Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16791 articles
Browse latest View live

ஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்

$
0
0

Jared.Diamond-1

வரலாற்றின் பரிணாமவிதிகள்

அன்பு ஜெமோ,

 

 

நலந்தானே ?

 

ஒரு பெரிய நிறுவனத்தின் தொழில்நுட்ப  மாநாட்டிற்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் ஒரு எழுத்தாளரை அழைப்பது வழக்கம். இந்த வருடம் புவியியல், வரலாற்று ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் ஜாரெட் டைமண்ட் அவர்களை அழைத்திருந்தார்கள். அவருடைய புகழ்பெற்ற புத்தகமான ‘துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு’ படித்திருக்கிறேன். அதைப்பற்றி உங்கள் தளத்தில் சில கட்டுரைகளையும்.

 

அவர் அரங்குக்குள் வரும்போது ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் இசையை ஒலிக்கவிட்டார்கள்! அவர் அணிந்திருந்த டையில் டயனோசார்கள் படம், வண்ணங்கள் மாறும் ஒளியமைப்பு என்று நிறுவனத்தார் கவனமாக ஒருங்கிணைத்திருந்தனர்.  பெரிய புன்னகையுடன்  அரங்கில் நுழைந்தார். கசங்கிய உடை, சற்றே மெதுவான நடை.

 

ஆனால், உரையாடல் என்றால் மற்றதெல்லாவற்றையும் மறந்துவிடுவது, பேசுவதில் இருக்கும் அதே அக்கறையை  கேட்பதிலும் காட்டுவது, பேசும்போது வந்துகொண்டே இருக்கும் புதிய திறப்புக்கள் என எனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளரை நினைவூட்டிக்கொண்டே இருந்தார் :-)

 

‘தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் பேசினார். ஆராய்ச்சி செய்பவர்கள், அதன் பயன்பாட்டைப் பற்றி சிந்திக்கவே கூடாது;  அது பல நேரங்களில் அவர்களின் ஆராய்ச்சியின் வீச்சை குறைத்துவிடும் என்றார். கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ‘பைசா பெறாத’ ஆராய்ச்சிகள் எப்படி உலகத்தையே மாற்றியமைத்தன என்று ஒரு பட்டியல் தந்தார். தொலைபேசி, ஒலிப்பதிவு, வானொலி என்று நீளமான பட்டியல்.

 

அதற்கு நேரெதிர் திசையில் சென்று ஆராய்ச்சியிலிந்து எப்படி ‘கண்டுபிடிப்புகள்’  வேறுபடுகின்றன என்று விளக்கினார்- பயன்பாட்டின் தேவையில் இருந்து முகிழ்த்து வரும் கண்டுபிடிப்புகள். இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விவரித்தார்.

Picture1_004__13451_std

எனக்கு மிகவும் ஆர்வமூட்டியது கொரிய எழுத்துமுறை ‘கண்டுபிடிக்கப்பட்டது’  பற்றி அவர் சொன்னதுதான்.

 

15ம் நூற்றாண்டு வரையில் கொரிய மொழிக்கென்று எழுத்துக்கள் இல்லை. சீன எழுத்துக்களையே பயன்படுத்தினர். சிக்கல் என்னவென்றால், சீன எழுத்துக்கள் பெரும்பாலும் வார்த்தைகள்! உச்சரிப்பும் கடினம். இந்த மொழிக் குழப்பத்தால் கொரியாவில் கற்பதும், படிப்பதும் மிகச்சிறு வட்டத்துள் நிகழும் செயலாயிற்று. பெரும்பான்மை மக்களுக்கு படிப்பறிவில்லை. அதன் தாக்கம் நாட்டின் எல்லா செயல்பாடுகளையும் பாதிப்பதை உணர்ந்த மாமன்னர் செஜாங், கொரிய மொழிக்காக ஒரு நவீன எழுத்துமுறையை உருவாக்க செயலில் இறங்கினார்.

 

அம்முயற்சியின் விளைவாக, இதுவரை உலகில் உள்ளவற்றிலேயே சிறந்த, நவீனமான, எல்லாவகையிலும் தர்க்கபூர்வமான எழுத்துமுறையை கொரிய மொழிக்கு உருவாக்கினார்.

 

ஒவ்வொரு எழுத்தும் அதை எப்படி உச்சரிப்பது என்ற குறிப்பையும் கொண்டிருக்கும்! உச்சரிக்கும் போது நாக்கு அல்லது உதடு எப்படி இருக்கும் என்பதே எழுத்தின் வடிவம். மேலும் இரண்டு விஷயங்களை சேர்த்தார். சீன மொழிப்படி மேலிருந்து கீழாக எழுதத் தொடங்குவது, ஆனால் அந்த வார்த்தை முடிந்த பிறகு, அடுத்தவார்த்தையை வலப்பக்கத்தில் தொடங்குவது. இதுபோல், ஒரே சமயத்தில் மேல் கீழாகவும், இட வலமாகவும் எழுதுவதால், கொரிய மொழியில் மிக வேகமாக படிக்க முடியும்.

 

14 மெய்யெழுத்துக்கள், 10 உயிரெழுத்துக்கள் என மொத்தமே 24 எழுத்துக்கள். இன்று மிக விரைவில் கற்றுக்கொள்ளக் கூடிய மொழி கொரிய மொழிதான். மொத்தமே அரைமணி நேரத்தில் எல்லா எழுத்துக்களையும் கற்றுக்கொண்டு மெதுவாக படிக்கவும் ஆரம்பித்து விடலாம்! அரை மனதோடு முயன்று பார்த்தேன்- அரை மணிக்குள் எல்லா எழுத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம் என்பது உண்மைதான்!

 

With-Jared.Diamond

ஒரு மணி நேர உரைக்குப்பிறகு கலந்துரையாடல்.  பல சுவாரஸ்யமான வினாக்கள் வந்தன. ஒரு செந்தலையம்மணி  ‘அமெரிக்காவின் மிகப்பெரிய பிரச்சனை தற்போது என்ன?’ என்று கேட்டார். ஜாரெட் ‘தகவல்களை புறவயமாக அலசி ஒரு முடிவுக்கு வருவது எல்லா மக்களாட்சிக்கும் தேவையான ஒன்று. ஆனால், மக்கள் சிலசமயம் அவசரப்பட்டு குறுக்குவழிகளை நாடி, உணர்ச்சியைத் தூண்டும் தலைவர்களை கொண்டு வந்துவிட்டால், அப்பட்டமாக நேர்மையற்ற, உரத்த மனிதர்கள் உள்ளே வந்து நேர்மையானவர்களை, மென்மையாகப் பேசுபவர்களை வெளியே தள்ளி விடுவார்கள். அதன்பின், அந்நிலையை சரிசெய்ய சில பத்தாண்டுகளோ, தலைமுறைகளோ ஆகலாம். என் பதில் உங்களுக்கு யாரையாவது நினைவூட்டினால், நான் அவர்களைத்தான் சொல்கிறேன்!’ என்றார்.

 

நானும் ஒரு கேள்வி கேட்டேன். ஒரு பக்கம் தானியங்கி இயந்திரங்களைக்கொண்டு அதிவேகத்தில் உற்பத்தி செய்கிறோம்; உற்பத்திக்கு ஆகும் செலவும் குறைந்துகொண்டே வருகிறது.  ஆனால், மறு பக்கம் அதனால் வேலையிழந்தவர்கள் நுகரும் திறன் குறைகிறது (இவர்களையும் நம்பித்தான் தேவைக்கதிகமான உற்பத்தி நடக்கிறது). வருங்காலத்தில் இது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று கேட்டேன். ஜாரெட் ‘இது சிக்கலான பிரச்சனைதான், மக்கள்தொகை குறைந்த நாடுகளே இதை முதலில் உணரும். பின்னர் பல மாற்றங்களுக்குப் பிறகே சமநிலை வரும் என்றார்.

 

ஏறத்தாழ 250 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்,  இரண்டே ‘தேசிகள்’. ஆனால், மற்ற தொழில்நுட்ப அரங்குகளில் நாலில் ஒருவர் இந்தியர். இது மட்டும் இன்னும் மாறவில்லை. இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்று நினைக்கிறேன்.

 

 

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு ஜாரெட் டயமண்ட்

ஐரோப்பாவின் கண்களில்…

மூதாதையர் குரல்

இனங்களும் மரபணுவும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்!

$
0
0

deva1

 

தேவதச்சனுக்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளையின் கவிக்கோ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9 அன்று வேலூரில் நடக்கும் விழாவில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது.

கவிக்கோ விருது பெறும் கவிஞர் தேவதச்சனுக்கு  என்னுடைய, விஷ்ணுபுரம் நண்பர்களுடைய  மனமார்ந்த வாழ்த்துக்கள்.  

கவிஞன் பிறரில் மேன்மையானவன்

தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞனே பிறரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான்.மேம்பட்டவனாகிறான்.தன்னுடைய மனதளமாகவே கவிதை அமைய பெற்ற கவிஞனுக்கு மட்டுமே இந்த பண்பு சாத்தியம்.பெரும்பாலும் எங்கு தொடங்குகிறார்களோ ,அங்கேயே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பார்கள்.சிறந்த கவிக்கு பண்பு இதுவல்ல.அவனுடைய சில கவிதைகளை படித்து விட்டு அவனுடைய விதியைப் பற்றி தீர்மானம் செய்து விடாத உயரிய பண்பை  அவன் கொண்டிருப்பான்.அவன் வாழ்வின் மீது இயற்றுகிற சலனங்கள் தொடர்ந்து மாறுதலைடைந்து கொண்டே இருக்க வல்லவை.அத்தகைய கவிகளில் ஒருவர் தேவதச்சன்

 

தேவதச்சன் பற்றி லக்ஷ்மி மணிவண்ணன்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்நாட்களில்…

$
0
0

reboot23

 

இரண்டு நாட்களுக்கு முன் அஜிதன் கூப்பிட்டிருந்தான். “என்னப்பா பண்றே?” என்றான். “வெண்முரசு” என்றேன். “இண்டநெட் பக்கம் போயிராதே. மொட்டை வசை, அவதூறு, கிண்டல். நேரிலே சிக்கினா விஷம் வச்சே கொன்னிருவாங்க. அவ்ளவு வெறுப்பு” என்றான். “ஓ” என்றேன். “எதுக்கு இவ்ளவு வெறுக்கிறாங்க?” என்றான். “இது ஒரு சின்ன வட்டம்தான். பெரும்பாலும் சின்ன எழுத்தாளர்கள். சினிமா சான்ஸ்தேடுறவங்க. அவங்களுக்கு இது ஒரு பத்துநாள் கொண்டாட்டம்” என்றேன்.

 

“என்ன சார் இது, மொத்த தமிழ் சினிமாவும் நீங்க இலக்கியத்திலே உருவாக்கியிருக்கிற கதையுலகுக்கு நூத்துலே ஒண்ணு வராது. சர்க்காருக்கு கதையும் நீங்க கிடையாது, எங்கியும் அந்தப்பேச்சு இல்ல. ஆனா நீங்களே கதைய திருடிட்ட மாதிரி ஒரு கும்பல் இண்டர்நெட்டுலே  திரிச்சுப்பேசிக் கூச்சலிடுது” என்றார் வாசக நண்பர்.  “செய்யட்டும்… அதன் வழியா அவங்களும் இருக்காங்கன்னு அவங்களுக்கே காட்டிக்கிடறாங்க” என்றேன்

 

கிட்டத்தட்ட தீய நோய்களை மனித உருவாக ஆக்கி எரித்துக்கொண்டாடும் மனநிலை. கவனத்துக்கு வந்த பல விஷயங்களை எண்ணிச் சிரித்து மகிழ்ந்தேன் நாற்பத்தைந்து நாள் குடித்துக் கூத்தாடிவிட்டு கதை எழுதியதாகச் சொல்கிறேன் என ஓர் உடன்பிறப்பு ஆணித்தரமாக ஐயப்படுகிறார். இன்னொரு பெரியாரியப் பிழம்பு வெண்முரசு  ஒரு திருட்டுக்கதை என கண்டுபிடித்துவிட்டார்! ஆம், மகாபாரதத்தில் இருந்து திருடியது. ஏராளமான சான்றுகளை வேறு அளிக்கிறார். அந்த வசைகளில் இந்துத்துவ, சாதியக் கோஷ்டிகளும் [பல்வேறு புனைபெயர்களுடன்] பிறருடன் கைகோத்துக்கொண்டு ஈடுபட்டு கொண்டாடுகின்றன..

 

உண்மையில் இந்த வசைகள் எனக்கு நன்மையையே செய்கின்றன. இத்தகைய வசைகளின் அலை முன்னரும் வந்துள்ளது. அதிலுள்ள மிதமிஞ்சிய மூர்க்கம், எந்த நியாயத்துக்கும் கட்டுப்படாத வெறி ஒரு சாராரை மகிழச்செய்யும். ஆனால் அடிப்படை நியாயவுணர்ச்சி கொண்ட சிலர் அதில் ஒவ்வாமை கொள்வார்கள். அவர்களே என்னை தேடிவருபவர்கள். ஒவ்வொரு வசைமழைக்குப்பின்னரும் எனக்கு புதிய வாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே உண்மையில் வாசகர்கள், மற்றவர்கள் எப்போதும் எதையும் வாசிக்கப்போவதில்லை.

 

இந்த வசைகளையே பாருங்கள். மேலே சொன்ன மொக்கைகள் எவரும் என்னையோ என் எழுத்தையோ கேள்விப்பட்டதுகூட இல்லை. வேறுசிலருக்கு ஒற்றைவரிகள் தெரியும். அப்படி ஒருசில லட்சங்களுக்கு என் பெயரை கொண்டுசென்று சேர்த்துவிட்டார்கள். அவர்களில் ஒரு பத்தாயிரம்பேர் ’யார்ரா இந்தாள்?” என என்னை படிக்க வருவார்கள். அவர்களில் ஒரு இரண்டாயிரம்பேர் வாசகர்களாக நீடிப்பார்கள். ஐநூறுபேர் நல்ல வாசகர்களாக ஆவார்கள். அடுத்த விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்து நின்றிருப்பார்கள்.

 

எஞ்சிய பெருங்கும்பல் நவம்பர் இறுதிக்குள் என்பெயரை மறந்து ‘ஜெயகுமாரோ எவனோ ஒருத்தன் என்னமோ சினிமாவிலே ஏதோ எழுதினான்ல, யார்ரா அவன் மச்சி?”  “ஆமாடா, சர்க்கார் படத்திலே பத்மஸ்ரீங்கிற குட்டிக்கும் இவனுக்கும் என்னமோ பிரச்சினைன்னு சொன்னாங்க” என்ற டெம்ப்ளேட்டில் உலவிக்கொண்டிருப்பார்கள். இதுதான் எப்போதும் நிகழ்கிறது.

 

இவ்வாறு எனக்கு வாசகர் பெருகுவதைக் கண்டபின் ஒவ்வொரு முறையும் ‘இனிமே பேசிப்பேசி இவருக்கு விளம்பரம் குடுக்கக்கூடாது’ என இவர்களே வஞ்சினம் கூறுவார்கள். ஆனால் அதைச்செய்யாமலிருக்க அவர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களுக்கு என வேறு அறிவுச் செயல்பாடு ஏதுமில்லை. ஆகவே இது நல்லதுதான்.

 

நான் வாயைத் திறந்திருக்கக் கூடாது என நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.. ஒற்றைவரியில் இருந்து முருகதாசும் உதவியாளர்களும் முடைந்து உருவாக்கிய கதையின்போது நான் உடனிருந்தேன். வசன எழுத்தாளராக என் பணியை ஆற்றினேன். நான் நேரில்கண்ட,  நன்கறிந்த ஒன்றை அதற்குரிய தருணத்தில் சொல்லாமலிருப்பது அறமல்ல என எனக்குப் பட்டது. அதிலும் அவர் சூழப்பட்டு தாக்கப்படுகையில், அவருடைய பேட்டியில் அவர் துயரத்துடன் கண்ணீர் மல்க அதைச் சொன்னதைக் கேட்டபின்னர், உடன்நிற்பதே என் கடமை என எண்ணினேன். அத்தகைய தருணங்களில் தந்திர மௌனம் என் இயல்பல்ல.

 

ஏற்கனவே லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து குறிப்பு எழுதியபோதும் என் நிலைபாடு இதுவே. இதன்பொருட்டு வசைபாடப்படுவேன் என தெரியும். அதைப்பற்றி எப்போதும் கவலைப்பட்டவன் அல்ல,  என் நண்பர்கள் விஷயங்களில் இதுவே என் நிலைபாடு. எந்நிலையிலும் எவ்விழப்பிலும் இறுதிவரை உடனிருப்பதே என் அறம்.இந்த ஐம்பத்தாறாண்டுகளில் அப்படித்தான் இருந்திருக்கிறேன்,  இனியும்  அப்படித்தான்.

 

நான் தொடக்கத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருந்ததையே கே.பாக்யராஜ் அவர்களும் இப்போது தொலைக்காட்சியில் சொல்கிறார் என கேள்விப்பட்டேன்.  சர்க்கார்- ஒரு கடிதம்.  சர்க்கார் கதைக்கும் வருண் என்பவரின் கதைக்கும் ஒற்றுமை என்பது கரு அளவிலேயே என்றும், முருகதாசுக்கு அது முன்னரே தெரியாது என்றும், கதைத்திருட்டு என்ற சொல்லுக்கே இடமில்லை என்றும் பாக்கியராஜ் சொல்கிறார்.இது எப்போதும் அப்படித்தான். சிலநாட்களுக்குப்பின் உண்மை வெளிவரும். ஆனால் காழ்ப்பாளர்களுக்கும் வம்பர்களுக்கும் அதில் அக்கறை இருப்பதில்லை. அப்படியே வேறுபேச்சுக்குப் போய்விடுவார்கள். இவர்கள் உருவாக்கிய நஞ்சு மட்டும் இணையத்தில் எஞ்சியிருக்கும்.

 

இவ்விஷயத்தில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு பொதுவாகவே ஏதும் தெரியாது. குறிப்பாகச் சட்டம். சட்டப்படி கதைக்கருக்களுக்கு பதிவுரிமை கோரமுடியாது. நான் ’இரவு’ என ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். இரவில் மட்டுமே வாழும் மனிதர்களைப்பற்றிய கதை. இரவில் மட்டுமே வாழும் மனிதர்களைப்பற்றி இனி எவரும் எதுவும் எழுதக்கூடாது என அதற்குப் பொருளா என்ன? கூடங்குளம் அணுவுலை உடைந்து மக்கள் தப்பியோடுவதைப்பற்றி ஒரு கருவை எழுதி பதிவுசெய்துவிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். இனி அணுவுலை உடைவதைப்பற்றி என்னைக்கேட்காமல் எவருமே எதுவும் எழுதக்கூடாது என்று சொல்லமுடியுமா?

 

சட்டம் எப்போதும் கதையின் வளர்ச்சி, திருப்பங்கள், நுண்செய்திகள் பற்றி மட்டுமே கருத்தில்கொள்ளும். அவை நேருக்குநேர் ஒன்றாக இருந்தால் மட்டுமே கதைத்திருட்டு எனக் கொள்ளும். அந்தக்கதை முறையாகக் காப்புரிமைப் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். அதை அந்த ஆசிரியரே உருவாக்கினார்  என்றும் வேறு எவரும் முன்னரே பதிவுசெய்யவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டபின்னரே சட்டப்படி காப்புரிமை கிடைக்கும். அதற்கான பல படிநிலைகள் உள்ளன. அத்துடன் அந்த கதை பொதுவெளியில் புழங்கவேண்டும் அல்லது அந்தக் கதையை குற்றம்சாட்டப்பட்டவர் வாசித்திருக்கிறார் என்பதை குற்றம்சாட்டுபவர்  சான்றுகளுடன் நீதிமன்றத்தில் நிறுவவேண்டும்.

 

ஆகவே பெரும்பாலான கதைக்கரு ஒற்றுமைகள் சட்டத்தின்முன் நிலைநிற்பதில்லை. ஒருவர் ஒரு கருவை இன்னொருவரிடம் நேரிடையாகச் சொல்லி, அவர் அதை அனுமதியில்லாமல் எடுத்துக்கொண்டால் மட்டுமே அதை அறத்தின் நோக்கில்கூட தவறு எனச் சொல்லமுடியும்.

 

அதேபோல இந்த ’மிடூ’ பிரச்சினை. அவற்றில் அவதூறு வழக்குகள் சரமாரியாக போடப்படுகின்றன.  அவதூறு வழக்கில் எப்போதுமே சொல்லப்பட்டது பொய்யா உண்மையா என்பது விவாதிக்கப்படுவதில்லை. அதைச் சொன்னவருக்கு அவதூறு நோக்கம் இருந்ததா, முன்பகையால் சொல்லப்பட்டதா என்று மட்டுமே பார்க்கப்படும். அதை நிரூபிக்கவேண்டியவர் வழக்கு தொடர்ந்தவர்தான். மோடிவ் தான் ஒரு செயலை குற்றம் ஆக்குகிறது என்பது சட்டத்தின் அடிப்படை. ஆகவேதான் லீனா மணிமேகலை அந்நிகழ்வை என்னிடம் முன்னரே சொன்னார் என்பது முக்கியமாகிறது. அதை நான் மறைக்கக்கூடாது, சொல்லியாகவேண்டும். அதுவே அறம்.

 

இப்படியிருந்தும் ஏன் சட்ட நடவடிக்கையை நாடுகிறார்கள்? சட்டச் செயல்பாட்டிலுள்ள தாமதம் மிகப்பெரிய ஆயுதம். அது பேரம்பேசும் ஆற்றலை அளிக்கிறது. தாமதத்தால் இழப்புகள் ஏற்படும் தரப்பு பணிந்தே ஆகவேண்டும். அதுவே வெற்றியாகக் கருதப்படுகிறது.

 

சினிமா சார்ந்த விஷயங்களில் இது மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடும். தமிழில் வெற்றிபெற்ற எல்லா படங்களின் மூலக்கதைகளையும் எவரேனும் உரிமைகோருவதைக் காணலாம் சுப்ரமண்யபுரம். மெட்ராஸ் போன்ற படங்களின் கதையுரிமை மேல் எழுந்த விவாதம் ஓர் உதாரணம். நான் தமிழில் பணியாற்றிய பாபநாசம் படத்தின் மூலக்கதையான த்ரிஷ்யத்தின் கதையுரிமை பற்றியே ஒரு வழக்கு நடந்தது. சமீபத்தில் வெளிவந்த அறம் என்னும் படத்தின் கதை தன்னுடைய ஆழம் என்னும் சிறுகதையுடன் நூறுசதவீதம் ஒத்துப்போவதாகக எழுத்தாளர் கலைச்செல்வி குற்றம்சாட்டினார்.என்ன முக்கியம் என்றால் அந்த இயக்குநர் மற்றவர்கள் மேல் தன் கருக்களை திருடிவிட்டதாகக் குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருபவர்.

 

இங்கே சினிமாக்களுக்கான கதைக்கருக்கள் மிகப்பொதுவானவை. பெரும்பாலும் அவை சமகாலச் செய்திகளில் இருந்து எடுக்கப்படுகின்றன. அவற்றை வெவ்வேறுபேர் வெவ்வேறு வடிவில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பலசமயம் கதைக்கருக்கள் திரும்பத்திரும்ப பல இடங்களில் சொல்லப்பட்டு அனைவருக்கும் தெரிந்தவையாக ஆகிவிடுகின்றன. பலரிடம் பலவடிவில் அவை வளர்கின்றன. நூல்வடிவில் வெளியான என் கதைகளில் இருந்து எத்தனை காட்சிகள் தமிழ் சினிமாக்களில் வந்துள்ளன என்பதை சினிமா பார்ப்பவர்கள் அறிவார்கள்.

 

எதையும் அறியாத ஊடகங்களுக்கும், வெறுப்பில்திளைக்கும் இணையவம்பர்களுக்கும் இரையூட்டுவதாகவே இந்த விவாதங்கள் அமையும். புகழ்பெற்றவர்கள் அவமதிக்கப்படுவார்கள். இனிமேல் வருங்காலத்தில் எந்த சினிமா வந்தாலும் பலர் அது என்னுடையது என சட்டத்தை நாடுவார்கள். அது சமாளிக்க முடியாத சிக்கலாக ஆகும். இன்று எழுந்துள்ள 96 படத்தின் உரிமைப்பிரச்சினையே உதாரணம். எல்லா பெரிய சினிமாக்களுக்கும் அவை வெளியாகும்போது இன்று பெரிய பஞ்சாயத்து நடக்கிறது, இனிமேல் கரு விஷயமும் இதேபோல பஞ்சாயத்தாக ஆகும்.

 

சரி,பிடிக்காதவரை வசைபாடி மகிழ, பழைய கணக்குகளைத் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. எனக்கு இதில் புதிதென ஏதுமில்லை. என் நண்பர்களுக்கும் இது ஒன்றும் புதியதல்ல. என் புதியவாசகர்களுக்கு மட்டும் குழப்பம் இருக்கும். அவர்களில் சிலர் இதில் எனக்கு அவப்பெயர் வருமோ என அஞ்சினர். நற்பெயர் எளிதில் உருவாவதில்லை. நெடுங்காலத்துச் செயல்பாட்டின் வழி உருவாவது அது. நான்குபேர் சொல்வதனால், ஒரு சில ஊடகங்கள் அவதூறுசெய்வதனால் எளிதில் போய்விடுமென்றால் அது உண்மையான நற்பெயருமல்ல. நான் யாரென என் வாசகர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு மட்டும் தெரிந்தால்போதும்

 

இத்தகைய ஒரு அவதூறு அல்லது வசை வருகையில் என் நேர்மைமேல் நம்பிக்கை கொண்டவர்களே என் நண்பர்களாக இருக்கமுடியும். அந்நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்களாகவே என் நட்பிலிருந்து முற்றாக விலகிச்செல்வதே அவர்களின் நேர்மைக்கான அடையாளமாக இருக்கும் என்றே நான் எண்ணுவேன். எவ்வகையிலும் அவர்களை எனக்கு அணுக்கமாக வைத்துக்கொள்ளமாட்டேன்.

 

இந்நாட்களில் வழக்கம்போல எந்த விவாதத்தையும் நான் கவனிக்கவில்லை. நேற்று நண்பர்கள் தொகுத்தளிக்க சிலவற்றை ஒரே வீச்சில் நோக்கி என்ன நிகழ்ந்தது என தெரிந்துகொண்டேன்.என் எழுத்துக்களில் ஈடுபட்டிருந்தேன். கூடவே விஷ்ணுபுரம் விழா அழைப்புகள், ஏற்பாடுகள். பெரிதும் துன்புறுத்திய செய்தி வடகரை வேலனின் இறப்பு. என் இருபது வயதுகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட அகவை கொண்டவர்கள் ஒருவர் இறந்த செய்தி வந்ததுமே தங்கள் வயதுடன் அதை ஒப்பிட்டுப்பார்ப்பதை கண்டு எரிச்சல் கொண்டிருக்கிறேன். அந்த இடத்தை நானும் வந்தடைந்திருக்கிறேன். வடகரைவேலனுக்கு எனது வயதுதான். இணையான வயதுகொண்டவர்களின் இறப்பு என்பது ஒரு நிகர் மரணம். அதிலிருந்து வெளிவருவது எளிதல்ல. இந்த இனிய குளிர்மழைதான் காப்பாற்றுகிறது

 

சர்க்கார், இறுதியாக…

சர்கார்- இறுதியில்…

சர்க்கார் அரசியல்

சர்க்கார்- ஒரு கடிதம்

சர்க்கார், அவதூறுகளின் ஊற்று

சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-58

$
0
0

bowசஞ்சயன் இரு விழிகள் மேல் பதிந்த நான்கு விழிகளால் நோக்கு பெருகி ஒவ்வொன்றையும் தொட்டும் அனைத்தையும் தொகுத்தும் குருக்ஷேத்ரப் பெருங்களத்தை நோக்கி சொல்பொழிந்துகொண்டிருந்தான். “கௌரவர்களிடம் என்ன நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அவர்கள் இதுவரை உள்ளூர சற்று அஞ்சிக்கொண்டிருந்தனர். அந்த அச்சத்திலிருந்து எதனாலோ அவர்கள் விடுபட்டனர். தளைச்சரடுகள் ஒவ்வொன்றாக அறுபட்டு கைகளிலும் கால்களிலும் நெஞ்சிலும் விடுதலையை உணர்ந்தனர். வீறிட்டுக்கூவியபடி கதைகளை சுழற்றிக்கொண்டு அவர்கள் களமெழுந்தனர்.”

தன்னுயிர் பிரிவதைப்பற்றிய அச்சமல்ல அது. தங்களில் ஒருவர் வீழ்வதைப்பற்றிய அச்சம். அது இரும்புக்குண்டுபோல் அவர்களின் கால்களில் தடுக்கியது. அவர்கள் அத்தனை எளிதாக கொல்லப்பட அதுவே வழிவகுத்தது. அந்த அச்சத்தை வெல்ல அவர்கள் மிகையாக வெறியூட்டிக்கொண்டனர். அவ்வெறியில் விழிசெவி துலங்காது முன்னால் பாய்ந்தனர். அதனாலேயே அம்புகள் முன் சென்று நின்று தலைகொடுத்தனர்.

கொக்கிக்கம்பிகளில் இழுத்தெடுக்கப்பட்ட கௌரவர்களின் உடல்களை காணும்போதெல்லாம் அவர்கள் அகம் துடித்தது. அந்தக் கொக்கி தசையில் சிக்கி இழுபடுவதுபோல் முகம்சுளித்து உடல்துள்ளினர். உடல்களைக் கண்டவர்கள் பாறையில் தலையுடைத்துக்கொள்ள வெறியெழுந்தவர்களாக எழுந்து பாய்ந்தனர். கதையால் நெஞ்சுடைந்து களம்வீழ்கையில் அவர்கள் உரியது நிகழ்ந்தது என்னும் நிறைவை அடைந்தனர். அவர்களின் இறந்த முகங்களிலெல்லாம் புன்னகை எஞ்சியிருந்தது. அவர்களின் கைகள் முழுமையாக விரிந்து அனைத்துப் பிடிகளையும் விட்டிருந்தன.

அரசே, அக்களத்தில் இறந்தவர்கள் அனைவரும் எதையேனும் பற்றியிருந்தனர். படைக்கலங்களை, தங்கள் ஆடையை, அல்லது அருகிருக்கும் உடைந்த தேர்த்துண்டுகளை. பலர் உடனிறந்தவர்களின் கைகளையோ கால்களையோ பிடித்திருந்தனர். நிலத்தை அள்ளிப்பற்றி விழுந்தவர்களும் உண்டு. அரிதாகவே இரு கைகளும் விரல்விரியவிட்டுக் கிடந்தவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவர் முகங்களிலும் அந்தப் புன்னகை இருந்தது. அது தார்த்தராஷ்டிரர் அனைவரிடமும் இருந்தது என்பதை அங்கே படையினர் கண்டனர். கௌரவப் படைப்பிரிவுகளில் அதைப்பற்றி பேசி வியந்துகொண்டனர்.

கௌரவர்கள் இன்று ஏன் அச்சமிழந்தனர்? இன்றும் அதோ இறந்த கௌரவர்களின் உடல்களை வண்டிகளில் அடுக்கி கொண்டுசெல்கிறார்கள். இன்றும் துரியோதனரும் துச்சாதனரும் பெருந்துயரால் எடைமிகுந்த உடலுடன், தள்ளாடும் கால்களுடன், விழிநீர் வழியும் முகத்துடன் தேர்த்தட்டில் நின்றிருக்கிறார்கள். வீழ்ந்தவர்களின் பெயர்சொல்லி முழவுகள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ”கௌரவர்கள் விண்புகுக!” என படைவீரர் வாள்களையும் வேல்களையும் தூக்கி வாழ்த்தொலி எழுப்புகிறார்கள்.

ஏதோ நிகழ்ந்தது. என்னவென்று அறியமுடியாத ஒன்று. அவர்கள் அனைவரிலும் அது ஒரே தருணத்தில் பரவியது. அவர்களின் முகங்கள் மலர்ந்தன. உடல்கள் கொந்தளித்தன. ”வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று கூச்சலிட்டபடி அவர்கள் வில்களையும் வேல்களையும் கதாயுதங்களையும் எடுத்துக்கொண்டு படைமுனைக்கு சென்றார்கள். அங்கே ஆமையின் ஓட்டுக்காப்பு பல இடங்களில் உடைந்திருந்தது. ஆமையால் நாற்கரம் சிதைந்து பொருளில்லாத வளையமாக ஆகி ஆமைமேல் அலையடித்துக்கொண்டிருந்தது.

கௌரவர்கள் பீமசேனரை சூழ்ந்துகொண்டார்கள். அவர்களின் அம்புகள் பீமனை அறைந்து அப்பாலிட்டன. அவருடைய கவசங்கள் உடைந்தன. தொடையிலும் விலாவிலும் அம்புகள் பாய்ந்தன. அவர் அவர்கள் மாறிவந்திருப்பதை அப்போதே புரிந்துகொண்டார். அவருடைய கையசைவுக்கேற்ப கொடிகளும் முழவுகளும் ஆணையிட்டன. சுருதகீர்த்தியும் சுருதசேனரும் சதானீகரும் சுதசோமரும் சர்வதரும் அம்புகளை தொடுத்தபடி வந்து கௌரவர்களை எதிர்த்தனர். கௌரவர்கள் பின்னுச்சிப் பொழுதின் மெல்லிய ஒளியில் பொன்னெழில் கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்களின் விழிகளுடன் கைகள் ஒத்திசைந்தன. அவர்களின் அம்புகள் திசையழியவில்லை.

தாம்ரலிப்தியின் படைத்தலைவன் சங்கஹஸ்தனை நிஷங்கியின் அம்பு வீழ்த்தியது. விரஜஸால் தித்திரநாட்டு இளவரசர்கள் சங்குவும் சுதாகரனும் கொல்லப்பட்டார்கள். திருதரதாசிரயர் தண்டகநாட்டு இளவரசர்களான ஆகுகனையும் அஜயனையும் ஆர்ஜவனையும் கொன்று வீழ்த்தினார். கௌரவர்களான காஞ்சனதுவஜரும் சுபாகுவும் துர்பிரதர்ஷணரும் திருதக்ஷத்ரரும் இணைந்து சர்வதரையும் சதானீகரையும் அம்புகளால் அறைந்து பின்செலுத்தினர். கௌரவ வீரர்களாகிய நிஷங்கியும் துச்சலனும் துச்சகனும் இணைந்து சுருதகீர்த்தியை அறைந்து தேரிலிருந்து தெறிக்கச்செய்தார்கள்.

பீமனை கௌரவர்கள் மேலும் மேலும் பின்னடையச் செய்தார்கள். அவருடைய கவசங்கள் முற்றாகவே உடைந்து விழுந்தன. குருதிவழியும் உடலுடன் தேரிலிருந்து பாய்ந்து படைகள் நடுவே மறைந்த பீமசேனரை நோக்கி கௌரவர்களின் அம்புகள் சீறிவந்தன. பாண்டவர்களின் படைகளிலிருந்து வில்லவர்கள் கௌரவ அம்புகளால் சரிந்துகொண்டே இருந்தார்கள். தசார்ணத்தின் இளவரசர்கள் ஊர்ஜனும் உத்கீதனும் வீழ்ந்தனர். படாச்சார அரசர் சூரர் தன் மைந்தர் சுதீபனுடன் களம்பட்டார். சர்வதர் கவசம் உடைந்து நெஞ்சில் அம்புபட்டு தேரில் வீழ அவரை பின்கொண்டுசென்றான் தேர்ப்பாகன். சுருதசேனரின் தோளில் அம்புகள் தைத்தன. அவரை காக்கும்பொருட்டு சென்ற சதானீகரும் தேர்த்தட்டில் அம்புபட்டு வீழ்ந்தார்.

பாண்டியப் படையும் பிஷச்சர்களின் படையுமே கௌரவர்களை எதிர்கொண்டு நின்றிருந்தன. பிஷச்சர்களின் அரசர் கமலநாபர் வீழ்ந்ததும் அவர்களும் பின்னடையலாயினர். அப்போது பின்னணியிலிருந்து புரவிகளின் கனைப்போசை கேட்டது. உரசி பழுக்கச்செய்யப்பட்ட அம்புகளால் மலவாயில் சூடுவைக்கப்பட்ட புரவிகள் தறிகெட்டு கனைத்தபடி பாய்ந்து களத்தில் தெறித்துச் சிதறிப்பரந்தன. அவற்றிலொன்றின்மேல் காலூன்றி பீமன் ஏவப்பட்ட அம்புபோல களத்திற்கு வந்தார். அவ்விசையிலேயே விருந்தாரகனை தலையை அறைந்து கொன்றார். நிஷங்கியும் விரஜஸும் மறுகணமே களம்பட்டார்கள்.

சிதறிப்பரவிய புரவிகளில் சர்வதரும் சுதசோமரும் எழுந்துவந்தனர். அவை ஒன்றுடன் ஒன்று முட்டித்ததும்பி துள்ளி அகன்று காலுதறிச் சரிந்து உருண்டு எழுந்து கனைத்து பிடரி சிலிர்த்துப் பாய்ந்து அம்புபட்டுச் சரிந்து துடித்தெழுந்து மீண்டும் சரிந்து துள்ளி தசைக்குவியல்களென அதிர்ந்த கொப்பளிப்பின் மேல் அவர்கள் அலைபாயும் புதர்ப்பரப்பின் மேல் சிட்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும்போல் துள்ளி அலைந்தனர். எதிர்பாராத இடங்களில் தோன்றி கௌரவர்களை அறைந்து வீழ்த்தினர். சர்வதர் கௌரவ மைந்தர்களாகிய கௌஷிகியையும் கோமதரையும் சுமந்தரையும் வீழ்த்தினார். சுதசோமர் கௌரவ மைந்தர்களாகிய ஹிமரையும் பத்மரையும் ஜலசாயியையும் பத்ரசாயியையும் கொன்றார்.

பீமனின் கையிலிருந்த கொக்கிக்கயிறு வந்து காஞ்சனதுவஜரை இழுத்து சென்றது. அவர் பீமசேனரின் காலடியில் சென்று விழுந்து அவர் கதையால் தலையுடந்து குதிரைகளின் குளம்புகளுக்குக் கீழே விழுந்தார். துர்பிரதர்ஷணரும் திருதக்ஷத்ரரும் பீமசேனரின் பெருவேலால் நெஞ்சு துளைக்கப்பட்டு தேர்த்தட்டிலிருந்து விழுந்தார்கள். பீமசேனர் தன் தோள்களை ஓங்கி அறைந்துகொண்டு உரக்க நகைத்து ”எழுக! கௌரவர்கள் எழுக! இன்றைய வேட்டை எஞ்சியிருக்கிறது!” என்று கூவினார். அவரைச் சூழ்ந்து சிறகுகள் அலையப் பறந்த நாற்பத்தொன்பது மருத்துக்கள் தங்கள் கைகளிலிருந்த முழவுகளை முழக்கி ”எழுக! எதிர்க்கவிருப்போர் எழுக!” என்று கூச்சலிட்டனர்.

திருதராஷ்டிரர் திகைத்து ”என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்றார். சஞ்சயன் கனவிலோ கள்மயக்கிலோ இருப்பது போலிருந்தான். ”தட்சப்பிரஜாபதியின் மகளும் தர்மதேவனின் மனைவியுமான மருத்வதியின் மைந்தர்கள் அவர்கள். காற்றுகளின் மைந்தனைத் துணைக்க அவர்கள் எழுந்திருக்கிறார்கள். அவர்களால் வழிநடத்தப்படும் முந்நூற்றறுபது மருத்துக்களின் படைகள் குருக்ஷேத்ரத்தை நிறைத்து கொப்பளிக்கின்றன” என்றான். ”என்ன சொல்கிறாய்? மூடா! நீ எதை பார்க்கிறாய்?” என்று திருதராஷ்டிரர் கூவினார்.

சஞ்சயன் வெறிகொண்டவன்போல் சொன்னான். ”அதோ மருத்துக்கள்! நீர்வண்ணமும் வெள்ளிவண்ணமும் பொன்வண்ணமும் கொண்ட சிறகுகள் அலைப்பவை. கூரிய அலகுகொண்ட பறவைகள் போன்றவர்கள் சிலர். பறக்கும் புரவிகள் போன்றவர்கள் சிலர். சிலர் வண்டுகள். சிலர் தும்பிகள். அரசே, சிலர் கூரிய நோக்கு கொண்ட கரிய வௌவால்கள். அதோ சுழன்றடிக்கும் பிரவாகன், சுழிக்கும் ஆவகன், அலைகொள்ளும் உத்வகன், நிலைகொள்ளும் சம்வகன், இரண்டாகப் பிளந்த விவகன், கூரிய பர்வகன், நீரை அள்ளிச்செல்லும் வாககன், மூலையை காக்கும் இஷான்கிருத், தழலுடன் விளையாடும் துனயன், புழுதியள்ளிச் சுழற்றும் ரிஷதன்ஷ், கூச்சலிடும் தூதயன், ஓங்கியறைந்து ஓலமிடும் பரீஜயன்.”

“அதோ வருபவன் மரங்களை அள்ளிச்சுழற்றும் மகிஷாசன், இலைகளை அள்ளிக்கூட்டும் சுதானவன், மின்னலை சூடிக்கொண்ட ஆஃப்யவன், பொன்னிறமான சித்ரஃபானவன், ஊளையிடும் மஞ்சினன், அறைகளுக்குள் சுழலும் ஸ்வத்வாசன், எழுந்தமையும் ரகுஷ்யாத், மலைகளை தழுவிச்சுழலும் கிரீசன், பாறைகளை முட்டி உருட்டும் ஹஸ்தின், மான்களைப்போல் காட்டுக்குள் ஓடும் மிருகைவன், ஒளிகொண்ட பிரசேதஸ், நடுங்கச்செய்யும் குளிர்கொண்ட சுபிஷ், உலுக்கும் சபத், முகில்களை சுமந்துசெல்லும் அஹிமான்யவன், வேள்வித்தீயை வளர்க்கும் ருஷ்திஃபி, வேள்விப்புகையை பரப்பும் பிருஷ்திஃபி, விண்ணளாவ விரியும் விஸ்வதேவன், சினம்கொண்ட ருத்ரஸ்யன், அனைத்தையும் பிளக்கும் யுவனன், பசிகொண்ட ஆபோக்யன். அவர்கள் சாட்டைகளை படைக்கலங்களாக கொண்டிருக்கிறார்கள். அவற்றை சுழற்றிச்சுழற்றி வீசியறைந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”

“அதோ வருபவன் புரவிகளை ஆளும் அதிக்ரேவன், சிம்மங்களின் பிடரிகளில் திகழும் அஜ்ரன், தழலென ஒலிக்கும் ருத்ரன், சந்திரசூரியர்களை நடத்தும் விவாக்ஷு, அலையடித்து விளையாடும் ருஷ்தயன், எதிர்பாராமல் வந்தறையும் சித்ரேயன், அடுமனையில் அனலோம்பும் நரன், உலைகளில் தங்கத்தை ஊதி சிவக்கச்செய்யும் அஜ்ஜோஃபி, நெஞ்சில் பொன்னணிந்த வக்ஷஸி, விண்மீன்களின் ஒளியை அதிரச்செய்யும் திவன், ஒவ்வொன்றையும் தொட்டெண்ணி காலம் சமைக்கும் நிமிமுக்‌ஷு, வேள்விநிறைவு செய்யும் ஹிரண்யேயன்” என்று சஞ்சயன் கூவினான். “அவர்களுடன் இணைந்துள்ளனர் மூச்சுவடிவ மருத்துக்கள். விழும் அபானன், எழும் உதானன், நிலைகொள்ளும் சமானன், அவர்கள் மேல் ஏறிய பிராணன். அங்கே புரவிக்கால்களில், யானைச்செவிகளில், அம்புச்சிறகுகளில் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.”

அவர்களை எதிர்த்துப் போரிட வந்துள்ளனர் மூன்று பெருந்தழல்கள். காற்றை ஊர்தியாகக்கொண்டு எழும் சூசி இளநீல நிறமானவன். விண்ணிலெழும் பாவகன் வெண்ணிறம் கொண்டவன். அன்னத்திலெழும் பவமானன் செந்நிறத்தோன். அவர்கள் ஆயிரம் பல்லாயிரமென கணம்தோறும் பெருகும் சிறகு கொண்டவர்கள். அம்புமுனைகளில் மின்னுகிறார்கள். தேர்ச்சகடங்களில் பொறிகளாகி தெறிக்கிறார்கள். கேடயங்களை வெம்மைகொள்ளச் செய்கிறார்கள்.

அங்கிருக்கிறார்கள் அனலோனின் அனைத்துத் தோற்றங்களும். விண்நிறைக்கும் அக்னி, பசிவடிவான வைஸ்வாநரன், காற்றிலூரும் வஹ்னி, ஆகுதிகளை வாங்கும் விதிஹோத்ரன், பொன்னிலுறையும் தனஞ்சயன், நீரிலுறையும் கிருபீதயோனி, மின்னுவனவற்றில் எழும் ஜ்வலனன், அறிவிலெழும் ஜாதவேதன், மூச்சிலுறையும் தனுனபாத், கனலும் பார்ஹி, தளிர்களில் வாழும் சுஷமன், கரும்புகை வடிவான கிருஷ்ணவர்த்தன், தழலை முடியெனக்கொண்ட சோசிகேசன், புலரியிலெழும் உஷர்ஃபு, அனைத்தையும் அள்ளிப்பற்றும் அஸ்ரஸ்யன், அனைத்தையும் ஒளிரச்செய்யும் பிருஹத்பானு.

காற்றுத்தெய்வங்களை அனல்தேவர்கள் தாக்குகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் ஆள்கிறார்கள். முடிவிலாதது என நிகழ்ந்துகொண்டிருக்கிறது அந்தப் போர். அவர்களின் நடுவே ஓடித்தவிக்கிறான் காற்றுகளுக்கும் அனல்களுக்கும் அன்னைவடிவமான மாதரிஸ்வான். அங்கிருக்கிறார்கள் அனைத்து தேவர்களும். அருள்வடிவான அஸ்வினிதேவர்கள் இரட்டைப்புரவிகளாக களம்வந்துள்ளனர்.

அரசே, அங்கெழுந்துள்ளனர் பதினொரு ருத்ரர்கள். அனலுருவான அஜர், அடிமரமென ஒற்றைக்காலூன்றி எழுந்த ஏகபாதர், நான்கு தலைகள்கொண்ட அக்னிபுத்திரர், எரிகுளமென விழியெழுந்த விரூபாட்சர், மலைமுடியென ஓங்கிய ரைவதர், கொலைக்கரம் நூறுகொண்ட ஹரர், பன்னிரு முகம் எழுந்த பகுரூபர், மூன்றுவிழியரான த்ரியம்பகர், காட்டாளத் தோற்றம்கொண்ட அசுரேசர், பொன்னொளிகொண்ட சாவித்ரர், மின்படைகொண்ட சயந்தர். அவர்களின் சினத்தால் அதிர்ந்துகொண்டிருக்கிறது குருக்ஷேத்ரத்தின் வான்வெளி.

அரசே, அங்கே கதையும் மின்கொடியும் ஏந்திய மித்ரனை கண்டேன். பறக்கும் முதலைமேல் பாசக்கயிற்றுடன் வருணன். மானுட உருக்கொண்ட வேதாளத்தின் மேல் கதாயுதத்துடன் குற்றுருவனாகிய குபேரன், எருமைமீதூரும் எமன். தழலெனப் பறக்கும் முடிக்கற்றைகள் கொண்ட செவ்வாட்டின் மீது அனலோன், மின்சுழலை படைக்கலமாகக் கொண்ட நிருதி. பொற்குளம்புள்ள கலைமான் மீதூரும் வாயு, வெண்முகில்மேல் தேயுஸ், வெண்களிறு வடிவில் பிருத்வி, ஆமையின்மேல் ஊரும் ஆபன், அரசே, அங்கே அத்தனை தெய்வங்களும் போரிட்டுக்கொண்டிருக்கின்றன.

எட்டு திசையானைகள் களத்திலுள்ளன. ஐராவதம், புண்டரீகன், வாமனன், குமுதன், அஞ்சனன், புஷ்பதந்தன், சார்வபௌமன், சம்பிரதீகன். முகில்குவைகளைப்போல எடையற்றவை அவை. ஆனால் துதிக்கையால் அறைகையில் மட்டும் மலைபெயரும் எடைகொண்டவை. திசைகளை நிறைத்துச் சுழல்கின்றன. மத்தகங்கள் முட்டிப்போரிடுகின்றன. அவற்றின் வெண்கொம்புகள் குருதிகொண்டு சிவந்துள்ளன.

அதிதியின் மைந்தர்களான ஆதித்யர்கள் அங்குள்ளனர். தாதா, மித்ரன், ஆரியமா, ருத்ரன், வருணன், சூரியன், பகன், விவஸ்வான், பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு ஆகியோர் ஒளிகொண்டு நின்றிருக்கின்றனர். அவர்களுக்கு தங்கள் ஒளிக்கதிர்களே படைக்கலங்கள். அரசே, அவர்களுக்கு உடலே விழியுமாகும். திதியின் மைந்தர்களாகிய தைத்யர்கள் அங்குள்ளனர். ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் இருவரும் போரிடுகின்றனர். மைந்தர்கள் அனுஹ்ளதன், ஹ்ளதன் ஆகியோர் உடனுள்ளனர். சூரசேனன், சிம்மவக்த்ரன், வாயுவேகன், மனோதரன், பானுகோபன், வஜ்ரமுகன், அக்னிமுகன், வஜ்ரபாகு, ஹிரண்யன், சம்பரன், சகுனி, திரிமூர்த்தா, சங்கு, அஸ்வன் என அசுரர்களின் முடிவிலா நிரை நின்றிருக்கிறது.

எட்டு வசுக்களான தரனும் துருவனும் சோமனும் அனிலனும் அனலனும் ஆபனும் பிரபாசனும் பிரத்தியூடனும் தங்கள் படைக்கலங்களுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களின் மைந்தர்களும் களம் நின்றிருக்கிறார்கள். வைதண்டன், சிரமன், சாந்தன், த்வனி ஆகியோர் தங்கள் தந்தையாகிய ஆபனுக்கு உடன்நின்றுள்ளனர். துருவனுடன் மைந்தனாகிய காலன் நின்றுள்ளான். சோமனுடன் அவன் மைந்தன் வர்ச்சஸ் நின்றிருக்கிறான். அவன் மைந்தன் தர்மனுடன் அவன் மைந்தர்களாகிய திரவிணன், ஹுதஹவிவயஹன், சிரிரன், பிராணன், வருணன் ஆகியோர் படைக்கலமேந்தி போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். அனிலனுடன் மனோஜவன், அவிக்ஞாதகதி ஆகியோர் நின்றிருக்கிறார்கள். அனலனின் மைந்தன் குமாரனும் அவன் மைந்தர்களான சாகன், விசாகன், நைகமேயன் ஆகியோர் படைகொண்டிருக்கிறார்கள். பிரபாசனுடன் நின்றிருப்பவர் விஸ்வகர்மன். அவர் மைந்தர்களான அஜைகபாத், அவிர்புத்தன்யன், த்வஷ்டா ஆகியோர் அவருடனிருக்கிறார்கள்.

அங்கெழுந்துள்ளனர் பெருநாகங்கள். வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன், அனந்தன். அவர்களுடன் இணைந்து எழுந்துள்ளது பாதாளநாகங்களின் பெரும்படை. வாசுகியின் மைந்தர்களான கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாகு, சரணன், கக்ஷகன், காலதந்தகன் ஆகியோர். விண்ணில் நீரிலென நீந்தும் ஆற்றல்கொண்ட கரிய பேருடலர்கள் அவர்கள்.

தட்சகனின் மைந்தர்களான புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சோசிகன், சரபன், பங்கன், பில்வதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமன், சுரோமன், மஹாஹனு ஆகியோர் அதோ மழைமுகில்களென சூழ்ந்துள்ளனர். கீழே ஐராவதனின் மைந்தர்களான பாராவதன், பாரிஜாதன், பாண்டரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மேதன், பிரமோதன், சௌஹதாபனன் ஆகியோர் சேற்றுப்பரப்பென நிலம் நிறைத்துள்ளனர்.

கௌரவ்ய குலத்தில் பிறந்த பாம்புகளாகிய ஏரகன், குண்டலன், வேணி, வேணிஸ்கந்தன், குமாரகன், பாகுகன், சிருங்கபேரன், துர்த்தகன், பிராதரன், அஸ்தகன் ஆகியோர் பிற வடிவங்களின் நிழல்களென நெளிந்தனர். திருதராஷ்டிர குலத்தில் பிறந்த சங்குகர்ணன், பிடரகன், குடாரமுகன், சுகணன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், குமடகன், சுஷேணன், அவியயன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உத்ரபாரகன், ரிஷபன், வேகவத், பிண்டாரகன், ரக்தாங்கன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேதிகன், பராசரன், தருணகன், மணிஸ்கந்தன், ஆருணி என்னும் நாகங்கள் பிற நாகங்களின் நிழல்களாகி அங்கே நிறைந்திருந்தன.

இவையனைத்தையும் ஒரு பக்கமென்றாக்கி பேருருக்கொண்டு களம்நிறைந்திருக்கின்றனர் அன்னையர். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதை, சிந்து, காவேரி என நூற்றெட்டு நீரன்னையர். துளசி, மானசி, தேவசேனை, மங்கள சண்டிகை, தரித்ரி என்னும் தேவியர். பலிகொள்ளும் ஸ்வாகா, ஏற்றுக்கொள்ளும் தட்சிணை, நெறிவடிவான தீக்‌ஷை, உண்ணும் ஸ்வாதா, காற்றை ஆளும் ஸ்வஸ்தி, வளம்நிறைக்கும் புஷ்டி, நஞ்சுவடிவான துஷ்டி, ஈசானத்தை ஆளும் ஸம்பத்தி, நாகினியாகிய த்ருதி, அனலையான சதி, அளிவடிவான தயை, நிலைகொள்பவளான பிரதிஷ்டை, தவவடிவான ஸித்தி, அருள்வடிவான கீர்த்தி, செயல்கொண்ட கிரியை, விழிமயக்கும் மித்யை, அமைதிவடிவாகிய சாந்தி, இளமகளான லஜ்ஜை ஆகியோரை அங்கே போர்க்கோலத்தில் காண்கிறேன்.

மெய்வடிவான புத்தி, மெய்கடந்த மேதா, விடுதலையளிக்கும் திருதி, விழிநிறை அழகுமகளான மூர்த்தி, அனைத்து மங்கலங்களும் கொண்ட ஸ்ரீ, துயிலரசி நித்ரை, இருள்வடிவான ராத்ரி, செம்மை சூடிய சந்தியை, வெள்ளிப்பெருக்கான திவை, பசிவடிவான ஜடரை, விடாய்வடிவான திரிஷை, நீர்வடிவான பிபஸை, ஒளிகொண்ட பிரபை, சுடரில் வாழும் தாஹிகை, சாவரசி மிருத்யூ, முதுமையின் தேவியான ஜரை, குருதிவெறிகொண்ட ருத்ரி, அனைத்தையும் மறக்கச்செய்யும் விஸ்மிருதி, அனைத்தையும் விரும்பச்செய்யும் ப்ரீதி, நினைவரசி சிரத்தை, பணிவின் தேவியான பக்தி ஆகியோரும் இக்களத்தில் நின்றுள்ளனர்.

விசாலாக்ஷி, லிங்கதாரிணி, குமுதை, காமுகி, கௌதமி, காமசாரிணி, மதோல்கடை, ஜயந்தி, கௌரி, ரம்பை, கீர்த்திமதி, விஸ்வேஸ்வரி, புரூகுதை, மந்தை, ருத்ரகர்ணிகை, பத்ரை, ஜயை, மாதவி, பவானி, ருத்ராணி, காளி, மாகாளி, குமாரி, அம்பிகை, திரயம்பிகை, மங்கலை, பாடலை, நாராயணி, ஏகவீரை, சந்திரிகை, சுகந்தை, திரிசந்தி, நந்தினி, ருக்மிணி, குந்தளை, ஔஷதி, பிரசண்டை, சண்டிகை, அபயை, நிதம்பை, தாரை, புஷ்டி, கோடி, கல்யாணி என நான் நோக்குந்தோறும் சீற்றம்கொண்டு ஒளிரும் படைக்கலங்களுடன் இங்கே களம்நிற்கும் அன்னையர் பெருகிக்கொண்டே செல்கிறார்கள்.

இருளுலகை ஆளும் தெய்வங்கள் ஊடுகலந்துள்ளன அங்கே. எட்டு கால்களில் வலைவீசிப்பறக்கும் ஜாலிகர் என்னும் பெரும்பூதங்கள். கைகளோ கால்களோ உடலோ தலையோ இன்றி வயிறும் வாயும் மட்டுமேயான கபந்தர்கள். ஒற்றைவிழியில் அனலெரிய சிறகுவீசிப் பறக்கும் ஜாதுகர்கள். நண்டுகளைப்போன்ற பெருங்கொடுக்குகளுடன் அசைந்து நடக்கும் கர்கடகர்கள், தவளைகள்போல் பின்காலில் எம்பிப்பறந்து நாநீட்டி கவர்ந்துண்ணும் மாண்டூக்யர்கள். ஒற்றைக்கை மட்டுமேயான ஹஸ்தர்கள். ஒற்றைக்கால் மட்டுமேயான பாதுகர்கள். ஒற்றை நாக்கு மட்டுமேயாகி புழுவென நெளிந்து வளைத்துண்ணும் ஜிஹ்வர்கள். பல்லாயிரம் நெளியும் புழுக்களாலான உடல்கொண்ட கீடர்கள். நோக்க நோக்க பெருகுகின்றன பூதங்களும் பேயுருக்களும். அவர்களின் முழக்கங்களை விழிகளால் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஒன்றையொன்று விழுங்குகின்றன. ஒன்றையொன்று கொன்று வெளிவருகின்றன. ஒன்றை ஒன்று உண்ணமுயன்று முடிவிலாது சுழல்கின்றன. ஒன்றுடன் ஒன்று இணைந்து ஓருடலாகி போருக்கெழுகின்றன. ஒன்று கிழிந்து பலவாகிப்பெருகிச் சூழ்கின்றன. நகங்களும் பற்களும் உகிர்களும் கொம்புகளும் வால்முனைகளும் செதில்களும் படைக்கலங்களாகின்றன. கைகளும் விரல்களும் நாக்குகளும் கொல்படையாகின்றன. நோக்குகளும் ஓசைகளும் மூச்சுச்சீறல்களும்கூட கொலைக்கருவியாகின்றன. நஞ்சும் அனலும் கொண்டவை. வஞ்சப்பெருங்குரல் எழுபவை. கொலைவெறிகொண்டு கூத்தாடுபவை. குருதியுண்பவை. குருதிச்சேற்றில் திளைத்து ஆடுபவை.

அங்கே வெண்ணிறத் தேரிலெழுந்திருக்கிறான் இந்திரன். அவன் கையில் இருந்து மின்னிமின்னி அதிர்கிறது வான்படை. அவனை எதிர்த்து எழுபவன் சூரியன். அவன் தழலெழும் செந்நிறத்தேரில் அமர்ந்திருக்கிறான். சுழலும் மலர்ச்சகடத்தை படைக்கலமாக கொண்டிருக்கிறான். நாநீட்டிய காளிகைகளும், அனல்வாய் கொண்ட பைரவிகளும், குழல்நீண்டு பறக்கும் தீர்க்கசிகைகளும் அவர்களுக்குச் சுற்றும் குருதிதேடி கூத்திடுகின்றன.

நான் எதை காண்கிறேன்? அரசே, நான் காண்பது துளியினும் துளியினும் துளி. ஒரு விதைக்குள் எழுந்த காடு இது. இத்தகைய பல்லாயிரம்கோடித் துளிகளின் விரிவென ஒரு பெருங்கடல். அக்கடலே ஒருதுளியென இன்னொரு கடல். அக்கடலை ஒரு துளியெனக்கொண்டது அப்பாலொரு கடல். கடல் கடல் கடலெனச் சென்றமையும் முடிவிலா ஆழ்கடலின் ஒரு விழித்துளியசைவு இது. ஒரு கணம் நான் இமைத்தால் அனைத்தும் மாறிவிடுகிறது. ஆதித்யகோடிகள் முட்டிச்சுழல்கின்றன. இடியிடியிடியென வெடித்துச்சிதறி அணைந்தழிகிறது ஒரு புடவி. இருளுக்குள் மின்னிப்பெருகி வெடித்துச் சிதறி உருப்பெருக்கி விழிநிறைக்கப் பரவி நின்றிருக்கிறது புதுப்புடவி ஒன்று.

நான் எதை காண்கிறேன்! அரசே, என்னை பற்றிக்கொள்க! இந்தப் பெருக்கில் உதிர்ந்து கரைந்தழிவேன். எஞ்சுவதில்லை என்னுள் ஒரு சொல்லும். நான் காண்பதென்ன? இப்பெரும் போரை நிகழ்த்தும் இந்தத் தெய்வங்களின் முடிவின்மையின் பொருளென்று எச்சொல் நின்றிருக்கும்? எச்சொல்லின் விரிவென்று இம்முடிவின்மையை எடுத்துவைப்பேன்? அரசே, என்னை பற்றிக்கொள்க! என்னை இழுத்துச்செல்கிறது பேரொழுக்கு ஒன்று. அரசே, என் உடல் வெடித்துத் திறக்கிறது. என் அணுக்கள் ஒவ்வொன்றும் உடைந்து அகல்கின்றன. இன்மையென்றாவதன் இறுதிச்சொல்லில் நின்றுள்ளேன். நான் என்ற இச்சொல்லை இறுகப்பற்றிக்கொள்கிறேன். அரசே, நான் எனும் சொல்லில் துளியிலும் துளியென எஞ்சியிருக்கிறேன். இந்த சிறுமணற்பருவில் துளிப்பொன்பூச்சென இச்சொல்லில் சற்றே பொருள் எஞ்சியிருக்கிறது. நான் எனும் சொல். நான்! ஆம், நான்!

“அரசே!” என்ற அலறலுடன் சஞ்சயன் சரிந்து திருதராஷ்டிரரின் காலடியில் விழுந்தான். அவனுடைய சொற்குமுறலை கேட்டுக்கொண்டிருந்த அவர் அசையவில்லை. அவன் உடல் அங்கே கிடந்து கைகால்கள் இழுத்து இழுத்து அதிர்ந்து புளைந்தது. வாயோரம் எச்சில்நுரை வழிய, விழிகள் ஆழிமைகளுக்குள் சிக்கிச்சரிய, உதடுகளைக் கடித்த பற்கள் குருதியெழ ஆழப்பதிந்திருக்க, தொண்டைமுழை அதிர்ந்து அதிர்ந்து அடங்க, மெல்ல சஞ்சயன் அமைந்தான். அவனை அறியாதவர் போலிருந்த திருதராஷ்டிரரின் தாடை மட்டும் அசைந்துகொண்டிருந்ததை பீதன் கண்டான்.

தொடர்புடைய பதிவுகள்

கவிதைகள் கடிதங்கள்

$
0
0

kala

முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

தற்குறிப்பேற்றம்

அன்புள்ள ஜெ

 

சமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த சில கவிதைகளும் அவற்றைப்பற்றிய குறிப்பும் அருமையாக இருந்தன. கலாப்ரியாவின் கவிதைகளை நான் நேரடியாக ஒரு வர்ணனையாகவே வாசித்தேன். அவற்றை தற்குறிப்பேற்ற அணி என்று வாசிக்கமுடியும் என்பதும் அதுக்கு நவீனக்கவிதையிலே இடமுண்டு என்பதும் ஆச்சரியமானவையாக இருந்தன.

 

தற்குறிப்பேற்றம் என்றால் ஆசிரியரின் உள்ளக்குறிப்பை இயற்கைமேல் ஏற்றிச்சொல்வது. அதற்கு என்ன காரணம் என்றால் இயற்கையில் அவ்வாறு உள்ளடக்கம் என்று ஒன்றும் இல்லை என்பதுதான் என்று சொல்கிறீர்கள். ஆனால் இயற்கையில் உள்ள அர்த்தங்களில் ஒரு துளி அந்தத் தருணத்திலே அந்தக்கவிஞனை அவ்வாறு வந்தடைந்தது என்று எடுத்துக்கொள்வதுதானே சரியாக இருக்கும்?

 

அன்புடன்

சங்கர்

mukundjpg

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் தளத்தில் வெளிவந்த கவிதைகளில் முகுந்த் நாகராஜனின் கவிதைகள் அற்புதமானவை. அதிலும் வீட்டை இரண்டாகப்பிளக்கும் அந்தக்குழந்தை ஓர் அற்புதம். என் அம்மா ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். என் பையன் இதேபோல வீட்டை இரண்டாகப்பிரித்து  கொண்டு ஓடினான். அம்மா பார்த்து சிரித்தபடி ‘கிருஷ்ண பாதம் தெரியறதே. இன்னிக்கு கண்ணன்பிறப்பா?” என்றார்கள். கிருஷ்ண ஜயந்தி அன்றைக்கு கோலமாவில் கால்வைத்து கிருஷ்ணனின் கால்களை வீட்டுக்குள் வைப்பதை அவர்கள் ஒப்பிட்டது அற்புதமாக இருந்தது. இப்படி நம் பேச்சிலே எப்போதும் கவிதை வந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தக்கவிதையை ஒரு கவிதைக்குள் பார்ப்பது பெரிய அனுபவமாக அமைந்தது

 

ராஜி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை

$
0
0

the_Last_Mughal,_The_Fall_of_a_Dynasty,_Delhi_1857

கடைசி மொகலாயன் –  வில்லியம் டேல்ரிம்பிள் –  தமிழில் இரா செந்தில்  –  எதிர் வெளியீடு

 

மூலத்தை படிப்பது போன்ற உணர்வைத் தரும் மொழிபெயர்ப்பு. நீளமான வாக்கியங்கள்  தில்குஷ் (மன மகிழ்ச்சி) தரும் ஒரு மொகலாய மாம்பழத்தோட்ட்த்தில் இருக்கும் இனிமையைத்தருகின்றன. ஆயினும் rechristine என்ற சொல்லை மறு கிறிஸ்துவமயமாக்கல் என்று தான் பெயர்க்க வேண்டுமா என்று தெரியவில்லை (மறுபெயரிடல் என்றிருக்கலாம்). ஈனர்கள் , மாயாதீதமான என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இரண்டாவது Mystic இன் மொழியக்கம். முதல் சொல்லுக்கு இணையான மூலத்தில் உள்ள சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும்.

 

ஒரு காவியத்தின் சமநிலை மற்றும் அமைதியுடன் அயராத உழைப்புடன் சேர்க்கப்பட்ட மொகலாய, பிரிட்டிஷ் கடிதங்கள், ஆவணங்கள், கோப்புகள், உளவுச்சீட்டுகள், அக்பார் , கெஜட்போன்ற செய்தித்தாள்கள், இவற்றின் மறு தொகுப்பு, மூலம் பிரம்மாண்டமான ஒரு உண்மை வரலாறு மெதுவாக எழுந்து வருகிறது. காலம் – இடத்தால் விலகி இருந்து கொடுமையான நடுநிலையுடன் செய்திகளும் உண்மைத் தகவல்களும் அடுக்கப் படுவதில், முதலில் அது எழுவது தெரிவதில்லை. பின்னர் அறிகிறோம் நாம் அமர்ந்துள்ளது நிலம் அல்ல, ஒரு நகரும்பெரும் மிருகம் என்று.

 

“நள்ளிரவில் சுதந்திரத்தி” ல் நேப்பியர் மற்றும் காலின்ஸ் மவுன்ட்பேட்டனை நாயகனாக்கி வழமையான அழுக்கு இந்தியா மற்றும் அரசர்களின் மீதான எள்ளலால் நிறைத்தது போலஅல்லாமல் இந்தியாவை இரண்டாம் தாயகமாகவே கொண்டுள்ள டேல்ரிம்பிள் பரிவுடனும் மனிதத்துவத்துடனும் பிரிட்டிஷ் குற்ற உணர்ச்சியுடன் முன்வைத்துள்ள வரலாறு . நம்மைச்சுற்றிஇவ்வளவு ஆவணங்கள் இருப்பதை ஏன் இத்தனை ஆண்டுகளாக எவருமே கண்டுகொள்ளவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.

 

அடையாள அழிப்பு

 

துவக்கம் அந்த தவிர்க்க முடியாத வரலாற்று நாயகனின் முடிவுடன் காட்டப்படுகிறது. 1862 நவம்பர் மாதத்தில் ஒரு நாள் அடையாளம் மிச்சமின்றி ரங்கூன் சிறையருகே புதைக்கப்படும்முன்னாள் மொகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர் தைமூர் வம்சாவளியின் இறுதிப் புள்ளி; பாபர் துவங்கி வைத்ததை முடித்து வைத்த கடைசி மொகலாய மன்னர். அவருடைய சூபி தத்துவமார்க்கம், கஜல்கள் பாடும் திறம், கவிஞர்களை அதரித்தல் (புகழ்பெற்ற கவிஞர் காலிப், தன் நண்பரும் பேர்ரசரின் மூத்த மகனுமாகிய மிர்சா அபுபக்கர் விஷம் வைத்து கொல்லப்பட்டபின்,தனக்கு மாம்பழம் வாங்குவதற்காக கிடைத்து வந்த மாதம் பத்து ரூபாய் பற்றி கவலைப்படுகிறார்) , மென்கலைகளுக்கு ஆதரவு, தோட்டங்கள் மாம்பழங்கள் மீதான பற்று, 16 மகன்கள்,விருப்பத்திற்குரிய மனைவியாகிய ஜீனத் மஹல் மீதான பற்றினால் அவர்களின் மகனாகிய (அரசரின் 15ஆவது மகன்) மிர்ஸா ஜாவன் பக்த் ஐ வாரிசாக அறிவித்து அதை ஏற்றுக்கொள்ளகேன்னிங் பிரபுவிடம் கெஞ்சிக் கடிதங்கள் எழுதுவது என்று ஒரு கலைத்துப் போட்ட அல்லது குறுக்கி வெட்டுத்தோற்றத்தின் கண்ணாமூச்சியாக நம்மை ஆக்கிரமிக்கிறது புத்தகம்.

 

பீடிகைஇல்லாத வாக்கியங்களில் பெரும் நிகழ்வு சொல்லப்பட்டு விடுவதால் மிக கவனமான வாசிப்பும் சில இடங்களில் திரும்ப வருவதும் தேவைப்படுகிறது பேரரசரை புதைத்த பின் உடனடியாக புல்வளரவும் உடல் சிதையவும் (சுண்னாம்பு சேர்த்து) ஏற்பாடு செய்யும் பிரிட்டீஷ் அரசு மதச்சடங்குகள் எதையும் அனுமதிக்காமல் அடையாளம்எதுவும் மிச்சமின்றி இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது

 

மத மோதல்

 

பாதிரியார் ஜென்னிங்ஸ் தன் பரிவாரங்களுடனும் ஆன்ம அறுவடைக்கான திட்டங்களுடனும் வந்து இறங்குகிறார். கும்ப மேளாவில் லட்சக்கணக்கில் குவியும் மக்களை மதமாற்றம் செய்யஆற்றங்கரையில் கலக்கிறார். பெரிய வெற்றி கிடைக்கவில்லை. கிறிஸ்தவ மத த்தை இங்கிலாந்து காப்பதால் ஒரு பேரரசு கடவுளால் வழங்கப் பட்டுள்ளது. என்று உறுதியாக நம்புகிறார். கல்கத்தா பிஷப் ஹெபர், காட்டுமிராண்டி தன் குருட்டுத்தனத்தால் மரத்திற்கும் கல்லுக்கும் முன்னால் மண்டியிடுகிறான். என்று தன் ஸ்தோத்திரப் பாடலில் குறிப்பிட்ட தொனி பரவலாகஇருந்தது .

 

இந்தியத்தின் மீதான வெறுப்பும் தங்கள் இங்கிலாந்தின் உயர்வாழ்க்கை மறுக்கப்பட்டதால் உண்டான எரிச்சலும் சேர்ந்து பிரிட்டிஷ் அதிகாரிகளை இயக்கி உள்ளது. உடனே நினைவில் வருவது “ஊமைச்செந்நாய் “ இந்த தன்னாட்டில் புறக்கணிக்கப்பட்டு, அடிமை கொண்ட காலனி தேசத்தில் வெறியாட்டமிடும் வெள்ளை அதிகாரி மனநிலையை காட்டுகிறது மெக்காலேயின் உறவினரான ராணுவ அதிகாரி “ ஒரு நல்ல ஐரோப்பிய நூலகத்தின் ஒரே ஒரு அலமாரி இந்திய மற்றும் அரேபியாவின் மொத்த மண்சார்ந்த இலக்கியத்திற்கும் சம்மானது”என்று பதிவு செய்கிறார். கேன்னிங் பிரபு பிரிட்டனில் அமைச்சரவையில் இடம் கிடைக்காத்தால் சமாதானம் செய்யப்பட்டு கவர்னர் ஜெனரலாக இங்கே அனுப்பப் படுகிறார். கவர்னர் பதவிஅன்றும் இன்றும் சமாதானப் படுத்தும் கருவி போல

William_Dalrymple_2014

கிறிஸ்துவ இஸ்லாம் கலப்பு

 

ஒரு புறம் கடும் பிற மத வெறுப்பு கொண்டோரிடையே குறைந்த எண்ணிக்கையிலான நல்லிணக்க வாதிகளையும் காண்கிறோம். வெள்ளை மொகலாயர்கள் என்னும் ஆசிரியரின் பிறிதொரு நூலில் வேறோரு காட்சி காணக்கிடைக்கிறது. பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய, மொகலாய மன்னர் மற்றும் மக்களுடன்இரண்டறக் கலந்து உடை, பழக்கங்களை பின்பற்ற துவங்கி பிபிக்களுடன் வாழ்ந்து, மசுதிகளையும் கோவில்களையும் கட்டிக் கொடுத்து ஒரு கலப்பு வெள்ளையின மொகலாயர்களைஉருவாக்கி உள்ளனர் ஆயினும் பின்னர் வந்த தூய வெள்ளை வாதம் இதை தகர்த்து விட்டதால் ஜேம்ஸ் ஜஹாங்கிர் போன்ற பெயரகள் அரிதாகி விட்டன

 

முரணியக்கங்கள்

 

பகதூர் ஷாவின் அன்னை ஒரு இந்து. மன்னர் டெல்லியின் சுவர்களுக்கிடையே மூன்று மதங்களும் ஒத்திசைவுடன் வாழ்வதற்கு உழைக்கிறார். இந்த மெல்லிய நூலை அறுந்துபோகாமல் காப்பதால் மொகலாய மன்னர் வரிசையைக் காக்கலாம் என்று எண்ணுகிறார். சிப்பாய்கள் அரண்மனைக்குள் நுழைந்ததும் வேறு வழியின்றி கிளர்ச்சிக்கு அனுமதி தருகிறார். ஜிஹாதிகளின் இழுப்புக்கும் அவரது தாடி அலைபாய்கிறது.

 

அவரது அன்புக்குரிய மனைவி ஜீனத் அவர் அறியாமலேயே பிரிட்டிஷுக்கு உளவு சொல்ல, அரசவையின் ஹகிம் (குடும்ப மருத்துவர்) மன்னரை ஏமாற்றி, காட்டிக் கொடுத்து, ‘விசாரணையில் பொய்சாட்சி சொல்கிறார். விசாரணை செய்ய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உள்ள சட்ட உரிமையே கேள்விக்குரியதாகி உள்ளது. விசாரணை கம்பெனி ராணுவ முறையில் நடக்காமல் ஜனநாயக பிரிட்டிஷ் நீதிமுறைப்படி நடந்திருந்தால் மன்னர்க்கு எதிரான சாட்சியங்களும் ஆவணங்களும் பொய்ப்பிக்கப் பட்டிருக்கும் என்கிறார் ஆசிரியர்.

 

பிரிட்டிஷின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள், சீக்கிய, கூர்க்காப் படையினர் மற்றும் பத்தான் படையினர். பஞ்சாப் மன்னரின் ஆயுத உதவி. பகதூர் ஷாவின் அரசவையிலிருந்தே உளவு சொன்னவர்கள். பதவி, பணம், உயிர் வாழ்வதற்கான துரோகம், ஒரு ஆங்கிலேய போர்வீர்ர் (ஆங்கிலேயராக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய சர்ஜெண்ட் கார்டன் ) கிளர்ச்சிக் காரர்களுடன் சேர்ந்து கொண்டு, “என் ஆலோசனையை முதலிலேயே கேட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனாலும் உங்களுடனேயே வீழ்வேன் “ என்கிறார்.

 

ஒருங்கிணைப்பில்லாத, தங்களுக்குள் தலைமைப்போட்டி கொண்ட பல்வேறு ரெஜிமென்ட்கள் தாமாக போய் தோல்வியில் விழுந்தன. படைகளுக்கான உணவு கிடைக்காததால் பட்டினியும் தப்பி ஓடுதலும் நிகழ்ந்தன. கிளர்ச்சிப் படையினர் கண்ணில் பட்ட வெள்ளையரையெல்லாம் கொன்றழித்தனர், பெண்களும் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. முட்டியிலிருந்து ஷூ கழட்டப் படாமல் வெட்டி வீசப்ப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் குழந்தையின் கால் மிகப் பெரிய படிமம் ஆகிறது. பின்னர் பழிக்கருவியாகி பல மடங்கு வன்மத்துடன் இந்தியர்களை (ஈனர்கள் என்றே பிரிட்டிஷ் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்) அழித்தொழிக்கிறது. குறுகிய தூரத்தில் சுடுதல் மற்றும் (மெதுவாக துடித்து சாவதற்காக) நீளம் குறுகிய கயிற்றில் தூக்கு, கண்ணில் படுபவர்களுக்கெல்லாம் கிடைக்கிறது. பெண்கள் கொல்லப்படக் கூடாது என்கிறது பிரிட்டிஷ் ஆவணம் ஆனால் இது பின்பற்றப் பட்டதா என்று தெரியவில்லை.

 

இணக்கத்தின் இறுதிப் புள்ளி

 

ஜாபர் என்றால் வெற்றி என்று பொருள். தாய் ஒரு ராஜபுதனர். இவர் சூபி நம்பிக்கையும் இசைப்பாடல்களில் பற்றும் கொண்டவர். ஷா வலியுல்லா போன்றவர்கள் வலியுறுத்தும்வகாபிசத்தில் இருந்து மாறுபட்டவர். சோதிடம் மந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர். இஸ்லாமியர்கள் பசு வதைக்கு அனுமதிகேட்கும்போது கண்டிப்புடன் மறுத்தவர். காசியில் குளிப்பதை விரும்பிய காலிப் மற்றும் சாக் போன்ற உருதுக் கவிஞர்களின் புரவலர் பல மணிநேரம் கவிதை எழுதுபவர். ஹோலி நவராத்திரி கொண்டாடுபவர். ராம்லீலா பார்ப்பவர். அவர்கால டில்லிமதரசாக்கள் பெரும் கல்வி மையங்களாக் இருந்தன. அரபி, பாரசிகத்தில் உயர் கலையும் ஞானமும் போதிக்கப் பட்டன. ஆங்கிலம் மறுக்கப் பட்டிருந்தாலும்.

ஆனபோதும் அப்போதைய மதக் கொந்தளிப்பு சூழலில் மதம் அதிகாரப் போட்டியின் அடையாளமாகியது. “இரு நம்பிக்கைகளின் அடிப்படைவாதிகளும் ஒருவர் மற்றொருவருடைய முன்தீர்மான்ங்களையும் வெறுப்பையும் வலுப்படுத்திக் கொள்ளவே பரஸ்பரம் தேவைப்படுகிறார்கள் “

 

பெரிய இடத்துக் கொலைகள்

 

ஹகிம் என்னும் இஸ்லாமிய முறை மருத்துவர்கள் மூலம் கண்டே பிடிக்க முடியாத வகையில் மெதுநஞ்சு தரப்பட்டு தாமஸ் மெட்கால்ப், ஹென்றி எலியட் மற்றும் தாமேஸன்கொல்லப்பட்டுவிட்ட்தாக நம்ப்ப் பட்டிருக்கிறது. தன் மகனுக்கு எதிராக ஜீனத் பேகம், மூத்த மகனை வாரிசாக்க ஒப்புக் கொண்ட இந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை காலிசெய்திருக்க வேண்டும்.சிதைக்கப் பட்டுவிட்ட மாளிகைகளின் சுவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்

 

பிரிட்டிஷாரின் வாழ்க்கை

 

பிரிட்டிஷ் கனவான்களின் வாழ்வும் நுண்ணிய தகவல்களுடன் சொல்லப்பட்டுள்ளது. சூடு நிறைந்த டெல்லியை வெறுத்து சிம்லாவிலேயே தஞ்சம் புகும் கனவான்கள், செப் 26 அன்று தன்மாமியார் இறந்த தகவல் மனத்தில் ஒரு பெரும் வதைக்கும் நோயாக மாறி அந்த நாளை எதிர்கொண்டு வேறு சிந்தனை இன்றி தன் மரணாத்தை நோக்கி விரைந்து சென்று அடங்கும் இளம்தாயாகிய சார்லெட்டின் வாழ்வு இரண்டே பக்கங்களில் அசோக மித்திரன் சிறுகதை போன்ற அன்னியத்தன்மையுடம் சொல்லப் பட்டுள்ளது

 

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்து விட்ட் அதிகாரி பிரேசர் இங்கிலாந்திலேயே தங்கி விட்ட தன் மகனைப் பற்றி கவலைப்படுகிறார். தகவல் தொடர்பு அருகி விட்ட்தற்கு வருந்துகிறார் ஒருகட்டத்தில் இந்தியா வந்துள்ள தன் மகனை அடையாளம் காணாமலேயே கடந்து செல்கிறார். புரட்சி வரும் என்ற அனுமானமே இல்லாமல் சோம்பலுடம் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளை எச்சரிக்கும் தடயங்கள் வராமல் இல்லை. ஒரு நாள் காலையில் ஜுமா மசூதியில் ஈரான் சார்பில் வாள் பட த்துடன் புனிதப் போருக்கான எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது. மிகவும் நயவஞ்சகத்துடன் அவத் பிரதேசத்தை பிரிட்டிஷ் இணைத்து விட்ட்து அதிர்ச்சியையும்கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது

last

முடிவிலா வெறுப்பு

 

வெண்முரசின் போர்க்களக் காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது இந்த வரலாறு. வரலாறு புனைவாகும் தருணம் கால ஓட்டத்தால் தன் உச்சத்தை அடைகிறது. நம்ப முடியாத்தன்மை, இக்கட்டில் மனித உயிர் மேற்கொள்ளும் பேரங்கள், இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இன, மத , நாம்- பிறர் முரண்கள் புனைவின் இடைவெளிகளை நிரப்புகின்றன. அரசருக்கெதிரான இறுதி விசாரணை ஒருதலைப்பட்சமாக நடத்தப் பட்ட போதும் குற்றவியல் நீதிமுறை சட்டமே இக் கால கட்டத்தில் தான் தெளிவு பெறுகிறது.

 

அம்பேத்கார் ஸ்மிருதிக்கு முன்னோடியான பிரிட்டிஷ் ஸ்மிருதி. அரசு வக்கிலின் வாதங்களில் பிரிட்டிஷுக்கு எதிரான இஸ்லாமிய அடிப்படை வாதம் மற்றும் சர்வ தேச சதி, ஈரான் – மெக்கா – டில்லி என நீளும் ஒரே ஆட்சிக் கனவு அப்பாவியான, பொக்கை விழுந்த 86 வயது பகதூர் ஷா மீது ஏற்றப் படுகின்றன. இருப்பினும் ஹட்சன் அரசரை சரணடைய வைக்குமுன் கொடுத்து விட்ட, பல பிரிட்டிஷ் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்த கொல்லாமை வாக்குறுதி நிறைவேற்றப் பட்டு, மன்னர் ரங்கூனுக்கு நாடு கட த்தப் பட்டு புரட்சி நடைபெற்ற ஐந்தரை ஆண்டுகள் கழித்து தொண்டை முடக்கு வாத த்தால் இறக்கும் வரை பிரிட்டிஷ் நீதிமுறை அவரை அக்கரையுடன் கவனித்துக் கொள்கிறது.

 

ஜெ அவர்கள் குறிப்பிடும் இரண்டு ஐரோப்பாக்கள் ( இன மேலாதிக்கம் x சமத்துவ லிபரல் தன்மை) கடந்து சென்று விடமுடியாத ஒன்று.

 

அந்த ரங்கூன் வீட்டுச் சிறைச் சுவர்களில் கரித்துண்டால் கவிதை எழுதிக்கொண்டிருந்த , பாதி நினைவு தப்பி விட்ட, பக்கிர் ஆகி மெக்கா செல்ல விரும்பிய அந்த கிழட்டு மாமன்னரின் கடைசி கால நினைவலைகள் யாரும் அறியாமல் ஐராவதி முகத்துவார அலைகளில் கலந்து விட்டன. பல வருடங்கள் கழித்து அவரது கல்லறை தோண்டப் பட்டு, ஆசி வழங்கும் குருவாக வைத்து வழிபடப் பட்டு, உச்சமாக ராஜிவ் காந்தி வழங்கிய அழகிய கம்பளத்தின் கீழே இந்த கஜல்கள் எழுதிய ,உலகின் மிகச்சிறந்த உருது கவிஞர்களையும் சித்திர எழுத்துக் கலைஞர்களையும் ஆதரித்த , அரவணைக்கும் இஸ்லாத்தின் வாரிசு உறங்குகிறார்,

 

சுவர் சூழ் டெல்லியிலிருந்து விரட்டப் பட்ட ஓர் அறிஞர் அனைத்து சொத்துக்களையும் விட்ட போதும், தன் குருவான ஸாக்கின் கஜல்கள் எழுதிய கட்டை மட்டும் எடுத்துச்செல்கிற அளவிற்கு கலை- இலக்கிய எழுச்சி கொண்ட நாட்டை ஆண்ட, வறுமையில் செம்மை கண்ட அக்பரின் மறு பிறவி போன்ற மாமன்னரின் கதை மதத்திற்காக ஓங்கும் வாள்களும் ராக்கெட் லான்சர்களும் தணிந்து சுருண்டு கொள்ள துணை நிற்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

செவ்வல்லியின் நாள்

$
0
0

a

முன்பொருமுறை சுந்தர ராமசாமியிடம் பேசும்போது “தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் ஆக்கங்களில் இயற்கைவர்ணனையே இருப்பதில்லையே, ஏன்?” என்று கேட்டேன். சிரிப்புடன் “வர்ணிக்க இயற்கை இருக்கணுமில்லியா?” என்றார். அது குமரிமாவட்டத்துக்காரரின் பெருமிதம்.

 

குமரிமாவட்டம் எப்போதுமே பசுமையானது. இரண்டு பெரிய மழைக்காலங்கள். குட்டிக்குட்டி மழைகள் மேலதிகமாக. இரண்டு மழைக்காலங்களுமே அழகானவை. ஜூன், ஜூலையில் தொடங்கும் முதல்மழைக்காலம் சீரான தொடர்மழை கொண்டது. அதன்பின் ஆடிச்சாரல் இருபதுநாள். பின்னர் வானம் தெளிந்து ஓணம்.

b

அக்டோபரிலேயே தொடங்கும் இரண்டாவது மழைக்காலத்தில் இடிகுறைவு. மழை தனித்தனியான மழைகளாக நின்று பெருகியிறங்கும். இரவு முழுக்க மழை.பெய்தாலும் பகலில் பெரும்பாலும் எங்கும் நீர் தேங்கியிருப்பதை காணமுடியாது. நிறைய மழைபெய்யும் ஊர்களில் நீர் தன் வழியை தானே கண்டடைந்திருக்கும்

 

மழைமணல் வரிகளால் ஆகியிருக்கும் முற்றங்களும் சாலைகளும். வெள்ளிரேகையில் வானவில் சூடியபடி நத்தைகள் சென்றுகொண்டிருக்கும். குளிர்காற்றில் தென்னையோலைகள் சுழன்றுகொண்டிருக்கும் ஓசை. இந்த மழைக்காலத்தின் வண்ணம் வேறு. ஜூன்மாத மழைக்கு கொஞ்சம் வெளிச்சம் குறைவு. எப்போதுமே இருட்டு. இது அவ்வப்போது எழும் இளவெயிலில் நீர் ஒளிகொள்ளும் பருவம். நீரே ஒளிதானோ என உளம் மயங்கும் காலம்.

c

காலையில் எழுந்ததும் மழை பெய்துகொண்டிருந்தது. எண்ணிக்கொண்டதுபோல நின்றுவிட்டது. உடனே குடையை எடுத்துக்கொண்டு நடக்கக் கிளம்பினேன். சாரதா நகரின் நுழைவில் ஒரு சிறிய அல்லிக்குளம். அதில் இம்முறை முழுக்கமுழுக்க செவ்வல்லி. சிவப்பு என்று சொல்லமுடியாது, சற்றே நீலம்கலந்த சிவப்பு. மலர்நிறைந்த குளத்தில் இலைகளுக்குமேல் பல்லாயிரம் நீர்முத்துக்கள் சுடர்கொண்டிருந்தன

 

மணல்படிந்த சாலையினூடாக சென்றேன். மழைத்திரை இழுக்கப்பட்டு மலைகள் வெளிவந்திருந்தன. காற்று நன்றாகக் கழுவப்பட்டிருந்தமையால் மலைகளை மிக அருகே காணமுடிந்தது. மரங்களைக்கூட பார்க்கமுடியுமென தோன்றியது. மழை மலையின் மேல் நூற்றுக்கணக்கான வெள்ளிச்சரடுகளைத் தொங்கவிட்டிருந்தது

d

வயல்பணிகள் தொடங்கிவிட்டிருந்தன. பல இடங்களில் பூமயிர்ப்பரப்பென நாற்றடிகள் ஒருங்கியிருந்தன.நீர் நிறைந்த வயல்களில் வானம் இறங்கியிருந்தது. ஒருவர் வானத்தை கலக்கி பரப்பிக்கொண்டிருந்தார். ஒரு பெண்மணி வானத்தில் நாற்றுநட்டுக்கொண்டிருந்தார்

 

பனைகளின் கன்னங்கருமை. தென்னைகள் முற்றாக நனைவதில்லை. பாதியுடல் நனைந்திருப்பதே வழக்கம்.ஆனால் இத்தகைய பெருமழை அவற்றையும் முழுக்க நனைத்துவிட்டிருந்தது. அரசமரமும் ஆலமரமும் கிளைகளை உதறி இலைக்கொந்தளிப்புடன் நின்றன

e

பேச்சிப்பாறை கால்வாயில் மழைநீரே நிறைந்து சுழிந்த்து சென்றுகொண்டிருந்தது. அதன் அனைத்து துணைவழிகளையும் மதகுதிறந்துவிட்டிருந்தனர். அவை அருவிகளுக்குரிய ஓசையுடன் பொழிந்தோடின. நீர் சுழிக்கும் ஓடை பெரிய செம்பட்டை பிடித்து வகைவகையாக முறுக்குவதுபோல புரண்டு சென்றது.

 

தாமரைக்குளத்தில் மலர்கள் இல்லை. கோடையில் மலர்கள் மட்டுமே தெரியும். இப்போது நீர்த்துளிகள் நலுங்கும் இலைப்பரப்பு மட்டுமே. ஒவ்வொரு மணியும் ஒரு துளி வானம்.

i

மானுட விழிக்குத் தேவைக்குமேல் ஒளி விண்ணிலிருந்து வழிகிறது. காட்சிகளை ஒளியே மறைத்துவிடுகிறது. மழை மாபெரும் திரைச்சீலையால் உலகை மூடிவிடுகிறது. அதன்பின் தேவையான மெல்லொளியை தானே உருவாக்குகிறது

 

வெயிலில் ஒவ்வொரு பொருளும் வெம்மையால் காட்சியாகின்றன. மழையில் அவை தண்மையால் காட்சியாகின்றன. செல்லும் வழியில் கணியாகுளத்தின் சிறிய டீக்கடையில் மண்ணெண்ணை அடுப்பு எரிகிறது. அந்தச் செந்தழல்கூடக் குளிர்ந்திருக்கிறது

f

தலைக்குடைகளுடன் விவசாயிகள் சென்றுகொண்டிருந்தார்கள். வயல்களில் தலைக்குடைகள் குனிந்திருந்தன. நீருக்குமேல் அலையெழுப்பியபடி நாரை ஒன்று சென்றது. கலப்பைமுனையை வைத்ததுபோன்ற கருங்கால் நாரை. கொக்குக்கூட்டங்கள். குளக்கோழிகள்.

 

மீண்டுமொரு மழை இருட்டத் தொடங்கியது. வானம் உறுமியது. தெற்கே மின்னல்கள் கிளைபிரிந்து நரம்புகளாக அதிர்ந்து அடங்கின. நான் திரும்புவதற்குள் பொழியத் தொடங்கிவிடும். என எண்ணிக்கொண்டிருக்கையிலேயே குடைமேல் மழை அறைந்தது. கம்பிகள் வளைய நீர்ப்பெருக்கு. தரையில் நீர் விழும்போது சிறுசிறு சேற்றுப்பூக்கள் துள்ளி துள்ளி மறைந்தன

g

 

எப்போதும் எனக்குப் பிரியமான வரிகளில் ஒன்று, தேவதேவனின் கொக்குபூத்த வயல். தேவதேவனின் அண்டைவீட்டாரான எழுத்தாளர் மோகனன் அந்த தலைப்பில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். கொக்கு வயல்களில் ஆம்பல் போல பூத்திருக்கும். பறக்கும் மலர்கள்!

உழுபவருக்குப்பின்னால் கொக்குகள் செல்வதை பார்த்துக்கொன்டு நின்றபோது டோராவை நினைத்துக்கொன்டேன். நாம் வீட்டுக்கு வெளியே என்ன வேலை செய்தாலும் டோரா மகிழ்வாள். வாலட்டிக்கொன்டு பின்னாலேயே வருவாள். அவள் பிடித்து குதறிப்போட்டிருக்கும் ஓணான்கள் பல்லிகளை அள்ளி அப்பாலிடும்போது கடுப்பாக இருக்கும். ஆனால் ‘இதோ இன்னொண்ணு… இந்தா இங்கிணயும் ஒண்ணு. எல்லாம் நம்ம வேலைதான்’ என அவள் மகிழ்ச்சியாக கூடவே வருவாள்.

IMG_20181104_080314

விழிசெறிந்து முத்தாலம்மன் அமர்ந்திருந்தாள். அவள் கோபுரம் குளிர்ந்திருந்தது. அதன்மேல் பெய்தமழையின் எச்சமென இளஞ்சாரல் இறங்கியது. பச்சைவயல்களுக்கு அப்பால் ஷேக் ஔலியாவின் தர்கா தன்னந்தனிமையில் கிடந்தது  அவர் நாடிவந்த தனிமையை மழை மூடிக்காத்துக் கொண்டிருக்கிறது

 

வெண்முரசு எழுதுவதற்கு முன் வேண்டிக்கொள்வதற்காக சென்ற இடங்களில் ஒன்று பீர்முகமது அப்பா அவர்களின் தர்கா. ஆனால் அங்கு நின்றபோது இங்கு வரவேண்டுமெனத் தோன்றியது. ஆண்டில் ஐந்துநாட்களுக்கு மட்டுமே ஆளரவம் இருக்கும் ஷேக் அவர்களின் தர்காவில் பிரார்த்தனை செய்யும் ஒரே ஒருவன் நான் மட்டுமே. அவருடைய அபாரமான தனிமையிலிருந்து பெறும் சொற்களின் எடை மிக அதிகம்

l

காகங்களின் சிறகுகளுக்கு சற்றுமுன்  கழுவப்பட்டவை போல விழிமட்டுமே அறியும் ஓர் ஈரம் உண்டு. பாம்புகளுக்கும் அரணைகளுக்கும் அந்த ஈரம் உண்டு. ஆனால் கீரிகள் ஈரத்தால் படிந்த மென்மயிர்களுடன் செல்வதை இப்போதுதான் காணமுடியும்.

 

பூவரச இலைகளுக்கும் கைக்குழந்தை உடல்போல் மென்மையே ஈரமெனத்தெரியும் ஓர் ஒளி உண்டு. மழையில் அவை மடிந்து மடிந்து அசைந்துகொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான சேம்புகள் இலைகளை குட்டியானைச் செவிகளைப்போல் திருப்பியபடி காற்றில் திகழ்ந்தன

j

இந்த மண்ணின் விலங்கு என மழையை கரிய முதுகில் ஏற்று மெல்ல நடந்துசென்றது எருமை. நிரந்தரமாகவே ஒரு கரிய கூடாரத்துக்குள் குடியிருக்கிறது அது. எருமையின் கண்களுக்குத்தான் எத்தனை குளுமை. அது தன்மேல் ஏற்றுக்கொண்ட அத்தனை மழைகளிலும் இருந்து பெற்றுக்கொண்டதுபோலும்.

 

வீட்டுக்கு நடந்துவந்தபோது எண்ணிக்கொண்டேன். இரண்டுமணிநேர நடை. வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் இயற்கையின் இத்தகைய மாபெரும் தோற்றம். தமிழ்நாட்டில் வேறு எந்த ஊரில் குடியிருந்தால் இது கிடைக்கும்?

h

வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். விழிகளினூடாக உளம் நிறைவதைப்போல் அரிய ஊழ்கம் பிறிதில்லை. இங்கிருக்கிறோம் என்னும் நிறைவு அது. இவையனைத்தையும் நம்மைச் சூழப்பரப்பி இன்னும் வேண்டுமா இவை போதுமா என கேட்கிறது இவையனைத்தும் ஆன அது. ஆம், இங்கிருக்கிறேன் என அதற்குச் சொல்கிறேன்

 

இந்த மண்ணில் பிறந்த மூதாதையருக்கு வணக்கம். இந்தம்மழையின் அழகறிந்த  அத்தனை கலைஞர்களுக்கும் வணக்கம். இந்த குளிர்ந்த எருமைகளுக்கு அடிபணிந்து வணக்கம்.

============================================================================================================

பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்

கணியாகுளம்,பாறையடி…

கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி

ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா

குன்றுகள்,பாதைகள்

முதல் மழை

வரம்பெற்றாள்

இடவப்பாதி

குருகு

ஒருநாள்

வாசிப்பறை கடிதங்கள்

 

அம்மை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59

$
0
0

bowதேரிலேறிக்கொண்டதும் சஞ்சயன் விழித்துக்கொண்டான். “போர்முனைக்கு செல்லட்டும்! தேரை அர்ஜுனர் முன் நிறுத்துக!” என்றான். தேரோட்டி திரும்பி நோக்கியபின் புரவிகளை அதட்டினான். திருதராஷ்டிரர் “மூடா, நீ என்னருகே இருக்கிறாய்!” என்றார். “ஆம், நான் இங்கிருக்கிறேன்!” என்று அவன் சொன்னான். “ஆனால் நான் போர்க்களத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அங்கே போர் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது!” திருதராஷ்டிரர் “அந்திமுரசு ஒலித்துவிட்டது. நாம் திரும்பிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “இல்லை, அங்கே போர் நிகழ்கிறது… நான் இதோ பார்க்கிறேன்!” என்றான் சஞ்சயன்.

“தேவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். ஒளிரும் வைரமுடி அணிந்தவர்கள். வைரமென இமையா விழி ஒளிர்பவர்கள். அவர்களின் பற்களும் நகங்களும் வைரங்கள்போல் மின்னிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் கொண்டிருக்கும் படைக்கலங்களை பார்க்கிறேன். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம். அவற்றை நான் எங்கெங்கோ கண்டிருக்கிறேன். இது மேழி அல்லவா? ஆம், அது துரட்டி. அது அரிவாள், அது கத்தி. இன்னொன்று அகப்பை. இன்னொன்று சட்டுவம். அது துடுப்பு… நாம் இங்கு புழங்கும் அத்தனை பொருட்களையும் அவர்கள் படைக்கலங்களாக ஏந்தியிருக்கிறார்கள்.”

“கிண்ணங்கள், சருவங்கள், கலங்கள், யானங்கள், குண்டான்கள். எத்தனை வகையான படைக்கருவிகள்! அவர்களின் முகங்கள் ஒன்றுபோலிருக்கின்றன. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றம் கொண்டவர்களாகவும் தோன்றுகிறார்கள். அரசே, அவர்களை நான் முன்னரே நோக்கியிருக்கிறேன். ஒவ்வொருவரையும் முன்னரே அறிவேனா என்ன? அவர்களில் ஒருவர் என் தந்தை. அவர் முகம் மணலில் பொற்குண்டு என மின்னி விழிமாயமோ என மறைந்தது. அவர்கள் எவரெவருடையவோ முன்னோர்கள். ஓவியங்களில் கண்ட முனிவர்கள். அது பிரதீபரா? அப்பாலிருப்பவர் ஹஸ்தியா? அதற்கப்பால் யயாதி. அருகே பரதன். அவர்கள் அனைவரும் அவ்வடிவில் அங்கிருக்கிறார்களா? அவர்களிலிருந்து எழுந்து அங்கே சென்றார்களா?”

“தேவர்கள் அணிவகுக்கும் இப்போர்க்களத்திற்கு முடிவே இல்லை. கந்தர்வர்களை காண்கிறேன். அவர்கள் இசைக்கருவிகளையே போர்க்கருவிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நூற்றெட்டு நரம்புள்ள பேரியாழ் நூற்றெட்டு அம்புகளை தொடுக்கும் நூற்றெட்டு நாண்கள் இழுத்துக்கட்டப்பட்ட வில்லென ஆனதென்ன? வேய்குழல்கள் வேல்கள். வீணைகள் விற்கள். கொம்புகள், முழவுகள், முரசுகள், துந்துபிகள், சங்குகள், மணிகள் அனைத்துமே கொலைப்படைகளென மாறிவிட்டிருக்கின்றன. விழிகள் மலர்ந்த யட்சர்கள். பறக்கும் கின்னரர்கள். ஒன்றுநூறென எண்ணியதுமே பெருகும் கிம்புருடர்கள். ஒவ்வொருவரும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொடுங்காற்றில் பொடித்துகள்கள் என அவர்களனைவரும் பறந்தலைந்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். போராலான ஒரு பெருங்கடற்பரப்பு. போராலான பெருஞ்சுழி!”

மீண்டும் அவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. விழிகள் மேலே செருகிக்கொள்ள கைகால்கள் இழுத்து அதிர்ந்தன. வாயிலிருந்து நுரைவழிந்து கன்னத்தில் ஒழுகியது. அவனுடைய மூச்சு புறாவின் ஓசையென ஒலித்தது. பின்னர் விழிப்புகொண்டு “ஆ!” என்றான். “நான் பீஷ்மரை காண்கிறேன்” என்றான். “என்ன காண்கிறாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “அவர் களத்தில் நின்றிருக்கிறார். தன் குழலை நீண்ட தோல்நாடாவால் கட்டி தோளிலிட்டிருக்கிறார். குருதி வழிந்து உலர்ந்த தாடி திரிகளாக தொங்குகிறது. சீற்றம்கொண்டவராக அவர் போரிட்டுக்கொண்டிருக்கிறார். அஸ்மாகர்களும் குனிந்தர்களும் அவரைச் சூழ்ந்து எதிர்க்கின்றனர். குனிந்த மன்னர் அமோக்ஃபூதியின் இளையவர்களாகிய அஹோபாகுவும் விஸ்வமித்ரனும் அவர் அம்பால் வீழ்ந்தனர். அமோக்ஃபூதி அலறியபடி அவர் முன் வருகிறார். அவரை சிகராஸ்திரம் என்னும் அம்பால் பீஷ்மர் வீழ்த்தினார்.

பீஷ்மரின் வில்லில் இருந்து அனைத்துவகையான அம்புகளும் எழுந்து செல்கின்றன. பறவைக்குலங்களால் மூடப்பட்ட வான் போலிருக்கிறது அந்தப் படைவெளி. நீண்ட தண்டுகொண்ட தண்டசக்ரம் என்னும் கணைகள் சென்று அறைந்து நிலைகொள்பவை. பிளந்து செல்பவை இந்திரசக்ரம் என்னும் அம்புகள். வஜ்ரம் என்னும் கணை விம்மிச்சுடர்ந்து சென்று துளைப்பது. ஐஷீகம் சிட்டுபோன்றது. விழியறியாது வந்து விழிகொத்தி தாழ்வது. காலபாசம் அம்புடன் இணைந்த நீள்சரடு கொண்டது. தைத்தவற்றை இழுத்து எடுக்க உதவுவது. பினாகாஸ்திரம் நெளிந்தது. நெஞ்சுள் நுழைந்தால் திரும்ப இழுத்தெடுக்க இயலாதது. கிரௌஞ்சபாணம் சிறகுகள் விரித்து மெல்ல பறந்து எழுந்து விசைகொண்டு இறங்குவது. பிரதனாஸ்திரம் பம்பரம்போல் சுழல்வது. வாருணாஸ்திரம் அலையலையென துள்ளிச்செல்வது.

அரசே, அம்புகளையே நோக்குகிறேன். அவற்றுக்கு மானுடர் ஒரு பொருட்டே அல்லவோ என ஐயுறுகிறேன். காலபாசம் தைத்ததுமே சுழற்று அங்கே சுற்றிக்கொள்கிறது. பிரம்மபாசம் அரக்குடன் இணைந்தது. தைத்த இடத்தில் உருகி இறங்குகிறது. சிகராஸ்திரம் செங்குத்தாக பீறிட்டு மேலெழுந்து அங்கே திசைதெரிந்து சரிந்திறங்குவது. பெருமுழக்கமிட்டுச் செல்கிறது கங்காளாஸ்திரம். தன் எடையாலேயே சென்றறைந்து உடைக்கிறது முசலாஸ்திரம். மண்டையோடுகளை உடைக்கும் கபாலாஸ்திரம். வளைந்த முனைகொண்ட கங்கணாஸ்திரம். சென்றபின் இலக்கைத்தேடி வழிவளைந்தும் சென்றெய்தும் மானவாஸ்திரம். நரம்புகளை அறைந்து நினைவழியச் செய்யும் மோஹாஸ்திரம். வந்தது அறியாமல் வந்து தைக்கும் சௌம்யாஸ்திரம். புலிப்பல்லென இரட்டை வளைமுனைகொண்ட தம்ஷ்ட்ராஸ்திரம். வெடித்து ஒளிவிட்டுச் செல்லும் தைஜப்பிரபாஸ்திரம்.

அம்புகள் இப்போரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அம்பிலும் எழுந்து செல்லும் தெய்வங்களை காண்கிறேன். அவற்றுக்கு ஒவ்வொரு வடிவம். விழிமணிமட்டுமே கொண்டவை. நகங்களைப் போன்றவை. பற்களைப் போன்றவை. சிட்டுக்களின் அலகு போன்றவை. யானைத்தந்தம் போன்றவை. அத்தெய்வங்கள் அங்கே களியாட்டமிடுகின்றன. அரசே, ஒவ்வொரு உயிரின் வடிவிலும் அங்கே தெய்வங்கள் உள்ளன. யானைகளைப் போன்ற சிறுபூச்சிகள். சிறு பூச்சிகள் போன்ற யானைகள். பறக்கும் மீன்கள். செதில் வால் சொடுக்கிச் சீறும் களிறுகள். நாமறிந்த ஒவ்வொன்றும் பிறிதொன்றாகி நின்றுள்ளன அங்கே.

அரசே, நான் பீஷ்மரைச் சூழ்ந்து பேருருக்கொண்டு நின்றிருக்கும் அறுவரை காண்கிறேன். வலக்கையில் கதாயுதமும் இடக்கையில் தாமரையும் கொண்ட தரன். ஒருவிரல் சுட்ட மறுவிரல் வளைந்து ஆமென்று அடங்க நின்றிருக்கும் துருவன். அமுதகலம் ஏந்திய சோமன். விசிறியும் வில்லும் ஏந்திய அனிலன். எரிதழல் எழுந்த வலக்கையும் முப்புரி வேல் கொண்ட இடங்கையுமாக அனலன். அலையடிக்கும் பாசக்கயிறும் வேலும் கொண்ட ஆபன். அவர்கள் அவரை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். விளையாடும் சிற்றுயிரை குனிந்து பார்க்கும் பேருருவர்கள்போல. அவர்களின் முகத்திலிருக்கும் அந்த இரக்கம் எதன்பொருட்டு?

அரசே, பீஷ்மருக்கு இருபுறமும் இருவர் நின்றிருக்கிறார்கள். அவர் வலக்கையென ஆகி இயங்கிக்கொண்டிருப்பவன் பிரத்தியூடன். செந்நிற ஒளிகொண்டவன். இடக்கையென அமைந்திருப்பவன் பிரபாசன். இளநீல நிறத்தில் மின்னுபவன். பீஷ்மர் என நின்று அப்போரை நிகழ்த்துபவர்கள் அவர்களிருவருமே. காண்டீபம் நாணொலிக்க, சங்கூதியபடி பீஷ்மரை எதிர்கொள்ள வருகிறார் பாரதர். அவருடைய தேருக்குமேல் என எழுந்து நின்றுள்ளது வெண்முகில்களிறு. அதில் மின்னல் சொடுக்கும் படைக்கலத்துடன் அமர்ந்திருப்பவன் இந்திரன், இடியோசையுடன் மின்னொளியுடன் காற்று கிழிபட திசைகள் வெடிபட அவர்களின் போர் நிகழ்ந்துகொண்டிருப்பதை காண்கிறேன்.

சஞ்சயன் விசும்பியழுதான். கைகளை விரித்து “நான் காண்பதென்ன? இந்தப் போரை நான் ஏன் காண்கிறேன்? இதிலிருந்து நான் எவ்வண்ணம் விடுபடுவேன்?” என்றான். திருதராஷ்டிரர் “மூடா, அங்கே என் மைந்தர் செய்துகொண்டிருப்பதென்ன என்று சொல்!” என்றார். “அங்கே கரிய இருளின் திவலைகள்போல் வௌவால்களும் காகங்களும் என வடிவுகொண்டு பாதாளதெய்வங்கள் காற்றில் சுழன்று சிறகடிக்கும் ஓரிடத்தில் போரிட்டுக்கொண்டிருக்கிறார் துரியோதன மாமன்னர். அவருடைய உடல் கரிய ஒளிகொண்டிருக்கிறது. அவருடைய தேர்ச்சகடங்களை கைகளால் தாங்கியிருக்கின்றன நரிவடிவுகொண்ட இரண்டு பூதங்கள். அவருடைய தேரின்மேல் கொடியெனப் பறக்கிறது காகபூதம். அவருடைய அம்புகளை பற்றிக்கொண்டு பறந்து சென்று எதிரியின்மேல் அறைகின்றன கூருகிர்பறவைகள்.”

பாண்டவர்களின் தரப்பிலிருந்து பெரிய உழலைத்தடிகளையும் கொக்கிக்கயிறுகளையும் சுழற்றியபடி போர்க்குரலெழுப்பிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள் வேகவான், மகாரௌத்ரன், வித்யுத்ஜிஹ்வன், பிரமாதி என்னும் நான்கு அரக்கர்கள். தென்கிழக்கே விந்தியனின் சரிவில் விண்ணிலிருந்த தொல்லரக்கர் நகரமான மாகிஷ்மதி உடைந்து மண்ணில் சிதறிய துண்டுகளில் ஒன்றான கூர்மாவதி என்னும் நகரை ஆள்பவர்கள் அவர்கள். ஹிரண்யாக்‌ஷனின் குருதி எஞ்சிய தொல்லரக்கர் குடியினர். ஓங்கிய கரிய உடலும், ஒளிரும் பற்களும், சிப்பிபோல் விழிகளும், முழங்கும் முழவுக்குரலும் கொண்டவர்கள்.

அவர்களின் நகரம் மாளவ மன்னரின் எல்லைக்குட்பட்டது என்று மாளவப்படை பன்னிருமுறை அவர்களின் மேல் படைகொண்டு சென்றது. பன்னிருமுறை அவர்களின் காடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பன்னிருமுறை அவர்களின் குடிகள் முற்றழிந்தனர். வெந்த மைந்தருடன் கருகிய துணைவியருடன் அவர்கள் மேலும் மேலும் உள்காடுகளுக்குள் சென்றனர். அவர்களை மேலும் மேலுமென துரத்திவந்தது மாளவத்தின் படை. எரியுண்ட காட்டில் புகைசூழ்ந்த குகைக்குள் ஒடுங்கியிருந்த அவர்களின் தந்தை ஹிரண்யநபஸ் தன் நான்கு மைந்தரை நெஞ்சோடணைத்து போரிட்டு இறக்கும் நல்லூழ் அமைக உங்களுக்கு என்று வாழ்த்தி விழுந்துமறைந்தார்.

நான்கு உடன்பிறந்தாரும் தங்கள் குடிகளை சேர்த்துக்கட்டினர். மாளவத்தின் படைகள் எழுவதுவரை காத்திருக்கலாகாது என்று அவர்கள் அறிந்துகொண்டனர். மாளவத்தின் படைகளை கூர்நோக்க மலைமுடிகளில் பன்னிரு நோக்குமண்டபங்களை அமைத்தனர். மாளவப் படை ஐந்து விரல்களாகப் பிரிந்து நின்றிருப்பது என்றும் ஐந்தும் இணைந்து கையென்றாகும்போதே படையெடுப்பு நிகழ்கிறது என்றும் கண்டுகொண்டார்கள். அதன்பின் அவர்கள் இணைந்து வந்த மாளவப் படையை ஒருமுறைகூட எதிர்கொள்ளவில்லை. படை விலகிப்பிரிந்ததுமே மலைகளிலிருந்து இறங்கி அவர்களை தாக்கினர். படைகளின் ஊற்றுகளை அழித்தனர். களஞ்சியங்களை எரித்தனர். காவல்மாடங்களை சிதைத்தனர்.

அஞ்சிப் பின்னடைந்த மாளவம் அதன்பின் அரக்கர்நிலத்தை கைவிட்டது. தங்கள் தொல்நகரை அவர்கள் மீட்டமைத்தனர். துவாரகையுடன் வணிகப்பாதையை அமைத்துக்கொண்டனர். அவர்களின் நதிக்கரையில் படகுகளில் பொருட்களுடன் வணிகர்கள் வந்திறங்கலாயினர். துவாரகையின் அரசரை அவர்கள் தங்கள் குடித்தலைவர் என்றே எண்ணலாயினர். சம்பராசுரரும் பாணாசுரரும் அவருக்கு குருதியுறவினரானபோது அவர்களின் குருதிச்சரடிலமைந்த அவர்களும் உறவினரானார்கள். அரசே, அவர்கள் பாணாசுரரின் மைந்தர் சக்ரர் தலைமைதாங்கும் பதினேழாம் படைப்பிரிவில் எட்டாம் படையாக நின்று களம்கண்டனர்.

நால்வரும் துரியோதனரை சூழ்ந்துகொண்டு தாக்கினர். துரியோதனரின் பின்புலத்தை துச்சாதனர் காத்தார். அம்புகளால் அவர் அரக்கர்களின் தேர்களை உடைத்தார். வேகவானின் கழுத்தை அறுத்துச்சென்றது ஒரு வாளி. தன்னை அணுகிய அந்தக் கணையை இரு காகங்கள் ஏந்திவருவதைக் கண்டு அவன் அலறினான். அவ்வலறலை இரண்டாகப் பிளந்தது கூர்முனை. எஞ்சிய அலறலுடன் இருந்தது துண்டுண்ட தலை. அவன் அலறலைக்கண்டு ஓடியணைந்த மகாரௌத்ரன் பன்னிரு துதிக்கைகள் கொண்ட பெருங்களிறு ஒன்றின்மேலேறி பறந்துவரும் துரியோதனரை கண்டான். வெறிகொண்டு கதைசுழற்றியபடி அவரை அணுகினான்.

அவனுடைய எட்டு குடித்தெய்வங்கள் அவனை தங்கள் கைகளில் ஏந்தியிருந்தன. குளிகன், மாதன், மதங்கன், சம்பன், சம்புகன், சாமன், காமன், கதம்பன் என்னும் அத்தெய்வங்கள் யானைபோல் கொம்புகளும் துதிக்கைகளும் வௌவால்களின் சிறகுகளும் கொண்டவை. உறுமிச்சிரிக்கும் பற்கள்கொண்ட நாகங்கள் மேல் ஊர்பவை. கதையுடன் கதைகள் மோதிக்கொண்டன. தெய்வங்கள் தெய்வங்களுடன் போரிட்டன. உறுமிக்கூவின. அறைந்தன, கிழித்தன, மோதிச்சிதறிப் பின்னடைந்து மீண்டும் வெறிகொண்டு எழுந்தன. துரியோதனரின் கதையின் அறைகொண்டு நெஞ்சுபிளந்து மகாரௌத்ரன் மண்ணில் விழுந்தான்.

அவனைச் சூழ்ந்து ஆர்ப்பரித்த அரக்கர்களின் குடித்தெய்வங்கள் எழுந்துசென்று வித்யுத்ஜிஹ்வனை தங்கள் கைகளில் தூக்கி வந்தன. அவனுக்குப் பின்னால் பாய்ந்துவந்த புரவியின்மேல் நின்றவனாக பிரமாதி வந்தான். துரியோதனர் பிரமாதியை ஒரே அம்பால் வீழ்த்தினார். வீழ்ந்தவர்களின் குருதியை குடித்தன நீண்ட கூரலகுகளும் பற்களும் கொண்ட பாதாளதெய்வங்கள். மண்ணின் சிறுதுளைகளிலிருந்து நண்டுக்குஞ்சுகளென அவர்கள் எழுந்தபடியே இருந்தனர். விழிகளோ செவிகளோ இல்லாத விடாய் மட்டுமேயான சிற்றுருவர்கள். குருதியுண்டு வீங்கிப்பருத்து பேருருக்கொண்டு எழுந்து நெஞ்சிலறைந்து வெறிக்குரலெழுப்பி கால்களை ஓங்கி அறைந்து உதைத்து மருப்பு சிலிர்த்தனர்.

துரியோதனரும் வித்யுத்ஜிஹ்வனும் போரிட்டுக்கொண்டார்கள். அந்தப் போருக்குச் சுற்றும் குருதிகுடிக்கும் தெய்வங்கள் நின்று கைவீசி கூச்சலிட்டன. நெஞ்சிலும் தொடையிலும் அறைந்துகொண்டு ஆடின. நிலத்தில் மிதித்தும் கைதூக்கி வானில் சுழற்றியும் ஆர்ப்பரித்தன. இருவரின் தெய்வங்களும் அவர்களின்மேல் மிதித்தேறி போரிட்டனர். துரியோதனர் வித்யுத்ஜிஹ்வனை அறைந்து வீழ்த்தினார். அக்கணமே பாய்ந்த தெய்வங்கள் அவனை அள்ளி எடுத்து குருதியருந்தலாயின. அந்த உடல்கள் குருதியிழக்க அவற்றிலிருந்து வெளிறிய வண்ணம் கொண்ட புகைவடிவென அவர்கள் எழுந்தனர். துயர்கொண்ட மலைத்த விழிகளால் அந்தப் போர்க்களத்தை நோக்கியபடி நின்றனர். அவர்களினூடாக கடந்துசென்றன கூரம்புகள். அவர்களை அறியாமல் முட்டித்ததும்பிக்கொண்டிருந்தன தெய்வங்கள்.

துரியோதனர் தன் இரு தோள்களிலும் மாறிமாறி அறைந்துகொண்டு ஆர்ப்பரித்தார். “வருக! வருக!” என்று அவர் எதிரிகளை கூவியழைத்தார். பௌரவமன்னர் சுதாசர் செந்நிறப்பிடரி பறக்கும் நான்குதலைப் புரவிகளின் வடிவிலமைந்த தன் தெய்வங்களால் களத்தில் பறந்தலைந்தார். அவரை அணுகிய துரியோதனர் அம்புகளால் அவர் தலையை கொய்தெறிந்தார். தண்டக நாட்டு அரசன் குமுதனையும் அவன் இளையோன் ஜீமுதனையும் நீள்வேல் கொண்டு வெட்டி வீழ்த்தினார். அவர்களின் தெய்வங்கள் ஊளையிட்டபடி அஞ்சிச் சிதறி ஓடின.

இடியோசை எழுப்பியபடி கடோத்கஜன் துரியோதனரை நோக்கி வந்தார். அரசே, அவர் மலைகளைப்போன்ற தோள்கள்கொண்ட பெருங்குரங்குகளின் வடிவிலமைந்த நூற்றெட்டு மலைத்தெய்வங்களால் காக்கப்பட்டார். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் தாவியேறி ஒருவரை ஒருவர் கடந்து ஒருவரையொருவர் எடுத்து வீசி பெருகி அணுகினர். பேரலைகளில் எழுந்துவரும் சிறுநாவாய்போல கடோத்கஜன் அவர்களில் திகழ்ந்தார். வரும் வழியிலேயே ஜயத்ரதரின் தேரை அறைந்து துண்டுகளாக தெறிக்கவிட்டார். தேரிலிருந்து இறுதிக்கணத்தில் ஜயத்ரதரை பறக்கும் கரடிபோல் தோன்றிய சிந்துநாட்டுக் குடித்தெய்வம் தூக்கி அகற்றியது. சல்யர் கலப்பை வடிவில் படைக்கலமேந்திய ஏழு தெய்வங்களால் கடோத்கஜனிடமிருந்து காக்கப்பட்டார்.

கடோத்கஜனும் துரியோதனரும் போரிட்டபோது குரங்குருக்களும் காகவடிவப் பூதர்களும் விண்ணில் மோதிக்கொண்டார்கள். முகில்களுக்கும் மலைகளுக்குமான போரென அதை காண்கிறேன். கடோத்கஜனின் உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் அமைந்த விலங்குகள் எழுந்து வந்தன. நெஞ்சிலிருந்து இரு மத்தகங்கள் எழுந்து யானைகளாயின. தொடைகளிலிருந்து இரு களிறுகள் எழுந்தன. கால்களிலிருந்து கரடிகள். அரசே, அவருடைய இரு கைகளும் விரைவுகொண்ட இரு சிறுத்தைகளாகி எழுந்தன. வளைந்து பதுங்கியும், விரிந்தும், சிலிர்த்தும், சீறியும் அவை தாக்கின. பத்து கைநகங்களும் பத்து கூரலகுகளாகி கழுகுகளாக மாறின. அவருடைய வயிற்றிலிருந்து செதில்நிரைகொண்ட உடலுடன் எழுந்தது முதலை.

பெருகிக்கொண்டே இருந்தார் துரியோதனர். நரிக்கூட்டங்களாகி ஊளையிட்டுச் சீறி வால்சுழற்றி பாய்ந்தார். காகங்களாகி, முகில்களாகி நிறைந்தார். கழுதைபோல் ஒலியெழுப்பின அக்காகங்கள். இடியோசை என உறுமின அந்த நரிகள். அவருடைய தோள்கள் பெருகுவதை காண்கிறேன். அரசே, மண்மறைந்த கௌரவர்கள் அனைவரும் கதையேந்திய கைகளுடன் வந்து அவர் உடலில் பொருந்தி கிளைக்கிறார்கள். அவர்களின் மைந்தர்களும் கதைகளுடன் எழுந்து விரிகிறார்கள். நூறுநூறு கைகள். நூறுநூறு கதைகள். அவர் ஒரு படையென கடோத்கஜனை தாக்கினார். அவரை எத்திசையிலிருந்தும் அறைந்தார். ஒருகணமும் பின்னடைய விடாமல் அறைந்தார்.

அவர் ஆற்றிய போரின் விசையால் அப்பகுதியில் பெருஞ்சுழி ஒன்றே காணக்கிடைத்தது. தெய்வங்களும் தேவர்களும் பேயுருக்களும் அரக்கர்களும் அசுரர்களும் மானுடரும் இணைந்துருவான அச்சுழியின் அடியில் நிகழ்வதென்ன என்று காணக்கூடவில்லை. கடோத்கஜனின் அறைகள் ஒவ்வொன்றையும் அவருடைய கதைகள் தடுத்தன. அள்ளி அப்பால் வீசப்பட்ட கடோத்கஜனை அவருடைய தெய்வங்கள் தூக்கிக்கொண்டு அப்பால் சென்றன. அவரை துரத்திச்சென்று கூச்சலிட்டு அறைகூவினார் துரியோதனர்.

அநூபநாட்டு அரசன் நீலன் அஸ்வத்தாமாவால் கொல்லப்பட்டார். மலைவிழுந்ததுபோல் அவர் உடல் மண்ணிலறைந்து விழுந்தது. அப்பால் பகதத்தரை சேதிநாட்டு வசுதானரும் தசார்ணநாட்டரசர் சுதர்மரும் எதிர்த்தனர். பகதத்தரை சூழ்ந்திருந்தனர் பிரக்ஜ்யோதிஷத்தின் குடித்தெய்வங்களாகிய மீனுருக்கொண்ட மத்ஸ்யன், நண்டுருக்கொண்ட கர்க்கடகன், முதலையுருக்கொண்ட மகரன், ஆமையுருக்கொண்ட கூர்மன் ஆகியோர். அவர்களை எதிர்கொண்ட தெய்வங்கள் முகங்களில் கொம்புகளும் விரிக்கும் சிறகுகளும் கொண்டவை. வெட்டுக்கிளிகளெனத் தாவி வந்து அவை போர்புரிந்தன.

துரியோதனரை பீமசேனர் தன் காற்றுப்படை சூழவந்து தாக்கினார். அவருடைய கைகள் வீசுவதற்கேற்ப நாற்பத்தொன்பது காற்றுகளில் ஒன்று வந்து அமைந்தது. அறைகையில் எருமைத்தலைகொண்ட மகிஷாசன் வந்தமைகிறான். தேர்த்தூண்களைப் பிழுது எறிகையில் பன்னிரு கைகள் கொண்ட ஸ்வத்வாசன். கதைசுழற்றி வரும் நெஞ்சில் யானைப்பாறைபோன்ற ஹஸ்தின். உறுமி கைவிரித்து விரிந்தெழுகையில் நூறுகைகள் கொண்ட விஸ்வதேவன். சீற்றத்துடன் கால்களை உதைத்து பாய்கையில் ருத்ரன். நெஞ்சை நோக்கி கதைவீசி அணுகும்போது செந்தழல்போல் முடிகொண்ட யுவனன். அரசே, நாற்பத்தேழு காற்றுகள் கடந்துசெல்லும் மலையுச்சியின் ஒற்றைமரம் போன்று களம்நின்றாடுகிறார் பீமசேனர்.

துரியோதனரும் பீமசேனரும் இணையொடு இணையென நின்று பொருதிய அப்போரில் விண்ணில் இடியெழுந்தது. ஒவ்வொரு அறைக்கும் தெய்வங்கள் கூக்குரலிட்டன. தொடைகளை அறைந்துகொண்டும் கைகளை வீசி எழுந்து குதித்தும் ஒருவரை ஒருவர் கூச்சலிட்டு அழைத்து அறைகூவியும் களியாட்டமிட்டன. அவற்றின் ஆட்டத்தால் நிலம் மரவுரி விரிப்புபோல் நெளிபட்டது. நிலத்துக்கடியில் ஆழ்ந்த பொந்துவழிகளினூடாக பாதாளநாகங்கள் பிதுங்கி வெளியே வந்தன. துரியோதனர் பீமசேனரின் நெஞ்சக்கவசத்தை பிளந்தார். பிறிதொரு வீச்சில் அவர் தலைக்கவசத்தை உடைத்தார். மீண்டும் அறைய அவர் காற்றிலெழுந்தபோது பீமசேனர் அவர் விலாவிலறைந்தார். துரியோதனர் நிலையழிந்து பின்னால் சரிந்தார்.

அரசே, துரியோதனர் சென்ற சிலநாட்களாகவே நிலையழிந்திருக்கிறார். அவர் உடல் நூற்றுவரால் ஆனது. இழப்புகள் ஒவ்வொன்றும் அவருடலின் ஒரு தசையை ஆற்றலிழக்கச் செய்கின்றன. ஆகவே ஒவ்வொரு நாளும் அவருடைய நடை மாறுபடுகிறது. குரலும் கையசைவும் மாறுகின்றன. அவர் முகமேகூட நாளுக்கொன்று எனத் தெரிகிறது என்கிறார்கள். களத்தில் அவர் நிலைமீள்வதற்குள் பீமசேனர் அவரை அறையும்பொருட்டு கதையுடன் பாய்ந்தெழுந்தார். ஆனால் துச்சாதனரும் துச்சகரும் துச்சலரும் துர்மதரும் அவரை சூழ்ந்துகொண்டனர். கதையை ஊன்றியபடி துரியோதனர் எழுந்து நோக்கியபோது கௌரவர் நால்வருக்கும் பீமசேனருக்கும் உச்சப்போர் மூண்டுவிட்டதை கண்டார்.

அப்போது பொன்னுருகியதெனச் சிவந்த பெருங்களிற்றின் மீது மெல்ல மிதந்தவராக பால்ஹிகப் பிதாமகர் வருவதை அவர் கண்டார். அந்தப் படைக்களத்தில் ஒவ்வொன்றும் உச்சவிரைவில் கொப்பளித்து அலையடித்துக் கொண்டிருக்க அவர் மட்டும் மிகமிக மெல்ல அசைவதறியாது ஒழுகும் முகிலென வந்தார். அவருடைய கவசங்கள் அந்தியொளியில் மின்னிக்கொண்டிருந்தன. நான்கு கந்தர்வர்கள் வெண்முகில் சாமரங்களால் அவருக்கு விசிறிக்கொண்டிருந்தனர். சுடர்முடி சூடிய இந்திரவடிவான தேவன் ஒருவன் அவருக்குப் பின்னால் வெண்குடை ஏந்தியிருந்தான். யக்ஷர்களும் கின்னரர்களும் அவருக்கு இருபுறமும் மலர்மழை சொரிந்தனர். மலர்களாலான துந்துபிகளையும் எக்காளங்களையும் முழக்கினர்.

பால்ஹிகரின் கையில் பொற்சங்கிலி ஒன்றில் கட்டப்பட்ட மென்மையான மலர்போன்ற சாமரம் தொங்கியது. அதை சுழற்றிவீசியபடி அவர் அணுகினார். அந்தக் காற்றில் பறந்துகொண்டிருந்த தேவர்களின் பொன்னிறக் குழல்கள் அலைபாய்ந்தன. கந்தர்வர்களின் ஒளிவண்ண ஆடைகள் நெளிந்தமைந்தன. அது வருடிச்சென்ற தெய்வங்கள் மெய்ப்பு கொண்டு புன்னகைத்து அசைவழிந்து நின்றன.

அவரைப் பார்த்ததும் பீமசேனரை ஏந்தியிருந்த மாருதர்கள் அவரை அப்படியே விட்டுவிட்டு பின்னடைந்தார்கள். அவர் நிலத்திலுதிர்ந்து எழுந்தோடி அப்பால் சென்று நோக்கினார். துரியோதனரைச் சூழ்ந்திருந்த காருருவ தெய்வங்கள் புகையணைவதுபோல் கரைந்தழிந்தனர். அவர் வெற்றுக்கைகளுடன் திகைத்து நின்றார். பீமசேனர் தன் படைகளுக்குள் பாய்ந்து மறைய துரியோதனரை அவருடைய தம்பிகள் சூழ்ந்துகொண்டனர். அவர்களை அறியாதவர்போல தன் மெல்லிய சாமரத்தைச் சுழற்றியபடி அவர்களிருவருக்கும் நடுவே பால்ஹிகர் கடந்துசென்றார்.

அரசே, அதோ பீஷ்ம பிதாமகர் தன் கைகளென எழுந்த வசுக்களுடன் படைமுகம் நின்று பொருதிக்கொண்டிருக்கிறார். அவருடைய களத்தில் குருதிவெறிகொண்ட தெய்வங்கள் முட்டிமோதுகின்றன. உடலைவிடப் பெரிதாக நாக்குகொண்டவை. நாவுகளை சிறகுகளாக்கி பறக்கின்றன. நாவுகளை வால்களாக்கி அறைந்து பூசலிடுகின்றன. நாவுகளை கால்களாக்கி எழுந்து தாவுகின்றன. நாவுகளை பின்னிப்பிணைத்து வளைத்து எடுத்து அறைந்து போரிடுகின்றன. நாவுகளை ஊன்றி எழுந்து நின்றிருக்கின்றன.

பீஷ்மர் தன் எதிரே மிக அப்பால் ஒரு தேரை கண்டார். அது அந்திவெளிச்சத்தில் திரும்பிய மின்னல் அவர் விழிகளில் அடித்தது. அவர் கைகளால் முகம் மறைத்து மீண்டும் நோக்கியபோது அவரை நோக்கி வந்தது. வெள்ளியெனத் தெரிந்த இரும்புத்தேர் அணுகும்தோறும் பொன்னொளிகொண்டது. நெருங்கி வருந்தோறும் சிற்றுருவாகியது. களித்தேர் என்றாகி அவர் முன் வந்து நின்றது. அதில் ஆடையேதும் அணியாத சிறுகுழவி ஒன்று நெஞ்சில் ஐம்படைத்தாலியும் இடையில் கிண்கிணி நாணுமாய் கையில் அல்லிமலர்த்தண்டாலான வில்லுடன் நின்றிருந்தது. அவரை நோக்கி புன்னகைத்து “வருக!” என போருக்கு அழைத்தது. அதன் சிவந்த சிற்றுதடுகளுக்குள் மேலீறில் ஒரு பால்துளி என பல் தெரிந்தது. தெளிந்த விழிகளில் சிரிப்பு ஒளிகொண்டிருந்தது.

பீஷ்ம பிதாமகர் தன் வில்லைத் தாழ்த்தி தலைகவிழ்ந்தார். பின்னர் “திருப்புக! தேரை திருப்புக!” என ஆணையிட்டார். அரசே, அப்போது அவருடைய வலக்கையென விளங்கிய பிரத்தியூடன் என்னும் வசு துயருடன் விலகிச்செல்வதை கண்டேன். உயிரற்றதுபோல் வலக்கை சரிய வில் விழப்போயிற்று. அவர் பாய்ந்து அதைப்பற்றி நிறுத்தினார். பிரத்தியூடன் தன் உடன்பிறந்தார் அறுவருடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் துயர்நிறைந்த விழிகளுடன் பீஷ்ம பிதாமகரை குனிந்து நோக்கினர்.

தொடர்புடைய பதிவுகள்


புத்துயிர்ப்பு -தினேஷ் ராஜேஸ்வரி

$
0
0

writing

இலக்கிய உலகில் எல்கேஜி யில் அடி எடுத்து வைத்திருக்கும் எனக்கு உங்களது எழுத்தும் வலைத்தளமும் கொடுத்தது அதிகம். இதில் எழுதிக் கொண்டு இருக்கிறேன். பேஸ்புக் இப்போது பிடிக்கவில்லை.
அன்புடன் தினேஷ்.

புத்தியிர்ப்பு வலைத்தளம்

அன்புள்ள தினேஹ்

கட்டுரைகளில் இசை பற்றியதும் மலையாள சினிமாவிற்கும் இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்த நூலின் மதிப்புரையும் நன்று

பொதுவாக முகநூலில் எழுதுவதற்கும் வலைத்தளத்தில் எழுதுவதற்கும் வேறுபாடுண்டு. வலைத்தளம் ஒரு இதழ். எப்போதுமிருக்கும் பக்கம். அந்த உணர்வுடன் எழுதுங்கள்

நன்றி

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல்

$
0
0

debi

 

அன்புள்ள ஐயா

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில், உரையாடலின்போது “அத்வைத வேதாந்தத்தை உலகஅளவில் எடுத்துச் சொல்ல தகுந்த அறிஞர்கள் இல்லை” என்று சொன்னீர்கள். “நீங்கள் அப்பணியைச் செய்யலாமா?” என்றதற்கு“நான் அடிப்படையில் இலக்கியவாதி” என்றீர்கள். இருப்பினும் தங்கள் தளம் மதம்-ஆன்மிகம்- இறையியலுக்கு நல்லஅறிவுவளங்களைக் கொண்டுள்ளது.

 

‘philosophy’ க்கு இணையான தமிழ்ச்சொல் தத்துவம் என்றே கூகுள் சொல்கிறது. தத்வமஸி என்னும் உபநிடத மகாவாக்கியத்தை இந்த அறிவுத்துறைக்கே பெயராக வைக்கும் அளவிற்கு இந்திய சிந்தனையில் அத்வைத வேதாந்தம் இடம் பிடித்திருக்கிறது. மெய்யியல் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கலாம்.

 

தங்கள் தத்துவ நூல் பரிந்துரைகளில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல் –ஓர் எளிய அறிமுகம் அவற்றில் ஒன்று. (அலைகள் வெளியீட்டகம் சென்னை)தோழர் வி என் ராகவன் மொழிபெயர்த்துள்ளார். டி ஞானையா சரிபார்த்து அணிந்துரை அளித்துள்ளார்.   நூல் குறித்த சிலஎண்ணங்களும் ஐயங்களும்:

 

நூல் இடது சாரியின் பார்வையில்  “இந்திய மரபில் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை “  என்று நிரூபிக்கமுனைகிறது. பொருள் முதல் வாதம் (லோகாயதம்) மட்டுமே பகுத்தறிவு சார்ந்த சிந்தனைக்கு வழிவகுத்து விட்டிருக்கும்என்று முடிவு செய்கிறது. லோகாயதம் 2000 ஆண்டுகள் முன் நன்றாக வளர்ந்திருக்கிறது; இந்தியா பொருள்முதல்வாதத்திற்கு இடம் அளித்திருப்பதை கொண்டாடுகிறது

கருத்து முதல்வாதத்தின் படி எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட்து எதுவுமில்லை. அறிவை உருவாக்கும் பொருள் என்பதுஅறிவின்சிறுதுளியே. அதாவது ஒரு கருத்து தான். நாம் பார்க்கும்  பல பொருள் வடிவங்கள் அறிவின் வடிவங்களே. மனதிற்குஅப்பாற்பட்ட பொருட்கள் அல்ல. உதாரணங்கள் காட்டுவதில் “குயவனின் பானையும் நெசவாளியின் தறியும் – இந்தத் தொழில் நுட்பத்தைத் தான் பயன்படுத்திவந்துள்ளனர் இது தான் நமது தத்துவார்த்த எல்லைகள் “ என்கிறார் ஆசிரியர். உதாரணங்கள் எளிமையாகவும் அவை சுட்டும்உட்பொருள்கள் ஆழமாகவும் இருத்தல் போதும் என்று தோன்றுகிறது.

 

கணாதரின் வைசேஷிக தத்துவம்  அணுக்கொள்கை எனப் படுகிறது. இதற்காக அணுகுண்டு சோதனையில் நம்மவர்கள்தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது மிகை. ஆயினும் பருப் பொருட்களின் பகுதிப் பொருட்கள், பரு – பகுதி இவற்றின் உறவுகுறித்த சிந்தனை குறித்து திருப்தி கொள்ளலாம்.

 

சொற்கள் வளர்ந்து வாதங்களாகி வான்முட்டி நின்ற காடுகளில் பூர்வ பக்ஷம் என்ற உத்தி – எதிர்த் தரப்பை முழுவதும்ஆய்ந்து விளக்கி, பின் மறுப்பது ஜனநாயகமான தர்க்க வளர்ச்சியையும் அறிவுசார் அணுகுமுறையையும் குறிக்கிறது.

 

நையாண்டிக்கும் குறைவில்லை. கணாதரை ‘அணுக்களை உண்பவர்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.பொருள் முதல்வாதிகள் மட்டுமே மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பது நூல் ஆசிரியர் கூற்று. சிந்தித்தால் ஒன்றுநம்பிக்கைகள் எல்லாமே மூட்த்தனம் அல்லது மூடநம்பிக்கைகள் என்று எதுவுமில்லை என்று தோன்றுகிறது. ஜெ அவர்கள்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் கோணத்தில் புராணங்களைப் புரிந்து கொள்வது – பூர்வகுடிகளின் ஆழ்மனம் – மரணத்தைஉள்வாங்கிக்கொள்ள சடங்குகள் உருவாவது – என்ற  நிலைப்பாடு இடது சாரி தத்துவ வாதிகளுக்கு ஒப்புவதில்லை.

 

“காண்பதெல்லாம் பொய்; பிரம்மம் மெய்” என்ற அத்வைதக் கூற்றை தவறாக புரிந்து கொண்டு  திண்ணை வேதாந்தம், வீணர்வேதாந்தம் வளர்ந்து விட்டது உண்மை.  ஸ்வாமி விவேகானந்தர் வரையிலான ஆன்மிக தலைவர்கள் இதை சரியாக விளக்கிநூறு ஆண்டுகளுக்கு ஒரு தூய்மையாக்கல் நிகழ்ந்திருக்கிறது நூல் ஆசிரியரால் புரிந்து கொள்ளப்படவில்லை. நவீனநரம்பியல்,near death ஆய்வுகள் மற்றும் க்வாண்டம் இயற்பியல் முன்னேற்றங்களை மனதில் கொள்ளவேண்டும்.

 

மூளைபற்றிய தற்கால ஆய்வுகள் அதிக பட்சம் நினைவு, உணர்ச்சி பல்வேறு புலன்களுக்கான மூளை மையங்களைக் கண்டுபிடித்தல்,அவற்றில் உள்ள மின் –வேதியியல் மாற்றங்கள், செயற்கை மின் அதிர்வு மூலம் மூளையைக் குலுக்குதல் இவற்றைத்தாண்டிச் சென்றதாகத் தெரியவில்லை. நவீன அறிவியலுக்கு மனம் என்ற ஒன்று மூளைதாண்டித் தேவையே இல்லை. ‘நான்’என்ற உணர்வுக்கான மையம் கூட தெளிவாகவில்லை.

 

உறக்கத்திலிருந்து கனவு காணும் போது திடீரென எழுந்தால் வேகமாக கீழே ஒளிந்துகொள்ளும் ஆழ்மனத்தை சிலநேரங்களில் பிடித்து விடுகிறோம். ஆழுறக்கம்- கனவு –விழிப்புநிலை மூன்று நிலைகளுக்கும் பொதுவான ஒரு அடித்தளமாகஆன்மாவை பழைய சிந்தனையாளர்கள் hypothesise செய்திருக்கலாம். மாறும் ஒழுக்கில் மாறாத ஒன்றுக்கான தேடல்.நவீன இயற்பியல் கூட, தன்னுணர்வு சேரும்வரை பார்க்கப் படுபவை எல்லாம் சாத்திய அலைகளாகவே இருக்கின்றன என்றுகூறுகிறது. அத்வைதம் உலகம் மாயை என்கிறது.  சற்று இரக்க உணர்வுடன் நூல் ஆசிரியர் அத்வைத தாந்த்த்தைஅணுகியிருக்கலாம்.

 

நூலின் சில முடிவுகள்:

“காட்டுமிராண்டிகள் உணவைக்கூடப் புகழ்ந்து பாடினர்”. தரிசனங்கள் எல்லாம் மாயாஜாலங்களை மட்டுமே பரப்பின. கர்மாகொள்கை சுரண்டலுக்கான நியாயப் படுத்தல் மட்டுமே. அத்வைதத்தின் பாம்பு-கயிறு உதாரணத்தில் குறையுள்ள அறிவேவெளிப்படுகிறது. “

 

இந்தியப் பூர்வ குடிகளை ஒரே ஓரிடத்தில் புகழ்கிறார் ஆசிரியர். சைதன்யர்,கபிர், நானக் போன்றோர் நிலவுடைமைச்சுரண்டலுக்கு எதிரான போராளிகள் என்கிறார்.புத்தர் உபநிடதங்களுக்கு எதிராக கொள்கை வளர்த்து, முதன் முதலாக பொருள்முதல் வாதத்தை ஏற்படுத்துகிறார். எல்லாமேதொடர்ச்சியானது என்பது புத்தமதம் தத்துவத்திற்கு அளித்த பங்கு என்கிறார் ஆசிரியர். ஆலய விஞ்ஞானம் என்ற சொல்விஷ்ணுபுரத்தை நினைவுபடுத்தியது. (ஞான சபை விவாதங்களின் புராண, தத்துவ அடுக்குகளைப் புரிந்துகொள்ள வேண்டும்)தர்மம், அகிம்சையைப் பேசிய ஜைனத்தில் தத்துவம் என்று எதுவும் இல்லை என்கிறார். புத்தரின் சூன்ய வாதமும் அத்வைதவேதாந்திகளின் மாயாவாதமும் இணைவைக்கக் கூடியவை.

 

மொழிபெயர்ப்பாளர் பெரும் சவாலை நிறைவேற்றி இருக்கிறார். பழுதை (கயிறு) பழுது என்று பயின்று வந்திருப்பது அச்சுப்பழுதா ஆக்கப் பழுதா என்று புரியவில்லை.நூலின் மூலமும் நூலைக் கடந்தும்   இந்தியத் தத்துவ இயலின் கொடைகள் என்று புரிந்து கொள்வது:1 அழகிய கவிதையை மெய்யியல் ஆராய்ச்சியில் இணைத்தது – புல்லின் நுனியில் சென்ற கம்பளிப்புழு தன்னைச் சுருட்டிக்கொள்வது போல – மரணத்தின் பின் அவன் ஒருவன் ஆகிறான்.

2 உளவியலை அந்தக் கரணங்கள் (உள் கருவிகள்) மூலம் விளக்கியது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று பிரித்து உளவியல் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டது. இதை இப்படிப் புரிந்துகொள்கிறேன். மனம் – எண்ணங்களின் ஓட்டம்;சித்தம் – எண்ணங்களின் உறைநிலை. இதில் அலைகளை நிறுத்துவதே யோகம். புத்தி – ஆய்ந்து முடிவெடுக்கும் கருவி;அகங்காரம்- ‘நான்’ உணர்வு. நவின உளவியல் இவ்வளவு ஆழம் சென்றதாகத் தெரியவில்லை. மூளை ஆய்வைத்தாண்டவில்லை. Affective (உணர்வு நிலை), Cognitive (அறிவு சார் நிலை), Behaviour (புறச் செயல்பாட்டு நிலை) என்றே வகுக்கிறது.

சித்தத்தைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் ஏரியைக் கொண்டு அழகாக விளக்குகிறார்.

 

3 சாங்கியம்  கூறும் முக்குணங்களின் சமநிலை, அவற்றின் திரிபால் பிரபஞ்சத் தோற்றம், அவற்றை சமன் செய்யும்முயற்சிகள் தத்துவத்தில் பெரும் பாய்ச்சலாகும்.

 

4 இறுதி உண்மைக்கான தேடல், அதற்காக எதையும் துறப்பது பெரும் அறிவியக்க செயல்பாடு (ரைக்வன் என்ற நோயுற்றவண்டிக்காரனிடம் உபநிடத உண்மையைத் தெரிந்துகொள்ள ஜனஸ்ருதி என்னும் மன்னன் பொன்னையும் தன் மகளையும்தருகிறான்). ஒருவேளை  அந்த உண்மை இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை அல்லது வெளிப்படுத்தப் படவில்லை.ஆயினும் தேடல் உயர்ந்தது.

5 சரியாக புரியப்பட்ட கர்மா கொள்கை, செயல்முறை வேதாந்தத்தை வழங்கும். ( ‘நான் இன்று இருக்கும் தாழ்வான நிலைக்குநானே காரணம்; அதனால் எனது எதிர்காலத்தை நானே தீர்மானிப்பேன்’ ;  “துன்புறுத்துவது அவன் கர்மா என்றால் உதவுவது.எனது கர்மா”  மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சம் என்ற பரிணாம வாதம் (சாங்கியர்களுடையது) முக்கியக் கொள்கையாகிறது.

நிரந்தரமான ஊழிப்பொருள் (primordial matter?) எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது; ஓய்வதே இல்லை; ஒன்றிலிருந்துமற்றொன்று எப்போதுமே பரிணாம வளர்ச்சி அடைகிறது.

 

இந்தியத் தத்துவ இயலின் குறைகள் என்று நினைப்பது:

 

1 உச்ச அறிவு இயக்கமான உபநிடதங்களும் சடங்குகள், வர்ணபேதங்களில் இருந்து முழுவதும் வெளிவரவில்லை

 

2 அனைத்து வாதங்களும் ஆவணப் படுத்தாமையால் குழப்பத்திற்குக் காரணமாயின

 

3 அத்வைத உண்மை வ்யவஹாரிக (நடைமுறை) உண்மைக்குப் பொருந்த வேண்டாம் என்பதை (பின்னாளில் ராமகிருஷ்ணர்விளக்கியது போல) கொண்டு சேர்க்கவில்லை. (க்வாண்டம் இயற்பியலின் விதிகள் அணு உலகிற்கு மட்டுமே; நியுட்டன்விதிகள் நமது அன்றாட உலகிற்கு மட்டுமே என்பது போல)

 

நூலின் சார்பு நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஸ்வாமி விவேகானந்தர், சங்கரர் முதலிய அனைத்து ஆசிரியர்களுமேதங்கள் கொள்கைகளுக்காக உபநிடதங்களை திரித்துச் சொல்வதாகக் கூறுகிறார். சார்பற்ற, திரிபற்ற உண்மை அறிவு நாட்டம்நமக்கு கட உபநிடத நசிகேதஸ் மூலம் காட்டப்படுகிறது. மரணம் பற்றி அறிந்து கொள்ள மரணத்திடம் சென்று கேட்பது உச்சகற்பனை.

இந்திய மெய்யியலின் நிரந்தர பூர்வபக்ஷமான இடது சாரி அறிவுஜிவிகளில் மூன்றாவது முக்கிய ஆளுமையாகிய (ராகுல்சாங்கிருத்தியாயன், கோசாம்பிக்கு அடுத்து) தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அவர்களை அறிமுகம் செய்ததற்கும் , இருபக்கவாதங்களையும் கவனிக்கும் அறிவியக்கத்தை தொடர்ந்து நடத்திவருவதற்கும் நன்றி.

 

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

கோவை

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தமிழகப்பொருளியல்- கடிதங்கள்

$
0
0

kalai

குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.

கலையரசனின் கட்டுரை- பாலா

அன்புள்ள ஜெ

 

கலையரசனின் கட்டுரையை சமீபகாலமாக தேசிய ஊடங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் திராவிட இயக்க ஆதரவு கட்டுரைச் சமையல்களில் ஒன்றாகவே சொல்லமுடியும். புள்ளிவிவரங்களைக் கொண்டு வெவ்வேறுவகையாகச் சமைக்கப்படும் இத்தகைய கட்டுரைகளுக்கு வெவ்வேறு அரசியல் விவாதங்களுக்கு மட்டுமே பயன். மற்றபடி எவ்வகையிலும் உண்மைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. திரு பாலா அவர்கள் ஒரு திராவிட ஆதரவாளர், அல்லது சப்பைக்கட்டாளர் என்ற வகையில் அவருடைய அயராத முயற்சியைப் பாராட்டலாம்

 

இந்தக்கட்டுரையின் சிறப்பு என்னவென்றால் இதை எந்த திராவிடக்கட்சியும் உடனடியாகச் சுட்டிக்காட்டாது என்பதுதான். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சிகள் இரண்டுமே பெரிய அழிவைச் செய்தவை. அவை திராவிட ஆட்சியே அல்ல. திராவிட ஆட்சியின் சாதனைகள் எல்லாமே மு.கருணாநிதியால் நிகழ்த்தப்பட்டவை என்பார்கள் இவர்கள். ஆனால் அவர் மிகக்குறைவான ஆண்டுகளே பதவியிலிருந்தார். அவருடைய தனிப்பட்ட சாதனைகள் என்பவை கூவத்தைச் சுத்தப்படுத்தும் முயற்சி, வீராணம் நீரை சென்னைக்குக் கொண்டுவரும் முயற்சி போன்றவை அரைகுறையாகவே முடிந்துவிட்டவை. உழவர்சந்தை, சமத்துவபுரம் போன்ற முயற்சிகள்கூட பெரிய தோல்விகளே என கண்கூடாகக் காணலாம்

 

ஆனால் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டும் தனிப்பெரும் சாதனைகள் பல [கிராமக் கர்ணம் பதவிகள் ஒழிக்கப்பட்டது, சத்துணவு, ஆங்கிலவழி கல்விவளர்ச்சி] எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டவை. ஆகவே அவர்கள் இக்கட்டுரையைச் சுட்டிக்காட்டத் தயங்குவார்கள். அல்லது ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று சொல்லிவிட்டு கடந்துசெல்வார்கள்.

 

தமிழகத்திலே வளர்ச்சி உண்டா? உண்டு, ஆனால் அது இங்குள்ள அரசியலால் உருவான வளர்ச்சி அல்ல. அரசியலை மீறி வளர்ந்த வளர்ச்சி. இங்கே உருவான கோவை, ஈரோடு,ஓசூர், நாமக்கல், கரூர், சிவகாசி, விருதுநகர் போன்ற தொழில்வட்டங்கள் அறுபதாண்டுகளாகவே மெல்லமெல்ல உருவானவை. புதியபொருளியல்கொள்கையின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவை கொஞ்சம் வளர்ந்தன. இப்போது மோடியின் தனிப்பட்ட சாதனையால் திகைத்து வழியில்லாமல் நிற்கின்றன.

 

தமிழகத்தின் வாழ்க்கைத்தர வளர்ச்சியின் காரணம் ஆரம்பத்திலேயே, ஆம் காமராஜர் காலத்திலேயே, இங்கே உருவான கல்வி. கல்வியே ஆரோக்கியம் பற்றிய பிரக்ஞையாக மாறுகிறது. அதையெல்லாமே அரசின் சாதனையாக சொல்பவர்கள் சென்ற ஐம்பதாண்டுகளில் தமிழகத்தின் நீர்நிலைகள் கைவிடப்பட்டமை. சூழியல் அழிவு எதற்கும் அரசைச் சுட்டிக்காட்டமாட்டார்கள்.

 

கலையரசனின் பாலாவின் கட்டுரையின் பாணியில்தான் இந்துத்துவர்களும் சென்ற ஐந்தாண்டுகளில் இயல்பாக உருவான எல்லா வளர்ச்சியும் மோடியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்கிறார்கள். எல்லா பின்தங்கிய நிலையும் மக்களின் குறைபாடு என்கிறார்கள். இங்கே இந்தவகையான பொருளியல்நிபுணர்கள் என்பவர்கள் தங்கள் கோணத்துக்கு ஏற்ப உலகைத் திரித்துக்காட்டி நம்மை நம்பவைப்பவர்கள் மட்டுமே

 

 

ஜெயராமன்

 

 

இனிய ஜெயம்

 

கட்டுரைகள் சிறப்பு . ஆனால் வடிவேலு சொல்வதைப்போல பில்டிங் ஸ்டாங்கு ,பேஸ்மென்ட்டு வீக்கு கதைதான் . நிர்வாக ரீதியாக ”பெரும் மாறுதல்களை ”நிகழ்த்தினார்களாம்.என்ன ஒரு அறிய பெரிய செயல்திட்டம் . அரசு என்றால்  என்ன என்ற ஆனா ஆவன்னா கூட தெரியாத ஒரு கழகம்,ஆட்சியை பிடிக்கும் வரலாற்று பிழை நேர்கிறது .அதை தக்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்கள் . இதற்க்கு எதற்கு சமூக நீதி எனும் குச்சி மிட்டாய் காரணம் ?

 

கிராம நிர்வாக அலுவலர் எனும் பதவி வழியே சாதி ஒடுக்குமறை ஒழித்தார்களாம். இவ்வளவு பெரிய புரட்சியை சத்தமே இல்லாமல் செய்து விட்டு ,மேடையில் கூட இதை பேசாமல் அமைதி காக்கும் அளவு , தன்னடக்கம் கொண்ட கழக்கத்தின் பண்பு இரும்பூதி எய்த வைக்கிறது .

 

அட்ரஸ் இல்லாத ஆட்கள் அதிகாரத்துக்குள் வரும் போது முதலில் செய்வது , புறம்போக்கு நிலத்தை பட்டா போடுவது .  திராவிடம் நீர் மேலாண்மையில் தூங்கி வழியும் காரணம் ,பல நீர் வழி பாதைகளின் இன்றைய ஆண்டைகள் திராவிட தொண்டர்கள் என்பதே .  அதற்காக செய்யப்பட்ட நிர்வாக மாற்றத்தை இப்படியும் சொல்லல்லாம் என்பதே நமது திராவிட அறிவியக்க கொடை.

 

எம்ஜியார் சத்துணவு திட்டத்துக்கு ஒதுக்கிய கோடிகள் அளவே ,சத்துணவு ஊழியர்களும் சேர்க்கப்பட்டனர் .அது அதற்க்கு முந்திய திராவிட சாதனையான ஆசிரியர்கள் கூட்டம் எனும் ஓட்டு பொதி கணக்கை  சமன் செய்யவே என்பதை இப்போதுதான் பருப்புஞ்சாவுக்கு மாறிய பாப்பா கூட அறியும் . தமிழகம் கல்வியில் சிறக்க ,வெளி நாட்டில் இருந்து ,  நலத்திட்ட உதவிகள் வழியே உள்ளே , செயல்வழிக் கற்றல்எனும் தலைப்பில் பல கோடிகள் வந்தது . வந்த அத்தனை காசும் எங்கே போனது ?  நிர்வாகத்தில் சமூக நீதி காக்கும்  கழக த்யாகிகள்  தானே இருந்தது ?

 

தமிழ் செம்மொழி மாநாடு , உலகத் தமிழ் மாநாடு எல்லாவற்றுக்கும் ஒதுக்கிய காசு யாருக்கு ?  அங்கிருக்கும் யாருக்கும் சுந்தர சன்முகனாரை தெரியாது ஆனால் குஷ்பூவை தெரியும் .  தமிழ் நாட்டில் தமிழ் ”விருப்ப பாடம்” மட்டுமே .முனிசிபல் அலுவலகம் மேலே தமிழ் வாழ்க பல்பு அணைத்து போய் கிடக்கிறது , தமிழில் பெயர் வைத்தால் சினிமாக்களுக்கு வரியில் சலுகை  இதுதான் திராவிடம் கண்ட தமிழ் வளர்ச்சி .

 

இன்று மண்ணைக் காத்து , அந்த தியாக வாழ்வில் தன்னை எரித்து கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் ஒரு கழக தியாகி ,பஸ்டாண்டில் பழம் விற்றுக் கொண்டிருந்தவர் .  இவைதான் இந்த புள்ளி விவர உண்மைகள் வந்து தீண்டாத ,அரசியல் அறியாத ,என் போன்ற சாமானியன் அவன் கண் முன்னால் காணும் உண்மை .

 

கன்யாகுமரியில் துவங்கிய எருமை நடந்து நடந்தே அறுபது ஆண்டுகளில் இமயமலை போய்விட்ட்து என்பதனால் ,அது செய்தது புனிதப் பயணம் என்று சொல்லி அதற்க்கு ஒரு மாலை போட்டு மரியாதை செய்தால் , அது செய்பவர் உரிமை… .அதை அவ்வாறே நம்புக என்று  சாமான்யனை சொல்ல கூடாது :)

 

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒரு தத்தளிப்பு, கடிதங்களும் பதிலும்

$
0
0

lon

எப்போதுமே வந்துகொண்டிருக்கும் கடிதங்களில் இரண்டு. சிக்கலான உளநிலையினூடாக ஓடும் இந்தச் சொற்களில் உண்மையான சமகாலப்பிரச்சினை ஒன்று உள்ளது என நினைக்கிறேன். இதை குறைத்துச் சொல்லவோ, எளிமைப்படுத்தவோ நான் விரும்பவில்லை. ஆனால் எப்போதுமே வெளியேறும் வழி ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறேன். நிபுணராக அல்ல, நானும் இந்த உளநிலைகளினூடாகச் சென்றவன் என்ற வகையில்

 

ஜெ

 

 

ஜெயமோகன் சார்,

 

 

நான் உங்கள் அறம் புத்தகத்தில் முதல் Chapter ஆகிய அறம் பகுதியை வாசித்து முடித்திருக்கிறேன். உங்களை தவிர எந்த எழுத்தாளரையும் நான் படிக்க முயற்ச்சி செய்து கொண்டுதான் இருக்கேன். ஆனால் முடியவில்லை. என் கடிதம் கீழே போக போக அலுப்பு ஏற்படுத்துவதற்கு மண்ணிக்கவும். காலையில் தூங்கி பல்கூட துலக்காமல் எழுதி கொண்டு இருக்கிறேன். அவ்வளவு ஆர்வம் உங்கள் எழுத்தின் மேல்..

 

 

எனக்கு இப்போது 30 வயதாகிறது. எனக்கு தமிழ் உங்கள் அளவு வராது சார். ஆனால் உங்களின் ஒரு காணொலியை பார்த்த பின்பே இவரை நாம் விட்டு விட கூடாது என்று “வாழ்விலே ஒரு முறை” படிக்க ஆரம்பித்தேன். அதில் நீங்கள் கட்டட வேலை செய்யும் தொழிலாளிகளின் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு சென்று அதை விவரித்த விதம் நெஞ்சை பிளிந்து விட்டது. நான் Cellphone addict ஆதலால், உங்கள் எழுத்தை உங்கள் Websiteலயே பார்த்து விடுகிறேன். இப்போது Leo tolstoy chokkalingam போரும் வாழ்வும் வாசித்து வரேன்.

 

 

நான் வேலையை விட்டுவிட்டதால் வீட்டுல அந்த புத்தகம் வாங்க காசு தர பயப்டுராங்க. இதலால் Anna centenary library ல படிக்றேன்.முதலில் தமிழில் படித்துவிட்டு அப்புறம் English கத்துக்க Maud translatlation படிக்க போரேன். இங்லீஷ் கத்துக்க.முக்கியமாக நான் கூற வந்த நோக்கம்:::

ஒரு ஏழு வருடங்களுக்கு முன்பு B.E முடித்துவிட்டு தெருவில் அலைந்து கொண்டிருந்த என்னை மிகுந்த வெறுமையில் இருந்த என்னை சின்ன வயதில் என்னை மிகவும் பாதித்த சினிமா

துறையை தேடி அலைந்தேன்.அப்போது தான் என் மாமா Internetல சமணர் குகை பற்றி ஆராய சொன்னார். Osho என்ற அந்த நான் வெறுத்த mysticஆம் அவரையும் படிக்க சொன்னார்.

 

 

என்னுடைய பிரச்சனையே அது தான்.அந்த Osho மேல் வெறுப்பு 7 வருடஙங்கள் கழித்து தீரா வெறுப்பு உண்டாகியுள்ளது. ஆயினும் அவரை ம க்க உங்கள் ஓஷோ உடைத்து “நொருக்கப்படவேண்டிய பிம்பம்”அந்த கட்டுரைக்கு உங்களை கைகூப்பி வணங்க வேண்டும் என்றே தோனுது.

 

 

இப்போது Anna centeneray library தான் என் வாழ்க்கை. ஒருபக்கம் சினிமா மேல் இருக்கும் காதல் பயமுறுத்துகிறது. யாரும் நம்மை சினிமாவில் ஏமாற்றி விடுவார்களா என்று. நடிக்கவும்  ஆசை. காசே இல்லாமல் கூட என்று சொல்ல தோணுது

 

 

இன்னொரு பக்கம் ” நான் எழுதலாமா” உங்க கட்டுரை ரசிக்க வைத்தது போல் இன்னும் என்னை எழுத தூண்ட வில்லை.

தமிழில் எழுத்து பிழை இலக்கணம் இதிலெல்லாம் நான் ரொம்ப POOR.(கிரியா அகராதி பற்றி கூட உங்கள் Websiteல தான் பார்த்தேன். அத வாங்கிருவேன்)

 

நன்றி

இப்படிக்கு

 

ஆர்

 

 

அன்புள்ள என் இனிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் உங்களின் வலைதலத்தில் இருக்கும் கட்டுரைகளை ஆர்வமாக சில நேரம் ரசனை முத்தி போய் கூட படித்திருக்கிறேன்.சமீபத்தில் படேல் சிலையின் கீழ் தமிழ் சரியாக உச்சரிக்கபடவில்லை என Social mediaல மிகவும் கேளிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

என்னுடைய சந்தேகம் மற்றும் கேள்வி என்னவென்றால் இந்த தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுபவர்களை சுத்த தமிழ் பேசுபவர்கள் எதற்காக ஒரு அருவருப்பு கலந்த பார்வையிலேயே பார்க்கிறார்கள். ஹோட்டல் சினிமா பீச் பொது இடங்களில் கூட கடை பலகைகளில் இப்படி தானே மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள். செந்தமிழில் பேசினால் தான் தமிழ் வளருமா? எனக்கு சில நேரம் நம் இலக்கியத்தை படிக்கவில்லை என்றால் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. நான் டால்ஸ்டாய் போரும் வாழ்வும் T.chokkalingam படிக்கும்போது, எனது நண்பர்கள் சோழ வரலாறை படிக்கிறார்கள் என்றால் நான் தெரிந்திருக்கவேண்டுமோ என்ற அச்சம் வருகிறது. இது சம்பந்தமாக நான் ஷாலினி மனநல மருத்துவரை அணுகினேன். அப்போது தான் அவர் “என்னுடைய பிரச்னை அதிகமாக இன்டர்நெட்ல தேங்கி யூடூப்பில தேங்கி கிடக்கிற சினிமா ஆபாசங்களை பார்த்து தான் இந்த குழப்பம் ஏற்படுத்திருக்கிறது என்று சொன்னார். இருந்தாலும் என்னை ஈர்த்த எழுத்தாளர் நீங்கள் என்பதால் கேட்க்கிறேன். புத்தகம் வாசிப்பதற்கு என்று ஒரு மனநிலை அவசியமோ?

 

புத்தகம் படிக்கும் பழக்கம் கடல் படத்தில் உங்கள் வசனத்தால் ஈர்த்து அப்பறம் உங்கள் பேச்சை கேட்டு உங்கள் வலைத்தளத்தில் தான் படித்து கொண்டிருக்கிறேன். என் குடும்பம் ஒரு கூட்டு குடும்பம். என் சித்தப்பாவை தவிர மாமாவை தவிர யாரும் பள்ளி மற்றும் கல்லூரி புத்தகத்தை தவிர எதையும் தொட மாட்டார்கள். என் சித்தப்பா என்னை முதலில் நான் அண்ணா நூலகம் சென்று படிப்பதை பாராட்டினார். அனால் நான் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் நான் நூலகம் போய் படிப்பதை அவர் நிறுத்தி விடு என்கிறார். எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ஆபாச படங்கள் முடங்கி கிடக்கிறது நம் யூடியூபில. எல்லாம் நம் So-called indian masala cinemaவின் தான். வேறென்ன?

 

ஒரு சமகால எழுத்தாளராக உங்களது அறிவுரையும் தேவைபடுகிறது. தயவுசெய்து கூறுங்கள். நான் உங்களுக்கு அடிக்கடி கடிதம் அளவுக்கு பெரிய வாசகன் அல்ல. இந்த பாலியல் வேட்க்கை தான் என்னை புத்தகம் படிக்கவிடாமல் என்னை துன்புறுத்துகிறது. நான் இப்போது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் முன்னூறு பக்கம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாசிக்க வேண்டியதாக இருந்தது என்று உங்களுக்கு சொன்னால் புரியாது. பிடித்தும் படிக்க முடியவில்லை. அருமையான நாவல் அது. அதில் வரும் தேவராஜன் கதாபாத்திரம் என்னை ஈர்த்தது. வாசிக்கும் பொது இடையில் கன்னாபின்னாவாக ஆயிரம் எண்ணங்கள் கற்பனைகள் வந்து பயமுறுத்துகிறது. நல்ல வாசகனாக இருபதற்க்கு என்று ஏதேனும் அடையாளம் இருுக்கிறதோ? வாசிப்பதை விட சினிமாவே கூட மேல ஆர்வம் வருகிறது. ஒருவேலை நான் தவறான இடத்தில் இருந்து வெளிவரமுடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் தோன்றுகிறது.என்வாழ்க்கையில் கீழ்கண்ட எது என்னை ஆட்டிவிக்க போது என்று நினைக்கவே பயமாகஇருக்கு. நான்கே Choice தான்.

 

1) எழுத்தாளர்

2) நடிப்பு

3) சினிமா இயக்குனர்

4) Swiggy or zomato driver.

 

இப்படிக்கு

ஆர்

 

 

அன்புள்ள ஆர்,

 

உங்களுக்கு நான் அறிவுரை சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கையை, அதையொட்டி நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களை புறவயமாகச் சற்றே கூர்ந்துபாருங்கள் என்று கோருகிறேன். புறவயமாகப் பார்க்கையில் உங்களுக்கே தெரியும் பல சிக்கல்கள் உங்கள் கடிதங்களில் தெரிகின்றன

 

முதல் விஷயம் உங்கள் இலக்கின்மை. இலக்கு ஒன்றை வைத்துக்கொண்டு வாழவேண்டும் என்பதில்லை. ஆனால் தனக்கு வேண்டியதென்ன என்றாவது ஒருவருக்குத் தெளிவு இருக்கவேண்டும். வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அப்படி இல்லாமலிருக்கும்.ஆனால் விரைவில் அங்கே சென்றாகவேண்டும்

 

 

நீங்கள் உங்களால் எளிதில் செய்யக்கூடியவற்றைச் செய்கிறீர்கள். அதன்பொருட்டு கடினமானவற்றைத் தவிர்க்கிறீர்கள். உலக வாழ்க்கையில் கடினமானவையும் எளிதானவையும் இரண்டறக் கலந்தே உள்ளன. நமக்கு எளிதானவற்றை மட்டும் செய்வதாக நாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது. அதன்பொருட்டு நாம் பிறரைச் சுரண்டத் தொடங்கிவிடுவோம்

 

நீங்கள் நூல்களை இன்றைய உளநிலையில் வாசிக்கலாகாது. நூல்கள் தெளிந்த உளநிலையில் வாசிக்கப்படவேண்டியவை. குழப்பமான உளநிலையில் பலசமயம் அவை மேலும் குழப்பங்களையே உண்டுபண்ணும். ஆகவே இப்போது குறைந்த அளவுக்கு, அன்றாடத்துடன் தொடர்புள்ளவற்றை மட்டுமே வாசிக்கவும். நீங்கள் நிறைய வாசிக்கவேண்டிய காலம் வரும்போது வாசிக்கலாம்

 

நாம் செய்யும் வேலை புற உலகம் சார்ந்தது. ஆனால் அதுதான் நம்மை ஓர் ஒழுங்குக்குள் கட்டுப்படுத்துகிறது. நம் அகத்தையும் கட்டமைக்கிறது. ஆகவே வேலை, அது எதுவானாலும் , செய்யத் தொடங்குங்கள். அதற்கு அப்போது உங்களை முற்றளியுங்கள். அதன்பின் எஞ்சிய பொழுதுகளை முறையாகத் திட்டமிடலாம்

 

தேவையென்றால் இதற்கு உளவியலாளரின் உதவியை நாடலாம்

 

ஜெ

 

பிகு

 

சினிமா என்பது நீங்கள் எண்ணுவதுபோல பிற அனைத்துத் துறைகளிலும் சிக்கலுடன் வெளியேறுபவர்கள் வந்தமையவேண்டிய இடம் அல்ல. அது இன்றைய சூழலில் மிகமிகக் கடுமையான போட்டி நிலவும் இடம். மிகத்திறன்கொண்டவர்கள் மட்டுமே வெற்றிபெறமுடியும். சினிமாக்கலையில் மட்டுமல்ல மக்கள்தொடர்பிலும் ஒருங்கிணைப்பிலும் ஆற்றல்கொண்டவர்களுக்குரியது அது. ஆகவே அதைப்பற்றிய கனவுகளை முற்றாகவே கைவிடுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கட்டண உரை நெல்லை, நவம்பர் 10

$
0
0

Banner_004_JP

 

கட்டண உரை வரும் நவம்பர் 10 அன்று நெல்லையில்

 

இடம்  திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே  உள்ள ஹோட்டல் ஆர்யாஸ் எதிரே உள்ள  ஆர் ஆர் என் இன்ன் கூடம் [RRN  Inn Hall]

 

நமது இன்றைய சிந்தனைமுறை உருவாகி வந்தது எவ்வாறு?’  என்கிற தலைப்பில்  ஜெயமோகன் கட்டண உரை  நிகழ்த்துகிறார்.

 

உரையின் கால அளவு  100 நிமிடங்கள். கூட்டம் சரியாக மாலை 5.30 க்கு துவங்கி  7.10  க்கு நிறைவுபெறும்.

 

கலந்துகொள்ள விரும்புபவர்கள் தொடர்புகொள்க.

 

கிருஷ்ணன்

98659 16970.

மின்னஞ்சல் : salyan.krishnan@gmail.com

 

நெல்லையில் தொடர்புகொள்ள

ஜான் பிரதாப் : 8098016596
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-60

$
0
0

பகுதி ஒன்பது : வானவன்

bowகோசல மன்னன் பிருஹத்பலன் தன் குடிலின் வாயிலில் இடையில் இரு கைகளையும் வைத்து தலைகுனிந்து தனக்குள் ஒற்றைச் சொற்களை முனகியபடி குறுநடையிட்டு சுற்றி வந்தான். அவனது நிலையழிவை நோக்கியபடி அப்பால் தலைக்கவசத்தை ஏந்தியபடி ஏவலன் நின்றிருந்தான். பிருஹத்பலன் நின்று திரும்பிப்பார்த்து “வந்துவிட்டார்களா?” என்றான். “அரசே!” என்று அவன் கேட்டான். “அறிவிலி! அவர்கள் எங்கே?” என்றான். வெற்று விழிகளுடன் ஏவலன் “அரசே!” என்று மீண்டும் சொன்னான். “மூடர்கள்! மூடர்கள்!” என்று தன் தொடையை தட்டியபடி அவன் மீண்டும் சுற்றி வந்தான்.

மீண்டும் நின்று “எங்கிருக்கிறார்கள்?” என்றான். “அரசே!” என்றான் ஏவலன். “வங்க மன்னர் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் இங்கு வருவதாக சொல்லியிருந்தார்கள்” என்றான் பிருஹத்பலன். “அதைப்பற்றிய செய்தி ஏதும் இன்னும் சொல்லப்படவில்லை, அரசே” என்றான் ஏவலன். “பிறகு நீ இங்கு என்ன செய்கிறாய்? அதை கீழே வை, நீர்க்குடம் சுமந்த கன்னிபோல. அறிவிலி!” என்றபின் பிருஹத்பலன் சென்று பீடத்தில் அமர்ந்தான். தன் இரு கைகளையும் விரல் கோத்து மடியில் வைத்து தலையை அசைத்தபடி “என்ன நிகழ்கிறது என்றே தெரியவில்லை” என்றான். பற்களைக் கடித்து எட்டித் துப்பி “எங்கும் புழுதி… குருதியுலர்ந்த புழுதி” என்றான்.

ஏவலன் “தேர் வருகிறது, அரசே” என்றான். “அது எனக்கும் கேட்கும். விலகு” என்று உரத்த குரலில் சொல்லி கைவீசினான் பிருஹத்பலன். ஏவலன் தலைவணங்கி சற்றே பின்னடைந்து நின்றான். ஒற்றைப்புரவித் தேர் வந்து நிற்க அதிலிருந்து சமுத்ரசேனரும் இளையோன் சந்திரசேனரும் இறங்கி பிருஹத்பலனை நோக்கி வந்தனர். பிருஹத்பலன் அமர்க என்று கைகாட்டினான். சமுத்திரசேனர் அமர்வதற்குள்ளாகவே “நாம் என்ன செய்யப்போகிறோம்? அவைக்குச் சென்று பேசவிருக்கிறோமா?” என்றார். “அதைப்பற்றி முடிவெடுக்கத்தான் உங்களை வரச்சொன்னேன்” என்றான் பிருஹத்பலன். சந்திரசேனர் “நாம் மட்டும் முடிவெடுத்தென்ன பயன்? மாளவரும் கூர்ஜரரும் இன்னும் வரவில்லை. குறைந்தது அவர்களாவது நம்முடன் இருந்தாகவேண்டும். பிற சிறு அரசர்களைப்பற்றி நாம் கவலை கொள்ளவேண்டியதில்லை” என்றார்.

“முதலில் நாம் அறுதி முடிவெடுப்போம். அதை நாம் பேசுவோம். நமது முடிவை அவர்களுக்கு தெரிவிப்போம்” என்றான் பிருஹத்பலன். “கூர்ஜரனைப்பற்றி நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. நாளுக்கொரு பேச்சு பேசும் வீணன்” என்றார் சமுத்ரசேனர். “இங்குள்ள ஷத்ரியர்கள் அனைவருமே நாளுக்கொரு பேச்சு பேசுபவர்கள்தான். எவருக்கும் தனித்து நிற்கும் ஆற்றல் இல்லை. ஏற்கெனவே படையும் செல்வமும் கொண்டு சேர்ந்து நிற்கும் பெருங்குழுவுடன் நிற்பதே அவர்கள் விரும்புவது. அந்தப் பெருங்குழு எது என்று எப்போதும் முடிவெடுக்க முடிவதில்லை. ஏனென்றால் அது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆகவே அந்திப்பறவைகளைப்போல மரங்களிலிருந்து மரங்களுக்குப் பறந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று பிருஹத்பலன் சொன்னான். “எவருமே உறுதியாக இல்லை” என்று சமுத்ரசேனர் முனகிக்கொண்டார். “எவரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எச்சொற்களும் பிழையாகிவிடும் என்னும் அச்சமே எழுகிறது.”

“உறுதியாக இருந்த இருவர் அவந்தியின் விந்தரும் அனுவிந்தரும்” என்று பிருஹத்பலன் முனகினான். “நேற்று நமது சொல்லாடல் எவ்வகையிலோ எவரையோ சென்று சேர்ந்திருக்கிறது. ஒருவேளை…” என்று நிறுத்திய சமுத்ரசேனர் “ஒருவேளை நான் சொல்வது பிழையாக இருக்கலாம். ஆனால் இங்கிருந்தே பாண்டவர்களுக்கு செய்தி போயிருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்றார். பிருஹத்பலன் “இங்கிருந்தென்றால்?” என்றான் விழிசுருங்கி. சமுத்ரசேனர் “கௌரவர்களிடமிருந்து… துரியோதனர் அவையிலிருந்து. நாம் போரிலிருந்து விலகுவதைப்பற்றி முடிவெடுத்ததனால் எவருக்கு இடர்? கௌரவ மன்னர் துரியோதனருக்கு. ஆனால் நேற்று நிகழ்ந்தது என்ன? நமது அரசர்கள் கொத்து கொத்தாக கொன்று வீழ்த்தப்பட்டனர். என்ன நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணிப்பார்க்கையில் ஐயங்கள் பெருகுகின்றன. வேண்டுமென்றே நம்மை படைமுகப்புக்கு அனுப்பினார்களா?” என்றார்.

பிருஹத்பலன் “நம்மை எவரும் படைமுகப்புக்கு அனுப்பவில்லை. நாம் அனைவருமே பின்னணியில்தான் நின்றோம். படை நேற்று குழம்பியதில் ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டோம். அம்புகள் பட்டு செத்துக்குவிந்தோம்” என்றான். “ஆம், அதைத்தான் சொல்கிறேன். நாம் திட்டமிட்டு படைகளுக்குப் பின்னால் நின்றிருந்தோம். ஆயினும் தொலையம்புகள் வானிலிருந்து பருந்துகள்போல வந்து நம் மீது இறங்கின. நாம் அவ்வாறு அகன்று நின்றிருப்போம் என அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஷத்ரியர் நின்றிருக்கும் இடம் முழுக்கவே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது” என்றார். “அச்சம் அறிவின்மையாகிறது” என பிருஹத்பலன் கைவீசி அதை தவிர்த்தான்.

“நம்மை குறிவைத்து தாக்கினார்கள் என்பதில் ஐயமே இல்லை. நேற்றும் முன்னாளுமாக ஷத்ரியர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல். இனி இப்போர் முடிந்தால்கூட பாரதவர்ஷத்தில் ஷத்ரிய வல்லமை பெரிதும் எஞ்சியிருக்காது” என்றார் சந்திரசேனர். இகழ்ச்சியுடன் “துரியோதனர் ஷத்ரியர் அல்லவா?” என்று பிருஹத்பலன் கேட்டான். “அவனை யார் ஷத்ரியன் என்றது? அவனது குருதி என்ன? மூதாதையரால் ஒதுக்கப்பட்ட துர்வசுவின் குலம். காட்டுப்பெண்டிரின் கருக்களில் எழுந்தவர்கள். பாலைவன வேட்டுவக் குடிகள் என்றன்றி எவர் அவர்களை பொருட்படுத்துகிறார்கள்? துளிநீர் தேடி தவமிருக்கும் பாலைவன ஓநாய் வழி வந்தவர்கள். பாரதவர்ஷத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்கா இப்போருக்கு எழுந்தோம்?” என்றார் சந்திரசேனர்.

பிருஹத்பலன் தலையை அசைத்தபடி “சரி, ஆளவேண்டிய ஷத்ரியர் எவர்? மாளவர்களா?” என்றான். “அவர்கள் அசுரர்கோன் ஹிரண்யரின் குருதி கொண்டவர்கள்” என்றார் சந்திரசேனர். “சரி, வேறு யார்?” என்றான் பிருஹத்பலன். சமுத்ரசேனர் பேசாமலிருந்தார். “நீங்களா?” என பிருஹத்பலன் கேட்டான். சமுத்ரசேனர் சீற்றத்துடன் “ஏன் நானாக இருந்தாலென்ன? வேதம் கனிந்த தீர்க்கதமஸின் குருதியில் எழுந்த குலம் நாங்கள்” என்றார். “உங்கள் குலமூதாதையான வாலி அரக்கர்குலம் என்பதல்லவா கூற்று?” என்றான் பிருஹத்பலன். “அதை நீங்கள் பேசவேண்டியதில்லை. கோசலகுலத்தின் வேரை நாங்கள் தோண்டி எடுக்க முடியும்…” பிருஹத்பலன் “எடுங்கள் பார்க்கலாம்” என்றான்.

சந்திரசேனர் “நாம் இப்போது இதை பேசவேண்டாம். நாம் குலப்பெருமை கிளத்த இங்கே அமரவில்லை” என்றார். “நாளுக்கொரு பேச்சு என நான் சொன்னது இதைத்தான்” என்றான் பிருஹத்பலன். சந்திரசேனர் சீற்றத்துடன் ஏதோ சொல்ல எழ அதை கையமர்த்தி பிருஹத்பலன் “இன்று நாம் பேசவேண்டியது வேறு. நம் குடிகளைப்பற்றி பேசுவோம். நாம் துரியோதனரிடம் இதைப்பற்றி பேசுவோம். இன்னும் இப்போர் தொடர்ந்தால் ஷத்ரியர் எவரும் எஞ்சப்போவதில்லை. ஷத்ரியரின் குலத்தை முற்றொழிப்பதற்காக நாம் இப்போருக்கு எழவில்லை. நமக்கு வேறு இலக்குகள் உள்ளன” என்றான். “ஆம், நாம் அழிந்துகொண்டிருப்பதை அவரிடம் சொல்வோம்” என்றார் சந்திரசேனர். “இறந்தவர்களின் நிரையை அவரே அறிவார். ஆனால் நாம் நமது சினத்தையும் துயரையும் சொல்லியாகவேண்டும்.”

சமுத்ரசேனர் “இப்போரிலிருந்து இனி எவ்வகையிலும் அவர் பின்னடைவார் என்று எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொரு நாளும் தன் உடன்பிறந்தாரை இழந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு இழப்புக்கும் மேலும் மேலும் வஞ்சினம் கொண்டவராக ஆகிறார். எண்ணி நோக்குகையில் இப்போது அவர் அமைதிப்பேச்சுக்கு சென்று அமர்ந்தால் தன் இறந்துபோன உடன்பிறந்தாரை கைவிடுகிறார் என்றே பொருளாகும். அதை அவரால் இயற்ற இயலாது” என்றார். சந்திரசேனர் அவரை திரும்பிப்பார்த்துவிட்டு “மூத்தவர் சொல்வதும் சரியென்றே தோன்றுகிறது. நாம் சொல்வதை அவர் செவிகொள்ளப் போவதில்லை” என்றார். “நம் சொற்களை போரை அஞ்சும் கோழையின் குரல் என அவர் கொள்ளவும்கூடும்.” சமுத்ரசேனர் “நாம் பிறிதொரு வலுவான சொற்கோவையை வைக்கவேண்டும். நாம் அழிவோம் என்பதற்காக போரொழியக் கோருகிறோம் என பொருள்வரக்கூடாது. அது பாரதவர்ஷத்தின் பொதுநலனுக்காகவும் வேதத்தின் வளர்ச்சிக்காகவுமே என ஒலிக்கவேண்டும்” என்றார்.

பிருஹத்பலன் எழுந்து தலையை அசைத்து “ஆம், ஆனால் எத்தனை எண்ணம் சூழ்ந்தாலும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இக்களத்தில் நாம் மடிவோம் என்ற எண்ணம் மட்டுமே வலுவாக நிலைகொள்கிறது. நம்மை மெய்யாகவே துரத்துவது அந்த அச்சம் மட்டும்தானா?” என்றான். “உங்களிடம் நிமித்திகர்கள் என்ன சொன்னார்கள்?” என்று சமுத்ரசேனர் கேட்டார். “யார்?” என்று பிருஹத்பலன் சீற்றத்துடன் கேட்டான். “நிமித்திகர்கள். இங்கு வருவதற்கு முன் ஒவ்வொருவரும் நிமித்திகர்களை பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறோம். உங்களிடம் நிமித்திகர் சொன்னதென்ன?” என்றார் சமுத்ரசேனர். “உங்களிடம் சொன்னதென்ன?” என்று பிருஹத்பலன் கேட்டான்.

“நாங்களிருவரும் இந்தக் களத்தில் மடிவோம் என்றுதான். இது பெருநகரங்களை சருகுகளென உள்ளிழுத்து ஆழ்த்திச்செல்லும் சுழி, இதிலிருந்து எவரும் தப்ப இயலாது என்றான் எங்கள் நிமித்திகன். பாரதவர்ஷத்தின் அரசர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு அழிவார்கள் என்றும் காட்டெரிக்குப் பின் புதிய முளைகள் எழுவதுபோல் வேறு அரசுகளும் புதிய நெறிகளும் இங்கே உருவாகும் என்றும் சொன்னான். அது அத்தனை பெரிதாக இருந்ததாலேயே அவனுடைய கற்பனை என்று எண்ணினோம். அவ்வாறு ஒருதுளியும் எஞ்சாது உள்சுழற்றி இழுக்கும் ஒரு பெரும்போர் நிகழ இயலுமென்றே அப்போது எண்ணவில்லை. இப்போது விழி முன் காண்கிறோம்.”

பிருஹத்பலன் “நான் அவனால் கொல்லப்படுவேன் என்றான் நிமித்திகன்” என்றான். தலைகுனிந்து நிலத்தை நோக்கியபடி “அதை தெளிவாகவே உரைத்தான். மேலும் கேட்டிருந்தால் எங்கே எவ்வண்ணம் என்றுகூட சொல்லியிருப்பான்” என்றான். சந்திரசேனர் “யாரால்?” என்றார். “அபிமன்யூவால்” என்று பிருஹத்பலன் சொன்னான். “அது நிகழக்கூடும்” என்றார் சமுத்ரசேனர். பிருஹத்பலன் திரும்பி நோக்கி “இக்களத்தில் கொல்பவனும் கொல்லப்படுபவனும் ஊழால் முன்னரே தொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று என் நிமித்திகன் சொன்னான். முற்பிறவிகளில் அவர்கள் ஆற்றியவற்றின் தொடர்ச்சியே இக்களத்தில் அவர்கள் எதிர்கொண்டு நின்றிருப்பது. இங்கிருந்து மேலும் ஒரு சரடு நீண்டு மறுபிறப்புகளுக்கு செல்கிறது. இது நாமறியா பெருஞ்சிலந்தி ஒன்று பின்னும் வலை” என்றான்.

சென்ற பிறவியில் நான் அவன் உடன்பிறந்தான். நான் அவனுக்கு மூத்தவன். கங்கைக்கரையில் சுஹர்ஷம் என்னும் சிறுநகரின் இளவரசர்களாக பிறந்தோம். நான் மூத்தவன் என்றாலும் எதிர்காலத்தில் அரசன் என அமர்ந்து ஆளும் ஊழ் அவனுக்கிருப்பதாக நிமித்திகர் சொன்னார்கள். அவன் என்னை கொல்லக்கூடும் என அச்சொற்களை நான் பொருள்கொண்டேன். அவன் என்னை கொல்வதை எண்ணி எண்ணி கொல்ல எண்ணுகிறான் என்றே நம்பலானேன். அவன் என்னை கொல்வதை கனவுகண்டேன். கனவிலெழுந்த அச்சமும் வஞ்சமும் நனவிலும் பெருகின. அவனை கொல்லாவிட்டால் அவன் கையால் இறப்பேன் என முடிவெடுத்தேன்.

அவனை நீராடும்பொருட்டு கங்கைக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் இருவரும் கங்கையின் நீர்ப்பெருக்கில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடி காவலரிடமிருந்து மிக அகன்று சென்றோம். அங்கே அவன் தலையைப்பற்றி நீருள் ஆழ்த்தி அழுத்தி பிடித்துக்கொண்டேன். ஆனால் கரையிலிருந்த என் பெற்றோரிடம் நீரில் மூழ்கும் அவனை நான் காப்பாற்ற முயல்வதாக கூச்சலிட்டேன். படைவீரர் பாய்ந்து நீந்தி அணுகுவதற்குள் அவன் இறுதிமூச்சை விட்டிருந்தான். அவனுடைய இழப்பால் துயருற்றவனாக சிலநாள் நடித்தேன். நீர்க்கடனும் புலைச்சடங்குகளும் முடிந்த பின்னர் விடுதலை கொண்டேன். மைந்தன் இறப்பால் உளம்சோர்ந்து தந்தை படுக்கையில் விழுந்தார். அன்னையும் நோயுற்றாள். ஓராண்டில் அவர்கள் இருவரும் இறக்க நானே அரசன் ஆனேன்.

ஆனால் முடிசூடிய பின் என்னால் அவனை மறக்க இயலவில்லை. ஒவ்வொருநாளும் அவன் கனவிலெழுந்தான். என் மைந்தர்களில் இளையவன் அவனைப்போல தோற்றமளித்தமையால் அவனை நோக்குவதையே ஒழிந்தேன். அவனைப் பெற்ற அன்னையை சந்திப்பதை அதன் பின்னர் தவிர்த்தேன். அவனுக்காக எவருமறியாமல் பழிநிகர்க் கடன்கள் செய்தேன். நிமித்திகர்களை அழைத்து அவனை நிறைவுறுத்த என்ன செய்யவேண்டுமென கோரினேன். அவர்கள் என் நாளும் கோளும் கணித்து சென்ற பிறவியில் அவனும் நானும் அயோத்தியின் பெருவணிகன் ஒருவனுக்கு மைந்தர்களாக பிறந்திருந்தோம் என்றனர். தந்தையின் பொருளை விழைந்த அவன் நான் துயில்கையில் என் அறைக்குள் பாம்பொன்றை அனுப்பி என்னை நஞ்சூட்டிக் கொன்றான். என்னையே நினைத்திருந்து பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தான்.

நான் விண்புகாமல் அவனைச் சூழ்ந்து மூச்சுவடிவில் இருந்தேன். அவன் அளித்த அன்னத்தையும் நீரையும் ஏற்க மறுத்தேன். அவ்வஞ்சமே என்னை அடுத்த பிறவியில் அவனுக்கு உடன்பிறந்தானாகப் பிறந்து பழியீடு கொள்ளச்செய்தது என்றார்கள் நிமித்திகர்கள். இந்தச் சுழலை எப்படி கடப்பேன்? இது பிறவிபிறவியெனத் தொடரும் ஊசலாட்டம்தானா என நான் கேட்டேன். உங்களில் ஒருவர் வஞ்சம் ஒழிந்து பிறரை முற்றாக பொறுத்து கனியவேண்டும். வாழ்த்து சொல்லி மூச்சுலகிலிருந்து அகன்று விண்புகுந்து முன்னோர்களுடன் சென்றமையவேண்டும். அடுத்தவர் பிறிதொரு பிறவி எடுத்து தன் செயலுக்கு ஈடுசெய்து அங்கு வந்துசேர்வார். அதுவரை இந்த மாற்றாட்டம் தொடரும் என்றார் முதுநிமித்திகர். என் இளையோன் வஞ்சமொழியவேண்டும் என நான் விழிநீர் சிந்தி வேண்டிக்கொண்டேன். நோன்புகள் நோற்றேன். பூசனைகளும் கொடையும் இயற்றினேன்.

“அவன் வஞ்சமொழியவில்லை. அந்த வஞ்சமே அவனை அபிமன்யூவாக பிறப்பித்திருக்கிறது என்றனர் நிமித்திகர்” என்றான் பிருஹத்பலன். “இப்பிறவியில் அவன் என்னை கொல்வான். கொல்பவனும் கொல்லப்படுபவனும் ஒன்றே என்று உணர்ந்து, இங்கு எழுந்தவர்கள் எவரும் கொல்லப்படுவதே இல்லை எனத் தெளிந்து நான் இன்னுளத்துடன் விடைகொண்டேன் என்றால் வட்டச்சுழல் முழுமையடையும் என்றனர். நான் இதுநாள்வரை என் உள்ளத்தை அதன்பொருட்டு பழக்கிக்கொண்டிருந்தேன். எங்களுக்குள் இந்தப் பிறப்பில் எப்பூசலும் இல்லை. உளமறிய வஞ்சமென ஒருதுளியும் அவனிடமும் இல்லை. ஆகவே இங்கே நிகழும் இறப்பு மலருதிர்வென நிகழட்டும் என எண்ணினேன்.”

நான் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் அவன் எவன் என்றும் இந்த ஊழாடலின் இயல்பென்ன என்றும் அறிவதற்கு முன்னரே அவனிடம் என் உள்ளம் படிந்துவிட்டது. ஏன் என்று அறியாமலேயே அவனைப்பற்றிய செய்திகளை தனித்து செவிகொண்டபடியே இருக்கிறேன். அவை அனைத்தையும் என் உள்ளம் நினைவில் தொகுத்துக்கொண்டிருக்கிறது. அவனை நான் நேரில் பார்த்ததில்லை. பார்த்திருக்கலாம், ஆனால் எதனாலோ பார்ப்பதை தவிர்த்தேன். அவனைப்பற்றிய என் உளச்சித்திரத்தை அனைவரிடமிருந்தும் காத்துக்கொண்டேன். அவனையும் என்னையும் ஊழ் முடிச்சிட்டிருக்கிறதோ என நான் ஐயுற்ற தருணம் எழுந்தது அவன் விராடரின் மகளை மணந்தபோது.

வங்கரே, விராடர் தன் மகளை எனக்கு அளிக்க எண்ணம் கொண்டிருந்தார் என அறிவீர்கள். அவளை நான் மணக்கக்கூடுமா என்று கோரி தூது வந்தது. ஆனால் மச்சர்குடியின் அரசமகளை அரசியாக்க என் அவையினர் ஏற்கவில்லை. என் பட்டத்தரசி காமரூபத்தின் அரசமகள். அவளை மீறி நான் எதையும் செய்ய இயலாது. ஆனால் தூதன் அதை அறிந்தவன்போல் என்னிடம் ஓர் பட்டுத்திரை ஓவியத்தை காட்டினான். அவளை கண்டதுமே நான் அவளை முன்னரே அறிந்திருப்பதாக உணர்ந்தேன். காதல்கொண்டவர்கள் எப்போதும் உணர்வது அது என அறிந்திருந்தேன். ஆண்கள் இளமையிலேயே அவர்களுக்கான பெண்ணுருவை அகத்திரையில் தீட்டிக்கொள்கிறார்கள். அப்பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறார்கள். கண்டடைந்ததும் முன்பறிந்தவள்போல் இருக்கிறாள் என எண்ணி வியக்கிறார்கள். ஆனால் இது அவ்வாறல்ல, என் உள்ளத்திலிருந்த பெண்ணே அல்ல அவள். ஆனால் அவள் விழிகள் என்னை நேர்நோக்கின. அவள் எப்படிபேசுவாள் என்றுகூட நான் அறிந்திருந்தேன்.

தூதன் சொன்னான், அவர்கள் மணத்தன்னேற்பு ஒன்றை ஒழுங்குசெய்வதாக. அதில் நான் அவளைக் கொண்டால் அதை என் குடிகள் எதிர்க்கவியலாது. மணத்தன்னேற்பு அரசகுடியினருக்கு தெய்வங்களால் ஆணையிடப்பட்டது. அதை நானும் ஏற்றேன். விராடநகரிக்கு நான் அவளை கவர்ந்துவரும்பொருட்டே சென்றேன். அப்போது அங்கே பாண்டவர்கள் கரந்துறைவதை அறிந்திருக்கவில்லை. அவளை அர்ஜுனன் கவர்ந்துசென்றதை அறிந்தபோது அதையும் முன்னரே அறிந்திருப்பதாக தோன்றியது ஏன் என்றே எண்ணிக்குழம்பிக்கொண்டிருந்தேன். இழப்புணர்வுடன் மதுவிலாடி அரண்மனையில் இருக்கையில் அவளை அபிமன்யூ மணம்புரிந்துகொண்டதாக செய்தி வந்தது. அபிமன்யூ என்னும் சொல்லால் துரட்டியால் குத்தப்பட்டதுபோல் எழுந்தமர்ந்தேன். அப்போதுதான் அவன் என்னுடன் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.

ஆகவே நிமித்திகர் நான் அபிமன்யூவால் கொல்லப்படலாம் என்று சொன்னபோது நான் திகைப்படையவில்லை. அவர்கள் அவன் பெயரை சொல்லக்கூடுமென எண்ணி காத்திருந்தேன். சொன்னதும் என் நரம்புகள் முறுக்கவிழ உடல் தளர்ந்தது. நான் ஒரு சொல்லும் கூறவில்லை. நிமித்திகர் கூற்றை என் அமைச்சர்கள் நம்பவில்லை. நான் அபிமன்யூவின் செய்திகளை கூர்ந்து கேட்பதை நிமித்திகர்கள் எவ்வண்ணமோ உய்த்தறிந்தே அதை சொன்னார்கள் என்றார் என் பேரமைச்சர். நிமித்திகர்கள் பெயர்களை ஒழுக்கென சொல்லிச் செல்கையில் அபிமன்யூவின் பெயர் ஒலித்ததும் என் விழி ஒளிகொண்டது. அவர்கள் அதை கூர்ந்துநோக்கிக்கொண்டிருந்தனர், அவர்களின் வழிமுறை அது என்றார் அமைச்சர்.

அது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் நான் அதை முழுதும் நம்பினேன். இல்லையேல் அவ்வண்ணமொரு ஈர்ப்பு எனக்கு அவன்மேல் தோன்ற வாய்ப்பில்லை. இக்களத்துக்கு வந்த பின்னரும் அவனை நேரில் பார்ப்பதை தவிர்த்தேன். முதல்நாள் போரில் அவன் இருக்கும் இடத்துக்கு மிக அப்பால் படையுடன் நின்றிருந்தேன். ஆனால் அவனை என் அகம் அறிந்துகொண்டிருந்தது. மிக விரைவிலேயே பாண்டவர்களின் குழூஉக்குறியில் அவன் பெயர் எப்படி முரசொலியாகும், கொடியசைவாகும் என புரிந்துகொண்டேன். அதன்பின் அவன் செய்வதனைத்தையும் கேட்டு அகவிழியால் நோக்கிக்கொண்டிருந்தேன். அவனுக்கு என்னை தெரியுமா என்று வியந்தேன். அவன் முன் சென்று நின்றால் அவன் என்னை நோக்கி திகைக்கக்கூடும். நாங்கள் விற்களை கீழே வீசிவிட்டு பாய்ந்து அணைத்துக்கொள்ளவும்கூடும்.

வங்கரே, நான் இன்றுவரை அபிமன்யூவை பார்க்கவில்லை. திட்டமிட்டே அதை தவிர்த்துக்கொண்டிருக்கிறேன். போர் முறுகும்தோறும் ஒன்று தோன்றலாயிற்று, இப்போரிலிருந்து அகன்றுசென்றால் ஊழியின் அந்த வளையத்திலிருந்து நான் முறித்துக்கொண்டு விலகக்கூடும். ஏனென்றால் இங்கே நான் உசாவிய ஒற்றர்கள் ஒன்று சொன்னார்கள், அபிமன்யூ இந்தக் களத்திலிருந்து உயிருடன் மீளப் போவதில்லை. அவன் மாவீரன் என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போரில் அவன் களம்படுவான். ஒவ்வொருநாளும் அவன்மேல் வஞ்சம் பெருகிக்கொண்டிருக்கிறது. கௌரவ மைந்தர்களில் பெரும்பகுதியினரை அவன்தான் கொன்றிருக்கிறான். அவன் தந்தைக்கு இருக்கும் பெருங்காப்பென்பது இளைய யாதவரின் உளச்சூழ்கை. அது அவனுக்கில்லை. அவனுக்கும் தற்காப்பு குறித்த எவ்வெண்ணமும் இல்லை. அவன் இங்கே கௌரவர்களால் வீழ்த்தப்படுவான் என்றால், அதற்கு முன்னரே நாம் படையிலிருந்து விலகிவிட்டோம் என்றால் ஊழிலிருந்து தப்பிவிடமுடியும்.

“நான் விழைவது அதை மட்டுமே. ஆயிரம் கைகள் நீட்டி பற்றவரும் ஊழிலிருந்து விலகி மீண்டும் கோசலத்திற்கு சென்றுவிடுவதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் பிருஹத்பலன். சமுத்ரசேனர் “இத்தகைய கதைகளுக்கு என்ன பொருள்? இப்பிறப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபிறப்பை பற்றி நமக்கு என்ன தெரியும்? தெரியாதவற்றை பற்றி பேசுவது ஷத்ரியனின் பணி அல்ல, அது சூதர்களின் உலகம்” என்றார். “ஆம், ஆனால் இப்போது அவன் கையால் நான் கொல்லப்பட விரும்பவில்லை” என்று பிருஹத்பலன் சொன்னான். “நான் அஞ்சுவது சாவை அல்ல. சாவுக்குப் பின்னரும் தொடரும் வஞ்சத்தின் தொடரை. இங்கே இச்சரடை அறுத்து விடுபட விழைகிறேன்.”

“எப்படி எவர் சொல்லெடுத்தாலும் இங்கு போரைப்பற்றி பேசுவதனைத்தும் இந்த அச்சத்திலிருந்துதான். நாம் எவரும் எஞ்சப்போவதில்லை” என்றார் சமுத்ரசேனர். “நேற்று நிகழ்ந்ததென்ன? மீண்டும் ஒரு கொலைவெறியாடல். இறந்த மன்னர்களின் பெயர்களை நேற்று படைத்தலைவன் பட்டியலிட்டான். ஒவ்வொரு பெயரும் என் நெஞ்சை அறுத்தது. அவர்களின் முகங்களும் சொற்களும் செரிக்காத உணவென உள்ளே புளித்துக் கொப்பளித்தன. இனி அந்த நாடுகளெல்லாம் என்ன ஆகும்?” சந்திரசேனர் “எந்த அறிவின்மையால் நாம் பட்டத்து இளவரசர்களை கொண்டுவந்து இந்தக் களத்தில் நிறுத்தினோம்?” என்றார். சமுத்ரசேனர் “பட்டத்து இளவரசர்களை களம் நிறுத்தாமல் இருந்தால் நம்மால் வென்ற நிலத்தில் எப்பங்கும் கோர இயலாது. ஒருவேளை நாம் இக்களத்தில் மறைந்தால் நமது பட்டத்து இளவரசர்கள் ஷத்ரியப் படைக்கூட்டிலிருந்து முற்றிலும் அகன்றுவிடுவார்கள்” என்றார்.

“ஆம், அதுதான் நமது கணிப்பு. ஆனால் இப்படி குலம் முழுமையும் அழியுமென்று அப்போது எண்ணியிருக்கவில்லை” என்றார் சந்திரசேனர். “அதைப்பற்றி இப்போது என்ன? நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்றார் சமுத்ரசேனர். “அனைத்து ஷத்ரியர்களையும் இன்று துரியோதனர் அவையில் எழுந்து பேசச் சொல்லலாம். அது ஒன்றே செய்வதற்குரியது” என்று பிருஹத்பலன் சொன்னான். “அமைதிக்கு அவர் ஒப்பமாட்டார்” என்று மீண்டும் சமுத்ரசேனர் சொன்னார். “ஒப்பமாட்டார். ஆனால் ஷத்ரியர்கள் மேலும் உயிர்கொடுக்க சித்தமாக மாட்டோம் என்று அவரிடம் சொல்லியாகவேண்டும். முழுப் போரையும் இனி அவரே தன் தோளில் நிகழ்த்தட்டும். நாம் படைவல்லமையை மட்டும் அளிப்போம். அரசர்கள் முற்றிலும் பின்னணியில்தான் நிற்கவேண்டும்.”

“நேற்றும் முன்னாளும் முற்றிலும் பின்னணியில்தான் இருந்தோம். பின்னணியில் இருப்பவர்களை கொல்வதற்கும் அவர்களிடம் படைக்கலங்கள் இருக்கின்றன” என்றார் சமுத்ரசேனர். பிருஹத்பலன் எண்ணியிராதபடி உளம் சோர்ந்து “என்ன பொருள் இவற்றுக்கெல்லாம் என்றே புரியவில்லை. முற்றிலும் வீண் பேச்சு” என்றான். “இன்று அவையில் என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம். நமது எதிர்ப்பையேனும் பதிவு செய்வோம். இப்போரை இவ்வாறே முன்னெடுத்தால் இது எங்கு சென்று சேரும் என்று துரியோதனர் எண்ணவில்லை என்றாலும் பீஷ்மரும் துரோணரும் கிருபரும் சல்யரும் எண்ணட்டும். அவர்கள் இப்போர் தொடங்குவதற்கு முன் துரியோதனருக்கு அளித்த சொல்லுறுதிகள் என்னாயிற்று? அரணென கௌரவ குலத்தை காத்து நிற்பேன் என்று சொன்ன பீஷ்மரின் கண் முன்னால் கௌரவர்கள் ஒவ்வொரு நாளும் இறந்து உதிர்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்று சமுத்ரசேனர் சொன்னார்.

“ஆம், அவர்களை நோக்கி நாம் பேசுவோம். ஒருவேளை ஆயிரத்தில் ஒரு பங்கு நல்லூழ் இருந்தால் துரியோதனர் நம் சொற்களை செவி கொள்ளக்கூடும்” என்று பிருஹத்பலன் சொன்னான். எழுந்தபோது தலைசுழன்றவன்போல நிலையழிந்து மீண்டும் அமர்ந்துகொண்டான். “என்ன?” என்றார் சமுத்ரசேனர். “தலைசுழல்கிறது. விழித்திருக்கையிலேயே கனவு வந்து சூழ்கிறது” என்றான் பிருஹத்பலன். “என்ன கனவு?” என்றார் சமுத்ரசேனர். “ஒரு தாமரை. அதற்குள் இரண்டு புழுக்கள்… என்ன என்று புரியவில்லை” என்றான் பிருஹத்பலன்.

தொடர்புடைய பதிவுகள்

சட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்

$
0
0

சட்டநாதன்-640x480 (1)

 

எண்பதுகளில் இலங்கைத் தமிழிலக்கியத்தில் சட்டென்று கவனம் பெற்ற இருவர் ரஞ்சகுமார், சட்டநாதன். இருவருமே தீவிரத்துடன் தொடர்ந்து எழுதமுடியவில்லை. இலக்கியவாசிப்பு விவாதத்துக்கான சூழல் அன்றிருக்கவில்லை. தனிவாழ்க்கையிலும் அவர்களுக்கு அலைக்கழிப்புக்கள்

 

சட்டநாதனின் கதைகள் வண்ணதாசனின் உலகுக்குரிய நுண்ணிய உறவுச்சிக்கல்களைப் பேசுபவை. உணர்வுசார்ந்தவை, ஆனால் மிகை அற்றவை

 

சட்டநாதனைப்பற்றி ஜிஃப்ரி ஹசன் எழுதிய நல்ல கட்டுரை. பிரான்ஸிலிருந்து வெளிவரும் நடு என்னும் இணைய இதழில்

சட்டநாதன் சிறுகதைகள்-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன்

 

அவரது காலம் தேசிய இனப்பிரச்சினை எழுச்சியடைந்த காலம். இலக்கியம் அதன் பிரதிநிதியாக மாறிய காலம். இதனால் சட்டநாதன் அதன் பிரதிநிதியாக மாறினார். ஆனால் முழுமையாக அவர் அந்தத் தளத்திலேயே இயங்கிக்கொண்டு போகவுமில்லை. மானுட உறவுகள், ஆண்-பெண் உறவுகளில் காணப்படும் அசமநிலை மற்றும் அதற்கெதிரான குரல், போரினுள் அகப்பட்டு மடியும் மானுடத் துயர் என பல நிலைகளில் வெளிப்படும் கதைகளை அவர் எழுதினார்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தல்ஸ்தோய் பற்றி…

$
0
0

puthu-tolstoy

ஜெமோ,

                    கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களை நேரில் சந்தித்தது ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. அதிலும் டால்ஸ்டாய் பற்றி நீங்கள் ஆற்றிய உரை (பேருரை)  பேரிலக்கியங்களால் சமூகம் எப்படி முன்நகர்கிறது என்பதை உணர்த்துவதாக இருந்தது.  இவ்வுரை பற்றிய என்னுடைய அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜெயசூர்யா -மம்மூட்டி- மோகன்லால்

$
0
0

 

மலையாள மிமிக்ரி நிகழ்ச்சிகள், நகைச்சுவை துணுக்குநிகழ்ச்சிகளை நான் பெரும்பாலான இரவுகளில் சற்றுநேரம் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் மிகத்தரமான நகைச்சுவை அவற்றிலிருக்கும். கேரள அரசியல், சினிமா, சமூகச்சூழல் கொஞ்சம் தெரிந்தால் வெடித்துச் சிரிக்கலாம். முன்னர் கோட்டயம் நஸீர். இப்போது பிஷாரடி நட்சத்திரங்கள்.

 

கேரள நடிகர்களில் பலர் மிமிக்ரி கலைஞர்களாக இருந்தவர்கள். ஜெயராம், கலாபவன் மணி, திலீப், ஜயசூர்யா, சுராஜ் வெஞ்ஞாறமூடு போன்றவர்கள் அதில் நட்சத்திரங்களாக இருந்து திரைக்குச் சென்றவர்கள். இப்போதும் அவர்கள் மேடைகளில் மிமிக்ரி நிகழ்ச்சிகளைச் செய்கிறார்கள். அங்கே மேடைநிகழ்ச்சிகள் நடிகர்களின் முக்கியமான வருவாய்களில் ஒன்று

 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெயசூர்யா மம்மூட்டி மோகன்லால் திலீப் சுரேஷ்கோபி ஆகியோரை நக்கலடிக்கிறார். அவர்கள் சினிமாப் படப்பிடிப்பில் நடந்துகொள்ளும் முறையை. மம்மூட்டியின் வெற்றுத்தோரணை, மோகன்லாலின் பெண் பித்து, சுரேஷ் கோபியின் அசட்டுத்தனம், திலீபின் வியாபார புத்தி என நுட்பமான நகைச்சுவை. இதை இன்றைக்கு கேரளத்துக்கு வெளியே செய்யவே முடியாது. முதலில் ரசிகர்கள் அடிக்க வருவார்கள். நடிகர்களும் விரும்ப மாட்டார்கள்

 

மம்மூட்டி சொத்துவாங்குவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். மோகன்லால் நடிக்கக்கூப்பிடும்போது எவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார், திலீப் எவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் முக்கியமான குறிப்புணர்த்தல்கள். மோகன்லாலின் கண்கள் பெண்களுக்காக அலைமோதிக்கொண்டே இருக்கின்றன. பெண்ணைப்பார்க்கையில் கண்கள் விரிய மலர்கிறார். மம்மூட்டிக்கு நிரந்தரமான முகச்சுளிப்பு.  ‘ஏதா ஈ ஏப்ராஸி?” என வாயை தூக்கிக்கொண்டு கேட்கிறார். திலீப்பின் மனம் சினிமாவிலேயே இல்லை

 

ஜெயசூர்யா நல்ல நடிகன்

 

*

 

கொச்சின் கலாபவன் கேரள மிமிக்ரி கலையில் மிகப்பெரிய அலையை உருவாக்கிய ஓர் அமைப்பு. அதிலிருந்துதான் முக்கியமான கலைஞர்கள் பலர் வந்திருக்கிறார்கள். லால் [ஒழிமுறி] கூட அதிலிருந்து வந்தவர்கள். அதிலிருந்து வந்த  முக்கியமான கலைஞர்கள் சேர்ந்து நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியும் சுவாரசியமானது

பாகுபலி பற்றிய கேள்விக்கு உம்மன்சாண்டி சொல்லும் பதிலில் உள்ள அரசியல்நஞ்சு கேரளத்துக்கே உரிய ஒர் ஊடகத்துணிச்சல்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வேலைபூதம்

$
0
0

images (8)

 

ஜெ,

 

 

நலமா? நீண்ட நாட்களாயிற்று உங்களுக்கு கடிதம் எழுதி.   சில சந்தேகங்களை உங்களிடம் கேட்கவேண்டும்போல் தோன்றியது.  வாழ்வதற்கு போதுமான அளவுக்கு ஊதியம் கிடைக்கும் மனதுக்கு பிடித்த வேலை, வாழ்க்கையில் நல்ல சம்பாத்தியம் தரும், ஆடம்பரமாக வாழ உதவும் அலுப்பூட்டும் வேலை, இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பார்வையில் சரியானது?

 

மனதுக்குப் பிடிக்காத 10 To 6 வேலைக்கு செல்லும் ஒருவன், தினந்தோறும் காலையில் எழுதல், அலுவலகம் செல்தல், திரும்ப வருதல், தூங்குதல், மீண்டும் காலையில் எழுதல் என்கிற ஒழுங்கை பல ஆண்டுகளுக்கு செய்யவேண்டியிருக்கிறது. இதனை செய்யும் ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க பொருளாதாரமும் கணிசமாக உயரும். இந்த ஒழுங்கைப் பின்பற்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிசெய்துகொண்டிருக்கும் மனிதர்கள்கூட இருக்கிறார்கள். ஆனால் 30 நாட்கள்கூட என்னால் இந்த ஒழுங்கைப் பின்பற்ற முடியவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இப்படியே இயங்கவேண்டும் என்பது பிரம்மிப்பாக இருக்கிறது (எரிச்சலாகவும் இருக்கிறது).

 

இந்த ஒழுங்கை வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கான மனநிலையை எப்படிப் பெறுவது?  10 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார சூழல் மிகச்சிறப்பாக இருக்கும், கைநிறைய சம்பளம் கிடைக்கும் போன்ற காரணங்களுக்காக  கொஞ்சமும் விருப்பம் இல்லாத வேலைக்கு   செல்லும் ஒருவன் கொஞ்சம்கூட எரிச்சல் அடையாமல் காலையில் அலுவலகம் கிளம்பமுடியுமா? முடியும் என்றால் அந்த மனநிலையை எப்படி உருவாக்கியெடுப்பது?  இவைதான் என்முன்னுள்ள சந்தேகங்கள்.

 

கடைசியாக இன்னொரு சந்தேகமும், வெகுஜன பத்திரிகையில் வேலை செய்தால் அது நம்முடைய இலக்கிய மொழியை பாதிக்கும் என்பதில் உண்மையுண்டா?

 

 

அன்புடன்,

அகில் குமார்.

 

அன்புள்ள அகில்குமார்

வேலை என்பது எதுவானாலும் கற்பனை கொண்ட ஒருவனுக்கு கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும். ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று

 

விடுமுறை தரும் பூதம்

 

ஞாயிறு தோறும் தலைமறை வாகும்

வேலை என்னும் ஒரு பூதம்

திங்கள் விடிந்தால் காதைத் திருகி

இழுத்துக் கொண்டு போகிறது

ஒருநாள் நீங்கள் போகலை என்றால்

ஆளை அனுப்பிக் கொல்கிறது

மறுநாள் போனால் தீக்கனலாகக்

கண்ணை உருட்டிப் பார்க்கிறது

வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்

வீட்டில் ஒருவர் நலமில்லை

என்னும் பற்பல காரணம் சொன்னால்

ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

வாரம் முழுதும் பூதத்துடனே

பழகிப் போன சிலபேர்கள்

தாமும் குட்டிப் பூதங்களாகிப்

பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

தட்டுப் பொறியின் மந்திரகீதம்

கேட்டுக் கேட்டு வெறியேறி

மனிதர் பேச்சை ஒருபொருட் டாக

மதியாதிந்தப் பெரும்பூதம்

உறைந்து போன இரத்தம் போன்ற

அரக்கை ஒட்டி உறை அனுப்பும்

‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ன்னும்

இந்தப் பேச்சை அது கேட்டால்

 

உலகம் முழுக்க இந்தப் பூதத்துக்கு கொஞ்சம் குருதியை அளித்துவிட்டுத்தான் கவிஞர்களும் கலைஞர்களும் வாழ்கிறார்கள். கலையை கொஞ்சம் வெட்டிக்கொடுப்பதை விட குருதியைக் கொடுப்பது மேல் என்றுதான் நான் சொல்வேன். இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருநாளுமென வந்து மோதும் தேவைகளில் நாம் வேறொரு தெரிவை கொள்ளவே வழியில்லை.

 

சென்ற நிலப்பிரபுத்துவ யுகத்தில் உடுக்க ஒரு துணி உண்ண நாழி உணவு போதும் என இருந்துவிட முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைகளைப் பெருக்கி அதன்பொருட்டு ஒவ்வொருமனிதனும் கடும் உழைப்பைச் செலுத்தியாகவேண்டும் என்னும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது இன்றைய பொருளியல் –சமூகக் கட்டுமானம். நான் சிங்கப்பூர், அமெரிக்கா சென்றபோது அங்குள்ள வாழ்க்கைக்கு இங்குள்ளது மேல் என்ற உணர்வை அடைந்தேன். அங்கே சமூகத்தின் அளவுகோல்கள் பெரியவை. ஆகவே ஒவ்வொருவருக்கும் தேவைகள் மேலும் கூடுதல். ஆகவே மேலும் உழைப்பு. ஆனால் நமக்கும் அவர்களுக்கும் காலம் அளித்துள்ள பொழுது ஒன்றுதான்.

 

இன்றையசூழலில் குறைவான நேரத்தில் போதுமான அளவுக்கு பொருளீட்ட உதவும் ஒரு துறையே உகந்தது. போதுமான என்பதை நாம் முடிவுசெய்யவேண்டும். முழுக்கமுழுக்க சுற்றாரும் சமூகமும் அதை முடிவுசெய்ய விட்டுவிடக் கூடாது. அது நம்மை பொருளியல்நுகங்களில் கட்டிவிடும். விழைவதைச் செய்யமுடியாதவர்களாக, பொதிசுமந்து தளரும் வாழ்க்கை கொண்டவர்களாக ஆகிவிடுவோம்

 

உண்மையில் நாம் உழைத்து ‘ஈட்டிக்கொள்ளும்’ இந்த அரிய பொழுதின் மதிப்பை நாம் உணர்வதில்லை. ஆறுநாள் உழைத்து ஏழாம்நாள் ஈட்டும் விடுமுறைநாள் என்பது ஒரு செல்வம். ஆனால் அதை இளைப்பாறுகிறோம் என்றபேரில் குப்பையில் வீசிவிட்டு மறுநாள் சோர்வுடன் அலுவலுக்கு மீள்கிறோம். தன் தனிப்பட்ட பொழுதுகள் வீணாவதனால், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாத இயலாமையின் குற்றவுணர்ச்சியால் வேலைமேல் சலிபப்டைகிறோம் என்பதுதான் நடைமுறை. வேலையை நம் தோல்விகளுக்கான காரணமாகச் சொல்லி நாம் தப்பித்துக்கொள்கிறோம்

 

நாம் ஈட்டிக்கொள்ளும் நாளை மிகமிக அரிதென நாம் நினைக்கும் செயலைச் செய்ய, நம்முடைய படைப்பூக்கம் முற்றாக வெளிப்படுவனற்றை இயற்ற செலவழிப்போம் என்றால் நாம் நிறைவடைவோம். தனக்கென்று ஆன பொழுதுகளை தான் நிறைவுகொள்ளும்படிச் செலவிடுபவர்களுக்கு வேலைப்பொழுது என்பது வீண் என்றோ சோர்வூட்டுவது என்றோ தோன்றாது. அது அந்தப் பொழுதை ஈட்டிக்கொள்வதற்கான உழைப்பு என்றவகையில் இனிதாகவேகூடத் தோன்றும்

 

பத்திரிகையில் வேலைசெய்தால் இலக்கியமொழி பாதிக்கப்படுமா என்றால் ஓரளவு ஆம் என்றே சொல்வேன். ஆனால் அதிலிருந்து விடுபடவும் இயலும். பத்திரிகை எழுத்திலிருந்து அந்தரங்கமாக தனிமொழி ஒன்றை பிரித்து வைத்துக்கொள்வது நம் கவனம், திறன் சார்ந்தது

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61

$
0
0

bowதுரியோதனனின் சொல்சூழ் அவையில் அரசர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஒற்றைச் சொற்களும் ஆடையசைவின் ஒலிகளும் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. பிருஹத்பலன் கைகூப்பியபடி உள்ளே நுழைந்து அவையை ஒருமுறை விழிசுழற்றி நோக்கியபின் கூர்ஜர அரசர் சக்ரதனுஸை நோக்கி தலை அசைத்தான். அவர் மெல்லிய புன்னகை பூத்து தலையசைத்தார். அவன் தன் பீடத்தில் அமர்ந்து அருகிலிருந்த அனுவிந்தனிடம் பேசுவதற்காக திரும்பி, உடனே திகைத்து அதை உடனே மறைத்து இன்சொல் எடுத்தான். அருகே இருந்த காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி “நன்று, கோசலரே” என்றார்.

அவனிலிருந்த திகைப்பை புரிந்துகொண்டு க்ஷேமதூர்த்தி “அவந்தியின் படைகளை நான்காக பிரித்து புளிந்தர்களுடன் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரூஷப் படைகளும் புளிந்தர்களுடன் நின்றுள்ளன” என்றார். “நன்று” என்று பிருஹத்பலன் சொன்னான். க்ஷேமதூர்த்தி “படைகள் குறைந்துகொண்டே இருக்கின்றன. ஒருவரை ஒருவர் முன்பறியாதவர்கள் இணைந்து நிற்கவேண்டியிருக்கிறது. என்ன துயரென்றால் முன்னரே போரிட்டுக்கொண்ட படையினர்கூட சேர்ந்து நிற்கவேண்டியிருக்கிறது. புளிந்தர்களுடன் இணைந்துள்ளனர் அஸ்மாகநாட்டுப் படையினர். அவர்களுக்கும் அவந்தியினருக்கும் நூறாண்டுகளாக போர் நிகழ்ந்துள்ளது” என்றார்.

கொம்பொலி எழுந்ததும் கைகூப்பியபடி துரியோதனன் அவைக்குள் நுழைந்து பீடத்தில் அமர்ந்தான். நிமித்திகன் அவை கூடும் நோக்கத்தை உரைத்து முடித்ததும் பூரிசிரவஸ் எழுந்து முகமன்கள் ஏதுமில்லாமல் “வெற்றி திகழ்க!” என வாழ்த்தி தொடங்கினான். “அவையினரே, இந்த எட்டு நாள் போரில் நாம் பாண்டவப் படைகளின் பெரும்பகுதியை அழித்துவிட்டிருக்கிறோம். நமது திறல்மிக்க படைத்தலைவர்களாகிய பீஷ்மரும் துரோணரும் கிருபரும் ஜயத்ரதரும் சல்யரும் அஸ்வத்தாமரும் தங்கள் முழு செயலூக்கத்துடன் களம் நின்றிருக்கிறார்கள். ஆம், வெற்றி எளிதல்ல என்று தெரிந்தது. ஆனால் அணுக அரிதல்ல என்றும் தெளிவாக இருக்கிறது. நாம் வெல்வோம் என்னும் உறுதி அமைந்துள்ளது” என்றான்.

“இன்னும் ஓர் அடிதான். உடைந்து சரிவதற்கு முன்வரை கற்கோட்டைகள் உடைவதற்கு வாய்ப்பே அற்றவை என்றே தோன்றும். அதன் அடித்தளத்தில் விரிசல் விழுந்திருப்பதை அதனுடன் மோதும்போது மட்டுமே நாம் புரிந்துகொள்ள இயலும். அவையீரே, நான் உணர்கிறேன் பாண்டவப் படையின் அடித்தளம் சரிந்துவிட்டது என்று. ஒருகணம், இன்னும் ஒருகணம், அது முழுமையாகவே சரிந்து சிதறும். அந்தக் கணம் வரை நாம் நின்று பொருதியாக வேண்டும். அதற்கு முந்தைய கணம் வரை நம்பிக்கை இழக்கவும் பின்னடையவும் வாய்ப்பிருக்கிறது. நாம் பொருத வேண்டியது நம்முள் நம்பிக்கையின்மையாகவும் சோர்வாகவும் வெளிப்படும் அந்த இருள்தெய்வங்களுடன் மட்டுமே. தவம் கனியும்தோறும் எதிர்விசைகள் உச்சம் கொள்ளும். வழிபடு தெய்வம் எழுவதற்கு முன்னர் இருள்தெய்வங்கள் தவம் கலைக்க திரண்டு எழும். நாம் வெல்வோம். வென்றாகவேண்டும். நாம் உளம்தளராது முன்சென்றால் முன்னோர் நமக்கென ஒருக்கிய கனிகளை கொய்வோம். ஆம், அவ்வாறே ஆகுக!”

“ஆம்! ஆம்! ஆம்!” என்று அவை ஓசையிட்டது. “இன்றைய போருக்கென படைசூழ்கையை வகுத்துள்ளேன். அவற்றை ஓலைகளாக்கி அரசருக்கும் படைத்தலைவர்களுக்கும் அளித்துள்ளேன். நீங்கள் அனைவரும் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “இந்தப் படைசூழ்கை நேற்றே பிதாமகர் பீஷ்மரால் எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் அதை பகுத்து வரைந்தெழுப்பினேன். சர்வதோபத்திரம் என்று நூல்களில் சொல்லப்படுவது இது. பன்னிரு ராசிக்களத்தின் வடிவில் அமைந்தது. இதன் மையம் என சகுனி அமைவார். பன்னிரு களங்களில் பன்னிரு போர்த்தலைவர்கள் தலைமைகொள்வார்கள். துரியோதனர் தன் இளையோருடன் ஒரு களத்திலமைவார். பீஷ்ம பிதாமகரும் ஜயத்ரதரும் சல்யரும் அஸ்வத்தாமரும் நானும் கிருபரும் துரோணரும் பால்ஹிகரும் பகதத்தரும் மாளவரும் கூர்ஜரரும் பிற களங்களில் அமைவோம். இது விடாது சுழன்றுகொண்டிருக்கும் சகடம். தேவைக்கேற்ப களத்தில் சுழன்று சுழன்று சென்று தாக்கும் வல்லமைகொண்டது.”

சல்யர் “பிதாமகர் பீஷ்மருக்கு நேர்பின்னால் துரோணர் அமையும்படி வகுக்கப்பட்டிருக்கவேண்டும்” என்றார். பூரிசிரவஸ் “ஆம், அப்படியே அமைந்துள்ளது” என்றான். “ஒருமுறை இச்சகடம் தன்னை சுற்றிக்கொள்ள என்ன பொழுதாகும்?” என்று ஜயத்ரதன் கேட்டான். “முழுப் படையும் சுற்றிவர அரைநாழிகைப் பொழுதாகும்… விளிம்பில் புரவிகளும் பின்னர் தேர்களும் அப்பால் காலாள்படையும் நின்றிருப்பதனால் சுற்றுதல் எளிது” என்றான் பூரிசிரவஸ். “ஓலைகள் அனைவருக்கும் செல்லட்டும்” என்றார் துரோணர். அஸ்வத்தாமன் “அவர்களின் படைசூழ்கை என்னவென்று தெரிந்ததா?” என்றான். “நம் படைசூழ்கையை ஒட்டியே அவர்களுடையது அமையும்… ஒற்றர்களை அனுப்பியிருக்கிறேன்” என்று துச்சாதனன் சொன்னான்.

படைசூழ்கைகள் பற்றிய சொல்லாடல்கள் சென்றுகொண்டிருப்பதை பிருஹத்பலன் நோக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் எவருக்கும் பெரிய ஆர்வமிருப்பதாக தெரியவில்லை. கிருபர் மேலும் சில ஐயங்களை கேட்டார். பூரிசிரவஸ் அவற்றை விளக்கினான். எதிர்பாராத தருணத்தில் சல்யர் எழுந்து “நான் ஒன்றை கேட்க விழைகிறேன். நாம் வகுக்கும் படைசூழ்கைகள் எவையேனும் அவற்றின் இயல்பான வெற்றியை அடைந்துள்ளனவா? ஒவ்வொரு படைசூழ்கையும் இணையான படைசூழ்கையால் எதிர்க்கப்படுமெனில் இவ்வாறு எண்ணி எண்ணி அமைப்பதற்கு என்ன பொருள்?” என்றார். “இதென்ன வினா?” என்று ஜயத்ரதன் திகைத்தான். “இது எளிய மலைமகனின் ஐயம் என்றே கொள்க… சொல்லுங்கள்” என்றார் சல்யர்.

பூரிசிரவஸ் “மாத்ரரே, இணையான படைசூழ்கையால் எதிர்க்கப்படுவதனால்தான் நாம் எளிதில் வெற்றியடையாமல் இருக்கிறோம். நாம் படைசூழ்கை அமைக்காது சென்றிருந்தால் இத்தருணத்தில் நாம் அனைவரும் விண்ணுலகிலிருந்திருப்போம்” என்றான். துச்சாதனன் “ஆம், கவசங்கள் அணிந்தே செல்கிறோம். ஆயினும் அவை உடைக்கப்படுகின்றன. ஆகவே கவசமணியாமல் களம்நிற்போமா?” என்றான். “படைசூழ்கை அமைக்காது செல்வதைவிட படைசூழ்கையை அமைத்துச் செல்வது மேல்” என்றான். அவன் இளிவரலாக சொல்கிறானா என்பது முகத்திலிருந்து தெரியவில்லை. பூரிசிரவஸ் “நாம் படைசூழ்கைகளை அமைப்பது வெல்லும் பொருட்டே. களத்தில் அச்சூழ்கைகள் தோற்கடிக்கப்படலாம். ஆனால் என்றேனும் ஒருமுறை நமது படைசூழ்கை அவர்களின் படைசூழ்கையைவிட ஆற்றல் மிகுந்ததாக அமையும். அத்தருணத்தில் நாம் வெல்வோம். அந்த வெற்றி நோக்கியே ஒவ்வொரு படைசூழ்கையும் அமைக்கப்படுகின்றது” என்றான்.

பிருஹத்பலன் கனைத்துக்கொண்டு எழுந்ததுமே சக்ரதனுஸ் தானும் எழுந்தார். பிருஹத்பலன் “இந்தப் போர் நீங்கள் எண்ணுவதுபோல் வெற்றி நோக்கித்தான் செல்கிறது என்பதற்கு என்ன சான்று உள்ளது? கௌரவர்கள் ஒவ்வொரு நாளும் இறந்துகொண்டிருக்கிறார்கள். கௌரவ மைந்தர் பாதிக்குமேல் கொல்லப்பட்டுவிட்டனர். இத்தருணம்வரை மறுதரப்பில் கொல்லப்பட்ட பெருந்திறலுடையவர் எவர்? சங்கனையும் ஸ்வேதனையும் சொல்வீர்கள் என்று நான் எண்ணவில்லை” என்றபோது அவையில் சிரிப்பொலி எழுந்தது. “நான் இளிவரலாடவில்லை. சொல்க, பாண்டவர்களில் ஒருவருக்கேனும் சிறு புண்ணாவது இதுவரை நிகழ்ந்துளதா? படைத்தலைமைகொள்ளும் திருஷ்டத்யும்னனோ சாத்யகியோ துருபதரோ கொல்லப்பட்டிருக்கிறார்களா?”

அவையில் ஓசைகள் எழுந்தன. “ஒவ்வொருநாளும் இங்கே வெற்றியென சொல்லெடுக்கப்படுகிறது. மெய்யாகவே கேட்கிறேன், எவருக்காக நாம் இச்சொற்களை இங்கு கூறுகிறோம்?” என்றான் பிருஹத்பலன். ஜயத்ரதன் “அவர்களை கொல்வோம். ஐயம் தேவையில்லை” என்றான். பிருஹத்பலன் “நாம் இந்த வஞ்சினங்களை உரைக்கத்தொடங்கி எட்டு நாட்களாகின்றன. கணம் கணமென நிகழும் இப்போரில் எட்டு நாட்களென்பது நெடும்பொழுது. இருதரப்பிலும் ஷத்ரியர்கள் கொன்றும் கொல்லப்பட்டும் அழிந்துகொண்டிருக்கிறோம். இந்தப் பொருளின்மையை இதற்குமேல் நாம் நீட்டிக்க வேண்டுமா?” என்றான்.

சக்ரதனுஸ் “ஆம், நான் கேட்க விழைவதும் இதுவே. இங்கே பொருளிலாத சாவுதான் நிகழ்கிறது. போர் என்பது எவர் மேல் என்பதை முடிவுசெய்யும் களநிகழ்வுதான். அதுவே நூல்கள் சொல்வது. மதம்கொண்ட களிறுகள்கூட மத்தகம்முட்டிக்கொண்டு வலுவறிந்ததும் போரை நிறுத்திக்கொள்கின்றன. ஆற்றலுடையதை அல்லது பணிகிறது. இருசாராரும் நிகர் என்றால் அதை எண்ணி போரை நிறுத்திக்கொள்வோம். இருசாராரும் முற்றழிவதுவரை போரிடுவோம் எனில் அது போரே அல்ல. எந்தப் போர்நூலும் அதை சொல்வதில்லை. காட்டில்கூட எந்த விலங்கும் அவ்வாறு போரிட்டுக்கொள்வதில்லை” என்றார்.

“நாம் என்ன செய்யவேண்டும் என தாங்கள் எண்ணுகிறீர்கள், கோசலரே?” என்று கிருபர் கேட்டார். “என்ன செய்யவேண்டுமென மூத்தோர் முடிவெடுங்கள். இங்கே ஷத்ரிய குலம் அழிந்துகொண்டிருக்கிறது. வேதங்களுக்கு வேலியாக முனிவர்களால் அமைக்கப்பட்டது இக்குலம். இப்போது களத்தில் இது முற்றழியுமெனில் நாளை வேதப்பயிர் இங்கு எவ்வாறு செழிக்கும்? இங்கு இந்த நெறிகள் அனைத்தும் எத்தகைய பெரும் குருதிச்சேற்றிலிருந்து முளைத்தெழுந்தவை என்று உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. ஆயிரம் ஆண்டுகாலம் நெறியின்மையே திகழ்ந்த நிலத்தில் ரிஷிகள் இயற்றிய பெருந்தவத்தால் விளைந்தது இது. இங்கு வேதம் மழையென இறங்கியதால்தான் ஞானம் பொலிகிறது, செல்வம் நிறைகிறது” என்றான் பிருஹத்பலன்.

“வேதத்தின் பொருட்டே நாம் களம் நிற்கிறோம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், ஆனால் இப்போர் செல்லும் திசை நோக்கினால் வேதத்தின் காவலர்கள் முற்றழிவார்கள் என்றே தோன்றுகிறது. காவலை அழித்து வேதத்தை நிலைநிறுத்தவியலுமா? சூழ நிறைந்துள்ள வேதஎதிரிகள் முன் வேலியின்றி வேதத்தை திறந்திட்டு நீங்கள் அடையப்போவதென்ன?” என்று பிருஹத்பலன் கேட்டான். “சரி, நாம் என்ன செய்யவேண்டும்?” என்று துர்மதன் கேட்டான். கையை தூக்கி முன்னகர்ந்து “போரை நிறுத்தவேண்டுமென்கிறீர்களா? அது நிகழாது. எங்கள் உடன்குருதியினரின் பழிக்காக வேறு எவர் அகன்றாலும் நாங்கள் களம் நிற்போம்” என்று கூச்சலிட்டான்.

“உயிர்கொடுப்பது உங்கள் விழைவு” என்றான் பிருஹத்பலன். “நாங்கள் எந்த வஞ்சத்திற்காகவும் இங்கு வரவில்லை. வேதம் காக்கவே வந்தோம். வேதம் செழிக்கவேண்டுமெனில் ஷத்ரியக்குருதி எஞ்சியிருக்கவேண்டும். ஆகவே இப்போரிலிருந்து விலக எண்ணுகிறோம்.” எழுந்து கூர்ந்து நோக்கி தணிந்த குரலில் “போரிலிருந்து விலக எவருக்கும் ஒப்புதல் இல்லை” என்று துரோணர் சொன்னார். “விலகினால் என்ன செய்வீர்கள்? எங்களை கட்டுப்படுத்தும் விசை உங்களிடம் என்ன உள்ளது?” என்று பிருஹத்பலன் கூவினான். “வில் உள்ளது!” என்று துரோணர் சொன்னார். “ஐயமே வேண்டியதில்லை, இக்களத்திலிருந்து படையுடன் விலகிச்செல்லும் ஒவ்வொரு ஷத்ரியரும் எங்கள் எதிரிகளே. இப்போர் முடிந்து அவர்களை தேடி வருவோம் என்று எண்ண வேண்டியதில்லை, இப்போர்க்களத்திலேயே அவர்களை கொன்றழிக்கவும் துணிவோம்” என்றார்.

துரோணரின் முகத்தை பார்த்தபின் சக்ரதனுஸ் அமர்ந்துகொண்டார். பிருஹத்பலன் மெல்ல கைகள் நடுங்க சொல்லிழந்து தவித்து “அதற்கு உங்களுக்கு உரிமையில்லை” என்றான். “வெல்வதற்கான உரிமை ஒவ்வொரு ஷத்ரியனுக்கும் உள்ளது. வெல்வதன் பொருட்டே இங்கு களம் எழுந்துள்ளோம். போர்க்களத்தில் கைவிட்டு விலகுதல் கோழையின் செயல் மட்டுமல்ல அது பின்னின்று குத்தும் வஞ்சகமும்கூட. வஞ்சகரை கொல்வதற்கு அரசனுக்கு உரிமையுள்ளது” என்றார் துரோணர். “வென்றபின் சிறுபழிகளை தெய்வங்களுக்கு பலிகொடுத்து அழித்துக்கொள்வோம். அறமே வெல்லும், வெல்வதே அறம். வெல்லாதொழிந்தால் எந்த அறமும் பொருளற்றதே.” பிருஹத்பலன் மேலும் சொல்ல நாவெடுக்க கூரிய குரலில் “கோசலனே, வாள்பழி கொள்ளவேண்டியதில்லை. அமர்க!” என்றார் துரோணர்.

சல்யர் சீற்றத்துடன் “அவர்களுக்கு அதை சொல்ல உரிமையுண்டு, துரோணரே. நாம் அவர்களுக்கு எந்தச் சொல்லையும் அளித்து இந்தப் போருக்கு அழைத்து வரவில்லை. அவர்களே வஞ்சினம் உரைத்து வந்தார்கள். ஆகவே அவர்களுக்கு விலகிச்செல்ல உரிமை உள்ளது” என்றார். துரோணர் “அந்த நெறிகளை அவர்களின் சிதைகளுக்கு முன்னால் நின்று பேசி முடிவெடுப்போம். இங்கு வெற்றியொன்றே இலக்கு. ஐயம் தேவையில்லை, இப்படையிலிருந்து விலக முயலும் எவரும் அக்கணமே கௌரவப் படைகளால் கொன்றழிக்கப்படுவார்கள்” என்று துரோணர் சொன்னார். “அது மாத்ரர்களுக்கும் பொருந்தும்.”

சல்யர் “என்ன சொன்னாய், அறிவிலி!” என கூவியபடி எழுந்தார். “அமர்க, ஒரு சொல் இனி உன் நாவிலெழுந்தால் உன் தலை மண்ணில் கிடக்கும்! எனக்கு அதற்கு வில்லோ அம்போ தேவையில்லை” என்றார் துரோணர். கைகள் பதற தலைநடுங்க நின்று வாய்திறந்துமூடிய சல்யர் விழுவதுபோல் பீடத்தில் அமர்ந்தார். துரோணர் “இப்போர் தொடரட்டும். நாம் வெல்வோம். பிற எண்ணங்கள் அனைத்தும் அரசவஞ்சகம்” என்றார். ஜயத்ரதன் எழுந்து “அதை சிந்து நாட்டின் படைகள் வழிமொழிகின்றன” என்றான். ஷத்ரியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அமைதியாக இருக்க பிருஹத்பலன் “நான் பின்னடைவதைப்பற்றி பேசவில்லை. பேரழிவைப்பற்றி பேசுகிறேன். அதை குறைப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றபின் கைகளை விரித்து தலைகுலுக்கி பீடத்தில் அமர்ந்தான்.

துரியோதனன் அங்கு நிகழ்ந்த சொற்களை கேட்காதவன்போல் அமர்ந்திருந்தான். அவையில் நிகழ்ந்த அமைதியை அவனுடைய மெல்லிய அசைவு கலைத்து அனைத்து விழிகளையும் ஈர்த்தது. “அவையினரே, இந்தப் போர் முற்றிலும் நிகர்நிலையில் நின்றுள்ளது என்பதே உண்மை” என தாழ்ந்த குரலில் அவன் சொன்னான். “ஓர் அணுவிடைகூட அவர்களோ நாமோ முன்னகரவில்லை. நாம் முன்னகர்ந்து வெல்ல வழி ஒன்றே. நம் தரப்பில் பெருவீரன் ஒருவனை உள்ளே கொண்டுவருவது. கர்ணன் போருக்கு இறங்கட்டும். இப்பொழுதேனும் பிதாமகர் பீஷ்மர் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான்.

பீஷ்மர் அதை கேட்கவில்லை. தாடியை நீவியபடி அரைவிழி சரித்து எங்கோ நோக்கி அமர்ந்திருந்தார். துரோணரின் முகம் சுருங்கியது. அவர் “கர்ணன் களமிறங்குவதனால் பெரிய மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை” என்றார். “அவன் வெற்றியை ஈட்டி நம் கையில் அளிப்பான் என்று நான் சொல்ல வரவில்லை. ஆசிரியரையும் பிதாமகரையும்விட பெருவீரன் அவன் என்றும் நான் கூறவில்லை. ஆனால் அவனுக்கு இப்போரில் பெருந்திறலுடன் களம் நிற்கும் வீரம் உண்டென்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். முற்றிலும் நிகர்நிலையில் துலாவின் இரு தட்டுகளும் நின்றிருப்பதனால் அவன் ஒருவன் இப்பகுதியில் வரும்போது போரின் கணக்குகள் அனைத்தும் மாறத்தொடங்கும்” என்றான்.

துரோணர் ஏற்காமல் தலையசைத்தார். “அவன் பொருட்டு பிதாமகர் பீஷ்மர் கொண்டுள்ள ஒவ்வாமை நீங்குமெனில் நாம் வெற்றிநோக்கி செல்ல இயலும்” என்றான் துரியோதனன். “பிதாமகரிடம் நான் கனிந்து மன்றாடுகிறேன். பிதாமகர் பீஷ்மர் இக்கொடையை எனக்கு அளிக்க வேண்டும். என் விழைவுக்காகவோ வஞ்சத்துக்காகவோ அல்ல, இறந்த என் உடன்பிறந்தாரின் குருதிப்பழிக்காக” என்று சொல்லி கைகூப்பினான். பீஷ்மரின் அருகே குனிந்த கிருபர் என்ன நிகழ்ந்ததென்று சொல்ல அவர் உடல் நடுங்க எழுந்து “இல்லை! இல்லை!” என்று முதிய குரலில் கூவினார். “நான் இருக்கும் வரையில் இப்படையில் ஒருபோதும் சூதன் படைத்தலைமை கொள்ளமட்டான்” என்றார்.

“படைத்தலைமை கொள்ள வேண்டியதில்லை. இப்போரில் அவன் இறங்கட்டுமே என்றே சொன்னேன்” என்றான் துரியோதனன். “இங்கு அரக்கர்களும் நிஷாதர்களும் கிராதர்களும்கூட படை நின்றிருக்கிறார்கள் அல்லவா?” பீஷ்மர் “ஆம், அவர்களில் ஒருவனாக அவன் களம் நிற்கட்டும். ஆனால் அங்க நாட்டுப் படையுடன் அவன் வரக்கூடாது. அவன் கொடி கொண்டோ முடி கொண்டோ களத்தில் நிற்கக்கூடாது” என்றார். “அதை நாம் எப்படி சொல்ல முடியும்?” என்று துரியோதனன் சொன்னான். “நான் சொல்கிறேன். அவன் ஷத்ரியனாக உருக்கொண்டு இங்கு நின்றிருக்கக்கூடாது. நீ சொல்வதுபோல் விழைந்தால் கிராதனாக வரட்டும், நிஷாதனாக வரட்டும்” என்றார் பீஷ்மர்.

“தாங்கள் என் மேல் வஞ்சம் கொண்டு பேசுவதுபோல் உள்ளது” என்றான் துரியோதனன். பீஷ்மர் சினத்துடன் “வஞ்சம் கொண்டு பேசுகிறேன் என்றால் இதுநாள் வரை உனக்காக களத்தில் நின்றிருக்கமாட்டேன். இந்தப் போர் எங்கு வென்றாலும் எனக்கொன்றுமில்லை. இத்தனை ஆண்டுகள் மண்ணில் கடுநோன்புகள் கொண்டு நான் ஈட்டிய அனைத்தையும் இந்தக் களத்தில் நெறிபிறழ்வதனூடாக இழந்துகொண்டிருக்கிறேன். என்னில் குடியேறிய எட்டு வசுக்களில் எழுவரை இழந்துள்ளேன். எஞ்சியுள்ளவன் என் நாள்தேவனாகிய பிரபாசன் மட்டுமே. அவ்விழப்புகள் அனைத்தும் உனக்காகவே. இன்னும் நூறு பிறவிகள் வழியாக நான் ஈட்டி நிகர்செய்யவேண்டியவை அவ்விழப்புகள்” என்றார்.

“தாங்கள் எங்களுக்காக களம் நிற்கவில்லை என்றோ இழக்கவில்லை என்றோ சொல்லவில்லை. பிதாமகரே, வெற்றிக்கான ஒரு வழி திறந்திருக்கையில் தங்கள் தனிப்பட்ட ஒவ்வாமையால் அதை தவிர்க்க வேண்டாம் என்று மட்டுமே கோரினேன்” என்று துரியோதனன் சொன்னான். “அது வெற்றிக்கான வழி அல்ல, பேரிழிவுக்கான வழி. மானுடர் இப்புவியில் அடைவனவற்றின் பொருட்டு வாழக்கூடாது, விண்ணில் ஈட்டப்படுவனவும் அவர்களின் கணக்குகளில் இருந்தாகவேண்டும். இங்கு வென்று, அங்கு பெரும்பழி ஈட்டி நீ அமைவாய் என்றால் அதை உன் தந்தையாக நான் ஒருபோதும் ஒப்ப இயலாது” என்றார் பீஷ்மர்.

“தங்கள் சொற்கள் எனக்கு புரியவில்லை” என்றான் துரியோதனன். “இதற்கு அப்பால் எனக்கும் கூறுவதற்கு ஒன்றுமில்லை” என்று பீஷ்மர் சொன்னார். “நான் எண்ணுவது உனது பெருமையைக்குறித்து மட்டுமே. நீ இந்த அவையில் அவன் பெயரைச் சொன்னது எப்படி விளக்கினாலும் என் மேல் உள்ள நம்பிக்கை இழப்பையே காட்டுகிறது. என்னால் வெல்ல முடியாதென்று நீ சொல்கிறாய் என்றே அதை வரலாறு பொருள்கொள்ளும்” என்றார் பீஷ்மர். “அவ்வாறல்ல. பிதாமகரே, களத்தில் ஒருவரும் இதுவரை வெல்லவில்லை என்பதை நான் அறிவேன். தாங்கள் இருக்கும்வரை என்னை எவரும் தோற்கடிக்க இயலாதென்று உறுதி கொண்டுள்ளேன். ஆனால்…” என்று அவன் சொல்ல அவர் கைவீசி அதை தடுத்தார்.

“அந்த ஆனால் எனும் சொல்லே கர்ணனாக இங்கு வரவிருக்கிறது” என்று பீஷ்மர் கூவினார். அவருடைய உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தன் மரவுரியாடையை இழுத்து தோளிலிட்டபடி கிளம்புவதுபோல் அசைந்தார். “இப்போரில் எட்டு நாட்களுக்குப் பின் அவன் களம் இறங்குவான் எனில் அது எனக்கு பெரும்பழியையே சேர்க்கும். ஒன்று செய்கிறேன், நான் வில் வைத்து பின்னடைகிறேன். காட்டுக்கு சென்றுவிடுகிறேன். என் பிழைகளுக்காக கடுநோன்பு கொண்டு அங்கு உயிர் துறக்கிறேன். கர்ணன் நின்று உன் படையை நடத்தட்டும். நீ விழையும் வெற்றியை உனக்கு அவன் ஈட்டி அளிக்கட்டும்” என்றார் பீஷ்மர்.

பதற்றத்துடன் துரியோதனன் எழுந்தான். “பிதாமகரே!” என்று அழைத்து கைநீட்டி முன்னால் வந்தான். “நான் சொல்வதை தாங்கள் புரிந்துகொள்ளவில்லை. அளிகூர்ந்து என் சொற்களை நோக்குக! முற்றிலும் நிகர்நிலையில் இன்று இரு படைகளும் நின்றிருக்கையில் அவன் நம் தரப்புக்கு வருவது சற்று முன்தூக்கம் அளிக்கும். அந்தச் சிறு வேறுபாடே நமக்கு வெற்றியை ஈட்டும். தாங்கள் அகன்று அவ்விடத்துக்கு அவன் வந்தால் நம்மில் இருக்கும் ஆற்றல் மேலும் குறையும். அது உறுதியாக என் தோல்விக்கே வழிவகுக்கும். பிதாமகரே, தங்களுக்கிணையான போர்வீரர் எவரும் இந்த பாரதவர்ஷத்தில் இல்லை என்பதை தாங்களே அறிவீர்கள்.”

“அந்தப் பேச்சை இனி பேசவேண்டியதில்லை. நாங்கள் இருவரும் இணைந்து ஒரு போர்க்களத்தில் நின்றிருப்பது ஒருபோதும் நிகழாது” என்றார் பீஷ்மர். கிருபர் “அவன் இப்போரில் கலந்துகொள்ள வேண்டியதில்லை என்றே நானும் எண்ணுகிறேன்” என்றார். அனைவரும் திரும்பி நோக்க “அவன் இப்போரில் கலந்துகொண்டால் என்ன நிகழுமென்பதை எண்ணி நோக்குக! ஷத்ரியர்கள் தோற்று சோர்ந்து பின்னடையும்போது சூதனொருவன் வந்து வேதத்தை காத்தான் என்று ஆகுமல்லவா? இன்று இந்த அவையில் பிருஹத்பலனும் இவனுடன் இணைந்த ஷத்ரியர்களும் சொன்ன சொற்களை காலத்தின் செவி கேட்டிருக்கும். சூதர் சொல்லில் அது வாழும். ஷத்ரியர் உரைக்கட்டும் சூதன் வந்து காக்க வேண்டுமா உங்கள் வேதங்களை?” என்றார் கிருபர்.

பிருஹத்பலன் “வேண்டியதில்லை! கர்ணன் களமிறங்க வேண்டியதில்லை” என்றான். சக்ரதனுஸ் “ஆம், ஷத்ரியர்கள் இக்களத்தில் இருக்கும்வரை சூதன் வில்லுடன் முன் நிற்க வேண்டியதில்லை. அதை ஒப்பமாட்டோம்” என்றார். மாளவ மன்னர் இந்திரசேனரும் காரூஷரான க்ஷேமதூர்த்தியும் “ஆம், அதுவே எங்கள் கருத்தும்” என்றனர். கிருபர் திரும்பி “வேறென்ன? இங்குள எவருக்கும் கர்ணன் களமிறங்குவதில் ஒப்புதல் இல்லை. எனவே இதை நாம் மீண்டும் பேச வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன்” என்றார். “ஆம்! ஆம்!” என அவை ஓசையிட்டது. பிருஹத்பலன் “எங்களுக்கு பிதாமகர் பீஷ்மர் மேல் முழு நம்பிக்கை உள்ளது. அவர்பொருட்டே நாங்கள் களம் நிற்கிறோம்” என்றான்.

துரியோதனன் பெருமூச்சுவிட்டு “இப்போர் இனிவரும் நாளிலேனும் வெற்றி நோக்கி செல்லும் என்று நான் எண்ணினேன்” என்றான். பீஷ்மர் “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்க! இப்போர் வெற்றி நோக்கியே செல்லும் என்னும் சொல்லை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றார். “எட்டு நாட்களில் ஈட்டாத வெற்றி இனிவரும் நாளில் எவ்வாறு ஈட்டப்படும்? சொல்க, பிதாமகரே!” என்று துச்சாதனன் உரத்த குரலில் கேட்டான். “இந்த எட்டு நாட்களிலும் என்னை தளையிட்டிருந்தது என்னைச் சூழ்ந்திருந்த வசுக்களின் தூய்மை. அவர்களின் ஆற்றல் எனக்கு காவல் என்று எண்ணினேன். அவர்களின் நெறி எனக்கு தளை என்று இப்போது உணர்கிறேன். இன்று இறுதித் தளையையும் அறுக்கிறேன். அதன் பின்னர் கீழ்மகனாக, வெற்றிக்கென எதையும் செய்யத்துணியும் கிராதனாக களம் நிற்கிறேன். என்னை தடுக்க எவராலும் இயலாது” என்றார் பீஷ்மர்.

பிருஹத்பலன் மெய்ப்புகொண்டான். அவருடைய முகம் பெருவலியிலென சுளித்திருந்தது. தாடையை இறுக்கி மூச்சொலியென பீஷ்மர் சொன்னார். “ஆயிரம் ஆண்டுகள் கெடுநரகில் விழுவேன். என் மைந்தர் அளிக்கும் ஒருதுளி நீரோ அன்னமோ வந்தடையா இருள்வெளியில் உழல்வேன். அதன் பின் கோடி யுகங்கள் பருவெளியில் வீணாக அலைவேன். என் அன்னையால் பழிக்கப்படுவேன். எனை ஆக்கிய பிரம்மத்தால் ஒதுக்கப்படுவேன். அது நிகழட்டும். இக்களவெற்றி ஒன்றை ஈட்டி உனக்களித்துவிட்டு செல்கிறேன். இது என் ஆணை!” துரியோதனன் கைகூப்பி சொல்லடங்கி இருந்தான். துர்மதன் “பிதாமகரே!” என்றான். பீஷ்மர் கைநீட்டி அவனைத் தடுத்து “இறுதித் தளையையும் இன்று அறுப்பேன். இனி தேவவிரதனாக அல்ல, கீழ்மை மட்டுமே கொண்ட கிராதனாக என்னை பாடுக சூதர்!” என்றபின் அவையிலிருந்து வெளியே சென்றார்.

அவை ஒருவரை ஒருவர் நோக்கி சோர்ந்தமர்ந்திருந்தது. துரோணர் எழுந்து “இப்போர் தொடங்கிய முதற்கணம் முதலே நம் ஒவ்வொருவரையும் நெறிபிறழச் செய்துகொண்டிருக்கிறது. காற்றில் ஆடைகள் பறப்பதுபோல் நமது அறங்கள் அகல்கின்றன. இறுதியில் வெற்றுடலுடன் நின்று நாம் அனைவரும் போரிடப் போகிறோம். நன்று! விலங்குகளும் அவ்வாறுதானே போரிடுகின்றன? போர்களின் உச்சம் என்பது விலங்காதலே” என்றபின் கிருபரிடம் கைகாட்டிவிட்டு தானும் வெளியேறிச் சென்றார்.

தொடர்புடைய பதிவுகள்

கல்மலர்தல்- பார்கவி

$
0
0
st
அன்பின் ஜெ,
நலம் என்றே நம்புகிறேன். சமீபத்தில் மைசூரு சென்றிருந்தேன், அந்த அனுபவத்தை கீழே பதிந்திருக்கிறேன். தங்களுடைய கல் மலர்தல் என்ற சொல்லாடல் மனதில் மின்னிக்கொண்டிருந்தது.

கல்மலர்தல்

 

அன்புள்ள பார்கவி

 

கல்லில் தீ எழும் அந்தச் சிலை பல கனவுகளை தொடங்கிவைக்கும் ஒரு படிமம்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16791 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>