Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16976 articles
Browse latest View live

வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு

$
0
0

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

அன்புள்ள ஜெ

நாம் இந்த ஆண்டின் குமரகுருபரன் விருதை நண்பரும் ,  கவிஞருமான, வேணு வெட்ராயனுக்கு,  அறிவித்த உடனேயே, அவரை  தொடர்பு  கொண்டு வாழ்த்து, தெரிவித்தோம்.  சென்னையில் கொரோனா தொற்று நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இந்த வருட விழாவை நடத்துவதில் சிக்கல் இருந்தது, ஆகவே, விமரிசையான விழாவை பின்னர் வைத்துக்கொள்ளலாம் என நீங்கள் சொன்னபடி  நண்பர்கள் முடிவெடுத்தோம்.  எனினும் குமரகுருபரனின் பிறந்த நாளான ஜூன் 10ந்தேதி, விருதையும், விருது தொகையையும் வேணு வேட் ராயனுக்கு நேரில் சென்று வழங்குவதே, கெளரவமாகவும் முறையாகவும் இருக்கும் என நண்பர்கள் கருதியதால், சென்னையில் இருக்கும் நண்பர்கள்,  கூடி,  வேணுவின் இல்லத்திற்கு செல்வதாக, பேசி, அவரிடமும்  அனுமதி பெற்றோம்.

சென்னையை அடுத்த மணிமங்கலம்  எனும் வயல்  சூழ்ந்த, புறநகர் பகுதியின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அதன் முகப்பில் உள்ள பூhiங்கா  போன்ற பகுதியில் விருதை வழங்கலாம் என ஏற்பாடு  செய்திருந்தோம், வேணு தன் குடும்ப உறுப்பினர்களான தாயார், அக்கா, மற்றும் அக்கா குழந்தைகள், வந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து,  பழங்கள் , பிஸ்கட்டுகள் என இனிய சிற்றுண்டியுடன்  நிகழ்வு தொடங்கியது.  சென்னை நண்பர்கள் ஜாஜா,{  ராஜகோபாலன் } ஷண்முகம் ஆகியோர் முன்னதாகவே அங்கு சென்றுவிட்டனர், சுரேஷ்பாபு, சந்தோஷ், காளிபிரசாத், ஆகியோர் பின்னர் இணைந்துகொள்ள,  நானும், கவிதா சொர்ணவல்லியும், குமரகுருபரனின் நெருங்கிய நண்பர் கார்த்தியும்,  மாலை ஐந்து மணிக்கு சென்று சேர்ந்தோம்.  உடனேயே உற்சாகமான மனநிலை தொற்றிக்கொள்ள, அரட்டையும்,  சிரிப்புமாக,  அந்த சிறிய விழா தொடங்கியது.

நண்பர் கார்த்தி தொழில்முறை புகைப்பட கலைஞர் என்பதால், தொடர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்,   ஒவ்வொருவரிடமும் ”விருதுக்கேடயம்”,  வடிவமைத்துத்தரும் நண்பர் கடை இரண்டு மாதமாக அடைக்கப்பட்டுள்ளதால், எனது ,  கைபேசியில்  வடிவமைத்த ஒரு ”விருது சான்றிதழ்” போன்ற ஒன்றை செய்து,  வழங்கினோம், அதுவும் சிறப்பாகவே இருந்தது.விஷ்ணுபுரம் வட்டம் சார்பாக,  விருது தொகையையும்,  விருதையும்,  கவிதா சொர்ணவல்லியும் , ராஜகோபாலனும், இணைந்து வேணுவிற்கு வழங்க, அனைவரும் கைதட்டி பாராட்டி மகிழ்ந்தோம், விருது வழங்கி பேசிய ராஜகோபாலன், இது விமரிசையாக நடத்தப்பட வேண்டிய முக்கியமான ஒரு விழா, சூழ்நிலை காரணமாக எளிதாக இங்கே நடைபெறுகிறது, பின்னொரு நாளில் மீண்டும் சிறப்பாக, இதை நிகழ்த்துவோம், என்றும்  குடும்ப உறுப்பினர்கள்,  நிச்சயம் வரவேண்டும் என்றும்  கேட்ட்டுகொண்டார், இதில் வேணுவின் அம்மாவும்  , அக்காவும்  மிகவும் மகிழ்ந்து விட்டனர்.  பின்னர், அந்த பூங்காவில் அமர்ந்து,  வேணுவுடன் ஒரு இனிய உரையாடல் தொடங்கியது ,

பெரும்பாலும் அனைவரும் அவருடைய கவிதைகளை வாசித்துவிட்டு சென்றிருந்தோம் என்பதால், உரையாடல் இனிமையாகவும் , செறிவாகவும் அமைந்தது.  எங்கள் அனைவருக்கும் பிடித்தமான அவருடைய, கவிதைகளை சொல்லி, அதை அவருடைய அனுபவம் வாயிலாக விரித்துக்கொண்டோம்.

உதாரணமாக இந்த வனவேந்தன் கவிதை,

 

அந்தரத்தில் ஆடும் சிறு கிளையில்

வனவேந்தன் சிலையென வீற்றிருந்தது ஒரு குரங்கு.

 

நான் முதலில் சொல்லி, இதில் தத்துவார்த்தமான ஒன்று கற்பனையுடன் இணைவதை பற்றி கேட்க, வேணு, கவிதையில் தத்துவம் என்பதும் கூட ஒரு அறிவு செயல்பாடு தான், அறிவுச்செயல்பாடு, நல்ல கவிதையை முற்றாக அழித்துவிடும், ஆனால் ஒரு கவிதையில், தன்னியல்பில், தத்துவம் வெளிப்படும் எனில், அது தவறில்லை என விளக்கினார்.

வேணு சிங்கப்பூர் காவிய முகாமிலும்  ஊட்டி இலக்கிய முகாமிலும் ஏற்கனவே சொல்லியுள்ள அவருடைய கவிதை நிகழும் தளமான, ”அந்தகரண விருத்தி” பற்றி விரிவாக பேசினார்.  அந்த பூங்காவில் உள்ள ஊதா மலர்க்கொத்தை காட்டி விளக்கினார், மனம் விரிவடைந்துகொண்டே சென்று சேரும் போது  உதிப்பதும், மனம் சுருங்கி சூன்ய நிலையில் வெளிப்படும் ஒற்றை சொல்லும் கவிதை தான்.  இதில் மேல் கீழ் என்கிற அடுக்குகள் ஏதும் இல்லை, இதை நான் தேவதேவனில் இருந்து பெற்றுக்கொண்டேன், எனவும் தான் தேவ தேவன் மரபில் வந்தவன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புவதாகவும் சொல்லிச்சென்றார்.,  காளிபிரசாத் அலகில் அலகு தொகுப்பு தேவதேவனை விட தேவதச்சன் கவிதை உலகுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக சொல்லி சில, கவிதைகளை குறிப்பிட்டார்.  அதற்கும் வேணு மிக விரிவாக தன்னுடைய கவிதை உலகு பற்றி விளக்கினார்.

பின்னர், ராஜகோபாலன் சில கவிதைகளையும், மற்ற நண்பர்களும் கவிதை பற்றியும், மேலும் வேணு தொடர்ந்து எழுத வேண்டும், என்றும், அடுத்த தொகுப்பு விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.  இறுதியாக கார்த்தி புகைப்படம் எடுக்க அனைவரையும் அழைத்தார், வேணு மருத்துவர் என்பதால், மிகவும் கறாராக,  முகமூடியை அணிவதிலும் , சமூக இடைவெளியிலும், கவனமாக  இருந்தார்.  சுரேஷுபாபு வேணுவை  ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று விரும்பினார்.  அடுத்த வாரத்தில் அதையும் செய்துவிடலாம் என  சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பினோம்.  சிறிய நிகழ்வாக இருந்தாலும் மிகவும் மனநிறைவோடும், இனிய நினைவுகளுடனும் மேலும் ஒரு நாள் அமைந்தது மகிழ்ச்சி. இந்த இனிய தருணத்தை  வழங்கியதற்கு உங்களுக்கு நன்றி.

வேணு வேட்றாயனுக்கு  பாராட்டுகளும், நன்றியும்.

 

சௌந்தர்ராஜன்

 

தொடர்புடைய பதிவுகள்


செட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன்

$
0
0

ஒரு மாதம் முன்பு கடலூர் சீனு எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். “இதை எழுதியவர் ஒரு ஃபாஸிஸ்ட் என்று முடியாத கட்டுடைப்பு விமர்சனம் ஏதாவது தமிழில் நடந்திருக்கிறதா? தகவல் தேவை

நான் அதை உண்மையிலேயே பரிசீலித்துப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது, அப்படி ஒன்று இல்லை. மேற்கோள்கள், பெயர்சுட்டல்கள், திருகல்மொழிகள், அறிவாளிப்பாவனைகள் அனைத்துக்கும் அடியில் மொட்டையான ஒரு வாசிப்பு மட்டுமே இருக்கும். அதற்கப்பால் ஓர் அடி எடுத்துவைக்க இவர்களால் இயலாது. ஒரு சராசரி வாசகனுக்குக் கூட  ‘இந்தாள் உளறுறான், அடிப்படையே புரியல்லை’ என்று தோன்றிவிடும்

அதாவது வெறும் அடையாள வாசிப்பு. எழுதுபவன் என்கட்சியா, என் ஆளா என்பது முதல் அடையாளம். அதிலிருந்து கிளம்பி எந்த படைப்பிலும் கட்டுரையிலும் சில வரிகள் சில சொற்களை பிடித்துக்கொண்டு மிகமிக வழக்கமான, மிகமிக சலித்துப்போன ஒரு ‘டெம்ப்ளேட்’ வாசிப்பை நிகழ்த்திவிட்டு கொக்கரித்தபடி சென்றுவிடுவார்கள்.

எனக்கும் இவர்கள் எரிச்சல்மூட்டிய காலம் இருந்தது. இன்றெல்லாம் வெறும் புன்னகையுடன் கடந்துசென்றுவிடுவேன். இவர்களை ஒரு பொருட்டாக நினைக்கும் வாசகன், மிக ஆரம்பநிலையிலேயே இவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத ஒருவன், இவர்களைப் போன்றவனே. அவன் அரசியல்கட்சி நிலைபாடுகளுக்கு ஏற்ப கூச்சலிடுவதற்கும் வேகாக்கவிதைகள் எழுதவும்தான் தகுதியானவன். அவன் என்றைக்குமே இலக்கியத்திற்குள் , அறிவியக்கத்திற்குள் வரப்போவதில்லை.

அவன்தான் இங்கே எண்ணிக்கையில் பெரும்பான்மை. ஆகவே அமைப்புக்களை நடத்துபவன். அறிக்கைகளில் கையெழுத்திடுபவன். மாநாடுகளை ஓயாமல் நடத்திக்கொண்டிருப்பவன். அந்தக்கும்பலில் பத்துபேர் சேர்ந்தாலோ குறைந்தாலோ இலக்கியத்திற்கு ஒன்றும் ஆகிவிடாது.

என்ன சிக்கல் என்றால் இவர்கள் நாம் பேசும் பொதுவெளியை பாழாக்கிவிடுவதுதான். இவர்களை திட்டமிட்டு வெளியே நிறுத்தாமல் எதையுமே இங்கே பேசமுடியாது. இவர்களின் முதன்மை ஆயுதம் தங்களை குற்றம்சாட்டுபவரின் இடத்தில் நிறுத்திக்கொள்வது. இவரை ஏற்காதவர்கள் அனைவருமே பிற்போக்கு,மதவாத, சாதியவாதிகள். அதை சொல்லிக்கொண்டே இருக்க இவருக்கு உரிமை உண்டு, ஏனென்றால் இவர் முற்போக்கு

சரி நீ என்ன லட்சணம் என்று திருப்பி குற்றம்சாட்டினால் பதறிவிடுவார்கள். தனிவாழ்க்கையில் அப்பட்டமான சாதியவாதிகள், வட்டிக்குப் பணம் கொடுக்கும் முதலாளிகள், சம்பிரதாயமான மதநம்பிக்கையாளர்கள் [ஹிஹி என் பொண்டாட்டி ரொம்ப ஆசாரம்] இவர்கள். இவர்களின் பொதுவெளிப்பிம்பம் என்பது சமைக்கப்பட்ட பொய். அது சும்மா தொட்டாலே சரிந்துவிழக்கூடியது

பாருங்கள் நக்சலைட்டுகள் போலீசாரால் வேட்டையாடப்பட்டு சிறையிலும் வாழ்விலும் சீரழிந்தபோது அந்த அரசின் செய்தித்தொடர்பாளராக இருந்து அரசியல் செய்த ஒருவர் எப்படி நக்சலைட் இயக்கத்தை தலைமை தாங்க முடியும், அவருடைய நேர்மை என்ன, அவருடைய கூச்சல்களின் மதிப்பு என்ன என்ற எளிய கேள்விக்குமுன் என்னென்ன பதற்றங்கள், பாவலாக்கள்!

லக்ஷ்மி மணிவண்ணனின் சுவாரசியமான குறிப்பு இது. தமிழ்ச்சூழலின் இந்த விசித்திரமான அவலத்தை காட்டுகிறது

செட்டியார் மாத்திரை-  லக்ஷ்மி மணிவண்ணன்

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு,எல்லாவற்றையும் கட்டுடுடைத்துச் சொல்லுகிற வர்க்கம் ஒன்று தமிழில் உருவானது.சாதிச் சான்றைப் பார்த்தாலே தெரிந்து விடப் போகிற விஷயங்களை எல்லாம் கிடந்து கட்டுடைத்துக் கொண்டேயிருப்பார்கள்.முழு நேரமும் இதே பணிதான்.திடீரென அவரைக் கண்டுபிடித்து விட்டோம் என்பார்கள்.திடீரென இவரைக் கண்டுபிடித்து விட்டோம் என்பார்கள்.

கோணங்கியை நாற்பது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி ,அவர் தேவர் என்று ஒருவர் கண்டுபிடித்தார்.அந்த கட்டுரை மிகவும் புகழ் பெற்றது.கோணங்கி தேவர் என்பதுதான் ஊரறிந்த விஷயம் ஆயிற்றே;இதற்கு எதற்காக கட்டுடைக்க வேண்டும் ,கடினப்பட வேண்டும் என்று நான் கேட்டேன்.அது வேறு இது வேறு என்பார்கள்.ஜெயமோகன் நாயர் என்று நிறைய பேர் கட்டுடைத்தார்கள்.அதிலும் ஒரு இழிவு புலப்பட வேண்டும் என்பதற்காக ,அவர் யானை வளர்க்கும் நாயர் என்று கட்டுடைத்தார் ஒருவர்; சுந்தர ராமசாமியை ஐயரில் குறைந்தவர் என்று கட்டுடைத்தது போல. என்னை ஒருவர் இந்து நாடார் என்று கட்டுடைத்தார்.முதலில் அவர் என்னை நாடார் என்றுதான் கட்டுடைத்திருந்தார்.அது அவருக்குப் போதவில்லை.பிறகுதான் இந்து நாடார் என்று கட்டுடைத்தார்.இப்படி ஏராளம் பேர் கட்டுடைக்கபட்டார்கள்.

இதற்கு பிரதிக்குள் அலைதல் என்று பெயர்.படைப்பாளிகள் அனைவருமே பிரதிக்குள் அலைந்தவர்களால் கட்டுடைக்கபட்டு சாதி சொல்லப்பட்டார்கள்.நமக்கு ஏற்கனவே கிராம அதிகாரி ஏற்பாட்டில் தாசில்தார் சாதிச் சான்று தருகிறார்.அது செல்லாது என்று ஆகுமாயின் இந்த பிரதியறிதல்காரர்களின் சான்று ஒருவேளை பயன்படலாமே என்று எல்லோரும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.

சங்கத்தில் இதற்குப் புகழ் கூடிற்று.ஏதேனும் நாவலைப் பற்றி பேசினால் தோழர் ஒருவர்,அதை எழுதியவரின் சான்றை எடுத்து நீட்டுவார்.இது ஒரு வயிற்றுப் போக்கு வியாதி போல பரவத் தொடங்கிற்று.தோழரிடம் பெருமிதம் அதிகரித்தது.தோழர் செட்டியார் சமுகத்தைச் சார்ந்தவர்.அதனால் ஒன்றுமில்லை.மரக்கடை இல்லையென்றால் இருக்கிறது கறிக்கடை.ஒன்றும் பிரச்சனையில்லை.ஆனால் தோழர் அப்படியில்லை.சாம்பார் என்றாலும் செட்டியார் சாம்பாரா என்று பார்க்கக் கூடியவர்.அசல் செட்டியார் என்பதற்கான அனைத்து குணாதிசயங்களும் கைவரப்பெற்றவர்.செட்டியார் மரபு சூழ் வாழ்க்கை அவருடையது.

ஒரு நாள் சங்கத்தில் வைத்து தோழரிடம் “தோழர் அவர் நாயர்,இவர் தேவர் ,நான் நாடார் என்பதைப் போல நீங்கள் இந்து செட்டி அவ்வளவுதானே தோழர் விஷயம் ? இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று கேட்டுவிட்டேன்.

மனிதர் கொந்தளித்தார் பாருங்கள்.சமுகக் கொடுமைகள் எதற்குமே இவ்வளவு கொந்தளித்து நான் அவரைப் பார்த்ததில்லை.என்னைப் பார்த்து என்ன கேட்டு விட்டாய் ? ,என்னிடம் இதுவரையில் யாருமே இப்படிக் கேட்டதில்லை.நான் நினைத்தால் உன்னை புடுங்கி விடுவேன் தெரியுமா ? என்று மூச்சுமுட்டக் கத்தினார். சாதி அவரிடம் ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது என்று யோசித்தபடியே வீடு திரும்பி விட்டேன்.

பின்னர் அவர் என்னைக் காணும் இடங்களில் எல்லாம் பிபி மாத்திரை போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.மருத்துவ சிபாரிசாக இருக்க வேண்டும்.அந்த மாத்திரைக்கு அப்படித்தான் செட்டியார் மாத்திரை என்று எங்கள் ஊர் பகுதியில் பெயர் வந்தது.

 

பா.செயப்பிரகாசமும் மாற்றிதழ்களும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

$
0
0

கௌரி பார்வதி பாய்

பார்வதி பாய் அரசரின் அரண்மனையை அடைந்தபோது வாசலில் மார்த்தாண்ட வர்மா நின்றிருந்தார். மஞ்சலில் இருந்து இறங்கிய அவளை நோக்கி ஓடிவந்து வணங்கினார். “எப்படி இருக்கிறார்?” என்று பார்வதி பாய் கேட்டாள்.

“நான் அவரை பார்க்கவில்லை” என்று மார்த்தாண்ட வர்மா சொன்னார்.

“ஏன்?” என்று பார்வதி பாய் கேட்டாள்.

“இளையம்மைக்கு தெரியும், என்னால் அவரை நெருங்கவே முடிந்ததில்லை. அதிலும் சென்ற ஓராண்டாக அவர் என்னிடம் முகம்கொடுத்தே பேசுவதில்லை” என்று மார்த்தாண்ட வர்மா சொன்னார். “இன்று காலையில் அவர் வழக்கம்போல முதற்காலையில் தூங்கி எழவில்லை. பத்மநாபசாமி கோயிலில் இருந்து ஸ்தானிகர் வந்து காத்து நின்றிருந்தார். அவர் எழவில்லை என்று சேவகன் என்னிடம் வந்து சொன்னான். நான் உடனே கிளம்பிப்போய் பத்மநாப சாமி ஆலயத்தின் வாள்கொள்ளும் சடங்கை முடித்துவிட்டு திரும்பி வந்தேன். அப்போதும் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போதிருந்தே நான் வாசலில் நின்றிருக்கிறேன். அவரை எழுப்ப எனக்கு தைரியமில்லை.”

“சேவகன் யாரையாவது அனுப்பவேண்டியதுதானே?”

“தனிச்சேவகன் அனந்தன் நாயரும் கொட்டாரம் காரியஸ்தன் சுப்பா பிள்ளையும் நாலைந்துமுறை சன்னல் வழியாகப் பார்த்துவிட்டு வந்தார்கள். அவர் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்.”

“இரவு அபின் எடுத்துக்கொண்டாரா?”

மார்த்தாண்ட வர்மா தயங்கி “இப்போது நோய் காரணமாக மருந்துடன் சற்று அபின் எடுத்துக்கொள்வது உண்டு” என்றார்.

“ம்” என்றபடி பார்வதி பாய் உள்ளே சென்றாள். காவல்நாயர்களும் சேவகர்களும் வணங்கி நின்றார்கள். அவள் உள்ளே சென்றபடியே கொட்டாரம் காரியஸ்தன் சுப்பா பிள்ளை தன்னுடன் வரவேண்டும் என்று கைகாட்டினாள். அதை உணர்ந்த மார்த்தாண்ட வர்மா நின்றுவிட்டார்.

“நேற்று என்ன சாப்பிட்டார்?” என்று பார்வதி பாய் கேட்டாள்.

“வழக்கம்போல மிகக்கொஞ்சமாக பால்விட்ட கஞ்சி… அதன்பின் வழக்கமான மருந்துகள்…”

“அபின்?”

“மருந்தில் உள்ள அளவுதான்.”

“எப்போது தூங்கினார்?”

“இரவில் நெடுநேரம் இருமிக்கொண்டே இருந்தார். பிறகு எழுந்து வீணையை கொண்டுவரச் சொன்னார். ஆனால் வாசிக்கவில்லை. வெறுமே விரலால் தந்திகளை நீவிக்கொண்டிருந்தார். நீண்டநேரம். விடியற்காலை குளிர் தொடங்கியபோது நான் பார்த்தேன். வீணைமேலேயே விழுந்து தூங்கிக் கொண்டிருந்தார். நான் தரையில் காலால் தட்டி ஓசை எழுப்பினேன். எழுந்து பீடத்தில் கையூன்றி படுக்கையை அடைந்து படுத்துக்கொண்டார்” என்றார் சுப்பா பிள்ளை.

“நேற்று காலைமுதல் என்ன செய்தார்?”

“பத்மநாபசாமி கோயிலுக்கு போய்விட்டு வந்தார். கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார். அதன்பிறகு வீணையைச் சுண்டிக் கொண்டிருந்தார். மதியம் ஒன்றும் சாப்பிடவில்லை.”

“யாராவது வந்தார்களா?”

“அம்மை மகாராணி அறியாதது அல்ல. அவர் ஓராண்டாக எவரையுமே பார்க்க விரும்பவில்லை. இளையவர் அவரைச் சந்திக்க ஐம்பதுமுறைக்கு மேல் அனுமதி கேட்டிருக்கிறார், ஒப்புக்கொண்டதில்லை. சென்ற ஆறுமாதத்தில் நான்குமுறை தாங்கள் சந்தித்திருக்கிறீர்கள். ஏழுமுறை திவான் சந்தித்திருக்கிறார். ஒரே ஒருமுறை பேஷ்கார். அவ்வளவுதான்…”

“பகலெல்லாம் என்னதான் செய்தார்?”

“அவர் புதிதாக கீர்த்தனைகள் எழுதியிருக்கிறார். அதை திரும்பத் திரும்ப  ஸ்வரப்படுத்திக் கொண்டிருந்தார்.”

“சங்கீதக்காரர்கள் யாராவது வந்தார்களா?”

“யாரையுமே சந்திக்க அவர் விரும்பவில்லை. வடிவேலு, சின்னையா, பொன்னையா, சிவானந்தன் நால்வருமே பலமுறை சந்திக்க விரும்பி சொல்லியனுப்பினார்கள். மறுத்துவிட்டார்.”

“அப்படியென்றால் அவர் சங்கீதம்கூட கேட்பதில்லையா?”

“இல்லை அம்மைமகாராணி, அவரே பாடிக்கொள்வதுடன் சரி” சுப்பா பிள்ளை  சொன்னார்.

ராமவர்மாவின் அறைவாசலில் ஏவலர்கள் நால்வர் நின்றிருந்தனர். அவள் வருகையை கண்டதும் தலைவணங்கினர்.

பார்வதி பாய் கதவின் முன் சென்றுநின்று ஒரு கணம் தயங்கியபின் தட்டினாள். “ராமா, ராமா, இது நான்… இளையம்மை வந்திருக்கிறேன். ராமா, கதவைத் திற… ராமா”

உள்ளிருந்து ஓசை ஏதும் எழவில்லை. பார்வதி பாய் மீண்டும் வலுவாகத் தட்டினாள்.

சன்னல்வழியாக பார்த்துக்கொண்டிருந்த மார்த்தாண்ட வர்மா மெல்ல “கண்விழித்தார்” என்றார்.

பார்வதி பாய் மீண்டும் தட்டினாள். “ராமா, கதவைத் திற… கதவைத்திற…”

மார்த்தாண்ட வர்மா “எழுந்துவிட்டார்” என்று ஆறுதலுடன் சொல்லி சன்னலில் இருந்து விலகினார். உள்ளே காலடியோசை கேட்டது. கதவு திறக்கப்பட்டது.

பார்வதி பாய் உள்ளே நின்றிருந்த ராமவர்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு “என்ன ராமா? உடம்புசரியில்லையா? என்ன ஆயிற்று?” என்றாள்.

“தூங்கிவிட்டேன்” என்று ராமவர்மா சொன்னார். திரும்பி மார்த்தாண்ட வர்மாவையும் கூட்டத்தையும் பார்த்து “என்ன இது? யார் இவர்கள்?” என்றார்.

“நீ கதவைத் திறக்காமல் தூங்கியதனால் என்னை அழைத்தார்கள்…” என்றபின் அவர்கள் போகலாம் என்று கையை அசைத்தாள். அவர்கள் விலகிச் சென்றார்கள். சுப்பா பிள்ளை  மட்டும் அவளுக்குப் பின்னால் நின்றார்.

“நீ நன்றாக இருக்கிறாயா ராமா?”

“இளையம்மை, ஸ்ரீ பத்மநாபதாச, வஞ்சிபால, ராமவர்ம குலசேகர கிரீடபதி ஸ்வாதித்திருநாள் மகாராஜாவாகிய அடியேன் முழுதாக சேதாரமில்லாமல் இருக்கிறேன்” என்றார் “போதுமா இல்லை மிச்சத்தையும் சொல்லவா, பிள்ளே சொல் பார்ப்போம்.”

சுப்பா பிள்ளை “ஸ்ரீ பத்மநாபதாச, வஞ்சிபால,ராமவர்ம குலசேகர கிரீடபதி ஸ்வாதித்திருநாள் மகாராஜா ராமராஜா மன்னை சுல்தான் மஹாராஜராஜ பகதூர்ஷா ஷாஷேர் ஜங் மகாராஜா சவிதம்” என்றார்.

“போதுமா?” என்று ராம வர்மா புன்னகைத்தார்.

‘விளையாடாதே ராமா, நீ களைத்திருக்கிறாய்.”

“நான் நேற்று சரியாகத் தூங்கவில்லை” என்று சொல்லிக்கொண்டே காலெடுத்து வைத்த ராமவர்மா தள்ளாடி விழப்போனார். சுப்பா பிள்ளை  பாய்ந்து அவர் தோளைப் பற்றிக்கொண்டார்.

சீற்றத்துடன் அவர் கையை தள்ளிவிட்டு உரத்தகுரலில் “என்னிடம் விளையாட வருகிறீர்களா? நான் இன்னும் நோயாளியாகவில்லை… போங்கள்” என்றார். சுப்பா பிள்ளை  மெல்ல கையை விட்டார்.

தள்ளாடும் கால்களுடன் சென்று மீண்டும் படுக்கையிலேயே அமர்ந்துகொண்டார் ராமவர்மா.

பார்வதி பாய் “நீ சூடாக ஏதாவது குடிக்கலாம்…” என்றபின் சுப்பா பிள்ளை யிடம் “பிள்ளே…” என்றார்.

“இதோ என்று அவர் வெளியே ஓடினார்.

பார்வதி பாய் தோலுறையிட்ட சிறிய டச்சு நாற்காலியில் அமர்ந்தாள். “ராமா உன் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. நான் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை” என்றாள்.

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார் ராமவர்மா.

“நான் நீ வழக்கம்போல சங்கீதத்தில் மூழ்கி இருக்கிறாய் என்று நினைத்தேன். உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றார்கள். உன் உடல்நிலை எப்போதுமே மோசமாகத்தான் இருந்தது என்று நினைத்துக்கொண்டேன்” என்றாள் பார்வதி பாய். “நான் உன்னை வந்து பார்ப்பதே உனக்குப் பிடிக்கவில்லை. சென்றமுறை வந்தபோது மிகவும் கொந்தளித்துவிட்டாய். ஆகவே நான் வராமலிருந்தேன்…”

ராமவர்மா கட்டில்மேல் கால்களை தூக்கி வைத்துக்கொண்டார்.

“மிகமிக மெலிந்துவிட்டாய். உன் கைகளும் கால்களும் சுள்ளிபோலிருக்கின்றன” என்று பார்வதி பாய் சொன்னாள். “நான் உன்னை அப்படியே விட்டிருக்கக்கூடாது…”

“நீங்கள் கவலைப்படவேண்டாம் இளையம்மை.”

“நான் கவலைப்படாமல் யார் கவலைப்படுவார்கள்? நான் என் அக்கச்சிக்கு கொடுத்த வாக்கு… அக்கச்சி என்னை மன்னிக்கமாட்டார்”

“அக்கச்சி அக்கச்சி… வேறு பேச்சே இல்லையா? உங்கள் வாழ்க்கையே உங்கள் அக்கச்சிக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும்தானா?”

நிதானமாக “ஆம், அந்த வாக்குறுதி மட்டும்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள். “ஆகவேதான் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்தேன். என் ரத்தத்தில் இருந்து அவர்கள் பிறந்தால் அதிகார ஆசை கொண்டிருப்பார்கள் என்று சந்தேகப்பட்டேன். வைத்தியர்களிடம் கேட்டு குழந்தையில்லாமல் ஆக்கிக்கொண்டேன். ராகவ வர்மா கோயில்தம்புரானுக்கும் இது தெரியும். திசைதிரும்பாத அம்புதான் ஆற்றல் கொண்டது, அதுவே இலக்கடையும் என்று என் ஆசிரியர்கள் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.”

“வெறும் இலக்கு, அவ்வளவுதானா வாழ்க்கை?”

“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்ல வேண்டிய ஒன்றுதான் அது…. அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்.”

“அவ்வளவுதான் வாழ்க்கை என்றால் அதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை. அதை ஏன் வாழ்ந்து தொலைக்கவேண்டும்?” என்று தலைகுனிந்து ராமவர்மா முணுமுணுத்தார்.

“சரி, வாழ்க்கை என்றால் என்ன? நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்? நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்?”

“தெரியவில்லை இளையம்மை. ஆனால் நான் வாழ்க்கை பற்றி கனவுகண்டுகொண்டே இருக்கிறேன். சிலசமயம் காலத்தால் அழியாத கீர்த்தனைகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிலசமயம் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்று தோன்றும்போதே உலகமெங்கும் செல்லவேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு என்னவேண்டும் என்று உண்மையாகவே தெரியவில்லை. ஆனால் கனவுகாணாத நாளே இல்லை. என் வாழ்க்கையே கனவுகளால் கழிந்துவிட்டது”

“என்ன பேச்சு இது? உன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. அரசர்கள் பொதுவாக பட்டத்திற்கு வரும் வயது இது…” என்றாள் பார்வதி பாய்.

“எனக்கு சலித்துவிட்டது. பதினேழு ஆண்டுகள் இந்த கூண்டுக்குள் அடைபட்டு திணறிக்கொண்டிருக்கிறேன்… நேற்று நினைத்துக்கொண்டேன், என் சிறகுகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இப்போது இந்தக்கூண்டை திறந்துவிட்டால்கூட என்னால் பறக்கமுடியாது”

ஸ்வாதித் திருநாள் ராமவர்மா

இந்தமாதிரிப் பேச்சுக்களை நான் வெறுக்கிறேன். எல்லார் மனதிலும் ஊக்கமும் சோர்வும் நம்பிக்கையும் கசப்பும் விதைகளாக உள்ளன. அதில் நமக்கு வேண்டியதை பேசிப்பேசி வளர்த்துக்கொள்கிறோம். உன்னுடைய சோர்வையையும் கசப்பையும் வளர்த்துக்கொள்வதை தவிர வேறென்ன பயன்?”

இளையம்மை, நான் இந்த பதினேழு வருடங்களில் ஒரு நாளாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேனா?”

அது உன்னுடைய சிக்கல்நீ ஒரு நாட்டின் அரசன். அந்தக் கடமையை நீ ஒழுங்காகச் செய்திருந்தால் அத்தனை மகிழ்ச்சிகளும் உன்னைத் தேடி வந்திருக்கும். உன் கடமையை நீ ஒழுங்காகச் செய்யவில்லை. ஆகவே ஒவ்வொன்றும் சிக்கலாகி உன்னை சுற்றிக்கொண்டன.

நான் என் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் ரெஸிடென்ட் கல்லன் என்னை போற்றி மடிமேல் வைத்து கொஞ்சியிருப்பாரா?”

இல்லை, நீ அவரை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருப்பாய்என்று பார்வதி பாய் சொன்னாள். “அரசாட்சி என்பது ஒரு போர், ஒரு விளையாட்டு. அதில் எதிரிகள் உண்டு. நம் ஆட்டத்தை தீர்மானிப்பவர்கள் எதிரிகள்தான்.

ராம வர்மா தலையை பொறுமையின்றி அசைத்தார்.

நான் என் அக்கச்சியிடமிருந்து இந்த நாட்டின் ரீஜண்ட் மகாராணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எனக்கு வயது பதிமூன்று. அன்று இங்கே ரெஸிடெண்டாக இருந்தவர் கர்னல் மன்றோஇன்றுகூட திருவிதாங்கூரில் அவர் பெயரைச் சொன்னால் அச்சமும் வெறுப்பும் பக்தியும் கலந்து உருவாகிறது. அவர் பத்து கர்னல் கல்லன்களுக்கு சமம்என்று பார்வதிபாய் தொடர்ந்தாள்.

கர்னல் மெக்காலே வேலுத்தம்பி தளவாயை ஒடுக்கியவர். அவருக்கு திறமை போதவில்லை என்று சொல்லி மலபாரில் இருந்து கர்னல் மன்றோவை இங்கே அனுப்பினார்கள். அவரை இங்கே இரும்புச்செக்கு என்று சொல்வார்கள். திருவிதாங்கூரை பிழிந்து கடைசித்துளிவரை கொண்டு செல்வதற்காகவே கம்பெனி அவரை அனுப்பியது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானை வென்று மைசூரை ஆட்சிசெய்தவர் அவர். மராத்தா போர்களில் பங்கெடுத்தவர். ரெஸிடென்ட் கல்லன் அவருடன் ஒப்பிடுகையில் ஒரு வயதால் குழம்பிப்போன கிழவர் மட்டும்தான்.

என் அக்கச்சியின் காலத்திலேயே கர்னல் மன்றோ நேரடியாகவே திருவிதாங்கூரின் திவானாக அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்கு என் அக்கச்சி மன்றாடி விண்ணப்பிப்பதாக ஒரு கடிதமும் எழுதி வாங்கிக்கொண்டார். நான் ரீஜண்ட் ஆக வந்தபோது அவர்தான் ரெஸிடென்டும் திவானும் எல்லாமேபாப்பு ராவ் என்று ஒரு அடிமையை வைத்து எல்லாவற்றையும் அவரே செய்தார். நான் உலகம் தெரியாத சின்னப்பெண். உன்னைப்போல ஆங்கிலக் கல்வி உடையவள் அல்ல. என் துணைக்கு யாருமே இல்லைபார்வதி பாய் தொடர்ந்தாள்

ஒரு சின்ன பிழை செய்தால் போதும் நாட்டை வெள்ளைக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள். மிகமிகக் கவனமாக நான் செயல்பட்டேன். கர்னல் மன்றோவை எனக்கான எதிரியாக அல்ல, என் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான களமாகவே நான் எடுத்துக்கொண்டேன்

முதலில் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் அவருக்கு எதிரி யார் என்பதை ஒற்றர்கள் வழியாக அடையாளம் கண்டேன். அந்த எதிரிகளின் காதில் அவரைப்பற்றிய எதிர்மறைச் செய்திகளை போட்டுக்கொண்டே இருந்தேன். கர்னல் மன்றோ இங்கே திவானாக இருந்து தனிப்பட்ட லாபம் சம்பாதிக்கிறார் என்று கெட்டபெயரை உருவாக்கினேன்.

உண்மையைச் சொல்வதற்கு என்ன, கர்னல் மன்றோ மிகமிகமிக நேர்மையானவர். ஈவிரக்கமற்றவர், ஆனால் ஊழலே இல்லாதவர். ஆனால் அவரை ஊழல்செய்கிறார் என்று முத்திரை குத்தினேன். ஒரு நேர்மையாளன் நேர்மையற்றவன் என்று சொல்லப்படும்போது சமநிலை இழக்கிறான். கர்னல் மன்றோ அவருக்கு கவர்னர் எழுதிய கடிதங்களுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். மெட்ராஸ் கவர்னர் கர்னல் மன்றோமேல் ஒரு விசாரணையை ஆணையிட்டார். அவர் திவான் பதவியிலிருந்து விலகினார்பார்வதி பாய் சொன்னாள்.

நான் மேலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தேன். அவருடைய மகன் இங்கே காப்டன் பதவியில் இருந்தான், அவர் அவனுக்காக நெறிகளை மீறுகிறார் என்று பழிகிளப்பிவிட்டேன். கர்னல் மன்றோ மெல்ல மெல்ல இங்கிருந்து விலக்கப்பட்டார். ஆயிரத்தி எண்ணூற்றி பதினெட்டில் அவர் லண்டன் திரும்பும்போதுகூட அவர் அவமானமடைந்து இங்கிருந்து சென்றதற்கு நானே காரணம் என்று அறிந்திருக்கவில்லை. அதுதான் ராஜதந்திரம்

அதை நான் என் சொந்த லாபத்திற்காகச் செய்யவில்லை. அவருக்குப்பின் வந்த ரெஸிடென்ட் மோரிசன் எனக்கு உகந்தவராக இருந்தார். கர்னல் மன்றோவைப்போல அவர் திருவிதாங்கூரை கறவைப் பசுவாக மட்டும் நினைக்கவில்லை. ஆகவேதான் நான் மலைக்குடியேற்றங்களை வளர்க்கமுடிந்தது. கடலோரச்சந்தைகளை உருவாக்க முடிந்தது. திருவிதாங்கூரை கடனில் இருந்து மீட்டேன். இன்று நீ காணும் கல்விவளர்ச்சி, பட்டினியில்லா நிலைமை இரண்டுமே அப்படித்தான் உருவாகி வந்தனஎன்றாள் பார்வதி பாய்.

தலைகுனிந்து அமர்ந்திருந்த ராமவர்மாவை பார்த்துக் கொண்டு அவள் தொடர்ந்தாள்கர்னல் மன்றோ இரக்கமற்றவர், ஆகவே நானும் இரக்கமற்றவள் ஆனேன். ஏனென்றால் கூரிய வாளை கூரியவாளால்தான் எதிர்க்கமுடியும். அதுதான் அரசாட்சிமெல்லிய சிரிப்புடன்நீ என்ன நினைத்தாய், உன் ஆட்சியை உனக்கு தட்டில் வைத்து பரிமாறுவார்கள் என்றா? எந்த அரசாவது எவருக்காவது அப்படி அளிக்கப்பட்டிருக்கிறதா?” என்றாள்.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார். “நான் அரசனாக ஆகும்போது எத்தனையோ கனவுகளுடன் இருந்தேன். கீழ்மட்ட ஊழலை முழுக்க நீக்கம் செய்யவேண்டும், அத்தனைபேருக்கும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை வரும்படி நீதி முறையை கொண்டு வரவேண்டும், வணிகப்பாதைகளை முழுக்கமுழுக்க பாதுகாப்பாக அமைக்கவேண்டும்எத்தனையோ திட்டங்கள் வகுத்தேன்

அதற்கு நீ என்ன செய்தாய்?” என்று பார்வதி பாய் கேட்டாள். “உனக்கு ஆசிரியராக இருந்த சுப்பா ராவை திவானாக ஆக்கவேண்டும் என்று நினைத்தாய். ஏனென்றால் அவரிடம் உன் கனவுகளை எல்லாம் சொல்லியிருந்தாய். அவர் அவற்றையெல்லாம் ஆதரித்தார். நானும் ரெஸிடென்ட் மோரிசனும் அதை எதிர்த்தோம். ஏனென்றால் எங்களுக்கு சுப்பாராவ் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் ரெஸிடென்ட் மோரிசன் மாறுதலாகிப் போனதுமே நீ நான் நியமித்த திவான் வெங்கிட்டராவை பதவிநீக்கம் செய்தாய். உன் ஆசிரியர் சுப்பாராவை திவானாக ஆக்கினாய். அவர் சொன்னார் என்று கொச்சு சங்கரப்பிள்ளையை திவான் பேஷ்காராக நியமித்தாய்…”

ஆமாம், நான் அரசன். என் அரசை நான் உருவாக்கவேண்டும் என்று நினைத்தேன்.

உண்மை, ஆனால் உன் கனவுகளை நிறைவேற்றும் தகுதி நீ நியமித்த அமைச்சருக்கு இருக்கிறதா என்று பார்த்தாயா? அவர் வெறும் ஆசிரியர். ஒரு நிர்வாகி கீழிருந்து படிப்படியாக மேலேறி வரவேண்டும். பலமுறை இதை நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். திவான் என்பவர் அரசின் முக்கியமான எல்லா துறைகளிலும் சில ஆண்டுகளாவது வேலை செய்திருக்கவேண்டும்… ” என்றாள் பார்வதி பாய்.

சுப்பாராவ் முயற்சி செய்தார்என்று ராமவர்மா சொன்னார்.

சுப்பராவ் அத்தனை செயல்களையும் அரைகுறையாகவே செய்தார். உன் எண்ணங்களை எல்லாம் வெறும் ஆணைகளாகவே பிறப்பித்துக்கொண்டிருந்தாய். மாதம் ஐந்தாறு அரசாணைகள்அந்த ஆணைகள் நிறைவேறினவா என்று நீ பார்க்கவில்லை. அவை என்ன விளைவை உருவாக்கின என்று நீ கவனிக்கவில்லை. அவை வெறும் சந்தைப் பேச்சுக்களாகவே நீடித்தன..” என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்.

பதினேழு ஆண்டுக்குமுன் நான் உன்னிடம் சொன்னேன். ஒன்றை நினைப்பதும் சொல்வதும் அல்ல அதை செய்வதுதான் அரசாட்சியில் முக்கியம். நினைக்கையிலும் சொல்லும்போதும் நம்முன் எவருமே இல்லை. செய்ய ஆரம்பிக்கும்போது அதற்கு எதிரான எல்லா சக்திகளும் எழுந்து வருகின்றன. அவற்றை கையாளத் தெரியவேண்டும்

அதாவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என்றால் அதிகாரிகளின் தரப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா?” என்று ராமவர்மா உரக்க கேட்டார்.

இல்லை. ஆனால் நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறதுஎன்றாள் பார்வதி பாய்ஆமாம், நாம்தான் இந்நாட்டை ஆட்சி செய்கிறோம். ஆனால் நம் ஆணைகளை இந்த நாடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆட்சி நடக்கும். ஆணைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதில்தான் அரசனின் ஆட்சித்திறனே இருக்கிறது.

எனக்கு புரியவில்லை இளையம்மைநான் எல்லா இடங்களிலும் தோற்றுவிட்டேன்.

ரெஸிடென்ட் கல்லனை இரண்டு ஆண்டுகளாக நீ ஏன் சந்திக்கவில்லை? நான் உன்னிடம் பலமுறை சொன்னேன்.

நான் சொன்னேனே, அவருக்கு செவி கேட்கவில்லை. என்னால் கத்திப்பேசமுடியவில்லை. என் நெஞ்சு வலிக்கிறது.

அசட்டுத்தனமாகப் பேசாதேஎன்று பார்வதி பாய் சொன்னாள்.

அவருடைய காதில் கொஞ்சம் செவிக்குறைவு உண்டு. ஆனால் அவர் அதை என்னிடம் கூடுதலாக நடிக்கிறார். என்னை கூச்சலிடச்செய்கிறார்

சரி, நீ ஏன் அதிகாரிகளைச் சந்திப்பதில்லை? ஏன் திவானைக்கூட சந்திப்பதில்லை?”

ஏன் சந்திக்கவேண்டும்? இங்கே நான் சொல்வது நடக்கிறதா என்ன? இளையம்மை உங்களுக்கு தெரியும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ரெஸிடென்ட் கல்லன் எல்லா மனுக்களையும் அவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆணையிட்டுவிட்டார். எல்லா ஆணைகளையும் அவரே போடுகிறார். நான் அவருடைய ஆணைகளை ஏற்று கைச்சாத்திடவேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் எதற்கு?”

சரி, அதைக்கூட நான் புரிந்துகொள்கிறேன். நீ சென்ற ஆண்டு நாஞ்சில்நாடு போனாய். அங்கே பதினெட்டு பிடாகைக்காரர்களும் உன்னை பார்க்க விரும்பினார்கள். இந்த திருவிதாங்கூரே நாஞ்சில் நாட்டின் அன்னத்தை உண்டு வாழ்வது. நம்முடைய சோற்றுக்கலம் அது. நமக்கு முழுக்கமுழுக்க விசுவாசமானவர்கள் நாஞ்சில்நாட்டு பிள்ளைமார். நீ அவர்களுக்கு சந்திப்பு அளிக்க மறுத்தாய்

நான் கன்யாகுமாரிக்கு போய்க் கொண்டிருந்தேன். அங்கே தனியாக இருக்க நினைத்தேன்.

பொறுமையை தருவித்துக்கொண்டுநீ என்னதான் நினைக்கிறாய்? உனக்கு என்னவேண்டும்?” என்று அவள் கேட்டாள்.

நான் அரசன்அரசனாக நான் பணியாற்றவேண்டும்அதற்கான உரிமையும் சுதந்திரமும் எனக்கு வேண்டும்

அதை நீதான் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதைத்தான் உன் இளமைநாட்கள் முதல் நான் உன்னிடம் சொல்கிறேன். உன்னை அதற்காக பயிற்சிகொடுக்கத்தான் நான் முயன்றேன். நீ அதையெல்லாம் சித்திரவதைகளாக நினைத்தாய்…”

இளையம்மை, நீங்கள் அளித்த எல்லா பயிற்சிகளையும் நான் அடைந்தேன். என்னால் ஆயுதப்பயிற்சி பெறமுடியவில்லை. என் மனம் அதில் நிற்கவில்லை.”

அரசன் முதலில் பயிலவேண்டியது ஆயுதங்களைத்தான். போர்க்கலை வழியாகத்தான் மற்ற கலைகளை புரிந்துகொள்ளவேண்டும்

ராமவர்மா வெடித்துச் சிரித்துசங்கீதத்தைக்கூடவா?” என்றார். பார்வதி பாய்யின் முகம் சிவப்பதைக் கண்டுஇல்லை, சிரிக்கவில்லை. வேடிக்கையாக இருந்தது, அவ்வளவுதான்என்றார்.

நீ ஒருபோதும் என் சொற்களை செவிகொண்டதில்லைஎன்றார் பார்வதி பாய்.

இளையம்மை அப்படிச் சொன்னால் நான் என்ன செய்ய? நான் திருமணம் செய்துகொண்டதுகூட உங்கள் ஆணைப்படி. என் ஆசை வேறு என்று உங்களுக்கே தெரியும்…”

ஆமாம், நீ விரும்பிய மாவேலிக்கரை ராமனாமடத்தில் ஓமனத் தங்கச்சியை திருமணம் செய்துகொண்டால் அரசனாக உனக்கு என்ன நன்மை? திருமணம் வழியாக நீ நாஞ்சில்நாட்டின் முழு ஆதரவையும் பெற்றிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நாயரும் வேளாளரும் உன்னுடன் நின்றிருக்கவேண்டும். அப்போதுதான் நாடே உன் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவேதான் திருவட்டார் அம்மச்சி வீட்டில் நாராயணிப்பிள்ளையையும் நீலம்மைப்பிள்ளையையும் உனக்கு மணமகள்களாக்கினேன். வேளாளர்களில் வடசேரி அம்மவீட்டில் சுந்தரலட்சுமிப் பிள்ளையை உனக்கு தேர்வுசெய்தேன்…”

தெரிவுசெய்து வாக்கு கொடுத்தபின் எனக்குச் சொன்னீர்கள். உரியநாளில் சென்று நான் பட்டும் கச்சையும் கொடுத்தேன். அவ்வளவு சுதந்திரத்துடன் இருந்திருக்கிறேன்என்று ராமவர்மா புன்னகைத்தார்

சுதந்திரம் என்பது ஆற்றலால் வருவது. நான் சொன்னபடி அவர்களை நீ கூடவே வைத்திருந்தால் உன்னைப் பார்த்து ரெஸிடென்ட் கல்லன் பயந்திருப்பார்.”

அதைவிட நான் இந்த மூன்று பெண்களையும் பார்த்து பயந்தேன் இளையம்மைஎன்று ராமவர்மா சொன்னார்.

என்ன பயம்? அவர்களை நீ ஏறெடுத்தும் பார்க்கவில்லை

அவர்கள் தைரியமானவர்கள், உலகியல் கணக்கு ஊறியவர்கள், உங்களைப்போலஎன்று ராமவர்மா சொன்னார்பாடத்தெரியாத பெண்ணுடன் ஒரு வார்த்தைகூட என்னால் பேசமுடியாது.

பார்வதி பாய் பெருமூச்சுவிட்டாள். “எல்லாவற்றையும் நீயே சீரழித்துக்கொண்டாய். உன் மனம் சங்கீதத்தில் மூழ்கிகிடந்தது. அரசனுக்கு சங்கீதம் வேண்டும், அது குளியல்போல. நீ இரவுபகலாக குளத்திலேயே ஊறிக்கிடந்தாய்…”

ராமவர்மா மெல்ல அவருக்கு எப்போதுமிருந்த எரிச்சலை அடையலானார். “இளையம்மா, இப்போது நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்? என்னை வழிநடத்தவா? என்னை சீர்திருத்த நினைக்கிறீர்களா?”

இல்லை, உன்னை வழிநடத்த எட்டு ஆண்டுகள் முயன்றேன். உன்னை சீர்திருத்த மேலும் பல ஆண்டுகள். அதனால் பயனில்லை என்று புரிந்துகொண்டேன்.

ஆகவேதான் என் இளையவனை வழிகாட்டி வளர்த்தீர்கள் இல்லையா?” என்று ராமவர்மா ஏளனத்துடன் கேட்டார்.

ஆமாம், அவனை நான் நினைத்தவாறு வளர்த்தேன். அவன் யானைத்தந்தம்போல உறுதியானவன்

ராமவர்மா கசப்புடன் சிரித்துநீங்கள் சொல்வது என்ன என்று புரிகிறது, என்னை எப்போதுமே வாழைத்தண்டு என்றுதான் சொல்லிவந்தீர்கள்

ஆமாம், நீ வாழைத்தண்டேதான். குளிர்ந்தவன், உன் உடலில் எப்போதும் பெண்பிள்ளைகளைப்போல மென்மையும் குளிர்ச்சியும். உன் குரல்கூட மென்மையானது…” அவள் உதடுகளைச் சுழித்துஅதனால்தான் உன் பெண்களுக்கு கூட உன்மேல் மதிப்பில்லாமல் ஆயிற்று.

தெரியும்அவர்களும் என்னை வாழைத்தண்டு என்றுதான் சொன்னார்கள். வடசேரிக்காரி என்னை ஏளனமாக குயில் என்று சொல்வாள்.

பார்வதி பாய் சலிப்புடன் தலையசைத்துநாம் பேசியது போதும், நீ இப்படி இனிமேலும் நீடிக்கமுடியாது. நீ அரசவிவகாரங்களில் ஏதேனும் வகையில் தலையிட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன.

எனக்கு எல்லாம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது.

என்னதெரியும்? சொல், இப்போது நம்முடைய திவான் யார்?”

கிருஷ்ணராவ்தானே? ரெஸிடென்ட் கல்லன் தஞ்சாவூரிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த அந்தக் குள்ளன்?” என்றார் ராமவர்மாஅவன் இங்கே வந்தபோது ஒருநாள் பேச்சுவாக்கில் சுப்பாராவ் சொன்னார், அவன் வெள்ளைச்சிலந்தி என்று. வந்த முதல்நாளே அமைதியாக வலையைக் கட்ட ஆரம்பித்துவிட்டான். வலை இந்த அரண்மனையையும் திருவிதாங்கூர் நாட்டையும் முழுமையாக மூடிக்கொள்வது வரை நமக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவரையாக கட்டித்தழுவி நஞ்சூட்டினான். ஒவ்வொருவரையாக குருதி உறிஞ்சி குடித்து வளர்ந்தான்.

வந்த அன்றே அவனை நான் அடையாளம் கண்டேன். அவன் ரெஸிடென்டின் நிழலில் வளர்ந்தான். அவனை திவானாக ஆக்கவேண்டும் என்று ரெஸிடென்ட் மெட்ராஸுக்கு எழுதினார். அவனை திவானாக ஆக்கக்கூடாது என்று நான் மெட்ராஸ் கவர்னரிடம் மன்றாடினேன். ஜார்ஜ் ஹே துரை என் கோரிக்கையை அப்படியே ரெஸிடென்ட் கல்லனுக்கு அனுப்பினார். இங்கே வேறு தகுதியானவர்கள் எவரும் இல்லை என்று ரெஸிடென்ட் கல்லன் ஜார்ஜ் ஹே துரைக்கு எழுதினார்….” என்றார் ராமவர்மா.

உளக்கொதிப்பால் ராமவர்மா எழுந்துவிட்டார்அதற்கும் நான் ஈடுசெய்தேன். கர்னல் மன்றோ இங்கே கொண்டுவந்தவர் முன்னாள் திவான் வெங்கிட்ட ராவ். பிரிட்டிஷாருக்கு வேண்டியவர், அவருக்கு தகுதியில்லை என்று பிரிட்டிஷார் சொல்லவே முடியாது. அவர் மெட்ராஸில் பிரிட்டிஷ் சர்வீஸில் இருந்தார். அவரை வரவழைத்து திவானாக்கினேன். கிருஷ்ணராவை திவான்பேஷ்கார் பதவியில் நியமித்து அவருக்கு கீழே துணை திவான்பேஷ்கார் பதவி ஒன்றை உருவாக்கினேன். எல்லா அதிகாரத்தையும் துணைதிவான் பேஷ்காரிடமே ஒப்படைத்தேன்

சலிப்பும் துயரமுமாக பார்வதி பாய் அவரை பார்த்துக்கொண்டிருந்தாள்.

எனக்கும் அரசியல் விளையாட்டு தெரியும். ஜார்ஜ் ஹே துரை தற்காலிகமாக லண்டன் போனபோது ஹென்றி டிக்கின்ஸன் மெட்ராஸின் ஆக்டிங் கவர்னர் ஆனார். உடனே அவருக்கு ஒரு பரிசை அளித்து கிருஷ்ணராவை பதவிநீக்கம் செய்ய அனுமதி பெற்றேன். அவரை திருவனந்தபுரத்திலிருந்தே துரத்தினேன்என்றார் ராமவர்மா.

பார்வதி பாய் புன்னகைத்து, “ஒரு சிறுவெற்றி. சரி, அதனால் என்ன ஆயிற்று?. ரெஸிடென்ட் கல்லன் அது அவருக்கு எதிரான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டார். அதற்கு பதிலடியாக உன் ஆசிரியர் சுப்பாராவை வெளியேற்றுவதற்கு அவர் முயன்றார். மீண்டும் கார்ஜ் ஹே மெட்ராஸ் கவர்னராக வந்தார். கர்னல் அவரிடம் பேசி சுப்பாராவை டிஸ்மிஸ் செய்யவைத்தார். அவரை திருவனந்தபுரத்தில் இருந்து துரத்தினார். உன் அவைக்கு வந்து கதறி அழுத சுப்பாராவை உன்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் தஞ்சாவூருக்கு போனார்

ஆமாம், ஆனால் அவரை மீண்டும் அழைத்துக்கொண்டேன்என்றார் ராமவர்மா.

எப்படி? ஒன்றரை ஆண்டுகள் கழித்து. ஜார்ஜ் ஹேக்கு பதினெட்டு கடிதங்கள் அனுப்பினாய். தனிப்பட்ட பரிசாக மட்டும் பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாய். கடைசியில் வெற்றி கிடைத்தது. சுப்பாராவ் இங்கே வந்தார். மதிப்பில்லாத ஓர் அரசப்பதவியில் அமர்ந்தார்இந்த மொத்த அரசியலுக்கும் நீ செலவிட்டது மூன்று ஆண்டுகள்…” என்றார் பார்வதி பாய்.

ராமவர்மாவின் உடலில் ஒரு மிகச்சிறிய அசைவு நிகழ்ந்தது. அவள் அவருக்கு எதையாவது கற்பிக்க முயலும்போதெல்லாம் எழும் அசைவு அது. உடலில் விழுந்த நீர்த்துளியை உதறுவதுபோல. அவளைச் சினமூட்டும் ஒரு சொல் போல.

அவள் குரல் ஓங்கியது. “அந்த மூன்றாண்டும் இங்கே என்னென்ன நிகழ்ந்தது என்று உனக்கு தெரியுமா? அங்கே மெட்ராஸ் ராஜதானியில் மீண்டும் பஞ்சம் தலைகாட்டத் தொடங்கியது. இங்கே பல்லாயிரம்பேர் ஒவ்வொரு நாளும் பஞ்சம் பிழைக்க கிளம்பி வந்து ஆரல்வாய்மொழி கணவாயில் குவிந்து கிடந்தனர். அவர்களுக்கு மலைப்பகுதிகளில் நிலம்கொடுத்து குடியேற்றவேண்டிய அதிகாரிகள் அந்தப் பஞ்சப்பரதேசிகளிடமே லஞ்சம் வாங்கினார்கள். சிலர் அவர்களை அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு சென்று தூத்துக்குடியில் விற்பவர்களிடம் கூட்டு சேர்ந்து கொண்டார்கள்.

இங்கே நம் மண்ணுக்குள் அடிமைமுறை பத்மநாபசாமிக்கு எதிரான குற்றம். நான் இட்ட ஆணை அது. ஆனால் நாகர்கோயிலில் இருந்தும் பத்மநாபபுரத்தில் இருந்தும்கூட பஞ்சம்பிழைக்க வந்த மக்களை ஆசைகாட்டியும் பிடித்துகட்டியும் கொண்டுசென்று விற்றார்கள் நம் அதிகாரிகளான நாயர்கள். நம் கடல்முழுக்க போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்தலாயினர். நமக்கு விசுவாசமாக இருந்த மீனவக்குடிகள் போர்ச்சுக்கலுக்கு கப்பம்கட்டி நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம் சந்தைகள் அனைத்திலும் ஆதிக்கம் செய்யும் கூட்டங்கள் உருவாயின. போர்ச்சுக்கல்காரர்கள் தாக்கியதனால் மணக்குடி முதல் ஆலப்புழை வரை துறைமுகங்கள் பொலிவிழந்தன.

மூன்றே ஆண்டுகளில் நான் பத்தாண்டுகளில் உருவாக்கிய செல்வத்தை அழித்துவிட்டாய். ராமா, இந்த திருவிதாங்கூரின் செல்வம் இரண்டே ஊற்றுக்களில் இருந்துதான். மலைக்குடியேற்றக்காரர்கள் அளிக்கும் தீர்வை, சந்தைகளும் துறைமுகங்களும் அளிக்கும் சுங்கம். மலைக்குடியேற்றக்காரர்கள் உருவாக்கும் விளைபொருட்கள் ஆறுகள் வழி சந்தைகளில் வந்துசேரவேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரை இந்தப்பாதை பாதுகாக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாம் அழிவோம்…. நான் திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் கண்விழித்து கணக்கிட்டு காத்து உருவாக்கிய பயிர் இது, உன்னால் அது கருகியதுஎன்றாள் பார்வதி பாய்.

நான் என்ன செய்திருக்கவேண்டும்? என் திவானை நியமிக்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு நம்பிக்கை இல்லாத ஒருவரை நீக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பணிந்து போகவேண்டுமா?” சட்டென்று ராமவர்மா ஆவேசம் கொண்டார். “கண்முன் விஷவிருட்சம் வளர்கிறது. அதை வெட்டிவீச நம்மால் முடியவில்லை என்றால் நாம் ஏன் அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளவேண்டும்? இந்த வெற்றுவேஷம்தான் அரசனின் அடையாளமா? அந்த கிரீடமும் செங்கோலும் உடைவாளும் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் வைத்திருந்தது. அதை தொடுவதற்கே எனக்கு தகுதி இல்லை.

அந்த தகுதியை ஈட்டிக்கொள், நான் சொல்லவந்தது அதைத்தான்என்று பார்வதி பாய் சொன்னாள்.

நான் சும்மா இருந்திருக்கவேண்டுமா? கிருஷ்ணராவை அப்படியே இந்த நாட்டை ஆளவிட்டிருக்கவேண்டுமா?”

வேண்டாம், ஆனால் இதை வைத்துக்கொண்டு சதுரங்கம் விளையாடியிருக்கக்கூடாது. அந்த கிருஷ்ணராவ்தான் பிரச்சினையா? அவன் சிக்கலானவன் என்று தோன்றினால் அவனை அப்போதே கொன்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதானே?”

அய்யோஎன்று ராம வர்மா தலையை பிடித்துக்கொண்டார்.

பிரம்மஹத்தியை பயப்படுகிறாயா? பத்துபணம் கொடுத்தால் இன்னொரு நியோகி பிராமணன் இவனை கொன்றிருப்பானேஎன்றாள் பார்வதி பாய்அவன் செத்த அன்று அவன் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி அவன் விதவைக்கு ஒரு பென்ஷனையும் அறிவித்துவிட்டு ரெஸிடென்ட் கல்லனைக் கண்டு நம் துயரத்தையும் தெரிவித்திருந்தால் விஷயம் அங்கேயே முடிந்தது.

நான் நீங்களல்ல இளையம்மே.

நீ வேறு, அதனால்தான் சொன்னேன். நானாக இருந்திருந்தால் இந்த மொத்த விஷயத்துக்கே ஐந்து நாட்களுக்குமேல் செலவிட்டிருக்கமாட்டேன். சுப்பாராவையே கொல்ல ஆணையிடுவேன். அவரைக் கொன்றது ரெஸிடென்ட் கல்லன்தான் என்று பழிசுமத்தி அவரை இந்நேரம் லண்டனுக்கு அனுப்பியிருப்பேன்அடுத்து வரும் ரெஸிடென்ட் இங்கே என் சொல்லே வாழும் என்று தெரிந்து கொண்டுதான் திருவிதாங்கூரில் காலெடுத்து வைப்பான்

அய்யோ….அய்யோ!” என்றார் ராமவர்மா அவர் உடல்நடுங்கியது. கைகளை கும்பிடுபவர் போல நெஞ்சுடன் சேர்த்து வைத்துக்கொண்டார்.

நான் ராணியாக ஆனது இந்த அரசியலாட்டத்திற்காக அல்ல. தெரியுமா, அங்கே வங்காளத்தில் பஞ்சத்தில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே மெட்ராஸ் ராஜதானியில் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் எண்ணிக்கொள், இதெல்லாம் பஞ்சமே இல்லை. மிகப்பெரிய பஞ்சம் வரப்போகிறது. பல்லாயிரம்பேர், பல லட்சம்பேர் செத்துக்குவியப் போகிறார்கள். இப்படி வெள்ளையர் நாட்டுராஜ்யங்களை அழித்து விதைநெல்லை கொள்ளையடித்துச் சென்றால் ஒரு மழை பொய்த்தால் போதும் லட்சக்கணக்கானவர்கள் செத்து விழுவார்கள். இந்த வெள்ளையர் அப்போதும் கப்பமும் கட்டணமும் அபராதமும் வசூலிப்பதை நிறுத்தப் போவதில்லை.

சொல்லப்போனால் பஞ்சத்தை அவர்கள் ஊக்குவிப்பார்கள். அதைப் பயன்படுத்தி இங்கிருந்து கூலிகளை உலகமெங்கும் கொண்டு செல்வார்கள். கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே ஆப்ரிக்கா வரை கொண்டு சென்று குவிப்பார்கள். செல்பவர்களில் முக்கால்வாசிப்பேர் அங்குள்ள புதியநோய்களில் செத்து அழிவார்கள். சாகுந்தோறும் இவர்கள் மேலும் கொண்டு சென்று நிரப்புவார்கள். இரக்கமே காட்டமாட்டார்கள்என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்.

ஏனென்றால் நாமெல்லாம் அவர்களுக்கு மனிதர்களே அல்ல. ஒருவகை விலங்குகள். அவர்கள் தென்னமேரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒட்டுமொத்த மக்களையும் கொன்றே அழித்தவர்கள். ஆப்ரிக்காவில் அத்தனை மக்களையும் அடிமைகளாக்கியவர்கள். மக்களின் சாவு அவர்களுக்கு வெறும் கணக்குதான். அவர்களில் ஒருவர் கூட வருத்தப்படப் போவதில்லை. அவர்களின் பணிக்குறிப்புகளில் பட்டினிபற்றியும் பஞ்சம் பற்றியும் ஒரு வரிகூட இருக்காது. போர்வெற்றிகளும் கப்பம்கொண்ட கணக்குகளும்தான் இருக்கும்என்று பார்வதி பாய் சொன்னாள்.

ராமவர்மா திகைத்துப் போய் அமர்ந்திருந்தார்.

இந்தியாவெங்கும் உள்ள ஏழை மக்களைப் பார்க்கிறேன். புழுப்பூச்சிகளைப் போல சாகிறார்கள். கூட்டம்கூட்டமாக செத்து அழியப்போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் கேட்க யாருமில்லை. இங்கே திருவிதாங்கூரில் நான் இருக்கிறேன். என் மக்கள் தாயில்லா பிள்ளைகள் அல்ல

நெஞ்சில் கைவைத்து பார்வதிபாய் தொடர்ந்தாள்சென்றமுறை மெட்ராஸ் ராஜதானியில் பஞ்சம் வந்தபோது என் நாட்டில் ஒருவர் கூட சாகாமல் நான் பார்த்துக்கொண்டேன். ஒருவர் கூட அடிமையாக அன்னியநாட்டுக்கு போகாமல் நான் பேணினேன். இனிமேலும் காப்பேன், நான் உயிருடன் இருப்பதுவரை எனக்கு வேறெந்த லட்சியமும் இல்லை…. அதற்குமுன் எனக்கு எந்த மனிதர்களும் பொருட்டில்லை.

ராமவர்மா உடல் அதிர அப்படியே சரிந்து படுக்கையில் சுருண்டதுபோல படுத்துக் கொண்டார். அவர் தோள்கள் குலுங்கின.

கடைசியாக ஒன்றைக் கேட்கிறேன் ராமா, ஸ்ரீனிவாச ராவ் திவான் பொறுப்பிலிருந்து விலகியபோது மீண்டும் நீயே தானே கிருஷ்ணராவை அழைத்து திவானாக ஆக்கினாய்

ஆமாம், என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ரெஸிடென்ட் கல்லனிடம் போரிட என்னால் முடியாது. நான் சலித்துவிட்டேன்.

அதாவது நீ அரசனான பிறகு செய்த ஒரே போராட்டத்தையும் கைவிட்டுவிட்டாய்.

ஆமாம்.

ஆனால் நீ பணத்தை மண்ணையும் கல்லையும்போல செலவழிக்கிறாய். ஆண்டுக்கு அரண்மனைக்கு பட்டு வெல்வெட் துணிகள் வாங்குவதற்காக மட்டும் மூன்றுலட்சம் ரூபாய் செலவழித்தாய். அரண்மனையில் ஓவியங்கள் வாங்குவதற்கு மட்டும் அறுபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இசைக்கலைஞர்களுக்கான செலவுமட்டும் எழுபத்தாறாயிரம் ரூபாய்அவர்களுக்கான பரிசுகள், ஊதியங்கள், இசைவிழாக்கள்…”

ராமவர்மா ஒன்றும் சொல்லவில்லை.

ராமா நீ எப்படி அரசனாக ஆனாய் தெரியுமா?”

ராமவர்மா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

நீ உன் அம்மாவின் கருவில் உருவானபோது திருவிதாங்கூரை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சேர்க்கும் எண்ணம் சென்னை கவர்னருக்கு இருந்தது. ஜார்ஜ் பர்லோ அதற்காக எல்லாவற்றையும் செய்தார். ஆகவே நீ கருவிலிருக்கையிலேயே உனக்கு முடிசூட்டினோம். அரசன் என்று எல்லா ஆவணங்களிலும் உன்பெயரை சேர்த்தோம். அரசன் இருந்த நாடு ஆதலால் திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படவில்லை.

ஆனால் இன்று நீ நோயுற்றிருக்கிறாய் என்றும் திருவிதாங்கூரின் ஆட்சி சீர்குலைந்திருக்கிறது என்றும் ரெஸிடென்ட் கல்லன் மெட்ராஸ் கவர்னருக்கு செய்தி அனுப்பமுடியும். உன்னால் நாட்டை ஆட்சிசெய்து உரியமுறையில் கப்பம் கட்டமுடியாது என்று ஒரு வார்த்தை அவர் எழுதினால் போதும், மெட்ராஸ் கவர்னர் நம் நாட்டை இணைத்துக் கொண்டுவிடுவார். பூதம் வாய்திறந்து காத்திருக்கிறதுஎன்றார் பார்வதி பாய்.

அதற்கான எல்லா ஆதாரங்களும் இங்கிருக்கின்றன. நீ ரெஸிடெண்டை சந்தித்தே இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவர் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று கோரி எழுதிய பதினேழு கடிதங்களுக்கு நீ பதில் அளிக்கவில்லை. ரெஸிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த நாநூற்றுக்கும்மேல் கடிதங்களுக்கு உன்னிடமிருந்து பதிலே போகவில்லைஎன்று பார்வதி பாய் சொன்னாள்.

சென்ற ஆண்டு தெற்குத்திருவிதாங்கூரில் புயலடித்தது. தேங்காய்ப்பட்டினமும் மணக்குடியும் முழுமையாக அழிந்தன. கடுக்கரையிலும் பறக்கையிலும் ஏரிகள் கரையிடிந்து வெள்ளம் பெருகியது. பிடாகைக்காரர்கள் உன்னை சந்திக்க விரும்பினர். நீ சந்திக்கவில்லை. மக்களுக்கு தேவையான எந்த உதவியும் செய்யப்படவில்லை. அடுத்த பூவுக்கு விதைநெல் கேட்டு நாஞ்சில் நாட்டிலிருந்து தூதுவந்தனர். அழிந்த தோட்டங்களை மறுபடியும் அமைப்பதற்காக உதவிகோரி மக்கள் கோயில்கள் தோறும் கூடி குரலெழுப்பினார்கள். ரெஸிடென்ட் அது தன் வேலை இல்லை என்று தவிர்த்துவிட்டார். நீ கண்டுகொள்ளவே இல்லை. என் தனிப்பட்ட சொத்துக்களையும் நிதியையும் கொண்டு குறைந்தபட்ச உதவிகளை நான் செய்தேன்என்றாள் பார்வதி பாய்.

ராம வர்மா அவளை கேட்காதவர் போல சுருண்டே கிடந்தார்.

நீ ரெஸிடென்ட் கல்லனை ஏதோ தனிப்பட்ட எதிரிபோல நினைக்கிறாய். உன்னுடைய அத்தனை சிக்கல்களும் அங்கிருந்துதான் தொடங்கின. பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன், ரெஸிடென்ட் துரை நம் எதிரி அல்ல, நாம் அவரை பயன்படுத்திக்கொள்கிறோம்என்றாள் பார்வதி பாய்நான் ஆட்சிக்கு வந்தபோது என் ஆட்சியில் ஏதாவது குறைகண்டு திருவிதாங்கூரை நேரடியாக கைப்பற்ற மெட்ராஸ் கவர்னர் இறுதிமுடிவு செய்திருந்தார். ஒவ்வொருநாளும் அங்கிருந்து குறைசொல்லும் கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன.

கர்னல் மன்றோ அப்படி வரும் கடிதங்களுக்கு பதில் எழுதும்போது அப்படி திருவிதாங்கூரின் ஆட்சி சீரழிந்திருப்பது உண்மை என்றாலும் விரைவிலேயே மீட்டுவிடமுடியும் என்றே எழுதுவார். அவருடைய மனம் எனக்கு மெல்ல புரிந்தது. திருவிதாங்கூர் மெட்ராஸுடன் சேர்க்கப்பட்டால் அவர் ரெஸிடென்ட் அல்லாமலாவார். அதை அவர் விரும்பவில்லை. அதை நான் புரிந்துகொண்டேன். மெட்ராஸ் கவர்னர்களிடமிருந்து இந்நாட்டைக் காப்பாற்றுவதற்குச் சிறந்த வழி என்பது பிரிட்டிஷ் ரெஸிடென்ட்களை ஆதரிப்பது என்று நான் புரிந்துகொண்டேன். இங்கே ரெஸிடென்ட்கள் மெட்ராஸ் கவர்னர்களின் நேரடிக் கட்டுப்பாடில்லாமல் தனியாட்சி செலுத்துகிறார்கள். அந்த அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள்பார்வதி பாய் சொன்னாள்.

மெட்ராஸ் கவர்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயப் பிரபுக்கள். இந்த ரெஸிடென்ட்கள் போர்வீரர்கள். ஆகவே இவர்களை புகழ்ந்து, இவர்களை அரசர்களைப்போல நடத்தி, தேவையென்றால் லஞ்சம் கொடுத்து திருவிதாங்கூரின் ஆதரவாளர்களாக வைத்துக் கொண்டேன். திருவிதாங்கூர் இதுவரை சுதந்திரமாக இருப்பது தொடர்ச்சியாக இங்கே வந்த ரெஸிடென்ட்கள் இதன் சுதந்திரத்தை ஆதரிப்பதனால்தான். இப்போதுகூட ரெஸிடென்ட் கல்லன் திருவிதாங்கூர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார். ஏனென்றால் அப்போதுதான் அவர் ஆட்சிசெய்யமுடியும்என்றாள் பார்வதி பாய்.

ஆகவே அவருடைய அதிகார ஆசையை நாம் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்என்று பார்வதிபாய் தொடர்ந்தாள். “சொல்லப்போனால் அதிகார ஆசையில்லாத ரெஸிடென்டுக்கு அதை உருவாக்க வேண்டும். ஆனால் மெய்யாகவே அவருடைய அதிகாரம் நம்மை பாதிக்கும் என்றால் அவரைத் தோற்கடிக்க வேண்டும்என்றாள் பார்வதி பாய்இந்த வெள்ளையரை நம்மால் வேறெந்த வகையிலும் தோற்கடிக்கமுடியாது. இவர்கள் தன்முனைப்பு கொண்டவர்கள், அதை அடிக்கவேண்டும். அவர்களின் கௌரவத்தைக் குலைக்கவேண்டும். அவர்களை அவதூறு செய்து மனமுடையச் செய்யவேண்டும். அவர்களே இங்கிருந்து ஓடவைக்கவேண்டும்

அது மிக எளிது. ஏனென்றால் இவர்கள் தங்கள் படைவீரம் வழியாக புகழும் பதவியும் ஈட்டிக்கொண்ட போர்வீரர்கள். இவர்கள் கீழ்க்குடியினர், ஆகவே கௌரவமானவர்கள் அல்ல என்ற எண்ணம் பிரிட்டனின் பிரபுக்களிடையே இயல்பாகவே உண்டு. ஆகவே இவர்கள்மேல் எழும் எந்த அவதூறையும் அவர்கள் நம்புவார்கள். இவர்களை அவமானப்படுத்தும் எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிடமாட்டார்கள்

ஆனால் அதை நாம் நேரடியாகச் செய்யக்கூடாது. நாம் அதன்பின் இருப்பதையே அவர்கள் அறியக்கூடாது. ஒரு ரெஸிடென்டைப்பற்றி நாம் நம் கையால் ஒருபோதும் எதிர்மறையாக ஒரு வரிகூட கவர்னருக்கு எழுதக்கூடாது. ஏனென்றால் அந்த ரெஸிடென்டுக்கு எங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதோடு பொதுவாக வெள்ளையர்கள் அவர்களைப் பற்றி கறுப்பர்கள் புகார் செய்வதை விரும்புவதில்லை. அவர்களைப் பற்றிய புகார்கள் தன்னிச்சையாக எழுவதை நாம் திட்டமிட்டு அமைக்கவேண்டும்அது மிக எளிது. அதற்குரியவர்களை தேடிக்கண்டுபிடிக்கலாம்நீ செய்ததெல்லாம் வெறும் சிறுபிள்ளை விளையாட்டுஎன்று பார்வதி பாய் சொன்னாள்.

இளையம்மை, இதெல்லாம் எதற்காக?” என்று முனகலாக ராம வர்மா கேட்டார்.

சுதந்திரத்திற்காக .யோசித்துப்பார், கோழிக்கோடு சாமூதிரியிடமிருந்து நாடு பறிக்கப்பட்டது. இன்று மலபார் பிரிட்டிஷ் அரசின் பகுதி. இப்போது மக்கள் கூட்டம்கூட்டமாக மலபாரிலிருந்து பஞ்சம் பிழைக்கச் செல்கிறார்கள். அங்கே கொத்துக் கொத்தாகப் பட்டினி மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால் திருவிதாங்கூருக்கு பஞ்சம்பிழைக்க மக்கள் தேடி வந்துகொண்டிருக்கிறார்கள். இங்கே சோறிருக்கிறது. அந்த வேறுபாடே காட்டும், எதற்காக நான் போராடுகிறேன் என்று. ஏன் இதையெல்லாம் செய்கிறேன் என்றுஎன்றாள் பார்வதிபாய்.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார்.

பார்வதி பாய்ராமா நான் உன்னிடம் கேட்கவந்தது ஒன்றே. இதை கேட்கும் சந்தர்ப்பத்தை எண்ணி எண்ணி தவிர்த்தேன். என்னால் இதை உன்னிடம் கேட்கமுடியாது. நீ என் முதல்மகன் போல. உன்னை மடியிலிட்டு வளர்த்திருக்கிறேன்என் அரசியல் வாழ்க்கையில் நான் எதற்குமே தயங்கியவள் அல்ல, இதற்காக தயங்கினேன்.

நீங்கள் என்னிடம் எதையும் கேட்கலாம் இளையம்மைஎன்றார் ராம வர்மா.

நீ அரசனாக நீடிக்கவேண்டுமா?”

ராமவர்மா திடுக்கிட்டவர்போல பார்த்தார். அவருடைய நெஞ்சு துடிப்பது தெரிந்தது. கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் அதிர்ந்தன.

வரவிருக்கும் காலம் கொடுமையானது ராமா. நீ உன் செயலின்மையால் பல்லாயிரம்பேரை பட்டினிச்சாவு நோக்கி தள்ளிவிடுவாய்.

இளையம்மை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் நடுங்கும் குரலில் கேட்டார்.

நீ உன் இளையவனை அரசனாக்கிவிட்டு மருத்துவம் செய்து கொள்வதற்காக லண்டனுக்கு போ. உன் நோய் அங்கே குணமாகும். அங்கே நீ விரும்பிய இசையை முழுமையாக கற்கவும் முடியும்…”

ராமவர்மா பெருமூச்சுவிட்டு தளர்ந்தார்.

நீ மென்மையானவன்என்றாள் பார்வதி பாய். “முன்பெல்லாம் இங்கே வீடுகளின் கதவுகள் எடைமிக்கவை. அந்தக் கதவுகளை நிறுத்தும் இடத்தில் ஒரு நிலைக்கல்லை வைப்பார்கள். அந்தக்கல்லை கல்லாசாரிகள் தேடிப்பிடித்துக் கொண்டுவருவார்கள். நெய்க்கருப்பன் கல் என்று அதைச் சொல்வார்கள். அது இரும்பைவிட உறுதியானது. உடையாது, எளிதில் தேயாது. அதில் எடைமிக்க கதவு ஒருநாளுக்கு நூறு இருநூறுமுறை சுழல வேண்டியிருக்கிறது…”

அரசன் நெய்க்கருப்பன் கல்லாக இருக்கவேண்டும். நீ மென்மையான மாக்கல். அதில் சிற்பங்கள் செய்யலாம். நிலைக்கல்லாக அமையமுடியாது. நெய்க்கருப்பங்கல்லில் சிற்பம் வடிக்கமுடியாது, அது உளியை உடைத்துவிடும். அது நிலைக்கல்லாக வைக்க மட்டுமே உதவும்உன் இளையவன் அப்படிப்பட்டவன்அவள் அவனை நோக்கி குனிந்துஉன்னை நீயே மதிப்பிட்டுக்கொள்என்றாள்.

ராமவர்மா நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

திருவிதாங்கூரின் நலம் மட்டுமே என் நோக்கம். நீ அதை எண்ணிப்பார்.

இளையம்மை, மென்மையான அரசன் ஒருவன் இருக்கமுடியாதா? கலைகளையும் இலக்கியத்தையும் அறிந்தவன், நெறிகளில் நம்பிக்கைகொண்டவன் அரசனாக ஆளவே முடியாதா?”

ராமா, புராணங்களில்கூட அப்படிப்பட்ட ஓர் அரசரைப்பற்றிய செய்திகள் இல்லையேஎன்றாள் பார்வதி பாய்.

ம்என்றார் ராமவர்மா.

அலக்ஸாண்டர் சக்கரவர்த்தி புல்லாங்குழல் வாசித்தபோது அவர் தந்தை வந்து பிடுங்கி வீசிவிட்டு அவர் வாயில் சூடுபோட்டார் என்று உன் ஆங்கில ஆசிரியர் சொன்னார், நினைவிருக்கிறதா?” என்று பார்வதிபாய் சொன்னாள்புல்லாங்குழல் இசைப்பவனால் கொல்லமுடியாது. கொல்லாதவன் அரசன் அல்ல.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார்.

ஒட்டுமொத்தப் பெருங்கருணையால் ஒவ்வொன்றிலும் கருணையே இல்லாமலிருப்பவனே அரசன் என்று ஸ்மிருதிகள் சொல்கின்றனஎன்று பார்வதிபாய் சொன்னாள்.

ராம வர்மா தலைதாழ்த்தி அமர்ந்திருந்தார்.

நீ சாப்பிட்டு ஓய்வெடுநான் மாலையில் வந்து உன்னைப்பார்க்கிறேன்என்று பார்வதிபாய் எழுந்தாள்.

சுப்பா பிள்ளை வந்து வாசலில் நின்றார். ராமவர்மா கையூன்றி எழுந்தார். அவர் தள்ளாடி கட்டிலுக்கு கீழே நிலத்தில் விழுந்தார். பார்வதி பாய் அதை பார்க்காதவர்போல சீரான நடையுடன் விலகிச் சென்றுவிட்டார்

பிள்ளே, வந்து என்னை பிடிஎன்றார் ராமவர்மா.

சுப்பா பிள்ளை அவரை அள்ளி தூக்கி கொண்டுசென்றார்.

பார்வதி பாய் அந்தியில் அரண்மனை முன்னால் மஞ்சலில் வந்திறங்கியபோது மார்த்தாண்ட வர்மா அங்கே வாசலிலேயே அவளைக் காத்திருந்தார். அவள் விழிகாட்டியதும் மற்றவர்கள் அகன்றனர். அவள் தாழ்ந்தகுரலில் “என்ன ஆயிற்று?” என்றாள்.

“அவரைச் சந்திக்க காலைமுதல் பத்துமுறைக்குமேல் வந்தேன். பார்க்க முடியவில்லை. உடல்நிலை சீரடையாமலேயே இருக்கிறது. எழுந்து சங்கீத அறைக்குப்போய் அங்கே தம்பூராவுடன் பகல் முழுக்க அமர்ந்திருந்தார். சற்றுமுன்புதான் படுக்கையறைக்கு சென்றார். ரெஸிடென்ட் கல்லனின் தூதுடன் பேஷ்கார் அண்ணாவிப்பிள்ளை வந்தார். அவரையும் சந்திக்கவில்லை

“டாக்டர் பென்ஸன் வந்தாரா?”

“இங்குதான் பகல் முழுக்க இருந்தார். பலமுறை சந்திக்க ஒப்புதல் கேட்டு ஆளனுப்பப்பட்டது. மறுத்துவிட்டார். இளையம்மே இரண்டு ஆண்டுகளில் அவர் ஒரு வெள்ளைக்காரரைக் கூட சந்திக்கவில்லை. வெள்ளை என்ற வார்த்தையையே இழிவாகத்தான் உச்சரிக்கிறார். அவருடைய முன்னால் எவரும் வெள்ளை என்ற சொல்லையே கூறக்கூடாது என்று ஆணை”

“ம்” என்றாள் பார்வதி பாய்

“ஆனால் அந்த தஞ்சாவூர்க்காரர்களை வரவழைத்தார். அவர்களுடன் பகல் முழுக்க இருந்தார்”

பார்வதி பாய் “நான் பார்க்கிறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள். மார்த்தாண்ட வர்மா வாசலேயே நின்றுவிட்டார்.

பார்வதி பாய் சீரான நடையில் உள்ளே செல்ல சுப்பா பிள்ளை வந்து வணங்கினார். விழிகளால் சொல் என்று அவள் ஆணையிட்டாள்

“மதியம் பால்கஞ்சியும் அதன்பின் இருமுறை பழச்சாறும் அருந்தினார். காய்ச்சல் சற்று இருக்கிறது. வயிற்றுவலியும் இருக்கிறது என நினைக்கிறேன்.”

“பகல் முழுக்க என்ன செய்தார்?”

“சங்கீத அறையில் இருந்தார்” என்று சுப்பா பிள்ளை சொன்னார். “வடிவேலு, பொன்னையா ,சின்னையா, சிவானந்தம் நால்வருமே வந்தார்கள். சேர்ந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். வடிவேலு முன்பு இங்கே காணிக்கை வைத்த வெள்ளைக்கார தோள்வீணையை எடுத்துவரச்சொல்லி ஆணை…”

“வயலினா?”

“ஆமாம்… அதை எடுத்துவந்தோம். அதை அவர்கள் சேர்ந்து வாசித்தனர். அவர்கள் சென்று ஒரு நாழிகைகூட ஆகவில்லை.”

பார்வதி பாய் தலையசைத்தாள். அவர் வணங்கி பின்னகர்ந்தார்.

பார்வதிபாய் சென்று நிற்க சேவகன் அனந்தன் நாயர் உள்ளே சென்று ராமவர்மாவை பார்த்துவிட்டு வெளிவந்து உள்ளே செல்லலாம் என்று காட்டுவதுபோல தலைவணங்கினார்.

பார்வதி பாய் உள்ளே சென்றபோது ராமவர்மா தன் கட்டில்மேலேயே அமர்ந்திருந்தார். காலையில் அவள் விட்டுச்சென்றதுபோலவே தோன்றுவதாக அவள் நினைத்தாள்.

ராமவர்மா முகமலர்ச்சியுடன் “இளையம்மை உட்காருங்கள்” என்றார்

பார்வதி பாய் அமர்ந்தாள்.

“நான் ஒன்பது கீர்த்தனங்கள் எழுதியிருக்கிறேன்” என்று அவர் உற்சாத்துடன் தொடங்கினார் “ஆறு கீர்த்தனங்கள் முன்னரே எழுதி ஸ்வரப்படுத்தி முடித்தவை. மற்றவற்றை இன்றைக்குத்தான் முடித்தேன். வடிவேலுவையும் சகோதரர்களையும் வரவழைத்து சுவரகுறை எல்லாம் தீர்த்துவிட்டேன். மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன.”

அவர் ஒரு கத்தை தாள்களை எடுத்துக்காட்டி மேலும் உற்சாகத்துடன் சொன்னார். “ஒன்பது ராகங்களில் ஒன்பது கீர்த்தனைகள். தேவி ஜகஜனனி கீர்த்தனைக்கு சங்கராபரணம்… சங்கராபரணம் ராஜராகம் இளையம்மை. முதலில் பாடப்பட்டால் அரங்குக்குள் யானை நுழைந்ததுபோலிருக்கும். அடுத்த பாடல் பாகிமாம் வாகீஸ்வரி கல்யாணியில். கல்யாணி என்றால் அலங்காரமான ராகம். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம் போல ஓர் உணர்வு வரும். தேவி பாவனே, இந்தக் கீர்த்தனையை சாவேரியில் அவைத்திருக்கிறேன். இது மங்கலமான ராகம். சுமங்கலையான பெண்கள் தாலமெடுத்து வருவதுபோல இருக்கும்”

“தோடியில் அடுத்த கீர்த்தனை. தோடி மலர்மழை பொழிவிக்கும் ராகம் அல்லவா?. பாரதி மாமவ என்னும் கீர்த்தனம்” என்று பேசியபடியே மனம் பொங்கி ராமவர்மா எழுந்து நின்றார் “ஜனனி மாமவமேயே கீர்த்தனையை பைரவியில் அமைத்தேன். அது நடனத்திற்குரியது. மயில்களாடும் லாஸ்ய நடனம். மாயூர கதி. அல்லது இளங்காற்றில் கொடிகள் ஆடுவதுபோல. அடுத்தபாடல் தென்றல் மலர்மணத்துடன் வீசுவதுபோன்ற சாவேரியில். ஜனனி பாகிசுதா”

“அடுத்தது சின்னக் குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடுவதுபோன்ற ராகம் நாட்டைக்குறிஞ்சி. தொன்மையான பண் அது. ஏராளமான நாதஸ்வரப்பிடிகள் கொண்டது. சாப்பு தாளத்தில் அமைத்தேன். பாகி ஜனனி சந்ததம் என்ற கீர்த்தனை அது. இறுதியாக பாகி பார்வத நந்தினி என்ற கீர்த்தனையை ஆரபியில் அமைத்திருக்கிறேன். அது தீயின் நடனம் போன்ற ராகம். இளையம்மை, ஆரபி என்றால் தீயின் தழல்தான்” அவர் முகமே தழல்கொண்டது போலிருந்தது.

கைகளை நீட்டி அவரே பாடினார், “பாகி பர்வத நந்தினி…” முகம் மலர “இந்தப்பாடலை எழுதும்போது கல்கத்தாவிலிருந்து நான் நிறுவிய மிருககாட்சி சாலைக்கு கொண்டுவந்த வேங்கைப்புலியை நினைத்துக்கொண்டேன். இளையம்மை, அன்றிருந்த திவான் ஸ்ரீனிவாச ராவ் உங்கள் பெயரை அதற்கு போடலாம் என்றபோது நான் சிரித்துக்கொண்டே ஆம், அதுதான் சரி என்று சொன்னேன்” என்றார்.

“ஆனால் பார்வதி என்ற பெயரையே மிருககாட்சி சாலையில் எவரும் சொல்வதில்லை.ராணி என்றுதான் சொல்கிறார்கள்.”

“நான் என்ன நினைத்தேன் என்று சொல்லவில்லையே” என்று உற்சாகத்தால் உடைந்த குரலில் ராம வர்மா சொன்னார் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி மூன்றுகுட்டிகளை போட்டதே, அப்போது நான் பார்க்கச் சென்றிருந்தேன். அதன் கூண்டை ஒட்டிய காட்டுக்குள் அது தன் குட்டியை கவ்வி எடுத்துக்கொண்டு போவதைக் கண்டு அலறிவிட்டேன். குட்டியை கொன்றுவிட்டது என்று கூவினேன். காவலர்கள் ஓடிவந்தனர், இல்லை அது குட்டியை அப்படித்தான் தூக்கிக்கொண்டு செல்லும் என்றார்கள். குட்டி அதன் வாயில் ஒரு துணிபோல துவண்டு தொங்கிக்கிடந்தது. இன்றைக்கு அது எட்டடி வேங்கையாக வளர்ந்துவிட்டது.”

“இளையம்மை, அதன்பிறகு ஓரு மாதம் கழித்து அதிலொரு குட்டி நோயுற்று எழமுடியாமல் இருந்தது. நான் மேலே நின்று பார்த்தபோது அந்தப்புலி ஒரு குட்டியை கவ்விக்கொண்டு போவதைக் கண்டேன். எங்கே கொண்டு செல்கிறது என்று கேட்டேன். அது குட்டியை எங்கோ கொண்டு செல்கிறது என்றார்கள். ஆனால் கொண்டுசென்று குதறிகொன்று புதருக்குள் போட்டுவிட்டு திரும்பிவந்தது. நோய் மற்றகுடிக்கு பரவாமலிருக்க அப்படிச் செய்திருக்கிறது என்றார்கள்… இரண்டு கவ்வுதல்களும் பார்க்க எந்த வேறுபாடுமில்லை.”

பார்வதி பாய் கீழே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“அது தேவியின் லீலை அல்லவா? தேவி பாகவதத்தில் ஒரு வரி வருகிறது, அலகில்லாத கருணையும் அலகில்லாத குரூரமும் கொண்டவள் பராசக்தி என்று” என்றார் ராமவர்மா “இங்கே நாம் நவராத்திரி பூஜையை அரண்மனைக்குள் கொலுவைத்து கொண்டாடுகிறோம். வரும் ஆண்டுமுதல் நவராத்திரியை இங்கே பெரிய விழாவாகக் கொண்டாடவேண்டும். அன்னையின் ஒன்பது முகங்களையும் சிலைகளாக நிறுவி மக்கள் அனைவரும் வந்து வழிபடவேண்டும். இந்த ஒன்பது கீர்த்தனைகளையும் ஒன்பதுநாளும் இங்கே பாடவேண்டும்…. இது அன்னையரின் மண். இந்த பெண்மலையாளத்தில் போற்றிவணங்கவேண்டியது அன்னையரைத்தான்.”

“இதெல்லாம் இப்போது பேசவேண்டியவை அல்ல” என்று பார்வதி பாய் எரிச்சலுடன் சொன்னாள்.

“இன்று காலை பேசும்போது சொன்னீர்களே, மொத்த இந்தியாவும் தாயில்லா பிள்ளை ,இந்த திருவிதாங்கூருக்கு தாய் இருக்கிறாள். என்று… அப்போது எனக்கு மெய்சிலிர்த்தது. அதன்பின் என்னால் எதையுமே யோசிக்கமுடியவில்லை. நீங்கள் சென்றபின் நான் தனிமையில் அமர்ந்து அழுதேன். அம்மா இருக்கும்போது எவர் அனாதையாக முடியும்? அம்மா இருக்கும்போது வேறு தெய்வங்கள் எதற்கு? பர்வதநந்தினீ, தேவி, என் குடிகளுக்கெல்லாம் தாயாக இருந்து காத்துகொள்ளவேண்டும் என்று தொழுதேன்” ராமவர்மா கண்கள் கலங்க விரல்களால் அழுத்தியபடி குனிந்துகொண்டார்.

பார்வதி பாய் அசௌகரியத்துடன் மெல்ல அசைந்து அமர்ந்து “ரெஸிடென்ட் கல்லனின் செய்தியுடன் பேஷ்கார் வந்திருந்தார், நீ சந்திக்கவில்லை. நான் கல்லன் துரைக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தேன், அது உண்மையா என்று விசாரிக்கத்தான் அவர் வந்தார். நீ அவரை நேரில் சந்தித்து பேசு. முடிந்தால் கல்லன் துரையிடமே பேசு. அல்லது ஒரு கடிதமாவது அவருக்குக் கொடு. மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் ஹே நம் மீது கரிசனம் கொண்டவர். இங்கே அவர் வந்தபோது நாம் நல்லெண்ணத்தை உருவாக்கியிருக்கிறோம். அவர் இங்கே சகோதரப்போர் நடக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது” என்றாள்.

ராம வர்மா அதைக் கேட்காதவர் போல காகிதங்களை அடுக்கி வைத்தார்.

“அப்படி ஏதேனும் ஒரு சந்தேகம் வந்தால்கூட திருவிதாங்கூர் மெட்ராஸ் ராஜதானியின் பகுதியாக ஆகிவிடும். இங்குள்ள மொத்த செல்வமும் அந்த கடலில் போய் கரைந்துவிடும். இங்கும் பட்டினிச்சாவும் இடப்பெயர்வும் தொடங்கும்” என்றாள் பார்வதி பாய்.

“இங்கே நவராத்திரியை எப்படி கொண்டாடவேண்டும் என்று நான் விரிவாக எழுதிப் பதிவுசெய்திருக்கிறேன். வடிவேலு சகோதரர்களிடமும் சொல்லியிருக்கிறேன்” என்று ராமவர்மா சொன்னார்.

“நீ கடிதத்தை எப்போது கொடுப்பாய்?”

“பாகிமாம் பர்வத நந்தினி” என்று ராமவர்மா சிரித்தார்.

“எனக்கு பாடல்களில் ஆர்வமில்லை…” என்று எரிச்சலைக் காட்டி பார்வதிபாய் சொன்னாள்.

“இல்லை, ஆர்வமுண்டு. எனக்குத்தெரியும். இளமையில் என் அம்மாவும் நீங்களும் இசை கற்றுக்கொண்டீர்கள். இருவரில் நீங்கள்தான் நல்ல பாடகி. நான் பிறந்த அன்றுகூட எனக்காக ‘ஓமனத்திங்கள் கிடாவோ’ பாட்டை பாடினீர்கள்… எனக்குத்தெரியும்.”

“ஆமாம், ஆனால் நான் எல்லாவற்றையும் உதறிவிட்டேன். ஒரு துளிகூட மிச்சமில்லாமல்” என்றாள் பார்வதிபாய். “இரும்பில் இருக்கும் மண்ணும் சேறும் அதை உருக்கி வாளாக ஆக்கும்போது அகன்றுவிடும்.”

“ஆனால் தங்கமிருந்தால் உருகி கலந்துவிடும்” என்றார் ராமவர்மா “பழமொழிகள் எனக்கும் தெரியும். உங்களுக்குள் கொஞ்சம் சங்கீதம் மிச்சமிருக்கும்… கொஞ்சம் இருக்கவேண்டும். எனக்காக. என் இளையம்மை நான் இயற்றிய இந்த ஒன்பது பாட்டையும் கேட்கவேண்டும். இப்போது என் குரலில் கடைசிப் பாடலையாவது கேட்கவேண்டும்”

“ராமா உன் நோய் என்ன என்று உனக்குத்தெரியாது.”

“எனக்குத்தெரியும், காசநோய்” என்றார் ராம வர்மா.

“அது எவ்வளவு கொடியது என்று தெரியாது” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“தெரியும், என் நுரையீரல்கள் அழிந்துவிட்டன… என் மூச்சு மறைந்து வருகிறது. நான் உயிர்வாழமாட்டேன்”

“இல்லை, லண்டனில் அதற்கு நல்ல மருந்துகள் உள்ளன. நான் டாக்டர்களிடம் கேட்டேன்.”

“இளையம்மை, நான் பட்டும் நகைகளும் வாங்கினேன். ஓவியம் வாங்கினேன். ஏன் தெரியுமா? எனக்குள் வண்ணங்கள் குறைந்துகொண்டே வருவதுபோலிருந்தது. வெளியே இருந்து வண்ணங்களை அள்ளி அள்ளி உள்ளே நிறைத்தேன். அழகானவற்றை மட்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். எனக்கு வேண்டியது அதுதான். வண்ணங்கள், இசை”

“நீ முழுமையாகவே குணமாகமுடியும் ராமா” என்றாள் பார்வதி பாய்.

“நான் பாடுகிறேனே” என்று ராமவர்மா சொன்னார் “என் பொன்னு இளையம்மை அல்லவா? என் செல்ல இளையம்மை அல்லவா? கொஞ்சம் கேளுங்கள்”

பார்வதி பாய் பொறுமையில்லாமல் தலையை அசைத்தாள். “நீ கடிதம் கொடுப்பாயா மாட்டாயா?” என்றாள்.

“நாளையே கடிதம் கொடுக்கிறேன். ரெஸிடென்ட் கல்லன் துரையை வணங்குகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் என் பாட்டை இப்போது கேட்கவேண்டும்” என்றார் ராம வர்மா.

“ராமா உன் உடல்நிலை மோசமாக இருக்கிறது. உன் குரலே உடைந்திருக்கிறது.”

“ஆமாம். ஆனால் என் அம்மாவுக்காக பாடவேண்டாமா? தாயே பர்வதநந்தினி, மகாகாளி, இதைக் கேட்டு அருளவேண்டும்…” என்று ராமவர்மா சொன்னர் “சாக்கியார் இதோ மேடையேறி கதை சொல்கிறார்!” கைகளை விரித்து சாக்கியார் போல காட்டி, சாக்கியார் கூத்தின் நீண்ட உச்சரிப்புடன் “முன்பொருநாள் வங்கத்து வேங்கை ஒன்றின் பாலை ஒரு சின்ன பூனைக்குட்டி குடித்து வளர்ந்தது. அந்த பூனை மியாவ் மியாவ் என்றபோது புலி உறுமியது, தன் உறுமலைக் கற்பிக்க முயன்றது. பூனையால் அதைக் கற்கவே முடியவில்லை” என்றார் “தேவீ மகாகாளீ, ரக்தபானப் ப்ரியே, அந்த பூனைக்கும் அருளவேண்டும்”

“சரி பசப்பாதே பாடு” என்றாள் பார்வதி பாய்.

“நானும் ரத்தபானம் செய்தவன்தான்… ஏனென்றால் உங்கள் முலைகுடித்தவன் நான்… எனக்கு நினைவிருக்கிறது இளையம்மை. அந்தமுலைகளில் கொஞ்சமாக மெல்லிய தித்திப்பு ஊறும். அது ஊறுவதுவரை நான் குடித்துக்கொண்டே இருப்பேன். நீங்கள் அரசியல் நடத்திக்கொண்டே இருப்பீர்கள். உங்களை அறியாமலேயே ஊறும்… அதில் ரத்தச்சுவை இருக்கும். அது ரத்தமணம் என்று பிறகுதான் அறிந்தேன்.”

பார்வதி பாய் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்

“பாடட்டுமா?”

“பாடு”

தொடையில் மெல்ல தாளமிட்டு நடனத்துக்குரிய சீரான விசையில் ராமவர்மா பாடினார்.

பாகி பர்வதநந்தினி

மாமயி பார்வணேந்து சமவதனே!

வாஹினி தட நிவாசினி!

கேசரி வாஹனே!

திதிஜாளி விதாரணே!”

ராமவர்மாவின் குரலும் மூச்சும் பாட்டுக்கு எழமுடியவில்லை. பாடி முடித்து மூச்சுவாங்க அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். பார்வதி பாய் எழுந்து ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றாள். வெளிக்கூடத்தில் மார்த்தாண்ட வர்மா எழுந்து நின்றார். அவரிடம் முகம் காட்டாமல் சென்று மஞ்சலில் ஏறிக்கொண்டாள்

மறுநாள் காலையில் பார்வதி பாய் மஞ்சலில் அரண்மனை முற்றத்திற்கு வந்து நின்றபோது அரண்மனை வளாகமே பரபரப்பாக இருந்தது. உள்ளிருந்து கண்ணீரோடு தன்னை நோக்கி ஓடிவந்த மார்த்தாண்ட வர்மாவைப் பார்த்ததுமே அவளுக்கு தான் கேள்விப்பட்டது உண்மை என உறுதியாயிற்று.

மஞ்சலில் இருந்து நிமிர்ந்த தலையுடன் இறங்கி இயல்பான இறுகிய முகத்துடன் நடந்தாள். அவளுடன் நடந்தபடி விம்மலோசை கலந்து ஏதோ சொல்ல முயன்ற மார்த்தாண்ட வர்மாவிடம் போதும் என்று கைகாட்டி விலக்கி உள்ளே சென்றாள்.

திவான் கிருஷ்ண ராவ் அருகே வந்து வணங்கினார். “ரெஸிடென்ட் கல்லனுக்கு செய்தியை முறைப்படி அறிவிக்கவேண்டும். ஜோசியர்கள் வந்து உரியநேரம் குறித்து தந்தபின் அந்த நேரத்தை மக்களுக்கு அறிவிக்கவேண்டும்…” என்று மெல்லிய குரலில் ஆணைகளை இட்டபடி நடந்தாள்.

***

தொடர்புடைய பதிவுகள்

தங்கப்புத்தகம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

இரு பார்வைகள் தங்கப்புத்தகம் நூலில் வெளிப்படுகின்றன. ஒன்று ஞானம் என ஒன்று இருக்கிறது, அதை அடையவேண்டும். அது வெளியே எங்கோ இருக்கிறது, அங்கே சென்றடையவேண்டும். இந்தப்பார்வை என்றும் உள்ளதுதான். இன்னொரு பார்வை ஞானம் என்பது எங்கும் இருக்கிறது. அதை கண்டடையும் கண்தான் வேண்டும். ஞானம் நமக்குள்ளேயே இருக்கிறது. இந்த இரண்டு பார்வைகளுக்குள்ளும் இருக்கும் மோதல்தான் இந்தக்கதை. இந்த ஒரு பார்வையிலிருந்து இன்னொரு பார்வைக்கான நகர்வு என்று சொல்லலாம். ஒரு பார்வை வெளியே சென்று பாழ்வெளியுடன் முட்டிக்கொள்ள செய்கிறது. இன்னொரு பார்வை மீட்டு எடுக்கிறது

உங்களுக்கு தெரிந்திருக்கும் பைபிளின் இரு பார்வைகளைப் பற்றிய விவாதம் எப்போதும் உண்டு. பைபிள் சொர்க்கராஜ்ஜியம் வரவிருக்கிறது என்று சொல்கிறது. ஆனால் நக் ஹம்மாதியில் கண்டடையப்பட்ட தொன்மையான புனித தோமஸின் சுவிசேஷம் சொர்க்கராஜ்ஜியம் வந்துவிட்டது, அது உங்கல் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்று சொல்கிறது.

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நலம். நலம் விழைகிறேன்.

 

மனதைக் கொஞ்சம் நீட்டி முறுக்கெடுத்து விட்டு உடனடியாக மறு மராத்தானுக்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள். ஆனால் எனக்கு இன்னும் அந்த அறுபத்தொன்பது கதைகளையே வாசித்து முடிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு எழுகிறது. இம்முறை தினமும் தவறாமல் அனைத்து கதைகளையும் வாசித்தே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன். ஆனால் பாருங்கள் காலை முதல் பகுதியை வாசித்து முடித்தேன். அலுவல் முடிந்து வந்து மறுபகுதியை முடிக்க இந்நேரம் ஆகி விட்டது. ஒரு பார்வையில் நாள் முழுக்க தங்கப் புத்தகம் ஒரு முழு நாளும் மனதில் அலைந்த படியே மிதந்த படியே இருந்து கொண்டிருக்கிறது.

முதலிலேயே பாடபேதம் குறித்த சில வரிகள் அற்புதம். அவையே மீண்டும் கதையின் மையமாக ஆகும் காட்சிகள் நான் கண்டிருந்த கனவை மீண்டும் எழுப்பி அடையாளம் காட்டுவது போல் இருந்தது. பழையநூல்கள் காலத்தால் வடிகட்டப்பட்டவை என்ற சொல்லில் இருந்தே இந்த கதையின் மிரட்சி தொடங்கி விடுகிறது. நூலில் இருந்து எதைப் பெற வேண்டும், அறிவையா, ஞானத்தையா, தருக்கத்தையா என்ற கேள்விகள் வரும் போதே மெளனத்தை என்ற பதில் விழிக்கும் முன் வருகிறது. நகல்கள் அத்தனையும் வெவ்வேறானவை அவை அசலின் பிரதிபலிப்புகள் என்று நினைப்பதே எத்தனைக் குறுக்கல்வாதம்.

திபெத்தின் வரலாறும் அதன் மடாலயங்களில் நிலவும் கட்டமைப்பும் அற்புதமான கனவுகளைத் தந்தன. தியாக மயானங்கள் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. அங்கு கழுகுகளுக்குச் சடலங்களை உண்ணத் தரும் சடங்குகள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சொராஸ்டிர இனத்தவரைப் போலவே இங்கும் அப்படியொரு பழக்கம் இருப்பதை அறிந்து கொண்டென்.

ஞானக்கடல் என்ற ஞானி தவமேற்கொண்டு தன் மனதைக் கைகளில் மணியைக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார். விரல்களே எண்ணங்களின் நீட்சி என்பதை உணர்ந்து கொண்டேன். அதிலிருந்து எழும் அலையே அவரது உரையாடல். இப்படி எழுந்து கொண்டே இருக்கின்றன வர்ணனைகள்.

நினைவில் மிகவும் ஆழப்பதிந்த ஒன்று. ஒலியின்றி நடைபோடுகையில் நமது சமநிலை குலைந்து விடுவது போன்ற உணர்வு எழுவது குறித்த சொற்றொடர்கள். பின்னர் வரும் தொடர் விவரிப்புகள் அலைக்கழிப்பை உருவாக்குபவை. ஒரு நூலை மட்டுமேனும் முற்றிலுமாய் விழுங்கிக் கொள்ள எண்ணம் கொள்பவர்களின் விழிக் கருவளையங்கள் எத்தனை சோர்வு தரும் காட்சி.

சுழலடுக்கு படிகளில் இருளில் பாதை காட்டும் ஒளி பட்டாம்பூச்சியாய் மாறும் கண நேரக்கவிதையை, பணி முடியும் தோறும் கொள்ளும் ஏமாற்றத்தை, எழுத்துப் பூச்சி எங்கு வேண்டுமானாலும் தன்னை பொருத்திக் கொண்டு திரியும் மாயத்தை என ஒரே ஒரு கதையில் விரிந்து கொண்டே போகும் அர்த்த வனங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தின. முடியாது கிளர்ந்தெழும் கனவுகளைத் தருவது உங்களது கதைகள். கனவுகளில் மூழ்கி இறக்கும் இறப்பை மிகச் சிறந்த மரணமாகக் குறிப்பிட்டு ஒரு பத்தி வரும். அத்தகைய கனவுகளுள் ஒன்றை உங்கள் கதைகளுள் ஒன்று எங்களுக்குத் தரக்கூடும்.

தங்கப் புத்தகம் ‘நீலம்’ நாவலாகவும் இருக்கக்கூடும் என்ற ஒரு மயக்கம் வாசிப்பின் இடையிடையே தோன்றியது. ஓவியங்கள் கூட இருளுக்கும் ஒளிக்கும் இடையில் பலவிதமாய் மாற்றம் கொள்ளும் எனில் சொற்களுக்கு அத்தகைய நடனக் கலை எளிதில் கைவராது போய்விடுமா என்ன? முடியாது கிளர்ந்தெழும் கனவுகளைத் தருவது உங்களது கதைகள். கனவுகளில் மூழ்கி இறக்கும் இறப்பை மிகச் சிறந்த மரணமாகக் குறிப்பிட்டு ஒரு பத்தி வரும். அத்தகைய கனவுகளுள் ஒன்றை உங்கள் கதைகளுள் ஒன்று எங்களுக்குத் தரக்கூடும்.

இம்முறையாவது எழுதும் அத்தனைக் கதைகளையும் அன்றன்றே படிக்க வேண்டும்.

 

நன்றி.

தங்கள் அன்புள்ள

கோ.கமலக்கண்ணன்.

 

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் என்பது திபெத்தேதான். திபெத் பற்றி மேலைநாட்டவரின் பலவகையான வாசிப்புகளைத்தான் கூடு, கரு கதைகளின் முகப்பில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் முக்தா. அந்த வாசிப்புகளுக்கு அப்பால் திபெத் என்பது என்ன என்பது நம் ஒவ்வொருவராலும் சென்றடையவேண்டிய விஷயம்

இந்தக்கதையிலும் வரும் திபெத் மர்மமான நிலம். வெலியே வெண்ணிற்மான வெறுமை. உள்ளே வண்ணமயமான மடாலயங்கள். மலைகளின் அமைதி. குளிர். எங்கும் தனிமை. அந்த நிலம் என்பது ஒரு பெரிய வசீகரம்தான். அந்த நிலம் ஏன் வசிக்க்கரமாக இருக்கிறது என்றல் அது மொத்தமாகவே ஒரு அன்மீகமான குறியீடாக மெல்லமெல்ல மாறிவிட்டது என்பதனால்தான். அதையும் முக்தா இன்னொரு கதையில் சொல்கிறார்

 

ரவிச்சந்திரன்

அன்புள்ள ஜெ,

‘கரு’ குறுநாவலை வாசித்த பின்  எனக்குள் ஏற்ப்பட்ட பிரம்மிப்பு, திபத் மலைகளின் தரிசனமும், நிலப்பரப்புகளும் என்னுள் பெரும் கனவை உருவாக்கியது. அதிலே சில நாள் திலைத்திருந்த எனக்கு ‘தங்கப்புத்தகம்’ குறுநாவலும் அதே நிலப்பரப்பை மீண்டும் என்னுள் நிலை நிறுத்திவிட்டு அதனூடாக பனிப்போர்த்திய மலைகலைகளிலும், கரும்பாறைகளலும், புத்த குகைகளிலும்,  முக்தா, பட்டுடன் பயனித்தேன். என்னால் எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை உண்மையில். இலக்கிய வாசிப்பு இப்போது தான் தொடங்கி இருக்கும் எனக்கு இக்கதையை வாசித்த பின் ஏற்பட்ட என் அகயெழிச்சிகளை, பிரமிப்புகளை மொழி கோர்வையாகவும் என்னால் முழுமையாக எழுதிவிட முடியவில்லை. இருப்பினும் இதில் பயனித்து பேரனுபத்தைப் பெற்றுவிட்டேன். அதில் அந்த சூரிய ஒளி பட்டு செந்நிறமாய் ஒவ்வொரு மலைமுடியும் தோன்றும் காட்சி சித்திரம் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. தங்களின் படைப்பின் மூலம் வாசிப்பனுவத்தை வளர்த்துக் கொள்ளும் எனக்கு ‘தங்கப்புத்தகம்’ பெரும் தரிசனம். நன்றி ஆசான்.

சரண்ராஜ்

தொடர்புடைய பதிவுகள்

குமிழி,மலையரசி- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கேரளத்தில் இந்த வரலாற்றுக் கதைகளை இதுவரை எவருமே எழுதவில்லையா ? இப்போது உங்களை எழுதத் தூண்டுவது எது ?

ஒவ்வொரு கதையும் அற்புதம். அவை இணைந்துகொள்ளும் விதமும் அற்புதம்

மது சம்பத்

 

அன்புள்ள மது,

 

இங்கே இரண்டு வகையான இந்தியவரலாறுகள் எழுதப்பட்டன. ஒன்று காலனியாதிக்கவாதிகளால் எழுதப்பட்ட வரலாறு. அது அரசவரிசை, படையெடுப்புகள் ஆகியவற்றைச் சார்ந்தது. இன்னொன்று தேசியவரலாறு. தேசப்பெருமிதம் சார்ந்தது.

காலனியாதிக்கவரலாற்றெழுத்தும் சில விடுபடல்களை கொண்டது, சில பிழைகளை உருவாக்கியது.தேசிய  வரலாற்றெழுத்தும் இணையான விடுபடல்களும் பிழைகளும் கொண்டது. தேசிய வரலாற்றெழுத்து விடுதலைப்போராட்டத்திற்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க ஆளுமைகளை வரலாற்றில் கண்டெடுக்கும் நோக்கம் கொண்டது. ஆகவே வெள்ளையரை எதிர்த்த ஆளுமைகளை அது தேசிய வீரர்களாக ஆக்கியது. அடுத்தபடியாக இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள்.

வேலுத்தம்பி தளவாய், பழசி ராஜா, கட்டப்பொம்மன் போன்றவர்கள் இத்தகையவர்கள். இவர்களெல்லாமே முதலில் வெள்ளையரை ஆதரித்து கப்பம் கட்டியவர்கள், வெள்ளையருக்காக இந்திய அரசர்கள்மேல் தாக்குதல் தொடுத்தவர்கள். திப்புசுல்தானின் போர் பெரும்பாலும் சக இந்திய அரசுகளின்மீதுதான் என்றும் மலபாரும் திருவிதாங்கூரும் அவரால் சூறையாடப்பட்டன என்றும் சொல்லமுடியாத நிலை உருவானது.

இந்த இரு வரலாற்றெழுத்திலும் விடுபடுபவர்கள் அரசிகளும், அமைதியான முறையில் வளர்ச்சிகளை உருவாக்கியவர்களும்தான். உண்மையில் மேலே சொன்ன ‘மாவீரர்கள்’ அரசியல்சூழலை உணராதவர்கள், சாகசக்காரர்கள். இந்த அறிவிலா சாகசக்காரர்களை முன்னுதாரணமாக நிறுத்தும்போக்குதான் கீழைநாடுகள், வளராநாடுகளில் பேரழிவை உருவாக்குகிறது. ஐரோப்பா அதை கடந்துவிட்டமையாலேயே அது வெல்கிறது

ராணி பார்வதிபாய் அடிமை ஒழிப்பு, இலவச ஊழிய முறை ஒழிப்பு என தொடங்கி திருவிதாங்கூரின் அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டவர். ஆனால் அவர் வரலாற்றில் வெள்ளையரை தாஜா செய்தவராகவே பதிவாகியிருக்கிறார். ராணி மங்கம்மாள் இல்லாமல் இன்றைய தென்தமிழகமே இல்லை. ஆனால் அவர் ஔரங்கசீப்புக்கு கப்பம் கட்டி படைகளை திருப்பியனுப்பிய கோழை என்றே சொல்லப்படுகிறார். இந்த விடுபடல்மீது எப்போதுமே எனக்கு ஒரு மறுப்பு இருந்தது. இந்தக்கதைகள் அதிலிருந்து உருவாகின்றன

நம் வரலாறு என்பது மறக்கப்பட்ட அன்னையரும் மிகையாக துதிக்கப்பட்ட வீரர்களும் அடங்கியது. அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. புனைவு அந்த மையவரலாற்றுக்கு எதிரான ஊடுருவல்.

இது கேரளவரலாறு குறித்த கதைகள் மட்டுமல்ல- சூழல் மட்டுமே கேரளம் சார்ந்தது.

 

ஜெ

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

‘லட்சுமியும் பார்வதியும்’ சிறுகதை வாசித்தேன். பெருவியப்பாக இருந்தது. எந்த பேரரசரும் (எனக்கு தெரிந்த வரையில்) சிந்திக்காததை அல்லது நிறைவேற்றாததை, ஒரு 13 வயது பெண் (பார்வதி பாய், அரச படியில் உள்ளவர்) இவ்வளவு நுட்பமாக  ஒரு அரசை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று விளக்கியது வியப்பாக இருந்தது. இங்கே நாம் மார்தட்டிக் கொள்ளும் அரசர்கள் புகழின் இடையில் ஒரு மாபெரும் வெளிச்சமாக தோன்றுகிறார் ராணி பார்வதி பாய்.

மன்னனை அமைச்சன் மிரட்டியது எனக்கு புதிதாக இருந்தது. மன்னன் என்றால் ஒரு பிம்பத்தை நாம் எப்போதுமே மனதில் நிலை நிறுத்திக் கொள்கிறோம். வீரன், சூரன், அனைத்தையும் வென்றவன், அழகன், கம்பீரமானவன்  போன்றவற்றால் அவனை ஒரு more than life மனிதனாகவே நாம் அறிகிறோம். ஆனால் ராஜராஜ வர்மா தன் அமைச்சனால் மிரட்டப்படுவதும் அப்படி அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாடுகளை கைப்பற்றிய பிரிட்டிசாரின் பேரில் அவர்கள் செய்த கொடுமைகளுக்கு இதுவும் ஒரு சாட்சி.

ராணி லட்சுமியும், ராணி பார்வதியும் பாடும் பாட்டை நான் இறுதியில் வாய்விட்டு பாடிக்கொண்டே போனேன். அதன் அர்த்தம் முழுமையாக புரியா விட்டாலும், அதன் ராகம் எனக்கு கிட்டியது. அது ஒரு ஆனந்தப் பயணம். காயலில் தனிமையில் இரவில் இரு உள்ளங்களுடன் ஓராயிரம் நட்சத்திரங்களும் அவர்களோடு சேர்ந்து பாடியிருக்கும்.

 

அன்புடன்,

பிரவின்

தர்மபுரி

 

அன்புள்ள ஜெ

 

குமிழி அழகான சிறிய கதை. மண்ணில் இருந்து ஒரு சின்ன உதடு குவிந்து வந்து ஒரு சொல்லை உரைத்து குழந்தையாக ஆகும் அந்த இடம் வாசிக்க வாசிக்க மலர்ந்துகொண்டே செல்லும் அழகான கவிதை. முழுக்கமுழுக்க கவித்துவத்தாலேயே தொடர்புறுத்தும் கதை. மண்குழைவது, மண் திரண்டு உருவாகி மீண்டும் மண்ணாவது எல்லாமே அழகான படிமங்கள். சம்ஸ்கிருதத்தில் மிருண்மயம் என்று உடல் சொல்லப்படுகிறது. மண்ணாலானது இந்த உடல்.

 

சாரங்கன்

 

வணக்கம் ஜெ

 

குமிழி சிறுகதையை வாசித்தேன். //மனம் கனியும் போது களிமண்ணு பூக்கும்// அந்தத் தொடரே இந்தக் கதையின் திறப்பு. வள்ளி விசும்பலுடன் அழும் தருணம் மனம் கனிந்து பாவையை வனைய முன்வருகிறாள். யட்சி இழந்த குழந்தை பொருட்டுக்  கொஞ்சி அழுது அரற்றிக் கனிந்து குழந்தை வரம் அளிப்பதும் அக்கணத்தில்தான்.நெஞ்சில் இருக்கும் தீயை மறந்து கலம் எழுகிறது மாதவனின் கைகளில்.

 

அரவின் குமார்

தொடர்புடைய பதிவுகள்

குமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி

$
0
0

 

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது முன்னிட்டு கவிஞர் வேணு வேட்ராயன் உடன் காளிப்ரசாத் கேள்வி கேட்க ஒரு நேர்காணல் செய்திருக்கிறோம். அந்த காணொளி உங்கள் பார்வைக்கு.
அன்புடன்
சுரேஷ் பாபு

தொடர்புடைய பதிவுகள்

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

$
0
0

விசித்திரமான குற்றம், தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி ஐம்பது வயதான, துளுபேசும் பிராமணர். கிருஷ்ண பட் என்றுபெயர். சற்றே கூன்கொண்ட ஒல்லியான உடம்பு. குழிந்த கன்னங்களும், முன்னுந்திய பற்களை இழுத்து மூடிக்கொண்டமையால் சற்றே குரங்குச்சாயல் வந்துவிட்ட வாயும், பரந்த மூக்கும் கொண்ட உடுப்பி முகம்.

அவரை உள்ளே அழைக்கும் வரை நான் குற்றத்தைப் பற்றி மிகத்தீவிரமான நிலைபாடு கொண்டிருந்தேன். எந்த நிர்வாக அதிகாரியும் மன்னிக்கமுடியாத குற்றம். ஊடகங்களுக்கு தெரிந்தால் தேசிய அளவில் நாறிப்போகும். குற்றவாளியை முன்னுதாரணமாகத் தண்டிக்கவேண்டும், ஆனால் குற்றம் சம்பந்தமாக எச்செய்தியும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று எனக்கு மேலிடத்திலிருந்து ஆணை வந்திருந்தது. வேறேதேனும் ஒரு காரணத்தை உருவாக்கி தண்டிக்கவேண்டும். நிரந்தர வேலைநீக்கம் கூட பரிசீலிக்கப்படலாம்.

காசர்கோடு மங்களூர் சாலையில் கும்பளா என்ற ஊரில் வசித்துவந்த ஹாஜி தெங்குவீட்டில் அப்துல் ரஹ்மான் என்பவர் சென்ற மாதம் மறைந்தார். எண்பத்திநான்கு வயது. மிகப்பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர், பிறவிப் பணக்காரர். அவருடைய மகன்கள் இருவருமே மும்பையிலும் சௌதி அரேபியாவிலும் வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவர் மட்டும் இங்கே தனியாக வேலைக்காரர்களின் பராமரிப்பில் இருந்தார். அவர் தங்கியிருந்த பாரம்பரிய வீடு கடலோரம் ஒரு தென்னந்தோப்புக்குள் இருந்தது.

அவர் இறந்தபின் அவருடைய தொலைபேசி எண் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதை திரும்ப எடுப்பதற்காகச் சென்ற டெம்பரரி லைன்மேன் பிரபாகரன் ஒரு விஷயத்தைக் கவனித்தான். அந்த வீட்டுக்கு இன்னொரு தொலைபேசி எண் தொடர்பும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆவணங்களின்படி அந்த வீட்டுக்கு ஒரு தொலைபேசி இணைப்புதானே எனறு அவன் உறுதிசெய்துகொண்டான். அங்கிருந்த ஒரு ஃபோன் அந்த எண்ணுடன் தொடர்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால் இன்னொரு எண் எங்கே?

பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜூனியர் எஞ்சீனியர் சாபு ஆப்ரகாம் அங்கே சென்று அந்த வீட்டை ஆராய்ந்தார். உண்மையில் இரண்டு இணைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அருகிலிருந்த டிஸ்ட்ரிப்யூஷன் பாக்ஸிலிருந்தே லைன் இழுக்கப்பட்டிருந்தது. அந்த ஃபோனின் இணைப்புமுனை ஹாஜியின் படுக்கையறைக்குள் இருந்தது. ஆனால் அங்கே ஃபோன் ஏதும் இல்லை. அதை இணைத்திருந்த ஃபோன் எங்கே?

ஒன்றும் புரியாமல் சாபு ஆப்ரகாம் அந்தச் செய்தியை ஏ.இ.ராமச்சந்திரன் நாயருக்கு தெரிவித்தார். அவர் இறங்கி விசாரணை செய்தார். ஹாஜி அப்துல் ரகுமானின் மகன்கள் இருவருக்கும் உண்மையிலேயே ஒன்றும் தெரியவில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளில் ஒருமுறைகூட அவர்கள் அங்கே வரவில்லை என்றார்கள்.

ஹாஜிக்கு மூன்று மகள்கள். மூவருமே துபாயில் இருந்தார்கள். அந்த வீடு ஆமினாம்மா என்ற தாட்டியான வலுவான கிழவியால் பராமரிக்கப்பட்டது. அவளே சமையற்காரி. அவளுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவளுக்கு கல்வியறிவே இல்லை. எதை கேட்டாலும் “னிக்கு ஒந்நும் அறியில்ல ன்றே ரப்பே!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு உதவியாக ஏழு வேலைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் வீட்டையும் தோட்டத்தையும் பராமரித்தனர். பொருட்களை வாங்கிவந்தனர். காவல்காத்தனர். அனைவருமே படிப்பறிவற்ற உலகம் தெரியாத உள்ளூர் முஸ்லீம்கள். அவர்கள் எவரும் வாழ்நாளில் ஒருமுறைகூட ஒரு ஃபோனை காதில் வைத்தவர்கள் அல்ல.

ஹாஜியின் மகன் தெங்குவீட்டில் முகமது ராஃபி மும்பையில் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திவந்தார். நூற்றுக்குமேல் வேலைக்காரர்களும் பதினொன்று அலுவலகங்களும் கொண்ட அந்நிறுவனம் ஒருநாள்கூட அவரில்லாமல் நடக்காது. அவருக்கு எதற்குமே நேரமில்லை. மாதத்திற்கு ஒருமுறை தந்தையுடன் பேசுவதோடு சரி.

அப்துல் ரஹ்மான் சாகிபின் இன்னொரு மகனாகிய தெங்குவீட்டில் முகமது இப்ராகீம் தந்தையின் கபரடக்கத்திற்கு வந்தபின் உடனே சென்றுவிட்டார். அவர் சௌதி அரேபியாவில் ஒரு பெரிய ஷாப்பிங் மால் உரிமையாளர். ஒரு சூப்பர் மார்க்கெட்டும் நடத்தினார். அவரும் அவருடைய தொழிலால் கவ்வப்பட்டவர். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை அவருக்கு ஃபோன் வந்துகொண்டே இருந்தது. வீட்டில் ஃபோனருகிலேயே அமரவேண்டிய நிலை.

முகமது ராஃபி அவரும் உடனே மும்பைக்குக் கிளம்பவேண்டும் என்றார். இல்லை, விசாரணை நடத்தியாகவேண்டும், சொத்து உங்கள் பெயருக்கு வரப்போவது, நீங்கள்தான் பொறுப்பு என்று சொல்லி நிறுத்தி வைத்தனர். அவர் மங்களூரில் ஒரு ஓட்டலில் தங்கி விசாரணைக்கு முழு ஒத்துடைப்பு கொடுத்தார். ஓரிரு விசாரணைகளுக்கு பின் அவரை போகச்சொல்லிவிட்டார்கள்.

ராமச்சந்திரன் நாயர் முகமது ராஃபி முன்னிலையில் அந்த வீட்டை ஆராய்ந்தபோது அந்த இன்னொரு ஃபோனை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்த லைன் அறுபட்டதுபோல கிடந்தது. அந்த போன் ஹாஜியின் படுக்கையறையில் இருந்திருக்கவேண்டும். ஆனால் அதை எடுக்க முடியவில்லை.

அந்த இரண்டாவது இணைப்பு எண் எவருடையது? ராமச்சந்திரன் நாயர் டெலிஃபோன் எக்சேஞ்சில் ஆராய்ந்தபோது ஐந்தே நிமிடத்தில் அதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அது ஒரு பேரலல் இணைப்பு. அதிலிருந்த எண் சீரோ.

ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்சில் ஸீரோவை ஒரு பொதுவான எண்ணாக வைத்திருப்பார்கள். அது டெஸ்டிங் செய்வதற்குரிய எண். எக்ஸேஞ்சில் உள்ள எந்த எண்ணில் பேச்சு ஓடினாலும் அதில் கேட்கும்.

பொதுவாக அன்றெல்லாம் எந்த தொலைபேசிப் பேச்சையும் ஊழியர்கள் கேட்கமுடியும். ஊழியர்கள் விரும்பினால் உள்ளே சென்று அவர்களிடம் பேசமுடியும். உங்கள் இணைப்பு மூன்றுநிமிடம் ஆகிவிட்டது, ஆறு நிமிடம் ஆகப்போகிறது, இன்னும் ஒரு நிமிடம்தான் உள்ளது என்ற அறிவிப்புகளை அளிக்கலாம்.

ஒர் அழைப்பு எக்காரணம் கொண்டும் ஒன்பது நிமிடங்களுக்கு மேல் போகக்கூடாது என்பது அன்றைய விதிமுறை. தொலைபேசி அழைப்புகள் செலவேறியதாக இருந்த காலம். மூன்றுநிமிடம் உள்ளூரில் சாதாரண அழைப்புக்கு ஒரு ரூபாய் ஆகும், அதாவது ஒரு அளவுச்சாப்பாட்டின் விலை. டெலிஃபோன் என்பதே பணக்காரர்களின் கருவி, அம்பாசிடர் கார் போல ஒரு கௌரவச்சின்னம்.

டெலிஃபோன் வேண்டுமென்றால் பதிவுசெய்துவிட்டு ஆறாண்டுகள் வரை காத்திருக்கவேண்டும். அல்லது வேறு எவராவது வாங்கி அவர் பெயரில் வைத்திருக்கும் எண்ணை பகிடி என்னும் கூடுதல் பணம் கொடுத்து சட்டவிரோதமாக வாங்கவேண்டும். அதற்கு அந்த இன்னொருவர் உங்கள் விலாசத்தில்தான் தங்கியிருக்கிறார் என்பதற்கான போலி ஆவணங்களை தயாரிக்கவேண்டும். லைன்மேனின் உதவியும் தேவை.

எந்த ஆவணமும் இல்லாமல் ஒரு ஹாஜிக்கு இணைப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதுவும் எல்லா எண்களும் பேசுவதைக் கேட்கும் ஸீரோ என்னும் எண். பகலில் அதில் எவரேனும் எண்களை சோதனை செய்து கொண்டிருப்பார்கள். இரவில் அதில் எவரேனும் பேசுவதைக் கேட்கலாம்.

நான் சந்தேகப்பட்டது அப்துல் ரஹ்மான் ஹாஜியின் நிழல் உலகம் பற்றி. அவருடைய குடும்பம் பழங்காலம் முதலே கடல்வணிகம் செய்துவந்தது, இந்தியச் சட்டத்தின்படி அது பிறகு கள்ளக்கடத்தல் என்று ஆகியது. அது மங்களூர் முதல் கோழிக்கோடு வரை பரவியிருக்கும் ஒரு நிழல்உலகம். பொதுவாகவே சட்டம் அதை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அவர்கள் பொதுமக்களில் எவரையேனும் தாக்கினாலொழிய அவர்கள் செய்திக்கே வருவதில்லை.

ஆனால் அப்துல் ரஹ்மான் சாகிப் அவருடைய குடும்பத்தொழிலில் இருந்து அகன்று முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகிறது என்றார்கள். அவர்கள் வளைகுடா சார்ந்த வணிகங்களுக்கு திரும்பிவிட்டனர். ஹாஜி சென்ற நான்காண்டுகளாக உடல்நலமில்லாமல் இருந்தார். பெரும்பாலும் படுக்கையிலேயே இருந்தார். அவருக்குப் பக்கவாதம் இருந்தது. நான்காண்டுகளுக்கு முன் ஒரு கையும் காலும் இழுத்துக்கொண்டது. அதன்பிறகு இடைக்குக் கீழ் அசைவில்லாமல் ஆகியது.

அவர் மிகுந்த எடைகொண்டவர். மிகப்பெரிய உடல். இந்தப் பகுதியில் நெடுங்கால ஆப்ரிக்க தொடர்புகள் இருந்தன. ஹாஜியின் படத்தை பார்த்தால் அவரை ஒரு எத்தியோப்பியர் என்றே சொல்லமுடியும். அவருடைய இரண்டாவது மகனும் ஆப்ரிக்கச் சாயல் கொண்டவர். அந்த எடை அவரை படுக்கையிலிருந்து எழமுடியாமலாக்கியது.

ஹாஜியின் அறையைச் சோதனையிட்டபோது கிடைத்த ஒரு சிறிய மைக்ரோஃபோன் கிடைத்தது. அதில் அந்த டெலிஃபோன் கேபிளை இணைப்பதற்கான போர்ட் இருந்தது. அதைக் கொண்டுவந்து டெலிஃபோன் கேபிளுடன் இணைத்தபோது டயல்டோன் ஒலிப்பெருக்கியில் ஒலிப்பதுபோல அறையை நிறைத்து ஒலித்தது. பேச்சுக்கள் ரேடியோ போல முழங்கின.ஹாஜி அதைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்

அவர் தொலைபேசித்துறையில் எவருடையவோ உதவியுடன் ஃபோன்களை ஒட்டுக்கேட்டிருக்கலாம் என்று ஜிஎம் சந்தேகப்பட்டார். பெரும்பாலும் அவர்களின் எதிர்குழுவாக இருந்த மெட்டால கோவிந்த ரையின் தம்பியான மெட்டால கேசவ ரையின் குழுவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருபத்தேழு ஃபோன்கள் இருந்தன. அதைத்தவிர போலீஸ் அதிகாரிகளின் எண்கள் பதினெட்டு. கடலோரக் காவல்துறையின் எண்கள் எட்டு. என்ஃபோர்ஸ்மெண்ட் துறைக்கு ஆறு எண்கள். அரசுத்துறை எண்கள் மட்டும் மொத்தம் நூறுக்குமேல்.

உளவறிதல் நடந்திருந்தால் அச்செய்தியை முதலில் என்ஃபோர்ஸ்மெண்ட் துறைக்குத் தெரிவிக்கவேண்டும். அதில் உடனே பாதிக்கப்படவிருப்பவர் டெலிஃபோன் எக்சேஞ்சின் பொறுப்பிலிருக்கும் அதிகாரியான ஜூனியர் எஞ்சீனியர் சாபு ஆப்ரகாம், அவருக்கு உயர்பொறுப்பில் இருக்கும் ஏ.இ ராமச்சந்திரன் நாயர் ஆகியோர். அது செய்தியாக வெளிவருமென்றால் மேலும் தலைகள் உருளும்.

ஆகவே கீழிருக்கும் ஒரு தலையை மட்டும் உருட்டி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நான் ஆணையிடப்பட்டிருந்தேன். எல்லா முதற்கட்ட விசாரணைகளும் சென்று நின்றது கிருஷ்ணபட் என்பவரில். அவர்தான் அந்தப்பகுதியின் லைன்மேன். மாற்றமே இல்லாமல் பத்தொன்பது ஆண்டுகளாக அப்பகுதியின் லைன் மேனாக இருந்துவந்தார். ஹாஜி இறந்தபின் அவருடைய டெலிபோன் திரும்ப ஒப்படைக்கப்பட்டபோது கிருஷ்ண பட் லீவிலிருந்தார்.

அன்றைய டெலிபோன் தொடர்பு பெரும்பாலும் தலைக்குமேலே செல்லும் இரும்பு மற்றும் செம்புக்கம்பிகளால் ஆனது. அவை வலுவான மட்டை விழுந்தாலே அறுந்துவிடக்கூடியவை. கொடிகள் படர்ந்தால் லூப் ஆகிவிடுபவை. ஆகவே அந்த நிலத்தை நன்கறிந்தவர்களால்தான் கம்பிகளைச் சரியாகப் பேணமுடியும். பெரும்பாலான லைன்மேன்கள் அந்த கம்பிகளை தூண்கட்டி நட்டவர்களாகவே இருப்பார்கள். விலங்குகள் ‘டெரிட்டரி’ பாதுகாப்பதுபோல அவர்கள் தங்கள் பகுதியை காபந்து செய்வார்கள்.

கிருஷ்ண பட் உள்ளே வந்தபோது அவரிடம் எந்த தயக்கமும் தென்படவில்லை. குற்றம் செய்தவருக்குரிய தயக்கம் மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டவருக்குரிய பதற்றம்கூட இல்லை. கைகூப்பி வணங்கினார். உட்காரும்படிச் சொன்னேன். நாற்காலியில் ஒடுங்கி அமர்ந்தார். மிகச்சிறிய மெலிந்த உருவம். ஏதாவது கைவிடப்பட்ட கோயிலில் இருண்ட கருவறையில் பூசாரியாக நின்றிருக்கவேண்டிய தோற்றம்.

நான் அவரை கூர்ந்து பார்த்தேன. நான் ஏற்கனவே படித்திருந்த ஆவணங்களை அப்போதுதான் பார்ப்பதுபோல புரட்டி கூர்ந்து நோக்கினேன். அதெல்லாமே எங்கள் விசாரணை தந்திரங்கள். ஒரு பேனாவால் சிறு சொற்களை குறிப்பேட்டில் எழுதிக்கொண்டு நிமிர்ந்து பெருமூச்சுடன் “ராமச்சந்திர பட் கிருஷ்ண பட். ஹெப்பார் என்று குடும்பப்பெயர். நீங்கள் மாத்வர்களா?” என்றேன்.

“இல்லை, நாங்கள் ஸ்மார்த்தர்கள்” என்றார்.

“போற்றிகளா?”

“இல்லை, ஹெப்பார் என்றால் தேருடன் சம்பந்தப்பட்டவர்கள். கோயில்பூசை செய்வதுண்டு. அப்பா கோயிலில் வேலைபார்த்தார்.”

“ஓகோ” என்றேன். “உங்களுக்கு அப்துல் ரஹ்மான் ஹாஜியை எப்படித் தெரியும்?”

“நான் டெம்பரரி மஸ்தூராக வந்ததே இங்கேதான். அவர் வீட்டுக்கு ஃபோன் பழுதுபார்க்க போனபோதே தெரியும்.”

“எப்போது?” என்றேன். “ஏறத்தாழ சரியாக ஆண்டைச் சொல்லமுடியுமா?”

“1959, தேதியையே சொல்லமுடியும், அது ரம்ஸான் நாள்”

“என்ன நடந்தது?”

“நான் அதற்கு முன் இரண்டு ஆண்டுகள் மங்களூரில் வேலைபார்த்தேன். அன்றைக்கு மங்களூரும் காசர்கோடும் ஒரே ரீஜியன். அங்கே நான் கூலிவேலைதான் செய்தேன். இங்கே அப்போதுதான் நிறைய ஃபோன்கள் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆகவே இங்கே மாற்றினார்கள்.”

“டெம்பரவரி மஸ்தூரா?”

“ஆமாம், ஒரு மணிநேரத்திற்கு நாற்பத்தைந்து பைசா சம்பளம். ஒருநாளுக்கு இரண்டேகால் ரூபாய்…”

“அன்றைக்கும் அது குறைவான சம்பளம்தான்”

“ஆமாம், ஆனால் போகிற இடத்தில் ஐம்பதுபைசா ஒரு ரூபாய் என்று கொடுப்பார்கள். ஒருநாள் எப்படியும் மூன்று ரூபாய் கிடைத்துவிடும். ஒருநாளுக்கு ஐந்தாறு ரூபாய் என்றால் அன்று பெரிய சம்பளம். அதில்பாதிகூட அன்று எந்தக் கூலிவேலைக்கும் கிடைக்காது.”

“ஹெப்பார் நீங்கள் ஏன் லைன்மேன் வேலைக்கு வந்தீர்கள்?”

“என் அப்பா வைதிகர்தான்… கோயில்வேலை பார்த்தார். யக்ஷகானம் ஆடுவார். எனக்கும் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு எட்டு குழந்தைகள். அவர் கிட்டத்தட்ட பட்டினியால்தான் செத்தார். சாகும்போது என் பிள்ளைகளை பசிக்கவிடாதே கிருஷ்ணா என்றுதான் சொன்னார்” என்றார் கிருஷ்ண பட்.

“நான் ஓட்டலில் வேலைபார்த்தேன். இரவும் பகலும் வேலை. ஆனால் ஒருநாளுக்கு ஒரு ரூபாய்தான் கிடைக்கும், மிஞ்சிய சோறும் குழம்பும். அப்போதுதான் அங்கே சாப்பிடவந்த அனந்த பை சார் நீ டெலிபோனில் சேர், இரண்டே ஆண்டுகளில் லைன்மேன் ஆகலாம். மாசச்சம்பளம் கிடைக்கும் என்று சொன்னார். நான் சேர்ந்துவிட்டேன்.”

“நீங்கள் யக்ஷகானா ஆடுவதுண்டா?”

“இல்லை.”

“ஏன்?”

“இங்கே அந்த ஆட்டம் இல்லை. ஆனால் நான் யக்ஷகானா எழுதியிருக்கிறேன்.”

“கன்னடத்திலா?”

“கன்னத்திலும் துளுவிலும். உஷாபரிணயம், சீதாகல்யாணம், கார்த்தவீரியார்ஜுனம், தக்ஷயாகவைபவம் ஆகியவை நானே இயற்றியவை. கதகளி ஆட்டக்கதையான நிழல்குத்தை தழுவியும் எழுதியிருக்கிறேன்.”

“ஓகோ” என்றேன். என் பார்வையே மாறிவிட்டது. இது நூறுரூபாய் இருநூறுரூபாய் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு செய்த ஒரு ஊழல் அல்ல. வேறேதோ ஒன்று.

“அன்றைக்கு நீங்கள் மட்டும்தான் அப்துல் ரஹ்மான் ஹாஜியின் வீட்டுக்குப் போனீர்களா?” என்றேன்.

“ஆமாம், என் ஏரியாவை பார்த்துக்கொண்டிருந்தவர் அப்துல் நாசர். அன்றைக்கு ரம்சான், ஆகவே அவர் லீவு.அன்றைக்கு கும்பளா முதல் மங்களூர் வரை ஒரே சர்வீஸ் ஏரியா, ஒரே லைன்மேன் தான். மொத்தமே நாற்பத்தாறு நம்பர்தானே?”

“சரி.”

“அன்றைக்கு அப்துல் காக்கா லீவு. ஆகவே அன்றைக்கிருந்த மெயிண்டெனன்ஸ் கிளார்க் குமாரன் நம்பியார் என்னை கூப்பிட்டு கும்பளா பகுதியில் ஒரு ஃபோன் கிடைக்கவில்லை, முக்கியமான நம்பர், தவிர்க்கமுடியாது, போய்ப்பார் என்றார். லைன் அறுந்திருந்தால் கட்டிவிடு. வேறெந்த பிரச்சினையாவது இருந்தால் ஃபோனை மாற்றிவிடு என்று சொல்லி கையோடு கொடுத்தனுப்பினார்.”

“அது அப்துல் ரஹ்மான் ஹாஜியின் வீடு இல்லையா?”

“ஆமாம், மிகப்பெரிய வீடு. தெங்குவீட்டில் மன்ஸில் என்று பெயர். வீட்டைச்சுற்றி பெரிய தென்னந்தோப்பு. வீட்டுக்கே சொந்தமான படகுத்துறையும் ரோட்டிலிருந்து தனிரோடும் இருந்தது” என்று கிருஷ்ண பட் சொன்னார்.

நான் சைக்கிளில் பார்த்துக்கொண்டே போனேன். ஒரு மரம் விழுந்து கம்பி அறுந்திருந்தது. அதை கட்டினேன். பங்களாவைச் சுற்றி ஏராளமான ஆட்கள் கூடியிருந்தார்கள். நூறு இருநூறுபேர் இருக்கும். ரம்ஸான் கொண்டாட வந்தவர்கள். ஆனால் முஸ்லீம்கள் மட்டுமல்ல. இந்துக்கள்தான் உண்மையில் அவர்களில் பெரும்பகுதி.

எல்லாருக்கும் உட்கார்வதற்கு பெஞ்சு போடப்பட்டிருந்தது. பெஞ்சுகளில் ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் ஆங்காங்கே தென்னை மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. பெரிய மலைத்தேனீக்கூடு போலிருந்தது அந்த வீடு.

நான் பார்த்தபோது எல்லாருமே புதிய ஆடைகள் அணிந்திருந்தார்கள். என்ன நடக்கிறது என்று சுற்றி கூர்ந்து பார்த்தேன். கைவள்ளங்களிலும் நடந்தும் வந்தவர்களை அழைத்துப்போய் புதிய ஆடைகளை கொடுத்தார்கள் வேலையாட்கள். அவற்றை அணிந்துகொண்டு பழையவற்றை சுருட்டி அங்கே உரப்புரையில் வைத்துவிட்டு அவர்கள் போய் அமர்ந்தார்கள்.

அன்றைக்கெல்லாம் தையல் இல்லாத ஆடைகள்தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேட்டி மேல்வேட்டி. பெண்களுக்கு தொளதொளப்பான சட்டை. ஆண்களுக்கான ஆடைகள் எல்லாமே வெள்ளைநிறம். பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிறம். அந்தத் தோப்பு முழுக்க பறவைக்கூட்டங்கள் போல அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

நான் ஃபோனை சோதனையிட வந்திருக்கிறேன் என்று சொன்னேன். ஒரு வேலைக்காரன் உள்ளே கூட்டிக்கொண்டு போனான். நான் ஃபோனை சரிசெய்தேன். “சாகிபிடம் கையெழுத்து வாங்கவேண்டும்” என்று சொன்னேன். அன்றைக்கு அப்படி ஒரு வழக்கம் இருந்தது.

“அப்படித்தான் அவரை பார்த்தீர்கள், இல்லையா??”

“ஆமாம். அவருடைய தோற்றம் இப்போதும் நினைவிலிருக்கிறது. ஆறரை அடி உயரம். பெரிய உடம்பு. கைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுவன் அளவுக்கு இருக்கும்… எப்போதும் வெண்மையான நீண்ட அங்கியும் கால்சராடும் அணிந்திருப்பார்” என்றார் கிருஷ்ண பட் “அவரை எல்லாரும் கறுத்தசாகிப் என்றுதான் அழைப்பார்கள்.”

அப்துல் ரஹ்மான் ஹாஜி ஒரு பெரிய அறையில் அமர்ந்து வந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். எல்லாருமே பட்டு அங்கி போட்டு பட்டுக்குல்லாய் போட்ட பெரியமனிதர்கள். அவர்களெல்லாம் நாற்காலிகளிலும் பெஞ்சுகளிலும் அமர்ந்திருக்க அவர் மட்டும் தரையில் கால்நீட்டி அமர்ந்திருந்தார்.

அன்றைக்கு எனக்கு அது பெரிய ஆச்சரியம், பிறகு தெரிந்தது ஹாஜி சாகிப் எப்போதுமே தரையில் அமரவே விரும்புவார் என்று. அதைவிட படகில் அமர பிடிக்கும். சும்மாவே நீர்மேல் நின்றிருக்கும் படகில் போய் உட்கார்ந்துகொள்ள ரொம்ப பிடிக்கும்.

வேலைக்காரன் அவரிடம் கொண்டுபோய் ரசீதை கொடுத்ததும் அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்து புன்னகை செய்தார். அவருடைய பற்கள் மிகப்பெரியவை. அவர் புன்னகைத்தாலே சிரிப்பதுபோல இருக்கும். அவர் சிரிக்காவிட்டாலும் முகம் சிரித்துக்கொண்டே இருக்கும். பெரிய உருண்ட மினுமினுப்பான கண்கள். அவை எப்போதுமே கொஞ்சம் ஈரமாக இருப்பதுபோல தோன்றும். என்னைப் பார்த்து அவர் சிரித்த அந்த தருணத்தை நான் இன்றைக்குவரை மறக்கவில்லை.

அவர் எனக்கு பணம் தரவில்லை. நான் அதை அப்போது எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக பணம் எதிர்பார்ப்பேன். கிடைக்கும் வரை நின்றிருப்பேன். சிலசமயம் மெல்ல நினைவுறுத்துவதும் உண்டு. அன்றைக்கு அவருடைய அந்த சிரிப்பே போதுமானதாக இருந்தது.

அவர் “ரொம்ப உபகாரம்.. அவ்வளவுதூரம் வந்து செய்து கொடுத்தீர்கள். ரம்சானும் அதுவுமாக நம்பர் அறுந்துவிட்டது. இல்லையென்றால் கூப்பிட்டிருக்க மாட்டேன்” என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. அப்படி எவரும் நன்றி சொல்வதில்லை. அதற்கு என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. பொதுவாக எனக்குப் பேசவே தெரியாது.

நான் வெளியே வந்தேன். சைக்கிளில் ஏறப்போகும்போது வேலைக்காரன் பின்னால் வந்து ஐந்து ரூபாய் தந்தான். அவர் எப்போதுமே இன்னொருவர் முன்னால் வைத்து எந்த கொடையும் செய்வதில்லை. பெறுபவர் குன்றிவிடுவார் என நினைப்பார். அது ஒரு ரகசியச் செயல்பாடாகவே நடக்கும். பெற்றுக்கொள்பவனே சொன்னால்தான் உண்டு.

வேலைக்காரன் கூடவே ஒரு வேட்டி மேல்துண்டு ஆகியவற்றை ஒரு பையில் போட்டு தந்து “சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும், சாகிப் சொன்னார்” என்றான்.

“இல்லை, நான் சாப்பிடுவதில்லை” என்றேன்.

“இல்லை, சாகிப் சொன்னார். சாப்பிடாமல் போகக்கூடாது.”

“ஏன்?”

“நான் சாப்பிடுவதில்லை.”

“பெருநாளில் சாப்பிடாமல் போகக்கூடாது” என்றான்.

“சாப்பிடமாட்டேன்… மன்னிக்கவேண்டும்.”

“இருங்கள், நான் சாகிப்பிடம் சொல்லிவிடுகிறேன்”

சற்று நேரத்தில் உள்ளிருந்து சாகிப்பே வந்தார். ஒரு குட்டியானைபோல நடந்து வந்து என்னை நோக்கி புன்னகைத்து “ஏன் சாப்பிடாமல் போகிறீர்கள்? பிரியாணி சாப்பிடலாமே?” என்றார்.

“நான் பிராமணன்” என்றேன்.

“பிராமணனா?” என்றார். ஒரு பிராமண லைன்மேனை அவர் அப்போதுதான் பார்க்கிறார் என்று தெரிந்தது.

“நம்பூதிரியா?” என்று மீண்டும் கேட்டார்.

“இல்லை, ஹெப்பார். மங்களூரிலிருந்து வருகிறேன்.”

“இருங்கள். டேய், திருமேனியை அங்கே கொண்டு உட்காரவை” என்றார்.

என்னை ஒரு கொட்டகையில் அமர வைத்தனர். கொஞ்சநேரத்தில் வாழைப்பழமும் இளநீரும் வந்தது.

பதினொருமணிக்கெல்லாம் அங்கே சாப்பாடு ஆரம்பித்துவிட்டது. பெரிய பந்தல்போட்டு வரிசையாக உட்காரவைத்து ஆட்டுப்பிரியாணியும் ஆட்டுக்கறியும் பரிமாறினார்கள். மக்கள் வரிசையாக உள்ளே போனார்கள்.

நான் அப்போது கவனித்த ஒன்று இருந்தது, அதைப்போன்ற ஒன்றை அதற்குப்பிறகு கூட பார்த்ததில்லை. கறுத்தசாகிப் பந்தல் வாசலில் நின்று ஒவ்வொருவரையாக மூன்றுமுறை கட்டித்தழுவி உள்ளே அனுப்பினார். எல்லாரிடமும் ஒருசில சொல்லாவது பேசினார். சின்னப்பையன்களின் தலையை தட்டினார். பெண்களுக்கு தனி பந்தி. அங்கே அவருடைய பீவி அனைவரையும் வரவேற்றார்.

அங்கே எவருக்கும் தனிப்பந்தி இல்லை. எவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பளபளக்கும் பியூக் காரில் வந்தவர்களும், நடந்து வந்தவர்களும், முஸ்லீம்களும், இந்துக்களும், ஆற்றுக்கரையில் வாழும் புலையர்களும் ஓரிரு மலைக்குறவர்களும் எல்லாரும் ஒரே வரிசையில் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர். அவர்களுடன் அமர்ந்துதான் கறுத்த சாகிப்பும் சாப்பிட்டார்.

அந்த விருந்தை நான் ஒரு பழைய மரத்தொட்டிமேல் ஏறி நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். மனிதர்கள் சாப்பிடுவது ஒரு யாகமாக நிகழமுடியும் என்று அப்போதுதான் பார்த்தேன். நான் பல யாகங்களை பார்த்திருக்கிறேன். அங்கே மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக பிரிக்கப்பட்டிருப்பார்கள்.

சாகிபின் பந்தியில் உணவு அள்ளி அள்ளி பரிமாறப்பட்டது. ஒருவர் கூட கேட்கும்படி ஆகவில்லை. வெறிகொண்டவர்கள் போல சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். பின்பக்கம் ஒரு பெரிய சமையல்கொட்டகை. அங்கே பனம்பாயில் பிரியாணியை அள்ளி அள்ளி கொட்டினார்கள். குன்றுபோல. ஆமாம், ஆளுயர அன்னமலைகள். ஆவிபறந்தது அவற்றில். நாயர்சார், அது கார்த்தவீர்யார்ஜுன மகாப்பிரபுவின் அன்னசபை போல் இருந்தது.

சற்றுநேரத்தில் அங்கே இருந்த ஒரு மங்களூர் பிராமணன் ஒரு சம்புடத்தில் எனக்கு சாப்பாடு கொண்டுவந்தான். சோறு குழம்பு கறிகள். “மன்னிக்கவேண்டும், கண்டிப்பாக நெய்போட்ட பருப்புப் பாயசம் வேண்டும் என்று கறுத்தசாகிப் சொன்னார். ஆகவே கொஞ்சம் தாமதமாகிவிட்டது” என்று அவன் சொன்னான்.

ஒவ்வொருவரும் கறுத்த சாகிப்பிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். நான் அவரிடம் விடைபெறும்போது “சாப்பிட்டீர்களா?”என்று கேட்டார்.

“ஆமாம், நல்ல சாப்பாடு” என்று சொன்னேன்.

“நீங்கள் பிரியாணிக்குப் பதிலாக பாயசம்தான் சாப்பிடுவீர்கள் என்று சொன்னார்கள்” என்றார்.

நான் புன்னகைத்தேன். அவர் என்னை தழுவி விடை அளித்தார். நான் திரும்பச் செல்லும்போது அந்த இடவழி, அந்த சாலை, அந்த தோப்புகள் எல்லாமே எனக்கு இனிய இடங்களாக ஆகிவிட்டன. இன்றுவரை அப்படித்தான்.

அன்று தொடங்கியது அந்த உறவு. அவர் வீட்டிலும் சுற்றியிருக்கும் இடங்களிலுமாக அன்றைக்கு பதினெட்டு நம்பர்கள் இருந்தன. ஆகவே வாரமொரு முறையாவது போகவேண்டியிருக்கும். எப்போதுமே நான் போனது அவருக்கு ஒரு உதவியைச் செய்யத்தான் என்று அவர் பேசுவார். என்னை நண்பனாக நடத்துவார். அவர் பணம் தருவது அவருக்கே தெரியாது என்று எனக்கே தோன்றும்படி இருக்கும்.

நான் கறுத்த சாகிப்பின் வீட்டில் மிகமிக விரும்பியதே அங்கே நடக்கும் மாபெரும் விருந்துகளைத்தான். எந்த விருந்தானாலும் அது எல்லாருக்குமாகத்தான். எந்தப் பந்தியானாலும் அது மனிதர்கள் அனைவருக்குமாகத்தான். மாதம் இரண்டு விருந்தாவது நடக்காமலிருக்காது. விருந்து என்று தெரிந்தாலே போய்விடுவேன். எங்காவது ஏறி நின்று மக்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருப்பேன்.

மக்கள் எப்படிச் சாப்பிடுகிறார்கள்! யக்ஷகானத்தில் அன்னசம்யோகம் என்று சாப்பாட்டைச் சொல்கிறார்கள். உடலும் சாப்பாட்டும் அன்னம் என்றுதான் சொல்லப்படுகின்றன. அன்னம் என்றால் பிசிக்ஸில் மேட்டர் என்கிறோமே அது. அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.

காலிப்பானைகளுக்கும் குடங்களுக்கும் ஒரு பதற்றம் இருக்கிறதைப்போல தோன்றுவதில்லையா சார்? அவை வாய் திறந்து அலறுகின்றன. குருவிக்குஞ்சுகள் வாய்திறந்து எம்பிக்குதிப்பதுபோல. தண்ணீரை அள்ளி ஊற்ற ஊற்ற இன்னும் இன்னும் என்கின்றன. அதன்பின் நிறையும் ஓசை. அது ஒரு பெருமூச்சு. ஓம் என்ற ஓசை அது.

நாயர் சார், அங்கே மனிதர்கள் அப்படி சாப்பிடுவார்கள். பரவசமாக சாப்பிடுவார்கள். பட்டினிக்காரர்கள் வெறிகொண்டு அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள். சின்னப்பிள்ளைகள் ருசித்து ருசித்து தலையாட்டி சாப்பிடும். சில சின்னப்பிள்ளைகள் ருசியான ஒரு துண்டு கிடைத்தால் அதை எடுத்து அவற்றின் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ஊட்டும் பாருங்கள் நான் கைகூப்பி அழுதுவிடுவேன். அன்னத்தைக் கொடுக்கும் மனிதனைப்போல அழகானவன் யார் சார்?

ஒரு ஐந்துவயது பெண் ஒருவயது தம்பிக்கு ஊட்டியதை பார்த்தேன். வெளியே வந்ததும் அதன் காலைத்தொட்டு வணங்கி “புவனராணியான அன்னபூரணியே, இந்த உலகத்தில் பசியை அணைத்துக்கொண்டே இரு தாயே” என்று சொல்லி கண்ணீர்விட்டேன்.

கறுத்த சாகிப் ஒருவேளைகூட தனியாகச் சாப்பிடுபவர் அல்ல. அவர் வீட்டில் எல்லாநாளும் சாதாரணமாக நூறுபேர் சாப்பிடுவார்கள். வீட்டு வேலைக்காரர்கள், படகுக்காரர்கள், தென்னை வேலைக்காரர்கள் எல்லாரும் ஒரே பந்தியாக அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும் நேரத்தில் வெளியே போய் குரல் கேட்கும் தொலைவிலுள்ள அனைவரையுமே சாப்பிடக் கூப்பிடுவார்கள். காகம் கரைந்து அழைப்பது போலவே.

அந்தக்குரல் கேட்ட எவரானாலும் எந்தக்கூச்சமும் இல்லாமல் சாப்பிட வந்துவிடுவார்கள். கந்தலாடை அணிந்த பிச்சைக்காரர்களுக்குக் கூட அதே பந்திதான், அதே சாப்பாடுதான்.

அங்கே எல்லாநாளும் பிரியாணிதான். கறுத்தசாகிப் பிரியாணி தவிர வேறு உணவை ஒரு பொருட்டாக நினைத்தவரே அல்ல. பிரியாணிதான் ஆரோக்கியம், சுவை என்று அவர் உண்மையாகவே நினைத்தார். பிரியாணி சாப்பிடாததனால் நான் சீக்கிரமே செத்துவிடுவேனோ என்று மெய்யான கவலையுடன் என்னிடம் கேட்டிருக்கிறார்.

சாப்பிட்டால் அவரைப்போல சாப்பிடவேண்டும். அவர் சாப்பிடுவதை நல்ல சாப்பாட்டுராமன்கள் மூன்றுபேர் சாப்பிடலாம். ஆனால் அள்ளி அள்ளி திணித்துக்கொள்ள மாட்டார். யானை சாப்பிடுவது அப்படித்தான். நிறைய சாப்பிடும், ஆனால் சுவையறிந்து சாப்பிடும். மூங்கிலின் தளிரை முதலில் சாப்பிடும். மூங்கிலையே கடைசியாகச் சாப்பிடும்.

கறுத்தசாகிப் சாப்பிட்டு முடித்து கைகழுவி சமையற்காரரை அழைத்து தோளில் கைவிட்டு தழுவி பாராட்டுவார். அவருடைய வீட்டில் வேலைபார்க்கும் சமையற்காரனையே நாள்தோறும் பாராட்டுவார். சாப்பிடும்போதே சங்கீதம் கேட்பதுபோல “பலே! பேஷ்! சபாஷ்!” என்றெல்லாம் சொல்வார். தலையை ஆட்டுவார். கையை தூக்கி “சுபானல்லா!”என்று வணங்குவார்.

ஒருமுறை நான் கறுத்த சாகிபிடம் சொன்னேன். “இங்கே இந்தப் பந்தியில் அமர்ந்து சாப்பிட வேண்டும் சாகிப்”

“உங்கள் அப்பாவுக்கு அது பிடிக்குமா ஹெப்பாரே?” என்று கேட்டார்.

“இல்லை” என்றேன்.

“பிறகென்ன?”என்று சொல்லிவிட்டார்.

நான் இங்கே என் தம்பிகளை படிக்கவைத்து ஆளாக்கியது, என் தங்கைகளை திருமணம் செய்து அனுப்பியது கறுத்தசாகிப்பின் பணத்தால்தான். என் தம்பி முதல்வகுப்பில் ஜெயித்தபோது அன்றைக்கே ஐநூறு ரூபாய் பணம் கொடுத்தார். அவன் மங்களூரில் படிக்கச் சேர்ந்தபோது அவர்தான் உதவினார். அவன் இன்று மணிப்பாலில் டாக்டர். சின்னவன் கொப்பலில் பள்ளிக்கூட ஆசிரியர்.

என் தங்கைகள் கல்யாணத்தில் அவர் ஒவ்வொருவருக்கும் ஐந்துபவுன் நகை போட்டிருக்கிறார். அவரே திருமணத்திற்கு வந்து வாழ்த்தி பரிசளித்துவிட்டு போனார். எனக்கு நேரில் தரவில்லை. அந்த தருணத்தை எனக்கு உருவாக்கவே இல்லை.

அவருடைய நிலைமை மாறியதை என் கண்களால் பார்த்தேன். அது காலமற்றம். நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவருடைய மகன்களுக்கு இந்த ஊரும் இங்கிருக்கும் சூழலும் பிடிக்கவில்லை. அவர்கள் மங்களூரிலும் மும்பையிலும் படித்தவர்கள். உண்மையிலேயே அவர்கள் இங்கே இருக்கமுடியாது. அவர்கள் இங்கிருந்து கிளம்பிச்சென்று பெரிதாக வளர்ந்தார்கள்.

ஆனால் கறுத்தசாகிப் இங்கிருந்து எங்கும் போகமுடியாது. வேறெந்த இடத்திலும் அவர் கறுத்தசாகிப் அல்ல. அவருடைய மக்கள் இங்கேதான் இருந்தார்கள். அவர் அறிந்த நிலமும் இங்கேதான் இருந்தது.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பீபி மறைந்தார். அதன்பின் கறுத்தசாகிப் தனிமையாக ஆனார். அவரை சவூதிக்கோ மும்பைக்கோ கொண்டுபோக அவர் பிள்ளைகள் முயன்றார்கள். கட்டாயப்படுத்தினார்கள். எளியவனாகிய என்னிடம்கூட சொல்லிப் பார்த்தார்கள். அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

நான்காண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் வந்து ஒரு பக்கம் தளர்ந்தது. இரண்டு ஆண்டுகளாக இடையும் தளர்ந்துவிட்டது. படுக்கையிலேயேதான்.

அதைவிட அவரால் பேசமுடியாமலாகிவிட்டது. நாக்கு நன்றாகவே குழைந்து உள்ளே கிடந்தது. பெரும்பாலும் சைகைதான் மொழி. நாயர் சார், அவருக்கு வயது எண்பதுக்கும் மேல். சாகவேண்டிய வயதுதான். ஆனால் யானை வலிமைமிகுந்த மிருகம், அதனால் எளிதில் சாகமுடியாது.

ஆனால் அவருக்கு எந்தக்குறையும் இல்லை. அவருடைய வேலைக்காரர்கள் அவரை மகாராஜாவைப் போலவும் கைக்குழந்தையைப் போலவும் கவனித்துக்கொண்டார்கள். அவர் பேசாமலேயே அவருடைய தேவைகளை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். மகன்களும் மகள்களும் உடனில்லை, ஆனால் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.

ஆனால் கறுத்தசாகிப் மெலிந்துகொண்டே போனார். சாப்பிடுவதே இல்லை. பசி மறைந்துவிட்டது, தூக்கம் இல்லாமலாகிவிட்டது. தூக்கமில்லாமல் ஆனதனால்தான் பசி இல்லாமலாகிவிட்டது. டாக்டர்கள் வந்து பார்த்தார்கள். பலவிதமான மருந்துகள் கொடுத்தார்கள். ஆனால் அவர் ஒருநாளில் மூன்றுமணிநேரம்கூட தூங்குவதில்லை. அதுவும் பத்துநிமிடம் இருபதுநிமிடம் என்று விட்டுவிட்டு தூங்குவதுதான்.

ஆமினாம்மா என்னிடம் “எல்லாம் செய்துவிட்டோம் ஹெப்பாரே. மௌலவிகள் எல்லாருமே வந்துபோய்விட்டார்கள்” என்றபின் குரலைத் தாழ்த்தி “இனி உங்கள் முறையில் ஏதாவது பூசாரிகளை அழைத்து மந்திரவாதம் செய்யலாமா?” என்றார்.

எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. நான் எவரிடமும் சொல்லாமல் சேந்நன் பெருவண்ணானை அங்கே கூட்டிச்சென்றேன். ஆமினாம்மாவும் வேலைக்காரர்கள் சிலரும்தான் இருந்தார்கள்.

பெருவண்ணான் வீட்டைச் சுற்றிப்பார்த்தார். கறுத்தசாகிப்பின் படுக்கையறையையும் பார்த்தார். பிறகு வெளியேபோய் தொழுவத்தின் அருகே அமர்ந்தார். நானும் ஆமினாம்மாவும் அருகே சென்றோம்.

“சூன்யதை உண்டு சுற்றும்” என்று பெருவண்ணான் சொன்னார். “வீடு சூனியமாக இருக்கிறது. ஒழிந்து கிடக்கிறது. அதை மனித ஆத்மாக்களைக் கொண்டு நிறைக்கவேண்டும்… சூனியத்தால் அவருடைய ஆத்மா தவிக்கிறது. அதனால்தான் தூக்கமில்லை, உணவும் உள்ளே போகவில்லை.”

“அதற்கு என்ன செய்யவேண்டும்?” என்று நான் கேட்டேன்.

“அவருக்கு வேண்டியவர்களின் பொருட்கள் வேண்டும்… அவற்றை கொண்டு சில பூஜைகள் செய்தால் அவர்களின் ஆத்மாக்களின் ஒரு பகுதி இந்த வீட்டில் இருக்கும். அதாவது அவர்களின் சைதன்யம் இருக்கும். இந்த சூனியம் போய்விடும்”

“என்ன பொருட்கள் வேண்டும்?” என்றார் ஆமினா.

“அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள்… அவர்களின் ஆடைகள் இருந்தால் நல்லது.”

ஆனால் அங்கே அப்படி எவையுமே இல்லை. அந்த வழக்கமே இல்லை. ஒருவர் மறைந்தால் அவர் சார்ந்த எல்லா பொருட்களையும் துறந்துவிடுவதே அவர்களின் வழக்கம்.

“ஏதாவது பொருள் இருந்தால் தேடி வையுங்கள்” என்று சொல்லிவிட்டு பெருவண்ணான் கிளம்பிப் போனார். நானும் ஆமினாம்மாவும் தேடினோம். கறுத்த சாகிப்பின் நண்பர்கள்,, உறவினர்கள், அவர் கட்டித்தழுவிய பலநூறு மனிதர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்டிருந்தார்கள். அவர்களின் பொருட்களை எப்படி சேகரிப்பது?

அதற்கு நான் முயன்றுகொண்டிருந்தபோதுதான் ஒருநாள் ஒரு விஷயத்தை கண்டேன். கறுத்த சாகிப்பின் படுக்கையறையில்தான் ஃபோன் இருந்தது. அதை நான் பழுதுபார்த்துக் கொண்டிருந்தேன். ரிசீவரை எடுத்து மேஜைமேல் வைத்துவிட்டு நான் வேறேதோ செய்துகொண்டிருந்தேன். அங்கே எவரோ தவறுதலாக இணைப்பு கொடுத்துவிட்டார்கள்.

அதில் ஓர் இளைஞன் கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். ”ஹலோ ஹலோ” அதன்பிறகு அவன் “மறுபக்கம் பேசாமலிருந்தால் தெரியாதா? மாலினி நீதானே? ஏய் பேசுடீ” என்றான்.

கறுத்தசாகிப் அதை நோக்கி திரும்பி புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவர் முகம் அந்த குரலுக்கு ஏற்ப மலர்ந்து உதடுகளும் புருவங்களும் அசைந்தன.

நான் அதைக் கவனித்தேன். அது என்ன என்று கொஞ்சநேரம் கழித்துத்தான் புரிந்துகொண்டேன். மனிதக்குரல். அந்த மிகப்பெரிய வீட்டில் ஆமினாம்மாவின் குரலும் வேலைக்காரர்களின் முணுமுணுப்பும் மட்டும்தான் ஒலிக்கும்.

அவர் ரேடியோவை கவனிப்பதில்லை. அவருக்கு இசை, நாடகம் போன்றவற்றில் ஆர்வமில்லை. ரேடியோவில் பேச்சொலி கேட்கும்தான். ஆனால் அவை மனிதக்குரல்கள் அல்ல, நடிப்புகள். அவரை கவர்பவை உண்மையான பேச்சொலிகள். உண்மையான குரல்கள்.

நான் அதன்பிறகு பலமுறை டெலிபோனில் எவரையாவது கூப்பிட்டுவிட்டு அவர் அருகே ரிசீவரை வைத்துப் பார்த்தேன். மனிதக்குரல் கேட்டாலே அவர் மலர்வதைக் கண்டேன்.

“அதன் பிறகுதான் எனக்கு தோன்றியது கறுத்தசாகிப்க்கு ஒரு தனி இணைப்பு கொடுத்தால் என்ன என்று. ஆமினாம்மாவுக்கு என்னவென்றே தெரியாது. நான் அவரிடமும் சொல்லவில்லை. எதையும் எவரிடமும் பேசவில்லை. நானே இன்னொரு பேரலல் இணைப்பு கொடுத்தேன்” கிருஷ்ண பட் சொன்னர்.

“டெலிபோன் எக்ஸேஞ்சுக்கு உள்ளே எப்படி இணைப்பு கொடுத்தீர்கள்?” என்று நான் ஹெப்பாரிடம் கேட்டேன்.

“டெக்னீஷியனிடம் சொன்னேன். இங்கே கறுத்தசாகிப் பெயரைச் சொன்னால் எவரானாலும் உதவுவார்கள். ஆனால் நான் அந்த டெக்னீஷியன் பெயரைச் சொல்லப் போவதில்லை. நானே எல்லாம் செய்தேன் என்பதுதான் என்னுடைய அறிக்கை. நான் அவருக்காக தண்டிக்கப்பட்டால் அது எனக்கு பெருமைதான். ஒரு கடனில் வட்டியை மட்டும் கட்டுவதுபோல. அசல் நிற்கட்டும், அடுத்த பிறவிக்காக.”

நான் பெருமூச்சுவிட்டேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கிருஷ்ண பட் சொன்னார் “மைக்ரோஃபோனை எனக்கு அந்த டெக்னீஷியன்தான் வாங்கித் தந்தார். அங்கிருக்கும் டெக்னீஷியன்கள் எல்லாருக்குமே இதெல்லாம் தெரியும். எப்போதும் அந்த பேரலல் லைனில் இணைப்பு கொடுப்போம். அதில் எப்போதும் மனிதர்களின் உரையாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்”

“ஆனால் நீங்கள் நினைப்பதுபோல அவரால் பேச்சுக்களை கேட்கமுடியாது. ஒன்றுக்குமேல் உரையாடல்கள் கலந்து வெறும் ஓசையாகத்தான் இருக்கும். வெறும் மனிதக்குரல்கள்… அவ்வளவுதான்” என்றார் கிருஷ்ண பட்.

“அவர் நலமடைந்தாரா?” என்றேன்.

“ஆச்சரியம் ஒரே வாரத்தில் சரியாகிவிட்டார். நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு. பிரியாணி சாப்பிட ஆரம்பித்துவிட்டார். நன்றாகவே பிரியாணி சாப்பிட்டார்…. எடை மீண்டது. உடல் பளபளப்பாகியது. முகம் பருத்து கண்களில் அந்த ஈரமினுமினுப்பு வந்தது. எப்போதுமே புன்னகையுடன் இருந்தார். தூக்கத்திலேயே போய்விட்டார். இறந்த முகத்தில் மலர்ந்த சிரிப்பு இருந்தது. மய்யத்தை பார்த்த அத்தனை பேருமே அதைப் பார்த்து வியந்தார்கள்”

“அவர் அந்த இணைப்பு வழியாக என்ன கேட்டார்? அது வெறும் இரைச்சலாகத்தானே இருந்திருக்கும்?”

“ஆமாம், ஆனால் குரல்கள் ஆத்மாவின் பகுதிகள். நத்தை ஊர்ந்துபோகும்போது அதன் ஒரு பகுதிதான் ஒளிவிடக்கூடிய தடமாக ஆகிறது. அதுதான் சைதன்யம் என்பது. மனிதர்களின் குரல்களிலும் ஆடைகளிலும் அவர்கள் புழங்கிய பொருட்களிலும் அவர்களின் சைதன்யம் இருக்கிறது. ஃபோன் வழியாக வந்த குரல்கள் வழியாக அவற்றைப் பேசியவர்களின் சைதன்யம் அவர் வீட்டுக்குள் நிறைந்திருந்தது.”

நான் “ஓ” என்று பொருளில்லாமல் சொன்னேன்.

“நான் ஒரு கனவில் அதைக் கண்டேன். நான் சைக்கிளில் தெங்குமூட்டில் மன்ஸிலை நோக்கிப் போகிறேன். மலைத்தேனீக்கூடு போல அது ஓசையிட்டுக் கொண்டிருந்தது. அருகே சென்றபோதுதான் அந்த ஓசை நான் கொடுத்த பேரலல் லைன் வழியாக மைக்ரோஃபோனில் ஒலிக்கும் குரல்களின் தொகுப்பு என்று தெரிந்தது. நூற்றுக்குமேல் குரல்கள் கலைந்த முழக்கம்” கிருஷ்ண பட் சொன்னார்.

“நான் தோட்டத்திற்குள் நுழைந்தபோது கண்டேன், தோட்டம் முழுக்க மக்கள். திண்ணைகளிலெல்லாம் மக்கள். வீடு முழுக்க முட்டிநெரித்தபடி மக்கள். நான் அவர்களை உந்தி விலக்கி முட்டி மோதி கறுத்தசாகிப்யின் அறைக்குள் போனேன். அவர் அறைக்குள் ஐம்பது அறுபதுபேர் இருந்தார்கள். அவர் அவர்களுக்கு நடுவே சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். கைகளை தட்டிக்கொண்டு செண்டைமுழக்குவதுபோல உரக்கச் சிரித்தார்.”

நான் கைகளைக் கோத்து அதன்மேல் முகத்தை வைத்துக்கொண்டு அவரை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். பிறகு “கனவா?” என்றேன்.

“கனவுகளில்தான் அறியமுடியாத உண்மைகள் தெரியமுடியும்” என்றார்.

“ஹெப்பார்” என்று நான் அழைத்தேன். “நீங்கள் பார்த்தீர்களே, அவர்களெல்லாம் யார், அவருக்கு தெரிந்தவர்களா?”

“இல்லை, அவர்கள் அனைவருமே எங்கேயோ ஃபோனில் பேசிக்கொள்பவர்கள். எனக்கோ கறுத்தசாகிப்க்கோ தெரியாதவர்கள்.”

“தெரியாதவர்களா?” என்றேன்.

“ஆமாம், அதனாலென்ன?” என்றார் கிருஷ்ண பட்.

அதனாலென்ன என்ற வார்த்தை எனக்கு மிகப்பெரிய எடைபோலிருந்தது. உடனே அதை இறக்கி வைக்கவேண்டும் என்பதுபோல.

நான் அவரை அனுப்பி வைத்தேன். அந்த வழக்கை ஹெப்பார் கிருஷ்ண பட்டுக்கு எந்த தீங்கும் இல்லாமல் முடித்துவைத்தேன். இன்று முப்பதாண்டுகள் கடந்துவிட்டன. “அதனாலென்ன” என்ற சொல் காதில் எஞ்சியிருக்கிறது. சில ஆப்தவாக்கியங்கள் எங்கிருந்தோ நம் மீது உதிர்ந்துவிடுகின்றன.

***

தொடர்புடைய பதிவுகள்

புலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்

$
0
0

வணக்கம். ​

நீங்களும் வீட்டிலுள்ளவர்களும் நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்.​

புலம்பெயர்ந்த எழுத்துக்கள் என்றால் என்ன? (நன்றி – வல்லினம்) என்னும் தலைப்பில் 20-22 டிசம்பர் 2019, நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை இன்று செவிமடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் நீங்கள் சொல்லிய கருத்துக்கள் பலதுடன் நானும் உடன்படுகிறேன்.

இதேவேளை புலம்பெயர்ந்த நாடுகளின் கலாசாரம் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக்களை எழுதியவர் அ முத்துலிங்கம் மட்டுமே  எனப்பொருள்பட பேசியிருந்தீர்கள். அது சற்று நெருடலாக உள்ளது. அவர் எனது நல்ல நண்பர், நெருங்கிய தொடர்பிலிருப்பவர் என்பதற்பப்பால் அவரது எழுத்துக்களைத் தாண்டி நீங்கள் குறிப்பிட்ட விஷயம் நெடுந்தூரம் வந்துவிட்டது என்பதைச் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

ஆசி கந்தராஜா

எனது கதைகள் குறுநாவல்கள் புனைவுக்கட்டுரைகள் ஆகிய படைப்புக்களுள் 90 வீதமானவை அன்னிய கலாசாரங்கள் பற்றியவையே.

இதுபபற்றி பேராசிரியர் எம். ஏ. நுஃமான் முதல்கொண்டு பலர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இந்த வகையில் எனது பவனைபேசலன்றி சிறுகதைத் தொகுதியை வாசித்தபின் பல வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதிய கடிதத்தை பொக்கிசமாக இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.​

எதிர்காலத்தில் அ முத்துலிங்கத்தை குறிப்பிடும் அதேவேளை மற்றைய எழுத்துக்களையும் குறிப்பிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். ​

இக்கடிதம் நட்புடனும் உரிமையுடனும் எழுதப்பட்டது.​

 

ஆசி கந்தராஜா

 

1) http://www.aasi-kantharajah.com/category/சிறுகதைகள்

​2) http://www.aasi-kantharajah.com/category/குறுநாவல்

3) http://www.aasi-kantharajah.com/category/புனைவு-கட்டுரை

4) https://aasimuttam.blogspot.com/

நோயல் நடேசன்

அன்புள்ள ஆசி கந்தராஜா அவர்களுக்கு,

முதல்விஷயம், உங்கள் படைப்புக்களைப் பற்றி தமிழ்ச்சூழலில் விரிவாக தொடர்ந்து அறிமுகம் செய்து உரையாடி வரும் விமர்சகன் நான். புலம்பெயர்ந்த இலக்கியம் பற்றிப் பேசும்போது மட்டுமல்ல பெரும்பாலான இலக்கிய உரையாடல்களில் இயல்பாகவே உங்கள் எழுத்துக்களை குறிப்பிடுவதுண்டு.

அந்த உரை புலம்பெயர் இலக்கியம் பற்றியது அல்ல. நவீன இலக்கியத்தில் புழங்கும் சில இலக்கிய வகைபாடுகளில் ஒன்றாகிய புலம்பெயர் இலக்கியம் பற்றி சிலநிமிடங்கள் அதில் பேசியிருக்கிறேன்.அந்த உரையில் அ.முத்துலிங்கம் மட்டுமே சிறந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர் என்ற தொனி வந்திருக்குமென்றால் அது தவறு. ஒட்டுமொத்த உரை மலேசியச்சூழல் குறித்து சொல்லப்பட்டது. மலாய் சீன வாழ்க்கையை கொஞ்சம்கூட எழுதாமல், அவர்கள் எவரென்றே தெரியாமல், தங்களைப்பற்றி மட்டுமே எழுதுவதும்; தங்களுக்கான செயற்கைப்பெருமிதங்களை தமிழகத்திலிருந்து வரும் உதிரி அரசியல்வாதிகளைக்கொண்டு சொல்லிச்சொல்லி உருவாக்கிக்கொள்வதும் மிகப்பெரிய தேக்கநிலை என்ற அளவிலேயே அந்த உரை அமைந்தது.

அவர்களுக்கான முன்னுதாரணமாகவே அ.முத்துலிங்கம் அவர்களைச் சுட்டிக்காட்டினேன். அ.முத்துலிங்கம் நவீனத்தமிழிலக்கியத்தின் ஓர் உச்சம் என்றே நான் நினைக்கிறேன். அவருடைய அக்கா தொகுதியை அவரே மறந்துவிட்ட நாளிலேயே அதைப்பற்றிப் பேசியிருக்கிறேன்.அவர் மீண்டும் எழுதவந்தபோது பிரசுரமான முதல்கதைக்கே என் வாசகர்கடிதம் பிரசுரமாகியிருந்தது. அவர்மேல் நான் கொண்டுள்ள ஈடுபாடும் மதிப்பும் அத்தகையது.

பொ கருணாகர மூர்த்தி

அத்தகைய முன்னுதாரணமாக அவரை நான் சுட்டுவதற்கான முதன்மைக் காரணம் அவர் இயல்பான ஒரு ‘உலகக்குடிமகன்’ என்பது. அவர் ஈழ அரசியலின் சமையலறை விவாதங்களுக்குள் சிக்கிக்கொள்ளவில்லை என்பதனால் அவரை வசைபாடுபவர்களை இருபத்தைந்து ஆண்டுகளாக கண்டுவருகிறேன்.அவ்வாறு அவர் சிக்காமலிருப்பது அவர் உலகமறிந்தவர் உலகைநோக்குபவர் என்பதனால்தான்.

அந்த உரையில் அவர் ஓர் அடையாளமாக, இன்று எழுதுவோர் சென்றடைய வேண்டிய இலட்சியமாக அல்லது கடக்கவேண்டிய சாதனையாகவே முத்துலிங்கம் குறிப்பிடப்பட்டார். அவர் மட்டுமே இருக்கிறார் என்று அல்ல. அப்படி குறிப்பிடவேண்டியதில்லை – பிறர் அனைவரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன் என்னும் நிலையில்.

நான் பேசிக்கொண்டிருந்தது புலம்பெயர்ந்து சென்ற உலகங்களுடனான கலாச்சார உரையாடலைப் பற்றி மட்டுமே. அந்த அம்சத்திற்கு வெளியே நின்று பார்க்கையில் ஷோபா சக்தி மிகமுக்கியமான இலக்கியப் படைப்பாளி என்று எப்போதுமே சொல்லி வருகிறேன். ஷோபா சக்தி புலம்பெயரவே இல்லை என்பதே என் கருத்து

ஷோபா சக்தி

அந்த உரை புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் எவரெல்லாம் முக்கியமானவர்கள் என்ற அளவில் அமைந்தது அல்ல—அதை நீங்கள் முழுமையாகக் கேட்கலாம். அவ்வாறு புலம்பெயர் இலக்கியம் பற்றி மொத்தமான பார்வையில் எழுதப்பட்டுள்ள எல்லா கட்டுரைகளிலும் முக்கியமான அனைவரையும் சுட்டிககட்டி மதிப்பிட்டே எழுதியிருக்கிறேன்

உங்களைப் பற்றிய எழுத்துக்களில் நீங்கள் அ.முத்துலிங்கம் போன்றே உலகை நோக்கி விரியும் நோக்கு கொண்டவர், ஆகவே முக்கியமானவர் என்று எழுதியிருக்கிறேன். நீங்கள் ,நோயல் நடேசன், பொ.கருணாகரமூர்த்தி என அவ்வாறு வேறு பண்பாடுகளுடனான உரையாடலை நிகழ்த்திய படைப்பாளிகள் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளிடையே உள்ளனர். அனைவர் பற்றியும் எழுதியிருக்கிறேன். [சொல்லப்போனால் தமிழகத்தில் நான் மட்டுமே எழுதியிருக்கிறேன், இன்னும் எழுதவிருப்பவனும் நான் மட்டுமே. அது உங்களுக்கும் தெரியும்]

ஆனால் முத்துலிங்கமே முதன்மையானவர், முன்னோடி, முன்னுதாரணம் என்பதில் எனக்கு ஐயமில்லை.

 

ஜெ

பயணியின் புன்னகை

முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன்

அசோகனின் வைத்தியசாலை

பெரிய உயிர்களின் தேசம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குமிழி,மலையரசி- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

குமிழி மானுட துக்கத்தையும் அதிலிருந்து மீட்சியையும் காட்டும் கதை. நீங்கள் எழுதும் அந்த காலகட்டத்தில் அறுபது எழுபதுகளில் குழந்தைகள் இறப்பது மிகுதியாகவே இருந்திருக்கிறது. குழந்தைகள் இறப்பதை குழந்தைகள் பிறப்பதை வைத்து சமன் செய்துகொண்டிருக்கிறார்கள். குழந்தையின் பிறப்பு குழந்தையின் சாவை சரியாக்கிவிடும் என்பதற்கான ஆறுதல் வார்த்தைகள் அந்தக்காலத்திலே ஏராளமாக உண்டு. “அந்தக்குழந்தைதான் இப்டி வந்து பொறந்திருக்கு” என்று சொல்வார்கள்.

கிட்டத்தட்ட அதே கதைதான். இங்கே தன் குழந்தையை இன்னொருவருக்கு கொடுப்பதன் வழியாக மீட்டுக்கொள்கிறாள் அந்த குயவர்குலத்து அம்மா. அவளால் அந்த மண்குழந்தையை தொடவே முடியவில்லை. ஒருவாரமாக அப்படியே இருக்கிறது. அனந்தன் அதை எடுத்தபோது அவன் அதை தப்பாக எடுத்ததால் அவள் அதை தொடுகிறாள். தொட்டதும் அழுகிறாள். பனி உருக ஆரம்பித்துவிட்டது. இனி அதை அவள் கொடுத்துவிடுவாள். அவள் கொடுத்தது இங்கே கிடைக்கிறது.

வெறும் கவித்துவப் படிமங்கள் வழியாகவே ஓடும் அழகான கதை.

 

டி.எம்.ராகவன்

 

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.

 

நலம்தானே?

குமிழி படித்தேன் . சுருக்கமான தெளிவான மனத்தில் நிற்கும் கதை.

“இருவர் சேர்ந்து மண் சேர்த்திட ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய்வைத்த சூளை” என்று மகவு உண்டாகிப் பிறப்பதைப் பாம்பாட்டிச் சித்தர் பாடியிருப்பது நினைவுக்கு வந்தது.

குயவன் கலம் செய்வதும், இருவர் கலந்து பிள்ளை உருவாவதும், எழுத்தாளன் படைப்பை உருவாக்குவதும் எல்லாம் இணையாகவே என் மனத்தில் எழுந்தன. மூன்று செயல்களுக்கும் ஆர்வம், உணர்ச்சி, அமைதிச் சூழல் தேவை.

தொடக்கத்தில் வரும் மாதவண்ணன் வேறு. மூன்று முறை மனைவிக்குக் கரு கலைந்ததால் உண்டான சோகமும், ஆண்டி இன்னும் பாவையைத் தராததால் மனத்தில் சினமும் ஆத்திரமும் கொண்டுள்ளார்.கதை முடியும்போது அவரே மனம் நிறைவு பெற்று இருக்கிறார்.

தன். கையால் பானை உருவாகாதபோது அவர்கொள்ளும் ஆத்திரம்,கவலை,சினம் எல்லாம் குழந்தை பெற்றெடுக்காத மனத்தின் வெளிப்பாடே. பானை உருவான உடன் மகிழ்ந்து பகவதீ என்று கூச்சலிடுவது ஆனந்தத்தின் வெளிப்பாடு. படைப்பின் கரு உள்ளே தோன்றி அதை எழுத்தில் கொண்டுவருவதுவரை எழுத்தாளன் வேதனை கொண்டாலும் அது படைப்பாக வந்தவுடன் மிக மகிழ்ச்சி கொள்கிறான்.

முதலில் சாராயத்தின்பால் கவனமே செலுத்தாதவர் அவரே பலமுறை முயற்சி செய்து பானையை உருவாக்கிய பின் தம்மால் இனி கலையாத கருவை உண்டாக்க முடியும் என்றெண்ணுகிறார். அதனால்தான் அவரே அம்புரோஸ் சாராயம் கேட்கிறார்.

மனசு கனியணும் அப்பொழுதுதான் கலம் உருவாகும் என ஆண்டி கூறுவதை குழந்தை உண்டாவதற்கும், படைப்பு தோன்றுவதற்கும் கூடப் பொருத்திப் பார்த்து க் கொள்ளலாம்.

ஆப்புத்தட்டிச் சரி செய்வதுதான் குழந்தையை நோய் நொடி அணுகாமல் வளர்ப்பதும், படைப்பை மறுவாசிப்பு செய்து திருத்துவதும் ஆகும்.

கரு கலைவது என்பவர்களுக்கு மூன்று பிரசவத்திற்குச் சமம் என்பார்கள். உள்ளே ஆண்டியின் மனைவி குழந்தையின் சோகத்திலிருந்து மீண்டு வர முடியாமல் மண்ணாலான பாவையை வைத்து அழுவது மாதவ அண்ணனின் மனைவியின் நிலையையையும் காட்டுகிறது.

யட்சியை நம்பி பாவை செய்து வைக்கும் தொன்மத்தையும், கரு கலையும் யதார்த்தத்தையும் கலந்து மிளிரும் அற்புதக் கதை

 

வளவ. துரையன்

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

லக்ஷ்மியும் பார்வதிய்ம், மலையரசி இரு கதைகளும் ஒரு குறுநாவல் போல அழகாக இணைந்துகொண்டு ஒரு முழு வாழ்க்கையையே காட்டுகின்றன. லக்ஷ்மியும் பார்வதியும் கதையில் 13 வயதான சிறுமியாக வரும் பார்வதிபாய் மலையரசி கதையில் தான் நினைத்த எல்லாவற்றையும் செய்திவிட்ட நிறைவுடன் தன் கடைசி கடமையையும் செய்ய வந்திருக்கிறாள்

துர்க்கை என்று சொல்கிறீர்க்ள். குட்டிகளை கவ்வி கொண்டுசென்று பாலூட்டும் புலி. கவ்வி குதறிப்போடும் புலியும்கூட. ஸ்வாதித்திருநாளின் கடைசி கீர்த்தனம் பர்வத நந்தினி பார்வதிபாய் அரசியைப்பற்றிய கவிதை என்று உருவகம் செய்திருப்பதுதான் இந்தக்கதையில் உச்சம் என்று நினைக்கிரேன். அந்தக் கவிதைபற்றிப் பேசும்போது ஸ்வாதித்திருநாள்  சொல்லும் எல்லா வரிகளுமே கவித்துவமாக உள்ளன.

 

சரஸ்வதி பாபு

 

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

லட்சுமியும் பார்வதியும் மலையரசி இருகதைகளுமே ஒர் ஆழ்மான உனர்ச்சியை உருவாக்கின. லட்சுமிபார்வதிபாய் சுவாதித்திருநள் படத்தில் ஸ்ரீவித்யா செய்த கதாபாத்திரம் என்று நினைக்கிரேன். அதில் ஸ்வதிதிருநாளின் காதலியான சுகந்தவல்லியை கொலைசெயபவராகவும் ஒருவகையான நுட்பமான வில்லியாகவும்தான் அவர் காட்டப்பட்டிருக்கிறார். அவர் எப்படிப்பட்ட ஆட்சியாளர் என்று காட்டும் இந்தக்கதை அவரை ஒருவகையில் மீட்டு எடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

சுவாதித்திருநாளின் கடைசிநாள் பற்றிய இந்தக்கதை ஒரு எபிக் டிராமா தன்மையுடன் இருக்கிறது. இதற்குத்தான் வரலாரு தொன்மம் என்று கதை நகரவேண்டும் என்றும் சொல்வது. நித எபிக் யூனிட்டியை யதார்த்தமான சமகாலக் கதைகளில் கொண்டுவந்துவிடமுடியாது

 

சிவக்குமார்

 

 

தொடர்புடைய பதிவுகள்

தங்கப்புத்தகம் – கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ,

தங்கப்புத்தகம் வாசிக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. ஒருவர் தன்னைப்பற்றிய அகங்காரம் கொண்டிருந்தால்தானே தான் அடைந்தது மூலநூல், மாற்றமில்லாத நூல் என நினைக்கமுடியும்? அப்படி இல்லாமல் ஒரு மூலநூல் இருக்கிறது, அதை அறியவேண்டும் என்று ஒருவர் நினைப்பதிலென்ன பிழை இருக்கமுடியும்? அதற்காக அவர் முயற்சிசெய்வது ஒரு வகையான அடக்கம்தானே?

ஆனால் தங்கப்புத்தகம் வாசித்து இத்தனைநாட்களுக்குப்பிறகு வேறுவகையான எண்ணம் உருவாகியிருக்கிறது. தன்னைப்பற்றிய அகங்காரம் தலைக்கேறிய ஒருவர்தான் உலகம் முழுமைக்குமான ஒரு நூலை தானே அறிந்துவிடமுடியும் என நினைப்பார். தன்னடக்கம் உள்ளவர் முதலில் அறிவது தன்னுடைய ஆணவத்தைத்தான். அவரைப்பொறுத்தவரை தன்னால் எதை அறியமுடியுமோ அதை அறியவே முயல்வார். தன் அறிதல் அந்த மொத்த அறிதலில் ஒரு பகுதி என்று சமாதானம் செய்துகொள்வார். அதுதான் மனிதனுக்குச் சாத்தியம்

முக்தா கடைசியில் அதைத்தான் சொல்கிறார்

 

மகாதேவன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

 

தங்கப்புத்தகம் – இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் பாகம் முடித்தவுடன் இரண்டாம் பாகத்தையும் ஒன்றிப்போய் உடனே வாசிக்க தொடங்கினேன். சுவாமி முக்தானந்தாவின் தேடலும் பயணமும் திகைப்பை வரவழைக்கிறது. கரு கதையில் முக்தானந்தரின் அனுபவம் இரகசியமான ஞானத்தின் வாசல் வரை வந்தது. மறைஞான தேடலில் இருக்கும் ஆடம் ஷம்பாலாவிற்குள் செல்வதற்கு அழைப்பு வந்தபோது முக்தானந்தாவிற்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.  பரமஹம்ஸ யோகானந்தரின் யோகியின் சுயசரிதைப் போல ஒரு பார்வையாளராக சக பயணியின் ஆன்மீக அனுபத்தை பதிவு செய்தது கரு.

அந்த ஏமாற்றத்தை தங்கப்புத்தகம் நிறைவு செய்தது. எட்டாக் கனியான நேரடி ஞான அனுபவத்தை, அந்த தேடலின் தாகத்தை சாகசத்தோடும், கண்ணீரோடும் தங்கப்புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறீர்கள்.  நம்பகத்தன்மையொடு மிக சீராக கதை செல்கிறது. ஞான நூல்களுக்கு எல்லைகளே இல்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சென்று கொண்டே இருக்கலாம். மூலநூல்களின் பாடபேதங்களை ஆய்வு செய்துகொண்டே இருப்பது ஒரு மனநோய் ஆகிவிட்டது என்கிறார் முக்தானந்தர்.  ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஓரிடத்தில், ஓயாமல் படித்துகொண்டே இருப்பதும் ஒருவகையான மனப்பிறழ்வு என்கிறார்.

முடிவில்லாமல் பல சாத்தியங்களை உள்ளடிக்கிய புத்தம் தங்கப்புத்தகம். அதைப் எப்படியும் பிரதி எடுக்க வேண்டும் என்று முனைகினார் முக்தானந்தர். அதன் விதிகளை ஆராய்ந்து மெல்ல மெல்ல புத்தகத்தின் கட்டமைப்பை அறித்துகொள்கிறார், நெருங்கிவிட்டதாகவும் உணர்கிறார்.  ஆனால்  முடிவில்லாத சாத்தியங்களால் தங்கப்புத்தகம் அவரை சிறை வைத்துவிடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்ஆன்மீக நூல்களை தீவிரமாக  வாசித்து வரும்போது, குருத்ஜீயேப்பின் “ஆல் அண்ட் எவ்ரித்திங் – பியாஸில்பப் தன் பேரனுக்கு சொன்ன கதைகள்”  வித்தியசமான வாசிப்பனுவத்தைத் தந்தது. படிப்பதற்கு மிக சிரமான சொற்றொடர்கள், நீண்ட வாக்கியங்கள், அர்த்தமற்ற சொற்கள் என்று இருக்கும்.  ஒரு பக்கத்தை வாசிப்பதற்கே அதிக கவனம் தேவைப்படும். சுமார் 1200 பக்கங்கள் கொண்டது. குருத்ஜீயேப், ஒருவன் நிரந்தரமான சுயத்தை அடைவதற்கு விழிப்புணர்வோடு கூடிய உழைப்பும், சுய வதையும் அவசியம் என்கிறார்.

முக்தானந்தர் வருடக்கணக்கில் திபெத்திய மாடாலையங்களில் உழைக்கிறார். அழைப்பு வரும்போது இருண்ட குகையில், தனிமைச்சிறையில் கூட்டுப்புழுப் போல் ஒடுங்கி இருக்கிறார்.தங்கப்புத்தத்தை பிரதியெடுக்கும்போதும்விரல் நுனிகள் வீங்கி இரத்தம் கட்டி வெடிக்கும் நிலைவரை முனைகிறார்.

இமயமலைக் கூட்டங்களிலும், மாடாலைங்களிலும் முக்தானந்தருடைய தீவிரமான தேடலும், அலைகளிப்பும் உங்கள் விவரிப்பில் வாசகனுக்கும் ஒரு மெய்நிகர் அனுபவத்தை தரும். சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலை முகடுகளிலும் சூரிய உதயத்தின் பொன்கீற்றுகளை காணும் அனுபவம் மிக அற்புதம்.

இறுதியில்  தான் அடைவதற்கு ஏதுமில்லை ஆகவே இழப்பதற்கும் தன்னிடம் ஒன்றுமில்லை என்ற முக்தானந்தர் சொற்களில் நானும் உறைந்துப்போய் இருந்தேன்.

 

நன்றி.

 

விஜய் சத்தியா

வாசிங்டன் டி.சி

 

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகத்தை வாசிக்கையில் வேதாந்தத்தின் சில கருத்துக்கள் ஞாபகம் வந்தன. ஞாதா ஞேயி ஞானம் மூன்றுமே ஒன்றுதான். அறிபவன் அறிபடுபொருள் அறிவு மூன்றும் ஒன்றே. அறியப்படும் ஒவ்வொரு பொருளிலும் இது மூன்றும் உள்ளது. இந்தப்பேனாவை நான் பார்க்கிறேன். இதில் பேனா உள்ளது. பேனாவை பார்க்கும் நான் உள்ளேன். பேனா என்ற அறிதல் உள்ளது. மூன்றில் ஒன்று இல்லாமல் சாத்தியமே இல்லை. அப்படியென்றால் நான் இல்லாமல் ஒரு புத்தகமே சாத்தியமில்லை.

அதைத்தான் முக்தாவும் உணர்கிறார் என்று படுகிறது. விதவிதமான உருவகங்களை தத்ரூபமான வர்ணனைகள் வழியாகச் சொல்லும் கதை பித்துப்பிடிக்கச்செய்கிறது. செல்லும்வழி சிக்கலானது திரும்பி வருவது எளிதானது என்பதே அபூர்வமான ஒரு படிமம்தான்

எஸ்.பாஸ்கர்

 

வணக்கம் ஜெ

 

சில நூல்களை வாசித்து முடித்து கடைசி பக்கத்தை திருப்பும் போது உடனே இதை முதலிலிருந்து மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றும். ஃபோர்டின் பரேட்ஸ் எண்ட்(Parade’s End) மற்றும் ப்ரொஸ்ட்டின் In Search of Lost Time, இந்நூல்களில் தான் அதை முதலில் உணர்ந்தேன். சில நூல்கள் வாசித்து முடித்தவுடன் பெரும் அயர்ச்சியை அளிக்க கூடுவன. போரும் அமைதியும் கரமஸோவ் சகோதரர்கள் விஷ்ணுபுரம் போன்றவை அத்தகைய நூல்கள்.  அவை நம்முள் ஊறி முளைத்து துளிர் விட சில காலம் தேவை. அதன் பின் நம்மை ‘கைவிடும் பசுங்கழை’ என வேகமாக மீண்டும் அதனிடம் இழுத்துக்கொள்ளும்.

இவ்விரண்டு வகை நூல்களுமே மறுவாசிப்பின் வாய்ப்பை நமக்கு அளிக்கின்றன. ஆனால் மறுமுறை நாம் வாசிப்பது அதே புத்தகத்தை அல்ல. மறுவாசிப்பில் நாம் பெறுவது அநேகமாக புதுவாசிப்பே. டார்க்கோவ்ஸ்கி மாலிக் போன்றோரின் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு அனுபவத்தை பெறுவதை போல இந்நூல்கள் பல திறப்புகளை அளிக்கின்றன. வாசிக்க வாசிக்க மூலம் மாறி மாறி நமக்கு முற்றிலும் வேறாக அர்த்தபடுகிறது. வெவ்வேறு வடிவ கண்ணாடிகள் மூலம் ஒரே காட்சியை பல விதமாக பார்க்கிறோம்.

தங்கப்புத்தகத்தை நாம் அனைவரும் வாசித்துக்கொண்டிருக்கிறோம். அல்லது நாம் வாசிக்கும் அனைத்து நூல்களுமே தங்கப்புத்தகங்கள் தான். அவற்றை நாம் வாசிக்கையில் அடைவது ஒன்று. அதை மற்றவரிடம் சொல்லாக விளக்கையில் வேறு அச்சாக எழுதுகையில் வேறு ஓவியமாக தீட்டுகையில் வேறாகிறது. என் வாசிப்பும் மற்றவர் வாசிப்பும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அனைத்தும் ஒன்றிலிருந்து வந்தவையாதலால் அனைத்தும் ஒன்றே.

இக்கருத்தை பல அம்சங்களில் பொருத்திப் பார்க்கலாம்.  ஒரு புள்ளியின் பெருவெடிப்பிலிருந்து தோன்றியவைதான் அனைத்து பிரபஞ்சமும் என கொள்ளலாம். பரமாத்மா ஒன்றே, அதனின் வெவ்வேறான வடிவங்களே அனைத்து ஜீவாத்மாக்களும் எனவும் கொள்ளலாம் அல்லது மூல பிரக்ருதத்தை அறியும் புருசர்கள் என வேதாந்தம் சாங்கியம் என அனைத்தையும் பேச வழி அளிப்பது பௌதத்தின் பின்னணியில்அமைந்திருக்கும் இக்கதை.

இந்த richness of material தான் உங்கள் கதைகளில் என்னை பெரிதும் கவர்வது. அது நமக்களிக்கும் வெளி பிரம்மாண்டமானது. எந்த புள்ளியிலிருந்தும் தொடங்கி நாம் அடைய தரிசனங்கள் பல. கதைகள் மீண்டும் வர துவங்கியதில் மகிழ்ச்சி, வாழ்க்கை மீண்டும் பொருளுள்ளதாக தோன்றுகிறது. தொடர்ந்து எழுதவேண்டும், கதைகள் வந்துக்கொண்டேயிருக்கட்டும். பெற்றுக்கொள்ள தயாராக காத்திருக்கிறோம். நன்றி.

 

ஸ்ரீராம்

தொடர்புடைய பதிவுகள்

வெண்மலர் பறவை –அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து

$
0
0

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது

 

அன்புநிறை ஜெ,

இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயனின் “அலகில் அலகு” கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவம்.

வாயிலில் நின்று தயக்கத்துடன் கதவை ஒருக்களித்துத் திறந்து தலைநீட்டும் குழந்தையின் ஒற்றைவிழிப்பார்வை என்றே கவிதை வாசிப்பைக் குறித்து எழுதும் இம்முயற்சியை உணர்கிறேன்.

இத்தொகுதியை வாசித்ததும் மனதில் நிறைவது தூயதொரு வெண்மை. வெண்மலர்களும் வெண்பறவைகளும் வெண்மேகங்களுமான ஒரு மனவெளி. இறகுகள் இதழ்களாக மயங்கி பறவையும் பூவும் ஒன்றென்றாகும் வெளி. “முடிவிலி இழையில் ஆடிடும் நனவிலி”, “இலை உதிரும் தருணம்
நிகழும் ஓர் நடனம். மரணம்”, “சிறகதிரும் பால்வெளி” போன்ற சில வரிகள் வாசித்தது முதல் உடனிருக்கின்றன.

இத்தொகுப்பின் சிறந்த கவிதைகள் என நான் விரும்பியவை அனைத்துமே இருவகைகளுள் வரும். முதல் வகைக் கவிதைகள் தேர்ந்த புகைப்படக் கலைஞனென நுண்தருணங்களை கவிதை மொழியில் காட்சிப்படுத்துபவை. இரண்டாவது வகை மனதை உற்று நோக்கி அகநடனங்களை சொல்பவை.

முதல் வகைமையில் சில கவிதைகள் வரிசையாக அடுக்கப்படும் காட்சிகள். எனில் அவற்றை செறிவு கொள்ளச் செய்வது மௌனசாட்சியாய் இருக்கும் ஒன்றின் தன்மை. இக்கவிதையில் அது இரவு:

தனிமையில் வளரும் நள்ளிரவு நிலா

உறக்கத்தில் புரளும் கடல் அலைகள்.

அலை அலையாய் மோதி செல்லும் மழைக்காற்று.
கருவறையில் உதைத்து விளையாடும் செல்ல குழந்தைகள்.

மின்னல் இடும் கணப்பொழுது கோலங்கள்.
மௌனமாய் விழித்திருக்கும் இரவு

வானைக் கனவு கண்டு நீரில் துள்ளும் மீன் மரித்ததும் பறவையென்றாகும் கணத்தைப் பாடிய தேவதேவனின் கவிதை வரிசையில் இதில் ஒரு கவிதை

விரைந்து நெருங்கும் கழுகின் கண்களில்

துள்ளி மறையும் புள்ளிமான்கள்

 

தரை தொடும் முரட்டுக் கால்களில் சிக்கித் துடிக்கும் முயல்குட்டி

உயரே உயரே பறக்கும் மருண்ட விழிகளில் சிக்குண்ட ஒரு சொல்

அறியா அர்த்தங்கள் உலவும் வெளியில் சிறகடித்துச் செல்கிறது

இன்னொரு கவிதை:

சிறு சிறு குட்டைகளில்
தேங்கி நிற்கிறது
முன்னொரு காலத்தின் பெருநதி.
அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது
அதிகாலைச் சூரியன்

சென்ற கோடையின் துவக்கத்தில் சோழநாட்டு கோவில்களைக் காணவென்று பயணம் ஒன்று சென்றிருந்தேன். அனுதினமும் எழுந்தது முதல் உறங்குவது வரை பல கோவில்கள்.  பெரும்பாலும் ஆளொழிந்து கிடந்த கோவில்களில் சிற்பக் கலையின் உன்னதங்களும், பாடல் பெற்ற தலங்களாக விளங்கிய அங்கு எழுந்த தமிழும் இசையுமெனவேறொரு காலத்தில் அவ்வாலயங்கள் அமைந்திருக்கின்றன. திருமழபாடியில் கொள்ளிடக் கரையில் பல்லாண்டுகள் கண்ட ஆலமரங்களின் அடியில் நின்றுபார்த்த போது விரிந்த மணற்பரப்பில் ஆங்காங்கே தேங்கிய நதியில் அந்தி வெயில் சுடர்ந்து கொண்டிருந்தது. அந்நதி ஏதோ விதத்தில் அந்த காலமற்ற வெளியை என்றுமென நிற்கும் மகத்தான கலைமரபை பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அதைக் கவிதைக் கணமாக ஆக்கித் தந்தது இக்கவிதை. அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது சூரியன் எனும் காட்சி மாற்றங்களுக்கிடையே மாறாதிருக்கும் பெருநெறி என்றும் தோன்றியது.

இரண்டாவது வகைமையில் அமைந்த கவிதைகளில் அவரது ஆன்மீகமான தேடலையும் அகப்பயணத்தையும் சொல்லும் மொழி அமைந்திருக்கிறது. ஆழ்ந்திறங்கும் இரவின் அமைதியில் வெடித்துச் சிதறும் எரிமீன்களென சில வரிகள் ஆங்காங்கே தெரிக்கின்றன. புலன்களின் எல்லைகளைக் கடந்த உள்முக அனுபவம் ஒன்றைக் கடத்தும் கவிதைகளில் ஒன்று இது.

திரிசடை அதிர் நிலம் உகிர் தோய் உதிரம்
பற்றி நாளமெல்லாம் நீரோடும் நெருப்பு
படபடபட சடசடசட
நடனமிடும் குளம்படிகள் சுழன்றடிக்கும் காற்றில் புரளும் செந்தீயின் பிடரி
சுடரும் மலரிதழ் மேல் அனந்தசயனம்
சாந்தம் சாந்தம் சாந்தம்

ஒடுங்குதல் நிகழ்கிறது எனத் தொடங்கும் மற்றொரு கவிதையிலும் மனது அடங்கி காலாதீதமான ஒன்று நிகழும் கணம் நிகழ்ந்திருக்கிறது. களிறு என்ற படிமம் வரும் கவிதைகளில் சிறப்பான ஒன்று இது:

நாட்கணக்கில் வனத்தில் திமிறிய களிறு

வெண்இதழ் மலரை கொய்து மெல்ல நீல வெளியில் வீசுகிறது

அந்தரவெளியில் தனித்து நீந்தும் வெண்மலர்

மனதின் போக்கை கவனித்து நிற்கும் கவிதையென இன்னொன்று:

ஆயிரமாயிரம்
இறகுகளின் பறவை
ஒரு கணத்தில்
ஒரு திசையில்
நகர்கிறது.
காலமற்ற வெளியுமற்ற
நிலையில் அது நிலைக்கிறது

“ஒளிந்திருக்கும் நினைவுகளை ரகசியமாய் மீளவாசிக்கும் மனம்” என்று துவங்கும் கவிதையில் “இரைவேண்டி கடும் வெயில்வெளியில் தவம் புரியும் ஒரு அரவம்” என்ற படிமமே முதல் வரியைச் சொல்லப் போதுமென்றும் படுகிறது.

இவ்விரண்டு வகைகளும் இணைந்து வரும் கவிதைகளும் இத்தொகுதியில் உண்டு.  நதிநீரில் முகம் காணும் மலர்கள், நீரில் காண்பது வேர்வழியே மலரென்றாகி சுடரும் நீரையே என்பதும் இருவகைமைகளையும் இணைக்கும் ஒரு கவிதை.

நதிநீரில் முகம் காணும் கரைமலர்கள்

அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள்

மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர்

செந்தளிர்களில் ஒளிரும் உயிரின் சுடர்

அறிந்தவற்றின் வாயிலாக அறியாதவற்றைத் தொட விழையும் மொழி யத்தனமே கவிதை எனும் வகையில், ‘அளக்கமுடியாமைகளின் அலகு’ என்றே ‘அலகில் அலகு’ தலைப்பு பொருள் படுகிறது. இதன் தலைப்பு வரி வரும் கவிதையில் வருவதோ இதேபோல காட்சிச் சித்தரிப்பும் அகப்பயணமும் இணையும் மற்றுமொரு புள்ளி. தன் இருப்பை அருந்திச் செல்ல முயலும் அந்தரப் பறவையின் காட்சி, அந்த நுண்தருணத்தை நலுங்காமல் தொட்டமையாலேயே இது கவிதையாகி வருகிறது.

“சரேலென பறந்து
சரிந்து இறங்கி
நிலைத்த நீரின்மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது”

ஓயாத மனதை உற்றுநோக்கி தியானத்தில் தன்னுணர்வை கரைத்துவிடும் முயற்சியின் கணம் என்று காட்சியும் கவிதையும் விரிந்து கொண்டே செல்கிறது.

விழிப்பு மனம் நனவிலியில் பற்றியேறும் கணங்களே கவிதைத் தருணங்கள் என்று சொல்கிறது இக்கவிதைத் தொகுதி.

 

மிக்க அன்புடன்,

சுபா.

அலகில் அலகு மின்நூல் வாங்க

அலகில் அலகு நூல் வாங்க

வேணு வேட்ராயன் கட்டுரைகள் அரூ

தொடர்புடைய பதிவுகள்

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

$
0
0

 

மாதண்ட மடத்திலிருந்து தந்த்ரி சங்கரன் போற்றி முன்னால் வர அவரைத் தொடர்ந்து கோயில் கமிட்டியினரும், கோயில் ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளையும் தாவித்தாவி நடந்து வந்தார்கள். தந்த்ரி அவ்வப்போது நின்று கைகளைச் சுட்டி ஏதோ பேசினார். அவர் மிகமெல்லிய குரலில் பேசினார் என்று தோன்றியது, அவர்கள் கைகட்டி, உடலை வளைத்து, முகத்தை முன்னால் நீட்டி அவர் பேசுவதை கேட்கவேண்டியிருந்தது.

நான் என் சன்னிதிக்கு முன்னால் கல்தூணோரம் கைகூப்பி நின்றேன். தந்த்ரி என்னை பார்ப்பது எனக்கு நல்லதா கெட்டதா என்று சொல்லமுடியவில்லை. நான் முறைப்படி பூஜைசெய்கிறேனா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தேவஉபாசனையும் பூஜாமந்திரமும் அப்பா சொல்லிக்கொடுத்தது. இந்தத் தெய்வத்திற்கு தாந்த்ரீக முறை என ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் ஏதாவது பெரிய பிழை செய்துகொண்டிருக்க வாய்ப்புண்டு.

அவர் ஏதாவது தப்பு கண்டுபிடித்தால் என்னைக் காய்ச்சி எடுத்துவிடுவார். அவர் பல கோயில்களில் அர்ச்சகர்களையும் போற்றிகளையும் கதறி அழவைத்திருக்கிறார். ஏற்கனவே எனக்கு சம்பளமில்லாத உத்தியோகம் .தினமும் தட்டில் வருவதே வருமானம். கோயில் கமிட்டியினரை நயந்து வாழும் வாழ்க்கை.

இவர் என்னை ஏதாவது சொன்னால் அதோடு என் பிழைப்பு போயிற்று. இந்த நொண்டிக்காலை வைத்துக்கொண்டு நான் வேலைக்குச் செல்லவேண்டும். நான் செய்யக்கூடிய ஒரே வேலை ஓட்டலில் பரிமாறுவதுதான். ஆனால் அதற்கு கைகளுக்குச் சமானமாக கால்களும் தேவை. நாளெல்லாம் நிற்கவேண்டும். என் தம்பிக்கு இருகால்களும் உறுதியானவை. ஆனால் அவை நரம்புகள் புடைத்து கொடிபோல சுற்றியிருக்கின்றன. அந்தியில் அவன் மனைவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கிறாள். அவன் ஆ ஆ என்று அலறிக்கொண்டிருப்பான்.

இந்த தந்திரி சங்கரன் போற்றியைப் பற்றித்தான் ஒருவாரகாலமாக கோயிலில் பேசிக்கொண்டிருந்தார்கள். மிகமிகப் புகழ்பெற்றவர். மாதண்ட மடம் என்றால் ஆயிரமாண்டுகளாக வேரூன்றிய குடி. அவர்கள்தான் இந்தப் பகுதியிலுள்ள எல்லா கோயில்களுக்கும் தந்திரிகள். மாதண்ட மடத்தின் நம்பூதிரிகளுக்கு முன்னால் மகாராஜாவே அமர்ந்து பேசமாட்டார். எந்த சபையிலும் அவர்கள் சொல்வதே இறுதியானது. மூத்த தந்த்ரி கிருஷ்ணன் போற்றி மறைந்து நான்காண்டுள் ஆகிறது. அவருக்கு பின் இவர் பொறுப்பேற்றிருக்கிறார்.

ஆனால் இவர் முறையாக படித்தவர் அல்ல என்று அனந்தன் நாயர் சொன்னார். அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர்,  இங்கே நாள்தோறும் சாமி கும்பிட வருபவர்.  “இந்தாள் அவரோட வாரிசுதான். ஆனால் சின்னவயசிலேயே படிக்கப்போய்ட்டார். வக்கீல் படிப்பு முடிச்சு கொஞ்சநாள் பிராக்டீஸும் பண்ணினார். அப்புறம் அப்பா செத்துப்போனபிறகு சடார்னு ஒருநாள் காலையிலே தந்திரி ஆயிட்டார். கேட்டா அப்பா வைச்சிருந்த ரெண்டுமூணு தந்த்ரநூல்களை படிச்சிட்டாராம். தந்த்ரம்ங்கிறது என்ன இந்தியன் பீனல்கோடா? அது மந்த்ரவடிவிலே இருக்கு. மந்த்ரத்தை ஞானத்தாலே கடைஞ்சு தியானத்தாலே உருக்கி எடுத்தாகணும்…” என்றார்.

“ஆனால் இப்ப அவருதானே ஃபேமஸ்… நமக்கு கும்பாபிஷேகம் பண்ணணுமானா தந்த்ரி ஆலோசனை வேணும்” என்றார் கோயில் கமிட்டி தலைவர் மணக்கரை பத்மநாப பிள்ளை.

“அதுக்கில்லை, உங்களுக்கு போஸ்டர்லே போட ஒரு ஆளுவேணும். போனமாசம் மங்கலக்குறிச்சியிலே ஒரு கோயிலிலே போஸ்டரிலே தந்த்ரி மாதண்டமடம் சங்கரன் தந்திரி எம்.ஏ.பி.எல்லுன்னு போட்டிருக்கான். நான் கேட்டேன், ஏண்டே கிரிமினல்னு பிராக்கெட்டிலே போடவேண்டாமான்னுட்டு… அடுத்த தடவை போடுதேங்குதான்” என்றார் அனந்தன் நாயர்

தந்த்ரியும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் என் அருகே வந்தபோது நான் அறியாமலேயே மீண்டும் பின்னால் நகர்ந்தேன். தூணுக்கு வெளியே என்னுடைய மூக்கும் கையும்தான் தெரிந்திருக்கும்

தந்த்ரி என் சன்னிதி அருகே வந்ததும் நின்று கூர்ந்து பார்த்தார். முகம்சுளித்து “இதேது தெய்வம்?” என்றார்.

“இது ஜ்யேஷ்டையாக்கும்…” என்றார் கமிட்டித் தலைவர் மணக்கரை பத்மநாப பிள்ளை.

“இதெப்டி இங்க? பகவதி மகாமங்கலையாக கோயில் கொண்டிருக்கிற ஸ்தலத்திலே…” அவர் குனிந்து அருகே வந்து உற்றுப்பார்த்தார்

சன்னிதி முக்கால் ஆள் உயரம்தான். வாசலுக்குள் உட்கார்ந்துதான் உள்ளே போகமுடியும். அவர் நல்ல பருமன், பெரிய தொந்தி. கையூன்றி உட்கார்ந்தபோது அந்த அலுப்பில் எரிச்சலடைந்தார் என்று தோன்றியது.

சன்னிதிக்குள் நுழையாமல் இடைப்படியிலேயே காலை உள்ளே விட்டு அமர்ந்தார். தேவியின் இடையில் அணிவிக்கப்பட்டிருந்த நீலப்பட்டு வஸ்திரத்தை உருவினார்

“அய்யோ… தம்பிரானே!”என்று நால் அலறிவிட்டேன்

“இவன் யாரு?”என்று அவர் முகம்சுளித்தபடி திரும்பிப்பார்த்தார்.

“இவராக்கும் இங்க சாந்திக்காரர்”

“சாந்தியா? நீ ஆரெடா, போற்றியா, ஸ்மார்த்தனா?”

“நான் பண்டாரமாக்கும்… பூக்கட்டிப் பண்டாரம்”

அவர் உதடுகள் கோணலாக இழுபட“பண்டாரம் பூஜை… நல்ல காரியம்” என்றார். கையை வீசி உரக்க “போ, தள்ளிப்போ” என்று அதட்டினார்.

நான் “தம்பிரானே, அவ உக்ரமூர்த்தியாக்கும். கண்கண்ட தேவதையாக்கும்…நான் இருகண்ணாலே கண்டிட்டுள்ளவளாக்கும்… ஆசாரவிரோதம் வேண்டாம்” என்றேன்

“என்னடே ஆசாரம்? எந்த சாஸ்திரம்? எந்த தந்த்ரம்?” என்றார் தந்த்ரி

“எங்க அப்பாவுக்க உபாசனை… எனக்கு சொல்லிக்குடுத்தார்”

இகழ்ச்சியுடன் “மூதேவி உபாசனை, நல்ல தொழில்” என்றபின் அவர் திரும்பி தேவி அணிந்திருந்த நீலமலர் மாலைகளையும் பிடுங்கி வீசினார். கையால் விக்ரகத்தை தடவிப்பார்த்தார். குனிந்து கீழே வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்த்து முகம் சுளித்து “இது என்னடே இது?”என்றார்

“தேவிக்கு ப்ரீதியான அமங்கல வஸ்துக்கள். துடைப்பம், முடி, சாம்பல்” என்றேன். துடைப்பம்போல உள்ளங்கையளவுக்கு செய்து வைத்திருந்தோம். தலைமுடியில் ஒருசுருள். சாம்பல் ஒரு சிட்டிகை. அது அமாவாசை தோறும் படைக்கப்படும்

முகத்தை அருவருப்புடன் சுளித்து “அஸ்ரீகரம்… பகவதிகோயிலுக்குள்ளே இது எப்டி வந்தது செட்டியாரே?” என்றார் தந்த்ரி

கமிட்டித் துணைத்தலைவர் சங்கரநாராயணன் செட்டியார் “நான் அறிஞ்ச காலம் முதலே இங்கே இருக்கு” என்றார். “இடைக்கிடைக்கு நானும் வந்து கும்பிடுவதுண்டு…”

“இங்கயா? மூதேவியையா? பின்ன எதுக்கு ஓய் அங்க ஸ்ரீதேவி நாராயணியா உக்காந்திட்டிருக்கா?”

“இல்ல, கஷ்டங்கள் வரும்போது, ஜோசியங்கள் சொன்னா…” என்று செட்டியார் தயங்கினார்.

“அதாக்கும் காரியம், ஜோசியனுங்களுக்க விளையாட்டு. தெய்வநம்பிக்கை உள்ளவனுக்கு ஒரு தெய்வம் போதும். வெம்பிப்போன நம்பிக்கை உள்ளவனுக்கு காரியத்துக்கு ஒரு தெய்வம் வேணும். ஒவ்வொரு பயத்துக்கும் ஒவ்வொரு தெய்வம். ஒவ்வொரு ஆசைக்கும் ஒவ்வோரு தெய்வம். ஜோசியனுக்க காசு விளையுறது அந்த பயத்திலயும் ஆசையிலயுமாக்கும். அவனுக எங்கியாவது தெய்வங்களை கண்டுபிடிச்சு தூண்டிவிடுவாங்க… பரிகாரமூர்த்தின்னு சொல்லி பரப்புவாங்க. ஜனங்கள் மங்கலதெய்வத்தை விட்டு அமங்கலதெய்வத்துக்கு பின்னாலே ஓடுவாங்க… இதாக்கும் இப்ப நடந்திட்டிருக்கிறது” என்றார் தந்த்ரி

நான் குனிந்து, மன்றாடுவதுபோல் கைநீட்டி “அப்டி இல்லை திருமேனி…”என்று சொன்னேன்

“என்ன? எதுத்துப் பேசுறியா?”

“இல்ல… அதுக்கெல்லாம் எனக்கு அறிவில்லை” என்றேன் “ஆனா இந்த சன்னிதியைப் பற்றி எங்க அப்பா சொல்லியிருக்காரு” என்றேன்

அவர் முகம் திருப்பிக்கொள்ள நான் மேலும் குரலை தாழ்த்தி “இங்க முன்னாடி ஒரு குகையிலே ரெண்டு தேவிகளும் இருந்திருக்காங்க. அக்காதங்கச்சி கோயில்னுதான் கோயிலுக்கே பேரு. கார்த்திகைத்திருநாள் தர்மராஜா காலத்திலே வில்வமங்கலத்து ஸ்வாமியாருக்க சிஷ்யர் ஒருத்தர் இங்கே வந்தார். கேசவானந்த சுவாமின்னு பேரு. அவரு ஸ்தாபிச்சது இந்த கோயில். இந்த தேவியை இங்கே ஸ்தாபிச்சதும் கேசவானந்த சுவாமியாராக்கும்”

“வில்வமங்கலத்து சுவாமியாரா?”என்று தந்த்ரி திரும்பி முகம் சுருங்க  கேட்டார்

“இல்லை, அவருக்க சிஷ்யபரம்பரையிலே ஒருத்தர். முஞ்சிறை மடத்திலே அவர் சமாதியானார்னு சொல்லுவாங்க. அப்ப இந்த ஊரு இங்கே இல்லை, நாலு கிலோமீட்டர் தெக்கே வாகினியாற்றுக்க கரையிலயாக்கும்… இப்பம் கொட்டாரம் எஸ்டேட் இருக்குல்லா அங்கே. அங்கதான் மகாராஜாவுக்க அரண்மனை இருந்தது” என்று நான் சொன்னேன்.

தந்த்ரி என்னை கேட்கிறார் என்று தெரிந்தது. ஆனால் அதைக் கேட்காதவர் போல அவர் சிலையை நோக்கி திரும்பியிருந்தார். கோயில் கமிட்டியினருக்கு ஆர்வமிருந்தது, அவர்கள் அதையெல்லாம் கேட்டிருக்கவேயில்லை என்று தெரிந்தது. அவர்கள் எவருமே என்னிடம் முகம்கொடுத்துப் பேசியவர்களே அல்ல.அவர்கள் கண்ணில் நான் கீழே தரையோடு தரையாக செல்லும் தவளை மாதிரி தெரிவேன்.

“அப்ப நீர்க்கம்ப நோய் வந்து ஊரையே அழிச்சிட்டிருந்தது. வாய்நீரும் வயிற்றுநீருமா வெளியேபோயி ஜனங்கள் குடும்பம் குடும்பமா செத்துக் குவிஞ்சாங்க. அந்த உடம்புகளை தொட்டு எடுக்கக்கூட ஆளில்லாம நாய்நரி கடிச்சு இழுத்துது. கயிறுகட்டி இழுத்து ஆத்திலே போட்டாங்க. ஆத்திலே பிணத்தைபோட்டா அம்பது கசையடின்னு மகாராஜா உத்தரவு வந்தபிறகு அதுக்கும் வழியில்லை. அப்டியே வீடோட கொளுத்திருவாங்க…” என்று நான் சொன்னேன்.

ஆண்டுதோறும் இங்க கூட்டச்சாவு உண்டு. நீர்க்கம்பம் ஒருவருசம் குருதீனம் அடுத்த வருசம். ஆனா இது கல்லுவாரி வீசினா பொன்னு விளையுற மண்ணு, விட்டுட்டுப் போகவும் முடியாது. அப்பதான் இங்க வில்வமங்கலம் மூணாம் ஸ்வாமியார் கேசவானந்த குரு வந்தாரு. இங்கே இருந்த கரைமாடம்பி வலியகாளிப் பிள்ளை அவரைப் போயிப் பாத்து ஊரைக் காப்பாத்தணும்னு சொல்லி கையை தலையிலே கூப்பிக்கிட்டு அந்தாலே மண்ணிலே எட்டுசாணும் படிய விழுந்து கும்பிட்டாரு. காலைப்பிடிச்சுக்கிட்டு காப்பாத்தல்லேன்னா விடமாட்டேன்னு கதறினாரு

வில்வமங்கலம் மூணாம் சுவாமியார் “சரிடே, காலைப்பிடிச்சுட்டே. உனக்கு நான் வழிசொல்லுதேன்”னு சொன்னார். பதினாலுநாள் அன்னம் தண்ணி இல்லாமல் தவம் பண்ணினார். அதிலே அவருக்கு ஒரு காட்சி கிடைச்சுது. அவர் கையிலே கோலோடே கிளம்பி நடந்தப்ப ஜனங்களும் கூடவே வந்தாங்க. இந்த எடம் அப்ப ஒரு குன்று. இப்ப ரோடும் வழியும் வந்து தாழ்ந்துபோச்சு. இதை கள்ளியங்காடுன்னு சொல்லுவாங்க. இலைக்கள்ளி காடா அடர்ந்து கிடந்த இடம் இது

இந்த காட்டுக்குள்ள ஒரு பெரிய ஒற்றைப்பாறை… இந்தா கோயிலுக்கு புறத்தாலே நிக்குதுல்லா இந்தப்பாறை…இதுக்கு அரக்குப்பாறைன்னு பேரு. அரக்கு மாதிரி ஒத்தைமெழுகாட்டு இருக்கு… இதிலே ஒரு குகை அந்தக்காலத்திலே இருந்திருக்கு. குகைக்குள்ள ரொம்ப பழைய காலத்திலேயே அக்காதங்கச்சிகளை வைச்சு கும்பிட்டுட்டு இருந்திருக்காங்க. ஆண்டுக்கொருமுறை ஜனங்க வந்து கும்பிட்டுட்டு போவாங்க. காலப்போக்கிலே ஜனங்க மறந்திட்டாங்க. சாந்தி நடந்து பன்னிரண்டு ஆண்டு தாண்டியாச்சு.

சுவாமியார் இங்கே  சர்வமங்கலையா பகவதியை பிரதிஷ்டை பண்ணணும்னு சொன்னார். ஒரு மங்கலம் குறையக்கூடாது. அப்டித்தான் சங்கு சக்கரம் கதாயுதம் ஏந்தி அபயஹஸ்தம் காட்டி உக்காந்திட்டிருக்கிற நாராயணிதேவியை இங்கே பிரதிஷ்டை செய்தார். அவரு சொல்லி வரைஞ்சுகுடுத்த பிரகாரம் மயிலாடி வலியசில்பி வல்லபன் மாராயன் செதுக்கினதாக்கும் கர்ப்பகிருகத்திலே உள்ள சில்பம்

கரைமாடம்பி வலியகாளிப் பிள்ளை மைலாடியிலே இருந்து கல்லாசாரிகளைக் கொண்டுவந்து தங்கவச்சு இங்கே இந்த கோயிலை கட்டினார். அதோடே இந்த ஊரிலே எல்லா சீக்கும் நீங்கி ஐஸ்வரியம் நிறைஞ்சுதுன்னு ஐதீகம். இந்த ஊருக்கே அதுக்குப்பிறகுதான் பொன்னுமங்கலம்னு பேரு வந்தது. இந்த கோயிலுக்கு மங்கலஸ்தானம்னு பேரு. இங்கே அஷ்டதிக்பாலகர்கள் அஷ்டதிக்கஜங்கள் யக்ஷிகின்னராதி தேவர்கள்னு எல்லா ஐஸ்வரியங்களும் உண்டு.

“இங்கே தேவிக்கு சர்வமங்கல்யைன்னு பேரு… ஒவ்வொருநாளும் அஷ்டமங்கலம் காட்டி பூஜை நடக்கும். இந்த பகுதிகளிலே கல்யாணத்துக்கு நாள்குறிச்சதுமே பெண்ணை மங்கலவஸ்திரமும் ஆபரணமும் அணிவிச்சு தாலம்நிறைய அஷ்டமங்கலங்களோடே இங்கே கூட்டிட்டு வந்து கும்பிட்டுட்டுப் போற வழக்கம் உண்டு” என்று நான் சொன்னேன்

தந்த்ரி என்னை நோக்கித் திரும்பி “சரிடே, நீ சொல்லுற சரித்திரம் சரீன்னே வைச்சுக்கிடுவோம். இது மகாமங்கலை பகவதிக்க கோயில் தானே? இங்கே எல்லா மங்கலங்களும் உண்டுன்னு சொன்னே. இந்த தேவி எது, இது மங்கலமூர்த்தியா?” என்றார்

“இது ஜ்யேஷ்டாதேவி” என்றேன்

“ஆமா, அதாவது அக்கா , மூதேவி. சேட்டைன்னு சொல்லுதோமே அது. பாரு, சாமுத்ரியா லட்சணத்துக்கு நேர்எதிரான எல்லா லட்சணங்களும் உள்ள உடம்பு. சுத்தி என்னென்ன வைச்சிருக்கே? கஷ்மலம், இல்ல? துடைப்பம், முடி, சாம்பல்… மலம் உண்டாடே?”

நான் ஒன்றும் சொல்லவில்லை

“சொல்லு, மலம் உண்டா?”

நான் மிக மெல்ல “உண்டு” என்றேன்

“அய்யய்ய… எங்க?”

“அது அங்க அந்த சிவப்பு துணியிலே சுத்தி வச்சிருக்கு. உலந்ததாக்கும்”

“போதுமா?”என்று அவர் கோயில் கமிட்டியினரை நோக்கிச் சொன்னார். “இதை இங்க வச்சிட்டு என்ன ஓய் சர்வமங்கலம்?”

அவர்கள் என்னை பார்த்தார்கள். “நான் இது அக்காவாக்கும்… பகவதிதேவிக்கு அக்கா. அக்கா இல்லாம அவ இருக்க மாட்டா” என்றேன்

“சாஸ்திரப்படி…” என்று சங்கரநாராயணன் செட்டியார் தொடங்க நான் இடைமறித்தேன்

“செட்டியார்வாள், சாஸ்திரபப்டி ஒரு அமங்கலம் இல்லாமல் மங்கலம் நிறைவடையாது. அதாக்கும் இந்த பிரபஞ்சலீலை… இது தெய்வமங்கலம், அதனாலே இங்கே தெய்வ அமங்கலம் உக்காந்திட்டிருக்கு” என்றேன்.

நான் சொன்னேன்.“இவ பீடைக்க தெய்வம். இருட்டுக்கும், துன்பத்துக்கும், சீக்குக்கும் மரணத்துக்கும், அழுக்குக்கும் கசப்புக்கும் எல்லாம் தெய்வம் வேணும். ஏன்னா அதெல்லாம் இங்க இருக்கு. நாம இல்லேன்னு நினைச்சா இல்லாம ஆகிடாது… நாம மறைச்சா மறைஞ்சிராது. வெளிச்சத்தையும் சந்தோஷத்தையும் சுகத்தையும் சுத்தத்தையும் இனிப்பையும் மட்டும் வச்சுகிட்டு ஆரும் இங்கே வாழ்ந்திட முடியாது”

“போதும் போ, உங்கிட்ட சாஸ்திரம் படிக்கவேண்டிய நிலைமையிலே நான் இல்ல, புரியுதா?” என்றார் தந்த்ரி

“இந்த சாஸ்திரம் உங்களுக்குத் தெரியல்லை திருமேனி, அதாக்கும் அடியேன் சொல்லுகது” என்றேன். “புதைச்சு வைக்கிறது முளைக்கும். விருட்சமா தலைமேலே எந்திரிச்சு நிக்கும். அதனாலே நன்மையைத்தான் புதைச்சு வைக்கணும். தீமையை கண்முன்னாலே நிறுத்தணும். தேவி நீ எப்பவும் இருப்பே, நீ நிரந்தரி, நீ சர்வசக்தை, உன் சக்திக்கு முன்னால் நான் க்ஷணகுமிழி, அற்ப தூசுக்கும் தூசுன்னு சொல்லணும். பயப்படக்கூடாது. தயங்கக்கூடாது. அருவருப்பும் கூச்சமும் வரப்பிடாது. அஷ்டமங்கலையா உக்காந்திட்டிருக்கிற பகவதியை கும்பிடுத அதே பயபக்தியோட அதே பரவசத்தோடே மனசு நிறைஞ்சு கும்பிடணும். அடிபணியணும். திருப்பாதங்களை தலையிலே சூடிக்கிடணும்”.

“இனிப்பு நல்லதாக்கும், ஆனா இனிப்பு நோயைத்தரும். கசப்பு கெடுதலாக்கும், ஆனா அளவோடு சாப்பிடுத கசப்பெல்லாம் மருந்து” என்று நான் சொன்னேன். “சந்தோஷமும் ஐஸ்வரியமும் உள்ள இடத்திலே போகம் வளரும்.போகம் வளர்ந்தா அங்கே தர்மசிந்தை அழியும். துன்பமும் சீக்கும் வாழ்க்கைதான்ன்னு நினைக்குதவன் மனசிலே மட்டும்தான் தர்மசிந்தை இருக்கும். அதனாலேதான் ஜ்யேஷ்டையை தர்மசம்வர்த்தினீன்னு சொல்லுதோம்”

“பகவதி மகாமாயை. இவதான் அவ, அவதான் இவ” என்று நான் சொன்னேன். குளிர்கண்டவன் போல நடுங்கிக்கொண்டிருந்தேன். “சீக்கை மறந்தவனுக்கு ஆரோக்கியம் இல்லை. அழுக்கை மறந்தவனுக்கு சுத்தம் இல்லை. மலத்தை ஒதுக்குகிறவனுக்கு முக்தியும் இல்லை” என்றேன். “அம்மை இங்கே இருந்து இந்த நாட்டை அனுக்ரகிக்கிறாள். இந்த வீராளிபப்ட்டுலே பகவதி ஊடுன்னா இவ பாவு… ”

சங்கரநாராயணன் செட்டியார் என் சொற்களால் மனம்நகர்ந்தவராகத் தெரிந்தார். நான் அவரை நோக்கி திரும்பி  “செட்டியாரே, உம்ம மகனுக்கு மனசு பேதலிச்சப்ப நீங்க இங்கதான் வந்தீரு. அம்மை அருளாலே இப்ப அவன் படிச்சு வேலைக்கு போறான்…”

“ஓ, அப்டி ஒரு வியாபாரமா உமக்கு?”என்றார் தந்த்ரி “நல்ல தட்சிணை தேறுதுபோல?”

“திருமேனி, எட்டு பூசை நடத்திக்குடுத்ததுக்கு செட்டியார் எனக்கு மொத்தமா தந்தது முந்நூறு ரூபாயாக்கும்… நான் பேசுதது பைசாவைப் பத்தி இல்லை” என்றேன். “எல்லாரும் கேளுங்க. அங்க இருக்கிற பகவதி சௌந்தரிய மாதாவாக்கும். அலங்கரிச்சு உக்காந்திட்டிருக்கிற அம்மை. பிள்ளை அழுதா உடனே வந்திரமாட்டா. இவ விரூபமாதா. அடுக்களைக்கரியும் தொழுத்துச்சாணியும் பூசியிருக்குத நம்ம அம்மைகளைப்போல. இவ நம்மளை அடிப்பா, அடிச்சுட்டு அவளே அழுவா. முலையூற கைநிறைய அள்ளி அள்ளிக் குடுப்பா”

“செட்டியாரே, இங்க உள்ள சீக்கெல்லாம் இந்த மூர்த்தியாலே வாறதாக்கும்” என்றார் தந்த்ரி “இவ வேணுமா உங்களுக்கு… முடிவெடுத்து சொல்லுங்க”

“என்ன முடிவு? யாரு முடிவெடுக்குதது? இவளுக்க ஆஸ்தானமாக்கும் இந்தக் கோயில்” என்று நான் சீற்றத்துடன் கூவினேன்

“இவங்க இந்தகோயிலுக்க டிரஸ்டிகள்,நான் தந்திரி. நாங்க போதும் முடிவெடுக்க. சொல்லுங்க இவளும் இவ குடுக்குத சீக்கும் வேணுமா?”

“சீக்கில்லாத வாழ்க்கை உண்டா? இருட்டாம விடியுமா?”என்றேன் “சீக்கை மறைச்சா சீக்கு மறைஞ்சிருமா? அம்மை சீக்குக்க அதிதேவதை. சீக்கை நோக்கி அம்மே தாயே மகாமாயேன்னு விளிக்கணுமானா இவ இங்க இருக்கணும்” என்று நான் உரக்கக் கூவினேன். என் குரலைக் கேட்டு நானே விசும்பி அழத்தொடங்கினேன் “திருமேனீ, ஏழு தலைமுறையாட்டு எங்க மந்திரம் ஒருநாள் மூவேளை தவறாம இங்க நிறைஞ்சிட்டிருக்கு. அம்மையை உயிர்கொடுத்து கட்டுப்படுத்தி நிப்பாட்டிட்டு இருக்குத மந்திரம் எங்களுக்கு வசமாக்கும்… ஒரு நோன்பு குறைச்சதில்லை. ஆத்மபலிகுடுத்து செய்யுத உபாசனையாக்கும் இது”

“என்ன மந்திரம் சொல்லும் பாப்பம்”

“அது ஆப்த மந்திரம்…”

“என்னன்னு எனக்கு தெரியும்” என்று தந்த்ரி ஏளனமாகச் சொன்னார்.  “அதெல்லாம் காணிக்காரன் சொல்லுத மந்திரம். தந்த்ர சாஸ்திரத்திலே அதுக்கெல்லாம் இடமில்லை”

நான் “அப்டி சொல்லக்கூடாது. மந்த்ரம் அநாதியாக்கும்” என்றேன்

“போவும் வே” என்றபின் அவர் திரும்பி கமிட்டியினரிடம் “என்னவே, என்ன முடிவு? இந்த சீக்குதேவி இங்க இருக்கணுமா வேண்டாமா? முடிவு எடுத்துச் சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு” என்றார்.

கோயில்கமிட்டி தலைவர் மணக்கரை பத்மநாப பிள்ளை திரும்பி ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளையிடம் “தந்த்ரி திருமேனி சொல்லுகதிலே காரியமுண்டு. நானும் அதை யோசிச்சதுண்டு. இந்த மகாமங்கலை கோயிலிலே இந்த அழுக்குமுண்டை என்னத்துக்கு?” என்றார்

“ஆனா…”என்றார் சங்கரநாராயணன் செட்டியார்

தந்த்ரி “அந்தக்காலத்திலே இந்த கோயிலை இங்க வைச்சாங்கன்னா அன்னைக்கு இன்னைக்கு மாதிரி மாடர்ன் மருந்துகள் இல்லை. காலராவுக்கும் வைசூரிக்கும் பிளேக்குக்கும் ஜனங்கள் பயந்திட்டிருந்தாங்க. அந்த பயத்தாலே இந்த தெய்வத்தை வச்சு கும்பிட்டாங்க. இந்த தெய்வம் அவங்களைக் காப்பாத்தல்லை, வெள்ளைக்காரன் மருந்துதான் காப்பாத்திச்சு. இப்பவும் சீக்குவந்தா டாக்டர்கிட்டதான் ஓடுதோம், யாரும் இங்க வாறதில்லை. நாம அப்ப பயந்ததுக்கு சாட்சியா இந்த பீடைத்தெய்வம் இங்க உக்காந்திட்டிருக்கு” என்று சொன்னார்.

“இந்த காலத்திலே இந்தமாதிரி காட்டுமூதேவித் தெய்வங்களை இங்க வச்சு கும்பிட்டா நம்மளை பாக்கிறவன் காட்டாளன்னு சொல்லுவான். இப்ப ஒரு வெள்ளைக்காரன் நம்ம கோயிலுக்குள்ள வந்து இப்டி ஒரு தெய்வத்தை பார்த்தா என்ன சொல்லுவான்? பேய் மாதிரி தெய்வம். பீய படைச்சு கும்பிடுதோம். வெளங்குமா? நம்மள ஆப்ரிக்க காட்டாளன்னு சொல்லிடமாட்டானா?”  என்று தந்த்ரி மற்றவர்களை பார்த்து கேட்டார்

“சகல ஐஸ்வரியமும் தாறதுக்கு மங்கலப் பகவதி போதாதா? போதாதா வே?”

“போதும்” என்று  மணக்கரை பத்மநாப பிள்ளை சொன்னார் “பூத்த கொன்றை மாதிரி அம்மை இருக்கிறப்ப வேற தெய்வம் எதுக்கு?”

“அப்ப கேப்பீங்க, அவளா தாறான்னு. உண்மை, அவ தரல்லை. அது கல்லுச் சில்பம். ஆனா நாம அதுக்குமேலே சார்த்துகள் வைக்குதோம். பொன்னும் மணியும் பூவும் பட்டும் சந்தனமும் குங்குமமும் சார்த்துதோம். சங்கீதமும் கவிதையும் சார்த்துதோம். மந்திரம் சார்த்துதோம். அதெல்லாம் நம்ம மனசிலே இருந்து எந்திரிச்சு வாறது. நம்ம மனசுக்க ரூபங்கள் அதெல்லாம். நாம  அங்க பகவதியா பாக்குதது நமக்கு உள்ள இருக்கிற ரூபத்தையாக்கும்”

“மங்கலரூபத்தையும் மங்கல வஸ்துக்களையும் பார்த்தா நம்ம மனசு மங்கலமாயிடும். நம்ம கண்ணிலயும் செவியிலயும் மனசிலயும் சொப்னத்திலயும் சுஷுப்தியிலயும் சாந்தியும் சந்தோஷமும் நிறையும். அதான் தெய்வவழிபாட்டுக்க ரகசியம். உபாசனை எல்லாமே ஆத்ம உபாசனைதான்… அவ்ளவுதான் சாஸ்திரம். என்ன சொல்றீங்க? வெளிச்சமா இருட்டா எது வேணும்?” என்றார் தந்த்ரி

“வெளிச்சமில்லாம இருட்டில்லை திருமேனி” என்று நான் சொன்னேன்.

“டேய், அந்தால போ” என்றார்  ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளை

கமிட்டித் தலைவர் மணக்கரை பத்மநாப பிள்ளை “இந்த தெய்வம் இங்க வேண்டாம்… எங்க முடிவு அதாக்கும். என்ன செட்டியாரே?”என்றார்

“ஆமா…”என்றார் சங்கரநாராயணன் செட்டியார்

“பிறகென்ன?”என்றார் ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளை

தந்த்ரி கையை நெஞ்சில் குவித்துவைத்து கண்மூடி மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கினார். அவருடைய உதடுகள் துடித்தன. மற்றவர்கள் கைகூப்பி நின்றார்கள்.

நான் “திருமேனி, திருமேனி, கருணை காட்டணும்… கருணை காட்டணும் தம்புரானே” என்று அழுதேன்

அவர் மந்திரம் முடித்து எழுந்து சிலையை பிடித்து மும்முறை உலுக்கி பீடத்திலிருந்து பெயர்த்து எடுத்தார். அதை அந்த நீலப்பட்ட்டால் பொதிந்து தூக்கிக்கொண்டார்

அந்தக் காட்சி ஒருகணம் எனக்கு கனவு போலிருந்தது. அத்தனை எளிதாக சிற்பம் உடைந்துவரும் என்று நான் நினைக்கவில்லை. வெறுமையான பீடம் என்னை திடுக்கிடச் செய்தது நான் “திருமேனீ… வேண்டாம் திருமேனீ” என்று கூவியபடி அவர் காலில் விழுந்தேன்

“எந்திரிச்சு போடா” என்று ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளை என்னை பிடித்து தூக்கி அப்பால் வீசினார். நான் மல்லாந்து விழுந்தேன். கல்தூணில் என் தலைமுட்டியது

அவர்கள் நடந்து அகன்று சென்றார்கள். நான் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டு படுத்திருந்தேன். ஏதோ நிகழப்போகிறது என்று எதிர்பார்ப்பவன்போல. என் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளை நெஞ்சில் கூப்பி வைத்திருந்தேன்.

அவர்களின் கால்கள்தான் சென்றுகொண்டே இருந்தன. என்னால் நம்பமுடியவில்லை. ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளை ஒருமுறை திரும்பிப்பார்த்தார். அதைக்கண்டு மணக்கரை பத்மநாப பிள்ளை திரும்பிப் பார்த்தார். ஒன்றுமே நடக்கவில்லை. உண்மையிலேயே ஒன்றும் நடக்கவில்லை.

என்முன் நான் இருபதொரு ஆண்டுகள் பூஜைசெய்த சிறுகோயிலின் கருவறை கண்பிடுங்கிய குழிபோல தெரிந்தது. என் அப்பா நாற்பத்திரண்டு ஆண்டுகள் அங்கே பூஜைசெய்தார். அவர் அப்பா அங்கே முப்பதாண்டுகள். அவர் அப்பா வாழ்நாளெல்லாம்.

நான் என்ன செய்யவேண்டும்? தேவீ என்று அலறவேண்டுமா? எழுந்து சென்று அந்தக் கல்படியில் மண்டையை மோதி உடைக்கவேண்டுமா? வானம் நோக்கிக் கதறவேண்டுமா? அப்படியென்றால் என்ன நடக்கும். இந்தக் கோயில் இடிந்து விழுமா? அந்த ஆலமரம் சரியுமா? இடிமின்னலுடன் புயல் எழுமா?

என் உடல் சோர்ந்து செயலற்றிருந்தது. கைகால்கள் செத்துக் குளிர்ந்திருந்தன. என் கண்களிலிருந்து சொட்டிய கண்ணீரும் குளிர்ந்திருந்தது

சாமி கும்பிட வந்த அணைக்கல் கிருஷ்ணபிள்ளையும் நாராயணன் நாடாரும் என்னை நோக்கி விரைந்து வந்தனர்

“என்ன ஆச்சு? என்னவே?”என்றார் கிருஷ்ண பிள்ளை

“சாமிய, தந்த்ரி…”என்று கைகாட்டினேன். என்னால் பேச முடியவில்லை, அழுகையில் குரல் உடைந்து தெறித்தது

“சாமிய கொண்டுபோயிட்டாரா? எங்க? எதுக்கு?”

அவர்கள் அத்திசை நோக்கி ஓடிச்சென்றார்கள். நான் அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். கூடவே மானசீகமாக ஓடிவிட்டு மீண்டும் திரும்பி என் சன்னிதிமுன் வந்தேன். நான் நினைவறிந்த நாள்முதல் வாழ்க்கையில் பெரும்பகுதியை அந்த நான்கு கல்தூண்களுக்கு நடுவே கழித்தவன். அங்கிருந்து விலகி எங்குசென்றாலும் பதறிக்கொண்டிருப்பேன். சொந்த வீட்டில்கூட.

நீலாப்பிள்ளை அம்மச்சியும் ஒரு சிறுமியும் வந்தனர். கோயில் வாட்ச்மேன் சுகுமாரன் அவர்களிடம் மெல்ல பேசினார். நீலாப்பிள்ளை அம்மச்சி என்னை நோக்கி  “நல்ல காரியம், கோயிலுக்குள்ள அந்தப் பீடை என்னத்துக்கு? இருந்த எடம் வெளங்கா மூதேவி… போனது நல்லது” என்றாள்

வாட்ச்மேன் சுகுமாரன் “கொஞ்சநாளா பலரும் சொன்னதாக்கும்” என்றார்

“நாம செய்ய முடியுமா? தந்த்ரிகள் செய்யணும்…நல்லதாப்போச்சு”

நான் எழுந்து அவர்கள் சென்ற திசைநோக்கி ஓடினேன். நான் செய்வதற்கு ஒன்றே உள்ளது. அந்தச் சிலையை நான் பிடுங்கிக்கொள்வேன். அது என் குடும்பத்தின் உபாசனா மூர்த்தி. என் சொத்து அது. இத்தனைகாலம் என் குடும்பம் உச்சாடனம் செய்த மந்திரங்களும் செய்த பூஜைகளும் திகழும் சிலை அது. அதை நான் கொண்டுசென்று என் வீட்டில் வைத்துக்கொள்கிறேன். அங்கே நான் பூஜை செய்கிறேன்.

ஆமாம், நானே வழிபடுகிறேன். வேறு ஒருவரும் வழிபடவேண்டாம், நான் மட்டும் அதை பூஜைசெய்கிறேன். அழுக்கு இருட்டு சீக்கு வறுமை. அது என் விதி. என் அப்பாவும் தாத்தாவும் ஏழுதலைமுறை மூதாதையரும் போன பாதை. இதை இழந்தால் என்ன செய்வேன்? சோறு கிடைக்கலாம், ஆனால்  நான் உயிருடனிருப்பதற்கு என்ன பொருள்?

நான் ஓட ஓட என்னுள் சொற்கள் பெருகின. அந்தச்சிலையை தூக்கிச் செல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. தந்த்ரியாவது மயிராவது, நான் பயந்தது அவருடைய கிரிமினல் தந்திரத்தை அல்ல. என் வேலைக்காக பயந்தேன். என் தட்டுக்காசுக்காக பயந்தேன். இதோபோய் அவரை மறிக்கிறேன். அவர் தடுத்தால் சங்கைக் கடித்து துப்புகிறேன்.

நான் கோயிலைவிட்டு வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். அவர்கள் தேரிக்குளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். என் நெஞ்சு சுளுக்குபோல் இழுத்துக்கொண்டது. தேரிக்குளத்திற்குத்தான் போகிறார்கள். அது பத்தாள் ஆழமான குளம். கையொழியும் சிலைகளை ஆழமான நீரில் போடுவார்கள். உடைத்து பின்னப்படுத்தி வீசிவிடுவார்கள். அது ஒரு தெய்வ்த்தைக் கொலைசெய்வது.

என்ன அறிவின்மை!. தெய்வத்தை யார் கொல்ல முடியும்? அவர் கொலைசெய்வது என் மூதாதையர் செய்த தவத்தை. எங்கள் உபாசனைப் பலனை அவர் தூக்கி நீரில் போடப்போகிறார். இப்போது நான் என்ன செய்யவேண்டும்? கல்லை எடுத்து எறியவேண்டுமா? கூச்சலிடவேண்டுமா?

நான் கால்தடுக்கி குப்புற விழுந்தேன். என் வாய் மண்ணில் அறைந்தது. என் தலைக்குள் பொறி மின்னி வண்ணங்களாகி அழிந்தது. கையூன்றி எழுந்து அமர்ந்தபோது மண்ணும் ரத்தமும் எச்சிலுமாக கோழை வழிந்தந்து முன்வாயின் மேற்பல் ஒன்று கீழே சோற்றுப்பருக்கை போல கீழே புழுதியில் கிடந்தது. உதடு கிழிந்திருந்தது.

கையால் வாயை பொத்தியபடி எழுந்து ஓடினேன். என் உடல் ஆரோக்கியம் இல்லாதது. சரியான சாப்பாடு இல்லாதவன். எங்கும் கூனிக்குறுகி உடல் வளைந்தவன். கோழிபோல ஓடினேன்

அங்கே தந்த்ரி படிகளின் வழியாக நீரில் இறங்கிவிட்டார். சிலையை கற்படிகளில் வைத்து அப்பாலிருந்த இன்னொரு கல்லை எடுத்து அதன் மூக்கை தட்டி உடைத்து மூளியாக்கினார்

தேரிக்குளம் தாமரை மண்டியது. நீர்ப்பரப்பில் குஞ்சன் அக்கானி காய்ச்சும் பெரிய வட்டத் தகரப் பாத்திரத்திதை படகாக்கி அமர்ந்து கையால் துழாவிக்கொண்டு பூப்பறித்துக் கொண்டிருந்தான். தந்த்ரி கைகாட்டி அவனை அழைத்தார். அவன் அருகே வந்ததும் சிலையை மும்முறை நீரில் முக்கி எடுத்து அந்த பாத்திரத்தில் வைத்து கைவீசி ஆணையிட்டார்

நான் மெல்ல மெல்ல கால்வைத்து நடந்துகொண்டிருந்தேன். அவன் கையை துடுப்பாக்கி உந்தி குளத்திற்குள் சென்றான். சிலை குளத்தின் நடுப்பகுதிக்குச் செல்வதை பார்த்தபின் உடல் தளர்ந்து நின்றுவிட்டேன். நெஞ்சு பதைக்கும் கடுமையான தாகம்தான் எழுந்தது.

குஞ்சன் அதை எடுத்து நீரில் போட்டான். நீர் பிளந்து அதை உள்ளிழுத்துக்கொண்டது.நான் எந்த எண்ணமும் இல்லாமல் அதை பார்த்துக்கொண்டு நின்றேன். பின்னர் கால்தளர்ந்து அமர்ந்துகொண்டேன்

தந்த்ரி நீரில் இறங்கி மும்முறை மூழ்கி எழுந்தார். அவர்கள் மெல்ல பேசியபடி திரும்பி வந்தனர். தந்த்ரி நடந்த வழியெங்கும் மணல்மேல் நீர் ஊறிச்சொட்டியது.

வழியில் வெறுந்தரையில் அமர்ந்திருந்த என்னை தந்த்ரி ஓரக்கண்ணால் பார்த்தார். மற்றவர்களும் பார்த்தனர் ஆனால் பேச்சை தொடர்ந்தபடி கடந்துசென்றனர். தந்த்ரி ஏதோ சொல்ல மெல்லிய சிரிப்பொலி கேட்டது.

நான் அங்கெயே அமர்ந்திருந்தேன். அந்தி சீக்கிரமே இருட்டிவிட்டது. வானம் மரங்கள் நிழலுருக்களாக மாறின. குளத்தின் நீரிலிருந்து குளிர்ந்த காற்றுவீசியது. தாமரை இலைகளில் இருந்த நீர்மணிகள் மின்னிக்கொண்டிருந்தன. அவற்றை மீனின் கண்கள் என்பார்கள். கண்கள் மட்டுமே கொண்ட மீன்கள் அவை. வானும் இருண்டது. நீர்மணிகள் மேலும் நெடுநேரம் மின்னிக்கொண்டிருந்தன

கோயிலில் பூசை நடக்கும் ஓசைகள் கேட்டன. அன்று நல்ல கூட்டம். தந்த்ரி வந்திருப்பதனால் வந்த கூட்டமாக இருக்கலாம். அவர்கள் எவரும் என் தெய்வம் அங்கிருந்து விலகியதைப் பற்றி கவலை கொண்டிருக்க மாட்டார்கள்.

இல்லை, ஒரு சிலர் இருக்கலாம். பலர் அவர்களின் இக்கட்டுகளில் ஜ்யேஷ்டையை பிரீதிப்படுத்த ஓடிவந்தவர்கள்தான். ரகசியமாக பூஜை செய்தவர்கள் மேலும் பலர். நான் அவர்களிடம்தான் போகவேண்டும்.

நான் குளத்தில் இறங்கி என் முகத்தை கழுவிக்கொண்டேன். உதட்டில் நீர் பட்டபோது அரத்தால் அறுத்ததுபோல எரிந்தது. ரத்தம் கலங்கிக் கலங்கி வந்துகொண்டிருந்தது.  என் வேட்டி எல்லாம் ரத்தமும் மண்ணும் படிந்திருந்தது.

உடலில் நீர் வழிய நான் கோயில் முகப்புக்கு வந்தேன். உள்ளே தேவியின் கருவறை நூறுதீபங்களுடன் பொன்னொளியில் மின்னிக்கொண்டிருந்தது. வெளியே வந்த நாகராஜன் சிரித்தபடி“என்ன பண்டாரம், உம்ம சாமிய தூக்கி தண்ணியிலே போட்டாச்சு போல?”என்றார்.

அவனுடன் வந்த உலகநாதன் ஆசாரி “அந்தப் பீடை இங்க இருந்து சீக்குல்லா பரப்பிச்சு… நாசம்பிடிச்சது. அதை இப்பமாவது தூக்கி போட்டாங்களே” என்றார்.

நான் கைகளை கூப்பியபடி கண்களிலிருந்து நீர் வழிய நின்றேன். என்னை ஒவ்வொருவராக கடந்து சென்றார்கள். அனைவருமே ஏளனமாக ஏதாவது சொன்னார்கள்

“பீடைய பிடிச்சுகிட்டு இருந்தான். இப்ப அது போச்சுன்னு சொல்லி அளுவுதான்” என்றார் நாகலிங்க நாடார்

கணேசன் “ஏம்வே, வேற வல்லதும் சோலி செய்து சீவிக்கலாமே…பேயைக் கும்பிட்டு எளவு பேய்மாதிரில்லாவே இருக்கேரு” என்றான்

வடக்கே கார் வந்து நிற்கும் முற்றம். அங்கிருந்து தந்த்ரியும் பிறரும் சென்ற ஓசை கேட்டது. கோயில் ஆளொழிந்தது. நான் மெல்ல நடந்து முகவாசல் வழியாக உள்ளே போனேன். நேர் எதிரில் பகவதியின் கருவறை சரவிளக்குகளும் தூக்குவிளக்குகளும் சுற்றுவிளக்குக்ளும் நிலைவிளக்குகளும் அடுக்குவிளக்குகளுமாக ஒளியுடன் தெரிந்தது

முகமண்டபத்தருகே சென்று தூணில் சாய்ந்து நின்றுகொண்டேன். வாட்ச்மேன் சுகுமாரன் “ஆருவே?” என்றார். பின்னர் என்னை கூர்ந்து பார்த்து   “அய்யோ, வே அணைஞ்சபெருமாள், நீரா வே? என்னது இது? விளுந்தேரா? மூஞ்சி அப்டி வீங்கிப்போச்சே” என்றான்

நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன்

போற்றி கருவறைக்குள் இருந்து வெளியே வந்து “நடை சாத்துத நேரம்… வேணுமானா கும்பிட்டுப்போங்க” என்றபிறகு என்னை அடையாளம் கண்டு “வே அணஞ்சி, வே, என்ன? அடிபட்டிருக்கே? கம்பவுண்டருக்கிட்ட போவும் வே” என்றார்

நான் இல்லை என்று தலையசைத்தேன்

போற்றி தணிவாக “நீரு கவலைப்படாதீரும். நீரும் நானும் எல்லாம் பிச்சைக்காரக் கூட்டம். பிச்சைக்காரனுக்கு அதுக்கும் கீள போக வளியில்ல பாத்துக்கிடும்” என்றார். “நான் நாளைக்கோ மறுநாளைக்கோ  மணக்கரை பத்மநாப பிள்ளைக்க வீடுவரை போயி பேசிப்பாக்குதேன். ஆளு மடையனும் கர்விஷ்டனுமாக்கும். இந்த கமிட்டிக்காரனுகளிலே கர்வக்காரனான மடையன்தான் நல்லவன், மத்தவனுக திருடனுக. அவரை கொஞ்சம் ஏத்திவிட்டா நல்லது செய்வான். உமக்கு இங்கியே ஒரு சின்ன வேலை போட்டு குடுக்கச் சொல்லுதேன். பூகட்ட பூசைப்பண்டம் வெளக்கன்னு ஜோலிகள் உண்டு….பாப்பம்” என்றார்

நான் ஒன்றும் பேசாமல் நின்றேன்

“கம்பவுண்டரிட்ட போயி ஒரு ஊசிய போட்டு மருந்தப்போடும். வீட்டிலே போயி படுத்து உறங்கும். எல்லாம் நாளைக்கு பாப்பாம்” என்றார் போற்றி . வேட்டியில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து தந்து “இந்தாரும்வே, போயி மருந்த வாங்கும். மிச்சத்தை கெட்டினவ கையிலே குடும்”

“வேண்டாம்” என்றேன்

“இன்னைக்குள்ள தட்டுக்க்காசுவே… இன்னைக்கு நல்ல கூட்டம்லா?”

“வேண்டாம்”

“வையுமே நான்லா குடுக்கேன்? கைநீட்டுதவனுகளுக்குள்ள என்ன ஏத்தம் எறக்கம்?” என்று அவர் பணத்தை என் கையில் தந்துவிட்டு போனார்

நான் அங்கேயே நின்றிருந்தேன். பின்னர் மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு போய் கருவறையை பார்த்தேன். ஒரு திகைப்பு ஏற்பட்டது. உள்ளே ஜ்யேஷ்டை அமர்ந்திருந்தாள்.

“அய்யோ” என்றேன்

“என்னவே?”என்று சுகுமாரன் கேட்டான்

“ஒண்ணுமில்லை” என்றேன்.

அது பகவதிதான். ஆனால் அளவு, அமர்ந்திருக்கும் முறை எல்லாம் அப்படியே என் உபாசனாதேவதை. அக்கா தங்கையேதான்.

நான் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். பிறகு வடக்குவாசல் வழியாக வெளியே சென்றேன். அது கார் நிறுத்தும் முற்றத்தை நோக்கிச் சென்றது.  அங்கே கார்கள் ஏதுமில்லை. அப்பால் ரோட்டில் நின்றிருந்த விளக்குத்தூணிலிருந்து சிவப்பு வெளிச்சம் விழுந்து பரவியிருந்தது. இலைகள் காகிதங்கள் என குப்பைகள் காற்றில் அலைபாய்ந்தன.

முற்றத்தின் மறுபக்கம் பெரிய ஆலமரம் ஒன்று உண்டு. விழுதுகள் ஊன்றி கிளைகளை நீட்டி பரவியிருக்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது கைகளை நீட்டி பரவுவதாக பிரமை ஏற்படும். அதன் விழுதுகள் உருண்டு அலையலையாக மேலெழுந்த பாறையின் மேல் படிந்து ஊன்றி உருகி வழிந்திருக்கும்

அந்தப்பாறை அப்படியே ஏறி கோயிலுக்கு மேற்கே எழுந்துவிடும். எங்கள் கோயிலுக்கு மேற்குதிசை இல்லை. அங்கே மிகப்பெரிய ஒற்றைப்பாறைதான். கன்னங்கரேலென்று தார் உருகியதுபோன்ற பாறை. அதன் உச்சிமேல் ஒரு ஆலமரம் உண்டு. மற்றபடி மொட்டைப்பாறைதான்

நான் ஆலமர விழுதின் மடிப்புகளில் மிதித்து பாறைமேல் ஏறிச் சென்றேன். தாழ்வான ஆலமரத்து கிளைகளில் மயில்கள் சேக்கேறியிருந்தன. என் அசைவை கண்டு விசிறிக்காற்று போல வால்சிறகு அசைவுடன் எழுந்து அப்பால் சென்று அமைந்து காவ் என்று ஓசையிட்டன. பாறையில் அவற்றின் எச்சம் வழுக்கியது.

நான் அதன்மேல் சின்ன வயசில் ஏறியிருக்கிறேன். அதன்பிறகு மேலே போனதே இல்லை. பொதுவாகவே எவரும் போவதில்லை. அங்கே ஆடுகளுக்குக்கூட மேய்வதற்கு ஒன்றுமில்லை. காலை பத்துமணிக்கே சுட்டுப்பழுத்து தகிக்க தொடங்கிவிடும். மழைக்காலத்தில் வழுக்கும்

மேலேறிச் செல்லச்செல்லத்தான் நான் ஏன் செல்கிறேன் என்று எனக்கு தெரிந்தது. பாறையின் மேற்குப்பக்கம் செங்குத்தானது. விளிம்பிலிருந்து நேரடியாக நூறடிக்குமேல் கீழே சென்று தேரிக்குளத்தின் கரையாக அமைந்த பாறைகளை அடையும். அங்கே தலைசிதறிக் கிடக்கும் என்னை நான் பார்த்துவிட்டேன்

மேலே அவ்வளவு இருட்டாக இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அது அமாவாசைக்கு முந்தையநாள். மழைக்கார் வேறு. வானம் முழு இருட்டாக இருந்தது. ஊரில் விளக்குகள் எரிந்தன, அந்த வெளிச்சம் ஆங்காங்கே மின்மினிகள் போல தெரிந்தது. பாறையின் கருமையால் நான் இருட்டையே மிதித்துச் செல்வதுபோல தோன்றியது

ஒரு சிறு முள்செடி பிசிறுபோல வளர்ந்து நின்றது. நான் முதலில் அதை ஏதோ விலங்கு என்று நினைத்து திடுக்கிட்டேன். அது செடி என்று தெரிந்ததும் பெருமூச்சு விட்டேன். சாகப்போகிறவன் ஏன் பயப்படவேண்டும் என்று நினைத்துக்கொண்டதும் சிரிப்பு வந்தது.

அதுவரை இருந்த கவனம் விலகியதுமே என் காலில் ஒர் உருளைக்கல் வழுக்கியது. நான் நிலைதடுமாறினேன். கால்களை ஊன்றியபோது என் வலுக்குறைந்த கால் மேலும் வழுக்கியது. பாறையில் விழுந்து எழ முயல்வதற்குள் உருளத் தொடங்கினேன்.

அத்தனை வேகமாக உருள்கிறோம் என்பதை கற்பனையே செய்ய முடியவில்லை. எங்கும் பிடி நிற்கவில்லை. என் கைகள் தவித்துப் பரிதவித்து அள்ளி அள்ளி வெறும்பாறையின் வழவழப்பை பற்றி சறுக்கின.

நான் சரிந்து ஒரு பாறையில் விழுந்தேன். அங்கிருந்து இன்னொரு பாறைக்கு. அங்கிருந்து இன்னொன்றுக்கு. அத்தனை ஆழமாக விழுந்தும் அடிபடவில்லை. இருட்டில் ஏதோ கைகள் மாற்றி மாற்றி என்னை பிடித்து பிடித்து இறக்கிக்கொண்டிருப்பதுபோலிருந்தது.

தரையை அடைந்ததும்தான் என் மனம் திரும்பி வந்தது.மண்ணில் புரண்டு எழுந்து முழந்தாளிட்டு அமர்ந்தபடி நான் எங்கிருக்கிறேன் என்று   பார்த்தேன். ஒரு கிணற்றுக்குள் ஆழத்தில் விழுந்துவிட்டிருக்கிறேன் என்று தோன்றியது. நான் விழுந்த துளை தலைக்குமேல் ஒரு பிளவு போல தெரிந்தது.

பிறகு மெல்ல என் இடத்தை புரிந்துகொண்டேன். அது மிக ஆழமான பாறைப்பிளவு. ஒரு மனிதன் உடல் அளவுக்கே இடைவெள் கொண்டது. பாறைப்பிளவுகளில் வழக்கமாக வளரும் முட்செடிகள் ஏதுமில்லை, ஏனென்றால் கீழே பாறைதான், மண் இல்லை.

அங்கிருந்து மேலே ஏறவே முடியாது என்று தெரிந்தது. அங்கே வரும் மழைத்தண்ணீர் ஓடையாகி ஒழுகும் வழி ஒன்று இருக்கும். அங்கே சென்றாலொழிய வெளியே போக முடியாது

நான் அந்தப் பிளவின் மறுபக்கம் நோக்கிச் சென்றேன். அந்தப்பாதை சற்றே இறங்கியது. வலப்பக்கமாக வளைந்து கீழே சென்றது. அங்கிருந்து குளிர்காற்று வந்தது. வழி இருக்கிறது,அதன் வழியாக வெளியேறிவிடலாம் என்று தெரிந்தது

ஆனால் என் வலப்பக்கம் ஒரு கற்பாறை விலகிய வழி தெரிந்தது. உள்ளே விளக்கசைவு. அந்த சுரங்கப்பாதையில் யார் நடமாடுகிறார்கள்? நான் அதன் வழியாக உள்ளே பார்த்தேன். அது சுரங்கப்பாதை அல்ல,ஒரு பெரிய கூடம் போன்ற அறை. உள்ளே சில பறையிடுக்குகள் வழியாக வந்த ஒளி அசைந்துகொண்டிருந்தது.

முற்றிலும் மூடப்பட்ட ஒரு குகை அது. எனக்கு எதனாலோ எந்த பயமும் ஏற்படவில்லை. அந்த இடத்திற்கு எப்போதோ கனவில் வந்திருப்பதுபோலத்தான் தோன்றியது. அந்தச் சிறிய துளைவழியாக உடலை நுழைத்து உள்ளே சென்றேன். என் காலுக்கு கீழே இருட்டு. தரை எத்தனை ஆழம் என்று தெரியவில்லை. ஆனாலும் குதித்தேன். ஆழம் அதிகமில்லை, பாறைத்தரையில் நின்றேன்

மிகப்பெரிய கூடம்போன்ற பாறைக்குகைக்குள் நான் நின்றுகொண்டிருந்தேன். மேலே கூரைவளைவு ஏழெட்டு ஆள் உயரமிருக்கும். அங்கிருந்து மலைத்தேனீக் கூடுகள் உறிக்கலயங்கள் போல தொங்கின. தேனீக்களின் ஓசை தம்புரா முழக்கம்போல கேட்டது

அக்குகையின் முகப்பு பெரிய கற்சுவரால் முழுமையாக மூடப்பட்டிருந்தது. அச்சுவரின் கீழிருந்த சிறிய இடைவெளிகளினூடாக உள்ளே சிவந்த ஒளிச்சட்டங்கள் வந்து குகையின் கூரையிலும் சுவர்களிலும் படிந்து விளக்குகள் போல சுடர்ந்தன. அந்த செவ்வெளிச்சத்திற்குமெல்லமெல்ல கண்கள் துலங்கத் தொடங்யபோது அதன் மறு உட்சுவரில் முழு உயரத்தையும் நிறைத்து புடைப்பாகச் செதுக்கப்பட்டிருந்த மாபெரும்  சிலையை பார்த்தேன்.

தெறித்த குமிழ்விழிகளுடன்  மகிஷியும் யக்ஷியும் பரிவாரதேவதைகளாக நின்றிருக்க ஜ்யேஷ்டா தேவி அமர்ந்திருந்தாள். எட்டு ஆள் உயரமிருக்கும். அவள் கால்களே என் தலைக்குமேல் இருந்தன.

நான் அவளை பார்த்தபடி மறந்துபோய் நின்றேன். பின்பு திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தேன். அந்தச் சுவரால் குகையை முழுமையாக மூடி அதற்கு அப்பால் மகாமங்கலை அன்னையின் கோயிலை கட்டியிருந்தனர். பகவதியின் கருவறை அச்சுவருக்கு அப்பால் இருந்தது. அங்கிருந்த விளக்குகளின் ஒளிதான் குகைக்குள் கசிந்துகொண்டிருந்தது

அப்பால் கருவறையில் இருந்த பகவதியின் சிலை அந்தச் சிலையின் காலடியளவே இருக்கும். அங்கே போற்றி பூசை செய்யும் மணியோசை கேட்டது. ஒளிச்சட்டங்கள் அசைந்தன.

நான் தலைக்குமேல் எழுந்து அமர்ந்திருந்த மூத்தவளின் முகத்தை நோக்கியபடி நின்றேன். அன்னையின் முகத்திலிருந்த ஏளனமும் வெறியும்  குரூரமும் என்னை நடுங்கச் செய்தன.வீங்கி தொங்கிய உதடுகளுடன் கைகூப்பியபடி இருளில் நின்றேன்.

 

தொடர்புடைய பதிவுகள்

மடிவலையில்…

$
0
0

வழக்கமாக யூடியூபில் பாட்டு கேட்பதற்கு ஒரு   ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. இளையராஜா ஹிட்ஸ், எம்எஸ்வி ஹிட்ஸ் என்றோ ஹிட்ஸ் ஆஃப் 60 என்றுதான் கேட்போம். ஆனால் யூடியூபில் பாட்டுகள் கேட்க ஆரம்பித்து இந்த பத்தாண்டுகளில் திரும்பத்திரும்ப சில பாட்டுக்களே வந்துகொண்டிருக்கின்றன. புத்தம்புதிய பாட்டு ஒன்றைக்கேட்டு மண்டை சிலிர்க்கும் அனுபவம் குறைந்துவிட்டது.

பழங்காலத்தில் ரேடியோவில் பாட்டு கேட்பதிலுள்ள மிக உற்சாகமான அம்சம் அதில் அடுத்தபாட்டு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியாது என்பது. பாட்டை அறிவிக்கும் வரை இருக்கும் மெல்லிய எதிர்பார்ப்பு, சிலசமயம் அறிவித்தபின்னரும் என்ன பாட்டு என்று தெரியாத குழப்பம், பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும்போது கிளை அலைவுற்று துளிகள் எதிரபாராமல் உடலில் விழுவதுபோன்ற சிலிர்ப்பு. ஒலிநாடாக்கள் வந்து வேண்டிய பாட்டை எத்தனை முறை வேண்டுமென்றாலும் கேட்கலாம் என்றபோதே அது போய்விட்டது. அத்தனைபாட்டும் கைபேசியில் இருக்கிறது என்ற நிலையில் பாட்டுகேட்பதில் எதிர்பார்ப்பே இல்லை

ஆகவே ஒரு வழி கண்டுபிடித்தேன். 1962 முதல் – அது நான் பிறந்த ஆண்டு- எந்தெந்த தமிழ் மலையாள படங்கள் வந்துள்ளன என்று கூகிளில் பார்ப்பது. எல்லா படங்களிலும் உள்ள எல்லா பாட்டுக்களையும் ஒரு நிமிடமாவது கேட்பது. முப்பதாண்டுகளாக கேட்காத பல பாட்டுகளை கேட்கமுடிந்தது. ஒருமுறை கூட கேட்டிருக்காத பல பாட்டுக்களையும் கேட்டேன். இத்தனை நாட்களில் 1965 வரை வந்துவிட்டேன்.

இதற்கு மடிவலை தேடல் என்று பெயர் சொல்ல்லாம் என்று நினைக்கிறேன். மடிவலை என்பது மீனவர்கள் போடும் நுட்பமான கண்ணிகள் கொண்ட வலை. ஒரு வட்டாரத்தின் அத்தனை மீன்களையும் குப்பைகூளங்களோடு அள்ளிவிடும்

1965 தமிழ்மலையாள இசையின் ஒரு நல்ல காலகட்டம் போலிருக்கிறது. ஏகப்பட்ட நல்ல பாட்டுக்கள். பெரும்பாலும் மெல்லிசை மெட்டுக்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன் ஜி.தேவராஜன், சலீல் சௌதுரி நால்வருமே நல்ல ஊக்கமான நிலையில் இருந்திருக்கிறார்கள். சுசீலாவின் குரல் மிகமிக இளமையாக பட்டுபோல இருந்திருக்கிறது.

 

 

 

 

 

https://youtu.be/PGadaW53o0U

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அன்னம்,லட்சுமியும் பார்வதியும்- கடிதங்கள்

$
0
0

.

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

லட்சுமியும் பார்வதியும் கதை எனக்கு பல எண்ணங்களை உருவாக்கியது. இதேபோன்ற ஒரு சந்தர்ப்பம் விஷ்ணுபுரத்தில் வரும். கருணையற்றவர்களே நல்ல ஆட்சியாளர்கள், கருணையுள்ள ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்று சூரியதத்தரிடம் அவருடைய மகன் சொல்வான். இது உண்மையாக இருக்கலாம். ஆனால் கசப்பான உண்மை. சுவாதித்திருநாள் கேட்கும்போது புராணங்களில் மாறாக ஒரு உதாரணம்கூட இல்லையே ராமா என்றுதானே பார்வதியால் சொல்லமுடிகிறது

ஆட்சி என்பதிலேயே ஓர் அநீதி உள்ளது என்று பார்வதி இன்னொரு இடத்தில் சொல்கிறார். இதை ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். சங்ககால ஆட்சியாளர்கள் சிறுகுடி மன்னர்களை அழித்தார்கள். அந்தக் கொடூரப்போர்களை புறநாநூறு பாடுகிறது. ஆனால் அப்படி அழித்ததனால்தான் தமிழ்நாட்டில் வலுவான அரசுகள் வந்தன. போர்கள் இல்லாமலாகி மக்கள் வாழ்க்கை செழிப்புற்றது. கல்வியும் பெருகியது. இல்லாவிட்டால் நாளும் சண்டை நடக்கும் ரத்தபூமிதான் மிஞ்சியிருக்கும்

சோழர்கள் படையெடுத்துப்போன ஊர்களை எல்லாம் அழித்திருக்கிறார்கள். ஆனால் ஏரிவெட்டி நமக்கெல்லாம் சோறும் போட்டார்கள். வரலாற்றை நெறிகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளவே முடியாது என்று நினைக்கிறேன்

 

பிரபாகர்

 

அன்பு ஜெயமோகனுக்கு, வணக்கம், நலம்தானே?

லட்சுமியும் பார்வதியும் சிறுகதை படித்தேன். ஓர் உன்னதமான கதையிலிருந்து வாசகருக்குப் பல கதைகள் எழ வேண்டும்.இதில் அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ள்ளன.

ராஜவர்மா பட்டத்துக்கு வந்தவிதம், மன்றோவின் அரசியல், மன்னரைச் சுற்றி இருப்போரின் சூழ்ச்சி, லட்சுமிபாயின் உடல்நிலை, பார்வதியின் துணிவு இப்படி இன்னும் எழுத முடியும்.

தலைமுறை இடைவெளி என்பது லட்சுமி மற்றும் பார்வதியின் உரையாடலில் நன்கு வெளிப்படுகிறது. நான் வந்த ஒருவாரத்திற்குள் அவன் தலை உருளும் என்றும், மக்களுக்காகப் பெட்டிகளைத்திறப்பேன் என்றும் சொல்லும் லட்சுமியின் உறுதியும், ஆளுமையும் நாட்டை ஆள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

ஒரு வரலாற்றுச் சூழலை கதை இந்தத்தலைமுறைக்கு வெளிப்படுத்துகிறது.”

“ஒருகையில் துரட்டியும், மறுகையில் கரும்பும் இருந்தாலொழிய யானை படியாது” என்பது நல்ல மேற்கோள்.ஒருகையில் கோரிக்கை, மறு கையில் போராட்ட அறிவிப்பு எடுத்துக்கொண்டுதான் அரசுடன் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டும் என்று எங்கள் ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மறைந்த  சு. ஈஸ்வரன் கூறியது நினைவுக்கு வருகிறது.

 

வளவ. துரையன்

———–_——————————————-

பி.கு

அண்மையில் கொச்சியில் சாலைத் தடுப்புகளுக்கிடையில் இருக்கும் குறுகிய இடைவெளியில் ஒரு குதிரை புகுந்து மாட்டிக்கொண்டு எப்பக்கமும் போகமுடியாமல் தவித்ததை தொலக்காட்சியில் பார்த்தபோது உங்களின் கதையில் ஆனை புகுந்து மாட்டிக்கொண்டு தவித்தது நினைவுக்கு வந்தது

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அன்னம் இன்னொரு கெத்தேல்சாகிபின் கதை. படிக்கும்போது மானிட சமுத்திரம் நானென்று கூவு என்ற பாரதிதாசனின் வரியைத்தான் நினைத்துக்கொண்டேன். அதைப்போன்ற இலட்சியவரிகளை நாம் பள்ளியிலே படிக்கிறோம். அவை க்ளீஷே ஆக மாறிவிடுகின்றன. அவற்றின்மேல் ஒரு அவந்ம்பிக்கையும் உருவாகிவிடுகிறது. ஆனால் நம்மைச்சுற்றி அப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வரிகள் மேல் உருவாகும் ஒவ்வாமையால் நாம் அந்த மாமனிதர்களைப் பார்க்கும் கண்ணில்லாத குறுகியவர்களாக ஆகிவிடுகிறோம்.

நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. நவீன இலக்கியம் வாசகனை கூருணர்வுகொண்ட்வனாகவும் அவவ்நம்பிக்கை கொண்டவராகவும் சுருங்கிப்போனவனாகவும் தோல்விகளை கொண்டாடக்கூடியவனாகவும் மாறிவிடுகிறது என்று. மலேசியாவில் ஓர் உரையில் நீங்களும் அதைச் சொல்கிறீர்கள். அது பெரிய திறப்பு எனக்கு. நானே நினைத்ததுதான் அது. அன்னம் போன்ற கதைகள் நவீன இலக்கியத்தின் வழக்கமான டெம்ப்ளேட்டுகள், நிலைபெற்றுவிட்ட நம்பிக்கைகள், எவருமே விவாதிக்காமலேயே அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்ட தத்துவங்கள் ஆகியவற்றிலிருந்து மீறிச்செல்பவை. அவை நவீன இலக்கியத்திற்கு புதுமுகம் அளிக்கின்றன.ஒருவகையில் எல்லைகளை மீறிச் செல்கின்றன. அன்னம் ஒரு அரிய படைப்பு

 

ஸ்ரீனிவாஸ்

 

அன்புள்ள ஜெயமோகன்

அன்னம் , சோற்றுக் கணக்கின் தொடர்ச்சியே , கொத்தேல் சாகிப் தான் கறுத்த சாகிப் . 2 சாகிப்புகளும் அன்னத்தினால் இணைகிறார்கள் .சாப்பிடுபவர்களின் சந்தோஷக் குரல்களை  தினமும்  உள்வாங்கி உவகையடைகிறார்கள்  . கறுத்த சாகிப் போனில் கேட்கும் குரல் மூலம் தன்னை மீட்டுருவாக்கிக் கொள்கிறார் . அன்னம் அளிக்கும் கறுத்த சாகிப்பைவிட  அழகானவர் யார் ? கிருஷ்ண பட்டுக்கு எந்தத் தீங்கும் இல்லாமல் வழக்கு முடிவது சராசரி வாசகனுக்கு திருப்தி .

கோபால்
புனே

 

 

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

 

தொடர்புடைய பதிவுகள்

தங்கப்புத்தகம்,செய்தி- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

 

தங்கப்புத்தகம் முதல்கதையாக வந்தது. அதற்குப்பின் இன்னொரு கதையை படிக்கவே இல்லை. இப்போதுதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கதையின் மனநிலையை விட்டு விலக மனமில்லாமல் தொடர்ந்து மேலும் மேலும் அதையே வாசித்தேன். அதிலுள்ள செய்திகளை மேலும் சென்று தெரிந்துகொண்டேன். திபெத்தியப் பௌத்த தெய்வங்கள் போதிசத்வர்கள் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டபோது கதை இன்னும் விரிவானபடியே சென்றது.

அந்த அறை மலையின் கருப்பைக்குள் இருப்பது ஒரு அற்புதமான குறியீடு. மலைகள் ஒவ்வொன்றாக பொன்னொளி கொள்வதைப்பற்றி கதை பேசுகிறது. மலைகளுக்குள் தங்கப்புத்தகம் இருக்கிறது. மேலே சூரியன் பொழியும் தங்கமே உள்ளே குடிகொள்வதுபோல. மூன்று போதிசத்வ உருவங்கள் ஒன்றாக இணைந்த சிலையை பற்றி உருவகித்துக்கொள்ளாமல் அந்த நூலின் பொருள் என்ன என்று புரிந்துகொள்ள முடியாது.  மைத்ரேயர் வஜ்ராயுதமும் தாமரையும் ஏந்தி நின்றிருக்கிறார். அமிதாபர் அமுதகலம் வைத்திருக்கிறார்.மறுபக்கம் மஞ்சுஸ்ரீ. தண்டனை அளிக்கும் மைத்ரேயரும் முக்தி அளிக்கும் அமிதாபரும் ஞானமளிக்கும் மஞ்சுஸ்ரீயும் கலந்த சிலை அது.அதுதான் அந்த புத்தகத்தின் உள்ளடக்கம் என்று நினைத்தேன்

அதைநோக்கிச் செல்வது மிகவும் சிக்கலானது. வெளியேறுவது மிகவும் எளியது. அதிலிருந்து தப்புவது சாவது. அதை உதறுவது விடுதலை. இப்படியே சுற்றிச்சுற்றிச் செல்லும் அந்த படிம உலகம் பித்து ஊட்டுவதாகவே உள்ளது.

 

ஜெயக்குமார்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு .,

 

தங்களின் கதைமாந்தரான ஔசேப்பச்சன் கூறும் த்ரில்லர் சாகச கதைகள் போல , முக்தா கூறும் கதைகள் அதற்கு மேலே சாகசத்தை நோக்கி விரிகிறது. ஔசேப்பச்சனுக்கு ஒரு மது விடுதி வேண்டும் கதை சொல்ல., முக்தாவிற்கு ஊட்டி குருகுலம். ஔசேப்பச்சன் கதை உலகியல் நோக்கி செல்லும்போது, முக்தாவின் கதைகள் ஞானத்தை நோக்கி தன் மென் சிறகை விரிக்கிறது.

தங்கப்புத்தகம் இலக்கியமும் தத்துவமும் சரியாக இணையும் பிரதியாக அமைகிறது. எல்லையற்ற ஞானமும் , எல்லையற்ற காமமும் இணையும் வஜ்ராயன பௌதம் போல. இக்கதையின் அமைப்பும் , கூறுமுறையும் தங்கப்புத்தகத்தை நோக்கி நம்மை அழைக்கிறது. ஒரு த்ரில்லர் நாவலைப் போல. தங்கப்புத்தகத்திற்கான தேடலும் , தங்கப்புத்தகமும் முதலில் படிமமாக மனதில் அமைகிறது. கதை முடிந்தபிறகு , அந்த படிமம் தான் நம்மை தத்துவத்தை நோக்கி நகர்த்துகிறது.

இந்த கதையே தங்கப்புத்தகத்தைப் போல ஒரு மாயத்தோற்றத்தை அளிக்கிறது. எந்த ஒரு நகலும் மூலப்பிரதியை விட்டு சிறிதலவேனும் மாறுபட்டவேயே என்ற வரிகள் எந்த தளத்திற்கும் செல்லுபடியாகும் போல் தோற்றம் தருகிறது. உதாரணமாக, உயிர்த்தோன்ற காரணமான புரதவிதையை மூலப்பிரதியாக எடுத்துக்கொண்டால் , அதிலிருந்து வந்த நகல்கள் தானே நாம். உலகில் வாழும் பல்லாயிர ஜுவராசிகளும் அம்மூலத்தின் நகல்கள் தானே. எவ்வளவு வேறுபாடு. எந்த நகலும் மூலப்பிரதியின் கூறு கொண்டவை மட்டுமே, மூலம் அல்ல.

இன்னொறு பார்வையில் , இக்கதையே பிரபஞ்ச தரிசனத்தை நோக்கிய பார்வையாக உள்ளது.  சங்கரரும் , இராமனுஜரும் , மத்வரும் இப்பிரஞ்ச மூலப்புத்தகத்தின் வெவ்வேறு நகலையே தங்கள் தரிசனமாக முன்வைக்கிறார்கள் என்று கதையின் ஆரம்பத்தில் வருகிறது. இந்திய ஞானம் அனைத்தும், அப்படி ஒரு தங்கப்புத்தகத்தின் நகல்கள் தானோ? அதை நோக்கிய தேடல் தானே முக்தாவின் தேடல். இறுதியில் அவர் அடைவதும் அப்படி ஒரு ஞானத்தை தானோ. “எதையும் அடையமுடியாதவனாக மாறினேன். ஆகவே எதையும் இழக்க இல்லாதவனாகவும் ஆன். ” இந்த இடத்திற்கு தானே ஞானம் ஒருவனைக் கொண்டு செல்கிறது.

முக்தா முதலில் தங்கப்புத்தகத்தைக் கண்டடைந்ததும் வரும் ஏமாற்றம், ஞானத்தை தன் கைகளால் தழுவ முயலும் அனைவருக்கும் உரியதே. இதுதானா ? இதற்குத்தானா இவ்வுளவு தூரம் அழைந்தோம் ? ஆனால், அந்த இடம்தான் தேடலின் உண்மையான தொடக்கமாக அமைகிறது. அங்கிருந்து, அவன் உள்சென்று அடைவதே ஞானம்.

பாட் கதாப்பாத்திரம் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுகிறது. இப்புவியின் அறிவியல் காலகட்டத்து பிரதிநிதியாக உள்ளே வருகிறான் பாட். அறிவியல் உள்நுழைந்தபோது பிரபஞ்சம் ஞானம் மறைபொருள் எல்லாம் obsolete ஆகப்போகிறது என்று கூக்குறல் இட்டது. இப்பொழுது அது சென்று சேர்ந்திருக்கும் இடத்தை கதையில் அறியலாம். தங்கப்புத்தகத்தின் மாயத்தோற்றம் புலப்படும் போது, முக்தா உள்நுழைய எத்தனிக்கிறார். பாட் வெளியேறுகிறார். அற்புதமான படிமம்.

கயிற்றரவம் என்ற படிமம் வேதாந்த தத்துவத்தை விளக்குவதற்கு பயன்படுத்துவதைப்போல, தங்கப்புத்தகம் இப்பிரபஞ்ச ஞானத்தை விளக்கும் செவ்வியல் படிமமாக அமைகிறது.

 

கார்த்திக் குமார்.

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

தங்கப்புத்தகம் கதையின் இன்னொரு பக்கம் போல இருந்தது செய்தி. மனிதன் இந்த உலகிலுள்ள அனைத்தையும் உதறிக்கடந்து சென்று எதையோ தேடுகிறான். இங்கே உள்ள சின்ன உறவிலுள்ள இன்பத்திலும் திளைக்கிறான். இரண்டுமே தங்கம்தான். பொன்னொளிதான். நான் இந்த தங்கப்புத்தகம் கதையை முக்தா எவரிடம் சொல்கிறாரோ அவன்தான் செய்தி கதையை நினைத்துக்கொள்கிறான் என்று கற்பனை செய்துகொண்டேன். தங்கப்புத்தகம் கதை அளித்த பிரமிப்பு குழப்பம் ஆகியவற்றிலிருந்து தப்ப அவன் இதைக் கற்பனை செய்துகொண்டிருக்கலாம் என்று தோன்றியது. இரண்டுமே இரண்டு உலகங்கள். எது சிறந்தது என்று எவர் சொல்லமுடியும்? எந்த நினைவை மனசு சாகும்வரை பெணிக்கொள்கிறது என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

 

சண்முகசுந்தரம்

 

அன்பு ஜெ,

 

உலகம் பெயர் வைத்திராத உறவுகளும் உணர்வுகளும் இந்த உலகில் இருக்கின்றன தான். ஒவ்வொரு மனிதனும் இது போன்றவைகளை கடக்கிறான் தான். அந்த உறவுகளை, உணர்வுகளை தனக்குத் தெரிந்த உலகாயத உறவுகளுக்குள் அடைக்க முற்படுகிறான். அங்கு தான் சிக்கல் பிறக்கிறது.

இந்தக் கதையை அல்லது இது போன்ற உணர்வுக் குவியலின் கதைகளை முன்பெல்லாம் வெறுத்ததுண்டு. ஒருவகையில் மிஷனரிப் பள்ளிகளில் பயின்று வந்த குழந்தைகளின் தலையில் அறம் என்ற சுமையை ஏற்றி வைத்து விடுகிறார்கள். அது அப்போது சுமையாய்த் தெரிந்த தில்லை. வாழ்வின் பயணத்தை நான் மேற்கொள்ள அது ஓர் ஊன்றுகோலாய் எப்போதும் துணைக்கு அழைத்துக் கொண்ட ஒன்று. அதனாலேயே அது என் உயிர்நாடியாய் மாறிப் போயிருந்தது. அறப்பிறழ்வு என்ற ஒன்றை முற்றிலும் வெறுத்து ஒதுக்கியவள் நான். அதனாலாயே தி.ஜா வையும், பிரபஞ்சனையும், ஜெயகாந்தனையும் சில கதைகளில் கடிந்து கொண்டதுண்டு செல்லமாக.

இன்று இளமையின் முதிர்ச்சி வாழ்வின் நிதர்சனங்களை அதன் அப்பட்டங்களை தோலுரிக்கும் போது என்னையே சுயபரிசோதனை செய்து பார்க்கும் போது தான் தெரியவருகிறது  அறம் என்று உலகம் வகுத்த ஒன்றை நானும் மனதளவிலாவது மீறியிருக்கிறேனென்று. எத்துனை உணர்வுகளை, வாழ்க்கைகளை துச்சமாக அறப்பிறழ்வு என்ற வார்த்தையில் கல்லரையாக்கியிருக்கிறேன். எனக்காக நான் பரிதாபப் படுகிறேன் இன்று.

இன்றெல்லாம் உறவுகளை உணர்வுகளை என் மனம் சந்திக்கும் போது அதை அழுத்தி கொலை செய்வது கிடையாது. அவைகளை என் மனம் முழுமைக்கும் படர விட்டு இரசிப்பதுண்டு. சில பொக்கிஷ உணர்வுகளை என் நினைவடுக்கின் உயிருள்ள பகுதிக்குள் பத்திரப்படுத்தவதுண்டு. தனிமையின் போது நினைவுகளை மீட்டி அதை இரசித்திருப்பேன். இப்படி வாழ்க்கையில் தான் பெயர் வைக்கப்படாத எத்துனை உணர்வுகள். இவையாவையும் உள் நுகர அறப்பிறழ்வு என்ற மேலோட்டமான மாறுபடும் வரையறை கொண்ட சொல்லை சற்றே தள்ளி வைப்பதுண்டு. இப்படி தள்ளி வைப்பதனாலேயே பல நிதர்சனமான கதை எழுதிய எழுத்தாளர்களை கண்டடைந்தேன்.

ஒருவகையில் அனந்தனுக்கும் பகவதியம்மைக்கும் கிடைத்த உணர்வுகளை என்னால் இப்பொழுது புரிய முடிகிறது ஜெ. இவ்விருவரும் கால மாற்றத்தில் இவ்வுணர்வுகளை கடந்து விடுவார்கள். ஆனால் மறப்பது எளிதல்ல. அது தந்த சிலிர்ப்பை உள்ளம் பத்திரப்படுத்தும். இத்தகைய உணர்வுகளை துல்லியமாக நான் இங்கு உணர்ந்தேன் ஜெ.

பெண்கள் என் வரையில் உணர்வுகளின் குவியல் தான். உணர்வுகளுக்காக ஏங்குபவர்கள். பகதியம்மையைப் போல. பெயர் சொல்லத் தெரியாத இந்த உணர்வுகளில் சற்று நேர திழைப்பு எனக்கு ஒரு வகை அனுபவம் தான். நன்றி.

 

அன்புடன்

இரம்யா

 

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

தொடர்புடைய பதிவுகள்


குளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி

$
0
0

வேணு வேட்ராயன் கவிதைகளைப் பற்றி…

சமகால கவிஞரின் நூலுக்கு விமர்சனம் எழுதவேண்டுமென்றால் முதலில் கவிஞரின் அனைத்து நூல்களையும், கவிதைகளையும் வாசிக்கவேண்டும். பிறகு கவிஞரின் ஆளுமை பற்றி ஓரளவாவது அறிமுகம் வேண்டும். ஒரு ஒரு நூலை மட்டுமே வாசித்து அதில் இருப்பதை மட்டுமே வைத்து புறவயாக விமர்சித்து எழுதுவதை கவிதைகளுக்கு நான் பெரும்பாலும் செய்வதில்லை. இதன் காரணத்தை இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன். தொடர்ந்து அயலில் வாழ்வதால் நூல்களை குறித்த காலத்தில் கைப்பெறுவதே கூட சிரமான செயல். ஆகவே ஒரு சமகால கவிஞர் பற்றிய முழு மதிப்பீடு எழுதுவது போன்ற சிரமங்களுக்கு துணிய எனக்கு வாய்ப்பு அமைவதில்லை.

கவிஞர் வேணுவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மின்னஞ்சல் வழி தொடர்பு கிடைத்தது. அவரின் புத்தகம் கிண்டிலில் கிடைத்ததால் உடனே எடுத்து வாசிக்கவும் முடிந்தது. இதுவரை அவர் வெளியிட்டது இந்த ஒரு புத்தகம் மட்டும்தான் என்பதால் அதைப்பற்றி எழுதவும் துணிவு ஏற்பட்டது.

 

சரேலென பறந்து

சரிந்து இறங்கி

நிலைத்த நீரின்மேல் நின்றது

ஒரு நிறமற்ற பறவை.

அலகில் அலகு பொருத்தி

அலைகளிலாடும் தன்னை

அது

அருந்திவிட்டுச் சென்றது.

 

மாயை தண்ணீர். அதில் தெரியும் என் பிம்பம் அகந்தை. இந்த பிம்பம் தன்னை ‘நான்’ என்று நினைத்துள்ளவரை, தண்ணீரின் அலைப்புக்கெல்லாம் ஆடுகிறேன்; பிம்பத்தை உண்டாக்கும் எனது நிஜசொரூபமாகவே எப்போதும் இருந்திருப்பதை அறிகிறேன்; பிம்பத்துக்கும் அது தண்ணீரில் படும் அலைப்புகளுக்கும் சம்மந்தம் அற்றவனாகிறேன். ஆனால் அலைவாய்ப்பட்ட பிம்பம் ஆடியபடி தான் இருக்கும். உன் பார்வையில் நோவாய்ப்படுவதும் அழுவதும் சிரிப்பதும் உபதேசிப்பதும் மௌனமாய் இருப்பதும், எல்லாம் இந்த பிம்பம்தான். நீ வழிபடுவது அல்லது சிலுவையில் அறைவது,  இந்த பிம்பத்தைத்தான். நீ காண்பது இதன் அலைப்புகளைத் தான். ஆனால் சத்ய சொரூபத்தில் இந்த அலைப்புகள் ஏதுமில்லை. அது அலையாட்டம் இல்லாத திடமான சொரூபமாக, எங்கோ நிற்கிறது. அது மாயையின் கரையை விட்டு நீங்கியதும், அதன் பிம்பமும் மறைகிறது. உடனே ‘மகாசமாதி, மகாபரிநிர்வாணம்’, என்றெல்லாம் சொல்கிறாய் (தியானதாரா- சாது அப்பாத்துரையின் வாய்மொழிகளை). அலகில் அலகு கவிதையை முன்வைத்து முன்பொரு சமயம் விவாதித்தபோது வேணு வெட்ராயன் கூறியவை இவை. பிரமிளின் புகழ்பெற்ற ’காவியம்’ என்ற கவிதையையைப்போன்ற நவீனக்கவிதையில் ஒரு கிளிஷேயாக மாறிவிடக்கூடிய வல்லமை கொண்டது அலகில் அலகு இக்கவிதை.

யாரோ எதுவோ எங்கோ ஏனோ முதல் பெண் சூடிய முதல் பூவில் அழகின் பிறப்பு மெய்யென்றும் பொய்யென்றும் அறிந்ததும் அறியவொண்ணாததுமாய் பெருமரமாய் கிளைத்துப்பரவி விழுதில் வேரூன்றிக்கிடக்கிறது. இளைப்பாறும் காதுகளில் கடல் அனுப்பிய மீன் ஒன்று அதன் ரகசியங்களை சொல்லிக்கொண்டிருக்கிறது.

நீரற்ற ஓடைமேல் சருகுகள் புரளச்செய்யும் காற்று. பாலை மணல்வரிகளில் அடுக்கடுக்காய் காற்றின் நினைவுகள். அதில் இரைவேண்டி கடும் வெயிலில் தவம் புரியும் அரவம். முடிவின்றி சொட்டிக்கொண்டிருக்கும் கடிகார முட்களின் அடியற்ற ஆழத்தில் விழுந்து கொண்டிருக்கும் காலத்துளிகள், சிந்தனை அனைத்தும் நின்றபின் துளிர்க்கும் முதல் அசைவு. நிலைகொள்ளாமல் கிளைமேல் சிறகடிக்கும் பறவை, திரியில் காற்றில் துடிதுடிக்கும் சுடர்.

சிறுசிறு குட்டைகளில் தேங்கி நிற்கிறது முன்னொரு காலத்தின் பெருநதி. அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது அதிகாலைச் சூரியன். அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள் வழி மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர். செந்தளிர்களில் ஒளிரும் உயிரின் சுடர்.

வட்ட வட்ட வளையங்கள் ஒன்றை ஒன்று வெட்டிட இணைந்து விலகும் நீர்மேல் நீர்த்துளிகள். நீரினில் விழும் ஒரு துளி நீலம் உடைந்து சிதறும் கண்ணாடி குடுவை வெளியினில் நீந்தி விளையாடும் மீன்கள். நெற்பரப்பில் பறந்தலையும் காற்றின் அலைகள். தீராத எண்ணங்களை தின்று கொண்டிருகும் குருவிக்குஞ்சுகள்.

பெருவெளியை உழுது செல்லும் ஓர் ஒற்றைத்தோணி. மழைநீர்கழுவிய மண்வாசலில் கோலம் தேடிவந்த ஒரு கூட்டு நத்தை அதில் தன் கோலத்தை மெல்ல வரைந்து மெல்ல செல்கிறது.

 

வேணுவின் கவிதைகளுக்கு தமிழுக்கு வெளியே ஒப்புமை சொல்ல வேண்டுமானால் சீன தேசத்தின் தொன்மையான ஜென் கவிதைகளுக்குத்தான் செல்லவேண்டும். குறிப்பாக 4-7 B.C.E காலகட்டத்தை சேர்ந்த கவிஞர்கள் எழுதியவை.

இவற்றில் பல கவிதைகளில் உவமையோ உருவகமோ இருப்பதில்லை. சொற்சிக்கனம், எளிமை ஆகியவற்றால் உருவாகும் கவித்துவம் பயின்று வரும் ஒரு எளிய சிறு நிகழ்வின் அவதானமே முழுக்கவிதையாக உருப்பெற்று நிற்கிறது. பொதுவாக சொன்னால் லாவோ சூ, ஹான் ஷான், லி போ, டோகன் கிஜென், சியாவோ ஜான், யுவான் மீ, ரியோகன், சைகியோ, பாஷோ மற்றும் பலரின் படைப்புகளில் இந்த அம்சங்களை காணலாம்.

தாவோயிசத்திலிருது பெற்றுக்கொண்டபடி மிகையான சொற்பிரயோகத்தின் மீது நம்பிக்கையற்ற நிலைப்பாடு கொண்டவை என்று ஜென் கவிதைகளை வகைப்படுத்தலாம். பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிலைகளில் நிற்பவை என்றாலும் ஒரு பொருளை அல்லது நிகழ்வை தியானிப்பதன் வழி அந்த நிகழ்கணத்தின் மனதின் ஒளியை எளிய சொற்களில் வெளிப்படுத்துபவை என்று இவைகளை ஒட்டுமொத்தமாக பொதுப்படுத்தலாம்.

 

உயர்ந்து நிற்கும் மலையின் மீது

நுரையாய் வழிகிறது மேகம்

நிலவொளியை

உரிமை கொண்டு

குளிரின் மையத்தில்

சில்லிட்டு நிற்கிறது

கோயில்

-ஹூய் யுங், 332-414 B.C.E

 

தேங்கி நிற்கும் குளத்திலிருந்து

குளிர்கால நிலவை

கரைத்து அழிக்கப்பார்க்கிறது

காற்று

-மியாவோ யின், 376-380 B.C.E

 

மலையின் மீதமர்ந்து

கீழிருக்கும் நீரில்

சிற்றலைகளின் விளையாட்டை காண்பது

எல்லையில்லா இன்பம்

எளிய மேகம்

நிறங்களற்று

கரைந்து செல்கிறது

-லி போ, 701–762 B.C.E

 

எண்ணங்கள் உணர்வுகள் வழி பெருகி ஒன்றிலிருந்து ஒன்றென விரிந்து செல்லக்கூடிய மனநிலையில் உருவாவது அல்ல வேணு வேட்ராயனின் கவிதைகள். மாறாக அதற்கு எதிர்திசையில், எண்ணங்கள், உணர்வுகள் அற்றுபோகும் நிலையில் இருந்து உருவாகி வருபவை. ஒரு அவதானம் உருவாக்கும் எண்ணங்கள், கருத்துகள், உணர்ச்சிகள் அனைத்தும் முயங்கி அடங்கி நிறையும் புள்ளியின் மெளனத்திலிருந்து தோன்றி உருப்பெருபவை.

ஆகவே அலங்காரங்கள் ஒப்பனைகள் அற்றவை. வழிச்செல்லும் ஒரு பயணியை வழிமறித்து எதிர்கொள்ளும் துடுக்கோ, விரிவான உரையாடல்களோ, உபசரித்து விருந்தளிக்கும் பானங்கள், உணவுகள் ஆகியவற்றின் நீண்ட பட்டியலோ அவைகளிடம் இல்லை. மாறாக மலை மேல் இருந்து இறங்கி வந்து மரநிழலில் அமர்ந்திருக்கும் ஒரு எளிய கிழட்டுத்துறவியைப்போல அவை மெளனத்தில் தியானிக்கின்றன. கேட்பவர்களுக்கு அவை கையளிப்பது குளிர்ந்த நீரின் ஒரு எளிய குவளையை. தாகத்தை தணிக்கும் வல்லமை கொண்ட அரிதான ஒரு சுனையிலிருந்து முகரப்பட்ட தூய நன்னீர் நிரம்பிய குவளை. இக்கவிதைகளின் எளிமைக்கு காரணம் படைப்பின் போதாமை அல்ல. இப்படைப்புகளின் தோற்றமும் மூலமும் வேறானது என்பதுதான். துறவி ஒருவன் மலையின் முகட்டின் மீது பலமணி நேரம் சொல்லின்றி நின்றபின் அவன் குரல் வழி காற்றில் உருப்பெறும் சில சொற்களைப்போல ஒரு நிகழ்வின் எளிய சாட்சியாக கவிஞனுடன் மெளனித்து நிற்பவை என்று இக்கவிதைகளை கூறலாம்

நவீன மனித மனம் ஒரு வாசிப்பு முறையின் சட்டகத்து பழகியுள்ளது. இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக எழுதப்படும் மொழிகளுக்கு உள்ள முறைமைகள் ஒருபக்கம். ஒரு தலைப்பை வாசித்ததும் அது ஏற்படுத்தும் மனப்பதிவு வாசகனை மேற்கொண்டும் அந்த பிரதியில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய ஒரு எளிய சித்திரத்தை உருவாக்கி அளிக்கிறது. அந்த சித்திரம் பலசமயங்களிலும் ஆசிரியனுக்கு அனுகூலமானதும் கூட. ஆகவே ஒரு கவிஞன் அந்த வாய்ப்பை துணிந்து தன் ஆயுதமாக பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

அதேசமயம் தலைப்பு இல்லாமல் எழுத ஆசிரியன் தீர்மானித்து விட்டபிறகு அதற்கு ஒருவேளை காரணங்கள் இருக்கக்கூடும் என்பதையும் வாசகன் நம்பியாக வேண்டும். தலைப்புகள் அற்று இருப்பது வாசிப்பை சிரமமாக்குகிறது சிதறடிக்கிறது என்றாலும் கவிதைகளின் அரூபத்தை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. ஒருவேளை கவிஞர் விரும்புவது அதைத்தான் என நினைக்கிறேன்.

ஒரு கவிதை அது நிகழும் தேசம், புவியிடம், இடம், காலம், காட்சி ஆகியவற்றை முன்வைக்க முடியும். முடியும். கவிதை நிகழ்த்துபவரின் தொழில், நோக்கம், உளக்காட்சி கவிதையில் அவருக்குள்ள இடம் ஆகியற்றையும் தெளிவுபடுத்துவதன் வழி நிகழ முடியும். யதார்த்தம், வரலாறு, புராணம், தொல்படிமம், ஆகியவற்றின் வழி இயங்க முடியும். ஆன்மீகமான கேள்வி, தன்னுரையாடலின் சர்ச்சை ஆகியவற்றின் வழி உருப்பெற முடியும். இவற்றையெல்லாம் கடந்து ஒரு எளிய இருப்பின் அழகின் வழி இயங்குபவை என்பது இக்கவிதைகளை தனிப்படுத்துவது.

அந்த வகையில் வேணு வெட்ராயனின் கவிதை அபூர்வமானது. எண்ணங்களால் பதைபதைத்து மனதின் ஆழம் மொழியில் ஆழத்துள் உறைந்து நின்றபின் ஏற்படும் நிச்சலனம் நிலைபெற்றபிறகு உருவாகி வருவதால் சிலசமயங்களில் சொற்களுக்கும் தர்கங்களுக்கும் அப்பாற்பட்டு நிகழ்பவையும் கூட. அவருக்கு வாழ்த்துக்கள்.

மாணிக்கவாசகர் திருத்தக்கதேவர் வழியாக நீளும் ஒரு சரடு அவரை சங்கால கவிதைகளுடன் பிணைத்து பிரமிள், தேவதேவன், தேவதச்சன் ஆகியோருடன் நிகழ்காலத்தில் இணைக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

 

 

-வேணு தயாநிதி

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது

ஒரு துளி நீலம்– சுனில் கிருஷ்ணன்

வெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து

குமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி

வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு

 

 

அலகில் அலகு மின்நூல் வாங்க

அலகில் அலகு நூல் வாங்க

வேணு வேட்ராயன் கட்டுரைகள் அரூ

 

தொடர்புடைய பதிவுகள்

ராசிபலனில் நவீன இலக்கியம்

$
0
0

 

அன்புள்ள ஜெ

யூடியூபில் ராசிபலன் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு அபத்தம் வந்து பொங்கலில் கல் கடிபடுவதுபோல உறுத்தியது. ஒருவர் ராசிபலன் சொல்லி குறிப்பிட்ட தோஷத்திற்காக வெண்முரசில் இந்தந்த பகுதியை படியுங்கள் என்று சொல்கிறார். இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதை அறிந்தால் ஊக்குவிப்பீர்களா?

 

ஆர்.சிவராம்

 

அன்புள்ள ஆர்.சிவராம்,

முதல் கேள்வி நீங்கள் சோதிடத்தை ஏற்கிறீர்களா, நம்புகிறீர்களா என்பது. அதை மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் ஒரு வழிமுறை என்று ஏற்கிறவர்கள் உண்டு. ஆழமாக நம்புகிறவர்களும் உண்டு. நீங்கள் ஒட்டுமொத்தமாக சோதிடத்தை நம்பவில்லை என்றால் அதில் ஒன்று அபத்தம், இன்னொன்று சிறப்பு என்பதெல்லாம் இல்லை, ஒட்டுமொத்தமாகவே அபத்தம்தான்.விவாதமே தேவையில்லை.

[ஆனால் தமிழகத்தில் பொதுவெளியில் சோதிடத்தை இகழ்ந்துவிட்டு தனிவாழ்க்கையில் சிக்கலென்னும்போது தேடிச்செல்பவர்களே மிகப்பெரும்பாலானவர்கள். இதை நான் ஒருமுறை அமெரிக்காவில் சொன்னேன். உடனிருந்த வெள்ளையப் பேராசிரியர் அமெரிக்காவிலும் அப்படித்தான் என்று சொன்னார். உலகமெங்கும் அதுதான் வழக்கம்போலிருக்கிறது]

சோதிடத்தை நீங்கள் ஏற்கிறீர்கள் என்றால், ஏன் இது அபத்தமாகத் தெரிகிறது? ஏனென்றால் இது வழக்கமாக எல்லா சோதிடர்களும் சொல்வதுபோல இல்லை — நீங்கள் நம்புவதுபோல இல்லை அவ்வளவுதான் இல்லையா?

திரு.குமரவேலை எனக்கு என் வாசகராக பதினைந்தாண்டுகளாகத் தெரியும். ஒன்று, அவர் கல்விபயிலாதவர் அல்ல.நுண்உயிரியலில் முனைவர் பட்டம் பெற்று, இந்தியாவின் முக்கியமான ஆய்வகமொன்றில் தலைமை அறிவியலாளராக பணியாற்றுபவர். செல் உருமாற்றம் பற்றிய நூல்களை எழுதியவர். ‘செல்லுக்குள் செல்வோம்’ அவருடைய எளிமையான அறிமுக நூல்.

அவருக்கு சோதிடம் தொழில் அல்ல. சோதிடம் சொல்ல எனக்குத்தெரிந்து இப்போது அவர் கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்வதில்லை. அவர் ஏற்கனவே மிக வசதியானவர். குழந்தைகளும் நல்லநிலையில் இருக்கிறார். இதை அவர் தன் கடமை என நினைக்கிறார்

ஏனென்றால் சோதிடம் அவருடைய குலத்தொழில். நெடுங்காலமாகவே குலத்தொழிலாக சோதிடத்தை கொண்ட சாதியைச் சேர்ந்தவர். கணியன் பூங்குன்றன் தன் குலம் என்று சொல்பவர். ஆகவே இதை விட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார்.

இங்கே மரபான விஷயங்களில் குலமுறை என்ற ஒன்று முன்பு கணிக்கப்பட்டது. மருத்துவம் குறைந்தது மூன்றுதலைமுறையாகச் செய்யப்படவேண்டும்.சோதிடம் ஏழு தலைமுறையாக செய்யப்படவேண்டும். இது பண்டைய ஆசாரம், நம்பிக்கை. இதை நான் நம்புகிறேனா என்பது வேறுகேள்வி. ஆனால் இதுவே இங்குள்ள மரபு

ஏன் பாரம்பரியத்தை முன்வைக்கிறார்கள் என்றால் இத்துறைகளில் அறிவு இரண்டாம்பட்சம்தான். நுண்ணுணர்வு [Intuition ]தான் முதன்மையானது. பாரம்பரியமாக அதை செய்பவர்களில்தான் இளமையிலேயே அது உருவாகி வந்திருக்கும் என்பதும், மந்திர உபதேசம் அவர்களுக்கே பயனளிக்கும் என்பதும் இங்குள்ள நம்பிக்கை.

உடனே சாதிமேட்டிமை என்ற வழக்கமான ஒற்றைவரி எழுந்து வரும். நடைமுறை அப்படி அல்ல. ஆசாரிகள், கணியர், புள்ளுவர், பண்டாரம் போன்ற பல சாதியினருக்கு இப்படி பாரம்பரியமான நுண்ணுணர்வுகள் உண்டு என்பது இங்கே உள்ள நம்பிக்கை. ஏன் சோதிடம், மந்திரவாதம் ஆகியவற்றில் பறையர்களில் ஒருபிரிவினரான வள்ளுவர்கள் இயற்கையான பாரம்பரிய மந்திரசித்தி உடையவர்கள் என்ற நம்பிக்கை இன்றும் உண்டு.

இதை நான் ஏற்கிறேனா என்றால் என் மூளைக்கு இது ஒரு நம்பிக்கை என்ற அளவிலேயே தோன்றுகிறது என்பதே பதில். தர்க்கபூர்வமானதாக அல்ல. சோதிடத்தையே  நான் ஒரு நம்பிக்கையாகவே நான் பார்க்கிறேன். நான் இதுவரை சோதிடமே பார்த்துக்கொண்டது இல்லை. என் குடும்பத்திலேயே சோதிடம் பார்த்தவர்கள் இருந்தனர். குமரவேலிடமே கூட சோதிடம் கேட்டதில்லை. கேட்கும் எண்ணமும் இல்லை. நான் இங்கே எது பாரம்பரியமான நம்பிக்கை, வழிமுறை என்று மட்டுமே சொல்கிறேன்.

இன்று தமிழகத்தில் சோதிடம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியம் அற்றவர்கள்,அவர்களே நூல்கள் வழியாக கற்றுக்கொண்டவர்கள். தந்தையை குருவாகக்கொண்டு கற்கவேண்டும், அல்லது குருவை தந்தையாகக்கொண்டு கற்கவேண்டும் என்றுதான் தொல்நெறி. அது இங்கே இன்று இல்லை. சோதிடம் ‘அறிவியலாக’ கற்றுக்கொடுக்கப்படுகிறது. கல்லூரிப் பாடமாக உள்ளது.

மரபான பார்வைப்படி சொன்னால் சோதிடத்தை அப்படி புறவயமாகக் கற்பிக்கமுடியாது. சோதிடத்தில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளன. நோன்பு, மந்திரஉபதேசம், உபாசனை. சோதிடம் கற்க அதற்குரிய வாழ்க்கைமுறைதேவை, அதை நோன்பு என்கிறர்கள். குருவிடமிருந்து மந்திரம் பெற்று நுண்ணுணர்வை தீட்டிக்கொள்ளவேண்டும். அதை வாழ்க்கைமுழுக்க இயற்றவேண்டும்- அதை உபாசனை என்கிறார்கள். எவர் அதை கல்லூரிகளில் வழக்கமாக ஆக்கமுடியும்?

ஆகவே இங்கே ஒரு சோதிடம் இன்று வேரூன்றி உள்ளது. இதையே இயல்பானது, சரியானது என்று நம்பி, மரபானதை ஏளனம் செய்யும் ‘பகுத்தறிவை’ ஈட்டியிருக்கிறோம்

சோதிடத்தில் முக்கியமானது பரிகாரம். ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்ல, அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் சொல்வது அது. பரிகாரம் நான்கு படிகள் கொண்டது. நான் சொல்வது கேரளத்தில் வேரூன்றிய தொன்மையான சோதிடமுறையை. ஒன்று, நிஷ்டை அல்லது நோன்பு. இரண்டு, உபாசனை அல்லது வழிபாடு. மூன்று தானம் அல்லது கொடை, நான்கு பாராயணம் அல்லது வாசிப்பு

பரிகாரத்தில் முதலில் சொல்லப்படுவதே நோன்புதான். உணவுசார்ந்த நோன்புகள் முதன்மையாக. நான் இளமையில் பெரும்பாலும் எல்லா நோன்புகளிலும் அசைவத்தை ஒதுக்குவதைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாழ்நாள் முழுக்க விலக்குவது, ஓர் ஆண்டு விலக்குவது , ஒரு மண்டலம் விலக்குவது என அதில் பல படிநிலைகள். சோதிடம் இங்கே சமணத்தால் முன்னெடுக்கப்பட்ட அறிவியக்கம் என்பதனால் இது வந்திருக்கலாம்.

ஒருபொழுது உண்ணுதல், சிலகுறிப்பிட்ட உணவுகளை ஒதுக்குதல் [தமோகுணம் கொண்ட உணவுகள். குறிப்பாக கிழங்குகள்] போன்று பல உணவுநோன்புகள் உண்டு. [கடைசியில் சமண உணவுமுறைக்கே சென்றுசேரும் வேடிக்கையையும் கண்டிருக்கிறேன்]. ஆனால் புலால்மறுத்தல் பேசப்படாமல் பரிகாரம் நான் கேள்விப்பட்டதில்லை. இதைத்தவிர காலையெழுதல், இரண்டுவேளை நீராடுதல், பாலியல் ஒறுப்பு,தனிமைநோன்பு, பேசாநோன்பு என பல நோன்புகள் உண்டு

அடுத்தது உபாசனை. இன்னதெய்வத்தை வழிபடு என்று சொல்லுதல். விஷ்ணு,சிவன் , துர்க்கை போன்ற பெருதெய்வங்களை வழிபடச் சொல்வதுண்டு. ஆஞ்சநேயர், நரசிம்மர், சரபேஸ்வரர் போன்ற இணைவடிவுகளை மட்டுமல்ல குடித்தெய்வங்கள், காவல்தெய்வங்கள் போன்ற சிறுதெய்வங்களையும் வழிபடும்படி சோதிடர்கள் சொல்வதுண்டு. அது எந்த தோஷம், கிரகங்களின் நிலை, சம்பந்தப்பட்டவரின் குலமும் ஊரும் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது. அவ்வழிபாட்டின் முறைகளும் நெறிகளும் உபதேசிக்கப்படும்

மூன்றாவது, கொடை. கொடை என்பது பலவகை. பசுவுக்கு தழை கொடுப்பது பறவைகளுக்கு உணவிடுவது முதல் அந்தணருக்கும் பயணிகளுக்கும் கல்வியாளருக்கும் பணம் வழங்குவது வரை அதில் பல உண்டு. அன்னம், வஸ்திரம், பசு முதல் நிலம் வரை கொடையாக ஆணையிடப்படுவதுண்டு. கொடை என்பது பெறுபவரால் தீர்மானிக்கப்படக்க்கூடாது, கொடுப்பவர் நிறைவுறவேண்டும். ஒருவேளை சோறுபோட்டால் பிச்சைக்காரன் நிறைவடைவான். அது கொடை அல்ல, தன் செல்வநிலைக்கு ஏற்ப உண்மையாகவே கொடையளித்துவிட்டோம் என்ற திருப்தியை ஆழத்தில் கொடுப்பவன் அறியவேண்டும்.

இந்த வரிசையில்தான் பாராயணம் வருகிறது. இன்னின்ன நூல்களை படியுங்கள் என்னும் அறிவுறுத்தல். சிவபுராணம், திருவிளையாடல்புராணம் போன்ற புராணங்கள்தான் பெரும்பாலும் சொல்லப்படும். கம்பராமாயணம் பாலகாண்டம், சுந்தரகாண்டம் போன்ற காவியப்பகுதிகளைப் படிக்கச் சொல்வது உண்டு.

குமரவேல் பாராயணம் என்ற இடத்தில் ஏன் புராணங்களுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என நினைக்கிறார். முந்தைய பரிகாரங்களான நோன்பு, வழிபாடு, கொடை மூன்றும் உடல், மனம், ஆத்மா சார்ந்தவை. பாராயணம் மூளைசார்ந்தது. உடல்,மூளை,மனம், ஆத்மா நான்காலும் பரிகாரம் செய்வதற்காகவே இவை சொல்லப்பட்டுள்ளன.  இன்றைய மனநிலையில் புராணங்களை படிப்பவர் மூளையால் நிறைவடைவதில்லை. அவருக்கு சமகாலத்தின் தர்க்கம் தடையாக அமைகிறது. மொழி தடையாக அமைகிறது. ஆகவே புராணங்களை பரிந்துரைத்தால் அது நாலைந்து வரிகளை வாசிப்பது என்ற அளவில் சடங்காகவே நின்றுவிடுகிறது. ஆகவே நவீன இலக்கியங்களை பரிந்துரைக்கிறார்.

அவர் நல்ல வாசகர். வாசித்ததைப் பற்றியே பரிந்துரைக்கிறார். வெண்முரசைப் பற்றி மட்டும் சொல்லவில்லை, பா.ராகவன் முதல் சாரு நிவேதிதா வரை அத்தனை நூல்களையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பரிந்துரைக்கிறார்.நூல்களில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமென்றால் அது வேறு. நவீன நூல்களுக்கு அதற்கான தகுதி இல்லை என நினைக்கிறீர்கள் என்றால் அதைப்பற்றி அவரிடம் பேசலாம். ஆனால் அபத்தம் என்றெல்லாம் சாஸ்திரம் அறிந்தவராக பாவனை காட்டவேண்டாம்.

இது வேடிக்கையான விஷயம்தான். நான் சோதிடர்களிடம் அவர்கள் நோன்பு,கொடை இரண்டையும் வலியுறுத்துவதில்லையே என்று கேட்டிருக்கிறேன். “சார், நோன்புன்னா அசைவம் வேண்டாம்னுதான் முதல்ல சொல்லணும். சொல்லிட்டு மதுரையிலே தொழில்பண்ண முடியுங்களா? தாராளமா சாப்பிடலாம்னு அந்தப்பக்கம் ஒருத்தன் சொல்லுவான். அங்க போயிடுவாங்க” என்றார் ஒருவர். “தானம் சொன்னா முதல்பெருந்தானம் பிராமணனுக்கு குடுக்குறது. சொன்னா இங்க நம்மளை விட்டிருவானுகளா?நமக்கு தட்சிணை தரவே பேரம் பேசுறவன் அன்னதானம் போடுன்னு சொன்னா கேப்பானா?அதனாலே பசுவுக்கு அகத்திக்கீரை குடுன்னு சொல்லி நிப்பாட்டிக்கிடறது” என்றார் ஒருவர்

குமரவேல் அவருக்கு அவருடைய சாஸ்திரம் மீதும் பாரம்பரியம் மீதும் உள்ள நம்பிக்கையால் இதைச் செய்கிறார். அவருடைய துணிச்சலைத்தான் நான் பாராட்டுவேன்

ஜெ

அன்புள்ள ஜெ,

 

இந்த கொரோனா காலத்தில் ராசிபலன் மீதான நம்பிக்கை சிறிதும் இல்லாமல் ஆகிவிட்டது , கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருப்பதால் இப்படி தோன்றுகிறது என நினைக்கிறேன் , கறி விருந்துக்கு வரசொல்லி  நண்பனிடம் இருந்து வரும் அழைப்பைவிட இன்னும் குதூகலம் அளிக்கக்கூடிய வெள்ளிகிழமையின் இரவுகளே இப்போதெல்லாம் சாதரணமாகிவிட்டது .

நிலமை இப்படியிருக்க… கொஞ்சம் வாசிப்பு பழக்கம் இருக்கும் நண்பனொருவன் வாட்ஸப்பில் ஒரு சுட்டியை அனுப்பியிருந்தான் ,சொடுக்கிப் பார்த்தால் 20 நிமிடம் ஓடக்கூடிய ராசிபலன் காணொளி … இவனுக்கு ஏதோ புத்தி பேதலித்துவிட்டது என நினைத்துகொண்டு வேறு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் , அரைமணிநேரம் கழித்து மீண்டும் என்னை அழைத்து வாட்ஸப்பில் நான் அனுப்பிய வீடியோவை பார்த்துவிட்டாயா என்றான் … “அப்படி என்னடா இருக்கு அதுல?? சாதாரண ராசிபலன்தானே ??? ” என்றேன். “சாதாரண ராசிபலனில் ஜெயமோகன்,சுந்தர ராமசாமி , எஸ்.ராமகிருஷ்ணன் பெயர்கள் எல்லாம் வருமா??” என்று கேட்டான்…

ராசிபலனில் சந்திரனும் சுக்கிரனும்தானே வருவார்கள் இவன் என்ன ஜெயமோகன் , சுந்தர ராமசாமி பெயர்கள் எல்லாம் வருகிறது என்று சொல்கிறான் என்று நினைத்துக்கொண்டே அவன் அனுப்பிய ராசிபலனை பார்க்க ஆரம்பித்தேன் … உண்மைதான் ஒவ்வொரு ராசிக்கும் பரிகாரத்தை போலவே ஒரு எழுத்தாளரின் பெயரை சொல்லி இவரது எழுத்தை வாசித்துப்பாருங்கள் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று வழக்கமான ஜோதிட பாஷையிலே சொன்னார். கடக ராசி நேயர்களுக்கு ஜெயமோகனும் , பா.ராகவனும்!! ஆச்சரியமாக இருந்தது …

“ஒரு புத்தக வாசிப்பின் நிறைவு படித்த புத்தகத்தைப் பற்றி யாரிடமாவது சொல்லும்போதுதான் முழுமையாக கிடைக்கிறது ‘ என யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது , என்னை போலவே ராசிபலன் சொல்பவருக்கும் யாரிடம் சொல்வது என தெரியாமல் ராசிபலனுடன் சேர்த்து சொல்லிவிட்டார் என நினைக்கிறேன்… உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது.

வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள் : சுஜாதா, சாரு நிவேதிதா , பாலகுமாரன் , ஜெயமோகன், பா.ராகவன் , எஸ்.ராமகிருஷ்ணன் , சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன்.

அன்புடன் ,
பாலசுப்ரமணி மூர்த்தி

 

அன்புள்ள பாலசுப்ரமணிய மூர்த்தி

 

அவருக்கு அவர் சொல்லும் விஷயங்களில் தெளிவு உள்ளது. அதைத்தான் சொல்கிறார். சோதிடருக்கு அவருடைய கலையில், உள்ளுணர்வில் இருக்கும் நம்பிக்கையே முக்கியமானது

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

$
0
0

நான் என் அறைக்குள் மெத்தையை தட்டி விரித்துக்கொண்டிருந்தபோது பலர் உரக்கப்பேசியபடி சர்ச் வளாகத்திற்குள் நுழைந்து என் வீடு நோக்கி வருவது கேட்டது. குரலில் இருந்து ஆன்றப்பனை மட்டும் என்னால் அடையாளம் காணமுடிந்தது. ஆன்றப்பன் இருந்தால் அது ஏதோ சிக்கலான பிரச்சினைதான்

மின்சாரம் இல்லை. கடற்பகுதிகளுக்கு மட்டுமேயான மின்சாரவெட்டு உண்டு. கடற்பகுதிகளுக்கு மட்டுமேயான குடிநீர் வெட்டு உண்டு. கடற்பகுதிகளுக்கு மட்டும் பேருந்துகள் நின்றுவிடுவதுண்டு. கடற்பகுதிகளுக்கு மட்டும் வந்துசேராத எவ்வளவோ விஷயங்கள் உண்டு.

நான் லாந்தரின் திரியை தூக்கி கையில் எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தேன். வெளியே இருபது முப்பதுபேர் என்னை நோக்கி வந்தனர். ஆன்றப்பன் நேராக முற்றத்தில் வந்து நின்று “ஃபாதர் கொஞ்சம் வாருங்க… ஒரு பிரச்சினை” என்றான்

“என்னடே?”என்றேன். “முதல்ல உள்ள வாருங்க. சமாதானமாட்டு பேசுவோம்” ஏதாவது அடிதடியாகத்தான் இருக்கும். கடற்புறங்களில் சாயங்காலம் அடிதடி சாதாரணம். ரத்தகாயம் என்றால்தான் நான் தலையிடவேண்டியிருக்கும்

“அம்பிடுபேரும் உள்ள வரமுடியாது ஃபாதர்.. இது அடிபிடி ஒண்ணும் இல்ல… வேற விசயம்.. வாருங்க”

நான் சட்டையை போட்டு ஒரு மப்ளரையும் கழுத்தில் சுற்றிக்கொண்டு கிளம்பினேன். லாந்தரை தாழ்த்தி ஓரமாக வைத்தேன். எட்டுகட்டை டார்ச்சை எடுத்துக்கொண்டேன்.

“என்னடே?”என்று போகும்போதே கேட்டேன்

“நம்ம கூட்டத்திலே ஒரு பய தொலைஞ்சுபோயிட்டான் ஃபாதர்” என்றான் ஆன்றப்பன் “சின்னப் பயலாக்கும்.பதினாறு வயசுதான். நம்ம எலிசாளுக்க பய. அவளுக்க வீட்டுக்காரன் கடலிலே போனபிறவு பிள்ளைகளை வச்சுக்கிட்டு நரகவேதனைப்பட்டா. பட்டினியும் சீக்குமா அளுகின மீனிலே புளு மாதிரியாக்கும் கெடந்தா. இந்தப் பய தலையெடுத்து இந்த வருசமாக்கும் கடலுக்கு போகத் தொடங்கினான். நல்ல பயலாக்கும். செல்லம்போல இருப்பான்..”

சென்றபடியே அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். எலிசாளின் மகன் அந்தோணி என்னும் பையன் ராயப்பன் முதலாளியின் பெரிய படகில் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறான். அனுபவம் இல்லாதவன், ஆனாலும் கூட்டிச்சென்றிருக்கிறார்கள்.

மீன்பிடிக்கச் செல்ல ஆள்கிடைக்காமலான காலம். வடக்கே கடலையே பார்த்திராத பீகாரிலிருந்து வரும் தொழிலாளர்களையே கூட்டிச்செல்லவேண்டிய நிலைமை. இப்போதெல்லாம் மீன்பிடிப்பு என்பது முழுக்கமுழுக்க இயந்திரங்களின் வேலை. அள்ளி ஃப்ரீசரில் வைப்பது போன்றவைதான் உடலுழைப்பு வேலைகள். ஆகவே சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மீன்பிடிக்க போகும்போதே கடல் வழக்கதுக்கு மாறான கொந்தளிப்பு அறிகுறிகளை காட்டியது.. ஆனால் அதற்கேல்லாம் படகை நிறுத்திவிடமுடியாது. பெரும்பாலான படகுகளைப்போல அதுவும் கடனுக்கு வாங்கப்பட்டது. மாதம் ஒன்றரைலட்ச ரூபாய் வட்டியுடன் தவணை கட்டப்படவேண்டியது. கடலுக்குச் சென்றே ஆகவேண்டும், மீன்பிடித்தே ஆகவேண்டும்.

ஆனால் நினைத்ததை விட புயல் அதிகம். மழை இல்லாத வரட்டுக் காற்று. அலைகள் எழுந்து கொந்தளித்தன. எப்படியும் போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் செல்லச்செல்ல அலைகள் தலைக்குமேல் மிக உயரத்தில் எழுந்து வந்து படகை தூக்கி வீசின. திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.

படகில் அனுபவசாலியாக இருந்தவன் கிறிஸ்டோபர். அவன் அந்தோணியிடம் பிகாரி தொழிலாளியான பன்னா சிங்கை அழைத்துக்கொண்டு படகின் பின்பக்க வளைவில் நெடுந்தூரம் நீண்டு கிடந்த நைலான் வடத்தை இழுத்துச் சுருட்ட சொன்னான். வடத்தை அவர்கள் இழுத்துச் சுருட்டிக்கொண்டிருந்தனர். படகு மேலெழுந்து ஒருபக்கமாகச் சரிந்து அதேவிசையில் மறுபக்கமாகச் சென்றது.அலையெழுந்து முழுப்படகையும் மூழ்கடித்து அப்பால் சென்றது. பொருட்கள் செல்லாமலிருக்க அவர்கள் ஒவ்வொன்றாக இழுத்து எடுத்தனர்.

மீண்டும் படகு மேலெழுந்தபோது செபஸ்தியான் சொன்னான். அந்தோணி, பன்னாசிங் இருவருமே படகில் இல்லை. அவர்கள் எப்போது விழுந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.“ஏலே எப்பலே விளுந்தானுக?”என்று கிறிஸ்டோபர் கூவினான். அவன் குரலே மற்றவர்களுக்குக் கேட்கவில்லை.

அலைகள் அறைந்து அறைந்து படகை நெடுந்தொலைவு கொண்டுவந்தன. கரைக்கு வந்துவிடமுடியும் என்ற நம்பிக்கையே நெடுநேரம் கழித்துத்தான் வந்தது. எழுந்ததுபோலவே சட்டென்று கடல் அடங்கிவிட்டது. அவர்கள் தூண்டில்வளைவுக்கு வந்தபோது மிதமான அலைகள்தான். எந்த இடத்தில் அவர்கள் விழுந்தார்கள் என்று தெரியவில்லை.படகு அலைக்கழிந்து எங்கெல்லாம் சென்றது என்றும் தெரியவில்லை.

“அந்த இந்திக்காரப் பய பேரு என்ன?”என்றேன்

“பன்னாசிங்கு… நீங்க பாத்திருக்கீங்க ஃபாதர். நம்ம சர்ச்சு அன்னெக்சரிலே ஓடு மாத்த வந்தான்லா?”

“ஆமா, முகம் கொஞ்சம் ஒடுங்கியிருக்கும்… கொஞ்சம் பூனைக்கணு”

“அவனேதான்”

“நல்லா தெரியுமே… நெறைய பேசிட்டிருந்தேன்… சவைச்சு துப்பி தமிழ் பேசுவானே” என்றேன்

நான் கடற்கரைக்குச் சென்றபோது எலிசாம்மாள் நெஞ்சிலறைந்து அழுதுகொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் ஓடிவந்து காலில் விழுந்து கதறினாள்.  “எனக்க மாதாவே எனக்க மாதாவே” என்று கூவினாள்.

அவள் தலையை தொட்டு “செரி, பாப்பம். கடவுள் இருக்காரு… பாப்பம்…” என்று நான் சொன்னேன். எலிசாம்மாளின் இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு பையனும் திகைத்துப்போய் நின்றிருந்தனர்.

கிறிஸ்டோபர் என்னருகே வந்தான் “செரியான அலையாக்கும். படகு சருகுமாதிரி கெடந்து சுத்திச்சுது…”

“உங்கிட்ட ஜிபிஎஸ் இருக்குல்லா… குடு” என்றேன்

“ஜிபிஎஸ் தண்ணியிலே போயிட்டுது. செல்போன் வாட்சு எல்லாமே போச்சு…”என்று அவன் சொன்னான்

“இவனுக போன தடத்தை அறிய ஏதாவது வழி உண்டாடே?”என்று நான் ஆன்றப்பனிடம் கேட்டேன்

“இவனுக ஏதாவது எக்விப்மெண்ட்டு வச்சிருக்கணும்” என்று ஆன்றப்பன் சொன்னான் “மத்தபடி ஒண்ணும் செய்யமுடியாது”

“உடனே போயி ஒரு ரவுண்டு தேடணும்லா?”என்றேன்

“நாலு போட்டு போயிருக்கு… இப்ப காத்து இல்லை” என்றான் ஆன்றப்பன்.

“எங்கியாம் உயிரோட இருக்க வாய்ப்புண்டாடே?”என்று நான் கேட்டேன்

“உள்ளதைச் சொன்னா நூறுசதவீதம் வாய்ப்பில்லை. கடல் அப்டி பயங்கரமா அலையடிச்சுது.பாத்திரத்திலே இருக்குத தண்ணியை போட்டு குலுக்குத மாதிரியாக்கும் ஆண்டவரு கடலை போட்டு எளக்கினாரு.. விளுந்தவன் கடலுக்குள்ள பிறந்த முக்குவானானாலும் உள்ள போயிருப்பான்”

“அதெப்டி ஒரு காத்து சட்டுன்னு?”

“சிலசமயம் அப்டி வரும். கடலுக்குள்ள ஒரு எடத்திலே சூடு கூடிப்பொயி காத்து விரிவாகி மேலே போயிடும். மத்த எடத்து காத்து உடனே அங்க போகுது. அது ஒரு பெரிய காத்துசுழி மாதிரியாக்கும்…தண்ணியிலே ஒரு குடத்தவிட்டு கோரி எடுத்தா வருதுல்லா அந்தமாதிரி சுழி” என்றான் ஆன்றப்பன்

“நீ எங்கடே படிச்சே?”

“கடலுக்க போக்குகளை பத்தி ஒரு நல்ல புக்கு உண்டு” என்றான் ஆன்றப்பன். அவன் எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்தவன். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள். கிறிஸ்டோபர் கூட கம்யூட்டர் சயன்ஸ் படித்தவன்

“டேய் மத்த பய என்ன படிச்சிருக்கான்?” என்றேன்

“எம்சிஏ முடிச்சான்னு சொன்னான்” என்றான் கிறிஸ்டோபர். “பாவம் இந்நேரம் சுழிக்குள்ள போயிருப்பான்”

“இருந்தாலும் நாம போயி பாக்கணும்லா?” என்று நான் சொன்னேன்

“ஆமா, போட்டுகளை அனுப்பியாச்சு… கடலிலே மிதந்து கிடந்தா தெரிஞ்சிருக்கும். காத்து வடக்குகெளக்கா அடிச்சிருக்கு. அதனாலே அந்தாலே ஒரு நாப்பது கிலோமீட்டர் வரை போயிப் பாக்க சொல்லியிருக்கு” என்று ஆன்றப்பன் சொன்னான். “இனி கடலோரக் காவல்படைக்குச் சொல்லணும்… அவனுக ஹெலிகாப்டர் வழியாட்டு தேடிப்பாப்பானுக…அதுக்கு ஒரு இமெயில் அனுப்பணும். நாங்க நாலுபேரு ஒப்பு போடுதோம். உங்கபேரிலே அனுப்பலாம்”

ஆன்றப்பனுக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை. ஆனால் அவனே ஏதாவதுசெய்தால் அவன் ஆட்கள் அவன் மூப்பெடுக்கிறான் என்று நினைப்பார்கள். ஆகவே என்னை எப்போதுமே முன்னிறுத்துவது அவன் வழக்கம்

“போட்டுகள் வந்தபிறகு மெயிலை எழுதலாமா?”என்றேன்

“இல்லல்ல, எழுதிருவோம்… போட்டுகளிலே ஒண்ணும் சிக்காது”

நான் திரும்பி எலிசாம்மாளை பார்த்துவிட்டு “அந்த பொம்புளையை வீட்டுக்கு போகச்சொல்லு. அந்தப்பிள்ளைகளுக்கு சாப்பிட என்னமாம்  குடுங்க” என்றேன்

“போட்டுகள் திரும்பி வராம அவங்க போகமாட்டாங்க” என்றான் ஸ்டீஃபன்

ஸ்டீஃபனின் லேப்டாப் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆன்றப்பனே இமெயில் வாசகங்களை அழகான ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தான். என்னுடைய அதிகாரபூர்வ அடையாளத்துடன் கூடிய ஐடியில் இருந்து அதை அனுப்பினோம். அதன்பின் அரைமணிநேரம் கழித்து ஃபோனில் அழைக்கலாம் என்று கிறிஸ்டோபர் சொன்னான்

ஆனால் உடனே பதில் மின்னஞ்சல் வந்தது. ஆவன செய்யப்படும் என்று சப் லெஃப்டினென்டின் குறிப்பு.

“அவனுக ஓரளவு விழிப்பாத்தான் இருக்கானுக இப்ப” என்று ஆன்றப்பன் சொன்னான்

பத்து நிமிடங்களுக்குள் இன்னொரு மின்னஞ்சல் வந்தது கடலில் நின்றிருக்கும் ஐ.என்.எஸ் உதய் என்ற கப்பலில் இருந்து காப்டன் எழுதியிருந்தார். நாங்கள் குறிப்பிட்ட இடங்களை தேடத்தொடங்கிவிடுவோம் என்று

இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று தோன்றியது. அனைவரும் பெருமூச்சுடன் அமைதியடைந்தோம். நான் கடற்கரையில் ஒரு படகின்மேல் ஏறி அமர்ந்தேன். கடற்கரை முழுக்க மக்கள் ஆங்காங்கே சிறு கூட்டங்களாகச் சிதறி நின்றனர். காற்று நல்ல குளிராக இருந்தது. மஃப்ளரால் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டேன்

அருகில் இருந்த அற்புதமேரியின் வீட்டிலிருந்து கட்டன்டீ கொண்டுவந்து தந்தார்கள்.அந்த வேளைக்கு அது இதமாக இருந்தது. நெஞ்சுக்குள் இருந்த படபடப்பு ஓய்ந்தது. நான் பெருமூச்சுவிட்டேன்

கடலை பார்த்தபடி காத்திருந்தோம். கடல் அலைகள் எனக்கு எப்போதுமே ஆச்சரியமும் பயமும் அளிப்பவை. நான் அங்கே பணிக்கு வருவதற்கு முன் ஏழெட்டுதடவை கடலைப் பார்த்ததுடன் சரி. நிரந்தரமாக தங்கவேண்டும் என்று ஆகி அங்கே வந்தபோது கடலின் ஓயாத அலறல் மிகப்பெரிய தொந்தரவாக இருந்தது. ஏழெட்டுநாட்கள் தூக்கமே இல்லை.

அது எதையோ உறுமி அலறி ஆவேசமாக கரைமேல் அறைந்து தலைமுடி சுழற்றி துள்ளி சொல்லிக்கொண்டே இருக்க மனிதர்கள் எவரும் கேட்கவே இல்லை என்பதுபோல தோன்றியது. பின்புகூட தூக்கத்தில் எப்போது விழித்துக்கொண்டாலும் அந்த அலறலைத்தான் கேட்பேன். மிக அருகே ஒலிப்பதுபோலிருக்கும். தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்வதுபோலிருக்கும்.

சற்றுநேரத்திலேயே படகுகள் திரும்பி வந்துவிட்டன. எதிர்பார்த்த செய்திதான், கடலில் எவரும் இல்லை.

எலிசாம்மா கதறி அழுது நெஞ்சில் அறைந்து அறைந்து மயக்கமாகிவிட்டாள். அவளை தூக்கிக்கொண்டுசென்றார்கள்.

“கொஞ்சம் ரம்ம ஊட்டி விட்டிருங்க” என்று ஆன்றப்பன் சொன்னான். “இனி ஒரு நாலஞ்சுமாசம் அவளுக்கு நரகமாக்கும்… வாழ்க்கை முழுக்க நல்ல உறக்கம் இல்லை”

“என்னத்தை பொளைப்பு” என்று ஒருவன் சொன்னான்

வயசான மீனவர் ஒருவர் “ஏலே என்னலே பேசுதே? பொளைப்புக்கு என்ன கேடு? உனக்க அப்பனும் பாட்டனும் சோறுதின்னது இந்தக் கடலை வச்சுத்தான்லே” என்று கத்தினார்

“சரி சரி, பேச்சு வேண்டாம்” என்று நான் சொன்னேன். என்ன இருந்தாலும் கடலைப்பற்றி ஒன்றும் சொல்ல விடமாட்டார்கள்.

கடற்படையிலிருந்து இமெயில் வந்தது, அந்த எல்லைக்குள் எங்கும் கடலில் எவரும் இல்லை என்பதை வருத்தத்துடன் அறிவித்தார்கள்

ஆன்றப்பன் “செரி,எல்லாரும் கெளம்புங்க…” என்றான்.

நான் களைப்புடன் கிளம்பும்போது கோயில்குட்டி தனிஸ்லாஸ் என்னிடம் “துக்கமணி அடிக்கணும்லா?” என்றான்

“செரி”என்று நான் சொன்னேன்

மிகக்கூட்டமான நெரிசலான இடங்களில் மக்கள் ஒற்றைத் திரளாக ஆகிவிடுகிறார்கள். மணல் போல, தண்ணீர் போல ஒரு பரப்பாக மாறிவிடுகிறார்கள்.எவருக்கும் தனிக்குணமோ தனிச்செயல்பாடோ கிடையாது. தண்ணீரும் மணலும் தன்னைத்தானே சரிசெய்துகொள்பவை.அதேபோலத்தான் கடற்கரை என்று வந்ததுமே கண்டிருக்கிறேன்.

மறுநாளே இயல்புநிலை மீண்டுவிட்டது. ஒரு போலீஸ் கேஸ் பதிவுசெய்யப்பட்டது. எலிசாம்மாவுக்கு ஊர்கணக்கில் ஒர் உதவித்தொகை அளிக்கப்பட்டது. அனைவருக்கும் தொழில் இருந்தது. அதைச் செய்தேயாகவேண்டும் என்னும் கட்டாயம் இருந்தது. அவ்வளவுதான்.

ஆனால் பத்து நாட்கள் கழித்து ஆன்றப்பன் என்னை வந்து பார்த்தான். அவனுடன் கிறிஸ்டோபரும் பிதலீஸும் வந்தனர். நான் என் அறையில் வாசித்துக்கொண்டிருந்தேன் “என்ன?”என்று கேட்டபடி எழுந்து வந்தேன்.

“மத்தபய உயிரோடு இருக்கானாம்… அவனுக்க அடையாளம் இப்பதான் தெரிஞ்சிருக்கு” என்றான் ஆன்றப்பன்

“யாரு?” என்றேன். முதலில் எனக்கு என்னவென்றே புரியவில்லை.

“அந்தோணி, அவன் இங்க கொல்லங்கோட்டிலே இருக்கான். அங்கேருந்து மீன்பிடிக்கப்போறவங்க கண்டு மீட்டு வந்திருக்காங்க. பயலுக்கு என்ன ஏதுன்னு ஒண்ணும் சொல்லத் தெரியாததனாலே அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை. வாட்ஸப்பிலே பரப்பி விட்டிருக்கானுக. நேத்து ராத்திரிதான் பாத்தேன்…நம்மாளுதான்”

“உடனே கூட்டிட்டு வாங்க… ஊரிலே நாலஞ்சாளை கூட்டிக்கிடுங்க” என்றேன்.

ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கடற்கரையில் இந்தவகையான அற்புதங்களுக்கு எப்போதுமே இடமுண்டு

சாயங்காலம் ஊரே திரண்டு சாவடிக்கு முன்னால் காத்து நின்றது. ஆன்றப்பன் ஜீப்பில் போயிருந்தான். ஜீப் தொலைவில் வந்தபோது ஆரவாரம் எழுந்தது. ஏராளமானவர்கள் ஜீப்பை நோக்கி ஓடினார்கள்.

உள்ளிருந்து ஆன்றப்பன் இறங்கினான். செபஸ்தியும் பிதலீசும் இறங்கியபின் அந்தோணி இறங்கினான். கண்கள் கூசுவதுபோல முழங்கையால் முகத்தை மறைத்துக்கொண்டான். கேரளபாணியில் வேட்டி அணிந்திருந்தான். அவனேதான்

மொத்தக்கூட்டமும் அவனை மொய்த்துக்கொண்டது. பலர் “லே மக்கா.. லே” என்று கூவினார்கள்

எடத்துவாக்காரி “லே மக்கா நீ ஆண்டவரை பாத்தியாலே?”என்றாள்

எலிசாம்மா ஓடிவந்து அப்படியே அவன்மேல் பாய்ந்ததில் அவன் மல்லாந்து விழுந்தான். அவள் அவனை ஓங்கி ஓங்கி அறைந்தாள். கூச்சலிட்டு அழுதாள். அவன் தம்பி தங்கைகளும் அவன்மேல் சேர்ந்து விழுந்தார்கள்

ஆன்றப்பன் “தள்ளுங்க… அவனுக்கு நல்ல சுகமில்லை. பெரிசா ஞாபகமில்லை. இப்ப அவன் வீட்டுக்குப்போயி ரெஸ்டு எடுக்கட்டு” என்றான்

அவர்கள் அவனை தூக்கியே கொண்டுசென்றார்கள். அவன் ஒருமாதிரி மலங்க மலங்க விழித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது

நான் சர்ச்சுக்கு செல்லும்போது ஆன்றப்பன் கூடவே வந்தான். “போலீஸுக்கும் கடலோரக் காவல்படைக்கும் விசயத்தை சொல்லணும்” என்றேன்

“ஆமா” என்று ஆன்றப்பன் சொன்னான் “மத்த பயலைப் பத்தி விசாரிக்கணும். பன்னா சிங்கு. அவன் ஆளுக அவன் செத்துட்டான்னு அவனுக்க வீட்டிலே சொல்லிட்டாங்க. ராயப்பன் அவன் தம்பிக்கு அம்பதாயிரம் ரூபா பணமும் குடுத்திருக்காரு. ஆனா நாம விசாரிக்கணும்ல? இவன் எப்டி தப்பினான்? அவன் என்ன ஆனான்?”

நான் “ஆமா, முதல்ல இவனை விசாரிப்போம். இவன் தெளிஞ்சு வரட்டும் என்றேன்”

“நான் இவன் கிட்ட ஒரு மாதிரி விசாரிச்சேன். கிறுக்குமாதிரி பேசுதான்” என்றான்

“என்ன?” என்றேன்

“போட்டிலே இருந்து விளுந்ததுமே அலை அவனை தூக்கிட்டு போயிருக்கு நெறைய தடவை தூக்கி தூக்கி வீசியிருக்கு. பிறகு அப்டியே தூக்கி ஒரு தீவுமேலே போட்டிருக்கு”

“தீவுமேலேயா? எங்க?”என்றேன்

“அலையிலேயே போயிருக்கான்னா இங்க பக்கத்திலேதானே?”என்றான் ஆன்றப்பன் “அந்த தீவிலே நிறைய கல்லுகெட்டிடமா இருந்திருக்கு. இந்து கோயிலுக மாதிரி.. அதிலே ஒரு கெட்டிடம் மேலே விளுந்திருக்கான். அங்கேருந்து சறுக்கி கீழே வந்திருக்கான். தரையெல்லாம் பாறை. அதிலே நிறைய வாசல்கள் இருந்திருக்கு. அவ்ளவுதான் ஞாபகம். அதைச் சுத்திச் சுத்திச் சொல்லுதான்”

“தீவா? இது என்னடே? அங்க யாருமே இல்லியா?”

“யாரையும் அவன் பாக்கல்லை”

“அங்க மரம் ஒண்ணுமில்லியா?”

“அவன் அந்தளவுக்கு தெளிவாட்டு சொல்லல்ல”

“என்னடே இது? என்ன தீவு அது?”

“இங்க கடல் எல்லைக்குள்ள அப்டி தீவு ஒண்ணுமில்லை..” என்றான் ஆன்றப்பன்.

“சின்ன லகூனா இருக்குமோ?”

“அப்டி ஒரு லகூன் இங்க உண்டு, ஆனால் அதிலே கோயில் ஒண்ணுமில்லை. நாலு தென்னைமரம் நிக்கும். நாலுசுத்தும் கடலாக்கும். வெறும் மணல்மேடு”

“அப்ப இவன் எங்க போனான்?”

“தெரியல்ல…ஆனா துண்டுதுண்டா இதையே சொல்லுதான்”

“சொப்பனம் கண்டிருப்பானோ?”

“இருக்கலாம்..”

“இவனை எப்டி காப்பாத்தினாங்களாம்?”

“அங்க ஒரு பெரிய கடல்பாறைமேலே நின்னு கையை வீசி சத்தம்போட்டிருக்கான். மீன்பிடிக்க போனவங்க பாத்திருக்காங்க.”

“இது எப்ப?”

“நாலுநாளு ஆகுது… வெள்ளிக்கிழமை. அதாவது இங்க கடலிலே போயி ஏழுநாள் கழிச்சு”

“என்னடே இது…”என்றேன்

“இந்த ஏரியாவிலே வேற தீவே இல்லை. ஒரு சான்ஸ்தான் இருக்கு. இவனை அலைகொண்டுபோயி அந்த பாறைமேலே போட்டிருக்கு. அந்த பயத்திலே அவன் அதை தீவாட்டும் கோயிலாட்டும் நினைச்சிருக்கான். இல்லேன்னா பட்டினியா அங்க கிடக்கிறப்ப சொப்பனம் கண்டிருக்கான், அது அடிக்கடி நடக்கும். பட்டினியும் தாகமுமா மண்டை மயங்கினா பயங்கரமான சொப்பனம்லாம் வரும். ஒருத்தன் சுறாமீனுக்கு உள்ள போயி ஒருவாரம் அங்க தூங்கிட்டிருந்தேன்னு சொல்லியிருக்கான். பலபேரு மாதாவையும் ஏசுவையும் பாத்திருக்காங்க” என்றான் ஆன்றப்பன் . பிறகு “இல்லேன்னா…”என்றான்

“என்னடே சொல்லுதே?”என்றேன்

“இல்லேன்னா அந்த காத்துலே கடல்விலகி அடியிலே இருந்து ரொம்ப காலம் முன்னாலே மூழ்கிப்போன ஒரு தீவு வெளியே வந்திருக்கலாம்”

“மூழ்கிப்போன தீவா? உளறாதே”

“இல்ல, பாட்டன்மாரு சொன்ன கதையிலே அப்டி சிலது உண்டு.  அதுக்க பேரு மணிபல்லவம்னாக்கும்”

“என்னது?”என்றேன்

“மணிபல்லவம்… அப்டி ஒரு தீவு உண்டுன்னு சின்னவயசிலே கதை கேட்டிருக்கேன்”

“ஏய், எவனோ தமிழ் வாத்தியாரு கிளப்பிவிட்ட கதை மாதிரி இருக்கு” என்றேன்

“அப்டி இல்லை.இந்த கடலுக்குள்ளே போறதுக்குன்னு சில வழிகள் உண்டு. அதை மாத்தக்கூடாது. ஹைவே மாதிரி. வழிமாறினா கடலுக்கு அடியிலே இருக்கிற பாறைகளிலே அடிமுட்டிரும். பல இடங்களிலே இடுப்பளவு ஆழத்திலே இறங்கி நிக்கலாம்னு சொல்லுவாங்க”

“அங்க கட்டிடங்கள் உண்டுன்னு சொல்லியிருக்காங்களா?”என்றேன்

“ஆமா” என்றான் ஆன்றப்பன் “சிலசமயம் கடலு அமைதியா பளிங்குமாதிரி ஆயிடும்…மிதமான மழைவெளிச்சம் இருக்கணும். இல்லேன்னா நல்ல நிலாவெளிச்சம். அப்ப அங்க போயி அடியிலே பாத்தா கெட்டிடங்களும் கோட்டைகளுமெல்லாம் இருக்குறத பாக்கலாம்னு சொல்லுவாங்க. அங்க கடல்பாசி கூடுதல். அதனாலே அங்கே யாரும் வலைபோடப் போறதில்லை.. பழைய காலத்திலே கட்டுமரத்திலே போறப்ப நீரோட்டம் வழியா அங்கபோன சிலர் பாத்திருக்காங்க”

ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஆன்றப்பன் அவனே சொன்னான். “இந்தக்கதையை அந்தப்பயலும் கேட்டிருக்கலாம். அவனுக்க பசிமயக்கத்திலே சொப்பனம் கண்டிருக்கலாம்”

நான் உடனே கூகிள் செய்து பார்த்தேன். “டேய் மணிபல்லவம்னா என்னான்னு போட்டிருக்கான் தெரியுமா? மணிமேகலையிலே அப்டி ஒரு தீவைப் பற்றி சொல்லியிருக்கு. மணிமேகலை எட்டாம் காதையிலே பூம்புகாருக்கு நாநூறு யோசனை தூரத்திலே நாகநாடுன்னு ஒண்ணு இருந்திருக்கு. அந்த நாகநாட்டிலே மணிபல்லவம்னு ஒரு தீவு. அதிலே மணிமேகலா தெய்வம்னு ஒரு பெண் தெய்வம்தான் ஆட்சி செய்திருக்கு. அந்த தெய்வம் மணிமேகலையை தூக்கிட்டு மணிபல்லவத்தீவுக்கு கொண்டு போயிருக்கு. அங்கதான் மணிமேகலைக்கு குறையாம சோறு வந்திட்டே இருக்கிற அமுதசுரபி கிடைச்சிருக்கு”

“ஓ”என்றான் ஆன்றப்பன் “அப்ப அப்டி ஒரு எடம் இருந்திருக்கு”

“அது சும்மா கற்பனை. உலகம் முழுக்க இந்தமாதிரி கதைகள் உண்டு. மாலுமிக்கதைகள்னு சொல்லுவாங்க. கடலோடிகள் சொல்லுற செவிச்செய்திகளை வச்சு இஷ்டம்போல வளர்த்துக்கறது. மணிபல்லவத் தீவு நாகநாடு பத்தில்லாம் எந்த ஜியாலஜிக்கல் எவிடென்சும் இல்லை”

“ஆனா அப்டி ஒரு கதை இருந்திருக்குல்ல?” என்று ஆன்றப்பன் சொன்னான். “அந்தக்கதைக்கான ஒரு சோர்ஸ் இருந்திருக்குல்ல?”

“என்ன சொல்றே?”

“பல்லவம்னா தளிர். மணின்னா முத்து. மணிபல்லவம்னா முத்து முளைச்சு வர்ர எடம்னு அர்த்தம். அப்டி ஒரு எடம் இருந்திருக்கு. கடலுக்குள்ள போயிருக்கு. பிறகு ரொம்பநாள் ஞாபகங்களிலே இருந்திருக்கு. அதைப்பத்தி பேசியிருக்காங்க. கனவு கண்டிருக்காங்க. மணிமேகலையே ரொம்பநாள் கழிச்சு அந்தக்கதையை வச்சு எழுதப்பட்டிருக்கலாம்”

“சரி விடு” என்றேன். “டீ சாப்பிடுறியா?”

“போடுங்க”

நான் டீ போட்டேன். நாங்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பொதுவாக எதையெதையோ பேசிக்கொண்டும் அவ்வப்போது அகத்தில்நுழைந்து யோசித்துக்கொண்டும் இருந்தோம்.

ஆன்றப்பன் சொன்னான். “நானும் முடிஞ்சவரை ரேஷனலா யோசிக்கத்தான் முயற்சிபண்றேன் ஃபாதர் ஆனால் நிக்க மாட்டேங்குது. ஒருமாதிரி அலைபாய்ஞ்சுக்கிட்டே இருக்கு”

“பாப்பம், பய தெளிஞ்சு வருவான்லா?”என்று நான் சொன்னேன். “ஒரு நல்ல கதை கிடைச்சாக்கூட நல்லதுதானே?

ஆன்றப்பன் சிரித்துவிட்டான். எழுந்துகொண்டு “வாறேன். இந்த போட்ட எந்த நேரத்திலே வாங்கி விட்டேன்னு தெரியல்லை…ஈஎம்ஐ கட்டுறதை மட்டும்தான் நினைக்கமுடியுது… வேற சிந்தனையே மனசிலே இல்லை” என்றான்

எலிசாம்மாள் சர்ச்சுக்கு வந்து ஜெபம் செய்துவிட்டு போனாள். மகன் எப்படி இருக்கிறான் என்று கேட்டேன். நான் அவனிடம் பேசவேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். அவன் வீட்டுக்கு வந்ததுமே மனம்தேற ஆரம்பித்துவிட்டான், நன்றாகப் பேசுகிறான் என்றாள்

ஜெபம் செய்வதற்காக நானே அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். சுனாமியின்போது கட்டி அளிக்கப்பட்ட இரண்டு அறைவீடு கொஞ்சம் தள்ளி தோப்பருகே இருந்தது. அதன் இருபக்கமும் அஸ்பெஸ்டாஸ் போட்டு இழுத்து சமையலறையும் ஒரு முன்வராந்தாவும் கட்டியிருந்தனர். மொத்தக்குடும்பமும் என்னை வரவேற்றது

அந்தோணி என்னை கண்டதும் மெல்ல புன்னகைத்தது எனக்கு நம்பிக்கை அளித்தது. நான் அவனிடம் “ஜெபம் செய்யலாமா?”என்றேன். தலையசைத்தான்

ஜெபம் முடிந்ததும் எலிசாம்மா டீ கொண்டுவந்து தந்தாள். பக்கத்து கடையில் வாங்கிய டீ. அதைக் குடித்ததும் நான் அந்தோணியிடம் “நான் சிலது கேக்கணும். பேசலாமா?”என்றேன்

அவன் கண்கள் மாறின.  தலையசைத்தான்

“தெளிவா எல்லாத்தையும் கேட்டுக்கிடவேண்டியது என் பொறுப்பு. நாளைக்கே ஏதாவது விசாரணை வரலாம். ஏன்னா உங்கூட இன்னொரு ஆளு காணாம ஆகியிருக்கான். நீ வந்த தகவலை தெரிவிச்சாச்சு”

அவன் மீண்டும் தலையசைத்தான்.

“சொல்லு, என்ன நடந்தது? அப்ப வந்த அலை ரொம்ப பயங்கரமா இருந்ததுன்னு சொன்னாங்க. நீ அதிலே எப்டி விழுந்தே? என்ன ஆனே? பன்னா சிங் என்ன ஆனான்?”

“நான் சொன்னதை ஆன்றப்பன் நம்பல்லை. வேற யாருமே நம்பல்லை. ஆனா அதாக்கும் சத்தியம்”
“அப்ப நீ கொஞ்சம் மனசுகுழம்பி இருந்தே. இப்ப நல்லா இருக்கே இல்ல? மைண்ட் அமைதியா இருக்கு இல்ல? எது சொப்பனம் எது உண்மைன்னு உனக்கு நல்லா தெரியும் இல்ல?”

“ஆமா தெரியும்”  என்றான் “நான் பலமுறை அதை நினைச்சுப்பாத்து தெளிவா வச்சிருக்கேன்”

“சொல்லு”என்றேன்

அந்தோணி சொன்னான். “கயித்தைப் பிடிச்சு நானும் பன்னா சிங்குமா இழுத்தோம். அப்ப படகு அப்டியே எங்களை தூக்கி அந்தாலே எறிஞ்சிட்டுது. நான் ஒரு அலைமேலே போயி விழுந்தேன். அலைன்னா ஒரு பனை உயரத்திலே வளைஞ்சு நீலநிறமா மலைமாதிரி தெரிஞ்சுது. அப்டியே என்னை தூக்கித் தூக்கி எறிஞ்சுது. பத்துப்பதினைஞ்சு தடவை. நான் மேலே போயிட்டு கீழே வந்தேன். மேலே போறப்ப ரொம்பதூரத்துக்கு கடல் அலைகளை பாத்தேன்”

“அலைவழியா போய்ட்டே இருந்தேன். பறந்து போற மாதிரி இருந்தது. வளைஞ்சு சுத்திட்டே இருக்கிற மாதிரியும் இருந்தது. சட்டுன்னு என் உடம்பு கல்லிலே அறைஞ்சுது. நான் அப்டியே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். அலை பின்வாங்கி ஒழுகிப்போச்சு. அப்டியே ஒட்டி உக்காந்திட்டிருந்தேன். தண்ணி என்னைச்சுத்தி கொந்தளிச்சிட்டே இருந்தது. அப்றம் அருவி மாதிரி ஓடி வழிஞ்சு போச்சு.அப்றம்தான் நான் கண்ணையே திறந்தேன்”

“பாத்தா நான் ஒரு கோபுரத்துக்குமேலே உக்காந்திட்டிருந்தேன். இந்துகோயில் மாதிரி. ஆனா இப்ப உள்ள கோயில்கோபுரம் மாதிரி இல்லை. ஒருமாதிரி பிரமிடு. சிற்பம்லாம் ஒண்ணுமில்லை. ஆனால் அடுக்கடுக்கா இருந்தது. படிமாதிரி கீழே இறங்கிடலாம்” என்றான் அந்தோணி.

“பாசியும் பவளமும் எல்லாம் படிஞ்சு இருந்திருக்கும் இல்லியா?” என்றேன்

“இல்லை நனைஞ்சு கறுப்பா இருந்தது. ஆனா பாசியோ பவளமோ சிப்பியோ ஒண்ணுமே இல்லை. அப்டியே கழுவி வச்சமாதிரித்தான் இருந்தது”

“அதெப்படி?” என்றேன். “ஒரு பாறை மூழ்கியிருந்தாலே அதிலே பவளமும் சிப்பியும் வந்து ஒட்டிக்கிடும். பாசி கண்டிப்பா இருக்கும்”

“தெரியல்லை. அந்த எடம் அப்டி இருந்தது”

“சரி சொல்லு”

“அங்கே யாருமே இல்லை. நம்ம ஊரைவிட பெரிசு அந்த எடம். நூறு இருநூறு கெட்டிடம் இருக்கும். எதுக்குமே கதவு இல்லை. எல்லா வாசலும் திறந்திருந்தது. நான் ஒரு கோபுரத்துக்குள்ள போய் பாத்தேன். உள்ள எதுவுமே இல்லை. காலியா கெடந்தது. ஈரமான பாறைதான் தரை, சுவரு எல்லாமே. தூணிலே எல்லாம் நெறைய சிலைகள். ஆனால் எல்லாமே உருகி கரைஞ்சு ஒருமாதிரி துணிபோட்டு மூடினமாதிரித்தான் தெரிஞ்சுது”

“முகங்கள்லாம் மழுங்கியிருந்தாலும் எல்லாத்திலயும் என்னென்ன உணர்ச்சிகள் இருக்குங்கிறது அப்டி தெளிவா தெரிஞ்சுது. ஆச்சரியம் மாதிரி சிரிப்பு மாதிரி நம்மளை கூப்பிடுற மாதிரி,எதையும் பாக்காம பிரேயர் பண்ணுதமாதிரி. அந்த மாதிரி உணர்ச்சிகள் தெரியுறப்ப அதெல்லாமே உசிரோட இருக்கிற மாதிரி தோணிடுது. அதாவது நாம பாக்கிறப்ப சிலையா நின்னுட்டிருக்கு. நாம பாக்காதப்ப உசிரு வந்து நம்மளை பாக்குது”

“சட்டுன்னு திரும்பினா அதுகளோட கண்ணைப் பாத்திடலாம்னு தோணிச்சு. பலமுறை திரும்பிப் பார்த்தேன். ஆனா நம்ம நினைப்பே அதுகளுக்கு தெரியும். எப்ப கல்லாகணும் எப்ப திரும்ப உசிராகணும்னு தெரிஞ்சிருக்கு…” என்று அந்தோணி சொன்னான். “கிறுக்கனை மாதிரி அங்கிணயே சுத்திட்டு கெடந்தேன். யப்பா என்னென்ன சிலைகள். பிடரி முடி சுருள் சுருளாட்டு கிடக்குத சிங்கம். தும்பிக்கை கோத்து கொம்பு முட்டி நின்னுட்டிருக்க யானை. வரிசையா மான்கூட்டம். மயில்கள், அன்னப்பறவைகள்…”

“ஃபாதர் அங்கே மயிலும் அன்னமும்தான் கூடுதல். அந்த ரெண்டு பறவையையும் செதுக்கிச் செதுக்கி அப்டியே ஒருமாதிரி அலங்காரக்கோலமா மாத்திட்டாங்க. அதேமாதிரி பூவுகள். என்னென்னமோ பூவையெல்லாம் செதுக்கி வச்சிருந்தான். நந்தியாவட்டை மாதிரியான பூதான் நெறைய. ஆனா தாமரை மட்டும் பல டிசைன். தூணுக்கு அடியிலே தாமரை மலந்து நின்னிட்டிருக்கும். மேலே தாமரை கவுந்து நிக்கும். மண்டபத்துக்க நடுவிலே கல்லை அடுக்கி பெரிய தாமரை மாதிரி கவுத்திருக்காங்க. கல்லு அப்டியே பூவா மலர்ந்திருக்கு”

“அங்க தெய்வம்னு ஏதாவது இருந்ததா” என்று நான் கேட்டேன்

“தெய்வம்னா…” என்று இழுத்தான். “நான் அப்டி தெளிவா தேடல்லை. சும்மா அங்க சுத்திச்சுத்தி அலைஞ்சேன். அங்க அப்டி ஒண்ணும் பாக்கல்லை” என்றான்.  பிறகு “அங்க ஒரு மண்டபம் இருந்தது… எட்டுகால் மண்டபம். எண்கோணவடிவத்திலே. அதுக்கு நட்டநடுவிலே ஒரு பாறை. அதிலே ஒரு காலடித்தடம் இருந்தது”

“காலடித்தடம்னா?”என்றேன்

“ஒத்தைக்காலடி”

“கன்யாகுமரி பாறையிலே இருக்கே அதை மாதிரியா?” என்றேன்

“ஆமா”

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவன் பொய்சொல்லவில்லை. அவ்வளவு விரிவாக கற்பனையோ கனவோ இருப்பதில்லை.அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பிறகு மீண்டுவந்து “அங்க என்ன சாப்பிட்டே?”என்றேன்

“பாறையிடுக்கிலே மீன் மாட்டிக்கிட்டிருந்த்து. அதை பிடிச்சு தின்னேன். ஒரு மழை பெய்ஞ்சுது, தண்ணியும் கிட்டிச்சு” என்றான்.  “ரெண்டுநாள் அங்கதான் இருந்தேன். ரெண்டு நிமிசம் ஒரு சொப்பனம் கண்டது மாதிரி இருக்கு”

“அங்கேருந்து எப்டி வெளியே வந்தே?”என்றேன்

“மூணாம்நாள் அங்க தண்ணி மேலே வரத் தொடங்கிட்டுது. தண்ணி மேலேறி வாரதை பாத்தேன். என்ன செய்றதுன்னு தெரியல்லை. மேலே மேலேயா ஏறி நின்னேன். இருக்கிறதிலேயே பெரிய கோபுரத்துக்க உச்சியிலே நின்னப்ப ஒருவிஷயம் தெரிஞ்சுது. அந்த மொத்த ஏரியாவும் ஒத்தை ஒரு பாறை. ஒருபெரிய பாறையை குடைஞ்சுதான் அந்த கோபுரங்கள் கோயில்கள் எல்லாத்தையுமே செஞ்சிருக்காங்க. மகாபலிபுரம் இருக்குல்லா, அதை மாதிரி”

தண்ணி மேலே வந்தப்ப நான் அதிலே மிதந்தேன். தண்ணி என்னை தூக்கிட்டு போச்சு. மிதந்து கிடந்திட்டே இருந்தேன். தண்ணி ரொம்பதூரம் கொண்டுபோச்சு. கடைசியிலே அந்த வேகம் நின்னப்ப ஒரு பாறையை பாத்தேன். நீந்தி அதுமேலே ஏறிக்கிட்டேன் .அங்க மூணுநாள் உக்காந்திருந்தேன். சாப்பாடு இல்லை, தண்ணியில்லை. செத்தேன்னு நினைச்சேன். அப்பதான் பாறையிலே சிப்பி பிடிக்க வந்தவங்களுக்க வள்ளத்தைப் பாத்தேன். எந்திரிச்சு நின்னு கையை ஆட்டினேன். குரல் வரல்லை, தொண்டை அடைச்சிருந்தது”

“நீ சட்டையை களட்டி வீசியிருக்கலாமே?”

“ஃபாதர் என் உடம்பிலே துணியே இல்லை. அலையிலே போயி அந்த கோயிலிலே விளுந்தப்ப என் உடம்பிலே இருந்து துணியெல்லாம் களண்டுபோச்சு. ஜட்டிகூட இல்லை”

“பெரிய அலையிலே அப்டி ஆகும்… சுனாமியிலே பலபேரு துணியில்லாமல் ஆனாங்க. ஆனா ஜட்டி எப்டி களண்டு போகும்?”

“அங்க பாறையிலே உருண்டப்ப போயிருக்குமோ?”

எலிசாம்மா வந்து “இனிமே கடலுக்கு போகவேண்டாம்னு சொல்லியாச்சு. இங்க கடையிலே வேலைக்குப்போனாலும் சோத்துக்கு பைசா கிடைக்கும்… அது போரும்” என்றேன்

“ஆமா, அது நல்லதுதான்” என்றேன். எழுந்துகொண்டு “சரி, இப்ப நீ இதைப்பத்தி வேற யாரிட்டயும் சொல்லவேண்டாம். மனசுக்குள்ள இருக்கட்டும்” என்றேன். “அப்டி ஒரு எடம் கடலுக்குள்ள இருக்கலாம். அந்த பெரிய அலையிலே வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கிடுதது நம்ம வேலை இல்லை. நமக்கு பொளைப்பு இருக்கு”

“ஆமா”என்று அவன் சொன்னான்

“அப்டியே கொஞ்சம் கொஞ்சமா மறந்தாத்தான் உனக்கு நல்லது. அம்மை சொல்லுறது மாதிரி கொஞ்சநாள் கடைவேலைக்கு போ”என்றேன்

நான் அந்த இடத்தை கூகிள் வரைபடத்தைக்கொண்டும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற ஆய்வுநிறுவனங்களின் தகவல்களைக் கொண்டும் அடையாளப்படுத்த முயன்றேன்.ஆன்றப்பன் எனக்கு உதவிசெய்தான். நாங்கள் நினைத்ததை விட பிரமிப்பூட்டும்படியான துல்லியத்துடன் இருந்தது கூகிள் எர்த் நிலப்படம்.

கடலின் ஆழத்தைக் காட்டும் கூகிள் செயற்கைக்கோள் படத்தில் இந்தியாவின் மேற்கு கடலை ஒட்டி ஆழம் குறைவான பகுதி நீண்டு கடலுக்குள் இருப்பதை காணலாம். இந்திய தீபகர்ப்பம் ஐம்பதிலிருந்து நூறு கிலோமீட்டர் வரை குறுகி உள்ளே வந்திருக்கிறது. இந்த நீரில் மூழ்கிய பகுதிகளில் ஏராளமான கடல்பாறைகள் உள்ளன. பல பாறைகள் கடலுக்குமேல் எழுந்து நின்றிருக்கின்றன. மீனவர்கள் ஓய்வெடுக்கும் பகுதிகளாகவும் கடற்பறவைகள் குஞ்சுபொரிக்கும் இடமாகவும் இருந்தன

முட்டத்திற்கும் குளச்சலுக்கு நடுவே கரையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் அப்பால் எங்கோ என்று அந்த இடத்தை வரையறை செய்தோம். நானும் ஆன்றப்பன்னும் அவனுடைய படகிலேயே கடலுக்குள் போய் அங்கிருந்த பாறைகளை ஆராய்ந்தோம். எதிர்பார்த்ததுபோலவே அப்படி எந்த தடையமும் கிடைக்கவில்லை. அப்படி ஓர் இடமிருந்தால் அது கடலுக்கு அடியில் இருபதடி ஆழத்துக்கும் கீழே, வெளிச்சம் சென்றுசேராத இருட்டில், இருக்கவேண்டும்.

ஆன்றப்பன் எளிதாகச் சோர்வடைந்தான். “ஏதோ ஒண்ணு வந்திட்டு போய்ட்டுது, அப்டி நிப்பாட்டிக்க வேண்டியதுதான். இனி தேடணுமானா நம்ம கிட்ட டைவர்வேணும். அதுக்குண்டான ரப்பர் போட்டுகள் வேணும்…” என்றான்

“ஆனா அப்டி ஒரு எடமிருக்குறதை கண்டுபிடிச்சுட்டோம்னா அது ஒரு நியூசாக்கும்…ஆறுமாசத்திலே உலகமே இங்க வர ஆரம்பிச்சிரும்” என்று நான் சொன்னேன். “இப்ப நான் நிறைய வாசிச்சாச்சு. சிலப்பதிகாரத்திலே ஒரு விஷயம் வருது. ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க, அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வான் பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள அப்டீன்னு”

“அப்டீன்னா என்ன?”என்றான் ஆன்றப்பன்.

“அதுக்கு என்ன அர்த்தம்னு யாருக்கும் தெரியாது. எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு புராணமாக இருந்திருக்கணும். இப்ப அது என்னன்னு தெரியாம ஆளாளுக்கு ஏதாவது சொல்லிட்டிருக்காங்க. ஊழிதோறும் உலகத்தைக் காக்க அடியில் தன் அளவென்ன என்று அரசருக்கு புரியவைக்கிறதுக்காக பாண்டியன் தன் வேலை எறிஞ்சான். அதனாலே வானத்து தேவர்களுக்கு கோவம் வந்து அவன் நாட்டிலே கடற்கோள் வந்தது. பஃறுளிங்கிற ஆறும் பலசிகரங்கள் அடுக்கடுக்கா இருந்த குமரிமலையும் கடலுக்குள்ளே போச்சு. அதனாலே அவன் வடக்கா போயி மதுரையை உண்டுபண்ணினான். இதான் நேரடி அர்த்தம்…” என்றேன்

“அடியில் தன் அளவு அரசருக்கு உணர்த்தினதுன்னா என்ன? அதனாலே ஏன் தெய்வங்கள் கோவிச்சுக்கிடணும்? பாண்டியன் இந்திரனுக்கோ வருணனுக்கோ சவால்விட்டான்னு எடுத்துக்கிடலாம். ஏன்னா அவங்க ரெண்டுபேரையும்தான் வெறுமே அரசன்னு சொல்ற வழக்கம் இருக்கு. அடியில் உள்ள அரசன்னு சொல்றப்ப அது வருணன்தான். ராஜாக்கள் வருணனுக்கு சவால்விட்டு ஆயுதத்தாலே தாக்கி சண்டைபோடுற கதை ஒரு டெம்ப்ளேட் மாதிரி இந்து புராணங்களிலே இருக்கு” என்று தொடர்ந்தேன்

“உண்மையிலே அதுக்கு என்ன அர்த்தம்? கடலை நிரப்பி நகரங்களை அமைக்கிறதைத்தான் வருணனோட சண்டைபோடுறதுன்னு சொல்லியிருக்காங்க. அது வருணனுக்கு பிடிக்கிறதில்லை. அவன் பொங்கி வந்து அழிச்சிடறான். வடக்கே கிருஷ்ணனோட துவாரகையைப்பற்றியும் இதே கதை இருக்கு… பழைய பாண்டியர்களோட நகரங்களான தொல்மதுரை கபாடபுரம்லாம் கடலுக்குள்ளேயே கட்டினதா இருக்ணும். அதுதான் வருணனுக்கான சவால்….”

“இந்த கடலுக்குள்ளே இப்ப மூழ்கியிருக்கிற நிலத்திலே ஏழ்தெங்கநாடு ஏழ்பனைநாடுன்னு பல நாட்கள் இருந்திருக்கிறதா பானம்பாரனார் உரையிலே வருது. அந்த நிலத்தோட பெரிய நகரத்தைதிலே ஒரு ஏரியாவைத்தான் அந்தோணி பாத்திருக்கான்” என்று நான் சொன்னேன். “இப்ப பறளி ஆறுன்னு சொல்லுத ஆறுதான் பஃறுளிளின்னு சொல்லுறாங்க”

“இப்டியே கற்பனை செஞ்சுகிட்டே போகலாம்… எவிடென்ஸ் வேணும்ல?” என்றான் ஆன்றப்பன்.

“இலக்கியத்தை பாத்தா என்னெனமோ இருக்கு” என்றேன். “மணிபல்லவம்ங்கிற எடம் ஒரு பெரிய கனவா இருந்திருக்கு. அங்க போறதுக்கு எல்லாருக்குமே பெரிய தவிப்பு இருந்திருக்கு.  ‘மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்’ ன்னு மணிமேகலை சொல்லுது. அங்க போயி சுத்திக்கும்பிடணும்னு தோணுற ஆசைய யாராலயும் தணிக்க முடியாதுன்னு பாட்டு சொல்லுது”

“அங்க எதுக்கு போறானுக?”

“அங்கே போனா ஒருத்தன் தன்னோட ஏழுபிறவிகளையும் பாத்திடலாம். வாழ்க்கைக்க அர்த்தம் முழுசா தெரிஞ்சிரும். அங்கபோய் பாத்துட்டு ஆபுத்திரன்  ’என்பிறப்பு அறிந்தேன், என் இடர் தீர்ந்தேன் அப்டீன்னு சொல்றான்’.அது கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் மூணுமா இல்லாம காலம் நிலையா இருக்கிற எடம்”

எழுந்துகொண்டு “வேணுமானா எங்கியாம் எளுதி விடுங்க” என்று தன் பையை எடுத்துக்கொண்டான்

“அதான் சொன்னியே, ஆதாரம் வேணும். ஆதாரமில்லாம அடிச்சுவிடுற ஆய்வாளர்கள் நெறைய இருக்காங்க… “ என்றேன்

“எல்லாம் கணக்குதான். இங்க வயித்துப்பாட்டு ஜனம் ரெண்டுபேரையுமே கவனிக்கிறதில்லை” என்று ஆன்றப்பன் கிளம்பிச்சென்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக நானும் எல்லாவற்றையும் மறந்துபோனபிறகு ஒருநாள் எலிசாம்மா என்னை தேடிவந்தாள். பதற்றமும் கண்ணீருமாக என்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னாள். என் அறைக்கு அழைத்துச் சென்றேன்

“ஃபாதர், அந்தோணிகிட்ட நீங்க பேசுங்க…எனக்க பயல காப்பாத்திக்குடுங்க” என்று அழத்தொடங்கினாள்

“என்ன அவனுக்கு? நல்லாத்தானே இருக்கான்? வேலைக்கு போறான் இல்ல?”

“வேலைக்கு போய்ட்டுதான் இருந்தான். இப்ப பத்துப் பதினைஞ்சுநாளா போறதில்லை” என்று அவள் சொன்னாள். “அவனுக்கு மனசு செரியில்லை ஃபாதர். அவனுக்கு என்னமோ ஆயிப்போச்சு. பேயிபிசாசுக்க பிடியிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. கடலுக்கு போனப்ப அவனை என்னமோ ஏறி பிடிச்சுப்போட்டுது”

“சமாதானமா சொல்லுங்க, என்ன ஆச்சு?”என்றேன்

எலிசாம்மா சொன்னது இதுதான். திரும்பிவந்த பிறகு அந்தோணி மெல்ல மெல்ல மீண்டுவந்தாலும் சோர்வாகவே இருந்திருக்கிறான். அடிக்கடி தனிமையில் இருந்தான். எவரிடமும் அதிகம் பேசுவதில்லை. கடையில் வேலைக்கு போனான். அங்கும் எவரிடமும் எந்த தொடர்பும் இல்லை. அவன் தனியாக அமர்ந்து தனக்குத்தானே தலையாட்டி பேசிச் சிரிப்பதை 6 பலமுறை பார்த்தாள். அவன் அடிக்கடி கடற்கரையில் போய் நின்றுகடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். அலைகளுடன் பேசுவதுபோல கைகாட்டினான்

அவனிடம் பெரிதாக ஏதோ தவறு இருப்பதை அவள் உணரத்தொடங்கியது அவன் இரவில் காணாமாலாகத் தொடங்கியபிறகுதான். அவன் ஆடைகள் நனைந்திருப்பதை, கடல்மணலுடன் அவன் திண்ணையில் படுத்திருப்பதை முன்பும் பலமுறை பார்த்திருந்தாள். அவன் கடற்கரையில் சென்று நின்றிருக்கிறான் என்று நினைத்தாள்.

ஒருமுறை அவன் போகும்போது மெதுவாக எழுந்து வந்து பார்த்தாள். அவன் கடற்கரைக்குப் போய் அங்கே குடில்களுக்கு அருகே கொட்டகைகளில் வைக்கப்பட்டிருந்த மோட்டாரை எடுத்து கரையில் நின்ற படகில் பொருத்திக்கொண்டு தள்ளி அலைகளில் ஏறி கடலுக்குள் போய் மறைந்தான். அவள் திகைப்புடன் ஓடிப்போய் கடற்கரையில் நின்றாள். நெடுநேரம் கழித்து விடிவதற்கு முன்புதான் அவன் திரும்பி வந்தான்.

அவள் கரையில் நிற்பதை அவன் கண்டதாகவே தெரியவில்லை. பழையபடி படகை நிறுத்திவிட்டு அவன் போய் திண்ணையில் ஈர உடையுடன் படுத்துக்கொண்டான். அவள் அவனருகே சென்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டாள். பிறகு அழுதாள். பின்பு கெஞ்சினாள். அவன் அவள் பேச்சை கேட்டதாகவே தோன்றவில்லை

“என் மக்கா, கோளுள்ள கடலாக்கும். நீயோ கை உறைக்காத சின்னப்பய. வேண்டாம்லேன்னு நான் காலைப்பிடிச்சு சொல்லியாச்சு. கேக்கல்ல. மறுபடி பலதடவை கடலுக்குள்ள போனான். இங்க எங்க வீட்டிலே கெடக்குத மோட்டாரை கொண்டுபோயி ரிப்பேர் செய்து வச்சிருக்கான். எங்க பளைய போட்டையும் ஓட்டை அடைச்சு ரெடிசெய்தாச்சு. போட்டை எடுத்துட்டு போனா இப்ப ரெண்டுநாள் மூணுநாள் கழிஞ்சாக்கும் வாறது. ரஸ்கும் தண்ணியும் எல்லாம் கொண்ட்டுட்டுப் போறான்”

“எங்கபோறான்?”என்றேன்

“தெரியல்ல. மீனு சிப்பி ஒண்ணும் கொண்டு வாறதில்லை” என்றாள் எலிசாம்மா.

“செரி, நான் வந்து பேசுதேன்”என்றேன்

அன்றே எலிசாம்மா வீட்டுக்கு போனேன். அந்தோணி வீட்டில் திண்ணையில் லுங்கிகட்டிக்கொண்டு தூங்கியபடி இருந்தான். என்னைக் கண்டதும் எலிசாம்மா அவனை எழுப்பினாள். அவன் எழுந்து தூக்கம் விலகாத கண்களைச் சுருக்கி என்னை பார்த்தான். முகம் வீங்கி உதடுகள் உலர்ந்திருந்தன

நான் முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்தேன். அவன் உள்ளே போய் முகம் கழுவி சட்டை போட்டுக்கொண்டு வந்தான். நானும் அவனும் தனிமையில் ஆனபோது நான் கேட்டேன். “என்னப்பா? உங்க அம்மை நீ கடலுக்கு போறதா சொன்னா… நீ போனியா?”

“ஆமா”என்றான்

“ஏன்?”

“நான் அந்த எடத்தை தேடிப்போனேன்” என்று அவன் சொன்னான்

“இங்கபாரு, அது உண்மையிலேயே இருக்கிற இடமா இருந்தாக்கூட எங்கியோ இருக்கு. கடலுக்கு உள்ள. எப்டியோ ஒரு அலையிலே மேலே வந்திருக்கு, கொஞ்சநேரம்.மறுபடி அதை கண்டுபிடிக்கணுமானா நம்மால முடியாது. உள்ளதைச் சொல்லணுமானா நீ சொன்னபிறகு நானும் ஆன்றப்பனும் சேர்ந்து இன்னும் சயண்டிஃபிக்கா தேடினோம்.பெரிய போட்டிலே போயி தேடினோம். தடையமே இல்லை. அப்டி ஒரு எடமிருந்தா அது முப்பதடி ஆழத்துக்கு அடியிலே இருக்கு… அது மேலே வராம நம்மால பாக்கவே முடியாது”

“நான் மறுபடி பாத்தேன்” என்றான்

நான் திகைத்துவிட்டேன்

“எனக்கு ஒரு சொப்பனம் வந்தது, அதிலே எங்க அப்பா அந்த கட்டிடங்களிலே உக்காந்து என்னை பாத்திட்டிருக்காரு. முழிச்சப்பிறவு நான் நடுங்கிட்டேன். அதிலே இருந்து வெளியே வரவே முடியல்லை” என்றான் அந்தோணி. “உள்ள போயி பாக்கணும்னு துடிப்பா இருந்தது. அதை செய்யவேண்டாம்னு கடுமையா தடுத்துப் பாத்தேன்… கிறுக்கு பிடிச்சிரும்னு தோணிட்டுது. பிறவுதான் போயி பாக்கலாம்னு போட்டை எடுத்தேன்”

“ஃபாதர் அந்த எடத்திலே இருக்கிறப்ப எனக்கு அங்க நெறையபேரு இருக்கிறதா தோணிச்சு.. என்னை பலபேரு பாத்திட்டிருக்கிறதா நினைச்சு திரும்பித்திரும்பிப் பாத்தேன். ஆனா இப்ப தெரியுது, எங்க அப்பா அங்க இருக்காரு”

“இதெல்லாம்…”என்று நான் சொல்ல ஆரம்பிக்க அவன் கைகாட்டி இடைமறித்தான்.

“சும்மா தோணல்லுன்னு சொல்லுவீங்க. எனக்கும் அதெல்லாம் யோசிக்கத் தெரியும்” என்றான்.

“நான் சொல்றதைக்கேளு , நீ படிச்சவன். இந்தக் கடலு இங்க நம்ம கண்முன்னாடி விரிஞ்சு கிடக்கு. நாம பாத்துப்பாத்து பாக்காம ஆயிட்டோம். கேட்டுக்கேட்டு கேக்காம ஆயிட்டோம். அப்ப அது நம்ம சப்கான்ஷியஸுக்கு போயிட்டுது. அதான் இப்ப நம்ம சப்கான்ஷியஸ். அதிலே அலையடிக்கிறதும் கொந்தளிக்கிறதும் எல்லாத்தையுமே சிம்பாலிக்காத்தான் பாக்கணும்.அந்த ஊரு எந்திரிச்சு வந்தது உன்னோட சப்கான்ஷியஸிலே இருந்துதான்”

“சரி அப்ப அதுக்குள்ள போயி பாக்கிறேன்”

“சப்கான்ஷியஸுக்கு நம்ம சிந்தனையிலே இருக்கிற ஆர்டர் இல்லை. அது கடல்மாதிரி முடிவில்லாம கெடக்கு. சரியான வழிகாட்டலும் அதுக்குண்டான சக்தியும் இல்லாமல் உள்ள போனா மூழ்கிடுவோம்”

“ஆனா அதுக்க ஒரு வாசல் திறந்தாச்சுன்னா பிறகு அதை மறந்து இருக்கமுடியாது…” என்று அந்தோணி சொன்னான். “அது கிறுக்குமாதிரின்னா அப்டி. ஆனா அதுக்குள்ள ஒரு தடவை போய்ட்ட பிறவு இங்க இந்த ஊரு இந்த சின்ன வீடுகள் சில்லறைத் தொளில் எல்லாமே மடத்தனமா ஆயிடும்”

நான் மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன்

அது ஒரு அழைப்பாக்கும் ஃபாதர். ஒரு கதவு திறந்த மாதிரி…” என்றான் அந்தோணி “நான் கடலுக்குள்ள போய் பாத்துட்டே இருந்தேன். எனக்கு வழி தெரியல்ல. கடலுக்குள்ள இடம் கண்டுபிடிக்கிற டிரெயினிங்கும் இல்லை. ஆனால் என் மனசுக்குள்ளே ஏதோ ஒரு தடம் இருந்தது. அதை நம்பி போய்ட்டே இருந்தேன். பலநாட்கள்”

“அங்க மத்தியான்னவெயிலிலே கடலுக்க நிறம் நீலம்கூடி ஒண்ணுமே தெரியறதில்லை. ஒரு தனிவெளிச்சம் வேணும், கடலுக்குள்ள பாக்க. போன மாசத்திலெ ஒருநாள் முழுநிலாவிலே நான் கடலிலே இருந்தேன். அப்ப ஒரு பாறை தூரத்திலே தெரிஞ்சுது. அதிலே யாரோ உக்காந்திட்டிருந்தாங்க. நான் போட்டை பக்கத்திலே கொண்டுபோனேன். நல்லாவே ஆளைப்பாத்தேன், எங்க அப்பா. அவரு என்னை பாத்துட்டு நின்னுட்டிருந்தாரு”

“அதெப்டி?”என்றேன்

“நீங்க சொன்னீகள்லா, சப்கான்ஷியஸ்னு.. அங்க இருக்கலாம்”

நான் மண்டையை கையால் சொறிந்து “குழப்பாதடே, கிறுக்குபிடிச்ச மாதிரி இருக்கு” என்றேன்

“நான் பாத்தேன், என் கண்ணால தெளிவாட்டு பாத்தேன். சந்தேகமே இல்லை. நான் பக்கத்திலே போறதுக்குள்ள என்னைச்சுத்தி அலை வந்திட்டுது. மிகப்பெரிய அலை. செங்குத்தா நூறுயானை உயரத்திலே. போட்டும் நானும் அந்த அலைகள் மேலே சுத்தினோம். அலை அடங்கினப்ப நான் என் பக்கத்திலே அந்த பாறைத்தீவை பாத்தேன். அதே எடம்தான்…”

“படகை உந்தி பக்கத்திலே கொண்டுபோனேன். அதிலே ஏறி உள்ள போயி பாத்தேன். அதே எடம். ஒத்தைக்கரும்பாறை. அதுக்க ஒத்த நடுவிலே எண்கோண மண்டபத்திலே ஒரு கால்த்தடம். சுத்தி அமைதியா நின்னுட்டிருக்கிற நனைஞ்ச கோபுரங்கள். கல்லுச்சுவரிலயும் தூணிலயும் சிற்பங்கள். அங்க யாருமே இல்லை. சுத்திச் சுத்தி வந்தேன். அப்பா அப்பான்னு கூப்பிட்டேன். அங்க நான் எவ்ளவு சத்தம்போட்டலும் குரல் வெளியே வராத மாதிரி இருந்தது”

“ஒரு கோபுரத்துக்குள்ள சின்ன அறை. அதுக்குள்ள எட்டிப் பாத்தேன். அங்கே சின்னதா பாறையிலே வெட்டின படிகள் தெரிஞ்சுது. சுரங்கம் மாதிரி உள்ளே எறங்கிப் போய்ட்டிருக்கு. முதல் நாலஞ்சு படியிலே இறங்கினேன். உள்ளே நல்ல இருட்டு. கூச்சலிட்டு பாத்தேன். உள்ளே இருந்து எதிரொலி வந்தது. அப்பா அப்பான்னு கூப்பிட்டேன். முழக்கம்தான் வந்தது. மறுபடி நாலஞ்சு படி இறங்கினேன். வந்த வழி தலைக்குமேலே சதுரமான வெளிச்சமா தெரிஞ்சுது. பயந்து மேலே ஏறிவந்திட்டேன். என்னை யாரோ துரத்திட்டு வர்ர மாதிரி இருந்தது. திரும்பிப்பாக்காமல் ஓடி போட்டிலே ஏறி வந்திட்டேன்”

“கரைக்கு வந்த பிறகு உக்காந்து நான் அழுதேன். ஏன் திரும்பி வந்தேன்னு நினைச்சு தலையிலே அடிச்சுக்கிட்டேன். எதுக்க்காக பயப்படுதேன்? எதை விட்டுட்டு போகணும்னு? எனக்கு இங்க என்ன இருக்கு? இந்த அளுக்கு வீடும் சாக்கடைத்தெருவும் சந்தடியும் குப்பையுமா? திரும்பிப்போகணும்னு தோணிச்சு. ஒரு வேளை திரும்ப எனக்கு அது தெரியாமலேயே ஆயிடலாம். இனி என் வாழ்க்கையிலே ஒரு வாய்ப்பே கிடைக்காம ஆயிடலாம்”

அதை நினைச்சு நினைச்சு அழுதேன். மறுபடியும் கடலுக்குள்ள போனேன். பகலும் ராத்திரியும் அங்க இருந்தேன். மறுபடி தெரியாதுன்னே நினைச்சேன். ஆனால் தெரிஞ்சுது. ஒரு அந்திநேரம். அதேபோல பெரிய அலை. ரொம்பப்பெரிய அலை. நான் படகிலே சுத்தி சுத்தி வந்தேன். தூரத்திலே அந்த பாறைத்தீவை பாத்தேன். பொன்னிலே செஞ்சது மாதிரி. ஒரு பெரிய கிரீடத்தை கழட்டி வைச்ச மாதிரி. கிட்டக்க போலாம்னு நினைச்சேன். ஆனால் சட்டுன்னு அது தீமாதிரி தெரிஞ்சுது. கிட்டபோனா சுட்டுச்சாம்பலாக்கிடும்னு தோணிச்சு. ஆனால் விலகி வரவும் முடியலை. கண்ணீர் விட்டுட்டு அப்டியே பாத்துட்டே இருந்தேன். இருட்டி அப்டியே அணைஞ்சு மறைஞ்சு போச்சு”

“போனவாரம் மறுபடியும் பாத்தேன். பௌர்ணமியிலே. அப்டி ஒரு வெளிச்சம் கடல்மேலே. அலையே இல்லை. கடல்நீர் பாறைமாதிரி கெடக்கு. நான் போட்டிலே போய்ட்டிருந்தப்ப அந்த எடம் தெரிஞ்சுது. முதல்ல கடல்மேலே மேகக்கூட்டம் எறங்கி கிடக்குதுன்னு நினைச்சேன். பக்கத்திலே போகப்போக அது அந்த எடம்தான்னு தெரிஞ்சுது. கனவான்னு நினைச்சு கூர்ந்து பார்த்தேன். அதே இடம்தான்.அப்டியே நிலவொளியிலே தெரிஞ்சுது”.

“நிலவு நேர்மேலே இருக்கு. நிலவிலே இருந்து என் படகு வரை ஒரு பாதை. பொன்னாலே விரிப்பு போட்டது மாதிரி தளதளன்னு… இறங்கி நடந்திருப்பேன். ஆனால் மனசு உள்ள நடுங்கிப்போச்சு. அப்டியே கண்ணீரோட பாத்துட்டே இருந்தேன். ரொம்பநேரம் கழிச்சு ஞாபகம் வந்தபோ அலை அடிச்சிட்டிருந்தது. என்னை தூக்கி ரொம்பதூரம் கொண்டு வந்திட்டுது”

நான் கைகளை கோத்தபடி அமர்ந்திருந்தேன். எப்படி எதைச் சொல்வது என்று தெரியவில்லை

“ஏன் அப்டியே திரும்பி வாறேன்னு தெரியல்லை. ஒரு சின்ன இழுப்புதான் இந்தப்பக்கமா கொண்டுவந்திடுது. அதைத் தாண்டி போக என்னாலே முடியல்லை” சட்டென்று உரக்க “தாண்டிப்போயாகணும்… போவேன்” என்றான்

“இங்கபாரு, உன் அம்மாவும் தம்பி தங்கச்சிகளும் இருக்காங்க…”

“ஆமா, ஆனா அவங்க எனக்கு முக்கியமில்லை… இங்க உள்ள எதுவுமே முக்கியமில்லை”

“நீ போற எடம் ஒருவேளை திரும்பி வரமுடியாத எடமாக்கூட இருக்கலாம”

“திரும்பி வரமுடியாத எடம்தான். திரும்பி வந்தாக்கூட போன ஆளா திரும்பி வரமாட்டேன். அது போறது மட்டும்தான்”

“ஏன்?”

“அதை நான் எப்டிச் சொல்றது? ஃபாதர் அந்த வாசல் திறக்கிறது நம்ம கையிலே இல்லை. அது கடலிலே இருக்கோ மண்டைக்குள்ள இருக்கோ திறந்தாச்சுன்னா ஒண்ணும் பண்ணமுடியாது… இந்த அலைக்கழிப்பெல்லாமே கடைசியிலே அங்க போறதுக்காகத்தான். வேற வழியே இல்லை”

“சரி நான் ஒண்ணு சொல்லுதேன், நீ நாளைக்கு சர்ச்சுக்கு வரமுடியுமா?”

“எதுக்கு?”

“மறுபடி பேசுவோம்… ஜெபம் செய்வோம்”

“வாறேன்…”

“நாளைக்கு காலையிலே… கண்டிப்பா வரணும்”

அவன் தலையசைத்தான். நான் கிளம்பும்போது அவன் நாளை வராவிட்டால் தேடி வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எனக்கு அவனிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நான் மிகவும் குழம்பியிருந்தேன், அகத்தே முற்றிலும் தனித்திருந்தேன்

மறுநாள் காலை அவன் வரவில்லை. அவனை கூட்டி வரும்படி கோயில்குட்டியை அனுப்பினேன். அவன் திரும்பிவந்து அந்தோணி வீட்டில் இல்லை என்று சொன்னான். அன்று மதியம் எலிசாம்மா வந்து அந்தோணி இரவிலேயே கடலுக்கு போய்விட்டதாகச் சொன்னாள். விசும்பி அழுதபடி “ஃபாதர் எனக்க பயல காப்பாத்துங்க ஃபாதர்” என்றாள்.

நாங்கள் அன்றும் அடுத்தநாளும் அதற்கு அடுத்தநாளும் காத்திருந்தோம். மூன்றுநாட்களுக்குமேல் அவனிடம் உணவும் நீரும் இருக்க வாய்ப்பில்லை. நான்காம் நாள் அவன் கடலுக்குள் போன செய்தியை நான் ஆன்றப்பனிடம் சொன்னேன். அவன் உடனே படகுகளை கடலுக்குள் அனுப்பினான். ஏழுநாட்களுக்குமேல் கடலில் தேடிக்கொண்டிருந்தோம். அந்தோணி திரும்பி வரவே இல்லை

நான் அவசரமாக என் ஊருக்குப் போகவேண்டியிருந்தது. பெங்களூரில் ஒரு பயிற்சி வகுப்புக்குச் சென்றேன். அங்கிருந்து சென்னையின் இன்னொரு பத்துநாள் தியானமுகாமுக்குப் போனேன். அங்கிருந்து மீண்டும் கடற்கரைக்கே வந்தேன். வேண்டுமென்றேதான் அந்தப்பயணங்களை ஏற்பாடு செய்துகொண்டேன். எனக்கு வேறுவழியில்லை. என் உள்ளத்திடமிருந்து என்னை காப்பாற்றிக் கொள்ளவேண்டியிருந்தது.

அந்தோணி காணாமலானது பெரிய அலைக்கழிப்பாக இருந்தது. இழப்பின் துயர் வேறு, மெல்லிய நம்பிக்கையுடன் அலைக்கழியும் துயர் வேறு. பிந்தையது மிகமிக கொடியது.அந்தோணி அவனெ கடலுக்குள் சென்றிருந்தான். புயலில் மாட்டவில்லை. ஆகவே அவன் எங்காவது கரையேறியிருக்க வாய்ப்பிருந்தது. ஏற்கனவே ஒருமுறை அப்படி மீண்டு வந்தவனும்கூட.

என்னை அலைக்கழித்தது அவன் சாவு அல்ல. அதிலிருந்த வேறொன்று.சாவு அறுந்து தொங்கும் வாழ்வின் நுனியில் தொங்கியாடுவது. இது அப்படி அல்ல. இதில் ஒரு முழுமை இருந்தது. கதைபோல, புராணம்போல. அல்லது ஒரு கனவுபோல. அதுதான் என்னை கொந்தளிக்கச் செய்தது. பிறிதொடு நினைவே இல்லாதவனாக ஆக்கியது.

அது ஓர் உளவியல் பீடிப்பு என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. மனம் கனவுகளை ஒன்றோடொன்று பிரக்ஞை அறியாமலேயே கைமாறிவிடுகிறது. ஏனென்றால் கனவுகள் அனைவருக்கும் உரிய ஆழத்தில் உறைகின்றன. ஒருவகை வைரஸ்.நான் அதனுடன் போராடிக்கொண்டிருக்கிறேன். மெல்லமெல்ல வென்றுமீளலாம், தளர்ந்து அமிழவும்கூடும்.. உள்ளே வரும் அந்த சின்னஞ்சிறு விதையை முளைக்கவைக்க என்னுள் எத்தனையோ விசைகள். என் அச்சங்கள்,ஐயங்கள், குற்றவுணர்வுகள். அன்றாடச்சலிப்பின் பேரெடை. கனவுகளால் ஆட்கொள்ளப்பட்டது மானுட வாழ்க்கை.கனவு அவனைவிடப்பெரிதாகும்போது வாய்திறந்து அவனை உண்டுவிடுகிறது.

அந்த அலைக்கழிப்பிலிருந்து தப்ப நான் அங்கிருந்து விலகிநிற்க முடிவுசெய்தேன். அது பயனும் அளித்தது. திரும்பி வந்தபோது அந்தோணி தொலைவான நினைவாக இருந்தான். ஆன்றப்பன் என்னை வந்து சந்தித்தபோது அனைவருமே அந்தோணி இனி வரமாட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொன்னான்

‘பேப்பரில விளம்பரம் குடுத்தாச்சு. போலீஸ்ல புகாரும் குடுத்தாச்சு. எல்லா வாட்ஸப் குரூப்லயும் போட்ட்டாச்சு. இருபத்தஞ்சு நாளாச்சு. எங்கியாம் இருந்தான்னா வந்திருக்கணும்” என்று ஆன்றப்பன் சொன்னான்

“எங்கியாம் ஜெயிலிலே இருப்பானோ?”என்றேன்

“இப்பல்லாம் ஜெயிலிலே வச்சாக்கூட நெட்லே போட்டிருதாக… ஆனா அதுக்கு வாய்ப்பிருக்கு”

“பரவாயில்லை, எலிசாம்மாளுக்கு நம்புறதுக்கு ஒரு சின்ன வாய்ப்பு மிச்சமிருக்கே” என்றேன்

“ஆமா, பாவப்பட்ட குடும்பம்… அந்த எளையபய இப்ப கடைவேலைக்கு போறான்” என்று ஆன்றப்பன் சொன்னான்

ஆனால் மறுநாள் எலிசாம்மாவை சாலையில் பார்த்தபோது அவள் நம்பிக்கையை இழந்துவிட்டிருப்பதை கண்டேன். “சர்ச்சுக்கு ஏன் வரல்லை?”என்று கேட்டேன்

”வரணும்” என்று பொதுவாகச் சொன்னாள்

“விசுவாசத்தை விட்டிரவேண்டாம்” என்றேன். “உங்க மகன் வருவான்… ஆண்டவர் அருள்வார்”

“அவன் வரமாட்டான்” என்று அவள் சொன்னாள். “நான் வாங்கிவந்த வரம் அப்டித்தான். அவன் போயாச்சு… அவன் அப்பனுக்க ஒப்பம் போயி சேந்தாச்சு”

“இல்ல…”என்று நான் சொல்லத் தொடங்க அவள் இடைமறித்தாள்

“நான் சொப்பனம் கண்டேன் ஃபாதர்”

“என்ன சொப்பனம்?”என்றேன்

அவள் ஒன்றும் சொல்லாமல் சேலைமுனையை தலைமேல் இழுத்துப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டாள்.

நான் அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன கனவு? அந்தோணிக்கும் எலிசாம்மாவுக்கும் மணிபல்லவம் என்ற பெயரே தெரிந்திருக்கவில்லை. அந்த வார்த்தை என்னை மட்டும்தான் போட்டு சுழற்றிக்கொண்டிருக்கிறது. காலமில்லாத இடம். அப்படி ஒரு கனவு, ஒரு சொல் உள்ளே வந்து தைத்தால் அது விஷமுள் போல உள்ளத்தையே நஞ்சாக்கிவிடுகிறது. உயிரை எடுத்தபிறகுதான் ஓயும் அது.

ஆன்றப்பன் வந்தபோது அவனிடம் அதைப்பற்றி சொல்ல நினைத்தேன். ஆனால் தவிர்த்துவிட்டேன். அவனும் ஆர்வம் மடைமாறியிருந்தான். ஒரு புதிய லோனை வாங்கும் முயற்சிபற்றி பேசிக்கொண்டிருந்தான்.

நான் மணிபல்லவம் என்ற சொல்லை பித்துப்பிடித்து சொல்லிக்கொண்டிருந்தேன். பிறகு மீண்டும் அதிலிருந்து விலகினேன்.  ஒரு சில நாட்கள். அந்தோணியின் நினைவும்  மயங்கி பின்னகர்ந்துவிட்டிருந்தபோது எனக்கு ஒரு கனவு வந்தது.

பின்னிரவில். நான் கனவுகாண்கிறேன் என்று எனக்கு தெரிந்திருந்தது. ஒரு படகில் தன்னந்தனியாகச் சென்றுகொண்டிருந்தேன். அலையில்லா கடல். நிலவொளி. ஒரு பாறைமேல் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

கூர்ந்து பார்க்கும்தோறும் அவன் மங்கலடைந்தான். மீண்டும் மீண்டும் பார்த்தபடி அருகே சென்றேன். விழித்துக்கொண்டேன். மனம் தெளிந்ததுமே தெரிந்தது, அவன் அந்தோணி. அவன் என்னை பார்த்தபடி அந்தப்பாறையில் அமர்ந்திருந்தான்

நான் வியர்த்து படபடத்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் குடித்து ஜெபித்துவிட்டு படுத்துக் கொண்டேன். நெடுநேரம் தூக்கம் வரவில்லை. விடியற்காலையில்தான் தூங்கினேன். விழித்த முதற்கணமே அந்த நினைப்புதான் வந்து நின்றது.

அதைத் தவிர்த்துவிடவேண்டும் என்று எனக்கே ஆணையிட்டுக்கொண்டேன். அதில் என் மனம் படியாமலிருக்க என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். ஜெபம் செய்தேன். சர்ச் வேலைகளை இழுத்துவைத்து வெறியுடன் செய்துகொண்டிருந்தேன். வீடுகள் தோறும் போய் ஜெபம் செய்தேன். என்னென்னவோ செய்தேன். அத்தனைக்கும் பின்பும் இரவு தூங்குவதற்குமுன் மாத்திரை போட்டுக்கொள்ளவேண்டியிருந்தது

ஆனால் பத்துநாளில் அந்த தொந்தரவை மழுங்கவைத்துவிட்டேன். பின்னர் இயல்பாக நடமாடத்தொடங்கினேன். கடற்கரையில் எவருக்குமே அந்தோணி என்ற இளைஞன் அங்கே இருந்ததும் மறைந்ததும் நினைவில் இல்லை. டீக்கடையில் ஒருமுறை ஒரு பேச்சு எழுந்து வந்தது. ஒரு சின்னக்குமிழி உடைவதுபோல மறைந்தது.

இத்தகைய விஷயங்கள் நம் பிரக்ஞையை நாம் சமாதானப்படுத்தி அமையவைத்தபின் அடியிலிருந்து எழக்கூடியவை. நான் ஒரு கனவு கண்டேன். படகில் சென்றுகொண்டிருக்கிறேன். என் அருகே அந்தோணி இருக்கிறான் என்பதை என்னால் உணரமுடிந்தது. தொலைவில் அந்த பாறைத்தீவை கண்டேன். அது நிலவொளியில் பொன்னாக தெரிந்தது.

அக்கணமே விழித்துக்கொண்டேன். எழுந்து கடற்கரை நோக்கி ஓடினேன். கடல் அலையடித்துக்கொண்டிருந்தது. நிலவு அதன் முழுமையான ஜொலிப்புடன் வானில் நின்றிருந்தது. நிலவை நோக்கி அழைக்கும் அந்த பொன்னிறப்பாதை தளதளத்தது. கடற்கரையில் காற்று என்னை அறைந்த்து அறைந்து ஏதோ சொன்னது. அலைமுழக்கம் எதையோ சொன்னது

சட்டென்று அவற்றில் ஒரு சொல்லை என் அகம் பொருள்விளங்கிக்கொண்டது. திடுக்கிட்டு உடல் துள்ளி நடுங்கியது. என்ன சொல், என்ன புரிந்துகொண்டேன்? அது என் விழிப்புள்ளத்திற்கு வரவே இல்லை.

கிறுக்குத்தனம், வெறும் கிறுக்குத்தனம். இங்கிருந்து ஓடிவிடவேண்டும். இது என்னை தின்றுவிடும். கடல் உருவாக்கும் மாயை. கடல் போட்டிருக்கும் தூண்டியின் ஒளிவிடும் மிதவைதான் அந்த மணிபல்லவம்.

பதைபதைத்தபடியும் உள்ளம் உடைந்து அப்படியே மணலில் விழுந்து அழுதபடியும் நான் இரவெல்லாம் அங்கிருந்தேன். விடியலில் ஒளியில் இரவெல்லாம் நான் கொண்ட அந்த கொந்தளிப்பு அசட்டுத்தனமான மனநாடகமாக மாறியது. திரும்பி வீடுநோக்கி ஓடி என் அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டேன். சர்ச்சுக்கு போகவில்லை. காய்ச்சல் என்று சொல்லிவிட்டேன்.

பகல்முழுக்க அங்கேயே இருந்தேன்.கொஞ்சம் தூங்கினேன். ஆனால் ஆழ்ந்த தூக்கம் இல்லை.அவ்வப்போது விழித்து விழித்து எழுந்துகொண்டிருந்தேன். கடைசியாக விழித்துக்கொண்டபோது நள்ளிரவு ஆகியிருந்தது. என் மனம் தெளிந்து அமைதியாக இருந்தது. நான் மிக அருகே என அந்த கனவை பார்த்துக்கொண்டிருந்தேன்

கடலுக்குள் போவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால் எனக்கு கடலுக்குள் செல்ல எந்த பயிற்சியும் இல்லை. ஆன்றப்பன்னை அழைத்தாலென்ன? ஆனால் அது முடியாது. இது தன்னந்தனியாக மட்டுமே செல்லவேண்டிய பயணம். இதை எவருமே தவிர்க்கமுடியாது. தவிர்க்கமுயன்று சுற்றிச்சுற்றி ஓடலாம். ஆனால் அது அந்த சுழிமையத்தை நோக்கி மேலும் விசையுடன் செல்வதுதான்

கடலுக்குள் செல்வதற்கான எல்லா தர்க்கங்களையும் உருவாக்கிக்கொண்டேன். போய் பார்ப்பதே இந்த மாயக்கவற்சியிலிருந்து என்னை மீட்கும். அங்கே ஒன்றுமில்லை. இது அந்தோணி சொன்ன கதைகளில் இருந்து என் மனம் கற்பனை செய்துகொண்டது. இந்த சின்னஞ்சிறு கடற்கரை ஊரின் தனிமையில் எனக்கிருக்கும் சலிப்பை வெல்ல என் மனம் இந்தக் கனவை வளர்த்துக்கொள்கிறது. இதை யதார்த்தத்தில் வைத்துப் பார்ப்பதே இதை உடைக்கும் வழி, ஒதுக்க முடியாது. ஒதுக்க ஒதுக்க இது பெருகும்

நான் கடற்கரைக்குச் சென்றேன். அந்த நிலையில் என் மூளை அடைந்திருந்த கூர்மை என்னையே வியக்கச் செய்தது. நாம் எதையும் கவனிப்பதில்லை என்பது நாம் கொண்டிருக்கும் மாயை, நாம் எல்லாவற்றையும் பார்க்கிறோம். நம் ஆழ்மனம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேதான் இருக்கிறது.

எங்கே படகுக்குரிய மோட்டார் வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிந்திருந்தது. ஒன்றை எடுத்துக்கொண்டுவந்து ஒரு படகில் பொருத்தினேன். படகை தள்ளி கடலுக்குள் கொண்டுசென்றபின் அதை இயக்கினேன். அலைகள்மேல் எழுந்துவிட்டேன்.

அலைகள் நிலவில் பளபளத்துச் சுருண்டன. புரண்டு கொந்தளிக்கும் நீர்ப்பரப்புக்கு மேல் சிவந்த நிலவு மேகங்கள் ஒளியுடன் சூழ்ந்திருக்க வானில் நின்றது. செல்லச் செல்ல நான் என் கைகளே படகை ஓட்ட அறிந்திருப்பதை புரிந்துகொண்டேன். நான் பயிற்சியின்போது படகோட்டுவதின் அடிப்படைகளைக் கற்று அப்படியே மறந்துவிட்டிருந்தேன்

பறவைகள் நுண்ணுணர்வால் வலசை போவதுபோல நான் சென்றேன். கடல்மேல் நான் சென்றபாதை என்னுள் ஏற்கனவே எங்கேயோ இருந்தது. ஆனால் நடுவே அது வெறும் பித்து, நான் சாகப்போகிறேன் என்று தோன்றிக்கொண்டிருந்தது. ஓர் அலைபோல தர்க்கபுத்தி வந்து அறைந்து திரும்பு திரும்பு என்றது. அதைவிட பன்மடங்கு அலையாக எக்களிப்பு ஒன்றுவந்து மூடிக்கொண்டது

கடலில் நான் அலைந்துகொண்டே இருந்தேன். நெடுநேரம். எங்கும் அந்த பாறைத்தீவின் தடம் தெரியவில்லை. மாபெரும் ஈர வாழையிலைப் பரப்பு போல நிலவில் கடல் மின்னியது. அலைகள் அடங்கிவிட்டிருந்தன. மெல்லிய நெளிவு மட்டுமாக அவை என்னைச் சூழ்ந்திருந்தன.

திசையின்மையை என் வாழ்க்கையில் முதல்முறையாக உணர்ந்தேன். முதலில் ஒரு திகிலாக, பின் பதற்றமாக, பின்னர் ஒரு கொந்தளிப்பாக என்னுள் திகழந்த அது மெல்ல ஒரு விடுதலையுணர்வாக ஆகியது. முற்றிலும் திசையின்மை. திசைகளை நான் இழக்கவில்லை, அவை எனக்குள் தோன்றியே இருக்கவில்லை. ஏற்கனவே இருந்த நினைவுகளில்கூட திசைகளே இல்லை.

கடலில் நான் சுற்றிக்கொண்டே இருந்தேன். சற்றே தூக்கம் வந்திருக்கும். சிலநிமிடங்களாகக்கூட இருக்கலாம். படகு போய்க்கொண்டுதான் இருந்தது. பின்னர் தொங்கிய தலையின் ஆட்டத்தால் விழித்துக்கொண்டபோது மனம் சுக்கான் மாற்றிக்கொண்டுவிட்டிருந்தது. அந்த எக்களிப்பு மறைந்து மேலும் கூரிய தன்னுணர்வு வந்திருந்தது.

தன்னுணர்வு என்பது ஒரு தர்க்கரீதியான புள்ளி என்று அப்போது உணர்ந்தேன். அதை தர்க்கமே கட்டமைக்கிறது. பித்து அதை அழிக்கிறது. மீண்டும் தர்க்கம் அதை கட்டமைக்கிறது. அதற்கு திசைகள் தேவை. அந்தச் சிலந்தி நான்கு திசைகளையும் தொட்டுத்தொட்டு கம்பிநூல் இழுத்து வலைநெய்கிறது. அதன் நடுவே தன்னை அமர்த்திக்கொள்கிறது. வண்டுகள் அதை கிழித்தால் அறுத்து விடுவித்துவிடுகிறது.காற்றுக்கள் அதை அழித்தால் உடனே புதியதை பின்னத்தொடங்கிவிடுகிறது

நான் திசைகளை தேடித்தேடி தவித்து ஓர் உள்ளுணர்வாக கரை இருக்கும் மேற்குத்திசையை கண்டுகொண்டேன். படகைத் திருப்பினேன். அந்த கனவு முடிந்துவிட்டது. அது ஒருநாள் மட்டும் நின்றிருக்கும் மரம்—ஒரு மாபெரும் நாய்க்குடை. அவ்வளவுதான். அப்படி ஒரு பாறைத்தீவு இங்கில்லை. இருந்தால் அதை காண்பது இயலும் காரியமல்ல.

அப்போது நான் தொலைவில் ஒரு பாறையைக் கண்டேன். அதன்மேல் ஒருவன் நின்றிருந்தான். நிலவொளியில் முதலில் நிழல் போலிருந்தான். படகு சற்றே திரும்பியபோது அவன் முகத்தைப் பார்த்தேன். அது பன்னா சிங்.

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் –ஜூன் 2020

$
0
0

ஓவியம்: ஷண்முகவேல்

 

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (21/06/2020) மாலை 5 மணி முதல்  8 மணி வரை, இணையவழி  நிகழ்வாக  நடைபெற உள்ளது.

இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில் திரெளபதி”, என்கிற  தலைப்பில், நண்பர் வைஜெயந்தி பேசுகிறார்.

உரையாடலில் இணைய: (Zoom Meeting ):
https://us02web.zoom.us/j/84459808098?pwd=NS9LZjNTUXlSR0JkRFdPM01DSjJkdz09

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

Regards,

S SANTHOSH,

+91-9566171535

s.santhosh2007@gmail.com

change today…change tomorrow…!

www.bhumi.org.in

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலையரசி,செய்தி- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மலையரசி, லட்சுமியும் பார்வதியும் இரு கதைகள் வழியாகவும் ஒரு ஆளுமையை முழுமையாக வரைந்துகாட்டுகிறீர்கள்.கௌரி பார்வதிபாய் வரலாற்றுப்பாத்திரமாக இருக்கலாம். ஆனால் இங்கே நம் முன் ஒரு பெண்ணாக வந்து நிற்கிறாள். அரசகுடும்பத்திலேயே பிறந்தாலும் பொதுவாழ்க்கையில் வந்து ஜெயிக்க பெண்ணுக்கு பெரிய சவால்கள் இருக்கின்றன. ஏன் லட்சுமி தோற்று கொல்லப்பட்டள்? பெண்ணுக்குரிய மெல்லுணர்வுகளுடன் இனிய மனநிலையுடன் இருந்தாள். பார்வதியும் அந்த மனநிலையை பகிர்ந்துகொள்பவள்தான் ஆனால் அவள் தன்னை உருக்கு மாதிரி மாற்றிக்கொண்டாள்.

நான் இந்தக்கதையில் வாசிப்பது இதைத்தான். இங்கே பெண்ணுக்கு என்று சில குணங்கள் சொல்லப்படுகின்றன. அவையெல்லாம் குடும்பப்பெண்களுக்கு உரியவை. அவற்றை அலுவலகத்திலோ தொழிலிலோ கொண்டுசெல்லவே முடியாது.  அவை அங்கே அவளை தோற்கடித்துவிடும். லட்சுமியாக வீட்டில் இருக்கலாம். துர்க்கையாகத்தான் பொதுவெளியில் இருக்கமுடியும்

 

எஸ்.கிருபா

 

அன்பின் ஜெ,

மலையரசி‘ வாசித்தேன்.

காந்தி தனது ராமனை வாளுடன் கூடிய க்ஷத்ரிய ராமனாக உருவகிக்கவில்லையென்றும், சாத்வீக ராமனாகவே உருவகித்தார் என்று ஒரு கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டது நினைவிலுள்ளது.ராமவர்மாவை அவ்வாறான ஒரு ராமனாகவே காண்கிறேன்.

அதே சமயம் ராணி பார்வதியை  காந்தியின் லௌகீக விவேகம் கைகூடிய நடைமுறை அரசியல் வல்லமை தெரிந்த ஒரு ஒரு சிறந்த நிர்வாகியாகவே காண முடிகிறது.புனைவில் விரவி வரும் தத்துவம், மேலாண்மை, அதே சமயம் அந்த புலி படிவம் (குட்டியைக் காப்பாற்றும் அன்னை புலி பலவீனமான குட்டியை குதறிக் கொல்வதற்கும் தயங்காதிருத்தல்) இவற்றின் ஒத்திசைவு அருமை.

ராணி பார்வதியின் லௌகீக விவேகத்தின் உச்சமாகக் கீழ்க்கண்ட வரிகளைக் கண்டேன்.

“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்ல வேண்டிய ஒன்றுதான் அது…. அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்.”

எந்தவொரு எளிய பெண்ணின் வாழ்விலும் பொருந்தும் மாபெரும் உண்மை ராணியின் வாக்காக வருவது  பார்வதியின் ‘நுண்மான் நுழைபுலத்திற்கான’ சான்று.கதை நெடுகவே கறார்தனத்துடனும் நடைமுறை ஞானத்துடனும் கூடிய அவரின்  விவேகம் பிரமிக்க வைக்கிறது.இன்றைய பெண்கள் கைகொள்ள வேண்டிய துல்லியமான உதாரணமாகவே பார்வதி காட்சியளிக்கிறாள்.

கோவிட் ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் எத்துணையோ உள்ளங்களை உங்கள் கதைகள் மீட்டெடுத்திருக்கும்.அலுவலக இயக்குனர் ஒருவரின் கேள்வி (Does he have a team or writers?? How is he able to produce so much???). இது ஒன்றே உங்களின் பெருமைக்கு சான்றளிக்கப் போதுமானதாயுள்ளது

மிக்க நன்றி.

அன்புடன்
வெங்கட்ரமணன்

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

செய்தி கதையின் நுட்பமான adolescent age சித்தரிப்புகள் அழகாக இருந்தன. அதிலுள்ள கவற்சி உண்மையில் என்ன என்பது அந்தக்குறிப்புகள் வழியாக கிடைக்கிறது. அனந்தனின் காமத்தை எழுப்பும் அழகி வெண்ணிறமனா குண்டான விஜயஸ்ரீ. ஆனால் கறுப்பான பகவதியில் வேறொரு வகையில் காமம் எழுந்துவிடுகிறது. அது காமமா என்றால் அதேமாதிரி ஒன்று. அதற்கான சந்தர்ப்பம் அப்படி அமைந்தது. ஒரு மெல்லிய உரசல். ஒரு தொடுகை. இவள் நேர் எதிரான தோற்றம் கொண்டவள். எப்படி அப்படி ஒரு ஈர்ப்பு நிகழ்கிறது? எத்தனை விஜயஸ்ரீயை பார்த்தாலும் அது ஏன் அப்படியே நீடிக்கிறது? அதுதான் புரிந்துகொள்ளவே முடியாத காமத்தின் நுட்பம்

 

உமாநாத்

 

அன்புள்ள ஜெ அவர்களுக்கு

கதைத்திருவிழா-2செய்தி படித்து முடித்தேன்.அனந்தன் என்றபெயரை படித்ததும் அவர்சிறுவனாக,வளரிளம் பையனாக ,இப்போது இளைஞனாக பார்க்கின்றநேரத்தில் மொழி ,மாயப்பொன்  போன்ற கதைகளின்அனுபவங்களும் மேலெழுந்தது.வேற ஒண்ணும் எழுதவில்லையா என்றகேள்விக்கு பிறகுஅங்கேநிகழ்வது ஒருமாயக்கணம்.அதில் இருவருமே சுழல்கிறார்கள்.ஒலிக்கின்ற பாடல் ,பார்க்கின்ற மனிதர்கள் என யாவுமே அவன்உள்ளத்தை அறிய துடிக்கின்றது அல்லது மீறி நடந்தவைகளை முன்புபோலவே வைக்க நினைக்கின்றது.மறுபடியும் பார்க்ககிடைக்கின்ற அவள் கையில் உள்ள நீல நிறக்கவர் காட்சி அவனைஉறையச் செய்கின்றது.இறுதியில் உள்ள பகுதி அவள் விழிகளில் அனல் பற்றி எழுதியிருந்தீர்கள்.அந்தகணத்தை இருவருமே தவற விடவில்லை.கீழே ஒரு youtube காணொளி.முதல் ஒருநிமிடம் பாருங்கள்

 

குமார் ஷண்முகம்

 

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16976 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>