Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16982 articles
Browse latest View live

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8

$
0
0

சூரியவட்டத்தில் ஆடுஅமை களத்தில் தன் கிணைப்பறையை மீட்டியபடி முதல் சூதரான அஜர் பாடினார். தோழரே, விஜயத்துடன் களம் நின்று பொருதும்பொருட்டு புறப்படும்போது அங்கநாட்டரசர் கர்ணன் தன் அன்னையாகிய ராதையை பார்க்கும்பொருட்டு சென்றார். அவரது பெற்றோர் நகருக்கு வெளியே ஒதுங்கிய மாளிகையில் எவருடனும் இணையாமல் தனித்து வாழ்ந்தனர் அப்போது. சூதர்களல்லாதவர்கள் மேல் அவர்கள் வஞ்சம் கொண்டிருந்தனர். சூதர்களை அவர்கள் பொருட்டென எண்ணவில்லை.

கர்ணன் களம்செல்லப்போவதில்லை என்ற செய்தி அரண்மனையெங்கும் பரவி அங்கிருந்து அங்கநாட்டிலும் சூழ்ந்திருந்தது. ஷத்ரியர் தங்கள் அவையிலிருந்து அங்கரை வெளியேற்றினர் என்று சிலர் சொன்னார்கள். அவருக்குக் கீழே நின்று போரிட ஷத்ரியர் எவரும் ஒருக்கமில்லை என்றனர். அங்கர் சிறுமைகொண்டு திரும்பிவந்து தன் அறைக்குள் முடங்கிக்கொண்டு மதுவருந்தி நிலைமறந்த நிலையில் இருக்கிறார் என்றார்கள். அவர் படைமுகம்கொண்டு எழுந்தபோதுகூட அது போருக்கென எவரும் அறியவில்லை. சிபிரத்தின் அருகே காட்டுக்குள் வேட்டைக்குச் செல்வதாகவே எண்ணினார்கள்.

அஸ்தினபுரியில் அரசர் அவைச்சிறுமை செய்யப்படுவது கண்டு சீற்றம்கொண்ட அரசி சுப்ரியை அவருடைய அறைக்குச் சென்று “ஆணென்றால் எழுந்து சென்று உங்களை அவைமதிப்பு இழக்கச்செய்த அவ்வீணர்களை போருக்கு அழையுங்கள். அவர்களை வென்று எழுங்கள். அன்றி நின்று பொருதி உயிர்விடுங்கள். இரண்டும் உங்கள் குடிக்கும் என் குருதியில் பிறந்த மைந்தருக்கும் பெருமையே. இவ்வண்ணம் அறைக்குள் புகுந்து பாணருடனும் பாங்கருடனும் அமர்ந்து மதுவருந்தி களியாட்டமிடுகையில் நீங்கள் அவர்கள் உரைத்த அனைத்துப் பழிச்சொற்களையும் நூறெனப் பெருக்கி சூடிக்கொள்கிறீர்கள். விதைகளென உலகமெங்கும் பரப்புகிறீர்கள். எழுக… ஆணென்றால் எழுக! மெய்யாகவே நற்குடிக்குருதி உங்கள் உடலில் ஓடுகிறதென்றால் எழுக!” என்றாள்.

ஆனால் அங்கர் எழவில்லை. களிமயக்கில் நகைத்துக்கொண்டிருந்தார். அவள் அவர் முன் சென்று நின்று குறுவாளை தன் கழுத்தில் வைத்து “இக்கணமே எழுக! இல்லையேல் இங்கேயே சங்கறுத்துவிழுந்து உங்களுக்கு மேலும் பழியமைப்பேன்” என்று கூச்சலிட்டாள். அங்கர் அதை நோக்கியும் விழிக்கு அப்பால் எதையும் பெற்றுக்கொள்ளாதவராக அமர்ந்திருந்தார். “ஆணிலி என்றால், தோளில் இருக்கும் உரம் நெஞ்சில் இல்லை என்றால் கலிங்கத்திற்கு வந்து என்னை சிறைகொண்டது ஏன்? ஏன் என் வாழ்க்கையை சிறுமைசெய்தீர்கள்?” என்று அவள் அழுகையுடன் கேட்டாள். அங்கர் மறுமொழி சொல்லவில்லை. விழிதாழ்த்தி வெற்றுமுகத்துடன் அமர்ந்திருந்தார்.

அவள் அந்தக் குறுவாளை நிலத்தில் வீசி “கீழ்மகனே, உன்பொருட்டு உயிர்விடுவதும் கீழ்மை. உன்னுடன் நான் இருந்த நாட்களில் ஊறிய குருதி ஒரு சொட்டும் எஞ்சாமல் என் உடலில் இருந்து அகலவேண்டும். உன்னை எண்ணிய என் நெஞ்சு முற்றழியவேண்டும். இனி நான் உன் துணைவியும் அல்ல, உன் மெய்யோ எண்ணமோ வந்து தொட்டவளும் அல்ல” என்றபின் இறங்கி வெளியேறினாள். நாகர்களுடன் சேர்ந்து நாகினியானாள். தவம்செய்து இமையா விழிகொண்டவளாக மாறினாள். தோலுரித்து அகற்றும் நாகங்களைப்போல் நாகினியரும் ஆண்டுக்கு இருமுறை உடலை உரித்து அகற்றுவர். தன் உடலில் இருந்து அவள் அகன்று அகன்று சென்றுகொண்டே இருந்தாள்.

கதைகளினூடாக அக்காட்சி விரிந்து ஒவ்வொருவரும் நின்றுநோக்கி உளம்நடித்த ஒன்றாக மாறியது. அங்கரின் தரப்பை எளியோரே எடுத்துப்பேசினர். “இந்நிலம் அஸ்தினபுரியின் நட்பிலிருப்பது. அரசர் அஸ்தினபுரியின் பேரரசரின் அணுக்கர். அஸ்தினபுரி கூட்டும் படையவையில் எழுந்து உட்போருக்கு அறைகூவுவதைப்போல் நட்புப்பிழை பிறிதென்ன?” என்றனர். “ஆம், என்றும் அவர் நட்புக்கு கட்டுப்பட்டவர்” என்றனர் பெண்கள். ஆனால் அங்கநாட்டின் தொல்குடி ஷத்ரியர் சினம்கொண்டிருந்தார்கள். “அவர் எவரேனும் ஆகுக! அனைத்து அரசர்களும் கூடிய அவையிலிருந்து குலமிலி என நம் அரசர் அகற்றப்படுகையில் சிறுமைகொள்வது அவர் மட்டும் அல்ல. நம் குடிகளும் முன்னோரும் அவர்கள் அடிபணிந்து ஏத்திய இவ்வரியணையும்தான்.” அவர்களில் சிலர் குரல் தாழ்த்தி “அரியணை தன்பெருமையை மீட்க வழி ஒன்றே உள்ளது. அதன்மேல் ஏறிய மாசு களையப்படவேண்டும்” என்றனர்.

தொல்குடியினர் அமர்ந்த அவையில் ஒருவன் அவ்வாறு சொல்ல ரிஷபகுடித் தலைவர் விஸ்வகீர்த்தி சினந்தெழுந்தார். “எவர் அதை சொன்னது? எழுக, அரசருக்கு எதிராக அதை சொன்னவன் எவன்?” என்றார். “நான் அதை சொன்னேன்” என்றபடி இளைய குடித்தலைவன் ஒருவன் எழுந்தான். “நான் முந்தைய படைத்தலைவரான கருணகரின் மைந்தன் வஜ்ரபாதன். இந்த அங்கநாடு தொல்பெருமைகொண்டது. தீர்க்கதமஸின் குருதிவழியில் வந்தது இதன் அரசகுடி. இன்று கலிங்கமும் வங்கமும் சென்றமரும் அவையில் இருந்து அங்கம் எழுப்பப்படுகிறது என்றால் என்ன பொருள்? குடிப்பெருமை குன்றும். ஆனால் குடியழிந்தோர் மீண்டும் அவையேறிய நிகழ்வே இல்லை. விழுந்த விலங்கு அக்கணமே உண்ணப்படும் என்பதே காட்டின் நெறி” என்றான்.

மேழிகுலத்து அசங்கர் “அவர் சொல்வதிலும் மெய்யுள்ளது” என்றார். எவரும் மறுமொழி சொல்லவில்லை. அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் அஞ்சியதனால் எவரும் தொடர்ந்து அங்கே இருக்கவும் விழையவில்லை. அவை அவ்வண்ணமே கலைந்தது. ஆனால் வஜ்ரபாதனின் சொல் பரவியது. அவனைச் சூழ்ந்து ஷத்ரியர்களின் ஒரு திரள் எப்போதும் இருந்தது. அவன் அவர்களுடன் எப்போதும் படைகளிடமிருந்து தனித்திருந்தான். அவன் தனக்கென தனிப்படை திரட்டக்கூடும் என ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. போருக்குப் பின் அங்கநாட்டு ஷத்ரியர் கிளம்பிச்சென்று வெல்பவரைப் பணிந்து அங்கநாட்டுக்கு ஷத்ரியநிலையைக் கோரக்கூடும். அதற்கு ஏன் அதுவரை பிந்தவேண்டும், இப்போதே கிளம்பிச்சென்றாலென்ன என்றனர் சிலர்.

“எவ்வாறாயினும் பாரதவர்ஷத்தில் போர் எழுகிறது. நமது படைகள் ஒருங்கியிருக்கவேண்டும்” என்று அமைச்சர் ஹரிதர் ஆணையிட்டார். படைகளை அணிபயிற்ற கர்ணனின் உடன்பிறந்தோரான துருமனும் வித்பலனும் விருத்ரதனும் சத்ருந்தபனும் வந்தபோது வீரர்கள் அனைவரிலும் இருந்த ஆர்வமின்மை துலங்கித்தெரிந்தது. “நம் ஆணை எழுந்த முதற்கணம் நாம் காண்பது ஓர் அமைதியை. அதன்பின் படையிலிருந்து ஓர் அசைவு எழுகிறது. அது படைமுழுக்க பரவுகிறது. அதுவே நம் ஆணையின் செயல்வடிவாகிறது. பயின்ற படை ஆணையேற்கக் காத்திருக்கும் வேட்டைநாய் போலிருக்கும் என்பார்கள்” என்று துருமன் இளையோனிடம் சொன்னான்.

இரண்டு நாட்கள் படைப்பயிற்சி முடிந்த பின்னர் வித்பலன் “இவர்கள் நம்மை எதிர்க்கிறார்கள்” என்றான். விருத்ரதன் “ஆம், அதை நானும் உணர்ந்தேன்” என்றான். துருமன் தலையசைத்தான். ஆணை ஒன்றை இட்ட மறுகணமே திரும்பி அவர்களில் ஒரு வீரனின் விழிகளை நோக்கினான். அங்கிருந்த மீறலைக் கண்டு அவனை தனியாக அழைத்தான். அவன் உணர்வதென்ன என்றான். “நம்முடன் ஷத்ரியர் போரிடப்போவதில்லை. நாம் சூதர்களாக வகுக்கப்பட்டுவிட்டோம்” என்று அவன் சொன்னான்.

துருமன் அதைக் கேட்டு கால்கள் நடுங்கினான். செல்க என கையை காட்டிவிட்டு பீடத்தில் அமர்ந்துவிட்டான். “அது இப்படையின் பொது எண்ணம். அவர்கள் தங்கள் குடியும் நாடும் சிறுமையடைந்துவிட்டதாக எண்ணுகிறார்கள்” என்றான். “நாம் செய்வதற்கொன்றுமில்லை, இனி அரசர் முடிவெடுக்கட்டும்” என்றான் துருமன். ஆனால் கர்ணன் கள்மயக்கிலேயே இருந்தான். அவனை அணுகிப்பேச எவராலும் இயலவில்லை. “பேசிப்பயனில்லை. சொற்கள் அவருக்குள் நிலைகொள்ளவில்லை” என்றார் சிவதர்.

அங்கநாட்டின் அரசவையில் அரியணை ஒழிந்திருக்க அருகே போடப்பட்ட சிறிய அரியணையில் அமர்ந்து விருஷசேனன்தான் ஆட்சி செய்தான். முடிவுகளை ஹரிதர் எடுத்தார். சிவதரின் ஆணைப்படி துருமன் ஹரிதரிடம் சென்று செய்தியை சொன்னான். விருஷசேனன் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக சொன்னான். “எச்சொற்களும் அவர்களை தேற்றப்போவதில்லை, இளவரசே. அவர்கள் போருக்கு உளமெழுந்துவிட்டவர்கள். போரன்றி எதனாலும் ஆறமாட்டார்கள்” என்றார் ஹரிதர். “நான் செய்யக்கூடுவதென்ன என்று சொல்லுங்கள்” என்று விருஷசேனன் கேட்டான். “அங்கநாட்டு அதிரதரின் பெயர்மைந்தராகச் சென்று அவர்கள்முன் நின்றால் அவர்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். கலிங்கப் பேரரசி சுப்ரியையின் மைந்தனாகச் சென்று நில்லுங்கள்… அவர்கள் குடிப்பெருமையை குருதிமரபை உணரட்டும்” என்றார் ஹரிதர்.

இளையவர்கள் சூழ விருஷசேனன் அன்று படையணிவகுப்பை பார்க்கும்பொருட்டு சென்றான். திவிபதனும் சத்ருஞ்சயனும் சத்யசேனனும் விருஷகேதுவும் சித்ரசேனனும் சுஷேணனும் உடன்சென்றனர். சிறுவனாகிய சுதமன் மட்டும் அரண்மனையிலேயே இருந்தான். தந்தைக்கு அணுக்கமானவனாகவும் அவர் சொல்வதை உணர்பவனாகவும் அவனே எஞ்சினான். படைவிரிவை நோக்கி மேடையில் எழுந்து நின்றபோது விருஷசேனன் உடல்நடுங்கினான். அவன் பொற்பூச்சுள்ள கவசம் அணிந்திருந்தான். அருமணிகள் சுடர்ந்த முடிசூடியிருந்தான். அவன் குரலுக்காக அங்கநாட்டுப் பெரும்படை காத்திருந்தது. அவன் குரலை அள்ளிப்பெருக்கி படைப்பெருக்கின்மேல் உமிழும் நீள்கூம்புவடிவ மேடைக்கூரை அவன் பேசுவதற்காக காத்திருந்தது.

தன்னையறியாமலேயே தன்னிலெழுந்து ஒலித்த குரலை தெய்வமிறங்கக் கண்டதுபோல் விருஷசேனன் உணர்ந்தான். “படைவீரர்களே அறிக, நான் அங்கநாட்டரசர் கர்ணனின் மைந்தன்! கதிர்மைந்தரின் குருதி. வெல்லற்கரிய விறல்கொண்ட விஜயத்தை ஏந்திய வீரரின் வழிவந்தவன்.” அவன் குரல் ஒலித்த ஒருகணம் படை நாகத்தின் மணம் ஏற்ற யானைபோல் திகைத்து உடல்விதிர்த்து நின்றது. பின்னர் “அங்கர் வாழ்க! கதிர்மைந்தர் வாழ்க! கொடைவள்ளல் வாழ்க! வெற்றிகொள் வீரர் வாழ்க! பரசுராமரின் படைக்கலம் கொண்டவர் வாழ்க!” என வாழ்த்தொலிகள் எழுந்து விண்ணை நிறைத்தன.

அச்செய்தியை அப்பால் அரண்மனை மேடையில் அமர்ந்து நோக்கிய சுதமன் விழிகளில் நீருடன் எழுந்தோடிச்சென்று தந்தையின் அறைக்கதவைத் திறந்து “தந்தையே” என வீறிட்டான். நிகழ்ந்ததை அழுகையும் விம்மலுமாகச் சொல்லி “நீங்கள் அங்கே வாழ்கிறீர்கள். இங்கில்லை, இவ்வுடலில் இல்லை, அங்கிருக்கிறீர்கள் நீங்கள்” என்றான். கர்ணன் தலை நடுங்கிக்கொண்டிருக்க அவனை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் கண்களை மூடிக்கொண்டான். அவன் விழியோரங்களில் நீர் வழிந்தது. சுதமன் “எழுக, தந்தையே! புகழ்கொள்க! நீங்கள் எங்கு சிறுமைசெய்யப்பட்டாலும் இங்கு உங்கள் குடிகள் நடுவே பெருமையை மட்டுமே கொண்டிருக்கிறீர்கள்” என்றான். கர்ணன் நடுங்கும் கையை நீட்டி “செல்க… செல்க!” என்று கூச்சலிட்டான். “அகல்க… என் முன் நில்லாதே…” என்று கூவியபடி எழுந்து மீண்டும் கால்தளர்ந்து பீடத்தில் அமர்ந்தான். “மதுகொண்டு வருக… மது எங்கே?” என கூச்சலிட்டான். சுதமன் மெல்ல பின்னடைந்து விழிநீருடன் திரும்பிச்சென்றான்.

ஆனால் மறுநாள் கர்ணன் படையெழும்படி ஆணையிட்டான். அவன் கனவில் அவனை ஆளும் மாநாகங்கள் வந்தன என்றார்கள் அணுக்கர். படைக்கலநிலைக்குச் சென்று விஜயத்தை கையிலெடுத்தான். அதில் முதல் அம்பை வைத்ததுமே பிறிதொருவனென்றானான். அவனில் நாகங்கள் எழுந்தன என்றனர் ஏவலர். அவன் நிழலில் மாநாகப் படங்கள் தோன்றின. அவன் நீர்ப்பாவை நாகமென்றே தெரிந்தது. அவன் துயில்கொண்ட அறைக்குள் நாகச்சீறல்கள் எழுந்தன. அவனைச் சூழ்ந்திருக்கும் தூண்களும் கட்டில்கால்களுமெல்லாம் நாகங்களாயின. அவன் போருக்கெழுந்துவிட்டான் என்னும் செய்தியே சம்பாபுரியை விசைகொள்ளச் செய்தது. படைகளில் களிவெறி பரவியது. இல்லங்கள் தோறும் குடித்தெய்வங்கள் படையல்கொண்டன.

கர்ணன் தன் மைந்தர்கள் விருஷசேனனும் விருஷகேதுவும் உடன்வர அதிரதனும் ராதையும் வாழ்ந்த இல்லத்தை அடைந்தபோது வாயிலிலேயே அதிரதன் அவனுக்காகக் காத்து நின்றிருந்தார். அவன் தேரிலிருந்து இறங்கியபோது அவர் விழிகள் விரிந்தன என்றாலும் மெய்ப்பாடு எதுவும் தோன்றவில்லை. வெறுமனே திறந்த வாயுடன் பழுத்த விழிகளால் நோக்கி நின்றார். கர்ணன் அருகணைந்து “வணங்குகிறேன், தந்தையே” என்று சொல்லி அவர் கால்களைத் தொட்டு சென்னிசூடினான். அவர் “நீள்வாழ்வுகொள்க!” என வாழ்த்தினார். மைந்தரும் வணங்கியபின் அவர்கள் உள்ளே சென்றார்கள். “அன்னை எங்கே?” என்று கர்ணன் கேட்டான். “சற்றே நோயுற்றிருக்கிறாள்” என்றார் அதிரதர்.

“நோயுற்றிருக்கிறாரா? அச்செய்தியே என்னை அடையவில்லையே?” என்றான் கர்ணன். “சின்னாட்களாகவே அவ்வப்போது நோயுறுகிறாள். அவளை இயக்கிய விசைகள் அவிந்து வருகின்றன. முதுமையல்லவா?” என்றார் அதிரதன். “இப்போது சிலநாட்களாக அவளுக்கு நோய் முதிர்ந்து வருகிறது. இன்று காலை எழவே முடியவில்லை என்றாள்…” அவர்கள் உள்ளறைக்குச் சென்றனர். மூதரசிக்குரிய மஞ்சத்தறை வாயிலில் இரு சூதர்குடிச் சேடியர் நின்றிருந்தார்கள். ராதை தன் குடியில் தன் கைபட எழுந்து வளர்ந்த பெண்களையே சேடியர் என்றும் ஏவலர் என்றும் ஒப்பினாள். பிற அனைவர் விழிகளிலும் இளிவரல் இருப்பதாக அவள் கருதினாள்.

மூத்த சேடியிடம் “அன்னை எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று கர்ணன் கேட்டான். “நோயென ஏதுமில்லை என மருத்துவர் சொன்னார்கள். நல்லுணவும் துயிலுமே போதும் என்றனர். ஆனால் அன்னை துயில்வதே இல்லை. அவர் சொல்லிக்கொண்டிருப்பது என்னவென்று எங்களுக்கு புரியவுமில்லை” என்றாள் மூத்த சேடி. கர்ணன் மஞ்சத்தறைக்குள் நுழைந்தான். அங்கே சேடி ஒருத்தி காலடியில் நின்றுகொண்டிருக்க ராதை விழிமூடிக் கிடந்தாள். இமைகளுக்குள் கருவிழி ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் வருவதை அவள் அறிந்திருந்தாள். அவன் தேரோசையையும் பேச்சொலியையும் அணுகும் காலடிகளையும் கேட்டிருந்தாள். அதன் பின்னரே விழிமூடி துயில்நடிக்கிறாள் என நன்கு தெரிந்தது.

அருகமர்ந்த கர்ணன் அவள் மெலிந்த கைகளை தன் பெரிய கைகளால் பற்றி நெஞ்சில் அணைத்துக்கொண்டு அவள் முகம்மேல் குனிந்து “எவ்வண்ணம் இருக்கிறீர்கள், அன்னையே?” என்றான். அவள் விழிதிறந்து அவனை நோக்கினாள். ஒருகணம் அவ்விழிகளில் மின்னி மறைந்தது வஞ்சமா என விருஷசேனன் ஐயம் கொண்டான். அவன் நோக்கியபோது விருஷகேதுவின் விழிகளிலும் அச்சத்தை கண்டான். “அன்னையே, நான் ராதேயனாகிய கர்ணன். உங்களை சந்தித்து விடைகொள்ளும்பொருட்டு வந்தேன்” என்றான் கர்ணன். “ம்” என அவள் முனகினாள். கண்களை மூடிக்கொண்டு பூனையைப்போல் முனகத் தொடங்கினாள். “அன்னையே, என்னை பாருங்கள். உங்களுக்கு என்ன செய்கிறது?” என்றான் கர்ணன்.

“என்ன செய்கிறது? ஒன்றுமில்லை. சாக்காடு அணுகிக்கொண்டிருக்கிறது. நான் இறந்தால் இங்கே ஒவ்வொருவரும் நிறைவடைவார்கள். அவர்களுக்கு அதற்குமேல் பொறுப்பும் கடனும் இல்லை அல்லவா?” என்றாள் ராதை. “என்ன சொல்கிறீர்கள், அன்னையே… உங்கள் மைந்தர் அல்லவா இந்நாடு முழுக்க அடிபணியக் காத்து நின்றிருக்கிறார்கள்!” என்ற கர்ணன் நிமிந்து அதிரதனிடம் “துருமன் வருவதுண்டல்லவா?” என்றான். “அவர்கள் அனைவரும் நாளுக்கு இருமுறை வந்து பார்த்துச் செல்கிறார்கள். அவர்கள் வரும்போதுதான் நோய் மிகுதியாகிறது” என்றார் அதிரதன். கர்ணன் “மருத்துவர் நோக்கிக்கொள்வார்கள். அன்னையே, நீங்கள் எழுந்து ஆற்றல்கொண்டு எங்களை வாழ்த்துவீர்கள்” என்றான்.

“எனக்கு வாழ்வதற்கு விழைவில்லை” என்று ராதை சொன்னாள். “நான் பறவைகள் பறந்துபோனபின் காற்றில் சிதைந்த கூடு போலிருக்கிறேன். எவருக்கும் என் மேல் அன்பில்லை. ஏனென்றால் நான் எவருக்கும் இனிமேல் தேவையில்லை. தனித்த நோயுற்ற முதுமகள் எவருக்கும் பெருந்தொல்லையே.” கர்ணன் “இந்த உளச்சோர்வு உங்களுக்கு ஏன் வந்தது? நானோ இளையோரோ மைந்தரோ பிறரோ உங்களுக்கு ஏதேனும் பிழை ஆற்றியிருந்தால் அன்னையென அமைந்து பொறுத்தருள்க!” என்றான். “அன்னையென்றா? நான் எவருக்கு அன்னை? அந்த எண்ணம் எவருக்கு இருக்கிறது? நான் அறிவேன். உனக்கும் உன் மைந்தருக்கும் இன்று நானே இழிவனைத்திற்கும் அடையாளம். நான் இறந்தால் இப்படி ஒருத்தி இருந்ததையே அழித்துவிடுவீர்கள். எள்ளும் நீரும் எனக்கு எவரும் அளிக்கப்போவதில்லை.”

“ஏனென்றால் நான் சூதப்பெண்… அறிவில்லாதவள். குதிரைச்சாணி நாறும் உடல்கொண்டவள். என் நாற்றத்தை நான் தொட்டு எடுத்து முலையூட்டி வளர்த்த உன் மேலும் உன் கொடிவழியினர் மேலும் சுமத்திச் செல்கிறேன்…” கர்ணன் அவள் கைகளை அசைத்து “ஏன் இந்த வீண் எண்ணங்கள், அன்னையே? உங்கள் மைந்தன் என்ற அடையாளத்துடன் அல்லவா எந்த அவையிலும் எழுந்து நின்றிருக்கிறேன்” என்றான். “என் குருதியில் ஒரு மைந்தன் பிறந்திருக்கலாம். அவன் எந்நிலையிலும் என்னை கைவிட்டிருக்க மாட்டான். எனக்கு அவன் அளிக்கும் அன்னமும் நீரும் வந்துசேர்ந்திருக்கும். நீ வந்ததும் நான் செருக்கினேன். உன் அழகையும் திறனையும் கண்டு இனி ஒரு மைந்தனே வேண்டாம் என விம்மினேன். அதை தெய்வங்கள் கேட்டன. என் கருவறையை மூடின.”

கர்ணன் அவள் கைகளை சிறுகுழவிபோல அசைத்தான். ராதை “என் மீட்புக்கான வழிகளை நானே மூடிக்கொண்டேன். என் இருளை நானே தேடிக்கொண்டேன்” என்று விம்மி அழுதாள். “அன்னையே…” என கர்ணன் சொல்வதற்குள் வாயிலுக்கு அப்பால் நின்றிருந்த அதிரதன் கைநீட்டி கூச்சலிட்டபடி உள்ளே வந்தார். “நிறுத்து… பேதைச்சொல்லுக்கு ஓர் எல்லை உண்டு…” என்றார். “வேண்டுமென்றே சொல்கிறாள். இவளுடைய நோய் வெறும் நடிப்பு. இவள் விடும் கண்ணீர் ஏமாற்று. இறங்கிச்சென்றால் உடன்வந்து அணைத்து ஏற்றிக்கொள்வார்கள் என நம்பும் கீழ்மை இது. அறிவிலா முதுபெண்டிர் அனைவரும் செய்வது… அவர்கள் இரக்கத்தை நாடி இதை சொல்லத் தொடங்குகிறார்கள். நாம் இரங்கும்தோறும் கீழிறங்கிச் செல்வார்கள். எங்கே நிறுத்திக்கொள்வதென்றே அறியமாட்டார்கள். ஒரு தருணத்தில் இவர்கள் பிறருக்கு துன்பம் மட்டுமே அளிப்பவர்களாக மாறுவார்கள். பிறரை துன்புறுத்துவதின் உவகையில் திளைப்பார்கள். அத்துன்பத்தால் பிறர்கொள்ளும் ஒவ்வாமையை தன்மீதான வெறுப்பென எண்ணிக்கொண்டு மேலும் துயருறுவார்கள். தன்னை துன்புறுத்தி பிறரையும் துன்புறுத்தி துன்பத்தில் திளைத்து இன்பத்தையும் நலத்தையும் மறந்தே விடுவார்கள்… நீ இவள் சொற்களை செவிகொள்ளாதே. இவள் நாவிலெழுந்து பேசுவது இவ்வுலகின் நன்மைகள் எதையுமே பொறுத்துக்கொள்ளாத கீழ்மைநிறைந்த ஓர் இருள்தெய்வம்.”

கர்ணன் “தந்தையே!” என்று சொல்ல நாவெடுப்பதற்குள் விசையுடன் ராதை எழுந்து அமர்ந்தாள். வஞ்சமும் வெறுப்பும் நிறைந்த விழிகளால் அதிரதனை நோக்கி “எவரிடம் இருள்? நான் இருளில் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். என்னை இருளில் தள்ளியது நீங்கள். நீங்களும் உங்கள் எடுப்பு மைந்தனும். நன்றிகொன்றோர் இறந்தபின் செல்லும் இருள் ஒன்று உண்டு என்பார்கள். நன்றி மறக்கப்பட்டோர் வாழும்போதே சென்று சேரும் இருள் ஒன்று உண்டு. அதில் வாழ்பவள் நான்” என்றாள். அவளுடைய நீட்டிய கைகள் அதிர்ந்தன. தலை நடுங்கியது. கழுத்துத்தசைகள் இழுபட்டு விதிர்க்க வாய்கோணலாகி துடித்தது. விழிகளிலிருந்து நீர் வழிய “என் அன்பு சிறுமைசெய்யப்பட்டது. என் கொடைகள் அனைத்தும் வீணாயின. என் வாழ்க்கையே பொருளிழந்தது” என்றாள்.

“தந்தையே” என கர்ணன் எழுந்து தடுக்க முயல அதிரதன் அவன் கையை உதறி மூச்சிரைக்க கூச்சலிட்டபடி முன்னால் வந்தார். “எவர் நன்றிகொன்றது? எவருக்கு நீ என்ன கொடுத்தாய் நன்றி மறப்பதற்கு? நீ பேசிக்கொண்டிருப்பது என்னிடம். உன்னுடன் எழுபது ஆண்டுகள் வாழ்ந்தவனிடம். மலடியென்று எத்தனை குடிக்கூடல்களில் இருந்து நீ எழுப்பி வெளியேற்றப்பட்டிருக்கிறாய்! எத்தனை மங்கலநிகழ்வுகளில் வெளியே நின்று வெதும்பி அழுதிருக்கிறாய். உன் உடன்பிறந்த தங்கையின் மணநாளில் நீ வரவேண்டாம் என்று வந்து சொல்லிச்சென்றாள் உன் அன்னை. நீ மறந்தாலும் நான் மறப்பேனா? உன் தங்கையின் குழவியை நீ தொட்டுவிட்டாய் என்பதற்காக உன்னை பிடித்து தென்வாயிலினூடாக வெளியே தள்ளினர். கொட்டும் மழையில் நீ நின்று அழுதாய். உன் தங்கையும் அவள் இல்லத்தாரும் அந்த மகவுக்கு ஏழுவகை புகையிட்டு கண்ணேறு கழித்தனர். குடித்தெய்வத்திற்கு கருஞ்சேவல் குருதிகொண்டு கொடைமுடித்தனர்.”

வெறிகொண்டு அதிரதன் கூவினார். “சொல்லவா? இன்னும் சொல்லவேண்டுமா உனக்கு? உன் தமக்கை மகள் கருவுற்றிருந்தபோது உன் விழிபட்டு அவள் கரு கலைந்தது என்று அவர்கள் சாணிகரைத்த கலத்தை உன் தலைமேல் கொட்டி சிறுமைசெய்யவில்லையா? அவள் தந்தை உன்னை அறைந்து வீழ்த்தினார். அவள் அன்னை துடைப்பத்தால் உன்னை அடித்து வசைச்சொல் கூவினாள். அன்று உன் குடியும் ஊரும் வெறுமனே நோக்கிநின்றன. நீ நெஞ்சிலறைந்து அழுதபோது ஒருவரும் ஒரு சொல் உரைக்கவில்லை. அனைவரும் வாயிலை மூடிக்கொண்டு உள்ளே சென்றனர். உன்னை நான் வந்து அணைத்து அழைத்துவந்தேன். நீ உயிர்நீக்க விழைந்தாய். நானும் உடன்வருவேன் என்றேன். அதைக் கேட்டு என்னை தழுவிக்கொண்டு அழுதாய்.”

“பன்னிரு நாட்கள் நாம் உணவும் நீரும் ஒழிந்து இருண்ட இல்லத்திற்குள் ஒடுங்கி அழுதுகொண்டிருந்தோம். அதன் பின்னர் இங்கே இருந்தால் துயர்பெருகும் என்று எண்ணியே ஊரை நீத்துச் சென்றோம். யமுனைக்கரையில் என் உறவினர் இல்லத்தில் ஒளிந்து என வாழ்ந்தோம். அன்று நம் கைக்கு வந்துசேர்ந்தான் இவன். கதிரொளி மிக்க மைந்தன். நீர்கொண்டு வந்த செல்வம் தெய்வக்கொடை என்பதனால் நீ ஈன்றதற்கு நிகரான அன்னையென்றானாய். உன் கலி அகன்றது. நீ பிறவிப்பயன் அடைந்தாய். அன்று இவனை நெஞ்சோடணைத்துக்கொண்டு நீ கதறியழுததைக் கண்டு நானும் அழுதேன். பன்னிரு நாட்கள் சிரிப்பும் அழுகையுமாக பிச்சி போலிருந்தாய். உன் உளம் பேதலித்துவிட்டதென்றே எண்ணினேன். குடித்தெய்வங்களின் காலடியில் சென்று விழுந்தாய். தலையால் கல்பீடத்தை அறைந்து குருதி பெருக்கினாய். நள்ளிரவில் துயிலில் எழுந்து அமர்ந்து கூச்சலிட்டு நகைத்தாய். நெஞ்சிலறைந்து அழுதாய். உன்னைக் கண்டு நானும் பித்தனென்றே இருந்தேன்.”

“அவனை நெஞ்சோடணைத்தபடி உன் தமக்கையின் இல்லத்தின் முன் சென்று நின்று அறைகூவினாய். வந்து பார், இதோ என் மைந்தன், அவன் அடிப்பொடியை உன் தலைமேல் சூடி பிறவிப்பழி தீர்த்துக்கொள் என்று கூவினாய். மைந்தனுடன் உன் குலத்தினரின் இல்லந்தோறும் சென்றாய். உன் சிறுமையை தீர்க்கவந்தவன் இவன். சிறுமைகொண்டவளே, நீ அவனுக்கு அளித்ததுதான் என்ன? முலைப்பாலா? அதை உன் நெஞ்சில் ஊற்றெடுக்கச் செய்தவனே அவன் அல்லவா? தெய்வங்கள் அவனுக்கு அளித்த அமுது அது. அவனுக்கு நீ ஊட்டிய கைப்பிடி அன்னத்தையா கணக்கெனச் சொல்கிறாய்? அவன் வந்தபின்னர் அல்லவா உன் அடுப்பில் அன்னம் ஒழியாமலாயிற்று? கீழ்மகளே, நீ கொண்டிருக்கும் அனைத்தும் அவன் உனக்கு அளித்தது…” அவர் மூச்சிரைக்க குரல் உடைய நடுங்கும் கைகளை நீட்டியபடி சொன்னார் “நீயும் நானும் அவனுக்கு அளித்தது ஒன்றுமில்லை. நாம் அவனிடம் இரந்துபெற்ற இரவலர் மட்டுமே.”

“அவனுக்கு நாம் அளித்தது எல்லாம் குதிரைச்சூதன் என்னும் இழிவைத்தான். இதோ அரசர்கள் அமைந்த அவையிலிருந்து அவனை சிறுமைசெய்து எழுப்பி அனுப்பியிருக்கிறார்கள். என் மைந்தன் ஆண்மையும் ஆற்றலும் அழிந்து களிமகனாக அரண்மனையில் அமர்ந்திருக்கிறான் என்ற செய்தி கேட்டு நெஞ்சில் பந்தத்தால் சுட்டுக்கொண்டதைப்போல் உணர்ந்தேன். இம்மண்ணில் எவரும் என் மைந்தனுக்கு என்னைப்போல் தீங்கிழைக்கவில்லை. அவனால் அமைந்தது தந்தை எனும் நிலை எனக்கு. செல்வமும் மதிப்பும் அவன் அளித்தது. அவனால் பெருகியது என் குலம். மாற்றாக நான் அவனுக்கு அளித்தது இழிவை மட்டுமே…” என்று அதிரதன் விம்மியழுதார். கர்ணன் ஏதோ சொல்லப்போக விருஷசேனன் “வேண்டாம், தந்தையே” என மெல்லிய குரலில் அவனை நிறுத்தினான். “அவர்கள் சொல்லி முடிக்கட்டும்” என்றான்.

ராதை அயர்ந்துபோய் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கன்னங்களில் இமைமயிர் விழிநீர் உலர்ந்த பிசுக்கில் ஒட்டிக்கொண்டிருந்தது. அவர்கள் நடுவே வேறு எவரும் அப்போது இல்லை எனத் தோன்றியது. அவர் இருமலும் இளைப்புமாக இடைவெளி விட்டபோது அவள் தன் சீற்றத்தை திரட்டிக்கொண்டாள். “ஆம், நான் அவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன். ஆனால் அவனுக்கு தீங்கிழைக்கவில்லை. தீங்கிழைத்தது எவர்? அவன் சூதர்பெண்ணை மணம்புரிந்தாகவேண்டும் என வலியுறுத்தி உணவொழிந்தது நீங்கள். உங்கள் நிலைகண்டு அவனிடம் அதற்குரிய சொல்பெற்றுத் தந்தேன். விண்ணில் வாழும் உங்கள் மூதாதையருக்கு நீர்க்கடன் கிடைத்தது. எனக்கு என்ன கிடைத்தது? நான் எதையும் பெறவில்லை… எச்சில் இலை என இதோ வீசப்பட்டுவிட்டேன். இங்கேயே செத்து அழிகிறேன்.”

அதிரதன் தன்னை திரட்டிக்கொண்டார். “என்ன கிடைத்தது என்றா கேட்கிறாய்? உனக்கு அன்னையெனும் இடத்தை அளித்தான். தன்னைப் பெற்ற அன்னை என அவைநடுவே மதிப்பை அளித்தான். நீ அறிந்திருக்கவேண்டும். அவன் விலக்கியதனால் நான் இன்றுவரை சொன்னதில்லை. இவன் எவர் என்று அறிவாயா? அஸ்தினபுரியின் பேரரசி குந்தியின் மைந்தன். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அரசனாக வேண்டியவன். நூற்றைந்து தம்பியர் சூழ அரியணை அமர்ந்து மும்முடி சூடி பாரதவர்ஷத்தை முழுதாளவேண்டியவன். இவன் இளமைந்தனாக இருக்கையில் இவன் தாய்மாமன் வசுதேவன் இங்கே வந்தார். இவன் தன்னுடன் வந்து அஸ்தினபுரியின் அவையில் எழுந்து தான் குந்தியின் மைந்தன் என்று அறிவிக்கவேண்டும் என்று சொன்னார். அவர் உடனிருந்து அதற்கு சான்று உரைப்பார் என்றார். குந்தியால் அதை மறுக்கவியலாது. மறுப்பாரென்றால் தன் கொழுநனின் பெயர்சொல்லி அனல்தொட்டு ஆணையிடும்படி கோரலாம் என்றார்.”

“அன்று இதோ இந்த நகரில், புரவிகளை நீராட்டும் கங்கைப்படித்துறையில் அமர்ந்திருந்தோம். இவன் அகவை முதிரா இளைஞன். அவர் எவரென்றும் எதன்பொருட்டு தேடிவந்திருக்கிறார் என்றும் நான் அன்று அறிந்திருக்கவில்லை. அவர் என்ன சொன்னார் என்றும் இவன் என்ன மறுமொழி உரைத்தான் என்றும் நான் அறிந்தது மீண்டும் நாற்பதாண்டுகளுக்குப் பின் வசுதேவன் தன் நாவால் என்னிடம் உரைத்தபோதுதான். அன்று அவர்களை பேசவிட்டு நான் எழுந்து அப்பால் சென்றேன். அவர் அவனுக்கு ஏதோ புரவிப்பணியை அளிக்க வந்துள்ளார் என்றே எண்ணினேன். எவ்வகையிலேனும் அவன் இங்கிருந்து விட்டுச்சென்றால் நன்றே என எண்ணிக்கொண்டிருந்தேன்.”

“ஏனென்றால் இங்கே அத்தனை ஷத்ரியர்களையும் தன் உயரத்தாலும் அழகாலும் பொறாமைகொள்ளச் செய்தான். அவர்களால் சிறுமைசெய்யப்பட்டான். அவர்களிடமிருந்து தப்ப மையச்சாலைகளை ஒழிந்து சிறுபாதைகளினூடாக நடந்தான். புரவிக்கொட்டில்களில் சூதர்களுடனேயே இருந்தான். தேரோட்டவோ நீராடவோ பலர்முன் எழுந்ததே இல்லை. ஆயினும் தொடர்ந்து வந்தது இழிவு. விலகிப்போ புரவிச்சூதனே என அவனை நோக்கி கூவினர் அந்தணர். புரவிச்சாணி நாறுகிறதே இவனால்தானா என இளிவரல் கூறினர் காவலர். எழுந்த பேருடலைக் குறுக்கி விழிகளை நிலம்நோக்கித் தழைத்து அவன் நடப்பதைக் கண்டு நான் விழிநீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை என் மைந்தன் விழிசாய்த்து அமர்ந்திருக்கிறான் எனில் அது அன்று வந்த பழக்கம்.”

“ஆனால் அவன் தன் தாய்வழி மாமனின் விழிகளை நோக்கி சொன்னான். ‘அஸ்தினபுரியின் அரசியை நான் அன்னை எனச் சொன்னால் ராதேயன் அல்லாமல் ஆகிவிடுவேன் அல்லவா?’ என்று. வசுதேவன் திகைப்புடன் ‘ஆம், அவள் உன்னை வளர்த்த அன்னை மட்டுமே’ என்றார். “நான் ராதையின் மைந்தன். வாழ்நாள் முழுமைக்கும் அவ்வாறே. மறைந்தபின் என் கொடிவழிக்கும் அவரே பேரன்னை. அவரை துறந்து நான் அடையும் அரசும் குடியும் உறவும் புகழும் ஏதுமில்லை. தெய்வங்களும் இல்லை’ என்றான். அவர் அவன் கையைப்பற்றி ‘மைந்தா, நான் சொல்வதென்ன என்று நீ முழுதுணரவில்லை. நான் உனக்களிப்பது பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியின் மணிமுடியை. வெல்லமுடியாத பெருங்குடியை’ என்றார். ‘என் அன்னையைவிட்டு ஒரு மறு எண்ணமில்லை. என் தந்தைக்கு மைந்தனாக அல்லாமல் நின்றிருக்கும் அவை என ஏதும் எனக்கில்லை’ என்றபின் திரும்பிச்சென்றான். நான் அவன் பின்னால் சென்று ‘அவருடன் செல்வதே உனக்கு நல்லது, மைந்தா’ என்றேன். ‘உங்களை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. நான் ராதேயனாகிய கர்ணன்’ என்றான் என் மைந்தன்.”

“அச்செய்தியை என்னிடம் வசுதேவர் மதுமயக்கில் சொன்ன அன்று நான் நெஞ்சை ஓங்கி அறைந்துகொண்டு அழுதேன். எழுந்தோடி குதிரைக்கொட்டிலுக்குள் சென்று புரவிகளின் மேல் முகம்புதைத்து கதறினேன். கீழ்மகளே, உன்னை விண்ணேற்றும் சொல் அது. உனக்கு தெய்வங்கள் அருளிய பேறு. உன் வாழ்வுக்குப் பொருளாகி வந்த வேதம். அதை உணரும் உளவிரிவு உனக்கில்லை. எனக்குமில்லை அந்த விரிவு. அன்று வில்தேர் களம் நடுவே சவுக்குடன் குதிரைச்சாணி நாறும் உடலுடன் சென்று நின்று வணங்கிய என்னை நெஞ்சோடணைத்து அவன் என் தந்தை என்றான். அக்கணமே நான் தேவர்களால் வாழ்த்தப்பட்டேன். அதை உணரவும் என் நெஞ்சில் ஒளியிருக்கவில்லை. இப்புவியில் அவன் அளித்த கொடையெதையும் எவருமே முழுதுற வாங்கிக்கொள்ளவில்லை. இரந்த கையும் நீட்டிய கலமும் நிறைந்து வழியவே அவன் அளித்திருக்கிறான். அவனுக்கு எவரும் எதையும் அளித்ததில்லை. எவரிடமும் கொள்ளும் நிலையில் அவன் இல்லை. விண்ணிலூரும் கதிரவனுக்குக் கொடையென எவரும் எதையும் அளிக்கவியலாது. நீ அளிக்கும் எதுவும் அவன் சுடரனல் வளையத்தைக் கடந்து சென்றணைவதில்லை.”

அதிரதன் நெஞ்சைப் பற்றியபடி நின்றார். அவர் விழுந்துவிடுவார் என்று தோன்றியது. சுவரை பிடித்துக் கொண்டு இருமுறை இருமினார். பின்னர் திரும்பி நடந்து அகன்றார். ராதையின் உடலில் வலிப்பு வந்தது. வாய் இழுபட்டுக்கொள்ள அவள் உடல் விதிர்த்தது. கர்ணன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். சேடி வந்து அகிபீனாப் புகையை அவள் மூக்கருகே காட்டினாள். “அவ்வப்போது இது எழுகிறது. அவர்களே இதை வரவழைத்துக்கொள்கிறார்கள் என்று மருத்துவர் சொல்கிறார்கள். ஒவ்வொரு முறை இது வந்து மீண்டதும் மேலும் நலிவடைகிறார்கள்” என்றாள். ராதை மெல்ல உடல்தளர்ந்தாள். முதிய முகம் தசை தொய்ந்து சரிய மூச்சொலி எழுந்தது. கர்ணன் பெருமூச்சுடன் எழுந்துகொண்டான்.

தொடர்புடைய பதிவுகள்


கங்கைக்கான போர் –ஓர் ஆவணப்படம்

$
0
0

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்

$
0
0

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

இந்த வருடம் முழுக்க உங்களை சந்திக்க முடியாமல் ஆகி விட்டது என்று நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. விஷ்ணுபுரம் விருது விழா நேரத்தில் தவிர்க்கமுடியாத காரணத்தால் அமெரிக்கா செல்லவேண்டிவிட்டது. சரி ஊட்டி முகாம் எப்படியும் பார்த்துவிடலாம் என்றால் எனக்கு அனுமதி இல்லாமல் ஆகிவிட்டது. சரி என்ன நேரில் பார்த்தால் தான் உண்டா??? எப்படியும் தினமும் யோசிக்கும்போதெல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அடுத்தமுறை கண்டிப்பாக வாய்ப்பு வரும்போது வந்துவிடுவேன்.

 

மற்றபடி அனைத்தும் நலம்.

 

நேற்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 வது வருட நிறைவு. எங்கள் குடியிருப்பில் அதைப்பற்றி ஒரு திரைப்படம் திரை இடலாம் என்று நினைத்து கடைசியில் திரையிட்டும்விட்டேன். ஆனால் கூட்டமே இல்லை. எதற்க்கு இந்த படம் என்றும், இப்போது என்ன வந்தது என்றும் ஒரே பொருமல்கள்.

 

சிறியவர்களின் பொருமல்கள் உணரமுடிகிறது. ஆனால் பெரியவர்களும் இதில் வரும்போது ஒரு விதமான மன அலைச்சல்களுக்கு ஆளாகிறேன். பின் தொடரும் நிழலின் குரலைபோன்று சற்று ஒரு 100 வருடத்திற்குமுன் 23 வயது இளைஞன் சுதந்தரத்தையே தன் வாழ்நாள் லட்சியமாக நினைத்து தன் உயிரை அர்பணித்த அந்த அபலைகளை நினைத்து கண்ணீர் உகுக்கவேண்டாம் ஆனால் என்ன இப்போது என்று சொல்ல வேண்டுமா!!! அவர்களின் தியாகத்திற்க்கும், உழைப்பிற்க்கும் என்னதான் பொருள். ஏன் அந்த ஏமாளிகள் தன் வாழ் நாளை இப்படி இந்த வீணர்களுக்கு அர்பணித்தனர். ஒரே எரிச்சலும் ஆற்றாமையும்தான் வருகிறது.

 

-திருமலை.பச்சமுத்து

 

 

 

அன்புள்ள திருமலை

 

பாரதிகுறித்த நினைவுகளில் ஓர் இடம்.  வரா எழுதியது என நினைவு. 1919 ல் பாரதி கடற்கரைக்கு நடை செல்கிறார். அங்கே ஒரு வழக்கறிஞர் பாரதியைப் பார்த்து அடையாளம் கண்டுகொள்கிறார். “ஏன் பாரதி உங்க டிலக் இப்ப என்ன பண்றான்?” என்று கேட்கிறார். பாரதி சீறிவிடுகிறார். அவன் குரல்வளையைக் கடிக்க நிற்க மற்றவர்கள் இழுத்து வருகிறார்கள் ‘ஏண்டா டேய், உனக்கு திலகர் டிலக்காடா?” என்று கூச்சலிடுகிறார்

 

விடுதலைப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. ஜாலியன் வாலாபாக் நடந்த அதே ஆண்டு. அதைத்தவிர வேறு பேச்சே இல்லாமலிருந்த சந்தர்ப்பம். அன்றைக்கு மனிதர்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். எளிய மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். வறுமையால் சிறுமைகொண்டிருப்பார்கள். அல்லது செல்வத்தால் சிறுமைகொண்டிருப்பார்கள்.

 

நீங்கள் ஜாலியன் வாலாபாக்கை ஒரு வெறுப்புகோஷத்துடன், ஓர் எதிரியைச் சுட்டிக்காட்டி, முன்வைத்துப்பாருங்கள். கூட்டம் திரள்வார்கள். நேர்நிலை இலட்சியவாதம் அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் அரசியல் முழுக்கமுழுக்க எதிரியை முன்னால் கண்டு உருவாக்கிக் கொள்ளும் திரள் உளநிலை மட்டுமே

 

கனவுகள், இலட்சியங்கள், பொதுநலன் ஆகியவை ஆயிரத்தில் ஒருவருக்கே. தத்துவமும் ஆன்மிகத்தேடலும் லட்சத்தில் ஒருவருக்கே..அவர்கள் அப்படி இல்லையே என வருந்துவதை விட நாம் அவர்களைப்போல் இல்லையே என மகிழ்வதே சரியான உளநிலை

 

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

$
0
0

நீர் நெருப்பு – ஒரு பயணம்

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

கங்கை தூய்மையற்றது என அறியாத ‘படித்த’ இந்தியர்கள் குறைவு. அத்தூய்மையின்மை எதனால் என்று கேட்டால் உடனே கங்கையில் வட இந்தியர்கள் பிணங்களைத் தூக்கிவீசுகிறார்கள் என்பார்கள். இந்துக்கள் தங்கள் புனிதநதியை தங்கள் அறிவின்மையால் அழிக்கிறார்கள், சாக்கடையாக்கி ஓடவிடுகிறார்கள் என்பதுதான் இங்கிருந்து உலகம் முழுக்கச் சென்றுள்ள பரப்புரை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் கங்கையில் மிதக்கும் பாதிமட்கிய மாடுகளின் உடல்கள், மனிதச் சடலங்கள் குறித்த புகைப்படங்கள் தேசிய ஊடகங்களில் வெளிவரும்

 

இப்புகைப்படங்கள் பெரும்பாலும் கங்கையில் முதல்பெருவெள்ளம் வந்து வடிந்தபின் எடுக்கப்படுபவை. அந்தப்பெரிய நதியில் எவ்வகையிலும் அத்தகைய மாசுக்களைத் தவிர்க்க முடியாது. ஒப்புநோக்க இறுதிச்சடங்குகள் ஏதும் நிகழாததும் புனிதத்தலங்கள் ஏதும் இல்லாததுமான பிரம்மபுத்திராவிலும் அதேபோல சடலங்களைக் காணலாம். கங்கையில் செல்லும் வெள்ளத்தின் அளவுக்கு அந்த மாசுக்கள் மிக எளிதாக அழிக்கப்பட்டுவிடும். அதிலுள்ள மீன்கள் நீர்நாய்கள் முதலைகளின் உணவுக்கே அவை போதாது.

 

ஆனால் கங்கை மாசடைந்ததுதான். ஏன்? ஒருமுறை காசிக்கோ கான்பூருக்கோ அலகாபாதுக்கோ சென்று கங்கை ஏன் மாசடைந்துள்ளது என்று நோக்கினாலே புரியும். ஹரித்வாரிலிருந்து மேலே இமையமலை அடிவாரம் வரை மொத்த மலைகளும் கல்அகழ்வாளர்களால் கனிக்கொள்ளையர்களால் சூறையாடப்பட்டு மண்புழுதியும் வேதிக்குப்பையும் ஆற்றில் கொட்டப்படுவதைக் காணமுடியும். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பங்குபெற்று நிகழும் இந்த சூறையாடல் பல ஆண்டுகளாக இடைவிடாது நிகழ்கிறது. அத்தனை அரசியல்கட்சிகளும் அதற்கு ஒத்துப்போகின்றன

நிகமானந்தர்

இன்று கங்கையின் நீர் ஏராளமான அணைக்கட்டுக்கள் வழியாக பலவாறாகத் திருப்பிவிடப்படுகிறது. மிகக்குறைவான நீரே கங்கையில் செல்கிறது. அதேசமயம் கழிவுகள் கலப்பது மிகுந்து வருகிறது. இது இந்தியா முழுக்க அனைத்து ஆறுகளும் சந்திக்கும் நிலை. அதற்கும் மேல் கங்கையை மாசுபடுத்துபவை தொழிற்சாலைக் கழிவுகள்

 

உதாரணமாகக் காசி. அது ஒரு மாபெரும் தொழில்நகரம். பட்டு உற்பத்திமையம். பட்டுக்கு வண்ணமேற்றும் சிறிய தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ரசாயனத்தொழிற்சாலைகள் பல உள்ளன. மொத்தக் கழிவும் வரணா அஸி என்னும் இரு ஆறுகள் வழியாக கங்கையில் வந்து கலக்கின்றன. நடுவே உள்ள படிக்கட்டுதான் வரணாஸி. எந்தவிதமான தூய்மைப்படுத்தும் முறையும் இல்லை. நேரடியாக ஆற்றில் திறந்து விடப்படுகின்றன. கங்கையில் இரவெல்லாம் வந்துசேரும் இக்கழிவுகளால் அது நுரைநுரையாக வெவ்வேறு வண்ணங்களில் ஒழுகுவதைக் காணலாம்.

 

கான்பூர் இந்தியாவின் தோல்பதனிடும் தொழிலின் மையம். இந்தியாவின் தோல்பொருட்களில் நேர்பாதி அந்நகரில்தான் உற்பத்தியாகின்றன. அதன் ரசாயனக்கழிவுகள் மொத்தமும் கங்கையை அடைகின்றன.அலகாபாதின் ரசாயன ஆலைகள். வெவ்வேறு தொழிற்சாலைகளின் கழிவும் கங்கையில்தான் சென்று சேர்கிறது. இதைத்தவிர கங்கைக்கரையிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நகர்களின் சாக்கடைகள் மொத்தமாகவே கங்கையில்தான் வந்தமைகின்றன.

இந்த சூழியல் அழிவு குறித்த பேச்சுக்கள் ஊடகங்களில் இருந்து மறைக்கப்படுவதற்காகவே கங்கையின் இடுகாடுதான் சூழியலழிவை உருவாக்குகிறது என்னும் செய்தி தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது. கங்கையின் மெய்யான அழிவு மூன்று காரணங்களால் என வகுக்கலாம். ஒன்று நீரோட்டம் தடுக்கப்பட்டு கங்கையின் பல்லுயிர்தன்மை அழிவது. இரண்டு ரசாயனக் கலப்பு. மூன்று கங்கைக்கரையோரமாக நிகழும் கட்டற்ற கனிம அகழ்வு. அதன் கழிவுகள் கங்கையில் கலப்பது.

 

கங்கை ஒரு புனிதநதி என்பது ஒருபக்கம், அது பல லட்சம்பேரின் வாழ்வாதாரம். விவசாயிகள், மீனவர்கல் படகோட்டிகள் என அதை நம்பிவாழ்பவர்கள் ஐந்து மாநிலங்களிலாக பரவியிருக்கிறார்கள். கங்கைநீரை வேளாண்மைக்குப் பயன்படுத்த அதில் பெரிய அணைகளைக் கட்டவேண்டியதில்லை. சிறிய தடுப்பணைகள் வழியாகவே நீரவ் வேளாண்மைக்குக் கொண்டுசெல்லலாம். சொல்லப்போனால் குறைந்த செலவில் மேலும் அதிகமாக வேளாண்மை செய்யலாம். பெரிய அணைகளின் நோக்கம் முதன்மையாக மின்னுற்பத்தி. அடுத்ததாக குத்தகைக்காரர் அதிகாரி அரசியல்வாதி என்னும் முக்கூட்டுக்கொள்ளை.

 

பெரிய அணைகளுக்கு நிதியுதவிசெய்யவே பன்னாட்டு நிதியங்கள் விரும்புகின்றன. ஏனென்றால் அதற்கான பொருட்கள் அவர்கள் நிதியுதவிசெய்யும் வேறு நிறுவனங்களிடம் வாங்கப்படும். அந்தப்பணம் வேறுவகையில் அவர்களுக்கே திரும்பி வரும். வட்டி மட்டும் பெருகிக்கொண்டிருக்கும். சூழியல்நிபுணர்கள் பெரிய அணைக்கட்டுத்திட்டங்களுக்கு எதிரான மாற்று பொருளியல் ஆலோசனைகளை விரிவாகவே வகுத்து அளித்திருக்கிறார்கள். அவை எவராலும் செவிகொள்ளப்பட்டதே இல்லை. இன்றைய அதிகாரக்கட்டமைப்பில் அக்குரல்கலுக்கு இடமே இல்லை

கங்கையைப் பாதுகாக்கவேண்டும் என்று கோரி மக்களின் விழிப்புணர்ச்சியை உருவாக்கும்பொருட்டு ஒரு பெரும் போராட்டம் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஹரித்வாரை மையமாகக் கொண்டு செயல்படும் மாத்ரிசதன் என்னும் அமைப்பு இதை நிகழ்த்துகிறது. இந்தியாவின் ஆத்மா வெளிப்படும் போராட்டம் எனக் கருதப்படும் இந்நிகழ்வுகுறித்து இங்கே அறிவியக்கத்தவர் பேசுவதில்லை. அரசியல்வாதிகள் பொருட்படுத்துவதில்லை. ஊடகங்களில் ஓரிரு வரிகளுக்குமேல் காணமுடியாது. தமிழகத்தின் முதன்மைநாளிதழ்கள் எவையும் இன்றுவரை இதைச் செய்தியாகப் பொருட்படுத்தியதில்லை

 

மாத்ரி சதன் காந்திய வழியில் போராடுகிறது. மக்களின் மனசாட்சியுடன் உரையாடும்பொருட்டு அவர்கள் உண்ணாவிரதப்போரில் ஈடுபடுகிறார்கள். முதலில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் சுவாமி நிகமானந்தா. கங்காபுத்ர நிகமானந்தர் என அவர்அழைக்கப்படுகிறார்.   அதைத்தொடர்ந்து சுவாமி கியான் ஸ்வ்ரூப் சானந்த் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இப்போது சுவாமி ஆத்மபோதானந்தர் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்.

 

1976 ஆகஸ்டில் பிகாரில் தர்பங்கா மாவட்டத்தில் லடாரி என்னும் சிற்றூரில் பிறந்த நிகமானந்தரின் இயற்பெயர் ஸ்வரூபம் குமார் ஜா. கிரீஷ் என அன்னையாரால் அழைக்கப்பட்டார். பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தன்னைத் தயாரித்துக்கொண்டிருக்கையில் 1995 அக்டோபரில் வீட்டைத்துறந்து ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். நாடோடித் துறவியாக அலைந்து திரிந்தார். ஹரித்வாரில் உள்ள ஆசிரமத்தில் சுவாமி சிவானந்தரின் வழி வந்த கோகுலானந்த சரஸ்வதி மற்றும் நிகிலானந்த சரஸ்வதியின் மாணவராக ஆகி பின்னர் அவர்களிடமிருந்து துறவுபெற்றுக்கொண்டு நிகமானந்தராக பெயர் சூட்டிக்கொண்டார்

 

நிகமானந்தர் வேதங்களையும் வேதாந்தத்தையும் கற்றுத்தேர்ந்தார். மாத்ரி சதனின் டிவைன் மெஸேஜ் என்னும் மாத இதழில் வேதாந்தம் சார்ந்த ஆழ்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1997 ல் அவர் தலைமையில் சில இளைஞர்கள் கங்கையைக் காப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் போராட்டத்தைத் தொடங்கினர்.1998 ஜனவரியில் கங்கையைக் காக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து தன் முதல் உண்ணாநோன்புப் போராட்டத்தை தொடங்கினார். பின்னர் ஜூன் மாதம் மீண்டும் ஏழுநாட்கள் போராட்டத்தை நடத்தினார்.

ஜி டி அகர்வால்,

மாத்ரிசதன்  இதுவரை 60 முறை போராட்டம் நடத்தியுள்ளது.ஒருவர் உயிரிழந்தால் அவருடைய இடத்தில் இன்னொருவர் உண்ணாநோன்பைத் தொடர்வது வழக்கம். பொதுவாக ஊடகங்கள் இந்தப்போராட்டத்தை பொருட்படுத்தவில்லை. அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களும் அதை கவனிக்கவில்லை. ஆயினும் அவர்கள் சலிக்காமல் தங்கள் போராட்டத்தை நடத்தினர்.

 

சொல்லப்போனால் ஊடகங்கள் இந்தப்போராட்டத்தைப் பற்றி எள்ளல்நிறைந்த மொழியிலேயே பேசின. 2011ல் சுவாமி நிகமானந்தா உயிரிழந்தபோதுதான் சற்றேனும் ஊடகக் கவனம் கிடைத்தது. அதுவும் அப்போது மத்திய அரசின் ஊழலுக்குஎதிராகப் போராடிய ராம்தேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹரித்வாரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது நிகமானந்தாவின் உடல் அதே மருத்துவமனையில் இருந்தது. ராம்தேவ் அதைச் சுட்டிக்காட்டியபின்னரே ஊடகங்கள் கவனித்தன.

 

நிகமானந்தரின் போராட்டம் காங்கிரஸுக்கு எதிரானது, இந்துத்துவ நோக்கம் கொண்டது என அன்று திரிக்கப்பட்டது. அன்று இந்துத்துவ அரசியல்வாதிகள் அதை ஆதரித்தனர். இன்று இப்போராட்டம் மோடிக்கு எதிரானதாக மறுதரப்பினரால் திரிக்கப்படுகிறது. அன்று அவரை ஆதரித்தவர்கள் இன்று அப்போராட்டத்தை வசைபாடுகிறார்கள். அரசியல் துருவப்படுத்தலுக்கு அப்பால் நின்று மக்களின் பிரச்சினைகளை, வாழ்க்கைச்சிக்கல்களை நோக்க இங்கே கண்களே என்னும் நிலை முன்பு இருந்ததே இல்லை.

 

நிகமானந்தர் கொல்லப்பட்டார் என்னும் குற்றச்சாட்டு உள்ளது பிப் 2011ல் அவர் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தால் உடல்நிலை நலிந்து ஹரித்வார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் எவரென்றே தெரியாத ஒருவர் செவிலியர் உடையில் வந்து அவருக்கு ஓர் ஊசியை போட்டார் எனச் சொல்லப்பட்டது. அந்த நஞ்சு ஊசிக்கு உடனடியாக மாற்று மருந்துக்கள் அளிக்கப்பட்டாலும் அவர் உயிரிந்தார். உடலாய்வில் அவருக்கு நஞ்சு செலுத்தப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது

 

வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதும் நிகமானந்தருக்குச் சிகிழ்ச்சை அளித்த டாக்டர் பட்நகர் அவருக்கு நஞ்சு செலுத்தியது கண்டறியப்பட்டது. அவரை அதற்குத் தூண்டிய ஹிமாலயன் அகழ்வுத்தொழிலதிபர் கணேஷ்குமார் என்பவர் கைதுசெயப்பட்டார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது

 

நிகமானந்தரின் கொலைமேல் நடவடிக்கை கோரி சிவானந்தர் 11 நாள் நீண்ட உண்ணாவிரதத்தை நடத்தினார். உத்தரகண்ட் அரசு கங்கைகரையின் சட்டவிரோத கனியகழ்வுகளை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்க ஆணையிட்டது. அதன் சூழியல் அழிவை கணக்கிட ஓர் அமைப்பையும் நிறுவியது. ஆனால் இவை கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. இன்றும் கொல்லைப்புறமாக அனைத்து அகழ்வுகளும் நிகழ்கின்றன. சட்ட இடுக்குகளினூடாக அனுமதிகள் அளிக்கப்படுகின்றன. மாத்ரி சதன் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறது. இன்றைய மத்திய மாநில அரசுகளும் அலட்சியமாகவே இருக்கின்றன.

 

நிகமானந்தரின் மறைவுக்குப் பின்னர் சூழியல் ஆய்வாளரும் கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றியவருமான ஜி.டி.அகர்வால்  துறவுபூண்டு அதேகோரிக்கைகளுக்காகப் போராடி உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.

 

1932 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் மாவட்டத்தில் கந்தலாவில் பிறந்தார் குருதாஸ் அகர்வால். சூழியல்பொறியாளரான இவர் கான்பூர் ஐஐடியில் பதினேழாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.2011 ஜூலையில் சுவாமி கியான் ஸ்வரூப் சானந்த் என்றபேரில் துறவுபூண்டார். அவருக்கு வித்யா மடம் துறவு அளித்தது.

ஆத்மபோதானந்தருடன் ஸ்டாலின்

கங்கையைக் காக்கும்பொருட்டு ஏற்கனவே 2008 முதல் ஐந்துமுறை உண்ணாவிரதப் போராட்டங்களைச் செய்திருக்கிறார். அவருடைய கோரிக்கைகளை கொள்கையளவில் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார். ஒருசில ஆணைகளையும் பிறப்பித்தார்

 

நரேந்திரமோடி பிரதமாரக ஆனபின் அவருக்கு சுவாமி கியான் ஸ்வரூப் பல கடிதங்கள் எழுதினார். இறுதியாக எழுதிய கடிதத்தில்  ‘நீங்கள் கங்கையைக் காப்பீர்கள் என நம்பினேன்.  கங்கை நதிக்கென தனி அமைச்சரவையைஉருஅவக்கிய நீங்கள் அதை மீட்டெடுக்க இன்னும் இரண்டு அடிகள் முன்செல்வீர்கள் என நம்பினேன். ஆனால் இத்தனை வருடச் சூழியல் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த நான்கு ஆண்டுகளில் திறம்பட ஒரு நல்ல நடவடிக்கை கூட எடுக்கவில்லை. நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பெருநிறுவனங்களுக்குப் பயனளிக்கும் நோக்கம் கொண்டவையாக மட்டுமே இருந்தன. நான் மீண்டும் உங்களைக் கெஞ்சிக்கேட்கிறேன். தடவுசெய்து கங்கையை மீட்டெடுங்கள்” என்று மன்றாடியிருந்தார்.

 

அவருடைய கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. 2018ல் தன் உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடஙிகிய சுவாமி  கியான்ஸ்வரூப் சானந்த் ஜூன் 22 ,2018 ல் உண்ணாவிரதத்தாஉயிர்துறந்தார். அப்போது அவருக்கு 87 அகவை.

ஆத்மபோதானந்தர்

சுவாமி கியான் ஸ்வரூப் சானந்த் மறைந்த இரண்டாவது வாரமே மத்ரி சதன் அமைப்பிலிருந்து 26 அகவை மட்டுமேயான துறவி ஆத்மபோதானந்தர் தன் உண்ணாநோன்பை தொடங்கினார். கேரளத்தைச் சேர்ந்த கணிப்பொறியாளரான ஆத்மபோதானந்தர் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். அவருடைய உயிரும் ஆபத்தில் இருக்கிறது.

 

ஆனால் இவ்வளவு திகைப்பூட்டும் ஒரு தொடர்போராட்டம் இந்தியாவின் ஊடகங்களால் இன்னமும்கூட பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. ஏனென்றால் இதன் எதிர்நிலையில் நின்றிருப்பவர்கள் மிகப்பெரிய அகழ்வுநிறுவனங்கள், ஆலைகள். அவர்களை நம்பியே ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளன. இப்போராட்டம் சிறு சூழியல்குழுக்களாலேயே மாற்று ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படுகிறது

 

தமிழகத்தின் சூழியல்செயல்பாட்டாளரும், காந்தியருமான ஸ்டாலின் எழுதிய சிறுநூல் ‘நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு’ இந்த மாபெரும் போராட்டத்தின் கதையைச் சொல்கிறது. அவர் சார்ந்த குக்கூ குழந்தைகள் வெளியின் ஊழியர்கள் ஒரு சிறு குழுவாக அவர்கள் இங்கிருந்து கிளம்பிச் சென்று ஆத்மபோதானந்தரைக் கண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்துவந்தனர். அப்பயணத்தின்பொருட்டு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம் என இதைச் சொல்லலாம்.

 

இன்றுவரை நம்காலத்து மாபெரும் கொள்கைப்போராட்டமான இதைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தமிழில் எழுதப்படவில்லை. இந்தத் தளத்தில் செய்திகள் வந்துள்ளன. ஸ்டாலினும் குக்கூ குழுவினரும் நேரில் சென்று ஆத்மபோதானந்தரை வாழ்த்தி மீண்டிருக்கின்றனர். அச்செய்தி வெளிவந்துள்ளது. இதுவரை ஒரு கடிதம்கூட வாசகர்களிடமிருந்து வரவில்லை. இதில் வெளிவரும் எந்த ஒரு சிறுசெய்திக்கும் வாசக எதிர்வினை இருக்கும். இவ்வளவுபெரிய ஒரு புறக்கணிப்பு எங்கிருந்து வருகிறது? இதன் உளநிலைதான் என்ன?

 

.

 

Ganges: The holy men fasting to death keep a river alive

Kerala’s computer science graduate-turned activist on fast-unto-death for clean Ganga

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9

$
0
0

அதிரதனின் இல்லத்திலிருந்து தன் அரண்மனை நோக்கிச் செல்கையில் தேரில் உடனிருந்த விருஷசேனனும் விருஷகேதுவும் கர்ணனிடமிருந்த ஆழ்ந்த அமைதியை அறிந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் விழிநோக்கிக் கொண்டார்கள். சம்பாபுரியின் தெருக்கள் உச்சிவெயிலுக்கு அடங்கி ஓயத்தொடங்கிவிட்டிருந்தன. கர்ணனின் தேர் செல்வதை மக்கள் அறிந்ததாகத் தெரியவில்லை. எந்த அணியுமில்லாத விரைவுத்தேர் அது. அதன் செம்பட்டுத் திரைச்சீலைகளை காணநேர்ந்த சிலர் உள்ளிருப்பவர் எவர் என நோக்கி அது கர்ணன் என அடையாளம் காண்பதற்குள் தேர் அவர்களைக் கடந்துசென்றது.

அரண்மனையை தேர் சென்றடைந்தபோது கர்ணன் பெருமூச்சுடன் மீண்டும் ஒன்றும் சொல்லாமல் இறங்கி நடைவாயிலை நோக்கிச் சென்றான். விருஷகேதுவும் விருஷசேனனும் இறங்கி நிற்க அவர்களின் உடையின் வண்ண அசைவை வெண்பளிங்குச் சுவரில் கண்டு கர்ணன் திரும்பி நோக்கினான். அவர்களை எவர் அவர் என்பதுபோல விழிசுருக்கி பார்ப்பதாகத் தோன்றியது. பின்னர் கைவீசி அவர்களை தன்னைத் தொடரும்படி ஆணையிட்டுவிட்டு நடந்தான். மெய்யாகவே அவன் தன்னைத் தொடரும்படி ஆணையிட்டானா என்னும் ஐயத்துடன் மூத்தவனை விருஷகேது நோக்கினான். விருஷசேனன் “செல்க” என்றபடி நடக்க அவனும் தொடர்ந்தான்.

கர்ணன் பட்டம் ஏற்றபின் கட்டிய பெரிய அரண்மனையின் நீண்ட இடைநாழி தேவதாரு மரத்தாலான தரைகொண்டது. மெழுகு தேய்க்கப்பட்ட அப்பரப்பின்மேல் கர்ணனின் வண்ண உடல்தோற்றம் நீண்டு சென்றது. விருஷகேது அதை நோக்கியபடி நடந்தான். யானைகளுக்குரிய நடை. ஆனால் உடல்தசைகளின் அசைவு சிம்மங்களுக்குரியது. தசைகள் இயல்பாகத் தளர்ந்திருப்பவை என்றும், பேராற்றல் கொண்டவை என்றும் ஒரே தருணத்தில் தோன்றச்செய்பவை. விருஷசேனன் தன்னை முந்தி முன்னால் சென்றபோது தந்தையின் இன்னொரு உருவம் என விருஷசேனன் தோன்ற விருஷகேது விழிதிகைத்தான். முதிய கர்ணனை இளைய கர்ணன் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான்.

அவன் தன் முகத்தை ஆடியில் நோக்க விழைந்தான். அவன் தன் அன்னையின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். கர்ணனின் உயரமும் கருநிறமும் அவனுக்கு அமையவில்லை. இளமையிலேயே அன்னையின் மடியிலிருந்து வளர்ந்தமையால் அவன் விற்கலையிலும் வாட்கலையிலும் பயிற்சி கொள்ளவில்லை. சேடியராலும் செவிலியராலும் அவன் வளர்க்கப்பட்டான். அரண்மனையின் குளிர்ந்த விரிந்த அமைதி நிறைந்த மாற்றமின்மையை, மீள மீள ஒன்றே நிகழும் வெறுமையை இல்லாவிரும்பினான். இளமையின் தனிமை அவனைக் கற்பனைகளுக்குக் கொண்டுசென்றது. மொழியை அவன் பற்றிக்கொண்டான். நூல்நவில்வதில் ஆர்வம் கொண்டிருந்தான்.

மூத்தவர்களின் எந்தக் களியாட்டிலும் அவன் கலந்துகொண்டதில்லை. கர்ணனைப்போலவே அணிகள் பூண்டு, அவனைப்போலவே சற்றே தாழ்ந்த விழிகளுடன் நீளுடலை சாய்த்த்து பீடத்தில் அமர்ந்திருக்கும் விருஷசேனனையும் அவனுடைய மாற்றுரு என்றே தோன்றும் பிற மூத்தவர்களையும் பார்க்கையில் அவர்களின் குருதி அல்ல தன்னுடையது என்று அவன் உணர்ந்தான். அவர்கள் முழங்கும் ஆழ்ந்த குரல் கொண்டிருந்தார்கள். இயல்பாக பேருடல்கொண்டவர்களிடமிருக்கும் தளர்வசைவுகள் கொண்டவர்களாகவும் பயிற்சி என்றும் விளையாட்டென்றும் போரென்றும் எழுகையில் நாண் இழுபட்ட வில் என நின்றிருப்பவர்களாகவும் இருந்தனர். அங்கர் நான்கு பக்கமும் சூழ்ந்த ஆடிகளில் தன்னை நோக்கிக்கொண்டார். மைந்தர்களெனப் பெருகிச்சூழ்ந்தார் என பாடினர் சூதர்.

பாண்டவ, கௌரவ மைந்தர்கள் எவருடனும் அவனுக்கு அணுக்கத் தொடர்பு இருக்கவில்லை. பாண்டவ மைந்தர்களும் கௌரவ மைந்தர்களும் இணைந்தே அஸ்தினபுரியிலும் பின்னர் துரோணரின் குருநிலையிலும் பயின்றனர். அவன் மூத்தாரும் அங்கே பயின்றனர். அஸ்தினபுரிக்கு உரிய அணிக்காட்டில் வேட்டையாடினர். கங்கையில் நீர்விளையாடினர். அவன் எப்போதும் அகன்றிருந்து நோக்குபவனாகவே இருந்தான். அதனால் அவர்களால் அவன் ஏளனம் செய்யப்பட்டான். ஆனால் அவன் உடன்பிறந்தார் அவனை எப்போதும் சிறுவன் என, அரியவன் என எண்ணிப் பேணினர். ஏளனம் இளிவரலாக ஒருபோதும் மாறியதில்லை. விருஷசேனன் அவனைத் தன் மைந்தன் என்றே எண்ணினான். அவனைவிட இளையவர்களான சுசேஷணனும் அவனை இளையவனாகவே நடத்தினான்.

அவர்களில் பிரதிவிந்தியனும் யௌதேயனும் மட்டுமே அவனுக்கு அணுக்கமானவர்கள். அவர்களும் விளையாட்டுக்களில் கலந்துகொள்வதில்லை. ஒதுங்கியிருந்து நோக்கி மகிழ்வார்கள். அவ்விளையாட்டுக்கள் பற்றிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்வார்கள். அவற்றையே சொல்லாடலாக ஆக்கிக்கொண்டு அதில் நெடுந்தொலைவு செல்வார்கள். சில தருணங்களில் அவர்கள் விளையாடி முடித்து மீண்டு வரும்போதுகூட அவர்களின் சொல்லாடல் முடிவுற்றிருக்காது. லக்ஷ்மணன் எப்போதுமே இளிவரலாடுவான். உடன் துருமசேனனும் சேர்ந்துகொள்வான். சுதசோமனும் சர்வதனும் மூத்தோருக்குத் துணைநிற்பார்கள். பூசலின் எல்லைக்கோடு வரை சென்று சென்று மீளும் ஓர் ஆடலாக அது நிகழும்.

அறைவாயிலில் நின்று திரும்பி நோக்கிய கர்ணன் விருஷசேனனிடம் “பிற மைந்தரும் உடனே வரவேண்டும்… அவர்கள் இங்கிருக்கிறார்கள் அல்லவா?” என்றான். “ஆம், அனைவருமே அரண்மனையில்தான் உள்ளனர். இன்று படைப்புறப்பாடு இருக்கும் என்பதனால் இங்கேயே இருக்கவேண்டும் என நான் ஆணையிட்டேன்” என்றான் விருஷசேனன். “நன்று, அவர்கள் வரட்டும்” என்றபின் கர்ணன் உள்ளே சென்றான். விருஷசேனன் விருஷகேதுவிடம் “சென்று உன் மூத்தவர்கள் அனைவரையும் வரச்சொல். நான் அதுவரை அமைச்சரிடம் சொல்லாடிக்கொண்டிருக்கிறேன்” என்றான். அருகிருந்த அறையிலிருந்து சிவதர் வெளிவந்து விருஷசேனனை நோக்கித் தலைவணங்கினார்.

விருஷகேது நேராக அமைச்சர்நிலைக்குச் சென்று அங்கிருந்த ஏவலர்களிடம் தமையன்களை உடனே அரசரைப் பார்க்கவரும்படி ஆணையிட்டு அனுப்பினான். அவன் திரும்பி அங்கே சென்றபோது விருஷசேனன் சிவதரிடம் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் சிரித்துக்கொண்டிருப்பதை தொலைவிலேயே அவன் கண்டான். அருகணையும்தோறும் அவன் நோக்கு கூர்கொள்ள நடை தளர்ந்தது. அவர்கள் பேசிக்கொள்வனவற்றில் காதில் விழும் முதல் சொல்லில் இருந்து அவ்வுரையாடலை உய்த்தறியவேண்டும் என அவன் முடிவு செய்தான். விருஷசேனன் “அவர்கள் அறிவதில்லை” என்று சொல்லி திரும்பி நோக்கி “வருகிறார்களா?” என்றான். “ஆம்” என்றான் விருஷகேது. அவனால் உரையாடலை உணர முடியவில்லை.

“அவர்கள் வந்தபின் பேசுவோம்” என்றார் சிவதர். ஆனால் அவர்கள் பேசிக்கொண்டது மூத்தவர்களைப் பற்றி அல்ல என்று விருஷகேதுவுக்குத் தோன்றியது. அவர்களைப் பற்றி அத்தனை சிரிப்புடன் பேச என்ன இருக்கிறது? அவர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். திவிபதனும் சத்ருஞ்ஜயனும் சுசர்மனும் சேர்ந்து வந்தார்கள். தொடர்ந்து இன்னொரு சிறிய குழுவாக சத்யசேனனும் சித்ரசேனனும் சுசேஷனனும் வந்தனர். வாழ்த்துச் சொல் ஏதுமின்றி அவர்கள் விருஷசேனனை வணங்கி விருஷகேதுவை நோக்கிப் புன்னகை புரிந்தனர். சிவதர் எழுந்து அறைக்குள் போய் மீண்டுவந்து “அழைக்கிறார்” என்றார். அவர்கள் தங்கள் ஆடைகளைச் சீரமைத்து நீள்மூச்செறிந்தனர்.

விருஷசேனன் உள்ளே செல்ல பின்னர் பிறர் தொடர்ந்தனர். அறைக்குள் கர்ணன் மஞ்சத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன் நான்கு இருக்கைகளே இருந்தன. விருஷசேனன் மட்டும் தந்தையை வணங்கிவிட்டு ஒன்றில் அமர்ந்தான். மற்றவர்கள் வணங்கிவிட்டு கைகட்டி நின்றனர். விருஷகேது தந்தையை வணங்கிவிட்டு அவர்களுக்குப் பின்னால் நின்றான். அது எப்போதும் அவன் வழக்கம். அவன் கர்ணனின் விழிமுன் நிற்பது அரிது. அது பொறுப்புகளை ஏற்பதற்கான தயக்கத்தால்தான் என்று பிறர் கூறுவதுண்டு. அவன் அவ்வாறு சென்று நிற்கையில் நோக்கப்படுபவனாக உணர்ந்தான், நோக்குபவனாகவே நின்றிருக்க விழைந்தான்.

கர்ணன் “நான் இன்று மாலை கிளம்புகிறேன். வடபுலத்தில் உள்ள சிபிரம் என்னும் கோட்டைக்குச் சென்று அங்கே வேட்டையாடுவதாகக் காட்டித் தங்கியிருக்க திட்டமிட்டிருக்கிறேன். எனக்குப் போருக்கான அழைப்பு வரும். அப்போது நான் அகன்று இருக்கலாகாது. மேலும் இத்தருணத்தில் தொலைவிலிருப்பது என்னைத் தளர்த்துகிறது. எத்தனை அணுக்கமாக இருக்க இயலுமே அத்தனை அணுக விழைகிறேன்” என்றான். விருஷசேனன் “ஆம், அது நன்று. அதை முன்னரே பேசிவிட்டோம்” என்றான். கர்ணன் “இதில் எவருக்கேனும் மாற்றுச் சொல் உள்ளதா?” என்றான். எவரும் ஒன்றும் சொல்லவில்லை. விருஷகேது அவர்களை மாறிமாறி நோக்கினான். பின்னர் மெல்ல உடலை அசைத்தான்.

அவனை நோக்கி கர்ணன் திரும்பினான். “தந்தையே, சேய்மையை உருவாக்கியவர்கள் அவர்கள். நாம் எத்தனை அணுகினாலும் அச்சேய்மை குறைவதில்லை. நீங்கள் ஒருபோதும் அணுவிடைகூட அகன்றவருமல்ல” என்றான் விருஷகேது. கர்ணன் “ஆம், ஆனால் போர்க்களம் நாமறியா விசைகளின் ஆடுதளம். அங்கே என்ன நிகழுமென நம்மால் கணிக்க முடியாது. நான் அழைக்கப்படுவேன். அமைச்சர்களும் அதையே சொல்கிறார்கள். நிமித்திகர்கூற்றும் அதுவே” என்றான். விருஷசேனன் சிறு எரிச்சலுடன் விருஷகேதுவை நோக்கித் திரும்பி “நாம் முடிவெடுத்துவிட்டோம், இளையோனே. நம் படைகள் கிளம்பச் சித்தமாகவும் உள்ளன. இனி இதைப்பற்றிப் பேசவேண்டியதில்லை” என்றான்.

கர்ணன் புன்னகைத்து “அவன் எந்நிலையிலும் பேசவிழைபவன்…” என்றபின் விருஷசேனனை நோக்கி “இன்று நீ உடனிருந்தாய். தந்தை அன்னையிடம் சொன்னதக் கேட்டாய்” என்றான். “ஆம்” என்றான் விருஷசேனன். “அச்செய்தியை முன்னரே அறிந்திருப்பாய்” என்று கர்ணன் சொன்னான். “அது உங்கள் இருவரிலும் எந்த விளைவையும் உருவாக்கவில்லை என்பதைக் கண்டேன்.” விருஷசேனன் புன்னகைத்து “ஆம், முன்னரே அறிவோம். அரண்மனையில் சேடியர் நடுவே பூடகமாகப் பேசப்பட்டு வருவது இச்செய்தி. நாங்களனைவரும் சொல்லறியத் தொடங்குகையில் அறிவோம். புரியாமல் குழம்பி ஒருவாறாகத் தெளிந்து எண்ணி எண்ணி வியந்து பின்னர் அவ்வாறே என அமைவோம்” என்றான். விருஷகேது “இப்போதுதான் அதை நேர்ச்சொல்லாக்கி பிறர் செவிகேட்க முன்வைக்கலாமென்னும் எண்ணம் வந்தது” என்றான்.

கர்ணன் “அவர்கள் சொன்னது உண்மை என என்னிடமிருந்து ஓர் ஒப்புதல் வந்தது உங்களுக்கு” என்றான். “ஆம்” என்றான் விருஷசேனன். திவிபதன் “போருக்குச் செல்வதற்கு முன் எல்லாவற்றையும் பேசிவிடும் வழக்கம் உண்டு. தாதை நெடுங்காலமாக உளமொதுக்கி வைத்திருந்ததாக அது இருக்கலாம்” என்றான். கர்ணன் “ஆம், அவரும் நிமித்தநூல் நோக்கியிருப்பார், நான் மீள்வேனா என்று” என்றான். விருஷசேனன் “எவ்வாறாயினும் சொல்லப்படவேண்டியவை சொல்லப்பட்டுவிட்டன” என்றான். “ஆம், அதுவும் நன்று என்றே உணர்கிறேன். ஆகவேதான் உங்களிடம் பேசத்துணிந்தேன்.” அவன் சொல்வதற்காக அவர்கள் காத்துநின்றிருந்தனர்.

“ஒரு சூதர்கதை உண்டு. நம் அவையில் முன்பு ஒரு தென்னகச் சூதர் அணிச்சொல் என பாடியது. கதிரவன் எதையும் பெற்றுக்கொள்வதில்லை. மண்ணிலுள்ளவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மைந்தனாகிய என்னை மானுடரிடமிருந்து பெற்றுக்கொள்க என ஆணையிட்டு இங்கே அனுப்பினான். ஆனால் இங்கு எவரும் எனக்கு எதுவும் அளிக்கவியலவில்லை. நான் எதையும் பெற்றுக்கொள்ளாதவனாக விண்மீண்டேன்.” கர்ணன் புன்னகைத்து “சூதர்களுக்கு எவரிடம் எதைப் பாடவேண்டும் என தெரியும். அவர்களின் தோற்றத்தையும் பழக்கத்தையும் கடந்து ஆழ்கனவிலிருந்து அவர்களுக்கு உகந்ததைக் கண்டெடுக்கிறார்கள். அதை அவர்கள் முன் பாடுகிறார்கள். மகிழ்விப்பதன் கலையை பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயின்றவர்கள்” என்றான்.

“அவர்களால் மானுடர் மண்ணில் நிலைநிறுத்தப்படுகிறார்கள்” என்று விருஷகேது சொன்னான். கர்ணன் அவனை நோக்கி “ஆம், இப்போது நானும் நீ எண்ணியதையேதான் எண்ணினேன். மானுடர் விழைவதை அவர்கள் எனச்சொல்லி நிலைநிறுத்துகிறார்கள், எனில் இவர்கள் இங்கே நிலைநிறுத்துவது எதை? மானுடர் காணும் கனவுகளைத்தானா?” என்றபின் கைவீசி அவ்வெண்ணத்தைத் தவிர்த்து “விந்தைதான்” என்றான். “தந்தையே, கனவுகளையே மெய்யான மானுடர் என்று சொல்லவேண்டும். மானுடரின் தோற்றமும் நடத்தையும் சொற்களும் அவர்களின் கனவு என்னும் கடலின் அலையும் துளியும் துமியும் என்றே சொல்லவேண்டும்” என்றான் விருஷகேது.

கர்ணன் நிமிர்ந்து நோக்க “எது உண்மையான மானுடனோ அதை அவர்கள் நிலைநிறுத்துகிறார்கள். தந்தையே, பெரும்பாலான கனவுகள் வெறும் விழைவுகளோ அச்சங்களோதான். விழைவும் அச்சமும் அற்ற கனவே அம்மானுடன். இன்று பாரதவர்ஷத்தில் மும்முடி சூடிய பேரரசர்கள் பிறர் இருக்கலாம். தங்கள் கனவுகளில் அவர்கள் அதை மெய்யாகவே எய்தவில்லை. தாங்கள் எய்தியிருக்கிறீர்கள். ஆகவே சூதர் உங்களையே மும்முடிசூடிய பேரரசர் என்று சொல்வார்கள்” என்றான் விருஷகேது. கர்ணன் உரக்க நகைத்து “இசைச்சூதனின் நா கொண்டிருக்கிறான், நன்று” என்றான்.

பின்னர் விருஷசேனனிடம் “நான் அச்சூதரின் கதையையே என் உள்ளமெனக் கொண்டிருந்தேன் என்பதைச் சொல்லவந்தேன்” என்றான். “இங்கிருந்து எதையுமே பெற்றுக்கொள்ளலாகாது என நான் கருதினேன். எவர் எனக்கு எதையேனும் அளிக்க முற்பட்டாலும் அதை பெற்றுக்கொள்ளா தொலைவுக்கு அகன்றேன். எந்தையும் அன்னையும் அளித்த அன்பு என்னை வந்தடையாத இடத்தில் இருந்தேன். அஸ்தினபுரியின் அரசர் எனக்கு இந்நாட்டையும் குடியடையாளத்தையும் அளித்தபோது நூறுமடங்கென திருப்பிக்கொடுத்து அவரும் அணுகமுடியாதவனானேன். அதை ஆணவம் என்று சொல்லலாம். ஆனால் ஒருவகைத் தன்னுணர்வு என்றே சொல்வேன்” என்றான்.

“வஞ்சத்தால், கசப்பால் அவ்வண்ணம் இருக்கிறேனா? அன்னை என்னை அகற்றியமையால் இனி எவரும் எனக்கு எதையும் அளிக்கவேண்டியதில்லை என முடிவெடுத்தேனா? நானே உழன்று உழன்று அதை வினவிக்கொண்ட காலம் உண்டு. அவ்வாறல்ல என இன்று நன்கறிவேன். மெய்யாகவே எனக்கு எவர்மேலும் சற்றும் வஞ்சம் இல்லை. என் அன்னையைக்கூட அவர் நின்ற இடத்திற்குச் சென்றே புரிந்துகொள்கிறேன். ஆகவேதான் அவருடைய தன்மதிப்பு எந்நிலையிலும் குலையலாகாது என எண்ணினேன். அன்னை பிழையுணர்வும் தனிமையும் கொண்டு உளம்குமைகிறார் என நான் அறிவேன். அவர் சற்று இடம்கொடுத்தால் சென்று அவரை அணைத்து ஆறுதல்சொல்லி அத்துயரிலிருந்து ஆற்றவேண்டும் என்றே உள்ளம் எழுகிறது.”

“நான் எப்போதுமே துயரம்கொண்டவன், தனித்தவன். என்னுள் ஓர் ஆற்றாமை கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலத்தை முழுதும் தழுவி எழுகிறது என் உள்ளம். உடனே தன்னுணர்வுகொண்டு சுருங்கி உள்ளொடுங்கிக் கொள்கிறது. இவ்விரு அலைக்கழிப்புகளிலிருந்து எனக்கு விடுதலை இல்லை” என்று கர்ணன் சொன்னான். ”எரிந்துகொண்டே இருந்தாகவேண்டியவன் நான் என்கின்றனர் என் நாள் நோக்கிய நிமித்திகர்கள். அதை அவர்கள் சொல்லச்சொல்ல நான் அதுவே மெய் என ஏற்றுக்கொண்டேன். அந்நிலையில் இயல்பாக இருக்கவும் பழகிக்கொண்டேன்.” அவன் தன்னுள் சென்று சுட்டுவிரலைச் சுழித்து காற்றில் எதையோ எழுதி அழித்துக்கொண்டிருந்தான். பின்னர் மீண்டு நீள்மூச்சுடன் “ஆம்” என்றான்.

“தங்களை நாங்கள் நன்கு அறிவோம், தந்தையே” என்றான் விருஷகேது. விருஷசேனன் அவனை திரும்பிநோக்கி விழிகளை உறுத்தான். ஆனால் அத்தருணத்தில் எதையேனும் அப்படிப் பேசினால்தான் கர்ணன் மீள்வான் என விருஷகேது அறிந்திருந்தான். “ஆம், என்னை நீங்கள் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்ன கர்ணன் புன்னகைத்து “அந்நம்பிக்கையில்தான் பேச விழைகிறேன்” என்றான். பின்னர் விருஷகேதுவிடம் “நீ நூல்நவில்பவன். நீ சொல். நான் வள்ளல் என்கிறார்கள். தன்னுள் தான் சுழன்று ஓயாது எரிந்துகொண்டிருப்பவன் எப்படி கொடைத்திறன் கொள்கிறான்?” என்றான்.

“ஒப்புமை என்பது அறிதல்களுக்காக மிகச்சிறந்த வழி. அளவைமுறை சென்றடையாத ஆழத்திற்கும் நுண்மைக்கும் ஒப்புமை சென்று சேர்ந்துவிடும். ஆகவேதான் அறிநெறிகளில் நேர்காட்சி, உய்த்தல், முன்னறிவுக்கு பின் அதை வைக்கின்றனர் கணாதகௌதம நெறியினர்” என்றான். விருஷகேது “தந்தையே, தங்களைப்போல நேரடியாக காவியமோ அளவையியலோ கற்காதவர்கள் ஒப்புமைகளை எளிய அணிவிளையாட்டென்று எண்ணுகிறீர்கள். காவியமும் அளவைநூலும் கற்காமலேயே ஒப்புமையின் ஆற்றலை இசைச்சூதர்கள் அறிவார்கள். வில்வேதம் கற்காது கைத்திறனாலேயே அம்புகளை மலைவேடர் அறிந்திருப்பதுபோல” என்றான்.

“உங்களைச் சூரியனுடன் ஒப்பிடுவதே உங்களை அறிவதற்கான மிகச்சிறந்த வழி. வேறெந்த பாதையும் உங்களுள் வாழும் மெய்யுருவை வந்தடையாது” என விருஷகேது தொடர்ந்தான். “நிமித்திகர்களின் அறிதல்முறையும் ஒப்புமைகளால் ஆனதே. சூதர்கள்போல் முடிவிலாத ஒப்புமைகளை அவர்கள் கையாள்வதில்லை. ராசிக்குறிகள் போன்று நன்கு வகுக்கப்பட்டு அனைவருக்கும் பொதுவான ஒப்புமைகளை மட்டும் கையாள்கிறார்கள். ஒருவனை ஒரு ராசியில் நிறுத்தி அவ்வடையாளங்களினூடாக அவனை அறிவதைப்போல் எளிய வழி ஒன்றில்லை. அவனை வகுத்துக்கொண்டு, பிறழ்வுகளையும் பிசிறுகளையும் குறித்துக்கொண்டு கூர்கொண்டு முன்செல்வதே அவனைச் சென்றடைய எளிய வழி. அவர்கள் அதை சித்தத்தாலும் கற்பனையாலும் கனவாலும் நிகழ்த்திப் பயின்று தலைமுறைகள்தோறும் கைமாறி விரித்து கால மடிப்புகளையே பிரித்து நோக்கும் ஆற்றல்கொண்டவர்களாக ஆகியிருக்கிறார்கள்.”

“கதிரவனின் அனைத்தியல்புகளும் உங்களுக்கு அமைந்துள்ளன. நீங்கள் கதிரவனின் மானுடவடிவமென்பதைப்போல் பொருந்தும் வரையறை வேறேதுமில்லை” என்றான் விருஷகேது. “எரிந்துகொண்டே இருக்கிறீர்கள். அவ்வெரிதலே பிற அனைவருக்கும் ஒளியென்றாகிறது. கோடிக் கைகளால் இப்புவியையும் வானையும் தழுவிக்கொண்டிருக்கிறீர்கள். அள்ளிக் கொடுக்கிறீர்கள். அமுது விளைவிக்கிறீர்கள். சுடர செய்கிறீர்கள். ஆகவேதான் உங்களை விழியறியும் தெய்வமென இங்குளோர் வணங்குகிறார்கள். அது என்றும் அவ்வண்ணமே இருக்கும்.”

அவன் சொற்கள் அவன் உடன்பிறந்தாரை உணர்வெழுச்சி கொள்ளச்செய்தன. கர்ணனின் விழிகளும் கூர்கொண்டு மின்னணிந்திருந்தன. “ஏன் கதிரவன் வள்ளல் ஆகிறான்? கதிரோனின் தன்னியல்பு ஒன்றினால்தான். தான் நோக்கும், தன்னை நோக்கும் எதையும் தானே என்றாக்குகிறான். ஆடிகள் சுடரோன் ஆகின்றன. கற்கள், உலோகங்கள், தளிர்கள், மலர்கள் அனைத்தும் அவனே என மாறிவிடுகின்றன. கடல்கள், ஓடைகள், பனித்துளிகள் அவன் வடிவு கொள்கின்றன. இங்கே விளையும் நெற்கதிரும் இன்கனியும் அவன் ஒளியே அல்லவா? பொன்னும் மணியும் அவனல்லவா? மானுடர் முகத்தில் விழிகளெனத் திகழ்பவை அவனாகத் தானே மாறிய இரு ஊன்குமிழிகள் அல்லவா?”

“நீங்கள் எவரை நோக்கினாலும் ஒருகணத்தில் இடம்மாறி அவரே என ஆவதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வலியையும் துயரையும் முழுமையாகவே வாங்கிக்கொள்கிறீர்கள். அவர்களின் தனிமையையும் சீற்றத்தையும் நீங்கள் அடைகிறீர்கள். மறுபக்கம் அவர்கள் நீங்களென்றாகிறார்கள். நிமிர்வும் நம்பிக்கையும் கொண்டவர்களாக. உலகை விழிநோக்கும் ஆற்றல்கொண்டவர்களாக. தந்தையே பெருவள்ளல்கள் பிறருக்கு வழங்குபவர்கள் அல்ல. பிறர் என எண்ணுபவர் அளிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் பிறரை மதிப்பிடுகிறார்கள். அம்மதிப்புக்கு நிகராக அளிக்கவேண்டும் என கணக்கிடுகிறார்கள். பிறனில் தன்னைக் காண்பவர், பிறர் நோய் தன்னோய்போல் நோக்குபவர் மட்டுமே அள்ளிக்கொடுத்து வள்ளலென எழுகிறார்கள். அவர்கள் அனைத்தையும் தனக்கே அளித்துக்கொள்பவர்கள்.”

“கொடுப்பதனூடாக வள்ளல்கள் நூறுநூறு வடிவுகளில் எழுந்து பெற்றுக்கொள்கிறார்கள். தெய்வங்கள் கோடிநாவுகளால் தங்களையே பாடிக்கொள்வதுபோல” என்றான் விருஷகேது. அவன் குரல் உணர்வெழுச்சியால் தாழ்ந்தது. “வெங்கதிரோன் அள்ளி வழங்குவனவற்றை அவனுக்கே படைக்கிறோம். தன் ஒளிவிரல்களால் தொட்டு வாழ்த்திக் கடந்துசெல்கிறான். நீங்கள் பிறிதொருவர் அல்ல. உங்கள் உடலை நீங்கள் என நீங்கள் எண்ணலாம். உங்கள் உள்ளமே நீங்களெனக் கருதலாம். இங்கே உங்களைச் சூழ்ந்துள்ள எங்களுக்கு உங்கள் கனவே நீங்கள். நாங்கள் அதை எங்கள் கொடிவழியின் நினைவுகளில் அவ்வண்ணமே அணையா விளக்கென நிலைநிறுத்துவோம்.”

அறைக்குள் ஆழ்ந்த அமைதி நிலவியது. கர்ணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். விருஷசேனன் பெருமூச்சுவிட அவ்வொலியில் அனைவரும் கலைந்தார்கள். கர்ணன் எழுந்து கைகளை நீட்டி உடலை நெளித்தான். அறைக்குள் சில எட்டுகள் நடந்தபின் நின்று “நன்று, நான் கேட்கவிருப்பதை இனி விரித்துரைக்க இயலாது என்னால். மைந்தரே, நான் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாகாதென்று எண்ணியவன். கருதாது வழங்கியவன். ஆனால் உங்களுக்கு மட்டும் எதையும் வழங்கியதில்லை. இவ்வரசை நான் விரிவாக்கவில்லை. என் கொடிவழியினருக்கு பேரரசு ஒன்றை விட்டுச்செல்லவில்லை” என்றான். அவன் குரல் தழைந்தது. “நான் துறந்த அஸ்தினபுரியின் மணிமுடி உங்களுக்கும் உரியது” என்றான்.

விருஷசேனனின் தோளை தொட்டு “என்னை எண்ணாது உங்களை நான் எண்ணியிருந்தேன் என்றால் நீ அஸ்தினபுரிக்கு அரசனாகியிருப்பாய். இப்புவியே புகழ்பாடும் பேரரசனாகவும் அமர்ந்திருப்பாய்” என்றான். அப்போது கொள்ளவேண்டிய உணர்வென்ன என்று அறியாதவன்போல் அவன் முகம் குழம்பி விந்தையானதொரு கசப்புப்புன்னகையை அணிந்துகொண்டது. விருஷசேனன் நிமிர்ந்து தந்தையை நோக்கி “அவ்வண்ணம் ஒன்றை நான் விரும்பினேன் என்றால், ஒரு துளியேனும் அக்கனவு என்னுள் இருந்தால் என் பொருட்டு இப்போது உங்கள் உள்ளத்தில் தோன்றும் கனிவை நீங்கள் அடைவீர்களா, தந்தையே?” என்றான்.

கர்ணன் திகைத்து “அறியேன். ஆனால் இப்போது உன்னை தொட்டபோது நீயே நான் என உணர்ந்தேன்” என்றான். புன்னகைத்து “இதற்கு அப்பால் இப்புவியில் மைந்தனாக நான் எதையேனும் விழைவேன் என்று எண்ணுகிறீர்களா?” என்றான் விருஷசேனன். கர்ணன் நீர்பரவி ஒளிகொண்ட விழிகளுடன் நோக்கி நின்றான். “இதோ இவர் நான் என எண்ணி மைந்தன் தந்தையை நோக்கி அடையும் பெருமிதம் ஒன்று உண்டு. பெருந்தந்தையரை அடைந்த மைந்தருக்கு மட்டுமே தெய்வங்கள் அளிக்கும் நற்கொடை அது. கோடியினரில் ஒருவருக்கு மட்டுமே அமைவது. அதை அடைந்தவர்கள் நாங்கள். அதற்கிணையாக வேறெதை நீங்கள் எங்களுக்கு அளிக்கவியலும்?”

உணர்வற்றதென ஒலித்த குரலில், விழிகளில் ஒளி கூர்கொண்டிருக்க விருஷசேனன் சொன்னான் “உங்கள் உருவை அல்லவா நோக்கி நோக்கி மகிழ்ந்தோம்? உங்கள் அணிகலன் ஒன்றைக் கண்டாலே விழிநிறைந்து நெஞ்சு அதிர்பவர்களாக இருக்கிறோம். அழகோ பெருமையோ வெற்றியோ உங்களால்தான் பொருள்பெறும் சொற்கள் எங்களுக்கு” என்ற விருஷசேனன் திரும்பி “இங்கிருக்கும் என் இளையோர் சொல்க, ஒருநாளேனும் தந்தையின் நினைப்பன்றி ஏதேனும் உங்கள் முதல் விழிப்பில் உள்ளத்தில் எழுந்துள்ளதா? தந்தையை அன்றி பிற எதையேனும் எண்ணி துயில்கொண்டிருக்கிறீர்களா?”

அவர்கள் விழிகளில் நீருடன் உடல்விம்ம அசையாது நின்றனர். “நீங்கள் இப்புவியிலிருந்து எதையும் கொள்ளவில்லை, தந்தையே. ஆனால் எங்களிடமிருந்து நீங்கள் அவ்வண்ணம் ஒழிய முடியாது. நாங்கள் அளிப்பதை நீங்கள் மறுக்கவே இயலாது” என்றான் விருஷசேனன். “உங்களுடன் சேர்ந்து போருக்கெழுவோம். உங்களுக்காக உயிர்கொடுப்போம். நாம் வென்று மீண்டு நாடாண்டால் உங்களுக்கு அன்னமும் நீரும் அளிப்போம். உங்களுக்கு கொடுக்கும் நிலையில் இருப்பவர் நாங்கள் மட்டுமே. எந்த தந்தையும் மைந்தரிடமிருந்து கொள்ளமாட்டேன் என்று சொல்ல இயலாது. அது தெய்வ ஆணை!” என்ற விருஷசேனன் புன்னகைத்து “கொள்க, தந்தையே” என்றான்.

கர்ணன் விழிகளில் நீர் வழிய சிரித்தபடி இரு கைகளையும் விரித்தான். விருஷசேனன் எழுந்து அவனை தழுவிக்கொண்டான். மைந்தர்கள் அனைவரும் சேர்ந்து தந்தையைத் தழுவிக்கொண்டார்கள். சொற்களில்லாதவர்களாக பொருளில்லாது நகைத்தவர்களாக ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும் ஒருவரோடொருவர் முந்தியும் ஒருவரை ஒருவர் தழுவியும் ஓருடலென அங்கே நின்றிருந்தனர்.

முதற்களத்தில் அமர்ந்த சூதரான அஜர் பாடினார். “கூறுக, தோழரே. மண்ணுலகு முழுக்கப் பரப்பிய அனைத்துக் கைகளையும் இழுத்துக்கொண்டு மேற்கே அணையும் கதிரவன் துயர்கொண்டிருக்கிறானா மகிழ்கிறானா? துயர்போலும் உவகையும் உவகையெனும் துயருமல்லவா மானுடன் அடையும் உச்சமென வகுக்கப்பட்டுள்ளது? தெய்வங்களை வாழ்த்துக. அவை மானுடரை நடிக்கின்றன, அதனூடாக மானுடனை அழிவற்றவனாக்குகின்றன. கதிரவனை வாழ்த்துக, அவன் கர்ணன் என இப்புவிக்கு இறங்கி வந்தான். ஆம்! ஆம்! ஆம்!”

தொடர்புடைய பதிவுகள்

பாரதியும் வரலாற்றுக்குரலும்

$
0
0

இலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ

 

பாரதியார் ‘உங்க டிலக் இப்ப எங்கே இருக்கான்?’ என்று கேட்டவரை சினந்துகொண்டதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். முகநூலில் ஒருவர் வ.ராவின் நூலில் இருந்து மூலப்பகுதியை எடுத்துப்போட்டிருக்கிறார்

 

புதுச்சேரி கடற்கரையில்,ஆனந்தமாக காற்று வாங்கி கொண்டிருந்தோம்…..பாரதியார் அருமையாக பயாடிக் கொண்டிருந்தார்.அந்தச் சமயம் வ.வே.சு. அய்யரின் நண்பரான திருச்சி வக்கீல்,ஒருவர் (ரொம்ப பிரபலஸ்தர்) எங்களுடன் இருந்தார்.

     

பாட்டு முடிந்ததும் அந்த வக்கீல்,பேச ஆரம்பித்தார்,’என் சார்! ஒங்க டிலக் இப்ப எங்கே இருக்கான்? என்று வ.வே.சு. ஐயரைக் கேட்டார்.டிலக் என்று சொன்னது,லோகமான்ய திலகரை.அய்யரின் முகம் சிவந்து போயிற்று.அவர் தமது,ஆத்திரத்தை அடக்கி கொண்டார்.ஆனால்,பாரதியார் ஒரே வெடியாக வெடித்துவிட்டார்.கடகடவென்று அவர் கோட்டத்து தொடங்கினார்.

 

‘ஏண்டா நீ தமிழன் இல்லையா நீ வெள்ளைக்காரனா? என்னடா டிலக் வேண்டியிருக்கு/திலகர் என்று சொல்ல நாக்கு கூசுகிறதா?.அவன் இவன் என்று மரியாதையில்லாமல் பெருக்கிறாரு.முழு மூடா! என்று நிரம்பக்  கேவலமாக பேசிவிட்டார்.

 

வக்கீலின்  முகம் அப்படியே வெளுத்துப் போய் விட்டது.வக்கீல் வேண்டுமென்றே மரியாதைக் குறைவாக பேசவில்லை என்று பின்னால் தெரிந்தது.தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்குள்  ஒரு கெட்டபழக்கம், பிரசன்னமாக இல்லாத ஒருவரை,அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவது.இந்தப் பழக்கத்துக்கு பலியானவர் வக்கீல்.அவ்வளவுதான்.

 

வக்கீல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.அப்போது பாரதியாரைப் பார்க்க வேண்டுமே..முகத்தில் ஈ ஆடவில்லை. நிரம்பவும் சிரமப்பட்டுப் போனார்.’நீங்கள் செய்தது அறியாப்  பிழை என்று தெரிந்து கொண்டதால், எனக்கு ஒரு புறம்,வருத்தம்: ஒரு புறம் சந்தோசம்.நீங்கள் வேண்டுமென்றே உதாசீனமாக சொல்லிவிட்டீர்களோ   என்று எண்ணி நான் சற்று கடுமையாக பேசிவிட்டேன்.தயை செய்து மன்னித்து விடுங்கள் என்று மிகவும் அங்கலாய்த்துக்கொண்டு சொன்னார்

 

*

நீங்கள் நினைவுப்பிழையாக உண்மையை திரிக்கிறீர்கள், வரலாற்றைத் திரித்துவிடுகிறீர்கள், இளம்வாசகர்களை தவறாக வழிநடத்துகிறீர்கள் என எழுதியிருந்தார். உங்கள் கவனத்திற்கு இதைக் கொண்டுவருகிறேன்

 

க.

 

அன்புள்ள க்,

 

நமது வரலாற்று வாசிப்பு பல படிகள் கொண்டது. ஒரு வரலாற்றுநிகழ்வை, ஒரு அரசியல்தீர்மானத்தை நேராக அவ்வண்ணமே நாம் மேற்கோளிடவேண்டும். ஏனென்றால் அது ஒரு தகவல். ஆனால் இது ஒரு சிறிய அன்றாட நிகழ்வு. இது நினைவில் நிற்பதும் பேசப்படுவதும் ஒரே காரணத்திற்காகவே. இது ஒரு குறியீட்டுநிகழ்வு. இக்குரலை ஒரு பிரதிநிதித்துவக்குரலாக எடுத்துக்கொள்வது என்பது ஆய்வாளனின் நோக்கு சார்ந்தது.

 

வரலாற்றில் இருந்து இச்சிறு நிகழ்வினூடாக நாம் ஒரு குரலை கண்டெடுக்கிறோம். அது அன்று ஒலித்ததா இல்லையா என்பது மட்டுமே முக்கியமானது. அக்குரலே ஒலிக்கவில்லை, அல்லது அக்குரல் நேர் மாறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது, அல்லது ஒரு பெரிய பின்னணியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு வேறுபொருள் அளிக்கப்பட்டது என்றால் அது பிழை அல்லது திரிப்பு. அந்தப் பொருள்கோடலுக்கு பின்புலமாக மெய்யான ஒரு சூழலை சுட்டிக்காட்டமுடியாது என்றால் அது ஏற்றுக்கொள்ளமுடியாத ஆய்வு.

 

‘உங்க’ ‘டிலக்’  இப்ப எங்க ’இருக்கான்?’ என்று கேட்கும் குரல் குறைந்த அளவுக்கான தேசபக்தி கொண்டதோ, திலகர் மேல் அடிப்படையான மரியாதை கொண்டதோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவேதும் தேவை இல்லை. அந்த ஆசாமியின் பேச்சுமுறையே அதுதான் என்றால் தன் தந்தையை அவன் இவன் என்றா சொல்வான்?

 

இந்திய அரசியலின் கொந்தளிப்பான காலகட்டம் அது. அச்சூழலில்கூட இயல்பாக அப்படி ஒரு குரல் எழுவது ஒர் அடையாளம், ஒரு குறியீடு. அது ஓர் அரசியல்தரப்பால் வெறுப்புடன் கேட்கப்பட்ட குரலாக இருந்தால் அதன் பொருள் வேறு. ஒரு சாதாரணமனிதர் இயல்பாக அதைக் கேட்கிறார். ஆகவே மேலும் துல்லியமான ஒரு பிரதிநிதிக்குரல்.அது ஒரு பெரும்பான்மையின் தரப்பு. அக்குரலில் ஒலிக்கும் விலக்கம், அலட்சியம் அதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டியது. நான் அதைத்தான் சுட்டுகிறேன்.அந்த பெரும்பான்மையின் மனநிலை என்றுமுள்ளது என்கிறேன்

 

அந்த ஊகத்தை நிகழ்த்த அடிப்படையாக அமைவது பாரதியின் வாழ்க்கை. அவர் தன் வாழ்நாளெல்லாம் அடைந்த புறக்கணிப்பு ஏளனம் ஆகியவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. பாரதியே அன்றைய பெரும்பான்மையின் இந்த மனநிலையை சுட்டி சீற்றத்துடன் ஆற்றாமையுடன் பதிவுசெய்திருக்கிறார். அந்த பின்புலத்துடன் சென்று இக்குரல் பொருந்துவதனாலேயே இவ்வாறு பொருள்கொள்ள முடிகிறது.

 

அந்தக் கேள்வியைக் கேட்டவர் பாரதியின் மிகையான சினத்திற்குப்பின் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்றும், பாரதி அவரை மன்னித்துவிட்டார் என்றும், தன் மிகைச்சினத்தை உணர்ந்து பாரதி பின்னர் நாணினார் என்றும் சொல்வதனால் அக்குரல் எழுந்தது மறுக்கப்படுகிறதா என்ன? அந்த நபர் பொதுவாக அப்படிப்பட்டவர் அல்ல என்பது வ.ராவால் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது என்பதைக்கொண்டு அக்குரல் எழவில்லை, அல்லது அதன் அர்த்தம் அவ்வாறல்ல என்றாகிவிடுகிறதா என்ன? வ.ரா அச்சூழலில் அக்குரலை அப்படி எடுத்துக்கொள்கிறார். அன்று அது அவருக்கு பாரதியின் பெருமையைச் சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வு மட்டுமே. அவருடைய பார்வை அது. இன்று நூறாண்டுக்குப்பின் இன்று அது வரலாற்றில் இருந்து பல்வேறு அர்த்தங்களை இழுத்துச்சேர்த்துக்கொண்ட ஒரு குறியீட்டுக்குரல் என எனக்குப் படுகிறது.

 

அந்த வரலாற்றுத்தரப்பின் குரலை அன்றைய மனநிலையைப் புரிந்துகொள்வதற்கான முகாந்தரமாகக் கருதி ஆராய்கிறோம். வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் புறவயமாகத் தொகுப்பது ஒர் அணுகுமுறை. அது வரலாற்றாய்வாளனின் பார்வை.குறியீடுகள், பிரதிநிதித்துவ நிகழ்வுகளில் இருந்து உள்ளுறை அர்த்தங்களை நோக்கிச் செல்வது அகவய அணுகுமுறை. இன்றைய பின்நவீனத்துவ ஆய்வுகளில் இரண்டாவது அணுகுமுறையே மேலோங்கி ஒலிக்கிறது. இதையே நுண்வரலாறுகளின் முக்கியத்துவம் என்கிறார்கள்.

 

குறிப்பாக வாழ்க்கை வரலாறுகள், நிகழ்வுப்பதிவுகளில் இருந்து  வரலாற்றுப் புரிதல்களை அடைவதற்கான வழி இதுவே.  மொத்த அர்த்தத்தையும் தன்னியல்பாக தன்மேல் ஏற்றிக்கொண்ட சில நிகழ்வுகள், சில குரல்கள் எப்போதும் காணக்கிடைக்கின்றன.வரலாற்றை அகவயமாக நோக்கும் நுண்வரலாற்று ஆய்வின் பாணி. அவ்வாறு நோக்குவதற்கான நூற்றுக்கணக்கான உதாரணங்களை கொஞ்சம் வாசிப்பவரே  இன்றைய எழுத்துக்களிலிருந்து கண்டறிய முடியும்.

 

ஓர் உதாரணம் சொல்கிறேன், காந்தி ’ஹரிஜன்’ மக்களுக்காக ஓர் உண்ணாவிரதம் இருக்கிறார். அந்த உண்ணாவிரதத்தை ஒரு தலித் சிறுவன் பழச்சாறு கொடுத்து முடித்துவைக்கும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் உரிய தருணத்தில் அச்சிறுவன் அங்கே வராமல் எங்கோ சென்று ஒளிந்துகொள்கிறான். இது ஒரு சிறுநிகழ்வு. ஆனால் இந்நிகழ்விலிருந்து அன்றைய தலித் மக்களின் உளநிலை, மேலிருந்து கருணையை எதிர்கொள்கையில் மானுடனின் தன்மானம் கொள்ளும் திரிபு என பல தளங்களில் டி.ஆர்.நாகராஜ் விரித்துச்செல்வதை அவருடைய தீப்பற்றிய பாதங்கள் நூலில் காணலாம். இன்றுவரை காந்தியுடன் தலித்துகளுக்கான உறவைப் பற்றி இச்சிறுநிகழ்வைக்கொண்டே நாகராஜ் ஆராய்கிறார். அவரை நான் எடுத்த பேட்டியிலும் இதைச் சொல்கிறார். இத்தகைய அணுகுமுறைகளை உணர சமகாலச் சிந்தனைமுறைகளில் குறைந்தபட்ச வாசிப்பு, அதற்கான புரிதல் தேவை. மொண்ணையான முகநூல் தர்க்கங்கள் அல்ல

 

வரலாற்றை அகவயமாக வாசிக்கவேண்டியது இப்படித்தானே ஒழிய  ‘வ.ராவே அந்தாள் பாவம்னு சொல்லிட்டார் தெரியுமா?’ என நூலை மேற்கோளாக்கி வாதிடுவதன் வழியாக அல்ல. அல்லது  ‘அந்த தகவலிலே ஒரு சின்ன பிழை இருக்கு, எப்டி இருக்கார்னு கேக்கலே, எங்க இருக்கார்னுதான் கேக்கறார்’ என்றெல்லாம்  வெட்டிவாதம் பேசுவதென்பது அந்தக்குரலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் இன்றைய சாதிப்புத்திதான். தன் சாதிக்கெதிரான கூற்று அது என்னும் பதற்றமே இத்தகைய வாதங்களை உருவாக்குகிறது. அந்தக் குறுகிய தளத்திலிருந்து எழும் பொருளில்லாத வாதங்களுடன் இணைநின்று பேச நான் ஒருபோதும் முயல்வதில்லை. குறைந்த அளவுக்கேனும் புரிந்துகொள்ள முயலாத குரல்களுடன் விவாதிப்பதைப்போல வெட்டிவேலை பிறிதில்லை

 

 

ஜெ.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்

$
0
0

அறிபுனை- விமர்சனப்போட்டி

அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  உமா ரமணன்

 

அரூவின் இனைய இதழில் வெளியான பத்து கதைகளையும் வாசித்தேன்.  இந்த கதைகளை தொடர்ந்து வாசித்த பொழுது அரூப வெளியில் கொஞ்சம் கொந்தளிப்போடும் அதே சமயம் அக விடுதலையுடனும் உலாவுவதை போலிருந்தது. அது ஏற்படுத்திய உணர்வுகள் என் இருப்பின் மீது ஆழமான கேள்விகளை எழுப்பியது. அதற்கான விடைகளை மிக எளிமையாக ஏற்றுக்கொள்ள வைத்தது மரணத்தை ஏற்றுக்கொள்வதை போல. இந்த கதைகளை படித்த பின்னே என்னையும் வெறும் கருவி அல்லது இயந்திரமெனவே உணர்ந்தேன்.

 

ஒருவனுடைய நான் என்பது அவனது மனம் மட்டுமே. மனம் என்பது அவன் இதுவரை பெற்ற அனுபவங்களின் மூட்டை. அந்த மூட்டையிளிருந்தே அவன் வாழ்வதற்கான விழுமியங்களை வழிகளை வகுத்துக்கொள்கிறான். மனதில் உள்ள தகவல்களை வைத்து கொஞ்சம் சிந்திக்கவும் செய்கிறான். அவனின் சிந்தனைகளுக்கு எல்லைகள் எதுவும் இல்லை ஆனால் ஒரு எல்லைக்கு மேல் அவனால் செல்ல முடிவதில்லை. அதற்கு தடையாக நிற்பதும் அந்த அனுபவங்களின் மூட்டைதான். இந்த தத்தளிப்பிலிருந்து தப்பிக்க அவன் கண்டடையும் சாத்தியங்களும் வழிமுறைகளும் இதுவரை எண்ணற்ற கருவிகளையும் இப்பிரபஞ்சத்தை போர்த்தியிருந்த இரகசியங்களையும் கண்டடைந்திருக்கிறது. இயற்கை தன்னையறிய கண்டுபிடித்த கருவி மனிதனென்றால் மனிதன் தன்னையறிய கண்டுபிடித்த கருவிகள்தான் இன்று வரை நீண்டிருக்கும் அறிவியல் போலும்.

 

இன்று நாம் ஞான மார்கத்தில் போராடி பெரும் ஞானத்தை, எதிர்காலத்தில் சில கருவிகளே கொடுத்துவிடும் வாய்ப்புகள் வியப்பாகவும் அதே நேரம் ஏமாற்றாமாகவும் இருக்கிறது. பெரும்பாலான கதைகள் இதில் நிறுவுவது மனிதனின் உள்ளுணர்வை இயந்திரங்களுக்கு ஊட்டும் சாத்தியங்களை. அது தானாக சிந்திக்கும் தகமையை சாத்தியப்படுத்துவதை. மனிதன் அமரத்துவத்தை விஞ்ஞானத்தின் மூலம் சீக்கிரமே எட்டிவிடுவான் என்றே இந்த கதைகளை படித்த பின் தோன்றுகிறது. மனித மனதை ஒரு மெமரி  சிப்புக்குள் அடைத்துவிடும் காலம் நெருங்கிக்கொண்டிருப்பது போல தோன்றுகிறது. சிம் கார்டை சொருகி அலைபேசியில் இயங்குவதை போல நம் தாத்தாக்களின்  அப்பாக்களின் மெமரி சிப்புக்களை வைத்துக்கொள்ளும் காலம் வியப்பாக இருக்கிறது. இன்றைய காலத்திலேயே மனிதனின் இருப்பு பெரும்பாலும் சர்வர்களுக்கும், க்ளொவ்டுகளுக்கும் இடம்பெயர்ந்து விட்டது. வருங்காலத்தில் எல்லோருக்கும் ஒரு க்லோன் அங்கே இருக்குமென நினைக்கிறேன்.

 

அறிவியல் கதைகளை எழுதுவதில் உள்ள சிக்கல்கள் என நான் நினைப்பது

நேரடியான வாழ்வனுபத்திலிருந்து கதைக்கான கருவை பெற முடியாதது. சாதாரணமாக எழுதும் சிறுகதைகள் நம் வாழ்விலிருந்து எழுவதால் அதற்கான மொழியும் காட்சிகளும் தானாகவே உருபெற்றுவிடும். ஆனால் அறிவியல் சிறுகதைகளுக்கு அது ஒரு சவால்.

அறிவியல் கதைகளுக்கான கருவை நாமே தேடி பிடிப்பிப்பதால் அதை விளக்கும் தொனியில் கதைகள் அமைந்துவிடக்கூடும் . அதனால் அது பெரிய தாக்கத்தை வாசகனின் மனதில் ஏற்படுத்த முடியாது.

முழுமையான அறிவியல் அறிவு அறிவியல் அறிஞர்களை தவிற பிறருக்கு சாத்தியமில்லை. நாம் எடுத்துக்கொள்ளும் அறிவியல் கோட்ப்பாட்டை பற்றியோ கருவியை பற்றியோ முழுமையான அறிவு நமக்கு சாத்தியமில்லை. அப்படியே அதை முழுமையாக புரிந்துகொண்டாலும் அது புனைவின் சாத்தியத்தை கட்டுப்படுத்த கூடும்.

 

ஆனால் இந்த கதைகள் அனைத்தும் அந்த சிக்கல்களை கடந்து ஒரு வாழ்வனுபவத்தை நம்முள் நிகழ்த்துவதாகவே நான் உணர்கிறேன். காலத்தின் மாற்றத்தின் முன் மல்லுக்கட்டடாமல் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை தூண்டுவதாக கருதுகிறேன்.

 

அரூ இதழ் ஒவ்வொரு கதைக்கு முன்பும் எத்தனை நிமிட வாசிப்பு என்று குறிப்பிட்டுருப்பது மிகவும் உதவியாக இருந்தது. நம் வாசிப்பை எளிதாக திட்டமிட உதவியது.

 

நிறமாலைமானி

 

பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகளை முன்பு வாசித்திருக்கிறேன். அதனால் அவருடைய கதையை முதலாக வாசித்தேன். சிறுகதையிலும் கவித்துவம் மிகுந்திருந்தது. இயற்பியல் சோதனை ஆய்வகத்தில் பனி புரியும் ஒருவன் தன் வாழ்க்கையின் சோதனை ஒன்றை தான் அறிந்த இயற்பியலின் மூலம் தீர்த்துக்கொள்ள நினைக்கும் ஒரு கதை. நிறமாலைமானியை பற்றி நான் இதற்கு முன்பு பெரிதாக அறிந்துகொண்டதில்லை. இந்த கதையை படித்த பின்னரே அதைபற்றி தேடி கொஞ்சம் தெரிந்துக்கொன்டேன்.

 

நிறமாலைமானியை(Spectrometre) பற்றி படிக்க தொடங்கினால் ஒளியை பற்றியும், ஒளியின் ஊடுருவல் பற்றியும், நிறங்களை பற்றியும் படிக்க வேண்டியிருக்கிறது. அது படிக்க படிக்க தெடர்ந்துகொண்டே போகிறது. ஒன்றை அறிய பலவற்றை அறிய வேண்டிய அறிவியலின் கட்டாயம் என்னை போன்ற சோம்பேறிகளுக்கு பெரிய சவால். ஒரு பொருளின் உட்கூறுகளை கண்டறிய நிறமாலைமானி பயன்படுகிறது என்பது தெரிகிறது. ஒரு பொருளின் மீது ஒளியை பாய்ச்சி, அந்த பொருளில் ஒளி ஊடுருவி, வெளியே சிதறும் ஒளி சிதறல்களிலிருந்து அந்த பொருளின் தன்மையை அதன் உட்கூறுகளை அதன் வடிவமைப்பை கண்டறிய நிறமாலைமானி உதவுகிறது. இன்றைய MRI ஸ்கேன் தொழில்நுட்பமும் அதன் நீட்சியே என்று நினைக்கிறன்.

 

நிறமாலைமானியின் இந்த ஒளி ஊடுருவல் அது ஊடுருவும் பொருளில் எந்த பாதிப்பையும் விளைவிப்பதில்லை. இன்னும் சில தகவல்களில் நிறமாலைமானியை கொண்டு molecular restructuring  சாத்தியம் என்பது போலவும் படித்தேன். இவையெல்லாம் தெரியாதற்கு முன்புக்கூட இந்த கதை மனித உணர்வுகளின் ஊடே அதன் தாக்கத்தை மனதில் நிகழ்த்தியது. படிக்கும் போது அதை பின்தொடர்வதும் புரிந்துகொள்வதும் கடினமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒருவனின் கையறு நிலை வழியே அது மனதில் பதிந்தது.

 

பரிதி அந்த ஆய்வகத்தில் என்னவாக பணி புரிகிறான் என்பதை ஆசிரியர் கூறவில்லை. நான் கதையை வாசித்த போது அவன் ஏனோ அந்த ஆய்வகத்தின் காவலனாகவோ அல்லது உதவியாளனாகவோ மனதில் பதிந்தான். பாத்திரத்தின் தமிழ் பெயர் அப்படி நினைக்க தூண்டியிருக்கிறதோ என்று பின்புதான் யோசித்தேன். கடவுளின் முன்பு மன்றாடி ஒரு வரத்தை பெறுவது போல தானறிந்த நிறமாலைமானியின் மூலம் தன் மனைவியின் குறையை தீர்க்க நினைக்கிறான். கடவுளிடம் கூட சில வரங்கள் எளிதில் கிடைத்துவிடும். ஆனால் அறிவியல் கறாரானது. எந்த ஒரு முடிவான வெற்றியும் பலப்பல தோல்விகளிலிருந்தும் கற்றறிதல்களிலிருந்துமே சாத்தியம். இதில் பரிதயின் உணர்ச்ச்சி பெருக்கின் வழியே எழுந்த முயற்சி அறிவியலின் கறார் தன்மையின் முன்னே தோற்கிறது. அணுக்களை மறுகட்டமைப்பு செய்வதை போல கால்களின் ஏற்றத்தாழ்வையும் சரி செய்துவிட நினைக்கும் அவனின் அறிவின் திறனே அறிவியலின் மூலக்கூறு. எல்லா கண்டுபிடிப்புக்களும் ஒரு வாழ்க்கை தேவையின் வழியேவே நிகழ்ந்திருக்கிறது. பரிதியின் வாழ்க்கை தேவை வழியே இந்த புனைவை ஆசிரியர் புனைந்திருப்பது  இயல்பாக வெளிப்படுகிறது.

 

இந்த கதை மீள் வாசிப்புகளை கோரும் கதை. ஓரளவுக்கு புரிந்தாலும் தவறாக புரிந்துகொண்டுவிட்டோமோ என்னும் அச்சம் அறிவியல் கோட்பாடுகளை போலவே அறிவியல் புனைவுகளுக்கும் பொருந்துமென்றே நினைக்கிறேன். மற்ற கதைகள் மனித மனதையும் எந்திரங்களுக்கு உள்ளுணர்வை கடத்துவதை பற்றியும் பேசுவது நேரடியாக புரிகிறது. இந்த கதை ஒரு அறிவியல் கருவியின் வழியே மனித இருப்பின் வலி, ஆன்மிகம், அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் பேசியிருக்கிறது. உன்மையில் எனக்கு தெரிந்து இந்த கதைத்தான் மிகவும் சவாலான கதைக்களத்தையும் அறிவியல் அறிவையும் கொண்டிருக்கிறது. பெரு விஷ்ணுகுமார் அதில்  வென்றிருக்கிறார்.

 

கதையின் மொழிநடை பல இடங்களில் கவித்துவத்தோடு ஒளிர்கிறது. தவறி விழுந்த ரசாயன கோப்பையின் சத்தத்தை பற்றிய  இடத்தில ஒரு கவிஞனின் மொழி வெளிப்படுகிறது. அது கவிதையை போலவே மனதில் அரைந்து பேசுகிறது.

 

“நீர்மம் நிச்சயம் ஓசையிட்டிருக்காது. அத்தகைய இழிவான நாக்கு அதற்கில்லை. எதற்கெடுத்தாலும் கூச்சலிடுவது, அகக்குரலுக்கு ஒலியூட்டுவதென்று சித்த வெளியில் உலவும் மனிதர்களின் அதிகப்பிரசங்கித்தனம். அவர்களைப் போன்றவர்கள்தான் இதுபோன்ற நனவெளியில் பருப்பொருட்களின் ஓசைகளை அதிலும் நீர்மத்தின் ஓசையைக் கேட்க அதை ஒரு குப்பிக்குள்ளிட்டு நிரப்பி வைப்பர். ”

 

அதை போலவே தொலைவை பற்றி கூறும்போதும்

 

“தொலைவு பெரும்பாலும் ஒரு பூதாகரமானவொன்றாக நம்ப வைத்தே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். தொலைவு என்பது ஏதுமற்ற வெளி. இன்னுமும் கூறினால் ஏதுமில்லாதிருப்பதே தொலைவுக்கான அடையாளமாகும்.”

 

அதே போல காத்தாடியின் மையத்தையும் மனித ஆண்மாவையும் ஒப்பீட்டு பேசும் வரிகள் ஆன்மீகத்தை பேசுகின்றன. முடிவில் கயிற்றின் இறுக்களில் வெளிப்படும் வெளிச்சமும் ஆண்மாவின் வெளிச்சம் என்றே கூறுகிறார். மையம் உடையும் போது அதன் செய்லகளும் முடிகிறது என்றே நினைக்கிறன். இந்த கதையை இன்னும் புரியும் படி கூற முயன்றிருந்தால் அது புனைவை விட்டு வெளியேறி விளக்க உரையாக விலகியிருக்க கூடும். ஆசிரியர் அதில் ஜெயித்திருக்கிறார்.

 

 

கோதார்டின் குறிப்பேடு

 

கமலக்கண்ணனின் இந்த கதை எளிமையான நடையில் தேவையான காட்சி சித்திகரிப்புக்களுடன் கூற விளைந்த கருவை அழகாக கதையாக்கிருக்கிறது. மனித மனத்தின் விசித்திரமான கூறுகளை அலசும் கதையாக இருக்கிறது. அகத்துக்கும் புறத்துக்குமான இடைவெளியில் சிக்கி தவிக்கும் மனம் நடத்தும் நாடகங்களையும் பேசியிருக்கிறது. கதையின் தொடக்கத்திலேயே மனோலயத்தையும்  மனோநாசத்தையம்  பற்றி ஆசிரியர் பேசிவிடுகிறார். மனோலயம் செயலாற்ற தேவையானதாக இருக்கிறது ஆனால் மனோநாசமே அக விடுதலைக்கான வழியாக இருக்கிறது. இவையிரண்டுக்கும் இடையே மனிதன் சிக்கி தவிக்கும் தவிப்புகளே மன சிக்கல்கள் என நினைக்கிறேன்.

 

ராம்சேவின் கசப்பான தனிமையான இளமை வாழ்க்கை அவனை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. அவனின் வேக பயணங்களின் மூலம் அவன் தனக்குத்தானே நிரூபித்து அந்த அழுத்தத்திலுருந்து வெளியே வர முயற்சிக்கிறான். கணக்கு பாடம் வராததால் தாழ்மையுணர்வு கொண்டு மனம் நோகும் ராமசேவின் மனமோ வேகத்தையும் அதனை கடக்கும் சூட்சமத்தையும் அறிந்ததாகவே இருக்கிறது. அவன் அகத்தில் இருக்கும் கணித திறன் புறத்தில் வெளிப்படாமல் சிக்கிகொள்கிறது தலையிலிருக்கும் சொல் கைக்கு இறங்காதது போல. அதனை மனதியல் ஆய்வாளர் அவனுக்கே சுட்டிக்காட்டும் போது அவனுக்கு ஒரு திறப்பாக அமைகிறது. அவன் உயிரோடிருந்தாலும் அதை நம்ப மறுப்பதும் அப்படி யார் சொன்னாலும் அவமானம் கொள்வதும் மன சிதைவின் அறிகுறிகள். அதிலிருந்து அவனை மீட்க கேத்ரினின் கதையை அவனுக்கு உரைப்பதன் மூலம் அவனை மீட்க முயல்கிறார் ஆய்வாளர். மனசிதைவுகளையும் அதிலிருந்து வெளிவர உதவும் உளவியல் வழிமுறைகளையும் கதை ஆராய்கிறது.

 

ஃபிராய்டு ஆழ்மனம் அல்லது நனவிலி மனத்தை  (அன்கான்ஷியஸ்) ‘இத் ‘ என்கிறார். இங்குதான் அடக்கி வைக்கப்ட்ட  ஆசைகள் யாவும் திமுறிக் கொண்டிருக்கின்றன. சமநிலைப்படுத்தப்பட்ட சராசரி மனத்தை ‘ஈகோ ‘ என்கிறார். அடுத்தாக உயர் மனக்கூறு (சூப்பர் ஈகோ) பற்றி கூறுகிறார். இந்த சூப்பர் ஈகோதான் நனவிலியில் பொங்கி வளியும் ஆசைகளை கட்டுப்படுத்தி சராசரி மனம் இயல்பாக இருக்க உதவுகிறது. இந்த சூப்பர்  ஈகோ சிலசமயங்களில் நனவிலியை கட்டுப்படுத்த  முடியாத நிலைகளில் அது உளவியல் சிக்கலைகளை உண்டுபண்ணுகின்றன. அத்தகைய உளவியல் சிக்கல்களையே இந்த கதை பேசுகிறது என நினைக்கிறன். யெய்மீ  என்ற பெண் நாவலாசிரியை பிரான்சில் புகழ்பெற்ற ஒரு நடிகையை கொல்ல முயற்சி செய்கிறாள். ஆனால் அந்த ஆசிரியைக்கும் நடிகைக்கும் எந்த தொடர்பும் நிஜ வாழ்வில் இல்லை. இதை ஆராய்ந்த லக்கான் யெய்மீ தனது எழுத்தின் மூலம் அடைய நினைத்த பேரும் புகழும் வாய்க்காத போது அது ஒரு நடிகைக்கு எளிதாக வாய்த்திருப்பது கண்டு அவளை கொல்ல முயற்சிக்கிறாள். இதன் காரணம் யெய்மயின் லட்சிய படிமமே  (ஐடியல் இமேஜ் ) அவளது வெறுப்பிற்கு உரிய படிமமாகவும் மாறியது. அதனால் அவள் சுயமறுப்பு மனப்பிறழ்விற்கு (self punishment ) தள்ளப்படுகிறாள் என்கிறார். இந்த கதையில் ராம்சே தான் உயிரோடு இருப்பதை நம்ப மறுப்பதும் கேத்ரின் தன்  கணவனை கணவன் என நம்ப மறுப்பதும் இத்தகைய மனப்பிறழ்வின் காரணம் என்றே நினைக்கிறன். மனநல மருத்துவர் என்பாதாலேயே ஒருவர் தௌ¤வான மனதோடுதான் இருப்பார் என்ற கற்பனையையும் இந்த கதை உடைத்து பேசுகிறது என்றே நினைக்கிறேன். ப்ரேசில் எழுத்தாளர் மச்சோ டீ க்ரூஸ் எழுதிய ‘மனநலமருத்துவர் ‘ என்ற நாவலை வாசித்திருக்கிறேன். அதில் மனப்பிறழ்வு இல்லாத மனிதர்களே உண்மையில் மன நோயாளிகள் என்று படித்ததாக ஞாபகம்.

 

மூக்குத் துறவு

 

கே.பாலமுருகனின் இந்த கதை அரூவிற்கு ஜெயமோகன் அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டுருந்த சில அறிவியல் புனைவுக்கான கருக்கலாக கூறியிருந்த ஒன்றை எடுத்து கையாண்டிருக்கிறது. உலகில் நாளை ஆக்சிஜென் இல்லையென்றால் என்னவாகும் என்ற கருவை நான் வாசித்த போது அதை புனைவாக்கும் சாத்தியங்கள் குறைவு என்றே நினைத்தேன். அதனை பாலமுருகன் அழகிய புனைவாக உருக்கொள்ள செய்திருக்கிறார்.

 

ஆக்சிஜென் தட்டுப்பாடான உலகம் எப்படியிருக்கும் மக்களின் வாழ்க்கை முறை எப்படி மாறியிருக்கும் அந்த உலகிலும் வாழ மக்கள் எப்படி தங்களை தயார் செய்துகொள்கிறார்கள் என்னும் கற்பனை எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை அப்படியே காட்சியாக்கி இருக்கிறது. கதையில் ஒரு இடத்தில மூக்கு துறவு செய்து கொண்ட நாயகன் இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறான் “இதுக்குலாம் என்ன காரணம்? நம்ம ஏன் இதை அனுபவிக்கறோம்?” இந்த கேள்வி நம் வருங்கால தலைமுறை நம்மை நோக்கி எழுப்பும் கேள்வி. இயற்கையை பேணி காக்க தவறிவிட்ட அவர்களின்மூதாதையரான நம்மை நோக்கி எழுப்பும் கேள்வி. மரங்களின் தேவையை நீராதாரங்களை காக்க தவறும் இன்றைய அரசாங்கத்தை நோக்கி எழுப்பும் கேள்வி.

 

சமீபத்தில் பார்த்த குறும்படம் ஒன்று வருங்காலத்தில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்க பட்டிருக்கும். ஒரு பெண் நிச்சயம் இரு ஆண்களுடன் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கமே ஆணை பிறப்பித்திருக்கும். தன் கணவனோடு சேர்ந்து இன்னொருவனை மாப்பிள்ளை பார்க்க செல்வது, அவனுடனும் திருமணம் முடிந்த பின்னர் முதலிரவில் அவள் மனம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒத்துழைக்க மறுக்கும் போது புதிய கணவன் பழைய கணவனின் உதவியை நாடுவான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு போலீ¦ஸ் பாதுகாப்பு தேவையாகியிருக்கும். அதன் சாத்தியங்கள் சந்தேகத்திற்குரியது என்றாலும் நம் வாழ்க்கைமுறை அதனை ஒட்டி எப்படி மாறியிருக்கும் என்று பேசியிருக்கும் அப்படம். அதை போலவே இக்கதையும்

 

அந்த வாழ்க்கை முறை மாற்றத்தை கண் முன்னே கொண்டு வந்து திகிலுற செய்கிறது. படிக்கும் போது ஒரு மெல்லிய நகையுணர்வு தோன்றினாலும் அப்படிப்பட்ட வாழ்வில் நம்மை நினைக்கும் போது மனம் அஞ்சுகிறது. மூக்கு துறவு என்ற சொல் அழகிய கோர்ப்பு. இன்று நாம் நினைக்கும் துறவு எதிர்காலத்தில் வேறொரு பரிமாணத்தில் நிகழ்கிறது. சன்யாசம் ஏற்பதை போல அதுவும் ஒரு சடங்காக கையாளப்படுகிறது. மனதிற்கும் மூச்சிற்கும் நேரடி தொடர்பு இருப்பதை இந்திய மெய்ஞானம் கண்டுகொண்டிருக்கிறது. மூச்சின் அளவு குறையும் போது மனதின் எண்ணங்களும் குறையும். அது தலைகீழாகவும் நிகழும். மூச்சை கவனிக்க கவனிக்க மனம் கொள்ளும் அமைதி மனதை இல்லாமலாக்கி அதன் மூலமான வெளியோடு கலக்கவல்லது. புற வழியே மூச்சை விடாமல் உடலுக்குள்ளேயே மூச்சை அடக்கி சமாதியுறும் கலை நம்மிடமுள்ளது. இந்த கதையில் வரும் மூச்சு கட்டுப்பாடுகள் மெய்ஞானத்தோடு தொடார்புற்று வாழ முடிந்தால் அதை துறவாக்கி ஞான பாதையில் செல்லலாம். ஆனால் எளிய மனதிற்கு அது மிக பெரும் வலி. கடைசியில் பைபிளின் வசனத்தை பேசி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒருவனை போலதான் எல்லோரும் சாகவேண்டியிருக்கும்.

 

ம்

 

கிரிதரன் கவிராஜாவின் இந்த கதை விஞ்ஞானத்தை கொண்டு மெய்ஞானத்தையும் மெய்ஞானத்தை கொண்டு விஞ்ஞானத்தையும் அறியும் அனுபவத்தை தருகிறது. கதையின் மொழிநடை எல்லையற்ற பெருவெளியின் முன் வியப்பில் ஒளிரும் ஒருவனின் சொற்களாக வெளிவந்திருக்கிறது. உடல் மனம் எல்லாவற்றையும் கடந்துவிட்ட பின்பும் நாம் ஏதோ ஒன்றாக எஞ்சுவதையும்  அந்த இருப்பை நாமே உணர்வதையும் ஒரு ஆன்மீக திணறலாக கதை வெளிப்படுத்தியிருக்கிறது.

 

துரியாதீத தவம் என்றொரு தவத்தை சொல்வர். அதில் மனிதன் புருவமத்தியில் மனதை நிறுத்தி, பின்பு துரியத்திற்கு சென்று, அப்படியே தலைக்கு மேலே எழும்பி, பிறகு சந்திரனை அடைந்து, அடுத்து சூரியனை அடைந்து, பின்பு சக்தி களத்தை  அடைந்து, கடைசியாக சிவக்களம் என்னும் வெட்டவெளியில் கலந்து தியானம் செய்யும் போது வெட்டவெளியில் கலந்து மனம் அமைதி பெற்று ஓர்மை நிலையை அடையும். இது மெய்ஞானத்தின் வழி. அது கடினமானதும் கூட. ஆனால் விஞ்ஞானத்தில் விண்களத்தில் சென்று வெளியின் இறுக்கம் தாளாமல் விண்களமே சிதறி ஒரு கருந்துளைக்குள் பிரயாணம் செய்யும் மனிதனை கற்பனை செய்யும்போது திகிலாக இருக்கிறது. ஆனால் மெய்ஞானமென அதை தானே தேடி தீர்க்கிறோம். கதை அம்சம் இந்த கதையில் குறைவாக இருந்தாலும் பெரும்பாலான கதைகள் அலுக்காமல் பேசிக்கொண்டிருக்கும் கதை இதுதானே. அழகிய மொழிநடையும், கவித்துவமும், விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணையும் புள்ளியும் இக்கதையின் சிறப்பென கருதுகிறேன்.

 

தியானி ௲ கிபி 2500

 

அஜீக்கின் இந்த கதை மிகவும் எளிமையான நடையில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்தமான கதையாகவும் இருந்தது. காலத்தின் மாற்றத்தில் மனிதன் பரிணாம வளர்ச்சியை அடைவதை போலவே மனிதன் ஞானம் அடைவதற்கான எல்லைகளும் பரிணாம வளர்ச்சியடைகின்றன.

 

காகிதத்தில் எழுதும் பழக்கம் இந்த தலைமுறையோடே முடிந்துவிட போவதாக நான் நினைக்கிறன். கணினியில் எழுதினாலும் மனிதன் எழுத்துக்களோடு இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் எதிர்காலத்தில் மனிதனுக்கு கட்டாயம் எழுதும் பழக்கத்தின் தேவை இருக்காது. மனிதனின் அன்றாட வாழ்விற்கு மனிதன் சொல்ல சொல்ல கணினியே தட்டச்சு செய்துகொள்வது பெரிய வரமாக இருந்தாலும் கலை இலக்கிய பங்களிப்புகளுக்கு அது பெரிய ஆபத்து. கதைகளும் கவிதைகளும் வெறும் வாய்மொழி வழியே எழுதிவிட முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியே.

 

மனிதனின் சிந்தனை ஓட்டம் விரல்களின் வழியில் வளியும் போது நிகழும் ஒரு ரசவாதம் வாய்மொழி வழியே சாத்தியமில்லை என்றே நான் நினைக்கிறேன். எழுதும் பழக்கமே மனிதனின் ஆழ்மனதிலிருருக்கும் படிமங்களை வெளியே கொண்டுவருகிறது. வாய் மொழி வழியே அது நிகழுமா என தெரியவில்லை. பல எழுத்தாளர்கள் சொல்ல சொல்ல இன்னொருவர் எழுதும் முறையை கேள்விப்பட்டிருந்தாலும் தானே எழுதும்போதே உண்மையான வெளிப்பாடு நிகழுமென தோன்றுகிறது.

 

தியானி அவ்வகையில் எடுத்துக்கொண்டிருக்கும் கருவும் அதனை பதிவு செய்திருக்கும் விதமம் நன்றாகவே உள்ளது. எழுதுவது என்பது ஒரு இரகசிய அமைப்பாகவும் தண்டனைக்கு உரியதாகவும் பிற்காலத்தில் மாறப்போகும் நிலை விந்தையாக உள்ளது. எஸ்.ரா ஒரு உரையில் ஒரு திரைப்படத்தை குறிப்பிட்டார். அதில் ஒரு ஊரில் மனிதர்கள் சிந்திக்க கூடாது என்பதற்காக எல்லா புத்தகங்களையும் அரசாங்கமே எரித்துவிடும். அனைவரும் தொலைக்காட்சி மட்டுமே பார்க்க முடியும் அதுவும் அரசாங்கத்தின் பிடியில்தான் இருக்கும். புத்தகம் வைத்திருப்பது கஞ்சா வைத்திருப்பது போன்ற குற்றமாக பார்க்கப்படும். அங்கே ஒருவனின் வீட்டில் இரகசியமாக இருந்த நூலகத்தை கண்டுபிடித்து ஒட்டுமொத்தமாக அரசாங்கம் எரித்துவிடும். அவனை ஊரை விட்டு வெளியே அனுப்பிவிடும். ஊருக்கு வெளியே இருக்கும் நதிக்கரைக்கு செல்லும் போது  அங்கே பல மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லோருமே மனித நூல். ஒவ்வொருவரும் ஒரு நூலை படித்து வைத்திருப்பார்கள். அதை மற்றவர்களுக்கு வாய் வழியே உரைப்பார்கள். வாசிப்பு அப்படி அழியாமல் அங்கே காக்கப்படும். அதே போன்றதொரு அனுபவத்தை இந்த கதையும் ஏற்படுத்தியது. பரிணாம வளர்ச்சியில் பழமையை மீண்டும் கண்டடைவதுவே ஞானம் என்றும் தோன்றுகிறது.

 

மற்ற ஐந்து கதைகளை பற்றிய எனது எண்ணங்களை இன்னும் சிறிது நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

 

உமா ரமணன்

 

அரூ அறிபுனை விமர்சனம்-1 ,புதுப்படிமங்களின் வெளி

அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்

அரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி…கிருஷ்ணன்

$
0
0

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை

ஈரோடு விவாதப்பட்டறை – கடிதங்கள்

 

 

ஆசிரியருக்கு ,

 

அறிவியக்கத்தில் நாட்டமுள்ள ஒருவன் விவாதித்துக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. சொல்லப் போனால் நண்பர்களுடன் அல்லது சித்தாந்த எதிரிகளுடன் விவாதிக்குக்போது  அறிவு  சேகரிப்பை விட  நமது கொள்கையை நிலைநாட்டுவதையே பிரதானமாகக் கொள்கிறோம். ஒருவன் இவ்வளவு ஆண்டுகளாக விவாதித்து பெற்றுக் கொண்டது என்ன எனக் கேட்டால் மிக மிக சொற்பம் என தான் பதில் கிடைக்கும். என்றாவது நீங்களோ அல்லது உங்களது மறுதரப்போ உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா அதை பொதுவில் ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டாலும் நீக்கமற இல்லை எனதான் பதில் கிடைக்கும், எவ்வளவு நெருங்கிய நண்பருடன் என்றாலும்  நாம் விவாதித்து மாறுவதில்லை  அல்லது  நமது மாற்றத்தை  வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை, இதை ஒரு தோல்வி எனவே காண்கிறோம். ஒரு தத்துவ தேடலில் பளபளப்பாக நமது அகங்காரத்தை கண்டுகொள்வது  இங்கு தான்.

 

அறிவுத்தேடலில் தீவிரமற்ற மக்கள் ஒரு பொது உரையாடலில் தெடர்ந்து சில பிழைகளை செய்வதை பார்க்கிறேன், “யாரோ ஒரு அரசூழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதால் அனைவரையும் அவ்வாறு சொல்ல முடியாது” போன்ற ஆயத்த ஆடை கருத்தை அணிந்துகொள்ளுதல் , “இதற்கு முன்னும் MGR , ஜெயலலிதா போன்றோர் மக்கள்  பணியில் ஈடுபடாமல் நேரடியாக அரசியலுக்கு வந்தார்கள் அது போலத்தான் ரஜினியும் கமலும்” போன்ற தவறான முன்னுதாரணத்தை சரியென கொள்ளுதல், “கங்கை காவிரியை இணைக்க வக்கில்லை அத்திக்கடவு அவிநாசி திட்டம் பற்றி பேசுகிறார்கள்” போன்ற அதிகோரிக்கைகள், அது போக நிறுவப்பட்ட கருத்துகளை  மீண்டும் விவாதிப்பது, தரவுகள் தேவை என்பதை அறியாமல் மேலும் மேலும் பேசிக்கொண்டே செல்வது, விதிவிலக்குகளை கருத்தில் கொள்ளமல் பேசுதல்   ஆகியவைகளும் தொடரும்.

 

நமது அறிவுத்  தேடல் தீவிரம்  கொண்ட நண்பர்களின்  பொது விவாதத்தங்களில் சில வாத இடர்களையம்  சில சிந்தனை பிழைகளையும் அடையாளம் காணலாம்.  நம்மிடையே  உள்ள வாத இடர்களில் பிரதானமானது 7, இந்த பிரதானமான 7 வகைகளில்  அப்படி பொதுமைப்படுத்த முடியாது , அப்படி வேறுபடுத்த முடியாது, அப்படி ஒப்பிட முடியாது, அப்படி மேல் கீழ் என அடுக்கி வரிசையிட முடியாது ஆகிய 4 வகைகளை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போது கூடுதலாக மூன்றை  சேர்க்க விரும்புகிறேன்.

 

இந்த ஏழு  வகை இடர்களுக்கும்  காரணமாக  அமைவது 2, விவாதத்தை  மேலே கொண்டு செல்ல கூடுதல் மூளை  உழைப்பு தேவை என்பதை முன்பே உணர்ந்து விவாதத்தை நீர்த்து போக செய்வது  அல்லது தனது முற்போக்கு முகமூடி நழுவிவிடுமோ என்கிற அச்சத்தில் நழுவிவிடுவது. இனி அந்த கூடுதல் 3 இடர்கள் :

 

-இதனால் பெரிய பயனில்லை ஆகவே தேவையில்லை (ஒருநாளும் சாதியை , ஊழலை ஒழிக்க முடியாது ஆகவே  பெயரில் சாதியை நீக்குவது ,RTI ACT  போன்றவற்றால் பலனில்லை ஆகவே தேவையில்லை)

 

-இதுவரை செய்யாததை இனியா செய்யப் போகிறார்கள், இது தாமதமாக வருகிறது ஆகவே தேவையில்லை  (சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை ஆகவே தேர்தல் ஆணையத்தின் பிரச்சாரத்தால் ஒன்றும் விளையாது அது தேவையில்லை)

-நிலைப்பாடு  எடுப்பதை ஒத்திப்போடுவது அல்லது மறுப்பது. ( நான் முன்வைக்கும் அரசியல்வாதிகளை  மறுக்கிறீர்கள் , நீங்கள் முன்வைப்பவர்கள் யார் யார்  ? சுதந்திர இந்தியாவின் மக்கள் வாக்களித்து தேர்வு செய்த செயலுக்கு மதிப்பெண் இட்டால் 100 க்கு  எவ்வளவு ? ஒழுக்கத்துடன்  வாழ்பவர்கள் பாதிக்கும் மேலா  கீழா ?)

 

இது போக ஒரு விவாதத்தை துவங்குவதற்கே தயங்கும் காரணம்  ஒன்று உண்டு அது அரசியல் சரி. இதை இடர் எனக் கூற முடியாது வேண்டுமானால் நழுவுதல் அல்லது விலகுதல் எனக் கூறலாம். அரசியல் சரி என்பது ஒரு பொதுவெளியில் அவ்வளவாக அறியாத திரள் முன் கூர்மையான கருத்துக்களை சொல்லி அவர்களை காயப்படுத்தக்கூடாது என்கிற நோக்கில் உருவாக்கப் பட்டது அது சமூக உரையாடலில் மிக நாகரீகமான விதி , ஆனால் அதையே கற்றோர் தமது தனி உரையாடலிலும் கடைபிடித்தால் விவாதத் தேர் எங்குமே  நகராது.  இங்கு பெண்ணுரிமை, தலித்துகளின் இயல்பு, பொதுமக்களின் சுயநலம் போன்றவற்றை  பேசாமல் தவிர்ப்பது விவாதத்தையே மழுங்க  செய்துவிடும்.

 

அடுத்தது அறிவுத்தேடலில் அடுத்தகட்ட  தீவிரம் கொண்டு மேலே கண்ட இடர்களை தாண்டியவர்கள் கூட சிக்கிக் கொள்ளும் சிந்தனை பிழைகள்  சில உண்டு, இது வாதத்தில் வெளிப்படும்  அதில்  பிரதானமானவை

 

  1. உட் பிரிவுகள் அறிமுகமானவுடனேயே வாதத்தை கைவிடுவது (ஜனநாயகமா சர்வாதிகாரமா என்கிற வாதத்தில் ஜனநாயகத்தில் கூட மையப்படுத்தப்பட்ட அதிகாரம் பரவலாக்கப்பட்ட அதிகாரம் என்கிற பிரிவுகள் உண்டு )

 

 

  1. காரணம் கவர்ச்சிகரமாக தோன்றினால் அதன் விளைவை கற்பனை செய்து தற்போதைய கள யதார்த்தத்தை காண தவறுவது (தமிழகத்தில் பெண் சிசுக்கொலை பற்றி படங்கள் வந்தது, கதைகள் எழுதப்பட்டது, வழக்குகள் போடப்பட்டது, கருவில் ஆண்  பெண் கண்டறிதல் பெரிதும் தடுக்கப்பட்டது ஆகவே இப்போது மக்கள் தொகையில் ஆண்  பெண் சமநிலை நிலவுகிறது)

 

 

  1. பாதிப்பு கொள்கை பற்றி உணராமல் வாதிப்பது, அதாவது இப்போது இருக்கும் நிலை ஒரு புதிய நிலை வந்தால் எந்த அளவுக்கு பாதிக்கப்டும் என்ன அனுகூலங்கள் என்பதை தராசுத்தட்டில் வைக்காமல் சிந்திப்பது  (இதே அரசு மீண்டும் வந்தால் என்ன பாதிப்பு, அரசு மாறினால் என்ன அனுகூலம், எது மிகுதி)

 

இவ்வளவையும் ஒரு விவாதத்தில் உணர்பவனுக்கு ஈரோடு விவாதப்பட்டறையின் முக்கியத்துவம் தெரியும். இந்த ஒன்றரை நாள் பயிற்சி பட்டறை அறிமுக அளவில் கிட்டத்தட்ட அதன் இலக்கை அடைந்துவிட்டது என கொள்ளலாம். தேநீர் மற்றும் உணவு இடைவேளைகளில் நண்பர்கள் ஆர்வத்ததுடன் விவாதித்துக்கொண்டிருந்தனர், அமர்வுகளில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள், பட்டறை முடிந்தவுடன் தாமாக வந்து இது மிகுந்த பலனளித்ததாக நிறைய பேர்  சொன்னார்கள். ராஜகோபால் செந்திலும் தமது பணியை சிறப்பாக ஆற்றினார்கள், குறிப்பாக கூறியது கூறல் இல்லை, அவர்களுக்கிடையே நல்ல ஒருங்கினைப்பு இருந்தது, அவையையும் சுவாரஸ்யமாக கட்டுக்குள் வைத்திருந்தனர். உங்களின் இரண்டாம் நாள் நியாய சாஸ்திர இறுதி அமர்வு அற்புதம்.

 

 

ஆனாலும் முதல் மாதிரி விவாதத்திலேயே அவ்வளவும் பிழையாகிப்போனது எவ்வளவு தான் சொன்னாலும் அவ்வளவு தானா என்கிற அயர்ச்சியை ஏற்படுத்தியது, பின்னர்  இரண்டாவது மாதிரி விவாதம் எதிர்பாராவகையில் முன்னேற்றம் கண்டது. எவ்வித பொது பேசுபொருளும் இல்லாமல் நடந்த இந்த நிகழ்வு விஷ்ணுபுரம் விழாக்களிலேயே  தனித்துவம் மிக்கது, இதில் பங்கு பெறாதவர்கள்  இழந்தது சற்று மதிப்புமிக்கது.

 

 

இது கடந்து சில நாட்களுக்கு பின் நான் எண்ணுகிறேன், உங்களைப்போன்ற ஒரு குருவுடன் இவ்வளவு ஆண்டுகள் பயணித்து உரையாடி நான் அடைந்தது பெருஞ்செல்வம். தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த பட்டறை அவ்வளவு ஒன்றும் மயிர்கூச்செரியவில்லை. நான் உங்களிடம் அணுகி அறிந்ததில் ஒரு பகுதியை இந்த பங்கேற்பாளர்கள்  அறியக் கூட இன்னும் சில கூடுகைகள் தேவைப்படும், ஒருங்கிணைக்க எங்கள்  ஈரோடு அணி எப்போதும் போல் முன்னிற்கும்.

 

 

கிருஷ்ணன், ஈரோடு.

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

$
0
0

Aruna Roy (2019)

அருணா ராய் பேட்டி 1

அருணா ராய் பேட்டி 2 

தகவலறியும் சட்டத்தின் கதை

கொலாபா, மும்பையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு, கடற்கரையை ஒட்டி, இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கார்கில் போர் முடிந்தவுடன், போரில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு  வழங்க வேண்டும் என்னும் நோக்கில், ஆறு மாடிக் கட்டிடம் கட்ட அரசின் அனுமதி பெற்று, ஒரு திட்டம் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கியபின், நகர் வளர்ச்சி வாரிய விதிகளுக்கும், கடற்கரையோர கட்டிட விதிமுறைகளுக்கும் முரணாக, எந்த அனுமதியுமில்லாமல், அது 31 மாடித் திட்டமாக மாற்றப்பட்டது. அரசியல் வாதிகளும், ராணுவ அதிகாரிகளும், அதில் பல வீடுகளை, தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொண்டார்கள். அந்த ஊழல் வெளிப்பட, ஐந்து முன்னாள் முதல்வர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் எனப் பலர் சிக்கினர். மாநிலத்தின் அன்றைய முதல்வர் பதவி விலக நேரிட்டது.

 

2G, காமன் வெல்த், வேதாந்தா பல்கலைக்கழக நில ஒதுக்கீடு எனப் பல முறைகேடுகள் பொதுவெளிக்கு அந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்தன. இவை அனைத்தின் பின்னும், மிக முக்கியமான ஒரு சட்டம் இருக்கிறது. அதன் பெயர் தகவல் அறியும் சட்டம். வெறும் 10 ரூபாய் கட்டணம் கட்டி, அரசு அலுவலகங்களில் நடைபெறும் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களை எவரும் பெற்றுக் கொள்ள முடியும் என்னும் ஒரு சாத்தியம் இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய மக்களுக்குக் கிடைத்தது.

 

பல அரசாங்கங்களை வீழ்த்திய இந்தச் சட்டம் பெரும் சட்ட மேதைகளாலோ அன்றிப் பெரும் அரசியல் தலைவர்களாலோ இயற்றப்படவில்லை.  ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜஸ்மண்ட் மாவட்டத்தில், ஆரவல்லி மலைச் சரிவையொட்டிய தேவ்துங்ரி என்னும் வறண்ட கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் நான்கு லட்சியக் கிறுக்குகளால் உருவாக்கப்பட்டது. அவர்களும், பெரும் அரசாங்கங்களை வீழ்த்த வேண்டும் என இந்தச் சட்டத்தை உருவாக்க வில்லை. தங்கள் கிராம மக்களுக்கு அரசு திட்டங்கள் வழியாக, நேர்மையாகச் சேர வேண்டிய அடிப்படைக் கூலியான 11ரூபாயை வேண்டித்தான் 1987 ஆம் ஆண்டு துவங்கினார்கள்.

அருணா, 1946 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை ஜெயராம், தில்லியில் அரசுப்பணியில் இருந்தார். தன் பள்ளிக் கல்வியை அவர், தில்லி, சென்னை கலாக்‌ஷேத்ரா, புதுச்சேரி அரவிந்தர் பள்ளி, தில்லி பாரதிய வித்யாபவன் என, பல கல்விநிலையங்களில் பயின்றார். தில்லிப் பல்கலைக்கழகத்தின் இந்திரப்ரஸ்தா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 1967 ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணித் தேர்வை வென்று, தமிழகத்தில் பணியில் மாவட்ட ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.  தன் நண்பரான பங்கர் ராயுடன் திருமணம் நிகழ்ந்தவுடன், தில்லிக்கு மாற்றலாகி வந்தார். அரசு அதிகாரியாக, அந்த விதிகளுக்குட்பட்டு, உண்மையாக மக்கள் பணியாற்றுதல் கடினமாக இருந்தது. 1975 ஆம் ஆண்டு தன் வேலையைத் துறந்து, கணவர் பங்கர் ராயுடன், அவரது வெறும்பாதக் கல்லூரியில், ஊரக முன்னேற்றப்பணிகளில் ஈடுபட்டார். அங்கு பணியாற்றுகையில், அவருடன் ஷங்கர் சிங் என்பவர் நண்பரானார். அவர்களோடு, அமெரிக்காவில் கிடைத்த கல்வி வாய்ப்பை உதறி சமூகப் பணியாற்ற வந்த நிகில் டே என்னும் 21 வயது இளைஞரும் இணைந்து கொண்டார்.

மூவரின் எண்ண அலைவரிசையும், கனவுகளும் ஒன்றாக இருந்தன. மக்களிடையே ஜனநாயக நிறுவனங்கள் பற்றிய அறிதல் மிகக் குறைவாக இருந்தது. தங்களது உரிமைகள் பற்றிய அறிதலும் பெரிதாக இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மக்களிடையே எடுத்துச் செல்லவேண்டும் என்பதே அவர்கள் மூவரின் கனவு. மகாத்மா காந்தி, ஜெயப்ரகாஷ் நாரயண் வழியில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கம் ஒன்றைத் துவங்குவோம் என முடிவு செய்தார்கள். அதற்கான நிறுவனம், வழிமுறைகள் அனைத்தும் மக்களோடு பணியாற்றுகையில்,  இயல்பாக, தானே உருவாகி வரவேண்டும் என்பதே அவர்கள் வழி.

 

ஏதாவது ஒரு கிராமத்திலிருந்து துவங்க வேண்டும் என அங்கே இங்கே அலைந்து, 1987 ஆம் ஆண்டில், தேவ்துங்ரி என்னும் கிராமத்தில் தங்க முடிவெடுத்தார்கள். அது ஷங்கர் சிங்கின்  ஊருக்கு அருகில் இருந்ததும், ஷங்கர் சிங்கின் மனைவி அன்ஷி, சொந்த ஊருக்கு அருகில் வசிக்க ஆசைப்பட்டதும் முக்கிய காரணங்கள். ஷங்கரின் உறவினர் ஹக்குவின் குடிசையை வாடகைக்கு எடுத்து தங்கத் துவங்கினார்கள். அந்தக் குடிலில் நிகழ்ந்த வாதப் ப்ரதிவாதங்களும், அங்கிருந்து திட்டமிடப்பட்ட போராட்டங்களும்தான், பின்னாளில்,  தகவலறியும் சட்டம் என்னும் மக்கள் நலச் சட்டம் உருவாக  அஸ்திவாரமிட்டன.  பெரும் தொலைக்காட்சித் திரை போல, தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 8 வழியே வாகனங்கள் விரைந்து கொண்டிருக்க, அதிலிருந்து விலகி அமைந்துள்ள, அமைதியான அவர்களின் தேவ்துங்ரிக் குடிலில், மக்களுக்கான தீர்வுகள் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

 

மக்களோடு மக்களாக வசிப்பதில் பல முக்கியமான நன்மைகள் இருந்தன. ஏழை மக்களுக்கான தீர்வுகளை, அவர்களின் வாழ்க்கையின் எல்லைகளுக்குள் நின்று அறிந்து கொள்வது. அவர்களது பார்வையிலிருந்து, உலகில் நிகழும் விஷயங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வது போன்றவை அவை.

 

தேவ்துங்ரிக் குடிலுக்கு முதலில் வந்தவர், ரஜ்னி பக்‌ஷி என்னும் பத்திரிகையாளர். ‘வீட்டில் ஏதேனும் சிறுவேலைகள் – பெருக்குதல், ஆட்டுக்குத் தீனி வைத்தல் போன்ற வேலைகளைச் செய்யும் போது, பாபு குடில் (வார்தா) நினைவுக்கு வரும். ஆனால், அதைச் சொன்னால் அருணாவுக்கும், நண்பர்களுக்கும் மிகச் சங்கடமாக இருக்கும். அவர்கள் இயல்பின்படியே மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்’, என எழுதியிருக்கிறார்.

 

அந்த வீட்டின் எளிமையும்,  அருணா மற்றும் நண்பர்களின் நட்புணர்வும், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மனிதர்களை ஈர்த்தன. பலரும் அவர்களை அணுகி, அவர்களின் பிரச்சினைகளைப் பேசத் துவங்கினார்கள். ஷங்கர் சிங், அதே ஊர்க்காரர் என்பது, மக்களுடன் உரையாடவும், பிரச்சினைகளின் ஊடுபாவுகளை நுட்பமாக அறிந்து கொள்ளவும் உதவியது. அருணாவின், நிகில் டேயின் எண்ணங்களை, உள்ளூர் கலாச்சாரத்தோடு பிணைக்கும் ஒரு சக்தியாக ஷங்கர் விளங்கினார். திட்டங்களை, கருத்துக்களை, போராட்டங்களை, உள்ளூர்க் கதைகளாக, பாடல்களாக, தெரு நாடகங்களாக அவர் மாற்றியது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

அந்தக் குடிலுக்கு வந்த அஜித் பட்டாசார்ஜி, ப்ரபாஷ் ஜோஷி என்னும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களும் ரஜினி பக்‌ஷியைப் போலவே உணர்ந்திருக்கிறார்கள்.  ‘தேவ்துங்ரிக்கு வந்தவுடனேயே எனக்கு வார்தாவின் பாபு குடில்தான் நினைவுக்கு வருகிறது. மண் அடுப்பில் எங்களுக்கு ரொட்டி செய்து உணவளித்தார் அருணா. இரவு, வீட்டுக் வெளியே உள்ள மண் தரையில் படுத்துக் கொண்டோம். காலையில், குல்மோகர் மரத்துக்கும், போகன் வில்லாச் செடிகளுக்கும் இடையே எழுந்த சூரியன் எங்களை எழுப்பினான். வீட்டின் பின்னால் அமைந்திருக்கும் குடிசைக் கழிவறை, ஐந்து நட்சத்திர விடுதியின் சுத்தத்தில் இருந்தது’.

 

ஆனால், நண்பர்களுக்கு இவர்களின் முயற்சிகளில் நம்பிக்கையே இல்லை. மண் குடிசை, ஆட்டுப்பால் என இவர்களின் வழி கற்பனாவாத முயற்சியாகத் தெரிந்தது. ‘விரைவில் நாகரீக உலகுக்கு வந்துவிட்டுவீர்கள்’, என வாழ்த்திச் சென்றார்கள்.

 

ஜெய்ப்பூரில் உள்ள வளர்ச்சியியல் கல்லூரிக்காக, கள ஆய்வுகளைச் செய்து தங்களது அடிப்படைத் தேவைக்கான பணத்தை ஈட்டிக் கொண்டார்கள். மக்களை, அவர்களின் வாழ்விடங்களில், தனியாகவே அல்லது ஒரு சிறு குழுவாகவோ சந்தித்து உரையாடத் துவங்கினார்கள். முதலில் நகரத்தில் இருந்து வந்த இவர்களை சந்தேகத்துடன் பார்த்த மக்கள், இவர்கள் வாழ்க்கை முறைகளையும், நடவடிக்கைகளையும் கவனித்த பின்னர், நம்பிக்கையுடன் உரையாடத் துவங்கினார்கள்.

 

1987 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பெரும் வறட்சி நிலவியது. எங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடியது. வறட்சி நிவாரணப் பணிகளில் வேலைக்குச் சேர பெரும் வன்முறை நிகழத்துவங்கியது. திட்டக்கமிஷனின் குழு ராஜஸ்தானுக்கு நேரில் சென்று நிலையை அறிய வந்தது. அருணா ராயின் வற்புறுத்தலில், துணைத்தலைவர் ஹனுமந்த ராவும், திட்டக் கமிஷன் ஆலோசகர் பங்கர் ராயும் தேவ்துங்ரி வந்தார்கள். மக்களிடம் பேசத் துவங்கினார்கள். உணவுக்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ஒரு பெண், சாலையோர வேலிச் செடிகளின் முட்களை அரைத்து, அதில் சுடப்பட்ட ரொட்டியைக் காட்டினார். புராணக்கதைகளில் மட்டுமே ஒருவர் கேள்விப்பட்டிருக்கக்கூடிய அவல நிலை அது. திட்டக் கமிஷனின் உறுப்பினர்கள் முன்னால், மாவட்டக் கலெக்டர், அவர்களுக்கு உடனடியாகத் தானியங்களை ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஆனால், செய்யவில்லை.

 

மழை பொய்த்தலும், வறட்சியும், ராஜஸ்தான் மக்கள் அடிக்கடி காண்பவை.  அருணாவும் நண்பர்களும் செல்லுமிடமெலாம், ஏழை மக்களிடையே இதுவே பேச்சாக இருந்தது. அந்தக் காலத்தில் அரசாங்கம் வழங்கும் வறட்சி நிவாரணத்தை, அவர்கள் ‘ஃபேமைன்’ என்று அழைத்தார்கள்.  1878 ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த பெரும் பஞ்சத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட ஃபேமைன் ரிலீஃப் கோட் (Famine relief Code) என்னும் சட்டத்தின் மரூஉ.  உதய்ப்பூரின் பிச்சோலா ஏரி, ஜெய்ப்பூரின் உமைத் பவன் போன்றவை பஞ்சகாலத்தில், ஏழை மக்களுக்கு வேலையும் உணவும் அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவை. ஃபேமைன் எப்போ ஆரம்பிக்கும் என்பது சாதாரண ராஜஸ்தானி ஊரக ஏழையின் வாயில் புழங்கும் சொல்.

 

1987 ஆம் வருடம், தேவ்துங்ரியின் அருகில் உள்ள ஒரு இடத்தில், ஏரியின் கரையை உயர்த்தும் வேலை, வறட்சி நிவாரணப்பணியாகத் துவங்கப்பட்டது. 8 மணி நேர வேலைக்கு 11 ரூபாய் குறைந்தபட்சக் கூலியாக அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், உழைப்பாளிகளுக்குக் கிடைத்ததோ 2 முதல் 4 ரூபாய்கள் மட்டுமே. அருணாவும் நண்பர்களும் சென்று விசாரித்த போது, அவர்கள் உழைப்புக்கு ஏற்ப, கூலி கொடுக்கப்பட்டுள்ளது என்றார் இளநிலைப் பொறியாளர். ஆனால், உழைப்பாளர்களோ, எவ்வளவு வேலை செய்ய வேண்டும் எனச் சொல்லப்படவேயில்லை என்றார்கள். பேச்சு வார்த்தைகள் நடந்து, உழைப்பாளர்கள் செய்ய வேண்டிய வேலையை அளந்து கொடுக்க ஒத்துக் கொண்டார் பொறியாளர்.  அந்த வேலையைச் செய்து முடித்து, 15 நாட்கள் கழிந்து ஊதியம் வாங்கச் சென்றவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அதிக வேலை செய்தவர்களுக்குக், குறைவாகவும், குறைந்த வேலை செய்தவர்களுக்கு அதிகமாகவும் கூலி கொடுக்கப்பட்டது. விசாரித்தால்,  அவர் வேலை அளவுகள் ரெஜிஸ்டரில் குறிக்கப்பட்டுள்ள அளவை வைத்துத் தான் கூலி கொடுக்கப்பட்டது என பொறியாளர் கூறினார். வேலை செய்த மக்கள், ரெஜிஸ்டரை காண்பிக்கச் சொல்லிக் கேட்க, பொறியாளர் மறுத்துவிட்டார்.

 

உண்மை என்னவெனில், 100 பேர் வேலை செய்ததாகக் காண்பிக்கப்பட்டிருக்கும் ரெஜிஸ்டரில், 40 பேர் போலியாகச் சேர்க்கப்பட்டு, ஊதியம் திருடப்பட்டிருக்கும்.  மற்றவர்களுக்கு இஷ்டப்படி ஒரு கூலி எழுதப்பட்டு கொடுக்கப்படும். வேலையை மேற்பார்வை செய்ய வேண்டிய பொறியாளர் இடத்துக்கே வர மாட்டார். மேட் என அழைக்கப்படும் ஒரு மேஸ்திரி போன்றவர் வேலைகளை பகிர்ந்து கொடுத்தல், செய்த வேலையை அளத்தல், ரெஜிஸ்டரில் குறித்தல் போன்ற வேலைகளைச் செய்வார். அதில் வேலைக்கே வராதவர்களின் பெயரை எழுதி, ஊதியத்தைக் களவாடுவதும், உண்மையிலேயே வேலை செய்பவர்களுக்குக் கூலியைக் குறைத்துக் கொடுத்தல் போன்ற வேலையையும் செய்வார். அருணா, சங்கர், நிகில் மூவரும் அனைத்து உழைப்பாளிகளையும் ஒன்று திரட்டிப் பேசினார்கள். வேலை செய்ய வேண்டிய அளவுகள் குறிக்கப்பட்டன. உழைப்பாளிகள், கொடுக்கப்பட்ட அளவைவிட, அதிக வேலையைச் செய்து முடித்தார்கள். பின்னர், அவை அளக்கப்பட்டன – அனைவருமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை விட அதிகம் செய்திருந்தார்கள்.  ஆனால், இறுதியில் 5-6 ரூபாய் என்றே கூலி வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அருணா ராயும் நண்பர்களும் உண்மையை நிலை நாட்டி, சரியான கூலியை, மக்களுக்குப் பெற்றுத்தர முடியவில்லை.

அருணா ராய்க்கு இது புதிதல்ல. ஏற்கனவே, டிலோனியாவின் வெறும்பாதக் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த போது, அரசு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, குறைந்த பட்சக் கூலிக்குக் குறைவாக, ராஜஸ்தான் மாநில அரசு கொடுத்த போது, அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்று, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்வைப் பெற்றிருந்தார். ஆனாலும், அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.

 

இதையடுத்து, அருணாவும், நண்பர்களும், சோகன்கர் என்னும் கிராமத்தில் நிகழ்ந்த ஒரு அநீதியைத் தட்டிக் கேட்கப்போனார்கள். அந்த ஊர் கிராமத்தலைவர் ஒரு பெரும் நிலச்சுவாந்தார்.  சமூக அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொது நிலங்களை ஆக்கிரமித்திருந்தார். அவற்றை உபயோகிக்க தண்டல் வசூலித்து வந்தார். அதனால், பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அவர்கள் அருணாவையும், நண்பர்களையும் அன்போடு வரவேற்றனர். அருணாவும் நண்பர்களும், துவக்கத்தில் சிறு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தத் துவங்கினர். அதைக் கண்டு கோபம் கொண்ட கிராமத்தலைவர் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அஞ்சாமல், சோகன் கர் கிராம நில ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களைக் திரட்டத் துவங்கினர் – அந்தத் தகவல்களை உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகள் தர மறுத்தனர்.  அவர்கள் அருகில் உள்ள பீம் என்னும் வட்டார அலுவலகத்தில் உள்ள துணை நிலை ஆட்சியரை அணுகினார்கள். அவர் உதவியுடன், கிட்டத்தட்ட 450 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் கண்டு மீட்டார்கள். மகளிர் சங்கம் ஒன்றை அமைத்து, அந்த நிலங்களை, சமூக வனம் உருவாக்கும் அரசுத்திட்டத்தில் பகிர்ந்தளித்தார்கள். அந்தத் திட்டம் துவங்கப்பட்ட பசுமை அமாவாசை என அழைக்கப்பட்ட அந்த நாளில், அருணா ராய் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது. திட்டத்தில், பங்கு கொண்ட காக்கிஜி என்ற பாட்டி, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’. பாடலைப் பாடினார். அதைக் கேட்ட அருணா ராய், ‘உங்களுக்கு இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்தது யார்?’ எனக் கேட்டார். அதற்கு அவர்.’பாபு (Bapu)’, எனப் பதிலளித்தார். ‘உங்க அப்பாவா?’, எனக் கேட்ட அருணாவுக்கு வந்த பதில், ’இல்லை.. பெரிய பாபு (காந்தி)’. காக்கிஜியின் தந்தை, சபர்மதி ஆசிரமத்தில் மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியைச் செய்து வந்தார். அப்போது சிறுமியாக இருந்த காக்கிஜி, காந்தியிடம் இருந்து இந்தப் பாடலைக் கற்றுக்கொண்டிருந்தார்.

 

அந்த அரசு திட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்ட அருணாவும் நண்பர்களும், அதில் வேலை செய்த அனைவருக்கும் சரியான ஊதியத்தை வழங்கினர். முதன் முதலாக, அந்த மக்கள், தாங்கள் செய்த வேலைக்கான குறைந்த பட்சக் கூலியைப் பெற்றனர். அதை எதிர்த்த கிராமத் தலைவர் வன்முறை மிரட்டலை விடுத்துக் கொண்டேயிருக்க, மக்கள் வெகுண்டு, அங்கிருந்து ஒரு நடைப்பயணப் போராட்டம் செய்து, அந்த வட்டத் தலைநகரான பீமுக்குச் சென்று துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர். கிராமத் தலைவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட்து. ஒன்றுபட்டால் ஒழிய, அரசும், அதிகாரமும், தங்களுக்கு என்றும் நீதி வழங்கப்போவதில்லை என கிராம மக்களுக்கு புரியத் துவங்கியது. இதை முன்னெடுத்துச் செல்ல ஒரு இயக்கம் தேவை என மக்களும், அருணாவும், நண்பர்களும் உணர்ந்தனர்.

 

சோகன்கர் போராட்டத்தின் மிக முக்கிய கோஷம், ‘ஹம் ஹமாரா அதிகார் ஜான்தே.. நஹி கிஸிசே பீக் மாங்தே’. (எங்கள் உரிமை எங்களுக்குத் தெரியும்; யாரிடமும் பிச்சை கேட்கவில்லை). போராட்டத்தின் முடிவில், ’உழைப்பாளர், உழவர் சக்திக் கூட்டமைப்பு (மஜ்தூர், கிஸான் சக்தி சங்கடன்)’, என்னும் அமைப்பு உருவாகியது. இதில், தலைவர், தொண்டர், செயலாளர், பொருளாளர் என்னும் அடுக்கு முறை அமைப்பு இல்லை. அனைவரும் சமம். இதன் சின்னத்தை மக்களே வடிவமைத்தார்கள், ஆணும் பெண்ணும் சமம் என்னும் வகையில், ஆண் உருவம் கறுப்பிலும் (போராட்டம்), பெண் உருவம் சிவப்பிலும் (புரட்சி) என உணர்த்தும் ஒரு சின்னம் உருவாக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு மே-1 ஆம் தேதி இந்தக் கூட்டமைப்பு துவங்கப்பட்டது.

 

அந்த ஆண்டு வறட்சி நிவாரணப் பணிகளுக்கான குறைந்தபட்சக் கூலியான14 ரூபாய்க்குக் குறைவாக, உழைப்பாளிகள் யாரும் வாங்க மாட்டோம் என கூட்டமைப்பு அறிவித்தது.  இதற்குப் பின்பும், ராஜஸ்தானின் கொடும் கோடையில் உழைத்த மக்களுக்கு, பொதுப்பணித்துறையும், நீர்ப்பாசனத் துறையும், 8 ரூபாய் மட்டுமே கூலி கொடுக்க முன்வந்தன. 300 தொழிலாளர்கள் கூலியைப் பெற மறுத்து விட்டனர்.

 

முதற்கட்டமாக, 20 தொழிலாளர்கள், பீம் நகருக்குச்  சென்று துணை வட்டாட்சியரைப் பார்த்து, குறைந்த பட்சக் கூலிக்குக் குறைவாக நாங்கள் ஊதியம் பெற்றுக் கொள்ள மாட்டோம் என நோட்டிஸ் கொடுத்தார்கள். நடவடிக்கை எடுக்க மூன்று நாள் அவகாசம் கேட்டார் துணை வட்டாட்சியர். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஜூலை மாதன் 18 ஆம் தேதி,  300 உழைப்பாளிகளும் (175 பெண்கள்), ஒரு நாள் தர்ணாவில் ஈடுபட்டார்கள். துணை வட்டாட்சியர் ஊரைவீட்டு வெளியே போய்விட்டார். அவர் வரும்வரை தர்ணா என முடிவு செய்தார்கள். மாலையில், காவலர்கள் வந்து, தர்ணா செய்தவர்களைத் தாக்கத் துவங்கினார்கள். கலவரம் நிகழும் சூழலை நிறுத்தி, மீண்டும், அமைதியைக் கொண்டு வந்தார் ஷங்கர். வேறு வழியின்றி, துணை வட்டாட்சியர் தன் அலுவலகம் வந்து மீண்டும் வந்து அவர்களைச் சந்தித்தார். மாவட்ட ஆட்சியரைக் கலந்து பேச வேண்டும் எனக் காரணம் சொல்லி ஒரு வார கால அவகாசம் கேட்டார்.

 

ஜூலை 25 ஆம் தேதி தொழிலாளர்கள் மீண்டும் துணை வட்டாட்சியர் அலுவலகம் முன் கூடினார்கள். இந்த முறை பொதுப்பணித்துறைப் பொறியாளர்களும் இருப்பார்கள் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அன்று, அலுவலகத்தில் ஒருவர் கூட இல்லை. அடுத்த நாளில் இருந்து 17 பேர், உண்ணாவிரதம் துவங்கினார்கள். மாவட்ட நிர்வாகம் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கைவிரித்து விட்டது. உள்ளூர் சட்ட சபை உறுப்பினர், 17 பேர் செத்தால், மக்கள் தொகை குறையும் எனச் சொல்லிவிட்டார்.

ஆனால், பீம் நகரின் முக்கிய மனிதர்கள் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்கள்.  ஜூலை 30 க்குள் இது தீர்க்கப்படாவிட்டால், போராட்டத்தில் தாங்களும் இணைவதாக, பீம் நகர வியாபாரிகள் குழு அறிவித்தது.

 

நிலைமை மோசமடைவதை உணர்ந்த, மாவட்ட கலெக்டர், உதய்ப்பூரில் இருந்து வந்து, போராட்டக்காரர்களிடம் பேசினார்.  அடுத்த 3-4 நாட்களுக்குள், தொழிலாளிகளுக்கு, குறைந்த பட்சக் கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தார். (குறைந்தபட்சக் கூலி கொடுக்கப் பட்டாக வேண்டும் என உச்ச நீதி மன்றத் தீர்ப்பு இருந்தும் இந்த நிலை). இரண்டு நாட்களுக்குப் பிறகு, கூட்டமைப்பின் உறுப்பினர் இருவர், ஜெய்ப்பூர் சென்று, முதல்வரைச் சந்தித்தார்கள். அவரும், மாவட்ட ஆட்சியர் வாக்குறுதிப்படி, ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.  பத்துநாட்கள் கழித்து, நீர்ப்பாசனத்துறை, ஒத்துக் கொண்ட கூலியைவிடக் குறைவாக அளித்தது. பொதுப்பணித்துறையோ, பழைய கூலியை மட்டுமே தரமுடியும் எனப் பிடிவாதமாக நின்றது.

 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரு வாக்குறுதியைக் கொடுத்து திசை திருப்பியதை உணர்ந்த கூட்டமைப்பு, இந்தப் போராட்டத்தை எப்படி மேலெடுத்துச் செல்வது என யோசித்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவையும், அரசு இழைத்து வரும் அநீதியையும், பல தளங்கலிலும் எடுத்துரைத்து, போராட்டத்துக்கான ஆதரவைத் திரட்ட வேண்டும் என முடிவெடுத்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான, குறைந்த பட்சக் கூலி கொடுக்க முடியாது என்னும் அரசின் கொள்கையும், அதை நிறைவேற்றுவதில் உள்ள அதிகார துஷ்ப்ரயோகமும், ஊழலும் என, பிரச்சினை, பல்வேறு கூறுகளாய்ப் பிரித்து விவாதிக்கப்பட்டது. மிக முக்கியமாக, அரசின் செயல்பாடுகளில் உள்ள வெளிப்படையின்மை இதன் முக்கியக் காரணமாக வெளிப்பட்டது.

 

இதன் அடுத்தபடியாக, அக்டோபர் மாதம் 24/25 தேதிகளில், மாநில அளவிலான உழைப்பாளர், உழவர் மாநாடு ஒன்று பீம் நகரில் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதுமிருந்தும், அண்டை மாநிலங்களான மத்தியப்பிரதேசம், தில்லியிலிருந்தும் தொழிலளர்களும், பிரதிநிதிகளும் வந்து கலந்து கொண்டார்கள்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மத்திய அமைச்சரகச் செயலர் பி.டி,ஷர்மா ஐ.ஏ.எஸும்,  ஊரக அமைச்சரகத் துணைச் செயலர் கே.பி.சாக்சேனா ஐ.ஏ.எஸும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ‘எனது ஆதரவு உங்களுக்கு முழுதும் உண்டு. நீங்கள் கேட்பது குறைவு. நாட்டின் வளங்களின் மீது, ஏழைகளுக்கு முழு உரிமையும் தரப்பட வேண்டும். ஆனால், அது போராடாமல் கிடைக்காது’, என்றார் பி.டி,ஷர்மா.

 

வேட்டி குர்த்தாவில் வந்திருந்த பி.டி.ஷர்மாவையும், சரியாகத் தலை வாராமல் வந்திருந்த சாக்சேனாவையும், மாநில சி.ஐ.டி போலீஸார் நம்பவில்லை, ‘உண்மையைச் சொல்லுங்கள். அவர்கள் தீவிரவாதிகளா?’, எனக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். உள்ளூர் ஆட்சியர் வந்து, அவர்களுக்கு சல்யூட் வைத்த பின்னரே நம்பினார்கள். மாநாடு, ’அனைவருக்கும் குறைந்த பட்சக் கூலியைக் கட்டாயமாக்க வேண்டும்;  வேலைக்கான கூலி, ஒவ்வொருவரின் வேலை அளவின் படிக் கொடுக்க வேண்டும் – குழு அளவில் அல்ல; வேலை என்பதைத் தெளிவாக கால அளவு அல்லது வேலை அளவு என வரையறுத்துக் கொடுக்கப்படவேண்டும்’, என்னும் முடிவுகளை முன் வைத்தது. பி.டி.ஷர்மாவும், சாக்சேனாவும் அவற்றை ஆதரித்துக் கையெழுத்திட்டனர்.

 

போராட்டத்தை, கல்வி, பொருளாதார, சட்டத் தளங்களில் முன்னெடுக்கத் துவங்கியது கூட்டமைப்பு. ஜெய்ப்பூரில் உள்ள வளர்ச்சியியல் கழகத்தின் இயக்குநர் வியாஸ், இந்தத் தளத்தில் இயங்கும் முக்கிய ஆளுமைகளை அழைத்து ஒரு கருத்தரங்கை நடத்த முன்வந்தார்.  அரசு திட்டங்களைத் தீட்டுபவர்கள், உயர் அதிகாரிகள், பொருளியல் அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ நிறுவன அதிகாரிகள் என பல்வேறு தரப்பு அறிஞர்களையும் அழைத்து, நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் கருத்தரங்கை நடத்தினார் வியாஸ்.

 

அஹமதாபாத் மேலாண் கழக இயக்குநர் விஜய் ஷங்கர் வியாஸ், தில்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உபேந்திர பக்‌ஷி, ஜெய்ப்பூர் வளர்ச்சியியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் நாருலா,  ஊரக அமைச்சகச் செயலர் எஸ்.ஆர்.சங்கரன் ஐ.ஏ.எஸ், மனித வளத்துறைச் செயலர் அனில் போர்டியா,  ராஜஸ்தான் அரசு தலைமைச் செயலர் எம்.எல்.மேத்தா, பொருளியல் அறிஞர் காந்தா அஹூஜா, காந்தி உழைப்பாளர் கழகத்தின் இந்திரா ஹிர்வே,  டாக்டர். ஷாரதா ஜெயின் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட அந்தக் கருத்தரங்கில், கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:

 

  1. எல்லா அரசுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் (வறட்சி நிவாரணம் உட்பட), குறைந்த பட்சக் கூலி கட்டாயமாக்கப் படவேண்டும்.

 

  1. வேலை முடிந்து, மஸ்டர் ரோல் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

 

 

  1. வேலை – கால அளவிலோ / வேலை அளவிலோ – தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

 

  1. தொழிலாளர்கள் செயல் திறன் மேம்பாட்டில், தொழிற்சங்கங்களும், தன்னார்வல நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்க வேண்டும்

 

 

  1. திட்டங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அவை, திட்டம் நடைபெறும் இடங்களில், தெளிவாக, தகவல் பலகைகளில் இடம் பெற வேண்டும். அதன் மதிப்பு, கால அளவு, பயன் பெறும் நபர்கள், கொடுக்கப் பட வேண்டிய குறைந்த பட்சக் கூலி முதலியவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.

 

ஆனால், அரசு, அடுத்த ஆண்டு துவங்கிய (1991) ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மீண்டும் குறைந்த பட்சக் கூலியான 22 ரூபாய்க்குப் பதில் 11 மட்டுமே வழங்க முன்வந்தது. மீண்டும் பீம் நகரில் தர்ணா  – உண்ணாவிரதம் துவங்கியது.  தர்ணா துவங்கிய ஐந்தாம் நாள், மாநில முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத், தர்ணா பந்தலுக்கு வந்தார். குறைந்தபட்சக் கூலி வழங்க ஏற்பாடு செய்வதாக வாக்களித்து விட்டுச் சென்றார்.

ஆனால், அன்றிரவு, போலீஸை உபயோகித்து, தர்ணா செய்பவர்களைக் கலைத்துவிட முதல்வர் ஆணையிட்டுச் சென்றதாக தகவல்கள் வந்தன. நள்ளிரவில், இரண்டு வேன்கள் நிறைய காவலர்கள் வந்து, தர்ணா செய்தவர்களைத் தாக்கி இழுத்துச் சென்றார்கள். தர்ணா செய்தவர்கள் தங்களிடமிருந்த ‘தோல்’ (Dhol) என்னும் ராஜஸ்தானிய பெரும் தோல் வாத்தியத்தை பலமாக முழங்கினார்கள். ஒலிபெருக்கியில், மரண வீடுகளில் அழும் குரலில் பெரும் ஒலி எழுப்பினார்கள். சத்தம் கேட்டு மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடினர்.

 

அடுத்த நாள் காலை, மக்கள்  தர்ணா நிகழ்ந்த இடத்துக்கு முன் மீண்டும் குழுமினர். பீம் நகர முக்கிய மனிதர்களும், பத்திரிகைகளும், நிகழ்வைக் கண்டித்தனர். மத்திய அரசு ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்ட நிதியை நிறுத்தி வைத்தது. இதன் முடிவில், வேறு வழியின்றி, தேவ்துங்க்ரிக்கு அருகில் நடந்த ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும், தர்ணா பந்தலிலேயே ரூபாய் 22 எனக் கூலி வழங்கப்பட்டது.

 

இந்தப் போராட்டங்களின் பின்னர் நிகழ்ந்த கூட்டமைப்பின் உரையாடல்களில், மக்கள் பணி தொடர்பாக, ஆவணங்களை அரசும் அதிகாரிகளும் வெளிப்படையாக வைக்கத் தயங்குவது பற்றியே பெரிதும் பேசப்பட்டது. பலமுறை மக்கள் வைக்கும் குற்றச் சாட்டுகளை, திரும்பத் திரும்ப அரசும், அதிகாரிகளும் பொய் என்றே பதிலளித்து வந்தார்கள். அரசு ஆவணங்களைப் பகிர்தல் அரசு ரகசியச் சட்டப்படி ( Official secrets Act 1923) குற்றம் என்னும் பதிலும் வைக்கப்பட்டது. தகவல் என்பது அதிகாரத்தின் ஊற்றுக்கண். அதை அனைவரிடமும் பகிர்தல், அரசு என்னும் அதிகார சாம்ராஜ்யத்தை பலவீனப்படுத்திவிடும் என்பதால் அரசு அதிகாரிகள், எந்த ஒரு தகவலையும், பூதம் போல் காத்துவந்தார்கள். போராட்டங்களில் பெற்ற அனுபவங்களில் இருந்து, தேவ்துங்ரி மக்கள் அதை உணரத் துவங்கினார்கள்; வெளிப்படையாகப் பேசத்துவங்கினார்கள்

 

கூட்டமைப்பில் நிகழ்ந்த உரையாடல்களின் இடையே, ஒரு கிராமத்துப் பெரியவர்,  ’அரசு ஆவணங்கள் வெளிப்படையாக வைக்கப்படாதவரை, நாம் பொய்யர்களாகவேதான் இருப்போம்’, எனக் கூறியது ஒரு மந்திரம் போல கூட்டமைப்பின் சொல்லாடல்களை மாற்றியது. தகவலறியும் சட்டத்தின் ஆதி மந்திரம் போல அது ஒலித்துக் கொண்டேயிருந்தது.

 

அதேபோல, கூட்டமைப்பின் போராட்ட முறைகள் பற்றியும் அவற்றின் சாதக பாதகங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டன.  முந்தைய உண்ணாவிரதப் போராட்டங்களின் போது, உள்ளூர் சட்டசபை உறுப்பினர் ஒருவர்,  ’இவர்கள் செத்தால் சாகட்டும்; மக்கள் தொகையாவது குறையும்’,  என அலட்சியமாகப் பேசியது அலசப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் போராளிகளின் உடல் நிலை மோசமடைந்தால், திரும்பவும், சிகிச்சைக்காக, இதே அரசு நிறுவனங்களை எதிர்பார்த்து நிற்பதும், ஏற்கனவே உணவில்லாமல் போராடும் மக்கள் உடல் நிலை இன்னும் மோசமாவதும் சரியல்ல என முடிவெடுக்கப்பட்டது.  உண்ணாவிரதப் போராட்டங்களை, காலம் தாழ்த்துதல் என்னும் சிறு உத்தி மூலம், அதை சில நாட்களிலேயே அரசு எளிதில் வீழ்த்திவிடுகிறது, எனவே புதிய போராட்ட முறைகளை வடிவமைக்க வேண்டும் என கூட்டமைப்பு முடிவெடுத்தது.

 

மக்கள் குரல் கேட்டல்: (ஜன் சுன்வாய்):

 

அருணாவும் நண்பர்களும், உண்ணாவிரதம், போராட்டம் என்னும் வழக்கமான வழிகளை மாற்றி, மக்கள் குரல் கேட்டல் என்னும் ஒரு புதிய வழியை உருவாக்கினார்கள். கிராமத்தில், அனைவரும் கூடி, அங்கே நடந்துள்ள மக்கள் பணிக்கான செலவுகளை, பொதுவில் வைத்து விசாரிப்பது. அந்தப் பணியில் பங்கு பெற்ற உள்ளூர் தொழிலாளர்களும், பொதுமக்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி, பஞ்சாயத்துக் கணக்குகளை ஆடிட் செய்வார்கள். செய்யப்பட்ட வேலைகள் என்னென்ன, அதற்கான பொருட்கள் எங்கே வாங்கப்பட்டது. மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலி எவ்வளவு என்பதற்கான ரசீதுகள் போன்றவற்றை பரிசீலிப்பார்கள். இந்த நிகழ்வில், சுதந்திரமான பார்வையாளர்கள் 4-5 பேர் கலந்து கொள்வார்கள் (ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் பெரியவர்கள் என). பஞ்சாயத்து பணிகள் பற்றி மக்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் அவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்படும். அதற்கான ரெஜிஸ்டர்கள், பில்கள் முதலியன சரிபார்க்கப்படும். பஞ்சாயத்து தலைவர்கள் / ஊழியர்கள் தவறு செய்திருந்தால், அதற்கான பணம் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். எடுத்துக்காட்டாக, கிராமப் பள்ளிக்கூட்த்துக்கு காம்ப்வுண்ட் சுவர் கட்டியதாக கணக்கெழுதி, பணம் கையாடப்பட்டிருந்தால், அந்தப் பணம் சம்பத்தப்பட்ட ஊழியரிடமிருந்தே திரும்பப் பெறப்படும். ஒரு வேளை மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு தவறாக இருந்தால்,  எந்த நடவடிக்கையும் இருக்காது.

 

உழைப்பாளர் உழவர் கூட்டமைப்பு, இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் முன்பு, தெளிவான ஆதாரங்களைத் திரட்டி வந்ததால், பெரும்பான்மையான, குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின. இந்த நிகழ்வுகள், பொதுவான பார்வையாளர்கள் கலந்து கொள்ள ஒரு பெஞ்ச், டேபிள், ஒரு மைக், நிகழ்வுகளைப் படம் பிடிக்க ஒரு விடியோ கேமரா எனக் குறைந்த பட்ச உபகரணங்களோடு துவங்கும். பங்கு கொள்பவர்கள் நிதானமாகவும், மரியாதையாகவும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். தீர்ப்புகள், தரவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் தரப்படும் என்பது போன்ற விதிகள், இந்த நிகழ்வுகளின் உணர்வுக் கொந்தளிப்புகளை அடக்கி வைத்தன.

 

முதல் மக்கள் குரல் கேட்டல் நிகழ்வு, பாலி மாவட்டத்தில் உள்ள கோட் கிரானாவில் நிகழ்ந்தது. அங்கே ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த நிர்மல் வாத்வானி, அருணாவுக்கும் சங்கருக்கும் ஏற்கனவே பழக்கமானவர். மிகுந்த தயக்கத்துடன், பலத்த எதிர்ப்புக்கிடையே, வாத்வானி, கோட் கிரானா பஞ்சாயத்து ஆவணங்களைப் பிரதியெடுக்க அனுமதித்திருந்தார்.  அரசியல்வாதிகள், பெரும் பதற்றத்துக்குள்ளானார்கள்.  கோட் கிரானா மக்களைக் கடத்திச் சென்று, ஆட்சியர் முன்னிலையில், தவறு எதுவும் நடக்கவில்லை என மனுக்களில் எழுதிக் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

 

குறித்த நாளில், நேரத்தில் கோட் கிரானா மக்கள் குரல் கேட்டல் நிகழ்வு துவங்கியது. கல்வியாளர் ரேணுகா பமேச்சா, சமுக சேவகர்கள் சவாய் சிங்,  பங்கர் ராய் முன்னிலையில், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நிகழ்வு முடிவில், ஊழல்கள் அடையாளப்படுத்தப்பட்டன. ஐஏஎஸ் அதிகாரி நிர்மல் வாத்வானி, கோட்கிரானா இளநிலைப் பொறியாளர் மற்றும் கிராம சேவகர் மீது, போலீசில் புகார் கொடுத்தார்.

 

அரசு நிர்வாகம் கொந்தளித்து விட்டது. கிராம சேவகர்கள் யூனியன், தாங்கள் இதற்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என மறியலில் ஈடுபட்டது. ஆனால், பொதுமக்கள், மக்கள் சேவையில் இருப்பவர்கள், பல நேர்மையான அரசு அதிகாரிகளிடையே இதற்கு வரவேற்பு இருந்தது. மக்கள் குரல் கேட்டல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன. முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதைச் செய்த அலுவலர்களும், பஞ்சாயத்து மக்கள் பிரதிநிகள் கையாடிய பணத்தைத் திரும்பக் கொடுத்தார்கள். இதற்குக் கிடைத்த வரவேற்பையொட்டி, கூட்டமைப்பு நான்கு முக்கிய வேண்டுகோள்களை அரசின் முன் வைத்தது:

 

  1. பஞ்சாயத்து அளவில் எல்லா ஆவணங்களும் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.

 

  1. ஊழல் உறுதி செய்யப்பட்டால், அதைச் செய்த பஞ்சாயத்து அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் அவற்றுக்குப் பொறுப்பேற்க வகை செய்யப்பட வேண்டும்.

 

 

  1. ஆவணங்களைச் சமூகம் அல்லது மக்கள் பொதுவில் சரி பார்க்கும் முறை (social / people’s audit) ஒரு அரசு முறையாக ஆக்கப்பட வேண்டும்.

 

  1. கையாடப்பட்ட பணத்தை, கையாடியவர்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

 

 

மக்கள் குரல் கேட்டல் நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல்  5 ஆம் தேதி, பஞ்சாயத்து ஆவணங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்யப்படும் என சட்டசபையில்அறிவித்தார். அது செய்தித் தாள்களிலும் வந்தது. அந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு சென்று ஆவணங்களைக் கேட்ட போது, அரசாங்க ஆணை வரவில்லை என்னும் பதில் கிடைத்தது. ஒரு ஆண்டு காலம் வரை, முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

கூட்டமைப்பு ஒரு ஆண்டு காலம் காத்திருந்தது. முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அடுத்த ஆண்டு அதே நாள், பேவர் என்னும் நகரில், தர்ணாவைத் துவக்கினார்கள். இது உண்ணாவிரதப் போராட்டமல்ல. தொடர் தர்ணா. துவங்கும் முன்பு, சுற்று வட்டாரத்தில் இருந்த 300 கிராமங்களுக்கும் சென்று, மக்களின் ஆதரவை வேண்டினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் 4 நாட்கள் தர்ணாவில் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  தர்ணாவுக்காக ஒவ்வொரு வீடும் 1.5 கிலோ தானியங்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள். தர்ணா முடிய 1 மாதத்துக்கும் மேலாகும் எனவே, சரியான தயாரிப்புகளின்றி செல்வது தவறு எனத் தீர்க்க தரிசனத்தோடு கணித்தார்கள். போராட்டத்தில், முன்பே அறிமுகமாகியிருந்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஷ் மந்தர் கலந்து கொண்டார். பிரபல பத்திரிகையாளர்களாகிய குல்தீப் நய்யார் மற்றும் நிகில் சக்ரவர்த்தி கலந்து கொண்டது, பத்திரிகையுலகில், இந்தப் போராட்டம் பெருமளவில் பரவவும், ஆதரவு பெறவும் வழிவகுத்தது. சமுக சேவகர் மேதா பட்கர், மும்பையில், மிக நேர்மையான அரசு அதிகாரியாக அறியப்பட்டிருந்த  சுனீல் கைர்நார் போன்றோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

 

முப்பதாவது நாள், போராட்டம் ஆஜ்மீருக்கு நகர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு, தலைநகர் ஜெய்ப்பூரை அடைந்தது. தலைமைச் செயலகத்துக்கு நூறு அடி தொலைவில்,  சாலையில் ஓரத்தில் டெண்ட் அடித்து, தர்ணா செய்பவர்கள் அமர்ந்தனர்.  தர்ணா செய்பவர்களில் பெரும்பாலானோர், ‘காக்ரா’ என்னும் ஒருவகை பாவாடை போன்ற உடையை அணிந்திருப்பவர்கள். அதை அணிந்த முட்டாள்களா அரசை எதிர்ப்பது என நிர்வாகத் தாழ்வாரங்கள் கேலி பேசின.

 

போராட்டத்தில் கலந்து கொண்ட ப்ரபாஷ் ஜோஷி என்னும் இண்டியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழ் குழுமத்தில், பல்லாணடுகள் பணிபுரிந்த முதுபெரும் பத்திரிகையாளர். அவர், தில்லி சென்று, ‘ஹம் ஜானேங்கே; ஹம் ஜீயேங்கே’, (நாம் அறிந்து கொள்வோம்; நாம் வாழ்வோம்) என்னும் தலைப்பில், மிகவும் புகழ்பெற்ற ஒரு கட்டுரையை எழுதினார். பின்னாளில், தகவலறியும் சட்டப் போராட்டத்தின்,  போர்க்குரலாக இந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அந்தக் கட்டுரையில், அவர், இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குக் காரணம்,  வழக்கமான தொழிலாளக் கூட்டமைப்பின் தலைவர்கள் போலல்லாது, அருணா, ஷங்கர், நிகில் மூவரும், ராஜஸ்மண்ட் மாவட்டத்தின் ஏழை மக்கள் திரளில் ஒரு அங்கமாக வாழ்ந்ததே மிக முக்கிய காரணம் என எழுதியிருந்தார்.

 

இந்தப் போராட்டத்தில், வழக்கமான காந்திய வழிமுறைகளான உண்ணாவிரதம் போன்றவை பயன் தராத போது, புது வழிகளைச் சமைத்தார்கள். தினசரி வரவு செலவுக் கணக்குகளை, உண்ணாவிரதப் பந்தலுக்கு வெளியே எழுதி வைத்தார்கள். தள்ளுவண்டிக் காய்கறி வணிகர்கள் காய்கறிகளை இலவசமாகத் தந்தார்கள். சிறு வணிகர்கள், தானியங்களைத் தந்தார்கள். தேசிய நாடகப் பள்ளியில் இருந்து, கலைஞர்கள் வந்து, உள்ளூர் மக்களுக்கு பயிற்சி தந்து, தெரு நாடகங்களை நடத்தினார்கள். உள்ளூர் கபீர் மற்றும் சுஃபி பாடல்கள் பாடும் கலைஞர்கள் வந்து பாடல்களை புதிதாய்ப் புனைந்து பாடினார்கள். அருணா முதல் அனைத்துத் தொண்டர்களும், தெருக்களில் உணவு தயாரித்து, உண்டு, உறங்கி வாழ்ந்தார்கள். மொத்தத்தில் போராட்டம் ஒரு மக்கள் திருவிழாவாக, கூத்தும் பாட்டுமாய் அமர்க்களப்பட்டது.

 

போராட்டம், நடந்து கொண்டிருந்த போது, அருணாவின் கணவர் பங்கர் ராய் நடத்தி வரும் வெறும்பாதக் கல்லூரிக்கு வரும் வெளிநாட்டு உதவி பற்றி விசாரிக்க நேரிடும் என, மாநிலத்தின் தலைமைச் செயலர் உழைப்பாளர் உழவர் சக்திக் கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் மிரட்டல் விடுத்தார்.

 

அடுத்த சில நாட்களில், வெறும்பாதக் கல்லூரியின் எல்லா ஆவணங்களும், ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் முன்னிலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. குறைந்தபட்சக் கூலியை ஊதியமாகப் பெற்று, மக்களுக்காக வாழும் மனிதர்களிடம் மிரட்டிப் பயமுறுத்த உயிரைத் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது?

 

இந்தப் போராட்டத்தின் விளைவாக, மக்கள் தகவலறியும் உரிமைக்கான தேசிய இயக்கம் ஒன்று துவங்கப்பட்டது. (National Campaign for People’s Right to Information NCPRI). இதன் இலக்குகள் இரண்டு.

 

அ. தகவலறியும் சட்டத்துக்கான ஒரு வரைவை உருவாக்குவது

 

ஆ.  தகவலறியும் சட்டத்துக்கான ஒரு நாடு தழுவிய இயக்கத்தை உருவாக்குவது.

 

அருணா ராயின் நண்பரும், ஐஏஎஸ் அதிகாரியுமான, ஹர்ஷ்மந்தர் இதை முன்னெடுத்தார். அவர் பணிபுரிந்த, ஐஏஎஸ் அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் லால் பகதூர் சாஸ்திரி அகதெமியின் இயக்குநர், என்.சி.சக்சேனாவுடன், தகவலறியும் சட்டம் உருவாக்க, தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை, ஒருங்கிணைத்து நடத்தினார்.  அது, ஐஏஎஸ் அதிகாரிகளின் பயிற்சிக் கூடமான, டேராடூனில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அகதெமியில் நிகழ்ந்தது. கூட்டத்தில், ‘பாராளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தில் வைக்கப்படும் எல்லாத் தகவல்களும் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும்’, என்னும் மிக முக்கியமான ஒரு கருத்தை, அகதெமியின் இயக்குந சக்சேனா முன் வைத்தார். முடிவில், ஒரு மாதிரி முன்வரைவு உருவாக்கப்பட்டது. அந்த மாதிரி முன்வரைவை, இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதி சாவந்த் அவர்களிடம் அளித்து, மெருகேற்றக் கேட்டுக் கொண்டார்கள். சாவந்த் இறுதி செய்த அந்த வரைவை, அவர்கள், அரசின் முன் வைக்கப்பட்டது

 

மக்களுக்காக, மக்களால் முன்மொழியப்பட்டு, மக்கள் சேவகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சட்ட வரைவு, மக்களாட்சியின் நான்காம் தூணான இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலால் மெருகேற்றப்பட்டு,  செப்டம்பர் 30, 1996 அன்று ஐக்கிய முண்ணணியின் பிரதமர் தேவே கௌடாவிடம் அளிக்கப்பட்டது. அவர் நுகர்வோர் நல உரிமைகளுக்காக போராடி வந்த ஹெச்.டி.ஷோரி தலைமையில், இதை ஆராய ஒரு கமிட்டி அமைத்தார். அவர்கள் 1997 ஆம் ஆண்டு ஒரு சட்ட வரைவை மத்திய அரசு முன்பு வைத்தார்கள்.

 

இதற்கிடையில், மாநில அளவில், 1997 ஆம் ஆண்டு, தமிழகத்தில் முதலிலும், பின்னர் கோவாவிலும் தகவலறியும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ஆனால், தகவல் அறிதலின் முக்கியத்துவத்தை, சாதாரண மனிதர்கள் உணர்ந்த அளவுக்கு, மத்திய அரசும், அதிகாரிகளும், இதை உணர்ந்து கொள்ள வில்லை. எனவே, ஒவ்வொரு நிலையிலும் இது தாமதப்பட்டது.

 

இறுதியில், பல மத்திய அரசுகளைத் தாண்டி, இது 2002 ஆம் ஆண்டு சட்டமாக வெளிவந்தது. ஆனால், அதை அரசு செயல்படுத்தாமல், கிடப்பில் போட்டது. 2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின், குறைந்த பட்சச் செயற்திட்டத்தில், தகவலறியும் சட்டம் மேம்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது.  குறைந்த பட்சச் செயற்திட்டத்தை நிறைவேற்ற, பிரதமருக்கு உதவியாக தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன், சூழியல் அறிஞர் மாதவ் காட்கில், அருணா ராய், வளர்ச்சிப் பொருளியில் அறிஞர் ஜான் த்ரெஸ் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தார்கள். தனது முதல் அமர்விலேயே, இந்தக் குழு தகவலறியும்  சட்ட வரைவை முன் வைத்தது.  இது பாராளுமன்றத்தால், ஜூன் 12, 2005 ல் நிறைவேற்றப்பட்டு, அதே  ஆண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி  முதல் அமுலுக்கு வந்தது.

இப்படியாக, 1987 ஆம் ஆண்டு, வறட்சி நிவாரணப் பணிகளுக்கான அடிப்படைக் கூலியான 11 ரூபாயை ஊழல் செய்யாமல் வழங்க வேண்டும் என தேவ்துங்ரியில் துவங்கிய சிறு போராட்டம், 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் தகவலறியும் சட்டமாக வெளிவந்தது. தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் முதல் சத்யாக்கிரகம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிந்தது. அதன் பின்னர், இந்தியாவில் அவர் ஒவ்வொரு போராட்டத்துக்கும் எட்டிலிருந்து பத்து ஆண்டுகள் வரை உழைத்து, உருவேற்றி, மக்களியக்கமாக நாடெங்கும் வெற்றிகரமாக நிகழ்த்தியது வரலாறு. இந்தப் போராட்டமும், அந்த வகையில், ஒரு சிறு பொறியாகத் துவங்கி, அரசு நிர்வாகத்தை மேம்படுத்த, அதைக் கண்காணிக்க உதவும் ஒரு சட்டமாக மாற 18 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

 

2005 ஆம் ஆண்டு, பொருளாதார வளர்ச்சியின் பலன்களை, மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கோடு, ‘மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்’, உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில், வளர்ச்சிப் பொருளியல் நிபுணர் ஜான் த்ரெஸ்ஸும், அருணா ராயும் முக்கியப்பங்களித்தனர்.  இது தவிர, இந்தக் காலகட்டத்தில், கல்விக்கான உரிமை (right to education), அடிப்படை உணவுப் பாதுகாப்பு (Food security Act) போன்றவையும் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்திலும், அருணா ராயின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

 

கணவர் பங்கர் ராய், அஜ்மீர் மாவட்டத்தின் டிலோனியா கிராமத்திலும், அருணா ராய், ராஜஸ்மண்ட் மாவட்டத்தின் தேவ்துங்ரியிலும், ஒவ்வொரு நாளும், ஏழைமக்களின் வாழ்க்கையை ஒரு படி முன்னேற்றும் முயற்சியில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காந்தி,வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பாலாவின் கட்டுரைகள்

 

 

https://www.thehindu.com/features/magazine/An-extraordinary-existence/article12351092.ece

 

 

https://www.dnaindia.com/just-before-monday/interview-the-road-to-information-2628403

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒரு மொழியாக்கம்

$
0
0

 

 

ராகுல் காந்தியின் உரையை ஜோதி அழகாக மொழியாக்கம் செய்கிறார். வேண்டுமென்றால் சில இணைப்புச்சொற்கள் மிகுதி என்னும் குறையைச் சுட்டிக்காட்டமுடியும்.

 

முன்னர் தங்கபாலுவும், பி.ஜே.குரியனும் மொழியாக்கம் செய்து நகைப்புக்கு இடமானார்கள். அவர்கள் செய்த பிழைகள் என்னென்ன? முதலில் மொழியாக்கம் என்பது ஒரு மொழித்தொழில்நுட்பம். அதில் தேர்ச்சி கொண்டவர்கல் மொழியாக்கம் செய்யவேண்டும். மாறாக கட்சியில் முக்கியத்துவம் கருதி மொழியாக்கம் செய்ய முன்வருகிறார்கள். ராகுலின் அருகே நின்றிருக்கும் வாய்ப்பு என்பது பெரிதாகத்தெரிகிறது. அதை இன்னொருவருக்கு கொடுக்கும் உளநிலை இல்லை. தங்கபாலுவுக்கு ஆங்கிலம் சிக்கல். பி.ஜெ.குரியனுக்கு செவி சிக்கல்

 

இரண்டாவது, முதற்பேச்சாளர் பேசும்போது திரும்பி அவரைப் பார்க்கக்கூடாது. அவருடைய உடலசைவுகள், முகபாவனைகள் நம்மை திசைதிருப்பு. கூட்டத்தைப் பார்க்கவேகூடாது. அவர்களில் நம்மை கவனம் கலைக்கும் ஏதேனும் நிகழும். குனிந்து பார்ப்பதே நன்று.

 

மூன்றாவது, உறுதியாக குறிப்பேட்டில் பேச்சாளர் சொன்னவற்றை குறித்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் பேச்சாளர் பேசும்போது சொல்லும் கருத்துகளுக்கு நம் உள்ளம் எதிர்வினை ஆற்றுகிறது. ஓர் உரையாடலே அங்கே நிகழ்கிறது. அவர் நான்கு கருத்துக்களைச் சொல்லி முடித்தால் நாம் இறுதியான கருத்தில் வந்து நின்றிருப்போம். அங்கிருந்து முன்னால் சென்று முதல்கருத்திலிருந்து வரிசையாக மொழியாக்கம் செய்வதற்கு இறுதிக்கருத்தில் இருந்து நம் உள்ளத்தை துண்டித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அது எளிதல்ல.

 

நமக்கு சில கருத்துக்கள் நினைவிலிருக்காது. சிலகருத்துக்கள் நமக்கு முக்கியம் எனத் தோன்றும். அந்தக்கருத்துக்களை  நாம் முக்கியத்துவம் கொடுத்து சொல்லிவிடுவோம். ஆகவே வரிசையாக கருத்துக்களை  சுருக்கமாக எழுதியபடியே செவிகூர்வது நல்லது. முழுமையாக எழுதக்கூடாது. முக்கியமான சொற்களை மட்டும் எழுதினால் போது. கலைச்சொற்கள், தரவுகளை கண்டிப்பாக எழுதவேண்டும்

 

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரைகளையே பெரும்பாலான தலைவர்கள் பேசுகிறார்கள். அவற்றை முன்னரே மொழியாக்கம்செய்தும் வைத்திருப்பார்கள். ஆனால் ராகுல் காந்தி அடிப்படையான விஷயங்களையே பேசுகிறார். ஆனால் அவற்றை அங்கே அந்தமேடையில் பேசுகிறார். ஆகவே மொழியாக்கச்சிக்கல்கள் எழுகின்றன

 

ஆனால் இந்த குளறுபடி மொழியாக்கங்களை எதிர்கொள்கையில் ராகுலிடம் இருக்கும் இளமைக்குரிய இறுக்கமற்ற நட்பான பாவனையும், இயல்பான சிரிப்பும் ,மனம்கவர்வதாக உள்ளன. தலைவன் என்பவன் மற்ற மனிதர்களை மதிப்பவனாக, பிறருக்குச் செவிகொடுப்பவனாக, நல்லெண்ணம்கொண்டவனாக மட்டும் இருந்தால்போதும். படிப்பு, திறமை, கூர்மதி எதுவுமே தேவையில்லை, அவற்றை அளிக்க ஆயிரம்பேர் வந்து நிற்பார்கள். நாடு நிபுணர்களால் ஆளப்படுகிறது. ஆள்பவன் ஆளப்படுபவர்களுக்கும் அந்நிபுணர்களுக்குமான ஒரு நல்ல ஊடகம் மட்டுமே என்னும் எண்ணம் ஏற்பட்டது.

 

நான் பல மேடைப்பேச்சுக்களை மொழியாக்கம் செய்திருக்கிறேன். மேலே சொன்ன எதையும் கடைப்பிடித்ததில்லை.  நித்யாவின் நீண்ட உரைகளை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். கல்பற்றா நாராயணன் போன்றவர்களின் செறிவான இலக்கிய பேருரைகளையும் மொழியாக்கம் செய்திருக்கிறேன் .வரிக்குவரி, சொல்லுக்குச்சொல் மொழியாக்கம் செய்வேன்.பிழைநிகழ்ந்ததில்லை. காரணம் நான் இலக்கியம், தத்துவம் அல்லாத மொழியாக்கங்களைச் செய்ததில்லை. பொதுவாக நினைவில் அடுக்கிக்கொள்ளும் பயிற்சி உண்டு. அது மிக எளியதுதான். முயற்சி எடுக்கவேண்டும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10

$
0
0

அங்கநாட்டு அரசன் கர்ணனின் உடல் கிடந்த வட்டத்தைச் சுற்றி அமர்ந்திருந்த பன்னிரண்டு சூதர்களில் இரண்டாமவரான காளையர் சொன்னார் “தோழரே கேளுங்கள், பதினைந்தாம் நாள் போர்முடிந்த அன்று மாலை அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் அவைக்கூடலில் அவர் என்றுமிலாத பதற்றத்தையும் தளர்வையும் கொண்டிருந்தார். அவரை எப்போதும் கூர்ந்துநோக்கிக் கொண்டிருக்கும் வழக்கம்கொண்ட துச்சாதனன் அந்தப் பதற்றத்தை தானும் அடைந்தார். பீஷ்மரின் படுகளத்திற்குச் சென்றபோது இருந்த நிமிர்நடையை அவர் இழந்துவிட்டிருந்தார். அங்கிருந்து திரும்பும்போதே ‘நான் ஓய்வெடுக்கவேண்டும். மதுவுடன் ஏவலரை அனுப்பு’ என்று துச்சாதனனிடம் சொன்னார்.”

துச்சாதனன் அவைக்கூடத்திற்கு வந்தபோது அங்கே கிருபரும் சல்யரும் இருந்தனர். கிருபர் “கர்ணன் வந்துகொண்டிருக்கிறான். நாம் முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது” என்றார். துச்சாதனன் “முடிவுகளை நாமே எடுப்போம். மூத்தவர் அதற்கான உளநிலையில் இல்லை” என்றான். “ஆணையை இடவேண்டியவர் அவர். அவரில்லாது அவை கூடமுடியாது” என்றார் சல்யர். கர்ணன் வந்து சல்யருக்கும் கிருபருக்கும் தலைவணங்கி முகமன் உரைத்து அமர்ந்தான். கிருபர் “அஸ்வத்தாமன் தந்தையை எரியூட்டும்பொருட்டு சென்றிருக்கிறார். அச்சடங்குகள் முடிந்து அவர் இங்கே வர பொழுது பிந்துமென எண்ணுகிறேன். அவர் இல்லாமலேயே இன்றைய முடிவுகளை நாம் எடுத்தாகவேண்டும்” என்றார்.

“ஏன் இன்றிரவே முடிவை எடுத்தாகவேண்டும்?” என்று துச்சாதனன் கேட்டான். “நாளை முதற்புலரியில் நம் படைகள் எழுகையில் போருக்கென உளம் அமைந்திருக்கவேண்டும். இன்று அவர்கள் துயில்வதற்குள் இங்கே அடுத்த படைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு படைசூழ்கை அமைக்கப்படும் செய்தி சென்று சேர்ந்திருக்கவேண்டும்” என்றார் சல்யர். “அரசர் உளம்சோர்ந்திருப்பார் என்றும் படையெழுவதுகூட நிகழாதாகலாம் என்றும் நம் வீரர்கள் எண்ணுவார்கள். இரவில் எஞ்சிய எண்ணமே காலையில் முளைக்கிறது… அச்சோர்வுடன் அவர்கள் எழுவார்களென்றால் படைசூழ்கையை அமைத்து அவர்களை களம்நிற்கச் செய்ய இயலாது.” துச்சாதனன் “அவர்களில் பெரும்பாலானவர்கள் துயில்கொண்டுவிட்டனர்” என்றான். “ஆம், ஆனால் இறுதியாகத் துயில்பவரே காலையில் எழுபவர். அவர்கள் அறியட்டும் அரசரின் உள்ளத்தை” என்றார் சல்யர்.

“நாம் நம் படையின் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும். படைசூழ்கையை இறுதிசெய்யவேண்டும்” என்று கிருபர் மீண்டும் சொன்னார். “அரசரை அழைத்துவர ஏவலர் செல்லட்டும்.” துச்சாதனன் “மூத்தவர் முன்னரே சொல்லிவிட்டார், அங்கர் படைத்தலைமை கொள்ளட்டும் என்று. நம் தரப்பின் முதன்மை வீரர் என்று அங்கரை மூத்தவர் சொன்னார். ஒருவேளை இவ்வெற்றி அவருக்குரியதென முன்னரே தெய்வங்கள் வகுத்திருக்கும் போலும். ஆகவேதான் பீஷ்மரும் துரோணரும் களம்பட்டார்கள். அங்கர் கையால் பாண்டவர்கள் கொல்லப்படவும் எனக்கு மணிமுடி சூட்டப்படவும் ஊழ் பாதை வகுத்துள்ளது என்றார். நாமனைவரும் கேட்டது அது” என்றான். “நான் வணங்கும் தெய்வங்களே என்னை கையொழிந்தாலும் சரி, உளம் சோரப்போவதில்லை. என் தெய்வமே வில்லெடுத்து எனக்கெதிராக வந்து நின்றாலும் சரி, களம் நில்லாதொழியப்போவதில்லை என்றார் மூத்தவர். அவருடைய அச்சொற்களே போதும்.”

சகுனி “அரசர் வரட்டும். அவருடைய சொல் நமக்குத் தேவை. இந்த அவையில் அவரும் இருந்தாகவேண்டும்” என்றார். “அவர்…” என்று துச்சாதனன் சொல்லத்தொடங்க “அவரில்லாமல் எடுத்த முடிவு என எந்நிலையிலும் எவரும் சொல்லலாகாது. நமக்கே அவ்வண்ணம் தோன்றுதலும் கூடாது” என்றார் சகுனி. துச்சாதனன் மேற்கொண்டு பேசாமல் தலைவணங்கி வெளியே சென்று ஏவலனிடம் அரசரை அழைத்துவரும்படி ஆணையிட்டுவிட்டு வாயிலிலேயே நின்றிருந்தான். துரியோதனன் எந்நிலையில் இருக்கிறான் என்பதைப்பற்றி எண்ணிக்கொண்டு நின்றிருந்தபோது ஒருகணம் குண்டாசி நினைவிலெழுந்தான். எத்தனை அவைகளிலிருந்து குண்டாசியை தூக்கிக்கொண்டு சென்று வெளியேற்றியிருக்கிறோம் என எண்ணி அவ்வெண்ணம் ஏன் வந்தது என தன்னை கடிந்துகொண்டான்.

துரியோதனன் வரும்போதே மூக்கில் வழியுமளவுக்கு மது குடித்து நிலையழிந்திருந்தான். தள்ளாடியபடி தேரிலிருந்து இறங்கி இரு கைகளையும் வீசியபடி நடந்து வந்தான். “ஏன் வழியில் நின்றிருக்கிறாய், அறிவிலி!” என காவலனை அறைய கை தூக்கினான். துச்சாதனன் “மூத்தவரே” என்றான். “அறிவிலிகள்” என்று துரியோதனன் வசைபாடினான். புளித்த ஏப்பத்துடன் “அனைவரும் அறிவிலிகள்… கீழ்மக்கள்” என்றான். பீடத்தில் சென்று அமர்ந்தபோது அவன் இமைகள் தடித்து சரிந்துகொண்டிருந்தன. வாயை இறுக்கி தாடையில் பற்கள் நெரிபடும் அசைவு தெரிய சிவந்த விழிகளால் அவையை கூர்ந்து நோக்கினான். “அவை கூடிவிட்டது” என்று கிருபர் சொன்னபோது “ஆம்… அது தெரிகிறது” என்று உறுமினான்.

அவன் உடல் மிக வெளிறியிருந்தது. மெல்லிய நடுக்கும் தெரிந்தது. வெளித்தெரியாத புண் ஏதேனும் அமைந்திருக்குமோ, நோய் கொண்டிருப்பானோ என துச்சாதனன் அஞ்சினான். சகுனி தன் காலை இழுத்து வந்து இருக்கையில் அமர்ந்ததும் கிருபர் “நாம் தொடங்கலாம். இப்போது முறைமையெல்லாம் தேவையில்லை. நாம் சிலரே இருக்கிறோம்” என்றார். “ஆம், மிகச் சிலரே எஞ்சுகிறோம்” என்று கூறி துரியோதனன் புன்னகைத்தான். பின்னர் திரும்பி வாய்மணம் கொண்டுவர கைகளால் ஆணையிட்டான். ஏவலன் அப்பால் சென்றதும் அவன் துச்சாதனனை நோக்கி புன்னகைத்தான். அறிவின்மை துலங்கிய அப்புன்னகை துச்சாதனனை திடுக்கிடச் செய்தது. அவன் விழிகளை விலக்கிக்கொண்டான்.

கிருபர் துரியோதனனை நோக்கியபின் “நாம் முடிவெடுக்கவேண்டிய பொழுது இது. நமக்கு பேரிழப்பு நிகழ்ந்துள்ளது. நம் படைத்தலைவரும் ஆசிரியருமான துரோணர் மறைந்துவிட்டார்” என்றார். துரியோதனன் வாய்மணத்தை கைகளில் வைத்தபடி “என்ன?” என்றான். “துரோணரின் மறைவு குறித்து சொல்லப்பட்டது” என்றார் கிருபர். “ஆம், ஆசிரியர் மறைந்தார்… அவர் களம்பட்டார்” என்றான் துரியோதனன். “அவர் முழு வீரத்தை வெளிப்படுத்தி விண்புகுந்தார்” என்றார் சல்யர். துரியோதனன் “என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது… விரிவாகக் கூறுங்கள் என்ன நிகழ்ந்தது?” என்றான். சற்றே எரிச்சலுடன் துச்சாதனன் “மூத்தவரே, என்ன நிகழ்ந்ததென்று பலமுறை பலர் கூறிவிட்டனர். மீள மீள அதை கேட்பதில் பொருள் இல்லை. இன்றைய போர் முடிந்துவிட்டது. இனி நிகழவிருப்பதென்னவென்று நாம் எண்ணவேண்டிய தருணம் இது” என்றான்.

துச்சாதனனை பொருளற்ற விழிகளுடன் வெறித்து நோக்கிய துரியோதனன் “ஆம், நாம் என்ன செய்யவேண்டுமென்பதை இப்போது எண்ணவேண்டும். உடனே திட்டங்களை வகுக்க வேண்டும். நாம் போருக்கெழுகிறோம். ஒருபோதும் அடிபணிய மாட்டோம்” என்றான். எழுந்து இரு கைகளையும் விரித்து “என்ன நிகழ்ந்தாலும் சரி, தெய்வங்களே நமக்கெதிர் வந்தாலும் சரி, நாம் வெல்வோம்! நின்று பொருதுவோம்! இந்த மண் எனக்குரியது! இந்த முடி என் முன்னோர் சூடியது! இப்பாரதவர்ஷம் நான் ஆளும்பொருட்டு விரிந்திருப்பது! கடல் சூழ் இந்த ஞாலம் என் புகழ்பாடக் காத்திருக்கிறது” என்றான். எங்கிருந்து அச்சொற்களை அவன் பெற்றான் என்று துச்சாதனன் எண்ணினான். அவை சூதர்களின் மொழியில் எழுந்து வந்தவை போலிருந்தன. அத்தருணத்தை அவை இளிவரல் நாடகம்போல் ஆக்கின.

“நான் எழுயுகத்தின் மைந்தன்! என் தெய்வத்தால் வழிகாட்டி அழைத்துச்செல்லப்படவிருப்பவன். விழைவொன்றே அறமென்றாகும் கலியுகத்தின் தலைவன். என்னை வெல்ல எவராலும் இயலாது. நான் இங்கு இன்று மும்முடி சூடிய பேரரசனாகத் திகழ்கிறேன். என்றும் என் கொடிவழியினர் நாவிலிருப்பேன். சூதர்களின் எண்ணத்தில் இருப்பேன். என்றும் அழியாதவன், அக்கதிரவனைப்போல!” அவன் கைகள் நிலைத்திருக்க ஒருமுறை விக்கலெடுத்து “ஆம், கதிரவனைப்போல. அல்லது வடமலைகளைப்போல” என்றான். அச்சொற்களால் மூச்சிளைத்து மீண்டும் அமர்ந்து தன் தலையை பற்றிக்கொண்டான். கிருபர் அவனுடைய சொல்வதை பொறுமையின்மையுடன் நோக்கியபின் “நாம் பேசவேண்டியதை தொடங்குவோம்” என்றார். “நான் வெற்றியை மட்டுமே ஏற்றுக்கொள்வேன்” என தலையைப் பிடித்து குனிந்து அமர்ந்தபடி துரியோதனன் சொன்னான். எவரும் மறுமொழி உரைக்கவில்லை.

வாயிற்காவலன் வந்து வணங்கி “உத்தரபாஞ்சாலரான அஸ்வத்தாமன்” என அறிவித்தான். துரியோதனன் “அவர் எங்கே?” என்று முனகினான். சகுனி கைகாட்ட காவலன் சென்று அஸ்வத்தாமனை உள்ளே அனுப்பினான். அஸ்வத்தாமன் துரியோதனனை நோக்கி தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்தான். “ஆசிரியர் விண்ணேகிவிட்டாரா?” என்றார் சல்யர். அதை அவ்வண்ணம் அவர் கேட்டிருக்கலாகாது என துச்சாதனன் உணர்ந்தபோதே கிருபர் எரிச்சலுடன் “நாம் இங்கே நாளைய போர்சூழ்கையைப் பற்றியும் படைத்தலைமை குறித்தும் பேசுவதற்காக கூடியிருக்கிறோம்” என்றார். அஸ்வத்தாமன் “அவை பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. இறுதிச்சொல் எடுப்பது மட்டுமே எஞ்சுகிறது” என்றான்.

துரியோதனன் உள்ளிருந்து எழுந்த எண்ணத்தால் துரட்டி குத்தப்பட்ட யானையென திடுக்கிட்டு எழுந்து துச்சாதனனிடம் “என்ன நிகழ்ந்தது? எவ்வாறு கொல்லப்பட்டார் ஆசிரியர் துரோணர்?” என்றான். துச்சாதனன் “நாம் இந்த அவை நிகழ்வுகள் என்ன என்பதை பார்ப்போம் மூத்தவரே, நமக்கு பொழுதில்லை” என்றான். “ஆம், அவை நிகழ்வுகளை நாம் பார்க்கவேண்டியுள்ளது. நமக்கு பொழுதில்லை” என்ற துரியோதனன் “அங்கரே, அவை நிகழ்வுகள் என்ன? அஸ்வத்தாமன் எங்கே?” என்றான். “இங்கிருக்கிறேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “சொல்லுங்கள்! நாம் என்ன செய்யவிருக்கிறோம்? நமது படைசூழ்கை என்ன?” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமன் “முதலில் நாம் படைத்தலைவரை தேர்ந்தெடுத்தாகவேண்டிய இடத்திலிருக்கிறோம், அரசே” என்றான். சல்யர் “ஆம், முதலில் அதைப்பற்றிய ஆணை எழுக!” என்றார்.

“நமது படைத்தலைமை துரோணருக்கு உரியதல்லவா? வழக்கம்போல் அவர் வழிநடத்தட்டும் நமது படைகளை” என்று துரியோதனன் சொன்னான். திரட்டிக்கொண்ட பொறுமையுடன் துச்சாதனன் “மூத்தவரே, இன்று மாலை துரோணர் களம்பட்டார். அதன் பொருட்டே இங்கு அவை கூடியிருக்கிறோம்” என்றான். “ஆம், அவர் புகழுடல் அடைந்தார். களம்நின்று எதிரிகளை முற்றழிக்கப்போகும் தருணத்தில் வஞ்சத்தால் கொல்லப்பட்டார். அறிவேன். நாம் என்ன செய்யவிருக்கிறோம்? ஏன் நாம் இங்கு வெறுமனே அமர்ந்திருக்கிறோம்? நமது திட்டங்கள் என்ன? திட்டங்களை உடனடியாக இங்கு கூறுக! திட்டங்கள் மட்டும் போதும், வேறெந்தப் பேச்சும் வேண்டாம்” என்று துரியோதனன் சொன்னான். சல்யர் ஏதோ சொல்ல முயல கைநீட்டி “பேச்சு வேண்டாம்… திட்டங்கள்… போர்த்திட்டங்கள்” என்று கூவினான்.

அஸ்வத்தாமன் “அரசே, தாங்கள் உணர்வுகளை அடக்கி எங்களை சற்று செவிகூருங்கள். என் படைசூழ்கைத் திட்டத்தை நான் இங்கு விளக்குகிறேன். அதற்குமுன் நமது படைத்தலைவர் எவரென்று முடிவு செய்ய வேண்டியுள்ளது” என்றான். துரியோதனன் சீற்றத்துடன் இரு கைகளாலும் இருக்கையின் இரு பிடிகளையும் ஓங்கி அறைந்து “நான் படைத்தலைமை கொள்கிறேன்! ஆம், நானே படை நடத்துகிறேன். நான் எவருக்கு அஞ்ச வேண்டும்? இப்படைத்தலைமையை நான் கொள்கிறேன்! அதன்பொருட்டே இக்களம் வந்துள்ளேன்” என்று கூவினான். எழுந்து இரு கைகளையும் விரித்து “தெய்வங்கள் அறிக, சொல்லுங்கள்! என் படைகளுக்கு சொல்லுங்கள்! இனி இப்படைகளை நானே நடத்துகிறேன்” என்றான்.

சல்யர் “முடிக்குரிய அரசர்கள் நேரடியாக படைத்தலைமை கொள்வதில்லை” என்றார். “ஏன்? எவர் சொன்னது? இந்த மணிமுடியும் நிலமும் எனக்குரியது. இதன்பொருட்டு பொருதிநின்றிருக்க எழுந்தவன் நான்…” என்றான். “என் நிலத்தின்பொருட்டு போரிட எனக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை.” துச்சாதனன் பெருமூச்சுடன் தன் பீடத்தில் அமர்ந்தான். அமர்கையில் அதன் கைப்பிடிமேல் கைகளை ஊன்றியதை அவனே விந்தையென எண்ணிக்கொண்டான். அவன் உடல் தளர்ந்திருந்தது. தசைகளில் ஒரு பகுதி ஏற்கெனவே இறந்துவிட்டிருப்பதைப்போலத் தோன்றியது. சல்யர் “அரசே, படைத்தலைவன் பொறுமை கொண்டிருக்க வேண்டும். எளிய இலக்காக அவன் படைமுகப்பில் நின்றிருக்கவும்கூடாது. அவனை நம்பி இருக்கின்றன படைகள். அரசன் படைத்தலைவன் ஆகுகையில் படைமுகத்தில் அமைதி இழக்கிறான்” என்றார்.

“நான் அமைதியிழக்கவில்லை. நான் அறிவேன், நான் வென்றே தீர்வேன் என. ஊழ் என்னை எங்கு கொண்டு செல்கிறது என்று எனக்குத் தெரியும். ஒவ்வொரு இழப்பும் எனது வெற்றியை உறுதி செய்கின்றது. எனது வெற்றியின் பெறுமதியென்ன என்று எனக்குச் சொல்வதற்கே இவ்விழப்புகள் நிகழ்கின்றன. என் உடன்பிறந்தார் இறக்கத்தொடங்குகையிலேயே நான் உணர்ந்துவிட்டேன், நான் முற்றிழக்கப் போகிறேன். ஒன்று மிஞ்சாது இக்களத்தில் நின்று வெற்றி ஒன்றையே தெய்வக்கொடை எனச் சூடுவேன். பிறகு அவ்வெற்றியைத் தூக்கி என் தெய்வத்தின் காலடியில் வீசி எறிவேன். அவ்வெற்றியும் எனக்கொரு பொருட்டல்ல என்று அதனிடம் சொல்வேன். ஆம்!”

துரியோதனன் வெறியுடன் ஓங்கி சிரித்தான். “ஆம்! என் தெய்வம் துணுக்குற வேண்டும். அதன் கண்களில் எவன் இவன் என்னும் திகைப்பு எழ வேண்டும். நான் செய்வதற்கு எஞ்சியிருப்பது அது ஒன்றே. ஐயமே இல்லை, வெற்றி என்னுடையதே. ஆகவே எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை. நான் நிலைகொண்டிருக்கிறேன், மலையுச்சியில் அமர்ந்த பெரும்பாறை போலிருக்கிறேன். எனக்கு ஐயமில்லை. அமைதி மட்டுமே. விண் தொடும் அமைதி மட்டுமே.”

“சற்று செவி கொள்ளுங்கள், அரசே!” என்று உரத்த குரலில் சல்யர் சொல்ல திடுக்கிட்ட துரியோதனன் “ஆம், ஆம், செவி கொள்கிறேன்” என்றான். இரு கைகளையும் கூப்புவதுபோல் நெஞ்சருகே வைத்துக்கொண்டு கண்களை மூடி “சொல்லுங்கள், செவிகொள்கிறேன். சொல்லுங்கள் முதியோரே, உங்களை எல்லாம் நம்பித்தான் இருக்கிறேன்” என்றான். “அஸ்வத்தாமன் பேசட்டும்” என்றபின் சல்யர் அமர்ந்தார். அஸ்வத்தாமன் “நாம் நமது படைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்று மீண்டும் சொன்னான். “படைத்தலைமை கொள்ள இனி தகுதியானவர் அங்கர் மட்டுமே.” கிருபர் “மெய், அரசரும் அதை உரைத்துள்ளார்” என்றார்.

“நமது படைகளின் முதன்மைப் பெருவீரர் எவரென்று கேட்டால் நாம் அங்கரைத்தான் சொல்வோம். பயிற்சியால், மூப்பினால் பீஷ்மரும் துரோணரும் நமது படையை நடத்தினார்கள். இப்போர் தொடங்கவிருக்கும்போது உண்மையில் நாம் எண்ணிய படைத்தலைவர் அங்கரே. பீஷ்மருக்கும் துரோணருக்கும் மேல் என அவர் வந்து படைமுகம் நின்றிருக்க வேண்டாமென்று தயங்கினோம். ஷத்ரியர்களின் அச்சத்தையும் தயக்கத்தையும் கருத்தில் கொண்டோம். இனி நமக்கு வேறு வழியில்லை. களம்பட்ட இருவரும் அவரை வாழ்த்தினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே அங்கர் படைமுகப்புக்குச் செல்வதில் எப்பிழையும் இல்லை. அங்கர் படைத்தலைமை கொள்ளட்டும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

துச்சாதனன் “ஆம், இனி நமக்கு வேறு வழியில்லை. இனி அங்கரே நம்மை காக்க வேண்டும்” என்றான். துரியோதனன் விழிதிறந்து கர்ணனை பார்த்தான். பின்னர் “நான் எவரிடமும் எதையும் கோர வேண்டியதில்லை. ஆனால் அங்கர் படைத்தலைமை கொள்வாரென்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் என்னை அறிவார்” என்றான். கர்ணன் கைதூக்கி “இதில் கோருவதற்கும் ஒப்புவதற்கும் ஏதுமில்லை. இயல்பாகவே படைத்தலைமை என்னை வந்து சேர்ந்திருக்கிறது. படையை நான் நடத்துகிறேன். களம்வென்று அரசருக்கு முடியை அளிக்கிறேன். இது என் தெய்வங்கள் மேல் ஆணை!” என்றான்.

துரியோதனன் “ஆம், அதுவே நிகழவிருக்கிறது. ஊழின் நெறி அது. என் தோழருக்கு நெடுங்காலத்துக்கு முன் நான் அங்கநாட்டு மணிமுடியை அளித்தேன். அது எனக்கு நானே சூட்டிக்கொண்ட மணிமுடி. இன்று அவர் எனக்கு அஸ்தினபுரியின் மணிமுடியை அளிப்பார். அது அவர் தனக்கு சூட்டிக்கொள்வது” என்றான். “அவர் வெல்வார். வென்றாகவேண்டும். ஏனென்றால் அவர் கதிரோன் மைந்தர். கதிரோன் நிலைபிறழ்ந்தால் விண்ணகம் அடுக்கு குலையும்…” சொல்லிவந்து வேறேதோ எண்ணம் ஊடுருவ நிலைகுலைந்து இரு கைகளையும் விரித்தபடி உரக்க நகைத்து “இதை நோக்கித்தானா வந்துகொண்டிருந்தோம்? நாம் நூறு ஆயிரம் வழிகளில் முட்டிமோதி இப்போதுதான் கண்டடைந்திருக்கிறோமா? இதுதானா? இவ்வளவுதானா?” என்றான்.

“அரசே, சற்று அமருங்கள். இதை நாம் முடிவெடுப்போம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். பின்னர் கர்ணனிடம் “அரசாணை எழுந்துவிட்டது. அங்கரே, நீங்கள் படைநடத்துகிறீர்கள். நமது படைகளில் சிறு பகுதியே எஞ்சியிருக்கிறதென்று அறிவீர்கள். அவை முன்பு இருந்ததுபோல பயின்று முற்றும் ஒருங்கமைந்தவையும் அல்ல. அடுமனையாளர்களும் ஏவலர்களும்கூட படைக்கலமேந்தி உள்ளே வந்திருக்கிறார்கள். பெருவில்லவர்களும் முகப்பில் நின்று போரிடும் நீள்வேலர்களும் இன்றில்லை. நமது யானைகளும் புரவிகளும் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கின்றன. எஞ்சியிருப்பவர்களும் நம்பிக்கையிழந்தவர்கள். உடைந்த படைக்கலத்துடன் களமிறங்குகிறீர்கள்” என்றான்.

சல்யர் உரத்த குரலில் “ஆம், ஆனால் மறுபுறமிருக்கும் பாண்டவப் படையும் அவ்வாறே உள்ளது. அப்படை இன்று நமது படையை விட மூன்றில் ஒன்றே” என்றார். “துரோணர் விண்செல்லும்போது பாண்டவப் படையில் பெரும்பகுதியை எரித்தும் கொன்றும் இடிமின்னால் பொசுக்கியும் அழித்துவிட்டே சென்றிருக்கிறார். நமக்கு அவர் அளித்த பெருங்கொடை இது. ஓங்கி அறைந்தால் ஒரு நொடியில் நொறுங்கிவிடும் அமைப்பாகவே பாண்டவப் படை எனக்குத் தெரிகிறது” என்றார். அஸ்வத்தாமன் பேச நாவெடுக்க கையமர்த்தி மேலும் சொன்னார் “அவர்களும் அடுமனைச்சூதரையும் புரவிச்சூதரையும் போர்வீரர் என திரட்டி வைத்திருக்கிறார்கள். சூதர்களின் போர் நிகழவிருக்கிறது.”

துச்சாதனன் சீற்றத்துடன் கைநீட்டி ஏதோ சொல்ல எழுந்தபோது துரியோதனன் வாய்திறந்து கோட்டுவாயிட்டு “பிறகென்ன? இப்போதே நமது படைகள் கிளம்பட்டும். இரவுப்போரெனில் அதுவும் ஆகுக! நாம் வென்றாகவேண்டும். வெல்வோம் என்ற என் தெய்வத்தின் ஆணையை அருகே கேட்கிறேன்” என்றான். துச்சாதனன் “அமருங்கள், மூத்தவரே. இதை நாம் பேசி முடிப்போம். தாங்கள் சொல்லெடுக்க வேண்டியதில்லை. சற்று பொழுதேனும் தாங்கள் அமர்ந்திருங்கள்” என்றான். துரியோதனன் அமர்ந்து திரும்பி ஏவலனிடம் மது கொண்டுவரும்படி கைகாட்டினான். ஏவலன் குனிந்து கொண்டு வந்து நீட்டிய யவன மதுவை வாங்கி மும்முறை அருந்தி வாயை மேலாடையால் துடைத்தபின் கண்களை மூடிக்கொண்டான். அவன் நெற்றியில் நரம்புகள் புடைத்து அதிர்ந்தன. கழுத்து அசைந்து தசைகள் இறுகி நெகிழ்ந்துகொண்டிருந்தன.

அஸ்வத்தாமன் “ஆகவே அரசாணைப்படி இது முடிவெடுக்கப்பட்டது. அங்கர் படை நடத்துவது உறுதியாயிற்று. அங்கருக்கு இப்படை நடத்துவதற்கு தேவையென்ன என்பதை இந்த அவையிலே கூறட்டும்” என்றான். கர்ணன் “தேவையென ஏதுமில்லை. எனது தேர், எனது வில், நான் பெற்ற அம்புகள் போதும். இக்களத்தில் வெற்றியை ஈட்டி அரசருக்கு அளிக்கிறேன்” என்றான். “தாங்கள் நாளை அர்ஜுனனை களம்நின்று எதிர்க்கப் போகிறீர்கள்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இக்களவெற்றி இன்றியமையாதது. அர்ஜுனன் இறக்காமல், பீமன் களத்தில் சரியாமல் நாம் வெற்றியென்னும் சொல்லையே உரைக்க இயலாது” என்றான். கர்ணன் “ஆம், நாளை அர்ஜுனனை நான் வெல்வேன்” என்றான்.

சல்யர் “அதற்கு தேவையென்ன என்று கூறுக! ஷத்ரியர்களும் துணைவருவது நன்று. அர்ஜுனன் ஷத்ரியன் என்பதை கருத்தில் கொள்க!” என்றார். கர்ணன் சல்யரை நோக்கிவிட்டுத் திரும்பி அஸ்வத்தாமனிடம் “நான் என் விழியில் நாளை நிகழும் போரை ஓட்டிப்பார்க்கிறேன். எனது தேர் நிகரற்றது. விஜயம் காண்டீபத்தைவிட ஆற்றலும் வடிவும் கொண்டது. எனது அம்புகள் அரியவை. நான் பெற்ற பயிற்சி மேலானது. எனது ஆசிரியர்கள் புவியில் நிகரற்றவர்கள். மறுபக்கம் அவன் வில்லுடன் நின்றிருக்கிறான். என்னை வந்தடைய விழைந்தவன். எனக்கு நிகர்நிற்க இன்றும் இயலாதவன், ஆயினும் ஒன்றில் அவன் என்னை விஞ்சியிருக்கிறான். அவன் தேரை ஓட்டுபவன் யாதவ கிருஷ்ணன்” என்றான்.

“இந்தப் பதினைந்து நாள் போரில் நாம் கண்டது அவன் கைத்திறனையே. அவன் எண்ணமென ஓடின புரவிகள். அர்ஜுனன் எண்ணுவதற்கு முன்பே அதை அறிந்தான். அவன் தேரினூடாக அவன் உள்ளமென்றாகி நின்றான் அர்ஜுனன். அவர்களின் இணைப்பினால் அத்தேர் ஓர் போர்த்தெய்வம் என்று ஆகி களத்தில் திகழ்ந்தது. அவனுக்கு நிகரான தேர்ப்பாகன் என்னிடம் இல்லை என்ற குறையை மீண்டும் மீண்டும் களத்தில் உணர்ந்துகொண்டிருந்தேன். அதை அவர்களும் அறிந்தனர். என் தேர்ப்பாகன்களையே குறிவைத்தனர். அவை அறியும், தேர்ப்பாகர்களாக அமர்ந்திருந்த எனது உடன்பிறந்தார் அனைவரும் கொல்லப்பட்டனர். நாளை போரில் எனக்கு இளைய யாதவனுக்கு இணையான தேர்ப்பாகன் தேவை. அவ்வண்ணம் ஒருவர் அமைந்தால் வென்றேன் என்றே கொள்க!” என்றான் கர்ணன்.

துச்சாதனன் “இளைய யாதவருக்கு நிகரானவர் என எவரும் இங்கு இல்லை” என்றான். அஸ்வத்தாமன் அவனை நோக்கி கையமர்த்திவிட்டு “நீங்கள் எவரை எண்ணுகிறீர்கள்?” என்றான். கர்ணன் “சல்யர் எனக்கு பாகனாக வரட்டும். அவர் எல்லாவகையிலும் இளைய யாதவனுக்கு நிகரானவர்” என்றான். அதை முதலில் சல்யர் புரிந்துகொள்ளவில்லை. கிருபர் “சல்யரா?” என்றார். “ஆம், அவர் புரவிதேர்வதில் திறனாளர். தேர்நுண்மை அறிந்தவர்” என்று கர்ணன் சொன்னான். சல்யர் ஒருகணத்தில் பற்றிக்கொண்டு ஓங்கி தன் கைகளை பீடத்தில் அறைந்தபடி எழுந்தார். “என்ன சொல்கிறாய்? கிருபரே, இங்கே என்ன பேசப்படுகிறது? சூதனுக்கு சூதனாகவா? நான் சூதன் காலடியில் அமர்ந்து தேரோட்ட வேண்டுமா? மலைமகன் என்றால் அத்தனை இழிவா?” என்று கூவினார்.

“இங்குள்ளோர் உணர்க! நான் எங்கும் அடிபணியவில்லை. எவருக்கும் ஏவல்செய்யவுமில்லை. பாண்டவர்களுக்கு பெண் கொடுத்த குடியை சார்ந்தவன். இன்று விழைந்தாலும் மறுபுறம் சென்று நின்று படை நடத்தி உங்களை வெல்லும் ஆற்றல் கொண்டவன். நான் அஸ்தினபுரியின் ஷத்ரியப் படைக்கூட்டாளியாகவே இங்கே வந்தேன். எனக்கு எவருடைய பாகனாகவும் இருக்கவேண்டிய இழிவு இன்னும் அமையவில்லை” என்றார். “இளைய யாதவரைவிட குடிமேன்மை எதுவும் உங்களுக்கு இல்லை அல்லவா?” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம்! அவன் குடி என்னைவிட குறைந்ததே. யார் அவர்கள்? கன்றோட்டி வாழ்பவர்கள், வளைதடிகொண்டு காடுகளில் அலைபவர்கள். நாங்கள் அரசப்பெருங்குடி. சௌவீர மணிமுடி எங்கள் குடிக்கு வந்து நூறு தலைமுறைகளாகிறது. அன்று அஸ்தினபுரி என ஒரு நாடு இருந்ததா? சொல்க!”

“பால்ஹிகப் படைக்கூட்டை எவரும் குறைத்து மதிப்பிடவேண்டாம். நாங்கள் படைதிரட்டிக் களம்வென்று நிலம் சேர்க்காமல் இருக்கலாம். எங்கள் மலைநகர்கள் சிறியவையாக இருக்கலாம். எங்கள் கருவூலங்கள் இன்னும் நிறையாமலிருக்கலாம். ஆனால் விரிநிலத்திலிருக்கும் எந்த ஷத்ரியரைவிடவும் ஆற்றலும் விசையும் கொண்டவை எங்கள் விற்கள். இங்கிருக்கும் எந்த அரசகுடியை விடவும் தொன்மையானது எங்கள் குடி” என்று சல்யர் கூவினார். “நாம் இங்கு குடிப்பெருமை பேச வரவில்லை, மத்ரரே” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “நான் வந்தது அதற்காக மட்டுமே. நான் அன்றும் இன்றும் பேசிக்கொண்டிருப்பது அதுவே. அவை நடுவே என் குலப்பெருமை நிலைகொள்வது மட்டுமே எனக்கு இலக்கு” என்று சல்யர் கூவினார்.

“அவை நிகழட்டும். வெற்று உணர்ச்சிகள் வேண்டாம்” என்றார் கிருபர். “நீங்களும் இவர்களுடன்தானா? நன்று கிருபரே, நன்று. துரோணர் மறைந்ததும் நான் தனியனானேன்” என்றார் சல்யர். “இந்தச் சூதன்மகன் செய்யும் சூழ்ச்சி என்ன என்றறியாதவன் அல்ல நான். இவன் உளம்செல்லும் தொலைவை நானும் சென்றடைந்தேன். சொல்க, நான் எதன் பொருட்டு மலையிறங்கி வந்தேன்? எதன் பொருட்டு பாண்டவரை உதறி இங்கு சேர்ந்தேன்? எனது குடிப்பெருமை இங்கு களத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே. யாதவருடன் இணைந்தால் நாளை அவர்கள் வென்றாலும் எங்கள் குடி யாதவக்குடியுடன் இணைத்து பேசப்படும் என்பதற்காகவே ஷத்ரியராகிய அஸ்தினபுரியுடன் வந்து இணைந்தேன். ஷத்ரியப் பேரவை முன் நாங்கள் என்றென்றும் நிமிர்ந்து நின்றிருக்க வேண்டும் என்பதற்காகவே என் குருதியையும் தாண்டினேன்.”

“இன்று என்னை இவன் தனக்கு தேர்ப்பாகனாக அமர்ந்திருக்கக் கோருகிறான்… சூதனுக்குத் தேரோட்டியபின் இருநிலம் வென்று அமைந்தாலும் என் குடிகளுக்கு இழிவே எஞ்சும் என அறிந்தே அதை கோருகிறான்… நான் என்ன செய்யவேண்டும்? சொல்க, நான் என்ன செய்யவேண்டும்? என் நாவால் இவனை சூதன் என இகழ்ந்தேன். அதே நாவால் இவனுக்கு வணக்கம் சொல்லவும் இவன் ஆணைப்படி வார்பற்றவும் வேண்டும் அல்லவா? இயலாது. அவ்விழிவைச் சூட எந்நிலையிலும் என்னால் இயலாது. இதோ எஞ்சிய பால்ஹிகர்களுடன் நான் கிளம்புகிறேன். இனி இப்போரில் நாங்கள் கலந்துகொள்ள இயலாது” என்ற சல்யர் பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்து தோளிலிட்டபின் வெளியேறினார்.

தொடர்புடைய பதிவுகள்

பழந்தமிழர்களின் அறிவியல்!

$
0
0

 

அன்புள்ள ஜெ 


பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி தினத்தந்தியில்  சிறப்புக் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். தன்னுடைய முனைவர் பட்டத் திறனைப் பயன்படுத்தி  தமிழ் ஆசிரியர் ஒருவர் பழந்தமிழர்களின்  அறிவியல் சிந்தனையை எளிய மனிதரும் அறியும் வண்ணம் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்துள்ளார். பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி இதுவரை அறிவியல் உலகம் கண்டிராத வகையில் குறிப்பிடுவது ஆசிரியரின் தனிச்சிறப்பு.நவீன அறிவியல்துறைகளுக்கும் பழந்தமிழரின் சிந்தனைகளுக்கும் இடையே இருக்கும் இணைப்பை ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கின்ற விதங்கள் அவரின் நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுகிறது.


1.
சார்பியல் கொள்கை


முதலில் ஐன்ஸ்டீன் அவர்களுடைய சார்பியல் கொள்கையை இதுவரை பல அறிவியல் சிந்தனைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு சிந்தனையாளரும் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் எனும் இயற்கையின் மூலப்பொருட்களுக்கு இடையேயான சார்பியலையும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை யும் இணைத்து சுட்டிக் காட்டியது இல்லை .முதல் முறையாக சார்பியல் கொள்கைக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே இருக்கும் இணைப்பை கூறியிருக்கிறார்.


//
தமிழர்கள் வானியல் அறிவு பெற்றிருந்தார்கள் இந்த உலகம் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகிறது. நிலம் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது, நிலம் ஏந்திய விசும்பும், வான் என்ற விசும்பைச் சுற்றிய காற்று, காற்றை பரப்பும் தீயும், தீக்கு எதிரான நீரும் என ஐம்பூதங்களாய் கலந்தது என்ற வரையறையின் வழி புறநானூற்று பாடல்களிலேயே பஞ்சபூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம் எனக் கூறுகிறது. இதனுள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைச் சிந்தனைக் கூறுகள் இருப்பதைக் காணலாம்.//


2.
வானியல் 


தமிழரின் வானியல் சிந்தனைகளாக ஆசிரியர் குறிப்பிடும் சிறப்புகளை காணும் போது என் மனம் வானில் பறக்கிறது. கதிரவனையும் சூரியனையும் பற்றி தனித்தனியே ஆசிரியர் குறிப்பிடும் செய்திகள் எங்கும் காணக் கிடைக்காதவை.


//
கதிரவன் பற்றியும், சூரியன் பற்றியும், செம்மீன் என்ற செவ்வாய் கோள் பற்றியும் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன.அமாவாசை, பவுர்ணமி என இன்று குறிக்கப்படுவதினை தமிழர்கள் அன்று வெள்உவா என்றால் பவுர்ணமி என்றும் கார்உவா என்றால் அமாவாசை என்றும் குறித்தனர். இவையெல்லாம் பழந்தமிழரின் வானியல் நுட்பத்தினை எடுத்துரைக்கிறது.// 


3.
மண்ணியல்


மண்ணியல் பற்றிய அறிவியல் சிந்தனையைச் சங்க காலத்திலேயே காதலெனும் உணர்வின் துணைகொண்டு பாடலாகப் பாடி இருக்கிறார்கள் என்பதை  விளக்கியுள்ள வகை இதுகாறும் எவ்வாசிரியரும் செய்யாதது.

 

//செம்மண்ணிலே வீழ்ந்த தண்ணீர் எவ்வாறு சிவப்பான நிறத்தை பெறுகிறதோ, அதைப்போல காதலரும் நானும் இணைந்தோம் என்ற புகழ் பெற்ற சங்கப்பாடலில் தண்ணீர் நிறமற்றது அதை எந்த மண்ணைச் சார்கிறதோ அந்த நிறம் பெறும் என்ற அறிவியல் உண்மையை காதல் பாடல் வழி எடுத்துரைத்துள்ளனர்.//


4.
தீர்க்க தரிசன சிந்தை


காலத்தை முன்னோக்கிப் பார்த்து பின்பு வரக்கூடிய அறிவியல் சிந்தனைகளுக்கு கூட பொருந்தும் வகையில் பெயரிடக்கூடிய தீர்க்கதரிசன சிந்தையுடைய பழந்தமிழரின் அறிவியல் சிந்தனையை ஆசிரியர் ஆற்றுப் படுத்தும் விதம் அருமையிலும் அருமை.


//
உலகத்தின் இயல்புகளை தமிழர்கள் அறிந்திருந்தனர். இன்றைய இயற்பியலில் குவாண்டம் என்ற கொள்கை நவீன இயற்பியல் கொள்கை அறிஞர் நலங்கிள்ளி என்ற அறிஞர் மெக்கானிக்க்ல் யுனிவர்ஸ் என்ற நூலினை இயந்திர அண்டம் என மொழிப்பெயர்த்துள்ளார். குவாண்டம் என்ற சொல்லுக்குஅக்குவம்என தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். அக்கு அக்காக ஒளி உமிழப்படுவதை அக்குவம் எனக் கூறியுள்ளார். குவாண்டம் என்ற சொல்லை விடவும் கூட அறிவியல் துல்லியம் வாய்ந்தது இச்சொல் என தமிழரின் அறிவினை வியக்கிறார்//.


5.
வானியல்


வானியல் பற்றிய தமிழர்களின் அறிவை நாம் அறிவோம். அதேசமயம் பக்தி இலக்கியத்தில் தமிழரின் வானியல் அறிவு வெளிப்படுவதை நாம் அறிந்திருப்பது குறைவுதான். அதிலும் திருவாதவூரார் என்று சொல்லப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில் இருக்கும் திரு அண்டப் பகுதி எனும் பாடலில் சொல்லப்படும் அண்டம் பற்றிய கருத்துக்களைக் திருநாவுக்கரசர் துணைகொண்டு ஆசிரியர் விளக்கும் விதம் சிறப்பு


//
வானியல் அண்டவியல் அறிவு இருந்தமைக்கான பல சான்றுகள் கிடைக்கின்றன. அண்டப்பெருவெளியில் உருண்டைப் பெருக்கம் அளப்பெரும் தன்மை வளப்பெறும் காட்சி என திருநாவுக்கரசர் செப்புகிறார். அண்டம் என்ற பெருவெளியில் உருண்டையான கோள்களின் காட்சி அளவிட முடியாத வளமான காட்சியாக விளங்குகிறது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.//


6.
உயிரியல்


தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கும் 1520ஆம் பாடலான


ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே


நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. என்பதில் உள்ள உயிரினங்கள் தமது உடற்கருவிகள் மூலம் அடையும் அறிதலை  வைத்துப் பிரித்த  பிரிவினையைச் சுட்டுகிறது.அதைச் செவி இல்லாத உயிரினங்கள்  நகர முடியாது என்பதைக் கொண்டு ஆசிரியர் தெளிவாக்கிறார்.அக்கூற்று ஆசிரியரின் கல்வி மேன்மையை நமக்கு உணர்த்துகிறது


//
ஓரறிவுயிர் தொடுதல் உணர்வுடையவை தொட்டாச்சிணுங்கி, புல் போன்றன. இரண்டு அறிவு தொடுதல் உணர்வுடன் நாவினால் சுவைத்தல் உடையவை. அவை கிளிஞ்சல்கள், சங்கு, நத்தை, சிப்பி, போன்றன. மூன்றாவது அறிவுடையவை தொடுதல் நாவினால் உண்டாகும் சுவையுடன், மூக்கினால் மோந்து பார்த்தல் இவை செல், ஈசல், பட்டுப்பூச்சி, போன்றன. இவை ஓசையிட்டாலும் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லையே ஏனென்றால் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அதற்கு செவியில்லை என விளக்கம் தருவது அவரின் நுண்ணறிவினைக் காட்டுகிறது. //


7
மானிடவியலும் மருத்துவமும்


இனக்குழுக்களின் நடத்தைகள் பற்றிய மானுட அறிவியலையும் நவீன மருத்துவ அறிவியலையும்  இணைத்து இரு துறைகளுக்கிடையே  பெரும் புரிதலை ஏற்படுத்துகிறது அவர் கொடுத்திருக்கக்கூடிய இந்தப் பகுதி.


//
பழந்தமிழரின் மருத்துவவியல் வியக்கத்தக்க ஒன்றாக இன்றும் அறியப்படுகிறது. இன்றைய அறுவைசிகிச்சைக்கான குறிப்பு அன்றே குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைக்கும் வழக்கம் தமிழரிடையே இருந்துள்ளது. //


8.
அறிவியல் சிந்தனையும் தொழில் நுட்பமும்


அறிவியல் சிந்தனைகளின் மூலம் கருவிகள் உருவாக்கப்பட்டு பின்னர் தொழில்நுட்பம் தோன்றுகிறது. சில நேரங்களில் தற்செயலாக தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு அறிவியல் சிந்தனைகள் மூலமாக அறிவியல் பூர்வமாக அவை உறுதி செய்யப்படுகின்றன .அத்தகையஅறிவியல் சிந்தனைகளுக்கும்  தொழில்நுட்பத்துக்கும் இருக்கக்கூடிய இணைப்புகளை பற்றிக் கடைசியாக கட்டுரையில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்


  //
அறிவியல் கண்டுபிடிப்புகள் சக்கரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்களை வளைந்த குயவனின் சிறப்பை கலங்களை உருவாக்குகின்ற குயவனே என புறநானூற்றில் ஒரு மன்னனை அடக்கம் செய்யும் தாழியினை அளவு தொடர்பான செய்தி கூறப்பட்டுள்ளது. தச்சுத்தொழிலும், மட்பாண்டத்தொழிலும் தமிழரிடையே சிறந்திருந்தது. கட்டிடவியல், சிற்பக்கலை போன்றவற்றில் தமிழரின் அறிவியல் கூறுகளை காணலாம்.//

அந்தியூர் மணி


படிப்போர் அனைவரும் போற்றும் வண்ணம் எழுதிய இத்தகைய புலமை வாய்ந்த ஆசிரியரிடம் கற்காத என்னுடைய தீயூழை என் சொல்வது?.இவரிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணும்போதும், இத்தகைய திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகங்களின் திறனை எண்ணும்போதும் ஆனந்தத்தின் உச்சிக்கே செல்கிறேன். இத்தகைய பெரும் அறிவியல் புலமை கொண்ட தமிழ் முனைவர்கள் இன்னும் எத்தனை பேர் நம் பல்கலைக்கழகங்களில் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. அனைவரிடமும் ஆளுக்கொரு அவர்கள்துறைக்கும் மற்ற அறிவியல்துறைகளுக்குமான இணைப்புகளைப் பற்றிய  கட்டுரை வாங்கினால் மட்டுமே அவர்களுடைய அறிவும், திறனும், நுண்மாண் நுழைபுலமும்,பெற்ற கல்வியின் மாண்பும் ,கல்வியில் அவர் கொண்ட ஆய்வின் தெளிவும் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தெரியும். இனி அனைத்து முனைவர்களையும் அவர்களின் திறனை வெளிப்படுத்த இது போன்ற கட்டுரைகளை வனையும்படி தமிழ் அறிவுலகம் அறிவுறுத்த வேண்டும். இவரைப் போன்ற அனைத்து நல் ஆசிரியர்களின் திறனையும் கண்டறிந்து அவர்களைப் பெருமைப்படுத்தும் நாள் தான் இருண்டு கிடக்கும் இன்றைய தமிழ் அறிவுலகத்தின் உண்மையான பிறப்பு நாள்.


இப்படிக்கு
அந்தியூர் மணி.

அதற்கான சுட்டி

பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகள்…!

https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/03/28074335/The-ancient-family-lived-with-the-knowledge-and-intellect.vpf

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யக்ஷிப்பாலை -கடிதங்கள்

$
0
0

யட்சிப்பாலை

அழியா வண்ணங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

வணக்கம்

 

யட்சிப்பாலை வாசித்ததிலிருந்து உங்களுக்கு எழுத நினைத்துக்கொண்டே இருந்தேன். தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால் வலுவூட்டும் பயிற்சிகள் திரும்பத்திரும்ப நடத்தப்பட்டன. கல்லூரியும் நேற்றுடன் முடிந்து இரண்டுமாத கோடைவிடுமுறை துவங்கியது. எழுதவே முடியவில்லை.

ஏழிலைப்பாலை எனக்கு பிடித்தமான மரம்.Alstonia scholaris என்னும் இதன் பெயரில் சிற்றினம் Scholaris. முன்பு பட்டம் வழங்கப்படுகையில் உடன் இதன் பூக்கும் சிறுகிளையொன்றினையும் அளிப்பார்களாம்.கற்றுத்தேர்ந்தவர்களுக்கான மரம் இது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனாலும்

பல மொழிகளிலும் இது சைத்தான் மரம் பேய் மரமென்றே அழைக்கப்படுகின்றது.20வருடங்களுக்கு முன் ஆராய்ச்சி உதவியாளர் நேர்காணலுக்காக புதுதில்லி சென்றிருக்கையில் தான் இவற்றை முதலில் பார்த்தேன்.

 

 

அந்த அலுவலகம் இருந்த தெருவெங்கும் இரண்டு பக்கத்திலும் எதிர்எதிராக வளர்ந்திருந்தன. அப்போது பூக்கும்காலமுமென்பதால் மனம் மயக்கும் வாசனையில் தெருவே நிறைந்திருந்தது.

 

 

இப்போது வீட்டிலும் வளர்கிறது. பூக்க சில வருடங்கள் ஆகும். உங்களின் எழுத்துக்களில் வரும் யட்சிகளின் மீது பெரும் வசீகரமுண்டு எனக்கு.

இறப்பிற்கு பின் யட்சியாகும் பெருவிருப்பமுமிருப்பதால்,இந்த மரத்தையும் கூடுதல் சாத்தியங்களுக்காக இரண்டு செண்பகமரங்களையும் வீட்டுத்தோட்டத்தில் வைத்துள்ளேன்.

 

 

தேர்தலதிகாரியாக ஒரு குக்கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்ளிக்கு வந்துள்ளேன். அறிமுகமே இல்லாத ஊர்.எல்லோரும் அந்நியர்கள்.ஒற்றை வாக்குச்சாவடி. ஆனால்இந்த பள்ளியின் வாசலில் பெரிய யட்சிப்பாலை நிற்கிறது.அதனடியில் அமர்ந்து உங்களுக்கு எழுதுகிறேன்

மிக வேண்டியவர்களை புதிய இடத்தில் எதிர்பாராமல் சந்தித்தது போல் மகிழ்வுடனிருக்கிறேன்.

.

 

அன்புடன்

லோகமாதேவி

 

அன்புள்ள லோகமாதேவி

 

முன்பெல்லாம் கேரளத்தில் நாயர் வீடுகளை ஒட்டி ஒரு யட்சிகோயில் இருக்கும். குடும்பயக்ஷி. என் அம்மாவின் நட்டாலம் வீட்டில் ஒரு யக்ஷி உண்டு. மூதாதை ஒருவர் கள்ளியங்காடு வழியாகச் சென்றபோது சந்தித்து அழைத்துவந்தார். இங்கே வந்தபின் பெண் அல்ல யக்ஷி என தெரிந்தது. அப்படியே இருந்துவிட்டாள். அந்த யக்ஷியம்பலங்களில் யக்ஷிப்பாலை நிற்பதுண்டு. இப்போது அந்த ஆலயங்கள் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டன. கூடவே ரப்பர் தவிர எந்த மரமும் தேவையில்லை என்னும் மெய்ஞானமும் உருவாகிவிட்டது

 

 

அன்புள்ள ஜெ

 

 

யக்ஷிப்பாலை, அழியா வண்ணங்கள் ஆகிய இரு கட்டுரைகளையும் வாசித்தேன். நீங்கள் சுட்டிக்காட்டும் மலையாளப் பாடல்களை எவரேனும் பார்க்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. நான் பார்ப்பதில்லை. எனக்கு அந்தப்பாடல்கள் எந்த ஆர்வத்தையும் உருவாக்கவில்லை. ஏன் இவ்ற்றை கஷ்டப்பட்டு மொழியாக்கம் செய்து வெளியிடுகிறீர்கள் என்ற எண்ணம்தான் உள்ளது

 

 

சண்முகராஜ்

 

அன்புள்ள சண்முகராஜ்

 

எனக்கும் அந்த ஐயம் உண்டு. நான் மலையாளச் சினிமாப்பாடல்களை போடும்போது பெரும்பாலும் கடிதமே வருவதில்லை. அந்தப்பாடல்களை கேட்டோம் என்று சொல்லி நான் கேட்டதே இல்லை.

 

இருக்கட்டும், எல்லாவற்றையும் மக்கள் வாசிக்கவேண்டும் என்று உண்டா என்ன? நமக்காவே நாம் சிலவற்றை எழுதிக்கொள்ளலாமே

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2

$
0
0

 

அறிபுனை- விமர்சனப்போட்டி

அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  உமா ரமணன்

 

அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்தொடர்ச்சி

 

அவன்

 

தன்ராஜ் மணியின் இந்த கதை இயந்திரங்களுக்கு மனிதர்களின் உள்ளுணர்வை ஊட்டுவதையும், கூட்டு நனவிலி அமைப்பை உருவாக்குவதை பற்றியும் பேசுகிறது. 2080ல் நடப்பதாக சொல்லப்படுகிறது கதை – அதில் உள்ள மனிதர்களையும் அவர்களின் மொழியையும் கொஞ்சம் அந்த காலத்தை ஒட்டி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது மிகவும் கடினம் தான். ஒரு துப்பறியும் கதைக்குறிய களத்தையும் அதற்கான வேகத்தையும் கதை கொண்டிருப்பது சிறப்பு. ARTIFICIAL INTELLIGENCE கணித்த மனிதனின் செயலை ‘அவன்’ செய்வானா, மாட்டானா என்ற தவிப்பை வாசகனுக்கும் கடத்துகிறது.

இன்றைய தேதியில் கணினி துறையில் வேகமாக முன்னேறி வரும் துறைகள் ARTIFICIAL INTELLIGENCE , MACHINE LEARNING, DATA SCIENCE. எல்லா நிறுவனங்களும் மும்முரமாக அதில்தான் கவனம் செலுத்துகின்றன. மனித மூளையில் எப்படி தகவல்கள் சேகரிக்க படுகிறதோ அப்படி இயந்திரங்களும் தகவல்களை சேகரித்து கொள்வதையும், சேகரித்த தகவல்களின் மூலம் புள்ளி விவரங்களை உருவாக்கிக் கொண்டு, அதன் மூலம் வருங்கலாத்தை கணிக்கும் யூகங்களை வளர்ப்பதில் பெரிதும் கவனம் செலுத்துகின்றன. இத்தகைய வளரும் துறையை களமாக கொண்டு அதன் வளர்ச்சியையும், வழிகளையும் புனைவாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

எல்லா மனிதருக்கும் ஒரு உள்ளுணர்வின் வழியேதான் எந்த அதிசயமும் நிகழ்கிறது. கவிதையை போலவே கதையை போலவே மனிதன் செய்யும் எல்லா தொழிலுமே உள்ளுணர்வின் மூலமே தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கின்றன. கணினியின் முன்பு பல நாட்கள் போராடியும் வேலை செய்யாத மென்பொருள் ப்ரோக்ராம்கள் திடீரென ஒரு உள்ளுணர்வின் வழிகாட்டுதலில் தீர்க்கப்படும். இக்கதையில் அவன் அடிக்காமல் இருப்பதற்கு உள்ளுணர்வும், நமக்குள் பொதுவாக உருவாகியிருக்கும்  கூட்டு நனவிலியும் தான் காரணம் என்று சிவா கண்டுபிடிப்பதும் அத்தகைய உள்ளுணர்வால் தான். வென்றவன் அவன்தான், கொன்றவன் அவன்தான், செத்தவன் அவன்தான் என்பதுபோல எல்லாமே அந்த உள்ளுணர்வின் வெளிப்பாடுதான். கிரிக்கெட் மேட்ச்சை அதை பார்த்துக்கொண்டிருக்கும் கோடான கோடி மக்களின் கூட்டு நனவிலி கூட தீர்மானிக்குமென்று நான் எண்ணியிருக்கிறேன். அத்தகைய கூட்டு நனவிலியும், உள்ளுணர்வும் இயந்திரதிற்கும் எதிர்காலத்தில் கிட்டும் என்பது இன்று புனைவில் சாத்தியப்படுவதை போல நாளை நிஜத்திலும் சாத்தியமாகும். கற்பனையிலிருந்துதானே நிஜம் பிறக்கிறது.

 

கடவுளும் கேண்டியும்

நகுல்வசனின் இந்த கதை புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும்’ அழகாக மீளுருவாக்கம் செய்துள்ளது. ஒரு பழைய பாடல் ரீமிக்ஸ் ஆகி  கேட்பதை போன்ற ஒரு துள்ளலான உணர்வை தந்தது. அதே சமயத்தில் மூலத்தின் மீதான வியப்பையும் ஏக்கத்தையும் அதிகரித்தது. சிறுகதைகளில் ரீமேக் எனக்கு புதிதாகவும், கவர்வதாகவும் இருந்தது. மொழிநடையும் மூலத்தின் நடையையே கொண்டிருப்பது ஆசிரியரின் சவால் மற்றும் அவரடைந்திருக்கும் வெற்றி.

பழைய கதையில் கந்தசாமிக்கு வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தும் அவருடன் சகஜமாக மனிதனை போலதான் பழகுவார். கடவுளிடம் எந்த வரங்களையும் கேட்டு பெறமாட்டார். இந்த கதையில் கேண்டி வந்திருப்பது கடவுளென அறிந்திருக்கவில்லை. அறிவியலின் வளர்ச்சியில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை கடவுளுக்கும் கேண்டிக்குமான உரையாடலின் வழி சொல்லப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் தூரங்கள் மிக சுருங்கிவிடும் என்பதை கதை மிக எளிதாக பின்புலத்தில் சொல்லி செல்கிறது. பிராட்வேயிலிருந்து தினமும் அமெரிக்காவிற்கோ, பிரிட்டனிற்கோ தினமும் வேலைக்கு சென்று வரும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. தூரத்தை சொன்னதை போலவே மற்ற முன்னேற்றங்களான VR, ARTIFICIAL

INTELLIGENCE போன்றவற்றையும் கதையின் தேவையோடு இணைத்திருக்கலாமென தோன்றியது. அவற்றை சொல்வதற்காகவே சில யுக்திகள் கையாண்டிருப்பதாக பட்டது. உலகமெல்லாம் வருங்காலத்தில் டாலரே பொதுவான கரன்சியாகும் என்பது அரசியலையும் தொடுகிறது.

கடவுள் உருவாக்கிய அனைத்தையும் மனிதனாலும் உருவாக்க முடிந்ததை காணும் கடவுளின் மனநிலை கதையில் அழகாக பதிவாகியிருக்கிறது. கடவுளின் இயல்பான அன்பையும் கருணையையும் அவர் மனிதனிடம் கடைசிவரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஆனால் அது கடைசிவரை நிகழ்வதாய் இல்லை. அதனால் தான் சொல்லாமல் கொள்ளாமல் நூறு டாலரை வைத்து விட்டு சென்று விடுகிறார் போலும். மனிதனுக்கு புரியும் மொழி டாலர் மட்டும்தானே.

யாமத்தும் யானே உளேன்

சுசித்ராவின் இந்த கதை மிக அற்புதமான வாசிப்பனுபவத்தை தந்தது. பெரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் நாவல்களும் ஏற்படுத்தும் உளக்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கதையின் நீளம் பெரியதாக தோன்றினாலும் அவசியமற்ற எதுவும் கதையில் இல்லாதது போல்தான் தெரிகிறது. வாசிக்கும் போது சில நேரங்களில் தொடர்நது வாசிக்க முடியாத சலிப்பையும் ஏற்படுத்தியது. கதையின் நீளமோ அல்லது தொடக்கத்தில் நிலவும் புரியாத தன்மையோ அதற்கு காரணமாக இருக்கக்கூடும்.  கதையின் இறுதி தருணங்களில்தான் கௌதமனை ஒரு தானியங்கி இயந்திரமென விடுவிக்கிறார்.  உண்மையில் அதற்கு  பின்பு மனதில் எழும்பும் அதிர்வுகள் அதிகம். அதுவரை அந்த அதிர்வுகளை ஏற்படுத்த்தும் கல்லாக அதற்கு முன்பு நிகழும் அத்தனையும் தேவைதான் என்றே நினைக்கிறேன். இருந்தும் அதை அறியும் வரை ஏனோ ஒரு சலிப்புத்தன்மை கூடவே வருகிறது.

ஆசிரியரின் மொழி மிகவும் அருமையாக வெளிப்படுகிறது. பல இடங்களில் கவித்துவம் மிக்க தருணங்கள் கைகூடியிருக்கிறது. அதே போல உணர்வுகளின் ஆழங்களை அழகாக மொழியாக்கியிருக்கிறது. கதையை படிக்க தொடங்கிய போது வெண்முரசின் ஒரு அத்யாயம் போலவே இருந்தது.  இருளாழத்தில் வாழும் கதைகள் மனிதரின் உளம் தொட்டு உயிர்பெற காத்திருக்கும் இப்பெருவெளியின் விளையாட்டை காட்டுகிறது. மனிதரின் அழைப்பிற்காக காத்திருக்கும் தேவதைகளை போல அவை உருக்கொள்கின்றன. மந்திரங்களின் வழியே தேவதைகள் வெளிவருவதை போலவே கதைகளும் மனிதரின் அழைப்பிற்கு காத்திருக்கின்றன.

லக்கானின் உளவியல் வழிமுறையில் ‘நான் என்பது எனக்கு வெளியே இருக்கிறது’ என்கிறார். நம்முடைய நான் மற்றமையால்தான் கட்டமைக்கப்படுகிறது என்கிறார். எம்.ஜி.சுரேஷ் எழுதிய லக்கான் பற்றிய ஒரு புத்தகத்தில் ஒரு ஆய்வை குறிப்பிடுகிறார். தன் முட்டைகளை அடைகாத்துக்கொண்டிருக்கும் ஒரு வாத்தை அதன் முட்டைகள் பொரிந்து குஞ்சு வெளிவரும் சமயம் பார்த்து அப்புறப்படுத்திவிட்டு அந்த வாத்திற்கு பதிலாக ஆய்வாளரின் பூட்ஸை வைத்துவிடுகின்றார். முதன் முதலாக வெளியே வரும் குஞ்சுகளின் கண்ணில் படுவது அந்த பூட்ஸ்தான். அந்த குஞ்சுகள் அந்த பூட்ஸையே தாயென கருதிக்கொள்கின்றன. அவர் அந்த பூட்ஸை அணிந்துகொண்டு எங்கு சென்றாலும் அந்த பூட்ஸையே அவை சுற்றி சுற்றி வருகின்றன. இதிலிருந்து மனிதனின் சுயம் அவன் பிறப்பின் வழி வருவதில்லை. அது அவன் வெளியே வந்த பின்னே மற்றமைகள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து உருவாகிவருகிறது என்கிறார். சிந்தித்து பார்த்தால் நான் என்பது இந்த சமூகம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மட்டுமே என்று தோன்றுகிறது.

இந்த கதையில் வரும் கௌதமன் அந்த வாத்து குஞ்சை போலவே இருக்கிறான். அவனுக்கு சொல்லப்படும் கதைகளின் வழி அவன் அவனை கட்டமைத்துக்கொள்கிறான். கதைகள் அவனுக்கு உள்ளுணர்வை தருகிறது. உள்ளுணர்வால் வலிகளும் தோன்றுகிறது. கதைகளின் வழிதான் மனிதனின் மனமும் உள்ளுணர்வும் உருவாகி வருகிறது. அதையே ஒரு இயந்திரத்திற்கு முயலும்போது அதுவும் மனிதனாகி வருகிறது. உயிர் என்ற ஒன்று மனிதனின் சாபமோ வரமோ, ஆனால் அதனால்தான் அவன் மனிதனாக இருக்கிறான்.  இயந்திரமாக இருந்தாலும் அவனுக்கும் அவன் தாய்க்கும் இடையே நிலவும் பிணைப்பு மனித உறவுகளை போலதான் உள்ளது. அவர்களுக்குள்ளே கண்ணீர், அன்பு, உறவு சிக்கல்கள் அனைத்தும் நிலவுகிறது. எந்திரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை கதை நம் உணர்வு தளத்தில் நிகழ்த்துகிறது. உணரும் திறன் இருந்தால் எந்திரமென்ன மனிதனென்ன எல்லாம் ஒன்றுதானே.

மனிதர்களின் சலிப்பை, வாழ்வின் மீதான வெறுப்பை தீர்க்கும் மருந்து கலைகளும் இலக்கியமும் மட்டுமே என்று தோன்றவைக்கிறது. அன்னையின் சொல்லுக்கு சட்டென தலையாட்டி, தானே சிதறி பூமியில் உள்ள மனிதரின் வாழ்வை மீட்க கதைகளென உலாவ துணியும் கௌதமன் போன்றவர்கள்தான் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஞானிகளுமென நினைக்கிறேன். அதற்கும் அவனுக்கு அவன் அம்மா சொன்ன கர்ணனின் கதைதான் காரணமாக இருக்கக்கூடும். கர்ணனின் அம்மா அவனை ஆற்றில் விட்டதை போல, கௌதமனின் அம்மா அவனை வெளியில் விடுகிறாள்.

மின்னெச்சம்

ரூபியா ரிஷியின் இந்த கதை மனித மூளையை இறப்பிற்கு பின் உயிர்ப்புடன் வைத்து அதில் உள்ள தகவல்களை கணினியில் நியூரல் நெட்ஒர்க் என நிறுவி இறப்பிற்கு பின்னும் மனிதனை ஓரளவு உயிரோடு வைத்திருக்கும் சாத்தியத்தை பேசுகிறது. சாகாவரத்தை, மரணமற்ற பெருவாழ்வை அறிவியலின் வழி கற்பனை காண்கிறது. மனித மூளையை ஒரு டாட்டாபேஸ் ஆக்கி அதிலிருந்து அலைகள் மூலம் மனித மனதை சிமுலேட் செய்து இறந்த மனிதனை மீண்டும் உயிர்த்தெழ செய்வது ஒரு உளக்கிளர்ச்சியை தருகிறது. எல்லோருக்கும் சாகாவரம் சாத்தியமாகும் காலம் அறிவியல் மூலமே சாத்தியமென்றே நினைக்கிறன். கதையின் மொழிநடை அறிவியல் புனைவுக்கான செறிவோடு இருக்கிறது. மின்னெச்சம் இயற்கையின் விதிகளை தாண்டிய ஒரு மனிதனின் இருப்பை வெறும் கழிவென உணர செய்கிறது.

இந்திய மெய்ஞானத்தில் ஆண்மா மட்டுமே அழியாதது, என்றைக்கும் உள்ளது என்ற தத்துவத்தின் நெருக்கத்தை இக்கதை கொண்டிருக்கிறது. ஆண்மாவை அறிவியல் நம்பமுடியாது. அறிவியலில் மனிதனின் மூளைதான் ஆண்மா. அதை தக்கவைப்பதின் முலம் அமரத்துவத்தை எய்துகிறது. அப்படிப்பட்ட சாகாவரத்தின் சாதக பாதகங்களை கதைஆராய்கிறது. பல்வேறு பட்ட மனிதரின் மூளைகள் இறப்பிற்கு பின் எதிர்வினையாற்றும் உரையாடல்கள் வழி சாகாவரத்தின் விளைவுகளை பேசுகிறது. சிறுவயதில் என் தாத்தா வீட்டில் ஆங்கில எழுத்துக்களை உடைய ஒரு சதுரங்க போர்டில் மெழுகுவத்தியை மட்டும் ஏத்தி வைத்து இறந்த முன்னோர்களோடு பேசுவார்கள். அத்தகைய ஒரு அனுபவத்தை நவீனமாக உணர்வதை போல இதன் உரையாடல்கள் இருந்தன.

மனிதனின் மனதிலுருந்து அவனது துயர்களையும் விரும்பப்படாத நினைவுகளையும் அழித்துக்கொள்வது வரம் போல தோன்றினாலும் சாபமாகவும் தோன்றுகிறது. அப்படி ஒரு வசதி வந்தாலும் மனிதன் அதை செய்துக்கொள்ள தத்தளிப்பான் என்றே தோன்றுகிறது. வெறும் ஆன்மாவாக எஞ்சிவிட்டாலும் செயலாற்ற வேன்டுமென்றால் ஒரு உடலின்றி முடியாது என்பதை போல மூளை சேமிக்கப்பட்டு சிமுலேட்டர் மூலம் இயங்கினாலும் அவன் பிறரின் உதவியுடன்தான்  வாழமுடியும் என்பது இயற்கையின் விதிகளை மனிதன் ஓரளவுதான் தாண்ட முடியுமென காட்டுகிறது.

 பல்கலனும் யாம் அணிவோம்

ரா. கிரிதரனின் இந்த கதை அறிவியல் மாற்றங்களுக்கும் அதை எதிர்க்கொள்ளும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் போராட்டத்தை பேசுகிறதென நினைக்கிறேன். மனிதன் தன்னை வெறும் மனிதனாக மட்டும் தக்கவைத்துக்கொள்ளும் சுகந்திரத்தை அறிவியல் வளர் வளர இழந்துகொண்டே வருகிறான். இன்றைய சூழலிலேயே அறிவியலின் மாற்றங்களால் மனிதன் தன் வாழ்க்கைக்குள் அவன் வேண்டாதவற்றையும் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இந்த கதை முன்வைக்கும் காலக்கட்டங்களில் மனிதர்களும் பாதி இயந்திரங்களாக வாழ  வேண்டிய காட்டயத்தில் தள்ளப்பட்டிருப்பர். ஆனாலும் அப்போதும் மனிதனின் ஆதாரமான அன்பு, காதல், காமம், வன்மம் , குரோதம் , அகங்காரம் போன்ற உணர்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கும். மனிதர்களுக்குள் நேசம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். காதலுக்காக தற்கொலை செய்துகொள்ளும் காதலர்கள் அப்போதும் இருக்கதான் செய்வார்கள். தற்கொலைக்கான வழிமுறைகள் வேண்டுமானால் மாறியிருக்கலாம். இந்த கதை அவ்வகையில் அறிவியலுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையே நிகழும் போராட்டத்தை பேசுவதாக உள்ளது. ஆசிரியரின் மொழிநடையும் கதை சொல்லிய விதமும் அந்த போராட்டத்தை நம்முள் அழகாக கடத்துகிறது.

 

 

அரூ அறிபுனை விமர்சனம்-1 ,புதுப்படிமங்களின் வெளி

அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்

அரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்

அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-1

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

செல்வது மீளாது

$
0
0

 

பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்

கணியாகுளம்,பாறையடி…

கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி

காலைநடையில்…

பார்வதிபுரம் பாலம்

செவ்வல்லியின் நாள்

முதல் மழை

வரம்பெற்றாள்

குன்றுகள்,பாதைகள்

இடவப்பாதி

குருகு

 

இன்று காலை நடை வந்தபோது திடீரென்று ஓர் எண்ணம், நாம் பார்க்கும் காட்சிகள் எப்போதும் இங்கிருக்கும் என நினைத்துக்கொள்கிறோம். ஒவ்வொருநாளும் ஒரே காட்சியைக் காண்பதாக எண்ணி மயங்குகிறோம். நடக்க வந்து மரங்களை, கட்டிடங்களை, சாலைகளை பார்த்து இருக்கிறாயா என உளமுசாவிக்கொள்கிறோம். உண்மையில் இந்தக்காட்சி மிகமிக விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். நகரங்களின் புறநகர்கள், அண்மைச்சிற்றூர்களைப் போல விரைவாக உருமாறும் இடங்கள் வேறில்லை. எல்லா இந்திய நகரங்களும் வீங்கிப்பெருக்கின்றன.

 

ஏனென்றால் இங்கே கிராமங்கள் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளன. இன்று தமிழ்நாட்டின் முதன்மையான பிரச்சினையே கைவிடப்படும் சிற்றூர்கள்தான். எந்தச் சிற்றூருக்குச் சென்றாலும் ஒன்றைக் காணமுடிகிறது, அங்கே கொஞ்சம் பணமுள்ளவர்கள் வாழ்வதில்லை. பல ஊர்களில் பழைமையான பெரிய வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன. நிலக்கிழார்கள்கூட சிற்றூர்களில் வாழ்வதில்லை. நிலத்தை பிறரிடம் விட்டுவிட்டு நகர்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். நிலத்தை நம்பிவாழும் கூலித்தொழிலாளர்கள் மட்டுமே ஊர்களில் இருக்கிறார்கள். சிற்றூர்களில் அரசு ஊதியம் பெறுபவர்களே சற்றேனும் பணமுள்ளவர்கள். அவர்களில்கூட பெரும்பாலானவர்கள் நகர்களில் அல்லது சிறுநகர்களிலிருந்து அன்றாடம் வந்துசெல்பவர்கள்.

நகரங்களில்தான் பிள்ளைகளுக்குக் கல்விவசதி உள்ளது என்பதே பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம்.அது உண்மை. ஆனால் அவ்வாறு கல்வி- தனிப்பயிற்சி வசதிகளேதும் கிராமத்தில் இல்லாமகிருப்பதற்குக் காரணமே இந்தக் கூட்டம் கூட்டமான இடப்பெயர்வுதான். கைவிடப்பட்ட கிராமங்கள் அனைத்தும் நகர்களைச் சுற்றிப் புறநகர்களாகின்றன. எந்தத் திட்டமிடலும் இல்லாமல், எந்த வசதியுமில்லாமல் பெருகிநீள்கின்றன. அதன்பின் வெவ்வேறு போராட்டங்கள். குடிநீருக்கு.மின்வசதிக்கு. சாலைக்கு. புறநகர்கள் என்பவை ஒருவகை கான்கிரீட் கிராமங்கள்.

 

2000- த்தில் நான் குடிவந்தபோது சாரதாநகர் மிக ஒதுக்குபுறமான புறநகர். உண்மையில் நாகர்கோயிலே அல்ல, கணியாகுளம் கிராமப்பஞ்சாயத்து அது. என் வீட்டில் நின்றால் கொல்லைப்பக்கம் வேளிமலை அடுக்கு தெரியும். இன்றைக்கு நெரிசலான நகர்ப்பகுதியாக ஆகிவிட்டது. வேளிமலை நோக்கி பாறையடிவரை நடைசெல்வோம்.

அன்றெல்லாம் வேளிமலை அடிவாரம் ‘ஆபத்தான’ பகுதி என்பது உளப்பதிவு. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அது உண்மையும்கூட. ஆளில்லாத மலைப்பகுதி கள்ளச்சாராய மையமாக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்புகூட ஒவ்வொருநாளும் அந்தியில் போலீஸ் ரோந்துசெல்லும்.நானும் அருண்மொழியும் மட்டுமே சாரதா நகரிலிருந்து அப்பகுதிக்கு நடைசெல்பவர்கள். “அங்கேயா? எதுக்குப் போனீங்க?” என்று கேள்விப்படுபவர்கள் துணுக்குறுவார்கள்.

 

ஆனால் அங்கே பொறியியல்கல்லூரிகள் வந்தன. அவை பேருருக்கொண்டன. வீடுகள் முளைத்தன. அவை பெருகிச்செறிந்தன.சாலை வந்து விரிந்து போக்குவரத்து கூடியது. காலையில் எப்படியும் நூறுபேர் மலையடிவாரம் நோக்கி நடைசெல்கிறார்கள். இப்போது வெளியே இருந்து வருபவருக்கு இப்பகுதி அழகிய வயல்வெளிகளும் மலையும் நிறைந்த கண்நிறைக் காட்சி. ஆனால் எங்களுக்கு நாளுக்கு நாள் மறைந்துகொண்டே இருக்கும் கனவு.

இப்போது மிகப்பெரிய நான்குவழிச்சாலை ஒன்று பார்வதிபுரத்தையும் கணியாகுளத்தையும் இருபக்கமும் தள்ளியபடி உருவாகிக் கொண்டிருக்கிறது. அளவுகள் எடுத்தார்கள் எனத் தெரியும். இத்தனை விரைவாக இப்பெரிய வேலையைச் செய்வார்கள் என நினைக்கவே இல்லை. லாரிகள் மண்ணைக்கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. வட இந்தியத் தொழிலாளர்கள் எறும்புகள் போல வேலைசெய்கிறார்கள். வயல்களை நிரப்பி, ஏரிகளை தூர்த்து சாலை எழுகிறது. இன்னும் ஓராண்டில் இப்பகுதி முற்றிலும் பிறிதொன்றாக இருக்கும். இப்படியொரு காட்சி எங்கள் நினைவில்தான் எஞ்சியிருக்கும். நினைவை நம்பமுடியாது, அது உருமாறிக்கொண்டே இருக்கும். சென்றது சென்றதுதான்

 

இப்பகுதி நீர்ப்பறவைகள் நிறைந்தது. ஒவ்வொருநாளும் காலையில் நான் கூட்டம்கூட்டமாக நாரைகளை, கூழைக்கடாக்களை , நீர்க்கோழிகளை, கொக்குகளைப் பார்ப்பேன். பொதுவாக மனித – வண்டி நடமாட்டம் குறைவு என்பதனாலும் ஆண்டு முழுக்க மண்ணில் ஈரம் இருப்பதனாலும் அவை இங்கிருந்து அகல்வதே இல்லை. இங்கே  சோழர்காலத்து பெரிய ஏரிகள் மூன்ற்ய் உள்ளன மூன்றுமே ஐம்பதாண்டுகளாகக் கைவிடப்பட்டு தூர்வாரப்படாமல் சுற்றுக்கரை உடைந்து சதுப்புகளாக மாறிவிட்டன.ஆனால் சேற்றுப்புதர் மண்டிய அந்நிலம் பறவைக்கூட்டங்களுக்கு மிக உகந்தது.

 

அந்த ஏரிகளில் இரண்டு ஏரிகளுக்குள் புகுந்து செல்கிறது இந்த மாபெரும் சாலை. ஏற்கனவே ஓர் ஏரியைச்சுற்றி ஏராளமான வீடுகள் வந்துவிட்டன. ஆகவே அவர்கள் அதில் நீர் தேங்கவிடுவதில்லை. அந்த ஏரியும் கரையோரமாக சாலைவிரிவாக்கம் நிகழ்ந்து குறுகிக்கொண்டிருக்கிறது. பத்தாண்டுகளில் இங்கே ஏரிகள் இருந்தன, நீர்ப்பறவைக்குலம் பெருகியிருந்தது என்று சொன்னால் புனைவுபோலத்தெரியும்

இதைப்பற்றி புலம்பிப் பயனில்லை. ஒவ்வொருவருக்கும் இந்த நுகர்வுப்பண்பாட்டின் எல்லாமே தேவையாகிறது. நிலம் மட்டும் எழில்கொஞ்ச இருந்தாகவேண்டும் என்று எப்படிச் சொல்லமுடியும்? இருக்குமிடம் தேடிப்போகவேண்டியதுதான்.

 

ஆனால் இந்த மண்ணில் தெரியும் மண்ணள்ளி இயந்திரங்களின் பெரிய டயர்தடங்கள் வருத்தமளிக்கின்றன. மென்தோலின்மேல்  சாட்டைத்தடம்போல.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள்- கருத்தரங்கு

$
0
0

 

எம் கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு. ஏப்ரல் 20, 2019  கோவை இந்துஸ்தான் கலைக்கல்லூரி அரங்கு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11

$
0
0

துச்சாதனன் திகைப்புடன் எழுந்தான். ஆனால் துரியோதனன் சல்யர் வெளியேறியதையே நோக்கவில்லை. துச்சாதனன் கிருபரிடம் “நான் சென்று அவரை அழைத்துவருகிறேன்” என்றான். “வேண்டியதில்லை, அவரால் செல்ல இயலாது. வருவார்” என்றார் கிருபர். அஸ்வத்தாமன் கர்ணனை நோக்கி “நீங்கள் அவரில்லாமல் படைமுகம் செல்ல இயலாதா என்ன?” என்றான். “அவர் முற்றாக விலகிச் செல்லட்டும். அதன்பின் அதைப்பற்றி எண்ணுவோம்” என்றான் கர்ணன். கிருபர் “அவர் தன் எதிர்ப்பை காட்டியாகவேண்டும்” என்றார். பின்னர் “முதியவர்களின் நடிப்பும் குழவியரின் நடிப்பும் மிக எளிமையானவை” என புன்னகை செய்தார். துச்சாதனன் “அவர் சீற்றத்துடன் சென்றிருக்கிறார்” என்றான். “ஆம், அச்சீற்றம் உண்மை…” என்றார் கிருபர்.

துச்சாதனன் அவர் சொன்னதை புரிந்துகொள்ள முயன்று விழித்து நிற்க சல்யர் வாயிலில் தோன்றினார். “நான் ஒன்றை சொல்லிக்கொண்டு விலகவே வந்தேன். நான் இங்கே எவரையும் நம்பி வரவில்லை. அவையில் என் தனித்தன்மையும் என் குடியின் பெருமையும் காக்கப்படும் என அரசர் அளித்த சொல்லை நம்பியே வந்தேன். இங்கே என்னை சிறுமைசெய்பவர், என் குடியை பழிப்பவர் அரசரைப் பழித்தவரே ஆவர்” என்றார். கிருபர் “இங்கே எவரும் உங்கள் குடியை பழிக்கவில்லை” என்றார். “நான் அறிவேன், என்ன நிகழ்கிறது என நான் அறிவேன்” என்று சல்யர் கூவினார். “உங்கள் திட்டங்கள் அனைத்தும் எனக்கு தெற்றெனத் தெரிகிறது. அதைப்பற்றிப் பேச நான் வரவில்லை. அதைப்பற்றிப் பேச என்னிடம் ஒரு சொல்லும் இல்லை.”

“ஆம், இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் ஒன்று உணர்க, நாளை அரசர் தன்னுணர்வு கொண்டு என்னைப்பற்றி கேட்கையில் என்ன நிகழ்ந்தது என்று மெய்யாகச் சொல்லும் பெற்றி உங்களுக்கு இருக்கவேண்டும். அது உங்களுக்கு காட்டும் நீங்கள் எனக்குச் செய்தது என்ன என்று. இனி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று சல்யர் மூச்சிரைத்தார். “எவரும் எதையும் தனிப்பட்ட உளமோதலாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இங்கு எவரும் தனியர்கள் அல்ல. நாம் அனைவரும் அரசரின் பணியிலிருக்கிறோம். இக்களத்தில் வெற்றியை ஈட்டவேண்டிய நிலையிலிருக்கிறோம். வெற்றுணர்வுகளுக்கு இங்கு இடமில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“இது வெற்றுணர்வல்ல” என்று சல்யர் கூவியபடி மேலும் உள்ளே வந்தார். “எதன்பொருட்டு நான் இங்கு வந்தேனோ அதையே அழிப்பது இது. ஒருபோதும் இதை நான் ஏற்க இயலாது” என்று கைநீட்டினார். “என்ன எண்ணியிருக்கிறீர்கள் என்னை? என்னை சூதன் என்று அமரச்செய்கிறீர்கள் என்றால் இதுநாள் வரை என்னவென்று எண்ணி என்னை அவையிலமர்த்தினீர்கள்?” துச்சாதனன் “அங்கர் ஓர் எண்ணமென்றே உரைத்தார், மத்ரரே. நாம் அதைப்பற்றி பேசுவோம் என்றே அதற்குப் பொருள்” என்றான். கர்ணன் “ஆம், நான் எளிய விழைவாகவே இதை சொன்னேன். ஆனால் இவரால் மறுக்கப்பட்டுவிட்ட பின்னர் இதில் உறுதி கொள்கிறேன். ஏனென்றால் மறுக்கப்பட்டேன் என்பது எனக்கு இழிவு. அவ்விழிவுடன் வில்லேந்தி களம் சென்றால் அது என்னை உளம் அழிக்கும். இவர் எனக்கு பாகனாக வந்தே ஆகவேண்டும்” என்றான்.

“அது நிகழப்போவதில்லை. ஒருநிலையிலும் அது நிகழப்போவதில்லை. சூதனுக்குப் பாகனாக எந்த மலைமகனும் வரப்போவதில்லை” என்று சல்யர் கூச்சலிட்டார். கர்ணன் சுட்டுவிரலால் மீசையைச் சுழித்தபடி அவரை தன் சிறிய கூர்விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான். சல்யர் அவனை நோக்கி கைநீட்டி பற்கள் தெரிய முகம் வலிப்புகொள்ள முன் சென்றபடி “சூதனே, உன் நோக்கம் என்ன என்று தெரிகிறது. என்னை முற்றிலும் வீழ்த்த எண்ணுகிறாய். நான் உனக்கு பாகனென களம்சென்றால் மறுபுறம் என் மறுமைந்தர்கள் என்னை நோக்கி நகைப்பார்கள் என்று அறிந்திருக்கிறாய். அவர்கள் முன் நான் இங்கே சூதனென்றே நடத்தப்படுகிறேன் என்று காட்டவிழைகிறாய். அவர்களுக்கு என் மீதிருக்கும் எஞ்சிய மதிப்பையும் அழிக்கத் திட்டமிடுகிறாய்” என்றார்.

“அவர்கள் என்னைக் கொல்வதற்கு இக்கணம் வரை தயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நான் இன்றும் அவர்களின் குடிமூத்தவன். தந்தையின் இடத்தில் அமர்ந்தவன். என் எதிரில் வில்லெடுத்து வருகையில் அவர்கள் கை தளர்வதை பலமுறை கண்டிருக்கிறேன். சூதனுக்குப் பாகனாக நான் அமர்ந்துவிட்டேன் என்றால் அதன் பின்னர் அவர்களுக்கு அத்தயக்கம் இருக்காது. அவர்களில் ஒருவனது வில்லால் நான் இறப்பேன் என்று எண்ணுகிறாய்” என்றார் சல்யர். “தேவையற்ற சொற்கள் எதற்கு…” என்று கிருபர் சொல்ல “தேவையானதுதான் இது. இவனுக்குத் தேவையானது. ஏனென்றால் இன்று இவன் வெறும் சொல்வீரன் என்றும் வீண் ஆணவத்தையே வீரம் என முன்வைப்பவன் என்றும் அறிந்துள்ளவன் நான் மட்டுமே. பீஷ்மருக்குப் பின் அதை அவையிலெழுந்து சொல்பவனாகவும் இருக்கிறேன். இவனால் என்னை வெல்ல இயலாது. எனவே என்னை சிறுமைசெய்து அழிக்க எண்ணுகிறான்” என்றார் சல்யர்.

“நான் எண்ண வேண்டிய அனைத்தையுமே நீங்களே சொல்லிவிட்டீர்களென்றால் மேலும் எண்ணுவதற்கு எனக்கு சொற்கள் இருக்காது” என்று கர்ணன் இகழ்ச்சியாக சொன்னான். அதை புரிந்துகொள்ளாமல் சல்யர் மீண்டும் “ஒருபோதும் இது நிகழப்போவதில்லை. நான் சொல்கிறேன், இவன் படைத்தலைவனாக வேண்டிய தேவையும் இல்லை. இப்போரை நான் நடத்துகிறேன். என்னால் படைத்தலைமை கொள்ளமுடியும். என் வில்திறனால் பாண்டவர்களை வென்று இப்போரை முடிக்கவும் என்னால் இயலும். துரோணர் தொடங்கிவைத்ததை நான் முடிக்கிறேன். அவருக்கு நான் பட்ட கடனை தீர்க்கிறேன். பிறகென்ன?” என்று கூவினார். “ஆணை கொடுங்கள்! நான் படைத்தலைமை ஏற்கிறேன்” என்று துரியோதனனை நோக்கினார். கைகளில் தலைசாய்த்து வாயிலிருந்து எச்சில் வழிய அவன் துயின்றுகொண்டிருப்பதைக் கண்டு முகம் சுளித்து திரும்பிக்கொண்டார்.

அஸ்வத்தாமன் “அவ்வாறல்ல மத்ரரே, இத்தருணத்தில் போரை நடத்த அங்கரால் மட்டுமே முடியும். தாங்கள் வெல்லமுடியும். அதை மறுக்கவில்லை. ஆனால் வெல்லமுடியுமென்ற எண்ணத்தை நம் படைகளிடம் உருவாக்க அங்கரால் மட்டுமே முடியும். நீங்கள் அடைந்த வெற்றிகள் எல்லாம் உங்கள் மலைநாட்டில் நிகழ்ந்தவை. அவற்றை நம் படைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கர் அவர்களை நடத்திச்சென்று பாரதவர்ஷத்தின் பாதிநிலத்தை ஏற்கெனவே வென்றவர்” என்றான். கிருபர் “அங்கர் படைத்தலைமை ஏற்பதை முடிவு செய்துவிட்டுதான் மேலே பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “எனில் இனி நீங்களே பேசுங்கள். இந்த அவையில் எனக்கு பணி எதுவும் இல்லை” என்றபின் சல்யர் வெளியே நடந்தார்.

துச்சாதனன் பார்த்தபோது இரு கைகளாலும் தலையைப் பற்றி குனிந்து இமைகள் சரிந்து வாய் சற்றே கோணலாகி நீள்மூச்சொலியுடன் துரியோதனன் அரைத்துயிலில் இருந்தான். “மூத்தவரே” என்ற துச்சாதனன் துரியோதனனின் காலைத் தொட்டு அசைத்தான். விழித்து “என்ன நிகழ்கிறது? யார்?” என்றான் துரியோதனன். வாயைத் துடைத்துவிட்டு “நாம் படைமுகம் செல்லவிருக்கிறோமா?” என்றான். “மூத்தவரே, சல்யர்தான் தனக்கு தேர்நடத்த வேண்டுமென்று அங்கர் விரும்புகிறார்…” என்று துச்சாதனன் சொல்வதற்குள் “ஆம், சல்யர் தேர்நடத்தட்டும்… அதுவே முறை. நாம் வெல்லும் வழி அதுவே” என்று துரியோதனன் சொன்னான்.

சல்யர் வாயிலருகே நின்று திரும்பி சீற்றத்துடன் “என்னை சூதன் என்று ஆக்க விழைகிறீர்களா? சூதனுக்குச் சூதனாக சென்று அமர்ந்த பின்னர் என் கொடிவழியினருக்கு நான் அளிக்கும் அடையாளம் என்ன? குடிப்பெருமை காக்க மட்டுமே நான் இப்போருக்கு வந்தேன். பிறிதொன்றையும் இங்கிருந்து நான் அடைவதற்கில்லை. நாளை என் மைந்தர் ஷத்ரிய அவையில் நிகரமர்வு கொள்ள வேண்டுமென்பதற்கப்பால் நான் எதையும் எண்ணிச் சூழவும் இல்லை. இக்களத்தில் அதை இழந்துவிட்டு பின் நான் அடைவதுதான் என்ன?” என்றார். “உங்கள் வெற்றியும் உங்கள் மணிமுடியும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அது என் புரவியில் சூட்டும் கடிவாளத்திற்கு நிகர். ஆம், என் கால் குறடுக்கு நிகர்.” அழுத்தமான குரலில் “மிகைச்சொற்கள் வேண்டாம், மத்ரரே” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இப்போரில் வென்றால் மட்டுமே உங்களுக்கு பெருமையோ செல்வமோ அணுவளவேனும் எஞ்சப்போகிறது. இல்லையேல் நீங்கள் ஒரு மலைப்புரவியின் மதிப்புகூட இல்லாதவர் என்று உணர்க!”

சல்யர் திகைப்புடன் வாய்திறந்து நின்றார். “இக்களத்தில் நீங்கள் தோற்றால் சௌவீர, பால்ஹிக நாடுகளின் அரண்களும் களஞ்சியங்களும் பாண்டவர்களால் முற்றழிக்கப்படும். அந்நாடுகள் நூறு துண்டுகளாக சிதறடிக்கப்பட்டு பாண்டவர்களின் கீழ் சிற்றரசுகளாக அமையும். ஒருபோதும் அவை கொடிகொண்டு அமரவோ கோல்கொண்டு ஆளவோ இயலாது. ஏனென்றால் நீங்கள் அவர்களுக்குச் செய்தது நேரடியான நம்பிக்கை வஞ்சகம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “சௌவீர, பால்ஹிக நாடுகளை ஆளவிருப்பவர்கள் சிபிநாட்டவர். ஏனென்றால் அவர்கள் வென்றவர்களுக்கு குருதியுறவுகொண்டவர்கள். ஆளவிருக்கும் யுதிஷ்டிரனின் மைந்தர் சைப்யர் என்பதை மறக்கவேண்டாம். உங்கள் கொடிவழியினர் சிபிநாட்டுக் கொட்டில்களில் புரவி மேய்ப்பதைவிட இப்போது நீங்கள் தேர்தெளிப்பதொன்றும் சிறுமை அல்ல.”

ஒரு கணத்தில் முற்றிலும் தளர்ந்து சல்யர் “ஆம்” என்றார். முனகல்போல மீண்டும் ஓர் ஒலியெழுப்பி கால் தளர்ந்து பீடத்தில் அமர்ந்தார். “நீங்கள் இன்று ஆற்றவேண்டியது ஒன்றே. இப்போரில் வெல்ல என்ன செய்யவேண்டும் என்பது மட்டும்தான் நம் எவருக்கும் முதன்மைக் கடமை. அதை மட்டும் எண்ணுவோம்” என்றான் அஸ்வத்தாமன். “ஆம், அதைத்தான் நானும் எண்ணுகிறேன்” என தழைந்த குரலில் சல்யர் சொன்னார். கர்ணன் “நான் படை நடத்துகிறேன். தேரிலேறி களமுகம் நின்று அர்ஜுனனையும் பீமனையும் வெல்கிறேன். நாளைய போருக்குப் பின் எவர் வெல்வதென்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால் இவர் எனக்கு தேரோட்டியாகவேண்டும்” என்றான்.

சல்யர் அழுகை நிறைந்த முகத்துடன் வெறுமனே அவனை பார்த்தார். துரியோதனன் மீண்டும் மெல்லிய குறட்டை ஒலியை எழுப்பினான். “மூத்தவரே” என்று அவன் காலை அசைத்தான் துச்சாதனன். துரியோதனன் விழித்து எழுந்து சல்யரை நோக்கி “மத்ரரே, தாங்கள் எனக்கு அளிப்பதற்கு பிறிதொன்றும் இல்லை. இது எனது ஆணை அல்ல, எனது விண்ணப்பம்” என்றான். சல்யர் தோள் தளர்ந்து “இத்தகைய சொற்களால் என்னை அடிமை கொள்கிறீர்கள்” என்றார். ஆனால் அவர் முகம் தெளிவடைந்தது. “உங்கள் ஆணை எனக்கு பொருட்டல்ல, ஆனால் இன்சொற்களை என்னால் தட்டமுடியாது என அறிவீர்கள்” என்றார். “எனில் இதை இறுதிமுடிவு செய்வோம். அங்கர் படைத்தலைமை கொள்கிறார். படைமுகப்பில் அவருக்கு சல்யர் தேரோட்டுகிறார்” என்றான் அஸ்வத்தாமன்.

சல்யர் மீண்டும் விசைகொண்டு எழுந்து தன் மேலாடையை எடுத்து அருகிலிருந்த இருக்கையில் ஓங்கி வீசி “அவ்வளவுதானே? நீங்கள் விழைவது நடக்கட்டும். நான் என் குடிப்பெருமையை இழக்கிறேன். என் ஆணவத்தை அழித்துக்கொள்கிறேன். இச்சூதனுக்கு பாகனாக அமர்கிறேன். அதற்குமேல் ஏதேனும் இருந்தால் அதையும் ஆற்றுகிறேன்…” என்றார். பின்னர் “அரசே, இங்கு பெருவில்லவர்கள் உங்களுக்காக உயிர் கொடுத்தனர். மைந்தரை கொடுத்தனர் பலர். நான் அதற்கு அப்பாலும் கொடுத்திருக்கிறேன், நினைவுகொள்க!” என்று கூறி அவையை விட்டு வெளியேறினார். அவர் செல்வதை பொருளிலா விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்த துரியோதனன் திரும்பி ஏவலனிடம் வாய்மணம் கொண்டுவரும்படி கைகாட்டினான்.

அஸ்வத்தாமன் கர்ணனிடம் “அவர்தான் தேரோட்ட வேண்டுமென்று ஏன் கூறினீர்? அவரை சிறுமை செய்யும் நோக்கம் மெய்யாகவே உங்களுக்கு இருந்ததா?” என்றான். கர்ணன் “இல்லை. இந்தக் களத்தில் இதுவரை நான் எடுக்காத சில அம்புகளை எடுக்கவிருக்கிறேன். அதற்குரிய விசை என் தேரில் கூடவேண்டும். நான் நாணொலிப்பதற்கு இணையாக என் தேர் திரும்பவேண்டும். என் அம்புகளை தானும் முற்றறிந்த ஒருவரே தேரை தெளிக்க முடியும். அந்தியில் நான் உணர்ந்தது அதுவே. அர்ஜுனனின் படைவெற்றிக்கு முதன்மை அடிப்படையாக அமைவது இளைய யாதவன் தேர்தெளிக்கிறான் என்பது. அவனது அத்தனை அம்புகளையும் தானும் அறிந்தவன். அவன் போடும் படைக்கணக்குகள் அனைத்தையும் முன்னரே உணர்ந்தவன்” என்றான்.

“களத்தில் பாகனுக்கு சொல்லி புரியவைப்பது இயலாது. நான் அறிந்த அம்புகளை ஷத்ரியரன்றி பிறர் அறிந்திருக்க மாட்டார்கள். ஷத்ரியர்களிலும் வில்தவம் இயற்றியவரே என் அரிய அம்புகளை உணரமுடியும். சல்யர் நானறிந்த அனைத்து வில்தொழிலையும் தானுமறிந்தவர். அவரிடம் நான் சொல்வதற்கெதுவுமில்லை” என்றான். துச்சாதனன் “அவர் சீற்றம் கொண்டிருக்கிறார். சிறுமைப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார். நாளை போரில் அவர் உங்களை கைவிட்டாரெனில் என்ன செய்ய இயலும்?” என்றான். அதுவரை அங்கில்லாதவர்போல் இருந்த சகுனி “ஆம், தேர் நடத்தும்போது அவர் வேண்டுமென்றே தன்னை உள்ளிழுத்துக்கொண்டாரென்றால் இடர்தான்” என்றார்.

“அவ்வாறு வீரனால் செய்ய இயலாது என்றே எண்ணுகிறேன். அவர் எளிய வீரர், அரசுசூழ்தலின் கணக்குகள் அறிந்தவரல்ல. இக்கொந்தளிப்புகளும் வசைச்சொற்களும் போருக்கு முந்தைய கணம் வரைக்குமே. போர்முரசு முழங்கிவிட்டதென்றால் அதன் பின்னர் வில்லிலிருந்து எழும் தேவர்கள் போரை நடத்துகிறார்கள். அவர்கள் நம் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் அல்ல. நமது எளிய உணர்வுகள் எதையும் அவர்கள் அறிவதுமில்லை” என்றான் கர்ணன். கிருபர் “ஆம், போரில் எவரும் ஆணவக் கணக்குகள் போடுவதில்லை” என்றார். சகுனி “தெய்வங்களே நடத்துகின்றன என்பது உண்மை, ஆனால் தெய்வங்களை மனிதர்கள் கணிக்கவே முடியாது” என்றார்.

விழித்தெழுந்தவன்போல துரியோதனன் கைகளை ஓங்கித்தட்டினான். “நாம் வென்றாக வேண்டும். எவ்வகையிலும் வென்றாகவேண்டும். நாளையே இப்போர் முடிந்தாகவேண்டும்” என்று கூவினான். “நாளை இக்களத்தில் நான் குருதியில் நனைந்து எழுந்து நின்று அமலையாடவேண்டும். மணிமுடியை இங்கேயே சூடிக்கொள்ளவேண்டும்.” கர்ணன் “ஆம் அரசே, நாளையுடன் இப்போர் முடியும்” என்றான். “நாளை அர்ஜுனன் இறக்கவேண்டும். நாளை யுதிஷ்டிரன் வந்து என் அடிபணிந்தாகவேண்டும்” என்றான் துரியோதனன். “அது நிகழும், அறிக தெய்வங்கள்!” என்று கர்ணன் சொன்னான். துரியோதனன் அஸ்வத்தாமனிடம் “நமது படைசூழ்கை என்ன? உடனே படைசூழ்கை வகுக்கப்படட்டும்” என்றான்.

“அங்கர் படை நடத்துகிறாரா என்பதை கருத்தில் கொண்டு எனது படைசூழ்கையை முழுமை செய்யலாமென்று எண்ணினேன். அவர் படை நடத்துகிறார் என்பது உறுதியாயிற்று. இனி நான் என் படைசூழ்கையை முழுமை செய்ய வேண்டும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அங்கரும் சல்யரும் ஒரே தேரில் அமர்ந்திருப்பார்களெனில் நான் இப்போது வகுத்து வைத்திருக்கும் படைசூழ்கையை அவிழ்த்து மீண்டும் கோக்க வேண்டும். புலரிக்குமுன் என் படைசூழ்கையை அறிவிக்கிறேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அதற்குமுன் அங்கர் போர்த்தலைமை கொண்டதை முரசு அறிவிக்கட்டும். படைகள் அதை அறிந்தபின் துயில்கொள்ளட்டும்” என்று கிருபர் சொன்னார்.

“அவ்வாறே ஆகுக! நான் ஓய்வெடுக்கிறேன். என் உடல் மதுவால் எடை கொண்டிருக்கிறது” என்றபடி துரியோதனன் எழுந்தான். அவன் சற்று தள்ளாட துச்சாதனன் அவன் தோள்களை பற்றிக்கொண்டான். “விடு என்னை… நான் என்ன நோயாளன் என எண்ணினாயா?” என்றான் துரியோதனன். ஆனால் மீண்டும் நிலையழிந்து விழப்போனான். துச்சாதனன் அவனை பற்றிக்கொண்டு அழைத்துச் சென்றான். “அனைத்துச் செய்திகளும் என்னை வந்தடையவேண்டும்…” என்றான் துரியோதனன். “இளையோனே” என வேறெங்கோ நோக்கி அழைத்தான். “மூத்தவரே” என்றான் துச்சாதனன். துரியோதனன் “என் சார்பாகச் சென்று நீ சல்யரிடம் மீண்டும் பேசு. அவருடைய உளச்சோர்வை அகற்று… அஸ்வத்தாமனும் அவரிடம் பேசட்டும்” என்றான். அஸ்வத்தாமன் “ஆணை” என்றான்.

சகுனி “நாளைய படைசூழ்கையை புலரிக்கு முன் ஒருமுறை என்னிடம் கொண்டுவந்து காட்டுக!” என்றார். அவர் அந்த அவையில் பேசவே இல்லை என்பதை அஸ்வத்தாமன் அப்போதுதான் உணர்ந்தான். “அங்கருக்கு பீஷ்மரின் நற்சொல் அமைந்தது என்பதையும் நம் படைகளிடம் அறிவிக்கவேண்டும்” என்றார் சகுனி. “ஆம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கர்ணனும் கிருபரும் பேசியபடி வெளியேறினர். சகுனி தன் காலை நீட்டி நீட்டி வைத்து மெல்ல நடந்தார். அஸ்வத்தாமன் அவருடைய நடையால் உள்ளம் சீண்டப்பட்டான். அவருடைய எப்போதுமிருக்கும் நடை அது என அவன் அறிந்திருந்தான். ஆயினும் அப்போது அவன் உள்ளம் சீற்றம் கொண்டது. அங்கே நிகழ்ந்தவற்றுக்கு முற்றிலும் அப்பால் அவர் பதறாது சோர்வுறாது அமர்ந்திருந்தார் என எண்ணச் செய்தது.

அவன் அவரை புண்படுத்த விழைந்தான். தொட்டுத்தொட்டு பல எண்ணங்களினூடாகச் சென்று கண்டடைந்ததும் அகம் மலர்ந்தான். “நான் தங்களிடம் கேட்கவேண்டும் என எண்ணினேன், காந்தாரரே. அமைச்சர் கணிகர் எங்கே இருக்கிறார்? அவர் நலமாக இருக்கிறார் அல்லவா?” என்றான். சகுனியின் முகத்தில் கடுமையான வலி என ஒரு சுளிப்பு உருவாகி மறைந்தது. புன்னகை எழ “அவர் அமைச்சர் அல்ல, அதை முதலில் சொல்லவேண்டும். அவர் அந்தணர், நோன்புகொண்ட அந்தணர் களம் வருவதில்லை” என்றார். “அஸ்தினபுரியில் அவர் இல்லை என எண்ணுகிறேன்” என்றான் அஸ்வத்தாமன் சகுனியின் கண்களை கூர்ந்து நோக்கியபடி. “ஆம், அவர் அருகே ஒரு காட்டுக்குடிலில் இருக்கிறார்” என்ற சகுனி மேலும் புன்னகை விரிய “போரெழுகையைக் கண்டு அஞ்சி உடனே கிளம்பிவிட்டார். நலமாக இருக்கிறார் என நினைக்கிறேன்” என்றபின் நடந்து சென்றார்.

அஸ்வத்தாமன் அவையிலிருந்து வெளிவந்தபோது தன் தேரில் சல்யர் தலையை தாங்கி அமர்ந்திருப்பதை கண்டான். காலடி கேட்டு அவர் ஏறிட்டுப் பார்த்தார். அவருடைய பாகன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி அவருடைய ஆணைக்காக காத்து நின்றிருந்தான். அவர் கர்ணன் அவரை கடந்துசெல்வான் என எதிர்பார்க்கிறார் என அஸ்வத்தாமன் எண்ணினான். ஆனால் கர்ணன் எதிர்ப்பக்கமாக நடந்து சென்றான். கிருபரும் அவனுடன் பேசியபடி செல்ல சல்யர் அவர்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அஸ்வத்தாமன் அவரை நோக்கி நடந்து சென்று தேருக்குக் கீழே நின்றபடி “மத்ரரே, வணங்குகிறேன்” என்றான். சல்யர் நிமிர்ந்து சிவந்த விழிகளால் அவனை பார்த்தார்.

“தாங்கள் சற்று மிகையாக எண்ணுகிறீர்கள். தாங்கள் அங்கருக்குத் தேரோட்டியதனால் எந்த இழிவையும் அடையப்போவதில்லை. அர்ஜுனனை அவர் வென்றால் அதன் பெருமை அனைத்தும் உங்கள் இருவருக்குமாக பகிரப்படும். அது உங்கள் குடிப்பெருமையையும் தனிப்பெருமையையும் மிகையாக்கவே செய்யும். ஒருபோதும் இதன் பொருட்டு நீங்கள் வருந்த நேராது” என்றான் அஸ்வத்தாமன். “நான் அவரிடம் கேட்டேன். மெய்யாகவே உங்களை இழிவுசெய்யும் நோக்கம் அவருக்கில்லை. அம்புகளை தானுமறிந்தவரே நுண்ணொடு நுண் பொருதும் போரில் வில்லவனுக்கு தேர்தெளிக்க முடியும் என்றார். அர்ஜுனனும் கிருஷ்ணனும் இணைந்து களம்நிற்கையில் இணையான இன்னொரு பாகனும் வில்லவனுமே அவர்களை எதிர்கொள்ள முடியும். அங்கர் சொல்வது உண்மையானதுதான்.”

“அல்ல” என்று அவர் சொன்னார். “அவனை நான் அறிவேன். அவனால் பாகனின் உள்ளத்தை ஆளமுடியும். பாகன் வழியாக புரவிகளையே ஆள முடியும். அவன் பரசுராமரின் மாணவன். நாணொலியால் உள்ளங்களைக் கவரும் கலை அறிந்தவன். இதில் போர்நோக்கமே இல்லை.” அஸ்வத்தாமன் “நான் அவரிடம் கேட்டேன். அவர் பொய் சொல்லவில்லை என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் உங்களை எவ்வகையிலும் சிறுமைப்படுத்த விரும்பவில்லை என்றே எண்ணுகிறேன்” என்றான். “அவன் என்னை சிறுமைப்படுத்தவில்லை” என்று சல்யர் சொன்னார். “அவன் எனக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறான். எனக்கல்ல, வேறு ஒருவருக்கு” என்றார்.

“என்ன செய்தி?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். சல்யர் மறுமொழி சொல்லவில்லை. சல்யரின் முகத்தை ஒருகணம் நோக்கிவிட்டு அஸ்வத்தாமன் “இந்தப் போரின் பொருட்டு தாங்கள் எவ்வகையிலும் உளவருத்தம் கொள்ளவேண்டியிருக்காது என்பதைத்தான் நான் மீளவும் சொல்ல விழைகிறேன்” என்றான். “இப்போரின் பொருட்டு மட்டும்தான் வாழ்நாளெல்லாம் நான் வருந்துவேன். ஆனால் இப்போர் முடிந்த பின்னர் ஒரு நாளுக்கு அப்பால் நான் உயிரோடிருப்பேன் என்று எண்ணவில்லை” என்று சல்யர் சொன்னார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். சல்யரின் விழிகள் சிவந்திருந்தன. “நீங்கள் அறியாத நூறு முடிச்சுகள் இந்தப் பரப்பில் உண்டு, இப்போது சொல்லமுடியாதவை” என்று சல்யர் சொன்னார்.

அவரை அஸ்வத்தாமன் வியப்புடனும் திகைப்புடனும் பார்த்துக்கொண்டிருந்தான். “நான் இந்தக் களத்திற்கு வந்தது வேறொன்றுக்காக. ஒருபோதும் எதிர்நின்று போரிட நேரக்கூடாது. ஒரு அம்பையேனும் என் கைகளால் தொடுத்துவிடக்கூடாது என்பதற்காக” என்றார் சல்யர். “எவருக்கெதிராக?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். சல்யர் அதற்கு மறுமொழி சொல்லாமல் இல்லை இல்லை என்பதுபோல் தலையசைத்தார். “இதோ நானே அழைத்துச் செல்லவிருக்கிறேன். செல்லுமிடம் எதுவென்று அவனுக்குத் தெரியும். எனக்கும் தெரியும். என்னை அழைத்துச் செல்ல வைக்கிறான். முழுப் பொறுப்பையும் என் மேல் சுமத்திச் செல்ல விரும்புகிறன். ஆம், அதற்கு நான் தகுதி கொண்டவனே. எழுந்து என் குரலை எந்த அவையிலும் ஒலிக்கத் துணியாதவன்.”

அவர் தனக்குத்தானே என சொல்லிக்கொண்டே சென்றார். “வேறெவருடையவோ உள்ளத்தை மட்டுமே நான் எண்ணினேன். அவனை எண்ணவில்லை. அவனை நான் எண்ணியிருந்திருக்க வேண்டும். அவனுக்கு அளிக்க வேண்டியதை அளிக்கவில்லை.” “யாருக்கு?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். சல்யர் கைநீட்டி தேர்ப்பாகனின் தோளில் தட்டி “செல்க!” என்றார். தேர் முன்னெழுந்து விரைய அஸ்வத்தாமன் அதில் உடல் குலுங்க அமர்ந்துகொண்டிருந்த சல்யரை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.

துச்சாதனன் அவன் அருகே வந்து “சென்றுவிட்டாரா?” என்றான். “ஆம், நீ அவரை தொடர்ந்து செல். அவரிடம் பேசு. அவர் மேலும் சொற்கள் கொண்டிருக்கிறார். அவர் இங்கே நின்றதே அங்கரிடம் எதையோ சொல்வதற்காகத்தான். அச்சொற்கள் இப்போது அவருள் பெருகிக்கொண்டிருக்கும். அவற்றைச் சென்று கேள்” என்றான் அஸ்வத்தாமன். “அவற்றை என்னிடம் சொல்லி என்ன பயன்?” என்று துச்சாதனன் கேட்டான். “அவற்றை என்னிடம் சொல்வாரா?” என்று மீண்டும் கேட்டான். “உன்னிடம் அங்கரிடம் பேசவிருந்தவற்றை பேசமாட்டார். முற்றிலும் வேறு சிலவற்றையே சொல்வார். ஆனால் அவர் அங்கரிடம் பேசவிழைந்தவற்றுக்கு அவை நிகரானவையாகவே இருக்கும்” என்றபின் அஸ்வத்தாமன் புன்னகைத்தான்.

துச்சாதனன் “எனக்கு ஒன்றும் புரியவில்லை, பாஞ்சாலரே” என்று சொன்னான். “என் உள்ளம் இப்போதெல்லாம் எதையும் முழுதுற உள்வாங்கிக்கொள்வதில்லை போலும். இச்சொற்கள் அனைத்திலிருந்தும் அகன்றிருக்கிறேன். இவை எனக்கு பொருள் அளிக்கின்றன, எவ்வுணர்வையும் அளிக்கவில்லை” என்றான். அஸ்வத்தாமன் சிரித்து “அதை பிராணசுஷுப்தி என்கிறார்கள் மருத்துவர்” என்றான். “என்ன?” என்றான் துச்சாதனன். “உயிராழ்வு” என்று சொல்லி அவன் தோளைத் தொட்டு “அதை அஸ்வினிதேவமாலிகை இப்படி சொல்கிறது. புலரிதேவி எழுவதற்கு முன் இனிய குளிர்காற்று வீசுகிறது. இரவின் மூச்சுக்களை எல்லாம் அள்ளி அகற்றுகிறது. உயிர்களை ஆழ்ந்து துயிலச்செய்கிறது. மலர்களைத் தொட்டு விரியச்செய்கிறது. புது நறுமணங்களை பரப்புகிறது. உள்ளங்களில் இனிய கனவுகளை நிறைக்கிறது. அதைப்போல சாவன்னை எழுந்தருளும்போது அவளுக்கு முன் உயிராழ்வு என்னும் இனிய காற்று எழுகிறது” என்றான் அஸ்வத்தாமன்.

துச்சாதனன் உரக்க நகைத்து “அவ்வாறு நிகழுமென்றால் நன்றே” என்றான். பின்னர் குரல் உடைய “துருமசேனனை மீண்டும் ஒருமுறை காணமுடியும் என்றால் அதன்பொருட்டு ஏழு இருளுலகுகளுக்கும் செல்ல நான் ஒருக்கமாவேன்” என்றான். அஸ்வத்தாமன் அவன் தோளைத் தொட்டு “எந்தையின் உடலை துண்டுதுண்டாகச் சேர்த்துச் சிதையேற்றிவிட்டு வந்திருக்கிறேன். மீண்டும் ஒரு படைசூழ்கைக்காக. அச்சோர்வில் சொன்ன சொற்கள் அவை. கருத்தில் கொள்ளவேண்டாம்” என்றான். “இனிய சொற்கள் அவை, பாஞ்சாலரே” என்றான் துச்சாதனன். “எவ்வாறாயினும் தமையனின் ஆணையை கடைக்கொள்ளவேண்டும். அவரிடம் சென்று பேசிப் பார்க்கிறேன்” என்று தன் புரவியை நோக்கி சென்றான்.

தொடர்புடைய பதிவுகள்

கங்கைக்கான போர் -கடிதங்கள்

$
0
0

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

அன்புள்ள ஜெ

 

சோர்வடைய வைத்த பதிவு – இரண்டு பேரின் உயிரிழப்பு, மூன்றாவது ஒருவரின் உயிரும் பணயம் வைக்கப்பட்டுள்ளது… என்னதான் செய்ய முடியும்..

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2014 தேர்தல் ஒரு வித நம்பிக்கையை, அரசியல்-லட்சியவாத அலையை எழுப்பி இருந்தது – ஆம் ஆத்மி, மோடி ஆகியோரின் மூலம்.. ஆனால், மீண்டும் மீண்டும் வரலாறு உரைப்பது ஒன்று தான் – அரசியல் வேறு லட்சியம் வேறு.. ஆகவே, “எல்லாம் அப்படித்தான்” என்ற மனநிலைக்கு இந்த 5 ஆண்டுகளில் திரும்பி வந்து சேர்ந்திருக்கிறோம்..

 

மீண்டும் ஒரு வெளிச்சம் யாரும் என்று நம்புவோம்.. நமக்காக உயிரையும் துறப்பவர்களுக்கு நம் வணக்கங்களையும், நம் வருங்கால சந்ததியின் நன்றிகளையும் தெரிவிப்போம்..

 

நன்றி

ரத்தன்

 

அன்புள்ள ஜெ வணக்கம்…

 

குக்கூ அமைப்பினரின் நீர் நெருப்பு ஒரு பயணம், மற்றும் நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு இரண்டையுமே படித்தேன்.

 

எதிர்வினைகள் செய்யாமைக்கு ஒருவிதமாய் மரத்துப்போனதும், சுரணையின்னையுமே காரணங்கள்.

 

என் சொந்த ஊர் திருப்பூர் சிறுவயதில் நொய்யல் ஆற்றில் குளித்திருக்கிறேன் நீர் குடித்தும் இருக்கிறேன், அனுவனுவாக அந்த ஆறு சிதைந்தது யாவரும் அறிந்ததே, அதை கண்ணுற்ற மௌன சாட்சிகளில் நானும் ஒருவன். அக்குற்ற  உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு

 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக என் தொழில் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பது, பெரும் இலட்சியவாத வேகத்தோடு தமிழகத்தில் பரவிய இயற்கை வேளாண்மையின் இன்றைய நிலையை நீங்களே அறிவீர்கள்.

 

அதற்கு முன்பிருந்தே இயற்கை சூழல் செயல்பாடுகள் சார்ந்து நிறைய பங்கெடுத்து இருக்கிறேன்.

 

நகர்ப்பகுதிகளில் செய்யப்பட்ட மரம் வளர்ப்பு முயற்சிகள் 97% தோல்விதான். (பல காரணங்கள் அவை விரிவானவை இங்கே பேச விரும்பவில்லை),

 

இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் நெகிழி தடை நானறிந்த மூன்றாவதோ, நான்காவதோ தடை.

தடை அமலான சில நாட்களிலேயே எல்லாம் இயல்புப்படி நிகழ்ந்தது.

 

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரும்பாலான பகுதிகளுக்கு வன சுற்றுலாவும் மலை ஏற்றமும் தொடர்ந்து சென்று வருபவன் என்ற வகையில் வன அழிப்பு , வனவிலங்கு வேட்டை,நிகழாத இடங்களே இல்லை என்று கூறிவிடலாம்.

 

 

மேற்கண்டவற்றை நான் கூறுவது பிறர் மேல் பழி போடுவதற்காக மட்டுமல்ல.

 

இந்த வாழ்வில் நான் அடைந்த புரிதல்களில் ஒன்று ஏந்த மாற்றமும் எளிதாக வந்துவிடுவதில்லை.

 

இப்போதைய பிரதமரோ முந்தைய பிரதமரோ இந்திய ஆறுகள் அழிவதை அறியாதவர்கள் அல்ல, அதை காக்கும் வழிமுறைகள் தெரியாதவர்களும் அல்ல,

சீரமைக்க எடுக்கும் முயற்சிகள் பல கோடி மக்களின் வாழ்வில் நேரடியாக தலையிடுவது, தற்கால ஓட்டு பொறுக்கும் அரசியலில் இவையெல்லாம் நடக்குமா?

 

வாழத் தெரியாதோர் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதோர் ஆட்சி தானே அமையும்.

 

 

தொலை நோக்கோடு சிந்திக்கும் தலைவர்களும், பேராசையற்ற மக்களும் நம் சமூகத்தில் மிகச்சிறுபான்மையே.

 

 

இந்திய ஆறுகள் காக்கப்பட வேண்டும் எனில் பெரும் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் வேண்டும்.

 

 

நதிக்காவல்துறை/RIVER ARMY

 

நாட்டின் எல்லையை காப்பது போல, சமரசமற்று ,குற்றங்களுக்கு கடும் தண்டனை  வழங்கும் ஒரு பெரும் அமைப்பு தேவை, அது சில பத்தாண்டுகள் தொடர் செயல்பாட்டுடன் இருக்கும்போது மட்டுமே மாற்றம் சாத்தியம் என  எண்ணுகிறேன்.

 

 

மாத்ரிசதன் அமைப்பினரின் போராட்டம் படிக்கும் பொழுதே பெரும் நிலைகுலைவினை ஏற்படுத்துகிறது, அவர்கள்  மொளனமாக எழுப்பும் கேள்விகள் அச்சத்தை உண்டாக்குகிறது, இவ்வளவு அப்பட்டமான உண்மையை எதிர் கொள்வது எளிதாக இல்லை.

 

 

துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், சிறு நன்கொடைகள் அளித்தல்,மரம் நடு விழாக்கள், சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வை பரப்புதல்,  போன்ற எளிய  குழந்தை விளையாட்டுக்களை பார்த்தும், ஆடியும் ,பழகிய  என் போன்றவர்களுக்கு மாத்ரிசதன் நிகழ்த்தும் நிஜ யுத்தத்தை ஒளிந்து இருந்தும் கூட காண முடியவில்லை.

 

அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகியும், எப்போதும் நிறைவின்மையையே உணரும் மனங்களை கொண்ட இக்காலகட்டத்தின் ஒரு துளி தான் நானும்.

 

மு.கதிர் முருகன்

கோவை

 

அன்புள்ள ஜெ

 

நானும் நீங்கள் எழுதியதைப்பற்றி யோசித்திருக்கிறேன். ஐரோம் ஷர்மிளா பற்றி தமிழில் எவ்வளவு எழுதிக்குவிக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள். கிட்டத்தட்ட இருபது நூல்கள் அவர்களைப்பற்றி எழுதப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேல் கட்டுரைகள் இருக்கும். பலர் அவரைப்பற்றி எழுதும்போது காந்தியவழிகளை ஆதரிப்பவர்கள் என்னும் பாவனையையும் மேற்கொள்வதுண்டு. அவர்கள் எவருமே இந்த கங்கைக்கான சாத்விகப்போர் பற்றி எதுவும் எழுதவில்லை.

 

ஏன்? இது இந்தியா, இந்துமதம் ஆகியவற்றுக்கு எதிரான போர் அல்ல. அப்படி இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார்கள். இந்து துறவிகள் என்று வரும்போதே செத்தால்சாகட்டும் என்னும் புறக்கணிப்பு உருவாகிவிடுகிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப்பற்றிப் பேசும் நூறு குழுக்களாவது உள்ளன. அவர்கள் எவருமே இதைப்பற்றிப் பேசுவதில்லை. ஏனென்றால் சுற்றுச்சூழல் இவர்களுடைய அக்கறையே இல்லை. இவர்களின் அக்கறை இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான அமைதியின்மையை உருவாக்குவது மட்டுமே. அதற்கு மட்டுமே பணம் கிடைக்கும்.

 

இந்துத்துவர்கள் இந்தப்போராட்டம் காங்கிரஸ் அரசுக்கு எதிரானதாக இருந்ததுவரை அரைமனதோடு ஆதரித்தனர். அவர்களின் ஆட்சி வந்ததுமே போராடும் துறவிகள் எதிரிகளும் துரோகிகளும் ஆகிவிட்டார்கள். ஏழாயிரம்கோடி ரூபாய் கங்கையை தூய்மைசெய்ய செலவழிக்கப்பட்டது. ஆனால் ரசாயனக் கழிவுகளை கட்டுப்படுத்த, சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த ஒன்றுமே செய்யவில்லை. செய்யும் எண்ணமும் இல்லை. துறவிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்துக்கள் என நரம்புபுடைக்கிறார்கள். வணங்கத்தக்க இந்துத்துறவிகளின் உயிர்த்தியாகம் இவர்களின் மனசாட்சியைத் தொடவில்லை. ஏனென்றால் இவர்களின் உண்மையான ஆர்வம் அதிகார அரசியல்மட்டுமே

 

இவற்றுக்கு அப்பால் இங்குள்ள சாமானியர்களை நம்பி பேசிக்கொண்டிருக்கவேண்டியதுதான்

 

அருண் கல்யாண்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பொண்டாட்டி –சுரேஷ் பிரதீப்

$
0
0

மையமின்மை விளையாட்டாக கலைத்து கலைத்து கதையை அடுக்குவது என்பது போன்ற பின்நவீனத்துவ விஷயங்களாலும் நாவல் கட்டப்படவில்லை. நாவலில் ஒரு பலகீனமான தரிசனமும் உள்ளது. அதை தரிசனம் என்பதைவிட ஒருவகையான எளிய பெண்ணிய முன்முடிவு எனலாம்

 

பொண்டாட்டி – பாலுறவைப் பேசும் நீதிக்கதை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முதல்மழைக்குப்பின்…

$
0
0

 

செல்வது மீளாது

 

குமரிமாவட்டத்தில் பொதுவாக மாமரவளர்ப்பை ஒரு தொழிலாகச் செய்யமுடியாது. கூலியாள் பிரச்சினை வந்தபோது மாந்தோப்பு போடலாம் என்னும் பேச்சு எண்பதுகளில் எழுந்தது. “ஏல, சித்திரயிலே விஷுக்கணி வாங்க வருவாள்லாலே? வெறிபிடிச்ச ஏக்கியாக்கும். பூவும் பிஞ்சுமாக்கும் அவளுக்க இஷ்டம்” என்று பெரிசுகள் சொல்லிவிட்டன.

 

சொல்மிஞ்சிப்போய் ஒட்டுச்செடி வாங்கிவந்து நட்டு மாந்தோப்பு உருவாக்கி ஐந்துவருடம் காத்தவர்கள் இருந்தனர். விதை நட்ட நாளுக்குப்பின் தோட்டப்பக்கமே செல்லவேண்டியதில்லை என்பதன் கொண்டாட்டம். முதல் பூவில் மாமரங்கள் பூத்து கிளைதாழ நிறைகரு கொண்ட பசுபோல செவிதாழ்த்தி நின்றன. நோக்கி நோக்கி மகிழ்ந்தனர். கொன்றைபூத்தது. சித்திரை வந்தது. விஷு வந்து பத்தாமுதயம் எழுவதற்குள் யக்ஷி வந்தாள். கூந்தலை சுழற்றி ஒரு நான்கு நாள் வெறியாட்டமிட்டாள்.

குழல்தோகை மலைகளை நிலத்தை கூரைகளை அறைந்து அறைந்து சுழல வானில் அவள் பெருமுழக்கம் நிறைந்திருந்தது. தளிர்களை பூக்களை விரும்புபவள். இளமரங்களை வேருடன் குடைசாய்ப்பவள். புல்லுக்கு இனியவள். அவள் வந்துசென்ற மறுநாள் காய்ந்தபுற்களெல்லாம் பசுமைகொண்டிருக்கும். மூன்றாம்நாள் பல்லாயிரம்கோடி புல்விதைகள் முளைத்தெழும். மாந்தோட்டங்களில் ஒரு பூ எஞ்சவில்லை. தரையில் மஞ்சள் கம்பளம்போல மாம்பூ.

 

வெறிகொண்டு மாமரங்களை வெட்டி விறகுக்கு விற்றார்கள். “சொன்னேம்ல? மக்களை பாத்தும் மாம்பூ பாத்தும் மாலோகத்திலே யாரும் மதம்கொள்ளாண்டாம்” என்றார் மூத்தநாடார். இங்கேயே தகவமைந்த நாட்டு மாமரங்கள் உண்டு. நூறுக்கு ஒரு பூவை தக்கவைத்துக்கொண்டு ஓரளவு காய்க்கும். மரமாக எழ பதினைந்தாண்டுகளாகும். காய்க்கத்தொடங்கினால் நூறாண்டு பொலியும். ஆனால் அது தொழிலுக்கு உதவாது.

விஷு கொண்டாட்டத்தின் ஒரு பகுதி யக்ஷியின் வருகை. வேனல்காரி என்றும் பிராந்திப்பாறு [கிறுக்கிப் பார்வதி] என்றும் நாங்கள் சொல்வோம். வகைதிரிவு இல்லாதவள். தென்மேற்கிலிருந்து கிளம்பி வடகிழக்காக விரைந்து மலைகளில் மோதிச் சுழன்று மீண்டும் தென்கிழக்காக சென்று ஓய்வாள். பத்தாமுதயத்திற்குள் அவள் வரவில்லை என்றால் அவ்வாண்டு வரட்சி உண்டு. ஆனால் இங்கே வரட்சி என்பது புல்காய்வது மட்டும்தான்.

 

சித்திரை விஷு தொல்தமிழர்களின் புத்தாண்டு. விஷுக் கொண்டாட்டம் என்பது எங்களூரில் சங்ககாலத்தின் நேர்த்தொடர்ச்சி. இங்கே நாயக்கர் ஆட்சி இருந்ததில்லை என்பதனால் தமிழ்மையநிலத்தில் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றங்கள் ஏதுமில்லை.ஆண்டின் முதல்விழிப்பை எட்டு மங்கலங்களின் மீது நிகழ்த்துவதை கணிகாண்பது என்கிறோம். கண்திறப்புச் சடங்குதான் கணி..

 

எட்டு மங்கலங்களில்  நிறைகுடநீர், அகல்சுடர்நெருப்பு ,பொன்,முகம்பார்க்கும் கண்ணாடி, நெல், சித்திரையின் கனிகளான மா பலா வாழை, மங்கலத் தெய்வங்களாகிய திருமகளும் கணபதியும் ஆகியவற்றுடன் மைய இடம்பெறுவது கொன்றை மலர்.

 

தமிழகத்தின் தொன்மையான பல ஆலயங்களின் ஆலயமரம் கொன்றை. கொன்றையின் வேந்தன் தென்னாடுடைய சிவன். சிவன் கோயில்களிலேயே தொன்மையானது என கேரளத்தார் சொல்லும் திருவஞ்சைக்குளம் [வஞ்சி] கோயில் [இன்றைய கொடுங்கல்லூர் எனும் அன்றைய கொடுங்கோளூர்] கொன்றையடியானை தெய்வமெனக் கொண்டது.

 

 

ஆண்டுக்கணக்கை கொன்றையை வைத்தே கணக்கிட்ட காலத்தைச் சேர்ந்தது இவ்விழா. அன்று எல்லா காலக்கணிப்புகளும் தாவரங்களைக் கொண்டே நிகழ்ந்தன. கேரள ஆலயங்களில் எல்லா பருவமாற்றங்களும் அந்தந்தச் செடிகள் மலர்களைக் கொண்டே இன்றும் கணிக்கப்படுகின்றன. இன்றும் முதற்கொன்றை மலர்வது அங்கே நாளிதழ்களின் தலைப்புச்செய்தி.

 

தொல்பழைமையுடன் இணைந்துகொள்வது ஒரு சிறப்பான உளநிலை. இளமையில் வெறும்சடங்காகத் தோன்றுகின்றது. அன்று நாம் நம்மை ஒரு தனிப்பிறவி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். நானும் உலகமும் என எண்ணுகிறோம். முதிர்கையில் நாம் இவ்வனைத்திலும் ஒரு துளி, ஒரு தொடரின் கண்ணி, எந்நிலையிலும் அதற்கப்பால் ஏதுமில்லை, நம்மை நாம் பொருள்கொள்ள அது ஒன்றே வழி என உணர்கிறோம். அன்று இவையனைத்தும் பிறிதொன்றாகிவிடுகின்றன

விஷுக் கொண்டாட்டங்களை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம்.  மலராடை அணிவது பழைய வழக்கம். மஞ்சள்நிற ஆடையாக அது பின்னாளில் மாறியது. வேம்பும்தேனும் உண்பது. ஐந்துவகை பொங்கலிட்டு சூரியனை வழிபடுவது. இதற்காக புதுநெல்லை சேர்த்து வைத்திருப்பார்கள். பனைக்குருத்தில் வெல்லம் சேர்த்த அரிசிமாவு வைத்து ஆவியில் அவிக்கும் அப்பம் ஒன்றுண்டு. அது சாஸ்தாக்களுக்கு படைக்கப்படும். யக்ஷிகள் அனைவருக்கும் புதுமலர்களால் பூசை உண்டு.

 

சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு வெவ்வேறுவகை தொல்வானியல் கணக்குகளால் இந்தப் புத்தாண்டுக்குறிப்பு முன்னும் பின்னுமாகச் சிலநாட்கள் தள்ளிப்போய் தனித்தனி விழாக்களாக ஆகிவிட்டது என்று சோதிடரான என் பெரியப்பா சொல்வதுண்டு. [அவருடையது தவிர பிற புத்தாண்டுகள் வானியல்பிழைகளால் உருவானது என வாதிடுவார்].

சித்திரைக்குச் சற்றுமுன்னராக பங்குனியில் வரும் பங்குனி உத்தரம் ஒரு தொன்மையான தமிழ்ப்புத்தாண்டு.  சற்றுப்பிந்தி வரும் பத்தாமுதயம் இன்னொரு தொன்மையான தமிழ்ப்புத்தாண்டு. இவற்றை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இனக்குழுக்கள் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடிவந்தனர். வெவ்வேறு ஆலயங்களில் இவை புத்தாண்டுகளாக கொண்டாடப்பட்டன.

 

பத்தாம்நூற்றாண்டில் கேரளத்தைக் கைப்பற்றிய சோழர்கள் இவற்றை சீர்ப்படுத்தி சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக ஆக்கினர். மற்ற புத்தாண்டுகள் புத்தாண்டாக அல்லாமல், ஆனால் அதே கொண்டாட்டத்துடன் அவ்வாறே நீடிக்கின்றன.. பங்குனி உத்தரம், பத்தாமுதயம் இரண்டுக்குமே புத்தாண்டின் அதே சடங்குகளுடன் அதே கொண்டாட்டம் உண்டு. மலையாள மாதம் மேஷம் –மேடம்- பத்தாம் தேதி பத்தாமுதயம் வருகிறது. பங்குனிமாதம் உத்தரம் நாளில் பங்குனி உத்தரம் வருகிறது

திருவிதாங்கூர் அரசுக்குக் கீழே இருந்த சிவன் கோயில்களில் பங்குனி உத்தரம், விஷு, பத்தாமுதயம் மூன்று வரிசையாக ஒரேபோல கொண்டாடப்படும். “இதிலே எதுடா புத்தாண்டு… ஒரே வருஷம் எத்தன தடவடா பொறக்கும்? பிக்காலிகளா!” என்று மூவிழியன் சினப்பதாக தோன்றும். “செரி இருக்கட்டும். உமக்கு என்னவே? நீரு காலமில்லா கடுவெளியிலே இருக்கப்பட்டவராக்குமே. இங்கிண கணக்கும் கணக்குகள் தப்புறதும் எல்லாம் எங்கள மாதிரி பாவப்பெட்ட மனுசனுக்குல்லா? எங்க கணக்கு தப்பாத எடமுண்டாவே, நீரே சொல்லும்” என்று பதில்சொல்வோம்.

 

இதற்கு அப்பால் மலையாளப்புத்தாண்டு. அது பாண்டியர்களிடமிருந்து கேரளம் விடுபட்டபின் உருவாக்கப்பட்ட கொல்லவருஷக் கணக்கு. கிபி 825ல் இது தொடங்குகிறது. இன்றைய ஆங்கில ஆண்டிலிருந்து 835ஐ குறைக்கவேண்டும். அதன்படி சிங்கம் [ஆவணி] தான் முதல் மாதம். அதையும் கொண்டாடுவோம். அப்போது சிவன் மலையாளியாக இருப்பார்.

 

 

இம்முறையும் சரியாக யக்ஷி வந்துவிட்டாள். இருட்டி வந்தது. பெய்யுமா என ஒருமணிநேரம் போக்குகாட்டியது. பின்னர் விண்ணிலிருந்து ஒரே அறை. மரங்கள் கொண்டாட்டமிடுவதை பார்த்தபடி நானும் அருண்மொழியும் அஜிதனும் கொல்லையில் அமர்ந்திருந்தோம். கோடைமழையின் உறுமலும் விசையும் பலமடங்கு. காற்றழுத்தவேறுபாடுகளால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் நோக்கி செல்லும் பெருக்கு அது.

 

இன்றுகாலை முதல் மழைக்குப்பின் நனைந்துகிடந்த கணியாகுளம் நோக்கிச் சென்றேன். தாமரைகள் கோடையை அறியாதவை போலிருந்தன. அத்தனை மரங்களும் புற்களும் புதிதாக எழுந்திருந்தன. மலைகள் கழுவிவிடப்பட்டு, நீர்முழுக்காட்டு முடிந்த சிவலிங்கம் போல் தூய்மையும் பொலிவும் கொண்டிருந்தன. சூரியனையே தூசிபோக கழுவிவிட்டதுபோல் சுடர் தெளிந்திருந்தது

ஒளி மிகக்குறைவாக இருந்தது. விண்பரப்பு முகில்களால் மூடப்பட்டிருந்தமையால் மழைக்கான முன்னோட்டம் என தோன்றியது. நீர்ப்பரப்பு இருண்டு தண்மை தெரிந்தது. குறைவான ஒளியில் நாம் வேறு ஒரு நிலக்காட்சியைப் பார்க்கிறோம். நல்ல ஒளிக்கலைஞர்களே அதைப் புகைப்படமாக ஆக்கமுடியும்.

 

இங்கே ஒவ்வொன்றின்மேலும் ஓர் ஆதிக்கம் எழுந்து நிற்கிறது. மலைகளை கோடிடுகின்றன மின்கம்பிவரிகள். சாலை வயல்களின் மேல் மலைப்பாம்பு போல் எழுந்து சுற்றிவளைத்துக்கொண்டிருக்கிறது. தாமரைகள் மலர்ந்த குளத்தின்மேல் பெரிய இரும்புத் தண்டுடன் எழுந்து நிற்கிறது மின்கோபுரம். அதில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றல் இந்த நீரால் உருவாக்கப்பட்டது. மழையில் இருந்தது. கட்டுண்ட யக்ஷி.

 

புல்நுனிப் பனித்துளிபோல நடுங்கி நிலைகொண்டிருக்கிறது இப்புவி. இந்நாள் அதில் ஒரு கணம்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16982 articles
Browse latest View live