோப்பா அறிவியலுக்கு மாற்றான சிந்தனைகள், தனிமனித ஆன்மிகம் ஆகியவற்றால் ஆனது. ஒன்று, வால்டேரின் ஐரோப்பா. இன்னொன்று தோரோவின் ஐரோப்பா. வால்டேரின் ஐரோப்பாவின் வாரிசுகள் நேருவும் அம்பேத்கரும். தோரோவின் ஐரோப்பாவின் வாரிசு காந்தி.

 

மெல்லமெல்ல காந்தி இந்துமறுமலர்ச்சிக்காலத்தின் மதிப்பீடுகளையும் உள்வாங்கிக்கொண்டார். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் இரு பண்பாட்டுச்சரடுகளையும் இணைப்பவராக ஆனார். அதுவே அவரை பிறரிலிருந்து மேலே நிறுத்தியது. அவர் ‘மகாத்மா’ ஆக ஆனது அவ்வாறுதான். அவர் தேசியத்தலைவர்கள் எவருக்கும் இல்லாத மக்கள்செல்வாக்கை அதனூடாகவே அடைந்தார். நவீனக்கல்வி பெற்று ஐரோப்பியத் தாராளவாதத்தையும் விக்டோரிய ஒழுக்கவிய்லையும் கற்றுக்கொண்ட தேசியத்தலைவர்களால் புரிந்துகொள்ள முடியாதவராகவும் ஆனார்.

 

இச்சூழலில் காந்தியின் பாலியல்சோதனைகள் என்னபொருள் கொள்கின்றன? இது மேலே சொன்ன மூன்று பண்பாட்டுச்சரடுகளில் உருவாக்கும் அதிர்வு என்ன? இன்றையநாவல் இக்கருவை எழுதமுயல்கையில் காந்தியை அந்த வரலாற்றுப்புள்ளியில்தான் கொண்டு சென்று நிறுத்தும். அந்த சூழலைக் கட்டமைக்கும் தகவல்விரிவை உருவாக்கிக்கொள்ளும்.

 

பிறிதொரு கோணத்திலும் வரலாற்று அணுகுமுறைக்கு இடமுள்ளது. இந்தியப்பண்பாட்டு ஒழுக்கின் இரண்டு சரடுகள் பக்திமரபும், தாந்த்ரிக மரபும். தன்னை இறைவனுக்கு, அல்லது இறைநிகரான பெருஞ்செயல்களுக்கு முற்றாக அர்ப்பணிப்பது, அதன்பொருட்டு தன்னை கரைத்தழிப்பது பக்திமரபு. காந்தியின் பொதுமுகம் அதுவே. தன்னை வைஷ்ணவப் பக்திமரபின் ஒரு நீட்சியாகவே அவர் முன்வைத்தார். பஜனைகள், கீதைபாராயணம் அனைத்தும் அதன் கூறுகள்

 

ஆனால் அவருடைய பாலியல்சோதனைகள் தாந்த்ரீகமரபுக்குள் இருந்து கிளைத்தவை. அதற்கு அவருக்கு சில முன்னுதாரணங்களும் ஆசிரியர்களும் இருந்தனர். அவற்றைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன். தாந்த்ரீகச் செயல்பாடுகளை பக்தியுடன் இணைக்க காந்தி முயன்றார். அவற்றிலிருந்த ரகசியத்தன்மையை அதன்பொருட்டு களைந்தார். அதனூடாக பெரும் கொந்தளிப்பை உருவாக்கினார். இந்த இருநிலையின் கொந்தளிப்பே அவருடைய இறுதிக்காலக் குழப்பங்கள்.

 

அவருடைய அந்த இருநிலை அவருடனிருந்த பெண்களை எப்படிப் பாதித்தது? அவர்கள் அதை எப்படிப் புரிந்துகொண்டார்கள்? அவர்கள் வளர்ந்து வந்த சூழலை நோக்குகையில் மீண்டுமொரு வரலாற்றுப்பின்புலம் தேவையாகிறது. நம் குடும்ப அமைப்புக்குள் நல்ல மனைவியாக ஆகும்பொருட்டு வளர்க்கப்படும் ஒரு பெண் இதை எதிர்கொள்ளும்போது என்னென்ன உளவியல்கள் வழியாகக் கடந்துசெல்லவேண்டியிருந்தது?

 

வரலாறற்ற தன்மையின் விளைவான சுருக்கமே இந்நாவலின் முக்கியமான குறைபாடு என்று சொல்வேன். இது காந்திக்கும் அவருக்கு அணுக்கமாக இருந்த பெண்களுக்கும் அவருடைய சோதனைகளை அறியநேர்ந்த சிலருக்குமான உளமோதல்கள், உணர்வுகளாக மட்டுமே நின்றுவிட்டிருக்கிறது.

mahatma-gandhi-at-age-70-with-his-two-everett

இந்நாவலின் அடுத்த குறைபாடு இதன் நடை. வணிக எழுத்திலிருந்து பெறப்பட்டது. சுஜாதாவும் வைரமுத்துவும் ரகசியமாக மின்னிமின்னிச் செல்லும் நடை இத்தகைய நாவலை மிகவும் அயலானதாக ஆக்குகிறது. உதாரணமாக ‘அன்று கட்டிலில் எட்டு கால்களும் சேராமலேயே இருந்தன’ என்பதுபோன்ற ஒரு வரி சட்டென்று நாவல் உருவாக்கும் அனைத்திலிருந்தும் உதைத்து வெளியே தள்ளுகிறது. இந்த வரியை ‘நயம்’ என நினைக்கும் உள்ளம் இலக்கியத்தின் உலகு சார்ந்தது அல்ல. இது கவியரங்க ரசனை, தமிழக மேடைப்பேச்சு ரசனை.

 

ஒன்றை சமத்காரமாகச் சொல்வது அதன் மதிப்பை கீழிறக்கும். அதைச் சொல்பவன் திரைவிலக்கி முன்னால் வந்து நிற்பதுபோன்றது அது. இலக்கியப்படைப்பில் தவிர்க்கப்படவேண்டியது. சரவணக் கார்த்திகேயனின் முந்தைய கதைகளிலும் இந்தக்குறையை வலுவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதைக் களைவது எளிதும் அல்ல. ஏனென்றால் இது ஓர் அகநிலை மொழியாக வெளிப்படுவது. முயன்று, தன்னைத்தானே உற்றுநோக்கி, நடையிலிருந்து இக்கூறுகளை ஈவிரக்கமில்லாமல் களைந்து மட்டுமே இலக்கியநடை நோக்கி வரமுடியும். சரவணக் கார்த்திகேயன் ஓர் இலக்கியப் படைப்பாளிக்குரிய நடையை நோக்கி வர கடும் முயற்சி எடுத்தாகவேண்டும்.

 

இந்நாவலுக்குப் பொருத்தமான நடைகள் இரண்டுதான். ஒன்று, உணர்ச்சிகலவாத தகவல்களால் ஆன இதழியல்நடை. அது இக்கதையின் நம்பகத்தன்மையை நிலைநாட்டும்.ஆனால் சரவணக் கார்த்திகேயனின் நாவல் புறவயத்தகவல்களை குறைத்து கதைமாந்தரை மையமாக்குகிறது. அந்நிலையில் அவர்களின் உணர்ச்சிகளை நேரடியாக, நம்பகமாக, அளவுக்குட்பட்டு வெளிப்படுத்தும் நடை பொருத்தமானது. அதில் சொல்ஜாலங்களோ சமத்காரங்களோ பெரிய திரிபாகத் தெரியும்.

 

இந்நாவல் இந்த முக்கியமான எல்லைகளையும் குறைபாடுகளையும் கடந்து முக்கியமானதாக ஆவது முதலில்குறிப்பிட்டதுபோல வரலாற்றையும் வரலாற்றுமாந்தரையும் சூழலில் புழங்கும் இரு துருவநிலைகளுக்கும் சென்று நின்று நோக்காமல் அறியும்தன்னிலையாக நின்றிருக்கும் ஆசிரியன் நோக்கில் உண்மையுடன், நேர்மையுடன் அணுகியிருப்பதனால்தான். ஆகவே இதன் எளிய, சிறிய சித்தரிப்பு வளையத்திற்குள்ளாகவே வாசகன் சென்றடையும் நுட்பங்களும் அரிய உணர்ச்சித்தருணங்களும் வாழ்க்கைக் கண்டடைதல்களும் சில உள்ளன.

 

இந்நாவலின் கட்டமைப்பு காந்தியின் பாலியல்சோதனைகளை அப்பெண்கள் எவ்வாறு பார்த்தனர் என்பதை ஒட்டியே உள்ளது.சுசீலா நய்யார் போன்றவர்கள் அதை காந்தியுடனான அணுக்கத்திற்கான வழியாக பார்க்கிறார்கள். காந்தி ஓர் அதிகாரமையம். நேரடியான உலகியல் அதிகாரம் மட்டுமாக அதை எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. ஆன்மிகமான அதிகாரமும்கூட. அது எளிதானது அல்ல. இந்தியாவில் முற்றாகவே பாலியலுக்கு அப்பாலிருந்த கிறுக்கர்களும் தனியர்களுமான ஆன்மீக சாதகர்களுக்குக்கூட இதேபோல எச்சமின்றி அர்ப்பணித்துக்கொள்ளும் மாணவிகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

 

காந்தியின் அதிகாரம் பெண்களை ஈர்க்கிறது. தங்களை முக்கியமாக எண்ணிக்கொள்ள, தங்கள் வரலாற்றுப்பங்களிப்பை கற்பனைசெய்துகொள்ள அது உதவுகிறது. ஆகவே அவர்களுக்குள் நுட்பமான உளவியல்போட்டிகள் உள்ளன. அவர்களில் மனு அன்றி எவருக்கும் அதில் முழுதுளத்தாலும் ஈடுபட இயலவில்லை. தவிர்த்து விலகவும் முடியவில்லை.   அவற்றை குறைவான தருணங்கள் வழியாக கூர்மையாகவே சரவணக்கார்த்திகேயன் விவரிக்கிறார்.

 

இந்த அதிகாரப் போட்டியில் ஒருவகையில் கஸ்தூர்பாவும் இருக்கிறார். அவருக்கு காந்தியுடன் எந்தப்பெண் எவ்வகையில் அணுகக்கூடும் எனத் தெரிந்திருக்கிறது. அதற்கு தடையமைக்கவும், காய்கள்நீக்கவும் அவர் முயல்கிறார். அனைத்துப் பெண்களும் வெவ்வேறுவகையில் அந்த ஆடலின் ஏதேனும் ஒருகட்டத்தில்தான் உள்ளனர் என்று நாவல் காட்டுகிறது

 

அந்த ஆடலுக்குள் எவ்வகையிலும் ஈடுபடாதவளாக இருக்கிறாள் மனு. இந்நாவலின் அழகிய குணச்சித்திரமே மனுதான். இளமைக்குரிய கள்ளமின்மை என அதைச் சொல்லலாம். அல்லது கி.ராஜநாராயணனின் சொற்களில் சொன்னால்  ‘கன்னிமை’. அதன் ஆன்மிகமான வல்லமையால் அவள் பிறர் எவரும் புரிந்துகொள்ளாத காந்தியைக் கண்டடைகிறாள். காந்தி எனும் அன்னையை. இந்த அம்சமே இந்நாவலை ஒரு கலைப்படைப்பாகிறது. எளிய அரசியல்படைப்பாகச் சிறுத்துவிடக்கூடிய வாய்ப்புள்ள ஒரு கரு இங்கே கலையால் மட்டுமே கூர்மையாகச் சொல்லப்பட இயல்வதான ஒரு நுண்முடிச்சாக ஆகிவிடுகிறது.

 

மனு காந்தியுடனான சோதனைகளை ரகசியமாக நினைக்கவில்லை. அவற்றை காந்தியே கேட்டுக்கொண்டதற்கேற்ப தன் பெற்றோருக்குத் தெரிவிக்கிறார். முறையாகப் பதிவுசெய்கிறாள். தன் உளக்குழப்பங்களையும் பாலியல்விழைவுகளையும்கூட காந்தியிடம் பகிர்ந்துகொள்கிறாள். இளமையிலேயெ அன்னையை இழந்த மனு மெல்ல மெல்ல காந்தியில் ஒரு ஆசிரியனையும், ஆன்மிகவழிகாட்டியையும், தோழனையும் இறுதியாக அன்னையையும் கண்டுகொள்கிறாள்.

 

மனுவில் தொடங்கி மனுவில் முடியும் இந்நாவல் காந்தி அவருடைய பாலியல்சோதனைகளில் முயன்றதென்ன என்பதை கண்டடைகிறது. பாலியலினூடாக காந்தி தன்னுடலில் உறைந்த ஆணை எழுப்பவில்லை, அவனை அணையச்செய்கிறார். அடக்கி ஒடுக்கவும் முயலவில்லை, அவனை பெண்ணாக்கிக்கொள்ள முயல்கிறார். அன்னையென்றாவதன் கனிவினூடாக தான் ஆன்மிகமான முதிர்ச்சியை அடையமுடியும் என்றும் அதனூடாக ஆற்றல்பெற்று தன் இலக்குகளை நோக்கிச் செல்லமுடியும் என்றும் நம்புகிறார்

 

அந்நம்பிக்கை எத்தகையது, அதை அவர் முறையாக அதன் மரபிலிருந்து கற்றுக்கொண்டாரா அல்லது அவருடைய தன்போக்கிலான உளமயக்கங்களா அவை என்பதெல்லாம் வேறுவினாக்கள். ஆனால் நம் விக்டோரிய அறவியலால் நாம் போகிறபோக்கில் மதிப்பிட்டு கருத்துசொல்லிக் கடந்துசெல்லும் தன்மைகொண்டவை அல்ல அவை. ஒரு விந்தையான, வேறுபட்ட பேருள்ளத்தின் அலைக்கழிப்புகள். தன்னை அழித்து பிறிதொன்றாக அதுகொள்ளும் முயற்சியின் படிநிலைகள். மேதைகளுக்கும் கிறுக்கர்களுக்குமிடையே எப்போதுமே வேறுபாடு மிகநுட்பமானதே. பிறிதொரு மேதையால் சென்று தொடத்தக்க அந்த நுண்ணிய தளத்தை மனு தன் கள்ளமற்ற குழந்தைத் தன்மையால் எளிதாகச் சென்று தொட்டுவிடுவதை இந்நாவல் காட்டுகிறது

 

காந்தியையும் மனுவையும் கறாரான உலகியல்தன்மையுடன் மதிப்பிடும் ஆளுமையாக இந்நாவலில் தக்கர்பாபா வருகிறார். உடலென்று வந்திருப்பது உலகையும் உயிர்க்குலத்தையும் படைத்து நிலைநிறுத்தும் விசைகளின் தொகுதி என்றும் மானுடன் அதன் விழைவுகளுக்கும் இடர்களுக்கும் கட்டுப்பட்டவனே என்றும் அறிந்தவர். காந்தியும் மனுவும் தனித்து நடந்துசென்றுகொண்டிருக்கும் அந்தப்பாதை அவர்களின் பொதுவான உளமயக்காக இருக்கக்கூடும் என்றும் அதனூடாக அவர்கள் ஒருபோதும் விரும்பமுடியாத இடங்களுக்குச் சென்றுவிடக்கூடும் என்றும் உணர்ந்தவர்.

 

இந்நாவலில் உள்ள முரணியக்கம் என்பது தக்கர்பாபா ஒருபக்கமும் மனுவும் காந்தியும் மறுபக்கமுமாக நின்று நிகழ்த்துவதே. அந்த உரையாடல்களினூடாக இந்நாவல் இதன் புனைவுத்தளத்திலிருந்து தத்துவார்த்தமாக மேலெழுகிறது. முன்னரே விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுபோல இதுவே ஆப்பிளுக்குமுன் நாவலின் சாரம்

 

காமத்தை எதிர்தெய்வத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு முந்தைய ஆதமாகவும் ஏவாளாகவும் ஆகிவிடமுடியுமா என முயன்ற இருவரின் கதை இது. காமமற்ற நிலையை புனிதமாக்குவதென்பது இந்திய மரபில் உள்ளது அல்ல, அது செமிட்டிக் மரபிலிருந்து மதங்களுக்குள் சென்றது. காந்தி மனுவை ‘தூய்மையானவள்’ என்று பார்ப்பது இந்தியப் புராணங்களின் உளநிலையே அல்ல.அவர் செய்துகொண்ட அந்த சோதனைகளுக்கும் இந்திய மதமரபில் இடமில்லை. மனு அவருக்கு தாந்தேயின் பியாட்ரீஸ் போன்ற தேவதை. இந்திய தாந்த்ரிக மரபின் சில சோதனைகளை கிறித்தவ உருவகங்களுடனும்  இணைத்து தனக்கான பயிற்சிகளை தானே உருவாக்கிக்கொண்டார். ஆகவே ஒரு வகையில் ஆப்பிளுக்கு முன் என்னும் செமிட்டிக் மதக் குறியீடு இந்நாவலுக்குப் பொருத்தமானதாகவே உள்ளது.

 

சிக்கலான இந்த பேசுபொருளை வாசகனைச் சீண்டும் நோக்கமின்றி, எந்நிலையிலும் எளிமைப்படுத்தாமல், அதேசமயம் வழக்கமான புகழ்பாடல்களை நோக்கியும் செல்லாமல் எழுதமுடிந்திருப்பதனால் இது தமிழில் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக ஆகிறது

ஆப்பிளுக்கு முன், சி.சரவணக்கார்த்திகேயன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35

$
0
0

bowபாண்டவப் படைமுகப்பில் பூரிசிரவஸ் தன் தேரில் அமர்ந்து எதிரே எழுந்த செவிநிறைத்துச் சூழும் முழக்கத்தை கேட்டான். “எதிர் வருகிறது யானை நிரை! நேர்கொள்க! யானை நிரை! எதிரில் யானைப்படை!” என்று முரசுகள் ஒலித்தன. பூரிசிரவஸ் தன் கழையனிடம் கைகாட்ட அவன் கணுக்கழையில் தொற்றி மேலேறி அணிலென அதே திசையில் தலைகீழாக கீழிறங்கி குதித்து “நூற்றெட்டு யானைகள் ஒற்றைத்தண்டு கொண்டு வருகின்றன” என்றான். “பதினெட்டு தண்டுகள் எழுந்துள்ளன.” பூரிசிரவஸ் “ஒற்றைத்தண்டா?” என்று திகைத்த மறுகணமே அதை உளத்தால் கண்டான். “தேர்கள் பின்னடைக! படை பின்னடைக!” என்று அவன் ஆணையிட்டான். அவன் ஆணையை முரசுகள் ஒலித்தன.

ஆனால் அவன் எண்ணியவாறு தேர்கள் பின்னடைய இயலவில்லை. முகப்பில் வில்லவர்கள் ஊர்ந்த தேர்கள் பாண்டவப் படைமுகப்பிலிருந்து பின்னகர வேண்டுமென்றால் முகம் திருப்பி வளைய வேண்டியிருந்தது. அவை ஒன்றுடன் ஒன்று விலாசெறிந்து சென்றுகொண்டிருந்தமையால் அதற்கான இடம் இருக்கவில்லை. திரும்பிய ஓரிரு தேர்கள் பிற தேர்களுக்கு இடையூறாயின. புரவிகள் ஒன்றுடன் ஒன்று கால்தட்டி கனைத்தன. சவுக்குகளை அறைந்தபடி வசைச்சொற்களைக் கூவி தேர்களை பின்னிழுத்து கொள்ள முயன்றனர் பாகர்கள். அதற்குள் நூறு யானைகள் சேர்ந்து பற்றிய பெரும் தண்டு ஆழிப்பேரலை என அணுகி வந்தது. விலகவோ ஒழியவோ இயலாதபடி தேர்கள் சிக்கிக்கொள்ள அவற்றை அறைந்து சிதறடித்தபடி அணுகியது.

பூரிசிரவஸ் அந்த அறைதலை ஓசையென்றே உணர்ந்தபடி கைவீசினான். அவன் தேர் பின்னடைந்தது. “மேலும் பின்னடைக! மேலும் பின்னடைக! எதிர்கொள்ளல் ஒழிக!” என்று அவன் கூவினான். “நெடுவில்லவர் முன்னெழுக! தொலையம்புகளை ஏவி யானைகளின் பின்பகுதியை தாக்குங்கள்” என்றான். மத்தகக் கவசம் அணிந்த யானைகளின் நெற்றிமுழைகள் மேல் வில்லவர்களின் அம்புகள் சென்றுபட்டு உதிர்ந்துகொண்டிருந்தன. உடைந்த தேர்களிலிருந்து நுகம் சிதறிய புரவிகள் கனைத்தபடி திரும்பி ஓடிவர, பின்னால் நின்ற தேர்களின் புரவிகள் அவற்றை தடுக்க அங்கு பெருங்குழப்பம் நிலவியது.

கண்ணெதிரில் கௌரவப் படை முழுமையாக சிதறடிக்கப்பட்டுவிட்டதை பூரிசிரவஸ் பார்த்தான். பிறிதொரு அலையாக சற்று அப்பால் மேலும் நூறு யானைகள் பெருந்தண்டு கொண்டு முன்னெழுந்து வந்தன. தண்டேந்திய யானைகளை முகப்பில் அமைக்காமல் வேண்டுமென்றே வில்லவர்களின் தேர்களை முன்னால் நிறுத்தி யானைகளை முற்றிலும் மறைத்து சிகண்டி படைகொண்டு வந்திருக்கிறார் என்று அவன் புரிந்துகொண்டான். வில்லவருக்கெதிராக தேர்வில்லவர் கௌரவர் தரப்பில் அணிநிரந்திருந்தனர். அவர்கள் அம்புகளால் எதிர்கொண்டதும் ஓரு முரசாணையால் பாண்டவ வில்லவர்கள் ஒதுங்கி வழிவிட அவர்களுக்குப் பின்னாலிருந்து தண்டேந்திய யானைகள் முன்னால் எழுந்து வந்தன.

நொறுங்கிய தேர்களை மிதித்து உடைத்துத் நெறித்தபடி யானைநிரை மேலும் மேலும் முன்னால் வந்தது. ஏந்திவந்த தண்டால் ஒன்றுடன் ஒன்று இணைத்து தொகுக்கப்பட்டதால் அவற்றின் விசை ஒவ்வொரு பகுதியிலும் பன்மடங்காக இருந்தது. அந்த அடியை தடுக்கவே இயலவில்லை. தொடர்ந்து பின்னகர்ந்து இணைந்து இணைநிரையென்றாகின கௌரவர்களின் தேர்கள். தேரில் நிலைகொண்டு பெருவில்லெடுத்து நீளம்பு தொடுத்து வானில் எய்து அது வளைந்திறங்கி யானை மேல் விழச்செய்தான் பூரிசிரவஸ். அவனைத் தொடர்ந்து அம்புகள் எழுந்து வளைய அம்புகளாலான ஓர் யானைமுதுகு காற்றிலெழுந்தது. “யானை மேலிருக்கும் பாகன்களை மட்டும் குறிவையுங்கள்” என்றான். “யானைப்பாகன்களை குறிவையுங்கள்!” என்று அவன் ஆணை காற்றிலேறியது.

ஆனால் யானைகளும் பாகன்களும் கவசமணிந்திருந்தமையால் அம்புகள் பெரும்பாலும் பயனற்றன. பின்னகர்ந்துகொண்டிருந்த கௌரவப் படையினரால் குறிபார்க்கவும் இயலவில்லை. நெடுவிற்களை காலில் மிதித்தூன்றி நுனிபற்றி இழுத்து வளைத்து அவர்கள் எழுப்பிய அம்புகள் எவருக்கென்றன்றி எழுந்து இலக்கடையாது அறைந்து விழுந்தன. பூரிசிரவஸ் தன் வலது இடது என இரு பகுதிகளிலும் அலறல் ஒலிகளை கேட்டான். மேலும் பின்னகர்ந்தபோது முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தான். இரு பகுதிகளிலிருந்தும் முரசுகள் “முன்னகர்க! யானைப்படை முன்னகர்க!” என்று ஆணையிட்டன. யானைகள் ஏந்திவந்த தண்டு அணுகி வருந்தோறும் பெருகுவதைப்போல அவனுக்கு தோன்றியது. அது தோதகத்திப் பெருமரங்களை இரும்புப்பூணிட்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவாக்கப்பட்டது. அதில் கூரிய இரும்புமுனைகள் பொருத்தப்பட்டிருந்தன.

மேலும் தேரை பின்னெடுக்க இயலாமல் பின்னிருந்து வந்த படையுடன் முட்டிக்கொள்ள அவன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி விரைந்துகொண்டிருந்த புரவியொன்றின் மேலேறினான். கைதூக்கி “பின்னகர்க! இறப்புகளை குறைத்துக்கொள்வதொன்றே வழி! இறவாதொழிக!” என்று ஆணையிட்டான். அவன் படைவீரர்கள் தேர்களிலிருந்து பாய்ந்திறங்கினர். ஆனால் பின்னால் நின்றவர்கள் அதற்கு வழியிலாது திகைக்க தண்டு தேர்களின் மேல் பாய்ந்தது. நூற்றுக்கணக்கான தேர்கள் நொறுங்கும் ஒலி எழ பூரிசிரவஸின் முதுகு சிலிர்ப்படைந்தது. தேர்களும் புரவிகளும் தேர்வலரும் வில்லவரும் இணைந்த திரள் உடைந்து சிதைந்து தண்டின் மீதும் களிறுகளின் கால்களிலுமாக நிலத்திலமைந்தது. பூரிசிரவஸ் கண்களை மூடிக்கொண்டான்.

கௌரவப் படைகளுக்குப் பின்புறம் எங்கோ சங்கொலி எழுந்தது. அது எவருடையதென்று உணர்வதற்கு முன்னரே அவன் உடல் மெய்ப்புகொண்டது. அதன் பிறகே பால்ஹிகரின் கவசயானையான அங்காரகன் துதிக்கை தூக்கி பிளிறியபடி தேர்களை பிளந்துகொண்டு வருவதை அவன் கண்டான். அதன் அடுத்த பிளிறல் மேலும் அருகே ஒலித்தது. மூன்றாவது பிளிறலில் அது அவனைக் கடந்து சென்றது. அங்காரகன் குருதிவழிய சிவந்திருந்தது. அதை சிவந்த யானை என பால்ஹிகர் சொல்லிக்கொண்டிருந்ததை அவன் நினைவுகூர்ந்தான். பால்ஹிகரின் பெருத்த கதையின் சங்கிலியை அவரது யானை துதிக்கையால் பற்றியிருந்தது. அதன் நுனியை அவர் தன் வலக்கையில் பிடித்திருந்தார். உரக்க நகைத்தபடி இரு கால்களாலும் யானையின் விலாவை அணைத்தபடி சிறுவன்போல் எழுந்தெழுந்து நகைத்தார். “செல்க! செல்க!” என்று அவர் ஓசையிடுவது கேட்டது.

அங்காரகன் அவருடைய கதையை தன் துதிக்கையால் சுழற்றி விசையுடன் முன் வீச பெரும் குமிழி பறந்து சென்று நூறு யானைகளால் கொண்டு வரப்பட்ட தண்டின் மேல் அறைந்து விரிசலோசை எழுப்பியது. அதை ஏந்தியிருந்த யானைகள் அனைத்தும் அவ்வதிர்வால் திகைத்து நின்று செவிகூட்டின. இரண்டு யானைகள் தண்டை துதிக்கையிலிருந்து விட்டுவிட்டு பிளிறலோசை எழுப்பின. பால்ஹிகர் பெருங்கதையின் விசையை தன் கைகளால் ஏந்திச்சுழற்றி மீண்டும் ஓங்கி அறைந்தார். இம்முறை மத்தகத்தில் அறைபட்டு கவசத்துடன் தலை சிதற ஒரு யானை பிளிறி முழந்தாளிட்டு விழுந்தது. அனைத்து யானைகளும் திகைத்து நிற்க மேலும் ஒரு யானையை அறைந்து வீழ்த்தினார்.

அங்காரகன் கதையின் நுனியைப்பற்றி மீண்டும் சுழற்றி வீச அடுத்த அறையில் பெருந்தண்டில் இருந்து மெல்லிய முனகலோசை ஒன்று எழுகிறதா என்று பூரிசிரவஸ் வியந்தான். விழிகளும் ஒலிகேட்கப் பழகுவதென்பது போர்க்கலையின் தேர்ச்சிகளில் ஒன்று. மீண்டும் ஒருமுறை கதை சென்று அறைந்து எழுந்தபோது யானைகளில் ஒன்று தண்டை விட்டுவிட்டு துதிக்கையை மேலே தூக்கி சினத்துடன் பிளிறலோசை எழுப்பியது. அது பிடியானை என்பதை பூரிசிரவஸ் நோக்கினான். அனைத்து யானைகளும் அந்த யானையின் ஆணைக்கு கட்டுப்பட்டவையாக உரக்கப் பிளிறியபடி தண்டைத் தள்ளி முன்னெடுத்தன. பால்ஹிகரின் கதை மீண்டும் ஒருமுறை சென்று அறைய யானைகளின் உந்துவிசையாலேயே தண்டின் நடுப்பகுதி விரிசலிடத் தொடங்கியது.

பூரிசிரவஸ் “தண்டின் நடுப்பகுதியை தாக்குக! தாக்கி முன்னெடுங்கள்!” என்று கூவினான். அதற்குள் அவன் படைகளின் பின்னிலிருந்து வந்து விட்டிருந்த மூன்று யானைகள் நீள் தண்டை ஏந்தி விரைந்து முன்னால் சென்றன. அவற்றிலிருந்த பாகர்கள் ஆணையிட அத்தண்டால் எதிர் வந்துகொண்டிருந்த தண்டின் விரிசலிடும் பகுதியை ஓங்கி அறைந்தன. தண்டு இரண்டாக முறிந்து மடிந்தது. அவ்விசைச் சிதறலால் யானைகள் கால் தடுமாறி பிளிறி தண்டை விட்டன. பால்ஹிகர் மீண்டுமொருமுறை தன் கதையால் அறைந்து அத்தண்டை உடைத்தார். யானைகள் நிலைதடுமாறி அங்குமிங்கும் சிதற அவர் கதை எழுந்து சென்று அறைந்தது. ஒரு யானை மத்தகம் உடைந்து கீழே விழுந்தது. இன்னொன்று விலாவில் அறைபட்டு சாய்ந்தது.

அங்காரகன் சினத்துடன் பிளிறியபடி விழுந்த யானைகளின் இடையே புகுந்து அப்பால் சென்றது. நிலைகுலைந்த யானைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு சுழல பூரிசிரவஸ் “செல்க, இடைவெளிகளினூடாக உள்நுழைக!” என்று ஆணையிட்டு தன் தேர்ப்படையை மீண்டும் ஒருங்கு குவித்து முழு விசையுடன் பாண்டவப் படைகளுக்குள் நுழைந்தான். அம்புகளை இடைவெளியின்றி எழுப்பியபடி அவர்கள் முன்னே சென்றனர். நீளம்பு ஒன்றால் எதிர்வந்த யானையின் காதுக்குப் பின்புறம் அறைந்து அதை பூரிசிரவஸ் வீழ்த்தினான். “யானைகள் மீண்டும் திரளலாகாது… செல்க!” என ஆணையிட்டான். அவன் மைந்தர் யூபகேதனனும் யூபகேதுவும் மூத்தவன் சலனும் அவன் மைந்தர் சார்த்தூலனும் சகனும் அம்புகளை தொடுத்தபடி முன்னால் சென்றார்கள். சகுனி பின்னிருந்து “உடைத்து முன்செல்க! உடைவினூடாக மேலும் உடைத்து முன்செல்க!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தார்.

நிலைகுலைந்த யானைகள் பாண்டவப் படைகளுக்குள்ளாகவே சிதறி பின்வாங்க அங்கிருந்த தேர்களும் வில்லவர் புரவிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி நிலையழிந்து சுழன்றன. பால்ஹிகரின் கதை பித்தெழுந்ததுபோல் துள்ளிச் சுழன்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான். அதில் அறைபட்டு தேர்கள் தெறித்தன. புரவிகள் குருதிச்சொட்டுகளென சிதறின. அந்த கதை சென்ற பாதை பாண்டவப் படைகளுக்குள் மலைப்பாறை உருண்டுசென்ற தடம்போல் உருவாகியது. இருபுறத்திலிருந்தும் பால்ஹிகரை நோக்கி எழுந்து வந்த அம்புகள் அவருடைய எடைமிக்க கவசங்களில் முட்டி விழுந்துகொண்டிருந்தன. அம்புகள் அவருக்கு கொசுக்களைப்போல என்று முந்தைய நாள் எவரோ சொன்னதை பூரிசிரவஸ் நினைவுகூர்ந்தான்.

அவருடைய படைநிற்றல் கௌரவப் படையினருக்கு விண்ணிலிருந்து விளக்க இயலாத பேராற்றலுடன் தெய்வம் ஒன்று வந்து சேர்ந்திருப்பதுபோல் எழுச்சியூட்டியது. அவரை எவராலும் கொல்ல இயலாது என்று வீரர்கள் கூறினர். இறப்பற்று இக்களம் மீண்டு இதேபோல் மேலும் பன்னிரு களம்கண்டு விண்ணிலிருந்து இறங்கிவரும் வெண்ணிற யானை மேலேறி உடலுடன் விண்செல்லவிருப்பவர். மானுடருடன் விளையாட வந்த தேவன். தொலைவிலிருந்து பெருங்கதை சுழன்று செல்வதை, அதை மேலிருந்து இயல்பாக கை சுழற்றி இயக்கியபடி அறைந்து நகைத்து களியாடிக்கொண்டிருந்த பேருருவரை பார்க்கையில் பூரிசிரவஸ் மெய்ப்பு கொண்டான்.

பாண்டவப் படை கலங்கிச் சிதைந்து அகல, இருபுறத்திலிருந்தும் வந்து இணைந்துகொண்ட யானைப்படைகள் எல்லைக்கோட்டை என அமைய, நடுவே அம்புகளை செலுத்தியபடி கௌரவத் தேர்கள் பாண்டவப் படைக்குள் நுழைந்தன. பூரிசிரவஸ் தொலைவில் சிகண்டியின் கொடி வருவதை பார்த்தான். சிகண்டி சீற்றமும் எரிச்சலும் கொண்டிருந்தார். இரு கைகளையும் வீசி தன் படைகளுக்கு ஆணையிட்டபடி அணுகி வந்தார். அவர் வில்லிலிருந்து எழுந்த நீளம்பு பால்ஹிகரின் தோள் கவசத்தை அறைந்தது. முதன் முறையாக அம்பின் விசையொன்றை உணர்ந்த பால்ஹிகர் திரும்பி அவரை நோக்கி இடக்கையைச் சுட்டி சிரித்தார். அதே வீச்சில் கதையை வீசினார்.

தன் கதை செல்லும் தொலைவைக்கூட அவர் கணித்திருக்கவில்லை என்று தெரிந்தது. சிகண்டிக்கும் தனக்கும் நடுவில் நின்றிருந்த வில்லவர்களை, புரவிகளை அறைத்து தெறித்தபடி அவரை நோக்கி சென்றார் பால்ஹிகர். அவர் அணுகுந்தோறும் தன்னை பின்னடையச்செய்து பேரம்புகளால் மீண்டும் மீண்டும் பால்ஹிகரின் தோள்கவசத்தை அறைந்தார் சிகண்டி. ஏன் தோள்கவசத்தில் இலக்கு குவிக்கிறார் என்று பூரிசிரவஸ் எண்ணினான். கவசங்களில் அசைவு மிக்கது தோள்கவசம். பால்ஹிகரோ பெருங்கதையை இடைவிடாமல் சுழற்றுபவர். உறுதியாக அவற்றின் எட்டடுக்கில் ஒன்றேனும் பொருத்து தேய்ந்துவிட்டிருக்கலாம். வலக்கையின் கவசத்தை உடைத்து தோளிலொரு அம்பை நிறுத்திவிட முடிந்தால் அதன்பின் பால்ஹிகர் போருக்கு பயனற்றவரே.

கைகாட்டி வீரர்களை தன்னை தொடரச்செய்தபடி பூரிசிரவஸ் பால்ஹிகரின் பின்னால் தொடர்ந்து சென்று அவ்விசையிலேயே அம்பெடுத்து சிகண்டியின் தேரை நோக்கி செலுத்தினான். நாணொலி கேட்டு திரும்பிப்பார்த்த சிகண்டி தொடையில் கையால் அறைந்து நகைத்தபடி பூரிசிரவஸை நோக்கி திரும்பினார். பூரிசிரவஸ் சிகண்டியின் வில்திறனை முதன்முறையாக அருகென கண்டான். பிதாமகர் பீஷ்மருக்கு நிகரானவர், புல்லை அம்பாக்கும் வித்தையையும் அறிந்தவர் என்று அவரைப்பற்றி அறிந்திருந்தான். பீஷ்மரைப் போலவே சிகண்டி போர்புரிந்தார். தேரில் தவத்தில் ஆழ்ந்த முகத்துடன், தன்னியல்பென நெளியும் உடலுடன், கைகள் நடனமென வீசிச் சுழல நின்றிருந்தார்.

மீண்டும் மீண்டும் சிகண்டியின் அம்புகள் வந்து அவன் தேரையும் கவசங்களையும் உடைத்தன. அவன் பின்னகர விழைகிறானா என்று பாகன் கையசைவால் வினவிக்கொண்டே இருந்தான். “செல்க! செல்க!” என்று ஆணையிட்டபடி மீண்டும் மீண்டும் அம்புகளை அறைந்த பூரிசிரவஸ் அந்த அம்புகள் எவையுமே சிகண்டியை சென்று சேரவில்லை என கண்டான். “துணை சேர்க! உதவி தேவை! துணை தேவை!” என அவன் கோரினான். “சிகண்டியை எதிர்கொள்கிறேன்! சிகண்டிமுன் நின்றுள்ளேன்!” என்று அவன் கூற அக்குரலே பெருகி முழவோசையென எழுந்தது.

அப்பால் காவல்மாடத்தில் பெருமுரசோசை என எழுந்தது சகுனியின் ஆணை. “ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் செல்க! சிகண்டியை எதிர்கொள்க!” ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் வந்துகொண்டிருப்பதை இருபுறத்திலிருந்தும் முரசுகள் கூவி அறிவித்தன. இன்னும் சற்று நேரம். அதற்குள் என் தலை அறுந்து விழாதிருக்கவேண்டும். அம்பொழியாது நிலைகொள்வதையே முதன்மைப் போரென கொள்ளவேண்டும். சென்றெழுந்து தாக்குவதாக தோற்றமும் அளிக்கவேண்டும். பின்னடைகிறோம் என்று தோன்றினால் அதுவே இறப்பு. சிகண்டியின் அம்பின் அருகுவலையத்திற்குள் சென்றால் பிறையம்பு தலைகொய்து செல்வதை தவிர்க்க இயலாது.

பூரிசிரவஸ் “முன்செல்க! முன்செல்க!” என்று கூவியபடி சிகண்டியை அம்புகளால் தாக்கினான். அவன் தேர்ப்பாகன் அவன் எண்ணத்தை புரிந்துகொண்டான். தேரை முன்செலுத்த இயலாமல் எதிர்த்தேரில் முட்டிக்கொண்டவன் என நடித்து அதை விரைவழியச் செய்தான். சீற்றத்துடன் சவுக்கால் புரவிகளை மாறி மாறி அறைந்து கைநீட்டி அவற்றுக்கு ஆணையிட்டான். ஆனால் கவிழ்ந்து கிடந்த இரு தேர்களுக்குப் பின்னால் முட்டிநின்ற அவன் தேரை இழுக்கவியலாது புரவிகள் காலசைத்தபடி அங்கேயே அசைவிலாது நிலைகொண்டன. பூரிசிரவஸை சூழ்ந்திருந்த வில்லவர்கள் சிகண்டியை அம்புகளால் அடித்து தடுத்து நிறுத்தினர். தன் பின்னாலிருந்து வீரர்கள் அலறி விழுந்துகொண்டிருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். ஒவ்வொருவராக அவர்கள் சரிய அவ்விடத்தை நிரப்புவதற்கு மேலும் வில்லவர்கள் இன்மையால் அவனுடைய துணைப்படை வளையம் உடைந்து சிறுகுழு என்றாயிற்று. சிகண்டியை முன்வராது தடுத்த அம்புவேலி மெலிந்தபடி வந்தது.

பூரிசிரவஸ் மிகத் தொலைவில் பால்ஹிகர் கடந்து சென்றிருப்பதை கண்டான். அம்புகளால் அவன் சிகண்டியை தடுத்து நிறுத்தியிருக்க சிகண்டிக்கும் தனக்கும் நடுவே இருந்த யானைகளையும் தேர்களையும் உடைத்தபடி பால்ஹிகர் அவரை நோக்கி சென்றிருந்தால் சிகண்டியை மேலும் பின்னடையச் செய்திருக்க இயலும். ஆனால் அவர் தன்னை எதிர்ப்பவர்களை மட்டுமே எதிர்த்தார். பிறரை தாக்குபவர்களை சென்று தாக்க எண்ணவில்லை. எவரையும் வெல்ல எண்ணவில்லை. எவரையும் காக்கும் பொருட்டு எழவும் இல்லை. அந்தப் பெருங்கதையை சுழற்றுவதன் இன்பத்திற்கு அப்பால் அவர் எதையும் உளம்கொள்ளவில்லை என்று தோன்றியது.

இன்னும் ஒரு படி. இன்னும் ஒரு கணம். இன்னும் சில அம்புகள். சற்று, இதோ அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இதோ வந்து சூழ்கிறார்கள். இன்னும் ஒரு வாழ்க்கை. இன்னும் காலத்துளிகள் சில. பூரிசிரவஸ் சிகண்டியின் முகத்தை அருகிலென கண்டான். முதன் முறையாக இறப்பின் அச்சம் அவனில் எழுந்தது. அக்கணமே அதன் பொருளின்மை எழுந்து தெரிந்தது. அதுவரை அந்நிகழ்வின் மேல் ஏற்றப்பட்டிருந்த அனைத்தும் விலகி அகன்றன. கைநழுவி பளிங்குக் கலம் கீழே விழுந்து உடைவதுபோல பிறிது ஒருபோதும் தன் வடிவுக்கு மீள இயலாத ஓர் அழிதல். அதுவன்றி வேறெதுவுமல்ல. அழிவு. அழிவு மட்டுமே. அழிவு என்பது மிக வெளிப்படையானது. முற்றிலும் உள்ளற்றது. ஆழமென அணுவிடைகூட இல்லாது அலையடிக்கும் பெருங்கடல்வெளி.

அவ்வெறுமை அவனை சீற்றமடையச் செய்தது. அவ்வெறுமையின் திரள் என முன்னால் எழுந்து நின்றிருந்த சிகண்டி மீது பெரும் சீற்றம் உருவாகியது. பற்களைக் கடித்து கண்களில் நீர்கோத்துக்கொள்ள முழு விசையுடன் அம்பை இழுத்து எய்தான். பேரம்பு சிகண்டியின் தலைக்கவசத்தை உடைத்தது. அடுத்த அம்பு அவர் தலைநோக்கி செல்ல உடல் வளைத்து அதை ஒழிந்த சிகண்டி மூன்று தனி அம்புகளால் அவன் தோள்கவசங்களை உடைத்தார். தோளில் அம்பொன்று உரசிச்செல்ல தெறித்த குருதி கவசங்களின் மீது வழிந்தது. உறுமியபடி வந்த பிறையம்பிலிருந்து தப்ப பூரிசிரவஸ் தேர்த்தட்டிலேயே கால் மடித்தமர்ந்தான். தேர்த்தூணை உடைத்துச் சென்றது அது. தேர்முகடை தெறிக்க வைத்தது பிறிதொரு அம்பு. பிறிதொன்று எழுந்து அவன் விலாக்கவசத்தை உடைத்தது. அவன் உருண்டு வேறொரு கவசத்துடன் எழுவதற்குள் விசைமிகுந்த நாகச்சீற்றம் போன்று அவன் விலாவில் தைத்தது ஓர் அம்பு. கால் தளர்ந்து அவன் தேர்த்தட்டில் அமர பிறிதொரு அம்பு அவன் பாகனை கொன்றது. அவன் புரவிகளிலொன்று கழுத்தற்று விழுந்தது. பின் ஓர் அம்புககு அவன் விழுந்து புரண்டெழ தேர்த்தட்டில் நின்று நடுங்கியது.

தேரிலிருந்து பாய்ந்து புரவிகளுக்கும் உடைந்த தேர்ச்சகடங்களுக்கும் நடுவே தன் உடலை ஒடுக்கி ஒளிந்துகொண்டான். மேலும் மேலுமென அம்புகள் வந்து அவனைச் சூழ விழுந்து கிடந்த புரவிகளிலும் யானையுடல்களிலும் தைத்தன. தேர்ச்சகடங்களையும் உடைந்த தேர்முகடுகளையும் அதிர வைத்தன. சிகண்டியின் அம்புகள் தன்னை சினம்கொண்டு தேடிவருவதை அவன் கண்டான். மேலும் உடல் இழுத்து விழுந்து கிடந்த தேர்முகடொன்றை அணுகி அதற்குப் பின்னால் எலிபோல் உடல் சுருட்டி பதுங்கினான். அவனைச் சூழ்ந்திருந்த தேர் வில்லவர்கள் நால்வர் விழுந்தனர். எஞ்சியவர்கள் புரவிகளையும் தேர்களையும் பின்னிழுத்து மேலும் பின்னடைய சிகண்டி நாணொலி கேட்கும்படி, அம்புகளின் சீறலோசை முழக்கமென எழுந்து சூழ அணுகி வந்தார்.

பூரிசிரவஸ் வலப்பக்கம் மிக அருகே நாணொலியை கேட்டான். அது ஜயத்ரதன் என்று தெரிந்ததும் அவன் உள்ளத்திலிருந்து எடையொன்று அகன்றது. மறுபக்கம் அஸ்வத்தாமனின் சங்கொலி எழுந்தது. இருவரும் தங்கள் அணுக்கப்படையினருடன் வந்து சிகண்டியை எதிர்கொண்டனர். சிகண்டி அவர்கள் இருவரையும் ஒரே தருணத்தில் எதிர்கொள்வதை அவன் பார்த்தான். இருகைவில்லவன் என்று புகழ்பெற்ற அர்ஜுனனுக்கு நிகராக இருந்தது அவர் கைவிசை. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் தங்கள் மிகச் சிறந்த அம்புகளால் அவரை தாக்கினர். ஓர் அணுவிடையும் பின்னகராமல் சிகண்டி அவர்கள் இருவரையும் நேர்கொண்டு விசை நிலைக்க அம்புகளால் கோத்து நின்றார்.

பூரிசிரவஸ் முதன்முறையாக தன் மேல் எரிச்சலை உணர்ந்தான். தான் ஒளிந்திருக்கும் இடமும் தன் உடல் அமைந்திருக்கும் வடிவும் அக்கணம்தான் அவனுக்கு புலப்பட்டன. திரும்பி சூழவும் பார்த்தான். அங்கு அவனை நோக்கும் விழிகள் எதுவும் இல்லை. ஆனால் அவனை அவனே நோக்கிக்கொண்டிருந்தான். அக்கணமே அம்பறாத்தூணியிலிருந்து கூரம்பு ஒன்றை எடுத்து கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்ள வேண்டுமென்ற உளவிசையை அவன் அடைந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

எம். கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வாசிப்பனுபவம் 

$
0
0

m.gopal

 

மனைமாட்சி 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட ஜெயகாந்தனின் கதைகள் ஒரு காலகட்டத்தை பிரதிபலித்தது. சமகால சமூக சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணின் உடல் வேட்கை குறித்து தீர்மானிப்பவள் அவள் மட்டும் தானா அல்லது அவள் குடும்பம் முதல் சமூகம் வரை அனைத்தும் அதில் மூக்கை நுழைக்குமா தனி மனித சுதந்திரம் என்பது பெண்ணை பொறுத்தவரை ஆணைக் காட்டிலும் அதிகமான வரையறைக்கு உட்பட்டது தானா அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டியவள் என்னும் பெரும் பொறுப்பு அவள் பாலியல் வேட்கைக்கும் விடுதலைக்கும் தடையா முப்பதாண்டுகளுக்கு பிறகு நம் தற்கால சூழலில் இவற்றுக்கெல்லாம் ஒரு அதிர்ச்சி மதிப்பீடு உண்டா நாம் எதுவரை வந்து சேர்ந்திருக்கிறோம் இப்போதைய சூழல் என்ன என்பதை அதனை பிரதிபலிக்கும் ஒரு புனைவைக் கொண்டே அணுகலாம்.

மூன்று பகுதிகளாக வரும் கதைகளில் எந்த வித சமரசமும் இல்லாத மரபார்ந்த மனதிற்கு ஏற்பின்மையை ஏற்படுத்தக் கூடிய மூன்று பெண்கள்(சாந்தி மதுமதி வாணி) அவர்களை தங்கள் இயல்பின் படி டீல் செய்யும் பல் வேறு ஆண்கள். இவர்களோடு இன்னும் மரபுச் சூழலில் இருந்து வெளி வராத ஆனால் திறந்த மற்றும் வெளிப்படையான மனம் கொண்ட பெண்கள்(ராஜம் மங்கை வினோதினி)

சாந்தி கோபமும் ஆத்திரமும் கட்டற்று போகக்கூடியவள். அதற்காக கணவனையும் உடல் மன ரீதியாக தண்டித்து ஆசுவாசம் அடைபவள். அவளது இந்த குணத்திற்கான காரணம் அவள் கசப்பான குழந்தை பருவத்தில் இருக்கிறது. ராஜம் பொறுமையே வடிவானவள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக புகுந்த வீட்டாரால் விரட்டப்பட்டு கணவனின் நினைவுடன் மெஸ் வைத்து நடத்துபவள். இரண்டாம் மணம் புரியும் கணவனுக்கு 30 ஆண்டுகள் கழித்து அவளுடன் தொடர்பு ஏற்படுகிறது. சாந்தியின் மனநிலை புறக்கணிப்பு கொண்ட ஒரு சிறுமி வளர்ந்து பெரியவளாகி தனக்கென ஒரு துணையை தேடிக் கொள்ளும் போது அவர் மீதே வன்முறை வெறியாட்டத்தை திருப்புகிறது. அவள் ஒரு பைத்தியம் அவளை கல்யாணம் பண்ணிக்காதீங்க என்று பெற்றோரே காதலனான தியாகுவிடம் கூறுகிறார்கள். அவன் அதனை புறக்கணித்து அவளை மணக்கிறான். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் சைக்கோதனம் தாங்காமல் குழந்தைகளுடன் வெளியேறி பாடம் புகட்டுகிறான். கடும் மன உளைச்சலில் இருக்கும் பெண்கள் சாமியார்களிடம் அடைக்கலமாக போவதன் உளவியல் இதில் துல்லியமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. செளராஷ்டிரர் மற்றும் தேவாங்கர் வழக்கினை ஒரு நாவலில் வாசிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது
manai
இரண்டாம் கதை வெகுளியான சாப்பாட்டு ராமனான கணவனை மணமுடித்து மறுநாளே பிரிந்து வந்து விடுகிறாள் மதுமதி. இவளுடைய உறவுகள் மிக நுட்பமாக தற்கால உறவுகளையும் அதில் உள்ள ஒரு அலட்சிய போக்கையும் சொல்கிறது. ராஜம் ஒரு லட்சியப் பெண்மணி என்றால் மதுமதி ஒரு அலட்சியப் பெண்மணி. மதுமதியின் சிக்கலும் குழந்தைப் பருவம் சார்ந்தது தான். சில நேரங்களில் சில மனிதர்களில் இருந்து இலக்கியம் உறவுகளைப் பேசிப் பேசி வந்தடைந்திருக்கும் இடம் மலைப்பைத் தருகிறது. மங்கையினால் சலனமடந்து மகாதேவனை வெறுக்கும் சோமு வாத்தியார் மற்றும் பாகவதர் மதுமதிக்கு நேர் எதிரான மங்கையின் பாத்திரப் படைப்பு என திருச்சிற்றம்பலப் பகுதி ஆண் பெண்  உறவுகளின் அதன் ஆழ்மன விழைவுகளின் ஆடலாக இருக்கிறது

sivaku
கன்னட(அல்லது தெலுங்கா என தெரியவில்லை) தேவாங்கரின் பிண்ணனியில் ஒரு கதையை படிப்பது இதுவே முதல்முறை. ஒரு பெரும் பயங்கரத்துடன் தொடங்கும் கதை வினோதினியின் அக உணர்வுகளை அவள் தவிப்பை நுட்பமாக சொல்லிச் செல்கிறது. கண்ணன்-கலைவாணி உறவென்பது மிகத் துல்லியமாக தற்போது 30 வயதிற்க்குட்பட்டவர்களின் காஷூவலாக அதேசமயம்  முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் ரொம்பவே மெச்சூர்டாக உறவை அணுகும் விதத்தை காட்டுகிறது. கலைவாணியின் பாத்திரம் தற்போதைய பெண்ணின் ஒரு மாதிரி அனால் கண்ணபிரான் அளவுக்கு ஆண்கள் இன்னும் பெரிதாக நம் சமூகத்தில் மெச்சூர்ட் ஆகவில்லை. கண்ணனின் பாத்திரப் படைப்பு நிலப்பிரபுத்துவ மனநிலை சார்ந்த உறவு முறைகளை அனுகும் அவன் பெற்றோரிடம் இருந்து தாராளமய மய உலகிற்கு நிகழும் ஒரு பாய்ச்சல். அதற்கு பெங்களூரின் பிண்ணனி மிகச்சரியாகவே ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று கதைகளிலும் வரும் பெரிய நகரம் இதுவே.

இந்த நாவலை பரிந்துரைத்த வளரும் எழுத்தாளர் காளிக்கு நன்றி

சிவக்குமார்

சென்னை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்

$
0
0

ஜெ அவர்களுக்கு

 

 

வணக்கம்..

 

நலமா?

 

தல்ஸ்தோய் உரை கேட்டேன்.. மிகச் சிறப்பான உரை.. உங்களுடைய உரைகள் நிறைய கேட்டிருக்கிறேன்… ஆனாலும், இந்த உரை மனதை தொட்டுவிட்டது. அன்னா கரீனினா மற்றும் புத்துயிர்ப்பு வாசித்திருக்கிறேன்.. தன்னறம் பற்றிய ஒரு கூர் ஆய்வை என் மனதுக்குள் நிகழ்த்திய உரை.. நெஹ்லூதவ் மற்றும் லெவின் வழியாக அறச்சிந்தனையை விவரித்தீர்கள்.. சிறிய அரங்கில் நிகழ்ந்த உரை என்றாலும், என் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த உணர்வு.. இணையத்தின் சாத்தியங்கள் எத்தனை அதிசயங்களை நிகழ்த்துகிறது..

 

 

நன்றி ..நன்றி.. நன்றி..

 

பவித்ரா

 

அன்புள்ள ஜெ,

 

 

திங்கள்   இரவு அன்றுதான் upload செய்யப்பட்ட காணொளிகளை மொபைலில் டவுன்லோட் செய்தேன்; அதை அலுவலகளத்திலிருந்து வரும்போதுபார்த்துவிட  திட்டம்; நான் இப்பொழுது கம்பெனி மாற்றிவிட்டமையாலும் அது வீட்டிலிருந்து 40 கி மீ  தொலைவு, ஆகா வாசிக்க கூடுதல் நேரம் கிடைக்கும்;

 

சரியாக இன்று மாலை 5:40 company பஸ் கிளம்பியது (இன்று சென்னையில் மித மழை வேறு) அந்த காணொளியில் மிக சரியாய் “10:21″ இல்  “மனித வாழ்க்கை என்பது உச்சத்தால் ஆனது மட்டும் அல்ல – அற்பமான விஷயங்களால் தொகுதியால் ஆனது  – போர் என்பது அற்பமான விஷயங்களின் தொகுப்பு – வரலாறு என்பதும் அதுதான் – வாழக்கை என்பதும் அதுதான்”, rewind செய்து ஒரு பத்து முறையாவது கேட்டிருப்பேன்; pause செய்து ஆழ்ந்து என்னுள் சென்றேன்

 

மீண்டும் காணொளியை பார்க்க ஆரம்பித்தேன் “resurrection”  நாவலை பற்றி ஆரம்பிக்கும் முன் மூன்று அடிப்டை கேள்விகள் தொட்டு நாவலுக்குள் என்னை இழுத்து போட்டு விட்டீர்கள் ,

 

உண்மையில் என் கட்டுப்பாட்டை யிழந்து வீட்டேன்;  மிக லேசாக கண்ணீர் விழிஓரம்…என் இருக்கையின் வலது பக்கம் இருந்தவள் என்ன ஆயிற்று என்பது போல் செய்கையில் கேட்டாள், நான் ஒரு “ஸ்மைல்”…(ஏனெனில் அவள்  “முட்டை யில் (“இந்திய நிறத்தில் இருக்கும்)  ஒரு மஞ்சள் நிறம்) மீண்டும் காணொளியை   தொடர்தேன்  .சைபீரியாவில் அவள் வாழ்க்கையை இவன் வாழ ஆரம்பித்தது நீங்கள் narrate செய்யும்போது,  கிட்டத்தட்ட அழுதே விட்டேன்!

 

ஜெ,  இதுவரையில் நான் குற்றவுணர்வு கொள்ளும் ஆகும் எந்த செயலையும் நான் செய்தது கிடையாது, resurreccion உம இதுவரை படித்தது கிடையாது, இருந்தும் நான் ஏன் உணர்வு கொந்தளிப்பை அடைந்தேன் ? தல்ஸ்தோய் வழியாக, ஜெ வழியாக எனக்கு ஒரு ஒரு அறம் மீண்டும் ஒரு கூற்றாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது, இந்த அனுபவத்தை தந்ததற்கு நான் தல்ஸ்தோய் க்கு என் கனவில் நன்றி சொல்லிகொள்ள்வேன்

 

7:40 க்கு வீடு  திரும்பினே மீண்டும் காணொளியை பார்க்க ஆரம்பித்தேன் , என் அம்மாவிடம் ஒரு வார்த்தை பேச வில்லை ;

மீண்டும் தொடர்ச்சியாக  மூன்றாம் முறை கேட்டேன் – என்னோ இன்றிரவு உணர்ந்த தோன்றவில்லை –   (நீங்கள் நம்பு வீர்களா என்று தெரியவில்லை, என தாய் மாமா அண்மையில் இறந்து விட்டார், அவர் இறப்பு பல உறவினர்கள்  அதை எதிர்பார்த்து காத்திருந்தனர்  என்று தான் கூறவேண்டும்;  “அப்படிப்பட்ட” ஒழுக்கமற்ற வாழ்க்கை அவர் வாழ்ந்தது .எதோ காரணத்தால் மீண்டும் இந்த ஞாயிறு மாலை கேள்வி ஒன்று மனதுக்குள் எழுந்தது, அது அவர் தன அளவில் மகிழ்ச்சியான வாழ்க்கையை தானே அவர் வாழ்ந்தார், எனவே எது அறம்?–பதில் இல்லை, குழப்பம் – இன்று அதற்கான சரியான விடை கிடைத்தது

 

மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டுதூங்க  செல்லப்போகிறேன்

 

நன்றி வணக்கம் !

 

பல ஈமெயில்கள் உங்களக்கு அனுப்பாமல், அனைத்தையும் draft லேயே வைத்திருக்கிறேன், இதை அனுப்பி விடுவதென்றே முடிவே செய்து  விட்டேன்

 

ராமகிருஷ்ணன்

 

 

என் உரைகள், காணொளிகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கட்டண உரை-அறிவிப்பு

$
0
0

je

கட்டண உரை –ஓர் எண்ணம்

வருகிற  10-11-2018 சனிக்கிழமை மாலை 6.30 முதல் 7.30 வரை   நமது இன்றைய சிந்தனைமுறை உருவாகி வந்தது எவ்வாறு?’ என்கிற தலைப்பில்   ஜெயமோகன் கட்டண உரை  நிகழ்த்துகிறார். இது சுமார் 120 பேர் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட அரங்கு.  அவரைத் தவிர வேறு யாரும் மேடையில் அமர மாட்டார்கள்.  இதுவரை சென்னை,பாண்டி, ஈரோடு போன்ற ஊர்களில் இருந்து குழுமம் வழியாக சுமார் 35 பேர் வர உறுதியளித்துள்ளனர். முன் பதிவில்லாமல் வரும் நபர்கள் இடமிருக்கும் பட்சத்தில் கட்டணம் செலுத்தி உரையை கேட்கலாம்.

 

இதன் காணொளியை யு டியூபில் காண இயலாது.  

 

 

இக்கூட்டத்திற்கு வர விரும்புவோர் கிழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 150/- செலுத்தி உங்கள்

 

பெயர்:

தற்போதைய ஊர் :

வயது :

தொழில் :

தொலைபேசி :

மின்னஞ்சல் :

 

ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல்  இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும்.

 

Account details :

A.S Krishnan,

Indian Overseas bank,

District Court, Erode.  

Account no. : 182501000008406

IFSC: IOBA0001825

 

இடம் : உள் அரங்கம், மாவட்ட அறிவியல் மையம்.

கொக்கிரகுளம்,

வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையம் அருகில். திருநெல்வேலி.

நாள் & நேரம் : 10-11-2018, மாலை சரியாக 6.30.

 

 

நிகழ்ச்சி தேதி மாறினாலோ ரத்து செய்யப்பட்டாலோ கட்டணம் திரும்பச் செலுத்தப்படும்.

 

கிருஷ்ணன்

98659 16970.

மின்னஞ்சல் : salyan.krishnan@gmail.com

 

நெல்லையில் தொடர்புகொள்ள

ஜான் பிரதாப் : 8098016596

 

ஜெயமோகன் உரைகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிரிக்காத புத்தர்

$
0
0

hes

 

சித்தார்த்தன் என்ற பெயருடன் இணைந்து நம்மனதில் தியானத்தின் பேரமைதியில் உறைந்த புத்தரின் முகம் நினைவுக்கு வரும். உலகப்புகழ் பெற்ற ஜெர்மனிய படைப்பிலக்கியவாதியான ஹெர்மன் ஹெஸி’க்கு அந்த தியான நிலையை எட்டுவதற்காகப் புத்தர் கடந்து வந்த நீண்ட பாதை நினைவுக்கு வந்தது போலும். ஞானத்திற்கான தேடலின் தவிப்பையும் தத்தளிப்பையும் மையப்படுத்தக்கூடிய நாவல் அவருடைய `சித்தார்த்தா’. திரிலோக சீதாராம் அவர்களால் காவியச்சாயல் கொண்ட நடையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு தமிழில் 1957ல் வெளிவந்தது. பிறகு இதன் மலிவுப்பதிப்பை `ராணிமுத்து’ நிறுவனம் வெளியிட்டது. தமிழினி பதிப்பகம் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளது.

சித்தார்த்தா இந்திய ஞானச்சூழல் குறித்தும் இந்தியாவின் மெய்மை தரிசனம் குறித்தும் பேசக்கூடிய நாவல். ஆனால் அடிப்படையில் இது ஒரு மேற்கத்திய நாவலேயாகும். இதன் சித்திரிப்பிலும் சரி, தரிசனத்திலும் சரி, இந்தியத்தன்மை அறவே இல்லை என்றுதான் கூறவேண்டும். இந்திய வண்ணங்களால் தீட்டப்பட்ட ஒரு மேற்கத்திய ஓவியம் இது. அவ்வகையில் இது முக்கியமான புனைகதையேயாகும்.

சித்தார்த்தா’வின் கட்டமைப்பில் மேற்கத்திய முன்னுதாரணங்களின் பாதிப்பே அதிகம். அதில் ஒன்று தாந்தேயின் `டிவைன் காமெடி.’ யுலிசஸின் நரக யாத்திரை என்ற பயணம் கிறிஸ்தவ மரபில் ஆழ வேரூன்றியது. அதுவே ஜான் பன்யனின் `பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்’ என்ற புகழ்பெற்ற நூலின் முன்னோடி. முக்கியமான மேற்கத்திய விமர்சகர் ஒருவர் சித்தார்த்தாவில் டான் குவிசாட்டின் பாதிப்பும் உண்டு என்று கூறியிருக்கிறார். அது சற்று அதிகப்படியான ஊகம். தேடலின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டும் படைப்பு டான் குவிசாட். அவ்வகையில் தேடல் குறித்த எந்தப் படைப்பிலும் அதன் சாயலைக் காணலாம். சித்தார்த்தாவில் டான் குவிசாட்டில் உள்ள அங்கதம், சுய எள்ளல் அறவே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

ஜெர்மனியச்சூழலில் இந்திய பேரிலக்கியங்கள் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பரவலாக அறிமுகமாயின. அப்போது ஜெர்மனி தத்துவத்தின் விளைநிலமாக இருந்தது. ஹெகல், நீட்சே போன்றவர்களின் காலம் அது. தர்க்கபூர்வமாக மானுட இருத்தலையும் அதற்கு வரலாற்றுப்பெருக்கிலும் பிரபஞ்ச பேரமைப்பிலும் உள்ள இடத்தையும் வகுத்துரைக்கும் முயர்சிகள் ஓர்மூச்ச எல்லையை அடைந்து திகைத்து நின்ற காலகட்டம். அப்போது அறிமுகமான இந்திய தத்துவநூல்களும் பேரிலக்கியங்களும் அவர்களில் ஒருசாராருக்கு ஆழமான மனநகர்வை அளித்தன. ஜெர்மானிய ஆசிரியர்கள் பலரும் இந்தியஞானமரபின் தாக்கமுள்ள ஆக்கங்களை எழுதியிருக்கிறார்கள்.புகழ்பெற்ற உதாரணம் தாமஸ் மன் எழுதிய மாற்றிவைக்கப்பட்ட தலைகள்.

ஆனால் இந்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் உண்மையில் இந்திய ஞானமரபுக்குள் நுழையவேயில்லை என்றே சொல்லவேண்டும். அவர்களுக்கு அங்கே இருந்த தேடலுக்கு இந்திய இலக்கியமரபையும் ஞானமரபையும் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்திய மரபு அளிக்கும் மாற்று வழிகளுக்குள் வர அவர்கள் முந்நூறாண்டுகளாக ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாக்கி அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஞானமரபை கழற்றிவிட்டு கீழ்த்திசை நோக்கிக் காலடி எடுத்து வைக்கவேண்டும். அது பெரும்பாலும் நிகழவில்லை. இந்திய- கீழைநாட்டு ஞானமரபுள் வந்து எழுதிய எந்த ஐரோப்பிய இலக்கியவாதியும் இல்லை என்பதே உண்மை.

உண்மையில் அவ்வாறு வருவதற்கு மிக அதிகமான வாய்ப்புகள் உள்ளவர் ஹெர்மன் ஹெஸ்தான். அவரது தாய்வழித்தாத்தா ஹெர்மன் குண்டர்ட் கிறித்தவ மிஷனரியாக கேரளத்துக்கு வந்து பலவருடங்கள் இங்கேயே வாழ்ந்தவர். மலையாள மொழிக்கு முதல் நவீன அகராதியை தயாரித்தவர். வாழ்நாளின் இறுதியில் அவர் கிறித்தவ மதநம்பிக்கைகளில் இருந்து வெகுவாக விலகி கீழைநாட்டு மதங்களின் ஆழ்ந்திருந்தார். ஹெர்மான் ஹெஸ் அவரது இளமைக்காலத்தில் தாத்தாவுடன் பழகி வாழ்ந்தவர்.தாத்தாவின் வீட்டில் இருந்த இந்தியச் சிற்பங்களாலும் ஒவியங்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டவர். அவரது சுயசரிதையில் அவர் இளம்வயதிலேயே உபநிடதங்களாலும் கீதையாலும் கவரப்பட்டதை நாம் வாசிக்கலாம்

ஆனால் ஹெர்மன் ஹெஸ் இந்தியா வந்ததில்லை. அவர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அப்போதுகூட இந்தியா வர திட்டமிடவில்லை. இந்தியா பற்றிய தன் கனவுகளை யதார்தம் கலைத்துவிடக்கூடும் என அவர் அஞ்சினார். இந்த தயக்கம் அவருக்கு தத்துவத்திலும் இருந்திருக்கிறது. இந்தியாவை அவர் ஒரு கனவுத்தளத்தில் வைத்திருந்தார். அழகிய குறியீடுகளை உருவாக்கியளிக்கும் ஒரு விளைநிலமாக மட்டும் அதை தனக்குள் கொண்டு சென்றார். அதுவே அவரது புனைகதைகளின் இயல்பைத் தீர்மானித்த அம்சமாகும்.

ஹெர்மன் ஹெஸ் தத்துவார்த்தமாகப் பார்த்தால் இருத்தலியர். வேறெந்த தத்துவஞானியைவிடவும் மார்ட்டின் ஹைடெக்கர்தான் அவரை ஆழமாக பாதித்திருக்கிறார். ஹெஸ்சியின் ஆன்மாவை நாம் காண்பதற்கு மிக உகந்த நூல் என்பது ஸ்டெப்பி ஓநாய் [Steppan wolf] வாழ்நாள் முழுக்க தன்னந்தனிமையில் இருக்கும் ஸ்டெப்பி ஓநாயைப்போன்ற ஒரு தனிமனிதனின் அந்தரங்கத்திற்குள் செல்கிறார் ஹெஸ்ஸி. அது அவருக்கு மிகப்பழக்கமான அகம், அவருடைய சொந்த அகம். தன்னந்தனிமையில் தன் பிறவிக்குணத்தால் முகர்ந்து முகர்ந்து வழிதேடி அலையும் ஸ்டெப்பி ஓநாயின் இன்னொரு வடிவமாகவே அவர் சித்தார்த்தனை உருவாக்கியிருக்கிறார். அது இந்தியா கண்ட சித்தார்த்தன் அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா கண்ட சித்தார்த்தன்.

பத்தொன்பதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சிந்திக்கும் ஐரோப்பிய மனம் உலகசிந்தனைகள் அனைத்தையும் தன்முன் குவித்துப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது. விரிவான காலனியாதிக்கம் மூலம் உலகமெங்கும் இருந்து கலைகளும் இலக்கியமும் தத்துவமும் ஐரோப்பாவை வந்தடைந்தன. அந்த பெரும் குவியலை துழாவிக்கொண்டே இருக்கும் ஐரோப்பிய மனம் தேடியது, எனக்கான வழி எது? எனக்கான மீட்பு எது? எனக்கு மட்டும் உரிய பதில் எது? இந்த தேடலை அக்காலத்தின் பல ஆக்கங்கள் பலவகைகளில் சொல்கின்றன. இந்த வினாவே இருத்தலியமாக உருவம் கொண்டது. சித்தார்த்தன் வழியாக ஹெஸி முன்வைக்கும் தேடலும் இந்த ஐரோப்பிய நிகழ்வேயாகும்.

தமிழ்ச்சூழலில் நாம் சித்தார்த்தாவுடன் உடனடியாக ஒப்பிடவேண்டிய படைப்புகள் பல. முதன்மையானது மணிமேகலை. ஓர் எல்லைவரை நீலகேசி. இப்புராதன நூல்கள் ஞானத் தேடலின் பயணத்தைச் சித்திரிப்பவை. மணிமேகலையின் தேடல் மிக விரிவானது. வாழ்வின் அனைத்து தளங்களையும் தொட்டு பரவுவது. காதல், கருணை என்று உன்னதத்தின் படிகளை ஏறி அவள் துறவின் அரியணைமீது அமர்கிறாள். ஆணாகவும், பெண்ணாகவும் அந்தத் தேடல் நீள்கிறது.

இந்தத் தேடலுடன் சித்தார்த்தனின் தேடலை ஒப்பிட்டுப் பார்த்தால் உடனடியாகத் தென்படும் வித்தியாசம் விதி என்னும் கருத்துதான். மணிமேகலையின் ஞானத்தேடல் அவளுடைய பயணம் அல்ல. ஊழ் அவளை இட்டுச் செல்கிறது. அவள் அந்த பயணம் வழியாக சுத்தீகரிக்கப்பட்டு, பூச்சுகள் களையப்பட்டு தன்னுடைய சாரத்தைக் கண்டடைவாள் என ஊழ்விதி உள்ளது. ஆகவே அவள் பெறும் அனுபவங்கள் அனைத்துமே பயனுள்ளவை, தெளிவான இலக்குள்ளவை. எவையுமே பொருளற்றவை அல்ல.

ஆனால் சித்தார்த்தனோ தன்னுடைய ஒவ்வொரு பாதங்களையும் மிகுந்த பிரக்ஞையுடன் எடுத்து வைக்கிறான். விதி என்பதை இத்தகைய புனைவு வெளியில் `தவிர்க்க முடியாமை’ என்றோ `நமக்கு அப்பார்ப்பட்ட வல்லமைகள் என்றோ எடுத்துக் கொள்ளலாம். வாழ்வைப் பற்றிப் பேசும்போது இந்த அதீத அம்சம் எப்போதும் கணக்கில் கொள்ளப்பட்டாக வேண்டும். ஆனால் சித்தார்த்தாவில் சித்தார்த்தனை மீறியதாக ஏதும் நிகழவில்லை. ஆகவேதான் உலகப்புகழ் பெற்ற இந்த படைப்பு அதன் அனைத்து அழகுகளுடன் இந்தியப் பார்வையில் ஒரு `சிறிய படைப்பு’ என்று கூறும் நிலையில் உள்ளது.

தன் வாழ்வை ஒரு தேடலாகவும் பயணமாகவும் மாற்றிக் கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால் அவனுடைய வாழ்வின் மீது அவனுடைய கட்டுப்பாடு என்பது பல சமயம் மிகமிக மேலோட்டமான ஒன்றேயாகும். அவனை மீறிய, அவனால் ஒருபோதும் புரிந்து வகுத்துவிட முடியாத, ஆழ் நீரோட்டங்களினால் அலைகடல் துரும்பென அவன் அடித்து செல்லப்படுகிறான். அந்நிலையில் அவனுடைய பயணம் ஒருபோதும் நேர்கோடாக இருக்க முடியாது. தன் வாழ்வின் இறுதியில் தன் பயணத்தைத் திரும்பிப் பார்க்கையில் தேடல் குறித்த தன் இளமைக்கால கற்பனைகளின் அபத்தம், வாழ்வின் அடியோட்டமாக உள்ள மகாநதிகளின் பேரொலி, அவனை அடையும்.

download

ஹெஸியின் சித்தார்த்தா துல்லியமான ஒரு நேர்கோடு. பிராமண இளைஞனாகிய சித்தார்த்தன் மிக இளம் வயதிலேயே ஞானத்தின் புயலை கிளப்பும் முதல் பெருவினாவை எதிர் கொள்கிறான். சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோரின் ஞானம் வழியாக உலகியலின் அலைகளினூடாக அவனுடைய தேடல் ஊடுருவிச் செல்கிறது. இறுதியில் கங்கையில் ஒரு படகோட்டியாக அவன் தன்னை உணர்கிறான். நட்சத்திரங்கள் கண்களாக மலர்ந்த வானகப் பெருக்கு போல வழியும் மகாநதியில் தன் தேடலின் விடை அவனுக்கு கிடைக்கிறது. மறை பொருளான அந்த மெய்ஞானம் நதிக்கரையில் இறந்து கிடக்கும்போது அவன் உதடுகளில் ஒரு மெல்லிய முறுவலாக தேங்கி நிற்கிறது.

ஒரு மேற்கத்திய மனம் இந்திய ஞான மரபு குறித்து செய்து கொண்ட விருப்பக் கற்பனை இது. இந்திய ஞான மரபில் சித்தார்த்தனுக்கு இணையான பயணம் ஒன்று சித்திரிக்கப்பட்டிருக்குமெனில் அது இவ்வாறு நேர்கோடான பாய்ச்சலாக இருக்காது. அதன் ஒவ்வொரு கணமும் தராசு போல சமன்படுத்தப்பட்டிருக்கும். அகம் பிரம்மாஸ்மி என்று அமர்ந்த ஞானியின் அருகே கற்சிலையைக் கண்ணீரால் நனைத்து அதே மெய்ஞானத்தை அடைந்த ஞானியும் அமர்ந்திருப்பார். சித்தார்த்தன் உதறியவற்றின் மூலமே முழுமையின் மெய்மையை அடைந்தவர்களும் அதே நாவலில் ஊடாகப் பரவியிருப்பார்கள். அவன் அடைந்தவற்றை முற்றாக நிராகரிக்கும் ஒரு பயணமும் அவனுடன் இணையாக நிகழ்ந்து அதே உச்சத்தில் சென்று தொட்டிருக்கும்.

ஹெர்மன் ஹெஸியின் சித்தார்த்தன் ஒவ்வொரு தருணத்திலும் அதுவரை அவன் அடைந்தவற்றை நிராகரித்து அடுத்த தளம் நோக்கிச் செல்கிறான். அந்த அனுபவங்களில் இருந்து அவன் பெற்ற ஞானம் என்பது அந்த அனுபவங்களுக்குச் சாரமில்லை என்பதே. சாரமான, முழுமையான உண்மை என்பது முன்னால் எங்கோ உள்ளது என்ற எண்ணமே அவனை வழி நடத்துகிறது. அதை அவன் இறுதியில் கண்டடைகிறான். அது சர்வசாதாரணமாகவும் மகத்துவம் கொண்டதாகவும் உள்ளது.

ஆனால் புத்தர் அவ்வாறு நிராகரிக்கவில்லை. ஒன்றை அடைந்தபின்னர் அந்த அனுபவத்தின் முழுமையின் உச்சியில் இருந்தே அவர் அடுத்த உச்சம் நோக்கிச் செல்கிறார். அவரது வழி என்பது மத்திம மார்க்கம். அல்லது சமன்வயம். இணைத்தும் தொகுத்தும் கொண்டு மேலே செல்லுதல் அது. நிராகரிப்பினூடாக அல்ல செரித்துக்கொள்ளுதலினூடாகவே புத்தர் அவரது மெய்ஞானத்தை நோக்கிச் செல்கிறார்.

ஹெஸியின் நாவலில் சித்தார்த்தனுக்கும் கமலாவுக்குமான உறவு அதிகமாக அழுத்தப்பட்டிருக்கிறது. இருத்தலியல் சார்ந்த எல்லா சிந்தனையாளர்களுக்கும் காமம் ஒரு பெரும் சிக்கலாக இருந்திருக்கிறது. காமத்தின் பாவ உணர்ச்சியும், காமம் உருவாக்கும் உறவுச்சிக்கல்களும் அவர்களுடைய இருத்தலியல் கோட்பாடுகளை பரிசீலிப்பதற்கான முக்கியமான களம். ஹெர்மன் ஹெஸியின் இந்த சித்தரிப்புடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியது நிகாஸ் கஸந்த் ஸகீஸின் கிறிஸ்துவின் கடைசி சபலம் [Last temtation of Christ] நாவலில் மேரி மக்தலீனாவுக்கும் கிறிஸ்துவுக்குமாந உறவு சித்தரிக்கப்பட்டிருக்கும் விதமே. கிறிஸ்து தானடைந்த மெய்ஞானத்தை மேரியுடனான உறவை வைத்தே மதிப்பிட்டு பார்க்கிறார்.

ஆனால் இந்திய காவியமரபில் காமம் அந்த வகையான தத்துவச்சிக்கல்களை உருவாக்குவதில்லை. அந்த வினாக்கள் வெகுநாட்களுக்கு முன்னரே கடந்து செல்லப்பட்டுவிட்டன. காமம் என்பது உலகியல் உறவு. உலகியலுக்கு அப்பல் செல்ல வேண்டும் என்று உன்னும் ஒரு பிரக்ஞை அதை துறந்து மேலே செல்லவேண்டும், அவ்வளவுதான். அதில் குற்றவுணர்ச்சியை இந்திய மனம் படியவைப்பதில்லை.

ஹெர்மன் ஹெஸின் சித்தார்த்தனின் பயணம் ஒற்றைப்படையானது. அம்புபோல அவன் ஒரு இலக்கை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறான். அவனுடைய வினா என்பது இருத்தலின் உண்மையைப்பற்றியதே. இருத்தல் மட்டுமே இருத்தலின் ரகசியம் என்று அவன் கண்டடைகிறான் எனலாம். கேள்விகளற்ற, தன்னுணர்வற்ற எளிமையான இயல்பான இருத்தல். அது ஒரு முழுமைநிலை என்று ஹெஸ்ஸியின் பிரக்ஞை கண்டடைகிறது. அதை சித்தார்த்தன் மேல் ஏற்றிச் சொல்கிறார்.

images (19)

ஆனால் தர்க்கஞானத்தால் வாழ்க்கையையும் காலவெளியையும் அள்ளி அள்ளிச் சோர்ந்துபோன இருத்தலியளாரின் அந்தரங்க பகற்கனவு மட்டும்தான் அது. பிரக்ஞை விழிப்பு கொண்ட ஒருவன், அப்பிரக்ஞையின் விழிப்புநிலையை ஒரு வதையாக உணரக்கூடிய ஒருவன், அதைக் கழற்றிவிட்டு எளிய வெறுமையின் நிம்மதியை எய்தி நிற்க ஆசைப்படுகிறான். இந்த விழைவையே ஹெஸ்ஸி மெய்ஞான முடிவாக முன்வைக்கிறார். இருத்தலியல் படைப்பாளிகளில் பலர் வந்தடைந்த முடிவுதான் இது

இதற்கு ஒரு ஐரோப்பிய பின்னணி உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தத்துவமும் மதமும் மறுமலர்ச்சி அடைந்தபோது மதமற்ற தத்துவமற்ற ஒரு வாழ்க்கைக்கான பகற்கனவு சில கவிஞர்களின் மனதில் எழுந்து மெல்ல தத்துவத்தில் வேரூன்றியது. ‘கள்ளம்கபடமற்ற’ மேய்ச்சல் வாழ்க்கைக்கான கனவு. அக்கனவை வேர்ட்ஸ்வர்த் போன்றவர்கள் கவிதையில் நிலைநாட்டினர். ரூஸோவும் தோரோவும் தத்துவத்தில் நிலைநாட்டினர். அந்த Pastoral யதார்த்ததையே இந்நாவலில் ஹெஸ்சியும் சித்தார்த்தனின் முக்திநிலையாக முன்வைக்கிறார்.
மீண்டும் நிகாஸ் கஸந் ஸக்கீஸின் படைப்புடன் இந்த நாவலை ஒப்பிடலாம். ஹெஸ்ஸியின் சித்தார்த்தன் வந்தடைந்த புள்ளியில் ஏற்கனவே சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் ஸோர்பா.

ஆனால் பௌத்தமும் அதன் வழிவந்த ஞான மரபுகளும் முன்வைக்கும் முக்தி நிலை இதுவா? தேடலின் பொருளின்மையை உணர்ந்து அதை கழற்றிவிட்டுவிட்டு இயற்கையைச் சரணடைந்து கொள்ளும் எளிய நிம்மதியா அது? அப்படிச் சொல்ல முடியாது. பௌத்தம் முன்வைப்பது சூனியத்தை. அறியமுடியாமையின் எல்லையின்மையை அறிதலாக ஆக்குவதே சூனியம். அந்த அறிதல் அளிக்கும் நிறைவே பௌத்தம் சொல்லும் நிர்வாணம். அது கேள்வியின்மையின் நிம்மதி அல்ல அல்ல பதிலின் நிறைநிலை.

ஆகவேதான் கீழை ஞானத்தில் அபத்தத்திற்கு, அங்கதத்திற்கு எப்போதும் இடமிருக்கிறது. தன் ஞானத்தை நோக்கி சிரிப்பவனே ஆகப்பெரிய ஞானியாக இருக்கிறான். சித்தார்த்தனிடம் சிரிப்பே இல்லை. சித்தார்த்தன் வந்தடையும் புள்ளியை நிராகரித்து மேலே செல்லும் ஒரு வாசகன் சித்தார்த்தனை நிராகரிக்க நேரும். அந்நாவலை முழுமையாக கடந்து செல்ல நேரும். அதனாலேயே அது ஒரு நிரந்தரமாக பெரும்படைப்பாக இல்லாமல் ஒருகாலகட்டத்தின் படைப்பாக உள்ளது.

[சித்தார்த்தன் _ ஹெர்மன் ஹெஸ்ஸே, தமிழில்: திருலோக சீதாராம்; முதல் பதிப்பு வெளியீடு: 1957, மூன்றாம் பதிப்பு வெளியீடு: 1999; தமிழினி பதிப்பகம், 342 டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014)

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36

$
0
0

bowபாண்டவர்களின் யானைப்படைக்குப் பின்னால் அணிவகுத்துச்சென்ற தொலைவில்லவர்களின் தேர்ப்படையில் அசங்கனும் இருந்தான். அவனைச் சூழ்ந்து அவன் தம்பியர் ஒற்றைப்புரவி இழுத்த விரைவுத்தேர்களில் வந்தனர். முரசுகளும் முழவுகளும் இணைந்த முழக்கம் காற்றில் நிறைந்திருந்தது. அசங்கன் திரும்பி நோக்கி “செறிந்துவருக… இடைவெளி விழாது அணைக!” என்றான். அவன் ஆணையை தேருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கழையன் முழவோசையாக்கினான். “செறிந்து வருக… ஆணை அமைந்ததும் வில்தொடுத்து முன்னேகுக!” என்று அசங்கன் ஆணையிட்டான்.

தன் உடன்பிறந்தார் தன் குரலை மட்டுமே கேட்கிறார்கள் என்று அசங்கன் அறிந்திருந்தான். போரில் எழும் முரசொலிகளை புரிந்துகொள்வதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தும்கூட செவி பழகியிருக்கவில்லை. அவனுக்கே தந்தையின் பெயரை மட்டுமே பிரித்தறிய இயன்றது. முழவொலியை சொல்லெனக் கேட்க செவி பிற புலன்களிலிருந்து விலகி அதை மட்டும் அறியும் ஒன்றாக மாறிவிட்டிருக்க வேண்டும். அலறும் யானைகளையோ குளம்படிகளையோ போர்க்கூச்சல்களையோ உயிர் துடிக்கும் கூச்சல்களையோ முற்றிலும் அகற்றி அவ்வதிர்வுகளை செவிப்பறையால் முற்றிலும் இணைகோத்து கேட்கவேண்டும்.

போருக்கெழுந்த சற்றுநேரத்திலேயே அவன் அதை உணர்ந்துகொண்டான். போர்முழவின் ஓசை தாளங்களின் எண்ணிக்கையாலும் அணுக்க விலக்கத்தாலும் விசையாலும் கோல் மாறுபாடுகளாலும் சொல்லென்றாகிறது. இரு முட்டலும் இரு நீட்டலும் ஒரு முத்தாய்ப்பும் ஒன்றென ஒலிப்பது சாத்யகி எனும் சொல். எண்ணி கணக்கிட்டு சொல்லென்று மொழியாக்கி அத்தாளத்தை புரிந்துகொள்ள இயலாது. நேரடியாகவே சொல்லென்று சிந்தை புகவேண்டும். அவன் தன் கைவிரல்களால் சாத்யகி சாத்யகி என அச்சொல்லை தாளமாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது வேறெங்கோ இருந்தது. முழவு அச்சொல்லை முழங்கியபின் சற்று கழித்தே அது சிந்தையை அடைந்தது. அதனுடன் இணைந்த ஆணைகள் வெறும் ஓசையென்றே ஒலித்தன. அருகே நின்றிருந்த மூத்த வீரர்கள் எவரேனும் அவ்வாணையை சொல் பெயர்த்தனர்.

“போர்க்களத்தில் வாய்ச்சொற்கள் சித்தம் புகாமலாகும். முழவொலியே குரலென்று சமையும். அத்தருணத்தை பயின்றறிய இயலாது. உள்ளம் சென்றமையவேண்டும்” என்றார் மூத்த வீரரான பரகாலர். “சென்றமைந்த கணமே நாம் படையென்று உருமாறுகிறோம். அதன்பின் நம் இறப்பு நமக்கொரு பொருட்டே அல்ல.” அவனுக்கு போர்க்களம் கணந்தோறும் பெருகும் திகைப்பாக இருந்தது. அலையடிக்கும் திரளில் தம்பியருடன் அவனும் மிதந்தலைந்தான். பாண்டவப் படையின் முன்புறம் தண்டேந்திய யானைகள் சென்றமையால் கரிய சுவரால் என எதிரிப்படை முற்றாக மறைக்கப்பட்டிருந்தது. சூழ்ந்திருந்த ஓசை திரையென்றாகி தனிமையை அளித்தது. அவன் ஒரு பொருளிலாக் கனவிலென விழித்தெழ தவித்துக்கொண்டிருந்தான்.

தந்தை எங்கோ இருந்தார். அவன் போருக்கு எழுகையில் தந்தைக்குப் பின்னால் அவருடைய விழிவட்டத்திற்குள் நின்றிருப்பதையே எண்ணியிருந்தான். அவர் காண போரிடவேண்டும் என கற்பனை செய்தான். அவர் முன் களம்படவேண்டும். அவர் அள்ளி அணைத்து மடியிலிட்டு கூவி அழுகையில் புன்னகையுடன் உயிர்துறக்கவேண்டும். காவல்மாடத்தில் இருந்து அவன் ஒவ்வொருநாளும் எண்ணி கண்ணீருடன் உவந்தது அதைத்தான். அந்த உடற்கொந்தளிப்பில் அவன் நிலம்பட்டால் அவன் உடன்பிறந்தாரே மிதித்து முன்சென்றுவிடக்கூடும். போர் முடிந்தபின் அவன் உடலை குடிமுத்திரை நோக்கி கண்டடைவார்கள். தந்தை அவர்கள் அங்கிருப்பதை அறிந்திருப்பாரா?

அவன் அவர் முகத்தையே எண்ணிக்கொண்டிருந்தான். அவருடைய தோற்றத்திற்கும் அவனுக்கும் தொடர்பே இல்லை. ஓங்கிய கரிய உடலும், பெருந்தோள்களும், எச்சரிக்கையுடன் நோக்கும் சிறுவிழிகளும், எண்ணி அடுக்கப்பட்ட சொற்களும் கொண்டவர் அவர். நாணிழுத்து இறுகக் கட்டப்பட்ட வில் என பிறருக்கு தோற்றமளிப்பவர். எண்ணியது இயற்றும் ஆற்றல்கொண்ட சிலர் இப்புவியில் எப்போதும் எழுகிறார்கள். அரியவர்கள், முன்நிற்பவர்கள், வழிநடத்துபவர்கள், பொறுப்பேற்றுக்கொள்பவர்கள், முதலில் வீழ்பவர்கள். அவர் அவர்களில் ஒருவர். அவன் தன் அன்னையைப்போன்ற தோற்றம் கொண்டவன். அவன் உடன்பிறந்தார் ஒன்பதின்மரும் அன்னையைப்போன்றே அமைந்தனர்.

அவர்கள் போஜர்குலத்தின் துணைக்குடியாகிய அஜகடகத்தை சேர்ந்தவர்கள். அக்குடியினர் அனைவருமே சிவந்த சிற்றுடலும் மென்மையான உதடுகள் அமைந்த நீள்முகமும் தணிந்த குரலும் கொண்டவர்கள். ஆண்கள் அனைவரிலும் பெண்டிர் அமைந்திருப்பார்கள். அக்குலப் பெண்டிரிலிருந்து சிறுமியர் மறைவதே இல்லை. அவர்களை யாதவக்குடிகள் விரும்புவதில்லை. ரிஷபவனத்திற்கு பெண்ணளிக்க பல யாதவக்குடிகள் சித்தமாக இருந்தாலும் சாத்யகி அவளை மணந்தான். யாதவர்களின் பெருங்களியாட்டுக்கு வந்திருந்த அவளை நோக்கியதுமே விழைவுகொண்டான். தன்னோரன்ன பெண்களுடன் மலர்களியாடிக்கொண்டிருந்த அவளை தேடிச்சென்று பலர் முன்னிலையில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் புகுந்தான். அங்கேயே அவர்களுக்கு குலமூத்தார் கான்மணம் செய்துவைத்தனர்.

அன்னையிடம் தந்தை பேரன்புடன்தான் எப்போதுமிருந்தார் என்பதை அசங்கன் கண்டிருந்தான். ஆனால் ஒவ்வொரு முறை தன்னை பார்க்கையிலும் தந்தையிடம் உருவாகும் புருவச்சுளிப்பையும் அவன் மிக இளமையிலேயே அறிந்திருந்தான். அது ஒவ்வாமை என அவன் உணர்ந்தான். அதை கடந்து அவருக்கு இனியவனாகும்பொருட்டு தன் அனைத்துச் செயல்களாலும் விழைந்தான். படைக்கலங்கள் ஏந்தி போருக்கெழுந்தான். இரவும் பகலும் களரியில் கழித்தான். ஆனால் வளைதடியோ வில்லோ அவன் கைக்கு பழகவில்லை. அவன் அளித்த தவம் அவற்றை சென்றடையவில்லை.

அவன் அம்புகள் பிழைபடுகையில், வளைதடி பிறிதொரு இடம் தேடிச்செல்கையில் தந்தை கடிந்து ஒருசொல்லும் கூறியதில்லை. ஆனால் மிக சிறு ஒளித்துளியென அவரில் எழும் நம்பிக்கை மறைவதை அவர் உடலில் எழும் ஓர் அசைவே காட்டிவிடும். அக்கணம் தன்னுள் உருவாகும் சலிப்பும் துயரமும் அவனை அன்றிரவெலாம் வாட்டி எடுக்கும். மீண்டும் சீற்றம்கொண்டு அம்பையும் வில்லையும் எடுத்தால் அச்சீற்றத்தாலேயே பிழைகள் நிகழும். தன் இரு கைகளையும் பார்த்து அவன் விழிநீர்வார ஏங்குவான். எவ்வண்ணம் இவ்வுடலை நான் கடக்கலாகும்? இதிலிருந்து எழுந்து பிறிதொருவனாக தந்தைமுன் நிற்க எப்போது இயலும்? இதற்கப்பால் சென்று நான் அடைவனவே எனக்குரியவை. நான் என்னை வென்றாலொழிய தந்தையை அணுகமுடியாது.

ஆனால் அவன் உடல் அச்சொற்களுக்கு அப்பால் பிறிதொன்றை நாடிக்கொண்டிருந்தது. அது என்ன என்பதை பன்னிரண்டாம் அகவையில் முதல் முறையாக மகரயாழ் ஒன்றின்மேல் விரல் ஓட்டிப் பார்த்தபோது உணர்ந்தான். களிறுஎழு விழாவிற்காக நூபுரத்வனியிலிருந்து வந்திருந்த இசைச்சூதர் நிகழ்ச்சி முடித்து உணவருந்தச் சென்றபோது உறையிட்டு மூடி வைத்திருந்த யாழ் அது. எழுபத்திரண்டு நரம்புகள் கொண்ட பேரியாழ். அதன் நரம்புகள் ஒளியாலானவை என தோன்றின. விந்தையான சிலந்தி ஒன்றால் கட்டப்பட்ட வலையின் ஒரு பகுதியென. அவன் எழுந்துசென்று மெல்ல அவற்றினூடாக விரலை ஓட்டியபோது அவை முன்னரே அந்த யாழை அறிந்திருப்பதை உணர்ந்தான்.

கனவிலும்கூட தான் யாழ் மீட்டுவதை அவன் பார்த்திருக்கவில்லை. அவ்வுள மயக்கை அகற்ற முயன்றும்கூட விரல்கள் தங்களுக்குரிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டவையென யாழை அறிந்தன. தொட்டுத் தொட்டு அவை எழுப்பிய இசையை செவி அறிந்திருந்தது. மிக மெல்ல சுட்டுவிரலால் அதிரும் யாழ்நரம்பை தொட்டபோது முதுகெலும்பு கூச, உடல் அதிர்ந்து விழிநீர் கோத்தது. யாழை உடலோடு சேர்த்து அமர்ந்து அவன் மெல்ல விம்மினான். காலடியோசை கேட்க விழிகளை மேலாடையால் துடைத்துக்கொண்டான்.

இளையவன் சினி அப்பாலிருந்து ஓடிவந்து “மூத்தவரே, யாழ் மீட்டுவது தாங்களா?” என்றான். அவன் மறுமொழி சொல்வதற்குள் “மூத்தவர் யாழ்மீட்டுகிறார், யாழ்மீட்டுகிறார்” என்று கூவியபடி அவன் வெளியே ஓட பிறர் உள்ளே வந்தனர். “மெய்யாகவா?” என்றான் சித்ரன். நாணத்துடன் அசங்கன் “வெறுமனே தடவிப்பார்த்தேன்” என்றான். உத்ஃபுதன் “இல்லை, சற்று முன் அந்தச் சூதர் மீட்டிச்சென்ற இசையின் நீட்சி இது. அதே பண், ஐயமேயில்லை” என்றான். “நான் பயின்றதேயில்லை” என்றான் அசங்கன். “நீங்கள் விழிகளால் பழகியிருப்பீர்கள். நானே பலமுறை பார்த்திருக்கிறேன், பிறர் யாழ் மீட்டுகையில் நீங்கள் சூழல்மறந்து விழிகளால் அவ்விரல்களை மட்டுமே பார்த்து முற்றிலும் ஆழ்ந்திருக்கிறீர்கள்” என்றான் சாந்தன்.

முக்தன் “மூத்தவரே, அதை மீட்டுக!” என்றான். “ஷத்ரியர் யாழ் மீட்டும் வழக்கமில்லை” என்று அசங்கன் சொன்னான். “நாம் குழலிசைப்பவர். இசையை நம் குருதியிலிருந்து அகற்ற இயலாது” என்றான் உத்ஃபுதன். “யாழ் மீட்டும் கைகளால் அம்பு தொடுக்க இயலாது என்பார்கள்” என்றான் அசங்கன். உத்ஃபுதன் “எவர் சொன்னது? திசையானைகளின் கொம்பை நெஞ்சில் சூடிய இலங்கையின் ராவண மகாபிரபு யாழ்வில் தேர்ந்தவர், இசைவேதம் பயின்றவர் என்று நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா?” என்றான். “ஆம்” என்று அசங்கன் சொன்னான். அச்சொற்கள் அவனுக்கு நிறைவளித்தன. பின்னர் “எவரேனும் வருகிறார்களா என்று பார்” என்று சினியிடம் சொல்ல அவன் அக்கூடத்தின் வாயிலருகே நின்றுகொண்டான். பிறர் ஆங்காங்கே நின்றனர்.

யாழைப்பற்றி மார்பில் சாய்த்து அமர்ந்தான். அதன் ஆணியையும் திருகியையும் தொட்டு சீரமைத்த பின் மெல்ல விரலோட்டலானான். “மூத்தவரே, பலநாள் பயின்று தேர்ந்தவர் போலிருக்கிறீர்கள்” என்று சாந்தன் கூவினான். அவன் முகம் மலர்ந்து “ஆம், இப்படி மீட்ட முடியுமென்றே நான் எண்ணியிருக்கவில்லை” என்றான். மீண்டும் மீண்டும் மீட்டியபோது மெல்ல அவன் எண்ணிய இசைக்கும் விரலில் எழுந்ததற்கும் இடையேயான சிறிய இடைவெளியை கண்டுகொண்டான். அக்குறை அவனை பித்தூட்டி ஆட்கொள்ளும் கொடுந்தெய்வமென பற்றிக்கொண்டது. பின்னர் தனித்திருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவன் உள்ளத்தில் யாழொன்றை மீட்டிக்கொண்டிருந்தான்.

“மூத்தவரே, நீங்கள் தனித்திருக்கையில் உங்கள் கைகளை பார்க்கிறேன். அவை யாழ் மீட்டுவனபோல அசைந்துகொண்டிருக்கின்றன” என்று சினி சொன்னான். “நான் அம்புப் பயிற்சி எடுக்கிறேன்” என்றான் அசங்கன். சினி குழப்பத்துடன் “அம்புகள் இவ்வளவு விரைவாக எடுக்கப்படுவதுண்டா?” என்றான். “இது பிறிதொரு வகை அம்பு” என்று அசங்கன் அவன் தலையை தட்டினான். சினி சிரித்து “இல்லை, என்னை ஏமாற்றுகிறீர்கள். இது யாழேதான்… யாழ்நரம்பில்தான் விரல்கள் ஓடுகின்றன” என்றான். “எவரிடமும் சொல்லாதே” என்றான் அசங்கன். சினி மந்தணம் சொல்லப்படுகையில் சிறுவர் அடையும் உளவிசையை அடைந்து “சாந்தரிடம்கூட சொல்லமாட்டேன்” என்றான். “உத்ஃபுதர் கேட்பார். அவரிடமும் சொல்லமாட்டேன்” என்று சேர்த்துக்கொண்டான்.

சாத்யகி துவாரகைக்கு கிளம்பிச்சென்ற பின்னர் களரித்தலைவர் சிம்ஹர் அவர்களுக்கு வில்லும் வளைதடியும் வாளும் கற்பித்தார். ஆனால் அவரால் அவனை பயிற்றுவிக்கவே இயலவில்லை. “உங்கள் உள்ளம் இதிலில்லை, யாதவரே” என்று சிம்ஹர் சொன்னார். “நாம் கையாளும் படைக்கருவி எதுவாயினும் அதன் வடிவு நம் உள்ளத்திலிருக்க வேண்டும். வெறுங்கையால் வாள்வீசுகையில்கூட எண்ணத்திலிருக்கும் அந்த வாளின் நீளமும் எடையும் விசையும் மெய்யான வாளுக்கு நிகராக இருக்கவேண்டும். அன்றி வாள் ஒருபோதும் வயப்படுவதில்லை. வாள் எனும் பருவடிவை வாள்மை எனும் உளநிகழ்வாக ஆக்கிக்கொள்வதற்கு பெயரே பயிற்சி.” யாழ்மை என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

ஒவ்வொரு நாளும் குறுங்காட்டுக்குள் செல்கையில் அங்கிருக்கும் கொடிமண்டபத்தில் முன்னரே கொண்டுவந்து ஒளித்துவைத்த மகரயாழை அவன் மீட்டினான். இளையோர் அவனைச் சூழ்ந்தமர்ந்து அதை கேட்டனர் அவர்கள் எவரும் தாங்கள் வாள்தேர்ச்சி கொள்ளவில்லை என்பதற்காக வருந்தவில்லை. அவன் மீட்டும் யாழுடன் அவர்களின் விழிகளும் கனிந்து இணைந்துகொள்வதை அறிந்தான். விழித்திருக்கும் கணமெல்லாம் விறலியரின் இசைகேட்டு அரண்மனையில் அமைந்திருக்கும் அன்னையின் விழிகள் அவை. அவர்களில் இருவர் அவன் யாழை தாங்கள் வாங்கி மீட்டத்தொடங்கினர். சினி மிக விரைவிலேயே கற்றுக்கொண்டான். ஒருவரையொருவர் ஊக்கியபடி சூதர் அவைகளில் செவிகளால் அள்ளி வந்த மெட்டுகளை மீட்டி களித்தனர்.

துவாரகையிலிருந்து மீண்டதும் சாத்யகி அவர்களை முதல் பார்வையிலேயே அடையாளம் கண்டுகொண்டான். “எவரும் வில்தேர்ச்சி அடையவில்லை அல்லவா?” என்றான். அவர்கள் பேசாமல் நிற்க சினி “யாழ்” என்று தொடங்க அவன் தோளைப் பற்றி நிறுத்தினான் உத்ஃபுதன். “என்ன?” என்று சாத்யகி கேட்டான். “வாள்பயிற்சியில் மேலும் ஈடுபாடுகொண்டுள்ளோம், தந்தையே” என்றான் அசங்கன். இம்முறை தந்தைக்கு உகக்காத ஒன்றை செய்கிறோம் எனும் உணர்விருக்கவில்லை. அவருக்கு உகந்ததைச் செய்து முன்னிற்கவேண்டும் என்ற விழைவும் அகன்றுவிட்டிருந்தது. தான் அறிந்த ஒன்றை அறியாது பிறிதொன்றில் ஈடுபட்டிருக்கும் ஒருவராகவே தந்தையை பார்த்தான்.

யாழ் ஒலியென்றாகி, விண் நிறைத்து, அறியா மொழியென்றாகி, புவியில் மழையென இறங்கும் உவகையை ஒருமுறையேனும் இவர் அறிந்திருப்பாரா? “மண்ணில் மிகச் சிலருக்கே இசையை அருளியுள்ளன தெய்வங்கள்” என்று அன்னை ஒருமுறை சொன்னார். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இசை கேட்போர் பிறிதொன்றுக்கும் ஒவ்வாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். இவ்வுலகு இசைவின்மையின் பெருவெளி. அங்கு தேவர்கள் வந்தமர்ந்து செல்லும் சிறு வட்டங்களென இசைவின் தடங்கள் உள்ளன. அங்கு உறைபவர்கள் மட்டுமே இசைகேட்க இயலும். இசைவின்மையின் பெருவெளியில் அவர்கள் ஒவ்வொன்றுடனும் முட்டிக்கொள்வார்கள். உரசி சிதைந்து குருதி வடிப்பார்கள். அவர்கள் இசைச்சுவைஞர் அன்றி பிறிதெவரும் அல்லாதாவார்கள். இப்புவியில் அவ்வண்ணம் மானுடர் பெருகினால் வயல் விளைவிப்பவர் எவர்? ஆ புரப்போர் எவர்? போர் புரியவும் நாடாளவும் பொன்எண்ணவும் இங்கு எவர் இருப்பார்கள்?”

“இசைகேட்பவரால் ஆற்றப்படுவதென்ன?” என்றான் சாந்தன். “இசைகேட்பதன்றி பிறிதொன்றும் அவர்கள் ஆற்றுவதில்லை. இங்கு அவர்கள் இருப்பது பிறரின் இசைவின்மையை அளப்பதற்கான அளவை எனும் நிலையில் மட்டுமே” என்றார் அன்னை. அவர் சொல்வது என்னவென்று அசங்கனுக்கு புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மிகுந்துகொண்டே இருக்கும் செறிவுகொண்ட மையத்தில் தானிருப்பதாக அவன் எண்ணிக்கொண்டான். அது இளமை முதல் அவனிலிருந்த குறையுணர்வை அகற்றியது. தன் உடலை மீண்டும் தன்னதென்று உணர்ந்தான். தன் விரல்களை இனியவை என்று கண்டான். அவற்றை கண் முன் ஏந்தி நோக்குகையில் மென்பட்டாலான அரிய இசைக்கருவி ஒன்றைப்போல் தோன்றின. அவற்றின் அனைத்து இயல்புகளும் அவை முன்னரே யாழை அறிந்திருந்தன என்பதனால் உருவானவை என்று அவன் கண்டான்.

தந்தை அவனை அம்பு தொடுக்கச்சொல்லி நோக்கி நின்றார். பதினெட்டு அம்புகளில் இரண்டு மட்டுமே இலக்கை அடைந்தன. அவர் சில கணங்கள் அவனை நோக்கி நின்றபின் ஒரு சொல்கூட உரைக்காமல் திரும்பிக்கொண்டார். முதலில் அது அவனுக்கு ஆறுதலை அளித்தது. பின்னர் அவன் குற்றஉணர்வடைந்தான். அவர் இழித்து ஒரு சொல் உரைத்திருந்தால் அதற்கெதிராக எழுந்து தன்னிலை உறுதி கொண்டிருக்கலாம். அவர் ஒன்றும் உரைக்காததே தன்னை அலைக்கழிக்கிறதென்று உணர்ந்தான். மறுநாள் பதினெட்டு அம்புகளில் எவையுமே இலக்கடையவில்லை. தந்தையின் விழிகளில் சினமெழுவதற்காக அவன் காத்து நின்றான். அவர் அவனை சில கணங்கள் நோக்கி நின்றபின் செல்லுமாறு கைகாட்டி அடுத்தவனை அழைத்தார்.

ஏமாற்றத்துடன் வில்லை வைத்துவிட்டு படைக்கலச்சாலையின் சுவர் சாய்ந்து நின்றான். இளையவன் அம்புகளால் இலக்குகளை அடிக்க அனைத்து அம்புகளும் இலக்கு பிழைப்பதை நோக்கி நின்ற தந்தையின் கண்களை பார்த்தபோது மெல்லிய உளநடுக்குடன் அவன் ஒன்றை உணர்ந்தான். அவர் அவனை நன்கறிவார். அவன் இலக்குகள் குறி தவறும் என்பதை வில்லெடுப்பதற்கு முன்னரே அறிந்திருந்தார். மீண்டும் அவ்விழிகளை பார்த்தான். அவற்றில் சினமில்லை என்று கண்டான். பொறுமையின்மையோ எரிச்சலோகூட வெளிப்படவில்லை. தோளிலும் கைகளிலும் வெளிப்பட்ட சலிப்புகூட அவரால் வலிந்து உருவாக்கப்பட்டதே.

அன்று திரும்பிச்செல்கையில் இளையோரிடம் “தந்தைக்கு நம்மேல் சினமில்லை” என்று அவன் சொன்னான். சினி “அது எனக்கு தெரியும்” என்றான். “எவ்வாறு?” என்றான் அசங்கன். “அவர் நான் வில்லை வைத்துவிட்டு கிளம்பும்போது என் தலையில் கைவைத்து அசைத்தார்.” அசங்கன் “ஆம், நம் அனைவரையுமே அவர் விழிகளால் தொட்டு விடைகொடுத்தார். நம்மீது அவர் சினம் கொண்டிருக்கவில்லை” என்றான்.

சாத்யகி மீண்டும் துவாரகைக்குச் சென்ற பின்னர் எண்ணும்தோறும் அவனுள் ஓர் அமைதியின்மை எழுந்தது. ஆணையிடப்பட்ட ஒன்றை மறுப்பதன் ஆண்மையென்று ஒன்றுள்ளது. செலுத்தப்படுவதிலிருந்து விலகும்போது தனித்தன்மை அமைகிறது. ஆனால் தந்தை என அவர் விழைவது அதுவென்று அறிந்து அதை இயலாமையால் விலக்குவது பிழையென அவன் அகம் உணர்ந்தது. தந்தைக்கு அவன் அளிக்கக் கூடுவதென அது ஒன்றே உள்ளது. இப்புவியில் அவன் எய்துவன அனைத்தையும்விட அதுவே மேலானது.

ஒரு நாள் அவன் கனவில் தந்தை எங்கோ களம்பட்டார் எனும் செய்தியுடன் வீரன் ஒருவன் வந்தான். அன்னை அலறிவிழ இளையோருடன் ஓடிச்சென்று அரண்மனை முகப்பில் காத்து நின்றிருந்த தேரிலேறிக்கொண்டபோது அவன் விழித்துக்கொண்டான். நெடுநேரம் மஞ்சத்தில் அக்கனவை எண்ணியபடி படுத்துக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனால் விளங்கக் கூடவில்லை. முகங்கழுவி களத்திற்குச் சென்றபோது அக்குழப்பம் நெஞ்சில் நிறைந்திருந்தது. தொலைவில் வில்லை பார்த்ததுமே அவன் அறிந்தான், அதன் பொருளென்னவென்று. அவன் அக்கடனை முடிக்கவில்லை என்றால், அவ்வெச்சத்துடன் தந்தை மண்மறைந்தார் என்றால், ஒருபோதும் எஞ்சிய வாழ்நாளில் அவன் நிறைவு கொள்ளப்போவதில்லை.

அன்று வில்லெடுத்தபோது ஆசிரியர் சலிப்புடன் வழக்கம்போல அவனை நோக்காமல் இலக்கை சுட்டிக்காட்டினார். அனைத்து அம்புகளும் இலக்கு தவற அவன் சில கணங்கள் தலைகுனிந்து நின்றான். பிறகு மீண்டும் வில்லை எடுத்தான். இரண்டாம் முறை வில்லெடுக்கும் வழக்கம் அவனுக்கில்லை என்பதனால் துணைஆசிரியர் ஊர்த்துவர் வியப்புடன் அவனை பார்க்க முழு உளத்தையும் விழிகளில் செலுத்தி இலக்கை நோக்கி அடித்தான். பதினெட்டு அம்புகளில் மூன்று இலக்கடைந்தன. அவர் குழப்பத்துடன் “நன்று” என்றார். யாதவர்களின் போர்களெல்லாம் விரிவெளியில் நிகழ்பவை என்பதனால் நிலைவில்லும் தொலையம்புமே அவர்கள் பயில்வன. இலக்கு மிகத்தொலைவில் விழிகூர்ந்தால் மட்டுமே தெரியும்படி இருந்தது. அவன் அதன் மையத்தில் அம்பால் அறைந்ததும் சிம்ஹர் “நன்று” என முகம் மலர்ந்தார்.

அதன் பின் ஒவ்வொரு நாளும் நான்கு மடங்கு பொழுதை அம்புப் பயிற்சிக்கு செலுத்தினான். “நாம் போருக்கு போகவிருக்கிறோமா, மூத்தவரே?” என்றான் சினி. “ஆம்” என்றான். “நம்மீது மகதம் படைகொண்டு வரப்போகிறதா?” என்றான் சினி. “இல்லை, நாம் சென்று மகதத்தை வெல்லவிருக்கிறோம்” என்று அவன் சொன்னான். இளையோர் அவன் வில்தேர்வதை நோக்கி மெல்ல விலக்கம் கொள்ளத் தொடங்கினர். சினியைத் தவிர பிறர் அவனிடம் களியாடுவது அரிதாயிற்று. அவன் தந்தையை நோக்கி சென்றுகொண்டிருந்தான். தந்தையின் நோக்கும் சொல்லும் அவனிடம் கூட அவர்கள் அவனை தந்தையென்றே என்ணத் தலைப்பட்டனர். அவன் சொற்களுக்கு பணிந்த நோக்குடன் ஆட்பட்டனர்.

அஸ்தினபுரியில் ஒவ்வொன்றறும் பிழையாக சென்று கொண்டிருப்பதை அவையில் நிகழ்ந்த உரையாடல்களிலிருந்து அவன் அறிந்தான். தந்தை போருக்குச் செல்லும் முன் தன் அன்னையிடமும் தந்தையிடமும் விடைகொள்ள வருவாரென்றும், அன்னையிடம் விடைகொள்ள வருகையில் அவரிடம் தானும் போருக்கெழுவதாக கூறவேண்டும் என்றும், வில்லெடுத்து இலக்கை அடித்து தான் அவருக்கு உகந்தவனாக மாறிவிட்டிருப்பதை காட்ட வேண்டுமென்றும் எண்ணியிருந்தான். அவன் இலக்குகள் பெரும்பாலும் நிலையடைந்துகொண்டிருந்தன. ஒவ்வொருநாளும் பயின்று பயின்று தன்னைத் தீட்டி கூரமைத்துக்கொண்டிருந்தான்.

உபப்பிலாவ்யத்திலிருந்து தந்தை விரைவுப்பயணமாக வந்து அன்னையிடம் அவர் போருக்குச் செல்வதாக கூறினார். அன்னை அதை அவனிடம் சொன்னபோது அவன் “நான் தந்தையை சந்திக்கவேண்டும், அன்னையே” என்றான். அன்னை அவன் சொல்லவிருப்பதை உணர்ந்திருந்தாள். மறுநாள் அவர்கள் அனைவரையும் அன்னையின் அறைக்கே வரும்படி தந்தை சொன்னார். அவர்கள் சென்று நின்றபோது கடுமையான நோக்குடன் ஒருமுறை அனைவரையும் நோக்கிவிட்டு “நீங்கள் அனைவரும் என்னுடன் போருக்கு எழுகிறீர்கள்” என்றார்.

சினி “அனைவருமா, தந்தையே?” என்றான். “ஆம்” என்றார் தந்தை. “நானுமா?” என்றான் சினி மீண்டும். “ஆம்” என்றார். “போர்! நான் போருக்கெழுகிறேன்!” என்று சினி இரு கைகளையும் தூக்கி கூவி குதித்தான். அன்னை நீர்பரவிய கண்களால் அவனை பார்த்தார். “அன்னையே, நான் போருக்கெழுகிறேன்! நூறு எதிரிகளை கொல்வேன்! ஏழு விழுப்புண்களுடன் திரும்பி வருவேன்!” என்றான். அசங்கன் தந்தையிடம் தணிந்த குரலில் “இம்முறை தாங்கள் என் வில்தேர்ச்சியை பார்க்கலாம், தந்தையே. என் அம்புகள் இலக்கு பிறழ்வதில்லை” என்றான்.

ஆனால் தந்தை அவனை பார்த்தபோது விழிகளில் துயரே தெரிந்தது. ஆமென்பதுபோல் அவர் தலையசைத்தார். பிறிதொரு சொல்லும் உரைக்காது எழுந்து அறைவிட்டு வெளியே சென்றார். அன்னை அவனிடம் “அவரிடம் இனி இதை குறித்து ஒரு சொல்லும் உரையாட வேண்டியதில்லை” என்றார். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அவர் இனி இதைப்பற்றி பேச விழையமாட்டார்” என்று அன்னை சொன்னார். அவன் ஏன் என்று கேட்க எண்ணி சொல்லொழிந்தான். சினி “அன்னையே, நான் போருக்குச் சென்றால்…” என தொடங்க அன்னை கடுமையான குரலில் “நானும் பேச விழையவில்லை” என்றார்.

அசங்கன் திரும்பி தம்பியரை நோக்கி “அணுகுக! அணுகிவருக!” என்றான். அவன் உடல் மெல்லிய நடுக்கு கொண்டிருந்தது. முரசு ஆணையிட்டதும் சூழ்ந்திருந்த வில்லவர்கள் “எழுக அம்புகள்!” என்று கூவியபடி விற்களை நிறுத்தி நாணேற்றி அம்புகளை தொடுத்தனர். நீளம்புகள் வானிலெழுந்து வளைந்து யானைநிரையைக் கடந்து அப்பால் விழிக்குத் தெரியாது ததும்பிக்கொண்டிருந்த கௌரவப் படையை சென்று தாக்கின. “தாக்குக! தாக்குக!” என்று தம்பியரை நோக்கி கூவியபடி அசங்கன் அம்புகளை ஏவினான். இந்த அம்புகள் அங்கு சென்று தைப்பது எங்கே? இதோ செல்லும் அம்பால் உயிர்துறப்பவனுக்கும் எனக்கும் என்ன உறவு? விண்ணில் சந்தித்துக்கொண்டால் நாங்கள் ஒருவரை ஒருவர் அறிவோமா?

முகம்நோக்காது அம்பெய்வது எளிதென்று அவன் சற்றுமுன்னர் வரை எண்ணியிருந்தான். அதுவே கடினம் என்று தோன்றியது. இலக்கு விழிமறைந்திருந்தபோது எந்த அம்பும் வீணாகவில்லை. இதோ இது ஏழு மைந்தரின் தந்தைக்கு. இது இனிய மனையாட்டியை விட்டுவந்த இளமைந்தன் நெஞ்சுக்கு. இது ஒரு தேர்ப்பாகனுக்கு. இது யானைமேல் அமர்ந்தவனுக்கு. அவன் கைநடுங்க வில்லை தாழ்த்தினான். அதிர்ந்துகொண்டிருந்த நாணின்மேல் கைவைத்து அதை நிறுத்தினான். அவன் முதுகெலும்பு கூசி, உடல் விதிர்த்து, விழிகள் கூசின.

தொடர்புடைய பதிவுகள்

கட்டண உரை -கடிதங்கள்

$
0
0

je

கட்டண உரை –ஓர் எண்ணம்

கட்டண உரை- கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ..

 

சில ஆண்டுகளுக்கு முன் ஓர் எழுத்தாளருடன் உரையாட சென்றிருந்தேன்.. இன்னும் சிலரும் உடன் இருந்தனர்.. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அது பயனற்ற உரையாடல் என தெரிந்து விட்டது.. காரணம் , அங்கிருந்த பலருக்கு ஓர் எழுத்தாளனுடன் எப்படி பேச வேண்டும் என தெரிந்திருக்கவில்லை.. கேள்வி கேட்க சொன்னால் ஒவ்வொருவரும் ஓர் உரை நிகழ்த்தினார்கள்.. எழுத்தாளரிடம் நான் ஒரு கேள்வி கேட்டால் , அவர் பதில் சொல்வதற்குமுன் மற்றவர்கள் ஆளாளுக்கு பதில் சொன்னார்கள் . . ஏமாற்றத்துடன் கிளம்பி வந்தேன்

 

இலக்கிய  நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் வரவில்லை என்பது சிலர் கவலை… தேவை அற்ற கூட்டம் வரக்கூடாதே என்பதும் நியாயமான கவலைதான்

 

உதாரணமாக , உங்களது டால்ஸ்டாய் குறித்த உரை நிகழ்ச்சி மிகச்சிறந்த அனுபவம் கொடுத்தது.. காரணம் அது பொது நிகழ்ச்சியாக இல்லாமல் , வரையறுக்கப்பட்ட அழைப்பாளர்களுக்கான நிகழ்வு.. எனவே வந்திருந்த அனைவருமே தீவிர கவனத்துடன் உரையை கேட்டனர்.  சக பார்வையாளருக்கு தொந்தரவு தரும் சிறு நிகழ்வுகூட நடக்கவில்லை…   மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது…

 

எல்லா நிகழ்ச்சிகளையுமே இப்படி நடத்தினால் நல்லதுதான்.. உண்மையில் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் இது போன்ற கூட்டங்களுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதே நல்லது,, ஆனால் அது சாத்தியமற்றது.. கட்டண உரை என்பது ,ஆர்வமற்றவர்களை தடுத்து நிறுத்த சிறந்த வழி என்றே நினைக்கிறேன். இதன்மூலம் உண்மையிலேயே தேடலுடன் வருபவனுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும்

 

கட்டண உரை என்பது கண்டிப்பாக மேலும் பலரை கூட்டங்களுக்கு ஈர்க்கும் என்றே நினைக்கிறேன்.. கால வரையறை , ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே வருவதால் தேவை அற்ற சலசலப்புகள் இராது என்ற நம்பிக்கை என்பது போல பல காரணங்களால் இதுவரை கூட்டங்களுக்கு வராதவர்கள்கூட இனி வருவார்கள்

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள ஜெ

 

கட்டணக்கூட்டம் என்ற ஐடியா நல்லதுதான். அதை மக்கள் சரிவரப் புரிந்துகொள்ளவேண்டும். கட்டணமில்லாத கூட்டமே உண்மையில் நல்லது. ஏனென்றால் அதில் ஒரு informal தன்மை உள்ளது. அதேபோல moderation இல்லாத கூட்டமே நல்லது.

 

ஆனால் இங்கே அவை தோல்வியடைகின்றன. என்ன காரணம் என்றால் இங்கே கூட்டத்திற்கு வருபவர்களில் ஒருசாரார் பொழுதுபோகாத வயசாளிகள். எதையாவது கொஞ்சம் வாசித்துவிட்டு அதை எங்காவது சொல்லிவிடவேண்டும் என்று தவிப்பவர்கள். இன்னொரு சாரார் உண்டு. அவர்கள் கொள்கை அடிமைகள். உலகையே மாற்றியமைக்கத்தக்க முடிவுகளை அடைந்துவிட்டதாக நினைப்பவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அதை சொல்லிக்கொண்டிருப்பவர்கள். இந்த இருசாராரும் எங்கேயும் இலக்கியக்கூட்டமே நிகழமுடியாதபடி ஆக்கிவிடுகிறார்கள்.

 

 

சரமாரியாகப்பேசுவது, எவரையும் பேசவிடாமல் செய்வது இவர்களின் வழக்கம். தேவையற்றவர்களை அனுமதிக்காமல் மட்டும்தான் இனிமேல் இங்கே கூட்டமே நடத்தமுடியும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறது. அதற்குக் கட்டனக்கூட்டம் ஒரு வழிமுறை. அதையும் திட்டமிட்டு உடைப்பார்கள். இருந்தாலும் முயன்றுபார்க்கலாம்.

 

கூட்டங்களில் பயனுள்ளவை பேசப்படவேண்டும், கொஞ்சமாவது படித்துவிட்டு வந்து பேசவேண்டும் என்பதை ஒரு நெறியாக வைத்துக்கொள்ளவேண்டும். என்ன பிரச்சினை என்றால் இங்கே நம்மில் பலருக்கும் informal பேச்சு எங்கே நடக்கவேண்டும் formal பேச்சு எங்கே நடக்கவேண்டும் என்று தெரியாது. informal பேச்சு நிகழவேண்டும் என்றால் அங்கே இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாகத்தெரிந்த சின்னக்குழுவாக இருக்கவேண்டும். பொதுவான கேள்விக்காரர்கள் இருந்தால் formal ஆன முறையான உரைதான் தேவை. இது உலகமெங்கும் உள்ள வழக்கம்.

 

அதேபோல எல்லா இடத்திலும் கேள்வி, உரையாடல், மறுப்பு ஆகியவை நிகழக்கூடாது. மறுத்துரை நிகழவேண்டும் என்றால் அங்கே இணையான வாசிப்பும் அறிவுத்தகுதியும் கொண்டவர்கள் இருக்கவேண்டும். கச்சிதமான moderation இருக்கவேண்டும். தேவையான விவாதங்கள் மட்டுமே நிகழும்படி கண்காணிக்கப்படவேண்டும். அதற்கு முன்னரே தெரிந்த குழுவின் சின்ன வட்டம்தான் சரியாக இருக்கும். முப்பதுபேருக்குமேல் ஆடியன்ஸ் இருந்தாலே விவாதம் சீரிய முறையில் நடக்க வாய்ப்பில்லை. அதற்குமேல் கூட்டமிருந்தால் அவர்களை ஒரே அமைப்பாக, ஒரு total entity யாக கண்டு அவர்களிடம் பேசும் உரைகள்தான் வழக்கம்.

 

இதையெல்லாம் நான் படித்த கல்லூரியில்கூட தெரிந்துகொள்ளவில்லை. ஆய்வுமாணவனாக இந்தியாவுக்கு வெளியே வந்து ஒரு நல்ல பல்கலையில் படிக்க ஆரம்பித்தபிறகுதான் புரிந்துகொண்டேன். நம் இலக்கியச்சூழலில் இதையெல்லாம் கொண்டுசென்று சேர்க்க இன்னும் நெடுங்காலமாகலாம்

 

சந்திரசேகர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சேர்ந்து வாழ்தல்- கடிதங்கள்

$
0
0

Do you come here often, Painting of mannequins.

சேர்ந்து வாழ்தல்

ஜெமோ,

 

‘டiving together’ பற்றி நப்பாசையுடன் வந்த கடிதத்திற்கான உங்களுடைய பதில் தன் விழைவுகளின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாதவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்திருக்கும். இப்பதில் சில வருடங்களுக்கு முன்பு நான் கலந்து கொண்ட தொழில்நுட்ப கருத்தரங்கில் பேசிய வல்லுனரின் உரையை ஞாபகப்படுத்தியது.

 

அங்கிருந்த இளையவர்களை நோக்கி “How many of you are thinking that the Controls in your organisation hinder your innovative thinking?” என்ற அந்த வல்லுனரின் கேள்விக்கு கிட்டத்தட்ட அரங்கத்திலிருந்த அனைவருமே கையுயர்த்தினார்கள். அதை எதிர்பார்த்திருந்தவர் போல திரையில் இரண்டு உயர்தர sports carகளை உயிர்ப்பித்தார். இரண்டும் ஓரிரு நொடிகளில் அதிவேகத்தை எட்டக்கூடியவை.  “The 2 cars you see in this video are almost same in all aspects. But, one of them doesn’t have the break. Which car is your choice?” என்ற அந்த வல்லுனரின் கேள்விக்குப் பிறகு ஒட்டுமொத்த அரங்கமும் அமைதியானது.

 

‘Controls are there in place for you to innovate without the fear of failure” என்று கூறிவிட்டு தன் உரையைத் தொடர்ந்தார். அமைப்புகளுக்குச் சரி, ஆனால் ஒரு தனிமனிதனுக்கு இந்த கட்டுப்பாடுகள் ஏன் தேவை. சட்டங்களின் வழியாக அவை ஏன் நிறுவப்படவேண்டும்? தனிமனித சுதந்திரத்திற்கு அது எதிரானதல்லவா என்று புரட்சிகரமாக எண்ணிய காலங்களுண்டு. ஆனால் காலம்போல் நமக்கு புரிதலை ஏற்படுத்துகிற ஆசான் வேறொன்றுமில்லை.

 

தனிமனித சுதந்திரம் என்பது தனக்கு நிகழும் அனைத்திற்கும் தானும் ஒரு பெரிய பொறுப்பு என்றுணரும்  முதிர்ச்சி நிலை. It is not really ‘free’ as it is painted all over.

இந்த நிலையை அடையும்வரை ஒழுக்கம் மதங்களிலிருந்து அரசியல் வழியாக குடும்பங்களிலும் சமூகத்திலும் நிலைநாட்டப்படுகிறது. இன்றைய ஜனநாயகத்தில் அது சட்டம். தனிமனித முதிர்ச்சிற்கேற்ப சட்டங்கள் மாறிக்கொண்டேயிருக்கும். சட்டங்கள் ஏதுவும் தேவையற்ற ஒரு முதிர்ச்சி நிலையைத்தான் மதங்களும் மார்க்ஸியம் போன்ற தரிசனங்களும் இலட்சியக் கனவாக முன்வைக்கின்றன.

ஹோட்டலில் சென்று தினமும் சாப்பிடுவது உடலுக்கு கேடு. ஆகவே இது தண்டனைக்குரிய குற்றம் என்பது முதிர்ச்சியற்ற சமூகங்களுக்குத் தேவையான  சட்டம்தான். ஆனால் ஹோட்டலில் தினமும் சாப்பிட்டு உளுத்துப் போன உடம்பிற்கு நான் தான் பொறுப்பாவேன்; மற்றவர்களல்ல என்றுணரும் பொறுப்புணர்ச்சி தனி மனித சுதந்திரத்திற்கான முதன்மைத் தகுதி.

இந்தியாவிற்கு அந்த பொறுப்புணர்ச்சி வந்துவிட்டதா என்பது சந்தேகமே என்பதை மிகவிரிவான பதிலின் மூலம் உணர்த்தியுள்ளீர்கள்.

 

அன்புடன்

முத்து

 

அன்புடன்
முத்து

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் கட்டுரையில் ஒரு வரி. மானுட உறவுகளை மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் ஒரு காலகட்டம் வரும் என்றால் இந்த உறவுமுறை இயல்பானதாக ஆகிவிடும் என்று. உண்மையில் அப்படி ஒரு காலகட்டம் இந்தியாவின் வாழ்க்கையில் ஒரு பகுதியில் உருவாகிவிட்டது. என் நண்பர்கள் வேலைநிமித்தமாக பாரீஸ் சென்றார்கள். நால்வர் ஆண்கள், இருவர் பெண்கள். நால்வரும் அந்த இரு பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு அந்த எட்டுமாதத்தையும் கொண்டாடினார்கள். அவர்கள் அதன்பின் பிரிந்துவிட்டார்கள். எந்த விதமான மனச்சிக்கலும் அவர்களிடம் இல்லை.

 

நான் கேட்டபோது அதில் ஒருவர்  ‘இது ஒன்றும் வாழ்க்கைப்பிரச்சினை இல்லை. சும்மா வேடிக்கை’ என்றார். இன்னொருவர் ‘அவர் என்ன உறவுதானே வைத்துக்கொண்டார்? பணமா ஏமாற்றினார்?” என்றார். பாலுறவை மனம்சார்ந்த உறவாக எடுத்துக்கொள்ளாமல் வெறுமே உடல்மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒருசாரார் இருக்கிறார்கள். இன்றைய பாலியல்தளங்களுக்கும் உலகளாவிய பண்பாட்டு பரிமாற்றத்துக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உள்ளது

 

ஆர்

 

அன்புள்ள ஜெ

 

சேர்ந்துவாழ்தல் பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தபோது தோன்றியது. நீங்கள் 1998ல் இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல் கன்யாகுமரி. அதில் விமலா என்ற ஆராய்ச்சியாளர் முழுக்கமுழுக்க ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு வாழ்க்கையே அதுதான். அவ்வப்போது விடுமுறை எடுத்துக்கொள்கையில் பாலியல்தோழனாக ஒருவனை தேர்வுசெய்துகொள்கிறார். எளிமையான, ஆரோக்கியமான ஓர் ஆணை.

 

ஆனால் விமலாவை அந்நாவல் ஓர் ஆதர்சப்பெண்மணியாகவே காட்டுகிறது. அது ஒன்றும் பெரியவிஷயம் அல்ல என்பதுபோலவும், அவருடைய ஆளுமை என்பது அறிவும் கருணையும் கொண்டது என்பதுபோலவும் காட்டுகிறது. அவருக்கு இளவயதில் ஒரு பாலியல் வன்முறை நிகழ்ந்தது.ஆனால் பாலுறவே சாதாரணமான ஒரு இளைப்பாறலும் மகிழ்ச்சியும்தான் என அவர் நினைக்கும்போது அந்த பாலுறவுவன்முறை ஒரு பொருட்டாக இல்லாமலாகிவிட்டது. தன்னை பாலுறவுவன்முறை செய்தவனையே ஒரு மருத்துவராக நின்றுதான் அவர் கருணையுடன் அணுகுகிறார்.

 

 

அதேபோல அதில்வரும் பிரவீணா என்னும் கதாபாத்திரமும் கலைசார்ந்த பெரிய கனவுகள் கொண்டது. அவளுக்கும் பாலுறவு என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை. தன் இலட்சியத்துக்காக அதைப்பயன்படுத்திக்கொள்வதில் குற்றவுணர்ச்சியும் இல்லை. அவளையும் நாவல் இலட்சியவடிவமாகவே முன்வைக்கிறது

 

அன்றைக்கு கன்யாகுமரி நாவல் பற்றி எழுந்த சர்ச்சைகளையும் வசைகளையும் நான் இணையத்திலேயே தேடித்தேடி வாசித்தேன். அது எனக்குக் காலம் எப்படி மாறிவிட்டது என்று காட்டியது. இன்றைக்கும் கன்யாகுமரி அதே வசைகளை அளிக்கும். அன்றைக்கு வசைபாடியவர்களில் பெண்களும் இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு கன்யாகுமரியைப் புரிந்துகொள்ளும் பெண்கள் சிலராவது உருவாகிவிட்டனர்.

 

எம்

 

 

கன்யாகுமரி- கடிதங்கள்

கன்யாகுமரி பற்றி…

கன்யாகுமரி கடிதங்கள்

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்

கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16885 articles
Browse latest View live