Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16965 articles
Browse latest View live

கோவையில் இன்று உரையாற்றுகிறேன்

$
0
0

கோவை கட்டண உரை

 

கோவையில் இன்று உரையாற்றுகிறேன். கட்டண உரை. இருப்பிடங்கள் முன்னரே  நிறைந்துவிட்டன என்பதனால் அறிவிப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே பண கட்டாதவர்களுக்கு நுழைவொப்புதல் இல்லை

 

ஏற்கனவே ஆற்றிய இரு உரைகளின் தொடர்ச்சிதான். இந்த உரைகளை நன்கு சிந்தித்து தெளிவடைந்தவற்றை முன்வைக்கும் உரைகள் எனச் சொல்லமாட்டேன். சிலவற்றைச் சொல்லி நானே அறிந்துகொள்ளும் உரைகள் என்பேன். எல்லாச் சிந்தனைகளையும்போல இவை வெவ்வேறு சிந்தனைமுறைகளில் இருந்து எடுத்துக்கொண்ட சரடுகளை தன்னறிதலின் வழியாக முடைந்து ஒன்றை உருவாக்கும் முயற்சி மட்டுமே.

 

இந்த உரைகள் நம் பண்பாட்டு கட்டமைப்பு, நம் உள்ளம் ஆகியவை சென்ற இருநூறாண்டுகளில் உருவாகி வந்ததைப்பற்றிய ஆய்வுகள். சமூகவியல், மானுடவியல், அரசியல்கோட்பாடு போன்ற அறிவுத்துறைகளை சார்ந்த புறவயமான முறைமைகொண்ட ஆய்வுகள் அல்ல. இலக்கியம் சார்ந்த உள்ளுணர்வின் அடிப்படையிலான அணுகுமுறை என்னுடையது. ஆகவே இலக்கியப்படைப்புகளில் இருந்தே இந்த ஆய்வு நிகழும்.

 

இவற்றை உரையென நிகழ்த்துவது இவற்றில் எழும் மையமான ஐயங்கள், குழப்பங்களுடன் இவற்றை அணுகியறிந்து என்னுடன் உரையாடும் சிலரை திரட்டிக்கொள்வதற்காகத்தான்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12

$
0
0

சல்யரின் குடிலுக்கு வெளியே துச்சாதனன் பொறுமையிழந்து காத்து நின்றிருந்தான். அவன் வந்ததுமே காவலன் உள்ளே சென்று அவரிடம் துச்சாதனனின் வரவை அறிவித்திருந்தான். உடனே உள்ளே செல்ல எண்ணியிருந்தமையால் சில கணங்களே நீளும் பொழுது எனத் தோன்றின. அவர் உடைமாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் பின்னர் அவர் துயில் எழுந்துகொண்டிருக்கிறார் போலும் என்றும் எண்ணி எண்ணி காத்திருந்தமையால் அவன் உணர்ந்த காலம் மிக நீண்டு சென்றது. எக்கணமும் கதவுக்கு அப்பாலிருந்து சல்யர் தன்னை அழைப்பாரென்று எதிர்பார்த்து அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதன் அசைவின்மையும் ஓசையின்மையும் நேரடியான சிறுமைப்படுத்தலாகத் தோன்ற முழு விசையுடன் அதை உடைத்து உள்ளே செல்வதாக கற்பனை செய்தான்.

பலமுறை அவ்வாறு நுழைந்தபின் சலிப்புற்று பெருமூச்சுவிட்டான். கைகளை ஒன்றுடன் ஒன்று இறுக்கிக்கொண்டு தன் பெரிய உடலை குட்டியானைபோல் அசைத்தபடி விழிகளை விலக்கி அப்பால் தெரிந்த பலகை நிரத்த படைப்பாதையையும் அந்திப் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்த படையணிகளையும் அடுமனையாளர்களின் விளக்குகள் அவற்றினூடாக ஒழுகிக்கொண்டிருந்ததையும் காவலர்களின் புரவிகள் ஊடாக சீரான குளம்படித்தாளத்துடன் சென்று கொண்டிருந்ததையும் நோக்கினான். காவல்மாடத்தில் நின்ற வீரன் தன்னை கூர்ந்து பார்ப்பதை நோக்கி விழிவிலக்கிக்கொண்டான். அவன் காத்திருப்பதை அவனும் உணர்கிறான். அது நாளை செய்தியாக ஆகும். அதன்பொருட்டே சல்யர் அதை செய்கிறார்.

அவனுக்குள் சீற்றம் எழுந்து பெருகத்தொடங்கியது. அந்த மதிப்பின்மையை அரசகுடியினர் எவரும் அவனிடம் காட்டுவதில்லை. அவனை துரியோதனனின் மாற்றுருவாகக் காண்பதே அனைவருக்கும் வழக்கம். அவன் தோன்றியதுமே துரோணர்கூட மெல்ல தலைவணங்குவதுபோல் ஓர் அசைவை காட்டுவார். பீஷ்மர் அரசரிடம் சொல்லவேண்டியதை அவனிடம் சொல்வதுண்டு. அவன் உடலசைவுகள் அனைத்தும் துரியோதனனுக்குரியவை. கர்ணன் ஒருமுறை “உன் நிழல் அரசரைப்போலவே இருக்கிறது, இளையோனே” என்றான். துச்சாதனன் சிரித்தபடி “நான் அவருடைய நிழல்” என்றான். கர்ணன் “நீங்கள் நிழலை பரிமாறிக்கொள்கிறீர்கள் போலும்” என்று உரக்கச் சிரித்தான்.

ஆனால் சல்யர் அத்தகைய நுண்ணுணர்வுகள் கொண்டவரல்ல என்பதையும், அவரது உள்ளம் செயல்படும் முறை முற்றிலும் பிறிதொன்று என்பதையும் அவன் அறிந்திருந்தான். சினம் எழுகையில் எவரிடமும் கடும் சொற்களை நேரடியாக முகம்நோக்கிச் சொல்வதும், சிறு செய்திகளுக்கே மிகையாக கொதித்தெழுவதும், ஒவ்வொருவரும் தன்னையும் தன் குலத்தையும் சிறுமைசெய்ய நுட்பமாக முயன்றுகொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்வதும், சொற்களை தனக்குகந்த முறையில் பொருள் கொண்டு அதிலிருந்து அத்தருணத்திற்குரிய மெய்ப்பாட்டை பயிரிட்டு எடுத்துக்கொள்வதும், அதன்பொருட்டு ஊடி பலநாட்கள் முகம் திருப்பிக்கொண்டு செல்வதும், ஒரு சிறு இடரையோ உளக்கசப்பையோ எதிர்ப்படும் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொள்வதும், தன் குரலுக்கு சற்று செவிசாய்க்காதவர்கூட தன்னை புறக்கணிப்பதாக எண்ணுவதும் அவரது இயல்பு.

துரியோதனனின் அரச அவையில் எப்போதும் தன் உடல்நிலை குறித்த உளக்குறையுடன் பேச்சை தொடங்குபவர் அவர் மட்டுமே. நிகர்நிலம் நோயும், ஒவ்வா காற்றுநிலையும் கொண்டது என அவர் சொன்னார். “இங்கே கதிரோன் மும்மடங்கு வெம்மைகொண்டிருக்கிறான். ஏனென்றால் இங்கு நோய் நிறைந்திருப்பதை அவன் அறிவான். புழுதி நிறைந்த இடத்தில் துடைப்பம் விசையுடன் விழுகிறது” என்பது அவர் அடிக்கடி சொல்வது. “என் மூட்டுகளில் வீக்கம் இருக்கிறது. இரவில் என்னால் துயில்கொள்ளவே முடியவில்லை. இங்கே புழுதியைப் போலவே ஓசையும் காற்றை நிறைத்துள்ளது. வெளிக்காற்று அனல் கொண்டிருக்கிறது. அறைகளுக்குள் ஆவி நிறைந்துள்ளது” என்று ஒவ்வொரு நாளும் சொல்வார். “எங்கள் முன்னோர் நிகர்நிலத்து மாந்தரை பழிக்காதே, அங்கு சென்றால் தெய்வங்களும் பொறுமையிழந்து சினம் சூடிக்கொள்ளும். சூதும் வஞ்சமும் கொண்டு உகிரும் பல்லும் பெருக்கி எழும் என்பார்” என்று சொல்லி வெடித்துச் சிரிப்பார். உடனிருப்பவரின் முகநிலை மாற்றங்களை அவர் கருத்தில் கொள்வதேயில்லை.

பொதுவாகவே அவர் தன்னிடம் பிறர் சொல்வதை செவிகொள்வதே இல்லை. பிறர் பேசத்தொடங்கியதுமே அவருடைய விழிகள் அலைபாயத் தொடங்கும். கைநகங்களை பார்ப்பார். அப்பால் இருக்கும் எதையேனும் நோக்குவதும் தலையசைப்பதும் பிறரிடம் கையோ முகமோ கொண்டு பேசத்தொடங்குவதும் வழக்கம். ஆனால் அவர் பிறரிடம் நெடுநேரம் பேசுவார். கேட்பவர் தான் சொல்வதை புரிந்துகொள்ள ஆற்றலற்றவர் என்னும் எண்ணம் கொண்டவராக “நான் சொல்வது புரிகிறதா?” என்றும் “நன்கு எண்ணிப்பார்க்கவேண்டும்” என்றும் “இது அத்தனை எளிதல்ல” என்றும் சொல்வார். சொல்லிவந்ததை வலியுறுத்த புதிய கோணம் பேச்சினூடாக அமையும் என்றால் அதை மீண்டும் சொல்லத்தொடங்குவார். ஒருவரிடம் நெடுநேரம் பேசவும் தன் உள்ளத்து மந்தணங்களையும் உணர்வுகளையும் விரித்துரைக்கவும் அவருடனான நெருக்கத்தையோ அவருக்கிருக்கும் தகுதியையோ சல்யர் கணக்கிடுவதில்லை.

அவர் எப்போதும் தனக்கெனவே பேசுவது தெரியும். ஒருவரிடம் பேசத் தொடங்கினால் அப்பேச்சினூடாகவே தன்னை கட்டமைத்து விரிவுபடுத்தி முழுமையாக்கி ஓர் ஆளுமையாக முன்னிறுத்திவிட்டு அதில் நிறைவடைந்து அந்நிறைவையே வெளிப்படையாகக் காட்டி புன்னகைத்து பெருமிதமும் செருக்கும் கொண்ட சொற்களால் அதுவரை உருவாக்கிய அந்த ஆளுமையை முற்றிலும் கலைத்து இளிவரலை உருவாக்கிவிட்டு அப்பால் செல்வது அவரது இயல்பு. அவரிடம் பேசுபவர்களில் முதலில் பொறுமையின்மையும் மெல்லமெல்ல ஒவ்வாமையும் அறுதியாக எள்ளலும் உருவாகும். அவர்கள் பேசும் சிறு சொற்களில் அது வெளிப்படும். அரசர்கள் நுண்சொற்களில் எள்ளிநகையாடும் பயிற்சி கொண்டவர்கள். அவரால் அவற்றை புரிந்துகொள்ள முடியாது. “அம்புக்கூர்களின் நடுவே பறந்தலையும் ஈபோல” என ஒருமுறை அவரைப்பற்றி சுபாகு சொன்னபோது துரியோதனன் வெடித்துச் சிரித்தான்.

சல்யரை முதுமகனென்றும், பயிலாத மலைமானுடன் என்றும் துரியோதனன் அவையில் அனைவரும் கருதியிருந்தனர். அவருடைய இயல்புகளில் எப்பொழுதும் புதுமையை நோக்கி உளம் விரியும் மலைச்சிறுவனின் ஆர்வம் இருந்தது. எதைக் கண்டாலும் ஆர்வத்துடன் எழுந்து வந்து கூர்ந்து நோக்குவதும் அடுக்கடுக்காக வினவுவதும் உண்டு. ஆனால் எதிலும் அந்த ஆர்வம் நீடிப்பதில்லை. அதன் முதல் விந்தை முடிவடைந்து உட்சிக்கல் தொடங்கியதுமே அவர் உள்ளம் அதிலிருந்து விலகிவிடும். சிக்கல்கள் அனைத்தையும் அவர் ஐயப்பட்டார். அவை தேவையில்லாமல் அறிவால் உருவாக்கப்படுபவை என்று எண்ணினார். அவை எவ்வகையிலோ தன்னை சிக்கவைக்கும்பொருட்டு தனக்குச் சுற்றும் விரிக்கப்படும் வலையோ என்று ஐயம் கொண்டார். “இதெல்லாம் நிகர்நிலத்து மானுடர் வெறும்பொழுது கழிப்பதற்காக சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொள்பவை. மெய்யான சிக்கல் என்னவென்று நான் அறிவேன். முடிச்சுகள் அனைத்தும் ஒரு வாளால் ஓங்கி வெட்டி அறுக்கப்படுபவையே என்று எங்கள் மலையில் சொல்வதுண்டு” என்று அவர் எச்சொல்லாடலிலும் அறுதியாகச் சொல்லிவிடுவார்.

தான் ஒரு மலைமகன் என்பதில் அவருக்குப் பெருமை எப்போதும் இருந்தது. அதை பிற அனைவருக்கும் மீதான தனது தகுதி என்று கருதினார். “ஏனெனில் தூய்மை மலையிலேயே உள்ளது. கங்கை பெரிதுதான் ஆயினும் கழிவும் சேறும் கலந்து மாசுபட்டிருக்கிறது. எங்கள் மலையுச்சி நதிகள் வானிலிருந்து சொட்டிய தூய்மை கொண்டவை. தெய்வங்களுக்கு உகந்தவை. எங்கள் மலையின் நீரை முனிவர்கள் ஏழுமலை ஏறிவந்து தங்கள் கமண்டலங்களில் அவற்றை அள்ளிச்செல்வதை நாங்கள் கண்டிருக்கிறோம். எங்கள் உள்ளங்களும் மலைச்சுனை நீர் போன்றவை” என்று அவர் ஒருமுறை சொன்னார். உடனே வெடித்துச் சிரித்து “நாங்கள் நீராடி கழுவிவிடும் நீரையே நிகர்நிலத்து முனிவரும் அருந்துகிறார்கள் என்று எங்கள் சிறுவர் சொல்வதுண்டு” என்றார். அவையிலிருந்தவர்கள் முகம்சுளித்ததைக் கண்டு மேலும் மகிழ்ந்து “பறவைக்குக் கீழேதான் ஆலயகோபுரமும் என்பார்கள் அல்லவா?” என்றார்.

கிருபர் ஒருமுறை அவர் பேச்சை மறித்து எரிச்சலுடன் “எந்த மலைச்சுனையும் தன்னை தூயது என்று சொல்லிக்கொள்வதில்லை. தூயவர் என்று உணர்கையிலேயே தூய்மை அல்லாத ஒன்றை அறிந்துவிட்டிருக்கிறீர்கள் என்பதே நாங்கள் புரிந்துகொள்வது” என்றார். அதிலிருந்த இடக்கை உள்வாங்கிக்கொள்ளாமல் சல்யர் “ஏனெனில் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் அவையில் இருக்கிறேன். நீங்கள் உங்கள் சொற்களால் சூதாடிக்கொள்வதை ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். ஒரு புது எண்ணம் எழுவதன் ஊக்கம் மீதுற கைதூக்கி “எனக்குத் தெரியும், இங்கு நீங்கள் அனைவரும் வாளேந்திப் போரிடவே விரும்புகிறீர்கள். வாளேந்தும் வாய்ப்பில்லாதபோது சொல்லேந்தி போரிடுகிறீர்கள். ஒருகணமும் நீங்கள் போரிடாதிருந்ததில்லை. ஒருவரோடொருவர் போரிடுகிறீர்கள், தங்களுக்கு தாங்களே போரிடுகிறீர்கள். ஒருகணமும் நீங்கள் போரிடாதிருந்ததில்லை. ஒவ்வொரு கணமும் போரிடுகிறீர்கள். தங்களுக்குத் தாங்களே போரிடுகிறீர்கள். மைந்தருடனும் மனைவியருடனும் போரிடுகிறீர்கள். ஏன் ஊழுடனும் தெய்வத்துடனும் போரிடுகிறீர்கள்” என்றார்.

“நாங்கள் போரிடுபவர்களல்ல, நாங்கள் வேட்டையாளர்கள். விரிந்த வெளியில் எங்களுக்குரிய விலங்கு எங்கு இருக்கிறதென்பதை நுண்ணுணர்வுடன் உய்த்து பின்தொடர்ந்து செல்பவர்கள். ஒவ்வொரு காலடித்தடத்தையும் ஒவ்வொரு மணத்தையும் கொண்டு அதை தேடிச்சென்று வேட்டையாடித் திரும்புகையில் நாங்கள் தெய்வத்திடமிருந்து எங்கள் தகுதிக்குரிய பரிசொன்றைப் பெற்றதாகவே உணர்கிறோம். வென்றதாக அல்ல, வாழ்ந்ததாக எண்ணுகிறோம். போரிட்டதாக அல்ல விளையாடி மீண்டதாக மகிழ்கிறோம். எங்கள் வேட்டை ஊழுடன் மட்டுமே. ஊழ்வடிவென இறங்கிய தெய்வத்துடன் மட்டுமே நாங்கள் விளையாடுகிறோம். மானுடருடன் எங்களுக்கு போட்டியே இல்லை. மலையைப்பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்? ஒவ்வொரு மனிதனும் பிறிதொருவனுடன் போட்டியிலாது வாழும் ஒரு நிலம் அது. அங்கிருந்து வந்திருக்கிறேன் நான்” என்று அவர் சொன்னார்.

அவர் சொல்லிச் சொல்லி உருவாக்கிக்கொண்ட கருத்து அது. ஒவ்வொரு முறை சொல்லும்போதும் சற்று சொல் மிகும். அதுவே அவருக்கு களிப்பை அளிக்கும். அவர் தான் கொண்ட அகச்சிறுமை ஒன்றை அச்சொற்களால் வென்று மறைத்துக்கொள்கிறார் என சுபாகு ஒருமுறை சொன்னான். “எனில் அந்தச் சொற்களைக் கீறி நோக்கலாகாது. ஒருவரின் உளநடிப்புகளை அகற்றுவது ஆடைஅகற்றி சிறுமைசெய்வதைவிட மும்மடங்கு கொடியது” என்றான் துரியோதனன். ஆனால் அவையில் அவருடைய சொற்கள் எழுகையில் அவரை நோக்கி நச்சுக்கூர்கள் எழாமல் தடுக்க இயல்வதில்லை. அமைதியானவரான கிருபரே சீற்றமும் எரிச்சலும் கொள்வதுண்டு. அரிதாக பீஷ்மர் கைநீட்டி சல்யரை சொல்லமர்த்துவதுண்டு. சகுனி மட்டுமே அவர் பேசட்டும் என்பதுபோல் தாடியை நீவியபடி விழிகளில் நகைப்புடன் நோக்கி அமர்ந்திருப்பார்.

“ஆனால் அங்கிருந்து நீங்கள் இறங்கி இங்கே வர வேண்டியிருக்கிறது, சல்யரே. எந்த எடை உங்களை கீழே இறக்கிக்கொண்டு வந்தது என்பதைப்பற்றி மட்டுமே இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் கிருபர். அதை புரிந்துகொள்ளாமல் சல்யர் “நாங்கள் இறக்கிக்கொண்டு வரப்படவில்லை. நாங்களே இறங்கி வந்திருக்கிறோம். ஏனெனில் எங்கள் தூய்மையால், நிகரின்மையால் உங்களை வெல்லவிருக்கிறோம். அறிக, இன்று நாங்கள் இந்த அவையில் நூற்றுவரில் ஒருவராக எளிய உருக்கொண்டு அமர்ந்திருக்கலாம்! எங்கள் சொற்கள் இந்த அவையில் ஓங்கி திகழாமலிருக்கலாம். ஆனால் ஒருநாள் உங்களை எங்கள் குடி வெல்லும். எங்கள் கொடி உங்கள் நிலங்களின் மேல் பறக்கும். எங்களால் நீங்கள் ஆளப்படுவீர்கள். அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் தெய்வத்தின் ஆணை பெற்ற தூய மக்கள் நாங்கள். நாங்கள் இவ்வுலகை ஆளவேண்டுமென்பதே தெய்வங்களின் விழைவாக இருக்கும்” என்றார். கைகளைத் தூக்கி அறைகூவும் குரலில் “எங்களுடன் போரிடுகையில் நீங்கள் எங்கள் மலைத்தெய்வங்களுடன் போரிடுகிறீர்கள். அதை மறக்க வேண்டியதில்லை” என்றார். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “இந்த வெறும் பேச்சை இங்கு நாம் நிகழ்த்தவேண்டியதில்லை. நாம் உசாவ வேண்டியவை பிற உள்ளன” என்று அப்பேச்சை அப்போது முடித்துவைத்தான்.

சல்யர் பொதுவாக அனைத்து அவைகளிலும் வேடிக்கைக்குரியவராக இருந்தாலும் அவ்வப்போது அரசர்களும் புண்பட்டு சீற்றம் கொண்டனர். அவர்கள் பேச்சுவழியில் தங்கள் குடிப்பெருமையை இயல்பாக சொல்லிவிட்டால் அக்கணமே அவர் அதை தனக்கெதிரான கூற்றாக எடுத்துக்கொண்டார். ஒருமுறை கோசலனிடம் “எவ்வண்ணம் உங்கள் நாடு பெருமையுற்றது என்று நாங்கள் அறியோமா என்ன? வீரத்தாலா? அல்ல, நூறுதேர் ஓட்டிய அயோத்தியின் அரசனுக்கு ஒரு மங்கையை மணம் புரிந்து கொடுத்ததனால்தான் நீங்கள் ஷத்ரியர்களும் குடிப்பெருமை கொண்டவர்களுமானீர்கள். இன்றும் அந்த அரசியின் பெயராலேயே உங்கள் நாடு அறியப்படுகிறது. பெண்கொடுத்து பெறும் பெருமை என்ன பெருமையென்று மலைமகனாகிய எனக்கு சற்றும் புரியவில்லை” என்றார். கோசலன் சீற்றத்துடன் எழுந்து “வாயை மூடுங்கள்! அல்லது இக்கணமே என் வாளுக்கு நிகர்நில்லுங்கள்” என்றான்.

“வாளுக்கெனில் வெளியே செல்வோம். அங்கு பூசலிடுவோம்! மலைமகனின் அம்பும் வில்லும் மும்மடங்கு இலக்கறிந்தவை என நீங்கள் அறிவீர்கள்” என்று சல்யரும் தன் வாளைத் தொட்டபடி எழுந்தார். பீஷ்மர் உரத்த குரலில் “அமர்க! அமர்க, சல்யரே! அமர்க, கோசலரே!” என்றதும் சல்யர் திரும்பி “இவர்தான் என்னை இப்போது பூசலுக்கு அழைத்தார். முதலில் பூசலுக்கு அழைத்தவரே படைக்கலம் தாழ்த்தி சொல் பின்னெடுத்து அமரவேண்டும். நான் அமரக்கூடாது” என்றார். கோசலன் “பிதாமகரே, என்னை பூசலுக்கு அழைத்தவர் இவர். என் குடியை இழிவு செய்தார். ராகவராமனின் கால்பொடிக்கு இணையாகமாட்டார் இந்த மலைவீணர். இங்கு வந்து அமர்ந்து ராகவராமனின் புகழைக் கெடுக்கும் ஒரு சொல்லை சொன்னமைக்காகவே இவர் தலையைக் கொய்ய நான் கடமைப்பட்டிருகிறேன்” என்றான்.

பீஷ்மர் “இது என் ஆணை! இருவரும் ஒரே தருணத்தில் அமரவேண்டும். என் ஆணையை மீறுவோர் இக்கணமே என் வாளை எதிர்கொள்ளவேண்டும்” என்றார். கோசலன் “நீங்கள் தந்தைநிலை கொண்டவர். உங்கள் ஆணைக்குக் கட்டுப்படுவது என் கடமை” என்றபடி தன் பீடத்தில் அமர சல்யர் உரக்க நகைத்து “எவ்வண்ணமேனும் நீர் அமர நேர்ந்துவிட்டது, கோசலரே” என்றபடி தானும் அமர்ந்தார். “பிறிதொருநாள் களத்தில் நீர் என் வில்லின் ஆற்றலைக் காண்பீர்” என்றார். “பேச்சு போதும்” என்றார் பீஷ்மர். “ஆம், நான் ஏதும் சொல்லவில்லை. ஆனால் என்னை போருக்கு அறைகூவவேண்டும் என்றால் அர்ஜுனன் எண்ணவேண்டும். யாதவகிருஷ்ணன் கருதவேண்டும்” என்றார் சல்யர்.

அரசுசூழ்தல்களில் சல்யரை எதிர்கொள்வது எப்போதும் அவையினருக்கு இடர் கொண்டதாகவே இருந்தது. அவையில் நிகழும் எதையும் முழுமையாக அவர் புரிந்துகொண்டதே இல்லை. ஒவ்வொரு முறையும் நெடுந்தொலைவிலிருந்து வந்து சேர்ந்து பிற எவருக்கும் எழாத ஐயங்களை அவர் எழுப்பினார். “இந்தப் படைசூழ்கையுடன் நாம் முன்செல்கையில் இதில் முன்னணியில் நிற்பவர்கள் வீழ்ந்தால் பின்னணியில் நிற்பவர்கள் சென்று அவ்விடத்தை நிரப்பவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு நிரப்பாவிடில் இச்சூழ்கை பயனற்றதாகிவிடும் அல்லவா?” என்று ஒருமுறை கேட்டார். “அவ்வாறு நிரப்பாதிருக்க வழியே இல்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அவர்கள் அவ்வாறு சென்று நிரப்புவார்கள் என்று எவ்வாறு உறுதி கூறுகிறீர்கள்?” என்று சல்யர் மீண்டும் கேட்டார். “ஏனெனில் அதன் பொருட்டே அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கடமை அது” என்றான். “அவர்கள் தங்கள் கடமையை செய்யாவிடில் என்ன செய்வது? அதையும் நாம் எண்ணிச் சூழ வேண்டுமல்லவா?” என்று சல்யர் கேட்டார்.

“அவ்வாறு எண்ணத்தொடங்கினால் போரிடவே இயலாது. போர்முனையில் நமது படைவீரர்கள் படைக்கலம் தாழ்த்தி ஓடிவிட்டார்கள் என்றால் என்ன செய்வது என்று எண்ணி ஒரு படைசூழ்கையை அமைக்க முடியுமா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “ஆம், அதையும் எண்ணித்தான் ஆகவேண்டும், ஏனெனில் எங்கள் போர்களில் போர்வீரர்களின் இலக்குகள் முதன்மையானவை, ஒவ்வொருவருக்கும் இப்போரினால் என்ன கிடைக்கும் என்பதை உணர்த்திய பின்னர்தான் அவர்களை கூட்டி வருவோம். ஒவ்வொரு முறையும் அதை நினைவுபடுத்திக்கொண்டும் இருப்போம். அது கிடைக்காதென்றால் எங்கள் படைவீரர்கள் களம் நிற்கமாட்டார்கள். வெளிப்படையாகவே இதனால் பயனில்லை என்று சொல்லி வாள் தாழ்த்தி திரும்பிவிடுவார்கள்” என்றார் சல்யர்.

அவை முழுக்க பரவிய சிரிப்பை புரிந்துகொள்ளாமல் திரும்பிப்பார்த்த பின்னர் அவர் தொடர்ந்தார். “இங்கு போர் நிகழும்போது ஒவ்வொரு படைவீரனுக்கும் அரசரிடம் எந்தவிதமான உளத்தொடர்பும் இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளிலிருந்து எழுந்து வந்து இந்த போரை நிகழ்த்துகிறார்கள். அக்கனவுகளுக்குள்ளேயே போர் முடிந்ததும் திரும்பிச் செல்கிறார்கள். இது போரே அல்ல. இது வேறேதோ தெய்வங்களால் ஆட்டி வைக்கப்படும் சூதென்று எனக்குத் தோன்றுகிறது.” எழுந்து கைநீட்டி “உங்கள் தெய்வங்களால் நீங்கள் ஆட்டிவைக்கப்படுக, சல்யரே! அமர்க இப்போது!” என்று உரத்த குரலில் துரோணர் சொன்னதும் சல்யர் திரும்பிப்பார்த்து “ஆம், எந்த தெய்வத்தால் நான் ஆட்டிவைக்கப்படுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு பெருவிழைவில்லை. எனக்கு இருப்பது என் குடிப்பெருமையை அவைகளில் நிலைநாட்டும் விழைவு மட்டும்தான். ஆனால் அது இங்கு ஒவ்வொரு நாளும் கீழிறங்கிக்கொண்டிருக்கிறதோ என்று ஐயுறுகிறேன்” என்றார்..

சல்யரின் இயல்புகளை ஒவ்வொரு முறையும் துரியோதனன் பொறுத்து, அவரை முறைச்சொற்கள் உரைத்து, பாராட்டியும் வாழ்த்தியும் முன்சென்றான். ஒவ்வொரு முறையும் சல்யருக்கு இறுதிச் சொல் கூறுவதற்கு இடம் கொடுத்தான். சல்யர் அதனாலேயே அந்த அவையில் தான் பீஷ்மருக்கும் துரோணருக்கும் கிருபருக்கும் நிகரான முதுதந்தையின் இடத்தை கொண்டிருப்பதாக எண்ணிக்கொள்ளலானார். ஒவ்வொருநாளும் அவையில் ஒருவர் உயர்குடியினர், இனியவர், பெருந்தன்மைகொண்டவர் என அவருக்குத் தோன்றியது. அவரிடம் மட்டும் நெடுநேரம் பேசினார். எஞ்சியவர்களிடம் முகம் கொடுக்காமல் மேட்டிமை நடித்து திரும்பிச்சென்றார். எப்போதும் அவையில் ஒருவர் பிறப்பால் கீழ்மைகொண்டவராகவும் நல்லியல்புகள் அற்றவராகவும் அவருக்குத் தோன்றினார். அவையில் அனைத்தையும் அவரை நோக்கியே சல்யர் சொன்னார்.

எப்போதுமே கர்ணன் அவருக்கு உகக்காதவனாகவே இருந்தான். கர்ணன் ஒவ்வொரு முறையும் அவரை வணங்கி முகமன் சொன்னான். ஒருமுறைகூட அவர் அவனை விழிநோக்கவோ வாழ்த்தேற்பும் மறுவாழ்த்தும் உரைக்கவோ முற்படவில்லை. அதை கர்ணன் எப்போதுமே பொருட்டெனக் கருதவுமில்லை. தன்னை முகம் நோக்கி வாழ்த்துபவரை நோக்கி மறுமொழி சொல்லவேண்டும் என்பதும் வாழ்த்துக்கு வாழ்த்தெடுக்காமை கீழ்மை என்றே அரசவையில் கருதப்படும் என்பதும் சல்யருக்கு எப்போதுமே புரிந்ததில்லை. கோசலன் அப்பூசலுக்கு மறுநாள் அவரைப் பார்த்து “வணங்குகிறேன், மத்ரரே” என்றபோது தலைதிருப்பி நடந்து சென்றார். கோசலன் அதனால் உளம் புண்படவில்லை. அருகிலிருந்த மகதரை நோக்கி புன்னகைத்து “மலைக்குடிகளின் இயல்பு அது” என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.

அச்சொல் சல்யரின் செவிகளை அடைந்தது. திரும்பி நின்று “ஆம், மலைக்குடிதான். அதன்பொருட்டு பெருமைகொள்கிறேன். இங்கிருக்கும் அனைவரும் கிராதர்களும் வேடர்களும் மூத்து ஷத்ரியர்களானவர்கள். மலைக்குடிகள் ஷத்ரியர்களாகவே மலையின் மடிப்புகளிலிருந்து எழுந்து வந்தவர்கள். எங்கள் பின்னால் ஒருபோதும் தெய்வங்கள் இல்லாமலிருந்ததில்லை” என்றார். “ஆம், அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்று கோசலன் விழிகளில் புன்னகையுடன் சொல்ல மகதர் “ஆம் மத்ரரே, மலைக்குடிமக்கள் பிறர் வாழ்த்துவதைக்கூட பொருட்படுத்தமாட்டார்கள். ஏனெனில் அது அரசர்களின் இயல்பு. அங்கே கன்றோட்டுபவரும் ஏர் உந்துபவர்களும்கூட அரசர்களே என்றுதான் அவர் சொன்னார்” என்றார்.

சல்யர் அவர்கள் இருவரையும் மாறி மாறி நோக்கியபின் மெல்லிய ஐயம் கொண்டு “ஆம், அவ்வாறே. எங்களிடம் பேசுவதற்கான தகுதியை நீங்கள்தான் ஈட்டிக்கொள்ளவேண்டும்” என்றபின் அவைக்குள் சென்றார். அருகே நின்றிருந்த துச்சாதனன் அப்போது சல்யர் மேல் இரக்கத்தையே அடைந்தான். அன்று அதை அவன் துரியோதனனிடம் சொன்னபோது அவையில் அமர்ந்திருந்த சகுனி “நீ அவரை இளமையில் பார்த்திருக்கவேண்டும். அன்று வீரன் என்னும் நிமிர்வும் அரசுசூழும் திறனும் விரிந்த உள்ளமும் கூர்நோக்கும் கொண்டவராக இருந்தார்” என்றார். துச்சாதனன் “ஆம், அதையே ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொள்கிறேன். நானறிந்த சல்யர் அல்ல இவர். முதுமையின் நலிவென்றே தோன்றுகிறது” என்றான்.

“முதுமை ஒருவரை முற்றிலும் பிறிதொருவராக ஆக்குமா?” என்று துச்சாதனன் கேட்டான். கிருபர் “முதுமை மானுடரின் உடலை மண்ணை நோக்கி இழுக்கிறது. எலும்புகள் வளைய தசைகள் தொய்கின்றன” என்றார். “மண்ணை நோக்கி உடலை ஈர்க்கும் அவ்விசையையே இறப்பு என்கிறோம். அது கருக்கொண்ட கணமே மானுட உடலுக்குள் குடிகொள்ளத் தொடங்குகிறது. ஒவ்வொரு கணமும் வளர்கிறது. மானுடரைக் கொல்லும் நோய் அவர்களில் தோன்றாத் துணை என உடனிருக்கிறது, அதை ரிபு என்கின்றன மருத்துவநூல்கள். இன்று சல்யரில் வெளிப்படும் இவை துளி என, அணு என அவரில் முன்னரே உறைந்தவை. அன்று அவருடைய உயிரின் ஆற்றலை அவர் எனக் கண்டோம். இன்று அவரை அழிக்கும் பிறப்புநோயை அவரெனக் காண்கிறோம்.”

சகுனி மெல்ல கனைத்து தன் கால்களை எடுத்து அப்பால் வைத்தார். அதுவரை அங்கில்லாதவன் போலிருந்த கர்ணன் திரும்பி நோக்கினான். “நான் எண்ணுவது பிறிதொன்று. அவரைப் பார்க்கையில் எல்லாம் தெய்வம் ஒழிந்த பாழ்கோயில் எனத் தோன்றுகிறது” என்றார் சகுனி. “அவரிலிருந்து அரிய ஒன்று பிறிதொன்றாகி எழுந்து அகன்றுவிட்டது.” துரியோதனன் சகுனியை சிலகணங்கள் நோக்கிவிட்டு “அவரைப் பற்றி பேசி என்ன பயன்? அவர் வில்லவர், பால்ஹிகக் கூட்டமைப்பை நமக்கென கொண்டுவந்தவர். களத்தில் நமக்கு உகந்தவர். நான் எண்ணுவது அதை மட்டுமே” என்றான்.

துச்சாதனன் மீண்டும் சல்யரின் கதவை நோக்கினான். அவன் வெளியே நின்றிருப்பதை செவிகூர்ந்தபடி அவர் உள்ளே அமர்ந்திருக்கிறார் என அவன் அறிந்தான். அவன் திரும்பிச்சென்றுவிட்டான் என்று தோன்றினால் அவர் எழுந்துவந்து கதவைத் திறந்து பார்ப்பார். அவரை பார்க்காமல் அவன் சென்றுவிட்டதை ஒரு பெருங்குறையாகவே துரியோதனனிடம் சொல்வார். அவன் தலையை அசைத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டான்.

தொடர்புடைய பதிவுகள்

அருணா ராய்,பங்கர் ராய் –கடிதங்கள்

$
0
0

 

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

அன்புள்ள ஜெ

 

அரசியல் இல்லாத இடமே இல்லை. அரசியல் இல்லாத ஆளே இல்லை. அரசியல் பேசாதவர்கள் எல்லாரும் சொம்பை . இது இன்றைக்கு பலர் கூச்சலிட்டுக்கொண்டிருப்பது. முகநூல் முழுக்க இதுதான். இவர்கள் அரசியல் என்பது கட்சிகட்டி சண்டைபோடுவது. வெறுப்பைக் கக்குவது. அவதூறு பொழிவது. தலைமைவழிபாடு. வேறு எதுவுமே தெரியாது. எதையுமே கவனிப்பதில்லை. இன்னொரு அரசியல் இருக்கிறது. ஆக்கபூர்வமான அரசியல். சத்தம்போடாத வெறுப்பை உருவாக்காத  கட்டி எழுப்பும் அரசியல்.அதை நீங்கள் வெளியிடும் கட்டுரைகள் வழியாக அறிகிறேன். அருணா ராய், பங்கர் ராய் கட்டுரைகளை அவற்றின் உச்சம் என்று சொல்வேன். பாலா அவர்களுக்கு நன்றி

 

டி.பிரபாகர்

 

 

அன்புள்ள ஜெ,

 

திரு.பாலா அவர்களது “அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும் !” கட்டுரை மிகுந்த மன மகிழ்ச்சியையும், துயரத்தையும் ஒருங்கே தந்த ஒன்று. அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

 

பதினெட்டு ஆண்டுகள் சோர்வோ தளர்ச்சியோ அச்சமோ இல்லாமல் நமது கருங்கல்லாலான அரசியல் அதிகார அமைப்போடு மோதும் மனவலிமை கொண்ட ஒரு குழுவினர் பெரும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தருகின்றனர். மானசீகமாக அவர்களது பாதம் தொட்டு வணங்குகிறேன். அதே சமயம் ஒரு தகவல் அறியும் சட்டம் கொண்டு வர இவ்வளவு நெடிய போராட்டம் தேவைப்படுமளவுக்கு நமது அரசியல் அதிகார வர்க்கம் தோல் தடித்து சொரணையற்றுப்போய் இருப்பதை நினைத்து அருவருப்படையாமல் இருக்க இயலவில்லை. அதுவும் நீதிமன்றம் ஆணையிட்டும் அசைந்துகொடுக்காமல் இருக்கிறது என்றால் இந்த அதிகாரவர்க்கம் நமது நீதிமன்றத்தின்மீது வைத்திருக்கும் மரியாதைதான் என்ன ?

 

உடனடியாக, பாரதியையும் சத்தியமூர்த்தி ஐயரையும் பற்றி ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. (யதார்த்தவாதியான திரு.சத்தியமூர்த்தி ஐயர், நாம் நமது ஜனநாயகத்தூண்களை வலுப்படுத்திக்கொள்ளாமல் பெறும் சுதந்தரம் சுதந்தர இந்தியாவில் ஊழல் பெருகவே வழி வகுக்கும் என்று கருத, ஆங்கில அரசில் அவர் நீதிபதி பதவி பெற்றதைக்குறித்து ‘நாயும் பிழைக்குமோ இப்பிழைப்பு’ என்று பாரதி கொள்ளும் சீற்றம் குறித்து) சர்வநிச்சயமாக ஐயர் தீர்க்கதரிசிதான். அரசியல், அதிகாரவர்க்கத்தின் பொறுப்பேற்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கும் தமது பிழைகளுக்கு கடுமையான தண்டனை அடைவதற்குமான வலுவான அமைப்பை ஆங்கிலேயே ஆட்சியிலேயே கட்டியெழுப்பியிருந்திருக்க முடியுமோ / வேண்டுமோ என்று தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை.

 

இப்படி ஒவ்வொரு சீர்த்திருத்தத்துக்காகவும் பாரதப்போர் மாதிரி பதினெட்டு ஆண்டுகள் போராடிக்கொண்டிருக்க முடியுமா ?

 

இப்போது கங்கைக்காக ஒரு உயிர்துறப்புப்போராட்டம் கட்டுரை குறித்து. ஒப்பு நோக்க பெரும் துயரமளித்த கட்டுரை.

 

திருமதி அருணாராய் மாதிரி அல்லாமல் மென்மேலும் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் துறவியர் மட்டும் தங்களது உயிரை இப்படி பணயம் வைப்பது சரியில்லையோ, விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ என்ற பதைப்பு என்று தோன்றுகிறது. ஏற்கனவே சிலர் உயிர் நீத்தும் அசைந்து கொடுக்காத நமது உறைந்துபோன சமூகத்திற்காக இத்தனை தியாகம் அவசியமா என்றுகூட தோன்றுகிறது.

 

 

 

அன்புடன்

பொன்.முத்துக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

பாலா எழுதும் கட்டுரைகள் மிகமிக முக்கியமானவை. இன்றைக்கு இங்கே காந்தியம் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இங்கே இதுவரை அடையப்பட்ட எல்லாமே காந்தியத்தால் கிடைத்தவைதான். மற்ற எல்லா போராட்டங்களும் வெறும் இழப்புகளையே உருவாக்குகின்றன. ஏனென்றால் காந்திய இயக்கம் சிறிய அளவில் தொடர்ந்து நடக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதன் வழியாக செயல்படுகிறது

 

பங்கர் ராய், அருணா ராய் ஆகியோரைப்பற்றிய கட்டுரைகளை நெகிழ்ச்சியுடன் வாசித்தேன். அவற்றில் உள்ள தகவல்தொகுப்பும் பாலாவின் பார்வையும் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்துகின்றன. இன்று அரசியல்தரப்புகள் சார்ந்து கூச்சல்போடுபவர்கள் மக்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சேவைக்கார்ர்கள் என சொல்கிறார்கள். ஆனால் அவர்களால் எந்த நன்மையும் இல்லை. சமூகத்தில் பகைமையை வளர்ப்பது மட்டுமே அவர்களால் செய்யப்படுகிறது. அவர்கள் போராடுவதெல்லாம் அவர்களின் தலைவர்கள் அதிகாரத்தை அடைய மட்டுமே. அதை நாட்டுக்கான போரட்டம் இலட்சியவாழ்வு என நம்பிக்கொள்கிறார்கள். அல்லது பாவ்லா காட்டுகிறார்கள்

 

உண்மையில் மக்களுக்கான வாழ்வு, இலட்சியப்போராட்டம் எல்லாம் அருணா ராய் பங்கர் ராய் போன்றவர்களிடமே உள்ளது. அதை உங்காள் தளம் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகிறது.

 

எம். முத்துக்குமார்

பாலாவின் கட்டுரைகள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கங்கைப்போர்- கடிதங்கள்

$
0
0

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

 

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

ஈரோடு விவாத பயிற்சிப் பட்டறையில் அளிக்கப்பட்ட குக்கூ காட்டுப்பள்ளியின் “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” வாசித்திருந்தேன்.  அத்துடன் அதன் வெளியீடான ”உரையாடும் காந்தி” வாங்கி வாசித்திருந்தேன்.  எதிர்வினை ஆற்றாதிருந்தது அறப்பிழையே.

 

சுவாமி நிகமானந்தர், சுவாமி கியான் ஸ்வருப் சானநத் கங்கையைக் காக்க உயிர் அளித்த அவர்களின் தியாகம் வீண்போகக்கூடாது என்று விழைகிறேன்.  சுவாமி ஆத்மபோதானந்தரின் உண்ணாவிரதம், அவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்று விழைகிறேன்.  கருத்தளவிலேனும் தம் எதிர்வினைகளின் வாயிலாக, விவாதங்களின் வாயிலாக தம் அற உணர்வினையும் மற்றவரது அற உணர்வினையும் விழிப்பிக்க முயலவேண்டும்.

 

இரண்டு விஷயங்கள், ஒன்று சூழியல் குறித்த விழிப்பு இல்லை – இது தொடர் முயற்சியின் மூலம் சரி செய்யப்படக் கூடியது.  இரண்டு, தன்னெஞ்சறிவது பொய்த்தே பழகி இருக்கிறது.  இதை சரி செய்வது மிகப்பெரும் சவால்.  இச்சவாலை ஏற்கும் துணிவு காந்தியத்திற்கு மட்டுமே உள்ளது.  அறம் வென்றே தீரும் என்று நம்புகிறேன்.

 

பட்டறைக் கழிவுகளின் நாற்றத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காவிரியைக் கடக்கும்போது தோன்றுவது அல்ல கர்னாடக பேருந்தின் மீது கல்லெறிந்து காப்பதுதான் காவிரியை காப்பது.  எதிர்பக்கதிற்கும் காவிரியை காப்பது என்பது அப்படித்தான்.

 

பெரும்பொழுது முகநூலில் கழித்து ஓயாமல் தன் புகைப்படங்களைப் போட்டுக்கொண்டு (அவ்வப்போது கையில் மண்வெட்டியுடன், சேற்றில் கால்வைத்து, மரத்தடியில் நின்று அப்படி ஒன்றிரண்டேனும் போட்டுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் சூழலியல் போராளி) மாரியம்மன் விழாவினால், மூடநம்பிக்கைகளால் சுற்றுச்சூழல் நாசமாபோகிறது என்று முற்போக்கு காட்டி, தனிப்பட்ட தன்னல நோக்கங்களுக்காக சூழலியல் போராளி வேடத்தை வியாபார உத்தியாக கையாண்டு பெரும் வர்த்தக வாய்ப்பு நோக்கி நிற்பவர்களையும் கடந்துதான் உண்மை அறம் ஒலிக்க வேண்டும்.

 

குக்கூவென்னும் குரல் பேரறறத்தின் காதுகளில் விழும், கங்கை பேரறறத்தால் காக்கப்படும் என்று நம்புகிறேன். என்னால் ஆவன சிறிதெனினும் செய்ய சித்தமாய் இருக்கிறேன்.

 

அன்புடன்,

விக்ரம்,

கோவை.

அன்புள்ள ஜெ

 

கங்கையைக் காப்போம் என்னும் இந்த இயக்கம் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் திமுக, இன்னொருவர் பாஜக. திமுக காரர் கங்கையைப் பாதுகாப்போம் என்பதே வகுப்புவாதம் என பேசினார். ஊரிலே எல்லா ஆறும் சாக்கடையாத்தான் இருக்கு, கங்கை மட்டும் என்ன ஸ்பெஷல் என்று கேட்டார். கங்கை என்பதனால்தானே சாமியர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், கூவம் சீர்கெட்டதனால் உண்ணாவிரதம் இருக்க வருவார்களா என்றார். கூவம்போன்ற நதிகளுக்காகவும் சாமியார்கள் போராடுகிறார்கள் என்றேன். கூவத்துக்காக நீங்கள் போராடலாமே என்று கேட்டேன். கூவத்தை கலைஞர் ஏற்கனவே சுத்தம்செய்துவிட்டார் என்றார். அவருக்கு முப்பது வயதுகூட இருக்காது

 

பாஜக ஆள் பிராமணர். இன்னும் சின்ன வயசு. அவரிடம் சொன்னபோது சன்யாசிகள் தற்கொலை செய்யக்கூடாது, உயிரை மாய்த்துக்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை என்றார். இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? இந்து மதத்தில் பல்வேறு வகையில் தற்கொலை செய்வதை போற்றித்தானே சொல்லப்பட்டுள்ளது? கங்கையில் குதிப்பதே மோட்சம் என்று சொல்லப்பட்டுள்ளதே. தற்கொலை செய்துகொண்டு பேயாக ஆன ஒருவராவது இந்து மதத்தில் உண்டா என்றேன். அவரால் சொல்லமுடியவில்லை. கங்கைமாதாவை மோடி காப்பாற்றிவிடுவார் என்றார்கள். அதற்காக ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்தாரா என்றேன். இனிமேல் எடுப்பார் என்றார்

 

சட்டென்று கோபப்பட்டு இந்தச் சாமியார்கள் ஏமாற்றுக்காரர்கள், பாரம்பரிய மடத்தை சேர்ந்தவர்கள் அல்ல என வசைபாட ஆரம்பித்தார். திமுககாரரும் இதேபோல ஏமாற்றுக்காரர்கள் என்றுதான் அவர்களைச் சொன்னார் என்று சொன்னேன்

கட்சிமனநிலை என்பது ஒருவகையான நவீன மூடநம்பிக்கை என்ற எண்ணம் உறுதிப்பட்டதி

 

எம்.ராஜேந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சேர்ந்து முதிர்தல்

$
0
0

 

1991  மே மாதம் நான் ஊட்டிக்குச் சென்றிருந்தேன். அவ்வாண்டுதான் எனக்குத் திருமணமாகியிருந்தது. அருண்மொழி பட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தாள். இன்றும் தொடரும் ஒரு நட்புவட்டத்தினரை ஒரே கொத்தாகச் சந்தித்த நாள் அது. தமிழகச் சூழியல் இயக்கத்தின் முன்னோடியும் காந்தியவாதியுமான ஈரோடு டாக்டர் வி. ஜீவானந்தம் அவர்கள் ஊட்டியில் ஒரு எழுத்தாளர்கூடுகையை ஒருங்கிணைத்திருந்தார். சூழியல் சார்ந்து எழுத்தாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வை உருவாக்குவது அதன் திட்டம். அன்று சூத்ரதாரி என்று பெயர்சூட்டிக்கொண்டிருந்த எம்.கோபாலகிருஷ்ணன், பசலை என்னும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருந்தவரும் அன்று இடதுசாரி இதழான மனஓசையின் எழுத்தாளரும் இடதுசாரித் தீவிர இயக்க உறுப்பினருமான கோவிந்தராஜ், பெருமாள் முருகன், மகுடேஸ்வரன், க.மோகனரங்கன் என பலர் அதில் பங்கெடுத்தனர். வெவ்வேறு இடங்களில் கானுலாவும், இயற்கையைப் பேணுவது குறித்த வகுப்புகளும் நிகழ்ந்தன.

 

அப்போதுதான் நான் நிர்மால்யாவைச் சந்தித்தேன். என்னை நோக்கி பதற்றமாக வந்து மேலும் பதற்றமாக “நான் நிர்மால்யா, மணின்னு பேரு” என்றார். முன்னரே எங்களுக்குள் கடிதப்போக்குவரது இருந்தது. தற்கால மலையாளக் கவிதைகள் என்னும் நூலில் நான் கே.சச்சிதானந்தனின் மழையின் பல அர்த்தங்கள் என்ற கவிதையை [ஆற்றூர் ரவிவர்மாவால் வழிகாட்டப்பட்டு] சுருக்கினேன். அதைப்பற்றி தன் கடும் எதிர்ப்பை அவர் தெரிவித்து ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அன்று சச்சிதானந்தனின் ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர். அவரும் அன்று மன ஓசை குழுதான். நான் முதலில் காட்டெருது ஏதோ வந்துவிட்டது என்று பயந்தேன். அல்லது காட்டுத்தீ. அல்லது ஏதாவது கவிஞர்கள் கலாட்டா செய்கிறார்கள். ஒன்றுமில்லை, அது நிர்மால்யாவின் இயல்பு. அவர் எப்போதுமே பதற்ற நிலையில்தான் இருப்பார். ஏறத்தாழ முப்பதாண்டுகளாக அப்படியே தொடர்கிறார்.

 

நிர்மால்யாவுடன் அன்று பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் மலையாள மொழியாக்கங்களில் செய்யப்படும் குளறுபடிகளைப் பற்றி. அவருக்கு ஒட்டுமொத்தமாக அதிருப்தி இருந்தது. ஊட்டியில் அந்தச் சூழியல்வகுப்புகளை நடத்தியவர்கள் மேல் அதைவிட பெரிய அதிருப்தி. அவர்களில் பலர் கிளப்களில் வாழும் பெரியமனிதர்கள். கால்ஃப் வாழ்க்கைக்காக சூழல் அழியக்கூடாது என நினைப்பவர்கள். நான் அப்போது நிகழ் இதழில் எழுதிய ஒரு குறிப்பில் மலைகளில் மிதமிஞ்சி பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுவதைப் பற்றி அவர்களில் ஒருவர் எழுதியிருந்த குறிப்பை மேற்கோளாக்கியிருந்தேன். நிர்மால்யா அவர் பெரிய தோட்டங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் பற்றி வாய் திறக்காமல் சிறுவிவசாயிகள் பயன்படுத்துவதைப்பற்றி மட்டும் எழுதுவதாகக் கொதித்தார். அவர் எஸ்டேட் உரிமையாளர், நிர்மால்யா அரை ஏக்கரில் உருளைக்கிழங்கும் காரட்டும் பயிரிடுபவர்.

 

ஆக மொத்தம் கொஞ்சம்கூட சுமுகமான சந்திப்பு இல்லை. கூட்டத்தில் மெல்லமெல்ல பிரம்மராஜனைப் பற்றிப் பேச்சு வந்தது. பிரம்ம.ராஜனைப்பற்றி நான் அப்போது கடுமையான கருத்தை நிகழ் சிற்றிதழில் எழுதி அவருடைய கசப்புக்கு ஆளாகியிருந்தேன். பிரம்மராஜனின் வீட்டுக்குச் செல்லலாம்  என கவிஞர்கள் முடிவெடுத்தனர். அவர் அப்போது சேரிங் கிராஸ் என்னுமிடத்தில் தங்கியிருந்தார். நிர்மால்யா பிரம்மராஜனுக்கு நண்பர். இன்றும் மானசீகமான நண்பர், அவரைப்பற்றிய என் விமர்சனங்கள் மேல் முப்பதாண்டுகளாக முற்றி வரும் கடும்மறுப்பு கொண்டவர். நிர்மால்யா மலர்ந்தார். எங்களை அழைத்துச்சென்றார்.நானும் பிரம்மராஜனின் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை கண்டுகொஞ்சம் முகம்சுளித்தாலும் நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் திரும்ம்பும் போது நிர்மால்யா எனக்கு அணுக்கமாகிவிட்டிருந்தார். நான் பிரம்மராஜனைப் பார்க்கச்சென்றது நல்ல விஷயம் என்று சொன்னார்

 

அவ்வாறு நான் அவருடன் அணுக்கமானேன். பின்னர் ஆறுமாதம் கழித்து மீண்டும் ஊட்டிக்குச் செல்ல நேர்ந்தது. நிர்மால்யாவைப் பார்த்தேன். அவர் நித்யசைதன்ய யதியைப் பற்றிச் சொன்னார். எனக்கு பெரிய ஆர்வமில்லை, ஊர் ஊராகப் போய் பலவகையான சாமியார்களைப் பார்த்துச் சலித்துவிட்டேன் என்றேன். அவர் “இவர் வேறுமாதிரி… நீங்க பாக்கவேண்டியவர்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஊட்டிகுருகுலம் ‘பக்தர்களுக்கு’ உரியது அல்ல. அது ஓர் அறிஞர்கூடுகை மையம் மட்டுமே என அப்போது நான் அறிந்திருக்கவில்லை. நிர்மால்யா அப்போது நித்ய சைதன்ய யதியின் மானுட மைந்தன் ஏசு என்னும் சிறிய நூலை மொழியாக்கம் செய்திருந்தார். எனக்கு அதைத் தந்தார். நான் அதை வாசித்து மொழியாக்கம் இன்னும் மேம்பட்டிருக்கலாம் என்னும் கருத்தைச் சொன்னேன். நித்ய சைதன்ய யதியை அடுத்தமுறை சந்திப்பதாகச் சொன்னேன், ஆனால் அந்த நோக்கம் இருக்கவில்லை.

 

அதற்குள் என் ஆன்மிகநிலையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. நான் பவாவுடன் அணுக்கமாகியிருந்தேன்.1992ல் அவரைப் பார்க்கத்  திருவண்ணாமலைக்குச் சென்றேன். அங்கே  யோகி ராம்சுரத்குமாரைச் சந்திக்க பவா என்னை அழைத்துச்சென்றார். அவரைச் சந்தித்தது என் ஆழத்திற்கு நான் தள்ளிவிட்டிருந்த ஆன்மிகத்தேடல்களை மீண்டும் தூண்டியது. நான் யோகியிடம் அணுக நினைக்கவில்லை, அவரை அறிந்துகொண்டேன், ஆனால் அவர் வேறொருவர் என தோன்றியது. அந்நாளில் ஊட்டிக்குச் செல்வது தற்செயலாகவே நிகழ்ந்தது. இம்முறையும் நிர்மால்யா நித்யாவைச் சந்திக்க அழைத்தார். நான் அவருடன் சென்றேன். ஆச்சரியம் என்னவென்றால் இந்த முப்பதாண்டுகளில் நிர்மால்யா ஒருவரைக்கூட நித்யாவையோ பிற துறவிகளையோ சந்திக்க அழைத்ததோ  கூட்டிச்சென்றதோ இல்லை. பொதுவாக அவர் குருகுலம், நித்யா பற்றி பேசுவதே இல்லை. எவரேனும் கேட்டாலும் தவிர்க்கும் நோக்குடன் சுருக்கமான பதில்களையே சொல்வார். என்னை ஏன் கட்டாயப்படுத்தினார் என்பதும் அவருக்குத்தெரியாது .

 

செல்லும்போது நான் மறுக்கவில்லை என்றாலும் மெல்லிய குறுகுறுப்பும் தயக்கமும்தான் ஓங்கியிருந்தன. நான் செல்லும்போது காலை எட்டுமணி. ஊட்டிக்கு அது விடிகாலை. நித்யா தன் மாணவர்களுடன் வெளியே வந்து காலைமலர்களை நோக்கிக் கொண்டிருந்தார். உடன் ஆரோன் என்னும் ஜெர்மானிய இளைஞன். சுவாமி தன்மயாவாக பின்னர் மாறிய டாக்டர் தம்பான். சுவாமி தியாகீசன் ஆகியொர் இருந்தனர். நான் நித்யாவை பதினைந்து அடி தொலைவில் பார்த்து அந்த முதற்கணத்திலேயே அவருடைய மாணவனானேன். இன்றும் ஒருநாள்கூட அவருடைய மாணவனாக , அவரிடமிருந்து கற்காதவனாக, இருந்ததில்லை. அன்றிலிருந்து இன்றுவரை மாணவனாக குருகுலத்திற்குச் சென்றுகொண்டே இருக்கிறேன்

 

அன்றெல்லாம் ஊட்டிக்கு மாதம் ஒருமுறையேனும் நான் செல்வேன். தர்மபுரியில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தேன். மாலையில் சேலம் வந்து அங்கிருந்து பின்னிரவில் கோவை வந்து விடியற்காலையில் ஊட்டி பேருந்தைப் பிடித்து ஏழுமணிக்கு ஊட்டியில் வந்திறங்குவேன். பெரும்பாலான பொழுதுகளில் நிர்மால்யா பேருந்துநிலையத்தில் காத்து நின்றிருப்பார். பார்த்ததுமே நாங்கள் ஒரு சங்கடமான புன்னகையை பரிமாறிக்கொள்வோம். நிர்மால்யா பதற்றத்துடன் இலக்கியம்பேசத் தொடங்குவார். ஆட்டோவில் குருகுலம் வருவோம். அவரைப் பார்த்ததும் குரு “இவர் வந்தால்தான் நீயும் வருவாயா?” என நிர்மால்யாவை புன்னகையுடன் கடிந்துகொள்வார். ஓராண்டுக்குப்பின் சேலம் குப்புசாமியும் என்னுடன் ஊட்டிக்கு வரத்தொடங்கினார்.

 

நித்யா என்னிடம் தமிழ்க்கவிஞர்களைச் சந்திக்க விழைவதாகச் சொன்னார். 1994 ல் நான் என் நண்பர்களான எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், கோவிந்தராஜ் பின்னாளில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆன செங்கதிர் போன்றோரைக் கூட்டிவந்து ஊட்டியில் ஒரு சிறிய கவிஞர் சந்திப்பை நடத்தினேன். நான், குப்புசாமி உட்பட மொத்தம் எட்டுபேர். கவிதைகளை கவிஞர்கள் வாசிக்க நான் அவற்றின் மொழியாக்கத்தை நித்யாவுக்கு வாசித்துக்காட்டினேன். நித்யா அவற்றின்மேல் தன் கருத்துக்களைச் சொன்னார். இயல்பாகத் தொடங்கிய அந்தச் சந்திப்பு ஒரு சீரான தொடர்நிகழ்வாக ஆகியது. ஆண்டுக்கு மூன்று அல்லது நான்குமுறை கவிஞர்கள் நித்யாவை வந்து சந்தித்துச் சென்றார்கள். தமிழின் பல இளம்கவிஞர்கள் வந்திருக்கிறார்கள்

 

நித்யா சமாதியானபின்னர் ஓராண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதன்பின்னர் நான் கலாப்ரியா உதவியுடன் குற்றாலத்தில் தமிழ் -மலையாளக் கவிஞர்களின் ஒரு சந்திப்புநிகழ்ச்சியை ஒருங்கிணைத்தேன்.  அது மலையாளச் சூழலில் பெரிய அதிர்வுகளை உருவாக்கியது. இன்றுகூட அதைப்பற்றிய பேச்சுக்கள் உள்ளன. குற்றாலம் எஃபக்ட் என்பது வசையாகவும் பாராட்டாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த நிகழ்ச்சிகள் மீண்டும்  குற்றாலத்தில். அதற்கு அடுத்தது நண்பர் மொரப்பூர் தங்கமணி உதவியுடன் ஒ்கேனேக்கலில். அவ்வாண்டு நான் ஊட்டிக்கு குருநித்யா நினைவுச் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்தேன். நித்யா நினைவாக நிகழும் சந்திப்பைப் பற்றிச் சொன்னபோது “வேறு எங்கும் நடத்தவேண்டியதில்லை. இங்கேயே நிகழட்டும்” என்று சொன்னார்

 

அதன்பின் நிர்மால்யா உதவியுடன் குரு கவியரங்கு ஊட்டியில் தொடங்கியது. 2002 முதல். நிர்மால்யா முழுமையாகவே இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். பெரும்பாலும் இது ஒரு தனிநபர் முயற்சி. குருகுலத்தைத் தூமைசெய்வது முதல் கடைசியில் குப்பை பொறுக்கிப்போடுவதுவரை நிர்மால்யாதான். அவரைப்பொறுத்தவரை இது குருவுக்கு அவர் செய்யும் பணி. நான் பெரும்பாலும் எந்த வேலையும் அன்றும் இன்றும் செய்வதில்லை. ஒருங்கிணைப்பு தவிர. ஆரம்பத்தில் ஆண்டுக்கு மூன்று சந்திப்புகள் வரை ஊட்டியில் நிகழ்ந்தன. பின்னர் அதில் ஒரு தொய்வு. ஓராண்டு அது நிகழவில்லை. 2006ல் நிகழ்ந்த சந்திப்புக்கு ஈரோடு கிருஷ்ணனும் கோஷ்டியும் வந்திருந்தார்கள். இதைப்போல இத்தனைப் படைப்பூக்கத்துடன் ஒரு நிகழ்வு நடக்கமுடியுமா என்று வியந்தேன் என கிருஷ்ணன் சொல்வதுண்டு. அன்றெல்லாம் விவாத அரங்கில் கவிஞர்கள் மட்டுமே பேசமுடியும். பிறருக்கு பார்வையாளராக மட்டுமே இடம்.

 

குருகுலம் நித்யாவுக்குப் பின் சிதிலமாகத் தொடங்கியது. வருகையாளர்கள் இல்லை. கொடையாளர்கள் முற்றிலும் இல்லை. பெரிய அமைப்பு. ஆகவே நாங்கள் ஓராண்டு இடைவெளி விட்டோம். ஓரளவு தூய்மைசெய்து மீண்டும் தொடங்கினோம். ஆனால் அடுத்த ஆண்டு ஏற்காட்டில் நடத்தவேண்டியதாயிற்று. அதனால் மிகவும் உளம்வருந்தியவர் நிர்மால்யா. மாதம் ஒருமுறை கூப்பிட்டு வருந்திக்கொண்டே இருந்தார். “ஊட்டியிலேதான் நடத்தணும். குருவோட சமாதி இங்கேதான் இருக்கு” என்று சொல்வார். ஊட்டி குருகுலத்தை நித்யாவின் மாணவி ஒருவர் சொந்தச்செலவில் சீரமைத்தார். அதன்பின்னர் இப்போது தொடர்ச்சியாக ஊட்டி குருநித்யா காவிய அரங்கு நிகழ்கிறது. இம்முறை மேமாதம் 3,4,5 தேதிகளில்

 

இப்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஆகிவிட்டது. நூறுபேருக்குமேல் கலந்துகொள்கிறார்கள். நூறுபேரையாவது இடமில்லை என தவிர்க்கவும் நேர்கிறது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து அரங்கை நிறைத்திருக்கிறார்கள். நிர்மால்யா பெரும்பாலும் அதே பதற்றத்துடன் அதே சொற்களுடன் கண்ணுக்குத்தெரியாதவராக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். தமிழகத்தில் இவ்வளவுகாலம் இவ்வளவு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த இன்னொரு இலக்கியவாதி உண்டா எனத் தெரியவில்லை. இதன்பொருட்டு அவருக்கு எந்தச் சமூக இடமும் எந்த புகழும் கிடைக்கவில்லை.

 

நிர்மால்யா ஒரு டீத்தூள் கடையின் பங்காளராக இருந்தார். அதன்பின் மிட்டாய் வினியோகம் செய்தார். இப்போதும் சிறுவணிகம்தான். விவசாயம் உண்டு. மொழியாக்கம் செய்து அதற்கான சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றிருக்கிறார். மகன் படித்து நல்ல வேலைக்குச் சென்றபின் கொஞ்சம் தெளிந்து அவ்வப்போது சிரிக்கிறார். அடுத்தமகன் படித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் இப்போதும் அதேபோல குறைவான பேச்சு கொண்ட நண்பர்கள்தான். “உன் நண்பர்களிலேயே ரெண்டும் ரெண்டு துருவம். ஒண்ணு பேசிட்டே இருக்கும். ஒண்ணு வாயே திறக்காது. லெச்சணம்தான்” என்று அருண்மொழி சொல்வாள் – கிருஷ்ணனையும் நிர்மால்யாவையும் பற்றி. எங்கள் இருவருக்கும் சேர்ந்தே வயதாகிவிட்டதை ஊட்டியில் நித்யாவின் அரிய புகைப்படங்களை எடுத்த தத்தன் புனலூர் அனுப்பிய இந்தப் புகைப்படம் காட்டுகிறது.

 

 

நிர்மால்யாவுக்கு விருது

ஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13

$
0
0

ஒரு சிறுபறவை ரீக் என்றபடி கடந்துபோன கணத்தில் துச்சாதனன் முற்றிலும் பொறுமை அறுபட்டு எழுந்து சீற்றத்துடன் குடிலின் கதவை தட்டினான். “மத்ரரே! மத்ரரே!” என்று அழைத்தான். உள்ளே மறுமொழி எதுவும் ஒலிக்கவில்லை. மீண்டும் தட்டி “மத்ரரே, நான் தங்களிடம் பேசும்பொருட்டு வந்திருக்கிறேன்” என்று உரக்க அழைத்தான். சல்யர் எழுந்து வரும் ஓசை கேட்டது. அவன் கதவை உடைக்க எண்ணிய கணத்தில் கதவை விசையுடன் திறந்து “ஏன் கூச்சலிடுகிறாய், அறிவிலி? நான் உள்ளே இருக்கிறேன் என்பது உனக்கு தெரியுமல்லவா?” என்றார் சல்யர். அவர் விழிகளை நோக்கி “தெரிந்துதான் அழைத்தேன். நெடுநேரமாக இங்கு காத்திருக்கிறேன். நான் சென்று ஆற்றவேண்டிய பணிகள் உள்ளன” என்று துச்சாதனன் சொன்னான்.

“நான் எவரையும் சந்திக்க விரும்பவில்லை” என்று சல்யர் சொன்னார். அவர் கதவை மூடுவதற்குள் துச்சாதனன் உறுதியான குரலில் “நான் அரசரின் ஆணையுடன் வந்திருக்கிறேன். சந்தித்தே ஆகவேண்டும். அதை மறுக்கும் உரிமை இந்தப் படையில் எவருக்கும் இல்லை” என்றான். சல்யர் விழிதாழ்த்தி “நான் அவ்வாறு உரைக்கவில்லை. உண்மையில் சந்திக்கும்பொருட்டே என்னை சித்தமாக்கிக்கொண்டிருந்தேன். ஆனால் என் உடல்நிலை…” என்றார். “நாம் உள்ளே சென்று அமரலாமா?” என்று துச்சாதனன் கேட்டான். சல்யர் “வருக!” என்று கதவை நன்கு திறந்து பின்னால் சென்று தன் புலித்தோலில் அமர்ந்துகொண்டார். “உண்மையாகவே நான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.”

துச்சாதனன் அவர் முன் சென்று அவரிட்ட மான்தோல் பீடத்தில் அமர்ந்து “நான் அரசரின் ஆணையை தெரிவிக்கும்பொருட்டு வந்திருக்கிறேன். நாளை புலரியில் நீங்கள் சென்று படைமுகம் நின்று அங்கரின் பொற்தேரை தெளிக்கிறீர்கள். இது அரசாணை” என்றான். “நாளை புலரியில் எந்நிலையிலும் இதை நீங்கள் ஒழியலாகாது. உடல்நிலை குன்றினும் இதை ஆற்றியாகவேண்டும். இல்லையேல் அரசமறுப்பு என்றே கொள்ளப்படும்.” அவனது ஒவ்வொரு சொல்லிலும் இருந்த ஆணைத் தோரணையை, அதில் அவர் மீதான மதிப்பு முற்றிலும் அகன்றுவிட்டிருந்ததை சல்யர் எவ்வகையிலும் உணரவில்லை. அவரது கண்கள் நிலைகொள்ளாது அலையத்தொடங்கின. கைவிரல்களைக் கோத்தும் விலக்கியும் தவித்தார்.

துச்சாதனன் அவரது உள்ளம் எங்கு செல்கிறது என்று உணர்ந்தான். அவரால் அவருக்கு இடப்படும் ஆணைகளை மீற இயலவில்லை. ஏனெனில் துரியோதனனை எப்போதும் அவர் அச்சத்துடனும் வியப்புடனும்தான் நோக்கிக்கொண்டிருந்தார். துரியோதனனே தன்னைத் தேடி வந்து அழைத்தமையால்தான் அவர் தன் குருதிச்சுற்றத்தைத் துறந்து இப்பால் வந்தார். அதை மறைக்கவே தானே அம்முடிவை எடுத்ததாக ஒவ்வொரு அவையிலும் ஒருமுறையேனும் சொல்லிக்கொண்டிருந்தார். ஆணைகளை மீற முடியாதவர் அவர் என துரியோதனன் அறிந்திருந்தமையாலேயே மிக அரிதாகவே அவருக்கு ஆணைகளை பிறப்பித்தான். அந்த ஆணைகளையும் அவர் தனித்திருக்கையிலேயே தாழ்ந்த கூரிய குரலில் சொன்னான். மறுமொழி சொல்லாமல் அவர் தலைவணங்கி ஏற்றார்.

அதை எவ்வாறு தானும் நோக்குவது தெரியாமல் நோக்கியிருந்தோம் என்று துச்சாதனன் வியந்தான். தேவையானபோது எடுக்க வேண்டிய மந்தணப் படைக்கலமாகக் கருதி அதை இருளறைகளில் இருத்தியிருக்கிறான். அவன் தனக்குள் புன்னகைத்துக்கொண்டு இயல்பான குரலை மீட்டு “தாங்கள் அங்கநாட்டு அரசர் மேல் கொண்டிருக்கும் ஒவ்வாமையை அரசர் நன்கு அறிவார். ஆனால் அது நமது வெற்றியை எவ்வகையிலும் குறைக்கலாகாது என விழைகிறார். நாளையுடன் இப்போர் முடிவடைய வேண்டுமென்று அரசர் எண்ணுகிறார். அங்கர் தேரில் வில்லுடன் நின்றிருக்க நீங்கள் சவுக்குடன் அமரத்தில் அமர்ந்திருப்பீர்கள் எனில் அது வில்லேந்திய அர்ஜுனனும் புரவி நடத்தும் யாதவரும் இணைந்து போர்முகம் வந்ததுபோல” என்றான்.

“ஆம்” என்று சொல்லி சல்யர் புன்னகை புரிந்தார். “மெய்யாகவே அது ஒரு நல்ல படைசூழ் திட்டம். அதை அப்போது நான் உணரவில்லை. இங்கே அமர்ந்து எண்ணுகையில் நாளை போருக்கெழும்போது புரவிகளை என்ன செய்வதென்றுதான் கருதிக்கொண்டிருந்தேன். அரசருடைய ஆணை நான் என்ன எண்ணியிருக்கிறேனோ அதையே சொல்கிறது. உண்மையில் நானே அங்கே வந்து அரசரிடம் இதை சொல்வதாக இருந்தேன்.” அவருடைய முகம் மலர்ந்தது. “புரவிகளைப்பற்றி நாம் பேசியாகவேண்டும். நீங்கள் தேர்களில் கட்டியிருக்கும் புரவிகள் ஒட்டிய நீளுடலும் சவுக்குபோல் நீண்ட கால்களும் கொண்டவை. அவற்றை அவற்றின் இலக்கண ஒருமைக்காக மட்டுமே தெரிவு செய்கிறீர்கள். அந்த இலக்கண ஒருமை எப்போதும் எங்கும் செல்லுபடியாகக்கூடியது அல்ல. புரவியின் இலக்கணங்களை நாங்கள் மலையில் வேறுவகையில் வகுத்து வைத்திருக்கிறோம்.” அதைச் சென்று தொட்டதுமே இயல்பாக ஆவதற்கான வழி அவருக்கு திறந்துகொண்டது. அவர் குரல் எழுந்தது.

“ஏனெனில் எங்கள் நிலம் முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நிகர்நிலத்துப் புரவிகள் நேர்ப்பாதையில் நெடுந்தொலைவு ஓட வேண்டியவை. ஆகவே அவற்றின் உடலின் ஆற்றல் வீணாகக்கூடாது. விசை குவிந்து முன்எழு திசையிலேயே வெளிப்படவேண்டும். ஆகவே அவை இருபுறமும் சீராக அமைந்த நேருடல் கொண்டவையா என்று பார்க்கிறீர்கள். கால்களும் உடலும் எந்த வளைவுமின்றி இருக்கவேண்டும். உடலின் எடை நான்கு கால்களிலும் இணையாக பகிரப்படவேண்டும். முன்குளம்பு விழுந்த நேர்கோட்டிலேயே பின்குளம்பு பதியவேண்டும். சுழிகளை நீங்கள் நோக்குவது அவற்றின் உடலில் எங்கேனும் வளைவிருக்கிறதா என்று நோக்கத்தான்.” சல்யர் கைதூக்கி அவனிடம் “சுழிகள் என்பவை என்ன?” என்றார். அவன் வெறுமனே நோக்கினான்.

சல்யர் அவனை கூர்ந்து பார்த்தார். “சொல்க!” என்றார். அவர் என்ன எண்ணுகிறார் என்று அறியாமல் துச்சாதனன் “தெரியவில்லை” என்று தலையசைத்தான். “தெரிந்திருக்காது” என அவர் மகிழ்வுடன் சொன்னார். “நீங்கள் நூல்களை நம்புகிறீர்கள். நூல்களுக்கு அப்பால் சென்று அந்நூல்களை எழுதியவர்கள் என்ன எண்ணினார்கள் என்பதை ஒருபோதும் பார்ப்பதில்லை. நம் உடலிலும் சுழிகள் உள்ளன. உடலில் எவ்வண்ணம் அசைவுகள் நிகழும் என்பதையே சுழிகள் காட்டுகின்றன. நம் உடலிலிருக்கும் சுழிகளைக்கொண்டு நம் அசைவுகளையும் உய்த்துணர முடியும். புரவிகளின் சுழிகள் இன்னும் தெளிவாக தெரியும். மனித உடலின் சுழிகள் தலையில் தவிர வேறெங்கும் வெளிப்படாதவை. மயிரின்மையால் அவற்றை கண்டடைய இயலாது.”

அவர் சிரித்து “ஆனால் என்னைப்போல் நுண்நரம்புச் சுழிகளை காணும் கலை கற்றவர்கள் மிக எளிதில் ஒவ்வொரு மானுடரையும் தொட்டு அறிந்து அவர் உடலில் இருக்கும் பதினெட்டு சுழிகளையும் அடையாளம் காண்போம். அதனடிப்படையில் அவர்கள் எவ்வாறு உடலசைப்பார்கள், எவ்வண்ணம் தேர் தெளிப்பார்கள், எவ்வண்ணம் உணர்வெழுச்சிகள் கொள்வார்கள் என்பதை கணிப்போம். புரவிகளின் சுழிகள் தெளிவாகத் தெரிவன என்பதனால் அவற்றைக் கொண்டு புரவிச்சுழி கணிக்கிறோம். அச்சுழிகளின் அடிப்படையில் புரவிகள் எவ்வாறு விசை கொள்கின்றன என்பதை உய்த்துணர்கிறோம். இங்கு நமக்குத் தேவை என்ன? நெடுந்தொலைவு அம்புபோல விசைகொண்டு செல்லும் புரவிகள் அல்ல நமக்குத் தேவையானவை. இது போர்க்களம், நெடும்பாதை அல்ல. இங்கே குறுகிய தொலைவுக்குள் எண்ணிய அக்கணமே முழு விசையையும் அடையும் புரவிகள் தேவை!” என்றார்.

“ஆனால் நாம் சுழி நோக்குவது ஒவ்வொரு புரவியும் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு ஒத்திசைந்து செல்கிறது என்பதை அறிவதற்காகவே” என்று துச்சாதனன் சொன்னான். அதை சொல்லியிருக்கலாகாது என்று தோன்றியது. அவர் தொடர்பற்ற ஏதோ திசைக்கு பேச்சை கொண்டுசெல்வதை உணர்ந்தான். ஆனால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் தோன்றியது. சல்யர் ஊக்கத்துடன் “ஆம், ஏழு புரவிகள் பூட்டிய தேரில் ஏழு புரவிகளும் ஒன்றுடன் ஒன்று நன்கு இசையாவிடில் அனைத்து தேர்விசையும் வீணாகும். தேர்த்தட்டு உலைந்துகொண்டே இருக்கும். தேர்ப்பாகன் அளிக்கும் ஆணைகள் புரவிகளை முழுமையாக சென்றடையாது. ஏழில் ஒன்று பிழையாக புரிந்துகொண்டாலும்கூட அந்த அளவில் தேர் பிழையுடனே முன்னகரும்” என்றார். “ஆம், அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றான் துச்சாதனன்.

“எனில் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு புரவியின் சுழியையும் நன்குணர்ந்து அச்சுழி உருவாக்கும் அசைவுகளுடன் இணையும் சுழி கொண்ட பிறிதொரு புரவியை தேர்வு செய்யவேண்டும். ஏழு புரவிகளும் சேர்ந்து ஒற்றைப் புரவியாக மாற வேண்டும். ஒன்றையொன்று அவை நிரப்பவேண்டும்” என்றார் சல்யர். “ஆனால் இங்கு அவ்வாறு நாங்கள் பார்ப்பதில்லை. ஒவ்வொரு புரவியும் முழுமையான சுழியொருமை கொண்டதாக இருந்தால் இயல்பிலேயே அவை ஒன்றென்றாகி விடுகின்றன என்று எண்ணுகிறார்கள்” என்றான் துச்சாதனன். தனக்குள் ஏன் பேசுகிறோம் என எண்ணி உளம்சலித்தான். நான் இங்கே பேசவரவில்லை. இந்த முதுமூடர் என்னை அலைக்கழிக்கிறார்.

“ஆம், மெய்!” என்றார் சல்யர். “ஆனால் அதனால் நாம் எத்தனை புரவிகளை வீணடிக்கிறோம்? அறிக, தன்முழுமை கொண்ட புரவி ஆணவம் கொண்டது! அது உள்ளத்தால் இன்னொரு புரவியுடன் இணைய விழையாது. உங்கள் தேர்ப்புரவிகள் உண்மையில் உள்ளத்தால் ஒற்றைப்புரவி என்றாவதே இல்லை.” துச்சாதனன் “ஆனால் அதுவே செய்யக்கூடுவது. ஒவ்வொரு புரவியின் சுழிகளையும் கணித்து ஒவ்வொன்றையும் பிறிதொன்றுடன் இணைக்கும் பெரும்பணியைச் செய்வதற்கு போர்க்களத்தில் பொழுதில்லை” என்று சொன்னான். அவன் உள்ளம் சலித்து தன் எச்சரிக்கைகளை கைவிட்டுவிட்டது. தற்கட்டுகளில் மிகக் கடினமானது சொல்லாடலில் நாவடக்குவது. முதல்சொல்லை எடுப்பதுவரை அது மிக எளிது. சொல்லிவிட்டால் தன்முனைப்பை முன்வைத்து ஆடத் தொடங்கிவிடுகிறோம். தோற்கலாகாது என்றே மீளமீள சொல்லெடுக்கிறோம்.

“ஆம், உங்களுக்குப் பொழுதில்லை!” என்று சொல்லி உரக்க நகைத்த சல்யர் “பொழுது உண்டு!” என்றார். தன் நெஞ்சை சுட்டிக்காட்டி “என் உள்ளத்துக்குள் பொழுது உண்டு. நான் இங்கிருக்கையில் ஒவ்வொரு புரவியையும் தனித்தனியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறேன். எனக்குத் தேவை உங்கள் விரிநிலத்தில் நீள்கால்களுடன் விரைந்தோடும் புரவிகள் அல்ல. நான் மலைகளிலிருந்து கொண்டு வந்த புரவிகள் இங்குள்ளன. அவை ஒவ்வொன்றையும் நான் நன்கறிவேன். ஒவ்வொரு சுழியையும் நான் இங்கிருந்துகொண்டே விழிமூடி எண்ணி நோக்க முடியும். அவை எங்கள் தேர்வலர்களால் தெளிக்கப்படுகின்றன. அப்புரவிகளை நாளை அங்கனின் தேரில் கட்டுவோம். அவை என் கைவிரல்களைப்போல. நான் எண்ணுவதற்குள் இயற்றும் திறன் கொண்டவை” என்றார்.

துச்சாதனன் முற்றிலும் சலிப்படைந்தான். அது எரிச்சலாக மாற அவரை இடைமறித்து “தாங்கள் விழைந்தபடியே தேரை செலுத்தலாம். ஆனால் அங்கரின் தேர் மிகுந்த எடைகொண்டது. அதை தங்கள் புரவிகள் தெளிக்குமா…” என்று சொன்னதுமே அவர் கைதட்டி “நில், நில். எங்கள் புரவிகளைப்பற்றி என்ன நினைத்தீர்கள்? உங்கள் புரவிகள் எங்கேனும் மேடேறுவதுண்டா? செங்குத்தாக தலைமேல் எழுந்து நிற்கும் மலை மீது எடை கொண்ட மல்லர்களைச் சுமந்து ஏறும் ஆற்றல் கொண்டவை எங்கள் மலைப் புரவிகள். அவற்றின் முன் கால்களைவிட பின்கால்கள் இருமடங்கு பெரியவை. தொடைகளை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் புரவிகளின் தொடைகள் சூம்பியவை. ஏனெனில் அவை முன் கால்களால் அறைந்து தாவி பின் கால்களை விசை கூட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றன. எங்கள் புரவிகள் பின் கால்களால் முழு முன்னகர்தலையும் செய்கின்றன. எங்கள் புரவிகளின் பின் கால்களே நாளை இந்தப் போரை வெல்லப்போகின்றன என்பதை பார்ப்பீர்கள்” என்றார்.

“தாங்கள் அதை நிகழ்த்தினால் போதும். அது எவ்வண்ணம் என்று எங்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. நாங்கள் நிகர்நில மக்கள். உங்கள் புரவிகளையும் உங்கள் போர்முறைகளையும் அறிந்தவர்களல்ல” என்றான் துச்சாதனன். “அதை நாளை காண்பீர்கள்” என்று சொல்லி சல்யர் தன் மீசையை நீவி சுட்டு விரலால் சுருட்டினார். ஒருகணம் துச்சாதனனின் உள்ளம் மின்னியது. அவன் விழிகளை நோக்கி “என்ன?” என்று அவர் கேட்டார். “தாங்கள் சுட்டுவிரலால் மீசையை சுற்றி முறுக்குகிறீர்கள்” என்றான். “ஆம், அந்த அங்கநாட்டு அறிவிலி என்னைப் பார்த்து இதைப்போல செய்கிறான். அவனுக்கு அது சற்றும் பொருந்தவில்லை” என்று சல்யர் சொன்னார்.

“அவரை இன்று நீங்கள் அவையில் சிறுமை செய்தீர்கள். அது மீண்டும் நிகழலாகாது என்று மூத்தவர் விழைகிறார். நான் முதன்மையாகச் சொல்லவந்தது அதையே” என்றான் துச்சாதனன். சல்யரின் விழிகளில் ஒரு சிறு மாற்றம் எழுந்தது. அது என்ன என துச்சாதனன் வியந்தான். “உன் மூத்தவனிடம் சென்று சொல்க, அங்கன் இப்போரில் வெல்வானெனில் அது என் புரவித்திறனால் மட்டுமே என! அவனால் இந்திரன் மைந்தனை வெல்லமுடியாது. அவன் ஆற்றல் கொண்டவன்தான், இல்லை என்று நாம் மறுக்கவில்லை. ஆனால் தாழ்வுணர்ச்சி கொண்டவன். தாழ்வுணர்ச்சியை ஆணவம் என்று மாற்றி நடித்துக்கொண்டிருக்கிறான். அவன் பெரும் கொடையாளி என்கிறார்கள். கொடையாளி என்பவன் யார்? கொடுத்துக் கொடுத்து புகழ் தேட விரும்புபவன். புகழ் அதர்வினவித் தேடி வரவேண்டும், புகழை ஈட்ட முயல்பவன் கொடையாளி அல்ல, சிறுமதியன்” என்று சல்யர் சொன்னார்.

“நான் அவரைப் பற்றி பேசுவதற்காக இங்கு வரவில்லை. அரசரின் ஆணையை உரைக்கவே வந்தேன்” என்றான் துச்சாதனன். எழுந்துவிடவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டான். ஆனால் அதற்கு ஒரு சிறு இடைவெளி தேவைப்பட்டது. பேச்சின் இடைவெளி. ஒரு நோக்கின் இடைவெளியேகூட போதும். ஆனால் சல்யர் ஊக்கம்கொண்டு “எதன்பொருட்டாயினும் இதை நீ அறிந்துகொள்ள வேண்டும். கொடையாளியை அறிவிலி என்றே அரசுசூழ்பவர் எண்ணுவர். நீ கொடையாளி அல்லவா என்று ஒருவன் புகழ்ந்துரைத்தால் அல்ல என்று ஒருபோதும் கொடையாளி சொல்வதில்லை. அவ்வாறு ஓரிடத்தில் ஒருவனை ஒற்றைச் சொல்லில் பிணைக்க முடியும் எனில் அவன் அச்சொல்லில் சிறைப்பட்டவன் என்றே பொருள். அச்சொல்லைக்கொண்டு அவனை எளிதில் வெல்லமுடியும். அவன் கோட்டையில் திறந்து கிடக்கும் வாயில் அது” என்றார்.

“அவன் கொடையாளி. அச்சொல்லில் மகிழ்பவன். சொல், அவன் எவருக்கு என்னென்ன அளித்திருக்கிறான் என்பதை நீ அறிவாயா? உன் மூத்தவன் அறிவானா? இல்லை, அதை அறிந்திருக்கமாட்டீர்கள். ஆனால் அவனை முழுவதும் அறிந்தவர்போல் எண்ணிக்கொள்கிறீர்கள்” என்றார் சல்யர். அப்போதுதான் அந்த எண்ணத்தை வந்தடைந்தமையால் அவருக்கு ஊக்கம் எழுந்துகொண்டே வந்தது. அவர் விழிகளுக்கு அப்பால் உள்ளம் சூழ்கை அமைப்பதை காணமுடிந்தது. துச்சாதனன் சலிப்புடன் “நாம் இச்சொற்கள் அனைத்தையும் பிறிதொருமுறை விரிவாக அமர்ந்து பேசலாம். இப்பொழுது போருக்கு எழவேண்டிய பொழுது. சற்று ஓய்வெடுத்தபின் முற்புலரியில் எழுந்து நம் படைகளை சூழ்ந்தமைக்க வேண்டியுள்ளது” என்று கைகூப்பி எழுந்தான்.

“இரு! இரு!” என்று அவன் தொடைகளை தன் கைகளால் தட்டினார் சல்யர். “நான் சொல்வதை செவி கூர்ந்து உளம் கொள். அவன் எவருக்கு என்னென்ன கொடுத்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை மதிப்பிடாமல் அவனை எவ்வண்ணம் அறியமுடியும்? அறியாத ஒருவன் கையில் எப்படி முழுப் படைப்பொறுப்பையும் அளிக்கமுடியும்? ஒவ்வொரு கொடையும் அவனை கட்டுப்படுத்துகிறது என்று அவன் அறிவதில்லை. அவன் மதவேழமாக இருக்கலாம். ஆனால் ஆயிரம் சரடுகளால் தறியறைந்து கட்டப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு சரடும் அவன் அளித்த கொடைகள்” என்றார் சல்யர். “அவனுடைய ஆற்றல் அனைத்தையும் அவன் அள்ளிக்கொடுத்துவிட்டான். பொன்னோ மணியோ அனைத்தும் பொருள்வடிவ ஆற்றல்களே. சொல்லோ நுண்வடிவ ஆற்றல். அவன் அள்ளிக்கொடுத்து வெறுமைகொண்டபடியே இருக்கிறான். இன்று அவன் முற்றிலும் ஆற்றலற்றவன், அறிக!”

துச்சாதனன் “தாங்கள் சொல்வது புரியவில்லை. எனக்கு அரசுசூழ்தல் பயிற்சியில்லை” என்றான். ஆனால் அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கிவிட்டது. “ஆம், அறிவேன். ஆகவேதான் நீங்கள் அரச அவைகளில் சுற்றிச் சுற்றிப் பேசுகிறீர்கள். எதை பேசவேண்டுமோ அதை கூர்மையான சொற்களில் சொல்வதில்லை. நான் சொல்கிறேன், ஒருவன் ஒன்றை கொடுத்தான் என்றால் பெற்றவன் அதை முழுமையாகப் பயன்படுத்துவதை அவன் கண்காணிக்க வேண்டுமல்லவா? அதை பிறிதொருவன் பறித்துக்கொள்ளாமல் காக்க வேண்டுமல்லவா?” என்றார். “ஆம்” என்று துச்சாதனன் சொன்னான். “அது ஒரு கடமையாகிறதல்லவா?” என்றார் சல்யர். “ஆம்” என்று துச்சாதனன் சொன்னான். “ஒரு கொடை ஒரு கடமையை கொடுப்பவனுக்கு அளிக்கிறது. ஒரு சொற்கொடை அதை பேணும் சுமையாகிறது. அவ்வாறு கர்ணன் தன் வாழ்நாளெல்லாம் கொடுத்தவற்றால் கட்டுண்டிருக்கிறான்.”

துச்சாதனன் நீள்மூச்செறிந்தான். “தன் சொற்கொடையால் எப்போதைக்குமாக பிறருக்கு அடிமைப்பட்டிருக்கிறான் அவன். அச்சரடுகள் என்ன, அவன் எங்கெல்லாம் கட்டப்பட்டிருக்கிறான் என்று அறியாமல் அவனுக்கு தேர் தெளித்தால் நான் மூடன் என்று ஆவேன். அவனுடைய தோல்விகளெல்லாம் என் தோல்விகள் என்று அறியப்படும். அதன் பொருட்டே நேற்று நான் அவனை எதிர்த்தேன். இன்றும் தயங்குகிறேன். இதை மட்டும் தெளிவுபடுத்திக்கொண்டு வந்து சொல்லுங்கள். நான் சவுக்குடன் வந்து தேரிலேறிக்கொள்கிறேன்” என்றார் சல்யர். “அவர் எவருக்கு சொல்லளித்திருக்கிறார்?” என்றான் துச்சாதனன். “அவனிடமே சென்று கேள், எவருக்கு சொல்லளித்திருக்கிறான் என்று. அல்லது உன் மூத்தவனிடம் கேட்கச் சொல். அவன் களத்தில் எத்தனை முறை பீமனை கொல்லாமல்விட்டான் என்பதை நீ அறிந்திருப்பாய். எத்தனை முறை யுதிஷ்டிரன் அவன் கையிலிருந்து உயிர் மீட்டெடுத்தான்? சொல், எத்தனை முறை நகுலனும் சகதேவனும் அவன் முன்னிருந்து உயிருடன் திரும்பிச்சென்றார்கள்?”

துச்சாதனன் தன் நெஞ்சொலியை கேட்டுக்கொண்டிருந்தான். “அவன் அவர்கள் எவரையுமே கொல்லவில்லை. ஏனெனில் எங்கோ எவருக்கோ அவர்களை கொல்வதில்லை என்று சொல்லளித்திருக்கிறான். அது ஏன் என்று நான் அறிவேன். அதை இப்போது உன்னிடம் சொல்லப்போவதில்லை” என்றார் சல்யர். துச்சாதனன் தன் உடல் முற்றாக தளர்ந்திருப்பதாக உணர்ந்தான். தணிந்த குரலில் “ஆம், அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றான். “அவன் களத்தில் இதுவரை ஆற்றியதென்ன? அவன் மிக எளிதில் அர்ஜுனனை கொன்றிருக்க இயலும் என்று அறியாதவர் எவர்? நாகவாளியை அவன் ஒரேஒருமுறை அர்ஜுனன் மேல் எய்தான். அதை அர்ஜுனன் திறம்பட ஒழிந்த பின்னர் பிறகு எத்தனைமுறை அதை மீண்டும் எய்தான் என்பதை சொல்” என்று சல்யர் கேட்டார்.

“ஆம், ஒருமுறை மட்டுமே” என்று துச்சாதனன் சொன்னான். “ஏன்? ஒரு போரில் நாகவாளியைப்போன்ற ஓர் அரிய அம்பை ஒருமுறை மட்டுமே தொடுக்கவேண்டும் என்று நெறியுள்ளதா என்ன? அந்நெறியை தனக்குத்தானே சூட்டிக்கொள்ளும் உரிமை அவனுக்குள்ளதா? அவன் துரியோதனன் பொருட்டு இறுதித் துளி குருதி வரை செலுத்தி இக்களத்தில் நின்றிருப்பேன் என்று வஞ்சினம் உரைத்தவனல்லவா? எதன் பொருட்டு அவன் தனக்கு அவ்வாறு எல்லையை வகுத்துக்கொண்டான்?” என்றார் சல்யர். துச்சாதனன் “நான் அவ்வண்ணம் எண்ணவில்லை” என்றான்.

“எண்ணி நோக்குக! எதையும் எண்ணி நோக்கவேண்டும், வெற்றுணர்ச்சிகளால் எப்பயனுமில்லை” என்று சல்யர் சொன்னார். “ஆம், அவன் உனக்கு தமையனுக்கு நிகரானவன். உன்னை தன் இளையோனாக தோள்சேர்த்து அணைப்பவன். உங்கள் அனைவருக்கும் அவனுடனான உறவென்ன என்று எனக்கு தெரியும். இக்களத்தில் நீங்கள் ஒவ்வொருவராக இறந்துகொண்டிருக்கிறீர்கள். அவன் அதன்பொருட்டு துயருறுகிறான். ஆனால் அதன் பொருட்டு பழி வாங்குகிறானா? பழி வாங்குகிறான் என்றால் இத்தனை அரிய அம்புகள் கொண்ட மாவீரன் தன் நிகரற்ற பெருவில்லுடன் எழுந்த பின்னரும் களத்தில் ஏன் பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்?”

“ஐவரையும் அவன் உயிரளித்து அனுப்பிக்கொண்டிருக்கிறான்” என்று அவனை கூர்ந்து நோக்கிக்கொண்டு சல்யர் சொன்னார். “ஏன்? அதை எண்ணுக, ஏன் அதை செய்கிறான்?” துச்சாதனன் சொல்லின்றி சிறிய விழிகளால் சல்யரை பார்த்துக்கொண்டிருந்தான். “அவன் எவருக்கோ அளித்த சொற்கொடை அது. கொடை மட்டுமே அவனை கட்டுப்படுத்தும். அது அவன் பாண்டவர்களின் அன்னைக்கு அளித்ததாக இருக்கலாம். அன்றி யாதவ கிருஷ்ணன் அவனிடமிருந்து அச்சொல்லை பெற்றிருக்கலாம்” என்றார் சல்யர். துச்சாதனன் நீள்மூச்சுடன் மீண்டு தன் உள்ளத்தை தொகுத்துக்கொண்டு “எதன் பொருட்டு அச்சொல்லை அவர்களுக்கு அளிக்கவேண்டும் அங்கர்?” என்றான்.

“வேறு எதன் பொருட்டுமல்ல, தான் கொடையாளி என்பதன் பொருட்டு மட்டுமே. அவர்கள் இரவலர் என வந்தால் அவன் அவர்கள் கோருவதை அளிப்பான். உன்னை நம்பி வந்து கேட்கிறேன் நீ அளித்தாகவேண்டும் என்று ஒருவர் சொன்னால் மாட்டேன் என்று சொல்லுமிடத்தில் அவன் இல்லை. அதைத்தான் அவனது தளை என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றார் சல்யர். “அவன் சொற்கொடை அளித்திருக்கிறான். ஆகவே இக்களத்தில் பாண்டவர் ஐவரில் எவரையும் அவன் கொல்லப்போவதில்லை. ஆனால் அவர்கள் தன்னை கொல்லக்கூடாதென்று ஒரு சொல்லை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அவனால் தன்னலத்துடன் எண்ணவும் முடியாது. ஏனெனில் அவன் எங்கும் தலை தாழ்த்தமாட்டான். எவரிடமும் எதையும் பெற்றுக்கொள்ள மாட்டான்.”

“அந்த வெற்றாணவத்தால் தன் விரிநெஞ்சுடன் சென்று அவர்களின் அம்புகளுக்கு முன் நிற்கப் போகிறான். இக்களத்தில் அவன் விழுவான். ஐயமே இல்லை” என்று சல்யர் சொன்னபோது அவர் குரல் பிறிதொன்றாக ஆகிவிட்டதை துச்சாதனன் உணர்ந்தான். அதுவரை இல்லாத புதிய ஒருவர் அங்கே தோன்றியதுபோல. பொருளுள்ளதும் அல்லாததுமான பலநூறு சொற்களின் திரைக்கு அப்பாலிருந்து அவர் தோன்றினார். தனித்தவராக, களைத்தவராக, கூசிச்சுருங்கியவராக. துச்சாதனன் “நான் என்ன செய்ய வேண்டும், சல்யரே?” என்றான். “சென்று கேள். அவனிடமே நேரில் கேள். அவன் எவருக்கு என்னென்ன சொற்களை அளித்திருக்கிறான் என்று உசாவு. சென்று உன் தமையனிடம் அதை சொல். இக்களத்தில் அவன் எவ்வண்ணமெல்லாம் சிறைப்பட்டிருக்கிறான் என்று அவனுக்கும் புரியும். அதன் பின்னர் உங்கள் சூழ்கைகளை வகுத்துக்கொள்க!” என்றார்.

“எனக்கு அரசாணைகளை மீறும் வழக்கமில்லை. தலைமை என்றால் என்னவென்று அறிந்தவன் நான். மேலும் அரசர் வென்று முடிசூடவேண்டுமென்பதற்காகவே குருதிச்சுற்றத்தை பகைத்து இங்கே வந்தேன். எனக்குத் தேவை அங்கனின் கடன்கள் என்ன என்னும் விளக்கம் மட்டுமே… இன்னும் சற்றுபொழுதே எஞ்சியிருக்கிறது. அச்செய்தியுடன் வந்து என்னைப் பார்” என்றார் சல்யர். “உண்மையில் எந்தக் கடனாக இருந்தாலும் அது இடரில்லை. அதற்கேற்ப என் சூழ்கைகளை அமைத்துக்கொள்வேன். அதற்காக மட்டுமே கேட்கிறேன். சல்யர் தேரோட்டினார், அவர் ஆற்றிய பிழையால் அங்கன் களம்பட்டான் என்னும் இழிசொல் எனக்கு அமையலாகாது. நான் எண்ணுவது அதை மட்டுமே.”

அக்குரலினூடாக அவர் மீண்டும் தன்னை மறைத்துக்கொண்டார். துச்சாதனன் “ஆம், நான் அவரிடமே கேட்கிறேன். பிற எவரிடமும் இதைப்பற்றி பேசுவதற்கு முன் அவரிடமே நான் பேசுவதே உகந்தது” என்று எழுந்து கொண்டான். சல்யர் எழுந்து வந்து “அவன் படைமுகம் செல்ல வேண்டியதில்லை. அவன் படைத்தலைமை கொண்டால் இப்படை வெல்வது அரிது. நான் படைத்தலைமை கொள்கிறேன். படைகளை நடத்தும் பொறுப்பு எனக்கு புதிதல்ல. பால்ஹிகக் கூட்டமைப்பின் பெரும்படைத்தளபதியாக பணியாற்றியவன் நான். என் வாழ்நாளில் நூறு களங்களுக்கு மேல் கண்டவன். என் உடலிலிருக்கும் புண்களைக்கொண்டு நீ அதை உணரமுடியும். இப்போரை நான் நிகழ்த்துகிறேன். வென்று மணிமுடியை ஈட்டி துரியோதனனுக்கு அளிக்கிறேன். மலைமக்களின் வீரமும் கொடையும் என்னவென்று பாரதவர்ஷம் அறியட்டும்” என்றார்.

துச்சாதனன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். சல்யர் மீண்டும் அனைத்துத் திரைகளுக்கும் அப்பால் சென்றுவிட்டிருந்தார். அவன் அவரிடம் எழுந்த இன்னொருவரை நினைத்துக்கொண்டிருந்தான். “நான் விடைகொள்கிறேன்” என்றான். “செல்க, நான் பேசியதெல்லாம் அஸ்தினபுரியின் நலன் பொருட்டே! நான் இப்படையுடன் இருப்பது வரை இதன் வெற்றியே என் இலக்கு” என்றார் சல்யர். ஒரு மின் என அவரிடம் அந்த மறைந்திருப்பவர் தோன்றினார். “ஒருபோதும் ஒருவர் தோற்கமுடியாத இடமொன்று உண்டு” என்றார். அது என்ன சொல் என துச்சாதனன் திகைத்தான். அவர் எவரிடம் அதை சொன்னார். “என்ன?” என்று அவன் கேட்டான். “செல்க!” என்று துச்சாதனனின் தோள்களில் தட்டி சல்யர் புன்னகைத்தார். மீண்டும் ஒருமுறை அவரை கூர்ந்து நோக்கியபின் துச்சாதனன் வெளிவந்து தன் புரவியை நோக்கி நடந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

பிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது

$
0
0

 

ஈராக் போர் அனுபவங்கள் ஷாகுல் ஹமீது 

 

ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ,

 

 

நேற்று அமெரிக்காவின் பழைய தலைநகரமான பிலேடெல்பியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அங்குள்ள American revolution museum சென்றிருந்தேன்.அங்கு நான்கு நிமிடம் ஓடும் பிரிட்ஷ் – அமெரிக்க படைகளுக்கு நடந்த போர்காட்சி ஒன்று திரையிடப்பட்டது.அது எனக்கு குருசேத்ரா போர்க்காட்சிகளை  நினைவுபடுத்தியது .குறிப்பாக மாலையில் போர் முடிந்தபின் இறந்த வீரர்களின் உடல்களை அகற்றும் காட்சி .

 

இப்போதெல்லாம் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு பார்பதற்கு என்ன இருக்கிறது என முன்பே தெரிந்துகொண்டு அவற்றை தேடிச்செல்லவே விரும்புகிறேன் .முன்பெல்லாம் கப்பலில் இருந்து வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது சக பணியாளர்களுடன் அவர்கள் செல்லும் வணிக வளாகங்களுக்கு தேவையும் ,விருப்பமும் இன்றி சென்று வருவேன் .நீங்கள் வெண்முரசு எழுத தொடங்கிய இரண்டாயிரத்தி பதினான்காம் ஆண்டு ஜனவரியில் தான் உங்கள் தளத்திற்கு வந்தடைந்தேன் .அதன் பின் தான் என் கண்களே திறந்துள்ளது .

 

முன்பு செம்மறிஆட்டு கூட்டத்திலிருக்கும் ஒரு ஆடு போலதான் நானும் இருந்திருக்கிறேன் .இரண்டு மாதத்திற்கு முன் பிலேடெல்பியா வரும் முன் நம் குழும நண்பர் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் எழுதிய ஊரை தெரிஞ்சிகிட்டேன் கட்டுரைகளில் ஒன்றான பிலேதேல்பியா பற்றிய கட்டுரையை வாங்கி படித்துவிட்டு,மிக எளிதாக அந்த இடங்களை பார்த்துவந்தேன்.நேற்றும் என்னுடன் கப்பலிலிருந்து ஆறுபேர் வெளியே வந்தனர் .எல்லோரும் வழக்கம்போல் வணிக வளாகங்களில் நுழைந்துவிட நான் மட்டும் தன்னந்தனியாக  பிலேடெல்பியா சென்று வந்தேன்.

 

சௌந்தர் ராஜன் எழுதிய கட்டுரை இணைத்துள்ளேன்.

 

https://m.facebook.com/story.php?story_fbid=977813972411709&id=193844824141965

 

ஷாகுல் ஹமீது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மண்ணும் மனிதரும் பற்றி…

$
0
0

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

முன்பெல்லாம் ஊருக்கு செல்லும்போது அப்பத்தாக்களும் அம்மாயிகளும் மேலாடை தனியே அணியாது ஒற்றை வெள்ளைப் புடவையை முழுதாய் சுற்றியபடி வறுமுலை தொங்க அமர்ந்து கையை கண்களுக்கு மேலாக வைத்து சற்று கூர்ந்து நோக்கி “ஏய்,பொந்துப்புளி சாலி மகனா,எப்படிப்பா இருக்க…அம்மா,அப்பால்லாம் நல்லா இருக்காங்களா..”என ஆரம்பித்து தலையைக் கோதி கைகளை தடவியபடி பத்து நிமிடத்திற்கு பேசிக் கொண்டிருப்பார்கள்…
சிவராம காரந்தின் “மண்ணும் மனிதரும்”நூலின் தமிழ் மொழி பெயர்ப்பை படித்தபோது என் ஆயாக்கள் தங்களின் கதையை ஊரின் கதையோடு சேர்த்துச் சொல்வதுபோல அவ்வளவு அணுக்கமானதாக இருந்தது.
ஆசிரியர் ஜெயமோகன் இந்நூலைப் பற்றி   குறிப்பிடும்போது இது மூன்று பெண்களின் கதை என குறிப்பிட்டிருந்தார்.பெண்கள் மூலமாக ஊரின் நாட்டின் வரலாற்றையும் இணைத்துச் சொல்கிறது.
ஆண்களை பெண்கள் பெரிதாக பொருட்படுத்தாமல் அவர்களால் பாதிப்படையாமல் தங்கள் வாழ்விற்குள் ஆண்களால் நுழையமுடியாது என்பதை உணர்ந்தபடி வாழ்ந்து கடக்கிறார்கள்.
மூன்று தலைமுறையின் வாழ்வைச் சொல்லும் இந்நாவல் எதைச் சொல்ல விழைகிறது,அல்லது காட்டுகிறது என நோக்கினால்
பெண்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது ,ஆண்களின் ஒத்துழைப்பு இல்லாதபோதும் என்பதைத்தான்.

 

ஆண்கள் நல்லவர்களாக இருந்தாலும் தீய நடத்தை கொண்டவர்களாயினும் பெண்கள் சுகப்படுவதில்லை.அதற்காக ஆண்களை நோவதுமில்லை.பெண்களின் உலகம் தனித்தது,அதனை ஆண்களால் உணரவோ உள் நுழையவோ முடியாது.

இந்நாவலை முடித்தவுடன் எனக்குத் தோன்றியது,தற்போது சில எழுத்தாளர்களின்  இருண்மையை விரிவாகக் கூறுவதன் மூலமாக ஒளியை உணரச்செய்யும் எழுத்தாய் இல்லாமல் இரு இராமன்களின் சிறப்பான செயல்களை விவரித்துக் கூறி லட்சுமணனின் தீய நடத்தைகளை குறிப்பாக உணர்த்தியபடி கடக்கும் பெரியவர்களின் கூறல் முறை எதற்கெல்லாம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எதனை தவிர்க்கவேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
ஆண்கள் இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் நிறைவின்மையுடனேயே அலைவார்கள் என்பதுடன் பெண்கள் சிறு இல்லத்திலேயே முழு நிறைவடைவார்கள் என்பதையும் சிறப்பாக காட்டுகிறது.
கதையை விட்டு நம்மை வெளியில் விடாமல் நம்மை கட்டிவைப்பது எந்த இடத்திலும் ஆசிரியரின் கருத்தென்றோ கூற்றென்றோ எதையும் உரைக்காமல் சற்று உயரத்தில் நின்று கீழே நடக்கும் வாழ்வை நோக்குவது போன்று கூறப்பட்ட முறைதான் .ஆசிரியர்  வாழ்வைப்பற்றி உணர்ந்தவற்றை நம்மையும் உணரச்செய்கிறார் தன் நடையின் மூலம்.
தமிழில் எழுதப்படும் பல நாவல்களே வாசிக்க முடியாமல் வாசித்தாலும் புரியக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்படும் இந்நாட்களில் இந்த  நாவல் எந்த இடத்திலுமே  மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றாதவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.   இவ்வளவு பெரிய நூலை  மொழிபெயர்த்த தி.ப.சித்தலிங்கையா நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர் .
மனிதர்கள் இளமையில் பிஞ்சுக்காய்களென துவர்ப்போடும் சற்று வளர்ந்தபின் புளிப்பாகவும் பின் கனியும்போது இனிமையாகவும்  காலவோட்டத்தில் மாறி   வாழ்வில் என்னயிருக்கிறது, அன்பாக இருந்துவிட்டு போகலாமே என்ற எண்ணத்தை வந்தடைவதைக்  காட்டும் நாவல், பெண்கள் அதற்கு மேலும் வாழ்வின் வெம்மையில் வாடி சினம்,வெறுப்பெல்லாம் ஆவியாகிவிட உலர் பழங்களாய் சற்று கெட்டிபட்ட தோலுடன் நின்று நிதானமாக உண்பதற்கான பதத்தை அடைகிறார்கள்.
மக்களையும் மண்ணையும் காட்டி வாழ்வின் பொருளை உணரவைக்கிறது ,பல ஆண்டுகளுக்குப் பின்னும்  உணவாக பயன்படும் உலர் பழங்கள் போல ஆன இந்நாவல்.அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு வணக்கங்கள்..

 

கா.சிவா

 

மண்ணும் மனிதரும் வாங்க

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கங்கைக்கான உயிர்ப்போர் –கடிதங்கள்

$
0
0

 

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

அன்புள்ள ஜெ,

 

தங்கள் கங்கைக்காக ஓர் உயிர்ப்போர், கட்டுரையை தொடர்ந்து அதற்கான மனு மற்றும் அது தொடர்பான செய்திகளை இணையத்தில் தேடிய போது எண்ண முடியாத அளவு மனுக்களும், அதிரவைக்கும் செய்திகளுமே கண்ணில் பட்டன, இதில் கொடூரமான ஒரு செய்தி என்னவென்றால் அதன் 70 மையங்களில் 5 மட்டுமே குடிப்பதற்கும், 7 மட்டுமே குளிப்பதற்கும் சாதியமானது மற்ற இடங்களில் குளிப்பது கூட நஞ்சை விளைவிப்பன,

 

https://www.downtoearth.org.in/coverage/water/namami-gange-5-reasons-why-ganga-will-not-be-clean-by-2020-61891

 

அதன் மனுக்களை உள்ளே சென்று வாசித்த போது மாத்ரி சதன் அமைப்பிற்கு ஆதாரவாக சுவாமி கியான் சுவரூப் சனானந் பாரத பிரதமருக்கு எழுதிய கடிதங்களும், அவர் உண்ணாவிரதத்தை முறிக்க செய்த அராஜகங்களுமே கண்ணில் பட்டன, உத்ராகண்ட் மாநிலத்தில் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பன்னிரெண்டாயிரம் கோடி செலவாகியுள்ளது மறுசீரமைப்பு செய்ய, இதற்கு காரணமாக சொல்லப்பட்டது அங்கே கங்கையில் ஏற்படுத்திய ஹைட்ரா-எலக்டிரிக் பிளாண்ட். இந்த பிளாண்ட்டை கேட்ட ஆகிய செலவு ஒன்பதாயிரம் கோடி.  நாட்டின் மின் வளர்ச்சி முக்கியமே ஆனால் அழிவை சந்திக்கும் வளர்ச்சிகள் சில பல லாபங்களுக்காக இங்கே அரங்கேறி கொண்டே இருக்கின்றன இங்கே ஒரு அழிவில் ஏற்பட்ட செலவு இந்த பிளாண்ட்டை உருவாக்க தேவையான செலவை விட பன்மடங்கு அதிகம் இன்னும் யாரும் இதனை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, கங்கை தன்னை இயற்கையாகவே சுத்திகரிக்கும் தன்மை கொண்டது ஆனால் அதன் கனிம வளங்கள்  தெகிரி அணையிலேயே தேக்கிவைக்கப்படுவதால் அதன் ஓட்டத்தில் சுத்திகரிக்கும் தன்மை இழக்கப்படுகிறது. மேலும் கங்கை மண்ணின் வளத்தை அழிக்கவும், காடுகளை அழிக்கவுமே ஒவ்வொரு திட்டங்களாக நடந்தவண்ணம் இருந்திருக்கின்றன. சுவாமி சனானந்தின் மொத்த 111 உண்ணாவிரத்ததையும் காட்சியக படுத்தப்படுள்ளது அதனுள் நடந்த கேவலங்களும் வெளிப்படையாகவே உள்ளன சுட்டி கீழே, ஆனால் இதற்கெதிராக எந்த எதிர்ப்பும் நிகழவில்லை என்பது கேவலத்திலும் கேவலம்,

 

https://www.youtube.com/watch?v=sdcTRJrqsIc&feature=youtu.be

 

இதற்கு எதிராக படித்தும் நாம் எதுவும் செய்யாமல் தானிருக்கிறோம், இதற்கு அயறாத வாசிப்பும், பல கட்ட ஆராய்ச்சிகளும் தேவையில்லை.மேலுள்ள கானொலியை பார்த்தாலே நமக்கு புரியும். மாத்ரி சதன் அமைப்பிலிருந்தும் இன்னும் பலரும் இதற்காக உண்ணாவிரதமிருந்து தங்கள் உயிர் நீத்துள்ளனர்.

 

இது வெறும் யாரோ ஒருவர் தன் முன் முடிவுகளாலோ, தான் கொண்டுள்ள நிலைப்பாட்டை சொல்லவோ நடந்துவரும் போராட்டமில்லை சிறந்த அறிவியலாளர்களால் பல தரப்பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு கிட்டதட்ட நூறு பக்க அளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு பொது தளத்தில் மக்கள் ஆதரவுக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

https://peoplegangaact.wordpress.com/

 

கடந்த மூன்று வருடங்களாக மனுக்கள் மட்டுமே அதிகரித்த வண்ணமுள்ளன, எல்லா மனுக்களும் ஐம்பது பேர், நூறு பேர் அதிகமாக ஐநூறு பேர் வரை மட்டுமே ஆதரவு தரப்பட்டு இப்போது நிராதரவான நிலையில் உள்ளது. இவையில் முக்கியமான மனு ஒன்றினை கண்டடைந்து அதில் என் பதிவை இட்டுவிட்டேன்.

 

https://www.change.org/p/pmo-people-s-ganga-act 

 

இதுவும் நூறுடன் ஒன்றாக போவதும், மாற்றத்தை ஏற்படுத்தபோவதும் எல்லோர் கையிலும் உள்ளது. குறைந்தது ஒரு லட்சம் ஆதரவு வந்தால் மட்டுமே இது ஒர் இயக்கமாக மாறும், இங்கே லட்சமென்பது தமிழக மக்கள் தொகையில் 0.1 சதவீதம் மட்டுமே இந்திய அளவில் நோக்கினால் 0.01 சதவீகிதம் கூட வராது. ஆராய்ந்து நோக்கும் போது 0.01 சதவீதம் ஒத்துழைப்பு இருந்தாலே இங்கே மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, அந்த அளவு கூட ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் தான் எல்லா போராட்டங்களும் தோல்வியில் முடிந்த வண்ணமுள்ளன, எல்லா மனுக்களும் குப்பைகளுக்கு சென்ற வண்ணமுள்ளன. இங்கே ஒரு தரப்பை எதிர்கிறோமென்றால் அது பொது திரளாக நடந்தால் மட்டுமே முடியும் ஒன்று, இரண்டு பேர் உண்ணாவிரதத்தாலள்ள. அது கங்கை தூய்மையென்பது சாதாரண விஷயமல்ல மேலுள்ள அறிக்கையை படித்தால் அதிலிள்ளதை வாசித்தால் புரியும். இதற்காக லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டால் கூட தீர்வு எட்டபடாது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனாக இந்த மனுவில் எனது பெயரை இணைத்துள்ளேன். இப்போதும் காலம் தாமதித்துவிட வில்லை, இனி முயற்சித்தாலும் இந்த போராட்டத்திற்கான ஒரு பொருளை ஏற்படுத்த முடியும். அதற்கான ஒரு புள்ளி வாய்ப்பை நான் தொடங்கிவிட்டேன் வெற்றி பெற செய்வது அனைவரின் கையிலுமுள்ளது.

 

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி

 

அன்புள்ள ஜெ

மாத்ரி சதனின் சாதுக்கள் கங்கையைக் காப்பதற்காக நடத்தும் உண்ணாநோன்பு மற்றும் உயிர்நீத்தலைச் சுட்டி, அதுகுறித்து எதிர்வினைகள் வரவில்லை என எழுதி  இருந்தீர்கள்

இது எதிர்பதில் தான். வினைத்திட்பம் இல்லாதவனிடமிருந்து

நீங்கள் வெண்முரசில் பல்வேறு இடங்களில் பரவக் காண்பித்துள்ளது போல பொது மானுடனின் சாமானிய தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை ஒதுக்கிச் செல்வதே அவனது தன்முனைப்பை அழுகாமல் காக்கும் வழி.

நான் ஒரு பொது சாமானியன். எனது சுயநலம் கள்ளத்தனமானது. போலிக்குடிமகனாக வேடமிட்டு, பிறர் பிழைகளை பெரிதுபடுத்தி என்னைப் புனிதப் படுத்தி அதிகார வர்க்கத்திற்கு இடர் தராத கருத்துச் சங்கிலிகளை சுழற்றி, எனது அழுக்குப் பொதியைக் காப்பாற்றிக் கொள்ள வைக்கிறது

அந்த அழுகும் சுயநலம், பல்வேறு தர்க்கக் கேள்விகளைக் கண்டடைகிறது 1 தற்கொலை செய்து கொள்ள எவருக்கும் உரிமையில்லை. உண்ணாநோன்பு ஒரு நிலையில் சமரசம் காண வேண்டும்.

2 துறவிகள் தற்கொலைசெய்து கொள்வது சமூகத்திற்கு தீராத பழியை ஏற்படுத்தும். அதன்மூலம் அந்தப் பாவத்திற்கு அவர்கள் ஆளாகலாம்

3 எவ்வளவோ பிரச்னைகள் உள்ள நாட்டில் இதுவும் ஒரு பிரச்னை

4 தொடர் அழுத்தம் மூலம் இயக்கமாக உருவாக்கித் தான் இது போன்ற செயல்களை செய்யமுடியும். அவசரம் கூடாது

5 தீவிர துறவு மனப்பான்மை என்பது ஒரு நிலையில் தன்வதையாக மாறுகிறது. இது உள்நோக்கித் திரும்பிய லிபிடோவாக, சமுதாயத்தின் மீதான எதிர்மறை விமர்சனமாக பரிணமிக்கிறது

6 அந்த தொழில் முனைவுகள் பெருமுதலாளிகளுக்கு துணைபோகலாம். ஆயினும் அதனால் பயன் பெற்ற சாமானியர்களும் இருக்கலாம்

 

இதுபோன்ற கருத்துக் கண்டுபிடிப்புகள் மூலம் என் மனச் சான்றை சரிக்கட்டி விட்டு அலுவலகம் சென்று ‘கடமை’யை ச் செய்யும் குடியாவேன்.

சிறு வயதில் மழையில் நனைந்தால் அம்மா திட்டும்; பள்ளி செல்கையில் விளையாடினால் டீச்சர் பேசும்; அதிகம் கேள்விகேட்டால் தலைமை ஆசிரியர் பிரம்பால் கவனிப்பார். எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டை அச்சம் தரும். ரத்தம், வெள்ளம், மழை, இரயில், யானை எதைப்பார்த்தாலும் நின்று பார்க்க, “நமக்கேன் வம்பு; வீட்டுக்குப் போகணும் ” அணுகுமுறை . அலுவலகத்தில் மேலதிகாரிக்கு கேள்வியின்றி அடிபணிதல். ஓய்வு பெற்றதும் அனைவருக்கும் அடிபணிதல். இப்படி உண்டுறங்கி இடர்செய்து சாவதே எனது போக்கு. நீங்கள் மனசாட்சியைக் கிளறுகிறீர்கள். கங்கையைக் கொல்வதையும் கங்கையிலேயே கருமஞ்செய்து கரைத்து மகிழ்வேன்.

ஊடகத்தைப் பொறுத்தவரை , மீம் உருவாக்கும் பொதுக்குடிமகன் அளவிற்குக்கூட விவரமான செய்திகள் வெளியாவதில்லை. அசல்தன்மை காணக்கிடைப்பதில்லை.  ஒரு சான்று.  ஒரே நாளில் முதல்பக்கச் செய்தி தமிழகம் தேர்தல் கால பணம், நகை கைப்பற்றலில் முதலிடம் பெற்றது. கீழே உள்ள செய்தி கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் நகை திரும்ப ஒப்படைக்கப் பட்டது. திரும்ப ஒப்படைக்கப்படக்கூடிய பணம் / நகைகள் மொத்த கைப்பற்றுத் தொகையிலிருந்து கழிக்கப்படவேண்டும் என்றோ, எதற்காக முதலில் அவை கைப்பற்றப்பட்டன என்றோ தினசரிகள் அலசியதாகத் தெரியவில்லை. புல்நுனியின் மீச்சிறு துளியை நக்கும் என்போன்றவனுக்கு இந்தச் செய்தி தான் அறிவுப் பெட்டகம்.

ஒரு மாதமாக வெப்பம் தகித்த கோவையில் புலன்களெல்லாம் எரிந்தன. உதிரமே சுட்டது. மரங்கள் அக்னிதவம் செய்தன. மண் கொதித்தது. காற்று கனன்றது. இன்று முகில் திரண்டு கருணை வானம் கிழிந்து சுரந்தது. பேரருளின் பொழிவு. முழுதாய் நனைந்து பைக்கில் பயணித்து குளிர்ந்தேன். மாத்ரி சதன் மகான்கள் போன்றவர்கள் எங்கோ வானில்  நின்று அளிபொழிகிறார்கள். என் போன்ற சாமானியர்கள் அந்தக் குளிர்நீரில் அழுது கொண்டே குளிக்கமட்டுமே இயன்றவர்கள். ஏனெனில் நான் ஒரு கலகமானிடப் பூச்சி

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காலையில் துயில்பவன்

$
0
0

 

Tinnitus

அன்புள்ள  ஜெயமோகனுக்கு,

 

எழுதுவது என்னை நான் முழுவதுமாக வெளிப்படுத்த உதவும் என்று நம்புகிறேன். எனது உடல் சார்ந்த போராட்டங்களையும் மனம் சார்ந்த போராட்டங்களையும் முழுவதுமாக வெளிப்படுத்துவதில் எனக்கு இது நாள் வரை தயக்கம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால் இப்போது சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நான் பகிர்ந்து கொள்ளப் போவது ஒரு அறிவியக்கத்திடம் என்பதனால் ஏற்பட்ட நம்பிக்கை இது.

 

பெயரை சொல்ல தயக்கமாக இருக்கிறது. சில முறை இலக்கியக் கூட்டங்ககளுக்கு வந்து என் பெயரையும் ஊரையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது சொன்னால் கண்டுகொள்வீர்களோ என்ற தயக்கம். எனது பெயரை “காலையில் துயில்பவன்” என்று வைத்துக் கொள்வோம்.

 

சிறு வயது முதலே எனக்கு தூக்கம் மிகவும் கம்மி.  இரவில் ஆறு மணிநேரம் தூங்கி விட்டால் அது சாதனை. அந்த சாதனையை மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து தடவை செய்வேன். ஒவ்வொரு முறை காலையில் விழிக்கும் போதும் ஆழ்ந்த அயர்ச்சி உடலின் ஒவ்வொரு பாகத்திலும் பரவியிருக்கும். மற்ற பாகங்களில் எழும் அயர்ச்சியை ஆடைகளால் மூடிக்கொண்டு பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்வேன். ஆனால் முகத்தில் தெரியும் அயர்ச்சியை மூட வழியில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் யார் என்னை பார்த்தாலும் என் முகத்திலும் கண்ணிலும் இருக்கும் தூக்கமின்மையைத் தான் பார்க்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். ஒரு நாளுக்கு பத்து முறைக்கு மேல் சோப்பு போட்டு கழுவி முகத்தை பொலிவாக்க முயல்வேன். ஆனால் முகம் கழுவிய அடுத்த ஐந்து நிமிடங்களில் பழைய நிலைக்கு மாறியிருக்கும். எப்போதும் முகத்துக்கும் பூசும் பவுடரை கர்ச்சீப்பில் கொட்டி வைத்திருப்பேன்.

 

எனக்கு பெரும்பாலும் பசிக்கவே செய்யாது. என் உடலை கண்ணாடியில் பார்ப்பேன். எனக்கே அருவருப்பாக இருக்கும். அவ்வளவு ஒல்லியாக இருப்பேன். உணவு வேளைகளில் உணவை எடுத்து வாயில் போட்டு அடைத்துக்கொள்வேன். நிறைய உணவை வாயில் போட்டு அடைத்துக்கொண்டால் தான் எடை கூட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். எப்போதாவுது அரிதாக பசிக்கும்.

 

பள்ளியின் இறுதி ஆண்டுகளில் பத்து மணிக்கு படுக்கைக்கு சென்று படுத்தால், விடியகற்காலை மூன்று மணிவரை தூங்க முயற்சி செய்து தூங்காமல் புரண்டுகொண்டிருப்பேன். மூன்று மணிக்கு மேல் சிறிது நேரம் தூங்குவேன். மறுபடியும் காலை எட்டு மணிக்கு பள்ளி. ஏழு மணிக்கு எந்திரிக்க வேண்டும். பெரும் பாடு பட்டு எந்திரிப்பேன். உடல் என்னை மீண்டும் படுத்துகொள் என்று கெஞ்சும். ஆனால் தினமும் அம்மாவும் அப்பாவும் சொல்வது நினைவுக்கு வரும் “தம்பி நம்ம unreserved category டா. எப்டியாவுது படிச்சு நல்ல மார்க் எடுத்தா தான் வேலையே கிடைக்கும். எங்களால பணம் லாம் கட்டி காலேஜ் ல சேர்க்க முடியாது பாரு. உன் தம்பிக்கு வேற Autism இருக்கு. நீயாவுது நல்லா வந்தா தான் எங்களுக்கு சந்தோஷமே”.

 

அப்போது நான் தினமும் தூக்கம் இல்லாமல் படுக்கையில் சராசரியாக நான்கு மணிநேரம் புரண்டுகொண்டிருப்பேன். சில நாட்கள் ஐந்து மணிநேரம். தூங்காமல் படுத்திருக்கும் நேரம் என்ன நடந்திருக்கிறது என்று இப்போது யோசித்து பார்த்தால், எவ்வளவு முயன்றும் தூங்க முடியாமையால் தோன்றும் விரக்தி ஒரு பக்கம் . மறு பக்கம் என் மீதி ஆற்றலை பயன்படுத்தி கற்பனை உலகில் மிதந்துகொண்டிருப்பேன். அதில் காமத்திற்கும் பங்கு உண்டு. எதையாவுது கற்பனை செய்து கொண்டே இருந்தால் எப்படியாவுது தூக்கம் வந்துவிடும் என்று நம்பியிருந்தேன்.

 

பதினொன்றாம் வகுப்பு வரை பள்ளியிலும் வீட்டிலும் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்காக பல கட்டங்களில் அவமானபடுத்தப்பட்டிருக்கிறேன். பாதி நேரங்களில் இதயம்  படபடவென்று வேகமாக அடித்துக்கொண்டிருக்கும். அவமானங்கள் ஏதும் இல்லாத தினங்களிலும் இதயம் அதே வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கும். நான் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பயப்படுவதால் தான் இப்படி நடக்கிறது என்று நினைத்துக்கொள்வேன்.

 

பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கிய போது இரவு பத்து மணிக்கு படுக்கைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டேன். இரண்டு அல்லது மூன்று மணி வரை தூங்க முயற்சி செய்யாமல் விழித்திருக்க தொடங்கினேன். அப்படி விழித்திருப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. சொல்லப்போனால் இது நாள் வரை இல்லாத ஒரு விழிப்புநிலையை இரவின் அந்நேரங்களில் அடைந்தேன். இந்த விழிப்புநிலையை படிப்பதற்கு(அதாவுது மனப்பாடம் செய்வதற்கு) பயன்படுத்திக்கொண்டேன். வீட்டிலும் பள்ளியிலும் என் நிலை சற்று உயர்ந்தது. இறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து மருத்துவக்கல்லூரியில் நுழைந்தேன். கேட்பதற்க்கு எளிதாகத் தோன்றலாம். தூக்கம் தானே இல்லை வேறு என்ன பிரச்சனை என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் நடந்துகொண்டிருப்பது என்ன என்று எனக்கு புரிவதற்குள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து விட்டேன்.

 

கல்லூரியில் நுழைந்த பிறகு தூக்கம் மேலும் குறைந்து விட்டது. மாதத்தில் பாதி நாட்கள் துயில் என்பது முழுவதுமாக இல்லாமல் ஆகியது. பல நாட்கள் தொடர்ந்து தூங்காமல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன்.  ஒரு முறை எனது அருகில் வந்த கல்லூரி நண்பன் ஒருவன் என் கண்களின் அருகில் வரை சென்று உற்று நோக்கிவிட்டு “ப்பா ..என்ன டா இப்டி கன்றாவியா இருக்கு?” என்று கேட்டு விட்டு நகர்ந்தான்.

 

கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் நிலைமை இன்னும் மோசமானது. தலை பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. அடர்த்தியான முதுகு வலி எடுக்க தொடங்கியது. இதயத்தின் வேகத்துடிப்பு நிமிடத்திற்கு 100 க்கு மேல் எப்பவும் இருந்துக்கொண்டிருந்தது. மூச்சு பலமாக வாங்கத் தொடங்கியது. உடலுக்குள் உள்ள அணைத்து பாகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழுகிக்கொண்டிருப்பது போல் இருந்தது. நானே எனது உடலை மிகவும் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு தினமும் சென்று வந்தேன்.

 

மருத்துவ பேராசிரியர்களிடம் தொடர்ந்து ஆலோசனை பெற்று வந்தேன். எல்லாம் சரியாகத் தான் உள்ளது, நீ தான் ஏதோ போட்டு குழப்பிக் கொள்கிறாய் என்றார்கள். தலைவலிக்கு CT PNS, முதுகுவலிக்கு MRI, மூச்சு வாங்குவதற்கு CHEST X- RAY , நெஞ்சு படபப்பிற்க்கு ECHO என்று எல்லாம் எடுத்து பார்த்தார்கள். நானும் மருத்துவம் படித்துக் கொண்டிருந்ததால் எல்லா Test Report களையும் ஆவலுடன் வாங்கி பார்ப்பேன். ஏதாவுது ஒரு report இல் TUMOR(cancer) என்று வந்துவிடாதா என்ற ஏக்கம். அவ்வளவு உடல் வலியை தினமும் சுமந்து கொண்டு கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தேன். ஆனால் எல்லா ரிப்போர்ட்டும் clean ஆக வரும். ஒவ்வொருமுறை ரிப்போர்ட் normal ஆக வரும் போதும் மனம் உடைந்து விடுவேன். இன்னும் எவ்வளவு நாள் இதே உடலுடன் வலியுடன் போராடி வாழ்வது என்று புரியாமல்.

 

நண்பர்கள் மற்ற மாணவர்களின் கேலிக்கு பயந்து பக்கத்து மருத்துவக்கல்லூரிக்கு சென்று Psychiatrist ஐ பார்த்தேன். தூக்கத்தில் தான் பிரச்சனை, அதனால் தான் உடலின் அணைத்து சிக்கல்களும் என்ற கணிப்பு எனக்கு இருந்தது. ஆனால் அவர்கள்(Psychiatrist + Psychologist combo) எனது சிறுவயதை ஆராய முற்பட்டார்கள். சிறுவயதில் ஏற்பட்ட Traumatic incidents என் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்கள். Cognitive Behavioral Therpay ஐ தொடங்கினார்கள்.  முதலில் ஒரு வாரம் தூங்குவதற்கு தூக்கமாத்திரையை  பரிந்துரைத்தார்கள். பிறகு “காலையில் சீக்கிரம் எழுந்து  உடற்பயிற்சி செய், இரவில் ஒன்பது மணிக்கு தினமும் தூங்கச்செல்” போன்ற கட்டளைகளை இட்டார்கள்.

 

கல்லூரியின் நான்காம் வருடம் அது. ஒரு மாதத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் தூக்கம் கிடைக்கும்.  மீதி நாட்கள் கட்டிலுக்கும் எனக்கும் போர் நடக்கும். அனேகமாக நான் முழுவதுமாக தோற்று அடுத்த நாளை தொடர்வேன். தலைவலியும் முதுகுவலியும் மூச்சுவாங்குவதும் நெஞ்சுபடபடப்பும் ஜோராக இருக்கும். ஒரு Zombie அங்கும் இங்கும் நடப்பதை போல் கல்லூரிக்குள் சுற்றுவேன். இன்னும் நான் எப்படி உயிரோடிருக்கிறேன் என்ற வியப்பு. கல்லூரியின் இறுதி ஆண்டு ஆதலால் எனக்கு எல்லா மருந்துகளை பற்றியும் ஓரளவு தெரிந்துவிட்டது. ஆனால் என் பிரச்சனை தீர்ந்த பாடில்லை.வழக்கமாக பார்க்கும் உளவியலாளரிடம் எனக்கு “Melatonin” பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதெல்லாம் இன்னும் இந்தியாவுக்கு வரவே இல்லை, நீ எப்போதும் எடுத்துக்கொள்ளும் “Fluoxetine(Prozac)” e எடுத்துக் கொள் என்றார்.

 

மருத்துவக்கல்லூரி நூலகத்திலும் இணையத்திலும் தூக்கத்தை பற்றி என்னால் முடிந்த வரை ஆராய்ந்து கொண்டிருந்தேன். தூக்கத்தை பற்றிய மருத்துவ புத்தகங்களிலும் தூக்க மருத்துவம் சார்ந்த இணைய பக்கங்களிலும் சில தூக்கம் சார்ந்த நோய்கள்(Sleep apnea, Narcolepsy) பற்றி மட்டும் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவை எதுவும் இல்லை என்று தெளிவாகவே தெரிந்தது.மேலும் மேலும் ஆராய்ச்சி செய்வதை தவிற வேறு வழி இல்லை.

 

எனது தூக்கத்திலும் உடலிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏதாவுது accident ல் இறந்துவிட்டால் இந்த வலியெல்லாம் இத்துடன் முடிந்துவிடுமே என்ற எண்ணம் தோன்றும். தற்கொலையை பற்றி தினமும் எண்ணத்தொடங்கினேன். உடல்வலியையும் மூச்சுவாங்குவததையும் மார்பில் வேகமாக அறைந்து கொண்டிருக்கும் இதயத்தையும் மீறி நான் சிந்திப்பதே பெரும் பாடாக இருந்தது.

 

தினசரி மனப்போரட்டங்களுடனும் உடல்வலியுடனும் மருத்துவப்படிப்பை படித்து முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். சில மாதங்கள் சென்றன. Recent Sleep journals எல்லாவற்றையும் புரட்டி முடித்தேன். அப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன. வலியை தினமும் அனுபவித்துக்கொண்டும் பெற்றோர்களிடம் புலம்பிக்கொண்டும் இருந்தேன். ஆனால் மாதத்தில் சில நாட்கள் நல்ல தூக்கம் கிடைக்கும். அப்போது வலி சற்று குறைந்திருக்கும். அது மட்டும் எப்படி என்று புரியாமல் இருந்தது. நன்றாக தூக்கம் கிடைத்த நாட்களில் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று குறித்துவைத்துக் கொண்டு அதை எல்லா நாட்களும் செய்வேன். ஆனால் பயன் இருக்காது. தூக்கம் இல்லாத நாட்கள் தொடர்ச்சியாக வரும். இன்னும் எவ்வளவு நாள் இப்படி, இன்னும் எவ்வளவு நாள்..என்னை கொன்றுவிடுங்கள் என்று சொல்லத் தோன்றும்.

 

வீட்டில் அனைவரும் ஒரே அறையில் தான் தூங்குவோம். அதாவுது மற்றவர்கள் தூங்குவார்கள். நான் ஏக்கத்தோடும் பொறாமையோடும் தூங்க முயற்சி செய்துகொண்டிருப்பேன். ஒரு நாள் வேறு அறைக்கு வந்து  தலைவலியுடனும் மற்ற உடல் வலிகளுடனும் இணையத்தில் வரிசையாக படங்கள் பார்த்துகொண்டே காலை வரை விழித்திருந்தேன். மணி ஆறாகிவிட்டிருந்தது. எனக்கு பயம் ஏற்பட்டது. இப்படியே தூங்க முயற்சி செய்யாமல் இனிமேல் இருந்துவிடுவோம். எவ்வளவு நாள் உடல் தாங்கும். அப்படியே இறந்து விட்டாலும் நிம்மதி. Laptop க்கு அருகில் சரிந்து இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த எனக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. எந்திரித்த போது அறையில் வெளிச்சம் இருந்தது. நேரம் என்ன என்கிற குழப்பம். பக்கத்தில் laptop on ஆகியே இருந்தது. அதில் நேரம் பார்த்தேன். மதியம் இரண்டு மணி.

 

அறை கதவை திறந்து வெளியே வந்தேன். உடல் எப்போதையும் விட சற்று சுறுசுறுப்பாக இருப்பதை உணர்ந்தேன். பசி எடுத்துக்கொண்டிருந்தது. மதிய உணவை ருசித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அந்த அறைக்கு வந்தேன். அறைக் கதவை பூட்டிக்கொண்டு என்ன நடக்கிறது என்று பொறுமையாக ஆராய்ந்தேன். வெறும் தரையில் படுத்து எட்டு மணிநேரம் தூங்கியிருக்கிறேன். எனக்கு பசி எடுப்பது மிகவும் அபூர்வம். முதுகு வலி குறைந்திருந்தது. Stethescope ல் heart rate ஐ பார்த்தேன். என்பது தான் இருந்தது. ஆச்சரியம். எப்போதும் நூறுக்கு மேல் இருக்கும்( Normal 60 to 100).

 

மூளையில் அந்த எண்ணம் மின்னியது. உடனே இணையத்தில் “People who can sleep only at daytime” என்று அடித்து தேடினேன். முதல் பக்கமாக “DELAYED SLEEP PHASE DISORDER(DSPD)” என்கிற விக்கிபீடியா page வந்தது. உள்ளே நுழைந்து வாசிக்க ஆரம்பித்தேன். என் 23 வருட zombie வாழ்க்கைக்கு  விடை கிடைத்து விட்டது என்று தோன்றியது.  உலகத்தில் இந்த வகை மனிதர்களால் இரவு எவ்வளவு முயன்றாலும் தூங்க முடியாது. ஆனால் காலையில் இவர்களால் நிம்மதியாக எட்டு மணிநேரம் தூங்கமுடியும். Melatonin, light therapy போன்றவை சிலருக்கு உதவலாம். ஆனால் இவர்கள் ஆரோக்கியமாக இருக்க ஒரே வழி இவ்வாறு தினமும் காலையில் தூங்குவது தான். இல்லை என்றால் பல உடல் சார்ந்த சிக்கல்களையும் உளச்சிக்கல்களையும் அனுபவிக்க நேரும்.

 

நான் என்னிடம் இருந்த World Health Organisation “International Classification of Diseases(ICD)” booklet ஐ எடுத்து உண்மையிலேயே இப்படி ஒரு பிரிவு இருக்கிறதா என்று தேடினேன். Circadian Rhythm Disorders என்ற பிரிவின் கீழ் DSPD இருந்தது.

 

என் இவ்வளவு வருட போராட்டங்களுக்கு உண்மையிலயே விடை கிடைத்து விட்டது  என்று  நம்பினேன். ஆனால் அடுத்த சிக்கல் ஓரிரு நாட்களிலேயே வந்தது. காலை ஆறுமணிக்கு தனியறையில் படுக்கை விரித்து படுத்து தூக்கத்திற்காக காத்திருந்தேன். ஆனால் எட்டு மணி, ஒன்பது மணி, பத்து மணி என்று தூக்கம் வரும் நேரம் ஒவ்வொரு நாளும் தள்ளி சென்று கொண்டிருந்தது. சுதாரித்துக்கொண்டேன். மேலும் DSPD பற்றி ஆராய்ச்சி செய்த போது “Non 24” என்கிற பெயர் திரும்ப திரும்ப அடிபட்டது.

 

Non 24 Sleep wake disorder/Free running disorder/ hypernychthemeral syndrome பற்றி வாசிக்க வாசிக்க எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. இந்த மனிதர்கள் தூங்கும் நேரம் தினமும் சராசரியாக ஒரு மணிநேரம் தள்ளிப்போகும். இந்த Rare disorder எனக்கு விதிக்கப்படிருக்கிறது. மூளையில்  தூக்கத்தை கட்டுபடுத்தும் கடிகாரப் பகுதி (circadian rhythm – supra chiasmatic nucleus)  எனக்கு பிறப்பிலிருந்தே இவ்வாறாக உருவாகிவிட்டிருக்கிறது.

 

இன்னொரு தகவல் Autism உள்ள குடும்பங்களில் இந்த Non 24 அதிகமாகக் காணப்படுகிறது.

 

பின் தினமும் ஒரு மணிநேரம் தள்ளி தூங்கினேன். காலை, மதியம், மாலை, இரவு என்று மாறி மாறி தூங்க ஆரம்பித்தேன். மூளையின் circadian சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. அருமையான எட்டு மணிநேர தூக்கம். உடல் மீண்டது. வலி எதுவும் இல்லாமல் ஆகியது. ஆச்சர்யமாக தினமும் பசி எடுத்தது. உடல் எடை கூடி பார்ப்பதற்கு மனிதன் போல் மெல்ல மெல்ல ஆகினேன்.ஐம்பது கிலோ இருந்த நான் எழுபது கிலோவுக்கு முன்னேறினேன்.முகம் பொலிவு பெற்றது. ஆனால் பிரச்சனை என்னவென்று சொல்லதேவையில்லை. இதை வைத்துக் கொண்டு எப்படி வேலைக்கு செல்வது.

 

Melatonin, Ramelteon, Tasimelteon என்று அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தேன். Light therapy ஐயும் முயற்சி செய்து பார்த்தேன். எந்த மருந்தாலும் சரி செய்துகொள்ள கூடிய நிலை அல்ல இது.

 

ஆனாலும் தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் கிடைத்தது. அதுவும் ஆச்சரியமாக தொடர்ந்து பல நாட்கள் இப்படி தூங்கினேன். இன்று மதியம் பன்னிரண்டு மணிக்கு தூக்கம் வந்தால் நாளை மதியம் ஒரு மணிக்கு தூக்கம் வரும். அடுத்த நாள் மதியம் இரண்டு, மூன்று, நான்கு என்று ஒவ்வொருநாளும் முன் சென்று கொண்டிருக்கும் தூங்கும் நேரம். இந்த நோயின் விசித்திரம் என்னவென்றால் நான் தூங்கும் நேரத்தை தவற விட்டுவிட்டால் அடுத்த நாள் எனது நேரம் வரும் வரை காத்திருக்கவேண்டும். அதற்க்கு இடையில் எவ்வளவு முயன்றாலும் தூங்க முடியாது. ஒரு எடுத்துக்காட்டுக்கு இன்று நான் தூங்க வேண்டிய நேரம் காலை ஆறிலிருந்து மதியம் இரண்டு வரை என வைத்துக்கொள்வோம். ஆனால் எனக்கு காலையில் வேறு ஏதோ வேலை வந்துவிடுகிறது. தூங்கும் நேரத்தை தவற விட்டு விடுகிறேன் என்றால் அடுத்த நாள் காலை ஏழு மணி வரை காத்திருக்க வேண்டும் தூக்கத்திற்காக. அதற்கு நடுவில் தலைவலி, முதுகுவலி, மூச்சுவாங்குதல் போன்றவை என் உடலில் ஏறிக்கொள்ளும்.

 

பெற்றோர்களும் நண்பர்களும் “இப்படி ஒரு நோய் உண்மையில் இல்லை. நான் பொய் சொல்கிறேன். நான் ஒரு சோம்பேறி” என்று நினைத்தார்கள். Non 24 பற்றிய அணைத்து மருத்துவக்கட்டுரைகளையும் ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் எடுத்துக்கொண்டு அப்பாவை அழைத்துக்கொண்டு உளவியலாளரிடம் சென்றேன். அவர் என் கண்களை சந்திக்க விரும்பாதவராக “திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவக்கல்லூரி” அல்லது “NIMHANS” க்கு செல்லுமாறு கூறி துரத்தினார். அவர் இதற்க்கு முன் DPSD மற்றும் Non 24  போன்ற வார்த்தைகளை கேட்டதே இல்லை போல. அப்பா சித்திரை திருநாளுக்கு அழைத்து சென்றார். அங்கு நடக்கப்போவதை நான் முன்பே கணித்துவிட்டேன். Neurology department ல் முழு Medical History எடுத்துவிட்டு அவர்கள் செய்த செயல் நான் முன்பே கணித்தது தான். ஒரு Neurology Intern என் கண் முன்னே மொபைலின் Neurology book pdf ல் “Non 24 sleep wake disorder” என்று சொடுக்கி தேடினார்.  இரண்டு paragraph அளவு மட்டுமே அவர் புத்தகத்தில் Non 24 பற்றி இருந்தது. மேலும் கூகுளில் சென்று “Non 24” என்று சொடுக்க முற்பட்டார். நான் என் கையில் இருந்த World Health Organisation ICD யின்  Non 24 பற்றிய கட்டுரையை அவருக்கு கொடுத்தேன். அவர் என் கண்களை சந்திக்காதவராக “These kind of rare disorders……” என்று வார்த்தையை முழுங்கினார். Neurology department இன் HOD எனது மெடிக்கல் ஹிஸ்டரியை திரும்ப முதலிலிருந்து கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே “நான் DSPD பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் Non 24 பற்றி எனக்கு தெரியாது” என்று கூறிவிட்டு diagnosis sheet ல் “Free running disorder. The patient has researched his condition and aware of its guarded prognosis. He can consult NIMHANS or AIIMS for further consultation” என்று எழுதினார்(Free running disorder என்பதை மருத்துவ உலகம் Non 24 sleep wake disorder என மாற்றி பல வருடங்கள் ஆகிவிட்டது).

 

நான் Tasimelteon பற்றி கேட்டேன்(இதுவரை non 24 நோய்க்கு என்றே கண்டுபிடிக்கப் பட்ட ஒரே மருந்து- Orphan drug- FDA வால் 2014 ல் இருந்தே அனுமதிக்கப்பட்டிருந்தது). அவர் அந்த மருந்தின் பெயரை இது வரை கேட்டதே இல்லையாம். நிம்ஹான்ஸிலும் இதே தான் நடக்க போகிறது என்று எனக்கும் அப்பாவுக்கும் புரிந்துவிட்டது. எனக்கு இந்த Psychiatry Neurology படித்தவர்கள் மேல் தாங்க முடியாத கோபம் வந்தது. தூக்கமில்லை என்று வரும் அனைவரிடமும்  “Insomnia”, “Sleep apnea” என்று தாங்கள் அறிந்த சில நோய்களை மட்டுமே தேடுகிறார்கள். சம்பளத்திற்க்காக மட்டும் நுனிப்புல் மேய்கிறார்கள்.

 

இணையத்தின் உதவியோடு Harvard ல் biochemistry படித்துவிட்டு Circadian rhythm மற்றும் Non 24 பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் James fadden என்பவரை தொடர்பு கொண்டேன். அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இந்த நோய்க்கு “disability benefit” தரப்படுகிறது என்றார். Tasimelteon எல்லாம் பெரிதாக யாருக்கும் உதவவில்லை என்றார். International Sleep Conferences க்கு வரும் இந்திய தூக்கமருத்துவ நிபுணர்களின் மந்த நிலையை சொல்லி சலித்துக்கொண்டார். Online support group ஒன்றில் சேர்த்துவிட்டார். உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இந்த நோயோடு போராடும் மனிதர்களிடம் பேசினேன். அனைவரும் வாழ்கையை முழுவதுமாக இழந்தவர்கள். சிலர் பிசினஸ் செய்கிறார்கள். வேலைக்கு சென்றவர்கள் அனைவரும் வேலை செய்ய முடியாமல் இப்போது வீட்டில் இருக்கிறார்கள். இந்த நோயோடு போராடி 9 to 5 வேலைக்கு இன்னும் சென்றுகொண்டிருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். தினமும் மண்ணிலே நரகத்தை அனுபவிக்கிறார்கள். பெற்றோரிடமும் நண்பர்களிடமும் இந்த நோயை விளக்க முயன்று தோற்று  “சோம்பேறி”, “சுயநலவாதி” என்று பெயர்கள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனிமை மட்டுமே இவர்கள் வாழ்க்கையை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது.

 

நான் எதையும் பற்றி யோசிக்காமல் தினமும் என் உடல் கடிகாரம் சொல்லும் நேரத்தில் தூங்க ஆரம்பித்தேன். தூங்கி எழுந்த பிறகு இதுநாள் வரை இல்லாத பெரும் விழிப்போடு இருந்தேன். அப்படி ஒரு நாள் காலையில் தூங்கிவிட்டு இரவில் விழித்திருக்கையில் இணையத்தில் உங்கள் தளத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்று வரை உங்கள் தளத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 23 வயது வரை எனக்கு இலக்கியம் என்று ஒன்றிருப்பதே தெரியாது. முதலில் அறம்,காடு,ஏழாம் உலகம், கன்னியாகுமரி, கட்டுரைத் தொகுதிகள், குறுநாவல்கள் என்று வாசித்தேன்.

 

என் உறவுகள், நண்பர்களை ஒவ்வொருவராக இழந்து வந்தேன். நான் சுற்றிக் கொண்டிருக்கும் துயில் சக்கரத்தில் யாரும் என்னுடன் இணைய முடியாத நிலை உண்டாகியது. ஆனால் எனக்கு கிடைத்த தனிமையையும் சுதந்திரத்தையும் கொண்டாடிக்கொண்டிருந்தேன்.  உங்கள் எழுத்தும் இலக்கியங்களும் அக்கொண்டாட்டங்களில் பெரும்பங்காற்றின. ஒரு கட்டத்தில் தூங்கி எழுந்தவுடன் உங்கள் நினைவு தான். தூங்குவதற்கு முன்னும் உங்கள் எழுத்தின் நினைவு தான். இப்போதும் அப்படித் தான் இருக்கிறது. இதுவரை செல்ல விரும்பி செல்லாத இடங்களுக்கு எல்லாம் தனியாக சென்று வந்தேன். கடற்கரைகளில், முட்காடுகளில் நேரத்தை செலவிட்டேன்.  இதுநாள் வரை எனது சிந்தனை முழுவதும் தற்கொலை என்றிருந்த நிலை மாறி வாழ ஆசை ஏற்ப்பட்டது.ஆனால் நாட்கள் செல்ல செல்ல தனிமை கசக்கத்  தொடங்கியது.

 

“இரவு” நாவலை தற்செயலாகத் தான் வாங்கினேன். வாசிக்க தொடங்கிய போது எனக்கு ஆச்சரியம். நீங்கள் கற்பனையால் தான் இந்த படைப்பை எழுதியிருக்கிறீர்கள்  என்று மனதின் ஒரு பகுதி சொல்லும். ஆனால் இக்கதை உண்மையாக இருக்க கூடாதா? இது போன்றும் இரவில் வாழும் மனிதர்கள் உண்மையிலேயே இருக்கக் கூடாதா ? என்று மனதின் இன்னொரு பகுதி வேண்டிக்கொள்ளும். தனிமையின் பாதாளத்திற்குள் நீந்திக் கொண்டிருந்தேன். இரவில் மட்டும் வாழும் அல்லது இரவில் விழித்திருக்கும் நண்பன் ஒருவனாவுது கிடைத்து விடமாட்டானா என்று மனம் தினமும் ஏங்கிக் கொண்டிருந்தது. இப்போதும் ஏங்கிக்கொண்டிருக்கிறது.

 

ஒரு ஹாஸ்பிடலில் “night duty” டாக்டராக வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் தூங்காமல் இருந்தால் எனது உடலில் ஏறிக்கொள்ளும் வலி பூதங்கள் என்னை மீண்டும் தற்கொலைக்கு தள்ளின. இரண்டு மாதத்திற்கு பிறகு வேலையை விட்டுவிட்டேன்.  இப்போது மாதகணக்கில் முழு தனிமையில் இருக்கிறேன். அவ்வப்போது support group ல் பேசுவேன். அது சாவு வீடு போல் இருக்கிறது. எல்லாரும் அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். வேலைக்கு செல்லாமல் பணம் சம்பாதிக்காமல் வீட்டிலயே இருக்கிறேன். இருபத்தி ஐந்து வயதான பிறகும் உணவிற்கு அடுத்தவர்களை நம்பியிருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி ஒவ்வொரு நாளும் என்னை கொன்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே autism உள்ள தம்பி இருக்கிறான். அவனுக்காக அப்பாவும் அம்மாவும் படாதபாடு பட்டுவிட்டார்கள். இப்போது என் நிலைமையும் இப்படி ஆகிவிட்டதால் நானும் அவர்களுக்கு சுமையாய் இருக்கிறேன் என்று தினமும் தோன்றுகிறது.

 

என் பெரியப்பாவிற்கும் இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று முன்பே கணித்து வைத்திருந்தேன். அவரது சோர்வுற்ற முகமும் கண்களும், சதை கொழுப்பு எதுவும் இல்லாத உடலும் எனக்கு இச்சந்தேகத்தை அளித்தது. ஒரு கல்யாணத்தில் அவரை பார்த்த போது மிகவும் சிரத்தை எடுத்து பிராணயாமா செய்து கொண்டிருந்தார். ஏன் இதை தினமும் செய்கிறீர்கள் என்று கேட்டேன். உடலுக்கு நல்லது மனதுக்கு நல்லது என்று அடுக்கிக்கொண்டிருந்தார். அவரை நிறுத்தி “இதை செய்த பிறகு தூக்கம் நன்றாக வருகிறதா?” என்று கேட்டேன். நான் தூக்கத்தை பற்றி கேட்டதை அவர் எதிர்பார்க்கவில்லை. எழுந்து வந்து என்னருகில் அமர்ந்தார். சுற்றி வேறு யாராவுது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு “இருபது வருஷமா நைட் தூக்கம் ரொம்ப கம்மி பா. எப்பையாவுது தான் தூங்குவேன் …..” என்று ஆரம்பித்தவர் இருபது வருடங்களுக்கு மேலாக அவர் அனுபவித்து வரும் நரகத்தை பற்றி முழுவதும் சொல்ல மிகவும் சிரமப்படுவதை புரிந்து கொள்ள முடிந்தது. பல மருத்துவர்களிடம் சென்றிருக்கிறார். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என்று ஒன்று விடாமல் அலைந்திருக்கிறார். கடைசியில் உளவியலாளர் Psychiartic problem என்று முத்திரை குத்தியிருக்கிறார். அவரும் ஏற்று கொண்டு இவ்வளவு வருடம் வாழ்ந்துவிட்டார். DSPD, Non 24 பற்றி கூறினேன். ஆழ்ந்த அமைதிக்கு பிறகு இதோட எப்படி வேலைக்கு போவது என்று கேட்டார். பின் விலகி சென்று விட்டார். அடுத்த நாள் கல்யாண வீட்டின் நடுவில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் தரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். இருபது வருடத்திற்கும் மேலான வாழ்க்கையை மறுமதிப்பீடு செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

 

கல்யாணத்தை பற்றியெல்லாம் நான் யோசிக்கவே கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்கும் இந்த நோயை பற்றி எந்த பெண்ணிடம் கூறுவது. டார்த்தீனியம் போன்றொரு வலையில் சிக்கிக்கொண்டு விட்டேன் என்று தோன்றுகிறது. என்னையும் என் குடும்பத்தையும் சேர்த்து அழித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது டார்த்தீனியம்  இல்லை. எனது உடலே எனக்கு எதிரி ஆகிவிட்ட நிலை. நீங்கள் “நோய்” பற்றி முன் ஒரு வாசகருக்கு எழுதிய கடிதம் எனக்கு பைபிள். “சிலுவையின் பெயரால்” வாசித்த போது என்னாலும் கிறிஸ்துவை மிக அருகில் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதை விட மேலும் நெருக்கமாக அல்போன்ஸம்மாவை உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

சலிப்பூட்டும் நேர்வாழ்க்கை நுண்ணுணர்வு கொண்டவனுக்கு போதாது. அவன் கற்பனையில் விரும்பிய வாழ்க்கை அனைத்தையும் வாழ முற்படுவான். படைப்பூக்கமே அவனுக்கு நிறைவை அளிக்கும் என்று உங்கள் எழுத்து உணர்த்தியிருக்கிறது. என் வாழ்கையையில் நான் இதுவரை அடைந்த உச்சங்கள் அனைத்தும் கற்பனையிலும் படைப்பூக்கத்திலும் தான் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் இப்போது மீண்டும் அனைவராலும் கைவிடப்பட்ட தனிமையை உணர்கிறேன். ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை வாழத் தான் வேண்டுமா என்று தோன்றுகிறது.

 

எழுத எழுத கடிதம் நீண்டுகொண்டே போகிறது. சொல்ல வேண்டும் என எண்ணியதில் சிறிதளவு தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். செறிவாக எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் துக்கமும் தனிமையும் நெஞ்சை அடைக்கிறது . சீக்கிரம் இதை பகிர்ந்து கொண்டு விடுவோம் என்று வேகமாக எழுதிவிட்டேன்.

 

இப்படிக்கு,

காலையில் துயில்பவன்.

 

 

அன்புள்ள நண்பருக்கு

 

சிலகாலம் முன்னர் நண்பர் மாதவன் இளங்கோ டின்னிடஸ் என்னும் நோய் பற்றி எழுதியிருந்தார். விசித்திரமாக இருந்தது. ஆனால் அதன்பின் ஒன்று தெரிந்தது, வாசகர்களில் ஒருசிறு சாராருக்கு உண்மையில் அந்நோய் இருந்தது. அது என்ன நோய் எனத்தெரியவில்லை. அதைவைத்துக்கொண்டு என்ன செய்வது எனத்தெரியவில்லை. அந்தக்கட்டுரை மிக உதவியாக இருந்தது, அதைக்கொண்டே தன்னை அடையாளம் காணமுடிந்தது என சிலர் சொன்னார்கள். இக்கடிதத்தையும் அப்படியே உணர்கிறேன்

இதில் கவனத்திற்குரிய ஒன்று உண்டு. இத்தகைய சிக்கல்கள் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கூர்மையான மனம் கொண்டவர்கள். ஆகவேதான் இலக்கியவாசிப்புக்குள் வருகிறார்கள். அவர்களே இதை எழுதுகிறார்கள். சற்று கூர் மழுங்கியவர்களுக்கு இத்தகைய சிக்கல்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாதா? உங்கள் பெரியப்பாவைப்பொல?

 

உங்கள் பிரச்சினையில் ஆறுதலான விஷயங்கள் சில உள்ளன.

 

ஒன்று, உங்களுக்கு உங்கள் பிரச்சினை என்னவென்று தெரிந்திருக்கிறது. உங்களை நீங்களே ஆய்வுசெய்து அதைக் கண்டடைய முடிந்திருக்கிறது. என்ன பிரச்சினை என்றே தெரியாத சிக்கல்கள் கொண்டவர்களே இங்கே மிகுதி. அதன் தவிப்பு மிகப்பெரிய துன்பம். அது உங்களுக்கு இல்லை. இதன் விளைவுகள் என்ன இனிமேல் என்ன ஆகும் எல்லாமே தெளிவாகியிருக்கின்றன. மிகப்பெரிய நல்லூழ் இது. இனி இதைப்பற்றி எண்ணிப் பதறவேண்டியதில்லை. விதவிதமாக கற்பனைசெய்து கவலைகொள்ளவேண்டியதுமில்லை. இதுவே மிகச்சிறந்த விஷயம் அல்லவா?

 

இரண்டு, உங்கள் படிப்பு. வேறெந்த படிப்பும் ஏதேனும் நிறுவனத்தைச் சார்ந்தே செயல்பட்டாகவேண்டிய நிலையில் உள்ளது. உங்கள் படிப்பு அப்படி அல்ல. நீங்கள் சுயமாகவே தொழில்செய்ய முடியும். ஆரம்பத்தில் உங்களுக்குப் பெரிய வெற்றி இல்லாமலிருக்கலாம். ஆனால் சீராக முயன்றால் ஒரு வருமானமுள்ளதொழிலைச் செய்யமுடியும்.மருத்துவப் படிப்பை முடித்திருக்கிறீர்கள். ஒரு சுதந்திர மருத்துவராகச் சிறிய அளவில் தொழில்செய்யலாம். அதன் நேரத்தை நீங்களே வகுத்துக்கொள்ளலாம். உங்களால் முடிந்தபோது மருத்துவம் செய்யலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் விந்தையாக இருக்கும். ஆனால் நீங்கள் கூர்ந்துநோக்கி மருத்துவம்செய்தால் எந்தச்சிக்கலும் இல்லை. சிலசமயம் அதை ஒரு சாதக அம்சமாகவேகூட எடுத்துக்கொள்வார்கள். டாக்டர்களின் சில்லறைக் கிறுக்குத்தனங்கள் மக்களுக்குப் பிடிக்கும் சிறிய அளவில் சுயமாகச் சிகிச்சை நிலையத்தைத் தொடங்குக. அப்பாவிடம் அதைப்பற்றிப் பேசுங்கள்.

 

மூன்று, நீங்கள் ஒரு தனியுலகை உருவாக்கிக் கொள்ளும் ரசனையும் அறிவுத்திறனும் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் வாசிக்கமுடியும். எழுதமுடியும். இலக்கியம் துணையிருக்கும். ஒரு இரண்டாவது உலகை, ரசனையின் உலகை உருவாக்கிக்கொள்ளுங்கள். அது ஒரு மீட்பு. ஓர் இளைப்பாறல் பகுதி .உங்கள் மொழிநடை சிறப்பாக உள்ளது. உங்களால் முக்கியமான படைப்ப்புகளை எழுதமுடியும். கூர்ந்த கவனிப்பும் உடன் இணையும் மொழியும் பெரிய இறைக்கொடை. அதை வீணடிக்கவேண்டாம். அது உங்களுக்கு ஓர் நோக்கத்துடனேயே அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் தனிப்பட்ட சாதனைகள் அதில் அமையலாம்.  பின்னாளில் திரும்பிநோக்க அது உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது என்று அறிவீர்கள்

 

இந்தச் சிக்கல்கூட ஒரு தனித்துவம்தானோ என்னவோ? அது உங்களுக்கு பிறர் உணரவியலாத ஓர் உலகுக்குச் செல்ல வழிகாட்டுகிறதோ என்னவோ? இதுவே உங்களுக்கு சிந்தனையில் – இலக்கியத்தில் தனியான உலகை, தனிநோக்கை உருவாக்கி அளிக்கலாம்.

 

நீங்கள் கற்பனைசெய்வதுபோல பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை என்றே எனக்குப் படுகிறது. புறவுலகை ஒழுங்குபடுத்திக்கொண்டால்போதும். சிறிய அளவில் சில உலகியல்சிக்கல்கள் மட்டுமே இருக்கும். திருமணம் செய்துகொள்வதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இதைச் சொல்லியேகூட திருமணம் செய்துகொள்ளலாம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத பெண்ணாக இருந்தால்போதும்

 

வாழ்த்துக்கள்

 

ஜெ

 

டின்னிடஸ் – கடிதங்கள் 2

டின்னிடஸ் -கடிதங்கள்

மாதவன் இளங்கோ பக்கம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14

$
0
0

துச்சாதனன் கர்ணனின் குடில் நோக்கி சென்று உளவிசையால் தொலைவிலிருந்து பாய்ந்திறங்கி, உடற்தசைகள் கொந்தளிக்க மூச்சு வாங்க அவன் குடில் வாயிலை அடைந்து, அங்கிருந்த ஏவலன் தலைவணங்குவதை பொருட்படுத்தாமல் கடந்து சென்று, கதவை ஓங்கி ஓங்கி மாறி மாறி தட்டினான். “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூச்சலிட்டான். அவன் பின்னால் நின்று காவலன் சொல்லெடுக்க தவித்தான். உள்ளிருந்து கர்ணன் “கதவை உடைக்காதே. உள்ளே வா” என்றான். துச்சாதனன் உள்ளே சென்று படுத்திருந்த கர்ணனை அணுகி அவன் காலடியில் நின்று “நான் சல்யரை சந்தித்துவிட்டு வருகிறேன்” என்றான்.

கர்ணன் ஒருகணம் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு “சொல்” என்றான். “உங்களிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கச் சொன்னார்” என்றான் துச்சாதனன். கர்ணன் இரு கைகளையும் தூக்கி தலைக்கு அணை வைத்தபடி “கூறுக!” என்றான். அவனுடைய திரண்ட தோள்தசைகள் இரு ஆமைகள் என எழுந்தன. துச்சாதனன் “மூத்தவரே, நீங்கள் கை தழையா வள்ளல் என்று நாங்கள் அனைவரும் அறிவோம். நீங்கள் எவருக்கு என்ன கொடுத்திருக்கிறீர்கள்? அக்கொடை வழியாக எங்கெல்லாம் கட்டுண்டிருக்கிறீர்கள்? அதை நீங்கள் கூறியாகவேண்டும்” என்றான்.

கர்ணன் “நீ அறியவேண்டியதென்ன? அதை மட்டும் கூறு. என் நினைவறிந்த நாள்முதல் நான் ஒவ்வொருநாளும் எவருக்கேனும் எதையேனும் அளித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அக்கொடை அனைத்துக்கும் கட்டுண்டிருக்கிறேன்” என்று சொன்னான். துச்சாதனன் “நீங்கள் களத்தில் அர்ஜுனனை கொல்வதில்லை என்று எவருக்கேனும் சொல்லுறுதி அளித்தீர்களா? பாண்டவர்கள் உயிரை பேணுவேன் என்று எவருக்கேனும் கூறினீர்களா?” என்றான். “ஏனென்றால் களத்தில் நீங்கள் அர்ஜுனனை கொல்லவில்லை. பாண்டவர்களை நீங்கள் பலமுறை தப்பிச் செல்லவிட்டீர்கள்.”

அவனை நோக்கி விழிநட்டு கர்ணன் சொன்னான் “அர்ஜுனனை கொல்வதில்லை என்று சொல்லுறுதி அளிக்கவில்லை. ஆனால் நாகவாளியை ஒருமுறைக்குமேல் செலுத்தமாட்டேன் என்று சொல்லுறுதி அளித்தேன். பாண்டவர் நால்வரையும் எந்நிலையிலும் கொல்வதில்லை என்று கூறினேன்.” நடுக்குகொண்ட குரலில் “எவரிடம்?” என்று துச்சாதனன் கேட்டான். கர்ணன் ஓங்காக் குரலில் “என் குருதியன்னையிடம். யாதவ அரசி குந்தி என் குடிலுக்கு வந்து என்னை தன் மைந்தன் என ஏற்று அன்னைக்கு மைந்தனின் கொடையென அதை கேட்டார். அவர் என் அன்னை என நான் முன்னரே அறிவேன். பிற அனைவருக்கும் எதையேனும் அளித்திருக்கிறேன். ஈன்ற அன்னைக்கு அளிக்க அப்போது அது ஒன்றே என்னிடம் இருந்தது. அவரும் அதுவன்றி வேறெதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை” என்றான்.

துச்சாதனன் பெருமூச்சுடன் தளர்ந்து பின்நோக்கி நகர்ந்து குடிலின் மூங்கில் தூணை பற்றிக்கொண்டான். பின்னர் “ஏன், மூத்தவரே?” என்று கேட்டான். அதில் இருந்த துயரத்தின் ஒலியைக் கேட்டு அவனே மேலும் துயர்கொண்டான். “மூத்தவரே, அந்தச் சொல்லுறுதியின் வழியாக நீங்கள் என் தமையனை கைவிட்டீர்கள். அதை நீங்கள் உணரவில்லையா?” என்றான். “இல்லை. உண்மையில் நான் உன் தமையனைப்பற்றி எண்ணுவதே இல்லை. நான் எண்ணுவதற்கு அப்பால் அவருக்கு ஓர் உள்ளமும் விழைவும் உண்டு என்று கருதியதே இல்லை” என்றான் கர்ணன். “இக்களத்தில் அவர்களைக் கொன்று செருவென்று தமையனை அரசராக்குவதாக சொன்னீர்கள்” என்றான் துச்சாதனன்.

“உன் தமையனுக்காக என் உயிரை, என் மைந்தர்களை, என் குடியை அளிக்க சித்தமாக இருக்கிறேன். களத்தில் அர்ஜுனனை கொல்ல எனக்கு நாகஅம்போ பிற அரிய அம்புகளோ தேவையில்லை. பாண்டவ ஐவரில் அவனை மட்டுமே கொன்றால் போதும், இப்போர் முடிந்துவிடும். எழும் நாளில் எனது அம்பில் அர்ஜுனன் உயிர் நீப்பான். அதில் உறுதி கொண்டிருக்கிறேன். இப்போரை அர்ஜுனனை கொல்லும்பொருட்டு மட்டுமே என நிகழ்த்துவதாகவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்று கர்ணன் சொன்னான். எண்ணியிராது எழுந்த சீற்றத்துடன் “அர்ஜுனன் அத்தனை எளிதில் கொல்லப்படக்கூடியவனல்ல” என்று துச்சாதனன் கூவினான். “உங்கள் நாகஅம்பையே அவன் ஒழிந்தான். அனைத்து அம்புகளிலிருந்தும் தப்பும் நுட்பத்தை அவனுக்கு கற்பிக்கும் ஆசிரியன் கையில் கடிவாளங்களுடன் புரவிமேடையில் அமர்ந்திருக்கிறான்.”

கர்ணன் “நாகவாளியை அவன் ஒழிந்தது திறனால் அல்ல, ஒரு சிறு சூழ்ச்சியினால், ஒருமுறை ஒரு சூழ்ச்சியை செய்கையிலேயே சூழ்ச்சி செய்யக்கூடியவன் என்பதை பிறருக்கு உணர்த்துகிறோம். சூழ்ச்சிகள் எல்லையற்றவை அல்ல. இம்முறை அவன் செய்யவிருக்கும் சூழ்ச்சியையும் கருத்தில் கொண்டே அம்புகளை தொடுக்கவிருக்கிறேன். இதிலிருந்து அவன் எந்நிலையிலும் தப்ப இயலாது. பரசுராமரின் வில்லை வெல்லும் ஆற்றல் அவனுக்கில்லை. பரசுராமரின் சொல் பெற்ற அம்பை அவனால் தடுக்கவும் இயலாது” என்றான் கர்ணன். துச்சாதனன் கைகளை நெஞ்சில் கட்டி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “அஞ்சவேண்டாம் இளையோனே, இப்போரில் நாம் வெல்வோம்” என்றான் கர்ணன்.

“இவ்வண்ணம் ஒரு சொற்கொடையை நீங்கள் நிகழ்த்தியதை உங்கள் நாவிலிருந்து மூத்தவர் அறிந்திருக்கிறாரா?” என்றான் துச்சாதனன். “இல்லை. நான் என் கொடைகளைப்பற்றி அவ்வாறு பிறரிடம் சொல்லிக்கொள்வதில்லை” என்றான் கர்ணன். “இது கொடை மட்டும் அல்ல. இது படைசூழ்கையை முற்றாகவே மாற்றும் ஒரு செய்தி. இதை நீங்கள் கூறியிருக்கவேண்டும்” என்றான் துச்சாதனன். “இதை இனி அவர் அறிந்தால் எவ்வண்ணம் உணர்வார் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா?” கர்ணன் புன்னகைத்து “இன்றுவரை உன் தமையன் என்ன எண்ணுவார் எப்படி புரிந்துகொள்வார் என்று ஒருகணம்கூட நான் கருதியதில்லை. இப்புவியில் என்னைப்பற்றி என்ன எண்ணுவான் என்று எந்நிலையிலும் கருதாமல் பழகும் ஒரே நட்பு அவருடையது. அதனால்தான் அதை நட்பென்று எண்ணுகிறேன்” என்றான்.

“அவர் உளம் குமைவார். இன்றிருக்கும் கசந்த நிலையில் உங்களை வெறுப்பார். போர்முனையில் நட்புக்கு மேல் குருதிப்பற்றை நிறுத்தி தன்னை கைவிட்டீர்கள் என்று எண்ணுவார். ஐயமில்லை” என்றான் துச்சாதனன். “இன்று அவர் தன் நல்லியல்பு அனைத்தையும் இழந்துவிட்டிருக்கிறார். இந்த அளவு நிலையில்லாதவராக அவரை முன்பு கண்டதே இல்லை. இளையோர் களம்பட்டு, பிதாமகர்களும் ஆசிரியர்களும் இறந்து, சுற்றமென வந்த அரசர்கள் ஒவ்வொருவராக மறைந்து தன்னந்தனியனாக நின்றிருக்கிறார். இந்தப் பெருவெள்ளத்தில் பற்றுக்கோடென உங்களை எண்ணியிருக்கிறார், நீங்களும் அவரை கைவிட்டீர்கள் எனும் இச்செய்தியை அவரால் தாள இயலாது.”

கர்ணன் “இத்தனை சொற்களுக்குப் பின்னரும்கூட அவர் என்னைப்பற்றி என்ன எண்ணுவார் என்பது எனக்கு ஒரு பொருட்டெனத் தோன்றவில்லை. அவர் என்ன எண்ணினாலும் அது என் உளநிலையில் மாற்றத்தையும் உருவாக்காது” என்றான். “மூத்தவரே, நீங்கள் கொடையென அளித்தது உங்களுக்கு உரிமைப்பட்ட ஒன்றை அல்ல. அதை மட்டும் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் அளித்தது எங்கள் உயிரை, எங்கள் தன்மானத்தை, என் மூத்தவரின் பெருமையை. உங்கள் அன்னையின் காலடியில் எங்களை பலியிட்டுவிட்டீர்கள்” என்றான் துச்சாதனன். “அளிக்கையில் அவ்வாறு எண்ணிச் சூழ்வது என் வழக்கம் அல்ல” என்றபின் கர்ணன் சிலகணங்கள் கழித்து “நீ கூறுவது உண்மை. ஆனால் உன் தமையனின் உடைமையை, அவர் பெருமையை ஒருபோதும் என் உடைமையோ என் பெருமையோ அன்று என நான் எண்ணியதில்லை” என்றான். இதழ் கோணலாக புன்னகைத்து “எவரேனும் முனிவர் வந்து கேட்டால் அஸ்தினபுரியையும் அவரையும்கூட நான் கொடையளித்திருக்கக்கூடும்” என்றான்.

“இப்போரை முடித்துவிட்டீர்கள். இனி நாம் ஒவ்வொருவரும் நிரையாக நடந்து இறப்பின் முன் சென்று நின்றிருப்பதொன்றே எஞ்சியுள்ளது. அவ்வளவுதான். இனி ஒரு சொல்லும் உங்களுக்குச் சொல்வதற்கு என என்னிடமில்லை” என்றபின் திரும்பி துச்சாதனன் குடிலைவிட்டு வெளியே சென்றான்.

துரியோதனனின் அவைக்கூடத்தை துச்சாதனன் சென்றடைந்தபோது அங்கு இரு படைத்தலைவர்கள் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். துச்சாதனன் அவர்களில் ஒருவரை நோக்கி “மூத்தவர் வந்தாரா?” என்றான். துரியோதனன் துயிலச்சென்றதை நினைவுகூர்ந்தான். ஆனால் அவன் சகுனியுடன் அங்கே இருப்பான் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. படைத்தலைவர்களில் ஒருவர் எழுந்து துச்சாதனனிடம் வந்து “அரசர் துயில்கொள்ளச் சென்றுவிட்டார். தாங்களே அறிவீர்கள், அவர் மயிர்க்கால்களும் நனைந்து குளிருமளவுக்கு மது அருந்தியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு தன்னுணர்வென ஏதும் இருக்க வாய்ப்பில்லை” என்றார். “நான் அவரை பார்த்தாகவேண்டும்” என்று துச்சாதனன் சொன்னான்.

“தாங்கள் கூறுவது எதையும் இப்போது அவரிடம் சென்று சேர்க்க இயலாது. தாங்கள் இப்போது தங்கள் மாதுலரிடம் பேசலாம். அவர் தெளிந்திருக்கிறார்” என்றார் படைத்தலைவர். “இல்லை, இது என் மூத்தவரிடம் மட்டுமே சொல்வதற்குரியது” என்று துச்சாதனன் சொன்னான். “அதனால் பயனில்லை” என்றார் படைத்தலைவர். “தெய்வச்சிலையிடம் என்று எண்ணிச்சொல்கிறேன், போதுமா?” என்று திரும்பி உரத்த குரலில் துச்சாதனன் கேட்டான். அவர்கள் சொல்லடைந்து நிற்க ஒருவர் “அங்கே இருக்கிறார்” என்றார். “குடிலுக்குள்ளா?” என்றான். “இல்லை, வெட்டவெளியில் துயில விரும்பினார். ஆகவே மரத்தடியில் மஞ்சம் அமைத்தோம்” என்றான் ஒரு ஏவலன்.

துச்சாதனன் வெளியே வந்து சில அடிகள் நடந்தபோதே அங்கு நின்றிருந்த சாலமரத்தின் அடியில் இலைப்படுக்கையில் இரு கைகளையும் தலைக்கு வைத்து அண்ணாந்து வானைப் பார்த்து படுத்து துயின்றுகொண்டிருப்பதை கண்டான். ஒருகணம் அவன் துயில்வதை கலைக்கவேண்டாம் என்று தோன்றியது. துரியோதனன் ஆழ்ந்துறங்குவதே இல்லை என்று அவன் அறிந்திருந்தான். பெரும்பாலான தருணங்களில் சிறுபொழுது துயின்று, உடனே உள்ளிருந்து தொட்டு உசுப்பப்பட்டு விழித்துக்கொண்டு நீள்மூச்சுகளும் பொருளிலா முனகல்களுமாக படுக்கையில் படுத்திருப்பான். அப்பால் படுத்திருக்கும் துச்சாதனன் அவன் விழித்துக்கொண்ட கணமே தானும் உணர்வு பெற்று அவன் அசைவுகளை செவிகளால் அறிந்துகொண்டிருப்பான். ஆனால் மெல்லிய அசைவாகக்கூட தன் விழிப்பை துரியோதனன் அறியலாகாது என எண்ணுவான்.

புரண்டு புரண்டு படுத்து, “இளையோனே” என முனகி, தம்பியர் எவர் பெயரையேனும் சொல்லி, அரிதான சில தருணங்களில் மெல்ல விம்மி, அவ்வொலியை தானே கேட்டு எழுந்து, மீண்டும் மதுவருந்தி, அதை நிறுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் அருந்தி, உள்ளிருந்து குமட்டலெழுந்து உடல் உலுக்க சற்றே வாயுமிழ்ந்து, இரு கைகளையும் மஞ்சத்தில் ஊன்றி தலை குனிந்து அமர்ந்திருப்பான். குருதி எடைகொண்டு குமிழியிட்டு தலைக்குள் நிறைந்து, தலை பெருத்து முன் தள்ள, உடல் சற்று அசைந்து, அவ்வண்ணமே மஞ்சத்தில் விழுந்து மீண்டும் துயிலத்தொடங்குவான். மீண்டும் அவன் குறட்டை ஒலி கேட்பது வரை துச்சாதனன் உளம் பதைக்க அங்கே அசைவிலாது அமர்ந்திருப்பான்.

“இளையோனே” எனும் குரல் தன்னை அழைக்கையில் துச்சாதனனுக்கு அது தெரியும். பிற அனைத்துக் குரல்களும் விண்புகுந்த தம்பியருக்கு என்று அவன் அறிந்திருந்தான். அவன் குறட்டையொலி கேட்கத் தொடங்குகையில் நெஞ்சில் ஆறுதல் பரவும் நீள்மூச்சுடன் கைகளைக் கூப்பி தெய்வங்களை வாழ்த்திவிட்டு தானும் உடலமைத்து ஓசையில்லாமல் படுத்துக்கொள்வான். துரியோதனனின் குறட்டையொலியை கேட்டுக்கொண்டிருக்கையில் உள்ளம் அமைதியடையும். அது ஓர் ஆறுதல்மொழி, ஓர் உறுதிகூறல். மெல்ல துயிலெழுந்து உடலெங்கும் பரவி மெல்ல சித்தம் அழிந்து மூழ்கத்தொடங்குவான்.

அப்போது துரியோதனன் ஆழ்துயில் கொண்டிருக்கிறான் என்னும் உணர்வே அவனுக்கு அமைதியை அளிப்பதாக இருந்தது. துச்சாதனன் திரும்பிச் செல்வதற்காக ஒரு காலடி எடுத்து வைத்தான். ஆனால் அங்கிருந்து செல்ல இயலாதென்று தோன்றியது. விசைமிக்க கைகள் அவனைப்பற்றி அங்கே நிறுத்தியிருந்தன. தன்னால் வேறெங்கும் சென்றமைய முடியாதென்று  தெரிந்தபின் அவன் மெல்ல காலெடுத்து வைத்து துரியோதனனை அணுகினான். அவன் துயில்கையில் அவ்வாறே விட்டுவிடலாம் என்றுதான் எண்ணியிருந்தான். எவ்வண்ணமாயினும் துரியோதனன் நெடும்பொழுது துயிலப்போவதில்லை. மது கூடிப்போனால் இரு நாழிகைகூட துயில வைப்பதில்லை. உடலுக்குள் அதன் செறிவு குறைந்ததுமே சித்தம் விழித்துக்கொள்கிறது. இறகு உலர்ந்த ஈ என அதிலிருந்து விடுவித்துக்கொண்டு தன்னைத்தானே சுற்றி சிறகுவிரித்து எழுந்து பறக்கத்தொடங்கிவிடுகிறது.

அவன் எழும்போது அருகிருக்கலாம். அப்போது அதை சொல்லலாம். அதுவரை காத்திருக்கலாம். காத்திருப்பது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இவ்வாழ்நாள் முழுக்க தமையனின் அருகே காத்திருப்பதையே தவமென செய்திருக்கிறேன். குழவிப்பருவத்தில் இளையஅன்னை சத்யசேனை அவன் கைபற்றி மூத்தவனை சுட்டிக்காட்டி “உன் தமையனை நோக்கு. அவன் சென்றதே வழி இனி உனக்கு” என்றாள். அச்சொற்களை அவன் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் கண்டு கேட்டு அக்கணம் நிகழ்ந்ததுபோல் தெளிவுபடுத்திக்கொண்டே வந்தான். அன்றிருந்த துரியோதனன் அவனுடனே வளர்ந்து பேருருக்கொண்டவனாக ஆனான். அரியணை அமர்ந்தவனாக, அவையமர்ந்து சுற்றத்துடன் நகையாடுபவனாக, மைந்தருடன் களிக்கும் தந்தையாக, ஒவ்வொருவரையாக இழந்து துயரடைந்து தனித்தவனாக மாறிக்கொண்டே இருந்தான். அச்சொற்கள் அவ்வாறே மாறாமல் ஒலித்தன.

துச்சாதனன் அருகே சென்றதும் துரியோதனன் விழித்திருப்பதை உணர்ந்தான். துரியோதனன் திரும்பிப்பார்க்கவோ ஒலியெழுப்பவோ செய்யவில்லை. ஆயினும் அவ்வுடல் படுத்திருந்ததிலிருந்த தன்னுணர்வு அவன் துயிலவில்லை என்று காட்டியது. உள்ளம் அனைத்துக் கடிவாளங்களையும் இழுத்து அமரத்தில் அமர்ந்திருக்கும் பாகன். துயிலில் உடல் கடிவாளங்கள் தளர விடுதலை கொள்கிறது. உள்ளத்திலிருந்து ஓய்வு பெற உடல் ஏங்கிக்கொண்டிருக்கிறது. அஞ்சிய உள்ளம், துயர் கொண்ட உள்ளம், ஐயம்நிறைந்த உள்ளம் உடலை சற்றும் அமைதி கொள்ள விடுவதில்லை. சவுக்கை சொடுக்கி ஆணையிட்டுக்கொண்டே இருக்கிறது. உள்ளம் அடையும் துயரில் பெரும்பகுதியை உடலும் அடைகிறது. துயருற்றவன் உடல் தொலைவிலேயே துயர் துயர் என்று கூவிக்கொண்டிருக்கிறது. துயருற்றவன் எப்பெருக்கிலும் தனித்து தெரிகிறான்.

தன் முகத்தை துச்சாதனன் ஆடியில் பார்ப்பதில்லை. ஒரே ஒரு முறை மட்டும் தன்னியல்பாக தீட்டப்பட்ட கேடயத்தில் அதை பார்த்தபோது திடுக்கிட்டு கேடயத்தை தாழ்த்திக்கொண்டு தன்னுள்ளத்தை அதிலிருந்து அகற்ற முயன்றான். அது பிறிதொருவனின் முகமாகத் தோன்றியது. ஒரு போதும் அதில் இல்லாத பதைப்பும் தனிமையும் துயரும் நிறைந்திருந்தது. அந்த முகத்தை நோக்கி இளமையிலிருந்து வந்துகொண்டிருந்தோமா? அந்த முகத்துடன்தான் இப்புவியிலிருந்து அகலப்போகிறோமா? அந்த முகம் என்னுள் குழவிப்பருவத்திலேயே இருந்திருக்க வேண்டும். அலையற்ற நீரில் தோன்றி மறையும் பாவையென துயில்கையிலோ தனித்திருக்கையிலோ துயர்கொள்கையிலோ அது வந்து மறைந்திருக்கவேண்டும். என்னை வளர்த்த செவிலியரிடமோ அன்னையரிடமோ சென்று கேட்டால் தெரியும். “அன்னையே, இம்முகத்தை எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” தயங்கி விழிதாழ்த்தி “ஆம், அரிதாக” என்று அவர்கள் சொல்லக்கூடும். அரிதாக என்பதனாலேயே அவர்கள் அதை மறக்காமலும் இருப்பார்கள். ஒருவேளை அதுவே அவன் என்று அவர்களின் உள்ளம் எண்ணியிருக்கவும் கூடும். ஆனால் அவர்கள் அனைவருமே அரசவையில் திரௌபதி துகிலுரியப்பட்டபின் அவனை ஏறிட்டும் நோக்குவதில்லை.

ஒரு முறை அவன் அன்னையரில் ஒருத்தி சுவரில் தெரிந்த அவன் நிழலை நோக்கி நின்றிருப்பதை சேடி ஒருத்தி கண்டாளாம். அதைப்பற்றி உசாவியபோது “அவனை நோக்குவதில்லை என வஞ்சினம் உரைத்திருக்கிறேன். நோக்காமலும் இருக்க இயலவில்லை. நிழல்நோக்கி அவனை அறிகிறேன்” என்றாளாம். அச்சேடி அதை சொன்னபோது அவன் நெஞ்சு அதிர எழுந்துகொண்டான். அசலை துருமசேனனில் அவனை கண்டாள். அவனை அரண்மனை மகளிர் அனைவரும் துச்சாதனனாக ஏற்றுக்கொண்டனர். நிழல்நோக்கியவள் என்ன கண்டாள்? மைந்தனை நோக்கியவர்கள் பிறிதொன்றை உணர்ந்தனரா என்ன?

அவன் அமர்ந்ததும் “எங்கு சென்றிருந்தாய்?” என்று துரியோதனன் கேட்டான். துச்சாதனன் “மூத்தவரின் குடிலுக்கு” என்றான். “அவன் துயின்றுவிட்டானா?” என்று துரியோதனன் கேட்டான். “படுத்திருந்தார். நான் அவரை எழுப்பினேன்” என்றான் துச்சாதனன். அவன் மேலே சொல்லும்பொருட்டு துரியோதனன் செவிகாத்திருந்தான். “மூத்தவரே, அதற்குமுன் நான் சல்யரைச் சென்று பார்த்தேன்” என்றான் துச்சாதனன். “என்ன சொன்னார்?” என்று துரியோதனன் கேட்டான். ஆனால் ஒருகணத்திற்குப் பின்னர்தான் அவ்வினாவை துரியோதனன் கேட்கவில்லை என்று துச்சாதனன் உணர்ந்தான். கேட்டதாக அத்தனை தெளிவாக தான் உணர்ந்தது எவ்வாறு என வியந்தான். அவன் மேலும் சிலகணங்களுக்கு அந்த அமைதியை உணர்ந்தபின் சொன்னான்.

“அங்கர் தன் பெருங்கொடைத் திறனாலேயே ஒவ்வாச் சொல்லுறுதிகளை பலருக்கும் அளித்திருக்கலாம், ஆகவே அவர் பல சரடுகளால் கட்டுண்டவர், நமக்கு மட்டுமென தன்னை அளிக்கும் உரிமையை இழந்தவர் என்கிறார் சல்யர். ஆகவேதான் போர்க்களத்தில் அவர் அர்ஜுனனை கொல்லாமல் தவிர்க்கிறார். பாண்டவர்களை அவர் வெல்வதுகூட இல்லை. அவர் எவருக்கோ அவ்வண்ணம் சொல்லுறுதி அளித்ததுபோல் தோன்றுகிறது என்றார். அது மெய்யென்று எனக்குத் தோன்றியது. ஆகவே நான் நேரில் சென்று அவரிடம் கேட்டேன். மெய்யென்று அவர் கூறினார்.”

துரியோதனனிடமிருந்து ஏதாவது எதிர்வினை வருமென்று துச்சாதனன் எதிர்பார்த்தான். ஒருகணம் காத்திருந்துவிட்டு “நம் படைகளுக்குள் நுழைந்து மூத்தவரின் பாடிவீட்டிற்குள் சென்று யாதவப் பேரரசி அச்சொல்லுறுதியை பெற்றிருக்கிறார்” என்றான். மீண்டும் ஒருகணம் காத்திருந்துவிட்டு “யாதவப் பேரரசிக்கு முதிரா அகவையில் பிறந்த மைந்தரே அங்கர். அதைச் சொல்லி அன்னையென நின்று அவர் அச்சொல்லுறுதியை பெற்றிருக்கிறார்” என்றான். கர்ணனைப் பற்றி முன்னரே துரியோதனன் அறிந்திருப்பதுபோல் தோன்றியது. அவன் உடலில் ஏதேனும் அசைவு தோன்றுமென்று துச்சாதனன் கூர்ந்து பார்த்தான்.

“எனக்கும் அங்கரைப்பற்றி அந்த ஐயம் இருந்தது. எவ்வகையிலோ குந்தியன்னையின் குருதி அவரில் ஓடுவதாகத் தோன்றியிருக்கிறது” என துச்சாதனன் தொடர்ந்து சொன்னான். “அவருக்கும் அர்ஜுனனுக்குமான முகஒற்றுமையும் தோற்றப் பொருத்தமும் என்னுள் எப்போதும் தெரிந்தது. ஆனால் மதுவனத்தின் யாதவக்குடியில் எவரோ அங்கரைப் பெற்றிருக்கலாம் என்றே இதுவரை எண்ணினேன். அல்லது முயன்று அவ்வாறு எண்ணிக்கொண்டேன் என்று படுகிறது” என்றான். “அன்னையென நின்றிருந்தபோது அங்கர் அச்சொல்லுறுதியை அவருக்கு அளித்திருக்கிறார்” என மீண்டும் சொன்னான். துரியோதனனின் குரலை செவிகூர்ந்து இருளில் அமர்ந்திருந்தான்.

துரியோதனன் “ஆம், நான் அறிவேன்” என்றான். “அறிவீர்களா?” என்று உரத்த குரலில் கேட்டபடி துச்சாதனன் எழுந்தான். “இப்படைக்குள் நிகழும் ஒன்றை தெரியாதிருக்கும் அளவுக்கு உளவுத்திறனோ ஆட்சித்திறனோ அற்றிருப்பேன் என்று எண்ணுகிறாயா?” என்று துரியோதனன் கேட்டான். “அவர் யாதவ அரசியின் மைந்தன் என்று முன்னரே அறிவீர்களா?” என்றான் துச்சாதனன். “இளமைந்தனாக அங்கர் என் முன் வந்து நின்ற அன்றே மாதுலருக்குத் தெரியும். நான் அன்று அதை உளம்கொள்பவனாக இல்லை. பின்னர் அது என் கனவிலும் கள்மயக்கிலும் மெல்லிய தொல்நினைவென தோன்றி மறையும் ஒன்றாக மட்டுமே இருந்தது. அது என் உள்ளத்தில் எழுவதற்குக்கூட நான் ஒப்பியதில்லை” என்றான் துரியோதனன். “ஒருவேளை அதை நான் ஏற்றிருந்தால் வாரணவதத்திற்கு துணிந்திருக்க மாட்டேன்…” என முனகிக்கொண்டான்.

“மூத்தவரே, எனில் அவரை நாம் ஏன் அங்கநாட்டுக்கு சிற்றரசராக அமரவைத்தோம்? அவர் இருந்திருக்க வேண்டிய இடம் தங்கள் அரியணை அல்லவா?” என்று துச்சாதனன் கேட்டான். “ஆம், என் அரியணை அவருக்குரியது. அது எனக்கு அவர் அளித்த கொடை” என்று துரியோதனன் சொன்னான். “அவர் மணிமுடிசூடவேண்டும் என்றால் குந்திதேவி அதை அவையில் எழுந்து சொல்லியிருக்கவேண்டும். அதை நம் ஷத்ரியக் குடிகள் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். அவ்வாறு அவர் கூறிவிடுவார் என பீஷ்ம பிதாமகர் அஞ்சினார். அதனூடாக அஸ்தினபுரியின் ஷத்ரியரும் யாதவரும் பூசலிட்டுக்கொள்வார்கள் என்றும் அஸ்தினபுரிக்கு எதிராக ஷத்ரிய அரசர்களின் கூட்டு அமையும் என்றும் கருதினார். ஆகவே அவர் அங்கரை எப்போதும் சூதன் என அவைச்சிறுமை செய்தார். அவர்மேல் வெறுப்பை உமிழ்ந்துகொண்டே இருந்தார்.”

“நமக்கும் பாண்டவர்களுக்குமான பூசல் முதிர்ந்து அவர்கள் கானேகும்போதும் மீண்டுவந்து நிலம் கோரும்போதும் எத்தருணத்தில் வேண்டுமென்றாலும் அஸ்தினபுரியின் குடியவையில் குந்திதேவி எழுந்து அங்கரை தன் மைந்தன் எனச் சொல்லி அரியணை கோரக்கூடும் என எண்ணினார் பிதாமகர். அதற்கு யாதவர் முதன்மைகொண்ட நம் குடிகள் ஒப்புதலும் அளிக்கக்கூடும். ஆனால் பீஷ்மரின் ஒப்புதல் இன்றி குடியவை அங்கரை பாண்டவர் என ஏற்காது, அவருடைய சொல் மட்டுமே ஷத்ரியரின் எதிர்ப்பை நிறுத்தும். அதை குந்திதேவி அறிவார். எந்நிலையிலும் அங்கரை ஏற்கமாட்டேன் என்றே பிதாமகர் காட்டிக்கொண்டிருந்தார்” என்று துரியோதனன் சொன்னான்.

“அங்கர் என்ன உணர்ந்திருப்பார்? தன் அன்னையின் தன்மதிப்பை குறைக்கலாகாதென்று ஒதுங்கியிருக்கலாம். இளையோருக்காக தன்னை ஒடுக்கிக்கொண்டிருக்கலாம். அன்னை அவராக எழுந்து தன்னைப்பற்றி பிறருக்கு அறிவிக்க வேண்டுமென்றும் அல்லது இளையோரே அறிந்து தன்னிடம் வந்து கோரவேண்டுமென்றும் எண்ணியிருக்கலாம். அவையெல்லாம் உண்மைதான். ஆனால் அறுதியுண்மை அது அல்ல. அவர் எதையும் கொடையெனப் பெற விழையவில்லை. அங்கநாட்டு மணிமுடியை அவர் தாள்பணிந்து நான் அளித்தேன். அவருடன் அக்கணமே ஒன்றாகி நின்றேன். எனக்கு ஒரு கொடையென்றே அவர் அதை பெற்றுக்கொண்டார். ஈகை என இந்த மணிமுடியும் குலக்குறியும் அல்ல பாரதவர்ஷமே அளிக்கப்பட்டாலும் பெற்றுக்கொள்ளமாட்டார்” என்று துரியோதனன் சொன்னான்.

“இதெல்லாம் இங்கே இக்களத்திற்கு வந்தபின் என் உள்ளத்தில் தெளிவது” என துரியோதனன் தொடர்ந்தான். “இங்கே ஒவ்வொரு இரவும் எனக்கு ஓர் ஊழ்கம். என் உள்ளத்தின் ஆழங்கள் அனைத்தும் திறந்துகொள்கின்றன. இங்கு வரும்வரை எதையுமே நான் எண்ணியதில்லை. என் அகம் அறிந்தவற்றைக்கூட மறக்கவே முயன்றேன். இல்லையென்றே ஆக்கிக் கொண்டேன். அங்கர் என் தோள்தோழர் அல்ல, எனக்கு குருதிமூத்தவர். ஆனால் என் தோழர் என்றே எப்போதும் தன்னை காட்டிக்கொண்டிருந்தார். அவர் அவ்வாறு தன்னை காட்டுந்தோறும் நான் அவ்வாறே ஆனேன்.”

துச்சாதனன் “ஆனால் இச்சொல்லுறுதியை அளித்ததினூடாக அவர் இப்போரின் அனைத்து நிகர்நிலையையும் அழித்துவிட்டார். பாண்டவர்களை அவர் கொல்லமாட்டாரெனில் இப்போர் எப்போது முடியும்? இச்சொல்லுறுதியை அவர் உங்களைக் கேட்காமல் எப்படி அளிக்க முடியும்?” என்றான். “இளையோனே, எப்போது வேண்டுமானாலும் அங்கர் எழுந்து அவைநின்று இந்த மணிமுடி எனது, இவர் எனது இளையோர், எனது அன்னை இவர் என சொல்லியிருக்கலாமே? இல்லை எனில் பாண்டுவின் பெயர்சொல்லி அனல்தொட்டு மறுக்கட்டும் என்று கேட்டால் யாதவ அரசி என்ன சொல்லியிருக்க முடியும்?”

“உண்மையில் அவர் அவ்வண்ணம் ஒரு சொல் உரைத்திருந்தால் என் தந்தை மறுசொல் இன்றி மணிமுடியையும் இளையோரையும் கொண்டுசென்று அவர் காலடியில் வைப்பதற்கு தயங்கியிருக்கமாட்டார். அரைக்கணம் அவர் தயங்குவாரெனில்கூட என் அன்னை ஒருபோதும் பிறிதொன்றை எண்ணியிருக்கமாட்டார். இந்த மணிமுடியும் நாடும் அவர் கொடையென்கையில் அதிலொரு சிறு பகுதியை எடுத்து தன் அன்னைக்கு அவர் கொடுப்பதில் என்ன பிழை?” என்று துரியோதனன் கேட்டான். “அவர் மீண்டும் தன் அன்னை முன் தன் மணிமுடியையும் உறவையும் அல்லவா துறந்திருக்கிறார்?”

துச்சாதனன் “எந்நிலையிலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இந்நாட்டையும் முடியையும் உங்களுக்கு அளித்தாரெனில்கூட அக்கொடையை காத்து நிற்பது அவருடைய பொறுப்பு. அன்னைக்கு அளித்த சொல்லுறுதியினூடாக அவர் உங்களை கைவிட்டிருக்கிறார்” என்றான். துரியோதனன் “இது அவருடைய நிலம். இதில் அவர் உகந்து எனக்கு அளிப்பதே என்னுடையது. இவ்வண்ணமேனும் அவர் எனக்கு அளித்தாரென்பது எனக்குப் பெருமை. அன்னையைக் கடந்து என்னை ஏற்றார் என்பது என் பிறவிப்பயன்” என்று துரியோதனன் சொன்னான்.

துச்சாதனன் கசப்புடன் “அவர் நாளை அர்ஜுனனை கொல்வதாக வஞ்சினம் உரைக்கிறார். அது நிகழப்போவதில்லை. மீண்டும் அவரது கொடையை நம்பியே அவர்கள் வருவார்கள். அர்ஜுனனின் உயிரை வேறு எவ்வகையிலேனும் மன்றாடி பெறுவார்கள். அதையும் அவர் கொடுப்பார். தன்னிடம் இரப்பவனிடம் இல்லையென்று சொல்ல அவரால் இயலாது என்று அறிந்திருக்கிறார்கள். அவ்வாயிலினூடாகவே உள்நுழைவார்கள். அவரை அழித்து நம்மை வெல்வார்கள்” என்று சொன்னான்.

துரியோதனன் “நான் ஊழுடன் விளையாடிக்கொண்டிருக்கிறேன். ஊழின் கருநீக்கங்கள் என்ன என்பதை கணக்கிடுவதை கைவிட்டுவிட்டேன். ஊழுடன் ஒப்ப நின்று பொருதுவதற்கான ஆற்றலையும் உளநிலையையும் மட்டுமே திரட்டிக்கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை நாள் இப்போர் தொடருமென்று தெரியவில்லை. வென்றவருக்கு என்ன எஞ்சுமென்றும் இப்போது சொல்லக்கூடவில்லை. வென்றவரும் தோற்றவரும் நிகரென்று தெய்வங்கள் முன் நின்றிருக்கும் நிலையை இப்போதே நாம் வந்து அடைந்துவிட்டோம்” என்றான். “இளையோனே, என் முதல் தம்பி களம்பட்ட அன்றே நான் முற்றிழந்தவனாகிவிட்டேன். எஞ்சியிருப்பது வந்த நிலையை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பும், பொருத எழுந்தபின் ஒருபோதும் தணியவில்லை என்னும் இறுமாப்பும் மட்டுமே. பிறிதொன்றும் என்னிடம் சொல்லத் தேவையில்லை.”

துரியோதனன் உடலை நீட்டி கைவிரித்து அலுப்பொலி எழுப்பி “என் வாழ்வை இன்று இக்களத்தில் அங்கர் கையில் அளிக்கவில்லை. வில்லுடன் அவர் அக்களத்தில் எழுந்த அன்றே அளித்துவிட்டேன். இதுவரை அவர் அளித்த அனைத்தும் அவரது கொடை. இனியும் அவர் அளிப்பது எதுவோ அதுவே என் வாழ்வு” என்றபின் கண்களை மூடிக்கொண்டான். துச்சாதனன் திகைப்புடன் துரியோதனனை நோக்கியபடி அசைவற்று நின்றான்.

தொடர்புடைய பதிவுகள்

திராவிட இயக்கம் -கடிதம்

$
0
0

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…

திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்

திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்

 

 

டியர் ஜெ.மோ

 

வணக்கம். திராவிட இயக்கம் திராவிட இயக்கத்தார் இலக்கியம் குறித்த உங்கள் கடிதங்கள் வாசித்தேன்.

 

அது குறித்து சிலச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அண்ணாவின் பார்வதி பாய் பி.ஏ நாவல் குறித்து நீங்கள் எழுதி இருந்தீர்கள். அந்த நாவல் எனக்கு முதுகலையில் தற்கால இலக்கியத்தில் வாசிப்புக்கு இருந்த து. அந்த நாவலை வாசித்துவிட்டு அதிர்ச்சி அடைந்த நான் விடுமுறையில் மும்பை வந்திருந்தப் போது என் அப்பாவிடம் (பி.எஸ். வள்ளி நாயகம்) அண்ணா சிறந்த நாவலாசிரியர் இல்லை.. என்று சொல்லிவிட்டேன்! அதுவும்’பேச்சு வாக்கில் சொன்னது தான். என் அப்பாவுக்கு கடும் கோபம் வந்துவிட்ட து.

 

“எங்க அறிஞர் அண்ணாவை விமர்சிக்கிற அளவுக்கு நீ வளர்ந்திட்டாயா..?உனக்கு ரொம்ப படிச்சிட்டோம்னு இப்பவே நினைப்பு வந்திடுச்சா…. பற்களைக் கடித்துக் கொண்டு கோவத்தில் கண்கள் சிவக்கப் பேசிய அப்பா .. இப்போதும் என்னைத் துரத்துகிறார்..!அப்பாவிடம் எவ்வளவொ விளக்கம் சொல்ல முயற்சி செய்தேன். அவர் கேட்கும் மன நிலையில் இல்லை. ஒரு அக்மார்க் திமுக  கார ர்கள் எப்போதுமே இப்படித்தான் இருப்பார்கள் இருக்கிறார்கள் என்பதை வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் அனுபவித்திருக்கிறேன்.

 

அப்பாவின் கோபம்.. முதுகலையில் நான் மெரிட்டில் தேர்ச்சி பெற்று கோல்ட் மெடல் வாங்கியப் பிறகும் மாறவில்லை.என் மேற்படிப்பு  தொடரவில்லை!மேலும் ஜெயகாந்தனை வாசிக்கும் வாசகர் வட்ட த்தை,ஏன் இன்று ஜெ.மோவை வாசிக்கும் வாசகர்களில் சிலரையேனும் உருவாக்கியதில் திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பு அதிகமுண்டு.

 

திராவிட இயக்கத்தினரின் இலக்கியம் குறித்த உங்கள் கருத்துகளில் உடன்படும் நான் அவர்களின் பத்திரிகைகள், நாடகங்கள் குறித்த மதிப்பீட்டை குறைத்து மதிப்பிடமுடியுமா என்ற கேள்வியை முன் வைக்கிறேன்.நாடகத்தின் போக்கு உள்ளடக்கம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள் திராவிட இயக்கத்தார்.அண்ணா எழுதிய துரோகி கப்லான்,  ஜன நாயக சர்வாதிகாரி, சகவாச தோசம் ஆகிய நாடகங்கள் வித்தியாசமானவை. மேலும் எம் ஆர் இராதா, திருவாரூர்தங்கராசு, என் எஸ் கிருஷ்ணன் நாடகங்களும் முக்கியமானவை. இந்த  நாடகங்களின் பங்களிப்பு இலக்கியப் பங்களிப்பில் இடம் பெறாதா?

 

திராவிட இயக்கத்தாரின் பத்திரிகைகள்..எனக்குத் தெரிந்து 70க்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவந்திருக்கின்றன. ஒரு இதழை எனக்குத்தெரிந்தே 5 முதல் 20 பேர் வரை ஓசியில்வாசிப்பார்கள். அதில் இலக்கியம் இல்லைஎன்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவைவாசிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியது.  அதற்கு முன்பு வரை இலக்கியம் என்பது மேட்டுக்குடிக்கானதாக இருந்த து மாறி இலக்கிய வாசகனை அடிமட்ட நிலையிலும் உருவாக்க ஒரு காரணமாக இருந்த தாக நினைக்கிறேன்.அண்ணாவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு அவர் சில தளங்களை மீட்டெடுக்கிறார்.

 

அதாவது வெள்ளையரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராகவேத இந்தியாவின் கலாச்சாரமும் மேன்மையும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதி போன்றவர்கள் கொண்டாடும் ஆரியதேசம்  இந்தவகைப்பட்டதுதான். ஆனால் அறிஞர் அண்ணா இந்த திசையை தன் இயக்கத்தின் ஆணிவேராக மிகச்சரியாக அடையாளப்படுத்திக்கொண்டார். இந்தியா என்ற ஒரு தேசம் பிறப்பதற்கு முன்பே தமிழர்களுக்கான தேசமும் தமிழ்த்தேச அரசியலும் தமிழ் மண்ணில் இருந்தது என்பதை 2000 வருடத்திற்கு முந்திய சங்க இலக்கியத்திலிருந்தும் மற்றும் இடைக்கால தமிழ்க் காவியங்களிலிருந்தும் எடுத்துக்கொண்டார். தமிழனின் சங்க காலத்தைப் பொற்காலமாகவும் தமிழ் மொழியையும் இனத்தையும் அப்பொற்காலத்தின் அடையாளமாகவும் காட்டியதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் உலகத்தில்  மிக எளிதாக தாக்கத்தை ஏற்படுத்தினார்.

 

இது எப்படி சாத்தியப்பட்டது என்றால் அண்ணாவின் திமுக காலத்திற்கு முந்திய ஆதிதிராவிடர் எழுச்சியும்உரிமைப்போராட்டங்களும் அக்காலத்தில் நீதிக்கட்சி வழங்கிய கல்விச்சலுகைகளும் பெரியாரின் திராவிடர் இயக்கம் ஏற்படுத்திய தாக்கங்களும் கிராமப்புற இளைஞர்களிடம் ஏற்கனவே மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. கிராமப்புறங்களில் பள்ளிக்கூட ஆசிரியர்களாக இருந்த அக்கால இளைஞர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வாசிக்க கிடைத்தவை பெரும்பாலும் இவர்கள் எழுதியவையும் இவர்கள் மேற்கோள் காட்டிய செய்திகளும்தான்.

 

 

இக்கிராமப்புற இளைஞர்களை  சொந்த ஊரில் நிலவுடமை சமூகமாக இருக்கும் ஆதிக்கச்சாதியினர்மதித்ததில்லை. பணிபுரியும் இடத்திலும் இவர்களுக்கு மரியாதை இல்லை. இப்படியாக தமிழ்மொழிக் கற்ற இவர்கள் ஒதுக்கப்பட்ட சூழலில் பேசப்பட்ட தமிழின் பெருமையும் தமிழரின் பொற்காலமும் இவர்களை அந்த பெருமையின் அடையாளமாக உணரச் செய்தது.கனவிலும் கிராமப்புறத்தில் தலைமைத்துவ இடத்திற்கு வரமுடியாது என்ற நிலையில் இருந்த இவ்விளைஞர்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம்கிராமத்தில் தங்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.

 

இக்காலக்கட்டத்தைப் பற்றி ஆய்வு செய்திருக்கும் ஜேக்கப் பாண்டியன் அவர்கள் கிராமங்களில் 60க்குப்பின் ஏற்பட்ட இம்மாற்றத்தில் தலைமைத்துவ இடத்திற்குஆதிக்கச்சாதியைச் சார்ந்த இளைஞரும் அவருக்கு ஆதரவாக பிற சாதி இளைஞர்களும் இருந்தார்கள் என்று சொல்கிறார்.அண்ணா அரசியலுக்காக எழுதினார்.அரசியலுக்காக கதை புதினம் நாடகம் ஏன் கவிதைகூட எழுதிப் பார்த்திருக்கிறார்.

 

இன்னொரு சின்ன சந்தேகம்…புதுமைப் பித்தன்  கவிஞர் பாரதிதாசனின் புரட்சிக்கவி காப்பியத்திற்கு எழுதிய அணிந்துரை வாசிக்க கிடைக்கிறது.புதுமைப்பித்தனை நேசிக்கிறவர்கள் இதைப் பற்றிஎழுதுவதில்லை. பாரதிதாசன் வகையாறாக்களுக்கும்புதுமைப்பித்தன் எழுதியதை மறந்தும் பேசுவதில்லை.இதையும் எங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

 

அன்புடன்,

 

புதியமாதவி,

மும்பை.

 

பி.கு: உங்கள் வலைத்தளத்தில் என் கடிதம் காந்தி பற்றி எழுதியதை வாசித்த உங்கள் வாசகர் திரு.எஸ். வேலுமணி அவர்கள் சென்னையிலிருந்து “இன்றைய காந்தி” உங்கள் புத்தகம் அனுப்பி

தந்தார். வாசித்துக் கொண்டிருக்கிறேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை.

 

அன்புள்ள புதியமாதவி,

அதை என் கட்டுரையிலேயே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஒர் இயக்கத்தின் கொடையை வரையறைசெய்யும் போது மிகையின்றி பார்ப்பது இங்கு நிகழ்வதில்லை என்பதே நான் சொல்வது. தமிழ் அடையாளம், தமிழ்அரசியல் இரண்டுமே திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்னரே இங்கு மிக வலுவாக உருவாகி நிலைகொண்டவை. பேரறிஞர்களாகிய முன்னோடிகள் அதற்கு உண்டு. உண்மையில் திராவிட இயக்கம் தமிழியக்கத்தைப் பொருட்படுத்தாததாக அதை ஏளனம் செய்வதாகவே இருந்தது. பழைய தமிழ்நூல்கள், குறிப்பாக திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நூல்களில் திராவிட இயக்கம், திராவிட இனம் என்னும் கருத்தாக்கம் ஆகியவற்றை கடுமையாக கண்டிக்கும் பகுதிகளைக் காணலாம். சி.என்.அண்ணாத்துரை அவர்கள் தமிழியக்கத்தின் பார்வைகளை, கருத்துக்களை எடுத்து பரப்பியக்கம் ஒன்றை கட்டமைத்தவர். அப்பரப்பியக்கத்தின் கொடைகளை அவருடைய சாதனைகளாகக் காணலாமே ஒழிய தமிழியக்கத்தின் கொடைகளை அவருடையவை எனக்காட்டுவது வரலாற்று மறுப்பு நோக்கு மட்டுமே.

 

நாடகத்தைப் பொறுத்தவரை அதையும் இரண்டாகவே பிரிக்கவேண்டும். தமிழின் சீரிய நாடகமரபு ஒன்று உண்டு. இன்னொன்று பரப்பியல்நாடக இயக்கம். சி.என்.அண்ணாத்துரையின் கொடை பரப்பியல் நாடகத்தளத்திலேயே ஒழிய சீரிய நாடக இயக்கத்தில் அல்ல. சீரிய நாடக இயக்கத்தை இன்னும் நாம் தெளிவாக வரையறைசெய்துகொள்ளவில்லை. நான் அதை எஸ்.வி.சகஸ்ரநாமம் முதல்தான் தொடங்குவேன்.

 

ஜெ

திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலையாளப்பாடல்கள் -கடிதம்

$
0
0

 

யக்ஷிப்பாலை -கடிதங்கள்

அழியா வண்ணங்கள்

யட்சிப்பாலை

அன்புள்ள ஜெயமோகன்,

 

இன்று உங்கள் தளத்தில் ஒரு வாசகர் எழுதியிருந்த கடிதத்தை வாசித்தேன். அதில் அவர் நீங்கள் மலையாளத் திரைப்படப் பாடல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை மொழிபெயர்த்து வெளியிடுவதை தான் வாசிப்பதில்லை என்று கூறி, ஏன் அவற்றை வெளியிடுகிறீர்கள் என்று உங்களைக் கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் பதில் கூறியிருந்தீர்கள்.

 

அவர் கூறியிருப்பது தவறு. நான் விரும்பி வாசிக்கிறேன். அதேபோல வேறு வாசகர்களும் வாசிப்பார்கள். எனவே நீங்கள் தொடர்ந்து மலையாளத் திரைப்படப் பாடல்களை அறிமுகப்படுத்துங்கள். வயலார், ஓ.என்.வி. ஆகியோரது பாடல்களை நீங்கள் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம்.

 

Hindilyrics.net என்று ஒரு இணையதளம்  இருக்கிறது. அதில் இந்திப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அது இந்திப் பாடல்களின் அர்த்தம் புரிந்து ரசிக்க எனக்கு உதவுகிறது. அதேபோல மலையாளப் பாடல்களுக்கும் யாராவது இணையதளம் தொடங்கி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் பிற மொழிக்காரர்கள் அப்பாடல்களைப் பொருள் உணர்ந்து ரசிப்பார்கள். தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் நான் வரவேற்பேன். வயலார், ஓ.என்.வி., இன்னும் பிற மலையாளக் கவிஞர்களின் திரைப்படப் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, நூல்களாகவே வெளியிடலாம். தமிழ் மக்கள் நிச்சயம் வாங்கிப் படிப்பார்கள்.

 

தமிழ்த் திரைப்படப் பாடல்களிலிருந்து, மலையாளத் திரைப்படப் பாடல்கள் வேறுபட்டவையாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கின்றன. மலையாளப் பாடல்களின் கவித்துவம் எனக்குப் பிடித்திருக்கிறது. வைரமுத்து எனக்கு அலுத்துவிட்டார். இன்னொரு கண்ணதாசனின் உதயத்திற்காகக் காத்திருக்கிறேன்.

 

அன்புடன்,

 

ஜி.சுந்தர்

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் தளத்தில் இன்றைய தமிழ் வாசகர்கள் மலையாளப்பாடல்களை விரும்ப மாட்டார்கள், ஆகவே அவற்றை மொழியாக்கம் செய்யவேண்டியதில்லை என ஒருவர் எழுதியிருந்த்தைப் பார்த்தேன்

 

எனக்கு மலையாள இசையில் ஆர்வம் இல்லை. ஆனால் நான் உங்களைக் கவனமாகப் பின்தொடர்பவன். ஆகவே நீங்கள் செல்லும் ஊர்கள், உங்கள் அன்றாட வாழ்க்கை, உங்கள் மன அலைச்சல்கள் எல்லாமே எனக்கு முக்கியம். உங்கள் மலையாளப்பாடல்களை அவ்வாறுதான் நான் பார்க்கிறேன்

 

ஆனால் அப்படியே ஆரம்பித்து இன்றைக்கு மலையாளப்பாடல்கள் மேல் எனக்கு பெரிய பித்தே உண்டு. அது கதகளிமேல் ஆர்வமாக ஆகியது. கதகளி வீடியோக்களைப் பார்க்கிறேன். கேரளா சென்று கதகளி பார்த்த்தேன். நீங்கள் அழியாவண்ணங்களில் சினிமாப்பாட்டு பற்றி மட்டும் எழுதவில்லை. அன்றைய இசையுலகு கதகளி உலகு பற்றிய செய்திகளை சினிமாப்பாட்டு எப்படி காட்டுகிறது என எழுதுகிறீர்கள். அந்தச் சினிமாப்பாட்டுகள் வழியாக எவ்வளவு மேதைகள் நினைவுகூர்படுகிறார்கள் என காட்டுகிறீர்கள். மிகப்பெரிய கலாச்சாரப் பதிவு அது

 

வெண்முரசு விவாதங்கள் தளத்தில் வெளியான கர்ணா தயாலு என்ற பதம் மிகமிக அற்புதமானது.  கர்ணனாக நடித்த அந்த நடிகர் ஒரு மேதை. என்ன ஒரு முகபாவனைகள். என்ன ஒரு நுண்ணிய நடிப்பு. கிளாஸிக்

 

எம்.ராஜேந்திரன்

கர்ணா தயாளு…

சென்னித்தல செல்லப்பன் நாயர்

பஞ்சமியோ பௌர்ணமியோ!

பிரம்மானந்தன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அடி!அடி!அடி!

$
0
0

எழுதாப்பயணம் நூல் வாங்க

 

ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை

 

லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் என்னும் நூலில் அந்தக் காட்சியை வாசித்தபோது கைகள் நடுங்கியது. நம் இன்றைய கல்விமுறை, நமது உணர்வற்ற மொண்ணைத்தனம் ஆகிய அனைத்தையும் காட்டும் ஒரு நிகழ்வு. ஒரு புனிதர் மலையுச்சியிலிருந்து இறங்கி  நம் இல்லத்து வாயிலில் வந்து நின்று நம் பழிகளின் பொருட்டு தன்னை அடித்துக்கொள்வதுபோலத் தோன்றியது. .

 

ஆட்டிசம் பற்றி இப்போது பரவலாகவே விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அதற்கு தாரே ஜமீன்பர் என்னும் படம் ஒரு காரணம். நாளிதழ்கள் செய்திக்கட்டுரைகளை வெளியிடுகின்றன. சிறிய அளவிலேனும் நடுத்தரவர்க்கத்தினர் ஆட்டிசம் உடைய குழந்தைகளை தனியாகக் கவனிக்கவும் பயிற்றுவிக்கவும் முயற்சிகள் எடுத்துக்கொள்கின்றனர்.

 

ஆனால் ஆட்டிஸம் உடைய குழந்தைகள் மீதான பொதுச்சமூகத்தின் உளநிலை பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதாகச் சொல்லமுடியாது. ஆட்டிஸக்குழந்தைகளின் பெற்றோர் அடையும் போராட்டங்களும் உற்றார் உறவினரிடமிருந்து அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களும் புறக்கணிப்புகளும் அப்படியேதான் தொடர்கின்றன. அவை அகல ஒரு தலைமுறைக்காலம் ஆகும்

 

ஆனால் ஆட்டிசம் பற்றிய இந்த விழிப்புணர்வே பொதுவான வாசிப்புப் பழக்கம் இல்லாத நம் சமூகத்தில் மிக அரிதான ஒரு நிகழ்வுதான். அதற்குக் காரணம் கூட்டுக்க்குடும்ப அமைப்பு சிதைந்து குழந்தைகளை மையமாகக் கொண்ட குறுங்குடும்ப அமைப்பு உருவானதும், குழந்தைகளின் படிப்பை ஒரு வகையான போட்டியாக நாம் உருமாற்றிக்கொண்டிருப்பதும்தான்.

 

ஆகவே ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளைப் பற்றி தேவைக்குமேல் பதற்றம் கொண்டிருக்கிறார்கள். சிறிய சிக்கல்களுக்கே கொந்தளிப்படைகிறார்கள். தங்கள் குழந்தை சற்றே வேறுமாதிரி இருந்தால்கூட ஐயம் கொண்டு அலைக்கழிகிறார்கள். அந்தக் கற்பனைப் பதற்றம் வழியாகவே ஆட்டிஸம் மற்றும் கற்றல்குறைபாடுகள் கொண்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகள் சென்றுசேர்கின்றன என நினைக்கிறேன்

 

ஆட்டிஸம் பற்றிய விழிப்புணர்வை தமிழில் உருவாக்கியமைக்கு எஸ்.பாலபாரதி அவர்களுக்குப் பெரும்பங்குண்டு. அதன்பொருட்டு சென்ற ஆண்டு விகடன் விருதும் பெற்றிருக்கிறார். அடிப்படையில் எழுத்தாளரும் இதழாளருமான பாலபாரதியின் குழந்தையான கனி ஆட்டிஸம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கைச்சிக்கலை ஒரு சமூகச்சிக்கலாக புரிந்துகொண்டு தன் மீட்புக்காக மட்டுமன்றி சமூகத்தின் மீட்புக்காகவும் போராடுபவர்கள் மிக அரிதானவர்கள். பாலபாரதி அத்தகையவர்.

 

கனியின் அம்மா லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய சிறுநூல்  ‘எழுதாப்பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்’. ஆட்டிசம் பற்றி எழுதப்பட்ட தன்கதை. இந்நூலின் முதன்மையான சிறப்பே இது ஓர் அன்னையின் அனுபவம் என்பதுதான். சிக்கலில்லாத நடையில், செயற்கையான சொல்லாட்சிகளோ பாவனைகளோ இல்லாமல். நேரடியாக உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஆட்டிசம் பற்றிய நூல் என்பதற்கு அப்பால் ஒரு வாழ்க்கைச்சித்திரம் என்றவகையிலும் முக்கியமானது இந்நூல்

 

இத்தகைய நூல்களின் முதன்மைத்தேவை இதை பொதுவான வாசகர்கள் வாசிக்கமுடியும் என்பதே, ஏனென்றால் இது ஒரு வாழ்க்கைக்கதை. ஆட்டிசக் குழந்தையின்பெற்றோர் கூடுதல் செய்திகள் கொண்ட நூல்களை விரும்பக்கூடும். ஆனால் பொதுவானவர்களும் ஆட்டிசம் பற்றி அறிந்திருக்கவேண்டும். அது ஓர் ஆட்டிசக்குழந்தையை எப்படிப் புரிந்துகொள்வது என்று காட்டும். ஆட்டிசக்குழந்தையை அடையாளம் கண்டுகொள்வது பெரும்பாலும் கொஞ்சம் விலகிநின்று பார்க்கும் பிறர்தான்.

 

ஆட்டிஸம் கொண்ட குழந்தையின் அன்னையின் முதற்சிக்கலே தன் குழந்தைக்கு ஒரு சிக்கல் உள்ளது என்பதை ஒப்புக்கொள்வதுதான். அது உருவாக்கும் கொந்தளிப்பை சுருக்கமாக என்றாலும் ஆழமாகப் பதிவுசெய்திருக்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். அதை அறியும்போது முதலில் உருவாவது தாழ்வுணர்ச்சி. பிறர் முன் தன்குழந்தையை முன்வைக்கத் தயங்குதல் ஊரார் பார்வை பற்றிய எண்ணம். அதன்பின் குற்றவுணர்ச்சி.

 

அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும்போது மேலும் பெரிய சிக்கல். அந்த அன்னையும் தந்தையும் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தங்கள் முழு ஆளுமையையும் மறுவரையறை செய்யவேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தக் குழந்தைக்காகவே செலவழிக்கவேண்டியிருக்கிறது. அது உருவாக்கும் உணர்வு அழுத்தங்களை தாங்கவும் அது பிறசெயல்களைப் பாதிக்காமலிருக்கவும் பயிலவேண்டியிருக்கிறது

 

லக்ஷ்மி தன் மகனைப் புரிந்துகொள்ள முயல்கிறார். ஆட்டிசம் பற்றி நிறையப் படிக்கிறார். பயிற்சிவகுப்புகளுக்குச் செல்கிறார். குழந்தையின் ஆட்டிஸத்தையும், அதைமீறி வெளிப்படும் அதன் தனித்தன்மைகளையும் உள்வாங்கிக்கொள்கிறார். இந்நூலின் மிகச்சிறப்பான பகுதி அவர் மெல்லமெல்ல தன் குழந்தையை வரையறைசெய்துகொள்வதுதான். ஆட்டிசம் குறித்த நூல் இது என்பதையும் கடந்து இந்நூலை எழச்செய்வது இந்தக் கூறு.

 

உண்மையில் அத்தனை அன்னையரும் தந்தையரும் இதேயளவுக்கு கூர்ந்துநோக்கி  தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொண்டு வரையறைசெய்ய முயலவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கனி ஆட்டிசம் கொண்ட குழந்தை என்பதனால்தான் அம்னையின் கூர்நோக்கு இந்த அளவுக்கு கிடைக்கிறது. அவனை தன்னைநோக்கி இழுக்காமல் தான் அவனைநோக்கிச் செல்ல லக்ஷ்மி முயல்கிறார். அவ்வாறன்றி அவன் ஒரு ‘சாதாரண’ குழந்தையாக இருந்தானென்றால் இந்த கவனம் அவனுக்குக் கிடைத்திருக்காது. ஏற்கனவே அன்னையும் தந்தையும் வைத்திருக்கும் சட்டகங்களுக்குள் அவனை கொண்டுசென்று அழுத்தி உருமாற்றிப் பூட்டவே நம் குடும்ப அமைப்பும் கல்வியமைப்பும் புரிந்திருக்கும்

 

ஆட்டிஸக் குழந்தையின் சற்றே வேறுபட்ட மூளை வெளியுலகை வேறு ஒரு கோணத்தில் அணுகிப்புரிந்துகொள்வதிலிருக்கும் விந்தைகளை, புதிய வாய்ப்புகளை இந்நூல் அறிமுகம் செய்கிறது. உதாரணமாக, சொற்களை மிகவிரைவாகக் கற்றுக்கொள்ளும் திறனாகிய ‘ஹைப்பர்லெக்ஸிக். கனிக்கு உள்ளது. அது ஒரு குறைபாடு, ஏனென்றால் அவன் கற்றுக்கொள்வது சொற்கள்தான், சொற்களுடன் பொருளும் சொற்களுக்கிடையேயான தொடர்புகளும் பிடிகிடைப்பதில்லை.

 

இந்நூலில் நம் அமைப்புக்கள் சற்றே வேறுபட்ட குடிமகன்கள்மேல் எத்தனை புறக்கணிப்பான நோக்கு கொண்டிருக்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். இன்றுகூட சற்று உடல்குறைபாடுள்ளவர், முதியவர் ஏறமுடியாதவையாகவே நம் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் கல்லூரிகள் அனைத்துமே முந்துபவர்களுக்கு மட்டும் உரியவை. சற்று கறுப்புநிறம் கொண்டவர்களே கல்லூரிகளில் சிறுமையடைகிறார்கள். குள்ளமானவர்கள் திக்குவாய்கொண்டவர்கள் தூக்கி மூலையில் வீசப்படுகிறார்கள். ஆட்டிஸம் கொண்டவர்களின் நிலை எதிர்பார்க்கத்தக்கதே

 

பாலகிருஷ்ணனும் லக்ஷ்மியும் பலதொடர்புகள் கொண்டவர்கள். ஆட்டிஸக் குழந்தைகளுக்காக பொதுவாகவே போராடுபவர்கள். சட்டம் அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் கனியை வெவ்வேறு திறன்வாய்ந்த ஆய்வாளர்களிடமும் பயிற்சியாளர்களிடமும் கொண்டுசெல்கிறார்கள். பல்வேறு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் புறக்கணிப்பை, பொறுப்பின்மையை, கூர்மையின்மையையே சந்திக்கிறார்கள்.

 

உதாரணமாக, தனித்தன்மை கொண்ட குழந்தையாகிய கனி தாயிடமிருந்து பிரித்து எடுத்துக்கொண்டுசென்று பயிற்சி அளிக்கப்படுவதை விரும்பவில்லை. அவன் கதறி அழுகிறான். அன்னை உடனிருக்கையில் இயல்பாக இருக்கிறான். அன்னையும் பயிற்சியில் உடனிருப்பதில் பிழையில்லை, அது மிக உதவியானதும்கூட. ஆனால் பல பயிற்சியாளர்கள் இந்தச் சிறிய விஷயத்தைக்கூட கவனிப்பதில்லை. அவனை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்று கதறி அழச்செய்து திருப்பியளிக்கிறார்கள். அந்த அழுகைக்கான காரணத்தைக்கூட புரிந்துகொள்ளவில்லை. இதில் பெரும்பணம் பெற்றுக்கொள்ளும் உயர்நிலை பயிற்சியாளர்களும் உண்டு

லக்ஷ்மியும் பாலகிருஷ்ணனும் கனியை தொடர்ந்து கவனிக்கிறார்கள். அவன் மெய்யாகவே கற்றுக்கொள்கிறானா, அவனைத் துன்புறுத்துகிறார்களா என்பதை அறிந்து அவனை இடமாற்றம் செய்கிறார்கள். அது பல பெற்றோர் செய்யாதது. மெல்லமெல்ல சரியாகிவிடும் என நினைத்து குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். ஏனென்றால் உள்ளத்தின் அழுதத்தில் இருந்து விலகிக்கொள்ளவே பெரும்பாலும் மானுடர் முயல்கிறார்கள்.

 

இந்நூல் தனியார்பள்ளிகள் எந்த அளவுக்கு இரக்கமற்றவையாக, பயிற்சியற்ற ஆசிரியர்கள் கொண்டதாக இருக்கின்றன என்பதை காட்டுகிறது. அரசுப்பள்ளிகளில் கனி பயில்கிறான். அங்கே ஆசிரியைகள் பொறுமையின்மை கொண்டிருந்தாலும் குழந்தைகள் அன்பாக இருக்கின்றன.

 

சர்வ சிக்ஷா அப்யான் என்னும் திட்டம் அனைவருக்கும் கல்வி என்னும் இலக்கை கொள்கையாகக் கொண்டது. அதனடிப்படையில் எவருக்கும் எந்நிலையிலும் கல்வி மறுக்கப்படலாகாது. தனித்தன்மைகொண்ட குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளிகளும் இடமளித்தாகவேண்டும், அவர்கள் கற்பிக்கத்தேவையான அனைத்தையும் செய்தாகவேண்டும். ஆனால் தனியார்பள்ளிகள் சட்டத்தைப் பொருட்படுத்துவதில்லை. அரசுப்பள்ளிகள் ஓரளவு ஒத்துழைக்கின்றன

 

இந்நூல் கனி மெல்லமெல்ல எழுவதைச் சித்தரிக்கிறது. மிகமிக மெதுவாக சிறகு கொள்ளும் பறவை. அதற்குப்பின்னால் கிட்டத்தட்ட ஒரு தவம்போல நிகழும் அன்னையின் தந்தையின் அக்கறையும் பேரன்பும் உள்ளது. எந்தத் தவமும் அதற்கான பெறுமதி கொண்டதே. இக்குழந்தையினூடாக அவர்கள் எவ்வகையிலோ தாங்களும் வாழ்க்கையை பொருள்பொதிந்ததாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது

 

பாலபாரதி இணையதளம்

 

மலர்வனம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் இணையதளம்

 


ஆட்டிசம் – கடிதங்கள்

முற்றிலும் குணமாகக் கூடியதா ஆட்டிசம்?

ஆட்டிசம் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? –மொபைல் செயலி  அறிமுகம்

ஆட்டிஸம்: அவர்கள் இயல்பில் இருக்கவிடுங்கள்!

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புதுவை வெண்முரசு விவாதக்கூட்டம்

$
0
0

 

அன்புள்ள நண்பர்களே , 

 

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 25 வது கூடுகையாக “ஏப்ரல் மாதம்” 25.04.2019 வியாழக்கிழமை அன்று மாலை6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாகஅன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி ஐந்து “நெற்குவைநகர்” ,21 முதல் 25 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர் இரா.விஜயன் உரையாற்றுவார்

 

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன் “

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு:

9943951908 ; 9843010306

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-15

$
0
0

மூன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதராகிய காமர் வெண்கல்லாக அமர்ந்திருந்த புதனையும் வெண்சங்கு வடிவில் அருளிய திருமாலையும் வணங்கி தன் கையிலிருந்த நந்துனியின் நரம்புகளை சிறு வெண்கலக் கம்பியால் மீட்டி, நூறு வண்டுகள் ஒன்றையொன்று சுழன்று துரத்தும் இசையை எழுப்பி, அதன் மெல்லிய சுதிக்கு தன் நெஞ்சுக்குள் மட்டுமே ஒலித்த முதல் நாதத்தை பொருத்தி, மெல்ல மூக்குக்கு எடுத்து உதடுகளில் அதிரச்செய்து, குரலென்று வெளிக்கிளப்பி முதற்சொல்லை எடுத்தார். “ஓம்!” எனும் அவ்வொலி நந்துனியின் இசையின் மீது ஏறிக்கொண்டது. தழுவிப்பறக்கும் இரு வண்டுகள் என சுழன்று வானில் நின்றது. பின்னர் நந்துனியின் இசையை தான் வாங்கி பெருகி ஒற்றை சொல்லென்று நிலைகொண்டது. “ஓம்! ஓம்! ஓம்!” என்றார் காமர். “ஆம், இது நிகழ்ந்தது! இவ்வாறே நிகழ்ந்தது! ஆம், இவ்வாறே எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது! ஆம், இது ஒன்றே மெய்மை! ஆம், இது என்றும் நிலை கொள்க! ஆம்! ஆம்! ஆம்!” என்று பாடி உரையெடுத்து கதை சொல்லத்தொடங்கினார்.

சூதரே, தோழரே, கேளுங்கள். நெடுங்காலத்துக்கு முன் இது நிகழ்ந்தது. கதிரோன் ஒளியை தன் கரிய உடலெனக் கொண்ட பேரழகனாகிய அங்கநாட்டரசன் கர்ணன் நெடுங்காலத்துக்கு முன்னர் ஒருமுறை தன் படைத்துணைவருடனும் ஏவலருடனும் அங்கநாட்டுக்குத் தெற்கே விந்திய மலைகளுக்கு அப்பால் விரிந்திருந்த தண்டகக் காட்டில் வேட்டைக்குச் சென்றான். தண்டகத்தின் மையக்காட்டில் கோடையில் வேட்டையாடுவது எந்த வில்லவனுக்கும் விழைவு எழுப்பும் வெல்விளிக்கு உரியதாக இருந்தது. ஏனெனில் ஆண்டுக்கு அரைமழை மட்டுமே பெய்யும் அந்நிலத்தில் பெருவிலங்குகள் அரிது. முள்சூடிய குற்றிலைச் சிறுமரங்கள் ஆங்காங்கே எழுந்து வான்துழாவி காற்றுக்கு வளைந்து நிற்கும். அவ்வப்போது நிலம் வெளுத்து வானம் குடைகவிந்து கண்கூசும் ஒளியெனத் தெரியும். அங்கே இரவில் எழும் விண்மீன்கள் வலைச்சரடில் இறங்கிவரும் சிலந்திகள்போல மிக அருகில் வந்து நின்றிருக்கும். வெட்டவெளியில் துயில்பவர்களின் முகத்தருகே வந்து மின்மினி என எழுந்தமைந்து விளையாடும்.

அவ்வெறும் நிலவெளியில் பறவைகள் ஆயிரம் கண்கொண்டவை. கண்சொடுக்கும் நேரத்தில் எழுந்து பறக்கவும், எண்ணங்களை முன்னறியவும், அம்புக்கு முந்தி உடல் திருப்பி தப்பவும் பயின்றவை. சிறுவிலங்குகளோ எப்பொழுதும் நடுங்கும் உடலும், நொடி ஒலிக்கே மெய்ப்பு கொள்ளும் உள்எச்சரிக்கையும், எக்கணமும் மறையும்படி நிலமெங்கும் வளைகளும் கொண்டவை. அங்கு சென்று வேட்டையாடி வெறும்வானில் வெறும்நிலத்தில் வாழ்ந்து நாற்பத்தொரு நாட்கள் தங்கி மீள்வதென்பது ஒரு நோன்பென்று கொள்ளப்பட்டது. அதை தண்டக நோன்பென்று நூல்கள் உரைத்தன. வில்பயின்றதுமே இளவரசர்களை அங்கே அனுப்புவார்கள். அந்நோன்புக்குப் பின் அவர்கள் தங்கள் வில்லம்புமீதும் கைகள்மீதும் நம்பிக்கை கொள்வார்கள். பெருந்துணையாவதும், வழிகாட்டுவதும் அதுமட்டுமே என அறிவார்கள். அங்கு சென்று மீளும் அரசர்கள் அரண்மனையில் அறுசுவை உண்டு மென்பஞ்சுச் சேக்கையில் துயில்கையிலும் அதில் மெய்மறக்காமலிருப்பார்கள்.

அந்நோன்பின் ஏழு நெறிகளில் முதன்மையானது, ஒரு விலங்கை ஒருமுறைக்குமேல் அம்பெய்யலாகாது என்பது. பிறிதொன்று, நின்றுவிட்ட விலங்கை எந்நிலையிலும் கொல்லலாகாது. மூன்றாவது, ஒருவேளை உணவை மறுவேளைக்கு எஞ்ச வைக்கலாகாது. நான்காவது, ஒருவர் உண்ண பிறிதொருவர் பசித்திருக்கலாகாது. ஐந்தாவது, நூல்கள் ஒப்பாத ஊனை உண்ணலாகாது. ஆறாவது நெறி, முட்டையிடும் பறவையையும் குஞ்சுகாக்கும் பறவையையும் சினைவிலங்கையும் பாலூட்டும் அன்னைவிலங்கையும் எந்நிலையிலும் கொல்லலாகாது. ஏழாவதாக, ஒரு விலங்கு ஒளிந்து அல்லது மரங்களில் அமர்ந்துவிட்ட பின்னர் அதை நோக்கி அம்பெய்யலாகாது என வகுக்கப்பட்டது. தண்டக நோன்பை எவ்வண்ணமேனும் முறிக்க நேர்ந்தால் மீண்டும் தண்டக நோன்புக்குச் செல்வதற்கு முன்னர் குடித்தெய்வக் கோயிலில் பதினான்கு நாட்கள் உணவும் நீரும் நீத்து பிழைநோன்பு இயற்றி தூய்மை செய்துகொள்ளவேண்டும்.

தண்டக நோன்பை ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்த்துவது கர்ணனின் வழக்கம். தண்டகக் காட்டின் உள்நிலங்களில் வணிகப்பெருவழிகள் இல்லை. மலைவேடரும் தொலைவணிகரும் உருவாக்கிய ஒற்றைக் காலடித் தடங்களாக செம்மண் பரப்பில் விரிந்து செல்லும் பாதைகளினூடாக அவன் தன் ஏழு படைத்துணைவருடன் சென்றான். மலைச்சரிவில் நின்று செம்மண் நிலத்தில் சிவந்த கோடுகளாக பரவியிருந்த பாதைகளைப் பார்த்த கர்ணன் புன்னகைத்து தன்னுடன் வந்துகொண்டிருந்த பாங்கனிடம் “நீ சூதனாயிற்றே, இந்நிலத்திற்கு ஓர் உவமை கூறு’ என்றான். சூதன் “அந்தியில் நீராடும்பொருட்டு அணியாடை கழற்றிய மங்கையின் செவ்வுடலில் பதிந்த அணித்தடங்கள்” என்றான். கர்ணன் உரக்க நகைத்து “இவ்வண்ணம் எதையோ சொல்வாய் என்று எண்ணினேன். மழைக்காலத்து சேற்றில் மண்புழு ஊர்ந்த தடங்கள் என்று எனக்குத் தோன்றியது” என்றான்.

“தாங்கள் பிறிதொன்றை சொல்லமாட்டீர்கள் என்று நானும் அறிவேன்” என்றான் பாங்கன். “பெண்களின் உடல் குறித்து ஒரு வரியும் எழாது என்பதில் எனக்கு ஐயமே இல்லை” என்று படைத்துணைவன் சொன்னான். கர்ணன் வெடித்து நகைக்க அவன் சிரிப்பில் பிறரும் இணைந்துகொண்டனர். அப்பாதையினூடாக பயணம் செய்து அவ்விரவின் தங்குமிடத்தை அடைந்தனர். கோடையில் நீர்த்தடங்கள் அனைத்தும் வற்றி, ஊற்றுகள் ஓய்ந்து, ஆறுகள் வெறும் மலைப்பாதைகள்போல் மாற, பாறைகளில் நீரோடிய உப்பின் தடங்கள் பொரிந்திருக்க நிலம் சலிப்புற்றுச் சூழ்ந்திருந்தது. அதில் புழுதிமணம் கொண்ட காற்று மூச்சென ஓடிக்கொண்டிருந்தது. அடிவட்டத்து இலைகள் அனைத்தையும் உதிர்த்து, அடுத்த வட்டத்து இலைகளை வாடவிட்டுத் தழைத்து, உச்சித்தளிரில் மட்டுமே உயிரை வைத்துக்கொண்டு மரங்கள் விண்ணோக்கி காத்திருந்தன. உதிர்ந்த சருகுகள் காற்றில் அள்ளப்பட்டு பாறைச்சரிவுகளின் அடியில் குவிக்கப்பட்டிருக்க அவற்றினூடாக ஓணான்களும் அரணைகளும் பாம்புகளும் சலசலத்து ஓடும் ஒலி எழுந்துகொண்டிருதது.

முள் புதர்கள் மலைக்காற்றில் பல்லாயிரம் நாகங்களென சீறிக்கொண்டிருக்க அந்தக் காடு நான் மானுடருக்குரியவனல்ல என்று கூறிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் வெளியேறுக எனும் எச்சரிக்கை இருந்தது. மலைப்பள்ளங்கள் அணுகாதே என விம்மலோசையில் முழங்கின. பாறை வெடிப்புகள் பசி கொண்டு வாய் திறந்திருந்தன. எங்கோ மலைநரி ஒன்றின் ஊளை துயரின் ஒலிவடிவென எழுந்தமைந்தது. உச்சிமலைப் பாறைகள் எக்கணமும் அதிர்ந்து நிலம் நோக்கி எழும் விழைவு கொண்டவைபோல் அச்சுறுத்தின. அவர்கள் சாய்ந்த பாறை ஒன்றின் அடியில் படிந்த மென்பூழியில் தங்கினார்கள். அன்று முழுக்க செய்த பயணத்தில் அவர்களின் கையிருப்பு நீர் தீர்ந்துவிட்டிருந்தது. கால்கள் வெடித்து புழுதிபடிந்து கிழங்குகள் போலிருந்தன. ஒவ்வொருவராக அந்தக் குளிர்ந்த பூழியில் விழுந்து அலுப்பொலி எழுப்பினர்.

கர்ணன் தன் வில்லுடன் எழுந்து பாறைகளிலிருந்து பாறைகளுக்குத் தாவி, இடுக்கில் முளைத்த புல்லை தின்றுகொண்டிருந்த முயலை கண்டான். காலடி கேட்டு அவனிடமிருந்து தப்பி ஓடிய முயல் பாறை முனையிலிருந்து தன் வளை நோக்கித்தாவும் கணத்தில் காற்றிலேயே அம்பை எய்து அதை கொன்றான். அன்று அந்திக்குள் அவன் மூன்று குழிமுயல்களை கொன்றான். அவ்வூனை எண்மரும் பகிர்ந்து உண்டு பசியாறிவிட்டு பாறைகளின் மேல் விண்மீன்கள் செறிந்த வானை நோக்கியபடி படுத்துக்கொண்டனர். பசி அடங்காததால் அவர்களுக்கு துயில் எழவில்லை. கர்ணன் “இதுவே நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை போலும். இன்றும் முனிவர்கள் வாழும் முறையும் இதுவே. சிற்றுணவு, நெடுந்தேடல், வான் கீழ் தனிமை” என்றான். பாங்கன் நகைத்து “ஆம், பெண்டிரும் உடனில்லை” என்றான். கர்ணன் “தொல்மூதாதையருக்கு பெண்டிர் இல்லை எனில் நாமென்ன நதிகளுக்கும் மரங்களுக்குமா பிறந்தோம்?” என்றான்.

அத்தனிமையை வெல்வதற்கு விழைந்தவர்கள்போல் அவர்கள் நகைத்துக்கொண்டனர். விண்ணிலிருந்து சிறிய செந்தீற்றல்களாக இரு விண்மீன்கள் உதிர்வதை கர்ணன் பார்த்தான். “பேரரசர்கள் எங்கோ இறந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம், எழுவர். நான் ஏழு விண்தீற்றல்களை கண்டேன்” என்றான் பாங்கன். “அவர்கள் பிறப்பதை அறிவிக்கும் விண்மீன் ஏதும் உண்டா, சூதரே?” என்றான் கர்ணன். “அவர்கள் பிறக்கும்போது புதிய விண்மீன் ஒன்று எழுகிறது. ஆனால் வானின் பல்லாயிரம் கோடி விண்மீன் பெருக்கில் நம்மால் அதை அடையாளம் காண முடியாது. அரசே, பேரரசர்கள் பேரரசர்களாகவே பிறக்கிறார்கள். ஆனால் தங்கள் பெருஞ்செயல்களினூடாகவே அவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். உதிர்கையிலேயே உலகெங்கும் அறியப்படுகிறார்கள்” என்றான் சூதன்.

“ஒவ்வொரு நாளும் எரிவிண்மீன்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன. அத்தனை பேரரசர்களா இவ்வுலகில் இருக்கிறார்கள்?” என்று கர்ணன் கேட்டான். “ஆழிசூழ் இவ்வுலகு அலகிலா விரிவுள்ளது. இங்கு ஆயிரத்தெட்டு நாடுகள் உள்ளன. அதிலொன்றே பாரதவர்ஷம் என்கிறார்கள். ஒவ்வொன்றிலும் பேரரசர்கள் திகழ்கிறார்கள். பேரரசர்கள் மானுடருக்கு மட்டுமல்ல, யானைகளில் கரடிகளில் சிம்மங்களில் புலிகளில் உண்டு. முயல்களில் எறும்புகளில் இங்குள்ள அனைத்துச் சிற்றுயிர்களிலும் பேரரசர்கள் உண்டு. தெய்வங்கள் அவர்களை மண்ணுக்கு அனுப்புவது பிறரை தலைமை தாங்கி வழி நடத்துவதற்காக. மண்ணின் உயிர்களை ஆற்றல் வழிநடத்தவேண்டும் என்று தெய்வங்கள் விரும்புகின்றன. அறங்களால் அவ்வாற்றல் உருவாகவேண்டுமென்று ஆணையிடுகின்றன. அறங்களை அக்குலம் நீடுவாழ்ந்து திரட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்று அமைக்கின்றன. ஒவ்வொரு உயிர்க்குலமும் பாலாழியெனக் கொந்தளித்து தன்னை தான் கடைந்து தனது பேரரசர்களை உருவாக்கிக்கொள்கிறது. அவர்களை மணிமுடியென தலையிலணிந்திருக்கிறது. குலக்கொடியென ஏந்தியிருக்கிறது. அரசே, நெற்றியில் அறிவின் விழியென அவர்களையே அக்குலம் கொண்டிருக்கிறது. கொடியோர் தோன்றும் குலம் நஞ்சை திரட்டிக்கொண்டது” என்றான் சூதன். கர்ணன் “நஞ்சு எழுந்த பின்னர் ஒவ்வொரு முறையும் தவறாமல் அமுது எழுகிறது. கம்சன் எழாவிடில் யாதவர் குலத்தில் கிருஷ்ணனும் எழுந்திருக்க மாட்டான்” என்றான்.

பதினெட்டு நாட்கள் அக்காட்டில் அவர்கள் தங்கினார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் உணவு குறைந்து வந்தது. அலைந்து திரிந்த தொலைவு மிகுந்தும் வந்தது. உடலுருகி, கன்ன எலும்புகள் புடைத்து, விலாக்கூண்டு வெளித்தெரிந்து, வயிறொட்டி இடைஎலும்பு அமர்கையில் பாறையில் உரச, கைகால்கள் சுள்ளிகள் என்றாக அவர்கள் ஒட்டி உருக்குலைந்தனர். “இம்முறை உணவு மிகக் குறைவாக இருக்கிறது. இந்நிலத்தில் நாம் எண்ணாத எதுவோ நிகழ்ந்துள்ளது” என்று அணுக்கன் சொன்னான். “தண்டகம் மாபெரும் காடு. அவ்வாறு அவ்வப்போது நிகழ்வதுண்டு” என்று கர்ணன் சொன்னான். “எங்கேனும் ஓரிடத்தில் மண்ணில் ஈரம் எஞ்சியிருக்கும். அதன்மேல் சற்று பசுமை பரவியிருக்கும். பறவைகள் அச்செய்தியை விண்பாதைகளினூடாக கீழே வாழும் உயிர்களுக்கு காட்டுகின்றன. யானைகள் முதலில் செல்கின்றன. குரங்குகள் பிறகு. மான்கூட்டங்களும் செந்நாய்களும் தொடர்கின்றன. ஒருகட்டத்தில் சிற்றுயிர்கள்கூட அப்பாதையை தேர்கின்றன. சில பகுதிகளில் முற்றிலும் உயிரசைவே இல்லாமல் ஆவதும் உண்டு.”

“தண்டகத்தில் உணவின்றி பசித்து இறந்த நோன்பாளர்கள் பலர் உண்டு. ஆகவேதான் தண்டக நோன்புக்கு கிளம்புவதற்கு முன் மைந்தரிடம் இறுதிச் சொற்களை கூறிவிட்டு, நீத்தாருக்குரிய இறுதிக் கடன்களையும் முடித்து எழவேண்டுமென்று சொல்லப்படுகின்றது” என்று படைத்தலைவன் சொன்னான். “ஆம், நாம் இங்கு சிக்கிக்கொண்டிருக்கிறோம்” என்று படைத்துணைவன் சொன்னான். “திரும்பிச் சென்றுவிடுவதே உகந்தது, அரசே” என்றான் காவலன். கர்ணன் சீற்றத்துடன் “தண்டக நோன்பை பன்னிருமுறை ஆற்றியிருக்கிறேன். இன்றுவரை நோன்பு முறித்ததில்லை. ஒரு நோன்பை முறித்தவன் அனைத்து நோன்புகளையும் முறித்தவனாவான். ஏனெனில் நோன்புகள் எப்போது வேண்டுமானாலும் முறிப்பதற்குரியவை என்ற எண்ணம் அவனில் விழுந்துவிடுகிறது. நோன்பை முறிக்கலாம் எனும் எண்ணமே நோன்பை முறித்த பிழைக்கு மூன்றிலொன்று என்பார்கள்” என்றான்.

படைத்தலைவன் “நான் அவ்வாறு கூறவில்லை. நாம் இங்கே எங்கேனும் பசுமை எஞ்சியுள்ளதா என்று மலைமேல் ஏறி பார்க்கலாமே?” என்றான். “அருகே எங்கேனும் பசுமை இருந்திருந்தால் வானில் பறவைகள் இருந்திருக்கும். நெடுந்தொலைவில் உள்ளது அது. அங்கு சென்று சேர இன்னும் குறைந்தது இருபது நாட்களாகும்” என்று கர்ணன் சொன்னான். பின்னர் “நாம் திரும்பிச்சென்று சாலையை அடைவதற்கும் இருபது நாட்களுக்குமேல் ஆகும். எவ்வண்ணமாயினும் நாம் இந்நிலத்தில் நோன்பு முடிவதுவரை இருந்தாகவேண்டும். தண்டகக் காட்டில் இறப்பது இங்கு மறைந்த முனிவர்களுடன் சென்றமைவது. நோன்பில் இறப்பவர்களுக்குரிய விண்ணுலகம் பொன்னொளியால் ஆனது. அங்கு முனிவர்களே தெய்வங்கள் வடிவில் அருள்புரிகிறார்கள் என்று தொல்நூல்கள் கூறுகின்றன” என்றான்.

மேலும் மேலும் உணவு குறைந்துகொண்டே சென்றது. ஏழு நாட்கள் அவர்கள் ஒரு துண்டு உணவைக்கூட அருந்தவில்லை. உடன்வந்த தோழர்கள் நடை மெலிந்து மூச்சிளைக்க ஆங்காங்கே அமர்ந்தனர். “இது நமது இறுதிப் படுக்கை அமையும் இடம் போலும். ஒவ்வொருவரும் இவ்விடமா இதுதானா என்று ஒவ்வொரு தருணத்திலும் உசாவிக்கொண்டிருக்கிறார்கள். இல்லை இல்லை என மீண்டு எழுகிறார்கள். இதோ இறுதியாக என்னுடையதை நான் கண்டடைந்துவிட்டேன்” என்று படைத்தலைவன் சொன்னான். கர்ணன் “நோன்புகளை நாம் கொள்வதே நமது இறுதி எல்லை என்ன என்று அறிந்துகொள்வதற்காகவே. நமது எல்லையை நாம் ஒவ்வொரு முறையும் புதிதென உணர்கிறோம். ஒவ்வொரு முறையும் அதை நீட்டி வைக்கிறோம். நான் எளிதில் தோற்பதாக இல்லை. நீங்கள் இங்கு அமர்ந்திருங்கள், நான் சென்று ஏதேனும் உணவு எஞ்சியுள்ளதா இக்காட்டில் என்று பார்க்கிறேன்” என்று சொல்லி கிளம்பினான்.

பசிக் களைப்பால் அவன் விழிகள் ஒளியிழந்திருந்தன. அவன் உள்ளம் தன்னை வெளியுலகிலிருந்து உள்ளிழுத்து ஆழத்தில் சுருட்டிக்கொண்டது. பசியும் களைப்பும் மீதூறுகையில் உள்ளம் தன்னை தான் சுற்றி இறுக்கிக்கொள்ளும் பாம்பென ஆகிறது. வளையிருளுக்குள் விழிமூடிக்கொள்கிறது. ஏனென்றால் மேலும் புதிய புலன்செய்திகளைப் பெற்று அடுக்கி வியனுலகு சமைக்க அதனால் இயல்வதில்லை. எனவே ஏற்கெனவே தான் சமைத்துச் சேர்த்துவைத்திருக்கும் உலகைக்கொண்டு அது ஒரு புறத்தை அமைத்துக்கொள்கிறது. அதில் வண்ணங்களையும் வடிவங்களையும் பெருக்கி அவ்வுயிரை அதில் வாழச் செய்கிறது. எங்கேனும் காட்டில் விழுந்து உலர்ந்த வாயும் வெறித்த விழிகளுமாக குருதி வற்றி இறந்துகொண்டிருக்கும் உயிரை கூர்ந்து பாருங்கள். அது தன்னுள் ஒளிமிக்க பசுமை நிறைந்த பிறிதொரு உலகில் திளைத்துக்கொண்டிருப்பதை அறிவீர்கள். அதன் இமைகள் கனவில் அசைந்துகொண்டிருக்கும். அதன் முகத்தில் துயரின்மையே தெரியும்.

கர்ணன் கங்கை பெருகியோடும் சம்பாபுரியின் காடுகளில் அலைந்துகொண்டிருந்தான். இனிய மான்களை வேட்டையாடி தீயில் வாட்டி கொழுப்பு வாயோரம் வழிய, முழங்கைகளில் சொட்ட உண்டான். ஒளியே நீரென ஓடும் பெருக்கில் பாய்ந்து நீந்தித் திளைத்தான். தோழர்களுடன் மலையிலிருந்து புரவியில் பாய்ந்திறங்கினான். பாறைகளிலிருந்து பாறைகளை நோக்கி மூங்கில் கழைகளில் தாவி விளையாடினான். ஒருவரோடொருவர் அம்பு தொடுக்கும் போட்டி வைத்து அவற்றில் வென்று நகைத்தான். பின்னர் அக்கனவுலகிலிருந்து விழித்துக்கொண்டு தான் எரிவெயிலில் நிழலில்லா முள்மரத்தின் கீழ் நா வறண்டு தொண்டை அடைக்க அமர்ந்திருப்பதை கண்டான். தன்னை திரட்டி எழுப்பிக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் சென்றான்.

அப்போது ஒரு முனகலோசை அவன் செவிகளில் விழுந்தது. அவன் அதை இடம் தேர்ந்து, வழி கூர்ந்து அணுகிச் சென்றபோது சிறிய குகையொன்றுக்குள் ஒரு விழியிலாத மூதாட்டி கரிந்த கருகிய விறகுக்குவை என மான்தோல் கந்தலுடுத்த உடலை மடித்து ஒடுக்கி ஒரு மூலையில் அமர்ந்து விம்மி அழுதுகொண்டிருப்பதை பார்த்தான். அக்குகைக்கு வெளியே கீழிருந்து மேலேறி வரும் பாறைகளில் ஓர் உடல் கிடந்தது. அவன் கூர்ந்து நோக்கியபோது கொப்பரையில் நீருடன் மேலேறி வருகையில் விழுந்து உயிர் துறந்த இளமுனிவனின் உடல் அது என்று தெரிந்தது. அவன் இறந்து மூன்று நாட்களுக்கு மேலாகியிருந்தது. உடல் வீங்கி பின்னர் வெடித்து தோல் மட்கத் தொடங்கியிருந்தது. சிரிப்பவன்போல் உதடு பின்னிழுத்து பற்கள் உந்தி வெளிவந்திருந்தன. அங்கிருந்து ஓநாய்களும் சென்றுவிட்டிருந்தமையால் அவன் எஞ்சியிருந்தான். ஆனால் அவனை மண்ணுக்குக் கீழிருந்து எழுந்த புழுக்கள் உண்ணத்தொடங்கியிருந்தன.

சற்று நேரம் அந்த முனிவனை நோக்கி நின்றிருந்த பின்னரே அங்கு நிகழ்ந்ததென்ன என்று கர்ணன் புரிந்துகொண்டான். குகைக்குள் நுழைந்து அவ்வன்னையை அணுகிச் சென்றான். காலடியோசை கேட்டதும் அன்னை இரு கைகளையும் நீட்டி “மைந்தா! மைந்தா! நீதானா!” என்றாள். முழந்தாளிட்டு தவழ்ந்து அவளருகே சென்று “ஆம்” என அவன் முனகல்போல் ஓசையெழுப்பினான். “நீருக்குச் சென்றாயே! நெடுநேரமாயிற்றே! ஓரிரு நாட்கள் ஆகியிருக்கும் அல்லவா?” என்று அன்னை சொன்னாள். நடுங்கும் கைகளை நீட்டி “நீர் கொடு! என் உயிர் வறண்டு கொண்டிருக்கிறது! எங்கே நீர்?” என தவித்தாள். “இதோ” என நாவெழாது சொல்லி குகையிலிருந்து வெளிவந்து அப்பகுதியை விழிசூழ்ந்து பார்த்தான். பறவையோசையோ சிற்றுயிர்களின் மீட்டலோ இன்றி அந்தக் காடு அமைந்திருந்தது. உருவாக்கப்பட்ட கணம் முதல் பல்லாயிரம் ஆண்டுகள் ஒருமுறை ஒரு விரல்கூட தொடாத இசைக்கலம்போல.

“தண்ணீர்! மைந்தா, தண்ணீர் கொண்டு வா!” என்று அன்னை கூவிக்கொண்டிருந்தாள். கர்ணன் கீழிறங்கிச் சென்று அச்சடலத்தின் கையிலிருந்த சிறிய கொப்பரையை எடுத்தான். பின்னர் அதை மேலே கொண்டு வந்து அன்னைக்கு சற்று அப்பால் நின்று தன் அம்பை எடுத்து கைகளில் குருதிக்குழாயொன்றை வெட்டினான். அக்குருதியை அதில் விட்டு அன்னையின் அருகே கொண்டு சென்றான். “அன்னையே, நீர் கிடைக்கவில்லை. சிற்றுயிரொன்றை பிடித்தேன். அதன் இளங்குருதியை கொண்டுவந்திருக்கிறேன். இதை உண்டு விடாய் அமைக!” என்றான். விடாயில் செவிகள் அடைத்து விழிகள் உள்மடிந்து அணையும் சுடர்என இருந்த அன்னை “கொடு! கொடு!” என்று கைநீட்டினாள். கர்ணன் கொப்பரையின் செந்நீரை அவளுக்கு ஊட்டினான். அவள் பெருவிடாய் உடலின் அனைத்துத் தசைகளிலிருந்தும் பொங்கி எழுந்து நாவுக்கு வர கரைச்சேற்றில் மூச்சுக்குத் துள்ளும் மீனென உதடுகளும் நாவும் துடிக்க அதை அள்ளி உண்டாள். நாவால் நக்கி ஒரு சொட்டின்றி உண்டு பெருமூச்சுவிட்டு பசியாறினாள். “ஆம், நான் இறந்துகொண்டிருகிறேன். ஆனால் பசித்து ஏங்கி இறக்கும் உயிர்கள் செல்லும் நரகத்துக்கு செல்லமாட்டேன். நாநீருடன் சாகும் நல்லூழ் எனக்குண்டு. என் மைந்தன் இருக்கிறான்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று கர்ணன் கூறினான்.

அன்னையுடன் அந்த குகையில் எட்டு நாட்கள் கர்ணன் இருந்தான். அவள் உடல் ஒவ்வொரு நாளும் நோய்கொண்டு நலிந்து இறப்பை அணுகிக்கொண்டிருந்தது. தன் குருதியையே அவளுக்கு ஒவ்வொரு நாளும் நா ஈரம் என அளித்து விடாயும் பசியும் தீர்த்துக்கொண்டிருந்தான் கர்ணன். அவன் உடலில் இருந்து உயிராற்றல் முற்றாக வடிந்தது. அக்குகையிலிருந்து எழுந்து அகல இயலாதவன் ஆனான். கைகளாலும் கால்களாலும் உடலை உந்தி தவழ்ந்துசென்று தன் புதுக் குருதிக்குழாயொன்றை வெட்டி உடலில் எஞ்சிய சோரியையும் அவளுக்கு ஊட்டினான். அன்னை தன் உடலில் எஞ்சிய இறுதி மூச்சை விடும்போது “மைந்தா, இதுவரை என்னுடன் இக்குகையிலேயே இருந்தாய். நினைவறிந்த நாள் முதல் உன்னை தொட்டுத் தடவி தழுவி அறிந்திருக்கிறேன். இந்நாட்களில் ஒருமுறைகூட உன்னை நான் தொட இயலவில்லை. உன் சொல்லும் தெளிவுடனில்லை. வருக, உன்னை தழுவிக்கொள்கிறேன். உனக்கு முலையூட்டிய என் நெஞ்சில் உன் முகம் பதிந்தால் இறக்கும் இக்கணம் எனக்கு தெய்வங்கள் அளித்த நற்கொடை என்றாகும்” என்றாள்.

கர்ணன் “இல்லை அன்னையே, நான் மிக மெலிந்திருக்கிறேன். என் உடலை தொட்டால் தாங்கள் துயருறுவீர்கள் என்பதனால்தான் அருகணையவில்லை” என்றான். “உன் குரலும் பசியால் உருமாறி நடுக்குண்டிருக்கிறது. அது பிறிதெவருடையதோ என்று ஒலிக்கிறது. நீ மிக மெலிந்திருக்கிறாய் என்பதை நானும் அறிவேன். ஆயினும் இது என் இறுதிக்கணம். இனி எனக்கு பொழுதொன்றில்லை. வருக!” என்று அவள் கை நீட்டினாள். “நான் இக்குருதியை உண்டு ஆற்றலை திரட்டிக்கொண்டதே இரு கைகள் தூக்கி உன்னை நெஞ்சோடணைக்கும் விசை இவ்வுடலில் வேண்டுமென்பதற்காகத்தான்.” கர்ணன் நடுங்கும் உடலுடன் அருகே சென்று அவளருகே தலை தாழ்த்தி “அன்னையே” என்றான். அவள் அதிர்ந்து கொண்டிருந்த தன் கைகளை அவன் தலைமேல் வைத்தாள். அக்கணமே அவை துள்ளித் துடிக்கத் தொடங்கின. உதடுகள் அதிர்ந்து விம்மல் போலொரு ஓசை எழுந்தது. அனல்பட்ட நாகங்கள்போல அக்கைகள் அவன் உடல்மேல் தவித்தலைந்தன.

ஆனால் கர்ணன் இரு அன்னைப்பசுக்கள் இருபுறமும் நின்று தன்னை நக்குவதுபோல் உணர்ந்தான். அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு “நீ யார்?” என்று அவள் கேட்டாள். “நான் உங்கள் மைந்தன்!” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள். அச்சொல்லே இறுதியாக அமைய அவள் உயிர் துறந்தாள். விண்ணில் எழுந்து அங்கிருந்து கீழே நோக்கி “பொழிக மாமழை!” என்று ஆணையிட்டாள். கீழ் வானில் “ஆம்! ஆம்! ஆம்!” என்று முகில்பேரொலி எழுந்தது. மின்னல்கள் அதிர்ந்து வானம் சுடர் கொண்டது. மரங்கள் மின்னி அணைந்தன. வான் கிழிந்து நீரென மாறி வந்து மண்ணை அறைந்தது. பல்லாயிரக்கணக்கான அருவிகள் மலைப்பாறைகளிலிருந்து ஒளி கொண்டெழுந்து ஆழங்களை நோக்கி சரிந்தன. ஓடைகள் உயிர் கொண்டு நெளிந்தன. காட்டாறுகள் ஓசை கொண்டன.

கர்ணனை அவன் அணுக்கர்கள் தேடிவந்து மீட்டபோது அவன் மழையில் நனைந்து வானமுதை உண்டு உயிர் சேர்த்து நினைவிழந்து படுத்திருந்தான். அவனை அவர்கள் தூக்கிக்கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே உணவருந்தி அவன் உயிர்கொண்டு எழுந்தான். அங்கநாட்டுக்கு சென்றுசேர்கையில் அவன் உடல் உள்ளே விளக்கேற்றி வைத்த படிகக்கட்டிபோல் ஒளிகொண்டிருந்தது. அவன் அரண்மனையில் ஏறுகையில் பெண்டிர் அனைத்துச் சாளரங்களிலும் கூடி அவன் உடல் கொண்ட அவ்வொளியையே திகைப்புடன் பார்த்தனர். அவன் தன் அறையில் அமர்ந்திருக்கையில் அகல்சுடர்களுக்கு நிகராக அவன் உடலும் ஒளி கொண்டுள்ளதை அமைச்சர்கள் கண்டு மலைத்தனர். அந்தி மயங்குகையில் விளக்கேற்றும் பொழுதிற்கு முன்னர் அவன் உடல் கொண்ட ஒளியாலேயே அவ்வறையின் தூண்வளைவுகளும் உலோகக் குமிழ்களும் மிளிர்வதைக் கண்டு ஏவலர்கள் அரண்டனர்.

நிமித்திகர் கூடி அவன் உடற்குறியும் நாட்குறியும் கணித்துநோக்கி இக்கதையை கண்டு கூறினர். “தெய்வங்களால் ஆயிரத்தெட்டு முறை வருடப்பட்ட உடல் கொண்டவன் இவ்வரசன். இப்புவியில் பிறிதொருவன் இனி இவ்வழகை கொள்ளப்போவவதில்லை. இதுவரை கொண்டதுமில்லை” என்றனர். காமர் சொன்னார் “பேரழகனை வணங்குக! ஊனில் அமைவதல்ல அழகு. குருதியால் அடையப்படுவதுமல்ல பேரழகு. அருளே அழகென்று எழுகிறதென்று பாடுக! ஆம், அழகுருவனைப் பாடுக!” அவரைச் சூழ்ந்தமர்ந்திருந்த சூதர்கள் தங்கள் இசைக்கலங்களை மீட்டியபடி “ஆம்! ஆம்! ஆம்!” என இணைந்தேற்றுப் பாடினர்.

தொடர்புடைய பதிவுகள்

கோடைநடை -கடிதங்கள்

$
0
0

கோடை நடை

அன்புள்ள ஜெ

கோடை நடை படித்த பிறகு எங்கள் சூழல் கூட இனிமையாய் தெரிய ஆரம்பிக்கிறது. . .நன்றி.

எங்கும் ஒரே புலம்பல் தான் இப்போது – வெயில் தாங்க முடியல, வேத்து ஊத்துது, இப்பவே இப்படி, ண்ணிக்கு என்ன பண்ணப்போறோம். . .

எங்களுக்கும் கோடை பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது! செடி கொடிகளெல்லாம்வாடி நிற்க தயாராகி இலைகளை உதிர்க்க ஆரம்பித்தன. காலையில் துயிலெழுப்பும் பறவைக்கூட்டத்தின் கோஷ்டிகானம் சற்று சுருதி இழக்க ஆரம்பித்தது. சில பறவைகள் வேறு கோஷ்டிக்கு ( வேறு ஊருக்கு) சென்றுவிட்டன போலும். சாரைசாரையாய் பல வண்ண எறும்புகள் குடிபெயர்ந்து எங்கோ செல்லத்தொடங்கிவிட்டன. பேருந்துகளில் எஞ்சின் சத்தத்தை விட உஸ் உஸ் என்ற பயணிகளின் மூச்சொலி பெரிதாக ஒலிக்க ஆரம்பித்தது. மூலைக்கு மூலை கறும்பு சாறு ( எங்கள் பக்கம் கறும்புப் பால்) நடைவண்டிக் கடைகள்.(ஐஸ் போடணுமா, வேண்டாமா?). தெருக்களில் முட்டிக் கொள்ளாமல் நடமாட முடிகிறது.

குழாய்களின் முன்னால் தீர்த்தத்திற்காக தவமிருக்கும் குடங்களின் வரிசை அனுமார் வாலாய் நீள ஆரம்பித்து விட்டது. மாட்டுவண்டியிலும், டிராக்டரிலும், லாரிகளிலும் தண்ணீரின் பயணம் தொடங்கிவிட்டிருக்கிறது. துணி தோய்த்த, பாத்திரம் தேய்த்த, தண்ணீர் சேமிக்கப்பட்டு செடிகளிடமோ கழிப்பறையிலோ தஞ்சமடைகிறது. ஆடுமாடுகள் அடிக்கடி நா வரண்டு தண்ணீர் கேட்டு கூப்பாடு போட
ஆரம்பித்துள்ளன. போர் போடனுமா சார் என்று பலர் பைக்கில் சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார்கள். கிணற்றில் சேறு அள்ளும் கிரேன் வண்டிகள், பாறையைப் பிளக்கும் வெடி மருந்துகளோடு இங்கும் அங்குமாய் ஓடுகின்றன.

பழைய சோறு அமிர்தமாய் இனிக்கிறது. அதோடு புதிதாய் பறித்து போடப்பட்ட மாவடு
ஊறுகாய், விருந்தாய் மணக்கிறது. நடுப்பகலில் குட்டித் தூக்கம் கட்டாயமாக்கப் பட்டுவிட்டது. மறந்து போயிருந்த மரத்து நிழல் சொர்க்கமாய் அழைக்கிறது. தெள்ளத்தெளிவான இரவு வானம் அத்தனை வைரங்களையும் காட்சிக்கு வைக்கிறது. இப்படிக் கூட இருக்குமா என்னும் பேரமைதி, சிலரை நடுக்கம் கொள்ள வைத்தாலும், பேரின்பப் பெருநிலையை தொட்டுக்காட்டுகிறது. குடிக்க வைத்திருக்கும் தண்ணீரில் முக்குளித்து சூடு தணித்துக்கொள்ளும் பறவைகள் சிலிர்த்துக்கொள்கின்றன, சிலிர்க்க வைக்கின்றன. பல பொழுது உணரப்படாமல் புறக்கணிக்கப்படும் காற்று, கோடையில் சொற்பமாய் வீசினாலும் அபரிமிதமாய் ஆனந்தம் அளிக்கிறது.

கோடையிலும் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. . .கண்டுகொள்வோம், மகிழ்வோம்!

அன்புடன்

ராமசுப்ரமணியன்

தேக்கம்பட்டு.

 

கோடை நடை

அன்புள்ள ஜெ

 

கோடைநடை ஓர் அருமையான கட்டுரை. வாசகர்கள் தொடர்ச்சியாக உங்களுடன் மானசீகமாக உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். உங்கள் காலைநடைப் பாதை, வீடு எல்லாமே நன்கு அறிமுமகானவை. இத்தகைய இடங்கள் இங்கே கொஞ்சம் குறைவுதான். மழை வெயில் என பார்வதிபுரம் சாலை மிக நெருக்கமானது. அதைப்பற்றிப் படிக்கையில் உங்களுடன் இருந்த உணர்வை அடைகிறேன். அந்தச்சாலையில் நடந்ததுபோலவே தோன்றுகிறது

 

எல்லா பருவகாலங்களும் அதற்கான அழகைக்கொண்டவைதான். எல்லா பருவகாலங்களிலும் அதற்கான துன்பங்களும் உண்டு. மனநிலையை இயற்கையை விரும்பும்படி அமைத்துக்கொள்வதுதான் முக்கியமானது என நினைக்கிறேன் பழைய பிளாக் ஆண்ட் ஒயிட் படங்களைப் பார்க்கையில் எல்லாமே சாம்பல்தான். ஆனால் எப்படி அதையெல்லாம் பச்சைப்பசுமை என்றும் பூக்களின் நிறங்கள் என்றும் நினைத்துக்கொண்டோம் என்ற ஆச்சரியம் வரும். அந்த மனநிலைதான் காரணம். அதை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்

 

செல்வராஜ் அமிர்தம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

டின்னிடஸ் அனுபவத்தின் வழியே…

$
0
0

Tinnitus

காலையில் துயில்பவன்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவிற்கு,

 

டின்னிடஸ் பற்றி, ‘காலையில் துயில்பவன்’ கட்டுரை வழியாக அறிந்தேன். எனக்கு இப்பிரச்சனை 2012ஆம் ஆண்டில் பள்ளியின் போட்டி விளையாட்டிற்கு மறுநாள் காலையில் ஏற்பட்டது. காதில் ஏதோ அடைத்துக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது என்று காது மருத்துவர்களிடம் சென்று செலவு செய்து ஓய்ந்தும் விட்டேன். நான்கு நாள் முழு இரவு உறக்கமில்லாமல் தவித்தேன். என்ன நோய் இதுவென்று புரியாமல் தவித்தேன். கடைசியாக ஒரு மலாய் காது நிபுணர்தான் இது ‘டின்னிடஸ்’ என்றும்  மூளை சுயமாக சத்தத்தை எழுப்புவதாகவும் இதற்கு மருந்து இல்லை என்றும் சொல்லிக் கைவிரித்தார்.

 

அதன் பிறகு இணையத்தில் தேடித் தேடி டின்னிடஸ் பற்றி விரிவாகப் புரிந்து கொண்டேன். அப்பிரச்சனைக்குப் பல தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்ட பல கட்டுரைகள் இருப்பினும் கடந்த ஏழு ஆண்டுகள் அது என்னை விட்டு நீங்கவில்லை. எனக்கு இருவர் டின்னிடஸ் குறித்து சொன்ன விடயங்கள் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக அமைந்துவிட்டிருந்தது.

 

ஒருவர், மலேசிய கல்வி அமைச்சில் பணியாற்றிய இலக்கிய ஈடுபாடும் கொண்ட திரு.பி.எம் மூர்த்தி. தண்டவாளத்தின் அருகில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லித் தொடங்கினார். எனக்கொரு நண்பன் அப்படி இரயில் தண்டவாளத்தின் அருகில் வாழ்ந்தவன் இருந்திருக்கிறான். தினம் பலமுறை இரயில் கடக்கும்போது பெரும் சத்தமும் வீடு அதிர்வும் இருக்கும். ஒருநாள் இரவில் அங்குப் படுத்து அதனால் தூக்கம் பாதிக்கப்பட்ட அனுபவத்தை நினைவு கூர்ந்து பார்த்தேன். ஆனால், என் நண்பன் வாழ்நாளில் அதனுடன் பழகியவன். அந்த இரயில் சத்தம் அவனை ஒன்றுமே செய்யவில்லை. அவ்வீட்டில் உள்ளவர்கள் ஏதும் நடவாததைப் போல நிம்மதியாக உறங்கினார்கள். இதையேத்தான் மூர்த்தி அவர்களும் சொல்லிக் காட்டினார். உனக்கு ஏற்பட்டுள்ள சத்தத்தையும் அப்படியே நினைத்துக் கொள். ஒருநாள் பழகிவிடும் என்றார்.

 

அதே போல, அடுத்தவர் டாக்டர் சண்முக சிவா. காதில் உருவான சத்தம் பற்றி அவரிடம் சொன்னபோது பின்னர் விசாரித்துவிட்டு மீண்டும் அழைத்தார். டின்னிடஸ் பற்றி சொல்லிவிட்டு இன்னொன்றும் சொன்னார். அச்சத்தத்துடன் போராடாதீர்கள்; தோல்வியே மிஞ்சும். அதனைப் பழகிக் கொள்ளுங்கள் என்றார். வாழ்வில் உருவாகும் எத்தனையோ தடைகளை, அவமானங்களை, பிரச்சனைகளை நாம் பழகிக் கொண்டு நகர்ந்து போவதில்லையா? அப்படித்தான் ஏழு ஆண்டுகள் அதனைத் தாண்டி பழகி வந்துவிட்டேன்.

 

மாதவன் இளங்கோ கடிதம் 2016இல் எழுதப்பட்டது. நான் வாசிக்கத் தவறிவிட்டேன். இன்று வாசித்தபோது நான் எந்த மனநிலையில் எனக்கு நேர்ந்த பெரும் சிக்கலைக் கடந்து வாழ்வதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்தேனோ அதேபோன்றுத்தான் மாதவன் இளங்கோவோம் என்று நினைத்து மகிழ்ந்தேன்.

 

டின்னிடஸ் நோய் அல்ல; அதுவே முடிவும் அல்ல. அது குணமடையலாம்; அல்லது வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கலாம். ஒன்றை மட்டுமே ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உலகில் டின்னிடஸால் பாதிக்கப்பட்டவர்கள் கோடி பேர் உள்ளார்கள். அதிலிருந்து மீண்டும் வந்தவர்கள் சொற்பமானவர்கள்; அதனோடு வாழப் பழகிக் கொண்டவர்கள் ஏராளம். ஆகவே, டின்னிடஸ் என்பதை அனுபவத்தால் எதிர்கொண்டு கடக்க முடியும் என்பதே நான் கற்றுக் கொண்டது. இதனைப் பற்றி நானும் இதுவரை எழுதியதில்லை.

 

என்ன ஆச்சர்யம் என்றால் டின்னிடஸ் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் ‘சத்தம்’ என்கிற ஒரு சிறுகதையை எழுதி முடிக்காமல் மடிக்கணினியிலேயே வைத்திருந்தேன். அதில் வரும் கதாப்பாத்திரத்திற்கு வீட்டில் நீர் ஒழுகும் சத்தம் கேட்கத் துவங்கி வீட்டை முழுவதும் ஆராய்ந்து பார்த்தும் விடையறியாமல் தவித்துக் கொண்டிருப்பான். இறுதியில் அது வீட்டில் கேட்கும் சத்தம் அல்ல அவன் காதில் கேட்கும் சத்தம் என்று தெரியும்போது கதை மர்மத்துடன் முடியும். அச்சிறுகதை அபத்தமாக உள்ளது என்று நானே பிரசுரிக்காமல் விட்டுவிட்டேன். அதே போன்று சிக்கல் எனக்கு ஒரு வாரம் கழித்து காதில் வேறுவகை சத்தம் கேட்கும்போது அதை பிரமை என்று நிராகரிக்க முடியவில்லை. இலக்கியம் முன்னமே தன்னை என் வழியே நிகழ்த்திக் காட்டிக் கொள்கிறதோ என்றும் தோன்றியது. அதுவொரு பேரதியத்தின் உச்சத் தருணம் அல்லவா?

 

எதையும் கடந்துவிடலாம் என்கிற பேரனுபவத்தை ஆச்சர்யமாக முன்னும் பின்னும் ஆழ்மனத்தில் உருவாக்க வல்லது இலக்கியமும் வாசிப்புமே. டின்னிடஸ்க்கு இதுவும்கூட ஒரு விடுதலைத்தான். இச்சிக்கல் தொடர்பாக பேச நினைக்கும் உலகில் ஏதோ ஒரு மூலையில் தவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

 

நான் பேசத் தயங்கியதை மாதவன் இளங்கோ மிக இயல்பாகப் பேசிச் சென்றதை வாசித்து மகிழ்ந்தேன். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் நாம் இலக்கியம் வாசித்து ஏது பயன் என்று மட்டுமே என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

 

கே.பாலமுருகன்

 

bkbala82@gmail.com

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எம்.எல்.நாவல்-விமர்சனம்-உஷாதீபன்

$
0
0

 

ண்ணநிலவன் எழுதிய “எம்.எல்” என்ற இந்த நாவலை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்தாரின் வாசிப்பிற்குப் பிறகு இரண்டாவதாக வாசித்து முடித்த பெருந்தகை அநேகமாக நானாகத்தான் இருக்க வேண்டும். திரு வண்ணதாசன் அவர்கள் சொல்வனம் இணைய இதழில் தொடர்ச்சியாகப் படிக்காமல் சற்றே விட்டு விட்டுப் படித்ததாகச் சொல்லியிருந்தார். உடனடியாக நான் உட்கார்ந்து படித்து முடித்ததற்குக் காரணம் முதலில் அந்தத் தலைப்பில் ஏற்பட்ட ஈர்ப்பு. அடுத்ததாக அறுபது எழுபதுகளில் தமிழ்நாட்டில் சாரு மஜூம்தாரின் மார்க்ஸிய – லெனினியக் கட்சி பரவிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் கால கட்டத்தைச் சித்தரிப்பதாக அமைந்த இந்த நாவலின் கதைப்போக்கு.

அவரது தவறான வழிகாட்டுதலில் இழுத்துச் செல்லப்பட்ட பலரை, நான் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்க முடிந்தது என்று வண்ணநிலவன் தனது குறிப்பில் சொல்லுகிறார். பெரு நகரமான சென்னையில் அது பரவலாய் இருந்திருக்கலாம். அதே சமயம் அவர்களின் கொள்கைகள் துண்டுப் பிரசுரங்களாக தமிழகத்தின் சின்னஞ்சிறு நகரங்களில் கூட அங்கங்கே தூவி விடப்பட்டுக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை.

தன்னோடு பேசுவது, பழகுவது யார் என்று தெரியாமலேயே பல இளைஞர்கள் அந்தப் புதிய நபர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, வேலை வெட்டி இல்லாத கால கட்டத்தில் வெட்டியாய்ப் பொழுது போவதற்கு இதையாவது கேட்போமே என்று நேரம் காலம் பார்க்காமல் இந்தக் கட்சி ஆட்களின் பேச்சிலே மயங்கிக் கிடந்தார்கள். பின்னால் ஆபத்து காத்திருக்கிறது என்பதை அறியாத அப்பாவிகளாய்…!

அப்படி மயங்கிக் கிடந்து,  வீட்டுக்கு வந்த விருந்தினர் என்று மட்டுமே அறிந்து கொண்டு அவரது பின்புலம் தெரியாமல் பழகி, காவல் துறையின் சந்தேகத்திற்கு ஆளாகி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தோடு குய்யோ முறையோ என்று அழுது புலம்பி, பல நாட்களுக்கு எங்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதே கூடத் தெரியாமல், என்ன ஆனான் என்பதும் புரியாமல் உற்றார் உறவினர் அலமந்து கிடக்க, திடீரென்று ஒரு நாள் ஆளை விடுங்கடா சாமி….என்று வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் அந்த  இளைஞர்கள். மனதில் பட்டதை எழுதிக் கொடுங்கள் என்று கையெழுத்திட்டு வாங்கி ஆளை விட்டனர்.

இந்த பாருங்க…உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீங்க சார்ந்திருக்கிற கட்சி, அமைப்புகளோட கொள்கைகளைப் பரப்பணும்னா அதுக்கு எங்கயாச்சும் லாட்ஜ்ல ரூம் எடுத்திட்டு ஆளுகளக் கூட்டிச்  செய்ய வேண்டிதானங்க…? எதுக்குங்க எங்கள மாதிரி அப்பாவிகளோட வீடுகளத் தேர்ந்தெடுக்கிறீங்க…? எங்க அப்பா உங்களுக்கு என்ன துரோகம் பண்ணினாரு? அவருண்டு, அவர் வேலையுண்டுன்னு கஷ்டப்பட்டு உழைச்சி, குடும்பத்தக் காப்பாத்திட்டிருக்காரு….அவரோட நீங்க வந்து பேசப் போக, நீங்க இன்ன மாதிரி ஆளுன்னு அவருக்குத் தெரியாமப் போக….அப்பாவோட ஃபிரண்டுன்னு நாங்களும் உங்களோட பழகப்போக கடைசில எங்களச் சந்தி சிரிக்க வச்சிட்டீங்க…இதுதான் உங்க பாலிஸியோட லட்சணமா? ஊருல எம்புட்டுப் பேரு வெட்டியாத் திரியறான்….அவிங்களாப் பார்த்துப் பிடிக்க வேண்டிதானங்க…நாங்கள்லாம், படிச்சமா, வேலைக்குப் போனமா, குடும்பத்தக் காப்பாத்தினமான்னு இருக்கிற சராசரியான ஆளுங்க….எங்களோட தொடர்பு வச்சு, வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்கிறீங்க….? நான் சுத்தமா துடைச்சு எழுதிக் கொடுத்திடுவேங்க…எங்க அப்பா அம்பது வருஷமா இந்த ஊர்ல நல்ல பேரோட இருக்கிறவரு…அவர் பேரெல்லாம் அவ்வளவு சாதாரணமா நீங்க கெடுத்திட முடியாது…போலீசுக்கே தெரியும்….சாமி எப்படிப்பட்டவருன்னு…அவரு பிள்ளைங்க நாங்க…எங்களப்பத்தியும் இந்த ஊர் அறியும்…..தெளிவ்வா….எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திட்டேன்….எப்படா கவர்ன்மென்ட் வேல கிடைக்கும்….வண்டியக் கட்டலாம்னு காத்துக்கிட்டுக் கெடக்கேன்….சகுனி மாதிரிப் பூரப் பார்க்கிறீங்களே……

என்று சொல்லி காவல் துறையிடம் உண்மை உரைத்து, சரண்டராகி,  வெளியே வந்த இளைஞர்கள் அப்போது பலர். இது சின்னச் சின்ன ஊர்களிலும் நடந்தது. ஆனாலும் அந்த இளைஞர்களை வைத்து அந்தப் போராளிகளைப் பிடித்தார்கள் போலீஸார். இவர்கள் ஆழம் தெரியாமல் காலை விட்ட இடங்கள் இம்மாதிரிச் சில. இவர்கள் கணக்கு என்றுமே சரியாய் இருந்ததில்லை. முன் பின் தெரியாத ஊர்களில் மூக்கை நுழைத்தால்…இடிதானே கிடைக்கும்?

 

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாமல் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அரசியல் தீர்வு என்று நம்பிய சாரு மஜூம்தாரும் அவரை நம்பிய கூட்டமும் பலம் பெற முடியாமல் படிப்படியாக நைந்து போனதும், குறி வைத்து ஒடுக்கப்பட்டதும் தமிழகத்தின் வெற்றிகரமான வரலாறு.

தீவிரவாதம்  என்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதை அறுபது எழுபதுகளின் தமிழகத்தின் இந்தச் சூழ்நிலையை முன் வைத்து ஒரு நாவலின் வழி சொல்ல வேண்டும் என்கிற வண்ணநிலவனின் ஆவல் இந்தப் புத்தகத்தின் மூலம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மொத்தமுள்ள 23 அத்தியாயங்களில் பதினேழு அத்தியாயங்களுக்குப் பிறகுதான் ஓரளவு இந்தப் பிரச்னை நாவலில் சூடு பிடிக்கிறது என்று சொல்லலாம். அதுவரை குடும்பம், வியாபாரம், தொழில், விருத்தி என்றே கழிகிறது.   அப்பு என்று ஒரு பாத்திரம் வருகிறது நாவலில். அநேகமாக தமிழகத்தில் இவரை அந்தக் கால கட்டத்தில் பலர் அறிந்திருக்கலாம். உண்மையான கதாபாத்திரமே நாவலிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. பின்னாளில் என்கவுன்டரில் அவர் கொல்லப்பட்டதாக முடிவு தெரியவருகிறது. தமிழகத்தில் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தவர் அவர் எனலாம். இவர்களது கொள்கைகளுக்கு ஆட்களைத் திரட்டுகிற வேலையைச் செய்தவர் அவரும் அவரால் ஈர்க்கப்பட்ட சிலரும்.

ஆனால் ஜனங்கள் காலங்காலமாக வாழ்க்கை நடத்தி வருவது போலவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடும்பம், வேலை அல்லது தொழில், உறவுகள், நண்பர்கள் என்று தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய வாழ்க்கை முறையில் எந்தத் தவறும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. ஜனங்களுடைய மனோபாவம் சாருமஜூம்தார், கனுஸன்யால், அப்புவுக்கும் கூடத் தெரியும். ஆனாலும் சீனப்புரட்சி, மாசேதுங், மார்க்ஸ், லெனின் இவர்களுடைய கொள்கைகள் வழிமுறைகளில் இருந்த அவர்களுடைய கண்மூடித்தனமான பற்றுதலும், நம்பிக்கையும் அவர்களை வழி நடத்தியது.தாங்கள் வித்தியாச மானவர்கள் என்று அவர்கள் தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் உலகிலுள்ள எல்லா மக்களையும்போல, அவர்களும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுவே சதம் என்றுதான் வாழ்ந்தார்கள்….. – வண்ணநிலவனின் இந்த வரிகளில்தான் எத்தனை யதார்த்தம்….?

மதுரை நகரைக் களமாகக் கொண்டு இந்த நாவல் நடை பயி்ல்கிறது. ஸ்டடி சர்க்கிள் என்பதாக சிறு சிறு அமைப்பை அங்கங்கே ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து யாரும் அறியாவண்ணம் சின்னச் சின்னக் குழுக்களாகக் கூடிக் கூடிப் பேசுதல், கொள்கைகளை விரித்துரைத்தல் என்பதாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கோபால் பிள்ளை என்கிற கம்யூனிஸ்ட் கட்சியில் 1953 முதல் பிரபலமாயிருந்த பிரமுகரை முதலில் சந்தித்து, அவர் மூலம் ஆயுதப்புரட்சிக்கான கருத்துக்களை வித்திட்டு மெல்ல மெல்லப் பரப்ப வேண்டும் என்கிற திட்டத்துடன் மஜூம்தார் மதுரையில் காலடி வைக்கும் விதமாக நாவல் துவங்கி படிப்படியாக நகர்ந்து செல்கிறது.

மஜூம்தார் கோபால் பிள்ளையை முதலில் சந்திக்கும் கட்டம். எய்ட் டாக்குமென்ட்ஸ் என்கிற சிறு சிறு பிரசுரங்களை அவரிடம் கொடுக்கிறார். அதைப் பார்த்து விட்டு கோபால் பிள்ளை  கேட்கிறார். நீங்க எதுக்கு சைனா லைன் எடுத்தீங்க? அது நம்ம நாட்டு மேல படை எடுத்த நாடு. அதனுடைய நடைமுறை எல்லாம் நம்ம நாட்டுக்கு ஒத்து வராது… என்கிறார்.

ஆயுதப் புரட்சி ஒண்ணுதான் ஜனங்களோட கஷ்டங்களுக்குத் தீர்வு. சைனா நமக்கு இதிலே நிச்சயம் உதவி செய்யும்…என்கிறார் அவர்.

மன்னிக்கணும் மஜூம்தார்…எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை….தெலுங்கானாவுல என்ன நடந்தது? நம்ம ஜனங்களை வீணா பிரச்னைல மாட்டி விடாதீங்க….

ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே….

அது ஆயுதப் புரட்சியா? நான் ஏத்துக்கலை….நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிடும். அங்கே நடந்தது குத்தகைத் தகராறு….. என்று ஆரம்பத்திலேயே மறுத்து விடுகிறார் கோபால் பிள்ளை. இருந்தாலும் ஸ்டடி சர்க்கிள் எப்படியும் ஆரம்பித்தாக வேண்டும் என்கிற முனைப்பில் பாலகிருஷ்ணன் மற்றும் துரைப்பாண்டி ஆகியோருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னாளில் இந்த இக்கட்டுகளிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். இந்த ஆரம்பகட்டப் பேச்சு வார்த்தையிலிருந்து ஒவ்வொரு நகர்வும் பீட்டர் என்கிற இன்ஃபார்மர் மூலமாகப் போலீசுக்குத் தகவல் போய்க்கொண்டேயிருக்கிறது….நாவல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளுக்கும், ஆயுதப்புரட்சிக்கும் உள்ள ஒட்டாத வேறுபாடுகளை அங்கங்கே தொட்டுக் காட்டிக் கொண்டே ஸ்வாரஸ்யமாக நகர்ந்து செல்கிறது.

கோபால்பிள்ளையின் உறவினர் சுப்பிரமண்யபிள்ளையின் மகன் சோமு தெரிந்தும் தெரியாமலும் ஈடுபடுகிறான். படிப்படியாக ஈர்க்கப்படுகிறான். கூடவே துரைப்பாண்டி,  பிச்சாண்டி, வெள்ளையப்பன் என்று சேர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் போலீஸ் என்கொயரி என்று வந்துவிட சோமு அதிர்ந்து போகிறான். பிறகு நிலமையை உணர்ந்து பயந்து சுப்ரமணிய பிள்ளையின் ஜவுளிக்கடைக்கு ஒழுங்காக வேலைக்கு வர ஆரம்பிக்கிறான். தகவல் அறிந்து மருமகன் சோமுவிடம் லெட்சுமணபிள்ளை ஆதரவோடு பேசுகிறார். தன் பெண்ணின் வாழ்க்கை பாழ்பட்டுப் போகுமோ என்று பயந்திருந்தவருக்கு வெளிச்சம் கிட்டுகிறது.

ஆயுதப்புரட்சி என்பது நமக்கு சரிவராது என்கிற கருத்தினை முன்வைக்கும் வாதம் –

“நம்ம நாட்டிலே பிரச்சனைகள், கஷ்டங்கள் இல்லைன்னு சொல்லலை. ஆனா என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு அத்தனை பேருக்கும் தெரியும். தங்களுடைய பிரச்னைகளுக்காக ஜனங்கள் போராடலாம். பத்திரிகையிலே எழுதலாம். மேடை போட்டு பிரச்னைகளைப் பற்றிப் பேசலாம். நமக்குப் பிடிச்ச மாதிரி வாழலாம். பிடிச்ச வேலையைச் செய்யலாம். சைனாவிலே இதெல்லாம் நடக்குமா? ரஷ்யாவிலே நடக்குமா? அங்கிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்ன சொல்றாங்களோ அதுதான் வேத வாக்கு. மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இங்க இந்த சாரு மஜூம்தார் நிலப்பிரபுக்களை ஒழிக்கணும்ங்கிறார்ஆயுதப்புரட்சி வரணும்னு சொல்கிற அளவுக்கு அவருக்கு சுதந்திரம் தரப்பட்டிருக்கு. சைனாவிலே இந்த மாதிரி மாசேதுங்கை எதிர்த்துப் பேச முடியுமா? அந்தக் கவர்ன்மென்டை எதிர்த்து புரட்சி நடத்தப் போறேன்னு சொல்ல முடியுமா?

அப்போ மார்க்ஸிஸம், லெனினிஸம், மாவோயிஸம் எல்லாம் தப்பா?

உஷாதீபன்

மார்க்ஸ் ஏழைகள் கஷ்டப்படுகிறதைப் பார்த்து ஒரு கொள்கையை உருவாக்கினார். மூலதனம் எப்படி உருவாகிறதுன்னு ஆராய்ந்தார். அப்போ அவர் வாழ்ந்த ஜெர்மனி, பிரிட்டனிலே எல்லாம் தொழில்கள் எல்லாம் தனியார் கிட்டேதான் இருந்தது. தனியாரோட பங்களிப்புதான் அதிகம். தொழிலாளிகள், சாதாரண மக்களோட நிலமை ரொம்ப மோசமா இருந்தது. முதலாளிகளுக்குக் கடிவாளம் போட மார்க்ஸ் நினைச்சார். அவருடைய தத்துவம் எல்லாமே ஒரு சிலரிடமே செல்வம் குவிகிறது என்பதற்கு எதிரானதுதான். பிறகு வந்த லெனின் மார்க்ஸ் கொள்கைகளை விரிவுபடுத்தினார்.சோஷலிஸத்தை முன் வைத்தார். மக்களைத் திரட்டினார்…ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்கே எல்லாம் அரசுடமை ஆகிவிட்டன. தனியுடமை ஒழிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிதான் உற்பத்தியைத் தீர்மானித்தது. ஆனால் ரஷ்ய மக்கள் அனைவரும் சுதந்திரமற்றவர்களாகிவிட்டார்கள். கம்யூனிஸ்ட் சர்வாதிகாரம் வந்து விட்டது. சைனாவிலும் இதுதான் நடந்தது. ரஷ்ய சீன அரசுகள் மனிதனின் சுதந்திரத்தையும் அவனது பேச்சுரிமைகளையும் சேர்த்தே ஒழித்து விட்டன. கலாச்சாரப் பண்பாட்டு சுதந்திரம்ங்கிறது இல்லாமலே போயிடுச்சு. நம்ம நாட்டுலே எல்லா மதத்துக்காரங்களும் அவங்களோட கடவுளைக் கும்பிடலாம். விழாக்கள் நடத்தலாம்…எல்லா மதத்துலயும் ஏராளமான சடங்குகள் இருக்கு. இதையெல்லாம் செய்யலாம். இதுதான் சுதந்திரம்ங்கிறது. வெறும் சாப்பாடு வேலை மட்டுமே மனிதனுக்குப் போதாது. சாமி கும்பிட, சடங்குகள் செய்ய வழி இருக்கணும்….

நாம யாரையும் சாதாரணமா காயப்படுத்தக் கூட முடியாது. ஆயுதம் வன்முறை எல்லாம் ஒத்து வருமா? யாரோ ஒருத்தர் வந்தாரு, ஏதோ ஒரு கட்டுரையைக் கொடுத்தாருன்னு அவர் புறத்தாலே போக முடியுமா? கட்சியிலே இருந்துதான் ஜனங்களுக்கு நல்லது செய்யணும்ங்கிறதுல்ல….நம்மளவுல யாருக்காவது உபகாரம் செய்தாக்கூட அது நல்ல விஷயம்தான்….- இப்படியான அறிவுரைகளில் தெளிகிறான் சோமு. துரைப்பாண்டி மட்டும் கடைசிவரை சாரு மஜூம்தார்தான் தன் தலைவன் என்று அலைந்து கைதாகிறான்.

இறுதியாக இவ்வாறு முடிக்கிறார் நாவலை.

இந்த 2018லும் எத்தனையோ கட்சிகள், கருத்துகள் மனிதர்களைப் பிடித்துள்ளன. அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம் , கல்வி என்று பல கருத்துகள். தங்களுக்குப் பிடித்தமான கருத்துகளே சதமென்று நம்பி மனிதர்கள் மோதிக் கொள்கிறார்கள். இப்படித்தான் உலகம் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. என்று முடித்து தனது யதார்த்தமான, எளிய நடையினால் ஆயுதப்புரட்சியை மையப்படுத்திய அறுபது எழுபதுகள் காலகட்டத்தின் அந்தக் கொள்கைகள் நம் நாட்டுக்கு என்றும் பொருத்தமானவையல்ல என்பதை அழுத்தமாய் அழகான விவாதங்கள் மூலம் நிறுவுகிறார் வண்ணநிலவன்.நடந்ததும் அதுதானே…! அதைத் தெளிவுபடச் சொல்லியிருக்கிறார்.  இதுவரை தவறான கருத்துக் கொண்டவர்கள் கூட இந்த எளிய நாவலின் வழி தெளிவடைந்து தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளக் கூடும் என்கிற நம்பிக்கை நமக்கு இந்த நாவலை வாசித்து முடிக்கிறது போது எழுகிறது. தீவிரவாதம் என்பது எப்போதும் சாத்தியமில்லை என்கிற கருத்தை இந்நாவலின் வழி வலியுறுத்திய வண்ணநிலவன் 2018 ல் ஒரு சிறந்த மையக் கருத்தை முன் வைத்து நாவல் களமாகக் கொண்டு தன் முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது

 

எம் எல் நாவல் வாங்க

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கட்டண உரை,பிறந்தநாள்,கோவை

$
0
0

கோவையில் மூன்றுநாட்கள் இருந்தேன். திட்டமிட்டிருந்தது இரண்டுநாட்கள்தான். கோவை கட்டண உரை ஏப்ரல் 20 ஆம் தேதிதான் திட்டமிடப்பட்டது. பலரிடமும் பணமும் பெற்றுவிட்டோம். ஆனால் அதேநாளில் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் பற்றிய முழுநாள் கருத்தரங்கை கோவையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே ஒருநாள் கட்டணஉரையை தள்ளிவைத்தோம்.முன்பதிவுசெய்த அரங்கத்தை கைவிடவேண்டியிருந்தது. ஒருநாள் கூடுதலாக தங்கநேர்ந்தது

 

21 அன்று ஞாயிறு ஆதலால் அரங்கு கிடைக்கவில்லை. சேம்பர் ஆஃப் காமர்ஸின் அரங்கை பெற்று நிகழ்ச்சியை முடிவுசெய்தோம். நான் ரயிலுக்கு முன்பதிவு செய்திருந்தேன். அதை மாற்றவேண்டியதில்லை என முடிவுசெய்தேன். எம்.கோபாலகிருஷ்ணன் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். அங்கும் செல்லவேண்டியிருந்தது

21 அன்று காலை கோவைசென்று அங்கே விடுதியில் தங்கினேன். நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். பகல் முழுக்க பேச்சு. மதியம் கிளம்பி எம்.கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குச் சென்றேன்.போகன், சுனீல்கிருஷ்ணன், சு.வேணுகோபால், ‘பசலை’ கோவிந்தராஜ் என  பெரும்பாலான நண்பர்கள் அங்கேதான் இருந்தனர். பி.ஏ.கிருஷ்ணன் இப்போதெல்லாம் ஆண்டில் மூன்றுமாதம் கோவையில் இருக்கிறார். அவர் விழாவுக்கு வந்திருந்தார்.

 

நான் சென்றபோது நாஞ்சில்நாடன் பேசிக்கொண்டிருந்தார். நாஞ்சில்நாடன் கோபாலகிருஷ்ணனுடன் தனக்கிருக்கும் உறவையும் கோபாலகிருஷ்ணனின் குறைத்துச்சொல்லிச் செல்லும் அழகியலையும் பற்றிப் பேசினார். விஜயா வேலாயுதம் எம்.கோபாலகிருஷ்ணனின் சமீபத்தைய நாவலான மனைமாட்சி பற்றிப் பேசினார். க.மோகனரங்கன் கோபாலகிருஷ்ணனுக்கும் அவருக்குமான நெடுங்கால நட்பைப்பற்றிப் பேசினார். நாங்கள் அனைவருமே சந்தித்துக்கொண்ட 1991 ல் ஊட்டியில் நடந்த பசுமைநடைச் சந்திப்பைப் பற்றி அனைவருமே சொன்னார்கள்.  பாவண்ணன் கோபாலகிருஷ்ணனின் முக்கியமான கதைமாந்தர்களைப் பற்றிப் பேசினார்.

 

முன்னரே இசை, கே.என்.செந்தில், சு.வேணுகோபால், சுனில் கிருஷ்ணன் என பலர் பேசியிருந்தார்கள். இவ்வரங்கு இலக்கிய ஆர்வலரான லாவண்யா சுந்தரராஜன் முயற்சியால் எழுத்தாளர்களான நண்பர்களின் நிதியுதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

 

ஒரு படைப்பாளியைப் பற்றிய முழுநாள் கருத்தரங்கு என்பது ஒர் அரிய செயல். அவர்மீதான நோக்கைக் குவிக்கவும், ஒட்டுமொத்தமான ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்ளவும் உதவுவது அது. இங்கே அது இலக்கியவாசகர்கள், எழுத்தாளர்களால்தான் பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. முன்னர் பாவண்ணன் பற்றி அமெரிக்க நண்பர்களான பி.கெ.சிவக்குமார் முயற்சியில் சென்னையில் ஒரு முழுநாள் கருத்தரங்கு நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் மனோன்மணியம் பற்கலையில் சுப்ரபாரதிமணியன் படைப்புகள் பற்றி ஒருநாள் கருத்தரங்கு அ.ராமசாமி முயற்சியில் நடைபெற்றது. பூமணி பற்றிய ஒருநாள் கருத்தரங்கு பெருந்தேவி முயற்சியால் முழுநாள் கருத்தரங்கு ஒன்று சென்னையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

மாலை அறைக்குத்திரும்பியபோது மீண்டும் நண்பர்கூட்டம். ஒவ்வொருவராகப் பிரிந்துசெல்ல இரவு 12 மணி ஆகிவிட்டது. நான் என் உரையைத் தயாரிக்கத் தொடங்கினேன். என் உரைகள் எவையும் இயல்பாக ஒழுக்காக வெளிப்படுவன அல்ல. அதற்குப்பின்னால் தயாரிப்பு உள்ளது, அதைக் கடந்து மேடையில் ஒன்று புதிதாக வெளிப்படும். அது அளிக்கும் எழுச்சியே மீண்டும் மேடையில் பேசவைக்கிறது.

 

21 ஆம் தேதி காலைமுதல் நண்பர்கள் அறைக்கு வரத்தொடங்கினர். பேச்சு நிகழும் நாளில் நான் கூடுமானவரை பகலில் பேசுவதில்லை. எனக்கு மேடைப்பேச்சில் சற்றே குரல்திணறல் இருக்கிறது. அதற்கு ஏதாவது செய்தாகவேண்டும். பகலில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் தேர்தல் சார்ந்த விவாதம். கொஞ்சம் தத்துவம் கொஞ்சம் இலக்கியம் என்று சென்றுகொண்டே இருந்தது.

 

உரைக்கு அணியவேண்டிய உடையை கொண்டுவந்திருந்தேன், வழக்கமான சட்டைதான். ஆனால் பாண்டிச்சேரி நண்பர் மணிமாறன் ஒரு சட்டையை பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்து தந்தார். வெண்பா வேட்டி பரிசளித்தார். சரி, புத்தாடையுடன் மேடை ஏறுவோம் என நினைத்தேன். மாப்பிளை போலிருப்பதாக எவரோ சொன்னார்கள். எனக்கே வாசலில் வருகையாளர் பட்டியலுடன் அமர்ந்துகொண்டிருந்த ஈரோடு கிருஷ்ணன் மொய் வசூலிக்கிறாரோ என ஐயம் எழுந்தது.

 

விழா நிகழ்ந்த அரங்கு இறுதிநேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது 160 இருக்கைகள். சற்றே ‘விரிவுபடுத்தி’ 190 ஆக்கப்பட்டது. ஒலியமைப்பு சிறப்பானது என்பதனால் அதனால் இடர் ஏதும் உருவாகவில்லை. ஆனால் உரை அறிவிக்கப்பட்ட சிலநாட்களிலேயே அரங்கம் நிறைந்துவிட்டது. ஐம்பதுபேருக்குமேல் வரவிரும்பினர்,இடமில்லை எனச் சொல்லும்படி ஆகிவிட்டது.

 

ஏற்கனவே ஆற்றிய உரைகளின் தொடர்ச்சியாக இவ்வுரையைச் சொல்லலாம். இந்தியாவின் இன்றைய எண்ணங்கள், தன்னிலைகள் சென்ற இருநூறாண்டுகளில் உருவாகிவந்ததை விவாதித்து   வெவ்வேறு போக்குகள அடையாளப்படுத்தும் முயற்சி. ஒருபகுதி அறியப்பட்ட வரலாற்று, இலக்கியச்செய்திகள். இன்னொரு பகுதி அவற்றிலிருந்து நீளும் என் உளம்கூர்தல்கள், புரிதல்கள், வினாக்கள். கேட்பவர்களுக்கு சில அடிப்படைவினாக்களை எழுப்பி முன்செல்ல உதவுவன இவ்வுரைகள் என நினைக்கிறேன்

 

மாலையில் உரைகுறித்த விவாதம் என் அறையில் நிகழ்ந்தது. அறைநிறைய நண்பர்கள். இரவு 12 மணிக்கு கதிர் “ஒரு ஐந்துநிமிடம் வெளியே செல்லலாமா?” என்றார். ஏதோ தனிப்பட்டமுறையில் பேசப்போகிறார் என நினைத்தேன். வெளியே சென்றபின்னர்தான் என் பிறந்தநாள் கொண்டாட்டம் என தெரிந்தது. கேக்கில் மெழுகுவத்திகள், மா,பலா,வாழை என கனிகள் என அனைத்தும் ஒருங்கியிருந்தன. நான் இளமையிலிருந்தே இவ்வகை கொண்டாட்டங்களைச் செய்வதில்லை. ஆகவே கொஞ்சம் வேடிக்கையாகவும் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் [2017] பவா என் வீட்டுக்கு ஒரு நண்பர்குழாமுடன் வந்து என் பிறந்தநாளை கொண்டாடிவிட்டுச் சென்றார். சென்ற ஆண்டு கொண்டாட்டம் ஏதுமில்லை. மின்னஞ்சல்கள் வழியாகவே பிறந்தநாளை அறிந்தேன். இம்முறை கோவையில் தற்செயலாக இருக்கநேரிட்டமையால் இக்கொண்டாட்டம்.

 

இரவு ஒருமணிவரை நண்பர்கள் இருந்தனர். மறுநாள் காலையில் மீண்டும் நண்பர்கூட்டம். விஜய் சூரியனின் மனைவி பிரதமன் சமைத்து கொடுத்தனுப்பியிருந்தார்கள். செல்வேந்திரன் பரிசுப்பொருளுடன் வந்தார். வெவ்வேறு வாழ்த்துக்கள், பரிசுகள்.

 

பழைய நண்பரார வ.ஸ்ரீனிவாசன் சிறுவாணி இலக்கியவட்டம் நடத்தும் பிரகாஷ் என்னும் நண்பருடன் வந்தார். அவர்கள் வெளியிட்ட நூலை அளித்தார். ஸ்ரீனிவாசன் முதன்மையாக ஜெயகாந்தனின் நண்பர். சுகா, பாரதிமணி அனைவரும் ஒருகாலத்தில் ஒருவட்டமாக அணுக்கமானவர்களாக இருந்தார்கள். வ.ஸ்ரீனிவாசன் எழுதிய கட்டுரைகள் ’எதுமாதிரியும் இல்லாமல்’ என்னும் தலைப்பில் நூலாகியிருக்கின்றன

 

சிறுவாணி இலக்கியவட்டம் முன்னர் சத்தியமூர்த்தி அவர்களின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர்வட்டம் என்னும் அமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டது. அன்று பதிப்பகங்கள் இலக்கியநூல்களை பதிப்பிக்காத நிலை இருந்தது. கைப்பிரதிகள் ஆண்டுக்கணக்கில் கிடந்து பல மறைந்தும்போயின. ஆசிரியரே சொந்தச்செலவில் அச்சிடநேர்ந்தது. வாசகர்வட்டம் இலக்கியவாசகர்களைக்கொண்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்கி நூல்களை வெளியிட்டு அவற்றைப் பகிர்ந்துகொண்டது. அதாவது குறைந்தது 200 பிரதிகளை வாங்கிக்கொள்ளும் ஒரு வாசகர்களின் குழுதான் அது. ஆனால் பெரிய இழப்புக்குப்பின் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நிறுத்திக்கொண்டார்.

இது எழுபதுகளில் நிகழ்ந்தது. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்குப்பின்னரும் வாசகர்வட்டம் இலக்கியச்சூழலில் நினைவுகூரப்படுகிறது. அவர்கள் வெளியிட்ட நூல்கள் மிக அழகிய கட்டமைப்பு கொண்டவை. மிகமுக்கியமான இலக்கிய ஆக்கங்கள். என்னிடம் வாசகர்வட்ட நூல்கள் பல இன்றும் உள்ளன. தமிழிலக்கியத்திலேயே ஒரு திறப்பை உருவாக்க வாசகர்வட்டத்தால் முடிந்தது.

 

சிறுவாணி வாசகர்வட்டம் நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் நூல்களை வெளியிட்டிருக்கிறது. க.நா.சுவின் நூல்களை மறுபதிப்பு செய்துள்ளது. ஆனால் இன்றையசூழல் வேறு. இன்று பதிப்பகம் மலிந்து எல்லாமே அச்சில்வந்துகொண்டிருக்கின்றன. இச்சூழலில் எதைவேண்டுமென்றாலும் வெளியிடலாம் என்பது காலப்போக்கில் பொருளிழந்ததாக ஆகிவிடும். அதற்கு ஒரு திட்டமும் நெறியும் வேண்டும்.

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி [வாசகர்வட்டம்]

எடுத்துக்காட்டாக, படைப்பாளிகளின் முதல்நூல்களை வெளியிடலாம். அல்லது இந்தியாவின் பிறமொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களை வெளியிடலாம், கிடைப்பதற்கு அரியவற்றை வெளியிடலாம். பிறபதிப்பகங்கள் செய்யாத, விட்டுப்போன ஒன்றைச் செய்யும்போதுதான் இத்தகைய முயற்சிகளுக்கு மதிப்பு

மாலையில் கோவையிலிருந்து நாகர்கோயிலுக்குக் கிளம்பியபோது துயில்களைப்பு. ரயில்நிலையத்திற்கு வெண்பா கீதாயன்,ஸ்வேதா, ஜி.எஸ்.வி.நவீன் ஆகியோர் வந்திருந்தார்கள். ரயிலில் ஏறியபோது எப்போதும் கோவை வந்து திரும்பும்போது உணரும் நிறைவை அடைந்தேன்.

 

பிறந்தநாள் கணக்கு

பிறந்தநாள்-2018

பிறந்தநாள் 2017

பிறந்தநாள்2016

பிறந்தநாள்2011

பிறந்தநாள் 2009

பிறந்தநாள் 2008

 

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பற்றி…

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16965 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>