Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16971 articles
Browse latest View live

நெடுநிலத்துள் –கடிதங்கள்

$
0
0

நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

அன்புள்ள ஜெ

வரிசையாக வந்துகொண்டிருக்கும் கதைகளில் அகரமுதல்வனின் கதை கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. உருவகக்கதை என்று சொல்லலாம். அல்லது நவீனத்தொன்மக்கதை என்று சொல்லலாம். ஈழத்தின் வரலாற்றை தொல்பழங்காலம் முதல் சமகாலம் வரை இணைக்க தொன்மம் வழியாக ஒரு முயற்சியைச் செய்திருக்கிறார்.

அந்த தொன்மத்தில் ஆர்வமூட்டும் அம்சமாக இருப்பவை இரண்டு விஷயங்கள் என்று தோன்றுகிறது.ஒன்று அதிலுள்ள மூதன்னை அம்சம். பூசாரியிலிருந்து வராமல் அம்மம்மாவிடமிருந்து அந்தக்கதை வருகிறது. அந்தத் தொன்மையான கதையின் சமகாலத்திலுள்ள ஊற்றாக அவர்களே இருக்கிறார்கள்

இரண்டாவது அம்சம் நாகர்களில் தங்களுடைய தொன்மையான தொடர்ச்சியை காண்பது. நாக நாக என்று சொல்லிக்கொள்ளும் மந்திரம் நாகநீள் நகரொடு நாகநாடதனொடு போகநீள் புகழ் மன்னும் புகார் நகர் என்று சிலம்பு மங்கலவாழ்த்துப்பாடல் சொல்கிறது. நாகநீள்நகர் இலங்கையிலிருந்தது, நாகநாடு என்பது இலங்கையே என்று சொல்லப்படும் ஒரு நம்பிக்கை உண்டு. புகாரிலிருந்து இணைத்துச் சொல்லப்படுவதனால் அந்தப் பார்வை வந்திருக்கிறது.

இந்தக்கதை தங்கள் தொல்மரபிலிருந்து சமகாலவீழ்ச்சி வரை ஒரே கதையிலே சொல்ல முற்படுகிறது. இந்தவகையான ஒரு சுயமீட்புக்கு மனிதப்பண்பாடுகள் எப்போதுமே தொன்மங்களைத்தான் தேடிச்செல்கின்றன. அவைதான் நீட்சியை நிலைநிறுத்தும். ஏனென்றால் அன்றாடவாழ்க்கையில் கடந்தகால நீட்சி பண்பாட்டு நீட்சி என்பதெல்லாம் கிடையாது. அது கனவில்தான் இருக்கிறது.

ஒரு வரலாற்றை கனவிலே சொல்லிப்பார்ப்பதுதான் தொன்மம் என்று காம்பலின் ஒரு சொற்றொடர் இருக்கிறது. இந்தக்கதை சொல்லப்பட்ட வரலாற்றையும் வஞ்சினத்தையும் கனவிலே சொல்லிப்பார்க்கும் ஒருமுயற்சி

ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ,

பெரிய தீ வந்து புல் பொசுங்கிப்போனால் அதன் வேர் மண்ணுக்குள் இருக்கும். அது உயிருடன் இருந்து அதிலிருந்து மீண்டும் முளைக்கும். மீண்டும் முளைத்தெழவேண்டிய அந்த தேவை இருக்கும்போதுதான் புதைந்திருக்கும் வேரைத்தேடிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இங்கே நாகவேர் தேடி கதை செல்வதும் அது ஒரு பாட்டியின் வாக்கிலிருந்து வெளிவருவதும் அதைத்தான் காட்டுகிறது. நெடுநிலத்துள் வேர்தேடிச் செல்லும் கதை என்று இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

கிணற்று நீரில் மூக்குத்தியோடு நீந்திக்கொண்டிருந்தது ஒரு நாகபாம்பு. அதன் தித்திப்பான அசைவில் புராதனத்தின் ஆழம் பெருகிக்கொண்டே இருந்தது- என்ற வரியில் கதையின் மையம் துலங்குகிறது என்று நினைக்கிறேன்.

மகாதேவன்

 

அன்புள்ள ஜெ

தொன்மக்கதை நேரடியாக சமகால அரசியலை இணைக்க ஆரம்பிக்கும்போது அதன் ஆழமும் அதன் சாத்தியங்களும் குறைந்துவிடுகிறது. அகரமுதல்வனின் கதையில்  இரண்டாம் குத்திகனின் மூச்சடங்கிய நந்திக்கடல் காயல். என்ற வரி மிகமிக நேரடியானது. கதையை ஒரு அரசியல்பிரகடனமாக ஆக்கிவிடுகிறது. வரலாற்றுடன் இணைக்கும் வேலையை வாசகனுக்கே விட்டிருக்கலாம்

சாரங்கன்

 

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

அகரமுதல்வனின் கதையை படிக்கும்போது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு சேரன் எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வந்தது. [மன்னிக்கவேண்டும், சும்மா வ்ந்த ஞாபகம் அல்ல. தொடர்பு உண்டு] அதில் யாழ்ப்பாணத்தின் டச்சுக்கோட்டையில் அகழ்வுசெய்தபோது தமிழ்பிராமி கீறலெழுத்துக்கள் உடைய பானை உடைசல்கள் கிடைத்தன. அதை வைத்து எங்கள் தொல்மூதாதையரின் நிலம் இது என்று சொல்லும் கவிதையை சேரன் எழுதினார். நாங்கள் இந்த நிலத்தின் பூர்வீகர் என்று அந்த எழுத்துக்கள் காட்டுவதாக அந்தக்கவிதை இருந்தது. 80 களில் அந்த கவிதை இங்கே பிரபலம். இந்தக்கதையும் அந்த மனநிலையை நாடியே செல்கிறது. வேர்களை அந்த நிலத்திலேயே அகழ்ந்து கண்டுபிடிப்பதும் அடையாளங்களை அங்கேயே நிறுவிக்கொள்வதும்தான் இந்தக்கதையின் சாராம்சம். இங்கே குத்திகன்கள் கொல்லப்படலாம், ஆழத்தில் இருந்துகொண்டிருப்பது நாகம் என்று கதை சொல்கிறது

ராஜசேகர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யானைப்படுகொலை

$
0
0

அன்புள்ள ஜெ,

இந்தச் செய்தியை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எவ்வளவு கோரமானவர்கள் இந்த மனிதர்கள். விவேகானந்தர் 1897 இல் கேரளத்தைப் பைத்தியக்கார விடுதி என்றார். அதைப் போக்க பல ஆத்மாக்கள் உழைத்தனர். இது கேரளாவுக்கு மட்டுமான ஒன்றல்ல. ஶ்ரீலங்காவிலும் இது சகயம்.  நீங்கள் யானைகள் பற்றி எழுதிய மூன்று முக்கியமான கதைகள் உள்ளன. மத்தகம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய். இவற்றை என்னளவில் ஒரு உயரிய படைப்பாகவே எண்ணுகிறேன். இங்கு நான் பணியாற்றும் இடங்களில் என்னிடம் யானை வேலி அமைக்க அனுமதி கோருவோருக்கும், யானைவெடி கேட்போருக்கும் இந்தக் கதைகளை வாசிக்குமாறு ஒரு சிபார்சு செய்வதுண்டு. அவர்களில் எத்தனை பேர் வாசித்தார்களோ தெரியவில்லை. ஆனால் தினமும் யானைகள் கொல்லப்படுகின்றன.

உங்களுடைய யானை டாக்டர் கதையில் நீங்கள் கூறிய விடயங்கள் இன்றும் நடக்கின்றன. அதில் மனிதர்களை தாழ்த்தி யானையை பலபடி உயர்த்தினீர்கள். அது எப்போதும் உண்மை. அவற்றை ஒரு தீர்க்க தரிசனமாக எழுதியுள்ளீர்கள். யானைகள் இல்லை என்றால் தமிழ்ப்பண்பாட்டில் சங்க இலக்கியங்களைத் தூக்கி எறிய வேண்டியதான் என்ற உங்கள் கருத்து மிகவும் பாதிப்புறச்செய்வது. நிச்சயமாக இவர்களைப் போன்ற யானையைக் கொல்லும் மனிதர்கள் எவ்வகையிலும் சமூகத்துக்கு உபயோகமற்றவர்கள்.  மிக வேதனையளிப்பது அந்த யானையின் உத்தரித்த மரணம்.

 

சுயாந்தன்

 

பேரன்புள்ள ஜெ..!

நீண்ட நாட்களாய் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்து, எந்த ஒரு காரணமும் இன்றி எழுதாமல் தங்களது எழுத்துக்களை ஆழ்ந்து  வாசிப்பதோடு என்னளவில் திருப்தியாக இருந்தேன்..

தங்களது “ராஜன்” சிறுகதை கடந்த வார இறுதியில் படித்தப்பின் ..தங்களுக்கு எழுத வேண்டும் என்கிற எண்ணம் காற்றில் பறக்கும் இறகாய் என்னுடன் மெலிதாக பயணப்பட்டு கொண்டிருக்கிறது..

இந்த மடல் எழுதும் சிறிது நேரத்திற்கு முன்பு, கேரளாவில் கடந்த மே 27ஆம் தேதி மனிதர்களால் தீங்கிழைக்கப்பட்டு பெருவலியுடன் போராடி மலப்புரம் வட்டாரத்தில் இறந்த பதினைந்து வயது கர்பவதி யானை பற்றி நிலம்பூர் வன அலுவலர் மோகன் கிருஷ்ணன் அவர்களின் பதிவை படித்தேன்…

https://m.facebook.com/story.php?story_fbid=2979525145456462&id=100001970187571

யானை – மனிதன் பூசல்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒன்றே, என்னதான் மனிதன் வாழ்வாதாரம் என்று அவன் பக்க நியாய தர்மங்களை அடுக்கினாலும்…மனிதர்கள் யானைகளுக்கு இழைக்கும் தீங்கு சமன் செய்ய இயலாத அளவிற்கு பெரும் பாவச்சசுமைகளாக நமது பக்கமே குடை சாய்ந்துள்ளது துலாபரம்…

விவசாயம், போக்குவரத்து, தோட்டங்கள், சொகுசு விடுதிகள், சாமியார் மடங்கள், சுற்றுலா, வனவிலங்கு புகைப்படத்துறை, ட்ராபிக்கிங், வேட்டை, மின்வேலி, பன்றிக் காய், உணவு, தண்ணீர், கோவில், உற்சவம் இன்னும் பல என்று நாம் யானைகளுக்கு கொடுக்கும் தொந்தராவுகளின் பட்டியல் ஒரு நீண்ட முடிவிலி..

முன்பெல்லாம், இத்தகைய சம்பவங்களை படிக்கும் அல்லது கேட்கும் பொழுதெல்லாம் திட்டி தீர்த்து புலம்பி தள்ளுவது வழக்கம்…ஆனால், இன்றோ அதையெல்லாம் கடந்து ஒரு பெரும் கரிய வெறுமையே மாமலையென அழுத்தமாக அமர்ந்துள்ளது… மனிதர்களோடமோ, அரசிடமோ இப்பிரச்சினைக்கான உண்மையான புரிதலோ தீர்வோ மாற்று வழியோ ஏற்படும் என்ற நம்பிக்கை முற்றிலும் நீங்கி விட்டது.

இந்த கடிதம் கூட எனது ஆற்றமையின் ஓருவெளிப்பாடகத்தான் இருக்க வேண்டும்..

பூதத்தான் கூற்றைப் போல . “இந்நாடு யானைக்கு வேண்டாம் ராஜாவே, இந்த மண்ணு வேண்டாம் ராஜாவே! நமக்கு ஆனப்புல்லு மண்ணுண்டு எனக்க பொன்னு ராஜாவே!” என்று எல்லா யானைகளையும் கூட்டிக்கொண்டு ஏழு கடல், ஏழு மலைகளை தாண்டி மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு காட்டுக்குள் சென்றுவிட வேண்டும்..!

 

 

அன்புடன்,

பிரசாத்

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு வணக்கம்.

சற்று முன் துக்ளக் வசந்தன் பெருமாள் அவர்களின் முகநூல் பக்கத்தில் இந்த பதிவை படித்ததில் இருந்து மனம் நிலைகொள்ளவில்லை.இப்படி ஒரு கொடுமையை ஒரு மிருகத்திற்கு அதுவும் கர்ப்பிணி பெண்யானைக்கு மலையாளிகள் செய்வார்கள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது என்ன விதமான மனோவியாதி?.

சில நாட்களுக்கு முன் கேரளத்தில், ஏதோ திருடிவிட்டார் என்ற குற்றத்திற்காக ஆதிவாசி ஒருவரை பலர் சேர்ந்து கடுமையாக தாக்கும் காணொளி ஒன்றை பார்க்க நேர்ந்தது,இன்று இந்த சம்பவம். மலையாளிகள் அன்பும், பண்பும் மிக்கவர்கள் என்று கருதியதெல்லாம் பொய் தானா ?

 

https://m.facebook.com/story.php?story_fbid=1483421488530579&id=100005882262789

 

அன்புடன்,

அ. சேஷகிரி

 

ராஜன் [சிறுகதை]

துளி [சிறுகதை]

ஆனையில்லா!” [சிறுகதை]

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

$
0
0

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

வேதநாயக சாஸ்திரியின் வேதசாஸ்திரக்கும்மி

அன்புள்ள ஜெ

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள் என்ற உங்களுடைய கட்டுரையில்தான் வேத்நாயக சாஸ்திரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். குறிப்பான ஒரு நோக்கம் இல்லாமலேயே எனக்கு அவர் மேல் ஓர் ஈடுபாடு வந்தது. ஏன் என்று யோசித்துப்பார்த்தும் தெரியவில்லை. அவரைப்பற்றி செய்திகளை தேடிக்கொண்டிருந்தேன். நான் வெளிநாட்டில்  இருப்பதனால் இணையத்திலேயே செய்திகளை தேடி அறிய வேண்டியிருந்தது. நான் ஆரம்பத்தில் இவரை முன்சீப் வேதநாயகம் பிள்ளை என்று குழம்பிக்கொண்டிருந்தேன். பிறகுதான் தெளிவு அடைந்தேன்.

வேதநாயகம் சாஸ்திரியாரைப் பற்றி ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் கீற்று இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஏராளமான செய்திகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை நகரில் 1772இல் பிறந்தவர் வேதநாயகம் சாஸ்திரியார். தந்தை அருணாசலம் பிள்ளை. அவர்  கத்தோலிக்க சமயத்தை 1760இல் தழுவினார்ர். தேவசகாயம் பிள்ளை என்று பெயரை மாற்றிக்கொண்டார். வேதநாயகம் பிள்ளை பின்னாளில் வேதநாயகம் சாஸ்திரியார் ஆக மாறினார்.

நெல்லைக்கு வந்த சுவார்ட்ஸ் என்ற பாதிரியாரால் தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேதநாயகம் சாஸ்திரியார் அங்கே சரபோஜி மன்னரின் சகமாணவராக கல்விகற்றார். அதன்பின் சரபோஜி மன்னருடைய அவைப்புலவராகவே இருந்தார். ஏராளமான கிறித்தவ கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். ஆ.சிவசுப்ரமணியம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறார். தீண்டாமை போன்றவற்றைக் கடுமையாக கண்டித்து எழுதிய வேதநாயகம் சாஸ்திரியார் எல்லா சாதியினருக்கும் ஒரே இடத்தில் கல்லறை அமைக்கவேண்டும் என்று வெள்ளைக்கார பாதிரியார்கள் சொன்னபோது கடுமையாக சினம்கொண்டு ஏராளமான கண்டனங்களை எழுதியிருக்கிறார் [ஆனால் வெள்ளையர்களின் கல்லறைகளின் அருகே கருப்பர்களின் கல்லறைகள் அமைக்கப்படவேண்டும் என வெள்ளைய பாதிரியார்கள் வலியுறுத்தவில்லை]

தற்செயலாக யூடியூபில் வேதநாயகம் சாஸ்திரியாரின் கீர்த்தனைகளைக் கண்டுபிடித்தேன். ஆச்சரியமாக இருந்தது. இன்றைய செய்தியுகத்தில் எல்லாமே எங்கோ கிடைக்கிறது. யூடியூப் விக்கிப்பீடியா போன்றவை பெரும் களஞ்சியங்கள். ஆனால் யாரேனும் குறிப்பிட்டுச் சொல்லாமல் யாரும் எதையும் படிப்பதில்லை. ஆகவேதான் இதை எழுதினேன்

வேதநாயகம் சாஸ்திரியாரின் பாடல்கள் இன்று கேட்கும்போது வித்தியாசமாக ஒலிக்கின்றன. சம்ஸ்கிருதக் கலப்புள்ள மொழிநடை. பெரும்பாலும் துதிகள். கவிதைநயம் என ஏதுமில்லை. ஆனால் ஒரு காலகட்டத்தை அவற்றில் கேட்கமுடிகிறது

அருள் செல்வநாயகம்

***

அன்புள்ள அருள்,

நன்றி. நீங்கள் குறிப்பிடாவிட்டால் நான் கவனித்திருக்கமாட்டேன். வேதநாயகம் சாஸ்திரியார் காலகட்டத்தில் ஒரு முக்கியமான உளநிலை இங்கே நிலவியது – எதையுமே பாட்டால் சொல்வது. காரணம் அன்று உரைநடை வளர்ச்சி அடையவில்லை. அன்று எளிய செய்திகள் கூட பாட்டாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.

பேச்சு அன்றாடப்புழக்கத்திற்கு. எதையாவது நினைவில் நிறுத்தவேண்டும் என்றால், குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், எவரிடமாவது எதையாவது கச்சிதமாகத் தெரிவிக்கவேண்டும் என்றால் செய்யுள்தான். செய்யுள் பாடலாகவே கருதப்பட்டது. ஆகவே இன்று ஒரு செய்திக்குறிப்பாகவோ, ஒரு நகைச்சுவைத்துணுக்காகவோ சொல்லப்படவேண்டியவைகூட பாடலாக எழுதப்பட்டிருக்கின்றன.

ஆகவே அன்று எழுதப்பட்ட இசைப்பாடல்கள்கூட சாதாரணமான பேச்சுக்களையே பாட்டாக பாடுகின்றன. நூறாண்டுகளுக்கு முந்தைய நாடகப்பாடல்களைப் பார்த்தால் தெரியும், அவை பேச்சின் பாட்டு வடிவங்கள் முன்சீப் வேதநாயகம் பிள்ளை எழுதிய பொதுவான கீர்த்தனைகள்கூட அன்றாடப் பேச்சுக்கள்தான்.

கிறிஸ்தவ கீர்த்தனைகள் உருவானமைக்கு ஒரு பின்னணி உண்டு. தொடக்கத்தில் கிறிஸ்தவ மதம் இங்கே வேறெந்த மதத்தையும்போல உயர்மட்ட மதமாகவே வந்தது. இரேனியஸ் போன்றவர்கள் இந்துதுறவிகள்போல உடையணிந்து, அய்யர் என்று பெயர் வைத்துக்கொண்டு மதப்பரவல் செய்ய முயன்றனர். பதினேழாம்நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அரசகுடியினரை மதமாற்றம் செய்ய பலமுயற்சிகள் நடைபெற்றன.அவற்றை ஜே.எச்.நெல்சனின் மதுரா கண்ட்ரி மான்வல் நூலிலேயே பார்க்கலாம்.

கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்கு வந்து உயர்தளத்தில் மதமாற்ற முயற்சியை தொடங்கியபோதே இந்துமதத்தின் தரப்பிலிருந்து கூரிய எதிர்விமர்சனங்கள் நூல்வடிவில் உருவாகிவிட்டன. தமிழில் உருவான  ‘கிறிஸ்துமத கண்டன’ நூல்களை எவரேனும் ஆராய்ந்து தொகுக்கலாம். அவை ஒரு குறிப்பிடத்தக்க பண்பாட்டு நிகழ்வை காட்டுவன. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கவை என ஐம்பது  ‘கிறிஸ்துமத நிராகரண’ நூல்களாவது வந்திருக்கும். தத்துவ விவாதக் கோணத்தில் அறிவார்ந்த விவாதம் முதல் கிறித்தவர்கள் முன்வைத்த வசைகளுக்கான எதிர்வசைகள் வரை அவற்றின் இயல்புகள் பல.

ரெவெரெண்ட் மீட், ரிங்கல்தௌபே போன்ற பிற்கால கிறிஸ்தவப் பாதிரியார்கள் இங்கே உயர்மட்டத்தில் கிறிஸ்தவமதத்தை கொண்டுசெல்ல முடியாது என்பதை பதிவுசெய்திருக்கிறார்கள். இந்துமதத்தவர் கிறிஸ்துவின் போதனைகளை ஏற்று, அவற்றை தங்கள் மதநம்பிக்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள முயல்கிறார்களே ஒழிய இந்துமதத்தை துறந்து மறுத்து கிறிஸ்து நோக்கி வருவதில்லை என மீட் பதிவுசெய்கிறார். ஜி.யூ.போப் போன்றவர்கள் இந்துமதத்தின் தத்துவ –இலக்கியக் கூறுகளால் கவரவும்பட்டனர். பலர் திருக்குறள் முதலிய நூல்களில் ஆர்வம்கொண்டனர். இந்துமதத்தின் இந்த உள்ளிழுத்தல் முயற்சி மிக அபாயகரமானது, ஆகவே அவர்களுடன் விவாதங்களை தவிர்ப்பதே நல்லது என்கிறார்.

ஆகவே அடுத்த கட்டத்தில் தத்துவ விவாதங்களுக்கு பதிலாக சேவை மதப்பரப்புதலுக்கான வழியாக கொள்ளப்பட்டது. கிறிஸ்தவமதம் கீழ்மட்டத்து மக்களுக்கானதாக மாறியது. இன்றும் அது அவ்வாறே நீடிக்கிறது. அந்த முதற்காலகட்டத்தில்தான் வேளாளர்கள் மிகுதியாக மதம் மாறினார்கள். குமரிமாவட்டத்தில் வடக்கன்குளம், ராஜாவூர் போன்ற ஊர்கள் வேளாளக் கிறிஸ்தவ ஊர்களாகவே நீடிக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் தொடக்கத்திலேயே நுழைந்த வேளாளர்கள் இன்றும் கத்தோலிக்க அமைப்புக்குள் மிகச்சிறுபான்மையினராக இருந்தாலும் வலுவானவர்களாக திகழ்கிறார்கள்.

இந்த தொடக்க காலகட்டத்தில் அரசவைகள், செல்வந்தர்கள் போன்றோருக்கான மதமாக கிறிஸ்தவம் திகழ்ந்தபோதுதான் கீர்த்தனைகளுக்குரிய பின்புலம் அமைந்தது. தேவாலயங்களில் பாடப்படுவதற்கான இசைப்பாடல்கள் மேலைமெட்டுகளில் வெள்ளையராலேயே உருவாக்கப்பட்டன. அவை வழக்கமான ‘கோயர்’ இசையாகவே இருந்தன- இன்றும் அவ்வாறே நீடிக்கின்றன. சீகன்பால்கு போன்றவர்கள் எழுதியவை இத்தகையவையே. இவற்றுக்கும் கீர்த்தனைகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஞானசந்திர ஜான்சன் கருத்தில்கொள்ளவில்லை என்று படுகிறது.

கர்நாடக இசையின் ராகங்களை ஒட்டி முறையான கீர்த்தனைகளை வீரமாமுனிவரே தொடங்கிவைக்கிறார். பின்னர் வேதநாயகம் சாஸ்திரியார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை போன்றவர்கள் அதை ஓரு பண்பாட்டு இயக்கமாக ஆக்கினார்கள். தமிழில் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவக் கர்நாடக இசைப்பாடல்கள் உருவாகியிருக்கின்றன. குறுகிய காலம் அவை செல்வாக்குடனும் திகழ்ந்திருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் அடித்தளமக்களுக்குரிய மதமாக மாறுந்தோறும் கர்நாடக கீர்த்தனைகளுக்கு கிறிஸ்தவத்தில் உள்ள இடம் இல்லாமலாகியது.

பின்னர் உருவான கிறிஸ்தவப் பாடல்களில் கர்நாடக இசைமெட்டுக்கள் கொண்டவை குறைவே. பெரும்பாலானவை மேலையிசை மெட்டுக்களுக்காக எழுதப்பட்டவை. ‘தந்தானை துதிப்போமே’ போன்றவை உதாரணம். நெடுங்காலம் அவை ‘பள்ளிபாட்டு’ என்று சொல்லப்படும் தனியடையாளத்துடன் நீடித்தன. தூய மேலையிசை மெட்டுக்கு தமிழ்ச்சொற்கள் உடைக்கப்பட்டு உட்செலுத்தப்பட்டிருக்கும். அவற்றில் கவிதைத்தன்மை மிகக்குறைவாகவே இருக்கும். கிறிஸ்தவ மதத்தின் வழக்கமான பக்திக்கருத்துக்கள் எளிய சொற்றொடர்களாக மெட்டுக்குள் அமைக்கப்பட்டிருக்கும். எபிரேயப் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குள் ஒடுக்கப்பட்டிருக்கும்

அந்த அன்னியத்தன்மை கீர்த்தனைகளில் இருப்பதில்லை. தமிழ்மொழி கர்நாடக இசையின் ராகங்களுக்குள் எளிதில் அமைகிறது, ஏனென்றால் அந்த ராகங்கள் பழந்தமிழ் பண்ணிசையில் இருந்து வந்தவை. வேதநாயகம் சாஸ்திரியாரின் இந்தப்பாடல்களைப் பார்த்தால் அவை இந்து பக்திப்பாடல்களின் அதே வடிவில், அதே புகழ்மொழிகள் வாழ்த்துரைகள் வர்ணனைகளுடன் அமைந்துள்ளன என்பதைக் காணலாம். தெய்வத்தின் பெயரும் அடையாளமும் மட்டுமே மாறியிருக்கிறது –இயல்புகள் எல்லாம் அப்படியே எந்த இந்து தெய்வத்திற்கும் உரியவை.

‘ஏதமேதும் இல்லாய் சரணம், இறையே பொறையே நிறையே சரணம்’ போன்றவரிகளில் தெய்வ விவரணை கூட இல்லை. சரணம் என்றால் அடிபணிதல்.அதற்கும் கிறிஸ்தவத்திற்கும் இறையியல்ரீதியான தொடர்பும் இல்லை. இந்த வரிகள் அன்றைய கிறிஸ்தவ உயர்சாதியினருக்கு உவப்பானவையாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவ கீர்த்தனைகளில் பெரும்பாலானவை இந்து –சைவ பக்திமரபுக்குள் பெரும்பாலும் பொருந்துபவையாகவே உள்ளன. காரணம் அவை மதம்மாறிய சைவ உயர்சாதியினரால் உருவாக்கப்பட்டவை.

இப்பின்னணியிலேயே புதிதாக மதம் மாறிவந்த தாழ்ந்த சாதியினருடன் சேர்த்து கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுவதை வேதநாயகம் சாஸ்திரியார் கொதிப்புடன் பார்த்ததை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சாதி மேன்மை அழிந்ததை வேதநாயகம் சாஸ்திரியார் மிகவும் துயருடன் பதிவுசெய்கிறார். நெல்லையில் தேவாலயங்களின் உள்ளே வழிபடுவோரை சாதிரீதியாக பிரிக்கும் சுவர்கள் அமைந்திருந்த காலம் அது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஆ.சிவசுப்ரமணியம் அவர்களின் கிறிஸ்தவமும் சாதியும் என்னும் நூல் விரிவாக இதைப் பேசுகிறது.

கிறிஸ்தவ பாடல்கள் இன்றும் மேலையிசை மெட்டுடனேயே பெரும்பாலும் ஒலிக்கின்றன என்றாலும் அவற்றில் நாட்டாரிசைக்கூறுகள் பெருவாரியாக உள்ளே வந்தது கத்தோலிக்ககளும் தென்னிந்திய திருச்சபையும் அல்லாத உதிரிச் சபைகள் உருவானபோதுதான். முன்னரே நாட்டார்ப்பண்களில் அமைந்த பல பாடல்கள் இருந்தன. ஆனால் இந்த சிறிய சபைகளும் ஒலிப்பதிவுக்கான எளிமையான வழிமுறைகளும் உருவானபோது நேரடியாகவே நாட்டாரிசை கிறிஸ்தவப் பாடல்களில் இடம்பெறலாயிற்று.எனக்கு ஃபாதர் பெர்க்மான்ஸ் ஒரு நாட்டார்ப்பாடகர் என்றே செவிகளுக்குக் கேட்கிறார்

கிறிஸ்தவ இசைப்பாடல்களில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வேதநாயகம் சாஸ்திரியார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை மூவரையும் முக்கியமாகச் சொல்லலாம் என்று அவர்களின் சில பாடல்களில் இருந்து தோன்றுகிறது.

ஓர் உருவகமாக கிறிஸ்தவத்தில் உள்ள மூன்று பண்பாட்டுக்கூறுகளை இந்த மூன்று இசைமரபுகளும் குறிப்பதாகக் கொள்ளலாம். கிறிஸ்தவத்தில் உள்ள மேலைப்பண்பாட்டு அம்சம், அதன் தொடக்கத்தில் உள்ளே நுழைந்த உயர்சாதி அம்சம், பின்னர் உருவான அடித்தளச்சாதி அம்சம்.

ஜெ

***

கிறிஸ்தவமும் சாதியும் ஆ சிவசுப்ரமணியம்

செயல்யோகத்தின் சுவடுகள்

இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82

$
0
0

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 1

மணிப்பூரக நாட்டிலிருந்து நள்ளிரவில் எவரிடமும் கூறாமல் கிளம்பி, மூங்கில் செறிந்த சாலையினூடாக காட்டுக்குள் புகுந்து, கிழக்கு ஒன்றையே இலக்கெனக் கொண்டு பன்னிரண்டு இரவுகள் பகல்கள் பயணம் செய்து, நாகநாட்டின் எல்லையை அர்ஜுனன் சென்றடைந்தான். காண்டீபம் ஒன்றே துணையென அவனுடன் இருந்தது.

தனிமை அவன் உடலை எடையென அழுத்தி, உள்ளத்தில் வெறுமை என நிறைந்திருந்தது. ஒவ்வொரு எண்ணத்தையும் பொருளின்மைக்கு கொண்டுசென்று நிறுத்தியது. ஒவ்வொரு நினைவையும் உணர்வின்றி வெறும் செய்தியாக மாற்றியது. ஒவ்வொரு முகத்தையும் படித்தறிய முடியாத மொழியின் சொற்களென ஆக்கியது.

ஆனால் அத்தனிமையை வெல்லும்பொருட்டு எங்கேனும் சென்று மனிதர்களுடன் தங்கினால் முதல் ஓரிருநாள் களியாட்டிற்கும் அன்பாடலுக்கும் பிறகு அவன் மீண்டும் தனிமையை உணரத்தொடங்கினான். அவன் பேசும் ஒவ்வொரு சொல்லும் பொருளற்று வெற்றொலியாக மாறின. அவனுடைய கையசைவுகள் ஒவ்வொன்றும் அவனை உந்தி விலக்குவதுபோல் இருந்தன.

மீண்டும் மீண்டும் அங்கே தன்னை நிறுத்திக்கொள்ள, அவ்விடத்தை பற்றிக்கொள்ள அவன் முயலும்தோறும் அவ்வசைவுகள் அனைத்தும் அங்கிருந்து விலகத் துடிப்பவையாக மாறின. ஒவ்வொரு கையசைவும் செல்க என்று விலக்குவதுபோல, அகல்க என்று உந்தித் தள்ளுவதுபோல, இல்லை என்று மறுப்பதுபோல, நீயல்ல என்று சுட்டுவதுபோல தோன்றும் மாயத்தை அவன் பலமுறை வியந்தான்.

பிரக்ஜ்யோதிஷத்திலும் காமரூபத்திலும் நூறுநூறு சிற்றூர்களிலிருந்து அவன் கிளம்பிச் சென்றான். ஒவ்வொரு ஊரிலும் நுழைவதற்குமுன் அவன் அக்குடிகளை எதிர்த்து போரிட்டான். அவர்களை வென்று அவர்களுக்கு அரசன் என்றும் தலைவன் என்றும் ஆனான். அவர்கள் கொண்ட பேரிடர்களை தீர்த்து அவர்களால் வழிபடப்படும் தெய்வம் என்று மாறினான். அவர்களின் முற்றங்களில் நிலைக்கல்லென தலைமுறைகள் தோறும் நின்றிருக்கும் குடித்தெய்வமென்று வழிபடப்பட்டான். அதற்குள் அவன் அங்கே உளம் விலகிவிட்டிருந்தான். கனி உதிர்வதுபோல அவ்வூரிலிருந்து அகன்றான்.

தன்னுள் இருக்கும் இத்தனிமை நஞ்சென தன்னைச் சூழ்ந்து ஒரு வளையத்தை உருவாக்குகிறது, அதைக் கடந்து எவரும் தன்னை அணுக முடியவில்லை என்று அவன் உணர்ந்தான். அதை கலைப்பதற்கு என்ன வழி என தொடக்கத்தில் பலமுறை பல கோணங்களில் எண்ணிப் பார்த்தான். எங்கும் அவன் தன்னை அர்ஜுனன் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அர்ஜுனன் புகழ்பாடும் சூதர்களின் அரங்கில்கூட அவன் இமையசையாமல் நோக்கி வெறுமனே அமர்ந்திருந்தான்.

தன்னை பலவாறாக உருமாற்றிக்கொண்டான். தான் பயின்ற நிகரற்ற உருமாற்றக் கலையினூடாக ஆட்டனாக, நாடோடியாக, மலைமகனாக, ஆணிலியாக, பெண்ணாக, முனிவனாக மாறினான். காண்பவர் கருத்தையும் முற்றிலும் நிறைத்து தன்னை நிறுவிக்கொள்ளும் பிறிதுருவை அவன் அடைந்தபோதிலும் கூட, அதற்கேற்ப தன் எண்ணங்களை, செயலை மாற்றிக்கொள்ளும்போதும் கூட, அவன் அகத்தே மாறாமல் எஞ்சியிருந்தான்.

காமரூபத்தைக் கடந்து மணிப்பூரகத்தின் எல்லையை அவன் அடைந்தபோது முதல்முறையாக அவனுள் வைரமென இறுகி உடைக்கமுடியாததாக மாறிவிட்டிருந்த தனிமை விரிசலிட்டது. அவ்வெல்லையில் அமைந்த ஆற்றை தன் வெல்லப்படாத வில்லுடன், சூழலை அறியாத உள்ளத்தின் அகநோக்குடன் அவன் கடந்தபோது மூங்கில்குவைக்கு அப்புறமிருந்து “நில்! யார் நீ?” என்று ஒரு குரல் கேட்டது.

அவன் நிமிர்ந்து பார்த்தபோது தன் முன் தன்னுடைய இளைய உருவம் நின்றிருப்பதைக் கண்டு திகைத்தான். முதலில் அது ஒரு மாயத் தோற்றம் என்று எண்ணினான். கந்தர்வர்களோ தேவர்களோ ஆடும் விளையாட்டு. கூர்ந்து நோக்கியபடி “நான் பாண்டவனாகிய அர்ஜுனன். நெடுநிலம் கடந்து கிழக்கே சென்றுகொண்டிருக்கிறேன்” என்று அவன் சொன்னான்.

“நீர் எவராயினும் இவ்வெல்லை கடந்து எங்கள் நிலத்திற்குள் நுழைவதற்கு ஒப்புதல் இல்லை” என்றான் எதிரில் நின்றவன். “இது எங்கள் பாதுகாக்கப்பட்ட நிலம். இங்கு ஷத்ரியரோ அசுரரோ நுழைவது ஏற்கப்படுவதில்லை.” அர்ஜுனன் “நான் எவரிடமும் ஒப்புதல் கோருவதில்லை” என்று சொன்னான். “ஒப்புதல் கோரி இந்நிலத்திற்குள் நுழைவது உங்களுக்கு நன்று” என்றான் அவன்.

அர்ஜுனன் எரிச்சலடைந்தான். “என் பெயரை நீ முன்னர் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று சொன்னபோது அந்த எரிச்சலையே அவன் விலகிநின்று நோக்கினான். அவன் துறந்தலைவதாக எண்ணிக்கொண்டிருந்தான், உண்மையில் எதையும் துறக்கவில்லை, பெயரிலிருந்து தொடங்குகின்றன அனைத்தும். குலம், குடி, முடி, புகழ் எல்லாம். அனைத்தையும் இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறேன். நான் பறவை என நினைத்தேன், வீட்டைச் சுமந்தலையும் ஆமைதான் போலும்.

“நன்கறிவேன்” என்று அவன் ஏளனத்துடன் சொன்னான். “இளைய பாண்டவராகிய அர்ஜுனனின் கதையை இங்கே ஏதேனும் சூதர் சொல்லாத நாளில்லை.” அவன் ஏளனத்தால் மேலும் சீற்றம் அடைந்து “உன் பெயரென்ன?” என்று அர்ஜுனன் கேட்டான். அவன் மாயத்தோற்றமல்ல மெய்யுருவே என்று தெளிந்திருந்தான். தன் உருவமே தன் முன் எப்படி அவ்வாறு எழமுடியுமென்று அப்போதும் அவனுக்கு புரிந்திருக்கவில்லை.

“என் பெயர் பப்ருவாகனன். மணிப்பூரகத்தின் அரசரின் மகள் என் அன்னை சித்ராங்கதை” என்று அவன் சொன்னான். அர்ஜுனன் திகைத்து அவனை நோக்கி சொல்லிழந்து நின்றான். பின்னர் “நீ என் மகன்” என்றான். “நீங்களே அவ்வாறு கூறிய பின்னரே அதை நான் சொல்லவேண்டும். என் அன்னையால் அவ்வாறுதான் எனக்கு கூறப்பட்டிருக்கிறது” என்றான் பப்ருவாகனன்.

அர்ஜுனன் உரக்க நகைத்து “ஆம். இதை எவ்வாறு எண்ணாமல் போனேன்? உன்னிடம் சொல் தெளிவதற்கு முன்னரே நான் இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டேன்” என்றான். “ஆம், அஸ்தினபுரிக்கு எங்களை அழைத்துச் செல்வதாகவும் அரசமர்த்துவதாகவும் சொல் அளித்துவிட்டுச் சென்றீர்கள். என் அன்னை அதற்காக காத்திருந்தார்.”

“ஆம், ஆனால் நானே அங்கே முடிசூடவில்லை. என் குருதியில் நீயேனும் எஞ்சவேண்டும் என்று விழைந்தேன்…” என்றான் அர்ஜுனன். “நான் இங்கே உங்கள் மைந்தன் என இல்லை” என்று பப்ருவாகனன் சொன்னான். “இந்த நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கு நீங்கள் வருவதற்கு எந்தத் தேவையும் இல்லை. இந்த எல்லைக்குள் ஷத்ரியர்கள் எவரையும் நாங்கள் ஒப்புவதில்லை” என்றான்.

அர்ஜுனன் “ஷத்ரியன் என்றல்ல, அனைத்தையும் துறந்து அலையும் எளிய நாடோடியாகவே நான் வந்திருக்கிறேன்” என்றான். “ஷத்ரியர்களின் மாயங்கள் எல்லையற்றவை. படைகொண்டு வந்து அவர்கள் நிலம் வெல்கிறார்கள். பெண்களை வென்று தங்கள் மைந்தர்களை உருவாக்கி நிலத்தை கவர்ந்துகொள்கிறார்கள். நட்பு கொள்கிறார்கள், பகைமைகளை மூட்டிவிடுகிறார்கள், தெய்வங்களை அளித்து நம்மை கவர்கிறார்கள், நம் தெய்வங்களை எடுத்து தங்கள் தெய்வங்களாக்கி நம்மை அடிமைப்படுத்துகிறார்கள்.”

“ஷத்ரியர்களால் தொடப்பட்ட எக்குடியும் தங்கள் தனித்தன்மையுடன் நீடித்ததில்லை. ஷத்ரியர்களைத் தொட்ட எக்குடியும் நீடித்ததில்லை. எந்நிலத்தில் ஏதேனும் ஒரு வடிவில் ஷத்ரியன் கால் பட்டதோ அந்நிலம் தன் தனித்தன்மையையும் தன்னுரிமையையும் இழக்காமல் இருந்ததில்லை. ஆகவே எங்கள் நிலத்தில் நுழைந்த ஒவ்வொரு ஷத்ரியனையும் கொல்வது என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றான் பப்ருவாகனன்.

அர்ஜுனன் புன்னகைத்து “நன்று! அது உங்கள் அரசநிலைப்பாடு. ஆனால் பிற அரசநிலைப்பாடுகளை ஏற்கும் நிலையில் நான் இல்லை. எப்போதும் எவருக்கும் ஆணையிடும் நிலையிலும் இல்லை, எவர் ஆணையை பெற்றுக்கொண்டதும் இல்லை” என்றான். பப்ருவாகனன் “உங்கள் காண்டீபத்தை நம்பி அதை சொல்கிறீர்கள். நன்று, அக்காண்டீபம் பாரதப் பெரும்போரை பதினெட்டு நாட்கள் நடத்தியது” என்றான். தன் மூங்கில்வில்லைத் தூக்கி “இவ்வில்லுடன் நான் வந்திருந்தால் ஒருநாளில் போர் முடிந்திருக்கும்” என்று சிரித்தான்.

அர்ஜுனன் “எனில் அதை எடு. உன் திறனை எனக்குக் காட்டு” என்றான். சொல்லி முடிப்பதற்குள் பப்ருவாகனன் எய்த அம்பு அவனை மயிரிழையில் கடந்து சென்றது. உடலில் அமைந்திருந்த அம்பறியும் திறனால் அவன் திரும்பிக்கொண்டமையால் அவன் மேலாடையை மட்டுமே அது கிழித்தது. அர்ஜுனன் தன் காண்டீபத்தை கணத்தில் நாணேற்றி அம்பால் அவனை அறைந்தான். அவனும் அதைப்போலவே கண் அறியா விரைவில் ஒழிந்தான்.

மூங்கில் புதர்களுக்குள் அவனுடைய தோழர்கள் விற்களுடன் தோன்றினர். அவர்கள் வில்தாழ்த்தி பப்ருவாகனனும் அர்ஜுனனும் நிகழ்த்தும் அந்தப் போரை பார்த்து நின்றனர். அம்புகளால் அவர்களிருவரும் அந்தத் தூய உரையாடலை நிகழ்த்தினர். எழுந்தும் வளைந்தும் நெளிந்தும் குழைந்தும் நடமிடும் இரு நாவுகள். நடுவே பறக்கும் புள் என சொற்கள். கூர்கொண்டவை, மின்னுபவை, விம்மி அணைபவை.

அர்ஜுனன் வேறெந்த வகையிலும் இன்னொரு மானுடனுடன் தான் உரையாடியதே இல்லை என்று அப்போது உணர்ந்தான். தனக்கு நிகராக எதிர்நின்று போரிடும் ஒருவரையே தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் அகத்தை கடக்க முடிகிறது. ஏனெனில் அப்போது வேறு வழியின்றி அவராக மாறி நின்று தன்னுடனும் போரிட வேண்டியிருக்கிறது. எய்வதும் ஒழிவதும் ஒருவரே. கொல்வதும் சாவதும் ஒருவரே.

சொற்களால் எப்போதும் தன்னை மறைத்துக்கொண்டே இருந்திருக்கிறோம் என அவன் எண்ணினான். சொற்கள் பொருள்கள் கொள்ளும் மாற்றுருக்கள் அன்றி வேறல்ல. அம்புகளோ எவ்வுருவிலும் அம்புகளாகவே நிலைகொள்பவை. அம்புக்கு இலக்கென ஒன்றே இருக்கமுடியும். அதன் விசையும் வடிவும் ஒளியும் விம்மலும் அந்த இலக்கின்பொருட்டு மட்டுமே. இலக்கை தவறிய மறுகணமே அது பொருளற்றுவிடுகிறது.

அம்புகள் இருவருக்கிடையே காற்றை நிறைத்திருந்தன. அம்புகளாலான ஒரு படலத்தால் அவர்கள் இருவரும் இணைந்திருந்தனர். கூரியவை, பிறைவடிவு கொண்டவை, இலைகள் என நாக்குகள் என ஆனவை. அனலென நீரென மாறியவை, காக அலகென்றும் வாத்து அலகென்றும் கொக்கு அலகென்றும் உருக்கொள்பவை. எரிதழலென்றும் மலர்ச்செண்டென்றும் உருக்கொள்பவை. சுழல்பவை, முழங்குபவை, துள்ளுபவை, வளைந்து இறங்குபவை, சூழ்ந்துகொள்பவை, உறுமுபவை. ஆயினும் அவை மாற்றுப் பொருளற்றவை. ஒன்றெனில் ஒன்றே ஆனவை.

அப்போர் ஏழு நாழிகைப் பொழுது நிகழ்ந்தது. அர்ஜுனன் பப்ருவாகனன் என்றாகி அர்ஜுனனுடன் போரிட்டான். இளந்தோள் பெற்றான். நம்பிக்கை நிறைந்த உளமானான். ஒளி நிறைந்த விழிகளை அடைந்தான். புன்னகை மாறாத முகம் கொண்டான். நினைப்பதற்கெல்லாம் இனிய நினைவுகளே உடையவனானான். அழுத்தும் தனிமையிலிருந்து விடைபெற்றான். சூழ்ந்திருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று படிந்து அவர்களையும் தானாக்கி தன்னை சூழவைக்கும் இனிய இளமையை அடைந்தான்.

பப்ருவாகனன் அவன் தந்தையென முதிர்ந்தபடி சென்றான். அம்புகளால் அவன் அர்ஜுனனை ஏழுமுறை தோளிலும் நெஞ்சிலும் அறைந்தான். அவன் அம்பை பார்க்கமுடியாமல் செய்யும் அந்தர்த்தான முறையில் அர்ஜுனனை சுற்றிச்சுற்றி பார்க்கச் செய்தான். அம்புகளை முழக்கமிடச் செய்யும் ஆக்ரோஷம் என்னும் முறையில் அர்ஜுனன் தன் அம்புகளை வீணடிக்கச் செய்தான். எழுந்து பின்னால் சென்று திரும்பவரும் பரோக்ஷகம் என்னும் முறையில் அர்ஜுனனை அவன் வீழ்த்தினான்.

அர்ஜுனன் சிரித்தபடி எழுந்து நின்று தன் மைந்தனை பார்த்தான். மைந்தனிலிருந்து பெற்ற இளமையுடன் அர்ஜுனனாக இருந்து அடைந்த முதுமையை இணைத்து விசைகூட்டிக் கொண்டான். ஏழு அம்புகளால் பப்ருவாகனனை அவன் வீழ்த்தினான். எட்டாவது அம்பை அவன் நெஞ்சுக்குக் குறி வைத்து “உன்னை நான் கொல்ல விரும்பவில்லை. உன் அன்னையை பார்க்க விரும்புகிறேன்” என்றான்.

பப்ருவாகனனைச் சூழ்ந்திருந்த அவன் குடியினர் விற்களைத் தூக்கி “மணிபூரகம் தலை தாழ்த்துகிறது” என்று அறிவித்தனர். அர்ஜுனன் காண்டீபத்தை கீழே இட்டு ஓடிச்சென்று மைந்தனை அள்ளி தன் தோளுடன் சேர்த்து இறுக்கி அவன் தலையில் முத்தமிட்டு தோளில் அறைந்து கூவிச் சிரித்து கொண்டாடினான். பின்னர் மறைந்த மைந்தரின் மணத்தை அவன் உடலில் உணர்ந்து விம்மி அழத்தொடங்கினான்.

“என்ன? என்ன, தந்தையே?” என்று பப்ருவாகனன் கேட்டான். “உன் தமையர்… உன் உடன்பிறந்தார்” என்றான் அர்ஜுனன். அரவானையும் உலூகனையும் அபிமன்யூவையும் சுருதகீர்த்தியையும் ஒரே தருணத்தில் எண்ணிக்கொண்டமையால் அவன் நெஞ்சு வெடித்துவிடுவதுபோல இறுகியது. மூச்சுவிட முடியாமல் அவன் திணறினான். இருமலும் திணறலுமாக நிலத்தில் விழுந்தான். பப்ருவாகனன் அவனை தாங்கிக்கொண்டான்.

அவனை மைந்தன் ஆறுதல்படுத்தினான். ஓடைநீர் அருந்தி மீண்ட அர்ஜுனன் விழிநீர் வழிய மீண்டும் மைந்தனை அள்ளி அணைத்துக்கொண்டான். “அஸ்தினபுரியிலிருந்து தொலைவில் நீ வாழ்ந்தமையால் இன்று எனக்கு இப்பேறு வாய்த்தது. மீண்டும் மைந்தனின் மணத்தை முகர்ந்து நிறைவுற்றேன்” என்றான். “போர் நிறைவுற்ற பின் நீங்கள் வந்திருக்கலாமே?” என்றான் பப்ருவாகனன். “நான் வந்திருக்கக்கூடாது. மைந்தன் என்று எண்ணி நான் உளம் மகிழலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

 

பப்ருவாகனனுடன் இணைந்து அவன் மணிப்பூரகத்திற்குள் நுழைந்தான். அந்நாடு அவன் முன்பு விட்டுச்சென்ற அதே வடிவில் இருந்தது. மூங்கில்கால்களின் மேல் இல்லங்கள் நின்றன. கன்றுகள் நிறைந்த கொட்டில்களில் புல்லெரித்த புகை எழுந்தது. ஒளிமாறா முகம் கொண்ட மனிதர்கள் அவனை சிறிய விழிகளைச் சுருக்கி பார்த்தனர். எங்கும் ஒளிகொண்ட பசுமை.

அவன் தன் முதுமையை, நினைவுச்சுமையை, தனிமையின் எடையை இழந்து மீண்டும் அங்கு வந்த இளமைக்கால அர்ஜுனன் ஆனான். சிரித்தபடி புரவியில் பாய்ந்து சென்றான். அரண்மனை முற்றத்தில் அவன் வருகையைக் காத்து நின்றிருந்த சித்ராங்கதை அவன் விட்டுச்சென்ற அதே இளமையில் இருப்பதாகத் தோன்றியது. அவள் கைநீட்டி ஓடிவந்து அவனை தழுவிக்கொண்டபோது தன் தோள்களிலும் இளமை நிறைந்திருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான்.

மலைக்குடிகளுக்குரிய முறைமையின்மையின் விடுதலையில் அங்கு அனைவரும் திளைத்தனர். சித்ராங்கதை அனைவர் முன்னாலும் அவனை ஆரத்தழுவி அவன் தோள்களிலும் கைகளிலும் முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். அங்கிருந்த ஏவலரும் காவலரும் வந்து அவனை தொட்டுப் பார்த்தனர். முதுபெண்டிர் அவன் கைகளையும் தோள்களையும் முத்தமிட்டனர். அவனை தங்களை நோக்கி இழுத்தனர்.

அவனைத் தழுவி உள்ளே அழைத்துச் சென்று பீடத்தில் அமரச்செய்து அவன் காலடியில் அமர்ந்து சித்ராங்கதை சிரித்துக்கொண்டிருந்தாள். ஷத்ரியர்குலப் பெண்கள் நெடும்பிரிவுக்குப் பின்னால் சந்திக்கையில் கண்ணீர் சிந்துவார்கள் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். எந்நிலையிலும் சித்ராங்கதை விழிநீர் சிந்துவதில்லை என்றும் தோன்றியது. அருகணையும் வரை சித்ராங்கதையின் அகவை அவனுக்குத் தெரியவில்லை. கண்களைச் சுற்றியும் வாயைச் சுற்றியும் இளம்பாளை வரிகள் என சுருக்கங்கள். ஆனால் அதே சிரிக்கும் சிறிய கண்கள்.

பப்ருவாகனனை அழைத்து அவள் “இவன் உங்கள் மைந்தன், உங்கள் வடிவானவன்” என்றாள். “என்னைவிட மேம்பட்டவன், எனக்கிருந்த தளைகள் ஏதுமற்றவன். அவ்வண்ணமே அவன் இலங்குக!” என்று அர்ஜுனன் அவனை வாழ்த்தினான். சித்ராங்கதை “உங்கள் வெற்றிகளை அவன் அடையவேண்டும்” என்றாள். “வேண்டாம், இழப்பில்லாது வெற்றியே இல்லை. வெற்றிகள் சுருங்கிக்கொண்டே செல்ல இழப்புகள் பெருகுகின்றன” என்றான் அர்ஜுனன்.

பப்ருவாகனனுடனும் சித்ராங்கதையுடனும் மூன்று மாதம் அந்நிலத்தில் அவன் இருந்தான். புரவிகளிலேறி அந்நிலத்தில் இருவரும் துரத்திக்கொண்டு சென்றனர். லோகதடாகத்தில் நீராழத்திற்குள் தலைக்குமேல் கோடி விரல்களென பிசையும் நீர்வளரிகளின் வேர்களை உலைத்தபடி நீந்தி விளையாடினர். இலைத்தீவுகளுக்கு மேல் பறவைகளுடன் அந்திச் சேக்கேறினர். உண்டு குடித்து விளையாடி களிகூர்ந்தனர்.

ஒருகணத்தில் அவன் அங்கிருந்து கிளம்பியாக வேண்டும் என்று உணர்ந்தான். ஒருநாள் இலைத்தீவில் படுத்திருந்த மைந்தனை அவன் நோக்கிக்கொண்டிருக்கையில் விந்தையானதோர் நடுக்கை உணர்ந்தான். அவன் மைந்தன் மேல் பெரும்பற்று கொள்ளத் தொடங்கியிருந்தான். மைந்தனையே எண்ணிக்கொண்டிருந்தான். மைந்தன் அவன் கனவில் வரத்தொடங்கியிருந்தான். ஒவ்வொரு முறையும் கனவில் மைந்தனுடன் அவன் பாம்பையும் பார்த்தான்.

அர்ஜுனன் துயில்கொண்டிருந்த மைந்தனை மெல்ல புரட்டினான். குளிர்ந்த நீர்வளரிப்பரப்பின்மேல் பலகையிட்டு பப்ருவாகனன் படுத்திருந்தான். அப்பலகைக்கு அடியில் செந்நிறப் புழு என நெளிந்தது நாகம். அவன் கழி தேடுவதற்குள் அது பாய்ந்து நீரில் குதித்து நெளிந்து மூழ்கி மறைந்தது. அர்ஜுனன் நடுங்கிக்கொண்டே அமர்ந்திருந்தான்.

அதை அவன் சித்ராங்கதையிடம் சொன்னான். “நாகர்களின் பழி என்னை தொடர்கிறது. அது என்மேல் வஞ்சநிறைவுகொள்ளும். என் மைந்தன் நாகர்களிடமிருந்து காக்கப்படவேண்டும்.” அவள் அவன் கையைப் பிடித்து “இதெல்லாம் வீண் ஐயம். இங்கே நாங்கள் பாம்புகளுடன் சேர்ந்தே வாழக் கற்றவர்கள்” என்றாள்.

“என் ஆணை இது. ஒருபோதும் தன் நாட்டின் எல்லைக்கு வெளியே என் மைந்தன் நிலம்வெல்ல செல்லக்கூடாது. ஒருபோதும் நாகர்களின் மண்ணுக்குள் நுழையக்கூடாது. தன் வில்லை தன் குடியை காப்பதற்கன்றி தன் புகழுக்காகவோ தனக்கு பெண்ணோ பொருளோ கொள்வதற்காகவோ பயன்படுத்தக்கூடாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

“உங்கள் சொற்கள் அவனுக்கு இறையாணை. அவை அவனுடைய தந்தைவழிச் செல்வமென்றே கொள்ளப்படும்” என்றாள் சித்ராங்கதை. “ஆனால் நீங்கள் தேவையின்றி அஞ்சுகிறீர்கள்.” அர்ஜுனன் “இல்லை, நீ நாகங்களை அறியமாட்டாய். வெளியே வரும் பாம்புகள் அல்ல அவை. உள்ளுறையும் நஞ்சுகளும் கூட. புனத்தில் சுருண்டுள்ளது பாம்பு. அதற்கு முன் முட்டைக்குள் சுருண்டிருந்தபோது கற்றுக்கொண்ட ஆழ்துயிலில் இருக்கிறது. அது எக்கணமும் எழும். அது நிகழலாகாது” என்றான்.

அங்கிருக்கையில் ஒவ்வொரு நாளும் கணமுமென அவன் பப்ருவாகனனின் இடத்தை குலைத்துக்கொண்டிருந்தான் என உணர்ந்தான். ஒருமுறை அவன் சந்தைக்குள் நுழைகையில் ஒரு முதியவன் திரும்பி நோக்கி பப்ருவாகனனை நோக்கி “இவன் பாண்டவனாகிய அர்ஜுனனின் மைந்தன். நேற்றும் வந்து இங்கு பொன்பொருட்களை வாங்கிச் சென்றான்” என்று சொன்னான். பப்ருவாகனனின் பின்னால் வந்து கொண்டிருந்த அர்ஜுனன் குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான்.

பப்ருவாகனன் சிரித்துக்கொண்டு அவனுடன் பேசி பொன்னுக்குரிய பணத்தை அளித்து கடந்து சென்றான். அக்கணம் அவன் மூட்டைக்குள் இருந்த நாகத்தை கண்டுவிட்டான். பப்ருவாகனன் “வருக, தந்தையே!” என்றான். அர்ஜுனன் அவனிடம் “உன்னை இதற்கு முன் எவரேனும் பாண்டவ மைந்தன் என்று கூறியிருக்கிறார்களா?” என்றான். “இல்லை, இங்கு குடிப்பெயரும் முதற்பெயரும் சொல்வதே வழக்கம். அவன் அயல்நாட்டு வணிகன். முதன்முறையாக இவ்வண்ணம் அழைக்கப்படுகிறேன்” என்று மலர்ந்த முகத்துடன் பப்ருவாகனன் சொன்னான்.

அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. தனக்குத்தானே எண்ணம் சூழ்ந்தபடி தனித்திருந்தான். அன்று மாலை அங்கிருந்து கிளம்ப வேண்டுமென்று முடிவெடுத்தான். இரவில் ஓசையில்லாமல் எழுந்து தன் காண்டீபத்தை எடுத்துக்கொண்டு கதவை திறந்தான். வெளியிலிருந்து கரிய எருமை என குளிர்காற்று வந்து அறையை நிறைத்தது. சித்ராங்கதை விழித்துக்கொண்டாள். ஆனால் அவனை பார்க்காதவள்போல படுத்திருந்தாள்.

“நான் செல்கிறேன், மீண்டும் வரமாட்டேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நான் இங்கிருந்தால் உன் மைந்தனுக்கு நாகப்பழி சூழும். ஆகவே செல்கிறேன். அவன் நீடுவாழவேண்டும், நூறாண்டிருந்து நிறையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றபின் “நீ நில் என ஒரு சொல் சொன்னால் செல்லமாட்டேன். அதை சொல்லும் உரிமை உனக்கு உண்டு” என்றான்.

அவன் காத்திருந்தான். பின்னர் “வாழ்க!” என்று சொல்லி வில்லுடன் வெளி முற்றத்திற்குச் சென்று ஊரெல்லையைக் கடந்து காட்டுக்குள் சென்றான். மேலும் கிழக்காக செல்லத் தொடங்கினான்.

ஒவ்வொரு முறை ஒவ்வொரு ஊரிலிருந்து கிளம்புகையிலும் அவனுடைய உளநிலை கிழக்கு நோக்கி செல்க என்பதாக இருந்தது. அது ஏன் என்று அவனால் உய்த்துணர முடியவில்லை. கிழக்கு அவன் தந்தையின் திசை என்பதனால், கிழக்கைச் சொல்லியே அவன் வளர்க்கப்பட்டான் என்பதனால், ஒளியை நோக்கி செல்பவனாகவே தன்னை எப்போதும் உணர்ந்திருந்தான் என்பதனால்.

கிழக்கை அறிய அவனுக்கு எப்போதுமே இடர் இருந்ததில்லை. அவன் உடலிலேயே கிழக்குணர்வு இருக்கும். எக்காட்டிலும் எவ்விருளிலும் மிகச் சரியாக அவனால் கிழக்கு நோக்கி நடக்க முடிந்தது. கிழக்கு அவனை மாபெரும் காந்தமென இழுத்தது. அங்கு எதோ ஒன்று இருக்கக்கூடும். அவனை முற்றாக தன்னுள் இழுத்து கரைத்து எச்சமின்றி ஆக்கக்கூடியது.

அத்தனிமையை மீண்டும் உணர்ந்தான். அது தன்னுணர்வு முதிர்ந்து உருவாகும் எடை. அதை உதிர்க்காமல் தனிமையிலிருந்து தப்ப இயலாது. அதை உதிர்க்கும் இடம் அன்றி பிறிதொன்றும் தான் தேடுவதற்கில்லை என எண்ணிக்கொண்டிருந்தான். பின்னர் உணர்ந்தான், அவன் சென்றுகொண்டிருந்தது நாகநாடு நோக்கி. அங்கே என் கடன் கழிந்து என் மைந்தன் விடுபடுவான் என்றால் அதுவே எஞ்சும் கடமை என்று சொல்லிக்கொண்டான்.

தொடர்புடைய பதிவுகள்

வில்வண்டி,நெடுநிலத்துள் -கடிதங்கள்

$
0
0

 

8.நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன் 

அன்புள்ள ஜெ

நெடுநிலத்துள் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கதையை ஏன் உருவகமாக எழுதவேண்டும்? அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று உண்டு. கடந்தகாலம் அப்படியே உருவகமாக ஆகிக்கொண்டே இருக்கிறது. தொன்மம் அல்லது புராணமாக ஆகிவிடுகிறது. ஏற்கனவே நாகர்களின் வரலாறு முதல் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. அதை அங்கே கொண்டுசென்று சேர்ப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. ஒரு குலப்பூசாரி போல எழுத்தாளன் மாறும் இடம் இது என்று நினைக்கிறேன்.

கோயில்களில் பின்னம் வந்த மூலவர் சிலைகளை மண்ணுக்குள் புதைப்பார்கள். அல்லது நீரில்போட்டுவிடுவார்கள். கடலில் போடுவதும் உண்டு. அது அகற்றுவது கிடையாது. அது ஏற்கனவே மண்ணிலும் நீரிலும் இருக்கும் தெய்வங்களுடன் சேர்ப்பதுதான். அகரமுதல்வன் அதைத்தான் இக்கதையில் செய்கிறார் என்று நினைக்கிறேன்

 

சங்கர்

 

தனசேகர்

 

வில்லுவண்டி[ சிறுகதை] தனா

அன்புள்ள ஜெ வணக்கம்…

 

அன்பு கருணை ஆதரவு மேலிருந்து தான் கீழே செல்லும் கீழிருந்து மேலே வருவது அரிது. பெற்றோருக்கு குழந்தைகள் என்னவோ அவ்வாறல்ல குழந்தைகளுக்கு பெற்றோர். வளர்ந்து காலூன்றிய பிறகு பெற்றோரின் தேவைகள் தீர்ந்த பிறகு,தன் வாழ்வை நிலைநிறுத்தவும் தன் குழந்தைகளை பராமரிக்கவும் சென்றது போக எஞ்சியதே பெற்றோரை நோக்கி பாயும். பெரும்பாலும் இதுதான் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

நடை, உடை கெட்டு படுத்த படுக்கையில் மலம் மூத்திரம் கழிப்பவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்களோ, அதே அளவு பரிதாபத்திற்குரியவர்கள் அவர்களைப் பராமரிப்பவர்கள். பொறுமையையும் கனிவையும் கணந்தோறும் சோதிக்கும்.பிரத்தியேக அறை, நவீனக் கருவிகள், கொஞ்சம் உடலிலும் பொருளாதாரத்திலும் பலம் இருந்தால் சமாளிக்கலாம்.

செந்தட்டி வாழ்ந்து கெட்டவர், இளமையில் பல்லாயிரங்கள் சம்பாதித்தவர் முதுமையில் ஐம்பதிற்கும் நூறுக்கும் கையேந்தும் நிலைக்கு சென்று விட்டார். மல மூத்திரம் சுத்தம் செய்யும் சுமையோடு வறுமை எனும் பெருஞ்சுமையும் அவரை அழுத்துகிறது.

தன் பெருமிதத்தின்  வெற்றிகளின் அடையாளமான வில்லு வண்டி சிதைந்த போதே சிதைய தொடங்கிவிட்டது அவரின் வாழ்வு, எஞ்சிய ஒற்றை சக்கரத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டுத்தான் காதல் இணையர் தங்கள் இறுதி ஊர்வலத்தை தொடங்குகின்றனர். அவர்கள் வாழ்வின் பிள்ளையார் சுழியான வில்லுவண்டியே முற்றுப்புள்ளி வைக்கவும் உதவுகிறது. கௌமாரியின் சன்னிதியில் தொடங்கிய வாழ்வு அவள் காலடியிலேயே அடித்துச் செல்லப்படுகிறது.

என் அம்மாவின் அம்மா மனைவியின் அம்மாவின் அம்மா கிட்டத்தட்ட இருவருமே படுத்த படுக்கை ஆனவர்கள் ஒருவர் மரணித்து விட்டார். அருகிருந்து கவனித்ததில் இயலாமை முதுமை அதிகரிக்க அதிகரிக்க வாழ்வின் மீது பற்று கூடுகிறது பிடி இறுகுகிறது அவர்களுக்கு. உணவுகள் மீது நொறுக்குத் தீனிகள் மீது ஏக்கம் அதிகரிக்கிறது. எவ்வளவு நாம் கவனம் செலுத்தினாலும் அவர்களுக்கு போதும் என்ற உணர்வு வருவதில்லை. ஒரு குழந்தை எவ்வாறு ஒரு வீட்டின் மையமாக இருக்கிறதோ கவனத்தை கோருகிறதோ அதைப்போலவே தன்னை சதா முன் நிறுத்திக் கொள்வார்கள். உயிர் தீபம் காற்றில் கரைவதை உணர்ந்த ஆழம் போடும் கூச்சல் மெல்ல மெல்ல அதிகரிப்பதை காணமுடியும்.

பதினைந்து வயதில் ஆவுடையம்மாள் தன் உயிர் விசையால் இறுகப்பற்றிய வில்லு வண்டி அவள் கடைசி சிரிப்பில் என்னவாக  இருந்திருக்கும்?

உள்ளம் பொங்கும் பரவசத்துடன் செந்தட்டியும்  ஆவுடையம்மாளும் ஊரை புறக்கணித்து திருமண ஊர்வலத்தை நடத்தியபோதும் எதையும் பார்க்காமல் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, உடலும் உள்ளமும் சிதைந்து நடத்திய இறுதி ஊர்வலத்தின் போதும் ஆறு எதையும் பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது…

வாழ்வு இயற்கை என்னும் பேராற்றிற்க்கு நாம் ஒரு பொருட்டே இல்லை….

 

மு.கதிர் முருகன்

கோவை

 

9கிருமி [சிறுகதை] உமையாழ்

8.நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

7.உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

6.வில்லுவண்டி[ சிறுகதை] தனா

5.உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

4.கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

3.இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

2.அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

1.கன்னி- [சிறுகதை] ம.நவீன்

=======================================================

நெடுநிலத்துள் – கடிதங்கள்
புதியகதைகள்- கடிதங்கள்-1
புதிய கதைகள்- கடிதங்கள்
உஷ்ணம் – கடிதங்கள்
வில்வண்டி- கடிதங்கள்
உதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்
இணைவு, ராஜன் – கடிதங்கள்
கூடு,பிறசண்டு- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
புதியகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்
தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
கன்னி- கடிதங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தேனீ ,ராஜன் –கடிதங்கள்

$
0
0

 

தேனீ [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தேனீ கதை வந்தபோதே யோசித்தேன் பலபேருடைய தந்தை நினைவு வந்திருக்கும் என்று. என் அப்பாவும் அவரை ஒருமுறை ஆந்திராவில் கனகதுர்க்கா கோயிலுக்கு கொண்டுபோகும்படிச் சொன்னார்

அந்தக்கதையிலுள்ள அழகான அம்சம் தேனில் அளைந்துகொண்டே இருக்கும் தேனீ என்ற கற்பனைதான். தேனிலேயே வாழ்ந்தவர் ஆசாரி. அந்த இனிமையின் ஒரு துளியை தேடுகிறார் அவர் மகன்

 

செல்வக்குமார் மகேந்திரன்

 

ஜெ

 

ஒவ்வொரு நாளையும் பார்த்துவிட்டு கதை எழுதுவீர்கள் போலிருக்கிறது. 20th தேதி தேனீக்கள் தினம். இரண்டு கைகளில் அதிலும் விரல்களில் சிலருக்கு  தெய்வங்கள் குடியிருப்பாக மாறி விடுகின்றன. மர -நகை ஆசாரிகள், மாணிக்கம் போன்ற வரைதல் தொழில் செய்பவர்கள் போல, பிரதமன் வைப்பவர்கள் போல,…

இந்த ‘குடும்பத்தை காப்பாற்றுதல் – மேலெலுற்றுதல்” எல்லாம் மிக பெரும்பாலும் நமது தந்தையின் தந்தை கால சிகர மனிதர்கள். கடமை எனும் சுழலில் சிக்கி தனியாக வாழ்ந்து விட்டு சென்றவர்களும் உண்டு. எந்த வகை தியாகம் என புரிவது இன்று சிரமம். இந்த ஆசாரி வாழ்வு ஒரு சிறுகதையில் அடங்கி விடுகிறது. ஆனால் இறந்தபின் நீண்டு சென்றபடி.. தன்னலம் மறந்து தன்னை உருக்கி வாழ் நாளின் பெரும்பகுதியை கொடுத்த  அந்த உழைப்பை இன்று புரிந்து கொள்ளல்  கடினம்.வாழ்நாளை கொடுத்து செய்ததது உணவு, உடை, கல்யாணம் போன்ற வாழ்வின் கடைமைகள் மட்டுமே – சொத்து சேர்த்தல் அல்ல . அவர்கள் ஏன் இப்போது இல்லை ?

செஞ்சு செஞ்சு தீராது. செஞ்சாலும் நிறையாது. அது ஒரு தபஸு. எங்கோ அள்ளி அள்ளி எடுத்திருக்காரு. இப்பிறவியிலே கொடுத்து கொடுத்து கழிச்சாரு  

அந்த நகை ஆசாரியின் இடம் அந்த இருக்கை மட்டுமே. பெரும்பாலும் வேலைகள் ஒரு அறைக்குள் முடிந்துவிடக்கூடியதாகவே இருக்கும். எட்டி ஆறு போகா வாழ்வின் ஒட்டம். தொடர்ந்து வரும் கர்மாக்கள். ஆசைகளை வெறுமனே அடக்கி எரித்து விட்டு செல்ல வேண்டிய பிறப்புகள். ஆனால் அந்த சங்கீதம் தான் அவரின் இதம் – ப்ரேமம் – ஆசுவாசம் – வாழ்வின் உயிர். அப்படி ஒன்று இருந்ததால் தான் அவரால் அந்த 3 மணி உறக்கத்தை தாண்டி செல்ல முடிந்து  இந்த சிறுகதை .வரை.. உண்மையில் அந்த சந்நிதியில் காற்றில் இருக்கும் அந்த ராகங்கள் இவருக்கு கேட்கும் படியாக இறைவன் அளித்து மோட்ச சாவு கொடுத்து இருப்பான்.

தித்திப்பை நாக்கால் தொட்டு விட்டு, பேசியபடியே சொல்லி விட்டு நகரும் ஒரு பொருள் பொதிந்த வாழ்வின் பதிவு – ஏனேனில் கிட்டியதை ஏற்று , செவ்வனே செய்து விட்டு செல்லும் ஆத்மா

தங்கம் வாங்கி நகை செய்பவர்களுக்கு இருக்கும் கலை நேர்த்தி டிசைன் செய்யும் தகைவு, வேகம் , மற்றும் சொல், செயல், கொடுக்கல் வாங்கல், செய்யும் பொருளின் சுத்தம் , வாக்கு நேர்மை தான் அதன் ஆணி வேர். தங்கம் என்பது தெய்வத்திற்கு அணுக்கம் என்பது போல இந்த ஆசாரிகளின் வீடுகள், திருமண நிச்சயம் முடிந்தவுடன் செல்லும் முதல் இடமாக இருந்தது.  இன்று நகை கடைகள் சில சமயம் பாத்திர, கார் கடை என ஆகி விளம்பரம் செய்து, நடிக மக்கள் சிரித்து சொன்னது பத்தாமல் அந்த கடை அதிபர்கள் இந்த நேர்மையை / சுத்ததை கூவி விற்க வேண்டிய போட்டி வணிகம் ஆனது – கால ஒட்டத்திற்கு தங்கமும் குறைவல்ல என நினைத்து கொண்டேன்

 

 

அன்புகளுடன்,

லிங்கராஜ்

 

ராஜன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ராஜன் கதை மீண்டும் ஒரு யானைக்கதை. உங்கள் எழுத்தில் யானையை யானையாகவே கொண்டுவரும் கதைகள் உள்ளன – துளி, ஆனையில்லா போல. யானை ஓர் அடையாளமாகவும் குறியீடாகவும் வரும் கதைகள் உள்ளன. இந்த எல்லாக் கதைகளிலும் யானையை பெரிதாக ஆக்கிவிடுகிறீர்கள். யானையின் உயரம் கொம்பின் அளவு ஆகிய இரண்டைப்பற்றிய குறிப்பும் கொஞ்சம் கூடுதலாகச் சொல்லப்பட்டாலே அது யதார்த்த யானை இல்லை, குறியீட்டு யானை.

இந்த யானையை விவரிக்கவே இல்லை. அதற்கு கம்பீரம் தவிர வேறெந்த இயல்பும் அளிக்கப்படவில்லை. அது வென்றெடுக்கப்படவேண்டிய ஐந்து ஐஸ்வரியங்களில் ஒன்றாக திருவடிவமாக இவர்களால் கருதப்படுகிறது. ஆனால் அதில் பூதத்தான் காண்பது அதற்கு மேலே ஒன்றை.

அந்த வேறுபாடு கதையில் கூர்மையாக சொல்லப் பட்டுள்ளது. மற்றவர்கள் யானையை உரிமைகொண்டாடுகிறார்கள். பூதத்தான் தன்னை யானைக்குக் கொடுக்கிறான். அவனைத்தான் யானை தன்மேல் ஏற்றிக்கொள்கிறது

 

விஜயகுமார்

 

அன்பு ஜெயமோகனுக்கு வணக்கம்.

 

நலம்தானே

 

ராஜன் படித்தேன். தன் மீது எஜமான் எச்சில் சாற்றை உமிழ்ந்தாலும் அது பற்றிக் கவலைப்படாத அடிமை மனம் கொண்டவன் பூதத்தான். அவர் எது சொன்னாலும் அடிபணிபவன். ஆனாலும் ஒரு யானைக்கு நஞ்சு கொடுத்து கொல்லச் சொல்லும்போது மறுக்கிறான். இத்தனைக்கும் கோவிந்தன் நாயர் அதனால் நமக்குப் பாவம் இல்லை.நாம் கட்டாரிகள்தாம்.கொல்பவர் எஜமான்தான் என்றெல்லாம் சொல்கிறான். அதற்கும் பூதத்தான் மசியாதபோது  உன் குடும்பமே அழிக்கப்படும் என்றும் பயமுறுத்துகிறான்.

யானையா குடும்பமா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அது கதையில் காட்டப்படவில்லை. ஆனாலும் அவன் மனத்தில் தான் அதைச் செய்யாவிடினும் வேறு யாரையேனும் ஏவிவிட்டு முடிப்பார்கள் என்ற எண்ணம் விழுந்து விடுகிறது.

அவன் கோவிந்தன் நாயரிடம் பேசும் உரையாடலின் மூலம் இதை வாசகர்களைத் தாங்கள் உணர வைக்கிறீர்கள் . யானைக்கெல்லாம் ஓர் உள்ளுணர்வு இருக்கும்.முன்பின் அறியாத பூதத்தான் வரும்போது இவன்தான் தன் பாதுகாவலன் என்று அது உணர்கிறது. என்ன செய்யலாம் என்று அவன் வந்தவுடன் முடிவெடுத்து விடுகிறது.

எப்பொழுதும் யானையின் கண்களில் காடு இருக்கும் என்பார்கள். அது மனிதரை நம்பாமல் தன் பூர்வீக இடமானக் காட்டிற்கே சென்று விடுகிறது. தன் குடும்ப எதிர் காலம் பற்றி எண்ணாமல் இந்த இடத்தை வழங்கிய யானையைக் காப்பாற்றி உயர்ந்து நிற்கிறான்.

வாசகர் ஊகங்களுக்கு அதிக வேலை தரும் அற்புதமான கதை

 

வளவ. துரையன்

 

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்

கிருமி- கடிதங்கள்

$
0
0

கிருமி – உமையாழ்

அன்புள்ள ஜெ

உமையாழின் கிருமி கதை நேரடியான பிரச்சாரக்கதை போல் இருக்கிறது. அதிலுள்ள ஒருகுரல்தான் அதை கதையாக்குகிறது. முன்பு பூச்சிகளையும் சிற்றுயிர்களையும்கூட கொல்லக்கூடாது என்று சொன்னவர் அவர் என்பது. கிருமி என இங்கே வந்து சூழ்ந்துகொள்வது ஆதிக்கம் வன்முறைதான் என்பது.

நேரடியான கதையாக இருந்தாலும் அதிகாரத்தின் முன் மனிதர்கள் வெறும் உடல் மட்டுமாக மாறிவிடுவதன் இருட்டைச் சொல்லும் கதை என்ற அளவில் முக்கியமான கதை என்று சொல்வேன்.. அப்படிப்பார்த்தால் நோயும் கூட ஓர் அதிகாரமே. அதிகாரம் ஆதிக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் தனித்தன்மையை கவனத்தில் கொள்வதில்லை. அவர்களை அது சராசரி ஆக்குகிறது. பொது அடையாளம் அளிக்கிறது. அதன்பின் அவர்களைக் கையாள்வது அவர்களுக்கு எளியது.

அந்நிலையில் தன் தனித்தன்மையை பேணிக்கொள்வதும் அதற்காக நிலைகொள்வதும்கூட அதிகாரத்திற்கு எதிரான செயல்தான். நோயே கூட கலாச்சாரத்தை அழிக்கும் புல்டோசராக மாறிவிடக்கூடாது

 

செல்வக்குமார்

 

வணக்கம் ஜெ

 

உமையாழின் கிருமி கதையை வாசித்தேன். பணிவு இருக்கும் இடங்களில் தொற்றி அடக்க முயலும் ஆணவம் எனும் கிருமியின் கதை. என்றென்றைக்குமாகப் அடக்குமுறையின் எதிர்க்கும் பணிவின் திமிறலுக்காகக் காத்திருக்கிறது மனிதனுள் உறைந்திருக்கும் ஆணவம்

.

அரவின் குமார்

மலேசியா

 

அன்புள்ள ஜெ

கிருமி ஒரு கூர்மையான பிரச்சினையை முன்வைக்கும் கதை. இலங்கையில் இஸ்லாமியர் உடல்களை கொரோனோ காலத்தில் அவர்களின் எண்ணத்தை மீறி எரித்தார்கள் என்பதுதான் இந்தக்கதைக்கான தூண்டுதல் இஸ்லாமியர்கள் மறுஎழுகையை நம்புபவர்கள் என்னும்போது இது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்

ஆனால் முதல்கட்ட உணர்ச்சியிலேயே கதையை எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். கிருமி என்பது அடக்குமுறைதான், வெறுப்புதான், அடையாளத்தைஅழிக்கும் வெறிதான் என்ற ஒற்றை எண்ணத்தையே இந்தக்கதை முன்வைக்கிறது. அதை முன்வைப்பதற்கு அந்தச்சூழலில் இருந்து இன்னும் வலுவான படிமங்களை கண்டடைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். சாவு உடை அணிவிப்பது முதல் பல விஷயங்கள் உள்ளன. நுணுக்கமான தகவல்களை அளித்து அந்த உடல் கையாளப்படுவதை சித்தரிக்க முடிந்திருந்தால்கூட இன்னும் வலுவாக இருந்திருக்கும்

ஆனாலும் ஒரு நேரடியான குரலாக இக்கதை அழுத்தமானதாகவே உள்ளது

ரவிச்சந்திரன்

9கிருமி [சிறுகதை] உமையாழ்

8.நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

7.உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

6.வில்லுவண்டி[ சிறுகதை] தனா

5.உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

4.கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

3.இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

2.அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

1.கன்னி- [சிறுகதை] ம.நவீன்

=======================================================

நெடுநிலத்துள் – கடிதங்கள்
புதியகதைகள்- கடிதங்கள்-1
புதிய கதைகள்- கடிதங்கள்
உஷ்ணம் – கடிதங்கள்
வில்வண்டி- கடிதங்கள்
உதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்
இணைவு, ராஜன் – கடிதங்கள்
கூடு,பிறசண்டு- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
புதியகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்
தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
கன்னி- கடிதங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்

$
0
0

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

அன்புள்ள ஜெ,

நீங்கள் கிறிஸ்தவ இசை மூன்று அடுக்குகள் என்ற பெயரில் வெளியிட்ட கட்டுரை பற்றி சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் கட்டுரையுடன் அளிக்கப்பட்டிருக்கும் ‘வேதநாயகம் சாஸ்திரியார் பாடல்கள் 1980’ என்னும் யூடியூப் வீடியோவில் அளிக்கப்பட்டிருக்கும் படம் முதல்வேதநாயகம் சாஸ்திரியார் அல்ல. அவருடைய வாரிசுகளும் தங்களை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைத்துக்கொள்வார்கள்.

அந்த யூடியூப் வீடியோவில் இருப்பவர் இன்றைய வேதநாயகம் சாஸ்திரியார். இப்போது அவருக்கு 90 வயது இருக்கலாம். கிறிஸ்தவ கீர்த்தனைகளை எழுதிய வேதநாயகம் சாஸ்திரியாரின் வழிவந்தவர் அவர்.  சென்ற நூறாண்டுகளாக வேதநாயகம் சாஸ்திரியாரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேதநாயகம் சாஸ்திரியார் என்று பட்டம் கட்டப்படும். அவர் தேவஊழியங்களை செய்வார். இது அக்குடும்பத்தின் பொதுவான பட்டமாகும்.

இச்செய்தியை உங்கள் தளத்தில் வெளியிடுங்கள். இப்போது அவருடைய மகன் புதிய வேதநாயகம் சாஸ்திரியார் ஆக பட்டம்கட்டப்பட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. கேட்டுக்கொள்ளவும்

 

அன்புடன்

டேவிட் ஆனந்த் குமார்

சென்னை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எப்படி எழுதுகிறேன்?

$
0
0

இந்த கொரோனாக்காலக் கதைகளின்போது என்னிடம் திரும்பத்திரும்ப கேட்கப்பட்டது, எப்படி இவ்வளவு எழுதினேன்? முன்னரே எழுதி வைத்திருந்தேனா? தகவல்களை எல்லாம் முன்னரே தேடி தொகுத்துவைத்திருந்தேனா?ஒரேயடியாக எழுதிவிடுவேனா, அல்லது விட்டுவிட்டு எழுதுவேனா?

கொரோனோக் காலக்கதைகள் இவ்வளவு வந்ததற்கான முதன்மைக்காரணம், நான் ஏற்கனவே சொன்னதுபோல, நாங்கள் திட்டமிட்டு கைவிடப்பட்ட சிக்கிம்- அருணாச்சலப்பிரதேசம்- சீன எல்லை பயணம்தான். கொரோனா பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் மார்ச் பத்துமுதல் பதினைந்துநாட்கள் பயணம் செய்ய விமான முன்பதிவு செய்திருந்தோம்.

ஆகவே நான் முன்னரே வெண்முரசு இருபது அத்தியாயங்கள் வரை முன்னணியில் இருந்தேன். புத்தகக் குறிப்புகள் உட்பட தேவையான கட்டுரைகளை எழுதிச் சேர்த்திருந்தேன். கொரோனா அறிவிக்கப்பட்டமையால் இருபது நாட்கள் எதையுமே எழுதவேண்டிய தேவையில்லாமல் நாட்கள் முழுமையாகக் கிடைத்தன

தகவல்களை எப்படிச் சேர்க்கிறேன்? அறிவுத்தளச் செயல்பாடு கொண்ட நண்பர்களுக்கு தெரியும், இவை என்னுடைய ஆர்வம் சார்ந்த ஒரு சிறுவட்டத்திற்குள் அமைபவை. மீபொருண்மை உலகம், தொன்மங்கள், இந்தியாவின் நிலப்பகுதிகள், கேரள- தமிழ் வரலாறு ஆகியவை என்னுடைய ஆர்வம் சென்ற நாற்பதாண்டுகளாக குவிந்திருக்கும் களங்கள். நான் தொடர்ச்சியாக இத்தளங்களில் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். தொலைதொடர்புத்துறை நான் பணியாற்றியது

நான் உயிரியல் அல்லது இயற்பியல் அல்லது கணிதம் பற்றி எதையும் எழுதிவிடமாட்டேன். உயிரியலிலும் இயற்பியலிலும் ‘பாப்புலர் சயன்ஸ்’ எனப்படும் பொதுநூல்களை விரும்பி வாசித்த அளவுக்கே என் அறிதல். ஒரு புனைவில் அந்த அளவுக்குள் மட்டும் செய்திகளை நிறுத்திக்கொள்வேன். அதைப்போல மருத்துவம் போன்ற பலருக்கும் அடிப்படைகள் தெரிந்திருக்கும் துறைகளில்கூட பொதுமக்கள் அறிவுக்குக்கூட எனக்கு அறிதல் இல்லை. அவற்றை அறிந்தால்கூட என் நினைவில் நிலைகொள்வதில்லை

கணிதத்தில் என் திறமை ஐந்தாம் வகுப்பு மாணவன் அளவுக்கே. மூன்று இலக்க எண்கள் இரண்டை என்னால் காகிதத்தில் எழுதினால்கூட தவறில்லாமல் கூட்டிச்சொல்ல முடியாது. இன்றுவரை கணிதத்திற்கு பிறரைத்தான் நம்பியிருக்கிறேன். எளிய அடிப்படைக் கூட்டல் கழித்தல்கள்கூட இன்றுவரை பிடிகிடைக்கவில்லை. முயற்சி செய்தால் மூளை ஒருமாதிரி எரிய ஆரம்பிக்கும்.

ஆகவே எல்லாத்துறைகள் சார்ந்தும் எழுதுவதில்லை—சாதாரணமாக எழுத்தாளர்களால் அது இயலாது என்று நினைக்கிறேன். அந்த எல்லையைக் கடந்துசெல்லும் மேதைகள் இருக்கவும்கூடும். எனக்கு என்றும் ஆர்வம் உடைய, நான் அனேகமாக ஒவ்வொருநாளும் வாசித்துக்கொண்டிருக்கும் துறைகள் சார்ந்தே எழுதுகிறேன்.

என் கதைக்கருக்கள் அந்த தளங்களைச் சார்ந்து எழும்போது ஆய்வு தேவைப்படுவதில்லை. தேதிகள், ஆண்டுகள் போன்றவற்றை அவ்வப்போது சரிசெய்துகொள்ளவேண்டியிருக்கும், அவ்வளவுதான்

இங்கே எழுத்தாளர்கள் உணரும் ஒரு சிக்கல் உண்டு. எந்த நல்ல எழுத்தாளனும் எப்போதுமே புனைவுமனநிலையில்தான் இருப்பான். கண்முன் காட்சியையே அந்தந்த கணங்களிலேயே புனைந்துகொண்டும் இருக்காதவன் எழுத்தாளன் அல்ல.ஆகவே பலசமயம் பின்னர் நாம் நினைத்துப்பார்க்கையில் அடிப்படைச் செய்திகள், தரவுகளுடன் கற்பனையும் கலந்திருப்பதை காண்கிறோம். மனப்பதிவுகள் அனைத்திலும் ஊடாடியிருக்கின்றன.

ஆனால் அந்த ஊடாட்டம்தான் எழுத்தாளனின் பங்களிப்பு. அதன்பொருட்டே அவன் எழுதுகிறான், அவன் எழுத்தை அந்த தளத்தில் செயல்படும் நிபுணன் வாசித்தால் அவன் ஆர்வத்துடன் கவனிப்பது அந்த ஊடாட்டத்தைத்தான். தல்ஸ்தோய் போரும் அமைதியும் நாவலில் நெப்போலியனின் ருஷ்யப்படையெடுப்பைப் பற்றிச் சொல்லியிருப்பதை நெப்போலியனின் வரலாற்று ஆய்வாளர்கள் மிகமிக விரிவாக விவாதித்திருப்பது இந்தக் கோணத்திலேயே.

ஆகவே செய்திகளுக்கு சமானமாக புனைவும் ஊடுகலந்து ஒரு நிகர்வரலாறாக, நிகர்அறிவியக்கமாகவே இலக்கியத்தில் வெளிப்படுகிறது. செய்தியாக ஒன்று புனைவில் சொல்லப்பட்டால் அது சரியாக இருக்கவேண்டும் என கவனிப்பேன், ஆனால் என்னையறியாமல் அது உருமாறியிருப்பதை நான் கண்டால் அது என் ஆழ்மன வெளிப்பாடு என எண்ணி விட்டுவிடுவேன். அது மேலும் வளர்ந்து வேறெங்கோ செல்வதையும் பின்னர் கண்டிருக்கிறேன்.

இலக்கியவாதி ஆய்வுசெய்யவேண்டும், அது வரலாற்றாசிரியனின் ஆய்வு அல்ல. அ.கா.பெருமாள் போன்றவர்கள் ஒரு சிறுசெய்தியை உறுதிசெய்துகொள்வதற்காக இரண்டு ஆண்டுகள்கூட தேடிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.அவருடன் பயணம்செய்திருக்கிறேன். ஆனால் அது அவருடைய வழி, என் மனம் அதற்குள் அச்செய்தியினூடாக நெடுந்தொலைவு சென்றிருக்கும். இரு வழிகளும் வேறுவேறு, இலக்கியத்தில் கனவுக்கான முகாந்திரம்தான் செய்திகள். கற்பனைக்கான ஓடுபாதை.

இக்கதைகளை பெரும்பாலும் காலையில் தொடங்கி இரவுக்குள் முடித்திருக்கிறேன். தொடக்க நாட்களில் ஒருநாளில் இரண்டு கதைகள்கூட எழுதியிருக்கிறேன். இரண்டுநாட்களில் மூன்று கதை என்பது சாதாரணமாக இருந்தது. ஆகவேதான் கூடு, நற்றுணை, கரு போன்ற கதைகளை இரண்டுமூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதமுடிந்தது

இதிலுள்ள உடலுழைப்பு முக்கியமானது, ஆனால் அந்த உழைப்பை வியப்பவர்களிடம் எனக்கு மதிப்பில்லை. அந்த உழைப்பைப் பற்றி பேசுபவர்கள் எங்களூர் அம்மச்சி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கோபுரத்தை பார்த்து “செஞ்சதுதான் செஞ்சாங்க, எப்டி எடுத்து நிப்பாட்டினாங்க!” என்று வியந்ததுபோல பேசுபவர்கள்

கலையில் உழைப்பு உள்ளது. ஓவியம் சிற்பம் மட்டுமல்ல, இசையிலேயே கூட உடலுழைப்பு மிகமிக அதிகம். அந்த உடலுழைப்பை அளிக்குமளவுக்கு உடலை ஆற்றலுடன் வைத்துக்கொள்பவர்களாக, உடல்நலிந்திருந்தால்கூட உள்ளத்தின் விசையால் எழுந்து அதைச் செய்பவர்களாகவே மாபெரும் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். என் ஆதர்சங்கள் அவர்களே.ஆனால் உழைப்பல்ல கலை, கலையில் உள்ள உழைப்பைப் பற்றி பேசுவது அறிவின்மை. அவ்வுழைபபி நிகழ்த்தும் உந்துதலையே வாசகன் உணரவேண்டும்.

ஒருநாளில் நான் பன்னிரண்டு மணிநேரம் வரை சாதாரணமாக இப்படைப்புகளுக்காக வேலைபார்த்திருக்கிறேன். நேரடியாக எழுதுவது எட்டு மணிநேரம் வரை. ஆனால் எதையாவது வாசிக்கப்போய் அதிலேயே நெடுந்தொலைவு சென்றுவிடுவது. கேரளவரலாற்றின் அசல் ஆவணங்கள், ரோரிச் குடும்பத்தின் வாழ்க்கை, திபெத் பற்றிய ஆவணங்கள், ஆர்தர் ஆவலோன் எழுதிய தந்த்ரீகநூல்கள் என்று எப்படியும் ஒருநாளுக்கு நாலைந்து மணிநேரம் வாசித்து தள்ளியிருக்கிறேன். ரோரிச் குடும்பம் பற்றியே ஒரு நாவலை எதிர்காலத்தில் எழுதக்கூடும்.

கலையைப் படைக்க இன்றியமையாதது அதிலேயே இருப்பது. முழுநேரமும் முழுப்பிரக்ஞையும். இந்தக்கதைகளை எழுதியநாட்களில் வேறெதிலும் என் மனம் திரும்பியதில்லை. என் வாழ்நாள் முழுக்கவே கூடுமானவரை சில்லறை விஷயங்களில் கவனச்சிதறல் இல்லாதவனாகவே இருந்திருக்கிறேன்.

ஆனால் தொழில்? நீங்கள் நினைப்பதுபோல அல்ல, சென்ற கொரோனோ காலகட்டத்தில் நான் வேலையும் பார்த்துக்கொண்டிருந்தேன். மூன்று பெரிய படங்களில் பணியாற்றுகிறேன். இன்னொரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதுசார்ந்த பேச்சுகள் விவாதங்கள் போய்க்கொண்டுதான் இருந்தன. அவற்றையும் இணைத்தே செய்தேன். அது வேறு.அதிலிருந்து இதற்கு உருமாறிக்கொள்வேன்

இதை வாசிக்கும் நண்பர்கள் தொடர்ச்சியாக எத்தனை நிமிடம் ஒன்றைச் செய்கிறீர்கள் என்று பாருங்கள். நடுவே மின்னஞ்சல், முகநூல், வாட்ஸப் பார்ப்பது எத்தனை முறை? டிவியை ஓரக்கண்ணால் பார்ப்பது எத்தனை முறை? அதை கவனித்தால் நீங்கள் வியப்பது என் திறனை அல்ல என்னுடைய ஈடுபாட்டைத்தான் என்று புரிந்துகொள்ள முடியும். முழுமூச்சாக ஒருமணிநேரம் செய்யும் வேலையை மூழ்காமல் செய்யவேண்டுமென்றால் நாலைந்து மணிநேரம் ஆகும். அது கற்பனை சார்ந்த வேலை என்றால் பலநாட்கள்கூட ஆகும்.

கதைவடிவத்தை திட்டமிடுவேனா? இல்லை. எனக்கு கதை ஒரு மங்கலான காட்சி, ஒரு படிமம், ஒரு தொடக்கவரி, ஒரு முடிவு வரி என்று ஏதோ ஒரு வடிவில் வரும். அவற்றில் சில நீண்டநாட்களாக நினைவில் கிடப்பவை. சில அக்கணத்தில் தோன்றி ஓரிரு மணிநேரத்திற்குள் படைப்பாக ஆகிவிடுபவை. கதையின் மொழியும் வடிவமும் பற்றி கவலையே படுவதில்லை. எழுதத்தொடங்கி மூழ்கி மூழ்கிப்போய் அந்தச் சித்திரத்தை முடிக்கும்போது அதுவே முழுமையான வடிவுடன் அமைந்திருக்கும்.

ஒரு கதையின் முடிவு என்பது அக்கதையின் வழியாக நான் தேடிச்சென்று அடையும் ஒரு கண்டடைதல், ஒரு மெய்யறிவு. அதுதான் கதை. அதுதான் அந்த வடிவத்தை உருவாக்குகிறது.அந்த கண்டடைதல் நடக்கவில்லை என்றால் மெய்யறிவு அடையப்படவில்லை என்றால் அது கதையாக ஆவதில்லை. அது ஆற்றல்மிக்க கண்டடைதல் மெய்யறிவு என்றால் அதுவே வடிவத்தை அமைத்துவிடுகிறது.

ஒரு கரு அமைந்ததுமே அதன் வடிவம் இயல்பாக வந்தமையவேண்டும். அதை அடைகாக்க வேண்டியதில்லை, செதுக்கவேண்டியதில்லை. சிலசமயம் முடிவில்லாது வடிவங்களை செதுக்குவது உண்டு. ஆனால் அது ஒரு பயிற்சிதான். அது அந்தக்கதையை ‘பிசிறற்றதாக’ ஆக்குவதற்காக அல்ல. அதனூடாக செல்லும் பிறிதொரு அகப்பயணத்திற்கான ஒரு  தயாரிப்பு அது

அப்படி முயலாமலேயே வடிவம் வந்தமைய என்ன செய்யவேண்டும்?. அது எந்தக் கலையிலும் அதன் மாஸ்டர்களால் மட்டும் இயல்வது. அதற்கு நீண்டகால பயிற்சி தேவை. முழு அர்ப்பணிப்புடன் பல ஆண்டுகள் மொத்த வாழ்க்கையையும் அளித்தல். அதைச்செய்யாத எந்த மாஸ்டரும் எந்த துறையிலும் இல்லை. கலையில் ஒரு தொழில்நுட்பம் உண்டு, அதைக் கற்று அதை முழுமையாக கடந்து மறந்து விடும் நிலை அது. மீறலுக்கான உரிமையும் அங்கேதான் அமைகிறது.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–83

$
0
0

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 2

அர்ஜுனன் சிற்றோடைக்கரையில் நீர்மருத மரத்தின் வேரில் உடல் சாய்த்து கால் நீட்டி படுத்திருந்தான். அவன் கால்களைத் தொட்டு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதில் மிதந்து வந்த இலைகளும் சற்று ஆர்வம் கொண்ட மீன்களும் அவன் விரல்களைத் தொட்டு அவ்வப்போது விழிப்புணர்த்திக்கொண்டிருந்தன. அவன் தன்னை இழந்து அமைந்திருந்த வெறுமைக்குள் ஒரு நோக்குணர்வை அடைந்தான். கை இயல்பாக நீண்டு காண்டீபத்தை தொட்டது.

அவன் தன் உடலெங்கும் நிறைந்திருந்த விழிகளால் அந்த எழுவரையும் பார்த்துவிட்டான். ஏழு நாகர்குலத்து இளைஞர்கள் கைகளில் விற்களும் அவற்றில் தொடுத்து நாணிறுக்கி நீட்டி குறிபார்த்த நச்சுஅம்புகளுமாக நுண்ணிதின் அணுகி வந்துகொண்டிருந்தனர். அவர்களின் விழிகள் அவனை நோக்கி கூர்ந்திருந்தன. அவர்களுக்குரிய காணா விழி ஒன்றால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அனைவரும் ஒரே அசைவை அடைந்தனர். ஒரே கணத்தில் சிலிர்த்துக்கொண்டனர். ஒரே கணத்தில் சொடுக்கினர். ஒரு பாம்பின் உடல் வளையம்போல் அவர்கள் இருந்தனர்.

அர்ஜுனன் தன் உடலைத் திரட்டி ஒரு கணத்தில் சுழன்றெழுந்து அமர்ந்தான். அவர்கள் அனைவரையும் நேருக்கு நேர் பார்த்தான். அதை எதிர்பாராத அவர்கள் திகைத்ததுபோல் நின்றனர். அவன் கை காண்டீபத்தை தொட்டுக்கொண்டிருந்தது. அவர்களில் தலைமை என நின்ற இளைஞனின் விழிகளை மிக அருகில் பார்த்து அர்ஜுனன் புன்னகைத்தான். அதைக் கண்டு அஞ்சி ஒருகணம் அவன் பின்னடைந்தான். அவன் உடலில் அப்பின்னடைவு நிகழவில்லை. உள்ளத்தில் நிகழ்ந்த அப்பின்னடைவு விழிகளில் தெரிந்தது.

பின்னர் அவன் தன்னை முழுக்க திரட்டிக்கொண்டு மெல்லிய உறுமலோசை ஒன்றை எழுப்பியபடி அவனை நோக்கி அம்பெய்தான். அதே கணத்தில் மற்ற அம்புகளும் எழுந்தன. அர்ஜுனன் தன்னுடலை பாம்பென ஏழு நெளிவுகளுக்குள்ளாக்கி அவனை நோக்கி வந்த ஏழு அம்புகளையும் தவிர்த்து காண்டீபத்தை எடுக்க முயன்றான். ஆனால் அவன் கைக்கு அப்பால் அது நீர்மருத மரத்தின் தடித்த வேரென மாறியதுபோல் மண்ணுடன் படிந்து கிடந்தது. முழு மரத்தின் எடையையும் தான் கொண்டுவிட்டதுபோல. பேருருக் கொண்ட புவியால் மறுபக்கம் பற்றி இழுக்கப்பட்டதுபோல.

அவன் காண்டீபத்தை பற்றித் தூக்க முழு விசையாலும் முயன்றான், அதை அவனால் அசைக்கவே முடியவில்லை. கற்பாறைபோல், அங்கே நிழலென வரையப்பட்டதுபோல் அது கிடந்தது. அவர்கள் மீண்டும் நாணேற்றி மீண்டும் அம்புகளை தொடுத்த பின்னரும் அவனால் வில்லை அசைக்க முடியவில்லை. அவனால் வில்லை எடுக்க முடியவில்லை என்பதை தலைவன் கண்டுகொண்டான். அம்பை செலுத்த வேண்டாம் என்று அவன் கைகாட்ட மற்றவர்கள் வில் தாழ்த்தினர்.

அவர்கள் அவனை பார்த்தபடி நின்றனர். அர்ஜுனன் வில்லை எடுப்பதற்கு மீண்டும் முழு ஆற்றலோடு முயன்றான். அவன் இடக்கையும் இடக்காலும் உயிரற்றவைபோல் தளர்ந்திருந்தன. மேலும் உந்தியபோது அவன் சரிந்து காண்டீபத்தின் மேலேயே விழுந்தான். தலைவன் கைகாட்ட நாகர்கள் எழுவரும் ஒரே கணத்தில் பாய்ந்து அவன் மேல் விழுந்தனர். பதினான்கு கைகள் அவனை பாம்புகள்போல் பற்றிக்கொண்டன. அவன் உடலின் நுண்ணிய பகுதிகள் அனைத்தையும் ஒரே கணத்தில் அழுத்தி அவனை செயலிழக்கச் செய்தனர்.

அவனை புரட்டிப்போட்டு கைகளை சேர்த்து பின்னால் காட்டுக்கொடிகளால் இறுகக் கட்டினர். கால்களைக் கட்டி மீண்டும் புரட்டி மலர்த்திப் போட்டனர். அவர்களின் தலைவன் அர்ஜுனனின் முகத்தை கூர்ந்து பார்த்தான். அவர்களின் மயிரற்ற முகங்கள் குளிராலும் வெயிலாலும் வெந்து சுருங்கி விழிகள் உள்ளடங்கி இருந்தன. தலைவன் வெறியுடன் தன் வெறுங்கையால் அர்ஜுனனின் முகத்திலிருந்த மீசையின் மயிர்களை பிடுங்கி பறிக்கத்தொடங்கினான். அர்ஜுனன் திமிறி புரண்டபோது அவன் முகத்தில் ஓங்கி அறைந்து காறி துப்பினான். தலைமயிரைப்பற்றி மண்ணில் பலமுறை அறைந்தான். பிறகு எழுந்து நின்று அவனை காலால் உதைத்தான்.

அர்ஜுனன் அசைவழிந்தபோது தலைவனும் அவனைத் தொடர்ந்து வந்த அறுவரும் சேர்ந்து அர்ஜுனனின் தாடியையும் மீசையையும் முழுக்கவே கைகளால் பிடுங்கி எடுத்தனர். முகமெங்கும் குருதி வழிய, உடலில் மெல்லிய துடிப்புடன் அவன் அங்கே கிடந்தான். தலைவன் அவனை காலால் ஓங்கி ஓங்கி உதைத்தான். பின்னர் அவன் நீண்ட தலைமயிரை தன் கையில் பற்றி சுற்றித் தூக்கி இழுத்துக்கொண்டு நடந்தான். அவர்கள் கூச்சலிட்டபடி அவனை தொடர்ந்தனர். அவன் உடல்மேல் எச்சில் துப்பினர்.

அர்ஜுனனின் உடல் காட்டின் கற்கள் மீதும், முட்கள் மீதும், வேர் முடிச்சுகள் மீதும் முட்டி புரண்டு எழுந்து அதிர்ந்து அவர்களுடன் சென்றது. அவர்களில் ஒருவன் இடக்கையால் காண்டீபத்தை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் வந்தான். அதைக் கொண்டு அவன் தழைகளையும் புற்களையும் அறைந்தான். அர்ஜுனன் அவன் கையிலிருந்த காண்டீபத்தை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் உள்ளம் எந்தச் சொல்லுமின்றி மலைத்ததுபோல் இருந்தது. நெடுநேரத்திற்குப் பின்னரே என்ன என்ன என்று அவன் அகம் அரற்றத் தொடங்கியது. என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? இதுதான் இறுதியா? இவ்வண்ணமா?

அவர்கள் அவனை காட்டினூடாக இழுத்துக்கொண்டு நாகர்களின் சிறுகுடிக்கு சென்றனர். அவர்களின் ஓசை கேட்டு அங்கிருந்து ஓடி வந்த நாகர் குலத்து முதியவர்கள் அவனைப் பார்த்ததுமே சூழ்ந்துகொண்டு கால்களால் மாறி மாறி மிதிக்கத் தொடங்கினார்கள். அவனை நசுக்கிவிட விழைபவர்கள்போல் வெறிகொண்டு கூச்சலிட்டபடி மிதித்தனர். அவன்மேல் பெண்கள் காறி உமிழ்ந்தனர். சிறுவர்கள் கூட எட்டி மிதித்தனர்.

பின்னர் அவன் இழுத்துக் கொண்டுசெல்லப்பட்டு நாகர்களின் சிற்றூரின் முற்றத்தில் போடப்பட்டான். அவன் ஆடை களையப்பட்டது. பகல் முழுக்க வெறும் உடலாக அவன் அங்கு கிடந்தான். நாகர்குலக் குழந்தைகள் அவன் அருகே வந்து விளையாடின. அவன் செவியிலும் கண்களிலும் மண்ணை அள்ளி போட்டன. அவன் உடலில் முட்களால் குத்தின. அவன் மேல் ஏறி அமர்ந்து கூச்சலிட்டன. அப்பாலிருந்த ஓடையிலிருந்து மண்ணையும் சேற்றையும் அள்ளி வந்து அவன் மேல் வீசின. அவர்கள் இழிவுச்சொற்களை கூவியபடியே இருந்தனர்.

நான்கு நாகர்குலக் குழந்தைகள் அவன் காலை ஒரு கயிற்றால் கட்டி அங்கிருந்த கழுதை ஒன்றின் வாலில் கட்டினர். கழுதையை அவர்கள் முள்ளால் குத்தி துரத்திவிட அவன் உடலை இழுத்தபடி அது அச்சிற்றூரின் முற்றத்தில் பதறிக் கனைத்து சுற்றி வந்தது. அவன் உடலில் தோல் உரிந்து குருதியில் மண்ணும் புழுதியும் ஒட்டிக்கொண்டிருந்தன. அவர்களில் ஒரு குழந்தை உள்ளே சென்று சாம்பலை அள்ளி அதன்மேல் போட்டது.

குழந்தைகளை அதட்டி நீக்கி ஒரு பெண் அவனை தலைமயிர் பற்றி இழுத்து வந்து திரும்ப முற்றத்தில் போட்டாள். அவன் வாயைத் திறந்து உள்ளே புளித்த காடி ஒன்றை ஊற்றினாள். அவர்கள் உண்ட எச்சில் உணவுகள் அனைத்தையும் கலந்த அந்தக் காடியை அவன் விடாயுடனும் பசியுடனும் அருந்தினான். கால்கள் தள்ளாட அவனை நோக்கி வந்த களிமகன் ஒருவன் அவன் முகத்திலும் வாயிலும் சிறுநீர் கழித்தான். அர்ஜுனன் அருவருப்புடன் புரண்டபோது அவன் வசைபாடியபடி அவனை இழுத்துச்சென்று அவ்வூரார் அனைவரும் மலம்கழிக்கும் குழி ஒன்றுக்குள் தூக்கி போட்டான். புளித்து நாறிய மலத்தில் அவன் புரண்டு கிடந்தான். மேலே நின்று களிமகன் இழிசொல் கூறி கூச்சலிட்டான்.

அந்தி இருண்டு கொண்டிருந்தது. இரவு சரிந்த பின்னர் அவர்களின் முற்றத்தில் ஏழு எண்ணைப் பந்தங்கள் நடப்பட்டு நடுவே தோல்பீடங்கள் போடப்பட்டன. அவற்றில் குடிமூத்தார் வந்து அமர்ந்தனர். தோலாடை அணிந்து மலை எருதின் வாலால் ஆன தலையணி சூடி கழுத்தில் நாகபடம் வைத்தது போன்ற கல்மணிமாலைகளுடன் அவர்கள் மன்று தலைக்கொண்டனர். சூழவும் அவர்களின் மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் அமர்ந்தனர். பெண்டிர் வலப்பக்கம் நிரை வகுத்திருந்தனர்.

அவர்கள் அர்ஜுனனை மேலே எடுத்து அவன் மேல் நீரை அள்ளி அறைந்து வீசி கழுவிய பின் இழுத்துவந்து முற்றத்தின் முன் போட்டனர். ஊர்த்தலைவர் எழுந்து வந்து அவன் முகத்தில் உமிழ்ந்த பின் காலால் பல முறை உதைத்தார். முடிபற்றி தூக்கி நிறுத்தினார். இருவர் அவன் கால்களை அழுந்த பிடித்துக்கொண்டனர். ஊர்த்தலைவர் “கூறுக, உன் பெயரென்ன?” என்றார். அர்ஜுனன் மறுமொழி எதுவும் உரைக்கவில்லை. “கூறு, உன் பெயரென்ன?” என்று அவர் மீண்டும் உரக்க கேட்டார். பலமுறை கேட்ட பின்னும் அவன் மறுமொழி சொல்லவில்லை.

அவர் அருகிருந்த ஒரு இளைஞனிடம் “அவர்கள் மொழியில் கூறு” என்றார். அவன் மழுங்கிய செம்மொழியில் “உன் பெயரென்ன?” என்றான். பின்னர் காமரூபத்தின் மொழியில் “உன் பெயர் என்ன? நீ எக்குடி?” என்று கேட்டான். “பெயரும் குலமும் கூறாதொழிந்தால் இங்கு நீ இன்னும் இடர்படுவாய். உயிருடன் எஞ்ச இயலாது” என்றான். அர்ஜுனன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவர்களில் ஒருவன் சீற்றம்கொண்டு தன் கழுத்தை அறுப்பதை எதிர்பார்த்திருந்தான்.

குடித்தலைவர் மீண்டும் எழுந்து வந்து அவனை மிதித்தார். அவன் மேல் உமிழ்ந்து “கூறுக, உன் பெயரென்ன?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார். அவன் விழிகளை சந்தித்த பின் அவன் கூறப்போவதில்லை என்பதை உணர்ந்து சினத்துடன் நடுங்கியபடி சில கணங்கள் நின்றார். பின்னர் கைகட்டியபடி சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். இருவர் கைதூக்க பெண்கள் குரவையிடத் தொடங்கினர். சிறுவர்களும் அக்குரவையில் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கான நரிகள் அவனைச் சுற்றி எழுந்து ஓசையிட்டது போலிருந்தது.

ஒரு நாக வீரன் தன் இடையிலிருந்த தோலால் ஆன வாளுறையை எடுத்து உள்ளிருந்து கூரிய கத்தியை உருவினான். அதை தன் கையிலேயே ஒருமுறை தீட்டிக்கொண்டு அர்ஜுனனை அணுகினான். அவன் தலைமுடிபற்றி தூக்கி நிறுத்தினான். இரு இளைஞர்கள் அருகிலிருந்த ஓடையிலிருந்து மரக்குடைவுக் கலத்தில் நீரள்ளி வந்தனர். அதை அவன் தலையில் ஊற்றி மீண்டும் நீராட்டினர். அவன் தலை மயிரை பற்றி இழுத்துச் சென்று அங்கே வடகிழக்கு திசையில் பதிக்கப்பட்டிருந்த ஏழு மாநாகங்களுக்கு முன் அவனை மண்டியிட வைத்தனர். மாநாகங்களைச் சுற்றி பந்தங்கள் கொளுத்தப்பட்டன.

குரவை ஒலிகள் வலுத்தன. ஒருவன் அவன் பின்னால் நின்று அர்ஜுனனின் தலைமயிரைப் பிடித்து தலையை மேலே தூக்கிக்கொண்டான். அவன் கழுத்துக்குழாய் புடைத்து மேலெழுந்தது. பந்தங்களின் ஒளியில் அர்ஜுனனின் உடல் ஈரத்தால் மின்னிக்கொண்டிருந்தது. நாக வீரன் அந்தக் கத்தியை அவன் கழுத்தில் வைத்து நாகர்களுக்கான வாழ்த்துச்சொற்களை முணுமுணுத்தான். கத்தியின் ஒளி அவன் முகத்தில் பட்டது. இந்தக் கத்திதானா? பல்லாயிரம் அம்புகளில், வாள்களில், வேல்முனைகளில் இருந்து இது எவ்வகையில் வேறுபட்டது? இல்லை, இது அல்ல.

அவனை பார்த்துக்கொண்டிருந்த நாகர்குடித் தலைவர் ஏதோ நினைவுகூர்ந்தவர்போல கைகாட்டி நிறுத்தி அருகணைந்து அவனை விலகச்சொல்லி அர்ஜுனனைப் பிடித்து அவன் கட்டுகளை அவிழ்த்து அவனைத் தூக்கி “நீ நாகர்களில் குருதியுறவு உடையவனா?” என்றார். அவன் மறுமொழி சொல்லவில்லை. “நான் ஒரு குரலை கேட்டேன். மிக அண்மையில் என் செவியருகே… நாகன் ஒருவன் சொன்னான், நீ அவன் தந்தை என்று… உனக்கு நாகமைந்தன் இருந்தானா? உயிர்நீத்து முன்னோர்வடிவு கொண்டானா?”

அர்ஜுனன் நெஞ்சு விம்ம முனகலோசையை எழுப்பினான். அவன் தலை குனிய விழிகளில் இருந்து நீர் வழிந்தது. “சொல், உனக்கு நாகர்மைந்தன் இருந்தானா? அவன் இங்குள்ளான். உன் பொருட்டு துயர்கொள்கிறான்” என்றார் குடித்தலைவர். “என்னை கொல்லுங்கள்… என்னை கொல்லுங்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவன் பெயர் என்ன? சொல், அவனுக்காக நாங்கள் இங்கே படையலிடவேண்டும்” என்றார் குடித்தலைவர்.

“அரவான், அவன் பெயர் அரவான்” என்று அர்ஜுனன் சொன்னான். பின்னர் உரத்த ஒலியுடன் கதறி அழத்தொடங்கினான். “அவனிடமிருந்து எனக்கு விடுதலை இல்லை. என் மைந்தரிடமிருந்து நான் விடுதலை பெறப்போவதே இல்லை. என்னை கொல்லுங்கள்… அளிகூர்ந்து என்னை கொன்றுவிடுங்கள்” என்று கூவினான். அவர்கள் திகைத்துப்போய் நோக்கி நின்றனர்.

குடித்தலைவர்கள் அப்பால் சென்று கூடிநின்று அறியாத மொழியில் விரைந்து பேசிக்கொண்டனர். பின்னர் குடித்தலைவர் ஏதோ ஆணையிட்டுவிட்டு நாகபடம் கொண்ட குடிக்கோலை தூக்கிக்கொண்டு தன் குடிலுக்குள் சென்றுவிட்டார். பிறர் அமைதியாக அவனைப் பார்த்து அமர்ந்திருந்தனர். அர்ஜுனன் “என் மைந்தன் குரலை நான் கேட்கவில்லை… மூத்தவரே, என் மைந்தன் குரலை நான் கேட்கச்செய்யுங்கள்” என்று அலறினான்.

நாகர் குலத்து இளைஞர்கள் அவனை தூக்கி நிறுத்தி உந்தி கொண்டுசென்றனர். இரவு முழுக்க காடுகளினூடாக அவனை நடக்க வைத்து கூட்டிச்சென்றனர். அவர்களின் நிலத்தின் எல்லையாக அமைந்த ஓடை ஒன்றை அடைந்து அதில் அவனை இறக்கி மறுபுறம் கொண்டு சென்றனர். அவன் கட்டுகளை அவிழ்த்து அவனை அங்கே விட்டுவிட்டு அவர்களில் ஒருவன் “நீ உன் மைந்தனால் காக்கப்பட்டாய்” என்றான். இன்னொருவன் “மூதாதை என மைந்தனின் காவல் உனக்குள்ளது, நீ நல்லூழ் கொண்டவன். செல்க!” என்றான். அவர்கள் அவனுக்கு ஒரு தோலாடையை வீசினர்.

அவர்கள் ஓடையில் இறங்கி அப்பால் சென்று மறைந்தனர். அர்ஜுனன் அவர்கள் விட்டுச் சென்ற அதே இடத்திலேயே அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்தபோது தன் இடக்காலும் இடக்கையும் முற்றிலும் செயலற்றிருப்பதை கண்டான். வலக்காலும் வலக்கையும்கூட ஆற்றல் இழந்து நனைந்து துணிச்சுருள்கள்போல் இருந்தன. ஆடையை இடையில் சுற்றிக்கொண்டு வலக்காலால் உந்தி வலக்கையால் மரக்கிளைகளைப் பற்றியபடி தளர்ந்து அவன் நடந்தான். வழியில் ஒரு நீரோடையில் விழுந்து புரண்டு மண்ணை அள்ளி உடலெங்கும் பூசி நீராடினான்.

பசி உடலெங்கும் பரவத்தொடங்கியது. ஆனால் அங்கு கிழங்குகள் எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை. மூங்கில் காடுகளில் கனிகளும் காய்களும் இல்லை. பறவைகள் செறிந்திருந்தன. ஆனால் அவற்றை ஒரு அம்பு செய்து எய்து வீழ்த்த அவனால் முடியாதென்று தோன்றியது. முயல்வோம் என்று ஒரு நாணலைப் பிடுங்கி அம்பென எய்தான். அவன் கையில் இருந்து நடுங்கியது அவன் எண்ணியிராத திசை நோக்கி சென்றது.

அவன் ஒரு கணத்தில் உளம் உடைந்து விம்மி அழத்தொடங்கினான். அப்படியே சரிந்து நிலத்தில் அமர்ந்து முழங்கால் மேல் தலைவைத்து அழுதான். நெடுநேரம் அழுது மீண்டபோது உளம் சற்று தெளிந்திருந்தது. கையூன்றி எழுந்து மூங்கில்களையும் மரங்களையும் பற்றியபடி மீண்டும் நடந்தான். தொலைவில் புகை மணத்தை உணர்ந்தான். அங்கு நாகர்கள் இருப்பார்களோ என்று எண்ணினான். ஆனால் அதற்கு மேல் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது.

அவன் தன் உடலை இழுத்துக்கொண்டு சென்றான். தேர் ஏறிய நாகம் நசுங்கிய பாதியை நசுங்காத பாதியால் உந்திக்கொண்டு செல்வதுபோல. அங்கு சிற்றோடை ஒன்றின் கரையில் பறவைகளை தோலுரித்து மூங்கில் கழியில் குத்தி தீயில் வாட்டிக்கொண்டிருந்த கரிய உடல் கொண்ட ஒருவனை பார்த்தான். அவன் நிறமே அவன் நாகனல்ல, காமரூபத்தவனும் அல்ல என்று காட்டியது.

அர்ஜுனன் உடலைத் திரட்டி முழு மூச்சு செலுத்தி உந்தி அவனை நோக்கி சென்றான். அவ்வோசை கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். கன்னங்கரியவன். கண்கள் வெண் சிப்பிகள்போல் தெரிந்தன. அவனைப் பார்த்ததுமே திடுக்கிட்டவன்போல் எழுந்தான். கைநீட்டி உரக்க “இளைய பாண்டவரே!” என்றான். அர்ஜுனன் திகைப்பில் தன் வலுவிழந்த கால் அதிர்ந்து துள்ள தொய்ந்த இடதுகை பாம்பென நெளிய நின்றான். அவன் அர்ஜுனனின் அருகில் வந்து “முற்றிலும் மாறியிருக்கிறீர்கள். முகமெங்கும் குருதிப்புண். ஆயினும் தங்கள் விழிகளால் தங்களை கண்டுகொண்டேன். தாங்கள் இளைய பாண்டவர்தான்” என்றான்.

“ஆம்” என்றான் அர்ஜுனன். “நான் இதுவரை தங்களை பார்த்ததில்லை. தங்களைப் பற்றிய கதைகளை மட்டுமே கேட்டிருந்தேன். என் பெயர் மலையன். தெற்கே முக்கடல் முனம்பு அருகே ஸ்ரீபதம் என்னும் சிற்றூரை சேர்ந்தவன். பாணர் குலத்தவன்” என்றான். “அரசே, நான் உங்கள் தொல்குடியின் கதைகளை கேட்டு வளர்ந்தவன். அதைப் பாடி இவ்விரிநிலமெங்கும் அலைபவன். நான் உங்களைத் தேடியே இங்கு வந்தேன். உங்களிடம் சொல்வதற்கு எனக்கு ஒரு செய்தி உண்டு.”

அர்ஜுனன் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். மலையன் உளஎழுச்சியுடன் “நான் விழிகளால் பார்த்தது அது. நான் விழிகளால் பார்த்தமையினாலேயே அதை உங்களிடம் சொல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறதென்றும், இந்த மாபெரும் நாடகத்தில் நான் நடிக்க வேண்டிய இடம் அது என்றும், அதன் பொருட்டே புவியில் பிறந்திருக்கிறேன் என்றும் புரிந்துகொண்டேன். நீங்கள் எங்கு சென்றிருப்பீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். கிழக்கே அன்றி வேறெங்கும் செல்ல முடியாது என்று தோன்றி நானும் கிழக்கு நோக்கி வந்தேன். இதோ சந்தித்துவிட்டேன்” என்றான்.

“கூறுக!” என்று அர்ஜுனன் சொன்னான். “அரசே, இச்செய்தியை அறிக! சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியரும், விருஷ்ணிகுலத்து இளைய யாதவரும், துவாரகையின் அரசருமான கிருஷ்ணன் விண்புகுந்தார்” என்று அவன் சொன்னான். சற்றுநேரம் அர்ஜுனன் வெறுமையில் அமர்ந்திருந்தான். பின்னர் மூச்சொலியுடன் அசைந்து “எப்போது?” என்று குழறலான குரலில் கேட்டான்.

“இன்றைக்கு சரியாக நாற்பத்திரண்டு நாட்களுக்கு முன்பு” என்று மலையன் சொன்னான். “எனில் நேற்று நாற்பத்தோராவது நாள், அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், நேற்று காலை எழுகதிர் நான்காம் சாமத்தில் அவர் மறைந்து மிகச் சரியாக நாற்பத்தொரு நாளாகிறது” என்றான் மலையன். அர்ஜுனன் “அவர் விண் புகுந்த தருணம், அதே பொழுது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். “அதனால்தானா?” என்று அவன் முனகினான். சுட்டுவிரலால் மண்ணைத் தொட்டு “அவ்வண்ணமே” என்றான்.

“அரசே, அவர் விண்புகுந்தபோது நான் அவருடன் இருந்தேன். அதை தங்களிடம் கூறவே நான் ஊழால் பணிக்கப்பட்டிருக்கிறேன்” என்று மலையன் சொன்னான்.

தொடர்புடைய பதிவுகள்

வேதநாயகம் சாஸ்திரியார்- இப்போது

$
0
0

 

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரையிலும் பின்னர் வந்த கடிதத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தபடி பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் புரசைவாக்கத்தில் முன்பு வாழ்ந்து வந்தார். அவர் மகன் கிளமெண்ட் எனது நல்ல நண்பர்

இப்போது அந்த பட்டம் கிளமெண்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்தான் இன்றைய வேதநாயகம் சாஸ்திரியார். அவர் சென்னையில் கொளத்தூரில் வசிக்கிறார். அவருடைய தொடர்பு எண் என்னிடம் உள்ளது

 

பி.இளங்கோவன்

elangovan.balasubramanian@gmail.com

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைகள்- கடிதங்கள்

$
0
0

 

அன்புள்ள ஜெமோ

உங்கள் அறுபத்தொன்பது கதைகளையும் வாசித்தபிறகே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்றைக்குத்தான் முடித்தேன். நான் கொஞ்சம் மெதுவாக படிப்பவள். தமிழ் சொந்தமாக படித்ததுதான். அமெரிக்கா வந்தபிறகு. சென்னையில் தமிழே இல்லாமல்தான் படித்தேன். இங்கே வந்து ஐரோப்பிய இலக்கியம் வழியாக உள்ளூர் இலக்கியத்துக்கு வந்தவள்நான்

தமிழிலக்கியத்தை வாசிக்கும்போது இரண்டு அனுபவங்கள். ஒன்று நான் அறியாத என்னுடைய சமூகச் சந்தர்ப்பச்சூழலை காட்டும் கதைகள். அவை எனக்கு தேவையாக இருக்கின்றன. அவற்றை நான் வேறெங்கும் படிக்கமுடியாது. சோ.தர்மன், இமையம் போன்றவர்கள் எழுதும் கதைகள். அவற்றை நான் விரும்பி வாசிப்பதுண்டு. நான் கொஞ்சம்கூட அறியாத சமூகம். என்னை நான் அந்தச் சமூகத்தின் கனி என்று சொல்வேன் என்றால் அதுதான் வேர்ச்சதுப்பு, சரியா?

ஆனால் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் மேலே. அதாவது நம்முடைய பண்பாட்டின் சூட்சுமங்களில் இருந்து எழுதப்படும் கதைகள். அந்தமாதிரியான கதைகள் இங்கே ஐரோப்பாவிலே நிறைய உண்டு. அவைதான் இங்குள்ள சம்பத்து

ஆனால் இருபத்தாறு ஆண்டுகளாக இங்கே இருந்தாலும்கூட என்னால் ஒன்று சொல்லமுடியும், இந்தக்கதைகளிலே உள்ள பண்பாட்டு சூட்சுமங்களை நம்மால் தெரிந்துகொள்ள மட்டும்தான் முடியும். அவற்றிலிருந்து நம் சப்கான்ஷியஸ் [நனவுலி?] கனவுகளை உருவாக்கிக்கொள்ள முடியாது. அது சட்டென்று அதுவாக மலரவேண்டும். அது கனவாக வரவேண்டும். அது நமக்கு அப்படி வராது.

பெரிய மோகத்துடன் தெரிந்துகொள்வதற்காக முயன்றுகொண்டே இருப்போம். இதெல்லாம் நமக்கு அந்நியம் என்பதனால் எல்லாமே சிறப்பாக தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக இதெல்லாம் Experience of Knowledge மட்டும்தானா என்று தோன்றி சலிப்பு வந்துவிடும்

அதிலேயும் சில விஷயங்கள் உண்டு. எனக்கு கிறிஸ்தவ ஆர்க்கிடைப்ஸ் அப்படி கனவாக கொஞ்சம் ஆகும். நிகாஸ் கஸண்ட்சக்கீஸ் வாசித்து மெய்சிலிருப்பு அடைந்திருந்தேன். ஆனால் ஐரோப்பாவின் பாகன் மித்துக்களோ அல்லது கிரேக்க மித்துக்களோ அப்படி இல்லை.

நான் இங்கே வந்தபோது மோபிடிக் படித்து ஏன் இது எனக்கு கதையாக மட்டுமே இருக்கிறது என்று நினைத்திருக்கிறேன். சமீபத்தில் ராபர்ட்டோ பொலோனா படித்து ஏன் இது இன்ஃபர்மேஷன் [செய்தி] ஆக மட்டுமே உள்ளே போகிறது என்று நினைத்திருக்கிறேன். ஆனால் சீனாவிலிருந்து வந்தவர்களுக்கும் அப்படித்தான் இருக்கிறது. ஆச்சரியமான விஷயம் இங்கிருக்கும் கறுமையினத்தவருக்கும் அப்படித்தான் இருக்கிறது.

இந்த விலகுதல் இல்லாமலிருக்கும் கதைகளை நான் இந்தியாவிலே வாசிக்க விரும்பினேன். ஆங்கிலத்திலே வாசித்ததில் River of Fre – Qurratulain Hyder எனக்கு அப்படி ஒரு பெரிய அனுபவத்தை அளித்தது. பல வங்காள நாவல்களிலும் அந்த அனுபவத்தை அடைந்தேன். உங்கள் நாவல்களை இன்னும் நான் படிக்கவில்லை. ஆனால் இந்தக்கதைகளில் பல கதைகள் எனக்கு அப்படி ஒரு கனவுபோன்ற கற்பனையை அளித்தவை. இவைதான் நம்முடைய கிளாஸிக்குகள் என்று தோன்றியது

ஆயிரம் ஊற்றுக்கள் ஒருவகையிலே நம்மை ஊடுருவிச்சென்றது. போழ்வு அதைப்போல. அதிலுள்ள அரசியல் உறவுகளின் சிக்கல்கள் நம்மைப்போன்ற சமூகத்திலே மட்டும் உள்ள விஷயம். ஆடகம் போன்ற கதைகள் எல்லாம் முழுசாகவே இந்தியத்தன்மை உடையவை.

யானைகளைப் பற்றிய கதைகளை எல்லாம் வேறெந்த மொழியில் வேறெந்த எழுத்தாளரும் எழுதமுடியாது. ஏனென்றால் இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில் மட்டும்தான் யானைக்கும் மனிதனுக்கும் இப்படி ஒரு நெடுங்கால உறவு இருக்கிறது. அந்த உறவிலிருந்தே இந்த கதைகள் வரமுடியும். ஆப்ரிக்க யானைகள் பழகுவதில்லை. தாய்லாந்தில் யானையுடன் இப்படி ஒரு கம்யூனிடி உறவு கிடையாது

அதேபோல ஒவ்வொரு கதையாகச் சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன், ஆகாயம் எல்லாம் unique ஆன இந்தியக்கதைகள். தமிழ்க்கதைகள். உலகமெங்கும் அலைந்தாலும் இங்கேதான் அவற்றை படிக்கமுடியும். அவை ஸ்பிரிச்சுவலானவை [ ஞானம்?] அவற்றின் ஆழமான நடுப்பகுதி இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக உருவாகி திரண்டு வந்த ஒன்று. ஷம்பாலா போல ஒன்று. ஒரு கூட்டுசேர்ந்த கனவு.

சூழ்திரு கதையிலே மிகமிக நுணுக்கமான ருசி சொல்லப்பட்டிருக்கிறது. அது மிகவும் ரீஜினல் [கிராமமான] ஆன ஒன்று. ஒரு இடத்தில்தான் இருக்கமுடியும். வேறே எங்கும் இருக்கமுடியாது. அதனுடைய தூய்மைப்படுத்தல் refinement தான் எல்லா கலையிலும் சாதனையாக கருதப்படுகிறது. இந்தக்கதைகளை நான் முழுசாக உள்வாங்க இன்னும் காலமாகும். ஆனால் சந்தேகமே இல்லாமல் ஒரு Experience of Great Art. நன்றி

சுபத்ரா.

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் ஊரடங்கு கால இலக்கிய வேள்வியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஒரு மாபெரும் அதிருஷ்டம். எனக்கு கதைகள் படிப்பதுதான் ஒரே ஆன்மத் தேடல். இலக்கியம் தான் என் மதம். ஆகவே விஸ்வரூபம் எடுத்த உங்கள் பித்து என்னையும் உள்ளிழுத்துக்கொண்டது. என் எல்லா நாட்களும் உங்கள் புனைவுடனே ஆரம்பித்து உங்கள் புனைவுடனே முடிவடைந்தன. நன்றி. இந்த நாட்களை அர்த்தமுள்ளவைகளாக்கியதற்கு,

உங்கள் கதைகளுக்கு வந்த கடிதங்களுக்கு அப்பால் ஏதும் சொல்லிவிட முடியாது. என்றாலும் என்னை மிகவும் பாதித்த கதைகளை குறிப்பிடாமல் இந்த கடிதம் முடிவடையாது. தன் வேலை செய் நேர்த்தியை கலையாய் மாற்றி, தான் கலைஞன் என்கிற கர்வத்துடன் உலகை துச்சமாக பார்க்கிற மாடன் பிள்ளை தன்னையே அந்த கலையாய் மாற்றிய ஒரு குருவியின் முன் கண் கலங்கி பணியும் குருவி என்கிற கதை என் உள்ளத்திற்கு நெருக்கமான கதை.

காமப் பொம்மைகளுக்கு மாதிரியாய் தன் உடலை விற்ற பெண்ணையும் தேவியாய் காணும் யாதேவி, பாம்பும் சேர்ந்த லூப்பு, வான் கீழ் என்கிற அழகான காதல் கதை, ஆண் பெண் உறவின் சுழல்களை சொல்கிற ஆழி, கள்ளன்களையும் நேசிக்க வைக்கிற கதைகள், பெண்களின் பயணத்தில் உடன் வரும் நற்றுணை,, கலைஞன் இறைவனாகிற இறைவன் கதை, வனவாசத்தில் இருந்தாலும், கலைஞர்களாகிற போது அரசர்களாய் தோன்றும் சாமியப்பாவும், குமரேசனும், தன் கலை மூலம் தேவியாகவே மாறும் தேவி,  பாட்டைக் கேட்க விரும்பியும் வர முடியாமல் போன பெண்ணிற்காய் வீட்டிற்கே செல்கிற பயில்வான் பாகவதர், ஜானகிராமனின் ஒரு கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்திகிற கடவுளாகியே மாறிப்போன சங்கரன் போற்றி என எத்தனை பாத்திரங்கள், எத்தனை தருனங்கள். நீங்களும் மாடன் பிள்ளையைப் போல நீயும் நானும் ஒன்னு தான்வே என்று சாமி கிட்ட சொல்லலாம்

அன்புடன்

ராமகிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய இணையத்தளத்தை  பல வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களது சிறுகதைகள், காடு, விஷ்ணுபுரம், பனிமனிதன் போன்ற புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். நீங்கள் எழுதிய புனைவுக்களியாட்டு கதைகள் அனைத்தும் ரசித்து வாசித்தேன். ஒவ்வொரு நாளும் காலையிலே வாசித்துவிடுவேன். அன்று முழுவதும் அக் கதையின் காட்சிகள் துல்லியமாக என்னைத்தொடர்ந்து கொண்டிருக்கும்.

 

உடலளவில் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாலும் மனதால் நீங்கள் உருவாக்கிய நிலத்திலேயே வாழ்ந்தேன்.உங்களது கதைகள் மூலம் இந்த காலத்தின் மன அழுத்தங்களில் இருந்து விடுதலை அடைய முடிந்தது. அதற்காக நன்றி. நான் உண்மையில் அறம், விசும்பு போன்ற கதைகளை நீங்கள் எப்போது எழுதுவீர்கள் என எதிர்பார்த்திருந்தேன். இந்த கோவிட் காலத்தில் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது.

ஆடகம், ஆனையில்லா,தங்கத்தின் மணம், சூழ்திரு,ஆயிரம் ஊற்றுகள் என்று வந்து கொண்டிருந்த உங்களது ஆரம்பக் கதைகளில் சூழ்திரு கதை தான் உச்சமாக இருக்கப்போகிறது என நினைத்தேன்.அக்கதையின் ஒவ்வொரு வரியையும் ரசித்து வாசித்தேன். ஆனால் பத்துலட்சம் காலடிகள், ஓநாயின் மூக்கு போன்ற ஔசேப்பச்சன் கதைகள் வாசித்து முடித்த போது பிரமித்துப் போனேன். அதன் பின் எப்போது ஔசேப்பச்சன் கதை வரும் என எதிர்பார்க்கத் தொடங்கினேன்.

இறைவன் கதை வாசித்து முடித்த போது அழுதுவிட்டேன்.” கொண்டாடினா செத்திரும்னு பயந்தேன். கொண்டாடாமலேயே செத்துப்போச்சு”.என்று இசக்கியம்மை சொல்லும் வரியை என்னால் மறக்க முடியவில்லை. பலிக்கல், நற்றுணை கதைகளை வாசித்த பின் ஔசேப்பச்சன் கதையில் இருந்த மயக்கம் குறைந்துவிட்டிருந்தது.

காக்காய்ப்பொன், கூடு, நிழல்காகம் ,கரு என அதற்குப் பின்னரான ஆன்மீக அனுபவம்  சார்ந்த  கதைகள் கொண்டாட வேண்டியவை.
இக்கதைகள் எனக்காக எழுதிய கதைகள் போலவே இருந்தன.நீங்கள் வெளியிட்ட‌ வாசகர் கடிதங்கள்  என் வாசிப்பை மேலும் கூர்மையாக்க உதவியது. இதுவரை தீவிர ஈடுபாட்டுடன் நான் வாசித்ததில்லை. உங்களது இக்கதைகள் வாசிப்பின் மேல் பெரிய ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது.  நன்றி.

நீங்களும் உங்களது குடும்பத்தினரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்
வாசுகி
இலங்கை

உங்களது ஏழரைப்பொன்  வாசித்து ஏற்றுமானூர் சென்று பார்த்திருக்கிறேன். உங்களது எழுத்துக்களை வாசித்து  திருவட்டாறு ஆதி கேசவனையும் சென்று பார்த்தேன். ஒரு பெண் ,இலங்கையிலிருந்து, ஒன்றரை வயது மகளுடன்

 

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் –கடிதங்கள்

$
0
0

 

அன்புள்ள ஜெ

 

தேவதேவனின் நான்கு கவிதைத் தொகுதிகளைப் பற்றிய விமர்சனங்களை அல்லது அறிமுகங்களை அவருடைய கவிதைகள் மீதான ரசனையாகவே முன்வைத்திருந்தது அழகாக இருந்தது. அக்கவிதைகள் ஏன் கவிதையாக ஆகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக ஏராளமான புனைகதைகளைப் படிப்பவர்களுக்குக் கூட கவிதைகள் பிடிகிடைப்பதில்லை. கவிதைகளிலும் எளிமையான அரசியலைத்தான் பெரும்பாலானவர்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள். அதற்கு அப்பால் சென்று அவருடைய கவிதைகளை சரியான படி வாசிக்கவும் ரசிக்கவும் இந்தக்குறிப்புக்கள் உதவின

பொதுவாக நீங்கள் சொல்வதைப்போல கவிதைகளுக்கு காண்டெக்ஸ்ட் அமைப்பதுதான் வாசகனின் பெரிய பொறுப்பு. அவனுக்கு கற்பனை தேவையாகிறது அங்கேதான். அதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த காண்டெக்ஸ்டை எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதைக் காட்டின உங்களுடைய குறிப்புக்கள். மற்ற கவிதைகளை எப்படி நாம் அர்த்தப்படுத்திக்கொள்வது என்பதையும் காட்டின. அதோடு இன்றைய கவிதை வாசிப்பில் உள்ள பல்வேறு போக்குக்களையும் அடையாளம் காட்டின. நன்றி

 

செந்தில்குமார்

 

 

எங்குமென நின்றிருப்பது

இளங்கனிவும் முதிர்கனிவும்

சொட்டும் கணங்கள்

கவிஞனின் கைக்குறிப்புகள்

அன்புள்ள ஜெ

 

நலம்தானே? தேவதேவனின் கவிதைகளைப் பற்றிய நான்கு அறிமுகக்குறிப்புக்களும் இன்று கவிதையை வாசிப்பவர்களுக்கு மிகமிக உதவியானவை. பொதுவாக கவிதை பற்றிய எழுத்துக்களில் கவிதையை எப்படி வாசிப்பது என்பதே இருப்பதில்லை. வாசிப்பதற்கான ஒரு தொடக்கம். வாழ்க்கையனுபவங்களுக்குள் கவிதையைக் கொண்டு வந்து அதை பொருத்தி அதற்குரிய நுட்பமான அர்த்தங்களை எடுக்க முடிகிறது . வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் முடிவில்லாத ஏதோ அர்த்தம் நோக்கி திறப்பதுதான் கவிதையாக ஆகிறது என்பதை இந்தக் குறிப்புகளில் இருந்து புரிந்துகொண்டேன்.

அன்றாட வாழ்க்கையிலேயே கவிதையின் தருணங்கள் அமைந்திருக்கின்றன என்பது ஒரு பெரிய புரிதல். வழக்கம்போல நானும் கவிதைக்கு நுட்பமான அழகான அபூர்வமான தருணங்கள் தேவை என்றுதான் நினைத்திருந்தேன். நெகிழ்ச்சியான காட்சிகளை கவிதை என்று நினைத்திருந்தேன். சாலையில் மயங்கிக்கிடக்கும் ஒருவரிடம் அட்ரஸ் கேட்கும் போலீஸை வைத்தே ஒரு கவிதை எழுதிவிட முடியும் என்பது ஒரு அற்புதமான விஷயம்தான்

 

எஸ்.சத்யராஜ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

படுகொலை செய்யப்படுவது என்ன?

$
0
0

யானை படுகொலை பற்றி பலர் எழுதியிருந்தார்கள். பலர் வேடிக்கைக்காகவோ அல்லது வேட்டைக்காகவோ யானைக்கு அன்னாசிப்பழத்தில் பட்டாசு வைத்து அளிக்கப்பட்டது என்றவகையில் குறிப்பிட்டிருந்தனர்.பெரும்பாலான இதழாளர்கள் இதை பட்டாசு என்றே எழுதியிருந்தனர். நகர் சார்ந்தவர்களுக்கு காட்டில் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை என்று தெரியும், ஆகவே இது எதிர்பார்த்ததுதான்

காட்டை விவசாயநிலம் நெருக்கி நெருக்கி உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தது. வரலாற்று காலம் முதல் தொடங்கிய இந்த அலை எழுபதுகளில் சூழியல்பாதுகாப்பு பற்றிய தன்னுணர்வு உருவானபோது நின்றது. காடு பாதுகாக்கப்படவேண்டியது என்ற எண்ணம் உருவாகியது.

அதுவரை அரசே காட்டை அழிக்கும் உரிமையை குத்தகை விட்டுக்கொண்டிருந்தது. இதை கூப் காண்டிராக்ட் என்பார்கள். நான் கல்லூரி நாட்களில் கூப் காண்டிராக்ட்காரர்களின் கூலியாக நண்பர்களுடன் சென்று காட்டில் தங்கி வேலைபார்த்திருக்கிறேன். காட்டை தீயிட்டும் வெட்டியும் அழிப்போம். மரங்களை வெட்டி நீரில் உருட்டிப்போட்டு ஆற்றில் கொண்டுவந்து சேர்ப்போம். அங்கிருந்து அவற்றை கொண்டுசெல்வார்கள். காட்டைப்பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக, ஒருவகை கொண்டாட்டமாக அது இருந்தது.தமிழகத்தின் பல பணக்காரர்கள், அரசியல்வாதிகள் கூப் காண்டிராக்ட் எடுத்தவர்களே.

ஆனால் காடு இன்றும் தொடர்ந்து சூறையாடப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமாக வன அழிப்பு நிகழும் மாநிலங்கள் கேரளம் முதலிடம், அடுத்து தமிழ்நாடு. ஏனென்றால் இங்கே மேற்குத்தொடர்ச்சிமலை மழைவளம் மிக்கது, மண் வளமானது. விவசாயம் சுற்றுலா இரண்டுக்கும் உகந்தது. காட்டுக்கு மிக அருகே வரை சாலைகள் போடப்பட்டுள்ளன.  ‘வளர்ச்சி’ என்பது எப்போதுமே காட்டை அழிக்கும் இயல்பு கொண்டதுதான்.

இன்று வெவ்வேறு மதஅமைப்புக்கள், தனியார் சுற்றுலா அமைப்புக்கள் கேரளத்தின் காடுகளை கூறுபோட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அடர்ந்த காட்டுக்குள், மலையுச்சிகளில்கூட தனியார் கேளிக்கைவிடுதிகளும் மதநிறுவனங்களும் இருப்பதை கேரளத்தில் காணலாம்

காட்கில் கமிட்டி,கஸ்தூரிரங்கன் கமிட்டி போன்றவை மிகமிகக் கடுமையாக இதை எச்சரித்துள்ளன. யுனெஸ்கோ அமைப்பு எச்சரிக்கை விடுத்தபடியே உள்ளது. இது சார்ந்து கேரளச் சூழியலாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல்ரீதியான அழுத்தம் அளிக்கிறார்கள். ஆனால் இத்தகைய விஷயங்கள் ஒற்றைப்படையாக, அதிரடியாக, உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்கவேண்டியவை அல்ல.

கேரளத்தைப் பொறுத்தவரை இது சிக்கலான அரசியல் பிரச்சினை. கேரளத்தின் முதற்கட்ட மலைக்குடியேற்ற மக்கள்தான் காடுகளை அழித்து விளைநிலமாக்கி தோட்டத்தொழிலை வளர்த்து விளைச்சலைப் பெருக்கி கேரளத்தை செல்வம் மிக்க மாநிலமாக ஆக்கியவர்கள் .அவர்களால்தான் கேரளத்தில் வறுமை ஒழிந்தது என்றே சொல்லலாம். ரப்பர், காப்பி, குருமிளகு, கிராம்பு, ஏலக்காய்,இஞ்சி ஆகியவைதான் கேரளத்தின் செல்வம். அவற்றின் உற்பத்தியாளர்கள் அவர்கள்.

அவர்கள் முன்னோடிகளுக்கே உரிய தாக்கிவென்றுசெல்லும் இயல்பு கொண்டவர்கள். மிகமிக வலுவாக அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டவர்கள். சென்ற ஐம்பதாண்டுகளில் கேரள அரசியலை தீர்மானித்த முதன்மை கோரிக்கையே ‘குடியேற்றக்காரர்களுக்கு நிலப்பட்டா’ என்பதுதான். கணிசமான மேற்குமலைக்காடுகள் பட்டாநிலங்களாக ஆகிவிட்டன

எழுபதுகளுக்குப்பின் உருவான சூழியல் பிரக்ஞை இவர்களின் காட்டுவிவசாயத்தை அழிவுச்செயல் என்று விளக்க தொடங்கியது. கேரளத்தின் காட்டோர விவசாயமும் மலைப்பகுதிகளில் நிகழும் நகர்மயமாக்கமும் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை இன்று அந்த மக்களிலேயே படித்த அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எங்கே நிறுத்துவது, எப்படி நிறுத்துவது?

கேரளத்தில் கணிசமான மலைவிவசாயிகள் இன்று காட்டழிவு பற்றிய தன்னுணர்வு கொண்டவர்கள். காட்டுவிவசாயத்தில் இருந்து மெல்லமெல்ல பின்வாங்கிக்கொண்டே இருப்பவர்கள். ஆனால் அவர்கள் பின்வாங்கிய இடங்களில் அடுத்தகட்ட சமூகப்படிநிலைகளில் நிற்பவர்கள் சென்று அமைகிறார்கள். அவர்களும் அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டவர்கள். முதற்குடியெற்றக்காரர்கள் வலதுசாரிகள், இரண்டாம் கட்ட குடியேற்றக்காரர்கள் இடதுசாரிகள்.இதை எப்படி கையாள்வது?

இதைப்பற்றிய விவாதம் கேரளச்சூழலில் உண்டு. ஆனால் இதுசார்ந்த அக்கறை இருந்த ஒரே அரசியல்வாதி வி.எஸ்.அச்சுதானந்தன் மட்டுமே. அவர் எடுத்த எல்லா நடவடிக்கைகளும் குளவிக்கூட்டில் கைவைப்பவைபோல ஆகி அவரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தின.இன்றைய முதல்வர் அச்சுதானந்தனுக்கு எதிராக அரசியல்செய்து வந்தவர்- மிகக்கவனமாகவே அவர் காலடி வைக்கமுடியும்.

ஒவ்வொரு ஆண்டும் கேரளத்தில் மலைவெள்ளப்பெருக்கும் மண்ணிடிவும் நடந்து பலர் மடிகிறார்கள். அப்போது மட்டும் மேற்குமலைக்காடுகளின் சூறையாடலைப் பற்றிய ஒரு பேச்சு எழும், கோடையில் மறைந்துவிடும். இதுதான் நிலவரம், இதுதான் இந்தியா முழுக்க உள்ள போக்கு என நாம் அறிவோம்.

உண்மையில் இங்கே வறுமை ஒழிப்பு வளர்ச்சியுடன் தொடர்புகொண்டிருக்கிறது, வளர்ச்சி சூழியலழிவுடன் தொடர்புகொண்டுள்ளது. அதன்மேல் அமர்ந்துகொண்டு அதை குறைகூறி அல்லது வசைபாடிக்கொண்டிருக்க நமக்கு உரிமை இல்லை. என்ன நிலைமை என்பதை சற்றேனும் நடுநிலைமையுடன் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.

இந்த மலைவிவசாயத்தின் ஒரு பகுதியாகவே இந்த யானைப்படுகொலை நடந்திருக்கிறது. மேற்குமலைப்பகுதியில் விளைநிலங்களை அழிக்கும் முக்கியமான சக்தி என்பது காட்டுப்பன்றி. அவற்றை வேட்டையாடும் விலங்குகள் காட்டில் குறைந்துவருகின்றன. காட்டுபன்றி உணவுக்கேற்ப பெருகுவது. மேற்குமலைச் சரிவுகளில் விவசாயங்களில் பெரும்பகுதி மரவள்ளி உள்ளிட்ட கிழங்குகள். அவை பன்றிகளுக்கு உணவு. ஆகவே காட்டுப்பன்றி மிகப்பெரிய அளவில் பெருகியிருக்கிறது. சமீபகாலத்தில் காட்டுபன்றி வேட்டையை அதிகாரபூர்வமாக அல்லாமல் கேரள அரசு அங்கீகரித்துள்ளது என்றார்கள்

காட்டுபன்றிகள் இரவில் காட்டிலிருந்து விளைநிலங்களுக்குள் வருபவை. அவற்றை பொறிகளில் வீழ்த்துவது கடினம். அவை கடினமான தேற்றைகளால் பொறிகளை உடைக்கும். அவற்றை வேட்டையாட கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் சவிட்டுவெடி என்று சொல்லப்படும் இந்த வெடி.

இது பட்டாசு அல்ல. சிவகாசி வெடிமருந்தை   கண்ணாடித்துண்டுகள் அல்லது சல்லிக்கற்களையும் கலந்து உருட்டி ஒரு பந்துபோல ஆக்கி அதன்மேல் சாக்குநூல் சுற்றி இந்த வெடி உருவாக்கப்படுகிறது. இதை கிழங்குகள் பழங்களுக்குள் வைத்து விளைநிலங்களில் போட்டுவைப்பார்கள். பன்றி இதைக் கடிக்கும்போது உள்ளிருக்கும் கண்ணாடி அல்லது சல்லிக்கல் உரசிக்கொண்டு வெப்பம் உருவாகும். குண்டு வெடிக்கும். அதன் தலைசிதறும். அந்தப் பன்றியை பெரும்பாலும் வேறு விலங்குகள் சாப்பிடும். சாப்பிடாவிட்டால் மறுநாள் எடுத்து மனிதர்கள் சாப்பிடுவார்கள்.

இந்த சவிட்டுவெடியில் மனிதர்கள் மிதித்து கால் வெடிப்பதுண்டு. வேறுவிலங்குகள் கடிப்பதுண்டு. அடிக்கடி வெடித்துச் சாவது கரடி, காட்டெருது ஆகியவை. மேய்ச்சல் விலங்குகளும் சிக்கிக்கொள்ளும். மிக அதிகமாக மாட்டிக்கொள்பவர்கள் மனிதர்களே. கேரளத்திலும் இந்தப்பக்கம் தேனீ கம்பம் முதல் தென்காசி பேச்சிப்பாறை வரை தமிழகம் சார்ந்த மேற்குமலைப் பகுதிகளிலும் காட்டில் நடமாடுபவர்களுக்கு இந்த வெடிகள் பெரிய அபாயங்கள். இம்முறை யானை அதை கடித்து உயிர்விட்டிருக்கிறது.

இந்த வெடி முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது, இதை வைப்பது குற்றம், ஆனால் சாதாரணமாகச் செய்யப்படுகிறது. போலீஸோ வனத்துறையோ இதை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை. எனென்றால் மொத்த மலைப்பகுதியும் கட்டுபபட்டில் இல்லை. தமிழகத்திலும் இது நடக்கிறது. பெரும்பாலும் செய்தியாக ஆவதில்லை- யானை மாட்டிக்கொண்டால் மட்டுமே செய்தியாக வாய்ப்பு.

இந்தப் படுகொலை குரூரமானது, இதன்மேல் உருவாகியிருக்கும் உணர்ச்சிகள் மிக இன்றியமையாதவை, அவை ஒருவகை விழிப்புணர்ச்சியை நாடெங்கும் உருவாக்கியிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கம்பியில் சிக்கி எத்தனை யானைகள், காட்டெருதுகள் சாகின்றன என்ற புரிதல் நமக்கு வேண்டும். தமிழகத்தின் நீதிமன்றங்கள் அனைத்திலும் யானையைக் கொன்ற வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.

மிகமிகக் குறைவானவர்களே குறைந்தபட்சமேனும் தண்டிக்கப்படுகிறார்கள், பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் குற்றவாளிகளை விடுதலை செய்துவிடுகின்றன. ஏனென்றால் குற்றம் நேரடியாக நடைபெறவில்லை. குற்றவாளியை குற்றத்துடன் பிணைக்க சந்தர்ப்பசாட்சியங்கள் அன்றி வேறு இருப்பதில்லை.நீதிபதிகள் பொதுவாக ஒரு சிறு கவனக்குறைவு என்று மட்டுமே இவ்வழக்குகளை அணுகுகிறார்கள்.

இது ஒரு தனிப்பட்ட குரூரச்செயல்பாடு அல்ல. காட்டுக்கு எதிரான ஒரு போரில் நிகழ்ந்த சாவு. அந்தப்போரை நாம் நிறுத்திக்கொள்ளவேண்டும். அதை உடனடியாக சட்டம் வழியாக, வன்முறை வழியாக நிறுத்த முடியாது. அது பொருளியலின் ஓர் அடிப்படைக்கூறு. பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. தொடர்ச்சியான பரஸ்பரப்புரிதல் கொண்ட நடவடிக்கைகள் வழியாகவே அதைச் செய்யமுடியும்.

உதாரணமாக சென்ற சில ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் வனநிலபாதுகாப்புச் சட்டம் காட்டை ஒட்டி மூன்று கிலோமீட்டர் வட்டத்துள் இருக்கும் தனியார் பட்டா நிலங்களிலும் காடழிப்பை, வேட்டையை தடைசெய்கிறது. அது இந்த படுகொலை போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.

அதற்கு காடோரக் குடியேற்ற மக்களிடமிருந்து மிகமிகக் கடுமையான எதிர்ப்பு வந்தது. ஏனென்றால் குடியேற்ற மக்கள் பெரும்பாலும் மிக ஏழைகள். இடதுசாரிகள் அச்சட்டத்தை எதிர்க்கின்றனர், இயல்புதான். ஆனால் அச்சட்டம் இந்தவகையான படுகொலைகள் நிகழாமல் தடுப்பதும்கூட.

ஆகவேஇந்த பிரச்சினையை வெறும் உணர்ச்சிக்கோஷமாக மட்டும் அணுகாமல் இருபக்கமும் பார்த்தே கையாளவேண்டும். குறிப்பாக நஷ்டஈடுகள் மாற்றுக்குடியேற்றங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்படவேண்டும். அதை அரசே செய்யவேண்டும். இந்த காட்டுவிவசாயத்தில் இருந்து நம் பொருளியல் பெரும் லாபம் அடைந்திருக்கிறது- அதில் ஒரு ப்குதியை திருப்பி அளித்தாகவேண்டும்

யானையை கேரளத்தில் ‘சஹ்யன்றே மகன்’ என்பார்கள். சஹ்யாத்ரி மலையின் மகன், கேரளத்தின் இயல்பான அரசன். நாம் செய்துகொண்டிருக்கும் போர் மேற்குமலைத்தொடருக்கு எதிராகத்தான். வாய்வெடித்து செத்த அந்தயானை, கருவிலிருந்த அந்த குட்டி, மேற்குமலைகளின் உருவகம்தான். கேரளம் தமிழகம் இருபக்கமிருந்தும் நாம் அதை தாக்கிக்கொண்டிருக்கிறோம்

அந்தப்போர் நிறுத்தப்படவேண்டும். மேற்குமலைகளுக்கு குறுக்காக மேலும் சாலைகள் அமைக்கப்படலாகாது. ஓரிரு முதன்மைச் சாலைகள் தவிர பிறவற்றை மூடுவதும் நல்லது. வனநிலத்தை ஒட்டிய நிலப்பகுதிகள்மீதான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படவேண்டும். காடுகள் வெவ்வேறு சட்டவிரிசல்கள் வழியாக கைப்பற்றப்படுவது தடைசெய்ய்பபடவேண்டும்

இது எங்கோ எவரோ கொடியவர்கள் செய்த பாவச்செயல் அல்ல. இது ‘நாகரீக’ மக்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் போர். அதில் ஒரு களப்பலி அந்த யானை. இதை தனிப்பட்ட குரூரச் செயலாக பார்த்தால் நாம் அந்த போரை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று பொருள்.

 

https://www.clearias.com/gadgil-report-kasturirangan-report-western-ghats/

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–84

$
0
0

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 3

மலையன் சொன்னான். நான் தென்னிலத்திலிருந்து வடக்கு நோக்கி வருந்தோறும் கதைகள் பெருகின. தலைகீழ் பெருமரம் ஒன்றை பார்ப்பதுபோல என்று எனக்கு தோன்றியது. அங்கே தென்னிலத்தில் பல்லாயிரம் கிளைகள் விரித்து, சில்லைகள் செறிந்து, இலைகள் செழித்து, கணமொழியாது தளிர்விட்டு, கொடிச்சுருள் நீட்டி பரவிக்கொண்டே இருக்கின்றன கதைகள்.

இங்கு வடக்கே அவை வேர்கொண்டிருக்கின்றன. வடக்கில் எங்கோ ஒரு சிறு ஊற்றில் இருந்து அவை தொடங்கி பெருகிவளர்கின்றன என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இங்கு வருந்தோறும் அவ்வேர்கள் பல்லாயிரம் கிளைவேர்களாக சல்லிவேர்களாக பிரிந்து, கணம் கணம் என பரவி, மண் கவ்வி நீர் உறிஞ்சி, உயிர் பெருக்கிக்கொண்டிருப்பதை கண்டேன். எவ்வண்ணம் இக்கதைகளின் கிளைவிரிவை ஒருவன் அள்ளிவிட இயலாதோ அவ்வண்ணமே இவற்றின் வேர்ச்செறிவையும் கண்டுவிட இயலாது.

ஒன்றுடன் ஒன்று முரண்படும் கதைகள் ஒன்றை ஒன்று வளர்க்கும் கதைகள் என மாறும் விந்தையை இதில்தான் பார்க்க முடிகிறது. ஒன்றையொன்று மறுக்கும் கதைகள் ஒற்றைப்பேருண்மையை ஏந்தியிருப்பதைக் கண்டு திகைக்க முடிகிறது. இந்தக் கதைவெளியில் ஒவ்வொருவரும் தீயோரும் நல்லோருமென தென்படுகிறார்கள். தீயோர் நல்லோரென உருமாறுகிறார்கள், நல்லோர் இயல்பாக தெரிகிறார்கள். அது இயல்பென்றும் அதுவே வாழ்வென்றும் தன்னை காட்டுகிறது கதையின் முடிவில்லாத மாயம்.

முதலில் இக்கதைகளின் சிடுக்கெடுத்து, ஒழுங்கு அமைத்துக்கொண்டு, மையம் ஒன்றை எடுக்க முயன்றேன். அவ்வாறு முயலுந்தோறும் மையமின்மையில் சிக்கி நானே பலவாறாக சிதைந்து பரவினேன். ஒரு தருணத்தில் இக்கதைகளினூடாக சென்று கொண்டிருக்கும் நான் ஒருவனல்ல, பிளந்து பிளந்து பல்லாயிரம் மானுடத்திரள் என்றானவன் என்று உணர்ந்தேன். ஓரிடத்தில் நான் சொல்லும் கதைக்கும் இன்னொரு இடத்தில் நான் சொல்லும் கதைக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் தோன்றியது. பின்னர் ஒருகணத்தில் நான் எண்ணுவதற்கும் மறுகணத்தில் நான் எண்ணுவதற்குமிடையே தொடர்பில்லையோ என்று ஐயுற்றேன்.

அவ்வண்ணம் என்னை தொகுத்துக்கொள்ளும் பொருட்டு இக்கதைகளின் மையமொன்றை எடுத்துக்கொள்ள முயன்றேன். இதன் முடிவில்லா கிளைபிரிதல்களுக்கு ஓர் ஒழுங்கையும் நெறியையும் கண்டடைய முயன்றேன். இதன் அத்தனை வளர்ச்சியும் பின்னலும் செறிவும் வாடலும் கருகலும் மலர்களென கனிகளென விதைகளென ஆவதற்காகவே என்று ஒரு பயன்நோக்கை உருவாக்கிக்கொள்ள என் எண்ணத்திறன் அனைத்தையும் செலவிட்டேன். இக்கதைகளுடன் நான் போரிட்டுக்கொண்டிருந்தேன். கை ஆயிரம் கொண்ட கார்த்தவீரியனுடன், துளியிலிருந்து பெருகும் ரத்தபீஜாசுரனுடன், பாதி வல்லமையை தன்னுடையதெனக் கொள்ளும் பாலியுடன்.

ஒரு புள்ளியில் திகைத்து செயலற்றேன். இக்கதைகளை இவ்வண்ணம் அசுரப்பேருருவாக அரக்கப்பெருவிசையாக மாற்றுவது நானே என்று உணர்ந்த பின் என் முயற்சிகளை முற்றாக கைவிட்டேன். இது இவ்வண்ணமே என்றுமிருக்கும், பெருகும், உருமாறும், அழிவின்மை கொண்டு முடிவின்மை நோக்கி செல்லும். இதில் சிக்கி இந்த மாபெரும் வலைப்பின்னலில் ஒரு துளி என்றாவதே இதை கேட்பவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஊழ் என்று உணர்ந்தேன். அவ்விடுதலைக்குப் பின் எளியவனானேன். இக்கதைகளில் எது என் அருகே இருக்கிறதோ, எது என் உணர்வுகளை தொடுகிறதோ அதனுடன் என்னை இயல்பாக இணைத்துக்கொண்டேன். அத்தருணத்தில் இருந்து என் வாழ்க்கையை நோக்கி வளர்ந்தேன். இன்று இக்கதைகளின் ஒரு பகுதி நான்.

இளைய பாண்டவரே, நான் தண்டகாரண்யத்தை கடந்தபோது அங்கு எங்கோ ஒரு ஊரில் இளைய யாதவர் தன்னந்தனிமையில் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டேன். சூதர் சொல்லில் அச்செய்தி ஒரு மந்தணமாக, ஆனால் எங்குமுள்ளதாக திகழ்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அவர் மண்நீத்துவிட்டார் என்றும், அவர் குடி முற்றழிந்தது என்றும் கதைகள் எனக்கு வந்தன. துவாரகை கடற்கோளால் அழிந்ததென்றும், முழு நகரும் மண்ணிலிருந்து நழுவி கடலுக்குள் இறங்கி மூழ்கி ஆழத்திற்கு சென்று மறைந்ததென்றும் கூறினார்கள்.

கதைகள் இவ்வாறு கூறின. அப்போது இளைய யாதவர் தன் மைந்தர் எண்பதின்மருடன் துவாரகையின் பொன்னுருக்கிச் செய்த பேரவையில் அமர்ந்து அவையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுபறவைகள் கலைந்து பறக்கும் ஓசையை அவர்களில் சிலர் கேட்டார்கள். பின்னர் பெரும்பறவைகள் பூசலிட்டு பறந்து சென்றன. பின்னர் புரவிகளும் யானைகளும் ஓசையிட்டன. இளைய யாதவரின் சொற்களில் செவியொன்றே புலனாக மூழ்கி அமர்ந்திருந்த மைந்தரும் அவையினரும் அவற்றை கேட்கவில்லை.

கடலோசை பெருகிப்பெருகி வந்தது. பேரலை ஒன்று வந்து துறைமுகத்தை அறைந்தது. அவையின் அனைத்துச் சாளரங்களினூடாகவும் பெருகி வந்த நீர் அவர்களை அறைந்தது. அலை துவாரகையை மூழ்கடித்து மேலெழுந்தது. நகரை கடல் ஒரு மாபெரும் மீன் என வாய்திறந்து விழுங்கியது. இளைய யாதவரின் சொற்கள் முறியவில்லை, அவர்கள் விழிகளே செவிகளாக கேட்டிருந்தனர். நகரை கடல்கொண்டதையே அவர்கள் அறியவில்லை. அச்சொற்கள் நீர்க்குமிழிகளாக மாறி அவர்களைச் சூழ்ந்து பறந்தன.

யாதவர் அனைவரும் மீன்களென உருமாறி கடலாழத்திற்குள் சென்று மறைந்தனர். இளநீல உடலும் பீலிமுடியும் கொண்ட பெருமீனாக மாறி இளைய யாதவர் அலை அமைந்த ஆழத்திற்கு தன் குலத்தினரை இட்டுச்சென்றார். அங்கு அவரைத் தொடர்ந்து சென்ற யாதவக் குடிகள் துவாரகையின் நீராழத்து வடிவம் ஒன்று அங்கு முன்னரே அமைந்திருப்பதை கண்டனர். ஒளிரும் பவளங்களாலான கோட்டைகள். சாலைகள், அரண்மனைகள், அணிமாளிகைகள், கலைக்கூடங்கள், ஆலயங்கள் அங்கிருந்தன. அவர்கள் அங்கு குடியேறினர். ஆழத்து துவாரகையொன்று அங்கு அமைந்தது. அங்கு அவர்கள் பெருகி செழிக்கலாயினர்.

பிறிதொரு கதையில் துவாரகை உருவானது சொல்லப்பட்டது. மதுராவில் இருந்து தனக்கென நிலம்தேடி கிளம்பிய இளைய யாதவர் நடந்து நெடும்பாலையைக் கடந்து கடல்நோக்கி எழுந்த அந்நிலத் துருத்தின்மேல் வந்து நின்றார். பாரதவர்ஷத்திலேயே அலைக்கொந்தளிப்பு மிகுந்த கடற்கரை அது. வருணன் அடங்காச் சீற்றத்துடன் என்றும் தென்படும் முனம்பு. அங்கு கடற்பயணிகள் அணுகுவதில்லை. அத்திசை நோக்கி இளைய யாதவர் வந்தபோது உடன் வந்த அக்ரூரர் “இந்நிலம் மனிதர் வாழ்வதற்கு உகந்ததல்ல. இங்கு வருணன் பெரும் சீற்றம் கொண்டவன். இது அவன் காக்கும் அருநிலம்” என்றார்.

“அச்சீற்றம் ஏனென்று பார்க்க வேண்டும். நாகம் வழக்கத்தைவிட சீற்றம் கொண்டிருந்தால் அது நாகமணியை காக்கிறது என்பார்கள். இங்கு வருணன் பொன்றாப் பெருஞ்செல்வம் எதையோ தன்னுள் கரந்துள்ளான்” என்றார் இளைய யாதவர். “இந்நிலத்தைக் கடப்பது எனில் வருணனை போருக்கு அழைப்பதாகவே பொருள்” என்று அக்ரூரர் கூறினார். “இம்முனம்பு அரசர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓர் அறைகூவலாகவே என்றும் இருந்துள்ளது. நம் குடிமூதாதையான கார்த்தவீரியன் இங்கு வந்து வருணனை போருக்கு அழைத்திருக்கிறார். அவரது இரண்டாயிரம் கைகளையும் நொறுக்கி சிறுவண்டென அப்பால் வீசிச்சென்றன வருணனின் நீர்க்கைகள்.”

“நரகாசுரனும் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் இலங்கையர்கோன் ராவணனும் இன்னும் மாபெரும் வீரர் பலரும் வந்து வருணனை எதிர்கொண்டு தோற்றுச் சென்ற இடம் இது. இங்கு மானுடரோ அரக்கரோ அசுரரோ வருணனை எதிர்கொள்ள இயலாது. வருணனுடன் போரிடும் படைக்கலம் ஏதும் மானுடரிடம் இல்லை” என்றார் அக்ரூரர். இளைய யாதவர் புன்னகைத்து “பொறுங்கள், நீங்கள் இங்கிருங்கள். நான் சென்று பொருதி நோக்குகிறேன்” என்றார். “நீங்கள் தனியர், இன்னமும் சிறுவர், போரிடும் வல்லமை பெற்றவருமல்ல” என்றார் அக்ரூரர்.

தன் இடையிலிருந்த புல்லாங்குழலை கையில் எடுத்தபடி இளைய யாதவர் அம்முனம்பு நோக்கி செல்ல அக்ரூரர் “படைக்கலமில்லாது பொருதச் செல்கிறீர்கள், இளவரசே. அளியற்ற அசுரன் என்றும், ஆயிரம் கோடி கைகள் கொண்ட அரசன் என்றும், அனைத்து உயிருக்கும் அமுதளித்து வேதச்சொல்லுடன் அவி பெற்று தெய்வமானவன் என்றும் வருணனை நூல்கள் சொல்கின்றன” என்றார். “ஆம், அத்துடன் அணையாப் பேரோசை கொண்டவன் என்றும் சொல்கின்றன” என்று சொல்லி புன்னகைத்து இளைய யாதவர் தன்னந்தனியாக நடந்து மறைந்தார்.

அம்முனம்புக்குச் சென்று அதன் உச்சியென நின்றிருந்த இரட்டைப்பாறையில் ஒன்றின்மேல் நின்றார். தன் இடையிலிருந்த புல்லாங்குழலை எடுத்து இனிய இசை ஒன்றை மீட்டத்தொடங்கினார். சுழன்று சுழன்று எழுந்து உளம் மயக்கிய அந்த மெல்லிய இசையை வருணன் கேட்டான். மேலும் அதை கூர்ந்து கேட்கும் பொருட்டு அவன் செவி கூரலானான். அவன் உளமடங்கும்தோறும் கடல் அலையடங்கி அமைதி கொண்டது. நீலப்பளிங்குப் பரப்பென மாறியது. இன்னொரு மலையுச்சியில் வருணன் வந்தமர்ந்து குழலிசையை கேட்டான்.

தொலைவில் நின்றிருந்த அக்ரூரரும் பிறரும் கடல் உறைந்துவிட்டதை கண்டனர். வருணன் அடிபணிந்துவிட்டானா என்று திகைத்தனர். இசை முடிந்ததும் கண்மயங்கி விழிநிறைந்து எழுந்த வருணன் “கூறுக இளையோனே, நீ விரும்பும் பரிசில் என்ன?” என்றான். “தேவா, இங்கு உன் சிறகுகளுக்குள் நீ ஒளித்து வைத்திருக்கும் அருமணி எதுவோ அது. இங்கு நான் ஒரு நகர் அமைக்கவேண்டும்” என்றார் இளைய யாதவர். “அவ்வண்ணமே ஆகுக!” என்றான் வருணன்.

கடல் சுருட்டி மேலெழுந்து வந்த பேரலை ஒன்று நிலத்தை அறைய கரையெங்கும் முத்துக்களும் பவளங்களும் அருமணிகளும் மழையென கொட்டின. வலம்புரிச்சங்குகள் கூழாங்கல்லென இறைந்து கிடந்தன. பெரும் பொற்பாறைகள் உருண்டு வந்து விழுந்தன. “கொள்க! கொள்க!” என்று வருணன் கூறினான். “இங்கே ஒரு நகரை நான் அமைப்பேன். பாரதவர்ஷத்தின் கையிலேந்திய செங்கோலென அது அமையும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவ்வண்ணமே ஆகுக!” என்று வருணன் வாழ்த்தினான்.

“ஆயின் ஒன்று உணர்க! அந்நகரில் ஒருகணமும் ஒழியாமல் உவகையின் ஓசை என நல்லிசை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஒருகணம் அந்த இசை அறுபடுமெனில் என் அலைகள் எழுந்துவந்து அந்நகரை அறைந்து மூடி அள்ளி ஆழத்திற்கு கொண்டு செல்லும். எதுவும் எஞ்சாது” என்று வருணன் கூறினான். “அவ்வண்ணமே” என்று இளைய யாதவர் சொல்லளித்தார். அவர் எழுந்து வந்தபோது அக்ரூரரும் பிறரும் ஓடிவந்து தழுவிக்கொண்டனர். அவர் தலைமுடியெங்கும் வருணன் சொரிந்த அருமணிகள் மின்னிக்கொண்டிருந்தன.

அந்தப் பெருஞ்செல்வத்தால் துவாரகை அமைக்கப்பட்டது. அந்நகரில் ஒவ்வொரு கணமும் பல்லாயிரம் இடங்களில் இசை முழங்கிக்கொண்டிருந்தது. நள்ளிரவிலும் முன்புலரியிலும்கூட இசை முழங்கிக்கொண்டிருந்தது. உலகில் உள்ள அனைத்து இசைச்சூதர்களும் அங்கே வந்தனர். அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அங்கு கருவூலங்கள் திறந்தன. வணிகர்களும் கடலோடிகளும் இரவெல்லாம் இசை கேட்டனர். பகல் முழுக்க நகர்மக்கள் இசை கேட்டனர்.

ஊழ்கத்தின் இசை, இறைவழிபாட்டின் இசை, களியாட்டின் இசை, துயர் மன்றாட்டின் இசை, போரெழுகையின் இசை என ஐவகை இசைகளும் அங்கு கேட்டுக்கொண்டிருந்தன. துளைகளிலும் விரிசல்களிலும் காற்று எழுப்பும் இசை, நீர் சொட்டும் இசை, முட்டிக்கொள்ளும் உலோகங்கள் எழுப்பும் இசை, வண்டுகளின் இசை, குயில்களின் இசை என்னும் ஐவகை இயற்கை இசைகளும் எழுந்தன. யாழ், குழல், முழவு, மூச்சு, குரல் என்னும் ஐவகை மானுட இசைகளும் அவற்றுடன் ஊடுகலந்தன. அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முதல் சுதியென இளைய யாதவரின் குழலிசை அமைந்தது.

இளைய யாதவரின் குழலிசைக்கு தனி மாணவர்கள் எவருமில்லை. ஆனால் அதை கேட்ட ஒவ்வொருவரிடமும் அது கொஞ்சமேனும் எஞ்சியிருந்தது. ஒவ்வொருவரிடமும் அது தனக்குரிய முறையில் முளைத்து வெளிப்பட்டது. துவாரகையின் முழவோசையிலும் முரசொலியிலும்கூட இளைய யாதவரின் குழலிசையின் பண்ணே வெளிப்படுகிறது என்றனர் சூதர். அங்குள்ள பெருஞ்சுவர்களில் செவி பதித்தால்கூட இசையை கேட்கமுடிந்தது.

எந்நேரமும் இசையும் உவகையும் துவாரகையில் இருந்தன. முடிவில்லாத செல்வங்கள் அதன் கருவூலத்தில் இருந்தன. புன்னகைக்கும் வாயில் வெண்பற்கள்போல பளிங்கு மாளிகைகள் நகரில் செறிந்திருந்தன. பட்டும் அருமணிகளும் கொண்டு அமைக்கப்பட்ட இல்ல முகப்புகள். உலகின் அழகியவையும் அரியவையும் குவிந்த அங்காடிகள். அழகியரும் இளையோரும் உலவும் தெருக்கள். அங்கே வந்து சேரும் அயல்நிலத்துச் சூதன் திகைத்து விழிமலைத்து சொல்லிழந்து ஒருநாள் அலைந்த பின்னரே ஒரு சொல்லை தன்னுள் இருந்து எடுத்தான். பின் அங்கிருந்து கிளம்பும்வரை அவன் நா ஓடும் காளையின் கழுத்து மணி நாவென ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து சென்ற பின்னர் அந்நினைவுகளை கனவில் பெருக்கி அவன் அதைப்பற்றி அன்றி பிறிதெதையும் பேசாதவன் ஆனான்.

விண்தொட புகழ் நிறுத்தியிருந்த துவாரகை தன் பொன்றாப் பெரும் செல்வத்தாலே, எதிர்க்க எவருமிலாத பேராற்றலினாலே, காலப்போக்கில் அசைவிழக்கலாயிற்று. அறுவடை மட்டுமே நிகழும் வயல் அது என்றனர் சூதர். மண்பெருக்கி பொன்பெருக்கி மைந்தர்பெருக்கி சொல்பெருக்கி புகழும் பெருக்கியபின் தன் கடன் முடிந்தது என்று இளைய யாதவர் அந்நகரிலிருந்து அகன்றார்.

பெருந்தந்தையரை அவ்வண்ணம் காட்டிலிருந்து விலக்குவது சிம்மங்களின் இயல்பு. மைந்தர் எண்பதின்மரும் தங்கள் தந்தையை வெல்லவும் கடக்கவும் முயன்றனர். தங்கள் தந்தையின் அரியணையில் அமர கனவு கண்டனர். “எனில் அவ்வாறே ஆகுக!” என்று இளைய யாதவர் நகர் நீங்கினார். அவ்வாறு செல்லும்போது அங்கு எழுந்த ஒவ்வொரு ஓசையிலும் பட்டு நூலென ஊடுருவி ஒன்றாக்கித் தைத்திருந்த அவருடைய குழலிசையும் உடன்சென்றது. அவர் சென்ற மறுநாளே அதை அங்குள்ள இசைச்சூதர் உணரலாயினர். பெருமுரசுகளிலும் மெல்லிய யாழிசையிலும் சுதிப்பிழை தொடங்கியது.

ஆனால் சுதிப்பிழைக்கு ஒரு தனி இயல்புண்டு. தேர்ந்த இசை வல்லுநர்களுக்கு மட்டுமே அது செவிக்கு தட்டுப்படும். அவர்களில் சிலருக்கு மட்டுமே செவி கடந்து சுவைக்கு பிடிபடும். அது பெருகி அனைவர் செவிக்கும் தெரியவருகையில் அது தீர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டிருக்கும். துவாரகையில் அனைத்து இசைக்கலன்களும் சுதி பிழைக்கலாயின. சுதி என்பது ஒவ்வொரு இசையும் பிறிதொன்றுடன் தன்னை பிணைத்துக்கொள்ளும் முறைமை. ஒரு சுதிவிலகல் பல்லாயிரம் இசைக்கலன்களை பிறவற்றுடன் இணையாமல் தனித்து ஒலிக்கச் செய்துவிடுகிறது. அப்பிழை மேலும் பல்லாயிரம் இசைக்கலங்களை பிறழவைக்கிறது. பிறழ்வு கணம் கணமென பெருகிக்கொண்டிருக்கிறது.

சுதியொருமைபோல அமையக் கடினமானதும் பிறழ எளிமையானதும் பிறிதொன்றில்லை. ஏனென்றால் அது மானுடர் உருவாக்கும் இசைவு. மானுடர் உருவாக்கும் ஒவ்வொன்றும் எழுவதற்கு அரிதும் வீழ்வதற்கு எளிதும் ஆகும். ஏனென்றால் அவ்வெழுச்சி தெய்வங்களுக்கு எதிரானது. அதனாலேயே அடைந்த கணமே ஆணவம் என அடைந்தோனில் நிழல் வீழ்த்துவது. அதை வீழ்த்துவது தெய்வங்களின் ஆணையை தலைக்கொண்ட காலம்.

ஒரு தருணத்தில் துவாரகையில் அனைத்து இசைக்கலங்களும் தனித்தனியாக ஒலிக்கத் தொடங்கின. தனித்தொலிக்கும் இசைக்கலம் கந்தர்வர்களே மீட்டுவதாயினும் இசையொருமை அற்றது. பிறிதொரு கந்தர்வன் மீட்டும் இசைக்கலத்துடன் முரண்படும்போதுகூட செவிக்கு ஒவ்வா ஓசை என்று மாறுவது. துவாரகை பொருட்களின் ஓசைகளின், காற்றின் உறுமல்களின், தீயின் முனகல்களின், நீரின் குழறல்களின், கடலின் அலறல்களின் நகரமாக மாறியது. அங்கு முதற்சுவை பிறழ்ந்தபோதே இசைச்சூதரில் முதல்வர் அகன்றுவிட்டிருந்தனர். பின்னர் ஒவ்வொருவராக அகன்று செல்லத்தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் அங்கு இசை மீட்டத்தெரிந்த ஒருவர் கூட எஞ்சவில்லை. இசைக்கலன்களை குரங்குகள் மீட்டுவதுபோல் இயக்கிக்கொண்டிருந்த இளையோர் சிலரும், சித்தம் பிறழ்ந்த முதியோரும் மட்டுமே இருந்தனர். ஆயினும் அந்நகரில் இருந்த கட்டடங்கள் அந்த ஓசையை எவ்வண்ணமோ தொகுத்து இசையென்றாக்கின. அவை அவ்வோசைக்கு தொலைவிலிருந்து கேட்கையில் உருவாகும் ஓர் ஒழுங்கையும் இனிமையையும் கூட்டிக்கொண்டிருந்தன.

அந்நாளில் ஒருமுறை நிலம் நடுங்கி அதில் ஒரு கட்டடம் உடைந்து மண்ணில் சேர்ந்தது. அத்தருணத்தில் அங்கு ஒலித்துக்கொண்டிருந்த இசை முழுமையாக நின்றுவிட்டது. மறுகணமே கடல் ஒற்றைப் பேரலையென பெருகி வந்து அந்நகரை அறைந்து சுருட்டி இழுத்து தன் ஆழத்திற்கு கொண்டு சென்றது. இளைய யாதவரின் மைந்தரும் சுற்றமும் முற்றழிந்தனர்.

அவர்கள் விழித்த விழிகளுடன் நீரில் மூழ்கி ஆழத்திற்கு சென்றபோது அங்கு கடலாழத்தில் அதுவரை யாதவ நிலத்தில் அந்நெடுங்காலம் முழங்கிய இசை முழுக்க கடலால் இழுத்து உள்வாங்கப்பட்டு அழுத்திச் சுருக்கி சிறிதாக்கப்பட்டு முத்தென சுடர்விட்டுக்கொண்டிருப்பதை கண்டனர். மண்ணில் இருக்கும் பேருருவங்கள் அனைத்தும் அறுதியாக கடலாழத்திற்குச் சென்று சிறுகுமிழிகளாக அழுத்தப்பட்டிருந்தன. ஏனென்றால் காலம் அசைவிலாது தேங்கிய இடம் அது ஒன்றே. ஒழுகாத இசை நிலைத்து ஒரு பொருளென்று ஆயிற்று. கண்ணுக்குச் சுடர்ந்தது, கைத்தொடுகைக்கு குளிர்ந்தது.

மலையன் சொன்னான். கதைகள் அவ்வண்ணம் பெருகிக்கொண்டே இருந்தன. இன்னொரு கதையில் யாதவ இளையோர் துவாரகையை கடல்கொண்ட பின்னர் பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு சென்றனர். மைந்தர் அங்கே அடைக்கலம் கூடியிருப்பதாக அறிந்து இளைய யாதவர் தன் தவம் முறித்து அங்கே சென்றார். அவர்கள் துவாரகையின் கோன்மைக்கென போரிட்டு நகரை இழந்து அங்கு வந்து சேர்ந்திருந்தனர். அங்கும் போரிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் ஓர் அவையில் அமரவைத்து ஒற்றைச் சொல்லளித்து ஓர் அரசனை அமைத்துச் செல்லலாம் என்று அவர் எண்ணினார்.

எண்பதின்மரையும், யாதவ குலங்களையும், பிற குடியினரையும் ஒருங்கிணைத்து அவைகூடி அமரசெய்து, தான் அரியணை அமர்ந்து, அவர் மைந்தரிடம் பேசலானார். அவர் தன் முதற்சொல்லை எடுப்பதற்குள்ளாகவே அவர் மைந்தர்கள் அவரை நோக்கி கூச்சலிடத் தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் அவர்மேல் உளக்குறைகள் இருந்தன, தங்களுக்கான கோரிக்கைகள் இருந்தன, பிறர்மேல் குற்றச்சாட்டுகள் இருந்தன. அனைவரும் எழுந்து நின்று ஒன்றிணைந்து கூச்சலிட்டபோது கடற்பறவைகளின் சதுப்புநிலக் கூச்சல் என ஓசை எழுந்தது.

“என் சொல் கேளுங்கள்! என் சொல் கேளுங்கள்! அமைக! அமைக!” என்று இளைய யாதவர் கூவிக்கொண்டிருந்தார். அவருடைய ஒரு சொல்லையும் கேட்க அவர்கள் சித்தமாக இல்லை. ஒருவருக்கொருவர் கையிலிருந்த பொருட்களை வீசிக்கொண்டனர். பின்னர் எழுந்து ஓடி படைக்கலங்களை எடுத்தனர். அவர்களில் ஒருவன் அங்கு நின்ற நாணல் ஒன்றை அம்பென்றாக்கி தன் தந்தையின் நெஞ்சு நோக்கி செலுத்தினான். அது அவர் இடநெஞ்சில் பட்டு தைத்து நின்றது. அதிலிருந்து குருதி வழிந்தது.

அக்குருதி நிலத்தில் விழுந்த ஒவ்வொரு துளியில் இருந்தும் பேருருவ அரக்கன் ஒருவன் எழுந்தான். வெறியெழுந்த கண்களும் வெறித்த வாயும் எட்டு பெருங்கைகளும் கொண்ட அரக்கர்கள் எழுந்தபடியே இருந்தனர். அவர்கள் குருதிசிந்தி தங்களை பெருக்கிக்கொண்டனர். ஆயிரம் பல்லாயிரம் கரிய பேருருவர்களாக எழுந்த அவர்கள் அங்கிருந்த நாணற்புற்களை பிடுங்கியபோது அவை உலக்கைகள்போல் ஆயின. அவர்கள் யாதவர்கள் ஒவ்வொருவரையும் அறைந்து கொன்றனர். அவர்களைக் கிழித்து குருதி உறிஞ்சி ஊன் உண்டனர். நெஞ்சிலறைந்து கூச்சலிட்டு, வெண்பற்கள் காட்டி வெறிநகைப்பு கொண்டு அமலையாடினர்.

வெள்ளெலும்புகள் மட்டுமென்றாகி அங்கே எஞ்சினர் யாதவர். அவர்கள் நடுவே மேலும் மேலும் ஊன் தேடி அலைந்தனர் அந்த அரக்கர். ஒருவரோடொருவர் மோதிக்கொண்டு கூச்சலிட்டனர். இளைய யாதவர் அங்கு நின்று குருதி வழியும் நெஞ்சை வலக்கையால் பொத்தியபடி அவர்களை பார்த்தார். பின்னர் மெல்ல நடந்து சென்று கடல் புகுந்து மறைந்தார். தன் குருதியிலிருந்து மேலும் பேரரக்கர்கள் எழுந்தால் அவர்கள் இப்புவியை அழித்துவிடுவார்கள் என அவர் உணர்ந்தார். அவரைத் தொடர்ந்து நிழலுருவங்களென அசைந்து சென்று அந்தப் பேரரக்கர்களும் கடலில் மூழ்கிமறைந்தனர்.

கதைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரம்முறை கதைகளில் மண்மறைந்த இளைய யாதவர் அங்கே மந்தரம் என்னும் ஊரில் சாவுக்கென நோன்பிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். தண்டகாரண்யத்தில் நான் கண்ட முதுசூதன் ஒருவனிடமிருந்து அங்கு செல்வதற்கான வழியை ஒரு பாடலென அறிந்து உளம்பதித்துக் கொண்டபின் அத்திசை நோக்கி செல்லலானேன்.

தொடர்புடைய பதிவுகள்


தனிமைக்கரை –கடிதங்கள்

$
0
0

வைக்கம் முகம்மது பஷீர்- பழைய படம்

தனிமையின் முடிவில்லாத கரையில்…

அன்புள்ள ஜெ,

தனிமையின் முடிவில்லாத கரையில் மீண்டுமொரு ‘மல்டிமீடியா’ கட்டுரை. புகைப்படங்கள், இலக்கியக்குறிப்புகள், பாடல், சினிமா எல்லாம் கலந்து ஒரு முழுமையான அனுபவம். எனக்கு பஷீர் எப்போதுமே முக்கியமான எழுத்தாளர். பஷீரிடம் எது முக்கியமாக இருக்கிறது? எளிமை என்று முதலில் சொல்லலாம். ஆழமான எளிமை என்றுதான் சொல்லவேண்டும்.

அதாவது மிக எளிமையாகச் சொல்லப்படும் விஷயங்கள். ஆனால் எல்லாமே மேலும் மேலும் ஆழமானவை. உதாரணமாக இந்த சினிமாவிலேயே மதிலுகள் சினிமாவில் வரும் காட்சி வருகிறது. இருவருக்கும் நடுவே அந்த மதில் இருக்கிறது. அந்த சினிமா முழுக்க அந்த மதில் இருக்கிறது. சாவு- வாழ்க்கை என்ற மதி. காலத்தின் மதில்.

அந்தப்படத்தில் ஓர் இடத்தில் இளைஞனான பஷீர் இளங்கன்னியாக பேயாக இருக்கும் பார்கவியின் பழைய தோழிகளைப் பார்க்கச் செல்கிறார். எல்லாரும் கிழவிகளாக இருக்கிறார்கள். ஒரு தோழி அவரை மகனே என அழைக்கிறாள்.அது ஒரு துணுக்குறலை உருவாக்கியது. இந்த மதிலை உணரும்போதுதான் கதை முழுமையடைகிறது. அதுதான் பஷீரின் கலை. மிகமுக்கியமான கட்டுரை ஜெ. நன்றி

செல்வக்குமார்

***

அன்புள்ள ஜெ

நீங்கள் சொன்னதுபோல பயமே வராத இனிமையான பேய்ப்படம் பார்கவி நிலையம். பார்க்கவி கடலில் தோன்றும் காட்சிகூட அழகானதுதான். பஷீரை ஒரு சினிமாவில் பார்ப்பதுபோலவே உணரச் செய்கிறது. பஷீரின் தோழர்கள் சரியான ’அலவலாதிகளாக’ இருக்கிறார்கள். கதைகளிலும் அப்படித்தான். அது புன்னகைக்க வைத்தது

அழகான படம். குறிப்பாக அந்த கறுப்புவெள்ளை புகைப்படக்கலை. படத்தை ஒன்றிப்போய் பார்க்கவைத்தது அந்த கறுப்புவெள்ளையின் அழகுதான்

சிவக்குமார்

***

தொடர்புடைய பதிவுகள்

ஆனையில்லா, தேனீ- கடிதங்கள்

$
0
0


அன்புள்ள ஜெ

ஆனையில்லா கதையை வாசிக்கும்போது உருவாகும் சிரிப்பு அப்படியே மறுவாசிப்பிலும் இருக்கிறது. உண்மையில் இந்தக் கதையை நான் என் நண்பன் போனில் முழுமையாகச் சொல்லி கேட்டபின்னர்தான் வாசித்தேன். அதன்பிறகு அந்தக்கதையை ஒருமுறை என்னுடைய மேனேஜ்மெண்ட் மீட்டிங்கில் சொன்னேன். சொல்லும்போதும் அந்த வெடிச்சிரிப்பு தொடர்வதைக் கண்டேன். இன்றைக்கிருக்கும் இக்கட்டான நிலைமையையும் அதன்மீதான நம்பிக்கையையும் சொல்வதற்கு மிகமிகச் சரியான உதாரண கதை இது. “நாம் யானையை குடைமாதிரி மடித்துவிடுவோம்” என்று சொன்னேன். சிரித்தபடியே கலைந்தோம்

அந்தச் சிரிப்பு நீடித்துக்கொண்டே இருந்தது. நாங்கள் வேறொரு பிரச்சினையை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஓர் இளைஞன் “சார் இது யானைக்கு பின்பக்கம் க்ரீஸ் போடும் ஐடியா இல்லையா?”என்றான். எல்லாருக்கும் புரிந்து சிரித்துவிட்டோம். அதன்பிறகு க்ரீஸ் என்பதே ஒரு குறியீடாக ஆகிவிட்டது. எம்டி யானையை செப்பில் போட்டு வார்ட்ரோபில் வைத்திருக்கிறார் என்று ஒருவர் சொன்னார். கதை அப்படியே விரிந்துகொண்டே சென்றது. இன்றைக்கு நாங்கள் வாசிக்கும் கதை நீங்கள் எழுதிய கதையை விடபெரியது

சங்கர் அருணாச்சலம்

அன்புள்ள ஜெ,

மலையாளத்தில் பஷீரின் சில கதைகள் குறியீடுகளாக மாறி பழமொழிபோல ஆகிவிட்டதைப்பற்றி நீங்கள் ஒரு பேச்சிலே சொன்னீர்கள். அதைப்போல யானையில்லா பூனை துளி மாதிரியான கதைகள் இன்றைக்கு மாறியிருக்கின்றன. என்னவென்றால் அந்தக்கதையை வாசிக்காதவர்களிடம் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். ஆங்கிலம் வழியாகவே ஓரளவு சொல்லிவிடலாம். அந்த செண்டிரல் மெட்டஃபர் கிடைத்துவிடும். கற்பனை செய்தாலே சிரிக்க ஆரம்பித்துவிடலாம்.

ஆனையில்லா கதையை அப்படி நினைத்து நினைத்துச் சிரிக்கிறோம். பொதுவாக எங்கள் சீஃப் அதிகமாக சிரிக்கமாட்டார், கதைகளும் சொல்லமாட்டார். அவர் மலையாளி. அவருக்கு யானையில்லா கதை பிடித்துவிட்டது “நீயெல்லாம் ஒரு யானையை மானம் மரியாதையா வாழ விடமாட்டே இல்ல?”என்று ஒருமுறை சொன்னார்.

இந்த சின்னக்கதையில் எவ்வளவு மேனேஜ்மெண்ட் வேடிக்கைகள். பிரச்சினை என்ன என்று கேட்டால் உடனே ‘வீட்டிலே யானை நுழைஞ்சுபோச்சு சார்”என்று கண்கூடாக தெரியும் பிரச்சினையை விளக்க ஆரம்பிப்பவர்கள் உண்டு. வீட்டில் யானை நுழைந்தாலும் “என் சட்டிபானை போச்சே” என்று பிலாக்காணம் வைக்கும் சந்திரிகள் உண்டு. அதேபோல பிரச்சினை எல்லாம் முடிந்தபின் வந்து லபோதிபோ என்று கத்தி “அய்யோ வீட்டில் யானைந் நுழஞ்சிட்டுதே” என்று கத்தும் கிழவிகளும் உண்டு. நடுவே பிரச்சினைய குடைபோல மடக்கிவிடுவோம் என்று சொல்லும் கத்துக்குட்டி ஐஐஎம் பையன்களும் உண்டு.
ஒருகதையை இந்த அளவுக்கு விரிவாக்க முடியுமா என்று நினைக்கையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. கதை இப்போது அப்படி விரிவடைந்து போய்விட்டது

ஆர்.ரவிச்சந்திரன்

அன்புள்ள ஜெ

தேனீ கதையை நான் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பிறருக்காக இழந்த அத்தனை அப்பாக்களின் ஞாபகமாகவும்தான் வாசிக்கிறேன். சென்றதலைமுறையில் அப்படி தனிப்பட்ட ரசனை இருந்தாலே அது தப்பு என்ற என்ணம் தான் இருந்தது. ஏன் இன்றைக்கேகூட குடும்பத்துக்கான எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒருவர் வெண்முரசில் பித்துடன் இருந்தால் என்ன சொல்கிறார்கள்? நான் தேனீ கதையை என்னுடைய வெண்முரசு அனுபவத்துடன்மட்டும்தான் சேர்த்துக்கொள்வேன். அது எனக்கான nector of the soul ஆகத்தான் வைத்திருக்கிறேன். அதை எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அப்படி இருக்கும்போது அது கடல்போல அவ்வளவு பெரியதாக இருக்கிறது

எஸ்.கிருஷ்ணகுமார்

அன்புள்ள ஜெ,

நினைவு தெரிந்த நாள் முதல் உழைப்பு மட்டுமே செய்து முதுமை அடைந்து இறக்கும் பல்வேறு மனிதர்கள் நம்முடைய முந்தைய சமுதாயத்தில் நிறையே பேர் இருந்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணமாக அந்த கால கட்டத்தில், வருமானம் பெற பலவகையான தொழில்கள் இல்லை. பெரும்பாலும் குடும்ப தொழிலை நம்பியே பிள்ளைகள் பிறக்கிறார்கள். இன்னொன்று, நுகர்வு கலாச்சாரம் என்பது மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை. இன்றுள்ளவர்களில், அந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்வது சற்றே கடினமானது என்றே நினைக்கிறேன். “எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும்.” என்ற வரிகளின் ஆழம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

தேனீ போல கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறார் சம்முகத்தின் அப்பா. வெறும் மூன்று மணி நேரம் தூக்கம். மூன்று வயது முதல் முதுமை காலத்தில் பக்கவாதம் வரும் வரை இதே பிழைப்பு தான். தனக்குப் பிடித்த ‘திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை’ அவர்களின் ஒரு கச்சேரியை கூட அவர் நேரில் சென்று பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் மற்றவர்கள் கேட்டு வந்து அதை பத்தி பேசும் போதே, அந்த வாசிப்பின் ராகங்களையும் இசையையும் அவரால் உணர முடிந்தது. இசை என்பது மனதின் உள்ளிருப்பது, அது வெளியில் இல்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்து கலைக்கும் பொருந்தும். கலையின் ஆக்கத்திற்கு மட்டுமில்லாமல், அதன் உள்வாங்களுக்கும் கூட இது பொருந்துவது போல் உள்ளது.

பிள்ளை அவர்களின் இசையை கேட்க (அவர் இறந்த பல வருடங்கள் கழித்து) சம்முகம் பிள்ளை தன் அப்பாவுடன சுசீந்திரம் சென்று அங்கே உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் சென்றமர்ந்தனர். அங்குள்ள தூண்களிலும், சிற்பங்களிலும் அவர் இசையைக் கேட்க ஆரம்பித்து, ஒரு முழு கச்சேரியை கேட்டு முடித்தது, பெரும் வியப்பாக உள்ளது. இசை அவரின் மூச்சில் ஒன்றாக கலந்தது, அதன் மேல் அவருக்கு அலாதி பிரியமும், அதை அனுபவிக்க அவர் காலம் முழுதாகவும் தவம் செய்து கொண்டே இருந்தார். அந்த தவத்தில், இசை தன்னை மீறி தன்னிடமிருந்து தோன்றி தனக்கு மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. அவர் இசையாகிய தருணம் அது.

மிகப்பெரும் தவங்கள் கிட்டிய பொழுது அதற்கு அப்பால் வாழ்வில் பொருள் ஏதும் இல்லாமல் மனம் தன்னைத்தானே சிதைத்து கொள்கிறதோ என்று தோன்றுகிறது. அந்தச் சிதைவின் தொடக்கமே மரணமாக முடிகிறது.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி.

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

 

தொடர்புடைய பதிவுகள்

யானைப்படுகொலைகள்- கடலூர் சீனு

$
0
0

யானைப்படுகொலை

படுகொலை செய்யப்படுவது என்ன?

என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

தற்போதுதான் தளத்தில் யானைக் கொலை செய்தி வாசித்தேன். கொலை நிகழ்ந்து நெடிய நேரம் கடந்து விட்டதால், அறிவுச் சமநிலை கொண்ட பல பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது.

மலையாளியாக பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன் வகையறா பதிவுகள் முதல் வகை.

உண்மை எதுவோ அதை சரியாக பார்க்க வேண்டும். வயலுக்குள் காட்டுப் பன்றி நுழைந்து சேதம் செய்வதை தடுக்க, விவசாயிகள் இப்படி உணவில் வெடி வைப்பது இயல்பு. யானை தவறுதலாக இதில் சிக்கி விட்டடது. இந்த நிலையை தவிர்த்துவிட்டு ஒட்டுமொத்த மலையாளிகளே இப்படித்தான் என காழ்ப்பை கொட்டுவது தவறு. இது இரண்டாவது வகை.

காட்டுப் பன்றிகள் தலை சிதறி செத்தால் அது ஒரு விளைவையும் உருவாக்காது. செத்தது யானை. அதுவும் கர்ப்பிணி. ஆகவேதான் இத்தனை அறப்பொங்கல். இது மூன்றாவது.

இத்தகு விஷயங்களில் ஈடுபடுவது ஆண்கள் மட்டுமே. எங்கேனும் இந்தியாவுக்குள் பெண் இப்படி செய்து கேள்விப்பட்டது உண்டா. இத்தகு பதிவுகள் தனி வகை.

பிராந்திய மனிதன் மீது குவியும் வெறுப்பை கேள்வி கேட்கிறது ஒரு பார்வை. அடிப்படை அறச்சீற்றம் மீது கேள்வி கேட்கிறது ஒரு பார்வை. கொடுமைக்கு எதிரான கொதிப்பு ஒரு நிலை. குற்ற உணர்வு அடுத்த நிலை.

முதல் பார்வையில் சரிதானே என்று தோன்றும் இந்த கருத்துநிலைகளும் உணர்வு நிலைகளும், மறு பரிசீலனை செய்தால், அந்த யானை தின்ற வெடிகுண்டும் இவையும் ஒன்றே என்று புலப்படும். யானை டாக்டர் கதையை எடுத்துக் கொண்டால், அதன் இலக்கு, இயக்கம் இரண்டின் வழியே ஒரு நிலையை ‘ஒருமை’ நிலையை சாதிக்கிறது. உண்மையான சிக்கல் ஒன்றுக்கு ஒருமையான முகம் அளிக்கிறது. அந்த ஒருமை மட்டுமே சமூகத்தில் அரசில் கிரியா ஊக்கி என அமைந்து  நேர்மறையாக ஏதேனும் நிகழ ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.

மாறாக ஒரு விஷயம் உருவாகி வரும் போதே, அதை விழிப்புணர்வு நோக்கி நகர்த்தாமல், உருவாகிவரும் அந்த  ஒன்றை, அதன் அடிப்படை விசைகளை வினாக்கள் வழியே உடைப்பது என்பது அந்த யானையின் வாயில் உண்ணக் கொடுக்கும் மற்றொரு வெடி போன்றதே.

உண்மையில் சமூக வலைத்தளங்கள் அளிக்கும் கருத்து சுதந்திரம் என்பது,  தன்னியல்பாக உருவாகி வரும் ஒன்று, அதன் சிக்கல், சூழல்விழிப்புணர்வு நோக்கி வளராமல் மனிதர்கள் தங்களது கருத்து மோதல்கள் வழியே மழுங்கடித்துக்கொள்ளவே துணை நிற்கிறது.

உதாரணமாக மேற்கண்ட சூழலில், ஒருமுகப்பட்ட கருத்து உருவானால் என்ன நிகழும்? அது அரசை நிர்பந்திக்கும். அரசு என்ன செய்ய முடியும்?  வேறு எந்தக் காலத்தையும் விட, வனங்கள் அழித்து, தொழில் வளங்களுக்கான நிலமாக அந்த வனத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் சூழல் இந்த மத்திய அரசின் கீழ் தான் துரிதம் பெற்றிருக்கிறது.

தனது வாழிடம் சுருங்க, சுருங்க யானைகள் எங்கேதான் போகும்? 1980 இல் யானைகளின் ஆர்வலராக அதன் இனத்தின் பாதுகாவல் களப் பணிக்காக சத்தியமங்கலம் வனத்தில் பணியாற்றிய ராமன் சுகுமாரன் அவரது இது நாள் வரயியலான யானைகளோடான அனுபவங்களை என்றென்றும் யானைகள் எனும் சிறு நூலாக எழுதி இருக்கிறார். தமிழினி வெளியீடாக வந்திருக்கிறது.

அதில் அவர் பேசும் முதல் சிக்கலே, காட்டுப் பன்றிக்கு வைத்த வெடி உணவை உண்டு சாகும் யானைகளை குறித்ததுதான். நாற்பது ஆண்டுகளாக தொடரும் பிரச்னை. கருத்துக்கள் ஒருங்கு திரண்டு, கருத்தியல் ஆற்றல் என்று மாறி, சமூக அலகில் புறவயமாக ஒரு அசைவாக மாறும் நிலையை, இந்த சமூக வலைத்தளங்கள் (அதில் உரக்க ஒலிக்கும் மேற் சொன்ன வகைமைகளின்  ஜனநாயக ரீதியிலான கருத்து நிலைகள்)     முளைப்பதற்கு முன்பாகவே விதைகளை உடைத்து விடுகின்றன.

விளைவு. ஆக்கப்பூர்வமாக எதுவுமே  நிகழாத, ஜனநாயகத்தின் கூப்பாடு மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழல். சமூக வலைத்தளங்கள் ஜனநாயக களம்தான். அதிலிருந்து சமூகத்தில் விரும்பும் மாற்றத்தை உருவாக்கும், கருத்தியல் ஒருமை, அது கிளர்த்தும் ஒருங்கிணைத்த ஆற்றல் எதுவும் உருவாகி வராது. இந்த சூழலும் அதன் சான்றாகவே சென்று முடியும்.

 

கடலூர் சீனு

என்றென்றும் யானைகள் வாங்க

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிவம்,தேவி- கடிதங்கள்

$
0
0

தேவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த பெருந்தொற்று காலத்தில் வெளிவரும் உங்கள் சிறுகதைகளை வாசிக்கையில் அவை என்னைத் தொற்றி படறி மனஎழுச்சியின் உச்சத்தை எனக்கு தந்தவண்ணம் இருக்கிறது. அமுதா, நஞ்சா, போதை வஸ்தா எதுவென்று தெரியவில்லை. காலையில் அந்த சிறுகதையைப் படிக்கும் போது ஏற்படும் போதை அந்த நாள் முழுக்க எனக்குள் நிறைகிறது.

விருதுநகரை மைய்யமாக கொண்டு நான் எழுதுகிற கதையில் தின்னவேலி வட்டார வழக்கு வருகிறது. அந்த வசனத்தை நான் தட்டச்சு செய்கையில் தவறு என்று புரிந்தாலும் பரவசமாக இருக்கிறது.ஏதோ ஒரு விதத்தில் ஆன்மா கதையில் கலக்கவேண்டும் என்று நினைப்பது தானே கதாசிரியனின் வேலை.ஏதோ ஒரு வண்ணத்தைத் தொட்டு தன் ஓவியத்தை வரையத் துவங்கும் ஓவியனைப் போல உங்கள் வட்டார வழக்கைத் தொட்டு நான் எழுதத் துவங்குவது நல்லதொரு மயக்கத்தைத் தருகிறது.

தேவி சிறுகதையைப் படித்தவுடன் பேசத்தோன்றாமல் எழுத அமர்ந்து விட்டேன். வனவாசம் சிறுகதையும் தேவி சிறுகதையும் நாடக உலகத்தைப் பற்றியது என்பதால் என்னை அத்தனை எளிதாக கட்டிப்போடுகிறது.தலையன் கோட்டை காளியப்பா தான் இங்கே தலைவன் கோட்டை சாமியப்பாவாக நிற்கிறார் என்பது எனக்கு தெரியும். எவனும் கை தட்டவேண்டியதில்லை எனக்கே தெரியும் நான் அந்த இடத்துக்கு போயிட்டேன்னு என்கிற வசனம் தருகிற மயக்கம் போதைவஸ்துகள் தருகிற போதையை விட பல லட்சம் மடங்கு பெரியது.திருநெல்வேலி லாட்ஜில் இரவெல்லாம் நாடகம் பற்றி நீங்கள் பேசிய பேச்சைக் கேட்கையில் பிடித்த கிறுக்கு மேட்டுப்பாளையம் லாட்ஜில் அமர்ந்து அனந்தன் மாதிரி பித்து பிடித்து காவியத்தலைவன் கதையை எழுதித் தீர்த்தேன். அந்த கணம் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

காவியத்தலைவன் பார்த்துட்டு என்னை கிராக்கு, பொழைக்கத் தெரியாதவன், ஆர்ட் பிலிம் மேக்கர்,வேஸ்ட், மசாலா இல்லாத சரக்கு, எந்த லூசாவது இந்த மாதிரி ஒரு அறுவையைப் பண்ணுவானா என்ற கேலிபேச்சுகள் என்னை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஏறக்குறைய வனவாசம் தான். ஆனாலும் இது போன்ற நாடகக்கதைகளை படித்தவுடன் இயல்பான வாழ்க்கையின் அத்தனை துயரமும் மறந்து நான் தான் தலைவன் கோட்டை சாமியப்பா, நான் தான் அனந்தன்,நான் தான் தேவி என்று மனம் அரற்றுகிறது. நாடக நடிகை ஸ்ரீதேவி மூன்று கதாபாத்திரமாக நடிப்பதை நீங்கள் எழுதியுள்ளதை படிக்கையில் மனம் காற்றிலாடும் உதிர்ந்த இறகாக பறக்கத் துவங்கிவிட்டது. மீண்டும் அந்த அபாயக்கனவுக்குள் வாழ்கிறேன்.இப்போது என் உடல் நெருப்பு பிடித்து எரிகிறது.

உடல் தீ பற்றி எரியும் சிறுகதைகள்.

மனம் யா தேவி சர்வஃபூதேஷு சக்திரூபேண சம்ஸ்திதா என்கிறது.

நன்றி

அன்புடன்

வசந்தபாலன்

 

அன்புள்ள ஜெ

 

பெண்ணின் முகங்கள் என்று சொல்லத்தக்க கதை. ஆனால் அதில் வில்லியும் உண்டு என்பதில்தான் லாரன்ஸின் ஜூவனைல் மனசு எதிர்கொள்ள முடியாத சிக்கல் உள்ளது. நேராகச் சென்று காலில் விழவேண்டியதுதான். வேறுவழியே இல்லை.

ஒரு கிராமநாடகம் என்பது அந்தக்கிராமமே கூடும் விழா. அதில் எத்தனை ஓட்டங்கள். சாதிமதம் எல்லாம் இருக்கிறது. ஆனால் கலை எல்லாவற்றையும் கடந்த ஒரு வெளியில் இயங்குகிறது. இதை நான் சின்னவயசில் பார்த்திருக்கிறேன் [நமக்கு ஒரே வயசு. எனக்கு அமரவிளை]

ஏன் நாடகம் அத்தனை பாப்புலராக இருந்தது என்றால் அது கோயில்கலை அல்ல. கதகளி மாதிரி அதற்கு ஆசாரமெல்லாம் இல்லை. அதில் எதைவேண்டுமென்றாலும் கலக்கலாம். புதிய சிந்தனைகளை சேர்க்கலாம். எல்லா சாதியினரும் மதத்தினரும் பங்குபெறலாம். எங்கள் பகவதியம்மன் கோயில் நாடகங்களில் முஸ்லீம்கள் வேடமிட்டு ஆடுவார்கள். அல்லா பாட்டு பாடி ஆரம்பிப்போம். அந்த ஜனநாயகவெளிதான் நாடகம் அவ்வளவு பாப்புலர் ஆக காரணம்.

நாடகத்தை கையிலெடுத்த அரசியல் இயக்கங்கள் மக்களியக்கங்களாக மாறின. கேரளத்தில் தோப்பில் பாசியின் கேபிஏஸி நாடகக்குழு தான் கம்யூனிஸ்டுக் கட்சியை ஆட்சிக்கே கொண்டுவந்தது என்று சொல்வார்கள்.

அந்த ஜனநாயகக் கொண்டாட்டம் இந்தக்கதையில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. நுட்பமான அம்சம் ஃப்யூடல் மேலாதிக்கமே அதில் இல்லை. அவர்கள் எல்லாருமே ஒதுங்கியிருக்கிறார்கள். அதன் கலைஞர்கள் எல்லாருமே மார்ஜினலைஸ்ட் ஆட்களாக இருக்கிறார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவுபெரிய ஃபினாமினன் நாடகம். ஆனால் இந்த விஷயம் ஏன் நம் இலக்கியத்தில் இதுவரை பதிவாகவோ பேசப்படவோ இல்லை?

 

அன்புள்ள ஜெ,

சிவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

சிவம் கதையில் காசியின் எல்லா முகங்களும் பதிவாகியிருக்கின்றன. வழக்கமான கதைகளில் பக்தி – சடங்கு காசி பதிவாகி அவுட்சைடர்களாக அங்கிருக்கும் சாமியார்கள் பதிவாகியிருப்பார்கள். இந்தக்கதையில் பக்தி –சடங்கு ஆட்கள் அவுட்சைடர்களாக நையாண்டியுடன் சொல்லப்பட்டிருக்கிறார்கள். காசி இயல்பாகவே சாமியார்களின் ஊர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வேறுபட்ட கோணமே இக்கதையின் அழகு

 

எம்.சரவணன்

 

 

ஜெ

நாம் நூற்றுக்கணக்கான ஊர்களையும் நகரங்களையும் பார்த்திருப்போம். எங்குமே சுடுகாடு தனியாக மயான வெறுமையில் ஊருக்கு வெளியில் எங்கோ இருக்கும். துடிப்புடன் வாழ்க்கை ஊரின் உள்ளே நிகழும். ஊர் வளர்ந்து மயானம் அருகில் வந்தாலும் கூட நாம் கண்டும் காணாமல் செல்வோம். ஆனால் காசியில் அப்படி இல்லை.

காசியில் வாழ்க்கைக்கு நிகராக மரணமும் துடிப்புடன் ’வாழும்’ ஒர் இடம். காசி வாழ்வையையும் மரணத்தையும் மிக அருகருகே வைத்த  நகரம்.  அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதே பெரும் ஆச்சரியம்தான் ! காசியின் கங்கையில், மணிகர்ணிகா கட்டத்தில்  வாழ்வுக்கும் சாவுக்கும் கங்கையின் மேல் எழும் குளிர்காலபனிபோல  ஒரு மென் திரைதான் இருக்கிறது. கிண்ணத்தில்  ‘கிளிங்க்’ என விழும் வெள்ளிமெட்டி ஒலியிலோ,  கைகால்கள் கட்டப்பட்டு கைகூப்பி கங்கையில் ஜலசமாதியாகும் இடத்திலோ, சுவரில் சாய்த்துவைக்கப்பட்ட பிணத்தின் தனிமையிலோ, சிதையின் நீல ஜூவாலையின் வெம்மையிலோ அந்த திரை விலக முடிந்தால் வலது காலை வைத்து உள்ளேச்சென்று ‘நீ உண்மையிலே யார்?’ என்று மரணத்தை கேட்க வாய்ப்பளிக்கும் நகரம்.

காசியில் அந்த முதல் சிதையை எரித்தவன்! காசியின் வரவேற்பு வாசகமே ‘காசியம் மரணம் முக்தி’ என்பதுதான். தொடர்ந்து சிதைகள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து எரிந்துகொண்டே இருக்கின்றன. சிதையின் நெருப்பில் ரொட்டியை  வாட்டி உயிர் ஒருபுறம் நிகழ அதே நெருப்பில் பிணம் எரிந்துகொண்டிருக்கிறது. அப்போது நித்யாவுக்கு கைமாற்றப்படுவது ஒரு ரொட்டி துண்டு அல்ல. ஆக்கலும் அழித்தலும் பற்றி தொன்றுதொட்டு இந்த மண்ணில் இருந்த வரும் ஞானம். பிரசாதம் என்பது கோயிலில் தெய்வம் முன் படைத்து  மலரின், தூபத்தின் மணம் எழு இரு கை ஏந்தி பெறுவது மட்டும்தானா ! சிதையின் நெருப்பில் வாட்டி  சாம்பல் நெடியுடன் கைமாற்றப்படுவதும்தான். மண்டையோட்டின் வெண்மையிலும் தழலின் சிவப்பிலும் காலம்காலமாக ‘அருகமர்ந்து’ மரணத்தை அறிந்த குருமரபு அளித்த ஞானம்தான் அது.   அணையாச்சிதையைச் சுற்றி சாமியார்கள் காலம்காலமாக காசியில் அமர்ந்துக்கொண்டிருக்கிறார்கள். சவத்தின் அருகமர்ந்து அறியும் சிவம்.   ’அருகமர்தல்’ இன்னும் விரிவான பொருள் கொள்கிறது.

இப்படி மரணத்தை கடந்த குருவிடம்தான் கதைசொல்லி ’உங்களுக்கு அன்பு என்பதே இல்லையா?’ என்று கேட்கிறான். ’நிழல்காகம்’ கதையில் ஒரு வரி வருகிறது. ‘உன் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் அது அறப்பிரச்சனை. ஆனால் உனக்கு இது ஒரு தத்துவப்பிரச்சனை.’ இந்த கதைக்கும் ஒருவகையில் பொருந்தும் ஒரு வரியாகவே நான் அந்த வரியைப் பார்க்கிறேன். துறவிக்கு மரணமும் கடந்துசெல்லப்படவேண்டிய ஒன்று.  ’மீண்டும் வருவாய்தானே?’ என்று கேட்கும் போது கதைசொல்லி எதிர்பார்த்த அந்த ‘அன்பு’ இன்னும் பேருரு கொண்ட ஒன்றாக மாறிவிடுகிறது.

 

***

இன்னொன்றையும் சொல்லவேண்டும். இதை வாசகர்கள் அறிந்தே இருப்பார்கள். இருந்தாலும்..’நித்யா வரிசை கதைகள்’ மற்ற கதைகளைப் போல் அல்ல. ஏனெனில் இதன்பின் உள்ள உக்கிரமான அனுபவங்கள் சாதாரணமானவை அல்ல. துறவிகளுக்கு நிகழும் நேரடி அனுபவங்கள். அந்த உணர்வுகளையெல்லாம் மிக மென்மையாக இந்தக் கதைகள் தொட்டுகாட்டிவிட்டு செல்கின்றன. உதாரணமாக, கிழவியின் பிணத்தைப் பார்த்து பயந்து ஓடுவதும் பின் ரொட்டி துண்டை இயல்பாக வந்து உண்ணும் இடத்திற்கும் இடையே உள்ள நித்யாவின் பயணம்.   எந்த மொழிக்கும் இந்தக் கதைகள் ஒரு கொடைதான். இதையெல்லாம் கற்பனையில் எழுதவே முடியாது. அலைந்துதிரிபவர்களின் அனுபவங்களை எழுத உண்மையிலேயே எழுத்தாளனும் அதேபோல அலைந்துதிரிந்திருந்தால்தான் உயிர்ப்புடன் எழுதமுடியும். அலைந்துதிரிந்துவிட்டு மீண்டும் அந்த அனுபவங்களை இதுபோன்ற கதைகளாக மாற்றுவது  ஒருவகையில் அரிதிலும் அரிதுதான்.  ஒரு துறவியையும் எழுத்தாளனையும் பிரிக்கும் ஒரு மெல்லிய கோடு எங்கோ உள்ளது. அந்த மென்சமநிலையில் அதிரும் கோட்டில் இருந்து எழும் கதைகள் இவை. அல்லது காவியும் எழுதுகோலும் சந்திக்கும் உச்சப்புள்ளியில் இருந்து எழும் கதைகள் இவை.

அன்புடன்,
ராஜா

 

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்

‘மாஸ்டர்’

$
0
0

கதைகளை தொடராக வெளியிடத் தொடங்கி அதைப்பற்றி சிலவற்றை பேசியபோது எனக்கு வந்த கடிதங்களில் முக்கால்பங்கு வசைகளும் ஏளனங்களும்தான். பெரும்பாலும் எங்காவது வசைகளை எழுதி அதை எனக்கு நகல் அனுப்புவது. போலி முகவரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் மிகுதி. ஏறத்தாழ ஆயிரம் கடிதங்கள் என்றால் ஆச்சரியப்பட மாட்டீர்கள். அவர்களில் கால்வாசிப்பேர் இளைஞர்கள். ஒரு அவர்களுக்காக மட்டும் சில சொல்ல விரும்புகிறேன்.

வசையாளர் அல்லது ஏளனம் செய்பவர்களைப்பற்றிய ஆச்சரிம் என்பது பலர் தங்களுடன் என்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான். எனக்கு வரும் கடிதங்களில் நேர் பாதியின் ஆதாரமனநிலை அதுதான். ‘அதெப்டி, நாங்கள்லாம் அப்டி இல்லியே” என்று. அப்படி ஒப்பிட்டுக்கொள்பவர்களை பார்க்கிறேன், சாதாரணமானவர்கள், எதையுமே நிகழ்த்திக்காட்டாதவர்கள். அவர்கள் அவ்வாறு ஒப்பிட்டுக்கொள்வதிலுள்ள அசட்டுத்தனத்தைக்கூட உணர்ந்திருக்கவில்லை.

எந்தக் கலையானாலும் அந்தக் கலையின் ‘மாஸ்டர்’ என்பவர் வேறு வகையானவர். அவர்கள் ஆற்றுவதை, அடைவதை பிறர் அடையமுடியாது. ஆகவே அந்த ஒப்பீடே அவருக்கான அவமதிப்புதான். நான் நீங்கள் வாழும் தலைமுறையின் பெரும்படைப்பாளி- மாஸ்டர். அதை உணரவில்லை என்றால் நீங்கள் இலக்கியத்தில் எதையுமே உணரத்தொடங்கவில்லை ,நீங்கள் வேறெங்கோ இருக்கிறீர்கள்.

இதை ‘பிறவிக்கொடை’ என்று சொல்ல வரவில்லை. பிறவிக்கொடை என ஒன்று உண்டு, அது வரமும் சாபமும்தான். நான் எனக்கு மிகமிக இளமையிலேயே மொழிசார் நுண்ணுணர்வு மிக அதிகம் என உணர்ந்திருக்கிறேன். நான் எழுதப்படிக்க கற்றுக்கொண்டது இரண்டு வயதில்.  “பேசக்கற்றுக் கொள்வதற்குள்ளே வாசிக்க கற்றுக்கொண்டான்” என்று என் அம்மா சொல்வாள்.ஒன்றாம் வகுப்பில் சேர்கையில் நான் ஒருநாளில் நூறுபக்கம் தமிழில் படிக்கக்கூடியவன். வாரம் ஒரு நூலை படித்து முடிப்பவன்.

ஆனால் இதற்கான விலைகளும் அதிகம். என் அறிவு சமநிலை கொண்டதாக இல்லை. இன்று வரை எனக்கு கணக்கு வரவில்லை. மிக எளிமையான கணக்குகள் கூட.பள்ளியில் கணக்குகளை செய்யுள்போல மனப்பாடம் செய்து அப்படியே எழுதி பாஸ் ஆவதே என் வழக்கம். பத்தாம் வகுப்பில் ஒரு பயிற்சிநூலில் இருந்த முந்நூறுக்கும் மேற்பட்ட கணக்குகளை அச்சுஅசலாக அப்படியே திருப்பி எழுதி படித்து எண்பது மதிப்பெண் பெற்றேன்.

கணக்கின் பொருட்டு என்னை சித்திரவதை செய்யாத ஆசிரியர்களே இல்லை. ஒருவரை இப்போது காலைநடை போகும்போது சந்திக்கிறேன். “என்னடே, சம்பளப்பணத்தை பெஞ்சாதிகிட்ட குடுத்திரு என்ன?” என்றபின் நண்பரிடம் “நூறிலே எளுவத்தஞ்சு போனா எவ்ளவுன்னு கேளுங்க, இப்பகூட சொல்லமாட்டான்” என்றார்.

அப்படி பல சாதாரணமான நுண்திறன்கள் வேலைசெய்யவில்லை. இளவயதிலிருந்தே என்னால் வழிகளை நினைவு வைத்துக்கொள்ள முடிந்ததில்லை- வாரந்தோறும் தொலைந்துபோகிறவன். நான் இன்றுவரை எந்த வண்டியையும் ஓட்டியதில்லை. சைக்கிள்கூட. ஏனென்றால் என்னுடைய உடலின் தானியங்கித் தன்மை மிகப்பலவீனமானது. என்னால் எந்த இயந்திரங்களுடனும் பழக முடியாது. ஒரு சாதாரணமான பஞ்சிங் மிஷினைக்கூட கையாள முடியாது.

என்னால் தேர்வு எழுதி வேலைக்குச் சென்றிருக்க முடியாது. எல்லா IQ test களிலும் எனக்கு மிகமிகக் குறைவான மதிப்பெண்கள்தான் வந்துள்ளன.  எல்லா aptitude test களிலும் நான் பரிதாபகரமான தோல்வையையே அடைந்திருக்கிறேன். கேள்வித்தாள்கள் என்னவென்றே புரிந்ததில்லை. ஒரே ஒருமுறை ஒரு போட்டித்தேர்வை எழுதினேன். நூறுகேள்விகளில் இரண்டுக்கு மட்டுமே பதில் எழுதமுடிந்தது- இரண்டுமே தவறு. என்னால் ஒரு எளிமையான பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை .இந்த உலகம் இங்கே தங்கிவாழ்வதற்கு உருவாக்கியிருக்கும் எந்த திறன்களையும் என்னால் அடைய முடிந்ததில்லை. என் செவிசார் நினைவு மிகக்குறைவு. இசையை, குரல்களை நினைவு வைத்திருக்க முடியாது.

இந்தப் போதாமைகள் நீண்டநாட்கள் பெரும் தாழ்வுச்சிக்கலாக இருந்தது. ஏனென்றால் நான் வேலைபார்த்தது தொழில்நுட்பம் சார்ந்த துறையில். ஆண்டுதோறும் பயிற்சிகள், தகுதித்தேர்வுகள் உண்டு. அனைத்திலும் தோல்வியடைந்து அவமானப்பட்டு கூசிக்குறுகித்தான் அங்கே இருந்தேன். அரசுவேலை இல்லாவிட்டால் வறுமைக்கே சென்றிருப்பேன். தனிவாழ்விலும் வழிகாட்டியாக, பேணுநராக என் அண்ணா எப்போதும் உடனிருந்ததனால் நான் வாழ்க்கையில் எதையும் இழந்து சீரழியவில்லை- எழுத்தாளர்களுக்கு அப்படி அமைவது மிக அபூர்வம்.

ஆனால் எந்த துறையிலும் முதன்மையாளர்கள் என்பவர்களுக்கு ஒரு தகுதி உண்டு, அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பு. ஒன்றை தெரிவுசெய்து அதில் தன்னை முழுதளித்தல்.  நான் செய்வதுபோல ஒரு கரு அமைந்ததுமே கையில் வடிவம் உங்களுக்கு வரவேண்டுமா? என்னைப்போல நாற்பதாண்டுகள் ஒவ்வொருநாளும் குறைந்தது எட்டு மணிநேரம் முழுக்கவனத்துடன் வாசியுங்கள், எழுதுங்கள், ஓர் ஆண்டுக்கு பத்தாயிரம் கிலோமீட்டருக்கு குறையாமல் உலகைப் பார்ப்பதற்காக மட்டுமே பயணம் செய்யுங்கள், நீங்கள் மதிக்கும் அத்தனை பேராளுமைகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் சென்று பாருங்கள், ஆணவத்தை முழுமையாக கழற்றிவிட்டு காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். பிற தளங்களில் வெற்றியும் பணமும் புகழும் உள்ளது, நாலுபேர் மதிக்கும்படி இருக்கவேண்டும் என்பதுபோன்ற சபலங்களை கடந்து உங்கள் கலைக்கு உங்களை அளியுங்கள். அதன்பின் முயலுங்கள்.

ஒருவர் ஒரு துறையில் மாஸ்டர் என்று உணரும்போது உங்களுக்குள் தோன்றுவதென்ன என்று பாருங்கள். எரிச்சல், சிறுமைப்படுத்தவேண்டும் என்ற உந்துதல், உங்களை ஒப்பிட்டுக்கொள்ளுதல் என்றால் நீங்கள் சாமானியர், அவருடைய கலையை அறிவுத்துறையை அறியாதவர். நீங்கள் உங்கள் சிலலறைகளுடன் புழங்கும் உலகில் அவர் இல்லை, அவர் உங்களை பார்க்கப்போவதே இல்லை. அது உங்கள் சொந்த நரகம். நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே, முழுமையாக விலகிக்கொண்டு உங்கள் எறும்புலகுக்குள் சென்றுகொள்ளலாம். அங்கே நீங்கள் நிம்மதியாக வாழலாம்.

அல்லது உங்களுக்கு இரண்டு எண்ணங்கள் வரலாம். ஒன்று, அந்த மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், அவரினூடாக பயணம் செய்தல், உங்களை கண்டடைதல். எனில் நீங்கள் அந்தக்கலையை அடையத் தகுதியானவர். அல்லது ஒருநாள் நானும் அவரென ஆவேன் என்று தோன்றலாம், அதற்காக உங்களை நீங்கள் முழுவெறியுடன் திரட்டிக்கொள்ளலாம். எனில் நீங்கள் நாளைய மாஸ்டர்

மாஸ்டர் என்று ஒருவர் தேவையா?ஒருவர் மாஸ்டர் என்று ஆகவேண்டுமா? மேலே சொன்ன பாமரர்களிடமிருந்து அப்படி ஒருவர் இல்லை என்றும் அப்படி ஆகவேண்டியதில்லை என்றும் பதில்வரும். ஏனென்றால் அவர்கள் அந்த வட்டத்திற்குள் இல்லை என்றும் போகமுடியாது என்றும் அவர்களுக்கே தெரியும். படித்தும் ஒன்றும் புரியாத பாமரர்களும் உண்டு

மாஸ்டர் என்பவர் ஒரு தளத்தில் மானுடசாத்தியத்தின் உச்சத்தில் மோதிப்பார்ப்பவர். அப்படி மோதிப்பார்ப்பதும் எல்லை கடப்பதும்  மானுடத்தின் அடிப்படை இயல்பு. அதன் வழியாகவே மானுடத்தின் அறிவும் கலையும் எல்லைகளை விரித்து முன்னேறி வந்துள்ளன. அந்த விசையே மனிதனின் சாராம்சம். எந்த மாஸ்டரும் கடக்கப்படுவார். ஏனென்றால் மானுடம் ஒட்டுமொத்தமாக மிகப்பெரியது, மாஸ்டர்கள் அதன் குமிழிகள் மட்டுமே

ஆகவே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இங்கே ஒவ்வொரு துறையிலும் மாஸ்டர்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் கடக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆகவே ஒவ்வொரு துறையிலும் செயல்பாட்டை தொடங்குபவனின் முதன்மை இலக்கு அதில் மாஸ்டர் ஆகவேண்டும் என்பதாகவே இருக்கமுடியும்.

அப்பயணத்தின் ஏதேனும் ஒருபடிநிலையில் நாம் இறுதியாக அமைந்துவிடலாம். அது நம் எல்லை, நம்சூழல் நமக்கு அளிக்கும் எல்லை ஆகியவற்றைச் சார்ந்தது. அதில் மிகப்பெரிய அளவில் தற்செயல் உள்ளது, ஒரு மாபெரும் திறனாளர் காசநோய்க்கு ஆளாகி முழுமையாக வெளிப்படமுடியாமலானால் அவர் ஒன்றும் செய்யமுடியாது, விதிதான். ஆனால் ஒவ்வொருவரும் அந்த ஊழின்முன் உச்சவிசையுடன் நின்றாகவேண்டும். அதுதான் மானுடத்தின் ஆதார விதி—மனிதர்களில் மட்டுமல்ல அத்தனை உயிர்களிலும்.

மாஸ்டர்கள் நிகழும்போது அவர்களைச் சூழ்ந்து அவர்கள்மேல் எரிச்சலும் ஒவ்வாமையும் கொண்ட குரல்கள் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் – இதற்கு ஒரு விதிவிலக்குகூட இதுவரை உலகில் இல்லை.

ஏனென்றால் ஒரு மாஸ்டர் பிறரை தன் அளவால் சிறியவராக்குகிறார். அவர்களின் ஆணவங்களைச் சீண்டுகிறார். ஆகவே அத்துறையிலேயே சிறிய அளவில் செயல்படுபவர்களை நிலைகுலைய வைக்கிறார். அவரை தங்களில் ஒருவர் என எண்ணும் எளியவர்களை சீற்றமடையச் செய்கிறார். அளவுகோல்களை மாற்றுகிறார். அதன்வழியாக இலக்கணவாதிகளை குழப்புகிறார். நேற்றைய மாஸ்டர்களை முந்திச்செல்கிறார். ஆகவே நேற்றைய மாஸ்டர்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களை பதற்றமுறச் செய்கிறார்

மாஸ்டர்கள் என்பவர்கள் தங்கள் வாழ்நாளின் குறுகிய கால அளவை, மானுட சாத்தியத்தின் எல்லையை அறிந்து பதற்றம் கொண்டிருப்பார்கள். ஆகவே எரிச்சலும் நிலைகொள்ளாமையும் அவர்களிடமிருக்கும். சிலர் ஏற்கனவே இருப்பனவற்றை இடித்து தங்கள் வழியை உருவாக்கிக்கொள்ளக் கூடும்.

மாஸ்டர்களுடன் இணைந்துகொண்டால் நீங்கள் ஒரு காலகட்டத்தின் படைப்புச்செயல்பாட்டுடன், அறிவியக்கத்துடன் இணைந்து கொள்கிறீர்கள். அவர்களுக்கு எதிரான ஒவ்வாமைகளுடன் இணைந்துகொண்டால் அக்காலகட்டத்தின் சிறுமைகளுடன் இணைந்துகொள்கிறீர்கள்.தெரிவு உங்களுடையது உங்களைப்பற்றி நீங்கள் எப்படி மதிப்பிட்டிருக்கிறீர்களோ அதைச் சார்ந்து முடிவெடுக்கலாம்.

எந்த துறையிலும் மாஸ்டர்களுடன் உங்களை இணைத்துக்கொண்டால் மிகமிகச் சிறுபான்மையினர் ஆகிவிடுவீர்கள். அறியாமையும் அதன் விளைவான தன்னம்பிக்கையும் கொண்ட பெரும்பான்மையின் நையாண்டிக்கும் எதிர்ப்புக்கும் ஆளாவீர்கள். தெரிவு உங்களுடையது.

ஒருபோதும் ஒருபோதும் ஒரு மாஸ்டரை அவருடைய ஆணவத்தின்பொருட்டு அல்லது நாகரீகமின்மையின் பொருட்டு விமர்சனம் செய்யாதீர்கள். நாகரீக உலகில் எங்கும் அந்த வழக்கம் கிடையாது- அப்பட்டமான பண்பாட்டுப் பயிற்சியின்மை மட்டும்தான் அது. நாகரீகம் என்பது ஒத்திசைவிலிருந்து உருவாவது. ஒத்திசைவு சமூகமாகச் செயல்படுபவர்களுக்குரியது. எந்த மாஸ்டரும் தனிப்பறவைதான். பெரும்பாலானவர்கள் அத்துமீறுபவர்களும் எரிச்சலூட்டுபவர்களும்தான்.

நேற்றைய மரபிலிருந்து நீங்கள் வழிபடுபவர்களாக எழுந்து வந்திருக்கும் எவரும் அப்படித்தான். இளையராஜா நாகரீகமில்லாதவர் என்று கெக்கலிக்கும் ஒருவர் மொஸாத் எவ்ளவு பெரிய மேதை தெரியுமா என்கிறார். மொசாதின்  ‘நாகரீகம்’ என்னவாக இருந்தது என இவருக்கு எவர் சொல்லிப் புரியவைக்கமுடியும்?

ஆணவத்தைப் பொறுத்தவரை ஒன்றே சொல்லவேண்டும். ஒருதுறையிலும் பெயர்சொல்லத் தேவையானவராக இல்லாத நீங்கள் ஒரு மாஸ்டரை விமர்சனம் செய்யலாம் என்று நினைப்பதில் உள்ள ஆணவத்தை எண்ணிப்பாருங்கள். அதில் ஆயிரத்தில் ஒருபங்குகூட தன் கலைபற்றி தெரிந்த அந்த மாஸ்டர் கொள்ளும் ஆணவம் இருக்காது.

வெளித்தெரியும் ஆணவம் என்பது அவன் தன் கலைக்காக அமைத்துக்கொள்ளும் கவசம்.அது இல்லையேல் தன்னைச் சூழ்ந்து கொள்ளும் சிறுமைகளில் இருந்து மேலெழவே முடியாது. கொசுக்கடிகளை பொருட்படுத்தாமல் தன் கலைக்குள் , சிந்தனைக்குள் மூழ்கமுடியாது. பாமரர்களால் சூழப்பட்டிருப்பதே கலைஞனுக்கான நரகம்.

உள்ளிருக்கும் ஆணவம் என்பது தன் கலை, அதில் தன் இடம் பற்றிய தன்னுணர்வு. ஆனால் அது நிலையானது அல்ல. எந்த மாஸ்டரும் தன் கலைபற்றிய ஆழ்ந்த போதாமையை அடைந்து கசப்பின் நிராசையின் எல்லைக்குச் செல்வான். அங்கே சிறுத்து தூசாக அணுவாக கண்ணீருடன் நின்றிருப்பான்.

சூழ்ந்திருக்கும் அத்தனை மாஸ்டர்களையும் காணும் கண் இருப்பதனாலேயே அவன் மலைகளுக்கு நடுவே நின்றிருப்பதுபோல் உணர்வான். ஒன்று ஆனவன் இன்னொன்றும் ஏன் ஆகமுடியவில்லை என அழுவான். செகாவ் போல சிறுகதை எழுதமுடியவில்லை என்று தல்ஸ்தோய் கண்ணீர்விட்டார் என்பது அதனாலேயே.

அதிலிருந்து மீண்டும் தன் ஆணவத்தைப் பெருக்கிப்பெருக்கி வந்து நின்றுதான் மீண்டும் அவனால் படைக்கமுடியும். ஆணவம் என்பது படைப்புவிசையின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதி. நீங்கள் கலைஞர் என்றால் ஆணவத்தை பேணிக்கொள்ளுங்கள் என்பதையே முதன்மையாகச் சொல்வேன்

மாஸ்டர் என நீங்கள் உணர்பவரை வழிபடவேண்டாம். கொண்டாடவேண்டாம். ஆனால் ஒருபோதும் எளிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் அளவுக்கு வெட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் சிறுமைகளை கொண்டுவந்து அவர்மேல் கொட்டாதீர்கள். அவருடைய பாய்ச்சலை முடிந்தவரை தொடர முயலுங்கள்.

அவன் கூறுவனவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. அவன் படைப்புக்களை ஏற்கவேண்டும் என்றுகூட இல்லை. அவனுடன் உண்மையான ஓர் உரையாடலை தொடங்கினாலே போதும். ஏற்பும் மறுப்புமாக அது வளரும்போது அதில் தன் சிறுமையை உணர்ந்து உருவாக்கிக்கொள்ளும் செயற்கையான ஆணவமோ அல்லது அவன் செயல்கள் உருவாக்கும் எரிச்சலோ ஊடுருவாமல் காத்துக்கொண்டால் போதும்.அந்த உரையாடல் மானசீகமாக நடந்தாலே போதும். உங்களுக்குள், உலகமறியாமல். உங்கள் செயல்கள் வழி அதை உலகம் அறியட்டும்

அந்த உரையாடல் வழியாக அன்றாடத்தின் சிறுமையிலும் சலிப்பிலும் இருந்து விடுபடுவீர்கள். மனிதனின் ஆற்றல்குறித்த நம்பிக்கையை அடைவீர்கள். உங்களுக்கான மெய்யறிதலை நீங்களே கண்டடைவீர்கள். நீங்கள் வேறொரு துறையில் செயல்படுபவராக இருந்தாலும் அந்த உடன்பாய்ச்சல் அத்துறையில் உங்களை திறனாளர் ஆக்கும் என்பதைக் காண்பீர்கள்.

இந்தவரிகள் தமிழ்ச்சூழலில் எப்படி பொருள்கொள்ளப்படும் என்று எனக்குத் தெரியும். எழுத்தாளனும் கலைஞனும் வாசல்படியில் கிடக்கும் மிதியடிமெத்தை போல இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒரு பாமரக்கூட்டம். மறுபக்கம் மிதிபடும்  பழைய சாக்குபோல தன்னைக் காட்டிக்கொள்ளும் போலித்தன்னடக்கக் கூட்டம். ஒரு நச்சுச்சூழல். கூடவே கலைஞனிடமும் எழுத்தாளனிடமும் கலைபற்றி போதிக்கும் கலையோ எழுத்தோ உணரும் திறனற்றவர்களின் பெருக்கம். நான் இங்கே நின்று இதைச் சொல்வது, நீங்கள் அள்ளிச்சொரியப்போகும் வசைகளையும் ஏளனங்களையும் பெற்றுக்கொள்வது, எதிர்காலத்தில் எழுபவர்களுக்காகவும் சேர்த்துத்தான்.

குறைந்தபட்சம் உங்கள் வசைகளும் ஏளனங்களும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்றாவது புரிந்துகொண்டால் நீங்கள் நுண்ணுணர்வை அடையத் தொடங்கிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16971 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>