Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16718 articles
Browse latest View live

காந்தி -கடிதங்கள்

$
0
0

nan

வணக்கம்.

நல்லாருக்கீங்களா?  சிங்கப்பூர் படைப்புகளின் விமர்சனங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இப்போது பெங்களூரில் இருக்கிறேன்.  முன்பு சென்னையில் இருந்தபோது பனுவலுக்கு நீங்கள் வந்தபோது, என் தேவையில்லாத சிந்தையால் உங்கள் பேச்சைக் கேட்பதைத் தவறவிட்டுவிட்டேன்.  இப்போதும் வாய்ப்பின்மையால் தவறவிட்டுவிட்டேன்.  ஸ்ருதி டி.வி மற்றும் youtube-ன் புண்ணியத்தில் காந்தி தோற்கும் இடங்கள் உரையைக் கேட்டேன்.

உங்களின் எழுத்தும் பேச்சும் அடர்த்தியானதாகவே இருக்கின்றது.  அதை கிரகித்துக் கொள்ள எனக்கு சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் எடுத்துக் கொள்கிறது.  கேட்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், வேறு ஏதோ சம்பந்தமில்லா ஒரு வேலையில் இருக்கும் போது, உங்கள் உரையின் வரிகளில் ஒன்று ஞாபக அடுக்கிலிருந்து மேலெழுந்து வரும்.  அப்போது அந்த வரியின் அர்த்தம் முழுமையாகப் புரியும்.  ஒன்று மட்டும் நிச்சயம், அவை என்னில் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறியதில்லை அல்லது ஏன் அவர் சொல்வதற்கு வேறானதாய் இருக்கக் கூடாது? என்றாவது தோன்றியிருக்கிறது.
இன்று நான் பார்த்த ‘காந்தி தோற்கும் இடங்கள்’ உரையில், ‘இவர்கள் – அவர்கள்’, ‘நம்மவர் – அயலவர்’ என்று நீங்கள் சொன்னது மட்டும் என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறது.  என் அகங்காரத்தை நோக்கி, மென்னகை புரியும் கிழவனை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  சில நேரங்களில் கிழவன், ஜீன்ஸ் அணிந்து மீசையில்லாத ஜெயமோகன் போல உருவெளித்தோற்றமாகவும் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறேன்.  காரணம் உண்டு.  கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தேன்.  என் சிந்தனையின் அத்தனை பக்கங்களிலும் அது தன் நல்ல விழுமியங்களால் நிறைந்துவிட்டிருக்கிறது.  எல்லா மருந்திலும் பக்கவிளைவுகள் உண்டல்லவே, காந்தியைப் பற்றிய என் சித்திரம் பெரும் எதிர்மறையாகக் கட்டமைக்கப்படாவிட்டாலும், ‘அவரால பிரையோஜனமில்ல’ என்கிற அளவில் இருந்தது.  அது உடைபட்டது, உங்களின் கட்டுரைகளில்.

உங்களின் கட்டுரை ஒன்றில், அந்த பொக்கைவாய்ச் சிரிப்பைச் சொல்லியிருப்பீர்கள்.  அதுதான் முதன்முதலில், கிழவனைப் பற்றிக் கொஞ்சமேனும் யோசித்துப் பார்க்க வைத்தது.  ஏன் என்றெல்லாம் தெரியவில்லை.  சத்திய சோதனையை வாசிக்காமல் தள்ளிப் போட்டு வருகிறேன்.  சட்டையைக் கழற்ற அஞ்சும், உள்ளிருக்கும் பாம்பாக இருக்கலாம்.  இன்றையா காந்தியா சத்திய சோதனையா எது முதலில் என்று யோசித்ததில், சத்திய சோதனையை முதலில் வாசிக்கலாம் என்றிருக்கிறேன்.

இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்.  நீங்கள் ஒரு தேர்ந்த ஆசிரியர்.  முன்பொருமுறை ஆர்வக்கோளாறில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.  அதில் இதைச் சொல்லியிருந்தேன்.  எழுத்தில் கண்டிப்பான ஆசிரியராகவும், பேச்சில் கனிவான ஆசிரியராகவும் இருக்கிறீர்கள் என்று.  இப்போது இரண்டிலும் கனிவானவராக எனக்குத் தோற்றம் தருகிறீர்கள்.

என்னைப் போல எவ்வளவு பேரைப் பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், அதனால் மீண்டும் ஒரு முதிராக் கடிதம்.  ஏதேனும் தவறாக இருப்பின் மன்னிப்பு கோருகிறேன்.

நன்றி,
ஜே. இன்பென்ட் அலோசியஸ்

 

அன்புள்ள இன்ஃபெண்ட்,

 

காந்தியைப்பற்றிப் பேசுவதென்பது ஒருவகையில் நம் எல்லைகளைக் கண்டடைவதுதான். அன்றைய என் பேச்சே கூட எவ்வகையில் நாம் காந்தியிடம் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் சொன்னது. தனிப்பட்ட முறையில் என் கோபத்தை, மூர்க்கத்தை வெல்வதேகூட எனக்குப் பெரும் சவால். அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

 

ஜெ

 

ஜெ அவர்களுக்கு,

 

என் கல்லூரி நாட்களில் காந்தியின் சுயசரிதம் படித்து அதனால் அவர் மீது பெரிதும் ஈர்க்கப்பட்டவன்  நான்.

 

காந்தி உலகுக்கு எடுத்துக் காட்டிய அகிம்ஸை முறை பற்றி எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.

 

ஒரு அகிம்சாவாதி எப்படி இந்த உலகிற்குத் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கேள்வி. இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.

 

1) தன்னை அகிம்சாவாதி என்று பகிரங்கமாகப் பிரகணப்படுத்திக் கொள்ளுதல். மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா இதற்குச் சிறந்த உதாரணம். தங்கள் அகிம்சை முறையினால் மக்களிடம் கிடைக்கும் தார்மீக ஆதரவே அவர்களுக்குப் பலம்.

 

2) இன்னொரு வழிமுறை, அகிம்சாவாதியாக வெளிப்படையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாதது. இந்த நபருக்கு உள்ளுக்குள்  எதிராளிக்குத் தீங்கு செய்யும் நோக்கம் சிறிதும் இருக்காது. ஆனால் வெளியே  நீ என்னிடம் வைத்துக்  கொண்டால் உன்னை உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்ற ரீதியில் பயத்தை உண்டாக்குவார். எதிராளியின் அச்சத்தைப் பயன்படுத்தி அவனை பலவீனப்படுத்துவார்.

 

இந்த இரண்டாம் வழிமுறையே நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமானது என்பது எனது அபிப்பிராயம்.

 

இதற்கு உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட்  ரீகனைச்   சொல்லலாம். அவர் சோவியத்தை அணு  ஆயுதத் தாக்குதல் செய்து கூட கம்யூனிசத்தை அழிப்பேன் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து தான் ஜனாதிபதி ஆனார்.

 

ஜனாதிபதி ஆனப்  பிறகு அமெரிக்காவின் ஆயத பலத்தைப் பன் மடங்கு பெருக்கி சோவியத்தை கிலி கொள்ளச் செய்தார். இதன் மூலம் சோவியத்துக்குப் பெரிய பொருளாதார நெருக்கடியை உண்டாக்கினார். அதன் பிறகு சோவியத்திடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி இரு தரப்பிலும் அணு ஆயுதங்கள் பெரிதளவு குறைக்க வழி செய்தார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஒரு முறை கூட நேரடியாக அமெரிக்க ராணுவத்தை சோவியத்தைத் தாக்கப் பயன்படுத்தவில்லை.  ஆஃப்கானிஸ்தானில் கூட மறைமுகமாகத்  தான் சோவியத்துக்கு எதிராக தாலிபனுக்கு ஆதரவு அளித்தார்.

 

எனக்கு ரொனால்ட் ரேகனும் அகிம்சாவாதியாகத் தான் தெரிகிறார். சாணக்கியத்தன்மை கலந்த அகிம்சாவாதியாக. காந்தியின் அகிம்சைமுறையை விட இது நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதா?

 

இது பற்றி தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

 

நன்றி

சத்திஷ்

 

 

அன்புள்ள சதீஷ்,

 

ஒரு கோணத்தில் நீங்கள் சொல்வது சரி. பரமஹம்சர் சொன்னதுபோல கொத்தவேண்டாம், சீறலாமே என்னும் கதைபோலத்தான்

 

ஆனால் உண்மையில் வன்முறையை தவிர்த்தல் என்பது எதிர்வன்முறை அல்லது சமானமான ஆற்றல் மூலம் உருவாகும் செயலின்மை அல்ல\

 

உள்ளப்பூர்வமான அகிம்சை என்பது வன்முறையை நம்பாமலிருத்தலே. அது மிகமிகக் கடினம். நான் அதை நம்புகிறேன். என்னால் இயல்வதில்லை

 

ஜெ

 

ப்ரிய ஜெ

 

வணக்கம்.

 

இந்த வருட  விடுமுறையின் போது தங்களை சந்திக்க நினைத்தேன்.ஆனால் தங்கள் சிங்கப்பூர் பயணத்தால் அது நிறைவேறவில்லை.

 

காடு வாசித்து முடித்தேன். அது பற்றி தனியே தங்களுக்கு எழுத வேண்டும்.

 

என் நட்பு  குழுமத்தில் முன்னரே குறுந்தொகை, கபிலர் படித்து வந்தேன்.

 

காடு-அய்யர் வழியே அறிந்த கபிலன் இன்னும் ப்ரியமானவன் ஆனான். அதற்கு என் நன்றிகள்.

 

ஈரோடு புத்தக விழாவில் குறுந்தொகை -திரு ராகவ ஐயங்கார் உரை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளேன்.

 

 

Convey My kind regards to Family.

 

Regards,

Chandru

Doha

 

அன்புள்ள சந்துரு

 

நீண்டநாட்களாயிற்று கடிதம் கண்டு. இப்போது பதில்

 

இன்றைய காந்தி இப்போதும் அச்சில் உள்ளது என்றுதான் நினைக்கிறேன். நான் பார்த்து நீண்டநாட்களாகின்றன.

 

குறுந்தொகை நூல் எதுவானாலும் உரையைக்கொண்டு கவிதையை மறைக்காததாக இருக்கவேண்டும்

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு விவாதக்கூட்டம்,சென்னை

$
0
0

SOLVALAR_KAADU_EPI_55

 

நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த மாத {17வது} ”சென்னை” வெண்முரசு கூடுகை வருகிற ஞாயிற்றுக்கிழமை {23/10/16} மாலை 4 மணி முதல் 8 மணிவரை நடைபெறும்.

இதில் சொல்வளர்காடு நாவல் குறித்த கலந்துரையாடல் நடைபெறும்.

வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இடம்:

சத்யானந்த யோகா மையம்,

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு, வடபழனி

முருகன் கோவில் அருகில்.

சென்னை 26

 

தொடர்புக்கு :- 9952965505

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8

$
0
0

b1

 

உயர்திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். விஷ்ணுபுரம் விருது குறித்து அறிந்தேன்.

கல்யாண்ஜியோ, வண்ணதாசனோ, அவரின் இலக்கியம் மிக மென்மையானது. வெற்றிலையை மெத்தென்ற தொடையில் வைத்து நீவி நீவி அடியையும் நுனியையும் வலிக்காமல் கிள்ளி, களிப்பாக்கை அதோடு சேர்த்து, சுண்ணாம்பை சரியான அளவில் கட்டைவிரல் நகத்தால் நோண்டி எடுத்து வெற்றிலையில் தடவி புகையிலையை அதன் ஓரமாக வைத்து, மடித்து, மடித்து குறட்டுக்குள் அடைத்து கொள்ளும் இலாவகம். காரியமே கண்ணாக இயங்கும் புலன்களின் ஒருங்கிணைப்பு. கடைவாயில் களிப்பாக்கை சத்தமின்றி கடித்து சாறெடுத்து வெற்றிலை கூட்டணிக்கு வலு சேர்க்கும் ஒருங்கமைவு. இவை போல அத்தனை நேர்த்தியாக அழகியலை யதார்த்தத்தில் பின்னி பின்னி உலகம் முழுவதையும் அன்பின் பெருக்கத்தில் அணுகும் அவரின் கதை(மனப்)போக்கு அபாரமானது. அவருக்கு விருதளிப்பது மிக பொருத்தம்.

விருது என்றால் ஒருநாள் கூடி கலைந்து, நோக்கம் மறந்து, சுயதம்பட்டங்களுக்குள் வீழ்ந்து போவதல்ல. ஏன் விருது, எதற்காக விருது, என்றும் அவரின் இலக்கிய பணிகள் குறித்து விவாதித்தும், ஆவணப்படத்திலும் நேரிலும் அவரை கொண்டாடி, கொண்டாடி அளிக்கும் விருது விஷ்ணுபுரம் விருது.

இயல் விருது, விஷ்ணுபுரம் விருது, இவைகளெல்லாம் சாகித்ய அகாடமி விருதை போல முக்கியத்துவம் வாய்ந்தவை.

தங்களுக்கும் விருது பெற்ற எழுத்தாள கவிக்கும் வாழ்த்துகள்.

அன்புடன்

கலைச்செல்வி.

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசனுக்கு விருது அளிக்கும் செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அவரை நான் எழுத்தாளர்களுக்குள் ஒரு பாடகன் என்றுதான் நினைக்கிறேன். அவருடைய கதைகள் எல்லாம் எனக்குப் பாடல்களாகவே தெரிகின்றன. பாடல்களுக்கு இருக்கும் மென்மையும் உருக்கமும் நஸ்டால்ஜியாவும் அவருடைய கதைகளிலும் இருக்கின்றன.

அவர் சொல்லும் உலகம் கடந்துபோன ஒன்று என்று சிலர் சொல்வார்கள். அப்படித்தான் எல்லாம் கடந்து போகிறது. அதையெல்லாம் மொழியிலே அழியாமல் வைப்பதற்காகத்தானே இலக்கியத்தை எழுதுவது

சபரிகிரிநாதன்

***

அன்புள்ள ஜெயமோகன்

வண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி மனம் நிறைய மகிழ்ச்சியை அளித்தது. தாமிரவருணியின் குளிரும் பொதிகைத்தென்றலின் மணமும் கொண்ட எழுத்து அவருடையது. நொய்மையான மனம் கொண்டவர்கள் அவருடைய கதாபாத்திரங்கள். ஆகவே அவர்கள் நுட்பமான விஷயங்களை அறியமுடிகிறது. அவரும் அப்படித்தான். எங்கும் எவரிடமும் போய் அவரெல்லாம் நிற்க முடியாது. விருதும் பட்டமும் அவரைத்தான் தேடிவந்தாகவேண்டும். நீங்கள் செய்திருப்பது மிகச்சிறந்த எழுத்தாளருக்கு மிகச்சிறந்த கௌரவம் வாழ்த்துக்கள்

சுப்ரமணியம்

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசன் என் ஆத்மாவுக்கு மிக நெருக்கமான எழுத்தாளர். அவருடைய சின்னுமுதல்சின்னு வரை நான் பலமுறை வாசித்த நாவல். மிக ஆரம்பத்தில் எதற்கு இத்தனை செய்திகளைச் சொல்கிறார் என்று தோன்றியது. கடைசியில் மெதுவாக அவர் சொல்வது அந்தச் சின்னச்சின்ன விஷயங்களைத்தான் என்று புரிந்தது. அதுதான் கதை என்று தெரிந்ததுமே வாழ்க்கையையும் அப்படிப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அதுதான் வண்ணதாசன் அளிக்கும் அனுபவம்

மகேஷ்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியத்தின் தரமும் தேடலும்

$
0
0

editorial-cartoon-art-literature

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். அண்மையில் எழுந்த சர்ச்சைகள் குறித்து எனக்கு சில கேள்விகள்.

இலக்கியம் என்பதன் வரையறை எது? எது சரியான இலக்கியம் என்று புதிய வாசகர்கள் எப்படி அறிவது?

இன்றைய இணைய காலகட்டத்தில் வாசிப்பவர்களுக்கு இணையாக எழுதுபவர்களும் உள்ளனர். கறாரான இலக்கிய இதழ்களில் வெளிவந்த படைப்புகளைப் போன்று இன்றைய வாசகன் சரியான எழுத்தைக் கண்டறிவது சிரமமாகத்தான் உள்ளது. ஏனெனில் இங்கு கொட்டிக் கிடப்பவை கற்பனைக்கப்பாற்பட்டவை. அதிகம் வாசிக்கும் பழக்கமுடைய என்னால், எனக்கு வரும் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், இலக்கிய இதழ்கள் என்று இணைப்பில் வந்து குவியும் எல்லா எழுத்துகளையும் முழுமையாக வாசித்து முடிக்க முடியவில்லை. சில நேரங்களில் வணிக கேளிக்கை எழுத்துகளைப் பிரித்தறியவே நேரம் கழிகிறதோ என்று தோன்றுகிறது. இன்றைய இணையத்தில் சரியான எழுத்தினை எப்படி பிரித்தறிவது? எழுதப்படும் அனைத்துமே கவிதைகளா? அதிகம் வாசிக்கப்படும் எல்லாமே சிறந்த இலக்கியமா என்றே வினா எழுகிறது.

தமிழ் இலக்கியத்தில் மாறும் காலகட்டங்கள் முன்பிருந்தவற்றை மீறி எழுந்தவையே. எனில் தமிழில் சமகாலத்தில் இனிவரும் காலங்களில் எத்தகைய படைப்புகள் உருவாகும்? எந்த வகையான எழுத்து முன்னிலை பெறும். ஒரு ஆர்வமிக்க இலக்கிய வாசகியாக சரியான எழுத்துகளை எப்படி கண்டறிவது? இதை உண்மையான ஆதங்கத்துடனேயே கேட்கிறேன். ஏனெனில் வாசிக்கத் தொடங்கி அது வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே என்று ஒதுக்குவது உண்மையான வாசிப்பு ஆர்வங்கொண்டவர்களுக்கு எரிச்சலையே தரும் என்பது தாங்கள் அறிந்ததே.

ஜேகே எழுதுவார் “என்ன புஸ்தகம் இது? ஒண்ணும் நன்னா இல்லே. படிக்க ஆரம்பிச்சுட்டா, அதுக்காக நன்னா இல்லன்னு வச்சுட முடியறதா? நன்னா இல்ல நன்னா இல்லேன்னு முனகிண்டே படிக்க வேண்டி இருக்கு? எங்கேயாவது கொஞ்சம் நன்னாயிருக்காதாங்கற நப்பாசை தான். சான்சே குடுக்க மாட்டான் போல இருக்கு! பக்கம் பக்கமாத் தள்ளிண்டே இருக்கேன் என்று சில நேரங்களில் நாவலில். இப்படித்தான் எனக்கும் பல வேளைகளில் நடக்கிறது.

எப்படி வடிகட்டி வாசிப்பது என்று நேரமிருக்கையில் பதில் கூறுங்கள்.

நன்றி

மோனிகா மாறன்.

*

அன்புள்ள மோனிகா,

இங்கே நீங்கள் செய்யும் ஒரு பிழையை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். இலக்கியம் என்பது அச்சிலும் இணையத்திலும் கண்கூடாகத் தெரிவதனால் புத்தகமாகத் தொட்டுப்பார்க்க முடிவதனால் ஒரு புறவயமான இயக்கம் என நினைக்கிறீர்கள். அப்படி அல்ல. இலக்கியத்தின் ஒரு பதிவு வடிவம் மட்டும்தான் அவை. இலக்கியம் எவ்வகையிலும் புறவயமானது அல்ல. அது முழுக்க முழுக்க அந்தரங்கமானது, தனிப்பட்டது, அகவயமானது. அதை புறவயமாக, அனைவருக்குமாக, எப்போதைக்குமாக வரையறை செய்யமுடியாது.

ஆகவே இலக்கியவாசிப்பு என்பது ஆசிரியனும் வாசகனும் அந்தரங்கமாக உரையாடிக்கொள்ளும் ஓர் இடத்தில் மட்டுமே நிகழ்கிறது. அதற்கு புறவயமான விதிகளை, இலக்கணங்களை, கொள்கைகளை நிரந்தரமாக உருவாக்கிக் கொள்ளமுடியாது. எனவே நல்ல இலக்கியம் என்பது இப்படி இருக்கும் என எவருமே வரையறை செய்யமுடியாது.

இலக்கியத்திற்கான எல்லா வரையறையும் அகவயமானதாகவே இருக்கும். ஒரு வாசகனிடம் மட்டுமே அவை அர்த்தம் கொள்ளும். உதாரணமாக, ஒரு நல்ல படைப்பில் சொல்மிகாத கூர்மை இருக்கும் என்று ஒரு வரையறையைச் சொல்வோம். சொல்மிகாத கூர்மை என்றால் என்ன என்பதை வாசகன் அல்லவா தீர்மானிக்கமுடியும்? ஒருவனுக்குச் சொல் மிகுந்துள்ளது என தோன்றும் படைப்பு இன்னொருவருக்கு கச்சிதமானதாகத் தோன்றும் அல்லவா? ஆகவே இலக்கியம் பற்றிய எந்தக்கூற்றும் வாசகனின் தன்னிலை சார்ந்த அர்த்தம் மட்டுமே அளிப்பதுதான்

ஆகவே இலக்கிய மதிப்பீடு, இலக்கியவகைப்பாடு என்பவை ஒருபோதும் அனைவருக்கும் பொதுவானவையாக இருக்கமுடியாது. அவற்றை எவ்வகையிலும் நிரூபிக்கமுடியாது. இந்தப் படைப்பு உயர்ந்தது என ஒரு விமர்சகன் சொல்கிறான் என்று கொள்வோம். அதை அவன் அந்தப்படைப்பை வாசித்து அதன் நுட்பங்களை தன்னைப் போலவே அறியும் ஒருவாசகனிடம் மட்டுமே சொல்ல முடியும். அவனிடம் மட்டுமே அவன் அப்படிச் சொல்வதற்கான தர்க்கங்களை முன்வைக்க முடியும்.

அந்தவாசகன் அப்படைப்பை வாசித்து அக்கருத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டான் என்றால் அந்த விமர்சகனின் கருத்தை ஏற்கவோ மறுக்கவோ முடியும். அந்நூலை வாசித்து உணரமுடியாத ஒருவாசகனிடம் அந்த விமர்சகன் உரையாடவே முடியாது. என்ன சொன்னாலும் புரியவைக்கமுடியாது.

ஆகவே எந்த இலக்கிய வாசகனும் இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்கமுடியுமா என பொதுவெளியில் கேட்கமாட்டான். இலக்கியத்தின் இயல்புகளாகச் சொல்லப்படும் அழகு, ஆழம், நுணுக்கம், தரம் எதையுமே பொதுமேடையில் வரையறை செய்ய முடியாது. அவற்றை சமானமான ரசனை கொண்ட ஒருவரிடம் மட்டுமே சொல்லமுடியும். அவை விளக்குதலாக நிகழ முடியாது, சுட்டிக்காட்டலாகவே நிகழமுடியும்.

*

இலக்கியத்தின் இந்த அந்தரங்கத்தன்மை மிகமிக அடிப்படையான விஷயம். ஆரம்பப்பாடம் இது. இதை ஏதோ புதுக்கண்டுபிடிப்பு போல புரிந்துகொண்டு பயில்முறைஇலக்கியவாதிகள் இலக்கியத்தில் தரம் என்ற ஒன்று இல்லை என்றும் ஒருவருக்கு தரமான எழுத்து என்பது இன்னொருவருக்கு தரமற்றதாகத் தெரியும் என்றும் உண்மைகளை எடுத்துவிட ஆரம்பிக்கிறார்கள். அப்படியே பாய்ந்துபோய் இலக்கியம் என்றே ஒன்று இல்லை என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். தொலைபேசி பெயர்ப்பட்டியல் கூட ஒருவருக்கு இலக்கியமாகத் தெரியலாமே என ஒரு மேதை ஒருமுறை சொன்னார்

இந்த அசட்டுத்தனத்திற்கு இருநூறாண்டுக் காலமாக இலக்கியவிமர்சகர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். அதன்பின்னரும் இந்தக் குரல் வந்துகொண்டே இருக்கும். இலக்கியத்தை பாமரர் தரப்பில் இருந்து எதிர்கொள்ளும் முதல் குரல் இது என நினைக்கிறேன்.

சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே தெரியும், எந்த ஒரு அறிவுத்துறையிலும் அப்படி எல்லாமே சமம்தான், எல்லாமே முக்கியம்தான் என ஒரு நிலை இருக்கமுடியுமா என்ன? தான் ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்ததை நோக்கி, மிகநுண்மையை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் மானுட இயல்பு. மேலும் மேலும் என்றே அது தாவுகிறது. மானுடர் ஈடுபடும் அத்தனை செயல்களிலும் அந்த மேன்மையாக்கமும் நுண்மையாக்கமும் நிகழ்ந்தாகவேண்டும்.

இலக்கியம் உட்பட அனைத்திலும் நாம் பேசிக்கொண்டிருப்பது அதைப்பற்றித்தான். எப்படியோ ஒட்டுமொத்த மானுடக்குலமும் இணைந்து அந்த முன்னகர்வை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இன்று, செய்தித்தொடர்புகள் மூலம் உலகம் ஒன்றாகிவிட்டிருக்கிறது. இன்று அது கண்கூடாகத்தெரிகிறது. ஆனால் வரலாற்றுக்காலம் முழுக்க இப்படித்தான் மானுடக்குலம் ஒற்றைப் பெருந்திரளாக முன்னகர்ந்திருக்கிறது. கலை, அறிவியல், தத்துவம் அனைத்திலும். அதை பெருநூல்களை வாசித்தாலே அறியலாம். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பரவலாக ஆனதை நோக்கினாலே புரிந்துகொள்ளலாம்

ஆகவே தரம் என்பது என்ன என்றால் அந்த ஒட்டுமொத்த முன்னகர்வில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்னும் அளவீடுதான். அந்த ஒட்டுமொத்த உரையாடலில் உங்கள் குரலின் இடம் என்ன என்னும் கேள்விதான். அது என்றுமுள்ளது.

அது முதல்தளத்தில் தனிப்பட்ட ரசனை சார்ந்தது, அகவயமானது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அப்படி அல்ல. அதற்கு கண்கூடான ஒரு புறவயத்தன்மை உண்டு. ஒருவருக்கு புகழேந்திப்புலவர் கம்பனை விட பிடித்தமானவராக இருக்கலாம். ஆனால் புகழேந்திப்புலவர் கம்பனுக்கு சமானமானவர் அல்ல என்று நிரூபிக்கவேண்டியதே இல்லை.

இது எப்படி நிகழ்கிறது? இலக்கியத்தின் ரசனை தனிப்பட்ட தளத்தில் நிகழ்ந்தாலும் ஒரு பொதுவான சமூக மதிப்பீடு திரண்டு வந்தபடியே இருக்கிறது. அது ஒரு பண்பாட்டுத் தளத்தில் நிகழும் தொடர்ச்சியான உரையாடல் வழியாக நிகழ்கிறது. திருவள்ளுவரும் கம்பரும் மேலே வர ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் கீழே செல்கிறார்கள். இதுதான் இலக்கிய மதிப்பீட்டின் உருவாக்கம். இது நிகழாத காலகட்டமே இலக்கியத்தில் இருக்கமுடியாது. இது நின்றுவிட்டால் இலக்கியமே அழிந்துவிடும்.

மணிக்கொடி காலகட்டத்தில் எத்தனைபேர் எழுதியிருப்பார்கள். ஆனால் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தி மட்டும்தான் அக்காலகட்டத்தின் முதன்மைப் படைப்பாளிகள். அந்தத் தெரிவு எப்படி நிகழ்ந்தது? அதை ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்ற விமர்சகர்கள் முன்வைத்தனர். விவாதம் மூலம் அது நிறுவப்பட்டது. க.நா.சுப்ரமணியத்தால் உறுதிசெய்யப்பட்டது.

அப்போதும் அரைவேக்காடுகள் இவர்கள் எப்படி இதையெல்லாம் சொல்லலாம்?’ என்றும் இலக்கியம் என்றால் இது என எப்படிச் சொல்லமுடியும்? அவரவர்க்கு ஒன்று பிடித்திருக்கிறதுஎன்றும் இலக்கியம் என்றால் என்ன என்று புறவயமான வரையறை எங்கே?’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

மானுடம் தழுவிய அளவில் நிகழும் அந்த உரையாடல்-விவாதம்-மதிப்பீடுதான் ஷேக்ஸ்பியரை மானுடத்திற்குப் பொதுவான கவிஞராக கொண்டுவந்து நிறுத்துகிறது. தல்ஸ்தோயை கொண்டுவந்து நிறுத்துகிறது. இலக்கிய விவாதக்களத்தைப் பார்த்தோம் என்றால் இப்போது துஃபு போன்ற சீனக்கவிஞர்கள் அந்த இடம் நோக்கி வருவதைக் காணலாம்.

இலக்கியத்தில் மட்டும் அல்ல பெரும்பாலும் அனைத்து அறிவுத்துறைகளிலும் வெகுஜனப் பங்களிப்பாலோ அல்லது பிற அளவீடுகளாலோ மதிப்பீடுகள் உருவாக்கப்படுவதில்லை. அத்துறையின் முக்கியமான, மையப்போக்கில் செயல்படக்கூடியவர்களாலேயே அவை உருவாக்கப்படுகின்றன. அவை தீர்ப்பாகச் சொல்லப்படுவதில்லை. விவாதக்கருத்தாக முன்வைக்கப்படுகின்றன. விவாத முடிவில் வகுக்கப்படுகின்றன. peer review என அதைச் சொல்கிறார்கள்.

இந்த மதிப்பீட்டுப்போக்கை இலக்கியத்தை உண்மையிலேயே வாசிக்கும் எவரும், இலக்கிய விமர்சனத்துடன் உரையாடும் எவரும் மிகமிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். வாசிக்காதவர், ரசனையற்றவர் என்னதான் சொன்னாலும் புரிந்துகொள்ளமுடியாது.

அன்பு, காதல், இலட்சியவாதம், தியாகம், அறம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றவற்றை நீங்கள் எப்படி அறிகிறிர்கள்? அவற்றை எவரேனும் புறவயமாக வகுத்துச் சொல்லிவிடமுடியுமா? அவை வகுத்துரைக்கப்படவில்லை என்பதனால் அவை இல்லை என ஆகிவிடுமா? அவை ஆளுக்கொரு வகையில் வெளிப்படுகின்றன, புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதனால் எல்லாமே அன்புதான் என்று ஆகிவிடுமா? அவை எந்த அளவுக்கு அந்தரங்கமானவையோ அந்த அளவுக்கு மானுடப் பொதுவானவையாகவும் உள்ளன அல்லவா?

*

இலக்கிய மதிப்பீடுகளை எப்படி அடைவது? ஒன்று வாசிப்பது, இன்னொன்று மதிப்பீடுகளை அறிந்துகொண்டு அவற்றை பரிசீலிப்பது. இரண்டுமே சேர்ந்து நிகழும்போது இலக்கியமதிப்பீடு எளிதில் உருவாகிவிடும். புதுமைப்பித்தனை வாசியுங்கள். அவரைப்பற்றி ஆதரித்து க.நா.சுவும், சுந்தர ராமசாமியும், நானும் எதிர் விமரிசனம் செய்து கைலாசபதியும், தி.க.சிவசங்கரனும், அ.மார்க்ஸும் எழுதியிருப்பதை வாசியுங்கள். உங்கள் கருத்தை அந்த விமர்சனகளத்தில் மானசீகமாக வையுங்கள். உங்கள் மதிப்பீடுகள் உருவாகிவிடும்

இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கி நிலைநிறுத்துபவை செவ்விலக்கியமும் பேரிலக்கியமும்தான். ஒரு மொழியில். ஒரு பண்பாட்டுச்சூழலில் அதற்குரிய செவ்விலக்கியமும் பேரிலக்கியமும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு மொழியின் பிற்காலத்தைய இலக்கியங்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைபவை செவ்விலக்கியங்கள். அம்மொழியின் உச்சப்படைப்புகளாக அறியப்படுபவை பேரிலக்கியங்கள். பொதுவாக கிளாஸிக் என்கிறோம்

அவை மேலே சொன்ன கூட்டுவாசிப்பு, கூட்டுவிவாதம் மூலம் உருவாகி வந்த மதிப்பீடுகளின் விளைவாகவே முன்னிலைப்படுத்தப்பட்டன.. ஐம்பெருங்காப்பியங்கள் என்பவை அன்றிருந்த பலநூறு காப்பியங்களில் இருந்து அறிஞர்களின் கூட்டுவிவாதம் மூலம் காலப்போக்கில் முன்னிறுத்தப்பட்டவை. வள்ளுவன்போல் கம்பனைப்போல் இளங்கோவைப்போல் என்று ஒருவன் சொல்கிறானே அதுதான் இலக்கிய மதிப்பீடு. பேரிலக்கியங்கள்  தங்கள் இருப்பாலேயே இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கி நிலைநாட்டுகின்றன. அவற்றை வாசிப்பதே நம் உள்ளத்தில் அளவுகோல்களை உருவாக்கிவிடும்

நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றின் பேரிலக்கியங்கள் உலகமொழிகள் அனைத்திலும் உள்ளவை, உலகளாவியவை தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் என பேரிலக்கியவாதிகளின் ஒரு நீண்ட வரிசை உள்ளது. அவர்களை வாசிப்பவர்கள் தங்கள் ரசனையாலேயே இலக்கிய அளவீடுகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

*

கடைசியாக, வந்து குவியும் இலக்கிய நூல்களில் இருந்து தேர்ந்து வாசிப்பதெப்படி என்னும் வினா. யோசித்துப்பாருங்கள், இது எந்தப்பொருளுக்குத்தான் இன்று இல்லை? எல்லா பொருளையும் நாம் இப்படி பல்லாயிரத்தில் ஒன்று என்றுதானே தெரிவு செய்கிறோம்? எப்படிச் செய்கிறோம்? பிற நுகர்வோர் கருத்தைக் கேட்கிறோம். பொதுவான மதிப்பீடுகளை அறிந்துகொள்கிறொம். சாம்பிள்பார்க்கிறோம். அப்படியும் கொஞ்சம் ஏமாந்துபோகிறோம்

அதேதான் இலக்கியத்திற்கும் வழி. முதலில் உங்கள் ரசனைக்குரிய நூல்கள் எவை என நீங்களே ஓரளவு புரிந்துகொள்ளுங்கள். சூழலில் நம்பகமான கருத்துக்களைச் சொல்லும் விமர்சகர்களை கவனியுங்கள். ஒரு புனைவைக்குறித்து உருவாகி வரும் மதிப்பீடுகளை கவனியுங்கள். அதன்பின் வாசித்துப் பாருங்கள். எந்த நூலுக்கும் அதன் ஐந்தில் ஒருபங்கு சலுகை அளிக்கலாம். அதற்குள் அது உங்களைக் கவரும் அம்சங்கள் எதையேனும் காட்டியிருக்கும். இல்லை என்றால் அது உங்கள் நூல் அல்ல. அல்லது நீங்கள் அந்நூலுக்குத் தயாராகவில்லை.

அறிவுத்தேடலிலும் சுவைதேடலிலும் அந்தத் தேடல் என்பது மிக முக்கியமானது. அதுவே உண்மையில் சுவாரசியமானது. அதில் கண்டிப்பாக ஏமாற்றங்கள் உண்டு. அவையும் அறிதலே. குறைந்தபட்சம் அவை நமக்கு ஏன் பிடிக்கவில்லை என்றாவது யோசிக்கலாமே

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5

$
0
0

[ 8 ]

அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார்.

“வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்தியின் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவநெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி எழுந்து எருக்கமலர் தொடுத்துச்சூட்டி கள்ளும் ஊனும் படைத்து கிராததேவனை வழிபட்டு வெண்சாம்பல் பூசி புதிய கப்பரை ஏந்தி வடக்கே உயர்ந்தெழுந்த பனிமலைகளை நோக்கிச் செல்வது அறுவருக்கும் தொல்மரபாக அறியப்பட்டுள்ளது.”

“நான் அங்கிருந்து மலையிறங்கி கங்கைப்பெருக்கினூடாக வந்தேன். அறுவகை சமயங்களுடனும் சொற்போரிட்டேன். பன்னிரு நாடுகளில் பிச்சையெடுத்து உண்டேன். என் துணையோருடன் காசிப்பெருநகர் அடைந்தேன். அங்கு இரு பெரும் சுடலைத்துறைகளில் இரவும் பகலும் எரிதாழாது சிதைகள் எரிகின்றன. அத்தழல்களுக்கு நடுவே கையில் முப்புரிவேலும் உடுக்கையும் கொண்டு வெற்றுடல் கோலமாக காலபைரவன் நின்றிருக்கும் ஆலயம் உள்ளது. அவன் கையிலிருந்து உதிர்ந்த கப்பரை குருதி உலராத பலிபீடமாக ஆலய முகப்பில் அமைந்துள்ளது. நாளும் பல்லாயிரவர் பலியும் படையலும் கொண்டு அங்கே வருகின்றனர். அவ்வாலயத்தின் முகப்பில் கட்டப்பட்டுள்ள நுழைவுமணி ஓய்ந்து ஒலியடங்கும் கணமே இல்லை.”

“ஆலயத்திற்கு தென்மேற்கே படித்துறையருகில் பார்ப்புக்கொலைப் பேய் தொழுத கையுடன் மூதாட்டி வடிவில் அமர்ந்திருக்கிறாள். கங்கையில் நீராடுவதற்கு முன் அவள் முன்னிலையில் பழைய ஆடைகளை நீக்குவது மரபு. கொண்ட நோய்களையும் பீடைகளையும் அங்கு ஒழித்து புதிதாகப் பிறந்தெழுந்து காலவடிவனை வணங்குகின்றனர். இறந்தோர் ஆடைகளும் அங்கு குவிக்கப்பட்டு எரியூட்டப்படுகின்றன. அக்கரி படிந்த அவள் முகம் சென்றது எதையோ எண்ணியதுபோல தன்னுள் தொலைந்து தோளுக்குள் புதைந்திருக்கும்.”

“காசியிலிருந்து கிளம்பி நான் தென்றிசை செல்கிறேன். தென்னகத்தில் ஆதிசிவமென அமைந்த மலை என மாகேந்திரம் சொல்லப்படுகிறது. நஞ்சு சூடிய மாநாகர்களால் ஆளப்படுவது அது. அவர்களால் ஏற்கப்படுபவர்கள் மட்டுமே அதில் ஏறி அம்மலையின் உச்சியில் குவைக்கல் வடிவில் குடிகொள்ளும் சிவத்தை தொட்டுவணங்கமுடியும். அடுத்த சொல் கேட்பதற்கு முன்னர் சென்று அதை வணங்கி மீளும்படி என் ஆசிரியரின் ஆணை. அதைத் தலைக்கொண்டு நான் கிளம்பினேன்” என்றார்.

வைசம்பாயனன் அவர் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அவை நகங்கள் மண்செறிந்து விரல்கள் காய்ப்பேறி எலும்புக்கணுக்கொண்டு பாலைநிலத்து முள்மரங்களின் வேர்த்தூர் போலிருந்தன. அவை செல்லும் தொலைவை அவன் எண்ணிநோக்கினான். உடல் சரியும் கணம் வரை அவை சென்றுகொண்டுதான் இருக்கும்போலும். உடல்சரிந்த பின்னரும் உள்ளம் தான் கொண்ட விசை தீராது மேலும் செல்லும். அங்கே காத்திருப்பது எது?

அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல அவர் உரக்க நகைத்து “எது எது என்று தேடிச்செல்பவன் இல்லை இல்லை என்று மறுத்துமறுத்துச் செல்கிறான். அவன் அறியும் பேரிருள் இப்புடவியை ஏழுமுறை மூடியிருக்கிறது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்” என்றார். அவன் உள்ளம் நடுங்கத் தொடங்கியது. கைகளை மார்புடன் நன்கு கட்டி இறுக்கிக்கொண்டான்.

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”

மலைப்பாறையில் கால்களை நீட்டிக்கொண்டு அவர் படுத்தார். உடலை ஒவ்வொரு உறுப்பாக எளிதாக்கி பரப்பிக்கொண்டார். விண்மீன்கள் செறிந்த வானை நோக்கி “சிவம்யாம்” என்றார். “ஆம், சிவமேயாம்” என்று மீண்டும் சொன்னார். அவருடைய விழிகள் மூடிக்கொள்வதை அவன் கண்டான். அருகே அவர் கால்களைப் பற்றி அமுக்கியபடி அமர்ந்திருந்தான். அவர் உறுப்புகள் துயிலில் விடுபட்டுச் சரிவதை காணமுடிந்தது.

“ஆசிரியரே…” என அவன் மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்க!” என்றார் அவர். “சொல்லுங்கள், நான் செல்லும் இடம் என்ன?” அவர் விழிமூடியபடியே புன்னகைத்தார். “நீ வேதம் கற்றுக் கடந்து காவியத்திற்குள் நுழைந்துள்ளாய். காவியம் கடந்து எதில் நுழைவாய்?” என்றார். அவன் அவர் சொற்களுக்காக காத்திருந்தான். “அக்காவியத்தில் நீ தேடுவது என்ன? பொய்யெனும் இனிப்பையா மெய்யெனும் கசப்பையா?” அவன் சீற்றத்துடன் “உண்மையை. அதை மட்டுமே. பிறிதெதையும் இல்லை” என்றான். அவர் உடல் குலுங்க நகைத்தார். “அதைத் தேடிச்சென்ற உன் மூதாதையொருவன் சொன்னான், இல்லை இது இல்லை என. பலமரம் கண்ட தச்சன் அவன். ஒருமரமும் கொள்ளாமல் மீண்டான். நேதி! நேதி! நேதி!”

அடக்கமுடியாத சினம் எழுந்து அவன் உடலை பதறச்செய்தது. அவன் கைகள் வழியாகவே அதை உணர்ந்தவர்போல அவர் மேலும் நகைத்து “எவர் மேல் சினம்? நீ செய்யப்போவது என்ன? யோகியென இங்கிருப்போர் விலக்கி விலக்கி அறிவதை நீ தொகுத்துத் தொகுத்து அறியப்போகிறாய். வேறென்ன?” என்றார். அவர் மீண்டும் நகைத்து “ஒரே இருளை அறிய ஓராயிரம் வழிகள். சிவநடனம். சிவமாயை. சிவப்பேதைமை. அறிவென்றும் அறியாமை என்றும் ஆகி நின்றாடல். அனலொரு கையில் புனலொரு கையிலென பொன்றாப் பேராடல். சிவமேயாம்! சிவமேயாம்!” என்றார். அவன் சினத்துடன் “நான் அறியப்போவது இருளை மட்டும் அல்ல. இவ்வாழ்க்கையை. இதிலுள்ள அனைத்தையும்” என்றான். “அனைத்தையும் ஒன்றெனக் கலந்தால் இருளன்றி வேறேது வரும்? மேலே அவ்வீண்மீன்களை தன் மடியில் பரப்பி அமர்ந்திருக்கும் இருள்.”

அவர் துயில்வதுவரை அவன் நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து விண்மீன்களை நோக்கினான். அவை இருண்ட சதுப்புக்குள் திகைத்துத்துடித்து புதைந்துகொண்டிருந்தன. திசைதேர் கலையை நன்றாகப் பயின்றிருந்தும்கூட அவனால் விண்மீன்களை கணிக்க முடியவில்லை. அறியாமொழியின் எழுத்துக்கள் என அவை வானில் சிதறிக்கிடந்தன. மீண்டும் மீண்டும் அந்த அலகின்மையை அள்ளமுயன்று தோற்றுச் சலித்தபின் கால்தூக்கி வைத்து திரும்பி காட்டுக்குள் புகுந்தான்.

சீவிடுகளின் ஒலியால் தொகுக்கப்பட்ட இருள்குவைகளும் நிழலுருக்களும் காற்றசைவுகளும் சருகொலிகளும் காலடியோசையும் எதிரொலியுமாக சூழ்ந்திருந்தது தண்டகப்பெருங்காடு. வடபுலக்காடுகள் போல இரவில் அது குளிர்ந்து விரைத்திருக்கவில்லை. அடுமனைக்கூடம் போல மூச்சடைக்கவைக்கும் நீராவி நிறைந்திருந்தது காற்றில். ஆனால் உடல்தொட்ட இலைப்பரப்புகள் குளிர்ந்த ஈரம் கொண்டிருந்தன. எங்கோ ஏதோ உயிர்கள் ஒலிகளென உருமாறி அடர்ந்திருந்தன. இருளே குழைந்து அடிமரங்களாக கிளைகளாக இலைகளாக மாறி உருவென்றும் அருவென்றுமாகி சூழ்ந்திருந்தது. அவன் நடந்தபோது அசைவில் கலைந்து எழுந்தன கொசுப்படைகள். சற்றுநேரத்தில் அவனை மென்துகில்படலமெனச் சூழ்ந்து அவை ரீங்கரித்தன. சேற்றில் பதிந்த காலடியில் இருந்து சிறு தவளைகள் எழுந்து பறந்தன.

அவ்விருளில் நெடுந்தொலைவு செல்லமுடியாதென்று தோன்றியது. எங்காவது மரக்கிளையிலோ பாறையிலோ அமர்ந்து துயில்வதொன்றே வழி. ஆனால் அவன் மிகக்குறைந்த தொலைவே விலகி வந்திருந்தான். விழித்தெழுந்ததும் அவர் இயல்பாக அவனை கண்டடைந்துவிடமுடியும். சேற்றில் அவன் காலடித்தடம் பதிந்திருக்கும். அதைக் கண்டு அவன் விலகிச்செல்ல விழைகிறான் என அவர் புரிந்துகொள்ளக்கூடும். இல்லை, வேறெதன்பொருட்டோ சென்றிருக்கிறான் என எண்ணினால் தொடர்ந்து வருவார். மீண்டும் அவர் முகத்தை நோக்க அவனால் இயலாது.

ஆனால் அவர் எதற்கும் தயங்குபவர் அல்ல. தன் மூவேலால் அவன் தலையை அறைந்து பிளக்கலாம். அதன் கூர்முனையை அவன் நெஞ்சில் வைத்து வா என்னுடன் என ஆணையிடலாம். அல்லது அறியாதவர் போல கடந்தும் செல்லலாம். ஆனால் மீண்டும் அவர் அவன் வாழ்க்கையில் வரவேண்டியதில்லை. அவன் வாழ்ந்த உலகம் வேறு. அவன் அங்கு மீண்டு செல்லவிரும்பினான். பொருள் கொண்ட சொற்களின் உலகம். பொருள்கோடலுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் முன்னரே தன்னுடன் வைத்துக்கொண்ட சொற்களின் உலகம்.

சொற்களின் உலகம்போல உகந்தது எது? சொற்களென வந்தவை அனைத்தும் பல்லாயிரம் முறை முன்னோரால் கையாளப்பட்டவை. அவர்களின் கைவிழுக்கும் மணமும் படிந்தவை. அங்கு புதியதென ஏதுமில்லை. புதியவை என்பவை பழையவற்றின் உடைமாற்றம் மட்டுமே. ஆனால் இக்காடு நேற்று முளைத்தெழுந்தது. இதோ என்னைச் சூழ்ந்திருக்கும் இலைகள் இதுவரை மானுடனைப் பாராதவை. இக்கொசுக்கள் முதல்முறையாக அருந்துகின்றன மானுடக்குருதி. மறுகணம் இவை எவையென்று நான் அறியவே முடியாது.

சொல்கோத்து சொல்கோட்டி சொல்சிதைத்து சொல்மறைத்து மானுடன் உருவாக்கிக்கொள்வதுதான் என்ன? அறியமுடியாமையின் பெருவெளிக்குள் அறியப்படும் ஒரு சிற்றுலகைத்தானா? அறியப்படாத நூல்கள் உண்டா? இருந்தாலும் அவை அறியத்தக்கவையே என்னும் வாய்ப்பை கொண்டுள்ளவை. எங்கோ எவராலும் ஒருமுறையேனும் வாசிக்கப்படாத நூல் ஒன்று இருக்கலாகுமா? அப்போதும் அது வாசிப்பதற்கென்றே எழுதப்பட்டதாகையால் வாசிக்கத் தக்கதே.

எல்லா சொல்லும் பிறசொல் குறித்ததே. எல்லா சொல்லும் பொருள் குறிப்பது அவ்வாறே. சொல் என்பது ஓர் ஓடை. சொற்றொடர்களின் ஓடை. நூல்களின் ஓடை. அறிதலின் ஓடை. ஒன்று பிறிதை ஆக்கி ஒன்று பிறிதில் ஊறி ஒன்றென்று ஓடும் பெருக்கு. இங்குள்ளவை ஒவ்வொன்றும் தனித்தவை. இந்த இலை அதை அறியாது. இக்கொசு பிறிதை எண்ணாது. இவற்றைக் கோத்திருக்கும் அறியமுடியாமை என்னும் பெருக்கு இருண்டு மேலும் இருண்டு குளிர்ந்து மேலும் குளிர்ந்து அடங்கி மேலும் அடங்கி தன்னுள் தானை முடிவிலாது சுருட்டிக்கொண்டு சூழ்ந்திருக்கையில் இவை என்ன செய்தாலும் எஞ்சுவது பொருளின்மையே.

அவன் நாகத்தின் ஒலியைக் கேட்டான். அதைக் கேட்பதற்கு ஒரு கணம் முன்னரே அவன் உட்புலன் அதை அறிந்து உடல் மயிர்ப்பு கொண்டது. சிலகணங்கள் எங்கிருக்கிறோம் என்பதையே அவன் உணரவில்லை. பின்பு கைகால்கள் அனைத்துத் திசைகளிலும் உதறிக்கொள்ள நின்ற இடத்திலேயே உடல் ததும்பினான். அதன் பின்னரே அது யானை என்றறிந்தான். அவன் முன் பிறைநிலவின் நீர்ப்பாவை என ஒரு வெண்வளைவாக ஒற்றைத் தந்தம் மட்டும் தெரிந்தது. மறுகணம் இருளில் மின்னும் நீர்த்துளி என கண்கள். விழிகளால் அன்றி அச்சத்தால் அதன் நீண்டு தரைதொட்டுத் துழாவிய துதிக்கையையும் கண்டுவிட்டான்.

ஆழுள்ளத்தில் கரந்த எண்ணமொன்று அசைவதுபோல அவன் மிகமெல்ல தன் வலக்காலைத் தூக்கி பின்னால் வைத்தான். அடுத்த காலை எடுக்கையில் தன் உடலால் அசைக்கப்பட்ட காற்றின் ஒலியையே அவன் கேட்பதுபோல் உணர்ந்தான். நிறுத்தி நெஞ்சில் செறிக்கப்பட்ட மூச்சு எடைகொண்டு குளிர்நீரென கற்பாறையென ஆயிற்று. மீண்டுமொரு கால் எடுத்துவைத்தபோது விலகிவிடமுடியுமென நம்பிக்கை எழுந்தது. மீண்டுமொரு காலில் விலகிவிட்டோமென்றே எண்ணம் பிறந்தது. மீண்டுமொரு கால் வைத்தபோது விழிகள் கூர்மைகொண்டன. யானையின் செவிகள் இருளை துழாவிக்கொண்டிருந்தன. செவிகளிலும் மத்தகத்திலும் செம்பூக்கள் இல்லை. முற்றுக்கரியுருவம். அதன் உடல் இருள்வெளி கனிந்து திரண்ட சொட்டு என நின்று ததும்பியது.

மீண்டும் இரு அடிகள் எடுத்துவைத்து அப்படியே பின்னால் பாய்ந்து ஓடத்தொடங்கலாமா என அவன் எண்ணினான். யானை துரத்திவருமென்றால் புதர்களில் ஓடுவது அறிவுடைமை அல்ல. பெருமரத்தில் தொற்றி ஏறவேண்டும். அல்லது உருள்பாறை ஒன்றில். அல்லது செங்குத்துப்பள்ளத்தில். அல்லது அதன் முகக்கை எட்டாத மேட்டில். ஒரு கணத்திற்குள் அவன் உள்ளம் அக்காட்டில் அவன் கண்ட அனைத்தையும் தொட்டு தேடிச்சென்று பெரும்பலா மரம் ஒன்றை கண்டுகொண்டது. அதன் கீழ்க்கணு அவன் கையெட்டும் உயரத்தில்தான் இருந்தது. முதற்கிளை யானைமத்தகத்திற்கும் மேலே. இரண்டாம் கிளை அதன் கைமூக்கின் நுனிக்கும் மேலே. அதுதான்.

உடல் ஓடத்தொடங்கி கால்கிளம்புவதற்கு முந்தைய கணத்தில் அவன் அடுத்த சீறலை கேட்டான். விழிதிருப்பி தனக்குப் பின்னால் நின்றிருந்த கரிய யானையை கண்டான். மறுகணமே வலப்பக்கமும் இடப்பக்கமும் யானைகளை கண்டுவிட்டான். மேலுமிரண்டு. மேலுமிரண்டு. எட்டு. எட்டுத்திசையானைகள். எட்டு இருள்மத்தகங்கள். எழுந்த பதினாறு வெண்தந்தங்கள். ஓசையின்றி பெருகி அவை சூழ்ந்தபின்னரே அவன் முதல் யானையை கண்டிருக்கிறான். எண்பெருங்கரியின் நடுநுண்புள்ளி. தன் கால்கள் திகிரியென ஆகி உடல்சுழல்கின்றதா? சூழ்ந்த இருள் சுழல்கின்றதா? எட்டுத்திசையும் ஒற்றைப்பெருவட்டமென்றாகின்றனவா?

அவன் விழித்துக்கொண்டபோது விழிகளுக்குள் காலையொளி புகுந்து கூசவைத்தது. நிழலாட்டத்தை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த பின்னர்தான் யானைகளை நினைவுகூர்ந்தான். அவன் மேல் குனிந்தபடி பிச்சாண்டவர் நின்றிருந்தார். “உயிருடன் இருக்கிறாய்” என்று அவர் சொன்னார். “தொலைவில் உன்னை பார்த்தபோதே தெரிந்துகொண்டேன்.” அவிழ்ந்த தழையாடை அப்பால் கிடந்தது. அவன் உருண்டு அதை கைநீட்டி எடுத்து இடையில் சுற்றிக்கொண்டு எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான். திகைப்புடன் “யானைகள்!” என்றான்.

“என்ன?” என்றார் அவர். “எட்டு யானைகள்! அவை என்னை சூழ்ந்துகொண்டன.” அவர் புன்னகையுடன் “வா” என்று அழைத்துச்சென்றார். அவன் இரவில் செறிந்த காடென நினைத்த இடம் சேறுமண்டிய புதர்ப்பரப்பாக இருந்தது. “இதோ நீ நின்றிருந்த இடம்” என அவர் காட்டிய இடத்தில் அவன் காலடித்தடம் இருந்தது. அவர் முன்னால் சென்று “இங்கு களிறு ஒன்று நின்றிருக்கிறது. பிண்டம் கிடக்கிறது. காலடிகள் உள்ளன. தழை ஒடித்து தின்றிருக்கிறது” என்றார். அவன் ஓடிச்சென்று அந்தத் தடங்களை பார்த்தான். “நான் எட்டு யானைகளை பார்த்தேன்… என் விழிகளால் பார்த்தேன்.” அவர் புன்னகையுடன் “ஆம், அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றார்.

“நான் பார்த்தேன்… உண்மையாகவே பார்த்தேன்” என்று கூவியபடி அவன் பாய்ந்து புதர்களுக்குள் ஓடினான். அவன் விழுந்து கிடந்த இடத்தை புதர்கள் வழியாக சுற்றிவந்தான். யானைக்காலடிகளை காணாமல் மீண்டும் மீண்டும் விழிதுழாவி சலித்தான். திரும்பி வந்து மூச்சிரைக்க நின்று “நான் பார்த்தேன்!” என்றான். அவர் “பார்த்திருக்கக்கூடும் என்றுதானே நானும் சொன்னேன்” என்றபின் கனிவுடன் புன்னகைத்து அவன் தோளைத்தொட்டு “வருக!” என்றார்.

[ 9 ]

சௌகந்திகத்திற்கு வந்த கிராதன் அங்கிருந்து சென்றபின்னரும் அவன் சூர் அங்கே எஞ்சியிருந்தது. தேவதாரு மரங்களின் காற்று சுழன்று வீசும் ஒரு கணத்தில் அதை மூக்கு உணர்ந்தது. வேள்விப்புகையின் இன்மணத்தின் உள்ளே அது மறைந்திருந்தது. முனிவர்கள் காமத்தின் ஆழ்தருணத்தில் தங்கள் மனைவியரின் உடலில் அதை உணர்ந்தனர். அதை அறிந்ததுமே அனைத்தும் மறைந்து அவன் நினைவு மட்டும் எழுந்து கண்முன் நின்றது. மெய்ப்பு கொண்டு எழுந்து திசைகளை நோக்கி பதைத்தனர். “இங்குள்ள அனைத்திலும் அவன் எப்படி ஊடுருவ முடியும்?” என்றார் கனகர். “அத்தனை வேள்விகளும் மகாருத்ரம் ஆனது எப்படி? அனைத்து வேதச்சொற்களும் ருத்ரமாக ஒலிப்பது எப்படி?”

“நாம் காட்டாளர்கள் அல்ல” என்று சூத்ரகர் சொன்னார். “காட்டின் வேர்களை உண்கின்றன பன்றிகள். தண்டை உண்கின்றன யானைகள். இலைகளை மான்கள். கனிகளை குரங்குகள். நாம் மலரில் ஊறிய தேனை உண்பவர்கள். ஆம், காட்டின் உப்பும் சூரும் கொண்டதே அதுவும். அதுவே காட்டின் சாரம். தோழரே, வண்ணத்துப்பூச்சிகளே காட்டை அறிந்தவை. அவற்றின் சிறகிலேறிப் பறக்கிறது காடு. நாம் வேதநுண்சொல்லை மட்டுமே அறியவேண்டியவர்கள். இந்தக் கொடுஞ்சூரால் அதை நாம் இழக்கிறோம்.” குருநிலையின் எட்டு முதன்மை முனிவர்கள் தங்களுக்குள் ஒன்றாகி அதைப்பற்றி பேசிக்கொண்டனர். பேசப்பேச சினமும் துயரும் கொண்டு ஒன்றுதிரண்டனர்.

அவர்கள் அதை அத்ரியிடம் சொன்னார்கள். அவர் விழிசொக்கும் பெரும்போதையிலென இருந்தார். “ஆம், நானும் அறிகிறேன் அந்த மணத்தை. கருக்குழந்தையின் குருதி போல, புதிய கிழங்கில் மண் போல, மழைநீரில் முகில்போல அது மணக்கிறது. அதன் ஊர்திகளே இவையனைத்தும்” என்றார். அவர்கள் சோர்ந்த முகத்துடன் எழுந்தனர். “இவரிடம் சொல்லிப்பயனில்லை. தன்னை இழந்துவிட்டார்” என்றார் கருணர். “அவர் அறிந்த ஒன்றை நாம் அறியவில்லை என்று பொருளா இதற்கு?” என்றார் கனகர். “தன்னை இழந்தபின் அறிந்தாலென்ன அறியாவிட்டாலென்ன?” என்றார் கர்த்தமர்.

“வந்தவன் யார்?” என்றார் கனகர். “நாம் அவனை நேரில் கண்டோம். இரந்துண்ணும் காட்டாளன். அவனிடம் காடுகள் தங்கள் இருளுக்குள் தேக்கிவைத்துள்ள மாயம் ஒன்றிருந்தது. சற்றுநேரம் நம் கண்களைக் கட்ட அவனால் முடிந்தது. பிறிதென்ன?” சூத்ரகர் “தன் காட்டுத்தெய்வத்தை நம் ஆசிரியரின் நெஞ்சில் நிறுத்திவிட்டுச் சென்றான். இதோ நம் குருநிலை வாயிலில் கல்லுருவாக நின்று பூசெய்கை கொள்கிறது அது” என்றார். “அவன் நம் மீது ஏவப்பட்டவன், ஐயமே இல்லை” என்றார் அஸ்வகர்.

“சூழ்ந்திருக்கிறது காடு. நோயும் கொலையும் குடிகொள்ளும் வன்னிலம் அது. அதை விலக்கியே இவ்வேலியை நம் குருநிலைக்குச் சுற்றிலும் அமைத்தனர் முன்னோர். அந்த வேலியை நாமே திறந்தோம். அவனை உள்ளே விட்டதே பெரும்பிழை” என்றார் கனகர். “அவன் இரவலன்” என்றார் சூத்ரகர். “ஆம், ஆனால் காட்டாளர் நம் எதிரிகள். இரவலராகவும் இங்கொரு வேதமறிந்த அந்தணன் மட்டுமே உட்புக முடியும் என்று நெறியிருந்தது அல்லவா? அதை எப்போது மீறினோம்?” அவர்கள் அமைதியடைந்தனர். “என்றோ ஒரு இடத்தில் நாம் நம்மை நம் முன்னோரைவிடப் பெரியவர்களாக எண்ணிக்கொண்டோமா? அதன் விளைவைத்தான் சுமக்கிறோமா?”

“ஆயிரம் ஆண்டுகாலம் வேதச்சொல் கேட்டு தூயமணம் கொண்டு நின்றிருந்த தேவதாருக்களில் மலநாற்றம் கலந்துவிட்டிருக்கிறது. வேதச்சொல் கொண்டு கூவிய பசுக்களின் அகிடுகளில் குருதிச்சுவை கலந்த பால் சுரக்கிறது” என்றார் கனகர். “நாம் நம்மை இழந்துவிட்டோம். இந்தக் காட்டாளரின் கல்தெய்வத்திற்குப் பூசைசெய்யவா தேவதாருக்கள் மணம் கொள்கின்றன? இதன் மேல் ஊற்றவா நம் பசுக்கள் அமுதூறுகின்றன? இதை வழுத்தவா வேதச்சொல் எடுக்கிறோம்?”

நாளுக்குநாள் அவர்களின் அச்சமும் விலக்கமும் கூடிவந்தன. முதலில் மாறிமாறி அதைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொல்தேய்ந்து அமைதியடைந்தார்கள். சொல்லப்படாதபோது அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அது பேருருக்கொண்டு வளர்ந்தது. அதை எதிர்கொண்டு நோக்கவே அவர்கள் அஞ்சினர். எனவே அதன்மேல் எண்ணங்களையும் செயல்களையும் அள்ளிப்போட்டு மூடி அழுத்தினர். உள்ளூறி வளர்ந்து அவர்களின் குருதியில் கலந்தது. அவர்களின் விரல்நுனிகளில் துடித்தது. அவர்களின் காலடிச்சுவடுகளில் பதிந்துகிடந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் பிறர் காலடிகளை உடனே அடையாளம் கண்டுகொண்டனர்.

ஒருநாள் தாருகக்காட்டுக்கு கூன்விழுந்து ஒடுங்கிய சிற்றுடலும் வெண்ணிற விழிகளும் உடைந்து பரவிய கரிய பற்களும் கொண்ட வைதிகர் ஒருவர் தன் இரு மாணவர்களுடன் வந்தார். தொலைவில் வரும்போதே நடையின் அசைவால் அவரை வேறுபடுத்தி நோக்கி நின்று கூர்ந்தனர். அருகணைந்ததும் அவருடைய முதன்மை மாணவனாகிய கரிய நெடிய இளைஞன் “எங்கள் ஆசிரியர் அதர்வத்தைக் கைப்பற்றிய பெருவைதிகர். இவ்வழி செல்லும்போது இக்குருநிலையைப்பற்றி அறிந்தோம். ஓய்வுகொண்டு செல்ல விழைகிறோம். அவரை அடிபணிந்து அருள்பெறும் நல்வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறோம்” என்றான்.

KIRATHAM_EPI_05

அவர்கள் திகைப்புகொண்டாலும் அச்சொல்லில் இருந்த முனைப்பே அதை ஏற்கச்செய்தது. கனகர் “எங்கள் குருநிலைக்கு வருக, அதர்வ வைதிகரே!” என்றார். வெளிறிய குறிய உடல்கொண்டிருந்த இரண்டாவது மாணவன் “இக்குருநிலையின் தலைவரே வாயிலில் வந்து எங்கள் ஆசிரியரை வரவேற்கவேண்டுமென்பது மரபு” என்றான். “அவ்வண்ணமே” என்று அஸ்வகர் திரும்பி உள்ளே ஓடினார். அத்ரிமுனிவர் தன் இரு மாணவர்களுடன் வந்து வாயிலில் நின்று வரவேற்று அதர்வ வைதிகரை உள்ளே அழைத்துச்சென்றார்.

மகாகாளர் என்று பெயர்கொண்டிருந்த அவர் வந்த முதல்நாள் முதலே அங்குள்ள அனைவராலும் வெறுக்கப்பட்டார். வெறுக்கப்படுவதற்கென்றே ஒவ்வொன்றையும் செய்பவர் போலிருந்தார். எப்போதும் மூக்கையும் காதையும் குடைந்து முகர்ந்து நோக்கினார். அக்குள்களை சொறிந்தார். அனைத்துப் பெண்களையும் அவர்களின் முலைகளிலும் இடைக்கீழும் நேர்நோக்கில் உற்றுநோக்கினார். அவர்கள் திகைத்து அவர் விழிகளை நோக்கினால் கண்கள் சுருங்க இளித்தார். உணவை இடக்கையால் அள்ளி வாயிலிட்டு நாய்போல் ஓசையெழ தின்றார். அவ்விரல்களை ஒவ்வொன்றாக நக்கியபின் இலையையும் வழித்து நக்கினார்.

உணவுண்ணும் இடத்திலேயே காலைத்தூக்கி வயிற்றுவளி வெளியிட்டார். அவ்வோசைக்கு அவரே மகிழ்ந்து மாணவர்களை நோக்கி சிரித்தார். அடிக்கடி ஏப்பம் விட்டு வயிற்றைத்தடவி முகம்சுளித்து மாணவர்களை கீழ்ச்சொற்களால் வசைபாடினார். அவர் இருக்குமிடத்திற்கே எவரும் செல்லாமலானார்கள். அவர் அங்கிருப்பதையே எண்ணவும் தவிர்த்தனர். குருநிலையின் வேள்விக்கூடத்திற்கும் சொல்கூடும் அவைக்கும் அவர் வந்தமரும்போது அவர் அமரக்கூடும் இடத்தை முன்னரே உய்த்தறிந்து அங்கிருந்தோர் விரல்தொடுமிடத்தில் சுனைமீன்கூட்டம் போல விலகிக்கொண்டனர்.

ஒருநாள் சுகந்தவாகினியில் நீராடி எழுந்த கனகர் மரவுரியை உதறும்போது எழுந்த எண்ணம் ஒன்றால் திகைத்து அசையாமல் நின்றார். உள்ளத்தின் படபடப்பு ஓய்ந்ததும் தன் தோழர்களிடம் திரும்பி “ஒருவேளை இவர்தான் நமக்காக வந்தவரோ?” என்றார். “யார்?” என்றார் அஸ்வகர். “இந்த அதர்வர். இவர் அபிசாரவேள்வி செய்யக்கற்றவர். நாம் எண்ணியது ஈடேற இவரை அனுப்பியதோ ஊழ்?” அவர் சொல்லிச்செல்வதற்குள்ளாகவே அவர்கள் அங்கு சென்றுவிட்டிருந்தனர். ஆனால் அவ்வெண்ணத்தை அவர்களே தங்களுக்குள் மறுத்துக்கொண்டார்கள். ஒன்றும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் நோக்கினர்.

கருணர் “ஆனால் இவர் இழிகுணத்தவர். இவரிடம் என்ன ஆற்றல் இருக்கக்கூடும்?” என்றார். அதன் மறுமொழியை அவரே அறிந்திருந்தார். கனகர் அந்த எதிர்ப்பால் ஆற்றல்கொண்டு “நமக்குத் தேவை இழிவின் ஆற்றல்தான். அந்த கல்லாக் காட்டாளன் முன் நம் சிறப்புகள் செயலற்றதைத்தான் கண்டோமே! அவனை வெல்ல இவரால்தான் இயலும்” என்றார். “இவர் கற்றது நாமறிந்த நால்வேதம் அல்ல. கிருஷ்ணசாகையுடன் அதர்வம் நம் எண்ணத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது கீழ்மையின் உச்சம் என்கிறார்கள். அதன் சொற்கள் எழுந்தால் பாதாளநாகங்கள் விழியொளியும் மூச்சொலியுமாக எழுந்து வந்து நெளியும். ஆழுலக இருள்மூர்த்திகள் சிறகுகொண்டு வந்து சூழ்வார்கள். இவர் அவர்களின் உலகில் வாழ்கிறார்.”

“ஆம், இவரே” என்றார் சூத்ரகர். “இவரைக் கண்டதுமே நான் அதைத்தான் நினைத்தேன்.” கர்த்தமர் “இல்லையேல் இவரே நம்மைத்தேடி வரவேண்டியதில்லை” என்றார். மிகவிரைவிலேயே அவர்கள் கருத்தொருமித்தனர். “ஆம், இவரிடமே பேசுவோம். இவர் விழைவதை நாம் அளிப்போம்” என்றார் அஸ்வகர். “நாம் என்ன விழைகிறோம்?” என்றார் சூத்ரகர். அதை அவர்கள் அதுவரை எண்ணவில்லை என்பதனால் சற்று தயங்கினர். “நாம் விழைவது வெற்றியை” என்றார் கனகர். “அந்தக் காட்டாளனை முழுதும் வென்றடக்கவேண்டும். அவன் இங்கு அடைந்துசென்ற வெற்றியின் கெடுமணமே நம்மைச் சூழ்ந்துள்ளது. தோற்று அவன் ஆணவம் மடங்குகையில் இந்த நாற்றமும் அகலும்.”

“அவனை வேதமே வெல்லவேண்டும்” என்று அஸ்வகர் கூவியபடி கனகரின் அருகே வந்தார். “வேதமென்பது மலர்மட்டுமல்ல, சேற்றை உண்ணும் வேரும்கூடத்தான் என அந்தக் கிராதன் அறியட்டும்.” கனகர் “ஆம், அதர்வம் காட்டாளர்களின் சொல்லில் இருந்து அள்ளப்பட்டது. ஆயிரம் மடங்கு ஆற்றல் ஏற்றப்பட்டது. காட்டுக்கீழ்மையால் உறைகுத்தப்பட்ட பாற்கடல் அது என்கின்றது பிரஃபவசூத்ரம். அந்த நஞ்சை அவன் எதிர்கொள்ளட்டும்” என்றார்.

அத்தனை விசையுடன் சொல்லப்பட்டதும் அவர்கள் அதன் வீச்சை உள்ளத்தால் உணர்ந்து அமைதிகொண்டார்கள். ஒருவரை ஒருவர் நோக்காமல் முற்றிலும் தனித்து நின்றிருந்தார்கள். கனகர் தன் மரவுரியை மீண்டும் உதறிவிட்டு “உங்களுக்கு ஒப்புதலென்றால் நானே அவரிடம் சென்று பேசுகிறேன்” என்றார். “ஆம், தாங்களே பேசுங்கள்” என்றார் சூத்ரகர். பிறர் தலையாட்டினர்.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

தொடர்புடைய பதிவுகள்

வெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்

$
0
0

 

2015-04-25

அன்புள்ள ஜெ

வணக்கம் முதலில் உங்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். அன்று காலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தன்னையறியாமல் கண்களிலிருந்து கண்ணீர். அந்த கண்ணீர் ஏன் வருகிறது? எதனால் வருகிறது?அதன் நோக்கம் என்ன?என்று புலப்படவில்லை. சற்று ஒரு கணம் யோசித்து ஓ!அது மண்டையோட்டின் முகப்பு கண்ணாடி திறந்ததால் கற்று வீசி வருகிறது என்று நினைத்தேன். மறுகணமே என் சிந்தனை மாறியது. அப்படியென்றால் நீண்ட நேரம் வராதே, காற்றில் கண்ணீர் கன்னத்தில் காய்ந்திருக்குமே! இந்த கண்ணீர் விசித்திரமானதாக இருக்கிறதே! கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் கடலில் ஓரத்தில் எழும் அலைபோல் அல்லாமல் கடல் நீர் நடுவிலுள்ளபோல் அமைதியாக வந்தது. பின்னர் அறிந்தேன் இது காற்றால் அல்ல. ஒரு வித வலியால், உணர்வு, இந்த சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பால் வந்தது என்று.

ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது. இது கண்களிலிருந்து வரவில்லை, உணர்வு, வெறுப்பு, வேகம் நிறைந்த என் கனத்த இதயத்திலிருந்து வருகிறது என்று. இத்தனை நாள் வரவில்லை. இன்று ஏன்? இன்றுதான் வெள்ளை யானை நாவலை படித்தேன். இந்நூலை படித்த பின்பு பெரிகார்டியம் பாதுகாப்பு இருந்தும் பெரிய அதிர்ச்சி உணர்வு என் இதயத்தை தாக்கியது. என்னுள் பல கேள்விகள் எழுகின்றன. இந்த சமுதாயம் ஏன் இப்படிருக்கிறது? நாம் இப்போது மனிதனாக வாழ்கிறோமா, மதிக்கப்படுகிறோமா, அப்படியே இருந்தாலும் அதெல்லாம் புறவேசமா, புறநடிப்பா! இப்படி நடப்பதற்கு சாதி அமைப்பு, பொருளாதார நிலைமை காரணமா!

இல்லை அய்யங்கார் சொல்லுவதை போல் இந்த மக்களை இறைவன் கொடுமைப்படுத்தத்தான் படைத்தானோ! பல கேள்விகள் கேட்பது யாரிடம் தெரியாமல் என் மனச்சாட்சியை நானே கேட்டேன். ஆனால் பதில் இல்லை. இந்த நாவல் என்னை பல சுயபரிசோதனைகளுக்கு உட்படுத்தியது. நான் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருக்கிறேனா! வெளியுலகம் அறிவதில்லையோ! ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்புலம் அறிவதில்லையோ! அறிகிறேன், ஆழ்ந்து யோசிக்கவும் செய்கிறேன். பின்னர் ஏன் என்னுள் கேள்வி எழுகிறது. எழுகிறது என்று சொல்லுவதைவிட எழுப்பியது வெள்ளை யானை.

காத்தவராயன்” சாவு உண்மைதான் ஆனால் எங்கே வாழ்ந்தோம் நாங்கள் சாவதற்கு, இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று சொல்லுவதும், நூறு பேரில் தொண்ணூறு பேர்கள் இறந்து பத்து பேர்கள் மனிதனாக வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் சொல்லும் போது இதயத்தில் கனத்த வலியை உண்டாக்கியது. ஏன் நாம் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ போராட்டம். உலகில் மனிதனை தவிர மற்ற இனம் அதே இனத்தோடு வாழ போராடவில்லை. பின்பு ஏன் நமக்கு மட்டும் இந்த போராட்டம். வெள்ளை யானை என்னை “பிறர் தட்டிவிடும்போது என்னால் முட்டி எழ முடியும்” என்னுள் இருந்த நம்பிக்கையை அதிகப் படுத்தியது. நன்றி ஐயா

தாமரை வீ

***

பெரு மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,

நாஞ்சில் நாட்டின் மீது இருந்த பற்றின் மூலமே நான் உங்களின் வாசகனானேன். உங்கள் மாடனிடம் பேசும் அப்பி என் நினைவில் தினமும் வருபவன். உங்களின் எழுத்துக்களின் மூலமே நீங்கள் சாதி மத எல்லைக்குள் நிற்பவர் அல்ல என புரிந்து கொண்டேன். அப்படிப்பட்ட நீங்கள் ஏன் நாஞ்சில் நாட்டில் இருந்த சமூக சீர்திருத்தவாதி [அய்யா வைகுண்டர் – முத்துக்குட்டி] பற்றி இன்னும் எழுதவில்லை என்பது வியப்பாக உள்ளது.

அவரின் சீர்திருத்தங்களில் சில…

ஒரு ஊரில் உள்ள அனைத்து சாதி மத வீடுகளிலும் பிச்சை எடுத்து அதை ஓரே பானையில் சமைத்து அதற்கு அன்னம் என்று பெயரிட்டு அதை அனைத்து சாதி மக்களும் ஒன்றாக இருந்து உணவருந்த செய்தார்.. இதை விட சமத்துவம் வேற யாரும் சொன்னதில்லை .

அனைத்து சாதி மக்களையும் தலையில் தலைப்பாகை [அது அரசனின் கிரீடம் போல] அணிவித்து அனைவருமே அரசனாக்கினார் சமமாக்கினார் .

தங்கத்தை தொட்டால் தீட்டு என்ற காலத்தில் அனைவருமே தங்கத்தில் தாலி கட்ட வைத்தார் [இன்று குமரி மாவட்டத்தில் சாதி மத வித்தியாசமின்றி அனைவருமே தங்கத்தில் தாலி காட்டுகின்றனர்]

அவர் அகிலத்திரட்டு என்ற நூலையும் அருளியிருக்கிறார்.

ஆனால் பெரியார் போன்ற எவருமே பேசியிருக்கலாமே தவிர இப்படி செய்து காட்டியிருக்க முடியாது .

எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்லி விட்டேன். நீங்கள் ஆராய்ந்து சரியென்று தோன்றினால் எழுதுங்களேன்.

பணிவன்புடன்,

பொன் ராஜா.

***

அன்புள்ள பொன் ராஜா

ஐயா வைகுண்டர் குறித்து எழுதியிருக்கிறேன். நாகர்கோயில் இதழ்களில். கட்டுரைகளை தேடி எடுக்கவேண்டும்.

என் மூத்தநண்பரான அ.கா.பெருமாள் அவர்கள் ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டை செம்பதிப்பாக பிழைதிருத்தி வெளியிட்டிருக்கிறார். அதையொட்டி விரிவாக எழுதவேண்டும் என எண்ணினேன். குறிப்புகளுடன் நின்றுவிட்டது

எழுதவேண்டும்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9

$
0
0

b25

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளி திரு. வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளத்தில் மிகவும் மகிழ்ச்சி.

வண்ணதாசன் என்னும் சிறுகதையாசிரியர் உருவாக்கும் படைப்புலகம் தனிமனிதனின் கோபதாபங்களையும், ஆசாபாசங்களையும் அகழ்ந்து எடுக்க கூடியது. அதன் உளவியலை புறக்காட்சிகளின் மீது ஏற்றி அழகிய சித்திரம் போல் வரைந்து விட கூடியது. மனித மனம் அன்பு, குரோதம், நட்பு, துரோகம் என ஒன்றுக்கொன்று முரணான இயல்புகளை ஒரு படிமம் போல் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்துள்ளது, அதன் நுட்பங்களையும், உணர்வுகளையும் கலைத்து போட்டு மீண்டும் அடுக்கும் ஒழுங்கை ஒத்து இருக்கிறது அவர் கதைகள். ஒரு முட்டு சந்துக்குள் நம்மை கொண்டு சென்று நிறுத்தி விட்டு அங்கு ஒரு புதிய பாதையை திறக்கும் லாவகம் வண்ணதாசன் அவர்களுக்கு தெரியும்.

அவரின் எல்லா கதைகளும், கதை மாந்தர்களும் அவர்கள் கொண்டுள்ள உணர்வுகளின் முரண் வழியாக தனக்குள்ளும், தனக்கு வெளியே சமூகத்துடனும் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார்கள். இந்த நுண்ணியல்பை அவரைத் தவிர வேறு எந்த எழுத்தாளனும் இயல்பாகவும், அழகியலுடனும் படைத்ததில்லை என்று சொல்லலாம். இலக்கியம் எதையும் எங்கும் விவரித்து சொல்லுவதில்லை, அனைத்தையும் பூடகமாக சொல்லிச் செல்கிறது.

ஆனால் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைகள் இந்த அடிப்படையில் இருந்து வேறுபட்டு அவர் சொல்ல விரும்புவதற்கு எதிரானவைகளை மட்டும் கதைகளில் விவரிக்கிறார். உதாரணமாக “கனியான பின்னும் நுனியில் பூ” என்னும் சிறுகதையில் தினகரிக்கும் அவள் அப்பாவுக்கும் நடக்கும் உரையாடல் அனைத்தும் இறுதியில் திருடன் என்று சொல்லப்படும் ஒருவரை நோக்கி ” ‘அவரு கொய்யாப் பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவுதாம்மா’. என்று நிறைவுறுகிறது.

இந்த கதை சொல்ல வருவது திருடன் என்று சொல்கிற அவருக்கும் அந்த குட்டி பெண்ணுக்கும் உள்ள உறவைதான் அனால் வண்ணதாசன் அந்த திறப்பை மேற்சொன்ன அந்த ஒற்றை வரியில் கொண்டு நிறுத்துகிறார். இதுதான் வண்ணதாசனின் படைப்புலகம், அது சொல்லாதவைகளின் மீதம். இருவரின் அந்தரங்கங்கள் கொண்டுள்ள ரகசியம் அதை அவர் திறப்பதேயில்லை. அந்த விஷயத்தை வாசகனிடம் விட்டு விடுகிறார் அவன் திறந்து பார்க்கும் ஆவலை தூண்ட செய்வது தான் அவரின் கதைகள்.

அவர் திருநெல்வேலி என்னும் நகரத்தின் தெருக்களில் எல்லா திருப்பங்கள் வழியாகவும் சென்று திரும்புகிறார். அவரின் கதைகள் திருநெல்வேலி டவுன் சந்துகளிலும், முடுக்குகளிலும் ஆரம்பித்து லாலா சத்திர, சந்தி பிள்ளையார், வாகையடி, தெப்பக்குளம், கோயில்வாசல் என முக்குகளில் திரும்பி ரத வீதியை வந்து அடைந்து விடுகிறது. டவுன் முழுவதுமே சில நேரங்களில் வண்ணதாசன் அவர்களின் கதை மாந்தர்கள் மட்டும் உலவும் இடமாக தெரியும் ஆச்சர்யம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அவரால் இந்த சாமான்யர்களிடமிருந்து இதே மக்களிடமிருந்தது இன்னும் எத்தனையோ கதைகளை படைக்க முடியும்.

கொல்கத்தாவில் எஸ்பிலேனடு சாலையில் காலையில் நான் நடந்து செல்லும்போது நடைபாதையின் முன்பு குந்தி அமர்ந்திருந்த கட்டிட கூலி தொழிலாளர்களுக்கும், சிறு வயதில் பள்ளி செல்லும் போது பாளையம்கோட்டை மார்க்கெட் சாலையில் வேலைக்காக காத்து கொண்டிருந்த கட்டிட கூலி தொழிலாளர்களுக்கும் அநேகமாக எந்த பெரிய வித்தியாசமும் இல்லை, அவர்கள் பணிக்காக வைத்திருந்த பொருட்களை தவிர. இருவரின் முகமும் ஒரே சிந்தனையில் தான் இருந்தன. இன்றைய நாள் கழிய கூலி கிடைக்குமா என்பது மட்டும்.

உலகம் முழுவதும் மனிதர்கள் வேறுபடலாம். அவர்களின் அகம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அந்த அகத்தை மட்டும் எழுதிக் கொண்டே இருக்கும் வண்ணதாசன் அவர்கள் இந்த விருதின் மூலம் கெளரவிக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி.

என்றும் வாசிப்புடன்,

சரவணன்

 

 

அன்புள்ள ஜெ

 

வண்ணதாசன் கதைகளுக்கு விஷ்ணுபுரம்ன் விருது அளிக்கப்பட்டிருப்பதை ஒரு முரண்பாடான ஆச்சரியமாகவே பார்க்கிறேன். வண்ணதாசன் கதைகள் நேரடியான வாழ்க்கையைச் சொல்பவை. அப்பட்டமான வாழ்க்கை என்றுகூட சொல்வேன். ஆனால் விமர்சனம் இல்லாதவை. பூடகமானவை. ஆனால் ஆசிரியன் தெரியாதவை. தத்துவம் சிந்தனை என்பதெல்லாம் வண்ணதாசனுக்கு அப்பாற்பட்டவை. அதோடு அவர் காட்டும் உலகம் குறியீடுகள் அற்றது. அதனால்தான் அப்பட்டம் என்று சொன்னேன்

 

ஆனால் விஷ்ணுபுரம் நேர் எதிரானது. அது பூடகமான குறியீடுகளால் ஆனது. சிக்கலானது. யதார்த்தமே இல்லை அதிலே. அதில் வாழ்க்கைகூட இல்லை. உருவகங்கள் மட்டும்தான். ஆசிரியன் எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளும் இருக்கிறான். தத்துவமாகவே எல்லாம் உள்ளன. அதன் அழகியலே வேறு. எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காத புத்தகம் என்றால் விஷ்ணுபுரம்தான்

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் அவார்ட் என்பது வண்ணதாசனின் வெற்றி என்றுதான் நினைக்கிறேன். சரியா? எனக்குப்பிடித்த எழுத்தாலர் என்றால் வண்ணதாசன்மட்டுமே. அசோகமித்திரனையும் பிடிக்காது சுந்தர ராமசாமியையும் பிடிக்காது. இலக்கியம் என்றால் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டாமே என்றுதான் நான் நினைக்கிறேன்

 

மருத்துவர் ராஜசேகர்

 

அன்புள்ள அய்யா ஜெயமோகன் ,

 

நான் வண்ணதாசனை கண்டுகொள்ள ஆரம்பிக்கும் தருணத்தில் இந்த விருது அவருக்கு கிடைப்பது என்வாசக அனுபவத்துக்கு ஒரு தூண்டுதலாக அமைகிறது , வண்ணதாசனின்  சில சிறுகதைகளை மட்டும்வாசித்து முடித்திருக்கிறேன்.

 

ஜெயமோகன்  , புதுமை பித்தன் , எஸ்.ராமகிருஷ்ணன், கி. ரா , பிரியா தம்பி ஆகியோரின் சிறுகதைகள்வாசித்திருக்கிறேன் ஆனால் வண்ணதாசன் ஒரு தனி league என்று தான் கூற வேண்டும் (என்அனுபவத்தில்).

 

நீங்களும்  எஸ்.ராமகிருஷ்ணனும் மிகை யதார்த்தவாதிகளாகவே எனக்குப்  படுகிறீர்கள் . யதார்த்தத்தை மிகவும் நெருங்கி சொல்பவராக  வண்ணதாசன் எனக்குத்  தோன்றுகிறார் .

 

உங்கள் இருவரின் எழுத்தும் மிகக் கூர்மை வாய்ந்ததாக இருக்கின்றது. உண்மைகளை நேரடியாகச் சொல்லி, உண்மையின்  நிதர்சனத்தைப்  பட்டவர்த்தமாக வாசகனின் தலையில் விழும்படி எழுதுகிறீர்கள்  (with brutal honesty).

 

வண்ணதாசன் ஒரு மெல்லிசை போல் ஒரு உண்மை நிலையைச்  சொல்லி விட்டு , அதைப்  பற்றிவாசகனின் இயலாமையை உணர்த்துகிறார். வண்ணதாசனுக்கு இந்த விருது மிகவும் பொருத்தமானதாககருதுகிறேன், அதே வேளையில் நீங்களும் , எஸ்.ரா வும் இணைந்து அவருக்கு இந்த விருதை (மேடையில்)அளிக்க வேண்டும் என்பது என் ஆசை.

 

நன்றி

சுதாகரன் விஸ்வநாதன்

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

=====================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா?

$
0
0
3_0923

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் மதிப்பீடுகளின் படி சிறந்த சமகால எழுத்தாளர்கள் தெலுங்கு மொழியில் எவரேனும் இருந்தால் தெரியப்படுத்தவும். என் தெலுங்கு நண்பருக்கு வணிக எழுத்துகளே அறிமுகம். அவருக்கு நல்ல சமகால தெலுங்கு இலக்கியம் பற்றி தெரியவில்லை. என்னாலும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

நன்றி

சண்முகநாதன்

*

அன்புள்ள சண்முகநாதன்,

நான் வாசித்தவரை தெலுங்கில் நவீன இலக்கியம் என ஏதும் இல்லை.

நமக்கு பிற இந்திய மொழிகளில் இருந்து வாசிக்கக் கிடைப்பவை சாகித்ய அக்காதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற அமைப்புகளால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் நூல்கள் மட்டுமே. அவற்றில் பெரும்பாலும் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். அவற்றில் அடிப்படை இலக்கியத்தன்மை கொண்ட ஒரு தெலுங்குப் படைப்பைக்கூட வாசிக்க நேர்ந்ததில்லை. பள்ளிக்கூட குழந்தைகளுக்காக வாத்தியார்கள் எழுதிய நீதிக்கதைகள் போல இருக்கும்.

நான் வாசித்தவற்றிலேயே சிறந்தவை என்பவை இரண்டே. அற்பஜீவி [பண்டித விஸ்வநாத சாஸ்திரி] அவன் காட்டை வென்றான் [முனைவர் கேசவரெட்டி] இரண்டுமே நவீன இலக்கிய வாசிப்புள்ளவனுக்கு அசட்டுத்தனமாகத் தோன்றும் இலக்கிய முயற்சிகள். முப்பாள ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிய அசட்டு நாவல்களை வைத்துப்பார்த்தால் இவை பரவாயில்லை அவ்வளவுதான்

ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடவும் முடியாது. ஏனென்றால் தமிழிலக்கியம் பற்றி கன்னடம் வங்கம் போன்ற மொழிகளின் இலக்கிய வாசகர்கள் இந்த எண்ணம்தான் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாசித்தவை ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனின் சித்திரப்பாவை போன்ற நாவல்கள், நா.பார்த்தசாரதி, சிவசங்கரி எழுத்துக்கள். அவைதான் மொழியாக்கம் மூலம் அவர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.சமீபத்தில் மும்பை கேட்வே இலக்கியவிழாவில்கூட “நவீன இலக்கியம் உருவாகி வந்துகொண்டிருக்கும் தமிழ், கொங்கணி, தெலுங்கு போன்ற மொழிகள்…” என்று ஒருவர் பேசக்கேட்டேன்.

ஆகவே தரமான இலக்கியம் ஒருவேளை தெலுங்கில் கண்மறைவாக இருக்கக்கூடும். அங்குள்ள கல்வித்துறையாலும் ஊடகங்களாலும் மறைக்கப்பட்டிருக்கக்கூடும் என எண்ணிக்கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

உண்மையில் தெலுங்கில் கொஞ்சமேனும் வாசிக்கத்தக்க எழுத்துக்கள் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதும் வணிகநாவல்கள்தான். துப்பறியும் கதைகள் அவை. ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். வடிவ உணர்வும் இருக்கும்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6

$
0
0

[ 10 ]

முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக்கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல்மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். அவர்கள் திகைத்து அவரைப்பார்த்தனர்.

அவர் “அவனை நான் அறிவேன்” என்றார். “யார்?” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே?” என்றார் மகாகாளர். புன்னகையுடன் “அவன் அழிப்பவன். அதற்குமேல் அவனுக்கு இலக்கு என ஏதுமில்லை” என்றார். அவர்கள் ஒருவரோடொருவர் விழிகளால் பேசிக்கொண்டபின் கனகர் “நாங்கள் இப்போது பொன்னென ஏதும் அளிக்கவியலாது. ஆனால் எங்களில் ஒருவர் பாரதவர்ஷத்தின் ஏதேனும் பெருமன்னருக்கு வேள்விசெய்யச் செல்வோம். கிடைக்கும் பொன் அனைத்தையும் உங்களுக்கே அளிப்போம்” என்றார்.

“எனக்கு காணிக்கை என ஏதும் தேவையில்லை” என்று மகாகாளர் சொன்னார். “நான் இதை என் பொருட்டே செய்யலாமென எண்ணுகிறேன்.” அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அதைவிட நான் அறிந்தாகவேண்டிய ஒன்று அவனிடம் உள்ளது. அதை அவனைச் சூழ்ந்து சிறைப்பிடிக்காமல் நான் அறியவும் முடியாது.” கருணர் “அவனை முன்னரும் எதிர்கொண்டிருக்கிறீர்களா?” என்றார். “அவனை எதிர்கொண்டபடியேதான் இருக்கிறேன்” என்றார் மகாகாளர்.

அவர்கள் நினைத்தது ஈடேறுமென்ற எண்ணத்தை அடைந்தனர். ஆனால் அவ்வெண்ணம் ஆறுதல் அளிக்கவில்லை. அவர்களின் நெஞ்சங்களை பதறச்செய்தது. பின்வாங்கிவிடலாமா என ஒவ்வொருவரும் ஆழத்தில் எண்ணி பிறரை எண்ணி அதை கைவிட்டார்கள். “இருளைக்கொண்டு ஆடுகிறான். அவனுள்ளும் இருக்கும் அவ்விருள். அதையே அவனுக்கு அனுப்புகிறேன். அதை என்ன செய்வான்?” என்றார் மகாகாளர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முனிவர்கள் மாணவர்களை பார்த்தனர். அவர்களும் ஒன்றும் புரியாமல்தான் நின்றுகொண்டிருந்தனர்.

“அபிசாரவேள்வியை நடத்த இடம் வேண்டும் அல்லவா? இங்கு நடத்தமுடியாது…” என்றார் கனகர். “அதற்குரிய பொருட்கள் என்னென்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் இன்றே சேர்த்துக்கொள்ளத் தொடங்குவோம்” என்றார் கருணர். “இக்காட்டினுள் ஒரு மலைப்பாறை போதும். எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்றார் மகாகாளர்.

அவர்கள் திகைப்புடன் நோக்கிக்கொண்டபின் “அபிசாரம் என்றால்….” என்று சொல்லத்தொடங்க “மண்ணிலுள்ள இழிபொருட்களை அளித்து அதுசெய்யப்படுகிறது. காய்ந்தமலம் முதல் காக்கைச்சிறகுவரை ஆயிரத்தெட்டு பொருட்கள் அதற்குத் தேவையாகின்றன. ஆனால் நான் விண்ணிலுள்ள இழிபொருள் ஒன்றையே அவியாக்கவிருக்கிறேன்” என்றார் மகாகாளர்.

“இது ஒரு தருணம். ஒருவேளை நான் இங்கு வந்ததே அதன்பொருட்டாகவிருக்கலாம்” என்றபின் எழுந்துகொண்டு “நாள் கடந்து நாள் இரவு கருநிலவு. அந்நிசி உகந்தது” என்றார். அவர் நடந்துசென்றபோது திகைத்து நின்றிருந்த அவரது மாணவர்களும் உடன் சென்றனர். “என்ன சொல்கிறார்?” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி?” என்றார் சூத்ரகர். “அதை சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஆற்றலை மட்டும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது” என்றார் கனகர். “நம் அச்சத்தால் அதை அறிகிறோம்.”

கருநிலவுநாளில் அந்தியில் குருநிலையில் அனைத்து வேள்விச்சடங்குகளும் முடிந்தபின் முனிவர் பதினெண்மரும் உணவருந்தாமல் துயிலச்சென்றனர். அனைவரும் துயின்றபின்னர் எழுந்து வெளியே நடந்து இருளுக்குள் ஒன்றுகூடினர். இருள்வழியாகவே சென்று காட்டுக்குள் இருந்த சிறிய பாறையடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன்மேல் வெண்ணிற ஆடையாக மகாகாளர் நின்றிருப்பது தெரிந்தது. கனகர் ஒருகணம் உளச்சோர்வுகொண்டார். அதை அவர் உடலசைவு வழியாகவே பிறர் அறிந்து நின்றனர்.

கனகர் “இப்போதுகூட நாம் திரும்பிச்சென்றுவிடமுடியும்” என்றார். பிறர் ஒன்றும் சொல்லவில்லை. இருளுக்குள் அவர்களின் விழிவெண்மைகள் மட்டும் தெரிந்தன. “நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாமே?” என்று பின்னால் நின்றிருந்த அஸ்வகர் கேட்டார். அவர் முதலில் இருந்தே அஞ்சியவர் போலிருந்தார் என்பதை கனகர் உணர்ந்தார். “இதுவரை வந்துவிட்டோம். இதனாலேயே பாதிப்பங்கு செயலை ஆற்றிவிட்டோம். திரும்பிச்சென்றால் எஞ்சியதை கற்பனையில் ஆற்றியபடி மீதி வாழ்வை வீணாக்குவோம். சென்று செய்து விளைவை எதிர்கொள்வதே நாம் செய்வதற்குகந்தது.”

அது முற்றிலும் உண்மை என அனைவரும் உணர்ந்தனர். ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றனர். அவர்களை வரவேற்புச்சொல் ஏதுமின்றி மகாகாளர் எதிரேற்றார். அங்கே எளிய நிகர்சதுர வேள்விக்குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கிழக்கே மேற்குநோக்கி மகாகாளர் அமர்வதற்கான புலித்தோல் இருக்கை. மகாகாளர் அமர்ந்ததும் இரு மாணவர்களும் அவருக்கு இருபக்கமும் பின்னால் அமர்ந்து வேள்விக்கு உதவிசெய்தனர். மகாகாளர் எந்த முகமனும் இல்லாமல் அனலேற்றி நெய்யூற்றி அவியிட்டு வேள்வியைத் தொடங்கினார். அதர்வம் ஒலிக்கத்தொடங்கியது.

மூன்றுவேதங்களும் முற்றொதுக்கியவற்றால் ஆன நான்காம் வேதம். கனகர் அதை முன்னரே ஒலியெனக் கேட்டதே இல்லை. அதன் ஒலி ஒத்திசைவற்று இருப்பதாக முதலில் தோன்றியது. எருதுகள் செல்லும் காலடியோசைபோல. எருதுகளைக் கண்டபின்னர் அவற்றின் ஒசை ஒன்றென்றாகியது. பின்னர் அவர் அந்த ஓசையால் முற்றாக ஈர்க்கப்பட்டார். கல் அலைத்து ஒழுகிய பேரருவியென அது அவர்களை இட்டுச்சென்றது. மலைச்சரிவுகளில் சென்று அடியிலி நோக்கி பொழிந்தது.

எரிகுளத்தில் கதிர் எழுந்து நின்றாடியது. எந்த ஒலியையும் தான் ஏற்று நடிக்கத்தெரிந்தது தழல். அனைத்தையும் நிழல்கொண்டு தன்னுடன் ஆடவைக்கும் மாயம் அறிந்தது. தன்னிலிருந்து எழுந்து பேருருக்கொண்டு தலைமேல் எழுந்து நின்றாடும் அந்நிழலை அவர் நன்கறிந்திருந்தார். அது அவரை அறியாததுபோல் வெறிகொண்டு ஆடியது. காற்று நிழலை அசைத்தது. மரக்கூட்டங்களை நிழல் அசைத்தது.

அனலை மட்டுமே நோக்கியிருந்த மகாகாளரின் விழிகளுக்குள்ளும் அனலெரிந்தது. அவர் கை அவியளிப்பதை நிறுத்தி ஓங்கியபடி காற்றில் நின்றபோது அவர்கள் தம் எண்ணங்கள் அறுந்து அவரை நோக்கினர். அவர் உரத்த குரலில் “இருளெழுக! இருளென எழுக! இருண்டெழுக!” என்று கூவினார். பின்னர் அனலில் கையிலிருந்த இறுதி விறகை எறிந்து “எழுக! எங்குமுள்ளதே எஞ்சுவதே எழுக! எரிவதே அணைவதே எழுக! திகழ்வதே தெரிவதே மறைவதே எழுக! சூழ்க! சூழ்க! சூழ்க!” என்றார்.

கீழே பாறைக்கு அடியில் செறிந்திருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே இருள் செறிந்து உருண்டு உருவானதுபோல் ஓர் அசைவை கனகர் கண்டார். அவர் விழிதிரும்பியதுமே தாங்களும் திரும்பிய பிறமுனிவரும் அதைக் கண்டனர்.

[ 11 ]

“தாருகக் காட்டின் எட்டுமுனிவர்களால் எட்டுத்திசைகளிலிருந்தும் எட்டு யானைகள் எழுப்பப்பட்டன என்கின்றன தொல்கதைகள்” என்றார் பிச்சாண்டவர். இருள் சூழ்ந்திருந்த இரவில் குளிர்ந்த இருள் எனக் குவிந்தெழுந்த பாறை ஒன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தனர் “அவை எட்டுத்திசையானைகளாகச் செறிந்த கடுவெளியின் இருளே. அதர்வச்சொல் ஒவ்வொன்றுக்கும் நடுவே நிறைந்திருப்பது அவ்விருளே. இருளைக்கொண்டு இருளை ஏவினார் மகாகாளர். இருள்வேழங்கள் துதிக்கை தூக்கி பிளிறியபடி வந்து அந்த வேள்விக்குண்டத்தை எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து செவியாட்டி இருளை ஊசலாட்டியபடி நின்றன.”

“மகாகாளர் தன் கையிலிருந்த கங்காளத்தை மீட்டினார். விம்மலென எழுந்த அந்த ஓசையை செவிகோட்டி அவை கூர்ந்தன. அவற்றின் விழிகளென அமைந்த இருட்துளிகள் மின்கொண்டன. அந்தக் கங்காளத்தை அவர் சுழற்றி காட்டில் எறிந்தபோது அவை கொலைப்பிளிறலுடன் காட்டுக்குள் பாய்ந்தன. காட்டுக்குள் நிறைந்திருந்த கங்காளத்தின் ஒலியை அவை கேட்டன. செவிகோட்டி ஒலிதேர்ந்தும் துதிநீட்டி மணம்கொண்டும் அவை காட்டுக்குள் ஊடுருவிச் சென்றன”.

“இருளென இருளில் கரைந்து, இருளிலிருந்து இருட்குவையென பிதுங்கி எழுந்து அவை சென்றன.பிளிறும்பேரிருருள்.கங்காளம் மீட்டிச்சென்றுகொண்டிருந்த கிராதனைக் கண்டதும் எட்டும் இணைந்து ஓருருக்கொண்டன. கரியமலைபோல பேருடல் கொண்டு அவனை மறித்தன.”

பிச்சாண்டவர் வைசம்பாயனனை நோக்கி “அக்கரியுரித்தல் நிகழ்ந்த இடமென பன்னிரு இடங்களை நானே கண்டுள்ளேன். பாண்டவர்களை எரித்துக்கொல்ல கௌரவர்கள் முயன்ற வாரணவதம் அதிலொன்று” என்றார். “ஆனால் அது நிகழ்ந்திருக்குமென நான் எண்ணும் ஓர் இடத்தை பின்னர் கண்டேன். இமயமலைச்சரிவில் திரிகர்த்தநாட்டின் மறு எல்லையில் கின்னரர் நாடு தொடங்குமிடத்திலுள்ளது அது. கஜசர்மம் என்று அந்த மலை அழைக்கப்படுகிறது. அதனுள் ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது.”

இளவயதில் நான் எங்கள் எல்லை கடந்து சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தேன். காட்டெருது ஒன்றை துரத்திச் சென்று வழிதவறி வழிகண்டுபிடிப்பதில் தோற்று மீண்டும் வழிதவறி நான் கஜசர்மத்தை சென்றடைந்தேன். நெடுந்தொலைவிலேயே யானை மத்தகம் போன்ற அந்த மலைப்பாறையைக் கண்டேன். அதன் மேல் மரங்கள் நின்றிருந்தன. அப்படியென்றால் அதற்கருகே நீர்நிலை இருக்கும் என உய்த்து எரியும் விடாயுடன் அதனருகே சென்றேன்.

நீர்நிலை மான்விழிபோல கிடந்தது. நீரள்ளி அருந்தியபோது என் மேல் அம்புகள் குறிவைக்கப்படுவதை கண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் நீரை அள்ளி அருந்தி முடித்து மண்ணில் முகம் பதிய குப்புற விழுந்துகிடந்தேன். அவர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். என்னை பிடித்துத் தூக்கி நாரால் கைகளைக் கட்டி இழுத்துச்சென்றனர். அவர்களின் மொழியிலிருந்தும் தோற்றத்திலிருந்தும் என்னைக் கொல்லமாட்டார்கள் என என் ஆழம் உய்த்தறிந்தது. ஆகவே நான் என்னை முற்றாக அவர்களுக்கு ஒப்படைத்துக்கொண்டேன்.

அவர்கள் அங்குள்ள பதினெட்டு குகைகளிலாக வாழும் தொல்குடி. தங்களை அவர்கள் காலர்கள் என அழைத்துக்கொண்டார்கள். என்னை அங்குள்ள சிறுகுகை ஒன்றில் அடைத்து வைத்தனர். அவர்களின் குடிப்பூசகர் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் சாம்பல்பூசி சடைமுடிமேல் பன்றிப்பல்லால் ஆன பிறைநிலவு சூடி கழுத்தில் நாகத்தை மாலையென அணிந்திருந்தார். அவர்கள் அவரை சிவம் என்றனர்.

முழுநிலவுநாள் வரை அங்கேயே என்னை அடைத்து வைத்திருந்தனர். முழுநிலவு எழும்போது அவர் உடலில் எழுந்த சிவம் என்னை அயலான் அல்ல என்று அறிவுறுத்தியதும் என்னை அவர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டனர். அவர்களை அறிந்தபின்னர் அங்கிருந்து செல்லலாம் என எண்ணி நான் நான்குமாதகாலம் அவர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒரு பெண்ணையும் மணந்துகொண்டேன்.

குடிப்பூசகரான சிவம் முதல்முறை சூர்கொண்டபோது என்னை சிவந்த விழிகளால் நோக்கி “கையிலுள்ளது மண்டை. மண்டையை கையிலேந்தியவன். மண்டை உதிரும் இடமொன்று உண்டு. தேடுக! தேடிச்செல்க!” என்றது. அதன்பொருள் அன்று எனக்குப்புரியவில்லை. நான் அவர்களில் ஒருவராக ஆனபின் ஒவ்வொரு முழுநிலவிலும் என்னை நோக்கி அதையே சொன்னது. “மண்டையைக் கையிலேந்தும் ஊழ்கொண்டவர் சிலரே. ஊழ் கனிக! இருள்பழுத்து சாறு எழுக!”

நான் கிளம்புவதற்கு முந்தைய முழுநிலவில் “ஏழுலகைப் பெய்தாலும் நிறையாதது மண்டை. முடிவுள்ளதொன்றாலும் நிறையாத கலம். முடிவிலி நிறைக்கட்டும் அதை. முடிவிலா கடுவெளி நிறைக்கட்டும் அக்கலத்தை. பெரும்பாழே அதை நிறைக்கட்டும்” என்றது. அன்றுதான் அச்சொற்கள் நான் உணராத பெரும்பொருள் கொண்டவை என்று உணர்ந்தேன். அவரிடம் மறுநாள் அதைப்பற்றி கேட்டேன்.

ஆனால் அவருக்கு அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. “நான் ஒன்று காட்டுகிறேன். நான் சொன்னதன் பொருள் அதிலிருந்ததென்றால் நீயே உணர்க!” என்று சொல்லி என்னை மட்டும் உச்சிமலைக்கு அழைத்துச்சென்றார். அங்கு மிக அணுகி ஒரு மலைப்பாறையை சுற்றிவந்தபின்னர்தான் ஒரு குகைவாயில் இருப்பது தெரிந்தது. அதற்குள் சுளுந்தொளியை ஏந்தியபடி என்னை அழைத்துச்சென்றார்.

விந்தையானதொரு கனவென என்னுள் நிறைந்திருக்கும் ஓவியத்தொகையை அங்கே கண்டேன். கருமைபடிந்த கற்சுவர்வளைவில் மின்னும் கருமையால் வரையப்பட்டவை அவ்வோவியங்கள். மெல்ல முதல் யானையை விழி அடையாளம் கண்டதும் யானைகள் தெரியலாயின. பின்னர் மேலும் மேலும் யானைகள். இறுதியில் அவ்விருளே யானைகளாலானதென்று தோன்றியது.

அந்த இருள்பரப்பால் முற்றிலும் சூழப்பட்ட மக்களைக் கண்டேன். அவர்கள் கடுங்குளிரில் என ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டு ஒற்றையுடலாக பாறையொன்றின் அடியில் கூடியிருந்தனர். வானில் இரு மெல்லிய அரைவட்டங்களாக இரு நிலவுகள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சூரியன் பிறிதொன்று சந்திரன் எனத் தெளிந்தேன். கூர்ந்துநோக்கியபோது மரங்கள் இலைகளை இழந்து கிளைகளில் வழிந்து உறைந்து தொங்கிய பனியுடன் நின்றிருக்கக் கண்டேன். இருளுக்குள் இருளாக பனியை வரைந்திருந்தனர். நோக்க நோக்க அச்சூழலே பனிமூடி உறைந்திருப்பதை அறியமுடிந்தது.

அக்கூட்டத்தில் ஒருவன் கரியவெற்றுடலும் பிடரிமேல் படர்ந்த சடையுமாக எழுந்து முதலில் வந்த பெருவேழத்தை எதிர்கொண்டான். அதன் இரு கொம்புகளைப்பற்றி நடுவே தன் வேலைச்செலுத்தினான். அதைக் கொன்று பிளந்தான். அதன் ஊனை வெட்டியெடுத்து உண்டது அவன் குடி. அவ்வூன்கொழுப்பை எரித்து அனலாக்கி அதைச்சூழ்ந்து அமர்ந்து வெம்மை கொண்டன. அதன் தோலை உரித்து விரித்து அதைப்போர்த்தியபடி உடல்கூட்டி அமர்ந்திருந்தன.

அப்பால் யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் அக்குலமூத்தானின் உருவத்தைக் கண்டேன். அதன் மத்தகத்தின் மேல் வலக்கால் ஊன்றி இடக்காலால் அதன் முன்வலக்காலை உதைத்து விலக்கி தலைக்குமேல் எழுந்த இரு கைகளால் அதன் பின்னங்கால்களை பற்றித்தூக்கி அத்தோலை தன்னைச்சூழ அமைத்து விழிகள் வானை நோக்க இதழ்களில் குறுநகையுடன் அவன் நின்றிருந்தான். அவன் காலடியில் வலப்பக்கம் சூரியநிலவும் இடப்பக்கம் சந்திரநிலவும் நின்றிருந்தன. அவன் உடல் செந்நிறத்தழலுருவாக வரையப்பட்டிருந்தது.

சிவம் என்னிடம் “மண்வடிவான அன்னை மகியின் ஆணைப்படி சூரியன் முற்றணைந்த காலம் ஒன்றிருந்தது. அன்று பகல் இருக்கவில்லை. முடிவடையாத இரவொன்றே திகழ்ந்தது. அன்று எங்கள் குலம் அழியாதபடி காக்க விண்ணிலிருந்து இறங்கி வந்த தெய்வம் இது. இதையே முதற்சிவம் என்கிறோம்” என்றார். நான் அந்த ஓவியத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அம்மூதாதையையே விடியல்கதிரவன் என வரைந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

அவன் காலடியின் சிவந்த அழலை செம்பாறைக்குழம்பால் வரைந்திருந்தனர். அச்செம்மை அவன் உடலில் கீழிருந்து மேல் நோக்கி வீசியது. நோக்க நோக்க அனல் வெம்மையை அறியமுடிவதுபோலிருந்தது. அந்த எரியொளி வட்டத்திற்கு அப்பால் இருள். யானைகளாகச் செறிந்து குகைவிளிம்புவரை சென்று மெய்யிருளுடன் முற்றாகக் கலந்தது அது. என்னைச்சூழ்ந்திருக்கும் மதவேழங்களை உடலால் உணர்ந்தேன். செவியசையும் காற்றை. துதிக்கை மூச்சை. அதன் ஈர ஊன்மணத்தை. மரப்பட்டைபோன்ற உடல்கள் உரசிக்கொள்ளும் ஒலியை.

“நெடுநாட்கள் அக்காட்சி என் நினைவுக்குள் இருந்தது. பின் அது கனவுக்குள் சென்று வளர்ந்தது. நான் ஒருபோதும் அதிலிருந்து விடுபட்டதே இல்லை” என்றார் பிச்சாண்டவர். “இந்த நிறையாக் கபாலம் என் கைக்கு வந்தபின் அதை மீண்டும் கண்டேன். நாம் நம் விலங்கியல்பால் சென்றுகொண்டிருக்கும் பாதையில் பெருநிழலென தொடர்ந்து வருகிறது. நனவின் இடைவெளியில் அதை நாம் ஓர் எச்சரிக்கை உணர்வு என அறியக்கூடும். கனவுகளில் அச்சமென காணவும் கூடும். ஆனால் மெய்மை விழைந்து திரும்பி நடக்கத் தொடங்கும்போது நேர் எதிரில் காண்கிறோம்.”

“நான் அதை எதிரில் கண்டநாளை நினைவுறுகிறேன்” என்று பிச்சாண்டவர் தொடர்ந்தார். “அஞ்சிக் கூச்சலிட்டபடி எழுந்து நின்றேன். என் உடலில் இருந்து நீரும் மலமும் வெளியேறிக்கொண்டிருந்த வெம்மையை உணர்ந்தேன். தடுக்கி விழுந்து எழுந்து ஓடி என் ஆசிரியர் காலடியில் விழுந்தேன். யானை யானை என்றுகூவினேன். ‘மரத்தை மறைக்கும் மாமதம்’ என அவர் புன்னகைசெய்தார். என்னை எழுப்பி அவர் அருகே அமரச்செய்து என் ஆயிரமிதழ்த்தாமரையின் மையத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். நான் அந்த யானையை என் முன் மிக அருகே கண்டேன்.”

“இரு நிலவுகள் எழும் யோகப்பெருநிலை” என்று பிச்சாண்டவர் சொன்னார். “அதைப்பிளந்தெழவேண்டுமென்பதே இலக்கு. கரியுரித்தெழும் கனலால் விடியும் காலை அது. நீளிருள் நீங்கும் தருணம்.” வைசம்பாயனன் அவரை நோக்கியபடி கனவிலென அமர்ந்திருந்தான். “எண்கரியை நீ கண்டுவிட்டாய். நன்று அவை ஒன்றெனத் திரண்டு உன்முன் எழுக!” என்றபின் அவர் தன் சுட்டுவிரலை நீட்டி அவன் நெற்றிப்பொட்டை தொட்டார். அவன் விழிகள் எடைகொண்டவைபோல சரிந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் விழிப்புகொள்ள முயலும்தோறும் சித்தம் சரிந்து மறைந்தது. விழிகளுக்குள் இருள் ஊறி நிறைந்து மூடியது.

இருளின் மெல்லிய அசைவை அவன் மிக அருகெனக் கண்டான். அது ஒரு தோல்சிலிர்ப்பு. இருளில் விரிசல்கோடுகள் என வரிகள். யானைத்தோல். மூக்குதொடுமளவுக்கு அண்மையில் அதை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் அகன்று அகன்று அதை முழுமையாகக் கண்டான். மிகப்பெரிய மத்தகம். இருபேருருளைகள். கீழே அவன் ஒரு வெண்தந்தத்தைக் கண்டான். அது நீரில் பிறையென அலையடித்தது.

“சிவோஹம்” என்னும் ஒலி கேட்டு விழித்துக்கொண்டான். அவர் அவன் விழிகளைக் கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்?” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்!” என்றார். “ஒற்றைப்பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா?” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா?” என்றார். “இல்லை” என்றான் “அதன் பாவை மட்டுமே.”

அவர் எழுந்துகொண்டு “நீ செல்லும் திசை வேறு” என்றார். “ஆசிரியரே…” என அவன் எழுந்துகொண்டான். “நீ கனவுகளினூடாக அங்கு சென்றடைபவன். சொல்லை அளைபவன். உன் ஆசிரியன் ஒற்றைநிலவில் விழிதிறந்திருக்கும் ஒருவன்.” அவர் தன் சூலத்தை ஊன்றியபோது எலும்புமணிகள் குலுங்கின. “ஆசிரியரே, என்னை கைவிடாதீர்கள்… என்னை அழைத்துச்செல்லுங்கள்” என்று அவன் கூவியபடி அவர் கால்களைப் பற்றினான்.

அவர் தன்னை விடுவித்துக்கொண்டு நடந்து இருளுக்குள் சென்று மறைந்தார். அவரை உள்ளிழுத்துக்கொண்டு இருள் நலுங்காமல் நிறைந்து சூழ்ந்திருந்தது. தன் ஆடைக்குள் இருந்து பாவையொன்றை எடுத்துக்காட்டி மறைத்துக்கொண்ட அன்னை. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகளாக விட்டுக்கொண்டு நெடுநேரம் அமர்ந்து பின் களைத்து படுத்துக்கொண்டான். அவ்வண்ணமே விழிமயங்கித் துயில்கொண்டான்.

பறவைக்குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். வாயைத்துடைத்தபடி எழுந்தமர்ந்தபோது அவன் உடலில் இருந்து எழுந்து பறந்தது கொசுப்படலம். செந்நிறத்தீற்றலாகத் தெரிந்த கீழ்வான் சரிவை நோக்கியபடி எழுந்து நின்றான். குளிருக்கு கைகளை கட்டிக்கொண்டான். முதற்பறவைகளின் தனிக்குரல்கள் இருளில் ஒலித்துக்கொண்டிருந்தன. சாம்பல்வானப் பின்னணியில் எழுந்து சுழன்று மீண்டும் இறங்கிய சிறிய பறவைகளைக் கண்டான்.

KIRATHAM_EPI_06

வான்சிவப்பு அடர்ந்து விரிந்தது. ஓடைகளாக செவ்வொளி வழிந்து பரவியது. இருண்டபரப்பை கிழித்துப்போர்த்தியபடி எழுந்த செவ்வுருவை அவன் கண்டான். அதன் தெற்கு மூலையில் மெலிந்த வெண்பிறை வெள்ளிக்கம்பி போல வளைந்து நின்றிருந்தது.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

தொடர்புடைய பதிவுகள்

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10

$
0
0

vannadasan-eruvadi7

 

அன்புள்ள சார்,

பல நாட்களுக்கு முன் சண்டை போட்டுவிட்டு வந்த வாடகைக்காரனின் குழந்தைகள், ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் பார்க்க வருகிறார்கள். சிறுவனும் சிறுமியும்.. அப்போது அவர் யோசிப்பார். தன் மனைவியும் கூட இருந்தால் எல்ஐசி விளம்பரம் போல நிற்கலாம் என. சண்டைக்காரனின் குழந்தைகளிடம் வேறு என்ன பேச முடியும்….

இன்னொரு கதை இமயமலையும் அரபிக்கடலும்.. தன் அம்மா, அப்பாவிடமும் அவரின் புது மனைவியிடமும் சண்டை போட்டுக்கொண்டிருப்பாள். அந்நேரத்திலும், அப்பா கச்சிதமாக அணிந்திருக்கும் துண்டையும், கொட்டாங்குச்சியில் நேர்த்தியாக சுண்டப்பட்ட சாம்பலுடன் பீடித்துண்டுகளும், கழுவப்பட்ட செருப்புமாய் இருக்கும் நேர்த்தியை கண்டு வியக்கிறாள் அந்தச் சிறுமி.

ஓவியர் போல கதை மாந்தர்களை தீட்டியளிக்கிறார் திரு.வண்ணதாசன் அவர்கள். சிறுகதையை படிக்கும் போதே அந்த சாலையில் உள்ள புளியமரத்தற்கு ஒரு எண்ணையும் என் மனதும் சேர்த்து எழுதிக்கொண்டிருக்கிறது.

முதுகில் தட்டி பேசியதால் ஒரு ஆட்டோக்காரர் இன்னும் நெருக்கமாகிறார். லோகு அண்ணாச்சி பக்கத்து வீட்டில் போர் போட்டு இறைக்கும் தண்ணீரை பெருமாள் கோயில் தீர்த்தமாய் அருந்துகிறார். நண்பனின் தங்கை புளியமரத்தில் காலாட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அதுவும் எப்படி?

இப்படி ஒவ்வொரு சிறுகதையிலும் ஒருவர். ஒரு சிறிய குறிப்பில் மொத்த அபிப்ராயத்தையும் மாற்றுகிற அல்லது இன்னும் நெகிழ வைக்கின்ற எழுத்தாளுமை. உயரப்பறத்தல் என்ற சிறுகதை தொகுதியின் பெயரைக் கண்டபோது ஒருநாள் தோன்றியது. சிறகடிப்பின்றி அமைதியாக உயரே பறக்கும் கருடன் கீழே சின்ன சின்ன அசைவுகளையும் நோட்டமிடுவது போல வண்ணதாசன்சாரும் உயரே நின்று பார்த்து எனக்கு எடுத்துரைக்கிறார் என்று.

அகம் புறம் தொடரில் ஒவ்வொரு கதைசொல்லிகளாக வந்து இறுதியில் பேருந்து நடத்துநர் குறித்து சொல்வார். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களையும் கண்முன் நிறுத்திவிடுவார் என்று.வண்ணதாசன் சாரும் அப்படித்தான். சங்கரியோ, கல்யாணி அக்காவோ, கோமதி அத்தையோ இவர் சிறுகதைகளில் வரும்போது ஒரு தொடர்கதையில் அல்லது நாவலில் ஆரம்ப அத்தியாம் தொட்டு படித்து வருபவர்கள் போன்றதொரு அருகாமையை அளிக்கிறார்கள்.

உயிர்மை விழாவில் அவரின் உரையைக் ஒருமுறை கேட்டேன். முறத்தில் அரிசியைப் புடைக்கும் போது எழுந்து வீழும் அரிசியைப்போல் நானும் எழுந்து வீழும் அல்லது வீழ்ந்து எழும் மனிதர்களின் கதையை அழகாக எழுதுகிறேன் என்று கூறினார். அந்த அழகாக என்ற வார்த்தை மனதில் அப்படியே தங்கிவிட்டது. பிறகொருநாள் கேணிக் கூட்டத்தில்.. அன்று நல்ல மழை. கேணியருகேயல்லாமல் கூடத்தில்தான் உரையாற்றினார். நான் மிகத் தாமதமாக சென்றிருந்தேன். கிட்டத்தட்ட கூட்டம் முடிந்திருந்தது.

இந்த விருது விழாவின்போது இருநாட்கள் அவரோடு உரையாடலாம் என்ற நினைப்பே மிகவும் உவகையளிக்கிறது.

விருது நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..

அன்புடன்,
R.காளிப்ரஸாத்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அவருடைய கதைகளையும் கவிதைகளையும் சென்ற நான்கு ஆண்டுகளாகத்தான் எனக்குத்தெரியும். சொல்லப்போனால் அவரை நான் வாசிப்பதே அவர் ஃபேஸ்புக் வந்தபிறகுதான். அவருடைய உலகத்தை நான் அறிமுகம் செய்துகொண்டாலும் உள்ளே போவது எளிதாக இருக்கவில்லை.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தஞ்சாவூர். இங்கே உள்ள மனநிலையே வேறு இங்கே எல்லாரும் நக்கல் கிண்டலுடன் பேசுவார்கள். ஜானகிராமன் எழுதியதைப்போல. வண்ணதாசனின் உலகிலே எல்லாரும் சென்ற காலத்தின் மீதி போல இருக்கிறார்கள். அல்லது வேறு எங்கோ வாழ்பவர்களின் நிழல்களைப்போல இருக்கிறார்கள். எவருமே சிரிப்பதில்லை. எவருமே கேலிகிண்டல் செய்வதில்லை

அதன்பிறகுதான் சுகாவின் எழுத்தை அறிமுகம் செய்துகொண்டேன். அப்போது மனநிறைவு ஏற்பட்டது. அவர்களும் சிரிக்கிறார்கள். அவர்களும் நக்கல் செய்துகொள்கிறார்கள். அப்படியென்றால் இது திருநெல்வேலி அல்ல. இதெல்லாம் வண்ணதாசனின் அகவுலகம் மட்டும்தான்

அந்தத்தெளிவு வந்தபின்னாடி வாசித்தபோதுதான் வண்ணதாசனை மிகவும் நெருக்கமாக்க முடிந்தது. அது அவரேதான் என்பதுதான் அவரை நாம் வாசிக்க அவசியமானது என நினைக்கிறேன்.

வண்ணதாசனுக்கு விருது அளிப்பதற்கு பாராட்டுக்கள்.

மனோகரன்

***

சின்ன விஷயங்களின் மனிதனுக்கு விஷ்ணுபுரம் விருது..

சின்ன விஷயங்களின் மனிதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவித்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றிச்செண்டு, வண்ணதாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். விருது அறிவித்த அன்றே அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன்.

அவரை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது’ போன்றது என்று நண்பர்களிடம் கூறுவேன். கடந்த 2015-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ‘சின்ன விஷயங்களின் மனிதன்’ புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்? புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறிய விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பு என்னை மிகவும் ஈர்த்தது. அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்:

“யானையைக் கூட

அடிக்கடி பார்க்க முடிகிறது

மாதக் கணக்காயிற்று

மண்புழுவைப் பார்த்து.”

எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்!

இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்! ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனையும் இந்த மண்புழுக்களே. நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவைகள் இந்த யானைகள். அதைப் பற்றிய கவலை அவருக்கு இருந்திருக்கலாம். இப்படி வரிகளுக்கிடையே வாசித்து அதை நிரப்பிக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. அப்படித்தான் உங்களுடைய ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதையை நிரப்பி வைத்திருக்கிறேன். இப்போது “என்னைவிட சிறப்பாக ஒரு எழுத்தாளர் புனைகதையில் சொல்லிவிடக்கூடும்” என்று அந்த ஜப்பானியர் கூறும் எழுத்தாளர் யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். அவரிடமே இறப்பைப் பற்றி பேச இருக்கிறேன்.

பற்றி யோசிக்கும் போது எனக்குள் தோன்றிய வரிகளை எழுதிவைத்திருக்கிறேன்.

நான் பலரிடம் அவரை அறிமுகப்படுத்துவதற்காகக் கூறிய “யானைகளுக்கிடையே நெளியும் மண்புழு” வரிகளையும், என்னுடைய வரிகளையும் சென்னை புத்தகக் காட்சியில் அவரை சந்தித்தபோது அவரிடமே கூறினேன். உரக்கச் சிரித்து அங்கீகரித்தார். புகைப்படங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளுக்குக் கூட உயிர் கொடுக்க முயற்சிக்கும் அவருடைய பரிவும், மென்மையும், அவரால் கல்லைக் கூட எழுத்தின் மூலம் நடக்க வைக்க முடியும். புத்தகக் கண்காட்சியில் அவருடன் நான் நிற்கும் காட்சியைப் படம் பிடித்து வைத்திருக்கிறேன் என் வரிகளை அங்கீகரித்த அவரின் சிரிப்போடு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவருக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று நானும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவரது புன்னகையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

அன்புடன்,

மாதவன் இளங்கோ

பெல்ஜியம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நோபல் கடிதங்கள்

$
0
0

 

Bob-Dylan-Xavier-Badosa-Huck-958x559

 

அன்புள்ள ஜெ.

உங்களிடம் இது பற்றி கேட்கவேண்டும் என்று இருந்தேன். சற்று பொறுத்து இருக்கலாம் என்று தோன்றியது. நீங்களே எழுதி விட்டீர்கள்.

பொதுவாக அமைதி பரிசு மட்டும் – ஒரு சமூகத்திற்கு செய்தியாக – சற்று அரசியல் கலந்து இருக்கும். மற்றபடி அறிவியல், பொருளாதாரம் மற்றும் இலக்கியத்தில் ஒரு தரம் இருக்குமோ என்றும், தரம் இருக்கலாம் என்கிற ஐயப்பாட்டுடன் ஒலிக்கும் (த்வனிக்கும் என்பதாக).

ஒருவேளை எல்லாவற்றிலும் சற்று அருகில் சென்றால், சிக்கல்கள் அதிகமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பாப் டிலன் – இலக்கிய பரிசு – சற்று கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. சில வருடம் – இலக்கிய பரிசு இல்லமால் இருந்து இருக்கிறது. அது மரியாதையை காப்பாற்றி இருக்கும்.

சுமாராக பட்டியல் எடுத்தால் – 25 பேர் (நோபல் பரிசு பெற்றோர்) வாசித்து இருக்கிறேன். இலக்கிய விமரிசகன் அல்லன் . வாசகனாக என்னை ஊக்குவித்து இருக்கிறது.ஆனால் அவை சமீப கால எழுத்துக்கள் அல்ல.

2016 நோபல் பரிசு பற்றி பல கேலி விமரிசனங்கள் – என்னைக் கவர்ந்தது -

நோபல் கமிட்டிக்கு என் அனுதாபங்கள் – அவர்களின் முடிவு முற்றிலும் புரிகிறது. புத்தகங்களை படிப்பதுதான் எவ்வளவு சிரமம்!

ஒருபுறம் தொழில் நுட்பத்தின் விளிம்பில் – ஆழத்தில் – இதனை இன்னும் சிறப்பாக செய்யலாமே – மொழி கடந்து – மென்மையான – அனுபவங்களை மரியாதை செய்யலாமே என்றெல்லாம் தோன்றுகிறது.

மறுபுறம் – ஒரு வருட ட்விட்டர் செய்தி கூட இலக்கிய அங்கீகாரம் பெறலாம் என்கிற சாத்தியத்தின் புதுமைக்கு நான் தயாராக இல்லையோ என்றும் தோன்றுகிறது.

ஒருவேளை புதிய நூற்றாண்டிற்கு நாம் தயாராக வேண்டும்.

அதில் வேவ்வேறுவிதமான முயற்சிகள் அங்கீகரிக்கப் படவேண்டும் – நமக்கு பழக்கமில்லாத புதிய கூறுகள் வரலாம். நாம் புறக்கணித்த சில அடிப்படை அறிவியல் சேர்க்கப் படவேண்டும். கணிதம் சேர்க்கப் படவேண்டிய ஒன்று என தோன்றும். (சமுதாயத்திற்க்கு நேரடியாக உதவாது – என்கிற நிலை மாறி – குறைந்த பட்சம் வருடங்கள் இருபத்திற்கு மேலாகிறது). தொழில் நுட்ப யுகத்தில் நோபல் குழு மெய்நிகராக (virtual) இருக்கலாம்.

புதுப்பித்தல் மூலம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறலாம். புதியன இணைதலாக, பழையன பெருகுதலாக..

திடீரென நம்பிக்கை துளிர்கிறது.

அன்புடன் முரளி

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நோபல் பரிசு பற்றி எழுதப்பட்ட குறிப்பு கண்டேன். நோபல் கமிட்டி மிக அசட்டுத்தனமான முடிவைத்தான் செய்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. நோபல் பரிசு பாடலுக்கு அளிக்கவேண்டுமென்றால் பாடலுக்கான ஒரு நோபல் பரிசைத்தான் உருவாக்கவேண்டும். அதை கவிதையாகப் பார்ப்பதென்றால் அதன் கவிதை மதிப்பை மட்டும்தான் பார்க்கவேண்டும்

இல்லை, சம்பிரதாயமான முடிவுகளை மீறுகிறார்கள் என்றால் மொழியை எல்லா வகையிலும் பயன்படுத்துபவர்களை ஏன் கணக்கிலே கொள்ளவில்லை? மொழியை மிகத்திறமையாக உபயோகித்தவர்கள் ரோலான் பார்த், தெரிதா போன்றவர்கள். இவர்களை எல்லாம் விட ஒரு படி மேல் லக்கான். அற்புதமான மொழிவிளையாட்டுடன் எழுதியவர்

சட்டம், அரசியல் என எல்லாவற்றிலும் மொழி இன்று பயன்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் இலக்கியமாகக் கொள்ளலாம் என்றால் இலக்கிய அளவுகோல்தான் என்ன?

நோபல் பரிசு செய்யவேண்டிய வேலை உள்ளது/ அது உலகமெங்கும் உள்ள பண்பாடுகளிலிருந்து நல்ல எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்யவேண்டும். நஜீப் மஃபூஸ் பொல. அதையெல்லாம் செய்ய அவர்களுக்கு மனமும் இல்லை. ஆட்களும் இல்லை

ஆகவே இப்படி காமெடி செய்கிறார்கள். அதாவது அமெரிக்காவின் பாட்டெழுத்தாளருக்குக் கொடுத்தாலும் கொடுப்போமே ஒழிய ஒரு ஆசிய எழுத்தாளனுக்குக் கொடுக்கமாட்டோம் என்பது இதன் நீதி

முகமது ஷெரீஃப்

***

ஜெ

நோபல் பரிசு பெற்ற பாப் டைலனின் பல பாடல்கள் யூ டியூபில் உள்ளன. அவற்றில் எனக்குப்பிடித்த ஒன்று

ஆனால் வரிகளை மட்டும் பார்த்தால் என்ன கவித்துவம் என்றே புரியவில்லை. நம்மூர் கத்தரின் பாடல்களைப்போல இருக்கிறது

எண்பதுகளில் நான் கத்தரின் பாடல்நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். கொந்தளிப்பாகவே இருக்கும். ஆனால் அவற்றை வரிகளாக வாசித்தால் பொங்கி எழு புரட்சி செய்என்று மட்டும்தான் இருக்கும்.

நோபல் பரிசுக்குழு காலத்துக்கு ஏற்பமாற முடிவு செய்திருக்கிறது. ஆனால் அது தான் நம்பும் விழுமியங்களுக்கு ஏற்பத்தான் நின்றிருக்கவேண்டும்

ஆனால் அமெரிக்காவின் அடிப்படையான ஒரு அறிவுத்தளம் மழுங்கிவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன். அமெரிக்கருக்கு நோபல் என்று அவர்கள் எம்பிக் குதிக்கவில்லை. கறாராகவே பார்க்கிறார்கள். நோபல் பரிசை கண்டித்து பலர் எழுதிவிட்டார்கள்

இன்றுவரை பாப் டைலன் நோபல் பரிசை பெற ஒப்புக்கொள்ளவில்லை. அந்தத் தயக்கமே அங்கிருக்கும் விமர்சனத்தைப் பயந்துதான். அந்த சமரசமில்லாத தன்மைதான் இன்றைக்கு அவசியத்தேவை

சொல்லவிட்டுப்போய்விட்டது. பாடகருக்கான எந்த விருதுக்கும் பாப் டைலன் தகுதியானவர்தான்

ஜெயராமன்

 

 

 

 


தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இரண்டு வெங்கட் சாமிநாதன்கள்

$
0
0

vesa

 

அன்புள்ள ஜெ,

சிங்கப்பூர் கமலாதேவி அரவிந்தனின் கதைகளை வானளாவப்பாராட்டி வெங்கட் சாமிநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். மிகக்கறாரான விமர்சகர் என்று பெயர் பெற்றவர் அவர். இங்குள்ள பல மூத்த எழுத்தாளர்களைக் காய்ச்சி எடுத்தவர். அசோகமித்திரனுக்கு இலக்கியமே தெரியாது என்று எழுதிக்கொண்டே இருந்தவர். கமலாதேவி அரவிந்தனின் கதைகள் அசட்டுத்தனமானவை என நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். வாசகர்கள் எதைக்கொள்ளவேண்டும்?

சீனிவாசன்

*

அன்புள்ள சீனிவாசன்,

இரண்டையும் கொள்ளவேண்டாம். நான் சொல்வதையும் அவர் சொல்வதையும் அந்தத் தொகுதியின் கதைகளை வைத்து பரிசீலியுங்கள். வாசகன் செய்யவேண்டியது அதுதான். நாங்கள் சொல்லும் முடிவுகள்  ‘தீர்ப்புகள்’ அல்ல. அவை பரிந்துரைகள், கருத்துக்கள் மட்டுமே. வாசகன் தன்னுள் நிகழும் இலக்கியவிவாதத்திற்கு இக்கருத்துக்களைத் துணைகொள்ளவேண்டும். தன் மதிப்பீட்டு உருவாக்கத்திற்கு இவற்றை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இலக்கியவிமர்சனம் அதற்காகவே.

இலக்கியவிமர்சனம் இலக்கியவாசகனிடமே பேசுகிறது. இலக்கியத்தை வாசித்தாலும் ஒன்றும் புரியாதவனுக்கு இலக்கியவிமர்சனத்தால் ஒரு பயனும் இல்லை. வாசகனுக்குள் உருவாகும் அறிதலையும்உணர்தலையும் விரிவாக்கம் செய்ய, கூர்மைசெய்ய மட்டுமே இலக்கியவிமர்சனம் பயன்படும்.

இலக்கியவிமர்சனம் என்பது ஒரு சூழலில் இலக்கியம் சார்ந்த விவாதத்தை உருவாக்கி நிலைநிறுத்துவது. மாறுபட்ட கோணங்களில் வாசிப்பை உருவாக்குவது. இலக்கிய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்துகொண்டிருப்பது.

இலக்கியவிமர்சனம் வழியாக பல்வேறு கோணங்கள் ஒரு சூழலில் திறக்கப்பட்டு பலவகை மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமாகவே இலக்கியம் சார்ந்த பொதுவான மதிப்பீடுகள் நிலைநிறுத்தப்படுகின்றன

உதாரணமாக நாம் இன்று நவீனத்தமிழிலக்கியம் என்று சொல்லும் எழுத்தாளர் மரபு பெரும்பாலும் க.நா.சுவின் பட்டியலை ஒட்டியது. ஆனால் அவர் முன்னிறுத்திய ஆர்.ஷண்முகசுந்தரம், ந.சிதம்பர சுப்ரமணியம் போன்றவர்கள் இன்றைய பொதுப்பட்டியலில் இல்லை. அவர் புறக்கணித்த ப.சிங்காரம் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.

இது ஏன் நிகழ்கிறது? எந்த விமர்சனத்திலும் முழுமையான மதிப்பீடு வெளிப்படமுடியாது. க.நா.சு கச்சிதமான வடிவம், கட்டுப்பாடான நடை, புறவயமான கூற்று ஆகியவற்றை முன்வைத்தவர். ப.சிங்காரத்தில் வடிவ ஒருமை இல்லை. கட்டற்ற நடை உள்ளது. அந்தரங்கமான மொழி பயில்கிறது. ஆகவே க.நா.சுவால்  ப. சிங்காரத்தை ஏற்கமுடியவில்லை. ஆனால் எனக்கு க.நா.சுவின் அந்த அளவுகோல் முழுமையாக ஏற்புடையது அல்ல. ஆகவே நான் ப.சிங்காரத்தை வலுவாக முன்வைத்தேன்

அதேபோலத்தான் அசோகமித்திரனை வெங்கட் சாமிநாதன் நிராகரித்ததும். வெ.சாமிநாதன் கலையின் ‘பித்துநிலை’யின் உபாசகர். டிரான்ஸ் என அதைச் சொன்னார். ஆகவே அவருக்கு லா.ச.ரா ஆதர்சம். அசோகமித்திரனும் ஜெயகாந்தனும்  உலகியலின் எழுத்தாளர்கள்.கீழானவர்கள்.

நான் வெங்கட் சாமிநாதனின் நண்பனாக இருந்தவன். என்னை அவர் எப்போதுமே பாராட்டிவந்தார். ஆயினும் நான் அவருடன் முரண்பட்டும் விவாதித்தேன். எனக்கு அசோகமித்திரன் முக்கியமான எழுத்தாளர். என்னைப்பார்க்கும்போதெல்லாம் வெங்கட் சாமிநாதன் அசோகமித்திரனை விமர்சனம் செய்ய ஆரம்பிப்பார்

இந்தப் பார்வைமாறுபாடு எப்போதுமே இலக்கியத்தில் உண்டு. இந்த விவாதச்சூழல் வழியாகவே இலக்கியவாசிப்பின் பலகோணங்கள் விரிகின்றன.இவை ஒரு சூழலில் முட்டிமோதித்தான் அழகியல்விவாதங்கள் நிகழ்கின்றன. பொதுமுடிவுகள் உருவாகின்றன

ஆனால் அதெல்லாம் கமலாதேவி போன்றவர்களின் கதைகளுக்குப் பொருந்துபவை அல்ல. ஒரு மிகமிக எளிய இலக்கியவாசகன் கூட அவை அசட்டு எழுத்துக்கள் என்று சொல்லிவிடமுடியும். அப்படி உணராதவனை நான் இலக்கியக்கேணையன் என்பதற்கு அப்பால் மதிக்கப்போவதில்லை.

அப்படியென்றால் என்ன ஆயிற்று வெங்கட் சாமிநாதனுக்கு? அவரது அந்த மதிப்புரையை முதுமையின் அசட்டுத்தனம் என்று மட்டும்தான் சொல்லமுடியும். வயதான காலத்தில் அவர் இதற்கும் கீழே இறங்கி மகா அசட்டுத்தனமான எழுத்துக்களை எல்லாம் கொண்டாடி எழுதிவைத்திருக்கிறார்.

வயதான விமர்சகனின் நரகம் ஒன்றுண்டு. அவன் எதன்பொருட்டு பேசினானோ அதெல்லாம் அவன் உருவாக்க்கிய விவாதங்களாலேயே ஏற்கப்பட்டு, இயல்பானகருத்துக்கலாக ஆகும்போது அவன் காலத்தில் பின்னகர்ந்துவிட்டிருப்பான். அவன் குரல் பொருளற்றதாக ஆகிவிட்டிருக்கும். வெங்கட் சாமிநாதன் வாழ்நாளெல்லாம் இடதுசாரி இலக்கியக்குறுக்கல்களுக்கு எதிராகப்போராடியவர். இடதுசாரி எழுத்துக்களின் கோணத்தை அவரால் மாற்றவும் முடிந்தது. ஆனால் அதன்பின் அவருக்கு இடமில்லாமல் ஆகியது

அந்தத் தனிமையில் அவர் தன்னை அணுகுபவர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பவராக ஆனார். அசோகமித்திரனை நிராகரித்த வெங்கட் சாமிநாதன் அல்ல, கமலாதேவிக்கு முன்னுரை எழுதிய வெங்கட் சாமிநாதன். இவர் தனிமையில் நொந்துபோய் வாசலைப்பார்த்து அமர்ந்திருக்கும் கிழவர். மதிப்பீடுகள் மழுங்கிப்போனவர்

அப்படி வெங்கட் சாமிநாதன் ஒரு கவிஞருக்கு எழுதிய வாழ்த்துக் கட்டுரையை வாசித்துவிட்டு அவருக்கு மிகக்கோபமாக எழுதினேன். ’graceful ஆக சாவது ஒரு கலை. அது உங்களுக்கு வாய்க்கவில்லை. பழைய வெங்கட் சாமிநாதன்மேல் சாணியை அடித்துவிட்டுதான் சாவீர்கள்’. அப்படிச் சொல்லும் உரிமை எனக்கிருந்தது. சாமிநாதன் அதற்கு வழக்கம்போல வேடிக்கையாகவும் நக்கலாகவும் ஒரு பதில் எழுதியிருந்தார்.

வயதான காலத்தில் சாமிநாதன் அதுவரை பேணிய அனைத்துச் சமநிலைகளையும், நவீன இலக்கிய மதிப்பீடுகளையும் இழந்து சாதியுணர்டனும் மதவெறியுடனும் எழுதிய பல பதிவுகள் இணையத்தில் சிதறிக்கிடக்கின்றன. அவற்றைக்கொண்டே அவரைக்கொண்டாடும் ஒரு கும்பலும் உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு பழைய வெங்கட் சாமிநாதனைத் தெரியாது. இவற்றைக்கொண்டே அவரை அவர்கள் வரையறைசெய்து காலத்திற்கு அளிக்கிறார்கள்.

இந்தக் கடைசிக்கால வெங்கட் சாமிநாதனுக்கும் தமிழில இலக்கிய அழகியலின் கட்டுப்பாடற்ற தன்மையை, கலையின் ஒருங்கிணைந்த வெளிப்பாட்டை, அறத்துக்கும் கலைக்குமான உறவை முன்வைத்து விவாதித்த எண்பதுகள் வரையிலான வெங்கட் சாமிநாதனுக்கும் சம்பந்தமே இல்லை.இன்று கமலாதேவியின் கதைகளை வாசித்துவிட்டு ஒருவன் அவற்றை வியந்துபாராட்டியவர் என வெங்கட் சாமிநாதனை மதிப்பிட்டான் என்றால் பழைய வெங்கட் சாமிநாதனை அவன் உச்சகட்டமாகக் கேவலப்படுத்துகிறான் என்றே பொருள்.

ஆகவே இரு வெங்கட் சாமிநாதன்களையும் வேறுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.  நான் கொள்ளவிரும்புவது அந்த ‘பாலையும் வாழையும்’ வெங்கட் சாமிநாதனை மட்டுமே. அடுத்த தலைமுறைக்குமுன் நிறுத்த விரும்புவதும் அவரைத்தான். அவர் நான் உட்பட ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் எதிர்கொண்டு விமர்சித்து விவாதித்த ஒரு முதன்மையான தரப்பு.

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8

$
0
0

[ 3 ]

முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி  பாலாழியைக்  கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர்.  இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும் பொறிக்கப்பட்டு காலமின்மையில் துயின்றிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக கண்விழித்தெழுந்தன.

பால்வண்ணப் பேரேட்டில் ஆமென்றும் அல்லவென்றும் குறிக்கும் ஓமென்ற எழுத்தால் எழுதப்பட்டிருந்த  பிரக்ஞாதேவி என்னும் அன்னை எட்டு கைகளுடன் விழித்தெழுந்தாள். அவள் முன்பக்கம் பொன்னிறமும் பின்பக்கம் கருநிறமும் என இருபுறமும் முகமும் முலைகளும் இடையும் கொண்டிருந்தாள். பேரழகும் நுண்ணறிவும் தண்ணளியும் கொண்டு மலர்ந்திருந்தது ஒரு முகம். மறுபக்கம்  எழுந்த முகம் கொடுமையும் மடமையும் கீழ்மறமும் என சுளித்திருந்தது.

சுழன்று சுழன்று ஒன்றுபிறிதெனக் காட்டி மேலெழுந்தாள் பிரக்ஞை. அவளை நோக்க பாலாழியின் பலகோடி மீன்கள் விழிகளாக எழுந்து சூழ்ந்தன. “இவள்! ஆம், இவள்!” என்று வியந்தன அவை. அவள் அசைவில் எழுந்த குமிழிகள் சொற்களென்றாகி ஒளிகொண்டன. பாலாழியின் மேல்விளிம்பை அடைவதற்கு முற்கணம்  தேவர்கள் “எங்களுள் அழியாதிருப்பவளே, எழுக!” என்று கூவிய ஒலி கேட்டதும் தேவியின்  கொடுமுகம் மறுமுகத்தை இடக்காலால் உதைத்து உந்தி விலக்கி தான் மேலெழுந்து வந்தது.

அவள் தோற்றத்தைக் கண்டு திகைத்த தேவர்கள் தங்கள் பிடியை நழுவவிட்டு அஞ்சிக் கூவியபடி பின்னகர்ந்தனர். இளித்த வாயும் வெறித்த விழிகளுமாக அவள் தேவர்களை நோக்கி பேருருக்கொண்டு விண்நிறைத்து மிதந்துசென்றாள்.  நாகவடம் நழுவ அதை இழுத்தோடியபடி கூவிக் களியாடிய அசுரர் “எங்களுள் விடாயென இருப்பவளே, எழுக!” என்று கூவியபோது தேவியின் இன்முகம் புன்னகையும் அருளுமாக எழுந்து, பொன்னொளி விரிய அவர்களை நோக்கி சென்றது. திகைத்து விழிகூட மேலே நோக்கி சொல்லவிந்தனர் அசுரர். அவர்கள் கைநழுவி நோக்கித் திகைத்த கணத்தில் தேவர்கள் தாங்கள் இழந்த நீளத்தை மீட்டெடுத்தனர்.

இரு அன்னையரும் எழுந்து விண்ணில் நின்றிருக்க  இருண்டும் குளிர்ந்துமிருந்தது வானத்தில் பாதி. ஒளிர்ந்து வெம்மைகொண்டிருந்தது மறுபாதி.  முனிவர்களின் மெய்மை அவரைவிதையென இரண்டாகியது. அவர்களில் ஒருபாதி கைகூப்பியபடி எழுந்து “விண்ணளந்தோனே, நீங்களே காக்க வேண்டும்! இத்தெய்வங்களை வென்றருளவேண்டும்” என்றது. மறுபாதி ஓடிச்சென்று முழந்தாளிட்டு “அனலுருவோனே, இத்தெய்வங்களை நீங்களே கொண்டருள்க!” என்று கூவியது.

விஷ்ணு பொன்னுருவ அன்னையைச் சுட்டி “இன்முகம் கொண்ட இவள் என் நெஞ்சமர்ந்தோளின் மாற்றுருவென்றிருக்கிறாள். இவள் என் துணைவியென்றமைக! எங்கெல்லாம் பதினாறு செல்வங்களும் எட்டு மங்கலங்களும் பொலிகின்றனவோ அங்கெல்லாம் இவள் வழிபடப்படுக!” என்றார்.  மூன்று கைவல்லிகளில் தாமரை மலரும் வெண்சங்கும் சுடரும் ஏந்தி வலக்கை அருளி நின்றிருக்க அன்னப்பறவைக் கொடியுடன் வெண்யானை மேல் எழுந்த அன்னை அவர் வலக்கையின் செந்நிற வரியோடிய குழிவில் சென்று குடிகொண்டாள்.

மூன்று கைகளில் பாசமும் அங்குசமும் துடைப்பமும் ஏந்தி, அருட்குறி அமைந்த இடக்கையுடன், நாகமாலையை கழுத்தில் சூடி, காகக்கொடி பறக்க, கழுதைமேல் எழுந்து கோரைப்பல்காட்டி  உறுமிய அன்னையை ஆதிசிவன் தன் மகளெனக் கொண்டார். அவள் சென்று அவர் காலடியில் பணிந்துநிற்க இடக்கால் தூக்கி அவள் மடியில் வைத்து அருளளித்தார். “துயர்கொண்ட உள்ளங்களில் நீ குடிகொள்க! இருளும் அழுக்கும் கெடுமணமும் உன் இயல்பாகுக! உண்மையென்பது உன் வடிவும் ஆகுக!” என்று செம்மேனியன் அருள்புரிந்தார்.

சிவமகளை வருணன் மணந்தான். மூத்தவளும் இளையவளும் வடக்கிலும் தெற்கிலுமென குடிகொண்டனர். இரு அன்னையரில் ஒருவரை வழிபடுபவர் பிறிதொருவரின் சினத்திற்காளாவார்கள் என்றனர் முனிவர். நூல்நெறிப்படி அமைந்த ஆலயங்களில் முதுகொடு முதுகொட்டி இருபுறமும் நோக்கி அவர்கள் அமர்ந்திருந்தனர். இருவகை உலகத்தியல்பு அறிந்த முனிவர் இருவரையும் நிகரென வணங்கி அருள்பெற்றனர். அவர்கள் நெஞ்சில் மீண்டும் ஓருருக்கொண்டு இணைந்து அவள் பிரக்ஞாதேவி என்றானாள். அவளை அவர்கள் ஊழ்கத்தில் முகம் கண்டு புன்னகைத்தனர். அப்புன்னகை தெரிந்த மானுடரை முனிவர் என்றனர் கவிஞர்.

[ 4 ]

காம்யக வனத்திற்குத் தெற்கே இருந்த காளிகம் என்னும் குறுங்காட்டுக்குள் முன்பு ரகுகுலத்து ராமனும் அவன் இளையோனும் வழிபட்ட பேராலயமொன்றிருந்தது. அங்கு குளிரும் இருளும் நிறையவே முனிவர் அவ்விடம் நீங்க அது கைவிடப்பட்டு காட்டுப்பெருக்கால் உண்ணப்பட்டது. வேர்களுக்குள் கிளைகளுக்கு அடியில் இரு கல்லுருவங்களாக மூத்தவளும் இளையவளும் மூழ்கிக்கிடந்தனர். அவர்களுக்குமேல் எழுந்து பச்சைகொண்ட மரங்களில் நறுந்தேன் சூடிய மலர்கள் விரிந்து வானொளிகொண்டு நின்றன.

சாந்தீபனி குருநிலையில் இருந்து தன் தோழனைத் தவிர்த்து தனியாகத் திரும்பிய இளைய யாதவர் தன் எண்ணச்சிதறலால் வழிதவறி கால் கொண்டுசென்ற போக்கில் அக்காட்டுக்குள் நுழைந்தார். உலகில் கொள்வனவற்றையும் சூழ்வனவற்றையும்  எண்ணி எண்ணி அலமலந்த உள்ளம் கொண்டிருந்தமையால் வழியை அவர் அறியவில்லை. வழியறிந்தபோது விடாய் கொண்டு உடலெரிவதை உணர்ந்தார். மலர்பூத்த மரம் மீது பறவைகளின் ஒலி கேட்டு அங்கு வேர் அருகே நீரோடை இருப்பதை உய்த்தறிந்தார்.

KIRATHAM_EPI_08

தன் காலடிகள் தன்னை தொடர்ந்தொலிக்க அந்த மலர்மரத்தடியில் வந்து நீரோடையைக் கண்டு அள்ளி அருந்தியபின் இளைப்பாற வேர்ப்பற்றில் அமர்ந்தார். எண்ணம் எழுந்து சூழ உடல்தளர்ந்து விழிமூடி மயங்கியபோது அவர் பெண்குரல் விசும்பியழும் ஒலியை கேட்டார். தன்னுள் எழுந்ததோ அவ்விசும்பல் என்று திகைத்தார். பின் விழித்தெழுந்து நோக்கியபோது கருநிறமும் கெடுமுகமும் கொண்ட பெண் ஒருத்தி உடல்குவித்து அமர்ந்து அழுவதைக் கண்டார்.

அவளை அணுகி “பெண்ணே, நீ யார்?” என்று அவர் கேட்டார். “என்னை மூத்தவள் என்பார்கள். இக்காட்டில் நான் கோயில்கொண்டிருக்கிறேன்” என்றாள். “நீ அழுவது எதனால்?” என்றார். “தனித்து கைவிடப்பட்டவர்கள் அழுவதே இயல்பு” என்று அவள் சொன்னாள். “நீ கைவிடப்பட்டது ஏன்?” என்றார். அவள் தன் கையை நீட்டிக்காட்டினாள்.  அதில் இருந்து ஒளிவிட்ட அருமணியைக் கண்டு அவர் அருகணைந்தார். அவள் “என் விழிநீர்த்துளியால் உருவானது இது. இவ்வரிய மணியை நிகிலம் என்றழைக்கிறார்கள். இதை என்னிடமிருந்து பெற்றுச் சூடாமல் எவரும் மெய்மையை அறிவதில்லை” என்றாள்.

“இங்கு வாழ்ந்த ஒவ்வொரு முனிவருக்கும் இதை நான் நீட்டியிருக்கிறேன். எவரும் இதை பெற்றுக்கொண்டதில்லை. எவரும் ஏற்காத இந்த அருமணி என் கைகளை அனல் என எரிக்கிறது. அதன் துயர்தாளாது நான் அழுகிறேன்.” அவர் அதை நோக்கியபடி “இவ்வருமணியின் சிறப்பென்ன?” என்றார். அது ஒரு விழிமணி போலிருந்தது. “யாதவனே, நீ நோக்கியறிந்த ஒவ்வொன்றிலும் மறைந்துள்ள பிறிதொன்றுள்ளது. அதை இது காட்டும்” என்றபடி அவள் புன்னகைத்தாள். “இதன் ஒளியில் ஒவ்வொன்றும் நிலைமாறும். உன்னைச் சூழ்ந்துள்ள இப்புடவி முற்றிலும் திரிந்து உருமாறும்.”

அவள் கண்களை நோக்கியபடி அவர் திகைத்து நின்றார். “ஆம், இது எளியவர்களுக்கு உகந்தது அல்ல. அறிக, கோழைகளுக்குரியதல்ல மெய்மை! தன்னை உரித்து தான்போர்த்தி நின்றாடுபவர்களுக்குரியது அப்பாதை. தன்னைக் கொன்று தானுண்டு செரித்து மேலேறும் மாவீரர்களுக்குரியது அம்மலைமுடி. தன்னை நீறாக்கி தானணிபவர்களின் வானம் அது. சொல்க,  நீ அவர்களில் ஒருவனா?”

அவர் மூச்சடைக்கும் அச்சத்துடன், விழிவிலக்கவொண்ணா பேரார்வத்துடன்  அவளை நோக்கி நின்றார். “அறிதலென்பது நீ அறியத்தொடங்கிய நாளிலிருந்தே இனிதென்றே உன்னை வந்தடைந்திருக்கும்.  உண்ணும் புணரும் தழுவும் வெல்லும் கொள்ளும் இன்பங்களை சிறு திவலைகளென்றாக்கும் பேரின்பமே அறிதலென்பது.” அவள் விழிகள் நாகவிழிகளின் ஒளிரும் வெறிப்பு கொண்டிருந்தன. “ஆனால் அறிக, உவகையினூடாக அறிவது அறிவின் ஒருபக்கம் மட்டுமே. கடுந்துயரும் கசப்பும் வலியும் கொண்டு கணம் கணமென வதைபட்டு அறியும் அறிவும் ஒன்றுண்டு. அவ்வறிவாலும் இவையனைத்தையும் அறிந்தவனே மெய்யறிவன்.”

அவள் நுண்சொல் ஓதும் பூசகிபோல காதருகே காற்றசைவென பேசினாள். “அவன் அறியும் வேதம் வேறு. அவன் அடையும் வேதநிறைவும் மற்றொன்று. இருமையென அறிந்து ஒருமையென்றாக்கி அறிவதே மெய்மை.” அவர் தோள்களில் அவள் தன் கைகளை வைத்தாள். அவள் வாயிலிருந்து மட்கிய ஊன்நாற்றம் வீசியது. பீளைபடிந்த பழுத்த விழிகள் நோக்கிழந்த இரு துளைகளென்று தோன்றின. “உலர்ந்த குருதியில் மட்கும் பிணங்களில் எரியும் மயிரில் எழும் சொற்களின் வேதம். சீழில் சளியில் மலத்தில் அழுகலில் எழும் வேதம். கண்ணீரில் கதறலில் வசைகளில் சாவில் எழும் வேதம். அதைக் கல்லாது நீ அறிவதுதான் என்ன?”

அவர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து “ஆம், உண்மை” என்றார். “நானறிந்த வேதம் குறைபட்டதென்பதை ஒவ்வொரு சொல்லும் எனக்கு உணர்த்துகிறது. நான் கொண்ட பெருஞ்சோர்வு அதன்பொருட்டே.”  “நீ அவ்விழிகளால் அதைப் பார்க்க முடியாது. அந்த மெய்மையை அறியும் ஒளிவிழி இதுவே” என அவள் அந்த அருமணியை அவர் கண்களுக்கு முன் காட்டினாள். “கொள்க! இனியவனே, இதைக் கொள்க! உனக்கென்றே இன்று என் கையில் பூத்துள்ளது இது.”

அவள் கறைப்பற்கள் நடுவே சிறியவெண்புழுக்கள் நெளிந்தன. கரியநாக்கு பெரிய புழுவென துழாவியது. காம்பு கூம்பித் தொங்கிய வறுமுலைகள் அவர் மார்பின் மேல் படிந்தன. எலும்பெழுந்த கைகள் அவர் தோளை வளைத்து அவர் முகத்தை தன் முகம் நோக்கி இறுக்கின. அவள் மூச்சில் புண்சலம் நாறியது. “நீ வீரன். வென்று செல்பவன். யுகங்களுக்கொருமுறை மண்ணில் எழும் மாமானுடன். மெய்மையை மணிமுடியெனச் சூடி காலத்தைக் கடந்து நின்றிருப்பது உன் முகம். வெற்று அச்சத்தால் நீ அதை இழந்துசெல்வாயா என்ன?”

அவர் உடல் உதறிக்கொண்டே இருந்தது. “அஞ்சுகிறாய், இளையோனே. எதை அஞ்சுகிறாய் என்று எண்ணிப் பார். ஏன் அஞ்சுகிறாய் என்று ஆராய்ந்து பார். அஞ்சுவது என்னையா? உன்னுள் இருந்து எழுந்து வந்து இங்கு நான் நின்றிருக்கிறேன். உன் மலக்குடலில், குதத்தில் வாழ்கிறேன். நீ உண்ணும் இன்னுணவெல்லாம் எனக்களிக்கும் படையல். உன் மூச்சில் நானும் கலந்துள்ளேன். உன் விந்துவில் ஊறி உன் தேவியர் வயிற்றில் முளைத்து உன் மைந்தரென முகம் கொண்டு நின்றிருக்கிறேன்.”

அவர் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றார். “என்னைத் தழுவுக! என்னைச் சூடுக! ஏழாண்டுகாலம் என்னை உடன்கொள்க!” அவள் தன் இதழ்களை அவர் வாயருகே கொண்டுவந்தாள். மட்கிய ஊன்போன்று கரியவை. அழுகிக்கிழிந்து தொங்கியவை. அவர் அறியாது அவளை சற்று உந்தி விலக்கினார். “மண்ணிலெழும் மாமனிதரில் கணமேனும் என் கையின் இந்த மணி கொள்ளாதோர் எவருமில்லை. விண்வேதம் கொய்தெடுத்த மாமுனிவர் ஒவ்வொருவர் மடியிலும் ஏழாண்டுகாலம் அமர்ந்தவள் நான். நீ அவர்களில் ஒருவனல்லவா? அவர்கள் அறிந்ததை நீ அறியவேண்டாமா?”

அவர் பெருமூச்சுவிட்டார். கண்களை இறுகமூடி “ஆம்” என்றார். “எதற்கு அஞ்சுகிறாய்? நீ அறிந்ததில்லையா என்னை? உன் மைந்தரின் மலத்தை அருவருத்தாயா? அவர் எச்சிலை நீ அமுதென்று எண்ணவில்லையா? அவர்மேல் கொண்ட அக்காதலை எனக்கும் அளி. என்னைப் புல்கு. முதல் உறவுக்குப்பின் நான் இனியவள் என உணர்வாய். என்னை பேரழகி என்று உன் விழிகள் அறியும்.  என் அருகிருப்பதை மட்டுமே விழைவாய். ஏழரையாண்டுகாலம் என்னுடன் நீ இருந்து நிறையும்போது இவ்வருமணியை உனக்களித்து நான் மீள்வேன். இது முழுமை. இது சமன். இதுவே பிறிதொன்றிலாமை…”

அவர் மேலும் ஒருமுறை பெருமூச்சுவிட்டார். “நான் பைநாகப் படமணிந்தவனின் மகள். அவன் சூடிய சுடலைப்பொடி நாறும் உடல்கொண்டவள். நிணமொழுகும் தலைமாலை சூடிய காலபைரவனின் தமக்கை. உக்ரசண்டிகை என்றும் அகோரிகை என்றும் காளபயங்கரி என்றும் பவஹாரிணி என்றும் என்னை வழிபடுகிறார்கள் முனிவர்கள்.” அவர் “ஆம்” என்றார். “அழகனே, கொள்க இவ்வொளியை!” என்றாள். எப்பொருளும் இல்லாமல்  “ஆம்” என்று அவர் சொன்னார்.

ஒருகணம் மெல்லப்புரள, முன்பெங்கோ முடிவான மறுகணத்தில் அவர் அவளை அள்ளி அணைத்து உடலுடன் சேர்த்து இறுக்கி இதழ்களில் முத்தமிட்டார். காமம் கொண்டு முனகியபடி அவள் அவர் உடலுடன் தன்னைப் பொருத்திப் புல்கி ஒன்றானாள்.  “நீ இனியவன். நீ எனக்குரியவன்” என்று விழிசொக்கப் புலம்பினாள். அவள் உடலில் ஊறிவழிந்த மதநீர் எரிமணம் கொண்டிருந்தது.

அக்காட்டின் பசிய இருளுக்குள் அவளை அவர் புணர்ந்தார். கிளறப்பட்ட சதுப்பென கெடுமணங்கள் குமிழியிட்டெழுந்தன அவளிலிருந்து. சிதையென அவரை ஏற்று எரித்தாள். சேறென அவரைச் சூழ்ந்து மட்கவைத்தாள். சிம்மமென அவரை நக்கி உண்டாள். அவர் விழித்தெழுந்தபோது அவள் அங்கிருக்கவில்லை. அவள் ஒரு கெடுமணமாக தன் உடலில் படர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தார்.

[ 5 ]

காளிகக் காட்டிலிருந்து வெளிவந்த இளைய யாதவரின் நடையும் நோக்கும் மாறிவிட்டிருந்தன. புல்தெறித்துச் செல்லும் வெட்டுக்கிளி என நடந்துகொண்டிருந்தவர் நிலம் அதிர ஆண் எருமையென கால் எடுத்து வைத்தார். சுவைதேர்ந்து இன்கனியும் மெல்லூனும் தேனும் நறுநீரும் உண்டவர் கிழங்கைப்பிடுங்கி மண்ணுடன் மென்றார். சேற்றுடன் உழன்ற பன்றியைக் கொன்று குருதி வேகாது தின்றார். கலங்கல் நீரை அள்ளி அருந்தி ஈரச்சேற்றிலும் இருண்ட குகையிலும் படுத்துறங்கினார்.

எட்டு நாட்களுக்குப்பின் அவர் சியாமளபதம் என்னும் சிற்றூரைச் சென்றடைந்தபோது அவ்வூரார் அவரை காடுவிட்டெழுந்து வந்த காளாமுகன் என்று எண்ணினர். அவர் வருவதை அகலே எழுந்த நாய்க்குரைப்பிலேயே அறிந்த ஊர்மூத்தார் உணவும் நீரும் ஏந்தி ஊருக்கு வெளியே காத்து நின்று “கொள்க, கபாலரே! எங்கள் ஊர்செழிக்க வாழ்த்துக!” என்றனர். அவர் ஊருக்குள் நுழையாதபடி வேலிப்படல்களை முன்னரே மூடிவிட்டிருந்தனர். பெண்கள் குழந்தைகளைத் தழுவியபடி உள்ளறைக்குள் ஒடுங்க கன்றுகளை எண்ணி பசுக்கள் குரல்கொடுத்துக்கொண்டிருந்தன.

சப்தஃபலம் என்னும் யாதவச்சிற்றூரை அவர் சென்றடைந்தபோது அங்கிருந்த யாதவப்படைத்தலைவன் சதமன் அவரை அடையாளம் காணவில்லை. கபாலமும் சூலமும் உடுக்கும் இன்றி வந்த காளாமுகரை நோக்கி வியந்த அவன் அருகிருந்த முதிய யாதவவீரராகிய கலிகரை நோக்கி “யாரவர்? யாதவர் நிலத்திற்குள் கொடுஞ்சைவர் நுழைவதில்லையே?” என்றான். கண்களுக்குமேல் கைகளை வைத்து நோக்கிய கலிகர் “யார்?” என்றார். மெல்லிய நடுக்கம் ஓடிய உடலுடன் “எந்தையரே, யார் அவர்?” என்றார். மேலும் உரக்க “இல்லை, இருக்கவியலாது” என்று கூவினார்.

மறுகணமே சதமன் கண்டுகொண்டான். “ஆ! அவரேதான்! அரசர்” என்றான். அக்கணத்திலேயே அத்தனை வீரர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். காவல்மேடையிலிருந்து மரப்படிகளில் உடல்முட்டி நெரிந்திறங்கி ஓடி அவர்களை அணுகிவந்த இளைய யாதவரை நெருங்கி “அரசே!” என்று கூவினர். அவர் உடலில் சேறும் ஊனும் மலமும் நாறியது. அவர் விழிகள் சிவமூலிக் களிகொண்டவனைப்போல அலைபாய்ந்தன.

“அரசே, தாங்களா? என்ன ஆயிற்று?” என்று கலிகர் கூவினார். சதமன் அப்படியே அவர் கால்களில் சரிந்து அழத்தொடங்கினான். “அரசே! அரசே!” என யாதவ வீரர் அவரைச் சூழ்ந்துகொண்டு கூவினர். அவர்  மெல்லிய கூர்குரலில் “இந்நகரில் நான் சிலநாட்கள் இருப்பேன். இங்கு நான் எவரையும் காண விழையவில்லை” என்றார். “ஆம், ஆணை” என்றார் கலிகர்.

அவர்கள் எவரையும் நோக்காமல் நடந்து அச்சிற்றூரின் நடுவே அமைந்திருந்த அரசமாளிகையை அடைந்தார். அவருக்காக நீராட்டுப்பணியாளர்களும் சமையர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர்.  அவர் அவர்களை ஏறிட்டும் நோக்கவில்லை. முகமன்கள் எவையும் அவரை சென்றடையவில்லை. செல்லும்வழியில் தூண்மடிப்பில் விழுந்துகிடந்த மாடப்புறாவின் எச்சத்தை அவர் கைதொட்டு எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து முகம் மலர்ந்ததைக் கண்டு அவர்கள் திகைத்தனர்.

அடுமனைக்குள் புகுந்து அதன் கொல்லைப்பக்கம் கரிபடிந்த மூலையில் குவித்திட்ட குப்பைக்குமேல் அமர்ந்துகொண்டு உணவு கொண்டுவரும்படி சொன்னார். அவர்கள் திகைத்து முகமும் முகமும் நோக்க முதிய அடுமனையாளன் “அரசாணை எனில் அவ்வாறே” என்று மெல்லிய குரலில் சொன்னார்.  அவர்கள் அளித்த உணவை இருகைகளாலும் அள்ளி உண்டார். உண்ணும்போதே சொறிந்துகொண்டார். உரத்த ஒலியுடன் ஏப்பம் விட்டார்.

அவர்கள் இல்லம் புகுந்த பேயை என அவரை பார்த்துக்கொண்டிருந்தனர். எழுந்துசென்று கையைக் கழுவாது உதறிவிட்டு இருளுக்குள் நடந்தார். அவருக்கான நீராட்டும் மஞ்சத்தறையும் ஒருக்கியிருப்பதைச் சொல்ல பின்னால் சென்ற ஏவலர் அவர் அரண்மனைக்கு வெளியே சென்று அங்கு நின்றிருந்த இலைமூடி தழைந்த வாகைமரத்தின் அடியில் புழுதியிலேயே உடல்சுருட்டிப் படுத்து துயிலத் தொடங்கியது கண்டு அஞ்சி அப்பால் நின்றனர். அவரை எழுப்புவதா என்று மெல்ல முதிய குடித்தலைவரிடம் ஏவலன் ஒருவன் கேட்டான். “அவரில் வாழும் தெய்வமேது என்று அறியோம். காத்திருப்போம்” என்று அவர் சொன்னார்.

அன்றிரவு முழுக்க அவர்கள் இருளுக்குள் அவருக்காக காவல் நின்றனர். மறுநாள் விழித்தெழுந்த அவர் மீண்டும் வந்து அடுமனைக்குப்பின் அமர்ந்து உணவுகொண்டார். அரண்மனையை ஒட்டிய குறுங்காட்டுக்குள் சென்று அந்தி இறங்கிய பின்பு மீண்டார். நாட்கள் செல்லச் செல்ல அவர் விழிகள் அவ்விடத்தை அறியலாயின. அரண்மனையின் அறையில் துயிலவும் ஏவலர் விழிநோக்கவும் தொடங்கினார்.

ஆனால் அழுக்கும் இருளும் கெடுமணமும் அவரைச் சூழ்ந்திருந்தன.  அவர் அசைவுகள் காற்றில் பிரியும் புகைபோல ஓய்ந்திருந்தன. சொற்கள் அவரைச் சென்றடைய நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தது. வெறித்த விழிகளுடன் அவர் தன்னுடன் பேசுபவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். கண்முன் அகல்சுடர் சரிந்துவிழுந்து திரைச்சீலை பற்றி எரிந்து தன் ஆடையை தொடவரும்போதும் வேறெங்கோ இருந்து அதை நோக்கிக் கொண்டிருந்தார்.

தன் இருளாழத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் பெருஞ்சினம் கொண்டார். கொலைத்தெய்வம் போன்று வெறிகொண்டு சுளித்த முகத்துடன் கைநீட்டி அடிக்க வந்தார். “ஈன்ற பூனைபோலிருக்கிறார். அவரை அணுகாதொழியுங்கள்” என்று ஏவலர்தலைவன் இளையோரிடம் சொன்னான். தனிமையில் நாளெல்லாம் அமர்ந்திருந்தார். நீள்மூச்சு விட்டு  அவர் அசைந்தமர்கையில் “அவர் எண்ணி ஏங்குவதுதான் எதை? இளையோரே, எந்தை கொள்ளும் துயர் எதன்பொருட்டு?” என்று அமைச்சர்கள் புலம்பினர். முதுபூசகர் “அவர் துயரில் மகிழ்ந்தாடுகிறார். அவரைச் சூடிய பேய் அதில் திளைக்கிறது” என்றார்.

அங்கு அவர் வந்துசேர்ந்த செய்தி துவாரகைக்கு அனுப்பப்பட்டது. அரசர் ஆட்சிச்செயல்கள் அனைத்திலும் இருந்து விலக விழைவதாக ஆணை சென்றபோது அக்ரூரர் திகைத்து என்ன நிகழ்ந்தது என்று வினவி செய்தியனுப்பினார். என்ன நிகழ்ந்தது அரசருக்கு என குடித்தலைவருக்கும் நிமித்திகருக்கும் புரியவில்லை. குடிமூத்தார் குடிப்பூசகர் மூவரைக் கூட்டி உசாவினார். அரசருக்கு அகோரசிவம் உளம்கூடிவிட்டிருக்கிறது என்றனர் அவர்கள். அச்செய்தியையே துவாரகைக்கு அனுப்பினர்.

அக்ரூரர் உடனே கிளம்பி சப்தஃபலத்திற்குச் செல்ல விழைந்தார். “என்ன நிகழ்ந்துள்ளதென்று உணரமுடிகிறது, அரசி. மூத்தவர் பிரிந்து சென்றதும், யாதவர் உளத்திரிபு கொண்டதும் அரசரின் உள்ளத்தை உலைத்துவிட்டிருந்தன. அவர் தன் தோழரை காணச்சென்றதே அதன்பொருட்டுதான். அவர் உள்ளம் நிலையழிந்துள்ளது” என்றார். “இத்தருணத்தில் அவருடன் நான் இருந்தாகவேண்டும்… அது என் கடன் என்றே உணர்கிறேன்.”

சத்யபாமை அதை தடுத்துவிட்டாள். “நாம் அறியாத பலர் நாளும் கடந்துசெல்லும் ஒரு வாயில் போன்றவர் அவர். நாம் அறிந்தவர்களைக்கொண்டு அதை மதிப்பிடலாகாது. அக்ரூரரே, நம் தலைக்குமேல் எழுந்து நின்றாலும் இந்நகரின் அணிப்பெருவாயிலை நாம் எவரும் காண்பதே இல்லை. அதைக் காண நாம் கடலில் ஊர்ந்து விலகிச்செல்லவேண்டும்.  அவர் எவரென்று அறிய நாம் காலத்தில் பறந்தகலவேண்டும். பிறிதொரு யுகத்தில் நாம் அவரை ஒன்றென நோக்கமுடியும். முடிவிலா முகங்களினூடாக தன்னை தான் நோக்கிக்கொண்ட அந்த முழுமுகத்தை. அதுவரை அவர் ஆணைகளை தலைக்கொள்வதே நாம் செய்யக்கூடுவது.” அக்ரூரர் பெருமூச்சுடன் “ஆம், தேவி” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 12

$
0
0

DSC_0983

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசன் கவிதைகளை ரவி சுப்ரமணியம் இசையுடன் அமைத்திருந்தது மிகச்சிறப்பாக இருந்தது. தாமிரவருணிக்கரையில் அமர்ந்து அந்தக்கவிதைகளைக் கேட்பதுபோல ஓர் அனுபவம்

ஊருக்குச் சென்றால் தாமிரவருணி அங்கே இல்லை என்பதுதான் என்னைப் போன்றவர்களின் சோகம். அங்கே இருப்பது ஒரு பெரிய சாக்கடை

ஆனால் இதேபோல மொழியிலும் இசையிலும் தாமிரவருணி இருந்துகொண்டே இருக்கிறாள் என நினைக்கையில் ஆறுதல்

சங்கரநாராயணன்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசன் வாசகர்களில் கணிசமானவர்களுக்கு உங்களைப்பிடிக்காது என்று கடிதங்கள் வழியாகத் தெரிந்தபோது வேடிக்கையாக இருந்தது. இவர்கள் எல்லாரும் விஷ்ணுபுரம் விருது நிகழ்ச்சிக்கு வருவார்களா? அடிதடி ஏதாவது நடக்குமா? காவல் ஏற்பாடு உண்டா?

சரி, நானும் ஏன் மறைக்கவேண்டும். எனக்கும் உங்களை சுத்தமாகப்பிடிக்காது. நான் சிவாஜி ரசிகன். நீங்கள் அவரைப்பற்றி எழுதியது ஆபாசம், அவதூறு என்றுதான் நினைக்கிறேன். அதுவரை நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். அதன்பின்னர் படிப்பதை நிருத்திவிட்டேன்.

ஆனால் வண்ணநிலவன், வண்ணதாசன் ரெண்டுபேரும் என் ஆதர்ச எழுத்தாளர்கள். ஜானகிராமன் அழகிரிசாமி பிடிக்கும். அவர்கள் எழுதிய அழகியலுடன் இன்று ஓரளவுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான் எழுதிக்கொண்டிருக்கிறார். நீங்கள் எல்லாம் மூளையை வைத்து எழுதுபவர்கள்.

வண்ணதாசனுக்கு விருது அளிப்பதற்கு வாழ்த்துக்கள். அவருடைய சமவெளி நான் முதலில் வாசித்த தொகுப்பு. அதன்பின் இன்றுவரை வாசித்துக்கொண்டே இருக்கிறேன்

நடராஜன்

***

வணக்கம்.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டது பற்றி ஆர்.வி. சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் எழுதிய பதிவை படிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிட்டிருந்த விஷயம் (http://tamil.samayam.com/latest-news/technology-news/shock-wikipedia-mentioned-as-writer-vannadasan-died-in-1976/articleshow/55045441.cms) ஒரு நொடி கோபமும் சிரிப்பும் ஏற்படுத்தியது.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட மறுநாள் தேவதேவனுடன் பேசினேன். அவரிடம் விஷயத்தைச் சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தேன். அவர் எனக்குத் தெரியாதே என்றார். ஆச்சரியமாக இருந்தது.

வண்ணதாசன் தூத்துக்குடியில் சில காலம் இருந்தபோது இருவரும் பழகியதைச் சொன்னார். நீண்ட காலமாக தொடர்ந்து எழுதிவரும் அவருக்கு சாகித்திய அகாடமி விருதும் கிடைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

பேச்சினிடையே, வண்ணதாசனுக்குத்தான் விருது அறிவித்திருக்கிறார்கள். கல்யாண்ஜிக்கு இல்லையா? என்றேன். ஆமா என்றபடி சிரித்தார்.

நன்றி.

இப்படிக்கு,

வே.ஸ்ரீநிவாச கோபாலன்

***

வணக்கம்

வண்ணதாசன் அவர்களுக்கு விருது எனும் செய்தியை படித்தவுடன் அவரின் கவிதகைளே எனக்கு நினைவில் வந்தது. நான் அவரின் கவிதைகளை பல ஆண்டுகளாகவே வாசித்தும் ரசித்தும் வந்திருக்கிறேன்., பறவைகளும் அவற்றின் பூஞ்சிறகுகளும் பூனைக்குட்டிகளும் மரங்களும் சிறுமிகளும், வெயிலும் மழையும யானைகளுமாய் பரந்து விரிந்ததோர் கவிதா உலகம் அவருடையது.

நான் அவர் கதைகளை படித்ததே இல்லை விருது அறிவிப்புக்கு முன்னால். உங்களுக்கு பலர் எழுதும் கடிதங்களைப் பார்த்த பின்னர் அவரின் வலைத்தளம் சென்று ஒரு முதல் கதையை வாசித்தேன் .

”கனியான பின்னும் நுனியில்”உருண்டு திரண்ட மாதுளைகளும், சீராக அடுக்கப்பட்ட கொய்யாப்பழங்களும், அந்த சங்கிலித்திருடனாய் அறியப்பட்ட நீள மூக்குக்காரரும், தாவரவியல் வகுப்பும், வகுப்பில் பறந்த பறவையும், நீளமூக்குக்காரரின் மகளான அந்த பெரிய கண்களைக்கொண்ட அந்த காரணத்தினாலெயே பேரழகியாய்தெரிவதற்கு எந்த பெருமுயற்சியும் தேவைப்படாத சிறுமியும், அணில் நகக்காயம் பட்ட மாதுளையும், அந்த சிறுமியின் முன் நெற்றியில் அடிக்கடி வந்து விழும் முடிக்கற்றையுமாய் கதை விரிகிறது. கதையைப் படித்தபின்னரும் எனக்கு நான் இன்னும் அவரின் கதைகளைப்படிக்கவேயில்லை என்றும் ”கனியான பின்னும் நுனியில் பூ” மற்றுமோரு நீண்ட கவிதை என்றும் தோன்றியது

மழைக்காலத்தில் அவரின் கவிதைகள் வெளியாவது. விருப்பமென்கிறார் ஒரு பதிவில். விருது வழங்கப்படும் மாதத்தில் பருவம் தப்பிவிட்ட, ஐப்பசியில் பெய்திருக்க வேண்டிய, இன்னும் வராமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கும் மழை வரட்டும்.. அவருக்கு விருது வழங்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி விழாவில் அவரை சந்திக்கவும் கலந்துரையாடவும் மிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

“நேரடி வானத்தில்

தெரிவதை விடவும்

நிலா அழகாக இருப்பது

கிளைகளின் இடையில்“

கல்யாண்ஜி

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட உள்ளது. உவகை தரும் செய்தி.ஒரு தரமான இலக்கிய ஆளுமையை கௌரவித்தமைக்கு

நன்றி. இந்த விருது வண்ணதாசன் பற்றியும் ஜெயமோகன் பற்றியும் நிறையவும் நிறைவாகவும் சொல்கிறது. நான் வண்ணதாசனை வழக்கம் போல் தற்செயலாகவே வாசிக்க நேர்ந்தது.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நடந்த ஒரு போட்டியில் எனக்கு “தனுமை” என்ற நூல் பரிசாகக் கிடைத்தது. சுஜாதா தேர்ந்தெடுத்த சிறு கதைகளின் தொகுப்பு அது. அதில் வண்ணதாசனின் “தனுமை” மிகச் சிறந்த சிறு கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அப்போது தனுமை வாசிப்பு ஒரு புதுமைமையான வினோதமான அனுபவத்தைத் தந்தது.ஒரு சிறுகதை இப்படியும் இருக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது. கதையே இல்லாத ஒரு கதை.அல்லது சாஸ்திரத்துக்கு கொஞ்சம் கதை.

அதைக் கூட கதையாசிரியர் அடிக்கடி மறந்து போனது போல் எங்கெங்கோ போய் விடுகிறார். கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவற்றைப் பற்றியெல்லாம் பேசுகிறார். ஒன்றும் புரியாதது போல் இருக்கிறது. ஆனாலும் பிடித்திருக்கிறது. இப்படி அறிமுகமான வண்ணதாசன் பின்னர் என்னைப் பாதிக்கக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவரானார்.எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து ரசிக்கவும் வாழ்வின் சின்னச் சின்ன அழகுகளையும் பரவசங்களையும் தரிசிக்கவும் எளிமையாகக் கூறி பயிற்றுவித்தார்.

வண்ணதாசனுக்கு விருது பற்றிய வாசகர் கடிதங்கள் சுவாரசியமாக உள்ளன. பெரும்பாலான வாசகர்கள் தாங்களே விருது பெற்றது போல் குதூகலிக்கிறார்கள். மகிழ்ச்சியாக உள்ளது. சில வாசகர்கள் தமக்கு ஜெயமோகனைப் பிடிப்பதில்லை என்று எழுதி உள்ளனர். நீங்களும் அவற்றை மகிழ்ச்சியோடு பிரசுரத்திருக்கிறீர்கள். இது எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்- அஜீத் சின்ரோம். ஒருத்தரைப் பிடித்தால் அடுத்தவரைப் பிடிக்காது.(எனக்கு முன்பு எல்லோரையும் பிடிக்கும்.இப்போது இவர்களில் யாரையும் பிடிப்பதில்லை)

பிடிக்காதவர்கள் சிலர் ஜெயமோகனின் எழுத்துக்கள் எதையும் இதுவரை படித்ததே இல்லை என்றுவாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறார்கள். இது எப்படி? படிக்காமலேயே எப்படி வெறுப்பு வர முடியும்? பெரும்பாலும் வெறுப்பு இப்படித்தானோ? இதை எல்லாம் புரிந்து கொள்வதும் சகித்துக் கொள்வதும் பாடங்களே.

அன்புடன்,

ஜெ.சாந்தமூர்த்தி,

மன்னார்குடி

======================================

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==========================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இருத்தல், சந்திப்பு -கடிதங்கள்

$
0
0

 

unnamed

சார் வணக்கம்

லடாக் பயண அனுபவம் வாசித்தேன். லடாக் அடிக்கடி சென்று வரும் என் பல்கலை ஆசிரியரின் அனுபவங்களைக் கேட்டுக் கேட்டு அங்கிருக்கும் தாவரங்களுக்காக லடாக் செல்லவேண்டும் என நினைத்திருந்தேன் இதுவரை.

உங்கள் அனுபவத்தை படித்தபின் அங்கு போகவேண்டும் என்று மட்டுமல்ல, போனபின்பு அங்கேயே இருந்துவிடலாமென்றும் கூட தோன்றுகிறது. எதன் பொருட்டு இப்படி நாமெல்லாரும் பரபரப்பாய் அலைகிறோம்? எத்தனை இனிமை அவர்களின் இந்த மெதுவான வாழ்க்கை?

காலம் என்னை கடந்து செல்வதை நான் ஒவ்வொரு கணமும் உணர்கிறேன் அதற்காக வருந்தவும் கூட செய்கிறேன் பல சமயங்களில் (குறிப்பாக பிறந்தநாளின் போதும், பிறந்த குழந்தைகளை காணும் போதும்).

காலை 5.30 மணியிலிருந்து ஓயாமல் பதட்டமாக இரவு 10, 11 மணிவரை அலையும் எனக்கு நீங்கள் விவரித்த “கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு ஹூக்காவை பிடித்தபடி இளவெயிலில் மலைச்சரிவுகளைப் பார்த்தபடி நாளெல்லாம் அமர்ந்திருக்கும் காலமற்ற அவர்களின் வாழ்க்கை” ஏகத்துக்கும் பொறாமையை அளிக்கிறது.

அவர்களுக்கு இன்று மட்டுமே எனக்கோ நேற்று இன்று நாளை எல்லாமே இருக்கிறது. வரும் ஞாயிறு என்ன சமைப்பது என்று. அதற்கு முந்தின 3 நாட்களில் யோசித்து இட்லிக்கோ அடைக்கோ மாவு தயாரிக்கிறேன். என் மகன்களின் வருங்கால மனைவிகள் அவர்களுக்கு நன்றாக வயிறு நிறைய சமைத்துப் போடுவார்களா என்று இப்போதெல்லாம் தொலைநோக்குப் பார்வையோடு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

பரபரப்பான அலைச்சல் மிகுந்த என் வாழ்க்கையின் மீதும், உட்காரவிடாத ஒடிக்கொண்டே இருக்க சொல்கிற பதற்றமாக பதட்டமாக கவலையோடே இருக்கிற உள்ளத்தின் மீதும் கோபமும் அவமானமுமாய் இருந்தது இந்த லடாக் கட்டுரை படித்தபின்னர்.

நான் நினைப்பதுண்டு சார், மின்மயானத்திற்கு என்னை கொண்டு செல்கையிலும் குக்கர் வைத்துவிட்டு 3 விசிலில் நிறுத்தச்சொல்லிவிட்டுதான் போவேனென்று!!!!

புன்னகையுடன் மடியில் கைகளை வைத்துக்கொண்டு கண்மூடி தியானத்தில் இருக்கும் புத்தரும், அந்த ஆழ்ந்த அமைதியில் இருக்கும் மலைச்சிகரங்களும், அந்த மக்களும் அவர்களின் நீர்த்துளிக்கண்களும் நூற்றாண்டுகளை மிகச்சாதாரணமாய்க் கடந்து எள்ளுப்பேத்திகளை கையில் வைத்துக் கொஞ்சும் அவர்களின் பாக்கியமும், என்ன சார் சொல்லுவது? they live and i exist என்றுதான் தோன்றுகிறது

comfort zone லிருந்து வெளியே வரப்பழக்கமில்லாத அல்லது விரும்பாத எனக்கு, நீங்கள் கையில் எடுத்துக்கொண்டிருக்கும், பனிபோல குளிர்ந்த அந்த குட்டி ரித்திகா உங்கள் கண்ணை நேராகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நிழற்படம் உங்கள் எழுத்துக்களின் மீதான மதிப்பையும் உங்கள் அனுபவங்கள் மீதான பொறாமையையும் ஒரு சேர ஏற்படுத்துவதை தடுக்கவே முடியவில்லை சார்

நன்றியுடன்

லோகமாதேவி

*

அன்புள்ள லோகமாதேவி

எவரும் தனக்குள் இல்லாத ஓர் உலகை வெளியே உருவாக்கிக் கொள்ளமுடியாது. நித்யா சொல்வதுண்டு, எங்கும் செல்லாமலிருந்தாலும் கடிகாரம் ஓடிக்கொண்டுதான் இருக்கும் என

நானும் மிகமிகப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவன்தான். ஆனால் அவ்வப்போது என் அமைதியை நானே பார்க்கும் சில தருணங்களை உருவாக்கிக் கொள்கிறேன்

ஜெ

***

பேரன்பிற்குரிய ஜெயமோகன்,

வாழ்க்கை எப்போதும் சில அடுத்தவினாடி ஆச்சரியங்களை ஒளித்துவைத்து இருக்கிறது, உங்களை கடந்த ஞாயிறு அன்று நேரில் சந்தித்ததருணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம், உங்களின் ஆக்கங்களை பல வருடமாக படித்து வருகிறேன், உங்களின் வலைத்தலைத்தையும் எட்டு வருடங்களாக படித்து வருகிறேன், இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல்கடிதம்.

நான் எனது இரண்டு நண்பர்கள் உடன்விழாவிற்கு வந்திருந்தேன், ஒருவர் உங்களை எனக்கு அறிமுகம் செய்தவர் இன்னொருவர் உங்களின் நான் கடவுள், கடல் திரைக்கதை வசனத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர், அவருக்கு அறம்தொகுப்பை பரிசளித்தேன்.

உங்களின் எழுத்துக்களை ஒருவருடமாக ஐந்து நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களை சென்னை புத்தக கண்காட்சிக்குஅழைத்து சென்று அறம் மற்றும் ரப்பர் நாவலை வாங்க செய்தேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிறு தயக்கத்துடனே உங்களை அணுகி புகைப்படம் எடுத்துகொண்டேன், அற்புதமான பேச்சு -காந்தி பற்றின எனது எண்ணங்களை சுக்கு நூறாக உடைத்து எறிந்தது.

சுகா அண்ணாச்சி உடன் புகைப்படம் எடுத்து கொண்டோம்.

விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் என்தாயாரும் மனைவியும் ஒன்று சேரகேட்டார்கள் “இன்னிக்கு ஜென்மசாபல்யம் கிடைச்சிருக்குமே”

ஆம் என்று உரக்க கூறினேன். இத்துடன் நான் உங்களை எடுத்த ஒருபுகைபடத்தை இணைத்து உள்ளேன்.

கடிதத்தில் எழுத்து பிழை இருந்தால் அடியேனை மன்னித்து அருளுமாறு கேட்டு கொள்கிறேன், முதல் தமிழ் கடிதம் அடித்து முடிக்கவே ஒன்றரைமணி ஆகியது.

என்றும் அன்புடன்,

அசோக் சேஷாத்திரி

*

அன்புள்ள அசோக்,

அந்நாள் நல்ல சந்திப்புகள் நிகழ்ந்தன. நீண்ட இடைவேளைக்குப்பின் ஊருக்கு வந்த மகிழ்ச்சி என்னிலும் இருந்தது. சுகா உட்பட அனைத்துப் நண்பர்களையும் ஒரே நாளில் சந்தித்தேன்

நாம் மீண்டும் சந்திப்போம்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மொழியும் நிலமும்

$
0
0

397774508_8273f0d8c8

மலையாள எழுத்தாளர் கல்பற்றா நாராயணன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார், மொழி என்று பெயர். கரு இதுதான். மலையாளத்திலும் ஸ்பானிஷிலும் மேஜைக்கு மேஜை என்றுதான் சொல். ஒரு மலையாளி மண்டையில் அடிபட்டு மேஜை என்னும் சொல்லைத்தவிர எல்லாவற்றையுமே மறந்து எல்லா அவசியத்திற்கும் மேஜை என்றே சொல்லிக்கொண்டிருந்தார் என்றால் அவர் மலையாளமும் ஸ்பானிஷும் தெரிந்தவர் ஆகிறார் அல்லவா?

வேடிக்கைதான். ஆனால் இதேபோன்ற ஒரு திகைப்பு எனக்கு ஒருமுறை ஏற்பட்டது. செவியும்நாவும் அற்ற ஒருவர் என் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.கையசைவால் ஊமைமொழி பேசுவார். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டிஎறிதல் போட்டியில் சர்வதேச அளவில் தேர்வுசெய்து இத்தாலியில் மாட்ரிட் நகருக்கு சென்று வந்தார். அதை அவர் என்னிடம் சொன்னபோது நான் அறியாமல் மொழி அறியாமல் எப்படிச் சமாளித்தீர்கள்?’ என்று கேட்டுவிட்டேன். அதன்பின்னர்தான் அவர் சர்வதேசமொழி அறிந்தவர் என நினைவுக்கு வந்தது

என் மதுரை நண்பர் சண்முகம் ஒரு வாக்னார் கார் வாங்கியபோது அதை நெடுந்தொலைவு ஓட்டிச்செல்ல விரும்பினார். அதைப் பயன்படுத்திக் கொண்டு நானும் தமிழினி பதிப்பகம் நடத்தும் நண்பர் வசந்தகுமாரும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரும் 2005ல் மூன்று இந்தியப்பயணங்கள் மேற்கொண்டோம். சமணக்கோயில்களை பார்த்தபடி கர்நாடகம் வழியாக ஒரு சுற்று. பௌத்தத் தலங்களைப் பார்த்தபடி ஆந்திரம் வழியாக இன்னொரு சுற்று. சிவாஜியின் கோட்டைகளைப் பார்த்தபடி மகாராஷ்டிரா வழியாக ஒரு சுற்று

பௌத்தப் பயணத்தில் கோதாவரிக் கரைக்குச் சென்றிருந்தோம். கோதையின் கரைமுழுக்க நாயக்கர் அரசர்கள் ஏராளமான கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். பெரும்பாலும் அனைத்துக் கோயில்களும் பின்னாளில் விஜயநகர நாயக்கர்கள் தோற்கடிக்கப்பட்டு தக்காண நவாப்கள் அப்பகுதியைக் கைப்பற்றியபோது இடிக்கப்பட்டன. இடிபாடுகளாக எஞ்சிய ஆலயங்கள்தான் இப்போது வழிபாட்டில் உள்ளன. பெரும்பாலான ஆலயங்கள் கைவிடப்பட்டு புழுதியும் சேறும் மூடிக்கிடக்கின்றன

கிருஷ்ணதேவராயர் விஜயநகர நாயக்கர்களில் தலையாயவர். அவரது ஆட்சிக்காலத்தில்தான் மதுரை நாயக்கர்களின் கைக்கு வந்தது. அதற்கு முன்னர் பாண்டிய அரசனான சுந்தரபாண்டியனை அவன் தம்பி வீரபாண்டியன் உதவியுடன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றினார். மதுரையை வீரபாண்டியனுக்கு கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். கொடுக்கவில்லை, அவனையும் தோற்கடித்துகொன்று தன் தளபதியிடம் மதுரையை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

மாலிக் காபூர் ஸ்ரீரங்கம், மதுரை பேராலயங்களை இடித்து அழித்தார். மாலிக் காபூருக்குப் பயந்து ஸ்ரீரங்கம் பெருமாளை பட்டர்கள் தூக்கிக்கொண்டு கேரளத்துக்குச் சென்றனர். அங்கே ஸ்ரீவல்லப ஷேத்ரம் [இன்று திருவல்லா] போன்ற ஊர்களில் அரங்கன் இருநூறாண்டு காலம் காத்திருந்தார். அச்சுதப்ப நாயக்கர் இடிந்த ஸ்ரீரங்கத்தை திரும்ப கட்டியபிறகுதான் அரங்கன் திரும்ப முடிந்தது. இதை ஸ்ரீவேணுகோபாலன் திருவரங்கன் உலாஎன்னும் நாவலாக எழுதியிருக்கிறார்

மதுரை ஆலயமும் மாலிக் காபூரால் இடிக்கப்பட்டது. அப்போதுதான் கல்யானை கரும்பு வாங்கிய புராணக்கதை நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். துங்கபத்ரா நதிக்கரையில் நாயக்கர்களின் அரசான விஜயநகரத்தை ஹரிஹரர் புக்கர் என்னும் சகோதரர்கள் உருவாக்கினர். ஹரிஹரரின் மகனாகிய குமார கம்பணனின் மனைவிபெயர் கங்கம்மா தேவி. அவள் கனவில் மதுரை மீனாட்சி வந்து தன் ஆலயம் இடிந்து கிடப்பதாகச் சொன்னாள். கங்கம்மா தேவியின் விருப்பப்படி குமாரகம்பணன் படைகொண்டு வந்து மதுரையை ஆண்ட மாலிக் காபூரின் படைத்தலைவனை வென்று மதுரையைக் கைப்பற்றி அதை மீண்டும் பாண்டியர்களின் வாரிசுகளிடமே கொடுத்துவிட்டுச் சென்றார்.

மதுரை ஆலயம் சீரமைக்கப்பட்டது. நாகர்கோயில் அருகே வள்ளியூரில் ஒரு சிற்றாலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சியின் சிலை திரும்பவும் மதுரைக்குக் கொண்டுவந்து நிறுவப்பட்டது. நாம் இன்றுகாணும் மதுரை மீனாட்சி ஆலயம் நாயக்க அரசர்களால் எடுத்துக் கட்டப்பட்டது. மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியதை கங்கம்மா தேவி மதுராவிஜயம்என்னும் தெலுங்கு நூலாக இயற்றினார். இவ்வரலாற்றை நாம் சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலிலும் ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய மதுராவிஜயம் என்னும் நாவலிலும் வாசிக்கலாம்.

நாயக்க மன்னர்கள் வைணவர்கள். ஆனால் அவர்கள் மதுரை, சிதம்பரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற மாபெரும் சைவ ஆலயங்களையும் அமைத்தனர். நாம் இன்று தமிழகத்தில் காணும் பேராலயங்களில் பெரும்பாலானவை நாயக்கர் காலத்தையவை என்பது நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அவை சோழ பாண்டியர்களால் கட்டப்பட்டவை என்றே நினைத்திருப்போம்.

நாயக்கர்களால் கட்டப்பட்ட மிகச்சிறந்த கட்டிடக்கலைப் படைப்பு என்பது ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாள் கோயில் கோபுரம்தான். இதுதான் தமிழக அரசின் அரசுமுத்திரையாக உள்ளது. [பலரும் நம்புவதுபோல ஆண்டாள்கோயில் கோபுரம் அல்ல] நாயக்கர்களுக்கு தமிழக பக்தி இயக்கம் மீது பெரும் பற்று இருந்தது. இங்கிருந்து வைணவ பக்திப்பாடல்களை அவர்கள் ஆந்திரம் முழுக்கக் கொண்டுசென்று பரப்பினார்கள்.

அதிலும் கிருஷ்ண தேவராயருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் மேல் தனி ஈடுபாடு. ஆண்டாளின் கதையை அவரே அமுக்த மால்யதா [சூடாத மாலை] என்றபேரில் தெலுங்கில் சிறிய காவியமாக எழுதியிருக்கிறார். இதை ரா.கி.ரங்கராஜன் எழுதிய நான் கிருஷ்ணதேவராயன்என்னும் நாவலில் வாசிக்கலாம்.

கிருஷ்ண தேவராயர் ஆண்டாள் பாசுரங்களையும் நம்மாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார் பாடல்களையும் ஆந்திராவில் அவர் கட்டிய ஆலயங்களில் எல்லாம் பாட ஏற்பாடு செய்தார். அதற்காக நம்மூர் ஓதுவார்களைப்போன்ற பாடகர்களை பரம்பரையாக வரும்படி நியமித்தார். அவர்கள் இன்றும் அதைப்பாடி வருகிறார்கள்

நாங்கள் தர்மஸ்தலா என்னும் ஊரில் கோதாவரியில் நீராடி மேலே வந்தபோது செந்தமிழ்ப்பாட்டைக் கேட்டோம். சண்முகம் பரவசத்துடன் அந்த திசை நோக்கி ஓடினார். இடிந்த பழைய கோயிலுக்குள் பக்தர் எவருமில்லை. பெருமாள் கரியதிருமேனி பளபளக்க இருண்ட கருவறைக்குள் அகல்விளக்கொளியில் நின்றிருந்தார். அவர் முன் நின்று ஓர் இளைஞர் பாடிக்கொண்டிருந்தார். பேயாழ்வார் பாசுரம். அதன்பின் ஆண்டாள்.

அவர் பாடிமுடித்ததும் சண்முகம் பாய்ந்து சென்று அவரிடம் கைகூப்பியபடி பரவச முகத்துடன் பேச ஆரம்பித்தார். தெலிய லேதுஎன அவர் சொன்னபின்னரும் சண்முகம் நிலைமையை உணரவில்லை. யுவன் சந்திரசேகரும் அவரிடம் தமிழில் பேச அவர் பீதி அடைந்தார். பிறப்பால் தெலுங்கரான வசந்தகுமார் தலையிட்டு நிலைமையை புரியவைத்தார். வசந்தகுமாரின் தெலுங்கைக் கேட்டபின் அவர் தமிழைக்கேட்டதைவிட அதிக பீதி அடைந்தாலும் நிலைமை கட்டுக்குள் வந்தது.

பாடகருக்கு தமிழ்ப்பாசுரம்தான் தெரியும், தமிழ் ஒரு சொல்லும் தெரியாது. நாம் சம்ஸ்கிருத சுலோகங்களைச் சொல்வதுபோல அவர் பாசுரங்களை பாடுகிறார். அது அவர் குடும்பத்தொழில். தலைமுறை தலைமுறையாக அதைச் செய்து வருகிறார்கள். அவர் தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டவை அப்பாசுரங்கள். அவர் பள்ளி ஆசிரியர். இப்போது அந்தச் சேவைக்கு ஊதியமெல்லாம் இல்லை. ஆனாலும் குலவழக்கம் போகக்கூடாதே என்று அவர் பாடிவருகிறார்.

எங்களை அறிமுகம் செய்துகொண்டோம் டீ சாப்பிடுங்கள் சுவாமிஎன அவர் அழைத்துச்சென்றார். டீ சாப்பிட்டபடி அவர் பாடிய பாசுரங்கள் எவை என தெரியுமா என கேட்டேன். லேதுதான். அவருக்கு அவை பெருமாளுக்குரிய இனிய ஒலி அவ்வளவுதான். அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். மேலும் புரியவைக்க எனக்குத் தெலுங்கும் அவருக்குத் தமிழும் தெரியாது.

திரும்பி வரும்போது சண்முகம் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தார். நாலு வார்த்தை தமிழ் பேசியிருக்கலாம் சார். வாய் நமநமங்குதுஎன புலம்பினார். என்ன இப்ப? அவர் பாடறச்ச தமிழர்தான்….நாம ஒரு தெலுங்குப்பாட்டு பாடுவம். அப்ப தெலுங்காளு ஆயிடுவோம்ல?” என்றார் யுவன் சந்திரசேகர். சரி பாடுடாஎன்றேன். அவன் பிபரே ராமரசம்என்று பாடினான். நாலைந்துபேர் திரும்பிப்பார்த்துவிட்டுச் சென்றார்கள். தெலுங்கர்களாக கிருஷ்ணதேவராயரின் மண்ணில் நடந்தோம்.

கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்ததா சரித்திரம் இல்லை. ஆனா ஆண்டாள் பாசுரம் வழியா அவர் தமிழரா ஆகியிருப்பார். ஸ்ரீவில்லிப்புத்தூர் மண்ணிலே நடந்திருப்பார்என்றேன். யுவன் என்னை கட்டிக்கொண்டு சரியா சொன்னேடாஎன்றான்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9

$
0
0

[ 6 ]

முந்நூறாண்டுகளுக்கு முன்பு விருஷ்ணிகுலத்தின் ஒரு பிரிவாகிய  கோகிருதம் என்னும் தன் தொல்குடியிடமிருந்து ஏழு பசுக்களையும் மூன்று காளைகளையும் பங்குச்செல்வமாக பெற்றுக்கொண்டு மதனர் என்னும் யாதவர் வடக்காகக் கிளம்பினார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது. அவர் மணந்த சுதமைக்கு இருபத்தொன்பது.  அவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தன. அவர்கள் நோக்கிய நிலமெல்லாம் முன்னரே குடியேறிய யாதவர்களுக்குரியவை என மரங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் இன்னும் என விலக்கி இருக்கும் இருக்கும் என நம்பி அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

யாதவகுடிகள் விரிந்து  கன்று பெருகிய காலம் அது. மேய்ச்சல்நிலங்களுக்கான பூசல்கள் தொடங்கிவிட்டிருந்தன. கோகிருதத்தின் குடியவை கூடி அவர்களுக்குரியதென அமைந்த காட்டில் எங்கு எவர் தங்கள் கன்றுகளை மேய்க்கவேண்டும் என்று நெறியமைத்தது. கன்றுகளின் காதில் அவற்றின் உரிமையாளர்கள் மணிகோத்து அடையாளம் பொறிக்கவும் முறைவைத்து காடுகளை மாற்றிக்கொண்டு எல்லைக்குள் மட்டுமே மேய்க்கவும் ஆணையிட்டது.

மதனர் வளர்த்த காராம்பசு ஒன்று கட்டவிழ்த்துக்கொண்டு அவர் உடன்பிறந்த மூத்தவரின் பசுக்களுக்காக வகுக்கப்பட்டிருந்த புல்வெளியில் புகுந்தது. அது அங்கு மேய்வதைக்கண்ட மூத்தவர் அதை பிடித்திழுத்துச்சென்று பெருமரம் ஒன்றில் கழுத்து இறுகக் கட்டினார். பகலெல்லாம் பசுவைக் காணாது அலைந்த மதனர் அந்தியில் அதை கண்டுகொண்டார். நீரும் புல்லுமின்றி குரலெழுப்ப இயலாது கழுத்திறுகித் தொங்கி நின்ற பசுவைக் கண்டதும் அழுதபடி ஓடிச்சென்று கட்டை அவிழ்த்து பசுவை விடுவித்தார். அதன் கண்களில் வழிந்திருந்த கண்ணீரின்தடம் அவர் நெஞ்சை கொந்தளிக்கச் செய்தது.

சினத்தால் நடுங்கும் உடலுடன் அவர் சென்று தன் தமையன் முன் நின்று “இது முறையா? குலம்புரக்கும் அன்னை உணவும் நீருமின்றி நிற்கச்செய்ய நமக்கு என்ன உரிமை?” என்றார். அவ்வுணர்வை புறக்கணித்து “என் எல்லைக்குள் வந்தது உன் பசு” என்று தமையன் சொன்னார். “பசு எவருக்கும் உரிமையல்ல. யாதவர்கள்தான் பசுக்களுக்கு உரிமையானவர். மூத்தவரே, நிலத்தை நாம் பகுக்கலாம், பசுவுக்கு அது ஒற்றைப்பெருவெளியே” என்றார். “நான் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறாய்?” என்றார் மூத்தவர். “எழுந்து என் பசு முன் தலைவணங்கி பொறுத்தருளும்படி கோருக! பசுவின் பழிகொண்ட குலம் வாழ்வதில்லை” என்றார் மதனர்.

சினம் கொண்ட மூத்தவர் “விலகிச்செல் அறிவிலியே, நீ எனக்கு அறிவுரை சொல்கிறாயா?” என்று கூவியபடி இளையவனை கையால் பிடித்துத் தள்ளினார். மல்லாந்து விழுந்த மதனர் சினம் தலைமீற அருகிருந்த கல்லை எடுத்து தமையன் தலைமேல் ஓங்கி அறைந்தார். அதன்பின்னரே தான் செய்ததென்ன என்று அறிந்து அழுதபடி தமையன் காலில் விழ முன்னால் சென்றார். அவரை உதைத்து உதறிவிட்டு “தந்தைப்பழி கொண்டவனே, நீ இனி இங்கிருக்கலாகாது” என்று தமையன் கூவினார்.

குருதி வழிய தமையன் ஓடிச்சென்று குலமூத்தார் கூடிய அவையில் நின்று கதறி முறையிட்டார். நிலம் வகுத்த எல்லையை மீறியதும் அதைத் தடுத்த தமையனை தாக்கியதும் பெரும்பிழை என அவை வகுத்தது. பங்குச்செல்வத்தைப் பெற்று குலம்விட்டு விலகிச்செல்லும்படி மதனருக்கு ஆணையிட்டது. அவருக்கு தந்தையின் செல்வமெனக் கிடைத்தது பதினேழு பசுக்கள். அவற்றில் பத்து பசுக்களை அடிபட்ட தமையனுக்கு பிழையீடாக அளித்துவிட்டு எஞ்சியவற்றுடன் இரவெழுவதற்குள் குடிநீங்கும்படி சொன்னார்கள் மூத்தார்.

பதினேழு நாட்கள்  ஊர்கள் வழியாகவும் குறுங்காடுகள் வழியாகவும் தனக்கென நிலம் தேடி நடந்து களைத்த மதனர் ஒருநாள் மாலையில்  ஓர் அத்திமரத்தின் அடியில் தங்கினார். இளமழை சொரிந்த  குளிர்மிக்க அவ்விரவில் பாளைக்குடிலை தலைக்குமேல் அமைத்து மரவுரிகளைப் போர்த்தியபடி மனைவியை அணைத்துக்கொண்டு துயின்றார். அவரைச் சூழ்ந்து அவர் அழைத்துச்சென்ற பசுக்கள் நின்றன. அவற்றைச் சூழ்ந்து எருதுகள் நின்றன. காட்டுவிலங்குகள் அணுகாதிருக்க தறியறைந்து மணிகோத்துக் கட்டிய சரடு அவர்களை சூழ்ந்திருந்தது.

காலையில் அவர் கண்விழித்தபோது அவரைச் சூழ்ந்து ஏழு கனிந்த அத்திப்பழங்கள் விழுந்துகிடக்கக் கண்டார். அவ்விடம் திருமகள் உறையும் நிலம் என அவர் உணர்ந்தார். அங்கேயே குடில் ஒன்று கட்டி குடியிருக்கலானார். ஏழு கனிகள் விழுந்த இடத்தில் கல் ஒன்று நாட்டி திருமகளை நிறுத்தி வணங்கினார். மங்கலமஞ்சளும் மலரும் கொண்டு அவளை வழிபட்டாள் அவர் குலமகள். “இது இளையவள் அருளிய இடம். இங்கு அமைவோம். இங்கு தழைக்கும் நம் குடி” என அவர் அவளிடம் சொன்னார்.

அந்நிலத்தில் திருமகள் பொலிந்தாள். கன்றுகள் பெற்றுப்பெருக குடி எழுந்துபரந்தது. சப்தஃபல கன்னிகை என்றே அத்திருமகள் அழைக்கப்படலானாள். அவ்வூரும் சப்தஃபலம் என்று பெயர்கொண்டது. நூற்றெட்டு தலைமுறைகளாக அங்கே ஆபுரந்து அறம்வளர்த்த அத்தொல்குடி மாதனிகர் என்று அழைக்கப்பட்டது. விருஷ்ணிகுலத்தின் அவைகளில் அத்திமரத்தின் இலையை தலைப்பாகையில் சூடியமர்ந்திருக்கும் உரிமை கொண்டிருந்தது.

சப்தஃபலத்தின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் சிறிய கற்சிலையாக கைகளில் மலரும் அமுதகலமும் சுடரும் கொண்டு அருட்கை மலர்ந்து அமந்திருருந்த சப்தஃபலகன்னிகையே அவ்வூரில் வாழ்ந்த மூன்று கொடிவழிகளுக்கும் பொதுவான குடித்தெய்வம். அன்னைக்கு ஒவ்வொருநாளும் அன்றலர்ந்த புதுமலர்களால் பூசனை செய்யப்பட்டது. புத்தரிசிச்சோறும் மஞ்சள்குழம்பும் படைக்கப்பட்டது. கருவுற்றாலும் ஈன்றாலும் அங்குவந்து வழிபட்டனர். புதுப்பாலை அன்னைக்குப் படைத்தனர். அவர்களின் ஆநிரை காப்பவள் அவள் என்று தொழுதனர்.

முதற்புலரியில் ஊரெழுவதற்கு முன்னர் சப்தஃபலத்தின் இளையவள் எழுந்துவிடுவாள். குறுங்காட்டிலிருந்து நீராவி கலந்த குளிர்காற்றில் பசுந்தழை மணம் மொண்டு ஊர்மேல் நிறைப்பாள்.  இல்லங்களின் முற்றங்களில் இரவில் பூத்த மலர்களை உதிர்த்துப்பரப்புவாள். காற்று அலைபரவிய புதுப்புழுதித் தெருவில் அவள் காலடித்தடம் தெரியும். இல்லத்துப்பெண்கள் காலையெழுந்து கதவுதிறக்கும்போது மங்கல இளம்வெளிச்சமாக அவள் முற்றத்தை நிறைத்திருப்பாள். அவர்கள் பச்சரிசி மாவால் பசுஞ்சாணிப்பரப்பில் அவள் கால்தடங்களை கோலமாக வரைந்து வைப்பார்கள்.

அன்று இளையவள் தன் கோயிலில் இருந்து எழுந்து வெளிவந்தபோது எதிரே இருண்ட சாலையில் கலைந்த குழலும் தளர்ந்துலைந்த நடையுமாக இளையோன் ஒருவன் வருவதைக் கண்டாள். விடியொளி விழிதுலக்கத் தொடங்கியிருந்தபோதும் அவனைச் சுற்றியிருந்தது அடரிருள் ஒன்று. அவனைத் தொடர்ந்து எலிகள் வந்துகொண்டிருந்தன. தலைக்குமேல் வௌவால்கள் அவனைச் சூழ்ந்து சிறகடித்தன. அவன் வருவதற்குள்ளாகவே கெடுமணம் கொண்டு காற்று வந்தது.

அன்னை அவன் முன்னால் புன்னகையுடன் நின்று “மைந்தா” என்றாள். அவன் அவளை அலையும் விழிகளுடன் நோக்கி ஒருகணம் நின்று பின் தன் அழுக்கான கையை நீட்டி “விலகு” என ஒதுக்கிவிட்டு கடந்துசென்றான். அவள் “நான் யாரென்று அறிவாயா?” என்றபடி அவன் பின்னால் செல்ல அவன் இயல்பாக காறித்துப்பிய எச்சில் அவள் முகத்தில் விழுந்தது. திகைத்து அவள் அங்கேயே நின்றுவிட்டாள். அவன் திரும்பி நோக்காமல் நடந்து மறைந்தான்.

நின்றிருக்கவே அவள் உடல் கருமைகொண்டது. அவள் வலத்தோள்மேல் காகம் ஒன்று வந்தமர்ந்தது. அவள் இனிய புன்னகை மறைந்து கரிய கோரைப்பற்கள் எழுந்தன. கனைத்தபடி கழுதையொன்று அவளருகே வந்து நிற்க அவள் அதன் மேல் ஏறியமர்ந்தாள்.  கையில் அவள் கொண்டிருந்த வெண்தாமரை மலர் துடைப்பமாக மாறியது. அவள் உடலெங்கும் பரவியிருந்த ஒளி மெல்ல இருண்டு ஒட்டடைப்படர்வாகியது.

[ 7 ]

கசியபப் பிரஜாபதிக்கு அரிஷ்டையெனும் துணைவியில் பிறந்த பதினாறாயிரம் கந்தர்வர்களில் மூத்த நூற்றெண்மரில் ஒருவனாகிய சித்ரசேனன் தன் காதல் மனைவியாகிய சந்தியையுடன் விண்முகில் ஒன்றில் யாழுடன் அமர்ந்து காதலாடினான். அந்தியெழும் வேளையில் காற்றில் பனித்துளியென விண்ணில் பொன்னிறத்தில்  திரண்டு வரும் பேரழகி அவள். அந்தி இருண்டு விண்ணின் விழிகள் திறக்கும்போது அவனை மொழியால் சூழ்ந்து, மேனியால் தழுவி, காமத்தால் புதைத்து அவள் மகிழ்விப்பாள். மழைக்கால மலைகளைப்போல அவனிலிருந்து குளிரருவிகள் ஒளியுடன் எழும். அத்திமரம் கனிகொண்டதுபோல அவன் வேரும் தடியும் கிளையும் இனிமைகொண்டு நிறைவான்.

ஆனால் முதற்சூரியக் கதிர் எழுவதற்குள் அவள் உடல்கரைந்து உருமாறத்தொடங்குவாள். அவள் உடலின் தோலில் சுருக்கங்களும் மடிப்புகளும் உருவாகும். முகமெங்கும் வரி படரும். உடல்கூன கண்கள் பஞ்சடைய கூந்தல் நரைத்துக்குறுக முதுமகளாக ஆவாள். அவளுக்கு அப்போது வலிகை என்று பெயர். இருவுருக்கொண்ட ஒருமகள்  அவள் என்று சித்ரசேனன் அறிந்திருக்கவில்லை.  இரவில் ஒருமுகமும் பகலில் மறுமுகமும் கொண்ட அவளுடைய எழில் முகத்தை மட்டுமே அவன் கண்டான்.

முன்பு அந்திப்பொழுதில் முகிலில் கனிந்த மழைத்துளி ஒன்று செவ்வொளிபட்டு பொன்னென்றாகியது. அவ்வழி விண்ணில் கடந்துசென்ற பிரம்மன் புன்னகைத்து அவளை ஒரு கன்னியென்றாக்கினான். கைகூப்பி நின்றிருந்த கன்னியிடம் “பிந்துமதி என்று எழுந்தவள் நீ. இசைகொண்டு உன்னை மீட்டும் கந்தர்வன் ஒருவனுக்கு காதலியாகுக!” என்று வாழ்த்தினான். விண்ணில் ஒளிவிட்டு நின்றிருந்த அவளை இரு தேவியர் அணுகி இருகைகளையும் பற்றிக்கொண்டனர். வலக்கையைப் பற்றியவள் திருமகள். “நான் இளையோள். உன்னில் எழிலையும் மங்கலத்தையும் நிறைப்பவள்” என்றாள். இடக்கையைப் பற்றியவள் இருள்மகள். “நான் தமக்கை. உன்னை நீ மட்டுமே அறியும் பேராற்றல் கொண்டவளாக ஆக்குவேன்” என்றாள்.

இருவரில் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாது பிந்துமதி திகைத்தாள். இருவரும் இரு கைபற்றி இழுக்க அவள் இரண்டாகப் பிரிந்தாள். ஒருத்தி பேரழகுகொண்ட சந்தியை. பிறிதொருத்தி முதுமைகொண்டு சுருங்கிய வலிகை. அந்தியில் எழுந்தவள் சூரியனை அறியவே இல்லை. பகலில் உழன்றவள் விண்மீன்களை பார்த்ததே இல்லை. ஆனால் சந்தியையைக் கூடும் காமத்தின் ஆழத்தில் சித்ரசேனன் வலிகையைக் கண்டான். அழகைப் பிளந்தெழுந்த ஆற்றலை உணர்ந்தான்.

அன்றும் அவளுடன் காமத்தில் திளைக்கையில் ஆழத்து அலைகளில் ஆயிரம் கைகளும் பல்லாயிரம் கண்களும் கொண்டெழுந்த வலிகையின் விழைவின் பேராற்றலை உணர்ந்து திகைத்துத் திணறிக் கொண்டாடி மூழ்கி எழுந்து மீண்டு வந்து மல்லாந்து படுத்து அன்று அவனுடன் உரையாட எழுந்த விண்மீனை நோக்கிக் கொண்டிருந்தான். அவனருகே புரண்டுபடுத்த சந்தியை “நீங்கள் என்னுடன் இருக்கையில் பிறிதொருவரிடம் செல்கிறது உங்கள் உள்ளம். என் கைகளுக்குச் சிக்கிய உடலுக்குள் உள்ளம் இல்லை என்பதை ஒருகணம் உணர்ந்தேன்” என்றாள்.

“ஆம், ஆழத்தில் நீ பிறிதொருத்தியாக ஆகிறாய். அந்த ஆற்றலை எதிர்கொள்கையிலேயே என்னுள்ளும் ஆற்றல் எழுகிறது” என்றான் சித்ரசேனன். “அது நானல்ல” என்று அவள் சீறினாள். “அதுவும் நீயே. நீயென்று நீ நிகழ்த்துவது மட்டும் அல்ல நீ” என்று அவன் நகைத்தான். அவள் சினத்துடன் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் முகத்தின் உவகைக்குறி அவளை எரியச்செய்தது. பின்னர் குனிந்து அவன் செவிகளுக்குள் “நான் அவளென்று ஆனால் உங்களுக்கு பிடித்திருக்குமா?” என்றாள். அவள் வினாவை நன்குணராத சித்ரசேனன் “ஆம்” என்றான். அவள் மூச்சில் முலைகள் எழுந்தமைய அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

முதற்கரிச்சான் குரலெழுப்புவதற்குள் விழித்துக்கொண்டு அவன் இதழ்களை முத்தமிட்டு எழுப்பி விடைகொண்டு அகல்வது அவள் வழக்கம். அன்று அவள் வஞ்சமெழுந்த விழிகளால் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். கீழ்த்திசையில் முதல்புள் காலை என்றது. முகில்குவையின் நுனிகளில் செம்மை படரத் தொடங்கியது. அவள் புறங்கைகளில் நரம்புகள் புடைத்தெழுந்தன. கண்களுக்குக் கீழே தோல்வளையங்கள் கருகியிறங்கின. முகவாயில் ஆழ்ந்த வாய்வரிகள் விரிசல்போல் ஓடின. நெற்றியில் கோடுகள் படிந்தன.

அவனை முத்தமிட்டு “எழுக!” என அவள் சொன்னபோது அவள் வலிகையென்றாகிவிட்டிருந்தாள். அவன் விழித்து கையூன்றி எழுந்து அவளை நோக்கி “யார் நீ?” என்று கூவினான். “நான் மூத்தவளாகிய வலிகை. சந்தியையின் மறுமுகம்” என்றாள். “இல்லை, நீ எவரோ. நான் உன்னை அறியேன்” என்று அவன் கூவியபடி எழுந்தான். அவள் அவன் ஆடைபற்றி நிறுத்தி “நீ என்னை அறிவாய்” என்றாள். அவள் விழிகளில் எரிந்த விழைவைக் கண்டதுமே அவன் அறிந்துகொண்டான். “ஆம்” என்றான். அவனிலும் அவ்விழைவு பற்றிக்கொண்டது.

அவளுடன் அவன் காமத்திலாடினான். எரி எரியை ஏற்று எழுவதுபோன்ற காமம். கீழே சித்ரகூடமெனும் காடு புள்ளொலியும் சுனைகளிள் மணியொளியும் என நிழல்கரைந்து விடிந்துகொண்டிருந்தது. காதலில் கொண்டிருந்த எல்லா நுண்மைகளையும் அழகுகளையும் அவன் துறந்தான். இன்சொற்களும் நெகிழுணர்வுகளும் அகன்றன. வன்விழைவே இயல்பென்றான விலங்கென மாறினான். கூடி முயங்கி மூச்சிரைக்க திளைத்த பொழுதில் அவள் வாயிலிட்டு அளித்த வெற்றிலைச்சாற்றை தன் வாயில் வாங்கி மென்று திரும்பி நீட்டி நிலத்துமிழ்ந்தான்.

[ 8 ]

கௌசிக குலத்தில் பிறந்தவரும் விசுவாமித்திர மாமுனிவரின் கொடிவழி வந்தவருமாகிய காலவ முனிவர் கின்னரநாட்டின் மேல்விளிம்பில் அமைந்த  சித்ரகூடம் என்னும் பசுங்காட்டின் நடுவே குடில் அமைத்து தன் பதினெட்டு மாணவர்களுடன் தவமியற்றி வந்தார். ஆறாக்கடுஞ்சினம் கொண்ட முதல்முனிவரின் அவ்வியல்பையே தானும் கொண்டவர் என்று அவர் அறியப்பட்டிருந்தார்.

ஆவணி மாதக் காலை ஒன்றில் காலவர் தன் முதல் மாணவர் மூவருடன் அக்காட்டின் நடுவே ஓடும் சித்ரவாகினி என்னும் ஆற்றின் கரைக்கு கதிர்வணக்கத்திற்காக சென்றார். நீராடி, சடைமுடிக் கற்றைகளை தோளில் பரப்பி, கிழக்கு நோக்கி இடைவரை நீரில் நின்று, எழுசுடர் கொண்டிருந்த செம்மையை தன் முகத்தில் வாங்கி, சூரியனை வழுத்தும் வேதச்சொல்லை ஓதி,   நீரள்ளி கதிருக்கு நீட்டி கை மலர்ந்தபோது அதில் உமிழப்பட்ட வெற்றிலைச்சாறு வந்து விழுந்தது.

பறவை எச்சம் போலும் என்று எண்ணி அதை நோக்கிய காலவர் அறிந்து அருவருத்து கையை உதறி அதை நீரில் விட்டார். கைகளை மும்முறை கழுவியபடி தலை நிமிர்ந்து வானைப் பார்த்தபோது கடந்து சென்ற முகில் ஒன்றின் மேல் அரைமயக்கில் படுத்திருந்த கந்தர்வனின் கழலணிந்த காலை கண்டார். அப்பால் அக்காலுடன் பிணைந்ததென கந்தர்வப் பெண்ணொருத்தியின் கால் தெரிந்தது.

KIRATHAM_EPI_09

நிகழ்ந்ததென்ன என்று அக்கணமே உணர்ந்த  காலவர் குனிந்து நீரில் ஒரு பிடி அள்ளி வான் நோக்கி நீட்டி “நீ எவராயினும் ஆகுக! என் தவத்தூய்மை மேல் உமிழ்ந்த உன்னை இன்று நாற்பத்தொரு நாள் நிறைவுறுவதற்கு முன் எரித்தழிப்பேன். உன் பிடி சாம்பலை அள்ளி நீறென உடலணிந்து இங்கு மீண்டு என் தவம் தொடர்வேன். ஆணை! ஆணை! ஆணை!” என்றார். அவருடைய மூன்று மாணவரும் குனிந்து நிலம் தொட்டு “புவி சான்றாகுக! நிலை சான்றாகுக! வேர் சான்றாகுக!” என்றனர்.

சினம் எரிந்த உடலுடன் காலவர் சென்ற வழியெல்லாம் தளிரிலைகள் கருகின. புட்கூட்டம் அஞ்சிக் கூவி வானிலெழுந்தது. தன் குடில் மீண்ட காலவர் தனியறைக்குள் சென்று புலித்தோல் விரித்து அதன் மேல் அமர்ந்து விழிமூடி ஊழ்கத்தில் ஆழ்ந்தார்.  அவர் அறைக்கு வெளியே மாணவர்கள் கைகூப்பி காத்து நின்றனர். ஊழ்கத்தில் தன் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மூதாதையர் அளித்த முதற்சொல்லை மீட்டார். அதன் சரடு வழியாகச் சென்று அங்கு அடைந்து உச்சிநின்று கூவினார். “என் தவத்தை இழிவு செய்தவன் எவன்? தெய்வங்களே இங்கெழுந்து அவனை காட்டுங்கள்!”

தன்னுள் எஞ்சிய இறுதி வேதச்சொல்லெடுத்து ஆணையிட்டார். “இங்கு எழுக என் கையின் அவிகொண்ட எரி!” அவர்முன் அகல் சுடரிலிருந்து எழுந்து திரைச்சீலையை பற்றிக்கொண்டு நின்றெழுந்த அனலவன் “முனிவரே, அவன் பெயர் சித்ரசேனன். விண்ணில் தன் துணைவியுடன் காதல்கொண்டிருக்கையில் நிலைமறந்தான்” என்றான். காலவர் சீற்றத்துடன் “எப்போதும் நிலைமாறாதவனே விண்ணூரும் தகுதிகொண்டவன். அவன் கால்கீழே வேதச்சொல் ஓதும் முனிவர் வாழ்வதை அவன் அறிந்திருக்கவேண்டும்” என்றார்.

அனலோன் “ஆம், ஆனால் காதலென்பது கட்டற்றது அல்லவா?” என்றான். “காலவரே, இக்காடு விண்ணில் அவன் கொண்ட காதலின் பொருட்டு மண்ணில் அவனால் உருவாக்கப்பட்டது. ஆயிரமாண்டுகாலம் தன் யாழை மீட்டி அதன் சுதியின் அலைகளிலிருந்து இப்பசுமரப் பெருவெளியை அவன் படைத்தான். இங்கு மரங்களை சமைத்து, சுனைகளையும் குளிர்ந்த பாறைகளையும் உருவாக்கினான். விழிமின்னும் மான்களும் தோகை விரிக்கும் மயில்களும் பாடும் குயில்களும் அவனால் உருவாக்கப்பட்டதே. இங்கு ஆண்டு முழுக்க வெண்குடையென நின்று கனிந்து மழை பெய்து கொண்டிருக்கும் முகில் அவன் இல்லம். தன் நூற்றியெட்டு தேவியருடன் அவன் இங்கு வசிக்கிறான். வெல்லற்கரியவன். விண் துளிகளுக்கு நிகரான அம்பு பெய்யும் ஆற்றல் கொண்டவன்.”

காலவர் சினம் மேலும் கொழுந்துவிட கூவினார் “என் சொல் மாறாது. இவன் செயலால் என் தவம் கொண்ட இழிவு இவன் அழியாமல் அணையாது. அவனை நான் வென்றாக வேண்டும்.”  எரியன் “முனிவரே! அவனுடைய காட்டில் குடியேறியிருப்பது தாங்கள்தான். தன் இன்பத்தை பெருக்கிக்கொள்ளும் பொருட்டு குயிலுக்கு காகத்தையும் மயிலுக்குக் கோழியையும் மானுக்குப் புலியையும் குளிரோடைக்குக் காட்டெரியையும் அவனே உருவாக்கினான். தன் காமத்திற்கு மாற்றாக இங்கு உங்களை அவன் குடியேற்றினான். முற்றும் துறந்து தவம் செய்யும் பொருட்டு வெற்றுடலுடன் நீங்கள் இக்காட்டின் எல்லைக்கு வந்தபோது இவ்வழியே என்று கூவும் வழிகாட்டிப் பறவையாக உங்கள் முன் தோன்றி இங்கு அழைத்துவந்தவன் அவன்தான்” என்றான்.

“இக்காடல்ல நான் குடியிருக்கும் இடம். என் உள்ளத்தில் எழுந்த வேதச்சொல் விளையும் வெளியில் அமர்ந்திருக்கிறேன். பிறிதொன்றும் எனக்கொரு பொருட்டல்ல” என்று காலவர் சொன்னார். “பொறுத்தருள்க, முனிவரே! அவனை இங்கு அழைத்து வருகிறேன். உங்கள் வேள்விக்காவலன் என்று நின்றிருப்பான். உங்கள் தாள் பணிந்து பிழை பொறுக்குமாறு அவன் கோருவான்” என்றான் அனலோன். “இல்லை, நான் விழைவது அவன் எரிநீறு மட்டுமே” என்று காலவர் சொன்னார்.

“ஆம், அவன் அறியாமல் இப்பிழை ஆற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அவன் உமிழ்ந்த மிச்சில் என் மீதல்ல, நான் கொண்ட தவம் மீது மட்டுமல்ல, எந்தையின் மீதும்கூட. என் முதுமூதாதை விசுவாமித்திரர் மீது விழுந்த வாய்நீர் அது. அனலோனே, மானுடர்க்கரிய அருந்தவம் இயற்றி படைப்பவனுக்கு நிகரென பேருரு கொண்டபோதும் அந்தணர் அல்ல என்பதனால் ஆயிரம் அவைகளில் இழிவுபட்டவர் என் மூதாதை விசுவாமித்திரர். இன்றும் அவ்விழிவின் ஒரு துளி சூடியே நானும் என் குலத்தோரும் இம்மண்ணில் வாழ்கிறோம்.”

“என் கையில் விழுந்த அவ்வெச்சில் இங்கு நாளை வேதியரால் இளிவரலாக விரியுமென்பதை நான் அறிவேன். அது சூதர் சொல்லில் எப்படி வளரும் என்றும் நானறிவேன். அவனைப் பொசுக்கிய சாம்பல் ஒன்றே அதற்குரிய மறுமொழியாகும். கௌசிககுலத்தின் தவத்திற்குச் சான்றென அது நின்றிருக்கட்டும் கதைகளில்” என்று காலவர் சொன்னார். “இனி சொல்லாடவேண்டியதில்லை. நீ செல்லலாம்” என்றார்.

அனலோன் “அவ்வண்ணமெனில் உங்கள் சொல்வல்லமையால் அவனுடன் போர்புரிக! முனிவரே, மண்ணில் எவரும் அவனை வெல்ல முடியாதென்று அறிவீர்” என்றான். காலவர் “விண்ணில் ஒருவன் அவனை வெல்ல முடியுமென்றால் மண்ணிலும் ஒருவன் அவனை வெல்ல முடியும். யாரெனக் காண்கிறேன்” என்று  சூளுரைத்தார். “அவன் படைக்கருவி யாழில் அவன் இசைக்கும் இசை. வில் செல்லாத தொலைவுக்கு சொல் எட்டா சேய்மைக்கு செல்லும் ஆற்றல் கொண்டது இசை… அவனை வெல்லமுடியாது” என்றபடி அனலவன் அணைந்து கரியென எஞ்சினான்.

அன்றாட அறச்செயல்களை நிறுத்தி, நீரன்றி உணவுகொள்ளாது அவ்வறைக்குள் அமர்ந்து தன்னுள் நிறைந்து புடவிப்பேரோவியத்தை விரித்து விரித்து பறந்து புள் என தேடி ஏழுநாட்கள் அமர்ந்திருந்த காலவர் இளைய யாதவரை கண்டடைந்தார். அவரை முழுவடிவில் கண்டதுமே வானிலிருந்து அறுந்து மண்ணறைந்து விழுந்தவர்போல் அதிர்ந்து அலறினார். விழிதிறந்து உவகையுடன் “ஆம்!” என்று கூவியபடி எழுந்தோடி கதவைத் திறந்து வெளிவந்தார். தன் மாணவர்களிடம் “அவனே… ஆம், அவனே!” என்று கூச்சலிட்டார்.

அவர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். “அவனே வெல்வான். அவனை வெல்லல் மூன்று இறைவருக்கும் அரிது” என்று காலவர் கொந்தளித்தார். “இப்புவியில் விண்ணின் துளியென வந்துதிர்ந்தவன். மண்ணையும் முழுதும் வெல்லும் பேராற்றல் கொண்டவன். அவனே அக்கந்தர்வனையும் வெல்ல முடியும்” என்றார். முதல் மாணவனாகிய சலஃபன் “அவர் யாதவ அரசரல்லவா?” என்றான். “அவன் யாரென நான் அறிவேன். அவனால் என்ன இயலுமென அவனும் அறிவான். கிளம்புங்கள்” என்று சொல்லி காலவர் அங்கிருந்து புறப்பட்டார்.

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விருது ஓர் அறிவிப்பு, ஒரு விண்ணப்பம்

$
0
0

11

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

இவ்வருடம் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 ஆம் தேதி மாலை கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழவிருக்கிறது முந்தையநாள். 24 ஆம் தேதி காலைமுதல் உரையாடல்களும் எழுத்தாளர் சந்திப்புகளும் நிகழும்.

பரிசுபெறுபவர் குறித்த ஒர் ஆவணப்படமும் அவரைப்பற்றிய ஒரு நூலும் விழாவில் வெளியிடப்படும்.

வருபவர்கள் முன்கூட்டியே ரயில் முன்பதிவுகள் செய்து கொள்ளவேண்டுமென்று கோருகிறேன். பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்

தமிழகத்தில் இன்று நிகழ்ந்துவரும் மிகப்பெரிய இலக்கியவிழா இதுவே. இத்தனைபெரிதாக இதை உத்தேசிக்கவில்லை . இயல்பாகவே இது பெரிதாகி வந்தமைக்கு இளம் வாசகர்களுக்கு இது தேவையாக இருந்ததுதான் காரணம் என நினைக்கிறேன்

ஒவ்வொருவருடமும் இதன் செலவு அதிகரித்தபடியே செல்கிறது. பெரும்பாலும் நண்பர்களின் நன்கொடையால்தான் இவ்விழா முன்செல்கிறது. சென்ற ஆண்டு அது சற்றே சுமையாக ஆகிவிட்டது

ஆகவே இம்முறை விஷ்ணுபுரம் அமைப்பை ஒரு சிறிய டிரஸ்ட் ஆக பதிவுசெய்திருக்கிறோம். என் நண்பர்கள் நான்குபேர் கொண்ட இச்சிறிய அமைப்பு நிதிநிர்வாகத்திற்காக மட்டுமே.

இதுவரை வெளிப்படையாக நன்கொடைகள் பெற்றுக்கொண்டதில்லை, காரணம், முறையான அமைப்பு இல்லை என்பதுதான். இப்போது அவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

விஷ்ணுபுரம் அமைப்புக்கு நிதிதவி செய்யும்படி நண்பர்களைக் கோருகிறேன். இது அனைவரும்கூடிச் செய்யும் விழாவாக நீடிக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்

வங்கி விவரங்கள்

வங்கி ICICI BANK Ram Nagar Coimbatore

பெயர் VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZUTHALARGAL ARAKKATTALAI

கணக்குஎண் 615205041358

IFSC Code ICIC0006152

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காற்றுசெல்லும் பாதை.

$
0
0

Navin-M.

காற்றுசெல்லும் பாதை.

 

[ 1 ]

 

சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் நவீனைச் சந்தித்தேன். 2006ல் நானும் அருண்மொழியும் சிங்கப்பூருக்குச் சென்றோம். சிங்கப்புர் எழுத்தாளர் சங்கம் சார்பில் என் நண்பர் சித்ரா ரமேஷ் அழைத்திருந்தார். அங்கிருக்கையில் மலேசியா வருகிறீர்களா என ஓர் அழைப்பு வந்தது. மலேசிய நவீன இலக்கியத்தின் மையமாகிய டாக்டர் சண்முக சிவா அழைத்திருந்தார் ஆனால் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக மலேசியா செல்ல விசா கிடைக்காது என்னும் நிலை.

 

மறைந்த நண்பர் ஈழநாதன் விசா ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். சிலநாட்களிலேயே விசா வந்தது.  சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கினோம். கொலாலம்பூர் பேருந்துநிலையத்திற்கு நண்பர் அகிலனுடன் ஒரு காரில் நவீன் வந்து வரவேற்றார். கரிய உருவம் சிறுவனைப்போன்ற அழகிய முகம். முகத்தில் சரியும் மயிக்கற்றை. செல்லப்பிள்ளைகளுக்குரிய மெல்லிய திக்கல் கொண்ட பேச்சு.

 

அன்று முதல் இன்றுவரை நவீன் எனக்கு மானசீகமாக மிக அணுக்கமானவர். அவருடைய பல இயல்புகளுடன் நான் என் இளமைப்பருவத்தை அடையாளம் கண்டுகொண்டேன். ஒன்று அடிதடி. நவீன் அன்றும் ஓர் அடிதடிச்சிக்கலில் இருந்தார். பத்தாண்டுகளுக்குப்பின்னரும் அதே குணாதிசயம் நீடிக்கிறது. நான் அடிதடிப்பிரச்சினைகளில் இருந்து மீண்டு சமனமடைந்தது நாற்பது வயதுக்குமேலேதான்.

 

இன்னொன்று, இலக்கியம் என்னும் அறிவுத்துறை, இலக்கியமென்னும் கலை மீது கொண்டிருக்கும் சமரசமற்ற பற்று. அந்த அர்ப்பணம் எனக்கு எப்போதுமே இருந்தது. பிறிதொரு தெய்வத்திற்கு நான் தலைகொடுத்ததில்லை. எனக்கென ஓர் ஞானாசிரியனை நான் நித்யாவில் கண்டடைந்ததுகூட அவர் இலக்கியம் தேர்ந்தவர் என்பதனால்தான். நானறிந்தவரை இலக்கியம் மீது தணியாப்பற்றுகொண்ட அடுத்த தலைமுறை இளைஞர்களில் நவீன் முதன்மையானவர், அவரது வெற்றிகளும் உவகைகளும் இழப்புகளும் கசப்புகளும் அதிலிருந்து மட்டுமே

 

அப்போது நவீன் ‘காதல்’ என்று ஒரு பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அதில் இலக்கியத்தை அறிமுகம்செய்ய முயன்றுகொண்டிருந்தார் என்று சொல்லலாம். அவரைச்சூழ்ந்து ஒரு சிறிய எழுத்தாளர்வட்டம் உருவாகி வந்திருந்தது. வழக்கம்போல அவர்களுக்குள் இன்று மணப்பினக்கும் விலக்கமும் மீண்டும் நட்பும் என போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை நவீன் பறை என ஒரு சிற்றிதழை நடத்தினார். அவரது வாழ்க்கைப்போக்கின் மாற்றத்தைக் காட்டுவது இது என படுகிறது

 

உண்மையில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என தமிழ்பேசப்படும் தமிழகத்தின் அயல்பகுதிகளில் நவீன இலக்கியம் அதன் சரியான தீவிரத்துடன் அறிமுகமாகவே இல்லை. நவீன இலக்கியம் என்பதை பொதுவாக மரபிலக்கியத்திற்குப் பின் வந்ததும், உரைநடையில் எழுதப்பட்டதும் என வரையறைசெய்யலாம். ஆனால் குறிப்பாக அது ‘நவீனத்துவ’ இலக்கியம்தான். தமிழில் புதுமைப்பித்தனில் இருந்தே அது தொடங்குகிறது. புதுமைப்பித்தனின் மரபையே நவீன இலக்கியம் என இங்கே குறிப்பிடுகிறேன்.

 

இலங்கையைப் பொறுத்தவரை நவீன இலக்கியம் இருபோக்குகளாகவே அறிமுகமாகியிருந்தது. ஒன்று தமிழ் வணிகஎழுத்தை முன்மாதிரியாகக் கொண்ட எழுத்து. செங்கை ஆழியான் வகை. இன்னொன்று, முற்போக்கு எழுத்து. கைலாசபதி ,சிவத்தம்பி ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டது

 

நவீன இலக்கியத்தின் அடிப்படைகளை இலங்கையில் பேச ஆரம்பித்தவர் மு.தளையசிங்கம். ஆனால் அவரே முற்போக்கு முகாமிலிருந்து வந்தவர் என்பதனால் சமூகச்செய்தி என்னும் மனச்சிக்கலில் இருந்து விடுபடமுடியவில்லை. அத்துடன் அவர் செயல்பட்ட காலம் குறைவு, வட்டமும் சிறிது. அதன்பின்னர் அத்தகைய ஒரு மையம் அங்கு அமையவுமில்லை.

 

ஆகவே சரியான அர்த்தத்தில் புதுமைப்பித்தனிலிருந்து தமிழகத்தில் உருவான நவீன இலக்கியத்தின் அலை இலங்கையில் எழவே இல்லை. இன்று அங்கு எழுதுபவர்களில் அ.முத்துலிங்கம்,  ஷோபா சக்தி போன்றவர்கள் அச்சூழலுக்குச் சம்பந்தமே இல்லாமல் எழுந்துவந்தவர்கள்.

 

சிங்கப்பூர் இலக்கியத்தைப் பொறுத்தவரை அங்கு நவீன இலக்கியத்திற்கான மனநிலையை உருவாக்குவதில் குறைந்தகாலம் அங்கிருந்த சுப்ரமணியம் ரமேஷ் தொடக்கப்பங்காற்றியிருக்கிறார். எழுத்தாளராக நா.கோவிந்தசாமி ஒரு தொடக்கம். மற்றபடி அங்கிருந்தது மு.வரதராசனாரிலிருந்து தொடர்ச்சி கொண்ட ஓர் ஒழுக்கவாத இலக்கியம் , திராவிட இயக்கத்திலிருந்து வளர்ந்த அடையாள உருவாக்க இலக்கியம் ஆகியவை மட்டுமே.

 

மலேசிய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் முதல்பெரும்போக்காகத் தென்படுவது ஆர்..சண்முகம், அ. ரெங்கசாமி போன்ற முன்னோடிகளின் முற்போக்கு இலக்கியம். ரெ.கார்த்திகேசு போன்றவர்களின் ஒழுக்க இலக்கியம். நவீன இலக்கியத்திற்கான இடம் அங்கு உருவாவது சண்முக சிவா அவர்களின் முயற்சியினால்தான். மெல்லமெல்ல அவருக்கான ஓர் இளைஞர்குழு உருவாகியது. அதிலிருந்து கிளைத்தவர் நவீன்.

 

நவீன இலக்கியத்திற்கான அடிப்படைகள் என பலவற்றை வரையறைசெய்யலாம். ஆசிரியன் ஒரு வழிகாட்டியாக, அறுவுறுத்துவோனாக அதில் செயல்படுவதில்லை. அவன் அச்சமூகத்தின் ஒரு பிரதிநிதியாக தன்னை முன்வைக்கிறான். தன்னை தன் படைப்பில் அறுத்து ஆராய்கிறான். இந்த அகவயத்தன்மையே முன்னர் குறிப்பிட்ட இலக்கியப்போக்குகளில் இருந்து நவீன இலக்கியத்தை பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

 

இரண்டாவதாக, அவன் சமூகத்தின் தரப்பில் நிற்காமல் அதைத்திரும்பி நோக்கி விமர்சனம் செய்யும் கோணத்தில் நின்றிருக்கிறான். கூரிய விமர்சனம் என்பது நவீன இலக்கியத்தின் முக்கியமான அடிப்படை.

 

தன்னை முன்னிறுத்தல், விமர்சனப்போக்கு ஆகிய இரண்டு அம்சங்களால் நவீன இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஒரு ‘துடுக்குத்தனம்’ உள்ளது. அது புதுமைப்பித்தனிலேயே ஆரம்பிக்கிறது. மரபான உள்ளம் கொண்டவர்களை அது சீண்டுகிறது. சினக்கவும் கூசவும் வைக்கிறது. இன்றுவரை நவீன இலக்கியவாதிகள் தமிழின் மைய ஓட்டத்திற்குச் செல்லாததற்குக் காரணம் இதுவே

 

நம் மரபு என்பது மேல்கீழ் அடுக்குகளால் ஆனது. அங்கே சான்றோர் வேறு சாமானியர் வேறுதான். அதற்குரிய பலநூறு இடக்கரடக்கல்கள், முகமன்கள் முறைமைகள் ஆகியவை கொண்டது.  நவீன இலக்கியம் இந்த அடுக்குமுறைகளை பொருட்படுத்துவதில்லை. இடக்கரடக்கல்கள் முகமன்கள் முறைமைகள் அதற்கு சலிப்பூட்டுவன. ஆகவேதான் நவீன இலக்கியவாதி எப்போதும் மரபுசார்ந்தவர்களுக்கு எரிச்சலூட்டிக்கொண்டிருக்கிறான்

 

புதுமைப்பித்தன் ஆனாலும் சரி ஜெயகாந்தன் ஆனாலும் சரி இன்றுள்ள எழுத்தாளர்கள் வரை இந்த எரிச்சலூட்டும் அம்சம் அவர்களிடம் உள்ளது. கவன ஈர்ப்புகாக வேண்டுமென்றே கலகம் செய்கிறான் என்றும், கோணலானவன் என்றும் நவீன இலக்கியவாதி மரபானவர்களால் குற்றம்சாட்டப்படுகிறான். அக்குற்றச்சாட்டு தல்ஸ்தோய் மேல் இருந்தது, அல்பேர் கம்யூ மேல் இருந்தது என்னும் போது அது ஒரு கௌரவம்தான்

 

அத்துடன் உண்மையிலேயே கவன ஈர்ப்பு இலக்கியவாதியின் நோக்கமும் கூட. சீண்டி நிலைகுலையச்செய்வதன் வழியாகவே அவனுடைய இலக்கியம் சமூகத்திடம் உரையாடுகிறது. அதன் உறைநிலையை கலைக்கிறது. சமன்குலைத்தல் என்பது நவீன இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று.

 

மலேசியாவில் ஒருவகையில் நவீன இலக்கியவாதிக்குரிய அந்த துடுக்கை, சமன்குலைவுப் பண்பை அறிமுகம் செய்தவர் என நவீனை நினைக்கிறேன். இங்கிருந்து பார்க்கையில் என் தொலைதூர பிம்பம் போலிருக்கிறார். அவ்வகையில் எனக்கு மிக மிக அணுக்கமான ஒருவர் அவர்

 

 

t6dldl

 [ 2 ]

 

இளவயதிலேயே நான் உதறிவிட்ட ஓர் அம்சம் நவீனிடம் உண்டு, அரசியல். நான் அரசியல்நோக்கு என்பது எழுத்தாளனின் ஆழ்மனம் நோக்கிய பயணத்தை வெளியே இருந்து கட்டுப்படுத்துவது என்றே எண்ணுகிறேன்.  ஆனால் நவீன் அவரது சூழலில் இருந்து ஓர் அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். அவ்வரசியல் சார்ந்து அவர் முன்னிலைப்படுத்தும் சிலர்  என் நோக்கில் ஆழமற்ற கூச்சலாளர்கள் மட்டுமே

 

இலக்கியத்திற்கு அவசியமானது அந்தரங்கமான ரசனை என்பது என் எண்ணம். இலக்கியப்படைப்பை நோக்கி தன் ஆழ்மனதைத் திறந்துவைக்கும் வாசிப்பின் வழியாக உருவாகி வருவது அது. அரசியல் நோக்கு அதற்கு மிகப்பெரிய வடிகட்டியாக அமைந்துவிடுகிறது. வாழ்நாளெல்லாம் அரசியல்நோக்குடன் இலக்கியத்தை வாசித்தபலர் ஒரு கட்டத்தில் அவர்கள் இழந்ததென்ன என அறிந்து வருந்தியதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்

 

இளமையின் அரசியல்நோக்குக்குள் சென்று விடுவதென்பது பெரிய துரதிருஷ்டம்தான். மீண்டுவந்தால்தான் உண்டு. எவ்வகையிலோ இலக்கியமே நினைத்து கனிந்து நம்மை வந்து சூழ்ந்துகொள்ளவேண்டும். நவீன் குறித்து எனக்கிருந்த பதற்றத்தை தணிப்பதாக இருக்கிறது இந்நூல். இதில் அவர் தன் அரசியல்பலகணிகளை துறந்து வாசல்திறந்து வந்து படைப்புகளின் முன் நிற்பதைப் பார்க்கமுடிகிறது

 

பலகோணங்களில் இலக்கியரசனையை முன்வைக்கும் கட்டுரைகள் இவை. இலக்கிய ரசனையின் இரு வழிகள் இதிலுள்ளன. ஒன்று, இலக்கியப்படைப்பை தன்வயப்படுத்திக்கொள்வது.  தன் சொந்த அனுபாவங்கள் மற்றும் உணர்வுகள் வழியாக இலக்கியப்படைப்புகளை நோக்கிச் செல்வது. இரண்டு, இலக்கியப்படைப்புகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டும் தொடர்புபடுத்தியும் ஓர் அந்தரங்கமான வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்வது

 

இரண்டுமே இலக்கியப்படைப்புகளை வளர்த்து விரிப்பவை. உதாரணமாக, அக்னிநதி குறித்த கட்டுரை அந்நாவலுடன் ஆத்மார்த்தமான ஓர் உறவை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது. தொன்மங்களின் மறுஆக்கம் குறித்த  கட்டுரை இலக்கியப்படைப்புகளை ஒப்பிட்டு பின்னிச் செல்கிறது.

 

பலகட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தர ராமசாமி என தொடர்ந்துவரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளை கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும்.

 

காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும்பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும்பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது

 

உயிர்ப்புள்ள ஒரு இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் என கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றி தான் என உணரும் தானறியா  தன்னிலை ஒன்றை புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்டபின் தான் கண்டவற்றை தன்மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது

 

இந்த ரசனை அவரை வாழ்நாளெல்லாம் வழிநடத்தட்டும்

 

ஜெயமோகன்

 

 

[ம.நவீன் எழுதி வெளிவரவிருக்கும் உலகத்தின் நாக்கு என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை]

 

சிற்றிதழ் என்பது…

ஜெயமோகனுக்கு எதிர்வினை நவீன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10

$
0
0

[ 9 ]

இளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச் சிற்றூரில் இளைய யாதவர் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார்.

செல்லும் வழியிலேயே இளைய யாதவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தார். தமையனுடன் கொண்ட பூசலாலும் யாதவ குடிப்போர்கள் அளித்த கசப்பாலும்  உளம் நைந்த இளைய யாதவர் அங்கு கராளசிவத்தை பூசனை செய்து தனிமையில் வாழ்வதாகவும் எவரையும் சந்திப்பதில்லை என்றும் வழிப்போக்கனாக சந்தித்த சூதன் சொன்னான்.

சப்தஃபலத்தின் வாயிலில் அவரைத் தடுத்த காவலர்தலைவன் சதமன் “எவரும் தன்னை சந்திக்க வேண்டியதில்லை என்று இளைய யாதவரின் ஆணை, முனிவரே” என்றான். காலவர் தன்னை அவ்வாறு ஒரு காவலன் தடுப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடைய முதல்மாணவன்  சலஃபன் முன்னால் சென்று “கௌசிககுலத்து காலவ முனிவரை அறிந்துகொள்க! யாதவ அரசருக்கு அருள்புரியும்பொருட்டு இங்கு வந்துள்ளார்” என்றான். “எவராயினும் உள்ளே செல்ல ஒப்புதலில்லை” என்று சதமன் சொன்னான். “நீங்கள் தேடிவந்த இளைய யாதவர் உள்ளே இல்லை என்று மட்டும் அறிக!”

“நான் சந்திப்பதற்கு பிறிதொருவரும் இல்லை. அதன்பொருட்டே வந்தேன், சந்தித்த பின்பே மீள்வேன்” என்றார் காலவர். சதமன் “எனக்களிக்கப்பட்ட ஆணைகளை நான் மீறலாகாது, முனிவரே. என்மீது நீங்கள் முனிந்தாலும் நன்றே” என்றான். “சிறிதோ பெரிதோ தவமே என் வழி” என புன்னகையுடன் சொன்ன காலவர் அக்காவல் நிலைக்கு வெளியே முற்றத்தில் தன் மாணவர்களுடன் அமர்ந்தார். “இதனால் பயனில்லை, முனிவரே” என்றான் சதமன். “தவத்திற்கு கொடுந்தெய்வங்களும் இரங்கியாகவேண்டும்” என்றார் காலவர்.

முதிய காவலரான கலிகர் வந்து பணிந்து “புரிந்து கொள்ளுங்கள், முனிவரே. தமையனுடன் கொண்ட உளப்பிரிவால் நிலையழிந்திருக்கிறார் அரசர். இங்கு முழுத் தனிமையில்  புற்றுசூழ்ந்த தவநெறியர்போல் அமர்ந்திருக்கிறார். அமைச்சரோ சுற்றமோ அவரை அணுகுவதில்லை. தேவியருக்கும் அவரைப் பார்க்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இங்கிருப்பவர் காலமுகம் கொண்ட கடுஞ்சைவரைப்போல இங்குள அனைத்திற்கும் புறம் காட்டியவர்” என்றார்.

“எவ்வுருக்கொண்டாலும் இப்புவியில் எனக்கென இருப்பவன் அவன் ஒருவனே” என்றார் காலவர். கண்களை மூடி மடியில் கைவைத்து அமர்ந்தார். நீரும் உணவுமின்றி மூன்று நாட்கள் அக்காவல் முற்றத்தில் அவரும் மாணவர்களும் காத்திருந்தனர். அஞ்சியும் பதறியும் சப்தஃபலத்தின் யாதவர் அவர்களை வந்து பார்த்துச்சென்றனர். “அரசரிடம் சென்று சொல்வதா?” என்றான் சதமன். “அவருக்கு இன்று செவிகளே இல்லை” என்றார் கலிகர். “தவத்தோர் முனிந்து சொல்லேவினால் இச்சிற்றூர் அழியும். அவர் எரிசினத்துக்குப் புகழ்பெற்ற விஸ்வாமித்திரரின் சொல்மைந்தர்” என்றான் சதமன். “அவர் தன் தவத்தால் அரசரை அவர் வாழும் இருளுக்குள் இருந்து எழுப்பினால் அது நன்றே” என்றார் கலிகர்.

மூன்றாவது நாள் காலையிருளுக்குள் இலைகள் சூடிய பனித்துளிகள் உதிரும் ஒலி மட்டும் எழுந்துகொண்டிருந்த வேளையில்  நுண்அழைப்பு ஒன்றால் இழுத்துவரப்பட்டவர் போல திறந்து கிடந்த கோட்டைக்கதவு வழியாக நகருக்குள் இருந்து கரிய உடலுடன் தளர்ந்த நடையுடன் இளைய யாதவர்  வெளியே வந்தார். முன்னரே கண்டிராதபோதும் தொலைவிலேயே அவர் யாரென உணர்ந்து காலவர் எழுந்து கைகூப்பினார். அதன்பின்னரே அவரைக் கண்ட காவலர் காலைத்துயில் கலைந்து எழுந்து நின்று தலைவணங்கினர்.

எலும்புகள் புடைத்து கரியும் அழுக்கும் படிந்த தோலுக்குள் அசைந்தன. தேம்பிய தோள்களில் பரவிய குழலில் சருகுப்பொடியும் புழுதியும் படிந்திருந்தன. ஒட்டடைபோன்ற தாடி முகத்தை மூடியிருந்தது. தளர்ந்து நனைந்த இமைகளுக்குள் கண்கள் நிலம் நோக்கி சரிந்திருந்தன.  அவரை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது. காலவர் “யாதவர்க்கரசே, நீ எவரென உணர்ந்தபின்னரே வந்தேன்” என்றார்.

“இங்கு நான் அரசு துறந்து அமைகிறேன். யாதவ மன்னனாக தங்களுக்கு நான் அளிக்கும் எதுவும் இல்லை. துவாரகையை ஆள்பவள் யாதவப் பேரரசி சத்யபாமை” என்றார் இளைய யாதவர். அவர் திரும்பிச் செல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பினார். காலவர் “நான் பார்க்க விழைந்தது யாதவனை அல்ல” என்றார். இருவரும் ஒருகணம் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். அவர் நெஞ்சு திடுக்கிட்டது. “நான் காண விழைந்தது பெருங்காலத் தோற்றம் கொண்டெழும் விராடனையே” என்று அவர் சொன்னார். “உம்” என இளைய யாதவர் உறுமினார்.

பந்த ஒளியில் அவர் நிழல் நீண்டு விழுந்து கிடப்பதை அப்போதுதான்  காலவர் கண்டார். அவர் விழிகள் விரிந்தன. திரும்பி அவர் முகத்தை நோக்கி  கைகூப்பி “எனக்கு அருள்க, இருளே! என் பழி நீக்குக, பேராற்றலே!” என்றார். அவர் விழிகள் மெல்ல காலவரை ஏற்றுக்கொண்டன. “உம்” என மீண்டும் உறுமியபடி அவர் தலையை அசைத்தார். “சொல்க!” என்றார். அவரை அஞ்சி காலவரின் மாணவர்கள் விலகி நின்றனர். எழுந்த காற்றில் பந்தச்சுடர் ஒன்று நீண்டுபறக்க எதிர்த்திசையில் எழுந்த பெருநிழலைக் கண்டு ஒருவன் அஞ்சி “ஆ!” என்றான்.

காலவர் “என் மூதாதையின் பெயர் கொண்ட இழிவை நீ அறிந்திருப்பாய். ஷத்ரியக்குருதி என்று இன்றும் வேதச்சொல்லவைகளில் நாங்கள் இரண்டாம் நிரையில் அமரவைக்கப்படுகிறோம். அச்சொல்லை வளர்க்கும் செயலொன்று நிகழ்ந்தது. அப்பழியை தீர்க்க வேண்டுமென்று கோருகிறேன்” என்றார். அவர் “உம்” என முனகினார். நிகழ்ந்ததை காலவர் சொன்னார். “அவன் செய்தது ஏனென்று நானறியேன். என் குலக்குறையின் பொருட்டே நான் இழிவு படுத்தப்பட்டேன் என்று உணர்கிறேன்.”

கருகிய இதழ்கள் பல்காட்டி விரிய இளைய யாதவர் புன்னகைத்தார். “நான் அறிவேன்” என்றார். காலவர் “எப்படி?” என்றார். “நான் அதை நிகழ்த்தினேன்” என்று அவர் சொன்னார். அவர் உதடு அசையவில்லை என்று அவர் விழிமயங்கியது. அவர் பின்னமர்ந்து பிறிதொருவர் பேசியதுபோலத் தோன்றியது. “என் இரு கைகளையும் விரித்து சூரியனுக்கு நான் அளித்த நீர்மேல் காறி உமிழ்ந்தான் அவன். அவனைக் கொன்று எரித்து அச்சாம்பலைச் சூடாது இனி நான் தவம் இயற்றுவதில்லை என்று உறுதி கொண்டேன்.”

“இளையோனே, முனிவரின் தவம் பேணுதல் அரசரின் கடமை என்று நீ அறிந்திருப்பாய். என் தவக்காவலனாக உன்னைத் தெரிவு செய்தேன்” என்றார் காலவர். “ஆம்” என்று அவர் நீள்மூச்சுடன் சொன்னார். அவர் விழிகளை நோக்குவதையே தவிர்த்தார். உடலெங்கும் பிறிதொன்று நின்று தவிப்பதுபோல் ஒரு அசைவு ஓட எழுந்துகொண்டார். “உன் சொல் தேடுகிறேன், யாதவனே” என்றார் காலவர். “அவனை எரித்தழிப்பேன். உங்களுக்கு நீறளிப்பேன்” என்று அவருக்குப் பின்னாலென ஒரு குரலெழுந்தது.

இளைய யாதவர் திகைத்தவர் போல காலவரை நோக்கி “என்ன?” என்றார். “அவனை எரித்தழிப்பதாக சொல்லளித்தாய்” என்றார் காலவர். விழிகள் சற்று சுருங்க தலை நடுநடுங்க கூர்ந்து நோக்கிய இளைய யாதவர் “அவன் யார்?” என்றார். வியப்புடன் ஒருகணம் எண்ணி பின் எழுந்து காலவர் “சித்ரசேனன் என்று பெயர் கொண்ட கந்தர்வன். விண்முகிலில் வாழ்பவன். அங்கு தன் இரு தேவியருடன் குலாவி அமைந்து விழித்தெழுந்தபோது என் மேல் எச்சில் உமிழ்ந்தான்” என்று புதியவனிடம் என மீண்டும் சொன்னார்.

“நன்று” என்றார் இளைய யாதவர். அவர் விழிகள் நிலையற்று உருண்டு கொண்டிருந்தன. விரல்கள் அறியாத எதையோ தொட்டுத்தொட்டு மீட்டுவன போல் அசைந்து கொண்டிருந்தன. “தங்கள் ஆணையை சென்னி சூடுகிறேன். அவனைக் கொன்று அனலூட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். இது என் வஞ்சினம்” என்றார். காலவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடவேண்டுமென்னும் உணர்வையே அடைந்தார். “உன் சொற்களை நிலம் சான்றாக்கி ஏற்கிறேன்” என்றார்.

அவர் திரும்பிச்செல்லும்போது காலவர் ஓர் அடி முன்னால் வைத்து “இன்று பதினேழாவது நாள். நாற்பத்தொரு நாள் முடிவில் அவனை எரித்த சாம்பலை என் உடல் அணியவேண்டும். இல்லையேல் நான் எரிபுகுந்து மறைவேன்” என்றார். இளைய யாதவர் திரும்பாமல்  ”அது என் வஞ்சினமும் கூட” என்றார். தலைவணங்கி “என் குரு மரபும் சொல் மரபும் உனக்குத் துணை நிற்கும், யாதவனே. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் காலவர்.

தலைவணங்கி அவ்வாழ்த்தை ஏற்காது, திரும்பி ஒரு சொல்லும் பேசாது அவர் திரும்பிச் சென்றார். அருகே நின்றிருந்த முதல் மாணவன் சலஃபன் “அவரால் வெல்ல முடியுமா?” என்றான். “அவனால் மட்டுமே வெல்ல முடியும்” என்றார் காலவர். “ஆசிரியரே, தாங்கள் சொன்னதை அவர் சரியாகக் கேட்கவில்லை என்றே நினைக்கிறேன். தன்னுள் உழலும் ஒன்றுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்தவர் தாங்கள் சொல்லி முடிப்பதற்குள்ளேயே சொல்லளித்து எழுந்துவிட்டார்” என்று சலஃபன் தயங்கியபடி சொன்னான்.

“ஆம், தான் அளித்த வாக்கு என்ன என்று இன்னும் அவன் அறிந்திருக்கவில்லை. வாக்களித்தது அவனல்ல” என்றார் காலவர். “சித்ரசேனன் எவர் என்று அறிந்த பின்னரே அவன் முழுதுணர்வான். ஆனால் அவன் சொல் நின்றிருக்கும்.” புன்னகையுடன் சலஃபனின் தோளில் கை வைத்து “ஒருவேளை அதுவும் நன்றென்றே ஆகலாம். இன்று அவன் இருக்கும் செயலற்ற நிலையிலிருந்து மீள்வதற்கு இப்போர் ஒரு வழியாக ஆகக் கூடும். யாரறிவார்? இவையனைத்தும் அதன் பொருட்டே என்றிருக்கவும்கூடும். செயலும் விளைவும் மறுசெயலும் என பின்னிச் செல்லும் இப்பெரு வலையில் ஒரு கண்ணியை உணர அனைத்தையும் உணர்ந்தாக வேண்டும் என்பர்” என்றார்.

அன்றே தன் மாணவர்களுடன் சித்ரகூடத்திற்கு திரும்பிச்சென்றார் காலவர். தன் முன் அனலவனை எழுப்பி “இங்கு திகழ்க, எரியே! என் வஞ்சினம் நிறைவேற்றும் மானுடனை கண்டுகொண்டேன். துவாரகையின் இளையோன் சொல்பெற்று மீண்டுள்ளேன். என் குடிமேல் விழுந்த எச்சிலின் பொருட்டு விண்ணாளும் கந்தர்வனை எரித்தேன். அச்சாம்பலைச் சூடி எழுந்தேன். இனி வேள்விக்களங்களில் எல்லாம் இந்நிகழ்வுக்கு நீயே சான்று” என்றார்.

“ஒருவேளை என் சொல் திகழவில்லை என்றால் வெஞ்சாம்பலாக ஆகி மறைபவன் நான். என் ஊனுடலை உனக்கு அவியாக்குவேன். எரிந்தெழுந்து என் மூதாதையர் வாழும் உலகுக்கு என்னை கொண்டுசெல்க!” என்றபின் புலித்தோலை விரித்து அதன்மேல் மலரமர்வில் உடல் நிறுத்தி அமர்ந்து விழிமூடினார்.

 [ 10 ]

மாலைக்கதிர் கடலில் பெய்து அணைந்ததும் தன் மென்முகில் சேக்கையில் சித்ரசேனன் துயிலெழுந்தான். முன்னரே எழுந்த அவன் தேவி சந்தியை பூத்த காட்டில் பரவி மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து அவனுக்குச் சுற்றும் பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்பியிருந்தாள்.  புன்னகையுடன் எழுந்து அமர்ந்து கைதூக்கி சோம்பல்முறித்தபடி தோன்றி ஒளி கொள்ளத் தொடங்கியிருந்த முழுநிலவைப் பார்த்தான்.

சந்தியை கந்தர்வநாளின் புலரிவேள்விக்கென அனைத்தும் அமைத்து காத்திருந்தாள். பனித்துளி எடுத்து நீராடி, நிலவொளி தொட்ட வெண்முகில் கீற்றொன்றை ஆடையாய் புனைந்து வேள்விக் குளத்தருகே வந்தமர்ந்தான். தன் அச்சங்களையும் ஐயங்களையும் வஞ்சங்களையும் விறகென எரிகுளத்தில் அடுக்கி விழைவை அதில் நெய்யாக்கினான். இரு கைகளின் சுட்டுவிரல் தொட்டு மின்கதிர் எழுப்பி வேள்விக்குளத்தில் அனலூட்ட முயன்றான்.

பன்னிருமுறை முயன்றும் அனலெழாமை கண்டு குழப்பத்துடன் தன் தேவியை நோக்கினான். அவளுக்கும் நிகழ்வதென்னவென்று புரியவில்லை. மீண்டும் ஒரு முறை முயன்றதும் அனலோன் தன்னை தவிர்க்கிறான் என்று புரிந்துகொண்டான். தன் நெஞ்சில் கைவைத்து “என்னிலூறும் இசையின் முதல் துளியை சான்றாக்கி ஆணையிடுகிறேன். எழுக, அனலவனே!” என்றான்.

அனல் மூலையிலிருந்து எரியின் குரல் எழுந்தது. “என்னை பொறுத்தருள்க, கந்தர்வனே! இன்று உன் வேள்விக்குளத்தில் நான் தோன்ற மாட்டேன். ஏனென்றால் இன்னும் சில நாட்களுக்குள் உன்னை எரித்தழிக்கும் ஆணையை பெறப்போகிறேன். இதுநாள்வரை உன் வேள்விக்குளத்தில் தோன்றி நீ அளித்த அவியும் வேதச்சொல்லும் பெற்று விண்ணவருக்கும் திசை தெய்வங்களுக்கும் அளித்தவன் நான். அந்த நன்றிக்கடன் இதை உன்னிடம் சொல்லச் செய்கிறது. இனி உன்னிடம் இருந்து அவி பெறுவது முறையல்ல.”

“யார்? நீயா என்னை எரித்தழிப்பது? ஏன்?” என்றான் சித்ரசேனன். “நானல்ல. அணைகட்ட முடியாத ஆற்றல் கொண்ட ஒருவன் உன்னை எரித்தழிப்பதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான்” என்றான் கனலோன். “யார் அவர்? புடவியாளும் மூவரா? தேவருக்குத் தலைவரா? திசை நால்வரா?” என்றான் கந்தர்வன். “இல்லை, இவன் மண்ணில் வாழும் ஓர் அரசன். துவாரகையின் யாதவன்” என்றான் அனலோன்.

திகைப்புடன் “அவனுக்கேது அவ்வாற்றல்?” என்றான் கந்தர்வன். “மண்ணில் வாழ்பவருக்கு ஆற்றல் அளிப்பது வேதம். நான்கு வேதங்களும் கொண்ட மெய்ப்பொருளை ஒற்றைச் சொல்லென ஆக்கி தன் நாவில் சூடியவன் அவன். அவன் உன்னிடம் போருக்கெழுந்தால் நீ அரைக்கணமும் எதிர் நிற்க முடியாது என்றறிக!”

“நான் என்ன செய்ய வேண்டுமென்று அறியேன். என்ன பிழை செய்தேன்?” என்றான் சித்ரசேனன். “நீ காமமயக்கில் உமிழ்ந்த எச்சில் காலைத்தவம் செய்யக் கைநீட்டிய காலவரின் உள்ளங்கை குழியில் விழுந்தது. அது தன் குலத்தின் மீதான எள்ளலே என்று அவர் எண்ணிக்கொண்டார். அவருடைய ஆறாச்சினமே இளைய யாதவனின் வஞ்சினமாக மாறியது” என்றான் அக்னி. “அது நான் அறியாது செய்த பிழை. அன்று என்னுள் கூடியதென்ன என்று நான் இன்றும் அறியேன். தெரியாப்பேய் ஒன்று என் சேக்கையை வென்றது என்றே உணர்கிறேன்” என்று சித்ரசேனன் சொன்னான்.

“பேய்கள் எழுவது உள்ளமெனும் இருளுக்குள் இருந்தே” என்று அனலோன் சொன்னான். “நான் செய்யவேண்டியது என்ன?” என்று சித்ரசேனன் கேட்டான். “இனி நீ செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. உரைத்த வஞ்சினங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்த ஒருவனின் சொல் இது. அது உரைக்கப்பட்டபோதே அச்செயல் முடிந்துவிட்டதென்று நான் கொண்டேன்” என்றான் எரியன்.

“நான் காலவரை அணுகி அவர் கால்களில் பணிந்து பொறுத்தருளும்படி கோருவேன். அவர் ஆணையிடும் அனைத்தையும் செய்து முடிப்பேன். ஆயிரமாண்டுகாலம் அவர் வேள்விக்கு காவலனாக நின்றிருப்பேன்” என்றான் சித்ரசேனன். “இவை அனைத்தும் அவர் அவ்வஞ்சினத்தை இளைய யாதவனிடமிருந்து பெறுவதற்கு முன் செய்திருக்க வேண்டியவை. இன்று நீ செய்வதற்கொன்றே உள்ளது. நிகர் வல்லமை கொண்ட பிறிதொருவரிடம் சரண் அடைக! அவன் படைக்கலத்தால் காக்கப்படுவாய்.”

“ஆம், நான் மூன்று தெய்வங்களிடம் செல்வேன். தேவர் கோமகனிடம் செல்வேன்” என்றான் சித்ரசேனன். “அவர்கள் எவரும் அவ்விளைய யாதவனிடம் நின்று போரிட முடியாது. வேதச்சொல்லை வல்லமை என்று கொண்ட மானுடன் அவன். வேதக்காட்டை விதையென்றாக்கும் ஊழ்நெறி கொண்டு வந்தவன்” என்று எரியன் சொன்னான். “தன் எதிர்நிற்பவனிடம் அவனே கருணை கொண்டால் மட்டுமே அவனை தடுக்க முடியும். ஒவ்வொரு அம்புக்கும் ஒருதுளி அருளையும் அவன் எவனுக்கு அளிப்பானோ அவன் மட்டுமே இளைய யாதவன் முன் நிற்க முடியும்.”

“யாரவன்? அவன் மூத்தோனா? நான் பலராமனிடம் சென்று அடிபணிவேன்” என்றான் கந்தர்வன். “இல்லை சுபத்திரையா? வசுதேவனா? அவன் மைந்தர்களா? எவராயினும் இதோ செல்கிறேன்.” அனலோன் புன்னகைத்து “இல்லை. குருதியென்பது உறவல்ல என்பதை இளைய யாதவனே உணர்ந்துகொண்டிருக்கும் தருணமிது. அது கடமை மட்டுமே என்று அறிந்ததன் சுமையால் அவன் சித்தம் இருண்டுள்ளது. மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு கணத்தில் உணரும் அக்கசந்த உண்மையே பேயுருக் கொண்டு அவனை ஆள்கிறது இன்று” என்றான்.

“பின்பு யார் அவனுடன் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவன்?” என்றான் சித்ரசேனன். “இளைய பாண்டவன் பார்த்தன். ஊழால் இணைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் சொல் கைமாறிப் பிரிந்து சில நாட்களே ஆகின்றன. இளைய யாதவன் வஞ்சினம் உரைத்ததை இளைய பாண்டவன் அறிவதற்குள்ளாகவே சென்று தாள் பணிக! அவனிடமிருந்து அடைக்கலம் பெறுக!” என்றான் அக்னி.

“ஆம், இக்கணமே” என்று எழுந்தான் கந்தர்வன். அக்னி “அதற்கு நீ செல்வதைவிட உன் துணைவி மட்டும் செல்வதே உகந்தது” என்று அறிவுறுத்தினான். “பார்த்தன் இன்றிருப்பது யக்‌ஷவனத்தில். அவன் தமையன் அளித்துச்சென்ற அறத்தின் கோல்சூடி அமர்ந்திருக்கிறான். அவனை வெல்ல அறமெனும் சொல்லே வழியாகும். உன் துணைவி திருமிகுக் கோலத்தில் செல்லட்டும்.”

[ 11 ]

யுதிஷ்டிரர் கந்தமாதன மலையேறிச் சென்றபின்னர் யக்‌ஷவனத்தின் தனித்த தவக்குடிலில் பாண்டவர் நால்வரும் காத்திருந்தனர். அர்ஜுனன் பகலும் இரவும் அங்கிருந்த கூம்புமரக்காட்டுக்குள் வில்லம்புடன் உலவினான். உள்ளைக் குவிக்க வெளிக்குறி ஒன்றை தேர்வதே அவன் வழியென்றாகியிருந்தது. விடுபட்ட அம்புடன் எழுந்து பறந்து இலக்கைத் தொட்டதும் அவன் உள்ளம் ஒரு வட்டத்தை முழுமை செய்தது. முற்றிலும் தனித்தவனாக அலைவதற்கு காடே உரியதென்று அறிந்த விடுதலை அவன் உடலில் திகழ்ந்தது.

மாலை சிவந்து விண்முகில்கள் எரிசூடத் தொடங்கிய பொழுதில் விண்ணில் சுழன்று சென்ற இறகுப் பிசிர் ஒன்றை தன் அம்பில் கோத்து குறி நோக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் பெண்குரல் அழுகை ஒலி கேட்டு வில் தாழ்த்தி திரும்பிப் பார்த்தான். அங்கே மலர் உதிர்த்து மேடையிட்டு அதன்மேல் நின்றிருந்த மரம் ஒன்றின் அடியில்  பொன்னிற உடல்கொண்ட அழகியொருத்தியை கண்டான். மங்கலக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது அவள் தலைக்குமேல் எழுந்த கிளையில் அமர்ந்த பறவை. அவள் தனித்து வந்திருப்பதை உணர்ந்தபின் அருகே வந்து “யார் நீ?” என்று அவன் கேட்டான்.

இளமுலைகள் மேல் விழிநீர் வழிய அவள் அவன் முன் வந்து நின்றாள். “வீரரே, எடுத்த வீரர் எவராயினும் தங்கள் அம்பின் எல்லைக்குள் அவர் அரசரே என்கின்றன நூல்கள். செல்வதறியாது அழுதுகொண்டு இக்காட்டுக்குள் நுழைந்தேன். உங்கள் நாணொலி கேட்டு அடைக்கலம் வேண்டி வந்திருக்கிறேன். என் துயருக்கு நீங்களே காப்பு” என்றாள்.

“சொல்க!” என்றான் அர்ஜுனன். “விண்வாழும் கந்தர்வனாகிய சித்ரசேனனின் துணைவி நான். இசையன்றி படைக்கலம் ஏதுமில்லாதவன் என் கொழுநன். கருதாப்பிழை ஒன்றுக்காக எம் கணவனை எரித்து அழிப்பதாக அரசனொருவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான். அவன் எரிந்தழிவான் என்றால் அச்சிதையிலேயே நானும் அழிவேன். என் மங்கலநாணுக்கு நீங்களே காவல். என் கற்பின் மீது ஆணை” என்றாள்.

“என்ன பிழை?” என்று அர்ஜுனன் கேட்டான். “காதலின் மயக்கில் அவன் வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்தான். அது மண்ணில் நின்றிருந்த முனிவர் ஒருவர் மேல் விழுந்தது. தன் குலம் மீதான இழிவென அவர் அதைக் கொண்டார்” என்றாள் அவள். அர்ஜுனன் “அவன் காதலாடுகையில் உடனிருந்த துணைவி யார்?” என்றான். “நானே. மங்கலம் அன்றி பிறிதெதையும் சூடாதவள் நான்” என்று அவள் சொன்னாள்.

அவளை ஒருகணம் நோக்கியபின் “தேவி, உடனிருந்தவர் தாங்கள் என்றால் அவர் அறிந்தொரு அமங்கலம் செய்திருக்க வாய்ப்பில்லை. அக்கருதாப்பிழைக்காக உங்கள் கொழுநனை எவரும் கொன்று அழிக்க நான் ஒப்பேன்” என்றான்.  “இளவரசே, புவிதொட்டு அவ்வாணையை எனக்கு அளியுங்கள்” என்றாள் சந்தியை.  குனிந்து மண் தொட்டு “ஆணை” என்றான் அர்ஜுனன்.

அவள் கைகூப்பி “உங்கள் வில்லை நம்பி மீள்கிறேன்” என்றாள். புன்னகையுடன் விழிநீர் ஒப்பியபடி திரும்பியவளிடம் “வஞ்சினம் உரைத்த அரசன் யார்?” என்றான் அர்ஜுனன். “துவாரகையை ஆளும் இளைய யாதவன்” என்றாள் சந்தியை. திகைத்து “அவரா? ஏன்?” என்றான் அர்ஜுனன். சந்தியை “சூதுச்சொல் வழியாக அம்முனிவரால் அவரது வஞ்சினம் பெறப்பட்டது” என்றாள்.

அர்ஜுனன் “அவ்வண்ணமெனில் அஞ்ச வேண்டியதில்லை. இப்புவியில் என் சொல்லே இறுதியென எண்ணுபவர் அவர்.  அவரிடம் உண்மை என்ன என்று நானே உரைக்கிறேன். உங்கள் கணவரை அவ்வஞ்சினத்திலிருந்து விடுதலை செய்கிறேன்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16718 articles
Browse latest View live