Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16754 articles
Browse latest View live

வனவாசம், லூப்- கடிதங்கள்

$
0
0

வனவாசம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே அதைப்பார்த்தால் அது கூத்து மாதிரியே இல்லை. அந்த சின்னக்கிராமம், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் மனநிலைகள் எல்லாம் சேர்ந்துதான் அந்தக் கூத்து.

அது கூத்தே இல்லை. கூத்தின் ஒரு சின்ன பகுதி. ஒரு மீம் மாதிரித்தான் சொல்லவேண்டும். அதில் நிகழும் அந்த அல்லி அரசாணிமாலை நாடகம் உண்மையில் கதையை பார்க்கும் சுப்பையாவின் மனசிலேதான் நடைபெறுகிறது. சுப்பையாவுக்கு அந்த நாடகம் முழுமையாகவே தெரியும் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். சுப்பையா அந்தப்பாட்டை அவனேதான் நடிக்கிறார்

அந்த கூத்துக்கலைஞர்கள் வேஷம் கலைந்ததும் சாதாரண மனிதர்கள் ஆகிவிடுவதில்லை. அர்ஜுனன் ஆகவும் அல்லி ஆகவும்தான் நீடிக்கிறார்கள். இந்தக்கதையின் முக்கியமான புள்ளியே அதுதான். அர்ஜுனர் வேஷம்போடும் நடிகர் அர்ஜுனனாகவே வாழ்கிறார். மாடுமேய்க்கும்போது அவர் மாறுவேடம்போட்டு வனவாசம் போனவராகவே இருக்கிறார். அதாவது அவருடைய நிஜமுகம்தான் வேஷம். அர்ஜுனமுகம்தான் உண்மை,

 

பாஸ்கரன். எம்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களது நேற்றைய சிறுகதை “வனவாசம்” படித்தேன்.  ஏனோ என் மனதில் புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம்” கதையோடு ஒப்பிட்டு கொண்டிருந்தேன்.  வனவாசம் கதையின் கீழேயுள்ள வரிகள் :-

“பெருமூச்சுடன் சுப்பையா தன்னை உணர்ந்தபோது அவனைத்தவிர எவருமே கூத்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மைக்கில் ஒலித்த அவர்களின் குரல் ஊரை மூடியிருந்த இருண்ட வானில் அலைந்து தொலைவில் கரைந்து கொண்டிருந்தது. மணற்பரப்பில் நாலைந்துபேர் முண்டாசால் செவிகளையும் கண்களையும் மூடி தூங்கிக் கொண்டிருந்தனர். ”

புதுமைப்பித்தன்  சிற்பியின் நரகத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்

“எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்!” என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை! இப்படியே தினமும்…

சுப்பையா போன்ற உண்மையான ரசிகனுக்காக சாமியப்பாக்கள் பட்டினியோடும், பழையசோறு தின்றும் கலையை அழியவிடாமல் காப்பார்கள்.

இந்த கதையை உங்கள் நண்பர் திரு. சாமியப்பா கமல்ஹாசனுக்கு சமர்ப்பித்துள்ளது சாலப் பொருந்தும்.

 

மிகுந்த வணக்கங்களுடன்

பா. சரவணகுமார்

நாகர்கோயில்

லூப் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

லூப் கதைக்கு நிறைய வாசிப்புகள் வந்துவிட்டன. லூப் என்றால் இணைப்பு .  ஒரு முழுவட்டம். மலைப்பாம்பு உண்மையில் ஒரு தடை அல்ல இணைப்பு. அதைத்தான் கதை சொல்ல வருகிறது. துரை அதை தடை என்கிறான். ஞானம்சார் அதை இணைப்பு என்கிறார். அந்த சின்ன வேறுபாடுதான் கதை

மலைப்பாம்பு, காடு எல்லாமே இணைந்துதான் ஒரு வாழ்க்கை வட்டம். அதில் மலைப்பாம்பை எடுத்துவிட்டால் காட்டை அழித்துவிட்டால் லூப் அறுபட்டுவிடுகிறது.வாழ்க்கை வட்டம் இல்லாமலாகிவிடுகிறது

 

செந்தில்முருகன்

 

வணக்கம் ஜெ

லூப் சிறுகதையை வாசித்தேன். இந்தத் தொடர் கதை வரிசையில் தொலைபேசி பற்றிய நிறைய கதைகள் வந்துவிட்டன. இந்தப் பாம்பும் சேர்ந்துதான் போனு என்ற வரி உச்சம். தொலைபேசி கம்பி வடமெல்லாம் பாம்பாக நெளிவதாகத் தோற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் பாம்பு இல்லையென்றால் அந்தக் காடே அழிந்துவிடும்: அந்தத் தொலைபேசி இணைப்பும் சேர்ந்து. அதனைத் தடுக்க அந்தப் பாம்பின் இருப்பும் ஞானத்துக்குத் தேவையாக இருந்திருக்கிறது. அதையும் தாண்டி காடு ஞானத்துக்கு ஏசு வாழும் இடம்.

 

அரவின் குமார்

தொடர்புடைய பதிவுகள்


காக்காய்ப்பொன் [சிறுகதை]

$
0
0

3 Crows is a painting by Sarah Yeoman

“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார்.

விவேக சூடாமணி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. இருண்ட, குளிர்ந்த மாலைநேரம். வெளியே காற்று யூகலிப்டஸ் மரங்களை ஓலமிடச் செய்துகொண்டிருந்தது. சன்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. குருகுலத்தின் அந்தக்கூடத்திற்கு மட்டும் ஆறு சன்னல்கள், பதினெட்டு கதவுகள். அவற்றில் ஏதோ ஒன்றில் கதவு சரியாக மூடவில்லை. அது அதிர்ந்து காற்றை உள்ளே விட்டது. ஆகவே குளிரடித்தது.

ஆனால் சுழன்று சுழன்று வீசிய காற்று எந்த திசையிலிருந்து வருகிறது என்று சொல்லத் தெரியவில்லை. எழுந்து சென்று அந்த சன்னலை மூடினால் நன்றாக இருக்கும். ஆனால் அந்தச்சூழலில் ஒரு சிறு அசைவை வெளிப்படுத்துவதும் முண்டிக்கொண்டு எழுவதுபோல தோன்றும்.

நித்யா சொன்னார். “ஒரு சின்ன கதை சொல்கிறேன். காக்காய் கதை. நாமெல்லாம் முதலில் கேட்பது காக்காய் கதைதான். முதல் பாட்டின் கதைநாயகனும் காக்காய்தான். அந்த பிரபலமான பாட்டு இருக்கிறதே, ‘காக்கே காக்கே கூடெவிடே?’. அழகான பாட்டு. இப்போதுகூட மின்னும் கருமையுடன் ஒரு காகத்தை பார்த்தால் அந்த பாட்டு ஞாபகம் வருகிறது.”

“எம் கோவிந்தன் அதற்கு ஒரு நகல் கவிதை எழுதியிருக்கிறார். “வாக்கே வாக்கே கூடெவிடே?’ என்று. உண்மையில் அதன் தொடக்கம் நன்றாக இருக்கும்” நான் சொன்னேன்.

“ஆமாம், நல்ல வரி. வாக்கே வாக்கே கூடெவிடே. வாக்கு. காக்காவின் மொழி ஒற்றைச் சொல். கா? சம்ஸ்கிருதத்தில் கா என்றால் ஏன். ஒரு பறவை இந்த நிலம் முழுக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏன் ஏன் என்று கூவிக்கொண்டே இருக்கிறது.” நித்யா சொன்னார் “அல்லது அந்த பறவையிலிருந்துதான் தங்களுக்குள் எழும் கேள்விகளுக்கான சொல்லை முனிவர்கள் கண்டடைந்தனர்”

“இனியது, அழகியது. கருந்தளிர்போல அதன் உடலின் மினுமினுப்பு. காகத்தைப்போல அழகான பறவை வேறில்லை. ஒருநாளில் ஒருமுறையாவது காகத்தை பார்த்தாகவேண்டும் எனக்கு. அந்த கேள்வியை அது என்னிடம் கேட்கும். ஏன்? நான் அதனிடம் திரும்ப கேட்பேன், ஏன்? ஒற்றைச்சொல்லில் ஓர் உரையாடல்”.

“காகம் மூதாதையரின் வடிவம். குழந்தை பிறந்து எழுந்து அமர்ந்ததுமே தேடிவரும் முதல் உயிர் அதுதான். வானிலிருந்து உதிர்வதுபோல இறங்கி வருகிறது. எந்தக்குழதையும் அதன் பெயரைச் சொல்லிவிடும். காக்கா!” நித்யா புன்னகைத்து “குழந்தை கையிலிருந்து எதையாவது பிடுங்கி தின்கிறது. என் அம்மா சொல்வாள், அழாதே குஞ்ஞா, அது உன் தாத்தா. தாத்தாவுக்குத்தானே கொடுத்தாய்? ஆமாம், மூதாதை வந்து முதற்பலியை வாங்கிச்செல்கிறார்”.

நான் “காவிரியை உருவாக்கியதே காகம்தான் என்று சொல்லப்படுகிறது” என்றேன். “காகம் விரித்ததனால்தான் அதற்கு காவிரி என்று பெயர் என்று சொல்வார்கள். அகத்தியர் வானிலிருந்து ஆகாயகங்கையை இறக்கி தன் கமண்டலத்தில் அடக்கி தெற்கே கொண்டுவந்தார். அதை ஒரு காகம் தட்டி கவிழ்த்துவிட்டது. அங்கிருந்து காவேரி பெருகி ஓடத்தொடங்கியது. இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது”.

நித்யா வியப்புடன் “ஆமாம், அந்தக்கையை கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். அதை எண்ணி மீண்டும் புன்னகைத்து “அகத்தியர் கடலை விழுங்கியவர் அல்லவா?” என்றார்.

“ஆமாம்” என்றேன்.

“அந்தக் கமண்டலத்தில் இருந்தது அடுத்தவேளை குடிப்பதற்காக அவர் வைத்திருந்த கடல்!” நித்யா வாய்விட்டுச் சிரித்தார். “அதை தட்டிவிட காகம் வரவேண்டியிருக்கிறது. தலைசரித்து பார்த்திருக்கும். ஓடவேண்டியதை எதற்கு ஒடுக்கி வைத்திருக்கிறார் இந்த ஆள் என்று யோசித்திருக்கும். வந்து உருட்டிவிட்டுவிட்டு ஏன் என்று கத்தியபடி எழுந்து பறந்திருக்கும்”.

“காகம் மிகமிக அறிவுள்ளது. இன்றைக்குக்கூட அறிவியலாளர்கள் காகத்தைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யவில்லை. எதிர்காலத்தில் நல்ல எலக்டிரானிக் மினியேச்சர் காமிராக்கள் வரும். அப்போது இவர்கள் காகம் பற்றி தெரிந்துகொண்டிருப்பது டீஸ்பூன் அளவுக்குத்தான் என்று தெரியவரும். அதுவரை நாம் சொல்வதையெல்லாம் கதைகள் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்”.

“நான் சொல்ல வந்தது ஒரு துறவியைப்பற்றி” என்று தொடர்ந்தார் நித்யா “முன்பு சதானந்த தீர்த்தர் என்று ஒருவர் நம் குருகுலத்தில் இருந்தார். என் குருவை விடவும் இருபதாண்டுகள் சீனியர்… நான் அவரை முள்ளிமலையில் முதலில் சந்தித்தேன். முள்ளிமலை குருகுலத்தை அப்போதுதான் வாங்கியிருந்தோம். மலையுச்சியில் தன்னந்தனியான இடம். மிக அருகே இருக்கும் வீடு ஐந்து கிலோமீட்டர் தள்ளி. ஒற்றையடிப்பாதையில் இரண்டு மணிநேரம் ஏறித்தான் அங்கே செல்லமுடியும்”.

மிகச்சிறியவிலைக்கு வாங்கப்பட்ட ஏழரை ஏக்கர் நிலம். நடுவே ஒரு மண்வீட்டை கட்டி அதில் அவர் மட்டும் குடியிருந்தார். அந்த வீடே அவர் கையால் கட்டியதுதான். தாழ்வான சுவர்களும் ஓலைக்கூரையும் கொண்ட வீடு. நல்ல குளிர்ந்த மண் திண்ணை. அங்கே அமர்ந்திருந்தால் அலையலையாக குட்டி மலைகள் தெரியும். எல்லாமே பச்சைமூடிய மலைகள். ஒரு பெரும்புயல் அடித்து காட்டுப்பரப்பு அப்படியே கொந்தளித்து மிகப்பெரிய அலைகளாக எழுந்து அசைவற்று விட்டதுபோல தோன்றும்.

நாம் நாகரீகம் என்று நினைக்கும் எந்த ஓசையும் அங்கே வந்துசேராது. அங்கே கோடைகாலம் என்பதே இல்லை. இங்கே உள்ள கணக்கைக் கொண்டு பார்த்தால் குளிர்காலமும் இல்லை. அது மேற்குதொடர்ச்சிமலையின் மழைக்காடுக்குள் அமைந்த பகுதி. மழைக்காட்டில் சரியான பொருளில் இலையுதிர்காலமும் இல்லை. ஆகவே எஞ்சியிருப்பது கார்காலமும் வசந்தமும்தான்.

வசந்தமும் மழைக்காலமும் மாறிமாறி. வெயிலில் பச்சை சுடர்விடுவதை பார்த்துக்கொண்டு நீராவி நிறைந்த குளிர்காற்றை உடலில் வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தால் இருத்தல் போல இன்பம் மானுடனுக்கு வேறு ஏதும் இல்லை என்று தோன்றிவிடும். நுகர்வது அல்ல. அடைவது அல்ல. திகழ்வதுகூட அல்ல. வெறுமே இருப்பது. இருக்கிறேன் என உணர்வது.

சதானந்தர் மிகக் கடுமையான உழைப்பாளி.அந்த நிலத்தை அவர் ஓர் அற்புதமான சோலையாக ஆக்கினார். மா, பலா ,வாழை, தென்னை, கமுகு, மரவள்ளி, காய்கறிகள். வாரம் ஒருமுறை சந்தைக்கு பொருட்களை கொண்டுசென்று விற்பார். செலவுக்கு மிஞ்சியதை தலைமைக்கு அனுப்பிவிடுவார். அவருக்கு உடைமை என ஏதும் இல்லை.

அவர் வாழ்க்கையே ஒரு நோன்பு. காலை எழுந்து பாராயணம்,தியானம் இரண்டையும் முடித்தபின் மண்வெட்டியுடன் நிலத்தில் இறங்கிவிடுவார். அந்தியில்தான் வெளியே வருவார். மீண்டும் தியானம், பாராயணம். பிறகு சமையல் சாப்பாடு தூக்கம். காலையிலும் மாலையிலும் இரண்டுவேளைதான் சாப்பாடு. அவர் மட்டும்தான் அங்கே தங்கியிருந்தார். எப்போதாவது எவராவது தேடிவருவார்கள். பெரும்பாலும் என்னைப்போன்ற இளந்துறவிகள்.

அவருடன் அந்த திண்ணையில் பேசிக்கொண்டிருந்தேன். இளங்குளிர்காற்று கீழிருந்து ஏறி வந்துகொண்டிருந்தது. கண்கூசும் பச்சைநிறமான வெயில். அப்போது ஒரு காகம் வந்து அவர் அருகே அமர்ந்தது. அவரைப் பார்த்து கா என்றது. அவர் தலையசைத்தார். அவ்வளவுதான். மேற்கொண்டு உரையாடல் ஏதுமில்லை. அது எழுந்து பறந்து போயிற்று.

“இந்தக் காகத்திற்கு உங்களை தெரியுமா?” என்று கேட்டேன்.

“காகங்களுக்கு அவை சந்திக்கும் மனிதர்கள் அனைவரையுமே தெரியும்.தலைமுறை தலைமுறையாக ஞாபகம் வைத்திருக்கும்” என்றார்.

“அப்படியா?”என்று நான் அவநம்பிக்கையுடன் கேட்டேன். நான் அப்போதுதான் தத்துவப்பேராசிரியர் வேலையை விட்டிருந்தேன்.

“காகம் மிகமிக புத்திசாலி” என்றார் சதானந்தர்.

“ஆனால் அதன் கூட்டில்தானே குயில் முட்டைபோடுகிறது?” என்றேன். “அப்படியென்றால் குயில்தானே புத்திசாலி?”

சதானந்தர் அந்தமாதிரியான விவாதங்களுக்குப் பழக்கம் உடையவர் அல்ல. அவர் திகைப்பால் திறந்த வாயுடன் என்னை பார்த்தார். “இருக்கலாம்” என்றார். பிறகு “எனக்கு காகங்கள்தான் இங்கே ஒரே உறவு. அவற்றுக்கு என்னை நன்றாகவே தெரியும்” என்றார்.

“ஆமாம், இங்கே நமக்கு பறவைகள்தான் துணையாக இருக்கமுடியும்” என்றேன்

சற்றுநேரம் யோசித்தபின் “காகம் ஏன் குயிலை முட்டைபோட அனுமதிக்கிறது?” என்றார் சதானந்த சாமி.

“மிக அறிவானவர்களின் முட்டாள்தனம் வசீகரமானது” என்று நான் சொன்னேன். “அதைத்தான் நாம் அன்பு பாசம் கருணை அறம் என்றெல்லாம் சொல்கிறோம்”.

நித்யா சிரித்துக்கொண்டே சொன்னார்.“காகத்திற்கும் சதானந்த சாமிக்குமான உறவு வேடிக்கையானது. அதைத்தான் சொல்ல வந்தேன்” பின்னர் முகம் மலர்ந்து சொல்லத் தொடங்கினார் “அவர் தன் இருபத்தேழு வயதில் முள்ளிமலைக்கு வந்து தங்கினார். நான் சொன்னேனே, அங்கே அவருக்கு காகங்கள் மட்டும்தான் பேச்சுத்துணை. ஏற்கனவே வற்கலையில் பிரம்மசாரியாக இருக்கும்போதே அவர் காகங்களுடன் மிக நெருக்கமாக ஆகிவிட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் மூன்றுவேளையும் காகங்களுக்கு உணவு வைத்து அவை வந்து சாப்பிட்டுவிட்டுப் போன பிறகுதான் அவர் சாப்பிடுவார். காகங்கள் அவரை ஏற்றுக்கொண்டன. நெருங்கின. பிறகு அவருடன் அவை மிக அணுக்கமாக இருந்தன.

முள்ளிமலையில் சதானந்தர் காகங்களுடன் சரளமாகப் பேசிக்கொண்டே இருப்பார். அவர்கள் உரையாடுவது போலத்தான் இருக்கும். “நல்லவேளை சதானந்த சாமிக்கு வேதாந்தப் பிலாக்காணம் இல்லை. இருந்திருந்தால் காக்காய்களிலும் வரட்டு வேதாந்திகள் தோன்றியிருப்பார்கள். எல்லா காக்காய்களும் சேர்ந்து ஒற்றைக் காக்காய், அந்தக் காக்காய்தான் பிரம்மம், நானே அந்த பிரம்மம் என்று சொல்ல ஆரம்பித்திருப்பார்கள்” என்று என் நடராஜ குரு கிண்டல் செய்வார்.

ஒருநாள் குருகுலத்தின் முற்றத்தில் எதுவோ மின்னியது. இறங்கிச்செல்லும் படியின் நேர் முன்னால் அது கிடந்தது. அவர் அதை எடுத்துப் பார்த்தார். போலிப்பொன்னால் ஆன ஒரு கம்மல். சந்தைகளில் மலிவாக கிடைக்குமே, அலுமினியத்தில் செய்து கில்ட் பூசிய நகை அது. முதலில் அவர் ஏதோ பொன் என்று நினைத்தார். எடுத்துப் பார்த்தால் பொன் அல்ல என்று தெரிந்தது. அப்பால் வீசிவிட்டார்

ஆனால் நாலைந்து நாட்கள் கழித்து வேறொன்று அங்கே கிடந்தது. இன்னொரு போலிப்பொன் நகை. மூக்குத்தியோ திருகாணியோ. யார் அங்கே வருவது? அதுவும் பெண்? அபவாதம் உருவாகிவிடுமோ? சதானந்தர் நிம்மதி இழந்தார். முற்றத்தையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு வேலைகள் செய்தார். பகல் முழுக்க கண்காணித்தார். நாலைந்து நாளிலேயே விஷயம் தெரிந்தது, அதைக் கொண்டுபோடுவது காகம்.

அலகில் ஒரு வெள்ளிநகைத் துண்டுடன் காகம் வந்து தென்னை ஓலையில் அமர்ந்திருப்பதை அவர் பார்த்தார். பின்னர் அது சிறகடித்து கீழே இறங்கியது. முற்றத்தில் படியின் முன்னால் அமர்ந்து அந்த வெள்ளிமணியை போட்டது. திரும்ப எடுத்து மீண்டும் போட்டது. மீண்டும் இடம் மாற்றிப்போட்டுவிட்டு “கா!கா!கா!”என்றது. அவர் வெளியே வந்ததும் எழுந்து மேலே சென்று அமர்ந்தது.

அவர் அதை எடுத்துப் பார்த்தார். அது வெள்ளி. ஏதோ கால்கொலுசின் திருகாணி. அவர் காகத்தை பார்த்தார். அது வேண்டுமென்றேதான் கொண்டுவந்து போடுகிறது. அவருக்கு தெரிந்த காகம். அவர் தினந்தோறும் சாப்பாடு போடுவது. “இது என்ன?” என்று அவர் கேட்டார். “ஏன் இங்கே கொண்டுவந்து போடுகிறாய்? எங்கே கிடைத்தது?”

காகம் கரைந்துகொண்டே இருந்தது. பிறகு சென்றுவிட்டது. அவர் எண்ணி எண்ணி குழம்பிக்கொண்டே இருந்தார். அந்த பொருட்களை வைத்து கூடு ஏதாவது கட்ட நினைக்கிறதா? இல்லை அது தின்பண்டம் என்று நினைக்கிறதா? அது முட்டைபோட்டு குஞ்சுபொரித்து வளர்ப்பதற்கு அந்த பொருட்கள் தேவைப்படுகின்றனவா?

நாலைந்து நாட்கள் கழித்து அதே இடத்தில் ஒரு மின்னும் வெள்ளிநிறக் கூழாங்கல் கிடந்தது. சிலநாட்களுக்குப்பின் ஒரு அலுமினிய சிகரெட்தாள். பிறகு ஒரு அலுமினிய துண்டு. மீண்டும் சில மின்னும் கூழாங்கற்கள். ஒரு உடைந்த கண்ணாடித்துண்டு. ஒரு நீலநிற பளிங்குத்துண்டு கண்ணைப்பறிக்கும் மின் கொண்டிருந்தது. அவர் அதை எடுத்துப்பார்த்தார். செந்நீல நிறம். சரித்துப்பார்த்தால் மின்னியது.

அவர் காகங்கள் என்னதான் செய்கின்றன என்று பார்த்துக்கொண்டே இருந்தார். அந்தப்பொருட்களை ஒரு டப்பாவில் போட்டுவைத்தார். அந்நாளில் ஒருமுறை குருவும் நானும் அங்கே சென்றோம். சதானந்தர் அந்த டப்பாவை எடுத்துவந்து காட்டினார். “இது என்ன என்று சொல்லுங்கள்” என்றார்.

குரு “என்ன, காக்கா கொண்டுவந்து போட்டதா?” என்றார்.

சதானந்தர் திகைத்துவிட்டார். “எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றார்.

“காகத்திற்கு இப்படி ஒரு குணம் உண்டு. அதற்கு மிகவும் பிடித்தவர்களுக்கு ஏதாவது பரிசு அளிக்கவிரும்பும். மின்னுவதை பார்த்தால் கொத்திக் கொண்டுவந்து முற்றத்தில் போட்டு எடுத்துக்கொள் என்று சொல்லும்”.

சதானந்தர் திகைத்துவிட்டார். பிறகு “காகத்திற்கு இந்த பொருட்கள் எல்லாம் முக்கியமானவையா?” என்றார்.

“இல்லை, அதற்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் மனிதர்களுக்கு இவை முக்கியமானவை என்று அது நினைக்கிறது”.

“ஏன்?” என்று சதானந்தர் கேட்டார்.

“மனிதர்கள் என்ற விலங்குகளைப்பற்றி ஒட்டுமொத்தமாக நினைத்துப்பாருங்கள். அவற்றுக்கு உண்மையில் மின்னும் பொருட்கள் மேல் பெரிய பித்து இருக்கிறது. அந்த பித்தால்தான் அவர்கள் இயற்கையிலிருந்து ஏராளமான பொருட்களை கண்டுபிடித்து இந்த உலகையே உருவாக்கியிருக்கிறார்கள்” என்றார் குரு.

“மிகமிகப் பழைய கற்காலத்தில் மனிதர்கள் மின்னும் கூழாங்கற்களால் ஆன நகைகளை அணிந்திருந்தார்கள். மின்னும்கூர்மைகொண்ட உடைசல்கற்களை எடுத்து ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்கள். அதன்பின் உலோகங்களைக் கண்டுபிடித்தார்கள். மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்குமான வேறுபாட்டை உருவாக்குவது என்ன? உலோகங்கள் அல்லவா?”

“உலோகங்களில் பொன் ஓர் உச்சம். மனிதர்களுக்கு அழகு என்றால் பொன்தான். செல்வம் என்றால் பொன். அவர்களின் தெய்வமும் பொன்தான். மனிதர்கள் பொன்னுக்கு அடிமைகள்” என்றார் குரு. அவருக்கு பேசப்பேசத்தான் ஒரு கொள்கை உருவாகி வரும். அதை முழுமையாக உருவாக்கியபின் மணலில் வீடுகட்டி விளையாடிய குழந்தை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதுபோல விலகிவிடுவார்.

“மின்னுவது என்றால் உண்மையில் என்ன? அது ஒரு குணம். உறுதி, மென்மை, கூர்மை ஆகியவற்றின் காட்சிவடிவையே நாம் மின்னுதல் என்கிறோம். இயற்கையில் எந்தப்பொருளும் இயல்பாக மின்னிக்கொண்டிருப்பதில்லை. அவற்றின்மேல் ஏதோ ஒன்று நிகழ்ந்து அவை அக்குணங்களை அடைந்தால்தான் மின்னுகின்றன. ஆகவே மனிதர்கள் மின்னும் எந்தப்பொருளையும் ஆர்வத்துடன் எடுத்துப் பார்க்காமல் இருப்பதில்லை. நீங்கள்கூட இந்தப்பொருட்கள் மின்னுவதனால்தானே எடுத்துப்பார்த்தீர்கள்?”

“காகத்தின் பார்வையில் நாம் எப்படி தென்படுவோம்? மனிதர்கள் உடலெங்கும் மின்னும் நகைகளை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் மின்னுகின்றன. துணிகளில் சரிகை மின்னுகிறது. காகம் புரிந்துகொண்டது தவறு என்று எப்படிச் சொல்லம்முடியும்?” குரு கேட்டார்.

நான் அந்தப்பேச்சை கொஞ்சம் திசைமாற்ற விரும்பினேன். ஏனென்றால் சதானந்தர் அமைதியிழப்பதுபோல தோன்றியது என்று நித்யா சொன்னார். “அதற்கு நம்மைபோன்ற வண்ணங்கள் தெரியுமா?” என்றேன்.

“காகத்தின் பார்வை நம்மைவிட கூர்மையானது. நம்மைவிட நிறைய நிறங்களை அது பார்க்கும். அல்ட்ரா வயலட் கதிர்களைக்கொண்டும் அது பார்க்கிறது. ஆகவே அதற்கு வேறுபாடுகள் மிக நன்றாகவே தெரியும். நமக்குத்தான் அதெல்லாம் தெரியாது என்று அது நினைக்கிறது” என்றார் குரு.

குரு சொன்னதைக் கேட்டு சதானந்தர் முகம் சிவந்துவிட்டார். மூச்சு வாங்க ஆரம்பித்தார். நான் அதைக் கவனித்தேன். சூழலை சாதரணமாக ஆக்குவதற்காக “பாவம் காகம் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைக்கிறது” என்றேன்.

குரு சிரித்து “பொன் என்பது ஒரு மின்னும் பொருள் மட்டும்தான் என்று நினைக்கிறது என்றும் சொல்லலாமே” என்றார். “காக்காய்ப்பொன் என்று ஒன்று உண்டு தெரியுமா? இதோ இதுதான்” அந்த செந்நீலநிற கல்லை எடுத்தார்.

“இந்த மின்னும் பொருட்களில் இது மட்டும் வேறு. இது காப்பர் சல்ஃபைட். காட்டில் தொன்மையான எரிமலைப் பாறைகளில் ஒரு சிறுபகுதியாக இருக்கும். சிலசமயம் உடைந்து சில்லுகளாகி நதியில் ஓடி வந்து ஒதுங்கிக் கிடக்கும். நமக்கு இது அவ்வளவாக கண்ணுக்குப்படாது. ஆனால் காகத்தின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் கொண்ட கண்ணுக்கு இது சுடர்விட்டு எரிவதுபோலத் தெரியும். இதை எடுத்துக் கொண்டுவந்து நம் வீட்டுமுன் போடும். அவர் அதை திரும்ப வைத்து “காப்பர் சல்ஃபைட் பழங்காலத்தில் மிக மிக மதிப்புமிக்க மருந்து. தோலுக்குமேல் போடும் பெரும்பாலான மருந்துகளில் இது உண்டு”

அந்தப்பேச்சு அப்படியே ஆயுர்வேத மருந்துகளில் உள்ள இயற்கை ரசாயனங்களைப் பற்றியதாக மாறியது. ஆனால் சதானந்தர் பேசவே இல்லை. அவர் கடுமையாக மனம் புண்பட்டுவிட்டார் என்பது பின்னர் தெரிந்தது. அவரால் குரு சொன்ன அந்த வரிகளை கடக்கவே முடியவில்லை. குரு கிளம்பிச் சென்றபின் நான் மேலும் ஒருவாரம் அங்கே தங்கினேன். நான்காம் நாள் என்னிடம் சதானந்தர் “அந்தக் காகம் என்னை பற்றி ஏன் அப்படி நினைக்கிறது?” என்றார்.

“ஏன்?” என்று புரியாமல் கேட்டேன்.

“நான் எந்த நகையும் வைத்துக் கொள்ளவில்லை. இங்கே உள்ள எல்லா பாத்திரங்களும் மண்ணாலானவை. கோப்பைகள் கூட மண்தான். மின்னும் பொருள் ஒன்றுகூட இங்கே இல்லை” என்றார் சதானந்தர்.

“ஆமாம், ஆனால் காகம் உங்களை மனிதர் என்று நினைக்கிறது. மனிதர்களுக்கு எது பிடிக்குமோ அதை உங்களுக்கு தருகிறது” என்றேன்.

“ஆனால் நான் அப்படி அல்ல. நான் துறவி. நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே மேலே வந்திருக்கிறேன். இத்தனை உயரத்திற்கு. உனக்குத்தெரியுமா, இங்கே நான் பணத்தைக்கூட கொண்டுவருவதில்லை. விளைபொருட்களை விற்றுவிட்டு தேவையானவற்றை வாங்கி மிஞ்சிய பணத்தை கடையில்கொடுத்துவிட்டுத்தான் வருவேன். நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இங்கே மின்னும் பொருள் என்று எதுவுமே இல்லை.

“ஆமாம், அதை காகம் கவனித்திருக்காது” என்றேன்.

“அதற்கு எல்லாமே தெரியும். காகம் என்பது ஒரு தனிப்பறவை அல்ல. அது பெரிய ஒரு பறவையின் தனித்தனி தோற்றம். ஆகவேதான் அது தலைமுறை தலைமுறையாக விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறது அந்த ஏகரூபமான காகத்திற்கு நான் துறவி என்று தெரியாமல் இருக்குமா? என்னை பொன்னை விரும்புபவன் என்று அது எப்படிச் சொல்லமுடியும்?”

“அது அப்படிச் சொல்லவில்லையே” என்றேன்.

“மின்னுவதன் மீதான பற்று என்பது பொன்மீதான பற்றுதான். பொன்மீதான பற்று என்பது காமம்தான். பொருள் மோகம்தான். ஆணவமும்தான்….” என்றார் சதானந்தர் “ஆகவேதான் நான் எல்லாவற்றையும் விலக்கினேன். மின்னும் பொருள் எதுவும் என்னிடம் இல்லை. எதுவுமே இல்லை”

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் பேசாமல் அமர்ந்திருந்தேன். அவர் அழுவதுபோன்ற குரலில் “அது என்னை கிண்டல் செய்கிறது. நான் கடக்கவில்லை என்று சொல்கிறது. உனக்கு இதுதானே வேண்டும் என்று தான் அதுகேட்கிறது” என்றார்.

“காகம் கிண்டல்செய்கிறதா?”என்றேன். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“ஆமாம், கிண்டல் செய்கிறது. கிண்டல் செய்கிறது. நான் பொன்னுக்கு ஆசைப்படும் சாமானியன் என்று நினைக்கிறது” என்று அவர் கூவினார். “நான் மின்னுவதைக் கடந்தவன். கடந்த என்னை ஏன் அந்த காகம் புரிந்துகொள்ளவில்லை?”

அதையே இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் மிக முதியவர், சொல்லப்போனால் நாராயணகுருவின் தலைமுறையைச் சேர்ந்தவர். அவருடைய மனம் எப்படி செயல்படுகிறது என்று எனக்குப் புரிந்தது. அவர்களைப் பொறுத்த வரை சமரசமே இல்லாத வைராக்யமே தவம் என்பது. அதில் நகைச்சுவைக்கும் அழகுக்கும் மெல்லுணர்ச்சிகளுக்கும் இடமே இல்லை. சித்தவிருத்தி நிரோதம் மட்டுமே வாழ்க்கையின் இலக்கு. செய்வதனைத்தும் அதன்பொருட்டே.

மறுநாள் காலை நான் விசித்திரமான ஒரு காட்சியை கண்டேன். சதானந்தர் கையில் ஒரு நீண்ட கழியுடன் முற்றத்தில் நின்று காகங்களை துரத்திக்கொண்டிருந்தார். “போ!போ!”என்று ஒரே கூச்சல்.

“என்ன செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.

“என் முற்றத்தில் இனி அது எதையாவது கொண்டு போடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று அவர் கூச்சலிட்டார். “நான் யார் என்று எனக்குத் தெரியும். ஒரு அற்பப் பறவை வந்து என்னை இழிவுசெய்ய நான் விடப்போவதில்லை”

ஆனால் அவர் தோட்டத்திற்குச் சென்று வருவதற்குள் முற்றத்தில் காகம் ஒரு வெள்ளித்தாளை கொண்டுவந்து முற்றத்தில் போட்டிருந்தது. அவர் தொலைவிலேயே அதைப் பார்த்துவிட்டார். மிகமெல்ல காலடி வைத்து அருகே வந்தார். அதைக் குனிந்து பார்த்தார். காலால் விலக்கி நன்றாகப் பார்த்தார். நிமிர்ந்து பார்த்தபோது மேலே காகம் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

சட்டென்று விசும்பியபடி திண்ணையில் அமர்ந்துவிட்டார். நான் அருகே சென்று “என்ன இது? நீங்களே ஏதாவது நினைத்துக் கொள்ளவேண்டாம்… அது வெறும் பறவை. அதன் உயிரியல் பழக்கத்தைத்தான் அது செய்யமுடியும்” என்றேன்.

“இல்லை இல்லை”என்று தலையசைத்து அவர் அழுதுகொண்டிருந்தார். “அதற்குத் தெரியும்… அதற்கு தெரியும்”.

“நீங்கள் உங்கள் குழப்பங்களை அதன்மேல் ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் உணவு கொடுக்கிறீர்கள். அது பதிலுக்கு அந்த பொருளை கொண்டுவந்து போடுகிறது”.

அவர் நான் சொல்வதைக் கேட்கவே இல்லை. அழுதுகொண்டே இருந்தார். அவரை சமாதானப்படுத்த முடியாது என்று நினைத்து நான் விலகிச்சென்றுவிட்டேன்.

அங்கிருந்து நான் வந்துவிட்டேன். ஆனால் அவரைப்பற்றிய செய்திகளை கேட்டு அறிந்து கொண்டிருந்தேன். அவருடைய மனநிலையே தவறிவிட்டது. காகம் என்றாலே வெறுப்பு. காகங்களை விரட்டுவதற்காகவே கையில் எப்போதுமே கழி வைத்திருந்தார். காகங்களை பார்த்தாலே கல்லைவிட்டு எறியத்தொடங்கினார். கூச்சலிட்டார், வசைபாடினார்.

ஆனாலும் காகங்கள் அவரை தேடி வந்துகொண்டிருந்தன. அவரால் ஒரு காகத்தைக்கூட குச்சியால் அடிக்கவோ கல்லடித்து வீழ்த்தவோ முடியவில்லை. அவற்றின் பார்வை அவருடைய பார்வையை விட பலமடங்கு கூர்மையானது. அவருடைய கையை விட அவற்றின் வேகமும் மிகுதி. மேலும் அவை அவரை கூர்ந்து பார்த்து நன்றாகவே அறிந்திருந்தன.

அவர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே ஒடுங்கிக்கொண்டே வந்தார். எவரிடமும் பேசுவதில்லை. கண்கள் பதறிக்கொண்டே இருந்தன. முதுமையும் நோயும் அவரை அழுத்தின. அந்த குருகுலத்தை பார்த்துக் கொள்ள வேறொரு இளைஞரை அமர்த்தினோம்.

சதானந்தர் வெளியே வருவதே குறைந்தது. பின்னர் ஓர் இருண்ட தனியறையிலேயே இருக்க தொடங்கினார். முதற்காலையில் எழுந்து குளித்து அதற்குள் புகுந்தால் பகல் முழுக்க அங்கேதான் இருப்பார். பெரும்பாலான நேரம் கையில் மணிமாலையை வைத்து உருட்டியபடி ஜபம் செய்துகொண்டிருப்பார். இரவில் இருட்டு எழுந்தபிறகு வந்து திண்ணையில் அமர்ந்து நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருப்பார்.

அவர் வெயிலை பார்த்தே மாதக்கணக்கில் ஆயிற்று. அவருடைய கண்கள் சாதாரண வெளிச்சத்துக்கே கூசின. அங்கே மின்விளக்கு இல்லை. மண்ணெண்ணை விளக்கே கண்கூசுகிறது, மின்னுகிறது என்று சொல்வார். எண்ணைத்திரி போடப்பட்ட மிகச்சிறிய அகல்விளக்குதான். அதுகூட அரிதாகவே. பெரும்பாலும் அவர் இருட்டிலேயே இருந்தார்.

அவர் காகங்களை பார்த்தே நெடுநாட்கள் ஆகிவிட்டன. காகங்களுக்கு அங்கே சாப்பாடு வைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ஆகவே அவை வருவதுமில்லை.

எடைமிக்க கல் கிணற்றின் இருண்டநீரில் மூழ்கி ஆழத்தில் மறைவதுபோல சதானந்தர் மறைந்துகொண்டே இருந்தார். என்ன ஆச்சரியம் என்றால் அப்படி ஒருவர் தன்னை உள்ளிழுத்துக் கொண்டால் நாமும் அவரை அப்படியே கடந்து விடுகிறோம். நம் குருகுலங்களில் ஆண்டுக்கணக்காக மௌனவிரதம் இருக்கும் துறவிகள் உண்டு. அவர்கள் கண்முன் வந்துகொண்டே இருப்பர்கள். ஆனால் அவர்களிடம் நாம் பேசமுடியாது, அவர்கள் நம்முடன் பேசமாட்டார்கள் என்பதனாலேயே அவர்களை நம பார்க்காமலாகிவிடுவோம். அவர்கள் எவராலும் பார்க்கப்படாமல் நம்மிடையே நடமாடிக் கொண்டிருப்பார்கள். நாம் நமக்கு அளிக்கப்படுவனவற்றை மட்டுமே பெற பழகியவர்கள். நம்மிடம் கூறப்படாத எதையும் நம்மால் கேட்கமுடியாது.

நான்காண்டுகளில் சதானந்தரை எல்லாருமே மறந்துவிட்டனர். அவர் ஏதோ தனித்தவத்தில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஒருநாள் அவர் வழக்கம்போல விடியற்காலையில் வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்தால் கடும் காய்ச்சலில் மயங்கிக் கிடந்தார். அங்கிருந்து அவரை சுமந்துதான் கீழே கொண்டு வரவேண்டும். மூத்த உடல், அது தாக்குபிடிக்குமா என்று தெரியவில்லை.

டாக்டரை அழைத்துப் போனார்கள். அவர் சில மருந்துகள் கொடுத்துவிட்டு ஒருநாள் பார்க்கலாம், காய்ச்சல் குறையாவிட்டால் டோலியில் தூக்கி கீழே கொண்டுசெல்ல வேண்டியதுதான் என்று சொன்னார். நான் அப்போது தலைச்சேரியில் இருந்தேன். செய்திகேட்டு இரவில் சென்று சேர்ந்தேன்.

காய்ச்சல் மறுநாள் காலையில் குறைந்தது. சதானந்தர் கண்விழித்து என்னைப் பார்த்து புன்னகை செய்தார். “நீ வந்தது நல்லதாகப் போயிற்று” என்றார்.

“ஒன்றுமில்லை, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.

“என்னை திண்ணைக்கு கொண்டுசென்று படுக்கவை” என்றார். “காகம் வருகிறதா என்று பார். எனக்கு அது இப்போது என்ன கொண்டு தருகிறது என்று பார்க்கவேண்டும்”.

“இப்போது அது தேவையா? வெளியே காற்று கடுமையாக வீசுகிறது” என்றேன்.

“இல்லை, கொண்டுபோ என்னை” என்றார்

திண்ணையில் பாய்விரித்து அவரைப் படுக்கவைத்தோம். அவர் கைகளை கூப்பியபடி மல்லாந்து படுத்து முற்றத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பழுத்த கண்களில் இருந்தது என்ன உணர்ச்சி என்று எனக்குத் தெரியவில்லை.

“காகங்கள் வருவதுண்டா?”என்று கேட்டேன்.

அங்கிருந்த பிரம்மசாரி “இங்கே அவற்றுக்கு உணவு கொடுப்பதில்லை. ஆகவே முற்றத்திற்கெல்லாம் வருவதில்லை” என்றார்.

ஆனால் எனக்கு தெரியும், வந்தாகவேண்டும். இல்லாவிட்டால் கதையில் ஒருமை இல்லாமலாகிவிடுமே. எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு நின்றோம்.

வெயில் ஏறிக்கொண்டிருந்தது. காகங்கள் வெயில் ஏற ஏற விலகி கிளைகளுக்குச் செல்வதே வழக்கம். நான் அவை வரப்போவதில்லை என்று எண்ணியபோது ஒரு காகம் பறந்து வந்து அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து தலைசரித்து பார்த்தது. பிறகு பறந்து முற்றத்தில் இறங்கி வாலை ஆட்டியபடி நடந்து அருகே வந்தது.

சதானந்தர் அதை பார்த்துக்கொண்டிருந்தார். அது மீண்டும் எழுந்து பறந்து கிளைக்குச் சென்றது. அங்கிருந்து கரைந்தது. எழுந்து பறந்து சென்றது. சற்றுநேரம் கழித்து இன்னொரு காகம் வந்தது. மரக்கிளையில் அமர்ந்து சிறகை அடுக்கியபின் தழைந்து கீழிறங்கியது.

அதன் வாயில் ஒரு வெள்ளிபோல ஏதோ மின்னியது. அதை முற்றத்தில்போட்டுவிட்டு கா கா கா என்றது. சிறகடித்து எழுந்து கிளைக்கே சென்றது.

நான் சதானந்தரின் முகத்தைப் பார்த்தேன். அது மலர்ந்திருந்தது. சிறுகுழந்தைகளுக்குரிய சிரிப்பு என்று தோன்றியது. “அதை எடு” என்றார்.

அது ஒரு சிறு அலுமினிய மணி. ஏதோ செயற்கை நகையில் இருந்து உதிர்ந்தது. அதை எடுத்து அவரிடம் அளித்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டார். கைவிரல்களில் வைத்து உருட்டிக்கொண்டே இருந்தார்.

“அன்று மாலை சதானந்தர் சமாதியானார். அப்போது அவர் கையில் அந்த மணி இருந்தது” என்று நித்யா சொன்னார். “ஆகவேதான் சொன்னேன் தவமும் மீட்பும் பேசி முடிக்கமுடியாதவை”.

ராமகிருஷ்ணன் எழுந்துசென்று ஜன்னல் கதவை மூடினார். காற்றின் ஒலி குறைந்தது. நித்யா என்னை நோக்கிச் சிரித்து “இந்த நாடகீயமான கதைக்கு ஒரு நல்ல முத்தாய்ப்புச் சொற்றொடர் தேவை, இல்லையா?” என்றார். கையை தூக்கி “சிறுகுடத்து நீரை வற்றாத நதியாக்கும் கேள்விக்கு வணக்கம்” என்றார்.

நான் புன்னகைத்தேன்.

நித்யா “அடுத்த பாடலுக்குப் போவோம்” என்று விவேகசூடாமணிக்கே திரும்பினார்.

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மூன்று வருகைகள்.

$
0
0

சென்ற சிலநாட்களாகவே என் படுக்கையறைக்குள் கருவேப்பிலை மணம். கோடை தொடங்கியதுமே எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டு கொசுவலை கட்டிக்கொண்டு படுக்கத் தொடங்கினேன். இங்கே உண்மையில் மெய்யான கோடைகாலம் தொடங்கவேயில்லை- இன்னமும்கூட. அவ்வப்போது மழை. பின்னிரவில் நல்ல குளிர். ஆகவே மெய்யான காற்றில் உறங்க விரும்பினேன். காலை எழுந்தால் என் கொசுவலைமேல் கருவேப்பிலைகள்.

யார் செய்வது? இலக்கியவாதி சமூகத்திற்கு வெறும் கறிவேப்பிலை மட்டுமே என உணர்த்த விரும்புவது யார்? அடைக்கலங்குருவிகள்! காலையில் அவை என் தலைக்குமேல் குடும்பச்சண்டை போட்டன. காற்றில் கும்மாளமிட்டன. அறைமுழுக்க பக்கத்துவீட்டு வேல்முருகனின் கொல்லையில் நின்றிருக்கும் பெரிய கருவேப்பிலை மரத்தின் இலைகள். என்ன நடக்கிறது என்று புரிய மேலும் சிலநாட்களாகியது. அருண்மொழிதான் கண்டுபிடித்துச் சொன்னாள். டியூப் லைட்டின்மேல் ஒரு கூடுகட்டும் முயற்சிகள் தொடங்கிவிட்டிருந்தன.

அதன் டிசைன் மற்றும் இடத்தைப் பற்றி கணவன் மனைவி கொண்ட கருத்துப்பரிமாற்றம் வழக்கமாக எல்லா ஜோடிகளிடையேயும் கருத்துப் பரிமாற்றம் நிகழும் அதே வடிவில் நிகழ்ந்ததன் சத்தம்தான் நான் கேட்டது. சிறு தூவல்களும் உதிர்ந்து கிடந்தன. புருஷன் பெண்சாதியை முடியை பிடித்து நாலு கொத்து கொத்தி கருத்தொருமையை உருவாக்கியதன் விளைவாக இருக்கலாம்.

அடைக்கலங் குருவிகள் வீட்டுக்குள் கூடுகட்டுபவை. மரப்பொந்துகள் பாறையிடுக்குகளில் கட்டும் வழக்கம் கொண்டவை. அவற்றைவிட வீடுகள் உதவியானவை என்று பற்பல நூற்றாண்டுகள் முன்னரே கண்டுகொண்டிருந்தன. மனிதர்கள் அவற்றை ஒன்றும் செய்வதில்லை, ஆனால் அந்த முட்டைகளுக்காக வரும் பாம்புகள் காகங்கள் போன்றவற்றை மனிதர்கள் அண்டவிடுவதில்லை.

இன்று பெரும்பாலான வீடுகளில் குருவிகள் நுழைவதில்லை. எந்நேரமும் மின்விசிறிகள் சுழல்வதே காரணம். அவ்வப்போது திறந்து கிடக்கும் ஒழிந்த அறைகளிலோ வெளியில் பொருட்களைப் போட்டுவைக்கும் இடங்களிலோ அவை கூடு கட்டுகின்றன. எனக்கு பொதுவாக மின்விசிறி ஒவ்வாது. மூக்கு அடைக்கும். ஒன்று ஏஸி. அல்லது இயற்கைக் காற்று. மின்விசிறி இல்லாததனால்தான் இவை என் படுக்கையறையை தெரிவுசெய்திருக்கின்றன.

இந்த புரிதலை விலங்குகள் எளிதாக அடைகின்றன. கவி போன்ற கானுலாநிலையங்களில் மான்கள் கூட்டம்கூட்டமாக வந்து நம் விடுதிகளைச் சுற்றி மேய்வதைக் காணலாம். மனிதர்கள் இருக்குமிடங்களை சிறுத்தைகள் அணுகுவதில்லை என்பதே காரணம். கடலுக்குள் விழுந்துவிடும் மீனவர்கள் டால்ஃபின்கள் இருக்குமிடத்தை நாடுவார்கள் என்று எப்போதோ படித்த நினைவு

அடைக்கலங்குருவி கருவேப்பிலை கொத்துகளை கொண்டு கீழே போட்டது. அது சற்றே வாடி நாராக ஆனதும் எடுத்துச்சென்று வளைத்து கூடுகட்டியது. ஒரு சிறுசெய்தி, கூடு கட்டுவது ஆணின் வேலை. பெண் வந்து பார்த்து கூடு சரியாக இருக்கிறதா என்று சோதனையிட்டு அதன்பின்னரே அண்டவிடும். அதன்பிறகே காதல், முட்டையிடல் எல்லாமே.

பரிசோதனை முடிந்து கூடு ஏற்கப்பட இரண்டு நாட்கள் ஆயின. அதற்குள் எனக்குச் சந்தேகம் கூடு மிகமேலோட்டமாக டியூப்லைட் மேல் அமைக்கப்பட்டிருந்தது. விழுந்துவிடுமோ? ஆகவே கீழே துணியால் ஒரு தாங்கு கட்டினேன். அது போதுமா என்ற பதற்றம். அதற்கு பிரச்சினை வரக்கூடாது என்று எழுதும் அறையிலேயே படுக்கையை மாற்றிக்கொண்டேன்

மூன்றுமுட்டைகள் போட்டிருக்கிறது தாய், தந்தைக்கு மூன்று இனிய பதற்றங்கள். மூன்று வருகைகளுக்காக நான் காத்திருக்கிறேன். பார்த்தால் மூன்று சிறிய  மண்ணுருண்டைகள் போல. இரவில் பார்த்தால் இரட்டைவிரல் போல வால் கூட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.பகலில் நாம் அங்கே சென்றால் டிவீட் என்று ஒரு ஓசையுடன் பறந்துசெல்லும். நம்மை திசைதிருப்புகிறதாம்.கணவனும் மனைவியும் இப்போது ‘சொருமிப்பு’ ஆக இருக்கிறார்கள்.

வீட்டில் ஒர் அறை பேற்றறையாக மாறிவிட்டிருக்கிறது.குஞ்சுகள் இன்னும் சிலநாட்களில் வரும் என நினைக்கிறேன்

லீலை [சிறுகதை]

கரவு [சிறுகதை]

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

நற்றுணை [சிறுகதை]

இறைவன் [சிறுகதை]

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

முதல் ஆறு [சிறுகதை]

பிடி [சிறுகதை]

கைமுக்கு [சிறுகதை]

உலகெலாம் [சிறுகதை]

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–53

$
0
0

பகுதி நான்கு : அலைமீள்கை – 36

பிரதிபானு நடுங்கும் கைகளை தலைக்குமேல் கூப்பி உடைந்த குரலில் கூவினான். தந்தையே, தெய்வங்களுக்கு முன்னர் மட்டுமே மனிதர்கள் இத்தனை ஆழத்தில் தங்களை திறந்து வைக்க முடியும். தங்களுக்குத் தாங்களே பார்த்துக்கொள்ளாத இடங்கள், ஆழ்கனவுகளில் கூட தொட்டறியாத தருணங்கள் அனைத்தும் இங்கே என் நாவால் உரைக்கப்பட்டன. என்னை நீங்கள் காத்தருள வேண்டும் என்பதற்காகவே இவற்றை சொன்னேன்.

தந்தையே, இது எனக்காக அல்ல. என் மைந்தருக்காக, என் துணைவிக்காக. எளியவன் என்று என்னை முன்வைக்கிறேன். தனித்தவன், பொருளற்றவன். அதை அங்கே துவாரகையின் புறநகர் பகுதியில் இடிந்துசரிந்து மணல்மூடிக் கிடந்த பகுதியில் நின்று சூழ நோக்கியபோது நன்குணர்ந்தேன். என்னைச் சுற்றி பலர் கதறிக்கொண்டிருந்தனர். பலர் பித்துப்பிடித்து சுற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் நான் முற்றிலும் தனித்து அங்கே நின்றேன். அப்போதுதான் நீண்ட நாட்களுக்குப் பின் நான் உங்களை அவ்வண்ணம் நினைத்துக்கொண்டேன். நெஞ்சில் அறைந்து கண்ணீருடன் “தந்தையே!” என்று வீறிட்டேன். “தந்தையே! தந்தையே!” என்று அலறி அழுதேன்.

அங்கிருந்து திரும்பி ஓடினேன். எங்காவது தப்ப விழைபவனாக. மறுபக்கம் கரை இருக்கிறது என்பதை உள்ளுணர்வால் அறிந்து அத்திசை நோக்கி சென்றேன். மக்கள் பெருந்திரளாகக் கிளம்பி எங்கு செல்வதென்றறியாமல் நகரின் வெளிஎல்லைகளில் நின்று தடுமாறுவதை கண்டேன். நகருக்குள்ளிருந்து கிளம்பியவர்களுக்கு அந்நகரிலிருந்து வெளியே சென்றுவிடவேண்டும் என்ற எண்ணமே இருந்தது. ஆகவே அவர்கள் தங்கள் உள்ளத்திற்குள் அமைந்த வரைபடம் ஒன்றில் முன்னரே முடிவு செய்து வைத்திருந்த வழியொன்றை நோக்கி சென்றார்கள்.

நகரிலிருந்த ஒவ்வொருவருக்கும் அந்நகர் பற்றி ஒரு வரைபடம் இருந்தது. அது அவர்களே நம்ப முடியாத அளவுக்கு தெளிவு கொண்டிருந்தது. கூடவே மெய்யிலிருந்து சற்றே வேறுபட்டதாகவும் இருந்தது. அந்நகரிலிருந்து வெளிவருவதற்கான வழி ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது. ஏனென்றால் ஏதோ ஆழ்கனவுகளில் அந்த வழிகளில் ஒருமுறையேனும் அந்நகரிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்கள். ஆனால் அந்த வழியை சென்றடைவதற்கான முயற்சிகளில் பிற வழிகளைத் தேடி ஒருவருடன் ஒருவர் அவர்கள் முட்டிக்கொண்டனர். ஒருவரோடொருவர் பூசலிட்டனர். தங்கள் வழியை பிறர் தடுப்பதாக எண்ணினர். தங்கள் உறவினரையும் உற்றாரையும் இணைத்துக்கொண்டு செல்ல முயன்றனர். அவர்கள் தங்கள் உள்ளத்தில் பிற வழிகளை தேர்ந்ததனால் பிற வழிக்கு இழுத்தனர்.

ஆகவே ஒருவருக்கொருவர் பூசலிட்டனர். நெஞ்சில் அறைந்து கதறி அழுதனர். பெருகி வந்து நகரின் எல்லையை அடைந்தவர்கள் அப்போதுதான் அந்நகரம் கோட்டை என்று ஒன்று இல்லாதது என்பதை உளமுணர்ந்து கண்டுகொண்டனர். அதை சூழ்ந்திருந்த பெரும்பாலை நிலமே அதன் கோட்டை. கோட்டையைக் கடந்து செல்வது போலல்ல பாலையைக் கடந்து செல்வது. அதற்கு உணவும் நீரும் கருதியிருக்கவேண்டும். உடைமைகளை கொண்டுசெல்ல விலங்குகள் வேண்டும். பெரும்பாலையில் செல்வதற்கு வழிகளைப் பற்றிய அறிதல் வேண்டும்.

அவர்களில் பெரும்பகுதியினர் அந்நகரிலிருந்து ஒருமுறைகூட வெளியே செல்லாதவர்கள். சிறு தெய்வங்களை வணங்குவதற்கோ களியாடுவதற்கோ நகரைச் சூழ்ந்துள்ள திறந்தவெளிக்கு அவர்கள் வந்திருப்பார்கள். மிக அரிதாக சிலர் வேட்டையின் பொருட்டு பாலை நிலத்திற்குள் சென்றிருப்பார்கள். ஆனால் கடந்து செல்ல வேண்டிய ஒன்றென தங்கள் முன்னால் கண்ட பாலைவெளி திகைக்கவைத்தது. கொலை நகைப்புடன் எழுந்த தெய்வம்போல் அவர்கள் முன்னால் பேருருக்கொண்டு நின்றிருந்தது. அதுநாள் வரை அவர்கள் அந்நகர் என வகுத்துக்கொண்டிருந்தது அப்பாலையின் எல்லையைக் கொண்டே என்று அவர்கள் உணர்ந்தனர். மூன்று திசைகளிலும் அந்நகரை கவ்விப் பற்றி அதற்கு வடிவம் அமைத்தது அந்த வறுநிலமே.

அவர்கள் தயங்கி நிற்க அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்தவர்கள் வந்து மோத முகப்புச் செறிவு உலைந்தது. நீர்விளிம்பு என அலைகொண்டது. பொருக்கோடிய சேற்றுப்பரப்பு பிளந்து மென்சேறு வெளிவருவதுபோல தயங்கியவர்களை உடைத்துக்கொண்டு பின்னிருந்தவர்கள் எழுந்தனர். அவர்கள் தயங்க அவர்கள் மேலும் பின்னிருந்து மேலும் மக்கள் வந்து அவர்களை தள்ளினர். முன்னால் வந்தவர்கள் அவர்களை அறியாமலேயே தள்ளப்பட்டு பாலைக்குள் சென்றுவிட்டனர். பாலையை உணர்ந்ததும் அவர்கள் கூச்சலிட்டனர்.

நான் செய்ததென்ன என்பதன் முழுப் பேருருவை அப்போதுதான் பார்த்தேன். செய்த ஒவ்வொன்றையும் மீள்வு செய்யவேண்டும் என்றும், ஒவ்வொரு அடிவைப்பும் பின்னகர்ந்து ஒன்றுமறியாத எளியோனாக வெறும் பகல் கனவுகளுடன் ஃபானுவின் அரசில் அமைந்திருந்த அந்த பிரதிபானுவாக மாறிவிடவேண்டுமென்றும் அத்தருணத்தில் தோன்றியது. அன்று அறிந்தேன், ஒவ்வொன்றையும் தன்னலம் கருதியே நான் செய்திருக்கிறேன். எவ்வகையிலும் பொதுநலனோ தெய்வங்களுக்கு உகந்ததோ என் எண்ணத்தில் எழுந்ததில்லை. ஆணவம் நான் நான் என எண்ணச் செய்தது. ஆணவ நிறைவை மகிழ்ச்சி என்றும் வெற்றி என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்நகர் நொறுங்கி சிதைந்து கிடப்பது போலவே என் ஆணவம் கிடந்தது. நான் உங்கள் மைந்தன் அல்ல, அரசகுடியினன் அல்ல, மானுடன்கூட அல்ல. கீழ்மகன், எளியோன் பிறிதொன்றும் அல்ல. புழு, கிருமி, அல்லது அணுவுயிரி. அப்போது எஞ்சியிருந்தது ஒன்றே. அது எளிய விலங்குணர்வு. என் மைந்தர், அவர்கள் எங்கேனும் எவ்வகையிலேனும் உயிருடன் எஞ்சவேண்டும், அவர்களில் ஒரு துளியேனும் அதற்கு அடுத்த தலைமுறைக்கு செல்லவேண்டும். ஓர் உயிரின் முதல் விழைவு. மிக எளியது. ஆனால் இப்புடவியின் அடிப்படை நெறிகளில் ஒன்று. பேராற்றல் கொண்டது.

அத்தருணத்தில் பல்லாயிரம் பேரை கொன்று வீழ்த்தவும், எண்ணிச் சென்றடையாத பெரும்பழியொன்றை இயற்றவும்கூட நான் சித்தமாக இருந்தேன். “என் மைந்தர்! என் மைந்தர்!” என்று ஓசையில்லாமல் வீறிட்டபடி புரவி ஒன்றை கண்டடைந்தேன். அதில் ஊர்ந்து கொந்தளித்துச் சென்று கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி “நில்லுங்கள்! நில்லுங்கள்! அணிவகுத்துச் செல்லுங்கள்! ஆணைகளை செவிகூருங்கள்!” என்று கூவி கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்த காவல்வீரனொருவனை எதிர்பாராத தருணத்தில் பாய்ந்து தாக்கி வீழ்த்தி அப்புரவியிலேறி அதை கூட்டத்தினூடாக ஓட்டி மானுடரை பாய்ந்து கடக்கச்செய்து, திரள்களைப் பிளந்து, இடிபாடுகளை ஒழிந்து செல்லவைத்து அகன்றேன்.

புரவி தையல் ஊசி துணியில் செல்வதுபோல அப்பெருங்கொந்தளிப்பினூடாக ஊடுருவிச் சென்றது. கூட்டத்தினூடாக தாவிச் செல்வதற்கு பயின்ற குதிரை அது. நான் துவாரகையின் வெளி எல்லையை அடைந்து பாலைநிலத்தினூடாக சென்றேன். பாலைநிலத்தினூடாக ஓர் உளவிசையில் முன்னால் சென்றவர்கள் தயங்கித் தயங்கி வெவ்வேறு இடங்களில் நின்றிருந்தனர். சிலர் சென்ற திசையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தனர். “விலகுங்கள்! விலகுங்கள்!” என்று கூவியபடியே அவர்களை கடந்தேன்.

துவாரகைக்குள் நுழையும் தோரணவாயிலை அடைந்தபோது ஒரு திடுக்கிடலை அடைந்தேன். அதைச் சூழ்ந்து மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவே அவர்களுக்கு எவ்வகையிலும் தொடர்பற்றதுபோல அது ஓங்கி எழுந்து நின்றிருந்தது. அதன் பெரும் சிற்பமுகங்கள் கீழ்நோக்கி நகைத்து வாய் திறந்திருந்தன. துவாரகையில் அனைத்துக் கட்டடங்களும் இடிந்து சரிந்து கிடக்க தோரணவாயில் மட்டும் தொடர்பே அற்றதுபோல, பிறிதொரு நகரத்தின் நுழைவாயில்போல் நின்றது.

நான் அதை கடந்துசென்று திரும்பிப் பார்த்தேன். சிறிதாகி பின்னகர்ந்துகொண்டே இருந்தது. மீண்டும் சென்று திரும்பிப் பார்த்தபோது அத்தோரணவாயில் தனித்து எழுந்து நின்றது. அதற்கப்பால் துவாரகை அவ்வண்ணமே எந்த மாற்றமும் இல்லாமலிருக்கும் என்றும், சென்றால் அனைத்தையும் பார்க்கமுடியும் என்றும் உளமயக்கொன்றை உருவாக்கியது அது. ஆனால் ஒரு கணத்தில் அது உடைந்தபோது உருவான ஏக்கம் நெஞ்சை பேரெடையென உணரச்செய்தது. நான் என் உடலைக் குறுக்கி குனிந்து அமர்ந்து விம்மி அழுதேன்.

நான் பாலைநிலத்தினூடாக புரவியில் விரைந்து என் மைந்தர் வாழ்ந்த அரண்மனையை நோக்கி சென்றேன். அங்கு ஏற்கெனவே வீரர்கள் கூடி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். புரவியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடிச்சென்று “காவலர்தலைவன் எங்கே?” என்றேன். முதிய காவலர்தலைவன் சூர்ணன் அரண்மனைக்குள் பிறருடன் பூசலிட்டுக்கொண்டிருந்தான். அவன் இறங்கி ஓடிவந்து “இளவரசே, துவாரகையில் நிலநடுக்கம் வந்துவிட்டது என்றார்கள். கடல் நகருக்குள் புகுந்துவிட்டதாம். இங்கும் அதிர்வுகளை உணரமுடிகிறது. இங்கிருந்து கிளம்புவதா வேண்டாமா, எவருடைய ஆணையை ஏற்பது என்று தெரியாமல் நாங்கள் இருக்கிறோம்” என்றான்.

“வா என்னுடன்” என அவனை அப்பால் தனியாக அழைத்துச்சென்றேன். “என் மைந்தர் எங்கே? அரசி எங்கே?” என்றேன். “தங்கள் ஆணைப்படி படைவீரன் ஒருவன் அவர்களை அழைத்துச்சென்றான்” என்றான். “ஆம், அவனை அனுப்பியது நானே. அதை உறுதிப்படுத்திக்கொள்ளவே வந்தேன்” என்றேன். “எப்போது அவர்கள் சென்றனர்?” என்றேன். “இரண்டு நாழிகை, அல்ல மூன்று நாழிகைக்கு முன்பு அவன் இங்கு வந்தான். இங்கிருந்து தேரில் அவர்களை படித்துறை நோக்கி கொண்டுசென்றான். கடலினூடாக தேவபாலபுரத்திற்கோ அன்றி சிந்துவுக்குள் நுழைந்து பருஷ்ணிக்கோ செல்வதாக சொன்னான்” என்றான் சூர்ணன்.

“ஆம், நன்று” என்று திரும்பி ஒரு கணத்துக்குப் பின் இடையிலிருந்த வாளை உருவி அவன் கழுத்தை வெட்டி துண்டாக்கினேன். அவனிடமிருந்து ஒரு சொல்லும் கசியக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எவருக்காகவோ விளக்கம் அளிப்பதுபோல. குருதிபடிந்த வாளை அருகிலிருந்த திரைச்சீலையில் துடைத்தபின் நேராக வெளிவந்து என் புரவியில் ஏறி மீண்டும் துவாரகை நோக்கி விரைந்தேன். துவாரகையின் இறுதிப் படித்துறை அங்கிருந்து மிக அருகே இருந்தது. அதிலிருந்து சிந்துவுக்குச் செல்லும் சிறிய நீரோட்டம் ஒன்றும் உண்டு. அது அப்பேரலைக்குப் பின் அங்கிருக்கிறதா என்று தெரியவில்லை.

படித்துறை நோக்கி செல்லும் கல்வேய்ந்த பாதை ஆளோய்ந்து கிடந்தது. ஒவ்வொருவரும் நகரிலிருந்து வெளியே வடகிழக்காகச் செல்லவே முயன்றனர். அவர்கள் கிளம்பிவந்த தொல்நிலம் அங்கிருப்பதாக அவர்களின் அகம் பதிவு செய்திருந்தது. அவர்களின் மூதாதையரின் நாடு. புல்வெளிகள், இளமழை, ஒளிரும் சூரியன். ஆநிரைகள் பெருகி நிறையும் திசைகளும் தெய்வங்கள் வாழும் வானும் கொண்டது. அவர்களில் சிலரேனும் படித்துறைகளுக்குச் சென்றிருந்தால் அங்கே இருக்கும் படகினூடாக மிக எளிதாக தப்பிச் சென்றிருக்க முடியும். ஆனால் இயல்பிலேயே அவர்கள் கடலை அஞ்சினார்கள். கோள்கொண்டு எழுந்து நிலத்தை அறைந்த அப்பெருந்திரையைக் கண்ட பிறகு எவரும் கடல் நோக்கி சென்றிருக்க வாய்ப்பில்லை. எரியும் திசையிலிருந்து விலகிச்செல்லும் எறும்புகள்போல் துவாரகையின் மக்கள் அனைவருமே மறு எல்லை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

கடலை நெருங்க நெருங்க எவருமே கண்ணுக்குப்படவில்லை. கைவிடப்பட்ட முதியவர்களும், மிதிபட்டு உயிரிழந்த உடல்களும், சிதைந்து கிடந்த கட்டடங்களும், திசையழிந்து ஊளையிட்டு சுற்றிக்கொண்டிருந்த நாய்களும் என அப்பகுதியே போர் முடிந்த களம்போல் தெரிந்தது. என் புரவிக் குளம்படி கேட்டு விழுந்து கிடந்தவர்களில் சிலர் கைநீட்டி “தண்ணீர்! தண்ணீர்!” என்றோ “உதவுங்கள்! உதவுங்கள்!” என்றோ கூவினர். அவர்களின் உடல்களின் மீதாக புரவியைச் செலுத்தி மேலே சென்றேன்.

படித்துறையை அணுகி அங்கே புரவியை நிறுத்திவிட்டு துறைமேடையின் மேல் ஏறி படகுகளை நோக்கி சென்றேன். சிற்றலைகள் மட்டுமே கடலில் எஞ்சியிருந்தன. ஒரு சிறு குளம்போல் தெரிந்தது கடல். அத்தனை அலையழிந்து அமைதி கொண்ட கடலை நான் பார்த்ததே கிடையாது. கரையிலிருந்து மிக விலகி சேற்றுப்பரப்பின் மேல் படகு அமர்ந்திருந்தது. படகை காலால் உந்தி உந்தி கடலின் விளிம்பு நோக்கி கொண்டு செல்லவேண்டியிருந்தது. சேற்றில் அது வழுக்கி பாறைகளில் முட்டி ஏறி மடிந்து விழுந்து எழுந்து கடலுக்குள் சென்ற பின்னர் அதில் ஏறி அமர்ந்து துடுப்பை அவிழ்த்து உந்தி கடலில் அலைகளுக்கு மேல் ஏறினேன்.

படகின் மேல் சுற்றிவைக்கப்பட்டிருந்த கயிற்றை அறுத்து பாயை எழச்செய்தேன். கடற்காற்று இல்லாதபோதுகூட பாயை புடைக்கவைக்கும் அளவுக்கு உள்காற்று இருந்தது. மிக மெல்ல செல்வதுபோல் தோன்றினாலும்கூட கரையோர மரங்கள் விரைவதிலிருந்து படகு விசைகொண்டிருப்பதை உணர்ந்தேன். கண்ணிகளை இழுத்து பாயை முழுதாகத் திருப்பி முடிந்தவரை அதை காற்றின் திசையில் செல்லவைத்தேன். பின்னர் ஓய்ந்து படகில் அமர்ந்து கரையோரமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

துவாரகையின் மக்கள் கரையோரமாகவே பெருகிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் அவ்வண்ணம் சிந்துவின் கரைவரை சென்று அடையக்கூடும் என்று தோன்றியது. கடலில் சென்ற எனது மைந்தரும் துணைவியும் அப்போது எங்கிருப்பார்கள் என்று என்னால் உய்த்துணரக் கூடவில்லை. தேவபாலபுரம் சென்று அங்கிருந்து பருஷ்ணி வரைக்கும் செல்வது அவர்களுக்கு நான் இட்ட ஆணை. அவ்வழியில் சென்றால் எங்கேனும் அவர்களை கண்டடைய முடியும் என்று நினைத்தேன். எனக்கு வேறுவழி ஏதும் இருக்கவில்லை.

நீரின்றி உண்ண ஒரு பொருளுமின்றி அப்படகிலேயே அமர்ந்திருந்தேன். முழுப் பகலும் கடந்து அந்தியில் தேவபாலபுரத்தை சென்றடைந்தேன். அந்நகர் முற்றாக அழிந்திருந்தது. பேரலை அறைந்து நகரின் அனைத்து பண்ட நிலைகளையும் உடைத்துச் சரித்திருந்தது. மாளிகைகள் இடிந்தும் சரிந்தும் நின்றன. நகரில் எவரும் தென்படவில்லை. கடலோரம் ஓய்ந்தே கிடந்தது. நான் அதன் படித்துறையில் படகை நிறுத்திவிட்டு இறங்கி அப்பால் சென்றேன்.

திகைப்பூட்டும் காட்சிகளாக என் முன் விரிந்தது நகர். கடலில் நின்றிருந்த மரக்கலங்கள் அனைத்தும் பேரலையால் தூக்கி நகர் மேல் வீசப்பட்டிருந்தன. கட்டடங்களுக்கு மேலே மரக்கலங்கள் ஏறி கற்சுவர்களை நொறுக்கி அமர்ந்திருப்பதை கண்டேன். நகரெங்கும் உடைந்த மரச்சிம்புகள் குவிந்து கிடந்தன. கடலில் மனிதர்கள் பல ஆண்டுகளாக வீசிய அனைத்துக் குப்பைகளும் பெருகி வந்து நகர் மேல் படிந்திருந்தன. கடல்பாசிகள், மீன்கள், சிப்பிகள், முட்புதர்போன்ற நீருயிரிகள்.

நொறுக்கப்பட்ட ஒரு நகர். வானிலிருந்து ஒரு பெரும் கதாயுதம் வந்து ஒரேயடியாக தட்டி தள்ளப்பட்டது. விழாத ஒரு மாளிகை கூட அங்கில்லை. தேவபாலபுரத்தில் பெரிய மாளிகைகள் இல்லை. மூன்று அல்லது நான்கு அடுக்குகள்தான். பெரும்பாலானவை மரத்தாலானவை. ஆகவே அனைத்துமே விறகுக்குவியல்போல ஆங்காங்கே தென்பட்டன. செல்லும் வழியெங்கும் மனித உடல்கள் உப்பி புடைத்திருப்பதை கண்டேன். பெரும்பாலானோரின் வாய்களிலும் கண்களிலும் மணல் அழுத்திச் செறித்து நிரப்பப்பட்டிருந்தது. அவர்களின் வயிறுகள் உப்பி புடைத்திருந்தன. உள்ளே மணல் நிறைந்திருக்கும் என்று தோன்றியது.

பேரலை அறைந்த உடல்கள் பெரும்பாலும் அனைத்துமே ஆடையற்றவை. அலை எப்படி ஆடைகளை கழற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. நெஞ்சுடைந்த உடற்கூடுகள். கைகளும் கால்களும் விந்தையான முறையில் ஒடிந்து மடிந்தவை. செத்துக்கிடந்த பிணங்கள் அனைத்துமே சிறுகுழந்தைகளின் உடல்கள் போன்றே தோன்றின. சாவின் கணத்தில் அனைவருமே குழந்தைகளாக மாறியிருப்பார்கள் போலும்.

தேவபாலபுரத்தில் நான் பதைத்தவனாக சுற்றி அலைந்தேன். மைந்தர் அங்கு வந்திருந்தால் இந்தப் பேரலையில் சிக்கிக்கொண்டிருப்பார்கள். இவ்வலைக்கு முன்பே அவர்கள் சிந்துவில் நுழைந்திருந்தால் உயிர் தப்பியிருப்பார்கள். அங்கு எங்கேனும் அவர்கள் இருக்கிறார்களா? எங்கு அவர்களை தேடுவது என்று தெரியவில்லை. அந்நகர் முழுக்க நான் அலைந்து திரிந்தேன். அந்நகர் விட்டு சென்றவர்களை எங்கேனும் பார்க்க முடியுமா என்று எண்ணி மறுதிசை நோக்கி சென்றேன். மீண்டும் திரும்பி வந்தேன். அந்நகரில் ஒரு கிழிந்த கொடிபோல நான் படபடப்பதாகத் தோன்றியது.

நகர் முழுக்க கூலமூட்டைகள் அடித்துச் சிதறப்பட்டு மாளிகைகளின் சுவர்களை ஒட்டி அரிசியும் கோதுமையும் பிறவும் குவிந்துகிடந்தன. ஆனால் விலங்குகளோ பறவைகளோ ஏதுமில்லை. சில மீன்கள் மட்டும் உயிருடன் இருந்தன. சில முள்ளுயிரிகள் சிலிர்த்தபடி மெல்ல நடந்தன. அவை ஆழ்கடலில் வாழ்பவையாக இருக்கலாம். ஒருகணத்தில் கடல் எவ்வண்ணம் மறைந்தது என அவை திகைக்கக்கூடும். அங்கே குவிந்திருக்கும் சடலங்களில் என் மைந்தர்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என நானே உணர்ந்ததும் தீச்சுட்ட அதிர்வை அடைந்தேன். ஏன் அவ்வாறு செய்கிறேன்? என் அகத்தில் தீங்கு நிகழுமென நம்பிக்கொண்டிருக்கிறேனா? அவர்கள் உண்மையில் அங்கே கிடந்தால்கூட நான் செய்வதற்கொன்றும் இல்லை. அவர்கள் எங்கேனும் இருந்து என் உதவியை நாடினால்தான் நான் சென்றடையவேண்டும்.

நான் தேவபாலபுரத்தை கடந்து சென்றேன். பாலையின் தொடக்கத்தில் மக்கள் இருக்கக்கூடும் என்று தோன்றியது. அவர்களை நோக்கி செல்லவேண்டும். தொலைவில் மக்களின் ஓசையை செவிகூர்ந்தேன். அதை எதிர்நோக்கி சென்றுகொண்டிருந்தேன். நெடுந்தொலைவில் அவர்கள் ஓசை கேட்கத் தொடங்கியது. நடந்து அங்கு சென்றபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. நான் கண்ணீர்விட்டபடி, தள்ளாடியபடி, நடைப்பிணம்போல மாறி பின்னிரவில் மக்கள் கூட்டமாக அமர்ந்திருந்த வெட்டவெளிக்கு சென்றேன்.

அங்கு கையில் அகப்பட்ட உடைமைகளுடனும் உற்றாருடனும் மக்கள் கிளம்பிவந்து அமர்ந்திருந்தனர். அங்கு சென்று தொலைவிலேயே இரு கைகளையும் விரித்தபடி நடந்து அவர்களை அணுகி முழந்தாளிட்டு விழுந்தேன். அவர்களில் ஒருவன் வந்து ஒரு தோல் குடுவையிலிருந்த நீரை எனக்கு அளித்தான். அதை வாங்கி இரு கைகளாலும் அண்ணாந்து குடித்து உடலை நிறைத்தேன். நீர் அருந்தியதுமே உடல் சற்று ஓய்வுகொள்ள அவ்வண்ணமே மணலில் குப்புற விழுந்து சற்று நேரம் துயின்றேன். அதில் என் மைந்தரை கண்டேன். அவர்களுடன் இளவெயில் நிறைந்திருந்த பசும்புல்வெளியில் விளையாடினேன்.

பின்னர் எழுந்து அமர்ந்தேன். அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதுகொண்டிருந்தனர். பலர் தங்களின் உற்றாரைத் தேடி ஒவ்வொரு முகமாக பார்த்தபடி அவர்களின் பெயர்களை கூச்சலிட்டபடி சென்றுகொண்டிருந்தனர். பெற்றோரைப் பிரிந்த குழந்தைகள் கதறி அழுதபடி அலைந்தனர். ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொருவரும் முகம் தூக்கிப் பார்த்து அது தங்கள் குழந்தையல்ல என்று விட்டுச்சென்றனர். விட்டுச்செல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் விட்டுச்செல்பவர்களின் ஆடையை பற்றிக்கொண்டு “தந்தையே!” என்றும் “அன்னையே!” என்றும் கதறி அழுதன. அவர்கள் பிரிந்த பின் நிலத்தில் விழுந்து கைகால்களை உதறி கூச்சலிட்டன.

உளக்கொந்தளிப்பு ஓய்ந்ததனால் சிலர் அவ்வண்ணமே படுத்து ஆழ்ந்து துயின்றுகொண்டிருந்தனர். சிலர் உயிர் துறந்திருக்கவும் கூடும். துஞ்சுவதற்கும் துயில்வதற்கும் அங்கு வேறுபாடு தெரியவில்லை. எவரிடமும் பந்தமோ விளக்கொளியோ இல்லை என்பதனால் முற்றிருள் சூழ்ந்திருந்தது. வானின் ஒளியில் அவர்களின் முகங்கள் பற்களின் வெண்மையும் கண்களின் மினுப்புமாக தெரிந்தன.

நான் அங்கே எதற்கு அமர்ந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என் துணைவியை அங்கு தேட முடியுமா? விடிந்த பின்னரே அவர்களை தேடமுடியும். ஆயினும் என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. உடல் ஓய்வுகொண்டதும் உள்ளம் விழித்தெழுந்தது. நானும் எழுந்து என் மைந்தரின் பெயர்களை கூவி அழைத்தபடி அத்திரள் முழுக்க அலைந்து திரிந்தேன். என் மனைவியின் பெயரும் மைந்தரின் பெயரும் உள்ள பலர் அங்கிருப்பதை உணர்ந்தேன். நான் அருகணைத்து முகம் தூக்கி நோக்கிய மைந்தர் என் மைந்தரல்ல என்று தெரியும்போது எழும் உளச்சோர்வு நெஞ்சில் ஒரு கத்தி என ஆழப் புகுந்தது.

ஆயினும் அவர்கள் அங்கிருக்கிறார்கள் என்று என் உளம் கற்பனை செய்துகொள்ளும்போது வரும் உவகையின் தொடுகை என்னை சிலிர்க்கச் செய்தது. அவ்வுவகையில் திளைக்கும்பொருட்டே அவர்களை நான் பெயர் சொல்லி தேடிக்கொண்டிருந்தேன். இரவெல்லாம். தந்தையே, முழு இரவும். அத்திரளில் விழுந்து எழுந்து, விழுந்து எழுந்து, தேடிய இடங்களிலேயே மீண்டும் தேடி, தேடியவர்களையே மீண்டும் கண்டு, புலரியில் உணர்ந்தேன் அங்கு அவர்கள் இல்லை.

அத்திரளைப் பார்த்தபடி இளவெயிலில் கண்ணீருடன் நின்றேன். மீண்டும் நகருக்குள் புகுந்து இறந்து கிடக்கும் உடல்களில் அவர்களை தேடுவதா? கிழக்கே சுடர் எழுந்துகொண்டிருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரும் கதிரெழும் ஒளியை நோக்கி கண்ணீர்விடுவதை கண்டேன். கதிரொளி அத்தனை துயர் மிக்கதாக, அத்தனை கொடியதாக தோன்றும் தருணத்தை அதற்கு முன் நான் உணர்ந்ததில்லை. அவர்களின் கிழிந்த உடைகளை, கைவிடப்பட்ட நிலையை, சாவை, நோவை ஒவ்வொன்றையும் துலக்கிக்காட்டியது அது. ஒவ்வொருவரும் கதிரிலிருந்து முகத்தை விலக்கிக்கொண்டனர். பெரும்பாலானவர்கள் அதற்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தனர். சிறுகுழந்தைகள் அன்னையரின் உடல்களுக்குள் புகுந்துகொள்பவைபோல் ஒடுங்கிக்கொண்டிருந்தன.

அங்கிருந்து சிந்துவுக்குள் சென்று என் மைந்தரைப்பற்றி தேடவேண்டும் என்று எண்ணினேன். ஒருவரிடம் நீர் மட்டும் வாங்கி குடித்துவிட்டு மீண்டும் தேவபாலபுரத்தை நோக்கி சென்றேன். நான் நகர் நோக்கி செல்கையில் தொலைவில் ஒருவன் என் பெயர் சொல்லி அழைப்பதை கண்டேன். நின்று திரும்பிப்பார்த்தபோது ஒற்றன் ஒருவன் கைவீசியபடி வந்தான். “இளவரசே! இளவரசே!” என்றான். அவன் துவாரகையின் ஒற்றனாகிய சந்திரன் என அறிந்தேன். என் உடல் ஓய்ந்தது. உள்ளம் பாறையென்றாயிற்று. தேடல் முடிந்தது. இனி எதுவானாலும் ஒன்றே. “கூறுக!” என்றேன்.

“இளவரசே, தங்கள் மைந்தரையும் துணைவியையும் சிறைப்பிடித்து துவாரகைக்கு கொண்டுசென்றார்கள்” என்றான் சந்திரன். “யார்?” என்றேன். “இங்கு அவர்கள் படகில் வந்துகொண்டிருக்கையிலேயே துவாரகையிலிருந்து அவர்களை துரத்தி வந்தார்கள். விசைமிக்க படகுகளில் வந்து அவர்களை வழியிலேயே மறித்துக்கொண்டார்கள். அவர்களை பிடித்து இழுத்து அந்தப் படகில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். அவர்களை கொண்டுவந்த காவலர்களையும் அப்படகில் ஏற்றிக்கொண்டார்கள்” என்றான்.

“நான் தேவபாலபுரத்தில் துவாரகையின் ஒற்றன். இச்செய்தியை தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று பறவைத்தூது அனுப்பினேன். தாங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. தங்களிடம் இதை தெரிவிக்கும்பொருட்டு நான் இங்கிருந்து கிளம்பும் நிலையில்தான் அலையெழுந்தது” என்றான் சந்திரன். “நன்று” என்று நான் சொன்னேன். “இத்தருணத்தில் தங்களைப் பார்க்க என்னால் முடிந்தது நன்று” என்றான். “துவாரகையில் அவர்கள் இருக்கிறார்கள் அல்லவா?” என்றேன். “துவாரகைக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள்” என்று அவன் சொன்னான். “கொண்டுசென்றவர்கள் யார்? பிரத்யும்னனின் படைவீரர்களா?” அவன் “இல்லை, மூத்தவர் ஃபானுவின் படையினர்” என்றான்.

தந்தையே, அங்கிருந்து கிளம்பி துவாரகைக்கு நான் சென்றிருக்கவேண்டும். என் உயிரை அளித்து என் மைந்தர் உயிரை காப்பாற்றி இருக்கவேண்டும். ஆனால் நன்கு அறிந்திருந்தேன் நான் துவாரகைக்கு செல்ல முடியாது. துவாரகையில் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பார்கள். அந்நகரை இடித்தழித்தவன் நானே என்று அவர்கள் அதற்குள் அறிந்திருப்பார்கள். என்னை அவர்கள் சிறைப்படுத்தினால் தலைகொய்வார்கள். அதன் பின் என் மைந்தர்களை விட்டுவைக்கமாட்டார்கள். ஏனெனில் அது குடிப்பகையை எஞ்சவிடுவது. அவர்களும் இழிவுபடுத்தி கொல்லப்படுவார்கள்.

அவர்கள் உயிரோடிருக்க வேண்டுமெனில் அவர்கள் கையில் நான் சிக்கக்கூடாது. அவர்களின் பொருட்டு எப்போதேனும் நான் வந்துசேர்வேன் என்று நம்பினால் மட்டுமே அவர்கள் அவர்களை உயிருடன் விட்டுவைப்பார்கள். தங்களிடம் அவர்கள் இருப்பதை அறிவிப்பார்கள். அவர்கள் வெளிப்படையாக அவர்களை சிறை செய்து இழுத்துச் சென்றபின், அச்செய்தி எனக்கு வந்து சேரும்படி அனைத்து ஒற்றர்களிடமும் ஆணையிட்டிருப்பதனாலேயே அதுவே அவர்களின் திட்டம். ஆகவே நான் தலைமறைவாக வேண்டும். அவர்களிடம் சிக்கக்கூடாது.

நான் அங்கிருந்து தப்பி சிந்துவை அடைந்தேன். அதன் ஒழுக்கினூடாக மேலே சென்று, வழியிலேயே கரையணைந்து குறுக்குவழியினூடாக மீண்டும் பாலைநிலத்தில் ஏறி, அங்கிருந்து அவந்திக்கு வந்தேன். என் உள்ளுணர்வால் தேடி அலைந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இந்த இடத்தை கண்டடைவதற்கு எனக்கு என் தவிப்பு மட்டுமே வழிகாட்டியிருக்கிறது. பிறிதொரு வழியில்லை. துவாரகை அங்கு இப்போது எவ்வண்ணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மைந்தரை கொன்றிருக்கமாட்டார்கள், எனக்கான பணயப்பொருளாக அவர்களை வைத்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.

“தந்தையே, நீங்கள் மட்டுமே என் மைந்தர் உயிர்காக்க இயலும். எழுக, தந்தையே! என் மைந்தரைக் காக்க எழுக! உங்கள் பெயர்மைந்தர் அவர். உங்கள் குருதியினர்” என்று பிரதிபானு சொன்னான்.

தொடர்புடைய பதிவுகள்

“ஆனையில்லா!” , முதல் ஆறு- கடிதங்கள்

$
0
0

 

முதல் ஆறு [சிறுகதை]

இனிய ஜெயம்

 

முதல் ஆறு எனும் சொல் உள்ளே எங்கோ எவ்வாறோ விழுந்து கிடந்ததே என மனம் துழாவிக்கொண்டு இருந்தது. இன்று அதிகாலை எழுந்ததும் முதல் நினைவே முதல் ஆறு எனும் சொல்தான். சட்டென நினைவில் எழுந்து வந்தது. பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு சொல்லாக வரும் ஊர் முதல் ஆறு. முதல் ஆறு சங்க கிளையின் இரு உறுப்பினர்கள் kkm மீது அவர் கட்சிக்கு காட்டிய கணக்குகளை சரிபார்க்க கேட்டு புகார் அளிக்க வருவார்கள்.

 

அந்த நாவலில் ஒரு ஊரின் பெயராக அறிந்தது, அந்த நிலத்தை ஒரு பேருந்தில் கடக்க இதனை ஆண்டு தேவையாகஇருந்திருக்கிறது. அழகிய கதை. புறத்தில்பழகிய மாறாத தடம். அகத்தை அதுவே வகுத்து வைக்கிறது. இரண்டு வருடமாக எதுவுமே மாறவில்லை. இருபது நிமிட மாற்றம். புதிய நிலம். டிரைவரும் அறியாத புதிய பாதை. அவளது அகத்தை கலைத்தடுக்கி இனிமையை துவக்கிவிடுகிறது. அகமும் புறமும் இணைந்த முரண் இயக்கம். சங்க இலக்கிய அழகியல். ஊட்டி செல்கையில், நான் தவறவிடாமல் அனுபவிக்கும் மர்ம கணம் ஒன்று உண்டு. மேட்டுப் பாளையம் கடக்கையில், ஒரு குறிப்பிட்ட வளைவில், மந்திரக்கோல் தீண்டியது போல, சீதோஷணம் மாறும். தைல வாசனையுடன் குளிர் வந்து தழுவும். சமநிலம் உதிர்த்து மலைஏறும் ஒரு குறிப்பிட்ட வளைவில் ஒரு சடுதி மாற்றமாக எப்பேதும் நான் உணர்வது அது. அந்த உணர்வை அளித்த அழகிய கதை.

 

கடலூர் சீனு

 

 

அன்புள்ள ஜெ

 

முதல் ஆறு எளிமையான அழகான கதை. காதல் என்பது ஒரு சாதாரணமான வார்த்தை. ஒருவன் மிகமிக அருமையான ஒன்றை தன் மனசுக்குள் கண்டுபிடிக்கிறான்.

 

அந்த கதையில் ஒரு நுட்பமான விஷயம் எனக்குப் பட்டது. இளையராஜாவின் பாடல்கள் வருகின்றன. அவற்றை முந்தைய தலைமுறை கேட்டதே இல்லை. ஆகவே அவை தூய்மையானவை என அவன் நினைக்கிறான். அதேபோலத்தான் அந்தப்பாதையும். அது ஒரு தூய தனி வழி. இளையராஜா இசைதான் அந்த காலகட்டத்தின் முதல் ஆறு.

 

கே.ராஜாமணி

 

அன்புள்ள ஜெ,

நான் இப்போதுதான் ஆனையில்லா கதையை வாசித்தேன். நான் எழுதவேண்டிய ஏராளமான வரிகளை ஏராளமான வாசகர்கள் எழுதிவிட்டார்கள். கூட்டான மிகச்சிறப்பான வாசிப்பு ஏற்கனவே நடந்துவிட்டது. ஆனையில்லா அதன் தொடர்ச்சியான பாப்பாவின் சொந்த யானை இரண்டுமே அருமையான கதைகள். அந்த இரு கதைகளிலும் ஒரு கொண்டாட்டம் உள்ளது.

 

யானையில்லா கதை ஒரு சிறிய ஊரில் நிகழ்கிறது. அங்கே ஊரே கூடியிருக்கிறது. சாதி சனம் எல்லாமே. விலங்குகளும் உள்ளன. பாப்பாவின் சொந்த யானை கதை ஒரு அப்பார்ட்மெண்டுக்குள் நடக்கிறது. கூட எவருமே இல்லை. அப்படி ஒரு தனிமை. எந்த எல்லையில் இருந்து எந்த எல்லைக்கு வந்துவிட்டோம் இல்லையா? நினைக்க நினைக்க பதற்றமும் துக்கமும்தான் வருகின்றன

சண்முகசுந்தரம்

 

“ஆனையில்லா!” [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆனையில்லா கதையை நான் முன்னரே வாசித்திருந்தேன். அதை என் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் அவருடைய அப்பாவின் ஓர் அனுபவத்தைச் சொன்னார். உண்மையில் ஒரு பெரிய கதைக்கான இடம் அது. என் தாத்தா நெல்லைப்பக்கம் கொஞ்சம் பழைமையான ஊரைச்சேர்ந்தவர். இப்போது விரோதங்கள் வேண்டாம். ஆகவே சொல்லவேண்டியதில்லை.

தாத்தாவின் அப்பா பெரிய செல்வாக்கான வாழ்க்கை வாழ்ந்தார். 1905ல் கார் வாங்கியவர். ஆனால் அவர் திடீரென்று இறந்தார். குடும்பம் சேர்ந்து என் தாத்தாவின் அம்மாவையும் கைக்குழந்தையையும் துரத்திவிட்டுவிட்டார்கள். பிள்ளையுடன் நடுத்தெருவில் நின்றார். மிகப்பெரிய இழப்பு. ஆனால் அதைவிடப்பெரிய இழப்பு தாத்தாவின் அப்பா தன் மகனுக்காக பேங்கில் போட்டுவைத்திருந்த பத்தாயிரம் ரூபாயை ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொந்தக்காரர்கள் பறித்துக்கொண்டது.

பத்தாயிரம் ரூபாயில் சென்னையில் அன்றைக்கு மூன்று வீடு வாங்கலாம். பிடுங்கிக்கொண்டவர்கள் தாத்தாவின் சித்தப்பாக்கள். மட்டுமல்ல தாத்தாவின் மாமாக்களும்தான். அதாவது சொந்த சகோதரியின் சொத்தை பறித்து தெருவில் இறக்கிவிட்டனர். தாத்தாவின் அம்மாவால் அந்த பத்தாயிரம் ரூபாயை இழந்ததை தாங்கவே முடியவில்லை. காய்ச்சல் வந்து மெலிந்துவிட்டார். பத்தாயிரம் ரூபாய் என்றே நினைப்பு.

அப்போது ஒரு சொந்தக்காரர், அர்ச்சகராக இருந்தவர், அதை பத்துரூபாய் என்று நினைச்சுக்கோ என்று சொன்னாராம். அதெப்படி நினைக்க முடியும் என்று தோன்றினாலும் பிள்ளை இருந்ததனால் வேறுவழியே இல்லாமல் பத்து ரூபாய் என்றே நினைத்திருக்கிறார் பாட்டி. பத்து என்றுதான் சொல்வார். பிசாத்து பத்துரூபா என்பாராம்.

 

கொஞ்சம் கொஞ்சமாக அது பத்து ரூபாய் என்றே மனசில் பதிந்துவிட்டது. அப்படியே தேறிவந்துவிட்டாராம். பிறகு சிரித்தபடியே பத்துரூபாய் என்பாராம். ஒரு ஆனையை குட்டியாக ஆக்குவதுபோலத்தான். அப்பா அந்தக்கதையை இந்த சம்பவத்துடன் சம்பந்தப்படுத்திச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது

 

எஸ்.சந்தானம்

தொடர்புடைய பதிவுகள்

நற்றுணை- கடிதங்கள்

$
0
0

SV-AS10 ImageData

நற்றுணை [சிறுகதை]

இனிய ஜெ.

 

நேற்று இரவுதான் நற்றுணையை வாசித்தேன். ஒருபடியான படபடப்பு, நிலைகொள்ளாத தவிப்பு ஏதையெதையோ செய்து பார்க்கிறேன் தணியவில்லை. தூங்குவதற்கான சாத்தியமே இல்லை. சாஸ்திர விரோதமென்றாலும் பாவமில்லையென குளித்தேன் அப்பொழுது மணி இரவு ஒன்று இருபது. கொஞ்சமாக தெளிந்தபின் மீண்டும் ஒருமுறை கதையை படித்தேன். எத்தனை தெளிவான வார்த்தைகள் இதுதான்,  இது இப்படிதான் என்கிற ஆணித்தரமான நகர்வு. வரிவரியாக சிந்தித்து களைத்தேபோணேன். பெண்ணுக்கான நிமிர்வு மற்றொரு பெண்ணால் மட்டுமே, அவளோடு நிற்கும் அவளால் மட்டுமே கூடுவது. அவளே அது.

அம்மிணி தங்கச்சியின் நிமிர்வு கேசினி. ஒருவேளை கேசினியின் வரவுக்குப்பின் வலியகுளத்தில் பிணங்கள் மிதப்பது நின்றுவிட்டிருக்கலாம். ஆண்களில் அனைத்துமே கோரமுகங்கள் அதளாலேயே கேசினியின் கோரமுகத்தை பார்க்கையில் தங்கள் சுயமுக கோரத்தை எதிரேப் பார்த்தே அனைவரும் அடங்கிவிடுகின்றனர்.

சாதனைக்காகவோ அல்லது சாதிக்கவேண்டும் என்றோ பெண்கள் தங்களை முன்னெடுப்பதில்லை. அவர்களின் அடிப்படை உளஆசைதான் பெருக்கெடுத்து கேசினியாக உடன்வருகிறது. கேசினிகளை துணைக்கூட்டாமல் இன்றும் பெண்கள் ஜெயிக்க முடிவதில்லை. பெண்ணின் கோபத்தை தாங்க இங்கு எவருக்கும் திராணியில்லை ஆனாலும் அவள் கருணைகொண்டே அடிமையாக கிடக்கிறாள்

அழகிய மனநிறைவு. ஒருவேளை பதினைந்து வயதில் எனக்கு கேசினி கிடைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் நானும் ஜட்ஜாக வந்திருப்பேன். ஆனால் ஒன்று மட்டும் இன்று வரை சத்தியமான உண்மை ஜெ அதுதான் உங்களோடேயே நிற்கும் உங்கள் கேசினி. அவளை வணங்குகிறேன்.

 

அன்புடன்

ஜெயந்தி

 

அன்புள்ள ஜெயந்தி,

 

நலம்தானே?

எங்கோ இளமையில், மனம் தர்க்கத்தைவிட கற்பனையில் திளைத்த ஒரு வயதில், இந்தக்கதையின் கதைநாயகியை நேரில் பார்த்திருக்கிறேன். பலபுனைவுகளால் உருமாற்றப்பட்ட அத மூலவடிவை. அப்போது அவர்களுடன் ஓர் யக்ஷி இருந்ததாகவே எண்ணிக்கொண்டேன்

உள்ளிருந்து எழுவது, அல்லது வரலாற்றின் ஆழத்திலிருந்து எழுவது

 

ஜெ

 

 

அன்புள்ள ஆசானுக்கு,

 

தினமும் சிறுகதைகள் கிடைப்பது தனிதிருப்பின் நாட்களை குதூகல ப்படுத்துகிறது.மிக்க நன்றி.

இதில் நற்றுணை சிறுகதை ஒரு டிரான்ஸ் மனநிலைக்கு கொண்டுசென்றது.இரவில் அறையில் கேசினி வந்துவிட்டாளா என்று தேடிக் கொண்டேன்.இனிமையானவள். உறுதியானவள். ஒவ்வொரு பெண்ணும் ஏங்கும் சிநேகம்.சக பெண்ணிடம் ஏன் தாயிடம் கூட கிடைக்காத அரவணைப்பு.அம்மிணி அம்மச்சி எவ்வளவு கொடுத்து வைத்தவள்.   இன்று நாங்கள் பறப்பதற்கு,மூத்தம்மைகள் எவ்வவு ஆசிர்வதித்து இருப்பார்கள்.

கேசினி,அம்மச்சியின் பிளவாளுமையாக இருப்பாளோ?(வாசிப்பு சரிதானா?)

பி.கு : அம்மிணி அம்மச்சியை பற்றி கூகிள்-லில் தேடி சலித்துவிட்டேன்.Cute devil இன் முகத்தை பார்க்கவேண்டும்.Mary Poonen ஒரு பதின்பருவ பையனை போல் உள்ளார்.Anna Chandy இன் சுருள் முடி ஜட்ஜ்களின் விக்கை போலவே உள்ளது .

 

அன்புடன்,

அர்ச்சனா

 

அன்புள்ள அர்ச்சனா

நன்றி

இரண்டு விஷயங்கள். ஒன்று, கதையை வாசிக்கும்போது நம்முடைய சமகால பொது அறிவின் விளைவாக அதைச் சுருக்கிக் கொள்ளும் பழக்கத்தை நாம் அடைகிறோம். ஒரு குறிப்பிட்ட மனநிலையை பிளவாளுமை என்றோ ஈடிப்பஸ் காம்ப்ளெக்ஸ் என்றோ அடையாளப்படுத்துவது. ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலை பின்காலனிய மனநிலை என்றோ நிலப்பிரபுத்துவ வழக்கம் என்றோ மதிப்பிடுவது. அறிவுச்செயல்பாட்டில் இதற்கு ஓர் இடம் உண்டு. அங்கே ‘பொதுமைப்படுத்துதல்—சுருக்குதல்- தீர்வுகாணுதல்’ ஆகியவையே வழிமுறைகள்.

இலக்கியத்தில் அப்படி அல்ல. இங்கே செயல்படவேண்டியது பொது அறிவு சார்ந்த பொதுமைப்படுத்துதலும் சுருக்குதலும் அல்ல. அவை கதையை சுருங்கவைத்துவிடும். இங்கே கதையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தையும் மேலும் பலமடங்காக விரித்துக்கொள்ளும் கற்பனைதான் வாசகனுக்குத் தேவை. அதை பிளவாளுமை என்று சுருக்கினால் நமக்கு என்ன கிடைக்கும்? ஒரு எளிய உளவியல் தீர்வு. அதைத்தான் உளவியல் செய்கிறதே, இலக்கியம் எதற்கு? ஆனால் இலக்கியம் தேவையாகிறது. விரிப்பதற்கு. அதற்காகவே அதில் அத்தனை உண்மையான செய்திகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரையும் பொதுவாக இயக்கிய ஒரு  ‘யக்ஷி; ஒரு குறியீடு. அது என்ன? அதன் வேர் என்ன? அதன் வரலாற்று உறைவிடம் என்ன? அப்படியே கற்பனையை விரித்துச்செல்லவே இலக்கியவாசகி முயலவேண்டும்

அக்கதையில் மையக்கதாபாத்திரம் கற்பனையானது – அப்படித்தான் இருக்கமுடியும் அல்லவா?

 

ஜெ

நற்றுணை -கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஐந்து நெருப்பு,கரவு -கடிதங்கள்

$
0
0

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அந்த எரியும் நிலத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இந்தச் சிறுகதைகளை என்னால் வகைப்படுத்தவே முடியவில்லை. மிக இனிமையான மொழி போன்ற கதையை வாசிக்கும்போது இலக்கியம் இப்படி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பிடி கதையை வாசிக்கும்போது இப்படி ஒரு நெகிழ்வுதான் இலக்கியம் என்று தோன்றுகிறது. எழுகதிர் வாசிக்கும்போது இந்த கவித்துவம்தான் தேவை என்று தோன்றுகிறது. ஆனால் ஐந்துநெருப்பை வாசிக்கும்போது  இதுபோல அப்பட்டமான வாழ்க்கையைச் சொல்லுவதே இலக்கியம் என்று தோன்றுகிறது

அந்தப்பையன் என்னவாக ஆவான்? யோசிக்கவே முடியவில்லை. கொடூரமான கொலைக்காரனாக ஆகலாம். மனசுக்குள் கொஞ்சம் ஈரம் மிச்சம்வைத்திருக்கலாம். மூன்றுபக்கமும் தீ எரிய நாலாவது பக்கம் பாய்ந்து வருகிறான். அவனை எவராலும் தடுக்கமுடியாது. எத்தனை டீடெயில்கள். என்னுடைய சொந்த ஊர். நான் 10 ஆம் வகுப்பு வரை படித்தது உடன்குடியில்தான். பொழிமண்ணில் சைக்கிளை மிதிக்கும் காட்சி. முள் ஸ்டீல்மாதிரி தெரிவது. கோமதிக்கும் அவள் அண்ணனுக்கும் இருக்கும் இனிமையான உறவு. சுடிதாரைப்பற்றி அவள் அண்ணனிடம் சொல்லும் ஒரே சொல்லில் என்ன ஒரு ஆசை. மனசை நெகிழச்செய்த கதை

 

ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

உங்கள் எழுத்துக்களுக்கு ஒரு மாய சக்தி உண்டு. கதை படிக்கும் வாசகனை அந்த தளத்திற்கே கூட்டிச் செல்வீர்கள். கதை படிப்பதைத் தாண்டி அது நம் கண் முன்னே நடப்பதைப் போல உணரச் செய்து விடுகிறீர்கள். ‘ஐந்து நெருப்பு’ சிறுகதை படித்த போது அப்படித்தான் உணர்ந்தேன். முட்கள் குத்தி முத்து துடிக்கும் வலியையும், வலியில் துடிக்கும் மகனுக்கு சாராயம் வாங்கித் தரும் தாயின் முரட்டுப் பாசமும் கண்ணெதிரில் பார்த்த காட்சிகள் போல் உணரச் செய்தது.

சுட்டெரிக்கும் அந்த மண்ணில் வாழும் மக்களின் வெப்பத்தை உணரச் செய்தது. அந்த வெப்பத்தை விட்டு விலகி சென்றாலும் அதன் உஷ்ணம் எவ்வளவு தொலைவு சென்றாலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் மீண்டும் சுட்டெரிக்கும். அதைத் தெரிந்தும் முத்து அர்ஜுனனைப் போல அந்த ஐந்து நெருப்பிற்கு நடுவில் நிற்க போகிறான். ஒரு புரியாத வலியோடு முடிகிறது.

 

அன்புடன்,

விஜி குமரன்.

கரவு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

கரவு சிறுகதை வழக்கம்போல ஒரு களவு விவரிப்பு என்றுதான் வாசித்தேன். சட்டென்று கதை அடுத்த தளத்திற்குச் சென்றது. திகைப்புதான் வந்தது. இருட்டிலிருந்து இரண்டு தெய்வங்கள் வருகின்றன. அவை எங்கிருந்து வருகின்றன என்றுதான் கதை முழுக்க உரையாடல் நடைபெறுகிறது என்பதை கதை முடிந்தபின் ஒருமுறை மனசிலே ஓட்டிப்பார்த்தால்தான் தெரிகிறது. சிதாகாசம் பற்றிய பேச்சு, பார்க்கப்பார்க்க நட்சத்திரங்கள் உள்ளே இருந்து எழுந்து வருவது என்று ஏகப்பட்ட குறிப்புக்கள். கதை வேறு ஒரு முழுமையை அடைகிறது

 

ராஜ் கண்ணன்

 

வணக்கம் ஜெ

 

கரவு சிறுகதையை வாசித்தேன். கள்ளன் தங்கன் தனது கெஜகில்லி தனத்தால் மாடனாகவும் உருமாறும் கதை. மாயண்டி சாமியும் கள்ளனாக இருக்கிறான். தேன்சீட்டு சிறகை விட்டொழிந்து பூவில் தேன் குடிப்பதைப் போல தன் மனிதச் சிறகை உதறி கந்தர்வனாக இருட்டுக்குரியவனாக மாறுகிறான்.

 

அரவின் குமார்

தொடர்புடைய பதிவுகள்

பலிக்கல்[சிறுகதை]

$
0
0

வாசலில் வந்து நின்றவரை நான் முன்னர் பார்த்திருக்கவில்லை. நாளிதழை தழைத்துவிட்டு எழுந்து “யாரு?” என்றேன்

அவர் கைகூப்பி “இல்ல, பாக்கணும்னு…” என்றார். “ஆடிட்டர் அஷ்டமூர்த்தி சாரு?”

“நாந்தான்”என்றேன்

“என் பேரு பரமசிவம்… நமக்கு தென்காசிக்கு அந்தால புளியறை…”

நான் கைகூப்பி “வாங்க” என்றேன். எதற்கு வந்திருக்கிறார் என்று புரியவில்லை. நினைவில் எங்கும் முகம் தென்படவில்லை. நான் பணியாற்றியது முழுக்க கேரளத்தில்.தென்காசிப்பக்கம் தெரிந்த எவரும் இல்லை

அவர் அமர்ந்துகொண்டு “நான் ஒரு காரியமாட்டு வந்தேன்” என்றார் .குரலில் ரகசியம் வந்துவிட்டிருந்தது. “முத்தாலத்து சங்கரன் போத்தி சாமி…”

“எங்க அப்பாதான்” என்றேன்

“நான் அவரை பாக்கணும்”

நான் “எதுக்கு?”என்றேன். “அவரை உங்களுக்கு எப்டி தெரியும்?”

“எனக்கு அவரை தெரியாது. நான் வந்தது வேற ஒருத்தருக்காக. அவர் பெரியவரோட வாழ்க்கையிலே ரொம்ப சம்பந்தப்பட்டவர்”

“இங்க பாருங்க, அப்பாவுக்கு இப்ப என்ன வயசு தெரியுமா?”

அவர் தலையசைத்தார்

“எனக்கு அறுபத்திமூணு. அப்பாவுக்கு தொண்ணூத்திநாலு… அவருக்கு நடமாட்டம் நின்னுபோய் ஏழுவருஷம் ஆகுது. சுயநினைவு குழம்பிப்போய் முப்பது வருஷம் ஆகுது. இப்ப அவரை வச்சு என்ன பண்ணப்போறீங்க?”

“நான் எல்லாத்தையும் சொல்லிடறேன் சார். நான் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர்.புளியறையிலே ஒரு பண்ணையை என்னோட பார்ட்டி ஒண்ணு விக்க வந்தார். அவரு பேரு சண்முகலிங்கம். அவரோட அப்பா காலத்திலே வாங்கின லேண்ட் அது. அவரு மெட்ராஸிலே ஆடிட்டரா இருககர். நூத்து நாப்பத்தேழு ஏக்கர். முழுக்க தென்னையும் மாவும்பலாவும். நல்ல செழிப்பான தோட்டம், அங்க தண்ணிப்பிரச்சினை இல்லை பாத்துக்கிடுங்க. எஸ்டேட்டுக்குள்ளாடியே ஒரு சின்ன ஆறுபோவுது” என்றார் பரமசிவம். “ஒரு பங்களாவும் உண்டு.பழசுதான், ஆனால் நல்ல பெரிய வீடு..”

“ஓகோ”

“ஆனால் அவங்க நெலத்தை அப்டியே ஒரு வாட்ச்மேன் பொறுப்பிலே விட்டுட்டு மெட்ராஸிலே இருந்தாங்க. அங்க யாரும் வர்ரதே இல்லை. மண்ணிலே இருந்து லாபம்கூட அந்த வாட்ச்மேனே எடுத்திட்டிருந்தான். அதான் வித்துடலாம்னு முயற்சி பண்ணியிருக்காங்க. நான் நெலத்தை வாங்குறதுக்கு ஆளுதேடினேன். நெலம் பத்துப்பதினஞ்சு கோடிக்கு போவும். அம்பிடு கோடி ருபா குடுத்து நெலத்தை வாங்கணுமானா அரசியல்வாதி வாங்கணும். அவனுக கிட்ட பைசாவ வாங்குறது கஷ்டம். அதனாலே கேரளாவிலே ஆளுண்டான்னு விசாரிச்சே”.

“சரி” என்றேன் ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என எண்ணிக்கொண்டேன்

“அதை வாங்க வந்தவர் ஒரு கேரளாக்கார கிறிஸ்தவர். ஜார்ஜ் தாமஸ் வடக்கேடன்னு பேரு. துபாய்ல கடைவச்சிருந்தவர். ஊருக்கு வந்திட்டார். அவரு பாத்ததுமே தெரிஞ்சுகிட்டார், பாக்க ஆளில்லாத நிலம்னு. நாலுகோடிக்குமேலே ஒரு பைசா தரமாட்டேன்னு சொல்லிட்டார். சண்முகலிங்கம் நல்லா சொல்லிப்பாத்தார். ஆனா கேரளாக்காரனுக நேக்கு தெரிஞ்சவனுக. ஒத்தவெலை நாலுகோடி, குடுத்தாக்குடு, இல்லேன்னா போன்னுட்டாங்க. நான் கொதிச்சுப்போய்ட்டேன், நாலுகோடிக்கு நூத்திநாப்பத்தேழு ஏக்கர் பண்ணைன்னா அது ஏவாரம் இல்லை, தானம் குடுக்கிறது. ஆனா சண்முகலிங்கம் சட்டுன்னு நாலுகோடின்னாலும் பரவாயில்லை, முடிச்சிருன்னு சொன்னார்”

“சரி ,இதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்றீங்க? நான் இப்ப ஆடிட்டிங் எல்லாம் பண்றதில்லை”

“ஒரு ஓரமா சொல்லிட்டே வந்திடறேன்சார். இல்லேன்னா புரியாது. பேச்சு எல்லாம் முடிஞ்சு அட்வான்ஸ் கைமாறியாச்சு. பதிவுக்கு நாள் குறிச்சாச்சு. அந்நேரத்திலே ஒரு ஆக்ஸிடெண்ட். ஜார்ஜ் தாமஸோட மூத்த பையன் காரிலே இடுக்கியிலே இருந்து தொடுபுழா வர்ரப்ப கார் மலைப்பள்ளத்திலே விழுந்துட்டுது.அப்டியே போய்ட்டான். உடம்ப எடுக்கவே நாலுநாள் ஆச்சு”.

“ஜார்ஜ் தாமஸ் ஒடிஞ்சு போய்ட்டார். மூணுமாசம் பொறுத்து நான் போயி நெலத்தை வாங்குறீங்களான்னு கேட்டேன். இல்லே, ஏதாவது ஜோசியன்கிட்ட கேட்டுட்டு செய்வோம்னு சொல்லிட்டாங்க… நாந்தான் அல்லிமங்கலம் நம்பூதிரிகிட்ட கூட்டிட்டு போனேன். கேட்டிருப்பீங்க, மாவேலிக்கரையிலே… ரொம்ப புராதனமான ஜோசியக் குடும்பம் அவங்க… எனக்கும் அவரை தெரியாது. அவங்களே விசாரிச்சுட்டு அவரு நல்ல ஞானம் உள்ள ஜோசியர்னு சொன்னாங்க.என்னைய கூட்டிட்டுப்போகச் சொன்னாங்க”

“சார், இப்ப மாதிரி இருக்கு. நானும் ஜார்த் தாமஸும் அவரோட வீட்டுக்காரம்மாவும் ஜோசியர் முன்னால உக்காருறோம். ஜாதகத்தை எடுத்து புரட்டிப்பார்க்கிறார். இப்டி குடும்பத்திலே ஒரு துக்கம்னு சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள கையை காட்டி ‘பையன் போய்ட்டான் இல்ல?’ன்னு கேட்டார். ஜாதகத்தை பாத்து மடிச்சு வச்சுட்டு ‘ஒரு மகாபாப தோஷம் தேடி வந்திருக்கு. ஆர்ஜித தோஷம். நீங்க செஞ்சது இல்லை, வேற எங்கிருந்தோ வந்து ஒட்டியிருக்கு’ன்னு சொன்னார்”

“எனக்கு ஒண்ணும் புரியலை ‘அதெப்டி’ன்னு ஜார்ஜ் தோமஸ் கேட்டார். ஜோசியர் மறுபடியும் பாத்துட்டு  ‘வீடு ஏதாவது புதிசா வாங்கினீங்களா?’ன்னார்.  ‘இல்லே’ன்னு ஜார்ஜ் தோமஸ் சொன்னார். ‘இல்லை வேறேதாவது நகை சொத்து?’ அப்டீன்னு கேட்டார். இவர் கொஞ்சம் பம்மி ‘நான் ஒரு நெலத்தை வாங்கலாம்னு அட்வான்ஸ் பண்ணினேன். அதை செஞ்ச நாளிலே இருந்தே மனசுலே ஒரு மாதிரி ஒரு அலைமோதலா இருந்திட்டிருந்தது’ன்னு சொன்னார்”

“ஜோசியர் ‘கனவுகள் வந்திச்சோ?’ ன்னு கேட்டார். ‘ஆமா’ன்னு இவர் சொன்னார்.  ‘என்ன கனவு?’ன்னு ஜோசியர் கேட்டார்.. ‘ஒரு வயசான கிழவர் ஒரு பெரிய கிணற்றுக்குள்ள ஆழத்திலே இருந்து அழுதிட்டிருக்கார். நான் மேலே நின்னு பாத்திட்டிருக்கேன்’ன்னு ஜார்ஜ் தாமஸ் சொன்னார். ‘வேற?’ ன்னு ஜோசியர் கேட்டார். ‘வேற கெடையாது. இந்த ஒரே கனவுதான்’. நம்பூதிரி அவருக்க வீட்டுக்காரம்மாவை பாத்து ‘உங்களுக்கும்மா?’ன்னு கேட்டார். ‘யாரோ வந்து கதவை தட்டி அழுதுட்டே நிக்கிறமாதிரி கனவு. அதுமட்டும்தான். ஆனா பத்து தடவைக்குமேலே வந்திட்டுது’ன்னு அந்தம்மா சொல்லிச்சு”

“நம்பூதிரி ‘நெலம் எங்கே, யாரோடது?’ன்னு கேட்டார். நான் எல்லாத்தையும் விபரமா சொன்னேன்.  ‘நெலத்துமேலே பெரிய சாபம் கெடக்கு, அதிலே இருந்து வெளியே வர்ரது கஷ்டம். போனதுபோகட்டும், அட்வான்ஸை விட்டிருங்க. மிஞ்சின குடும்பம் லாபம்னு இருக்கட்டும். கூடுதலா சாபம் தேடி வைக்கவேண்டாம்’ அப்டீன்னு சொல்லி ஜாதகத்தை கீழே வைச்சிட்டார் நம்பூதிரி.”

“கும்பிட்டு கெளம்பினப்ப அந்தம்மா அழுதிட்டு கைகூப்பி ‘செரி சாமி, இதுக்கு என் பையன் ஏன் போகணும்?’னு கேட்டார். ‘பாவம்னா மோசமான ஒட்டுவாரொட்டி. அது அப்டித்தான். ஒருவாய் சோத்துலே கூட ஏறி நம்மகிட்ட வந்திரும். அதான் துஷ்டனைக்கண்டா தூரவிலகுன்னு சொல்லியிருக்கு’ன்னு அவர் சொன்னார்.  ‘இருந்தாலும் இப்டி ஆயிடிச்சே சாமீன்னு அந்தம்மா அழுதிச்சு.  ‘எல்லாத்துக்கும் ஜோசியன் ஒரு பதிலைத்தாம்மா சொல்லமுடியும், எல்லாம் விதியோட கணக்கு’ன்னு சொல்லி அவரு கும்பிட்டார்”

“வெளியே வந்ததும் ஜார்ஜ் தாமஸ் எங்கிட்ட  ‘எல்லாம் அப்டியே போகட்டும், என் அட்வான்ஸ் வேண்டாம்’னார். நான் சொல்லிப் பாத்தேன், பரிகாரங்கள் பண்ணலாம்னு பேசினேன். அவரு ஒத்துக்கலை. மனசுவிட்டுப் போனேன். மெட்ராஸ் போயி சண்முகலிங்கம் சார் கிட்ட  ‘இப்டி ஆயிடிச்சே சார்!’ னு சொன்னேன்.  ‘அட்வான்ஸை திருப்பிக் குடுத்திடறேன், அவரு பைசா நமக்கு எதுக்கு?’ன்னார்”

“அப்ப சட்டுன்னு அவரோட மனைவி அழுதுகிட்டே வெளியே  ஓடிவந்து எங்கிட்ட  ‘அந்த நம்பூதிரிய பாக்கணும்ங்க, எங்க குடும்பத்திலேயும் பெரிய பெரிய நாசமெல்லாம் நடந்திட்டிருக்கு! எங்களைக் கூட்டிட்டுப்போங்க”ன்னு சொன்னா.தலையிலே அறைஞ்சு கதறி அழுதிட்டே விழுந்திட்டா”

“நான் அவங்களை நம்பூதிரிகிட்ட கூட்டிட்டுபோனேன். இவங்க ஜாதகத்தைப் பாத்ததுமே அப்டியே கீழே போட்டுட்டார் ‘குலசாபம் துரத்துது. அழிச்சிட்டுதான் போகும். அள்ளி அள்ளி வச்சாலும் அடங்காத நெருப்பு’ ன்னு சொல்லிட்டாரு.இவங்க கதறி அழுதிட்டே இவங்க குடும்பத்தைப் பத்திச் சொன்னாங்க. அப்பதான் எனக்கும் எல்லாம் தெரிஞ்சுது”

எனக்கு ஓரளவு பிடிகிடைத்தது. ஆனால் பேசாமல் இருந்தேன்

“அழகியநம்பியாபிள்ளை குடும்பம் சார், பெரியவரு அப்ப கேஸ்லே மாட்டினப்ப இவருதான் கோயில் எக்சிகூட்டிவ் ஆபீசர்.”

“ம்” என்றேன்

“அப்ப சம்பாரிச்சதுதான்… அந்த பணத்தவச்சு அந்த நெலத்தை வாங்கியிருக்கார். அவரோட குடும்பமே அதைவச்சுத்தான் மேலேவந்திருக்காங்க”

நான் தலையசைத்தேன்

“அழகியநம்பியாபிள்ளைக்கு மூணு பிள்ளைக. மூத்தவரு சுப்ரமணியம். ரெண்டாவது பொண்ணு, மீனாட்சின்னு. கடைசியா இவரு, சண்முகலிங்கம். சுப்ரமணியம் போய்ட்டாரு. எஞ்சீனியரா இருந்தவரு மாடியிலே இருந்து விழுந்துட்டாரு. அவருக்கு ஒரே மகன் அவனும் ஒரு ஆக்ஸிடெண்டிலே போய்ட்டான். அவனுக்க பொஞ்சாதி ஒத்தைப் பையனோட தன் அப்பாம்மா வீட்டுக்கு போய்ட்டுது. மூணுவருசம் முன்னாடி அந்த பையனும் தவறிட்டான். செம்பரம்பாக்கம் ஏரிக்கு குளிக்கப்போனவன் சேத்திலே சிக்கிக்கிட்டான். இப்ப அந்தம்மா மட்டும் எங்கியோ ராஜபாளையத்திலே இருக்கு. அந்த வம்சமே அழிஞ்சாச்சு”

“அழகியநம்பியாபிள்ளைக்க மகள் மீனாட்சியும் இப்ப இல்லை. அவங்களோட ரெண்டு பையங்களும் தவறியாச்சு. ரெண்டுபேருக்குமே சட்டுன்னு ஹார்ட்டு அட்டாக்கு வந்துச்சு. அவங்க குடும்பத்திலயும் நாலு சாவு. மூணு பிள்ளைங்களுக்கு மூளை வளர்ச்சி கெடையாது. அந்தக்குடும்பமே அப்டியே இழவடிச்சுப்போய் திருவண்ணாமலையிலே கெடக்கு”

“அப்டியா?”

“ஆமா சார். சண்முகலிங்கம் சார் ஆடிட்டர். ரெண்டு பையன் ஒரு பொண்ணு. பொண்ணு நாலுவருசம் முன்னாடி பிரசவத்திலே போய்ட்டா. மூத்த மகனுக்கு போனவருஷம் ஒரு ஆக்ஸிடெண்ட். படுத்த படுக்கையா இருக்கான்… அவரு சொல்லுதாரு, மூணுமாசத்துக்கு ஒரு கெட்டசெய்தி வந்திட்டே இருக்குன்னு… வாழ்நாள் முழுக்க அப்டித்தான். அவரு இருபது வயசிலே இருந்தே மாத்திரபோட்டுத்தான் தூங்கிட்டிருக்காரு… என் கையைப் பிடிச்சுட்டு ‘நான் கல்யாணம் பண்ணிட்டிருக்கக் கூடாது. என் வம்சம் அழிஞ்சிருக்கணும். மத்தபேராவது தப்பிச்சிருப்பாங்க’ன்னு சொல்லி கதறி அழுதிட்டார்…”

“இப்ப என்ன பண்ணணும்?”என்றேன்

“சார், அவங்க செய்யாத பூசை இல்லை. போகாத கோயில் இல்லை. கோடிக்கணக்கிலே தானதர்மம் பண்ணியிருக்காங்க. பிராயச்சித்தம் பண்ணிட்டே இருக்காங்க. இனி செய்றதுக்கு ஒண்ணும் இல்லை” என்றார் பரமசசிவம். “அவங்க அப்பா அழகியநம்பியா பிள்ளை எழுபதுவயசிலே போனார். ஃபிஸ்டுலான்னு ஒரு சீக்கு. பீ ஒளுகிட்டே இருக்கும். அப்பதான் எல்லாத்தையும் சொல்லி அளுதிருக்காரு.  ‘பதினேழு வருசமா கழுவிலே ஏத்தி உக்கார வைச்சிருக்குடா… ஆண்டவன் என்னைய கழுவிலே ஏத்திட்டாண்டா’ன்னு சொல்லி கதறியிருக்காரு”

நான் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள தலையை கவிழ்த்து அமர்ந்திருந்தேன். பற்களை இறுகக் கடித்திருந்தேன்

“எல்லாம் செஞ்சது அவரு. ஒப்பரம் நின்னது ரெண்டு வாட்ச்மேன் ஸ்டாஃப். அந்த ஆளுகளும் இப்ப மொத்தமா நாசமாப் போயிட்டாங்க. அழகியநம்பியா பிள்ளை மாட்டிக்கிட்டதும் ஒண்ணும் தெரியாத பெரியவர கைகாட்டி விட்டுட்டார். வக்கீல் முதல் எல்லாருக்கும் பணத்தை அள்ளி எறக்கி தப்பிச்சுட்டார். ஆனா ஆண்டவன்கிட்டேருந்து தப்பமுடியல்லை”

நான்  “சரி, இப்ப அதெல்லாம் எதுக்கு?”என்றேன்

“அவங்க இவ்ளவுநாள் பெரியவரு போய்ட்டாருன்னு நினைச்சுட்டு இருந்திருக்காங்க. அங்க இங்க விசாரிச்சப்ப அப்டித்தான் சொல்லியிருக்காங்க. இவ்ளவுநாள் இருப்பாருன்னு எப்டி எதிர்பார்க்கிறது? சோசியர்தான் ‘பிராயச்சித்தம் பண்ணி எந்தபிரயோசனமும் இல்லை, உங்களாலே அழிஞ்சவங்க உங்கமேலே போட்ட சாபம் அப்டியே இருக்கு. அங்கபோயி காலிலே விழுந்து மன்னிப்பு கேளுங்க. அவங்க மன்னிச்சாத்தான் விடுதலை’ன்னு சொன்னார்.  ‘அந்த தலைமுறையே இப்ப இல்லையே’ன்னு சண்முகலிங்கம் சொன்னார். ‘அப்ப அவங்க வாரிசுக இருப்பாங்க. அவங்க கிட்ட போயி மன்னிப்பு கேளுங்க. அவங்க மனசார மன்னிச்சா அவங்களோட பூர்விகர்கள் மன்னிச்சமாதிரிதான்’னு நம்பூதிரி சொன்னார்”

“அப்ப பெரியவர் உசிரோட இருக்கிறது தெரியாது. நான் பொதுவா அவரைப்பத்தி தேடினேன். வாரிசுங்களையாவது கண்டுபிடிக்கலாம்னு நினைச்சேன்.நீலமாணிக்கபுரத்திலே யாருக்கும் ஒண்ணும் தெரியாது. நாகர்கோயிலிலே பார்வதிபுரம் அக்ரகாரம் போனேன் அங்க ஒரு தகவலும் இல்லை. பல எடங்களிலே தேடினேன். அட்ரஸை ஒருவழியா கண்டுபிடிச்சு இங்க வந்தேன்”

“அட்ரஸ் ஜெயிலிலே கிடைக்குமே” என்றேன்

“ஆமா சார், அங்கதான் கிடைச்சுது. ஆனா அது கொச்சி அட்ரஸ். அங்கபோயி விசாரிச்சு அங்கேருந்து உங்க பழைய ஆபீஸ் அட்ரஸை கண்டுபிடிச்சேன். உங்க பென்ஷன் இங்கே திருவனந்தபுரம் ஆபீசிலேருந்து குடுக்கிறதா சொன்னாங்க. அங்க போயி இந்த வீட்டு அட்ரசை கண்டுபிடிச்சேன்”

“அதுக்கு நீங்க எதுக்கு மெனக்கெடணும்?”

“எனக்கு உண்டான செலவும், கூடுதலா கமிஷனும் தாறதா சொன்னாங்க. நம்ம தொழிலுல்லா?”

“சரி, இப்ப என்ன பண்ணணும்?” என்றேன்

“பெரியவரு இப்ப உசிரோட இருக்கிறாருன்னு அவங்க கிட்ட சொல்லிட்டேன். அவங்க வந்து பெரியவரு காலிலே விழுந்து மன்னிப்பு கேக்கணும்… “

நான் சற்றுநேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு எழுந்து “வாங்க” என்றேன் “உள்ள வாங்க, அப்பாவை பாருங்க”

அவர் என்னுடன் வந்தார். “அவரு எப்டி இருந்தாலும் இது அவங்களுக்க மன ஆறுதலுக்கு. அவங்களுக்கு நிம்மதியான தூக்கமில்லை. பயந்துபயந்து ரெண்டு தலைமுறையா செத்துட்டிருக்காங்க… வந்து காலிலே விழட்டும். என்ன சடங்கு வேணுமோ செய்யட்டும்… நான் இதை தொழிலா மட்டும் பார்க்கலை. மனுஷ வாழ்க்கையில்லா? அப்டி தலைமுறை தலைமுறையா உமித்தீ மாதிரி நீறி அழியுறதுன்னா அது பெரிய கொடுமை…”

நான் அவரை உள்ளறைக்கு கொண்டு சென்றேன். மையவீட்டில் இருந்து தள்ளி இருந்த அறை. டெட்டாலும் சிறுநீரும் கலந்த அந்த வாடை எனக்கு எப்போதுமே குமட்டலை உருவாக்குவது.

அப்பா கட்டிலில் எழுந்து அமர்ந்து ஜன்னலை பார்த்துக் கொண்டிருந்தார். மிகவும் களைத்துப்போயிருந்தார். நானே அவரைப் பார்த்து ஒருமாதத்திற்கு மேல் ஆகிறது.

அவர் என் வீட்டிலேயே தனியாகத்தான் இருந்தார். ஜான் என்ற ஆண் நர்ஸ் தினமும் வந்து கூடவே இருந்து அவருக்கு தேவையானதைச் செய்துவிட்டு சாயங்காலம் சென்றுவிடுவான். அவனை நான் பார்த்தே பலநாட்கள் ஆகின்றன. இரவில் அவருடன் ஒரு வேலைக்காரிக் கிழவி தங்குவாள். அப்பா பெரும்பாலும் இரவில் ஆழ்ந்து உறங்குவார்.

அப்பாவின் முகத்தை நான் ஏறிட்டுப்பார்த்தே பல ஆண்டுகளாகின்றன என்று உணர்ந்தேன். ஒரு கணம் அவரைப் பார்த்துவிட்டு பார்வையை தாழ்த்திக்கொள்வது என் வழக்கம். அவர் எனக்கு அளிக்கும் பதற்றம் ஏன் என்றே தெரியாதது. நான் அவரைப் பற்றி நினைப்பதையே தவிர்த்தேன். இளமைநாளிலிருந்தே அப்படித்தான். வீட்டுக்குள் கூடவே முப்பதாண்டுகளாக இருக்கும் ஒருவரை என்னால் மறக்கமுடிந்தது அவ்வாறுதான். மறக்கமுடிந்தமையால்தான் நான் உயிருடன் இருக்கிறேன்.

அப்பாவின் முகம் ஒடுங்கி நீண்டு உருமாறியிருந்தது. கன்ன எலும்புகள் உந்தி வெந்து கருகியதுபோல் தோன்றிய முகத்தோலுக்குள் புடைத்திருந்தன. பெரிய கழுகுமூக்கு முகத்தசை வற்றி தழைந்ததனால் மேலும் புடைத்திருந்தது. மூக்குத்துளை நிறைய நரைத்த மயிர்க்கற்றை. உதடுகளே இல்லை. கண்களில் வெண்விழிகள் கலங்கிச் சிவப்போடியிருந்தன. கருவிழிகள் நரைத்திருந்தன. அவர் கண்கள் இரு சீழ்பிடித்த புண்கள் போல இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றும். அந்நினைப்பை உந்தி விலக்கிக்கொள்வேன்.

அவர் உடல் மிகவும் குறுகிவிட்டது. கைகளில் தசைகள் வற்றி நரம்புகள் இழுத்துக்கொண்டு வலிப்பு வந்து அப்படியே உறைந்துவிட்டவர் போலிருந்தார். ஒரு மெழுகுச்சிலை உருகி உருமாறியதுபோல. தோலிலும் ஒரு மெழுகுத்தன்மை.கால்கள் வீங்கி பளபளவென்றிருந்தன.

அவர் கைகள் நடுங்கிக்கொண்டே இருக்கும். அவரால் எந்தப்பொருளையும் கையால் எடுக்க முடியாது. தண்ணீர் கூட எவரேனும் ஊட்டவேண்டும். அல்லது குழாய் பொருத்தப்பட்ட பிளாஸ்க் வேண்டும். அப்பா கைகளை தன் இரு தொடைகளுக்கு அடியிலும் வைத்து அழுத்திப் பிடித்திருந்தார். முழங்கைகள் துள்ளி நடுங்கிக்கொண்டிருந்தன.

காலடியோசை கேட்டு திரும்பி பார்த்த அப்பா என்னையே அடையாளம் காணவில்லை என்று தோன்றியது “இவா யாரு?” என்று என்னிடம் கேட்டார்.

“உங்களைப் பாக்கத்தான் வந்திருக்கா” என்றேன்.அவருக்கு என்னை தெரிகிறது.

“டேய் குருவி வரதுடா உள்ளார. அடைக்கலாங்குருவி… இங்க உள்ளார வந்து..” என்று அப்பா சுட்டிக்காட்டினார். “இவா யாரு?”

“அப்பா உங்களைப் பாக்க வந்திருக்கா”

“கோயில் காரியமா? பூசைக்குன்னா ராமுகிட்ட பேசிடுங்கோ” என்றார் அப்பா.

“அப்பா, இவர் உங்க கேஸைப்பத்தி விசாரிக்க வந்திருக்கா?”

அப்பா திரும்பிப் பார்த்து புன்னகைத்தார். “செவெண்டி சிக்ஸ் தெஃப்ட் கேஸ்தானே? நீலமாணிக்கபொரம் தெஃப்ட் கேசு? இவா அதிலே யாரு?”

“தெரிஞ்சவா” என்றேன் “அதைப்பத்தி விசாரிச்சுட்டு போலாம்னு வந்திருக்கா”

அப்பா “உக்காருங்கோ சொல்றேன்” என்றார். “அது அந்தக்காலத்திலே பிரமாதமான கேஸ்… பத்திரிகையிலே ஏகப்பட்ட நியூஸ் போட்டுண்டிருந்தா. இப்பல்லாம் மறந்துட்டா. இங்க நீலமாணிக்கபுரம் கோயிலிலே நடந்த பெரிய திருட்டு. பூசாரியா இருந்தவரு முத்தாலத்து சங்கரன் போற்றின்னு ஒருத்தர். நல்ல மனுஷர். ஒரு வம்புக்கும் போகமாட்டார். பெரிசா அறிவும் கெடையாதுன்னு வைங்கோ”.

பரமசிவம் திடுக்கிட்டு என்னை பார்த்தார். நான் கண்களால்  மேலே கேளுங்கள் என்று குறிப்பு காட்டினேன்

“முத்தாலத்து சங்கரன் போற்றின்னு சொன்னேன்ல, அவரு ஊரிலே எல்லாருக்கும் வேண்டப்பட்டவர். ஜோசியமும் பாப்பார். வீட்டிலே ரொம்ப கஷ்டம். ரொம்ப கஷ்டம்னா, ஒருவேளைதான் வீட்டிலே சமையல். வெறும் சோறு இல்லேன்னா மரச்சீனு கெழங்கு. அதுவும் அப்பப்ப இல்லாம ஆயிரும். ராத்திரியிலே அப்டியே பழையாத்தங்கரை ஓரமா போயி பேய்ப்பூசனிக்காய பறிச்சிட்டு வருவார். அது நஞ்சு, சிலதிலே நஞ்சு கூடிப்போய் ஆளைக் கொன்னிரும். பசுவுக்கே குடுக்கமாட்டா. இவரு அதை வேகவைச்சு பிள்ளைகளுக்கு குடுப்பார். அதைவிட நஞ்சு காட்டுச்சேம்பு. அதை குடுப்பார்… அதெல்லாம் பட்டினி தலைமேலே ஏறினா செய்யக்கூடியது”.

“அப்பல்லாம் கன்யாகுமரி மாவட்டத்திலே முக்காவாசிக் கோயில்களை அறநிலையத்துறையோட இணைக்கல்லை. திருவிதாங்கூர் சம்ஸ்தானத்திலே இருந்து வந்த கோயில் எல்லாம் ஒரு தனி நிர்வாகம். இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள்னு பேரு வச்சிருப்பா. அறநிலையத்துறையிலேயே ஒழுங்கா சம்பளம் இல்லை. இணைக்கப்படாத கோயிலிலே சம்பளம் கிடைச்சா ஆச்சு, இல்லேன்னா இல்லை. என்ன பண்ணுவா சொல்லுங்கோ? ஊரிலே எவனாம் பூசை கார்மிகம்னு கூப்பிட்டு எட்டணா, ஒருரூபா குடுத்தா உண்டு. பட்டினிதான் வாழ்க்கைன்னு வைங்கோ. என்ன சொல்லிண்டிருந்தேன்?”

நான்  “சங்கரன் போற்றியப்பத்தி…” என்றேன்

“அவருதான்… அப்ப எவனோ வந்திருக்கான். ஆசைகாட்டியிருக்கான். கோயிலிலே நாலஞ்சு பஞ்சலோக சிலை உண்டு. உற்சவமூர்த்திகள். சாமிக்கு ஒரு எரநூறு பவுன் நகையும் உண்டு. இவரோ பட்டினி. இவருக்க அப்பா வேற படுத்த படுக்கை. அவரு ஒரு காலத்திலே பெரிய தந்த்ரி. தந்தரசமுச்சயம் கரதலபாடம். மகாராஜாவே கூப்பிட்டனுப்பி கும்பிட்ட ஆளு. எல்லாம் போச்சு. நாடு நிலைமை மாறியாச்சு. கோயில் நிலத்தை வச்சிருந்த நாயரும் வெள்ளாளனும் சேர்ந்து நம்பூதிரியும் போத்தியும்தான் அயோக்கியன்னு சொல்லி நம்பவைச்சிட்டான். மரியாதை போச்சு. வருமானம் போச்சு. பிச்சைக்கார வாழ்க்கையாச்சு, சரி எல்லாம் பகவானோட ஹிதம், என்ன சொல்றீங்க?”

ஜான் வந்து நின்றான். அப்பா அவனை யாரோ என்பதுபோல சற்றுநேரம் கூர்ந்து பார்த்தார். பிறகு என்னிடம் சொல்லத் தொடங்கினார்.

“நான் சொன்ன இந்த சங்கரன் போற்றிக்கு நாலஞ்சு பிள்ளைங்க. அதிலே மூணு பொண்ணு. ஒண்ணு வளந்து கல்யாணத்துக்கு நின்னுட்டிருந்தது. ரெண்டாவது பையன், பதினொண்ணாம் கிளாஸு படிச்சிட்டிருந்தான்.அவனுக்கும் ஒரு சாஸ்தாகோயிலிலே பூசைவேலை உண்டு. படிக்காசு மட்டும்தான். கீழே மறுபடி மூணு பெண்குழந்தைகள். ஏழுஜென்ம சாபம் போலே பட்டினி சுத்தி நின்னுண்டிருக்கு. எப்டியோ கையை சாமிசெலைமேல வச்சிட்டாரு… முதல்ல நகைகளை எடுத்து கொஞ்சம் கொஞ்சமா வித்து அங்கங்கே சேத்து வச்சுகிட்டாரு. பிறவு சிலைகளை எடுத்து வித்திருக்காரு. எப்டி எடுத்தாரு எப்டி வித்தாரு எல்லாம் போலீஸ் விஜாரிச்சு புடிச்சுட்டாங்க. கோர்ட்லே புட்டுப்புட்டு வைச்சிட்டாங்க. அவருக்கு பத்துவருசம் ஜெயிலு.சாமிபாவம் விட்டிருமா? பிரம்மஹத்தி மாதிரி வந்து பிடிச்சுக்கிடும்ல?”

அப்பா மீண்டும் புன்னகைத்தார். எதையோ ரகசியமாகத் தெரிந்துகொண்டு தந்திரமாகப் புன்னகைப்பதுபோல் இருந்தது “நான் அப்ப சுசீந்திரம் உட்பட எட்டு கோயிலிலே எக்ஸிகூட்டிவ் ஆபீசர். நான்தான் திருட்டை கையும் களவுமா புடிச்சவன். பாதி எவிடென்ஸ் நான் குடுத்ததுதான்னு வையுங்கோ. கோர்ட்லே பனிஷ் பண்ணிட்டாங்க… தப்பு செஞ்சா தலைய குடுக்கணும், என்ன சொல்றீங்க? பெருமாள் சொத்துலே கைய வச்சா அவன் விடுவானா? கருடன் வந்து கொத்திண்டு போய்டாது?”

நான் “ஆமா” என்றேன். பரமசிவம் திகிலுடன் என்னைப்பார்த்தார்.

அப்பா தலையை ஆட்டி சிரித்து “பாவம், ஜெயிலிலே நரகவேதனைப் பட்டான். கைதிகளோட அடி வாங்காத நாள் கிடையாது.அது பின்ன, அடிக்காம விடுவானுகளா? இவரு செய்ஞ்சது அப்டீல்லா? கும்பிடுற சாமியை எடுத்து வித்தா விட்டிருவானுகளா?” என்றார் அப்பா “டேய் தண்ணியக்குடுடா”

ஜான் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அப்பா அதை தலைகுனிந்து அமர்ந்து மிகமெல்ல உறிஞ்சினார்.

பரமசிவம் மிக மெல்ல “சார்” என்றார்

“சொல்லுங்க”

“முத்தாலத்து சங்கரன் போத்திங்கிறவரு…”

“இவருதான்…”என்றேன். “இப்ப இவரு தன்னை வேற மாதிரி நினைச்சுகிட்டிருக்கார்”

அப்பா “ஏண்டா குருவி எல்லாம் உள்ள வருதே? சன்னலை பூட்டிவைன்னு சொன்னா அவன் கேக்குறதில்லை…”என்றார்

நான் “போலாமா?” என்றேன்

“சரி சார்” என்றார் பரமசிவம்

நாங்கள் கூடத்துக்கு வந்தோம். “பாத்தீங்கள்ல?” என்றேன்

“என்ன சார் இது?” என்றார் பரமசிவம். அவர் கொஞ்சம் நடுங்கிக்கொண்டிருந்தார்.

“ஜெயிலிலேயே இப்டி ஆயிட்டார். இப்ப அவரு சங்கரன் போத்தி இல்லை, வேற யாரோ” என்றேன் “எழுபத்தேழுலே உள்ள போனார். எம்பத்தெட்டிலேதான் வெளியே வந்தார். பத்துவருசம் ஜெயில்தண்டனை. ஆனா பதினொரு வருசம் உள்ள இருந்தார். விசாரணைக் கைதியா இருந்ததை எல்லாம் சேத்தா பன்னிரண்டு வருஷத்துக்கு மேலே.அதாவது ஒரு முழு ஆயுள்தண்டனை. நடுத்தெருவிலே ரெட்டைக்கொலை பண்ணினவன் எல்லாம் நேரு பிறந்தநாள் பெரியார் பிறந்தநாள்னு அஞ்சுவருசத்திலே வெளியே போய்ட்டே இருந்தான். இவரு பரோலுகூட இல்லாமல் உள்ளேயே இருந்தார்.”

“ஏன் சார்?” என்றபோது பரமசிவம் அழுதுவிட்டார்.

“எல்லாத்துக்கும் ஆளு வேணும்ல? அரசியலிலே ஆளுவேணும். சர்க்காரிலே ஆளுவேணும். எங்களுக்கு யார் இருக்கா? பிராமணன். அதிலயும் துளு போத்தி. இந்த ஊரிலே நாங்க மொத்தமா நாநூறுபேரு கூட இல்லை. டெமாக்ரஸியிலே நம்பர்தானே சக்தி? விசாரணை எப்டி நடந்தது? ஆறுமாசம், சரசரன்னு நடந்து அப்டியே தீர்ப்பு. அப்பீல் கெடையாது. நேராஜெயில். அப்பாவுக்காக வாதாட கோர்ட்டே நியமிச்ச இலவச வக்கீல். அவரு இருபத்தாறு வயசான ஒண்ணும்தெரியாத பையன்… அவன் பாதிநாள் கோர்ட்டுக்கே வரல்லை.அவ்ளவுதான், கதை முடிஞ்சது”

“அதோட மொத்த சமூகத்திலயும் இருந்த பிராமண வெறுப்பு. ஆகா, கோயிலிலேயே பூசாரி திருடிட்டார்னு மொத்த ஊரே கொண்டாடிச்சு. பத்திரிகைகளிலே செய்திமேலே செய்தி. அப்ப நாகர்கோயிலுக்கு வந்த ஒரு பெரிய அரசியல்வாதி இந்த விஷயத்தைப் பத்தி மட்டும் மேடையிலே ஒண்ணரை மணிநேரம் நக்கலும் நையாண்டியுமா பேசியிருக்கார்.மக்களுக்கு ஒரு பலி தேவைப்பட்டது. வெள்ளாட்டைத்தானே இழுத்துவந்து பலிகுடுப்பாங்க?”

“இப்ப சொல்றேன், இந்த நாட்டிலே கோயில் சொத்திலே நேரடியாகவோ மறைமுகமாகவோ கையை வைக்காத குடும்பங்கள் ரொம்ப கம்மி. அவங்களுக்கு அது கொஞ்சம் உறுத்தும். அதனாலே எல்லாருமா சேந்து அப்பாவை பலிக்கல்லிலே ஏத்தினாங்க.நீதி நியாயம் எல்லாமே சமூகத்திலே பொதுவா தீர்மானமாகிறதுதான். சமூகம் இதுதான் நீதின்னு எதை முடிவுசெஞ்சாலும் அதான் நீதி, அவ்ளவுதான்”

“நான் அப்ப பதினொண்ணாம் கிளாஸு முடிச்சு சும்மா நின்னேன். நாங்க தங்கியிருந்த வீடு கோயிலுக்குச் சொந்தம். போலீஸு புடிச்சதுமே ஊர்க்காரங்க கல்லாலே அடிக்காத கொறையா தொரத்தி விட்டாங்க. எந்திரிக்க முடியாத தாத்தாவ தூக்கி ஒத்தக்காளை வண்டியிலே போட்டுட்டு புலியூர்க்குறிச்சி போனோம். அங்க சித்தப்பா கையெடுத்து கும்பிட்டு போயிடுங்க, என் பொழைப்ப அழிக்காதீங்கன்னார். அப்டியே திருவட்டார் போனோம். பெரியப்பா வந்து ஆற்றூரிலேயே வழிமறிச்சு ஊருக்குள்ளேயே நுழையாதீங்க, என்னையும் என் குடும்பத்தையும் நாசமாக்காதீங்கன்னார்”

“அப்டியே திரும்பி போறப்ப பாத்தா தாத்தா உடம்பு குளுந்து கெடக்கு. அம்மாவை கூப்பிட்டு சொன்னேன். அம்மா வண்டிக்காரன் கிட்ட சொல்லி கும்பிட்டு அழுதா. அவன் எந்திரிச்சு அவ கன்னத்திலே அறைஞ்சான். பதினாறு வயசு பையன் நான் பாத்துக்கிட்டு நின்னேன். பக்கத்திலே பதினெட்டுவயசு அக்கா. மூணு தங்கச்சிக… அப்றம் எப்டி சமாளிச்சோம்? அதை பெத்தமகன் நான் என் நாக்காலே சொல்லக்கூடாது. ஒவ்வொரு நாளும் அந்த பாழாய்ப் போனவளை நினைச்சு மனசாலே கும்பிடணும்…”

“அவனே அந்த உடம்பை உண்ணாமலைக்கடை பக்கம் காட்டுக்குள் ஒரு சுடுகாட்டில் ஆளைப் பிடிச்சு பணம் கொடுத்து எரிக்கவச்சான். நான் கொள்ளிவைச்சேன். அவனே வண்டியில் எங்களை கொண்டுபோய் மார்த்தாண்டத்தில் போய்விட்டான். திருவனந்தபுரம் வரை பஸ் டிக்கெட்டுக்கு பணமும் தந்தான். திருவனந்தபுரத்திலே போய் ஒரு மடத்தோட திண்ணையில் எட்டு நாள் இருந்தோம். அப்றம் ஒரு ஓட்டலிலே வேலைக்குச் சேர்ந்தோம். அந்த ஓட்டல் ஓனருக்கு கீப்பாத்தான் எங்கம்மா இருந்தா. அப்றம் என்ன?”

“ஒருவருசம் அந்த ஓட்டலிலே நான் தட்டுதூக்கினேன். பிறகுதான் போஸ்டாபீஸிலே வேலை கிடைச்சது. பதினொண்ணாம் கிளாஸ் மார்க் அடிப்படையிலே. நானே படிச்சேன். ஆடிட்டர் ஆனேன். அக்காவுக்கு இருபத்தொன்பது  வயசிலே கல்யாணம் பண்ணி வைச்சேன். தங்கச்சிகளை கட்டிக்குடுத்தேன். நடுவிலே இவரை வந்து பாக்க எங்களால முடியலை. உண்மையச் சொல்லணும்னா அந்த தொடர்பையே மறந்திட்டேன். கஷ்டப்பட்டு மறந்திட்டேன். செத்தாச்சுன்னே நினைச்சுகிட்டேன்”

“இவரை பாளையங்கோட்டையிலே இருந்து வேலூருக்கு மாத்தினாங்க. பத்துவருஷம்… மறுபடியும் ஒரு வருஷம். விடுதலை பண்றதுக்கு எவ்ளவு புரசீஜர்ஸ்… வர்ரப்ப இப்டி வந்தார். இப்ப அவரு சங்கரன் போற்றி இல்ல. வேற யாரோ. சங்கரன் போற்றி திருடினார், அதனாலே அவரை ஜெயிலிலே போட்டாங்க, அவருக்கு அதெல்லாம் வேண்டியதுதான்னு இவரே நினைச்சுகிட்டார்”

“எங்கிட்ட வந்தபிறகு பத்துப்பதினைஞ்சு டாக்டர்கள் கிட்ட காட்டியிருக்கோம். எல்லாரும் சொல்றது ஒண்ணுதான், மனசு போட்ட அந்த வேஷத்தாலேதான் இவரு ஆளு தப்பிச்சுகிட்டார். சங்கரன் போற்றி வேற ஆளுன்னு நினைச்சார். அவரை வெறுக்கறதுக்கு பழகிக்கிட்டார். அப்ப சங்கரன் போற்றிய ஜெயிலிலே போட்டதும் அடிஅடின்னு அடிச்சதும் இன்னும் வெளியிலே சொல்லமுடியாத என்னென்னமோ செஞ்சு சீரழிச்சதும் நியாயம்தானே?”

“சங்கரன் போற்றி திருடலை. திருடினது அழகிய நம்பியாபிள்ளை. அது தெரியாத யாரும் கிடையாது. அத்தனை சாட்சிகளுக்கும் தெரியும். நீதிபதிக்கு ரொம்ப நல்லா தெரியும். தர்மம் செத்துப்போச்சுன்னு சொன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடும். பிறந்த நாள் முதல் கடவுளை நம்பி வாழ்ந்தவர் அப்பா. எப்டி கடவுளை விட்டிருவார்? விட்டுட்டு எப்டி ஜெயிலிலே இருப்பார்? மனசு கொதிச்சு கொதிச்சே செத்திருப்பார். அதனாலே சங்கரன் போற்றிய அப்டியே விட்டுட்டார். சங்கரன் போற்றி திருடர், அதனாலே ஜெயிலிலே கிடக்கார். அப்ப கடவுள் இருக்காரு ,அவரு நியாயத்தை நடத்துறார்னுதானே அர்த்தம்? அதைப்புடிச்சுகிட்டு வாழுறார்… முப்பத்திரண்டு வருஷமா இவர் இருக்கார்,சங்கரன் போற்றி இல்லை”

“இல்ல, இப்ப வேற என்னமோ சொன்னார்”

“என்ன?”என்றேன்

“இல்ல, தான்தான்  சுசீந்திரம் உட்பட எட்டு கோயிலிலே எக்ஸிகூட்டிவ் ஆபீசர். நான்தான் திருட்டை கையும் களவுமா புடிச்சவர்னு சொன்னார்” என்றார் பரமசிவம்

“ஆமா” என்றேன்.  “அதை நான் கவனிக்கலை” எனக்கு படபடப்பாக இருந்தது “அப்ப அவரு தன்னை அழகிய நம்பியா பிள்ளைன்னு நினைச்சிட்டிருக்கார்” என்றேன். அத்தனை நாள் எப்படி அதை கவனிக்காமலிருந்தேன்!

“ஆமா” என்று பரமசிவம் சொன்னார்

நான் பெருமூச்சுவிட்டேன். “பாருங்க, இப்டி இருக்காரு. இப்ப அழகியநம்பியா பிள்ளையோட பிள்ளைய கூட்டிட்டு வந்தா அவருக்கு என்ன தெரியும்? அவரு எப்டி மன்னிப்பு குடுக்கமுடியும்?”

“அவரு மன்னிப்பு குடுக்க வேண்டியதில்லை” என்று பரமசிவம் சொன்னர் “நான் கூட்டிட்டு வாறேன். அவரு குடும்பத்தோட இவுரு காலிலே விழுந்து மன்னிப்பு கேக்கணும்…அவங்களுக்காக. எங்கியோ சாமீண்ணு ஒரு இருந்தா அதுக்காக”

“ஆனா” என்று நான் தயங்கினேன். “அவரு ஜெயிலிலே இருந்ததெல்லாம் என்னோட மகனுக்கோ மகளுக்கோ தெரியாது. அவங்க பிள்ளைகளுக்கும் தெரியாது.  இங்க அவங்க வந்தா பிரச்சினை ஆயிடும்”

“அப்ப எங்கயாவது கூட்டிட்டு வாங்க” என்றார் பரமசிவம்

“அவரை வெளியே கூட்டிட்டுப் போகமுடியாது” என்று நான் சொன்னேன். “சரி, அவங்க அடுத்தவாரம் ஒரு கல்யாணத்துக்கு மட்டாஞ்சேரிக்கு போவாங்க. வீட்டிலே நானும் அப்பாவும் மட்டும்தான் இருப்போம். அப்ப நான் ஃபோன்பண்றேன். அப்ப வந்துட்டு போகச்சொல்லுங்க”

“சரி”

“ஆனா ஜோசியன் சொன்னான் பூசாரி சொன்னான்னு பூசை, சடங்கு, பரிகாரம் ஒண்ணும் செய்யமுடியாது. வந்து பாக்கணுமானா பாக்கலாம். ஒரு அரைமணி நேரம்… அவராலே ஒண்ணும் புரிஞ்சுகிட முடியாது” என்றேன் “அவங்க திருப்திக்காக வேணும்னா பாத்துட்டு போகலாம்”

“சரி” என்று பரமசிவம் எழுந்து கும்பிட்டார் “ரொம்ப உபகாரம்… நான் அவங்க கிட்ட பேசிட்டு சொல்லுறேன்”

அவர் போனபின்னர்தான் நான் அப்பா இருக்கும் நிலையை முழுக்க உணர்ந்தேன். அவர் தன்னை அழகியநம்பியா பிள்ளையாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றால் அது சங்கரன் போற்றியிடமிருந்து விலகிக்கொள்வதற்காக மட்டுமா? அழகியநம்பியாபிள்ளையாக அவர் ஏன் மாறவேண்டும்? அழகிய நம்பியாபிள்ளைதான் திருடர் என அவருக்கு நன்றாகவே தெரியும்.

அப்படியென்றால் அவர் அழகியநம்பியாபிள்ளை வெற்றிபெற்றவர் என நினைக்கிறார். சங்கரன் போற்றி வீழ்த்தப்பட்டவர். தோற்றவரிலிருந்து தாவி வென்றவர்மேல் படிந்துவிட்டிருக்கிறார். அவர் சங்கரன்பிள்ளையின் துயரை கொண்டாடுவது அழகியநம்பியா பிள்ளையாக நின்றுதான். அத்திருட்டை வெற்றி என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா?

எனக்கு அது அளித்த ஒவ்வாமை நாள் தோறும் பெருகியது. அழுகிய மலினம் எதையோ தவறாக விழுங்கிவிட்டதைப்போல குமட்டிக்குமட்டி வந்தது. அப்பா தன்னை கடவுளை நோக்கி நகர்த்திக்கொண்டார் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அவர் தன்னை அழகிய நம்பியா பிள்ளையாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்.

அவரிடம் நான் சாதாரணமாக பேசுவதில்லை. அதன்பின் அடிக்கடி அவர் அருகே சென்று அமர்ந்து பேச்சுக்கொடுத்தேன். “நீங்க சங்கரன் போற்றிய ஜெயிலிலே பாத்திருக்கீங்களா அப்பா?” என்றேன்

“பின்ன?நெறைய வாட்டி என்றார். என்னைய பாத்ததும் அழுவார். தப்புசெஞ்சுபோட்டேன் பிள்ளைவாள்னு சொல்வார். சரி, செஞ்சதப்புக்கு தண்டனை வந்தாச்சு… எல்லாம் சரியாயிடும்னு சொல்வேன். ஜெயிலிலே ரொம்ப கஷ்டம்தான். இவர் வேற வெள்ளையா பூஞ்சையா இருப்பாரா, அவுசாரிப் பொழைப்புதான்…ஹெஹெஹேஹெ”

“அப்பா அழகியநம்பியா பிள்ளைதானே திருடினவரு?” என்றேன்

“ஆரு?” என்றார்

“நீங்க?”

அப்பாவின் கண்கள் சுருங்கின. வாய் சுருக்குப்பைபோல குவிந்தது “எந்தத் தேவ்டியா மகன் சொன்னான்?” என்றார்

“இல்ல, அப்டி கேள்விப்பட்டேன்” என்றேன்

“அவன் சொன்னானா? சங்கரன் போத்தியா?”

“இல்ல, நான் வேறமாதிரி…”

“என்ன வேறமாதிரி? அவன் தான் சொல்லிண்டிருந்தான். ஏன்னா அவன் திருடன். எந்த திருடன் திருட்ட ஒப்புத்துட்டிருக்கான்? அவன் யோக்கியம்பான். அப்ப அயோக்கியன் யாரு? இன்னோர்த்தன். இவனுக்கு பிடிக்காதவன். சங்கரன் போத்தியை மாட்டிவிட்டவன் நான். அவனுக்கு எம்மேலே எவ்ளவு வெறுப்பு இருக்கும்… சொல்லாம இருப்பானா? அயோக்கியப்பய”

நான் பெருமூச்சுடன் எழுந்துகொண்டேன். உண்மையிலேயே பதற்றமாக இருந்தது. அப்பாவைச் சந்திக்க அவர்களை வரச்சொல்லலாமா? அந்தச் சந்திப்பு அவரில் எந்த விளைவை உருவாக்கும்? என் நண்பரும், அவ்வப்போது அப்பாவை கவனித்துக்கொள்பவருமான டாக்டர் பாலகிருஷ்ணன் நாயரை நேரில் போய் சந்தித்தேன். அனைத்தையும் சொன்னேன்

“சிக்கல்தான், எனக்கும் புரியவில்லை. அவர்களிடம் அவர் எப்படி நின்று பேசுவார்? அழகியநம்பியா பிள்ளையாக நின்று அவர்களிடம் பேச எப்படி முடியும்? மகனிடம் பேசுவதுபோல பேசுவாரா? அல்லது மீண்டும் சங்கரன் போற்றியாக மாறி நின்று அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாரா? சங்கரன் போற்றி மீண்டும் அவரில் தோன்றுவதென்றால்… அதுவும் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு… அந்த மாறுதலைச் செய்துகொள்ளும் அளவுக்கு அவருக்கு இன்றைய சூழலில் மனஆற்றல் உண்டா?” என்று பாலகிருஷ்ணன் சொன்னார்

“அவருக்கு ஏதாவது ஆகிவிடுமா?”என்றேன்.

“நூறுவயது ஆகப்போகிறது அவருக்கு. முதியவர்களின் உடல் மிகமிக பூஞ்சையானது. உயிர் அதில் கொஞ்சமாக எஞ்சியிருக்கிறது. மனம் என்பது உடலின் ஒரு வெளிப்பாடுதான். மிகப்பெரிய கொந்தளிப்பை அடைந்தால் உடல் தாங்காமல் போய்விடலாம்”

“அப்படியென்றால் அவர்களிடம் வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்”

“அதுதான் நல்லது… ஆனால்” என்று பாலகிருஷ்ணன் தயங்கினார்.  “ஆனால் இது ஒரு ஆன்மீக விடுதலையாக இருக்கலாம். அவருடைய ஆத்மா அடைபட்டுக் கிடக்கும் இருண்ட சிறையிலிருந்து வெளிவந்து விடுதலை அடையலாம். இத்தனை நாட்கள் அவர் வாழ்ந்ததே கூட இந்த தருணத்திற்காகத்தான் என்று இருக்கலாம். நமக்கு அதை மறுக்க உரிமை உண்டா?”

நான்“என்னதான் சொல்கிறீர்கள்?”என்று எரிச்சலுடன் கேட்டேன்

“அவர் அவர்களைச் சந்திக்கவேண்டியதில்லை என்று உளவியலாளனாக நான் சொல்வேன். சந்தித்தாகவேண்டும் என்று ஒரு மனிதனாக நான் சொல்வேன். எனக்கே புரியவில்லை”

“நான் உங்களிடம் வழிகாட்டல்தேடி வந்தேன்”என்றேன்.

பாலகிருஷ்ணன் சட்டென்று “சந்திக்கட்டும், அதுதான் தோன்றுகிறது. இதுவரை இவ்வாறெல்லாம் நிகழ்ந்தது விதி என்றால் அதுவும் நடக்கட்டும். என்ன ஆகப்போகிறது? பெரியவர் இறந்துவிடக்கூடும். அதனாலென்ன?நூறு வயதாகப் போகிறது. சாவதற்குமுன் அவர் நிலைமீளக்கூடும் என்றால் அது நல்லதுதானே?” என்றார்

“யாராவது ஜோசியரிடம் கேட்கலாமா?” என்றேன்.

“ஆம், அதைத்தான் நானும் நினைத்தேன்” என்றார். “ஜோசியர்கள் உறுதியாகச் சிலவற்றைச் சொல்லமுடியும். ஏனென்றால் அவர்கள் எதற்கும் பொறுப்பேற்கவேண்டியதில்லை. அவர்கள் விதியைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு. உளவியலாளர்களான நாங்கள்தான் எங்கள் சொற்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்”

“நான் மேலமணக்காடு அச்சுதன் நம்பூதிரியிடம் பலமுறை போயிருக்கிறேன். அவரிடம் கேட்டாலென்ன?”

“அப்பாவைப்பற்றி அவருக்கு தெரியுமா?”

“இல்லை, சொன்னதில்லை”

“நம்பிக்கை இருந்தால் போங்கள்”

“நீங்களும் வாருங்கள்” என்றேன்.

“நானா!” என்று சிரித்தார்

“வாருங்கள்” என்று சொன்னேன். “நீங்கள் ஜோசியம் பார்க்காதவராக இருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு மலையாளி பூமிமேல் இல்லை”

அவர் சிரித்து “வருகிறேன்” என்றார்.

நாங்கள் அன்றே நேரம் பதிவுசெய்துகொண்டு மேலமணக்காடு அச்சுதன் நம்பூதிரியைப் பார்க்கச் சென்றோம். பழைய வீடு, அவரும் கிழவர். நூறாண்டுகளுக்கு முந்தைய ஓர் உலகில் நுழைந்துவிட்டதாக உணர்ந்தேன். முன்பு ஒருமுறை அங்கே வந்திருந்தேன், என் மகன் ராகவனின் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க. அன்றும் அதே உணர்வு ஏற்பட்டது

அச்சுதன் நம்பூதிரியிடம் நான் எல்லாவற்றையும் சொன்னேன். தாமரை மணைமேல் பத்மாசனத்தில் அமர்ந்து, கண்கள் தாழ்ந்திருக்க, வலக்கைச் சுட்டுவிரலால் மண்ணை தொட்டபடி அவர் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் நிமிர்ந்து என்னைப் பார்த்து “இதில் ஜோசியம் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை ,அவர் அவர்களைச் சந்தித்தாகவேண்டும்” என்றார்

“ஆனால்…” என்றேன்

“என்ன ஆகும் என்று நாம் சொல்லமுடியாது. என்ன ஆனாலும் அது நல்லது, அவர் இறந்தால்தான் என்ன?” என்று அச்சுதன் நம்பூதிரி சொன்னார். “அவருக்குள் ஆழத்தில் சங்கரன் போற்றியின் ஆத்மா சிறைப்பட்டு கிடக்கிறது, அதை திறந்துவிடுங்கள். அது என்ன ஆகிறதோ ஆகட்டும்.”

நாங்கள் கும்பிட்டுவிட்டு திரும்பும்போது நான் தெளிவடைந்திருந்தேன். பாலகிருஷ்ணன் சிரித்தபடி “இதற்குத்தான் ஜோசியர்கள் வேண்டும் என்பது. நாங்கள் டாக்டர்கள் முடிவெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டுவிடுகிறோம். ஜோசியர்கள் முடிவை அவர்களே எடுத்து உங்களுக்குத் தருகிறார்கள்” என்றார்

“நீங்களும் வாருங்கள், அவர்கள் வரும்போது நீங்களும் இருங்கள்” என்று சொன்னேன்

பாலகிருஷ்ணன் தயங்கி “நான் வந்தால் நன்றாக இருக்குமா?”என்றார் “அவர்கள் ஒரு அந்தரங்கமான சந்திப்பை உத்தேசித்திருந்தால்…”

“அதற்கு நமக்கு உரிமை இருக்கிறது, நீங்கள் அப்பாவின் டாக்டர்” என்றேன்

“ஆமாம், அப்படி சொல்லலாம். நான் வருகிறேன்” என்றார்

நான் அதன்பின் அதிகம் பதற்றம் அடையவில்லை. இயல்பான நிலையை அடைந்து என் வழக்கமான வாழ்க்கைச் சுழலுக்குள் அமைந்தேன். எதிர்பார்ப்பு மட்டும் இருந்துகொண்டிருந்தது.

அன்று என் குடும்பத்தினர் கிளம்பிச் சென்றார்கள். டாக்டர் பாலகிருஷ்ணன் அவருடைய காரில் வந்து சேர்ந்தார். நாங்கள் கூடத்தில் காத்திருந்தோம். அப்பாவுடன் ஜான் இருந்தான்.

பாலகிருஷ்ணன் “நான் சில அடிப்படை மாத்திரைகள் கொண்டுவந்திருக்கிறேன். அவர் கொந்தளிப்பாக இருந்தால் நாம் உடனே தூங்கவைத்துவிடலாம்… பயப்படவேண்டியதில்லை” என்றார்

“பார்போம்” என்று நான் சொன்னேன்

கைகளை மார்பில் கட்டி கண்மூடி அமர்ந்திருந்தபோது நான் அம்மாவை நினைத்துக்கொண்டிருந்தேன். திருவல்லாவில் போஸ்டாபீஸில் வேலைகிடைத்து நான் வீடு பார்த்துக்கொண்டபோது அவளை அழைத்தேன். வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். “உன் கூடப்பிறந்தவங்களை கூட்டிட்டுப் போ, நான் வந்தா சரியா இருக்காது”

எனக்கு ஏன் அப்படி சொல்கிறாள் என்று அப்போது புரியவில்லை. கொந்தளித்தேன். “இனிமேலாவது மானமா பிழைக்கவேண்டாமா? பேசாம வா” என்று அழைத்தேன். ஒருகட்டத்தில் மனம் உடைந்து அழுந்தேன். பின்னர் கொதிப்படைந்து அவளை வசைபாடினேன். “மானம்கெட்ட பொழைப்பு அப்டியே பழகிப்போச்சு என்ன?”என்றேன்

அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். நான் என் சகோதரிகளுடன் திருவல்லாவில் குடியேறினேன். முதலில் கசப்பு குமட்டிக் குமட்டி வந்தது. ஒருவாரம் கழித்து மனம் உருகியது. போய்ப்பார்த்து காலில் விழுந்து கூட்டிவரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவள் செத்துவிட்டாள் என்ற செய்திதான் வந்தது. அவள் வழக்கமாகப் படுக்கும் ஸ்டோர் அறையில் பிணமாகக் கிடந்திருக்கிறாள். திருவனந்தபுரத்தில் ஒரு சுடுகாட்டில் எரிந்தாள்.

கார் வந்து நின்றது. பரமசிவம் இறங்கி கும்பிட்டபடி வந்தார். “சார், அவுக வந்திருக்காக… வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க”

நான் வெளியே கைகூப்பியபடி சென்றேன். காரில் அவர்கள் இருவரும் இருந்தனர். சண்முகலிங்கம் என் பக்கமாக இறங்கினார். கைகூப்பியபோது அழுவதுப்போல் இருந்தார். அவரால் ஒரு வார்த்தைகூட பேசமுடியவில்லை. மறுபக்கமாக வந்த அவர் மனைவி தலைகுனிந்திருந்தார்

“வாங்க” என்றேன்

அவர்கள் கூடத்திற்குள் வந்து அமர்ந்தனர். பரமசிவம் பாலகிருஷ்ணனைப் பார்க்க “இவர் டாக்டர் பாலகிருஷ்ணன், என் நண்பர்” என்றேன்

டாக்டரைப் பார்த்ததனால் சண்முகலிங்கம் ஆறுதல் அடைந்ததுபோல தோன்றியது

“வீட்டிலே யாரும் இல்லை”என்று நான் சொன்னேன். “ஒரு டீ வேணும்னா…”

“வேண்டாம், இப்பதான் சாப்பிட்டுட்டு வந்தோம்”என்றார் சண்முகலிங்கம்

பரமசிவம் “வர்ர வழியிலேயே ரெண்டுபேருக்குமே கொஞ்சம் மயக்கம் மாதிரி வந்திச்சு”என்றார்

நான் “கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறதானா…” என்றேன்

“அய்யோ வேண்டாம்” என்று சண்முகலிங்கம் சொன்னார். “இப்ப நல்லாத்தான் இருக்கேன்”

“பரமசிவம் சொல்லியிருப்பார், அப்பா…”

“ஆமா” என்றார்

“அவரு இப்ப வேற ஆளா இருக்காரு” என்னால் முழுமையாகச் சொல்லமுடியவில்லை

“ஆமா” என்றார் சண்முகலிங்கம் “அழகியநம்பியாபிள்ளையா அவரோட மனசு இருக்குன்னு பரமசிவம் சொன்னாரு” அவர் முகம் இழுபட்டு உதடுகள் கோணலாயின. “சாமி சுத்தமானவரு. மனசாலேகூட அந்த பாவியா தன்னை நினைச்சுக்கக் கூடாது. முதல்ல வரணுமான்னுதான் நினைச்சேன். பிறகு தோணிச்சு எனக்கும் என் வம்சத்துக்கும் மன்னிப்பு கேட்டுகிடுறது இருக்கட்டும். முதல்ல அந்த பஞ்சமாபாவியோட நெனைப்பிலே இருந்து சாமிய வெளியே கொண்டுவரணும்னுட்டு…அது எங்க கடமை. நான் செஞ்சாகணும்… நான் சொன்னா அவருக்கு அது புரியும்”

“ஜாக்ரதையாகச் சொல்லணும்”என்றார் பாலகிருஷ்ணன் “அவருக்கு வயசு நூறை நெருங்கிட்டிருக்கு. பெரிய இமோஷனல் டிராமாவையெல்லாம் தாங்கிக்கிட மாட்டார்”

“எங்களாலே முடிஞ்சவரைக்கும்” என்றார். “அவரு காலிலே அப்டியே விழுந்துடணும்… அதுக்குத்தான் வந்தோம். பிறகு செந்திலாண்டவனோட விருப்பம்”

நான் எழுந்துகொண்டு “வாங்க” என்றேன்.

அவர் நடுங்கத் தொடங்கினார். கைகளை மார்பின்மேல் கோத்துக்கொண்டார்

“வாங்க” என்றேன்

“டாக்டரும் வரட்டுமே”

“அவரும் வருவார்”

“பரமசிவம் வாரும்வே”

“வாரேன்யா”

“ஏட்டி…”

“வாரேன்”என்றாள் அந்த அம்மாள்

அவர் மிகமிக மெல்ல நகர்ந்தார். அவ்வப்போது நின்றார். மூச்சுவாங்கினார். “முருகா! செந்திலாண்டவா!”என்று முனகிக்கொண்டார்

அறைக்குள் அப்பா வெள்ளை ஆடை அணிந்து கட்டிலில் அமர்ந்திருந்தார். அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. உள்ளங்கைகளை தொடைக்கு அடியில் வைத்து அழுத்தி பிடித்திருந்தார். முழங்கைகள் அசைந்தன.எங்களைப் பார்த்ததும் மலர்ந்து சிரித்தார். என்னை பார்த்து “ஏண்டா, ரூம்புக்குள்ளே குருவி வந்துண்டே இருக்கே. சன்னலை மூடுடான்னா கேக்கமாட்டேங்குறான்” என்றார்

“அப்பா இவாள்லாம் உங்களைப் பாக்க வந்திருக்கா”

அப்பா முகம் மலர்ந்து “வாங்கோ” என்றார். “என்ன விஷயம்? கோயில் விஷயமானா நீங்க எல்லாத்தையும் முதல்லே ராமுகிட்டே பேசிடுங்கோ… ரசீது போடாம இப்பல்லாம் ஒண்ணுமே செய்யக்கூடாது”

“அப்பா, இவா கேஸ் விஷயமா பேசவந்திருக்கா. பழைய தெஃப்ட் கேஸு”

அப்பா புன்னகையுடன் தலையை ஆட்டி, “ஆமா, அது அந்தக்காலத்திலே பிரமாதமான கேஸ்… பத்திரிகையிலே ஏகப்பட்ட நியூஸ் போட்டுண்டிருந்தா. இப்பல்லாம் மறந்துட்டா. இங்க நீலமாணிக்கபுரம் கோயிலிலே நடந்த பெரிய திருட்டு…”

“அப்பா இவா திருவடியா பிள்ளையோட மகன்”

“ஆரு?”என்று அப்பா கண்களைச் சுருக்கியபடிக் கேட்டார்

சண்முகலிங்கம் சட்டென்று பாய்ந்து அப்பாவின் காலடியில் குப்புற விழுந்தார். அப்பாவின் கால்களை பிடித்து தன் தலைமேல் வைத்துக்கொண்டார். “சாமி, எங்களை மன்னிக்கணும். சாமி என்னையும் என் குடும்பத்தையும் மன்னிச்சு ஆசீர்வாதம் பண்ணணும். கோயில்சொத்தை திருடி உங்களை ஜெயிலுக்கு அனுப்பின மாபாவி அழகியநம்பியா பிள்ளைக்க மகன் நான். எங்க குடும்பமே நாசமாப்போச்சு சாமி… சில்லுச்சில்லா அழிஞ்சே போச்சு சாமி… சாமி ஆசீர்வாதம் பண்ணணும்…என் பிள்ளைங்களுக்கு ஒரு தோஷமும் வந்திரப்பிடாது”

அந்தக்குரல் என் நெஞ்சை அழுத்திப்பிசைவதுபோல் ஒலிக்க நான் திரும்பிக்கொண்டேன். கன்னங்களில் கண்ணீரை உணர்ந்து துடைத்துக்கொண்டேன்.

அந்த அம்மாள் அப்படியே தரையில் அமர்ந்தாள். பக்கவாட்டில் அப்படியே சரிந்து விழுந்து முகத்தை தரையில் பதித்துக்கொண்டாள். அவள் உடல் வலிப்பு போல அதிர்ந்து கொண்டிருந்தது

அப்பாவின் முகம் சாதாரணமாகவே இருந்தது. தொடைக்கு அடியில் இருந்து நடுங்கும் கையை எடுத்து சண்முகலிங்கம் தலைமேல் வைத்தார். “சரி விடுடா…ரெண்டுபேருமே சின்னப்பசங்க. நமக்கு எல்லாருமே ஒண்ணுதான்” என்றார்

“சாமி ஆசீர்வாதம் பண்ணுங்க சாமீ” என்றார் சண்முகலிங்கம் பிச்சை எடுப்பவர் போல கையேந்தி “ஆசீர்வாதம் குடுங்க சாமி!” என்றார்

“புள்ளைகுட்டியோட அமோகமா இருடா… பதினெட்டு தலைமுறைக்கு சிரேயஸும் பிரேயஸும் அமையும்… சந்தோசமா போ” என்றார் அப்பா “பொம்புளையாளுகளுக்கு ஒரு கொறையும் இல்லாம பாத்துக்கோ”

அவர் விம்மி அழுதபடி தரையில் படுத்துவிட்டார். நான் கைகூப்பி அழுதுகொண்டிருந்த பரமசிவத்திடம் “கூட்டிட்டுப்போங்க” என்று மெல்ல சொன்னேன். ஜானிடம் அப்பாவை படுக்க வைக்கும்படி கண்காட்டினேன்

டாக்டரும் கண்ணீருடன் அழுது கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் கூடத்திற்கு வந்தோம். பரமசிவம் அவர்கள் இருவரையும் கூட்டி சென்று வெளியே திண்ணையில் அமரவைத்தார். இருவரும் அப்போதும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அழுகையின் இயல்பு மாறியிருந்தது

பரமசிவம் என்னிடம் வந்து “கெளம்புறோம் சார். இனிமே ஏதாவது பேசினா நிறைவா இருக்காது. பெரியவர் ரொம்பப் பெரிய ஆசீர்வாதத்தைக் குடுத்துட்டார்… இதுக்குமேலே ஒரு வார்த்தை என்ன?”என்றார்

“சரி, பாப்போம்”என்று எழுந்து கைகூப்பினேன்

“வாறேன் டாக்டர்” என்று சொல்லி கைகூப்பி பரமசிவம் வெளியே சென்றார்

மீண்டும் அமர்ந்துகொண்டோம். நான் எல்லா ஆற்றலும் அகன்றுவிட்டதுபோல் உணர்ந்தேன். கைகால்கள் தளர்ந்தன. இமைகள் சரிந்தன. பெருமூச்சுடன் மேலும் மேலும் ஓய்ந்தபடியே சென்றேன்

பாலகிருஷ்ணன் என்னிடம் தயங்கியகுரலில் “இல்லை, ஒரு சின்ன டவுட்”என்றார்

“என்ன?”என்றேன்

“இப்ப உங்க அப்பா வாயிலே வந்து பேசினது யாரு?”

நான் திடுக்கிட்டு எழுந்துவிட்டேன். டாக்டரை வெறித்து பார்த்தேன். மெல்ல நடந்து அப்பாவின் அறைக்குள் போய் பார்த்தேன். அப்பாவை ஜான் கட்டிலில் படுக்கவைத்து போர்த்தி விட்டான். அவர் மார்பின்மேல் கையை கோத்து வைத்து வாய் திறந்திருக்க தூங்கிக்கொண்டிருந்தார்.

===============

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–54

$
0
0

பகுதி நான்கு : அலைமீள்கை – 37

தந்தையே, நீங்கள் என்னை காத்தருள வேண்டும் என்று கோர எனக்கென்ன உரிமை என்று இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன். பழி சூழ்ந்தவன். இன்னும் அந்தக் கீழ்மைகளிலிருந்து உளம் விலகாதவன். எனினும் எளியோன், இறையருளால் மட்டுமேதான் காக்கப்படவேண்டும் என்று எண்ணுபவன். என்னைப்போல் ஒருவனுக்கு தெய்வங்கள் இறங்கிவந்தாக வேண்டும். கடையனுக்கும் கடையனுக்குக் கூட கையேந்தி பெறமுடியும் என்ற இடத்திலேயே தெய்வங்கள் இருக்கவேண்டும். பழி சூழ்ந்தவனுக்கு இறங்கி வருகையிலேயே தெய்வங்கள் தம் பெருமையை மண்ணில் நிலைநாட்டிக்கொள்கின்றன.

தாங்கள் எனக்கு கனிவதற்கான அனைத்து வழிகளும் அடைத்திருப்பதாகவே இருக்கட்டும். எனினும் ஒன்றின் பொருட்டு தங்கள் கை நீண்டுவந்து என்னை தொடலாம். நான் இங்கு வந்திருப்பது என் உயிருக்காக அல்ல, என் மைந்தர் உயிருக்காக. என் வாழ்வில் நான் எனக்கன்றி எவருக்காகவேனும் இவ்வுலகையே விழைவு கொண்டேனெனில், என்னை துளிகூட எண்ணாமல் எதன்பொருட்டேனும் போராடுவேன் எனில், எவருக்காவது என்னை முற்றளிப்பேன் எனில் அது என் மைந்தருக்காக மட்டுமே.

மிக மிகத் தொன்மையான உணர்வு அது. மானுடர் வளர்த்துக்கொண்டதல்ல, தெய்வங்கள் மானுடரில் பொறித்து மண்ணுக்கு அனுப்பியது, அனைத்து உயிரிலும் திகழ்வது, அதன் பொருட்டு எனக்கு அதை நீங்கள் அருளலாம். எனக்கு வாழ்க்கையை அளிக்கலாம். தந்தையே, தாங்கள் எண்ணினால் என்னை காப்பாற்ற முடியும், என் மைந்தரையும் மனைவியையும் விடும்படி ஒரு ஆணை பிறப்பியுங்கள். தங்களுடையதென்று ஒரு சொல் எனக்கு அளிக்கப்படட்டும். இங்கிருந்து கிளம்பிச்சென்று என் உடன்பிறந்தார் முன் பணிகிறேன்.

என் குருதியினர் விடுதலை செய்யப்படட்டும். அதற்கு மாற்றாக என் தலையை அளிக்கிறேன். என் மைந்தர் எங்கேனும் சென்று வாழட்டும். யாதவ நிலத்திற்கு அவர்கள் செல்லமாட்டார்கள். ஒருபோதும் என் நினைவை அவர்கள் பேணமாட்டார்கள். யாதவர் என்ற அடையாளத்தையே அவர்கள் சூடிக்கொள்ளமாட்டார்கள். அச்சொல்லுறுதியை அவர்களுக்கும் தங்களுக்கும் நான் அளிக்கிறேன். என் பொருட்டு கனியுங்கள். தந்தையே, யாதவ குலத்தின் அழிவு என்னிலூடாக நிகழ்ந்தது உண்மை, ஆனால் நான் ஒரு கருவி என்று தாங்கள் அறிவீர்கள்.

தன்னை ஒரு கருவி எனக் கருதி விழைவை நாடி படைக்கலம் ஏந்திச்செல்வதல்லவா ஒரு ஷத்ரியன் கொள்ளவேண்டிய நெறி? தாங்கள் எழுதிய ஐந்தாவது வேதம் உரைப்பது அது அல்லவா? நான் குலமழித்தோன் எனில் தங்கள் சொல்கேட்டு வில்லேந்திய தனஞ்சயனும் குலத்தை அழித்தவன் அல்லவா? எவரை கொல்கிறோம்? எவர் கொல்லப்படுகிறார்? கொல்பவன் நான் கொல்லப்படுபவன் நான் என்று தங்களில் எழுந்த விண்பேருருவன் உரைத்தான் அல்லவா? உற்றார் உறவினர் என்று பார்க்கவேண்டாம், புவியில் ஒருவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமை எதுவோ அதை செய்க என்று சொன்னவர் நீங்கள் அல்லவா?

தந்தையே, உங்கள் ஒவ்வொரு சொல்லையும் இங்கு வரும்போது எண்ணிக்கொண்டிருந்தேன். அதன்பொருட்டே நான் நின்றேன் என்று உணர்ந்தேன். ஏனெனில் நான் ஷத்ரியன் என்று தன்னை அறிந்தவன். ஷத்ரியன் மண் விழைவதும் வெற்றியை நாடுவதும் புகழ் தேடுவதும் இயல்புதானே? இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமைய வேண்டும் என்ற உங்கள் சொல் அழிவற்றது அல்லவா?

தந்தையே, பறவைச் சிறகெரித்து, புழுக்குலம் அழித்து, மரங்களில் நா சுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை உங்கள் நூல் அல்லவா உரைத்தது. அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர். இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம். நிலமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப் படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன என்னும் உங்கள் சொற்களையே நான் என் வழிகாட்டி என கொள்கிறேன்.

தந்தையே, இன்று என் குடிக்காக நான் வந்து இரந்து நிற்பதுகூட ஷத்ரிய அறத்தின்படிதானே? தந்தையே, நான் கோழை அல்ல. நானும் நின்றிருந்த தேரில் என் உற்றாரைக் கண்டு ஒருகணம் கைதளர்ந்தவன்தான். உங்கள் சொல்லே என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டவர்கள் என்று நீங்கள் உரைத்தீர்கள். அவர்களை நான் கொல்லவில்லை எனில் எவரேனும் கொல்லப்போகிறார்கள் என்றீர்கள். நான் கொன்றவர்களும் உங்களால் முன்னரே கொல்லப்பட்டவர்கள், அன்றி இனிமேல் கொல்லப்படவிருப்பவர்கள். உங்கள் மைந்தர்களே ஆனாலும்.

விண்ணில் நிறைவையும் மண்ணில் புகழையும் நான் அடைவதற்கான வழி என்பது போரிடுவது. ஆகவே போரிடுக என்ற சொல்லை என் செவியருகே தாங்கள் உரைத்த ஐந்தாவது வேதம் கூறிக்கொண்டே இருந்தது. நான் இயற்றியதெல்லாம் அதன்பொருட்டே. அதன்பொருட்டே அழித்தேன். எனில் அவ் அழிவும் தங்கள் சொல்லிலிருந்து எழுந்தது. இனி நாளை ஒரு ஆக்கம் உருவாகுமெனில் அதுவும் உங்கள் சொல்லிலிருந்தே எழட்டும். என்னிலிருந்து இனி ஒரு ஆக்கம் நிகழாதென்று நான் அறிந்திருக்கிறேன். என் மைந்தர் எங்கேனும் சென்று புகழ்கொண்டு வென்று வந்தார்கள் எனில் அது தங்கள் சொல் முளைத்ததென்றே ஆகுக!

தந்தையே, வேதத்தில் வாழ்பவன், ஐந்தாம் வேதத்தை உரைத்த தலைவன், வாழும் வேதத்தின் விழுப்பொருள் நீங்கள். உங்களால் உரைக்கப்பட்ட அவ்வேதத்தை எண்ணி செயல்சூழ்ந்தவனாகிய நான் உங்களை வணங்கி கோருகிறேன், என்னை காத்தருள்க! எனக்கருள்க! அளிகூர்க!

 

பிரதிபானு இளைய யாதவரின் குடிலின் வெளியே மண் மெழுகிய சிறு திண்ணையில் கைகூப்பி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் அச்சொற்களின் ஒரு பகுதியை உரைத்தான் . ஒரு பகுதியை நெஞ்சில் நிகழ்த்தினான். பிறிதொரு பகுதியை எங்கோ கனவில் தொட்டு பெருக்கிக்கொண்டிருந்தான். பிறிதொரு பகுதி மிக ஆழத்தில் சொல் வடிவே அடையாது நின்று தவித்துக்கொண்டிருந்தது. அனைத்துச் சொற்களும் வழிந்து விலக எச்சமிலாது அகம் முற்றும் வழிந்தொழிய அவ்வெறுமையில் திளைத்தபடி அவன் அமைந்திருந்தான்.

அத்தருணத்தில் கொள்வதற்கும் கொடுப்பதற்கும் ஏதுமில்லை என்று தோன்றியது. அத்தருணத்தில் இருத்தலே இன்மை என்று இருந்தது. அங்கு இருந்தது ஒரு பெரும் அடியிலா அகழி. அன்போ கொடையோ அளியோ வந்து பொழிந்தால்கூட அதனூடாக கடுவெளியின் வெறுமை நோக்கியே சென்று சேரும். பின்பு அவன் மீட்டு தன்னை தேற்றிக்கொண்டான். தானென உணர்ந்தான். பெருமூச்சுடன் திரும்பிவந்து தன் உடல் மேல் படிந்து அமர்ந்தான். கண்களிலிருந்து வழிந்து விழிநீர் உலர்ந்து கோடாகியது. நடுங்கிக்கொண்டிருந்த இரு கைகளின் விரல்களையும் கோத்து இறுக்கி அதைத் தூக்கி அதன்மேல் நெற்றியை வைத்து முகம் தழைத்து உடல் குறுக்கி உடல் விதிர்க்க அமர்ந்திருந்தான்.

பின்னர் நெடுமூச்சுடன் நிமிர்ந்து “கூறுங்கள் தந்தையே, ஒரு சொல்லேனும் கூறுங்கள்” என்றான். இளைய யாதவர் அவன் சொற்களை கேட்டவர் போலவோ, அச்சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் போலவோ, அக்குடிலுக்குள் தர்ப்பைப் புல் விரித்த பாயில் கால் மடித்து அமர்ந்து கைகளை மடிமேல் கோத்து வைத்து விழிகள் தழைந்திருக்க ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். “கூறுக தந்தையே, ஒரு சொல்லேனும் கூறுக!” என்று அவன் மீண்டும் கேட்டான்.

“தங்கள் சொல் பெறாது இங்கிருந்து நான் எழப்போவதில்லை, வேண்டுமானால் எழுந்து தங்கள் கைகளால் என்னை கொல்லலாம். என் பிழைகளுக்கு அது பொறுப்பாகும். ஆனால் சொல்லின்றி எனை நீங்கள் இங்கிருந்து அகற்றப்போவதில்லை” என்று அவன் சொன்னான். அவர் அவன் சொற்களால் தொடப்படாதவராக தன்னுள் நிறைந்த புன்னகையின் ஒளியுடன் அசைவின்றி அவ்வாறே அமர்ந்திருந்தார். அவரை நோக்கியபடி அவன் அங்கு அமர்ந்தான். அந்தப் புன்னகை முதலில் அவனை துணுக்குறச் செய்தது.

“இப்புன்னகைக்கு என்ன பொருள்? உங்கள் ஒரு சொல்கூட இப்புவியில் இல்லாமல் அழியவிருக்கிறது. உங்கள் சொல்லை நிலைநிறுத்த வேண்டுமெனில் நீங்கள் உரைத்த சொல்லும் உங்கள் நினைவும் ஒரு அரசமரபால் பேணப்படவேண்டும். உங்கள் கொடிவழியினர் இங்கு வாழவேண்டும். துவாரகை அழிந்தால் என்ன ஆகும்? யாதவ மைந்தர் அனைவருமே போரிட்டு சாவார்கள். உண்மை, ஆனால் அவர்களின் மைந்தராவது எஞ்சவேண்டுமல்லவா?”

“தந்தையே, என் மைந்தர் அவர்களால் கொல்லப்பட்டால் அது ஒரு தொடக்கம். அது ஒரு தடையின்மையை உருவாக்கும். ஒவ்வொருவரும் மாறிமாறி துணைவியரையும் குழந்தைகளையும் கொல்லத் தொடங்குவார்கள். என் மைந்தரை காப்பாற்றவேண்டுமென்று இங்கு சொல்ல வரவில்லை. அனைத்து மைந்தர்களும் அவர்களால் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்.”

“முற்றழியும், தந்தையே. யாதவ குலத்தின் குருதி ஒரு துளிகூட இல்லாமல் இப்புவியிலிருந்து மறையும். உங்கள் சொற்களை ஒருபோதும் ஷத்ரியர் நினைவுகூரமாட்டார்கள். அசுரர் நிலைநிறுத்தப் போவதில்லை. அதை தங்கள் குலப்பெருமையென்றும் கொடிவழியின் செல்வமென்றும் கொண்டுசெல்ல வேண்டியவர்கள் யாதவர்கள். அவர்கள் எஞ்சவேண்டும். அதன்பொருட்டு நீங்கள் எழவேண்டும்.”

“தந்தையே, உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் செய்ததெல்லாம் அச்சொற்களை திரட்டி எடுப்பதற்காகவே. அச்சொற்களை நிலைநிறுத்தும்பொருட்டே அப்பெரும்போரை ஒருக்கினீர்கள். அச்சொற்களை குருக்ஷேத்ரப் பெருநிலத்தில் விரிந்த குருதிமேல் நிலைநாட்டினீர்கள். அச்சொற்கள் எஞ்சாது அழிந்தால் என்ன பயன்? உங்கள் வாழ்வுக்கு அதன்பின் என்ன பொருள்? உங்கள் சொல்லுக்கு என்ன மதிப்பு? அதை நம்பி அக்குருக்ஷேத்ரத்தில் உயிர்கொடுத்த பல்லாயிரம் பல லட்சம் எளியோருக்கு நீங்கள் உரைக்கும் மறுமொழி என்ன?” என்றான் பிரதிபானு. நெஞ்சில் அறைந்து பெருங்குரலில் “எண்ணுக, தந்தையே! அதன்பொருட்டேனும் எழுக! ஒரு சொல் எனக்கு உரையுங்கள்” என்றான்.

“தந்தையே, சொல் அனைத்திற்கும் அடியில் இருக்க வேண்டியது அளி. உங்கள் மெய்வேதமோ ஏழு முறை கூர் தீட்டிய வாள் போன்றது என்கிறார்கள். அது பேரறத்தின் கையில் அமைந்திருக்கையில் அல்லவா அதற்கு தெய்வத் தகுதி வருகிறது? பேரறம் என்பது நெறிகளால் ஆனது. மாறாத முறைகளால் ஆனது. அனைத்து நெறிகளும் முறைகளும் அமைந்திருக்க வேண்டியது பேரளி என்னும் பீடத்தின்மேல். தந்தையே, இனி எஞ்சுவது அளி மட்டுமே. இங்கு உங்கள் குருதிமைந்தன் வந்து உயிருக்கு இரக்கையில் அவ்வளியை எதன்பொருட்டேனும் நீங்கள் ஒழிந்தீர்கள் எனில் உங்கள் சொல்லுக்கு அடியில் தெய்வமென அமர்ந்திருக்க வேண்டிய ஒன்றை மறுக்கிறீர்கள். உங்கள் சொல் அதன்பின் வாழ்ந்தாலும் அதனால் எப்பொருளும் இல்லை என்றாகும்.”

“தந்தையே, உங்கள் சொல்லின் தகுதியை எண்ணுங்கள். அது இவ்வுலகம் அனைத்தையும் அழிக்கும் கூர் கொண்டது. கருக்குழவியை சென்று தொடும் நஞ்சும் கொண்டது. ஆக்க விசை பொருந்தியது போலவே அழிப்பதற்கும் முந்துவதே வேதம் என்பார்கள். அதிலிருந்து ஆக்கும் விசையை எடுத்து அகற்றுகிறீர்கள். அது அளியற்ற அரசர்கள் தங்கள் ஆட்சிநெறியின் பொருட்டு தன் மைந்தர் கழுத்தறுக்கவும் உற்றார் குருதிபெருக்கவும் உதவும் சொல்நிரையென்று ஆகும். தருக்கி எழும் குடித்தலைவர்களின் கையில் படைக்கலமென சென்று சேருமெனில் இப்புவியில் உங்கள் சொல் எவ்வாறாக பொருள்படும் இனி?”

“ஆயிரம் குருக்ஷேத்ரங்களை இந்த மண்ணில் நிகழ்த்துமல்லவா? பல்லாயிரம் தலைமுறைகளை கொன்றழிக்கும் அல்லவா? விண்ணிலிருந்து விழுந்த தெய்வத்தின் தீச்சொல்லென அது கருதப்படும் அல்லவா? குருதியிலிருந்து குருதிக்குப் பரவி கொன்றழித்துக்கொண்டே இருக்கும் கொடுநோய் என்று அதை மானுடம் கருதும் அல்லவா? இவ்வொரு துளி இரக்கத்தால் நீங்கள் உயிர்க்குலங்களை காக்க முடியும்.”

பிரதிபானு அவரை கூர்ந்து நோக்கினான். பின்னர் சீற்றத்துடன் “நீங்கள் கொண்ட இந்த அமைதி தவமென கருதப்படாது. இந்த அமைதி தன்னிறைவென எண்ணப்படாது. இது தோல்வி என்றே நிறுவப்படும். வஞ்சமென்றே கணிக்கப்படும். கனிந்து இறங்கவேண்டிய இடத்தில் கொள்ளும் விலக்கத்தைப்போல இரக்கமற்றது ஒன்றில்லை. தந்தையே, இத்தருணத்தில் இரங்காவிடில் இப்புவியில் ஒரு தருணத்திலும் நீங்கள் இரங்கப்போவதில்லை. தலைமுறை தலைமுறையென எழுந்து வந்து உங்களை நோக்கி கைநீட்டி அருளை இரக்கும் அடியவர்கள் எவர் கையிலும் ஒரு துளி நீரையோ அமுதையோ நீங்கள் அளிக்கப்போவதில்லை.”

“என்னை நீங்கள் கைவிடவில்லை. என் வடிவில் இங்கு வந்து நின்றிருக்கும் மானுட குலத்தையே கைவிடுகிறீர்கள். நான் பழி சூழ்ந்தவன் என்பதை மறக்கவில்லை. ஆனால் இன்றல்ல, என்றும் உங்களை எண்ணி கையெட்டும் எவரும் பழி சூழ்ந்தவர்களே. பழி சூடாத எவர் புவியில் தெய்வத்தை நினைக்கப் போகிறார்கள்? தன் பழியால், தன்னையே செலுத்திக்கொண்டு திரும்பி வர முடியாத திசைகளுக்குச் சென்ற பின்னர் தான் உணரும் வெறுமையால், அச்சத்தால் தெய்வத்தை எண்ணுகிறார்கள் மானுடர். பழியின் பொருட்டு தெய்வங்கள் மனிதர்களுக்கு இரக்கம் காட்டாமல் இருந்தால் இப்புவியில் ஒருதுளி அருள்கூட விழாமல் போகும்.”

“இங்குள மானுடர் அனைவருமே பழி சூழ்ந்தவர்கள் என்பதும், தவிர்க்க முடியாமல் அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதும்தான் இங்கு தெய்வங்கள் கனியவேண்டும் என்பதற்கான தேவை. அவர்கள் இல்லையேல் வாழ்வு நிகழாது என்பதற்கான சான்று அவர்கள் எழுவதே.”

“அளி கொள்க, தந்தையே! அடியவன் பேரில் அளி கொள்க! விண்ணில் மிதந்திருக்கும் தேவரும் தெய்வங்களும் கோடி கோடி என்கிறார்கள். மண்ணில் உயிர்க்குலங்கள் அவற்றுடன் ஒப்பிடுகையில் துளியிலும் துளி என்கிறார்கள். பொருளற்ற திறனற்ற துளிகள். துளியிலொரு துளியாகி நின்றிருக்கும் என் மீது பேருருக்கொண்ட தெய்வமாகிய தாங்கள் எவ்வஞ்சத்தையும் கொள்ள இயலாது. அளிகொண்டே ஆகவேண்டும்.”

“ஆம், ஒருவேளை நீங்கள் உணரலாம். உங்கள் சொல் அழியாச் சொல்லென்பதனால், ஆழ்ந்துசெல்லும் கவிதை என்பதனால் நிலைகொள்ளட்டும் என்று. அரசோ குடியோ அதை முன்வைக்கலாகாது என்று. அது ஓர் இனத்தின், குடியின் சொல் என திகழலாகாது என்று. எனில் நான் அச்சொற்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறேன். இனி உங்கள் பெயரையே சொல்லமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்” என்று பிரதிபானு கைகூப்பி கதறி அழுதான். “ஒருசொல் உரையுங்கள், தந்தையே. ஒற்றைச் சொல் மட்டும் உரையுங்கள்.”

அவர் அங்கிலாததுபோல் இருந்தார். அவன் அம்முகத்தை பார்த்தான். அது அவனுடைய ஒவ்வொரு சொல்லாலும் பல்லாயிரம் காதம் தள்ளி கொண்டுசெல்லப்பட்டு எங்கோ எங்கோ எங்கோ என சென்றுகொண்டிருந்தது. இங்கிருந்து ஒரு சொல்லும் ஒரு உணர்வும் அங்கு சென்று சேரமுடியாதென்று தோன்றியது. அவன் திகைப்புடன், தனிமையுடன், மேலும் தனிமையுடன், மேலும் மேலும் பெருகும் தனிமையுடன் அதை பார்த்துக்கொண்டிருந்தான். அவனை துளியாக்கி, அணுவாக்கி, இன்மையென்றாக்கி நிறுத்திய தனிமையுடன் அங்கிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவனுள் ஏதோ ஒன்று அறுந்தது. அவன் அனைத்தில் இருந்தும் வெளியேறினான். எழுந்து தன் மூட்டையை தூக்கிக்கொண்டு திரும்பி நடந்து அச்சிற்றூரிலிருந்து வெளியே சென்றான்.

 

தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் அச்சிற்றூரிலிருந்து பிரதிபானு சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே மண்மடிந்து மலைச்சரிவு என்றாகி இறங்கி வந்து வளைந்தெழுந்து மேலே செல்லும் கணவாயினூடாக வெளியேறினான். தண்டகாரண்யத்தின் நடுவே நீண்டு அலைகொண்டு மலைகளில் ஏறி இறங்கிச் சென்ற செம்மண் பாதையில் நடந்து கொண்டிருந்தபோது நேர் எதிரில் ஒருவனை பார்த்தான். அக்கணமே அவனுக்கு தெரிந்துவிட்டது. அசைவிலாது நின்றான்.

அவனுக்குப் பின்னால் படைவீரர்கள் திரள்வதை அவன் கண்டான். முன்னும் பின்னும் படைவீரர்கள் அவனை நெருங்கியவுடன் அவன் தன் கையிலிருந்த பொதியை கீழே போட்டான். மூச்சை இழுத்துவிட்டு அசைவிலாது நின்றான். அவர்கள் அணுகிவந்து சூழ்ந்து நின்றனர். அந்தக் காவல்வீரனை அவன் நன்கு அறிந்திருந்தான். அவனுடைய அணுக்கனாக நெடுங்காலம் திகழ்ந்தவன். அவன் பெயர் சிவகன். அவனை ஒரு வேட்டையின்போது கண்டடைந்தான். அவனுடைய அம்புபட்டு முயல் துள்ளி விழுந்தபோது புரவியில் அணுகிச்சென்று அவன் தோளைத் தொட்டு “என்னுடன் இரு” என்றான். இந்தத் தருணத்திற்காகத்தானா?

சிவகன் “தங்கள் தலைகொய்து வரும்படி ஆணை, யாதவரே. தலைவணங்கி மண்ணில் அமர்க!” என்றான். “என் தலை வணங்காது” என்று பிரதிபானு சொன்னான். “தலைவணங்கினால் தங்களுக்கு இடுகாடு ஒன்று அமையும். இல்லையெனில் ஏழு துண்டுகளாக இக்காட்டில் வீசப்படுவீர்கள். தாங்கள் கொல்லப்பட்ட இடம் எவருக்கும் உரைக்கப்படாது. கொல்லப்பட்ட மண்ணின் புழுதிகூட மறக்கப்படும். நீர்க்கடன் இயற்றப்படாது நீடிருளில் வாழ்வீர்கள்” என்றான் சிவகன்.

பிரதிபானு கண்ணீருடன் கைகூப்பி “ஒன்று கூறுகிறேன்… நான் ஒன்று கேட்கிறேன். அதை உரைத்தால் நான் என் தலைதாழ்த்துவேன்” என்றான். “கூறுக!” என்று சிவகன் சொன்னான். “என் மைந்தர் என்ன ஆனார்கள்? என் துணைவி சிறையில் இருக்கிறாளா?” என்றான் பிரதிபானு. சிவகன் “யாதவரே, நாங்கள் அங்கிருந்து கிளம்பிய அன்றே உங்கள் மைந்தர் அனைவரும் துவாரகையின் தோரணவாயிலுக்கு வெளியே அமைந்த பாடிவீட்டின் முன் முதுகுத்தோல் உரிக்கப்பட்டு எரிவெயிலில் கழுவில் ஏற்றப்பட்டார்கள். உங்கள் துணைவி உயிருடன் நெய்யூற்றி கொளுத்தப்பட்டார். உங்கள் குருதிவழியின் ஒரு துளியும் எஞ்சவில்லை” என்றான்.

பிரதிபானு நடுங்கிக்கொண்டிருந்தான். “மண்டியிடுங்கள், தலைகொடுங்கள். இத்தருணத்தில் இனி நீங்கள் விழையக்கூடுவது ஒன்றே. உங்கள் குருதிவழியில் எவரேனும் எங்கேனும் உங்களை நினைவுகூர்ந்து ஒரு கை நீரள்ளி விடுப்பது. அதனூடாக மூத்தோர் வாழும் விண்ணுலகுக்கு செல்வது” என்றான் சிவகன். “ஆம்!” என்று உரைத்து அவன் நடுங்கும் கால்களை வளைத்து மண்டியிடப்போனான். அக்கணத்தில் தோன்றிய ஓர் உணர்வால் பொருளில்லாது அலறியபடி பக்கவாட்டில் பாய்ந்து மணற்புழுதிச் சரிவில் இறங்கி ஓடினான்.

அவன் சென்ற பாதையில் புழுதி சரிந்து அவனை மேலும் உருட்டி கீழே கீழே என கொண்டுசென்றது. அவர்கள் அவனை துரத்தி வரவில்லை. அங்கிருந்தே நோக்கி நின்றார்கள். அவர்களில் ஒருவன் தன் நீண்ட வில்லை எடுத்து அம்பு பொருத்தி செவி வரை இழுத்து அவனை நோக்கி எய்தான். அவன் முதுகில் பாய்ந்த அம்பு அவன் நெஞ்சைத் துளைத்து முன்னால் வந்தது. ஒருகணம் மூச்சு திடுக்கிட்டு வலக்கையும் வலது காலும் இழுத்துக்கொண்டது. புழுதி முகத்தில் அறைய பிரதிபானு மண்ணில் விழுந்தான். இரண்டாவது அம்பு வந்து அவன் விலாவில் தைத்து நின்றது. மூன்றாவது அம்பு அவனை புரட்டியது. நான்காவது அம்பு அவன் நெஞ்சில் தைத்தது. ஐந்தாவது அம்பு வயிற்றில் தைத்தது. பிறிதொரு அம்பு அவனை புரட்டி அதற்கப்பால் இருந்த சிறு பள்ளத்திலிட்டது. இறுதித் துடிப்பும் ஓய்ந்து கை தளர்ந்து விண்ணோக்கி விழித்த விழிகளுடன் பிரதிபானு அங்கே கிடந்தான்.

அவர்களில் இருவர் கீழிறங்கி வந்தனர். அவர்களில் ஒருவன் வாளால் அவன் கைகளையும் கால்களையும் வெட்டி வெவ்வேறு திசைகளுக்கு வீசினான். அவன் நெஞ்சைப் பிளந்து குலையை வெட்டி அப்பால் வீசினான். அவன் தலையை வெட்டி தூக்கி மலைச்சரிவில் வீசினான். அவர்கள் மேலே செல்லத் தொடங்கும்போதே கீழே ஓநாய்களின் ஊளை ஒலிக்கத் தொடங்கியது.

தொடர்புடைய பதிவுகள்

நற்றுணை, காக்காய்ப்பொன் –கடிதங்கள்

$
0
0

நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஆசிரியருக்கு,

“இறைவன்” — நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிமையில் விம்மச் செய்த கதை. மாணிக்கம் ஆசாரி சாக்குப்பையுடன் நுழைந்த போதே உள்ளுக்குள் ஏதோ விழித்துக் கொண்டது…

ஒருவேளை இசக்கியம்மையை நடிக்கத் தொடங்கியிருந்தேன் எனலாம். தெற்குப்புரையின் திறந்த  பாதிக்கதவு வழி சிவந்த தூணாகிறது…மெல்லிய படிமமென தேவி எழுந்து விடுகிறாள் அங்கேயே…!!

இசக்கியம்மை இழந்த வாழ்வு, அவளிழந்த பகவதி, அதனாலொரு குற்றவுணர்வு ஆழ்மனதில் நிறைக்க ஆசாரியைச் சுற்றி சுற்றி வருகிறாள்…!!  அறைக்குள் யாரோ இருக்கும் உணர்வினை அடைவது அவள்மட்டுமல்ல….!!

வாயே திறக்காத கெத்தேல் சாகிப்பின் நினைவெழுகிறது…மாணிக்கத்தை எண்ணுகையில்….அன்னமும் ஒருவகை படைப்புதானே …படைப்புக்கிறைவர்கள் எழுந்தவண்ணமிருக்கின்றனர் தங்களில்…!! பிறந்த தொன்னூறு நாட்களில் என் கைகளில் மரித்துப்போன “சாத்விகா” எழுவதை மனதிற்குள் புனைந்து கொண்டே இருக்கிறேன்…!!

அன்புடன்,

இ . பிரதீப் ராஜ்குமார்

***

அன்புள்ள ஜெ

நற்றுணை கதையை இரண்டு நாளாக தொடர்ந்து வாசித்தேன். அதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாதநிலை. மீண்டும் மீண்டும் வாசித்தேன். அது தன்னை ஒரு கட்டுரை என மாயம் காட்டுகிறது. கட்டுரைக்குரிய சரியான தரவுகள் கொண்ட ஒரு நிலம் வழியாகச் செல்லும்போது சட்டென்று மிகப்பெரிய ஒரு எழுச்சியை யக்ஷி வழியாக அளிக்கிறது

அந்தப் பாட்டி சொல்கிறாள். உன் வழியிலே அரசரும் கோட்டையும் இருந்தால் அதை உடைத்துக்கொண்டு போ. உன் வழியில் தெய்வமும் கோயிலும் இருந்தால் அதையும் உடைத்துக்கொண்டு மேலே போ என்று. அந்த வரியில் எழுந்த ஆவேசம்தான் யக்ஷியாக வந்து நின்றிருக்கிறது. அதுதான் வழிநடத்திச் செல்கிறது

நூற்றுக்கணக்கான சின்னச்சின்ன செய்திகளை கோத்து கதையை அமைத்துக்கொண்டேன். அம்மிணி தங்கச்சி சைக்கிள் விடுவது ஒரு சுதந்திரப்பிரகடனம். யக்ஷியும் அவளுடன் சைக்கிளில் செல்கிறாள் என்பது ஆச்சரியமான கற்பனை

குமார் முருகேசன்

***

 

காக்காய்ப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

வணக்கம். நற்றுணை மிக வலிய கதை.  நாட்டுப்புற‌ங்களில் சிறிது காலம் முன்பு கூட இது போன்ற நம்பிக்கைகள் இருந்தன.  ஆனால் அம்மிணி தங்கச்சி போல திண்மையும், நேர்மையும் இல்லாததினால் அவர்களுக்கு அந்த நம்பிக்கையின் துணை கிடைக்கவில்லை.  ஆனால் மிகுந்த நெருக்கடியான நேரங்களில் அவர்கள் தங்கள் குல தெய்வத்தையோ, விரும்பும் கடவுளரையோ துணைக்கு அழைப்பதையும், அந்த வேகத்தில் சவாலான வேலைகளைக் கூட முடிப்பதையும் கண்டிருக்கிறோம்.  ஆனால் அம்மிணி அம்மாள் போல சிறு வயதிலேயே தெய்வம் தன் கூடவே இருக்கிறது என்ற நம்பிக்கையும் துணிவும் யாருக்கும் இருந்ததில்லை.  நற்றுணையாவது நமச்சிவாயவே என்றும், நாராயணணே நமக்கே பறை தருவான் என்றும் வாழ்ந்த அருளாளர்கள் போலும், காந்தியடிகள், பரமஹம்சர், பாரதி போலவும் தெய்வம் கூடவே இருக்கிறது என்று நம்பிச் செயலாற்றுபவர்கள் சிலரே.

இத்தனை தடைகளையும் எதிர்த்து, துணிவுடன் போராட, தன்னுடன் ஒரு தெய்வம் இருக்கிறது என்ற நம்பிக்கை அம்மணி அம்மாளிடம் இருந்திருக்கிறது.  நல்லவற்றிற்காகப் போராடுபவர்கள் இத்தகைய ஒரு நம்பிக்கையுடனேயே இருந்திருக்கிறார்கள். நன்றி ஜெ.

நாரா.சிதம்பரம்

***

இனிய ஜெயம்

பொதுவாக சிறுகதைகளில் மையமான கதாபாத்திரம் எதுவோ அதன் உணர்வுநிலை ஆத்மீகமான ஒரு பெரிய உணர்வு நிலையுடன் உரையாடும்போதுதான் இயல்பிலேயே அக் கதையின் உட்பரிமாணங்களுக்கு  முடிவற்ற ஆழமும் அக் கதையின் இருப்புக்கு காலம் வெளி கடந்த ஒரு சாராம்சமும் கூடுகிறது.

அமியின் பிரயாணம் கதை மானுடத்தை இயக்குவது உயிர் இச்சை மற்றும் வலிமையுள்ளதை மட்டுமே எஞ்ச வைக்கும் வன ஆற்றல் என்னும் பார்வை ஆத்மீக பின்புலம் ஒன்றுடன் உரையாடும் நிலையை கொண்டே மேற்சொன்ன வகைமைக்குள் வருகிறது.

நாஞ்சிலின் யாம் உண்பேம் கதையில் வரும் பசி வெறும் அடிப்படை ஆற்றலின் வெளிப்பாடு அல்ல. அதில் எழுவது வறுமையிலும் செம்மையை இழக்க வைக்காத மான்பை மானுடத்துக்கு கற்றுக் கொடுத்த நமது பண்பாட்டின் குரல்.

உலகம் யாவையும் கதையை இடம் காலம் கடந்த காலாதீதம் கொள்ள வைக்கும் அம்சம் அக் கதை உரையாடும் ஆத்மீக விரிவே. கு அழகிரிசாமியின் ராஜா வந்திருந்தார் போல குறிப்பிட்ட சில கதைகளை இந்த வகைமைக்கு உதாரணம் சொல்ல முடியும்.

அதே சமயம் இது போன்ற கதைகளுக்கு அதன் வெளிப்பாட்டுக் களம் காரணமாகவே அந்தக் கதைகளின் வாசிப்பு இன்ப நிலைக்கு ஒரு வசதி இருக்கிறது. ஒரு பெரிய மைதானத்தில் சிக்ஸர் அடிப்பது போன்ற நிலை இது.  இதன் மறு முனையான ஒரு ஆத்மீக சாதகன் அவன் ஆத்மீக தத்தளிப்பு என்னவாக இருக்கிறது அதில் அவன் பெற்றதும் இழந்ததும் என்ன என ஒரு கதை பரிசீலிக்கத் துவங்கினால், அக் கதைக்கு வேறு விதமான சவால் துவங்கி வீசுகிறது. அக் கதையின் வாசிப்பு இன்பம் இன்னும்  நுட்பமானது . மிக சரியாக முதல் அடியிலேயே இலக்கை தைக்கும் அம்பை செலுத்தி வெற்றி பெரும் ஆர்ச்சரி விளையாட்டு அது.

இந்த வில் விளையாட்டில் வெற்றி கண்ட கதைகளில் ஒன்று இந்த காக்காய்ப்பொன் கதை.  சதானந்தருக்கு அவருக்கான மீட்பை எப்போதோ அளித்து விட்டது அந்த காகம்.  அவர் கடக்க வேண்டிய இறுதி இருள் அந்த மீட்பு அவர் கண்ணில் விழாமல் தடுக்கிறது. கதைக்குள் நித்யாவின் சொல்லில் இரண்டு குறிப்புகள் வருகிறது. முதல் குறிப்பு பொன் என்பது மின்னும் பிற பொருட்களைப் போன்றதே எனும் குறிப்பு. அந்த உண்மையை அறியவே சதானந்தர் இத்தனை நாள் தனியறையில் கிடக்க நேர்கிறது. இரண்டாவது குறிப்பு அவர் சமாதி ஆனார் எனும் சொல். இயற்க்கை எய்துதல் அல்ல அது. அது மரணம். இது சமாதி, வேறு நிலை.  அந்தக் காகம் சதானந்தருக்கு அளித்தது அந்த ‘விவேகிக்கான’ விவேக சூடாமணியைத்தான்.  முக்கியமான கதை. 

வேறொரு கோணத்தில் முற்றிலும் ஆத்மீகத் தோல்வி அடையும் சாதகர் ஒருவரின் கதையாகவும் இதை வாசிக்க முடியும். உண்மையில் சதானந்தர் பெற்றவரா? இழந்தவரா?

கடலூர் சீனு

***

அன்புநிறை ஜெ,

இன்றைய நாளை இனிதாக்கியவை  இரண்டு பதிவுகள் – மூன்று வருகைகள் பதிவும் காக்காய்ப்பொன் சிறுகதையும். கருவேப்பிலை கொண்டு வரும் அடைக்கலம்குருவியும், சதானந்தருக்கு ஒளிர்வனவற்றை கொண்டு வந்த காகமும் உங்கள் அறையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்திருக்குமோ.

கணந்தோறும் மானுடனை நோக்கிக் கேள்வி எழுப்பும் பறவை – இனி காகத்தை அலட்சியமாகக் கடந்து விட முடியாது. //ஒரு பறவை இந்த நிலம் முழுக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏன் ஏன் என்று கூவிக்கொண்டே இருக்கிறது//

ஒரே ஒரு சரியான வினாவை தவமெனப் பற்றிக் கொள்வதும் அதையே வாழ்நாள் முழுவதும் விரித்தெடுப்பதும் பின்தொடர்வதும்தான் மீட்சிக்கான  வழி. அந்த சரினான முதல் வினாவுக்கே குரு முத்தாய்ப்பாக வணக்கம் சொல்கிறார். அகல் விளக்கின் ஒளி கூட கண்ணைக் கூசும் அளவுக்கு முற்றிருளில் ஒடுங்கி, சதானந்த தீர்த்தர் அந்த மின்னைக் கண்டு கொள்கிறார்.

குருகுலத்தில் இந்த தினங்களில் நிகழ்ந்து முடிந்திருக்கவேண்டிய இலக்கிய முகாம் கூடுகையைப் பற்றி நேற்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று யூகலிப்டஸ் மரங்களின் ஓசையும் குளிர்காற்றுமாக காலை குருகுலத்தில் விடிந்தது. இப்படி ஒரு கதைக்கு மிக்க நன்றி.

மிக்க அன்புடன்,

சுபா

***

தொடர்புடைய பதிவுகள்

இறைவன் ,வனவாசம்- கடிதங்கள்

$
0
0

இறைவன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

இறைவன் கதை அதன் எளிமையாலேயே நினைவில் என்றென்றும் நின்றிருக்கும் என நினைக்கிறேன். தமிழில் அதற்கிணையான இன்னொரு கதையை உடனே சுட்டிக்காட்டமுடியவில்லை.

வரையப்போவதற்கு முன் அவனுடைய இறுக்கம். அந்த வீட்டில் அவன் டீ பற்றி ஒரே கேள்வியால் நெருக்கமாக இயல்பாக ஆவது. வரைய ஆரம்பித்தபின் சன்னதம் வந்து இன்னொருவராக ஆகிவிடுவது. வரைந்த பின் அவனிடம் வந்து மூடும் மூதேவி. ஒவ்வொன்றும் மகத்தான சித்திரமாக உள்ளது

அந்த பாமரக்கிழவியின் பார்வையில் அந்த மகா கலைஞன் வருகிறான். அவனுடைய அருளை அவள்தான் முழுமையாக அனுபவிக்கப்போகிறாள். அவளுக்கு கலை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் தெய்வத்தின் அருளை அடைய தெய்வத்தை நன்றாக அறிந்திருக்கவேண்டுமா என்ன?

 

ஆர். பாலகிருஷ்ணன்

 

வணக்கம் ஜெ

 

இந்த கதைகள் தொடங்கிய முதல் வாசித்தவுடன் அவ்வனுபவத்தை கடிதமாக எழுதி கொண்டிருந்தேன். பின்பு மெதுவாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கதைகளுடனான தொடர்பு எனக்கும் அவற்றுக்குமான ஒரு அங்கதம் போல. அதை வெளியே சொல்ல கூடாது என்பதுபோல. ஆனால் இறைவன் கதை வாசித்தவுடன் இதை எழுத தோன்றியது.

கலையை படைப்பவனுக்கும் அதை ரசிப்பவனுக்கும் ஓர் இடத்தில் அந்த கலையுடன் ஏற்படும் ஒரு பிணைப்பு. இவ்வுலகிற்கு தான் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது என அவன் எழுதவோ வரையவோ செய்கிறான். இருந்தும் ஒரு கணத்தில் அதனுடன் ஒரு தனிப்பட்ட பிணைப்பு உருவாகிறது. அந்த உச்ச நிலை அடைந்த உடன் அந்த கணத்திற்கு பின் அவன் அந்த கதையையோ ஓவியத்தையோ முடித்து விடுகிறான். அது இப்போது அவனிடமிருந்து உலகிற்கு இறங்கி சென்றுவிடுகிறது. அந்த கலை அவனிடமிருந்து மற்றவருக்கும் சென்றவுடன் அதன் உச்சம் மறைந்து அது வேறொன்றாகிவிடுகிறது. ஒரு கணத்தில் பகவதியை அறிந்து வரைந்த பின் அந்த பகவதியை ஆசாரி துச்சமாக எண்ணுகிறான். இசக்கியம்மை பகவதியை தன்னை மீறிய ஒன்றாக அறிந்து பயம் கொண்டிருக்கிறாள் பின் ஒரு கணத்தில் அந்த பகவதி அவளிடம் சாதாரண ஒரு பெண் போல உரையாடுகிறாள். இருவருக்கும் அந்த ஒரு கணம்.

சினிமா பார்ப்பது தியேட்டரில் முன்பின்தெரியாத கூட்டத்தின் மத்தியில் துவங்கி குடும்பத்திற்குள் என டீவிக்குள் வந்து பின்பு நம் கைகளில் மொபைலில் வந்திருக்கிறது. இது நமக்கு மட்டுமே திரையிடப்படுகிறது என்பதில் தொடங்கி நமக்கு மட்டுமேயான திரைப்படம் என ஆகிறது. காலம் காலமாக புத்தகத்திற்கும் வாசகனுக்கும் உள்ள தொடர்பை போல. முன் இருந்ததை விட சினிமா பார்ப்பது இந்த ott மூலம் அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்ககூடும். Exclusively for you என்ற மாயச்சொற்கள் அதற்கு காரணம். அந்த எக்ஸ்க்ளூசிவ்னஸ் நம் ரசனையையும் எக்ஸ்க்ளூசிவ் என தோன்ற செய்கிறது. இது சற்றே செல்ஃபிஷாக அகங்காரமாக தோன்றினாலும் அந்த படத்திற்குள் இறங்கி அந்த கணத்தை அறிவதை எளிதாக்குகிறது. கலை படங்கள் பார்க்கப்படுவதும் பேசப்படுவதும் அதிகரித்திருக்கிறது. அமித் தத்தா போன்ற இயக்குனர்கள் கலை படங்களின் வருங்காலம் இத்தகைய லேப்டாப் அல்லது மொபைலில் பார்க்க படுவதே எனக் கூறியுள்ளனர். தனிமையிலேயே ரசனை கூர்மையடைகிறது.

இக்கதைகளை தொடர்ந்து வரும் கடிதங்கள் அக்கதைகள் சென்றடையும் சாத்தியங்களுக்குச் சான்று. கூட்டு வாசிப்பும் கூட்டு ரசனையும் அக்கதைகளை பிரித்து பிரித்து பல கோணங்களில் காண செய்கிறதென்றாலும் அந்த கதை எனக்குள் ஏற்படுத்திய அந்த உச்ச கணம் என்னுள்ளே இருக்கும். அதை விரித்து விரித்து அந்த கணத்திலேயே வாழ்வது தான் என் தரிசனமாக கொள்கிறேன். அது என்னுள் மட்டுமே ஏற்படுவது. வெளிப்படுத்த இயலாதது. கலைஞனுக்கு ஏற்படும் அதே கணம் ரசிகனுக்கும் உண்டு. அந்த கணத்தை அடைந்து அறிவதற்காகவே அனைத்து கலைகளும் உருவாக்கபடுகின்றன ரசிக்கப்படுகின்றன. அந்த கணம் எது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். இருவர் ஒரே புத்தகத்தை படிப்பதில்லை அல்லது ஒரே படத்தை பார்பதில்லை என்று சொல்வது போல். கலைஞனுக்கும் ரசிகனுக்கும் அக்கணம் தனிப்பட்டதே.

 

ஸ்ரீராம்

 

இந்த கதைகள் தொடங்கிய முதல் வாசித்தவுடன் அவ்வனுபவத்தை கடிதமாக எழுதி கொண்டிருந்தேன். பின்பு மெதுவாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கதைகளுடனான தொடர்பு எனக்கும் அவற்றுக்குமான ஒரு ரகசியம் போல. அதை வெளியே சொல்ல கூடாது என்பதுபோல. ஆனால் இறைவன் கதை வாசித்தவுடன் இதை எழுத தோன்றியது.

வனவாசம் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

வனவாசம் நீண்ட பெருமூச்சுடன் நினைத்துக்கொள்ளவேண்டிய கதை. வனவாசம் என்பது கலைஞன் தன் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவது. கலைஞன் அவனுடைய தெய்வங்களால் கைவிடப்படுவது. கலைஞனின் இருள் அது. அந்த தரத்தில் ஒரு கதை தனியாக வந்திருந்தால் கொண்டாடியிருப்போம். ஆனால் அதேபோன்ற கதைகள் வந்துகொண்டே இருக்கும்போது நாற்பதில் ஒன்றாக ஆகிவிட்டது

இந்த வரிசைக்கதைகள் முடிந்தபின் கலை பற்றி கொஞ்சமேனும் அறிவு உடையவர்கள் இவற்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நல்லது என்று தோன்றுகிறது

 

கதிரேசன் முருகானந்தம்

 

அன்புள்ள ஜெ சார்,

 

வணக்கம். வனவாசம் சிறுகதை கலை கலைக்காகவா மக்களுக்காகவா என்ற இருண்மையில் தள்ளியது.

சுப்பையா பெருமூச்சுடன் தன்னை உணர்ந்தபோது எவருமே கூத்துப் பார்க்கவில்லை. இறுதியில் சுப்பையா பின்னால் ஓடியும் அர்ஜுனன் (சாமியப்பா) சைக்கிளில் விலகிச் செல்கிறார். குமரேசன் விடிகாலையிலேயே கிளம்பிச் சென்றுவிடுகிறார். இரவில் சாயம் பூசியபின் சாமி கும்பிடவும் வருவதில்லை. அல்லி அர்ஜுனன் கூத்து சுப்பையா என்ற மூன்றாமவரையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. எனில் அவர்கள் பூசித்தது கலையைத் தானே. சுப்பையாவும் தன்னளவில் கலையைக் கண்டு கொண்ட ஒரு கலைஞன் தான்.

பிரதி எழுதப்பட்ட பின் ஆசிரியன் இல்லை என்பது போல் கலை நிகழ்த்தப்பட்ட பின் சாயம் கலைந்த லௌகீக வாழ்க்கையில் அங்கே சாமியப்பாவும் குமரேசனும் தான் எஞ்சியவர்கள். கலையில் வாழ்ந்த அர்ஜுனனும் அல்லியும் ஆன்மாவில் நிறைந்தவர்கள்.

சாமியப்பா -குமரேசன் பார்வையில் யாரும் காணாவிட்டாலும் கூத்து சுப்பையாவுக்காகவே நிகழ்ந்தது. சுப்பையா அவர்களின் கலை ஞானத்தையே ரசித்தான். கொடுக்கல் வாங்கல் போல. எனில் கலை கலைக்காகவும் மக்களுக்காகவும் தானே. கமல்ஹாசன் எனும் கலைஞனுக்கு இக்கதையை சமர்ப்பித்தது சாலப் பொருத்தம்.

இந்த நொடியில் பார்த்த நதி அங்கில்லை. கலை நதியில் தெரிந்த அர்ஜுனனும் அல்லியும் அவ்வாறே ஆனவர்கள்.

இறுதியில் சாமியப்பா முகத்தில் ஒரு நொடி தெரியும் அர்ஜுனன், சுப்பையாவினுள் நிகழும் தரிசனமா அல்லது சாமியப்பா எனும் கலைஞன் அளிக்கும் தரிசனமா? விலகிச் செல்வது சாமியப்பாவா அல்லது அர்ஜுனனா? சுப்பையாவிடமிருந்து சாமியப்பா விலகினாலும் ரசிகனிடமிருந்து கலை விலகிச் செல்ல முடியாது என்பதே நிதர்சனம்.

கதையின் மற்றொரு சிறப்பு குமரி மாவட்ட உணவுக் கலை. தேங்காய் குழம்பு, புளிசேரி என தனிப் பட்டியல் போட்டு சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

இக்கதை எங்கள் ஐயனை (தாத்தா) நினைவூட்டியது. அவர் அந்தக் காலக் கூத்துக் கலைஞர். ஆனால் வயதான கருத்த ஒடுங்கிய முகம் கொண்ட ஜிப்பா அணிந்த பாகவதர் முடி கொண்டவராக மங்கலான முகமே என் நினைவில் உள்ளது. அவர் கோமாளி வேடம் அணிபவராம். அதனால் கோமாளி பேரன் என்றே என்னை அழைக்கும் வயதான உறவினர்கள் உண்டு. அப்போது நான் மன உளைச்சல் அடைவேன். ஆனால் அவர் நடித்த கூத்துகளின் நாயக நாயகியர் பற்றி யாரும் அறியார். மக்கள் மனதில் நிலைத்தவர் என் தாத்தா மட்டுமே. என் அப்பா மற்றும் உறவினர்களுக்கு கலை இலக்கியம் எல்லாம் தெரியாது. ஆனால் எனக்குள் வந்த கலை இலக்கிய தாகத்தின் விதை எங்கள் அய்யா தான் என்பதை உணர்கிறேன். அவர் விட்டுச் சென்ற அவரது ஒரே ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் காணும் போதெல்லாம்

ஒரு கலைஞனின் பேரன் எனும் பெருமிதம் ஏற்படுகிறது. மூதாதையை வணங்குகிறேன்.

பேரிலக்கியங்கள் வாழ்வின் தரிசனத்தை தருவது போல் வனவாசம் சிறுகதை அளிக்கும் தரிசனமும் மகத்தானது.

 

 

அன்புடன்

 

க.ரகுநாதன்

 

 

தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்,பதில்கள்

$
0
0

வணக்கம் சார்,

அறம் சிறுகதை தொகுப்பு படித்து முடித்து இன்னமுமே என்னால் மீளவே முடியவில்லை. அதன் கனம் அப்படியே இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா உண்மை மனிதர்களின் கதை என்று அதுதான் இன்னும் கனத்தை தந்தது.

சோற்றுக்கணக்கில் நீங்கள் சம்பவங்களை அப்படியே அடுக்கிக்கொண்டே செல்கிறீர்கள் எனக்கு ஆத்திரம் அடைத்து கொண்டு வந்தது. அப்படியே நீங்கள்  உங்களது குரலில் என் முன்னாலமர்ந்து சொல்லுகிறீர்கள் நான் கேட்டவாறு இருக்கிறேன் என்று எடுத்துக்கொண்டேன். பின்பு ஓலைச்சிலுவை நீங்கள் சொற்களை பிரவாகமாக கொட்டி கொண்டே போனது மாதிரி இருந்தது.உங்களை பின் தொடர்ந்து வரும் வழியெல்லாம் எத்தனை எத்தனை மனிதர்கள், அவர்களுக்கு எத்தனை எத்தனை முகங்கள். இந்த கதை தொகுப்பு பழையது தான் தீவிரமாக வாசிப்பவர்கள் தீரத்தீர படித்து முடித்ததை இப்பொழுது தான் நான் வாசித்தே இருக்கிறேன் என்பதில் சிறுய குற்றவுணர்வும் இருக்கிறது. நன்றி சார், பின்பு ஒரு சிறு கேள்வி அல்லது தெளிவு தெரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் உங்களது பிறந்த நாள் போனது, அதற்கு ஏராள ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தது கூடவே காழ்புகளும். வாழ்த்து கூறவில்லை எனினும் பிரச்சனையில்லை, கூறுவது மாறி ஆரம்பித்து காழ்ப்பை காட்டிகொள்பவர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட பதிவுகள் உங்கள் பார்வையில் பட்டிருக்கும், அதை எவ்வாறு கையாண்டீர்கள். பிறகு சமீபத்தில் பத்து லட்சம் காலடிகள் என்ற கதை எழுதி இருந்தீர்கள் இல்லையா, அதை திரும்ப திரும்ப படித்து மலைத்து போய் இருந்தேன்.

ஆனால் அதற்கும் அத்தனை வசவுகள்,விமர்சனங்கள். இதெல்லாம் எதாவது ஒரு இடத்தில் எழுதுகையில் உங்களை சங்கடம் கொள்ள செய்கிறதா?? அப்படி செய்யுமாயின் அதிலிருந்து எவ்வாறு உங்களை தளர்த்தி கொள்ளுகிறீர்கள்.

நன்றி

செந்தில்.

***

அன்புள்ள செந்தில்

அந்த விமர்சனங்களை வேறுவேலை ஏதும் இல்லை என்றால், வம்புகளில் ஆர்வமிருந்தால், வாசித்துப் பார்க்கலாம். இந்த விமர்சனங்களில் எவையேனும் ஓர் எழுத்தாளன் போகட்டும், இலக்கிய நுண்ணுணர்வுகொண்ட ஓர் அடிப்படை வாசகனால் பொருட்படுத்தும் தகுதி கொண்டவை தானா என்று பாருங்கள்.

மிக எளிய அரசியல்சரிகளுக்கு, கட்சி அரசியலின் நிலைபாடுகள் மற்றும் எளியகாழ்ப்புகளுக்கு, புழக்கத்தில் இருக்கும் சில்லறைக் கோட்பாடுகளுக்கு அப்பால் இவர்களால் எதையாவது சொல்ல முடிகிறதா? ஒரு நல்ல வாசகன் தானே அவதானிக்காத ஒரு சிறு அவதானிப்பையாவது முன்வைக்க முடிகிறதா? மிகமிக மேலோட்டமான இரும்புமட்டை வாசிப்பு. அல்லது சில்லறை தகவல்பிழைகளை கண்டடைவது. தங்களுக்கு தோன்றிய தர்க்கபிழைகளை சுட்டிக்காட்டுவது. அதன்பின் ஒரு அசட்டுக் கெக்கலிப்பு. பழிப்புக் காட்டல்.  

சென்ற நூறாண்டுகளாக தமிழ் இலக்கியச் சூழலில் இலக்கியம் குறித்து பேசப்பட்டிருக்கும் எதனுடனாவது இவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இந்தக் கதைகளில் ஒரு நல்ல வாசகன் கண்டடையும் தளங்களில் இவர்களால் நுழைய முடியுமா? நம் முழங்காலுக்கு கீழே நின்று புழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எத்தனை தன்னம்பிக்கை. எத்தனை தெனாவெட்டாக இலக்கியவாதியை வழிநடத்திச் செல்ல, ஆலோசனை சொல்ல, கடைத்தேற்ற முயல்கிறார்கள். இலக்கியம் கற்ற, நுண்ணுணர்வுள்ள எந்த வாசகனும் என்றும் இந்த தன்னம்பிக்கையை அடையமுடியாது. அபாரமான அறியாமை இருந்தாலொழிய இதை சென்றுசேர்வது கடினம். இவர்களுடன் எவரும் உரையாட முடியாது. அவர்களுக்கு தகுதியான எதிர்வினை என்பது  ‘போடா டேய்’ என்பதுதான். இலக்கியவாதிகள் அனைவருக்கும் நான் சொல்வது அதுவே. இலக்கிய வாசகருக்கும் அதையே சொல்வேன்.

எனக்கல்ல என் முன்னோடி இலக்கியவாதிகளுக்கு இங்கே என்னதான் கிடைத்திருக்கிறது, இதைப்போன்ற கேவலமான வசைகள் அன்றி? சுந்தர ராமசாமிக்கு, க.நா.சுவுக்கு, புதுமைப்பித்தனுக்கு? அவர்களைப்பற்றி எழுதப்பட்டவை இங்கே இன்று கிடைப்பதில்லை, ஆகவே கௌரவமாக இருக்கிறது. இது இலக்கியம் என்னும் நுண்மையான இயக்கத்தை புரிந்துகொள்ளமுடியாதவர்களின் பதற்றம். அவர்கள் அடையும் அச்சம். இது எப்போதும் தமிழில் இப்படித்தான் இருந்திருக்கிறது

இந்தப் பெருச்சாளிகளை இந்த அளவுக்கேனும் மிரள வைக்கவில்லை என்றால் நம் பந்தங்களுக்கு என்ன பொருள்?

ஜெ

***

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுக்கு வரும் கடிதங்கள் சொற்றாடல்களிலும், இலக்கியத்தனத்திலும் நீங்கள் உருவாக்கிய குட்டி எந்திரன்கள் போலவே ஜெமோவை பிரதிபலிப்பதாய் உணர்கிறேன். இதனாலேயே உங்களுக்குக்  கடிதம் எழுதுவதையும் முடிந்தவரை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.

அது இருக்கட்டும். பலிக்கல் படித்துவிட்டு  நண்பனிடம் பேசும்போது, ஆசான் கொன்னுட்டார் தாயோளி என்று வாய் தவறி சொல்லிவிட்டேன். கடைசியில் சங்கரன் போற்றியின் உள்ளே கேறியது  இறைவன்தான் என்றால் கடைசியில் போனால் போகட்டும், இருவரும் சின்னவர்கள் தானே என்று மன்னித்து முதலிலேயே விடாமல் அந்த நிலத்தை வாங்க முயற்சித்தவனுக்கும் அடி விழுவதை விதி என்று தான் சொல்லமுடியும். ஒருவேளை நிலத்துக்கான முழு பணத்தையும் ஜார்ஜ் தாமஸ் கொடுக்க முன்வந்திருப்பாரேயானால் அவர் தப்பிப் பிழைத்திருக்க வழி இருந்திருக்கும். Leaving lot of loose ends ஒரு மகா கலை.  வாசகன் என்ன வேண்டுமானாலும் யூகிக்கட்டும். எது தேவையோ அது அல்ல தர்மம். எது மற்றவர்க்குத் தேவையோ அதே தர்மம். ஓவுசெப்பச்சன் வரவுக்காக காத்திருக்கிறேன்.  வாழ்க வளமுடன்.

நன்றியுடன்,

பாலு.

மதுரை

***

அன்புள்ள பாலு,

நீங்கள் சொல்வது ஓர்அளவு வரை உண்மை. ஆனால் இதை நான் பலமுறை எழுதியிருக்கிறேன். மீண்டும் நீங்கள் எழுதுவதிலிருந்து நீங்கள் என் தளத்தை படிப்பதில்லை என்று தெரிகிறது.

ஒன்று, நீங்கள் முகநூல் உட்பட பொதுப்புழக்கத்தில் இருக்கும் நடையை பாருங்கள். நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தின் நடையை பாருங்கள். எல்லாமே அச்சு அசலாக ஒரே நடை. ஆனால் அது தூசி போல எல்லா இடங்களிலும் இருப்பதனால் உங்களுக்கு தெரியவில்லை. இயல்பாக எண்ணுகிறீர்கள்

அந்தப் பொதுநடைக்கு அப்பால் இலக்கியச்சூழலில் பல நடைகள் உள்ளன. அவற்றின் சமகாலத்தைய முகப்பு எழுத்தாளர்களின் நடையாக அவை தொடக்கநிலை வாசகர்களால் கருதப்படும். உண்மையில் அவ்வாறல்ல, அவை பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் ஒரு நடையின் ஒரு பகுதிதான்.

என் உரைநடை சுந்தர ராமசாமியின் உரைநடையின் நீட்சி. அவர் க.நா.சு மற்று மு.தளையசிங்கத்தின் நீட்சி. அவருக்கு மலையாள முன்னோடிகளும் உண்டு- எம்.கோவிந்தன் போல. அவர்களே என் முன்னோடிகள்.அப்படியே அது மேலும் பின்னால் செல்லும்.

இந்த வட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் நுட்பமான தனித்தன்மையை கொண்டிருப்பார்கள். பொதுத்தன்மையையும் கொண்டிருப்பார்கள். உள்ளே புதிதாக நுழைந்து பொதுவாக வாசிப்பவர் எல்லா நடையும் ஒன்றே என்று எண்ணுவார்கள்.  உள்ளே வந்து வாசிக்க வாசிக்க தனித்தன்மைகள் ஓங்கித்தெரியும்.

இதுவே என்னைத் தொடர்பவர்களின் நடையும். அவர்கள் என்னை தொடரவில்லை. என் நடை அமைந்திருக்கும் ஓர் அறிவுச்சூழலை, மொழிச்சூழலை தொடர்கிறார்கள். சுந்தர ராமசாமியை, க.நா.சுவை தொடர்கிறார்கள். இந்த பொதுவான வட்டத்திற்குள் அமைகிறார்கள். புதிதாக வந்தவர்களுக்கு அவர்கள் என் நடையில் எழுதுவதாக தெரியும்.  இந்த பொதுவான குறைப்புரிதல்கள் எப்போதும் சூழலில் உண்டு.

சென்றதலைமுறையை விட இந்த தலைமுறையில் ஓர் ஆசிரியர் மொழிநடை பிறரில் செலுத்தும் செல்வாக்கு மிகுதி. ஏனென்றால் இணையதளம் வழியாக ஒவ்வொருநாளும் என்னை படிக்கிறார்கள். இந்த வாய்ப்பு முன்பு இல்லை. இச்செல்வாக்கைச் செலுத்துவதற்காகத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். செல்வாக்கு இருந்தால்தான் நான் செயல்படுகிறேன் என்பதற்கு பொருள் இருக்கிறது. அன்றி, செல்வாக்கே இல்லை என்றால் நான் பொருளற்றவன்.

இந்தச் செல்வாக்கு தன்மேல் உருவாகக்கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன் என் வாசகன் அல்ல. அவன் தன்னை பொதுநடைக்குள் கொண்டு சென்று ஒளித்துக்கொள்வான். முகநூல் நடையில் வாரஇதழ் நடையில் எழுதத் தொடங்குவான். அதில் எந்த உள்ளுறைந்த அறிவுத்தளமும் இல்லை. அது தனித்தன்மையே அற்றது. ஆகவே அனைவரும் அதை எளிதில் சென்றடைவார்கள். விளைவாகச் சில்லறை வாசகர்கள் அவர்களுக்கு கிடைக்கும். 

ஆனால் மெய்யான அறிவுத்தேடல் கொண்டவன் அந்த பொதுச் சூழலால் நிறைவடைய மாட்டான். எளிய ஏற்புகளில் மகிழவும் மாட்டான். வலுவான அறிவுச்சூழலுக்குள் நுழைந்து அதன் உச்சத்தை தான் அடைந்து அதை கடந்துசென்று தன் தனித்தன்மையை அதற்குள் நிறுவுவான் நான் அதைச் செய்தேன்.அத்தனை நல்ல எழுத்தாளர்களும் செய்வது அதையே.  

ஒன்று கவனித்திருக்கிறேன். இந்த அறிவுச்சூழல் – மொழிச்சூழலுக்குள் இருப்பவர்களுக்கே இந்தக் கதைகளும் கருத்துக்களும் சரியாகச் சென்று சேர்கின்றன. அவர்களுக்கே தொடர்ச்சி இருக்கிறது. என் நடையின் பாதிப்பே இல்லாமல் ஒரு கடிதம் எனக்கு வந்தால் – அதாவது சுந்தர ராமசாமி க.நா.சு என செல்லும் ஒரு பெரியவட்டத்தின் மொழிநடையே இல்லாமல் அக்கடிதம் இருந்தால்- அதில் பெரும்பாலும் பிழையான, குறைவான புரிதலே இருக்கும்.

வரும் கடிதங்களின் நடைகள் பலவகை. முகநூலின் மொழிநடை என்றால் அதில் அந்தரங்கமான வாழ்க்கையின் சுவடு இருந்தாலொழிய அதை பொருட்படுத்தவேண்டியிருக்காது. சுஜாதாபாணி நடை என்றால் பெரும்பாலும் கவித்துவம், தரிசனம் ஆகியவை கருத்தில்கொள்ளப்படாமல் ஒர் உலகியல்தளம் மட்டுமே வாசிக்கப்பட்டிருக்கும்.  வாரஇதழ்களின் நடையுடன் இருந்தால் பெரும்பாலும் கதைமுடிச்சு, சஸ்பென்ஸ்கள் மட்டுமே வாசிக்கப்பட்டிருக்கும்

ஏன்? நான் என் தொடர் எழுத்து வழியாக ஓர் அறிவுச்சூழலை- நுண்ணுணர்வுச் சூழலை உருவாக்குகிறேன். அந்த அறிவு — நுண்ணுணர்வுச் சூழல் அதற்கான கலைச்சொற்கள், சொற்றொடர்கள் வழியாகவே பரிமாறப்பட முடியும். அறிவுச்சூழல் என்பதும் மொழிச்சூழல் என்பதும் வேறுவேறல்ல. ஆகவே இதற்குள் வருபவர்கள் இந்த மொழிக்குள்தான் வருகிறார்கள். அதுவே இயல்பானது, இன்றியமையாதது

இந்த மொழிச்சாயலே இல்லாத ஒருவர் எப்படிப்பட்டவர்? அவர் வேறு ஒரு மொழிச்சூழலில் இருக்கிறார். அந்த அறிவுச்சூழலில் புழங்குகிறார். நான் உருவாக்கும் அறிவுச்சூழல் — நுண்ணுணர்வுச்சூழல்- மொழிச்சூழல் அவருக்கு முற்றிலும் அன்னியமானது. சும்மா எட்டிப்பார்க்கிறார். புரிந்துகொள்ள முயல்கிறார். இங்குள்ள ஒன்றை கவ்வி கொண்டுசென்று தான் புழங்கும் சூழலில் வைத்து புரிந்துகொள்ள முய்ல்கிறார்

இங்கு இந்த மொழிச்சூழலில் உள்ள எவரும் ஒரே மொழியை புழங்குபவர்கள் அல்ல. இருபதாண்டுகளுக்கு முன்பு சுகுமாரன், நான், யுவன் சந்திரசேகர் என பதினைந்துபேர் சுந்தர ராமசாமியின் மொழியில் எழுதுபவர்கள் என ஒரு மார்க்ஸிய விமர்சகர் எழுதினார். இன்று எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். நாங்கள் முற்றிலும் வேறானவர்களாக ஆகிவிட்டோம். ஆனால் மிக விரிந்த அளவில் நாங்கள் ஒரே மொழிச்சூழலைக் கொண்டவர்களும்தான்.

இந்தக்கதைகளை எவரும் வாசிக்கலாம், எப்படியும் வாசிக்கலாம் அவர்களின் வசதி. ஆனால் இவை நான் இருக்கும், நான் விரித்து உருவாக்கும் மொழி – சிந்தனைச் சூழலுக்குள் வருபவர்களுக்காகவே முதன்மையாக எழுதப்படுகின்றன. அவ்வகையில் இவை ஒரு சிறுவட்டத்திற்குள் நிகழும் உரையாடல்கள்தான்.  ‘வெளியே’ இருந்து வருபவர்களின் திகைப்பைப் புரிந்துகொள்கிறேன்

ஒரு சிறு கடிதத்தில்கூட உங்களால் உங்கள் எண்ணங்களைச் சீராக சொல்லமுடியவில்லை. ஒரு புதிய கோணத்தைச் சொல்லமுடியவில்லை. மிகச்சிறிய தனித்துவம்கூட இல்லை. பொதுப்புழக்கத்தில் இருக்கும் ஒர் உவமையைக் கையாள்கிறீர்கள். சினிமா உவமை இல்லாமல் தமிழகத்தில் பொதுச்சூழலில் எவரும் உரையாடுவதில்லை

நீங்கள் வருந்தவேண்டியது இந்த அடையாளமின்மைக்காக. ஆனால் சூழலின் நல்ல மொழிச்சூழல் ஒன்றின் சாயலைக் கொண்டவர்களை நீங்கள் ஏளனம் செய்கிறீர்கள். நீங்கள் எங்கும் செல்லமுடியாது, அவர்கள் மிகச்சிறந்ததில் இருந்து மேலும் எழுவார்கள். நான் உங்களை புண்படுத்தவில்லை, எண்ணிப்பாருங்கள் என்று கோருகிறேன்

என் வாசகர்களில் அவ்வப்போது சிலர் இந்த மொழிச்சாயலைப் பற்றி பிறர் ஏளனமாக ஏதேனும் சொல்வதை எனக்கு சொல்லி வருந்துவதுண்டு. நான் சொல்வேன், அப்படி ஏளனம்செய்பவர்களின் மொழிநடையைப் பாருங்கள் .எவ்வளவு பரிதாபமான பொதுநடை. அந்த நடைகொண்ட ஒருவர் உங்கள் செறிவான தீவிரமான நடையைப் பார்த்து மிரளாமல் இருக்கமுடியுமா? அந்த மிரட்சியே ஏளனமாக வெளிப்படுகிறது என்று.

ஜெ

***

பலிக்கல்[சிறுகதை]

காக்காய்ப்பொன் [சிறுகதை]

லீலை [சிறுகதை]

கரவு [சிறுகதை]

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

நற்றுணை [சிறுகதை]

இறைவன் [சிறுகதை]

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

முதல் ஆறு [சிறுகதை]

பிடி [சிறுகதை]

கைமுக்கு [சிறுகதை]

உலகெலாம் [சிறுகதை]

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

தொடர்புடைய பதிவுகள்

நஞ்சு [சிறுகதை]

$
0
0

நேரில் சந்தித்தால் அக்கணமே கையில் கிடைத்த பொருளால் அடித்து அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருக்கும் ஒரு பெண். அவளை ஓடும் பஸ்ஸில் இருந்து எதிரே செல்லும் பஸ்ஸில் பார்த்தேன். ஊட்டி சென்றுகொண்டிருந்தேன். இறங்கிய பஸ் ஒன்று வளைந்து ஒதுங்கி என் பஸ்ஸுக்கு இடம் கொடுத்தது. அந்த பஸ் என்னை கடந்துசென்றபோது ஒரு கணம் மிக அருகே அவள் வந்து அப்பால் சென்றாள்.

என் மனம் படபடத்தது. செத்தவன்போல கைதளர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டேன். பஸ் மேலேறிச் சென்றது. என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ எண்ணங்களுடன் இருந்தேன். பின்னர் எண்ணியபோது அந்த எண்ணங்களெல்லாமே விசித்திரமாக இருந்தன. நான் எழுந்து சன்னல்வழியாக வெளியேறி அந்த பஸ்ஸை துரத்திக்கொண்டு பறந்து, ஆம் பறந்து, அதை அடைந்து உள்ளே நுழைந்து அவளருகே சென்றேன். மூன்றுமுறை வேறுவேறு கோணங்களில் அது நிகழ்ந்த பிறகுதான் நான் எழுந்து நின்றேன்.

“என்ன சார்?” என்று கண்டக்டர் கேட்டார்.

அப்போதுதான் அங்கே இறங்கினாலும் நான் செய்வதற்கொன்றும் இல்லை என்று தெரிந்தது. அந்த இடம் நடுக்காடு. அங்கே இறங்கினால் எப்படி கீழிறங்கிச் செல்லும் பஸ்ஸை தொடர்ந்து செல்லமுடியும்?

“ஒண்ணுமில்லை” என்றபடி அமர்ந்தேன். கைவிரல்களை நெரித்தபடி உதடுகளை கடித்தபடி இருக்கை முனையில் அமர்ந்திருந்தேன். ஊட்டிமலைப் பாதையில் பஸ் எத்தனை மெதுவாகச் செல்லும் என்று அப்போதுதான் அறிந்தேன். மிகமிக மெல்ல அது சுழன்றுகொண்டிருந்தது. சில இடங்களில் முன்னால் சென்றபின் மீண்டும் பின்னால் வந்தது. உறுமியும் இருமியும் முனகியும் சீறியும் முன்சென்றது. அதிலிருந்து பொசுங்கிய டீசலின் கெட்டவாடை எழுந்தது.

அடுத்த ஸ்டாப்பிங் எது? அங்கே ஒரு டாக்ஸி கிடைக்குமா? அங்கே டாக்ஸி உண்டா என்று பார்த்தபின் இறங்கவேண்டும். பார்க்காமல் இறங்குவதில் அர்த்தமில்லை. ஆனால் ஆட்டோ இருந்தால்கூட இறங்கிவிடலாம். டாக்ஸி கிடைக்கும் இடம் வரை ஆட்டோவில் செல்லலாம்.

நான் எல்லா வியூகங்களையும் வகுத்துவிட்டேன். பஸ் சீறியபடி நின்றபோது எழுந்தேன். மேலே கம்பிப் பரணில் இருந்து என் பையை எடுத்துக்கொண்டு பாய்ந்து இறங்கினேன். அங்கே வேறு இருவர் இறங்கினார்கள். என் பஸ் நீலப்புகையை உமிழ்ந்தபடி சென்றது.

அங்கே டாக்ஸி ஏதுமில்லை. ஆனால் நாலைந்து ஆட்டோக்கள் நின்றன. எல்லாமே பருத்த டீசல் ஆட்டோக்கள். எந்த இடம் என்று தெரியவில்லை. நான் ஓர் ஆட்டோ நோக்கி சென்று அதில் ஏறிக்கொண்டேன்.

“எங்க சார்?”

“பக்கத்திலே எங்க டாக்ஸி கிடைக்கும்? நான் உடனே கீழ மேட்டுப்பாளையம் ரூட்ல போகணும்.”

“டாக்ஸியா? சார் இங்க நெறைய பஸ்வரும். இங்கேயே நின்னா…”

“இல்ல என்னோட வேண்டப்பட்ட ஒருத்தர் முன்னாலே கீழ போற பஸ்ஸிலே இருக்கார். அந்த பஸ்ஸை மறிச்சு அவரை பிடிக்கணும்…”

“செல்லிலே கூப்பிடுறது?”

“செல் நம்பர் தெரியாது… அவரை பாத்தே ரொம்ப நாள் ஆச்சு.”

“வட்டிக்கு குடுத்திருந்தியோ?” என்றார்.

“இல்லை… கைமாத்தாத்தான்” என்றேன்.

அவர் ஆட்டோவை எடுத்துக்கொண்டு “கைமாத்துன்னு ஒருத்தன் கேட்டாலே அதுக்கு ஒரே அர்த்தம்தான், அவன் சுருட்டி திங்கப்போறான். இப்ப நீ பின்னாடி போயி புடிச்சா மட்டும் தந்திரப்போறானா?” என்றார்.

“இல்ல .கேக்கலாம்ல?”

“கேட்டு? அவன்லாம் வெக்கப்படமாட்டான் சார். சரி நமக்கென்ன? நான் டாக்ஸி பக்கத்திலே விட்டுடறேன்.”

ஆட்டோ கீழேதான் சென்றது. மேலிருந்து வந்து கடந்துசென்ற பஸ்ஸின் டீசல் முகத்தில் வெம்மையாக அறைந்தது. முகத்தில் கரி படிந்தது போலவே உணரமுடிந்தது.

நான் அமைதியிழந்து இருக்கை முனையிலேயே அமர்ந்திருந்தேன். வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சீக்கிரம் போக முடியாதா?”

“ஆட்டோ ஸ்பீடே இவ்ளவுதான் சார்.”

நாலைந்து வளைவுகள். கீழே சென்றுகொண்டிருந்த பஸ்கள் எல்லாவற்றையும் பார்த்தேன். அந்த பஸ் நின்றுகொண்டிருக்கிறதா? அது கேரள பஸ். இந்த வழியில் கேரள பஸ் அடிக்கடிச் செல்வதில்லை. நல்லவேளை, அவள் தமிழ்நாட்டு பஸ்ஸில் போகாமலிருந்தாள். எல்லா தமிழ்நாட்டு பஸ்களும் ஒன்றுபோலவே இருந்தன.

“அந்தாள் சொந்தக்காரனா சார்?” என்றார் ஆட்டோக்காரர்.

“ஆமா.”

“பொண்ணு குடுத்த வகையிலேன்னு நினைக்கிறேன்… அவனுக கேட்டாத்தான் நம்மால இல்லேன் சொல்லமுடியாது. நமக்கே நாலாயிரம் ரூபா அப்டி நின்னுட்டிருக்கு.”

“அந்த வகையிலேதான்…”என்றேன்.

அவளை எனக்கு முன்பு தெரியவே தெரியாது. ஊட்டியிலிருந்து மசினகுடி போகும் வழியில் கல்லட்டி என்னும் அருவி இருக்கிறது. அதையொட்டி காட்டுப்பாதை ஒன்று செல்லும். ஆறடி மண்சாலை. ஆனால் ஒற்றையடிப்பாதை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அது கல்லட்டி எஸ்டேட்டின் மானேஜரின் அலுவலகம் வரை செல்லும். அதில்தான் அவளைப் பார்த்தேன்.

மானேஜரிடம் செக்கை வாங்கிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன். மாலை சிவந்து அந்தி ஆகிக்கொண்டிருந்தது. மானேஜர் ரவுண்ட் போய்விட்டிருந்ததனால் இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. செக்கை வாங்காமல் போனால் மறுபடியும் நான் ஈரோட்டில் இருந்து இதற்காகவே வரவேண்டியிருக்கும். எங்கள் உரக்கம்பெனி எஸ்டேட்டுகளுக்கு சரக்குகளை நேரில் கொண்டுசென்று சப்ளை செய்து ஆறுமாதத்திற்குள் பணத்தை பெற்றுக்கொள்வது. ஆர்டர் பிடிப்பதும் பணம் சேகரிப்பதும்தான் நான்.

ஊட்டி ஜோனல் அலுவலகத்திலிருந்து எடுத்துக்கொண்ட பைக்கில் வந்திருந்தேன். செக்குடன் கிளம்பியபோதே எஸ்டேட் மானேஜர் கருப்பையா “பைக்கிலேயா போறீங்க?” என்றார்.

“ஆமா, மசினகுடியிலே இருந்து வரேன்” என்றேன்.

“இருட்டிட்டிருக்கு… வழியிலே யானை நிக்கும். பைக்ல போறது நல்லதுக்கில்லை” என்றார் கருப்பையா

“பாத்துபோறேன்” என்றேன்.

“திம்மனை அனுப்பலாம்னா அவனும் இல்லை.”

“பரவாயில்லை. திம்மன் வந்தா அவன் எப்டி திரும்ப வருவான்?”

நான் திரும்பும்போது இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டே ஓட்டினேன். யானையின் இயல்பு சட்டென்று சாலையின்மேல் ஏறி நிற்பது. நாம் நிலையழிந்து போய் முட்டிக்கொள்வோம். அது இருட்டிவரும் காட்டில் புதர்களுக்குள் நின்றிருந்தால் கண்ணுக்கும் தெரியாது.

காட்டுக்குள் நினைத்ததைவிட இருட்டு. கல்லட்டி ஆற்றை மரப்பாலம் வழியாகக் கடந்தால் மொத்தம் பதினேழு வளைவுகள். மேலே மையச்சாலையில் எப்போதும் போக்குவரத்து இருக்கும்.

கோடையாதலால் ஆற்றில் நீர் குறைவாக இருந்தது. பயணிகள் போட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பாறைகளிலும் புதர்களிலும் சிக்கியிருந்தன. யானைகள் தண்ணீர் குடிக்க வரும் நேரம்.

முதல்வளைவை நோக்கி பைக்கை திருப்பியதும் அவளைக் கண்டேன். அந்த ஒற்றையடிப்பாதையில் தனியாக நடந்துகொண்டிருந்தாள். அந்த பகுதியைச் சேர்ந்தவள் அல்ல என்று தொலைவிலேயே தெரிந்தது. இளமையான நகரத்துப்பெண். வெண்ணிறச் சுடிதார் அணிந்திருந்தாள். சுடிதாரின் நிறம், துணியின் தரம், அதை அணிந்திருக்கும் விதம் எல்லாமே அவளுடைய வர்க்கம் என்ன என்பதை காட்டுவது. பைக் ஓசை கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

நான் பைக்கை அவளருகே கொண்டு சென்று விரைவு குறைத்தேன். “யாரு? எங்க போறீங்க?”

அவளால் பேசமுடியவில்லை. மூச்சுவாங்கியது. மனமும் மிகவும் தளர்ந்திருந்தது. “வழி… வழி தவறிட்டுது….” என்றாள். மிகச்சன்னமான குரல்.

“தனியாவா வந்தீங்க?”

“ஆமா.”

“இங்கயா? இங்க எங்க?”

“இங்கதான்… ஒரு எடத்திலே.”

“ஏறிக்கிறீங்களா?”

“ம்.”

நான் என் பைக்கில் இருந்து தண்ணீர் புட்டியை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் அதை வாங்கிக் குடித்தாள். முக்கால்புட்டி நீரை குடித்துவிட்டாள். அதன்பின் சற்று ஆறுதலடைந்தாள்.

“ஏறிக்குங்க.”

அவள் ஏறிக்கொண்டாள். நான் பைக்கை எடுத்தேன். சாலையில் சுழன்று சுழன்று மேலே சென்றேன். இருட்டு இருபுறமும் இருந்து வந்து சாலையை மூடிவிட்டது.

ஹெட்லைட்டை போட்டுவிட்டு வெளிச்சத்தில் மிகக்கூர்ந்து பார்த்து ஓட்டவேண்டியிருந்தது. ஆகவே அவள் விசும்பிக் கொண்டிருப்பதை நான் முதலில் கவனிக்கவில்லை. கவனித்தபோது வண்டியை நிறுத்தினேன்.

மேலே வந்துவிட்டிருந்தோம், மேலும் ஒருவளைவில் மையச்சாலையை அடையமுடியும். அங்கே ஹெட்லைட்டுகளின் வரிசை சிவந்த ஆறுபோல ஓடிக்கொண்டிருந்தது.

“என்னாச்சு?”

“ஒண்ணுமில்லை.”

“சொல்லுங்க.”

“ம்ம்கூம்”.

“நான் எதாவது ஹெல்ப் பண்ணணுமா?”

“எனக்கு எங்க போறதுன்னு தெரியல்லை…என் கையிலே பணம் ஏதும் இல்லை.”

“அதுக்கென்ன? நீங்க எந்த ஊரு?”

“மதுரை.”

“மதுரை பஸ்ஸிலே ஏத்தி விட்டுடறேன், போதுமா.”

“சரி.”

“போலாமா?” என்று பைக்கை எடுத்தேன்.

“ஒரு நிமிஷம்.”

“ஓகே.”

அவள் இறங்கி தயங்கி நின்றாள்.

“என்ன?”

“டாய்லெட் போகணும்… ஆனா இங்க…” என தயங்கினாள்.

“அந்தப் பக்கமா போங்க… அந்த மரத்துக்குப் பின்னாலே. நான் இங்கே நிக்கிறேன்…”

“இல்ல வேண்டாம்.”

“இருங்க. நான் அந்த எடம் வரை போய் பார்த்துட்டு வரேன், அப்றம் நீங்க போங்க”

“சரி” என்று தலையசைத்தாள்.

நான் அங்கே சென்று சுற்றிலும் பார்த்துவிட்டு “நீங்க போங்க.. ஒண்ணுமில்லை” என்றேன்.

அவள் தலையசைத்துவிட்டு சென்றாள். அவள் அங்கே மறைந்தபின் நான் திரும்பிக் கொண்டேன்

அவள் திரும்பிவரும் ஓசை கேட்டது. அருகே வந்து “ம்ம்” என்றாள்

“போலாமா?” என்றேன்.

“தண்ணி.”

நான் மீண்டும் தண்ணீரை கொடுத்தேன். அவள் குடித்தபோது கழுத்திலும் மார்பிலும் சிந்திக்கொண்டாள்.

புட்டியை திரும்ப நீட்டினாள். என்னைப் பார்த்து புன்னகைத்தாள். வாயில் ஒன்று சற்று தெற்றுப்பல். அது ஓர் அழகைக் கொடுத்தது. அந்தச் செயல்கள் வழியாக ஒருவரை ஒருவர் சற்றே அணுகி விட்டிருந்தோம்.

“காலையிலே இருந்து தண்ணியே குடிக்கலை. டாய்லெட் போகவும் பயம்” என்றாள்.

“காலையிலேயே இங்கதான் இருக்கீங்களா?”

“ஆமா.”

“யார்கூட வந்தீங்க?” என்றேன்.

“என் ஹஸ்பெண்ட் கூட.”

“ஓ.”

“காரிலே வந்தோம். இங்க ஒரு ரிசார்ட்டுலே புக் பண்ணியிருந்தோம்.”

“சண்டையா?”

“ம்.”

நான் மேலே கேட்கவில்லை.

“ஒருமாதிரி கேவலமான டவுட்டு. அவர் ஃப்ரெண்டு ஒருத்தரைச் சொல்லி…” என்றாள் “நான் யாரையோ கூடவே வரச்சொல்லியிருக்கேன்னு நினைப்பு”

“ஓ.”

“நான் கொஞ்சம் கடுமையா பேசினேன். என்னை அடிச்சார். நான் காரை நிப்பாட்டுங்கன்னு கத்தினேன். நிப்பாட்டினார். நான் இறங்கிட்டேன். பின்னாடி வந்து கூப்பிடுவார்னு நினைச்சு நடந்தேன். கூப்பிடலை. போய்ட்டார்.”

“அந்த ரிசார்ட்டுக்கு போயிருக்கலாமே?”

“அது எந்த எடம்னே தெரியலை. என்னோட செல் பர்ஸ் எல்லாமே காரிலேதான் இருந்தது… எங்கிட்ட ஒண்ணுமே இல்லை.”

எனக்கு அவள் சூழல் புரிந்தது.

“அவர் வந்திருவார்னு அங்கேயே உக்காந்திட்டிருந்தேன். ரொம்பநேரம் ஆனதும் எந்திரிச்சு நடந்தேன். ரெண்டு ரோடு பிரியிற எடத்திலே மறுபக்கமா திரும்பிட்டேன் போல. என்னமோ வழி தவறிடுச்சு… காட்டுக்குள்ளே போய்ட்டேன். அங்க ரெண்டும் எருமை…”

“காட்டெருதா? திமில் ரொம்ப பெரிசா இருக்கும், முன்காலும் பெரிசா…”

“இல்ல, நம்ம எருமை மாதிரித்தான்”

“அது காட்டுமிருகம் இல்லை. இங்க தோடர்கள் எருமைகளை காட்டுக்குள்ள திறந்து விட்டிருவாங்க… நேர்ச்சைக்காக”

“அதை பாத்து பயந்து காட்டு வழிக்குள்ளே ரொம்ப போய்ட்டேன். நாலஞ்சு வாட்டி வழிதவறிட்டுது. திரும்பி வரவே முடியலை. எங்கபோனாலும் வழி தெரியலை. ஒருவழியா இந்த ரோட்டை பிடிச்சேன்”

“நீங்க போனது அந்தப்பக்க ரோடு… சிங்காரா எஸ்டேட் ரோடு. அங்கதான் கடைசியிலே நாலஞ்சு ரிசார்ட் இருக்கு ”என்றேன். “ரிசார்ட்டுக்கு போறீங்களா இல்லை மதுரைக்கா?”

“மதுரைக்கே போறேன்.”

அவள் சட்டென்று தலைகுனிந்து விசும்பி அழத்தொடங்கினாள். அவளை அப்போதுதான் நன்றாக பார்த்தேன். அவளுடைய துப்பட்டா அள்ளிப்போடப்பட்டது போலிருந்தது. தலைமயிர் கலைந்திருந்தது. அதில் சருகுகள் ஒட்டியிருந்தன. முகம் சற்று அதைத்ததுபோல் இருந்தது. இளமையானவள், அழகி.

அந்த சந்தர்ப்பத்தின் நிர்க்கதியான தன்மை அப்போதுதான் முழுக்க பிடிபட்டிருக்க வேண்டும். அதுவரை எப்படி தப்பிப்பது என்றே நினைத்திருப்பாள். நினைக்க நினைக்க பெருகி அழுதுகொண்டிருந்தாள்.

அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவகையான அமைதியின்மையையும் அணுக்கத்தையும் அளிக்கிறாள். நான் “சரி போலாம், ஏறிக்குங்க” என்றேன்.

அவள் நின்றபடியே அசைந்தாள். மீண்டும் ஒரு சீறலோசை. புதிய அழுகை எழுந்து விசும்பல்களாக ஓங்கியது.

நான் சுற்றிலும் பார்த்தேன். நல்ல இருட்டு. பாதையில் மட்டும் மெல்லிய வான் ஒளி.

“வாங்க, போலாம்.”

இயல்பாக அவள் தோளை தொட்டுவிட்டேன். அது அழும்பெண்ணை காணும் ஆணின் இயல்புதான். உடனே கையை எடுக்கமுயல அவள் என் கை மேல் தன் கையை வைத்தாள். அவள் விழிகளை நான் சந்தித்தேன். ஈரமான கண்களை மிக அருகே பார்க்கும் தருணங்களை நாம் மறக்கவே முடியாது. ஆனால் அத்தருணத்திலிருந்து என்னை விலக்கிக்கொண்டேன். அந்த விழிகள் மேலும் அணுக்கமாக ஆயின.

“ஏறிக்குங்க” என்றேன்.

அவள் ஏறிக்கொண்டாள். அவளுடைய உடல் என் மேல் பட்டது. அல்லது அப்போதுதான் அந்த தொடுகையை நான் அப்படி உணர்ந்தேன். மிகமிக அந்தரங்கமான ஒன்றாக.

அவள் மூச்சையும் உணரமுடிந்தது. அது ஒரு கற்பனையாகக்கூட இருக்கலாம். அந்த எதிர்க்காற்றில் அப்படி மூச்சை உணர்வது சாத்தியமே இல்லை.

ஒரு சொல்கூட நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. பைக்கில் சுழன்று சுழன்று ஏறி கல்லட்டி மேட்டை அடைந்தோம். அருவியை நோக்கிச் செல்லும் திருப்பத்தில் சிங்கரா எஸ்டேட் சாலையில் இருந்து ஒரு கார் மேலேறி வந்தது.

“அவருதான்” என்றாள்.

“அந்த ரெட் வெர்னாவா?”

“ஆமா.”

நான் வண்டியை அந்தக் காரின் அருகே கொண்டு சென்று நிறுத்தினேன். அவள் இறங்கிக்கொண்டாள். “நீங்க போங்க” என்றாள்.

“இல்ல, பேசிட்டு போறேன்.”

“இல்ல போயிடுங்க.”

“அப்டி போனா நல்லாருக்காது. சொல்லிட்டுத்தான் போகணும்” என்றேன்.

அவன் அவளை பார்த்துவிட்டான். காரை நிறுத்திவிட்டு இறங்கினான். அவள் அவனை நோக்கிப் போனாள். நான் பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவனை நோக்கி கைநீட்டியபடி சென்றேன்.

“ஹல்லோ, இவங்களை கல்லட்டி பாதையிலே பாத்தேன்.”

அவன் கைநீட்டவில்லை. அவளிடம் “இவன்கூடத்தான் இவ்ளவுநேரம் இருந்தியா?” என்றான்.

“சார், நான் இப்ப வர்ரப்ப இவங்களை காட்டிலே பாத்தேன்” என்றேன்.

அவன் அவளிடம் “சொல்டீ பகல் முழுக்க இவன்கூடத்தான் சுத்தினியா?” என்றான்.

சட்டென்று அவள் கதறி அழுதபடி கார்க்கதவை திறந்து உள்ளே நுழைந்து சீட்டில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டாள்.

“ஹல்லோ, நீங்க என்ன பேசுறீங்க?” என்றேன்.

“சீ நாயே….” என்று சொல்லி அவன் என்னை எட்டி உதைத்தான். அதை எதிர்பார்க்காமல் நின்றமையால் நிலைதடுமாறி நான் மல்லாந்து விழுந்தேன். என் பைக்கின் மேல் கையை ஊன்ற அதுவும் சரிந்தது.

“தூ!” என்று துப்பிவிட்டு அவன் காரில் ஏறி திருப்பிக்கொண்டு சென்றான். என்னால் எழமுடியவில்லை. கையூன்றி எழுந்தபோது கார் போய்விட்டிருந்தது. அதன் சிவப்பு பின்விளக்குகள் எரிந்து அணைவதைத்தான் கண்டேன்.

அருகே கடைவைத்திருந்த இருவர் ஓடிவந்து “என்னா சார்?”என்று என்னைத் தூக்கினர்.

“ஒண்ணுமில்லை… ” என்றேன். ஊட்டியில் நிலம் நாமறியாத சரிவுகள் கொண்டிருக்கும். விழுந்து எழும்போதுதான் அது தெரியும்.

“பொண்ணு ஆரு சார்?”

“அவரோட சம்சாரமா சார்?”

என் உடலே எரிவதுபோல் இருந்தது. பைக்கை எடுத்து உதறி ஸ்டார்ட் செய்தேன்.

“டீ குடிச்சிட்டு போ சார்.”

பைக்கில் ஏறிக்கொண்டபோது முதலில் தோன்றிய எண்ணம் காரை துரத்திச் சென்று மறித்து அவனை இழுத்து கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்றுதான். ஆனால் அப்போது என் உடலே நடுங்கிக்கொண்டிருந்தது. எதையெல்லாமோ நினைத்து அஞ்சினேன்.

அதை அப்படியே விட்டுவிடவேண்டும் என்றுதான் நினைத்தேன். மறந்துவிடவேண்டும் என்று. ஆனால் நிதானமடைந்தபோது என் ஆங்காரம் வளர்ந்தது. சீற்றம் ஏறி ஏறி வந்தது.

அவள் மேல்தான் என் கோபம் எழுந்தது. அவள் மிகமிக தந்திரமாக அதைச் செய்தாள். அவள் காரில் ஏறி அமர்ந்தது அங்கே தன் முகம் பலர் கண்முன் தெரியக்கூடாது என்பதற்காக என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை துளித்துளியாக விரித்துக்கொண்டபோது அப்படி அல்ல என்று தெரிந்தது.

அவன் அவளிடம் என்னைப் பற்றிக் கேட்டபோது நான் அவளை காப்பாற்றியவன் என்று ஒரு வார்த்தை அவள் சொல்லவில்லை. என்னையும் அவளையும் இணைத்து பேசியபோது துளிகூட சீற்றம் காட்டவில்லை.

மாறாக கதறி அழுதாள். எதையோ நினைத்து மனம் உடைந்தவள் போல. எதையோ இழந்துவிட்டவள் போல. தவற்செய்து குற்றவுணர்ச்சி கொண்டவள் போல. எப்படிவேண்டுமென்றால் அந்த அழுகையை விளக்கலாம். அழுதபடி அப்படியே காரில் ஏறிக்கொண்டாள்.அவள் அந்த தருணத்தை அபத்தமாக ஆக்கினாள்.

வேண்டுமென்றே அதைச் செய்தாளா? அசட்டுத்தனமாக நடந்துகொண்டாளா? அல்லது அவனுக்கு எந்த வார்த்தையும் ஏறாது என்ற சலிப்பா?

அந்த தருணத்தை அத்தனை துல்லியமாக என் நினைவு எப்படி மீட்டிக்கொள்கிறது என்று வியந்தேன். அதுவரை நிகழ்ந்ததெல்லாம்கூட மங்கலடைந்துவிட்டன. அவள் கணவனை சந்தித்த அந்த சில நிமிடங்கள் ஒரு முழு வாழ்க்கை போல ஆகிவிட்டன.

சினிமாவை ஃப்ரேம் ஃப்ரேமாக பார்ப்பதுபோலப் பார்த்தேன். நிறுத்தி ஜூம் போட்டு கண்களை பார்த்தேன். ஓவ்வொரு உணர்ச்சியையும் பார்த்தேன். உணர்ச்சிகளுக்கு அப்பாலுள்ள சிந்தனைகளைக்கூட பார்க்கமுடிந்தது.

அவன் மெல்லிய ஐயத்துடன்தான் இறங்கினான். இறங்கியபோது அவளைத்தான் வெறுப்புடன் பார்த்தான். அவன் என்னைப் பற்றி கேட்டதுகூட அவளை அவமானப்படுத்தவேண்டும் என்றுதான். அது வெறும் ஒரு வசைபாடல்தான். உண்மை அவனுக்குத் தெரியும்.

அவளுடைய அந்த அழுகையும் மௌனமும்தான் அவனிடம் சந்தேகத்தை உருவாக்கி வளரச் செய்தன. ஒரு கணத்தில் அப்படியே பற்றி தீயாக எரிந்து எழுந்துவிட்டான். அவள் வேண்டுமென்றே செய்தது அது. அவளுக்குத்தெரியும், அவன் எப்படிப்பட்டவன் என்று. அவனிடம் அந்த அழுகையும் மௌனமும் என்ன விளைவை உருவாக்குமென்று நன்றாகவே உணர்ந்திருந்தாள்.

அது அவளுடைய நாடகம். ஆகவேதான் அவள் என்னிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டாள். அவள் முகத்தை நான் பார்க்கவேயில்லை.

நாட்கணக்கில் என் தூக்கம் இல்லாமலாகியது. தனியாக என்னை உணரும்போதெல்லாம் அவள் நினைப்பு எழுந்து உடல் தகிக்கும். கொதிப்பை அடக்க முடியாமல் கைகளை முட்டிசுருட்டிக்கொள்வேன். உதட்டைக் கடிப்பேன்.

“என்னடா ஆச்சு உனக்கு? உனக்கேதோ டிப்ரஷன் இருக்கு.. டாக்டரைப்பாரு” என்றான் ராகவன். “ஆபீஸ்ல எல்லாருமே சொல்றாங்க”

“என்ன?”

“தனியா நிக்கிறப்ப என்ன பண்றே தெரியுமா? ஒருநாள் வீடியோ எடுத்து காட்டுறேன்…அய்யோ கொலவெறி தெரியுது மூஞ்சியிலே. கிறுக்கன் மாதிரி என்னென்னமோ பண்றே”

அதன்பின் நானே என்னை ஆற்றிக்கொள்ள தொடங்கினேன். அவளை நினைப்பதில்லை. அந்நினைப்பு வந்தாலே ஏதாவது படிப்பேன். எங்காவது கிளம்பிச் செல்வேன்.

ஆனால் நெஞ்சுக்குள் ஆழமாக அவள் பதிந்துவிட்டாள். சிலநாட்கள் விடியற்காலையில் அவள் முகம் எழுந்துவரும். அப்படியே ஒரு பெரிய ஓவியத்தைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டு படுத்திருப்பேன். தூய வெறுப்பு என்றால் என்ன என்று அப்போது தெரிந்துகொள்வேன்.

அத்தகைய தூய வெறுப்பில்தான் திட்டமிட்ட கொலைகள் நிகழ்கின்றன. இரக்கமற்ற குற்றஉணர்ச்சியே அற்ற கொலைகள்.

அவள் எனக்குச் செய்தது ஓர் அவமதிப்பு அல்ல. அவள் என் அகத்தில் எதையோ நிரந்தரமாக உடைத்துவிட்டாள். ஒவ்வொருவரும் இளமை முதலே வளர்த்துப் பேணிவரும் ஒன்றை. நான் என்று எண்ணும்போதே திரண்டு வரும் ஒன்றை.

ஆனால் இந்த நஞ்சை நான் கடந்துவிடவேண்டும். இதை நான் வைத்துக் கொண்டிருந்தால் இது என்னுள் பெருகி என்னை அழிக்கும். என் பகற்கனவுகளில் நான் அவளை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தருணங்களில் சந்தித்தேன். அவளை அறைந்தேன். அவளைச் சிறுமை செய்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அதன்பின் கசப்பையே உணர்ந்தேன்.

கசப்பிலிருந்து மீளவேண்டும் என்றால் அதை துறப்பது மட்டுமே வழி. ஆகவே நான் என் வேலையை இடம் மாற்றிக்கொண்டேன். ஊட்டிக்கே அதன்பின் வரவில்லை. என்னுள் அதை சுருக்கிச் சுருக்கி ஒரு புள்ளியாக மாற்றிக் கொண்டிருந்தேன்.

மிகத் தற்செயலாகத்தான் இன்று ஊட்டிக்கு வரவேண்டியிருந்தது. பஸ்ஸில் ஏறும்போது ஒரு சிறு தொடுகைபோல அந்த நினைவு வந்தது. உடனே அதை உந்தி விலக்கிக்கொண்டேன்.

நான் அந்த கேரளா பஸ்ஸை கண்டுவிட்டேன். அந்தக்கணம் என் தலைக்குள் குருதி ஏறிய வேகத்தை நானே வியந்துகொண்டேன்.

“அந்தபஸ்தான்… அதோ” என்று கூச்சலிட்டேன்.

“டாக்ஸி வேணாமா சார்?”

“அந்த பஸ்தான்… இந்தாங்க…எவ்ளவு?”

“நூறு.”

“இந்தாங்க.”

“நான் வேணா வரவா சார்? நாலு வார்த்தை கேக்கறேன்.”

“வேண்டாம்… நான் பாத்துக்கறேன்.”

நான் இறங்கி ஓடிச்சென்று அந்த பஸ்ஸில் ஏறினேன். அவள் முன்பக்கம் வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அருகே சென்று அவள் அருகே அமர்ந்தேன். வியர்வை வழிய மூச்சுவாங்கிக் கொண்டிருந்தேன்

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் என்னைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தாள்.

“கூச்சல் எல்லாம் போடாதே… நான் இப்ப எதுக்கும் துணிஞ்சவன்…” என்றேன். என் முகம் எப்படி இருந்திருக்கும்? விசித்திரமான ஒரு இளிப்பு, வலிப்பு போல ஒர் இழுபடல் இருந்திருக்கும். “எறங்கு…”என்றேன்.

“இல்ல.. ப்ளீஸ்” என்றாள்.

“பேசாம இறங்கி வா.”

“ப்ளீஸ் வேண்டாம்.”

“எறங்கு. நான் உங்கிட்ட பேசணும்.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“எறங்கிறியா இல்லியா?”

அவள் மேலுதட்டை இழுத்து கடித்தபடி அமர்ந்திருந்தாள்.

“நீ மட்டும்தானே வந்திருக்கே?” அதுவரை அதைப்பற்றிக்கூட நான் நினைத்திருக்கவில்லை.

“ஆமா.”

“எறங்கு.”

“எதுக்கு?”

“ரேப் பண்ணப்போறேன், போதுமா, எறங்குடி.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“எறங்கு உங்கிட்ட பேசணும்.”

“இங்க பேசலாம்.”

“என்னால குரலை தாழ்த்தி பேசமுடியாது. எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சுகிடணும் அவ்வளவுதான்.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“எறங்கிறியா இல்லியா?” என்று பல்லைக் கடித்தபடி கேட்டேன்

அவள் கையில் ஏர்பாகுடன் எழுந்தாள். நான் அவளை அழைத்தபடி இறங்கினேன்.

டிரைவர் “வண்டி கெளம்புது சார்” என்றார்.

“இல்ல, நாங்க வேற வண்டியிலே வர்ரோம்” என்றேன்.

“இத பாருங்க..”என்று அவள் ஏதோ சொல்ல வந்தாள்.

“பேசாம வா.”

“டீக்கடையிலே வச்சு பேசுவோம்.”

“வா பேசாம.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்!”

நான் அவளை சாலைவழியாக கூட்டிச்சென்றேன். சாலையிலிருந்து ஒரு மண் பாதை மேலேறிச் சென்றது.

“வா.”

“இங்க எதுக்கு?”

“வரப்போறியா இல்லியா?”

“ப்ளீஸ்! ப்ளீஸ்!”

நான் மேலேறி சென்றேன். அவளும் தயங்கியபடி வந்தாள். அந்த மண்பாதை காட்டுக்குள் சென்றது. இருபக்கமும் புதர்கள் செறிந்திருந்தன. உடலெங்கும் கனி செறிந்த அத்திமரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் எங்களை வியப்புடன் பார்த்தன.

“போதும்” என்றாள்.

“வா” என்றேன்.

“எனக்கு பயமா இருக்கு.”

“பயப்படாதே… உன்னை கொல்லப்போறதில்லை” என்றேன். “கொல்லணும்தான் நினைச்சேன். சொல்லப்போனா துரத்திட்டு வர்ரப்பக்கூட பிடிச்சதுமே அடிக்க ஆரம்பிச்சிருவேன்னு நினைச்சேன். ஆனா உன்னைப் பாத்ததும் மனசு மாறிடிச்சு.”

அவள் விழிகளில் நம்பிக்கை தெரிவதை கண்டேன்.

“ப்ளீஸ்!” என்றாள்

“இப்ப எனக்கு உங்கிட்ட ஒருவிஷயம் தெரிஞ்சுகிடணும் அவ்வளவுதான்”.

“ம்.”

நான் பக்கவாட்டில் பிரிந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து அங்கிருந்த பாறை அருகே சென்று நின்றேன். எங்களைச் சுற்றி காடு நிறைந்திருந்தது. எவரும் பார்க்கமுடியாத அந்தரங்கம்.

“யாரும் பாக்காத இடத்திலே வச்சுத்தான் இதைக் கேக்கமுடியும்னு தோணிச்சு. ஏன்னா… ” என்றேன் “தெரியலை. இது என்னோட அந்தரங்கம். அதை நாலுபேர் கேக்கிறாப்ல பாக்கிறாப்ல பேச எனக்கே கூசுது.”

“ப்ளீஸ்!” என்றபோது அவள் விழிகளில் கண்ணீர்.

“நேரடியாகவே கேக்கிறேன், அன்னிக்கு நீ போட்டது டிராமா தானே?”

“ப்ளீஸ்!”

“அந்த வார்த்தையையே சொல்லிட்டிருக்காதே… சொல்லு, ஏன் அப்ப அப்டி அழுதே? அந்த அழுகையோட அர்த்தம் என்னன்னு தெரியும்ல உனக்கு? தெரியும்தானே?”

“ப்ளீஸ்!”

“இதப்பார், அறைஞ்சிருவேன்!” என்றபோது என் குரல் உயர்ந்தது.

“ப்ளீஸ் !ப்ளீஸ்!” என்று அவள் கைகூப்பியபோது கண்ணீர் வழிந்தது.

“அது தெரிஞ்சு பண்ணின டிராமாதானே?”

அவள் பேசாமல் நின்றாள்.

“அவன் எடத்திலே என்னை வச்சு கற்பனை பண்ணிப் பாத்தேன். ரெண்டு வருஷமா இந்த நாடகம் மட்டும்தான் என் மனசிலே” என்றேன் “நீ அவனுக்குக் குடுத்த தண்டனை அது, இல்லியா?”

அவள் மேலுதட்டை இழுத்துக் உதட்டைக் கடித்துக்கொண்டு தலைகுனிந்தாள்.

“அவன் சந்தேகபட்டிட்டே இருந்தான். உன்னை சித்திரவதை பண்ணினான். கடைசியா காட்டிலே இறக்கிவிட்டான். அவனை சாவடிக்கணும்னு அந்த நிமிஷத்திலே தோணிச்சு. அதுக்கு என்ன செய்யணும்கிறதும் தோணிச்சு. இல்லையா?”

“நாம போய்டுவோம், ப்ளீஸ்”

“அந்த எடத்திலே எது பேசியிருந்தாலும் நீ நினைச்சது மாதிரி நடந்திருக்காது. அதனாலத்தான் அழுகை. அழுகைய எப்டி வேணுமானாலும் அர்த்தம் பண்ணிக்கலாம்” என்றேன் “போறவழியிலே அவன் திரும்பத் திரும்ப கேட்டிருப்பான், என்ன நடந்ததுன்னு. ஒண்ணுமே நடக்கலைன்னு சொல்லி கதறி அழுதிருப்பே. இல்லியா?”

அவள் தலைகுனிந்து நின்றாள். நான் சொல்வதை கேட்காதவள் போலிருந்தாள்.

“இந்த ரெண்டு வருஷத்திலே நூறுதடவையாவது கேட்டிருப்பான், என்ன நடந்தது சொல்லிடுன்னு. கெஞ்சியிருப்பான், மிரட்டியிருப்பான், மன்றாடியிருப்பான். ஒண்ணுமே நடக்கலைன்னு சொல்லி நீ கதறி அழுதிருப்பே. ஆயிரம் சத்தியம் பண்ணியிருப்பே. அப்ப ஏன் அப்ப அப்டி அழுதேன்னு அவன் கேட்கிறப்ப தெரியாதுன்னு சொல்லி மறுபடியும் அழுதிருப்பே..”

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து “ஆமா”என்றாள்.

“அவனை போட்டு வதைக்கிறே. அவனால அந்த ஒரு சந்தேகத்திலே இருந்து வெளியே வரவே முடியாது. நஞ்சு மாதிரி அவனை அது கொன்னிட்டிருக்கு.”

அவள் உதட்டில் மிகமெல்ல ஒரு புன்னகை வந்தது. தலையை சற்றே சொடுக்கியபடி தூக்கி “ஆமா” என்றாள்.காதோர மயிரை கைகளால் நீவி பின்னாலிட்டாள்.

நான் பெருமூச்சுவிட்டேன். அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

“அவர் எனக்கு பண்ணினது உங்களுக்கு தெரியாது. சந்தேகம் சந்தேகம் சந்தேகம்… என் வாழ்க்கையை நரகம் ஆக்கினார். அடிச்சிருக்கார், கரண்டியாலே சூடு வைச்சிருக்கார்.”

“ஏன்? அவனுக்கு செக்ஸிலே ஏதாவது பிரச்சினையா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“ஸோ?”என்றேன்.

“ஆமாண்டா அப்டித்தான்னு சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைக்கணும்னு நினைச்சிட்டே இருப்பேன். மனசிலே அந்த சந்தர்ப்பத்தை ஆயிரம் வாட்டி கற்பனை செஞ்சிருப்பேன்…”

“அப்ப அதைச் சொல்லியிருக்கணும் நீ.”

“அப்ப அவன் நிம்மதி ஆகியிருப்பான். இப்பதான் எரியும். எதையுமே முடிவு பண்ண முடியாம எரிஞ்சு எரிஞ்சு சாவான்.”

நான் மீண்டும் பெருமூச்சுவிட்டேன்.

“ஆனா நீ என்னை எரிய வைச்சிட்டே.”

“ஆமாம், நான் நினைச்சு நினைச்சு மறுகிட்டிருக்கிறது அதைத்தான். ஸாரி !ஸாரி! ஸாரி” என்றாள் “காலிலே விழுந்து ஸாரி கேட்கிறேன்னு நினைச்சுக்கிடுங்க.. இல்ல விழணும்னா விழுந்துடறேன்.”

“சரி விடு” என்றேன். “உன்னோட ஆட்டத்திலே நான் நடுவிலே மாட்டிக்கிட்டேன்.”

“ஸாரி.”

“ஓக்கே வா போலாம்.”

அவள் அங்கேயே நின்றாள்.

“வா” என்றேன்.

“அவன் மாசம் மூணுமுறை ஊட்டிக்கு வர்ரான் தெரியுமா?”

“எதுக்கு?”

“உங்களைக் கண்டுபிடிக்க… நேரிலே கேட்டுக்க.”

“ஓ” என்றேன் “நான் ஊட்டிக்கே வர்ரதில்லை. என் ஏரியாவையே மாத்திட்டேன்.”

“தோணிச்சு… ஆனா அவன் அந்த கல்லட்டி அருவி ஜங்ஷனிலே காரை நிப்பாட்டிட்டு எத்தனையோ நாள் காலையிலே இருந்து ராத்திரி வரை நின்னுட்டிருந்திருக்கான்.”

“அய்யோ” என்றேன். “நல்லவேளை.”

“அப்டி நின்னுட்டு மனம் உடைஞ்சு திரும்பி வருவான். எங்கிட்ட சொல்லி அழுவான். உண்மையைச் சொல்லு அன்னிக்கு என்ன நடந்ததுன்னு கேட்டு கண்ணீர் விடுவான். ஒண்ணுமே நடக்கலை, என்னை நம்புங்கன்னு சொல்லி நான் கதறுவேன். உண்மையிலேயே அழுகை ரொம்ப வந்திரும். ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிச் சொல்லி அழுவேன். ஏன்னா அது அப்டித்தானே?”

நான் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றுவிடவேண்டும் என்று விரும்பினேன்.

“இப்ப நான் ஏன் வந்தேன் தெரியுமா?” என்றாள்.

“சொல்லு.”

“நேத்து அவன் கூட சண்டை. அம்மாவிட்டுக்கு கிளம்பினேன். சட்டுன்னு ஊட்டிக்கு வந்து கல்லட்டி ஜங்ஷனிலே நிக்கணும்னு தோணிச்சு. உங்களை அங்க பாக்கமுடியும்னு”.

“எதுக்கு?”

“சும்மாதான். அபத்தமாத்தான் இருந்தது. ஆனா அப்டி கற்பனை செஞ்சுக்க பிடிச்சிருந்தது. அங்க போய் நின்னுட்டிருந்தேன். மனசு அப்டி இனிச்சு கிடந்தது…”

“ஏன்?” என்றேன்.

“ஏன்னா நான் அந்த பைக்ல வந்ததை மனசுக்குள்ளே அப்டி கற்பனை செஞ்சுட்டே இருந்தேன். உள்ளுக்குள்ள வளந்துட்டே இருந்தது. இப்ப எனக்கு பிரைவேட்டா இருக்கிற டே-டிரீம்னா அதுதான். ஐ அம் லிவிங் இன் இட்” என்றாள் ‘கல்லட்டி ஜங்ஷனிலே நானே கற்பனையிலே நூறுவாட்டி நின்னிருப்பேன். நேர்ல நிக்கிறப்பவும் அப்டி ஒரு ஸ்வீட்டா இருந்தது”

நான் மூச்சுத்திணறினேன். அவள் விழிகளில் அத்தகைய தருணங்களில் பெண்களுக்கு வரும் துணிச்சலும் விந்தையானதொரு கூர்மையும் தோன்றின.

“இப்ப வேணும்னா ஆமாடா அப்டித்தான்னு சொல்லீருவேன்.”

“என்ன?” என்றேன்.

அவள் சற்று முன்னடைந்து அப்படியே நின்றாள். இலைநுனி நீர்த்துளியில் உதிர்வதற்கு முந்தைய கணத்தில் தோன்றும் ததும்பல் அவள் உடலெங்கும் நிறைந்திருந்தது.

நான் அறியாமல் கைநீட்டி அவள் இடையை சுற்றி பற்றிக்கொண்டேன். அவள் “ம்ம்” என்ற முனகலுடன் என்னை சுற்றி அணைத்து தன் மார்புகளை என் மார்பின்மேல் பதித்து முகத்தை மேலே தூக்கிப் பார்த்தாள்.

அவளுடைய மாநிறம் அனல்பட்டதுபோல செம்மைகொண்டிருந்தது. உதடுகள் நீர்ப்பரவலுடன் உயிரசைவுடன் அண்மையில் தெரிந்தன.

நான் மிகமிக குரூரமான ஓர் உணர்வை அடைந்தேன். அவளை உந்தி விலக்கினேன்.

அவள் தன்னையறியாமலேயே கை பதற என்னை பற்றவந்தாள். அவளை விட்டு விலகி என் பையை எடுத்துக்கொண்டு நடந்தேன்.

எனக்குப் பின்னால் அவள் மூச்சிரைத்தாள். பையை எடுத்துக்கொண்டு அவள் என் பின்னால் வரும் ஓசை கேட்டது.

நான் ஓரிரு அடிகள்தான் புன்னகையுடன், உடலெங்கும் பரவிய திளைப்புடன் நடந்தேன். அதன்பின் என் கைகால்கள் தளர்ந்தன. நெஞ்சு முழுக்க வெறுமை பரவியது. கசந்து கசந்து கசந்து சாலை நோக்கி சென்றேன்.

***

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–55

$
0
0

பகுதி ஐந்து : எரிசொல் – 1

தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரின் காட்டில் மலைப்பாறை ஒன்றின்மேல் நரை எழா குழல்கற்றையில் மயில்பீலி விழி நலுங்கி அசைய மடியில் வேய்குழலுடன் கைகளை மார்பில் கட்டி இளம் புன்னகையுடன் விழி மூடி அமர்ந்திருந்த இளைய யாதவரின் முன் அமர்ந்து முதிய சூதன் தன் இரு விரலால் குறுமுழவை மீட்டி பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியத்தில் அகவை ஒலியில் பாடிக்கொண்டிருந்தான்.

அவன் மலையிறங்கி நெடுந்தொலைவு கடந்து அங்கே வந்து சேர்ந்திருந்தான். வழி தவறி மலையடுக்குகளில் அலைந்து உயிர்பிரியுமோ என்று அஞ்சும் இறுதியில் சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே மண்மடிந்து மலைச்சரிவு என்றாகி இறங்கி வந்து வளைந்தெழுந்து மேலே செல்லும் கணவாயின் விளிம்பில் வந்து நின்றான். கீழே பசுமை நிறைந்து பின்மாலை ஒளியில் அலைகொண்டிருந்த அப்பள்ளத்தாக்கை பார்த்தான். அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்தது அந்தப் பீலிவிழி. “இசையிறையே, என்னை காத்தருள்க!” என்று கூவி கண்மூடி வேண்டிக்கொண்டபின் அவன் அந்த ஊரை நோக்கி சென்றான்.

அந்த ஊரை அடைந்த பின்னர்தான் அங்கே தங்கியிருந்தவர் எவர் என்று அவன் உணர்ந்தான். இரு கைகளையும் தலைமேல் தூக்கியபடி அலறிக்கொண்டு அவன் அவர் தங்கியிருந்த சிறுகுடில்முன் சென்று முற்றத்தில் முகம் அறைய விழுந்தான். “புவிக்கிறைவா, நீ அமர்ந்திருக்கும் ஆலயம் இதுவா?” என்றான். இளைய யாதவர் புன்னகைத்து “இதுவும்தான்” என்றார். “இது என்ன கோலம்? ஏன் இங்கிருக்கிறீர்கள்? அறிந்தீர்களா, உங்கள் மாநகரை கடல்கொண்டது. உங்கள் மைந்தர் திறமறிந்து நிலம்மாறினர். நீங்கள் விண்புகுந்துவிட்டீர்கள் என்றே பேசிக்கொள்கிறார்கள்” என்றான் முதிய சூதன்.

“இன்னும் விண்புகவில்லை. இன்னுமுள்ளன கடன்கள்” என்றார் இளைய யாதவர். “விண்ணுறைவோனே, உனக்குமா கடன்?” என்று முதிய சூதன் கேட்டான். “மானுடன் செயலாற்றாமல் இருக்கவியலாது. செயல் மறுசெயல்கொண்டது. ஒன்றுதொட்டு ஒன்றென விரிவது. எவரும் அதை கடக்கவியலாது” என்று இளைய யாதவர் சொன்னார். “செயல்கடந்தவர் சிலர். செயலுக்கு மறுசெயலாற்றி திகைந்து மீள்பவர் சிலர். நான் இரண்டாமவன்.” முதிய சூதன் “யாதவரே, ஏன் இங்ஙனம் ஆயிற்று?” என்று கண்ணீருடன் கேட்டான். “நான் உம்மிடம் கேட்கவேண்டிய வினா அல்லவா அது? கூறுக, ஏன் இங்ஙனம் ஆகிறது?” என்றார் இளைய யாதவர்.

“நானறிந்ததெல்லாம் கதைகளே. நாவும் செவியும் பரிமாறிக்கொள்ளும் சொற்கள் மட்டுமே” என்றான் முதிய சூதன். “எனில் அதை சொல்லுங்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவற்றுக்கு என்ன பொருள்?” என்று முதிய சூதன் கேட்டான். “இங்கே பொருளென்று ஏதுமில்லை. பொருளென எதையேனும் கொள்ளமுடியும் என்றால் அது கதைகளின் உட்பொருளை மட்டுமே” என்றார் இளைய யாதவர். “சொல்லுங்கள், உமது கதைகள் சொல்வதுதான் என்ன?” முதிய சூதன் “அதை நான் பாடுகிறேன். அதற்காகவே இங்கே நான் கொண்டுவரப்பட்டேன் போலும்” என்றான்.

கேளுங்கள். விண்முன் பிறிதொரு விண் என விரிந்த நகர்கள் பல இப்புவியில் இருந்ததுண்டு. சூரபத்மனின் வீரமாகேந்திரம், மகி‌ஷாசுரனின் மாகிஷ்மதி, நரகாசுரனின் பிரக்ஜ்யோதிஷம், ஹிரண்யகசிபுவின் மகாகாசியபபுரி, ஹிரண்யாக்ஷனின் ஹிரண்யபுரி, ராவணனின் இலங்கை… அவ்வண்ணம் எத்தனை! கல்வி பொலிந்தவை, கலை சிறந்தவை, செல்வம் எழுந்தவை, புகழ் பெருகியவை. சொல்லில் மட்டுமே தடம்விட்டு அவை மறைந்தன. அவை எங்ஙனம் அழிந்தன? நான் நான் எனும் ஆணவம் அந்நகரென விரிந்தது. அதை தெய்வங்கள் பொறுப்பதில்லை. ஆணவத்தை வெல்ல எழுகிறது தெய்வம்.

எதன்பொருட்டென்றாலும் ஆணவத்தை தெய்வங்கள் பொறுத்துக்கொள்வதில்லை. சில தருணங்களில் ஆணவம் அறத்தின் படைக்கலமாகிறது. அழியாச் சொல்லொன்றை உருவாக்கும் பொருட்டோ பெருங்கலை ஒன்றை நிகழ்த்தும் பொருட்டோ கூர்கொண்டு வான்தொட எழும் ஆணவங்கள் உண்டு. அவை தெய்வங்களுக்குரியவை. எனினும் அவற்றையும் தெய்வங்கள் விரும்புவதில்லை. தெய்வங்கள் பேராணவங்களை பலிவிலங்குக்கு உணவளிப்பதுபோல் பேணுகின்றன. அவை விளைந்தபின் தங்கள் அவியென கொள்கின்றன.

தெய்வங்கள் என்பவை என்ன? இப்புடவி அவி விறகெனில் இதில் எழும் அனலே தெய்வங்கள். விறகிலுறைகின்றன மூன்று அனல்கள். நெய்யில் உறைகின்றன மூன்று அனல்கள். கனிகளில், மலர்களில் உறைகின்றன மூன்று அனல்கள். ஆணவம் எழும் அம்மானுடனின் அகத்திலேயே உறைகின்றன அவனைக் கொன்று பலிகொள்ளும் தெய்வங்கள்.

முன்பு மூவுலகையும் வென்று மும்முடி சூடிய நரகாசுரன் தன் பெருநகரை முழுதுற அமைத்த பின்னர் அதன் நடுவில் விண் சுட்டும் விரலென எழுந்த காவல்கோட்டத்தின் மேலே ஏறி நின்று சுழன்று அதை நோக்கினான். “என்னையன்றி இதை அழிக்க எவரால் முடியும்!” என்று கூறி அவன் நகைத்தபோது அருகிலிருந்த இளையவரும் படைத்தலைவர்களும் திகைத்தனர். “ஆம், மூன்று தெய்வங்களாலும் இயலாது. ஆனால் நான் ஒற்றை சுட்டுவிரல் நீட்டி இதை அழிப்பேன்” என்று அவன் கூறினான். அச்சொல்லை அவன் இளையோன் குறி தேரும் நிமித்திகனிடம் கூறி “கூறுக நிமித்திகரே, அதன் பொருளென்ன, அத்தருணத்தில் அது எழுந்ததற்கு அடிப்படை என்ன?” என்று கேட்டான்.

நிமித்திகன் “உள்ளிருந்து அதை சொன்னது ஒரு தெய்வம். தருக்கி, தன்னைப் பெருக்கி எழும் ஒருவன் தனக்கு மேலாக அப்படி ஒரு தெய்வத்தை உருவாக்கி நிலைநிறுத்தவில்லை எனில் இத்துலாக்கோல் நிலைகொள்ளாதென்று உணர்க! இன்று ஆணவமும் அத்தெய்வமும் முற்றிலும் நிகர்நிலையில் நின்றிருக்கின்றன. ஆனால் அது தெய்வம் என்பதனால் அது ஒருகணம் முந்தும். முந்தும் கணம் இந்நகர் அழியும். ஆக்கியவனே அழிப்பதுதான் அனைத்துப் பெருங்கட்டமைவுகள் கொண்டுள்ள அழியா ஊழ் என்கின்றன நூல்கள்” என்றான். “சிலபோது அவ்வழிவை ஆக்கியவன் தன் விழிகளால் காணாதொழியலாம். ஆயினும் அழிவை தொடங்கிவைத்துவிட்டே அவன் செல்ல முடியும்.”

துவாரகை இப்போது அழிந்துவிட்டது. அதன்மேல் விண்ணின் விசைகளால் கடலில் எழுந்த பேரலை வந்து அறைந்தது. கல்மேல் கல் இன்றி அது வீழ்த்தப்பட்டது. அதன்மேல் கடல்மணல் பரவியது. சூறைக்காற்றுகள் அதை சென்று சென்று அறைந்தன. சூழ்ந்திருந்த பெரும்பாலையில் இருந்து காற்று கடல்நோக்கி வீசியபோது அதன்மேல் மணல் பொழிந்தது. மேலும் மேலுமென அலைகள் வந்து அந்நகரை கடலுக்குள் இழுத்துக்கொண்டிருக்கின்றன. நீரில் இறங்கிச் சென்றுகொண்டே இருக்கிறது அப்பெருநகர்.

நிகழும் ஒவ்வொன்றும் முன்னரே சொல்லென்று நிலைகொள்கின்றன. சொற்கள் ஒவ்வொன்றும் முன்னரே எண்ணமென்று நிலைகொள்கின்றன. எண்ணங்கள் ஒவ்வொன்றும் இயல்கை என்று இப்புடவியில் நிலைகொள்கின்றன. இங்கே நிகழ்வன அனைத்தும் அவ்வண்ணம் நிகழ்ந்தேயாகவேண்டும் என்று வகுக்கப்பட்டவை என்பதே நூலறிவோர் கூற்று. நீர்படும் புணைபோல் இங்கே வாழ்வென்பதனால் எளியோரை இகழ்தலும் பெரியோரை வியத்தலும் இணையாகவே பிழையென்று அறிந்தனர் சான்றோர். அவர் வாழ்க!

கேளுங்கள் இந்தத் தொல்கதையை. முன்பொருநாள் முதுமுனிவர் விஸ்வாமித்ரர் துவாரகைக்கு வந்தார். அவர் அவந்தியில் இருந்து பெரும்பாலை நிலத்திற்குள் புகுந்து பல நாட்கள் நீரின்றி உணவின்றி நெடுந்தொலைவு நடந்து வெடித்துப் புண்ணான கால்களுடன், நீராடாமையால் அழுக்கேறிய உடலுடன், நைந்து உடலில் கிழிந்து தொங்கிய ஆடைகளுடன், தோளில் பகுத்திட்ட சடைக்கற்றைகளில் புழுதியும் சருகுப்பொடியும் நிறைந்திருக்க வந்து துவாரகையின் நுழைவுப்பெருவாயில் முன் நின்றார். மேலிருந்து அவரைக் கண்ட காவலன் படியிறங்கி ஓடிவந்து அவ்விசையிலேயே அவர் முன் முழந்தாளிட்டு நெற்றி நிலம்தொட வணங்கி “வருக முனிவரே, இப்பெருநகரம் தங்களால் வாழ்த்தப்பட்டது” என்றான்.

அவன் தலைதொட்டு வாழ்த்தி புன்னகைத்த விஸ்வாமித்ரர் “நான் இளைய யாதவரை பார்க்க வந்தேன்” என்றார். “வருக! அவர் தங்களால் வாழ்த்தப்படட்டும்” என்று அவன் சொன்னான். “என் தோற்றத்தை இவ்வண்ணம் கண்ட பின்னும் எவ்வாறு என்னை இந்த மங்கலப்பெருநகருக்கு வரவேற்கிறாய்?” என்று விஸ்வாமித்ரர் கேட்டார். “தங்கள் தோற்றத்தால்தான்” என்று அவன் மறுமொழி சொன்னான். “இந்நகரை இன்று பாரதவர்ஷத்தில் அனைவரும் அறிவார்கள். இங்கு தூய்மையும் மங்கலமும் கேளிக்கையும் நிலவுகிறதென்பதே உலகோர் சொல். திருமகள் கோயில் கொண்டுள்ள இந்த இடத்தை ஒவ்வொருவரும் நீராடி தூய்மை கொண்ட பிறகே அணுகுகிறார்கள். நெடுந்தொலைவு பயணம் செய்து வரும் வணிகர்கள்கூட சோலைகளில் தங்கள் ஆடைகளைத் திருத்தி குழல்திருத்தி முகம்மலர்ந்து நுழைகிறார்கள். இவ்வண்ணம் கடுந்தவக்கோலம் கொண்ட ஒருவர் இக்கோலத்தை தன் நோன்பெனக் கொண்ட ஒருவராகவே இருக்க இயலும்” என்றான் காவலன்.

விஸ்வாமித்ரர் உரக்க நகைத்து “மெய்” என்றார். “ஆயினும் என் வருகையால் இந்த நகரின் மங்கலம் குறைந்துவிடும் அல்லவா? என்னை இந்நகரில் பிறர் விழிகளில் இருந்து மறைத்து அழைத்துச் செல்ல அல்லவா நீ முயலவேண்டும்?” என்றார். “முனிவரே, அனைத்து அழகுகளும், அனைத்து மங்கலங்களும், அனைத்து வெற்றிகளும், அனைத்துப் புகழும் தவத்திற்கு ஒரு படி கீழானவையே என்கின்றன மூத்தோர் சொற்கள். தவத்தை விட பெரிய மங்கலமும், தவத்திற்கு நிகரான செல்வமும், தவத்திற்கு நிகரான புகழும், தவத்திற்கு நிகரான வெற்றியும் இப்புவியில் இல்லை. தவத்தை வணங்குகையிலேயே இவை ஒவ்வொன்றும் பொருள் கொள்கின்றன. தவத்தோடு முரண்கொள்கையில் மங்கலங்கள் குலைகின்றன, செல்வம் பயனிழக்கிறது, புகழ் வெறுங்கதையாகிறது, வெற்றி தலைகீழாகிறது” என்று அவன் கூறினான்.

“நன்று, இத்தெளிவு இந்நகரில் இருக்கும் வரை இது வாழும்” என்றபின் அவர் தங்கள் அவைக்கு வந்தார். நீங்கள் உங்கள் அரண்மனை முற்றத்தில் தொழுத கையுடன் இறங்கி வந்து முடித்தலையும் எட்டுறுப்பும் புழுதிபட வணங்கி அவரை தங்கள் அவைக்கு அழைத்துச் சென்றீர்கள். அவர் தங்கள் அவையில் அமர்ந்திருக்க நீங்கள் அரியணை அமராமல் சிறுபீடத்தில் அமர்ந்து அவர் உரைத்த விழுப்பொருளை கேட்டீர்கள். அன்று அப்பெருநகர் திரண்டு வந்து அவரை வணங்கியது. அதன் அனைத்து மங்கல அவைகளிலும் அவர் சென்று வீற்றிருந்தார். நகரின் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் அவரை தாள்பணிந்து வணங்கினார்கள். மங்கல அன்னையின் விழித்தோற்றமென எழுந்த எட்டு அரசியரும் அவர் அடிபணிந்தனர்.

விஸ்வாமித்ரர் அந்நகரிலிருந்து திரும்பிச்செல்கையில் அளித்ததன்றி பெற்றுக்கொண்டதென ஏதுமில்லை. அந்நுழைவாயிலைக் கடந்து செல்கையில் ஒருகணம் திரும்பி காலில் இருந்த புழுதியை தட்டிவிட்டு அக்கணமே அந்நகரை மறந்து அகன்றார். அவர் உரைத்த வாழ்த்துக்கள் மட்டும் அந்நகரில் எஞ்சியிருந்தன. அவர் வந்துநின்ற இடத்தில் இருந்து மண் எடுத்து கொண்டுசென்று துவாரகையின் தென்கிழக்கு அனல்மூலையில் சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டது. அவர் வந்துநின்ற அந்நாள் ஆண்டுதோறும் விழாவென்று கொண்டாடப்பட்டது. அன்று அனலெழுப்பி வணங்கி அவருடைய மெய்ச்சொற்கள் ஓதப்பட்டன.

அரசே, மீண்டும் ஒருமுறை அவர் துவாரகைக்குள் நுழைந்தார். அப்போது நீங்கள் துவாரகையை நீங்கி நைமிஷாரண்யத்தில் தங்கியிருந்தீர்கள். துவாரகை உங்களை மறுக்க முனைந்துகொண்டிருந்தது. மறுக்கும்பொருட்டு வெறுக்க முனைந்தது. வெறுக்கும்பொருட்டு உங்களில் இருந்து விலக முயன்றது. விலகும்பொருட்டு நீங்கள் கூறியவையும் இயற்றியவையும் காட்டியவையும் ஆகிய அனைத்துக்கும் எதிர்த்திசைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

விஸ்வாமித்ரர் துவாரகையின் நுழைவாயிலை அடைந்த அன்று அங்கு காவல்படைவீரர்கள் பெருந்திரளென காத்திருந்தனர். அவர்கள் அவந்தியிலிருந்து வந்துகொண்டிருக்கும் வணிகர் குழு ஒன்றுக்காக பொறுமையிழந்து நின்றனர். தோரணவாயில் மேல் ஏறி நின்றிருந்த வழிநோக்கி நெடுந்தொலைவில் நோக்கை நிறுத்தியிருந்தான். அப்போது துவாரகையில் சாம்பனின் ஆட்சி நிலவியது. சாம்பன் தன் நெடுங்குடியைச் சேர்ந்த நிஷாதர்களையும் அசுரர்களையும் படைகளில் பெருமளவுக்கு கலந்திருந்தார். மைய அரசுநிலைகள் அனைத்திலும் தன்னவரே நிலைகொள்ளவேண்டும் என்று முடிவு செய்திருந்தார். ஆகவே அசுரர் குடித்தலைவனாகிய விருஷபன் தலைமையில் அங்கு காவல் நிகழ்ந்திருந்தது.

அப்போது வணிக வண்டிகள் நகருள் நுழைகையில் அனைத்துக் காவல்நிலைகளிலும் அவர்களிடமிருந்து சிறு பரிசுகளும் கையூட்டுகளும் பெறுவது வழக்கமாக இருந்தது. முதலில் அதைக் குறித்த குற்றச்சாட்டுகள் சாம்பனின் அவைக்கு சென்றபோது சாம்பனின் அமைச்சரும் தங்கள் இளமைத்துணைவருமாகிய ஸ்ரீகரர் “அரசே, ஒருபோதும் இதை ஒப்பலாகாது. அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் அரசு அளிக்கும் நெறிகளை மீறி இவ்வண்ணம் தங்களுக்கென பொருள் சேர்க்கலாகுமெனில் அவர்கள் அரசெனும் நெறியை மீறுகிறார்கள். அரசென்பதே நெறிகளின் தொகுதியான ஒரு பெருநெறிதான். அதில் ஒரு நெறியை மீறுகையில் அரசை மீறுகிறார்கள் என்றே பொருள். அரசை மீறி ஒருவன் அரசின் முகமென அங்கிருக்கிறான் எனில் அந்த அரசு முற்றாக தோற்றுப்போகும். காவல்நிலைகளில் கையூட்டென்பது அரசன் கோலுடன் நின்று வழிப்பறி செய்வதற்கு நிகரானது” என்றார்.

ஆனால் அசுர குடியினராகிய அமைச்சர் வக்ரர் “நாம் நமது படைத்தலைவர்களுக்கு செல்வத்தை ஊதியமாக அளிக்கிறோம். அச்செல்வமும் இவ்வணிகரிடமிருந்து கொள்ளப்பட்டதே. வணிகர்கள் நேரடியாக அவ்வூதியத்தை கொடுக்கிறார்கள் என்று மட்டுமே இதை பொருள்கொள்ள வேண்டும்” என்றார். “நாம் எத்தனை ஊதியம் கொடுத்தாலும் கீழே உள்ளோர் நிறைவடைய மாட்டார்கள். தங்கள் தகுதிக்கு அதைவிட மிகுதியான செல்வம் கிடைத்தாக வேண்டும் என்ற எண்ணமே அவர்களை ஆட்டுவிக்கும். அவர்களே தாங்களும் சிறிது ஈட்டிக்கொண்டால் அது தங்கள் தகுதியினால் ஈட்டிக்கொண்டதாக எண்ணுவார்கள். அதனால் மகிழ்வார்கள். செயலூக்கம் கொண்டவர்கள் தங்கள் செயல்களால் ஈட்டப்படுவனவற்றிலேயே மகிழ்வார்கள்.”

வக்ரர் தொடந்து சொன்னார் “அரசே, ஆயிரம் பொன் ஊதியமாக பெறும் ஒரு படைவீரன் ஐந்து பொன்னை கையூட்டாக பெற்றால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சற்றேனும் சூறையாட ஒப்பாத படை வெற்றியை நாடுவதில்லை, சற்றேனும் கையூட்டு பெற வாய்ப்பற்ற அரசு நீடிப்பதில்லை என்பதே நடைமுறை. மாளிகைகளின் கற்களைத் தூக்கி அடுக்குகையில் சற்றே நெகிழ்வுடன் அவை அமைக்கப்படவேண்டும் என்று சொல்வார்கள். அவை தம்மைத் தாமே அசைத்து அமைத்துக்கொள்ள இடமளிக்கவேண்டும். அது போன்றதுதான் இது. இந்நெகிழ்வால் நாம் ஆற்றலுறுவோம் என்றே உணர்க!”

“அவர்களின் பற்றும் செயல்பாடும் அரசுக்கெதிராக இல்லாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை. சற்று அவர்கள் பொருளீட்டிக்கொள்ள நாம் ஒப்பினால் ஒவ்வொருவரும் மும்மடங்கு பணியாற்றுவாரகள். ஒவ்வொருவரும் தங்கள் நலனுக்குரியது என்று தாங்கள் கருதும் இவ்வரசை இறுதிவரை காத்து நிற்பார்கள். இதன் நிலைக்கோளும் வெற்றியும் அவர்களின் கூட்டுப்பொறுப்பு என்று ஆகுகையில் ஒவ்வொருவரும் தங்கள் முழு வீச்சையும் வெளிப்படுத்துவார்கள்” என்று வக்ரர் சொன்னார். “அறிக, அவர்கள் ஊதியத்துக்கு மட்டுமே பணியாற்றுவார்கள் எனில் அவர்களின் பணி எல்லைக்குட்பட்டது! அதை இடர்களில் நம்ப இயலாது. அதை நம் தேவைக்கேற்ப விரிக்கவும் இயலாது.”

ஸ்ரீகரர் “அரசே, பேரரசுகள் மெய்யான பெருநம்பிக்கையால் நிலைநிறுத்தப்படுபவை. தன்னலநோக்கால் அல்ல. குலப் பற்றால், இனப் பற்றால், அறப் பற்றால், இறைப் பற்றால் அவற்றின் அடித்தளம் அமையவேண்டும். தன்னலத்தால் அமைந்த பெருநகரங்கள் எதுவும் வாழ்ந்ததில்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் தன்னலமும் இன்னொருவரின் தன்னலத்துடன் முரண்படுவது. ஒரு நகரத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் கொள்ளும் ஒத்திசைவினால் அதன் ஆற்றல் உருவாகிறதே ஒழிய ஒருவரோடொருவர் போட்டி போடுவதனால் அல்ல. நாம் ஒருவரை கையூட்டு வாங்கவிட்டால் இன்னொருவரை வென்றே அவர் அதை கொள்ளமுடியும். ஒருவர் இன்னொருவரை அழித்தே தான் வெல்லமுடியும். நம்முடன் நாம் போரிடுவோம். நம்மைநாமே தோற்கடித்துக் கொள்வோம்” என்றார்.

ஸ்ரீகரர் சொன்னார் “எந்நிலையிலும் ஓர் அரசுக்கு அடிபணிந்து ஊழியர்களாக இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு தனிச்செயல்பாடு கொண்டிருக்கலாகாது. கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ தெரியாத மந்தணச் செயல்பாடுகள் எதுவும் கொண்டிருக்கலாகாது என்பதுபோல. ஏனெனில் ஒரு மந்தணம் பல மந்தணங்களை உருவாக்குகிறது. அது அங்கு நிற்பதில்லை. அரசு ஊழியன் ஒருவன் அரசு என நூல் வகுக்கும் ஒரு நெறியை மீறும் செயலை எவரும் அறியாது செய்தாலும்கூட அது குற்றமே. அரசு என்பது நெறிகளாலானது எனில் ஒவ்வொரு அரசு ஊழியனும் அப்பெருநெறியின் ஒரு கூறென அமையும் சிறுநெறிகளால் ஆனவன். அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியிடம், பொறுப்பு, எல்லை என்னும் மூன்று வரையறைகளை அவ்வூழியன் தலைக்கொண்டாக வேண்டும். அவற்றில் ஒன்றை மீறுவான் எனினும் அவன் தன்னை அக்கணமே ஊழியனல்ல என்று ஆக்கிக்கொள்கிறான். அவன் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது உயிர்நீக்கம் செய்யப்பட வேண்டும்.”

ஆனால் வக்ரர் நகைத்து “இந்தச் சொற்கள் நூல்கள் கூறும் உயர்கொள்கைகள் மட்டுமே. அரசே, எங்கும் எந்நகரிலும் இவை நடைமுறையில் இல்லை. மானுடரின் இயல்பென்பது விழைவுகளால் ஆனது. நாம் இங்கு முனிவர்களைக் கொண்டு அரசு நடத்தவில்லை. போர்வீரர்களைக் கொண்டு நடத்துகிறோம். அமைச்சர்களைக் கொண்டு நடத்துகிறோம். வணிகர்களைக் கொண்டு நடத்துகிறோம். வேளாண்குடிகளைக் கொண்டு நடத்துகிறோம். அமைச்சர்கள் பொன் விழைவதனால்தான் வேதம் துறந்து இங்கு வருகிறார்கள். வெற்றியையும் புகழையும் செல்வத்தையும் விரும்புவதனால்தான் படைவீரர்கள் வாளெடுத்து வருகிறார்கள். வணிகர்களை எல்லைகடக்கச் செய்வதும் வேளாண்குடிகளை மண்ணில் வியர்வை வீழ்த்தச் செய்வதும் பொன்னே. அரசே, விழைவே அந்தணரையும் ஷத்ரியனையும் வணிகனையும் குடிகளையும் இயக்குகிறது” என்றார்.

“அவ்விழைவை எட்டு தளைகளில் பிணைத்துவிட்டு அவர்களை பணியாற்றச் செய்ய எவராலும் இயலாது. அவர்கள் தங்கள் விழைவு நிலைபெறவும் மேலும் விழைவுகள் கொள்ளவும் முன்னேறிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும். அரசன் அவ்வாய்ப்பை அறிந்தே அளித்தாகவேண்டும். மீள மீள ஒன்றையே செய்யும் சலிப்பிலிருந்து படைவீரர்களை மீட்பது அது. ஒன்றையே எதிர்பார்க்க முடியும் எனும் சோர்விலிருந்து அவர்களை விடுவிப்பது. சற்றேனும் வேட்டையாட ஒப்பாவிட்டால் ஓநாயை வீட்டில் வளர்க்க இயலாது” என்றார் வக்ரர்.

சாம்பன் இருபுறமும் கேட்டு குழம்பியவர் போலிருக்க வக்ரர் உரத்த குரலில் “அரசே, இது அவையேயாயினும் நான் இதை கூறுகிறேன். ஒன்று எண்ணுக! நீங்கள் ஒரு படைவீரர் என காவல்கோட்டத்தில் அமர்ந்திருந்தால் எதை விரும்புவீர்கள்? வகுக்கப்பட்ட நெறிகளினூடாக ஒழுகிச் செல்வதையா, அன்றி வென்று முன்செல்வதையா? வகுக்கப்பட்ட வழியில் மாறாது அமைவது நோன்பு. அது படிவர்களுக்கும் வேதம்புரக்கும் அந்தணர்களுக்கும் உரியது. அவர்களின் தன்னிறைவு அதிலிருக்கிறது. மீறிச்சென்று வெற்றியை அடைந்து தானென தருக்கும் கணங்களை அடைவதே ஷத்ரியர்களின் வாழ்க்கை. அசுரர்களின் வாழ்க்கை. எதை நீங்கள் உங்கள் வீரர்களுக்கு பரிந்துரைப்பீர்கள்?” என்றார்.

சாம்பன் முடிவேதும் கூறாமல் அவையிலிருந்து எழுந்து சென்றார். ஆனால் அவர் வக்ரரின் முடிவையே எடுத்தார். எதுவும் அறிவிக்கப்படவில்லை எனினும் சிறிய குற்றச்சாட்டுகள் எவையும் கருத்தில் கொள்ளப்படவில்லை. அவை கருத்தில் கொள்ளப்படவில்லை என்று தெரிந்ததும் அவை சற்று பெரிதாயின. நகரெங்கும் அனைத்து வீரர்களுமே கையூட்டு பெறலாயினர். கையூட்டு பெற்றவர்கள் பெறாதவர்களைவிட செல்வமும் கோன்மையும் கொண்டவர்களாயினர். அவர்களை பிறர் மதித்தனர், அஞ்சினர். அவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்பட்டபோது கையூட்டு பெறாதவர்கள் தோல்வி அடைந்தவர்களாக மாறினர். அவர்கள் கையூட்டு பெற்றேயாக வேண்டுமென்ற அழுத்தத்தை அவர்கள் குடும்பமும் குடியும் சுற்றமும் அளித்தன.

நாளடைவில் நகரத்தில் கையூட்டு ஒரு நிலைபெற்ற வழக்கமாகியது. பின்னர் அது ஒரு முறைமையாகியது. முறைமையாகியதனால் சலிப்படைய வைத்தது. அம்முறைமையை மீறி மேலும் மேலும் பெரிய கையூட்டுகள் பெறும் வழக்கம் தொடங்கியது. அதன்பொருட்டு நெறிகளை மீறுவது வீரம் என்றும் அறிவு என்றும் ஆகியது. ஒருகட்டத்தில் படைவீரர்கள் ஒரு பொன் ஊதியமாக பெற்றால் பத்து பொன்னை கையூட்டென பெற்றனர். வணிகர்கள் அக்கையூட்டுக்கும் சேர்த்து பொருட்களை விலைகூறினர். பொருட்கள் விலையேறியபோது அதை வாங்குபவர் ஒவ்வொருவரும் மேலும் பொருள் சேர்க்க வேண்டியிருந்தது. ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் உழைப்புக்கும் தங்கள் பொறுப்பிற்கும் மேலும் பொருள் விழைந்தனர்.

அதன் விளைவாக எளியோர் மேலும் எளியோராயினர். செல்வர் மேலும் செல்வராயினர். துவாரகை ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே இருபெரும் பிரிவுகளாக பிரிந்தது. எதையேனும் செய்து பெரும்பொருள் ஈட்டும் வாய்ப்புடையவர்கள் அனைத்து நெறிகளையும் கடந்து அதை ஈட்டி அப்பொருளைக்கொண்டு மேலும் பொருள் பெருக்கி மேலும் நுகர்ந்து மேலும் இடம் தகைந்து எழுந்தனர். ஒருவரை நூறு பேர் பணிய வேண்டியிருந்தது. அந்நூறு பேர் உழைத்தாலும் எழமுடியவில்லை. அவர்கள் பணியுந்தோறும் இழந்தனர். இழக்குந்தோறும் மீண்டும் பணிந்தனர். ஏதிலிகளாயினர். அவர்கள் தங்களை மிதித்து ஏறி தலைமேல் அமர்ந்து ஆண்டவர்களை தகுதியால் வென்றவர்கள் என்று எண்ணினார்கள். ஆகவே அவர்களை வழிபட்டனர். என்றேனும் அவர்களைப்போல் தாங்களும் ஆகிவிட முடியுமென்று கனவு கண்டனர். தங்களைக் கொன்று புசிக்கும் புலியை தெய்வமென வழிபடும் வெள்ளாட்டுக்கூட்டங்களென மக்கள் ஆயினர்.

பிற நிலங்களில் பல ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றம் ஒரு சில மாதங்களில் துவாரகையில் நிகழ்ந்தது. ஏனென்றால் பல பல ஆண்டுகளாக தலைமுறைகளாக வளர்ந்து வரும் நகரங்கள் அவை. துவாரகையோ ஒரு தலைமுறைக்குள் பொங்கிப் பெருகி பேருரு கொண்ட நகரம். அங்கே ஒவ்வொன்றும் ஏழுமடங்கு விரைவில் நிகழ்ந்தன. அதன் ஆக்கமும் அழிவும் அவ்வண்ணமே. அங்கே கலையும் சொல்லும் வளர்ந்ததும் அவ்வண்ணமே. நாளில் நிகழ்வது கனவில் மின்னுகிறது என்பார்கள். பாரதவர்ஷத்தில் ஒரு விதை மண்கீறி எழும் பொழுதில் துவாரகையில் அது கனியாகிவிட்டிருக்கும் என்றனர் கவிஞர்.

அந்நகரில் அன்று நுழையவிருந்த வணிகர் குழுவிடமிருந்து கையூட்டு பெற்று பகிர்ந்துகொள்வதற்காக விழைவெழுந்து புலரிமுதலே காத்திருந்து பொறுமையிழந்து நிலைகொள்ளாமல் நின்றிருந்த படைவீரர்களுக்கு முன்னால் நெடுந்தொலைவில் தன்னந்தனியாக விஸ்வாமித்ரர் தோன்றினார். கிழிந்த தோலாடையும் புழுதிச்சடைகளும் கொண்ட தவக்கோலத்தில் நடந்துவந்து அவர்கள் முன் நின்றார்.

அரசே, அறிக! சில தருணங்கள் ஊழால் வகுக்கப்பட்டவை. அவை சொல்லை பொருள் தொடுவதுபோல சொல்லிமுடியாத நுண்மைகள் கொண்டவை என்றான் முதிய சூதன்.

தொடர்புடைய பதிவுகள்

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

$
0
0

பலிக்கல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

மனசாட்சியை துளைக்கும் இன்னொரு கதை பலிக்கல். அது ஒரு தெளிவை அளிக்கவில்லை. தெளிவில்லாத ஒரு பெரிய சக்தியை அடையாளம் காட்டுகிறது. திட்டவட்டமான விதிகளின்படி இந்த பூமி செயல்படுகிறது என்று எவரும் சொல்லமாட்டார்கள். பாவபுண்ணிய விதிகள் எல்லாம் தராசுத்தட்டு மாதிரி துல்லியமானவை அல்ல. ஆனால் ஏதோ ஒன்று இல்லாமலும் இல்லை. இந்த மர்மம்தான் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது

பாவபுண்னியத்தால் அல்ல நாம் அறியாத வேறொரு அலையால் இந்த வாழ்க்கை அலைக்கழிகிறது. இதில் நம்முடைய அன்றாடச் சின்ன லாஜிக்கை போட்டுப்பார்த்து கொக்கரிக்கிறோம். கெக்கலிக்கிறோம். ‘அப்படியானால் ஏன் இப்படி?’ என்றெல்லாம் நியாயம் பேசுகிறோம். ‘டேய் வெண்ணை, உன் சின்ன மூளைக்கு பத்தாம்கிளாஸ் சயன்சே புரியாது. விதியின் நெறிகள் புரியுமா” என்பதுதான் அதுக்கான பதில். புரியாது ஆனால் இருப்பது தெரியும். கலை அதை உணர்த்தத்தான் முடியும்

லாஜிக்கால் அதை அறியமுடியாது. லாஜிக்கை கொஞ்சம் கற்பனையால் ஒத்திவைத்தால்தான் அறிய முடியும். அதற்குத்தான் இலக்கியம். அல்லது வாழ்க்கையில் பொறிபறக்க ஒருசில மரண அடிகள் விழும். லாஜிக்கெல்லாம் சிதறிப்போகும். அப்போது புரியும். இலக்கியம் சொல்லிப் புரியாதவனுக்கு விதிதான் சொல்லிக்கொடுக்கவேண்டும்

 

மகாதேவன்  

 

அன்புள்ளஜெ,

 

“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறளை நெடுநாட்களாக உங்கள் மூலம் பின்தொடர்ந்து வருகிறேன். பின் தொடரும் நிழலின் குறல் நாவலே இக்குறளில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதன்பின் பல்வேறு கட்டுரைகள், சிறுகதைகளில் அந்த குறளின் பல்வேறு பரிணாமங்கள் உங்கள் எழுத்துக்களில் வந்தபடியே இருக்கின்றன. அக்குறளின் சாரத்தை பல்வேறு தளத்தில் விரித்து கொண்டே செல்கிறீர்கள்.அதன் மேல் உங்களுக்கு உள்ள தீர மோகத்தையும் காட்டுகிறது.

இந்த புனைவு களியாட்டு சிறுகதைகளிலும் அதன் தாக்கம் உள்ளது. ஓநாயின் மூக்கு முதல் பலிக்கல் வரை. ஔசேப்பச்சனின் கூறுமுறையும், கதையின் பல்வேறு அடுக்குகள் கலந்த வடிவ ஒருங்கும் , ஒநாயின் மூக்கு கதையை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. “இங்குள்ள நாம் அறியக்கூடிய விதிகளால் ஆட்டுவிக்கப்படுவது அல்ல என்றால் நாம் எப்படி வாழமுடியும்? எதை நம்பி முடிவுகள் எடுக்கமுடியும்? சரித்திரம் பிரம்மாண்டமானது. எண்ணி எண்ணி தொடமுடியாதது. அதிலிருந்து பேய்களும் சாபஙகளும் எழுந்துவந்து என்னை கவ்வும் என்றால் எனக்கு என்னதான் பாதுகாப்பு? ” , இந்த கேள்வியில் இருந்து இன்னும் விடுபட முடியவில்லை. அல்லற்பட்டு ஆற்றா கண்ணீர் காலவெளி கடந்து சுழற்றி தாக்கும்போது, யாரால் தாங்கமுடியும்.

அதன் மறுபகுதியான, இந்திய பெருநிலத்தின் மைய அற விழுமியமாக , ‘தர்மமே வெல்லும்’ என்ற சொற்கள் அர்த்தமற்ற ஒலியாகவே என்னனுள் பலகாலம் இருந்துவந்துள்ளது.  ஆனால் , அவ்விழுமியம் எப்படி இந்திய நிலங்களின் அனைத்து பகுதிகளிலும் பல்லாண்டாக வேரூன்றி வந்துள்ளது என்பதை உங்கள் எழுத்தின் வழி உணர்ந்து வருகிறேன்.  கதைகளை இப்படியெல்லாம் சுருக்க கூடாது என்றாலும், புறத்தில் சுறுக்குவதெல்லாம் அகத்தில் விரிப்பதற்கே. குருவிடமிருந்து வரும் ஆப்த வாக்கியமாக , இப்பொழுது அச்சொல்லை அசைபோடுகிறேன்.

 

கார்த்திக் குமார்

 

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

பத்துலட்சம் காலடிகளை இப்போதுகூட வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு கதை ஏன் வாசகர்களுக்கு முக்கியமாக ஆகிறது என்றால் அது அவனுடைய சொந்த வாழ்க்கையை எப்படியோ பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது என்பதனால்தான். தப்புசரிகளாலோ அரசியல்கருத்துக்களாலோ அல்ல அவன் ஒரு கதையை முடிவுசெய்வது. அவனுக்கு ஆழத்தில் அது எந்த வகையிலே அர்த்தமாகிறது என்பதை வைத்துத்தான். அந்தவகையில் பத்துலட்சம் காலடிகள் எனக்கு மிகமிக முக்கியமான கதை

என் வாழ்க்கையில் நிகழ்ந்த தவறுகள் அவற்றை நான் சரிசெய்துகொண்ட விதம் இன்றைக்கு நான் கொண்டிருக்கும் உறுதி இது எல்லாமே இந்த ஒரு கதையில் இருக்கிறது. பத்துலட்சம் காலடிகள் என்ற தலைப்பே அற்புதமானது. ஒரு நீண்ட பயணம் என்பது என்ன? சிலலட்சம் காலடிகள். ஒரு வாழ்க்கை என்பது சில ஆயிரம் நாட்கள். ஒரு தொழில் என்பது என்ன? சில ஆயிரம் பரிவர்த்தனைகள். ஒரு பரிவர்த்தனை தப்பாகப் போனால் என்ன? சொல்லமுடியாது. பத்துலட்சம் பரிவர்த்தனையும் தப்பாகப் போய்விடும். நான் அனுபவித்து அறிந்த உண்மை இது. அதைச் சொல்லும் கதைதான் பத்துலட்சம் காலடிகள்

 

எஸ்.மாதவன்

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

 

புனைவுக் களியாட்டு சிறுகதைகளில் பத்துலட்சம் காலடிகள் மகத்தான கதை. உண்மையில் அறம் வரிசையில் வைக்கப்பட வேண்டிய ஆனால் அறம் வரிசை மனிதர்களில் மிக வித்தியாசமான மனிதரும்கூட எம்.ஏ. அப்துல்லா சாகிப். அறம் மனிதர்கள் யாவரும் பின்தொடர்ச்சி இல்லாத எளிய மனிதர்கள், மகத்தானவர்கள் எனினும் அவர்கள் பின்னால் இருப்பது மானுடம் வழிவந்த அறம் தான். அவர்கள் ஒரு பாதையை உருவாக்கியவர்கள், தங்கள் பாதைகளுக்காக போராடியவர்கள். ஆனால் அப்துல்லா சாகிப் தான் கொண்டிருக்கும் ஒரு பெரும் குல மரபின் நீட்சி. ஒன்றை உருவாகிச்செல்பவர்களை விட வழி வழியாக வரும் ஒன்றை காக்க முயல்பவரின் துயரும் கடமையும் அதிகம். ஆனால் அதற்கான வலிமையை அவர் இயல்பிலேயே குருதி வழி பெற்றிருக்கிறார். “நான் அவர் முகத்தை பார்த்திருந்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த விழிகள். எத்தனை உறுதியான நரம்புகள் என்ற வியப்பே எனக்கு ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக தீயும் ரத்தமும் கண்ணீரும் கண்டவர்களுக்கு உரியவை” இருப்பினும் அது ஒன்றும் எளியது அல்லவே. அவர் சென்றநூற்றாண்டின் சொற்களில் வாழ்பவராக இருக்கலாம். ஆனால் இந்த நூற்றாண்டில் நாம் இழந்தது இதைத்தானே. எதற்கும் கட்டுப்படாதவர்களாக நம்மை காட்டிக்கொள்ள முற்படுகிறோம். அதனால் நாம் இழந்த ஒழுக்கங்களும் ஆழங்களும் உண்டல்லவா.

இந்த நூற்றாண்டின் ஒரு பெண்ணின் மனதை அறியும் ஒளசேப்பச்சன் கூட சென்ற நூற்றாண்டின் கடமைகளில் வாழ்பவரை அறிய முடிவதில்லை. ஆம், அவள் மனதை திறக்கிறாள். ஆனால் இங்கே சாகிப் மனம் திறந்தாலும் புரிந்துகொள்ள இயலாத பத்தேமாரி கப்பல்களின் சூத்திரங்களால் ஆனவர் அல்லவா. உண்மையில் இந்த கதையில் இருந்து மீட்பே இல்லை எனக்கு. வாள் கொண்டு நிறுவாத சொல்லுக்கு மதிப்பில்லை என்பது போல, தன் தலைமுறையின் சொற்களை காக்கும் வாள், சுல்தானின் வாளாக இருப்பதே சாகிப் தானே.

சாகிப்பின் characterization எழுந்து வரும் விதம் தான் கதைக்கு இத்தனை அழுத்தமும் வலிமையும் கொடுப்பது. ஒட்டுமொத்த கதையும் பத்தேமாரி எழுந்து வருவது போல ஆங்காங்கே கட்டப்பட்டு ஆனால் உறுதியாக ஒரு  அடிப்படையை கொண்டு மேலெழுகிறது. கப்பல், சூத்திரம், கலாசிகள், பெண், காதால், அறம், என எல்லாவற்றையும் இணைத்து நீங்கள் கட்டிய கதையும் பத்தேமாரி போல அத்தனை வலிமையானது. அதனடியில் நிற்பது ஜே வின் சூத்திரம் தான். பத்துலட்சம் காலடிகளின் பத்தேமாரி என் மனதின் புயல்களை கிளப்பிவிட்டு ஒய்யாரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் இன்னும் நெடுங்காலம் கடல் கொந்தளிப்பில் இருந்தாக வேண்டும்.

அன்புள்ள ஜே, ஒரு குட்டி வாசகனின் எளிய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும். கண்டிப்பாக புனைவுக் களியாட்டு கதைகள் பதிப்பில் வரவேண்டும். அது பத்துலட்சம் காலடிகள் என்னும் தலைப்பிலேயே வரவேண்டும். வானும் கடலும் நீலம் கொண்டு அதில் பத்தேமாரி கப்பல் எழுந்து வருவது போல படம் கொண்ட அட்டையுடன் புத்தகத்தை கற்பனை கூட செய்துகொண்டேன்.

 

இப்படிக்கு தங்கள்    அன்புள்ள    வாசகன்,

 

பிரேம் குமார் ராஜா.     

 

 

 

தொடர்புடைய பதிவுகள்


நற்றுணை,லீலை -கடிதங்கள்

$
0
0

நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நற்றுணை கதையை கொஞ்சம் தாமதமாக வாசித்தேன். இந்தக்கதையை வாசித்தபோது இதற்குச் சமானமான ஒரு தொன்மம் நம் மரபில் எங்காவது இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்தக்கதை அப்படியே ஜோன் ஆஃப் ஆர்க் கதையின் பாணியில் அமைந்திருந்தது. ஜோன் தன்னுடைய 13 ஆவது வயதில் தேவதைகளை நேரில் காண ஆரம்பித்தாள்.படிப்பறிவில்லாத பிரெஞ்சு கிராமத்துப்பெண் பிரெஞ்சுப் படைகளுக்கு தலைமைவகித்து பலமுறை பிரிட்டிஷ் படைகளைத் தோற்கடித்தாள். ஒரு வீரத்தளபதியாக மாறினாள். அவளுடைய நம்பமுடியாத வீரம் அவளுடன் இருந்த தேவதைகளால் அருளப்பட்டது

Joan of Arc

அதன்பின்னர் அவள் சாத்தான் வழிபாட்டாளர் என்று பிரெஞ்சு திருச்சபையாலேயே குற்றம்சாட்டப்பட்டாள். சாதாரணமான ஒரு பெண்ணுக்கு எப்படி இந்த அளவுக்கு ஆற்றல் வரமுடியும்? எப்படி இந்தத் தடைகளை கடக்கமுடியும்? விசாரணையில் ஜோன் தன்னுடன் இருந்த தேவதைகளைப் பற்றி சொன்னாள். அவள் சாத்தான்வழ்பாடு கொண்டவள் என்று குற்றம்சாட்டப்பட்டு மதகுருக்களால் எரித்துக்கொல்லப்பட்டாள். ஆனால் பிறகு அவளை ஒரு தேசியவீராங்கனை என்று அடையாளம்கண்டனர். அவளை கொண்டடினர்.

அம்மிணி தங்கச்சிக்கும் ஆற்றல் வருவது ஜோன் ஆஃப் ஆர்க்கைப்போலவே தான். இருகதைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை மலைக்க வைக்கிறது.இது ஒரு மனம்சார்ந்த ‘டெம்ப்ளேட்’ ஆக இருக்கலாம். உலகம் முழுக்க இந்த நம்பிக்கை இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மகேஷ்

Mangammal

அன்புள்ள மகேஷ்

இஷடதேவதை என்ற கருத்து இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. இஷ்டதேவதை தன்னுடன் இருந்து தன்னை வழிநடத்துகிறது என்ற நம்பிக்கை. அது உடையவர்கள் இன்றும் உண்டு.  இங்கும் ராணி லக்ஷ்மிபாய்க்கு அப்படி இஷ்டதேவதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ராணி மங்கம்மாளின் கதையும் ஏறத்தாழ இதுதான். அவர்களுக்கும் இதேபோல இஷ்டதேவதை வழிபாடு இருந்தது. நற்றுணை கதைக்கு மிக நெருக்கமானது ராணிமங்கம்மாளின் கதை. நற்றுணை என்ற தலைப்பே இஷ்டதேவதை, அணுக்கதேவதை என்ற கருத்தையே குறிக்கிறது

அக்கருத்தில் எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு. கண்ணகிக்கு அப்படி ஒரு இஷ்டதேவதை உண்டு என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆகவே கவுந்தியை கண்ணகியின் இஷ்டதேவதை- வழித்துணைதேவதை என்று உருவகித்து 1995ல் ஒரு கதை எழுதினேன். அதன் விரிவான வடிவை கொற்றவையில் காணலாம். கொற்றவையில் கவுந்தி நீலியாக வருகிறாள். நற்றுணை ஒருவகையில் கொற்றவை நாவலின்  இன்னொரு வடிவம்

ஜெ

***

வணக்கம் ஜெ

நற்றுணை சிறுகதையை வாசித்தேன். பெண்கள் கல்வி சாத்தியப்பட தாண்டிய பலநூறு தடைகளைக் கண்டறிய முடிந்தது. மரபுகளால் உருவாகியிருந்த  தடைகளை அங்கிருந்தே உருவான யட்சியால் அடித்து உடைத்து வென்ற பெண்ணின் கதை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. பெண்களின் ஆற்றலின் வடிவங்களில் ஒன்றுதான் யட்சியாக உருமாறியிருக்கிறது. தனக்குள் ஒரு யட்சியைக் கண்டடைய செய்யும் கதை.

அரவின் குமார்

***

லீலை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இதுவரை இந்தக் கதைவரிசையில் வந்த கதைகளில் இருந்து முழுக்க மாறுபட்டது லீலை. இதில் கவித்துவமான குறிப்புகள் இல்லை. கதைமுழுக்கமுழுக்க நடைமுறை யதார்த்தத்துடன் நிகழ்ச்சிகள் வழியாகச் செல்கிறது. ஒரு சிறிய முடிச்சுதான். கடைசியில் ஏன் அவன் சிரித்துக்கொண்டே போகிறான்? ஏனென்றால் அவன் பெண்ணின் லீலையை அறிந்துவிட்டான். அந்த வயசில் அது ஒரு பெரிய அனுபவம்தான். அவன் அவள் மேல் கொள்வது ஜூவனைல் லவ். அவன் மனதை அவள் கொள்ளை கொள்கிறாள். எம்ஜிஆர் சிவாஜி எல்லாமாம மாறி அவளுடன் ஆடுகிறான்

அவள் அப்படி ஏமாற்றிவிட்டு ஓடும்போது மனம் சோர்ந்துவிடுகிறான். ஆனால் அவளுடைய சூழ்ச்சிகளை எல்லாம் பெண்ணின் தந்திரங்களாக பார்த்ததுமே அவன் அடல்ட் ஆகிவிட்டான். இனி அவன் பெண்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் செய்வான்

சாரங்கன்

***

ஜெ அவர்களுக்கு,

லீலை சிறுகதையை படித்தேன். நீங்கள் சொல்லியவை தான், வாசகன் கதை முடிவை பற்றி என்ன நினைக்கிறான் என்று ஊகித்து அதற்கு நேர் எதிராக கதையை முடித்து, அதிலிருந்து முன்னகர்த்தி மேலும் விரிவான கதையை கற்பனை செய்ய வைக்கிறது. அப்படி பார்க்கையில் திருப்பமானது, ஊர் மக்களிடம் வாங்கிய பணத்தை குழுவாக எடுத்து செல்வார்கள் என்று ஊகித்தேன். அது இல்லாமல் தட்சாயிணி  அதை எடுத்து செல்வது, தட்சாயிணியாய் இருந்து ரெஜினாவாக மாறிய கதை,   கடைசியான  லீலா என்பதான திருப்பம் மூலம் சொல்லப் பட்ட துணுக்கு,  அவளுடைய கணவன் எதனால் ஜெயிலுக்கு சென்று இருப்பான் என்று மேலும் கதையை விரிவடைய வைக்கிறது.

இப்படிக்கு

மணி

***

தொடர்புடைய பதிவுகள்

சித்திரைநிலவு- கடிதங்கள்

$
0
0

 

இனிய ஜெயம்

 

இன்று சித்திரை முழு நிலவு நாள். பெரும்பாலும் இன்று அருணை மலையில் வ்ருபாக்ஷ குகையில் இருப்பேன். நிலவு பொழியும் அருணைக் கோவிலை, வரை குகை வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அதீத அனுபவம். ரமணரின் இருப்பை அப்போது நான் உணர்வதாக நினைத்துக் கொள்வேன்.  ரமணர் எந்த குகையில் அமர்ந்து எந்த நிலவை எந்தக் கோவிலை பார்த்துக்கொண்டிருந்தாரோ அதே நிலா அதே குகை அதே கோவில். ஆனால் நான் மட்டும் ரமணன் இல்லை. பார்ப்போம் இருக்கவே இருக்கிறது வேறு பல பிறவிகள். புல்லாய் பூண்டாய் புழுவாய் இங்கே மீண்டும் மீண்டும் பிறப்பதே என் எண்ணம்.

 

இன்று மொட்டை மாடியில் நிலவின் கீழ் நின்றிருப்பேன். நீங்களும் நிலவு காணுங்கள் . :)

 

கீழ்கண்ட அருணைமலை வம்சி எடுத்தது.

 

கடலூர் சீனு

 

அன்புநிறை ஜெ,

மீண்டுமொரு சித்திரை முழுநிலவு. உலகமே வீடுகளுக்குள் தாளிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி இன்றைய சித்திரை நிலவு பயணிக்கும். மதுரையில் தனிமையில் மீனாட்சி அன்னையும் சுந்தரேஸ்வரும் மணமுடித்து இருக்கிறார்கள். ஆற்றில் அழகர் இறங்குவதற்கும் தடை. ஆனால் மண்டூகருக்கு சாப விமோசனம் உண்டாம், அதுவும் அழகர் கோவிலிலேயே இம்முறை. இன்று சாபங்களுக்கு விமோசனம் தரும் தினமும் போல என்று இன்றைய பலிக்கல் படித்ததும் நினைத்தேன்.

சென்ற ஆண்டின் ஒவ்வொரு முழுநிலவு நாளும் வேறு வேறு இடங்களில் இருந்தேன். நிலவுகளை சேகரித்துக் கொண்டிருந்தேன். முன் திட்டமல்ல; அப்படிச் சொல்ல முடியாது, என் திட்டமல்ல என்று மட்டும் சொல்லலாம். இப்போது அனைத்துப் பயணங்களையும் அங்கு கண்ட நிலவுகளையும் நினைவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த சித்திரை நிலவு எங்கோ தெரியவில்லை.

என்றென்றும் சித்திரை நிலவு இவ்வரிகளையும் ஆசிரியரின் பாதங்களையும் நினைவுறுத்தும்.

அது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் பேராசிரியரின் பாதங்களைப் பணிந்து அவரளித்த ஞானத்திற்கு கைமாறாக தங்களை முழுதளிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். “இச்சொல் இங்கு வாழவேண்டும். இது இந்நிலத்தின் விதைக்களஞ்சியம்” என்றார் ஜைமினி

மிக்க அன்புடன்,
சுபா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

போழ்வு [சிறுகதை]

$
0
0

கொல்லத்திலிருந்து நான் திருவனந்தபுரத்திற்கு வந்துசேர ஒரு பகலும் ஓர் இரவும் ஆகியது. காயல்வழியாக கொச்சுவேளி வரை படகில் வந்தேன். மூங்கில்பாயால் வளைவான கூரையிடப்பட்ட படகில் பகல் முழுக்க கரையோரமாக ஒழுகிச்சென்ற தென்னைமரக்கூட்டங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவை தொலைவிலிருந்து பார்த்தபோது புல்பத்தைகள் போல தோன்றின. கோடைகாலமாதலால் நீர் நீலத்தெளிவுடன் இருந்தது. அதில் அவ்வப்போது பச்சைத்தீவுகள் போல பாசிப்பரப்புகள் மிதந்து சென்றன.

இங்கெல்லாம் படகில் பாய்கள் இல்லை. துடுப்பு போடுவதுமில்லை. நீண்ட மூங்கில்கழிகளால் அடிநிலத்தில் ஊன்றி உந்தி படகை முன்னால் தள்ளுகிறார்கள். இருபது மனிதர்களும் ஏராளமான பொதிகளும் கொண்ட பெரிய படகை ஒரே ஒருவன் தள்ளுவான். ஆனால் நினைப்பதை விட விரைவாக இப்படகுகள் செல்லும். அவனுடைய தசைகள் இறுகி நெகிழ்ந்து நெளிந்துகொண்டிருப்பதை நீரின் அலைகளை பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டே இருக்கலாம்

நான் அவனுடைய பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். நான் இந்த மலபார் மண்ணுக்கு வந்தநாள்முதல் கேட்கும் பாடல். பரசுராமன் கோகர்ணத்தில் மலையுச்சியில் ஏறி நின்று தன் கோடரியை தூக்கி கடலில் வீசினார். கடல் பின்னகர்ந்து கேரளம் உருவாகி வந்தது. அதை அவர் ஐம்பத்தாறு நாடுகளாக பிரித்து அதற்குரிய அரசர்களை உருவாக்கினார். தொன்மையான கேரள மாகாத்மியம் என்ற சம்ஸ்கிருத நூலில் இச்செய்தி இருப்பதாக வில்லியம் கானர் என்னிடம் சொன்னார். ஆனால் அது இங்கே எல்லா நாட்டுப்புறப் பாடகர்களின் நாவிலும் இருக்கிறது.

ஆயுதத்தால் உருவான நாடு. நான் இங்கே வந்தபோது இந்த அபாரமான பசுமையை கண்டு மனம் பேதலித்தேன். என்னுடைய ஸ்காட்லாந்து போலவே பசுமை என்று தோன்றியது. ஆனால் இங்குள்ள பசுமை வெயிலில் வதங்கி மணம் எழுவது. நீராவி உமிழ்வது. பின்னர் தொடுபுழை கடந்து மேலேறி வாகைமண் மலையுச்சிகளுக்குச் சென்றபோது ஸ்காட்லாந்தின் அதே நிலத்தை, அதே பசும்புல்வெளிகளைக்கூட கண்டேன். என்னுடன் வந்திருந்த வில்லியம் கானர் “ஆமாம், பசுமைதான். ஆனால் பசுமைநிலங்கள் மதிப்பு மிக்கவை. அவற்றை வெல்லவும் ஆளவும் குருதி சிந்திக்கொண்டே இருப்பார்கள்” என்றான்.”இந்த சிறிய நிலத்தில் ஐம்பத்தாறுநாடுகள். அவை போர் ஓய்ந்து இருந்ததே இல்லை”

திருவனந்தபுரத்திற்கு நான் திடீரென்று கிளம்பவேண்டியிருந்தது. ஆகவே படகு எதையும் ஏற்பாடு செய்யவில்லை. கொல்லத்தில் ஸ்காட்டிஷ் மிஷன் ஆஸ்பத்திரியில் இருந்து என் உதவியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சொந்தமான குதிரைவண்டியில் காயல்கரைக்குச் சென்றேன். படகு ஏற்பாடு செய்ய நேரமாகும் என்றான் அங்கிருந்த படகுத்துறை காரியக்காரன். சரக்குப்படகு கிளம்பிக்கொண்டிருந்தது. ஏறிவிட்டேன். அது போதிய விசையுடன் செல்லவில்லை என்றால் வழியில் இறங்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது ஒருகட்டத்தில் காற்றில் பறந்து சென்றுகொண்டிருந்தது.

கொச்சுவேளியில் விடியற்காலையில் படகிறங்கினேன். அந்நேரத்தில் அங்கே குதிரைவண்டிகள் காத்திருந்தது ஆச்சரியம்தான். ஒற்றைக் குதிரைவண்டியில் ஏறி விரைவாக திருவனந்தபுரம் செல்ல ஆணையிட்டேன். வெளிச்சம் எழுந்துகொண்டிருக்கையில் ஸ்காட்டிஷ் மிஷனின் மிஷனரீஸ் ஆப் கிராஸ் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே என்  முகம்கழுவி ஆடைகளை மாற்றிக்கொண்டேன்.

கிளம்புவதாகச் சொன்னபோது ரெவெரெண்ட் ஜான் மாக்பை என்னிடம் “எங்கே செல்கிறாய்? இந்நேரத்தில் அரண்மனைக்குச் செல்வதென்றால் எவருக்காவது உடல்நிலை சரியில்லையா?” என்றார்.

“இல்லை, இது மருத்துவத்திற்காக அல்ல, இன்னொரு வேலையாக” என்று சொன்னேன்.

அவர் மேலும் கேட்கவில்லை. ஸ்காட்டிஷ் மிஷனின் ஒரு பகுதியாக மருத்துவப் பணியாற்றினாலும் நான் அவர்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவன் அல்ல, அதை அவர் அறிந்திருந்தார்.

குதிரைவண்டிக்குச் சொல்லியிருந்தேன். அது வந்து காத்திருந்தது. அதில் ஏறும்போது அவர் என் பின்னால் வந்து திண்ணையில் நின்றிருந்தார். “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று முறையாக அழைத்தார். “நாங்கள் உங்கள் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிட முடியாது. ஆனால் உங்கள் செயலால் எங்களுக்கு ஏதும் தீங்கோ தடையோ வந்துவிடக்கூடாது” என்றார்.

“வராது, நான் உறுதி அளிக்கிறேன்” என்றேன்.

“எங்கள் அதிகாரபூர்வ நிலைபாடு ஒன்று உண்டு. நமது பணி கிறிஸ்துவின் சொல்லை பரப்புவது, அதற்கான கல்வி, மருத்துவச் சேவைகளைச் செய்வது. உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. ஆகவே எந்த அரசு அமைப்புடனும் நெருக்கமாக இருப்பதில்லை.அரசகுடும்பத்தினரின் ஆதரவு நமக்கு தேவை, ஆனால் அதை மிகமிக அளவோடே வைத்துக்கொள்கிறோம்”.

“நானும் அப்படித்தான்” என்றேன்.

“நீங்கள் கிளம்பும் அவசரம் அப்படிக் காட்டவில்லை” என்றார் ரெவெரெண்ட் ஜான் மாக்பை. “நீங்கள் தளவாய் வேலுத்தம்பிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றே அறியப்பட்டிருக்கிறீர்கள்”.

“உண்மை அப்படி அல்ல. அவரை நான் பார்த்து ஓராண்டுக்குமேல் ஆகிறது”.

“ஆனால் இப்போது நீங்கள் அவரைத்தானே சந்திக்கப் போகிறீர்கள்?”

“ஆமாம்” என்றேன்.

“ஏன் என்று நான் கேட்கப்போவதில்லை”.

“அதை நானே சொல்கிறேன், இப்போது அல்ல” என்றபின் வண்டி நகரலாம் என்று கைகாட்டினேன். அவருக்கு தலைவணங்கினேன். அவர் சிலுவை காட்டினார்.

ரெவெரெண்ட் ஜான் மாக்பை பழையபாணி கிறிஸ்துவ ஊழியர். அவருடைய முகம் இந்த நிலநடுக்கோட்டுப்பகுதியின் வெப்பத்தால் வெந்து கன்றி செக்கச்சிவப்பாக, பெரிய பருக்களுடன் இருந்தது. இருந்தாலும் அவர் எப்போதும் கழுத்தை மூடும் தடிமனான அங்கியும் கழுத்துக்குட்டையும் தலையில் தொப்பியும் பட்டுக்கையுறைகளும் உயரமான தோல்காலணிகளும் அணிந்தே பிறர்முன் தோன்றினார். முறையான மொழியிலேயே எப்போதும் பேசினார்.

நான் தளவாய் வேலுத்தம்பியின் அரண்மனை அமைந்த நெடுந்தெருவின் முகப்பிலேயே ஈட்டியேந்திய காவலர்களால் மடக்கப்பட்டேன். அவர்கள் நான் அனுமதி பெற்றிருக்கிறேனா என்று கேட்டனர். என்னை அடையாளம் காட்டும் எவரேனும் அரண்மனையில் இருந்து வரவேண்டும் என்றனர். நல்லவேளையாக அங்கே பிரிட்டிஷ் சார்ஜெண்ட் ஒருவன்  தலைமைப் பொறுப்பில் இருந்தான். தொலைவிலேயே என்னைப் பார்த்தபின் அவன் அங்கிருந்து ஒரு சரடை இழுத்து மணியை அடித்தான். அவர்கள் பார்த்ததும் கையசைவால் ஆணையிட்டான். காவலர் என்னை உள்ளே செல்ல விட்டனர்.

அந்த சார்ஜெண்டை நான் அறிவேன். அவன் பெயர் பாட்ரிக் வால்ஷ். ஐரிஷ்காரன். நான் அவன் அருகே சென்று வண்டியில் இருந்து இறங்கியதும் “காலைவணக்கம், பாட்ரிக். என்ன நடக்கிறது? ஏன் இத்தனை காவல்?” என்றேன்.

“கலகத்திற்குப்பிறகு எங்கும் காவலை பலமடங்கு ஆக்கிவிட்டார்கள்” என்று அவன் சொன்னான். “இங்கே எந்த நாயர் அரசவிசுவாசி எவன் துரோகி என்று அவனுக்கே தெரியாது. சட்டென்று முடிவெடுத்து வாளை உருவிவிடுகிறார்கள்” புகைக்கறை படிந்த பற்களை காட்டிச் சிரித்து “கர்னல் மன்றோ கவலைகொண்டிருக்கிறார்” என்றான்.

நான் “உண்மைதான்” என்றேன். “நான் தளவாய் வேலுத்தம்பியை சந்திக்க வந்தேன். முக்கியமான செய்தி”.

“அவர் அறைக்குள் இருக்கிறார் என நினைக்கிறேன். இப்போதுதான் தூங்கி எழுந்திருப்பார். பத்மநாபன் தம்பி  அங்கே உள்கூடத்தில் இருக்கிறார்”.

“நன்றி பாட்”.

நான் உள்ளே சென்றேன். என்னை குச்சம் வைத்த தலைப்பாகை அணிந்த சட்டையில்லாத நாயர்வீரன் அரண்மனையின் கூடத்திற்குள் கொண்டுசென்றான். நான் வருவதை அறிவித்திருப்பார்கள். பத்மநாபன் தம்பி  உள்ளிருந்து வெளியே வந்தார். வெள்ளைவேட்டியை கால்சராய் போல அணிந்து, இடையில் மஞ்சள்நிற கச்சை கட்டி ,அதில் அலங்காரப் பிடிகொண்ட டச்சு உடைவாளை செருகியிருந்தார். வெண்பட்டால் ஆன தலைப்பாகை. அதன் முகப்பில் திருவிதாங்கூரின் சங்கு முத்திரை பொறித்த சுட்டி. கழுத்தில் ஒரு நீளமான மணிமாலை.

“வாருங்கள் டாக்டர்…” என்றார்.

“நான் தளவாய் வேலுத்தம்பி அவர்களை பார்க்கவந்தேன். ஒரு தனிப்பட்ட கோரிக்கை”.

“அவர் நேற்றிரவு மிகவும் பிந்தித்தான் தூங்கச்சென்றார். கர்னல் மன்றோவிடம் ஒரு சந்திப்பு. ஐரோப்பியர்கள் இரவில் நெடுநேரம் விழித்திருக்கிறார்கள். இங்கே அவர்களுக்கு உகந்த வெப்பநிலை இரவில்தான் அமைகிறது” என்றார் பத்மநாபன் தம்பி .கண்கள் சற்றே மாறுபட  “நீங்கள் கர்னல் மன்றோவை பார்த்துவிட்டு வருகிறீர்களா?” என்று கேட்டார்

“இல்லை, நான் நேரடியாக கொல்லத்தில் இருந்து வந்தேன்”.

“சற்று காத்திருங்கள்… நான் சென்று அவரை பார்த்துவிட்டு வருகிறேன்”.

பத்மநாபன் தம்பி ஒருபார்வையில் தளவாய் வேலுத்தம்பி போலவே தோன்றுவார். ஒருகணம் தளவாய் வேலுத்தம்பியை பார்த்துவிட்டோமா என்று ஐரோப்பியர் எண்ணுவார்கள். ஆனால் இவர் அவரைவிட நான்கு வயது இளமையானவர்,பத்துவயது இளைமையானவராக தோன்றுவார். இவரிடம் எப்போதுமே கண்களில் ஒரு புன்னகை இருக்கும். நிறையப்பேச விரும்புபவர் போலவும் கட்டுப்படுத்திக்கொள்பவர் போலவும் தோன்றுவார். தனியறைக்குள் சென்றால் மேலும் இளைஞராக ஆகி கைவீசி நடனமிடுவார் என்று நினைத்துக்கொள்வேன்.

நான் நாற்காலியில் அமர்ந்தேன். என் மருத்துவப்பெட்டியை கால்களுக்கு நடுவே வைத்துக்கொண்டேன். அதை கூடம் என்று சொன்னாலும் சற்றே பெரிய அறைதான். இரண்டு வாசல்கள். இரண்டிலும் திரைகள் ஏதும் இல்லை. வாசல்களுக்குமேல் வெண்கலத்தால் ஆன சங்கு முத்திரைகள் பதிக்கப்பட்டிருந்தன. இங்கே கூடங்களில் பங்கா தொங்கவிடும் வழக்கம் இல்லை. என் ஆடைக்குள் புழுங்கி வியர்வை நிறைய தொடங்கியது.

தளவாய் வேலுத்தம்பி எனக்கு அறிமுகமான அன்றே பத்மநாபன் தம்பியும் அறிமுகமானார். சொல்லப்போனால் அரைமணிநேரம் முன்னதாகவே. அன்றுமுதல் தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்ட நாட்கள் உண்டு. மிக நெருக்கமாகவே என்னிடம் பேசியிருக்கிறார், அவருடைய கவலைகளைப்பற்றி. ஐயங்களைப்பற்றி. அவருடைய குடும்ப வரலாற்றை விரிவாக என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் அவற்றை முறையாக எழுதி பதிவுசெய்து வந்தேன். அவர்கள் பொதுவாகவே ஐரோப்பியர் மேல் நம்பிக்கை கொண்டவர்கள். அச்சமே மிகுதி, அச்சம் அகன்றால் மிகமிக  அணுக்கமாக ஆகிவிடுவார்கள்.

நான் ஸ்காட்லாந்திலிருந்து 1798 ல் இந்தியா வந்தேன். கல்கத்தாவிலிருந்து 1801ல் கொல்லம் வந்து அங்கிருந்து திருவிதாங்கூரின் புதிய துறைமுகமான ஆலப்புழைக்கு வந்தேன். ஆலப்புழை ஸ்காட் மிஷன் ஆஸ்பத்திரியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில்தான் தளவாய் வேலுத்தம்பிக்கு சிகிழ்ச்சை அளிப்பதற்காக அழைக்கப்பட்டேன். அழைக்க வந்தவர் தன்னை மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை என்றும், தென்திருவிதாங்கூரில் ஆளூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும். வேலுத்தம்பி தளவாய்க்கு மிக நெருக்கமானவர் என்றும்  அறிமுகம் செய்துகொண்டார்.

வேலுத்தம்பி தளவாய் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்தார். ஆனால் அச்செய்தியை அவர் எதிரிகள் அறியக்கூடாது. ஆகவே  மிக ரகசியமான பயணம். ஆலப்புழையில்  தளவாய் வேலுத்தம்பியின் அரண்மனை துறைமுகத்திற்கு அருகிலேயே தனியான படகுத்துறையுடன் இருந்தது. ஆலப்புழை துறைமுகத்தை நிறுவிய ராஜா கேசவதாஸ் தனக்காக கட்டியது அது.அவர் அங்கே இரண்டு ஆண்டுக்காலம் தங்கியிருக்கிறார்

அது 1802 ஆம் ஆண்டு. வேலுத்தம்பி  திருவிதாங்கூரின் தளவாயாக பதவியேற்று மூன்றுமாதங்களே ஆகியிருந்தன. மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை என்னை உள்ளே அழைத்துச் சென்றார். பத்மநாபன் தம்பி உள்ளே தன் அண்ணனுடன் இருந்தார். அவர் வெளியே வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

தளவாய் வேலுத்தம்பி ஒரு தாழ்வான கட்டிலில் படுக்கவைக்கப் பட்டிருந்தார். அவருடைய விலாவில் ஆழமான வெட்டுக்காயம். அதற்கு உள்ளூர் முறைப்படி எண்ணைக்கட்டு போடப்பட்டிருந்தது. ஆனால் புண் புரையோடத் தொடங்கிவிட்டிருந்தது. கடுமையான காய்ச்சலில் அவர் வெந்தவர் போல் இருந்தார். காதுகள் ரத்தம்போல் சிவந்து வீங்கியிருந்தன

நான் அறைக்குள் நுழைந்தபோது ஓசைகேட்டு தளவாய் வேலுத்தம்பி திடுக்கிட்டு எழமுயன்றார். வலியால் இழுக்கப்பட்டு முனகியபடி படுக்கையில் சரிந்தார்.அருகே நின்றிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தார்கள். “டாக்டர்தான், ஐரோப்பிய டாக்டர்” என்றார்கள்.

நான் கட்டை அவிழ்த்துப் பார்த்தேன். புண் மிகப்பெரியது. அதற்கு தையல் போட்டாகவேண்டும். எரிசாராயத்தால் தூய்மை செய்யவேண்டும். ரத்ததில் நஞ்சு பரவாவிட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை. “அறுவைச் சிகிழ்ச்சை செய்யவேண்டும், அனுமதி உண்டா?” என்றேன்.

நான் அதைச் சொன்னபோது அவர் அருகே நின்ற பத்மநாபன் தம்பி “செய்யலாம். எதை வேண்டுமென்றாலும் செய்யுங்கள். ஆனால் இங்கே இவர் இந்நிலையில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது” என்றார்.

“இல்லை, நான் எவரிடமும் சொல்லப்போவதில்லை” என்றேன்.

“உங்கள் உதவிக்கு நீங்கள் எவரையும் அழைக்கக்கூடாது. மருந்துகள் பெறுவதாக இருந்தாலும் எவருக்கும் தெரியக்கூடாது”.

“இல்லை, நானே பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.

நான் புண்ணை எரிசாராயத்தால் கழுவி குதிரைவால் முடியால் தைத்தேன். கந்தகக்குழம்பை மேலே பூசினேன். பதற்றத்துடன் பத்மநாபன் தம்பி அருகே நின்றிருந்தார். மறுபக்கம் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை. நான் கைகழுவி வந்ததும் இருவரும் என்னருகே வந்தனர்.

பத்மநாபன் தம்பி கவலையுடன் “என்ன நிலைமையில் இருக்கிறார்?” என்றார்.

“பிழைத்துக்கொள்வார் என்றுதான் தோன்றுகிறது” என்றேன்.

“பிழைத்துக்கொண்டாகவேண்டும்… திருவிதாங்கூர் வாழவேண்டும் என்றால் அவர் பிழைத்தாகவேண்டும்” என்றார் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை. அவர் மிக உணர்ச்சிகரமான நிலையில் இருந்தார். கண்களில் கண்ணீரின் ஒளி இருந்தது.

என் அதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அவர் விரைவிலேயே குணமடைந்தார்.

என்ன நிகழ்ந்தது என்று பிறகு சொன்னார்கள். அவர் ஆலப்புழை அரண்மனையில் தன் படைத்தலைவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய படைத்தலைவர்களில் ஒருவனாகிய குஞ்சன் செறுமல்லன் என்பவன் அவரை கட்டாரியால் குத்தினான். அவனுடன் வந்த சிண்டன் மாராயன் என்பவனும் அவனுடன் சேர்ந்து குத்தினான். குஞ்சன் செறுமல்லனின் குத்தை அவர் கையால் தடுத்து உடலை விலக்கிக்கொண்டார். அந்த கட்டாரி நெஞ்சை தாக்காமல் அவர் விலாவை கிழித்துச் சென்றாலும் உயிரை எடுக்கவில்லை. சிண்டன் மாராயனை அவர் அருகே நின்றிருந்த மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை தடுத்து அவனை அங்கேயே வெட்டி வீழ்த்தினார்.

மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் பத்மநாபன் தம்பியும்தான் தளவாய்க்குரிய அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றினர். தளவாய் நோயுற்றிருப்பது அரசருக்குக் கூட அறிவிக்கப்படவில்லை. அரண்மனை முழுமையாகவே காவலில் இருந்தது. என்னை அங்கேயே ஓர் அறையில் தங்கவைத்தனர்.

மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் வேலுத்தம்பி தளவாயும் இளமைக்கால நண்பர்கள்.ஒரே வயதினர். கேரளபுரம் ஞாறய்க்கல் வெள்ளான் குறுப்பின் களரியில் இருவரும் சேர்ந்தே படைக்கலை பயின்றவர்கள். மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையிடம்தான் வேலுத்தம்பி தளவாய் கொஞ்சமேனும் சிரித்தார். அவருடன் தனித்திருக்கையில்தான் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பேசினார்.

வெளியே தளவாய் வேலுத்தம்பிக்கு எதிராக சூழ்ச்சிகளும் அவதூறுகளும் பரவிக்கொண்டிருந்தன. அவர் அரசரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு சிறுகுழுவை மக்கள்துணையுடன் அகற்றி தன்னை தளவாயாக ஆக்க அரசரை கட்டாயப்படுத்தி வென்றிருந்தார். அவரை பல்லாயிரம்பேர் காவல்தெய்வம் என்றும் வீரநாயகன் என்றும் கொண்டாடினர். அவரை கொல்லவும் சிலர் விரும்பினர்.

எவ்வகையிலோ எனக்கு தளவாய் வேலுத்தம்பி மேல் ஓர் ஆர்வம் எழுந்தது. அவர் நாளைய வரலாற்றில் நிலைகொள்ளப்போகும் ஒரு மாமனிதர் என எனக்குத்தெரிந்திருந்தது. அவரை வில்லியம் வாலஸ் போலவோ ராபர்ட் புரூஸ் போலவோ கற்பனை செய்துகொண்டேன். இளமை முதலே நான் கேட்டு வளர்ந்த புரட்சிவீரர்கள். மக்கள் நாயகர்கள். வேலுத்தம்பியும் அப்படிப்பட்டவர். அவர்களுக்கிடையே நிறையவேறுபாடுகள் உண்டு என தெரியாமல் இல்லை. ஆனால் ஒரு தனிமனிதர் வரலாற்றுக்கு குவிமையமாக ஆவது எப்படி, பல்லாயிரம் மனிதர்களின் சீற்றமும் கொந்தளிப்பும் அவர் வழியாக கடந்துசெல்வது எப்படி என்னும் அடிப்படைக் கேள்வியே என்னை அவருக்கு அணுக்கமாக ஆக்கியது.

வேலுத்தம்பி தளவாய் தன் உயிரைக் காப்பாற்றிய என்னிடம் சற்றே நெகிழ்வைக் காட்டினார். என்னைக் காணும்போது மெல்லிய புன்னகை ஒன்று வந்து மறையும். சொற்களில் சற்று மென்மை இருக்கும், அவ்வளவுதான். பொதுவாகவே அவர் மிகமிகக் குறைவாகவே பேசினார். எவர் சொன்னாலும் சிறிய விழிகளை தாழ்த்தியபடி அமர்ந்து கேட்டுக்கொண்டார். பெரும்பாலும் எதற்கும் தன் பதில் என்று எதையும் சொல்வதில்லை. அவர் சொல்வதெல்லாம் முறையான அரசாணைகளாகவே வெளிப்பட்டன.

பெரிய தலையும், சதுரமான முகத்தில் சற்றே பதிந்து பரவிய மூக்கும், தடிமனான உடலும் கொண்ட கரிய மனிதர். புதர்போல் செறிந்து கீழே வளைந்த மீசை. அவருடைய நீண்ட கூந்தலை பார்த்து முதல்முறை நான் வியந்துபோனேன். அதை சுருட்டிக்கட்டி அதன்மேல் பட்டுத்தலைப்பாகையை அணிவார்.

பத்மநாபன் தம்பி வந்து “வரலாம்” என்றார்.

நான் என் மருந்துப்பெட்டியுடன் எழுந்துகொண்டேன். நாங்கள் வேலுத்தம்பி தளவாயின் சிறிய படுக்கையறைக்குள் நுழைந்தோம். அவருடைய உருவத்திற்கு அது சிறிய படுக்கை. அந்த அறையே சாளரங்கள் இல்லாமல் சற்றே பெரிய மரப்பெட்டி போல் இருந்தது. காலையில் அவர் எழுந்ததும் பார்ப்பதற்காக நேர் எதிரில் ஒரு மேஜையில் மயிற்பீலியும் மலர்களும் கண்ணாடியும் வைக்கப்பட்டிருந்தது.

வேலுத்தம்பியின் கண்கள் களைத்து தசைகள் தளர்ந்திருந்தன. வாயின் இருபக்கமும் சுருக்கங்கள். அவர் நான் ஓராண்டு முன்பு கண்டதைவிட பல ஆண்டுகள் வயதானவர் போலிருந்தார். ஆனால் நன்றாக தடித்திருந்தார். வெயிலில் நிற்காமையால் வெளிறியும் இருந்தார்.

நான் அவருடைய நாடியை பிடித்துப் பார்த்தேன். அவருடைய கண்களையும் நாக்கையும் பார்த்தேன். அவர் உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டிருந்தது.

“நீங்கள் குறைவாக மது அருந்தவேண்டும்” என்றேன்.

“தொடர்ச்சியாக ஐரோப்பியர்களுடன் சந்திப்பு. மதுவை தவிர்க்கமுடியாது” என்றார்.

நான் பேசவந்ததை சொல்ல சொற்களை தேடிக்கொண்டிருந்தபோது வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் உள்ளே வந்தனர். அவர்களுடன் இரண்டு இஸ்லாமியர்களும் இருந்தனர்.

அவசரமான குரலில் “ஆடை ஒருக்கமாகிவிட்டது… தாங்கள் பார்த்து சொல்லவேண்டும்” என்றார் வலிய காரியக்காரர் கேசவன் நாயர்.

பேஷ்கார் நாராயண பிள்ளை “இப்போதுதான் பணிகுறை தீர்ந்தது… ஏதாவது மாற்றவேண்டும் என்றால் உடனே சொல்லவேண்டும்” என்றார்.

இஸ்லாமியர்களில் ஒருவர் வயதானவர். மருதோன்றிச் சாற்றால் சிவப்புச் சாயமிட்ட நீண்ட தாடியும் மீசையற்ற மேலுதடும் கொண்டவர். அவருக்குப்பின்னால் அவருடைய மகன் எனத் தோன்றும் இளைஞன் சிறிய கரிய தாடி கொண்டவன். இருவருமே பட்டுத்தொப்பி வைத்திருந்தனர்.

“உஸ்தாத், காட்டுங்கள்” என்றார் கேசவன் நாயர்.

கிழவர் முன்னால் வந்து “என்பெயர் கான் முகமது கான். இவன் என் மகன் தாவூத் கான். நாங்கள் மதுரையிலிருந்து வந்தவர்கள். திருமனசின் அளவுகள் கிடைத்தன. அதைக்கொண்டு தைத்தோம். நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது அல்லாவின் அருள்” என்றார்.

வேலுத்தம்பி தளவாய் தலையசைத்தார்.

அவர் தன் மகனிடமிருந்து ஒரு மூங்கில்பெட்டியை வாங்கி அதைத் திறந்து உள்ளிருந்து மிகப்பெரிய அங்கி ஒன்றை எடுத்தார். கிட்டத்தட்ட ஆளுயரமான ஆடை. ஆழ்ந்த கருஞ்செந்நிறப் பட்டால் ஆனது. அதில் பொன்னை உருக்கி நீட்டிய மெல்லிய நூல்கம்பிகளால் பூவேலை செய்யப்பட்டிருந்தது. விளிம்புகளில் மாங்காய்களை அடுக்கியதுபோல. நெஞ்சின் இருபக்கமும் தாமரைகள். கைகளில் கவிழ்ந்த தாமரைகள். பொன்னூல் வேலைப்பாடுகள் மிகமிக நுணுக்கமானவை.

வேலுத்தம்பி தளவாய் நிறைவுற்றார் என்று முகம் காட்டியது.

“நல்லது” என்றார்.

“உள்ளே போடுபவை அணியலங்காரம் அற்றவை” என்று அவர் அவற்றை எடுத்துக் காட்டினார். பட்டுச் சட்டை, பட்டு சராய். வெள்ளையரின் ஆடைகளைப்போல லேஸ் வைத்து தைக்கப்பட்டவை

வேலுத்தம்பி தளவாய் தலையசைத்தார். அவர்கள் தலைவணங்கி பெட்டியை மூடி எடுத்துக்கொண்டு சென்றார்கள்.

வேலுத்தம்பி தளவாய் பதற்றமாகவே இருந்தார். சட்டென்று திரும்பி பத்மநாபன் தம்பியிடம் “உடனே நான் கிளம்பவேண்டும்…நீ என்னுடன் வா” என்று சொல்லிக்கொண்டே மறுவாசல் வழியாக வெளியே சென்றார். அதை எதிர்பாராததால் நான் திகைத்து நின்றேன். பத்மநாபன் தம்பி என்னை ஒருமுறை பார்த்துவிட்டு தொடர்ந்து சென்றார்.

நான் மீண்டும் கூடத்திற்கு வந்து அமர்ந்தேன். வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் என்னை கடந்து வெளியே சென்றனர்.

அந்த இரு முஸ்லீம்களும் அங்கேயே அமர்ந்து அந்த அங்கியை சீரமைக்கத் தொடங்கினர். அதை அவர்கள் ஒரு கழியில் மாட்டி சுவரில் பொருத்தினர். பின்னர் பட்டுநூல் கோத்த ஊசியால் விரைவாக தைக்கத் தொடங்கினர். அவர்களின் கைகள் சிறிய பூச்சிகளில் மட்டுமே தெரியும் துடிப்பான விரைவைக் கொண்டிருந்தன.

முன்பெல்லாம் திருவிதாங்கூரின் தளவாய்க்கு இப்படிப்பட்ட சரிகைப் பட்டு ஆடைகள் இல்லை. மற்ற சம்ஸ்தானங்களில் திவான் எனப்படும் பதவி இங்கே தளவாய் எனப்படுகிறது. தலைமைப்படைத்தலைவர், தலைமை அமைச்சர் என்னும் இரு பதவிகளும் கலந்தது அது. அரசருக்கு அடுத்தபடியாக அனைத்து அதிகாரங்களும் கொண்டது. ஆயினும் அவர் ஓர் அரசு ஊழியரின் தோற்றத்தையே கொண்டிருந்தார்.

திருவிதாங்கூர் அரசின் சிற்பி என்று அழைக்கப்பட்ட மார்த்தாண்டவர்மா மகாராஜாவை அரசராக்கியவர், அவருக்காக எதிரிகள் அனைவரையுமே வென்று அழித்தவர், திருவிதாங்கூரில் நிலையான மைய நிர்வாகத்தை உருவாக்கியவர் தளவாய் ராமையன். அவருடைய படத்தை நான் பார்த்திருக்கிறேன். இடையில் சுற்றிக்கட்டிய புளியிலைக் கரையிட்ட வேட்டி, செம்பட்டுக் கச்சை, வெண்பட்டு மேலாடை, வெண்ணிறமான தலைப்பாகை, அதன் நெற்றியில் திருவிதாங்கூரின் சங்கு முத்திரை அவ்வளவுதான். நகைகள் கூட இல்லை. கையில் இடையளவு நீளமான பெரிய வாள்.

மற்ற திவான்கள் கூடுதலாக நகைகள் அணியத் தொடங்கினார்கள். கழுத்தில் ஓர் ஆரம், அதில் சங்குமுத்திரையிடப்பட்ட பதக்கம், கடுக்கன்கள், அரசரால் அளிக்கப்பட்ட கங்கணங்கள், தேவையான முத்திரை மோதிரங்கள். அவ்வளவுதான் ஆடையணிகள். அத்தனை அரசு அதிகாரிகளும் அவ்வாறு எளிமையாகத்தான் ஆடை அணிந்தனர். இங்கே வரும் ஐரோப்பியருக்கு இருக்கும் சிக்கலே ஆடையை வைத்து ஒருவரின் அதிகாரநிலை என்ன, குடும்பநிலை என்ன என்பதை கணிக்கமுடியாது என்பதுதான்.

ராஜா கேசவதாசனின் காலகட்டத்தில்தான் திவான் ஆடம்பரமான ஆடை அணிவது வழக்கமாகியது. அரசருடன் திவானும் அவையில் கொலுவிருக்க்கும் வழக்கமும் அப்போது உருவானதுதான். ராஜா கேசவதாசனின் அதே ஆடைதான் இதோ வேலுத்தம்பி தளவாய்க்காக ஒருங்கிக்கொண்டிருக்கிறது. பனம்பாளை விரித்தது போன்ற மடிப்புக்கொசுவம் கொண்ட பாவாடை போன்ற கீழாடை. அதற்குள் பட்டுத்துணியில் தைக்கப்பட்ட கால்சராய். மேலே பட்டுத்துணியில் பொன்னூல்களால் அலங்காரப் பின்னல்கள் செய்யப்பட்ட நீண்ட அங்கி அதற்குள் பட்டாலான முழுக்கை சட்டை. அதன் கையில் ஐரோப்பிய பாணியில் பட்டைகள்.அவர் அணியும் நகைகளும் திருவிதாங்கூர் மரபைச் சேர்ந்தவை அல்ல. மார்பில் சரப்பொளி மாலை, காதுகளில் குண்டலங்கள், தலையில் உயரமான பட்டுத்தலைப்பாகை, அதற்குமேல் சுற்றப்பட்ட முத்துச்சரங்கள்.

அந்த ஆடையணிகள்  டெல்லி முகலாயர் அவையிலிருந்து மராத்தியர்களுக்குச் சென்றவை.  டெல்லி அவையில் அது ஆப்கானிய குருதிகொண்ட பிரபுக்களுக்கான ஆடை. ஷெகன்ஷாவின் ஆடை மேலும் சற்று வைரங்கள் பதிக்கப்பட்டது, அவ்வளவுதான். பின்னர் அது மராத்திய பேஷ்வாக்களின் தோற்றமாக மாறியது. அங்கிருந்து தஞ்சை மராட்டியர் அவைக்கு வந்தது. சரபோஜியின் அமைச்சர்களான நியோகி பிராமணர்களின் ஆடையாகியது. அவர்களிடமிருந்து திருவிதாங்கூர் திவானின் ஆடையாக வந்தமைந்தது.

இந்த முஸ்லீம் தையற்காரர்கள் மதுரை நாயக்கர்களால் வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர்களின் முன்னோர்கள் ஆப்கானிலும் அதற்கு முன் பாரசீகத்திலும் இருந்தவர்கள். அவர்கள்தான் துருக்கிய சுல்தான்களுக்கு ஆடைகளை வடிவமைத்தவர்கள். துருக்கிய கலிஃபா முஸ்தபா பின் அப்துல் ஹமீது இன்று அணியும் ஆடையின் இன்னொருவடிவம் இதோ என் முன் நின்றுகொண்டிருப்பது. இவையனைத்திற்கும் மூலவடிவம் சீனச் சக்கரவர்த்திகளின் டிராகன் அங்கியில் இருந்து பெறப்பட்டது.

தளவாய் கேசவதாஸ் திவான் என்னும் நிலையில் இருந்து எழுந்து இணையான ஓர் அரசராகவே ஆனார். ராஜா கேசவதாஸ் என்றே அவரை மக்கள் அழைத்தனர். நாகர்கோயில் அருகே குன்னத்தூர் என்ற ஊரில் கீர்த்திமங்கலம் என்ற குடும்பத்தில் கேசவபிள்ளை பிறந்தார். அரசப்பணிக்கு இளமையிலேயே வந்த கேசவபிள்ளை  தர்மராஜா என்று புகழப்பட்டவரான கார்த்திகைத்திருநாள் மகாராஜாவின் முதுமைக்கால ஆட்சியில் கேசவதாஸ் என்றபேரில் திவானாக எழுந்தார்.

தென்னிந்தியாவையே கைப்பற்றியபின் மேலும் தெற்கே படைகொண்டு வந்த  திப்புசுல்தானின் படைகளை வென்று பெருவீரர் என மக்களால் கொண்டாடப்பட்டார் கேசவதாஸ். மன்னர் முதுமையில் அரண்மனையில் ஒடுங்க முடியதிகாரம் முற்றாகவே கேசவதாஸின் கைக்கு வந்தது. ராஜா என்று அவர் அழைக்கப்பட்டார். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். தனக்கான ஆடையை அவரே வடிவமைத்துக்கொண்டார். செல்லுமிடங்களில் எல்லாம் கொலுவிருந்தார். மக்களிடம் நேரடியாக குறைகேட்டார். படைகளை தானே நடத்தினார்.

துறைமுகங்களையும் சந்தைகளையும் சாலைகளையும் உருவாக்கி திருவிதாங்கூரின் செல்வநிலையை மேம்படுத்தியவர் ராஜா கேசவதாஸ். ஆலப்புழை துறைமுகமே அவர் உருவாக்கியதுதான். அவரை மக்கள் கொண்டாடினர். படைவீரர்கள் வழிபட்டனர். ஆனால் எங்கோ ஓர் இடத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. வளர்ந்து வளர்ந்து செல்பவர்களின் சிக்கல் அது. அவர்கள் வளர்வதற்குரிய அனைத்து விசைகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். இறுதி எல்லையை பார்த்த பின்னரும் வளர்வதை நிறுத்த அவர்களால் முடியாது. அதுவே அவர்களின் வீழ்ச்சியாக ஆகிவிடும்.

அரசருக்கான உடையை அணியத் தொடங்கிய இடத்தில் ராஜா கேசவதாஸின் வீழ்ச்சி தொடங்கியது என்று  ரெவெரெண்ட் ஜான் மாக்பை ஒருமுறை தனிப்பேச்சில் சொன்னார். அவர் ராஜா என்று அழைக்கப்பட்டதை , அரச உடையுடன் கொலுவிருந்ததை  மக்கள் கொண்டாடினர். மகாராஜாவுக்கும் எந்த மறுப்பும் இருக்கவில்லை. ஆனால் எங்கோ அவருக்கான வாள் எழுந்துவிட்டது. அது அதன்பின் அவருடைய ஒவ்வொரு செயலாலும் கூர்கொண்டபடியே வந்தது. உரிய தருணத்தில் அவரைப் பற்றியது.

தளவாய் வேலுத்தம்பியை ஊக்கம் கொள்ளச்செய்த முன்னோடி வடிவம் ராஜா கேசவதாஸ் மட்டுமே. அவர் ராஜா என்றுதான் எப்போதும் அவரைச் சொல்வார். என்னிடம் பேசும்போது ராஜா கேசவதாஸின் பெயரை மட்டும் பெருமதிப்புடன் மெல்ல உச்சரிப்பார். அப்போது கண்கள் கனிந்திருக்கும். நான் அவர் ராஜா கேசவதாஸின் குடும்பதைச் சேர்ந்தவர் என நினைத்திருந்தேன். இல்லை அது ஒருவகை மாணவ ஆசிரிய பாவனைதான் என்று பிறகுதான் தெரிந்தது

1765 ஆம் ஆண்டில்  தலக்குளத்தில் குஞ்ஞுமாயூட்டிப் பிள்ளைக்கும் வள்ளியம்மைத் தங்கச்சிக்கும் மகனாக வேலுத்தம்பி தளவாய் பிறந்தார். அவ்வாண்டுதான்  ராஜா கேசவதாஸ் கார்த்திகைத் திருநாள் மகாராஜாவின் அரசில் ராயசம் ஆக பதவியேற்றார். அப்போது அவர் மழவராயன் கேசவபிள்ளை மட்டுமே. அவ்வாண்டு கார்த்திகைத் திருநாள் மகாராஜா பத்மநாபபுரத்திற்கு வந்திருந்தபோது தங்கள் மூன்றுமாத குழந்தையுடன் தலக்குளத்து வலியவீட்டில் குஞ்ஞு மாயூட்டிப் பிள்ளையும் வள்ளியம்மைத் தங்கச்சியும் அரசரை முகம்காட்ட ‘திருமுன்காட்சிவைப்பு’களுடன் சென்றனர். மலர், கனி, நெல், உடைவாள், பொன் என்று ஐந்துவகை மங்கலங்களை மகாராஜாவின் முன் படைத்து வணங்கினர்.

குழந்தையை மகாராஜாவின் காலடியில் வைத்து “தங்கள் சேவைக்காக இதோ இன்னொரு தலையும் இரண்டு கைகளும் தம்புரானே” என்றார் குஞ்ஞு மாயூட்டிப்பிள்ளை.

மகாராஜா புன்னகைத்து குனிந்து குழந்தையின் தலையை தொட்டு “சிரேயஸ்மான் ஃபவ” என்றார்.

“குழந்தைக்கு ஒரு பெயர் சூட்டி அனுக்ரகிக்கணும்” என்றார் குஞ்ஞு மாயூட்டிப்பிள்ளை.

மகாராஜா அருகே நின்றிருந்த இருபது வயது இளைஞரான ராயசம் கேசவபிள்ளையிடம்  “என்ன பெயர் போடலாம் கேசவா?”என்று கேட்டார்.

“அடியன், இன்று கிருத்திகை நாள். முருகன் பெயர் போடலாம். வேலாயுதன் என்று இருக்கட்டும்” என்றார் கேசவபிள்ளை.

“அருமை, அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் மகாராஜா. “உன் குடும்பத்திற்கு சோழர்காலம் முதலே செண்பகராமன் பட்டம் உள்ளதல்லவா மாயூட்டீ? இவனை வேலாயுதன் செண்பகராமன் என்றே அழைக்கலாம்”.

“அடியேன், திருப்பாதங்களின் ஆசி நிறையட்டும்” என்றார் குஞ்ஞு மாயூட்டிப்பிள்ளை.

தனக்கு பெயரிட்டதே ராஜா கேசவதாஸ்தான் என்பதை தளவாய் வேலுத்தம்பி எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தார். என்னிடம் மூன்றுமுறை சொன்னார். மெல்லிய குரலில், முகத்தில் பெருமிதம் நிறைந்திருக்க அதைச் சொல்லி தனக்குத்தானே சிரித்துக்கொண்டார்.

கேசவபிள்ளை சம்பிரதியாகவும் பின்னர் சர்வாதிக்காரர் ஆகவும் மாறி கேசவதாஸ் என்றபேரில் திவானாக பதவி ஏற்பது வரை எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சென்று சந்தித்துக்கொண்டிருந்தார் வேலுத்தம்பி. அவரும் வேலாயுதன் செண்பகராமன் என்ற இளைஞனை நினைவு வைத்திருந்தார். அவனை வேலுத்தம்பி என்று அழைத்தவர் அவர்தான்.

1784ல் கார்த்திகைத்திருநாள் மகாராஜா திருச்செந்தூருக்கு ஆலயப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவருடைய பயணக்குழுவை களக்காட்டு மறவர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றில் மகாராஜாவின் தனிப்பட்ட பூசைப்பொருட்களும் பொன்னாலான பீடத்தில் பொருத்தப்பட்ட அரிய சாலக்கிராமம் ஒன்றும் இருந்தது. மனம் சோர்ந்து திருவனந்தபுரம் மீண்டுவந்த மகாராஜா திருடர்களை பிடித்து தண்டித்து அப்பொருட்களை மீட்டுவரவேண்டும் என்று ஆணையிட்டார்.

அன்று பெரியசர்வாதிக்காரராக இருந்த கேசவதாஸ் பத்மநாபபுரத்திற்கு வந்து களக்காட்டு மறவர்களை வென்று மகாராஜாவின் பூஜைப்பொருளை மீட்பதற்குரிய படை ஒன்றை அமைக்கவேண்டும் என்று புலியூர்க்குறிச்சியில் தண்டு கொண்டிருந்த திருவிதாங்கூரின் கிழக்கெல்லைப் படைகளை நடத்திய படைத்தலைவன் வலியகேசவன் தம்பியிடம் கோரினார்.

அன்று இருபது வயது இளைஞனாக இருந்த வேலாயுதன் செண்பகராமன் அப்போது சபையில் இருந்தார். அவர் எழுந்து “நூறுபேர் கொண்ட படை என்னிடம் இருக்கிறது, நான் சென்று அவர்களை தண்டித்து பொருளை மீட்டு வருகிறேன்”.

வலியகேசவன் தம்பி எரிச்சலுடன் “நூறுபேரல்ல ஆயிரம்பேர் சென்றால்கூட அவர்களை பிடிக்கமுடியாது. அவர்கள் வாழும் நிலம் மாபெரும் பொட்டல். சூழ்ந்திருப்பவை மொட்டைமலைகள். நம்மைக் கண்டதுமே அவர்கள் அந்த மலைகளுக்குமேல் ஏறிக்கொள்வார்கள். நாம் மேலேறிச்சென்றால் அவர்கள் பாறைகளை உருட்டிவிடுவார்கள். அந்த மலைகளுக்குமேல் அவர்களால் பலமாதங்கள் வாழமுடியும். நாம் கீழே ஒருவாரம்கூட தங்கமுடியாது, தண்ணீரும் உணவும் இருக்காது. பலமுறை நாம் படைகொண்டுசென்று பயனில்லாமல் திரும்பி வந்திருக்கிறோம்” என்றார்.

“நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று வேலுத்தம்பி சொன்னார். கேசவதாஸ் அனுமதி கொடுத்தார்.

வேலுத்தம்பியின் படை களக்காட்டை அடைந்தது. அவர்களைக் கண்டதுமே மறவர்கள் தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் மட்டும் விட்டுவிட்டு மொட்டைமலைகளுக்குமேல் ஏறிக்கொண்டனர். கானல் பாய்ந்து கிடந்த பொட்டல் நிலத்தில் தீபோல வெயில் எரிந்தது. அந்தப்பெண்கள் சாபம்போட்டு வசைபாடி மண்ணை அள்ளித்தூற்றினர். சாணியும் மலமும் கரைத்து ஊற்றினர் அது அவர்களின் வழக்கமான போர்முறை.

ஆனால் அத்தனை பெண்களையும் பிடித்து கட்டி கொண்டுவர வேலுத்தம்பி ஆணையிட்டார். அது அன்றுவரை எவருமே செய்யாதது. பெண்களைச் சிறையிட படைவீரர்களே தயங்கினர். ஆனால் வேலுத்தம்பி அவரே வாளை உருவி முன்னால் வந்து நின்று சாணியை அள்ளி வீசி கூச்சலிட்ட ஒரு முதிய பெண்ணின் கழுத்தை வெட்டி தலையை மண்ணில் வீழ்த்தினார். அந்த ரத்ததை எடுத்து தன் முகத்தில் விட்டுக்கொண்டு வெறிக்கூச்சலிட்டார்.

அதன்பின் வெறிகொண்டு படைவீரர்களும் முன்னெழுந்தனர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மொத்த வீடுகளும் எரியூட்டப்பட்டன. அப்பெண்கள் திகைத்து உறைந்தனர். அவர்களை இழுத்துவந்து மொட்டைமலைகளுக்கு கீழே திறந்த வெளியில் வைத்து ஒருநாளுக்கு ஏழுபேர் வீதம் கழுவேற்றினார்  வேலுத்தம்பி . மடியில் அவர்களின் குழந்தைகளின் தலைகளை வெட்டி வைத்தார்.

மேலே இருந்து நோக்கிய மறவர்கள் நடுங்கினர். அவர்களில் சிலர் நெஞ்சடைத்தே இறந்தனர். ஆயிரமாண்டுக்கால வரலாற்றில் எவரும் செய்யத்துணியாதது அது. தலைமுறை தலைமுறையாக தொடரும் குலப்பழியும் குடிப்பழியும் சேர்ப்பது.

மறவர்களில் முதியவன் மலையிறங்கி வந்து அடிபணிந்தான். அத்தனை மறவர்களும் வந்து பணியவேண்டும், திருடிய பொருட்கள் அனைத்தையும் திரும்ப அளிக்கவேண்டும்., இல்லையேல் ஒரு உயிர்கூட ஊரில் எஞ்சாது என்று வேலுத்தம்பி சொன்னார். கைக்குழந்தைகளையும் கழுவிலேற்றி துண்டுதுண்டாக வெட்டி ஈமச்சடங்குகூட செய்யமுடியாமல் பேய்களாக அலையவைப்பேன் என்றார்.

கிழவர் சென்று சொல்ல மறவர்கள் மேலும் தயங்கினர். இருமடங்கு பெண்கள் மறுநாள் கழுவேற்றப்பட்டனர். வேலுத்தம்பியில் இருந்த குருதிப்பேயை கண்டு அலறிவிட்ட மறவர்கள் அனைவரும் வந்து அடிபணிந்தனர். அவர்களில் பன்னிரண்டு இளைஞர்களை மட்டும் விட்டு எஞ்சிய அனைவரையும் கொன்று தலைகளை ஒரு மாட்டுவண்டி நிறைய குவித்து, பூசைப்பொருட்களையும் மீட்டு எடுத்துக்கொண்டு வேலுத்தம்பி திரும்பி வந்தார்.

பத்மநாபபுரத்திற்குள் அவர் நுழைந்தபோது குடிமக்கள் அத்தனைபேரும் அஞ்சி கூச்சலிட்டு வீட்டுக்குள் சென்று வாசல்களை மூடிக்கொண்டார்கள். சிலர் குலதெய்வங்களின் முன்னாலிருந்து விபூதியையும் குங்குமத்தையும் கொண்டுசென்று வீட்டு வாசல் முன் வைத்தனர். பிராமணர்கள் அனுமார் சிலைகளை கொண்டுவந்து படிகளில் வைத்தனர்.

ஆனால் ராஜா கேசவதாஸ் வேலுத்தம்பியை நேரில் வந்து எதிர்கொண்டு நெஞ்சோடு தழுவி வரவேற்றார். அவர் மீட்டுக்கொண்டுவந்த பொருட்களுடன் திருவனந்தபுரத்திற்கு திரும்பிச் சென்றார்.

வேலுத்தம்பியை அதன்பின் அனைவரும் அஞ்சினர். ஆழத்தில் வெறுத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் அதன்பின் தடைகளே இருக்கவில்லை. அவர் அவ்வாண்டே கல்குளம் ’மண்டபத்துவாதுக்கல்’ சபையின் காரியக்காரராக  ஆனார். இருபது வயதில் அத்தனை பெரிய பதவி எவரும் கேட்டிராதது.

1789 ல் கேசவதாஸ் திருவிதாங்கூரின் திவானாக ஆனார். அவர் இரணியல் நாட்டுக்கூட்டத்தின் தலைவராக வேலுத்தம்பியை நியமித்தார். திருவிதாங்கூருக்கு உட்பட்ட வேணாட்டு பகுதியின் அரசருக்கு சமானமான பதவி அது.

1798 ல் கார்த்திகைத்திருநாள் மகாராஜா மறைந்தார். அவருடைய பதினாறு வயதான மருமகன் அவிட்டம் திருநாள் பாலராமவர்மா அரசர் ஆனார். ஆற்றலற்றவரும் நோயுற்றவருமான  பாலராம வர்மா தனக்கு நெருக்கமானவரான ஜயந்தன் நம்பூதிரியை தன்னுடைய முதன்மை ஆலோசகராக நியமித்தார். ஜயந்தன் நம்பூதிரி தலக்குளத்து சங்கரநாராயணன் செட்டியையும் தச்சில் மாத்து தரகனையும் முதன்மைப் பதவிகளில் நியமித்தார்.

அந்தக் குழு முற்றதிகாரத்தை கைப்பற்ற நினைத்தது. ஆகவே. ராஜா கேசவதாஸை ஒற்றன் என முத்திரை குத்தியது. அவரை அரண்மனைச் சிறையில் அடைத்தது. ராஜா கேசவதாஸின் மேல் தனிப்பட்ட காழ்ப்பும் அச்சமும் கொண்டிருந்த அவையினர் பலர் அதை ஆதரித்தனர். மக்களில் ஒருசாராரின் ஆதரவும் அதற்கு இருந்தது.

திறமையானவரும் நேர்மையானவருமான ராஜா கேசவதாஸ் அவ்வண்ணம் வீழ்த்தப்பட்டதற்கு இருந்த ஆதரவு வேலுத்தம்பிக்கு திகைப்பை அளித்தது.  “இதெப்படி நடக்கமுடியும்? எடே பப்பு, ராஜாவைப்போல இந்த நாட்டுக்கு நல்லது செய்த யார் இருக்கிறார்கள்?” என்று அவர் புலம்பினார்.

பத்மநாபன் தம்பி “அவர் ராஜா இல்லையே அண்ணா” என்றார்.

“என்னடா சொல்கிறாய்?” என்று வேலுத்தம்பி சொன்னார்.

“ராஜா தவறுசெய்தாலும் மக்கள் மன்னிப்பார்கள். ராஜா அல்லாதவர் ராஜாவாக ஆவதை ஏற்கவே மாட்டார்கள்” என்றார் பத்மநாபன் தம்பி.

“நான் போய்ப்பார்க்கிறேன்.. நான் செய்யவேண்டியது என்ன என்று கேட்கிறேன்” என்று வேலுத்தம்பி சொன்னார்.

வேலுத்தம்பி திருவனந்தபுரத்திற்குச் சென்றார். அங்கே தெற்கே கொட்டாரம் மாளிகையில் சிறைவைக்கப் பட்டிருந்த ராஜா கேசவதாஸை காவல்களையும் தடைகளையும் மீறிச் சென்று பார்த்தார்.அங்கே கேசவதாஸுக்கு அவருடைய மருமகன்  மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை துணையிருந்தார். அவர் வேலுத்தம்பியை உள்ளே அழைத்துச்சென்றார்.

ராஜா கேசவதாஸ் அருகே ஒற்றர்கள் இருந்தமையால் பேசமுடியாதவராக இருந்தார். “என்னை திரும்ப நாஞ்சில்நாட்டுக்கே சென்றுவிடும்படிச் சொல்கிறார்கள்” என்று அவர் சொன்னார்  “என் கர்மமண்டலம் இது… நான் போகமாட்டேன்”.

“நான் என்ன செய்யவேண்டும் ராஜா. சொல்லுங்கள்” என்றார் வேலுத்தம்பி.

“நான் ஆணையிடுகிறேன்… நானே சொல்கிறேன்” என்றார் ராஜா கேசவதாஸ்.

வேலுத்தம்பி தலக்குளத்திற்கு திரும்பி வந்த ஏழாம் நாள் ராஜா கேசவதாஸ் நஞ்சிட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது.

ஜயந்தன் நம்பூதிரியின் ஆட்சி வெறும் இருபத்தைந்து நாட்களே நீடித்தது. வேலுத்தம்பியின் தூதர்கள் திருவிதாங்கூர் முழுக்க சென்று அனைத்து நாயர் தளபதிகளையும் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தனர். நூற்றுக்கணக்கான இடங்களில் படைவீரர்கள் கலவரம் செய்தனர்.

ராஜா கேசவதாஸின் நேர் மருமகன் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை வேலுத்தம்பி தளவாயுடன் வந்து சேர்ந்துகொண்டார். அவர் நாஞ்சில்நாட்டிலிருந்து இரன்டாயிரம்பேர் கொண்ட படை ஒன்றை திரட்டினார். பாண்டிநாட்டிலிருந்து இரண்டாயிரம்பேர் கொண்ட கூலிமறவப்படை ஒன்றையும் திரட்டிக்கொண்டார். அவர் ஆளூரில் இருந்து தலக்குளம் வந்து சேர்ந்தபோது அங்கிருந்த வேலுத்தம்பியின் இரண்டாயிரம் பேரும் இணைய திருவிதாங்கூரின் ஒட்டுமொத்த படையை விட பெரிய படை உருவாகியது.

அவர்கள் பத்மநாபபுரம் அரண்மனையை கைப்பற்றினர். அங்கிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்றனர். அவர்கள் செல்லும் செய்தி அறிந்ததுமே திருவிதாங்கூரின் பலபகுதிகளில் நாயர் பிரபுக்கள் படைகொண்டு திருவனந்தபுரம் நோக்கிச் சென்றனர். செல்லும் வழியிலேயே பலர் வேலுத்தம்பியுடன் சேர்ந்துகொள்ள எட்டாயிரம் பேர் கொண்ட படை தலைநகரைச் சூழ்ந்தது.

ஜயந்தன் நம்பூதிரி வடக்கே தப்பி ஓடினார். தலக்குளத்து சங்கரநாராயணன் செட்டியையும் தச்சில் மாத்து தரகனையும் வேலுத்தம்பி செவிகளை அறுத்து சிறையிலிட்டார். அங்கேயே அவர்கள் கொல்லப்பட்டனர். அரசரின்மேல் செல்வாக்குடன் இருந்த  சம்பிரதி குஞ்சுநீலன் பிள்ளை, வலியமேலெழுத்து முத்துப்பிள்ளை, சேனாபதி சுப்பையன் ஆகியோரை கொல்வதற்கான ஆணையில் அரசரிடமே கைச்சாத்து வாங்கினர். மதுவின் மயக்கத்தில் இருந்த அரசர் அந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது என்றே வாசிக்கவில்லை.

1802ல் வேலுத்தம்பி திருவிதாங்கூரின் தளவாய் ஆக வந்தார். ஆனால் அவருக்கு உள்ளூர எதிர்ப்புகள் இருந்தன. சிறையின்கீழ் ஐயப்பன் செண்பகராமன், பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் ஆகியோர் வலுவான நாயர் தலைவர்களாக இருந்தனர். ஜயந்தன் நம்பூதிரியை துரத்தியபின் மகாராஜா ஐயப்பன் செண்பகராமனைத்தான் தளவாய் ஆக நியமித்தார். அவர் பதினான்கே மாதங்களில் உயிரிழந்தார். தொடர்ந்து பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் தளவாய் ஆனார். அவரை ஏழு மாதத்தில் நீக்கிவிட்டு வேலுத்தம்பி திருவிதாங்கூரின் தளவாய் பதவிக்கு வந்தார்.

வேலுத்தம்பி தளவாய் பதவி ஏற்ற மூன்று மாதங்களுக்குள் ஏழு கொலைமுயற்சிகள் நடந்தன.  அதில் ஒன்றிலிருந்துதான் நான் அவரை காப்பாற்றினேன். அதற்குப் பின்னாலிருந்தவர் பாறசாலை பத்மநாபன் செண்பகராமன். அவர் அப்போதும் வேலுத்தம்பி தளவாய்க்கு வலுவான எதிரியாக நீடித்தார். அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் வேலுத்தம்பி தளவாயைக் காத்தது ராஜா கேசவதாஸின் பெயர். அவருடைய நேர்மருமகனாகிய  மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையின் ஆதரவு.

பத்மநாபன் தம்பி உள்ளே வந்தார். அவர் கைகாட்ட முஸ்லீம்கள் இருவரும் அந்த ஆடைகளுடன் உள்ளே சென்றனர்.

பத்மநாபன் தம்பி என்னிடம் வந்து “இன்று முக்கியமான ஒரு விசாரணை இருக்கிறது.  வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள்” என்றார்.

“தெரியும், தளவாய் அவர்கள் அரச ஆடை அணிவதும் அதற்காகத்தான் இல்லையா?” என்றேன்.

பத்மநாபன் தம்பி விழிகளில் ஒரு சங்கடத்துடன் “ஆம், அது தேவை என அவர் நினைக்கிறார்” என்றார்.

“நான் பேசவந்ததே அந்த விஷயமாகத்தான்” என்றேன்.

பத்மநாபன் தம்பி திடுக்கிட்டதுபோல தெரிந்தது. ஆனால் அவர் ஏதும் சொல்லவில்லை.

“நான் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைக்காக பேச வந்தேன்” என்றேன்.

“அதை நீங்கள் பேசமுடியாது” என்று பத்மநாபன் தம்பி சொன்னார் “வேறு எவருமே பேசமுடியாது”.

“நான் பேசியாகவேண்டும். இல்லாவிட்டால் என் மனசாட்சி என்னை வருத்தும். அதற்காகவே செய்தி அறிந்ததும் கொல்லத்தில் இருந்து படகில் வந்தேன்” என்றேன்.

“அவர்மேல் இருக்கும் குற்றச்சாட்டு என்னவென்று தங்களுக்கு தெரியாது. அரசுக்கு எதிரான கலகம். ராஜத்துரோகம்…”

“எல்லாமே எனக்கு தெரியும். நிலைமையை நான் சொல்கிறேன், தவறா என்று நீங்களே சொல்லுங்கள்” என்றேன் “பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் தலைமையில் வேலுத்தம்பித் தளவாய்க்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. வேலுத்தம்பி தளவாய் பதவிக்கு வந்து ஊழல்களை ஒடுக்கி, வரிநிலுவைகளை வசூலித்து நிதிவருவாயை பெருக்கத் தொடங்கியதும் அது பெருகியது”.

“தனக்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றபோது தளவாய் மேலும் மேலும் ஆங்கிலேயரைச் சார்ந்திருக்கத் தொடங்கினார். ஆங்கிலேயருக்கு சுங்கத்தை முழுமையாகவே தவிர்த்தார். ஆங்கிலேயர் அல்லாத வணிகர்களை நாட்டில் இருந்து விரட்டினார். ஒவ்வொரு நாளும் தனக்கு எதிரான எதிர்ப்புகளால் உந்தப்பட்டு அவர் ஆங்கிலேயர்களை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தார்”.என்றேன்

“அவர் ஆங்கிலேயர்களை நெருங்க நெருங்க அவர்மேல் உள்ளூரில் சந்தேகமும் பகைமையும் வளர்ந்தது. ஆங்காங்கே கலகங்கள் உருவாயின. அவற்றை அடக்க அவர் ஆங்கிலேயர்களிடமிருந்து படையுதவி பெற்றார். அதற்கு கட்டணமாக மிகப்பெரிய தொகையை அளிக்க நேர்ந்தது. ஆகவே திருவிதாங்கூரின் செலவு அதிகரித்தது. விளைவாக வரிகூடிக்கொண்டே சென்றபோதும் நாட்டின் பொருளாதாரம் கீழே சென்றது”.

நான் தொடர்ந்தேன் “ஒரு கட்டத்தில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேலுத்தம்பி தளவாய் மொத்த திருவிதாங்கூரையுமே பிரிட்டிஷ்காரர்களுக்கு கட்டணம் கட்டவைத்தார்”

“போதும்” என்றார் பத்மநாபன் தம்பி.

“ஏன் பிழையா?”

“அல்ல, அதை காதால் கேட்க சங்கடமாக இருக்கிறது”

“அவர் இரட்டை நிலையில் இருக்கிறார். நாட்டைக்காக்க அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று ஆட்சியில் நீடிக்கவேண்டும் என்றால் நாட்டை ஒடுக்கியாகவேண்டும்…. எல்லா மாவீரர்களும் சென்றடையும் இடம் இது. அவர்கள் வரலாற்றில் நீடிக்கவேண்டும் என்றால் வரலாற்றை சூறையாடியாக வேண்டும். விளைவாக அவர்கள் இரட்டைமனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் அவர்களிடம் எவரும் எதையும் பேசமுடியாது. ஏனென்றால் அவர்கள் சொல்லும் எந்த சொல்லுக்கும் செயலுக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார்கள்”

“நாம் இதைப்பற்றிப் பேசவேண்டாமே”.

“ஆனால் அவருக்கு நெருக்கமான ஒருவராவது இதை தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். ஓர் இடத்திலாவது இதை சொல்லியாகவேண்டும். கர்னல் ஜான் மன்றோ டியானினிச்சை வேலுத்தம்பி தளவாய் கண்டடைந்தது ஒரு விதியின் கணம். இரண்டுபேரும் அரக்கர்கள். ஒர் அரக்கர் இன்னொரு அரக்கரை கொன்று தின்பார். அதுதான் விதி. இன்று அவர்கள் தழுவிக்கொள்ளலாம், ஆனாலும் அது அங்கேதான் சென்றுநிற்கும்”.

பத்மநாபன் தம்பியின் தவிப்பை நான் கண்களில் கண்டேன்

“அதில் ஓர் அரக்கன் உலகம் முழுக்க பரவியிருக்கும் மாபெரும் பேரரசு ஒன்றின் மேல் ஏறி நின்றிருக்கிறார். இந்த அரக்கன் அவரை இதுவரை கொண்டுவந்து சேர்த்த பின்னணிச் சக்தியாகிய நாயர்படையையே அழித்துக்கொண்டிருக்கிறார்”.

“வேறென்ன செய்ய முடியும்?” என்றார் பத்மநாபன் தம்பி

”எதையாவது செய்யலாம்… குறைந்தது திரும்பிவரமுடியாதபடி முன்னால் செல்லாமலாவது இருக்கலாம்”.

பத்மநாபன் தம்பி பெருமூச்சுவிட்டார்.

“பிரிட்டிஷாருக்கு கப்பமும் வட்டியும்  கட்டுவதற்குரிய பணத்தை சேமிக்கும்பொருட்டு நாயர்படைகளை கலைத்து அவர்களுக்குரிய சம்பளத்தை மிச்சப்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தவர் யார்?”

“அவரேதான்…”

“இல்லை” என்றேன்.

பத்மநாபன் தம்பி “வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும்தான்” என்றார்.

“அவர்கள் எவருடைய விசுவாசிகள்?” என்றேன்.

பத்மநாபன் தம்பி “அவ்வாறு நாம் பார்க்கமுடியாது” என்றார்.

“வலிய காரியக்காரர் கேசவன் நாயரின் மருமகன்கள் கொல்லத்தில் பிரிட்டீஷாருடன் வணிகம் செய்கிறார்கள்.  பேஷ்கார் நாராயண பிள்ளையின் மகன்களும் மருமகன்களும் தூத்துக்குடியில் கப்பலோட்டுகிறார்கள்”.

”ஆமாம்” என்றார் பத்மநாபன் தம்பி.

“நாயர்படைகளை கலைப்பது எவருக்கு லாபம்? கலைத்துவிட்டு எந்தப் படைபலமும் இல்லாமல் சென்று கர்னல் மன்றோ முன் அமர்ந்தால் அவரிடம் எதைப்பேசி எதை வெல்லமுடியும்?”

“நான் அதை அண்ணனிடம் சொன்னேன். ஆனால் நாயர் படை இன்று நமக்கு ஆதரவாக இல்லை, அவர்கள் பாறசாலை பத்மநாபன் செண்பகராமனைத்தான் ஆதரிக்கிறார்கள் என்று அவர் சொன்னார். அவர்கள் அரசின் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு அரசின் தளவாய்க்கு எதிராக கலகம் செய்கிறார்கள் என்றார்”

“ஊதியத்தை நிறுத்திவிட்டால் அவர்களை வெல்லமுடியுமா?” என்றேன்.

“முடியும் என்றார். அவர்கள் முதல் சிலமாதங்கள் ஆங்காங்கே கலவரம் செய்வார்கள். அதை ஒடுக்கிவிட்டால் அதன்பின் வருமானம் இல்லாமல் ஆங்காங்கே கூலிப்படையாகச் சென்று சேர்வார்கள், நாயர்படையே சிதறிப்போய்விடும் என்றார்”.

“நான் கொச்சியில் இருக்கும்போதுதான் இங்கே கலவரம் நடந்ததை அறிந்தேன்” என்றேன்

“ஆமாம், முதலில் ஊதியம் நிறுத்தப்பட்டதற்கு எதிராக ஆங்காங்கே நாயர்படையினர் கலவரம் செய்தார்கள். பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் தலைமையில் அக்கலவரம் ஒருங்கிணைக்கப்பட்டபோது ஒரு போர்ச்சூழல் உருவானது. அப்போதுதான் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை அவர்களுடன் சென்று சேர்ந்துகொண்டார், அவர்களின் தரப்பு வலுப்பெற்றது. எங்களால் எதிர்கொள்ளமுடியவில்லை”.

“மீண்டும் கர்னல் மன்றோவிடம் சென்று முறையிட்டீர்கள்”

“ஆமாம், அவர் பிரிட்டிஷ் படையை திருக்கணங்குடியில் இருந்து வரவழைத்தார். பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொண்ட படை. காப்டன் ஃப்ரேசர் தலைமையில் வந்த பிரிட்டிஷ்படை நாஞ்சில்நாட்டில் உருவான கலவரத்தை அடக்கியது. நாகர்கோயிலில் முகாமிட்டிருந்த மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை சிறைப்பிடித்தது. பாறசாலை பத்மநாபன் செண்பகராமனையும் சிறைப் பிடித்தார்கள். கலவரம் ஓய்ந்தது”.

நான் பெருமூச்சுவிட்டேன்.

“அண்ணா சொன்னதே நடந்தது. நாயர் படை அப்படியே சிதறிவிட்டது. இன்று அண்ணாவுக்கு எதிரியே இல்லை”.

“மிகப்பெரிய எதிரி கர்னல் மன்றோதான். அதை அவரே உருவாக்கிக்கொண்டார். அவர்முன் தன் படைகளை தானே அழித்தார்”.

“அவர் அப்படி நினைக்கவில்லை”.

“மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைதான் தளவாயின் உண்மையான பலம். அவர் ராஜா கேசவதாஸின் மருமகன். மக்கள் வேலுத்தம்பி தளவாயை ஏற்றுக்கொண்டதே அவர் ராஜா கேசவதாசனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் வளர்க்கப்பட்டவர் என்பதனால்தான். ராஜா கேசவதாசனின் மருமகனை நம்பித்தான் நாயர்ப்படைகள் வேலுத்தம்பி தளவாய் தலைமையில் திரண்டன. இன்று மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை மேல் எந்த தண்டனை அளிக்கப்பட்டாலும் அதை மக்கள் ராஜா கேசவதாஸ் மீதான தாக்குதாலாகவே பார்ப்பார்கள்”.

“ஆமாம், அது ஒரு பார்வை. அதை நான் அண்ணனிடம் சொல்லமுடியாது. நீங்கள் சொல்லுங்கள்” என்றார் 2 “ஆனால் வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் உடனிருப்பார்கள்”.

“எனக்கு அவர்களை பயமில்லை”.

பத்மநாபன் தம்பியின் உடலில் ஒரு கொந்தளிப்பு நிகழ்வதை கண்டேன். “டாக்டர், நீங்கள் அண்ணனுக்கு நெருக்கமானவர். ஆனால் நீங்கள் கூட அண்ணனை சரியாக புரிந்துகொள்ளவில்லை. அண்ணன் ஒரு சாதாரண அதிகாரி அல்ல. அவர் ஒரு சரித்திர புருஷர். அவர் இங்கே பதவிக்கு வந்தபோது திருவிதாங்கூர் அரசாங்கமே சீரழிந்து கிடந்தது. எங்கும் ஊழல், சுரண்டல். ஒரு சந்தைகூட வியாபாரிகள் நம்பி வரக்கூடியதாக இருக்கவில்லை. ஒரு சாலையில்கூட வழிப்பறி பயம் இல்லாமல் மக்கள் செல்லமுடியவில்லை. ஒரே ஆண்டில் அனைத்தையும் சீரமைத்தவர் அவர்”

“இன்று அத்தனைபேரும் அவரை அஞ்சுகிறார்கள். தன் மகனின் பெயரைப் பயன்படுத்தி ஒரு சிறு ஊழலைச் செய்தார் என்பதற்காக தன் சொந்த அம்மாவின் கையில் விரலை வெட்ட ஆணையிட்டவர் அண்ணன்…. அதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மை. நான் அப்போது உடனிருந்தேன். அண்ணன் நெருப்பு போன்றவர். அவரில் எந்த சிறுமையும் அணுகாது. அவர் குரூரமானவர்தான். ஆனால் அந்த குரூரத்தால்தான் நீதியும் நெறியும் திகழும் ஒரு நாடாக அவர் திருவிதாங்கூரை மாற்றினார்”

“ஆமாம், ஆனால் அப்படி மாற்றவேண்டுமென்றால் அதிகாரம் வேண்டும். அதிகாரம் வேண்டுமென்றால் சமரசம் செய்யவேண்டும். நான் பேசிக்கொண்டிருப்பதே இந்த பிளவுநிலைபற்றித்தான்” என்றேன்

வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் உள்ளே வந்தனர். அவர்கள் மிகமெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

நாங்கள் எழுந்து சென்று சித்திரவாசலுக்கு வெளியே காத்திருந்தோம். பத்மநாபன் தம்பி முன்னால் நின்றார். அவருடன் வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் நின்றிருந்தனர். நான் சற்று பின்னால் நின்றேன்.

என் மருத்துவப்பெட்டியை சற்றுநேரமாக கையிலேயே வைத்திருந்தேன். அதன் எடை என் தசைகளை இழுத்தது.அதை தரையில் வைத்தேன். அசைவைக் கண்டு பத்மநாபன் தம்பி திரும்பிப் பார்த்தார்.

“நீங்கள் வேண்டுமென்றால் வெளியே கூடத்தில் காத்திருக்கலாம் டாக்டர்” என்றார் பத்மநாபன் தம்பி “அங்கே அமர்ந்திருக்கலாம்”

“வேண்டாம்” என்றேன் “என் பணி இது. மேலும் அவர் அந்தக் கூடத்தைக் கடந்தால் பிறகு எனக்கு நேரமிருக்காது”.

இந்த உள்ளறைகள் எல்லாமே சிறியவை. ஐரோப்பியரின் தலைகள் நிலைகளில் முட்டிக்கொள்ள வாய்ப்புள்ளவை. கைவிரித்தால் சுவர்களை தொட்டுவிடக்கூடும். சிறிய அறைகள் என்னை மூச்சுத்திணறச் செய்பவை. ஆயினும் அங்கேயே நிற்க நான் விழைந்தேன்.

கதவு திறக்க தாமதமாகிக்கொண்டிருந்தது. பத்மநாபன் தம்பியை காரியக்காரர் கேசவன் நாயர் பார்த்தார். “தட்டலாமா?”என்று மிக மெல்ல கேட்டார்.

வேண்டாம் என்று பத்மநாபன் தம்பி தலையசைத்தார்.

அவர்கள் மீண்டும் காத்திருந்தனர். பேஷ்கார் நாராயண பிள்ளை பெருமூச்சு விட்டார். பிற இருவரும் திரும்பி அவரைப் பார்த்தார்கள். நான் அவர்களின் பொறுமையின்மையை கவனித்துக்கொண்டிருந்தேன்.

கதவு திறக்கும் ஒலி அவர்களை திடுக்கிடச் செய்தது. சித்திரவாசல் இரண்டாகப் பிரிந்தது  தளவாய் வேலுத்தம்பி வெளியே வந்தார்.திவானுக்குரிய முறையான ஆடைகள் அணிந்திருந்தார். அவருடன் அவருக்கு ஆடை அணிவித்த இஸ்லாமிய தையல்காரர்களும் பின்னால் வந்தனர். முதிய கான் அந்த ஆடையில் நிறைவடையாதவர் போல குனிந்து குனிந்து பார்த்தார்.

வேலுத்தம்பி தளவாய் என்னை பார்த்தபோது முகம் சற்று சுருங்கியது “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று அழைத்தார் “நீங்கள் என்னிடம் எதையாவது பேசவிரும்புகிறீர்களா?”

எனக்கு நேரமில்லை என்று உணர்ந்தேன். அவசரமாக “தளவாய், நீங்கள் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை மன்னித்துவிட வேண்டும். அதைக்கோரிப்பெறத்தான் வந்தேன்” என்றேன்.

நான் எதிர்பார்த்ததுபோலவே வலிய காரியக்காரர் கேசவன் நாயரும் பேஷ்கார் நாராயண பிள்ளையும் திகைத்து ஏதோ சொல்பவர்கள போல அசைந்தனர். அவர்களை புருவ அசைவால் வேலுத்தம்பி தளவாய் நிலைக்க வைத்தார். என்னை வெறுமே பார்த்தார்.

“அவர் உங்கள் இளமைக்கால நண்பர், போர்களில் உங்களுடன் இருந்தவர். நீங்கள் வென்று திவான் ஆவதற்கு உதவியவர்.அவரை நீங்கள் தண்டித்தால் நன்றியில்லாதவர் என்ற பழியை பெறுவீர்கள்” என்றேன் “அவர் நாயர் படைகளின் அடையாளம். அவரை அவர்கள் மறக்க மாட்டார்கள். இந்த அரசியல்விளையாட்டில் உங்களுடைய ஆயுதமே நாயர்படைதான்”

“இந்த திருவிதாங்க்குருக்குள்ளேயே வடக்கு தெற்கு வேறுபாடு உண்டு. நீங்கள் தெற்குநாட்டவர். வேணாடும் நாஞ்சில்நாடும்தான் உங்கள் ஆதரவுத்தளம். மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் தெற்கத்திக்காரர். அவரை தண்டித்தால் உங்கள் ஆதரவுச்சூழலை நீங்கள் அழித்துக்கொள்வீர்கள்” என்று நான் தொடர்ந்தேன். “அனைத்துக்கும் மேலாக அவர் ராஜா கேசவதாசனின் மருமகன். உங்களை ராஜா கேசவதாசனின் வடிவமாகவே மக்கள் பார்க்கிறார்கள். நீங்கள் அவர் மருமகனை தண்டித்தால் பெரும்பழி வந்து சேரும்”

வலிய காரியக்காரர் கேசவன் நாயர் “நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இங்கே துரை சொன்ன எல்லாமே உண்மை. ஆனால் இவை அனைத்தையும் அப்படியே எதிர்தரப்பாகவும் பார்க்கலாம். இளமைக்கால நண்பர், போர்களில் உதவியவர், பதவியை அடைய துணைநின்றவர் ஆனாலும்கூட எதிர்த்தால் எஞ்சவிடமாட்டோம் என்ற செய்தியை நாம் நாட்டில் பரவவிடவேண்டும். அதற்கு இது ஒரு சந்தர்ப்பம்” என்றார்

“அவர் நாயர்படைகளின் அடையாளம் என்றால் அந்த அடையாளத்தை நாம் அழித்தாகவேண்டும். நாயர்படைகளின் அடையாளமாக தளவாய் வேலுத்தம்பி மட்டும் நீடித்தால் போதும், அதுவே உண்மையான ஆற்றல். நாயர்படைகளின் கட்டுப்பாட்டில் தளவாய் இருக்கக்கூடாது. தளவாயின் கட்டுப்பாட்டில் நாயர்படை இருக்கவேண்டும்”

நான் அந்த மதிநுட்பத்தைக் கண்டு திகைத்துவிட்டேன். பேஷ்கார் நாராயண பிள்ளை தொடர்ந்து சொன்னார் “அவர் சொன்னதையே நானும் சொல்வேன். மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை திவான் கேசவதாஸின் மருமகன். என்றானாலும் அவர் தளவாய்க்கு எதிரிதான். என்றோ ஒருநாள் தளவாயை வென்று தானே தளவாய் ஆகவேண்டும் என்று அவருக்கு தோன்றலாம். தோன்றுவதென்ன, தோன்றிவிட்டது. ஆகவேதான் அவர் கிளர்ந்தெழுந்தார். இன்று அவரை நாம் விட்டுவிட்டால் என்றாவது ஒருநாள் மீண்டும் அவரை போர்க்களத்தில் சந்திக்கநேரிடும். அப்போது நிலைமை நமக்கு சாதகமாக இருக்கவேண்டியதில்லை”

வேலுத்தம்பி தளவாயின் முகத்தில் இருந்து எதையும் உணரமுடியவில்லை. நான் சொன்னேன். “நான் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையால் அழைக்கப்பட்டே முதலில் உங்களை பார்க்கவந்தேன். இருபது முறைக்குமேல் அவரை சந்தித்திருக்கிறேன். அவர் உங்களுக்காக போரிட்டு வாள்காயம் அடைந்து கிடந்தபோது அவரை பார்த்துக்கொண்டவன் நான். அவருடைய உயிர் எனக்கு வேண்டும்… எனக்கென நான் எந்தப் பரிசையும் கேட்டதில்லை. இப்போது கேட்கிறேன். அவருடைய உயிரை எனக்கு அளிக்கவேண்டும்.

பத்மநாபன் தம்பி “டாக்டர் துரை அதை என்னிடமும் கேட்டார் அண்ணா” என்றார்.

சிறிய முகக்கோணலுடன் “இதில் உங்களுக்கு வேறு என்ன அக்கறை?”என்றார் வலிய காரியக்காரர் கேசவன் நாயர்.

நான் அவரை கூர்ந்து நோக்கி  “டேய் நாயர், என்னிடம் உன் நிலையில் உள்ள எவரும் இப்படி பேசுவதில்லை. இதை சொன்னதற்காக உன்னை கழுவிலேற்றும்படி கர்னல் மன்றோவிடம் சொல்வேன்” என்றேன். “ஸ்காட்டிஷ் மிஷனின் ஒரு சிறு உறுப்புதான் கர்னல் மன்றோ, தெரியும் அல்லவா?”

அவர் நடுநடுங்கி கைகூப்பிவிட்டார். பேஷ்கார் நாராயண பிள்ளை அவருக்கு பின்னால் மறைந்தார்.

நான் திரும்பி வேலுத்தம்பி தளவாயிடம் “சொல்வதற்கு மேலே ஒன்றும் இல்லை, சற்றேனும் தன்நலத்தை நாடினால் சற்றேனும் அறத்தை நாடினால் அவரை விட்டுவிடுங்கள்” என்றேன்.

வேலுத்தம்பி தளவாய் சிலகணங்கள் நின்றபின் மெல்ல தலையசைத்து முன்னால் நடந்தார். நிமிர்ந்த தலையும் இரண்டு யானைத்துதிக்கைகள் போல அசையும் கைகளுமாக. அவருக்கு அந்த ஆடை மிகமிகப்பொருத்தமாக இருந்தது. அதன் விசிறிமடிப்பு அவர் நடந்தபோது அலைகொண்டது. சரிகைகளின் பொன் மாறிமாறி வந்த வெளிச்சத்தில் அரிய செதுக்குகள் கொண்ட நகை ஒன்றை திருப்பித்திருப்பிக் காட்டுவதுபோல மின்னியது.

அவர் ஒரு பெரிய பொன்வண்டு போலிருந்தார். பொற்சிறகு என அந்த அங்கியை விரித்து எழுந்துவிடுவார் என்பதுபோல. இவர்களின் தெய்வங்கள் பறப்பவர்கள். இவர் ஒரு தேவன், ஒரு கந்தர்வன்.

பத்மநாபன் தம்பி என்னிடம் குரல் தழைத்து “ஒன்றும் செய்யமுடியாது. நாம் ஒருபக்கம் இழுத்தால் அவர்கள் இன்னொரு பக்கம் இழுப்பார்கள்” என்றபின் வேலுத்தம்பியைத் தொடர்ந்து சென்றார்.

நான் பின்னால் சென்றேன். பின்னாலிருந்து என்னுடன் நெருங்கி வந்த வலிய காரியக்காரர் கேசவன் நாயர் தழுதழுத்த் குரலில் “நான் அப்படி எண்ணிச் சொல்லவில்லை” என்றார்.

“சீ ,விலகிப்போ நாயின் மகனே. நீ கழுவில் அமர்வதை கண்டிப்பாக நான் பார்ப்பேன்… நாட்களை எண்ணிக்கொள்”.

அவர் கைகூப்பி தோளைக்குறுக்கி அப்படியே நின்றுவிட்டார். நான் அவரை திரும்பிப் பார்க்கவில்லை. அவர் முகம் சடலம் போல் ஆகியிருக்கும்..

பேஷ்கார் நாராயண பிள்ளை முன்னால் வந்து மேலும் குரல்தழைத்து “அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடாதுதான்” என்றார்.

“நீ அவன் அருகே கழுவில் அமர்வாய்” என்று நான் சொன்னேன்.

அவரும் நின்றுவிட்டார். நான் முன்னால் சென்றேன்.அவர்கள் இருவரும் வெளுத்து நடுநடுங்கிக்கொண்டு வருவதை உணர்ந்தேன். வழியிலேயே வலிய காரியக்காரர் கேசவன் நாயர் தரையில் அமர்ந்துவிட்டார். பேஷ்கார் நாராயண பிள்ளை அவரிடம் குனிந்து மெல்லியகுரலில் பேசுவதை பின்னால் கேட்டேன்.

வேலுத்தம்பி தளவாய் வெளியே தோன்றியதுமே வீரர்கள் வாள் தாழ்த்தி வணங்கினர். அவர் அரண்மனைக்கு வெளியே வடக்கேமுற்றம் என்று அழைக்கப்பட்ட பெரிய களத்தில் அமைந்திருந்த சிறிய மேடையில் சென்று அமர்ந்தார். பத்மநாபன் தம்பி அவர் அருகே நின்றார்.

வேலுத்தம்பி அந்த நாற்காலியில் அமர்ந்ததும் இரு முஸ்லீம்களும் ஓடிச்சென்று அவருடைய ஆடையை சீராக்கி சரியாக மடிப்புகள் அமைந்திருக்கச் செய்தனர். பின்னர் சற்று விலகிநின்று ஒரு சிற்பத்தையோ ஓவியத்தையோ பார்ப்பதுபோல அவர்களை பார்த்தனர். அவர்களுக்கு நிறைவில்லை. பத்மநாபன் தம்பி கைகாட்ட அவர்கள் விலகிச்சென்றனர்.

பேஷ்கார் நாராயணபிள்ளை ஓடிவந்தார். தளவாயின் முன் கைகூப்பி நின்றார். வேலுத்தம்பி தளவாய் திரும்பி நோக்கி புருவம் தூக்க “வலிய காரியக்காரர் கேசவன் நாயருக்கு நெஞ்சடைப்பு… விழுந்துவிட்டார்” என்றார்.

வேலுத்தம்பி தளவாய் நிமிர்ந்து என்னை பார்த்தார்.நான் அவர் கண்களையே கூர்ந்து நோக்கி நின்றேன். அவர் பார்வையை விலக்கிக்கொண்டார்.

பேஷ்கார் நாராயண பிள்ளை கைகாட்ட படைவீரர்கள் உள்ளே சென்று சற்று அப்பால் அழைத்துவந்து நிறுத்தி வைத்திருந்த மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை கூட்டிவந்தார்கள். அவர் அழுக்கான அரைவேட்டி மட்டும் அணிந்திருந்தார். உடலெங்கும் புழுதி. குருதிபடிந்து உலர்ந்த புண்கள். கைகள் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. ஆனால் மிடுக்காக தலைதூக்கி நிதானமாக நடந்து வந்தார்.

அவரைக்கொண்டுவந்து வேலுத்தம்பி தளவாய் நிறுத்தினார்கள். அவர் வணங்கவில்லை. விழிகளை தழைக்கவுமில்லை. நேருக்குநேர் பார்த்தபடி அமைதியாக நின்றார்.

வேலுத்தம்பி தளவாய் மீசையை நீவியபடி அவரைக் கூர்ந்து நோக்கினார். மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை திரும்ப அதே போல நோக்கிக்கொண்டிருந்தார்.

வேலுத்தம்பி தளவாய் கனைத்து குரலை எடுத்து உரக்க  “உன் மீதான குற்றம் என்ன என்று தெரியுமா?” என்றார்.

“நீயே சொல்”என்றார் மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை.

“ராஜத்துரோகம்… அரசரின் ஆணைக்கு எதிராக கிளர்ச்சி செய்தது. படைகளை திரட்டி அரசப்படைகளை தாக்கியது. அரசக்கருவூலத்தை கொள்ளையடித்தது”.

கிருஷ்ண பிள்ளையின் உதடுகள் சிரிப்பில் வளைந்தன “வேலாயுதா, திருவிதாங்கூரின் நாயர்படை என் தாய்மாமன் ராஜா கேசவதாஸ் உருவாக்கியது. அதை வெள்ளைக்காரன் பேச்சைக் கேட்டு கலைத்த நீ செய்ததுதான் ராஜத்துரோகம். நான் அந்த நாயர்படையை அழியவிடாமல் தடுக்க் முயன்றேன்.அந்த நாயர் படையை அழிக்க நீ வெள்ளையனிடமிருந்து கூலிப்படையை கேட்டுவாங்கிக் கொண்டுவந்தாய். அந்தக் கூலிப்படையை எதிர்த்துத்தான் நான் போரிட்டேன், அரசப்படைக்கு எதிராக அல்ல” என்றார்.

வேலுத்தம்பியின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி “நான் கொள்ளையடித்தது வெள்ளையனுக்கு கப்பம் கட்டுவதற்காக நீ கொண்டுபோன திருவிதாங்கூரின் செல்வத்தை. அது நாங்கள் கட்டிய வரிச்செல்வம்” என்றபோது அவர் முகத்தில் இருந்த தீவிரம் என்னை மனம்பதறச் செய்தது

வேலுத்தம்பி  மீசையை நீவியபடி புன்னகைத்து  “வேறேதும் சொல்வதற்கு உண்டா?” என்றார்.

“உண்டு, தளவாய் வேலுத்தம்பியிடம் அல்ல. பழைய வேலாயுதனிடம்” என்றார் மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை  “யானைமேல் ஏறுவதைவிட அங்கே அமர்ந்திருப்பது கடினம் என்று எனக்கும் தெரியும். நீ அந்தப்பதவியில் அமர்ந்திருப்பதற்காக இதையெல்லாம் செய்கிறாய். ஆனால் ஒரு பதவிக்காக எதையும் செய்பவனால் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது. அந்தப்பதவியை அதற்கும் மேலே ஒரு பெரிய லட்சியத்திற்காக கையாள்பவனால்தான் அதில் நீடிக்கமுடியும். என் தாய்மாமா ராஜா கேசவதாஸ் அப்படி இருந்தார். அந்த இலட்சியத்தால் அழிந்தார். ஆனால் தெய்வங்களுக்கு முன்பும் மூதாதையர் முன்பும் தலைநிமிர்ந்து நின்றார். நீ அப்படியா? உன்னால் மனம்தொட்டு அப்படி சொல்லமுடியுமா?”

முதல்முறையாக வேலுத்தம்பி தளவாய் அமைதியிழப்பதைக் கண்டேன். அவர் அப்பேச்சு நீண்டு செல்வதை விரும்பவில்லை என்று தெரிந்தது.

“ஆறுவருடங்களுக்கு முன்பு நீ என் தாய்மாமனை சந்திக்க வந்தாய். நான் உன்னை அவருடைய படுக்கையறைக்கு கூட்டிக்கொண்டுசென்றேன். அவர் உன் கையைப் பிடித்துக்கொண்டு என்ன சொன்னார்?. சொல், என்ன சொன்னார்?”

வேலுத்தம்பி  தலையை திருப்பிக்கொண்டார்.

மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையின் முகம் சட்டென்று கனிவை அடைந்தது. “தளவாய்க்குரிய அரச உடையை அவர் அணிந்ததுதான் பெரிய தவறு என்றார். மாமன்னர் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாளைப் போல அத்தனை அதிகாரங்களையும் தெய்வத்தின் முன்வைத்து அடியவனாக நின்று ஆட்சி செய்திருக்கவேண்டும் என்றார். இல்லையா? சொல்!”

“போதும்” என்றார் வேலுத்தம்பி தளவாய் ஆனால் அது ஒரு பலவீனமான முனகலாகவே ஒலிததது.

“வேடம் அணியாதே வேலாயுதா என்று சொன்னார். ஏனென்றால் இந்த ஆடையை அணிந்துகொண்டால் பிறகு கழற்ற முடியாது. ஆனால் நீ அவர் போட்டிருந்ததை விடப்பெரிய ஆடையை தைத்து அணிந்திருக்கிறாய். வேலாயுதா, நீ இன்று இரண்டாக இருக்கிறாய்.இந்த  அலங்கார ஆடை ஒருவன். உள்ளிருக்கும் தலக்குளத்து வேலாயுதன் செண்பகராமன் இன்னொருவன்”.

“ம்ம்ம்” என்று வேலுத்தம்பி தளவாய் பேஷ்கார் நாராயண பிள்ளைக்கு ஆணையிட்டார்.

அவர் ஆணையை முன்னரே போட்டிருந்தார் என்று தெரிந்தது. பேஷ்கார் நாராயண பிள்ளைக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. அவர் முற்றத்திற்குச் சென்று இருபக்கமும் கையசைத்தார். ஒரு பெரிய ஆண்யானை கையில் ஒரு வடத்துடன் வந்தது.

வேலுத்தம்பி தளவாய் திரும்பி மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையிடம் வெறுப்பால் வளைந்த உதடுகளுடன் “என்ன சொன்னாய்? இரண்டா? யார் இரண்டாக ஆவது என்று பார்ப்போம்” என்றார். “நாலாம் முறை…. நாராயணபிள்ளே,  நாலாம்முறை நடக்கட்டும்…”.

பேஷ்கார் நாராயண பிள்ளைக்கு அதுவும் உடனே புரிந்தது. அவர் தலையசைத்துவிட்டு கையசைவால் ஆணையிட்டார்..மறுபக்கம்இன்னொரு பெரிய யானை கையில் கயிற்றுடன் வந்து முற்றத்தில் நின்றது.

படைவீரர்கள் கிருஷ்ண பிள்ளையை இழுத்துச்சென்றனர். அவருடைய வேட்டி உருவி விழுந்தது. உள்ளே அணிந்த லங்கோட்டியுடன் அவர் சென்றார்.

அவரை கீழே கிடத்தி அவருடைய இரு கால்களிலும் இரு வடங்களை பிணைத்துக் கட்டினர். அவர் அதை வேறெவருக்கோ நிகழ்வதுபோல தலைதூக்கி பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் தொன்மையான ஒரு மதச்சடங்கைப் போல அதை பார்த்துக்கொண்டு நின்றேன். அவர்கள் அனைவரிலும் மதச்சடங்குக்கு உரிய முகமே இருந்தது. மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். கட்டுகளை அழுத்தியும் இழுத்தும் சரி பார்த்தனர்.

பத்மநாபன் தம்பி மிகமெல்ல “அண்ணா” என்றார்.

“என்ன?”என்றார் வேலுத்தம்பி தளவாய்.

பத்மநாபன் தம்பி ஒன்றும் சொல்லவில்லை.

இரு வடங்களும் இரு யானைகளின் துதிக்கையில் அளிக்கப்பட்டன. அவை வடங்களை சுழற்றி பற்றிக்கொண்டன. இரு யானைகளின் பாகன்களும் தங்கள் யானைகளின் யானைகளின் காதுகளை பிடித்தபடி நின்றனர். யானைகள் இருட்டாக மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தன. மாபெரும் மத்தகங்கள். கட்டுமரம் போன்ற கொம்புகள். நெற்றியிலும் காதுகளிலும் கொன்றைமலர் போன்ற செம்புள்ளிப் பரவல்கள். அவற்றின் அசைவை பார்த்ததும் நெஞ்சு திடுக்கிட்டது. நான் பார்வையை திருப்பிக்கொண்டேன்.

இரு கால்களும் கயிறுகளால் கட்டப்பட்டு விரிந்திருக்க கிருஷ்ண பிள்ளை எழுந்து பின்பக்கம் கையூன்றி மண்ணில் அமர்ந்திருந்தார்.

வேலுத்தம்பி தளவாய் எழுந்து சென்று மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையின் அருகே நின்றார். “என்ன கிருஷ்ணபிள்ளே, என்ன சொல்கிறாய்?” என்று மீசையை நீவியபடி ஏகத்தாளமாக கேட்டார் “நான் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இன்றே உன்னை கொண்டுசென்று களக்காட்டுக்கு அப்பால் விட்டுவிடச் சொல்கிறேன். ஆனால் இனி திருவிதாங்கூர் மண்ணில் கால் வைக்க மாட்டாய் என்று இந்த மண்ணில் மும்முறை அறைந்து சத்தியம் செய்து தரவேண்டும்”

“முடியாது என்று முன்னரே சொல்லிவிட்டேன். இது என் கர்மபூமி. என் தாய்மாமன் கட்டிக்காத்த நிலம். இது வெள்ளையர் ஆட்சிக்குச் செல்லப்போகிறது உன்னால்” உரக்க சிரித்து “வெள்ளையரின் முதல்பெரும்பலி நீதான்… அதை அத்தனை தெள்ளத்தெளிவாக பார்க்கிறேன்….இதோ கண்முன் தெரிவதைப்போல பார்க்கிறேன்”

சீற்றத்துடன் திரும்பிய வேலுத்தம்பி தளவாய் “ம்ம்” என்று உறுமினார். பேஷ்கார் நாராயண பிள்ளை கையை அசைக்க இரு பாகன்களும் யானைகளை தட்டினர். யானைச்சங்கிலிகள் குலுங்கிய ஓசையில் என் உடல் விதிர்த்தது. விழுந்துவிடக்கூடாது என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்

இரு யானைகளும் கால்வைத்து பின்னடைந்தன. வடங்கள் இழுபட கால்கள் நீண்டு கிருஷ்ண பிள்ளையின் உடல் அந்தரத்தில் விரைப்படைந்து நின்றது

“எப்படி இருக்கிறது கிருஷ்ணா?”என்றார் வேலுத்தம்பி தளவாய்

“ஒருபக்கம் வேலாயுதன் செண்பகராமனின் தலக்குளம் வீட்டுத் திண்ணையின் குளிர். மறுபக்கம் தளவாய் வேலுத்தம்பியின் அரண்மனை முற்றத்தின் வெப்பம்… நல்ல சுகமாக இருக்கிறது”

வேலுத்தம்பி தளவாயின் உடல் அதிர்வதை நான் தொலைவிலேயே கண்டேன்

பேஷ்காரிடம் கையை காட்டிவிட்டு வேலுத்தம்பி தளவாய் திரும்ப வந்து இருக்கையில் அமர்ந்தார். ஓய்வாக அமர்வதுபோல கால்களை நீட்டிக்கொண்டு கைகளை கைப்பிடியில் வைத்து தலையை தூக்கினார்

இரு யானைகளும் சங்கிலி ஓசையுடன் பின்கால் எடுத்து வைத்தன. மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையின் உடல் நீண்டு இறுகி காற்றில் நின்று துடித்தது. அவர்  “ம்ம்ம்ம்”   “ம்ம்ம்ம்”  என முனகிக்கொண்டிருந்தார். ‘ட்ட்டப்’ என்ற ஓசையுடன் இடுப்பெலும்பு உடைந்தது. “ஆஆஆஆ!”என்று அவர் அடித்தொண்டையில் அலறியபடி அந்தரத்தில் சுழன்று துடித்தார். இரு கைகளும் காற்றில் கிடந்து துவண்டு பதைத்தன

யானைகள் மீண்டும் ஒரு காலடி எடுத்து வைத்தன. இன்னொரு முறியும் ஒலி. ஆனால் மாவிங்கல் கிருஷ்ண பிள்ளை ஒரு முனகலோசையை மட்டுமே எழுப்பினார்

இரு யானைகளும் மேலும் விலகிச்சென்றன. உடல் நெடுக்காக பிளந்தது. ஒரு யானையின் வடத்தில் ஒரு காலும் ஒரு கையும் விலாவெலும்புகளும் நுரையீரலும் குடல்களுமாக பாதி உடலும் இருந்தன. இன்னொரு யானையின் வடத்தில் ஒருகாலும் பாதி உடலும் தலையும். இரண்டும் முற்றாக விலகிச் செல்ல இரு துண்டுகளும் மண்ணில் கிடந்து அதிர்ந்தன

நான் திரும்பி வேலுத்தம்பி தளவாயை பார்த்தேன், என் பிரமையாக இருக்கலாம். ஆனால் விந்தையான ஒரு காட்சியை கண்டேன். வேலுத்தம்பி தளவாயின் உடல் இருபக்கமும் தனித்தனியாக இரு வகைகளில் இழுத்து நடுங்கிக்கொண்டிருந்தது.

***

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–56

$
0
0

பகுதி ஐந்து : எரிசொல் – 2

அவந்தியில் இருந்து துவாரகைக்கு வரவேண்டியிருந்த வணிகக்குழுவினர் எதிர்க்காற்றில் புழுதி இருந்தமையால் சற்று பிந்தினர். ஆகவே அவர்களுக்கு முன்னரே எழுந்து நடந்து நகருக்கு வந்த விஸ்வாமித்ரர் கோட்டைமுகப்பில் காத்திருந்த காவல்வீரர்களால் எதிர்கொள்ளப்பட்டார். வண்டி நிறைய பொருட்களுடன், மடி நிறைய பொன்னுடன், திருமகள் வடிவென வரும் வணிகர்களை எதிர்பார்த்திருந்த காவலர்கள் அவள் தமக்கையின் வடிவென அழுக்கு உடையும் சடைமுடித் தலையுமாக வந்த விஸ்வாமித்ரரை கண்டதும் சீற்றம் கொண்டனர். முதலில் எவரோ தங்களை இளிவரல் செய்யும்பொருட்டே அவரை அனுப்பியிருப்பதாக அவர்கள் நினைத்தனர்.

“யார் அந்த பித்தன்?” என்று அசுரகுடியைச் சேர்ந்த காவலர்தலைவனான விருஷபன் உரக்க கேட்டான். “யாரோ வேண்டுமென்றே அவனை நமக்கு எதிராக அனுப்பியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். புலர்காலையில் பித்தர்கள் இப்படி கிளம்பி வருவதில்லை” என்றான் துணைக்காவலர்தலைவனாகிய சாகரன். “அவன் பித்தன் அல்ல. பித்தன் பெரும்பாலையை தன்னந்தனியாக எப்படி கடப்பான்?” என்றான் வில்லவர் தலைவனாகிய ஊர்வரன். “வேண்டுமென்றே வருகிறான். புலரியில் நமது முதல்விழி இன்று அவன்மேல் என்று அறிந்திருக்கிறான். மிகச் செருக்குடன் நடந்து வருகிறான்” என்றான் ஒரு வீரன். “அகற்று அவனை” என்று விருஷபன் கூவினான். வாளை உருவியபடி “நான் அகற்றுகிறேன், அக்கீழ்மகனை” என்று எழுந்தான்.

விருஷபன் அவரை நோக்கி சென்று ஒரு சொல்லும் உரைக்காமல் கால் தூக்கி அவர் விலாவில் உதைத்து மையச்சாலையில் இருந்து அப்பால் வீழ்த்தினான். வாளை உருவி அவரை அணுகி முகத்தில் துப்பி “கீழ்மகனே, யார் நீ? இந்த இழிமங்கலத் தோற்றத்தில் ஏன் இப்புலர்காலையில் இப்பெருநகரின் வாயில் முன் தோன்றினாய்?” என்றான். புழுதியில் விழுந்த விஸ்வாமித்ரர் கையூன்றி எழுந்து அமர்ந்து “நான் தவம் செய்பவன். இப்புவியிலிருந்து எதை உரிமையெனக் கொண்டாலும் என் தவம் குறைவுபடும். ஆகவே அன்றன்று பெறுவனவற்றையே கொண்டிருக்கிறேன். இப்பாலையில் என்னை பேண எவருமில்லை. ஆகவேதான் இவ்வண்ணம் இருக்கிறேன்” என்று சொன்னார்.

“தவமா? நீயா?” என்று அவன் சிரித்தான். “உன் தேவதை என்ன மூத்தவளா? எனில் அத்தவத்தை நீ காட்டில் செய்யவேண்டும். இங்கு மங்கலமும் அழகும் வெற்றியும் திகழும் நகரில் புலரியில் வந்து உன் இழிமுகத்தை காட்டலாகாது. பாற்கடலின் நஞ்சென உன்னை இங்கே உணர்கிறேன்” என்றான். அவனுக்குப் பின்னால் வந்து நின்ற சாகரன் “பரிமாறப்பட்ட அறுசுவை உணவில் ஒரு துளி மலத்தை வைத்ததுபோல” என்று சொன்னான். அவர்கள் அதைப்போன்ற அணிச்சொற்றொடர்களை சொல்லிப் பழகி அதில் மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். விருஷபன் “உன்னை இங்கு கண்டமையால் நானும் மங்கலம் அழிந்தேன்” என்றான். “ஓடு, எழுந்து திரும்பி ஓடினால் உயிர் பிழைப்பாய்!”

விஸ்வாமித்ரர் “நான் உங்கள் அரசரை பார்க்கவேண்டும்” என்றார். “அரசரையா, நீயா? நீ என்னை சந்தித்ததனாலேயே உயிர்விடும் நிலையை அடைந்துவிட்டாய்” என்றான் விருஷபன். “நரியின் முகத்தில் முயல் காலையில் விழித்திருக்கிறது.” ஊர்வரன் வெடித்துச் சிரித்தான். “நான் அவரை பார்ப்பதற்காக வந்தேன்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசர் இப்பொழுது எவரையும் பார்ப்பதில்லை” என்று ஊர்வரன் சொன்னான். “அதிலும் உன்னைப்போன்ற அழுக்குப்பிறப்பை அவர் சந்தித்தால் இன்று அவர் சொல்லால் உன் தலை மட்டுமல்ல பல ஏதிலார் தலையும் உருளும்.” விஸ்வாமித்ரர் “நான் அவரை பார்க்கும் பொருட்டே வந்தேன். பார்த்துவிட்டே செல்வேன்” என்றார். “செத்து கீழுலகு செல்வதைப் பற்றி சொல்கிறான்” என்றான் ஊர்வரன். சாகரன் வெடித்துச் சிரித்தான்.

“இவனை என்ன செய்வது?” என்று விருஷபன் இன்னொரு காவலனிடம் கேட்டான். “இவனை இன்றைய நிலைமையில் நகருக்குள் நுழையவிட்டால் நம் குடிகளே அடித்துக் கிழித்துப் போட்டுவிடுவார்கள். இன்று இந்திரனுக்குரிய நாள். குடிக்களியாட்டு உச்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. குடிக்களியாட்டுக்களில் எவரையாவது தெருக்களில் அடித்து இழுத்துச்சென்று கொல்வது அவ்வப்போது நிகழ்கிறது” என்றான் சாகரன். “இவனை அவ்வாறு அவர்கள் கொன்று விளையாடட்டும்” என்றான் ஊர்வரன். “நம் வீரன் எவனாவது சாவதற்கு இந்த அழுக்குப்பித்தன் சாகட்டுமே.”

பின்னால் நின்ற ஒரு வீரன் “நூற்றுடையோரே, ஒரு செய்தி. இவன் உடலில் இருக்கும் பச்சைகுத்தப்பட்ட குறிகளை பாருங்கள். இவன் அரசகுடியினன்…” என்றான். விருஷபன் கூர்ந்து நோக்கி “ஆம், அழுக்கில் மறைந்துள்ளன அடையாளங்கள்… அரசகுடியினன் என்றே தோன்றுகிறது” என்றான். ஒரு வீரன் குந்தி அமர்ந்து நோக்கி “நூற்றுடையோரே, இவன் குறிகளில் இருந்து இவன் சந்திரகுலத்தவன், புரூரவஸின் மைந்தனாகிய அமரவசுவின் குருதிவழியில் வந்தவன் என்று தெரிகிறது. குசநாபரின் மைந்தர் காதி இவன் தந்தை. அவர் குசகுலத்தை ஆண்டவர், குசநகரியின் அரசர்” என்றான். விருஷபன் “அடேய், நீ அரசகுடியினனா?” என்று கேட்டான். “நான் கௌசிக குடியினனாகிய விஸ்வாமித்ரன்… தவம் பயில்பவன்” என்று அவர் மறுமொழி சொன்னார்.

“என்ன செய்வது இவனை?” என்றான் விருஷபன். “நம் கையிலிருந்து கடத்திவிடுவோம். மேலும் வணிக வண்டிகள் வரும் பொழுது இது” என்றான் சாகரன். “ஐயம் எழுந்தமையால் இவனை சிறைபிடித்தோம் என்று சொல்வோம். முறைப்படி மூடுவண்டியிலேற்றி அரசரிடம் கொண்டு போகலாம். அவர் இவனை உசாவட்டும்” என்றான் விருஷபன். “இவன் அரசகுடியினன். அரசகுடியினர் இப்படி நகர்புகலாமா? உளவறியக்கூட வந்திருக்கலாம்” என்றான் சாகரன். “ஆம், ஆனால் அரசர் இவனுக்குரிய தண்டனையை அளிக்கட்டும்” என்றான் விருஷபன். “காலையில் ஏன் இப்படி ஒரு சிக்கல் வந்து நம் தலையில் விழுகிறது?” என்று விருஷபன் திரும்பிப் பார்த்தான். “இவன் மெய்யாகவே பித்தன்தானா?” சாகரன் “பித்தனல்ல என்றால் அரசகுடியினன் ஏன் இப்படி இருக்கிறான்?” என்றான்.

அவர்கள் விஸ்வாமித்ரரைப் பிடித்து மதுக்கலங்களை கொண்டு செல்லும் கூண்டு வண்டி ஒன்றுக்குள் ஏற்றினார். அது உண்மையில் ஒரு பெரிய பீப்பாய். அதற்குள்ளே இட்டு அவரை மூடி ஒற்றை அத்திரி இழுத்த வண்டியில் நகருக்குள் கொண்டு சென்றனர். அவர் அதற்குள் எந்த ஓசையுமில்லாமல் படுத்திருந்தார். அவரை அரண்மனை முற்றத்திற்கு கொண்டுசென்று இறக்கினர். அவருடன் வந்த ஊர்வரன் “காவலர்தலைவர் விருஷபன் என்னை அனுப்பினார். இந்த வண்டிக்குள் இருப்பவன் ஒரு பித்தன். ஆனால் அவன் உடலில் அரசகுடியினருக்குரிய குறிகள் இருக்கின்றன. ஆகவே இழுத்துவந்தோம். எவரும் பார்க்கவேண்டாம் என்று கூண்டுவண்டியில் கொண்டுவந்தோம்” என்றான்.

துணையமைச்சர் குடிலர் “இறக்கு அவனை” என்றார். விஸ்வாமித்ரர் இறங்கியதும் அவர் வந்து அவரை கூர்ந்து நோக்கி “யார் நீ?” என்றார். “கௌசிகனாகிய விஸ்வாமித்ரன். தவம் பயில்பவன். உங்கள் அரசரை சந்திக்கும்பொருட்டு வந்தேன்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசரை இப்போது சந்திக்க முடியாது. இது முதற்புலரி வேளை. அரசர் இன்னும் மதுத்துயிலில் இருந்து எழவில்லை” என்றார் குடிலர். “அவன் எவ்வண்ணம் இருந்தாலும் அவனை சந்தித்தாகவேண்டும் நான்” என்றார் விஸ்வாமித்ரர். “நெறி மறந்தா பேசுகிறாய், அறிவிலி?” என்று சொல்லி அருகே நின்ற காவலர்தலைவன் விஸ்வாமித்ரரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். குடிலர் “இவனை அடைத்து வையுங்கள். நான் என்ன செய்வதென்று சொல்கிறேன்” என்றார்.

அவர்கள் விஸ்வாமித்ரரை இழுத்துச் சென்று அங்கிருந்த சிறிய இருட்டறை ஒன்றில் தள்ளி மூடினர். அதற்குள் அமைச்சர் வக்ரர் குடிலரை அழைத்தார். அவரிடம் துறைநிலைக்குப் போகும்படி சொன்னார். அங்கே பீதர்நாட்டுக் கலம் ஒன்றை துறைக்காவலர்களே இரவில் புகுந்து சூறையாடியிருந்தனர். “அவர்கள் எவரென்று பார். நம் குலத்தோர் என்றால் பெரிதாக தண்டிக்கவேண்டாம்” என்றார் வக்ரர். குடிலர் உடனே கிளம்பி துறைநிலைக்கு சென்றார். அங்கே யாதவர்களும் அசுரர்களும் ஷத்ரியர்களும் இணைந்துதான் அச்சூறையாடல் நடைபெற்றிருந்தது. பீதர் கலத்தின் காவலர்கள் அவர்களில் பன்னிருவரை சிறைப்பிடித்து வைத்திருந்தனர். பொருட்களை திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவர்களைக் கொன்று நீரில் வீசிவிடுவதாக அவர்கள் சொன்னார்கள். துவாரகையின் காவலர்கள் பீதர் கலத்தை கொளுத்திவிடுவோம் என்று கொந்தளித்தனர்.

குடிலர் பீதர்களிடம் சென்று பேசினார். அவர்கள் சிறைப்பிடித்திருக்கும் வீரர்களை உடனே விடுவிக்கவேண்டும் என்றும் துவாரகையின் அரசர் உசாவி நீதி வழங்குவார் என்றும், பொருட்கள் அரசிடமிருந்து திரும்பக்கிடைக்கும் என்றும் சொன்னார். அவர்களை விடுவித்தார். அவர்களை மற்ற வீரர்கள் தோள்மேல் தூக்கி கூச்சலிட்டு நடனமிட்டபடி சென்றனர். பீதர்களிடம் பொறுத்திருங்கள் என்று சொல்லிவிட்டு அவர் திரும்பினார். “அவர்கள் அரசரிடம் முறையிடுவார்கள்” என்று அவருடன் வந்த உதவியாளன் சொன்னான். “முறையிட வாய்ப்பளிக்கவேண்டாம். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேல் இங்கே நிற்கமுடியாது. அவர்கள் செல்வதுவரை எந்தச் சொல்லும் அரசரிடம் வந்துசேரக் கூடாது” என்றார் குடிலர்.

குடிலர் திரும்பி வந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. வக்ரரிடம் அவர் நிகழ்ந்தவற்றை சுருக்கமாக சொன்னார். அப்போதுதான் அவருக்கு விஸ்வாமித்ரரின் நினைவு வந்தது. “மூத்தவரே, இன்று காலை அரசகுடியினன் ஆகிய ஒரு பித்தன் இங்கே தேடிவந்தான்” என்றார். “பித்தனா? அரசகுடியினன் என்றால் என்ன பெயர் சொன்னான்?” என்று வக்ரர் கேட்டார். “அவன் பெயர் விஸ்வாமித்ரன். கௌசிக குடியினன்” என்றார் குடிலர். “எங்கோ கேட்ட பெயர். நன்று, அவனை அழைத்து வா” என்று வக்ரர் சொன்னார். குடிலர் ஏவலனிடம் விஸ்வாமித்ரரை அழைத்துவர ஆணையிட்டார். விஸ்வாமித்ரரை பார்த்தபோது வக்ரர் ஏமாற்றம் அடைந்தார். அவர் அரசகுடியினர் போலவே தோன்றவில்லை. “என்ன வேண்டும் உமக்கு?” என்று கேட்டார்.

“நான் அரசரை பார்க்கவேண்டும்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசரை அத்தனை எளிதாக பார்க்கமுடியாது” என்று வக்ரர் சொன்னார். “நான் அவரை பார்த்தாகவேண்டும்” என்று விஸ்வாமித்ரர் மீண்டும் சொன்னார். வக்ரர் அதை எப்படி கடப்பது என்று எண்ணி அவைமறுப்பை சாம்பனின் இளையோர் எவரேனும் செய்யட்டும் என்று முடிவுசெய்தார். அவர் ஏவலனிடம் “இவரை அரசவைக்கு அழைத்துச் செல்… அரசரைக் காண விழைகிறார் என்று கூறு. அரசகுடியினர் என்பதனால் அனுப்பினேன் என்று சொல்” என்றார். பின்னர் தாழ்ந்த குரலில் “அவர்கள் இவரைத் தூக்கி வெளியே வீசுவார்கள். அப்படியே இழுத்து நகரிலிருந்து வெளியே கொண்டு வீசிவிடு” என்றார்.

அவன் அவரை “வருக!” என்று அழைத்துச் சென்றான். செல்லும் வழியிலேயே “இப்படி ஒரு தோற்றத்தில் எவரும் அரசரை சந்திக்க முடியாது. உமக்கு நான் வேண்டுமென்றால் என் மேலாடையை தருகிறேன். மேலே உடுத்திக்கொள்ளும்” என்றான். “வேண்டாம்” என்று விஸ்வாமித்ரர் சொன்னார். அவன் அவரை சாம்பனின் அவைக்கு அழைத்துச் சென்றான். சாம்பனின் அரண்மனை முழுக்கவே அசுரகுடியினரின் ஆட்சியில் இருந்தது. அவர்கள் கூடி நின்று விஸ்வாமித்ரரைப் பார்த்து சிரித்தனர். சிலர் “பித்தனை எதற்கு கொண்டுசெல்கிறீர்?” என்றனர். “இன்று அவைக் களியாட்டுக்கு ஒரு பித்தன் தேவையாகிறான்” என்று அவன் மறுமொழி சொன்னான்.

சாம்பன் அப்போது தன் உடன்பிறந்தாருடனும் காளிந்தியின் மைந்தருடனும் காப்பிரி நாட்டிலிருந்தும் யவன நாட்டிலிருந்தும் வந்த வணிகர்களுடன் சிற்றவைக்கூடத்தில் களியாட்டில் இருந்தார். அவர் காலையில் எழுந்து சிறுபொழுதே அரசப்பணிகளை நோக்கினார். அவை பெரும்பாலும் அரசி கிருஷ்ணையாலேயே நிறைவேற்றப்பட்டன. அரசர் என அவையில் தோற்றமளிப்பது ஒன்றே அவர் செய்யக்கூடுவது. ஒரு நாழிகைகூட அவரால் அங்கே அமரமுடியாது. பொறுமையிழந்து அசைந்துகொண்டிருப்பார். எழுந்து தன் அறைக்குச் சென்று அவையாடைகளைக் களைந்து வேற்று ஆடை அணிந்துகொண்டால் அதன்பின் நேராக களியாட்டறைக்குச் சென்றுவிடுவார். அங்கே அவருக்காக விறலியரும் பாணரும் பிறரும் கூடியிருப்பார்கள்.

அவர் பின்னிரவு வரை மதுக்களியாட்டில் ஈடுபட்டிருந்தார். மதுக்களியாட்டு அதனுடன் இளிவரலாடலை சேர்த்துக்கொண்டால்தான் கொண்டாட்டமாகிறது. இளிவரலாட்டு மேலும் மேலும் பொருளின்மைகொண்டு முழுப் பித்தாகவே ஆகும்போதுதான் அக்கொண்டாட்டம் உச்சமடைகிறது. அன்று உச்சிப்பொழுதிலேயே சாம்பன் குடிக்கத் தொடங்கியிருந்தார். விறலியர் நால்வரும் பாணர் நால்வரும் நடனமாடினர். பாணர் பெண்ணுருக்கொண்டும் விறலியர் ஆணுருக்கொண்டும் ஆடினர். கீழ்மை நிறைந்த அசைவுகள், சொற்கள். அதற்கு அங்குளோர் சிரித்து கூச்சலிட்டனர்.

ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் சாம்பன் ஓடிச்சென்று ஒரு விறலியின் ஆடையை கிழித்து வீசினார். அங்கிருந்தோர் அனைவரும் பாய்ந்து சென்று அவர்களின் ஆடைகளை இழுத்துக் களைந்து வெற்றுடலாக்கினர். ஆடையில்லாத அவர்கள் அங்குமிங்கும் ஓட மற்றவர்கள் துரத்தினர். சிரிப்பும் கூச்சலும் வசைச்சொற்களும் அறைக்குள் நிறைந்திருந்தன. அந்த அறைக்குள் இருந்த ஏவலரும் காவலரும்கூட மது அருந்தி நிலையழிந்திருந்தனர். மது அருந்தாத எவரும் அங்கே நின்றிருக்க முடியாது. சாம்பன் விறலி ஒருத்தியின் ஆடையை எடுத்து அணிந்துகொண்டார். சுமித்ரன் “மிகச் சரியாக இருக்கிறது, மூத்தவரே! அழகு!” என்று கூச்சலிட்டார். வசுமான் “சாம்பவி! இளவரசி சாம்பவி!” என்று கூவினார்.

சாம்பன் ஆடையின்றி நின்ற விறலியின் முலைக்கச்சையையும் கைவளைகளையும் அணிந்து பெண்போலவே நடந்தார். இளையோர் கைதட்டி கூவினர். அவர் ஆடையை சுருட்டிக் கட்டியிருந்தார். பெரிய குடவயிறு கொண்டவராதலால் அது மேலும் பெரிதாகத் தெரிந்தது. சகஸ்ரஜித் “கருவுற்றிருக்கிறாள்! சாம்பவிக்கு கரு முதிர்ந்திருக்கிறது!” என்று கூச்சலிட்டார். சுருதனும் கவியும் விருஷனும் “ஆம்! கரு! கரு முதிர்ந்துள்ளது” என்று கூவினர். சித்ரகேது எழுந்து கையை குழவியை தூக்குவதுபோல வைத்து ஆட்டி தாலாட்டுப் பாட்டு ஒன்றை பாடினார். அதை விரைவான கைத்தாளத்தால் அவர்கள் ஆடலுக்குரிய பாடலாக மாற்றினர்.

அப்போதுதான் விஸ்வாமித்ரரை ஏவலன் அவை வாசலில் கொண்டுவந்து நிறுத்தினான். “என்ன?” என்று வசுமான் கேட்டார். “அரசகுடியினராகிய ஒரு முனிவர்… பித்தன் போலிருக்கிறார். அரசரை பார்க்கவேண்டும் என்றார். அழைத்துவந்தேன்… அரசர் ஆணையிட்டால் பிறகு அழைத்து வருகிறேன்” என்றான் காவலன். வசுமான் உள்ளே நோக்கி “பித்தனாகிய முனிவர் ஒருவர் வந்துள்ளார்!” என்றார். “ஆ! பித்தன்! பித்தனாகிய முனிவன். அவன்தான் நமக்குத் தேவை… அழைத்து வருக!” என்று சுருதன் கூவினார். கவி “பித்தன் வருக! நாமெல்லாம் பித்தர்கள்!” என்றார். விருஷன் விஸ்வாமித்ரரிடம் “உள்ளே வருக” என்றார்.

உள்ளே சென்ற விஸ்வாமித்ரர் அவர்களை பார்த்தபடி எந்த உணர்ச்சியும் எழாத முகத்துடன் நின்றார். “பித்துமுனிவரே, வருக… இதோ சாம்பவி என்ற அரசி நமக்கெல்லாம் அள்ளி வழங்க வந்திருக்கிறாள்” என்றார் சுருதன். “அவள் கருவுற்றிருக்கிறாள்! ஆம்!” என்றார் விருஷன். கவி “நமது முனிவர் இப்போது கணித்துச் சொல்வார், அக்கருவில் எழவிருப்பது ஆணா பெண்ணா?” என்றார். விஜயன் “ஆம், நாம் அறிந்தாகவேண்டும். ஆணா பெண்ணா?” என்றார். சித்ரகேது “ஆண் அல்லது பெண்! ஆகா!” என்றார். சுருதன் “அதற்கு முன் இந்த அழுக்குமுனிவன் அவன் குலத்தையும் குடியையும் சொல்லவேண்டும்…” என்றார்.

கிராது “அரசி, வருக! வந்து தங்கள் மணிவயிற்றை காட்டுக!” என்றார். சாம்பன் ஒசிந்து நடந்து அருகே வந்து வயிற்றைக் காட்டி “என் கருவில் வளர்வது ஆணா பெண்ணா, முனிவரே?” என்றார். விஸ்வாமித்ரர் “நான் கௌசிகனாகிய விஸ்வாமித்ரன். இந்தக் கருவில் வளர்வது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல” என்றார். “இதற்குள் வளர்வது ஓர் இரும்பு உலக்கை. இது பிறந்து உங்கள் குடியை ஒரு துளியும் எச்சமின்றி அழிக்கும். இந்நகரை கற்குவியலாக ஆக்கும். நீரில் மூழ்கடிக்கும்… அறிக தெய்வங்கள்!” என்றார்.

ஆனால் அவர்கள் இருந்த நிலையில் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. “ஆ! இரும்பு உலக்கை!” என்று சுருதன் சிரித்தார். “முனிவரே, அந்த இரும்புலக்கை ஆணா பெண்ணா?” என்று விருஷன் கேட்டார். சித்ரகேது “இரும்புலக்கைக்கு என்ன பெயரிடுவது?” என்றார். கிராது “பெயரை நான் இடுகிறேன், முசலன்” என்றார். “டேய், அது ஆணல்ல பெண்” என்றார் கவி. “முசலி! முசலி!” என்று பலர் கூச்சலிட்டனர். “அது ஆணுமல்ல பெண்ணும் அல்ல. ஆகவே முசலம்!” என்றார் சுமித்ரன். “முசலம் எழுக! முசலம்!” என்று சகஸ்ரஜித்தும் விஜயனும் கூச்சலிட்டார்கள்.

“முசலத்தின் வரவை அறிவித்த முனிவருக்கு மூன்று வெள்ளிக் காசுகள் பரிசு… தம்பி வசு, இந்த அழுக்குவிலங்கை இட்டுச்செல். இதற்கு மூன்று வெள்ளிக்காசுகளை தரையில் வீசிக்கொடு. இது கவ்வி எடுத்துக்கொண்டால் ஓடவிடு… இல்லையேல் சாட்டையால் இதற்கு தவழ்வது எப்படி என்று சொல்லிக்கொடு” என்றார் சுமித்ரன். சாம்பன் “என் வயிற்றில் இதோ இரும்புலக்கை அசைகிறது! ஆ!” என்று நடிக்க மற்றவர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள். விஸ்வாமித்ரர் தலைவணங்கி அறையிலிருந்து வெளியே சென்றார்.

சீற்றத்துடன் அவருக்குப் பின்னால் ஓடி “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று கூவிய வசுமான் வாளை உருவி “என்ன சொல்லிவிட்டு செல்கிறீர்கள்? இவ்வண்ணம் ஒரு சொல்லை உரைத்தபின் இந்நகரத்திலிருந்து வெளிச்செல்ல முடியாது உம்மால்!” என்றார். “உங்களில் எவரேனும் துணிவிருந்தால் என் தலையை வெட்டலாம்” என்று கூறி விஸ்வாமித்ரர் நடந்தார். மேலும் பின்னால் ஓடிய வசுமான் வாளை உருவி அவர் தலையை வெட்டினார். ஆனால் அரைக்கணத்தில் திரும்பி அவர் வசுமான் கண்களை பார்த்தார். அந்த நோக்கு அவர் உடலில் ஏதோ நரம்பு ஒன்றை அறுத்ததுபோல் அவர் உடல் விதிர்த்து பக்கவாட்டில் விழுந்தது. அவர் வாயில் நுரை வர இழுத்துக்கொண்டார்.

விஸ்வாமித்ரர் திரும்பி சூழ நின்ற மூன்று காவல்வீரர்களை பார்க்க அம்மூவருமே அக்கணமே நிலத்தில் விழுந்து வலிப்பு கொண்டனர். அங்கிருந்த அத்தனை வீரர்களும் அஞ்சி கூச்சலிட்டுக்கொண்டு விலகிச்சென்று படைக்கலங்களை கீழே போட்டு சுவரோரமாக நின்றனர். அவர் இறங்கி வெளியே சென்று அரண்மனை நீங்குவது வரை அவருக்கு எதிரே வருவதற்கு எவரும் துணியவில்லை. அவர் மதயானை என நடந்து துவாரகையை வகுந்து வெளியே சென்றார். செல்லச்செல்ல அவருக்கு பின்னால் அந்தத் தீச்சொல் பரவியது.

அன்று நிகழ்ந்தது எதையுமே சாம்பன் அறியவில்லை. களியாட்டுக்குப் பின் அவர் வழக்கம்போல் நிலையழிந்து விழுந்தார். அவரை கொண்டுசென்று மஞ்சத்தில் படுக்கவைத்தனர். துயிலில் அவர் ஒரு கனவு கண்டார். அவர் பெண்ணாக பேற்றுநோவு கொண்டு துடித்தார். அவருடைய கால்களுக்கு நடுவே தசை கிழிந்து பிளந்தது. உள்ளிருந்து சலமும் குருதியுமாக ஒரு பொருள் வெளியே வந்தது. அது ஓர் உலக்கை. அவர் அதை தன் காலால் தட்டி அப்பால் வீசிவிட்டு அலறினார். பிறரை அழைத்தார். அது நாகம் என குருதி படிந்த உடலை நெளித்து ஏறி மஞ்சத்தில் அவர் அருகே படுத்துக்கொண்டது.

அவர் அதை தள்ளிவிட முயன்றார். அது கரிய நிறமுள்ள இரும்புத் தடி என்றாலும் நெளிந்து அவரை பற்றிக்கொண்டு சூழ்ந்தது. அவருடைய மார்பில் பால் அருந்த முற்பட்டது. அவர் உரக்க கூச்சலிட்டு கையால் மெத்தையை ஓங்கி தட்டித்தட்டி ஏவலனை அழைத்தார். வெளியிலிருந்து ஏவலர்களும் மருத்துவர்களும் உள்ளே வந்தபோது அவர் எழுந்து அமர்ந்து வியர்த்து மூச்சிரைத்து “கொடுங்கனவு!” என்றார். “கொடுங்கனவு… விந்தையானது” என்று சொல்லி “மது… மது கொண்டு வருக!” என்றார்.

“கூறுக, என்ன கனவு?” என்று மருத்துவர் கேட்டார். சாம்பன் “ஒன்றுமில்லை. பொருளற்றது” என்றார். “மதுவின் மிச்சம் அது…” மருத்துவர் “தங்கள் நோயை கணக்கிட அது உதவக்கூடும்” என்றார். “நான் கருவுற்றிருப்பதாகவும் ஒரு குழவியைப் பெற்றதாகவும் கனவு கண்டேன். ஆனால் ஆணாகவே இருந்தேன். அது குழவி அல்ல, ஓர் இரும்புத் தடி” என்றார் சாம்பன். சூழ நின்ற முகங்கள் வெளிறின. திகைப்புடன் அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். நான்கு நாழிகை நேரத்துக்கு முன்னர்தான் விஸ்வாமித்ரரின் அந்தத் தீச்சொல் அங்கு நிகழ்ந்திருந்தது. அது எவ்வண்ணமேனும் சாம்பனின் செவிகளுக்கு வர எந்த வாய்ப்புமில்லை. அவர் கள்மயக்கில் இருந்தார். அப்படியே துயின்றார்.

“ஆம் அரசே, அது பொருளற்ற கனவுதான். தங்கள் உடலுக்குள் ஒவ்வா உணவு ஒன்றிருக்கிறது. அவ்வண்ணம் இருக்கும்போதுதான் வாய் வழியாகவோ செவி வழியாகவோ பொருட்கள் வெளியேறுவதுபோல கனவு வரும். இது அது போன்ற ஒன்றே” என்று மருத்துவர் கூறினார். சாம்பன் மீண்டும் சற்று மது அருந்தி படுத்துக்கொண்டார். ஆனால் அவர் துயிலில் ஆழ்ந்து கொண்டிருக்கையிலேயே அவ்வாறு கனவொன்றைக் கண்ட செய்தி நகரெங்கும் பரவியது. மறுநாள் புலர்வதற்குள் நகர் முழுக்க அச்செய்தியே திகழ்ந்தது. அந்நகர் அழிய வேண்டுமென்று அரசமுனிவர் வந்து தீச்சொல்லிட்டுச் சென்றார் என்று சூதர்கள் கதை பெருக்கினர். “ஊன்தடி பிறக்கும். வாள் போழ்ந்து புதைப்பர். முளைத்தெழுந்து பெருகும். முற்றழித்து செல்லும்” என்ற சொல் நிலைகொண்டது.

தொடர்புடைய பதிவுகள்

இறைவன், துளி- கடிதங்கள்

$
0
0

துளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

திருவரம்புக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். துளி அதில் ஓர் உச்சம். மிகமிக எளிமையான சொற்களில் ஒரு கொண்டாடமான சூழலைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். மனிதர்கள், விலங்குகள். அனைத்தையும் பிணைத்திருக்கும் எளிமையான அன்பு.

இந்த எளிமையான அன்பை பார்க்கையில் ஒன்று தெரிந்தது. இது ஒருவகை விலங்குத்தனமான அன்பு. ஆகவே விலங்குகளில் இன்னும் கூர்மையாக அது வெளிப்படுகிறது. கருப்பன் அந்த அன்பின் ஓர் உச்சம். மனிதர்கள் எளிமையாக விலங்குபோல இருக்கையில் கொஞ்சம் முழுமையாக வெளிப்படுகிறது. செரிபெரல் ஆக மாற மார அந்த அன்பு குறைந்தப்டியே செல்கிறது. இல்லாமலாகிவிடுகிறது

ஆர்.ராஜ்குமார்

***

அன்புள்ள ஆசான்

துளி – தொடக்கம் முதல் முடிவு வரை இளித்து கொண்டே படித்த மற்றொரு கதை. கொரோனாவிற்கு முன்னர் உங்களிடம் ‘ஆசான் இப்பொழுதெல்லாம்  நீங்கள் ஏன் நகைச்சுவை அதிகம் எழுதுவதில்லை’ என்று கேட்க நினைத்திருந்தேன். இந்த காலங்களில் என்னைமீறி சிரித்துக்கொண்டே படித்துக்கொண்டிருக்கிறேன். ‘துளி’ மிகவும் பிடித்த கதை.

அனந்தன் என்னுடைய மனம்கவர் கதாபாத்திரம். கரடி நாயர், தவளைக்கண்ணன், கள்ளன், நாடார், டீக்கனார் அந்த ஊர் யானை (ஆனையில்லா!)  கோபாலக்ரிஷ்ணன், முக்கியமாக கருப்பன். ( உங்களிடம் “டீக்கனார் என்றால் என்ன அர்த்தம் ?” என்று குழந்தைத்தனமாக ஒருமுறை கேட்டு அதற்கு நீங்கள் நொந்துகொள்ளாமல் ‘Deacon’ என்று பதில் அளித்தீர்கள்.  நன்றிகள்) மிகப்பெரிய empathy இல்லாமல் இப்படி எழுத வாய்ப்பே இல்லை.

‘சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ்’ தொலைக்காட்சியில் பார்க்கையில் இன்னும் நன்றாக எடுக்கலாமே எழுதலாமே என்று தோன்றியுள்ளது. ‘காத்திரம் இல்லையோ’ என்று தோன்றியுள்ளது பெரும்பாலும் சிறுவர் கதாபாத்திரம் எழுதும்போது தன்மை நிலையில் இருந்து கதை சென்றாலும் ‘ஆசிரியர்’ சிறுவரை அவதானிப்பதாக பலர் எழுதுகின்றனர். சிறுவனாக மாறி எழுதுவது அவனுடைய பார்வையில் அவனுக்கு மட்டும் தெரியும் விடயங்களை எழுதுவது (கோட்டை  – இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ‘மொழி’யும் கூட  ) ஒரு குதூகலத்தை தருகிறது.

இந்த குதூகலம் யானைகள் கருப்பன் அந்த மொத்த ஊரையே நிலைநிறுத்துகிறது. ‘இனியெல்லாம் சுகமே’ என்று என்னை அமைதிப்படுத்துகிறது. ‘ஆனையில்லா’ விட்ட இடத்தில் இன்னுமொரு நாளில் இந்த கதை தொடங்குவதாக இருப்பது இன்னொரு சந்தோசம். கருப்பன் பேசும் ‘வசனங்கள்’ இனிமையாக அற்புதமாக பொருந்திவருகிறது. மதங்கள் ஜாதி இவற்றையெல்லாம் இலகுவாக பகடி செய்து கேலி செய்து பேசிக்கொள்வது இதமாக உள்ளது. ‘இப்படி எல்லா ஊரும் இருந்தா நல்லாயிருக்கும்’.

ஒரு கதை இவ்வளவு எளிமையாக இலகுவாக சொல்லமுடியுமா என்று ‘deceptively simple ‘ என்பதாக சொடுக்கிவிட்டு தொடங்கும் கதை அசால்டாக அனாயசமாக செல்கிறது. ஆனால் இப்படி எழுதுவது மிகவும் கடினம் என்று தெரிகிறது. ஒரு ஆனை இல்ல – இரண்டு யானை என்பதும் கொச்சுகேசவன் கோபாலகிருஷ்ணனை பார்த்து பதறுவதும் -நேரடியாக பார்த்து வந்தது போல இருந்தது. ஒவ்வொருவரையும் இன்னுமின்னும்  தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆசையாக உள்ளது வாழ்க்கை இந்த உலகம் இவ்வளவு இன்பமயமானதா – அதை எப்படியெல்லாம் (பெரும்பாலும் அறியாமை கலந்த அகங்காரத்தினால்) சிக்கலாக்கி கொள்கிறேன் என்று தோன்றுகிறது தேவை ஒரு துளி தான் !

என்ன,இந்த உலகம் பிடிக்காமல் அனந்தனின் ஊருக்கு சென்றுவிடமாட்டோமா என்று ஏக்கம் கொள்ளச்செய்கிறது ‘துள’ எவ்வளவு முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத கதை. கருப்பனின் அனந்தனின் கோபாலகிருஷ்ணனின் குதூகலம் நம்மை தொற்றி கொள்ளும் ‘அபாயம்’ தான்

நன்றி  ஆசான் !

ஸ்ரீதர்

***

இறைவன் [சிறுகதை]

இனிய ஜெயம்

செல்ல மகள் சாத்விகா பிரிவின்     நினைவை மீட்டிய வாசகர் கடிதம் கண்டேன்.  ஏதேதோ எண்ணங்கள் எழுந்து கவிந்தது. தாமரைப்பூக்களை தண்டுடன் கொத்தாக தூக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்திருக்கும் இல்லையா ஒரு குழந்தையை ஏந்துவது. அதே எடை, அதே வண்ணம், அதே வாசம்.

சென்ற தலைமுறை கதையே வேறு. ஒன்பது பெற்று அதில் மூன்று இறந்து ஆறு எஞ்ச, அதில் கிளைத்தது நமது அன்னை தந்தை குடும்பமாக இருக்கும். (அமியின் குழந்தைகள் இறக்கும்போது கதையும் பைரைப்பா அவர்களின் பால்யமும் நினைவில் எழுகிறது.)பொண்ணு பிறந்தா பாட்டி பேர், பையன் பிறந்ததா தாத்தா பேர் முடிந்தது கதை. என் பெயர் என் அப்பாவின் தாத்தா பெயர். அவர் பெயர் அவர் அப்பாவின் தாத்தா பெயர் . எல்லாம் இப்படித்தான் சென்றுகொண்டு இருந்திருக்கிறது. 95 குப் பிறகு நிலவரம் வேறு வடிவம் கொண்டுவிட்டது. எனது தோழிகளில் இருவர் பன்னெடுங்காலம் தனக்குப் பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கான பெயரை மனதுக்குள் அடைகாத்திருந்தனர். ( என்னைப் போன்ற ஒருவருக்கு சொல்லாவிட்டால் பிறகு அந்த ரகசியத்துக்கு என்னதான் மதிப்பு ). முதலில் பெயரை பெற்றுக் கொண்டு அதற்கொரு குழந்தையை பிறகு பெற்றுக்கொள்வது.

எந்தக் காலம் என்றால்தான் என்ன? ஒரு குழந்தையின் மரணம் என்பது தாய்க்கு அத்தனை எளிதாக கடக்கக் கூடிய ஒன்றா என்ன?  இசக்கி கிழவி வரம் பெற்றவள். இறைவனை கன்டுவிட்டாள்.

குருவி இறைவன் இரண்டு கதைகளிலும் கலைஞன் கொள்ளும் உணர்வு இரு வேறு துருவங்கள். முன்னது கடல் முன் தன்னை துளி என உணர்வது. பின்னது துளி அல்ல கடலே நான் என விரிவது.

இனிய ஜெயம்  படைப்பாற்றல் குறித்து இதற்க்கு முன் இப்படி ஒரு சொல் எழுதப்பட்டதில்லை. இனி எழுதப்படப்போவதும் இல்லை. அப்படி ஒன்றை மாணிக்கம் சொல்லிவிட்டான் .

நான் கொடுக்கிறேன் அந்த பிரம்மனாலும் கொடுக்க முடியாததை.

நான் கொடுக்கிறேன் அந்த எமனாலும் எடுக்கமுடியாததை.

பிரம்மம் . படைப்பாற்றல் என்றால் பிரம்மம். பிரம்மத்தின் பிரகடனத்தை கேட்டேன் அக் கதையில்

கடலூர் சீனு

***

அன்புள்ள ஜெ

இறைவன் கதை ஒரு நெகிழ்வான தருணத்தை அடையாளம் காட்டுகிறது. ஆனால் அந்த நெகிழ்வு செண்டிமெண்ட் அல்ல. செண்டிமெண்ட் என்றால் நம் மனம் இரங்குகிறது. இங்கே மனம் மேலே எழுகிறது. மனிதனைப்பற்றிய ஒரு பெருமிதமும் நிறைவும் உருவாகிறது. அதுதான் அந்தக் கதையின் உச்சம். தெய்வம் அவளை கைவிடுகிறது. என்னால் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறது. ஆனால் கலைஞன் கைவிடவில்லை. அவனுடைய கலை நான் எல்லாவற்றையும் தருகிறேன் என்று சொல்கிறது. அவளும் தெய்வத்திடம் எதையும் வேண்டிக்கொள்ளவில்லை. கலைஞனிடம்தான் தன் குழந்தையை கொடு என்று கேட்கிறாள்

ரேவதி கிருஷ்ணா

***

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16754 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>