Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16840 articles
Browse latest View live

சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 2

$
0
0

a

இன்றுகாலை சரியாக ஒன்பது மணிக்கு சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கிய அரங்கு தொடங்கியது. இந்தியாவிலிருந்து 27 பேர் கலந்துகொண்டார்கள். சிங்கப்பூரிலிருந்து 30 பேர். தேசிய கலைக் கழகம் சார்பில் கவிதாவும் சிங்கப்பூர் தேசிய கல்வி நிலையம் சார்பில் முனைவர் சிவக்குமாரன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக வந்து கலந்துகொண்டார்கள்.

விஜயராகவன் சுருக்கமாக வரவேற்புரை அளிக்க நிகழ்ச்சி தொடங்கியது. முதல் அரங்கு கம்பராமாயணம். ஆனால் நேற்று வந்திறங்கியபோதே நாகர்கோயிலில் இருந்து நாஞ்சில்நாடனின் தாயார் இறந்துவிட்ட தகவல் வந்தது. கிட்டத்தட்ட நூறு வயதானவர். சிலநட்களாகவே நோயுற்றிருந்தார். ஆகவே நாஞ்சில்நாடன் நேற்றி மாலையே விமானத்தில் கிளம்பி கொச்சி வழியாக ஊருக்குச் சென்றார். நாஞ்சில் கொண்டுவந்திருந்த கம்பராமாயணக் கவிதைகளையும் அறிமுகக்குறிப்பையும் ராஜகோபாலன் முன்வைத்து அரங்கை நடத்தினார்

வழக்கம்போல கம்பராமாயணம் அரங்கை ஆட்கொண்டது. சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சிவகுமரன், அருணாச்சலம் மகராஜன் உட்பட பலர் தீவிரமாக விவாதங்களில் கலந்துகொண்டனர். விஷ்ணுபுரம் அமைப்பின் அனைத்து நிகழ்ச்சிகளையும் போலவே கொண்டாட்டமும் சிரிப்பும் குறையாத தீவிரமுமாக நிகழ்ச்சி நடைபெற்றது

மதிய உணவுக்குப்பின் சிறுகதை அரங்கில் தி.ஜானகிராமனின் சிறுகதைகளை முன்வைத்து அருணாச்சலம் மகாராஜன் பேசினார். தி/ஜானகிராமனின் பாயசம், கங்காஸ்நானம் ஆகிய கதைளை விரிவாக முன்வைத்து தன் அவதானிப்புகளை நிகழ்த்தினார்.பலகோணங்களிலான விவாதம் நிகழ்ந்தது

ராஜகோபாலன்

 

சு. வேணுகோபாலின் புனைகதைகளில் உள்ள உளம் சார்ந்த பாலியல் அம்சத்தைப்பற்றி அரங்கசாமி பேசினார். தொடர்ந்து சு.வேணுகோபால் தன் சிறுகதைகளைப்பற்றிப் பேசி அவற்றின் உருவாக்கத்தை பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மிகத்தீவிரமான குரலில் அவர் தன்னை முன்வைத்தது ஆழமான உணர்வுநிலைகளை உருவாக்கியது

அருணாச்சலம் மகராஜன்

 

ஐந்துமணிக்கு அரங்கு முடிந்தது. நகர்மையத்தில் உள்ள Gardens By the Bay  சென்றோம். இரவு ஒன்பது மணிவரை அங்கே பிரம்மாண்டமான கண்ணாடி கூடாரத்திற்குள் செயற்கைச் சூழலில் அமைக்கப்பட்ட அனைத்துவகையான நிலப்பரப்புகளை சேர்ந்த மரங்களையும் தாவரங்களையும் பிரம்மாண்டமான செயற்கைமரங்களையும் கண்டோம்.

 

மீண்டுமொரு கொண்டாட்டமான நாள்.

 

 

புபுகைப்படங்கள் வெங்கடாச்சலம் ஏகாம்பரம்

 

மேலும் படங்களைப் பார்க்க

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அங்குள்ள அழுக்கு

$
0
0

 

IMG_0899

 

வங்காள அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர் ராணி சந்தா. நூறாண்டுகளுக்கு முன்பு அவர் காசிக்கு ஒரு கும்பமேளாவுக்குச் சென்றார். அப்பயண அனுபவங்களை அவர் பூர்ண கும்பம் என்னும் பெயரில் நூலாக எழுதினார். தமிழில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வந்த அந்நூலை நான் முப்பதாண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அது கும்பமேளாவுக்குச் செல்லவேண்டும் என்ற என்னுடைய கனவைத் தூண்டிவிட்டது

2010ல்தான் அந்தக்கனவு நடைமுறைக்கு வந்தது. கும்பமேளா பற்றிய செய்தியை கேட்டதுமே கிளம்பிவிடவேண்டியதுதான் என முடிவுசெய்தேன். உடனே நண்பர்களிடம் கூப்பிட்டுச் சொன்னேன். என் பதிப்பாளர் வசந்தகுமார், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், நண்பர்கள் அரங்கசாமி, கிருஷ்ணன், அருண் உள்ளிட்ட ஒரு குழு உடனே விமானம் பதிவுசெய்து டெல்லிக்கு கிளம்பினோம். டெல்லிவழியாக ஹரித்வார்

ஆனால் கும்பமேளா என்றதுமே நண்பர்கள் தயங்கினர். கிருஷ்ணன் “சார் அங்கே பெருங்கூட்டமா இருக்குமே. குப்பையும் பீயுமா குவிஞ்சு கிடக்கும்னு நினைக்கிறேன்…” என்றார். எனக்கும் அந்தத் தயக்கமிருந்தது. டெல்லியைக் கடக்கும்போது யமுனைக்கரையில் கண்டபெரும் குப்பைமலைகள் அரைத்தூக்கத்தில் தலைமேல் மலைபோலக் கொட்டின

நாங்கள் ஹரித்வாருக்கு வந்திறங்கியபோது அதிகாலை மூன்று மணி. பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு பொட்டல்வெளியில் விளக்கொளியில் புழுதிப்படலம் தங்கச்சல்லாபோல ஜொலித்துக்கோண்டிருந்தது. புழுதிபடிந்த கார்கள் விலாநெருங்கி நிறைந்திருந்தன. புழுதித்தரை மீது விரிக்கப்பட்ட சாக்குகளில் ஏராளமானவர்கள் கம்பிளிக்குவியல்களாகப் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். தூக்கமிழந்த போலீஸ்காரர்கள் கைகளில் ஸ்டென் மெஷின் கன்களுடன் சுற்றிவர ஒரு தீதி உற்சாகமாக டீத்தூள் பால் சர்க்கரை எதுவுமே இல்லாத டீ போட்டு விற்றுக்கொண்டிருந்தாள். குளிருக்கு அதுவும் நன்றாகவே இருந்தது.

நாங்கள் வரும்போது ஹரித்வரில் தங்க பலவகையான ஏற்பாடுகளுடன் வந்திருந்தோம். வரும் வழியிலேயே அந்த எந்த ஏற்பாடும் வேலை செய்யவில்லை என்ற தகவல் வந்தது. ஹரித்வாரில் எங்குமே தங்க இடமில்லை. ரிஷிகேஷ் போய் தங்குங்கள் என்றார்கள். எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் வழியாக ரிஷிகேஷில் ஒரு இடம் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே இடமிருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே ரிஷிகேஷுக்கே செல்வதென்று முடிவுசெய்தோம்.

அது கோயிலூர் மடம் என்று அழைக்கப்படும் ஒரு சத்திரம். அதிகமும் நகரத்தார் சமூகம் தங்குவது. ஆனால் அனைவருக்கும் பொது. அங்கிருக்கும் நிர்வாகியம்மாளை அனைவரும் ஆச்சி என அழைத்தனர். அங்கேயே தங்கி விருந்தினர்களை உபசரிப்பதை ஒரு யோகமாகச் செய்துவருகிறார்கள். அழகான சூழல். வசதியான அறைகள்.

காலையில் எழுந்ததுமே குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். நல்ல சாம்பார், சாதம். பசியில் ருசி பெருகும் விந்தை எத்தனை அனுபவித்தாலும் சலிக்காத அற்புதம். கோயிலூர் மடத்தின் தலைவர் நாச்சியப்ப சுவாமிகளின் படம் சுவரில் இருந்தது. பசி தணிந்து சுவாமிகளின் முகத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

ரிஷிகேஷ் ஊரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். விடுதிகள், கோயில்கள் வழியாக நடந்து லட்சுமண் ஜூலா சென்றோம். கங்கையை மிகச்சிறந்த கோணத்தில் பார்ப்பதற்கான இடங்களில் ஒன்று லட்சுமண் ஜூலா. ஜூலா என்றால் தொட்டில் அது ஒரு கம்பிப்பாலம். வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்டது. ஐந்தடி அகலம். அதன் வழியாக சாரி சாரியாக மறுகரைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். கங்கையின் இருபக்கமும் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் தீபங்கள் ஒளிர்ந்தன. மணியோசை ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தப்பகுதியிலிருந்த விழாக்கோலம் மனதை மயக்குவதென உணர நாம் மனிதர்களை நேசிக்க வேண்டும். அந்த மனிதர்களை முடிவிலாத இறந்த காலத்துடன் பிணைக்கும் பண்பாடு மீது நமக்கு ஒரு பற்று இருக்க வேண்டும்.

வியர்க்கத்தொடங்கியது. கங்கையில் குளிக்கப்போகலாம் என்று சரியான இடம் தேடினோம். கூட்டம் இல்லாத படித்துறைக்காக தேடிச்சென்றுகொண்டே இருந்தோம். “ஊரே கூட்டமா இருக்கு சார். எங்கபாத்தாலும் காலவைக்க முடியாதபடித்தான் இருக்கும்” என்றார் கிருஷ்ணன். ரிஷிகேஷ் தெருக்களில் சுற்றி நடந்து திரிவேணிகட் என்ற படித்துறையை அடைந்தோம். உக்கிரமான வெயில் இருந்தாலும் இமயமலைக்காற்று கொஞ்சம் குளுமை அளித்தது.

திரிவேணி கட் செயற்கையாக சிவப்புக்கற்களால் உருவாக்கப்பட்ட பெரிய படித்துறை. குளிப்பதற்காக கங்கையின் நீர்ப்பெருக்கை வெட்டி கிளை ஒன்று அமைத்திருந்தார்கள். தண்ணீர் பனிக்குளிருடன் விரைக்க வைத்தது. சற்று முன்னர்தான் வெயிலில் வெந்தோம் என்பதே மறந்து விட்டது. ஆச்சரியமாக மிகமிகச் சுத்தமாக இருந்தது. இத்தனைக்கும் அப்பகுதியெங்கும் பெருங்கூட்டம்.

கங்கையில் கண்சிவக்க நீராடி விட்டு கிளம்பினோம். படித்துறை சுத்தமாக இருந்தது. ஏராளமான கோயில்களில் இருந்து பஜனை ஒலி கேட்டபடியே இருந்தது. கான்கிரீட்டில் கட்டப்பட்ட பெரிய சிவன் சிலையும் கீதோபதேசம் சிலையும் வழக்கமான கான்கிரீட்தனம் இல்லாமல் உயிரோட்டமாக இருந்தன. அதற்குக்கீழே விதவிதமான ராஜஸ்தானி தொப்பி அணிந்த வயோதிகர்கள் வழிபட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த முகங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். வயோதிகமுகங்களில் தெரியும் ஒரு கனிவும் சோர்வே இல்லாத அமைதியும் இந்தியாவுக்கே உரியவை என்று தோன்றும். இழந்தவை குறித்த ஏக்கமும் வரும் இறப்பு குறித்த அச்சமும் இல்லாமல் முதுமையில் வாழ்வதற்கு ஆழ்ந்த மனநிலை ஒன்றுதேவை. அதை இந்தியாவில் வேரூன்றியிருக்கும் கர்மா கொள்கை அவர்களுக்கு அளிக்கிறது. அனைத்தும் நம்மைமீறிய பெருநியதி ஒன்றின் ஆடல், நாம் அப்பெருங்காற்றில் தூசுத்துளிகளே என்னும் தன்னுணர்வு. அதை சுருக்கங்களோடிய முகங்களில் தெளிவாகவே காணமுடியும்.

நான் தனியாக துண்டைக்காயவைத்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு தலைப்பாகை முதியவர் எழுந்துவந்து எனக்கு இலைத்தொன்னையில் ஊறவைத்த பொரியும் வெல்லமும் கலந்த பிரசாதத்தைக்கொடுத்தார். முகம் சுருக்கங்கள் இழுபட்டு வலையாக விரிய புன்னகையில் ஒளிவிட்டது. “சிவா கி பிரசாத்” என்றார். வாங்கி சாப்பிட்டேன். அப்பால் நண்பர்கள் படியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அனிச்சையாக இலையை கீழே போட்டுவிட்டு அவர்களை நோக்கிச் சென்றேன்

அந்த முதியவர் கையை ஊன்றி எழுந்து வந்து அந்தத் தொன்னையை எடுத்தார். உடலே கூசிவிட்டது. ஓடிவந்து “மன்னிக்கவும்… மன்னிக்கவும்” என்று சொல்லி அதை எடுக்கப்போனேன். “பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு அவரே எடுத்துக்கொண்டார். “கங்கையன்னையின் கரை… தெய்வங்களின் இடம்” என்றார். நான் மீண்டும் மன்னிப்பு கோரினேன். ஏன் அதைச்செய்தேன் என்றே புரியவில்லை. உண்மையில் குப்பைபோடுவது என் வழக்கமே அல்ல. வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தபின் மறந்தும் குப்பையை கீழேபோடுவதில்லை. அது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது. அன்று என்ன ஆயிற்றென்று இன்றும் எனக்குத்தெரியாது.

நண்பர்கள் அருகே சென்று அமர்ந்துகொண்டேன். கங்கையில் குளிப்பதற்காக ஒரு தமிழ்க்கூட்டம் வந்திருந்தது. கட்டான உடல்கொண்ட, பதினாறிலிருந்து இருபதுக்குள் வயதுள்ள கரிய இளைஞர்கள். எல்லாருமே குடுமி வைத்து பூணூல் போட்டவர்கள். அங்குள்ள ஏதோ மடத்தில் வேதம் பயில்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நீராடி கூச்சலிட்டு கும்மாளமிடுவதை பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்

சட்டென்று அவர்களில் ஒருவனை அந்தப்படிகளில் வந்துகொண்டிருந்த ஒரு வடஇந்திய மனிதர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார். பெரிய தலைப்பாகை கட்டிய அறுபது வயது மனிதர். கைநீட்டியபடி இந்தியில் உரக்க வசைபாடினார். தமிழகர்கள் தாக்கப்படுவதைக் கண்டு கோவை நண்பர் அருண் ஓடிப்போய் “என்ன? என்ன நடந்தது? ஏன் அடித்தீர்கள்?” என்று கேட்டார். அரங்கசாமியும் ஓடிச் சென்றார்.

எல்லாரும் சென்று குழுமவேண்டாம் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். அரங்கசாமி உரத்தகுரலில் அந்த தலைப்பாகைக்காரரிடம் ஏதோ கேட்டார். அவர் உதிரிச் சொற்களில் இவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். சில நிமிடங்களில் இருவரும் சாந்தமாக திரும்பிவிட்டனர். “என்ன?” என்று நான் கேட்டேன். “ஒண்ணுமில்ல சார் விடுங்க” என்றார் அரங்கசாமி. “ஏன் அடித்தார்?” என்று நான் மீண்டும் கேட்ட்டேன். “ஒண்ணுமில்ல சார், நம்ம பசங்க” என்றார் அரங்கசாமி

ஆனால் அருண் கோபத்துடன் நடந்தது என்ன என்று சொன்னார். அடிவாங்கிய அந்தத் தமிழ் இளைஞன் கங்கையின் நடுவே இருந்த மணல்திட்டு மேல் ஏறிச்சென்று மலம் கழித்திருக்கிறான். அறைந்தவர் அந்தப் படித்துறையின் காவலர். “கங்கையன்னையின் மடி.. கங்கையன்னையின் மடி” என்று சொல்லிக்கொண்டே இருந்தார் அவர். அருண் “அடிக்க வேண்டியதுதான் சார். காவாலிப்பசங்க. மானத்தை வாங்கிட்டாங்க’’ என்றார்

அந்த அடிவாங்கிய இளைஞன் ஒன்றும் நடக்காதது போல நண்பர்களுடன் குளிக்க ஆரம்பித்தான். தமிழகத்தின் ஏதாவது கிராமத்தைச்சேர்ந்த வறிய குடும்பத்து இளைஞனாக இருப்பான். ஊரில் மிகச்சாதாரணமாக நிகழ்வது இது. உண்மையிலேயே அவனுக்கு அவன் செய்த பிழை என்ன என்றே புரிந்திருக்காது.

நான் அந்த முதியவரின் முகத்தைப்பார்க்கக் கூசினேன். தலைகுனிந்தபடி நடந்து கடந்தேன். உண்மையில் அது ஒரு பெரிய சுயதரிசனம். அங்குள்ளவர்கள் அழுக்கானவர்கள், குப்பைபோடுபவர்கள் என எப்படி இயல்பாகவே நம் மனம் நம்புகிறது? ஏனென்றால் அவர்கள் நம்மவர்கள் அல்ல. நம் குறை நமக்குக் கண்ணில்படுவதில்லை. அறைவிழுந்தாலொழிய.

அவர்களும் நம்மைப்போலத்தான். குப்பையும் அழுக்கும் குறித்த பிரக்ஞை இந்தியாவில் சர்வதேச விமானநிலையங்களில் பயணம்செய்யும் உயர்குடிப்பயணிகளிடம்கூட இல்லை. ஆனால் நம்மைவிட மேலாக ஒன்று அவர்களிடம் உள்ளது. ஆழ்ந்த மதநம்பிக்கை. அது சூழலையும் நீரையும் காத்துவந்தது இன்றுவரை. நாம் அதையும் இழந்துவிட்டோம்.

 

[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சயாம் –பர்மா ரயில் பாதை

$
0
0
y
அன்பு நண்பர்களே வணக்கம்,
எதிர்வரும் சனிக்கிழமை மாலை சயாம் – பர்மா ரயில் பாதை என்ற ஆவணப் படத்தை மதுரையில் திரையிடுகிறோம்.
இந்நிகழ்விற்கு உங்களையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும் உரிய நேரத்திற்கு முன்பாக வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்.
தமிழர்களது வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடர்ச்சியே இந்த ஆவணப்படம். பத்தாண்டு கடின உழைப்பினால் உருவான இப்படத்தை தோழர். குறிஞ்சி வேந்தன் இயக்கியுள்ளார். இயக்குநரும் இந்நிகழ்விற்கு பங்கேற்கிறார்.
நேரில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
வே. அலெக்ஸ்
தலித் விடுதலை இயக்கம்
நாள்       24-9-2016 சனிக்கிழமை
இடம்     தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை
மாலை   5 மணி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3

$
0
0

இன்று இரண்டாவது நாள் அமர்வு. நேற்று மாலை வளைகுடாப்பூந்தோட்டம் பார்த்துவிட்டு திரும்பியபோது கிருஷ்ணனும் சந்திரசேகரும் வந்தார்கள். சப்பாத்தி சுட்டு சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கே ரெடியாகிவிடவேண்டும் என சரவணன் சொல்லியிருந்தார்.

இருந்தும் இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இத்தகைய நிகழ்ச்சிகளின் பிரச்சினையே இதுதான் நீண்ட அரங்குகள் நம்மை மேலும் பேசவைக்கின்றன. உள்ளம் கொப்பளிப்பதைப் பேசாமல் தூங்கமுடியாது

DSC_7714

ஏழரைக்கு அவர் வந்தார் . எட்டேகால் மணிக்கெல்லாம் நாங்கள் எம்டிஐஎஸ் வளாகத்திற்குச் சென்றுவிட்டோம். செந்தேசாவில் தங்கிய கும்பல் அங்கே முன்னரே வேனில் வந்திறங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

 

காலையுணவுக்குப்பின் அரங்கு தொடங்கியது. விஜயராகவன் முன்னுரை சொல்லி விழாவைத் தொடங்கிவைத்தார்.

விஜயராகவன் வரவேற்புரை

 

முதல் அமர்வில் கவிதைகளைப்பற்றி வேணு வெட்ராயன் பேசினார். தேவதேவன் கவிதைகளை முன்வைத்து கவிதை உருவாகும் கணம், கவிதை வாசகனில் நிகழும் கணம் பற்றி விளக்கினார். இந்திய அறிதல்முறைகளின் வழியாக, குறிப்பாக பௌத்த மெய்யியலின் கோணத்தில் அவர் அணுகியது மாறுபட்டதாக இருந்தது.

 

தேவதேவனின் கூழாங்கற்கள் என்னும் கவிதையை எடுத்துக்கொண்டு அதிலுள்ள கவிதையாக்கம் கூழாங்கல் என்று மூளை அறியும் அனைத்தையும் அழித்து ஒரு திகைப்பை உருவாக்குவதும் அதன் வழியாக புதிய அனுபவத்தை அளிப்பதும்தான் என விளக்கினார்

கவிதை முகிழ்ப்பதும் அறியப்படுவதும் – வேணு வெட்ராயன்

 

அடுத்ததாக சிங்கப்பூரைச்சேர்ந்த செல்வி கனகலதா கவிதைகளைப்பற்றிப் பேசினார். அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் இலங்கைக் கவிதைகளைச் சார்ந்தே அவரது விவாதம் அமைந்திருந்தது. கவிதை வாசிப்பின் படிநிலைகளைப்பற்றி பேசினார். கவிதைகளை வாசகன் வரிகளை மட்டும் கொண்டு வாசிப்பது, கவிஞனின் வாழ்க்கையைக்  கொண்டு வாசிப்பது என்னும் இரு வகை வாசிப்புகள் சாத்தியமாவதைப்பற்றிப் பேசினார்

ராஜகோபலன் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றிப் பேசுகிறார்

 

தேநீர் இடைவேளைக்குப்பின்னர்   புனைவுகளைப்பற்றிய  விவாத அரங்கில் கிருஷ்ணன் அவரைக் கவர்ந்த ஏழு புனைவுத்தருனங்களைச் சார்ந்து ஒரு தீவிரமான தருணம் எப்படி  ஒரு மனிதனை முன்பில்லாதவனாக மாற்றுகிறது, தன்னைக் கண்டடையச்செய்கிறது, ஒன்றுமே செய்வதில்லை என்னும் கோணத்தில் விளக்கினார்.

செல்வி கனகலதா. கவிதையின் வாசிப்புமுறைகள் பற்றிப்பேசுகிறார்

 

அசடன் [தஸ்தயேவ்ஸ்கி] ஃபாதர் செர்ஜியஸ் [தல்ஸ்தோய்] ஃபாதர்  [ ] தந்தை கோரியா [ பால்சாக்]சதுரங்க குதிரைகள் [ கிரிராஜ் கிஷோர்]காமினி மூலம்[ ஆ. மாதவன்] நிழலின் தனிமை[தேவி பாரதி] ஆகிய புனைவுகளை அவர் தெரிவுசெய்திருந்தார்

 

பொதுவாக நிகழ்வதுபோல விவாதத்தில் இக்கதைகளுடன் இணைந்துகொள்ளும் கதைகளும் நாவல்தருணங்களும் நினைவுகூரப்பட்டன். ஏனஸ்டோ டல்லாஸின் வெறும்நுரைதான், பிரேம்சந்தின் லட்டு, அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, சாமர்செட் மாமின் ரெயின் என . இவ்வாறு ஒரு கதை பலகதைகளை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் அனுபவமே இலக்கிய அனுபவமாக் ஆகியது.

 

சு வேணுகோபால் இடையீடு

 

மதிய அமர்வில் சௌந்தர் தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கியநிகேதனம் நாவலைப்பற்றிப் பேசினார்.  பழைமைக்கும் புதுமைக்குமான போராட்டமும் பரஸ்பர அங்கீகாரமும் ஆக அந்நாவலைப் பார்க்கலாம் என்றார். இந்தியாவுக்கு மேற்குலகுக்குமான இணக்கும் பிணக்குமாகவும் அந்நாவலைப்பார்க்கலாம் என்றார்

 

தொடர்ந்த விவாதத்தில் ஆயுர்வேதம் அலோபதி ஆகிய முறைமைகளைப்பற்றிய விவாதமாக மரபு நவீனம் ஆகியவற்றுக்கிடையே இருக்கும் ஒத்திசைவு மற்றும் முரண்பாடு பற்றி பேசப்பட்டது

புனைவின் திருப்புமுனைத் தருண்ங்கள் – கிருஷ்ணன்

 

ராஜகோபாலன் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலைப்பற்றிப் பேசினார். சிங்காரத்தின் சாகச சித்தரிப்பு, மொழிநடை அங்கதம் ஆகியவற்றைப்பற்றி குறிப்பிட்டார்.

 

விவாதத்தில் உலகளாவிப் பரந்துள்ள தமிழ்ச்சமூகம் மிகக்குறைவாகவே உலகம் பற்றி எழுதியிருக்கிறது, காரணம் வெளிநோக்கிப்பார்க்கும் பார்வையே இல்லாததுதான் என குறிப்பிடப்பட்டது.

எம் கோபாலகிருஷ்ணனுடன் நேர்முகம்

 

 

எம்.கோபாலகிருஷ்ணனுடன் அவருடைய புனைவுலகம் அவர் எழுதிவரும் படைப்புகளைப்பற்றி வாசகர்கள் கேள்வி கேட்க அவர் பதிலிறுத்தார். மிகப்பெரிய சமூக இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ள தமிழில் அனேகமாக அதைப்பற்றி பெரிதாக ஏதும் எழுதப்படவில்லை என்று சொல்லப்பட்டது. அப்படி எழுதும் எண்ணம் அப்போது உருவாவதாக கோபாலகிருஷ்ணன் சொன்னார்

 

முடிவில் சிங்கப்பூர் இலக்கியச்சூழலைப்பற்றியும் அங்கு தமிழ் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப்பற்றியும் பேரா அருண் மகிழ்நன் பேசினார்.

ஆரோக்கியநிகேதனம் – சௌந்தர் பேசுகிறார்

 

மாலை ஐந்துமணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதன்பின் புத்தரின் பல் வைக்கப்பட்டிருக்கும் ஆலயத்திற்குச் சென்றோம். சீனக் கடைகள் வழியாக நடந்து சிங்கப்பூரின் சிங்கச் சிலை அமைந்திருக்கும் சதுக்கத்திற்கு வந்தோம். இரவு ஒன்பது மணிவரை அங்கே சுற்றிக்கொண்டிருந்தோம். ஒரு கோஷ்டி ஷாப்பிங் என்று தேக்கோ சென்றது. இன்னொரு கோஷ்டி வேறு இடங்களில் சுற்றுவதற்காகச் சென்றது.

பேரா அருண் மகிழ்நன் அவர்களுடன்

 

படங்கள் வெங்கடாச்சலம் ஏகாம்பரம்

மேலும்படங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோப்ரா

$
0
0

Forest

 

எங்கள் கோதாவரிப்பயணம் இணையம் வழியாகப் புகழ்பெற்றது. இன்னொரு கோதாவரிப்பயணம் செய்தேயாகவேண்டும் என்றனர் நண்பர்கள். குறிப்பாக எங்களுடன் சமணக் கோயில்களுக்கெல்லாம் வந்த நண்பர் லண்டன் முத்துக்கிருஷ்ணன் அடம்பிடித்தார். ஆகவே இன்னொரு பயணத்துக்கு நண்பர் சேலம் பிரசாத் ஏற்பாடு செய்தார். ராமச்சந்திர ஷர்மா அப்போது அமெரிக்கா சென்றுவிட்டிருந்தார்.

முத்துக்கிருஷ்ணன் இதற்கென லண்டனிலிருந்து கிளம்பி வந்தார். நாங்கள் பெங்களூரில் இருந்து கும்பலாக கோதாவரிக்குக் கிளம்பும் நாளில் செய்திவந்தது. படகுப்பயணம் செய்யமுடியாது. ஏனென்றால் கோதாவரியில் பெருவெள்ளம். கோதாவரி வெள்ளம் என்பது சாதாரணமானது அல்ல. சும்மாவே பெருவெள்ளம் பெருக்கெடுக்கும் நதி அது.

எல்லாம் திட்டமிட்டாகிவிட்டது. கிளம்பும் மனநிலை வந்துவிட்டது. என்ன செய்வது? கிருஷ்ணன் ஒரு மாற்றுத்திட்டம் சொன்னார். பெங்களூரிலிருந்து மங்களூர் செல்லும் பாதையிலுள்ள ஆகும்பே என்னும் ஊருக்குச் செல்லலாம். தென்னாட்டிலேயே அதிகமான மழைபெய்யும் ஊர் அதுதான். வெள்ளத்தால் தடையான பயணத்தை மழையில் கொண்டாடுவோம்

ஆகவே உடனே ஒரு வேன் ஏற்பாடுசெய்துகொண்டு கூட்டமாக ஆகும்பே சென்றோம். அதற்குமுன் அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. சுற்றுலா மையமாக இருக்கும் என நம்பினோம். செல்லும்போதே மழை பெய்துகொண்டிருந்தது. ஆகும்பே சென்றடைந்தபோது மழை பேருருக்கொண்டு எங்களைச் சூழ்ந்திருந்தது. அந்த நீர்த்திரைக்கு அப்பால் ஊர் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருந்தது.

ஆகும்பேயில் ஒரே ஒரு தங்கும்விடுதிதான். அதில் பயணிகள் என எவருமே இல்லை. எல்லா அறையும் காலி. அகவே பேரம்பேசி மிகக்குறைவான கட்டணத்துக்கு அறைகளை அமர்த்திக்கொண்டோம். மழைச்சாரலில் சுவர்கள் ஈரம்படிந்திருந்தன. போர்வைகளில் கூட மெல்லிய நீர்த்துளிப்படலம். தலையணை ஈரத்துணியாலானதுபோலிருந்தது. தரையில் நடந்தால் காலடிகள் ஈரத்தடமாக விழுந்தன

“மழைக்குப் பயப்படக்கூடாது. நாம் வந்திருப்பதே மழைநனையத்தான்” என்றார் கிருஷ்ணன். “ஆமாம்” என்று முத்துக்கிருஷ்ணன் பரிதாபமாகச் சொன்னார். லண்டனின் வருடத்தில் முந்நூறுநாள் மழைபெய்யும். மிஞ்சியநாட்களில் புயல். ”அதுக்கு முன்னாடி சாப்பிடலாமே” என ராஜமாணிக்கம் மென்மையாகக் கேட்டார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கடுமையான பசி. வரும் வழியெங்கும் ஒரு டீக்கடை கூட திறந்திருக்கவில்லை

வெளியே நல்ல இருட்டு. மழை இருட்டுக்குள் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. மழைக்கோட்டுகள் அணிந்துகொண்டு சேற்றிலும் பெருகி ஓடிய நீரிலுமாக நடந்து சென்று விடுதி நடத்துபவரிடம் “இங்கே சாப்பிட என்னென்ன கிடைக்கும்?” என்றோம். “அதோ அந்த தெருமுனையில் ஷேனாய் ஒருவர் சிறிய மெஸ் நடத்துகிறார். இங்கே வேலைபார்க்கும் வாத்தியார்கள் தான் அங்கே சாப்பிடுவார்கள். அனேகமாக கடையை மூடியிருப்பார்” என்றா

பதறியடித்துக்கொண்டு அங்கே சென்றோம். கடையை சாத்திவிட்டிருந்தனர். “இந்தமழையிலே பட்டினியா? இதுக்காய்யா வந்தோம்?” என முத்துக்கிருஷ்ணன் கேட்கவில்லை, முகம் அதைக்காட்டியது. நம்பிக்கை இழக்காத கிருஷ்ணன் கதவைத்தட்டினார். அரைவாசி திறந்த ஒரு வயதான பிராமணர் “கடை மூடிவிட்டோம்” என கன்னடத்தில் சொன்னார்

”நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம். மதியமே கூட சாப்பிடவில்லை. வேறு கடையே இல்லை” என தமிழில் சொன்னோம். ஷேனாய் கதவைத்திறந்து “வாங்க” என்றபின் “ரவா மட்டும்தான் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவீர்களா?” என்றார். “கொண்டாடுவோம்” என்றார் கிருஷ்ணன்.

அவர் உள்ளே சென்று படுத்துவிட்டிருந்த தன் மனைவியை எழுப்பும் ஒலி கேட்டது. அந்தப்பெண்மணி எழுந்து அடுப்பு மூட்டினாள். புகையின் மணம். அதன்பின் உப்புமாவின் மணம். பசி என்பது எவ்வளவு இனிய உணர்வு என அப்போதுதான் அறிந்தோம்.

ஷேனாய் உப்புமாவை எங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறினார். தேய்ந்துபோன பற்கள். ஒருவார வளர்ச்சிகொண்ட நரைத்தாடி. குட்டையான உடல். ஆனால் நான் பார்த்த மிக அழகிய சிரிப்புகளில் ஒன்று அது. சிலர் எதற்கும் வாய்விட்டு உரக்கநகைப்பார்கள். ஷேனாய் அத்தகையவர்.

”நன்றாக நனைந்துவிட்டீர்களா? இங்கே நனையாமல் வாழவே முடியாது” என்றார். “இங்கே இதுதான் மழைக்காலமா?” என்றார் கிருஷ்ணன். “இங்கே வேறு காலமே இல்லையே” என்றார் ஷேனாய். “தென்னிந்தியாவிலேயே மழை மிகுந்த இடம் என்றார்கள்” என்றேன். “ஆமாம்… அதனால்தான் இங்கே நிறைய மழைபெய்கிறது” என்று சொல்லி வெடித்துச்சிரித்தார்.

சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது “காலையில் வாருங்கள். இட்லி தோசை எல்லாம் உண்டு” என்றார் ஷேனாய். “கர்நாடக இட்லி உண்டா?” என்றார் ராஜமாணிக்கம். “உண்டு, செய்து தருகிறேன்” என்றார் ஷேனாய்

மழை நின்றுபெய்தது. எங்கும் மழையின் ஓலம். “சார், மழைக்காக வந்தாச்சு. வயிறும் நிறைஞ்சாச்சு. ஒரு மழைநடை போவமா?” என்றார் கிருஷ்ணன். மழையில் இருண்ட சாலைவழியாக கூட்டமாக நடந்தோம். “கதை சொல்லுங்க சார். இந்த மூடுக்கேத்த கதை” என்றார் கடலூர் சீனு. நான் பேய்க்கதைகள் சொல்லத் தொடங்கினேன்

முதலில் கேலி சிரிப்பு என அதைக்கேட்டவர்கள் மெல்ல ஒரு மந்தையாக திரண்டு கைகளைப் பற்றிக்கொண்டார்கள். மழையிலேயே நடுங்கிக்கொண்டு திரும்பிவந்தோம். விடுதிக்குள் நுழையும்போது கடலூர் சீனு “தலையை எண்ணிக்கிடுங்க. ஒண்ணு குறைஞ்சாலும் தப்பு. கூடினாலும் தப்பு” என்றார். சிரித்துக்கொண்டே மழையின் குரல்கேட்டுக்கொண்டு தூங்கினோம்

காலையில் ஷெனாயின் ஓட்டலில் இட்லி தோசை என ஆளாளுக்கு வெறிகொண்டு சாப்பிட்டார்கள். “இந்த சிரிப்புக்காகவே நாலு தோசை ஜாஸ்தியா சாப்பிடலாம் சார்” என்றார் ராஜகோபாலன். “மழையைப்பாக்க இந்த தூரம் வரை ஏன் வரணும்? உங்க ஊர்ல மழை இல்லியா?” என்றார் ஷேனாய். “அது வேற மழை” என்றார் கிருஷ்ணன்

ஆகும்பே விசித்திரமான ஊர். மழைக்குள் நின்றபடி மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன். மழைக்குள் பையன்கள் கால்பந்து விளையாடினார்கள். மழைநனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றன. மழைக்குள்ளேயே நனைந்துசொட்டியபடி ஓர் அம்மாள் காய்கறிகளைப் பரப்பி வைத்து விற்றாள். மழை அவர்களுக்கு வெயில்போல. அது பாட்டுக்கு பொழியும், அவ்வளவுதான்

நாங்கள் இரவு நடந்து சென்ற காட்டுவழியாக அருவி ஒன்றைப் பார்க்கச்சென்றோம். கிருஷ்ணன் தான் முதலில் அந்த படத்தைப்பார்த்தார். “சார்!” என அலறினார். ஆகும்பே ராஜநாகத்தின் சரணாலயம் என அறிந்துகொண்டோம். அந்தக்காடு முழுக்கவே ராஜநாகங்கள் உள்ளன. ஆகவே இருட்டில் நடமாடவேண்டாம் என்றும் புதர்களுக்குள் செல்லக்கூடாதென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது!

அதன்பின்னர்தான் கிருஷ்ணனுக்கும் ராஜமாணிக்கத்திற்கும் நினைவுச்சுரப்பிகள் ஊறி ஆகும்பே ராஜநாகச் சரணாலயம் பற்றி வாசித்தவை நினைவுக்கு வரத்தொடங்கின. அங்கே இரண்டு மாதங்களுக்கு முன்னால்கூட ஒருவர் நச்சுக்கடி பட்டு இறந்திருக்கிறார். ஆகும்பேயில் ராஜநாகத்திற்கு வருடம்தோறும் பல பலிகள் உண்டு

”காலெல்லாம் கூசுது சார்” என்றார் ராஜகோபாலன். அத்தனைபேரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். ராஜநாகம் கடித்தால் இறப்பு உறுதி. அதன் குட்டியே ஒரு யானையைக்கொல்லக்கூடிய நஞ்சு கொண்டது. உலகின் மிக நஞ்சுள்ள விலங்குகளில் ஒன்று அது. நேராக நரம்புகளை தாக்குவது அதன் விஷம்

“நேத்து இந்தப்பாதையிலதான் போனோம் சார்” என்றார் கிருஷ்ணன். “சொல்லாதீங்க” என்றார் சிவராமன். அருவியைப்பார்த்தபோது அது படமெடுத்த ராஜநாகம் போலத் தோன்றியது. எதைப்பார்த்தாலும் ராஜநாகம். கால்கள் தரையை தொட்டதுமே உலுக்கிக்கொண்டன.

மதியச் சாப்பாட்டுக்குத் திரும்பி வந்தோம். வழியில் ஒருவர் அறிமுகமானார். ஆசிரியர். வேற்றூர்க்காரர் “எங்க சாப்பாடு? கோப்ரா கடையிலயா?” என்றார். புரியவில்லை. “கொங்கணி பிராமணர் என்பதன் சுருக்கம்சார்” என சிரித்தார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு. “சும்மா, சுவாமியை கிண்டல்செய்வதற்காக. ஆனால் அவரை எவரும் கோபப்படவைக்கமுடியாது” என்றார் அவர்

மதியம் சாப்பிடும்பொது மிகப்பெரிய நகைச்சுவையை சற்றுமுன் கேட்டவர்போல சிரித்துக்கொண்டிருந்த ஷேனாயிடம் “உங்களை கோப்ரா என்கிறார்கள்” என்றேன். “இது கோப்ரா சரணாலயம். கடிச்சா கேஸில்லை” என்று அவர் உரக்கச் சிரித்தார். “இந்தக் கோப்ராவுக்கு விஷம் இல்லை” என்றார் அங்கிருந்த ஒருவர்.

கிளம்பும்போது கிருஷ்ணன் சொன்னார். “கிங் கோப்ரா சாங்சுவரின்னு தெரிஞ்சப்பவே இந்த ஊர் பயங்கரமா ஆயிட்டுதுசார். இதோட இயற்கை அழகுகள் கூட கண்ணில படாம ஆயிட்டுது. ஆனா இப்ப இந்த கோப்ராவோட சிரிப்பப் பாத்தப்ப எல்லாமே மாறிட்டுது. ஊரே அழகா தெரியுது”

ஷேனாயிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். மழை சற்று விட்டு இளவெயில் நிறைந்தது வானில். இலைகள் ஒளிசொட்டின. காற்று நீர்த்துளிகளை அள்ளி தூவியது. என் மனதில் கோப்ரா என்றால் ஓர் இனிய அழகிய விலங்கு என எப்படி ஒரு மனச்சித்திரம் உருவாகியது, எப்படி அது இன்றும் நீடிக்கிறது என்பதை நீண்டநாட்களுக்குப்பின் நினைத்துக்கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது.

[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கப்பூர் நாட்கள்

$
0
0

சிங்கப்பூரில் சந்திப்பு அதுவும் முப்பதுபேர் என்றதுமே ஒன்றை முடிவுசெய்துவிட்டோம், தங்குமிடம் ஏற்பாடுசெய்து விழாவை ஒருங்கிணைப்பது மட்டுமே நம் வேலை.முப்பதுபேரையும்   ‘கட்டி மேய்ப்பது’ சாத்தியமல்ல ஆகவே இங்கு வந்தபின் அவர்களைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை. தாங்களே சிறிய குழுக்களாக செல்லவேண்டியதுதான். செந்தேசா கேளிக்கைத்தீவு. விரும்பியதைச் செய்யலாம்

ஆகவே நான்கு நான்குபேராகப்பிரிந்து டாக்ஸியில் செல்வதாகவும் தனித்தனிக் குழுக்களாகவே சுற்றுவதாகவும் திட்டம். நான் எல்லா நாட்களிலும் கலந்துகொள்ள முடியவில்லை. எனக்கு கல்லூரி வகுப்புகள் இருந்தன. எனக்கு அனுப்பப்பட்ட படங்கள் இவை. மேலும் பதிவுகளை நண்பர்கள் எழுதக்கூடும்

7

அனைவரையும் கூட்டிச்செல்ல திரும்பிக்கொண்டுவிட ஒரு வேன் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அதற்கான காத்திருப்பு. இத்தகைய சந்திப்புகளில் அரட்டையே எப்போதும் முக்கியமான நிகழ்வு

8

எம் ஐ டி எஸ் வளாகம். உயர்தர நிர்வாகவியல் கல்லூரி. சர்வதேச அளவில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்தலைவர்களின் பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள் என்பதனால் கல்வி அளவுக்கே தொடர்புகளும் கிடைக்கின்றன. ராபர்ட் முகாபேயின் மகள் சென்ற ஆண்டு பட்டம்பெற்றவர்களில் ஒருவர். தமிழக அரசியல்பெருந்தலைவர்கள் பலரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கொள்ளுப்பேரரர்கள் இங்கே படிக்கிறார்கள்

 

9

எம் ஐ டி எஸுக்குள் நுழைதல். என்னதான் இலக்கியக்கூட்டம் என்றாலும் கல்லூரி என்பதனால் ஒரு வகுப்பு மனநிலை வந்துவிட்டது. அதிலும் தோளில் பையுடன் கடைசியாக பேராசிரியர் சு வேணுகோபால் ‘பயல்களை பத்திக்கொண்டு’ செல்லும்போது

 

4

எம்.ஐ.டி.எஸ் அரங்கு. எண்பதுபேர் அமரலாம். எழுபதுபேர் வரை கலந்துகொண்டார்கள். ஒரே பிரச்சினை குளிர். 23 டிகிரி ஆக ஏஸி வைக்கப்பட்டிருந்தது. கூட்டவோ குறைக்கவோ முடியாது. மொத்தவளாகமும் ஒரே தட்பவெப்பநிலை.

 

a

மீனாம்பிகை ,சரவணன், அருணாச்சலம் மகராஜன்

 

2

மகராஜன் அருணாச்சலம், அரங்கசாமி, கணேஷ், அருண் மகிழ்நன், சரவணன்

 

 

1

ஈரோடு கும்பல். வழக்கமாக ஒரு பதினைந்துபேர் வருவார்கள். சிங்கப்பூர் ஆகையால் நான்குபேர் மட்டும். கிருஷ்ணன் , செந்தில், சிவா. படத்தில் இல்லாத இன்னொருவர் விஜயராகவ்ன்.

 

c

புத்தர் கோயிலின் காவல் போதிசத்வர்

e

இளம் தஸ்த்யாயெவ்ஸ்கி அல்லது முற்றாத ஓஷோ – டாக்டர் வேணு வெட்ராயன்

g

வேணு வெட்ராயன், ராஜகோபாலன், சரவணன், சௌந்தர், விஜயராகவன்

m

கருத்தரங்குக்கு வந்தவர்கள் தங்கவைக்கப்பட்ட குடில். செந்தேசா தீவின் கடற்கரை ஓரமாக நட்சத்திர விடுதிக்குரிய வசதிகளுடன் அதேசமயம் காட்டுக்குள் அமைந்த பாவனையும் கொண்ட விடுதி. இப்பயணத்தின் முக்கியமான அம்சமே இந்த விடுதிதான்

f

kala

கலந்துகொண்டவர்கள். நிகழ்ச்சியின் நிறைவில் ஒரு படம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கப்பூருக்கு விடைகொடுத்தல்

$
0
0
IMG_20160919_195132_HDR

கோபாலகிருஷ்ணன், சௌந்தர், அருணாச்சலம் மகராஜன் ஆகியோருக்கு சு வேணுகோபால் எதையோ நடித்துக்காட்டுகிறார்

 

இன்று காலையிலேயே சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கிளம்பி செந்தேசாவிலுள்ள யூனிவெர்சல் ஸ்டுடியோ அரங்குக்கு சென்றார்கள். அது ஒரு மாபெரும் களியாட்ட மையம். அறிவியலும் கலையும் கேளிக்கையாகும் அற்புதம் . நான்கு பரிமாணக் காட்சிகள், விழிகளை ஏமாற்றும் பல்வேறு காட்சியமைப்புகள்

IMG_20160919_195244_HDR

நான் கல்லூரிக்குச் சென்றுவிட்டேன். மாலை என் துறைத்தலைவர் சிவகுமார் என்னை அருகிலுள்ள அறிவியல் மையத்தில் இருக்கும் மேக்னாதியேட்டருக்கு அழைத்துச் சென்றார். மிகப்பிரம்மாண்டமான அரைக்கோளவடிவத் திரையில் அறிவியல் படம் ஒன்றை பார்த்தேன். மிக நுண்ணிய, மிகப்பிரம்மாண்டமான, மிக மெதுவான ,மிக விரைவான தளங்களில் இவ்வுலகில் என்னென்ன நிகழ்கிறது என்பதைக் காட்டும் படம். ‘அலகிலா விளையாட்டு’ என தலைப்புவைக்கலாம்

IMG_20160919_195147_HDR

சு வேணுகோபால் அவர் எகிப்திய மம்மிகளைப்பார்த்த அனுபவத்தைச் சொல்கிறார். விமானநிலையம் சாங்கி

 

வீட்டுக்கு வந்து குளித்து சித்தமானபோது சரவணன் வந்தார். அவருடன் சென்று விமானநிலையத்தைச் சென்றடைந்தேன். பலகுழுக்களாகக் கிளம்பிச்சென்றவர்களில் எஞ்சியவர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அரைமணிநேரம் பேசிச்சிரித்து விடையளித்தேன். அன்னியநாடு ஒன்றில் நான் நண்பர்களை வரவேற்று திருப்பியனுப்பியது விசித்திரமான அனுபவமாக இருந்தது

 

சிங்கப்பூர் நினைவுகள் நெடுநாட்கள் அழகிய நினைவாக எஞ்சுமென நினைக்கிறேன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பாலாவின் காட்சிமொழி

$
0
0

 

10slde1

தேசியக்கல்விக் கழக சீன மாணவர்களுக்காக இன்று சினிமா எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவைப்பற்றி ஒரு வகுப்பு எடுக்கவேண்டும்.  அதற்காக நான் எழுதிய சினிமாக்களில் இருந்து சில கிளிப்பிங்குகளைக் காட்டலாமென முடிவுசெய்தேன். யூடியூபில் நான் கடவுள் கிடைத்தது

 

நான்கடவுளின் காட்சிகள் வியப்பூட்டின. நான் எழுதியபோது என் மனதில் ஒரு சித்திரம் இருந்தமையால் சரியாகக் கவனிக்கப்படாதுபோன காட்சிகள் இவை. இன்று மிக விலகிவந்தபின் பார்க்கும்போது அவற்றின் மொழி ஆச்சரியமளிக்கிறது. இது முதல்காட்சி

முதலில் கங்கையில் ஒரு தீபம். பின்னர் புனிதமும் கோலாகலமுமான கங்கா ஆரத்தி. அழகு, மங்கலம். சட்டென்று தலைகீழாக கதாநாயகன் அறிமுகமாகிறான். முற்றிலும் வேறு உலகம். தலைகீழ் உலகம். அவன் விழிகள் திறந்து உலகைப்பார்க்கின்றன. படம் தொடங்குகிறது. பாலா காட்டவருவது அது

 

இன்னொரு காட்சி. ‘ஏழாம் உலகம்’. தாண்டவன் நாம் வாழும் உலகில் காரிலிருந்து இறங்குகிறான். நடந்து நடந்து பாதாளம் நோக்கிச் செல்கிறான். இருட்டு. அதிலிருந்து வெளிவருபவன் பாதாளத்துக்குள் செல்கிறான். அங்கே விபரீதமான உருப்படிகள். அவர்களின் முகங்கள். உணர்ச்சியற்று தாண்டவனை வெறிக்கும் ஒருமுகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது, அவர்களுக்கு அவன்கூட ஒரு பொருட்டே அல்ல என்று.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்

$
0
0

 

 

வணக்கம்,

 

சிங்கப்பூர் இலக்கிய மரபைப்பற்றி தேசியக்கல்விக்கழகத்தின் இணைப்பேராசிரியர்  சிவகுமாரன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு செய்தியைச் சொன்னார். சிங்கப்பூரின் தொடக்ககாலத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான முல்லைவாணன்  கரையிலிருந்து மூட்டைகளை தோளில் தூக்கிக் கொண்டு பலகை வழியாக நடந்து சென்று படகுகளில் ஏற்றும் பணியைச் செய்துவந்தார். அவர் சொன்னபோதே ஒரு சின்ன திடுக்கிடலுடன் அந்தக் காட்சியை நான் என் கற்பனையில் பார்த்தேன்.

 

மக்களுடன் மக்களாக இருந்து எழுதுவதாக எல்லாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கடுமையான உடலுழைப்பு என்பது அறிவுசார்ந்த செயல்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது. உடலூக்கம் அறிவுச்செயல்பாடுக்கு மிக இன்றியமையாத ஒன்று. எட்டு மணி நேரம் சுமை தூக்கிக் களைத்த ஒருவரால் அதன் பிறகு தசைகளைத் தளர்த்தி ஓய்வெடுக்க மட்டுமே முடியும். மூளையை இயக்கும் உயிர் விசை மிகவும் குறைந்திருக்கும். அதற்குப்பின்னரும் அவர் எழுதினாரென்றால்  ‘போரும் அமைதியும்’ எழுதிய டால்ஸ்டாய் பிரபுவின் உயிர்ஆற்றலுக்கு நிகரான ஆற்றல் அவருக்கு இருந்தது என்றுதான் அர்த்தம்.  மகா காவியங்களை எழுதும் முனிவர்களுக்கு நிகரான தவவல்லமையைக் கொண்டது அச்செயல். இந்த மேடையில் அந்த முன்னோடிக்காக எழுத்தாளன் என்ற முறையில், அவருடைய வழி வந்தவன் என்ற முறையில் தலை வணங்குகிறேன்.

 

அன்றைய படைப்பாளிகள் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை ஒரு உரைச்சித்திரமாகவே பேராசிரியர் சிவகுமாரன் சொன்னார். புத்தகங்களைத் தாங்களே அச்சிட்டு அவற்றை சைக்கிளில் கட்டிக் கொண்டு தொழில் சார்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் வீடுகளுக்குச் சென்று விற்றிருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் பேருந்து தரிக்கும் இடங்களில் நின்று கூவி விற்றிருக்கிறார்கள். பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புத்தகங்களுடன் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி  நன்கொடை பெற்று கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். அப்போது கூட அதிகபட்சம் முன்னூறு பிரதிகள் விற்றிருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்கள் கணிசமான பணத்தை இழந்திருப்பார்கள். அவர்கள் செய்த தொழிலை வைத்து பார்த்தால் அந்தப்பணம் என்பது எளிய தொகை அல்ல, அவர்களின் ரத்தம்..

 

பிறிதொரு எழுத்தாளரைப்பற்றி கேள்விப்பட்டேன். பரணன் என்ற பெயரில் அவர் கவிதைகள் எழுதினார். பிறப்பால் மலையாளி. தென்கிழக்குஆசியநாடுகளின் பெரிய விருதான ஆசியான் விருது பெற்ற கவிஞராயினும் ஒரு உணவகத்தில் தட்டு கழுவி மேசை துடைக்கும் பணியைத்தான் இறுதி வரை செய்து வந்தார். அந்த உணவகத்திலேயே உயிர் துறந்தார்.   அந்த சென்ற காலப் படைப்பாளியைப்பற்றி எண்ணியபோது ஒன்றிலிருந்து ஒன்றாக பல வாயில்கள் எனக்குத் திறந்து கொண்டன. முதற்கேள்வி பிறப்பால் மலையாளியாகிய அவர் ஏன் தன்னை தமிழ் அடையாளத்திற்குள் செலுத்திக் கொண்டார்? இரண்டாவதாக பரணன் என்ற பெயரை ஏன் அதற்கு அவர் தேர்ந்தெடுத்தார்?

 

பரணன் தளைதட்டாது மரபுக்கவிதையின் அனைத்து வடிவங்களையும் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர் என்றார்கள். அப்படியென்றால் தனக்கு அரிதாகக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியை அவர் அதற்காகச் செலவிட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒருவருக்கு கல்வி நிலையங்களின் முறையான கல்வி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்கள் அமைந்திருக்க மாட்டார்கள். நூலகங்கள் கூட அரிதாகவே கிடைத்திருக்கும் அன்றைய சூழலில். சுயமுயற்சியால் தேடி அலைந்து அந்த தேர்ச்சியை அவர் அடைந்தார். அவரை செலுத்திய அந்த விசை எது?

 

அக்கேள்விக்கான விடைகளைக் கண்டுகொண்டோமென்றால் சிங்கைத் தமிழிலக்கியத்தின் விதை திறந்து முதல் முளை வெளிவந்த தருணத்தை தொட்டு அறிந்துவிடலாம். பரணர் சங்க இலக்கியத்தை சார்ந்த ஒரு பெயர். கபிலரும் பரணரும் அவர்களின் கவிதை சார்ந்த ஒரு குறிப்பிட்ட அடையாளம் உடையவர்கள். அவர்கள் எழுதிய நிலப்பகுதியில் பெரும்பகுதி குறிஞ்சி. அதாவது இன்றைய கேரளப்பெருநிலம். சங்க இலக்கியத்திற்குள் புகும் மலையாளிகளுக்கு மிக உவப்பான கவிஞர்களாக இருப்பவர்கள் இவர்கள் இருவருமே. காடு நாவலில் கபிலரின் சொல் வழியாகவே நான் பிறந்து வளர்ந்த கேரள எல்லையோரக்காடுகளைக் நான் காட்டியிருக்கிறேன். வறனுறல் அறியாச்சோலை என்று கபிலர் சொல்லும் அந்த நிலமே நான் பிறந்து வளர்ந்து வாழ்வது.

 

நெடுந்தொலைவில் இங்கே இந்த நெரிசலான துறைமுக நகரத்தில் வாழ்ந்த அந்த முன்னோடிக் கவிஞன் பரணன் என்ற பெயரைத் தனக்கு சூட்டிக் கொள்ளும் போது சங்க காலத்து குறிஞ்சி நிலத்திற்கு மட்டும் செல்லவில்லை, தான் விட்டு வந்த கேரள நிலத்திற்கும் தான் செல்கிறான். மலையாளத்திற்கும் தமிழிற்கும் பொதுவான ஓர் இறந்த காலத்திற்கு செல்கிறான். அங்கு தன்னுடைய அடையாளத்தை அவன் கண்டடைகிறான். அதை மரபுசார்ந்த கவிதைகள் வழியாக நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து நிறுவுகிறான்.

 

கவிஞர் பரணனிடம் எவரும் புதுக்கவிதையைப்பற்றிப் பேசியிருக்க முடியாது. அது அவருக்கு மிகப்பெரிய ஒவ்வாமையைத்தான் அளித்திருக்கும். ஏனெனில் அவர் நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்திற்கு சென்று கொண்டிருந்தார். தான் வாழ்ந்த மண்ணைத் தோண்டித் தோண்டி மூதாதையர் வாழ்ந்த நிலத்திற்கு செல்வதைப்போல. அங்கொரு முதுமக்கள் தாழியைக் கண்டடைந்து அதற்குள் உறங்கிக் கிடக்கும் எலும்பு ஒன்றில் தன் மூதாதையைக் கண்டடைவது போல.

 

 

இங்கே சிங்கப்பூர் மண்ணில் நின்று கொண்டு ஒருவன் சங்க இலக்கியத்தில் தனக்கொரு முன் தொடர்ச்சியைக் கண்டு கொள்வதில் இருக்கும் கனவும் ஏக்கமும் தனிமையும் என்னை உலுக்குகின்றன. அந்த ஆதி உள எழுச்சியின் முன் மிகச்சிறியவனாக மாறுகிறேன். அனைத்தையும் இழந்தாலும் இப்படி ஒரு ரகசியச் சுரங்கம் மூலம் தன் மூதாதையரைச் சென்று அடையும் வழி ஒரு திறந்து கிடக்கிறதே என்று எண்ணி மனநிறைவு கொள்கிறேன். நான் செய்து கொண்டிருப்பதும் அதுவல்லவா என்று எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

 

பிறிதொரு முன்னோடியைப்பற்றி எனக்குச் சொன்னார்கள். அ.நா. மொய்தீன் என்று அவருக்குப்பெயர். ஒற்றைக்காசுகளாகவே பணம் திரட்டி உமறுப்புலவர் பெயரில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஓர் எளிய வாயிற்காவலராகவே தன் வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். இன்றும் இந்த சிங்கப்பூர் மண்ணில் தமிழர்களின் அடையாளமாக நின்றிருக்கும் உமறுப்புலவர் மையத்தின் தொடக்கப்புள்ளி அவர். தனது வேரை அவர் எட்டயபுரத்தில் பள்ளி வாசலுக்குப்பின்னால் அமைந்துள்ள கபரிடத்தில் துயிலும் தமிழின் பெருங்கவிஞரிடம் கண்டு கொண்டது, பரணன் தன் வேரைக் கண்டு கொண்டதற்கு நிகரானது.

 

சிங்கப்பூர் இலக்கியத்தின் தொடக்கத்தை இவ்வாறு வகுக்கலாம். அந்நிய நாடொன்றில் தன் வேர்களை கண்டு கொள்ளுதல் அதை சமகாலத்தில் வைத்து வரையறுத்துக் கொள்ளுதல்.

 

எந்த ஒரு பண்பாட்டிலும் இலக்கியம் அடையாளத்தை தேடுவதாகவும் வரையறுப்பதாகவுமே தொடங்கும். பலசமயம் இனம் ,வட்டாரம், குருதியுறவுகள் சார்ந்து ஒருவகையான குறுக்கல் போக்காகவே அது அமையும். சென்றகாலத்திற்குள் ஊடுருவி தனக்கென ஒரு தொப்புள் கொடித் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்ளவே அது எத்தனிக்கும். அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில் இலக்கியம் என்பதே தன்னளவில் மனிதகுலம் தனக்கு உணர்வு ரீதியான ஒரு தொடர்ச்சியை கட்டமைத்துக் கொள்ளும் பொருட்டு கண்டுபிடித்ததே. தொல்பழங்காலத்தில் தனது மூதாதையரின் கதைகளை தன் வாரிசுகளுக்குச் சொல்லி ஒரு தலைமுறைத் தொடர்ச்சியை உருவாக்கிய ஆதிக் கதைசொல்லிதான் அனைத்து இலக்கியத்திற்கும் தொடக்கம்.

 

உலகம் முழுக்க சொல்லப்படும் கதைகள் பெரும்பாலும் குலவரிசைக்கதைகளாக இருப்பதைப்பார்க்கலாம். மகாபாரதத்தில் கணிசமான பகுதிகள் குலவரிசைப்பட்டியல்களாகவே அமைந்துள்ளன. அனைத்து வகைகளிலும் அறுபடாத ஒரு தொடர்ச்சியை மொழிக்குள் நீடிக்க வைப்பது இலக்கியத்தின் கடமை. வேரிலிருந்து இலைநுனி வரைக்கும் செல்லும் ஒரு ரசஓட்டமே இலக்கியம் என்று கூட சொல்லலாம். தொன்மையான இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் கூட   பழங்காலத்திலிருந்து ஒரு வேர்த்தொடர்ச்சி எடுத்துக் கொண்டு ஒரு அடையாளத்தை சமைக்கும் தன்மை அவற்றுக்கு இருப்பதைக்காணலாம்.

 

உதாரணமாக, சங்கப்பாடல்களை எடுத்துக் கொண்டால் நமக்குக் கிடைக்கும் மிகத் தொன்மையான பாடல்களிலேயே

வடாது பனி படு நெடுவரை வடக்கும்

குடாது குமரியின் குடக்கும்

என ஒரு இந்திய அடையாளத்தை அது உருவாக்கிக் கொள்வதை பார்க்கலாம். அதற்குள் மன்னர்கள் ,குடிகள், நிலம் என பல அடையாளங்களை அவை கட்டமைத்துக் கொள்கின்றன. இந்த அடையாளங்களுக்கு தங்களுக்கு முந்தைய பழங்குடி மரபிலிருந்து ஆதாரங்களை உருவாக்கிக் கொள்கின்றன.

 

நவீன இலக்கியமும் அவ்வாறுதான். தமிழில் நவீன இலக்கியத்தின் தொடக்கம் என்பது பாரதி. அதை அவன் எழுதப்புகும்போதே ’யாமறிந்த புலவரிலே கம்பரைபோல வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல்” என்றொரு பட்டியலை முன்வைக்கிறான். அவர்களின் தொடர்ச்சியாக தன்னைப்பற்றி சொல்லும் போது ’சொல்புதிது பொருள்புதிது நவகவிதை’ என்று தன் கவிதையை அடையாளப்படுத்துகிறான்.

 

மலேசியாவின் மூக்கு நுனியாக இருந்த இந்த மண்ணில் பல்வேறு வழிகளூடாக இங்கு வந்து சேர்ந்து கடும் உழைப்பினூடாக வாழ்க்கையை உருவாக்கிக் கொண்ட நமது முன்னோடிகள்  தங்களுக்கு ஒரு வேர்த்தொடர்ச்சியை  தமிழகத்தில் கண்டடைந்தனர். அவற்றை இங்கு நட்டு தங்கள் குருதியை ஊற்றி வளர்த்து ஓர் அடையாளத்தை உருவாக்கினர்.

 

ஆரம்பகாலச் சிங்கப்பூர் கதைகள் அனைத்திலுமே இந்த அடையாள உருவாக்கம் ஒரு பெரும்பங்கை வகிப்பதை நான் பார்க்கிறேன். இங்கு அவர்கள் வரும்போது அவர்களின் இன அடையாளமும் இந்திய தேசமென்ற அடையாளமும் வலுவாக இல்லை. மாறாக மொழியே தூலமான அடையாளமாக இருந்தது. ஆகவே தங்களை மொழி சார்ந்து அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே மொழிசார்ந்த அடையாள அரசியலை  தமிழகத்தில் முன்னெடுத்த திராவிட இயக்கத்துடன் அவர்களுக்கான தொடர்பு உருவாகியது.

ma

மா இளங்கண்ணன் [புகைப்படம் :நன்றி தேசிய கலைக்கழகம் சிங்கப்பூர்]

சிங்கை படைப்புகளை கால வரிசைப்படி அடுக்கும்போது மிக எளிதாக தமிழ்நாட்டில் உருவாகி வந்த தமிழியயக்கக் கொள்கைகளுடன் சிங்கப்பூர் எழுத்துகள் தங்களை இணைத்துக் கொள்வதைக்  கண்டேன். அங்கிருந்த தமிழறிஞர்களையும் தமிழியக்க அரசியல்வாதிகளையும் இங்கு அழைத்துவந்து அவர்களிடம் இந்த வழிகாட்டுதலைப் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அது ஓர் அடையாளம் பெற்றுக்கொள்ளுதலே ஒழிய அவர்களின்  தேசிய உருவகத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளுதல் அல்ல. அப்படி நிகழவுமில்லை. இங்குள்ள மூன்றுபட்டைகொண்ட பண்பாட்டுத்தேசியத்துடன்தான் சிங்கைத் தமிழர்கள் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அதற்குள் தங்கள் தனித்தன்மையை வரையறுக்கவே தமிழியக்கத்தின் தொடர்பு பயன்பட்டது என நினைக்கிறேன்.

 

இவ்வாறு  வேர் தேடிச்சென்று அடையாளத்தை நிறுவி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் படைப்புகளுக்கு சில அழகியல் தனியியியல்புகள் உண்டு.

 

ஒன்று: நான் ஏற்கனவே சொன்னது போல பழமை நாட்டம். அவர்களின் கனவுகளும் ஏக்கங்களும் இறந்தகாலம் நோக்கியவை. ஆகவே அவர்கள் பழைமையை சார்ந்தே சிந்திப்பார்கள். முற்போக்கான கொள்கைகளுக்குக்கூட தொல்பழங்காலத்தில் இருந்த ஒரு பொற்காலத்திலிருந்து சான்று தேடுவார்கள்.

 

இரண்டு: ஒரு பண்பாட்டை சில அடிப்படைக்கூறுகளைக் கொண்டு சுருக்கும் ஒரு முயற்சி. அதாவது பண்பாட்டின் உள்முரண்பாடுகளையோ உள்விவாதங்களையோ கணக்கில் கொள்ளாமல் சில அடிப்படைப் புள்ளிகளை மட்டும் கண்டடைந்து அவையே தமிழ்ப் பண்பாடு என்றும் தமிழ் மரபு என்றும் நிரூபிக்கும் ஒரு குறுக்கல் போக்கு. (Reductionism).

 

மூன்று: இவ்வடையாளங்களை வலியுறுத்திக் கூறும் நோக்கம் கொண்டமையால் உருவாகிவரும் ஒருவகையான முழக்க குரல் , அறைகூவும் பாணி, பிரச்சாரம் செய்யும் போக்கு. ஆகவே இப்படைப்புகள் அனைத்துமே ஒருவகையான மேடைமுழக்கத்தன்மை கொண்டுள்ளன.

 

மரபுக்கவிதை இயல்பாகவே பழமையான மொழியைக் கொண்டது. அம்மனநிலையிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும்போது இன்றைய யதார்த்த மொழிக்குள் வருவதற்கு இவர்களுக்கு சங்கடம் இருக்கிறது. யதார்த்த மொழியில் கதைகளை எழுதும்போது கூட ஆசிரியர்கூற்றாக வரும் மொழியானது அணிகளும் அலங்காரங்களும் கொண்டதாகவும், மிகையுணர்ச்சி சார்ந்ததாகவும் உள்ளது. தமிழ்ப்பண்பாடு என்று சிலவற்றை அவர்கள் உருவகித்துக் கொள்கிறார்கள். அன்றைய திராவிட இயக்கம் முன்வைத்த காதல்,மானம்,வீரம் ஆகியவை. இங்கு சிங்கப்பூரில் அவற்றை முன்வைக்கும்போது கூடுதலாக தமிழ் ஒழுக்கம் என்பதையும் பேசுகிறார்கள்என்று தோன்றுகிறது. காரணம் இங்கு அவர்கள் கண்ட சீன, மலேய ஒழுக்கவியல் சற்று மாறுபட்டது.

 

இந்த ஆரம்ப காலக் கதைகள் அனைத்தையுமே  அழகியல் ரீதியாக ‘பிரச்சார இலக்கியம்’ என்று வரையறுத்துவிட முடியும் பிரச்சார இலக்கியத்தின் அடிப்படைப்பண்பு என்னவென்றால் அப்பிரச்சார நோக்கத்துக்கு அப்பால் அவற்றால் செயல்பட முடியாது என்பதுதான். ஒரு பிரச்சார இலக்கியத்தை நோக்கி  ‘ஆம், நீ சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று ஒருவாசகன் சொல்லிவிடுவானென்றால் அதன்பிறகு அந்தப்பிரச்சார இலக்கியத்துக்கு அவனிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. பிரச்சாரம் செய்யப்பட்ட விஷயங்கள் சமூகத்தில் பரவலாக ஏற்கப்படுமென்றால் அப்படைப்புகள் வரலாற்றுத் தடயங்களாக மாறி பின்னால் நின்றுவிடும்.

 

கலைப்படைப்புகள் அப்படி அல்ல. அவை முடிவிலாது முளைக்கக்கூடியவை. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வெவ்வேறு அர்த்தங்களை அளித்தபடி தன்னைப் புதுப்பித்துக் கொள்பவை. அவை ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் தெரிந்த தளத்தில் நிற்பவை மட்டும் அல்ல. முழுக்க முழுக்கப் பேசிய பிறகும் கூட பேசப்படாத ஒரு பக்கம் அவற்றில் எப்போதுமே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் கலைப்படைப்புகள் கலைஞனின் சிந்தனையும் செயலூக்கமும் வெளிப்படுபவை அல்ல. அவனுடைய ஆழ்மன வெளிப்ப்பாடுகள் அவை. மொழி வழியாக வெளிப்படும் கனவுகள் அவை.

 

பிரச்சார இலக்கியத்தில் எவை பிரச்சார நோக்கத்தை கடந்து செல்கின்றனவோ அவை மட்டுமே கலைபடைப்புகளாக எஞ்சுகின்றன. அவ்வாறான படைப்புகள் மேலே சொன்னதுபோல அடையாளத்தேடலும்  அடையாள வலியுறுத்தலும் ஓங்கி நிற்கும் காலத்தில் மிகக் குறைவாக இருக்கும். அது இயல்பானதே. இன்று அந்தக்காலகட்டத்தின் ஆழ்மனவிசையை நாம் ஏற்றுக் கொள்ளும் போதே அவற்றை விமர்சன பூர்வமாக அணுகி அவற்றில் எது கலை எது பிரச்சாரம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தப் பார்வையை தெளிவாக உருவாக்கிக் கொள்ளவில்லையென்றால் நாம் கலையின் தொடர்ச்சியை இழந்துவிடுவோம்.

 

வரலாறென ஒரு படைப்பை மதிப்பிடுவது வேறு ,கலை ரீதியாக மதிப்பிடுவது வேறு. இங்கு உருவான தமிழ் அடையாளக் கண்டடைதலும் அது உருவாக்கிய இலக்கிய அலைகளும் என் வணக்கத்துக்குரியவை. இலக்கிய வரலாற்றில் தவிர்க்கக்கூடாதவை. அதேசமயம் அவற்றில் ஓரிரு படைப்புகளையே கலை ரீதியான் பெறுமானம் உள்ளவை, இன்றும் நம்முடன் பேசுபவை என்று சொல்வேன். இங்கு அவற்றை சார்ந்த விமர்சனத்தை நான் முன் வைக்க விரும்பவில்லை. அத்தகைய ஒரு கறாரான விமர்சனப்பார்வையை இங்குள்ள இன்றைய தலைமுறையினர் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிறிதொரு தருணத்தில் ஒவ்வொரு படைப்பாக எடுத்து இதை நான் ஏன் சொல்கிறேன் என்று என்னால் விளக்க முடியுமென நினைக்கிறேன்.

 

அடையாள உருவகத்தின் அடுத்த கட்டமாக அமைவது சீர்திருத்தப் பார்வை. இயல்பான பரிணாம வளர்ச்சி அது. ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை உகந்தது என நீங்கள் பண்பாட்டுக்கு முன்னால் வைத்தீர்கள் என்றால் அந்த அடையாளத்துக்கு ஒவ்வாத அனைத்தையும் மாற்றி அமைக்க முயலுவீர்கள். அதுவே சீர்திருத்த நோக்கு. சீர்திருத்தநோக்கு எப்போதும் எதிர்கால நோக்கு கொண்டதாக அமையவேண்டுமென்பதில்லை. எதிர்காலத்தை இறந்தகால மாதிரியில் அமைக்கவிரும்புபவர்கள் திரும்பிப்பார்த்து சீர்திருத்தம்பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

 

இந்தியாவில் மூன்று வகையான சீர்திருத்தப் பேரியக்கங்கள் நவீன காலகட்டத்தில் ஆரம்பித்தன. ஒன்று மதச்சீர்திருத்த இயக்கம். தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம், ராஜாராம் மோகன்ராய் உருவாக்கிய பிரம்ம சமாஜம், விவேகானந்தரின் பேரியக்கம் என தொடங்கி முதல் காந்திய இயக்கம் வரை ஒரு வரலாற்றுத்தொடர்ச்சி அது. அறிஞர்களும் ஞானிகளும் இந்து மதத்தின் முரண்பாடுகளையும் மூட நம்பிக்கைகளையும் சீர்திருத்த முயன்றார்கள். அவ்வலை இந்தியா முழுக்க பரவவே கேரளத்தின் நாராயணகுரு போன்று தமிழகத்தில் வள்ளலார் போன்று வெவ்வேறு மதச் சீர்திருத்தவாதிகள் உருவாயினர்.

MG_1657-1-273x300

கண்ணபிரான்

 

இதன் விளைவாக உருவான சமூக சீர்திருத்த அலை இரண்டாவது. மரபார்ந்த சமூக கட்டுமானத்தை உடைத்து மறுஆக்கம் செய்து நவீன காலகட்டத்துக்கு கொண்டு வரும் பெருமுயற்சி இது. மகாத்மா புலேயிலிருந்து கேரளத்தின் அய்யங்காளி, ஈ.வெ.ரா வரைக்கும் ஒரு பெரும் பட்டியலை நாம் போட முடியும் . சாதிய ஒழிப்பு, பெண்விடுதலை, பண்ணையடிமை மனநிலை அகற்றல் போன்ற தளங்களில் பெரும்பணி நிகழ்ந்தது.

 

மூன்றாவதாக பண்பாட்டுச் சீர்திருத்தம்.சென்றகாலப்பண்பாட்டிலிருந்து சாராம்சமான பகுதிகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து அவற்றை முன்னிறுத்தி தேவையற்ற பகுதிகளை களைவதற்கான ஒரு முயற்சி அது.  இந்தியசிந்தனை மரபு இவ்வியக்கத்தால்தான் மீட்டு எடுக்கப்பட்டது. ஈஸ்வர சந்திர வித்யாசாகரிலிருந்து சுப்ரமணிய பாரதி வரை பல்லாயிரம் அறிஞர்களை நாம் வரிசையாகச் சொல்லமுடியும்

 

தமிழில் பண்பாட்டு சீர்திருத்தத்திற்குள் மூன்று சரடுகள் உண்டு.

 

ஒன்று : மொழிச் சீர்திருத்தம் இதைத் தனித்தமிழ் இயக்கம் என்று சொல்வோம். தமிழின் பிற மொழிக்கலப்பைக் களைவது, தமிழைச் செம்மைப்படுத்தி ஒரு தகுதர அமைப்பை உருவாக்குவது ஆகியவை  நம்முடைய முதன்மை இலக்காக இருந்தது. பரிதிமாற்கலைஞர் மறைமலையடிகள் தொடங்கி மொழிச் சீர்திருத்தவாதிகளின் பட்டியல் நமக்குத் தெரியும்

 

இரண்டு: தமிழிசை இயக்கம். சங்ககாலத்திலிருந்து உருவாகி வளர்ந்து ,சிலப்பதிகார காலத்தில் குறிப்பிடப்பட்டு, ஆழ்வார்களின் வழியாக பண்ணிசையாக நீடித்த தமிழிசை  இந்தியாவின் பிற இசை மரபுகளுடன் கலந்து ஒட்டுமொத்தமாக தென்னிந்திய இசையென்று இன்று அறியப்படுகிறது. கர்நாடக சங்கீதம் என்று அதற்கு இன்னொரு பெயர் உண்டு. இந்த இசையின் தமிழ்வேர்களை முன்னிறுத்துவதும் அதன் தமிழ்த்தனித்தன்மையை மீட்டு எடுப்பதுமே தமிழிசை இயக்கம். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அதன் தொடக்கப்புள்ளி

 

மூன்றாவது : தமிழ்ப் பதிப்பியக்கம். தமிழின் அனைத்துத் தொன்மையான நூல்களையும் பிழையற அச்சிட்டு தமிழுக்கு கொண்டு வருவதும், அதற்கு சமகால உரை எழுதுவதும் இவ்வியக்கத்தின் நோக்கம். உ.வே.சாமிநாதய்யர், சௌரிப்பெருமாள் அரங்கன், சி.வை தாமோதரம்பிள்ளை என இதன் முன்னோடிகள் பலர்

 

சிங்கப்பூர் இலக்கியத்தின் இரண்டாம் காலகட்டம் என்பது சீர்திருத்தநோக்கை முன்வைப்பது என்று நூல்களின் வழியாகத் தெரிகிறது. ஆனால் பொதுவாகக் கவனிக்கும்போது மேலே சொல்லப்பட்ட சீர்திருத்த அலைகளில் மதச்சீர்திருத்த இயக்கம் மிகக்குறைவாகவே இங்கு நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. இங்குள்ள படைப்புகளில் அதன் தடையங்கள் இல்லை. வெளியே என்ன நிகழ்ந்தது என்பதை எவராவது ஆய்வுநோக்கில் சொல்லவேண்டும். சைவ வைணவ வழிபாடுகள், சிறுதெய்வ வழிபாடுகள் அதன் பழைமையான வடிவில் அப்படியே இங்கே நீடிக்கின்றன. வள்ளலார் இயக்கத்தின் செல்வாக்கு சிங்கையில் பெரிய அளவு இருந்ததாகத் தெரியவில்லை.

 

சொல்லப்போனால் இங்குள்ள சைவ இயக்கங்களைப்பார்க்கையில் சைவமதம் பலவகையான சீர்திருத்த இயக்கங்களால் மறுவார்ப்பு செய்யப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய கண்மூடித்தனமான உணர்வுநிலைகள், ஆசாரங்கள் இங்கே நீடிப்பதைக் காணமுடிகிறது. பிற மதங்களுடனும் இந்துமதத்தின் பிற வழிகளுடனும் அனைத்து வாயில்களையும் மூடிக்கொண்ட சில அமைப்புகளைக்கூட நான் பார்த்தேன்.

 

சமூக சீர்திருத்த அலை மிகுந்த வீச்சுடன் பல புனைகதைகளில் வெளிப்பட்டுள்ளது.  இளங்கண்ணன், புதுமைதாசன் போன்றவர்களின் கதைகளைப் பார்க்கையில் தமிழகத்தின் சமூக சீர்திருத்த இயக்கங்களின் கருத்துகள் நேரடியாக வெளிப்படுவதைக் காண்கிறேன். சமூக உறவுகளின் இறுக்கங்கள், பழைமையான ஆசாரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளை மறு அமைப்பு செய்யும் விழைவு வெளிப்படுகிறது. திராவிட இயக்கத்தின் சமூக சீர்திருத்தக் கருத்துகள் எழுபதுகள் வரைக்கும் கூட இங்குள்ள இலக்கியத்தில் ஓங்கி ஒலிப்பதை என்னால் காண முடிகிறது.

 

பண்பாட்டுச் சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் தமிழிசை இயக்கத்தின் செல்வாக்கு பெருமளவு தென்படவில்லை என்னும் மனப்பதிவே எனக்குள்ளது. தமிழ் பதிப்பியக்கம் சார்ந்தும் இங்கு போதுமான அளவுக்கு ஊக்கம் தென்படவில்லை. காரணம் சிங்கப்பூரின் தொன்மை என்று ஒன்று இல்லை. ஆயினும் கூட சிங்கப்பூர் நாட்டுப்புற பாடல்களைத் தொகுப்பதோ சிங்கப்பூர் வாய்மொழி மரபுகளைத் தொகுப்பதோ குறைவாகவே நிகழ்ந்துள்ளது.  சிங்கப்பூரில் முன்னரே அச்சிடப்பட்டு மறைந்து போன நூல்களை அச்சுக்குக் கொண்டு வருவதுகூட ஓர் இயக்கமாக இங்கு நிகழவில்லை என்று தான் தோன்றுகிறது. இவ்வகையில் மறைந்த நண்பர் ஈழநாதன் சிலமுயற்சிகளை மேற்கொண்டதை நான் அறிவேன். இன்னமும் கூட அதில் பெரும்பணி ஆற்றப்படலாம்.[பேரா அருண் மகிழ்நன் முன்னெடுப்பில் இப்போது சிங்கை இலக்கியங்களை வலையேற்றும் முயற்சி நிகழ்ந்துவருகிறது]

 

ஆனால் தமிழ்ப் பண்பாட்டுச் சீர்திருத்த அலையின் மூன்று கூறுகளில் ஒன்றாகிய தனித்தமிழ் இயக்கம் ஒரு வலுவான செல்வாக்கை இங்கு செலுத்தியிருப்பதை இங்கு காணமுடிகிறது. மொழித் தூய்மைக்கான குரல், மொழி பேணப்படுவதற்கான குரல் தொடர்ச்சியாக இங்கு ஒலித்து வருகிறது. இன்றும்கூட சிங்கையில் இலக்கியச்சூழலில் ஓங்கி ஒலிக்கும் முக்கியமான கருத்துத் தரப்பாக இது உள்ளது.

 

இந்த இரண்டாவது காலகட்டம், அதாவது சீர்த்திருத்த அலை ஏறத்தாழ எண்பதுகள் வரைக்கும் நீடிப்பதை பார்க்க முடிகிறது. பொதுவான என் நோக்கில் இளங்கண்ணன், இராம.கண்ணபிரான் போன்றவர்களை உதாரணமாக காட்டுவேன். ஒருவகையில் இதுவும் ஒரு பிரச்சார தன்மை கொண்ட எழுத்துக்களை உருவாக்கும் காலகட்டம் தான். சமூக சீர்திருத்தமும் மொழிச் சீர்திருத்தமும் அறிவார்ந்தவை. ஆகவே ஆசிரியனின் அறிவிலிருந்து எழக்கூடியவை .வாசகனை மாணவனாகக் கண்டு அவனுக்கு அறிவுறுத்தும் தோரணை கொண்டவை. இன்றும் கூட இம்மரபின் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் கவிதைகளிலும் கதைகளிலும் வாச்கனை நோக்கி எழுத்தாளனோ கவிஞனோ ஒர் உயரத்தில் நின்று கொண்டு பேசுவதை நாம் பார்க்கலாம். ஆகவே இவற்றுக்கு ஒரு மேடைப்பேச்சின் தோரணையும் வந்து விடுகிறது.

 

சமூக அவலங்களை நோக்கிய அக்கறையும் அவற்றை மாற்றியமைக்க வேண்டுமென்ற தீவிரமும் இப்படைப்புகளில் வெளிப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கான சமூக முக்கியத்துவம் மறுக்க முடியாதது. இவை எழுப்பும் குரல்கள் தவிர்க்கப்படமுடியாதவை ஆனால் அதே சமயம் இவை தீர்வுகளையும் முன் வைக்கின்றன. அத்தீர்வுகளை யார் உருவாக்கினார்கள் என்று பார்த்தால் தத்துவ வாதிகளோ அரசியல்வாதிகளோதான். அவர்களுக்கு பின்னால் சென்று அவர்களின் பிரச்சாரகர்களாகவே எழுத்தாளன் செயல்படுகிறான்.

 

அவ்வாறு பின்செல்வது முதன்மை எழுத்தாளனின் இயல்பல்ல. அவனுடைய ஆய்வுக்கூடம் வேறு. அங்குள்ள ஆய்வு முறைமைகளும் வேறு. ஒர் எழுத்தாளன் காந்தியாலோ ஈ.வெ.ராவாலோ, கார்ல் மார்க்ஸாலோ செலுத்தப்படுவான் என்றால் அவன் பிரச்சாரகன். தன் உள்ளுணர்வால் மட்டும் செலுத்தப்படுவான் என்றால் மட்டும்தான் அவன் கலைஞன். சீர்திருத்தப் படைப்புக்ளை மதிப்பிடும்போது இந்த அளவுகோலை பயன்படுத்த மீண்டும் வலியுறுத்துகிறேன். அந்த தெரிவில் எவை கலைப்படைப்புகள் என்பதை விமர்சன நோக்குடன் விவாதித்து தொகுத்துக்கொள்ளும் சூழலிலேயே மேலும் கலைப்படைப்புக்கள் எழமுடியும். சிங்கப்பூருக்கு இன்று தேவை என நான் நினைப்பதே இந்த வரலாற்றுப் பொறுப்புள்ள அதேசமயம் கறாரான விமர்சன நோக்குதான்.

 

1992-ல் சுந்தர ராமசாமி இல்லத்தில் நா. கோவிந்தசாமியின்  ‘தேடி’ என்ற சிறுகதைத் தொகுதி இருப்பதை பார்த்தேன். அதைப்பற்றிக் கேட்டபோது “என் நண்பர். சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் முதற்புள்ளி இவரே” என்று சு.ரா சொன்னார். அன்று நான் எனக்கான விடைகளை அளிக்கும் எழுத்தாளர்களை தேடி தாகத்துடன் ஓடிக்கொண்டிருந்ததனால் அந்நூலை படிக்கவில்லை. மீண்டும் எட்டாண்டுகள் கழித்து நான் மருதம் என்ற பெயரில் ஒரு இணைய தளம் தொடங்கினேன். அதற்குரிய தகுதர எழுத்துக்கள் விலை கொடுத்து வாங்குவதற்கான பண வசதி அன்று இருக்கவில்லை. அதை நா.கோவிந்தசாமியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்க நண்பர் கோபால் ராஜாராம் அறிவுறுத்தியதன் பேரில் நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அப்போதுதான் தேடி என்ற தொகுப்பை   படித்து பார்த்தேன்.

img-425145800-0001

சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியென்று அந்நூலை சு.ராவைப்போல நானும் சொல்வேன். அதுவரைக்கும் எந்த நவீன இலக்கியமும் இல்லையா என்றால் நவீன காலகட்டம் தொடங்கிவிட்டிருந்தது, நவீனப்படைப்புகள் வரவில்லை என்றே என் பதில் அமையும். நவீன உரைநடை, நவீன இலக்கியவடிவங்கள் வந்துவிட்டிருந்தன. ஆனால் நவீன இலக்கியம் என்பது மேலும் சில பண்புக்கூறுகள் கொண்டது. அதைத்தொடங்கிவைத்தவர் நா.கோவிந்தசாமி

 

அவை இவை.

 

ஒன்று: சமூகத்தையும் பண்பாடையும் தனி மனிதனாக எதிர் நிலையிலிருந்து நின்று பார்க்கும் பார்வை. சமூகப் பண்பாட்டுக்கட்டமைப்பின் ஒரு பகுதியாக தன்னை வைத்துக் கொள்வதற்கு மாறாக விலகி நின்று அதை விமர்சனத்துடன் நோக்கும் பார்வை அது. நவீன இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று என அந்த விலகலைச் சொல்வேன். அதை நாம் புதுமைப்பித்தனிடம் பார்க்கலாம். அவர் சமகாலத்து பொதுச்சிந்தனையின் அலைகள் எதிலும் அடித்துச்செல்லப்பட்டவர் அல்ல. அரசியலிலோ தத்துவத்திலோ அவருக்கு வழிகாட்டிகள் இல்லை. அவர் தனி அலை

 

இரண்டு: அடையாளங்களை சூடிக் கொள்வதற்கு பதிலாக அடையாளங்களை அவிழ்த்துப்பார்க்கும் பார்வை. இரக்கமற்ற ஒரு சுயவிமர்சனம் அது. தன்னை வெவ்வேறு வகையில் தொகுத்துக்கொள்வது அல்ல, தன்னை உடைத்து உடைத்து விரிப்பது அது

 

மூன்று: மூளை சார்ந்து எழுதாமல் தன்னுடைய ஆழ்மனத்தவிப்புகளையும் கண்டடைதல்களையும் ஏதோ ஒரு வகையில் மொழியில் முன்வைக்கக்கூடிய ஒரு எத்தனம். இம்மூன்று அம்சங்களும் கூடும்போது நவீன இலக்கியத்தின் தனித்தன்மை அமைகிறது.

 

ஏன்? நவீன இலக்கியவாசிப்பு என்பது அரங்கவாசிப்பு அல்ல. கூட்டுவாசிப்பு அல்ல. அது அந்தரங்க வாசிப்பு. எழுத்தாளனுடன் வாசகன் மிகுந்த தனிமையில் உரையாடுவது அது. ஆகவேதான் சபைகளில் முன்வைக்கப்படும்போது நவீன இலக்கியப்படைப்புகள் வெளிறியதுபோலத் தெரிகின்றன. மேடையில் முழங்கும் படைப்புகள் நவீன இலக்கியத்தின் இயல்புகள் இல்லாமல் இருக்கின்றன. தமிழில் இன்றுகூட இவ்விரு இலக்கிய வகைபாடுகளும் மிகத்தெளிவாக வெவ்வேறாகவே உள்லன

 

இக்காரணத்தால் ஒரு பொதுவெளியில் நின்று வாசிக்கும் வாசகன் நவீன இலக்கியத்தை புரியாதது என்று நிராகரிப்பான். அதேசமயம் அந்தரங்கமாக வாசிப்பவன் மிக எளிதாக அதை நெருங்கிச் செல்வான். ஒரு காதல்முத்தம் போல மிக அந்தரங்கமாக நிகழ்வது இலக்கியத்தின்  தொடர்புறுத்தல். எனவே ஓர் இலக்கியப்படைப்பு சொல்ல வருவது என்ன என்று மேடையில் விளக்கச்சொன்னால்  அது தயங்கி நின்றுவிடும்.  இலக்கியப்படைப்பு பிரச்சாரம் செய்யாது. வாசகனை தனது மாணவனாக அல்ல சகஹிருதயனாக கருதுவது அது. சஹ- ஹிருதயன் என்றால் இணையான இதயம் கொண்டவன்.  எழுத்தாளனின் நேர்மறுபக்கம். எழுத்தாளனை நிரப்புபவன் அவன்

 

வாசகன் அங்கு புனை கதையை தெரிந்து கொள்பவனல்ல. தானும் சேர்ந்து கற்பனைசெய்து விரிவாக்கம் செய்பவன். ஆகவே சகபடைப்பாளி அவன். அவனுடைய தகுதியை முன்னரே உணர்ந்த ஆசிரியன் அவனிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் தான் சொல்வான். அவனே மேற்கொண்டு கற்பனை செய்ய விட்டுவிடுவான். வாசகனே சிந்திக்க அனுமதிப்பான். அதற்குத் தடையாக நிற்கும் எதுவும் தன்னுடைய படைப்பில் இருக்கக்கூடாது என்று நினைப்பான். ஆகவே அவனுடைய படைப்பு அமைதி கொண்டதாக இருக்கும். இடைவெளிகள் நிறைந்ததாக இருக்கும். முடிந்தபின்னரும் புதிதாக தொடங்குவது போல் இருக்கும். சொல்வதைவிட உணர்த்துவது அதிகமாக இருக்கும். உட்குறிப்புகள் நிறைந்ததாக இருக்கும்.

 

அத்தகைய ஒரு இலக்கியத்துக்கான தொடக்கம் என்று நா.கோவிந்தசாமி அவர்களைச் சொல்வேன் அவர்களுக்கு நான் இரு கடிதங்களை போட்டிருக்கிறேன். நேரில் சந்திக்க அமையவில்லை. சிங்கப்பூர் இலக்கியத்தில் கோவிந்தசாமி அவர்கள் ஒரு ஆழமான பாதிப்பை உருவாக்கினார் என்பார்கள். எனது நண்பர் ரெ.பாண்டியன் கோவிந்தசாமியைப்பற்றி நிறையவே சொன்னார். அலைக்கழிப்பும் கொந்தளிப்பும் நிறைந்த ஒரு ஆளுமையாக இருந்தார். ஒரு மருத்துவ சிகிச்சைக்கு உடன்பட்டிருந்தார் என்றால் இன்றும் உயிர் வாழ்ந்திருக்க கூடும்.

 

பரணன் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களிடமிருந்து  கோவிந்தசாமிக்கு உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். கோவிந்தசாமி பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தார். உடலுழைப்பு சார்ந்த தொழில் செய்தவரல்ல. உலகியல் சார்ந்த கவலைகள் அவருக்கில்லை. அவருடையது அடுத்த கட்ட பயணம், அடுத்த கட்ட துயரம்

 

ஆக, சிங்கப்பூர் நவீன இலக்கியத்தில் இன்று நுழையும் ஒர் எழுத்தாளனுக்கு முன்னால் மூன்று பாதைகள் உள்ளன. இன்னமும் முதற்காலகட்டத்திலேயே நின்றபடி அடையாளத்தேடலை தமிழகத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சென்றடையும் அந்த தமிழடையாளம் தமிழகத்தின் ஊழல், சாதியரசியல், போலித்தனமான மேடைக்கூச்சல்கள், பரஸ்பரப்பாராட்டுகளின் சம்பிரதாயம் ஆகியவற்றால் ஆனது.

 

இன்னும் இரண்டாவது காலகட்டத்தையே திரும்ப எழுதிக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.  சமூகம் இன்றிருக்கும் நிலை அவர்களுக்குத்தெரியாது. கலையின் இயல்பும் பொறுப்பும் என்ன என்று தெரியாது. இங்கே வந்தபின் நான் ‘முதிர்கன்னி’ களுக்காகவும் விதவைகளுக்காகவும் இரங்கி எழுதப்பட்ட பல கவிதைகளையும் கதைகளையும் வாசித்தேன். இந்தியச்சூழலிலேயே அந்தக் குரலுக்குரிய காலகட்டம் மாறி ஒரு தலைமுறை ஆகிறது. சிங்கப்பூரில் சொல்லவே வேண்டாம்

 

மூன்றாம் காலகட்டத்துக்கு வந்து விட்ட எழுத்தாளர்கள் ஓரிருவரே இருக்கிறார்கள். மூன்றாவது காலகட்டத்தை வந்தடைய அவர்கள் நிறைய வாசித்தாகவேண்டும். இலக்கியமரபையும் இலக்கியத்தின் வடிவத்தையும் கற்று அறியவேண்டும். அதன் வழியாக தனக்குமட்டுமே உரிய மொழியையும் உணர்வுநிலையையும் வந்தடையவேண்டும்.

 

மூன்றாவது காலகட்டத்தின்  அலைக்கழிப்பைப்பற்றி முதலில் சொன்னேன். வாசகனை சஹிருதயனாக பார்க்கும் பண்பு காரணமாகவே அவ்வாறு அல்லாத பொதுவாசகர்களுக்கு அவை பூடகத்தன்மை கொண்ட படைப்புகளாகவே உள்ளன. அவை வாசகன் கோருவதை பேசுபவை அல்ல, ஆசிரியன் உணர்வதைப் பேசுபவை. ஏற்கனவே பேசிக்கொண்டிருப்பவற்றை முன்வைப்பவை அல்ல, அப்போது உருவாகி வருபவை.

 

புரியாமை என்னும் சொல்லால் நவீன இலக்கியத்தை எளிதில் நிராகரித்துவிட முடியும். அப்படி நிராகரிக்க வேண்டுமென்றால் உலக அரங்கில் தனித்து நிற்கும் பல படைப்புகளை நீங்கள் நிராகரிக்க வேண்டியிருக்கும். பயிற்சியில்லாதவனுக்கு புரியக்கூடிய படைப்பென்பது உலகத்தில் எதுவும் இருக்காது .அப்படி ஒர் அறிவியல்பிரிவு இருக்க முடியுமா என்ன? சிங்கப்பூரின் இலக்கியப்பேச்சுக்களில் தமிழ் இலக்கியச்சூழலில் பரவலாக இன்று மறைந்துவிட்ட ‘புரியாமை பற்றிய மனக்குறை’ அதிகமாக ஒலிப்பதனால் இதைச் சொல்கிறேன்.

 

இலக்கியப்படைப்பு வாசகனிடம் கோருவது இலக்கிய வடிவங்களிலான ஒரு பயிற்சியை .கூர்ந்த வாசிப்பை. சுயமாக ஓரளவு கற்பனை செய்யும்தன்மையை. தானே சிந்திக்கும் பயிற்சியை. ஆகவே வாசகன் தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வாசகன் தன்னை அப்படைப்பை நோக்கி செலுத்த வேண்டியிருக்கிறது. ஒருபோதும் படைப்பு வாசகனை நோக்கி இறங்கி வரக்கூடாது. வாசகன் படைப்பை நோக்கிச் செல்ல வேண்டும். ஆகவே நல்லபடைப்பு வாசகனை வளர வைக்கிறது. வாசகனை நோக்கி வரும் படைப்புகள் வாசகனை அதே மந்த கதியில் அவனை அமர வைக்கும். எப்போதும் அவனை வளர்க்காது.

 

நவீன இலக்கியத்தில் அறிமுகமும் அவற்றை எழுதவேண்டும் என்னும் ஆர்வமும் கொண்ட ஓர் எழுத்தாளர் வட்டத்தை சிங்கப்பூரில் இன்று பார்க்கிறேன். ஓர் உதாரணத்துக்காக ஜெயந்திசங்கர், சித்ரா ரமேஷ், மாதங்கி, ஷானவாஸ், எம்.கே.குமார், கனகலதா,அழகுநிலா, சித்துராஜ் பொன்ராஜ் என சிலரைக் குறிப்பிடுவேன். அவர்களின் படைப்புக்களை நவீன இலக்கியவிமர்சனத்தின் அழகியல்நோக்கில் மதிப்பிடவேண்டியிருக்கிறது.

M._K._Menon

எம்.கே.மேனன்,[விலாசினி]

கடைசியாக, சிங்கப்பூர் இலக்கியத்தின் எதிர்காலச் செல்நெறியாக எதைச் சொல்வேன்? ஓர் இலக்கியவிமர்சகனாக இலக்கியம் எப்படிச்செல்லவேண்டுமென நான் சொல்லமுடியாது. ஒரு படைப்பாளியாக நான் வழிகாட்டவும்கூடாது. ஆனால் ஒரு வாசகனாக நான் எதிர்பார்க்கலாம். அதையே இங்கே சொல்லவிரும்புகிறேன்.

 

சிங்கப்பூர் நவீனஇலக்கியத்தின் பொதுவான இயல்பு என நான் நினைப்பது அதன் அன்றாடத்தன்மை. சமகால வாழ்க்கையின் ஒரு சிறிய துளியையே அவை பெரும்பாலும் சித்தரிக்கின்றன. கண்டிப்பாக அதுவே நவீன இலக்கியத்தின் முதல் தேவை.  ஆனால் இலக்கியம் அதையும் கடந்துசென்றுகொண்டே இருக்கும். நா.கோவிந்தசாமியில் தொடங்குகிறது என நான் சொன்ன அந்த எழுத்துமுறைக்கு நவீனத்துவம் என்று பெயர். அது அன்றாட வாழ்க்கையின்மீது மானுட உள்ளத்தைக் கொண்டுசென்று படியவைக்கிறது. ஆசிரியனின் ஆழ்மனம் அந்தத்தருணத்தை தொட்டு வளர்த்து விரித்துச்செல்கிறது. தனிமனிதநோக்கின் காலகட்டமே நவீனத்துவம் என்பது

 

இன்றைய காலகட்டம் நவீனத்துவத்தைக் கடந்துள்ளது. இன்று தனிமனிதன் என்பதே ஒருவகையான வரலாற்றுப் பண்பாட்டு உருவகம் மட்டுமே என்னும் கருத்து இன்று உருவாகிவந்துள்ளது. அந்த தனிமனிதனை வரலாறாக பண்பாட்டுப்பெருக்காக உடைத்து விரித்துப் பார்க்கும் காலகட்டம். அந்த வரலாற்றுநோக்குதான் இன்றைய புனைகதையின் முக்கியமான தேவை. வாழ்க்கையை அந்தந்த தருணங்களில் மட்டுமே வைத்துப்பார்க்கும் காலகட்டம் கடந்துவிட்டது

 

உதாரணத்துக்கு, ஒரு சீனப்பெண் இங்கு பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். கையில் ஒரு கறுப்புக்குழந்தை இருக்கிறது. அதை எழுத்தாளன் பார்க்கிறான். இதுதான் கரு என வைத்துக்கொள்வோம். அந்தக்காட்சியில் இருந்து ஒரு சமூக சீர்திருத்தக் கருத்துக்கு, ஒரு பண்பாட்டுக்கருத்துக்குச் சென்றுசேர்வது பழைய எழுத்துமுறை. அதை ஒரு தனிமனித நோக்கில் அணுகி அந்தப்பெண்ணின் அத்தருணத்தை நுட்பமாக விரிப்பது நவீனத்துவ எழுத்துமுறை. அந்தப்பெண் அங்கே நிற்பது ஒரு வரலாற்றுத்தருணம். ஈராயிரம் ஆண்டுகளாக தென்னாசியக் கடற்கரைகளில் வணிகம்செய்யவந்த சீன வணிகர்குழுக்களில் இருந்து வந்தவள் அவள். முந்நூறாண்டுகளாக ஐரோப்பிய வணிகப்படையெடுப்பால் அலைக்கழிக்கப்பட்டவள். இரு உலகப்போர்களைக் கண்டவள். மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது இங்கே வந்தவள். மாறியசூழலில் ஒரு இந்தியனை மணந்திருக்கலாம். அவன் ஈராயிரம் வருடப் பண்பாடு கொண்டவன். ராஜராஜசோழனும் திருமலைநாயக்கனும் ஆண்ட மண்ணிலிருந்து வந்தவன். இந்த வரலாற்றுச்சூழல் உருவாக்கிய பண்பாட்டுக்கொந்தளிப்பு அவளை கட்டமைத்துள்ளது. இவையனைத்தையும் கொண்டு அவளை புரிந்துகொள்ள முயல்வதே இன்றைய எழுத்துமுறை.

 

அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட  முல்லைவாணனின் காலகட்டம், அடையாளத்தை வரையறுத்து அதனடிப்படையில் சீர்திருத்தம்பேசிய இளங்கண்ணனின் காலகட்டம், அடையாளத்தை தன் ஆழ்மனதைக்கொண்டு பரிசீலித்த கோவிந்தசாமியின் காலகட்டம் என மூன்று காலகட்டங்கள் கடந்துசென்றுவிட்டன. இன்று அடையாளம் உருவாகி வந்த மொத்த வரலாற்றுப் பண்பாட்டுச்சூழலையும் கருத்தில்கொண்டு ஒவ்வொரு வாழ்க்கைத்தருணத்தையும் பார்க்கும் மூன்றாவது காலகட்டம். அன்றாடவாழ்க்கையின் தருணங்களில் நிகழும் எளிய திருப்பங்கள், உணர்வெழுச்சிகள், கண்டடைதல்களை இனிமேலும் நாம் எழுதிக்கொண்டிருக்கமுடியாது. எழுத்தாளனின் பொறுப்பும் சவாலும் பலமடங்காக விரிந்துள்ளது இன்று.

 

எம்.கே.மேனோன் மலையாளத்தில் விலாசினி என்னும் பேரில் எழுதிய அவகாசிகள் [உரிமையாளர்கள்,வாரிசுகள்] என்னும் மலையாளநாவலை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கிட்டத்தட்ட 4000 பக்கம் நீளமுள்ள இந்நாவல் சமீபகாலம் வரை இந்தியாவின் மிகநீளமான நாவலாக கருதப்பட்டது. விலாசினி சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றியவர். அவகாசிகள் உலகப்போர் முடிந்த கொந்தளிப்பான சூழலில் தொடங்கி மலேசியாவும் சிங்கப்பூரும் பிரிந்த காலகட்டத்தை கடந்து நவீன வரலாறு வரை வந்து நிற்கிறது. அந்தப்பின்னணியில் பலநூறு தனிமனிதர்களின் அந்தரங்கக்கொந்தளிப்புகளை வைத்து ஆராய்கிறது. சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து இன்றுவரை எழுதப்பட்ட எந்த ஒருநாவலையும் ஒரு பேச்சுக்குக்கூட அவகாசிகளின் அருகே வைத்து ஒப்பிட்டுப்பார்க்கமுடியாது. அதை தமிழில் மொழியாக்கம்செய்து வெளியிடலாம். சிங்கப்பூர் அரசு சார் அமைப்புகள் உதவுமென்றால் நான் ஏற்பாடு செய்யமுடியும். சிங்கப்பூரில் இன்று எழுதுபவர்களுக்கான மிகப்பெரிய வழிகாட்டுதலாக, அறைகூவலாக அது அமையும்.

 

இன்றைய சூழலில் சிங்கப்பூர் இலக்கியத்தின் முன் உள்ள சவால் என்பது இதுதான், அடையாளங்களைக் கடந்து அடையாளங்களை ஆக்கி விளையாடும் வரலாற்று விசைகளை, பண்பாட்டு உட்குறிப்புகளைப்பற்றியும் பேசுவது. மானுட உணர்வுகளை அந்த பெரும் பகைப்புலத்தில் வைத்துப்பார்ப்பது. இந்நாட்டின் இச்சமூகதின் உள்ளத்தையும் ஆளுமையையும் வடிவமைத்துள்ள அனைத்து பண்பாட்டுக்கூறுகளையும் கண்டடைவது,அதன் உளவியல்கூறுகளை கட்டமைத்திருக்கும் ஆழ்படிமங்களை மீட்டு எடுப்பது.  இனி எழுதவேண்டியது தனித்தனியாக தமிழ், சீன,மலேய வாழ்க்கையை அல்ல சிங்கப்பூர்வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக. அது நிகழுமென எதிர்பார்க்கிறேன்.

 

நன்றி

 

 

சிங்கப்பூர் உமறுப்புலவர் மையத்தில் 15-9-2016 அன்று நிகழந்த சிங்கப்பூர் இலக்கிய போக்குகள் குறித்த கருத்தரங்கில் பேசிய உரையின் வரிவடிவம்

 

சிங்கப்பூர் உமறுப்புலவர் பள்ளியின் வரலாறு

 

சிங்கப்பூர் நூல்களைதரவிறக்கி  வாசிப்பதற்கான நூலகத் திட்டம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்திரா பார்த்தசாரதியின் பெயர்

$
0
0

1

 

மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இந்திரா பார்த்தசாரதி. 1990 ல் எனக்கு அகிலன் நினைவுப்பரிசு ரப்பர் நாவலுக்காகக் கிடைத்தபோது இந்திரா பார்த்தசாரதி நடுவர்களில் ஒருவராக இருந்தார். விழாவுக்கு அவரும் அவர் துணைவியும் வந்திருந்ததை நினைவுகூர்கிறேன்

 

முருகபூபதி இந்திரா பார்த்தசாரதி மற்றும் இந்திரா பற்றி எழுதிய கட்டுரை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பிரேமையின் நிலம்

$
0
0

unnamed

 

 

காங்க்டாக்கில் இருந்து அதிகாலை ஆறுமணிக்கு சிலிகுரிக்குக் கிளம்பினோம். அங்கிருந்து பூட்டான் செல்வதாக திட்டம். 2012 மே மாதம் 22 ஆம் தேதி. வடகிழக்கு மாவட்டங்களைப் பார்ப்பதற்காக நானும் நண்பர்களும் கிளம்பி வந்திருந்தோம். சிலிகுரி வடகிழக்கை இந்தியாவுடன் இணைக்கும் புட்டிக்கழுத்துப் பகுதி. அங்கிருந்துதான் பூட்டானுக்கும் செல்லவேண்டும்.

 

சிலிகுரிவரை அரிய காட்சி என்பது சமவெளியில் உள்ள தேயிலைத்தோட்டங்கள். அஸாமிய தேயிலை ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. நாம் சோவியத் ருஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கத்தொடங்கியபோது பதிலுக்கு தேயிலையை கொடுக்க ஆரம்பித்தோம். ஒப்பந்தப்படி அவர்கள் அதை மறுக்கமுடியாது. வேண்டாம் என்று சொல்வதற்கான உரிமையும் அன்று அம்மக்களுக்கு இல்லை.

 

ஆகவே நம்மவர்கள் தளிருடன் இலைகளையும் அரைத்துசேர்க்கத் தொடங்கினர். இந்திய டீயின் சர்வதேச மதிப்பு தரைமட்டமாக ஆயிற்று. இன்றும் இந்தியத்தேயிலை நன்மதிப்பை மீளப்பெறவில்லை. இந்திய நிறுவனங்கள்தான் இலங்கை தேயிலைத் தோட்டங்களை நடத்துகின்றன. இலங்கை தேயிலை உலகப்புகழுடன் உள்ளது.

 

சிலிகுரியிலிருந்து பூட்டானுக்குச் செல்ல ஒரு டாட்டா சுமோ வண்டியை வாடகைக்குப் பிடித்தோம். அதில் நெருக்கியடித்து அமர்ந்தோம். நெருக்கம் செலவைக்குறைப்பது மட்டும் அல்ல குளிருக்கும் நல்லது.

 

மலையிறங்கியதும் இளவெயில். இருபக்கமும் வளமான மண். மழைபெய்திருந்தமையால் பச்சை போர்த்தியிருந்த்து.தீஸ்தாவின் கரையோரமாகவே சென்றோம். பூட்டானில் நுழையும் வாசல் புயூச்சோலிங் என்ற ஊர்.  இது வங்காளத்தில் இருக்கிறது. குப்பை மலிந்த ஊர். ஆனால் நல்ல சாலையை எல்லைக்காவல்படை போட்டிருக்கிறது.

 

பூட்டான் நாட்டு நுழைவாயிலில் பூட்டானியக்  கட்டிடப்பாணியில் அமைந்த ஓர் அழகிய தோரணமுகப்பு உள்ளது. நாங்கள் செல்லும்போது தாமதமாகிவிட்ட்து. மதிய உணவு இடைவேளை. ஆகவே நாங்களும் குப்பை மண்டிய தெருவழியாகச் சென்று வங்க ஓட்டல் ஒன்றைக் கண்டுபிடித்து சாப்பிட்டுவிட்டு ஒன்றரை மணிக்கு உள்ளே சென்றோம்.

 

பூட்டானில் நுழைய விசா வேண்டாம். ஆனால் அனுமதிச்சீட்டு வேண்டும். அதற்கு இந்திய பாஸ்போர்ட் அல்லது இந்திய வாக்காளர் அடையாளச்சீட்டு இருக்க வேண்டும் .  பூட்டானின் அரசு அலுவலர்கள் அனைவரும் பூட்டானியமுறைப்படி கிமோனோ போன்ற கருஞ்சிவப்பு ஆடைகளைத்தான் அணிந்திருந்தனர். போருக்குச் செல்வதுபோன்ற தோற்றம். பெண்களின் உடை இன்னும் கொஞ்சம் நளினமானது

 

எங்களுக்கு அனுமதி அளித்த ஊழியையின் பெயர் பேமா. பிரேமா என்ற பெயரின் பூட்டானிய வடிவம் என்று கொஞ்சம் கழித்தே புரிந்தது. அழகான மங்கோலிய முகம். கொஞ்சம் தாய்லாந்து சாயல். செக்கச்சிவந்த முகம். பிரேமை வழியும் நாணம் நிறைந்த சிரிப்பு. பூட்டானிய மொழியில் ஏதோ சொன்னாள். மீண்டும் சொன்னபோதுதான் அது ஆங்கிலம் என்றும் வெல்கம் டு பூட்டான் என்றும் சொல்கிறாள் என்பதே புரிந்தது.

 

அனுமதிகள் பெற்று மாலைமூன்றரை மணிக்கு இரு வண்டிகளில் பூட்டானுக்குள் நுழைந்தோம். ஒரு சிறு எல்லைதான் நமக்கும் பூட்டானுக்கும். இப்பால் குப்பைக்குவியல்கள். எல்லைக்கு அப்பால் பூட்டான் மிகமிகச் சுத்தமான நாடாக இருந்தது. அற்புதமான சாலைகள்.

 

பூட்டானில் மலை ஏற ஏற மீண்டும் குளிர் நெஞ்சை அடைக்க ஆரம்பித்தது. வழியில் ஒரு ராணுவச் சிற்றுண்டிச்சாலையில் சாம்பார்வடையும் பருப்புவடையும் கிடைத்த்து. அங்கே பொறுப்பில் இருந்தவர் காயங்குளத்தைச் சேர்ந்த ஒரு மலையாளி. ஏஷியாநெட் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

இரவு ஒன்பது மணிக்கு பூட்டானுக்குள் நுழைந்தோம். பூட்டானின் தெருக்களும் கட்டிடங்களும் அவர்களுக்கே உரிய தனித்தன்மையான கட்டிடக்கலை கொண்டவை. எல்லா கட்டிடங்களிலும் பௌத்த மடாலயங்களுக்குரிய செந்நிறச் சாய்வுக்கூரையும் முனைவளைவும் இருந்தன. சட்டென்று ஓர் அன்னிய நாட்டுக்குள் நுழைந்த நிறைவு கிடைத்த்து.

 

திம்புவில் ராவன் ஓட்டலில் எங்களுக்காக அறை முன்பதிவுசெய்திருந்தோம். மூன்று நட்சத்திர விடுதி. அது சுற்றுலாப்பருவமல்ல என்பதனால் வாடகை மிகக்குறைவு.மொத்த விடுதியுமே பெண்களால்தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. வெயிட்டர்கள் சமையல்காரர்கள் எல்லாருமே பெண்கள். அதுதான் இங்கே வழக்கம்.

 

உற்சாகமான அழகிய இரு இளம்பெண்கள் பணிவுடன் வரவேற்று அறையைச் சரிசெய்துகொடுத்தார்கள். ஒருத்திக்கு டிப்ஸ் கொடுக்கும்போது பெயரென்ன என்று கேட்டேன். பேமா. இன்னொருத்தி? அவள் நாணத்துடன் பேமா என்றாள். பூட்டானில் எவர் பெயருடனும் நான்கு அலகுகள் இருக்கும். பெயர், தந்தைபெயர், குடும்பப்பெயர், பழங்குடிப்பெயர், ஊர்ப்பெயர். பெயரைக்கேட்டாலே அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிடலாம்

காலை ஐந்து மணிக்கு எழுந்து திம்புவின்  நகரவீதிகள் வழியாக காலைநடை சென்றோம். அங்கே அரசுவேலைகள், கல்விநிலையங்களுக்குப் பாரம்பரிய உடை கட்டாயமென்பதனால் ஊரே விசித்திரமாக இருந்தது. படங்களில் பார்த்த திபெத்துக்கு வந்துசேர்ந்தது போல. பெரும்பாலும் அழகிய புதிய பெரிய கட்டிடங்கள். வறுமை இருப்பதாகத் தெரியவில்லை. சுத்தமாகக் கூட்டப்பட்ட தெருக்கள். நல்ல குளிர் இருந்தது.

ஒரு டீக்கடைக்குள் நுழைந்து டீ குடித்தோம். சிக்கிம் பூட்டான் போன்ற நாடுகளின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா டீக்கடைகளும் மதுக்கடைகளும்கூட என்பதே. எல்லாவகையான மதுக்கோப்பைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெரிய நன்னீர்மீன்கருவாடு பொரித்து வைக்கப்பட்டிருந்தது. கறுப்பு டீ இங்கெல்லாம் மிக அருமையாக இருக்கும். பால் என்றால் யாக்கின் பால் . அது நல்ல மிருகம்தான். ஆனாலும் கறுப்பு டீ நமக்கு நல்லது. டீக்கடை நடத்துவதெல்லாமே பெண்கள். அந்த டீக்கடை உரிமையாளரின் பெயர், ஆம், பேமாவேதான்.

 

நடுவே ஒரு சந்தை இருந்தது. அதைச்சுற்றிச் சென்றவழி முழுக்கப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தார்கள். பாரம்பரிய உடையில் பெண்கள் விசுக் விசுக் என்று சென்றார்கள். ஒரு பெண்ணிடம் இந்த அதிகாலையிலேயே பள்ளியா என்று விசாரித்தோம். அதீத வெட்கத்துடன் ஆமாம் என்று சொல்லிச்சென்றாள்.  பெயர் கேட்கவில்லை. பேமாதான், வேறென்ன இருக்கப்போகிறது?

 

பள்ளிக்கூடமும் பௌத்தமடாலயம்போலவே இருந்தது. பிலுபிலுவென பிள்ளைகள். ஒருவனிடம் பெயர் கேட்டோம். கிம் சுங் என தொடங்கி ஒரு சொல்வரிசையைச் சொல்லி இடுப்புவரை வளைத்து வணங்கி சிறுமணிக்கண்களால் சிரித்தான். அவனை கொஞ்சி விட்டு திரும்பிப்பார்த்தால் பெயரைச் சொல்வதற்காக ஒரு நாற்பது பூட்டானியக்குழந்தைகள் நின்றிருந்தன. எல்லா முகங்களிலும் பரவசச்சிரிப்பு

 

பள்ளிக்கு அப்பால் ஒரு பெரிய கோயில். அது சோர்ட்டன் நினைவகம் என்று அழைக்கப்படுகிறது. பூட்டானின் மூன்றாம் மன்னர் டிக்மே டோர்ஜி வான்சக் [ 1928 –1972]அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டது அது. அவர் வாழ்ந்த போதே தன் நினைவுச்சின்னத்தை புத்தரின் மனமாக உருவகித்து ஓர் ஆலயம் எழுப்பவேண்டுமெனக் கோரியிருந்தாராம். இது திபெத்திய மரபுப்படி கட்டபட்டு  டங்சே ரிம்போச்சே அவர்களால் பிரதிஷ்டைசெய்யப்பட்டது.

 

1974ல் கட்டப்பட்ட இது பல முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. நடுவில் பூட்டான் பாணியிலான உயரமான கோபுரம். சுற்றும் வட்டப்பாதை. அதை நோக்கிச்செல்லும் வழிக்கு இருபக்கமும் பிரார்த்தனைக்கான பெரிய அலங்கார உருளைகள் கொண்ட  கட்டிடங்கள் .

 

காலைநேரத்திலேயே அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து கூப்பிய கைகளுடன் வலம் வந்துகொன்டிருந்தனர். சிறிய உடுக்கை போல ஒன்றைச் சுழற்றியபடி பௌத பிட்சுக்கள் சுற்றிவந்தார்கள். பல வகையான உடைகள் கொண்டவர்கள். ரத்தச்சிவப்பு ஆடையணிந்தவர்கள் திபெத்திய லாமாக்கள் என்று தோன்றியது. சுட்ட வாழையிலை போலச் சுருக்கம் பரவிய மஞ்சள்முகங்கள்.

 

பிரார்த்தனை உருளைகள் அருகே மிக வயதான ஒரு லாமா அமர்ந்திருந்தார். அவற்றை மும்முறை சுற்றும்படி கண்கள் இடுங்க சிரித்துக்கொண்டே சொன்னார். புத்தரின் தர்மசக்கரத்தின் ஒரு வடிவம் அது. புத்தர் அதை முதலில் சுழலச்செய்தாராம். அதைப் பல்லாயிரம் கரங்கள் விடாது சுற்றவைக்கவேண்டும் என்பது மரபு. அவற்றில் பொன்னிற எழுத்துக்களில் மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் செந்நிறமான உருளைகள். அவற்றுக்குரிய போதிசத்வர் அல்லது லாமாவின் பெயரோ உருவமோ பின்பக்கம் இருக்கும். அந்த உருளையைச் சுற்றினால் அந்த குருநாதரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

திரும்ப அறைக்கு வரும் வழியில் கலைமணி என்பவரை சந்தித்தோம். விசித்திரமான மனிதர். கார்கிலுக்குப் போய் அங்கிருந்து பூட்டான் வந்திருக்கிறார். ஓய்வுபெற்ற பள்ளி ஆய்வாளார். முழுநேர வேலையே இந்தியாவைச் சுற்றி வருவது. கறுப்பான குள்ளமான மணிக்குரல்கொண்ட மனிதர்.அவர் கையில் இருந்த மஞ்சள்பையில் தமிழ் இருப்பதைப்பார்த்துத்தான் அவரிடம் பேசப்போனோம். அதை அந்த நோக்கத்துக்காகவே வைத்திருப்பதாகச் சொன்னார். தனியாக வேறு விடுதியில் அறை போட்டிருந்தார்.

 

எங்களுடன் எங்கள் விடுதிக்கும் வந்தார். தான் சென்ற ஊர்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். “இந்தியாவுக்குள்ள போய்ட்டே இருப்பேன் சார். ஒரு நாலு மாசம் ஊர்ல இருந்தா அபூர்வம். பென்ஷன் வருது. வைஃப் இல்ல. பசங்கள்லாம் நல்லா இருக்காங்க. அப்றம் என்னத்துக்கு ஊர்ல? இந்தியா அப்டியே விரிஞ்சு பரந்து கெடக்கு. எல்லாமே நம்ம மண்ணுன்னு நெனைச்சா பாக்கப்பாக்க சலிக்காது. எவ்ளவு எடம்? லடாக் போனீங்களா சார்?”

 

“இல்லை” என்றேன். ”போகணும் சார். லடாக் நம்ம ஊர்லயே அற்புதமான எடம். எல்லா எடங்களிலயும் ஜனங்க என்ன ஒரு அன்பா இருக்காங்க. இந்தியாவப்பாக்க ஆரம்பிச்சா இந்த தமிழன் மலையாளிங்கிற உணர்வெல்லாம் போயிரும். சாதிப்புத்தி போயிரும். சாமியப்பாக்கிற மாதிரி சார்”

 

அன்றுமுழுக்க கலைமணி எங்களுடன் இருந்தார். “சினிமா பாத்தீங்களா சார்?” என்றார். “இல்லை, நாங்க ஊரப்பாக்க வந்திருக்கோம்” என்றேன். “சினிமாத்தியேட்டருக்குப் போகணும் சார். அங்க என்ன படம் ஓடுது, எப்டிப்பட்ட ஆளுங்க வந்து பாக்கிறாங்க, எல்லாம் ரொம்ப முக்கியம்”

 

அங்கே அனேகமாக எல்லாமே நேப்பாளி மொழிப் படங்கள். பூட்டான் மொழியிலும் படங்கள் உண்டு. அரசு மானியத்தில் எடுக்கப்படுபவை. பொதுவாக இந்திப்படங்களை அப்படியே திரும்ப எடுத்துவிடுகிறார்கள். மிகமிகச்சிறிய பட்ஜெட். அனேகமாக ஐம்பதுலட்சம் ரூபாயில் ஒரு படம் எடுக்கப்பட்டுவிடும். இந்திப்படங்கள் இங்கே ஓடுவதுண்டு, ஆனால் அதேகதையில் ஒரு மஞ்சளினக் கதாநாயகி நடித்து மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறார்ர்கள்.

 

“நேத்து அந்தப்படத்தைப் பாத்தேன் சார்” என்றார் கலைமணி. “என்ன படம்?” என்றேன். ஏதோ ஒரு ஒலியை எழுப்பி “ஷாரூக் நடிச்ச படம்தான் சார். திரும்ப எடுத்திருக்காங்க” நான் வேடிக்கையாக “கதாநாயகிபெயர் பேமாவா?” என்றேன். “ஆமா சார்” என்றார் கலைமணி. ”அவங்க ராணிபேரும் பேமாதான்”.

 

பூட்டான் அரசரின் பெயர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சக். இளைஞர். 2011ல் தான் மணமுடித்திருந்தார். மனைவியின்பெயர்  ஜெட்சன் பேமா. பூட்டானுக்கு ராணுவமில்லை. இந்தியா அதன் பாதுகாப்புநாடு. முக்கியமான வருமானமே சுற்றுலாவும் லாட்டரியும்தான்.

 

மறுநாள் கலைமணி மறைந்துவிட்டார். அவர் அப்படி மறைவார் என நான் எண்ணியிருந்தேன். அபாரமான தனிமை கொண்ட மனிதர். ஓர் எல்லைக்குமேல் எவரையும் அனுமதிக்கமாட்டார். பெரிய பயணிகளெல்லாம் அப்படி தனிமையானவர்கள்தான்

 

பூட்டானில் நாலைந்துநாள் இருந்தோம். அங்குள்ள பௌத்த மடாலயங்களைப் பார்த்தோம். குன்றின் உச்சியிலிருக்கும் புலிக்கூடு மடாலயம் இந்தியாவின் அற்புதங்களில் ஒன்று. அங்குள்ள அருங்காட்சியகம் பூட்டானின் வாழ்க்கையை முழுமையாகக்காட்டுவது. அங்கும் ஒரு பேமா வழிகாட்டியாக வந்தார். இன்னொரு பேமா சிறுசட்டை அணிந்து அம்மாவின் கைப்பிடித்து இடுங்கிய கண்களால் எங்களை நோக்கிச் சிரித்தபடி வந்தாள்.

 

திரும்ப ப்யூச்சேலிங்க்குக்கு காரில் வந்துகொண்டிருந்தோம். ஒருகிழவி அழகிய குழந்தையுடன் வந்துகொண்டிருந்தாள். சுட்டபழம் போல சுருங்கிய முகம். இடுங்கியகண்களுக்குள் நீர்த்துளிவிழிகள். பெரிய பற்களுடன்கூடிய சிரிப்பு. “பூட்டானைவிட்டுக் கெளம்பறோம். பேமாகிட்ட பை சொல்லிருவோம்” என்று காரை நிறுத்தினோம்

 

குழந்தையின் பெயர் பேமாவேதான். கிழவிக்கு தன் பேத்தி புகைப்படம் எடுக்கப்படுவதில் பெருமகிழ்ச்சி. பூட்டானை நிறைத்துள்ள பிரேமையிடம் விடைபெற்றுக்கொண்டோம். அந்த வெள்ளிமலைகள், மகத்தான மலைச்சரிவுகள், பொன்னொளிர் முகில்கள், மௌனம் தேங்கிய வெளிநிலங்கள் பிரேமையை மட்டுமே அளிக்கக்கூடியவை.

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கை சந்திப்பு -கடிதம்

$
0
0

1 (1)

 

அன்புள்ள ஜெயன்

வேணுவும் நானும் இன்று மதியம் கோவை வந்து சேர்ந்தோம். குறுமுனியை பத்திரமாக அவருக்கான பேருந்தில் ஏற்றிய பிறகே எனக்கான இடத்துக்கு நான் புறப்பட்டு வந்தேன்.
சென்ற புதன்கிழமை வரையிலும் புறப்படுவதைப் பற்றிய நிச்சயம் இல்லாதிருந்தவன் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் இருந்துவிட்டு திரும்பியதை மகிழ்வுடனும் வியப்புடனும் நினைத்துக் கொள்கிறேன்.
எப்போதும் போல நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி கச்சிதத்துடன் செறிவுடன் அமைந்திருந்தன. கவிதையைப் பற்றிய உரையாடலின்போது நான் சொல்ல நினைத்தது இது.
கூட்டுவாசிப்பின்போது அதிலும் தரமான கவிஞர்களின் முன்னிலையில் அவ்வாறு நிகழும்போது ஒரு மொழியின் கவிதைப் போக்கே மாறிப் போயிருக்கிறது. மலையாளக் கவிதையின் சமீபகால வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும், அம் மொழியின் கவிதைப் போக்கை இரண்டாகப் பிரிக்கிறார்கள் – குற்றாலம் இருமொழி கவிதையரங்குக்கு முன்னும் பின்னும் என. தமிழில் இருந்து சுந்தர ராமசாமி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், யுவன், மோகனரங்கன் போன்றவர்களும் மலையாளத்திலிருந்து ஆற்றூர் ரவிவர்மா, கல்பற்றா நாராயணன், டி.பி.ராஜீவன், அன்வர் அலி, ராமன் போன்றவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கவிஞருக்கும் ஐந்து கவிதைகள். தமிழ் கவிதைகளை மலையாளத்திலும், மலையாளக் கவிதைகளை தமிழிலும் மொழிபெயர்த்துத் தந்திருந்தீர்கள்.
இதன் தொடர்ச்சியாக ஊட்டியில் இரண்டாம் அரங்கும் நடந்தது. இரு மொழியிலிருந்தும் இன்னும் சில புதிய கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வுக்குப் பின்னர் மொத்த மலையாளக் கவிதைப் போக்கே மாறிப்போய்விட்டது.
இதைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவகாசம் கிடைக்கவில்லை. இன்று வேணுவுடன் ரயிலில் வரும்போது இதைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தேன்.
உங்களுடனும் நண்பர்களுடனும் கழித்த இந்தப் பொழுதுகள், குறிப்பாக லேசர் காட்சியைக் காண்பதற்காக நடந்தோடிச் சென்ற அன்றைய இரவு மறக்க முடியாத ஒன்று. எங்கள் மீது நீங்கள் காட்டிய தனிப்பட்ட அக்கறையும் கவனமும் எப்போதும்போல உவகையையும் கூடவே பொறுப்பையும் கூட்டுவதாகவே உணர்கிறேன்.
இன்னும் ஒன்றை நான் இந்த நான்கு நாட்களில் கவனித்தேன் ஜெயன், நீங்கள் மெத்தக் கனிவுற்று இருக்கிறீர்கள். சினந்து கடிந்த பொழுதுளே இல்லை. சிங்கப்பூரின் ஆசிரியப் பணி அப்படியொரு ஆசிரியப் பக்குவத்தை அளித்திருக்கிறதா?
நிறைவுடன்
கோபாலகிருஷ்ணன்
1 (2)
அன்புள்ள கோபால்
அப்படி ஒரு கனிவு கூடியிருந்தால் நல்லது. உண்மையில் நாவல் எழுதிமுடிந்த இடைவேளை. ஆகவே விடுதலையாக உணர்ந்தேன். கொந்தளிப்போ எரிச்சலோ இல்லாமலிருந்தேன். இதுதான் சொல்லத்தோன்றியது.
உங்கள் வருகையும் பங்கேற்பும் முக்கியமானதாக இருந்தது. சு வேணுகோபாலின் கொந்தளிப்பும் கொப்பளிப்பும் ஒரு பக்கம் மறுபக்கம் உங்கள் அமைதியும் மிகையற்ற தன்மையும் கொண்ட உரையாடல்
அரங்கில் ஒரு பெரிய exodus நாவல் பற்றிப்பேசினோம். அது நினைவிலிருக்கட்டும். எதிர்பார்க்கிறேன்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புண்படுதல் –கடிதங்கள்

$
0
0

monkey laughing 2

 

அன்புள்ள திரு.ஜெயமோகன்!
நகைச்சுவை என நினைத்து ஏதோ கூறிவிட்டு இரண்டுமுறை உதை பட்டிருக்கிறேன்.
முதல் முறை,கோவில் வாசலில் விட்டிருந்த நண்பரின் காலணி காணாமல் போய்விட்டது.’பரதாழ்வான் வந்துவிட்டுப் போயிருக்கிறான்’என்று கூறினேன்.
நண்பர் வைணவர். வந்தது பாருங்கள் அவருக்குக் கோபம்.காலணி தொலைந்த‌
ஆதங்கமும் சேர்ந்து என்னை காய்ச்சி எடுத்துவிட்டார்.இராமாயணம் , பரதன், ஆழ்வார்கள் அனைவரையும் நான் கேவலப்படுத்தி விட்டேன் என்று கத்திவிட்டு கையையும் ஓங்கிவிட்டார்.
நாய் பிரியரான நண்பர் மூன்று நாய்களுடன் காலையில் நடைப்பயிற்சிக்கு வந்தார். எதிரே வந்த நான் ‘குட் மார்னிங், பைரவ சுவாமி’ என்றேன். கோபம் தலைக்கேறி கன்னத்தில் அறைந்து விட்டார்.
அன்புடன்,
கே.முத்துராமகிருஷ்ணன்
ஆங்கரை,லால்குடி
அன்புள்ள ஜெ
புண்படுதல் பற்றிய உங்கள் கட்டுரை முற்றிலும் உண்மை. இதை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கடுமையான கிண்டல்கள் மட்டும் அல்ல சாதாரணமான வரிகளேகூட பலரையும் இங்கே புண்படுத்துகின்றன. சாதி மதம் எல்லாம் மிகக்கவனமாகத் தெரிந்துகொண்டுதான் பேசவேண்டியிருக்கிறது.
இதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம். இங்கே மக்களுக்கிடையே உரையாடலே முன்னர் நிகழ்ந்ததில்லை. சாதி சாதியாக ஒரு கூட்டுக்குள்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே கிண்டல்கள் புரிந்துகொள்ளப்படுவதில்லை.
நான் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன் மனைவியை என்னிடம் ‘உன் தங்கச்சி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் வேடிக்கையாக ‘நான் அப்டி நினைக்கலை மாப்ள’ என்று சொன்னேன். இருபதாண்டுக்கால நட்பு அப்படியே முறிந்தது
ராம்சங்கர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பிரம்பும் குரலும்

$
0
0

MG_1657-1-273x300

 

சிங்கப்பூர் இலக்கிய உலகத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் வாசித்த முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் இராம கண்ணபிரானின்   ‘சோழன் பொம்மை’ ‘இருபத்தைந்து ஆண்டுகள்’ என்னும் இரு சிறுகதை நூல்களும் அடங்கும் . இவை முறையே 1980, 81 ஆண்டுகளில் வெளியாகிய நூல்கள்.

 

இராம கண்ணபிரான் சிங்கப்பூர் இலக்கியத்தின் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக கணிக்கப்படுபவர். சிங்கப்பூர் இலக்கியச்சூழலின் பிரச்சினைகள் மற்றும் எல்லைகளைக் கணக்கில் கொண்டே இப்படைப்புக்களை நாம் மதிப்பிட முடியும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முற்றிலும் அன்னிய நிலம். பல்லினப்பண்பாடுள்ள தேசம். குறிப்பாக குடும்பத்திற்கு வெளியே தமிழ் காதில் விழாத சூழல்.

 

ஆகவே இருவகையான இழப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று எழுதுவதற்கான வாழ்க்கைக்களங்கள் மிகக்குறுகிவிடுகின்றன. இரண்டு தமிழ்நடை உருவாகி வரமுடிவதில்லை.

 

நடை என்பது செவியால் உருவாக்கப்படுவது. மக்கள் பேசும் மொழி செவிவழியாக ஆசிரியன் மனத்துக்குள் புகுந்து தேங்கி ,விசைகொண்டு, நுட்பங்கள் அடைந்து நடையாக ஆகிறது. மொழிநடையின் அடிப்படை என்பது செவியே. வாழ்க்கையில் பல்வேறு அன்றாடக்களங்களில் புழங்கும் மொழியின் கசங்கலும் கொப்பளிப்புகளுமே நடையை உருவாக்குகிறன. வசைபாடவும், கொஞ்சவும் ,சட்டம் பேசவும், சாத்திரம் பேசவும் ஒருமொழி பயன்படுத்தப்படும்போதே அது மாறுபட்ட மொழிநடைகளை உருவாக்குகிறது. மொழி என்னும் அலைப்பரப்பின் நுரை என நடையைச் சொல்லமுடியும்.

 

அந்த வாய்ப்பு அன்னியமொழிச்சூழலில் வாழும் எழுத்தாளருக்கு அருகிப்போகிறது. அதன்பின் எஞ்சியிருப்பது பிறமொழிகளின் முயங்கலால் அமையும் சில புத்தழகுகள் மட்டுமே.  ஆனால் அன்றைய சிங்கப்பூரின் எழுத்து என்பது தமிழ் அடையாளத்தை வகுத்துக்கொள்வதிலும் தமிழ்ப்பண்பாட்டை நிலைநாட்டுவதிலும் மையக்கவனம் கொண்டது.  அவ்வாறு தமிழடையாளம் நோக்கிக் குறுகும்போது பிறமொழியின் சாயல்கள் கவனமாகத் தவிர்க்கப்படுகின்றன. ஆகவே நடை உருவாகும் ஒரே வாய்ப்பும் அடைக்கப்படுகிறது.

 

உண்மையில் சீன,மலாய் இனங்களை நோக்கி பார்வையைத் திருப்பிக்கொண்டு விரிந்த நோக்கைக் கொள்ளமுடியும் என்றால் வாழ்க்கைக்களங்கள் முடிவிலாது பெருகும்.  ஆனால் மறுபடியும் தமிழ்ப்பண்பாட்டுச் சீர்திருத்தம் என வரையறைசெய்துகொள்ளும்போது ஆகவே எழுதுவதற்கு இருந்த களம் என்பது தமிழ்மக்களின் குடும்பவாழ்க்கை மட்டுமே.

 

இராம.கண்ணபிரானின் இவ்விரு தொகுப்புகளில் உள்ள கதைகளின் முதன்மையான குறைகள் மேலே சொல்லப்பட்ட எல்லைகள் வழியாக உருவாகி வருபவை. இவை வண்ணங்களும் நுட்பங்களும் இல்லாத பள்ளியாசிரிய மொழிநடையில் அமைந்துள்ள கதைகள். இவற்றின் களம் திரும்பத்திரும்ப குடும்ப உறவுகள்.

 

இராம கண்ணபிரான் ‘கோபு என்னை மன்னி’ என்னும் கதை இப்படி ஆரம்பிக்கிறது. ‘பொறிதட்டியது அருணகிரிக்கு. தன் காதுகளை அவனால் நம்பமுடியவில்லை. கணக்கர் கலிப்பகையார் பொய்சொல்லியிருப்பாரோ என ஐயுற்றான்’ . கலிப்பகையார், மணக்குடவர்,  இளங்கீரன்,திருமங்கை போன்ற பெயர்கள் கதாபாத்திரங்களுக்குச் சாதாரணமாக வருகின்றன. உரையாடல்களும் அச்சுநடையிலேயே உள்ளன.உதாரணமாக அக்கதையின் உரையாடல்பகுதி இப்படி இருக்கிறது.

 

‘நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள். அருணகிரி, தொடர்ந்து நீ பண்ணையைப்பார்த்துக்கொள். கோபு, நீ அருணகிரிக்கு உதவியாக இரு. நம் குடும்ப உறுதிமொழியை என்றும் காப்பாற்று. ஒழுக்கம் இன்றியமையாதது’ என்று முடித்தார்.

 

இவ்விரு கூறுகளும் இலக்கியத்திற்கு எவ்வகையில் முக்கியமானவை என வாசகர்கள் உணரமுடியும். கதைமாந்தரின் பெயர் வேறு எந்த அடையாளமும் இல்லாமலேயே வாசகனுக்கு எவ்வளவோ நுணுக்கமான சித்திரங்களை உருவாக்கக்கூடியது. கதாபாத்திரத்தின் வயது, ஊர், சாதி, சமூகப்படிநிலை என. எழுத்தாளன் அதை யோசித்துப்போடமுடியாது, அனிச்சையாகவே அது அமையும். அவ்வாறு அமைவது இலக்கியவாதியின் முக்கியமான நுண்ணுணர்வு

 

இன்னொன்று பேச்சுநடை. அச்சுநடை இருக்கலாமா என்றால் இருக்கக்கூடாது என்ற நெறி ஏதுமில்லை. ஆனால் ஒரு கதாபாத்திரம் பேசும்போது நாம் அதை கேட்பதுபோலத் தோன்றவேண்டும். அக்கதாபாத்திரத்தின் முகபாவனைகளும் உணர்வுகளும் நம்மை வந்தடையவேண்டும். அதற்குத்தான் பேச்சுமொழி. பேச்சுமொழியாக இருந்தால் மட்டும்போதாது, அந்தப்பேச்சேகூட நம்பும்படியாக இருக்கவேண்டும். கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஏற்ப, தருணத்திற்கு ஏற்ப.

 

மேலே சொன்ன இருகூறுகளையும் புனைவின் ‘நம்பவைத்தல் கலை’ க்கு இன்றியமையாதவை என்று சொல்லலாம். இராம கண்ணபிரானின் கதைகள் அவ்வகையில் முதல்படியிலேயே தோல்வியடைந்துவிடுகின்றன.

 

புனைவெழுந்த்து தொடங்கிய காலகட்டத்தில் இத்தகைய கதைகள் ஏராளமாக வெளிவந்தன. புதுமைப்பித்தன் இத்தகைய கதைகளை கிண்டலடித்து ‘இந்தப்பாவி’ என்னும் கதையை 1935லேயே எழுதிவிட்டார். மேலும் அரைநூற்றாண்டுக்குப்பின் இராம கண்ணபிரானின் இக்கதைகள் வெளிவந்துள்ளன.

 

இக்கதைகளுக்கு முன்னுதாரணமாக இருந்தவை மு.வரதராசனார், கு.ராஜவேலு போன்றவர்களின் கதைகள் என ஊகிக்கலாம். உண்மையில் திருமங்கை அமைதி பிறந்தது போன்ற கதைகள்மு.வரதராசனாரின் கதைகளின் வலுவான சாயல்கொண்டவை. ஆனால் புதுமைப்பித்தனின் கிண்டல் வந்தபின் கால்நூற்றாண்டு காலம் கழித்து எழுதிய மு.வரதராசனாரின் படைப்புகள் காலாவதியாகி மேலும் கால்நூற்றாண்டுக்குப்பின் இக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன

 

இவை எழுதப்பட்ட காலகட்டத்தில் தமிழில் புதுமைப்பித்தன் மௌனி குபரா காலகட்டமும் லா.ச.ரா. க.நா.சு காலகட்டமும் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் காலகட்டமும் முடிந்து வண்ணதாசன் வண்ணநிலவன் காலகட்டம் ஆரம்பித்துவிட்டிருந்தது என்பதை ஓர் ஒப்பீட்டுக்காகச் சொல்லவிரும்புகிறேன்.

 

மு.வரதராசனார் உள்ளிட்ட இந்த மரபுசார் எழுத்தின் இன்னொரு பிரச்சினை என்னவென்றால் மரபின் அத்தனை பிற்போக்கு, ஏன் மானுட விரோத நோக்கும்  மண்டிக்கிடக்கும் என்பதே. உதாரணமாக திருமங்கை என்னும் கதை. மனைவியை கொடூரமாக நடத்துகிறான் கதாநாயகன். அவன் தன் கர்ப்பிணி மனைவியை அடித்தே கொல்கிறான். அவள் தன் அழகிய தங்கையை அவனுக்கு இரண்டாம்தாரமாக ஆக்கிவிட்டு மடிகிறாள். அவன் மனம்திரும்பி அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறான்.

 

இன்னொரு கதை கோபுரநிழல் கணவனிடம் கோபித்துக்கொண்டு ஒரு பெண் ரயிலில் தன் அக்கா வீட்டுக்குச் செல்கிறாள். கணவன் வந்து அழைத்தபோது அவள் அவனுடன் வர மறுக்கிறாள். அதைக் கேட்டு ஒரு ஹிப்பி அவளை ‘அழைக்கிறான்’. அவள் அவனை கன்னத்தில் அறைகிறாள். அங்கே படுத்திருந்த ஒரு ‘பெரியவர்’ எழுந்து அவளுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்றும் அவனை பொதுஇடத்தில் சண்டைபோட்டு அனுப்பியதனால்தான் அப்படி நிகழ்ந்தது என்றும் அறிவுரைகூறுகிறாள். அவள் திருந்துகிறாள். கோபுரநிழல் என்னும் தலைப்பைக் கவனியுங்கள். கணவன் கோபுரமாகக் காட்டப்படுகிறான் இங்கு.

 

சிங்கப்பூர் இலக்கியப்போக்கின் இரண்டாவது காலகட்டம் என நான் நினைக்கும் சீர்திருத்தக் காலகட்டக் கதைகள் இவை. சீர்திருத்தக்கருத்துக்களைச் சொல்லும் நோக்கமே ஓங்கியிருக்கிறது. ‘ நாடோடிகள்’ என்னும் கதை   ‘தன் இனத்தின் மொழி  மற்றும் பண்பாட்டைத் துறந்து’ அன்னியநாடுகளுக்குச் செல்பவர்களை நேரடியாகக் கண்டிக்கிறது. சிங்கப்பூர்த் தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாற்றும் பார்த்திபன் இச்சிந்தனைகளை எண்ணிக்கொள்வதாக  அது எழுதப்பட்டிருக்கிறது.

 

பெரும்பாலான கதைகள் செயற்கையான ஒரு களத்திலேயே நிகழ்கின்றன. மிகச்செயற்கையான திருப்பங்கள். முடிச்சுகள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஒரு பெண் ‘லாரன்ஸ் கம்பெனி எங்குள்ளது? தெரிந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்கிறாள். கேட்கப்பட்டவன் அவளை ‘அந்தக்கம்பெனி எங்குள்ளது என்று எனக்குத்தெரியும் .காட்டுவேன்’ என்று சொல்லிக் கூட்டிக்கொண்டு வருகிறான். உடனே அவள் அவனுக்கு மனைவி ஆகிறாள் . அவள் சிறுவயதில் காணாமல் போன அவன் அத்தைமகள். அது முடிச்சு.

 

இன்று இலக்கியரீதியாக இக்கதைகளை ஒருகாலகட்டத்தில் என்ன சிந்தனையோட்டம் சிங்கப்பூரில் இருந்தது என்பதை அறியும் ஆவணங்களாக மட்டுமே கொள்ளமுடியும். அன்றைய சீர்திருத்தக்கதைகளின் பாணியில் கருக்கள் நிகழ்வதற்கான செயற்கையான ஒரு சூழல் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்குள் ஊடாகத்தெரியும் சமூகசித்திரத்தை ஒரு வாசகன் தொட்டறியமுடியும்

 

உதாரணமாக, நாடோடிகள் கதையில் தமிழ்ப்பண்பாட்டை நிலைநிறுத்தப்போராடும் பார்த்திபன் உயர்சாதியினன். அவனால் நாட்டைவிட்டு ஓடும் பண்பாடற்ற செயலைச் செய்பவன் என வரையறை செய்யப்படும் தனபால்  மலவண்டி ஓட்டிக்கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்தவன். படித்து உயர்நிலையை அடைகிறான் தனபால். முழுக்கமுழுக்க ஆங்கிலேய வாழ்க்கையைத் தெரிவுசெய்கிறான். அந்த வெள்ளைய மோகத்தை பார்த்திபன் வெறுக்கிறான். தனபால் தமிழ்ப்பண்பாட்டை உதறிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போகிறான். அதற்குக் காரணம் பணம் அல்ல, தன் பின்னணியை மறைத்து சமூகஅவமதிப்பைக் கடப்பது. அங்கே அவன் மனைவி மறைகிறாள். ‘பண்பாட்டை’ உதறிவிட்டுச் சென்றது தப்பு என்று கடிதம் மூலம் பாவமன்னிப்பு கோரும் தனபாலைக் காட்டி முடிகிறது கதை.

 

இந்தக்கதையில் ஆசிரியர் கடைசியில் தன்பாலைக் கண்டித்து ஒரு பெரிய சீர்திருத்தச் சொற்பொழிவையே தனபாலின் வார்த்தைகளாகவே எழுதிச்சேர்த்திருக்கிறார். அதை ஆசிரியரின் கோணம் என அப்படியே தள்ளிவிட்டு தனபாலின் இக்கட்டை, தவிப்பை நோக்கி நாம் சென்றோம் என்றால் ஆசிரியர் எழுதத்தவறிய ஒரு கதையைச் சென்றடைகிறோம். மொரிஷஸில் கூலி வேலைசெய்து, சிங்கப்பூரில் மலவண்டி ஓட்டி, ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போய், அமெரிக்காவை நாடும் தலித் குடும்பம் ஒன்று நாடுநாடாகத் தன் அடையாளத்தைத் துறப்பதற்காகத் தவித்தலைவது மிகப்பெரிய ஒரு காவியத்துயர். அடையாளத்தைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்னொரு பக்கம் அது.  இன்றைய ஒரு எழுத்தாளன் அதை ஒரு பெருநாவலாகவே எழுதிவிடமுடியும்.

 

இன்னொரு உதாரணம் ‘புதிய உலகு’. மிக உயர்பதவிக்குச் சென்ற கனகு என்னும் பெண் குடும்பத்தலைவியாக இல்லாமலாகிவிட்டோமா என அடையும் குற்றவுணர்ச்சியையும் அதற்கு ஆசிரியர் நேரடியாக வந்து அவள் கணவன் வாய் வழியாகச் சொல்லும் தீர்வும் கொண்டது இக்கதை. ஆனால் சிங்கப்பூர் சூழலில் பெண்கள் அடைந்த, அடையும் அடிப்படையான ஒரு அறத்தடுமாற்றத்தைச் சொல்லும் கதை ஒன்றை நாம் வெளியே எடுக்கமுடியும்

 

கையில் பிரம்புடன் வகுப்புக்கு வந்து மேஜைமேல் தட்டி ‘அமைதி! அமைதி!’ என்று கூவிவிட்டு பேசத்தொடங்கும் ஆசிரியரின் குரலில் அமைந்த கதைகள் இவை. சிங்கப்பூரின் ஒருகாலகட்டத்தின் வாழ்க்கைச்சிடுக்குகள் அறியாமலேயே வெளிப்பட்ட கதைகளைக்கொண்டு இத்தொகுப்புகளை இலக்கியவரலாற்றில் இடம்பெறச்செய்யமுடியும்.

 

[இருபத்தைந்து ஆண்டுகள் இராம கண்ணபிரான். தமிழ்ப்புத்தகாலயம்சென்னை 1980

சோழன் பொம்மை தமிழ்ப்புத்தகாலயம் சென்னை 1981]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு

$
0
0

 

 

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற காவிய முகாம் என்னுடைய வாசிப்பு உலகில் எண்ணற்ற திறப்புகளை அளித்தது. இதுவரையிலான என்னுடைய வாசிப்பின் வழிகளும் அதன்வழி நான் கண்டடைந்த அறிதல்களையும் மீட்டெடுத்துப் பார்த்துக் கொள்ளவும் அதன் சரி தவறுகளை மறுமதிப்பீடு செய்து கொள்ளவும் அந்தரங்கமாக இந்த முகாம் எனக்கு உதவியது. வருடாவருடம் ஊட்டியில் நடக்கும் முகாம், இந்த முறை சிங்கப்பூரில் நடைபெற்றது என் போன்ற தீவிர இலக்கிய வாசகர்களுக்கு அமைந்த நல்லூழ். நீரிழுவையில் அடித்துச் செல்லப்பட்டவன் கால்களுக்குக் கீழ் தட்டுப்படும் பாறையைப் போல சிக்கெனப் பற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை, கம்பராமாயண வாசிப்புடன் முகாம் துவங்கியது (“என்ன ஒரு இனிய ஆரம்பம்! புரட்டாசி முதல் நாள் பெருமாளின் ராம காதையுடன் துவங்குகிறது முகாம்”, பக்திப்பெருக்கில் என் மனைவி என்னிடம் சொன்னது). நாஞ்சில் நாடன் நடத்த வேண்டிய அமர்வு. அவரது தாயார் காலமானதால் அவரால் வர இயலவில்லை. நண்பர் ராஜகோபாலன் இந்த அமர்வை நன்கு வழிநடத்தினார். ஒவ்வொரு பாடலையும் பங்கேற்பாளர்கள் வாசித்ததும் ஜெயமோகன் சுருக்கமாகவும் நுட்பமாகவும் பாடலின் அர்த்தத்தை விவரித்தார். சு.வேணுகோபால், பேராசிரியர் சிவக்குமரன் ஆகியோரும் தங்கள் கருத்துகளால் பங்களித்தனர். பெரும்பாலானவர்களுக்கு கம்பராமாயண அறிமுகமும் விளக்கமும் கிடைக்கப் பெறுவது பள்ளிகளிலும், கோயில் உபன்யாசகர்கள் மூலமாகத்தான். இவ்விரு அரங்குகளிலும் மரபான முறையிலேயே கம்பராமாயணப் பாடல்களை விளக்குவார்கள். பெரும்பாலான சமயங்களில் அது கேட்பவனை ஒருவகை மனவிலக்கத்தை நோக்கியே தள்ளிச் செல்லும். ஆனால், விஷ்ணுபுரம் காவிய முகாமில் வாசிக்கப்படும்/விவாதிக்கப்படும் கம்பராமாயணப் பாடல்கள் வாழ்நாள் முழுக்க ஒரு வாசகனுக்கு நினைவிருக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கம்பராமாயணத்தின் பக்தி சார்ந்த புனித அரிதாரங்கள் களையப்பட்டு, தமிழின் பேரிலக்கிய கவிதை என்ற வகையிலேயே கம்பரின் பாடல்கள் அணுகப்படுகின்றன. இந்த அணுகுமுறையே வாசகனை முதலில் ஈர்க்கின்றது.

முதல் பாடலான “உலகம் யாவையும்” துவங்கி பாலகாண்டம் மற்றும் அயோத்தி காண்டத்தில் சில முக்கியமான, உணர்வெழுச்சியூட்டும் விதிமுகூர்த்தங்கள் அடங்கிய நாற்பது பாடல்களை இந்த அமர்வில் பொருள் கேட்டோம். மறக்க முடியாத பாடல்கள். இரண்டு மூன்று முறை பொருளுணர்ந்து படித்தால் மனப்பாடம் ஆகிவிடுமளவுக்கு எளிமையான பாடல்கள். அதற்கு ஜெயமோகன் சொன்ன விளக்கமும் மறக்க முடியாதது.  கம்பராமாயண வாசிப்பு சார்ந்து ஜெயமோகன் சில முக்கியமான அடிப்படைகளை விவரித்தார். முதலில், கம்பரின் இவ்விருத்தங்களை மனதில் வாசியாமல், வாய்விட்டு வாசிக்க வேண்டும். அக்காலத்தில் கவிதைகள் வாசிப்பவனுக்காக அல்லாமல் செவியால் கேட்பவனுக்காக இயற்றப்பட்டமையால், நாமும் வாய் விட்டு வாசிக்கும்போது கவிதையின் ஓசைநயம் நம்மையறியாமல் பாடலை நம் அகத்தின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும். இன்னும் சொல்லப் போனால், இப்பாடல்களை வாசிப்பதைக் காட்டிலும் பாடுவதே இதன் அர்த்தத்தை அனுபவிக்க மிகச்சிறந்த வழியென்றார் (இதையே டி.கே.சி தன்னுடைய “கம்பர் தரும் ராமாயணம்” என்ற புத்தக முன்னுரையில் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர்ந்தேன்). கம்பராமாயணம் போன்ற காவியங்களுக்கு கூட்டு வாசிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கினார். மேலும், ஒரு காவியம் என்பது விதை போல. ஒரு குறிப்பிட்ட பண்பாடு முழுக்க அழிந்தாலும், அந்தக் காவியத்தை வைத்தே அந்த பண்பாட்டை மீண்டும் மலர வைக்க முடியும் என்ற எலியட்டின் கருத்தை முன்வைத்தார்.

கம்பராமாயணத்தின் பாயிரம் பகுதியை வாசிக்கையில் பெரும்பாலான காவியங்களில் “உலகம்” என்ற வார்த்தையே முதல் வார்த்தையாக வருவதை ஜெயமோகன் சுட்டிக்காட்டினார். காவியத்தின் முதல் வார்த்தை என்பது பார்த்திவப் பரமாணு போல (பிண்டத்தில் தன்னைத் தானிருக்கிறேன் என்று உணரும் முதல் அணு. தன்னைத் தானே பெருக்கி உயிராக ஆகும் விதை). அந்த முதல் சொல் பெருகிப் பெருகி மகா காவியமாக ஆவதாலேயே காவியங்களின் முதல் சொல் மிகுந்த கவனத்துக்குரியதாக ஆகிறது என்றார்.

கம்பராமாயண அமர்வில் கம்பனின் பாடல்களை வாசிக்க வாசிக்க நெகிழ்வூட்டும் பரவச நிலைக்குள்ளானேன். தசரதன் கைகேயி உரையாடல், கைகேயி ராமனிடம் காடேகச் சொல்வது (ஆழிசூழ் உலகமெலாம் பரதனே ஆள ..) ராமன் கைகேயிடம் சொல்வது (மன்னவன் பணி அன்றாகின்…), கோசலை ராமன் உரையாடல் (முறைமை அன்று என்பது ஒன்று உண்டு..), ராமன் இலக்குவனிடம் விதியின் பிழையைச் சொல்லும் இடம் (நதியின் பிழையன்று நறும்புனலின்மை..), பரதனின் குழாம் கண்டு குகன் வெகுண்டெழுவது (ஆழ நெடுங்திரை ஆறு கடந்திவர் போவாரோ?..) போன்ற பாடல்களின் இனிமை இன்னும் செவியிலறைகிறது.

அன்றிரவு உறக்கத்தில் கனவிலென சில பாடல்களின் வரிகள் மனதில் ஓடியபடியிருந்தன. “என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும் நன்மகன், இந்த நாடு இறவாமை நய…, மன்னவன் பணி அன்றாகின் நும் பணி மறுப்பெனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ.., தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ.. போன்ற வரிகளின் ரீங்காரத்தின் மையத்தில்தான் அன்றிரவு துயில முடிந்தது.

கம்பராமாயணம் காட்டும் லட்சிய அரசன், லட்சிய மகன், லட்சிய மனைவி, லட்சிய தம்பி, லட்சிய தூதன் என்று ராமாயணத்தின் மைய கதாபாத்திரங்கள் அனைவரும் உச்ச கதாபாத்திரங்களாக இருப்பது ராமாயணத்திற்கே உரிய தனிச்சிறப்பென்றார் ஜெயமோகன்.

மதிய உணவிற்குப் பின் மகாராஜன் அருணாச்சலம் தி.ஜானகிராமனின் “பாயசம்” மற்றும் “கங்காஸ்தானம்” சிறுகதைகளை விமர்சித்து உரை நிகழ்த்தினார். இந்த இரு கதைகளின் நுட்பங்கள், சிறப்புகள் என நீண்டு சென்றது விவாதம். பாயசம் கதையில் பெரும்பாலானவர்களுக்குப் பிடி கிடைக்காத நவீன ஓவியங்கள் வரும் பகுதியைப் பற்றி ஜெயமோகன் விளக்கினார். முக்கிய கதாபாத்திரத்தின் (சாமிநாது) எதிர்மறை மனவோட்டத்தை மேலும் தூண்டிவிடும் குறியீடுகளாக நவீன ஓவியங்கள் இக்கதையில் இடம்பெறுகின்றன என்றார். அதைத் தொடர்ந்து தி.ஜாவிற்கு நவீன ஓவியங்களின் மீது இருந்த மனவிலக்கத்தைப் பற்றியும் ஜெயமோகன் பேசினார். கங்காஸ்தானம் கதையில், கதாநாயகனின் மனைவி அவனை ஏமாற்றிவனுக்கும் சேர்த்து கங்கையில் பாவமுழுக்கிடச் சொல்லும் இடம் அக்கதையின் உச்சம் என்றார். அந்த உச்சத்தைத் தவற விட்டு குதர்க்கமாக கதையைப் புரிந்துகொள்வது கதையின் மீது செலுத்தப்படும் அறிவார்ந்த வன்முறை என்றார்.

கதையில் இடம்பெறும் சில நுண்சித்திரங்களைக் கூட நேர்த்தியாக, இயல்பாக அமைப்பதுதான் நல்ல எழுத்தாளனின் வெற்றி என்றார் ஜெயமோகன். அத்தகைய நம்பகமான நுண்சித்திரங்கள் தி.ஜாவின் கதைகளில் அதிகம் இடம்பெறும் என்றார்.

அதனைத் தொடர்ந்து சு.வேணுகோபால் கதைகளில் காணப்படும் உளம் சார்ந்த பாலியல் சிக்கல் குறித்து அரங்கசாமி பேசினார். சு.வேணுகோபால் வாசகரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தன்னுடைய கதைகளின் பின்புலத்தில் விரிந்திருக்கும் அவரது பால்யம் சார்ந்த சில நினைவுகளையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.

இரண்டாம் நாள் காலை முதல் அமர்வில் வேணு வெட்ராயன் தேவதேவன் கவிதைகளை முன்வைத்து ஒரு உரை நிகழ்த்தினார். தத்துவத்தின் பார்வையில் கவிதை, வாசகன் மனதில் “நிகழும்” கணத்தைப் பற்றிப் பேசினார். இது ஒரு முக்கியமான உரையாக அமைந்திருந்தது. பௌத்த தத்துவச் சொற்களின் ஒளியில் கவிதை, வாசகன் மனதில், அறிமுகமாகி, நிகழ்ந்து, பின் அறிதலாகக் கடந்து செல்லும் பயணத்தைப் பற்றி விளக்கினார் வேணு. விருத்தி, விகல்பம், ஆத்மவசியம், அகப் பிரபஞ்சம், புறப்பிரபஞ்சம், அந்தகாரண விருத்தி, சப்தகாரணவிருத்தி, ததாகாரணவிருத்தி போன்ற பௌத்த சொற்களை இந்த உரையின் மூலம் அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது.

அதனைத் தொடர்ந்து பேசிய ஜெயமோகன், கவிதையின் சொற்சேர்க்கை, சொல்லின்பம் பற்றி விளக்கமளித்தார். “மந்திரம் போல் வேண்டும் சொல்லின்பம்” என்ற பாரதியின் வரியைத் தொடர்ந்து, கவிதை வாசிப்பென்பது மனதில் ஒரு தியானத்தன்மையைக் கொடுக்கும் அனுபவம் என்றும், கவிதை என்பது மந்திரத்துக்கு இணையானது என்றும் சொன்னவர், மந்திரம் என்பது மனித மனதின் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஸுப்தி..நிர்வாணத்தைத் தாண்டி உள்ளே பயணிக்கக் கூடியது, அதற்கிணையான இயல்புடையதே நல்ல கவிதை என்றார். சில கேள்விகளுக்கு புத்தரிடமே மௌனம் மட்டும்தான் பதிலாகக் கிடைத்தது என்றும் அதனை “Golden silence of Buddha” என்பார்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா?, உயிர்கள் மறைந்ததும் எங்கு போகின்றன? இங்கு நடப்பவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? போன்ற கேள்விகளுக்கு புத்தரே மௌனம் சாதித்தார் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

அடுத்து சிங்கப்பூர் எழுத்தாளர் கனகலதா, தனக்குப் பிடித்த இலங்கைக் கவிதைகளைக் குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஜெயமோகன் இயல்பாகவே கலாபூர்வம் மிளிரும் கவிதைகளையும், கலாபூர்வமாகத் தென்படும் வகையில் ‘போல’ச் செய்யும் செயற்கையான கவிதைகளையும் இனம்கண்டுகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். பிரமிளின் கவிதை வரியான “ வழிதொறும் நிழல்வெளிக் கண்ணிகள், திசை தடுமாற்றும் ஆயிரம் வடுக்கள்..” தன் வாழ்வின் துக்ககரமான நாட்களில் அவரை அலைக்கழித்ததைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சு.வேணுகோபால் தனக்குப் பிடித்த சேரனின் கவிதை வரிகளை நினைவு கூர்ந்தார், “முகில்களின் மீது நெருப்பு தன் சேதியை எழுதிவிட்டது, இன்னும் எதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருக்கிறீர்கள், சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக..” (இதே கவிதை வரிகளை ஜெயமோகன் குமரகுருபனின் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசிய நிகழ்ச்சியிலும் பேசியதை நினைவு கூர்ந்தேன்). கவிதை என்பது சொற்சேர்க்கையின் அழகியலையும் ரசிப்பது என்ற முக்கியமான கருத்தும் சொல்லப்பட்டது. அரவிந்தரின் “Supreme Poetic Utterance” , “Rational Intelligent work”, “Irrational Intelligent work” போன்ற சொற்பதங்களை விளக்கி, கலை அழகுள்ள கவிதையையும், போலச் செய்யும் போலியான கவிதையையும் குறித்த மேலதிகமான விபரத்தையும் ஜெயமோகன் கொடுத்தார்.

தேநீர் இடைவெளிக்குப் பின் கிருஷ்ணன் சில இலக்கியப் படைப்புகளை முன்வைத்து அவற்றில் வரும் முக்கிய கதைமாந்தர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எப்படிக் கடக்கிறார்கள்? அதன் பின் அவர்கள் என்னவாக மாறுகிறார்கள்? அந்த சூழலைக் கடந்தபின் தன் இயல்பிலிருந்து திரிகிறார்களா அல்லது தன் ஆளுமையை அதன்பின் மலரச் செய்கிறார்களா? என்பதைப் பற்றி செறிவாகப் பேசினார்.

தன் உரைக்காக அவர் எடுத்துக் கொண்ட படைப்புகள்: அசடன் நாவல் (தஸ்தயேவ்ஸ்கி), துறவியின் மோகம் நாவல் (தல்ஸ்தோய்), தந்தை கோரியா (பால்சாக்), சதுரங்க குதிரைகள் (கிரிராஜ் கிஷோர்), காமினி மூலம் சிறுகதை( ஆ. மாதவன்), நிழலின் தனிமை நாவல் (தேவி பாரதி). இதனைத் தொடர்ந்து கேள்வி பதில் பகுதி சிறப்பாக இருந்தது. கிருஷ்ணனும், ஈரோடு செந்திலும் தங்கள் வழக்கறிஞர் தொழிலில் தாங்கள் சந்தித்த குற்றவாளிகளையும், குற்றச்செயல்களையும், அதன் பின் குற்றவாளிகளின் மனநிலை, குற்றவாளிகளின் குடும்பத்தாரின் மனநிலை குறித்தும் விரிவாகப் பேசினார். மனித மூளையின் இயல்பைப் பற்றியும், மூளையின் இயல்பான அமைப்பிலேயே குற்றவாளிகளின் இயல்புகள் நிறுவப்பட்டுவிடுகின்றன என்ற புதிய தகவலையும் அறிந்து கொள்ள முடிந்தது.

மதிய உணவு இடைவெளிக்குப் பின் சௌந்தர், தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் நாவலைப் பற்றிப் பேசினார். ஆயுர்வேதம், அலோபதி இரண்டிற்குமான விவாதங்களும், அவற்றின் வெற்றி தோல்விகளையும் மையமாக அமைந்த நாவல் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும், உண்மையில் இந்த நாவல், இறப்பை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மருத்துவ முறையையும், இறப்போடு போராடித் தோற்கும் மருத்துவ முறையையும் பற்றிய நாவல். நாவலில் வரும் ஜீவன் மஷாய் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி பலரும் பேசியது, நாவல் படிக்காமலே, அவரை நான் விரும்பச் செய்து விட்டது. இந்திய இலக்கிய விமர்சகர்கள் பலரும் இந்திய அளவில் முதன்மையான நாவலாக இந்த நாவலை அங்கீகரித்துள்ளார்கள் என்ற செய்தி, இந்த நாவலை வாசிக்கும் ஆசையை என்னுள் தூண்டிவிட்டிருக்கிறது. மனிதர்கள் தாம் இறக்கும் காலத்தை அறிந்த பின்னர் இயல்பான அமைதியுடன் கடவுள் நாம சங்கீர்த்தனத்திலும், ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்து விடுவதும் இந்திய மனதுக்கே வாய்த்த அருங்குணமாகத்தான் தோன்றுகிறது.

அதனைத் தொடர்ந்து ராஜகோபாலன், ப.சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” நாவலைப் பற்றி விரிவாகப் பேசினார். நாவலின் களம், ப.சிங்காரத்தில் வெளிப்படும் நுட்பமான தெரு/இடக் காட்சிகள், பகடி, மொழி ஆளுமை, தமிழ் குறித்தும் தமிழர்களின் இனப்பெருமை குறித்தும் மார்தட்டும் பேர்வழிகளை பகடி செய்வது போன்ற காட்சிகள் குறித்துப் பேசினார்.

ஜெயமோகன், இந்நாவலின் பலம் குறித்துப் பேசும் அதே வேளையில் இதன் பலவீனம் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்றார். வடிவ ரீதியாக இது தோல்வியடைந்த நாவல் என்றார். இந்த நாவலில் நெகிழ்வூட்டும் காட்சிகள் இல்லை என்ற கேள்விக்கு, ஆண்டியப்ப பிள்ளை “வளவி” கேட்ட தன் மகளுக்கு வளவி செய்து போட முடியாத ஒரு துயரம் மட்டுமே இந்த நாவலில் வரும் நெகிழ்வூட்டும் காட்சி என்றார். (எனக்கு, பினாங் செல்லும் பாண்டியனிடம் ரத்தினம் என்ற பையன் தன் தந்தையைத் தேடி அவர் இருக்குமிடம் தெரிவிக்க வேண்டும் காட்சி கூட நெகிழ்வூட்டும் காட்சியாகத்தான் தோன்றியது, பின்னாளில் ரத்தினம் என்ற அந்தப் பையன் ஐ.என்.ஏ-வில் சேர்ந்து அதன்பின் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை என்று பாண்டியன் நினைத்துப் பார்க்கும் சித்திரம் மட்டும் வருகிறது.) துயரத்தைக் கூட பகடியின் மொழியில் சொல்லிச் செல்கிறார் சிங்காரம். இந்தோநேசியாவின் “சைலேந்திரர்களை” வென்ற ராஜேந்திர சோழனின் படைகளைப் பற்றிச் சொல்லிச் செல்லும் இடத்தில் (இந்த இடத்தில் மட்டும்தான் தமிழரின் வீரத்தை/ பெருமையை அவர் மெச்சுகிறார் எனத் தெரிகிறது), அந்த வீரத் தமிழர்கள் சென்ற அதே கடல் பகுதியில் அவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் செல்கிறார்கள், படையெடுப்புக்காக அல்ல.. வயிற்றுப் பிழைப்புக்காக.. என்று எழுதுகிறார், சிங்காரம்.

அடுத்த அமர்வில், எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுடம் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. திருப்பூர் என்ற தொழில்நகரம் காலமாற்றத்தில் இப்போது எவ்வாறு உருமாறியிருக்கிறது என்று பேசினார் கோபாலகிருஷ்ணன். கலை ரீதியாக, வடிவ ரீதியாக, தனக்குப் பிடித்த நாவலாக ஜெயமோகனின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைச் சொன்ன அவர், அந்த நாவலில் இரு இடங்கள் (ஏசு கிருஸ்து வரும் இடம், தல்ஸ்தோய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி இடையே நிகழும் உரையாடல்) தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்தப் பகுதிகளை அடிக்கடி வாசிப்பதாகவும் சொன்னார்.

இறுதி அமர்வில் சிங்கப்பூர் தமிழிலக்கிய சூழலையும், சிங்கப்பூரில் தமிழ் சந்திக்கும் நெருக்கடிகளையும், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே தமிழை வளர்த்தெடுக்க அரசின் ஆதரவோடு இங்குள்ள தமிழ் அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், சிங்கப்பூரில் ஜெயமோகன் போன்ற ஒரு ஆசானின் தேவையைப் பற்றியும் விரிவாகப் பேசினார். இதன் மூலம் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சியைப் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரத்தை சென்னை நண்பர்களுக்கு தொகுத்தளித்தார் திரு அருண் மகிழ்நன்.

நிகழ்ச்சி நடந்த இரு நாட்களும் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க முடிந்தது. அறிவார்ந்த விவாதங்களையெல்லாம் தாண்டி எல்லோரும் சிரிக்கச் சிரிக்க, கேலியும், அங்கதமுமாக சபை நிறைந்திருந்தது. ஜெயமோகன் இருக்கும் அவைகளில் இது வியப்பளிக்கும் விஷயமல்ல என்றாலும், இரு நாட்களும் அவையில் குன்றாமல் இருந்த நகைச்சுவையும், அடிக்கடி எழும் வெடிச்சிரிப்புகளும், மனதை மலர்த்தியவாறு இருந்தன. அடுத்து விவாதங்களின் மையம். ஜெயமோகன் ஒரு மூத்த மாணவரைப் போல அவையை நடத்திச் சென்றதும், விவாதம் திசை திரும்பும் போதெல்லாம் மீண்டும் சுக்கானைப் பிடித்து வழிக்குக் கொண்டு வருவதும் இப்படி ஒருவரின் அவசியத்தை உணர்த்தியது. இந்த மையம் இல்லாவிட்டால், விவாதம் வீரியமாக நடைபெற முடியாது என்றே தோன்றுகிறது. அடுத்து மரியாதை நிமித்தமான Protocol-கள் இல்லாமல் சகஜமான ஒரு மனோபாவமே அனைவரிலும் தென்பட்டது மிக ஆரோக்கியமான விஷயம். ஜெயமோகனிடம் ஒரு நிமிடம் பேசினாலும், ஒரு புதிய தகவல் கிடைப்பதும், இலக்கியம் சார்ந்து சில திறப்புகள் கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது எனக்கு. அவரிடம் விடைபெறும் கணத்தில் கூட சித்ராவிடம் அவர் நாவலின் அழகியல் பற்றியதான உரையாடலில் “நாவல் என்பது தத்துவத்தின் கலை வடிவம்” என்று ஒரு வரியைச் சொன்னார். இந்த வரியை அப்படியே மனதில் அள்ளிக் கொண்டு வீடு திரும்பினேன். நிறைவான இரு நாட்கள். இனி ஒருபோதும் இப்படி அமையுமா என்ற கேள்வியை எழுப்பிய இரு நாட்கள்.

 

– கணேஷ் பாபு

சிங்கப்பூர்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கப்பூர் இலக்கியம் -கடிதங்கள்

$
0
0

 

 

வணக்கம்

 

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்  கட்டுரை படித்தேன் நீங்கள் குறிப்பிட்டது போல் நூலாகக்கூடிய கட்டுரை

 

எனினும் சிறு தகவல்களைச் சரிசெய்ய வேண்டும். உதாரணமாக பரணன் ஆரம்பம் முதல் மேசை துடைக்கவில்லை அவர்  பத்தாம் வகுப்பு வரை தமிழ்ப் பள்ளியில் படித்தவர். அலுவலகதத்தில் கிளார்காக வேலை செய்து ஓரளவு நல்ல சம்பளம் பெற்றுள்ளார். அக்காலத்தில் பத்தாவது படித்தவர்கள் தமிழாசிரியர்களாக ஆகியுள்ளனர் அக்காலம் முதல் மிக அண்மைக்காலம் வரையில் இங்கு வாழும் மலையாளிகள் மிகப் பெரும்பான்மையினோர் தமிழ் படித்தனர் எல்லாருமே தமிழ் பேசுபவர்கள் அண்மைய குடியேறி மலையாளிகள்தான் தாய்மொழியாக ஹிந்தி படிக்கிறார்கள் மிகச் சிலர் மலையாளம் படிக்கிறார்கள்.

 

பரணண் குடியினால் கெட்டவர் கடைசி காலத்தில் தெருவோரத்தில் விழுந்துகிடப்பார் குடியினால் எல்லாவற்றையும் தொலைத்தவர் மனைவியும் இறந்தபின்னர் கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் அக்காலத்தில்தான் மேசை துடைக்கும் வேலையையும் செய்தார். கவிஞர் என்று பலர் உதவினார்கள் கடைசியில் அந்தப் பரிதாபத்தை இழக்கும் அளவுக்கு மகா குடியராக சிராங்கூன் சாலை தெருக்களில் விழுந்து கிடப்பார். அவரது பிள்ளைகள் இருவரும் நன்கு படித்து நல்ல வேளையில் இருக்கிறார்கள் . ஆனால் அவரது பழக்கங்கள் காரணமாக அவரை அவர்கள் இறுதிக்காலத்தில் வைத்துப் பராமரிக்க விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.  சரியான தகவல் தெரியவில்லை.

மற்றது தென்கிழக்காசிய இலக்கிய விருது (அது ஆசியான் விருது அல்ல. தாய்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது) நான்கு மொழி எழுத்துகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை அன்று கலாசார அமைச்சின் இலக்கியம் தொடர்பான ஆலோசனைக் குழு தலைவராக இருந்த பேராசிரியர் எட்வின் தம்பு கொண்டு வந்தார். அப்போது அவருக்கு அந்த விருதைக் கொடுப்பதற்காகவே அவரது ஒரு நூலை அச்சிட்டார்கள்.   தரத்தின் அடிப்படையில் அல்லாது மொழியின் அடிப்படையில் விருதுகள் அளிக்கப்படுவதால்தான் அந்த விருதை இதுவரையில் கதுமு இக்பால், ஜேஎம் சாலி உட்பட பலர் பெற்றுள்ளார்கள்.

 

எனினும் பெரும்பாலான எழுத்தாளர்கள் உடல் உழைப்பாளிகள். பல நாடகங்களும் சிறுகதைகளும் எழுதியிருக்கும் சேவெ சண்முகம் என்பவர் துறைமுகத்தில் மூட்டை தூக்குபவராக வேலை செய்தவர். பாத்தேறல் இளமாறன் என்ற கவிஞர்  உணவுக் கடையில் உதவியாளராகப் பணி புரிந்தவர். மூத்த எழுத்தாளரும் மூத்த வானொலி தயாரிப்பாளுரான பிகிருண்னன் (புதுமைதாசன் என்ற பெயரில் எழுதுபவர் புதுமைப்பித்தனின் தீவிர ரசிகர்) கடையில் எடுபிடியாக வேலையில் சேர்ந்து சுய வாசிப்பினாலும் இரவுப் பள்ளியில் படித்தும் தன்னை உயர்த்திக்கொண்டவர்  சிங்கப்பூரின் வாழ்வைப் பிரதிபலிக்கும் ஏராளமான வானொலி நாடங்களை எழுதியிருக்கும் பி கிருஷ்ணன் ஷேக்ஸ்பியர் உட்பட ஏராளமான உலக இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார்.

 

கனகலதா

 

*

 

பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அன்பான வணக்கம்.

 

வெண்முரசின் பல்லாயிரக்கணக்கான எளிய வாசகர்களுள் ஒருத்தி நான். அது குறித்துதான் முதன்முதலில் உங்களுக்கு மிக நீண்டதொரு கடிதம் எழுதுவேன் என்று எண்ணியிருந்தேன். குறிப்பாக மழைப்பாடல், நீலம், சொல்வளர்காடு ஆகிய நூல்களில் குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். உள்ளூர், வெளியூர் படைப்பாளிகளுடைய ஆக்கங்களையும் காலச்சுவடு, உயிர் எழுத்து, கணையாழி, உயிர்மை போன்ற இதழ்களில் பிரசுரமாகும் தீவிர எழுத்துக்களையும் விடாமல் பல்லாண்டுகளாக வாசித்து வருகிறேன். உங்களுடைய சிங்கப்பூர்இலக்கியக்கூட்டங்களுக்கு வர மிக ஆசையுடன்  திட்டமிட்டிருந்தேன். என் துரதிருஷ்டம், மாமனார் திடீரென்று இயற்கை எய்தியதால் மதுரை செல்லும்படியானது. சிங்கப்பூர் திரும்பியதும் இக்கடிதத்தை எழுதுகிறேன். சிங்கப்பூரில் பதினாறு ஆண்டுகளாக வசிக்கிறேன். கணினி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார் என் கணவர். நானும் அதே துறை. எங்களுக்கு ஐந்து வயது மகள் இருக்கிறாள்.

 

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும் என்ற உங்களுடைய பதிவினை வாசித்தேன். மிக விரிவான மிகவும் அவசியமான பதிவு. முல்லைவாணன் கரையிலிருந்து மூட்டைகளை தோளில் தூக்கிக் கொண்டு பலகை வழியாக நடந்து சென்று படகுகளில் ஏற்றும் பணியைச் செய்து வந்ததைக் குறித்து அறிந்தபோது எனக்கு சி சு செல்லப்பா நினைவுக்கு வந்தார். சிற்றிதழை நடத்துவதற்காக பொம்மைகள் செய்து கூடையில் வைத்துக் கொண்டு தெருவெங்கும் திரிந்து விற்ற கதைகள் கேட்டு மிக வேதனை அடைந்ததுண்டு. பதிவு குறித்து எனக்குச் சொல்ல நிறைய உண்டு. அது ஒருபுறமிருக்க, காதால் கேட்டதை மட்டும் மேம்போக்காகக் கோர்த்து விமர்சனம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத் தனமாக உள்ளூரில் எழுதப்படுபவற்றை ஒப்பிடும்போது உங்களுடைய அலசல் விரிவானதாக சிறப்பாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன். மகிழ்ச்சி.

 

எனினும், இக்கடிதத்தின் நோக்கம் வேறொன்று.நேற்றைக்கு ஒரு சிறுகதை எழுத‌ முயற்சி செய்து மகிழ்ந்த உமாவாகிய என்னை பெரிய போற்றுதற்கு உரிய எழுத்தாளர் ஜெயமோகனுடன் பட்டியலில் சேர்த்தால் எத்தனை அபத்தம், இல்லையா? புனைவு, அபுனைவு, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் என்று அமைதியாக 22 ஆண்டுகளாக தொடர்ந்து பங்களித்து வரும் ஜெயந்தி சங்கரை நீங்கள் இவ்வாறு போகிற போக்கில் குறிப்பிடுவதோ அல்லது தொடக்க நிலையில் எழுதிக் கொண்டிருக்கும், எழுதுவதாக வெறும் டம்பம் அடித்துக் கொண்டிருக்கும், வாயாலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கும், சுய அட்சதை போட்டுக்கொண்டிருக்கும், எழுத முயற்சித்துக் கொண்டிருக்கும் பலருடன் சேர்த்து அவர் பெயரை எழுதியது அவருடைய நெடுநாள் வாசகி என்ற அளவில் என்னை மிகவும் துணுக்குறச் செய்தது. இது அவருக்கு மட்டும் அநியாயம் இல்லை அவரது பெரும்பங்களிப்புக்கும் அவமதிப்பு. மட்டுமல்லாது, உங்களுடைய மேன்மைக்கும்கூட இது பங்கமாகும். Sweeping/name dropping statement. இந்தக் கடிதம்தே வையா என்றுதான் முதலில் எண்ணினேன். என்னால் சொன்னாமல் இருக்க முடியவில்லை. இது ஒரு தவறான பிம்பத்தை எடுத்து இயம்பும். உயிரோடு இருந்து கொண்டு தொடர்ச்சியாக‌ இயங்கி வரும் ஒரு படைப்பாளியின் அருமை தெரியக் கூடாதோ!? மண்டையைப் போட்டால்தான் அவருடைய சிறப்பு எல்லோர் கண்ணுக்குமே தெரியும் போல. சாபக்கேடுதான். மிகுந்த வருத்தமடைந்தேன். அவருடைய சமீபத்தைய சிறுகதைத் தொகுப்பான ‘நகரெங்கும் சிதறிய சுழிகள்’ வாசித்தவர் எத்தனை பேர்? மின்னஞ்சலில் சில ஆண்டுகளுக்கு  முன்னர் ஒரு சிறுகதை குறித்து அவரோடு பேசியதுண்டு. ஆனால் சந்தித்ததில்லை. ஓரிரு மாதங்களில்நாங்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன்.

 

http://jeyanthisankar.blogspot.sg/

 

http://jeyanthisankar.com/

 

http://solvanam.com/?p=5868

 

நன்றி. தாழ்மையுடன்,

உமாஸ்ரீ பஞ்சு

 

அன்பான ஜெ.
நீங்கள் சிங்கப்பூருக்கு வந்தது முதல் உங்களிடமிருந்து எதிர்ப்பார்த்தது இவ்வாறான சில விமர்சனங்களைதான். விமர்சனங்கள் மூலமே உரையாடல்கள் சாத்தியம்.  உரையாடல்கள் இல்லாமலேயே மலேசிய – சிங்கை இலக்கியம் தேங்கி விட்டது. தொடர்ந்து உங்கள் பார்வையை வாசிக்க முடியும் என நம்புகிறேன். இவை வல்லினத்தில் வெளிவந்த சிங்கை எழுத்தாளர் லதாவின் சிறுகதை. அவர் தொகுப்பில் உள்ள கதைகளை விட பல மடங்கு சிறப்பானவை என எனக்குத் தோன்றியது. உங்கள் வாசிப்புக்கு.

அதேபோல் அழகுநிலாவின் ‘அலையும் முதல் சுடர்’ என்னை அதிகம் கவர்ந்தது. ஷநாவாஸ் சுவாரசியமான கதைச் சொல்லி. உங்கள் பார்வையில் எப்படியும் அவர்கள் படுவார்கள். மகிழ்ச்சியான தருணம்தான்.


ம.நவீன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வம்புகளின் சிற்றுலகம்

$
0
0

 

index

கமலாதேவி அரவிந்தன் திண்ணை இணையதளம் வழியாக எனக்கு முன்னரே அறிமுகமானவர். திண்ணையின் எழுத்துக்குப்பைகளில் ஓரிரு வரிகள் வாசித்து கவனத்தைக் கவரும் சிலவற்றை மட்டுமே மேற்கொண்டு வாசிப்பது என் வழக்கமாக இருந்தது.  ஆகவே அவரது எழுத்தைக் கவனித்ததில்லை. இப்போது சிங்கப்பூர் வந்தபின்னர்தான் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார் என்பதை அறிந்துகொண்டேன். அவரது கதைகளை தொகுதிகளாக வாசித்தேன்.

 

கமலாதேவி அரவிந்தன் இருமொழிகளில் எழுதுபவர். மலையாளம் அவரது தாய்மொழி. இருமொழி இலக்கியமரபிலிருந்தும் அவர் ஒரு துளியையேனும் கற்றுக்கொள்ளக்கூடாது எனமிகப்பிடிவாதமாக இதுநாள் வரை இருந்திருக்கிறார் என்னும் எண்ணமே எழுகிறது. முதிரா எழுத்து என நெடுங்காலமாக எழுதிவரும் இவ்வெழுத்தாளரின் படைப்புலகைச் சொல்வது சங்கடமளிப்பது, ஆனால் அதுவே உண்மை.

 

மலேய, சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர்களான இளங்கண்ணன், கண்ணபிரான் முதலியவர்களின் கதைகள் பலவகையான கலைக்குறைபாடுகள் கொண்டவை. ஆனாலும் அவை நேர்மையான நோக்கம் கொண்டவை. இங்கு ஒரு பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கவும் நிலைநிறுத்தவும் முயல்பவை. கமலாதேவி அரவிந்தனின் உள்ளம் வம்புகளில் மட்டுமே ஆழ்வது. அது ஒருபக்கம் இலக்கிய வம்புகளை தன் கோணத்தில் நோக்குகிறது. இன்னொருபக்கம் பாலியல் சார்ந்த குடும்ப வம்புகளை நோக்குகிறது

 

வம்புகள் இலக்கியத்தின் மூலப்பொருட்கள் என்பதில் சந்தேகமே இல்லை.  ஆனால் வம்புகளை அணுகும் இலக்கியவாதி அதற்குள் புழங்குபவன் அல்ல. மானுடரை அறிவதற்கான ரத்தமாதிரிகளாகவே அவன் அவற்றை அணுகுவான். விருப்புவெறுப்புகளால் அல்ல, நுணுக்கமான உளவியல்பார்வையுடனும், விலகல்நோக்குடனுமே ஆய்வுசெய்வான். கமலாதேவி அரவிந்தன் அக்கப்போரையே மீண்டும் மீண்டும் திறனற்ற உரைநடையுடன் எழுதிவைத்திருக்கிறார்.

 

தலைப்பே சொல்வதுபோல ‘கரவு’ தான் கமலாதேவியின் இக்கதைகளின் பொதுப்பொருள். முதற்கதையான   ‘அடோஜோபில’ மனைவியுடன் பூசலிட்டு தற்கொலை செய்துகொள்ள கேரளத்தின் கடற்கரை ஊருக்கு வருபவனைப்பற்றிச் சொல்கிறது. அங்கு ஓர் இளம்பெண்ணைப்பார்க்கிறான். உடனே  ஒரு மாதிரியான காதல், உடலுறவு. அவனிடமிருந்து பணம் பறித்தபின் அவள் அவனை விட்டுவிடுகிறாள். அவன் மனம்திரும்பி மனைவியிடமே வருகிறான். உண்மையில் அவனுக்கு என்னவேண்டுமென்று கிளம்பிச்சென்றான் என்று எண்ணத்தோன்றுகிறது

 

சிங்கப்பூ விமானநிலையத்தில் இறங்கி சொந்த வீட்டுக்குச் செல்கிறான் கதாநாயகன். மனைவி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காபி போடுகிறான். மனம்திருந்திவிட்டான் அல்லவா? ‘ஏன் கோபமே வரவில்லை என்று புரியவில்லை. அலுங்காமல் குலுங்காமல் வேணி இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். பொழுதுதான் விடியட்டுமே, அப்படி என்ன அவசரம்? ரங்கராஜன் காத்திருந்தான்’ என முடிகிறது கதை. இந்தக் கருவுக்கு கோவளம் வர்ணனை, மீன்குழம்பு வர்ணனை, மீனவர்க்ளின் கூப்பாடு என என்னென்னவோ சேர்க்கப்பட்டு குத்துமதிப்பாக கதை சமைக்கப்பட்டுள்ளது.

 

அதோடு மொழி.  ‘கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்தப்புத்தகம்’ என்ற வரியை வாசித்து திகிலாகிவிட்டேன். ஆலவட்டம் என்பது துணியால் செய்யப்பட்டு சாமி ஊர்வலங்களில் இருபக்கமும் பிடித்துக்கொண்டு போகப்படும் வட்டவடிவமான அலங்காரம். காற்றில் சிலுசிலுக்கும். தமிழிலும் மலையாளத்திலும் ஆலவட்டம்தான். பாவாடை ஆலவட்டம் போடுவதை சினிமாவில் எழுதிவிட்டார்கள். புத்தகம் ஆலவட்டம் போடுவது எப்படி என எண்ண எண்ண மண்டை குழம்புகிறது

 

அந்தக்கதை ‘எங்கேயும் மனிதர்கள்’ ஓர் இலக்கிய வம்பு. எவரெனத் தெரியவில்லை, அனேகமாக அது ஆசிரியையின் உள்ளம் உருவாக்கிக்கொண்ட சூழலாக இருக்கவேண்டும். நம்பீசன் என்னும் பெரும் படைப்பாளி சாதிபார்ப்பவராக இருக்கிறார். தூய உள்ளமும், சமரச நோக்கமும், படைப்பு வீரியமும், நேர்மையும் கொண்ட சுமி என்னும் சிங்கப்பூர்க் கதாசிரியை [இருக்காதே பின்னே?] அந்த தாழ்ந்த சாதி இலக்கியவாதியை இரக்கம்கொண்டு பாராட்டுகிறார். சுமி கதை எழுதவும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கலாம்.

 

தலைப்புக்கதையான  கரவு  மணஒப்பந்தம் மீறிய ரகசிய உறவின் கதை. ராமலிங்கத்தின் மனைவி புவனியை தாமஸ் காதலிக்கிறான். அவர்களுக்குள் ஒரு மெல்லிய காமப்பரிமாற்றம். ஆனால் உடலுறவு இல்லை. புவனியின் மகன் வளர்கிறான். தாமஸ் செத்துப்போகிறான். புவனி தன் மகன் ராஜாவை காதலன் பொருட்டு குளிக்கச் சொல்கிறாள். ‘தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சாம்பலாகிப்போன தாமஸின் ஜீஸஸ் லாக்கெட்டை என்ன செய்வதென்று அவனுக்குப்புரியவில்லை’ என கதை முடிகிறது

 

கு.ப. ராஜகோபாலன் தமிழிலும் காரூர் நீலகண்டபிள்ளை மலையாளத்திலும் பாலியல்மீறல்களின் நுண்ணிய தளங்களை எழுதி முக்கால்நூற்றாண்டு கடந்தபின் வரும் கதை இது என எண்ணிப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. வேறு எந்தத் தொழிலிலாவது அந்தத்தொழிலின் அடிப்படைகள் தெரியாமல் அதில் இறங்கமுடியுமா என வியக்கிறேன்

 

இத்தொகுதியின் அனைத்துக்கதைகளுமே இப்படி எளிய வம்புகள் மட்டுமே. ஒரு சிறிய வேறுபாடு என்றால் கண்ணிநுண்சிறுதாம்பு என்னும் கதையைச் சொல்லலாம். மனநலவிடுதியின் பெண்களைபற்றிய அச்சித்திரமே சினிமாவில் வரும் ‘பைத்தியங்களின்’ சேஷ்டைகளைப்பார்த்து எழுதப்பட்டது. ஆனாலும் மிக எளிதாக முறிந்துவிடும் பெண்களைப்பற்றிய எளிய குறிப்புகள் ஒருவகையில் உள்ளத்தை தாக்குகின்றன. கண்ணிநுண்சிறுதாம்பு என்னும் தலைப்பும் நன்று

 

கமலாதேவி அரவிந்தனின் இத்தொகுதியின் கதைகளில் அவர் தன்னை ஒரு பெரிய இலக்கியச்சாதனையாளராக எண்ணி கதைக்குள் வாதிடுவதை உணரமுடிகிறது. அவர் தன்னைப்பற்றிய விமர்சனத்தை தானே கடுமையாக உருவாக்கிக்கொள்ளலாம். அது அவரை நல்ல கதைகள் சிலவற்றை எழுதச்செய்யக்கூடும்.  கதை என்னும் வடிவை இன்னமும்கூட அவர்  கற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் பெரும் படைப்பாளிகள் எழுதிச்சென்ற மொழி இது.

 

*

 

பின்னட்டையே இந்நூலை ஒரு சிறந்த நகைச்சுவை நூலாக ஆக்குகிறது.  அந்தக்கோணத்தில் வாசிப்பவர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்திற்குரியது இது . ‘வை.மு.கோதைநாயகி அம்மாள் காலந்தொட்டு இன்றைய உமா மகேஸ்வரி வரை பெண்ணெழுத்து என்பது வாழ்வியல் பிரச்சினைகளை , அறச்சீற்றங்களைக்கூட, இணைமுரணில், பாதரசக்குண்டுகளாய், பெண்மொழியில் சொல்லத்தெரிந்தவர்களாகவே வாசகனைக் கவர்கிறார்கள். கணநேர அதிசயங்களைக்கூட சுவையான சிந்தனையில் ஊடுபாவி கட்டமைக்கப்பட்டக் கதைகளின் மூலம் இயங்காற்றலால் எழுதி வென்ற கதைகள் நிதர்சனச் சான்றாக இங்குண்டு. பரிசுபெற்ற கதைகள் என்பதனால் சொகுசாய் சொல்லவரவில்லை. உச்சபட்ச சிந்தனையைக்கூட மொழிநடைக்கும் அப்பாற்பட்ட செவ்வியல் பாணியில் எழுதும்போது கருத்தியல்தளம் அசாத்திய கேள்விக்குறியோடு எம்மைத் திகைக்க வைத்துள்ளது’ என தன் கதைகளைப்பற்றி மிகுந்த அவையடக்கத்துடன் சொல்லும் கமலாதேவி நம்மை இறும்பூது களியுவகை போன்றவற்றை எய்தவைக்கிறார்.

 

அவர் மேலும் மனம் கனிந்து  ‘தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் எழுதும்போது நான் கற்றவை ஏராளம். அமைப்பியல் வாதக்கோட்பாடுகள் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு லக்கானின் உளவியல் கோட்பாடு என நுட்பமாக மலையாள வகுப்பில் கற்றுக்கொண்டதை எல்லாம் எனது பல மலையாளக்கதைகளின் வழியாக நான் பரிசோதித்ததுண்டு. கருத்துக்களால் ஆன கதைகளை  stories of ideas என்றும் புனைவின்வழி வயப்படுத்தும் எழுத்துக்களை fiction of ideas என்றும்  விமர்சகர் வாதிட்டார்கள். ஆங்கும் வாழ்க்கையை அதன் அனைத்து அழுக்காறுகளோடும் [!] அந்தரங்க முணுமுணுப்புகளோடும் மானுடம்தழுவிய அகச்சிக்கலோடு கூடிய மீட்சிப்பெட்டகம் நிஜமாக வெளிப்படும்போது உண்மையும் கற்பனாவாதத்தோடும் கூடிய கதைகளை விகாசத்தின் கிரகிப்பில் உன்னதமாக எடுபட்டன. அத்தகைய கதைகளே முதன்மைப்பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டன என்பதைச் சிறு வெட்கத்துடன் இங்கு பதிவுசெய்கிறேன்’ எனும்போது தமிழில் உயர்தர நகைச்சுவை இல்லை என்று சொன்னவர் யார் என்று கேட்கத்தோன்றுகிறது

 

 

[கரவு ,கமலாதேவி அரவிந்தன். தங்கமீன் பதிப்பகம்]

 

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

 

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தமிழ் வாழ்க்கையின் உறவுச்சிக்கல்கள்

$
0
0

11

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

“நம் தமிழ் பொது மனதில் உறவுகளை பேணிக்கொள்ள விருப்பமோ; உறவுகளின் மீது உள்ளார்ந்த நம்பிக்கையோ இல்லையோ?” என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

 

என் மனைவி  இந்தியா திரும்பிய இந்த ஒன்றை வருடங்களில் எங்கள் இருவர் பெற்றோர் வீட்டிலிருந்தும் அதை சுற்றிய முதல் வட்ட உறவுகளை (சுமார் 10+ குடும்பங்கள்), அவற்றில் முளைத்து, தினம் ஒரு துளிராய் தழைக்கும் பிரச்சினைகளை யோசிக்கும்போது இப்படி தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை. ஓவ்வொரு பிரச்சினையின் போதும் சம்மந்தப்பட்டவர்களை உட்காரவைத்து, நானோ மாலதியோ பேசிக்கொண்டே இருக்கிறோம். கணவன்-மனைவி; மாமியார்/மாமனார்-மருமகள்/மருமகன்; நங்கை-கொழுந்தி; மாப்பிளை-மச்சான் என வாய்ப்புள்ள எல்லா உறவுகளிலும் எதோ ஒன்று வந்து உட்கார்ந்து கொண்டு அவர்களை பிய்த்து எரிந்துகொன்டே இருக்கிறது. எங்களுடன் நெருக்கமாக உள்ள நண்பர்களின் குடும்பங்களிலும் இதையே பார்க்கிறேன்.

 

இந்த சமரசங்களில் நாங்கள் (மனைவியும் நானும்) ஒன்றும் வித்துவான்கள் இல்லைதான். நாங்கள் சமரசம் செய்துவைப்பதில் நம்பிக்கையும் இல்லாதவர்கள். எங்கள் முயற்சி எல்லாமே, சம்மந்தப்பட்டவர்களை மனம் விட்டு பேச வைப்பதும்; அவர்களை சுற்றி இருப்பவர்களை வத்திவைக்கும் முயற்சிலிருந்து தடுத்து வைப்பதும்தான். நோண்டி நோண்டி அவர்களை பிறர் மீது தனக்கு என்ன பிரச்சினை என்று எங்களிடம் சொல்ல வைக்கிறோம். அதில் அவர் கொண்டுள்ள தவறான புரிதல் இருந்தால் சொல்லி சொல்லி புரியவைக்கிறோம். மறுபுறம் தப்பு இருந்தால் அதற்கான காரணம் ஏதும் இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறோம். மறுபக்கத்தின் நியாயங்களை, நல்லஎண்ணங்களைநிரூபிக்கிறோம்.  வெறுமனே “அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போ” என்று சொல்வதில்லை; அது ரொம்ப நாளுக்கு தாங்காது என்பது தெரியும். “போக போக சரி ஆய்டும்” என்று வெற்று நம்பிக்கை தர மனசு வரவில்லை; அப்படி  எதுவும் சரி ஆகாது என்று தெரியும். ஒருவரை ஒருவர் கஷ்டப்படுத்தும் நிகழ்வுகள் குறையலாம் கூடலாம், ஆனால் மனதளவில் எதுவும் சரி ஆவதில்லை.

 

ஆனால் எங்கள் முயற்சி எதுவமே ஒரு உறவைக்கூட சரி செய்யவில்லை.

 

முக்கால்வாசி பிரச்சினைகள் தனக்கு பூ கொஞ்சமாக கொடுத்ததாகவோ, இட்லிக்கு சட்னி வைக்காததாகவே இருக்கிறது. அல்லது அதைத்தான் வெளியில் சொல்கிறார்கள். யாரும் இன்னொருவர் பணம், வாழ்க்கை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறமை என்று இதுவரை சொல்லவில்லை.  தன் தாழ்வு மனப்பான்மைதான் காரணம் என்று சொல்வதில்லை. யாருக்கும் தன் தன்னம்பிக்கையின்மை காரணமாக தெரிவதில்லை.

 

எல்லாமே வேறு ஒருவரிடம் தான் சொல்லப்படுகிறது. யாருக்குமே பிரச்சினைகளை சம்மந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசினால் சரி செய்து உறவை மீட்டெடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இல்லை. இதை என் உறவுக்காரி ஒருவர் சொல்ல கேட்டதுதான் இந்த கடிதத்திற்கான தூண்டுதல். ஒருநாளின் பல செயல்கள், எண்ணங்கள் ஒரு எதிர்நிலையிலேயே நிகழ்கிறது. [உங்களுக்கு வரும் நேரடியான திட்டல் கடிதங்கள் ஒரு விதிவிலக்கு]

 

இது எதுவும் நம் யாருக்கும் புதில்லை; எதுவும் என் கூரிய அறிவினால் புதிதாக கண்டுபிடிக்கபட்டதும் அல்லதான். இதற்கான காரணம் என்ன என தேடியபொழுது கீழ்கண்டவாறு நான் நினைக்கிறன். [அதை என் மனைவி ஒத்துக்கொள்ளவில்லை என்பதை பதிவுசெய்து பின்விளைவுகளிலிருந்து என்னை நானே காப்பாற்றிக்கொள்கிறேன்]

 

தமிழ்நாட்டில் புதியதாக குடும்பம் தொடங்கும் இளைஞ்சர்களுக்கு நேர்மறையான உறவுகளை கொண்டாடும், உறவுகளோடு உரையாடும், உறவுகளில் இயல்பாக எழும் பிரச்சினைகளை உரையாடல் மூலம் தீர்க்கும் முன் மாதிரிகள் சமூகத்தில் இல்லாததே அதன் காரணமாக இருக்கவேண்டும். சமூகத்துடன் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் சினிமா, தொலைக்காட்சி தொடர்களும் பெரும்பாலும் எதிர்மறை உறவுகளையே காமிக்கின்றன. நம் பழமொழிகள் கூட ஒரு விதிவிலக்கல்ல. எல்லா இடங்களிலில் இருந்தும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படும் உறவுச் சிக்கல்கள் அவற்றை இயல்பான ஒன்றாக நிரூபித்துவிடுகின்றது.

 

உறவுகளில் சிக்கல் என்பது மனோதத்துவப்படி ஒருவேளை இயல்பானதாகக்கூட இருக்கலாம். இரண்டு நபர்கள் நெருங்கி வந்து உறவாடும் போது விட்டுக்கொடுத்தலும், மாற்றிக்கொள்ளுதலும், மறுத்தலும், பகிர்தலும் நடந்தே தீரும் . இது சிக்கல் என்பதை ஒரு உறவின் இயல்பான உப-உற்பத்தியாக ஆக்கிவிடும். உண்மைதான்.

 

ஆனால் ஒரு சமூகமாக அதற்கான நேரடி தீர்வை முன்வைக்க நாம் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது. பிரச்சினைகளை சம்மந்தப்பட்டவர்கள் பேசி புரிந்து தீர்வுகண்டு உறவுகளை சரிசெய்துகொள்ள முடியும் என்று சொல்லித்தர, நம்பிக்கையை விதைக்க முழுதாய் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது. நம் பாரம்பரிய தீர்வுகள் எல்லாமே ஒருவரை விட்டுக்கொடுக்க வைப்பதும், அட்ஜஸ்ட் செய்து போவதும், குடும்ப பெரியவர் நாட்டாமை செய்வதும், பிறரிடம் சொல்லி அழுவதும், உள்ளுக்குள் புதைத்துகொள்வதும், பெரும்பாலான நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தும் உரிமை கூட மறுக்கப்பட்டதுமாகவே இருந்து வந்துள்ளது. நம் காணொளி காட்சிகளோ விஷம் வைத்தல்  வரை போகிறதே ஒழிய இழுத்து வைத்து பேசுவதை தீர்வாக சொல்வதில்லை. [இவை ஒருவேளை நம் சமூகத்திற்கு ஒரு வடிகாலோ என்று நீங்கள் வியப்பதை நான் மருத்துக்கூறவில்லை…முழுதாய் ஏற்றுகொள்ளமுடியாவிட்டாலும்]

 

அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். நேரடியாக சம்மந்தப்பட்டவர்களிடம். ஒருவர் சொல்லுவதை எதிராளி நம்புகிறார். உன்னை மன்னித்துவிட்டேன் என்று வார்த்தைகளில் சொல்கிறார். அவரின் செயல்கள் அதை உறுதிப்படுத்தியவண்ணமே உள்ளன. பத்து வருடங்கள் அமெரிக்க வாழ்க்கையில் ஒருவருடனான பிரச்சினையை அவரிடம் நேரில் சொல்லி தீர்க்க முயலாமல் இன்னொருவரிடம் முதலில் சொல்லி அதிகம் கேட்டதில்லை. கேட்ட சில நிகழ்வுகளும் நம் தமிழர் கொடையே. அப்படி ஏதாவது பிரச்சினையை நான் சொல்லும்போது ஒரு அமெரிக்கனின்  கேள்வி “நீ சம்பந்தப்பட்டவன்கிட்ட  நேரா பேசிப்பாத்தியா?” என்பதுதான். அலுவலகத்தில் எப்பபோதாவது HR அல்லது டைரக்டர் அல்லது எங்கள் boss-ஐ பற்றி நாங்கள் பேசிகொள்ளுவோம். அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது என் தோழி ஒருத்தி அந்த HR /டைரக்டர் கிட்டே போய் இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே இது சரியான புரிதலா; என்ன காரணம்  என்று கேட்டுவிடுவார். அவர் சொல்லும் விளக்கத்தை கொண்டுவந்து எங்கள் முன் வைப்பார். நாங்கள் எதிராளிக்கு இன்னும் ஒரு அடி நெருங்கி இருப்போம். இங்கோ நாம் “அவள்கிட்ட சொல்லிடாதே” என்று சொல்லித்தான் குறை சொல்ல ஆரம்பிக்கிறோம்.

 

எங்கள் பங்குக்கு அமெரிக்காவில் இருந்த வரை எங்களுக்கும் பிற குடும்பங்களுக்கும் இடையே வரும் பிரச்சினைகளை அவர்களை கூப்பிட்டு வைத்து பேசியிருக்கிறோம். பாதி முறைக்கு மேல் அந்த முயற்சி எங்கள் உறவுகளை மறுபடி சரி செய்தது. அப்படி பேசாமல் ஆறப்போட்ட எதுவும் சரியாகவில்லை. இங்கு நம்மூரில் அப்படி பேச தொடங்கும்போதே, “ச்சே ச்சே அதல்லாம் ஒன்றுமில்லை” என்று தவிர்த்து நடித்து ஓடுவதே இதுவரை நடந்துள்ளது.

 

பெரும்பாலானவர்களின் சிந்தனையை, அதன் வீச்சை அவர்கள் அதுவரை அதிகம் கேட்டுவந்த சொற்றோடர்களே தீர்மானிக்கிறது என்று தோன்றுகிறது. தான் இதுவரை கேள்விப்படாத/நினைவில் நில்லாத வரியை சிந்திப்பது என்பது ஒரு மனதுக்கு சவாலே. அந்த வகையில் நமது கேளிக்கைகளும்,  நிகழ்வுகளும் உறவுகளின் எதிர்மறை பிம்பத்தை, அதன் தீர்க்கமுடியாமையை கட்டமைத்த வண்ணமே உள்ளது.

“மொழி ஒருவரின் சிந்தனைகளை”  கட்டமைக்கிறது (whorfiansim) என்பது இன்னும் முழுதாக நிறுவப்படாத, ஆனால் மெல்ல மெல்ல நிறுவப்பட்டுக்கொண்டு வருகிற ஒரு கருதுகோள்.

 

நன்றி

கௌதமன்

 

அன்புள்ள கௌதமன்,

 

இந்தியக்குடும்பங்களில் உறவுகளுக்கிடையே உள்ள உரசல்களைப்பற்றி புனைகதைகளில் நிறையவே எழுதப்பட்டுள்ளது. சமூகத்தின் முன்னுதாரணங்கள், சமூகத்தில் உள்ள ஊடகங்கள் ஆகியவற்றில் விடைதேடுவதை விட இச்சமூகத்தின் கட்டமைப்பில் விடைதேடுவதே மேலும் பொருத்தமானதாக அமையும். மனிதர்கள் வெளியே இருந்து தங்கள் இயல்புகளைப் பெற்றுக்கொள்வதில்லை. அவற்றை அவர்கள் தங்கள் இளமைமுதல் குடும்பச்சூழலில் இருந்தே உருவாக்கிக் கொள்கிறார்கள்

 

இந்தியாவில் நமது குடும்பவாழ்க்கை, சமூக வாழ்க்கை பண்டைய பழங்குடி மனநிலைகளுடன் நீடிக்கிறது. நிலப்பிரபுத்துவகால உறவுமுறைகளும் விழுமியங்களும் பெரும்பாலும் அப்படியே உள்ளன. மறுபக்கம் நம் பொருளியல் வாழ்க்கை  முதலாளித்துவ அமைப்புக்குள் சென்றுவிட்டது. முதலாளித்துவத்திற்கு உரிய சில விழுமியங்கள் உண்டு. பொருள் சார்ந்து மட்டுமே அனைத்தையும் மதிப்பிடும் மனநிலை என அதை எளிமையாகச் சொல்லலாம். அந்த மனநிலையை நாம் அடைந்துவிட்டோம். ஆனால் அதே பழங்குடி, நிலப்பிரபுத்துவ உறவுமுறைகளைப் பேணுகிறோம். இதுதான் சிக்கல் என நான் நினைக்கிறேன். [இதுவும் ஒரு ஊகம் மட்டுமே. மார்க்ஸிய சமூகப்பபுக்குச் சட்டகம் இப்படி யோசிக்க உதவுகிறது. இதை இப்படி யோசித்துப்பார்க்கலாம், அவ்வளவுதான்.

 

 

நாஞ்சில்நாடனின் பல கதைகள் இந்த முரண்பாட்டில் இருந்து எழுந்தவை. தாய்மாமன் ஒருவன் மருமகன் கல்யாணத்துக்குச் செல்கிறார். திருமணம் நிகழ்வது நட்சத்திரக் கல்யாணவிடுதியாக இருக்கும் அரண்மனையில் [கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்] அங்கே இன்னொருவரை தாய்மாமனாக மணையில் அமர்த்திவிடுகிறார்கள். ஏனென்றால் இவர் ஏழை.

 

 

முதலாளித்துவ அமைப்புடன் இணைபிரியாதிருப்பது தனிமனித சுதந்திரம். இன்னொருவர் வாழ்க்கையில் தலையிடாமலிருப்பது. தாய் பிள்ளை, கணவன் மனைவி ஆனாலும் எல்லை வகுத்துக்கொண்டு உறவாடுவது. பொருளியல் அனைத்தையும் தீர்மானிக்கும் நிலையில் தனிமனித எல்லைகள் மிக அவசியமானவை. அதை நாம் கற்றுக்கொள்ளவே இல்லை

 

வழக்கமாக இலக்கியவாதிகளின் ’டெம்ப்லேட்’ ஒன்று உண்டு. கிராம மக்கள் உறவை மதிப்பவர்கள், நகரங்களில் எல்லாம் பணம்தான் என. ஆனால் நடைமுறையில் எவ்வளவுதூரம் கிராமம் நோக்கிச் செல்கிறோமோ அவ்வளவுதூரம் உறவுகளில் பணக்கணக்குகளும் மோதல்களும் இருப்பதையே இன்று காண்கிறோம். நகர் வாழ்க்கையில் மெல்ல மெல்ல உறவுகளை ‘அளவோடு’ வைத்துக்கொள்ள பழகிவிட்டார்கள். ஆகவே பங்காளிச்சண்டையும் மாமியார்ச்சண்டையும் மிகவும் குறைந்துவருகின்றன. அதாவது நிலப்பிரபுத்துவ பண்பாடு தேய்ந்து முழுமையாக முதலாளித்துவப்பண்பாடு வருகிறது. நீங்கள் முழுமையான முதலாளித்துவப்பண்பாட்டில் இருந்து இங்கே வந்து பார்க்கிறீர்கள்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பெருநகர்த் தனிமை

$
0
0

puthumai

எந்த அர்த்ததில் உலக இலக்கியச் சூழலில் சிறுகதை என்று சொல்கிறோமோ அந்த அர்த்ததில் புதுமைதாசன் கதைகளை சிறுகதை என்று  சொல்லிவிடமுடியாது. இவை சிறுகதைக்குரிய வடிவ இயல்புகளை அடையவில்லை, ஆசிரியர் அவற்றை அறிந்திருக்கவில்லை என்றே ஊகிக்கவேண்டியிருக்கிறது . ஆனால் ஒரு வாசகனாக எனக்கு இவை நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தன. இவை எளிய நடைச்சித்திரங்கள், அல்லது அனுபவக்குறிப்புகள். அந்த அளவிலேயே சென்றுபோன சிங்கப்பூரின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை

 

புதுமைதாசனால் வளர்த்தாமல், வீண்சொல்லாடாமல் கதை சொல்ல முடிகிறது. கூடுமானவரை உபதேசங்கள் இல்லை.  வேடிக்கைபார்ப்பவனின் மனநிலை எல்லா கதைகளிலும் கைகூடுகிறது. அதனால் ஆசிரியனின் தலையீடு இல்லாமல் கதைமாந்தரைப்பார்க்கமுடிகிறது. அத்துடன் தனித்தமிழ் உபாதைகளும் இல்லை. ‘என் நண்பர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாததனால் மருந்து வாங்க ஜெனரல் ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன்’ என இயல்பாகக் கதையை ஆரம்பித்துச் சொல்லிச்செல்கிறார்.

 

வாழமுடியாதவள் கண்ணுச்சாமியின் மனைவியின் கதை. மலாய்ப்பெண். வேலைக்காக பினாங்கு வந்த கண்ணுச்சாமி போர்ச்சூழலில் மாட்டிக்கொண்டு இங்கேயே இருந்துவிடுகிறான். பல ஆண்டுக்காலம் ஊருடன் கடிதத்தொடர்பே சாத்தியமில்லை என்னும் நிலை. இங்கே மலாய்ப்பெண்ணை மணந்துகொள்கிறான். நிலைமைச் சரியானதும் மனைவியை கூட்டிக்கொண்டு ஊருக்குச் செல்கிறான். பெரும்பாலானவர்கள் மலாய்ப்பெண்ணை கைவிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள். கண்ணுச்சாமி அப்படிச் செய்யவில்லை.

 

அது பிழை என தெரிகிறது. கண்ணுச்சாமியின் கையிருப்புப் பணம் கரைந்ததும் அவர் அம்மாவும் அப்பாவும் உறவினர்களும் சேர்ந்து அந்த அப்பாவிப்பெண்ணை திட்டி அவமதித்து தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். அவள் கிணற்றில் விழுந்து இறக்கிறாள். கண்ணுச்சாமி கண்ணீருடன் சிங்கப்பூருக்கே திரும்பிவருகிறான். தமிழர் விருந்தோம்பல் பற்றிய பிலாக்காணங்கள் நிறைந்திருந்த ஒரு சிந்தனைச் சூழலில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது . இதில் அந்த பண்பாட்டுப்பெருமிதம் இல்லை, மாறாக யதார்த்தம்நோக்கித் துணிச்சலாகச்செல்லும் பார்வை இருக்கிறது. இதுவே உண்மையில் நவீன இலக்கியத்தின் அடிப்படை

 

சோதிடமோகம், [ காலக்கணக்கு] உதிரித் தெருச்சண்டியர்த்தனம் [உதிரிகள்] என சிங்கப்பூரின் அறியப்படாத வாழ்க்கைத்துளிகள் வந்துகொண்டே இருக்கின்றன புதுமைதாசன் கதைகளில். இந்த வணிகப்பெருநகரின் விதிகளை அறியாமல் பங்குச்சந்தையில் பணமிழந்து மறைபவர், [ஓய்வு] முற்றிலும் அன்னியநகரின் ஒரு பகுதியுடன் மட்டும் உணர்வுரீதியான உறவுகொண்டு அங்கே வந்துகொண்டே இருப்பவர் [வெறுமை] என இதுகாட்டும் மனிதர்களை அணுகியறிய முடிகிறது. அவர்கள் அனைவருமே சிங்கப்பூர் என்னும் மாபெரும் அமைப்பைப்பார்த்து பதைபதைத்து நின்றுவிட்டவர்கள் என்று தோன்றுகிறது. அதைப்புரிந்துகொள்ளவும் முடிகிறது, நான் இங்கே இன்னும் ஐந்துவருடம் இருந்தால் அப்படித்தான் ஆகிவிடுவேன்.

 

அத்துடன் புதுமைதாசன் படைப்புகளில் மட்டுமே வழக்கமாக சிங்கப்பூர் கதைகளில் உள்ள ‘தமிழ்க்குறுகல்’ இல்லை. அவரது உலகம் சீன, மலாய் பண்பாடுகளுடன் இயல்பாக இணைய முயல்கிறது. நல்லெண்ணத்துடன் சகமனிதர்களாக அவர்களை அணுகுகிறது. அவர்களின் மேன்மையையும் நமது சிறுமைகளையும் தொட்டு அறியவும் சுயவிமர்சனம் செய்யவும் முயல்கிறது. உண்மையில் ஒரு தருணத்தில் அப்படி மனம்திறந்து மானுடனாக நின்றிருக்கும் நிலையையே படைப்பாளியின் தன்னியல்பு என்கிறோம்.

 

உதாரணமாக தெளிவு என்னும் கதை. தண்ணிபோட்டுவிட்டு வந்து தன் கற்பை சந்தேகப்பட்டு  சலம்பல் பண்ணும் தமிழ்க்கணவனின் மண்டையில் புட்டியால் ஒரு போடு போடும் அந்த சீனப்பெண்ணை மிகமிக விரும்பினேன். அவரை நேரில் பார்க்கநேர்ந்தால் ‘ஆச்சி, சொவமா இருக்கேளா?’ என்று கேட்காமலிருக்கமாட்டேன்.

 

இத்தகைய கதைகளினூடாக நாம் அடையும் நுட்பமான வாழ்க்கைச்சித்திரம் வேறெந்த சமூக ஆய்வுகளிலும் சிக்காதது. பல அவதானிப்புகளைச் சொல்லலாம். உதாரணமக, பொதுவாகவே தமிழர்களுக்கு மலாய், சீன பண்பாட்டைச்சேர்ந்த பெண்கள் ‘ஒழுக்கமற்றவர்கள்’ என்னும் முன்முடிவு இருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமளித்தது, கூடவே நம்பவும் வைத்தது. அது ப.சிங்காரம் சொன்னதுபோல கண்ணகிஉளச்சிக்கல். பெண்களிடம் அந்தச்சிலம்பு இருக்கிறதோ இல்லையோ ஆண்கள் சதா தம்பெண்களை நோக்கி அதை குலுக்கிக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

ஒருவகையான கட்டுப்பெட்டித்தனத்துடன், அதை பேணும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட போலியான சுயமேன்மை மனநிலையுட்ன் வேறு இனத்தவரை அணுகியறியாமல் வேலி இட்டுக்கொண்டு  வாழும் நிலையில் இந்த மனநிலையை தலைமுறைகளாகவே பேணுகிறார்கள் தமிழர்கள். புதுமைதாசனின் பல கதைகளில் இந்த அம்சம் வருகிறது.  வாழமுடியாதவள் கூட இதைப்பேசும் கதைதான். அக்கதையில் இதே மனநிலையை இந்தியாவிலுள்ளவர்களும் சீன மலாய் மக்கள் மேல் கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

 

மலாய் மொழியின் சொல்லாட்சிகளையும் இவர் கதைகளில்தான் காணமுடிகிறது. இந்த நாடு அளிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பது பல்லினப் பண்பாட்டு உரையாடலே. அதன்மூலம் உருவாகும் அழகுகளும் அறிதல்களுமே இந்நாட்டு இலக்கியத்தை தனித்தன்மை கொள்ளச்செய்யமுடியும். அதற்கான அழகிய தொடக்கம் இவர் கதைகள். ஏன் அது தொடராமல் போயிற்று என ஆச்சரியமாக இருக்கிறது.

 

புதுமைதாசன் கதைகளில்தான் அடித்தள மக்களின் வாழ்க்கையைக் காணமுடிகிறது . உதாரணம் துணை. பெருநகரில் செருப்பு தைக்கும் ஒருவனின் வாழ்க்கை என்பது ஒருவகை உலகளாவியத் தன்மைகொண்ட அனுபவமாகத்தான் இருக்கிறது.இங்கும் தலித் வாழ்க்கை பிச்சைக்கார வாழ்க்கைக்கு பக்கத்தில்தான் இருந்திருக்கிறது.

 

சிங்கப்பூர் உருவாகும் காலகட்டத்தில் இங்கிருந்த கம்பொங் என்னும் சிறிய குடியிருப்புகளின் வாழ்க்கைச்சித்திரத்தை அதிக அலட்டல் இல்லாமல் புதுமைதாசன் சொல்லிச்செல்கிறார். அவர் கலைஞர் என்பதனால் பின்னர் வந்த வசதியான குடியிருப்புகளை விட நெருக்கியடித்துவாழ்ந்த அந்தச்சேரிகளே அவருக்குப் பிடித்திருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. சீனர்களுடனான நெருக்கம் அச்சூழலில் இருந்து அவர் அடைந்ததாக இருக்கலாம்.

 

புதுமைதாசன் புதுமைப்பித்தன் மேல் ஆர்வம் கொண்டு அப்பெயரைச் சூட்டிக்கொண்டார். இயற்பெயர் பி கிருஷ்ணன்.  எழுபதுகளில் எழுதபட்ட கதைகள் இவை. தமிழ்ச்சிறுகதையின் வரலாற்றின் பின்னணியில் இவை  வடிவரீதியாகப் பின்தங்கிய கதைகளே. உண்மையில் புதுமைதாசன் படைப்புகளில் எவையுமே வடிவமுழுமையடைந்தவை அல்ல. எக்கதையையுமே அவர் எழுதிமுழுமைப்படுத்த முயலவுமில்லை. [ஆனால் அவர் நல்ல வாசகர் என்பது தெரிகிறது. அன்று தமிழின் இலக்கியச்சூழலை ஆக்ரமித்திருந்த காண்டேகர் போன்ற படைப்பாளிகளை ஒரு கதையில் குறிப்பிடுகிறார்]

 

ஆனால் உண்மையும் மக்களைநோக்கும் விழிகளும் விலகல்கொண்ட நிலைபாடும் உள்ளது. இயல்பான மொழியில் அவை வெளிப்படுகின்றன. ஆகவே சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை முன்னோடி என அவரைச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை. புதுமைப்பித்தன் அவரைப்பார்த்திருந்தால் ‘வாடா பங்காளி’ என்று கூப்பிட்டு ஆச்சியிடம் “ஏளா, இவன் நம்மாளு கேட்டியா?’ என்று உந்திய பல்லைக்காட்டி குரல்வளை குதியாட சிரித்திருக்கவும் கூடும்.

 

புதுமைதாசன் சிறுகதைகள். பாமா பிரசுரம் 1993

 

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

 கமலாதேவி அரவிந்தன் கதைகள் பற்றி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்

$
0
0

 

இனிய ஜெ.

வணக்கம். ‘சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்பற்றிய உரையின் வடிவம் கண்டேன்இலக்கிய உரகர்களான எங்களுக்கு, உளஎழுச்சி தரும் வெய்யோனின் ஒப்பற்ற ஒளிபாய்ச்சிய அற்புதத்தருணம் இது என்பதாய் மகிழ்கிறேன். இதற்குத்தான் பலநாட்களாக நாங்கள் காத்திருந்தோம்.

தமிழகத்திலிருந்து வந்துசெல்லும் படைப்பாளர்களில், திரு மாலன் மட்டுமே நானறிந்தவரையில் சிங்கப்பூர் இலக்கியங்களின் மீதான தொடர்வாசிப்பும் கவனமும் கொண்டவர். அடிக்கடி அவர் இங்கு வந்துவிட்டுச்செல்வதாலும் தொடர்ந்து இங்குநடத்தப்படும் போட்டிகளுக்கும் நடுவராக இருந்துவந்தமையால், இயல்பான ஒரு அளவுகோலும் பின்புலத்தையும் கொண்டு சிங்கப்பூர்ப்படைப்பாளிகளை ஊக்கப்படுத்திக்கொண்டேவந்தார்.

இலக்கிய உலகில் கறார்தன்மையும், உள்ளதுகூறல் என்றவகையின் பின்புலத்திலும், சிங்கப்பூர் இலக்கிய உலகிற்கு தாங்கள் அளித்த இச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. இங்குள்ள, இதுவரையான படைப்பிலக்கிய உலகின் பின்புலமும் கட்டமைப்பும், படைப்பாளர்களின் எண்ண ஓட்டமும் போக்கும் வாசிப்பின் அவசியமும், வாசகர்களின் தகுதியும் மேம்படுத்திக்கொள்ளுதலின் பொருட்டான உண்மைத்தன்மையையும் என படைப்பிலக்கிய உலகின் முப்பங்காளிகளையும் ஒருசேர முன்னிறுத்தியதும் இதன் முக்கிய அம்சம்.

சிங்கப்பூரிலுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும், எழுத்தாளர்களும் இக்கட்டுரையின் அடிநாதத்தைப்புரிந்துகொண்டு அதன்பின்தொடர்ந்தால் சிங்கப்பூர் இலக்கியம் வீரியத்தோடு பல்கிப்பெருகும் என்பது மட்டுமின்றி, தங்களின் இக்கட்டுரையும், இரண்டு மாதமாக இங்குள்ள இலக்கியநாற்றங்காலில் விதைத்திருக்கும் விதைச்செறிவும்பார்த்திவப் பரமாணுவாய் படைப்புலகில்இன்னும் சில காலத்திற்குப்பின் மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிக்கொண்டுவரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

மேன்மைமிக்க சிங்கப்பூர் படைப்பாளியான ஜெயந்திசங்கரை, மேம்போக்காய் பத்தோடுபதினொன்றாய்க் குறிப்பிட்டதற்காய்ச் சினந்து கொண்ட, உமாஸ்ரீபஞ்சு என்ற சிங்கப்பூரிலிருக்கும் வாசகியைச் சந்திக்கவிரும்புகிறேன். அக்கதாபாத்திரம் அமெரிக்கா செல்லும்முன் சந்திக்கநேர்ந்தால் மகிழ்ச்சி. அவரின் முகவரியைக் கொடுத்தால், ’சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்பற்றிய தங்களுடைய கட்டுரையின் தொடர்ச்சியாய் ஒரு கலந்துரையாடலை அவரோடு முன்னெடுக்கலாம். முகவரியைக் கொடுத்து இதற்கும் ஒருவழி செய்யவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

தங்களின் நேரத்திற்கும் கடப்பாட்டுணர்விற்கும் சிரந்தாழ்ந்த நன்றி.

எம்.கே.குமார்.

 

அன்புள்ள ஜெமோ

 

சிங்கப்பூர் கதைகளைப்பற்றிய உங்கள் விமர்சனங்களை வாசித்தேன். ஆரம்பகட்ட கொந்தளிப்புகளுக்குப்பின் நீங்கள் சொல்லவருவது என்ன என அவர்களுக்குப்புரியும் என நினைக்கிறேன்

 

ஆனால் பல வரிகள் மிகக்கூரியவை. உங்கள் நிலையில் இருந்துகொண்டு இவற்றை நீங்கள் சொல்லவேண்டுமா என்பதை கேட்கவிரும்புகிறேன்

 

சத்யநாராயணன்

 

அன்புள்ள சத்யா,

 

என் விமர்சன அளவுகோல்கள் வெளிப்படையானவை. கிட்டத்த ஐந்தாயிரம் பக்க அளவுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை [ஏழு தொகுதிகள்]  உள்ளுணர்வின் தடத்தில், நவீனத்துவத்திற்குப்பின் தமிழிலக்கியம் தேவதேவனை முன்வைத்து ஆகிய கவிதைவிமர்சனத் தொகுதிகள், எழுதியவனைக் கண்டுபிடித்தல், எழுதும் கலை, புதியகாலம் போன்ற சமகால இலக்கிய விமர்சனநூல்கள், இந்திய நாவல்களைப்பற்றிய கண்ணீரைப் பின்தொடர்தல்  உலக இலக்கியம் குறித்த மேற்குச்சாளரம் ஆகிய நூல்கள் வெளியாகியிருக்கின்றன.

 

என் இலக்கிய மதிப்பீட்டில் ஒரு கலைமுயற்சியின் தோல்வியை ஒருபோதும் பிழையாக எண்ணுவதில்லை. அதை கடுமையாக விமர்சிப்பதுமில்லை. ஏன் அந்தத்தோல்வி என சிலசமயம் ஆராய்வதுண்டு, அவர்கள் இளம் படைப்பாளிகள் என்றால். மற்றபடி  ஏதும் சொல்வதில்லை. முதிரா எழுத்துக்களை பெரும்பாலும் அனுதாபத்துடனேயே அணுகுகிறேன்.

 

கடுமையான விமர்சனம் என்பது போலி எழுத்துக்கள் மீது மட்டுமே. இலக்கியத்தில் செயல்படுவதற்கான அக்கறையோ இலக்கிய வடிவங்களை கையாள்வதற்கான உழைப்போ இல்லாமல் போலியாக எழுதி பல்வேறு சூழ்ச்சிகள் மற்று உத்திகள் மூலம் களத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்களை நோக்கியே கடுமையாக எழுதுகிறேன். காரணம் அவை களைகள். அவை அடுத்த தலைமுறைக்கு பிழையான முன்மாதிரிகள். மேலும் போலிகளுக்கு ஊக்கம் அளிப்பவை. களை நீக்காமல் விவசாயம் இல்லை

 

ஜெ

 

சிங்கப்பூர் நாட்கள் புகைப்படங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16840 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>