Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16754 articles
Browse latest View live

காந்தியம் நடைமுறைச் சாத்தியங்கள்…..சித்தநாத பூபதி

$
0
0

1

2014 இல் ஊருக்குச் சென்றிருந்த பொழுது படித்த பள்ளிக்கும் சென்றிருந்தேன். முன்பு வேதியியல் ஆசிரியையாக-வழிகாட்டியாக் இருந்தவர் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவிஉயர்வு பெற்றிருந்தார். பள்ளியின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக செயலூக்கத்துடன் இருப்பவர். அங்கு சென்றிருந்த பொழுது பள்ளி மாணாக்கர்களின் தரைக்கீழ் நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து விட்டது என்றும் புதிய தொட்டிக்கு நிதி தேவைப்படுவதாகவும் – முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாங்கள் நடத்தி வரும் அறக்கட்டளையிலிருந்து 25000 கொடுத்தேன். அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று கேட்டேன். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும் என்றார். மீதத்தொகையை பழைய மாணவர்களிடமிருந்து பெற்றுத்தருவதாகவும் உறுதி சொன்னேன். முதலாவதாக புதிய தொட்டிக்கு அவ்வளவு தொகை தேவைப்படுமா என்று சரிபார்த்தேன். சற்றேறக்குறைய அவ்வளவு ஆகும் என்று சிவில்-எஞ்சினியரிங் அறிவு சொல்லியது.

எனக்கு மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. எங்கோ சிக்கனமான ஒருவழி இருக்கிறது. சிக்கனம் என்றாலே காந்தியின் தாக்கம் தான். கடிதங்களில் குத்தப்பட்டிருக்கும் குண்டூசியை எடுத்து வைத்துக் கொள்பவர் அல்லவா.

முதலாவதாக தரைக்கு கீழ் நெகிழி(பிளாஸ்டிக்) தொட்டி வாங்கிப் பதித்தால் என்ன என ஆராய்ந்தேன். தரைக்கு மேல் வைக்கப்படும் தொட்டியை விட தரைகீழ் நெகிழித் தொட்டி விலை அதிகமானது. பள்ளி மாணவர்களின் தேவைக்கு வேண்டுமென்றால் அது சரியான தீர்வாக அமையவில்லை.

தரைக்கு கீழ் நெகிழித்தொட்டி பதிக்கப்பட்டால் அது விலை அதிகமாயிருக்க காரணம் மண் தரும் அழுத்தம். ஏற்கனவே இருக்கும் தொட்டிக்குள் நெகிழித்தொட்டியை இறக்கிவிட்டால் மண்ணின் அழுத்தம் நெகிழித்தொட்டிக்கு வராது. ஆகவே தரைக்கு மேல் பயன்படுத்தப்படும் தொட்டியையே பயன்படுத்தலாம் என நினைத்தேன். ஆனால் செவ்வக வடிவில் இருக்கும் தொட்டியில் உருளை வடிவிலான தொட்டி கொள்ளும் நீரின் அளவு மாணவர்களின் தேவைக்குப் போதாது.

சிவில் படித்திருந்தாலும் இரும்பிலான அமைப்புகள் அதன் வடிவமைப்பில் வேலையில் இருப்பதால் கான்க்ரீட் தொடர்பில் அடிப்படையை விட கொஞ்சம் தான் அதிகம் தெரியும். ஆகவே என்னுடைய வழிகாட்டியாக இருந்த கோவை. வெங்கடசுப்ரமணி அவர்களைத்தொடர்பு கொண்டுகேட்டேன். அவர் ஏற்கனவே இருக்கும் தொட்டியில் உட்புறமாக இன்னொரு கான்கிரீட் தொட்டியை அமைத்துவிடலாம் என்று ஒரு வழிமுறை சொன்னார். அது 20 % அளவிற்கு செல்வைக் குறைக்கும்.

சிலநாட்களாக அதே சிந்தனை. ஜெ.சாரிடமும் தொடர்பு கொண்டு திருவண்ணாமலை வீட்டை வடிவமைத்த லாரி-பெக்கர் சிந்தனைத் தாக்கமுள்ள அந்த வல்லுனரிடம் ஏதும் தொழில் நுட்ப உதவி கிடைக்குமா என்று கேட்டேன். அவர்கள் கட்டடம் தொடர்பில் இருந்தாலும் நீர்த்தேக்கத் தொட்டிக்காக எதுவும் செய்யமுடியுமா என்று தெரியவில்லை என்று சொன்னார்.

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிப் பார்த்தேன். பக்கத்து மரத்தில் இருந்து சல்லி வேர்கள் சிறு அளவிலும் , ஒரு பெரிய வேர் தரையையும் துளைத்திருந்தது. இதே தொட்டியையே சரி செய்து பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை வந்தது.

தமிழில் வரும் தொழில்நுட்ப இதழ்கள் குறித்து பெரிய நம்பிக்கை இல்லயென்றாலும் சில புத்தகங்களை வாங்கிப் படித்தேன். ஒரு ஒளிக்கீற்றாக சுவற்றின் விரிசல்களைச் சரி செய்வது தொடர்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்த வேதிப்பொருள் ஊரின் மிக அருகில் ராஜபாளையத்தில் தயாராவது என்றவுடன் இன்னும் மகிழ்ச்சி. உடனே தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களுக்கு அவர்களின் தொலைபேசி எண் அந்த இதழில் வெளிவந்திருப்பதே தெரியவில்லை. இந்த வேதிப்பொருள் தண்ணீரில் கலந்து மாணாக்கர்களுக்கு தீங்கு விளைவிக்குமா என்று கேட்டேன். இல்லை. இது கிட்டத்தட்ட சுண்ணாம்பு. நீர் வெளிப்புகாவண்ணம் சிறிதளவு பலபடி சேர்க்கப்படும். நிறையபேர் எதுவும் விசாரிக்காமல் நீச்சல் குளத்திற்கான வேதிப்பொருளை வாங்கிச்சென்று குடிநீர்த் தொட்டிக்கு பூசுகின்றனர். அது தவறு.

இந்த வேதிப்பொருள் தண்ணீர் தொட்டிகென்றே வடிவமைக்கப்பட்டது. எங்கள் வீட்டிலயே இருந்த தொட்டியைப் பலப்படுத்த இதைப் பயன்படுத்தியிருக்கிறோம். என்றார். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிப் சிறிய சரிபார்த்தல் பணிகளுக்குப் பின் சுவற்றில் பூசினோம். முதல் நாள் தண்ணீர் தேக்கி வைத்திருந்த நீரளவிற்கு செந்நிறக்கோடு வரைந்து , மறு நாள் கோட்டை விட நீர்மட்டம் குறைந்திருக்கிறதா என்று பார்த்தோம். நூலளவு வேறுபாட்டைத் தவிரஏதுமில்லை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தேவைப்பட்ட வேலை , பதிமூன்றாயிரத்தில் முடிந்தது. இங்கு தொழில்நுட்பமும், பெருந்தொழிலும் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் சிக்கனமாகச் செலவிடவேண்டும் என்று கருத்தியல் காந்தியிடம் பெற்றது தான். விமான நிலையம் , பெரிய கட்டடங்கள் என பிரமாண்ட கட்டடங்களின் வடிவமைப்பில் ஒருபகுதியாக இருந்ததை விட மனநிறைவு தந்த பணி அது.

வீட்டுக்கான திட்டவரைபடம் கேட்டு வருபவர்களுக்கு முடிந்த அளவிற்கு சிறிய வீட்டிற்கான வரைபடத்தையே அளிக்கிறேன். அப்படியும் சிலர் பெரிய வீடாக மாற்றிக் கட்டி முடிக்க முடியாமல் என்னிடமே இரண்டு லட்சம் கடன் கேட்கின்றனர்.

முழுமையான காந்திய வழியிலான தொழில் முறை நடைமுறையில் இல்லை. வருவதற்கான வாய்ப்புகளும் குறைவே. ஆனால் காந்தியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாறுதல்களுடன் அரசும் , மக்களும் இணைந்து செயல்பட்டால் அதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழிற்சாலைகள் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கும் நல்ல மாற்றங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உழவு மட்டுமே பெருந்தொழிலாக இருந்த ஊரில் உருவான தொழிற்சாலைகள் ஓரளவிற்கு சாதிக்கட்டுமானத்தைத் தளர்த்தி இருக்கின்றன.

பாப்பாபட்டி கீரிப்பட்டியில் அரசு ஒரு தொழிற்சாலை அமைத்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் வேலை கிடைக்காமைக்குப் பயந்து தேர்தலில் வென்றவுடன் ராஜினாமா பண்ணியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்

பூபதி

 

[குழுமத்தில் இருந்து]

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வட்டார வழக்கு

$
0
0

நகைச்சுவை

1

 

வட்டார வழக்கு பலசமயம் கொச்சைப்பேச்சு என்று எண்ணப்படுகிறது. இதுபிழை. ஒரு தனிமனிதன் மொழியை சிதைத்துப்பேசினால் அது கொச்சை, ஒரு பகுதியின் மக்கள் முழுக்க அவ்வாறு பேசுவார்களென்றால் அது வட்டார வழக்கு. வட்டார வழக்கு என்பது ஒருவட்டாரத்து மக்களின் பண்பாட்டு அடையாளமாக அவ்வட்டார வழக்கைப் பேசாத அவ்வட்டாரத்தவர்களால் முன்வைக்கப்படுகிறது.வட்டாரவழக்குக்கு பெரும் பண்பாட்டு முக்கியத்துவம் உண்டு. ஒரு வட்டாரம் பிற வட்டாரங்களும் தன்னைப்போன்றே பிற்பட்டவைதான் என்ற தன்னம்பிக்கையை அடைய அந்தப் பிறபகுதிகளின் வட்டாரவழக்குகள் உதவுகின்றன.

ஒருபகுதியின் இயல்பான உறுப்பினரால் இயல்பானதாகவும் அங்கே வரும் பிறரால் விபரீதமாகவும் ஒரேசமயம் உணரப்படும் வட்டாரவழக்கே சிறந்த வட்டார வழக்காகும். குமரிமாவட்டம், நெல்லைமாவட்டம் முதலியவை அவ்வகையில் சிறப்பான வட்டார வழக்குகள் உள்ள பகுதிகள். இத்தகைய வட்டார வழக்கின் சிறப்பு என்னவென்றால் அவற்றைப் பேசும் மக்கள் தாங்கள் பேசுவதே தூயதமிழ் என்றும் பிற எல்லாம் தமிழின் மரூஉக்களே என்றும் ஆணித்தரமாக நம்புவதேயாகும். எம்பளதை எண்பது என்று சொல்பவர்களை நோக்கித் தஞ்சாவூர்க்காரர்கள் நகைப்பர்கள். திண்ணவேலியை திருநெல்வேலி என்று சொல்லும் அன்னியர் மொழிவளமில்லாதவர்கள் என்பது நெல்லையின் நம்பிக்கை.

வட்டார வழக்கில் இரு கூறுகள் உண்டு. பொதுமொழியில் உள்ள சொற்கள் குறிப்பிட்ட நிலப்பகுதியின் வெயில் மழை காற்று பட்டு வேற்றுருக்கொள்வது முதல்கூறு. இங்கே என்ற செம்மொழிச் சொல்லானது இஞ்ச என்றும் இங்கிண என்றும் இங்கிட்டு என்றும் இங்கிட்டுகூடி என்றும் இஞ்சால இஞ்சினிக்குள்ள என்றும் வழங்கப்படுவதைக் காணலாம். முனைவர் பட்டம் பெற்றவர்களும் மேடைப்பேச்சாளர்களும் இங்கே என்றும் சொல்வதுண்டு. அதை அவர்களின் தனி வட்டாரவழக்காகக் கொள்ளலாம் என்று வட்டார வழக்கியலாளர் தே.லூர்து சொன்னதாக ஒரு வதந்தி உண்டு.

இரண்டாவது கூறு, ஒரு பகுதிக்கு உரிய தனிச் சொற்கள். ‘அம்மிங்கிரு’ என்ற குமரிமாவட்டச் சொல்லாட்சியானது அம்மையார் என்பதைக் குறிக்கிறது. நீக்கம்பு [காலரா] நல்லப்பம் [முதன்முதலாக] முதலிய பலநூறு சொற்களும் குமரி வட்டாரவழக்கில் உள்ளன. செம்மொழிச் சொல்லானது ஒரு பகுதியில் மட்டும் தெரியாத்தனமாகப் பயன்படுத்தப்படுமென்றால் அதுவும் வட்டார வழக்கே ஆகும். உதாரணம், குமரி வட்டார வழக்கில் ‘செம்மே செய் கேட்டியாலே’. செம்மை என்பது செம்மொழிச்சொல்.

செம்மொழிச் சொற்களைத் தனிப்பொருள் கொடுத்து வட்டாரவழக்காக ஆக்குவதும் உண்டு. மயிர் என்றால் செம்மொழியில் முடி. முடி என்றால் மகுடம். மகுடம் என்றால் நெல்லைவழக்கில் ஒருவகை மேளம். குடம் போலிருக்கும். மேளம் என்றால் குமரிவட்டார வழக்கில் களேபரம். களேபரம் என்றால் சம்ஸ்கிருதத்தில் கூந்தல். கூந்தல் என்றால் குமரி வட்டாரவழக்கில் ஆடிமாத மழைமூட்டம். ஆனால் நெல்லையில் அதற்குப் பனைநுங்கு என்று பெயர்…

நுங்குதல் என்றால் குமரியில் அடிபின்னுதல். பின்னுவது என்றால் மையத்தமிழ்நாட்டில் முடைதல். முடை என்றால் பணம் இல்லை என்று மதுரை வழக்கு என்றால் குமரிமாவட்டத்தில் மூட்டம்போடுதல் அது. அந்த முடையை இங்கே முட்டு என்பார்கள். அதை முழங்கால் முட்டு என்று நெல்லைக்குமேல் புரிந்துகொள்வார்கள். மொழிகளுக்குள் நுழைந்தவனால் பிறகு பேசவே முடியாது. வர்ம வைத்தியனால் அடிக்க முடியாது என்பது போல– உடம்பெங்கும் வர்மம்தான் தெரியும்.

குமரிவழக்கில் மயிர் என்றால் அந்தரங்க முடி. மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமானைப்பற்றிக் குறள்விளக்கம் அளிக்கையில் குமரிமண்ணின் தமிழாசிரியர் ஒருவர் அந்நிலையில் மறைப்பு இல்லாததனால் வெட்கம் தாங்க முடியாமல்தான் கவரிமான் உயிர்துறக்கிறது என்ற நுண்பொருள் அளித்து அக்குறளின் பொருட்செறிவைப் பொருத்தமுள்ளதாக ஆக்கினார் என்பது வரலாறு.

வட்டாரம் என்பது வட்டாரங்களின் தொகுப்பு. அதேபோல வட்டாரவழக்கும் வட்டாரவழக்குகளின் தொகுப்பே. சாதி சார்ந்து மதம் சார்ந்து ஊர் சார்ந்து வட்டாரவழக்கு மாறுபடுகிறது. பெருமாள்முருகனின் கொங்கு வட்டார வழக்ககராதியை ஒருவர் கொங்குவேளாள வட்டார வழக்ககராதி என்று சொன்னார். வட்டார வழக்ககராதிக்குள் சாதிக்கு உள்பிரிவுகள் அளிக்கலாம். இட ஒதுக்கீடு கூடத் தேவைப்படும்.

குமரிமாவட்ட ஆசாரிமார் ‘ஓவியமாட்டுல்ல இருக்கு’ என்றால் கந்தரகோலமாக என்று பொருள். அவர்கள் நவீன ஓவியத்தை உத்தேசிக்கிறார்கள் என்று ஆய்வு. கோலமா இருக்கு என்றால் சீராக என்று பொருள். சீரு என்றால் நிலைமை. ”இருக்கப்பட்ட சீரைப்பாத்தா கீரைச்சோறுக்கு முட்டு” என்று சொலவடை. ஆசாரிமார் ‘வைப்பு’ என்று சொன்னால் நிலைநாட்டுதல். புலையர் வைப்பு என்று சொன்னால் குழந்தை உற்பத்தி.

உடம்பெங்கும் இதயத்துடிப்பு ஓடினாலும் மணிக்கட்டில் நாடித்துடிப்பு பார்ப்பதுபோல வட்டாரவழக்கு என்பது வசைகளில் சிறப்பாக வெளிப்பாடு கொள்கிறது. அதில் நுண்ணிய பொருள்வேறுபாடுகளைப் பார்ப்பவர்கள் வட்டாரவழக்கு என்பது சிந்தனையில்லாதவர்களால் உருவாக்கப்படுவதென ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

பூதஉடல், புகழுடல், சூட்சும உடல், காரண உடல், ஒளியுடல் என உடல் பலவகை என்பது யோகமரபு. ‘வசையுடல்’ என்று ஒரு உடல் பண்பாட்டில் உருவகிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உடலுறுப்புக்கும் நல்லவார்த்தையிலும் கெட்டவார்த்தையிலும் பெயர் உண்டு. முழு உடலே அவ்வாறு நல்ல உடல் கெட்ட உடல் என இரண்டாகப் பிரிவுபட்டிருக்கிறது. நம் எதிரிகள் நம் பெற்றோரின் கெட்ட உடலை அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.

ஆண்குறி பெண்குறி போன்ற நல்லவார்த்தைகளுக்குரிய கெட்டவார்த்தைகளை நாம் அறிவோம். இவற்றில் பகல்குறி இரவுக்குறி என இரண்டு உண்டா என தொல்காப்பிய அடிப்படையில் இலக்கண ஆய்வு ஒன்றை செம்மொழி உயராய்வர் ஒருவர் மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ‘ஆற்றுவெள்ளம் நேற்றுவரத் தோற்றுதே குறி’ என்ற பள்ளுப்பாடலை அவர் விரிவாக விளக்கி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாராம். கை கால் கண் போன்றவற்றுக்குக் கெட்ட வார்த்தைகள் இல்லையென்பதனால் கெட்ட வார்த்தைகளுடன் அவை உசிதமான முறையில் இணைக்கப்படுகின்றன.

வட்டார வழக்கு மிகமுக்கியமான பொருளியல் உற்பத்தி என்பதை பலர் அறிவதில்லை. ஃபோர்டு ஃபௌண்டேஷன் முதலிய அமைப்புகள் வட்டாரவழக்கைப் பயிர்செய்வதற்கும் சேமிப்பதற்கும் அளிக்கும் நிதியுதவி நாட்டின் முக்கியமான நிதியாதாரமாகும். நாட்டாரியல் என்னும் துறையே வட்டார வழக்கை நம்பி இருக்கிறது என்றால் மிகையல்ல.

ஒரு விஷயத்தை வட்டார வழக்கில் சொன்னால் அது நாட்டாரியல் என்பது முனைவர்  அ.கா.பெருமாள் அவர்கள் சொன்ன வரையறை. ஆகவேதான் டிவிஎஸ்-50 பயனர் கையேட்டை ஈத்தாமொழி வட்டாரவழக்கில் சொன்ன மெக்கானிக் ஞானவறுவேல் அவர்களின் கூற்றை அ.கா.பெருமாள் நாலரை மணிநேரம் ஒலிநாடாவில் பதிசெய்து தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் துறையின் சேமிப்புக்கு அளித்தார்.

வட்டார வழக்கை எல்லை வரையறை செய்வதில் ஆய்வாளர் நடுவே ஆழமான விவாதம் நிகழ்ந்து வருகிறது. மனைவியர் கணவனை அழைக்கும் வட்டார வழக்குச் சொற்களை சேகரித்த ஞா.ஸ்டீபன் அவர்கள் இஞ்சேருங்க, ஏங்க, ஏனுங்க, யானுங்க, பாருங்க, இவியளே, கேட்டேளா போன்ற நானூறுக்கும் மேற்பட்ட சொற்களைப் பட்டியல் போட்டிருக்கிறார். அவற்றில் ‘ம்க்கும்’ போன்ற கனைப்பொலிகளையும் அவர் சேர்த்திருப்பது முறையல்ல என்று ஆய்வாளர் மாற்கு கருத்து தெரிவித்தார். ஆனால் ஆ!.சிவசுப்ரமணியம் அவர்கள் ஒவ்வொரு அழைப்புக்குப் பின்னரும் வழக்கு உறுதியாக நடக்குமென்பதனால் இச்சொற்கள் கண்டிப்பாக வட்டார வழக்குச்சொற்களே என்று சொன்னார்.

வட்டார வழக்கு இலக்கியத்திற்குப் பெரிதும் உதவுவது. படைப்பில் மண்ணின் மணம் வருவதற்கு ஒருபிடி வட்டாரவழக்கைத் தூவினால் போதும் என்பது நாவலுலகின் கோட்பாடு. வட்டார வழக்கைப் பேசுவதைவிட வாசிப்பது எளிது. வாசிப்பதை விட எழுதுவது எளிது. எழுதுவதை விட ஆய்வுசெய்து மிக எளிது.

வட்டாரவழக்கில் சில இலக்கணங்கள் உள்ளன. ஈற்றொலிகள், இணைப்பொலிகள், திரிபுமுறைகள் என அவற்றைச் சொல்லலாம். மூன்றையும். ”ஈறும் தொடுப்பும் திரிபும் மூன்றும் சீராம் வழக்கென்பர் புலவோர்” என்பது இலக்கண சூத்திரம். கற்றுக்கொண்டால் நீங்களும் வட்டார வழக்கு எழுதலாம்.  வந்தேங் என்றால் மதுரை. வந்தனுங்க என்றால் கோவை. வந்தனுங்கோ என்றால் ஈரோடு. வந்துகினேன் என்றால் தருமபுரி. வந்தனான் என்றால் யாழ்ப்பாணம். இவை ஈற்றொலிகள்

”எங்கிட்டே வச்சுக்காதே” ”எங்கைலே வச்சுக்காதே” ”நம்மமேலே வச்சுக்காதே” ”நம்மளோட வச்சுக்காதே” என்னும் சொற்களைக் கவனிக்கவும். இணைப்பொலி மூலமே வட்டார மாறுபாடுகள் இங்கே உருவாக்கப்படுகின்றன. அடுத்தது திரிபுமுறை. நல்ல சொல்லை வட்டாரச்சொல்லாக ஆக்குவதெங்கனம் என்பதே இது. பெட்டி எங்கனம் பொட்டி ஆகிறதோ அது. ஒவ்வொரு வட்டாரவழக்குக்கும் அதற்கே உரிய திரிபு விதி உண்டு.

உதாரணமாகப் பெரும்பாலான வட்டார வழக்குகளில் மின்தொடர்பு விதி செயல்படுகிறது. மின்சாரம் இருபுள்ளிகள் நடுவே இருக்கும் குறைந்த தூரத்தையே தேர்வுசெய்யும். அதுபோல சொற்களின் முதல்- கடைசி என இரு புள்ளிகள் நடுவே உச்சரிப்பு அதிவேகமாக ஓடிச்செல்வதை வட்டாரவழக்கின் ஒரு விதி எனலாம். நாராயண அய்யர் என்ற சொல் நார்ணயர் என்றாவது உதாரணம். குமாரகோயில் கோர்ய்ல் என்றாகிறது.

தெரியாத சொற்களைத் தெரிந்த சொற்களின் ஒலிக்கு மாற்றிக்கொள்வது. இது அதிகமும் ஆங்கிலம் முதலிய பிறமொழிச்சொற்களில் செயல்படும் விதியாகும். கம்புட்டர் என்ற சொல் கம்பு என்பதன் சாயல் கொண்டது. ஃபோட்டோ என்ற சொல் ஆட்டம் பாட்டம் போல போட்டம் ஆக மாறுகிறது. ஆங்கிலச் சொற்களை அவற்றின் முதல் ஒலித்தோற்றத்தை அப்படியே அதன் பொருளாக எடுத்துக்கொள்வதும் உண்டு. உதாரணம் ‘அஸ்ஸால்டா போயினே இருந்தான்.’

வட்டார வழக்கு தமிழின் சிறப்பம்சம். உண்மையில் எல்லாக் காலத்திலும் தமிழர்கள் வட்டார வழக்கில் பேச அறிஞர்கள் அதைத் தமிழாக ஆக்கிக்கொண்டே இருந்தார்கள். தொல்காப்பியம் என்ப என்று சொல்வது இந்த வாய்மொழியர்களையே. என்ப என்று அஃறிணையில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்

செம்மொழியர்கள் வீட்டுக்குள் மனைவியிடம் வட்டார வழக்கில் பேசிவிட்டு வாசல்தாண்டி துண்டு தோளுக்கு வந்ததும் செம்மொழிக்குச் செல்வார்கள். செம்மொழி உரைப்பொழிவின் நடுவே கட்டைக்குரலிலோ அல்லது கம்மல் குரலிலோ வட்டார வழக்கில் பேசுதல் மரபென அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. வட்டார வழக்கை மட்டுமே அறிந்த பொதுமக்கள் அப்போது அதைக் கேட்டு கிண்டலாக நகைக்க வேண்டும் என்பதும் விதி.

வட்டார வழக்கு இருப்பதனால்தான் செம்மொழி சிறப்புடன் இருக்கிறது. இல்லாவிட்டால் செம்மொழியை யார் அடையாளம் காணப்போகிறார்கள்?

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் ஆகஸ் 29, 2012

 

 

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு விமர்சன அரங்கு சென்னை -பதிவு

$
0
0

 

1

இன்று  [17-1-2016] நடந்த வெண்முரசு விமர்சனக்கூட்டத்தில்  27 பேர் கலந்துகொண்டோம்.

ஜானகிராமன் அவர்கள் தன்னால் வர இயலாது என்று சென்ற திங்கள்கிழமையன்றே தெரிவித்தார். உடனடியாக ஒரு மாற்று பேச்சாளரை தேட வேண்டிய நிலைமையாயிற்று. அருணாசலம் கைகொடுத்தார். ஒருநாள் டைம் கொடுங்கள் என்று கேட்டார். ‘சிறியன சிந்தியாதான்’என்கிற தலைப்பில் அவர் துரியோதனை பற்றிப் பேசுவதாக தெரிவித்தார். கட்டுரையை தயாராக்கிக் கையோடு கொண்டு வந்திருந்தார். மேற்கோள்கள் கொடுத்து அருமையாக பேசினார்

அந்த கட்டுரையை நிகழ் காவியத்தில் பதிவேற்றி லிங்க் தருவார் (எனநம்புவோம்)

இன்றைய கலந்துரையாடலில் தியாகராஜனும், மாரிராஜும் ( இவர் புது வாசகர்) சொன்ன கருத்துக்கள் விவாதத்தை நன்றாக முன்னெடுத்து சென்றன

தியாகராஜன் அவர்கள் தனது உரையாடலில், துரியோதனன் ஒரு மனிதன் ஆனால் அவனை எதிர்த்த ஐவரும் ஐந்து தேவர்கள். கூடவே அவதார புருஷனான கண்ணனும். இத்தனை பேர் சேர்ந்தும் அவனை நேர்போரில் கொல்ல முடிவதில்லை. வஞ்சகமாகவே கொல்கிறார்கள் என்று கூறினார். அதுதவிர, இதற்குமுன், என்.டி.ராமராவ் தவிர வேறுயாரும் துரியனின் நல்ல குணங்களைஎடுத்து சொல்லவில்லை என்று கூறினார்.

இரண்டாவது மாரிராஜ் சொன்னது. இவர் இன்றுதான் முதல்முறைவருகிறார். வெண்முரசின் வாசகர் ஆனால் இதுதான் அதுகுறித்த முதல் உரையாடல் என்று கூறினார்.

அருணாசலத்தின் உரையில் காந்தாரி துரியோதனனை கருக்கொண்ட நாளில் இருந்து அவள் கனவில் யானையும் காகங்களும் வருவதை சொல்லி விளக்கினார். யானை என்பது வேழம் என்ற சொல்லாலே குறிக்கப்படுவதையும் மேலும் அது மன விரிவை காட்டுகிறது என்றும் காகங்கள் மாந்தரீகம் அல்லது கெட்ட குணங்களை குறிப்பதாகவும் சொன்னார். அந்த உரையாடலில், காந்தாரியின் கனவில் காகங்கள் யானையை தூக்கிசெல்வது போல் வருவதும், இது துரியனின் நல்ல குணத்தை சுற்றியிருக்கும் காக்கைகள் அல்லது துர்சிந்தனைகள் தூக்கிச் செல்வதை குறிப்பதாகவும் மாரிராஜ் சொன்னது மிக பொருத்தமாக இருந்தது.

ராகவ் மற்றும் தியாகராஜன், யானை என்பது ஹஸ்தினாபுரியை குறிப்பதாகவும் அது சூழ்ச்சிகளால் கொண்டு செல்லப்படுவதை அது குறிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

அருணாசலம், வெண்முரசு கதாநாயகன் துரியோதனன்தான் என உணர்ச்சி பொங்க கூறினார். வாலியைக் குறித்து கம்பன் எழுதிய வாக்கியமான சிறியன சிந்தியாதான் என்பதை துரியோதணனுக்கு அற்புதமாக பொருத்தினார்.
ரகு, துரியனின் அந்திமகால நிகழ்வுகளை விவரித்து,அருணாசலம் அந்த அத்தியாயங்களை படிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டான் :-)

அதன்பிறகு இரவுணவு பரிமாறப்பட்டது.ஜாஜாவும் அஜிதனும் சைதன்யாவை ரேகிங் செய்து கொண்டிருந்தார்கள். நான் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

காளிபிரசாத்

 

2

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வாசகர் சந்திப்புகள்

$
0
0

புதியவாசகர்களின் சந்திப்புகள் ஊட்டியில் 13,14 ஆம் தேதியும் ஈரோட்டில் 6.7 ஆம் தேதிகளிலும் நிகழவிருக்கின்றன. இருசந்திப்புகளிலும் முழுமையாகவே பங்கேற்பாளர்களை நிறைத்துவிட்டோம். கொள்ளளவுக்கு அதிகமாகவே. எனவே இடமில்லை

மேலும் வரவிரும்புபவர்களின் கடிதங்கள் உள்ளன. வழக்கம்போல மேமாதம் ஊட்டியில் இலக்கியமுகாம் நிகழும். இது அனைவருக்குமானது. அதற்கு மேல் இன்னொரு புதியவர்களின் சந்திப்பை வேறெங்காவது அமைக்கமுடியுமா என பார்க்கிறேன்

அனைவருக்கும் நன்றி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 32

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 9

கங்கைச்சாலையில் மரக்கூட்டங்கள் மறைத்த தொலைவில் முரசொலி வலுத்துக்கொண்டே வந்தது. காட்டிற்குள் அவ்வொலி சிதறிப்பரந்து மரங்களால் எதிரொலிக்கப்பட்டு அனைத்து திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்தது. பின்பக்கம் கோட்டைமேல் மோதிய காற்று செம்புழுதி சுழல மீண்டு வந்து அவர்கள்மேல் படிந்து அடங்கியது. தொலைவொலிகள் அஸ்தினபுரியின் கோட்டையில் மோதி மீண்டுவந்தன. காத்துநின்ற புரவிகள் சற்றே பொறுமையிழந்து கால்களை தூக்கிவைத்து பிடரிகுலைத்த மணியோசை எழுந்தது. யானைகள் காதுகளை ஆட்டியபடி முன்னும்பின்னும் உடலாட்டும் அசைவு இருண்ட நீர்நிலையில் சிற்றலைகள்போல் தெரிந்தது.

அஸ்தினபுரியின் கொற்றவை ஆலயத்தின் பூசனைக்காக எழுந்த மணியோசை நெடுந்தொலைவிலென கேட்டது. பின்பு ஒரு காற்று அதை அள்ளிக்கொண்டு வந்து மிக அண்மையிலென ஒலிக்க வைத்தது. கர்ணன் பெருமூச்சுடன் உடலை அசைத்தான். அவ்வசைவால் அகம் கலைந்து சொல்முளைத்த துச்சலன் “நூறு யானைகள் என்றார்கள்” என்றான். கர்ணன் “சிந்துவிலிருந்தே நூறு யானைகளில் வருகிறாரா?” என்றான். “ஆம், எதையும் சற்று மிகையாகவே செய்யும் இயல்புடையவர். அத்துடன் அஸ்தினபுரியைவிட சற்றேனும் மாண்பு தென்படவேண்டும் என்று அவர் விழைவதில் பொருளுண்டு” என்றான் துச்சலன்.

துர்முகன் “புதிய அரசர்கள் அனைவருமே இவ்வண்ணம் எதையேனும் செய்கிறார்கள்” என்றான். “நூறு யானைகள் என்றால் ஆயிரம் புரவிகளா?” என்றான் கர்ணன். “எப்படி தெரியும்?” என்றான் சுபாகு. “உண்மையிலேயே ஆயிரம் புரவிகள்தான். நூறு ஒட்டகங்களும், அத்திரிகள் இழுக்கும் நூறு பொதிவண்டிகளும் அகம்படி கொள்கின்றன என்கிறார்கள். அரசரும் பிறரும் பதினெட்டு பொன்னணித்தேர்களில் வருகிறார்கள்.” கர்ணன் சிரித்து “என்ன இருந்து என்ன? நாம் ஆயிரம் மைந்தரை அனுப்பி வரவேற்கிறோமே. அதற்கு இணையாகுமா?” என்றான். துச்சலன் நகைத்து “ஆம், உண்மை மூத்தவரே” என்றான்.

“இவ்வணி ஊர்வலம் இன்று நகர்நுழைந்து அவைசேர்வதற்கு உச்சி வெயிலாகிவிடும் போலிருக்கிறதே” என்றான் துச்சகன். “முதல்வெயில் கண்களை கூசச்செய்கிறது.” துச்சலன் “பல்லாண்டுகளுக்கு முன் காந்தாரத்திலிருந்து மாதுலர் சகுனி நகர்நுழைந்த செய்திகள் சூதர் பாடலாக இன்றுள்ளன. அப்பாடலைக்  கேட்டபின் எவரும் எளிமையாக நகர்புகத் துணியமாட்டார்கள்” என்றான். “ஆம், அது ஒரு மலைவெள்ளம் கோட்டையை உடைத்து உட்புகுந்து நகரை நிறைத்தது போலிருந்தது என்கிறார்கள். அந்த ஆண்டுதான் புராணகங்கை இந்நகரை மூழ்கடித்தது. அதன்பின் மாதுலர்சகுனி வந்த படைவெள்ளமும் அனல்வெள்ளமும் பெருகிவந்தன.”

எரியம்புகள் எழுந்து வானில் வெடித்தன. கோட்டைக்கு மேல் இளைய கௌரவர்களின் கூச்சல்கள் எழுந்தன. கர்ணன் திரும்பி நோக்கி “அத்தனை பேரும் கோட்டை மேல் ஏறிவிட்டார்களா?” என்றான். “ஆம்” என்றான் துச்சலன். “அது நன்று. அவர்கள் கோட்டையிலிருந்து இறங்காமல் இருக்க படிக்கட்டின் வாயில்களை மூடச்சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “அவர்களுக்கெதற்கு படிக்கட்டு? குதிக்கக்கூட செய்வார்கள்” என்றான் துச்சகன். “ஆம், ஓரளவு கால் வளர்ந்தவர்கள்தான் அதை செய்யமுடியும். எஞ்சியவர்கள் தடுக்கப்பட்டாலே நகரம் சற்று நிறைவாக உணரும்” என்றான் சுபாகு.

எரியம்புகள் மேலும்மேலும் எழுந்து விண்ணில் வெடித்து பொறிமலர்களை விரியவைத்தன. கனல்மழையென காற்றில் இறங்கின. பெரியதோர் அணிக்குடைபோல் மாபெரும் எரியம்பு விண்ணிலெழுந்து வெடித்துப்பரவி மெல்ல இறங்கியது. செந்நிறத்தில் ,இளநீலநிறத்தில் பொன்மஞ்சள்நிறத்தில் என சுடர்க்குடைகள் வெடித்து விரிவு கவித்து இறங்கிக்கொண்டிருந்தன. “அனலவனை ஏவல் பணிசெய்ய அமைத்தான்” என்றான் சுபாகு. “என்ன?” என்றான் கர்ணன். “அப்படித்தானே சூதர்கள் பாடப்போகிறார்கள்?” என்றான் சுபாகு. துச்சலனும் துர்முகனும் உரக்க நகைத்தார்கள்.

எட்டு வெண்புரவிகள் சிந்துநாட்டின் கரடிக்கொடிகளுடன் புழுதித்திரைக்கு அப்பால் இருந்து மெல்ல பிறந்தெழுந்து உருத்திரட்டி விரைவுகொண்டு அவர்களை நோக்கி வந்தன. இரும்புக்கவசங்கள் ஒளிர அமர்ந்திருந்த அவ்வீரர்கள் வெண்மலர்களில் அமர்ந்த தேனீக்கள்போல தோன்றினர். கொடிகள் சிறகென அடித்து அவர்களை தூக்கிவருவதுபோல. புரவிக்குளம்புகள் காற்றில் துழாவுவதுபோல. ஆனால் காடு குளம்படியோசைகளால் அதிர்ந்துகொண்டிருந்தது.

அஸ்தினபுரியின் படைமுகப்பை அடைந்ததும் புரவிகளைத் திருப்பி விரைவழியச்செய்து குதித்திறங்கி அதே விரைவில் கால்மடித்து அக்கொடியை தரையில் நாட்டி தங்கள் உடைவாள்களை உருவிச்சுழற்றி தரையைத்தொட்டு தலைதாழ்த்தி “தொல்புகழ் அஸ்தினபுரியை ஏழுநதிகளால் இமயம் வாழ்த்திய சிந்துநாடு வணங்குகிறது. பாரதவர்ஷத்தின் பேரரசர் ஜயத்ரதர் நகர்புகுகிறார்!” என்றார்கள். கர்ணன் தலைதாழ்த்தி வணங்கி “நன்று! இந்நகர் சிந்துவின் தலைவருக்காக காத்துள்ளது” என்றான். அவர்கள் வாளைச்சுழற்றி உறையிலிட்டு விலக துச்சலன் “நாடகம் போலுள்ளதே!” என்றான். சுபாகு “வாயை மூடுங்கள் மூத்தவரே, இவையெல்லாம் அங்குள்ள அரசச் சடங்குகள்” என்றான்.

இரும்பு பெருகி  வழிவதுபோல இருநிரைகளாக சிந்துநாட்டுக் கவசவீரர்கள் வந்தனர். அவர்களுக்கு நடுவே பதினெட்டு அணிப்புரவிகள் பொன்பூசியசேணங்களும் பட்டுமெய்யுறைகளும் அணிந்து அலையலையாக உடல் எழுந்தமைய வந்தன. அவற்றின் இருபக்கங்களிலும் அணிசூழ்கையர் பூத்தமரமெனத் திரும்பிய பட்டுப்பாவட்டாக்களும் மணிக்குச்சங்கள் சிலுசிலுத்த மலர்க்குடைகளுமாக சீராக நடையிட்டு அணுகினர். தொடர்ந்து பொன்னலை குழைந்து இளகிய முகபடாமணிந்து இட்டஅடி மெத்தையென எழுந்தமைய அம்பாரியில் அணிப்பரத்தையரைச் சுமந்த யானைகள் அசைந்து வந்தன.

அவை பொன்வண்டுத் தொகைபோலத் தோன்றி, உருப்பெருக்கி, கரிய மலைப்பாறைகள் மேல் கொன்றை பூத்ததுபோல் பேருருக்கொண்டு எழுந்து, கண்களை நிறைக்கும் இருளென்றாகி அவர்களை கடந்து சென்றன. தொடர்ந்து ஒளிரும் வேல்களும் வாள்களும் ஏந்திய குதிரைப்படையினர் உச்சிப்பொழுதில் ஒளிகொண்டு செல்லும் ஓடை என நெறிநடையில் கடந்து சென்றனர். அவர்களுக்கு மேல் கோட்டையிலிருந்து பொழிந்த அரிமலர்கள் மழையென்றாகின.

அவற்றுக்குப் பின்னால் இருபுறமும் உயர்ந்த பொன்மூங்கில்களில் பட்டுச்சித்திர எழினிகளையும் செந்திரைகளையும் தூக்கியபடி காலாட்படையினர் வர, தொடர்ந்து பொன்மணி குலுங்கும் குடைக்கூரை நலுங்க, சகடங்களின் இரும்புப்பட்டைகள் சுருள்வாள்களென சுழன்று ஒளிவிட,, வெண்புரவிக்கால்கள் நீர்வெளியில் நடமிடும் நாரைகளென எழுந்தமைய, அணித்தேர்கள் நிரைவகுத்தன. மாபெரும் சித்திரத் திரைச்சீலையொன்று நலுங்குவதுபோல என்று கர்ணன் நினைத்தான். விழிவிரித்து அக்காட்சியையே நோக்கி நின்றான்.

பின்பு அவன் உள்ளம் பெருமுரசுமேல் கோல் வருடுவதுபோல் அதிரத் தொடங்கியது. சற்று கழித்தே அவன் ஜயத்ரதனின் அரசத்தேரை பார்த்துவிட்டிருப்பதை உணர்ந்தான். கரடி இருகைகளையும் விரித்து கால்களைப்பரப்பி ஒருகையில் வாளும் மறுகையில் தாமரை மலரும் ஏந்தி நின்றிருந்தது. காற்றில் கொடி பறக்கையில் அது உயிர்கொண்டு துள்ளியது. அஸ்தினபுரியின் கோட்டைச்சுவர் நாண்இழுக்கப்பட்ட வில்லென அதிர்ந்து முழக்கம் எழுப்பியது. இசைச்சூதர்களின் முரசுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் இணைந்து எழுந்த மங்கலப்பேரிசை அதனுடன் இணைந்துகொண்டது.

வீரர்களும் குடிகளும் எழுப்பிய வாழ்த்தொலிகள் செவிகளை அடைத்து ஒலியின்மையை உணரவைத்தன. ஏன் ஒவ்வொரு தருணத்தையும் வாழ்த்தொலிகளால் நிறைக்கவேண்டுமென முன்னோர் வகுத்தனர் என்று கர்ணன் எண்ணிக்கொண்டான். உணர்வெழுச்சிகள் ஒலியென வெளிப்படுத்தப்படுகையில் அவை அவ்வுள்ளங்களை உதறி காற்றில் எழுந்து புட்களென சிறகடித்துத் திரண்டு ஒற்றைச்சுழலென்றாகிவிடுகின்றன. பின்னர் அவை பேருருக் கொண்டு ஒவ்வொரு உள்ளத்தையும் கவ்வி தூக்கிச்செல்கின்றன.

இந்த இசைப்பெருக்கும் குரல்கொந்தளிப்பும் இல்லையேல் இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இவ்வுணர்வுச்சத்தில் இருப்பார்களா? இவர்களை வெறிகொண்டு காற்றில் துள்ளி எழச்செய்யும் அந்த உணர்வு அவர்களுக்குள் இருந்து எழுவதா? பிறிதொருவருக்காக அத்தனை உணர்வு எழுமா என்ன? இதோ விழிவிரித்து கழுத்து நரம்புகள் புடைத்து தெய்வமெழுந்த வெறியாட்டன் என கையசைத்துக்கூவும் இவனுள் ததும்புவது எது? புயல் அள்ளிச்சுழற்றும் சருகுகள் இவர்கள். சொல்லிச்சொல்லி, கூவிக்கூவி ஒற்றைப் பேருணர்வாக அனைத்தையும் ஆக்குவதற்குத்தான் இவ்வொலிப்பெருக்கு.

இக்குரல்கள் இன்றிருக்கும் மானுடர்களின் வாயிலிருந்து எழுந்து திரண்டவை என்றால் கொம்பும் குழலும் முரசும் முழவும் சங்கும் மணியுமென ஒலிப்பவை மறைந்தழியா ஒலியுலகை அடைந்த மூதாதையரின் குரல்கள். இன்று நாளையென பிளவுறாது நின்று ஒலித்துக்கொண்டிருந்தது அஸ்தினபுரி என்னும் ஒற்றைச்சொல்லில் திரண்ட மானுடம். தங்களுக்கென இருண்ட கரவுப்பாதைகளும் தாங்கள் மட்டுமே ஏறிச்செல்லும் தேர்களும் கொண்ட தனித்த ஆத்மாக்கள். பிறப்பும் விடுதலையும் தனித்து மட்டுமே என்று பிரம்மத்தால் விதிக்கப்பட்டவை. இக்குரலால் அவற்றை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிற்றுயிர்களை துடைப்பத்தால் கூட்டி கூடையில் அள்ளுவதைப்போல.

முதன்முதலில் வாழ்த்துக்குரல் எழுப்ப மானுடரை பயிற்றுவித்த தலைவன் எவன்? அவன் ஆழிவெண்சங்கு கொண்டு மலைநின்ற மால். வெள்விடையேறி விழிநுதல்கொண்டு இருந்த செவ்வேள். கொல்வேல் மயிலோன். மதகளிறுமுகத்தோன். விரிகதிர் வெய்யோன். அனலோன். கடலோன். வேழமூர்ந்த வேந்தன். மூத்தோன், முன்னோன். முதல்பறவை. திசையறிந்தோன். தனித்தோன். மானுடரை ஒற்றைத்திரளாக்க அவனால் முடிந்தது. அது மழைச்சரடுத்திரளை அள்ளிமுறுக்கி ஒரு வடம் செய்வதுபோல. அதிலேறி விண்ணேறி அமர்ந்தான். குனிந்து மானுடரை நோக்கி புன்னகை செய்துகொண்டிருக்கிறான்.

என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று அவன் தன்னை வியந்து மீட்டபோது கரடி மிக அணுக்கத்தில் வந்துவிட்டிருந்தது. அரசப்பெருந்தேரின் சகடங்களின் அதிர்வு கால்கள் வழியாக தன்உடலை வந்தடைவதுபோல் உணர்ந்தான். சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த அத்தனை உணர்வுகளில் இருந்தும் தனித்துவிடப்பட்டவன்போல் தன் உடல் பதறிக்கொண்டிருப்பதை உணர்ந்து சால்வையை பற்றிக்கொண்டான். அவனுக்கு மட்டுமேயான ஒரு காற்று அதை நழுவச் செய்தது. அவனை மட்டுமே சூழ்ந்த வெம்மை அவனை வியர்வை கொள்ளவைத்தது.

துச்சலன் மெல்லிய குரலில் “மூத்தவரே, வேண்டுமென்றே துவாரகையின் இளையயாதவருக்கு நிகரான பொற்தேரை அமைத்திருக்கிறான் சைந்தவன். அதை சிந்து நாட்டிலிருந்து இத்தனை தொலைவு கொண்டுவரவும் செய்திருக்கிறான். என்ன ஓர் ஆணவம்!” என்றான். “சிந்து தொல்நிலம் இளையோனே” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இளைய யாதவர் வெல்லற்கரியவர். விண்ணென விரிந்தவர்” என்றான் துச்சலன். “இவன் மானுடன். ஊழ்முன் நின்று கலங்கும் உள்ளம் கொண்டவன்.”

ஜயத்ரதனின் அணிப்பொற்தேர் விழியறியா விண்செவிமடல் ஒன்றின் குண்டலம்போல் ஆடிக்கொண்டிருந்தது. ஈயக்கலவையால் மஞ்சள்கிளியின் சிறகெனப்பொலிந்த கிளிச்சிறைப்பொன் பூசிய சிற்பச்செதுக்குத் தூண்களும் குவைமுகடும் கூம்பும். மணிதூங்கும் தொங்கல்கள் குலுங்கின. ஏழு வெண்புரவிகளும் பழுதற்ற நேருடல் கொண்டவை. தேர்ந்த இசைச்சூதரின் முரசுக்கோல்களென அவற்றின் கால்கள் மண்ணை அறைந்து தாளமிட்டன. தேரின் எட்டு உருளாழிகளும் அவற்றின்மேல் ஏற்றப்பட்ட மூங்கில்விற்களை மெல்ல அழுத்தி அசைக்க மெல்லிய நீரலைகளில் ஏறிஅமைந்து வரும் படகுபோல் செந்நிறப்பட்டுத் திரைச்சீலைகள் நலுங்க அது வந்தது.

தேரின் முன்னால் அமரபீடத்தில் பொன்னிறத் தலைப்பாகைமேல் மலைநாரை பனியிறகு சூடி, மார்பில் மகரகண்டியும் கைகளில் பொற்கங்கணமும் அணிந்து வாள்மீசையுடன் அமர்ந்திருந்த தேர்ப்பாகன் சவுக்கை காற்றில் நாகபடமெனச் சொடுக்கி மெல்லிய ஓசையெழுப்பி தேரை செலுத்தினான். தேருக்கு இருபுறமும் இரண்டு நீள்நிரைகளாக பதினெட்டு வெண்புரவிகள் கொக்குக்கூட்டங்கள்போல் கழுத்தை முன்சரித்து, தலைமேல் சூடிய காமரூபத்து மலையணில்வால்கள் நாணல்பூங்கொத்துகள் என காற்றில் உலைந்தாட வந்தன. தேரின் வெண்சிறகுகள் போல தோன்றின அவை.

அரசத்தேர் அணுகியதும் அதன் முகப்பில் வந்த புரவியில் அமர்ந்திருந்த காவலர்தலைவன் கைதூக்க தொடர்ந்த தேரில் அமர்ந்திருந்த இசைச்சூதர்கள் எழுந்து கொம்புகளையும் சங்குகளையும் முழக்கினர். பெருந்தேரை தொடர்ந்துவந்த அணித்தேர்கள் ஒவ்வொன்றிலும் சங்கொலி எழுந்து அணிநிரையின் பின்பக்கம்வரை படர்ந்துசெல்ல அனைத்து தேர்ப்பாகரும் கடிவாளங்களை இழுத்து புரவிகளை நிறுத்தினர். தேர்கள் விரைவழிந்து சகடஒலிகளும் குளம்பு மிதிபடும் கலைந்த தாளமுமாக தேங்கிநின்றன. அவற்றில் ஆடிய மணிகள் சிணுங்கின. தேர்நிரைக்குப் பின்பக்கம் வந்து நின்ற சீர்வரிசை வண்டிகள் விரைவழியும் ஒலிகேட்டது. தொலைவில் வண்டிகளை ஒழுங்குபடுத்தும் படைவீரர்களின் கூச்சல்களும் கொம்பொலிகளும் எழுந்தன.

“மூத்தவரே” என்று மெல்லிய குரலில் அழைத்துவிட்டு துச்சலனும் துச்சகனும் முன்னால் நடந்துசெல்ல கர்ணன் விழிப்படைந்து தன்னருகிருந்த அணுக்கனிடமிருந்து பொற்தாலத்தை வாங்கியபடி அவர்கள் நடுவே நடந்துசென்றான். ஜயத்ரதனின் தேருக்குப் பின்னால் வந்த வெண்திரையிட்ட தேர்களிலிருந்து சிற்றமைச்சர்கள் இறங்கி அரசத்தேருக்கு வலப்பக்கமாக வந்து அணிவகுத்தனர். அவர்களுக்குப் பின்னால் வந்த இளஞ்சிவப்புத் திரையிடப்பட்ட தேர்களிலிருந்து அணிப்பரத்தையர் இறங்கி மங்கலத்தாலங்களுடன் இடப்பக்கமாக வந்து வரிசையாயினர். அவர்களுக்குப் பின்னால் வந்த இளநீலத் திரையிடப்பட்ட தேர்களிலிருந்து இசைச்சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் இறங்கிவந்து தேருக்குப் பின்னால் நின்றனர்.

தலைக்கோலன் முன்னாலெழுந்து கோல்சுழற்ற மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. தேருக்கு முன்புறம் கர்ணனும் இளையகௌரவர்களும் நின்றனர். மூச்சிரைக்க ஓடிவந்த அமைச்சர் கனகர் திரும்பி பின்னால் நோக்கி கையசைத்து ஆணைகளை பிறப்பித்தார். கோட்டைமுகப்புவாயிலில் நின்ற வைதிகர்கள் வேதம் ஓதியபடி வந்து அவர்களை கடந்துசென்று ஜயத்ரதனின் தேரை அணுகினர். இடப்பக்கத்திலிருந்து அஸ்தினபுரியின் அணிப்பரத்தையரும் மங்கலச்சூதரும் அவர்களை தொடர்ந்துசென்றனர்.

கனகர் இருகைகளையும் விரித்து சிந்துநாட்டின் அமைச்சருக்கு செய்திசொல்ல அவர் கண்களை அசைத்து அச்செய்தியை பிறருக்கு சொன்னார். மூத்தஅமைச்சர் ஒருவர் தேரின் படிகளில் ஏறி திரைவிலக்கி உள்ளே சென்று ஜயத்ரதனை அழைத்தார். கனகர் சிறியமேடை ஒன்றில் ஏறி கோட்டைமேலிருந்து அவரை நோக்கிக் கொண்டிருந்த காவலனை நோக்கி கையசைத்து ஆணையிட்டார். கோட்டைமேல் பெருமுரசுகளருகே கோல்காரர்கள் எழுந்து கையோங்கினர். கொம்புகள் இளங்களிறின் துதிக்கைகள் என எழுந்து வாய்களுடன் பொருந்தின. கோட்டை காத்திருந்தது.

திரைவிலக்கி அரசமுழுதணிக்கோலத்தில் ஜயத்ரதன் வெளித்தோன்றியதும் ஆயிரம்கைகளால் கோட்டை ஏந்திக்கொண்டிருந்த அத்தனை பெருமுரசுகளும் கொம்புகளும் முழவுகளும் சங்குகளும் ஒற்றைப்பேரொலியாக ஆயின. விண்ணகம் முழுக்க இடிநிறைந்ததுபோல் இருந்தது. பலநூறு எரியம்புகள் எழுந்து வானில் வெடித்து விண்மீன் மழையென பொழிந்தன. வாழ்த்தொலிப் பெருக்கு ஒளியையும் காற்றையும் அதிரச்செய்து பார்வையையே மறைத்ததுபோல் தோன்றியது.

இருகைகளையும் கூப்பியபடி ஜயத்ரதன் இறங்கி அஸ்தினபுரியின் மண்ணில் நின்றதும் வைதிகர்கள் வேதம் ஓதியபடி கங்கைநீரை அவன்மேல் தெளித்து அரிமஞ்சளும் மலருமிட்டு வாழ்த்தினர். மங்கலப்பரத்தையர் குரவையொலியுடன் அவன் எதிரே சென்று தாலங்களை அவன்முன் நீட்டினர். அவன் திரும்பி தன் பின்னால்நின்ற மங்கலச்சேடியரின் தாலங்களிலிருந்து பொன்நாணயங்களை எடுத்து தாலத்திற்கொன்றாகப் போட்டு ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு நறுமணப்பொருளை எடுத்து தன் சென்னியில் தொட்டு மறுபக்கமிருந்த தாலத்தில் போட்டான்.

பதினெட்டு மங்கலத்தாலங்கள் காட்டப்பட்டபின் சேடியர் விலக இசைச்சூதர் கௌரவரின் இருபக்கமும் சூழ்ந்துகொண்டனர். இசைமுழங்க கர்ணன் நீள்சீரடிவைத்து நடந்து ஜயத்ரதனை அணுகி கைகூப்பி “சிந்து நாட்டரசே, தாங்கள் அஸ்தினபுரிக்குள் எழுந்தருளும் இந்நாள் மங்கலம் கொள்க! திருவுடை அரசர் திருமாலே என்பார்கள். தங்கள் வருகையால் எங்கள் களஞ்சியங்களில் கூலமும், கருவூலங்களில் பொன்னும், கன்னியர் நெஞ்சங்களில் கனலும், அன்னையர் முலைகளில் அமுதும்,, கற்றோர் சொற்களில் மெய்யும் நிறைவதாக!” என்றான்.

ஜயத்ரதன் விழிதூக்கி கர்ணனை நோக்கினான். அவன் கர்ணனை அறியாதவன் போலிருந்தான். புன்னகை அரசர்களுக்குரிய விழிதொடாத பொதுமலரலாக இருந்தது. கற்றும் சொல்லியும் சொல்லன்று ஒலியே என்று ஆகிவிட்ட சொற்களில்   “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று கூறி அவன் தலைவணங்கினான்.

கர்ணன் ஜயத்ரதனின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். ஆனால் தான் நோக்குவதை அவன் உணரக்கூடாது என்றும் நுண்ணிதின் உளம் தேர்ந்திருந்தான். ஜயத்ரதன் முகம் அப்போதுதான் அச்சிலிருந்து எடுக்கப்பட்ட செப்புப்படிமையின் சீர்வடிவும் உறைந்த ஒற்றை உணர்வும் கொண்டிருந்தது. விழிகள் தாலத்தையும் ,அவற்றை ஏந்தி நின்ற கௌரவர்கள் முகத்தையும் இணையாக நோக்கின. அசையாச் சுடர்போல் ஓர் அசைவு அவனில் இருப்பதை கர்ணன் கண்டான். அவன் தன்னை நோக்கவில்லை என முதற்கணம் உணர்ந்து மறுகணமே அவன் தன்னையன்றி பிறர் எவரையும் நோக்கவில்லை என்றும் அறிந்துகொண்டான்.

இப்படி கரந்துநோக்கும் கலையை அவன் அறிவான் என்பதே அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. ஒருபோதும் பிறர் தன்னை நோக்குவதை அவன் பொருட்டென எண்ணியதில்லை. அது பெண்டிர் இயல்பென்று இளவயதிலேயே ஒரு விலக்கம் கொண்டிருந்தான். இன்று தன் ஆணிலை அழிந்து பேதைப்பெண்ணென உள்ளம் நீர்மைகொள்ள அங்கு நின்றிருப்பதை உணர்ந்தபோது நாணுற்று அதனாலேயே தருக்குற்று தன்தோள்களை நிமிர்த்தி தலையைத்தூக்கி முழங்கிய குரலில் “அஸ்தினபுரிக்கு தங்கள் வருகை சிறப்புறுக! குலமன்று அமர்ந்து இந்நாட்டை ஆளும் பேரரசர் திருதராஷ்டிரரும் அவர் உளமாளும் பிதாமகர் பீஷ்மரும் அவைச்சொல்லாளும் கிருபரும் துரோணரும் முடியாளும் துரியோதனரும் அவ்வாறே விழைகிறார்கள் அரசே” என்றான்.

எந்த மாறுதலுமின்றி “நன்று” என்றான் ஜயத்ரதன். கர்ணன் தலைவணங்கி பின்னால் நகர துச்சலனும் துர்முகனும் சென்று ஜயத்ரதனை வணங்கி முகமன் உரைத்தனர். கௌரவர்கள் ஒவ்வொருவராகச் சென்று முறைமைச்சொல் உரைத்து வரவேற்றபின் கர்ணன் வலம்நின்று ஜயத்ரதனை நகர்நோக்கி அழைத்துச்சென்றான். துச்சலனும் துர்முகனும் இருபக்கமும் உடைவாள்தொட்டு நடந்துவர நடுவே கைகூப்பியபடி ஜயத்ரதன் நடந்தான். அவனைத் தொடர்ந்து அவனது அமைச்சர்களும் மங்கலச்சேடியரும் சென்றனர்.

சாலையின் இருபுறமும் கூடிநின்ற அஸ்தினபுரியின் குடிமக்களும் வீரர்களும் வாழ்த்தொலிகள் முழங்க அவன்மேல் அரிமலர் தூவி வாழ்த்தினர். அவர்கள்மேல் கோட்டைக்குமேல் எழுந்த இளங்கதிரவனின் ஒளி பொழிந்தது. “மாமன்னர் ஜயத்ரதர் வாழ்க! சைந்தவர் வாழ்க! ஏழுநீர் ஆளும் எழுகதிர் வாழ்க!” என்று வீரர்கள் கூச்சலிட்டனர். அப்பாலிருந்து ஒரு குரல் “பொற்கதிர் பெற்ற மைந்தர் கர்ணன் வாழ்க! ஒளிமணிக்குண்டலம் வாழ்க! எரியொளிர் கவசம் வாழ்க!” என்று ஓங்கி ஒலித்தது.

திகைத்து கர்ணன் திரும்பி நோக்கினான். வெறிகொண்டவர்போல உடம்பெல்லாம் பதைபதைக்க கைகளிலும் கழுத்திலும் இழுத்துக்கட்டிய நீலநரம்புகளுடன் ஒரு முதியவர் பட்டுத்திரைநின்ற பொன்மூங்கில் கணுவில் மிதித்து மேலேறி கைகளை வீசி “செய்யோன் சேவடி வாழ்க! வெய்யோன் மைந்தன் வாழ்க!” என்று கூவினார். “வாழ்க! அளிகொள் அங்கைகள் வாழ்க! அழியாப்பெருங்கருணை வாழ்க! அங்கமன்னர் வாழ்க!” என்று கூட்டம் கூவியது. சற்றுநேரத்தில் அங்குள்ள அத்தனைபேரும் கர்ணனை வாழ்த்தி கூவத்தொடங்கினர்.

கர்ணன் திகைத்து துச்சலனிடம் ஏதோ சொல்ல முயல அவன் மலர்ந்தமுகத்துடன் தானும் கையசைத்து அவர்களுடன் இணைந்திருப்பதைக் கண்டு கனகரை நோக்கினான். கனகர் கைகாட்ட வீரர்கள் அதை புரிந்துகொண்டு “சிந்துமைந்தர் வாழ்க! எழுநீர் ஏந்தல் வாழ்க!” என்று கூவினர். அதை பிற வீரர்களே ஏற்றுக்கூவினர். அவ்வொலி தனித்தெழாது கரைந்தது. கர்ணன் ஜயத்ரதனை நோக்கினான். அவன் முகம் முதற்கணம் போலவே மென்சிரிப்பும் விழிமலர்வுமென சிலைத்திருந்தது.

அவர்களின் ஊர்வலம் கோட்டையின் முகப்பைக் கடந்து உள்ளே சென்றபோது கோட்டைக்காவலர்கள் இருபக்கமும் நின்று வாழ்த்துக்கூவினர். மறுபக்கம் இளவெயில் நிறைந்து நின்றிருந்த பெருமுற்றத்தில் பொற்பூச்சுமின்னிய தேர்களும், திரைச்சீலைகள் நெளிந்த பல்லக்குகளும், முகபடாமிட்ட யானைகளும், அல்லிமலர்ப்பரப்பு போன்ற புரவித்திரளும் நிறைந்திருந்தன. அணிப்பந்தலில் நின்றிருந்த அமைச்சர் விதுரரும் ஏழு சிற்றமைச்சர்களும் வணங்கியபடி ஜயத்ரதனை நோக்கி வந்தனர்.

ஜயத்ரதன் விதுரரை தலைகுனிந்து வணங்கி “பேரமைச்சரை வணங்குகிறேன். நெடுநாட்களுக்குப்பின் தங்களை சந்திக்கும் நல்லூழ் பெற்றேன்” என்றான். விதுரர் நகைத்தபடி அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு “நன்று. மேலும் தோள்பெருத்து தலை உயர்ந்திருக்கிறீர்கள் அரசே” என்றார். “சிந்துநாடு தனக்கென்று ஒரு விண்ணரசனை பெற்றிருக்கிறது என்றொரு சூதன் இங்கு பாடினான். இன்று அதை காண்கிறேன். இந்நகர் ஊர்வதற்கு தங்களுக்குரிய ஊர்தி ஐராவதமே” என்றார்.

ஜயத்ரதன் நகைத்து “வெண்ணிறயானை ஒன்று இங்கு கொண்டுவரப்பட்டதை முன்னரே ஒற்றர்கள் சொன்னார்கள் அமைச்சரே” என்றான். விதுரர் அவன் தோளைத் தட்டியபடி சிரித்தார். சிற்றமைச்சர் கைகாட்ட முற்றத்தின் மறுபக்கம் அணிகொண்டு நின்றிருந்த வெண்களிறு இருபாகன்களால் கொம்புபற்றி அழைத்துக்கொண்டு வரப்பட்டு ஜயத்ரதன்முன் வந்துநின்றது. அதன் செந்நிறக்காதுகளில் காளானின் தளிர்த்தண்டுகள்போல வெண்முடிகள் எழுந்திருந்தன. முகமெங்கும் நீர்க்கலங்கல் போல செந்தேமல் பரவியிருந்தது. சிவந்த துதிக்கையால் அவர்களின் மணம்கொள்ள முயன்றது.

ஜயத்ரதன் “இதன் பெயரென்ன?” என்றான். “இதை நாங்கள் ஐராவதம் என்றே அழைக்கிறோம்” என்றார் விதுரர். கனகர் “இங்கு வந்து எட்டு மாதங்களே ஆகின்றன. நன்குபயின்ற களிறு. ஆனால் பார்வை மிகவும் குறைவு. துதிக்கைபற்றி அழைத்துச்சென்றாலொழிய பகலில் எங்கும் செல்லாது” என்றார். ஜயத்ரதன் அதன் அருகே சென்று அதன் மத்தகத்தை கையால் அறைந்து வளைந்த கொம்பைப்பற்றி உடலைத்தூக்கி பின் இறங்கினான். யானை சிவந்த துதிக்கையால் அவன் தோளை வருடி தோலுரசும் ஒலியுடன் இறக்கியது.

ஜயத்ரதன் முகம்மலர்ந்து விதுரரிடம் “பெரியதோர் வெண்தாமரைபோல் இருக்கிறது” என்றான். “ஆம், இதற்கு பத்மன் என்றுதான் முன்னர் பெயரிட்டிருந்தார்கள்” என்றார் விதுரர். “ஏறிக்கொள்ளுங்கள் அரசே! இந்திரன் எங்கள் நகரிலும் எழுந்தருளட்டும்.” ஜயத்ரதன் “ஆம், இன்று ஒரு நாள் இங்கே விண்ணில் ஊர்கிறேன்” என்றபடி யானையின் அருகே செல்ல பாகன் அதன் காலை தட்டினான். வலக்காலை மடித்து தூக்கி அது மெல்ல பிளிறியது. அதன் காலை மிதித்து தொடைக்கணுவைப்பற்றி ஏறி கால்சுழற்றி அம்பாரிமேல் அமர்ந்தான். அவன் ஒருகணமேனும் தன் விழிகளை சந்திப்பான் என கர்ணன் நினைத்தான். ஆனால் அவன் கர்ணனை முற்றிலும் அறியாதவன் போலிருந்தான்.

யானையின் பின்பக்கக்கால் வழியாக ஏறிஅமர்ந்த காவலன் வெண்கொற்றக்குடையை ஜயத்ரதனுக்கு மேலாக பிடித்தான். பிற இரு காவலர்கள் அவனுக்குப்பின்னால் அமர்ந்து வெண்சாமரங்களை இருபக்கமும் வீசத்தொடங்க விண்ணிலெழுந்த வெண்சிறகுப்பறவைபோல் அவன் யானைமேல் ஊர்ந்து முன்சென்றான். சீர்நடையில் கால்களை எடுத்துவைத்து யானை அரண்மனையை நோக்கிய அரசவீதியில் நுழைந்தது.

இருபக்கமும் கூடியிருந்த அஸ்தினபுரியின் குடிமக்கள் மலர் பொழிந்து பெருங்கூச்சலுடன் அவனை வாழ்த்தி வரவேற்றனர். இரு கைகளையும் விரித்து இளைஞர்களை வாழ்த்தியும் கைகூப்பி முதியவர்களை வணங்கியும் ஜயத்ரதன் வெண்களிறுமேல் ஊர்ந்தான். அவனுக்குப் பின்னால் அஸ்தினபுரியின் குழந்தைகளும் பெண்களும் ஆர்ப்பரித்தபடி அணிஊர்வலமாக சென்றனர். அவன் குடைமேலும் கவரியிலும் காலையொளி சுடர்விட்டது. கர்ணன் அவனையே நோக்கியபடி நின்றான்.

தொடர்புடைய பதிவுகள்

புதியவர்களின் கடிதங்கள் 3

$
0
0

0Nd90_N3g_KJm7RACdERogT22EVMOxlyzJCq-jpeGpU

 

அன்பு ஜெமோ அவர்களுக்கு

தங்களின் ஈரோடு சந்திப்பு குறித்த வலையேற்றம் கண்டேன்.  தங்களின் 3வருட வாசகன் யானை டாக்டர் முதல் அறிமுகம் குமட்டலுடன் படித்து நானே அந்த வைத்தியனாய் மாறிய அனுபவமும் டாப்ஸ்லிப் சுற்றுலா நினைவுகளும் என்னை அலைக்கழித்தன.  மீண்டும் மீண்டும் உங்கள் தளத்தை கண்களும் கைகளும் துழாவியது.  நல்வாசிப்பு என்னில் நானே கண்டேன்.  நான் கோவைவாசியாதலால் உங்களுடைய வியாசர் உரை, கீதை உரை, சங்கரர் உரை நேரில் கேட்கும் பேறு பெற்றேன்.  ஈரோட்டில் தங்களை சந்தித்து விவாதிக்கும் வாய்ப்புக்கு விழைகிறேன்.

நன்றி

கண்ணன்,

கோவை

அன்புள்ள கண்ணன்

குமட்டலுடன் வாசித்ததை எண்ணி புன்னகைசெய்தேன். இறுதியில் குமட்டல் இல்லாமலாகியிருக்குமென நினைக்கிறேன். ஈரோட்டில் சந்திப்போம் வருக

ஜெ

அன்புள்ள ஜெ,

நான் மின்னனு பொறியியல் இறுதியாண்டு மாணவன். உங்களின் புத்தகங்களையும், பதிவுகளையும் கடந்த இரண்டாண்டாக வாசித்து வருபவன். வரக்கூடிய வாய்ப்புள்ள என் முதல் நிகழ்வாய் இந்த ஊட்டி கலந்துரையாடல் நிகழ்வை கருதுகிறேன். வர தயாராய் உள்ளேன்.

இப்படிக்கு,

ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா. மா

அன்புள்ள சங்கர்

மின்னணு பொறியியல் படிப்பு என்பது ஒருவகையில் படிப்பு வெறியுடன் கடந்து செல்லவேண்டியது என நினைக்கிறேன். படிப்பை சிக்கலாக்கிக் கொள்ளாமல் இலக்கியம் வாசிக்கவும்

வருக

 

ஜெ

அன்புள்ள ஆசிரியருக்கு,

உங்களுக்கு சில கடிதங்கள் எழுதியிருக்கிறேன். புதியவர்களுக்கான சந்திப்பில் இணைய விரும்புகிறேன். நண்பர் ஒருவருக்காகக் காத்திருந்தது தப்பாகப் போய்விட்டது. இடங்கள் நிறைவுற்றது உண்மையில் வருத்தமாக இருக்கிறது. அடுத்த சந்திப்பிலாவது வாய்ப்பு கிடைக்குமென்று நம்புகிறேன். இப்படியான சந்தர்ப்பங்களில் உங்களை சந்தித்தால் தான் உண்டு. இலக்கிய விழாக்களில் வாய்ப்பே இல்லை. இன்னுமொரு சந்திப்பை எங்களுக்காக நடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி,

ரிஷி

அன்புள்ள ரிஷி

ஈரோட்டில் சந்திப்போம்

நான் என் வாசகர்களிடம் நேரடியாக உரையாடத்தொடங்கியபின்னரே ஒவ்வொருநாளும் வாழ்க்கையைப்பார்க்கத் தொடங்கினேன். தொடர்பயணமும் உரையாடல்களும்தான் இத்தனை எழுதியும் என்னை காலியாக ஆக்காமல் நிறைக்கின்றன

இளையதலைமுறையைச் சந்திப்பது ஒரு தொடக்கமாக அமையட்டும்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

2013 ஜூன் மாதம் முதல் தங்கள் வலைத்தளத்தை படித்து வருகிறேன். அந்த வருடம்காந்தி பற்றிய ஒரு கேள்விக்கு மிக விரிவான பதில் அளித்திருந்தீர்கள்.நான்எங்கு போனாலும் மகாபாரதமும் என் கூடவே எப்படியோ ஒட்டிக் கொள்ளும். ஆறேமாதத்தில் நீங்கள் வெண்முரசு துவங்க அதை சரியாக உள்வாங்கி படிக்க எனக்குஒரு வருடம் ஆனது. தங்களை முதன் முறையாக வெண்முரசு நூல் வெளியீட்டுவிழாவில் மேடையில் பார்த்தேன். பின்னர் இரு விஷ்ணுபுரம் விருது விழாமற்றும் ஒரு நாள் கீதை உரையில் பார்த்தது. பொதுவாக புதியவர்களிடம் பேசஎனக்கு கொஞ்சம் தயக்கம் உண்டு.  என் கூச்ச சுபாவமே அதற்கு காரணம்.ஆகையால் உங்களை அருகில் பார்த்தும் பேச வரவில்லை. மிக குறைவாக பேசுவதும்அதிகம் கவனிப்பதுமே என் வழக்கம். கடந்த 4 மாதங்களாக சென்னை வெண்முரசுகூடுகையிலும் கலந்து கொள்கிறேன்.  தற்போது தங்கள் புதியவர்கள் சந்திப்புஅறிவிப்பு கண்டேன். சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்

ஏகப்பட்ட செந்தில்கள். ஏகப்பட்ட சிவக்குமார்கள். நேரில்சந்தித்து ஏதேனும் அடைமொழி போட்டாலொழிய நினைவில் நிற்கமாட்டீர்கள்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

சங்கரர் உரை -விமர்சனம்

$
0
0

1

 

கீதை- சங்கரர் உரைகளைப்பற்றி நண்பர் அரவிந்தன் கண்னையனின் விமர்சனக்குறிப்பு. தமிழில் எழுதியிருக்கலாமென்பதே என்னுடைய மறுமொழி. இதில் சுட்டப்பட்டுள்ள எதிர்மறைவிமர்சனங்களையும் கருத்தில்கொண்டு விரிவாகவே சிந்திக்கவேண்டும்

 

http://contrarianworld.blogspot.in/2016/01/jeyamohans-discourses-on-gita-and.html

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மிமிக்ரி கேரளம்

$
0
0
நாதிர்ஷா

நாதிர்ஷா

சில விசித்திரமான ரசனைகள் எனக்குண்டு என்று சொல்லும்போது நண்பர்கள் ஆச்சரியப்படுவதுண்டு. அதிலொன்று மலையாள மிமிக்ரி மற்றும் காமெடி ஷோக்கள். எப்போதும் சலிப்புறும்போது நான் அதைத்தான் தேடிச்செல்கிறேன்

பொதுவாகவே மிமிக்ரி என்பது ஒரு அசட்டுக்கலை.தமிழக மிமிக்ரி ஒரு வன்கொடுமை. ஆனால் மலையாளத்தில் மட்டும் அதை ஒரு நுண்கலையாக வளர்த்து எடுத்து மிகப்பெரிய ஒரு துறையாக ஆக்கியிருக்கிறார்கள். மலையாள வெகுஜனப்பண்பாட்டையும் பொதுவான அரசியல் சூழலையும் அறிந்தவர்களுக்கு அது பெரியதோர் கொண்டாட்டவெளி. நக்கல்களும் கிண்டல்களும் மிகநுட்பமானவை என்பதனால் அதை அறியாதவர்கள் அதிகமாகரசிக்க முடியாது.

நண்பர் தமிழினி வசந்தகுமார் ஒருமுறை சொன்னா. மிகிக்ரிக்கலையை வளர்த்து அதை ஒரு கேரளப்பொதுப்பண்பாடாகவே ஆக்கிவிட்டார்கள் மல்லுக்கள், விளைவாக  மலையாளிகளில் மிமிக்ரி செய்யாதவர்களே இல்லை என்று.

இன்னொரு பக்கம் மிமிக்ரி கலையால் கேரளத்தில் எதுவுமே தீவிரமல்ல என்ற மனநிலை உருவாகிவிட்டது என்று சகரியா கடுமையாகக் குற்றம்சாட்டினார் ஒருமுறை. [ஆனால் அவரே ஓர் இலக்கிய மிமிக்ரிக் கலைஞர். பிறரது எழுத்துமுறையை போலிசெய்து அவர் எழுதிய கேலிக்கதைகள் பல முக்கியமான கலைப்படைப்புகள்]

சொல்லப்போனால் இடதுசாரி அரசியலின் தசையிறுக்கத்தை மிமிக்ரி முழுமையாகவே அடித்து நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். அரசியல்வெறிகளை சிரிப்பால் எதிர்கொண்ட மிமிக்ரிதான் கேரளத்தில் அரசியல்கொலைகளை இல்லாமலாக்கியது என்பவர்கள் உண்டு.

மிமிக்ரி கேரளத்தின் செல்லக்குழந்தை. அதை சீண்ட எவரையும் அனுமதிப்பதில்லை அங்குள்ள பொதுமக்களின் கூட்டுமனசாட்சி. ஆகவே அவர்கள் எதையும் செய்யலாம். மம்மூட்டியையும் மோகன்லாலையும் உட்காரச்செய்து கேலிசெய்து தாறுமாறாகக் கிழிக்கலாம். முதலமைச்சரையும் அமைச்சர்களையும் எதிர்கட்சிக்காரர்களையும் வேடிக்கைப்பொருட்களாக ஆக்கலாம்,

 

அய்யப்ப பைஜு

அய்யப்ப பைஜு

அத்தனை தொலைக்காட்சிகளிலும் மிமிக்ரிதான் பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கும். அதைத்தவிர அன்றாடம் என மேடைநிகழ்ச்சிகள். பல மிமிக்ரிக் கலைஞர்கள் திரைநட்சத்திரங்களைவிட புகழும் பணமும் சம்பாதிப்பவர்கள். சாதாரண மக்களின் பேச்சில் புழங்கும் பல சொல்லாட்சிகள் மிமிக்ரியில் இருந்து வந்தவை.

கேரளத்தின் பல புகழ்பெற்ற கலைஞர்கள் மிமிரியிலிருந்து வந்தவர்கள். நெடுமுடிவேணு, கலாபவன் மணி, கலாபவன் ஷிஜுன், லால், ஹரிஸ்ரீ அசோகன் ,சலீம்குமார்,ஜெயசூர்யா,ஜெயராம், திலீப், சுராஜ் வெஞ்ஞாறமூடு, என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.ஒவ்வொரு சினிமாவிலும் ஒருவர் அப்படி வந்துகொண்டிருக்கிறார்கள்

ஹரிஸ்ரீ , கலாபவன் என்னும் இரு கலைக்குழுக்கள் மிமிக்ரியின் விளைநிலங்கள். என் பிரியத்திற்குரிய பல கலைஞர்கள் அவற்றிலிருந்து வந்தவர்கள். கலாபவன் மணி அவர்களில் முதன்மையானவர். ஜெயராம் மேடையில் நஸீராகவே மாறக்கூடியவர்.

இன்றுள்ள நட்சத்திரங்களில் கோட்டயம் நசீர் மலையாள நடிகர்கள் அனைவரின் குரலிலும் பேசுவார். அதாவது அவர்களின் புகழ்பெற்ற வசனங்களை தோராயமாக உச்சரிப்பதல்ல அது. அந்த நடிகர்களின் மனைவியரிடமே ஃபோனில் அழைத்து அவர்களைப்போல பேசி ஏமாற்றும் அளவுக்கு துல்லியமானது. அப்படி ஒரு நிகழ்ச்சி ஒருமுறை ஒளிபரப்பானது.

 

நடிக்ர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள் இலக்கியவாதிகள் செய்தியறிவிப்பாளர்கள் என அனைவரின் குரல்களிலும் அத்தனை ஒலிநுட்பங்களுடனும் உரையாட அவரால் முடியும். அவருக்கு நிகரான கலைஞர் நாதிர்ஷா.. சமீபமாக பிஷாரடி என்பவர் புகழ்பெற்ற கலைஞர். அவருடையது புத்திசாலித்தனமான உள்ளடிகள்.

அய்யப்ப பைஜூ, நெல்ஸன் இருவரும் சில நிரந்தரக் கதாபாத்திரங்களை நடிப்பவர்கள். ஸ்டேண்டப் காமெடி என சொல்லலாம். குடி கேரளத்தின் முக்கியமான நோய், குடிகாரர்களின் பாவனைகளை இவர்கள் நடிப்பது மிகமிகநுட்பமானது. சற்றும் மிகையற்ற, ஆனால் வெடித்துச் சிரிக்கவைக்கும் நடிப்பு. உண்மையாகவே அரசியலையும் பண்பாட்டையும் புரிந்துகொண்டு உருவாக்கப்படும் நக்கல்கள்.

1[கோட்டயம் நசீர்]

 

பலசமயம் இந்த நக்கல் எந்த எல்லையையும் கடக்கும். மறைந்த கேபி.உம்மர் நடனநிகழ்ச்சிக்கு நீதிபதியாக வருகிறார். ’ஷாஜியுடே பெண்வேடம் அஸலாயி. வைகுந்நேரம் பங்களாவிலேக்கு வா” . . இஸ்லாமிய நம்பிக்கைகளை துபாயில் வைத்து கிண்டல் செய்கிறார்கள். முஸ்லீம் மதகுரு இவர்களின் நிரந்தர இலக்கு

இன்னொரு முக்கியமான விஷயம் இந்த நகைச்சுவைகளை இவர்களே உருவாக்குவதில்லை. தேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர்கள் அமர்ந்து உருவாக்கி பயின்று மேடையேற்றுகிறார்கள். கிண்டல்களும் பகடிகளும் நுணுக்கமானவையாகவும் அர்த்தமுள்ளவையாகவும் இருக்கும். தீவிர இலக்கியவாதிகளைப் பற்றிய பகடிகளும் பெருவாரியாக ரசிக்கப்படுகின்றன. குறிப்பாக சச்சிதானந்தன் இவர்களின் முக்கியமான இரை. ஒருமுறை என்னையே ஒருவர் பகடி செய்தார், தமிழ்நெடியடிக்கும் மலையாளத்தில் நிறுத்தி நிறுத்தி நான் பேசிக்கொண்டிருப்பதை நானே திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பண்பாட்டுரீதியாகவும் ஒரு நுட்பம் உண்டு. இவர்களில் அனேகமாக அனைவருமே வடகேரளத்தைச்சார்ந்தவர்கள். கணிசமானவர்கள் இஸ்லாமியர். திருவனந்தபுரத்தைச்சேர்ந்த கலைஞர்கள் எவருமில்லை. இக்கலை உருவாவதற்கான சூழல் அங்கே உள்ளதுபோலும்.

பிஷாரடி

பிஷாரடி

ஏசியானெட் அத்தனை கலைஞர்களையும் மேடையேற்றி ஒரு நிகழ்ச்சி நடத்தியத்து. நட்சத்திர மதிப்புள்ளவர்களே கிட்டத்தட்ட ஐம்பதுபேர் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறெங்கும் இத்தனை மிமிக்ரிக் கலைஞர்கள் இல்லை. அவர்களுக்கு இத்தனை சுதந்திரமும் இல்லை. கேரளம் அதன் அனைத்து கலை இலக்கிய அரசியல் கொந்தளிப்புகளுக்கும் அடியில் சிரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தக்கலைஞர்களின் மிதமிஞ்சிய பணிவைத்தான் நான் எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பேன். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் என்ன ஒரு பவ்யம், மன்னிப்பு கோரல். ஆரம்பித்ததுமே விஸ்வரூபம் எடுத்து கிழித்து கந்தரகோலமாக்குகிறரகள். அந்தப்பணிவு நடிப்பு அல்ல. ஆனால் உள்ளே ஆன்மா கேலிப்புன்னகை செய்துகொண்டிருக்கிறது.

இன்று ஒரு நீண்ட எழுத்துப்பணிக்குப்பின், வாசிப்புச் சோர்வுக்குப் பின் ஒருமணிநேரம் யூடியூபில் அவர்களின் மிமிக்ரியை பார்த்து வெடித்துச் சிரித்து எளிதானேன். அவர்களில் பலர் தெரிந்தவர்கள். அய்யப்ப பைஜுவுக்குப் ஃபோன்செய்து நன்றி சொல்லிவிட்டு புன்னகையுடன் தூங்கச்செல்கிறேன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆயிரம் நாற்காலிகள்

$
0
0

1

 

நூறுநாற்காலிகள் எழுதியபின் சென்ற ஆண்டுகளில் மாதம் ஐந்துமுறையாவது எவரேனும் என்னிடம் சொல்வதுண்டு ‘இதெல்லாம் இப்ப கதை. இப்ப எங்கசார்?”. அதை ஒரு மிகச்சிறிய திரைப்படமாக எடுக்க முயன்றோம். அப்போது சொல்லப்பட்டது ‘ஜனங்க நம்பமாட்டாங்க. இதெல்லாம் எப்பவோ நடந்த கதை”

நான் சொல்வதற்கான உதாரணங்கள் என் வாசகர்களிலேயே பல உண்டு, ஆனால் அவர்கள் அதைச் சொல்லவிரும்பமாட்டார்கள். விஷ்ணுபிரியாவைத்தான் எப்போதும் சுட்டிக்காட்டுவேன். இப்போது  ரோஹித் வெமுலா. இந்தப்பட்டியல் ஒய்வதேயில்லை.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 33

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 10

விதுரர் கர்ணனிடம் “இனிமேல்தான் இளவரசரின் நகர்நுழைவுச் சடங்கு அரசே” என்றார். கர்ணன் புன்னகையுடன் “அந்த வெள்ளையானை வீணாகக் கொட்டிலில் நின்று உண்கிறதே என எண்ணியிருக்கிறேன். அதற்கும் ஒருநாள் வந்தது” என்றான். விதுரர் வாய்க்குள் புன்னகைத்து “காலையில்தான் தோன்றியது, தேவைப்படும் என்று” என்றார்.

கர்ணன் துச்சலனிடம் “இளைய கௌரவர்களை இறங்கவைக்கலாமே” என்றான். “இல்லை மூத்தவரே, இன்னும் சடங்குகள் உள்ளன” என்றான் துச்சலன். “அவர்கள் இங்கு வந்து என்ன செய்வார்கள் என்றே சொல்லமுடியாது.” கர்ணன் “அவர்கள் வரட்டும். இந்த நகரம் அவர்களால் பொலிவதையே துச்சளை பார்க்க விழைவாள்” என்றபடி மீண்டும் கோட்டைமுகப்பை நோக்கி சென்றான். துச்சலன் கையசைத்து கோட்டையை நோக்கி ஆணையிட்டான். துர்முகன் உடன்வந்தபடி “கோட்டைக்காவலர் கொள்ளும் விடுதலைமகிழ்ச்சியைக் காண நிறைவாக இருக்கிறது…” என்றான்.

கர்ணன் கோட்டைவாயிலை கடப்பதற்குள் மேலிருந்து கீழே வரும் இரும்புவாயில்கள் அனைத்தும் திறக்கப்பட பேரொலியுடன் இளைய கௌரவர்கள் அத்தனை வழிகளிலும் வெள்ளமென பீரிட்டு வந்து அவனைச் சுற்றி நிரம்பினர். கூச்சலும் சிரிப்புமாக அவர்கள் முன்னால் ஓடினர். தமையனின் தோளில் அமர்ந்திருந்த கரியகுழந்தை துச்சலனைப் பார்த்து கைசுட்டி “ஆ! ஆ!” என்று கத்திக்கொண்டிருந்தது. கர்ணன் துச்சலனிடம் “அது யார்? உன் மைந்தனா?” என்றான். “என் மைந்தனா என்று ஐயமாக இருக்கிறது” என்றான் துச்சலன். “இருக்கலாம். அவனுக்கு தெரிந்திருக்கிறது.”

இளைய கௌரவர்களை பார்த்ததும் கோட்டைக்குமுன் கூடிநின்றிருந்த அத்தனைபேரும் கலைந்து சிதறி விலக கூட்டம் கூச்சலிட்டு சிரித்தபடி அலையிளகத் தொடங்கியது. வாளேந்திய வீரர்கள் இருகைகளாலும் வாள்களை மேலே தூக்கி “அருகே வராதீர்கள்! கூர்வாள்! அருகே வராதீர்கள்” என்று கூவினர். அவர்கள் கால்கள் நடுவே சிறியகுழந்தைகள் பாய்ந்தோடினர். பல வீரர்கள் காலிடறி கீழே விழுந்தனர். அவர்கள்மேல் குழந்தைகள் ஏறி ஓடின. சிலர் ஆடையவிழ பதறித்திரும்பிச் சுழன்றனர். யானைகள்கூட அஞ்சி கால்களை தூக்கிவைத்து வயிறதிர பிளிறின. சற்றுநேரத்தில் புயல்சுழற்றிய பெருங்காடு போலாயிற்று கோட்டைமுகப்பு.

கர்ணன் வெளியே சென்றபோது அவனைச் சூழ்ந்துவந்த இளைய கௌரவர்கள் கைக்குச் சிக்கிய அனைத்தையும் தூக்கிவீசி கூச்சலிட்டனர். “பெரீந்தையே! யானையை இவன் அடித்தான்” என்றது ஒரு குரல். ”பெரீந்தையே நான் வாளால் வெட்டினேன்” “பெரீந்தையே என் ஆடை எங்கே?” புரவி ஒன்றின் வால் இழுக்கப்பட அது மிரண்டு கனைத்தது. தூண் ஒன்று சரிந்து யானைமேல் விழ அது சுழன்று திரும்பி துதிக்கைநீட்டி அதைப்பிடித்து ஆராய்ந்தது. கர்ணனுக்குப் பின்னால் ஓடிவந்து இன்னொருவன் தோள்மேல் மிதித்து ஏறிப்பாய்ந்து தோளை கவ்விக்கொண்ட ஒருவன் “பெரியதந்தையே! என்னை வானை நோக்கி விட்டெறிடா” என்றான். கர்ணன் அவனைச் சுழற்றி வானை நோக்கி விட்டெறிந்து பிடித்துக் கொண்டான். “என்னை! என்னை!” என்று நூறு குட்டிக்கைகள் அவனைச் சூழ்ந்து குதித்தன.

“வேண்டாம்! யாராவது வாளை நீட்டினால் சென்று விழுவீர்கள்” என்றான் கர்ணன். “விழமாட்டோம், நாங்கள் வானில் பறப்போம்” என்றான் ஒருவன். “நான் அனுமன்! நான் அனுமன்!” என்று ஒரு சின்னஞ்சிறுவன் துள்ளித்துள்ளி குதித்தான். அவனை தள்ளிவிட்டு ஓடிய ஒருவனை பின்னால் துரத்திச்சென்று அள்ளிப்பற்றி அவன் தொடையில் கடித்தான். கர்ணன் ஓடிச்சென்று அவனை தோளைப்பிடித்து தூக்கினான். அவன் திரும்பி கர்ணனின் கையை கடிக்க முயன்றான். கையை இழுத்துக்கொண்டு “உன் பெயரென்ன?” என்றான் கர்ணன். “அவன் பெயர் துர்மீடன்” என்றான் கீழே நின்ற அதேயளவான ஒருவன். “உன் பெயர் என்ன?” என்றான் கர்ணன். “என் பெயரும் துர்மீடன். நான் என் பெயரை அவனுக்கு போட்டேன்” என்றான்.

கர்ணன் சிரித்து துச்சலனிடம் “குழந்தைகளைப்பற்றிய அத்தனை நூல்களையும் கடந்து நான்கு திசையிலும் பெருகி வழிந்துவிட்டார்கள்” என்றான். “முதலில் இதெல்லாம் குழந்தைகளே அல்ல என்ற பேச்சு இங்கு உள்ளது” என்றான் துர்முகன். “இவர்கள் எண்ணங்கள் எப்படி ஓடுகின்றன என்பதை எவராலும் சொல்ல முடியாது” என்றான் துச்சலன். “நான் ஒருமுறை என் இல்லத்துக்கு சென்றபோது குட்டியானை ஒன்றை படிகள் வழியாக மேலேற்றி ஏழாவதுமாடியில் உள்ள களஞ்சிய அறைக்குள் கொண்டு சென்றிருந்தார்கள். யானையை மாடிக்கு கொண்டுசெல்லும் குழந்தைகளைப்பற்றி முதுதாதை வியாசர்கூட அவரது காவியத்தில் எழுதியிருக்கமாட்டார்.”

”அந்த யானைக்குட்டியும் இவர்களின் கணத்தைச் சேர்ந்தது. இல்லையேல் அது ஏன் ஏறுகிறது?” பேரொலியுடன் தரையில் ஒரு எரியம்பு வெடித்தது. அங்கு கூடிநின்ற அத்தனைபேரும் சிதறி ஓட உரத்தகுரலில் “என்ன ஆயிற்று?” என்றான் கர்ணன். வீரன் ஒருவன் கரிபடிந்து பதறி ஓடிவந்து “நான் கையில் வைத்திருந்த எரியம்பை இளைய கௌரவர் இருவர் எரியூட்டிவிட்டனர் அரசே” என்று தழுதழுத்தான். மேலும் மூன்று எரியம்புகள் கீழேயே வெடித்தன. அனைவரும் விலகி உருவான வட்டத்தில் உடலெங்கும் புழுதியும் கரியுமாக மூன்று இளையகௌரவர்கள் நின்றனர். “அனல் சுட்டிருக்கிறது” என்றான் கர்ணன். “அதைப்பற்றி யாரும் இங்கு எண்ணப்போவதில்லை. அவர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்” என்றான் துச்சகன்.

கர்ணன் முன்னால் சென்று அங்கு கருகியமுடியுடன் நின்ற இளைய கௌரவன் ஒருவனை பற்றி “நீயா தீயை வைத்தாய்?” என்றான். “நான் தீயை வைக்க எண்ணினேன் பெரியதந்தையே” என்றான் அவன். “ஆனால் தீயை வைத்தவன் அவன்.” கர்ணன் “அவன் எங்கே?” என்றான். அவன் உவகையுடன் பற்களைக் காட்டி “அவன் ஓடிவிட்டான். நான் எண்ணிக்கொண்டிருந்தபோது அவன் தீயை வைத்துவிட்டு ஓடிவிட்டான்” என்றான். “உன் பெயரென்ன?” என்றான் கர்ணன். “நான் மூத்தவன்,மிகப்பெரியவன்” என்றான். “உன் பெயரென்ன?” என்றான் கர்ணன். அத்தனை நேரடியான கேள்வியை எதிர்கொள்ளமுடியாத அவன் குழம்பி “என் பெயர்…” என்றபின் அருகே நின்ற இளையவனை நோக்கினான். அவன் “இவன் பெயர் குடீரன்” என்றான். “குடீரனா உன் பெயர்? என்றான் கர்ணன். அவன் குழப்பமாக தலையசைத்தான்.

“உனக்கு புண்பட்டிருக்கிறதா?” என்றான் கர்ணன். “இல்லை பெரியதந்தையே, புண்படவில்லை. ஆனால் உடம்பெல்லாம் எரிகிறது” என்றான் அவன். “நீரில் சென்று விழு, போ!” என்றான் கர்ணன். “நான் குழந்தையை பார்த்துவிட்டு நீரில் சென்று விழுவேன்” என்று அவன் சொன்னான். “எரியம்புகளை எல்லாம் எடுத்துச்செல்லுங்கள். படைக்கலங்கள் எவையும் இங்கிருக்க வேண்டியதில்லை” என்று கர்ணன் ஆணையிட்டான். “வரவேற்புக்கென அனைத்தையும் ஒருக்கியிருந்தோம்… எல்லாமே சிதைந்துவிட்டன” என்றான் ஒரு வீரன். கர்ணன் “எதுவும் தேவையில்லை. துச்சளையை வரவேற்கவேண்டியவர்கள் இவர்கள்தான்” என்றான்.

அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் தொலைவில் வந்துகொண்டிருந்த அணிப்பல்லக்கைக் கண்டு துச்சலன் கைவீசி எம்பிக்குதித்து “வந்துவிட்டாள்! வந்துவிட்டாள்!” என்றான். துச்சகன் “ஆம், துச்சளை!” என்று கூச்சலிட்டான். கர்ணன் பல்லைக்கடித்து “கூச்சலிடாதீர்கள்… நீங்கள் அரசகுடியினர்” என்றான். இருபக்கமும் மங்கலச்சேடியர் தாலங்களுடன் அணிவகுக்க நடுவே திறந்ததேர்களில் சூதர்கள் இசைக்கலங்களை மீட்டியபடி வந்தனர். அதைத் தொடர்ந்து எட்டுமங்கலங்கள் கொண்ட தட்டுத்தேர் ஒன்று வந்தது. ஒவ்வொன்றாக அவர்களை கடந்துசெல்ல இளைய கௌரவர்கள் கூவியபடி அவற்றைத் தொடர்ந்து ஓடினர்.

“ஓடும் எதையும் இவர்களால் துரத்தாமலிருக்க முடியாது” என்றான் துச்சலன். சிந்துநாட்டு அணிஊர்வலம் அவர்களை அணுகஅணுக சிதறிப்பரந்து கட்டற்ற பெருங்கூட்டமாக ஆகியது. மங்கலச்சேடியர் தாலங்களை மேலே தூக்கி பிடித்தார்கள். அவர்களின் ஆடைகளை குழந்தைகள் பிடித்து இழுக்க மறுகையால் அவற்றை அள்ளிப்பற்றிக்கொண்டு கூச்சலிட்டனர். வீரர்கள் படைக்கலங்களையும் சூதர்கள் இசைக்கலங்களையும் தலைக்குமேல் தூக்க துச்சலன் “ஆ! அனைத்தும் எடையிழந்து நீரில் மிதக்கின்றன” என்றான்.

துச்சளையின் பல்லக்கை அடையாளம் கண்டுகொண்ட இளைய கௌரவர் பெருந்திரளாக ஓடிச்சென்று அதை தூக்கிவந்தவர்களை பற்றிக்கொண்டனர். அவர்கள் உதறியபடி சுழல பல்லக்கு நீரில் சுழியில்பட்ட படகுபோல சரிந்து முன்னும்பின்னுமாக ஆடி ஒருபக்கமாக குடைசாய்ந்தது. துச்சலன் “கீழே வையுங்கள்! பல்லக்கை கீழே வையுங்கள்!” என்று கூவினான். அவர்கள் “என்ன?  என்ன?” என்றனர். “கீழே! கீழே வையுங்கள்” என்று துச்சலன் கூவ அதற்குள் அவர்களே பல்லக்கை கீழே வைத்துவிட்டனர்.

நான்கு இளைய கௌரவர்கள் பல்லக்கின் அனைத்து திரைச்சீலைகளையும் பிடுங்கிவீச ஒருவன் அதன் மலர்மாலையைத் தொற்றி மேலேறமுயன்று அறுபட்டு கீழே விழுந்தான். இன்னொருவன் தூணைப்பற்றி அதன்மேலே ஏற ஒருவன் அவனைப் பிடித்து இழுத்தான். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பல்லக்கின் அணிமுகடு ஆடி ஒருபக்கமாக சாய்ந்து உடைந்தது. உள்ளிருந்து சிரித்தபடி துச்சளை வெளியே வந்து அவளை நோக்கி பாய்ந்துசென்ற நான்கு இளைய கௌரவர்களை அள்ளி தன்மார்புடன் அணைத்துக்கொண்டாள். அத்தனைபேரும் ஒரேசமயம் பாய்ந்து அவள் உடலை மொய்த்தனர். அவள் குழலையும் ஆடைகளையும் அணிகளையும் பிடித்திழுத்தனர். அவள் பெரிய கைகளுக்கு மூவராக தொற்றிக் கொண்டனர்.

தொலைவிலிருந்தே அவள் கரியமுகத்தில் ஒளிவிட்ட வெண்பற்களை கர்ணனால் பார்க்க முடிந்தது. உரக்கச்சிரித்து அவர்களைத் தூக்கி தோளிலும் இடையிலும் வைத்துக்கொண்டாள். கர்ணன் சிரித்தபடியே அவளை நோக்கி சென்றான். துச்சலன் “பெருத்துவிட்டாள்! எங்களைவிட பேருடல் கொண்டுவிட்டாள்!” என்றான். துச்சகன் “அவளை ஒருமுறை கதாயுதப்போருக்கு அழைத்துப்பார்க்கவேண்டும்” என்றான்.

அவர்கள் அருகே நெருங்கியபோது உடலெங்கும் மைந்தருடன் தடுமாறி நின்ற துச்சளை கர்ணனைப் பார்த்து “மூத்தவரே, நீங்களா?” என்று உரக்கக்கூவி அவனை நோக்கி வந்தாள். அவர்கள் இருவருக்கும் குறுக்காக ஓடிய சிறுவன் ஒருவனைப்பிடித்து தூக்கி இடையில் வைத்தபடி குனிந்து கர்ணனின் காலைத்தொட்டு சென்னி சூடினாள். அவள் குனிந்தபோது இரு குழந்தைகள் உதிர்ந்தன. “அத்தை! அத்தை!” என பின்னால் குழந்தைகள் கூச்சலிட்டன. “த்தை த்தை” என்று ஒரு கைக்குழந்தை அவள் ஆடையில் தொங்கிக்கிடந்தது.”த்தை !இத்தை! தை! “ என பலவகையான ஒலிகளால் அவள் சூழப்பட்டிருந்தாள்.

“உன் தந்தையைப் போலவே பேருடல் கொண்டவளாகிவிட்டாய்” என்றான் கர்ணன். “ஆம், மூத்தவரே. குழந்தைப்பேறுக்குப் பிறகு மேலும் இருமடங்கு உடல் கொண்டுவிட்டேன்” என்றாள் துச்சளை. “அதைத்தானே சொல்கிறோம்” என்று துச்சலன் சொன்னான். “நான் அங்கேயே பார்த்தேன்… நீ பெருத்துவிட்டாய் என்று சொன்னேன்.” அவள் குனிந்து கௌரவர் கால்களைத்தொட்டு வணங்கினாள். அவள் கரியஉடல் வார்ப்பிரும்புபோல பளபளத்தது. கைகள் திரண்டு மலைப்பாம்புபோல் ஈரம்தெரிய நின்றன. உள்ளங்கைகள் மட்டும் செந்தளிர் இலைகள்போல சிறியவையாக சிவந்திருந்தன.

உடலெங்கும் அவள் அணிந்திருந்த நகைகளை இளைய கௌரவர்கள் பிடுங்கி தரையெங்கும் பரப்பிவிட்டிருந்தனர். ஒரு குழந்தை அவள் மேல் மண்ணை வாரி இறைத்து “த்தை த்தை” என்றது. அதன் மேல்வாயில் இருபற்கள் வெண்ணிறமாக தெரிந்தன. எச்சில் மார்பில் வழிந்திருந்தது. “எத்தனை குழந்தைகள்!” என்றாள் துச்சளை குனிந்து அதன் வாயை துடைத்தபடி. “எல்லாருக்கும் முதல்பல் மேல்வாயில்தான்… வியப்பாக இருக்கிறது.” குனிந்து “உலகையே எலிகளைப்போல கறம்பித் தின்கிறார்கள்” என்றான் துர்முகன்.

“பல்லக்கில் இருக்கையில் அலைபோல் இறங்கி அவர்கள் வருவதை பார்த்தேன் மூத்தவரே. ஒரு கணம் நெஞ்சைப் பற்றிக்கொண்டு நான் அழுதேன்” என்றாள். துச்சலன் “இங்கும் பெண்கள் அழுகிறார்கள்” என்றான். சுபாகு “தங்கையே, உன்னைப் பார்ப்பதற்காக சிந்துநாடு வரவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் இங்கு நாங்கள் நூற்றுவரும் உடனிருக்கவேண்டுமென்பது தமையனின் ஆணை” என்றான். “சுஜாதன் ஏழுநாட்கள் அங்கநாட்டுக்குச் செல்வதற்கே மூத்தவர் கண்கலங்கி விடைகொடுத்தார்.”

“ஆம், நீங்கள் அவருடன் இருக்கவேண்டும். நீங்கள் ஒரே உடல்” என்றாள் துச்சளை. “நானே இந்நகரைவிட்டு இனி திரும்பிபோகவேண்டுமா என்று ஐயுறுகிறேன்.” துச்சலன் “நீ சிந்துநாட்டுக்கு அரசி” என்றான். அவள் உதட்டைச் சுழித்து “அது என்ன ஊர்? ஏழு ஆறுகள் ஓடும் நிலம் என்று பெருமை வேறு” என்றாள். “ஏழு ஆறுகள் ஓடுவதென்பது எளிய செய்தியா என்ன?” என்றான் கர்ணன். “நீங்கள் ஒன்றும் சொல்லவேண்டியதில்லை மூத்தவரே. அரசு முறைமைகள் எனக்கு சலிப்பூட்டுகின்றன. அங்குள்ள ஒரே சிறப்பு மீன்உணவு கிடைத்துக்கொண்டே இருப்பதுதான்.” துச்சகன் “அதுதானா உன் உடலின் நுட்பம்?” என்றான்.

“குழந்தை எங்கே?” என்றான் கர்ணன். “அவனை நகர்புகச் செய்யவே நான் வந்திருக்கிறேன்.” துச்சளை “பின்னால் அவனுக்கென ஒரு பொற்பல்லக்கு வருகிறது” என்றாள். “செவிலியர் அவனை வைத்திருக்கிறார்கள். ஒரு குழந்தையுடன் சீராடுவதற்கெல்லாம் எனக்கு பொழுதில்லை. என் கைநிறைய பிள்ளைகள் வேண்டும். இதைப்போல” என்றாள். “இப்போதுதான் ஒரு குழந்தை வந்திருக்கிறது உனக்கு” என்றான் துர்முகன். கர்ணன் “அவள் திருதராஷ்டிர மாமன்னரின் குருதி. முயன்றால் நூறு குழந்தைகளை பெற்றுக்கொள்வதும் அரிதல்ல” என்றான். “உண்மையிலேயே அப்படித்தான் விழைகிறேன். என் முதுமையில் இதைப்போல் என்னைச் சூழ்ந்து ஆயிரம் குழந்தைகள் ஆடுமென்றால் விண்ணிலிருக்கும் தெய்வங்கள் அழைத்தாலும் செல்லமாட்டேன்” என்றாள்.

கர்ணன் “குழந்தையைக் காட்டு கரியவளே” என்றான். “அவனை சிந்துநாட்டின் கொடிபறக்கும் பல்லக்கில்தான் அஸ்தினபுரிக்குள் கொண்டுவரவேண்டும் என்பது அவன் தந்தையின் விருப்பம்” என்றாள் துச்சளை. “நன்று… அந்தப் பல்லக்குதானே?” என்றான் கர்ணன். கரடிக்கொடியுடன் ஒருவீரன் முன்னால் புரவியில் வர பொற்பூச்சு மின்னிய பெரியபல்லக்கு எட்டுபோகிகளால் சுமக்கப்பட்டு வந்தது. “நம் குழந்தைப்பெருக்கு இன்னும் அதை சுற்றிக்கொள்ளவில்லை… நல்லூழ்தான்.”

துச்சளை தன்னைச் சுற்றி கூச்சலிட்டு சிரித்தாடிய இளையோரை நோக்கி “ஐயோ! என் கைகள் பதறுகின்றன. உள்ளம் ஏங்குகிறது. இத்தனைபேரையும் அள்ளிக்கொஞ்சி ஆளுக்கொரு முத்தமிட்டு முடிப்பதற்கே நான் இங்கு தங்கும் நாட்கள் போதாதே!” என்றாள். “முற்றிலும் போதாது” என்றான் துச்சலன் உரக்க நகைத்தபடி. “ஏனென்றால் ஒவ்வொரு நாளும் அவர்கள் பிறந்து கொண்டிருக்கிறார்கள். நீ இங்கு பார்ப்பது பாதிதான். இன்னும் தொட்டிலிலும் மஞ்சத்திலுமாக பலநூறு இளைய கௌரவர்கள் கிடக்கிறார்கள்.”

துச்சளை அச்சொற்களால் உளம் தூண்டப்பட்டு நெஞ்சில் கைவைத்து கண்ணீர்மல்க விம்மினாள் “எண்ணும்போதே என்னால் தாளமுடியவில்லை மூத்தவரே. பாரதவர்ஷத்தில் அஸ்தினபுரி போல விண்ணவரின் வாழ்த்துபெற்ற வேறொரு மண் உண்டா என்ன?” என்றாள். கர்ணன் “ஆம், இங்கு அத்தனை மரங்களிலும் கனி நிறைந்ததுபோல் தோன்றுகிறது” என்றான். “நாடோடிக் குறவர்கள்தான் இத்தனை மைந்தருடன் இருப்பதை பார்த்திருக்கிறேன்” என்றான் சுபாகு. துச்சலன் “இவர்களுடன் ஒரு நாழிகை நாம் இருந்தால் நாமும் தோற்றத்தில் மலைக்குறவர்களாக ஆகிவிடுவதைப் பார்க்கலாம்” என்றான்.

அருகே பணிந்து மென்குரலில் “அரசே, முறைமைக்கு பிந்துகிறது” என்று கனகர் சொன்னார். “இளவரசரை நகர்நுழைய வைக்கவேண்டிய நற்காலம் ஆகிவிட்டது.” “ஆம், முதலில் அதை செய்வோம்” என்றபடி கர்ணன் நடந்தான். “அவருக்காக அஸ்தினபுரியின் மணிப்பல்லக்கு சித்தமாக உள்ளது…” என்றார் கனகர். “இளவரசர் என்ன? இதோ இங்கே இத்தனை இளவரசர்கள் இருக்கிறார்கள். அவன் இவர்களில் ஒருவன்தான். அவனுக்கென சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை” என்றாள் துச்சளை. “இல்லை தங்கையே, அவனுக்கு நூற்றிரு மாமன்கள் இருக்கிறார்கள். தலைமாமன் நேரில் வந்திருக்கிறார். செய்யவேண்டிய வரிசைகளை செய்தாக வேண்டும்” என்றான் துச்சலன்.

“ஆம், அவர் கையால் வரிசை செய்யப்படுவதென்பது அவனை விண்ணிறங்கி வெய்யவன் வாழ்த்துவது போல” என்று சொன்ன துச்சளை “வாருங்கள் மூத்தவரே” என்று அவன் கையை பற்றினாள். கர்ணன் “மைந்தன் என்ன நிறம்? உன்னைப்போல் கருமையா?” என்றான். “ஆம்” என்ற துச்சளை திரும்பி “எங்கே சிந்துநாட்டரசர்?” என்றாள். “அவர் நகர்வலம் செல்லத் தொடங்கிவிட்டார் அவருக்கென்று வெள்ளையானை ஒன்று அஸ்தினபுரியின் அரசரால் சித்தமாக்கப்பட்டுள்ளது” என்றான் ஜலகந்தன்.

“வெள்ளையானையா?” என்றாள் துச்சளை. பின்பு சிரிப்பை பொத்திக்கொண்டு “அவரது வெற்று ஆணவத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் விதுரர். மூத்தவரே, ஒர் அணியைக் கண்டால், ஓர் அரசமுறை பாடலைக்கேட்டால் இத்தனை மகிழ்வு கொள்ளும் எளிய உள்ளத்தை நான் பார்த்ததில்லை” என்றாள். “இளையவளே, அவரை நான் அஞ்சிக்கொண்டிருந்தேன்” என்றான் கர்ணன். “எதற்காக?” என்றாள் துச்சளை. அவள் புருவத்தில் சிறுமுடிச்சொன்று விழுந்தது. “அவரை நான் கலிங்கத்தில் சிறுமை செய்தேன்” என்றான். “அது களத்தில் அல்லவா? தன் வரனறியாது மிஞ்சிப்பாய்பவர் தோற்பதே சிறுமைதான்.” கர்ணன் “அதுவல்ல, நான் சற்று மிகையாகவே செய்தேன்” என்றான். “ஆம், அதை நான் அறிவேன். அஸ்தினபுரியே அன்று அந்த சிறுமைப்படுத்தலை கொண்டாடியது…” என்று துச்சளை புன்னகைத்தாள். “அதனாலென்ன?” கர்ணன் “அவர் என்மேல் வஞ்சம் கொண்டிருந்தால் அதில் பிழையே இல்லை” என்றான்.

“மூத்தவரே, உண்மையில் கடும் வஞ்சம் கொண்டுதான் கலிங்கத்திலிருந்து மீண்டார். என்னிடம் வந்து உங்களை பழிதீர்க்கப்போவதாக சொன்னார். நான் அவரிடம் நீங்கள் வெறும் ஒரு மலைச்சுனை. விண்ணாளும் சூரியனிடம் போரிடும் ஆற்றல் உங்களுக்கில்லை. வெல்வது மட்டுமல்ல, தோல்வி கொள்வதிலுமே பெருமை ஒன்றுள்ளது, அப்பெருமையை இழந்துவிடுவீர்கள் என்றேன். சினந்து என்னிடம் வஞ்சினம் உரைத்தபோது அவரை அறியாது உங்கள் பிறப்பு குறித்து ஒருசொல் வாயில் எழுந்தது. நான் கைநீட்டி போதும் என்றேன். என் விழிகளை நோக்கியவர் நடுங்கிவிட்டார்.”

துச்சளை சிரித்து “ஏனென்றால் நான் துரியோதனரின் தங்கை. அதை அக்கணம் நன்குணர்ந்தார். என் விழிகளைப் பார்த்தபின் பிறிதொரு சொல்லும் சொல்லாமல் இறங்கிச் சென்றார். அதன்பின் இன்றுவரை உங்களைப்பற்றி ஒருசொல்லும் சொன்னதில்லை” என்றாள். கர்ணன் “ஏன் அப்படி செய்தாய்? அவர் ஓர் அரசர்” என்றான். “மூத்தவரே, தங்கையென நான் இருக்கையில் அச்சொல்லை அவர் சொல்லியிருக்கலாமா?”

கர்ணன் விழிநெகிழ தோளில் கையை வைத்தான். துச்சலன் “நன்று செய்தாய். ஆனால் இளையவளே, வெறும் சொல்லென அது போயிருக்கக்கூடாது. ஓங்கி ஓர் அறை விட்டிருக்கவேண்டும். அச்சொல்லுக்கு அதுவே நிகர் நின்றிருக்கும்” என்றான். “என்ன சொல்கிறாய் அறிவிலி?” என்று கர்ணன் சினத்துடன் திரும்பினான். “மூத்தவரே, நாங்கள் ஷத்ரியராயினும் சர்மிஷ்டையின் அசுரர்குலத்துக் குருதியினர். எங்கள் மூத்தவர் இலங்கையாண்ட பத்துத்தலையர். நாங்கள் அவருக்காக உயிர்விட்ட தம்பியர். அரசமுறைமைகளால் அல்ல அன்பினாலேயே அசுரர் குலம் கட்டப்பட்டுள்ளது” என்றான் துச்சலன்.

கர்ணன் தலையசத்து “எப்போது நகையாடுகிறீர்கள், எப்போது சினம் கொள்கிறீர்கள் என்று உங்களுடன் இத்தனைநாள் இருந்தும் என்னால் கணிக்கக்கூடவில்லை” என்றான். துச்சலன் “நாங்கள் உங்களுக்கும் மூத்தவருக்கும் உயிர்பொருளாவி படையலிட்டவர்கள்…” என்றான். கர்ணன் “நன்று” என்றான். கனகர் கைகளை வீசி அணிப்பரத்தையரை அவர்களுக்கு அருகே செல்லும்படி சொன்னார். அதற்குள் இளைய கௌரவர் அந்தப் பல்லக்கை அடையாளம் கண்டுகொண்டிருந்தனர். அவர்களை அஞ்சி அது நிலத்தில் இறக்கப்பட்டிருந்தது.

அதன் திரைச்சீலைகள் பிடுங்கி வீசப்பட்டிருந்தன. உள்ளே இருந்த இரு முதியசெவிலியரும் துணிச்சுருளுக்குள் இருந்த மைந்தனை நெஞ்சோடணைத்தபடி நடுங்கிக்கொண்டிருந்தனர். அத்துணிச்சுருளைப் பிடித்து குட்டிக்கௌரவர்கள் இழுத்தனர். அவர்கள் அஞ்சி கூச்சலிடுவது அவர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக இருந்தது. துச்சளை கைநீட்டி “அஞ்சவேண்டாம். அவர்கள் கையிலேயே கொடுத்துவிடுங்கள்” என்றாள். ”அரசி!” என்றாள் முதியவள். “அவர்கள் கையில் கொடுங்கள்” என்றாள் துச்சளை. துச்சலன் “என்ன சொல்கிறாய்?” என கேட்க “அவன் அவர்களுடன் வளரட்டும்” என்றாள்.

“அரசியாரே… காவலரே’ என்று செவிலியர் கூவினர். காவலர் துச்சளையை நோக்கி திகைத்து நின்றார்கள். செவிலியர்களிடமிருந்து குழந்தையை இரு இளையகௌரவர்கள் பிடுங்கிக்கொண்டுவிட்டனர். அவர்கள் பதறியபடி பின்னால் வர குழந்தையைச் சுற்றியிருந்த பட்டுத்துணியை ஒருவன் கழற்றி வீசினான். ஒளி மணியாரங்களும் அணி வளைகளும் கணையாழிகளும் கால்தளையும் அணிந்திருந்த கரிய சிறுகுழந்தையை ஒருவன் தூக்கி வானில் வீசினான். இன்னொருவன் அதை பிடித்துக்கொண்டான். கூச்சலிட்டபடி அவன் தூக்கி வீச பிறிதொருவன் பிடித்துக்கொண்டான். மாறிமாறி அவர்கள் நகைத்துக்கூவியபடி குழந்தையை விண்ணிலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.

33

கர்ணன் முதலில் திகைத்து ,பின்பு கூர்ந்துநோக்கி குழந்தை சிறுவாயைத் திறந்து நகைத்துக் கொண்டிருந்ததைக்கண்டு சிரித்தான். துச்சளை சிரித்தபடி “மகிழ்கிறான். இவர்களுடன் இருப்பதுபோல் அவன் வாழ்க்கையில் உவகை மிகுந்த தருணங்கள் வேறெங்கும் வாய்க்கப்போவதில்லை” என்றாள். “விண்ணிலேயே இருக்கிறான், மண்ணுக்கு இறங்க விழைவற்றவன்போல” என்றான் கர்ணன். துச்சளை “இளையோரே, மைந்தனை அவன் மாமனிடம் கொடுங்கள்” என்றாள்.

அக்கணமே “இதோ” என்று ஒருவன் குழந்தையை கர்ணனை நோக்கி எறிந்தான். கர்ணன் அதை பிடித்துக்கொண்டான். சுழற்றி மார்போடணைத்தான். குழந்தை கால்களை உதைத்து உடலைத் திருப்பி மென்வயிற்றில் தசைமடிப்புகள்விழ இளைய கௌரவரை நோக்கி வளைந்து திரும்பி கைநீட்டி திமிறியது. கால்களால் கர்ணனின் வயிற்றை உதைத்தது. “அவர்களிடம் செல்லவே விரும்புகிறான்” என்றான் கர்ணன். துச்சளை “ஆம், சினம் கொள்கிறான்” என்றாள். “இவனுக்கும் சிந்துநாட்டுக்கும் தொடர்பே இல்லை. இன்னொரு கௌரவன்” என்றான் துச்சலன் குனிந்து குழந்தையின் கன்னத்தைத் தடவியபடி. குழந்தை இரு பற்களைக்காட்டி அவனை கடிக்க எம்பியது. அவன் சிரித்துக்கொண்டே கைகளை விலக்கி “கௌரவக்குருதியேதான்” என்றான்.

கர்ணன் குனிந்து குழந்தையின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு “என்ன ஒரு இனிய மணம்! இளையவளே, சுஜாதன் அங்கநாட்டுக்கு வந்திருந்தான். அவனை இளையோனாக எடுத்து முத்தமிட்டதை நினைவு கூர்ந்தேன். அவன் பெருந்தோள்களை அணைந்தபோது நெஞ்சுவிம்மி கண்ணீர் உகுத்தேன்” என்றான். “சுஜாதன் எங்கே?” என்றாள் துச்சளை. “அவனை அரசவையில் இருக்க மூத்தவர் ஆணையிட்டுவிட்டார். எங்களில் அவனே நூல்கற்றவன். ஒரு சுவடியை எவ்வளவு நேரம் வாசிக்கிறான் தெரியுமா?” என்று துர்முகன் பெருமையுடன் சொன்னான்.

“அவன் ஒருவனே இளைய கௌரவர்களில் இன்னும் மணமுடிக்காதவன்” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் மீசை வேல்நுனிபோல் கூர்மை கொண்டுவிட்டது” என்றான் துச்சலன். “அரசமகளை மட்டுமே மணப்பேன் என்று சொல்கிறான். கௌரவர் என்றாலே அரசகுடியினர் அச்சம் கொள்கிறார்கள்” என்றான் சுபாகு. கர்ணன் தன் முத்திரை மோதிரத்தை அருகிலிருந்த சேடியின் தாலத்தில் இருந்த செஞ்சாந்தில் முக்கி குழந்தையின் நெற்றியில் சூரியக்குறியை இட்டான். பின்பு குனிந்து தரையில் இருந்து ஒரு துளி அஸ்தினபுரியின் மண்ணை எடுத்து குழந்தையின் உதடுகளில் வைத்தான்.

சற்று மேலெழுந்து வளைந்த மேலுதடுகளும் சிறிய கீழுதடுகளுமாக எச்சில்வழிய இருந்த குழந்தை ஆவலுடன் அவன் கையை சுவைத்து முகம்சுளித்து துப்பியது. உடனே பால்நினைவு எழ அன்னையை நோக்கி தாவியபடி சிணுங்கத்தொடங்கியது. “எங்களிடம் கொடுங்கள்! குழந்தையை எங்களிடம் கொடுங்கள்! நாங்கள் அவனுக்கு மேலும் மண்ணை ஊட்டுகிறோம்!” என்று தனுர்வேகன் கூவினான். அவனருகே நின்ற கஜபாகுவும் தீர்க்கபாகுவும் “மண்ணை ஊட்டுகிறோம்! மண்ணை ஊட்டுகிறோம்!” என்று கீச்சுக்குரலில் கூவ கோழிக்குஞ்சுகள் என ஏராளமான குரல்கள் கூவின. தரைமூடியபடி பல மண்டைகள் தென்பட்டன.

“எங்கு பார்த்தாலும் ஒரே முகம்” என்று துச்சளை சொன்னாள். “என் தமையன் சூரியன் படிகக்கற்களில் என பெருகிவிட்டார்.” கர்ணன் “பெருகியவன் அவனல்ல, திருதராஷ்டிர மாமன்னர்” என்றான் கர்ணன். “அவர் சிகைக்காய். இவர்களெல்லாம் அதன் நுரைகள் என ஒரு சூதன் பாடினான்.” துச்சளை சிரித்து “ஆம், உண்மை” என்றாள். “இப்புவியில் இவ்வண்ணம் புதல்வரால் பொலிந்தவர் பிறிதெவருமில்லை.” கீழே இளையோர் “எங்களிடம் கொடுங்கள்! நாங்கள் மண்ணை ஊட்டுகிறோம்” என்று கூவினர். “அது பாலை தேடுகிறது” என்றாள் துச்சளை. “நாங்கள் அதற்கு யானையின் பாலை ஊட்டுவோம்” என்றான் சற்று மூத்தவனாகிய பாகுலேயன்.

கர்ணன் “யானைப்பால் குடித்தால்தான் இவர்களுடன் ஆடமுடியும் தங்கையே” என்றான். இளையோனாகிய சங்கரன் “அத்தை, என் ஆடையை காணவில்லை” என்று அவள் கையைப்பிடித்து ஆட்டினான். அதற்குள் ஒருவன் குழந்தையை அவன் கையிலிருந்து பிடுங்கினான். கூவிச்சிரித்தபடி அது கால்களை உதறியது. குழந்தையுடன் அவர்கள் அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை நோக்கி ஓடினார்கள். துச்சளை “இனி அவனை நான் கையில் தொடுவதே அரிதாகிவிடும் என்று நினைக்கிறேன்” என்றாள். துர்முகன் “அவன் ஓரிரு மாதங்களில் நடக்கத் தொடங்கினால்கூட வியப்பில்லை தங்கையே. இங்குள்ள குழந்தைகளெல்லாம் தமையன்களிடம் ஓடி மிகவிரைவிலேயே விளையாடத் தொடங்கிவிடுகின்றன” என்றான்.

கர்ணன் துச்சளையிடம் “வருக!” என்றபடி கோட்டையை நோக்கி திரும்பினான். காலடியில் ஏதோ இடற திரும்பிப் பார்த்தால் இருகுழந்தைகள் அவன் ஆடையை பற்றிக்கொண்டு மாறிமாறி பூசலிட்டபடி நின்றிருந்தன. அவன் இரண்டு பேரையும் கையில் தூக்கி தோளில் ஏற்றிக்கொண்டான். “என்னிடம் ஒன்றை கொடுங்கள்” என்றாள் துச்சளை. அவள் காலடியில் இருந்த இன்னொரு மைந்தனைக் காட்டி “இங்கென்ன குழந்தைகளுக்கா குறைவு? எங்கு பார்த்தாலும் அவர்கள்தான்” என்றான் கர்ணன். சிரித்தபடி ஆம் என்று சொல்லி துச்சளை கீழிருந்து மேலும் இரு குழந்தைகளை தன்மேல் ஏற்றிக்கொண்டாள். உடலெங்கும் குழந்தைகளுடன் கூவிச்சிரித்தபடி அரண்மனைக் கோட்டைவாயிலை நோக்கி சென்றாள். அவளுக்கு இருபக்கமும் கர்ணனும் கௌரவர்களும் உடலெல்லாம் மைந்தருடன் நடந்தனர்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

காந்தியின் முகங்கள்

$
0
0

_87558214_dpf_010

 

காந்தியின் அரிய புகைப்படங்களுடன் அப்புகைப்படங்களைப்பற்றி ஒரு கட்டுரை

http://www.bbc.com/news/world-asia-india-35259671

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புதியவாசகர்களின் கடிதங்கள் 4

$
0
0
images

அன்புள்ள ஜெ

சில நாள்களுக்கு முன் தோல்வியால் சோர்ந்திருந்த ஒரு இரவில் கடந்த காலங்களை வீணடித்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்த பொழுதில் உங்களை நினைத்துக்கொண்டேன். அது தந்த மன நிறைவையும் நம்பிக்கையும் வார்த்தைகளைக் கொண்டு என்னால் சொல்ல இயலவில்லை. பின்னிரவுக்குப் பின்னும் மனம் நெகிழ்ந்து கண்ணீருடன் நினைத்துக் கொண்டேன். உங்களை வாசித்ததற்குப் பின் நான் கண்டு கொண்ட எத்தனை எத்தனை உலகங்கள், சிந்தனைகள், மனிதர்கள்,எழுத்தாளர்கள், புத்தகங்கள், என நினைக்க நினைக்க முடிவற்று வந்து கொண்டே இருக்கின்றன.

உங்கள் எழுத்துக்களை வந்தடைந்தது தற்செயலால் தான். தோழி ஒருத்தி பரிசாக தந்த நவீன தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் நூல் தான் உங்களை வந்தடைய காரணம். ஜெயமோகன் என்ற எழுத்தாளரை பற்றி வாங்கிய அவளுக்கும் எனக்கும் அதற்கு முன்பு வரை தெரியாது (பின்னர் தான் அறிந்துகொண்டேன் தினமணி சிறுவர் மணியில்  உங்கள் பனிமனிதன் தொடரை பள்ளி நாட்களில் வாசித்திருப்பதை ). கடந்த மூன்று ஆண்டுகளாக ஏறத்தாழ எல்லா நாட்களும் உங்களது எழுத்துக்களை வாசிக்காமல் இருந்ததில்லை. உங்கள் எழுத்துக்கள் பாதிக்காத ஒரு என்னமோ நினைவுகளோ வந்ததில்லை. வண்ண தாசன் அகம் புறம் ஆனந்த விகடனில் எழுத ஆரம்பத்தில் அவரது எழுத்தை படித்துப் பின் ஆனந்த விகடனை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் மற்றும்  தினமணியின் கட்டுரைகளையும் பொழுது போக்காக வாசித்துக் கொண்டிருந்த பொழுதில் தற்செயலாய் கிடைத்த அந்த புத்தகத்தில் உங்களது சில வரிகள் என் வாழ்க்கையை  தலை கீழாக மாற்றி விட்டது. அறிவியலுக்கும் கலைக்கும் கணிதத்திற்கும் நீங்கள் கொடுத்த விளக்கம்   தான் என் வரையறைகளை உடைத்தது.நான் உங்களை கண்டுகொண்ட தருணம். அது எனக்கு மறு பிறப்பு. பைத்தியம் பிடித்ததை போல உங்கள் எழுதுக்களை வாசித்திருக்கிறேன்.

உங்களுக்கு எத்தனையோ முறை கடிதம் எழுத நினைத்தும் வாசகர் கடிதங்களை அதன் தரங்களை அவர்களின் நுண்ணுணர்வுகளை வியந்து நாம் மிக மேலோட்டமாக வாசிக்கிறோமோ என தயங்கி நின்று விடுவேன். ஒரு முறை மட்டும் எளிய மின்னஞ்சலினை அனுப்பி நின்றுகொண்டேன்.

வெள்ளை யானை வெளியீட்டு விழாவில் உங்களை முதன் முதலாக நேரில் கண்டேன். மிக எளிமையாக நீங்கள் மேடையில் அமர்ந்திருந்தீர்கள். நான் கண்ட ஜெயமோகன் அங்குதான் இருந்தார். நான் எழுத்துக்கள் வழியே கண்ட பிரம்மண்டத்துடன் அல்ல. பின் பனுவல் சந்திப்பில் பேச நினைத்து தயங்கி விட்டேன்.  மீண்டும் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழாவில் இறுதியாக உங்களிடம் இரண்டொரு சொற்கள் பேசினேன். என்னை உங்களோடு ஒரு கையால் சேர்த்து அணைத்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னீர்கள். அந்த கணத்தின் எழுச்சியால் அந்த புகைப்படத்தை கூட அந்த நண்பரிடமிருந்து பெற்றுக்கொள்ள தவறிவிட்டேன். எத்தனையோ நாள் நான் நினைத்திருக்கிறேன் ஒரு தந்தையின் கரங்களை போல என்னை அணைத்துக்கொண்ட பின்னும் இன்னும் என்ன தயக்கம் என.

வெள்ளை யானையை இன்னும் நான் வாசிக்கவில்லை மன்னிக்கவும்.

இந்த முறை உங்களை சந்திக்க என் மனத் தடைகளை கடந்து விடுவேன் என நினைக்கிறேன். எனக்கும் ஒரு வாய்ப்பை தருவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,

விஷ்ணு.

 

அன்புள்ள விஷ்ணு

முன்புபோல நான் நீண்ட தனிப்பட்ட கடிதங்கள் எழுதமுடிவதில்லை. ஆகவேதான் பொதுவான கடிதங்களைப் பிரசுரிக்கிறேன். அவை பலருக்கும் அவர்களுக்கு எழுதப்பட்டவை போலத் தோன்றுகின்றன. இந்தக்காலகட்டம் நமக்கு அளிக்கும் வசதி இந்த ஓயாத உரையாடல். இதை நம்மை மேலும் வளர்த்துக்கொள்ள பயன்படுத்தலாமென நினைக்கிறேன்.

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? வருக, சந்திப்போம்

ஜெ

 

வணக்கம் திரு ஜெயமோகன்

நான் உங்களுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு நீங்க பதில் அனுபுவதே இல்லையே, அதற்கு காரணமாவது தெரியப்படுத்துங்கள்.

பா – சதீஷ்

 

அன்புள்ள சதீஷ்

மன்னிக்கவும்

புறக்கணிப்பெல்லாம் இல்லை. என்ன காரணம் என்றால் நீங்கள் முன்பு அனுப்பியது விரிவாகப்பதிலளிக்கவேண்டிய கேள்வி

அதை எடுத்துவைத்தேன். ஆனால் தொடர் எழுத்துவேலைகளால் பிந்திபோய் பின்னுக்குப்போய்விட்டது

வெண்முரசு தொடங்கியபின் இச்சிக்கல் அடிக்கடி வருகிறது

ஜெ

 

ஜெ

தங்களைச் சந்திக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. பலநாள் உங்கள் கூட்டங்களுக்கு வந்து அருகிலேயே தயங்கி நின்றுவிட்டுத் திரும்பிவந்திருக்கிறேன். இன்று உங்களை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பை நீங்களே உருவாக்கித்தருகிறீர்கள். அதைப்பயன்படுத்தமுடியாத நிலையில் இருக்கிறேன். எனக்குத்தேர்வுகள் இருக்கின்றன. ஆகவே இந்த வாய்ப்பு இன்னும் இதேபோலத் தொடரவேண்டும் என நினைக்கிறேன். தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிரேன்

சிவராஜ்

 

வணக்கம் ஜெ,

என் பெயர் சுஷில் குமார். பூர்வீகம் குமரி மாவட்டம் தேரூரை அடுத்த குலசேகரன் புதூர். இரண்டு வருடங்களாக தங்கள் வாசகன். ரசிகன். இணையத்தில் கண்ட விவாதங்களின் அடிப்படையில் தங்கள் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்து இன்று முழுமையாக உங்கள் படைப்புகளை உட்கொள்ளும் பாதையில் இருக்கிறேன்.

ஆரம்பித்தது அறம். சோத்துக்கணக்கு என்றும் மனதில் பதிந்திருக்கிறது.என் நண்பர்களுக்கு நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் அறம். நான் பயின்ற கொட்டாரம் பள்ளியருகே ‘பூமேடை’ அய்யாவைக் கிண்டல் செய்த சிறுவர் கூட்டத்தில் நானும் இருந்தேன். தாங்கள் அவருடன் மிதிவண்டியில் சென்றது குறித்து எழுதியதைப் படிக்கும்போது மனசு இளகியது. அவருடன் ஒரு முறை பேசிய நினைவு மங்கலாக உறுத்திச் சென்றது.

ஒரு exploration என்ற முறையில் தங்களது நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில் ஏழாம் உலகம். பின் காடு. இன்னும் தினமும் ஒருமுறையாவது காட்டில் தாங்கள் வரைந்திருக்கும் ஏதேனும் ஒரு காட்சி என் கண்முன் வந்து செல்கிறது. அப்படி ஒரு உணர்ச்சிக் குவியல் காடு. கடைசிப் பக்கத்தின் பாதிப்பு அடுத்து விஷ்ணு புரத்தில் காலெடுத்து வைக்கும் வரை நீங்கவில்லை.

விஷ்ணுபுரம் தமிழுலகின் சின்னம். ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களுடன் திருவட்டார் சுற்றித் திரிந்த நினைவுகள், அதிசயித்த காட்சிகள், நமது மாவட்ட வாழ்க்கை முறை,பூர்வீகம் குறித்த தேடல், இவை அனைத்திலும் என் நம்பிக்கையை மேலும் அழுத்தி என் சிந்தனையின் ஊடாக நிலைத்து இருக்கிறதுவிஷ்ணுபுரம்  வெள்ளை யானை,கன்னியாகுமரி, ஊமைச்செந்நாய் வாசித்து சமீபத்தில் கொற்றவையில் திளைத்து நேற்று ரப்பர் முடித்தேன். அடுத்து பின் தொடரும் நிழலின் குரல். தொடர்ந்து தங்கள் வலைப் பதிவுகளையும் வாசிக்கிறேன். என் வாழ்வின் நீங்கா ஆதர்சன எழுத்தாளராக தங்களை மனதில் இருத்தி மகிழ்கிறேன். மிகவும் தாமதமாகவே தங்களை வாசிக்க ஆரம்பித்து விட்டோமே என்கிற வருத்தம் இருக்கிறது.

நேரில் சந்திக்க எப்படா என்று காத்திருந்தேன். தங்கள் இன்றைய அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளித்தது. கண்டிப்பாக ஊட்டி சந்திப்பிற்கு வருகிறேன்.சந்திப்பிற்கான முன்னேற்பாடுகளில் உதவி தேவையிருப்பினும் மகிழ்ந்து வருவேன்.(தற்போது கோவையில் வசிக்கிறேன். ஈஷா வித்யா கிராமப் பள்ளிகளின் Academic Coordinator ஆக பணிபுரிகிறேன்.)தாங்கள் கொடுத்த அனைத்து அனுபவங்களுக்கும் நன்றி…

சுஷீல்

 

அன்புள்ள சுஷீல்

நல்ல பழக்கங்கள் கொண்டவர் என்று பெயர். நேரில் வாருங்கள் உறுதிசெய்துகொள்கிறேன்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சென்றகாலங்கள்

$
0
0

1

அ. மார்க்ஸ் அவர்களின் இப்பதிவை அருண்மொழியின் குடும்பத்தைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எனக்குச் சுட்டி அனுப்பியிருந்தார். நினைவுகள் ஒரு நிலத்தையும் மக்களையும் துல்லியமாகக் காட்டுமளவுக்கு சமகாலப்பதிவுகள் காட்டுவதில்லை. ஏனென்றால் சமகாலப்பதிவுகள் விழியும் மனமும் தொட்ட அனைத்தையும் பதிவுசெய்கின்றன. நினைவுகள் எது முக்கியமோ அதை மட்டும் எஞ்சவைக்கின்றன. அ. மார்க்ஸின் இப்பதிவிலேயேகூட அன்று அந்த தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது பதிவாகவில்லை என்பதைக் கவனிக்கலாம்

என் மாமனார் சற்குணம் புதுக்கோட்டை அருகே திருவோணம் ஊரைச்சேர்ந்தவர். அன்றும் இன்றும் அதிதீவிர திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர். தம்பிக்குக் கடிதங்கள், ரோமாபுரிப்பாண்டியன் என சேர்த்துவைத்துக்கொண்டு படிப்பவர். என் சங்கசித்திரங்கள் தொகுதியை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். இப்போது இங்கே என் வீட்டில்தான் பொங்கலுக்கு வந்திருக்கிறார்

முந்தைய தலைமுறை திமுக என்பதனால் அன்றைய சில உணர்வுநிலைகள் சில அறிவுநிலைகள் அவரிடமுண்டு. பெரியார்,அண்ணாத்துரை, மு.கருணாநிதி அளவுக்கே அவர் ஜெயகாந்தனுக்கும் நா.பார்த்தசாரதிக்கும் ரசிகர். அவர்கள் திமுகவின் விமர்சகர்கள் என்றால் ”விமர்சனம் இருக்கணும்ல? நல்ல தமிழிலே விமர்சனம் பண்ணினாங்க” என்பார். பெரியார், அண்ணா, கலைஞர் என அவரது தொன்மங்களைத் தகர்க்க ஆரம்பிப்பது எனக்கு ஒருவேடிக்கை. மருமகன் என்பதனால் “அப்டீங்கறீங்க” என்று மெல்ல சொல்வார். ஆனால் அருண்மொழியிடம் பலகோணங்களில் அதற்கெல்லாம் மறுப்பு சொல்வார்

அக்காலகட்டத்தின் உத்வேகத்தை அவர் சொல்லிக்கேட்கையில் ஆச்சரியமாகவே இருக்கும். அண்ணாத்துரை புதுக்கோட்டையில் சொற்பொழிவாற்றிவிட்டு பட்டுக்கோட்டைக்குச் செல்வார். அந்தப்பேச்சு முடிந்ததுமே சைக்கிளில் பெரும்திரளாக இளைஞர்கள் கிளம்பி பட்டுக்கோட்டைக்குச் செல்வார்கள். அப்படியே திருப்பத்தூர்.மதுரையில் பேசிக்கேட்டபின் அடங்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் வரைக்கும்கூடச் சென்றிருக்கிறார்கள். ‘விதவிதமா பேசுவாரா?” என்றால் “இல்ல, ஒரே பேச்சுத்தான். அதை நாங்களே வார்த்தைக்குவார்த்தை பேசிருவோம். சும்மா அந்த தோரணையைப்பாக்கணும்னுதான்” என்பார்

அவரது சித்தரிப்பில் வரும் தி.மு.க நாமறியாத இன்னொன்று. அன்றையதஞ்சையின் ஆதிக்கம் மூன்று தரப்பினரிடம். சைவமடங்கள், நிலச்சுவான்தார்கள் [வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபித்தலம் மூப்பனார் என அண்ணாத்துரை அடுக்கிக்கொண்டே செல்வார்] மற்றும் பிராமணர்கள். அவர்களுக்கு எதிரான ஒரு மாற்றம் தேவை என உணர்ந்த எளிய மக்கள் அன்று காங்கிரஸ்,கம்யூனிஸ்டுக் கட்சிகளை ஆதரித்தனர்.

இன்னும் அடித்தளமக்கள் நேரடியாக மேடைவழியாகவே முதல் அரசியல்கல்வியை அடைந்து திமுகவுக்கு வந்தனர் திமுக அவர்களின் கட்சியாகவே கிராமங்களில் வேரூன்றியது. சலவைத்தொழிலாளர்களின், சவரத்தொழிலாளர்களின் கட்சி என அதற்கு ஒருகாலத்தில் பெயர் இருந்தது. ஆரம்பகால ஊழியர்கள் பலர் அவர்களே

காமராஜரின் ஓர் உத்தியே தமிழகத்தில் காங்கிரஸுக்கு வலுவான ஆட்சியை ஆரம்பத்தில் உருவாக்கியளித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் எப்போதும் வலுவான கட்சியாக இருக்கவில்லை. சுதந்திரத்திற்குமுன் அவர்களால் நிலையான ஆட்சியை அளிக்கமுடிந்ததே இல்லை. சுதந்திரத்திற்குப்பின் நான்கில் மூன்று பெரும்பான்மை பெற்று அரசியல்நிர்ணயசபையை நிலைநிறுத்த வலுவான வாக்குப்பின்புலம் காங்கிரஸுக்குத் தேவையாகியது. தமிழகத்தில் அதற்குக் காங்கிரஸ் கண்டடைந்த வழி வெல்லும் வாய்ப்புள்ளவர்களை காங்கிரஸுக்கு இழுத்து வேட்பாளராக நிறுத்துவது

பூண்டிவாண்டையாரும் கபித்தலம் மூப்பனாரும் காங்கிரஸ் வேட்பாளராக ஆனார்கள். அது காங்கிரஸ் மீதிருந்த அடித்தளமக்களின் நம்பிக்கையை அழித்தது. ஆரம்பகால தேர்தல்வெற்றிகள் அளித்த உறுதியான அரசைக்கொண்டே காமராஜ் இன்றும் தமிழகத்தை வாழவைக்கும் மகத்தான பொருளியல் அடிக்கட்டுமானங்களை உருவாக்கினார். ஆனால் காங்கிரஸின் வெகுஜன அடித்தளம் உடைந்தது. இன்றுவரை அது பெரியமனிதர்களின் கட்சிதான்

அந்த இடைவெளியில்தான் திமுக என்னும் குறுகியகால இலட்சியவாதம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. அடித்தளமக்களுக்கென ஒரு காலம் தமிழ்நாட்டில் எழும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. படிப்பகம் நடத்துதல்,செந்தமிழில் பேசுதல், பொங்கல்கொண்டாடுதல், அரும்புமீசை வைத்து தோளில் துண்டு அணிதல் என ஓர் அரசியல் எழுச்சியின் கொண்டாட்டம்.

திமுகவின் அக்கிலிஸ்கணுக்கால் என்ன? இப்போது தோன்றுகிறது சினிமாதான் என. மேடைப்பேச்சு அவர்களை அரசியல்கட்சியாக எழுச்சியுறச்செய்தது. ஆனால் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக அவர்கள் சினிமாவை நோக்கிச் சென்றனர். சினிமா அவர்களை பிரபலப்படுத்தியது.பணம் கொண்டவர்களாக ஆக்கியது. ஆனால் அவர்களின் அறிவார்ந்த அடித்தளத்தை அது தகர்த்தது. இருந்த எளிய இலட்சியவாதத்தையும் வரண்டுபோகச்செய்து  ஒருவகைக் கேளிக்கையாக அரசியலை மாற்றியது. காரணம்  அன்று வளர்ந்துகொண்டிருந்த வணிகக்கலை அது.மிகசில ஆண்டுகளிலேயே திமுக என்றாலே சினிமாமோகம் என்னும் நிலைவந்தது

அதை என் மாமனாரிடம் கேட்டேன், அவர்  “என்னிக்கு அண்ணாவை விட அதிககூட்டம் எஸ்.எஸ்.ஆருக்கு வர ஆரம்பிச்சுதோ அன்னிகே எல்லாம் செத்திட்டுது”என்றார் அதன் அடுத்தகட்டம் வாக்கரசியல். அதன் ஒருபகுதியான சாதி அரசியல். மீண்டும் காமராஜ் விழுந்த அதே குழி. அதைத்தான் அ.மார்க்ஸ் இறுதியாகச் சொல்கிறார். பூண்டிவாண்டையார்களுக்கும் கபித்தலம் மூப்பனார்களுக்கும் காங்கிரஸ் தியாகிகள் பிரச்சாரம் செய்யநேர்ந்த சோகத்தின் அடுத்த அத்தியாயம். இப்போது, கடைசியாகக் குடும்ப அரசியல்.

சென்றகாலங்கள் எத்தனை சுருக்கமானவையாக தெளிவானவையாக இருக்கின்றன. சமகாலமும் அப்படி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

 

 

புகைத்திரை ஓவியம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 11

துச்சளை இருகைகளாலும் கர்ணனின் வலக்கையை பற்றி தன்தோளில் வைத்து அதில் கன்னங்களை அழுத்தியபடி “மூத்தவரே, என் கனவில் எப்படியும் நாலைந்துநாட்களுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிடுவீர்கள். ஒவ்வொருமுறையும் நீங்கள் விண்ணிலிருந்து பேசுவது போலவும் நான் அண்ணாந்து உங்கள் குரலை கேட்பது போலவும்தான் இருக்கும். இப்போதுதான் தெரிகிறது. உங்கள் முகம் எனக்கு தலைக்குமேல் நெடுந்தொலைவில் உள்ளது. இப்படி நிமிர்ந்து பார்த்தால் வானத்தின் பகைப்புலத்தில் தெரிகிறீர்கள்” என்றாள்.

துச்சலன் “ஆகவேதான் அவரை வெய்யோன் மைந்தன் என்கிறார்கள்” என்றான். “அரிய கண்டுபிடிப்பு!” என்று துச்சளை துச்சலனின் தோளை அறைந்தாள். “மூத்தவரே, எங்கள் தந்தைக்கு மட்டும் எப்படி நூற்றுவரும் ஒரேபோன்று அறிவுத்திறனில் பிறந்திருக்கிறார்கள்?” “ஏன்? சுஜாதன் அறிவாளிதானே?” என்றான் துச்சலன். கர்ணன் “அவர்களிடம் விடுபட்ட அறிவுத்திறன் அனைத்தும் உனக்கு வந்திருக்கிறதே!” என்றான். துச்சகன் “ஆம். நான் அதையே எண்ணிக்கொள்வேன். எங்களைவிட இவள் எப்படி இவ்வளவு அறிவுடன் இருக்கிறாள்?” என்றான். துச்சளை தலையை நொடித்து “என்னை கேலி செய்கிறீர்கள் என்று தெரிகிறது” என்றாள்.

பின்னால் இருந்து சகன் அவள் மேலாடையை பற்றி இழுத்து “இங்கே பார்! நாங்களெல்லாரும் இளமையிலேயே படைக்கலப்பயிற்சிக்கு போய்விட்டோம். ஆகவேதான் எங்களுக்கு கல்வி கற்க பொழுதேயில்லை. நீ அரண்மனையிலேயே இருந்தாய். ஆகவே நீ கல்விகற்று அரசுசூழ்தலில் திறமை கொண்டவளானாய்” என்றான். “ஏன்? படைக்கலக் கல்வியில் தேர்ந்துவிட்டீர்களோ?” என்றாள் துச்சளை. கர்ணன் “அது எப்படி? துரோணர்தான் என்ன செய்ய முடியும்? முதல் கௌரவரிடமிருந்து அவர் கற்பிக்கத் தொடங்கினார். பத்தாவது கௌரவனுக்கு வருவதற்குள்ளாகவே அவர் களைத்துவிட்டார்” என்றான்.

துர்மதன் “ஆம். அவரது குருகுலத்தில் எப்போதுமே எங்களை எல்லாம் கூட்டமாக நிறுத்திதான் சொல்லிக்கொடுத்தார். அவர் என்ன சொல்கிறார் என்பதே எங்களுக்கு கேட்பதில்லை. ஆகவே பெரும்பாலும் வகுப்புகளில் சாய்ந்து துயில்வதுண்டு” என்றான். துச்சளை “குருகுலத்திற்குள் வாழும் மான்களையும் கங்கைக்கரை முதலைகளையும் எல்லாம் வேட்டையாடித் தின்றால் அப்படித்தான் தூக்கம் வரும்” என்றாள். துச்சலன் “நாம் சண்டை போடுவதற்கு இன்னும் நெடுநாட்கள் உள்ளன. இப்போது அரசுமுறை சடங்குகளுக்கான நேரம்” என்றான். கர்ணன் நகைத்தபடி “இந்தக் கலவரப்பகுதியில் என்ன சடங்கு நிகழமுடியும்?” என்றான்.

அவர்களைச்சுற்றி அதுவரை இருந்த அனைத்து ஒழுங்குகளும் சிதறி மீண்டும் தங்களை ஒருங்கமைக்கும் முயற்சியில் மேலும் கலைந்து கூச்சல்களும் காலடி ஓசைகளும் படைக்கலன்கள் உரசும் ஒலிகளுமாக இருந்தது சூழல். “முதலை புகுந்த நீர்ப்பறவைக்கூட்டம் போல” என்று துச்சலன் சொன்னான். “நானும் அதையேதான் நினைத்தேன்” என்றான் துச்சகன். “கங்கைக்கரை முதலைகள் மிகச்சுவையானவை. மீன்களைப்போல அடுக்கடுக்கான மென்மையான வெண்ணிற ஊன்…” என்றான்.

கர்ணன் “நமது இளவல்கள் அப்படியே மொத்த அஸ்தினபுரியையும் கலைத்துக்கொண்டு இந்நேரம் அரண்மனை சென்றடைந்திருப்பார்கள்” என்றான். “ஆம், அவர்கள் செல்லும் வழியே ஓசைகளாக கேட்கிறது. அங்காடியை கடந்துவிட்டனர்.” “அவர்கள் கொண்டு வருவது சிந்துநாட்டு இளவரசன் என்று அங்கு யாருக்காவது தெரியுமோ என்னவோ? விளையாட்டுக்களிப்பில் பாதி வழியிலேயே அவனை தரையில் விட்டுவிட்டுப் போனால்கூட வியப்பதற்கில்லை” என்றான் கர்ணன். சத்வன் “ஆம். ஆனால் ஒன்றுள்ளது. சிந்துநாட்டுக் குழந்தை நம் குழந்தைகளைப்போல பெரிய உருவம் கொண்டதல்ல. ஆகவே அரச குடியினருக்கு ஐயம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றான். “ஆனால் இங்கே கொஞ்சநாள் இருந்தால் யானைப்பால் குடித்து அவனும் பெரியவனாக ஆகிவிடுவான்.”

கோட்டைக்குள் அவர்கள் நுழைந்ததும் கோட்டைக்காவலன் இருபுறமும் கைநீட்டியபடி பதற்றம்கொண்டு கூவி வீரர்களை திரட்டிக்கொண்டே அவர்களை எதிர்கொண்டு மூச்சுவாங்க தலைவணங்கி “அரசியார் என்மேல் பொறுத்தருள வேண்டும். சற்று நேரத்தில் இங்குள்ள அனைத்தும் ஒழுங்கு சிதறிவிட்டன. நகரத்துக்குள் தங்களை பார்ப்பதற்காக வந்து குழுமிய மக்கள் தெருக்களில் இறங்கிவிட்டார்கள். அவர்களை ஒதுக்குவதற்காக இங்குள்ள படைகள் அனைத்தையும் அங்கு அனுப்பினேன். அதற்குள் இங்குள்ளவர்கள் கலைந்துவிட்டார்கள். இப்போது இங்கு ஒழுங்கை நிறுத்துவதற்கு என்னிடம் படைகள் இல்லை” என்றான். கர்ணன் “இப்படியே இருக்கட்டும். இது படை நகர்வு அல்ல. திருவிழா” என்றான்.

அவன் அதை புரிந்துகொள்ளாமல் “பொறுத்தருள வேண்டும் மூத்தவரே. இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை” என்றான். “நன்று” என்றபடி கர்ணன் கோட்டைவாயிலைக் கடந்து மறுபக்கம் சென்றபிறகுதான் கோட்டைக்காவலன் திடுக்கிட்டு எண்ணிக்கொண்டு முரசறைபவனை நோக்கி கையசைக்க அவர்களை வரவேற்கும் பெருமுரசங்கள் முழங்கத்தொடங்கின. முற்றமெங்கும் அதுவரை செய்யப்பட்டிருந்த அணியமைப்புகள் பொலிநிரைகள் அனைத்தும் கிழிந்தும் சிதறியும் தரையில் மிதிபட்டுக் கிடந்தன. பொதுமக்கள் பெருமுற்றத்தில் இறங்கி ஒருவரையொருவர் நோக்கி கூச்சலிட்டு அணைந்தும் குறுக்காக ஓடியும் அதை வண்ணக்கொந்தளிப்பாக மாற்றியிருந்தனர். விதுரர் நிற்பதற்காக போடப்பட்டிருந்த அணிப்பந்தல் குடை சரிந்திருந்தது. அவர் அருகே மேடையில் கனகர் நின்று பதற்றத்துடன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். விதுரர்தான் கூட்டத்தின் நடுவே வந்த துச்சளையைப் பார்த்து முதலில் கையசைத்தார்.

கனகர் அவளை நோக்கி ஓடிவந்து “இங்கு அனைத்துமே சிதறிவிட்டன இளவரசி… அஸ்தினபுரிக்கு நல்வரவு. வாருங்கள்” என்றார். துச்சளை சென்று விதுரரின் முன் முழந்தாளிட்டு தன் நெற்றியால் அவர் கால்களை தொட்டாள். “பதினாறு சிறப்புகளும் தெய்வங்களால் அருளப்படுவதாக!” என்று விதுரர் அவளை வாழ்த்தினார். அவள் எழுந்து அவர் அருகே நின்றதும் திரும்பி தன் அருகே நின்ற பணியாளர்களிடமிருந்து குங்குமத்தைத் தொட்டு அவள் நெற்றியில் இட்டு “என்றும் குன்றாத மங்கலம் உடன் வருக!” என்றார். எவ்வித உணர்வுமின்றி அதை சொல்லவேண்டுமென்று அவர் முன்னரே முடிவு செய்திருந்தபோதிலும் கண்களில் படர்ந்த ஈரமும் இதழ்களில் இருந்த சிறு நடுக்கமும் அவர் உணர்வெழுச்சி கொண்டிருப்பதை காட்டின.

“தங்கையே, உனக்காக அஸ்தினபுரியின் பொற்தேர் வந்து நின்றிருக்கிறது” என்றான் கர்ணன். துச்சலன் “முதலில் அதில் நான்கு சகடங்களும் ஆணிகளில் இருக்கின்றனவா என்று பாருங்கள். கடையாணியை கழற்றிக்கொண்டு போயிருக்கப்போகிறார்கள்” என்றான். கனகர் தானாக வந்த சிரிப்பை விதுரரை கடைக்கண்ணால் பார்த்து அடக்கிக்கொண்டு “நான் நோக்கிவிட்டேன், கடையாணிகள் உள்ளன” என்றார். கர்ணன் “இந்நேரம் அரண்மனை எப்படி இருக்கும் என்பதைப்பற்றித்தான் நாம் கவலை கொள்ளவேண்டும்” என்றான். துச்சளை “எத்தனை குழந்தைகள்! நான் சென்று மூன்று வருடங்களாகின்றன மூத்தவரே. இப்போது நினைக்கையில் ஏன் சென்றோம் என்று இருக்கிறது. இங்கிருந்தேன் என்றால் ஒவ்வொருவரையும் மடி நிறைத்து வாழ்ந்திருப்பேன்” என்றாள்.

“இனியும் என்ன? ஒரு ஐநூறு குழந்தைகளை சிந்துநாட்டுக்கு கொண்டு செல்” என்றான் துச்சகன். கர்ணன் “அந்த ஐநூறு குழந்தைகளின் இடத்தையும் இவர்கள் உடனே நிரப்பிவிடுவார்கள்” என்றான். அமைச்சர் கைடபர் வந்து வணங்கி நின்றார். துச்சளை “கைடபரே, நலமாக இருக்கிறீர்களா?” என்றாள். “சிந்துநாட்டரசியை தலைவணங்குகிறேன்” என்றார் கைடபர். “பாருங்கள்! இத்தனை கலவரத்திலும் முறைமைச் சொற்களை கைவிடாதிருக்கிறார்” என்றாள் துச்சளை.

கர்ணன் “ஆம். அது ஒரு அமைச்சரின் கடமை. முதிர்ந்து படுக்கையில் இருக்கையில் பாசக்கயிற்றில் எருமைக்காரன் வரும்போதுகூட நன்று சூழ்க நாம் கிளம்புவோம் என்று முறைமைச் சொல்லை சொல்ல வேண்டும்” என்றான். அப்போதும் கைடபர் முகத்தில் புன்னகை எழவில்லை. தலைவணங்கி “ஆவன செய்துள்ளோம் இளவரசி” என்றார். “நன்று! இந்த ஒரு முகத்திலாவது அரச முறைமை எஞ்சுவது நிறைவளிக்கிறது” என்றான் கர்ணன்.

துச்சளை “மூத்தவரே, என்னுடன் நீங்களும் தேரில் ஏறிக்கொள்ளுங்கள்” என்றாள். “நானா?” என்று கர்ணன் சிரித்து “மூன்றாண்டுகளுக்குப் பிறகு நகர் நுழைகிறாய். உன்னைப் பார்ப்பதற்காகத்தான் அஸ்தினபுரியின் அனைத்து மக்களும் இருபுறமும் கூடியுள்ளனர்” என்றான். “நீங்கள் என்னருகே நின்றால் எவரும் என்னை பார்க்கமாட்டார்களென்று எனக்குத் தெரியும்” என்றாள் துச்சளை. “ஆனால் நான் உங்களை பார்க்க விரும்புகிறேன்.”

“நாம் பேசுவதற்கென்ன? நான் உன் மகளிர்மாளிகைக்கே வருகிறேன். இரவெல்லாம் பேசுவோமே” என்றான் கர்ணன். “அரண்மனையில் நாம் பேசப்போவதில்லை. அங்கு சென்றதுமே அரசமுறைமைகளும் விழவுக் களியாட்டுகளும் தொடங்கிவிடும். என்னை பத்தாகக் கிழித்து பத்து இடங்களுக்கு அனுப்பினால்தான் சரியாக வரும். இங்கிருந்து அங்கு போவதுவரை மட்டுமே நான் உங்களிடம் தனியாக பேசமுடியும்” என்றபின் அவன் கையைப்பற்றி சிணுங்கலாக “வாருங்கள்” என்றாள்.

கர்ணன் திரும்பி விதுரரைப் பார்க்க அவர் மெல்ல இதழ்நீள புன்னகைத்தார். கைடபர் “தாங்களும் ஏறிக் கொள்ளலாம் அங்கரே” என்றார். “அங்கநாட்டு அரசனுடன் சிந்துநாட்டு அரசி வருவது அரசமுறைப்படி பிழையன்று அல்லவா?” என்றான் கர்ணன். கைடபர் “அங்கநாடும் சிந்துநாடும் போரில் இருக்கும்போது மட்டும் அது ஒப்பப்படுவதில்லை” என்றார். அவர் கண்களுக்குள் ஆழத்தில் சென்று மறைந்த புன்னகையின் ஒளியைக் கண்ட கர்ணன் உரக்க நகைத்து “ஆம். அதற்கான வாய்ப்புகள் சற்று முன்பு வரைக்கும் இருந்தன” என்றபின் துச்சளையின் தலையைத் தட்டி “வாடி” என்றான்.

துச்சளையின் தேரில் கர்ணன் ஏறிக்கொண்டு கை நீட்டினான். அவள் அவன் கையைப்பற்றி உடலை உந்தி ஏறி தட்டில் நின்று மூச்சிரைத்தாள். “மிகுந்த எடை கொண்டுவிட்டாய்! எப்படி? இதற்காக கடுமையாக உழைத்தாயா?” என்றான் கர்ணன். “அங்கு நான் எந்த திசையில் திரும்பினாலும் உணவாக இருக்கிறது. நான் என்ன செய்ய?” என்றாள் துச்சளை. “அத்துடன் குழந்தை பிறந்ததும் எனக்கு பேற்றுணவு அளிக்கத்தொடங்கினார்கள். முழுக்கமுழுக்க ஊனும் மீனும். பெருக்காமல் என்ன செய்வேன்?” சிரித்துக்கொண்டு “சிந்துநாட்டின் பல நுழைவாயில்களில் என்னால் கடந்து செல்லவே முடியவில்லை” என்றாள்.

“நன்று. பெண்டிர் மணமான ஆண்டுகளில் இப்படி ஆவதில் இறைவனின் ஆணை ஒன்று உள்ளது” என்று தொலைவை நோக்கியபடி கர்ணன் சொன்னான். அவன் குரலிலேயே கேலியை உணர்ந்து “என்ன?” என்றாள் துச்சளை. “உன்னை முன்பு விரும்பியிருந்த அரசர்கள் அத்தனைபேரும் ஆறுதல் கொள்ளவேண்டுமல்லவா?” என்றான். அவள் ஓங்கி அவன் தோளில் அறைந்து “கேலி செய்கிறீர்களா?” என்றாள். கர்ணன் சிரித்து “பாவம் அந்த பூரிசிரவஸ். அவன் பால்ஹிகநாட்டிலேயே ஏதோ குலக்குழுத்தலைவரின் மகளை மணந்திருக்கிறான்” என்றான். அவள் கண்கள் மாறின. “கேலி வேண்டாம் மூத்தவரே” என்றாள். கர்ணன் “சரி” என்றான்.

கர்ணன் தேரோட்டியிடம் “செல்க!” என்றான். தேர் அரசநெடும்பாதையில் செல்லத் தொடங்கியது. ஆனால் தெருவெங்கும் சிதறிக்கிடந்த பந்தல் மூங்கில்களும், சிதைந்த வாழைத்தண்டுகளும், சகடங்களில் சுற்றிச்சுழன்ற பட்டுத்துணிகளும், சரிந்துநின்ற பாவட்டாக்களும், சாலைக்குக் குறுக்கே சரிந்துசென்ற தோரணக்கயிறுகளுமாக அவர்களின் பயணம் நின்றும் தயங்கியும் ஒதுங்கியும்தான் அமைந்தது. இருபக்கமும் கூடிநின்ற அஸ்தினபுரியின் மக்கள் அனைத்து முறைமைகளையும் மறந்து களிவெறி கொண்டு கூச்சலிட்டனர். மலர் மாலைகளையும் பட்டாடைகளையும் தூக்கி அவர்கள் மேல் வீசினர். அரிமலர் பொழிவதற்கு நிகராகவே மஞ்சள்பொடியும் செந்தூரக்கலவையும் செம்பஞ்சுக்குழம்பும் சந்தனக்காடியும் அவர்கள் மேல் கொட்டியது.

34

“வெறியில் வீட்டிலுள்ள கோலமாவையும் அப்பக்காடியையும் எல்லாம் அள்ளி வீசிவிடுவார்கள் போலிருக்கிறது” என்றான் கர்ணன். துளிகளும் தூசும் பறந்து காற்றே வண்ணங்கள் கலந்த திரைப்படலம் போலாயிற்று. சற்று நேரத்தில் இருவரும் உடலெங்கும் வண்ணங்கள் நிறைந்து ஓவியங்கள் என்றாயினர். துச்சளை வாய்பொத்தி நகைத்தபடி “இவர்கள் இந்திரவிழவு என்று தவறாக எண்ணிவிட்டனர்” என்றாள். “சம்பாபுரியில் சூரியவிழவு இப்படித்தான் இருக்கும்” என்றான் கர்ணன்.

துச்சளை “அரசியர் கருவுற்றிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்” என்று அவனைப் பாராமல் சொன்னாள். “ஆம்” என்றான் கர்ணன். “இளைய அரசியின் செய்தி அரசருக்கு வந்தது” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “அதை என்னிடம் காட்டினார். அதில் அவருக்கு ஒரு பெருமை. அதை என்னிடம் காட்டுவதில் மேலும் பெருமை” என்றாள். “நீ என்ன சொன்னாய்?” என்றான். துச்சளை “பெண்களின் நுண்ணுணர்வுக்கு அளவே இல்லை. அவற்றை அவர்கள் பயன்படுத்தும் அறியாமைக்கும் அளவே இல்லை என்றேன்” என்றாள்.

கர்ணன் நகைத்தபடி “அரிய சொல். இதை நான் சூதனிடம் சொல்லி பாடலில் சேர்த்து காலத்தால் அழியாமல் ஆக்க வேண்டும்” என்றான். சிறிய வெண்பற்கள் தெரிய நகைத்தபோது துச்சளையின் முகம் மிக அழகானதாக ஆயிற்று. “இளையவளே, உடல் பெருத்தபோது நீ மேலும் அழகிய புன்னகை கொண்டு விட்டாய்” என்றான். “புன்னகை மட்டும்தான் அழகாக இருக்கிறது என்கிறீர்கள்” என்றாள். “இல்லையடி, திடீரென்று நீ ஒரு பெரிய குழந்தையென ஆகிவிட்டது போலிருக்கிறது. சட்டென்று மழலைச்சொல் எடுக்கத் தொடங்கிவிடுவாயோ என்று தோன்றுகிறது” என்றான் கர்ணன். அவள் அவன் கையைப்பற்றி தோளில் தலைசாய்த்து “மூத்தவரே, தங்களிடம் மழலை பேசவேண்டுமென்று எவ்வளவு விழைகிறேன் தெரியுமா?” என்றாள்.

கர்ணன் அவள் நெற்றியின் கூந்தலைப் பார்த்து “உன் கூந்தல் என்ன இவ்வளவு மேலேறிவிட்டது?” என்றான். “கருவுற்று குழந்தை ஈன்றால் நெற்றி முடி உதிரும். இது கூடத்தெரியாதா?” என்றாள். “அப்படியா?” என்றான் கர்ணன். “உண்மையிலேயே தெரியாது” என்றான். “மூத்தவள் கருவுற்றிருக்கிறாள் அல்லவா? சின்னாட்களில் தெரியும்” என்றாள். கர்ணன் “பார்க்கிறேன்” என்றான். “தங்கள் கண்களில் உவகை இல்லை மூத்தவரே” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “என்ன நடக்கிறது என்று என்னால் எளிதில் அறியமுடியும் மூத்தவரே. நான் என்ன சொல்ல? தங்கள் ஒளிமிக்க பீடத்திலிருந்து இங்குள்ள எளிய மானுடரை எப்போதும் பொறுத்தருளிக் கொண்டே இருக்கவேண்டும்” என்றாள் துச்சளை.

கர்ணன் அவளை திரும்பி நோக்காமல் அவன்முன் வாழ்த்தொலிகளுடன் கொந்தளித்த மக்களின் பலநூறு கைகளின் அலையடிப்பையும் விழியொளிகளின் மின்மினிக் கூட்டத்தையும் பற்களின் நுரைக்கீற்றுகளையும் பார்த்தபடி சென்றான். அதன்பின் சற்றுநேரம் துச்சளை ஒன்றும் சொல்லவில்லை. அரண்மனையின் மையக்கோட்டை தெரியத் தொடங்கியதும் “மூத்தவரே, தாங்கள் இளைய யாதவரை எப்போதேனும் பார்த்தீர்களா?” என்றாள். “இல்லை” என்றான் கர்ணன். “ஆம், அதை நானும் உய்த்தேன். ஆனால் அவ்வண்ணம் எண்ணுகையில் என் உள்ளம்கொள்ளும் துயர் பெரிது” என்றாள். “ஏன்?” என்றான் கர்ணன். “என் உள்ளம் நிறைந்துநிற்கும் இருவர் நீங்களும் அவரும். ஏன் ஒருமுறைகூட உங்களுக்குள் ஒரு நல்ல சந்திப்பு அமையவில்லை? என்றேனும் உளம் பரிமாறியிருக்கிறீர்களா?” என்றாள்.

“அது நிகழாது இளையவளே” என்றான் கர்ணன். “ஏன்?” என்றாள். ஒன்றும் சொல்லாமல் நின்றான். அவள் அவன் கையைப்பிடித்து சற்றே உலுக்கி “சொல்லுங்கள்” என்றாள். கர்ணன் திரும்பி அவள் கண்களுக்குள் நோக்கி “எங்களுக்கு நடுவே ஒருபோதும் சொல்லென ஆக முடியாத ஒன்றுள்ளது குழந்தை” என்றான். அவள் கண்கள் சற்றே மாற “என்ன?” என்றாள். கர்ணன் புன்னகைத்து “சொல்லென மாறமுடியாதது என்றேனே” என்றான். அவள் மெல்ல சிணுங்கும் குரலில் “அப்படியென்றால் எனக்கு உணர்த்துங்கள்” என்றாள். “என் முன் மழலை பேசுவதாக சொன்னாய். இப்போது அரசுசூழ்தலை பேசத் தொடங்கியிருக்கிறாய்” என்றான்.

அவள் சிலகணங்கள் அவனை நோக்கியபின் சட்டென்று நகைத்து “சொல்ல விரும்பவில்லை அல்லவா? சரி நான் கேட்கவும் போவதில்லை. ஆனால் என்றேனும் நீங்கள் இருவரும் தோள்தழுவி நிற்கும் காட்சியை நான் பார்க்கவேண்டும். பெண்ணென அன்று என் உள்ளம் நிறையும்” என்றாள். கர்ணன் “நன்று! அது நிகழ்வதாக!” என்றான்.

துச்சளை “அத்துடன் இன்னொன்றையும் நான் சொல்லவேண்டும். அதற்கென்றே இத்தேரில் உங்களை ஏற்றினேன் மூத்தவரே” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “தாங்கள் சிந்துநாட்டு அரசரைப்பற்றி சொன்னீர்கள். இப்போது அரசவையில் அவரை மீண்டும் சந்திக்கவும் போகிறீர்கள். ஒருபோதும் அவர் உங்களை அவமதிக்கப் போவதில்லை. ஏனெனில் என் உள்ளம் அவருக்குத் தெரியும். என் ஆற்றலும் அவருக்கு நன்கு தெரியும். அதை மீறும் அகத்திறன் கொண்டவரல்ல அவர். எனவே அந்த ஐயம் உங்களுக்கு வேண்டியதில்லை. ஆனால் தாங்கள் நினைப்பதுபோன்றவர் அல்ல அவர்” என்றாள்.

“அதை ஒரு துணைவியாக நீ சொல்லியாக வேண்டுமல்லவா?” என்றான் கர்ணன். “இல்லை மூத்தவரே. துணைவியாக மட்டும் சொல்லவில்லை” என்றபின் அவள் அவன் கையைப்பற்றி தன் தோளில் வைத்து “தங்கள் தங்கையாக நின்று இதை சொல்கிறேன். அவர் மிக எளியவர். பாரதவர்ஷத்தின் பிற ஷத்ரிய மன்னர்களிடமிருந்து பலவகையிலும் மேம்பட்டவரே. போர்த்திறனில், கல்வியில், அரசுசூழ்தலில், படைகொண்டு செல்லுதலில். ஆனால் அவர் பிறந்த இக்காலகட்டம் எங்கும் அவரை இரண்டாம் நிலையிலேயே வைத்துள்ளது. வென்று எழுந்து உங்களுக்கும் பார்த்தருக்கும் பீமனுக்கும் நிகர் நிற்க அவரால் இயலாது. ஒரு கணமேனும் துவாரகையின் தலைவனிடம் தானுமொரு ஆணென நிற்க அவருக்கு வாய்க்காது” என்றாள்.

“ஆனால் அரசர் என ஆண்மகன் என அவர் அப்படி விழைவதில் என்ன பிழை உள்ளது? அதற்கென அவரை நீங்கள் பொறுத்தருளவே வேண்டும். நீங்கள் அறிந்திருப்பீர்கள். மூத்தவரோ இளையவரோ இன்றி ஒற்றை மைந்தனாக சிந்துநாட்டரசுக்குப் பிறந்தவர் அவர். சிந்துநாடோ சூழ்ந்திருக்கும் நாடுகளால் அச்சுறுத்தப்பட்டு சிறுத்துக் கிடந்தது. மணிமுடி சூடி படைதிரட்டி தன் எல்லைகளை காத்தார். கருவூலத்தை நிறைத்தார். மேலும் என அவர் விழையும்போது எந்த ஷத்ரிய அரசரையும் போல பாரதவர்ஷத்தின் தலைவர் என்ற சொல்லே அவரை கிளரவைக்கிறது. அவரைச் சூழ்ந்து அதைச்சொல்ல ஒரு கூட்டமும் இருக்கிறது.”

கர்ணன் “நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?” என்றான். “இப்புவியில் அத்தனை மானுடரிடமும் நீங்கள் செய்வதைத்தான். அவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்கள் இளையோன் என எண்ணி பொறுத்தருளுங்கள்” என்றாள். “இதை நீ என்னிடம் சொல்லவேண்டுமா இளையவளே?” என்றான். “இல்லை. நீங்கள் அவ்வண்ணமே இருப்பீர்கள் என்று அறியாதவளா நான்? அதை நான் சொல்லி முடிக்கையில் எனக்கு எழும் நிறைவொன்றே போதும். அதற்காகத்தான் சொன்னேன்” என்றாள்.

அரண்மனை உள்கோட்டையின் முகப்பில் அவர்களை வரவேற்று அழைத்துச்செல்ல அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நின்றிருந்தனர். படைத்தலைவர் உக்ரசேனர் தலைவணங்கி “அஸ்தினபுரிக்கு சிந்துநாட்டரசியை வரவேற்கிறோம். இவ்வரண்மனை தங்கள் பாதங்கள் பட பெருமை கொள்கிறது” என்றார். கர்ணன் “தாழ்வில்லை. இங்கு அனைத்தையும் ஓரளவுக்கு சீரமைத்துவிட்டார்கள்” என்றான். உக்ரசேனர் “இவ்வழியே” என்றார். பின்னால் விதுரரின் தேரும் தொடர்ந்து கௌரவர்களின் தேர்களும் வந்து நின்றன.

தங்களுக்குப் பின்னால் அத்தனை மாளிகைகளிலும் அஸ்தினபுரியின் முகங்கள் செறிந்து வாழ்த்தொலி கூவிக்கொண்டிருப்பதை கர்ணன் கேட்டான். முதுபெண்கள் முன்நிரையில் நிறைந்திருந்தனர். “இளையவளே, பார்! அத்தனை முகங்களிலும் உன்னை எதிர்நோக்கும் அன்னை தெரிகிறாள்” என்றான். துச்சளை திரும்பி அண்ணாந்து ஒவ்வொரு முகத்தையாக பார்த்தாள். அறியாத ஒரு கணத்தில் நெஞ்சு விம்மி இருகைகளை கூப்பியபடி “ஆம். மூத்தவரே, மீண்டு வந்துவிட்டேன் என்று இப்போதுதான் உணர்கிறேன்” என்றாள்.

அரண்மனை முகப்பில் மங்கலத்தாலமேந்திய அணிச்சேடியர் காத்து நின்றிருந்தனர். அவர்களைச் சூழ்ந்து இசைச்சூதர்கள் நின்றிருந்தனர். காவலர்தலைவர் கிருதர் ஓடிவந்து அவர்களை வணங்கி “அரண்மனைக்கு நல்வரவு இளவரசி” என்றார். “கிருதரே, நலமாக இருக்கிறீர்களா?” என்றாள். “ஆம், இளவரசி. நான் இப்போது கோட்டைக்காவலனாக உயர்ந்திருக்கிறேன்” என்றார். “சம்விரதை எப்படி இருக்கிறாள்?” அவர் முகம் மலர்ந்து “நான்காவது குழந்தை பிறந்துள்ளது இளவரசி… ஜயவிரதன் என்று பெயரிட்டிருக்கிறோம்” என்றார். “நன்று. குழந்தையை கொண்டுவரச்சொல்லுங்கள்…” என்றபடி அவள் முன்னால் சென்றாள்.

கிருதர் வழிநடத்த முற்றத்தை குறுக்காகக் கடந்து துச்சளையும் கர்ணனும், துச்சலனும் துர்முகனும் இருபக்கமும் வர நடந்தனர். பிற கௌரவர் பின்னால் வந்தனர். முன்னால் நின்றிருந்த மூத்தசூதர் கைகாட்ட மங்கல இசை மயிற்பீலிப்பொதிகள் அவிழ்ந்து சொரிவதுபோல அவர்களை மூடிச்சூழ்ந்தது. உலையில் உருக்கிய பொற்கம்பி வழிவதுபோல அணியும்துணியும் ஒளிவிட எழிற்சேடியர் சீராக நடந்துவந்து மங்கலத்தாலங்களை துச்சளை முன் காட்டி மும்முறை உழிந்து பின்வாங்கினர். அவர்கள் அனைவர் விழிகளிலும் துச்சளைக்கான சிரிப்பு இருந்தது. துச்சளை அவர்களை ஒவ்வொருத்தியாக அடையாளம் கண்டு நகைத்தாள்.

நறுமணத்தூமம் காட்ட வந்த ஏழுசேடியரில் ஒருத்தி மெல்ல உதட்டசைத்து துச்சளையிடம் ஏதோ சொல்ல அவள் “போடி” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “பருத்துவிட்டேன் என்கிறாள். அவள்கூடத்தான் பருத்திருக்கிறாள்” என்றாள் துச்சளை. அவள் மீண்டும் உதட்டைக்குவித்து ஏதோ சொல்லிவிட்டுச் சென்றாள். “போடி…” என்று துச்சளை மீண்டும் சீறினாள். “என்ன?” என்றான் கர்ணன். “உங்களுக்கு புரியாது… இது பெண்களின் பேச்சு” என்றாள்.

தொடர்புடைய பதிவுகள்

பாவண்ணன் சிறப்பிதழ்

$
0
0

1

 
அன்புள்ள நண்பர்களுக்கு,

பதாகை இணைய இதழ் எழுத்தாளர் பாவண்ணன் படைப்புகள் தாங்கிய சிறப்பிதழாக இன்று மலர்ந்துவிட்டது. இச்சிறப்பிதழுக்கு உதவிய நண்பர்களுக்கு பதாகை இணைய இதழ் ஆசிரியர் குழு சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://padhaakai.com/

இந்த முகவரியில் சிறப்பிதழின் கட்டுரைகள் அனைத்தையும் படிக்கலாம். கிட்டத்தட்ட 23 படைப்புகள் சிறப்பிதழை அலங்கரித்துள்ளதை இச்சிறப்பிதழின் பொறுப்பாசிரியாக மிக்க மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இதுவரை பொறுமையுடன் காத்திருந்து எங்களுக்குத் தேவையான கட்டுரைகள், நண்பர்களது தொடர்பு, புகைப்படங்கள் கொடுத்த உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளைத் தெரிந்துகொள்வதில் நாங்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறோம். (editor@padhaakai.com)

கீழே சிறப்பிதழின் ஆக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. http://padhaakai.com/ முகப்புப் பக்கத்திலும் இவை இருக்கின்றன.

கிரிதரன் ராஜகோபாலன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புதியவாசகர்களின் கடிதங்கள் 5

$
0
0

 

1

அன்பின் ஜெ

 
வணக்கம்,இதுவே உங்களுக்கு முதல் கடிதம்.
நானும் இங்கே கடிதம் எழுதும் பல பேரை போன்ற மன நிலையையே உடையவன்.உங்கள் அருகில் அமர்ந்திருந்த பொழுதும் உங்களிடம் பேசுவது இயலாத காரியமாகவே எனக்கு அமைந்தது.எனக்கு உங்களின் படைப்பில் மிகவும் பிடித்தது,நான் மிகவும் விரும்பி படித்தது, உங்களின் ஆஸ்திரேலியா பயண கட்டுரையான “புல்வெளி தேசம்”.எனது சாதனை என்னவென்றால் அந்த புத்தகத்தில் உங்கள் கையொப்பம் பெற்றது.இன்று காலையில் உங்கள் வலை பக்கத்தில் புதியவர்களுக்கு ஆன சந்திப்பு குறித்து அறிந்தேன்.உங்களை சந்தித்து பேச ஆவல்,இந்த முறை பேசிவிடுவது என்று முடிவு செய்தாயிற்று.

நன்றி

ல.ஸ்ரீனிவாசன்.

 

அன்புள்ள சீனிவாசன்,

உங்கள் முதலெழுத்து உங்களை நினைவுக்குள் நிறுத்தும் நண்பர் ஆடிட்டர் வெ.சுரேஷை வே சுரேஷ் என நெல்லை மொழியில் கூப்பிடுவதுண்டு. உங்களை லே சீனிவாசன் என குமரி மொழியில் அழைக்கலாம்

ஜெ

அன்புள்ள ஜெ,

தொடர்ச்சியான புதியவர்களின் கடிதங்கள் ஒரு சந்திப்பைத் திட்டமிடத் தூண்டியது மகிழ்ச்சி. நேரில் சந்திக்காவிட்டாலும் தொடர்ந்து படித்தும், முரண்பட்டும், விட்டு விலகியும், மீண்டு திரும்பியும் தொடர்ந்துள்ளது உங்கள் தளத்துடனான பயணம். நேர்ச் சந்திப்பில் பங்கேற்பது ஆர்வமாக உள்ளது.

ராஜேஸ்
சென்னை.

 

அன்புள்ள ராஜேஷ்

இத்தகைய ஒரு சந்திப்பு எனக்கே தேவைப்பட்டது

ஜெ

 

வணக்கம்,
புதியவர்கள் சந்திப்பு – உதகை குறித்த பதிவைப் பார்த்தேன். பிப்ரவரி 13, 14ம் தேதிகளில் வரலாம் என ஆவல் உந்தினாலும் சிறு தயக்கம் இருக்கிறது. காரணம் நான் உங்களின் வெண்கடல் தொகுப்பை மட்டும்தான் படித்திருக்கிறேன். இப்போதுதான் ‘புறப்பாடு’ என் கைக்கு வந்துள்ளது. இனிமேல்தான் வாசிக்கப் போகிறேன். கே.என்.சிவராமன் அவர்கள் கொற்றவையை எனக்கு வாசிக்கக் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. எனது வாசிப்பறிவை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொண்ட பிறகு கொற்றவையைப் படிக்கலாம் என காத்திருக்கிறேன். வெண்கடல் எனக்களித்த வாசிப்பனுபவம் அபாரமானது. இருந்தும் உங்களின் ஒரு சிறுகதைத் தொகுப்பை மட்டுமே படித்த நான் அச்சந்திப்பில் கலந்து கொள்வது சரியாக இருக்குமா?

கி.ச.திலீபன்

அன்புள்ள திலீபன்

நேரில் வருக, சந்திப்போம்

சந்திப்புகளில் முதல்தயக்கமே பெரிய சிக்கல். அதை உடைப்பதே பெரிய விஷயம். ஜே ஜே சிலகுறிப்புகளில் அந்த தருணம் அழகாக வந்திருக்கிறது

ஜெ

 

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கங்களுடன் அ. மலைச்சாமி எழுதுகிறேன். சுமார் 7 ஆண்டுகளாக நான் தங்களின் வாசகன். என்னை புரட்டிய படைப்புகள் தங்களுடையவை. இன்றைய காந்திதான் நான் வாசித்த தங்களின் முதல் புத்தகம். அதன் பின்னர் வாசித்த தங்களின் படைப்புகள் என்னை மிரள செய்தன. 7 ஆண்டுகளுக்கு முன்பு நான் தேவி வார இதழில் 2 சிறுகதைகளும், சில சிறு பத்திரிகைகளில் சில கவிதைகளும் எழுதியிருக்கிறேன். தங்கள் படைப்புகள் என்னை ஆள ஆரம்பித்த பின் கிட்டத்தட்ட நான் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். எழுதுவது வாசிக்கத்தான். வாசிப்பு சலிக்கும்போதோ அல்லது வாசிப்பில் குறை காணும்போதோ அல்லது அனுபவம், வாசிப்பினூடாக சில புதிய தரிசனங்கள் பெறும் போதுதானே எழுத முடியும்? நான் தங்கள் படைப்புகளை வாசிக்கும் தோறும்(குறிப்பாக அறம், வென்முரசு) பிரம்மிக்கவும், சிந்தனா இன்பத்தில் திளைக்கவுமே நேரம் போதவில்லை. அதனால்தான் எழுதுவது நின்று போனது. தங்கள் படைப்புகள் என்னை சுத்திகரித்து பேரின்ப வெளிக்கு தள்ளுகிறது.

தங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் 2013 ல் ஒரு முறை நாகர்கோவிலுக்கு வந்தேன். ஆனாலும் மனம் தங்களை சந்திக்க துணியவில்லை. திரும்பி வந்துவிட்டேன். அதன் பிறகு நீங்கள் சென்னைக்கு பல முறை வந்த போதும் தங்களை நேரில் பார்க்கும் பேறு தள்ளிக்கொண்டே போனது. கடந்த ஆண்டு தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் மாதாந்திர விழாவில், நாஞ்சில் நாட்டு தனிச்சிறப்புகள் குறித்து தாங்கள் உரை நிகழ்த்திய போது மூன்றாவது வரிசையின் நடுவில் அமர்ந்து தங்களையும், தங்கள் உரையையும் கேட்கும் பேறு பெற்றேன். ஒரு இலக்கிய விழாவில் அதுமாதிரியான நுட்பமான பேச்சுகளை அதுவரையும், அவ்வுரைக்கு பின்னும் நான் கேட்டதே இல்லை. அன்று எனக்கு இன்னொரு பயம் வந்தது. எழுத்துக்கும், பேச்சுக்கும் வித்தியாசமே இல்லாமல் துல்லியமாக பேசும் தங்களிடம், எதிலும் அரை குறையாக இருக்கும் நான் பேசி தங்களை வெறுப்படைய செய்ய கூடாது என்பதால் நாமெல்லாம் எட்டி நின்றால் போதும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் ஆசைக்கு அறிவு கிடையாது அல்லவா? பதின்ம வயது காமம் போல தங்களை நெருங்க ஆசை. நெருங்கினால் பயம்.

இலக்கியம் குறித்து பேசவும், பழகவும் நல்ல நண்பர்கள் வாய்க்கவே இல்லை. பல காலம் நான் ஏங்கியிருக்கிறேன். சில நண்பர்களை(என் மனைவி உட்பட) புத்தகங்கள் வாசிக்க செய்ய முயற்சிக்கவும் செய்தேன். முடியவில்லை. அதனால் எனக்கு நண்பர்களும் அவ்வளவு அதிகம் இல்லை. அறிதலின் இன்பத்தை அனுபவிக்க விரும்பாதவர்களிடம் தொடர்ந்து பேச எனக்கும் ஆர்வம் இல்லை. கடைநிலை அரசூழியனான நான் 150 பேர் பணியாற்றும் பணியிடத்தில் என்னைத் தவிர இலக்கியம் பேச யாருக்கும் ஆர்வம் இல்லை. யாரும் வாசிப்பதுமில்லை.

ஆகவே தங்களின் நீலகிரி இலக்கிய வாசகர் கூடலில் பங்கேற்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். என் பெயரை பரிசீலிக்குமாறு வேண்டுகிறேன்.

அன்பன்

அ.மலைச்சாமி

 

அன்புள்ள மலைச்சாமி

நேரில் சந்திப்போம். ஊட்டி நல்ல சூழல். பொதுவாக நேரில் பேசும்போது ஓர் இயல்புநிலை உருவாகும். அதேசமயம் தீவிரநிலை சற்று தளரவும் செய்யும். சந்திப்புகளைப்பற்றிய பிரமைகள் இல்லாமல் சந்திப்பதே முக்கியமானது

வருக

ஜெ

 

 

அன்பு ஜெ,

வணக்கம்.

இளமையில் சுஜாதா, சாண்டில்யன் நாவல்களும் இடதுசாரி இயக்க தொடர்பு மூலம் சில ஜெயகாந்தன் நாவல்களும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு குடும்ப சூழல், பொருள் தேடிய வாழ்க்கை என்று, படிப்பு என்பது வார இதழ் வாசிப்புடன் நின்று விட்டது. மூன்று வருடங்களுக்கு முன் காங்கோ மகேஷ் மூலம் தங்களின் வாசகனாகும் வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் தொடர்ந்து தங்கள் தலத்தில் வரும் அனைத்து பதிவுகளையும் வாசித்து விடுகிறேன். வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களின் புறப்பாடு, எனக்குள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இரவு, கன்னிநிலம், கன்னியாகுமரி, ரப்பர், நாவல்களும், அறம் தொகுப்பும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தற்போது விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். கடந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வந்திருந்தேன். தங்களின் பாலக்காடு உரையை கேட்க மகேஷ், கிருஷ்ணன், மற்றும் நன்பர்களுடன் வந்திருந்தேன். இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவிற்க்கு இரண்டு நாட்கள் தங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்களின் எளிமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருந்தும் தங்களிடம் பேசவும், பகிரவும் எனக்குள் ஒரு தடை இருந்து கொண்டே உள்ளது. தாங்கள் அறிவித்துள்ள புதியவர்களுக்கான ஊட்டி சந்திப்பு அதை போக்கும் என நினைக்கிறேன். அதற்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்,

வரதராஜன்

நாமக்கல்.

 

அன்புள்ள வரதராஜன்

சந்திப்போம். ஊட்டி நிகழ்ச்சிகளில் பொதுவான தலைப்புக்கள் முறையாக வகுத்திருப்பதனால் விரிவான உரையாடல்கள் நிகழாமல் போகிறது. இம்முறை அது நிகழவேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் தலைப்புகள் இல்லை. சந்திப்பே தலைப்பு

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

செவ்விலக்கியங்களும் செந்திலும்

$
0
0

senthil

தமிழில் சென்ற சில ஆண்டுகளில் சீரிய இலக்கிய வாசிப்பாளனுக்கு இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், நோக்கம் ஆகியவற்றை தெளிவாக்கும் சில பேரிலக்கியங்கள் மொழியாக்கங்களில் கிடைத்தன. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு முன்னரே வெளிவந்திருந்தாலும் சமீபமாகத்தான் மறு அச்சு வெளிவந்தது.

தஸ்தோயின் அன்னா கரீனினா க.சந்தானத்தின் சுருக்கமான மொழியாக்கமே முன்னர் இருந்தது. இப்போது முழுமையாகக்கிடைக்கிறது. [நா தர்மராஜன்] தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் [எம்.ஏ சுசீலா] அசடன் [எம். ஏ சுசீலா] ஆகியவை வெளிவந்தன. அவரது மாபெரும்நாவலான கரமஸோவ் சகோதரர்கள் [புவியரசு] வெளிவந்துள்ளது

இப்படைப்புக்கள் என்னவகையான விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன? பரவலாக இளையதலைமுறையால் வாசிக்கப்பட்டிருக்கின்றனவா? சில அபூர்வமான கட்டுரைகளைத்தான் என்னால் காணமுடிந்தது.போரும் அமைதியும் பற்றி நண்பர் டோக்கியோ செந்தில் எழுதியிருக்கும் இந்தக்குறிப்புகள் முக்கியமானவை. இங்குள்ள ஒரு வாசிப்புச்சூழலில் நின்றபடி தல்ஸ்தோயை மதிப்பிடமுயல்பவை.
http://www.manavelipayanam.blogspot.jp/2014/09/1.html
http://www.manavelipayanam.blogspot.jp/2014/09/2.html
http://www.manavelipayanam.blogspot.jp/2014/09/3.html

தொடர்புடைய பதிவுகள்

ராஜாவுக்கு விருது

$
0
0

1

 

எல்லா மின்னஞ்சல்களையும் வாசிக்காமல் இருக்கும் திமிரின் விலையாக ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தவறவிட்டேன். கேரள அரசின் சுற்றுலாத்துறை வழங்கும் பெருமதிப்பிற்குரிய விருதாகிய நிஷாகந்தி புரஸ்காரம் இவ்வருடம் இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளமுதல்வர் உம்மன்சாண்டி விருதை வழங்கி ராஜாவைக் கௌரவித்தார்

ராஜா தமிழ்நாட்டில் பெருமதிப்புக்குரியவராக மக்களிடையே இருந்தாலும் அரசுசார்ந்து அவர் பெரிதாக மதிக்கப்பட்டதில்லை. இங்கே எந்தக்கலைஞரும் அப்படி அரசாலோ அரசுப்பொறுப்பில் இருப்பவர்களாலோ மதிக்கப்பட்டதில்லை என்பதே உண்மை. மிகப்பிந்திக்கிடைத்த பத்மபூஷண் மட்டுமே அவர் பெருமைகொள்ளத்தக்க விருது எனலாம்.

2

கேரள அரசு அளித்த இவ்விருது ஏன் முக்கியமானது என்றால் முழுக்கமுழுக்க தகுதியின் அடிப்படையிலேயே இது வழங்கப்படுகிறது என்பதால்தான். மிகத்தேர்ந்த கலைரசனையுடையவர்கள் என சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள் இதன் நடுவர்கள். ராஜா கேரளத்தில் கேரளப்பண்பாட்டின் அறியப்படாத இசைமரபொன்றை கொண்டுவந்தவர் என்றே கருதப்படுபவர். ஆகவே என்றும் மதிக்கப்படுபவர். பெற்றவரும் கொடுத்தவர்களும் பெருமைகொள்ளத்தக்க விருதாக இது உள்ளது.

3

விழாவுக்குச் சென்று வந்த நண்பர்களிடம் பேசியபோது பொறாமையாக உணர்ந்தேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிலும் சரி, சொற்பொழிவுகளிலும் சரி, இளையராஜாவுக்கே முதன்மையளித்து நடந்த அழகிய நிகழ்ச்சி எல்லாவகையிலும் அவருக்குரிய மரியாதையே என்றனர். உம்மன்சாண்டி எளிமைக்கும் நேசபாவத்திற்கும் புகழ்பெற்றவர். எனக்கும் அவரது அண்மையின் இனிமை அனுபவமாகியிருக்கிறது. இத்தருணம் ராஜாவின் அணுக்கமான இளையவன் என்னும் வகையில் எனக்குள் இருக்கும் ஏக்கம் ஒன்றை நிறைவுசெய்கிறது

இளையராஜாவுக்கு வணக்கம்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 35

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 12

அரண்மனையின் பெரிய உட்கூடத்தின் வாயிலை அடைந்ததும் கர்ணன் “முன்னால் செல் தங்கையே! நீ உன் இல்லம் புகும் நாள்” என்றான். அவள் திரும்பி புன்னகைத்து “ஆம் மூத்தவரே, என் கால்கள் நடுங்குகின்றன” என்றாள். சுநாபன் “விழுந்துவிடாதே. பேரொலி எழும்” என்றான். கையை நீட்டி  “போடா” என்றபின் அவள் கைகூப்பியபடி முன்னால் சென்றாள்.

அவள் நடை சற்றே தளர, பெரிய இடை ஒசிய அழகிய தளுக்கு உடலில் குடியேறியது. குழலைநீவி கைவளைகளை சீரமைத்து, மெல்லிய கழுத்தில் ஒரு சொடுக்கு நிகழ, உதடுகளை மடித்து சிறிய கண்கள் மட்டும் நாணத்துடன் சிரிக்க சென்று நின்றாள். சேடியர் சூழ பானுமதியும், துச்சாதனனின் அரசி அசலையும் பிறஅரசியர் தொண்ணூற்றெட்டுபேரும் நிரைவகுத்து வந்தனர். பானுமதி கையில் ஏழுசுடர் எரியும் பொற்குத்துவிளக்கு இருந்தது. அசலையின் கையில் எண்மங்கலங்கள் கொண்ட தாலங்கள் இருந்தன.

முதன்மைக் கௌரவர்களின் துணைவிகளும் காந்தார இளவரசிகளுமான ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகியோர் தங்கள் குலத்திற்குரிய ஈச்சஇலை முத்திரை கொண்ட தலையணி சூடி கையில் மலர்த்தாலங்கள் ஏந்தியிருந்தனர். செம்பட்டு ஆடையணிந்து அணிக்கோலம் பூண்டிருந்தனர். கோசல இளவரசிகளான காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகியோர் இக்ஷுவாகுகுலத்தின் கொடிமுத்திரையான மண்கலத்தை தங்கள் மணிமுடியில் சூடி கைகளில் சுடர்தாலங்கள் ஏந்தியிருந்தனர். மஞ்சள்பட்டாடை அணிந்திருந்தனர்.

அவந்திநாட்டு இளவரசியரான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோர் தங்கள் மாங்கனி இலச்சினைகொண்ட முடிசூடி கைகளில் கங்கைநீர் நிறைத்த பொற்தாலங்களை ஏந்தியிருந்தனர். நீலப்பட்டாடை அணிந்திருந்த அவர்களைத் தொடர்ந்து நிஷாதகுலத்து இளவரசியரான பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை  ஆகியோர் தங்கள் குடிக்குரிய குரங்குமுத்திரைகொண்ட முடிகளைச் சூடி மஞ்சளரித்தாலங்களை வைத்திருந்தனர். இளநீலப்பட்டாடை அணிந்திருந்தனர்.

வேசரநாட்டு இளவரசியரான குமுதை, கௌமாரி, கௌரி, ரம்பை, ஜயந்தி ஆகியோர் தங்கள் குடிக்குரிய இரட்டைக்கிளி முத்திரைகொண்ட முடிநகை சூடி கைகளில் பட்டுத்துணிகொண்ட தாலங்களை வைத்திருந்தனர். பச்சைப்பட்டாடை அணிந்து தத்தைகள் போலிருந்தனர். ஒட்டரநாட்டு அரசியர் விஸ்வை, பத்ரை, கீர்த்திமதி, பவானி, வில்வபத்ரிகை, மாதவி ஆகியோர் தங்கள் குடிக்குரிய எருமைமுத்திரை கொண்ட குழலணிசூடி கைகளில் சிறிய ஆடிகளை வைத்திருந்தனர். அவர்கள் செம்மஞ்சள்நிறப்பட்டாடை அணிந்திருந்தார்கள்.

மலைநாட்டு மூஷிககுலத்து இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்ஷி, விபுலை ஆகியோர் தங்கள் குடிச்சின்னமான எலி பொறிக்கப்பட்ட கூந்தல்மலர் அணிந்து அன்னத்தாலங்களுடன் வந்தனர். அவர்கள் கருஞ்சிவப்புப்பட்டாடை அணிந்து அவற்றின் மடிப்புகள் மலரிதழ்களென விரிந்து அமைய நடந்துவந்தனர். தொலைகிழக்குக் காமரூபத்து இளவரசியர் ஏகவீரை, சந்திரிகை, ரமணை, நந்தினி, ருக்மிணி, அபயை, மாண்டவி, சண்டிகை ஆகியோர் தங்கள் நாட்டு அடையாளமான எழுசுடர் பொறித்த முடிசூடி தாலங்களில் உப்பு ஏந்தியிருந்தனர். கிழக்கெழு சூரியனின் பொன்மஞ்சள் பட்டணிந்திருந்தனர்.

மச்சநாட்டு இளவரசியர் சிம்ஹிகி, தாரை, புஷ்டி, அனங்கை, கலை, ஊர்வசி, அமிர்தை ஆகியோர் கருநீலப் பட்டணிந்து பறக்கும் மீன்போன்ற முடிசூடி தாலங்களில் மயிற்பீலி ஏந்தியிருந்தனர். செந்நீலப் பட்டணிந்த ஔஷதி, இந்திராணி, பிரபை, அருந்ததி, சக்தி, திருதி, நிதி, காயத்ரி என்னும் திரிகர்த்தர்குலத்து இளவரசியர் மலைமுடிச்சின்னம் பொறிக்கப்பட்ட முடிசூடி களபகுங்குமப்பொடித் தாலங்களுடன் வந்தனர்.

உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோர் மயில்சின்னம் கொண்ட முடியுடன் கைகளில் மஞ்சள்பொடிச்சிமிழ்களுடன் வந்தனர். மயில்கழுத்துப்பட்டை அணிந்து தோகைக்கூட்டமென வந்தனர். வேல்முத்திரைகொண்ட முடிசூடிய விதேகநாட்டு இளவரசியர் துஷ்டி, வபுஸ், சாந்தி, ஸித்தி ஆகியோர் மஞ்சள்நீருடனும் மல்லநாட்டு இளவரசியர் தேவமித்ரை,தேவகாந்தி, தேவமாயை, தேவகி ஆகியோர் ஆலமர இலச்சினைகொண்ட முடிசூடி, கைகளில் நறுஞ்சுண்ணத்துடன் வந்தனர். செம்மஞ்சள் ஒளிர்பச்சை ஆடைகள் அணிந்திருந்தனர்.

அவர்களுக்குப் பின்னால் கௌரவர்களின் அசுரகுலத்து மனைவியரும் அரக்கர் குலத்து மனைவியரும் தங்கள் குடிமுத்திரைகள் கொண்ட தலையணிகளுடன் மங்கலத்தாலங்கள் ஏந்தி முழுதணிக்கோலத்தில் நிரையென வந்தனர். அணிகளின் மெல்லொலிகளும் ஆடைகளின் கசங்கல் ஒலிகளும் மூச்சொலிகளும் மெல்லிய பேச்சொலிகளுமாக அந்தக்கூடம் நிறைந்தது. “பொன்னொளிர் வண்டுகள் மொய்க்கும் கூடுபோல” என்று துச்சலன் சொன்னான். கர்ணன் அவனை நோக்கி புன்னகைசெய்தான்.

பானுமதி முன்னே வந்து விழிகள் அலைய நாற்புறமும் நோக்கி நின்றாள். “வணங்குகிறேன் அரசி” என அவள் கால்களைத் தொட்டு சென்னிசூடிய துச்சளையிடம் “நலம்பெற்று நீடுவாழ்க!” என்று வாழ்த்திய பானுமதி அவளுக்குப் பின்னால் நோக்கியபின் புருவம் சுழிக்க  “மைந்தன் எங்கே?” என்றாள். துச்சளை “மைந்தனை முன்னேரே இங்கு கொண்டுவந்து விட்டார்களே?” என்றாள். “யார்?” என்றாள் பானுமதி திகைப்புடன். “இளையோர்” என்றாள் துச்சளை. “யார்?” என்றாள் பானுமதி. “இளைய கௌரவர்கள்தான்” என்றான் கர்ணன்.

பானுமதி பதைத்து “அவர்களிடமா கொடுத்தீர்கள்?” என்றாள். கர்ணன். “கொடுக்கவில்லை. அவர்களே தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள்” என்றான். “தூக்கிக் கொண்டா?” என்று பானுமதி சொல்லி திரும்பி நோக்கி மேலும் குரல்தாழ்த்தி “அவர்கள் எங்கு வந்தார்கள்? மைந்தன் எப்போது அரண்மனை புகுந்தான்?” என்றாள். சேடி “இங்கு அவர்களின் ஓசை கேட்டது. குழந்தை கையில் இருப்பதை நாங்கள் நோக்கவில்லை” என்றாள். இன்னொருத்தி “நறுஞ்சுண்ணத்தையும் குங்குமத்தையும் அள்ளி இறைத்தனர் அரசி. இப்பகுதியே வண்ணத்தால் மூடப்பட்டது. கண்களே தெரியவில்லை. நான் அவர்களை ஓசையாகவே அறிந்தேன்” என்றாள்.

“மூத்தவரே” என்று கர்ணனைப் பார்த்து முகம் சுளித்து பட்டுஉரசும் ஒலியில் கேட்டாள் பானுமதி “என்ன இது? நீங்கள் சென்றதே மைந்தனை மங்கலம் கொடுத்து நகர்புக வைப்பதற்காகத்தானே?” கர்ணன் “ஆம், அதற்காகத்தான் சென்றேன். அவனுக்கு மண்புகட்டி மங்கலமும் செய்தேன். அதன் பின்னர் இளையோர் அவனை சேர்த்துக்கொண்டார்கள். அவன் இருக்கவேண்டிய இடம் அதுதானே என்று விட்டுவிட்டேன்” என்றான்.

சிரித்தபடி அசலை “அவர்களிடமிருந்து இளவரசரை பிரித்து நோக்கவே முடியாது அக்கா… மொத்தமாகவே அத்தனைபேரும் ஏழுவண்ணங்களாக இருந்தனர்” என்றாள். “நீ பார்த்தாயா?” என்றாள் பானுமதி. “ஆம், ஒருவனை பிடித்தேன். அவன் நீலவண்ணமும் செவ்வண்ணமும் கலந்திருந்தான். கண்கள் எங்கே என நான் தேடுவதற்குள் என்னை அடிவயிற்றில் உதைத்துவிட்டு தப்பி ஓடினான்” என்று அசலை மேலும் சிரித்தாள். “அவர்களில் ஏதோ ஒரு வண்ணம் சிந்துவின் இளவரசர். நான் அவ்வளவுதான் சொல்லமுடியும்.”

பின்பக்கம் நின்ற அசுரகுலத்து இளவரசி ஒருத்தி “வண்ணத்தை வைத்து அவர்கள் சென்ற வழியை தேடலாமே” என இன்னொருத்தி “அரண்மனையே ஏழுவண்ணங்களாக கிடக்கிறது” என்றாள். அத்தனைபேரும் கண்களால் சிரித்துக்கொண்டு உதடுகளை இறுக்கி அதை அடக்கி நின்றனர்.

பானுமதி தன்னை முழுமையாக அடக்கிக்கொண்டாள். முகம் இறுக கண்கள் கூர்மைகொள்ள திரும்பி நோக்கினாள். இளவரசிகள் அதனால் சற்று விழிகுன்றினர். “நன்று” என்று அவள் சொன்னபோது மிக இயல்பாக இருந்தாள். மெல்லிய குரலில் “அவர்களிடம் மைந்தரை கொடுக்கலாமா இளவரசி? என்ன இது? நீ ஒரு அன்னையல்லவா?” என்றாள். “என் மைந்தன் அவர்களிடம் மகிழ்வாக இருப்பான்” என்றாள் துச்சளை. “அறிவிலிபோல பேசாதே” என்று பானுமதி பல்லைக் கடிக்க துச்சளை முகம் கூம்பி “ம்” என்றாள்.

“மைந்தனை அவர்கள் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லையே!” என்றாள் பானுமதி.  துச்சளை சிறிய மூக்கு சிவக்க “அவர்கள் என் தமையன்களைப் போல, அரசி. இங்கு நூறு தமையன்களுக்கு ஒரு தங்கையாக வாழ்ந்தவள் நான். எனக்குத் தெரியும், அது எப்படிப்பட்ட வாழ்க்கை என்று” என்றாள்.

பானுமதி மீண்டும் திரும்பிப் பார்த்து விழிகளால் சேடி ஒருத்திக்கு ஆணையிட அவள் திரும்பி உள்ளே ஓடினாள். பின்பு அவள் குத்துவிளக்கை துச்சளையிடம் கொடுத்து “மங்கல விளக்குடன் உன் அன்னையின் அரண்மனைக்குள் வருக!” என்றாள்.

மங்கலஇசை தாளத்தடம் மாறி எழுச்சி கொண்டது. கையில் ஏழுமலர் எரிய வலக்காலை எடுத்து வைத்தாள் துச்சளை. சிவந்த அடிகொண்ட சிறுபாதங்களை தூக்கிவைத்து அரண்மனையின் படிகளில் ஏறினாள். அவளை வலப்பக்கம் பானுமதியும் இடப்பக்கம் அசலையும் கைபற்றி உள்ளே கொண்டு சென்றனர்.

அரண்மனைக்குள் நுழைந்து அணிச்சேடியர் தொடர இடைநாழியில் நடந்தபோது விதுரர் பின்னால் வந்து கர்ணனிடம் “இளவரசன் இங்கு வரவில்லையா?” என்றார். கர்ணன் “ஆம், குழந்தைகள் அப்படியே எங்காவது விளையாட கொண்டு போயிருக்கலாம்” என்றான். விதுரர் “அவர்களுடன் லட்சுமணனும் இருந்தான். அவன் மூத்தவன், அவனுக்குத் தெரியும்” என்றார்.

துச்சலன் “வந்துவிடுவார்கள்” என்றான். விதுரர் “ஒவ்வொரு நாளும் இரவு எழுந்த பிறகுதான் வருகிறார்கள். இன்று அனைத்து விழாக்களிலும் சிந்துநாட்டு இளவரசனே மையம்” என்றார். “கண்டுபிடித்துவிடலாம், நான் ஆளனுப்புகிறேன்” என்றான் துச்சகன். “அஸ்தினபுரி முழுக்க ஆளனுப்ப வேண்டும். ஆளனுப்பி இவர்கள் அனைவரையும் பிடித்தாலும் குழந்தையை அவர்கள் எங்கு போட்டிருக்கிறார்கள் என்று தெரியாது” என்றார் விதுரர். கர்ணன் பொதுவாக தலையசைத்தான்.

விதுரர் திரும்பி கனகரிடம் கைகாட்ட கனகர் தொலைவிலிருந்து உடல்குலுங்க ஓடிவந்து தலைவணங்கினார். “என்ன?” என்றார் விதுரர். “இளவரசரை காணவில்லை” என இயல்பாகச் சொன்ன கனகர் விதுரரின் முகத்தை நோக்கியதும் எச்சரிக்கை கொண்டு “எங்கு சென்றார்களோ?” என்றார் கவலையுடன்.

விதுரர் அவர்களுக்கு மெல்லிய குரலில் ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்கவும் கர்ணன் புன்னகையுடன் துச்சலனிடம் “நன்று, ஜயத்ரதனுக்கு அஸ்தினபுரியை புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு” என்றான். அவன் “ஆம், இங்கு நாமனைவரும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்று அவருக்கு தெரியும்” என்றான்.

கர்ணன் உரக்க நகைத்தபடி “தெளிவாக புரிந்து கொள்கிறாய் இளையோனே. ஒருநாள் நீ நடத்தும் ஒரு படையில் ஒரு படைவீரனாக வருவதற்கு விரும்புகிறேன்” என்றான். துச்சலன் “ஆம் மூத்தவரே, மகதம்மேல் படை எழுகையில் நானே நடத்துகிறேன் என்று மூத்தவரிடம் கேட்டிருக்கிறேன்” என்றான். கர்ணன் “என்ன சொன்னார்?” என்றான். “சிரித்தார்” என்றான் துச்சலன் பெருமையுடன். கர்ணன் சிரித்தான்.

மேலிருந்து பானுமதி மூச்சிரைக்க கீழே எட்டிப்பார்த்து புன்னகையுடன் “மூத்தவரே, மைந்தன் அன்னையிடம்தான் இருக்கிறான்” என்றாள். கர்ணன் “அன்னையிடமா?” என்றான். “ஆம், மொத்த இளையோரும் அப்படியே புஷ்பகோஷ்டத்துக்குச் சென்று அன்னையிடம் குழந்தையை காட்டியிருக்கிறார்கள். பேரரசி குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

கர்ணன் “நான் அங்கு செல்லலாமா?” என்றான். “ஆம், அதைச் சொல்லவே வந்தேன். அரசி ஏழெட்டுமுறை தங்களை உசாவினார்களாம்” என்றாள் பானுமதி. கர்ணன் “இவ்வேளை அன்னைக்கும் மகளுக்கும் உரியது. அன்னையிடம் துச்சளையை அழைத்துச்சென்று முறைமைகள் செய்துவிட்டு அவைக்கு வருக! நான் அங்கிருப்பேன்” என்றான். “பேரரசி தங்களை உடனே வரச்சொன்னார்களே” என்றாள் பானுமதி. “பேரரசரிடமும் குழந்தையை காட்ட வேண்டும்.”

பின்பக்கம் வந்து மூச்சிரைக்க நின்ற அசலை “அக்கா, சிந்துநாட்டரசியை புஷ்பகோஷ்டத்துக்குத்தானே அழைத்துச் செல்லவேண்டும்?” என்றாள். “அதைத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டு வந்தேன்?” என்றாள். “அவர்கள் தந்தையை பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்களே?” என்றாள் அசலை.

சற்று பொறுமையை வரவழைத்துக்கொண்டு பானுமதி “முதலில் தாயைப் பார்த்து வாழ்த்து பெற்றபிறகுதான் தந்தையை பார்க்கவேண்டும். அதுதான் இங்குள்ள முறைமை. அவளிடம் சொல்” என்றாள். “சரி” என்றபின் அவள் திரும்பி ஓடினாள். கர்ணன் புன்னகைத்தபடி “இன்னும் சிறுமியாகவே இருக்கிறாள்” என்றான். பானுமதி “அவள் இளைய யாதவரை தன் களித்தோழனாக எண்ணுபவள். பிருந்தாவனத்தில் மலர்கள் வாடுவதே இல்லை என்கிறாள்” என்றாள். “நீ?” என்றான் கர்ணன். “நான் அவரை தேரோட்டியாக வைத்தவள். எனக்கு பாதை பிழைப்பதில்லை.”

கர்ணன் சிரித்து “இங்கே அத்தனை பெண்களுக்கும் அவன்தான் களித்தோழன் என்றார்கள்” என்றான். “ஆம் மூத்தவரே, சூதர்பாடல் வழியாக உருவாகிவரும் இளையவன் ஒருவன் உண்டு. கருமணிவண்ணன். அழியா இளமை கொண்டவன். அவன் வேறு, அங்கே துவாரகையை ஆளும் யாதவ அரசர் வேறு. அவ்விளையோனை எண்ணாத பெண்கள் எவரும் இல்லை.”

கர்ணன் வண்ணங்களாக ஒழுகிச்சென்றுகொண்டிருந்த இளவரசியரை நோக்கியபடி “அஸ்தினபுரி இவ்வளவு உயிர்த்துடிப்பாக எப்போதும் இருந்ததில்லை இளையவளே. எங்கு எவர் எதை செய்கிறார்கள் என்று எவருக்குமே தெரியவில்லை” என்றான். பானுமதி சிரித்தபடி “வந்து ஒரு சொல் அன்னையிடம் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்” என்றாள். “அதற்கு ஏன் சிரிப்பு?” என்றான் கர்ணன். “பெரும்பாலும் சொல்கேட்கத்தான் வேண்டியிருக்கும், வாருங்கள்” என்றாள்.

கர்ணன் படிகளில் ஏறி மாடியில் நீண்டுசென்ற மெழுகிட்டு நீர்மைபடியச்செய்த கரிய பலகைத்தரையில் நடந்தான். அவன் காலடிகள் அம்மாளிகையின் அறைகள்தோறும் முழங்கின. சாளரங்களிலும் கதவுகளின் விளிம்புகளிலும் பெண்முகங்கள் அவனைப் பார்க்கும் பொருட்டு செறிந்தன. பானுமதி “கண்பட்டுவிடப்போகிறது” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “ஒன்றுமில்லை” என அவள் வாய்க்குள் சிரித்தபடி முன்னால் ஓடிச்சென்று சேர்ந்துகொண்டாள்.

கர்ணன் திரும்பி துச்சலனிடம் “நான் அன்னையை சந்தித்துவிட்டு என் அறைக்குச் சென்று நீராடிவிட்டு அரசரின் அவைக்கு வருகிறேன். சிந்துநாட்டரசர் அங்குதான் இருக்கிறாரா?” என்றான். “இல்லை. அவர் நகர்புகுந்ததுமே நீராடச் சென்றுவிட்டார். உணவருந்தி அவரும் அரசரின் தனியவைக்கு வருவார்” என்றார் அருகே வந்த கனகர்.

கர்ணன் “முறைமைகள் முடிய விடியல் எழும் என நினைக்கிறேன். நான் நேற்றும் சரியாக துயிலவில்லை” என்றான். துச்சலன் “உறங்கிவிட்டு வாருங்கள் மூத்தவரே. ஜயத்ரதனுக்காக நீங்கள் துயில்களையவேண்டுமா என்ன?” என்றான். “’தாழ்வில்லை” என்றான் கர்ணன். துச்சலனும் துர்முகனும் துச்சகனும் துர்மதனும் அவனுடன் வர பிற கௌரவர் வணங்கி விலகிச்சென்றனர்.

புஷ்பகோஷ்டத்தில் காந்தாரியின் மாளிகை முகப்பில் தரையெங்கும் உடைந்த பீடங்களும் கலங்களும் கலைந்த துணிகளும் இறைக்கப்பட்ட உணவுப்பொருட்களும் சிதறிய மங்கலப்பொருட்களுமாக பேரழிவுக்கோலம் தெரிந்தது. உள்ளே இளைய கௌரவர்களின் கூச்சல் எழுந்தது. படாரென்று ஒரு மரப்பலகை அறைபட்டது. ஏதோ பீடம் சரிந்து விழுந்தது. கதவு ஒன்று கீல்சரியும் முனகல் எழுந்தது. கூடத்தில் கௌரவ அரசியர் இருநூற்றுவர் ஒதுங்கி நின்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

கர்ணன் கடந்து செல்ல கோசல நாட்டு இளவரசி காமிகை “எங்கு செல்கிறீர்கள் அரசே?” என்றாள். கர்ணன் “அழைத்தார்கள்…” என்றான். “அழைத்தால் வந்துவிடுவதா?” என்றாள் அவள் தங்கை கௌசிகை. அவளைச்சுற்றி நின்ற பெண்கள் சிரித்தனர். அவர்கள் தன்னை கேலிசெய்கிறார்கள் என அவன் உணர்ந்தான். புன்னகையுடன் கடந்துசெல்ல முயல ஒருத்தி அவன் கையைப் பிடித்து நிறுத்தி “மூத்தவரே நில்லுங்கள்” என்றாள். கர்ணன் முகம்சிவந்து “என்ன இது?” என்றான். துச்சகனின் மனைவியான காந்தாரத்து அரசி ஸ்வாதை “மூத்தவரே, தப்பிச்செல்லுங்கள். தங்களை சூழ்ந்துகொள்ளவேண்டும் என இவர்கள் முன்னரே சொல்லிக்கொண்டார்கள்” என்றாள்.

“அதற்கு அவர் என்ன செய்ய முடியும்? சாளரம் வழியாக குதிக்கச் சொல்கிறாயா?” என்றான் துச்சலன். ஜலகந்தனின் மனைவியான புஷ்டி “தாவி ஓடலாமே…” என்றாள். அவந்தி நாட்டு இளவரசிகளான அபயை, கௌமாரி, ஸகை ஆகியோர் அவன் ஆடையை பற்றிக்கொண்டார்கள். ஸ்வஸ்தி “ஆடையை கழற்றிவிட்டு ஓடட்டும், பார்ப்போம்” என்றாள்.

பெண்களின் சிரிப்பு தன்னைச்சூழ கர்ணன் இடறும்குரலில் “என்ன செய்யவேண்டும் நான்?” என்றான். “என்னை ஒருமுறை தூக்கிச் சுழற்றி கீழே விடுங்கள். உங்கள் உயரத்திலிருந்து வானம் எத்தனை அணுக்கமானது என்று பார்க்கிறேன்” என்றாள் நிஷாதகுலத்து இளவரசி பூஜ்யை. பெண்கள் ‘’ஓஓ” என்று கூச்சலிட்டு ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு சிரித்தனர்.

கர்ணன் கைகால்கள் நடுங்கின. அவன் துச்சலனை நோக்க அவன் சிரித்தபடி “பலகளங்களில் வென்றவர் நீங்கள். இதென்ன? சிறிய களம்…” என்றான். “இது மலர்க்களம். இங்கே சூரியன் தோற்றேயாகவேண்டும்” என்று கனகர் பின்னால் நின்று சொன்னார். அவந்திநாட்டு அபயையும் கௌமாரியும் சிரித்துக்கொண்டே அவன் கைகளைப்பற்றி தங்கள் தோளில் வைத்துக்கொண்டு நின்று “நான் சொன்னேனே? பார்!” என்றார்கள். “என்ன?” என்றான் கர்ணன். “நான் உங்கள் தோள் வரை வருவேன் என்றேன். இல்லை இடைவரை என்றாள் இவள்…”

“அங்கரே, உங்களை இவள் கனவில் பார்த்தாளாம்” என்றாள் கௌசல்யையான கேதுமதி. “என்ன கண்டாள்?” என்றாள் அவந்தியின் கௌமாரி. “நீங்கள் பொன்னாலான கவசமும் மணிக்குண்டலங்களும் அணிந்து தேரில் செல்லும்போது உங்கள் மீது சிறிய சூரியவடிவம் ஒன்று சுடர்விட்டுக்கொண்டே வந்ததாம்.” கர்ணன் “சூதர்பாடல்களை மிகையாக கேட்கிறாள்” என்றான். “வழிவிடுங்கள்… நான் அன்னையை பார்க்கவேண்டும்.”

“வழிவிடுகிறோம். ஆனால் ஒரு தண்டனை” என்றாள் நிஷாதகுலத்து நிர்மலை. “தண்டனையா? என்ன?” என்றான் கர்ணன். “நீங்கள் எங்களை உயரமான தலையுடன் நோக்குகிறீர்கள். அது எங்களுக்கு அமைதியின்மையை அளிக்கிறது. ஆகவே நீங்கள் எங்களிடம் பொறுத்தருளக்கோரவேண்டும்.” கர்ணன் “பொறுத்தருள்க!” என்றான். “இல்லை… இப்படி இல்லை. கைகூப்பி கோரவேண்டும்.” கர்ணன் கைகூப்பி “பொறுத்தருள்க தேவியரே” என்றான்.

“இது கூத்தர் நாடகம்போலிருக்கிறது” என்றார்கள் வேசரநாட்டு இளவரசியரான குமுதையும் கௌமாரியும். “ஆம் ஆம்” என்று பிறர் கூவினர். “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் கர்ணன். “என்ன செய்வதா? இருங்கள். எங்கள் கால்களைத் தொட்டு பிழை சொல்லவேண்டும்.” கர்ணன் “அத்தனைபேர் காலையுமா?” என்றான். “வேண்டாம். ஒரே காலை பிடித்தால்போதும்… காந்தாரியான ஸ்வேதையின் காலை பிடியுங்கள். அவள்தான் மூத்தவள்…” கோசலநாட்டு சிம்ஹிகை “வேண்டாம், சித்ரைதான் இளையவள். அவள் கால்களைத் தொட்டால் போதும்” என்றாள்.

அவர்களின் உடல்கள் கூத்துக் கைகளென்றாகி பிறிதொரு மொழி பேசின. காற்றுதொட்ட இலையிதழ்கள். வானம் அள்ளிய சிறகிதழ்கள். ஒசிந்தன கொழுதண்டு மலர்ச்செடிகள். எழுந்து நெளிந்தன ஐந்தளிர் இளங்கொடிகள். ஒன்றை ஒன்று வென்றன மதயானை மருப்புகள். வியர்த்து தரையில் வழுக்கின தாரகன் குருதி உண்ட செந்நாக்கெனும் இளம்பாதங்கள். மூச்சு பட்டு பனித்தன மேலுதட்டு மென்மயிர் பரவல்கள். சிவந்து கனிந்தன விழியனல் கொண்ட கன்னங்கள்.

கலையமர்ந்தவள். கருணையெனும் குருதிதீற்றிய கொலைவேல் கொற்றவை. கொடுகொட்டிக் கூத்தி. தலைகோத்த தாரணிந்தவள். இடம் அமைந்து ஆட்டுவிப்பவள். மும்மாடப் புரமெரித்து தழலாடியவள். மூவிழியள். நெடுநாக யோகபட இடையள். அமர்ந்தவள். ஆள்பவள். அங்கிருந்து எங்குமென எழுந்து நின்றாடுபவள். சூழ்ந்து நகைப்பவள். விழிப்பொறியென இதழ்கனலென எரிநகையென கொழுந்தாடுபவள். முலைநெய்க்குடங்கள். உந்திச்சுழியெனும் ஒருவிழி. அணையா வேள்விக்குளம். ஐம்புலன் அறியும் அனைத்தென ஆனவள். மூண்டெழுந்து உண்டு ஓங்கி இங்குதானே என எஞ்சிநின்றிருப்பவள்.

ஸ்வேதை உரக்க “போதுமடி விளையாட்டு” என்றாள். பெண்கள் “ஆ! அவளுக்கு வலிக்கிறது” என்று கூவினர். “போதும், சொன்னேன் அல்லவா?” என்றாள். “போடி” என்றனர். கூவிச்சிரித்தனர். ஒரே குரலில் பேசத்தொடங்கினர். ஒருவரை ஒருவர் பிடித்துத்தள்ளி கூச்சலிட்டனர். வளைகளும் ஆரங்களும் குலுங்கின. கனகர் “அந்த கௌரவப்படை எங்கிருந்து முளைத்திருக்கிறது என்று தெரிகிறது” என்றார்.

பானுமதி வருவதைக் கண்டதும் பெண்கள் அப்படியே அமைதியாயினர். வளையல்கள் குலுங்கின. கால்தளைகள் மந்தணம் சூழ்ந்தன. கடும்மென்குரல் கொண்டு “என்ன?” என்றாள் அவள். எவரும் ஒன்றும் சொல்லவில்லை. சித்ரை மட்டும் மெல்லிய குரலில் “சூரியனின் புரவிகளுக்கு லாடம் அடிப்பதுண்டா என இவள் கேட்டாள்” என்றாள். “என்ன?” என்றாள் பானுமதி. அவள் பின்னால் வந்த அசலை சிரித்தபடி “லாடம் கட்டியிருக்கிறதா என்று பார்க்கிறார்கள் அக்கா” என்றாள்.

முகம் சிவக்க  “பிச்சிகள் போல பேசுகிறார்கள். அரசியர் என்னும் எண்ணமே இல்லை” என்ற பானுமதி “வாருங்கள் மூத்தவரே. பேரரசியை பார்க்கலாம்… அங்கே குரங்குக்கூட்டம் நிறைந்திருக்கிறது. பாதிப்பேரை பிடுங்கி வெளியே போடச் சொல்லிவிட்டு வந்தேன்” என்றாள்.

பெண்கள் விலகி உருவான புதர்ச்சிறு வழியினூடாக செல்லும்போது தன் பெரிய உடலை முடிந்தவரை குறுக்கிக்கொண்டான். கைகள் கிளையென்றான புதர்களில் புன்னகைகள் விரிந்திருந்தன. விழிகள் சிறகடித்தன.  மல்லநாட்டு தேவமித்ரை “சூரியக்கதிர் எங்கே?” என்றாள். பலர் சிரித்தனர். தேவகாந்தி “தள்ளிநில்லடி… தேர்செல்லவேண்டாமா?” என்றாள். சிரிப்புகள், வளையோசைகள் அவனைச் சூழ்ந்து உடன்வந்தன.

இடைநாழியில் படியேறியபோது அவன் உடல்தளர்ந்து மூச்செறிந்தான். அசலை சிரித்து “இங்கே நீங்களும் இளைய யாதவரும்தான் தேவர்கள் அரசே” என்றாள். “பிச்சிகள்… இவர்கள் நடுவே இளைய யாதவர் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்றான் துச்சலன். “என்ன ஆகியிருக்கும்? அவர் ஆடுகளை மேய்க்கத்தெரிந்தவர்” என்றாள் அசலை. “இவர்கூட குதிரைமேய்த்தவர் அல்லவா?” என்றாள் பானுமதி. “குதிரைகளை இவர் எங்கே மேய்த்தார்?” என்று அசலை சிரித்தாள்.

காந்தாரியின் அறைவாயிலில் காவல்பெண்டுகள் நின்றிருந்தனர். அவர்களுக்கு ஆணையிட்டபடி நின்ற இளையகாந்தாரியரான சுஸ்ரவையும் நிகுதியும் அவளை நோக்கினர். நிகுதி “எங்கே போனாய்? அக்கா கேட்டுக்கொண்டே இருந்தாள்” என்றாள். கர்ணன் இருவரையும் நோக்கி தலைவணங்கி “வாழ்த்துங்கள் அன்னையரே” என்றான். சுஸ்ரவை “இருவரும் கருவுற்றிருப்பதாகச் சொன்னார்கள்… நன்று மூத்தவனே… நலம் சூழ்க!” என்றாள்.

அப்பாலிருந்து மூச்சிரைக்க வந்த சுபை “அப்பாடா, ஒருவழியாக…” என்றாள். தடித்த இடையில் கைவைத்து நின்று “எனக்கு மைந்தரின்பத்தால்தான் சாவு என ஊழ்நூலில் எழுதியிருக்கிறது” என்றாள். பானுமதி “என்ன ஆயிற்று அத்தை?” என்றாள். “யானைக்கொட்டிலுக்கு பாதிபேரை கொண்டு சென்றுவிட்டோம்” என்றாள் சுபை. கீழே ஒரு குழந்தை அமர்ந்து ஒரு கோப்பையை தரையில் ஓங்கி அறைந்துகொண்டிருந்தது. அவர்கள் தலைக்குமேல் செல்வதை அது அறியவே இல்லை.

“முழுமையான ஈடுபாடு…” என்றாள் பானுமதி. சுபை “இது கருடர்குலத்து அரசி சிருங்கியின் மைந்தன் என நினைக்கிறேன்…” என்றாள். அவள் குனிந்து அதைத் தொட “போ” என்று அது தலைதூக்கி சீறியது. பானுமதி சிரித்து “அய்யோ, இளவரசர் கடும் போரில் இருக்கிறார்” என்றாள். தேஸ்ரவை “உள்ளே போ… மூத்தவர் அழுதுகொண்டும் சிரித்துகொண்டும் இருக்கிறார்கள்” என்றாள்.

அசலை உள்ளே சென்று நோக்கி விட்டு “வருக அரசே” என்றாள். கர்ணனும் துச்சலனும் துர்முகனும் துச்சகனும் துர்மதனும் உள்ளே சென்றனர். வாயிற்காக்கும் அன்னையர். கதவுக்கு அப்பால் பீடம் அமர்ந்த அன்னை. கர்ணன் மூச்சை இழுத்துவிட்டான். எங்கிருந்தோ மீண்டு அங்கு வந்தமைந்தான்.

பெரிய மஞ்சம் நிறைய கரிய குழந்தைகள் இடைவெளியில்லாமல் மொய்த்து கூச்சலிட்டுக்கொண்டிருக்க நடுவே பல இடங்களிலாக காந்தாரியின் வெண்ணிறப் பேருடல் சிதறித்தெரிந்தது. சுவர் சாய்ந்து இளைய காந்தாரிகளான சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை ஆகியோர் நின்றிருக்க அவர்களின் உடலெங்கும் இளமைந்தர் பற்றிச் செறிந்திருந்னர். அவர்கள் அக்குழந்தைகளின் உலகில் முழுமையாகவே சென்றுவிட்டிருந்தனர்.

சத்யசேனையின் இடையிலிருந்த சுமதன் “பாட்டி பாட்டீ… நான் யானை… நான் பெரிய யானை” என்றான். அவன் இளையவனாகிய சுசருமன் “போடா… போடா… நீ சொல்லாதே. நான் நான் நான்” என்றான். சம்ஹிதை தன் இரு கைகளிலும் வைத்திருந்த குழந்தைகளை மாறிமாறி முத்தமிட்டபடி ஆழ்ந்திருந்தாள்.

அன்னையருகே காலடியில் துச்சளை அமர்ந்திருந்தாள். அவளருகே பானுமதியும் அசலையும் அமர்ந்தனர். அசலைமேல் பாய்ந்தேறிய மிருத்யன் “அன்னையே, நான் அதை எடுத்துவிட்டேன்” என்றான். “எதை?” என்றாள் அவள். இன்னொரு பக்கம் இழுத்த கராளன் “ஒரு செம்பு வேண்டும்… எனக்கு ஒரு செம்புவேண்டும்” என்றான். எல்லா குரல்களும் இணைந்த கூச்சலில் சொற்களை பிரித்தறிவதே கடினமாக இருந்தது.

“அன்னை அழிமுக நதிபோல பரந்துவிட்டார்” என்றான் துச்சலன். காலடியோசை கேட்டு திரும்பிய காந்தாரி “யார் மூத்தவனா?” என்றாள். நீளுடல் வளைத்துப் பணிந்து  “ஆம், அன்னையே” என்றான் கர்ணன். “உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்… நீ என்னை வந்து முறைவணக்கம் செய்து போனபின் மீளவே இல்லை. இங்கே என்ன செய்கிறாய்? அறிவிலி” என்று அவள் சீறினாள். “இங்கே வா… அருகே வா” என்று அறைவதுபோல கையை ஓங்கினாள்.

கர்ணன் பின்னடைந்து “பல பணிகள் அன்னையே… இளவரசர் நகர்நுழைவு” என்று மெல்ல சொல்ல “அதற்கு நீயா மண்சுமக்கிறாய் இங்கே? நீ வந்த அன்றே இளையவனுடன் அமர்ந்து புலரியிலேயே உண்டாடியிருக்கிறாய். நான் நீ இங்கு வந்த அன்று அதை அறிந்திருந்தால் உன் பற்களை அறைந்து உதிர்த்திருப்பேன்” என்றாள். கர்ணன் துச்சலனை நோக்க அவன் விழிகளை திருப்பிக்கொண்டான்.

“இது நீத்தாரும் மூத்தாரும் குடிகொள்ளும் நகரம். அவர்களுக்கு ஒளியும் நீரும் மலரும் படையலும் அளிக்காது இங்கே அரசர்கள் வாயில் நீர்பட விட்டதில்லை…” என்று காந்தாரி மூச்சிரைக்க சீறினாள். “ஆம், நான் சொன்னேன்” என்றான் கர்ணன். “பொய் சொல்லாதே. இளையவன் அஸ்தினபுரிக்கு அரசன் இன்று. நீ அவனுக்கு நன்றுதீது சொல்லிக்கொடுக்கவேண்டிய மூத்தவன். நீயும் உடன் அமர்ந்து மதுவருந்தினாய்…”

கர்ணன் பானுமதியை நோக்க அவள் உதடுகளை இழுத்தாள். “நான் இனிமேல் சொல்லிக்கொள்கிறேன்” என்றான் கர்ணன். “இனிமேல் நான் ஒரு சொல் உன்னிடம் சொல்லப்போவதில்லை… செய்தி என் காதில் விழுந்தால் அதன்பின் மூத்தவனும் இளையவனும் இந்நகரில் இருக்கப்போவதில்லை. என் சிறியவன் சுஜாதனே போதும், இந்நகரை ஆள. அவனுக்கு கல்வியறிவும் உண்டு.”

“அவன்தான் அன்று முட்டக்குடித்தான்” என்றான் துச்சகன். பானுமதி சிரிப்பை அடக்க காந்தாரி திகைத்து தன் சிறிய வாயை திறந்தாள். துச்சலன் “கோள் சொன்னவன் சிறியவன்தான் மூத்தவரே. அவனை நாம் பிழிந்தாகவேண்டும்” என்றான். காந்தாரி அத்தருணத்தைக் கடந்து புன்னகைத்தபடி தன் கையைத்தூக்கி ஜயத்ரதனின் மைந்தனைக் காட்டி “சிறியவன்…” என்றாள். கர்ணன் “ஆம் அன்னையே, அழகன்…” என்றான்.

“அழகனெல்லாம் இல்லை. நான் நன்றாக தொட்டுப்பார்த்துவிட்டேன். உனக்கு உன்னைப்போல மைந்தன் பிறந்தால்தான் எனக்கு அழகிய பெயரன் அமையப்போகிறான்” என்றாள் காந்தாரி. “ஆனால் தளிர்போலிருக்கிறான். தொட்டுத்தொட்டு எனக்கு மாளவில்லை” என்றபின் “இங்கே வாடா” என்றாள். கர்ணன் அவளருகே அமர்ந்தபோது அவள் உயரமிருந்தான். அவள் அவன் முகத்தில் கைவைத்து தடவியபடி “வெயிலில் வந்தாயா?” என்றாள். “ஆம், அங்கத்திலிருந்து திறந்த தேரில் வந்தேன்.” காந்தாரி “ஏன் வெயிலில் வருகிறாய்?” என்றாள்.

துச்சளை “அன்னையே, அவர் சூரியன் மைந்தர் அல்லவா?” என்றாள். “போடி, முகமெல்லாம் காய்ந்திருக்கிறது. நான் மருத்துவச்சியிடம் சொல்கிறேன். அவள் ஒரு நெய் வைத்திருக்கிறாள். அதை துயிலுக்குமுன் முகத்தில் போட்டுக்கொள். முகம் பளிங்குபோல் ஆகிவிடும்” என்றபடி அவன் தோள்களையும் புயங்களையும் தடவி “என் மைந்தன் அழகன். நான் அவனை தொட்டுப்பார்த்ததெல்லாம் என் கைகளிலேயே உள்ளதடி” என்றாள்.

கர்ணன் “நான் சென்று நீராடிவிட்டு அவைபுகவேண்டும் அன்னையே” என்றான். “ஆம், சொன்னார்கள்…” என்றாள் காந்தாரி. “அவைமுடிந்து நாளை இங்கே வா. நான் இன்னமும் உன்னை பார்க்கவில்லை. அன்று முறைமைக்காகப் பார்க்கவந்தாய். அரசமுறையில் வந்தால் எவரோ போலிருக்கிறாய்.” கர்ணன் “வருகிறேன் அன்னையே” என்றான். “பார்த்துக்கொள், இந்த அரக்கர்கூட்டம் அஸ்தினபுரியையே சூறையாடிவிடும்” என்றாள் காந்தாரி.

கர்ணன் “ஆணை ,அன்னையே” என்றபடி எழுந்துகொண்டு பானுமதியை நோக்கி புன்னகைசெய்ய அசலை அவனை நோக்கி உதட்டை நீட்டி பழிப்புக்காட்டி சிரித்தாள். பேரொலியுடன் கதவு அவர்களுக்கு அப்பால் விழுந்தது. “யாரோ ஆணியை உருவிவிட்டார்கள்” என்றாள் அசலை. அவள் மடியிலிருந்த மிருத்யன் “மிகப்பெரியது!” என்றான். “இவ்வளவு பெரியது!”

காந்தாரியை பிடித்து இழுத்த தூமகந்தன் “பாட்டி பாட்டி பாட்டி” என்று கூவினான். காந்தாரி “இனி ஒருவாரத்துக்கு இவன் குரல் என் செவிகளிலிருந்து விலகாது” என்றாள். சத்யசேனை “தாங்கள் ஓய்வெடுக்கவேண்டும் மூத்தவரே” என்றாள். “எனக்கென்ன ஓய்வு…? நான் இவ்வாறு இருக்கவேண்டுமென்பது இறையாணை” என்றாள் அவள்.

தொடர்புடைய பதிவுகள்

புல்வெளியின் கதை

$
0
0

1
உங்களுடைய புல்வெளி தேசம், ஆஸ்திரேலியப் பயணக் கட்டுரை படித்து முடித்தேன்! தனி நபர்கள் பெயர்களை எடுத்துவிட்டால் அது ஆஸ்திரேலியாவின் புவி இயல், வரலாறு பற்றிய பாடப் புத்தகமாக வைத்துவிடும் அளவிற்கான தரம் கொண்டிருந்தது.

குறிப்பாக ,பலாரட் தங்கச் சுரங்கம், நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்வியல், வீடுகள் கட்டும் முறை, John Keynes Theory, கான்பெராவின் தொன்மை, அதன் நிர்வாக அனுகூலம்,நகர அமைப்பு,நீங்கள் வாசித்த போர் நாவல்கள், கலிபோலி போர்,ஆஸ்திரேலியர்களின் பொருள் வழிபாடு நிலை, பள்ளிகளில் வேலையை விரும்பிச் செய்யும் ஆசிரியர்கள்,வெய்யில், அதன் மஞ்சள் ஒளி,கங்காருவின் பெயர் காரணம், குரு நித்ய சைதன்ய யதி விவரித்த தென்னை மரம் தண்ணீரை தன்னுடைய உச்சிக்கு கடத்தும் தத்துவம். ஆஸ்திரேலியாவில் நீங்கள் உணர்ந்த மதுரையின் சப்தம், ஈமு பறவைகளின் கால்கள்,புதர் நடை, யூகலிப்டஸ் காடுகள், கோலா கரடிகள்,மனித உடலின் குறைவான உணவுத் தேவை, வீ ஜாஸ்பரின் பூகோள அமைப்பு, இனக் காழ்ப்புகள் உருவாகும் சூழ்நிலை,சீக்கியர்களின் வாழை விவசாயம், முயல்களின் நெரிசல்கள்,டிங்கோ,நெட் கெல்லி, நீதிபதி பாரியின் மரணம், கருப்பசாமி சுடலைமாடன் சாமிகளின் வழிபாடு முறைகள், பௌத்தர்களின் அதுவாகுதல் நிகழ்வு,சீனாவின் வாசிப்பு இல்லாத நிலை,பசுத்தல்,சிட்னி பிரிட்ஜ்,புல்லரிக்க வைக்கும் குளிர், நிழல் உலகின் நாணயமான போதை பொருள்கள்,ஒபரா ஹால், நீண்ட மூங்கில் வாத்தியம் வாசிக்கும் பழங்குடியினர், துறைமுகங்கள் உருவாகும் முறை,சு.கி.ஜெயகரன், லூயி மார்கன், எல்வின் தியரி, அந்தமானின் ஒங்கிகள்(அந்தமானில் பணி புரிந்திருந்தாலும் ஜார்வா-க்களை மட்டுமே தெரியும்),SBS-ன் வானொலி சேவை, உங்களுடைய, உங்களின் துணைவியின் பேட்டி, கிளிப் பேச்சு,சர்வேயர் Wart and Crane, மக்பி, ரேவன் பறவைகள், சுரங்கப் பாதைக்குள் உபயோகிக்கும் புகை கக்காத”பாரஃபின் விளக்குகள்,எருமையின் புட்டத்துக் காயம், தூக்கு ரயில்,KFC, Mcdonald ஆகியவை இந்தியாவிற்கு வர வேண்டிய காரணங்கள், உங்கள் நண்பரின் மகன் “தமிறோ”, Chop Stick, கணவாய் மீன்கள்(துறைவன் புதினத்திலும் படித்தேன்)சுஷி,சீன ஜப்பானிய உணவின் தொடு ரசங்கள்,ஜப்பானிய சாமுராய் வாளின் பெயர் “கடானா”, நாகர்கோயிலுக்கு ரயில் வந்த தினம்,சிட்னி-மெல்போர்ன் ரயில் பயணம், அதில் வந்த குழந்தைகளின் நடவடிக்கைகள்,ரஹ்மானின் ஜெய்ஹோ,நண்பர் சியாமளாவின் வயதான தந்தையின் அன்றாட வாழ்க்கையின் மீது அக்கறை, யாரா நதி,அதன் வாசனை, மழை நீர், மற்றும் கழிவு நீர் மேலாண்மை, குதிரைகள் மேய்வதை பார்க்கும்போது எழும் உணர்வு, அருங்காட்சியகம், தாடியில்லா சர்தார்ஜியான காரோட்டுனருடன் உங்களுடைய பண பரிவர்த்தனை,Pantheonism,விடுதலைப் புலிகளுக்கான உங்களுடைய நிலைப்பாடு, சலீம் அலி சொல்லிய “பறவை நீ பார்ப்பதற்கு முன்னரே உன்னை பார்த்திருக்கும்” என்னும் வரிகள், செம்முட்டன் எனும் தனி நெல்வகை, ஒரு வட இந்தியரிடம் படுக்கையை விட்டுக் கொடுத்து விட்டு பிறகு உங்களுடைய எதிர்வினை….

என எனக்காக மட்டும் கடந்த பத்து நாட்களாக நீங்கள் உங்கள் குரலில் சொல்லி வந்ததாகவே உணருகிறேன்!என்னுடைய சகதர்மிணி, எங்களது மகன் வருணுக்கும், சௌந்தர்யா மாமிக்கும் இதை வாசிக்க ஆரம்பித்து இருக்கிறார்!நிறைய ஆங்கில, தமிழ் பயண நூல்களை படித்திருந்தாலும் அவைகள்வெறுமென கேளிக்கை, வசதிகள்,அல்லது அவர்கள் கடந்த தொல்லைகளை மட்டுமே முன்னிறுத்தியதாக உணருகிறேன்! இதயம் பேசுகிறது ஆசிரியர் “மணியன்” அமெரிக்க குடியரசில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அமெரிக்கர்களாகிய நாங்களே எங்கள் நாட்டின் புவியியலை பற்றி கவலைப் படுவதில்லை, நீங்கள் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள்? என பலர் கேட்டதாக குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

உங்களுடைய எழுத்துகளை தொடர்ந்து வாசிக்கும்போது, நீங்கள் எங்குமே ஆங்கில சொற்றொடர்களை உபயோகிப்பதில்லை, இயன்றவரை அதை தமிழ் படுத்தி எழுதுவதையும் அவதானிக்கிறேன்!சென்ற கடிதத்தில் உங்களை நான் “ஆசான் ஜெயமோகன்” என்று குறிப்பிட்டு இருந்ததையும் நீக்கி வெறுமென “ஜெயமோகன் அவர்களுக்கு” என்று எடிட் செய்து இருந்ததும், உங்களை நீங்கள் எவ்வாறு முன்னிறுத்திக் கொள்கிறீர்கள் என்பது தெள்ளந் தெளிவாக தெரிகிறது.அடுத்து விஷ்ணுபுரம் எனக்காக காத்திருக்கிறது!

மிகத் தொலைவில் உங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
சுந்தர்.

 

 

அன்புள்ள சுந்தர்

புல்வெளிதேசம் சம்பந்தமான ஒரு சுவாரசியமான விஷயம் உண்டு

நண்பர் ஈரோடு கிருஷ்ணனுக்கு அதை சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் எப்போதும் என்னுடன் இருப்பவர். ஈரோடு பாரதிபுத்தகாலயத்திற்கு தினமும் செல்பவர். ஆகவே நூலை அவரே அங்கிருந்து விலைகொடுத்து வாங்கட்டும் என சொன்னேன், சற்று சீண்டலாகத்தான். அதெப்படி எனக்குச் சமர்ப்பணம் செய்த நூலை நான் பணம் கொடுத்து வாங்குவது என அவர் வீம்புபிடித்தார்

அவர் கடைசிவரை அந்நூலை வாங்கவேயில்லை. உயிர்மை பிரசுரித்த அந்நூலின்  மறுபதிப்பு இப்போது கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. சமீபத்தில் கோவையில் நான் அதை அவருக்கு கொடுத்தேன். தோற்கவேண்டியிருந்தது, வேறுவழியில்லை. அவர் சிரித்தபடி வாங்கி புரட்டிப்பார்த்து வாசிக்க ஆரம்பித்தார்

ஜெ

புதியவிழிகள்

 

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16754 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>