Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16988 articles
Browse latest View live

மூத்தோள்,அன்னம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

அன்புள்ள ஆசிரியருக்கு,

அன்னம் சிறுகதை கறுத்த சாகிப்பும் கார்த்தவீரியன் தான்.. தன் ஆணவத்தை ஆயிரம் கைகளென தவமிருந்து பெருக்கிக்கொண்டவன் கார்த்தவீரியன். ஆனால் அன்பை ஆயிரம் கைகளாக மனிதர்களில் பெருக்கிக்கொண்டவர் சாகிப். அன்பும் சமயங்களில் ஆணவம் தானோ என்னவோ. ஆயிரம் கைகளும் துண்டு பட்ட பின்பே கார்த்தவீரியன் இறக்கிறான். அன்பான மனிதர் சூழாமல் நிகர்மரணம் அடைகிறார் சாகிப்.

வண்ணக்கடல் நாவலில் துரியனுக்கு  கார்த்தவீரியனின் கதை சொல்லப்படும் இடம் எனக்கு படித்து சில ஆண்டுகள் ஆகியும் நெஞ்சில் நிற்பது.  “அரசே, நீ செய்ய முடியாதது என இனி இவ்வுலகில் ஏதுமில்லை. எனவே செய்யக்கூடாதவையும் பலவே. வல்லமை என்பது பொறுப்பே என்றறிக. எந்த உயிரும் தன் எல்லைகளை மீறுவதில்லை. மானுடன் மீறமுடியாத எல்லைகளும் சில உண்டு. அவற்றை மீறாதிருப்பது வரை உன்னை வெல்ல எவராலுமியலாது” என்று சொல்லி தத்தாத்ரேயர் மறைந்தார். (வண்ணக்கடல்23)

எல்லா வல்லமையும் கிடைக்கப்பெற்றவன், ஆனால் அறம் மீறி அழிந்தவன் கார்த்தவீரியன். ஆனால் அதற்கு நிகரான வாழ்வும் வல்லமையும் கிடைக்கப்பெற்ற சாகிப் அன்புக்காக ஏங்குபவர். ஆயிரம் குரல்கள், அன்பின் குரல்கள் அவரை சூழ்ந்து காக்க காரணம் அவர் பேணும் அறம் தானே, கார்த்தவீரியன் தவறவிட்ட இடத்தில் எழுந்து நிற்கிறார் ஆயிரம் குரல் சூழ்ந்த கறுத்த சாகிப்.

ஆயிரம் கைகள் இருந்தாலும் ‘அதனாலென்ன’ அறம் வேண்டும் காக்க…  முகம் தெரியாத மனிதராயினும் ‘அதனாலென்ன’ அன்பு போதும் வாழ.

 

இப்படிக்கு,

பிரேம் குமார் ராஜா.

 

அன்புள்ள ஜெ

 

அன்னம் மீண்டும் ஒரு அழகான கதை. அன்னம் என்ற சொல் எங்கே வளர்கிறது என்றால் கறுத்தசாகிபுக்கு அன்னம் என்றால் என்ன அர்த்தம் என்ற இடத்திலேதான். அன்னம் என்றால் பிரியாணிதான், சோறுதான். ஆனால் விரிந்த அர்த்தத்தில் அது மனிதர்களையும், இந்த உலகையும். அவர் சோற்றின்மீதல்ல மனிதர்கள் மீதுதான் அன்புடனிருக்கிறார். அந்த அன்பைத்தான் சோறுவழியாக வெளிப்படுத்துகிறார். அவருடைய களங்கமற்ற உள்ளமும் அதை ஹெப்பார் கண்டடைந்து வெளிப்படுத்தும் இடமும் அபாரமானது. அன்னம் அன்னத்தால் நிறைக்கப்படுகிறது. அதை ஒரு பெரிய வேள்வி என்கிறார் ஹெப்பார். மனிதம் மீதான அன்பே பெரிய யோகம் என்கிறார்

ஹெப்பார் இது வட்டி, அசல் நிற்கட்டும் அடுத்த பிறவியில் தீர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லும் இடத்தில் நெகிழ்ந்துவிட்டேன்

 

ஜெயக்குமார்

 

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

ஜெ

 

மூத்தோள் ஒரு திடுக்கிடவைக்கும் கதை. கதையாக சொன்னாலே திடுக்கிடவைக்கிறது. என் அம்மாவுக்கு ஃபோனிலேயே கதையைச் சொன்னேன். கதை என்ற வடிவத்தின் முழுமை நிகழ்ந்திருக்கிறது. அந்த கோயிலுக்கு போனதுபோலவே தோன்றுகிறது

மூத்தவள் என்று ஏன் தீமையின் கடவுளை வைத்தார்கள் என்ற கேள்விக்கான விடை. இந்தப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அழுக்கு இருட்டு துன்பம் சாவு அனைத்துக்கும் அவள் தேவதை. அவளை ஒதுக்கவோ மறைக்கவோ முடியாது. அவளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

அவள் மடியில்தான் ஸ்ரீதேவி பகவதி அமர்ந்திருக்கிறாள். அவளுக்குத்தான் எல்லா பூசைகளும் நடக்கின்றன. எல்லா பூசைகளையும் அவளும் பெற்றுக்கொள்கிறாள். மக்கள் அறியாமையில் அவள்மேலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

 

சிவராம்

 

அன்புள்ள ஜெ,

 

இருநாட்களாக நிதியாள்கையில் மாநிலங்களுக்கு சுயநிர்ணயம் வேண்டும் ( தமிழகத்தின் வரிப்பணம் பீகாருக்குச் செல்கிறது,…) என்னும் குரலுடன் உரையாடிக் கொண்டிருந்தேன் மானசீகமாக. இன்றைய மூத்தோள் கதை எனக்கு அவ்விவாத்தின் ஒருபகுதியாகவே ஒலிக்கிறது.

பிரிட்டன் ஐரோப்பிய சங்கத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தபோது அதை, ‘சங்கத்திலுள்ள அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்காக சில நாடுகள் அதிகமாக பங்களிக்கத்தான் வேண்டியிருக்கும். அதற்காக சங்கத்தைக் கலைத்தால் பாதிப்பு அனைவருக்கும்தான்’ என்று எதிர்த்தவர்கள்கூட இன்று ‘தமிழகத்தின் நிதி…’ எனப் பேசுகிறார்கள். வடமாநிலங்கள் அவர்களுக்கு ஒதுக்கிய நிதியைச் சரியாகப் பயன்படுத்தவில்லையெனில் இன்றைய தேவை நிதியை முறையாக கையாளும் அமைப்பொன்றை உருவாக்குவதல்லவா? என் மாநிலத்தில் ஈட்டிய பணத்தில் உனக்கு பங்கு கிடையாது – நீ ஈட்டும் பணத்தைக் கொண்டு வளர் என்னும் வாதத்தை ஏற்றால், அதே வாதத்தை இங்குள்ள மாவட்டங்கள் வைத்தால் என்ன செய்வது? என்னிடம் வாங்கும் வரியை அரசாங்கம் எனக்கு மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்றால் அரசின் நலத்திட்டங்களுக்கு நிதி?

ஜெ, கஷ்மலங்கள் சூழ்ந்த மூதேவியென தூக்கியெறிந்துவிட்டு நாம் சர்வமங்கலை என நம்பும் தேவியை வணங்கலாம். ஆனால் நம் வணக்கத்தை ஏற்பது ஸ்ரீதேவிக்குப் பின்னுள்ள விஸ்வரூப ஜேஷ்டை அல்லவா? நல்லவேளையாக, என்னிடம் வாங்கும் வரியைக்கொண்டு தர்மபுரியை வளர்க்கிறாய் என சென்னைவாசிகள் குரலெழுப்பவில்லை. அதுவரை நல்லது.

 

இந்தக்கதைக்கும் நன்றி ஜெ.

 

அன்புடன்

செந்தில்நாதன்.

 

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு

$
0
0

வேணு வேட்ராயன் கவிதைகளைப்பற்றி

பூஜ்யம் என்பது எண் என்று அழைக்கும் வகைமைக்குள் எவ்வாறு வரும் என்பது எனது கணிதம் சார்ந்த நெடுங்கால பல குழப்பங்களில் ஒன்று.   வேணு வேட்ராயன் கவிதைத் தொகுப்பான அலகில் அலகு தொகுப்பின் கவிதைகள் எதற்கும் தலைப்பு இல்லை. வசதிக்காக எண்கள் மட்டும். பூஜ்யத்தில் இருந்து ‘எல்லாம்’ துவங்கியது போலவே, இத் தொகுப்பில் பூஜ்யத்தில் துவங்குகிறது கவிதை வரிசை.

சாந்தம் சாந்தம் சாந்தம் என்று நிறையும் பூஜ்யமாவது கவிதையில் துவங்கி பின்னோக்கி நேரே ஒரு கோடு இழுத்தால், அது பாரதியின் வசன கவிதையில் (குறிப்பாக  ஞாயிரு) சென்று முடியும். அந்த வசன கவிதையின் வேதாந்தப் பார்வையிலிருந்து ஒரு கோடு  இழுத்தால், அது வேணுவின் இந்த பூஜ்யமாவது கவிதையில் வந்து முடியும்.

பாரதியின் வசனகவிதை செறிவாக்கம்  கண்டு, க நா சு வழியே புதுக்கவிதை என நாமகரணம் பெற்று, எழுத்து, கசட தபற எனும் இயக்கங்கள் வழியே செழித்த இந்த வகைமை, நவீனத்துவ நோக்கு, பின்நவீன நோக்கு, இரண்டாயிரத்துக்குப் பிறகான இன்று வரையிலான போக்குகள் வழியே அது சாதித்தவை பல இருப்பினும், அது.அடிப்படையில் கலை  கையாள வேண்டிய ‘ஆத்மீகமான’ ஒன்றின் மீதானவிசாரணை சார்ந்து (மிகச் சிறு விதி விலக்குகள் தவிர்த்தால்) பாராமுகமே கொண்டிருந்தது.

நவீனத்துவம் செழித்த சூழலில் பிரதான உடைப்பை உருவாக்கினார் பிரமிள். கட்டறுத்த கொந்தளிப்பின் அழகியலை நிறுவினார். நேர் உணர்வுகளின் அருவ உலகை இயங்க வைத்தார் அபி . பின் நவீனத்துவத்துக்குப் பிறகான கவிதையின் அழகியலை, மொழியை, வடிவத்தை, சாராம்சத்தை நிறுவினார் தேவ தேவன். மூவரிலும் செயல்பட்ட பொதுத் தன்மையும், அது வரையிலான கவிதைகளின் சாராம்சத்திலிருந்து விலகிய தனித்தன்மையும் இம் மூவர் கொண்ட ‘ஆத்மீக’ நோக்கில் இருந்து உருவானது.

இந்த ஆத்மீக நோக்கு எனும் தனித் தன்மை, அதுவே அலகில் அலகு தொகுதியை, வேணுவை இன்றைய கவிதைகள், அதன் ஆளுமைகள் எனும் பொது ஓட்டத்திலிருந்து தனித்து, தனித்துவம் கொண்ட தொகுப்பாக ஆளுமையாக நிறுத்துகிறது.

லௌகீகமான விஷயங்களைப் பின்தொடரும் இத் தொகுப்பின் சில கவிதைகளை விட்டு விடலாம். ஒரு குழந்தை கண் முன் தெரியும் அனைத்து பொம்மைகளையும் இழுத்து வைத்துக்கொள்ளும். ஆனால் குறிப்பிட்ட சில பொம்மைகளை கொண்டே விளையாடும். காரணம் அதன் அக  உலகுடன் பிணைந்த ஒன்றாக அந்த குறிப்பிட்ட பொம்மையே  இருக்கும். அது போல இத் தொகுப்பில் வேணுவின் அகம் பெரிதும் பின்னிப் பிணைந்து நிற்பது, இருத்தல் சார்ந்த சாராம்சமான ஒன்றுடன்தான்.

நவீனத்துவம் பேசும், காலத்தின் முன் ‘நான்’ இயற்கையின் முன் ‘நான்’ என்று கூர்மை கொள்ளும், ‘நான்’ எனும் அலகு சார்ந்த இருப்பு அல்ல. சாராம்சமான இருப்புஅதுவே வேணுவின் நோக்கு. முதல் எனப்படுவது நிலமும் பொழுதும். தொல்காப்பியர் வகுத்தது. இத் தொகுப்பில் வேணுவே ஒரு கவிதையில் சொல்வது போல. இருத்தல் அதுவே முதல் என்றாகிறது.

 

ஒடுங்குதல்  நிகழ்கிறது

ஒவ்வொரு சாளரமாய்

தன்னை சாத்திக்கொள்கிறது.

 

நாட்கணக்கில் வனத்தில் திமிறிய களிறு

வெண்இதழ் மலரை கொய்து மெல்ல நீலவெளியில் வீசுகிறது.

 

*

அந்தரவெளியில் தனித்து நீந்தும்

வெண்மலர்.

 

*

புல்வெளியில் கூடடைந்த நத்தை

தன் மனவோட்டங்களை பின்தொடர்கிறது.

 

*

இருத்தல் முதல் என ஆகிறது.

 

இத் தொகுப்பின் கவியாளுமையை எல்லா விதத்திலும் பிரதிநிதித்துவம் செய்யும் கவிதை இது. சாராம்சமான ஒன்றினை அடிப்படையாகக் கொண்ட இந்த தொகுப்பின் கவிதைகள், புறவயமான சித்தரிப்பில் துல்லியமான உருவங்கள் வழியாகவும், அகவயமான சித்தரிப்பில் அருவமான அலகுகள் வழியாகவும் தொழிற்படுகிறது. புறவயமான சித்தரிப்புகள் சென் கவிதைகளில் தொழிற்படும் புறம் போல இருக்கிறது. ‘போல’ என்பது இங்கே முக்கியத்துவம் வாய்ந்த விகுதி. சென் கவிதையில் வரும் பட்டாம்பூச்சி, மகிழ்ச்சி, களங்கமின்மை என எதன் குறியீடாகவும் அமைவதில்லை. அங்கே பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிதான். இங்கே இத் தொகுப்பில் வரும் பட்டாம் பூச்சிகளும், யானையும், பறவைகளும், மீன்களும் கவிதையின் சாரம் வழியே அர்த்த சாத்தியங்கள் ஏற்றப்பட்ட ஒன்று.

 

உதாரணமாக

 

எல்லா குளங்களிலும் மிதக்கிறது

ஒரே நிலா.

 

இது ஒரு சென் கவிதை.

 

சிறு சிறு குட்டைகளில்

தேங்கி நிற்கிறது

 

முன்னொரு காலத்தின் பெருநதி.

 

அவை ஒவ்வொன்றிலும்

உதித்தெழுகிறது

அதிகாலைச் சூரியன்.

 

இது தொகுப்பிலுள்ள கவிதை. முன்னொரு காலத்தின் பெருநதி யை ‘கண்டு சொல்பவன்’ அதுவே வேறு பாடு.

 

நதிநீரில் முகம்காணும் கரைமலர்கள்.

அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள்

மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர்.

செந்தளிர்களில் ஒளிரும் உயிரின்  சுடர்.

 

இத் தொகுப்பின் புறவயமான சித்தரிப்பு அதன் வழியே, ஆத்மீக சாரம் ஒன்றை நோக்கிய நகர்வு எனும் அழகியலுக்கு சிறந்த உதாரணம் மேற்கண்ட கவிதை. இந்த வரிசையிலேயே அலகில் அலகு பொருத்தி அலைகளில் ஆடும் தன்னை அருந்திச் செல்லும் பறவை கவிதையும் அமைகிறது.

 

அகவயம் சார்ந்த இரண்டாம் வகைமைக்கு-

 

இழையில் பிணைந்திருக்கும் மனங்கள்.

வெளிறிய சாம்பல் உறையில் உறங்கும்

வெஞ்சினத்தின் கங்கு.

சிலருக்கென்றே பூக்கும் வாடாமலர்ச் சிரிப்புகள்.

நனைந்திருக்கும் கூந்தலில்

மலர்சூடும் நதிநீர்க்கரங்கள்.

நீரற்ற ஓடைமேல் சருகுகள்

புரளச்செய்யும் காற்று.

ஆழ்ந்த உறக்கத்தில்

உறைந்திருக்கும் காட்சிக்குவியல்கள் .

கணப்பொழுதில் பற்றிமேலேறும்

எண்ணக் கொடிகள்.

விழிப்பில் உறங்கி இருளில் நீந்தும் கனவு மீன்கள்.

*

ஆயிரமாயிரம்

சிறகுகளின் பறவை

 

ஒரு கணத்தில்

ஒரு திசையில்

நகர்கிறது.

 

காலமற்ற

வெளியுமற்ற நிலையில்

அது நிலைக்கிறது

 

மேற்கண்ட கவிதைகளை உதாரணம் சொல்லலாம்.

 

காலமும் வெளியும் அனுபவ மண்டலத்தில் நிகழ்த்தும் மாயம் மீதான இரு கவிதைகள், தத்துவம் கால் வலிக்கும்போது அது கவிதையில் அமர்ந்து இளைப்பாரிக்கொள்ளும் என்று எவரோ சொன்னதன் இலக்கிய சாட்சியம்.

 

முடிவின்றி

சொட்டிக்கொண்டிருக்கும்

கடிகார முட்கள்.

 

அடியற்ற ஆழத்தில்

விழுந்துகொண்டிருக்கும்

காலத்துளிகள்.

 

 

நீரில் விழும்

ஒரு துளி நீலம்.

 

உடைந்து சிதறும்

கண்ணாடிக் குடுவை.

 

வெளியினில்

நீந்தி விளையாடும் மீன்கள்.

 

தேவ தேவன். அவருடைய மொழியும், நோக்கும் இத் தொகுப்பின் பல கவிதைகளில் (13, 23, 60) இழைந்து  நிற்கிறது. பசும்பாலில் தித்திப்பு போல .குறிப்பாக பன்னிரண்டாவது கவிதையான அசடன் கவிதையில்.

தேவ தேவன் உள்ளே வரும்போதே இயல்பாக வாசக மனம் தேவ தச்சன் எங்கேனும் தென்படுகிறாரா எனத் தேடும். என் நோக்கில் தேவ தச்சன் வடிவத்தால் மொழியால் நோக்கல் முற்றிலும் தேவதேவனுக்கு மாறானவர். தேவ தச்சச்சன் ‘பிரக்ஞயின்’ குறிப்பிட்ட நிலை குறித்து மட்டுமே பெரும்பாலும் கவனம் கொள்பவர். அந்த குறிப்பிட்ட ப்ரக்ஞய்   நிலையை கைப்பற்றும் வடிவத்தை தேர்ந்தவர். உதாரணமாக தேவதச்சனின் எனது காலை உணவு கவிதையை சொல்லலாம். கை  மட்டுமாக இருக்கும் பிரக்ஞ்சை நிலை குறித்த கவிதை அது. மொழியாலும் வடிவத்தாலும் இந்த நிலையை கைப்பற்ற ஒரு ‘லாவகத்தை’ கையாளுகிறார் தேவதச்சன். இதற்க்கு நேர் எதிர் நிலை  தேவ தேவன். வேணு இந்த தொகுப்பில் அபி  மற்றும் தேவ தேவன் இவர்களுக்கே அணுக்கமாக இருக்கிறார். எட்டாவது கவிதையான பலூன் குட்டிகள் மட்டும் சற்றே தேவ தச்சன் உலகின் அருகே வருவது என்று சொல்லலாம்.

மொத்தத் தொகுப்பிலும் விலகி நிற்கும்தனித்துவமான அழகிய கவிதை பதினோராவது கவிதை. அதில் ஒரு கதை இருக்கிறது. காதல் கதை. பார்வை நோக்கு point of view இருக்கிறது. அவளது நோக்கில் சொல்லப்படும் கதை. அவள் காதலனுடன் கொள்ளும் பயணத்தில் அவள் அடைந்த சுவாரஸ்யமான கணங்களில் ஒன்று, டோல்கேட் ஊழியர் அவள் காதலனை பார்த்து சிங்கிளா டபுளா என கேட்கும் கணம்.  காதலன் நிலையோ வேறு. அவனது இடம் இங்கே. அவனது நேரம் இக் கணம். இந்த நிலையில் வாழ்பவன் வசம்தான் அந்த வினா வந்து விழுகிறது.

தேவ தேவன் வசம் ஒரு வாசகர் வினவினார். ஏன் கவிதைகள் மீதான அக்கறை மட்டும் வாசிப்பு சூழலில் குறைவாக இருக்கிறது? தேவ தேவன் சொன்னார் வாழ்வனுபவம் மீதான அக்கறை குறைவு உதாசீனம் என்றும் இதை சொல்லலாம். இதன் பொருள் தேவ தேவன் நோக்கில் கவிதையும் வாழ்வனுபவமும் வேறு வேறு அல்ல என்பதே. இதன் படி நவீனத் தமிழ் கவிதை வரலாற்றில் பிரமிளும், அபியும், தேவ தேவனும் முன்வைத்த வாழ்வனுபவம் முற்றிலும் தனித்தன்மை கொண்டது. சமூக ஆழ்மனதின் சாராம்சம் மீது திகழ்வது. ஒட்டு மொத்த மானுடமும் வாழ்வனுபவம் என்று எதை உணர்கிறதோ, அதை முதல் அடியாகக் கொண்டு துவங்குவது ஆத்மீக சாதகனின் பயணம். ரமணரின் பயணம். மானுட இருப்பின் உச்ச சாத்தியம் ரமண நிலை. அந்த நிலை, அந்த வாழ்வனுபவங்களை பிரதிபலிக்க, மொழியினூடாக சென்று எட்ட முனைந்தவர்களே மூவரும். அவர்களின் தொடர்ச்சி என்றே வேணுவின் துவக்கம் நிகழ்கிறது.

மொழியில் திளைத்தல், புதிய புதிய சொல்லிணைவுகள், புதிய புதிய படிமங்கள், சமன்வயம் வாய்ந்த உணர்வு நிலை, நவீனத்துவத்தின் கூர்மையும் கச்சிதமும், மேலான உணர்வு நோக்கிய கொந்தளிப்பு இரண்டும் பிசிர் இன்றி முயங்கிய வடிவம் என இந்த தொகுப்பில் தனது வருகையை காத்திரமாக நிறுவி இருக்கிறார் வேணு.

 

வேங்களிறேறி

காரிருள் வனத்தில்

செந்தழல் கனி தேடுதல்.

இலக்கிய கர்த்தா அந்த ஆத்மீக சாதகனின் அதே தேடுதல் கொண்டவன்.

 

செந்தழல் கனி தேடுவது.

 

அது காரிருள் வனம். சரியான ஒரே பாதையை தேர்வதற்குள் பலநூறு

பிழையின் பாதையில் சென்று மறைய எல்லா வாய்ப்பும் உண்டு.

 

அக் கனி தேடும் அந்த இருள் வன பயணத்தை கடக்கத் தேவைப் படுவதோ, வேங்கையும் வேழமும் என்றான ஒன்று.

அந்த வினோத விலங்கின் கால்தடத்தை வாசகர் இத் தொகுப்பின் வழியே அறியலாம்.

நண்பரும் கவியுமான வேணு வேட்ராயன் அவர்களின் இந்த அலகில்  அலகு தொகுதி குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெற்றமைக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது

ஒரு துளி நீலம்– சுனில் கிருஷ்ணன்

வெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து

குமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி

வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

$
0
0

“கிறுக்குக்கூவான் மாதிரி பேசுதான் சார். அடிச்ச அடியிலே மண்டையிலே என்னமாம் களண்டிருக்குமான்னு சந்தேகமா இருக்கு” என்றார் சாமுவேல்.

“கூட்டிட்டு வாரும்வே, பாப்பம்” என்றேன்.

“எல்லாம் நடிப்பு… நாம பாக்காத நடிப்பா?” என்றார் மாசிலாமணி. “அடி எங்க படணுமோ அங்க படணும்… மணிமணியாட்டு சொல்லுவான்.”

“பாப்பம்… அவனுக்கு அடிபடவேண்டிய இடம் உடம்பிலே இல்லியோ என்னவோ” என்றேன்.

சாமுவேல் மோசஸை அழைத்து வந்தான். குள்ளமான கருப்பான இளைஞன். பெரிய உதடுகள், பெரிய கண்கள். மிகச்சிறிய காதுகள் தலையோடு ஒட்டியிருந்தன. குட்டையான காய்த்துப்போன விரல்கள். இரண்டுநாளில் அடர்த்தியாக தாடி எழுந்து முட்புதர்போல நின்றது.

“உக்காருடே” என்றேன்.

“வேண்டாம்சார்’ என்றான் பணிவுடன் கும்பிட்டு. அவன் தோள்கள் அத்தனை வலுவானவை என்பதை நான் கவனித்தேன்.

“உக்காரு… உங்கிட்ட பேசணும்” என்றேன்.

“வேண்டாம் சார்” என்றான்.

கையை ஓங்கியபடி, “டேய் உக்காரச்சொன்னா உக்காருடா,வெண்ணெ” என்றார் மாசிலாமணி.

அவன் சட்டென்று அமர்ந்துகொண்டான். உடம்பு நடுங்கத் தொடங்கியது.

“மாசு, நீரு கொஞ்சம் வெளியே நில்லும். ஸ்டீபன் நீயும் வெளியே நில்லு. கதவைச் சாத்து”

அவர்கள் வெளியே சென்று கதவைச் சாத்தினர்.

“இங்கபாரு, நான் சும்மா போட்டு அடிக்குத ஆளில்லை. எனக்கு கேஸுதான் முக்கியம். கேஸிலே நீ கெடந்து பெலம் பிடிச்சு ஒரு காரியமும் இல்லை. எங்களுக்கு வேண்டிய எவிடென்ஸு கிட்டுத வரை நாங்க விடமாட்டோம். நாங்க சொல்லுறது கோர்ட்டிலே நிக்கணும்னு இல்லை. உனக்கு காசிருந்தா, நல்ல வக்கீலை வச்சு உடைச்சுப்போட்டு வெளியே போ. அரசியலிலே ஆளிருந்தா வேணுமானா இப்பல்லாம் பப்ளிக் பிராசிக்யூட்டரையே போயி பாத்திருதானுக” என்றேன்.

அவன் பெரிய கன்றுக்குட்டிக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான் நான் சொல்வது புரிகிற்து என்று தெரிந்தது.

“படிச்ச கிரிமினலுங்க யாரும் இப்டி கிடந்து அடிதிங்க மாட்டானுக. இங்க எல்லாத்தையும் மணிமணியா சொல்லிடுவான். ஆகிறத கோர்ட்டிலே பாத்துக்கிடுவான். இங்கேருந்து எவ்ளவு சீக்கிரம் வெளியே போகமுடியுமோ அந்த அளவுக்கு நல்லதுன்னு நினைப்பான்” என்றேன்.

அவன் ஒன்றும் சொல்லாமல் அதே பார்வையுடன் அமர்ந்திருந்தான்.

“சரி, அங்க நடந்தது என்ன? சொல்லு. உண்மையைச் சொல்லணும்”

“சார், நான் ஆரம்பத்திலே இருந்தே உண்மையைத்தான் சார் சொல்லுதேன்.”

“சரி, சொல்லு” என்றேன். “நீயே நடந்ததை எல்லாம் சொல்லிடு… ஆரம்பத்திலே இருந்தே சொல்லணும்.”

“சரி சார்.”

“உன் பேரென்ன? அதிலே இருந்து தொடங்கு.”

“சார், என் பேரு மோசஸ்… அப்பன் பேரு ஞானப்பன். அப்பன் நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்பவே விட்டுட்டு போய்ட்டாரு. எனக்கு அம்மை மட்டும்தான். அம்மையும் டீசண்டு கிடையாது” என்று அவன் சொன்னான். தயங்கி “டீசண்டுன்னா, அம்மைக்கு வேற வளியில்லை. நாங்க நாலு பிள்ளைங்க. எங்களுக்கு தீனி போடணும். எங்க ஏரியாவிலே ஆம்பிளை இல்லா பொம்பிளை மானமா வாழவும் முடியாது.”

“சரி, என்ன படிச்சே?”

“நான் பள்ளிக்கூடம் போனது ரெண்டாம்கிளாஸு வரையாக்கும் சார். அங்க என்னை மத்தபயக்க அம்மையைச் சொல்லி கேலிசெய்யுததை புரிஞ்சுகிடத் தொடங்கினதும் நிப்பாட்டிட்டேன். இரும்புக்கடையிலே வேலைக்கு போனேன். அங்கியே ராத்திரி படுத்துக்கிடுவேன். அங்க முதலாளி கொஞ்சம் அன்பா இருந்தாரு. எட்டுவருசம் அங்க வேலைபாத்தேன்.”

“அங்கேருந்துதான் ஆரம்பமா?” என்றேன்.

“ஆமா சார்… அங்க இருக்கிறப்ப கொஞ்சம்கொஞ்சமா பயக்ககூட சுத்தத் தொடங்கினேன். இங்க மொட்டவிளையிலே என்னைய மாதிரி பயக்க கூடுதலாக்கும் சார். எல்லாவனுக்கும் குடிப்பளக்கம் உண்டு. பல காரியங்கள் செய்து கையிலே காசும் வச்சிருப்பானுக. மொரட்டுப் பயக்க. எல்லாவனுகளுக்கும் சினிமாவெறி. ஆளுக்கொரு நடிகனுக்க ரசிகனுங்களா இருப்பானுக”

“அவனுக கூட நான் ஏன் சேந்தேன்னு இப்ப நினைச்சு நினைச்சு பாக்குதேன். எனக்கு வேற ஆளே இல்ல சார். இரும்புக்கடையிலே நான் ஒரு நாயி, பூனை மாதிரியாக்கும். அப்டித்தான் நடத்துவாங்க. அப்பதான் சுல்தான்னு ஆக்கர்கடை பய ஒருத்தன் பளக்கமானான். அவன் கூப்பிட்டான்னு ஒருநாள் சினிமாவுக்கு போனேன். அப்டியே இந்த கேங்குலே பளக்கமாயிட்டேன்” மோசஸ் சொன்னான்.

“இங்க எல்லாவனும் நல்லா பேசுவானுக, சிரிப்பானுக. சார், நான் சிரிக்க கத்துக்கிட்டதே இவனுககூட சேர்ந்தாக்கும். முன்னாடி எனக்கு சிரிக்கவே தெரியாது சார். ஆமா சார் நான் சிரிக்கதே இல்லை… இவனுககூட நல்லா சுத்துவேன். ராத்திரியிலே நைசா வெளியே போயி சேந்துகிடுவேன். செக்கண்ட் ஷோ படம் பாப்போம். நல்லா பரோட்டா பீஃப் திம்போம். செலவுக்குச் சின்ன களவுகள் செய்வோம்…”

“ரெண்டு வருசம் அவனுககூட இருந்த வாழ்க்கை இப்பமும் அப்டி இனிப்பா ஞாபகம் இருக்கு சார். நான் செத்தாலும் அதை மறக்க மாட்டேன். என்னவா ஆனாலும் அவனுககூட சேந்தது தப்புன்னு சொல்லமாட்டேன்” என்று மோசஸ் சொன்னான்.  “மொட்டவெளையிலே சரவணன் குரூப்பு ஆமோஸ் குரூப்புன்னு ரெண்டு உண்டு. நான் ஆமோஸ் குரூப்பாக்கும்”

“பிறவு என்ன ஆச்சு?” என்றேன்.

“எனக்கு வருமானம் திகையல்ல. பகலந்தி வரை கம்பி வளைச்சா அறுவது ரூவா தருவாரு மொதலாளி… அதனாலே அடிக்கடி இரும்புச்சாமான்களை திருடினேன். ஆக்கர்கடை சுல்தான் பயதான் ஐடியா குடுத்தான். எடுத்து அவனுக்க வண்டியிலே போட்டிருவேன். அவன் பாதிப்பைசா தருவான். அதை வைச்சு கேங்கிலே செலவளிப்பேன்.”

“முதலாளி பாத்திட்டே இருந்திருக்காரு, நான் ராத்திரி போறதெல்லாம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் சரியாட்டு பொறிவச்சு பிடிச்சுப்போட்டாரு. ’நன்னிகெட்டா நாயே’ன்னு அடிக்க வந்தாரு. இரும்பு ராடை எடுத்து அவருக்க முளங்காலிலே அடிச்சேன். அவரு விளுந்துட்டாரு. நான் அந்தாலே ஓடிட்டேன்.”

“அப்றம் கேங்கிலேதான், இல்லியா” என்றேன்.

“ஆமா சார். முளுக்க கேங்கிலேதான்… அவனுக எல்லாரும் பலஜோலிகள் செய்வானுக. பகலிலே வேலை செய்யுத வீட்டிலே ராத்திரி போயி வெளியே கிடக்குத சாமான்களை தூக்கிட்டு வந்திருவானுக…”

“அப்டித்தான் திருட்டு ஆரம்பிச்சது இல்ல?” என்றேன்.

“ஆமா சார், சின்னச் சின்ன திருட்டுதான் சார் எல்லாமே. ஆளில்லா வீட்டுக்குத்தான் போவோம். வெளியே கிடக்குத எதையாவது எடுத்திட்டு வந்திருவோம். பிறவு பூட்டை உடைச்சு திருட ஆரம்பிச்சோம்… வாரம் ஒரு ஆட்டைய போட்டா போரும் சார். பகல்ல எங்கயாவது உறங்குவேன்.”

“மோசே, நீ சர்ச்சுக்கு போறதுண்டுன்னு சொன்னியாமே.”

“ஆமா சார்.”

“அங்க கையைச் சாத்தலாம்னு பாத்தியோ.”

அவன் பேசாமல் இருந்தான்.

“சொல்லு”

“இல்ல சார்… “

“டேய், சொல்லு” என்றேன்.

“சார் நான் உண்மையான விசுவாசியாத்தான் சார் போறேன்.”

“திருடுறது சாவான பாவம் இல்ல?” என்றேன்.

“சார், நான் செய்யுதது எல்லாமே சாவான பாவம்தானே?” என்றான். “ஆனா பாவிகளே எனக்ககிட்ட வாருங்கன்னுதானே ஆண்டவரு சொல்லுதாரு?”

“அது சரி.”

“நான் ஒருக்க மேலவெளை சர்ச்சு பக்கமாட்டு போனேன். ரோட்டிலே போறப்ப அங்க உள்ள குருவானவர் பிரசங்கம் செய்யுததைக் கேட்டேன். என்னமோ ஒரு மனசு நடுக்கம் உண்டாச்சு… அளுதிட்டே நின்னுட்டிருந்தேன். கையை நெஞ்சுமேலே வச்சு கும்பிட்டே நின்னேன். அப்டியே ஓரோ வாத்தையாட்டு கேட்டுட்டே இருந்தேன்…” என்றான் மோசஸ்.

பிறவு எல்லாரும் கிளம்பிப் போனாங்க. சர்ச்சிலே ஆருமே இல்லை. நான் மெதுவா பாத்து உள்ள போனேன். அங்க யாருமே இல்லை. ஆல்டர்லே மாதா குளந்தை ஏசுவை கையிலே வச்சுகிட்டு வானத்திலே பறந்திட்டிருக்க மாதிரி நின்னா. பெரிய சிலுவைக்கு லைட்டு போட்டிருந்தது. ஆகாசம் மாதிரி கூரை. அதிலேருந்து வரிசையாட்டு நிறைய ஃபேன் தொங்கிட்டிருந்தது. தேக்கிலே பெஞ்சும் டெஸ்கும் போட்டிருந்தது. நான் மாதாவை பாத்துட்டு நின்னேன்.

நான் அதுக்கு முன்னாலே சர்ச்சுக்கு போனது எனக்க அம்மைக்க கூட. அம்மையும் சர்ச்சுக்கு தனியாத்தான் போவா. அவ போறப்ப அங்க யாருமே இருக்கிறதில்லை. அதேமாதிரி வெளிச்சமா, கலரா, மைதானம் மாதிரி காலியாத்தான் இருக்கும். நல்ல ஞாபகம் இருக்கு. அம்மை சேலையை தலையிலே போட்டுட்டு முட்டுகுத்தி உக்காந்து அளுவா.

அம்மை ஜெபம் செய்து நான் பாத்ததில்லை. அளுதிட்டே இருப்பா. சத்தமே இல்லாம கண்ணீரு விளுந்திட்டிருக்கும். பிறவு பெருமூச்சோட எந்திரிச்சு வெளியே போயி திரும்பி பாத்து சிலுவை போட்டுட்டு என்னைய கூட்டிட்டு நடப்பா. அப்ப அவகிட்ட ஒண்ணுமே பேசக்கூடாது. திருப்பிப் பேசமாட்டா. அடமாட்டு என்னமாம் பேசினா அடிவிளும்.

“நான் அங்க மண்டியிட்டு சும்மா கொஞ்சநேரம் இருந்தேன். அம்மைய மாதிரி எனக்கும் கண்ணீராட்டு வந்திட்டிருந்தது. அரைமணிக்கூர் அங்க இருந்து அளுதேன். பிறவு அப்டியே வந்திட்டேன். அதுக்குப்பிறவு அடிக்கடி அங்க போவேன். வெளியே நின்னு பாப்பேன். யாருமே இல்லேன்னா உள்ள போயி கொஞ்சநேரம் அளுதிட்டு வந்திருவேன்” என்றான் மோசஸ்.

“உன்னை யாருமே பாத்ததில்லையா?” என்று நான் கேட்டேன் “யாரும் எதுவும் கேக்கல்லியா?”

“இல்லை சார். கோயில்குட்டி பாத்திருப்பாரு. ஆனா ஆரும் ஒண்ணும் கேக்கல்ல.”

“எவ்ளவு நாளாட்டு போறே?” என்றேன்.

“ஒரு, ஒரு ரெண்டு வருசம் இருக்கும் சார்.”

“பிரசங்கம் கேக்க போவியா?”

“ஆமா சார், வெளியே நின்னு கேப்பேன். ரொம்ப தள்ளி ரோட்டிலே நின்னு கேப்பேன்.”

“மோசே, நீ அங்க முதல்ல கேட்ட பிரசங்கம் என்ன? அதிலே ஏதாவது ஞாபகம் இருக்கா?”

அவன் பேசாமலிருந்தான்.

“சொல்லு, ஞாபகமிருக்கா… ஏதாவது.”

“இருக்கு சார்.”

“சொல்லு, என்ன அது?”

“அது வெளிப்படுத்தின விசேஷம், எட்டாம் அதிகாரம், முதலாம் வசனம்.” என்றான் மோசஸ் “அவர் ஏழாம் முத்திரை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைநாழிகை நேரமளவும் அமைதி உண்டாயிற்று.”

“அது என்ன வசனம்.”

“சொர்க்கவாசல் திறக்குத நேரம் சார். பிதாவானவர் வைச்ச ஏழு முத்திரைகளிலே ஏழாவது முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைக்கிற எடம்” என்று மோசஸ் சொன்னான். “அதோடே நியாயத்தீர்ப்புநாள் தொடங்கும். கல்லறைகள் உடைஞ்சு திறக்கும். செத்தவங்கள்லாம் எந்திரிச்சு வருவாங்க. வானமும் பூமியும் அக்கினியால் மூடப்படும். ஏசுவானவர் புனித அங்கியும் கிரீடமும் சூடி வானத்திலே தோன்றுவார்”

நான் கைகளை கோத்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன.

“மோசே, உனக்கு படிக்கத்தெரியுமா?” என்றேன்.

“தெரியாது சார்.”

“பைபிள் படிக்கணும்னு தோணலையா?”

“நான் பைபிள் கேப்பேன் சார்…ரேடியோவிலே. ஒவ்வொருநாளும் கேப்பேன். ராத்திரியும் கேப்பேன்… “

“பைபிள் உனக்கு எந்த அளவுக்குத் தெரியும்?”

“கொஞ்சமாட்டு தெரியும் சார்.”

நான் “ம்” என்றேன். பெருமூச்சுடன் “சரி, இப்ப இந்த விஷயத்துக்கு வாறேன். நீங்க போன பத்தாம்தேதி எம்.கே.ஆபிரகாம் வீட்டுக்கு திருடப்போனீங்க இல்லியா?”

“ஆமா சார்”

“யாரெல்லாம்? எப்டி திட்டம்போட்டீங்க? எல்லாம் சொல்லு…” என்றேன்.

அவன் தலைகுனிந்து சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பிறகு “ஜோசப்பும் மரியானும் செபஸ்தியும்தான் எல்லா திட்டங்களையும் போட்டாங்க சார். எனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்க குமுதா சிக்கன்லே பரோட்டா தின்னுட்டிருந்தப்ப மரியான் ‘எங்கிட்ட ஏல உங்கிட்ட ஒரு விசயம் பேசணும் வா’ன்னு கூப்பிட்டான். என்னைய வெளியே கூட்டிட்டுப் போனான். அவன் கணபதி கடையிலே சிகரெட்டு வாங்கி கொளுத்தி ஊதிகிட்டு எங்கிட்ட ரகசியமாட்டு இந்த ஐடியாவ சொன்னான்”

“என்னன்னு?”என்றேன்

“இந்த மாதிரி ஒரு வீட்டுலே ஒரு ஆட்டைய போட ஐடியா இருக்குன்னு சொன்னான். அங்க புருசன் பெஞ்சாதி ரெண்டுபேருதான் நாலுநாள் இருப்பாங்க. புருசன் ரிட்டயர்டு மிலிட்டரி. அறுவது வயசு. பெஞ்சாதி அம்பது வயசு. பிள்ளைங்க எல்லாம் அந்த வீட்டிலேதான்.  ‘அவங்க எல்லாரும் இவங்க ரெண்டுபேரையும் விட்டுட்டு பாளையங்கோட்டையிலே ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. வாறதுக்கு அஞ்சுநாள் ஆகும். இன்னிக்கு ராத்திரியே கையைச் சாத்திருவோம்னு ஐடியா இருக்குலே’ன்னு மரியான் சொன்னான்”

“எனக்கு இரும்புவேலை தெரியும், அதாக்கும் என்னை அவன் கூப்பிட்டது. அங்க சன்னலிலே ஒரு கிரில்லு இருக்கு. அதை சத்தம் கேக்காம அறுக்கணும். உள்ள சிலசமயம் பீரோவை பூட்டி சாவிய பிள்ளைங்க கொண்டுட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கு. அப்ப பீரோவையும் உடைக்கவேண்டியிருக்கும்.  ‘வாறியாலே? நூறுபவுனுக்கு குறையாது பாத்துக்க. நாலிலே ஒண்ணு விகிதம், நான் கேரண்டி’ன்னு மரியான் சொன்னான். ‘ஜோசேப்புதான் கேக்கச் சொன்னான். நான் உனக்க கூட்டுக்காரன் ஆனதனாலே கேக்குதேன்’ன்னு சொன்னான்.”

“நீ சம்மதிச்சே?”

“ஆமா சார்”

“மோசே நான் நேரடியா கேக்கேன். நீ சின்னச்சின்ன திருட்டுகள் செய்தவன். இவ்ளவுபெரிய ஆட்டைக்கு போக எப்டி சம்மதிச்சே? ”

“தேவை இருந்தது சார்.”

“என்ன தேவை? செட்டில் ஆகணும்னு நினைச்சியா?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“ஏதாவது லவ்வு, அந்த மாதிரியா?”

“இல்ல சார்.”

“பின்ன?”

“எனக்க அம்மைய ஒருதடவை பாத்தேன்…”

“ஓ.”

“தற்செயலாட்டுத்தான் பாத்தேன். அம்மை  தனியாட்டு இருந்தா. ரொம்பக் கிளவியா ஆயிருந்தா. ஒரு தண்ணித்தொட்டிக்கு அடியிலே சட்டிபானையோட குடியிருந்தா. ஒப்பம் நாலஞ்சு சொறிநயிங்க. அவ வயித்துப்பாட்டுக்கு பிச்சை எடுத்திட்டிருந்தான்னு தெரிஞ்சுது. நாலுபிள்ளையளும் விட்டுட்டு போயிட்டோம். அவளுக்கு வேற கெதியில்லை. அவ காலுரெண்டும் வீங்கி பெரிசா துணிமூட்டை மாதிரி இருந்தது”

மோசஸ் சொன்னான். “நான் தூரத்திலே நின்னு பாத்தேன். பக்கத்திலே போயி என்னான்னு கேக்கலாம்னு நினைச்சேன். ஆனா கையிலே அப்ப ஒத்த ஒரு ரூபாகூட இல்லை. பக்கத்திலே போனா கிளவி பைசா கேப்பா… அந்தாலே திரும்பி வந்திட்டேன். பிறவு போகவே இல்லை”

“அம்மாவுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சே?” என்றேன்.

“ஆமா சார், கொஞ்சம் பைசா இருந்தா குடுக்கலாம்னு நினைச்சேன். நெறைய பைசா வரும்னா அவளைக் கொண்டுபோயி எங்கயாவது அனாதைவிடுதியிலே சேத்திடலாம்னு தோணிச்சு. டெப்பாசிட்டு குடுத்தா சோறுபோட்டு வச்சுக்கிடுவாங்க”

“சரி, அதுக்காக இவனுக கூட சேந்துகிட்டே” என்றேன். “சொல்லு, எப்டி நடந்தது கிரைம்?”

“நான் ஒரு வர்க்‌ஷாப்பிலே தங்கியிருந்தேன். அங்கபோயி வேண்டிய சாமான்களை எடுத்துக்கிட்டு வந்தேன். நாலுபேருமாட்டு சினிமாவுக்கு போனோம்… செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு கையிலே டிக்கட்டு வச்சிருக்கிறது நல்லதாக்கும். மரியானுக்க பைக்கிலே நான். ஜோசப்புக்க பைக்கிலே செபஸ்தியான். சினிமா பாத்துட்டு மறுபடியும் பரோட்டா சிக்கன் சாப்பிட்டோம். பைக்கை கொண்டுபோயி ஓரு சந்திலே நிப்பாட்டி நம்பர் பிளேட்டுகளை மாத்தினோம். மெதுவா பெத்தேல் நகருக்கு போனோம்.”

“எத்தனை மணி இருக்கும்?”

“ராத்திரி பின்னேரம் ரெண்டுமணி இருக்கும்…”

“மழை இருந்தது இல்ல?”

“ஆமா சார் சாரல் மழை உண்டு” என்றான் மோசஸ். “அந்த வீட்டுக்கு நல்ல பெரிய காம்பவுண்டு. ஒரு சடைநாயி உண்டு. பொரிச்ச சிக்கனிலே பாலிடால் கலந்து வச்சிருந்தான் ஜோசப்பு. அதை தூரத்திலே இருந்து எடுத்து வீசினோம்.”

“ஏன்?”

“ஆளைப்பாத்தா நாயி சாப்பிடாது. சும்மா வீசினா மோப்பம் புடிச்சு வரும். அதை வேட்டையாடி திங்குறதா நினைச்சுக்கிடும்”

“சாப்பிட்டு செத்துப்போச்சு”

“ஆமா, குரைக்கமுடியாம மயங்கினதுமே நாங்க ஏறிக்குதிச்சிட்டோம். நான் உள்ளே உக்காந்து கேட்டை பூட்டின பூட்டை அறுத்தேன்”

“எதுக்கு?”

“திரும்பி ஓடுறப்ப கேட்டு திறந்திருந்தா நல்லது. ஏறிக்குதிச்சா யாராவது பாத்திருவாங்கள்லா?”

“பூட்டை அரம் வச்சு அறுத்தியோ?”

“ஆமா சார் ரோலிங்பிளேடுள்ள அரம். அங்க கார்ஷெட்டிலே இருந்த பல்பை ஜோசப்பு உருவினான். அந்த ஹோல்டரிலே பிளக்கை மாட்டி வயர் கனெக்ட் பண்ணினேன். பூட்டு மேலே பழைய துணிய சுத்திட்டு அறுத்திட்டேன். ஒரு சின்ன வண்டு மாதிரி சத்தம் வரும். அல்வா மாதிரி வெட்டீரலாம்”

“அப்றம்?” என்றேன்.

“பைக்கை உள்ள கொண்டுவந்து கார்ஷெட்டிலே நிப்பாட்டினோம். வெளியே நிப்பாட்டினா யாருக்காவது டவுட் வந்திரும்னு ஜோசப்புக்க நினைப்பு.”

“உள்ள போகவும் கிரில்லை வெட்டினீங்க?”

“ஆமா சார், கொல்லைப்பக்கம் சன்னல் திறந்திருந்திச்சு. கிரில்லை நான் ரோலிங்ராடு வச்சு  அறுத்தேன். சின்ன கேப் வந்திச்சு. ஜோசப்பு ஒல்லியான ஆளு. பாம்பு ஜோசப்புன்னுதான் அவனுக்கு பேரு. அவன் நுளைஞ்சு உள்ள போயிட்டான். அவன் கதவைத் திறந்தப்ப நாங்க உள்ள போனோம்.”

மோசஸ் சொன்னான் “ரப்பர் சோல் செருப்பு போட்டிருந்தோம். கையிலே கிளவுஸு உண்டு. இருட்டிலே பென்டார்ச் அடிச்சு மெல்ல தேடிட்டு போனோம். பீரோ இருக்கிற ரூமெல்லாமே பூட்டியிருந்தது. சத்தம் கேக்காம உடைக்க முடியாது. அப்ப கிழவரை மிரட்டி உக்கார வைச்சாகணும்…. ”

அவங்க தூங்கிட்டிருந்த அறைக்கதவு திறந்துதான் இருந்தது. ஜோசப்பும் மரியானும் உள்ள போனாங்க. கிழவர் பயந்துபோய் எந்திரிச்சதும் ஜோசப்பு சட்டுன்னு இரும்புக் கம்பியாலே மண்டையிலே ஒரு அடிய போட்டான். அப்டியே மயங்கி விழுந்திட்டார். பேச்சு மூச்சு இல்லை.

மரியான் குனிஞ்சு பாத்தான். மூச்சு இல்லை. ‘டேய் ஆளு போய்ட்டாண்டா’ன்னு சொன்னான். நான் பயந்திட்டேன். செபஸ்தி பேசாம இருன்னு என் கையை பிடிச்சான்.

கிழவி எந்திரிச்சு கும்பிட்டுட்டு நடுங்கிட்டிருந்தா. கண்ணீரு வழிஞ்சிட்டிருந்தது  ‘சத்தம் போட்டா உன்னையும் கொன்னிருவோம்… மரியாதையா சாவிகளை எடு’ன்னு ஜோசப்பு சொன்னான்.

கிழவி அழுதிட்டே ‘எங்கிட்ட சாவியெல்லாம் இல்ல மக்கா… அதெல்லாம் மருமகளுக கொண்டுட்டு போயிட்டாளுக’ன்னு சொன்னா.

‘அப்ப சத்தம் காட்டாம உக்காந்துக்கோ… மூச்சு வந்தா சொருகீருவேன்’ன்னு மரியான் சொன்னான்.

மரியான் முதல்ல வெளியே வந்தான். ஜோசப்பு வெளியே வாரப்ப சட்டுன்னு கிழவர் பாய்ஞ்சு எந்திரிச்சு அவன் காலைப்பிடிச்சு தள்ளிட்டார். அவரு சாகல்ல. மரியான் திரும்பி அவர் மண்டையிலே மறுபடியும் ஒரு அடிய போட்டான். அப்டியே விளுந்திட்டாரு.

மரியான் அவருக்க மூக்கிலே காலை வச்சு பாத்து ‘ஒளிஞ்சான், எளவு பேயி மாதிரில்லாடே எந்திரிக்கான்’ன்னு சொன்னான்.

நான் நடுங்கிட்டு நின்னேன். ஜோசப்பு ‘செபஸ்தி, நீ கிளவிய வாயை கெட்டிப்போட்டுட்டு வா’ன்னு சொன்னான். செபஸ்தி உள்ள போனான்.ஜோசப்பு  எங்கிட்ட ‘ஏல போயி ரூமுகளுக்க பூட்டை உடை. சீக்கிரம், நேரமில்ல’ன்னு சொன்னான்.

நான் முதல் அறைக்க பூட்டை உடைச்சேன். உள்ள பீரோ இருந்தது. அப்டியே ரோலிங்ராடை கொண்டுட்டு போயி பீரோவோட தகரத்தை வெட்டி உள்ள கையவிட்டு இளுத்து கொக்கியை தாழ்த்தி திறந்தோம். உள்ளயும் சினனப்பெட்டியை திறக்க ரெண்டு தகரத்தை வெட்டினேன். உள்ள நகை இருந்தது. ஜோசப்பு அதை எடுத்தான்

மோசஸ் சொன்னான் “மரியான் எங்கிட்ட  ‘லே வா, அந்த மத்த ரூமை நீ திற’ன்னு சொன்னான். நாங்க வெளியே போறதுக்குள்ள இருட்டிலேருந்து வாறது மாதிரி அந்தக் கிழவர் செபஸ்தி மேலே பாய்ஞ்சிட்டாரு…”

“ஆபிரகாம் பட்டாளத்தாரா?” என்று நான் கேட்டேன்.

“ஆமா, அவருதான். அவரு சாகல்லை” என்றான் மோசஸ். “செபஸ்தி கீழே விழுந்தான். அவன் சத்தம்போடக்கேட்டு மரியான் ஓடிவந்து இரும்புக் கம்பியாலே அவருக்க வயித்திலே குத்தி எறக்கிட்டான். அவரு கிடந்து துடிச்சாரு. மொசைக்கு தரையெல்லாம் ரத்தம்… செபஸ்தி எந்திரிச்சப்ப ரத்தத்திலே சறுக்கிச்சறுக்கி விழுந்தான்”

அவன் அப்டி ஒரு வெறியோட குத்தினான். ரத்தவாடை குமட்டிட்டு வந்தது. என் கை நடுங்கிட்டே இருந்தது. ‘சீக்கிரம் பூட்டுகளை திறங்கலே’ன்னு ஜோசப்பு சொன்னான்.

நான் இன்னொரு ரூமுக்க பூட்டை உடைச்சேன். அங்கயும் ஒரு பீரோ. அதையும் உடைச்சேன். மரியான் அதிலே இருந்து நகையை எடுத்திட்டிருந்தான். அப்ப ஜோசப்புக்க சத்தம் கேட்டுது. என்னன்னு பதறி ஓடிப்போனா ஜோசப்பு நைலான் பையோட தரையிலே கிடக்கான். அவனை பிடிச்சு உருட்டுதாரு அவரு, ஆபிரகாம் பட்டாளத்தாரு.

செபஸ்திக்கு வெறி ஏறிப்போச்சு. நாயிமாதிரி உறுமிக்கிட்டே பாய்ஞ்சுபோயி அவருக்குமேலே ஏறி பிடிச்சு அந்தாலே போட்டு இடுப்புலே இருந்து கத்தியை எடுத்து கண்டமானிக்கு குத்தினான்.

‘லே, வேண்டாம், போரும்லே, ஆளு செத்துட்டான்…விடு’ன்னு சொல்லி மரியான் அவனைப் பிடிச்சு இளுத்து தூக்கினான்.

‘விடுலே என்னை… இந்த பிசாசு எந்திரிச்சு வந்திட்டே இருக்கு. இதுக்கு சாவு இருக்கா இல்லியான்னு பாக்கேன்’னு செபஸ்தி சத்தம்போட்டான்.

மரியான் ‘போயி கையை களுவுலே… அம்பிடும் ரத்தம்’ன்னு சொன்னான்.

செபஸ்தி பாத்ரூம் கதவை திறக்கிறப்ப ஆபிரகாம் பட்டாளத்தாரு முழிச்சுகிட்டு கையை ஊனி தலையை தூக்கினாரு. “டேய்’னு அலறிகிட்டு பாய்ஞ்சு அவரை மறுபடி குத்தி புரட்டி அந்தால போட்டான் செபஸ்தி. ரத்தத்திலே முங்கி சேத்துலே பன்னி மாதிரி அவரு கிடந்தாரு.

கொஞ்சநேரம் அப்டியே நின்னோம். “செரிலே நடந்தது நடந்துபோச்சு… சோலிய பாப்பம்’னு ஜோசப்பு சொன்னான்.

நாங்க அந்த உடம்ப பாத்துட்டு திரும்பி அறைக்குள்ள போறப்ப அவருக்க கை பாம்பு மாதிரி நீண்டு வந்து தேடுறதை பாத்தோம். ஜோசப்புக்கே வெறி வந்துபோட்டு ‘இவன் என்ன எனம் பிசாசுலே’ன்னு சத்தம் போட்டுட்டு ராடை வச்சு அவர் மண்டையிலே மாறி மாறி அடிச்சான். பல்லைக்கடிச்சு ‘சாவுலே சாவுலே’ன்னு சொல்லிட்டே அடிச்சான்.

அவருக்க கைவிரலு ஒண்ணொண்ணா வில்லறுந்து நிக்குததை பாத்தேன். வாயி திறந்து கண்ணு மலைச்சு கிடந்தாரு.  ‘செத்தான் நாயி’ன்னு சொல்லி துப்பிக்கிட்டு ஜோசப்பு எந்திரிச்சான். ‘வாலே, சோலியை பாப்பம்… போகணும்’னு சொன்னான்.

அவன் காலை எடுத்து வைச்ச அதேச்மயம் அவருக்க கை நீண்டு புழு  மாதிரி எந்திரிச்சுது. “சாவுலே சாவுலேன்னு சொல்லிட்டு ஜோசப்பு மறுபடியும் அவரை அடிச்சு சதைச்சு போட்டான்.

மறுபடி அறைக்குள்ள போனப்ப நாங்க எல்லாருமே நடுங்கிட்டிருந்தோம். நான் ‘என்னலே இது’ன்னு சொன்னேன்.

‘ஏன்?’ன்னு ஜோசப்பு கேட்டான்.

‘என்னமோ தப்பா இருக்கு. அவருக்கு ஏதோ அருளிருக்கு… ஆறுதடவை செத்துட்டு திரும்ப வந்திட்டாரு’ன்னு சொன்னேன்.

‘சும்மா கெடலே. லே, அந்த பைய எடு’ன்னு ஜோசப்பு சொன்னான். நான் பையை எடுத்து குடுத்தேன். பீரோவிலே வெள்ளிப்பாத்திரம் இருந்தது. கொஞ்சம் பட்டுசாரியும் இருந்தது. அதை அவன் எடுக்க ஆரம்பிச்சான்

செபஸ்தியான் எங்கிட்ட ரகசியமா ‘என்னலே சொல்ல வாறே?’ன்னு கேட்டான். ‘

‘ஆறுவரவுன்னா அருளிருக்குன்னு அர்த்தம். ஏழாம் வரவுலே வாறது வேறயாக்கும்’னு நான் சொன்னேன்.

‘வேறன்னா?’ன்னு அவன் கேட்டான்.

‘வேறன்னா…’ன்னு சொல்லிட்டு  மேலே சொல்ல எனக்கு தெரியல்ல. பிறவு. ‘அதுக்குமேலே அமைதின்னாக்கும் வேதத்திலே சொல்லுகது’ன்னு சொன்னேன்.

ஜோசப்பு எங்கிட்ட  ‘ஏல அங்க என்ன முணுமுணுப்பு… சும்மா கெடயுங்கலே, செவுளிலே வச்சு சாத்தீருவேன்’ன்னு சொன்னான். ‘போங்க போயி எல்லா வார்ட்ரோபையும் பாருங்க’

நானும் செபஸ்தியானும் வெளியே போனப்ப நான் ஆபிரகாம் பட்டாளத்தாரை பாத்தேன். செத்து வாயைப்பிளந்து கிடந்தாரு. கண்ணு திறந்து ரெண்டு வெள்ளைச்சிப்பி மாதிரி இருக்கு.

‘செத்துட்டானாலே?’ன்னு செபஸ்தியான் கேட்டான்

‘ஆமா’ன்னு நான் சொன்னேன்.

‘முளுக்க செத்திட்டானா?’ன்னு செபஸ்தியான் மறுக்கா கேட்டான்.

நான் பேசாம நின்னேன்.

‘பக்கத்திலே போயி பாருலே’ன்னு செபஸ்தியான் என்னை உந்தினான்.

நான் ‘இல்ல, போக மாட்டேன்’னு சொன்னேன்.

‘ஏன்?’ன்னு அவன் கேட்டான்.

‘நான் போகமாட்டேன்’ன்னு சொன்னேன்.

‘அப்ப அந்தாள் சாவல்லேன்னு நினைக்குதியா?’

‘ஆறுதடவை எந்திரிச்சிருக்காரு’ன்னு நான் சொன்னேன்.

‘அப்ப மறுபடி எந்திரிப்பாரா?’ன்னு செபஸ்தியான் கேட்டான்.

‘எந்திரிக்கக்கூடாது’ன்னு நான் சொன்னேன். ‘எந்திரிச்சா பிரச்சினைதான்.’

‘ஏலே, என்னலே பிரச்சினை?’ன்னு செபஸ்தியான் பயந்துபோயி கேட்டான்.

‘எனக்கு தெரியல்ல… ஆனா ஏளாம்வரவுன்னாக்கும் பைபிள் சொல்லுகது’ அப்டீன்னு நான் சொன்னேன். “ஏழாம் வரவுக்குப்பிறகு அமைதியாக்கும்”

‘ஏலே அங்க என்ன செய்யுதீக? வார்ட்ரோபை பாத்தியளா?’ன்னு ஜோசப் கத்தினான்.

நானும் செபஸ்தியும் கதவைத் திறந்து படுக்கையறைக்கு உள்ள போனோம். மெத்தையிலே கிளவி செத்துக்கிடந்தா. தலையிலே இருந்து ரெத்தம் மெத்தை முளுக்க பரவியிருந்தது.

‘அய்யோ, ஆருலே கிளவிய கொன்னது?’ன்னு நான் கேட்டேன்.

‘ஜோசப்பு கொல்லச் சொன்னான்லே… கிளவனை கொன்னுட்டு இவளை மட்டும் விட்டுட்டு போனா சாட்சி சொல்லிருவா… வா, வார்ட்ரோபை பாரு’

வார்ட்ரோபிலே துணிக்குள்ள ஒரு பத்துபவுன் செயின் இருந்தது. செபஸ்தி கிளவிக்க  கையிலே இருந்து வளையலையும் மோதிரத்தையும் களட்டினான். கம்மலை களட்ட முடியல்லை. அவன் கத்தியாலே வெட்டி எடுத்துக்கிட்டான்.

நாங்க மறுபடி ஹாலுக்கு வந்தோம். அங்க கிழவருக்க பிணம் அப்டியே கிடந்தது. செபஸ்தி கிட்டக்க போயி குனிஞ்சு பாத்தான். பயந்துபோயி பின்னால வந்து  ‘சிரிக்காரு’ன்னு சொன்னான்.

‘யாரு?’ன்னு கேட்டேன்.

‘இங்கபாரு… சிரிக்காரு’ன்னு செபஸ்தி சொன்னான்.

கிளவருக்க முகம் வலிச்சுகிட்டு பல்லு தெரிஞ்சுது. ‘இது வலிப்பாக்கும்’னு நான் சொன்னேன்.

‘சிரிச்சுக்கிட்டே செத்திருக்காரு’ன்னு செபஸ்தி சொன்னான்.

ஜோசப்பு வெளியே வந்து, ‘பாத்தாச்சாலே? போலாமா?’ன்னு கேட்டான்.

‘பாத்தாச்சுன்னு’ செபஸ்தி சொன்னான். ‘உள்ள ஒண்ணும் இல்ல’

மரியான் வந்து ‘போலாம்லே… எப்டியும் நூத்தியிருபது பவுனு தேறும். முப்பதாயிரம் ரூவாயும் இருக்கு… போரும்… கெளம்பிருவோம்’

‘நேரா போகமுடியாதுலே… உடம்பெல்லாம் ரெத்தம். பட்ரோலுபோலீஸ் பாத்தா நேரா செயிலுதான்’

‘அதுக்காக குளிக்க முடியுமா?. ஈரத்தோட போனா என்னன்னு கேக்கமாட்டானுகளா’

ஜோசப் கிழவரைப் பாத்துட்டு ‘லே, இவன் நம்ம சைசுதான்…இவன் சட்டை இருக்கான்னு பாரு. இவனுக்க பிள்ளைகளுக்க சட்டைகளும் இருக்கும்’னு சொன்னான்.

மரியான் வார்ட்ரோபிலெ போயி நாலு சட்டையை எடுத்துட்டு வந்தான். மார்பிலே வச்சுப் பாத்தப்ப எல்லாமே ஓரளவு சைஸ் சரியா இருந்தது.

‘அப்டீன்னா பேண்டையும் மாத்திருவோம்லே… நேரா களியக்காவிளை தாண்டீருவோம்’னு ஜோசப் சொன்னான். ‘இங்க எங்க போனாலும் ஆட்டைய போட்டுட்டோம்னு பயக்களுக்கு தெரிஞ்சிரும். போட்டுக்குடுத்திருவானுக’

ஜோசப் துணிகளை முழுக்க களட்டிட்டு ஜட்டியோட பாத்ரூமுக்குள்ள போயி நல்லா சோப்பு போட்டு கையையும் முகத்தையும் களுவிட்டு வந்தான். அதுக்குப்பிறகு மரியானும் செபஸ்தியானும் துணிகளை களட்டீட்டு போயி களுவினாங்க. நான் கடைசியா துணியில்லாம போயி சோப்பு போட்டு உடம்பைக் களுவினேன்.

துடைச்சுட்டு புதிய சட்டையும் பேண்டும் போட்டோம். பளைய துணிகளை சுருட்டி ஒரு பிளாஸ்டிக் கவர்லே போட்டு எடுத்துக்கிட்டோம். “ஏல இதை ஒரு கல்லு வச்சு கட்டி தெக்குக்குளத்திலே போட்டிடணும் கேட்டியா? ரத்தவாசம் நாயிக்கு நல்லா தெரியும். போறவளியெல்லாம் குரைக்கும்’னு ஜோசப்பு சொன்னான்.

எடுத்த சாமான்களை பையிலே போட்டுக்கிட்டோம். நான் ரோலிங்ராடையும் மத்த சாமான்களையும் எடுத்தேன். கொல்லைப்பக்கம் வழியா வெளியே வந்தோம். ஜோசப்பு   “ஒரு செக்கண்டு நில்லுங்கலே”ன்னு கையை காட்டினான்.நாங்க நின்னோம்.

ஜோசப்பு “மரியான், நீ நம்மளை யாராவது பாத்திருக்கானான்னு பாரு. செபஸ்தி நீ வீட்டுக்குள்ள எதையாவது மறந்திட்டோமான்னு நினைச்சுப்பாரு… கிளியர் ஆனாத்தான் கெளம்பணும்’னு சொன்னான்.

மரியான் பாத்துட்டு  ‘யாருமில்லை’ன்னு சொன்னான்.

அப்ப செபஸ்தி “அய்யோ!’ன்னு சொன்னான். மூச்சுமாதிரி. ஆனால் அதிலே அப்டி ஒரு பயம் இருந்தது.

“சார், நான் திரும்பிப் பாத்தேன். அங்க ஆபிரகாம் பட்டளத்தாரு நின்னிட்டிருந்தாரு” என்று மோசஸ் சொன்னான்.

‘செத்தவரு?” என்று நான் கேட்டேன்.

“ஆமா சார், செத்து எந்திச்சிட்டாரு”

“ஏழாவது வரவு?”

“ஆமா சார்”

“பிறகு?”

“ஜோசப்பு திரும்பிப்பார்த்தான். ‘லே இவன் என்னலே சாகவே மாட்டானா’ன்னு சத்தம் போட்டுட்டு கத்தியை உருவிட்டு அவரை கொல்லப்போனான்.  மரியானும் ‘கொல்லுலே அவனை’ன்னு கத்திட்டு குத்தப்போனான். நான் ‘வேண்டாம்லே, வேண்டாம்லே, அவரு ஆளுவேறயாக்கும்’னு கத்தினேன். அவனுக கேக்கல்ல” என்று மோசஸ் சொன்னான்.

நீண்டநேரம் அமைதி நிலவியது. மேலே மின்விசிறி சுற்றிக்கொண்டிருக்கும் ஓசை மட்டும் கேட்டது. மோசஸ் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

பிறகு நான் அசைந்து அமர்ந்தேன். “மோசே, அவனுக மூணுபேரையும் யாரோ அங்க மண்டையிலே அடிச்சு கொன்னு போட்டிருந்தாங்க…” என்றேன். “போலீஸு வாரது வரை நீ அங்க உக்காந்திட்டிருந்தே.”

மோசஸ் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

“அவங்களை நீதானே கொன்னே?”

“இல்ல சார்.”

“அவங்க நீ சொன்னதைக் கேக்கல்ல, அவங்களை பின்னாலே நின்னு ஏதோ இரும்புக் கம்பியாலே அடிச்சே. இல்லேன்னா சுத்தியலாலே. அந்த ஆயுதம் எங்க? அதைமட்டும் சொல்லிரு.”

“இல்ல சார், அம்மை சத்தியமா இல்லை. பிதாசுதனாவி மேலே சத்தியமா இல்லை.நான் கொல்லல்லை.”

“பின்ன யாரு கொன்னது?”

“அவருதான் சார், ஏழாவதா எந்திரிச்சு வந்தவரு… அவரு ஆளு வேற சார். நான் கண்ணாலே பாத்தேன் சார்.”

நான் என்னை தொகுத்துக் கொண்டேன். மிகமிக இயல்பான குரலில் கேட்டேன்.  “மோசே, ஏழாவதா வந்தது என்ன?”

அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

”நீ பாத்திருக்க்கே”

அவன் தலையை அசைத்தான்.

”சொல்லு நீ பாத்தது என்ன?”

அவனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை, நான் மீண்டும் கேட்டேன் “சாத்தானா?”

அவனுடைய இறுகிய முகத்தை சற்றுநேரம் பார்த்துவிட்டுக் கேட்டேன் “கடவுளா?”

அவன் அசைவில்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். நான் கைகளை மார்பில் கட்டியபடி அவனைப் பாத்துக்கொண்டிருந்தேன். மேலே மின்விசிறி சுழன்றுகொண்டிருக்கும் ஒலி. வெளியே நாய்களின் குரைப்பொலி. கார் ஒன்று சீறிச்செல்லும் ஓசை. என்னைச் சுற்றி ஒவ்வொன்றும் அமைதியாக இருந்தது.

***

தொடர்புடைய பதிவுகள்

வம்புகள், புலம்பெயர் இலக்கியம்-கடிதங்கள்

$
0
0

 

புலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்

 

அன்புள்ள ஜெ

நேற்று எனக்கும் என் நண்பருக்கும் இடையே சுவாரசியமான ஓர் உரையாடல் நடந்தது. அவர் கொஞ்சம் இடதுசாரி- திமுக கலவை. நான் அவரிடம் உங்கள் அன்னம் கதையைப் பற்றிப் பேசியபோது ‘ஜெமோவை கழுவிக்கழுவி ஊத்துறாங்களே’ என்றார். நான் சொன்னேன். சரி, ஒன்றுசெய்யுங்கள். டிவிட்டர், ஃபேஸ்புக்கில் ஜெயமோகன் என்று அடித்து தேடிப்பாருங்கள். வரும் கருத்துக்களில் எவை எந்த சதவீதத்தில் இருக்கின்றன, என்ன கண்டெண்ட் என்று பாருங்கள் என்றேன். உடனே தேடினோம்.

ஒவ்வொருநாளும் பத்து இருபது பதிவுகள் உங்களைப்பற்றி டிவிட்டர், ஃபேஸ்புக்கில் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மை உங்கள் படைப்புக்களில் இருந்து தங்களை பாதித்த வரிகளை பலர் மேற்கோள் காட்டியிருப்பது, உங்கள் படைப்புகளைப் பற்றிய கருத்துக்கள். அதற்கு கொஞ்சம் குறைவாக எதிர்மறை கருத்துக்கள். நாங்கள் தேடியபோது உங்களை வாசித்து மேற்கோள் காட்டியவர்கள் ஒருபக்கம். மறுபக்கம் இருந்தவர்கள் அத்தனைபேரும் புளிச்சமாவு என்று சொல்லி ஏதாவது வசையோ நையாண்டியோ செய்தவர்கள்.

நான் அந்த நண்பரிடம் கேட்டேன். உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள்.உங்கள் அரசியலை விடுங்கள். நீங்கள் அறிவார்ந்த தேடல் கொண்ட ஒரு இளைஞன் என்றால் இந்த இரண்டு தரப்புகளில் எதை தேர்வுசெய்வீர்கள்? அவர் உண்மைதான். ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவரை ஒரு பொறுக்கிக்கூட்டம் எதிர்ப்பதுமாதிரித்தான் தெரிகிறது என்றார்.

நான்  சொன்னேன். அதுதான் உண்மை. வாசிக்க வருபவன் வெறும் அரசியல்தொண்டன் அல்ல. அவனுக்கு சென்சிபிளிட்டி உண்டு. உங்கள் காழ்ப்புகளை எல்லாம் அவன் பங்குவைக்க மாட்டான். அவன் இந்த வரிகளில் ஏதாவது ஒரு வரியால் இன்ஸ்பையர் ஆவான். இப்படி ஆழமோ புரிதலோ இல்லாமல் நக்கலும் வசையும் செய்பவர்கள் மேல் கசப்புதான் வரும் அவனுக்கு. இப்படித்தான் அவருக்கு வாசகர்கள் வருகிறார்கள் என்றேன்.

அவர் மனம் மாறவில்லைதான். அவரே எதையாவது படிக்கும் வரை மனம் மாறப்போவதுமில்லை. ஆனால் அவரால் பதில்சொல்லமுடியவில்லை

 

டி.செந்தில்குமரன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நேற்று உங்கள் இணையத் தளத்தில்  உங்களது உரையொன்று பற்றிய  ஆசி.கந்தராஜா அவர்களின் ஆதங்கத்தினையும், அதற்கான உங்கள் பதிலினையும் கண்டேன்.

ஒருவரது உரையின் காணொளி   அல்லது எழுத்தின் சிறு பகுதிகளை இன்னொருவர்  வெளியிடும்  போது இவ்வாறான கருத்துச் சிக்கல்கள் தோன்றுவதற்கு இடமுண்டு. ஒருவரின் உரையின் முக்கியமான பகுதியை சமூக ஊடகங்களில்  பகிரும் ஒருவர்  முழுக் காணொளியின் இணைப்பை முதலாவது கருத்துப் பதிவிலேனும் பகிர்ந்தால் ஆர்வம் உள்ளவர்கள் அதை பார்த்து தமது புரிதல் நியாயமானதுதானா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

உங்களது குறிப்பிட்ட உரையினை முழுமையாக, கவனமாக கேட்டேன். நவீன இலக்கியத்தின் வகைப் பாடுகளாகக்  கருதப்படும்  நான்கு முக்கிய தலைப்புகளில்  மிகச் சிறப்பாக உரை ஆற்றியிருக்கிறீர்கள். அந்த உரையைக் கேட்பது இனிமையான அனுபவமாகவே இருந்தது.  கலாசார பன்மைத்துவ இலக்கியம்,புலம்பெயர் இலக்கியம், பாரிய அல்லது கூட்டு இடம்பெயர்வின் பின்  எழுதப்படும் இலக்கியம், விளிம்பு நிலையாளர் பற்றிய இலக்கியம் என்ற தலைப்புகளில் விரிவாகவும், இவ்வகை எழுத்துக்களில்  உதாரண எழுத்தாளர்கள் ஒரு சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டும் இந்த உரை அமைந்திருந்தது.

புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளில்  அ.முத்துலிங்கம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது கலாச்சார பன்முகத் தன்மையை பிரியத்துடனும்,  மனவிரிவுடனும், மானுட சமத்துவத்துடனும் அணுகிய ஒரே எழுத்தாளர் என்றால் அது முத்துலிங்கம் தான் என்பதை வெகு  அழுத்தமாகவே பதிவு செய்திருந்தீர்கள். ஆனால் ஆசி.கந்தராஜா அவர்களுக்கான பதிலில் அப்படிப்பட்ட தொனி வந்திருக்குமாயின் அது தவறு என்பதையும் கூறியுள்ளீர்கள்.

எனினும் ஒரு சபையில் ஆற்றப்படும் இத்தகைய உரையானது  புலம்பெயர் வாழ்வு, பன்னாட்டு கலாசார விழுமியங்கள், பண்பாட்டு மாற்றத்தினை எதிர் கொள்ளும் சிக்கல்கள் என்பன பற்றித் தனது இலக்கிய எழுத்தின் மூலம் பற்பல படைப்புகளைத் தந்த ஒரு பிரபல இலக்கியவாதியை ஆதங்கம் கொள்ளச் செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனது பேரபிமானத்துக்கு உரிய எழுத்தாளர் என்ற வகையில் ஆசி.கந்தராஜா அவர்களின் ஆதங்கத்தை நான் மிகவும் நியாயமானதாகக் கருதுகிறேன்.

நான் வியந்து நோக்கும் எழுத்துக்கள் உங்களுடையவை. இவ்வளவு தகவல்களும்,தரவுகளும்  உங்கள் நினைவுக் கலங்களில் எவ்வாறு நிலைநிறுத்தப் படுகின்றன என்ற பிரமிப்பு அடிக்கடி எழுவதுண்டு.உங்கள் எழுத்துக்கள் புரியாதிருக்கும் போது ஒரு வித ஆற்றாமையும் ஒவ்வாமையும் கூடவே வருவதுண்டு. வாசித்தலில் ஆர்வமிருந்தாலும் இத்தகைய எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொறுமை எல்லோருக்கும் வாய்க்குமா என்பது சந்தேகமே. ஆனாலும்  தொடர்ந்து வரும் வாசகர் கடிதங்கள் எனது புரிதலை மேம்படுத்த உதவுகின்றன. வாசிக்க முடிந்த சமீபத்தைய கதைகளில் யாதேவி, கூடு,போழ்வு, இணைவு ,பத்துலட்சம் காலடிகள்,பலிக்கல்ஐந்து நெருப்பு, லீலை ஆகியன முக்கியமானவை.

அதே சமயம் எனது புரிதலுக்கும், தேடலுக்கும் ஏற்ற வகையில் வேறு பல எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் நல்ல எழுத்துக்களையும் விரும்பி வாசிக்கிறேன். ஒவ்வொருவருக்கும்  ரசனைகள் தனித்துவமானவை. அன்பு வாழ்த்துக்களுடன்

 

ரஞ்ஜனி சுப்ரமணியம்

கொழும்பு

 

ஜெமோ சார் ,
உங்கள் கதைகளை எழுத்துக்களை வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். இது ஒரு முடிவற்ற ஆனந்தமாக உள்ளது. ஆங்கிலம் மற்றும் அறிவியல் மூலம் எனது வயிறு நிரம்புகிறது.. தமிழ் மற்றும் உங்கள் எழுத்துக்கள் மனம் நிரம்புகிறது. உங்களது கதைகள், உங்களது வாசகர் கடிதங்கள், பிற எழுத்தாளர்கள் மற்றும் உங்களைப்பற்றிய பற்றிய வம்புகள் என உங்களது தளம் உயிர்ப்புடன் உள்ளது.நானும் உங்களது வாசகராக உள்ளேன் என்பதே ஒரு பெரும்பேறு.

அன்புடன்
செல்வராஜ் சுப்புராஜ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ராஜன்,மலையரசி- கடிதங்கள்

$
0
0

68.ராஜன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ராஜன் சிறுகதை படித்ததும் தோன்றியது: பூதங்கள் நம் உத்தரவுகளை நிறைவேற்றும் தான்.ஆனால் அது பூதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்‌.நம் எல்லைக்குட்பட்ட வாழ்வை தாண்டியவர்கள்.கண்ணண் நாயர் விளக்கை தேய்த்ததும் “உத்தரவு ஏமானே ” என கைக்கூப்பி வணங்கினாலும் “யானைக்க விஷம் வச்சா கொல்லுதவன கொல்லுவேன்” என கம்பீரம் காட்டுகிறான்.

 

அன்புடன்

பாலா

 

அன்புள்ள ஜெ

 

ராஜன் ஒரு அழகான சிறுகதை அந்தச்சிறுகதையை நான் பதினைந்துநாட்களுக்கு முன்பு வாசித்தேன். வாசித்த கொஞ்சநாளிலேயே கேரளத்தில் யானை கொல்லப்பட்ட செய்தி வந்தது. யானையிடமிருந்து பெற்ற நாடு கேரளம். ஆனால் அதை யானையை அழித்து நிலைநாட்ட விரும்புகிறார்கள்

கேரளமக்களின் தொன்மங்களில் யானை எப்படியெல்லாம் இடம்பெற்றிருக்கிறது. அங்கே அது ஒரு விலங்கு மட்டும் அல்ல. அதைக்கொல்வது என்பது மூதாதையரையும் தெய்வங்களையும் கொல்வதுதான். ஆனால் இன்று உருவான மனநிலை அல்ல. ராஜன் கதையிலேயே மிகச்சரியாக இன்றைய நிகழ்ச்சிக்கான மனநிலை உள்ளது. பழத்தில் ஆர்சனிக் வைத்து அந்த யானையை கொல்ல அனுப்புகிறார் அந்த நாயர்

இங்கே கொல்லப்பட்ட யானை என்பது அம்மை யானை. அது உன்னும் ஆழமான அர்த்தம் கொண்டது

 

ராஜாராம்

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

பல கதைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நீங்கள் உருவாக்கும் அந்த புனைவுநிலத்தை அழகாக எங்களுக்குள் விரிந்து வரச்செய்துவிடுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், மலையரசி, லட்சுமியும் பார்வதியும் போன்ற கதைகளை ராஜன் போன்ற கதைகளுடன் இணைத்துப்பார்க்கவேண்டும். ராஜன் கதையில் கேரளநிலமே பிடியானையிடமிருந்து பெற்றது என்று வருகிறது. பார்வதிபாய் ஒரு பிடியானைதானே?

 

ராஜீவ்குமார்

அன்புள்ள ஜெயமோகன்

மலையரசி தங்களின் பிறகதைகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது. பார்வதி அன்னை சொன்ன ”நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்… ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறது” என்னும் இடம் நெருடுகிறது . நேர்மையும், திறமையும் mutually exclusive eventsஆ  என்ன?

பார்வதி தேவி அலகில்லாத கருணையும் அலகில்லாத குரூரமும் கொண்ட பராசக்தியாக  இருந்து பெரும்  பஞ்சத்திலிருந்து காக்க மகனான  ஸ்வாதித் திருநாள் மகாராஜாவுக்கு ஸ்வர்க்க ஸாயுஜ்ய பதவியையும் பெற்றுத் தருகிறார் .

கோபால்
புனே

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

 

 

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

அன்னம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

அன்னம் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் ஆழ்ந்த கவித்துவமான படிமம்- அன்னமே மானுடத்திரளும் அவர்கள் உண்ணும் உணவும் என்ற வரி- அதை கவிதையாக ஆக்குகிறது. ஆனால் ஒரு சந்தேகம் வந்தது. இந்தக்கதை யானைடாக்டர், கெத்தேல்சாயபு கதை போன்றவை eulogy போன்று ஆகிவிடுகிறதல்லவா? நவீன இலக்கியத்தில் இவற்றுக்கான இடம் உண்டா? இதை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்

சிவராம்

 

அன்புள்ள சிவராம்,

போல என்ன eulogyயேதான். நவீன இலக்கியம் என்பதற்கு ஏதாவது வரையறை உண்டா என்ன? இருந்தால் அதை மீறுவதுதானே உடனே எழுத்தாளன் செய்யவேண்டியது? எதையும் எழுதலாம் என்பதுதான் நவீன இலக்கியம் உருவாக அடித்தளமாக அமைந்த மனநிலை. அந்த மனநிலையின்படியே வாழ்க்கையின் கீழ்மைகள், இருண்டமதிப்பீடுகள் எல்லாம் எழுதப்பட்டன. இன்று அதையே இலக்கணமாக ஆக்கி வாழ்க்கையின் கீழ்மைகள், இருண்டமதிப்பீடுகள் எழுதப்பட்டால்தான் நவீன இலக்கியம் என்கிறார்கள். எந்த ஒருசெயலும் ஏராளமானவர்களால் செய்யப்படும்போது, சற்றே காலப்பழக்கம் வரும்போது அது இப்படி ஒரு பொது இலக்கணமாக ஆகி, தேய்வழக்குகளக மாறுவது இயல்பானதுதான். ஆனால் படைப்பூக்கம் அதை கடந்தே செல்லும். இலக்கணங்களில் அது நிற்பதில்லை. இன்று விழுமியங்களை எழுதுவதே ஒரு அபாரமான மீறலாக மாறிவிட்டிருக்கிறது

Eulogyயை எழுதலாமா? எழுதலாம், அதை எழுதுபவன் எழுதப்படுபவன் அளவுக்கு அக்கதையில் உயரமுடிந்தால்- கதைக்குள்தான் எழுத்தாளனால் அது இயலும். நான் எழுதும் இம்மானுடர் கற்பனையானவர்கள் அல்ல. நான் அறிந்தவர்கள். அவர்களை எழுதலாம், எழுதவேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு வரவே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அன்றும் இன்றும் என்றும் மாமனிதர்களைப் பாடுவது கலையின் இயல்புதான். கடமையும்கூட

எழுத்தாளனின் ஆணவம், தன்னுணர்வு எழுதவைக்கிறது. ஆனால் கலைக்குள் அது மடிந்து பணியும் இடமும் வந்தாகவேண்டும். எழுத்தாளன் தன்னை மிகச்சிறியவனாக உணரும் இடங்களில் இருந்தே மெய்யான அகத்தூண்டலை அடைவான். நான் அவ்வாறு அடைந்த பல மகத்தான மானுடர்கள் உள்ளனர். அவர்களை சந்தித்தேன் என்பது என் தகுதிகளில் ஒன்று. அன்னம் சாகிப் அவர்களில் ஒருவர்.

ஜெ

 

ஜெ. வணக்கம்!

ஹைத்தம் இப்ராஹிம் நூரைன் என்றொரு சூடான் பழங்குடியின காட்டரபியுடன் எனக்கு பழக்கம் இருந்தது. மூவாயிரம், நாலாயிரம் ரியால் சம்பாதித்த எளிய மனிதன். (வளைகுடா நாட்டின் குமாஸ்தாவுக்கான சிறிய சம்பளம், அப்பொழுது – அதாவது 1990-களில்)  தெருவில் கண்ணுக்குத் தட்டுப்படும் எதொவொரு பெங்காலி இல்லாமல் சாப்பிடமாட்டான்.

தஞ்சை ரெஸ்டார்ண்ட், மெட்ராஸ் மெஸ் என்ற ஓட்டல்களில் தமிழ் வார இதழ்களையும் விற்றுக் கொண்டிருந்தனர். அதேபோல அங்கு நம்மூர்க்காரர் ஒருவரை பல்தியா எனப்படும் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுடன் அடிக்கடி பார்ப்பேன். பெரும்பாலும் ஈழ அகதிகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். வேறு வேறு ஆட்கள், நாற்றம் பிடிக்கும் குப்பை லாரிகளில் பணிபுரியக்கூடியவர்களை வயிறார பசியாற்றுவதை தர்மம், கடமை என்றெல்லாம் பெரிய ஜோடனைகளற்று மிக இயல்பாக செய்துகொண்டிருந்தனர். வள்ளலாரும், ஜீவாவும் இவரின் ஆதர்சங்கள்.

பிரபஞ்சன் எழுதிய “பாயம்மா” என்று கதையொன்றுள்ளது. ரொம்பச் சாதாரண கதையது. “காஃபிர்களின் கதை” என்று கீரனூர் ஜாகிர்ராஜா தொகுப்பிலும் தனியாக வேறொரு பதிப்பகம் (அனேகமாக நற்றிணை) வெளியீடாகவும் வந்துள்ளது. தாகூரும், பாரதியும்கூட இவ்வாறு முஸ்லிம்களைப் பற்றி கதைகளை எழுதியுள்ளனர். தலைக்கெட்டு காதர், கெத்தெல் சாயுபு வரிசையில் அப்துல்ரஹ்மான் ஹாஜி வரிசை “முஃமின்களின் கதைகள்” என்பேன்.

நீங்க நல்லவரா? கெட்டவரா என்று “மும்பை – பம்பாய்” படத்தில் அலியிடம் குழந்தை கேட்கும், அரை சதம் ஆண்டுகள் கழிந்த பிறகும் நல்லவனா என்று எனக்கே தெரியவில்லை உறுதியாக, கெட்டவன் இல்லை என்று தோன்றுகிறது – நீங்களும்தான்.

தமிழ் சிறுகதை வரலாற்றில் “அன்னம்” முக்கியமான பதிவு. “சுபானல்லா” என்று மிகச் சரியான தருணத்தில் அப்துல்ரஹ்மான் ஹாஜி கூறியதையே வழிமொழிய வேண்டியதுதான். மிக்க நன்றி!

கொள்ளு நதீம்,

ஆம்பூர்

 

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

 

கடந்த சில வாரங்களாகவே முகநூலிலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து உங்களைக் குறித்த எதிர்மறையான, கீழ்மையான வசைபாடல்களை அணுக நேரிட்டது. ஒருகட்டத்தில் மனம் சோர்வுற்று இவைகளுக்கெல்லாம் எப்படி எதிர்வினையாற்றுவது? தவிர்த்தலின் மெளனம் ஒப்புக்கொள்ளல் ஆகிவிடுமா? காயப்படுத்தும் சொற்களை எப்படி அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்? என ஏதோதோ யோசித்து ஒருவித கையறுநிலையிலும் இயலாமையிலுமே இருந்தோம். ஆனால், வெகு சாதாரணமாக போகிறபோக்கில் உங்கள் படைப்பின் ஒற்றைவரி, எங்கள் எல்லா நம்பிக்கையிழப்புகளையும் சரிசெய்து தட்டிக்கொடுத்து மீட்டுவிடுகிறது. காலம் அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறது.

‘அன்னம்’ கதையினை எல்லோருக்குமான ஒரு பெரிய பதிலாகவே காண்கிறோம். இது வெறும் அர்த்தப்படுத்திக்கொள்ளல் அல்ல, சத்தியப்படிக்கு எங்கள் அகத்திலுணரும் மனவுண்மை. உங்களைத் தொடர்பவர்கள் தூற்றுபவர்கள் என அனைவருக்குமான பதில்களென்றே நீங்களெழுதும் கதைகள் வெளிப்படுவதை அறியமுடிகிறது. இக்கதை எங்களை அவ்வளவு சலனப்படுத்துகிறது, சமன்குலைக்கிறது! ஆச்சாரமான சடங்குகளை நம்புகிற ஒரு வைதிக பிராமணனும், நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு தினமும் அன்னமிடுகிற இசுலாமிய பாய்க்கும் இடையே நிகழ்கிற இருதயவுரையாடல்களாக, அதன்வழி அமைகிற நட்புறவாக இக்கதையில் சித்திரிக்கப்பட்டுள்ள அவ்விருவரின் உறவுநிலை மீளமீள அன்னத்தை ஒரு தொன்மக்குறியீடாக எங்களுக்குள் ஆழப்பதிக்கிறது. அகம் என்பது எத்தனைபெரிய அன்னக்கலயம்!

ஹெப்பார் கிருஷ்ண பட் அவர்களின் குலநடைமுறைகளை சிறிதுகூட மீறிடாமல் அவரை அப்படியே ஏற்று அவருக்கான மரியாதையையும் உதவியையும் கறுத்தசாகிப் அள்ளியளிப்பதும், அத்தகைய ஆறடிதேடிகம் பக்கவாதத்தில் சாய்கையில் லைன்மேன் தருகிற கைமாறும் இக்கதையினை ஒரு நிகர்வாழ்வாக கண்முன் நிறுத்துகிறது. தூக்கமும் பசியும் இல்லாமலாகி கறுத்தசாகிப் கட்டிலில் வீழ்கையில் ஹெப்பார் பெருவண்ணானை அழைத்துவந்து மந்திரிக்கும் இடத்தில் இக்கதை வாழ்ந்துமறைந்த முன்னோர்களையெல்லாம் நினைவுக்குகொண்டுவந்து அலைவுறுத்தியது. ‘சூன்யத்தால் தவிக்கும் ஆன்மா’ எதைக்கொண்டு நிறைவடையும் என்கிற தவிப்பு கிருஷ்ண பட்டை துளைத்தெடுக்கிறது.

‘அற்புதங்கள் தற்செயலென நிகழும்’ ஒரு அருங்கணத்தை நாமெல்லாம் நம் வாழ்வில் ஒருமுறையேனும் அடைந்திருப்போம். அத்தகைய பெருங்கண்டடைதல்தான், ஃபோன் வழியாக குரல்கள் கேட்டதும் கறுத்தசாகிப்பின் கண்கள் மலர்வது. ‘மனிதக்குரல் கேட்டாலே அவர் மலர்வதைக் கண்டேன்’ என்னும் வரிகள் ஒரு பெளத்தவனத்துக்குள் மனதை அழைத்துப்போகிறது.

ஒட்டுமொத்த கதைச்சரடாக இதை வாசிக்கையில் அடைகிற உளநெகிழ்வு ஒருபுறமெனில், இக்கதையில் வருகிற சில பத்திகளும் அதன் கருத்தாழங்களும் உடலை நடுநடுங்கச் செய்துவிடுகிறது. கதையாக சரளமாக நகர்கையில், ஒருகணம் நின்று நிதானித்து மனதுக்குள் காட்சிப்படுத்திப் பார்க்கையில் எத்தனை மானுடதரிசனங்களை இக்கதைவழியாக அகம் கடந்திருக்கிறது என்பது எங்களை பேச்சில்லாமலாக்குகிறது.

அதிலும் குறிப்பாக,

“அவர் எப்போதுமே இன்னொருவர் முன்னால் வைத்து எந்த கொடையும் செய்வதில்லை. பெறுபவர் குன்றிவிடுவார் என நினைப்பார். அது ஒரு ரகசியச் செயல்பாடாகவே நடக்கும். பெற்றுக்கொள்பவனே சொன்னால்தான் உண்டு…”

“மனிதர்கள் சாப்பிடுவது ஒரு யாகமாக நிகழமுடியும் என்று அப்போதுதான் பார்த்தேன். நான் பல யாகங்களை பார்த்திருக்கிறேன்…”

“அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்…”

“ஒரு ஐந்துவயது பெண் ஒருவயது தம்பிக்கு ஊட்டியதை பார்த்தேன். வெளியே வந்ததும் அதன் காலைத்தொட்டு வணங்கி “புவனராணியான அன்னபூரணியே, இந்த உலகத்தில் பசியை அணைத்துக்கொண்டே இரு தாயே” என்று சொல்லி கண்ணீர்விட்டேன்…”

“ஆமாம், ஆனால் குரல்கள் ஆத்மாவின் பகுதிகள். நத்தை ஊர்ந்துபோகும்போது அதன் ஒரு பகுதிதான் ஒளிவிடக்கூடிய தடமாக ஆகிறது. அதுதான் சைதன்யம் என்பது…”

இத்தகைய வரிகளை வாசித்து மீள்கையில், ஒரு படைப்பு என்பது எல்லாவற்றுக்குமான எதிர்வினையாக இல்லாமல் எல்லாவற்றையும் கடந்த ‘பதிலாக’ இருப்பதை நாங்கள் சிறுதயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டோம். காழ்ப்பின் சீழண்டாத வீழாச்சொல் இது! மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை “அறம் கரியாக அருள்சுரந்து ஊட்டும் சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது” எனச் சுட்டுவதைப்போல ‘அறத்திற்கு சுரக்கும் பேரன்னமாக’ இக்கதைகள் “தான்தொலைவு இல்லா ஆருயிர் மருந்தென” எங்கள் அகப்பசியாற்றுக!

திண்டுக்கல் காந்திகிராமில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாற்று நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ நிகழ்வினில், கண்பார்வையற்ற ஒரு வயோதிகர் வள்ளலார் பாடலைப் பிரார்த்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இருபது வருடங்களாக அவர் விழிகளுக்குப் பார்வையில்லை. தனது விழியையிழந்த நாளிலிருந்து, மக்களிடம் தேடிச்தேடிச் சென்று அரிசி, பருப்பு யாசகம் வாங்கி அன்னதானம் செய்வதைத் துவங்கியவர், இன்னமும் அன்னமளித்தலை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இந்த நோயச்சகாலத்திலும் அவருடைய அன்னக்கருணை நின்றுவிடவில்லை, அருட்பெருஞ்சோதி அவருடைய அகத்தில் அணையாமலெரிகிறது.

நம் மண்ணில் வந்துதித்த அப்படியான அன்னமனிதர்களையும், அவர்களுடைய புண்ணியவாக்கினையும் நெஞ்சிலேந்தி உங்களுக்கும் உங்களுடைய படைப்பான்மாவுக்குமான இறைவேண்டலை, அணையாஅடுப்பின் அன்னவெளியில் முன்வைக்கிறோம்.

 

நன்றிகளுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

புளியானூர் கிராமம்

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

தொடர்புடைய பதிவுகள்

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

$
0
0

சாதனாவை நான் அந்த மலைக்குன்றுக்கு அழைத்துவந்தபோது அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். அவள் திறந்தவெளிக்கு வந்தே நீண்டநாட்களாகியிருந்தது. பெரும்பாலும் ஆஸ்பத்திரி அறை, வீட்டின் அவளுடைய படுக்கையறை. ஆஸ்பத்திரியின் அறையில் இருந்து இன்னொரு ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் மஞ்சள்சுவர்தான் தெரியும். எங்கள் அப்பார்ட்மெண்டின் எந்த சன்னலைத் திறந்தாலும் வேறு அப்பார்ட்மெண்டின் அடுக்குகள் தெரியும்.

நான் அவளிடம் காலையில் “நாம வெளியே போலாமா?”என்று கேட்டேன்.

எந்த கேள்விக்கும் அவளிடம் எதிர்மறையான ஒரு தயக்கம்தான் வரும் “வெளியேவா?” என்றாள் “பீச்லாம் கூட்டமா இருக்கும்”

“இது வேற எடம்” என்றேன்

“கோயில்னாக்கூட கூட்டம்தான்” என்றாள். “அதோட எனக்கு ரெஸ்டாரெண்ட் ஓட்டல் எதுவும் ஒத்துவர்ரதில்லை.  லைட்டபோட்டு கொல்றான். கண்ணுக்குள்ள ஊசியச் செருகினது மாதிரி இருக்கும்”

“நான் வேற எங்காவது… கொஞ்சதூரம் டிரைவ் பண்ணி போலாம்” என்றேன்

“டிரைவ் பண்ணியா?”என்று அவள் மீண்டும் தயங்கினாள்

‘சும்மா வா, போய்ட்டு வந்திடலாம்”

“திரும்பி வர்ரப்ப டயர்டாயிருவோம்”

”பரவாயில்லை, பக்கத்து சிட்டியிலே ரூம் போட்டு தங்கிட்டு காலையிலே நிதானமா வரலாம்”

“மாத்திரை எல்லாம் எடுத்துக்கணும்ல?”

“ஆமா, எடுத்துக்கலாம்”

“அப்ப எமர்ஜென்சிக்கு அங்க பக்கத்திலே எந்த டாக்டர் இருக்காருன்னு கேட்டு தெரிஞ்சுக்கிடணும்ல?”

“நான் கேட்டுடறேன், அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையே இல்லை”

அவள் பெருமூச்சுவிட்டாள். “நான் மெல்ல கெளம்புறேன். அவசரப்படுத்தாதே”

“இல்லை”என்றேன்

அவள் மிகமெல்லத்தான் கிளம்பினாள். உண்மையில் அவள் இப்போதெல்லாம் அணியும் தளர்வான ஜிப்பா போன்ற டாப்ஸும் பைஜாமாவும் அணிந்து ஒரு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியதை தவிர எதையுமே செய்யவில்லை. மாத்திரைகள் முதல் அனைத்தையும் எடுத்துக்கொண்டது நாந்தான்.

ஆனால் அவள் எரிச்சல் அடைந்தபடியே இருந்தாள். “எல்லாம் எடுத்துவச்சாச்சா? மாத்திரை ஏதாவது விடுபட்டிருக்கப்போகுது… அங்கபோய் அப்றம் கெடைக்காது”

“பாத்துட்டேன், எல்லாமே இருக்கு”

“இன்னொருவாட்டி பாத்திடு”

“சரி” என் பொறுமையை நான் மிகமிகப் பழக்கப்படுத்தியிருந்தேன். அவள் பெரும்பாலும் அங்குமிங்கும் குழம்பியபடி சுற்றிவந்தாள். பலமுறை கழிப்பறைக்குச் சென்றாள். கண்ணாடியை எங்கோ வைத்துவிட்டாள்.

“என் கண்ணாடியை எங்க வச்சேன்?” என்றாள் எரிச்சலுடன் “எங்கியாவது எடுத்து வச்சிட்டியா? மாட், கண்ணாடி எங்கே?”

‘பாத்ரூமிலே இருக்கும்” என்றேன்

அவள் பெருமூச்சுடன் வந்து சோபாவில் அமர்ந்து  “எதுக்கு இப்ப?”என்றாள்

“எனக்கே எங்காவது போகணும்போல இருக்கு”

“சரிதான்… நான் அட்மிட் ஆயிடறேன். நீ வேணா போய்ட்டு வாயேன்”

“இல்லை, அது சரியா இருக்காது. என் மைண்ட் ஃப்ரியா இருக்காது”

“எங்கபோறதுன்னு தெரியுமா?”

“சும்மா கூகிள்ல பாத்திட்டிருக்கிறப்ப ஒரு மலைக்கோயிலை பாத்தேன்… ஏகாந்தமா இருந்தது. அங்க போகணும்னு தோணிச்சு. அத அப்டியே தவிர்த்தாச்சு. ஆனா கனவிலே வந்து வளந்திட்டே இருக்கு…”

“எங்க இருக்கு அது?”

“விழுப்புரம் பக்கம்”

“அவ்ளவு தூரமா?”

“போயிடலாம்… நீ ஒரு தூக்கத்தைப் போடு”

அவள் பெருமூச்சுவிட்டாள். “முன்னெல்லாம் காரிலேயே டெல்லி போவேன்… நானே டிரைவ் பண்ணி நாலுவாட்டி போயிருக்கேன்”

காரில் ஏறி அமர்ந்ததுமே “சீட் கீழே போக மாட்டேங்குது” என்றாள்

“இவ்ளவுதான் போகும்… காலைநீட்டிக்க, ரிலாக்ஸா இருக்கும்” என்றேன்

கார் கொஞ்சம் ஓடியதுமே தூங்கிவிட்டாள். கிளம்பும்போது பதற்றத்தை குறைக்க ஏதாவது மாத்திரை போட்டிருப்பாள்

டிசம்பர் மாதம், மழைமூட்டம் இருந்தது. மங்கலான வெளிச்சம். நீண்ட நாட்களுக்கு பிறகு உற்சாகமாக உணர்ந்தேன். மெல்லிய குரலில் எண்பதுகளின் பாடல்களை ஓடவிட்டேன். என் நஸ்டால்ஜியா அது. ‘தனிமையிலே ஒரு ராகம் உருவாகும்…’

இருண்டு இருண்டு வந்தது. நெடுஞ்சாலையில் நேர்முன்னால் கருமுகில் நிற்பதுபோல. அதற்குள் சென்று நுழைந்தேன். மழை காரின் கூரையையும் முகப்புக் கண்ணாடியையும் அறைந்தது. காருக்குள் பாடல் ஒலிக்கும்போது வைப்பர்கள் பாடலுக்கு ஏற்ப சரியான தாளத்தில் நடனமாடுவதாகத் தோன்றுவது ஓர் இனிய மாயை.

அதே வேகத்தில் மழையிலிருந்து வெளியேறிவிட்டேன். இளவெயிலில் தார்ச்சாலை பளபளத்தது. டீசல்தடங்களில் வண்ணங்கள் மின்னின. நனைந்த பரப்புகள் எல்லாம் ஒளிர்ந்தன.நேர் முன்னால் மிகப்பெரிய வானவில்லை பார்த்தேன்.

“சாதனா,சாதனா” என்றேன்

“என்ன?”என்றாள்

“அங்க பாரு…”

”என்ன?”

“வானவில்… பாரு”

அவள் பார்த்துவிட்டு “டைம் என்ன ஆச்சு? என்றாள்

“பத்தரை”

“எப்ப போய்ச் சேர்வோம்?”

“மத்தியான்னத்துக்குள்ள போயிடலாம்”

“எங்கயாவது நிப்பாட்டு…”

நான் “சரி” என்றேன்

ஓட்டலில் டீ சாப்பிட்டேன். அவள் மீண்டும் தூங்கிவிட்டாள். நான் மீண்டும் பாடல்களில் மூழ்கினேன்.  ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’. பழையபாடல்களை கேட்டபடி காரில் விரையும்போது காலத்தில் பின்னால் அம்பென ஏவப்பட்டுவிட்டதுபோல. சென்று சென்று இழந்த அனைத்தையும் அடைந்துவிடலாம் என்பதுபோல.

எளிமையான செண்டிமெண்டுகள்.நானும் ஒருகாலத்தில் செண்டிமெண்டுகளை பார்த்து நமுட்டுப்புன்னகை பூத்தவன்தான். ஆனால் வாழ்க்கை என்பது விரும்பியோ விரும்பாமலோ இழந்து இழந்து கடந்து கடந்து செல்வது என்று தெரிந்துகொண்டபின், ஒன்றுமே மீளாது என்று அகம் கடைசியாக ஏற்றுக்கொண்டுவிட்டபின், அவ்வளவுதானா அவ்வளவுதானா என்று ஏங்கத்தொடங்கிவிட்டபின், தனிமை அத்தனை அழுத்தம் கொண்டதாக ஆகிவிட்டபின் செண்டிமெண்டுகளைப்போல இனியவை வேறில்லை. ரத்தச்சுவை கொண்டவை. ஆனால் இனிப்பவை. மிச்சமிருப்பவை அவை மட்டும்தான் என்றால் அவற்றை சுவைப்பதில் தவறே இல்லைதான்.

விழுப்புரத்தில் ஓர் உணவகத்தில் சாப்பிட்டோம். சாதனாவுக்கு வீட்டிலேயே பார்லி கஞ்சி கொண்டுவந்திருந்தேன். அவள் பால் குடிக்கக்கூடாது. அங்கிருந்து பொன்னூர் வழியாகத் திரும்பி தீர்த்தமலை என்று அழைக்கப்பட்ட இந்தக் குன்றை வந்தடைந்தோம்

காரிலிருந்து இறங்கியபோது சாதனா களைத்திருந்தாள். கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் ஓரங்கள் சுருக்கம்விழுந்திருந்தன. பத்துவயது அப்பயணத்திலேயே கூடிவிட்டதுபோல

நான் மருந்துக்கள் தண்ணீர் எல்லாம் அடங்கிய தோள்பையை மாட்டிக்கொண்டேன்

சாதனா இடுப்பில் கைவைத்து நின்று சுற்றிலும் பார்த்தாள். “எந்த இடம் இது?”

“தீர்த்தமலை… ஜினகிரின்னும் பேரு இருக்கு. மேலே ஒரு ஜைனக்குகையும் சின்ன கோயிலும் இருக்கு. ஒரு துர்க்கைகோயிலும் இருக்கு. ஒரு சின்ன குளமும் இருக்குன்னு போட்டிருக்கான். அங்கேயே ஊறி தேங்குற தண்ணி அதிலே”

“ஏறணுமா?”

“கஷ்டம் இல்லை”

“எதுக்கு அவ்ளவு உயரம்?”

“தெரியல்லை. ஆனா நீயும் நானும் அங்க நின்னிட்டிருக்கிறது மாதிரி ஒரு கனவு வந்தது…”

“ஓ”என்றாள் ஆர்வமில்லாமல்

மழைமூட்டம் இருந்தது. வானில் மேகமென திரள் ஏதுமில்லை. ஆனால் மொத்தவானமுமே கரிய துணியாலான குடைபோலிருந்தது.

“வெயில் இல்லை… ஈஸியா ஏறிடலாம்” என்றேன்

“ஆமா, காத்துகூட பிளஸண்டாத்தான் இருக்கு”

அகலமான கருங்கல் படிகள். 1969ல் ஆதிநாத் ஜெயின் டிரஸ்டால் கட்டப்பட்டவை என்று கல்வெட்டு இருந்தது. குட்டையாக பரவி கிளைகளை தலைதட்டும் உயரத்திற்கு நீட்டியிருந்த ஓர் ஆலமரம். அதன் வேர்கள் பாறையிடுக்குகளில் பற்றி ஏறியிருந்தன. விழுதுகள் காற்றிலாடின. ஆலமர விழுது இவ்வளவு சன்னமாக இவ்வளவு மென்மையாக இருக்கும் என நான் நினைத்திருந்ததில்லை

“சடைமுடி மாதிரி இருக்கு” என்றேன்

சாதனா திரும்பிப் பார்த்து புன்னகைத்து “ஆமா” என்றாள்

படிகள் உயரமற்றவை. சாதனாவால் இயல்பாக ஏறமுடிந்தது. “பத்துபடிக்கு ஒருதடவை நின்னுக்கோ. மெல்லமெல்ல போலாம். ஒண்ணும் அவசரம் இல்லை” என்றேன்

மேலே செல்லச் செல்ல அந்த இடத்தின் சூழல் எங்கள் மனதை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டது. மேலிருந்து உதிர்ந்து குவிந்தவை போல பெரிய பெரிய பாறைகள் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை. அவை மேலும் குவிந்து எழுந்தவை போல ஆங்காங்கே குன்றுகள். பாறைகளுக்கு நடுவே பச்சைக்குடைபோல கருவேல மரங்கள். தொடுவானம் அப்படி துல்லியமான மாபெரும் வளையமாக அமைந்து நான் அதுவரை பார்த்ததில்லை

படி ஏறியதன் களைப்பால் சாதனா மெல்லிய வியர்வையுடன் மூச்சிரைத்தாள்

“களைப்பா இருக்கா? தண்ணி வேணுமா?”

“ம்” என்றாள்

தண்ணீர் குடித்தபின்  “போலாம்” என்றாள்

படியை ஒட்டியே சில ஆலமரங்கள் நின்றன. அந்த படிகள் கட்டப்பட்டபோது நடப்பட்டிருக்கலாம். கெட்டியான இலைகளுடன் கிளைகள் பரந்து நின்றன. இளமையான கன்றுகள்

“சின்னவயசிலே ஆலம்பாலை மெல்வோம்… சூயுங் கம் மாதிரி” என்றாள் சாதனா

“ஆலம்பால்னா?”

“பால் உறைஞ்ச அரக்கு”

“ஓ” என்றேன். “இப்ப பால் இருக்குமா?”

“இருக்கும், ஆனா உறையறதுக்கு ஒருநாள் ஆகுமே”

படிகள் மேலே சென்று திறந்தவெளி போன்ற மலையுச்சியை அடைந்தன. அங்கே முழுவட்டமாக வானம் சூழ்ந்திருந்தது. தெற்கே தொடுவான் நோக்கிய சரிவில் புகைக்குவியல் எழுந்ததுபோல மேகங்களை கண்டேன்.

“அங்கேருந்து மழை வருதுன்னு நினைக்கிறேன்” என்றேன்

“இப்பல்லாம் வராது, ராத்திரி வந்தாலும் வரும்” என்று சாதனா சொன்னாள்

மலை,மேல் ஒரு பெரிய மைதானம் போல பாறைப்பரப்பு. அது கிழக்கிலிருந்து சீராகச் சரிந்து மேற்கே சென்று முடிந்தது. கிழக்கு பாறை மேடு போல எழுந்து தலைக்குமேல் நின்றது. சரிவின் விளிம்பில் ஆலமரங்கள் எழுந்து தெரிந்தன. கிழக்குமேட்டில் இரண்டு ஆள் உயரமான கோயில் தெரிந்தது. நான் நினைத்ததுபோல பழைமையான கோயில் அல்ல. சிமிண்டில் கட்டப்பட்ட சமீபகால கோயில்.

கோயிலுக்கு முன்னால் குளம் இருந்தது. ஆனால் அது ஒரு குட்டைதான். மிகக்கொஞ்சமாகத்தான் தண்ணீர் இருந்தது. பாசிபடிந்து பச்சைநிறமாக மாறியிருந்த நீர் ஏதோ ஆயுர்வேத தைலம் போலிருந்தது. குளத்திற்குள் செல்ல பாறையிலேயே சிறிய ஒற்றைக்காலடிப் படிகள் வெட்டப்பட்டிருந்தன.

“ஜைனக்கோயில் எங்க?”

“ஜைனக்கோயில் இல்லை, குகைன்னு சொன்னாங்க” என்றேன்

“அந்தப்பக்கம் பாறையிலே ஏதோ கம்பி மாதிரி தெரியுது”

மடிந்து எழுந்திருந்த கிழக்குப்பாறையில் கம்பியால் படி போல செய்யப்பட்டிருந்தது. அந்த மடிப்புக்குள் குகை இருக்கவேண்டும்.

“ஏறிடுவியா?”

“முடிஞ்சா ஏறுறேன்… இல்லேன்னா பரவாயில்லை. இந்த எடம் நல்லாயிருக்கு”

அவர்கள் அந்த கம்பி ஏணியை அடைந்தார்கள். அவன் மேலேறி கையை நீட்டினான்.

‘இல்ல பரவாயில்லை” என்று அவள் மேலேறினாள். மூச்சுவாங்க வந்து நின்றாள். கழுத்தில் நரம்பு துடித்துக்கொண்டிருந்தது.

“படபடப்பா இருக்கா?”

“இல்ல, பரவாயில்லை”

அங்கே பாறை மடிந்து உள்ளே சென்றிருந்தது. மேலிருந்து நீர்வழிந்த தடம் காவிநிறத்தில் இருந்தது. உள்ளே பாறையிலும் சிவப்பு பட்டைகள் வழிந்திருந்தன. பாறையில் நான்கு படுக்கைத்தடங்கள் வெட்டப்பட்டிருந்தன

“இதான்”என்று நான் சொன்னேன்

“இதுலே படுப்பாங்களா?”என்று அவள் கேட்டாள்

“அப்டித்தான் படிச்சேன். இங்க ஒரு குருவும் மூணு சிஷ்யங்களும் இருந்திருப்பாங்க…”

“எதுக்காக இந்த தனிமையிலே இருக்கணும்?”

“அப்பதான் தங்களைத் தாங்களே கூர்ந்து கவனிச்சுக்க முடியுமாம்”

நாங்கள் கீழிறங்கி வந்தோம். அவள் “மெடிடேஷனுக்கு ஏத்த இடம்தான்… அப்டியே பறந்திரலாம்போல இருக்கு” என்றாள். அவள் ஆடை காற்றில் படபடக்க வண்ணத்துப்பூச்சி போல தெரிந்தாள்

அவள்  “சட்டை புடைச்சு குண்டா தெரியறே” என்றாள்

“நிஜமாவே குண்டுதான்… இப்ப்ல்லாம் எந்த எக்ஸஸைஸும் இல்லை”

“நான் உன் லைஃபை அப்டி ஆக்கிட்டேன் இல்ல?”

“இங்க நாம செல்ஃப் பிட்டியை வளத்துக்கிறதுக்காக வரலை”

“ஸாரி”

அந்த துர்க்கை ஆலயத்தை அடைந்தோம். அதற்குள் வெள்ளை டைல்ஸ் மேடையில் ஒரு சிறிய துர்க்கைச்சிலை இருந்தது

“அங்க உக்காரலாம்” என்று அவள் ஆலமரத்தை சுட்டிக்காட்டினாள். அதுக்குக் கீழே நல்ல பாறைகள் இருக்கு

“இங்க குரங்கு இருக்கா?”என்றேன்

“வழக்கமா இந்தமாதிரி எடங்களிலே இருக்கும்… இங்க யாரும் வர்ரதில்லை போல”

ஆலமரத்தின் அடியில் இருந்த பாறைகளில் வெள்ளையாக பறவை எச்சம் பரவியிருந்தது. எச்சம் இல்லாத ஒரு பாறையில் அமர்ந்து நான் ஷூவை கழற்றி கால்விரல்களை நெளித்துக்கொண்டேன்

சாதனா “நான் பாத்ரூம் போய்ட்டு வர்ரேன்” என்றாள்

“இங்கயே போ…”

“இங்கயா… இங்க கோயில் இருக்கு”

“சரி”

அவள் பாறையில் கைவைத்து ஆலமரத்தின் வேர்கள்மேல் இறங்கி அப்பால் சென்றாள். பின்னர் அங்கிருந்து “மாட், இங்க வா” என்றாள்

“என்ன?”

“இங்க ஒரு சின்ன கேவ் டெம்பிள்”

நான் இறங்கி ஆலமரத்தைச் சுற்றிக்கொண்டு செல்வதற்குள் அவள் ஒரு பாறை இடுக்குக்குள் இருந்த அந்த கோயிலை அடைந்துவிட்டாள். அருகே போனபோதுதான் தெரிந்தது. அது ஒரு பெரிய குகைக்குள் நுழைவதற்கான வாசல். சரிந்த பாறைப்பரப்பில் கையை ஊன்றி சற்றே சரிந்து நடந்துதான் உள்ளே போகவேண்டும். கோயில் என்பதைக் காட்ட காவிச்சிவப்பு செங்குத்துப் பட்டைச்சாயம் அடித்திருந்தார்கள்.

ஆனால் உள்ளே குகை மிகப்பெரிதாக இருந்தது. அது வெளியிலிருந்தே தெரிந்தது. பேசும்போது உள்ளிருந்து முழக்கமான எதிர்வினை எழுந்தது

“ரொம்ப பெரிய கேவ், மாட்” என்று சாதனா சொன்னாள். கையூன்றி உள்ளே பார்த்து “பெரிசா இருக்கு… மைதானம் மாதிரி உள்ள எடமிருக்கு” என்றாள்

“இதைப்பத்தி கூகிள்ல போடவே இல்லை”என்றேன்

“வந்தவன் பாத்திருக்க மாட்டான்” என்றாள். “ஸோ ஹ்யூஜ்… ஒரு பெரிய சர்ச் ஹால் அளவுக்கு பெரிசு”

“உள்ள போகணுமா?”என்றேன்

“ஏன் போனா என்ன?”

“வௌவால் இருக்கப்போகுது”

“இருக்காது… இது திறந்திருக்கு. உள்ள நல்ல வெளிச்சமும் இருக்கு”

அவள் உள்ளே போனாள். நான் தொடர்ந்து போனேன். இயற்கையான குகை. உள்ளே பாறையாலான சுவர்கள் சரிந்து மேலேறிச் சென்றன. மேலே தேனீக்கூடுகள் தொங்கின. அங்கிருந்து பார்க்க சிறிய கரியபைகள் போல தெரிந்தன

“தேனீக்கூடுதானே அதெல்லாம்?”

“மாட், அங்க பார்”

அவள் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்த நான் திகைத்து நின்றுவிட்டேன். அறியாமலேயே கையை ஊன்ற சுவரை தேடினேன், அது மிக அப்பாலிருந்தது.

அங்கே குகையின் ஒரு பகுதி மேலும் ஆழமாக சென்றது. அதன் சுவர்களில் சுதைபூசி மேலே வளையமாக கொண்டுசென்று இணைக்கப்பட்டு ஒரு கருவறைபோல ஆக்கப்பட்டிருந்தது. அதற்குள் மூன்று ஆள் உயரமான மிகப்பெரிய புடைப்புச்சிலை அமர்ந்திருந்தது. சட்டென்று விஸ்வரூபமாக கண்முன் தோன்றியதுபோல.

கொடூரமான சிலை. எலும்புருவமான உடல். மண்டையோடு போன்ற முகத்தில் வெறிநிறைந்த பெரிய வட்டக்கண்கள். உரக்கச் சிரிப்பதுபோல இளித்த வாயில் வெண்பற்கள். கழுத்தில் ஓர் வளையம் தவிர ஆபரணங்கள் இல்லை. அதற்கு சரிகை வைத்த கரிய பட்டாடையை சுற்றியிருந்தனர்

என் நெஞ்சின் படபடப்பை உணர்ந்தேன். சாதனா அதை நோக்கி சென்றாள். நான் “சாதனா, வேண்டாம் போயிருவோம்” என்றேன்

“இரு” என்றாள்

“எனக்கு ஒருமாதிரி இருக்கு” என்றேன்

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றாள். அந்தச் சிலை காலடியில் ஓர் உடலை போட்டு மிதித்துக்கொண்டிருந்தது. மடியில் எதையோ பரப்பியிருந்தது. அதன்மேல் கரிய புடவை மூடியிருந்தமையால் சரியாகத் தெரியாது.குழந்தையா என்ன?

நான் அருகே சென்றேன். என் கைபட்டதும் சாதனா திடுக்கிட்டு திரும்பி பின்பு விலகிக்கொண்டாள்.  “மடியிலே என்ன, குழந்தையா?”என்றேன்

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

நான் கூர்ந்து பார்த்தேன். மடியில் கிடந்தது இன்னொரு பெண். கைவளைகளும் கால்சிலம்புகளும் அண்ணாந்த முகமும் தெரிந்தன. ஒரு கணத்தில் கடுங்குளிர் மூச்சுவழியாக நெஞ்சுக்குள் போனதுபோல உணர்ந்தேன், அந்த கொடுந்தெய்வம் மடியில் கிடந்தவளின் நெஞ்சை இரு கைகளாலும் பிளந்துகொண்டிருந்தது.வேறு இரண்டு கைகளல் குடலை உருவி மாலையென வளைத்து பிடித்திருந்தது.

“போயிடுவோம்” என்று நான் சொன்னேன்

சட்டென்று சாதனா தளந்து குழைந்து தரையில் விழுந்தாள். நான் திடுக்கிட்டு எவரையாவது அழைக்க விரும்புபவன் போல “அய்யோ அய்யோ” என்று கூவியபடி அங்குமிங்கும் அலைமோதிச் சுழன்றேன். அதன்பின் தன்னிலை உணர்ந்து பையை கீழே வைத்து அதிலிருந்து நீரை அவள் முகத்தில் தெளித்தேன்

அவள் இமைகள் அசைந்தன. விழித்துக்கொண்டதும் கையூன்றி திரும்பி அந்தச் சிலையை பார்த்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

“தண்ணியைக் குடி” என்றேன். அவள் என் குரலை கேட்கவில்லை.அவளுக்கு நானே தண்ணீரை ஊட்டினேன்.அவள் குடித்து முடித்ததும் சற்று ஆறுதலடைந்தாள்

“வா, போயிருவோம்” என்றேன்

அவளே கையூன்றி என் தோளைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். அந்த சரிந்த வாசல் வழியாக வெளியே வந்தோம். அவள் உடல் குளிர்ந்திருந்தது. முழு எடையும் என்மேல் இருந்தது.

“கீழே போயிருவோம்” என்றேன்

“உக்காரணும்” என்று அவள் சொன்னாள்

அங்கிருந்த படியிலேயே அமர்ந்தாள். என்னால் அமர முடியவில்லை. நான் அவள்முன் நின்றேன். என் கால்கள் துணிபோல குழைந்தன.

“ஐ யம் ஸாரி சாதனா… இப்டி எதிர்பார்க்கலை… பிளஸண்டான இடம்னு போட்டிருந்தது” என்றேன்

அவள் தலைசரித்து வளைந்து கீழே இறங்கிய வானத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் அந்த இடத்தை பார்த்தபோது மீண்டும் பதற்றத்திற்கு ஆளானேன். எப்படிப்பட்ட இடம். எவ்வளவு தனிமை. எதை நம்பி அவ்வளவு தொலைவு வந்தேன்!

“மாட்” என்று சாதனா அழைத்தாள். “அங்க அந்த தெய்வத்தோட மடியிலே கிடந்தது நான்தான்”

“சும்மா பேசாதே, போயிருவோம்”

“நோ, ஒரு செக்கண்ட். கனவுமாதிரி. இல்ல வேறொரு ரியாலிட்டி மாதிரி. அப்டியே நேர்ல பாத்துட்டேன்”

“ப்ளீஸ்” என்றேன் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை

“அது நான்தான்… அந்த தெய்வதோட மடியிலே… அந்த தெய்வம் இருக்கே… அதோட விஸ்வரூபம்…”

“நாம வேறே எதைப்பத்தியாவது பேசலாமே… பிளீஸ்”

“கமான் பாட், என்னாலே வேற எதைப்பத்தியும் யோசிக்கவோ பேசவோ முடியாது”என்று அவள் சொன்னாள். “யூ நோ, அந்த தெய்வம் என்னன்னு”

“அது இங்க உள்ள ஏதாவது தெய்வமா இருக்கலாம்” என்றேன்

“பிணத்தை மிதிச்சிட்டு இருக்கு….. அப்டீன்னா அது சாமுண்டிதேவி”

“இல்லை, இது ஏதோ கிராமத்தெய்வம்… சிலையைப் பார்த்தா ரியலிஸ்டிக்கா இருக்கு” என்றேன் “கையிலே வழக்கமான ஆயுதங்கள் ஒண்ணும் இல்லை”

“ஆமா, ஆனா அதான் டெம்ப்ளேட்” என்று சாதனா சொன்னாள். “எதுவா இருந்தா என்ன? அதைப்பத்தி தேடவேண்டியதில்லை. எனக்கு ஒரு விஷன் கிடைச்சிருக்கு. அது போதும்”

“சாதனா ப்ளீஸ் போயிடலாம்” என்றேன்

“மாட், எதுக்கு அவ்ளவு குரூரம்? அவ்ளவு வெறி? நான் என்ன பண்ணினேன் அப்டி? எனக்கும் அந்த தெய்வத்துக்கும் என்ன பகை அப்டி?” கன்னங்களில் கையை வைத்து நடுங்கி,  “குடலை மாலையா உருவி… அதோட கையிலே இருக்கிறது கரு… வயித்திலே இருக்கிற சின்ன குழந்தை” என்றாள்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவளே புலம்பி முடிக்க விட்டுவிடவேண்டியதுதான்

“நான் என்ன பண்ணினேன்? இதைத்தான் நினைச்சு நினைச்சு மறுகிட்டிருக்கேன். உண்மையிலே வலிகூட பெரிசில்லை. இந்த நினைப்புதான் போட்டு அரிச்சிட்டிருக்கு. ராத்திரியிலே தூக்கம் போச்சுன்னா பிறகு அவ்ளவுதான்… மண்டை கொதிக்கும். நரம்பெல்லாம் வெடிச்சிரும்போல இருக்கும் அப்டியே எந்திரிச்சு பால்கனியிலே இருந்து குதிச்சிரணும்னு தோணும்… அப்டி ஒரு மீனிங்லெஸ்நெஸ். வெறுமை…”

நான் தலையசைத்தேன்

“ஏதாவது ஒரு லாஜிக் இருக்கணும்ல? இவ்ளவுதான்னா எல்லாத்துக்கும் என்ன அர்த்தம்? எதுக்கும் அர்த்தமில்லேன்னா அதுக்கு மட்டும் என்ன அர்த்தம்? நான்ஸென்ஸ்… ஷீர் நான்ஸென்ஸ்” என்று சாதனா தலையை உலுக்கினாள். கைகளில் தலையை தாங்கி குறுகி அமர்ந்திருந்தாள்.

“அப்டியே பின்னாலே வந்திட்டே இருந்திருக்கு. சத்தமே இல்லாம. நிழல் மாதிரி. இரையை பிடிக்கிற மாதிரி பிடிச்சிட்டுது. மெடிக்கல்நேம் இப்ப தெளிவா தெரிஞ்சாச்சு. ஆனால் அதிலே ஒண்ணும் அர்த்தமில்லை. அது ஒரு வழி, அவ்ளவுதான். அதுக்கு என்ன வேணும்? ஏன் என் பின்னாலே வந்தது?”

அவள் நிமிர்ந்தபோது கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். என் நெஞ்சில் கடுமையான வலிபோல துயரம் எழுந்தது. அலறிவிடவேண்டும் என்று தோன்றுமளவுக்கு அழுத்தம். அவள் கண்களின் கண்ணீரை இப்போதெல்லாம் குறைவாகவே பார்க்கிறேன். எப்போதாவது அதைப்பார்க்கையில் எனக்குள் ஒரு வெறி எழும். கத்தி எடுத்து என் சங்கை அறுத்துக்கொண்டு விழுந்துவிடவேண்டும் என்பதுபோல. வெளியே இறங்கி கண்ணில்பட்ட அனைவரையும் கொன்றுகுவிக்கவேண்டும் என்பதுபோல.

”இப்ப அதை நேருக்குநேர் பாத்துட்டேன்… இதோ இங்க. விஸ்வரூபமா. அது இல்ல அவள்” என்று அவள் சுட்டிக்காட்டினாள். “அவளுக்கு என்ன வெறி அப்டி? யப்பா! அந்த கண்ணை பாத்தா….” அவள் உடலை உலுக்கிக்கொண்டாள்.

“நாம கெளம்பிடலாம் சாதனா”என்றேன்

அவள் சட்டென்று எழுந்தாள். ”மாட், நான் அந்த குகைக்குள்ள போய்ட்டு வாரேன்”

“வேண்டாம், ப்ளீஸ்”

“என்னாலே அவளை நேருக்குநேர் பார்க்க முடியுமான்னு பாக்கிறேன். பாத்தாகணும், ஒருவேளை அதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன்”

“நானும் வர்ரேன்…”

‘நான் மட்டும்தான் போகணும்…”

“சாதனா பிளீஸ்”

“இங்க இரு… ஒருமணிநேரத்திலே நான் வரலைன்னா உள்ள வா”

அவள் எழுந்து திரும்பிச் சென்றாள். நான் அவள் போவதை பார்த்துக்கொண்டு செயலற்று நின்றேன். அவளுக்குப்பின்னால் போகலாமா? அவளை அறியாமல் கண்காணிக்கலாமா?

ஆனால் என்னால் அசையவும் முடியவில்லை. நெஞ்சின் எடை தாளமுடியாமல் மூச்சை இழுத்து இழுத்து விட்டேன். படிகளில் அமர்ந்துகொண்டேன். சற்றுநேரம் கழித்து எழுந்தேன். நிற்கமுடியாமல் மீண்டும் அமர்ந்தேன்.

தெற்கே மேகக்குவியல் பெருகி மேலெழுந்திருந்தது. அதில் சிறிய மின்னல்கள் வெட்டின. ஷார்ட் சர்க்யூட் ஸ்பார்க்குகள் போல. உறுமல்கள் போல இடியோசை எழுந்தது.

மீண்டும் எழுந்து நின்றேன். குகைக்குள் போய் பார்க்கலாமா? கால்மணிநேரம் ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. செல்போனில் சாமுண்டி என்று அடித்து தேடினேன். ஏறத்தாழ அதே போன்ற தெய்வங்கள் வந்தன.வட இந்தியாவில் பல கொடூரமான தோற்றம் கொண்ட சாமுண்டி கோயில்கள் இருந்தன. மண்டையோட்டு முகம், கொடூரமான சிரிப்பு கொண்டவை

ஆனால் அந்த சிலைபோல மடியில் உடலைப் போட்டு கிழித்துக்கொண்டிருக்கும் தெய்வம் வேறு எங்கும் தென்படவில்லை. சாமுண்டி சாக்தமதத்தில் சப்தமாதாக்கள் என்னும் ஏழு அன்னை தெய்வங்களில் ஒன்று. சௌர மதத்தில் அறுபத்துநான்கு யோகினி தேவியர்களில் ஒருத்தி. பழங்காலத்தில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குகைகூட நரபலி கொடுப்பதற்கானதாக இருக்கலாம்.

ஒருமணிநேரம் ஆகப்போகிறது என உணர்ந்து நான் பாறையில் இறங்கியபோது குகைக்குள் இருந்து சாதனா வெளியே வந்தாள். அருகே வந்து  “போலாம்” என்றாள்

எனக்கு அவளுடைய சுறுசுறுப்பு ஆச்சரியமளித்தது. அவள் முகமே பத்து ஆண்டு இளமை அடைந்ததுபோலிருந்தது. கண்கள் மிக நன்றாகத் தெளிந்திருந்தன.

படிகளில் இறங்கும்போது அவளிடம் அதைப்பற்றி எதையாவது கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். கேட்கக்கூடாது, அப்படியே விட்டுவிடவேண்டும். அதுவே முறையானது. ஆனால் என்னால் கேட்காமலும் இருக்கமுடியவில்லை. என் நாக்குவரை வந்த கேள்வியை விழுங்கினேன்

அவள் சுற்றிலும் நோக்கியபடி நடந்துவந்தாள். நடையில் தளர்வு இல்லை. மெல்லிய மூச்சாக ஏதோ பாட்டை முனகுவதாகக்கூடத் தோன்றியது

“நல்ல கூல்பிரீஸ் இல்ல?” என்றாள்

“ஆமா”என்று நான் சொன்னேன்

மின்னல் வெட்டியது. ஆனால் கண்முன் நிறைந்திருந்த வெளிச்சம் சற்று வெளிறி அணைந்ததுபோலத்தான் அது இருந்தது. இடியோசை பாறை ஒன்று உருண்டதுபோல ஒலித்தது

”மழையிலே இங்கே இருந்தா நல்லா இருக்கும்” என்று சாதனா சொன்னாள்

“நாம் போயிடுவோம்… இந்த எடம் ரொம்ப லோன்லியா இருக்கு” என்றேன்

காருக்கு வந்ததும் அவள் நிமிர்ந்து மலையை பார்த்தாள். அங்கிருந்து பார்த்தால் படிகள் ஏறிச்சென்று வானில் முடிவதுபோல தோன்றியது “நைஸ் பிளேஸ்” என்றாள்

நான் காரை திறந்துவிட்டு சுற்றிச் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். அவள் முன் இருக்கையில் அமர்ந்து குனிந்து லிவரை விடுவித்து இருக்கையை நிமிரவைத்துக்கொண்டாள்

“போலாமா?” என்றேன்

அவள் குனிந்து மலையை பார்த்துக்கொண்டு “நைஸ் பிளேஸ்” என்றாள்.

“இன்னொருவாட்டி வருவோம்”

“ஓ நோ” என்று சிரித்தாள். “இன்னொரு வாட்டியா? அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை”

கார் தார்ச்சாலைக்கு வந்ததும் வேகத்தை கூட்டினேன். “விழுப்புரத்திலே தங்கணுமா? என்றேன்

“வேண்டாம், ராத்திரிக்குள்ள போயிடலாம்ல?”

“ஆமா”

“தென் ஓக்கே”

“செம மழை பெஞ்சிருக்கு” என்று சாதனா சொன்னாள் “எல்லாமே கழுவி துடைச்சு வச்சது மாதிரி இருக்கு”

“ஆமா” என்றேன்

“மேகம்லாம் என்ன ஒரு டிசைன்ஸ்…. அப்டியே ஜொலிக்குது இல்ல?” என்றாள். “சின்ன வயசிலே எனக்கு பிடிச்ச வெளையாட்டுன்னா கிளாஸ் மெட்டீரியல்ஸுக்குள்ள கண்ணை வச்சு பார்த்துட்டே இருக்கிறது. பாட்டில்கள் பேப்பர் வெயிட்டுகள்…வேற ஒரு உலகம் மாதிரி இருக்கும். அப்டியே கற்பனை பண்ணி உள்ள போயிடுவேன். அத மாதிரி இருக்கு. ஹெவென்ஸ்!”

நான் லாரி ஒன்றை கடந்தேன். சாதனா குனிந்து அந்த டிரைவருக்கு கைகாட்டினாள். “அந்தாள் ஃபன்னியா மீசை வச்சிருக்கான். வால்ரஸ் மாதிரி” என்றாள் “ஆனா பாக்க நல்லாத்தான் இருக்கு”

சாலை நனைந்து கருமையாக இருந்தது. கரிய நதிபோல ஒழுகி காருக்கு அடியில் புகுந்து மறைந்தது

“ஒரு பெரிய பெல்ட் மாதிரி ஓடிட்டு இருக்கு ரோடு” என்றாள். “எல்லாமே பாக்க ஆரம்பிச்சா அழகா ஃபன்னியா ஆயிடுது இல்ல?”

“ஆமா”என்றேன்‘

கார் வேகம் கூடியது. நான் அதன் சீரான ஓட்டத்துக்கு ஏற்ப மெல்லமெல்ல அமைதியடைந்தேன். “என்னாச்சு?”என்றேன். என்னால் கேட்காமலிருக்க முடியவில்லை

“என்ன?”

“மேலே என்ன பாத்தே?” என்றேன் “குகையிலே”

“ஒண்ணுமில்லை”

“வாட்?” என்றேன் மீண்டும்

“கமான் மாட், அதை இன்னொருத்தர்ட்ட சொல்ல முடியாது. ஹெல்தியான ஒருத்தர்ட்ட சொல்லவே முடியாது”

“ஓக்கே”

“டோண்ட் பி ஆங்ரி… என் செல்லக்குட்டப்பன் இல்ல?”

“ஓக்கே” என்று புன்னகைத்தேன்

“லாங் லிவ் வித் பீஸ் டியர்… நீ ரொம்ப ரொம்ப நல்லவன். ஐ அம் லக்கி டு ஹேவ் யூ…தேங்க் யூ டியர். தேங்க்யூ ஃபர் ஆல்”

நான் சட்டென்று கண்ணீர் மல்கினேன். ஆனால் அதை அவளுக்கு தெரியாமல் மறைத்தேன். உதடுகளை இறுக்கி தொண்டையின் இறுக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்

“நேர்முன்னாடி கிளவுட்ஸ்” என்று சாதனா சொன்னாள். “பெரிய புகை மாதிரி… மலை மாதிரி”.

“ஆமா” என்றேன்

“அதுக்குள்ள மழை பெஞ்சிட்டிருக்கும்… டெஃபனிட்லி!”

சட்டென்று அவள் கூச்சலிட்டாள். “மாட், வானவில்… அங்கபாரு வானவில்”

நான் மிகப்பெரிய வானவில்லை பார்த்தேன். வானிலிருந்து வான் நோக்கி வளைந்திருந்தது. அதன்கீழே காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்

தொடர்புடைய பதிவுகள்

ஒருபோதும் திரும்பாது.

$
0
0

சில சமயம் சென்று தொட்டுவிடும் பாட்டு சிலநாட்கள் அலைக்கழித்து பின்பு கடந்துசென்று நினைவில் ஒரு துளியாக எஞ்சிவிடும். கூழாங்கற்களில் ஆயிரத்தில் லட்சங்களில் ஒன்றில் யக்ஷி இருக்கும் என்பார்கள். நம் கால் பட்டால் பற்றிக்கொண்டுவிடும். பித்தாக்கி உடனிருக்கும். கடந்தகாலம் யூடியூப் பாடல்களாக, கூழாங்கல் பரப்பாக பரவிக்கிடக்கிறது. எங்கே எந்த யக்ஷி காத்திருக்கிறாள் என்று தெரியாது

திலீப்குமார் நடித்து 1954ல் வெளிவந்த அமர் என்ற படத்தின் பாடல் இது.

 

தேரே சடகே பலம் ந கர் கோயி காம்

 

அன்பே உன்னை வணங்கி கேட்கிறேன் எதற்கும், வருந்தாதே

இந்த நேரமும் இடமும் இனி ஒருபோதும் திரும்பாது.

 

அழகானவை இந்த நாட்கள்

வசந்தம் வருமா வராதா என்று நாமறியோம்

துயரங்களை மறந்துவிடு. இக்கணத்தில் வாழ்வோம்

எவரையும் பொருட்டாக நினைக்காதே

இவ்வுலகத்தை ஏன் பொருட்படுத்தவேண்டும்?

 

முட்களில் உன்னை சிக்கவைத்துக்கொள்ளாதே என் அன்பே

மலர்களின் நடுவே சிரித்துக்கொண்டிரு

இவ்வுலகில் சிரிப்பு கொஞ்சம்தான் மகிழ்ச்சியும் கொஞ்சம்தான்

அன்பே வாழ்வின் துயரங்களோ ஆயிரம்

அன்பே வாழ்வின் துயரங்களோ பல்லாயிரம்

 

 

 

https://youtu.be/dlTdU5C3lpo

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அருள்,மணிபல்லவம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மணிபல்லவம் மனதை கொந்தளிக்கவைத்த கதை. ஏனென்றால் நான் கடலில் பணியாற்றியிருக்கிறேன். கோஸ்டல் கார்ட்ஸில் இருந்தேன். மும்பை பக்கமும் கல்கத்தாப்பக்கமும் வேலையாக இருந்தேன். கடலில் போகும்போது படகிலிருந்து பார்த்தால் சிலசமயம் நீருக்கு அடியில் இருக்கும் பாறைகளும் கடல்பாசிகளும் பெரிய காடுபோலவும் நகரங்கள் போலவும் இருக்கும். நான் நிலவிலெயே பார்த்திருக்கிறேன். பெரிய கனவு போலிருக்கும். அப்படியொரு கனவுதான் மணிபல்லவம்.

நமக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடலுக்குள் நம்முடைய உலகம் ஒன்று உள்ளது என்ற கனவு உண்டு. துவாரகை கடலில் போய்விட்டது. பூம்புகாரும் மதுராபுரியும் கபாடபுரமும் கடலில்தான் இருக்கின்றன. தென்திசைதான் மூதாதையரின் திசை. கடலுக்குள் நாம் பெரிய கனவுகளை வைத்திருக்கிறோம். அந்தக்கனவிலே ஒரு துளிதான் மணிபல்லவமாக வந்து காட்சியளித்துவிட்டுச் சென்றிருக்கிறது

 

அருள்ராஜ்

 

 

அன்புள்ள ஜெமோ.. நலம் தானே.

 

மணிபல்லவம் வாசித்ததில் இருந்து பல எண்ணங்கள்  மீண்டும் மீNடும் வாசிப்பதற்கு அதில் ஏதோ ஒன்று புதைந்திருந்தது அந்தோணி கண்ட தீவைப் போல.

இக்கதையின் மொத்த புள்ளியும் அந்தக் கடைசி வரியில் தான் உள்ளது. அதுவரை ஒரு  சர்ரியலிஸ்டிக் உணர்வைத் தான் தந்து கொண்டிருந்தது.  இப்போதும் இது அவ்வகைக் கதை தான் என்றாலும், அந்தப் புள்ளியில் இருந்து துவங்கு போது அதன் வேறு வகைக் கோணங்களைச்  சாத்தியமாக்குகிறது.

முதலில் பன்னாசிங் பீகாரி என்பதினால்  கிருஷ்ணாவும், துவாரகையும் என்ற கோணத்தில் மனம் சென்றது, ஆனால் மீண்டும் வாசிக்க வாசிக்க அந்தோணியின் கூற்றின் படி அந்த இடம் அநேக புத்த, சமண விகாரைகளின் அமைப்புடன்  ஒத்து இருக்க மனம் மேலும் மேலும் அது புத்தர் என்றே வகுத்தக் கொள்ளத் துவங்கியது.

அப்போதுதான் மனம் கிருஷ்ணாவுக்கும் புத்தருக்குமான அநேக ஒப்புமைகளை வகுக்கவும் தொடங்கியது.  புற ஒப்புமைகளைத் தாண்டி, அகத்தே நின்று விசாரிககத்துவங்குகையில் திறந்த வாசல்கள் விடுக்கும் அழைப்பை மீறத் துணியாத மனங்களில் வசிக்கும் புத்தருக்கும் கிருஷ்ணருக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தோன்றியது.  நிலவும், கடலும், அலைக்கழிப்புகளும் உறுதிகளும் சேர்ந்ததுதானே அகவாழ்வு அந்த அதி உன்னதத்தை தேர்ந்தெடுத்த அனைவருக்குமான உணர்வையும் அலைக்கழிப்புகளையுமே அந்தோணியும் அடைகிறான்.   மீள்கிறான், கூடவே கதை சொல்லியும்.

ஞானம் என்பது 21 தலைமுறைகள் தொடரும் என்ற வழக்கின் படி அவனது தந்தையின் அழைப்பாகவே கூட இருந்தாலும்  எல்லோருக்கும் தந்தை  இறைவன் என்ற கூற்றும் மனதில் வந்து போனது.  சிலசமயம் மனம் பக்தியில் பொதிந்து கொள்வது இதம் தருவதாக உள்ளது.

 

’கிருத்திகா ஸ்ரீதர்

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நலம்தானே? கடுமையான வலியும் சாவும் தரும் நோயை எதிர்கொள்வதில் ஒரு நிலை உண்டு. சாவுடன் போராடுவது உயிர்களின் வழக்கம். ஆனால் ஒரு கட்டத்தில் சாவை ஏற்றுக்கொண்டாகவேண்டும். அதற்கு Palliative care என்னும் வலிநீக்கு மருத்துவத்தில் முக்கியமான இடம் உண்டு. கௌன்சிலிங் கூட கொடுப்பது உண்டு.

ஆனால் அது அத்தனை எளிய விஷயம் அல்ல. மிகமிக கடுமையான வலியில் அழிந்துகொண்டிருக்கும் உடல்கொண்டவர்கள்கூட மீளமுடியும் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள் அந்த நம்பிக்கை முழுசாக இருந்தால் பரவாயில்லை. அதுவும் இருக்காது. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்து ஊடாடிக்கொண்டிருக்கும். அவர்களால் எந்தப்பக்கமும் போக முடியாது. அது மிகப்பெரிய அலைக்கழிப்பு.

aதைப்போல நான் ஏன் சாகவேண்டும் என்ற கேள்வி. நான் என்ன தப்பு செய்தேன் என்று அதைத்தான் இந்தக்கதையிலே கேட்கிறாள்.அதை இறைநம்பிக்கை உடையவர்களும் கேட்பார்கள். சாமானியர்களும் கேட்பார்கள். ஆனால் பொதுவாக இண்டெலெக்சுவல்களுக்குத்தான் அந்தக்கொந்தளிப்பு அதிகம்.

அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் succumb ஆகிறார்கள். அங்கே விடுதலை அடைந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்படி succumbஆகிறார்க்ள் என்பதை கண்டுபிடிக்க கஷ்டம். பல காரணங்கள் இருக்கலாம். தெய்வத்தை எப்படியோ உணர்ந்திருக்கலாம். cosmic law ஒன்றை உணர்ந்திருக்கலாம். இந்தக்கதையில் கதாநாயகி அந்த inevitabilityயை கண்டு அதன்முன் பணிந்துவிடுகிறாள். விடுதலை ஆகிவிடுகிறாள். ஒரு அபாரமான தருணத்தின் கதை ஜெ. நன்றி

 

ராதாகிருஷ்ணன் சங்கரராமன்

 

அன்பின் ஜெ,

வணக்கம்!.

நண்பர் வா.மணிகண்டன் குறிப்பு ஒன்றில் சென்னை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் வைத்திருக்கும் அவரது நண்பர் சொன்னதாக ஒரு தகவலை பதிவு செய்திருந்தார்.

உணவகம் ஆரம்பிக்க இடம் பார்க்கையில் சென்னையிலிருந்து வெளியேறும் பாதை பக்கமாக இடம் தேடியதாகவும், அதற்க்கான காரணமாக, சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் கார்களில் இருக்கும் மக்களின் மனநிலையும், சென்னை திரும்பும் பாதையில் செல்லும் கார்களில் இருக்கும் மனநிலையும்,அந்த மனநிலை உணவகத்தின் வியாபாரத்தில் ஏற்ப்படுத்தும் தாக்கத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.

”அருள்” கதையின் அடிநாதமும், வானவில்லை ரசிக்கும் மனது, இரு வழி பயணத்தில், இடது வலமாய் இடம் மாறி இருப்பதற்க்கான காரணமும் இந்த குறிப்பை மீட்டெடுத்தது.அடுத்ததாய் அந்த சாமுண்டி.  காலையில் கதையை படித்துமுடித்தபோது சாதனா அடைந்திருந்த பதட்டத்திற்க்குள் சென்றுவந்திருந்தேன். நிலைமீண்டு நேரடியாகவே போய் பார்த்து வந்தேன் அந்த சாமுண்டியை. எங்கள் தலைச்சங்காடு கிராமத்தில் அவளின் பெயர் பேச்சாயி. வருடத்திற்க்கு இரண்டு குருதிகொடை குடும்ப சார்பாக உண்டு. பலியிடப்பட்ட நாட்டு சேவலை, சமைத்து படையலுக்கு கொண்டுவருவதற்க்காக மடியாக காத்திருப்பார் பூசாரியின் மனைவி.

பலியன்னத்தை  வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. பேச்சாயியின் காலடியிலேயே அமர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். பத்து வயதில், பயத்தோடு காலடியில் அமர்ந்து சாப்பிட்ட அச்சம் கலந்த நினைவுகள், இன்று போட்டோ எடுக்க அருகணைந்தபோதும் அப்படியே சில கணம் நீடித்தது.

சாதனா மீண்டுவிட்டாள், ஆனால் நானும், மாட்டும் மீள சின்னாள் ஆகும்.

 

-யோகேஸ்வரன் ராமநாதன்.

 

 

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

 

 

தொடர்புடைய பதிவுகள்

மூத்தோள்,செய்தி- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

செய்தி கதை இந்தக்கதைவரிசையில் எங்கே நிற்கிறது என்று பார்த்தேன். ஒளிமிக்க ஒரு கணம். அப்படி எழுதப்பட்ட கதைகளில் இந்தக்கதையும் வருகிறது முதல் ஆறு ஓர் உதாரணம். ஆழி இன்னொரு உதராணம். இந்தக்கதைகளில் எல்லாம் மனிதர்கள் மனிதர்களை ஆழமாக சந்திக்கிறார்கள். காதல் அல்லது காமம் அதிலே ஒன்று மட்டும்தான். இந்தக்கதையில் காமம். முதலாறு கதையில் காதல். எதுவாக இருந்தாலும் இனிமையான ஒரு சந்தர்ப்பம், அவ்வளவுதான்.

பகவதியை அனந்தன் தற்செயலாக, அந்த கணத்தின் ஒரு மீறலால், மனதின் ஆழத்தில் தீண்டிவிடுகிறான். அவள் மனசுக்குள் ஒரு மணலை போட்டுவிடுகிறான். அது என்றென்றும் முத்தாக அங்கே இருந்துகொண்டிருக்கும். அவர்கள் அதை மனதால் எடுத்து மகிழ்ந்து திரும்ப வைத்துவிடுவார்கள். அனந்தன் அதைக் கடந்துவிடுவான். அவளால் முடியாது

 

எஸ்.அரசு

 

அன்புள்ள ஜெ.

 

செய்தி கதை வயதைத் தாண்டிய இருவரின் பாலியல் கவர்ச்சியை பரஸ்பர மனங்களில் கொண்டுவந்து சித்தரிக்கும் கதை போலத் தோன்றுகிறது.

பகவதி அவனில் கணவனைக் காண்கிறாள். அதனை அவள் விரும்பியும் இருக்கிறாள். அதனால்தான் அவள் அந்தக் கடிதத்தின் ஆசை வார்த்தைகள் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளவில்லை. ஆனால் அவன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. தத்தளிக்கிறான். அலைந்து திரிகிறான். இறுதியில் அவளில் உண்டான மாற்றத்தை உணர்கிறான். இது யௌவன பருவங்களின் ஆற்றாமையை உள் அடக்கிய கதைபோல உணர்கிறேன். இது ஒவ்வொருவருக்குமான அனுபவம். வெளியில் கூறுவதில்தான் தயக்கம். இந்தக் கதை அந்தத் தயக்கத்தின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன்.

 

கேரளத்தில் பகவதி. தமிழகத்தில் கண்ணகி. இந்தப் பெயர்களை ஒரு குறியீடு போலப் பார்க்கிறேன்.

 

சுயாந்தன்.

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

மூத்தோள் சிறுகதை ஒரு அதிர்ச்சியை அளித்தது. அந்த முடிவை நான் எதிர்ப்பர்க்கவில்லை.அந்த முடிவிலிருந்து அந்த கோயிலே ஒரு மெடபிசிக்கல் இமேஜ் ஆக மாறிவிட்டது. ஒரு குகைக்குள் பகவதியும் மூத்தவளும் இருந்தார்கள் என்று சொல்லும்போது இரண்டுபேரும் சமமான அளவிலுள்ள சிலைகளாக இருந்தார்கள் என்று நினைக்கத்தான் தோன்றும். ஆனால் மூத்தவள் அப்படி பேருருவமாக இருந்திருக்கிறாள். இளையவள் சிறியவளாக அவள் காலடி அளவிலேயே இருந்திருக்கிறார். அந்த பிரம்மாண்டம்தான் இருட்டில் ஆழத்தில் எல்லா விளக்குகளையும் வழிபாடுகளையும் வாங்கிக்கொண்டு அமந்திருக்கிறது. அதன் மடியில் அமர்ந்து அதை வெறுத்தும் பழித்தும் நாம் வாழ்கிறோம்.

 

சிவக்குமார்

 

வணக்கம் ஜெ

 

மூத்தோள் சிறுகதையை வாசித்தேன். ஒரு துளி அமங்கலம் பொருட்டே உலகம் தன்னை ஆக்கச்சக்திகளால் நிறைத்துக் கொள்கிதது. அத்தனைக்கும் பின்னால் பேருருவென எழுந்திருக்கும் அமங்கலம் நகைக்கும் தருணம் கொண்ட கதை. ஒரு துளி அமங்கலமேனும் சூடாத எதுவும் நிறைவுறுவதில்லை. அத்தனைக்கும் அடியில் இருக்கும் அமங்கலத்தைத் தரிசிக்கச் செய்தது.

 

அரவின் குமா

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

தொடர்புடைய பதிவுகள்

வசையே அவர்களின் உரிமைப்போர்

$
0
0

செட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன்

அன்புள்ள ஜெ

‘அவதூறு’, ‘அவமதிப்பு’ விஷயமாக ஒரு செய்தி. வேடிக்கையானது, ஆனால் இது பதிவாகவேண்டும். நீங்கள் பிரசுரித்த ஒரு கடிதத்தில்  செயப்பிரகாசத்தைப் பற்றி அவருடைய இயக்கத்தோழர்கள் அச்சில் வெளியிட்ட ஒரு கருத்தை ஒட்டி ஒரு வரி இருந்தது. அதை அவதூறு அவமதிப்பு என்று குதித்து கூச்சலிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஆள்சேர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்கள். இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அறிக்கை வெளியிட்டன. அந்த அறிக்கை ஒன்றில் கவிஞர் சமயவேலும் ஆதரவு கையெழுத்து போட்டிருந்தார்.

ஆனால் பா.செயப்பிரகாசம் வழக்கு தொடுத்தது ஒரு வீண்வேலை என்று சமயவேல் கருத்து தெரிவித்தார். அவ்வளவுதான், தோழர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். சமயவேல் சாதிவெறியன், களவாணி, போலிவேடதாரி, அயோக்கியன். ஊழல்செய்தவர் என்று இரண்டுநாட்களாக வசை கொட்டிக்கொண்டிருக்கிறது.

இது அவமதிப்பு என்று அந்த கையெழுத்திட்ட நூறுபேரில் எவருக்குமே தோன்றவில்லை. தமிழில் ஒரு முன்னோடிக்கவிஞனைப்பற்றிய இந்தவசைகளை பொதுவெளியிலே கொட்ட எந்த தயக்கமும் இல்லை. ஒருவர்கூட அப்படியெல்லாம் ஒரு கவிஞனை வசைபாடலாமா என்று கேட்கவில்லை.

இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பா.செயப்பிரகாசம் ஒரு இடதுசாரிக்கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே கூட்டம். ஒருவருக்காக அத்தனைபேரும் கிளம்புவார்கள். மற்றபடி அவர்களுக்கு எந்த ஒரு பொதுநலக் கொள்கையோ திட்டமோ கிடையாது.

இடதுசாரிக்கும்பல் எழுத்தாளர்களை கீழ்த்தரமாக வசைபாடும், அவதூறுசெய்யும். அதெல்லாம் கொள்கைச்செயல்பாடு, அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என உண்மையிலேயே நம்புகிறார்கள். ஆனால் அவர்களை பற்றி மிகச்சாதாரணமான ஒரு சந்தேகம் பதிவானால்கூட மொத்தக் காக்காய்க் கூட்டமும் கூடி கூச்சலிடும். அதற்கு எழுத்தாளர்களும் போய் சேர்ந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் முற்போக்கு முத்திரை கிடைக்காது. பரிதாபம்.

எழுத்தாளர்கள் அனைவருக்குமே ஒரு எச்சரிக்கை இது. அவர்கள் தங்கள் சொந்த காழ்ப்புகளுக்காக இந்தக் கும்பலை வளர்த்துவிட்டால் என்றைக்கிருந்தாலும் அவர்களுக்குத்தான் ஆபத்து. எழுத்தாளர்களுக்கு கௌரவமோ அடையாளமோ ஒன்றுமே கிடையாது என்று நம்பும் கட்சியரசியல் கூட்டம் இது.

மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்,

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கூப்பிட்டார். நீங்கள் சொல்லும் கட்சியரசியல்கும்பலில் ஒருவர். எழுத்தாளர் அல்ல, வாசகரும் அல்ல, ஆனால் இலக்கிய உலகில் முப்பதாண்டுகளாக இருக்கிறார். கருத்துக்கள் சொல்வார், வசைபாடமாட்டார் ஆனால் வசைபாடிகளுடன் இருப்பார். ஏனென்றால் அதுதான் அவருக்கு அடையாளம். தனியாக அடையாளமில்லை. கும்பல்தான் அவருக்கு அடையாளம்.

“நீங்க அப்டி வெளியிட்டிருக்கக் கூடாது, அது அவமதிப்பில்ல?. நான் தன்மையா சொல்றேன்” என்றார்.

“சரி தோழர், ஒரு அஞ்சுவருஷமா யமுனா ராஜேந்திரன்னு ஒருத்தர் என்னை மிகமிகக்கேவலமா திட்டி அவதூறுபண்ணிட்டே இருக்கார். பச்சை கெட்டவார்த்தையா எழுதுறார். அப்டி சாக்கடை வார்த்தையாலே ஒவ்வொருநாளும் எழுதுற ஒரு நாலஞ்சு ஆத்மாக்கள் இருக்கு. நீங்க எதாவது கருத்து தெரிவிச்சிருக்கீங்களா?”

“அவனுங்க அப்டித்தான், நான் என்ன சொல்றது?”

“சரி, இப்ப எங்கிட்ட பேசுறீங்க. நான் தாக்கப்பட்டப்ப கேலிசெய்து கும்மாளமிட்டு கெட்டவார்த்தையாலே வசைபாடினாங்களே அது நாகரீகமில்லைன்னு சொல்லியிருக்கீங்களா?”

அவரால் பதில் சொல்லமுடியவில்லை.

“சரி, இதுவரை எழுத்தாளர்களை இந்தக்கும்பல் அவமானப்படுத்தினப்ப ஏதாவது எதிர்வினை ஆற்றியிருக்கீங்களா? சும்மாவாவது கூப்பிட்டு வேண்டாம்னு சொல்லியிருக்கீங்களா?”

அவர் “அவங்கள்லாம் சோஷியல் ஆக்டிவிஸ்டுங்க” என்றார்.

“என்ன ஆக்டிவிசம்? இந்த வசைபாட்டுக்கு அப்பாலே அவனுங்க என்ன செஞ்சிருக்காங்க?. ஒண்ணும் எழுதலை. சரி,வேண்டாம், அந்தமட்டுக்கும்போச்சு. அவனுக வசைபாடுற எழுத்தாளர்களை வாசிச்சாவது பாத்திருக்கானுங்களா?”

“என்ன அப்டி சொல்லிட்டீங்க.”

“மெய்யாகவே கேட்கிறேன். இந்தக் கும்பலாலே யாருக்கு என்ன நன்மை?”

அவர் ஃபோனை வைத்துவிட்டார்.

இது ஒரு போலிக்கும்பல். கூட்டமாக அடையாளத்திற்கு அலைபவர்கள். எதையும் எழுதவோ வாசிக்கவோ சிந்திக்கவோ துப்பில்லாத மொண்ணைகள். ஆனால் கூட்டமாக இருப்பதனாலேயே ஒரு பெரிய ஆற்றலை திரட்டி வைத்திருக்கிறார்கள். வசைபாடும் மிரட்டும் அதிகாரம். இப்போது நீதிமன்ற மிரட்டலையும் கையில் எடுத்திருக்கிறார்கள்.

தமிழின் முன்னோடியான கவிஞனை இவர்கள் சாக்கடை மொழியில் அவதூறு செய்யலாம். எவரும் வாய் திறக்கமாட்டார்கள். சமயவேலே இவர்களை ஒன்றும் சொல்லமாட்டார். முகத்திலேயே உமிழப்பட்டாலும் துடைத்துக்கொண்டு பவ்யமாகச் சிரிக்கவேண்டும். ஏனென்றால் இங்கே எழுத்தாளன் தன்னந்தனியன்.

ஆனால் இந்த ஆற்றலை எல்லாம் இவர்கள் எழுத்தாளர்களிடம் மட்டும்தான் காட்டுவார்கள். ஏனென்றால் அவன் எளியவன், தனித்தவன். இவர்கள் எழுத்தாளர் எவரையாவது சங்கி என்று முத்திரை குத்தி அவன்மேல் வசைபாடி நமைச்சலை அடக்கிக்கொள்வார்கள். உண்மையிலேயே ஒரு பாரதிய ஜனதா ஆள் மேல் இதையெல்லாம் செய்வார்களா? பெண்டு நிமிர்ந்துவிடும் என்று தெரியும்.

இந்தக் கும்பல் எழுத்தாளர்கள் அல்ல, வாசகர்கள் அல்ல. இவர்களுக்கும் இலக்கியத்திற்கும் கருத்துச் செயல்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை. பெரும்பாலானவர்கள் வெறும் என்ஜிஓ பிழைப்புவாதிகள் அல்லது கட்சிக்காரர்கள். ஒரு கண்டன அறிக்கை, ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட வசையும் அவதூறும் இல்லாமல் கௌரவமான மொழியில் எழுத அங்கே ஆள் கிடையாது.

இவர்களுடன் இணைந்தால் முற்போக்கு முத்திரை கிடைக்கும் என்று நினைக்கும் எழுத்தாளன், இவர்களால் சக எழுத்தாளன் கீழ்மைப்படுத்தப்படும்போது கண்டும் காணாமலும் இருப்பவன், எத்தனை கீழ்மை மிக்கவன். அவனை எண்ணித்தான் வருந்துகிறேன்.

ஜெ

***

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

பா.செயப்பிரகாசம் பற்றி

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

சாதியமும் புரட்சிகரமும்

பா.செயப்பிரகாசமும் மாற்றிதழ்களும்

***

 

தொடர்புடைய பதிவுகள்

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

$
0
0

ஃபைல்களையும் குறிப்புகளையும் திரும்ப அடுக்கி வைத்துவிட்டு நான் நாற்காலியில் சாய்ந்துகொண்டேன். மனம் காலியாக இருந்தது. உதிரியாக அர்த்தமில்லாத சொற்கள் ஓடிக்கொண்டிருந்தன.

தலைமைக்காவலர் மாணிக்கம் என் முன் என் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருந்தார்.

நான் நிமிர்ந்து “என்ன?” என்றேன்.

“என்னசார் ரிப்போர்ட்டு?” என்றார் மாணிக்கம்.

“என்ன ரிப்போர்ட்டு? எல்லார்ட்டயும் பேசியாச்சு. எல்லாம் வரிவரியா படிச்சாச்சு… ஒரு துப்பும் இல்லை. ஒண்ணுமே தெரியல்லைன்னு கூப்பிட்டு சொல்லிடவேண்டியதுதான்.”

“அதெப்டி சார்?” என்றார் மாணிக்கம்.

அவருக்குப் பின்னால் எட்டு கான்ஸ்டபிள்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“பின்னே என்ன? நீங்க சொல்லுங்க, என்ன சொல்ல? அவனைப்பத்தி உருப்படியா ஒரு துப்பாவது இருக்கா? ஃபாலோ பண்ணிட்டிருக்கோம் சார்னு சொல்றதுக்காவது ஏதாவது முகாந்திரம் இருக்கா. அப்டியே நின்ன நிற்பிலே மறைஞ்சிட்டான். நாம இந்தா இப்டி உக்காந்திட்டிருக்கோம். என்னமோ கொலையும் கொள்ளையும் நாம பண்ணின மாதிரி மேலே உள்ளவன் சத்தம்போடுதான். விதி .வேறே என்ன?”

பைக் ஓசை கேட்டது. எஸ்.ஐ ஸ்டீபன் உள்ளே வந்தான். நாங்கள் அவனை பார்த்துக்கொண்டிருந்தோம். அவன் என் அறைக்கு முன் வந்து சல்யூட் அடித்தான்.

“என்ன?” என்றேன்.

“அவனுக்கு இங்க கூட்டாளிகள்னு யாருமே இல்லை சார். பத்துப் பதினைஞ்சுபேரை ஃபாலோ பண்ணியாச்சு. நாலஞ்சுபேரை மேக்கரை ரிசர்வ் பில்டிங்குக்கு கூட்டிட்டுப்போயி அடிச்சும் பாத்தாச்சு. உண்மையிலேயே ஒருத்தனுக்கும் தெரியல்லை. தன்னந்தனியா இருந்திருக்கான். இங்க நம்மகிட்ட இருக்கிற டாக்குமெண்டிலே ஏதாவது க்ளூ இருந்தாத்தான்… இல்லே…”

நான் வெறுமே அவனைப் பார்த்தேன்.

“இல்லேன்னா அவனுக்க கைரேகை எங்கியாம் சிக்கி…” என்று அவன் இழுத்தான்.

“கைரேகை… அதாவது அவன் வேற எங்கியாம் கொலையோ கொள்ளையோ பண்ணி சிக்குத வரைக்கும் காத்திருக்கணும்.”

தடுமாறி, “இல்ல அதில்லை” என்றான்.

“வேறே எங்க கைரேகை எடுக்குதோம்? சிசிடிவி பொருத்தியிருக்கோம். அதிலேயே பாதி உருப்படியா இல்லை…”

ஸ்டீஃபன் புன்னகைத்தான்.

“இப்ப வரை அவனைப்பத்தி என்ன தகவல் நம்ம கிட்ட இருக்கு? இந்தா சில பழைய கேஸ்கள், ஒண்ணுரெண்டு பழைய விலாசங்கள், போட்டோ, கைரேகை. அவ்ளவுதான்… இந்த நாடு ஒரு பெரிய கடல். அவனை எங்க போயி தேட?”

அப்பாலிருந்து கான்ஸ்டபிள் குமரேசன் “சார்” என்றார்.

“சொல்லும்வே.”

“இல்ல, இங்க கஸ்பா ஸ்டேஷன் காண்டாக்டிலே அரிகிருஷ்ணன்னு ஒருத்தர் உண்டு” என்றார் “அவரை வேணுமானா கூப்பிட்டு கேட்டுப்பாக்கலாம்.”

“அவரு யாரு?” என்றேன்.

“அவரு ரிட்டயர்டு ஏட்டு… இந்த விசயத்திலே ஒரு எக்ஸ்பர்ட்டாக்கும்.”

“எக்ஸ்பர்ட்டுன்னா?” என்றேன் “அவருக்கு இவனுக கூட காண்டாக்ட் உண்டா?”

“சேச்சே, அவரு ரொம்ப நேர்மையான ஆளு. சாதுவான மனுஷன். வெளியே ஒரு ஆக்‌ஷனுக்குக்கூட போனவரு இல்லை. கடைசிவரை ரைட்டரா ஆபீஸு வேலையிலேதான் இருந்தாரு.” என்றார் குமரேசன்.

மாணிக்கம் “அவரு இங்க இதே ஊரிலே முப்பத்தேளு வருஷம் சர்வீஸிலே இருந்திருக்காரு. ரிட்டயர் ஆகி இருபத்தாறு வருசமாவுது. அறுபது வருசமா இங்க நடந்த எல்லா மேஜர் கிரைமையும் ஞாபகம் வச்சிருக்காரு. அந்த கிரிமினலுக்க சாதி, குடும்பம், சொந்தம், சுத்துப்புறம்,பழைய ஹிஸ்டரி எல்லாமே மனசிலே இருக்கு… அப்டியே ஞாபகம் வந்துகிட்டே இருக்கும். இப்பவும் அப்பப்ப வண்டி அனுப்பி கூட்டிட்டுவந்து கேக்குறதுண்டு” என்றார்.

“செரி, அப்ப கூட்டிட்டு வாங்க” என்றேன்.”பீஸு கேப்பாரோ?”

“இல்ல. அவருக்க பிள்ளைகள்லாம் டாக்டர் எஞ்சீனியர்னு நல்ல நெலையிலே இருக்காங்க. ஒரு மகன் இங்கேயே பார்ல சீனியர் லாயராக்கும். சும்மா நமக்காக வருவாரு.”

“நானே போய் கூட்டிட்டு வாறேன்” என்றான் ஸ்டீபன். “நமக்கும் ஆளை பரிச்சயப்பட்டது மாதிரி இருக்கும்.”

அவர்கள் கிளம்பிச் சென்றபின் நான் மீண்டும் ஃபைல்களை இன்னொருமுறை அணுவணுவாக வாசித்தேன். குற்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்திருந்தது. நகரின் வெளிப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தனியாக தங்கியிருந்த முதிய தம்பதிகளை கொன்று பணத்தையும் நகைகளையும் திருடிவிட்டு தப்பியிருந்திருக்கிறான். கைரேகை நிபுணர்கள் அதைச் செய்தவன் ஒருவன்தான் என்று சொன்னார்கள். பழைய குற்றவாளி, பெயர் குள்ள சுப்ரமணியம்.

கொல்லைப்பக்கம் பாத்ரூம் ஜன்னலை கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்து அவர்களை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு பீரோ உட்பட எல்லா பூட்டப்பட்ட இடங்களையும் உடைத்தே திறந்து சாவகாசமாக திருடிவிட்டு சென்றிருந்தான். துப்புரவாக வீட்டை முழுக்க தேடியிருந்தான். எந்த பதற்றமும் இல்லை. ஊறிப்போன கட்டை.

ஆனால் குள்ள சுப்ரமணியம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு கடைத்திருட்டில் சிறை சென்றபோது எடுத்த புகைப்படம், தகவல்கள் தவிர வேறெந்த செய்தியும் இல்லை. அவன் கம்பியை உடைத்து வீட்டுக்குள் புகுந்து திருடுபவன். பொதுவாக நகை, பணம்தான். அடிதடி, வழிப்பறி கணக்கு ஏதுமில்லை. ஆயுதமேந்தும் வழக்கம் இல்லை.

அவனுக்கு மனைவி இருந்தாள், எட்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாள். குழந்தைகள் இல்லை. அதற்குப்பின் பெண்தொடர்புகள் இல்லை. கூட்டாளிகள் எவருமில்லை. எங்கேயும் வழக்கமாக போவதில்லை. ஆற்றங்கரை சாஸ்தா கோயில் அருகே ஒரு மாடியில் ஒற்றை அறை வாடகைக்கு எடுத்திருந்தான். அங்கே ஒன்றுமே இல்லை. ஒரு துண்டு காகிதம்கூட. எல்லா தடையங்களையும் அழித்துவிட்டு சென்றிருந்தான். அந்த வீட்டுக்காரர்களுக்கு அவனைப்பற்றி ஒன்றுமே தெரியாது. பக்கத்து வீட்டுக்காரர்கள் அவனை பெரும்பாலும் பார்த்ததே இல்லை.

வருபவர் எப்படி என்ன துப்பு தரப்போகிறார்? அவருக்கு என்னதான் தெரிந்திருக்கும்? முதலில் அவநம்பிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக ஆவல். கொஞ்ச நேரத்திலேயே பொறுமையிழந்து எழுந்து நின்றுவிட்டேன்.

ஜீப் வந்து நின்றது. ஸ்டீபன் இறங்கி உள்ளிருந்து தளர்ந்து முதியவர் ஒருவரை கைப்பிடித்து கூட்டிவந்தான். நான் வாசல்வரை சென்று “வாங்கய்யா” என்றேன்.

“நல்லா இருங்கய்யா” என்றார். நெற்றியில் சந்தனம் அணிந்திருந்தார். காதில் துளசியிலை. வெள்ளைவேட்டி வெள்ளை சட்டை. கையை புஜம் வரை சுருட்டி வைத்திருந்தார்.

“உள்ளே வாங்க” என்று அழைத்துச் சென்றேன். அமர்ந்து கொண்டு மூச்சு வாங்கி இளைப்பாறினார்.

நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். “என் பேரு ராமகிருஷ்ணன்… இங்க இன்ஸ்பெக்டர். ஊரு நான்குநேரிப் பக்கம்.”

“ஆகா” என்றார். “பேரிலேயே எனக்குப் பிடிச்ச பேரு ராமகிருஷ்ணன்தான். ராமனும் கிருஷ்ணனும் உள்ள பேரு. என் மூத்த பையன் பேரு ராமகிருஷ்ணன்தான். டாக்டரா இருக்கான். இ.என்.டி அதோட நான்குநேரின்னா அது  வானமாமலைப் பெருமாளோட ஊருல்ல… அப்பா இருக்காரா?”

“ஆமா அங்கதான் இருக்காரு” என்றேன். “கோயிலிலே இருந்தீங்க போல?”

“ஆமா, எங்க குடும்பமே பறக்கை மதுசூதனப் பெருமாளுக்கு அடிமைப்பட்டதாக்கும். அங்க இப்ப ஏகாதசி சப்பரம். நம்ம கைங்கரியமும் கொஞ்சம் உண்டு.”

ஸ்டீபன் அவனே டீ கொண்டு வந்தான்.“சீனி போடல்ல ஐயா” என்றான்.

“வேண்டாம், நமக்கு சுகரு” என்றார்.

நான் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அந்த ஃபைலை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டேன். அவர் அதை விரிவாக வாசிக்கவில்லை. புகைப்படத்தை கண்ணாடியைப் போட்டுக்கொண்டு கூர்ந்து பார்த்தார். பெயரை மீண்டும் பார்த்தார்.

பிறகு நிமிர்ந்து “மாதேவனுக்க மகன்” என்றான்.

“யாரு?” என்றேன்.

“இந்த சுப்ரமணியம்… இவனுக்க அப்பன் பேரு மாதேவன். திருட்டுகேஸிலே எட்டுதடவை ஜெயிலுக்கு போயிருக்கான். அவனுக்க அப்பன் மல்லன் மகன்  அழகப்பன். அவனும் திருடனாக்கும்… திருவிதாங்கூர் ராஜ்ஜியத்திலேயே அவன் ரெண்டுதடவை ஜெயிலுக்கு போயிருக்கான்” என்றார்.

“இப்ப இந்த சுப்ரமணியம் தோராயமா எங்க இருப்பான்?” என்று கேட்டேன்.

அவர் அதைக் கேட்காதவர் போல “அழகப்பனுக்கு இங்க பெருவிளையாக்கும் ஊரு. அப்ப அங்கெல்லாம் காடுல்ல. பத்துப்பதினஞ்சு வயசிலேயே அவன் அந்த வழியா போறவங்களை வழிப்பறி செய்து அப்டியே தொளில்திருடனா ஆயிட்டான். ரெண்டு கூட்டுகாரனுக உண்டு. செவத்தான் மகன் மணிகண்டன். முருகேசன் மகன் வேலாண்டி. ஆளூர் மகாதேவய்யர் கொலையிலே முதல்பிரதிவாதி அழகப்பன். மத்த ரெண்டுபேரும் கூட்டுபிரதிகள். அப்பதான் திருவிதாங்கூர் போலீசு அவனுகளை பிடிச்சது.”

“ஓ” என்றேன். அவரே வரட்டும் என்று விடலாம் என்று தோன்றியது.

“அழகப்பன் ஜெயிலுவிட்டு வந்ததுமே டிபி வந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலே செத்தான். அப்பல்லாம் ஜெயிலுக்கு போனாலே டிபி வந்திரும்” என்றார் “அழகப்பனுக்கு அஞ்சு பையனுங்க. ஒரு மகள். மகளை திருவனந்தபுரத்திலே கெட்டிக்குடுத்தான். அவபேரு தேவகி. அவளுக்க கெட்டினவன் அங்க மார்க்கெட்டிலே ஒரு ரவுடியா இருந்தான். செத்துட்டான். சிவராமன்னு பேரு.

தேவகிக்க  மூணுபையனுங்களிலே முருகனை சின்னவயசிலே ஆரோ குத்தி கொன்னுட்டாங்க. கிருஷ்ணன் அங்க சந்தையிலே தேங்கா வியாபாரம் செய்யுதான். அவன் தம்பி அர்ஜுனன் ஒரு தெருவு வியாபாரியாக்கும். ரெண்டுபேருக்கும் பிள்ளைங்க உண்டு. கிருஷ்ணனுக்க மகன் ஒருத்தனுக்கு கிரிமினல் ரெக்காட் உண்டு. பிக்பாக்கெட்டு. அவன் தம்பி எல்.ஐ.சி. ஏஜெண்டு. நாராயணன்னு பேரு. அர்ஜுனனுக்கு ஒரு மகன். அவன் பட்டாளத்திலே இருக்கான். அர்ஜுனனுக்கு ரெண்டு அடிதடி ரெக்கார்ட் உண்டு. மத்தபடி பிரச்சினை இல்லை.

அழகப்பனுக்க பிள்ளைகளிலே மூத்தவன் மகாராஜன். அவன் கனகமூலம் சந்தையிலே காய்கறி தரகு ஏவாரம் செய்தான். கிரிமினலுதான். அடிதடி திருட்டு கேஸுகள் உண்டு.  அவனை ஆரோ குத்தி கொன்னுட்டாங்க. அவனுக்கு மூணு பிள்ளைங்க. ஒருத்தன் நாகர்கோயிலிலே ஆட்டோ ஓட்டுதான். ராம்குமார்னு பேரு. கிரிமினல் ரெக்காட் உண்டு. சாராயம் கடத்தல், ஆள்கடத்தல்னு நாலுகேஸு. ஒண்ணிலே ஜெயிலுக்கு போயி வந்தான். இன்னொருத்தன் மகேஷ், இங்க ஒரு கம்பிக்கடையிலே வேலைபாக்குதான். மூணாமத்தவன் சிவப்பிரசாத். கோணம் காலேஜிலே பிடெக் படிக்கான். அவனுக ரெக்கார்ட் இல்லாதவனுக.

மகாராஜனுக்க தம்பி விஸ்வநாதன் கோட்டாறிலே ஒரு இரும்புக்கடையிலே வேலை பாத்தான். அவன் இப்ப இல்லை. அவனுக்கு ஒரு மகள். மாதவின்னு பேரு. அவளை கெட்டினவன் ஒரு ஆட்டோ ரிக்சாக்காரன். பரமசிவம். அவளுக்கு ரெண்டு சின்னப்பிள்ளைங்க.  பரமசிவம் கிரைம் உள்ளவன். ஆனா இதுவரை கேஸ் இல்லை. விஸ்வநாதனுக்கு தம்பி சுந்தரம். அவனும் கிரிமினலாக்கும். கேரளத்துக்கு அரிசி கடத்துத தொளிலு. அவன் இப்ப இல்லை. அவனுக்கு ரெண்டு பிள்ளைக. அதிலே மக பேரு ஸ்ரீதேவி. அவ இப்ப கொல்லத்திலே இருக்கா. அவளுக புருசன் அங்க தரகு ஏவாரம். அவனுக்கும் கொஞ்சம் கிரைம் உண்டு. வட்டிக்கு குடுக்கான். அவளுக்கு நாலு பயக்க. சீனிவாசன், மாதவன், ஸ்ரீகுமார், ஸ்ரீராமன். நாலுபேருமே சில்லறை ரவுடிகளாக்கும். எல்லார் பேரிலேயும் ரெக்கார்ட் உண்டு.

அழகப்பனுக்க பிள்ளைகளிலே கடைக்குட்டி குமரேசன் யோக்கியன். இவனுக சங்காத்தமே வேண்டாம்னு கேரளாவிலே ஆரியநாடு பக்கமா போயிட்டான். அங்க அவன் பெண்ணு கெட்டி ரெண்டு பிள்ளைக. ஒருத்தன் சங்கரன் அவனுக்கு ரப்பட் டாப்பிங் வேலை. இன்னொருத்தன் கடை வச்சிருக்கான். அவனுக ரெண்டு பேரும் யோக்கியமானவனுகதான். குமரேசன் இப்ப இல்லை. செத்துட்டான்.

அவர் தனக்குத்தானே ஒரு பெரிய ஜெபம் போல சொல்லிக் கொண்டே இருந்தார். நினைவிலிருந்தே அவ்வளவு பெரிய வம்சகதை விரிந்து வருவதைக் காண பிரமிப்பாக இருந்தது. அவர் எனக்காகச் சொல்லவில்லை என்று தெரிந்தது. அதை நினைவில் வைத்திருக்க முடியாது. அவர் மனதிலுள்ள ஒரு பெரிய வரைபடத்தில் விரல்வைத்து தொட்டுத்தொட்டு தேடிச்செல்கிறார்.

அவர் சொல்லிக்கொண்டே சென்றார். “மாதேவனுக்கு மூணு பிள்ளைங்க. மூத்தவ மகள். அந்த மகளை சங்கரன் கோயிலிலே கெட்டிக் குடுத்திருக்கான். அவபேரு கோமதி. அவ புருஷன் அங்க ஒரு ஓட்டலு வச்சிருந்தான். அவன் பேரு நயினார். அவளுக்கு நாலு பிள்ளைங்க. நாலுலே ரெண்டுபேரு பம்பாயிலே ஓட்டல் வச்சிருக்கானுக. மணிகண்டன், ராமச்சந்திரன்னு பேரு. ஒருத்தன் பி.டபிள்யூ.டியிலே பியூனு. கண்ணன்னு பேரு. ஒருத்தன் ஃபாரஸ்டு கார்டு. அவன்பேரு மாணிக்கவேல்.

நயினாருக்கு ஒரு தம்பி உண்டு, கண்ணன்னு பேரு. அவன் கிரிமினல். அவனுக்கு நாலஞ்சு அடிதடி வழக்கு இருக்கு. சங்கரநயினார் கோயிலிலே அவன் ஒரு கேங்கிலே இருந்தான். இப்ப காலு வாதம் வந்து வெலகி இருக்கான். அவனுக்க பிள்ளைகளிலே மூத்தவன் அருணாச்சலம். அவன் இப்பவும் அந்த கேங்கிலேதான் இருக்கான். மத்தபயக்க யோக்கினனுங்க. மெட்ராஸிலே இருக்கானுக. இவனுக கூட தொடர்பு வச்சுகிடமாட்டானுக.

சுப்ரமணியன் முதல் பையன். அவனுக்க தம்பியும் ஆளு கிரிமினலாக்கும். கணேசன்னு பேரு. வழிப்பறி திருட்டு எல்லாம் உண்டு. அவன் மதுரையிலே இருக்கான். அவனுக்கு அங்க ரெண்டு பெஞ்சாதி. ரெண்டுபேரும் கூட இல்லை. அவளுக ரெண்டு பேருமே பிராத்தல் கேஸுகள். சரஸ்வதின்னு ஒருத்தி. கிருஷ்ணம்மாள்னு ஒருத்தி. அவளுக எங்க இருக்காளுகன்னு தெரியாது. அவன் அங்க தனியா குடிச்சு சீரளிஞ்சிட்டிருக்கான்.

“இவன் சுப்ரமணியன் பத்தாம் கிளாஸு பெயிலாயி இங்க ஒரு சிமெண்டு கடையிலே வேலைபாத்தான். அப்பவே குடி உண்டு. பதினெட்டு வயசிலே முதல் கேஸிலே மாட்டியாச்சு. இதுவரை நாலு முறை ஜெயிலிலே இருந்திருக்கான். எல்லாமே திருட்டு. இதுக்கு முன்னாடி வழிப்பறியிலே ஒருத்தனை வெட்டியிருக்கான். கையோட போச்சு. இதுதான் முதல் கொலை” என்றார் அரிகிருஷ்ணன்.

“நிதானமா செய்திருக்கான்” என்றேன்.

“இல்லை, பதறியடிச்சு செஞ்சிருக்கான். என்ன செய்யணும்னு தெரியாததனாலே ரூமிலேயே சுத்திச்சுத்தி வந்திருக்கான்” புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி “இங்க பாருங்க. இது பெட்ரூம் வார்ட்ரோபிலே இருந்த துணி. இதை சமையலறையிலே போட்டிருக்கான். அப்ப கைமறதியா எடுத்திட்டு வந்திருக்கான்னு அர்த்தம். அது அவனுக்க பதற்றத்தைத்தான் காட்டுது” என்றார். “படிச்ச கிரிமினல் தேவையில்லா பொருளை தொடமாட்டான். பொருள்களை அங்க இங்க கொண்டுட்டு போகமாட்டான்.”

நான் உடனே படுக்கையறையில் கிடந்த சம்புடத்தையும் புகைப்படத்தில் பார்த்துவிட்டேன். “ஆமா, உண்மைதான்” என்றேன்.

“கொலை செய்யக்கூடியவன் இல்லை. பெரும்பாலும் திருடனுங்க கொல்ல மாட்டானுக. கொன்னா பயந்துபோயி செய்தான்னு அர்த்தம். திட்டமிட்டு கொள்ளையடிக்குதவன் கொல்லுவான். ஆனா கண்டிப்பா ஒரு கிளவுஸ் இல்லாம வரமாட்டான்.”

“எங்க போயிருப்பான்?” என்றேன். “ஓட்டல் ரூமுன்னு தங்கமுடியாது… போலீஸு பின்னாடி வந்திட்டே இருக்கும்னு தெரிஞ்சிருக்கும்.”

“ஆமா அவன் எங்கியாம் வீட்டுக்குள்ளதான் தங்கணும். வெளியே வராம. ஒரு மூணுமாசம் முகம் வெளியே காட்டாம இருந்தா நியூசு பழசா ஆயிடும்… அவன் ஒளிஞ்சிருக்க இடம்தான் தேடுவான். அதோட அவன் ரூமை பாத்தேன்..” என்று ஃபோட்டோவை காட்டினார் “பீடிக் குப்பையா இருக்கு. பெரும்பாலான நேரம் ரூமிலேயே தனியா இருந்திருக்கான்.”

“ஆமா” என்றேன். “தனிமையான ஆள். போட்டோவிலேயே தெரியுது.”

“இந்தமாதிரி ஆளுகளை நாங்க பெருச்சாளிகள்னு சொல்லுவோம். தனியா பதுங்கி இருக்கிறதுதான் இவனுகளுக்க ரீதி. அப்ப கண்டிப்பா அதுக்கான இடம்தான் தேடுவான். கூடிய சீக்கிரமே எங்கியாவது போயி பதுங்கத்தான் பாப்பான். ரொம்பதூரம் போய்ட்டே இருக்கமாட்டான். அலையமாட்டான்” என்றார்.

“யாருகிட்ட போயிருப்பான்?” என்று நான் கேட்டேன்.

“அவனுக்க ரீதி என்னன்னு பாக்கணும். சிலபேரு நிறைய பேசுவான். பேசுதவனுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்க. அவன் அங்கதான் போவான். குறைவா பேசுதவனுக்கு ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. அவன் அங்க போக வாய்ப்பிருக்கு. இவனுக்கு ஃப்ரண்ட்ஸ் இல்லை… அதாவது இப்ப தெரியல்லை. அப்டி இருந்தா அது ஒரு அடுக்கு. பிறகு தேடுவோம்.

“அப்ப சொந்தக்காரங்க வீட்டுக்குத்தான் போயிருப்பான்” என்றான் ஸ்டீஃபன்.

“இந்த சொந்தக்காரங்க லிஸ்டிலே கிரிமினல் டெண்டென்ஸி உள்ளவங்க வீடுகள் ஏது?” என்றேன். “ஏன்னா அவன் படத்தோட நியூஸ் வந்திட்டுது. எங்கபோனாலும் திருடீட்டு வந்திருக்கான்னு தெரிஞ்சிரும்… பங்கு வாங்குறவந்தான் ஒளிச்சு வைப்பான்.”

“ஆமா அது ஒரு கோணம். அது. அது இன்னொரு அடுக்குன்னு வைப்போம். அவனுக்க கிரிமினல் பேக்ரவுண்டு தெரியாதவங்க வீட்டுக்கு போவான்னு வைப்போம். அதுதான் முதல் ரவுண்டு.”

“அப்டி யாரும் இங்க இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இவன் போனதுமே தெரிஞ்சிரும்… ஒரு வாரத்துக்குள்ள கண்டிப்பா தெரிஞ்சிரும். டிவியிலே காட்டுறாங்க” என்றேன்.

“அப்ப இவன் வெளியூரு போகணும். ஆனால் தமிழ்தவிர வேற பாசை தெரியாது. இதுவரை தமிழ்நாட்டு எல்லையை விட்டு வெளியே போனதில்லை. திடீர்னு அப்டி போயிருக்க மாட்டான்.”

அவர் மீண்டும் சுட்டுவிரலால் தேடித்தேடிப் போனார். ஒவ்வொருவரையாக தொட்டு விலக்கினார். பிறகு “இப்ப இவனுக்குச் சரியான ஆளுன்னா யாரு? இங்க என்ன நடக்குதுன்னு தெரியாதவன். அதாவது வெளியே எங்கியாவது இருக்கிறவன்… இவனை அறிமுகம் இருக்கும். வேண்டப்பட்டவனாக்கூட இருப்பான். ஆனா பேக்ரவுண்ட் முழுசாத் தெரிஞ்சிருக்காது… அப்டி ஒருத்தன்”

நான் அவர் எங்கே போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். “சங்கரன்கோயில் கோமதிக்க பிள்ளைங்க மணிகண்டனும் ராமச்சந்திரனும் பம்பாயிலே ஓட்டல் வச்சிருக்கானுக… அவனுகளுக்கு இங்க உள்ள நியூஸு தெரியாம இருக்க வாய்ப்பிருக்கு.”

“ஆமா என்றேன் “மும்பைக்கு போயிருப்பான்.”

“இருங்க. அவன் அப்டி கெளம்ப மாட்டான். அப்டி போற ஆளு இல்லை” என்றார். “வழக்கமா பம்பாய்க்காரனுக இங்க ஏதாவது சொத்து வாங்குவானுக. தோப்போ தோட்டமோ. அதை இங்க யார் பொறுப்பிலயாவது விட்டிருவானுக…”

“ஆமா” என்றேன்.

“அப்டி ஒரு சொத்து இருந்தா அதிலே போயி தங்குறதுதான் ஈஸி. தோட்டத்திலே ஒரு குடிலிலே தங்கிட்டா யாரும் கேக்கமாட்டாங்க. வாட்ச்மேன்னு நினைச்சுக்கிடுவாங்க.”

“சொத்து வாங்கியிருந்தா இந்த பி.டபிள்யூ.டி பியூனு கண்ணனுக்கு தெரிஞ்சிருக்கும். இல்லேன்னா ஃபாரஸ்டு கார்டு மாணிக்கவேலுக்கு தெரிஞ்சிருக்கும். ரெண்டுபேருமே சொத்து வாங்கிக்குடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு” என்று அவரே தொடர்ந்து சொன்னார்.

“ஆமா” என்றேன்.

“இந்த பியூன் கண்ணன் அம்பாசமுத்திரத்திலே இருக்கான். மாணிக்கவேலு பாபநாசத்திலே இருக்கான். ரெண்டுபேர்கிட்டயும் பொதுவா பம்பாய்க்காரனுகளுக்கு என்ன சொத்து இருக்குன்னு கேட்டுப்பாருங்க.”

“அதை இப்பவே கேட்டிடலாம். ரெண்டுபேருமே சர்க்கார் எம்ப்ளாயீஸ். அரைமணிநேரத்திலே பிடிச்சிடலாம்…” என்றேன்.

“செரி, இது முதல்ரவுண்டு… இதை கிளியர் பண்ணிட்டு அப்டியே கீழே எறங்கி மத்த அடுக்குகளிலே தேடுவோம்” என்று எழுந்தார். “நான் கொஞ்சம் படுக்கணுமே. நல்ல முதுகுவலி இருக்கு. எனக்கு ஒரு மத்தியான்ன உறக்கம் வழக்கமாக்கும்.”

“இங்க பெட் இருக்கு வாங்க” என்றான் ஸ்டீஃபன்.

அவரை அவன் கொண்டு சென்று படுக்கவைத்தான். அதற்குள் நான் ஆணைகளை பிறப்பித்துவிட்டேன். ஒருமணிநேரத்தில் பியூன் கண்ணனிடம் பேசினார்கள். அவன் ஃபரஸ்ட் கார்டு மாணிக்கவேல் மும்பையிலிருக்கும் மணிகண்டனுக்காக பாபநாசத்தில் பதினெட்டு ஏக்கர் நிலம் வாங்கிக்கொடுத்ததாக தெரிந்தது.

ஃபாரஸ்டு கார்டு மாணிக்கவேலை மேலும் ஒருமணி நேரத்தில் தொடர்பு கொண்டார்கள். அவனை அழைத்துக் கொண்டு பாபநாசத்தில் அந்த நிலத்திற்குச் சென்றார்கள். மாணிக்கவேல் மணிகண்டனுக்கு நிலத்தை வாங்கிக் கொடுத்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. அங்கே பிறகொருமுறை போனதில்லை. அந்த வியாபாரத்தில் அவனுக்கும் மணிகண்டனுக்கும் மனக்கசப்பு.

மேலும் ஒருமணி நேரத்தில் பாபநாசம் எஸ்.ஐ.கருப்புப்பாண்டி தகவல் தெரிவித்தான். குள்ள சுப்ரமணியத்தை பிடித்துவிட்டார்கள். தோட்டத்திற்குள் இருந்த சிறிய பம்ப்செட் கட்டிடத்தில் அவன் தங்கியிருந்திருக்கிறான். குற்றம் நடப்பதற்கு முன்னரே மணிகண்டனிடம் ஃபோனில் பேசியிருக்கிறான். மணிகண்டன் தன் நிலத்தை கவனித்துக்கொண்ட வாட்ச்மேன் ஞானக்கண்ணிடம் ஃபோனில் சொல்லி சுப்ரமணியத்தை அங்கே தங்கவைத்திருக்கிறான். அந்நிலத்தை பார்த்துக்கொள்வதாக மணிகண்டனுக்கு சுப்ரமணியம் வாக்களித்திருந்தான். அங்கே வந்த நாள்முதல் முழுக்க முழுக்க உள்ளேயே இருந்திருக்கிறான்.

“பிடிச்சாச்சு சார். உக்கார வைச்சிருக்கோம். நகையையும் பணத்தையும் மீட்டாச்சு…” என்றான் கருப்புப்பாண்டி.

“சூப்பர் வேலை கருப்பு… தேங்க்ஸ் மக்கா” என்றேன்.

“தேங்ஸ் சார்” என்றான் “ஆனா சரியா எப்டி அங்க கையை வச்சீங்க?”

“அதொரு மெண்டல் மேப்பு… பிறகு சொல்லுதேன்.”

அரிகிருஷ்ணன் எழுந்து முகம் கழுவி ஒரு டீ குடித்துவிட்டு என் மேஜைக்கு வந்தபோது நான் சிரித்தபடி “ஆளை பிடிச்சாச்சு சார்” என்றேன்.

“அப்டியா? அங்கதானா?”

“அங்கேயேதான்… உங்களை பர்சனலா தெரியல்லன்னா உங்ககிட்ட சொல்லிட்டு போயிருக்கான்னுதான் போலீஸ்காரன் மூளை வேலைசெய்யும்” என்றேன்.

சிரித்துக்கொண்டே அவர் அமர்ந்துகொண்டார். ”அப்ப நான் கிளம்புறேன்” என்றார்.

“ஜீப்பு இருக்காடே?”என்று நான் டிரைவர் நாகமாணிக்கத்திடம் கேட்டேன்.

“சார் கொண்டு போயிருக்காரு. ஒரு அக்கூஸ்டை பிடிக்க… இப்ப அரை மணிநேரத்திலே வந்திருவாரு.”

“பரவாயில்லை” என்று அரிகிருஷ்ணன் சொன்னார்.

“நான் ஆச்சரியப்படுறது உங்க ஞாபகசக்தியை. ஒத்த ஒரு கிரிமினலுக்க மூணுதலைமுறையோட முழுக்கதையையும் சொல்லுறீங்க… அப்ப்டி எத்தனை கிரிமினலுகளை ஞாபகம் வச்சிருப்பீங்க?”

“தெரியல்ல, ஆனால் இதுவரை இந்த ஜில்லாவிலே எனக்குத்தெரியாத ஒரு கிரிமினலை பாக்கல்லை” என்றார் அரிகிருஷ்ணன்.

“யப்பாடா… ஒரு ஐநூறு இருக்குமா?”

“ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு மேலே இருக்கும்” என்று புன்னகைத்தார்.

“அவ்ளவு பேரோடயும் முழுக்கதைன்னா எவ்ளவு… லெட்சம் பேரு இருக்கும்போல இருக்கே.”

“இருக்கலாம்… மனுசமூளையிலே பலகோடி நியூரான்ஸ் இருக்குன்னுல்லா பேச்சு.”

“எப்டி தெரிஞ்சுகிட்டீங்க? எப்டி ஞாபகம் வச்சிருக்கீங்க?”

“எப்டி தெரிஞ்சுக்கிட்டேன்னு எனக்கே தெரியாது. அதுக்குன்னு எதுவுமே செய்றதில்லை. எழுதி வச்சுக்கிடுறதில்லை. கூர்ந்து கவனிப்பேன். பேருகளை ஒருதடவைக்கு பத்துதடவை சொல்லிக்கிடுவேன். அப்டியே மனசிலே பதிஞ்சிரும்” என்றார் “நான் இதெல்லாம் பெயரா நினைச்சுக்கிடுறதில்லை.. அப்டியே முகங்களா, உயிருள்ள ஆட்களா, நான் நேரிலே பழகினவங்களா நினைச்சுக்கிடுவேன். இவங்களை நான் நேரிலே பாத்ததுண்டான்னு கேட்டா தெளிவா சொல்லமுடியாது.”

“அப்டியா?”

“ஆமா, எப்பவுமே கிரிமினல்களை நேரிலே பாக்கிறப்ப அவனை முன்னாடியே பாத்தது மாதிரித்தான் இருக்கும். ஒரு தடவைகூட முகம் நான் கற்பனை பண்ணின மாதிரி இல்லியேன்னு நினைச்சதில்லை” என்று அவர் புன்னகைத்தார்.

என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. “ஒருமாதிரி நம்ப முடியாமத்தான் இருக்கு”

“அப்டி இல்லை. ஒருத்தரோட ஆர்வம் ஒரு விஷயத்திலே குவிஞ்சிருக்கிறப்ப மத்தவங்களுக்கு அது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. பெரும்பாலானவங்களுக்கு அப்டி கவனம் ஒருவிஷயத்திலே குவியறதில்லை. அவங்க நூறுவிஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கிறதை நான் ஒரே விஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கேன், அவ்ளவுதான்.”

“அப்டி ஈஸியா சொல்லிடமுடியாது” என்றேன்.

“அவ்ளவுதான். இது என்னை மீறி நடந்திட்டிருக்கிறது. எங்க அப்பா கான்ஸ்டபிளா இருந்தாரு. அவரு வீட்டிலே கிரிமினல்களைப் பத்தி அம்மாகிட்ட பேசிட்டிருப்பாரு. அதைக்கேட்டு நான் வளந்தேன். பத்துப்பதினஞ்சு வயசுக்குப்பிறகு அவரே எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லுவாரு. நான் பதினெட்டு வயசிலே போலீசுக்கு வந்தாச்சு. இப்ப வரை வேற நினைப்பே இல்லை” என்றார்.

“ஆச்சரியம்தான்” என்றேன்.

“நான் ஒண்ணுமே பண்றதில்லை. ஆனா நியூஸ்லே நம்ம ஜில்லா கிரைம் மட்டும்தான் பாப்பேன். இதுசம்பந்தமான டாக்குமெண்ட்ஸ் ஏராளமா வச்சிருக்கேன். அதைத்தான் நேரம் போகல்லேன்னா படிப்பேன். வேற சினிமா டிவி அரசியல் ஒண்ணிலயும் இன்ட்ரெஸ்ட் இல்லை. இப்ப சுகர் இருக்கு. ஆனா அந்த நோய் பத்தி ஒண்ணுமே தெரியாது. அதைப்பத்தி வாசிக்கவே என்னாலே முடியாது. டாக்டர் சொன்னாக்கூட ஞாபகத்திலே நிக்காது. நான் சாப்பிடுத மருந்துக்க பேரு தெரியாது… கிரைம் கிரிமினல் தவிர எதுவுமே நிக்காது. அது அப்டி அமைஞ்சுபோச்சு.”

நான் “ஐயா ஒண்ணு கேக்கலாமா, தப்பா நினைக்கமாட்டீங்களே” என்றேன்.

“சொல்லுங்க” என்றார்.

“இல்லை இந்த ஆர்வம் வர்ரதுக்கு என்ன காரணம்? கிரைமுக்குமேலே அவ்ளவு வெறுப்பா? கிரிமினலுகளை பிடிக்காதா?”

“சேச்சே, கிரிமினலுகளை பிடிக்கிறதோட நம்ம வேலை முடிஞ்சுபோவும். நான் அவனுகளுக்க கேசிலேகூட பட்டுக்கிட மாட்டேன்… நான் கோர்ட்டுக்கே போனதில்லை.  கிரைம் கிரிமினல் இதெல்லாம் எப்பவும் உள்ளதுதானே? என்ன வெறுக்கிறதுக்கு இருக்கு?”

நான் சற்று முன்னகர்ந்து “சரி, அப்ப விரும்பறீங்களா?”

“எதை?”

“கிரைமை? உங்களை கிரிமினலா நினைச்சுக்கிடுவீங்களா? கிரைமையெல்லாம் மானசீகமா செஞ்சுபாப்பீங்களா? ஒரு கிரிமினலாத்தான் இந்த கிரைம் உலகத்திலே வாழுறீங்களா?”

அவர் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு “சட்டுன்னு சொல்லவேண்டாமேன்னு பாத்தேன். நீங்க கேட்டதனாலே மனசுக்குள்ள நினைச்சு நினைச்சு பாத்தேன். கண்டிப்பா இல்லை. எந்தக் கிரைமையும் நான் மானசீகமா செஞ்சு பாத்ததில்லை. எந்த கிரிமினலாகவும் நான் என்னை நினைச்சுக்கிட்டதே இல்லை. உறுதியாச் சொல்வேன். ஒருமுறைகூட கெடையாது. அவங்க வேற, நான் வேறதான். அது என் மனசிலே ஆழமா இருக்கு…”

“புரியுது” என்றேன்.

“அப்டி விலக்கிட்டிருக்கிறதனாலே தான் என்னாலே அப்டி விரிவா அவனுகளை பாக்க முடியுது.”

“அப்ப நீங்க யாரு? இந்த எடத்திலே உங்க ரோல் என்ன?”

“புரியல்லை.”

“நீங்க இந்த கிரிமினல்களோட ஹிஸ்டாரியனா?”

“நானா?” என்றார் “நான் எங்க இவனுகளைப் பத்தி எழுதப்போறேன்? நமக்கு கேஸ் பெட்டிஷன்தான் வரும்.”

“அசுரகுலத்துக்கு சுக்ராச்சாரியார் மாதிரி கிரிமினலுகளுக்கு நீங்க குலகுருவா?” என்றேன்.

“என்ன சொல்றீங்க? நான் என்ன இவனுகளுக்கு அட்வைஸா பண்ணுதேன்?”

“இல்லைதான். ஆனா இவங்க அத்தனை பேரைப்பத்தியும் முழுசா தெரிஞ்சவரு நீங்க மட்டும்தானே? அசுரர்களோட எண்ணிக்கை சுக்ராச்சரியாருக்கு மட்டும்தான் தெரியும்னு புராணத்திலே இருக்கு”

அவர் சிரிக்கவில்லை. சற்றுநேரம் யோசித்துவிட்டு “இருக்கலாம்…சுக்ரர்! நல்லாத்தான் இருக்கு” என்றார்.

ஜீப் வந்த ஓசை கேட்டது. அரிகிருஷ்ணன் எழுந்துகொண்டு “அப்ப சுக்ராச்சாரியார் கெளம்பறேன்” என்றார்.

“நான் சும்மா ஒரு க்யூரியாசிட்டிக்காகத்தான் கேட்டேன்… தப்பா நினைச்சுக்கிடாதீங்க”

“சேச்சே, இதிலே தப்பா என்ன?” என்று அரிகிருஷ்ணன் சொன்னார்.

ஸ்டீஃபன் வந்து நின்றன். நான் ஸ்டீபனிடம் “ஆளை பிடிச்சாச்சு” என்றேன்.

“அய்யோ, எங்க?”

“சார் சொன்ன இடத்திலே. பாபநாசம் பக்கம் ஒரு எஸ்டேட்டிலே”

“கிரேட்… தேங்க்யூ சார்” என்றான் ஸ்டீபன்.

“சேச்சே, இது நம்ம வேலைல்லா” என்றார் அரிகிருஷ்ணன்.

நான் “ஐயா கடைசியா ஒரு கேள்வி” என்றேன். “உங்க நினைப்பு முழுக்க கிரிமினலும் கிரைமுமா இருந்திட்டிருக்கு… நீங்க பெருமாளுக்கு முழுமனசு குடுக்கவேண்டியவரு… இப்டி ஆயிட்டோமேன்னு நினைக்கிறதில்லியா?”

“தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?” என்றார். என் தோளில் தட்டிவிட்டு சிரித்தபடி ஸ்டீபனின் தோளைப் பற்றிக்கொண்டு நடந்துசென்றார்.

***

 

தொடர்புடைய பதிவுகள்

மணிபல்லவம்

$
0
0

இனிய ஜெயம்

இவர் பெயர் கூலியாமி நெரி என்கிறது இணையம். 8 நிமிடம் வரை மிக இயல்பாக மூச்சு கட்டி, மிக ஆழத்திலும் நீந்தும் திறமை கொண்டவராம். உலகின் பல்வேறு நீர் உலகில் அலைந்து திரிந்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. :)

மணிபல்லவம்

கடலூர் சீனு

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

 

https://youtu.be/OnvQggy3Ezw

தொடர்புடைய பதிவுகள்

மணிபல்லவம், தங்கப்புத்தகம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மணிபல்லவம் இன்னொரு ஷம்பாலா. மிஸ்டிக்கான நகரம். புதையுண்ட ஆழத்தில் இருந்து வருகிறது. ஆச்சரியம்தான். ஷம்பாலா உச்சத்தில் புதைந்திருக்கிறது. மணிபல்லவம் ஆழத்தில் புதைந்திருக்கிறது. ஷம்பாலா வடக்கே. மணிபல்லவம் தெற்கே. இரண்டு கனவுகளும் இருந்துகொண்டே இருக்கின்றன.

நான் தமிழாசிரியை. மணிபல்லவம் பற்றி நா.பார்த்தசாரதி எழுதிய நாவலை படித்திருக்கிறேன். சங்க இலக்கியத்தில் இருந்து தமிழர் வரலாற்றுக்கான தகவல்களை எடுப்பதற்கான ஆராய்ச்சிகள்தான் இங்கே அதிகமாக நடந்திருக்கின்றன. ஆகவே மணிபல்லவம் எந்த தீவு என்ற வகையிலேதான் பேசியிருக்கிறார்கள். அது ஒரு பெரிய கனவு என்பது நீங்கள் இந்தக்கதையில் எடுத்துக்கொடுத்த சிலப்பதிகார, மணிமேகலை வரிகள் வழியாகவே தெரிகிறது. அது காலமே இல்லாத அல்லது முக்காலத்திற்கும் உரிய ஒரு வெளியில் அமைந்திருக்கிறது.அங்கே சென்றவர்கள் எல்லாம் ஞானியராகி திரும்பி வருகிறார்கள். ஆபுத்திரன் மணிமேகலை எல்லாரும். அப்படியென்றால் அந்த இடம் எங்கே இருக்கமுடியும்? அது மனக்கடலில்தான் இருக்கும். மனக்கடலா காலக்கட்லா என்று சொல்லமுடியாது

மணிபல்லவம் கடலின் கொந்தளிப்பிலிருந்து எழுந்து வருவதும் பொன்னொளியில் தெரிவதும் இன்னதென்று அறியமுடியாத அதன் மௌனமும் அதற்கும் நீத்தாருக்கும் உள்ள உறவும் எல்லாமே ஒருவகையான பித்துநிலையை உருவாக்குகின்றன. எல்லாருக்குள்ளும் மணிபல்லவம் உண்டு. கடலின் முத்துக்கள் முளைத்துவரும் ஒரு இடம் அல்லவா மணிபல்லவம்?. என் பெயர் மணிமேகலை என்பதனால் இந்தக்கதை எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. கடிதம் எழுத நினைத்து பாதி எழுதிய கடிதங்கள்தான் அதிகம். இந்தக்கடிதம் எழுதுவதற்குக் காரணம் இதுதான்

மணிமேகலை பாண்டியராஜ்

***.

அன்பு ஜெ,

ஆர்வம் மிகுந்து வந்து ஆர்வத்தின் உச்சியை அளித்தது கதையின் இறுதி முடிபு. லைஃப் ஆஃப் பை என்ற படத்தில் விஷ்ணு சயன வடிவில் ஒரு தீவைக் காண்பிப்பார்கள். அது அப்போது மணிபல்லவத் தீவைத் தான் எனக்கு ஞாபகப் படுத்தியது. நீங்கள் இங்கு எனக்கு காட்டியிருப்பது தருக்க ரீதியிலான ரேஷனல் மணிபல்லவத் தீவு. எப்பொழுதும் உங்கள் கதைசொல்லி தருக்கத்தின் உச்சியினின்று என் போன்றவர்களுக்கு விளக்குவதாகப் பார்க்கிறேன். தருக்கத்தின் எந்த மூலையையும் விடுவதில்லை.

வேறெந்த கற்பனை இடத்தை விடவும் கடல் சார்ந்த கற்பனை உலகம் கட்டமைக்கையிலேயே பிரம்மாண்டமாக இருக்கிறது. கடல் என்றுமே எனக்கு பிரமிப்பை ஊட்டக் கூடியது. அதுவும் இரவின் கடல் என்னை என்னவோ செய்யும் தன்மையது. ஒரு முறை இரவு 2 மணியளவில் கடலை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் ஜெ. என் வாழ்வின் மறக்க முடியாத தருணமது.

இரவின் கடல் அச்சமல்லாத ஒரு வகையுணர்வை என்னில் மூட்டியிருந்தது அன்று. நான் மட்டும் தனியில் அலைகளை காலில் தழுவ விட்டு கைகளை விரித்து கடல் நோக்கி பார்த்திருந்தேன். கடல் காலத்தின் பெருவெளியாய் என் முன் நின்றிருந்தது. அலையின் அறிப்பு நான் உள் நகர்ந்து கொண்டே இருப்பது போன்ற பிரமிப்பை அளித்திருந்தது. நான் சென்று கொண்டே இருந்தேன் எனப்பட்டது. என் ஒட்டு மொத்த ஆன்மாவை கழுவிக் கழுவி சுத்தீகரித்துக் கொண்டே இருந்தது. நான் இல்லாமல் ஆகி ஒருகட்டத்தில் அழுது கொண்டே இருந்தேன். தூரத்தில் தெரியும் அந்த நிலவு என்னில் அன்பை பரிபூரணமாக நிறைத்துக் கொண்டிருந்தது. இதுவே ஒரு வகை மயப்புனைவைப் போல்தான் இன்றும் மனதில் உள்ளது ஜெ. நீங்கள் கடத்திய மணிபல்லவத்தீவை அதனால் தான் அணுவணுவாக என்னுள் கட்டமைத்து அமிழ முடிந்தது. மனதிற்கு நெருக்கமாக்க முடிந்தது.

புவியியலையும்,  தத்வார்த்தத்தையும், பகுத்தறிவையும், அறிவியியலையும் உட்புகுத்தி கனவுகளில் செல்ல ஏதுவான ஓர் நவீன மணிபல்லவத்தீவை, எனக்கான புனைவு வெளியை கட்டமைத்துக் கொள்ள ஏதுவான கதை ஜெ. நன்றி.

அன்புடன்

இரம்யா.

***

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

நலம்தனே? தங்கப்புத்தகம்தான் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு சின்னவயசிலேயே நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடம். அதிலேயே வாழ்ந்து வளர்ந்தேன். இப்போது நாற்பத்தாறு வயசு. இன்றைக்கும் அதுதான். என்னுடைய தங்கப்புத்தகம் அதுதான் என்று சொல்வேன். எல்லாருக்கும் ஒரு வகையில் அது அர்த்தமாகும். எனக்கு எனக்கேயான ஒரு அர்த்தம் கிடைக்கும். ஒருநாளுக்கு ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை. அன்றைக்கு முழுக்க அதுதான்

என் மாமாதான் எனக்கு மந்த்ரம். அவர் அப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதெல்லாம் தப்பு என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தப்பாக இருக்கும் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் அப்படி அர்த்தம் எடுத்துக்கொள்ளாமலிருக்க என்னால் முடியவில்லை என்பதுதான் நிஜம்.  “செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே” என்ற வரியை நான் அங்கே ஒரு பெரிய காற்று வீசி அவர்களின் தலைமுடி பறந்தது என்றுதான் எடுத்துக்கொள்வேன்

தங்கப்புத்தகம் வாசிக்கும்போது என் வாசிப்பைப்பற்றி தோன்றியது. இப்படித்தான் வாசிக்கமுடியும் வாசிக்கவேண்டும் என்பதில்லை. தங்கப்புத்தகம் ஒரு கடல். நமக்கு துளிகள் தான் கிடைக்கும்

ஆர்.வரதராஜன்

***

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

வணக்கம்.

கதைத்திருவிழாவின் முதல்கதை – தங்கப்புத்தகம் வாசித்தேன். இரண்டாம்பாகம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு புரிதலுணர்வு. சட்டென்று இந்த வரி – ‘இது ஒரு புள்ளிவிவர விளையாட்டு மட்டுமே.’ கதை முழுமையும் இவ்வரியையொட்டி தெளிந்தது.

புள்ளியியலில் (Statistics) மையம் (Central Tendency), சிதறல் (Variation) என்று இரு அளவை வகைகளுண்டு. ஒரு முழுமைத்தொகுதியின் (Population) இயல்பையறிய இவ்விரண்டும் தேவை. பாட் மையத்தை அறிய விழைகிறான். முக்தாவோ அதன் சிதறல் தன்மையை அளந்துவிட எண்ணுகிறார். அடி-முடி காண்பதுபோல் இவ்விரண்டுமே முடியாமல் போகிறது. இதில் இன்னொரு ஆச்சர்யம் – தரவு சேகரிப்பில் உள்ள சிதறலுக்கு இரு முக்கிய காரணிகள் உண்டு. ஒன்று தரவு சேகரிப்பவரால் நிகழ்வது (Variation by measurer) , மற்றொன்று அவர் பயன்படுத்தும் முறையால் (Variation by method) விளைவது. இந்த இரண்டையுமே நீங்கள் விளக்கியுள்ளீர்கள். இவையெல்லாமே கொஞ்சம் சிக்கலான கருத்துருக்கள். உங்கள் கணித அறிவைப்பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனால் உங்கள் எழுத்து மூலமாகவே சிக்கலான கணிதக்கோட்பாடுகளையும் அலசியிருக்கிறீர்கள்.

நன்றியுடன்,

சேவியர்

***

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

தொடர்புடைய பதிவுகள்

அன்னம்,மூத்தோள்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அன்னம் சமீபத்தில் நான் வாசித்த கதைகளிலேயே ஆழமான ஒரு விஷன் கொண்டது. தர்மம் என்று சொல்கிறோம். அதை நாம் எப்படி அடைய முடியும்? தர்மம் என்று சொல்வது ஒரு ஐடியா இல்லை. அதை ஒரு ஐடியாவாக ஏற்று அதை நம்பினால் அதன்பிறகு அதை நாம் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்போமே ஒழிய அது நம்மை எந்தவகையிலும் ஊடுருவி அதிலேயே ஈடுபட்டவர்களாக ஆக்காது. தர்மம் சர என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. தர்மம் ஒழுகவேண்டிய ஒன்று. ஒழுகவேண்டுமென்றால் அது நம் இயல்பாக ஆகிவிடவேண்டும். நம்முள் கலந்துவிடவேண்டும்.

அப்படி கலந்துவிடும் ஒருவரிடம் அது ஒரு ஐடியாவாக இருக்கது. ஒரு இமோஷனாகவே இருக்கும். ஒரு இயல்பாக இருக்கும். அவரால் அதை பேசி நிறுவ முடியாது. அவருடைய இயல்பு அதுவாக இருப்பதனால் அவரால் அதைவிட்டு வேறுமாதிரி இருக்கவும் முடியாது. மகாதார்மிகர் என்று சிலபேர் உண்டு. அவர்களின் இயல்புகளிலே முக்கியமானது, அவர்களெல்லாம் கள்ளம் கபடமற்றவர்கள் என்பது. கொஞ்சம் கூர்மை இருந்தாலே சுயநலம் வந்துவிடும். கணக்குகூட்டல்கள் வந்துவிடும். தார்மிகர்கள் கள்ளமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதை மகாபாரதத்தின் பல உதாரண கதைகளில் இருந்து காணலாம்

அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரமாகவே இதில் கறுத்தசாகிப் வருகிறார். அதற்கு நீங்கள் அளித்திருக்கும் டீடெயில்கள் அப்படி உண்மையிலேயே ஒருவர் இருந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. தன்னுடைய களங்கமில்லாத எளிமையால் இன்னொரு மனிதர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்ட மகாத்மா அவர். அவரை நினைத்து வணங்குகிறேன்

சுவாமி

***

அன்பு ஜெ,

 “அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.”  என்ன அற்புதமான தத்துவம் ஜெ. நினைத்து நினைத்து பூரித்திருந்தேன். யாவும் அன்னம் என்று கர்சித்தே சிரித்திருந்தேன்.  பாரதி அனைத்தையும் ஒன்று என்பானே…

“இவ்வுலகம் ஒன்று.

ஆண், பெண், மனிதர், தேவர்,

பாம்பு, பறவை, காற்று, கடல்,

உயிர், இறப்பு — இவை யனைத்தும் ஒன்றே.

ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி,

குழல், கோமேதகம் — இவ் வனைத்தும் ஒன்றே.

இன்பம், துன்பம், பாட்டு,

வண்ணான், குருவி,

மின்னல், பருத்தி — இஃதெல்லாம் ஒன்று.

மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி — இவை ஒருபொருள்.

வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் —

இவை ஒருபொருளின் பலதோற்றம்.

உள்ள தெல்லாம் ஒரேபொருள், ஒன்று.

இந்த ஒன்றின் பெயர் ‘தான்’.

‘தானே’ தெய்வம்.

‘தான்’ அமுதம், இறவாதது.”

இந்த வரிகளை சென்னை JK-வசந்த விகாரில் ஓர் இரவு பாட்டாக கேட்டு “தான்” -ஐக் கரைத்திருந்தேன். அதை நினைவு கூர்ந்தேன் ஜெ. யாவும் ஒன்றே எனும் போது காணும் உலகம் மாறிவிடுகிறதே. யாவும் அன்னம் என்பதை பிரமித்தேன். இது வேறோர் கண்ணோட்டம். அதில் திழைத்தேன் எனலாம் ஜெ.

நான் கூட அப்துல் ரஹ்மானைப். போல சாப்பாட்டுப் பிரியர் தான். உணவுகளை தேடித்தேடி கலையைப் போல இரசித்த துண்டு. அதன் மனம், நிறம், சுவை என, என் அனைத்து புலன்களையும் மீட்டி இரசித்திருப்பேன். சில விலை உயர்ந்த சுவைமிகு உணவுக்காக காசு சேர்த்து வைத்து காத்திருந்தெல்லாம் உண்டிருக்கிறேன். என் போன்றவர்களைக் கண்டால் “என் இனமடா நீ!” என்று ஆரத்தழுவிக் கொள்ளத் தோன்றும். அங்ஙனமே அப்துல் ரஹ்மானை “ஆகா! பேஷ் பேஷ்” எனும் போது மனதாரத் தழுவினேன். பிரியாணி என் உயிர் எனலாம். நீங்கள் விளக்கியிருந்த பிரியாணிப் பந்தியை கிருஷ்ணபட் போல நானும் இரசித்திருந்தேன்.

விருந்து ஓம்புதலின் முழுமையை இங்கு கண்டேன் ஜெ. குறளினிது என்ற உங்களின் பேச்சில் வருவிருந்து மற்றும் செல் விருந்து பற்றியெல்லாம் நீங்கள் சொன்னது நினைவிற்கு வந்தது. “செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்வருந்து வானத் தவர்க்கு.” என்ற குறளும் அதனோடு நினைவிற்கு வந்தது.

பலிக்கல்லைப் போல ராஜனைப் போல இந்த அன்னத்திலும் ஒரு சமூகக் குட்டு வைத்திருந்தீர்கள். அதையும் இரசிக்காமல் இல்லை.

ஆனால் குரல்கள் ஆத்மாவின் பகுதிகள். நத்தை ஊர்ந்துபோகும்போது அதன் ஒரு பகுதிதான் ஒளிவிடக்கூடிய தடமாக ஆகிறது. அதுதான் சைதன்யம் என்பது” என்றீர்களே ஜெ. அதனை நான் உணர்ந்திருக்கிறேன். நான் ஒரு தனிமை விரும்பிதான். கிட்டத்தட்ட 3 வருடங்கள் தனிமையின் உச்சியைக் கண்டிருக்கிறேன். தோல்விகளால் உந்தப்பட்டு ஒருவகை மனஅழுத்தத்திற்கு ஆளானபோது தனிமைவிரும்பியாய் சற்றும் இருக்க முடியவில்லை. சென்னையின் இரைச்சல் மிகு பகுதியில் வெகு நேரம் உட்கார்ந்திருப்பேன். மனிதர்களின் குரல்களைக் கேட்பதையே ஓர் தெரப்பி போல் செய்திருந்தேன். கூச்சல் மிகு இடங்களில் தேனீர் சுவைத்து குரல்களில் சிலாகிப்பேன். முன்பெல்லாம் படிப்பதற்கு தனிமையான ஓசையற்ற இடங்களைத் தெரிவு செய்வேன். இன்றோ அதற்கு நேர்மாறாக மாறிவிட்டேன். எனக்கு அப்துல் ரஹ்மானை புரிய முடிகிறது ஜெ. ஒரு வகையில் இந்தக் கதையில் நான் தெரிந்து கொண்டது என்னைப் பற்றி தான். எனக்கு நோயில்லை. நான் இருப்பது ஒரு நிலை. முன்பெல்லாம் அதிகமாக செல்பேசியில் சதா பேசிக் கொண்டிருக்கும் என் அம்மிவிடம் கடிந்து கொண்டிருக்கிறேன். வேஸ்ட் ஆஃப் டைம் என்றிருக்கிறேன். இன்று அதே நான் அவளிடம் அளிப்பது புன் முறுவலைத் தான். அவள் தேடுவது குரல்களைத் தான்.  பல வித குரல்கள். தொலைபேசி வந்த காலகட்டத்தில் ராங் நம்பரில் பேசுவது ஒரு சுகம் என்பார் என் சிற்றப்பா. எல்லாம் வித விதமான குரல்களைத் தேடிதானோ…இரைச்சல்களல்ல உயிருள்ள குரல்கள்.

“அதனாலென்ன?” தெரியாத குரல்கள் தான். அற்புதமான முடிபு. அந்த வார்த்தையை சொல்லிக் கொண்டேன்.

 “அதனாலென்ன?”

என்றும் அன்புடன்

இரம்யா.

***

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மூத்தோள் தமிழ்ச்சிறுகதை உலகிலேயே கொஞ்சம் புதுமையானது. தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு இந்தியத் தொன்மங்களைப் பயன்படுத்தி எவரும் எதையும் பெரிதாக எழுதியதில்லை. அவற்றை ஒருவகையான metaphor tools ஆக கொள்ளலாம் என்ற எண்ணம்கூட இங்கே இருந்ததில்லை. அந்த குறைபாடு நம்முடைய பெரும்பாலான எழுத்துக்களில் உண்டு.

புதுமைப்பித்தன் சைவப்படிமங்களை பயன்படுத்தி எழுதிய கதைகள், தியானம் யோகம் போன்றவற்றைப் பற்றி எழுதிய கதைகள் எல்லாமே இங்கே பெரிதாக வாசிக்கப்படவில்லை. ஆகவேதான் தொடர்ச்சியாக அந்தவகையான எழுத்து உருவாகவில்லை. பிறகு இங்கே அந்த மரபுகளை அவநம்பிக்கையாக பார்க்கும் மனநிலை உருவாகியது. ஆகவே அவற்றை எவருக்கும் தெரிந்திருக்கவில்லை

எனக்கேகூட மூதேவி என்ற சொல் அறிமுகமான அளவு அந்த தெய்வம் தெரிந்திருக்கவில்லை. நீங்களே எழுதித்தான் அறிந்தேன். சேட்டை என்ற கட்டுரை. இந்தக்கதையை வாசிக்கும்போதுதான் அப்படி ஒரு தெய்வத்தை உருவகம் செய்வதிலுள்ள wisdom என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இரண்டு அம்சங்கள் கொண்டது அந்த wisdom. ஒன்று, அது ஒரு tribal vision. ஆப்ரிக்காவிலெல்லாம் கூட நோய், மரணம் ஆகியவற்றுக்கான தெய்வங்கள் உள்ளன. அதை ஒரு philosophical structure சந்திக்கும்போதுதான் இந்த தேவி உருவாகி வரமுடியும். அந்த பிளெண்ட் அல்லது டைலடிக்ஸ்தான் ஆச்சரியமான ஒரு விஷயம்

இந்தக்கதை அந்த இடத்தைத்தான் தொடுகிறது. குகைக்குள் இருப்பது சரியான ஆதிவாசி தர்சனம். அதை அந்த தாந்த்ரீகர் மதத்திற்குள் கொண்டுவருகிறார். அவர் அதற்கும் இங்கே இடமுண்டு, அது இல்லாமல் ஆகாது என்கிறார். அந்த ஆழத்தை அறிந்துகொள்ளாத மெக்கானிக்கலான தத்துவவாசிப்பு உருவாக்கும் மொண்ணையான puritanism தான் அந்தக்கதையின் சாராம்சம். இது ஒரு அரசியல் சார்ந்து நடந்துகொண்டிருக்கும் ஒரு revivalismத்தின் பகுதியாக எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது

இங்கே முன்பே நடந்ததுதான். பக்தி இயக்கத்தின்போது சைவத்தின் தாந்த்ரீகமதங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டன. அவை சித்தர் மரபாக திரும்பி வந்தன மறைமலை அடிகள் அவருடைய ‘சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடலாமா?’என்ற கட்டுரையில் இந்த நிலைபாட்டை எடுக்கிறார். சைவ revivalism இதைத்தான் பேசியது. அத்வைத revivalismமும் இதைத்தான் பேசியது. பாரதி மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள் என்று பாடியதும் இதைத்தான். இதையெல்லாம் தாண்டித்தான் அந்த age old wisdom இங்கே நிலைகொள்ள முடியும். இவர்களெல்லாம் சுவர்கட்டி மூடி அதன்மேல் இன்னொரு மதத்தை நிறுவுகிறார்கள். அடியில் அது இருந்துகொண்டிருக்கும்.

ராமச்சந்திரன்

***

அன்புள்ள ஜெ

மூத்தோள் ஒரு துணுக்குறலை உருவாக்கிய கதை. இந்த தொற்றுநோய் காலகட்டத்தில்தான் அந்தக்கதையின் வீரியம் புரிகிறது. நாம் ஐஸ்வரியங்கள் போதும் என்று நினைக்கிறோம். மற்றதெல்லாம் கண்ணிலேயே படவேண்டாம் என்று நினைக்கிறோம். எவராவது வந்து அதையெல்லாம் நீக்கிவிட்டால் எல்லாம் இல்லாமலாகிவிடும் என்று நம்புகிறோம்.

ஆனால் இந்த பிரபஞ்சத்தில் இருட்டுதான் நிறைந்திருக்கிறது. எங்கும் சாவு நிறைந்திருக்கிறது. நாம் பாம்பு  என்றும் சாவு என்றும் சொல்லவே பயப்படுகிறோம். ஆனால் அது அங்கே இருக்கிறது என்ற உணர்ச்சி நமக்குத்தேவை. அந்த உணர்வு இல்லாமல் நம்மால் உண்மையில் எதையுமே புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

மூத்தவள் இந்த உலகம் முழுக்க நிறைந்திருக்கும் பராசக்தியின் இன்னொரு வடிவம்தான். யாதேவி கதை முதல் வெவ்வேறு வகையில் இந்த உலகம் முழுக்க வெவ்வேறு முகம் கொண்டு நிறைந்திருக்கும் பராசக்தியைக் காண்பதற்கான ஒரு தீவிரம் இந்தக்கதைகளில் இருந்துகொண்டிருக்கிறது. இந்தக்கதைகளை வாசிக்கையில் ஒன்றுடன் ஒன்று அவை இணைகின்றன. யாதேவி வரிசை கதைகள். தேவி, லீலை போன்ற கதைகள். ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும் போன்றகதைகள். எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு வகையான சக்திதர்சனமாக ஆகின்றன. அதை நீங்கள் அறிந்தோ அறியாமலோ எழுதி எழுதி கூர்தீட்டி சென்றுகொண்டிருக்கிறீர்கள்

எஸ்.மகாதேவன்

***

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

தொடர்புடைய பதிவுகள்


வம்புகளும் படைப்பியக்கமும்

$
0
0

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

பா.செயப்பிரகாசம் பற்றி

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

சாதியமும் புரட்சிகரமும்

பா.செயப்பிரகாசமும் மாற்றிதழ்களும்

வசையே அவர்களின் உரிமைப்போர்

அன்புள்ள ஜெ

உங்கள் மீதான அவதூறுகள், வசைகளைப் பற்றி எழுதிவருகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அந்த கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் பெருமாள் முருகன் பெயர் இருக்கிறது. சுகுமாரன் சமயவேல் உள்ளிட்ட சிலர் பெயர்கள் உள்ளன.

மிகவும் சோர்வு அளிக்கும் விஷயம் இது. பெருமாள் முருகன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டபோது, அவரை சூழ்ந்து தாக்கியபோது, நீங்கள் அவரை ஆவேசமாக ஆதரித்து முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருந்தீர்கள். மலையாளத்திலும் எழுதினீர்கள். ஆங்கிலத்தில் உங்கள் கண்டனத்தைப் பார்த்தேன். பெருமாள் முருகனை ஆதரித்து மலையாள டிவியில் உங்கள் பேட்டி வெளியாகியது.

நான் பெருமாள் முருகனை ஆதரிப்பவன் அல்ல. என்னுடைய கருத்து வேறு. அன்றைக்கு அந்த விஷயத்தில் உங்கள் நண்பர்கள் பலர் உங்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு விலகிச்சென்றோம். அவர்களில் நானும் ஒருவன். ஆனால் உங்கள் நிலைபாட்டைச் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். அதைவிட உங்கள் பதிப்பாளரும் அறம் புத்தகத்தை பல ஆயிரம்பிரதிகள் விற்றவருமான வம்சிபதிப்பகம் உரிமையாளர் ஷைலஜாவின் பெயர் அப்பட்டியலில் இருக்கிறது.

உங்களுடைய நிலையிலிருந்து பார்க்கையில் இவர்களை எப்படி அணுகிறீர்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

எஸ்.ராம்குமார்

***

அன்புள்ள ராம்குமார்

பெருமாள் முருகன் , சமயவேல், சுகுமாரன் போன்றவர்கள் எப்போதுமே என் மேல் நட்போ நல்லெண்ணமோ கொண்டவர்கள் அல்ல. சென்ற முப்பதாண்டுகளில் அவர்கள் என்னைப்பற்றி எதுவுமே உயர்வாகவோ ஏற்பாகவோ சொன்னதில்லை. கசப்புடன் நிறையப் பேசியுமிருக்கிறார்கள். நேரில் பார்த்தால் புன்னகையுடன் பேசிக்கொள்வோம்—காலச்சுவடு ஆசிரியர் முன்னிலையில் என்றால் அதுவும் பேசமாட்டார்கள்.

அவர்களின் மனநிலைகள், சங்கடங்கள் எனக்குத்தெரியும். அது அவர்களின் பிரச்சினை. அவர்களின் இலக்கியப்படைப்புகளை மதிப்பிடவோ பிடித்திருந்தால் பாராட்டி எழுதவோ அதை ஒரு தடையாக நான் எடுத்துக் கொண்டதில்லை.என் அளவுக்கோல்களில் தனிப்பட்ட உறவுகலுக்கு பெரிய இடமில்லை.

பெருமாள் முருகனை ஆதரித்தது எழுத்தாளன் மீதான கும்பல்மிரட்டல்களை நான் எப்போதுமே ஏற்றுக்கொண்டவன் அல்ல என்பதனால். அது இடதுசாரி மிரட்டலாக இருந்தாலும் சரி வலதுசாரி மிரட்டலாக இருந்தாலும் சரி. எம்.எஃப்.ஹூசெய்ன், எம்.எம்.பஷீர் ஆகியோருக்கு எதிரான மிரட்டல்களுக்கு எதிராக எப்படி எதிர்வினை ஆற்றினேனோ அப்படியே பெருமாள் முருகன் விஷயத்திலும் எதிர்வினை ஆற்றினேன். நீங்கள் பெருமாள் முருகன் விவகாரம் வரும்வரை என் எதிர்ப்புகளை கண்டுகொள்ளவில்லை என்றால் அது உங்கள் பிழை.

ஜெ

***

அன்பு ஜெ,

நலமறிய ஆவல்.

சமீபத்தில் கதைகளல்லாத உங்களின் பிற பதிவுகளையும் வாசித்துக் கொண்டுதான் வருகிறேன். சர்ச்சைகளுக்கான பதில்கள், மாஸ்டர் மற்றும் பல. இது தவிர உங்களை நோக்கி வரும் வசைகளைப் பார்க்கிறேன். ஏனோ உங்கள் பதில்களைத் தீவிரமாக படிக்குமளவு இந்த வசைபாடிகளின் வசைகளை இரண்டொரு வரிகளுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை ஜெ. இவர்களின் வசைகளைப் படிக்கையில் ஓர் ஏளனச் சிரிப்பும், பரிதாப உணர்ச்சியுமே வருகிறது. இவர்கள் உங்களை முழுமையாகப் படித்திருந்தால் இப்படி பேச வாய்ப்பில்லையே என்று தோன்றும். இவர்களைப் பொருட்படுத்த வேண்டுமென்பதில்லை. ஆனாலும் உங்கள் எழுத்தென்னும் ஆயுதத்தால் எதிர்கொள்கிறீர்கள். அதையும் அவர்கள் எதிர்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால் அவர்களால் முடியாது. கருத்துவேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள் பற்றிப் பேசவில்லை நான். உங்கள் எழுத்துக்களை ஒன்றுக்குள் அடைத்து ஓரம்கட்ட முயற்சி செய்யும் சினிக்குகளுக்கு ஏன் தெரிவதில்லை. அது இயலாதென்று. விசுவரூபமாக உங்கள் எழுத்துக்கள் மானுடத்தை, அறத்தை, சமூகத்தை, அரசியலை, சமத்துவத்தை, உயிரை, உணர்வை, ஆன்மாவை, கலாச்சாரத்தை, பண்பாட்டை யாவையும் பற்றிச் சொல்லும் போது உங்களை ஓர் இஸத்துக்குள் அடைக்கப் பார்ப்பது கண்டு நடுக்குருகிறேன். உண்மையை எத்துனை காலம் மறைக்க முடியும் என்பதால் அமைதி கொள்கிறேன்.

உங்களைப் பார்க்கையில் காந்தியை, பெரியாரை பார்த்து ஏற்பட்ட பரிதாபமே ஏற்படுகிறது ஜெ. காந்தி எல்லாருக்கும் உரியவர் எந்த ஒன்றிலும் அவரை அடைக்க முடியாமையால் எல்லா தரப்பும் அவரைச் சாடியது. பெரியாரின் தேவையுள்ளவரை பயன்படுத்திவிட்டு இன்று SC, ST க்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து தா எனும் போது சாதியத்தை உயர்த்திப் பிடித்து நிற்கிறது. பெரியார் மீதான தாக்குதலும் காந்தி மீதான தாக்குதல்களும் என்னை திக்கு முக்காடச் செய்திருக்கின்றன. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொண்ட கொள்கையளவில் மாறுதல் இருக்கலாம். ஆனால் கீழ்த்தரமான தாக்குதலில் அறம் சிதறிப்போவது கண்டு நெஞ்சு பதைக்கிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்ற பாரதியின் வரிகள் நினைவிற்கு வருகின்றன ஜெ.

வெண்முரசு என்ற காவியம் , நாவல்கள், வீடுறைவு கால சிறுகதைகள், கதைத்திருவிழா, இலக்கியப் பேச்சுக்கள், இயற்கை இரசிப்பு என உங்கள் பயணம் திகைப்பூட்டக் கூடிய வேகத்தில் சென்று கொண்டிருப்பது திருப்தியளிக்கிறது. அந்த எழுத்துக்களின் ஜெ வை சந்திக்காதவர்களால் எழுப்பப்படும் முறையற்ற தாக்குதல்களையும், அதனை எதிர்கொண்டு எழுதும் அந்த ஜெ வையும் நான் பார்க்கிறேன். ஏன் இவர்களெல்லாம் உங்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று கோவம் வருகிறது. அது நான் “மூத்தோள்” கதை படித்து முடிக்கையில் ஆவியாகியிருந்தது. உங்களுக்கான துன்பங்கள் துறை சார்ந்து, வாழ்க்கை சார்ந்து இருக்கத் தானே செய்யும். எழுத்து சார்ந்து நீங்கள் சந்திக்கும் சில துன்பங்களை/ஜ்யத்யஷ்டாதேவியை நீங்கள் எதிர்கொள்ளும் விதத்தை படிப்பினையாகவே பார்த்து வருகிறேன் ஜெ. அதிலும் கற்றுத் தருகிறீர்கள். கேட்டுக் கொள்கிறேன்.

பிரிதொரு நாளில் “தேரே சடகே பாலம் நா கர் கோயி காம்” என்ற பாடலைப் பகிர்ந்திருந்தீர்கள். அதன் வரிகள் என் மனதிற்கு நெருக்கமாகிவிட்டன.

“அன்பே உன்னை வணங்கி கேட்கிறேன் எதற்கும், வருந்தாதே

இந்த நேரமும் இடமும் இனி ஒருபோதும் திரும்பாது.

அழகானவை இந்த நாட்கள்

வசந்தம் வருமா வராதா என்று நாமறியோம்

துயரங்களை மறந்துவிடு. இக்கணத்தில் வாழ்வோம்

எவரையும் பொருட்டாக நினைக்காதே

இவ்வுலகத்தை ஏன் பொருட்படுத்தவேண்டும்?

முட்களில் உன்னை சிக்கவைத்துக்கொள்ளாதே என் அன்பே

மலர்களின் நடுவே சிரித்துக்கொண்டிரு

இவ்வுலகில் சிரிப்பு கொஞ்சம்தான் மகிழ்ச்சியும் கொஞ்சம்தான்

அன்பே வாழ்வின் துயரங்களோ ஆயிரம்

அன்பே வாழ்வின் துயரங்களோ பல்லாயிரம்”

அற்புதமான ஆன்மா நீங்கள். மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருக்க வேண்டும், அதே தீவிரமான எழுத்தில் திழைக்க வேண்டும் என்பதைத் தவிரவும் வேறு வேண்டுதல்கள் என்னிடம் இல்லை. அதை நீங்கள் செய்வீர்கள். இருந்தும் சொல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது. சொல்கிறேன். இது அப்படியான தருணம்.

அன்புடன்

இரம்யா.

***

அன்புள்ள இரம்யா

இதைப்போல பலர் எழுதிய கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நான் அனைவருக்குமாகவும் சொல்வது இதைத்தான். படைப்பியக்கத்திற்கு எதிராக இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் கும்பல்வன்முறை, வசைபாடல்களைச் சுட்டிக்காட்டவே இவற்றை எழுதுகிறேன். எனக்கு எவ்வகையிலும் உணர்வுரீதியான ஈடுபாடு இவற்றில் இல்லை. இருந்தால் நான் கதைகளை நாளுக்கு ஒன்றென எழுதிக்கொண்டிருப்பேனா என்ன? வெண்முரசும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.முடியப்போகிறது, அதன் ஏக்கம், நிறைவு.

என் உளநிலைக்கு இவர்களும் இந்தக் கொசுக்கடியும் ஒரு பொருட்டே அல்ல. இவர்களின் எந்த குறிப்பையும் கட்டுரையையும் வாசிக்கவே மாட்டேன். வாசிக்காமலிருப்பதே இவர்கள் செய்யும் வசைக்கு நாம் அளிக்கும் பதில். வாசிக்கும் தகுதியுடன் அவர்கள் எழுதட்டும் முதலில்

எழுதும் அனைவருக்கும் நான் சொல்வது இதையே, இந்த கும்பல் உங்கள் உளநிலையை பாதிக்க அனுமதிக்காதீர்கள். அனுமதித்தால் அவர்கள் வென்றார்கள். அந்தச்சிறுமைகள் காலத்தின் முன் எவ்வகையிலும் பொருட்டல்ல. இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் எழுந்த இதைப்போன்ற வசைகள் உங்களுக்கு தெரியுமா? விஷ்ணுபுரம் அப்படியே இருந்துகொண்டிருக்கிறது.அதை எழுதுவதே எழுத்தாளனின் சவால்

இளைய எழுத்தாளர்களுக்கு நான் சொல்வது என்னைப்போல இடக்கைச் சுட்டுவிரலால் இவற்றை கையாளத்தெரியாவிட்டால் வாயே திறக்காதீர்கள் என்றுதான். படைப்பிலக்கியமே இலக்கியத்தின் மையம்,சாரம். இலக்கியமென்பதே அதுதான். மற்றவை எல்லாமே வெறும் சத்தங்கள். மிகமிக உயரிய விமர்சனமேகூட பெரும்பாலும் பொருளற்றது என்னும்போது இந்த அற்ப அரசியல்கூச்சலுக்கு என்ன பொருள்?

படைப்புநிலை என்பது ஆழ்ந்திருப்பது. உங்களை எப்போதும் உலுக்கும் அடிப்படைவினாக்களில் ஆழ்ந்திருப்பது. அதில் மட்டுமே நான் இருந்துகொண்டிருக்கிறேன்.

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

$
0
0

கோலப்பன் ஆசாரிதான் அந்தக் கரிய குள்ளமான மனிதரைக் கூட்டி வந்தார். நானும் கருணாகரனும் மேலாலும் வீட்டுப்  பூமுகத்தில் அமர்ந்து அச்சு அண்ணனின் வெடிப்பேச்சை கேட்டுக்கொண்டிருந்தோம்.

அந்த கரிய மனிதர் முற்றத்திலேயே தயங்கி நிற்க கோலப்பன் ஆசாரி,“பிள்ளே, இவனுக்க பேரு காளியனாக்கும்… இவனுக்க கையிலே ஒரு சாமான் இருக்கு… வெலைக்கு குடுக்குததாச் சொல்லுதான்… வித்தியாசமாட்டு ஒரு ஐட்டம். மரத்திலே செய்த ஒரு பலாக்காயி” என்றான். “நல்ல சேலுள்ள சாமானாக்கும் பிள்ளே. பைசா இருக்குன்னா வாங்கிப்போடுங்க.”

“பலாக்காய எதுக்குடே மரத்திலே செய்யுதாங்க?” என்றார் அச்சுதன் அண்ணா “புதிய கதையாட்டு இருக்கே?”

“எங்க?” என்று நான் கேட்டேன்.

காளியன் தன் கையில் இருந்த உரச்சாக்கு வெட்டித்தைத்த பையை எடுத்து உள்ளிருந்து ஒரு மரத்தாலான பொருளை எடுத்தார். பலாக்காய் மாதிரியே செய்யப்பட்டிருந்தது. அதேபோல முட்கள். காம்பு மட்டும் வெண்கலத்தில். உள்ளீடற்றது, ஆகவே எடையில்லாதது.

“இது என்னது?” என்று நான் அவரிடம் கேட்டேன்.

அவர் மிகப் பவ்யமான உடலசைவுகளும் பணிவான சிரிப்பும் கொண்டிருந்தார். பெரிய பற்கள் எப்போதுமே சிரிப்புபோல காட்டின “நம்ம வீட்டிலே கிடந்த சாமானாக்கும். பளையது. நம்ம பாட்டன் மாடன் புலையனுக்கு கரைமூப்பில் குஞ்சன் நாயரு அந்தக்காலத்திலே குடுத்தது.”

“மரத்திலே பலாக்காயா…” என்று அச்சுதன் அண்ணா சிரித்தார். “கொண்டா” என்று அதை வாங்கி புரட்டிப்பார்த்து “பலாக்காயிக்க முள்ளையெல்லாம் நல்லா ஒரிஜினலு மாதிரி செய்திருக்கான்.”

“அதாக்கும் நானும் பாத்தேன்” என்றார் கோலப்பன் ஆசாரி. “இப்டி ஒரு பொம்மையை செய்யுதவன் முள்ளை வரிசையாட்டு அடுக்கிச் செதுக்கியிருப்பான். அதுதான் சுளுவா செய்யுத வேலை. ஆனா பலாப்பழத்திலே முள்ளு அப்டி வரிசையா இருக்காது. வாரியிட்ட மாதிரி இருக்கும். இவன் ஒவ்வொரு முள்ளையும் தனித்தனியா செதுக்கிருக்கான்.ஒரு ஒளுங்கும் வரியும் இல்லை. இது கைவேலைத் திறமையாக்கும்.”

அச்சுதன் அண்ணா “உமக்க பாட்டனுக்கு எதுக்குவே பலாப்பழம் குடுத்தாக?” என்றார்.

“எனக்க பாட்டன் கணக்குக் கண்ணு உள்ளவரு” என்றார் காளியன்.

“கணக்குக் கண்ணா, அதென்னவே?” என்று அச்சுதன் அண்ணா கேட்டார்.

“கண்ணாலே பாத்தே கணக்கு போட்டிருவாரு… ஒரு வயலிலே எத்தனை நாத்து நிக்குதுன்னு எண்ணாம கண்ணாலே பாத்து சொல்லிருவாரு. விளைஞ்சு கதிரு சாய்ஞ்சு நிக்குத   வயலிலே எவ்ளவு  நெல்லு இருக்குன்னுகூட சொல்லுவாரு, அறுத்து அளந்து பாத்தா நாழிக்கணக்கிலே அப்டி செரியா இருக்கும்…” என்று  காளியன் சொன்னார்

“கொள்ளாமே, இது கேக்க நல்லா இருக்கு” என்று அச்சுதன் அண்ணா நம்பிக்கை இல்லாமல் சொன்னார்.

“பொம்புளையாளுகளுக்க முடியியை எண்ணிருவானோ?” என்றார் கருணாகரன்.

“அதை அறிஞ்சு மூப்பில்நாயரு கூப்பிட்டனுப்பினாரு. அவரை சோதிச்சுப் பாக்கணும்கிறதுக்காக ஒரு பலாப்பழத்தை குடுத்து அதிலே எத்தனை முள்ளு இருக்குன்னு சொல்லுடேன்னாரு. அவரு சும்மா கண்ணாலே ஒருதடவை பாத்துட்டு கணக்கைச் சொல்லிட்டாரு… பலாப்பழத்துமேலே ஒவ்வொரு முள்ளா வெட்டி வெட்டி கணக்கு போட்டா ஒண்ணுகூடல்ல ஒண்ணு குறையல்ல… அப்டி ஒரு கணக்கு” காளியன் சொன்னார்.

“அதுக்கு அவரு பரிசாட்டு குடுத்த பலாப்பழமாக்கும் இது. எங்க வீட்டிலே கிடக்கு… இப்ப கொஞ்சம் பைசாவுக்கு பிரச்சினை உண்டு. எனக்க மகன் காலேஜிலே படிக்கான். அவனுக்கு பீஸு கெட்டுகதுக்கு காசுவேணும்… அதாக்கும் இதை விக்கலாம்னுட்டு ஆசாரிகிட்டே கேட்டேன்” என்றார் காளியன்.

“கதை கேக்க நல்லாருக்கு… ஆனா அப்டி கணக்குக் கண்ணு உள்ளவனுக இப்ப உண்டா வே?” என்றார் அச்சுதன் அண்ணா.

“சுடலை அருளாலே நானும் கொஞ்சம்போல அந்த கண்ணு உள்ளவனாக்கும்” என்று காளியன் பணிவாகச் சொன்னார்.

“நீரா?” என்று திகைத்துவிட்டார். எங்களை திரும்பிப் பார்த்துவிட்டு “நீரு என்னவே செய்வீரு?” என்று கேட்டார்.

“பந்தயம் வச்சு கேட்டா சொல்லுவேன்.”

“செரி, அதைப் பாப்பம்” என்ற அச்சுதன் அண்ணா சட்டென்று எழுந்து பின்னால் சென்று அங்கே பாயில் காயப்போட்டிருந்த உளுந்துக்குவியலில் இருந்து இருகைகள் நிறைய உளுந்தை அள்ளி கொண்டுவந்தார். அதை தரையில் கொட்டி குவியலாக்கி வைத்து “இதிலே எவ்ளவு உளுந்து இருக்குன்னு சொல்லுவேரா வே?” என்றார்.

“பாப்பம், சுடலை அருளாலே” என்று காளியன் அதை கூர்ந்து பார்த்தார். வாய் முணுமுணுவென்று கணித்தது. “எட்டாயிரத்தி எளுநூறு… நாலஞ்சு கூடக்கொறைய இருக்கும்” என்றார்.

“வே சும்மா அடிச்சுவிடுதீரா?”

“எண்ணி பாப்பமே” என்று நான் சொன்னேன்.

நாங்கள் அந்த உளுந்தை மூன்றுகூறாகப் பிரித்து எண்ணினோம். எட்டாயிரத்து எழுநூற்றி பதிமூன்று”

“பயறு வேறவேற சைசிலே இருக்கு… இல்லேன்னா இன்னும் துல்லியமா சொல்லிடலாம்”என்றார் காளியன்.

அச்சுதன் அண்ணா பிரமித்துப்போனார். ஆனாலும் அவருடைய மனம் ஓயவில்லை. மீண்டும் முற்றத்துக்குப் போய் அங்கே காயப்போட்டிருந்த ஒரு துணியை எடுத்து வந்தார். அதில் ஒரு பகுதியை கிழித்து முன்னால் வைத்து “இதிலே எவ்ளவு நூலுன்னு சொல்லுவேரா வே?” என்றார்.

“பாப்போம், சுடலை அருளாலே” என்றார் காளியன். துணியை கூர்ந்து பார்த்தபின் பெருமூச்சுவிட்டு “நாநூற்றிப்பன்னிரண்டு ஊடு முந்நூற்றி அறுபத்திமூணு பாவு…” என்றார்.

“மொத்த எழுநூத்தி எழுவத்தஞ்சு?”

“ஆமா.”

நாங்கள் அந்த துணியை நூல்நூலாக பிரித்தோம். எண்ணி கூட்டிப்பார்த்தோம். மிகச்சரியாக எழுநூற்றி எழுபத்தைந்து நூல்

“எப்டிவே?”என்றார் அச்சுதன் அண்ணா.

“சுடலை அருள், பரம்பரையா வார அப்பன் பாட்டனுக்க கண்ணு.”

“நீரு இப்ப என்ன செய்யுதீரு?” என்று கருணாகரன் கேட்டார்.

“விவசாயம்தான், கூலிவேலை. ஏருபூட்டுவேன். எருமையும் வளக்குதேன்…”

“பள்ளிக்கூடம் போயி படிச்சதுண்டா?” என்றார் அச்சுதன் அண்ணா.

“இல்ல, எனக்க அப்பன் கூலிக்காரனாக்கும். அப்பல்லாம் பட்டினியில்லா?”

“ஓ”என்றார் அச்சுதன் அண்ணா. “செரி, இதுக்கு என்ன கேக்கேரு?”

“ஆயிரம் இருந்தா…” என்றார்.முகம் பரிதாபமாக மாறியது. “பயலுக்கு படிப்புச் செலவுக்காக்கும். மனசறிஞ்சு தரணும்.”

“ஆயிரம் இந்த சாமானுக்கு இல்லை, உம்ம திறமைக்குச் சும்மா தாறதாக்கும்… செரி பய படிப்புன்னு சொல்லிட்டேரு, வச்சுக்கிடும்” என்று உள்ளே போய் மனைவியிடம் ஆயிரம் ரூபாய் வாங்கி வந்தார். “இந்தாரும்வே.”

“பெரிய உபகாரம், நல்லா இருக்கணும்” என்று காளியன் கும்பிட்டு வாங்கிக் கொண்டார். கண்களில் ஒற்றினார்.

அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்த அச்சுதன் அண்ணா “ஆயிரம் ரூபாய்க்கு நட்டமில்லை. திருவனந்தபுரத்துக்கு கொண்டுபோயி பாத்துப்பேசி வித்தா மூவாயிரத்துக்கு குறையாது…” என்றார்.

“அவ்ளவு போகுமா?” என்றார் கருணாகரன்.

“வே, இதிலே சங்குமுத்திரை இருக்கு. திருவிதாங்கூர் அரசாங்க முத்திரையாக்கும்” என்றார் அச்சுதன் அண்ணா “இங்க நம்ம வீட்டிலே சில சாமான்களிலே சங்குமுத்திரை உண்டு” என்றவர் எதையோ நினைவுகூர்ந்து எழுந்துகொண்டு “இரு.. ஒரு காரியம்” என்று உள்ளே போனார்.

பலாக்காயை உள்ளே வைத்துவிட்டு திரும்பி வந்தபோது அவர் கையில் ஒரு மரப்பலகை இருந்தது. அதைக் கொண்டுவந்து எங்கள் நடுவே வைத்தார்.

“இது என்னது?” என்று நான் கேட்டேன்.

அச்சுதன் அண்ணா அதை தூக்கிக் காட்டி “சொல்லு, என்னன்னு தோணுது?” என்றார்

“பல்லாங்குழி மாதிரி இருக்கு” என்றேன். “ஆனால் பல்லாங்குழி இல்லை… இது வேறமாதிரி வெளையாட்டு.”

“வேறமாதிரி வெளையாட்டுதான்” என்று அச்சுதன் அண்ணா சிரித்தார். “சொல்லுங்கடே, என்ன வெளையாட்டு?”

அது ஈட்டிமரத்தாலான ஒரு பலகை. வெண்கலக் கைப்பிடி போடப்பட்டிருந்தது. கட்டைவிரல் அளவுள்ள ஒரு பித்தானை வைத்துவிடும்படியான ஒரே மாதிரியான குழிகள். ஆனால்  நான் மேலிருந்து கீழே எண்ணினேன். பக்கவாட்டிலும் எண்ணினேன். ஐம்பதுக்கு இருபது. மொத்தம் ஆயிரம்.

“இது பணப்பலகை” என்று அச்சுதன் அண்ணா சொன்னார். “நீங்க எவனும் பாத்திருக்க மாட்டீங்க… கெளவாடிகளைக் கேட்டா ஒருவேளை சொல்லுவானுக. ஆனால் நூறுவருசத்துக்கு முன்னாடிதான் இதெல்லாம் புழக்கத்திலே இருந்தது. அதுவும் பெரிய வியாபார ஸ்தலங்களிலயும் நம்ம வீடுமாதிரி பாட்டமும் வாரமும் தீர்வையும் வசூலிக்குத அதிகாரி வீடுகளிலேயும்தான் இதெல்லாம் இருக்கும்.”

நான் அதை பார்த்து “இதை வச்சு என்ன செய்வாங்க?” என்றேன்.

“அப்ப திருவிதாங்கூரிலே ராசிப்பணம்னு ஒண்ணு இருந்தது. அதான் இருக்கிறதிலேயே கடைசிமதிப்பு. சின்ன செம்புநாணயம். அது இதிலே சரியா அடங்கும்.”

“ஆ! இது பைசாவ எண்ணுகதுக்குண்டான பலகை!” என்றேன்.

“செரியா பிடிச்சிட்டானே… அப்ப ஜனங்க கையிலே பைசா குறைவு. வெள்ளிப்பணம் சிலபேரு கையிலேதான். பொன்பணம் பணக்காரன் கண்ணிலேதான் பட்டிருக்கும். ராசிப்பணம்தான் சாதாரணக்காரனுக்கு தெரிஞ்ச நாணயம். ஒருபக்கம் திருவிதாங்கூருக்க சங்கு மறுபக்கம் எழுத்து. சங்குநாணயம்னும் பேரு உண்டு.”

“ஒரு நல்ல தொழிலாளி ஒருநாள் முழுக்க மண்ணு சுமந்தா ஏழு முதல் பத்து ராசிப்பணம் வரைச் சம்பளம், இது எண்ணூறுகளிலே உள்ள கணக்கு. அஞ்சு ராசிப்பணத்துக்கு ஒரு பக்கா அரிசி கிடைக்கும். ஒரு ராசிப்பணம் குடுத்தா ஒருகல்லு மரச்சீனி கிளங்கு கிடைக்கும். ஒரு கல்லுன்னா இன்னைக்கு ஒரு மூணுகிலோ. ஒரு நல்ல பாலராமபுரம் வேட்டி அம்பது ராசிபணம்..”.

“அப்ப நம்ம குடும்பத்துக்கு இந்தப்பகுதியிலே மட்டும் பதினெட்டு சந்தையிலே தீர்வை வசூலிக்குத பொறுப்பு இருந்தது. எல்லா சந்தையிலயும் ஆளுக உண்டு. குடுமத்திலே இருந்து ஒரு ஆம்பிளையும் கூடவே இருப்பான். ஒருதலைச்சுமடு நிறைய கருப்பட்டியோ மரச்சீனியோ கொண்டுவந்தா ஒருபணம் தீருவை. வாங்குறவன் கிட்டயும் தீருவை உண்டு. இதுதவிர வண்டி, கழுதை, மாடு எல்லாத்துக்கும் தீருவை. அப்டி தோதுப்போல வசூல் செய்வானுக. எல்லாம் இந்த ராசிப்பணம்தான்.”

“ராசிப்பணத்திலே நடுவிலே ஓட்டை உண்டு. அதை ஓட்டைச்சக்கரம்னு அந்தக் காலத்திலே சொல்லுவாங்க. கயிறிலே கோத்து இடுப்பிலே கட்டி வச்சுக்கிடுவாங்க. குலுங்கி சத்தம்போட்டு காட்டிக் குடுக்கக்கூடாதுன்னு ஒவ்வொரு சக்கரத்துக்கும் இடையிலே கத்தாழை மடலை வெட்டி ஒரு துணை கோத்து வைக்குததும் உண்டு.”

“சந்தைகளிலே வசூல் முடிஞ்சு சாக்குமூட்டையிலே கட்டி கொண்டுவந்து சேப்பானுக. நம்ம குடும்பக் காரணவரு படுத்திருக்குதது பத்தாயத்துக்க மீதேயாக்கும். வழக்கமா பத்தாயத்திலே நெல்லுபோடுவாங்க. இங்க இவரு நாணயத்தை போட்டு வச்சிருப்பாரு… அவ்ளவு நாணயம் வரும். பாத்தா புளிங்கொட்டையை குவிச்சு வச்சமாதிரி இருக்கும்னு சொல்லி கேட்டிருக்கேன்.”

“மாசம் ஒருதடவை திருவனந்தபுரத்திலே இருந்து வில்லுவண்டியிலே பெரியபெட்டிகளோட வந்து தீர்வைப்பணத்தை வாங்கிட்டுப் போவாங்க. அதுக்கு வில்லைச் சேவகனும் ஈட்டியும் வாளுமாட்டு எட்டுபேருள்ள அகம்படி நாயர்மாரும்  உண்டு. இங்க நம்ம வீட்டு பூமுக மண்டபத்திலே வச்சுதான் நாணயத்தை அளந்து அளந்து போடுவாங்க. இந்த பலகை அதுக்குண்டானதாக்கும்.”

“இதிலே நாணயத்தை அள்ளிப்போட்டு கையாலே ஒரு நிரப்பு நிரத்தி அப்டியே பெட்டியிலே போடுவாரு நம்ம காரணவரு அம்மாவன். ஒரு பலகை ஆயிரம் பணம்… ஒருதடவைக்கு இப்டி ரெண்டாயிரம் முதல்  ஐயாயிரம் பலகைவரை பணம் இருக்கும். திருவிழா மாசங்களிலேயும் அறுவடை மாசங்களிலேயும் பத்தாயிரம் பலகைவரை வந்திருக்கு”.

“ஒருபலகை ராசிப்பணம் ஒரு வெள்ளிப்பணம். பத்துவெள்ளிப்பணம் ஒரு பொன்பணம்னு கணக்கு. அப்டி இந்த வேணாட்டிலே மொத்தம் எட்டு அதிகாரிகளுண்டு சந்தைக்கணக்குக்கு. எல்லாத்தையும் வசூல் செய்து பத்மநாபபுரம் கஜானாவுக்கு கொண்டு போறதுக்கும் நம்ம அம்மாவன்தான் போவாரு.  அங்க எண்ணி எடுத்து வச்சு அதை பங்குவச்சு பட்டாளத்துக்கும் போலீசுக்கும் சர்க்கார் உத்யோகஸ்தனுங்களுக்கும் சம்பளம் குடுப்பாங்க. மற்ற செலவுகளுக்கு வேண்டியதை குடுப்பாங்க.”

“அப்ப ஒரு போலீஸுகாரனுக்கு மாசம் ஆயிரம் ராசிப்பணம் சம்பளம், அதாவது ஒரு வெள்ளிப்பணம். அதை ராசிப்பணமாத்தான் குடுப்பாங்க. வெள்ளிப்பணத்தை எங்க கொண்டுபோயி செலவளிக்க முடியும்? சம்பளத்தை மஞ்சள்துணியாலான ஒரு பையிலே போட்டு சின்ன மூட்டையா கட்டிக் குடுப்பாங்க. அதுக்கு பக்கறைன்னு பேரு. சர்க்கார் சம்பளம் வாங்குறவனை பக்கறைப்பணம்ன்னு சொல்லுவாங்க. அதுக்கு அப்டி ஒரு மதிப்பு.”

“கணக்கு செம்பகராமன்னுட்டாக்கும் நம்ம குடும்பத்துக்கு பேரு. எல்லாம் ஆயிரத்தி எண்ணூற்றி தொண்ணூறு வரைக்கும்தான். திவான் ராமராவ் காலத்திலே இந்தமாதிரி பரம்பரைக் கணக்குபிள்ளைகளை நீக்கிட்டு சர்க்கார் நேரிடையா அதிகாரிகளை நியமனம் பண்ணி தீர்வை வசூலாக்க ஆரம்பிச்சாச்சு… அதோட கணக்கு அதிகாரம் போச்சு. ஆனாலும் ஆனகிடந்தா குதிரை மட்டம்லா? அப்ப சம்பாதிச்ச பணம்தான் இப்பவும்”.

நான் அந்த பணப்பலகையை கையால் வருடிப் பார்த்தேன். பிறகு ஒவ்வொருவராக வந்து பார்த்தனர்.

“செரி இதிலே என்ன பாத்தீங்க?” என்று அச்சுதன் அண்ணா கேட்டார். “வித்தியாசமாட்டு என்னடே பாத்தீங்க?”

“ஒண்ணுமில்லியே” என்று கருணாகரன் சொன்னார்.

நான் கூர்ந்து பார்த்தேன். பிறகு “ஒரு துளையிலே சின்ன ஓட்டை இருக்கு…” என்றேன்.

“அதாக்கும்!” என்று அச்சுதன் அண்ணா புன்னகைத்தார். “இவன் கரடிநாயருக்க மகன், கள்ளம் தெரிஞ்சவனாக்கும்”

“எதுக்கு அந்த ஓட்டை?” என்று நான் கேட்டேன்.

“அப்ப அதுவும் போச்சா? லே மக்கா, எதுக்கு ஓட்டை போடுவாங்க?”

ஆசாரி கோலப்பன் “நான் சொல்லுதேன். அதிலே ஒரு செம்புக்காசை ஒட்டி வச்சிருக்காங்க… அதை உள்ள சேத்து வைக்குததுக்கு உண்டான ஓட்டை அது” என்றார்.

“ஆமா” என்று அச்சுதன் அண்ணா சிரித்தார் “இவன் கள்ளமறிஞ்சவன்டே..”.

“அய்யோ! ஒரு காசு மட்டும் விழாம ஒட்டிக்கிட்டே இருக்கும்!” என்றேன்.

“ஆமா இதைவைச்சு ஆயிரம் தடவை அளந்துபோட்டா ஆயிரம் காசு மிச்சம். மாசாமாசம்… எவ்ளவு தொகை? சொல்லு..”

“ஒரு காசு!” என்றேன். “ஒரு காசிலே!”

“மாசம் சராசரியா பத்தாயிரம் காசுக்குகுறையாது…. இருபதாயிரம் முப்பதாயிரம்னு போன நாளும் உண்டு. ஆண்டுக்கு எவ்ளவுடே? குடுக்கிற எல்லாத்துக்கும் ஆயிரத்திலே ஒரு காசு லாபம். அப்டி முந்நூறு வருசம் சேத்துக்க எவ்ளவு பணம்?”

நான் வியப்புடன் “ஆமால்ல” என்றேன்.

“எனக்க தாய்வழிக் காரணவர் கணக்குசெம்பகராமன் கோமன் நாயரு இங்க எப்டி வந்தாரு தெரியுமா? இடுப்பிலே ஒரு பாதிவேட்டி. தோளிலே ஒரு துவர்த்து. கொலப்பட்டினியா இந்த ஊருக்குள்ள வந்தாரு. இந்த வீடு நெலம் கணக்குசெம்பகராமன் பட்டம் எல்லாம் இந்த ஒத்தைக்காசு டிரிக்குலே தட்டி எடுத்ததாக்கும்…. வசூல் காசிலே ஆயிரத்துக்கு அஞ்சு கணக்கு செம்பகராமனுக்கு கமிசன். ஆனால் நம்ம காரணவருக்கு அது ஆறு… மகாராஜா அறியல்லை, தெய்வம் அறியல்லை” என்றார் அச்சுதன் அண்ணா.

நான் “நல்ல கணக்கு” என்றேன்

“அதாக்கும் இதை ஒரு ஞாபகச்சின்னமாட்டு எடுத்து வச்சிருக்கேன். நம்ம சந்ததிகளுக்கு தெரியட்டுமே, எப்டி?” என்றார் அச்சுதன் அண்ணா. சிரித்துக்கொண்டே வெற்றிலை எடுத்து நீறு தேய்த்தவர் சட்டென்று நிறுத்தி “வே ஆசாரி, அந்த பலாக்காய்க்காரன் போயிருப்பானா வே? ஓடிப்போயி கூட்டிட்டு வாரும்.. ஒரு விசயம்” என்றார்.

“எதுக்கு?” என்றார் கோலப்பன் ஆசாரி.

“சொல்லுகதைச் செய்யும்வே”

ஆசாரி இறங்கி ஓடினார். அச்சுதன் அண்ணா வீட்டுக்குள் போய் ஒரு மரப்பெட்டியை தூக்கிவந்தார். அது நிறைய செம்புக்காசுகள் இருந்தன.

அச்சுதன் அண்ணா “ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்திநாலோட இந்தப் பைசாவுக்க மதிப்பு போச்சு. அப்ப கொஞ்சம் இங்க தங்கிப்போயிட்டுது. செரி இருக்கட்டுமே, ஐஸ்வரியமாக்குமேன்னு நம்ம காரணவன்மாரு வச்சிருக்காங்க” என்றார்.

ஒரு சிறு மரச்சம்புடத்தில் இருந்து ஒரு செம்புக்காசை எடுத்தார். “இதாக்கும் நம்ம குடும்பத்துக்கு ஐஸ்வரியமான பொருள்”என்றார். அந்த செம்புக்காசின் ஒரு பக்கம் செம்பு உருக்கப்பட்டு ஊசி போல நீட்டியிருந்தது. அதை அந்த காசுப்பலகையில் துளையிருந்த இடத்தில் வைத்து அழுத்தினார். அப்படியே பதிந்துகொண்டது. குலுக்கிப் பார்த்தார். உதிரவில்லை.

ஆசாரி காளியனை கூட்டிவந்தார்

“வாரும்வே… உம்ம கணக்கு என்னண்ணு பாக்குதேன்… ஒரு பந்தயம். அப்டி நீரு ஜெயிச்சு போகப்பிடாதுல்லா?”என்றார் அச்சுதன் அண்ணா. “இது அந்தக்கால செம்பு நாணயமாக்கும். இது பணம் எண்ணுத காசுப்பலகை. பாத்திருக்கேரா?”

“ஆமா, தெரியும்”என்றார் காளியன்.

”இப்ப இந்த பெட்டியிலே எவ்ளவு நாணயம் இருக்கு? கணிச்சு சொல்லமுடியுமா?”

“ஆமா” என்றார் காளியன் “சொல்லிடுதேன்.”

“இது சுளுவு வேலை, அதனாலே சுடலை அருளு வேண்டியதில்லை, இல்லியா?” என்று வெற்றிலைக் காவி படிந்த பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டு அச்சுதன் அண்ணா கேட்டார் “பந்தயமுண்டு… கணக்கு தப்பினா நீரு எனக்க முன்னாலே பத்து தோப்புக்கரணம் போடணும். சரியா இருந்தா நான் ஆயிரம் ரூபா சும்மா தாறேன்”

“ஆயிரம் ரூபா குடுங்க உடையோரே” என்றார் காளியன்.

“அப்ப அதை நீரு உறப்பாக்கியாச்சு இல்ல?” என்று சிரித்தபடி அச்சுதன் அண்ணா சொன்னார். “சொல்லும், எம்பிடு இருக்கு?”

அவர் கூர்ந்து நோக்கிவிட்டு “பதினெட்டாயிரத்தி நாநூற்றி எம்பத்தெட்டு” என்றார்.

“கரெக்டா இருக்குமா, கூடக்குறையுமா?”

“பதினெட்டாயிரத்தில் நாநூற்றி எண்பத்தெட்டிலே ஒத்த ஒரு சல்லி குறையாது கூடாது”

“உறப்பாக்கும்?”

“ஆமா உறப்பு” என்றார் காளியன்.

“செரி, எண்ணி பாத்துக்கலாம்” என்றார் அச்சுதன் அண்ணா. “இந்தாரும்  இந்தக் காசுப்பலகை வச்சுநீரே எண்ணும்”

“இல்ல நீங்க எண்ணுங்க” என்றார் காளியன்.

“வே ஆசாரி, எண்ணும்வே” என்றார் அச்சுதன் அண்ணா

ஆசாரியும் கருணாகரனும் அச்சுதன் அண்ணாவுமாக காசுப்பலகையில் நாணயங்களை அள்ளி அள்ளி போட்டார்கள். எண்ணினார்கள். பதினெட்டு முறை போட்டபின் எஞ்சிய நாணயங்களை அச்சுதன் அண்ணாவே எண்ணினார்.

பதினெட்டாயிரத்து நாநூற்றி எழுபது. பதினெட்டு குறைவு. காளியன் திகைத்து வெளுத்துவிட்டார்.

“என்னவே?”

“மன்னிக்கணும், மன்னிக்கணும், கணக்கு என்னாச்சுன்னு தெரியல்லை… சுடலை சாபமாப் போச்சு… தெரியல்லை” அவர் அழுவதுபோல ஆனார்.

“செரி போவும்…”

“நான் தோப்புக்கர்ணம் போடுதேன்.”

“வேண்டாம்வே நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.”

“இல்ல, நான் தோத்தேன்லா? சுடலையை மறந்தேன்லா?” என்றார். அவரே காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார்.

நான் அச்சுதன் அண்ணாவை பார்த்தேன். அவர் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். தோப்புக் கரணம் போட்டு காளியன் மூச்சுவாங்கினார்.

“நான் வாறேன்….” என்றார். “இப்பிடி தப்பினதே இல்லை” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

“இது வேற கணக்குவே. இந்தக்கணக்கு உம்மமாதிரி ஆளுகளுக்கு புரியாது… போய்ட்டு வாரும்.”

“இதெப்பிடி? இதெப்பிடி?” என்றார் காளியன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உதடுகள் இறுக்கமாக இருந்தன.

“உமக்கு சுடலை இருக்குல்லா, அதே மாதிரி எங்களுக்கு வேற தெய்வங்கள் உண்டு” என்றார் அச்சுதன் அண்ணா.

அவர் கும்பிட்டபடியே திரும்பிப் போவதை கண்டேன். “பாவம், அவர்கிட்ட விசயத்தைச் சொல்லியிருக்கலாம்” என்றேன்.

“அப்டிச் சொல்லீருவோமா என்ன?” என்று அச்சுதன் அண்ணா உரக்கச் சிரித்தார்.

***

தொடர்புடைய பதிவுகள்

அன்னம்,செய்தி- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அன்னம் உணர்ச்சிபூர்வமான கதை. கதை ஒரு டெக்னிக்கல் துப்பறியும் கதை போலத் தொடங்கி மிகநுட்பமாக நீண்டு நீண்டு செல்கிறது ஒரு இடத்தில் கதை அடையும் உணர்ச்சிநிலைகளே கதையின் அம்சங்களாக ஆகிவிடுகிறது.

இந்தக்கதை அளிக்கும் சில குறிப்புகளை வாசகனாக நான் வாங்கிக்கொண்டேன். அதைப்பற்றி எவராவது எழுதுவார்கள் என்று நினைத்தேன். அது இந்துவின் உள்ளத்தில் அசுரர்- அரக்கர் ஆகியோருக்கான இடம். அவர்கள்  ‘அந்நியர்கள்’ ஆகத்தான் அவனுக்குச் சொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அவன் அப்படித்தான் பார்க்கிறான். அவர்களுக்கு ஒரு தோற்றமும் அளிக்கப்பட்டிருக்கிற்து. கறுப்பு, பெரிய உருவம்.

ஆனால் இங்கே எல்லா அசுரச் சக்கரவர்த்திகளும் அரக்க சக்கரவர்த்திகளும் புராணங்களால் போற்றி புகழப்பட்டிருக்கிறார்கள். அதிலும் கார்த்தவீர்யார்ஜுனன், மகாபலி, நரகாசுரன் போன்ற சில அசுரர்கள் மக்களால் தங்கள் அரசர்கள் மூதாதையர் என்றும் நினைக்கப்படுகிறார்கள். மகாபலி கேரளத்தின் மூதாதை இல்லையா? கதகளி தெருக்கூத்து யட்சகானம் போன்ற கலைகளில் இவர்கள்தான் நாயகர்க்ள். இவர்கள் கொல்லப்படுவதை இந்தக்கலைகள் துயரத்துடன்தான் நடிக்கின்றன

ஹெப்பார் யட்சகான ஆசிரியர். அவர் கருத்த சாகிப்பை கார்த்தவீரியன் என்கிறார். கார்த்தவீரியனை தெருக்கூத்தில் பெரும் கொடையாளி, அன்னதாதா என்கிறர்கள். அவருடைய ஆயிரம் கையையும் வெட்டி பரசுராமன் அவரைக்கொன்றார்.   ஆனால் வடக்குதமிழ்நாட்டில் அவர் தெய்வம்போல. இங்கே எப்படி ஹெப்பாரின் மனசில் சாகிப் கார்த்தவீரியர் என்று தோன்றியது. எது அவரை அசுரர்களுடன் இணைத்தது. அவர் மனசுக்குள் நிகழ்ந்த தலைகீழாக்கங்கள் என்ன? ஆச்சரியமான விடைகளுக்கு நாம் செல்லமுடியும்?

ஹெப்பார் கருத்த சாகிப்பின் விருந்துபச்சாரத்தை வேள்வி என்கிறார். எந்த வேள்வியிலும் அந்த சமத்துவம் இருந்ததில்லை என்கிறார். அவர் பிராமணராக இருந்தாலும் ‘விலக்கப்பட்ட’ பிராமணர். ஆகவே இந்த அசுரவேள்வியை பார்க்கும் கண் அவருக்கு வந்துவிட்டிருக்கிறது. இங்கே சோறுதான் வேள்வி. புராணங்களில் எல்லா அசுரர்களுக்கும் வேள்விகள் உண்டு. அவர்கள் செய்த வேள்விகள் இப்படித்தான் இருந்திருக்கும்

கதைகளில் சப்டெக்ஸ்ட் என்கிறோம். அது ஆசிரியர் முடைந்து வைப்பது கிடையாது. இப்படி குறிப்புகள் வழியாக அவரை அறியாமலேயேகூட உருவாகி வருவதுதான்

 

எம்.பாஸ்கர்

 

வணக்கம் ஜெ,

 

அன்னம் சிறுகதையை வாசித்தேன். கறுத்த சாகிப் எனக்கு கெத்தேல் சாகிபைத்தான் நினைவுறுத்துகிறார். அவரின் இன்னொரு வடிவுதான் இவர். மைக்ரோபோனில் அறை முழுதும் ஒன்று நூறென முட்டிப் பொருளிலா மனித ஒலிகளாக நிறைந்த அறையில் கேட்டு மலர்ந்திருக்கும் சாகிபின் முகம் கூட காண முடிந்தது. இரு பக்கமும் பல மடங்கு உந்தி வந்த பின்னரே ‘அதனாலென்ன’ எனச் சொல்ல முடிகிறது. அதனாலும் என்ன…

 

அரவின் குமார்

 

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

உங்கள் வாசகர்களுக்கு உங்களை வாசிக்காமல் ஒரு நாள் கடந்துசெல்வதில்லை. உண்மையில் 69 கதைகளும் முடிந்தபின் அத்தனை கதைகளையும் திரும்ப வாசித்தேன். பழைய கதைகளை திரும்ப வாசித்தேன். மன்மதன் போன்ற கதைகள் அவை வெளிவந்தபோதிருந்ததை விட மிகப்பெரிய அழகுடன் இப்போது இருப்பதை கண்டுபிடித்தேன்

இந்த வரிசையில் இன்றைக்கு என்னை மிகவும் கவர்ந்த கதை செய்தி. அந்தசிறுகதையை வாசிக்கும்போது வெண்முரசில் பீஷ்மர் ஒரு புல்லை பறித்து வீசி போரிடுவது ஞாபகம் வந்தது. அதிலிருந்துதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழி வந்திருக்கவேண்டும். புல் அம்பாகும் வித்தை என்றால் அது கூர்மையானதுதானே

ஒருசாதாரணமான சம்பவம். சம்பவம்கூட இல்லை. ஒரு தருணம். அதில் இருக்கும் இனிமையை தொட்டுக்காட்டிவிட்டது அந்தக்கதை.

ஆர்.ஜெயலட்சுமி

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

தொடர்சிறுகதைகளும்,  கல்பொருசிறுநுரையும் நிறைவடைந்திருக்கும் போது இந்த கதைத்திருவிழா துவங்கியதும், தொடருவதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. நெடுங்கதைகள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ’செய்தி’ மனதுக்கு மிகவும் பிரியமானதொன்றாகிவிட்டதது. ஒரு கையால் டிரெளசரை பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்த அனந்தன் இப்போது மீசையரும்பும் பதின் வயதில், அவ்வயதுக்கே உரிய  தவிப்புகள், குழப்பங்கள், ஈர்ப்புக்கள் அனைத்தும் இருக்கும் அனந்தன், லீலையின் உரப்பனை நினைவு படுத்திய அனந்தன், தொலைவிலிருந்து பகவதியம்மையை பார்க்கையிலேயே அவளது கன்னங்களின் பளபளப்பும் மார்பகங்களும், பதைக்கும் கழுத்துக்குழியும், மூச்சையும் கவனிக்கும், பெண்ணை உடலாக அறிந்துகொள்ளும் முதல்படியில் இருக்கும் அனந்தன்

கணவனின் அருகாமையை சமீபத்தில் தான் இழந்திருக்கும், பாம்பேன்னா வானத்துக்கு பக்கத்தில் என்று நம்பும், எழுதப்படிக்கத்தெரியாத  பகவதியம்மை, கூச்சமும், தயக்கமும், பதட்டமும், விருப்பமுமாக அனந்தன், இப்படி இரு கதாபத்திரங்களின் இயல்பே கதையின் சுவாரஸ்யத்தை துவக்கத்திலேயே கூட்டிவிடுகின்றது. இவர்களுக்கிடையில் குமரேசன் எழுதியதும் அனந்தன் தெரிவித்ததுமாக இருவேறு செய்திகளுடன் அழகிய கதை .

லெட்டரில் குமரேசனின், ”நான் சுகம் நீ சுகமா பணம் பத்திரம் பி்ள்ளைகள் பத்திரம்” என்னும்  அலங்கரங்களும், கூடுதல் அன்பும் பிரிவின் ஆற்றாமையும், ஏக்கமும் எதுவும் இல்லாத நேரடியான செய்திக்கும் , அனந்தனின் ஒரு கவிதையைப்போன்ற, செல்லக்குட்டி என்னும் விளியும், கண்களின் அழகையும் காராமணிப்பயறுபோன்ற பளபளக்கும் நிறத்தையும், பூவைப்போன்ற உதடுகளையும், பிரிவாற்றாமையையும், மீண்டும் பார்க்கவேண்டும் என்னும் ஏக்கத்தையும் தெரிவிக்கும் அந்த பூப்போன்ற உதடுகளில் ஒரு முத்தமும் கொடுத்திருக்கும் ‘அன்புள்ள’ கணவன் குமரேசனின் செய்திக்கும் இருப்பது  உண்மைக்கும் விருப்பத்திற்கும் இருக்கும் வித்தி்யாசமல்லவா?

அனந்தன் வாசிக்கையிலேயே அது அவளுக்கு தெரிந்துவிட்டிருக்கும். குமரேசனுக்கு எழுதப்படிக்க மட்டுமல்ல, பிரியத்தை  இப்படி காட்டவும் தெரியது என்று பகவதிக்கல்லவா நன்றாகத் தெரியும்?

ஆனால் அப்படி ஒரு செய்தி அவளுக்கும் வேண்டி இருந்திருக்கிறது. அனந்தன் அதை வாசித்தது, அனந்தனின் அருகாமை, அனந்தன் மகனின் பெயரைக்கேட்டது, இப்படி எல்லாமே அவளுக்கு தேவையானவையே அதனலேயே அவள் உலகதின் ஆகச்சிறிய ரகசியமான அந்த 300 ரூபாய்களைக் குறித்து அவனிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

பகவதியம்மையின் பூவைப்போன்ற சிறிய உதடுகளில் முத்தம் கொடுப்பதற்கு முன்னர் அனந்தன் எடுத்துக்கொள்ளும் அந்த அவகாசத்தில், மிக மிக அடர்த்தியான, குளிர்ந்த காற்றுப்பரப்பை உடலால் கிழித்து அப்பால் கடந்துவந்த அந்த இடைவெளியில் சிறுவனாயிருந்த அனந்தன் ஆணாகிவிட்டிருக்கிறான்.

அதை அறிந்துகொண்ட கிளர்ச்சியினால்தான், அங்கேயே செயலற்று அமர்ந்திருந்ததும், எங்கோ துணி துவைக்கும் ஓசை அவன் உடல்மேல் கூழாங்கற்கள் போல விழுந்து கொத்திக்கொத்தி துரத்துவதும், இலக்கில்லா பிரயாணமும்,  சினிமாவும், விஜயஸ்ரீயுமாக அத்தனை இம்சை

சிறுவனாக குற்றணர்ச்சியும் ஆணாக பெருமிதமுமாக கலவவையான உணர்வுகளால் அல்லாடும் அனந்தன்

பகவதிக்கு மட்டுமல்லாது, அனைத்துப் பெண்களுக்குமே மாதம் சுளையாக வரும் ருபாய்களைவிட அனந்தன் சொன்னதுபோன்ற செய்தியே அதிகமில்லாவிடினும் கொஞ்சமாவது வேண்டி இருக்கிறது.

நான் வசிக்கும் இந்த கிராமத்தில் டிராக்டர் பணிமனை வைத்திருக்கும் ஒரு மலையாளக்குடும்பமும் இருக்கிறது எனக்கு அவர்களுடன் நல்ல நட்பும் இருக்கின்றது. அவர்களின் இருமகன்களும், சென்றமாதம் திருமணமான  அவர்களின் மூத்த மகன் விஷ்ணுவின் மனைவியும் கூட என் மாணவர்களே!

கொரோனா கெடுபிடிகளால் சுருக்கமாக, சிக்கனமாக, எங்களூருக்கு பக்கத்திலிருக்கும் ஒரு மும்மூர்த்திகளின் கோவிலில் திருமணம் முடித்து மறுநாள் அதிகாலையிலேயே, ஊர் போய் சேர்ந்ததும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் என்னும் கட்டாயத்துடன் சிறப்பு அனுமதியில் மணமக்கள் இருவரும் விஷ்ணு பணிபுரியும் வால்பாறை எஸ்டேட்டுக்கு இருசக்கர வாகனத்தில் பயணப்பட்டார்கள். ’எத்தனை அருமையான் தேனிலவு‘ என்று  ஊருக்குள் ஒரே பேச்சாக இருந்தது

விஷ்ணுவின் அம்மா ஜோதி சேச்சி சிலநாட்கள் முன்பு வீட்டுக்கு வந்திருந்து மகனின் மகிழ்ச்சியான திருமண வாழ்வையும், அவன் மருமகளை எத்தனை செல்லமாக வைத்துக்கொள்கிறானென்றும் சந்தோஷமும் பெருமையுமாக  சொல்லிக்கொண்டிருந்தார்கள். விடைபெற்றுக்கொள்ளுகையில் ’’எனக்கும் விவாகமாயி 28 வருஷமாச்சு இப்போ வரையில் ஒரே ஒரு முறைதான் என்னை இந்த மனுஷன் ஜோதிக்குட்டின்னு கூப்பிட்டிருக்காரு, சண்டை  போடாம இருந்தாலே அதே செல்லம்னு ஆயிருச்சசு, இவனெல்லாம் படிச்சு நாகரீகமானதால் பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கறதுன்னு தெரிஞ்சிருக்கு,என்று ஆதங்கமாக சொல்லிக்கொண்டு போனார்கள்

28 நீண்ட வருடங்களுக்குப்பின்னும் அந்த ’’ஜோதிக்குட்டி’’ என்னும் ஒற்றைவிளியை இன்னும் மனதில் இத்தனை பத்திரமாக வைத்திருக்கிறார்கள் என்றால் அது அவர்களுக்கு எத்தனை தேவையாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொணடே இருந்தேன்

சென்ற வாரம் விஷ்ணு என்னை போனில் அழைத்து ‘’ மேம் நேத்து ராத்திரி இங்கே எஸ்டேட்டில் வீட்டுக்கு முன்னாடி ஒரு யானை, சக்கை மரத்தில் முன்காலிரண்டையும் வச்சு நின்னுகிட்டு பழத்தை சாப்பிட்டுது கணணாடி ஜன்னல் வழியே பார்த்தோம்,  இவ  யானையை அத்தனை பக்கத்தில் பார்த்து பயந்துடடா  பாவம்’’ என்றபோது எப்போதும் மழையும் மேகமுமாக நிறைந்திருக்கும், பச்சைதிண்டுகளாக தேயிலைச்செடிகள் சூழ்ந்திருக்கும் ஒரு மலைப்பிரதேசத்தில், புதுக்கணவனின் அருகாமையில் இரவில், கணணாடிச்சன்னல் வழியே யானையை பார்த்துக்கொண்டிருக்கும் இளம்பெண்ணின், அவளை அச்சப்படவேண்டாம் என்று தேற்றும் கணவனின் சித்திரத்தில்  எனக்கே சத்தியத்தில் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது.

பேருந்தில் அனந்தனும் பகவதியும் கண்களால் பரிமாறிக்கொள்ளும் செய்தியுடன் முடியும் இக்கதை அனந்தனின் அந்தரங்கத்தின் செய்தியை மட்டுமல்லாது மனைவியின் விருப்பங்களைக்குறித்து அறியாத லட்சோபலட்சம் ஆண்களுக்கான செய்தியும் இருக்கின்றது

அன்புடன்

லோகமாதேவி

 

 

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

 

 

தொடர்புடைய பதிவுகள்

கணக்கு,சுக்ரர்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

நலம்தானே?

சுக்ரர் கதை வினோதமான ஒரு நபரை அறிமுகம் செய்கிறது. ஏறத்தாழ இதேபோன்ற ஒருவர் எங்கள் பழைய அலுவலகத்தில் இருந்தார். நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் அவர்களின் பிற ஏஜென்ஸிகள் எல்லாவற்றையும் நினைவிலிருந்தே சொல்வார். ஒரு மனிதர் ஒரு விஷயத்திலேயே முழு ஈடுபாட்டுடன் வாழ்ந்துவிட்டால் இப்படி ஆகிவிடுகிறார். இந்த திறமை இயல்பான ஒன்று அல்ல. ஏனென்றால் மனிதர்களால் அப்படி ஒன்றிலே மட்டும் குவிந்து வாழ்ந்துவிட முடியாது. அது மனித மனத்தின் இயல்பு அல்ல.

இந்தக் கதை போன்றவைதான் உண்மையில் சிறுகதை என்னும் வடிவத்தின் சாத்தியங்கள் என்னென்ன என்பதை காட்டுகின்றன. இந்தக் கருவை சிறுகதை இல்லாமல் வேறு எவ்வகையிலும் சொல்லமுடியாது. விரிவாக நுணுக்கமாகச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் ஒரே ஒருவரின் ஒரே ஒரு விஷயம் பற்றியது இந்தக்கதை. அவருடைய தோற்றம், அவர் ஒரு மந்திரம்போல அந்த மானசீக மேப்பை விரிப்பது, அதில் கைவைத்து கைவைத்துச் சென்று ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டுவது எல்லாமே கண்முன் காட்சிபோல தெரிகிறது. ஒருவகையான பிரமிப்பு உருவாகிறது.

ஆனால் இப்படி ஒரு காட்சியைச் சொல்லிவிட்டாலோ, ஒரு மனிதரின் ஒரு பிரச்சினையைச் சொல்லிவிட்டாலோ அது கதையின் உச்சமாக ஆகிவிடுவதில்லை. இதுவும் பெருமாள்சேவைதானே என்ற வரிகூட கொஞ்சம் கம்மியானது. இதுவும் பெருமாள்தானே என்றுதான் அவர் சொல்கிறார். அத்தனை அசுரர்ர்கலும் விஷ்ணுவிலிருந்துதான் தோன்றியிருக்கிறார்கள். விஷ்ணுவிலிருந்து பிரம்மா பிரம்மாவிலிருந்து ஏதாவது பிரஜாபதி அவரிடமிருந்து அசுரர்குலம் என்றுதான் புராணம் சொல்லும். அந்த இடத்தில்தான் கதை அதன் மெய்யான ஆழத்தை அடைகிறது

 

சுவாமி

 

வணக்கம் ஜெ.

 

சுக்ரர் கதையை வாசித்தேன். பெருமாளில்லைன்னு யாரு சொன்னது என அரிகிருஷ்ணன் கேட்கும் இடத்தில் இருமை களைந்து ஒன்றாக ஆகும் இறையுணர்வு வெளிபடுகிறது. கிரிமினல்களின் வரலாற்றை நினைவு கூர்வதன் மூலம் தன்னை அவர்களாகப் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார். அவர்களாக ஆகிறார்…அவர்களும் சேர்ந்துதான் பெருமாள்…

 

அரவின் குமார்

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

கணக்கு ஒரு parable வடிவத்தில் அமைந்திருக்கும் கூர்மையான கதை சுருக்கமானது. நேரடியானது. ஆனால் parable கதைகள் நாம் தொட்டுத்தொட்டு விரிக்கமுடியும். இந்தக்கதை வர்க்கங்கள் உருவான விதத்தையே சொல்லிவிடுகிறது. ஒரு சின்ன டெக்னிக். கண்ணுக்கே தெரியாத அளவுக்குச்ச் சின்னது. அதுதான் பெரும் செல்வத்தையும் அதிகாரத்தையும் உருவாக்குகிறது. அது சிஸ்டத்தில் உள்ள ஒரு ஓட்டை. ஒரு பிழை. அதுதான் இங்கே பணமாக ஆகிறது. அதை வேண்டுமென்றால் உபரி என்று சொல்லலாம்.

அந்த உழைப்பாளிக்கு உழைப்பு தெரியும். அதில் அவர் உருவாக்குவது பெர்ப்க்‌ஷனை. அவருடைய பயனம் அதுதான். அந்த உழைப்பின்மேலும் பெர்பெக்‌ஷன் மேலும் தொற்றுண்ணி மாதிரி உட்கார்ந்து ரத்தம் உறிஞ்சி இந்த சுரண்டல் அமைப்பு உருவாகியிருக்கிறது. எல்லாவகையிலும் ஒரு கலாரீதியான முற்போக்குக் கதை. ஒரு முற்போக்கு மேடையி பெயரைச் சொல்லாமல் இந்தக்கதையை சொன்னால் மெய்சிலிருபபர்கள் என்று நினைக்கிறேன்.

 

சாரங்கன்

 

அன்பின் ஜெ,

கணக்கு வாசித்தேன்.

காளியன் கதாப்பாத்திரம் உங்களின் முந்தைய கதைகளில் வரும் ஆசாரிகளை நினைவிலிருத்தியது.

அம்மையப்பம்‘ கிறுக்கனாசாரி, ‘ஏழுநிலைப்பந்தல்‘ சங்கரன் மூத்தாசாரி, ‘தேனீ‘ சம்முகமணி ஆசாரி, கட்டக்கடைசியாக ‘புனைவுக்களியாட்டு’ கதைத்தொடரை நிறைவு செய்த ‘ஆகாயம்‘ கதையில் வரும் கோரன்/குமாரன் -(இந்த வரிசையில் விடுபட்ட ஒரு பெயரை இறுதியில் எழுதுகிறேன்)இவர்கள் அனைவருக்கும் பொதுவான சில அம்சங்களை கிரகிக்க முடிகிறது.

லௌகீகம் தீண்டாமல் தங்கள் கலையைப் பொத்திப் பாதுகாத்தவர்கள் – இதை எச்சரிக்கையாகவோ, தன்னுணர்வுடனோ இல்லாமல் ஸ்வதரமமாகவும் ஒரு வித அப்பாவித்தனத்துடனும் பேணுபவர்கள் இதனாலேயே பிறரை இயல்பிலேயே சீண்டுபவர்கள் (இது அவர்களின் குற்றமுமல்ல)

தங்கள் வித்தையைத் தவிர எதிலும் ஆர்வமில்லாதவர்கள் (சராசரித்தனம் மலிந்த இந்த உலகத்தில் மற்ற பொழுதுபோக்குகள் அவர்களை உண்மையில் குழப்பத்திலாழ்த்துகின்றன; அவர்களைப் பொறுத்தவரை கலையின் உச்சமே கொண்டாடப்படவேண்டும். அல்லாமால் வெறுமனே சராசரித்தனத்தைத் திருப்திப்படுத்தும் எந்த விஷயமும் வேறு ஏதோவோக இருக்கலாமே தவிர கலையல்ல. ஆனால் இதை ஓரளவு புரிந்துகொண்டிருக்கும் ‘மக்கள்திரள்’ தாங்களும் கலாரசிகர்கள்தான் என்று காட்டிக்கொள்வதற்காகவே சராசரிகளை ரசிக்கும் ஒரு பாவனையை மேற்கொள்கிறது. ஆனால் ஆசாரி போன்ற அசல் கலைஞர்களுக்கு அவர்களது கலை அளிக்கும் தன்முனைப்பும் ஆர்வமும் பிற போலி பொழுதுபோக்குகள் அனைத்தையும் எளிதில் புறந்தள்ளிவிட்டு தங்களது வித்தையில் ஒன்றி விடுகின்றனர். அப்படி ஒன்றை மேற்கொள்ள பொறுமையில்லாத திரள் மக்கள் ‘ரசிகன்’ பாவனையை மேற்கொள்கின்றனர்)

காளியன் X அச்சுதன் அண்ணா வின் வேறுபாட்டை யோசித்துக் கொண்டேயிருந்தேன்அச்சுதன் அண்ணனுக்கு வழிவழியாகவே அந்த குறுக்கு/குயுக்தி புத்தி (1000 நாணயங்களுக்கு ஒரு நாணயம் வீதம் லவட்டும்) உறைந்திருக்கிறது. அதனாலேயே அவர்கள் லௌகீகமாக மேலே வர முடிந்திருக்கிறது.
மாறாக காளியன் தன் குடும்பத்தின் வழியில் தனது கலையைக் கற்றுக்கொள்கிறார். அதிலும் அவர் தந்தையைப் பற்றி சொல்லும் விதம் – { வயலிலே எத்தனை நாத்து நிக்குதுன்னும், விளைஞ்சு கதிரு சாய்ஞ்சு நிக்குத வயலிலே எவ்ளவு  நெல்லு இருக்குன்னும்கூட சொல்லும் திறன்,
நான் கவனித்தவரையில் இந்த ரீதியிலான கதைகளில் நுட்பங்கள்/நுணுக்கங்களை விவரிக்கும் இடங்களில் அந்த கதை அபாரமாக மேலேழும்புகிறது. (அல்லது என்னைப் போன்ற எளிய வாசகனின் மனதில் இவைதான் சுலபத்தின் நினைவில் நிற்குமா?!)

தேனீ கதையில் அந்த ஆசாரி நகை செய்துகொண்டே இசை கேட்கும் விதம் (‘கேட்கும்’ கூட அல்ல, நினைக்கும் விதம்) }இதன் வழியாகவே நம்முள் விஸ்வரூபம் எடுக்கும் அக்கலைஞன்.
கடைசியில் ஒரு சின்ன ஏமாற்று வேலை வழியாக கலைஞனை தோற்கடிக்கும் விதம் – அதுவே கூட அப்போதைய வெற்றிதானே, கடைசியில் வெல்வது (புலி)கலைஞன் தானே!

இப்போது அந்த விடுபட்ட பெயருக்கு வருகிறேன்.அது ‘ஜெயமோகன்’ தான்! ஒரு முக்கியமான வித்தியாசம் – கடவுளின் அருளாலோ நல்லூழ் பயனாலோ ஒரு அண்ணாவும், அருண்மொழி போன்ற ஒரு துணையும் உங்களை வெவ்வேறு கட்டங்களில் பேணியிருக்கின்றனர். (‘மாஸ்டர்’ கட்டுரைகளில் தங்களின் லௌகீக அசமஞ்சத்தனம் கிண்டலடிக்கப்படும் விதத்தை நீங்கள் விவரித்திருந்ததை வினைத்துக்கொள்கிறேன் – “100லேர்ந்து 25ஐ கழிச்சா எவ்வளவு?”).

ஆம், அந்த ஆசாரிக்கு (/ஆசாரிகளுக்கு) அருளப்படாத ‘லௌகீகப் பேணுதல்’ உங்கள் அண்ணாவாலும் மனைவியாலும் உங்களுக்குக் கிடைத்திருப்பதே உங்களின் மேதமை முழுமூச்சாக உங்கள் கலையில் வெளிப்படுகிறது என்றே நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்
வெங்கட்ரமணன்

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

 

 

தொடர்புடைய பதிவுகள்

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

$
0
0

நாங்கள் சென்றபோது நாகப்பன் முதலாளி வீட்டிலேயே இருந்தார். மிகப்பெரிய கேட்டுக்கு உள்ளே பிஎம்டபிள்யூ கார் நின்றிருந்தது. எட்டிப்பார்த்துவிட்டு ராஜேந்திரன் “கார் நிக்குது” என்றான்.

கேபினில் இருந்து வாட்ச்மேன் எட்டிப்பார்த்து “ஆரு? என்ன?” என்றான்.

“நாங்க பனை சொசைட்டியிலே இருந்து வாறம்… பனைப்பாதுகாப்புச் சங்கம். முதலாளியை பாக்கணும்” என்றான் ராஜேந்திரன்.

“டொனேசனுக்குன்னா ஆரையும் உள்ள விடக்கூடாதுன்னாக்கும் அறிவிப்பு” என்று வாட்ச்மேன் சொன்னான்.

“இல்ல, இது டொனேசன் இல்லை. வேற விசயம்…” என்று ராஜேந்திரன் சொன்னான். “முதலாளிக்க சொத்து ஒண்ணு இருக்கு… பனைவிளை. அது சம்பந்தமான பேச்சுக்காக்கும்.”

அவன் “கேட்டுப் பாக்குதேன்” என்று உள்ளே மறைந்தான்.

“டேய் என்னடே செய்யுதே? உள்ள போயி டொனேசன் கேட்டா செருப்பாலே அடிப்பாரு” என்றான் குஞ்ஞச்சன்.

“கேக்குத விதத்திலே கேப்போம்… எல்லாம் நாக்குல்லா? பின்ன அடி விளுந்தா அதை பிறவு பாப்போம்” ராஜேந்திரன் சொன்னான்.

கதவு திறந்தது. வாட்ச்மேன் வந்து “விளிக்காரு” என்றான்.

நாங்கள் உள்ளெ சென்றோம். நான் அந்த கேட்டைக் கடந்து அப்போதுதான் வருகிறேன். மிகமிகப்பெரிய வீடு. அப்படி ஒரு வீட்டை எங்களூர்ப்பக்கம் காணவே முடியாது. வெளியே இருந்து பார்த்தால் தெரியாது. பிரிட்டிஷ் பாணியிலான இரட்டைத்தூண் முகப்பு. அதையொட்டி விரிந்து சென்ற அறைகள்.

“கெட்டி அறுபது வருசமாச்சுடே” என்றான் குஞ்ஞச்சன். “நான் இப்பதான் பாக்குதேன்… எவ்ளவுபெரிய வீடு.”

“நாப்பது ரூம் உண்டுன்னாக்கும் கணக்கு. உள்ளயே குளமும் உண்டு” என்றான் ராஜேந்திரன். “பத்து வருசம் முன்னாடி ரீமாடலிங் பண்ணினாங்க. நம்ம ராபின்ஸனாக்கும் ப்ளூபிரிண்டு போட்டது.

இருபுறமும் குரோட்டன்ஸ் வளர்க்கப்பட்ட பாதையில் சென்று வளைந்து போர்ட்டிகோவை அணுகவேண்டியிருந்தது. எங்கோ டாபர்மான் நாய்கள் குரைத்தன.

உள்ளே போர்ட்டிகோவில் நாகப்பன் முதலாளி பெரிய மூங்கில் நாற்காலியில் சட்டைபோடாமல் ஒரு லுங்கி மட்டும் கட்டி அமர்ந்திருந்தார். வெளிறிய உடம்பு. தொங்கும் தாடை. களைப்பான கண்கள். பெரும்பாலும் எல்லா முதலாளிகளும் இப்படித்தான். இரவுபகலாக வேலை, கண்விழிப்பு, குடிகொண்டாட்டங்கள். சீக்கிரத்திலேயே பழுத்து கிழவர்களாக ஆகிவிடுவார்கள்.

“என்ன?” என்று நாங்கள் கும்பிடுவதற்கு முன்னாலேயே முகத்தைச் சுருக்கிக்கொண்டு கேட்டார்.

“ஒரு சின்ன விஷயம் பேசுகதுக்காக்கும் வந்தது” என்றான் ராஜேந்திரன்.

“என்ன விசயம்? என்னமோ சொத்து விசயம்னு சொன்னீங்களாம்.”

“உங்களுக்கு மேகரையிலே பதினாறு ஏக்கர் மண்ணு இருக்குல்லா? அதுக்க பேரு பனைவிளைன்னாக்கும். பனையைப்பத்தியாக்கும் நான் பேசவந்தது. இங்க நூறுவருசம் முன்னாடி ரப்பர் வந்தது. அப்ப அது மலையிலயும் மலையடிவாரத்திலேயும் இருந்தது. இங்க முளுக்க தெங்கும் பனையும் வாழையும் பலாவும் மாமரமும் நிறைஞ்சிருந்தது. ரப்பராக்கும் லாபம்னு எல்லா மரத்தையும் முறிச்சிட்டாங்க. இப்ப எங்க பாத்தாலும் ரப்பர்” ராஜேந்திரன் நிறுத்தாமல் சொன்னான்.

“என்னவே சொல்லுதீரு? என்ன சொல்ல வாறீரு?” என்று அவர் பொறுமையிழந்து இடைமறித்தார்.

“நான் சொல்லிடுதேன்… தென்னையும் வாளையும் பணப்பயிரு. அது இருக்கும். மாமரமும் பலாமரமும் இருக்கும். ஆனா பனைய இப்ப யாருக்கும் வேண்டாம். பனைவிடலிகளைக்கூட முறிச்சு செங்கல்சூளைக்கு விறகாட்டு அனுப்பியாச்சு. இப்ப நம்ம நாட்டிலே பனை இல்லை…”

“அதுக்கு நான் என்னலே செய்யணும்? என்ன பேசுதீக?” என்று அவர் கையில் இருந்த நாளிதழை டீபாயில் எறிந்தார்.

“நம்ம கல்ச்சர் முழுக்க பனையை நம்பியாக்கும். பனையடியிலே நம்ம மாடனும் எசக்கியும் இருக்காங்க. கரும்பனையிலே பத்ரகாளி உண்டுன்னாக்கும் நம்பிக்கை. பனை இல்லேன்னா நாம பஞ்சத்திலே செத்திருப்போம். பனையும் எருமையும் பாவப்பட்ட மனுசன்மாரை காப்பாத்துகதுக்கு பாதாள நாகங்கள் மேலே வந்து உருவம் கொண்டதாக்கும்னு சாஸ்திரம் உண்டு.”

“வெளியே போலே” என்று அவர் எழுந்து கையை நீட்டினார்.

ராஜேந்திரன் அவசரமாக “நான் சொல்லிடுதேன்… இங்க நம்ம மண்ணிலே உள்ள பனை வேற எங்கையும் இல்ல. இது வேற எனமாக்கும். பாண்டிப்பனை மாதிரி இல்லை. இந்தப்பனையை எல்லாம் அழிச்சா பிறகு நினைச்சாலும் நம்மளால உருவாக்கிக்கிட முடியாது” என்றார்.

“டேய் வெளியே போ!” என்று அவர் கூவினார் “ஏலே மாணிக்கம்…ஏய்!”

“பனையிலே இங்க பன்னிரண்டு வெரைட்டி உண்டு. அதிலே குடைப்பனையும் தாலிப்பனையும் ரொம்ப அபூர்வம்… வேற எங்கேயுமே வளராது. குடைப்பனையிலே அந்தக்காலத்திலே குடை செய்ஞ்சாங்க. தாலிப்பனையிலேதான் ஓலைகள் செஞ்சாங்க. தாலியைக்கூட அதிலேதான் செஞ்சிருக்காங்க”

அவர் முகம் சிவந்து மூச்சிரைக்க “உனக்கு என்னவேணும்?” என்றார்.

“டொனேசன்… நாங்க பனையோட எல்லா வெரைட்டிகளையும் நட்டு பாதுகாக்குதோம். அதுக்கு கொஞ்சம் மண்ணிருக்கு. இன்னும் மண்ணு வாங்கணும்… உங்களை மாதிரி ஆளுக குடுக்கணும்.”

“குடுக்கல்லேன்னா?”

“தெரியாம குடுக்காம இருக்கக்கூடாது. இப்ப தெரிஞ்சாச்சுல்லா? இனி குடுக்காம இருந்தா அது உங்க பொறுப்பு. உங்க தெய்வங்களும் பனையடியிலே இருக்குத தெய்வங்களாக்கும்… கிறிஸ்தவங்களுக்கு கூட குருத்தோலைத்திருநாள் இருக்கு.”

அவர் “தெய்வங்களா? த்தூ!” என்று துப்பினார் “எனக்கு எந்த சாமியையும் பயமில்லை, தெரியுதா? எனக்கோ எனக்க அப்பன் பாட்டனுக்கோ எந்த சாமியும் எள்ளுமுனை அளவுக்குக் கூட குடுக்கல்ல… நாங்க இந்த மண்ணிலே சாணிப்புளு மாதிரி வாழ்ந்தவங்க. தெரியுதாலே, சாணிப்புளு… ”

அவருக்கு மூச்சிரைத்தது “எனக்க தாத்தனுக்க அப்பன் கண்டன் புலையன் எட்டுநாள் பட்டினி கிடந்தாக்கும் செத்தாரு. அப்ப ஒரு சாமியும் ஒரு கை கஞ்சிவெள்ளம் அள்ளி குடுக்கல்லை. எனக்க தாத்தன் சந்தையிலே மூட்டை தூக்கினாரு. எனக்க அப்பன் அதே சந்தையிலே தரகு பாத்தாரு. நான் அதிலேருந்து மொத்த ஏவாரியா மேலே எந்திரிச்சு வந்தேன். இனியிப்ப ஏதாவது சாமி வந்து என்ன வரம் வேணும்னு கேட்டாக்கூட போடா மயிராண்டின்னாக்கும் சொல்லுவேன்… போ போ… எடம் காலியாக்கு.”

ராஜேந்திரன் என்னிடம் போவோம் என்று கண்காட்டினான். அவன் திரும்பும்போது உள்ளிருந்து “நில்லுங்கலே”என்று குரல் கேட்டது.

உடல் நன்றாக வளைந்து தாடைத்தசை தொங்கிய முதியவர் கைகளால் நாற்காலிகளை பிடித்தபடி நடந்து வந்தார். “நில்லுங்கலே… ஆரு இப்ப பனையை பத்தி பேசினது?”

“நானாக்கும்” என்று ராஜேந்திரன் சொன்னான். “நான் என்ன சொல்லுதேன்னா…”

“நீ சொன்னதை கேட்டேன். நீ நல்ல நாக்குச்சூடு உள்ள பயலாக்கும்” என்று சிரித்தார். “நான் இவனுக்க அப்பன். எனக்கபேரு அனக்கன். அனக்கன் தரகன்னு சொன்னா அந்தக்காலத்திலே உள்ளவங்களுக்கு தெரியும்.. உக்காருங்க.”

“அப்பன் எதுக்கு இங்க வந்தீரு… இது வேறவிசயம்.”

“நீயும் உக்காருலே… நீயும் கேக்கணும்” என்றார் அனக்கன் “ஏட்டீ…”

உள்ளிருந்து ஒரு பெண் “என்ன பாட்டா?” என்றாள். பைஜாமா போட்டு வெண்ணிற குர்தா அணிந்திருந்தாள். பளபளக்கும் தலைமயிரும் செதுக்கப்பட்ட புருவங்களும் நகப்பாலீஷும் கொண்ட நகரத்துப்பெண்.

“எனக்க பேத்தியாக்கும். பேரு வர்ஷா… வர்ஷான்னா மழை. இவளுக்க தங்கச்சி ஒருத்தி உண்டு. அவபேரு விருஷ்டி. அதும் மழைக்க பேராக்கும்” என்றார்.

“என்ன படிக்கிறீங்க?” என்று நான் கேட்டேன்.

“எம்.பி.பி.எஸ்” என்றாள். “மெட்ராஸ் ஸ்டேன்லியிலே”

“இப்ப லீவா?”

“ஆமா ஒரு எட்டுநாள் லீவு” என்றாள்.

“பயக்களுக்கு ஓரோ சாயை கொண்டுவரச் சொல்லு. எனக்கும் வேணும் ஒரு சாயை” என்றபின் “நான் சீனி போடுகதில்லை” என்றார்.

நாகப்பன் கசப்பு தெரியும் முகத்துடன் அமர்ந்தார். நாங்களும் கூடைநாற்காலிகளில் அமர்ந்தோம்

“நீ சொல்லுகது உண்மைதான் மக்கா. இங்க ஒரு காலத்திலே எங்க பாத்தாலும் பனையாக்கும். பனையை நம்பித்தான் வாழ்க்கை. பாதிப்பேரு பனையேறிகள். அவனுக்க பெஞ்சாதிகள் அக்கானி காய்ச்சுவாங்க. இங்க ஊரிலே இருந்து சந்தைக்கு போற சாமான்களிலே கருப்பட்டிதான் கூடுதல் விலையுள்ளது… உப்பு முதல் துணிவரை எல்லாமே கருப்பட்டிக்கு பதிலா வாறதாக்கும்” என்று கிழவர் தொடர்ந்தார்.

“பனம்பழம் அப்பல்லாம் ஒரு பெரிய தீனி. எனக்க அம்மை பனம்பழத்தைச் சுட்டுதருவா. அதை தின்னுட்டு பள்ளிக்கூடம் போவேன். மணமா இனிப்பா இருக்கும். அப்டி ஒரு ருசியான பண்டம்… இப்ப கண்ணாலே பாக்குறதுக்கில்லை. வெயிலு காலமானா நுங்கு. பிறவு பனங்கொட்டை முளைச்ச டவுணு. பனங்கிளங்கு… பனையை தின்னும் குடிச்சும் வாழ்ந்தோம்.”

அவருக்கு குரல் நடுக்கம் இருந்தது. ஆனால் உத்வேகத்துடன் பேசிக்கொண்டே போனார்.

“பனைன்னா அம்மையில்லா? எல்லாமே அவ தருவா. அந்தக்காலத்திலே துணி ஏது? மண்ணுலே சேத்திலே வேலை செய்யுத சனங்களுக்கு பனையை முடைஞ்சுதான் உடுதுணி”

“பாய் மாதிரியா?” என்றேன்

“இல்ல சின்னதா ஓலையை கீறி துணிமாதிரி நெய்வாங்க.. பாயிதான். ஆனா மெல்லிசா இருக்கும். கரும்பனைக்க ஓலையில்லை. இது குடைப்பனை ஓலை… தாளுமாதிரி மெல்லிசா இருக்கும்” என்றார் “ஆம்புளைக்கு ஜட்டிமாதிரி பொம்புளைகளுக்கு முட்டிவரை வரும். முலைக்குமேலே போடுகதுக்கும் ஜாக்கெட்டு மாதிரி உண்டு” என்றார். “எனக்க சின்னவயசிலேயே அப்டி பனைத்துணி போட்ட ஆளுகளை பாத்திருக்கேன்…”

“பெட்டி கடவம் எல்லாமே பனைதான். வீட்டிலே பனையிலே செய்ஞ்ச சாமானாக்கும் கூடுதலும்” என்று அவர் தொடர்ந்தார். “குடைப்பனை கொஞ்சம் அபூர்வம். நல்ல காட்டுக்குள்ள தனியா நின்னுட்டிருக்கும். ஓலையும் ஆண்டோடாண்டு வராது. கரும்பனைதான் ஊரெங்கும் நாணலு மாதிரி நிறைஞ்சு கிடக்கும்…”

டீ வந்தது. நாங்கள் டீ குடித்தோம். ராஜேந்திரன் நாகப்பன் முதலாளியை பார்த்து புன்னகைத்தார். அவர் கசப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

வர்ஷா உள்ளே போக திரும்ப “ஏட்டி இரு. நீ கேக்கணும்” என்றார். அவள் அமர்ந்துகொண்டாள்.

கோப்பையை வைத்தபடி அனக்கன் “நீங்க கொரம்பைன்னு ஒரு சாமான் இருக்கு, அதைப்பத்தி கேட்டிட்டுண்டா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

“அந்தக்காலத்திலே எல்லா வீட்டிலேயும் இருக்கும். காமணம்னும் சொல்லுகதுண்டு” என்றார். “இப்ப பனையோலையிலே தலைக்குடை செய்யுதாகள்லா?”

“ஆமா, தொப்பி மாதிரி வச்சுகிடுதது”

“அதேதான். அதைப்போல இது இன்னொண்ணு. இப்ப அதே ரூபத்திலே பிளாஸ்டிக் சாக்கை உள்ள மடிச்சு தலையிலே போட்டுக்கிடுதாங்க. அது அப்டித்தான் இருக்கும். தலையிலே மாட்டிக்கிட்டா தோளும் முதுகும் உள்ள மறைக்கிற மாதிரி இருக்கும். குனிஞ்சுகிட்ட கூரை மாதிரி நம்ம உடம்புமேலே நிக்கும். ஆமையோடு மாதிரின்னு வைங்க.”

“அப்பல்லாம் இங்க எப்பமும் மழை. மலையாளத்திலே மழைக்கு எவ்ளவு சொலவடைகள் தெரியுமா? துள்ளிக்கொருகுடம் மழை, கோரிச் சொரியுத மழை,வேரும்விழுதுமுள்ள மழை, பகலிருட்டு மழை, கறுத்த மழை ,சரவர்ஷம்… தமிழிலே ஒரே சொலவடைதான். அடைமழை. அடைச்சுக்கிட்டு கொஞ்சநேரம் பெய்யுத மழைதான் அவனுக கண்டது…”

சிரித்துக்கொண்டு அனக்கன் தொடர்ந்தார் “இந்த ஊரு மழைக்கு கொரம்பை இருந்தாத்தான் வாழ்க்கையே. தலையிலே போட்டுக்கிட்டு குனிஞ்சு நடந்தா கூடாரத்துக்குள்ளே நடக்குத மாதிரியாக்கும். ஒரு துளி உடம்பிலே படாது வயலிலேயும் விளையிலேயும் வேலை செய்யலாம். நாத்துநடுகது களை பறிக்குதது எல்லாமே கொரம்பைக்கு அடியிலே நின்னுதான். அந்தக்காலத்திலே இங்கே வயலுகளை பாத்தா கொரம்பைகள் நின்னுட்டிருக்கிறது தெரியும். பாக்க எருமைமுதுகு மாதிரி இருக்கும்.

ஆனா நல்ல கொரம்பை ஒரு பெரிய சொத்து. குடைப்பனை கொரம்பைன்னா அது சாதாரண விஷயம் இல்லை. நாலஞ்சு தலைமுறையாக்கூட வச்சிருப்பாங்க. யாருக்கதுன்னு அதிலே அடையாளமெல்லாம் போட்டிருக்கும். அதுக்க இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தா அடியிலே புதிய ஓலையை கோத்து செரியாக்கிடுவாங்க.

அப்டி சரிபண்ணிட்டே இருக்கணும். மேலே உள்ள ஓலை காலப்போக்கிலே கருகி மட்கிபோகும். அப்ப அடியிலே உள்ள ஓலை மேலே வரும். வெயிலுள்ள காலத்திலே தேன்மெழுகு எடுத்து அரக்கும்சேத்து உருக்கி மேலே பூசிவைச்சா பல ஆண்டுகள் அப்டியே இருக்கும்.

குடைப்பனை கொரம்பைதான் நல்லது, அதுக்கு வெயிட்டு குறைவு. கரும்பனையோலையிலயும் கொரம்பை செய்வாங்க. ஆனா நல்ல கனமா இருக்கும். மழையிலே ஊறியாச்சுன்னா தூக்கி நடக்க முடியாதபடி கனமா இருக்கும். எனக்க பாட்டிக்க கையிலே ஒரு கொரம்பை இருந்தது. அது கரும்பனைக் கொரம்பை.

பாட்டி ரொம்பச் சின்ன உருவம். அவ அந்தக் கொரம்பையை தூக்கி போட்டுக்கிட்டா உள்ளேயே ஒண்டிக்கிடுவா. அது ஒரு நாலஞ்சு கிலோ இருக்கும். ஆமையோடேதான். தேன்மெழுகும் அரக்கும் எடுத்து பூசிக்கிட்டே இருப்பா.

எனக்க தாத்தா கொச்சன் புலையன் ஒரு வேளாளனுக்க வயலுக்கு கரையிலே குடிலுபோட்டு தங்கியிருந்தாரு. அப்பல்லாம் புலையங்க அஸ்திவாரமுள்ள குடிலு கட்டக்கூடாது. மண்ணுதரைதான் இருக்கணும். அம்பது ஓலைக்குமேல் வைச்சு கெட்டப்பிடாது. செற்றைப்புரைன்னு பேரு. செற்றைன்னா மலையாளத்திலே சீப்பட்டவன்னு அர்த்தம்… கெட்டவார்த்தையில்லா.

அந்தச் செற்றக்குடிலையும் ஒவ்வொரு சீசனுக்கும் இடம் மாறி புதிய குடிலு கெட்டிக்கிடணும். மண்ணிலே அவங்க உரிமைகேக்கப்பிடாதுன்னு இந்த ஏற்பாடு. அங்க மரமோ செடியோ வச்சு வளத்திரப்பிடாது… ஆண்டோடாண்டு ஆண்டானுக்க காரியஸ்தனுங்க வந்து அடிச்சு கிளப்பிட்டே இருப்பானுக. அதொரு பெரிய நாடகமாக்கும் அப்ப. புதிய மண்ணுக்காக புலையனுங்க அடிபிடி கூடுவானுக. கொஞ்சம் வலுக்குறைஞ்சவன்ன்னா ஈரம் மாறாத சேத்துலே குடிலு கெட்டிக்கிடணும். அடிதடியிலே ஒருத்தன் இன்னொருத்தனை அடிச்சு கொல்லுகதும் உண்டு.

அதிலயும் ஒரு கணக்குண்டு. ஆம்பிளைக்கு மட்டும்தான் குடிலுகெட்ட அனுமதி. பொம்புளைக்கு இல்லை. அப்டி கிடைக்கணுமான காரியஸ்தனுக்கு படுத்துக் குடுக்கணும். அதொரு காலம். மானம் மரியாதை சூடு சுரணை ஒண்ணுமில்லை. வயிறு ஒண்ணுதான்… சொந்த வயிறில்லை பெத்த பிள்ளைகளுக்க வயிறு. எனக்க பாட்டி பாக்க நல்லா இருக்கமாட்டா. பட்டினிக்கோலம். சுள்ளிசுள்ளியா காலும் கையும். ஒட்டிப்போன முகமும். அதனாலே அவளை யாருக்கும் வேண்டாம்.

குடிலுகளிலே காலரா அன்னைக்குள்ள மாறாநோயாக்கும். நீர்க்கம்பம், நீக்கம்புன்னு இப்ப சொல்லுதோம்.சேத்துக்குளியிலே ஒருத்தனுக்க பீமூத்திரத்திலே இன்னொருத்தன் வாழ்ந்தா எங்க காலரா மாறும்? மழைசீசனிலே பிள்ளைகளிலே பாதி செத்திடும். எனக்க தாத்தா சீக்கு வந்து எந்திரிக்க முடியாம கிடந்தார். ஒருவாய் சோறில்லை. பட்டினியிலேயே செத்தார். ரெண்டு பிள்ளைகளும் போச்சு. எனக்க எனக்க அப்பா ஒத்தமகன்  மட்டும்தான் மிச்சம்.

“எனக்க பாட்டிக்க குடிலை ஒருத்தன் பிடுங்கிக்கிட்டான். அவளுக்கு மிஞ்சினது ஒரு கொரம்பை மட்டும். பிறகு பன்னிரண்டு வருசம் அவ வாழ்ந்தது அந்த கொரம்பைக்கு உள்ளயாக்கும்” என்றார் அனக்கன்.

“அதுக்குள்ளையா?”

“ஏன் ஆமை வாழல்லியா? நத்தை வாழல்லியா?” என்று அவர் புன்னகைத்தார். கண்களில் ஓர் உணர்ச்சியின்மை.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“பன்னிரண்டு வருசம் அவ அந்த கொரம்பைக்கு உள்ளே இருந்து வெளியே வந்ததே இல்லை” என்று அனக்கன் சொன்னார். “எனக்க அப்பா அதை சொல்லியிருக்கார். அவளுக்கு ஆமைக்காரின்னுதான் பேரே. ஆமை மாதிரி வீட்டை முதுகிலே வச்சுக்கிட்டிருந்தா. களட்டி வச்சுகிட்டு எங்கயாம் போனா யாராவது எடுத்திருவாங்கன்னு பயம். அவளுக்கு மிஞ்சினது அதுமட்டும்தான். அதுவும் போச்சுதுன்னா பிள்ளையோட போயி சாகவேண்டியதுதான்.

பகல் முழுக்க வயலிலே வேலை செய்வா. அவ மகனுக்கு ஒருவயசு. அவனை தோளிலே கட்டி வைச்சு அதுக்குமேலே கொரம்பையை போட்டுக்கிடுவா. அவன் கொஞ்சம் வளந்ததும் அவனையும் கொரம்பைக்குள்ள நிக்கவச்சுட்டே வயலிலே நாத்துநடுவா, களை பறிப்பா, கிளங்கு பிடுங்குவா. எல்லா வேலையையும் செய்வா.

கொரம்பையே குடிலு மாதிரி. அதை ஒரு குச்சியிலே வச்சு நிக்கவச்சுட்டு உள்ள உக்காந்து கல்லுகூட்டி சட்டியிலே கஞ்சி காய்ச்சுவா. கிளங்கு அவிப்பா. பனம்பளம் சுடுவா. தின்னுட்டு கொரம்பையை மேலே வச்சு கூரை மாதிரி மூடிக்கிட்டு ரெண்டாளும் தூங்கிடுவாங்க. மாத்துத்துணியும் மத்த அவசிய சாமானங்களும் எல்லாமே கொரம்பைக்கு அடியிலே சேத்து கட்டிவச்சிருந்தா. சட்டியை மட்டும் மரத்துக்கு அடியிலே வச்சிருப்பா.

அந்த கொரம்பை அவ உடலாட்டே ஆகியிருந்தது. அதை எடுத்தா பின்ன அவளாலே நடக்கமுடியாதுன்னு தோணும்.அவ உடம்பிலே உள்ள தோலே இல்லாம வெறும் சதையாட்டு இருக்கும்னு பலபேருக்கு நினைப்பு. அவளுக்கு மண்ணுன்னு ஒண்ணுமில்லை. அன்னன்னைக்கு கண்ட உலந்த எடத்திலே கொரம்பையோட போயி படிஞ்சிருவா. எந்த இடத்திலயும் ஒருநாளுக்குமேல் இருக்க விடமாட்டானுக. அடிச்சு தொரத்திருவானுக.

அவளும் ஆமைமாதிரி கூச்சம் நிறைஞ்சவ. ஆருகிட்டயும் பேசமாட்டா. வேலைக்கு போனா கேட்ட கேள்விக்கு மட்டும் மண்ணைப்பாத்து பேசுவா. ஆனால் எறும்புமாதிரி வேலை செஞ்சுகிட்டே இருப்பா. அதனாலே வேலை கிடைக்கும். ஆடிமாசம் வேலை இல்லாதப்ப பெரியவீடுகளுக்க முன்னாலே போயி நின்னு கைநீட்டி எதாவது இரந்து வாங்கி பிள்ளைக்கு குடுப்பா.

கொரம்பையோட உக்காந்திருக்கிறப்ப சின்ன சத்தம் கேட்டாக்கூட அப்டியே உள்ள உடம்ப இளுத்திருவா. ஒரு சத்தம் அசைவு இருக்காது. மணிக்கணக்கா அங்க கிடப்பா. ஒரு வெறும் கொரம்பை அங்க கிடக்குதுன்னு தோணிடும். ஒருக்க கோயில் யானை மதமிளகி கெளம்பிட்டுது. நாலஞ்சாளை அடிச்சு தள்ளிட்டு பிளிறிட்டு போகுது. அவ பிள்ளையோட உள்ள போயி சுருண்டுகிட்டா. ஆனை அந்த கொரம்பை பக்கத்திலே ஒருமணிநேரம் நின்னுது. உள்ள ஆளிருக்கிறதே அதுக்கு தெரியல்ல.

அவ மனிசங்க நடக்குத காலடியோசையிலே இருந்து நடுக்கத்தை வச்சு ஆளு ஆருண்ணு தெரிஞ்சுகிடுவா. அந்த ஊரிலே உள்ள எல்லாருக்க காலடிச்சத்தமும் அவளுக்கு தெரியும். ஊரிலே பலபேரு அவளை போட்டு கேலிசெய்ததுண்டு. அப்டியே கொரம்பையோட தூக்கி மறிச்சு போடுவாங்க. கொரம்பைக்குள்ளேயே ஒட்டிக்கிட்டு இருப்பா. தூக்கி தண்ணியிலே போடுவாங்க. அப்டியே கொரம்பையோட நீந்தி மறுகரைக்கு போயி வெளியே வந்திருவா

“ஒருநாள் ஆமைன்னு நினைச்சு யாராவது சமைச்சு திங்கப்போறானுக” அப்டீன்னு ஒரு சிரிப்பு அப்பல்லாம் இருந்திருக்கு. அவ தங்குற எடங்களிலே கொஞ்சம் தள்ளிப்போயி குழி தோண்டி உள்ளேயே வெளிக்கெறங்கி அப்டியே மூடிட்டு போயிடுவா. அப்டியே கொரம்பையோட தண்ணியிலே எறங்கி அதுக்க அடியிலே இருந்து குளிச்சிருவா. அவ வெளியே வரவே இல்லை. அவ உடம்பு எப்டி இருக்குன்னு ஒரு தலைமுறைக்கே தெரியாது

எனக்க அப்பா கொரம்பைக்குள்ளேயே பத்துவருசம் அவருக்க அம்மைகூட வாழ்ந்திருக்காரு. அப்பா சொல்லுகதுண்டு, கொரம்பைக்கு மேலே மழைவிழுற சத்தம்தான் அவரு சின்னவயசுன்னு நினைக்கிறப்ப வாற ஞாபகம்னு. கொரம்பை மழையிலே அடிவாங்கி அடிவாங்கி அதிர்ந்திட்டிருக்கும்.

ஆனா அவருக்கு அது ரொம்ப இனிப்பான ஞாபகம். அவளுக்க உடம்புசூட்டை இப்பமும் அறிய முடியுதுடே. குளிரும் பட்டினியும் இருந்தது. ஆனா பெத்த அம்மைக்க உடம்புலே ஒட்டிக்கிட்டு அவளுக்க மணத்திலேயே பத்துவருசம் வாழுற பாக்கியம் எவனுக்கு கிடைக்கும்னு சொல்லுறப்ப அழுதிருவாரு. கடைசிவரை நல்ல மழைன்னா உடனே அம்மை நினைப்பு வந்திரும் அவருக்கு.

எனக்க பாட்டி மகனை பொத்திப்பொத்தி வளத்தா. அவருக்கு தோளு வைச்சப்ப ஊரைவிட்டு சந்தையிலே மூட்டைதூக்க போனாரு. அவ அப்பவும் அந்த கொரம்பைக்குள்ளதான் கிடந்தா. அவரு அப்பப்ப வந்து பைசா குடுத்திட்டு போவாரு. ஒருநாள் கொரம்பை தெக்கே மேட்டிலே நாலுநாளா கிடந்திருக்கு. நாறுதுன்னு சொல்லி கொரம்பையை தூக்கி பாத்தப்ப உள்ள செத்து சுருண்டு இருந்திருக்கா.

எனக்க அப்பா வந்தப்ப அந்த கொரம்பையை அப்டியே சட்டிமாதிரி நிமித்து அதுலே அவளை போட்டு வச்சிருந்தாங்க. ஆமையை கவுத்தமாதிரித்தான் இருந்தாளாம். அப்டியே கொண்டுபோயி காட்டிலே வெறகு போட்டு கொரம்பையோட சுட்டிருக்காங்க. கொரம்பையோட சொர்க்கத்துக்கு போனான்னு ஒரு சிரிப்பு கதை உண்டு. கடவுள் வெளியே வாடீன்னு கூப்பிட்டப்ப தலையை மட்டும் நீட்டி ‘என்ன சொல்றீக’ன்னு கேட்டாளாம். “உனக்கு சொர்க்கம்னு” சொன்னப்ப கொரம்பையோட நடந்து உள்ள போனாளாம்.

கொரம்பை ஒரு கோட்டை அவளுக்கு. அதுக்குள்ள கையையும் காலையும் உள்ள இளுத்துக்கிட்டு சுருண்டுகிட்டா அப்டி ஒரு நிம்மதியா சந்தோசமா இருப்பாளாம். எனக்க அப்பா கிட்ட சின்னக்குரலிலே பேசிட்டே இருப்பா. இந்த கங்காருல்லாம் அதுக்க வயித்திலே பைய வைச்சு அதுக்குள்ள பிள்ளைய போட்டு உள்ளேயே பாலுகுடுக்கும்ல, அதுமாதிரி. அவ முகம் அப்டி ஒரு சாந்தமா இருக்குமாம்.செத்த முகமும் அப்டித்தான் சாந்தமா இருந்திருக்கு.

எனக்க அப்பா சந்தைப்பக்கம் கடைத்திண்ணைகளிலேதான் அந்தியுறங்கினாரு. மறுபடி ஏழு வருசம் கழிஞ்சுதான் அவருக்கு தலைசாய்க்க ஒரு கூரை அமைஞ்சுது. பெண்ணுகெட்டினாரு. நான் பிறந்தேன்” என்றார் அனக்கன் “எனக்க அப்பா ஏதோ ஒரு நேரத்திலே கிராமத்திலே இருக்கவேண்டாம், சந்தையாக்கும் நம்ம எடம்னு முடிவுசெய்து கிளம்பி வந்தாரு. அதனாலே நாங்க தப்பினோம்.

நாகப்பன் பொறுமையின்மையுடன் அசைந்தார்.

அனக்கன் அவரை நோக்கி “நீ கொரம்பைய பாத்திருக்கியாலே?” என்றார்.

“இல்ல… ஆனால் அப்பனுக்க பாட்டிக்கபேரு ஆமைக்காரின்னு தெரியும்” என்றார்.

“உனக்கு சொல்லியிருக்கேன். மறந்திருப்பே. உனக்கு ஆயிரம் ஜோலி” திரும்பி வர்ஷாவிடம் “உங்கிட்ட சொன்னதில்லை” என்றார்.

அந்தப்பெண் கண்ணீருடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

அனக்கன் “எனக்க அப்பனுக்கும் கொரம்பக்காரன்னு பேரு உண்டு. அவருக்கு சந்தையிலே மஸ்டர்கார்டு போடுறப்ப இனிஷியலு கேட்டிருக்காங்க. அவருக்கென்ன தெரியும். அப்பன் பேரு தெரியாது.அம்மைபேரு ஆமைன்னு சொல்லியிருக்காரு. ஆபீசரு சிரிச்சுட்டாரு. அவருக்க கூட்டுகாரனுக ஆரோ கொரம்பையில்னு போடுங்கன்னு சொன்னப்ப அவரும் செரீன்னுட்டாரு. அப்டியே எனக்க குடும்பப்பேரும் கொரம்பையில்னு ஆகிப்போச்சு. கே.அனக்கன். கொரம்பையில் அனக்கன்”

அனக்கன் சிரித்து “வடக்கே கொரம்பயில் அகமது ஹாஜின்னு ஒரு பெரிய ஆளு உண்டு. நம்ம பேரை கேக்குறப்ப அதைமாதிரி பெரிய குடும்பம்னு நினைச்சுகிடுவாங்க. நாயரான்னு கேட்டவனுக உண்டு. நான் சிரிச்சுக்கிடுவேன். ஒருதடவை ஒரு வடக்கன் ஏவாரி தறவாடு எங்க இருக்குன்னு கேட்டான். கொரம்பையில் தறவாடு திருவரம்பிலே இருக்குன்னு சொன்னேன். வீடு உண்டான்னு கேட்டான். இல்லை. ஆனா பெரிய வீடுன்னு சொன்னேன்.

அனக்கன் சிரித்து வாயை துடைத்துக்கொண்டு “செரி, பனையைப் பத்தி பேசினீங்க. எனக்க பய சொன்னது உண்மையாக்கும். எங்களுக்கு ஒருவாய் கஞ்சிவெள்ளம் கொண்டுவந்து தாறதுக்கு எந்த தெய்வமும் இல்லை. ஆனா பனை அப்டி இல்லை. எனக்கு அது தீனிபோட்டிருக்கு. எனக்க அப்பனுக்கும் தாத்தனுக்கும் தீனிபோட்டிருக்கு. ஆமைக்காரிக்கு வீட்டை குடுத்திருக்கு. அதுக்கு நாம பதிலு செய்யணும்… ஏம்லே?”

“ஆமா” என்றார் நாகப்பன்.  “என்ன செய்யணும் சொல்லுங்க.”

“நீங்க பாத்து செய்யுங்க” என்றேன்.

அவர் திரும்பி கண்காட்ட அந்தப்பெண் சென்று செக்புக்கை எடுத்து வந்தாள். அவளுடைய கண்கள் சிவந்து முகம் வீங்கியது போலிருந்தது.

நாகப்பன் அதில் தொகையை எழுதி கையெழுத்திட்டு “உங்க சொசைட்டி பேரை எழுதிக்கிடுங்க” என்றார்.

நான் தொகையைப் பார்த்தேன். இரண்டு லட்சம் எழுதியிருந்தார். ராஜேந்திரனே திகைத்துவிட்டான். எங்கள் மொத்த உத்தேச இலக்கே இரண்டு லட்சம்தான்.

“வாறோம்” என்று கைகூப்பி எழுந்துகொண்டோம். அனக்கன் அமர்ந்தபடியே கைகூப்பினார். நாகப்பன் எழுந்து எங்களை தொடர்ந்து வந்து கைகூப்பி விடைகொடுத்தார்.

கேட்டுக்கு வெளியே வந்ததும் ராஜேந்திரன் “இப்ப என்னலே சொல்லுதே? ஏலே,ரெண்டு லெச்சம் ரொக்கம்!” என்றான் “நான்லாம் வச்சா வச்சகுறி தப்பாது தெரிஞ்சுக்க.”

நான் “டேய் வீட்டுப்பேரைப் பாருடா” என்றேன்.

“கொரம்பையில் வில்லா” என்று படித்த குஞ்ஞச்சன் “அப்ப இதாக்குமா சங்கதி?” என்றான்.

“ஒரு கொரம்பை இப்டி ஒரு மாளிகையாட்டு வளரமுடியும்டே” என்றேன்.

“ஆமைக்க சக்தி அதாக்கும் மக்கா, அதுக்கு வேகமில்லை , ஆனா விட்டுக்குடுக்காத பிடிவாதம் உண்டு” என்றான் ராஜேந்திரன்.

***

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16988 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>