Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16723 articles
Browse latest View live

ஒன்றென்றாவது…

$
0
0

Housewarming-15

 

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். உங்களின் நெடுநாள் வாசகன் நான். ரப்பர் நாவலை எனது அலுவலக நூலகத்தில் இருந்து வாசித்தது முதல் உங்கள் எழுத்துக்கள், இணயதளம் மூலம் தினமும் வாசித்து வருகிறேன். தறபோது விஷ்ணுபுரம் மூன்றாம் முறையாக வாசித்து கொண்டு இருக்கிறேன்.

உங்களது அனைத்து படைப்புகள், புனைவுகள், கட்டுரைகள், பத்திகள் ஆகியவற்றில் காணும் நுட்பமான சொல்லாடல்கள், சிந்தனையை மென்மேலும் வளர்க்கும் தகவல்கள் போன்றவற்றை பார்க்கும் போது தோன்றிய கருத்துக்களை நான் பகிர விரும்பியதால் இக்கடிதம்.

மிக ஆழமான அறிவு, அதிகமான வாசிப்பு நுண்மாண் நுழைபுலம் காணும் திறன் ஆகியவை கொண்டே இது போன்ற ஆக்கங்களை அளிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். எனது ஐயம் என்னவென்றால் மக்கள் கூட்டத்தில் பல்வேறு அறிவுத்தளங்களில் உள்ளவர்கள் இதை போன்ற உண்மைகளை கண்டடைவது எப்படி என்பதே. மேலும் வரலாற்றில் ஏதாவது ஒருகால கட்டத்தில் (உதாரணமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த நாட்களில்) வாழந்த அனைத்து மக்களும் ஒரே அளவு அறிவுத்திறன் கொண்டு வாழ்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா? இந்த சிந்தனையே உங்களது காடு நாவலை வாசித்த பின்புதான் வந்தது. அதில் ஒரு இடத்தில் மரம், புள், விலங்கு போன்ற அனைத்து விதமான உயிரினங்களுக்கும் ஒரே ஒரு பிரம்மாண்டமான பெரிய “மனது” இருந்ததாகவும் எனவே ஒரு சிந்தனை என்று வரும்போது அனைத்து உயிரினங்களும் ஒரே வேதிவினை ஆற்றும் எனவும் கூறியிருந்தீர்கள்.

அதனை யோசித்து பார்க்கும் போது, சரியாக மாமரங்கள் அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் பூப்பதை நான் மாமரங்களுக்கு என ஒரு பெரிய பொது மனதும், சிந்தனையும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டேன். அது போன்ற ஒரு பெரிய பொது மனது உலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் இருந்துவிட்டால் எப்படி இருக்கும் என்றும் நினைத்தேன். மூச்சு விட வேண்டும் என அந்த பெரிய பொது மனது நினைத்தால் உலகின் 400 கோடி மனிதர்களும் மூச்சு விடுவதாகவும், நீர் குடிக்க அந்த மனது நினைத்தால் அனைவரும் நீரை குடிப்பதாகவும் நினைத்து பார்த்தேன், மலைப்பாக இருந்தது. அது போன்ற பொது மனது கொஞ்ச காலமெனும் இருந்து உங்கள் சிறந்த படைப்புகள் அனைத்தும் அந்த பொது மனது மூலம் உள்வாங்கப்பட்டால் எப்படி இருக்கும் எனவும் நினைத்தேன்.

சமீபத்தில் நாளிதழில் வந்த சேதி வழியாக நாம் உலகில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே அறிவியலில் மிக முதிர்ந்த ஒரு எதிர்கால உயிரினங்கள் வாழும் ஓர் (dream of the future world of much civilised aliens) உலகின் மிகப்பெரிய கனவு என ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் எனும் அறிவியலாளர் கூறியதாக அறிந்த போது மிகவும் வியப்பு அடைந்தேன்.

மு நேசராஜ் செல்வம்

தொலைத்தொடர்பு துறை

புது டெல்லி

***

அன்புள்ள நேசராஜ்,

அறிவியலில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று ஊக உருவாக்கம். இரண்டு நிரூபணம் மற்றும் கொள்கை உருவாக்கம். ஊக உருவாக்கத்தளத்தில் எல்லாவகையான கட்டற்ற சிந்தனைப்பாய்ச்சல்களுக்கும் இடமுண்டு. அது ஒருவகை கனவுத்திறப்புதான். காலப்பயணம், பிரபஞ்சத்துளைகள் போன்ற பல அறிவியல் ஊகங்கள் இன்றும் வெறும் கற்பனைகள் மட்டுமே. அவை அறிவியல் புனைகதைகளில் மட்டுமே வாழ்கின்றன. அறிவியலாக அல்ல. ஆனால் அப்படி அறிபுனைகளின் உலகில் நெடுங்காலம் இருந்த ஒன்று, கருந்துளை, பின்னர் நிரூபணமானதும் உண்மை.

ஸ்டீவன் ஹாக்கிங்ஸின் அந்த வரிகளை அத்தகைய ஒரு கனவாகவே நான் காண்கிறேன். ஆனால் மானுட சிந்தனை, உயிரிகளின் ஒட்டுமொத்தச் சிந்தனை, பூமியின் முழுமை இயக்கம் ஆகியவற்றை தொகுத்து ஒரே பெருக்காக, ஒரே நோக்கு கொண்டதாக அணுகும் ஆய்வுநோக்கிற்கு ஆழமான சாத்தியங்கள் உண்டு என்றே நினைக்கிறேன். அதில் ஆன்மீகமாக ஒன்றுள்ளது. நான் என எண்ணும்போது அந்தச்சொல்லே பிரபஞ்சமாகவும் ஆகும் ஒரு பெருநிலை.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4

$
0
0

 

1a

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். நலம்தானே?

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்திருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் மகிழ்ச்சி. தமிழில் எழுதும் மற்ற எழுத்தாளர்கள் எல்லோரும் எனக்கு வெறும் எழுத்தாளர்கள் மட்டுமே. வண்ணதாசன் ஒருவர் மட்டும் என்னில் ஒரு பகுதி. அல்லது, சரியாகச்சொன்னால், அவரில் நான் ஒரு பகுதி. எனக்காகவும் சேர்த்து உங்களுக்கு நன்றியும் வணக்கங்களும்

அன்புடன்

ஜி.குப்புசாமி

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்காக மனமார்ந்த நன்றி. சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் இதற்காகவே காத்திருந்தேன். வெளிநாட்டிலிருந்து என்னால் வந்துசேர முடியாது. ஆனால் இங்கிருந்தே மனம் நிறைந்து வாழ்த்தமுடியும்.

நான் வண்ணதாசனை வாசித்தது என் தோழியின் அறிமுகம் வழியாகத்தான். அவள் வண்ணதாசனின் பெரிய ரசிகை. அவளுக்காகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அவள் என்னை விட்டு விலகிப்போய்விட்டாள். வேறுவழியில்லாத ஒரு நிலைமை. இப்போது அவளும் இந்தச்செய்தியை எங்கிருந்தோ எண்ணிக்கொண்டிருப்பாள் என நினைக்கிறேன். வண்ணதாசன் அவளுடன் இணைந்தே என் மனதுக்குள் வந்துகொண்டிருக்கிறார்.

வண்ணதாசன் எனக்கு எதை அளித்தார் என்று நானே கேட்டுக்கொள்வேன். நான் இபப்டிச் சொல்லப்பார்க்கிறேன். நான் எட்டாண்டுக்காலம் வெளிநாட்டில் வாழ்ந்தேன். பிறகு ஒருமுறை சொந்த ஊருக்குப் போனேன். புதுக்கோட்டைப் பக்கம் போகும்போது ஒரு வீட்டில் சோறு பொங்கும் மணம் வந்தது. அந்த மணம் அதுவரை அப்படி அழகாக இருந்தது இல்லை. என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு மணத்தை அறிந்தது இல்லை அதேபோன்ற ஒரு அனுபவம்தான் வண்ணதாசனை வாசிப்பது

நாம் அறிந்திருக்கும் விஷயங்கள்தான். ஆனால் நாம் அதை ரசிக்க ஆரம்பிக்கும்போது வண்ணதாசனை அணுக ஆரம்பிக்கிறோம். ஒரு மாமரம் பூத்திருப்பதைக் கண்டால் வண்ணதாசன் இதைப்பார்க்கவேண்டும் என்று நினைக்கிறோமே அதுதான் அவருடைய வெற்றி

தமிழிலக்கியத்தின் முக்கியமான சுவை என்பது வண்ணதாசனின் எழுத்து. உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெ. அவரை இன்னும் பிந்திப்போகாமல் கௌரவித்திருக்கிறீர்கள்

சிவப்பிரசாத்

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசனுக்கு விருது அளிப்பது பற்றிய செய்தி கண்டேன். வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் எழுத்துக்கள் பிடிக்காது. நான் அதை முன்பு எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்துக்களிலும் உடன்பாடு கிடையாது. வண்ணதாசன் வழியாக நாம் உரையாடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவருக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்

சங்கர்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி மகிழ்ச்சியை அளித்தது. எனக்கு உங்களையோ உங்கள் எழுத்துக்களையோ கொஞ்சம்கூட பிடிக்காது. நாம் ஒரு கசப்பான கடிதப்பரிமாற்றமும் செய்திருக்கிறோம். உங்கள் எழுத்திலுள்ள திமிர் என்னைப் போன்ற வாசகனுக்கு பிடிப்பதில்லை.

வண்ணதாசன் எழுத்தில் உள்ள பணிவு அரவணைப்பது போல இருக்கிறது. அவர் நம்மிடம் மென்மையாக கூடவந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அவர்குரல் நடுங்கிக்கொண்டே மார்கழிக்குளிரில் இருட்டுக்குள் பேசிக்கொண்டு வரும் மூத்தமாமா போன்ற ஒரு குரல். அந்த மென்மைக்காகவே அவரை விரும்புகிறேன்

சரவணன் கதிர்வேல்

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசன் கதைகளைப்பற்றி எழுதியிருந்தீர்கள். 80 வயதான என் அப்பா சொன்னார். அவர் அப்போதுதான் வண்ணதாசனை வாசித்தார். ‘‘காடராக்ட் பண்ணிண்டு புதிசா உலகத்தைப்பாக்கிறாப்ல இருக்குடா’’ என்று. அதுதான் வண்ணதாசன் அளிக்கும் அனுபவம்

விருதுக்காக வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்

சாயி மகேஷ்

 

 

Vishnupuram award for Vannadasan

 

Vishnupuram for Vannadasan

 

 

====================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 3

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு விவாதக்கூட்டம்,சென்னை

$
0
0

SOLVALAR_KAADU_EPI_55

 

நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த மாத {17வது} ”சென்னை” வெண்முரசு கூடுகை வருகிற ஞாயிற்றுக்கிழமை {23/10/16} மாலை 4 மணி முதல் 8 மணிவரை நடைபெறும்.

இதில் சொல்வளர்காடு நாவல் குறித்த கலந்துரையாடல் நடைபெறும்.

வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இடம்:

சத்யானந்த யோகா மையம்,

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு, வடபழனி

முருகன் கோவில் அருகில்.

சென்னை 26

 

தொடர்புக்கு :- 9952965505

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்

$
0
0

 

Bob-Dylan-Xavier-Badosa-Huck-958x559

இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பாப் டிலனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுசார்ந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் பதிவாகியிருக்கின்றன. எதிர்ப்புகள் பொதுவாக ’இலக்கியம்’ என்னும் கலைவடிவின், அறிவுத்தளத்தின் தனித்தன்மை குறித்த கவலை கொண்டவர்களிடமிருந்து எழுகின்றன. ஆதரவு பெரும்பாலும் நுகர்வுக்கலாச்சாரத்தில் ஊறியவர்களான பெரும்பான்மையினரிடமிருந்து எழுகிறது.

முதல் வகையினரின் குரல் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பொறுத்தவரை சென்ற இருபதாண்டுக்காலமாக மெல்லமெல்லத் தளர்ந்து மிகச்சிறிய வட்டத்திற்குள் ஒலிப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. அதை காலத்திற்கு ஒவ்வாதது, குறுக்கல் நோக்கு கொண்டது என எள்ளல் செய்யும் பெரும்பான்மையின் குரல் அறிவுலக அங்கீகாரத்தையும், அமைப்புகளின் ஆதரவையும் படிப்படியாக பெற்றுவருகிறது. அவர்கள் இத்தருணத்தைக் கொண்டாடுகிறார்கள். அதே எள்ளலுடன் எம்பிக்குதித்தலுடன்.

மெல்ல நம் கண்முன்னால் அந்த சின்னச்சுடர் அணைந்துபோகும் என்றே நினைக்கிறேன். எது விற்கிறதோ அது இலக்கியம் என்றும், எது பரவலாக ஏற்கப்படுகிறதோ அதுவே கலை என்றும் ஆகும். உலகின் போக்கு அந்தத்திசை நோக்கியே. ஆனால் அந்த அழிந்துகொண்டிருக்கும் சிறுசுடரின் ஒளியில் நின்று, அதனுடன் அழிந்துபோகவே விரும்புகிறேன். ஏனென்றால் அது மானுடத்திற்குத் தேவை என்று நான் உண்மையில் நம்புகிறேன். மானுடம் அதை இழந்தால் அரிதான ஒன்றை, ஒர் இலட்சியத்தை ஒரு கனவை இழக்கிறதென்றே நினைக்கிறேன். அதை கைவிட்டு பிறிதொன்றைப் பற்றுவதை என்னால் எண்ண முடியாது.

ஆகவே இத்தருணம் எனக்கு மிகுந்த சோர்வையும் தனிமையையும் அளிப்பதாகவே உள்ளது. பாப் டிலனுக்கு அளிக்கப்பட்ட இப்பரிசு இலக்கியம் என்னும் கலைவடிவுக்கு, அறிவுப்பாதைக்கு எதிரான ஒரு பிரகடனம்.

*

ஆனால் இலக்கியத்திற்கான நோபல்பரிசு அதன் முக்கியத்துவத்தை உலகளாவிய இலக்கிய வாசகர்களிடம் இழந்து நெடுநாட்களாகின்றது. சந்தேகமிருந்தால் சென்ற சில ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள் யார், அவர்களை எத்தனைபேர் தேடிப்படித்தீர்கள் என்று மட்டும் தன்னை நோக்கிக் கேட்டுக்கொள்ளுங்கள். ஆகவே இந்தப்பரிசு பாப் டிலனுக்குக் கொடுத்தால் என்ன திரைக்கதைவசனம் எழுதியதற்காக குவிண்டின் டொரெண்டினோவுக்குக் கொடுத்தால் என்ன, அல்லது அதையெல்லாம் பேசியதற்காக லியனார்டோ டி காப்ரியோவிற்கே கொடுத்துத் தொலைத்தால்தான் என்ன என்னும் மனநிலையே பொதுவாக உள்ளது.

இந்தச்சரிவு சினிமாவிலும் உள்ளது. நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் கேன்ஸ், கார்லேவாரி திரைப்பட விருதுகளைப்பற்றிய ஒரு சின்ன பதற்றமே சூழலில் இருக்கும். அப்படங்கள் திருவனந்தபுரத்தில் சூரியா திரைக்கழகத்தால் மூன்றுமாதங்கள் கழித்து திரையிடப்படும்போது பஸ் பிடித்துச் சென்று பார்ப்போம். இன்று அந்தக் கவனமே தெரியவில்லை. கேன்ஸ் திரைப்பட விழாவே ஒரு பெரிய ஆடம்பர விருந்துபோல, ஒரு வணிகக்கேளிக்கை நிகழ்ச்சிபோல ஆகிவிட்டிருக்கிறது.

*

எழுபதுகளில் எவையெல்லாம் தீவிரம் என்று கருதப்பட்டனவோ அவையெல்லாம் பொருளிழக்கின்றன. எவை எல்லாம் ஒருவன் தன் வாழ்க்கையை முழுதாக இழப்பதற்கும், முழுமையானத் தனிமையில் நின்று போராடுவதற்கும் தகுதியானதென்றும் எண்ணப்பட்டனவோ அவையெல்லாம் கேலிக்குரியனவாக ஆகிவருகின்றன. புரட்சி, இலட்சியவாதம், தனித்தலைதல் போன்ற சொற்கள் அனைத்தும் பொருளழிந்துவிட்டன.

வேடிக்கை என்னவென்றால் பாப் டிலன் அந்த இலட்சியவாத காலகட்டத்தின் மேலோட்டமான நுரைக்கொந்தளிப்பாக அறியப்பட்டவர். இன்று அவருக்கு விருது அளிக்கப்பட்டிருப்பது அந்த விழுமியங்களை மறுப்பதற்காக. இது அவருடைய மக்களாதரவுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

நான் கல்லூரியில் படிக்கும்போது பாப் டிலன் பிரபலமாக இருந்தார். இடதுசாரிகளில் ஒருசாரார் அவரை புகழ்ந்து பேசுவர். அவரது பாடல்களைப் பாடும் ஒரு குழுவும் திருவனந்தபுரத்தில் இருந்தது. ஆனால் அவர்கள் திருவனந்தபுரத்தின் பெரிய ஓட்டல்களில்தான் பாடுவார்கள். ஒருவகை அமெரிக்க இலட்சியவாதமாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் அவரது பாடல்கள் பார்க்கப்பட்டன.

ஆனால் அன்று ஒரு பெரும் அலையாக இருந்த பாப் மார்லியுடன் ஒப்பிட்டால் அவரது பாடல்கள் சற்றே சோகையானவை. வரிகள் என்ற அளவில்கூட பாப் மார்லியின் பாடல்கள் வலுவானவை. பாப் டிலனின் வரிகளை மட்டும் வாசிக்கும் ஒருவர், அமெரிக்க மொழிச்சூழலில் இருந்து சற்று விலகி நிற்பவர் என்றால், அவை என்ன காரணத்தால் இலக்கியம் என்று கருதப்படுகின்றன என்று உணரமுடியாமல் திகைப்பர்.

*

நோபல் பரிசுகள் ஒவ்வொரு முறையும் காட்டுவது ஒன்றுண்டு, உலகைநோக்கி எழுதிய பெரும்படைப்பாளிகள் மெல்ல அருகிவருகிறார்கள். படைப்பாளிகளை பொதுவாக இரண்டாகப்பிரிக்கலாம். உலகிடம் பேசியவர்கள், ஒரு மொழி மற்றும் பண்பாட்டுச்சூழலில் மட்டுமே பொருள்படுபவர்கள். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் போன்றவர்களுக்கு அவர்கள் எழுதிய மொழி ஒரு வரலாற்றுத் தற்செயல் மட்டுமே. அவர்கள் உலக எழுத்தாளர்கள். ஆனால் பெரும்படைப்பாளியாக இருந்தாலும் ஜேம்ஸ் ஜாய்ஸ் ஒரு குறிப்பிட்ட மொழி, பண்பாட்டுச்சூழலுக்குள் மட்டுமே பொருள்படுபவர்.

முதல்வகை எழுத்தாளர்கள் உலகமெங்கும் வாசகர்களால் தங்களுக்காக எழுதியவர்களாகக் கருதப்படுகிறார்கள். மானுட மனசாட்சியை நோக்கிப் பேசுவதனால், உலக நோக்கு கொண்டிருந்தமையால் உருவாகும் உயரம் அது. உண்மையில் அதை அளிப்பது அவர்களின் இலக்கியத்தின் சாராம்சமாக இருக்கும் தரிசனம், அதை அவர்கள் முன்வைக்கும்போது உருவாகும் தத்துவார்த்தநோக்கு. அவர்களுக்கு மொழி, நாடு சார்ந்த அடையாளங்கள் இல்லை. காஃப்கா நமக்கு ஜெர்மானியரா என்ன? காம்யூ பிரெஞ்சுக்காரரா என்ன?

அத்தகைய உலக எழுத்தாளராக இறுதியாக நோபல் பரிசு பெற்றவர் கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ்தான். சற்றே தயக்கத்துடன் லோஸாவையும் சேர்த்துக்கொள்ளலாம். அத்தகைய எழுத்தாளர்கள் இல்லாமலாகும்போது நோபல் பரிசுக்குழுவே ஒன்றும் செய்யமுடியாமலாகிறது. டோனி மாரிசனையும் அலிஸ் மன்றோவையும் அவர்கள் நோபல் பரிசு பெற்றதனால் மட்டுமே வாசகர்கள் கவனிப்பார்கள். நோபல் பரிசுக்குழுவினர் என்னதான் பசப்பினாலும் அவர்கள் உலகவாசகர்களுக்குரிய எழுத்தாளர்கள் அல்ல என்று உடனே கண்டுகொள்வார்கள். அந்த ஒருவருடத்திற்கு அப்பால் அவர்களுக்கு உலகளாவிய கவனமும் அமைவதில்லை.

இந்நிலையில் நோபல்பரிசுக்குழு இன்னொரு இடர் நோக்கிச் செல்கிறது. பதிப்பகவல்லமையால் உலகம் முழுக்க பெரிய எழுத்தாளர்களாக நிலைநாட்டப்பட்டுள்ள போலி எழுத்தாளர்கள், வணிக எழுத்தாளர்கள் அவர்களின் வாசல்களைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். முதல்வகைக்கு சல்மான் ருஷ்தியையும் இரண்டாம் வகைக்கு ஹாருகி முரகாமியையும் சுட்டுவேன். கூடுமானவரை அவர்களை நோபல் குழு தவிர்த்து வருகிறதென்பதே இப்போதைக்கு ஆறுதலானது. இல்லையேல் மிக விரைவிலேயே நோபல் பரிசு என்பது ஆஸ்கார் போல ஒரு வணிகமுத்திரையாக நிறுவன வல்லமைகொண்டு திட்டமிட்டு பெறப்படுவதாக ஆகிவிடும்.

அபூர்வமாக நோபல் குழுவால் கண்டெடுக்கப்பட்டு அதன்மூலம் உலகளாவ அறிமுகமாகி உலக எழுத்தாளராக வாசிக்கப்படுபாவ்ர்களும் இருக்கிறார்கள். இவோ ஆண்ட்ரிச் போல. ஆனால் சென்ற முப்பதாண்டுக்காலமாக அத்தகைய அற்புதங்கள் நிகழ்வது நோபல் பரிசில் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. தெரிவுக்குழு பெரும்பாலும் ஐரோப்பிய மேட்டிமைநோக்கும், ஐரோப்பிய ரசனையும் கொண்டதாக இருக்கிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் அறியப்பட்டு ரசிக்கப்படாத ஒன்றை கண்டடைவதற்கான நுண்ணுணர்வை அது பெரும்பாலும் இழந்துவிட்டிருக்கிரது.

விளைவாக பல முக்கியமான உலகப்படைப்பாளிகளை நோபல் குழு புறக்கணித்துக்கொண்டே இருந்தது. மிலோரட் பாவிக் போல. அத்தகைய பலர் உலக மொழிகளில் இன்னமும் அறியப்படாது எழுதிக்கொண்டிருக்கக்கூடும். அவர்கள் வெளிச்சம் பெற இனி நோபல் பரிசை நம்பிப்பயனில்லை என்பதே இன்றைய நிலை.

*

இலக்கியம் என்னும் எல்லையை நோபல் பரிசு தாண்ட ஆரம்பித்து ஓரிரு வருடங்களாகின்றன. பாப் டிலனுக்கு அளிக்கப்பட்டமையால்தான் இது இன்று பேசுபொருளாகிறது. சென்றவருடத்திற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது ஸ்வெத்லேனா அலெக்ஸியேவிச் என்னும் இதழாளருக்கு, அவரது செய்திக்கட்டுரைகளுக்காக. நோபல் குழுவே கூட அவருடைய தைரியத்தைப்பாராட்டித்தான் நோபல் பரிசு அளித்திருக்கிரது. பாப் டிலனுக்கு அவரது நடனத்தை பாராட்டி இம்முறை அளித்திருக்கிறது என நம்புகிறேன்.

ஏன் இதழியலுக்கோ பாடலுக்கோ நோபல் பரிசு அளிக்கக்கூடாது? அளிக்கலாம். ஆனால் இது இலக்கியத்திற்கான நோபல் பரிசு. அப்படியென்றால் அது இலக்கியச் சிறப்புக்காகவே அளிக்கப்பட்டிருக்கவேண்டும். பாப் டிலனின் வரிகளை மட்டும் வாசிப்பவர்கள் அதை இலக்கியமாக நினைக்க மாட்டார்கள். நான் ஸ்வெத்லேனாவின் பரிசுபெற்ற நூலை வாசித்தேன், பெரும்பாலும். அவருடைய தைரியத்துக்கு மேலதிகமாக அவருடைய எழுத்தில் தகுதி ஏதும் இல்லை என நோபல் குழு நினைத்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது

இவை இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காகப் புகழ்பெற்றவை. பாப் டிலனின் பாடல் அதிலிருந்த நாட்டார்த்தன்மை கொண்ட தாளத்தால்தான் ரசிக்கப்பட்டது. இன்றைய ரசிகனுக்கு அதெல்லாம் பொருட்டாகத் தெரியாது. முப்பதாண்டுகளுக்கு முன் நாங்களெல்லாம் செருப்பால் மிதித்து மிதித்துத் தாளம்போட்டோம். ஸ்வெத்லேனாவின் எழுத்து அது வெளிப்படுத்தும் தகவல்களின் அரசியல் முக்கியத்துவத்தால் மட்டுமே புகழ்பெற்றது. எழுத்துமுறையால் மொழியால் அல்ல. அதாவது இலக்கியத்தால் அல்ல

இதையே மொழி பயன்படுத்தப்படும் பிற வடிவங்களுக்கும் சொல்லலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த ஒரு வரி பெரும்புகழ்பெறும். ஒருவகை சமூகப்பாதிப்பையும் செலுத்தும். ஆகவே அது உயர்ந்த கவிதை ஆகிவிடாது. ரஜினிகாந்த் சொல்வதனால் ஒரு வசனம் பெரும்புகழ்பெறும். அதனாலேயே அது உயர்ந்த இலக்கியம் அல்ல. ஓர் ஆக்கம் அதை உருவாக்கிய ஆசிரியனின் குரலாக மட்டுமே நின்றிருக்கையில்தான் இலக்கியமாகிறது.

ஆகவே என் பெருமதிப்பிற்குரிய இந்திரா பார்த்தசாரதி  பாப் டிலன் பற்றி எழுதிய இக்குறிப்பை நான் முழுமையாகவே நிராகரிக்கிறேன். அவரைப்போலவே எனக்கும் பாப் டிலன் பற்றிய கடந்தகால ஏக்கம் நிறைய உண்டு. ஆனால் இன்று வாசித்தால் அய்யே என்றுதான் இருக்கிறது. ஆழ்வார்பாடல்களும் அஷ்டபதியும் இலக்கியமாவது அவை பாடப்படுவதனால் அல்ல. வெறும் வரிகளாகவே அவை உயர்கவிதையாக நிலைகொள்கின்றன. பாடப்படுவதனால் ஒன்று இலக்கியமாகாது என எவரும் சொல்லவில்லை. பாட்டாக மட்டுமே நின்றிருக்கக்கூடிய ஒன்றை இலக்கியமாகக் கொள்ளலாமா என்பதே கேள்வி.

பாப் டிலன் இசை இலக்கியமாகுமா? இந்திரா பார்த்தசாரதி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விமர்சனங்கள் பற்றி…

$
0
0

 

அன்பு ஜெயமோகன்,

முதலில், என்னுடைய கடிதத்தைத் தங்கள் தளத்தில் வெளியிட்டதற்கு நன்றிச்செண்டு. அதன் மூலம் சில புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வழக்கமாக என் மகன் உறங்கிய பிறகே என் வாசிப்பு தொடங்கும். அதற்குள் உங்களுடைய அடுத்த நாளைக்கான கட்டுரைகள் வெளியாகியிருக்கும். ஆனால் அன்றைக்கு நான் உங்கள் தளத்துக்கு வருவதற்கு முன்பே அமெரிக்காவிலிருக்கும் என் கல்லூரி நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி வந்துவிட்டது – “பெல்ஜியத்திலிருந்து… என்கிற தலைப்பை பார்த்தவுடன் நீயாக இருக்குமோ என்று நினைத்தேன். உன்னுடைய கடிதமே தான்.” வேறு சில நண்பர்களும், “நீ ஜெயமோகனுடன் தொடர்பிலிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று எழுதியிருந்தார்கள்.

அப்புறம், சமீபத்திய விமர்சன சர்ச்சைகளைப் பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்லப்போவதில்லை. இதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் எளிதாகக் கடந்து சென்றுவிடுவீர்கள். கடந்த மாதம் விடுமுறைக்கு இந்தியா வந்து திரும்பிய அன்று என்னுடைய எண்ணங்களை நண்பர்களிடம் இவ்வாறு பகிர்ந்திருந்தேன்.

“….விமர்சனங்களுக்கு மதிப்பளித்துக் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் உயர்ந்தவராகவே இருக்கலாம். ஆனால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதம் என்கின்ற ஒன்று இந்தப் பேரண்டத்தில் இல்லவே இல்லை. குறைந்த பட்சம், சுய விமர்சனம், சுய எள்ளலாவது செய்து கொள்ளுங்கள். கண்ணாடி முன்பு நின்று நீங்கள் செய்வதையெல்லாம் ஒரு நாளாவது கவனியுங்கள். உங்கள் மனதை ஒரு மணிநேரமாவது உற்று நோக்குங்கள். உங்களை விட அதிபெரும் கோமாளி இந்த உலகில் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும். என்னை விட என்னை யாரும் அதிகமாகப் பகடி செய்தது கிடையாது என்பதை என்னால் கர்வத்துடன் சொல்லிக்கொள்ள முடியும்.

சான்றோர்களைச் சந்தியுங்கள். அவர்களுடனான சந்திப்பு நம் அறிவைப் பெருக்குவது மட்டுமல்ல, நூல்களைப் போன்றே நம் பார்வையை மாற்றும், நம்மை இன்னும் வலிமையானவர்களாக ஆக்கும். நம்மைவிட அறிவில் குறைந்தவர்களை சந்திக்கும் போது, அவர்களிடம் பேசி அவர்களையும் மேலே கொண்டு வர முயலுங்கள். நமக்கு எதிர் கருத்து உடையவர்களிடம் விவாதம் செய்யுங்கள். விவாதத்தில் ஒளி பிறக்கும். நமக்கு மேலான அறிவு படைத்தவர்களிடம் அடக்கத்தைக் கடைபிடியுங்கள். அமைதியாக கவனியுங்கள். மூடர்கள் உங்களிடம் அறிவு போதிக்கும்போதும் அதே அமைதியைக் கடைபிடியுங்கள். ஆனால் கவனிக்காதீர்கள்……”

என்னைச் சுற்றி நடக்கும் இதுபோன்ற விஷயங்களை கவனிக்காமல் அமைதியாக இருந்துவிடுவதே எனக்குப் பிடிக்கிறது. இருந்தாலும் அந்தக் கடைசி வரி என்னை அசைத்துவிட்டது. வள்ளலாருடைய ‘வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ…’ பாடல்தான் உடனே நினைவுக்கு வந்தது.

நீண்ட காலமாக வாசிப்பு பழக்கம் இருந்தாலும் உங்கள் மூலமாகவும், எஸ்.ரா போன்ற துரோணர்கள் மூலமாகவும்தான் நிறைய படைப்பாளிகளையும், படைப்புகளையும் பற்றி அறிந்துகொண்டேன். திலீப்குமார் என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று உங்கள் தளம் மூலம் அறிந்துகொண்ட பிறகே, அவருடைய சிறுகதைகளை வாசித்தேன். இன்றைக்கு திலீப்குமாருக்கு கடிதம் எழுதினால் அடுத்த இரண்டொரு மணிநேரங்களில் பதில் வந்துவிடும். என் தந்தைக்கு நிகராக நான் வைத்துப்பார்க்கும் ஒரு மனிதர் அவர்.

அ.முத்துலிங்கம் அவர்கள் ஆரம்ப காலத்தில் எழுதிய சிறுகதையொன்று கல்கியில் வெளியாகி பரிசைப் பெற்றதைப் பற்றி எழுதிய குறிப்பொன்று நினைவுக்கு வருகிறது. எஸ்.பொ அவர்கள் அந்தக் கதையை ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் அலசி ஆராய்ந்து, இறுதியில் கிழித்து எறிந்திருக்கிறார். இருபத்தைந்து வருடங்கள் கழித்து அதே எஸ்.பொ அவர்களின் மித்ர பதிப்பகம் அவருடைய சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். நல்ல வேளை நீங்கள் கிழித்தெல்லாம் எரியவில்லை. அதை செய்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். அ.முத்துலிங்கம் அவர்களையும் நான் உங்கள் மூலமாகவே அறிந்துகொண்டேன்.

நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல் எனக்கு நம்மைப் பற்றி உங்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. திலீப்குமார் போன்று என்னைச் சுற்றி இன்றைக்கு இருக்கும் பல புள்ளிகளையும் என்னையும் இணைக்கும் இழையாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் செய்துவிட்டு, ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டு, இதுபோன்ற எதிர்வினைகளையும் வாங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒருவேளை நான் எழுத்தாளராகி நிறைய புத்தகங்கள் எல்லாம் எழுதி, ;-) அதற்கு உங்களுடைய விமர்சனம் இப்படி இருக்குமானால், என்னுடைய ஆகச் சிறந்த படைப்பு ஒன்றை உருவாக்கிவிட்டே உங்களை வந்து சந்திப்பேன். அதை எதிர்பார்த்துத்தானே விமர்சனங்கள் செதுக்கப்படுகின்றன. தேவையற்றவை விழுந்தால்தானே சிலையொன்று உருவாகும். அது வேண்டாம் என்றால் நான் கல்லாக இருக்கவே விரும்புகிறேன் என்றாகிவிடும்.

எதுவும் சொல்லப்போவதில்லை என்று கூறிவிட்டு எதையெதையோ. நான் முக்கியமாக சொல்ல வந்ததையே மறந்துவிட்டு.

நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும்.

‘கேபி ஓல்ட்ஹவுஸ்’ என்கிற இந்தப் பெண்மணி ‘டின்னிடஸ்’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிடஸ் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என் நண்பர்களிடம் கூறிய போது, யாரும் அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சிலர் சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள்.

டின்னிடஸ் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இருபத்து நான்கு மணிநேரமும் கூடவே வரும் அந்தச் சத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். தான் ஏன் செத்தே ஆகவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு இறந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்ட போது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஒரே வித்தியாசம். அவர் சாவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். நான் வாழ்வைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.

‘பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்’ என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்கு பேய் பற்றிய பயமெல்லாம் இல்லை. ஆனால் இந்த டின்னிடஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த அரக்கன் டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை நிறைய விவரமாக உங்களைச் சந்திக்கும் நேர்ந்தால் கூறுகிறேன். தூக்கம் வரும்போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை எதுவுமே இருக்க முடியாது. எனக்கு கேன்சர் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் இந்தச் சத்தத்தோடு போடும் யுத்தத்தை விட கொடுமையான வலி வேறொன்று இருக்கமுடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய வலியைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தாலே போதும்.

எப்படியோ டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டுவந்துவிட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள். எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்துவிட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். எல்லாம் இயல்பாகவே இருக்கிறது; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள்.

இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி இந்தக் குறையும் சொல்லமுடியாது. ஆனால், மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மற்றவர்களும்தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதைவிட மிக மிக மிக அதிகமாகவே இருக்கிறது. Especially, human aspects.

டின்னிடஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்தபோது, இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்ப மருத்துவரை அழைத்தேன்.. அவரோ, ‘அதெல்லாம் ஒன்னுமில்லடா..’ என்று கூறியபோதே என் பாதி பிரச்சினை தீர்ந்துவிட்டதுபோல் இருந்தது. என் தந்தையார் ஒரு யோகா தெரபிஸ்டும் என்பதால், அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து யோகா செய்து வந்தேன். தீவிர உணவுக்கட்டுப்பாடு. எப்போதும் எதையாவது செய்துகொண்டு சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமே ஒரே வழி என்று புரிந்தது.

டின்னிட்ஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அமைதி வேண்டுமென்கிறார்கள். இவர்கள் சும்மாவே அமைதி விரும்பிகள். அர்த்தமற்ற அமைதியின் மீது அப்படி என்னதான் காதலோ? ஆனால் அவர்கள் வேண்டும் அமைதிக்கு நிச்சயம் சாத்தியமில்லை என்பதே உண்மை.

எனவேதான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்கொண்டேன். நண்பனாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் மீதே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இப்போது அதைக் கேட்காமலாக்கிவிட்டேன். அது இருக்கிறது. ஆனால் இல்லை. :-) ஏனெனில் கண்டுகொள்வதில்லை. மனதை வலிமையாக்கிக்கொள்வது மட்டுமே ஒரே வழி.

ஆனால் இவர்களுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்வதைவிட வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் நண்பன் ஒருவனை ‘ஒருமுறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று வா’ என்று தீர்வு சொன்னேன்.

இந்திய நகரங்களின் இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக அமைந்துவிடுமல்லவா? ஆனால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. எனது நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழுதுவிட்டாள்.

இங்கிருக்கும் நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து மீண்டுவந்துவிட்டதால் என்னை இவர்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள். எனக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. என்னால் முடிந்த அத்தனையும் செய்துவருகிறேன். அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணிநேரமும் மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்கிறதாம்.

ஒருபுறம் சாகத்துடிக்கும் நண்பர். இன்னொருபுறம் அவரது முடிவு சரி என்று ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் Euthanasia முடிவைப் பற்றிய இந்தக் காணொளி. இந்த நேர்காணலை அந்தப் பெண்மணி யுதனேசியா (கருணைக்கொலை என்கிற வார்த்தை எனக்கு பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை) செய்துகொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.

நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது. உண்மையில் யுதனேசியா பற்றிய என்னுடைய பார்வையே இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் மாறிவிட்டது. ஒருவேளை நான் அவரிடம் பேசி இருக்கலாமோ? அது அவருக்கு உதவியிருக்குமோ? என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகிறது. உண்மையில் இதைப் பார்த்த அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.

எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன். இயற்பியலாளர் ஸ்டிபன் ஹாக்கிங் பற்றி உங்களுக்குத் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றியெல்லாம் கூறி வருகிறேன்.

இருபத்தோரு வயதில் அவருக்கு ‘Motor Neurone Disease’ வந்து உடல் முழுவதும் செயலிழந்து போய், அவர் இன்னும் இரண்டு வருடங்கள்தான் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிக் கைவிரித்துவிட்டனர். ஆனால், ஸ்டிபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது கேட்டால், அவருடைய வாழ்க்கையைத்தான் காட்டுவேன்.

இன்றைக்கு அவருக்கு வயது எழுபத்து நான்கு. அவரால் பேச முடியாது, நடக்க முடியாது; அவரால் அவரது உடலைக்கொண்டு எதையும் செய்யமுடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்று செயல்படும். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவரே அவருக்குப் பிடித்தமான குரலைத் தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு. ஒருமுறை அவரிடம் ‘எப்படி இவ்வளவு நாள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்’ என்று கேட்டபோது அவர் கூறியது ‘While there is life, there is hope’. எனக்கு இந்த வரிகள்தான் எல்லாமாயும் இருந்திருக்கிறது.

ஹாக்கிங்கால் முடிந்திருக்கிறது. நானோ இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யுதனேசியா எல்லாம் தேவையா? அதைப்பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

நீண்ட கடிதத்துக்கு மன்னிக்கவும்.

குழந்தைகளுக்கு என் அன்பு.

என்றென்றும் அன்புடன்,

மாதவன் இளங்கோ

பெல்ஜியம்

madhavan.elango@gmail.com

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கல்யாண்ஜி கவிதைகள் பாடலாக

$
0
0

OLYMPUS DIGITAL CAMERA

 

அன்பு ஜெயமோகனுக்கு,
வணக்கம்.

வண்ணதாசனுக்கு விருது அறிவித்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி.
கோவை ரவீந்திரன் அவர்களின் உதவியோடு அவரது இரண்டு கவிதைகளை
பாடலாக்கி பதிவு செய்தேன். மெட்டு நான் போட்டது.
இசை : திவாகர் சுப்பிரமணியன்.
அதை உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
விழாவில் ஏதும் பயன்படுத்தினால் மகிழ்ச்சி.
அன்பாக
ரவிசுப்பிரமணியன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நான்கள்

$
0
0

2 (2)

 

எண்பதுகளில் நான் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து நிறைய பேசியிருக்கிறேன். 2007-ல் நீண்ட இடைவேளைக்குப் பின்னால் என்னைச் சந்தித்த பின்னர் அவர் சுகாவிடம் சொன்னதாகச் சுகா சொன்னார் ‘ஜெயமோகன் தானான்னே சந்தேகமா இருக்கு. நீங்க அவரை இருபது வருசம் முன்னாடி பாத்ததில்லை. ரொம்ப அடங்கிட்டார். ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப கனிஞ்சிட்டார்னு தோணுது’

அதை சுகா சொன்னபோது நான் எனக்குள் புன்னகை செய்தேன். நல்ல சொல்தான். ஆனால் கனிவு என்பது என்ன? தெரியவில்லை. ஒருவகை விடுபடுதல்தான் நான் அடைந்தது என்று தோன்றுகிறது. என்னில் இருந்து. நான் என நான் எண்ணிக்கொண்டவற்றில் இருந்து. என் மனதில் இருந்து. இன்னும் சொல்லப் போனால், என் ஜென்மவாசனைகளில் இருந்து.

என் அப்பா முன்கோபத்துக்கு புகழ்பெற்றவர். என் அண்ணா இன்றும் அப்பாவின் அதே குணத்துடன் இருக்கிறார். நான் என் இளமை முழுக்க முன்கோபத்துடன் இருந்திருக்கிறேன். எத்தனையோ அடிதடிகள். எத்தனையோ வழக்குகள். ஈட்டி ஏந்தி சென்று யாருக்காகவோ எதற்காகவோ போரிட்டுச் செத்த படைவீரனின் ரத்தம் எனக்குள் இருக்கிறது போல. அதை வெல்ல நான் என் வாழ்நாளெல்லாம் போரிட வேண்டியிருந்தது.

அதைவிட என் மனம். இரு சிக்கல்கள் கொண்டது. மிகவேகமாக உச்ச நிலைகளுக்குச் சென்று நெகிழ்ச்சியையோ கோபத்தையோ விரக்தியையோ வெறுப்பையோ அடையக்கூடியது அது. அதில் என் தர்க்கத்தின் கட்டுப்பாடே இருக்காது. ’பேய்’ இறங்க கொஞ்ச நேரமாகும்.

இரண்டாவதாக, மிகைப்பற்று மனச்சிக்கல் [Obsessive compulsive neurosis] அளவுக்கே செல்லும் செயல் தீவிரம். ஓர் எண்ணம் அல்லது செயல் என்னில் என் கட்டுப்பாட்டை மீறி இருந்துகொண்டே இருக்கும். அதை மட்டுமே எண்ணி, அதிலேயே குவிந்து, அதைமட்டுமே மணிக்கணக்கில் நாட்கணக்கில் செய்துகொண்டிருப்பேன். அந்த வேகம் காரணமாகவே நான் விஷ்ணுபுரம் போன்ற நாவல்களை எழுத முடிந்தது. ஆனாலும் அந்த வேகம் ஓர் உளப்பீடிப்பாகவே இருந்தது.

அவை இரண்டுமே கலைஞர்களுக்கு கண்டு வரும் சிக்கல்கள் என்று மணிப்பாலில் ஒர் உளவியல் நிபுணர் சொன்னார். நானே இவற்றை அவதானிக்க முடிவது வரை இவை உளப்பிரச்சினைகள் அல்ல என்றார். என் வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்கள் நான் இந்த உளச்சிக்கல்களுடன் போராடியிருக்கிறேன்.

கலைஞனின் மனம் என்ற விஷயத்தைப் பற்றி நான் எப்போதுமே சிந்தனை செய்வதுண்டு. அவன் கட்டுப்பாட்டில் இல்லாமலிருக்கும் போதுதான் அது படைப்பூக்கத் தன்மையுடன் இருக்கிறது. ஆகவே மனதை அதன்வழி போக விட்டால் மட்டுமே அவனால் நல்ல படைப்புகளை கொடுக்க முடியும். ஆனால் மனதை அதன் வழியே போகவிடுபவன் இச்சைகளை பின் தொடர்வான். இச்சைகளை பின் தொடர்பவன் உறவுகளை இழப்பான். பொய்யனாவான். பிறர் உணர்ச்சிகளை எப்படியோ சுரண்டுவான். அநீதிகளை எங்கேனும் செய்தேயாவான்.

எட்கார் அல்லன் போ முதல் இன்றுவரை புகழ்பெற்ற ஐரோப்பிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கட்டற்றதாக, அநீதியும் குரூரமும் கலந்ததாக இருப்பதற்கு காரணம் இதுவே. அவர்கள் செய்பவற்றின் மேல் அவர்களின் பிரக்ஞைக்கு கட்டுப்பாடு இல்லை. அறம் நீதி நாகரீகம் என்பதெல்லாம் பிரக்ஞைகள். ஆழ்மனம் ஓர் அபூர்வமான, மகத்தான விலங்கு. அவர்களின் எழுத்தில் அழகும் மானுட அறமும் வெளிப்படும் போது தனிவாழ்க்கை வேறெங்கோ இருந்துகொண்டிருக்கும்.

நானும் கட்டற்றவனாக இருந்தேன். அறவுணர்வு எனக்கிருந்தது. ஆனால் இங்கிதம் இல்லை. குரூரம் இருந்தது. நெருங்கிய ஒவ்வொருவரையும் புண்படுத்துபவனாக இருந்தேன். அப்படியே சென்றிருந்தால் நான் ஒரு பி.கெ.பாலகிருஷ்ணனாக ஆகியிருப்பேன். யார் கண்டது, ஜி. நாகராஜன்கூட ஆகியிருப்பேன். மனைவியை துரத்திச் சென்று நெருப்பு வைத்து கொளுத்திய ஜி. நாகராஜன்!

பல கலைஞர்களின் லௌகீகமான தோல்வி தங்களை கட்டற்ற ஆளுமைகளாக ஆக்கிக் கொள்வதில் இருக்கிறது. அந்த ஆளுமையை அவர்கள் பிறர்மேல் சுமத்துகிறார்கள். வேண்டியவர்களை கொடுமைக்குள்ளாக்குகிறார்கள். சகமனிதர்களை புண்படுத்துகிறார்கள். அதன்மூலம் உருவாகும் லௌகீகப்பிரச்சினைகளால் அவர்களின் கலை வீழ்ச்சியடைகிறது. அதனால் மனமுடைந்து தங்களைத் தாங்களே அழிக்கிறார்கள். ஒருவகை வன்மத்துடன் அந்த அழிவை தாங்களே முழுமை செய்துகொள்கிறார்கள்.

அதற்கான எல்லா வாய்ப்புகளும் கொண்டவனாகவே நான் இருந்திருக்கிறேன். என்னை மீட்டது இரு நிகழ்வுகள். ஒன்று அருண்மொழி. அவள்மேல் நான் கொண்ட, இன்றும் அதே உக்கிரத்துடன் ஒவ்வொருகணமும் நீடிக்கும் பெருங்காதல். பெண்மையின் ஒரு அம்சத்தை ஆண் தனக்குள் ஏற்றுக்கொள்ளாமல் அவனுக்கு மீட்பில்லை. எனது எல்லா நாவல்களிலும் அடிநாதமாக சொல்லும் சாரமான கண்டறிதல் இது.

அடுத்து நித்யா. நித்யா சிரிக்க சொல்லித்தந்தார். ’எதுவும் பெரிய விஷயமல்ல எல்லாமே பெரியதாக இருக்கும்போதுகூட’ என்று சொல்லித் தந்தார். தத்துவத்தை நோக்கியும் வரலாற்றை நோக்கியும் ஒவ்வொன்றையும் விரிக்க பயிற்றுவித்தார். அப்படி விரிந்தவற்றை பிரபஞ்ச நிகழ்வில் வைத்து சின்னஞ்சிறு துளியாக ஆக்கக் கற்பித்தார்.

எழுதும்போது கட்டற்றவனாகவும் நேர்வாழ்க்கையில் கட்டுப்பாடுள்ளவனாகவும் ஆக முடியும் என்றார். எழுதும்போது உணர்ச்சிகரமானவனாகவும் சிந்தனையில் தர்க்கபூர்வமாகவும் செயல்படலாம் என்று சொல்லிக்கொடுத்தார். என்னைப்போன்ற எழுத்தாளனின் முன்னுதாரணம் காஃப்காவோ, எட்கார் அல்லன் போவோ, மார்கி து சேடோ, ஜி.நாகராஜனோ அல்ல. துஃபுவும், பாஷோவும், சிவராமகாரந்தும், பஷீரும்தான்.

அத்வைதத்தின் கொள்கைப்படி ஆளுமை [personality] என்று ஒன்று இல்லை. அது ஐரோப்பாவில் மக்களை மந்தைகளாக்கிய கிறித்தவ திருச்சபையின் ஆன்மீகசர்வாதிகாரத்தை மீறி தனிமனித உரிமையை கோரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கருதுகோள். அந்த மக்களால் நாநூறு வருடங்களாக நம்பப்பட்டு ஏற்கப்பட்ட ஒன்று, அவ்வளவுதான்.

அத்வைதிக்கு நான் என்பது அகங்காரம் அல்லது மமகாரம் [தன்னிலை] மட்டுமே. அது ஒர் இருப்பு அல்ல. நிலை அல்ல. கட்டமைப்பு அல்ல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. அது இடத்துக்கு ஏற்ப தருணத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. ‘நான் இதுதான்’ என எண்ணுவதே மாயை. ’நான் இவ்வாறு இங்கே இருக்கிறேன்’ என்றே அத்வைதி எண்ணுவான்.

ஆகவே தன் அக இருப்பைப் பலவாக பிரித்துக்கொள்ள, பல தளங்களுடன் அதை இணைத்துக்கொள்ள அவனால் முடியும். இரும்புச்சிலைபோல தன்னைச் சுமந்தலையமாட்டான். காற்றுப்போல, நெருப்புப்போல கால – இடத்தில் தன்னை நிகழ்த்திக்கொள்வான். மேகம்போன்ற வடிவம் கொண்டதாக இருக்கும் அவன் அகம்.

உண்மையில் நாம் அனைவரும் அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். சிறுகுழந்தைகள் அப்படித்தான் இருக்கின்றன. கல்வி கற்கும் தோறும் அகங்காரம் இறுகி தன்னிலையை ஆளுமையாக உருவகித்துக் கொள்கிறோம். குறிப்பாக ஐரோப்பியக் கல்வி நம்மை நான் என நம்பச் செய்கிறது. தனிமனிதன் [individual ] என்ற சொல்லை அது சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதன் மூலம் நாம் நமக்கென ஒரு நானை உருவாக்கிக் கொள்கிறோம். அதன்பின் அதை பேணி வளர்க்கும் பொறுப்பு நம்முடையதாகிறது.

நான் ஆளுமை அல்ல. நான் ஓர் அகங்காரம் மட்டுமே. அதை உணரும்படிச் செய்தது நித்யா. அது என்னைப் பலவாக எளிதாகப் பிரித்துக் கொள்ளச் செய்தது. நான் குறைந்தபட்சம் இருவர். ஓர் எளிய லௌகீகன். கூடவே ஒர் இலக்கியவாதி. இரு ஆளுமைகள் நடுவே முரண்பாடில்லாமல் ஆக்கிக் கொள்ள கடுமையாக என்னை பழக்க வேண்டியிருந்தது. என் அகங்காரத்தை ஒடுக்க வேண்டியிருந்தது. முழு வெற்றியும் நிகழவில்லை. ஆனால் அது பலன் அளித்தது.

அதேசமயம் அகங்கார அழிவு என்பது ரஜோகுணத்தை இல்லாமலாக்கிவிடும். செயல்திறமையை அழிக்கும். ’நான் இதைச் செய்யவேண்டும், என்னால் முடியும்’ என்ற இச்சை [will] இல்லாமல் செயல் இல்லை. அந்த இச்சையை உருவாக்கும் அடித்தளமான அகங்காரத்தை செயல்களைச் செய்யும் கர்ம மண்டலத்தில், செயல்சூழலில், மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் நித்யா.

அது எளிதல்ல. ஆனால் சாத்தியம்தான் என்பதை நான் அறிந்தேன். என் எழுத்தில் என் கருத்துக்களில் வெளிப்படும் அகங்காரம் என்பது நானே உருவாக்கிக்கொண்ட ஓர் அமைப்பு மட்டுமே. அது எனக்கு விருப்புறுதியை அளித்து என்னைத் தீவிரமாகச் செயல்படச்செய்கிறது. என் மூளையை, என் மனத்தை, என் மொழியை நம்பச் செய்கிறது. என்னுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான தன்னம்பிக்கை அவ்வாறு உருவாவதே.

அகங்காரம் அடித்தளமாகக் கொண்ட என் செயல்தளத்தில் நான் முழுமையாகவே தனிமையானவன். அங்கே எனக்கு வேண்டியவர்கள் என எவரும் இல்லை. நான் நம்பும் விழுமியங்கள், இலட்சியங்கள் மட்டுமே அங்கே உண்டு.

ஆனால் நான் தனிமனிதனாக இதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவனாக என்னை ஆக்கிக்கொண்டேன். அங்கே முடிந்தவரை அகங்காரத்தை அழிக்க முயல்பவன். எந்தக்கூட்டத்திலும் இயல்பாக கரையக்கூடியவன். எத்தகைய மனிதர்களிடமும் சேர்ந்து பழகக் கூடியவன். ஆகவே நண்பர்கள் நிறைந்தவன். பிரியமான குடும்பம் கொண்டவன். ஒருபோதும் தனியன் அல்ல.

மூன்றாவதாக ஒரு நான் உண்டு. அது என் முழுமை நோக்கி நான் செல்லும் அந்தரங்கமான தேடல்களால் ஆனது. நித்யா தவிர எந்த மனிதரிடமும் நான் அதை முழுமையாகப் பகிர்ந்துகொண்டதில்லை. பகிரப்போவதும் இல்லை.

ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு எளிதில் என்னால் பின்வாங்க முடிவதே என்னை உற்சாகமானவனாக வைத்திருக்கிறது. என் கருத்துத்தளத்தில் நிகழும் எந்த சிக்கலும் சொந்த வாழ்க்கைக்குள் வருவதில்லை. ஒரு கணம்கூட அவற்றை நான் இங்கே கொண்டுவருவதில்லை. அது வேறு ஒருவன் என்றுதான் பலசமயம் உண்மையிலேயே தோன்றும்.

என்னைச் சந்திப்பவர்கள் எழுதும் ஆளுமைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வதுண்டு. நண்பர்கள் சொல்வதுண்டு. அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும்கூட அதைச் சொல்வதுண்டு. அது நான் பலகாலம் முயன்று அடைந்த ஒரு நிலை. ஒவ்வொருவருக்கும் அதையே சிபாரிசு செய்வேன். உறுதியான ஒற்றை ஆளுமையாக ஒருவர் தன்னை வைத்துக்கொண்டால் அவரை வாழ்க்கை ஏதேனும் ஒரு கட்டத்தில் பிளந்து போடும். அது இயற்கைக்கு மாறானது என்பதனால். அப்படி சிதைந்த பலரின் துயரங்களைக் கண்டிருக்கிறேன்.

கருத்துலக ஜெயமோகன் செய்யும் வேலைகளின் பொறுப்பை தனிமனித ஜெயமோகன் சுமப்பதில்லை. அது என் தன்னறம், அவ்வளவே. அது என்னால் செய்யப்படவேண்டியது என தோன்றுகிறது. செய்தால் நிறைவு கிடைக்கிறது. மற்றபடி அதன் வெற்றிதோல்விகளை, விளைவுகளை நான் பொருட்படுத்தப்போவதில்லை. அங்கே நான் வெளிப்படுத்தும் அகங்காரம் என் கடிவாளக் கட்டுக்குள் நிற்கும் ஒரு மிருகம் மட்டும்தான். ஆம், அது ஒரு பாவனை என்றே உணர்கிறேன்

ஏதேனும் ஒரு தருணத்தில் அந்த கருத்துலக முகத்தை முழுமையாக உதறி நான் பின்வாங்கவும்கூடும். என்னுடைய தனிமனித முகத்துடன் எஞ்சக்கூடும். ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த தனிமனித முகத்தையும் உதறி பின்வாங்கி நான் என் ஆழ்ந்த தேடல்களுக்கு மட்டும் என்னை ஒப்புக்கொடுக்கக் கூடும். அது நிகழுமா என தெரியவில்லை. ஆசை, கனவு, அவ்வளவுதான்

கருத்துலகில் நான் திட்டவட்டமாக பேசக்கூடியவன். பொதுவாக முன்வைக்கப்படும் அரசியல் சரிகளுக்கு அப்பால் சென்று என் சொந்த அறவுணர்வால் சிந்திப்பவன். அதை அப்படமாக முன்வைப்பவன். இலக்கிய அழகியல் நோக்கில் என் ரசனைக்குகந்தவற்றில் கறாராக இருப்பவன். அரசியல், அழகியல் கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பவன். ஆகவே என் மீது அன்றும் இன்றும் எரிச்சலும், கசப்புகளும் இருந்துகொண்டே இருக்கின்றன.

அதற்கான காரணங்கள் பல. ஒரு புதுக்கருத்து அது புதுக்கருத்து என்பதனாலேயே கொஞ்சம் அழுத்தமாகவே முன்வைக்கப்படும். மேலும் நான் படைப்பாளி என்பதனால் என் மொழி வர்மாணியின் விரல் போல. அறியப்படாத நுண்புள்ளிகளை அது சீண்டிவிடக்கூடும்.

எழுத்தாளனாக நான் உணர்ச்சிகளை அதீதமாக அடைபவனாகவே இருந்திருக்கிறேன். சென்ற காலங்களில் பல கருத்துக்களைத் தேவைக்குமேல் வேகமாக முன்வைத்திருக்கிறேன். இணையத்துக்கு நன்றி. நான் இணையம் வழியாக உரையாட ஆரம்பித்தபின்னர் மெல்லமெல்ல என் வேகத்தைக் குறைத்துக்கொண்டேன். ஒவ்வொருநாளும் என் கணிப்பொறியில் இருக்கும் கடிதங்களில் உலகின் மிகச்சிறந்த மனங்கள் பல என்னுடன் தொடர்பு கொள்கின்றன. அது என்னை இன்னும் நிதானமும் இன்னமும் தர்க்கமும் கொள்ளச்செய்கிறது.

இத்தனையையும் மீறி நான் சிலரைத் தனிப்பட்ட முறையில் எரிச்சல் கொள்ளச் செய்யலாம்தான். புதுக்கருத்தைக் கண்டு ஒவ்வாமை கொள்ளும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கிறது. நாம் நம்பும் விஷயங்கள் மறுக்கப்படும்போது, ஆராதிக்கும் மனிதர்கள் விமர்சிக்கப்படும்போது நாம் பொங்குகிறோம். அது ஒருவகையில் இயல்புகூட. கருத்துக்கள் மேலும் மனிதர்கள் மேலும் பற்றுக்கொள்வதில் பிழை என ஏதும் இல்லை.

அவர்களிடம் ’நான் சொல்வதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்’ என்றே சொல்வேன். ’இப்படி சிந்தனைசெய்து பார்க்காவிட்டால் நம்முடைய சிந்தனைகள் தேங்கிவிடுமல்லவா” என்று கேட்பேன். அதற்காக நான் ஊட்டும் எரிச்சலை மன்னித்துவிடும்படிக் கோருவேன். சிந்தனை என்பதே பல தரப்புகள் பிரிந்து முரண்பட்டு மோதி முன்னகர்வது, வளர்வது. அதில் நானும் ஒரு தரப்பு. நான் என்னை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பைச் செம்மை செய்து கொள்ள உதவுகிறேன் அல்லவா? குறைந்தது ஒரு விவாதத்தையாவது இந்த அறிவுச்சூழலில் அளிக்கிறேன் அல்லவா?

எரிச்சலடைபவர்களில் தங்களைப்பற்றி மிகையான மனப்பிம்பம் கொண்ட சில்லறை எழுத்தாளர்கள் பலர் உண்டு. இவர்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள். கம்பனுக்கே அன்று சில்லறைக் கவிஞர்களின் தொல்லைதான் அதிகம் இருந்திருக்கிறது. பாரதி தாகூர் புதுமைப்பித்தன் என அனைவருமே இந்த கொசுத்தொல்லையைத் தாங்கியவர்கள்தான். இவர்களின் எரிச்சல் இவர்களின் உள்ளீடற்ற அகங்காரம் மூலம் உருவாவது. அதற்காக அனுதாபம் கொள்கிறேன். வேறெதுவும் செய்வதற்கில்லை.

இதையும் மீறி என்னுடய கருத்துக்களின் பிழைகளால், போதாமைகளால் சிலர் எரிச்சல் கொள்ளக்கூடும். நான் என்னை எந்த துறையிலும் ஆராய்ச்சியறிஞன் என்று சொல்லிக்கொள்பவன் அல்ல. இந்தியஞானம், மற்றும் இலக்கியம் சார்ந்த கருத்துக்களை மட்டுமே நான் திடமாக முன்வைப்பேன், அவற்றில் எனக்கிருந்த ஆசிரியர்களும் அவர்களுடன் இருந்த வாய்ப்புகளும் உலகின் எந்த கல்விச்சாலையிலும் எளிதில் காணமுடியாதவை. பிற தளங்கள் சார்ந்து எனக்கு எப்போதும் ஐயங்களும் இடர்பாடுகளும் உண்டு. தகவல்களுக்குப் பிறரைச் சார்ந்திருக்கிறேன்.

மேலும் சிந்தனைகளை மேற்கோள் காட்டியே நமக்கு பழக்கம். நம்மில் பலர் எதைச் சொன்னாலும் அதை யார் சொன்னார்கள் என்றுதான் சொல்கிறோம். சுயமாகக் கருத்துக்களை உருவாக்கும்போது பல சிக்கல்கள். சிலகருத்துக்கள் ஒற்றைப்படையாக இருக்கும். சில கருத்துக்கள் முந்தைய கருத்துக்களுடன் முரண்படும். சிலகருத்துக்கள் தர்க்கமே இல்லாமல் வெறும் எண்ணங்களாக இருக்கும். அவற்றைத் தொடர்விவாதங்கள் மூலமே மேம்படுத்தி முழுமை செய்துகொள்ளமுடியும்.

எமர்சன் போன்றவர்களின் எழுத்தின் அளவு பீதியூட்டுவது. அதற்கான காரணம் இதுவே, அவர்கள் பேசவில்லை, உரையாடிக் கொண்டிருந்தார்கள். உலகின் எல்லா முக்கியமான சிந்தனையாளர்களும் நிரந்தரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அதன் வழியாகத் தங்களை செம்மை செய்துகொண்டிருந்தார்கள். ஆகவே என் சிந்தனைகளை நானே உருவாக்கிக் கொள்ளும்போது கொஞ்சம் தடுமாறுவதில் பிழையில்லை என்றே நினைக்கிறேன். அவை உரையாடலுக்கான வெளிகளைத் திறக்கின்றன.

நான் சொல்வது முற்றிலும் பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் அறிந்ததை, நம்புவதைச் சொல்கிறேன். அந்தக்குரலும் இந்த கருத்துத்தளத்தில் இருக்கட்டுமே. இவை நாளை முழுக்க மறுக்கப்பட்டாலும் கூட நம் சிந்தனையின் ஒழுக்கில் எனக்கான பங்கை ஆற்றியிருக்கிறேன் என்று நிறைவுகொள்வேன். இத்தனை பக்க அளவுகளுடன் இத்தனை சிந்தனைகள் மற்றும் விவாதங்களுடன் இந்த எழுத்துமுகம் என்னுடைய ஒரு சிறு பகுதி மட்டுமே.

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் ஜனவரி 21 ,2011

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1

$
0
0

பகுதி ஒன்று : கரிபிளந்தெழல்

[ 1 ]

நீர் நிறைந்த மண்கலத்தின் கரிய பரப்பு பனித்து துளித்து திரள்வதுபோல காட்டை மூடியிருந்த இருளிலிருந்து எழுந்துவந்த பிச்சாண்டவர் ஒவ்வொரு அடிக்கும் தன் உருத்திரட்டி அணுகினார். கீற்றுநிலவொளியில் அவர் தலைக்குமேல் எழுந்த சடைமகுடத்தின் மயிர்ப்பிசிர்கள் சுடர்கொண்டன. சிதைவெண்சாம்பல் மூடிய ஓங்கிய கரிய உடல். நரம்போடிய நெடுங்கைகள். இடையில் தோற்சரடில் கட்டப்பட்ட எலித்தோல் கோவணம். சடைத்திரிகள் பரவிய திண்டிரள் தோள்கள்.

வலக்கையில் மண்டையோட்டு வெண்கப்பரை ஏந்தியிருந்தார். இடக்கையில் தலைக்குமேல் எழுந்த முப்புரிவேல். நெற்றியில் செஞ்சுடர் வடிவில் தீட்டப்பட்ட அறிவிழிக்குறிக்குக் கீழே சிவமூலிப்புகை வெறி எரிந்த செவ்விழிகள். அவர் எடுத்து ஊன்றிய சூலத்தில் கட்டப்பட்டிருந்த எலும்புமணிகள் மெல்ல குலுங்கி ஓசையிட்டன. கால்கள் மண்ணில் பதிந்தனவா என்று ஐயுறவைக்கும் புலிநடை.

அருகணைந்ததும் யானை உறுமுவது போன்ற குரலில் “சிவமேயாம்!” என்றார். கைகூப்பியபடி நின்றிருந்த வைசம்பாயனன் அவர் அடிபதிந்த நிலம்தொட்டு புழுதித்துளி எடுத்து தன் தலைமேல் வைத்து “அடிபணிகிறேன், பிச்சாண்டவரே” என்றான். “அருள்க சிவம்!” என்று பிச்சாண்டவர் சொன்னார். அவருடைய சிவந்த விழிகள் அவன் முகத்தை நோக்கி ஒருகணம் நிலைத்தன.

அவன் அவரை புரிந்துகொண்டு “விசும்ப குலத்தில் வந்தவன். என் பெயர் என வைசம்பாயனன் என்பதை கொண்டிருக்கிறேன்” என்றான். அவர் அவனை கூர்ந்து நோக்கிக்கொண்டு அசையாமல் நின்றார். முன்பு அறிந்து மறந்த ஒருவனை மீண்டும் நினைவுகூர்பவர் போல. பணிந்தவனாக  அவன் அவரே பேசட்டும் என காத்து நின்றான்.

அவர் விழிகளை விலக்கி அப்பால் தெரிந்த இருண்ட காட்டுக்குள் இருளசைவெனத் தெரிந்த மரங்களை நோக்கி அசைவற்று நின்றார். அவன் மெல்ல “விசும்ப குருமரபு முன்பு கிருஷ்ணயஜுர்வேதத்தை கோத்தது. என் மூதாதையான வைசம்பாயன மாமுனிவர் தைத்ரிய சம்ஹிதையை செவ்வமைத்தார். எந்தை கிருஷ்ண சாம்யகர் தைத்ரியக் காட்டின் தலைவராக இருந்தார். சொல்முதிர்ந்து அங்கிருந்து எழுந்து வடமலை சேர்ந்தார்” என்றான்.

“நீ எங்கு செல்கிறாய்?” என்றார் பிச்சாண்டவர். “ஆசிரியரைத் தேடி” என்றான் வைசம்பாயனன். அவர் “ம்” என உறுமியபின் முன்னால் நடக்க அவன் அவருடைய சொல்லற்ற ஆணையை தலைக்கொண்டு அவரைத் தொடர்ந்து சென்றான். அவர் அவனை திரும்பிப்பார்க்கவில்லை என்றாலும் அவர் அசைவுகளில் அவனை அவர் உணர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அந்தக் காட்டுப்பாதையின் ஓரத்தில் நின்றிருந்த ஆலமரத்தடியில் சென்று வேர்ப்புடைப்பு ஒன்றில் அமர்ந்தார். அவன் தொழுதபடி அருகே நின்றான்.

KIRATHAM_EPI_01

அவர் குனிந்து நிலம்நோக்கி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். சடைக்கற்றைகள் முகம் மறைக்க விழுந்து ஆடின. அவர் எண்ணம் கலைய தசைகள் நெகிழ்ந்தன. முழவுக்குள் ஒலிக்கும் ஓசையென மெல்லிய ஆழ்குரலில் “சொல்க!” என்றார். அவன் எங்கிருந்து தொடங்குவதென்று அறியாமல் தயங்கி பின்னர் “தங்கள் அடிகளை சென்னி சூடுகிறேன். குருவென அமைந்து சொல்லருளவேண்டும்” என்றான். அவர் “அது உன் சொற்களுக்குப் பின்னரே” என்றார்.

“நான் தங்களுக்காகவே இங்கு காத்திருந்தேன் என தங்களைக் கண்ட கணமே உணர்ந்தேன்” என்றான். அதன்பின் அவன் சொற்கள் எழுந்தன. “பிச்சாண்டவரே, நான் செல்லவேண்டிய திசையென்ன என்று அறிந்திலேன். என் உள்ளம் கொண்ட எழுச்சியால் தைத்ரியம் விட்டு கிளம்பினேன். என் கால்களில் இருக்கும் தன்னுணர்வால் நடந்துகொண்டிருக்கிறேன்” என்றான். “இக்காட்டில் காலோய்ந்து அமர்ந்தபோது அந்த விசை முற்றிலும் அவிந்திருப்பதை உணர்ந்தேன். உணவும் நீருமின்றி மூன்றுநாட்களாக இந்தக் காட்டுப்பாதையின் ஓரத்தில் ஆலமரத்து வேர்க்குவையில் அமர்ந்திருக்கிறேன்.”

இனி ஒரு தூண்டுதலின்றி இங்கிருந்து எழுவதில்லை என்று உறுதிகொண்டேன். என்னை எல்லாத் திசைகளிலுமிருந்து உட்புகுந்து கூர்ந்து ஆராய்ந்தேன். விடையென ஒன்று எழுவதில்லை என்றால் இங்கு இறந்து மட்குவதே என் ஊழ் என எனக்கு சொல்லிக்கொண்டேன். உற்றும் கற்றும் நான் கொண்ட சொற்கள் கொந்தளித்து சித்தத்தை நிறைத்தன. பின்னர் அவை ஒன்றோடொன்று இணைந்து வெறும் ஓசையென்றாயின. அவை எடைகொண்டு படிந்து அமைதியடைந்தபோது நான் வெறுமையால் நிறைந்தேன். இனி எனக்கான சொல் வெளியே இருந்துதான் வரவேண்டுமென தெளிந்தேன்.

மாநெறியினரே, உட்புகுந்து தன்னை அறிவதென்பது எத்தனை இடர்மிக்கதென்று நான் இந்த மூன்றுநாட்களும் ஒவ்வொரு சொற்பெருக்கின் தன்னிலை மீட்சியின்போதும் உணர்ந்துகொண்டிருந்தேன். எதை நம்பி கிளம்பினேன் என்றுதான் மீளமீள கேட்டுக்கொண்டேன். மெய்மை என்றும் இறுதிவிடை என்றும் மீட்பு என்றும் என்னுள் எழுந்த ஒவ்வொரு சொல்லையும் விலக்கி நான் கண்டடைந்தது ஒன்றே, நான் கிளம்பியது வளர்ந்து பேருருக் கொள்வதற்காக மட்டுமே.

நான் வைசம்பாயனன் என என்னை அழைத்துக்கொண்டது ஏன்? நுண்சொல் தொட்டுக் கோத்து கிருஷ்ணயஜுர்வேதத்தை அமைத்த என் முன்னோனின் பெயர் அது. நான் அங்கிருந்து தொடங்க விழைந்திருக்கிறேன். அவனைக் கடந்துசெல்ல எண்ணியிருக்கிறேன். நான் என எழுந்து காலத்தின் முன் நிற்பது மட்டுமே என் கனவு. நான் இருந்த இடம் விதைபுதைந்த மண். கீறி எழுந்து வானோக்கவேண்டும். அதற்காகவே கிளம்பினேன்.

அந்தத் தன்னுணர்வு என்ன என்றுதான் இறுதிநாளாக இன்று இங்கு அமர்ந்து எண்ணிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் முற்றா இளமையில் பேராணவத்தை நிறைப்பது எது? நான் நான் என்றே அவன் ஒவ்வொரு கணமும் சொல்லிக்கொண்டிருக்கிறான். உலகுக்கு முன் எழுந்து தன்னை முன்வைப்பது குறித்து நூறாயிரம் கோணங்களில் கனவு காண்கிறான். அவன் வேறுபட்டவன், அவன் மேலானவன், அவன் ஊழால் தெரிவுசெய்யப்பட்டவன். அதை அன்றி அவன் எண்ணுவதே இல்லை.

எப்போது இவ்வெண்ணம் என்னுள் புகுந்தது? நானும் பிற சிறுமைந்தரைப்போல கானாடுவதும் நீராடுவதும் சொல்லாடுவதுமே இன்பம் என்று எண்ணியிருந்தவனே. என்னை என்று உணரத்தொடங்கினேன்? அருநெறியினரே, இங்கு அமர்ந்து எண்ணிக்கொண்டிருந்தபோது துழாவிச்சென்ற எண்ணம் ஒன்று அத்தருணத்தை தொட்டுவிட்டது.

நான் எந்தை எனக்களித்த வேதச்சொற்களை உள்ளார்ந்து உசாவும் தன்மைகொண்டிருந்தேன். ஒருமுறை காட்டில் நீரோடை ஒன்றை தாவிக்கடக்கையில் என் காலடிக்குக் கீழே சூரியனை கண்டேன். அக்கணம் யஜுர்வேதச்சொல் ஒன்று என் எண்ணத்தில் எழுந்தது. அவன் அனலால் தவத்தை, மொழியால் பிரம்மத்தை, ஒளியால் உருவை, இந்திரனால் தேவர்களை, காற்றால் உயிர்ப்பை, சூரியனால் ஒளியை, சந்திரனால் விண்மீன்களை, யமனால் மூதாதையரை, அரசனால் குடிகளை ஆள்கிறான். உடல் மெய்ப்பு கொள்ள அங்கேயே நின்றுவிட்டேன். நெடுநேரம். கொடுநோன்பாளரே, அக்கணத்தில் அந்த நீண்ட வேதச்சொல்லடுக்கின் முழுப்பொருளையும் நான் உணர்ந்துவிட்டேன்.

அங்கு நின்று  அழுதேன். விண்ணை நோக்கி அங்கு சுடர்கொண்டிருந்த சூரியனை விழிநிறைத்து நான் நான் என்று சொல்லிக்கொண்டேன். எனக்கும் திறந்துவிட்டது அந்தப் பொன்வாயில். வேதமுனிவர் தலைகளை கிளைநுனிகளாக்கி வந்தமைந்த அப்பறவையை நானும் ஏந்தியிருக்கிறேன். அறிதலென்பது ஒரு கணம். முன்பிருந்த அனைத்தும் பிறிதொன்றாக மாறும் திகிரிச்சுழி. அனலால் தவத்தை, மொழியால் பிரம்மத்தை ஆளுதல். அனலும் மொழியும். அனல்மொழி! மொழியனல்!

அச்சொல்லில் இருந்து எழுந்து மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருந்தேன். பின்னர் உறுதிகொண்டேன், என் தவம் மொழியை அனலாக்கி அடைதல் மட்டுமே. அதன்பின்னரே காவியங்களை நோக்கி செல்லத் தொடங்கினேன். எந்தைக்கு அது உவப்பளிக்கவில்லை. இது வேதச்சொல் எழும் காடு, தைத்ரியமரபு எப்போதும் காவியங்களுக்கு இடமளித்ததில்லை என்றார். அப்படியென்றால் நான் பிருஹதாரண்யகத்திற்கே செல்கிறேன் என்றேன். எந்தை என்னை விழியோடு விழி நோக்கி ஒருகணம் அமைந்தார். பின் அவர் என்னிடம் ஒரு சொல்லும் உரைக்கவில்லை.

சிவப்படிவரே, ஒடுங்குதல் யோகத்தின் வழி. விரிதலே கவிதைக்குரியது. நான் விரியத்தொடங்கியதுமே என் குருநிலையின் நாற்றிசை வேலிகளை என் கைகள் தொட்டுவிட்டன. அங்கிருக்கமுடியாமல் ஆனேன். என் இடம் எங்கோ காத்திருக்கிறது என்று உணர்ந்தேன். வடதிசை வேதம் பெருகிய மண் என்பதனால் தென்திசை தேர்ந்தேன் என உணர்கிறேன். குளிர்விழைபவன் நெருப்பை விட்டு விலகுவதுபோல.

நான் கிளம்பி ஒன்பது மாதங்களாகின்றன. அவந்தியையும் உஜ்ஜயினியையும் கடந்தேன். விந்தியனை ஏறிக் கவிந்து தண்டகாரண்யம் சேர்ந்தேன். இன்னும் இன்னும் என்று சென்றுகொண்டிருக்கிறது தெற்கு. அங்கு எனக்கெனக் காத்திருப்பது எது என்றறியேன். ஏதோ ஒன்று காத்திருக்கிறது என ஏன் எண்ணுகிறேன் என உசாவிக்கொண்டபோது எழுந்து நின்றது என் வெற்றாணவம்தான்.

நான் ஊழால் இலக்குநோக்கி தொடுக்கப்பட்டவன் என்பதற்கு என்ன சான்று? கோடி கோடி உயிர்கள் மண்ணில் பிறந்து மடிகின்றன. இந்த மரத்தடியில் ஒரு குயிலின் சிற்றுடல் பாதி மட்கிக்கிடப்பதை கண்டேன். அதன் பாடலை ஒரு செவியேனும் கேட்டிருக்குமா என்று தோன்றியது. அதுவும் தன்னை ஊழ் தொடுத்த அம்பென்று எண்ணித்தான் சிறகடித்துக்கொண்டிருந்ததா என்று எண்ணியதுமே சோர்ந்து இங்கே அமர்ந்துவிட்டேன்.

காலம் இறுகி கொடும்பிரி கொள்ளும்தோறும் ஓர் எண்ணம் வந்து நின்றது. அடுத்த நோக்கென என் முன் வரும் மனிதர் எனக்கு வழிகாட்டும் ஆசிரியரே என்று. வேடனோ வைதிகனோ வணிகனோ வழிப்போக்காளனோ எவராயினும் எனக்கான விடையுடனேயே வருவார்கள். அவர்கள் சொல்லலாம், உணர்த்தலாம். நான் ஊழின் பணியாளன் என்றால் அவர்கள் எனக்கெனவே வருவார்கள் என்று உறுதிகொண்டேன்.

“நீ என்னை எதிர்பார்த்தாயா?” என்றார் பிச்சாண்டவர். வைசம்பாயனன் ஒருகணம் தயங்கி “இல்லை, நான் என் அறியா இளமையினால் இனிய கனவொன்றையே கொண்டிருந்தேன். பனிவெண்தாடியும் குழலும் கனிந்த கண்களும் கொண்ட முதுகவிஞர் ஒருவரையே எதிர்நோக்கியிருந்தேன்” என்றான். பிச்சாண்டவர் “ம்” என்று முனகினார். பின்னர் “சிவமாகுக!” என்று தனக்குள் என சொல்லிக்கொண்டார்.

[ 2 ]

இருள் விலகத்தொடங்கும் பொழுதில் இருவரும் காட்டின் விளிம்பை வந்தடைந்தனர். அங்கே நீர் சுழித்தோடிய ஓடை ஒன்றில் முழங்காலளவு நின்று வைசம்பாயனன் தன் பொழுதிணைவு வணக்கத்தை செய்தான். அப்பால் இருந்த பாறைமேல் கால்மடித்து அமர்ந்து மார்பில் கைகளை கட்டிக்கொண்டு சூரியனை நோக்கிக்கொண்டிருந்தார் பிச்சாண்டவர். அவன் வணங்கி முடித்து எழுந்து காட்டுக்குள் புகுந்து இலைக்குறியும் வேர்க்குறியும் தேர்ந்து காய்களையும் கனிகளையும் சேர்த்து கொடிக்கூடையில் எடுத்துக்கொண்டு மீண்டபோது என்னவென்று அறிவதற்குள்ளாகவே அவன் உடல் துடிக்கத் தொடங்கியது. அவர் நெருப்பு மூட்டி சுள்ளிகளை எரித்து அதில் பெருச்சாளி ஒன்றை சுட்டுக்கொண்டிருந்தார். அவ்வூன்வாடை நீலப்புகையுடன் எழுந்து அங்கிருந்த இலைகளை எல்லாம் தழுவியிருந்தது.

அவன் உடல்கூசி புதருக்கு அப்பால் நின்றுவிட்டான். எலியின் தோல் மயிர்கருக அனலில் வெந்து வழண்டு அதிலிருந்து கொழுப்பு தீயில் விழுந்து நீலத்துளிகளாக வெடித்தது. நீண்ட பச்சைக்குச்சியில் குத்தப்பட்டிருந்த அதன் உடலில் வால் பொசுங்கி எரிய முகம் அனல்படாமல் விழிகளுடன் எஞ்சியிருந்தது. திறந்த வாய்க்குள் வெண்பற்களுடன் அது புன்னகையுடன் நெருப்பை ஆடையென அணிந்திருப்பதாகத் தோன்றியது.

அவனை திரும்பி நோக்கிய பிச்சாண்டவர் “வருக!” என தலையசைத்தார். அவன் அப்போதும் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான். அவர் பெருச்சாளியை புரட்டிப்புரட்டி சுட்டார். வெந்த ஊனின் மணம் அவனுக்கு வேள்வியை நினைவூட்டியது. அவன் ஒரே ஒருமுறைதான் பூதவேள்வியில் பங்குகொண்டிருந்தான். அதில் கரடித்தோலணிந்த ஹோதாக்கள் வெள்ளாட்டை வெட்டி பலியிட்டதைக் கண்டு அஞ்சி கண்களை மூடிக்கொண்டான். அருகே அமர்ந்திருந்த அவனது மூத்தவனாகிய அசலன் அவன் தொடையை தன் கையால் கிள்ளி விழிதிறக்கச் செய்தான். தந்தை திரும்பி விழிகளால் அவனை அதட்டி நிமிர்ந்து அமரச்செய்தார். வேதம் அவனைச் சூழ்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. நூறு பசிகொண்ட ஓநாய்கள் முரலுதல் போல சந்தம் கொண்ட அதர்வம்.

கழுத்துக்குழாய் அறுபட்ட வெள்ளாட்டின் கால்கள் துடித்துக்கொண்டிருந்தன. அதன் வெட்டுண்ட தலையை அப்பால் இருந்த பீடத்தில் வைத்துவிட்டு கழுத்திலிருந்து பீரிட்ட குருதியை அனலில் பாய்ச்சினர். கூடவே நெய்யும் ஊற்றப்பட்டபோது தழல் உண்டு நாவெழுந்தது. அப்பமும் மலரும் தேனும் நெய்யும் கலந்து விழுங்கி தங்கள் மூவெரிக்கூடத்தில் எழுந்தாடும் அதே அனல்தான் அது என எண்ணவே நெஞ்சு முரண்கொண்டது.

ஊன் துண்டுகளை வெட்டி இடும்தோறும் அனலின் மணம் வேறுபட்டபடியே வந்தது. குளம்புகளும் மயிர்வாலும் எரியும்போது குமட்டல் கொண்டு அவன் வயிறு அதிர்ந்தது. அங்கே மயங்கி விழுந்துவிடலாகாது என்பதை மட்டுமே எண்ணத்தில் நிலைக்கவிட்டு எதிரே நின்றிருந்த வேதத்தூணை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் உடலே அந்த நாற்றக்குவையை உணர்ந்துகொண்டிருந்தது. நோயுற்ற பசு என அவ்வப்போது அவன் உடலதிர்ந்தான்.

வேள்விநிறைவில் ஊன்கலந்த அன்னம் பரிமாறப்பட்டபோது அவன் தந்தை அதில் ஒரு பருக்கையை எடுத்து தன் வாயிலிட்டு கைகூப்பி “பிரம்மமாகுக! பிரம்மம் வளர்க! பிரம்மம் எஞ்சுக!” என்றார். அசலன் ஒரு பருக்கையை எடுத்து அவ்வண்ணமே சொல்லி வாயிலிட்டான். அவனால் நிற்கவே முடியவில்லை. நினைத்து நினைத்து உந்தியும் உடலெழவில்லை. “உம்!” என்றார் தந்தை. அவன் ஒரு பருக்கையை எடுத்துக்கொண்டான். அதை நாபடாமல் வைத்து திருப்பி எடுத்துக்கொண்டான். எவருமறியாமல் அதை கீழே உதிர்த்தபோது மெல்ல உடல் இளகியது. பெருமூச்சுவிட்டபோது கண்களில் நீர் இருப்பதை உணர்ந்தான்.

அதன்பின் எந்த வேள்வியிலும் ஏதோ ஒரு தருணத்தில் அவன் ஊன்பொசுங்கும் மணத்தை அடைந்தான். சிலவகை அரக்குமரங்கள் எலும்பென எரிந்தன. ஊன் என உருகின சிலவகை காய்கள். பட்டு எப்போதுமே முடியெனப் பொசுங்கியது. நெய்யில் குருதி எரிந்தது. வேள்விக்கென அமரும்போதே அவன் அந்த கெடுமணத்திற்காக காத்திருக்கலானான். நாளடைவில் வேள்வியே அவனுக்கு உளவிலக்களித்தது. சாலைக்குப் பிந்தினான். வேதநிரையில் பின்னால் அமர்ந்தான். தந்தை உசாவியதற்கெல்லாம் புறச்சொற்களில் மறுமொழி சொன்னான். ஒருநாள் அவர் விழிநோக்கி சொன்னான் “எந்தையே, நான் இனி வேள்விக்கு அமர்வதில்லை என்றிருக்கிறேன்”.

திகைத்து அவர் “என்ன சொல்கிறாய்?” என்றார். “இது நாமறியாத தொல்காலத்தில் நன்றுதீது திரியாத எளிய மானுடர் எவரோ ஆற்றிய சடங்கு. வழிவழி வந்தது என்பதனாலேயே இதை இன்னமும் ஆற்றிக்கொண்டிருக்கிறோம். இதன் பொருளென்ன என்று அறியோம். இதன் விளைவென்ன என்றும் உணர்ந்திலோம். இதன் துன்பங்களையும் இது அளிக்கும் பழிகளையும் மட்டும் சூடிக்கொண்டிருக்கிறோம்” என்றான். “இதுவன்று வேதம். அது காலையொளி சூடும் பனிமலைமுடிகளைப்போல தூயது. நாவில் விழும் மழைத்துளிபோல வானை மட்டுமே அறிந்தது. அதையே நான் நாடுகிறேன்.”

அவனருகே நின்றிருந்த அசலன் திகைத்து மூச்செறிந்தான். தந்தை “தொன்மையானவை அனைத்தும் நம்மிடம் நீடிப்பதில்லை, மைந்தா. இது வழிவழி வந்திருப்பதனாலேயே வாழும்தகுதி கொண்டதாகிறது” என்றார். துடுக்குடன் “அதுவன்றி பிறிதெதையும் சொல்வதற்கில்லையா தங்களுக்கு?” என்றான் வைசம்பாயனன் அவர் விழிகளை நோக்கி. “இல்லை மைந்தா, வேள்வியும் வேதமும் பொருள்கொண்டு அடையப்பெறுவன அல்ல” என்றார் தந்தை. “நான் பொருளெனக் கொள்ளாத ஒன்றை இனிமேல் ஆற்றப்போவதில்லை” என்றான் வைசம்பாயனன்.

அவர் சிலகணங்களுக்குப்பின் “நன்று. உன் வழி அதுவென்றால் அதன் விளைவுகள் அனைத்தும் உன்னுடையதே ஆகுக!” என்றபின் திரும்பிச்சென்றார். அசலன் “என்ன சொன்னாய் மூடா!” என தாழ்ந்த குரலில் சொன்னான். “இது ஊனுண்ணும் வேடர்களின் தொல்சடங்கு…” என்றான் வைசம்பாயனன். “நாம் ஊன்பலி இடுவதில்லை” என்றான் அசலன். “நாம் இடுவதும் ஊனே. கொல்லப்படாததனால் நெய் ஊன் அல்ல என்றாகிவிடாது” என்றான் வைசம்பாயனன். “நீ முரண்பட முடிவுசெய்திருக்கிறாய். வேதம் மீது எழுந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறாய். கருதுக, அவ்வாறு எண்ணிய அசுரர் அனைவருமே அழிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றபின் அவன் தந்தையைத் தொடர்ந்து சென்றான்.

பிச்சாண்டவர் பெருச்சாளியை அருகிலிருந்த பாறைமேல் போட்டு மும்முறை தட்டி அதன் சாம்பலை உதிர்த்தார். அதன் வால் நீல ஒளியுடன் நெய்யுருகும் மணத்துடன் எரிந்துகொண்டிருந்தது. அதை குச்சியால் அடித்து அணைத்தார். பச்சைக்கோலின் நுனியிலும் அனல் எரிந்தது. அதை தீயில் வீசிவிட்டு தன் சூலத்தால் பெருச்சாளியின் குடல் அகற்றப்பட்ட அடிவயிற்றை இரண்டாகப் பிளந்தார்.  நெஞ்சக்கூடு உடைந்து பிரிய அது இருபக்கமும் கால்கள் விரிய அகன்றது. வெண்ணிற அடுக்குகளாக தசை வெந்து படிந்திருந்தது. அதன் சிறிய கூர்முகத்தில் கண்கள் வெந்து அடங்கி துயில்வதுபோலிருந்தது.

அவர் ஓவியம் வரைவதுபோன்ற திறன் மிக்க மெல்லிய அசைவுகளுடன் அதன் வெந்து சுருண்ட தோலை இருபக்கமும் விலக்கினார். வெள்ளெலும்புகளுடன் வெந்த ஊன் மட்டும் நெஞ்செனத் திறந்திருந்தது. மூவேலின் கூர்முனையால் அவர் அதை மட்டும் வெட்டி எடுத்தார். நான்கு பொசுங்கிய கால்கள் நடுவே ஊன் பெயர்ந்த குழியுடன் எலி பாறைமேல் மல்லாந்து கிடந்தது. அந்த ஊனை அருகில் விரித்திருந்த இலைமேல் வைத்தபின் அவனை நோக்கி அவர் திரும்பியபோது அவன் அஞ்சி மேலும் பின்னடைந்தான்.

பிச்சாண்டவர் அருகே கிடந்த தட்டைக்கல் ஒன்றை எடுத்து சிறிய பாறைமேல் வைத்தார். “சிவம்! சிவம்! சிவம்!” எனக் கூவியபடி பிறிதொரு உருளைக்கல்லை அதன்மேல் வைத்து கைகூப்பினார். கையெட்டும் தொலைவிலிருந்து மூன்று சிறிய மலர்களைப் பறித்து அதற்குச் சூட்டி “பணிக சிவம்!” என மும்முறை கூவினார். பெருச்சாளியின் ஊனை எடுத்து அதன் அருகே வைத்து படையல் கொள்க என வலக்கை மூன்றுவிரலால் செய்கை காட்டினார். நெற்றி மண்பட உடல் வளைத்து மும்முறை வணங்கி “சிவமேநாம்!” என்று கூவினார்.

அங்கிருந்து ஓடிவிடவேண்டும் என்றுதான் அவன் உள்ளம் திமிறிக்கொண்டிருந்தது. ஆனால் அவன் கால்கள் உயிரற்றவை போலிருந்தன. தன் விழிநோக்கு ஒரு வடமென ஆகி அக்காட்சியில் தன்னை கட்டியிருப்பதாக உணர்ந்தான். அவர் இரு இலைகளை விரித்து அந்த ஊனை இருபங்காகப் பிரித்து அவற்றில் வைத்தார். ஒன்றின் அருகே கால்மடித்து அமர்ந்தபின் திரும்பி அவனிடம் “வருக!” என்றார்.

அக்கணம் அந்தச் சரடு அறுபட்டதுபோல அவன் பின்னால் சரிந்து கையிலிருந்த கூடையை கீழேபோட்டுவிட்டு திரும்பி ஓடத்தொடங்கினான். அவர் பின்னால் ஓடிவருவதுபோல தோன்றிக்கொண்டிருந்தது. பின்னர் அத்தனை மரங்களும் கால்முளைத்து தன்னைத் தொடர்வதுபோலிருந்தது. காடே ஒரு பெரும்பெருக்கென அவனுக்குப் பின்னால் கொந்தளித்து வந்தது. மூச்சுநிறைந்து விலாவெலும்புகள் வெடிக்குமென்றானபோது அவன் நின்றான். உந்திவந்த விசை எஞ்சியிருக்க முன்னால் விழுந்து கையூன்றி அமர்ந்தான்.

அங்கேயே அமர்ந்து மூச்சிளைத்தான். மூச்சு தளரத்தொடங்கியதும் உள்ளம் கரைந்து அழத்தொடங்கினான். நெடுநேரம் அழுது பின் ஓய்ந்து எழுந்தபோது இனிய களைப்புடன் உடற்தசைகள் நெகிழலாயின. அங்கேயே புற்பரப்பில் மல்லாந்து வானை நோக்கியபடி படுத்தான். வானம் ஒளிகொள்ளத் தொடங்கியிருந்தது. கண்கள் கூசி காதுநோக்கி நீர்க்கோடு வழிந்தது. மூச்சு சீரடைய நெஞ்சு எழுந்தமைய அவன் துயிலில் ஆழ்ந்தான்.

அவன் கண்களுக்குள் ஒளி வந்துகொண்டிருந்தது. அது எண்ணங்களையும் உதிரிக்கனவுகளையும் ஒளிபெறச்செய்தது. அவன் வேள்விச்சாலை ஒன்றில் அமர்ந்திருந்தான். நடுவே எரிகுளத்தில் நின்ற நெருப்பு வெண்ணிறமாக இருந்தது. அவன் வேதமுரைத்தபடி தன் கால்விரல்களை வெட்டி அதிலிட்டான். இரு கால்களையும் வெட்டி அவியிட்டான். இடக்கையால் வலக்கையை வெட்டி அனலூட்டினான். பின் எழுந்து அனல் நோக்கி நடந்தான். ஊன் எரியும் இன்மணம் மூக்கை நிறைத்தது.

திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். தன் நெஞ்சிலிருந்த வரி ஒன்றை என்ன இது என்பதுபோல புரட்டிப்புரட்டி பார்த்தான். “மென்மையான சொற்களை கலைமகள் சுவைத்து உண்கிறாள். அழகிய மலர்களை அலைமகள் விரும்பி உண்கிறாள். இனியவர்களே, அனலை அருந்துகிறாள் கொற்றவை.” எவருடைய வரிகள் இவை?

“காலத்தை உண்கிறான் பிரம்மன். வெளியை உண்கிறான் விண்ணோன். இனியவர்களே, ஊழிப்பெருக்கை உண்பவனோ உருத்திரன்.” அந்த வரிகளைத்தான் அவன் தன் கனவில் வேதமெனச் சொல்லி அவியூட்டினான். “வேதத்தை சுவைக்கின்றனர் தேவர்கள். மெய்மையை சுவைக்கின்றனர் தெய்வங்கள். இனியவர்களே, தன்னையே சுவைக்கிறது பிரம்மம்.” எங்கோ வாசித்தவை. முற்றிலும் மறந்து எங்கோ கிடந்தவை.

அவன் எழுந்து களைப்புடன் நின்றான். உள்ளம் அம்முடிவை எடுப்பதற்குள்ளாகவே கால்கள் திரும்பி நடக்கத் தொடங்கின. அவன் சென்றபோது அந்த இடத்திலேயே அப்படியே பிச்சாண்டவர் அமர்ந்திருந்தார். கைகழுவச்சென்ற அவன் மீள்வதைக் காத்திருப்பவர் போல. அவர் முன் இரு இலைகளிலும் ஊன் ஆறிப்போய் இருந்தது. அவன் அவர் அருகே சென்று நின்றான். அவர் அவனை வெறுமனே நோக்கினார். குருதிபடர்ந்த நோக்கு இரு கூர்கள் என அவனைத் தொட்டு நின்றது.

அவன் அவர் அருகே அமர்ந்து  அந்த ஊனை அள்ளி “பிரம்மத்திற்குக் கொடை” என மும்முறை சொல்லி வாயிலிட்டு மென்று உண்டான். அவர் “சிவம் கொள்க!” என்று உரைத்தபின் உண்ணலானார். ஊன் மென்மையாக உருகியநெய்யுடன் இருந்தது. நெடுநாட்களுக்கு முன்னரே அவன் அதை உண்டிருந்தான் என அறிந்தான்.

தொடர்புடைய பதிவுகள்


வெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்

$
0
0

SOLVALARKAADU_EPI_59

 

வரலாற்று நிகழ்வு அல்லது வரலாற்று ஆளுமையை கொண்டு புனையப்படும் கதைகள் பொதுவாக சாமானியனின் பார்வையில் சொல்லப்படும்போது, அது கதைக்கு கூடுதல் நெகிழ்வை அளிக்கிறது. அது அவனுடைய கதையாக, அவனுடைய கோணத்திலும் வரலாற்றை விசாரணைக்கு உட்படுத்துகிறது. கம்யுனிச சுத்திகரிப்பாகட்டும், ஃபாசிசத்தின் கோரமுகமாட்டும், இறுகிய கொள்கை பாறைகள் மூச்சுமுட்ட நம்மை சூழும் தோறும் அதை பிளந்து வருவதும், அம்முயற்சியில் வீழ்வதுமே கதைகளாக நம்மை வந்தடைகின்றன.

 

சுநீல் கிருஷ்ணன் எழுதிய கட்டுரைl

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் -5

$
0
0

maxresdefault

அன்புள்ள ஜெ ,

 

வண்ண தாசன் அவர்களுக்கு விஷ்ணுபுர விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி.

என் சிறுவயது நாட்களை எண்ணிக்கொள்கிறேன், ஆழ்வார்திருநகரி,நாங்குநேரி, பாளை,  என்று தாமிரபரணி ஆற்றின் கரைகள் தான் இன்றுவரை என் சொர்க்கபுரி, விளையாடி, குளித்து, களைத்து, உடலில் சிராய்ப்பு ஏற்படாமல் வீடு திரும்பிய நாட்கள் அரிது, ”சைபால்”  தேக்கப்படாத என்   முட்டியோ, முழங்காலோ நான் பார்த்ததே இல்லை,  ஆனாலும் இன்றுவரை மனம் முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பது என்னவோ ஊரில் தான்.

 

 

இப்படி விட்டுவிட்டு வந்த அத்தனை அனுபவங்களையும், தன கதைகளின் மூலம் எனக்கு மீட்டு தந்தவர் என்கிற முறையில் வண்ண தாசன் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்,

 

 

மென்மையான கதை சொல்லி என்கிற விமர்சனம் அவர்மேல் இருக்கலாம்,  நிஜத்தில் ஒவ்வொருவரும் பரபரப்பும் பதற்றமும், ‘செயல்படுதல்’ என்கிற பெயரில் ஆக்ரோஷமான ,கொந்தளிப்பான   மனோநிலையும்  கொண்ட மனிதர்களாவே இருக்கிறோம்,  வண்ணதாசன், போன்ற ஒரு படைப்பாளி தன படைப்பின் மூலம்,  நம்மில் இருக்கும்  மென்மையான பகுதியை தொட்டு எடுக்கிறார் என்றால், அது , அவர் நமக்குள் செய்யும்  நல் மாற்றம் தானே.

 

 

”ஒளியிலே தெரிவது” தொகுப்பை வாசித்து நான் அப்படியான அனுபவங்களையே மீட்டுக்கொண்டேன்,  ‘ அருணாசல காந்தி’ யும், செண்பகா என்கிற செண்பக அக்காவும், என் கை பிடித்து  அழைத்து சென்ற என் பக்கத்து வீட்டு அக்காவின் மாற்று பெயர்கள் தான்.

இந்த கதைகளின் மூலம் என்னுள் இன்னும் இருக்கும் அரை டவுசர் பையனை காண முடிவது ஒரு காலாதீத அனுபவம் அல்லவா.

 

 

இந்த தொகுப்பில் இருக்கும் கதைகள் பெரும்பாலும் , ‘ பின்னால் திரும்பி பார்த்து, நினைவுகளை அசை போடும்’ கதைகள் . பெரும்பாலும் இந்த ‘கதை’ எனும் கருவியை வைத்துக்கொண்டு இதனூடாகவே, என்னுள் இருக்கும்  என் கிராம வாழ்க்கையை வாழ்ந்துவிட கிடைத்த பரிசு என்பேன்.

 

 

அதே போல் ”சிநேகிதிகள்” கதையில்  வரும் நாச்சியாரும்,, கிருஷ்ணம்மாவும், இன்றுவரை தாமிரபரணி ஓடும் கரை ஊர்களில் காணக்கிடைக்கும், மனுஷிகள்.

கடந்தமுறை ஊருக்கு சென்றிருந்த போது , தோளில் ஈரமான துவைத்த துணியை, சுமந்து வந்த நடு வயது பெரியம்மாக்களை காணுகையில், இவர்களுக்கும் ”சொல்ல’  ஏதாவது காதல் கதை இருக்குமே என்று தான் நினைத்துக்கொண்டேன்,

 

 

இப்படி ஒவ்வொரு கதையிலும் நான் தனிப்படட முறையில்   ஒரு ”ஊர் வாழ்க்கை” வாழ, மனதுக்கு அணுக்கமாக இருந்த படைப்புகளுக்கு நன்றியும் வாழ்த்தும்.

 

 

என்றும் அன்புடன்..

 

சௌந்தர் 

சத்யானந்த யோகமையம்

சென்னை

*

 

அன்புள்ள ஜெ

 

வண்ணதாசனின் கதைகளை வாசிக்க ஆரம்பித்து இருபதாண்டுக்காலம் ஆகிவிட்டது. இன்னமும் வாழ்க்கையை வெவ்வேறு நிறங்களில் சொல்லிக்கொண்டே இருக்கும் கதைகளாகவே அவை என்னுடன் இருந்துகொண்டிருக்கின்றன. போய்க்கொண்டே இருப்பவளாகிய ஜூடி அன்னத்தை நினைத்துக்கொண்டேன். இன்று வரை அப்படி எத்தனை போய்க்கொண்டே இருக்கும் பெண்களை நான் கண்டிருக்கிறேன். எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. இரண்டாவது தலைமுறையாக அவர்களைப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

 

மனித வாழ்க்கை ஒரு அர்த்தமற்ற இழப்பு. ஒரு பெரிய துயரப்பாடல். அதைச் சொல்ல எப்போதும் கண்களில் ததும்பிய கண்ணீருடன் ஒரு கலைஞன் வேண்டும். அவன்தான் வண்ணதாசன்.

 

ரவி முருகேசபூபதி

*

அன்புள்ள ஜெ.

 

வணக்கம்.   உங்களோடு தினமும் தொடர்பில் இருப்பவன் நான். இணையத்தில். வாசிப்பு அயர்வு தரும்போது யூ.ட்யூப்பில் உங்கள் பேச்சுக்களைக் கேட்பவன். சமீபத்தில் கேட்டது காந்தீயம் தோற்கும் இடங்கள்.

 

 

சொல்லப்போனால் உங்கள் எழுத்தை வைத்து ஓட்டிக் கொண்டிருப்பவன்.  நான் ஒரு யோகா மாணவன். வருடா வருடம் மதுரை காந்தி மியூசியத்தில் எங்கள் யோகா மாணவர்கள் காந்தி ஜெயந்தி கொண்டாடும்போது அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு ஒரு சிறு சொற்பொழிவு ஆற்றுவேன். அதற்குப் பெரிதும் உதவுவது தங்களின் “இன்றைய காந்தி”. இந்த 2.10.16ல் நான் பேசியது “காந்திஜியின் எளிமை”. உங்களின் கருத்துக்களைத்தான் சொன்னேன். ஞாபகமாகக் கடைசியில் அண்ணலைப் பற்றிய ஜெயமோகன் அவர்களின் இந்தப் புத்தகத்தை தவறாமல் படியுங்கள் என்றும் சொல்லி விட்டேன். மனசாட்சி கேட்டால்தானே…!
நம் வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கொடுக்கப்பட்டுள்ளதை உங்கள் இணையத்திற்குப் பிறகு முகநூலில் அறிவித்த முதல் ஆள் நான்தான். என்ன எழுதினேன் என்பதை இத்துடன் இணைத்துள்ளேன். பிடித்தால் சந்தோஷம்.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அவருக்கும் பெருமை, விருதுக்கும் பெருமை

எனக்கு மிகவும் பிடித்த மனநெகிழ்ச்சியான படைப்பாளி. இவரின் கிருஷ்ணன் வைத்த வீடு மறக்க முடியாத சிறுகதை. அழிந்து போன ஒரு வீட்டின் பிம்பத்தை. அதன் வரலாற்றை அப்படியே மனதில் பாரமாக நிறுத்தி வைக்கும் கதை. என் சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் அப்படி ஒரு வீடு அங்கும் இருக்கக் கூடுமே என்று மனசு தேடும்…அந்த வீட்டின் அழிந்துபட்டவர்களின் கதை காட்சி ரூபமாய் விரியும். ஆனந்த விகடனில் அவ்வப்போது அப்படி வண்ணதாசன் எழுதிய கதைகள் அத்தனையும் உயர் தரம்.

 

பல்லாண்டு காலமாகக் கிளை விரித்துப் படர்ந்து முதிர்ந்து நிற்கும் ஒரு மாமரத்தை விலை பேசி வெட்ட வரும் நபர்கள், அந்த மரமும், அதை வளர்த்தெடுத்த பாட்டியின் நேசமும்…. செல்லுமிடமெல்லாம் அந்த மரத்தைத் தேட வைத்து விடுவார். சருகுகளின் ஒரு சிறு சலசலப்புக் கூட அந்தப் பாட்டியை உஷாராக்கி விடும்…அதை அவர் சொல்லியிருக்கும் அழகிருக்கிறதே…அப்படியொரு கதையை வேறு எவரிடத்திலும் நான் படித்ததில்லை…அவர் எழுதியுள்ள வரிகளை நினைத்து நினைத்து மனதில் ஏற்றி வியப்புக் கொள்ள வைக்கும் மிக உயர்ந்த தரத்திலான பல படைப்புக்களை வண்ணதாசன் தொடர்ந்து தந்துகொண்டேயிருந்திருக்கிறார்.அவருக்கு விஷ்ணுபுரம் விருது மிகத் தகுதியான ஒன்று…!

 

உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும். எத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தொகுதியை முன் வைத்து பரிசளிக்கப்படுகிறதென்றால் அந்தத் தொகுதியில் பத்துக்கு ஏழு அல்லது எட்டுச் சிறுகதைகளாவது மிகத் தரமானதாக உயர்ந்து நிற்க வேண்டும். அப்படியான ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பவதுதான் பரிசுக்குப் பெருமையாக அமையும். நாவல்களுமே அப்படித்தான். ஒரு காலகட்டத்தின் கதையை, ஒரு சமூக மாற்றத்தை, பெருமளவு உள்ளடக்கிய படைப்புக்களே சிறந்த நாவலாக அமையும். வெறும் சம்பவங்களாய், ஸ்வாரஸ்யமாய் இருந்தால் சரி என்று கோர்த்துக்கொண்டே போவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இன்றைய நாவல்கள் அப்படித்தான் வருகின்றன. பாதி படிக்கையிலேயே நேரம் வீண் என்கிற மன வருத்தம் வந்து விடுகிறது. அடுத்த புத்தகத்திற்குத் தாவ விழைகிறது.

.
ஆனால் இப்படித் தகுதியாய்விருது பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது…விருதினால் அவருக்கும் பெருமை…விருதுக்கும் பெருமை…!!! நான் இப்படிச் சொல்வதை நிச்சயம் கல்யாண்ஜி ஏற்றுக் கொள்ள மாட்டார். அவரின் பெருந்தன்மை அப்படி…! பண்பான மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்….

 

 உஷாதீபன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஏழரைப்பொன்

$
0
0

ettumanoor temple

 

சில ஊர்களின் பெயர்கள் தெரியாத ஏதோ காரணத்தால் நம்மை ஈர்த்து நாவிலேயே தங்கிவிடும். அவ்வாறு என் நாவில் அடிக்கடி சுழன்று வரும் பெயர்களில் ஒன்று ஏற்றுமானூர். ஏழரப் பொன் ஆனைமேல் எழுந்தருளும் ஏற்றுமானூரப்பாஎன்ற மலையாளப்பாடலே அப்பெயரை என் நாவில் நட்டது. கேரளத்தில் கோட்டயம் அருகே உள்ள தொன்மையான சிவன்கோயில் ஏற்றுமானூர். அங்கு திருவிதாங்கூர் அரசர் அளித்த ஏழு பொன்யானைகளும் ஒரு சிறிய பொன்யானையும் கோடைகாலத்தில் நிகழும் ஆறாட்டு ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்படும். அதைத்தான் ஏழரைப்பொன்யானை என்கிறார்கள்

முன்னர் பொன் முகபடம் அணிந்த ஏழு யானைகளும் ஒரு குட்டியானையும் செல்லும் சடங்கு இருந்தது. இந்த ஏழரைப் பொன் யானைஎன்ற தொன்மம் எங்கிருந்து வந்தது என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. ஏழரைநாட்டுச்சனி எனச் சொல்லப்படும் கிரகபாதிப்பு ஏற்படாமலிருக்க ஏற்றுமானூரப்பனை வழிபடுவார்கள். ஆகவே இச்சடங்கு வந்தது என்பார்கள். இந்த வசீகரமான சடங்கு ஒரு திரைப்பாடல் வழியாகக் காதில் விழுந்ததில் இருந்து அந்த ஊர் மீது ஒரு பிரியம் இருந்தது. ஆனால் அங்கு செல்வது பல காரணங்களுக்காக கைகூடவில்லை.

கோட்டயம் அருகே இருக்கும் இந்த ஊருக்கு இதற்கென்றே சென்றால்தான் உண்டு. வேறு எந்த தனிச்சிறப்பும் அங்கு கிடையாது. ஒவ்வொரு முறை எர்ணாகுளம் செல்லும்போதும் ஏற்றுமானூர் செல்ல வேண்டும் என்று எண்ணுவேன். அது நடக்காது. இந்தியா முழுக்க பயணம் செய்திருந்த போதிலும் நான் குறைவாகவே பயணம் செய்த நிலம் கேரளம்தான். இங்குதானே இருக்கிறது, போனால் போயிற்றுஎன்ற மனோபாவமாக இருக்கலாம். பயணங்கள் திட்டமிடும்போது எப்போதோ எப்படியோ சற்று தொலைவில் உள்ள இடத்திற்கு போகவேண்டும் என்று தான் தோன்றுகிறது. அதில் ஊரைவிட்டுச் செல்லுதல், தொலைந்து போதல் என்னும் கவர்ச்சி உள்ளது.

ஏற்றுமானூருக்கு ஒரு முறை சென்றே ஆகவேண்டும் என்று எத்தனையோ முறை எண்ணியும் கூட நான் திட்டமிட்டு அங்கு செல்லும்படி நேரவில்லை. தற்செயலாக சென்றேன். எர்ணாகுளத்தில் ஒர் இலக்கிய கூட்டத்திற்கு சென்றுவிட்டு அங்கே விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். மறுநாள் புலரியில் எனக்கு திருவனந்தபுரத்திற்கு ரயில் போடப்பட்டிருந்தது. விடுதிக்கு வெளியே இரவுணவுக்கு வாழைப்பழம் வாங்குவதற்காக வந்தேன். பேருந்து ஒன்று நெற்றியில் ஒளியுடன் வந்து நின்றது. ஏற்றுமானூர் என்று எழுதப்பட்டிருந்தது.

என்ன தோன்றிற்றென்று தெரியவில்லை. ஏறிவிட்டேன். ஏறிய பிறகே பையில் தேவையான பணம் இருப்பதை உணர்ந்தேன். “ஏற்றுமானூர்” என்று பயணச்சீட்டு எடுத்தபோது ஒரு பரவசம் எழுந்தது.ஆளில்லாத பேருந்தில் நனைந்து குளிர்ந்த இருக்கையில் அமர்ந்தேன். இனிய குளிர்மழைச்சாரல் நிறைந்த இரவு. பேருந்தின் ஓசையை மீறிக்கொண்டு இருபக்கமும் இருந்த வயல்வெளிகளிலிருந்து தவளைக்குரல் கேட்டுக்கொண்டிருந்தது. பேருந்தின் முகவெளிச்சத்தில் ஈர இலைகள் மின்ன மரங்கள் கடந்து சென்றன. கூரைச் சரிவுகளில் செவ்வொளி விரிந்து பரவிச் சென்றது. சில வீடுகளில் இருந்து தொலைக்காட்சி வெளிச்சம் சாளரங்கள் வழியாக அலையடித்தது. ‘ஆற்றுவஞ்சி கடவில் வச்சு அந்நு நின்னே கண்டப்போள்’ என பழைய மலையாளப்பாட்டின் கீற்று காதைத்தொட்டுச்சென்றது.

இனிய படபடப்பொன்றால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். எங்கு செல்கிறேன் என்ற எண்ணம் அடிக்கடி எழுந்தது. அந்தச் சொல் என் உள்ளத்தில் விழுந்ததற்கும் நான் அங்கு செல்வதற்கும் ஏதேனும் மர்மமான காரணமிருக்குமோ? அங்கு என்னை விசித்திரமான அனுபவம் ஏதேனும் காத்திருக்குமோ? அப்படி எண்ணியதுமே அங்கு என்னை மரணம்தான் காத்திருக்கிறது என்று தோன்றிவிட்டது. ஆம், அதுதான் விதையாக என்னில் வந்து விழுந்து முளைத்திருக்கிறது. ஒரு தூண்டில் கொக்கி அது. இருளில் இருந்து மெதுவாக அதை இழுக்கிறார்கள் எவரோ.

அந்த எண்ணம் மேலும் படபடப்பை அளித்தது. எக்கணமும் பாய்ந்து இறங்கிவிடுவேன் என்று என்னை நினைத்துக் கொண்டேன். ஒவ்வொரு முறை நடத்துநர் சீழ்க்கை கொடுக்கும்போதும் இதோ இறங்கப்போகிறேன் என்று எண்ணி உள்ளத்தால் எழுந்து உடலால் அசையாமல் அமர்ந்திருந்தேன்.

ஏற்றுமானூர் ஆலயத்தருகிலேயே பேருந்தில் இருந்து இறங்கினேன். ஆலயம் அங்கிருந்து பார்த்தால் தெரியாது. மைதானம் போன்ற ஆலயமுற்றத்தின் வழியாகக் கடந்து சென்ற பாதை சில படிகளாக இறங்கி கோவிலை அது சென்றந்தது. இறங்கியபோது மணி பதினொன்றுக்கு மேல் என்று உணர்ந்தேன். நான் நினைத்திருந்தது போல அவ்வூர் ஒரு நடுத்தர நகரம் கூட அல்ல, சிற்றுர்.

மழைத்துருவல் பெய்திறங்கிக் கொண்டிருந்தது. வழிவிளக்குகளின் மஞ்சள் ஒளிவட்டத்திற்குள் நீரின் பொற்சரிகையைப் பார்த்தேன். நான் சென்றிறங்குவதற்கு சற்று முன்பு மிகப்பெரிய மழை பெய்து ஓய்ந்திருக்க வேண்டும். சாலையின் இருபக்கமும் ஓடைகளில் செந்நிற நீர் குதித்தும் சுழித்தும் சென்றுகொண்டிருந்தது. சேற்றில் என் செருப்புத் தடம் பதிய நடந்தேன். அந்நேரத்தில் ஆலயம் திறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆலயத்தை சுற்றியிருந்த மாபெரும் மைதானம் விளக்கொளிகள் சேற்றுப்பரப்பில் பிரதிபலிக்க ஆளில்லாமல் அசைவில்லாமல் திறந்து கிடந்தது. அதனூடாக நடந்து ஆலய முகப்பு வரை சென்றேன்.

மிகப்பெரிய கோட்டை மதில் சூழ்ந்த ஆலயம். கேரள பாணியிலான மூன்றடுக்கு மரக்கோபுரம் கொண்ட முகப்பு. என் மணத்தை அறிந்து அப்பகுதியில் எங்கிருந்தோ யானை ஒன்று மெல்ல குரல் கொடுத்தது. தனியாய் மழையில் நனைந்தபடி நின்றுகொண்டிருந்தேன். படபடப்பு விலகி இருத்தலின் பெரும்பரவசம் என்னை ஆட்கொண்டது. கைகளை மார்பில் கட்டி குளிருக்கு இறுக்கிக் கொண்டேன். மழைத்துளிகள் சொட்டிக் கொண்டிருந்த சரிந்த கூரை கொண்ட மரக்கோபுரத்தை பார்த்தபடி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்றேன். தனிமையின் தித்திப்பு கணங்கள். பின்பு தன்னை உணர்ந்து திரும்பி சாலைக்கு வந்தேன்.

அன்றிரவு தங்க விடுதி ஒன்றைத் தேடிக் கண்டடைய வேண்டும் என்று தோன்றியது. விடுதி என்று தெளிவாகத் தெரியும்படியான கட்டிடங்களே குறைவாகத்தான் இருந்தன. ‘லாட்ஜ்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் கொண்ட ஒரு பழைய ஓட்டுக்கட்டிடத்தின் முன் நின்றேன். அது ஒரு வீடு போலத்தான் இருந்தது. கதவைத் தட்டி அழைத்தபோது முதியவர் ஒருவர் வந்து திறந்தார்.

”என்னவேண்டும்?” என்றார் கண்களைச் சுருக்கியபடி. “அறை” என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தபடி “அறை காலி இல்லை” என்றார். “நான் வெளியூரிலிருந்து வருகிறேன். இந்நேரத்தில் இடம்தேடி அலையமுடியாது” என்றேன். “அறைகாலி இல்லை” என்று மீண்டும் சொல்லிவிட்டு கதவை மூடப்போனார். ஏமாற்றத்துடன் நான் படியிறங்கித் திரும்பும்போது “ஒரு அறை இருக்கிறது” என்றார்.

அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப்புரியவில்லை. கூரிய மூக்கும் ஒட்டிய கன்னங்களும் சற்றே கூன் விழுந்த உடலும் கொண்ட பெரியவர். நள்ளிரவில்கூட நெற்றியில் சந்தனம் தெரிந்தது. “அதுபோதும்” என்று நான் அவரிடம் சொன்னேன். “சிறிய கட்டில்தான். வசதியான அறை அல்ல. நான் படுக்கும் இடம் அது. நீங்கள் அங்கே படுத்துக் கொள்ளலாம்” என்றார். “பரவாயில்லை” என்றேன். “உள்ளே வாருங்கள்” என்று சொல்லி அழைத்தார்.

உள்ளே சென்றதும் என்னிடம் “பெட்டி ஏதும் இல்லையா?” என்றார். நான் வெறுங்கையுடன் இருப்பதை பலமுறை முன்னரே கவனித்திருந்தார். “இல்லை” என்றேன். அவர் என்னை ஒருமுறை கண்கள் சுருங்கப் பார்த்துவிட்டு ”சரி” என்று தலையாட்டினார். உள்ளே சென்று ஒரு பழைய வேட்டியும் துண்டும் கொண்டு வந்து தந்தார். அதை அணிந்துகொண்டு ஈர உடைகளைக் களைந்தேன். தலை துவட்டிக் கொண்டேன்.

“சாப்பிட்டீர்களா?” என்றார். “இல்லை” என்றேன். “நீர் விட்ட சோறு இருக்கிறது. என் சமையல். சாப்பிடுகிறீர்களா?” என்றார். “சரி” என்று தலையசைத்தேன். ஒரு பாத்திரத்தில் நீர்விட்ட சோறும் ஊறுகாயும் கொண்டு வந்து தந்தார். அதைச் சாப்பிட்டு முடிப்பதற்குள் குடிக்க சீரகம் போட்டு காய்ச்சிய வெந்நீர் வந்தது. அந்தக் குளிருக்கு வெந்நீர் இதமாக என் உடலை நிரப்பிக் குருதியை சூடுபடுத்தியது.

அவர் அளித்த அறை மிகச்சிறியது. ஒரு கட்டில் போட்டபிறகு ஒருவர் நின்று கை உயர்த்தத்தான் இடம். கட்டிலில் மடித்து வைத்திருந்த போர்வையை உதறி விட்டு படுத்தேன். அவர் அருகே வந்து அங்கிருந்த சிறிய முக்காலியில் அமர்ந்தார். “எந்த ஊர்?” என்று என்னைக் கேட்டார். நான் “நாகர்கோவில்” என்றேன். “ எனக்குத் திருவனந்தபுரம் பக்கம் காட்டாக்கடை” என்றார். தன் பெயர் சதானந்தன் என்றார். சிரித்தபடி ”சதா ஆனந்தமாக இருக்கவேண்டும் ஆனால் சிறுவயதில் அப்படி இருக்கவில்லை” என்றார்

தந்தை சிறுவயதிலேயே இறந்து போய்விட சித்தியின் வளர்ப்பில் பலவகையான கொடுமைகளைச் சந்தித்து இளமைப்பருவத்தைக் கழித்ததையும், படிக்க ஏங்கி அதற்கான வாய்ப்பு இல்லாமல் துன்புற்றதையும், ஒன்பது வயதில் வீட்டை விட்டு ஓடிவந்து ஏற்றுமானூரிலேயே ஒரு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்ததையும், ஒவ்வொரு நாளும் அடியும் வசைகளும் பெற்று மூன்று வேளை உணவை மட்டுமே ஊதியமாக பெற்றுக் கொண்டு அங்கே பணியாற்றியதையும் பற்றி சதானந்தன் சொன்னார்.

”ஆனால் நான் மனந்தளரவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆகவே ஏற்றுமானூரப்பன் எனக்கு உதவுவார் என்று நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு சிறிய டீக்கடையை ஆரம்பித்தேன். அது வளர்ந்தது. இந்தக் கட்டிடத்தை வாங்கி விடுதியை ஆரம்பித்தேன். திருமணம் செய்து கொண்டேன். நான்கு பிள்ளைகள் நான்குபேருமே எர்ணாகுளத்திலும் திருவனந்தபுரத்திலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.”

“எனக்கு ஒரு குறையும் இல்லை” என சதானந்தன் தொடர்ந்தார் “மனைவி மகன்களுடன் இருக்கிறாள். இந்த விடுதி என் பொறுப்பில் இருக்கிறது. இதை விற்றுவிட்டு வரும்படி என்னைச் சொல்கிறார்கள். ஆனால் ஏற்றுமானூரப்பனின் பிரசாதம் இது. நான் உயிரோடிருக்கும் வரை இங்குதான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். ஆகவே தான் இங்கிருக்கிறேன். காலையிலும் மாலையிலும் ஏழரப்பொன் ஆனைமேல் ஏறியவனை வணங்குகிறேன். மனம்நிறைவாக இருக்கிறது” என்றார்.

தன் வாழ்க்கை பற்றி அவர் விரிவாக சொல்லி முடிக்கும்போது மணி இரண்டு தாண்டியிருந்தது. அதன் பிறகு கேரள அரசியலுக்குள் புகுந்தார். இடதுசாரிகளை விமர்சனம் செய்தார். நான் இடதுசாரிகளை ஆதரித்துப் பேசியபோது என் கருத்தை அவர் ஒத்துக் கொண்டார். அங்கிருந்து திரையுலகம் சென்றது. எம்.டி.வாசுதேவன் நாயரை விட பி.பாஸ்கரன் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றார். நான் அதை மறுத்தேன். அதையும் விவாதத்திற்குப்பின் ஏற்றுக்கொண்டார். அது அவர் இயல்பு என தோன்றியது

ஐந்து மணிக்கு அவர் சமையலறைக்குச் சென்று எனக்குக் கறுப்பு டீ போட்டுக் கொண்டு வந்து தந்தார். அதைக் குடித்துவிட்டு மேலும் பேசிக் கொண்டிருந்தோம். சன்னல் வழியாக வெளி ஒளிகொள்ளத்தொடங்கியதும் என்னிடம் ”நீங்கள் குளித்துவிட்டு ஏற்றுமானூரப்பனைத் தரிசனம் செய்யலாம். பொழுது விடிந்துவிட்டது” என்றார். நான் புன்னகையுடன் எழுந்து கொண்டேன். எழுந்தேன். “வெந்நீர் போட்டுத் தருகிறேன்” என்றார். அறைகளில் தங்கியிருந்த ஒரு பெரிய குடும்பம் துயிலெழுந்து ஓசையெழுப்பத்தொடங்கியது.

அவர் செம்புக்கலத்தில் கொண்டு விட்ட வெந்நீரின் புகைமணம் இருந்தது. தென்னை ஓலைச் சருகை எரிய வைத்து காய்ச்சியது. குளித்து காய்ந்த ஆடைகளை அணிந்து அவரிடம் விடை பெற்று நான் ஆலயம் சென்ற போது ஏற்றுமானூரப்பனை தொழுவதற்கு ஐம்பது பேர்வரை கூடியிருந்தார்கள்.முன்னரே நடைதிறந்திருந்ததது. நிர்மால்யபூசை முடிந்து முழுஅலங்காரங்களுடன் கருவறையில் லிங்கம் அமர்ந்திருந்தது.

உளம்நிறையும் இறை தரிசனங்களில் ஒன்று அது. நன்றாக வெயில் எழுவது வரை பெரிய ஆலயத்தை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தேன். மழைகழுவிய கருங்கல் பரப்புகள் மெழுகுபோலிருந்தன. சுவர்களில் எல்லாம் பச்சைநிறப் பூனைமயிர் போல புல்பாசி படிந்திருந்தது. இளங்காற்றில் மழைநினைவு எஞ்சியிருந்தது.

திரும்பி வரும்போதே காலையுணவு உண்டேன். விடுதிக்கு வந்து சதானந்தனிடம் விடைபெற்றேன். “எங்கு செல்கிறீர்கள்?” என்றார். “மீண்டும் எர்ணாகுளம் செல்கிறேன். அங்கு விடுதியில் எனது பெட்டி இருக்கிறது” என்று சாவியைக் காட்டினேன். புன்னகையுடன் என் கைகளைப் பற்றிக் கொண்டு “உங்களை நான் தூங்கவிடவில்லை. மன்னிக்கவேண்டும்” என்றார். “பரவாயில்லை உங்களிடம் பேசமுடிந்தது” என்றேன்.

“நீங்கள் தற்கொலைக்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன். கையில் பையில்லாமல் நனைந்தபடி வந்ததனால் அப்படித்தோன்றியது. ஆகவே தான் இங்கே இடம் கொடுத்தேன். தனியாக விடக்கூடாது என்பதனால்தான் விடியும் வரை உங்களுடன் இருந்தேன்” என்றார்.

நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். அவர் கைகளைப்பற்றிக் கொண்டு “சரி,எப்போதாவது தற்கொலை எண்ணம் தோன்றினால் இங்கு வந்துவிடுகிறேன்” என்றேன். அவரும் உரக்க நகைத்து “ஏழரப்பொன் ஆன மேல் ஏறிய அரசன் ஒருவன் ஆளும் மண் இது. அவன் செங்கோல் துணையிருக்கும்” என்றார்.

 

[குங்குமம் முகங்களின் தேசம் தொடர்]

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2

$
0
0

[ 3 ]

பிச்சாண்டவருடன் நடப்பது எளிதல்ல என்று வைசம்பாயனன் கண்டுகொண்டான். மலைப்பாதைகளின் சுழலேற்ற வழியில் அவர் பருந்தென ஏறிச்சென்றார். பாறைகளில் விட்டில்போல தாவித்தாவி அமர்ந்தார். அவர் இளைப்படைவதை பார்க்கமுடியவில்லை. அவனுக்காகவே அவர் அவ்வப்போது நின்றார். அவன் மூச்சிரைக்க அவரை அணுகி நின்றபோது அவர் இயல்பாக தொலைவை நோக்கியபடி சிலைத்துக் காத்திருந்தார். அவர் உடலில் மூச்சோடுவதே தெரியவில்லை.

அன்று முழுக்க அவன் அவருடன் பயணம்செய்தும் ஒரு சொல்லேனும் அவரிடமிருந்து எழவில்லை. அவருடைய முப்புரிவேலின் எலும்புமணிகளின் ஓசை அவர் குரலென ஒலித்து அவனை அழைத்துச்சென்றது. நீரோடையில் அவர் கையள்ளிக் குடிக்கும்போது பக்கவாட்டில் அவரது முகத்தை நோக்கினான். சடைத்திரிகளாகத் தொங்கிய தாடியில் ஒட்டாமல் உருண்ட நீர்மணிகளை தலையை உதறி தெறிக்கவைத்தபோது காட்டுவிலங்கு போலிருந்தார். விலங்கு என்பதை அவன் கற்ற குருநிலைகளில் தன்னை அறியாதது, எனவே பிரம்மம் என்பதை உணரவியலாதது என்றே சொல்லியிருந்தனர். புலன்களில் விடுதலையின்றி விலங்கிடப்பட்டது. முற்றிருளே அதன் முதற்குணம்.

ஆனால் அவரைப்பார்த்தபின் எதிரே வரும் விலங்குகளை நோக்கியபோது அவை முழுவிடுதலைகொண்டவை என்று தோன்றியது. காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மென்பஞ்சுத்துகள்கள் போலிருந்தன அவை. தானென்று உணரும் ஒன்றை அவை சுமந்தலையவில்லை. எனவே திசைதேடித் தவிக்கவில்லை. தானற்ற ஒன்றை கணம்தோறும் உணர்ந்து திகைத்து நெஞ்சழியவில்லை. விலங்கென்று ஆவதே விடுதலை போலும். கற்றுக்கற்று சென்றடையும் இடம் அதுவே என்றால் சொல்லென அமைந்து சுழற்றிக்கொண்டுசெல்லும் இம்மாயப்பெருக்கின் நோக்கம்தான் என்ன?

அச்சொல்லின்மையே இயல்பென்று தோன்றியது.  சொல்லெடுக்கத் தொடங்கினால் விலங்கு உருகி பிறிதுருக்கொண்டு மானுடனாகிறது. மானுடன் அவனுக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. அவன் கற்றவற்றுக்கும் தேர்ந்தவற்றுக்கும் அப்பால் சொல் என ஏதுமில்லை. அவன் அறியவேண்டியது சொற்களைத் திறக்கும் முறை. சொல்லின்மையில் இருந்து சொல்லெழும் வகை.

அவரது காலடிகளை அவன் புழுதியில் நோக்கிக்கொண்டு தொடர்ந்தான். அவை மண்ணில் சீராகப் பதிந்திருந்தன. ஓவியன் இட்ட தடங்கள் போல. அதன்பின் தன் கால்தடத்தை நோக்கினான். அவற்றில் வலக்கால் அழுத்தம் மிகுந்திருந்தது. சற்றே பக்கவாட்டில் விலகியிருந்தது இடக்கால். அத்தனை மானுடரும் அப்படித்தான் நடக்கிறார்கள் என அப்போது உணர்ந்தான். உடலின் எடைக்கும் நிலைக்கும் ஏற்ப கால்களை விலக்கியமைத்து நடப்பது மானுட இயல்பு. அவன் காலடிகளில் அவன் உள்ளம் தெரிந்தது. மேலே மேலே எனத்தாவி எழும் முதற்கால். அதற்கு நிலையமைத்து அளித்துத் தொடரும் இடக்கால். மானுடர் அனைவரும் காலடிகளால் மண்ணில் தங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

தன் காலடிகளில் பதிந்திருந்த உளவிசையைக் கண்டதுமே அதனுடன் இணைந்த தயக்கத்தையும் கண்டுவிட்டான். அவரது காலடிச்சுவடுத் தொடரை அணுகியும் விலகியும் அது உடன் சென்றது. முற்றிலும் நிகரான இரு தடங்கள் முற்றிலும் இணையாகப்பதிந்து முன் சென்றன. நிகர்நிலை கொண்ட உடல். தலையில் நெய்க்குடம் தளும்பாது செல்லும் ஆய்ச்சியின் இயல்பான சீரசைவுகள். அப்போது அவன் அந்தப்புலியை பார்த்தான். அவர்களின் காலடியோசையைக் கேட்டு அது காற்றுபட்ட தழலென சற்றே வளைந்து எழுந்தது. வாய்திறந்து வெண்கோட்டுப் பற்கள் தெரிய ஓசையின்றி சீறியது. சுண்ணக்கூழாங்கற்கள் போன்ற விழிகள் நோக்கற்ற வெறிப்புகாட்ட சுருட்டுப்புழு என சுருண்டு பின்னால் எழுந்து முன்னங்காலை சற்று தூக்கி ஆட்டியது.

அவன் நின்று அதை நோக்க அவர் இயல்பாக கடந்துசென்றார். அது ஓசையில்லாது தாவி நீண்டு சரிந்திருந்த மூங்கில்கழை ஒன்றில் ஏறி அதன்மேல் தூக்கி வளைந்த வாலுடன் நடந்துசென்றது. ஒவ்வொரு காலடியும் ஒற்றைக்கோட்டில் ஒற்றி ஒற்றி விழ அதற்கேற்ப இடைநெளிந்தசைய அது மூங்கில்நுனிக்குச் சென்று வால்சுழல மறுபக்கம் புதருக்குள் பாய்ந்து மூழ்கி மறைந்தது. அதன் விழிப்பாவை எஞ்சியிருக்கையிலேயே அது அங்கிருந்ததா என வியந்தது நெஞ்சம்.

KIRATHAM_EPI_02

அவர் முன்னால் சென்றுவிட்டிருப்பதைக் கண்டான். பாய்ந்து அவரைத் தொடர்ந்தோடி அணுகினான். அவர் அவன் நின்றதையும் வந்ததையும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. எந்நிலையில் எங்குள்ளது அவர் உள்ளம் என்பதை அவரைத் தொடர்கையில் அறியக்கூடவில்லை. அவர் தன்னை எங்கு அழைத்துச்செல்கிறார் என்பதை அவன் அவ்வப்போது எண்ணிக்கொண்டான். ஆனால் அவர் அதை அறிவார் என்பதை உள்ளம் நன்குணர்ந்திருந்தது.

அன்றுமாலை வரை அவர்கள் நடந்தனர். வெயில் மயங்கத்தொடங்கியபோது அவர்கள் ஒரு சிறுகுன்றின் சரிவை அடைந்திருந்தனர். அதன் மேல் இரு பெரும் விரல்களால் எடுத்து வைக்கப்பட்ட கழற்சிக்காய் என ஒற்றைக்கரும்பாறை அமைந்திருந்தது. அவர் குன்றில் ஏறத்தொடங்கியதும் அவனும் தொடர்ந்தான். அப்பாறையை ஒட்டி நின்றிருந்த ஆலமரத்தின் பொருத்துக்களில் கால்வைத்து ஏறி அவர் மேலே சென்றார். அவன் மேலேறமுடியாமல் மரக்கிளைநுனியில் தவித்தபோது அவனைத் திரும்பிப்பார்க்கவில்லை.

கைகளை விட்டுவிட்டு அவன் மழுங்கலான பாறைப்பரப்பை நோக்கி ஓணானைப்போல குதித்தான். மார்புக்கூடு அறைபட விழுந்து சறுக்கியிறங்குவதை அவர் நோக்கிக்கொண்டு நின்றார். அவன் கைவிரல்களாலும் கால்விரல்களாலும் கவ்விக்கொண்டு தொற்றிநின்றான். ஒரு விரிசலில் வலக்கால்கட்டைவிரல் பொருந்தியதும் விழுந்துவிடமாட்டோம் என உள்ளே உலைந்த தன்னிலை உணர்ந்தது. நிலைப்படுத்திக்கொண்டபின் உடலை மேலே தூக்கி தவழ்ந்து ஏறினான்.

எழுந்து நின்றபோது மார்பும் வயிறும் சிராய்த்து அனல்பட்டதுபோல் எரிந்தன. அவர் பாறைமேல் நின்று மேற்கே விழத்தொடங்கியிருந்த சூரியனை நோக்கினார். அவன் அவர் அருகே நின்று செங்கதிர் பழுத்துக்கொண்டிருப்பதை பார்த்தான். கீழே காட்டில் குரங்குகள் எக்காளமிட்டன. போர்க்களமொன்றிலிருந்து எழும் அம்புகள் போல பறவைகள் பீரிட்டெழுந்து சுழன்றிறங்கின. காடு மெல்ல இருண்டு அடங்கியது. பறவைக்குரல்களால் ஆனதாக மாறியது. எரியும் காட்டிலிருந்து சருகுக்கரிகள் போல பறந்து அமைந்தன சிறுகருங்குருவிகள்.

இறுதிப்பறவை எழுந்து விழுந்ததும் சூரியவட்டம் முற்றணைந்தது. எஞ்சிய ஒளியில் பிச்சாண்டவர் ஊன்றிய சூலமும் கையில் கப்பரையுமாக நிழலுருவெனத் தெரிந்தார். பாறைப்பரப்பில் அமர்ந்து அவனிடம் செய்கையால் ஆடைகளைக் கழற்றும்படி சொன்னார். அவன் தன் மேலாடையையும் இடையிலணிந்திருந்த பருத்தியாடையையும் கழற்றி அவரிடம் அளித்தான். அவர் அவன் அணிகலன்களை விழிசுட்ட கழுத்திலணிந்த ஒற்றைமணி மாலையையும் கையிலிருந்த சிற்றாழியையும் காதிலிருந்த ஒற்றைமலர் கடுக்கன்களையும் கழற்றி துணிக்குமேல் போட்டான்.

முழுவெற்றுடலுடன் அவர் முன் நின்றபோது முன்னரே அவ்வாறுதான் நின்றிருந்தான் என்றே உணர்ந்தான். அவர் அருகே ஓடிய கருகிய மாணைக்கொடியை இழுத்துப்பறித்து சுருட்டி துணிகளுடன் வைத்தார். இருகற்களை உரசி பொறி எழுப்பி அதை பற்றவைத்தார். தயங்கி எழுந்த தழல் துணியை பொசுங்கவைத்து ஊறிப்பரவி நாவெழுந்தது. அதன் அழலாட்டம் எழுந்ததும் அவர் அவனிடம் “அமர்க!” என்றார். அவர் குரலையே அவன் மறந்துவிட்டிருந்தான் என அப்போது உணர்ந்தான்.

அவன் கால்கோட்டி அமர்ந்ததும் உரத்த குரலில் “ஓம்!” என்றார். அவன் எதிர்முரளல் என அதை மீட்டொலித்தான். “ஓம்! ஓம்! ஓம்!” என அவர் முழங்கிகொண்டிருந்தார். அவ்வொலி எழுந்து கார்வைகொண்டு சூழ்ந்தது. இயல்பாகத் திரிபுகொண்டு “சிவம்!” என்று ஆயிற்று. “சிவமேயாம்!” என்று முற்றியது. “ஆம்! ஆம்! ஆம்!” என ஆகி அமைந்தது. அவனைச்சூழ்ந்திருந்த இருளில் அந்த ஒலியின் கார்வை நிறைந்திருந்தது.

அவர் அவனருகே கிடந்த ஒரு தட்டைக் கல்லைச் சுட்டி அதை எடுத்து தன் முன்னால் வைக்கும்படி செய்கையால் சொன்னார். அவன் அதை எடுத்து வைத்ததும் பிறிதொரு உருளைக்கல்லைச் சுட்டி அதை எடுத்துவைக்கும்படி விழிகளால் ஆணையிட்டார். அவன் கல்மேல் கல்வைத்து சிவத்தை நிறுவினான். எரிந்த அனல் முற்றவிந்துவிட்டிருந்தது. அவர் அதில் ஒரு சிட்டிகை அள்ளி சிவக்குறிமேல் பூசினார். எஞ்சியதை அவன் நெற்றியிலிட்டு “சிவமாகுக!” என்றார். அவன் கைகூப்பி “ஓம்” என்றான். அவர் தன் முப்புரிவேலை அவன் தலைமேல் வைத்து “சிவமேயாம்” என்றார். அவன் கண்களை மூடி அச்சொல்லை தன்னுள் நிறைத்துக்கொண்டான்.

[ 4 ]

அன்று கருநிலவு. கதுப்புகொண்ட இருளில் பிச்சாண்டவரின் அருகே வைசம்பாயனன் அமர்ந்திருந்தான். அவர்களின் தலைக்குமேல் ஒவ்வொன்றாக விண்மீன்கள் எழுந்து வந்து செறிந்துகொண்டிருந்தன. சற்றுநேரத்தில் கீழே இருந்த காட்டின் கிளைவளைவுகளைக்கூட பார்க்கும்வகையில் விழிகள் ஒளியடைந்தன. காட்டிலிருந்து இலைவெம்மையும் தழைமணமும் கொண்ட காற்றும் ஒலிகள் இணைந்து உருவான மீட்டலும் எழுந்து வந்துகொண்டிருந்தன.

“அங்கு தெரியும் அந்த விண்மீன்களை வேதச் சொற்கள் என்க! இங்கு வந்துகொண்டிருக்கும் அந்த ஓசையை வேதம் எனக்கொள்க! வானை அவை அறிவுறுத்துகின்றன. காட்டை அவை கொண்டுவந்து அளிக்கின்றன. அக்குறிகளை தொட்டுத்தேர்ந்து வழியமைப்பவன் வானை அறிகிறான். காட்டை அடைந்து அமைகிறான்” என்றார் பிச்சாண்டவர். “வேதமென்பது ஓர் அழைப்பு. பிறிதொன்றுமில்லை. ஓர் அறைகூவல். பிறிதொன்றுமில்லை. ஒரு கனவு. ஒரு தொடுகை. ஒரு முன்நினைவெழல். பிறிதொன்றுமில்லை.”

“இன்று இங்கிருக்கும் எளிய மாந்தர் முன்பு எங்கோ முழுநிலைகொண்டிருக்கக்கூடும் என்பர் முன்னோர். அங்கு அவர்கள் இழந்து இங்கு போந்ததையே வந்து நினைவூட்டுகிறதுபோலும் வேதம். வேதச்சொல் கேட்டவர் எங்குமுள்ளனர். எக்குடிக்கும் எவ்வுயிர்க்கும் வேதம் மறுக்கப்பட்டதில்லை. மெய்வேதமென்பது ஒன்றில்லை. வேதமெய்மை என்பதே உள்ளது. மெய்யுணர்ந்தோர் இங்குள சொல்லெல்லாம் வேதம் முளைத்த காடென்றுணர்வர். எச்சொல்லில் இருந்தும் அங்குள உண்மையையே சென்றடைவர். வேதப்பூசலிடுபவர் அறிய ஒண்ணாத மெய்மையால் கோக்கப்பட்டுள்ளது வேதம். வேதமறியாதவரிடம் இரையிடம் புலி என விளையாடுகிறது வேதம்.”

“சருகினை எரியென தழுவிக்கொள்வதே வேதம் என்றுணர்க!. எஞ்சுவதே நீறு. நீறாவது சிவம்” என்றார் பிச்சாண்டவர். “முன்பு பனிமலையுச்சியில் எங்கோ, படர்ந்த காட்டின் ஆழத்தில் எங்கோ எவரோ உணர்ந்த வேதச்சொல் ஒன்று அரக்குமரக்காட்டில் அனலென விழுந்தது. அம்முதற்சொல் சிவம். அதிலிருந்து முளைத்தன சைவப்பெருநெறிகள் பல. உண்மை ஒன்றே, உணர்வோர் கொள்வதே வேறுபடுகிறது. அன்னம் ஒன்றுதான், வயிற்றுக்கும் சுவைக்குமென அது சமைக்கப்படுகிறது.”

அம்முதற்சொல்லைப் பெற்றவன் எவன் என்று சிந்தைநீட்டி தேடிச் செல்வது எவராலும் இயலாது. அவன் முற்றிலும் தனித்தவனாக இருந்திருக்கவேண்டும். முழுமையாக தன்னை திறந்திருக்கவேண்டும். எரிவிண்மீன் இறங்கிய குளமென அவன் அகம் கொந்தளித்திருக்கவேண்டும். அடைந்தபின் அவன் இங்கு எஞ்சிய தருணத்தில் அச்சொல்லை நாச்செவி வடிவுக்கு நமக்கு அளித்திருக்கவேண்டும். சிவம்! முற்றிலும் பொருளற்ற ஒலி. அவ்வொலிக்கு நாம் அளிக்கும் அத்தனை பொருள்களும் அது எழுந்தபின் சென்றணைந்தவையே. தூயது, அருள்வது, எஞ்சுவது, தொடர்வது, துணைப்பது, சிவந்தது, எரிவது, சினப்பது, வெல்வது, விளைவது, வினையாவது, ஆவது, அழிப்பது. அவ்வண்ணம் சொல்லிச்சென்றால் எஞ்சிய அத்தனை சொற்களும் அவ்வொரு சொல்லின் பொருளென்றே ஆகும்.

இன்றுள சிவநெறிகள் எவையெல்லாம் என ஒருவன் இந்நிலம் முழுக்க அலைந்தாலும் முற்றறிந்துவிடமுடியாது. அச்சொல் இங்குள அனைத்தையும் எரித்து தடம் பதித்தபடி சென்றபின் பல்லாயிரம் தலைமுறைகள் பிறந்திறந்துவிட்டன. மொழி பல்லாயிரம் முறை அலையிளகி அமைந்துவிட்டது. நூறாயிரம் தெய்வங்கள் உருசூடியிருக்கும், உடைகளைந்திருக்கும். இங்கே வடதிசையில் நாமறிந்தவை ஆறு பெருநெறிகள். பாசுபதம், காபாலிகம், காளாமுகம், வாமம், மாவிரதம், பைரவம். பிற ஐந்தும் முதலொன்று பிரிந்து உருவானவை என்பார்கள். இருநிலை என்றும் ஒருநிலை என்றும் மேலும் அவை பிரிந்து விரிந்து சென்றுகொண்டிருக்கின்றன.

காலப்பேருருவன் என அச்சொல்லை விரித்தவர் பைரவர். தன்னை ஒறுத்து எஞ்சுவதே அது எனக் கொண்டவர் மாவிரதர். இங்குள அனைத்தும் அன்றி பிறிதே அது என உணர்ந்தவர் வாமர். இருளுருவெனக் கண்டவர் காளாமுகர். இறப்புருவென எண்ணுபவர் காபாலிகர். இப்பசுவை ஆளும் பதி என முன்னுணர்ந்தவர் பாசுபதர். அறுவகை அறிதலாக நின்றுள்ளது அது. அறிதற்கரியது அவ்வண்ணம் இங்கு ஆனது. அறிந்து உணர்ந்து கடந்து ஆகி அதை அடைந்தவர் தூயர். அவர்களின் சொல்விழுந்த காற்றில் கால்விழுந்த மண்ணில் நாம் நடந்துகொண்டிருக்கிறோம்.

விண்மீன்கள் நீண்ட இருள்சரடுகளில் சிலந்திகள்போல தொற்றிச் சறுக்கி இறங்கி அருகே வந்து அவர்களைச் சூழ்ந்து நின்றன. கைநீட்டி அவற்றைத் தொட்டு ஆட்டிவிடமுடியும் என்று தோன்றியது. ஊதினால் அவை அசையும் என்று. மெல்ல மின்னி மின்னி அவை உரையாட முயல்கின்றன என்று. பிச்சாண்டவர் தாழ்ந்த தனிக்குரலில் சொன்னார் “முன்பொருநாளில் திரிகர்த்தநாட்டில் ஏகவீரன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். தன் கோல்கொள்ளும் மைந்தனுக்காக ஏழாண்டுகாலம் அவனும் தேவியும் தவம்செய்தனர். அவ்வேட்டல் விளைந்து பிறந்த மைந்தனை நெஞ்சோடணைத்து சத்ருஞ்சயன் என்று பெயரிட்டனர்.”

கட்டற்ற உளவல்லமையால் ஆனவனாக இருந்தான் சத்ருஞ்சயன். மூன்றுமலைப்பள்ளங்களால் ஆன அந்நிலத்தை இளமையிலேயே புரவியேறிப் பாய்ந்து கடந்தான். ஆறுநெறிகளையும் கற்றுக்கடந்தான். அறிவென்பது ஆணவமே என்று சூடியிருந்தான். அவனை அன்னையர் தொட்டு வழிபட்டனர். மூத்தவர் எண்ணி பெருமிதம் கொண்டனர். கன்னியர் காதல் கொண்டனர். இளையோர் வாழ்த்தி பின்தொடர்ந்தனர். ஆணவம் எளியோருக்குமேல் இறுதிவெற்றியை அளிக்கிறது. வெற்றி மேலும் ஆணவமாக ஆகிறது. ஊழ்வல்லமை இல்லாதவர் அந்த வலையில் இருந்து வெளிவருதல் இயலாது.

சத்ருஞ்சயனுக்கு அதற்கு அருளிருந்தது. ஒருமுறை அவன் மலைச்சாரலில் சென்றுகொண்டிருக்கையில் அங்கு பாறையடியில் உடலெங்கும் சாம்பல் பூசிய சடைமுனிவர் ஒருவர் சருகில் அனலிட்டு ஊன்சுட்டுக்கொண்டிருப்பதை கண்டான். புரவியிலிருந்து இறங்கி அது என்ன என்று பார்த்தான். சேற்றால் பொதியப்பட்ட எலி அது. உடல் உலுக்கி எழுந்த ஒவ்வாமையுடன் “இழிமகனே, என்ன செய்கிறாய் நீ? மானுடர் உண்ணுதற்குரியதா அது?” என்று கூவினான். பாய்ந்துசென்று காலால் அதை உதைத்து அப்பால் தள்ளியபின் நின்று மூச்சிரைத்தான்.

அவர் திரும்பி நோக்கி கரியபற்களைக் காட்டி புன்னகைசெய்து “அதை உண்பதற்கு முன் சிவத்தில் மும்முறை கழுவுவேன்” என்றார்.  அவன் குமட்டலில் உடல் அதிர முகம் சுளித்து “உண்ணற்குரிய உணவில்லை என்றால் இறப்பதே மேல்…” என்றான். “இங்குள்ள அனைத்தும் உண்ணற்குரியவையே. ஏனென்றால் உண்பதும் உணவே” என்றபடி எழுந்தார். தூயவெண் பற்களுடன் அவனை நோக்கிச்சிரித்து “ஊன் அனைத்தும் ஒன்றே மைந்தா”  என்றார். தன்னை அவர் சீண்டுவதாகவே அவன் எண்ணி உளம் கொதித்தான். அவர் முப்புரிவேலை எடுத்துக்கொண்டு “நீ செல்க! நான் இன்னொரு எலியை இங்கேயே பிடிக்கமுடியும்” என்றார்.

அவனுள் அக்கணம் என்ன நிகழ்ந்ததென்று அவன் அறியவில்லை. வாளை உருவி அவர் காதைச் சீவி நிலத்தில் இட்டான். சிப்பிபோல புழுதியில் விழுந்து கிடந்தது அது. குமட்டலைக் காறித்துப்பி, “ஊனெல்லாம் உணவே என்றால் இதைச் சுட்டு உண் கீழ்மகனே. இதுவும் ஊனே” என்றான். அவர் தோள்களில் குருதி சொட்டி வழிந்தது. குனிந்து அதை நோக்கி “ஆம், அதுவும் ஊனே” என்றார். அவனைநோக்கி புன்னகைத்து அதை எடுத்து எலியைச் சுட்டுக்கொண்டிருந்த குச்சியில் கொளுத்தி எரிநெருப்பில் காட்டலானார். அதன் மயிர்கள் பொசுங்குவதைக் கண்டதும் அவன் குமட்டி வாயுமிழ்ந்தான். நின்றிருக்கமுடியாமல் புரவியை பற்றிக்கொண்டான். கூசி நடுங்கிக்கொண்டிருக்கும் உடலுடன் திரும்பி ஓடினான்.

காட்டில் சற்றுத்தொலைவு சென்றபின் நின்று தன் தலையை கைகளால் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். பற்கள் கிட்டித்து கழுத்துத்தசைகள் இழுபட்டு இறுகியிருப்பதை உணர்ந்தான். கண்கள் எரிந்து கலங்கியிருந்தன. “விளையாடுகிறானா? விளையாடுகிறானா?” என்று தனக்குள் உறுமிக்கொண்டான். இல்லை என்னை ஏமாற்றுகிறான். அது மானுடரால் முடியாது. எந்த விலங்காலும் முடியாது. ஆனால் அவனுள் ஏதோ ஒன்று அறிந்திருந்தது. மீண்டும் புரவியில் ஏறி திரும்பி விரைந்தான். தொலைவிலேயே அவன் ஊன்மணத்தை அறிந்தான். ஒரே கணத்தில் உடலை இழுத்துக்கட்டிய நரம்புகள் அனைத்தும் தளர குதிரைமேல் சடலமென அமர்ந்திருந்தான்.

அகலவருகையிலேயே அவன் கண்டுவிட்டான். அவர் அந்தக்காதை சுட்டு இலையில் பரப்பி வேலால் வெட்டிக்கிழித்து வாயிலிட்டு மென்று உண்டுகொண்டிருந்தார். அவர் காதிருந்த புண் குருதி திரிந்து சலமாகி சொட்டிக்கொண்டிருந்தது. தன்னுடலுக்குள் பிறிதொன்று புரள்வதை உணர்ந்தான். பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் ஒலி மண்டைக்குள் ஒலித்தது. குதிரை அவர் அருகே சென்று நிற்க அவன் அதன்மேல் விழித்தபடி அமர்ந்திருந்தான். வாயிலிட்டு மென்ற ஊனுடன் அவர் “சிவமேயாம்!” என்றார்.

அவன் பரிமேலிருந்து உதிர்பவனைப்போல அவர் காலடியில் விழுந்தான். மண்புழு மண் துளைத்து உட்புக முயல்வதுபோல புழுதித்தரையில் தலையை அழுத்திப்புதைத்தபடி நெளிந்தான். பின்னர் நினைவிழந்தான். விழித்தபோது அவனை நோக்கியபடி குனிந்திருந்தார். அவர் விழிகள் குழந்தைகளுக்குரிய தெளிவுகொண்டிருந்தன. “சிவம்நாம்” என்று அவர் சொன்னார். அவன் விசும்பியழுதபடி கைநீட்டி அவர் கால்களை பற்றிக்கொண்டான். சிறியவன் நான் என்று அவன் சொல்ல விழைந்தான். அவர் மீண்டும் “சிவம்நாம்” என்றார்.

வெடிப்போசையுடன் அச்சொல் திறந்துகொண்டது. அவன் உடல் அதைத்தாளாமல் வலிப்பு கொண்டது. அவன் அதிர்ந்த விழிகளுக்கு மேல் காடு நீர்ப்பாவை என அலையடித்தது. தன் இதழ்களை அவன் இறுகக் கடித்திருந்தான். குருதி ஊறி வாயை நிறைத்தது. சூடானது. உப்புச்சுவை கொண்டது. குழவியென அறிந்த முலைப்பாலின் இன்மணம் கொண்டது. தன்னிலை மீண்டபோது அவன் அதை சுவைத்து உள்ளுறிஞ்சி உண்டான்.

அவர் அவன் தோளைப்பற்றி எழுந்து அமரச்செய்தார். அவர் கையில் அந்த ஊனின் எச்சம் அப்போதும் எஞ்சியிருந்தது. அதை அவனிடம் நீட்டி “உண்க!” என்றார். அவன் அதை வாங்கி தன் வாயிலிட்டு மென்று உண்டான். அவன் நன்கறிந்திருந்த சுவை. அவன் கனவுகளை நிறைத்திருந்த சுவை. அவர் அவன் நெற்றியில் தன் முப்புரிவேலால் தொட்டு “சிவம்யாம்” என்றார்.

“அவன் அங்கிருந்தே அவருடன் சென்றான். அவர் ஒடுங்கிய இடத்திலிருந்து மேலும் நடந்தான். அவன் திரும்ப இடமில்லை. செல்ல முடிவிலி இருந்தது” என்றார் பிச்சாண்டவர். “மூன்று பெரும்பள்ளங்களை அவன் கடந்தான். விலக்கம், ஐயம், அருவருப்பு என மூன்றுருக்கொண்டது அச்சமே. இளையோனே, அச்சமென்பது என்ன? மானுடன் முடிவிலியை அஞ்சுகிறான். முடிவிலிநோக்கி எழும் இறப்பை அஞ்சுகிறான். இறப்பென்றாகும் நோயை அஞ்சுகிறான். நோய்கொள்ளும் உடலை அஞ்சுகிறான். உடலென்றான தன்னை அஞ்சுகிறான். அச்சத்தை அளவையாக்கி அவன் இப்புவியை அறிகிறான். எனவே அவன் அறிவதெல்லாம் அச்சம் ஒன்றையே.”

“அச்சத்தை அறுத்தவனுக்கு அறிவு இனிதாகிறது. அகம் இனிதாகிறது. அனைத்தும் இனிதாகின்றன. இனிக்கின்றது எல்லையின்மை. இனிப்பிலிருந்து தொடங்குக! சுவையாகி வருக சிவம்!” பிச்சாண்டவர் சொன்னார் “இனியவனே, அன்னம் இனிது. அன்னத்த்தை உண்ணும் அன்னம் அறிவது அவ்வினிமை. அறிக, தன் குட்டியை மென்று உண்ணும் அன்னைஓநாயின் கண்கள் சொக்கும் சுவையை. தன் அன்னை உடலை உண்டு வளரும் குஞ்சுநண்டுகளின் கால்கள் கொள்ளும் துள்ளலை. தான் வாழும் இல்லத்தை உண்டு திளைக்கும் மலப்புழுக்களின் களியாடலை. சிவமாகுக அன்னம்!”

மீண்டும் இருளின் கறங்கொலி மட்டும் அவர்களைச் சூழ்ந்திருந்தது. வைசம்பாயனன் விண்மீன்களை நோக்கியபடி அமர்ந்திருந்தான். தன் உள்ளம் கொண்ட ஐயங்களை அவரிடம் கேட்கவேண்டுமென்று விழைந்தான். உரிய சொற்களைக் கோக்க முயன்று சலித்து அமைந்து நீள்மூச்சுவிட்டான். அந்த இயலாமையை நோக்கிக்கொண்டிருந்தபோது அது ஆணவமே என்று உணர்ந்தான். உரியசொற்கள் என்பவை என்ன? அவ்வுணர்வு வெளிப்படுமென்றால் அழுகையோ தேம்பலோ கூட அதற்குரியவை அல்லவா? சொல்லி அவரை வெல்ல முயல்கிறேன். அவர் முன் சொல்லத்தெரிந்தவன் என நின்றிருக்க விழைகிறேன்.

தன்னை இழுத்து அவர் முன் பணியவைத்தான். எந்தத் திட்டமும் இல்லாமல் நாகொண்ட சொற்களை அவ்வண்ணமே சொல்லலானான். “ஆசிரியரே, நான் கற்றவற்றில் இழந்தது என்ன? ஒவ்வொன்றையும் பிறிதொன்றை இழந்தே பெறுகிறோம் என்றால் கல்வி என்பது தொடரிழப்பும் அல்லவா? வேதம்நிறைந்த தொல்காடுகள் அனைத்திலும் இருந்து ஒவ்வொரு நாளும் உதிர்ந்துகொண்டிருப்பது என்ன? வேதச்சொல் சூடி, வேதமெய்ப்பொருள் உசாவி அங்கு தவமொன்றே வாழ்வெனக் கொண்டு இருந்து மறைந்த என் முன்னோர் தோற்ற இடமென்பது என்ன?”

அச்சொற்கள் எழுந்ததுமே அவையே உகந்தவை என அவன் உணர்ந்தான். அக்கணம் வரை அவன் அவற்றை உணர்ந்ததில்லை. ஆனால் எங்கோ அடிப்பாறைவெடிப்புக்குள் ஊறிய நீர் என அவை இருந்திருக்கின்றன. அவர் சொல்லப்போகும் சொற்களுக்காக அவன் காத்திருந்தான். இக்கணம் நான் காத்திருந்தது. நான் கற்ற ஒவ்வொன்றாக உதிர்த்து உள்ளம் ஒழிந்து வந்து அமர்ந்திருந்தது இதற்காகவே.

“உங்கள் குருநிலைகளை நான் கண்டிருக்கிறேன்” என்றார் பிச்சாண்டவர். “அவை காட்டுக்குள் உள்ளன. ஆனால் காட்டைச் செதுக்கி வெளியாக்கி அவற்றை அமைத்துள்ளனர். அங்கு அக்காட்டிலிருந்தே விதைகொண்டுசென்று நிழல்மரங்களை நட்டு வளர்த்திருக்கின்றனர். செடிகளைப் பேணி மலர்த்தோட்டமிட்டுள்ளனர். காட்டுப்பசுக்களை மெருக்கி பாலூற்றுகளாக்கியிருக்கின்றனர். அங்குள்ள மான்கள் வேதச்சந்தத்தில் கத்துகின்றன. அங்குள்ள குடில்களின்மேல் அமர்ந்து கிளிகள் வேதச்சொற்களை கூவுகின்றன. அக்குருநிலைகள் வேலியிடப்பட்டு காட்டிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. இளையோனே, அவை இழப்பது சூழ்ந்திருக்கும் பசும்பெருங்காட்டைத்தான்.”

“நாளும் பலர் அக்குருநிலைகளை விட்டு கிளம்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு வந்த பாதையை மீண்டும் தேர்ந்து இன்னொரு குருநிலை நோக்கி செல்கிறார்கள். ஒற்றைச்சிலந்திவலையில் சிக்கியிருக்கும் சிறுபூச்சிகளே அத்தனை குருநிலைகளும் என்று அறிக!” பிச்சாண்டவர் சொன்னார். “அவர்களில் எவரோ சிலர் காட்டுக்குள் செல்கிறார்கள். சொல்வளர்காட்டைச் சூழ்ந்திருக்கும் ஒலிதளர்பெருங்காட்டை காண்கிறார்கள். அவர்களுக்கு முன்பு அவ்வழி சென்றவர்களின் காலடிச்சுவடுகளால் ஆன பாதையைத் தேர்பவர்கள் பிறிதொரு குருநிலையை சென்றடைவார்கள். இளையோனே, பாதையின்மையையே காடு என்கிறோம்.”

“அக்காட்டுக்குள் செல்பவனுக்கு கண்களில் வாழும் வானம் உதவாது. கால்களில் குடிகொள்ளும் திசைகளும் உதவாது. உடலறிந்த ஒன்றும் உடன்வராது. கருவறைப் புகுவதற்கு முன் கொண்ட கருத்து ஒன்றே கூடவரும். விலக்கி விலக்கி முன்செல்வதே காட்டைக் கடக்கும் ஒரே வழி. அங்கு அவனை வழிமறிப்பவை அவன் அஞ்சுவன அனைத்தும்தான். அச்சம் அழிந்து அவன் நின்றிருக்கையில்தான்  மூவிழியும் வெண்நீறும் புலியுரியும் பிறைநிலவும் உடுக்கும் சடையும் கொண்டு  கொலைதேர் கொடுஞ்சினக் காட்டாளன் ஒருவன் அவனை எதிர்கொள்கிறான்.” அவர் பெருமூச்சென “சிவமேயாம்” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6

$
0
0

images

 

 

அன்புள்ள ஜெ,

வணக்கம். நலம், நலம்தானே?

நான் அடிக்கடி விளையாட்டாக, பிரிட்டன் கால நிலை என்பது இரண்டே இரண்டுதான் என்று சொல்வதுண்டு. மழைக்கு முன் அல்லது மழைக்குப் பின்.

கிட்டதட்ட உங்கள் நிலையையும் இது போன்று இரண்டே நிலைதான் என்று தோன்றுகிறது. பயணத்திற்கு முன் அல்லது பயணத்திற்குப் பின்.

தற்போது கேதார் பயணத்திலிருந்து திரும்பியிருக்கிறீர்கள். அடுத்த பயணம் நிச்சயம், சீக்கிரமே என்பதில் சந்தேகம் இல்லை!

முன்பு ஒரு முறை வண்ணதாசன் சிறுகதைகளைப் பற்றி நமது நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவை அவர்களை அவ்வளவாக கவரவில்லை என்று அறிந்தேன். ஓரிரு கதைகள் மட்டுமே வாசித்திருந்தார்கள். மேலும் படிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்தபோது ஆச்சரியமே மேலிட்டது.

கவிஞர் குமரகுருபரனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் ஆற்றிய உரையை சமீபத்தில் கேட்டேன். அதில் கல்பற்றா நாராயணன் அவர்களின் Touch Screen கவிதையை “தொட்டு” ஆரம்பித்து உரையை எடுத்து விரித்துச் சென்றீர்கள். என்னை கவர்ந்த உரைகளில் ஒன்று.

ஓங்கி உதைத்து திறந்த கதவுகள், வன்மையாக குரலெழுப்பிய முற்றங்கள், மிதித்து தாண்டிய தொலைவுகள்…. இப்படிப்பட்ட, உக்கிரமான, தீவிர படைப்புகளை ஆரம்பத்திலேயே படித்து பழகியவர்களுக்கு வண்ணதாசனின் அணில்களும், நாவல் பழங்களும், ஆச்சியும், வண்ணாத்திபூச்சிகளும் மிக மென்மையாக, அதனாலேயே ஈர்க்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் மானுட உச்சங்களை காட்டுவதற்கு, “மனுசபயலை” உணர்த்துவதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென் தொடுகையே போதும் என்பதற்கு வண்ணதாசன் படைப்புகள் ஓர் சிறந்த உதாரணமாகவே நான் காண்கிறேன்.

ஆழமில்லாதது போன்று தோற்றமளிக்கும் ஏரிப்பரப்பில் முழு வானத்தையும் கண்டுகொள்ளமுடிகிறது அல்லவா?

வண்ணதாசன், 2016 விஷ்ணுபுரம் விருது – விருதைக்கொடுத்து விருதைப் பெறுதல். பேருவகை கொள்கிறேன்.

சிவா கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருது பெறும் வண்ணதாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வண்ணதாசனை தமிழிலக்கியத்தில் ஒரு ‘மணமான’ அம்சமாக நான் நினைக்கிறேன். பலவகையான ருசிகள் இங்கே உள்ளன. ஆனால் மணம் இல்லாமல் சமையல் ஏது? எண்ணையும் கடுகும் கறிவேப்பிலையும் சேர்ந்து உருவாக்கும் அந்த முறுகல் இல்லாமல் எப்படி சமையலறை நிறையும்?

பெரிய நெருக்கடிகளை வண்ணதாசன் காட்டுவதில்லை. ஏனென்றால் அவருடைய உலகமே அவற்றுக்கு அப்பாற்பட்டதுதான். அவர் காட்டுவது உலகங்கள் மெல்ல தொட்டுக்கொள்வதையும் உரசிக்கொள்வதையும்தான். ஆனால் அவற்றிலே மனித சுபாவங்களில் ஏராளமான வண்ணங்களைக் காட்ட அவரால் முடிகிறது. ஆகவே அவை கிளாஸிக் அந்தஸ்து கொண்டவை

இந்தியமொழிகளிலே அப்படிப்பார்த்தால் வண்ணதாசனைப்போல ஒரு படைப்பாளி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவுக்கு ரேமண்ட் கார்வர், எடித் வார்ட்டன் இருவரையும் வண்ணதாசனுடன் ஒப்பிடலாமென நினைக்கிறேன்

ராமச்சந்திரன் எம்.

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசன் கதைகளை நீண்டநாட்களுக்குப்பின் வாசித்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் என்றுதான் இந்த விருதை எடுத்துக்கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் இருந்தது எனக்கு.

நான் அவரை முதலில் வாசித்தது காலச்சுவடில் வெளிவந்த நீ இப்போது இறங்கும் ஆறு என்னும் கதை. 1988 என நினைக்கிறேன். அப்போதே அவர் பெரிய ஸ்டார். அந்தக்கதையை சுஜாதா இன்செஸ்ட் என்று சொல்லியிருந்தார். அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். அந்தக்கதையில் மறைந்திருக்கும் கதையை வாசிக்கவே எனக்கு ரொம்ப நேரம் ஆகியது

வண்ணதாசன் கதையைப்பற்றி இப்படித்தான் சொல்லமுடியும். சில விஷயங்களை ரொம்பப்பூடகமாகச் சொன்னால்தான் அவைகளுக்கு மதிப்பு. நேரடியாகச் சொன்னால் அப்படியா என்று ஆகிவிடும். அந்தப்பூடகமான விஷயங்களை மேலும் பூடகமாகச் சொல்லி அந்த பூடகத்தன்மைவழியாகவே அவற்றை பெரிதாக ஆக்குகிறார். அவருடைய பூதக்கண்ணாடி அந்த பூடகத்தன்மைதான்.

அதைச்சொல்வதற்கு அவர் ஒரு பாஷையை பயிற்சிசெய்து வைத்திருக்கிறார். சும்மா அவர் பாட்டுக்குச் சொல்லிச்செல்வதுபோல, நஸ்டால்ஜியா போல ஒரு பாஷை அவை இரண்டும் இணைந்து உருவாக்கும் ஒரு தனி ருசி அவரை தமிழில் முக்கியமான இலக்கியக்கலைஞராக ஆக்குகிறது

முகுந்த் நாராயணன்

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசனை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம் அவரோட ஒரு கதை. அதில் ஒருபெண் அவள் ரகசியக்காதல் கொண்டிருக்கிற ஒரு ஆண் படுத்து எழுந்துபோன மெத்தையின் சூடான குழியில் சென்று படுத்துக்கொள்வாள். இன்செஸ்ட் கதை அது என நினைக்கிறேன். அந்தக்கதையை வாசிக்கையில் ஒரு ரகசியக்குதூகலம் ஏற்பட்டது.

வண்ணதாசனின் கதையும் அதேபோல ஒரு நுணுக்கமான அனுபவம்தான். அதாவது அதை கொடுப்பவரும் பெறுபவரும் மட்டுமே அறிய முடியும். மற்றவர்களுக்கு அதிலே ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை. ஆழமான கதைகள் என்றால் அப்படி இல்லை என்று தான் சொல்வேன். ஆனால் அனுபவம் ஆழமானது

பெரியவிஷயங்களைச் சொல்லும் எழுத்தாளர்களின் நடுவே வண்ணதாசன் சின்னவிஷயங்களின் கடவுள்

சாரங்கன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வல்லவன் ஒருவன்

$
0
0

krishnan article vallavan oruvan

 

என் பயணத்தோழர்களில் ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞரான கிருஷ்ணன் விடாக்கண்டன். எதிரில் புலிவந்து நின்றாலும் வழக்கறிஞர்கள் அசரமாட்டார்கள். ‘இபிகோ 303 ன்படி இது கல்பபிள் ஹோமிசைடு. மரணதண்டனைக்குரிய குற்றம்’ என்று அதனிடம் சொல்வார்கள். கிருஷ்ணன் அந்தப்புலியையே அப்படி நம்பவைத்துவிடுவார். அது முனகிவிட்டு விலகிச்சென்றுவிடும். கிருஷ்ணன் வழக்கறிஞர் ஆனால் நல்லவர் என்று நான் பேச்சுவாக்கில் சொன்ன வரியே பாபநாசம் சினிமாவிலும் வசனமாக வந்து புகழ்பெற்று பழமொழியாகப் புழக்கத்தில் உள்ளது.

அறியாத ஊரில் தெரியாத இலக்கு நோக்கி வழிகேட்டு வழிதவறி மீண்டும் வழிகேட்டு சென்றுகொண்டிருப்போம். காரை நிறுத்தி சாலையோரம் நின்றிருக்கும் எவரிடமாவது வழிகேட்கையிலேயே ஆளை எடைபோட்டுவிடுவார். அவர் சுற்றிச்சுற்றி வழிசொல்லி வரும்போதே உரிமையுடன் “சார் கொஞ்சம் வண்டியிலே ஏறிக்கொள்ளுங்கள்… வந்து வழிகாட்டுங்கள்” என்பார்.

“எனக்கு வேற வேலை இருக்கே தம்பி” என்று அவர் தயங்கினால் மேலும் உரிமையுடன் “இருக்கட்டும் சார். இதுவும் வேலைதானே? நாளைக்குக்கூட வேலைய பாத்துக்கலாம். இன்னிக்குத்தானே எங்க கூட இருக்கமுடியும்? இந்தச்சின்ன உதவிகூட செய்யமாட்டீங்களா?” என்பார். அவர் கொஞ்சம் தயங்கியபடி நிற்கையிலேயே கதவைத்திறந்து ‘தள்ளுங்க. சார் ஏறணும்ல?’ என்பார். வேறுவழியில்லாமல் அவரும் ஏறிக்கொள்வார். “நீங்க இல்லேன்னா நாங்க எப்டி சார் போறது? உங்க ஊருக்கு வேற வந்திருக்கோம” என்பார் கிருஷ்ணன்.

நூறுகிலோ மீட்டருக்கு மேல் எங்களுடன் வந்து வழிகாட்டியவர்கள் இருக்கிறார்கள். முற்றிலும் சம்பந்தமற்ற ஊர்களில் மொழியே தெரியாமல் வந்து வழிகாட்டி அந்த இடத்தையும் விரிவாக விளக்குவார்கள். அங்கிருந்து நாங்கள் அடுத்த இலக்கு நோக்கிச் செல்ல அவர்கள் பஸ் பிடித்து தங்கள் ஊருக்குத் திரும்பவேண்டும். ஆனால் அதற்குள் ஆழ்ந்த அறிமுகம் ஆகிவிட்டிருக்கும். குடும்ப விஷயங்களெல்லாம் பரிமாறப்பட்டுவிட்டிருக்கும். ஆகவே அவர் டீ வாங்கித் தந்து பிரியாவிடை தந்துதான் வழியனுப்பிவைப்பார்கள். சமயங்களில் கண்ணீர் மல்குவதுகூட உண்டு.

அப்படி அரிய நட்புகள் பல வாய்த்திருக்கின்றன. ஹளபீடு சென்று கொண்டிருந்த கிருஷ்ணனை வலுக்கட்டாயமாக கூட்டிச்சென்று மேலும் பல ஹொய்ச்சாள ஆலயங்களை காட்டினார் ஒருவர். ‘பெலவாடி போகாம ஒரு பயணமா?’ என்று கூட்டிச்சென்ற அவர் ‘அடுத்தமுறை வர்ரப்ப சொல்லுங்க. இன்னும் நெறைய எடம் இருக்கு” என்றார். தலைக்காவிரி சென்றவர்களை திபெத் குடியிருப்பைப் பார்க்காமல் செல்லக்கூடாது என கட்டாயப்படுத்தி மறக்கமுடியாத அனுபவத்தை அளித்தார் ஒருவர். வழியில் ஒருவரை பார்த்ததுமே கிருஷ்ணன் தலையை ஆட்டி “சார் நம்மாளு!” என்பார்.

ஈரோட்டைச்சேர்ந்த இன்னொரு நண்பரான பாபு கொடாக்கண்டர். குழந்தை முகம். அன்னியக் குடும்பங்களில் அனல்பட்ட சீஸ் போல உருகி இணைந்துவிடுவார். ‘யக்கா’ என அவர் அழைத்தால் நடுத்தர வயது அம்மாக்கள் ‘தம்பி’ என நெகிழ்வார்கள். ஒருமுறை இரவிகுளம் போய்விட்டு மலைப்பாதையில் பகல் முழுக்க சோறு கிடைக்காமல் கொலைப்பட்டினியாக வந்துகொண்டிருந்தோம்.ஒரு மெஸ் கண்ணுக்குப்பட்டது. சற்று மேட்டில் இருந்தது அது. சபரிமலைத்தரிசனத்தின் பரவசம்

மேலேறிச்சென்றால் அந்த அம்மாள் “சோறு தீர்ந்துபோச்சே” என்றார். பாபு “இருக்கட்டும்கா. தம்பிக்கு சாப்பிட எதுனா குடுங்கக்கா” என்றார். “பரோட்டா இருக்கு… ஆனா காலம்பற செஞ்சது” என்றார் அம்மாள். “பரவாயில்லைங்கக்கா” என உட்கார்ந்துவிட்டோம். சாம்பாரும் கொஞ்சம் இருந்தது. சுருட்டிக் கடித்து தின்றபோது வேட்டைப்புலி போல உணர்ந்தோம்.

சாப்பிடும்போது பாபு “அக்கா கொஞ்சம் சோறு குடுங்கக்கா” என்றார். அம்மாள் “சோறு இல்லியே தம்பி” என்றார். “நீங்க சாப்பிட வச்சிருப்பீங்களே அத குடுங்கக்கா. தம்பிதானே கேக்கிறேன்” என்றார்.அவர் உள்ளிருந்து பாபுவுக்கு மட்டும் சோறு கொண்டுவந்து கொடுத்தார். “அக்கா கொஞ்சம் மோரு இருந்தா குடுங்கக்கா” என கேட்டு வாங்கி திருப்தியாக சாப்பிட்டார் பாபு. அந்த அம்மாளுக்கு அவரிடம் காசு வாங்கும்போது மிகுந்த சங்கடமாக இருந்தது “பரவால்லீங்கக்கா…வாங்குங்க… அடுத்தவாட்டி வந்து விருந்தே சாப்புட்டுட்டுப் போறம்” என்றார் பாபு பெருந்தன்மையாக. பெட்ரோல் பங்குகளில் கூட ‘ஏங்க கோயில் பாக்கப்போறம்…டிஸ்கவுண்ட் குடுங்க” என்று கேட்டு வாங்குவார்.

ஒருமுறை கேரளத்தில் திருநெல்லி என்னும் ஊருக்குச் சென்றிருந்தோம். மிகப்பழைமையான சிவன் கோயில் அது. அடர்காடு நடுவே இருந்தது. அங்கே வனவிடுதியில் தங்கினோம். மழையில் நனைந்தபடி காட்டைச்சுற்றிவந்தோம். மறுநாள் அதிகாலை கிளம்பி காட்டுச்சாலை வழியாக நாகரஹோலேயை கடந்து சாம்ராஜ்பேட் வந்து சத்யமங்கலம் வழி ஈரோடு வருவது திட்டம். கிளம்பி சாலைக்கு வந்தபோது விடிகாலை இருட்டில் விளக்குகள் எரிய ஒரு டீக்கடை ஜொலிப்பதைக் கண்டோம். சூடான குழாய்ப்புட்டு வாழையிலைகளில் உருளைகளாக அடுக்கப்பட்டிருந்தது. பொன்னிறமான நேந்திரம்பழக்குலைகள் தொங்கின.

“சாப்பிட்டுவிட்டே செல்வோமே” என்றேன். “சார், இதைவிட நல்ல கடை அந்தப்பக்கம் இருக்கு. இங்க உக்காந்து சாப்பிட வசதியில்லை” என்றார் கிருஷ்ணன். சரி என்று கடந்து சென்றோம். அன்று இரவு ஒன்பது மணிக்கு சாம்ராஜ்பேட்டில்தான் சாப்பிட ஏதாவது கிடைத்தது. வழியில் எங்கும் கடை ஏதும் இல்லை. ஏன் மனிதநடமாட்டமே இல்லை. சாலை மிகமிக மோசம். கிட்டத்தட்ட நடந்துசெல்லும் வேகத்தில்தான் சென்றோம். நடந்தால் மேலும் வசதியாக இருந்திருக்கும். வண்டி அப்படி தூக்கிப்போட்டது. ஆனால் வழியில் பலவகை மிருக நடமாட்டம். ஆகவே இறங்கவும் பயம். குலுங்கி ஆடி பழையகால ராக் அண்ட் ரோல் நடனமிட்டபடி கொலைப்பசியுடன் பகல் முழுக்க ஊர்ந்துகொண்டே இருந்தோம்.

“எப்டி கிருஷ்ணன் வழியிலே நல்ல ஓட்டல் இருக்குன்னு சொன்னீங்க?” என்று கேட்டேன். “ஒரு லாஜிக்தான். எடுத்த எடுப்பிலேயே ஒரு ஓட்டல் கண்ல பட்டுது. அப்ப அந்த மாதிரி நெறைய இருக்கணும்ல?” என்றார் கிருஷ்ணன். என்ன லாஜிக் என எனக்கு இன்றுவரை பிடிகிடைக்கவில்லை. ஆனால் அதன்பின் அவரது லாஜிக்கை நான் உடனடியாக நிராகரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

பசியில் சாப்பாட்டைப்பற்றியே பேசிக்கொண்டு சென்றோம். ஒருகட்டத்தில் நண்பரும் இன்னொரு வழக்கறிஞருமான செந்தில் [அவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராதலால் மேலும் நல்லவர்] வெறிகொண்டு “சாப்பாடு பத்தி பேச்சுவேண்டாமே சார்!” என்றார். “சரி, இலக்கியம் பேசுவோம். இப்ப லா.ச.ராவை பாத்தீங்கன்னா அவரோட அழகியல்…” என்று ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் “அவரோட கதையிலே வத்தக்குழம்ப மட்டும் தனியா வர்ணிச்சிருப்பார்… காபிநெறத்திலே பளபளன்னு அது சூடான சோறுமேலே நெய் உருகி மின்னுறத புன்னகைக்கிறதுன்னு ஒரு கதையிலே சொல்றார்” என வந்து நின்றது. தொடர்ந்து நாஞ்சில்நாடனின் சாளைமீன் புளிமுளம், ஜானகிராமனின் பாயசம் என்னும் கதை…

senthil -article vallavan oruvan

“வேண்டாம் சார் அரசியல் பேசுவோம்” என்று செந்தில் கதறினார். எழுபதுகளில் தி.மு.க மாநாட்டில் முயல்கறி பரிமாறப்பட்டதைப்பற்றி தினதந்தி செய்தி வெளியிட கலைஞர் ‘எச்சில் இலைகளைப்பார்த்து எழுதியிருக்கிறார்கள்’ என்று சொன்னதில் வந்து நின்றது. அதன் பின் முயல்கறி மான்கறி காடை கௌதாரி என நீண்டது. கடைசியில் சாப்பாட்டைப்பற்றியே பேசுவோம் என ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது. பாபு “நல்லா புது அரிசி சோறு கொதிக்கிற மணம் இருக்கே” என்றார். நெஞ்சு உடைய “அய்யோ!” என்றார் செந்தில். யாரோ வாய் உறிஞ்சும் ஒலி.

நடுவே வழி வேறு தவறியது. சரியான வழிதானா என்று கண்டுபிடிக்க வழியில் ஆளும் இல்லை. கடைசியில் ஒருவர் பேருந்துக்காக நிற்பதைக் கண்டோம். கையில் குடை. பெரிய மஞ்சள் பை. நரைத்தமீசை. நெற்றியில் துருத்திய நரைமுடி. குறுகி இறுகிய உடம்பு மலைப்பகுதி ஆள் என்பதைக் காட்டியது. ‘சார் நம்மாளு!’ என்றார் கிருஷ்ணன். உடன் வந்து வழிகாட்ட முடியுமா என அழைத்தபோது யோசித்தார்.

“வாங்கண்ணா, சாப்பிட்டே ரொம்ப நேரமாகுண்ணா” என்றார் பாபு. தயங்கிய பிறகு ஒப்புக்கொண்டார். வண்டியில் ஏற்றிக்கொண்டோம். கன்னடத்தில் பேசிக்கொண்டே வந்தார். காட்டின் இயல்புகள், வழியின் சிக்கல், விவசாயப்பிரச்சினைகள். எங்களுக்கு கன்னடம் நாலைந்து சொற்கள்தான் தெரியும் என்பது அவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை

ஒருவழியாக ஒரு சிறிய சாலையில் தாழ்வான கூரை போட்ட வீட்டுமுன் வண்டி சென்று நின்றது. “இஸ்டாப்பு” என்று கூவி நிறுத்தச்சொல்லி பையுடன் இறங்கிக்கொண்டார். “டாங்க்ஸ் குரு” என்றார். “இது என் வீடு. நீங்கள் வந்தவழியே திரும்பிச் சென்றால் நாம் ஒரு ஆலமரத்தை கடந்தோம் அல்லவா அந்த இடம் வரும். அங்கே சென்று வலப்பக்கமாகத் திரும்பினால் பெரிய சாலை வரும். அப்படியே செல்லுங்கள்… அதுதான் சாம்ராஜ்பெட் போகிற வழி என நினைக்கிறேன். உறுதியாகத்தெரியாது. அங்கே யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்”

கிட்டத்தட்ட பாதித்தூரம். சுத்தமாக சம்பந்தமே இல்லாத திசைக்கு அழைத்து வந்துவிட்டார் மனிதர். என்ன சொல்ல முடியும்? வண்டியைத் திருப்பினோம். வண்டிக்குள் பேச்சுக்குரலே எழவில்லை. விடாகண்டனும் கொடாகண்டனும் தங்களை மிஞ்சிய வல்லாளகண்டனைத்தான் நெஞ்சடைத்துப்போய் நினைத்துக்கொண்டிருந்தார்கள் என தோன்றியது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3

$
0
0

[ 5 ]

இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர் அங்கே சுகந்தவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் தனிக்குடில் கட்டி வாழ்ந்தார். நாளும் தேவதாருச் சமிதையால் அவர் அனலோம்பினார். அப்புகையை ஒற்றி உறிஞ்சி வானில் விளங்கிய முகில்கொழுந்துகளை கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் எடுத்துச்சென்று கிழித்துப் பங்கிட்டு தங்கள் முகம் விளக்குவதற்காக வைத்துக்கொண்டனர்.

அத்ரி மாமுனிவரின் கொடிவழியில் வந்த நூற்றெட்டாவது அத்ரி சௌகந்திகத்தில் குருநிலை அமைத்து மாணவர்களுடன் வேதச்சொல் ஓம்பினார். அவரது அறத்துணைவி அனசூயை அவரைப் பேணினாள். பசுங்கோபுரங்களென எழுந்த தேவதாருக்களால் குளிர்ந்த அக்காட்டில் அத்ரி விளைவித்த மெய்மையை நாடி முனிவர்கள் வந்து குடிலமைத்துக்கொண்டே இருந்தனர். நிகரற்ற அறிவர்களாகிய நூற்றெட்டு முனிவர்களால் அக்காடு பொலிந்தது.

அவர்களும் மாணவர்களும் ஓதும் வேதச்சொல் இரவும் பகலும் ஒருகணமும் ஒழியாதொலிக்கவே அங்கு தீயதென்று ஒன்று தங்காதாயிற்று. வேதம் கேட்டு வளர்ந்த தேவதாருக்கள் பிறிதெங்கும் இல்லாத நறுமணம் கொண்டிருந்தன. அங்கு முளைத்த பிறசெடிகளின் வேர்களும் தேவதாருக்களுடன் பின்னி சாறு உறிஞ்சி நல்மணம் கொண்டன. அவற்றின் கனியுண்ட கிளிகளின் சிறகுகளிலும் மணம் கமழ்ந்தது. அனைத்து ஒலிகளும் வேதமென்றே எழுந்த அக்காட்டை வேதவனம் என்றனர் முனிவர்.

வேதம் கனிந்த சித்தம் கொண்டிருந்த அத்ரி முனிவர் அரணிக்கட்டைகள் இன்றி தன் சொல்லினாலேயே அனலெழுப்பும் வழக்கம் கொண்டிருந்தார். அவர் சொற்கள் நுண்ணொலி நிறைந்த விண்கனிந்து நேராக எழுபவை என்றனர் அறிஞர். வேதச்சொல்லவை ஒன்றில் அவர் ஒப்புமை சொல்லும்போது பறக்கும் முதலைகளின் சிறகுகள் என்று ஒரு வரி வந்தது. அங்கிருந்த அவைமுனிவர் எழுவர் அக்கணமே எழுந்து “முதலைகள் பறப்பதில்லை, அவற்றுக்கு சிறகுமில்லை” என்றனர். திகைத்த அத்ரி தான் சொன்னதென்ன என்று அருகமைந்த  மாணவர்களிடம் கேட்டார். அவர்கள் அதைச் சொன்னதும் திகைத்து அமர்ந்தார்.

தன்னுள் தானறியாது கரந்தமைந்த ஆணவமே சொல்லென நாநழுவி விழுந்தது என்று உணர்ந்தார் அத்ரி. ஆனால் அந்த அவையில் தலைதாழ்த்தி சொல்லெனும் முடிவிலிக்கு முன் சித்தம் கொண்டாகவேண்டிய அடக்கத்தைச் சொல்ல அவரால் இயலவில்லை. “நான் சொன்னது உண்மை, பறக்கும் முதலை இங்குள்ளது” என்றார். “எனில் அதைக் காட்டுக எங்களுக்கு. அதுவரை உங்கள் சொல்லில் எழுந்த மெய்மை அனைத்தும் ஐயத்தால் தடுத்துவைக்கப்படட்டும்” என்றனர் முனிவர். “அவ்வாறே ஆகுக!” என்று அத்ரி எழுந்துகொண்டார்.

நிலையழிந்து குடில்மீண்ட அவரிடம் “ஆணவமற்ற அறிவை தாங்கள் அடைவதற்கான தருணம் இதுவென்றே கொள்க!” என்று அனசூயை  சொன்னாள். “ஆணவம் கொள்பவர் புவியனைத்துக்கும் எதிராக எழுகிறார். தெய்வங்கள் அனைத்தையும்  அறைகூவுகிறார். மும்முதல்தெய்வங்களேயானாலும் ஆணவம் வென்றதே இல்லை.” அத்ரி அவளை தன் கையால் விலக்கி “நான் கற்றவை என் நாவில் எழவில்லை என்றால் அந்நாவை அறுத்தெறிவேன். நான் வெல்கையில் வென்றவை வேதங்கள். அவைமுன் நாணுகையில் நாணுபவையும் அவையே” என்றார்.

இரவெல்லாம் அவர் தன் குடிலுக்குள் தனக்குள் பேசியபடி உலவிக்கொண்டிருந்தார். உடலுள் எழுந்த புண் என வலித்தது உள்ளம். விடிகையில் முடிவுகொண்டிருந்தார். அன்றே வேள்விக்கூடத்தில் புகுந்து எரியெழுப்பினார். ஐவகை அவியும் நெய்யும் அளித்து வேதச்சொல்கொண்டு தென்றிசையில் வாழும்  மேதாதேவியை அழைத்தார். “வாலறிவையே, இங்கு எழுக! இந்த அவைமுன் வந்து என் சொல்லுக்கு பொருளென்றாகுக!” என்றார்.

பிரம்மனின் மைந்தர் தட்சப் பிரஜாபதிக்கு பிரசூதி என்னும் துணைவியில் பிறந்தவள் மேதை. அவள் தென்னிசை ஆளும் தர்மதேவனை மணந்தாள். சொல்லில் எழும் மெய்மைக்குக் காவலென அமைந்தவள். எட்டு கைகளில் மலரும் மின்கதிரும் அமுதும் விழிமணிமாலையும் ஏடும் எழுத்தாணியும்  அஞ்சலும் அருளலுமென அமர்ந்தவள். அவர் உள்விழிமுன் தோன்றி “முனிவரே, முடிவற்ற நெளிவுகொண்ட நாவே சொல்லுக்கு முதல் எதிரி என்றுணர்க! பொருள்கடந்து மொழிகடந்து முடிவிலா ஆழம்வரை செல்வது  நாவென அமைந்த நாகம். அதை பணிக! அவையொன்றில் தலைவணங்குவதனால் எவரும் பெருமையிழப்பதில்லை. பணிந்த அவைகள் வழியாகவே வென்று செல்கின்றது அறிவு” என்றாள்.

சினந்து சிவந்த அத்ரி தன் இடக்கையால் தர்ப்பையை எடுத்து வலக்கையை நீட்டி அவியெடுத்து தன் முன் எரிந்த வேள்வித்தீ நோக்கி நீட்டியபடி சொன்னார். “நானறிந்த வேதமெல்லாம் இங்கு திரள்க! என் சொல் பொய்யாகுமென்றால் வேதம் பிழைபடுக!” அனலில் அவியிட்டு அவர் ஆணையிட்டார். “மேதாதேவியே, என் அவியை உண்க! என் வேதச்சொல் கொள்க! நால்வேதம் அறிந்தவனாக இங்கமர்ந்து ஆணையிடுகிறேன். என் சொல்லுக்கு அரணாக எழுந்துவருக!”

அவர் முன் நின்று மேதாதேவி பதைத்தாள். “பிழைக்கு ஆணையென்று தெய்வம் வந்து நிற்கமுடியாது. அது பொய்மையை நிலைநிறுத்துவதென்றே ஆகும்.” அத்ரி  “வேதத்தின் ஆணைக்கு தெய்வங்கள் கட்டுப்பட்டாகவேண்டும். இயலாதென்றால் சொல்க! என் சொல்லனைத்தையும் உதறி இந்த அவைவிட்டு எழுந்து செல்கிறேன்” என்றார். “முனிவரே அறிக, கலைமகளைக் கூடி எந்தை பிரம்மன் படைத்த இப்புவியில் இல்லை உங்கள் சொல்லில் எழுந்த உயிர்” என்றாள் மேதை.

“அவ்வாறென்றால் என் சொல்லில் உறையும் மெய்மையாகிய உன்னைப் புணர்ந்து பிரம்மன் படைக்கட்டும் அதை” என்றார் அத்ரி. “என்ன சொல்கிறீர்கள், முனிவரே? அவர் என் தந்தைக்குத் தந்தை. நான் அவள் மகள்” என்று அவள் கூவினாள். “நான் எதையும் அறியவேண்டியதில்லை. பிழைத்த சொல் சூடி இந்த அவை விட்டு எழமாட்டேன்” என்று கூவினார் அத்ரி.

தன் முன் எழுந்த அனலில் நெய்யும் அவியும் சொரிந்து வேள்வி செய்தார். தன் மூலாதாரத்திலிருந்து வேதச்சொல்  எடுத்து அனலோம்பினார். நீலச்சுடர் எழுந்து நாவாடியது. சுவாதிஷ்டானத்திலிருந்து எழுந்த சொல் செஞ்சுடர் கொண்டது. மணிபூரகத்தின் சுடர் மஞ்சளாக பெருகி எழுந்தது. அனாகதத்தின் சுடர் பச்சையொளி கொண்டிருந்தது. விசுத்தியின் சுடர் பொன்னிறம் பெற்றிருந்தது. ஆக்ஞையின் சுடர் வெண்ணிறமாக அசைவற்று நின்றது. சகஸ்ரத்தின் சுடரை எழுப்ப அவர் தன் நெற்றிமேல் தர்ப்பையை வைத்தபோது அனலில் எழுந்த பிரம்மன் “ஆகுக!” என்று சொல்லளித்தார்.

ககனப்பெருவெளியில் மேதையைப் புணர்ந்து பிரம்மன் நிகருலகு ஒன்றைப் படைத்தார். அவருள் இருந்து ஆழ்கனவுகளை எழுப்பினாள் மேதை. அவை பருவுருக்கொண்ட உலகில் பல்லிகள் பேருருக்கொண்டு நிலமதிர நடந்தன. கழுகுக்கால்களும் புலிமுகமும் கொண்ட வௌவால்கள் கூவியபடி வானில் மிதந்தன. தந்தம் வளைந்த பேருருவ யானைகள் வெண்கரடித்தோல் கொண்டிருந்தன. கால்பெற்று நடந்தன நாகங்கள். ஆமைகள் இடியோசை எழுப்பி வேட்டையாடின. சிறகு கொண்டன முதலைகள். அவற்றிலொன்று மரக்கூட்டத்திலிருந்து சிறுகிளை வழியாக இறங்கி சௌகந்திகக் காட்டுக்குள் வந்து இளவெயில் காய்ந்து கண்சொக்கி அமர்ந்திருந்தது.

அதை முதலில் கண்டவன் அவரை எதிர்த்து எழுந்த முனிவர்களில் முதலாமவராகிய கருணரின் மாணவன். அவன் ஓடிச்சென்று தன் ஆசிரியரிடம் சொல்ல அவர் திகைத்தபடி ஓடி வெளியே வந்தார். அங்கே அதற்குள் முனிவர்களும் மாணவர்களும் கூடியிருந்தார்கள். கருணர் அருகே சென்று அந்த முதலையைப் பார்த்தார். நான்கடி நீள உடலும் நீண்ட செதில்வாலும் முட்புதர்ச்செடியின் வேரடிபோல மண்ணில் பதிந்த கால்களும் கொண்ட முதலை இளம்பனையின் ஓலைபோன்ற தோல்சிறகுகளை விரித்து வெயில் ஊடுருவவிட்டு பற்கள் நிரைவகுத்த வாயைத் திறந்து அசையாது அமர்ந்திருந்தது.

அது விழிமயக்கா ஏதேனும் சூழ்ச்சியா என்று கருணர் ஐயம் கொண்டார். ஆனால் அதை அணுகும் துணிவும் அவருக்கு எழவில்லை. செய்தியறிந்து அங்கே வந்த அத்ரி முதலையை நோக்கிச்சென்று அதன் தலையைத் தொட்டு “எழுந்து செல்க!” என்றார். அது செதில்கள் சிலிர்த்தெழ விழிப்புகொண்டு எழுந்து விழிகளை மூடிய தோலிமைகளை தாழ்த்தியது. முரசுத்தோலில் கோலிழுபட்டதுபோல பெருங்குரலில் கரைந்தபடி சிறகடுக்கை விரித்து அடித்து வாலை ஊன்றி காற்றில் எழுந்தது. அதன் சிறகடிப்போசை முறங்களை ஓங்கி வீசியதுபோல் ஒலித்தது. அக்காற்றேற்று சிறுவர்களின் முடியிழைகள் பறந்தன. காற்றில் ஏறி அருகிருந்த மரக்கூட்டங்களுக்குள் புகுந்து மறைந்தது.

கருணர் திரும்பி இரு கைகளையும் தலைக்குமேல் விரித்து “எந்தையே, ஆசிரியரே!” என்று கூவியபடி அத்ரியின் காலடிகளில் விழுந்தார். அவரைத் தொடர்ந்து ஐயம்கொண்ட அத்தனை முனிவர்களும் அவர் முன் விழுந்து கண்ணீருடன் மாப்பிரந்தனர். அவர்களின் தலைக்குமேல் தன் கைகளை வைத்து “வேதச்சொல் என்றும் மாற்றில்லாதது” என்றார் அத்ரி. பின்னர் தன் குடில்நோக்கி நடந்தார்.

குடிலில் அவருக்கு கால்கழுவ நீர் கொண்டுவந்த அனசூயையிடம் பெருமிதம் எழ “என் சொல்லில் இருந்து எழுந்து வந்தது அந்தப் பறக்கும் முதலை” என்றார். அவள் அவர் விழிகளை நேர்நோக்கி “பிழைபட்ட சொல்லுக்காக தன்னை பிழையாக்கிக்கொண்டிருக்கிறது புவி” என்றாள். சினத்துடன் அவளை ஏறிட்டு நோக்கிய அத்ரி ஏதோ சொல்ல நாவெடுத்தபின் அதை அடக்கி தலைகுனிந்து கடந்து சென்றார்.

[ 6 ]

கலைமகளைப் புணர்ந்து பிரம்மன் படைத்த புவியில் இல்லாத விந்தைகள் நிறைந்திருந்தன மேதையைப் புணர்ந்து அவன் படைத்த பிறபுவியின் படைப்புகளில். கட்டற்று எழுந்த அவன் கற்பனையால் உருவங்கள் ஒன்றுகலந்தன. குன்றுகளும் யானைகளும் ஒன்றாகி எழுந்தன பேருருவ விலங்குகள். மரங்களும் எருதுகளும் ஊடாடி கொம்புகள் கொண்டன.  சிறகுகொண்டன சிம்மங்கள். சிம்ம முகம் கொண்டன நாகங்கள். நாக உடல்கொண்டு நெளிந்தன புலிகள். நடந்தன மீன்கள்.

தன் படைப்புப்பெருக்கை நோக்க நோக்க பிரம்மன் பெருமிதம் கொண்டான்.  மேலும் மேலுமென படைப்புவெறி பெருக பிற அனைத்தையும் மறந்து அதிலேயே மூழ்கிக்கிடந்தான். அவன் நாவில் சொல்லாகவும் கைவிரல்களில் உருவாகவும் நின்றிருந்தாள் மேதாதேவி. அவர்கள் படைத்த நிகருலகு விரிந்து சென்று விண்ணுலகையும் பாதாளத்தையும் தொட்டது. அங்கு இறப்பென்பதே இருக்கவில்லை. எனவே அதன் எடை ஏழுலகங்களையும் அழுத்தியது. அதன் விரிவு திசைகளை நெளியச் செய்தது.

இறப்பின்றிப் பெருகிய அவ்வுலகின் எடையால் தர்மதேவனின் துலாத்தட்டு நிகரிழந்தது. எருமை ஏறிய தேவன் விண்ணுலகுக்குச் சென்று கலைமகளைக் கண்டு வணங்கி சொன்னான் “அன்னையே, ஆக்கப்பட்டவற்றை அழித்து நிகர்நிலையை நிறுத்துவதே என் தொழில். அறம் வாழ்வது என் துலாக்கோலினால்தான் என்பது தெய்வங்களின் ஆணை. இன்று பெருகிச்செல்லும் அவ்வுலகை அழிக்கும் வழியறியாது திகைக்கிறேன். உருக்கொண்ட ஒவ்வொன்றையும் மொழிசென்று தொட்டாகவேண்டும். பெயர்கொண்ட ஒன்றையே என் பாசவடம் கொண்டு நான் பற்றமுடியும். அங்குள்ள எதையும் இன்னும் மொழியின் பெருவெளி அறியவில்லை. தாங்களே அருளல்வேண்டும்.”

அன்னை தன் தவம் விட்டு எழுந்து சென்று நோக்கியபோது கட்டின்றிப்பெருகி பின்னி முயங்கி தானே தன்னை மேலும் பெருக்கிச் சென்றுகொண்டிருந்த அவ்வுலகின் கனவுக்கொந்தளிப்பைக் கண்டு திகைத்து நின்றாள். கைநீட்டி விலங்குகளைப் பற்றி சுழற்றித் தூக்கி உண்டன பெருமரங்கள். கண்கள் கொண்டிருந்தன மலைப்பாறைகள். யானைகளை தூக்கிச்சென்றன கருவண்டுகள். நண்டுக்கால்களுடன் நிலத்திலறைந்து ஓசையிட்டு நடந்தன பேருருவ எறும்புகள். வகைப்பாடும் தொகைப்பாடும் ஒப்புமையும் வேற்றுமையும் அழிந்தமையால் மொழியை சிதறடித்துவிட்டிருந்தன அவை.

கனவிலென களிவெறியிலென நடமிட்டுக்கொண்டிருந்த தன் கொழுநன் கைபற்றி “நிறுத்துங்கள்! என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று அன்னை கூச்சலிட்டாள்.  போதையில் விழிமயங்கியிருந்த அவன் அவளை கேட்கவில்லை. அவனை உலுக்கி அவள் மேலும் கூவினாள். “விழித்தெழுங்கள்! கனவுமீளுங்கள்!”  விழிப்பு கொண்ட பிரம்மன் அவளை நோக்கி “யார் நீ?” என்றான். “உங்கள் சொல்லென அமைந்து உலகங்களை யாப்பவள். உங்கள் துணைவி” என்றாள் சுனைகளின் அரசி.

ஏளனத்துடன் சிரித்து “நீயா? உன் சொல் தவழும், நடக்கும் இடங்களில் பறப்பது இவள் கற்பனை. இனி இவளே என் துணைவி” என்று சொல்லி தன் கைகளை அசைத்துக்காட்டினான் பிரம்மன். அவனருகே களிவெறியில் சிவந்த விழிகளுடன் எங்கிருக்கிறோமென்றறியாது ஆடிக்கொண்டிருந்த மேதாதேவியை நோக்கி “நில்… இழிமகளே நில்!” என்று சொல்லன்னை கூவினாள். அவள் அக்குரலை கேட்கவேயில்லை. அவள் குழல்பற்றிச் சுழற்றி நிறுத்தி “கீழ்மகளே, இது நெறியல்ல என்று அறியமாட்டாயா நீ?” என்றாள் கலையரசி.

“நெறியிருக்கும் இடத்தில் களியாட்டமில்லை. களியாட்டில்லாது படைப்பெழுச்சியும் இல்லை” என்றாள் மேதை. “இவை எங்கள் ஆக்கங்கள். நிகரற்றவை, அழிவற்றவை.” அவள் தள்ளாடியபடி பிரம்மனை பற்றிக்கொண்டு “நாம் ஏன் வீண்சொல்லாடி பொழுது களைகிறோம்? இது நம் ஆடல்… வருக!” என்றாள். “ஆம், இதுவே நாம் தெய்வமாகும் தருணம்” என்ற பிரம்மன் திரும்பி தன் துணைவியிடம் “அகல்க! தன் உச்சத்தைக் கண்ட எவரும் மீண்டு வருவதில்லை. பறக்கத் தொடங்கியபின் கால்கள் சிறுக்கின்றன பறவைகளுக்கு. விலகிச்செல்! இப்படைப்புக் களியாட்டத்திற்கு முன் பிறிதென்று ஏதுமில்லை” என்றான்.

“அறிந்துதான் பேசுகிறீர்களா? ஆக்கல் புரத்தல் அழித்தல் என்றாகி நின்ற மூன்று பெருநிலைகளில் தொடக்கம் மட்டுமே நீங்கள். மூன்று விசைகளால் முற்றிலும் நிகர்செய்யப்பட்டது இப்பிரபஞ்சம்” என்றாள் வெண்மலரில் அமர்ந்தவள். “இப்படைப்புகளை அழிக்க எவராலும் இயலாது. இவை தங்களைத் தாங்களே புரப்பவை. எனவே இங்கு முழுமுதலோன் நான் மட்டுமே. அவர்கள் அங்குள்ள எல்லைகொண்ட சிற்றுலகங்களை ஆள்க! நான் ஆள்வது கட்டற்ற இப்படைப்புப் பெருவெளியை” என்றான் பிரம்மன்.

துயருற்றவளாக அன்னை கயிலை முடியேறிச் சென்றாள். அவளை யமனும் தொடர்ந்தான். அங்கே வெள்ளிப்பனிமலை முடி என வடிவுகொண்டு ஊழ்கத்திலிருந்த முதற்பெரும்சிவத்தின் முன்சென்று நின்று கைகூப்பி விழிநீர் விட்டாள். “உலகு காக்க எழுக, இறைவா!” என்று முறையிட்டாள். “அழிப்பவனே, அறம்புரக்க விழிசூடுக!” என்றான் யமன். பனிப்பரப்பு உருகி உடைந்து பேரோசையுடன் சரிவுகளில் அலைசுருண்டு இறங்கிச்சென்றது. பலநூறு பனிச்சரிவுகளால் மலைமடிப்புகள் இடியென முழங்கின. பொன்னுருகும் ஒளியுடன் அவன் முகம் வானிலெழுந்தது.

அன்னையும் காலனும் நிகழ்ந்ததை சொன்னார்கள். “இக்கணமே பிரம்மனை இங்கு அழைத்து வருக!” என்று செந்தழல்வண்ணன் ஆணையிட்டான். அவ்வாணையை ஏற்று நந்திதேவர் சென்று பிரம்மனை அழைத்து வீணே மீண்டார். “இறையுருவே, யார் அச்சிவன் என்று கேட்கிறார் பிரம்மன். அவர் திளைக்கும் அவ்வுலகில் தெய்வம் பிறிதில்லை என்கிறார்” என்றார். சினம் கொண்டபோது அவன்  எரிசூடிய பெருமலையென்றானான். அனல்கொண்டு சிவந்த அவன் உடலில் இருந்து உருகிய பனிப்பாளங்கள் பேராறுகளாகச் சரிவிறங்கி பல்லாயிரம் அருவிகளென்றாகின. அவை சென்றடைந்தபோது ஏழ்கடல்களும் அலைகொண்டு கொந்தளித்தன.

எரிகொண்ட அவன் உடலில் இருந்து நீராவி பெருகிஎழுந்து முகில்களாகி வெண்குடையெனக் கவிந்தது. நெற்றிவிழி திறந்தது. அதிலிருந்து உருகிய செம்பாறைக்குழம்பெழுந்து பெருகியது. அவ்வனல்துளியிலிருந்து உருக்கொண்டு எழுந்தான் காலபைரவன். அனல் குளிர்ந்து கரியுடல் கொண்ட அவன் விழிகளிரண்டும் சுடரென எரிந்தன. அவனைத் தொடர்ந்து வந்தது கரிய நாய். அதன் விழிகள் எரிமீன்களென புகையின் இருளில் தெரிந்தன.

“ஆணையிடுக!” என்றது பைரவசிவம். “அழைத்து வருக படைப்போனை!” என்றது முதற்சிவம். இடியோசைகளும் மின்னல்களும் தொடர பைரவசிவம் பிரம்ம உலகுக்குச் சென்றது. அங்கு வெறிகொண்டாடி நின்றிருந்த பிரம்மனை நோக்கி “முழுமுதல் படைப்போன் விழியிலிருந்து எழுந்த அவன் வடிவோன் வந்துள்ளேன். நோக்குக!” என முழங்கியது. பிரம்மன் நோக்கிழந்து மயங்கிய விழியும் உதடுகளில் பெருகிய நகையுமாக மேதாதேவியுடன் நடமிட்டுக்கொண்டிருந்தான். அவன் தோளைப்பற்றி “நில், வா என்னுடன்! இது படைப்பிறைவனின் ஆணை!” என்ற பைரவனிடம் கால்தள்ளாட நின்று “யார் படைப்போன்? இங்கு நானன்றி பிறனில்லை” என்றான் பிரம்மன்.

KIRATHAM_EPI_3

இடியோசை என முகில்களில் முழங்கிய உறுமலுடன் பைரவசிவம் தன் வலக்கையின் சுட்டுவிரலை நீட்டியது. அங்கொரு அனல்பெருந்தூண் அடியிலி திறந்து  எழுந்து விண் கடந்து சென்றது. அதன் வெங்கனலில் அக்கணமே பிரம்மன் உருவாக்கிய பிறவுலகு எரிந்து சாம்பலாகியது. அடுத்த கணம் வீசிய பெரும்புயல்காற்றில் அச்சாம்பலும் பறந்தகல கனவென மறைந்தன அங்கிருந்தவை அனைத்தும். அவை அமைந்திருந்த காலமும் அலைநெளிந்து மறைந்தது.

திடுக்கிட்டு விழித்து அண்ணாந்து நோக்கிய பிரம்மன் மாபெரும் குடையென புகைசூடி நின்ற அனல்தூணைக் கண்டு அஞ்சி அலறியபடி உடலொடுக்கி அமர்ந்தான். “நெறியிலியே, நீ மீறியவை மீண்டும் மீறப்படக்கூடாதவை” என்று கூவியபடி பைரவசிவம் தன் சுட்டுவிரலையும் கட்டைவிரலையும் குவித்து நகமுனையால் மலர்கொய்வதுபோல பிரம்மனின் தலைகொய்து மீண்டது.

தன் கணவன் தலையுடன் மீண்ட பைரவசிவத்தைக் கண்டு அலறியபடி ஓடிவந்த கலைமகள் நெஞ்சிலறைந்து அழுதாள். “இறைவா, படைப்பென்று இல்லையேல் புவனம் அழியும். அருள்க!” என்றாள். “தேவி, படைக்கப்பட்டவை அனைத்தும் மொழியிலுள்ளன. அப்படைப்பிலுள்ளான் படைத்தவன். உன்னிலிருந்து அவனை மீட்டுக்கொள்க!” என்றது முதற்பெரும்சிவம். தேவி கண்மூடி தன்னுள் நிறைந்த கலையில் இருந்து வெண்ணிற ஒளியாக பிரம்மனை மீட்டெடுத்தாள்.

நான்முகமும் அறிவிழியும் அமுதும் மின்னலும் ஏடும் மலரும் கொண்டு தோன்றிய பிரம்மன் வணங்கி “என்ன நிகழ்ந்ததென்றே அறிகிலேன், அண்ணலே. என்னை மீறிச்சென்று பிறிதொன்றாகி நின்றேன்” என்றான். “ஆம், படைப்பென்பதே ஒரு பிழைபாடுதான். பிழைக்குள் பிழையென சில நிகழ்வதுண்டு. தன்னை தான் மீறாது படைப்பு உயிர்கொள்வதில்லை. நிகழ்ந்தவை நினைவாக நீடிக்கட்டும். அவை இனிவரும் படைப்புக்குள் நுண்வடிவில் குடிகொள்வதாக!” என்றது சிவம்.

நிழலுருவாகத் தொடர்ந்துவந்த மேதாதேவி கண்ணீருடன் கைகூப்பி நின்றாள். “நான் வேதச்சொல்லுக்கு கட்டுப்பட்டவள். வேதமே என் செயலுக்குப் பொறுப்பாகவேண்டும்” என்றாள். “ஆம், நெறியுடன் இயையா பேரறிவென்பது வெறும் பித்தே. இனி என்றும் நீ அவ்வாறே ஆகுக!” என்றது சிவம். கைகூப்பி வணங்கி அவள் தன் இடம் மீண்டாள்.

அனைவரும் சென்றபின் முதற்சிவத்தின் முன் பேருருக்கொண்டு நின்றது பைரவசிவம். அதன் நிழல் வெண்ணிறமாக நீண்டு மடிந்து கிடந்தது. வெருண்டு நாய் முரல பைரவசிவம் திரும்பி நோக்கியபோது துயர்மிக்க விழிகளுடன் பெண்ணுருவம் கொண்டு எழுந்து கைகூப்பி நின்றதைக் கண்டது. “நான் நீங்களியற்றிய கொலையின் பழி. விடாது தொடரும் நெறிகொண்டவள்” என்றாள் அவள். “உங்கள் கையில் இருக்கும் அந்த மண்டை உதிருமிடத்தில் நிலைகொள்வேன்.”

திகைப்புடன் தன் கையிலிருந்த பிரம்மகபாலத்தை நோக்கி அதை கீழே வீச முயன்றது பைரவசிவம். அது விழாமல் கையுடன் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டது. கையை உதறியும் வீசியும் முயன்று தோற்றபின் அண்ணாந்து “இறையே, இக்கபாலத்துடன் நான் என்ன செய்வேன்?” என்று கூவியது.

“நீ செய்ய மறந்தது ஒன்றுண்டு. பிரம்மனின் தலைகொய்யும்போது அவனிருந்த பெருநிலை என்னவென்று அறிந்திருக்கவேண்டும்” என்றது சிவம். “தெய்வங்களை, பிரம்மத்தின் ஆணையை விலக்கும்படி அவனைப் பித்தெடுக்க வைத்த அப்பெருங்களியாட்டுதான் என்ன என்று நீ உற்றிருக்கவேண்டும்.” திகைப்புடன் “ஆம், அவ்விழிகளைத்தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அதிலிருந்த பேருவகையை எங்கும் நான் கண்டதில்லை” என்றது பைரவசிவம்.

“உண்ணும்போதும் புணரும்போதும் கொல்லலாகாதென்றனர். அவ்விரண்டைவிடவும் மேலானதொன்றில் இருந்தவனை நீ கொன்றாய்” என்றது சிவம். “அவ்விரண்டும் ஆகி அவற்றைக் கடந்தும் அமைந்த பெருநிலை அது. அதில் ஒரு துளியையேனும் அறியாது தீராது உன் பழி.” பைரவசிவம் துயர்கொண்டு தலைகுலுக்கி “ஆம், இன்றுணர்கிறேன். இறையே, நான் செய்த பிழையை அறிகிறேன். சொல்க, நான் மீளும் வழியென்ன?” என்றது.

“பிரம்மனின் தலைகொய்கையில் இருவிரல் நகங்களை மட்டும் பயன்படுத்தினாய். அதிலிருந்தது உன் ஆணவம். தெய்வமே என்றாலும் ஆணவம் இழிவே. அது அழியும் காலம் உன் கபாலம் கழன்றுதிரும்” என்றது சிவம். “அது உதிர்கையில் நீ அறிவாய், பிரம்மன் இருந்த பொங்குநிலையை. அதிலாடுகையில் நீ மீள்வாய்.” உடல்வீங்க விம்மி “எங்கு? நான் என்ன செய்யவேண்டும் அதற்கு?” என்றது பைரவசிவம். “மண்டை என்பது இரப்பதற்கே. இரந்துண்டு நிறையட்டும் உன் வயிறு. நீ நிறைவுகொள்ளும் இடத்தில் இது உதிர்வதாக!” என்றது தொல்சிவம்.

இரந்துண்டு பசிநிறைய இரவலன் உருவில் எழுந்தது பைரவசிவம். கரியநாய் தொடர்ந்துவர நோயில் ஒடுங்கிய உடலும் சூம்பிக்கூம்பிய கைகளும் ஒளிமங்கிய விழிகளுமாக பார்ப்புக்கொலைப் பேய் பெண்ணுருவில் உடன் வர உடும்புத்தோல் கங்காளத்தை மீட்டியபடி தேவர் வாழும் வீதிகளில் திரிந்தது. கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் மானுடரும்  வாழும் ஏழுலகங்களிலும் இல்லம்தோறும் இரந்துண்டது. சுவைகோடி அறிந்து, உணவுக்குவை கோடி தீர்ந்தபின்னும் அழியாத பெரும்பசியுடன் அலைந்தது. அதன் கங்காளத்தின் ஓசை இடித்தொடர் என முகிலடுக்குகளில் பெருங்காலமாக முழங்கிக்கொண்டிருந்தது.

இருநீர் பெருநதி கங்கை வளைந்தொழுகிய காசித்துறைக்கு  அது வந்தது. வரணாவும் அஸியும் வந்தணைந்த பிறைவடிவப் படித்துறையில் மூதாதையரை நீரூற்றி வானேற்றும்பொருட்டு அன்னம் அளிக்க அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்று  இரந்தது. கரியபேருடலும் சூலமும் கப்பரையும் கொண்டு கங்காளம் மீட்டிவந்த காட்டுருவனை அருவருத்தும் அஞ்சியும் விலகினர் மானுடர். அவர்கள் இட்ட உணவை அக்கணமே உண்டு கடந்த அவன் அழல்கண்டு திகைத்தனர். அவன் உடல் அணுகியபோது கொதிக்கும் தணல் என காற்று வெம்மைகொண்டதை உணர்ந்தனர். அவன் சென்றவழியில் கல்லுருகி தடம் பதிவதைக் கண்டு மருண்டனர்.

“அவன் யார்? விண்ணுருவன் வடிவாக முடிமன்னர் இருந்தாளும் இந்நகரில் எப்படி வந்தான்?” என்றனர். அவனை நிழல் எனத் தொடர்ந்த நாயை, நோயுருக்கொண்ட பெண்ணைக் கண்டு முகம் சுளித்தனர்.  அங்கே நீர்க்கரைநோக்கி அமைந்திருந்த சிற்றாலயத்திற்குள் ஆழியும் வெண்சங்கும் ஏந்தி  அமர்ந்திருந்த விண்ணவன் அவன் வருகையைக் கண்டான். ஆலயமுகப்பில் வந்து நின்று கங்காளத்தை முழக்கிய பைரவசிவத்தைக் கண்டு சினந்தெழுந்த விஸ்வக்சேனன் தன் தண்டுப்படையை ஓங்கியபடி தாக்கவந்தான். அக்கணமே தன் இடக்கை முப்புரிவேலால் அவன் தலையறுத்து நிலத்திட்டது பைரவசிவம்.

படிக்கட்டில் அமர்ந்திருந்தவர்கள் கூவியபடி எழுந்தனர். தலையற்ற உடல்கிடந்து துடிக்க செங்குருதி வழிந்து படியிறங்கியது. அமர்ந்திருந்த பீடத்திலிருந்து புன்னகையுடன் எழுந்த விண்ணவன் தன் படையாழியை எடுத்து வீச அது பைரவசிவத்தின் கழுத்துப்பெருநரம்பை வெட்டியது. துளையூற்றென சீறிப்பெருகிய  குருதி அவன் ஏந்திய கப்பரையில் நிறைந்தது. செவ்விழிகளால் அதை ஒருகணம் நோக்கியபின் ஏந்தி இதழ்சேர்த்து அருந்தினான் இரவலன். அருந்தும்தோறும் விடாய் மேலிட்டு மீண்டும் மீண்டும் உறிஞ்சினான். சுவையறிந்து அவன் உடலே நாவாகித் திளைத்தது.

ஊறி உண்டு மேலும் ஊற மேலும் உண்டு அவன் மேனி ஒளிகொண்டது. கங்காளநாதத்திற்கு இசைய அவன் கால் வைத்து நடமிடலானான். களிவெறி எழுந்து அவன் இடம்நிலை மறந்தான். விழிகளும் கைகளும் கால்களும் தாளத்தில் இசைய அவன் ஆடுவதை அங்கிருந்தோர் அஞ்சி கூடிநின்று நோக்கினர்.  அவன் கையிலிருந்த கபாலம் நிலத்தில் உதிர்ந்தது. முழந்தாளிட்டு மடிந்தமர்ந்த பார்ப்புக்கொலைப் பேய் படிக்கட்டில் பழந்துணியெனப் படிந்தமைந்தது. அவன் கைக்குவிகைகளில் விரல்மலர்கைகளில் ஆக்கமும் அழிவும் புரத்தலும் புரிதலும் எழுந்தமைந்தன. அவன் அருகே கையில் சிறிய வெள்ளித்தட்டுடன் நின்றிருந்த அழகிய முனிவன் புன்னகையுடன் “ஆம்!” என்றான்.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

தொடர்புடைய பதிவுகள்


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

$
0
0

6885832

அன்புள்ள ஜெ

ஆரம்ப கட்டக் கடிதப் போக்குவரத்திற்குப் பிறகு வாசிப்பே போதுமானதாக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அதுவே ஒரு உரையாடல்தான். மீண்டும் கடிதம் எழுத இதுபோன்ற நிகழ்வு குறித்த அறிவிப்பு வேண்டியிருக்கிறது.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்கிற அறிவிப்பிற்குப் பின்னர் வந்த கடிதங்களில் இருக்கும் ஒற்றுமையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். வாசகர்கள் அனைவரும் தங்களுக்கே விருது கிடைத்த பெருமிதத்தில் இருக்கிறார்கள். அல்லது தங்கள் வீட்டுப் பெரியவர் ஒருவருக்கு அளிக்கப்படவிருக்கும் கவுரவம் என்கிற வகையில் நோக்குகிறார்கள்.

2015 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வண்ணதாசன் அவர்களை முதல்முறையாக சந்தித்தேன். நண்பர் சாம்ராஜ் அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய கவிதைத் தொகுப்புகள் பலவற்றை வாசித்திருந்தாலும் அந்த சமயத்தில் அவருடன் எதையுமே பகிர்ந்து கொள்ளத் தோன்றவில்லை. உடனிருந்த கணங்களில் எதைக் குறித்தும் பேசாமல் உடனிருந்தால் போதும் என்கிற மனநிலை.

இம்முறை விஷ்ணுபுரம் விருது விழா முன்னெப்போதையும் விட சிறப்பான ஒன்றாக அமையவிருக்கிறது. ஆண்டுதோறும் விருதிற்கான மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. முன்னெடுத்துச் செல்லும் நண்பர்களுக்கு வழிகாட்டி உங்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.

அன்புடன்

கோபி ராமமூர்த்தி

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசனுக்கு விருது எனக்கே அளிக்கபப்ட்ட விருது. நான் எத்தனையோ முறை அவருக்கு போதிய கௌரவம் கிடைக்கவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன். வண்ணதாசனைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வருபவர் என் அலுவலகத்தில் முதலில் இருந்த கணேசய்யர். நான் அறியாப்பாலகனாக இங்கே வந்தபோது அவர்தான் என்னை சிரித்தபடி வரவேற்றார். சிறிய கிராமத்தில் பிறந்த எனக்கு அனைவருமே எதிரிகளாகத்தான் தெரிந்தார்கள். கணேசய்யர் அத்தனைபேரும் மனிதர்களே என்று எனக்குச் சொன்னார். காட்டினார் என்று சொல்லவேண்டும். ஒரு நட்பான புன்னகையால் வெல்லப்பட வேண்டியதுதான் இந்த உலகம் என்று எனக்குக் காட்டினார்

அதேபோலத்தான் எனக்கு வண்ணதாசன். அவர் இல்லாவிட்டால் என் குடும்பச்சூழல் காரணமாக நான் கசப்பு நிறைந்தவனாக இருந்திருப்பேன். போனவாரம் ரயிலில் ஒரு சின்னப்பாப்பா கையில் சிவப்புக்கண்ணாடி வளையல் போட்டிருந்தது. அதை வாங்கி கொஞ்சவேண்டும் என்று தோன்றியது. கைநீட்டியதுமே வந்தது. அந்த வளையலை முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன்

அப்போதுதான் தோன்றியது அந்தப்பரவசம் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. எனக்கு அது முக்கியம் என்று தோன்றுகிறது, அந்த அருமையான மனநிலை வாய்க்கிறது. அது மற்றவர்களிடமில்லை. அதை எனக்குக் கொடுத்தவர் வண்ணதாசன் அல்லவா?

என் ஆசானுக்கு வணக்கம். அவருக்கு விருது அளித்த உங்களுக்கும் வணக்கம்

கணேசமூர்த்தி

***

ஜெமோ

நான் உங்கள் வாசகன் அல்ல. சொல்லப்போனால் உங்களைப்பற்றி நிறையவே கசந்து எழுதியிருக்கிறேன். ஆணவமும் தோரணையும் எனக்குப் பிடித்தமானவை அல்ல. இருந்ததுபோல தெரியாமல் இருந்துவிட்டுச் செல்வதே நல்லது என்பதுதான் எனக்குப்பிடித்தமான கொள்கை

அதோடு நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் இந்துத்துவமும் பெரியாரிய வெறுப்பும் எனக்கு மிகவும் கசப்பு அளிப்பவை. நான் உங்கள் எழுத்திலே ஒருவரி கூட படித்தது இல்லை. சில கட்டுரைகளும் சிலகுறிப்புகளும் உதிரிவரிகளும்தான் வாசித்திருக்கிறேன். நீங்கள் என் ஆள் அல்ல. பெரியாரை நிராகரிக்கும் எவரும் எனது எழுத்தாளர் இல்லை

ஆனால் என் அன்புக்குரிய வண்ணதாசனுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதுக்காக உங்களை வாழ்த்துகிறேன். இதையெல்லாம் திராவிட இயக்கம் செய்திருக்கவேண்டும். விஷ்ணுபுரம் விருது அவருக்கு ஒரு பொருட்டு இல்லை. ஆனால் அவரது வாசகர்களாக எங்களுக்கு இது முக்கியம்

தமிழ்வேள் குமரன்

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசனின் கவிதை ஒன்று

ஒரு முடிவு செய்தது போல்

எல்லா இலைகளையும்

உதிர்த்துவிட்டிருந்தது செடி.

ஒரு முடிவும் செய்ய

முடியாதது போல்

செடியடியில் அசையாதிருக்கிறது

சாம்பல் பூனை

இந்த வரி என்னை அடிக்கடி தொந்தரவு செய்தது. என்ன என்றே தெரியாமல் ஒரு அனுபவம். அதைத்தான் நான் வண்ணதாசன் கதைகளில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை எந்த விமர்சனமும் சொல்லிவிடமுடியாது

அர்த்தமில்லாத அனுபவத்தை அளிக்கும் எழுத்துக்கள் வண்ணதாசன் எழுதுபவை. அவருக்கு விஷ்ணுபுரம் அளிப்பதில் மனநிறைவு

வாழ்த்துக்கள்

செண்பகா

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வசுதைவ குடும்பகம்- கடலூர் சீனு

$
0
0

 

இனிய ஜெயம்,

 

இன்று காலை செய்திகளில் இக் காணொளி கண்டேன்.   தலித் மாணவன் என கண்டிருந்தது.  தலித் பிரச்னைகள் என்றாலே அது ஒரு டெம்ப்ளட், அதில் பொங்கும் அறப்பொங்கல்கள் ஒரு பேஷன்.  கல்லறைப் பிணத்துக்கு ஒப்பான அறிவு மற்றும் உணர்வு சமநிலையுடன் இதை அணுகவேண்டும் என எனக்கே உரைத்துக் கொண்டு இக் காட்சியை மீண்டும் கண்டேன்.    ஒரு மனிதனை சக மனிதர்கள் அடிக்கிறார்கள். கொல்லப்பட வேண்டிய வெறி நாயை அடிப்பது போல அடிக்கிறார்கள்.  அதன் மேல் எந்த விஷயம் பேசப் பட்டால்தான் என்ன?   என் தம்பி. அடி வாங்கும் அதே தம்பி போலத்தான் இருப்பான். என் தம்பி என் தம்பி என்றே மனம் பதறியது.

 

 

என் தம்பிக்கு தொலைபேசினேன்,  உலகின் மாகா திமிர் பிடித்த ஜந்துக்களில் அவனும் ஒருவன்.  அடி குடுக்குற ஆளுங்க யாரும் உன் அண்ணன் தம்பி இல்லையா என நக்கலாக கேட்டான்.

 

வசுதைவ குடும்பகத்தை நினைத்துக் கொண்டேன். மானுடம் மொத்தமும் பாடையில் ஏறுவதற்குள் அங்கே சென்று சேர்ந்துவிடும் என எனக்கு நானே அறுதல் சொல்லிக் கொண்டேன்.

 

 

வெறுமனே மண்டியிட வந்திருக்கிறேன்
நீ ஒரு அரசனாகவோ
அரக்கனாகவோ இரு
ஆட்சேபணையில்லை
நான் ஒரு எளிய மனிதனாக
இருந்துவிட்டு போகிறேன்

என்னை தலை வணங்கவும்
மண்டியிடவும் செய்வதுதான்
உன் நோக்கம் எனில்
அப்படியே செய்வதில்
எனக்கு புகார் ஒன்றுமில்லை
தலைகள் வணங்கவும்
முழங்கால்கள் மண்டியிடவுமே
படைக்கப்படுகின்றன

ஆனால் நீ மண்டியிடச் செய்கிற ஒருவனுக்கு
நீ கடைசியில் ஏதாவது தர வேண்டும்
என்பதுதா உலகத்தின் நியதி
அதுதான் மண்டியிடச் செய்வதற்கான
உன் அதிகாரத்தை நிலை நிறுத்தும்
ஆனால் எனக்கு தேவையான
எதுவும் உன்னிடம் இல்லை

உன்னிடம் ஏராளமான பரிசுகள் இருக்கின்றன
நீ எனக்கு எதையும் தர அனுமதிக்க மாட்டேன்
அதைவிட துயரம் உனக்கு வேறு எதுவும் இல்லை

நான் வெறுமனே உன்னிடம்
மண்டியிடுகிறேன்
ஒருவனை
வெறுமனே மண்டியிடச் செய்வதற்காக
இந்த உலகம் உன்னை இகழும்
என்றுதானே
மண்டியிடும் ஒருவனைக் கண்டு
இவ்வளவு பயப்படுகிறாய்

-மனுஷ்ய புத்திரன்

இன்று வாசித்த கவிதை.  எனது இன்றைய நாளுக்கான கவிதை.

 

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சித்துராஜ் பொன்ராஜ், சிங்கப்பூரியம்

$
0
0

sithuraj-ponraj

ஜெ,

என் பெயர் வேண்டாம். இங்கே நான் பிழைக்க முடியாது. நான் இங்கே சில்லறைக்கூலிக்கு வேலைசெய்ய வந்தவன். புதுக்கோட்டை மாவட்டம்.

திரு சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் கதைகளைப்பற்றி பாராட்டி எழுதியிருந்தீர்கள். நானறிந்து அடுத்த தலைமுறையில் நீங்கள் இத்தனை பாராட்டிய ஓர் எழுத்தாளர் வேறு யாரும் கிடையாது.

ஆனால் நீங்கள் அவர் ஃபேஸ்புக்கில் என்ன எழுதினார் என்று பார்த்தீர்களா? நீங்கள் அவருக்குத் தமிழ் முறையாகத் தெரிந்திருக்காது என்று எழுதியிருந்தீர்கள். அவர் ஒரு கடிதமும் உங்களுக்கு எழுதியிருந்தார். அதற்கு நீங்கள் அப்படி நீங்கள் ஏன் ஊகித்தீர்கள் என்றும் எழுதியிருந்தீர்கள்

அதாவது உங்களை வாசித்தவராகச் சொல்லும் அவர் உங்களை நேரில் சந்தித்தபோது தமிழிலே பேசவில்லை. நீங்கள் அறிமுகம் செய்துகொண்டபோதுகூட கெத்தாகப் பேசியிருக்கிறார். அவருக்குத் தமிழ் தெரிந்திருக்காதுபோல என நீங்கள் நினைத்துக் கொள்ளும் அளவுக்கு ‘பழகியிருக்கிறார்’

அவர் நீங்கள் எழுதியபிறகு ஃபேஸ்புக்கில் உங்களைப்பற்றி ஏகப்பட்ட நக்கல்களும் கிண்டல்களுமாக எழுதியிருந்தார். பொதுவாக சிங்கப்பூரியன்களின் மனநிலை என்பது ‘நீ பிழைக்கத்தானே வந்தாய். அந்த வேலையைப்பார். விமர்சனமெல்லாம் செய்யாதே. பொத்திக்கிட்டு போ’ என்பதுதான். அதே மனநிலையில் அதேபோன்ற வரிகளைத்தான் சித்துராஜ் எழுதியிருந்தார்

அதாவது ’நீங்கள் சிங்கப்பூர் அரசின் ஊதியம் பெற்று வேலைக்கு வந்தவர். இங்கே வீட்டுவேலைக்கு வரும் தமிழர்களைப்போலத்தான் நீங்களும். சொன்னவேலையைச் செய்து பணத்துடன் திரும்பப்போகவேண்டியதுதானே, என்ன விமர்சனம் வேண்டிக்கிடக்கிறது?’ என்பதுதான் அவரது நக்கல்களின் சாராம்சம்

அதை இந்தியாவிலுள்ள உங்கள் எதிரிகளும் உண்மையிலேயே கூலிகொடுத்தால் பாராட்டுபவர்களும் மாய்ந்து மாய்ந்து லைக் போட்டு மகிழ்ந்தார்கள். அதற்குப்பிறகுதான் நீங்கள் எழுதுகிறீர்கள். அவர் பெரிய எழுத்தாளராக வருவார் என்கிறீர்கள்.

என் கேள்வி இதுதான். இலக்கியவாதிமேல் இலக்கியம் மேல் கொஞ்சம் கூட மதிப்பில்லாத ஒருவர், தாய்நாட்டுத் தமிழர்கள் மேல் இப்படி ஒரு இளக்காரமான எண்ணம் கொண்ட ஒருவர் எப்படி தமிழர்களுக்குரிய எழுத்தாளராக ஆகமுடியும்? எப்படி அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கமுடியும்? நல்லமனிதராக இல்லாதவர் எப்படி நல்ல எழுத்தை உண்டுபண்ண முடியும்?

கே.

*

அன்புள்ள கே,

நான் ஃபேஸ்புக் வாசிப்பதில்லை. அவர் அப்படி கிண்டலோ நக்கலோ செய்திருந்தால் அது ஃபேஸ்புக்கின் கொண்டாட்டங்களில் ஒன்று.அங்கே எல்லாமே நக்கல்தான் என்றார்கள். அதற்குமேல் அச்சொல்களுக்கு முக்கியத்துவமேதும் இல்லை. ஃபேஸ்புக்கில் எவரோ என்னை வசைபாடாத, கிண்டல் செய்யாத ஒருநாள் கூட கடந்து செல்வதில்லை என்றார்கள் நண்பர்கள். குறைந்த பட்சம் அதில் என்மேல் ஒரு கவனம் உள்ளது. அது நல்லதுதானே?

நான் என் கட்டுரைகளில் சொல்லும் விஷயம் ஒன்றுதான், உண்மைதான் இலக்கியத்தின் அழகு. அரசியல் சரிகள், ஒழுக்கநிலைகள் அல்ல. சிங்கப்பூரியர்களுக்கு தமிழர்கள் கூலிக்கு வருபவர்கள் என்னும் இளக்காரம் இருந்தால், அது சித்துராஜிடம் இயல்பாகவெளிப்பட்டால் அது மிகச்சரியான ஒரு பிரதிநிதித்துவம்தானே? அவர் அதை மறைத்தோ கட்டுப்படுத்தியோ எழுதினால்தான் தவறு.

ஏனென்றால் இலக்கியம் ஒரு வாக்குமூலம்தான். தன்னியல்பான வெளிப்பாடு என அதைத்தான் சொல்கிறோம். எழுத்தாளன் ஒரு சமூகத்தின் ’சாம்பிள்’ ஆக இருக்கும்போதே முக்கியத்துவம் பெறுகிறான். பொய்யான ஒழுக்கம் , அரசியல் சரிகளை வெளிப்படுத்தும்போது அல்ல.

அவர்கள் அப்படி உணர்கிறார்கள், அப்படி தங்கள் எழுத்தில் வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அது ஏன், எந்தெந்தப் பண்பாட்டுக் காரணிகளால் அவ்வாறு நிகழ்கிறது என்று ஆராய்வதே இலக்கிய வாசகனின் மனநிலை. அதனால் புண்படுவதும் சரி ,அதன்பொருட்டு அவ்வெழுத்துக்களை விலக்குவதும் சரி, அவ்வாறெல்லாம் எழுதக்கூடாது என்று அவரிடம் சொல்வதும் சரி அவன் செய்யக்கூடாதவை. இலக்கியத்திற்கு எதிரானவை.

சித்துராஜ் பொன்ராஜின் எழுத்தில் சிங்கப்பூரியத் தனித்தன்மை ஒன்று தெரிந்தது. அது எப்படி வெளிப்பட்டாலும் தமிழில் உள்ளவரை தமிழிலக்கியத்திற்கு முக்கியமானதே. அந்த சிங்கப்புயுரிய அழகியலைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வாசிக்கவும் ஆராயவும் பாராட்டவும் வேண்டும். அவர்கள் தமிழகத்தை வெறுத்தாலோ, அல்லது நம்மை இளக்காரம் செய்தாலோ அது நம் மதிப்பீட்டில் மாறலாகாது.

எது அவர்களால் உண்மையில் உணரப்படுகிறதோ அதை அவர்கள் எழுதட்டும். தமிழகத்தைப் பார்த்து எழுதுவது, பொதுவான விஷயங்களை எழுதுவதுதான் பிழையானது. அவர்களின் உள்ளம் உண்மையாக வெளிப்படும்வரை அதை இலக்கியமென்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை. ஏனென்றால் எனக்கு இலக்கியம் என்னும் இயக்கம்மீது ஆழமான நம்பிக்கை உண்டு.

நம்மை விட அவர்கள் முன்னேறிய தேசம். அது அளிக்கும் தன்னம்பிக்கையோ மேட்டிமைத்தன்மையோ அவர்களுக்கு இருக்கலாம். அது இயல்பு. அதைவிட பலமடங்கு மேட்டிமைத்தனம் அமெரிக்காவில் குடியேறிய நம்மூர்த்தமிழர்களிடம் உள்ளது. “யூ இண்டியன்ஸ் இப்பவும் நீங்க மாறலையா?” என்று நம்மிடம் கேட்கிறார்கள். அதெல்லாம் வரலாற்றின் சில இயல்புகள் என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்

நாம் வேறுதேசம், வேறுசூழல். இங்கு நாம் வரிசைகளில் காத்திருந்து, பேருந்துகளில் முண்டியடித்து, வேலைச்சுமைகளுக்கு நடுவே எழுதி, வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் பெற்று, நன்றிக்கடிதத்தையே ராயல்டியாக வாங்கி பூரித்து இலக்கியம்படைக்றோம். அவர்களுக்கு பலமடங்கு வாய்ப்புகள் உள்ளன. எழுத ,வாசிக்க ,விவாதிக்க . சர்வதேசக் கருத்தங்களுக்குச் செல்லலாம். உலகளாவிய பதிப்பகங்களில் இடம்பெறலாம்.

அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் அவர்கள் மொக்கையாக எழுதும்போது சீற்றம் வருகிறது. அதற்குக்காரணம் தமிழ்மேல் நமக்கிருக்கும் ஈடுபாடே. அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி சித்துராஜ் போன்றவர்கள் மேலே சென்றால் தமிழ்மேல் கொண்ட ஈடுபாட்டால் அதை தமிழின் வெற்றியென்றே கொள்ளவேண்டும்.அவர்கள் எழுதட்டும்

ஜெ

 

சித்துராஜ் பொன்ராஜ் கதைகளைப்பற்றி….

 

சித்துராஜ் பொன்ராஜ் கடிதம்

 

https://chajournal.wordpress.com/2016/08/29/addiction-sithuraj/

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சின்ன வயசு பாத்தேளா?

$
0
0

மலையாளத்தில் மிமிக்ரி போல தமிழில் டப்மாஷ் ஒரு பெரிய கலையாக வளர்ந்து வந்திருக்கிறது. மலையாளத்தின் நடிகர்களில் பலர் மிமிக்ரியில் இருந்து வந்தவர்கள். ஜெயராம், ஷம்மி திலகன், சலீம்குமார், ஜெயசூரியா, திலீப், லால்… அதேபோல நடிகர்கள் இதிலிருந்தும் வரக்கூடும்.

 

ஆனால் பெரிய சிக்கல் இது சினிமாநடிப்பல்ல என உணர்வது. ‘டைமிங்’ என்பதை மட்டுமே இந்த நடிப்பிலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். ‘செய்வது’ என்பதை முழுமையாகவே தவிர்த்துவிடவேண்டும். நவீன சினிமா நடிப்பு என்பது ’இருப்பது’ ‘புழங்குவது ‘ஆவது’ தான். ஒன்றை  செய்துகாட்ட ஆரம்பித்துவிட்டாலே இருநூறுமடங்கு பெரிய வெள்ளித்திரை அந்நடிகனின் உள்ளம் அதில் இல்லை என்பதை தெளிவாகக் காட்டிவிடும்.

 

நடிக்காமல் சும்மாநின்றால்கூட இன்றைய சினிமா மன்னிக்கும். செய்வதை தாங்கிக்கொள்ளவே முடியாது. தமிழ் சினிமா இயல்பாக புழங்கக் கற்ற நடிகர்களுக்காக தேடிக்கொண்டே இருக்கிறது. வருபவர்கள் எல்லாமே செய்துகாட்டுகிறார்கள். பல படங்களுக்காக நானே எப்படியும் நூறுபேரை நேரில் சந்தித்திருப்பேன். இந்த வேறுபாட்டை அவர்களுக்குச் சொல்லிப்புரியவைக்க முடியாது.இந்தச் சின்ன எல்லையை இவரைப்போன்றவர்கள் கடந்தார்கள் என்றால் நல்லது.

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4

$
0
0

[ 7 ]

அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டின் அழகிய காலையொன்றில் தொலைவில் மரம்செறிந்த காட்டுக்குள் ஒரு கங்காளத்தின் ஒலி கேட்கத் தொடங்கியது. அப்போது அங்கு வைதிகர் நீராடி எழுந்து புலரிக்கு நீரளித்து வணங்கிக்கொண்டிருந்தனர். பெண்டிர் அவர்களுக்கான உணவு சமைக்க அடுமனையில் அனலெழுப்பிக்கொண்டிருந்தனர். தொழுவத்தில் பால்கறந்தனர் முதிய பெண்கள். சிலர் கலங்களில் மத்தோட்டினர். அருகே வெண்ணைக்காக அமர்ந்திருந்தனர் இளமைந்தர். முற்றத்தில் ஆடினர் சிறுவர். மலர்கொய்து வந்தனர் சிறுமியர். இளையோர் சிலர் விறகு பிளந்தனர். சிலர் ஓலைகளில் நூல்களைப் பொறித்தனர்.

தூயது சௌகந்திகத்தின் காலை. தூய்மையில் விளைவதே மெய்மை என்று அத்ரி முனிவர் அவர்களுக்கு கற்பித்தார். விலக்குவதன் வழியாக விளைவதே  தூய்மை. மூவேளை நீராடி உடலழுக்கு களைதல். அனலோம்பி மூச்சை நெறிப்படுத்தல். வேதமோதி அகத்தை ஒளிகொள்ளச்செய்தல். சௌகந்திகம் சூழ்ந்திருந்த பெருங்காட்டை முற்றாக விலக்கி வேலியிட்டு தன்னைக் காத்தது. வேதச்சொல் கொண்டு தன்னைச் செதுக்கி கூர்மையாக்குக என்றார் அத்ரி. வாழைப்பூ என தன்னை உரித்து உரித்து தேன்மலர் கொள்க என்றார்.

இனிய புலரியை அதிரச்செய்த கங்காள ஒலியைக் கேட்டு அவர்கள் திகைப்புகொண்டனர்.  முதலில் அது உக்கில்பறவையின் உப்பலோசை என்று தோன்றியது. சீரான தாளத்தால் அது மரங்கொத்தியோ என ஐயுற்றனர் மாணவர். தொலைதேரும் கருங்குரங்கின் எச்சரிக்கையோசை என்றனர் சில மாணவர். இளையோன் ஒருவன் “அது கங்காளத்தின் ஓசை” என்றான்.

அவர்கள் அதை முன்பு கேட்டிருக்கவில்லை. அவனைச் சூழ்ந்துகொண்டு “அது என்ன?” என்றனர். “மலைவேடர் கையிலிருக்கும் சிறுதோல்கருவி அது. விரல்போன்ற சிறுகழியால் அதை இழும் இழுமென மீட்டி ஒலியெழுப்புவர். கங்காளம் என்பது அதன் பெயர். அவர்களின் கையிலமைந்த நாவு அது என்பார்கள் என் குலத்தவர். கதைகளையே அவர்களால் அவ்வொலியால் சொல்லிக்கொள்ள முடியும்” என்று அவன் சொன்னான். “அது விம்மும். ஏங்கும். அறுவுறுத்தும். அறைகூவும்.”

“எங்கள் மலையடிவாரத்து ஊரில் கங்காளத்தின் திரளொலி எழுந்தால் அனைவரும் அஞ்சி ஓடிச்சென்று ஒளிந்துகொள்வர். கரிய திண்ணுடலுடன் மலையிறங்கிவரும் வேட்டுவர்கள் ஊர்புகுந்து சாவடியில் நிலைகொண்டால் ஊர்ப்பெரியோர் கூடி அரிசியும் பொன்பணமும் பிறபொருட்களுமாகச் சென்று பணிந்து மலைக்கப்பம் கொடுத்து வணங்குவார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு ஊரை வாழ்த்தி வெளியேறுகையில் ஊர்முகப்பில் நின்றிருக்கும் மரத்தின் பட்டையில் தங்கள் குலக்குறியை பொறித்துச்செல்வார்கள்.”

“தனிவேட்டுவர் மலையிறங்கும் ஒலி ஆறுதலளிப்பது. அவர்களை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச்சென்று எங்கள் கன்றுகளை காட்டுவோம். அவற்றின் வாய்கட்டி வைத்திருக்கும் மலைத்தெய்வங்களை விடுவித்து மீண்டும் புல்கடிக்கச் செய்ய அவர்களால் முடியும். அணங்குகொண்டு அமர்ந்திருக்கும் கன்னியரை புன்னகை மீளச்செய்யவும் நோய் கொண்டு நொய்ந்த குழவியரை பால்குடிக்க உதடுகுவியச் செய்யவும் அவர்களால் முடியும்.”

அங்கு அதுவரை கங்காளர் எவரும் வந்ததில்லை. “இது வைதிகர் குருகுலம். இங்கு எவருக்கும் கொடையளிப்பதில்லை. இத்திசையில் எங்கும் வேட்டுவர் இல்லங்களும் இல்லை” என்றார் கனகர்.  ”வேதம்நாடி வரும் படிவரும் வைதிகருமன்றி பிறர் இதனுள் புக ஒப்புதலுமில்லை.” பிரபவர்  ”அவன் எதன்பொருட்டு வருகின்றான் என நாம் எப்படி அறிவோம்?” என்றார். தசமர் “அயலது எதுவும் தீங்கே” என்றார்.

“அவனுடன் நாய் ஒன்றும் வருகிறது” என்றான் ஓர் இளையோன்.  “எப்படி நீ அறிவாய்?” என்றனர் அவனைச் சூழ்ந்து நின்ற பெண்கள். “புள்ளொலி தேரும் கலையறிந்தவன் நான்” என்று அவன் சொன்னான். “அவனுடன் இன்னொருவரும் வருகிறார். அது பெண் என்கின்றது புள்” என்றான். “காட்டை ஒலியால் அறிந்துகொண்டிருக்கிறாய். நோயும் கொலையும் வாழும் இக்காடு அவ்வொலியால் உன்னையும் வந்தடைகிறது. காடுவாழும் உள்ளத்தில் வேதம் நிற்பதில்லை” என்றார் அவன் ஆசிரியரான கனகர்.

அவர்கள் குடில்தொகையின் வாயிலென அமைந்த மூங்கில்தூண்களின் அருகே காத்து நின்றனர். இளையோர் இருவர் முன்சென்று அவனை எதிர்கொள்ள விழைந்தனர். மூத்தோர் அவர்களை தடுத்தனர். “கொல்வேல் வேட்டுவன் அவன் என்றால் எதிரிகளென உங்களை நினைக்கலாம். அந்தணரையும் அறவோரையும் அறியும் திறனற்றவனாகவே அவன் இருப்பான்” என்றார் சூத்ரகர். அச்சமும் ஆவலும் கொண்டு ஒருவர் கைகளை ஒருவர் பற்றியபடி அங்கே காத்து நின்றிருந்தனர்.

கங்காளத்தின் ஓசை வலுத்து வந்தணைந்தது. மரக்கூட்டங்களிலிருந்து பறவைகள் எழுந்து கலைந்து பறந்தன. கொல்லையில் நின்றிருந்த பசுக்கள் குரலெழுப்பலாயின. அவன் மரக்கூட்டங்களுக்கு நடுவே தோன்றியதும் இளையோர் அஞ்சிக் கூச்சலிட்டபடி பின்னடைந்தனர். கரிய நெடிய உடலில் ஆடையின்றி வெண்சாம்பல்பொடி பூசி அவன் வந்தான். அவன் இடைக்குக் கீழே ஆண்குறி சிறுதுளை வாய்கொண்ட செந்நிறத் தலைபுடைத்து விரைத்து நின்றது. அதில் வேர்நரம்புப் பின்னல்கள் எழுந்திருந்தன. சினம் கொண்ட சுட்டு விரல் போல. சீறிச் சொடுக்கிய நாகம் போல. யானைகுட்டியின்  துதிமுனை போல. நிலம் கீறி எழுந்த வாழைக்கன்றின் குருத்துபோல.

சடைத்திரிகள் தோள்நிறைத்து தொங்கின. வேர்புடைத்த அடிமரம்போன்ற கால்கள் மண்ணில் தொட்டுத் தாவுவதுபோல் நடந்தன. வலத்தோளில் தோல்வாரில் மாட்டப்பட்ட முப்புரிவேல் தலைக்குமேல் எழுந்து  நின்றிருந்தது. இடக்கையில் மண்டைக்கப்பரை வெண்பல் சிரிப்புடன் இருக்க இடைதொட்டுத் தொங்கிய கங்காளத்தை வலக்கையின் சிறுகழியால் மீட்டியபடி நடந்து வந்தான். அவனுக்குப் பின்னால் நிலம் முகர்ந்தும், காற்றுநோக்கி மூக்கு நீட்டியும், விழிசிவந்த கரியநாய் வால் விடைக்க தொடர்ந்து வந்தது. அப்பால் வெண்ணிற ஆடையில் உடல் ஒடுக்கி நீண்ட கூந்தல் தோளில் விரிந்திருக்க நிலம்நோக்கி தலைதாழ்த்தி நோயுற்ற முதியவள் சிற்றடி எடுத்துவைத்து வந்தாள்.

பதறி ஓடி உள்ளே வந்து அவன் உள்ளே புகாதபடி மூங்கில்படலை இழுத்துமூடினர் இளையோர். அவன் மூடிய வாயிலருகே செஞ்சடைவழிந்த தலை ஓங்கித்தெரிய வந்து நின்று “பிச்சாண்டி வந்துள்ளேன். நிறையா கப்பரையும் அணையா வயிறும் கொண்டுள்ளேன்” என்றான். கங்காளம் குரலானது போலிருந்தது அவ்வோசை. “இரவலனுக்கு முன் மூடலாகாது நம் வாயில். திறவுங்கள்!” என்றார் முதியவராகிய சாம்பர். “அவன் காட்டாளன். இது வைதிகர் வாழும் வேதநிலை” என்றார் கனகர். “அவன் கொலைவலன் என்றால் என்ன செய்வது?” என்றார் சூத்ரகர். “எவராயினும் இரவலன் என்றபின் வாயில் திறந்தாகவேண்டும் என்பதே முறை” என்றார் சாம்பர். தயங்கிச்சென்ற இளையோன் ஒருவன் வாயில் திறக்க அவன் நீள்காலடி எடுத்துவைத்து உள்ளே புகுந்தான்.

அத்தனை விழிகளும் அவனையே நோக்கி நிலைத்திருந்தன. அத்தனை சித்தங்களிலும் எழுந்த முதல் எண்ணம் ‘எத்தனை  அழுக்கானவன்! எவ்வளவு அழகற்றவன்!’ என்பதே. தோல்வாடையும் ஊன்வாடையும் மண்மணமும் இலைமணமும் கலந்து காட்டுக்கரடிபோல் அவன் மூக்குக்கு தெரிந்தான். கங்காளத்தின் ஓசை குடில்சுவர்களைத் தொட்டு எதிரொலித்து சௌகந்திகக்காட்டுக்குள் பரவியது. நோயுற்றவள் சுகந்தவாகினிக்கு அப்பால் தரையில் குனிந்தமர்ந்தாள். நாய் அவளருகே கால்மடித்து செவிகோட்டி மூக்குநீட்டி கூர்கொண்ட முகத்துடன் அமர்ந்தது.

அவன் உள்ளே நுழைந்தபோது தேவதாருக்காட்டுக்குள் நிறைந்திருந்த நறுமணத்தை ஊடுருவியது மதம்கொண்ட காட்டுவிலங்கின் நாற்றம். தொழுவத்துப் பசுக்கள் கன்றுகளைக் கண்டவைபோல குளம்புகள் கல்தரையில் மிதிபட, கொம்புகளால் தூண்களையும் அழிகளையும் தட்டி நிலையழிந்து, முலைகனத்து குரலெழுப்பின. கூரையேறிய சேவலொன்று தலைசொடுக்கி சிறகடித்துக்  கூவியது. வளர்ப்புக்கிளிகள் ‘அவனேதான்! அவனேதான்!’ என்று கூவிச்சிறகடித்து உட்கூரையில் சிறகுகள் உரச சுற்றிப்பறந்தன.

அவ்வோசைகள் சூழ அவன் நடந்து முதல் இல்லத்தின் முன் சென்றுநின்றான். கங்காளத்தின் தாளத்துடன் இயைய “பசித்துவந்த இரவலன், அன்னையே. உணவிட்டருள்க, இல்லத்தவளே!” என்று கூவினான்.

அவனை சாளர இடுக்குகளினூடாக பெண்கள் நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் குரல்கேட்டு பதுங்கியிருக்கும் விலங்கின் உடலென அக்குடில் அதிர்வுகொண்டது. அதன் மூடிய கதவுகளின் இடுக்குகள் விதும்பின. அவன் மும்முறை குரலெழுப்பியதும் கதவு மெல்லத்திறக்க மேலாடைகொண்டு மூடிய தோளை ஒடுக்கி கால்கள் நடுங்க முனிவர்மனைவி முறத்தில் அரிசியுடன் வெளியே வந்தாள். தலைகுனிந்து நிலம்நோக்கி சிற்றடி வைத்து வந்து படிகளில் நின்று முறத்தை நீட்டினாள். அவன் தன் கப்பரையை அவளை நோக்கி நீட்டி புன்னகையுடன் நின்றான்.

அவளுடைய குனிந்த பார்வை திடுக்கிட்டு நிமிர்ந்தது. அவன் விழிகளை சந்தித்ததும் அவள் கைகள் பதற முறம் சரிந்து அரிசி சிந்தலாயிற்று. தன் கப்பரையாலேயே அவ்வரிசியை முறத்துடன் அவன் தாங்கிக்கொண்டான். கப்பரை விளிம்பால் முறத்தை மெல்லச்சரித்து அரிசியை அதனுள் பெய்தபோது அவன் விழிகள் அவள் உடலிலேயே ஊன்றியிருந்தன. விழி தழைத்திருந்தாலும் முழுதுடலாலும் அவனை நோக்கிய அவள் மெய்ப்புகொண்டு அதிர்ந்தாள். சுண்டிச்சிவந்த முகத்தில் கண்கள்  கசிந்து வழிய, சிவந்து கனிந்த இதழ்கள் நீர்மையொளி கொள்ள, உயிர்ப்பின் அலைக்கழிப்பில் கழுத்துக்குழிகள் அழுந்தி எழ, முலைக்குவைகள் எழுந்து கூர்கொண்டு நிற்க எங்கிருக்கிறோம் என்றறியாதவள் போலிருந்தாள்.

“நலம் திகழ்க இல்லாளே! உன் குலம் பெருகுக! கன்றுடன் செல்வம் தழைக்க! சொல்கொண்டு பெருகுக உன் கொடிவழி!” என்று சொல்லி கங்காளன் திரும்பியபோது கனவிலென காலெடுத்து வைத்து அவளும் அவனைத் தொடர்ந்துசென்றாள். அவள் இல்லத்திலிருந்து கைநீட்டியபடி வெளியே வந்த இன்னொருத்தி “என்ன செய்கிறாய், வாமாக்‌ஷி? எங்கு செல்கிறாய்?” என்று கூவ அவன் திரும்பி நோக்கி மெல்ல நகைத்தான். வெறிகலந்த விழிகள். பித்தெழுந்த சிரிப்பு. அவள் மேலாடை நழுவ பெருமுலைகள் இறுகி மாந்தளிர்நிற காம்புகள் சுட்டுவிரல்களென எழுந்து நின்றன. விம்மி நெஞ்சோடு கைவைத்து அழுத்தி ஒருகணம் நிலைமறந்தபின் அவளும் உடனிறங்கி அவனுடன் சென்றாள்.

அவன் கங்காளத்தை மீட்டியபடி இல்லங்கள்தோறும் சென்றான். அவன் செல்வதற்குள்ளாகவே ஆடை நெகிழ்ந்துருவிச் சரிய, விழிகளில் காமப்பெருக்கு செம்மைகொள்ள, விம்மும் முலைகளை தோள்குறுக்கி ஒடுக்கியும், கைகொண்டு இறுக்கியும், தொடைசேர்த்து உடல் ஒல்கியும் முனித்துணைவியர் அன்னத்துடன் திண்ணைகளுக்கு வந்தனர். உறவுத்திளைப்பிலென குறுவியர்வை கொண்ட நெற்றிகள். பருக்கள் சிவந்து துடித்த கன்னங்கள். கனிவு கொண்டு சிவந்த இதழ்கள். மூச்சு அனல்கொள்ள விரிந்தமைந்த மூக்குத்துளைகள். சுருங்கி அதிர்ந்த இமைகளுக்குள் பால்மாறா பைதல்நோக்குபோல் ஒளியிழந்து தன்னுள் மயங்கிய  விழிகள்.

குடிலுக்குள் இருந்து அஸ்வக முனிவர் ஓடிவந்து “என்ன செய்கிறாய், மாயாவியே? நீ யார்?” என்று கூவினார். கிருபர் “தடுத்து நிறுத்துங்கள் அவனை! நம் குலக்கொடிகளை மயக்கி கொண்டுசெல்கிறான் அவன்” என்றார். அவன் கங்காளத்தின் தாளம் மாறுபட்டது. குடில்களில் இருந்து குழந்தைகள் கூவிச்சிரித்தும் துள்ளியார்த்தும் அவனுக்குப்பின் திரண்டுசென்றன. அவனை நோக்கி மலர்களைப் பறித்து வீசின. அவனுடன் செல்ல முண்டியடித்தன. கங்காளம் அழைக்க வேதம் பயின்ற இளையோர் தங்கள் கையிலேந்திய பணிக்கருவிகளை அங்கேயே உதறி அவனைத் தொடர்ந்தனர். சுவடிகளை உதறி கல்விநிலைகளில் இருந்து எழுந்து அவன் பின்னால் ஏகினர்.

வேள்விச்சாலைக்குள் பன்னிரு முனிவர் சூழ அமர்ந்து வேதமோதி அவியிட்டுக்கொண்டிருந்த அத்ரியின் முன் சென்று நின்ற கருணர் மூச்சிரைத்தபடி “முனிமுதல்வரே, எண்ணவும் இயலாதது நிகழ்கிறது. எங்கிருந்தோ வந்த கிராதன் இதோ நம் இல்லப்பெண்களையும் மாணாக்கர்களையும் இழுத்துக்கொண்டு செல்கிறான். முடிவற்ற மாயம் கொண்டிருக்கிறான்… எழுந்து வருக! நம் குருநிலையை காப்பாற்றுக!” என்று கூவினார். “இங்கிருந்தே வெல்வேன் அவன் மாயத்தை” என்று கூவியபடி அவியிலிட தர்ப்பை ஒன்றைக் கையிலெடுத்த அத்ரி அது பொசுங்கி எரிந்து தழலாவதைக் கண்டார்.

சினத்தால்  உடல் அதிர எழுந்து அவர் வெளியே சென்று நோக்கியபோது கரிய திண்ணுடலில் தசைத்திரள் அதிர கங்காளம் மீட்டியபடி குடில்நிரை நடுவே கடந்துசென்ற காட்டாளனைக் கண்டார். “யாரவன்?” என்று கூவினார். “முன்பு இவன் இங்கு வந்துள்ளான். இவன் காலடிகளை நான் முன்பும் எங்கோ கண்டுள்ளேன். இவ்வோசையையும் நான் அறிவேன்.”  கர்த்தமர் “அடர்காட்டின் இருளில் இருந்து வந்தான். வெண்சாம்பல் அணிந்த காலன். அவன் நாயும் துணைவந்த நோயும் அங்கே அமர்ந்துள்ளன” என்றார்.

கையிலிருந்த வேள்விக் கரண்டியைத் தூக்கியபடி “நில்! நில்!” என்று கூவினார் அத்ரி. அவன் திரும்பி அரைக்கணம் நோக்கியபோது அவ்வெறிச்சிரிப்பின் துளியைக் கண்டு திகைத்து பின்னடைந்தார். சௌகந்திகக் காடே அவன் சூர்மணத்தை சூடிக்கொண்டிருந்தது. ஈரமண் மணம், பழைய வியர்வையின் மணம், புதிய விந்துவின் மணம். “யார் இவன்? யார் இவன்?” என்று கூவியபடி அவனைத் தொடர்ந்தோடினார். “நிறுத்துங்கள் அவனை… வாயிலை  மூடுங்கள்!” என்றபடி கீழே கிடந்த கழியொன்றை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார்.

கங்காளம் கதிமாற கட்டுப்பசுக்கள் வடங்களை அவிழ்த்துக்கொண்டு குளம்புகள் மண்மிதித்து ஒலிக்க, வால்சுழல, நாக்குநீட்டி கரிய மூக்கைத் துழாவியபடி கூவி அவனைத் தொடரலாயின. வேள்விச்சாலைக்குள் நால்வேதங்களாக உருவகித்து நிறுத்தப்பட்டிருந்த வெண்ணிறமும் செந்நிறமும் சாம்பல்நிறமும் கருநிறமும் கொண்ட பசுக்கள் நான்கும் கட்டறுத்துக் கூவியபடி நடையில் உலைந்த பெருமுலைகளின் நான்கு காம்புகளிலும் பால்துளிகள் ஊறிநின்று துளித்தாடி புழுதியில் சொட்ட, திரள்வயிறு அதிர, வால்சுழல அவனைத் தொடர்ந்தோடின.

அவனை முந்திச்சென்று மறித்த அத்ரி “நில் இழிமகனே, இக்கணமே நில்! என் வேதப்பேராற்றலால் உன்னையும் உன் குடியையும் பொசுக்கியழிப்பேன்…” என்று கூச்சலிட்டார். அவர் கையில் இருந்து நடுங்கியது விறகுக்கழி. “என் குடிப்பெண்களை இழுத்துச்செல்லும் நீ யார்? எதன்பொருட்டு இங்கு வந்தாய்?” அவன் புன்னகையுடன் “நான் இரவலன். பசிக்கு அன்னமும் என் குடிக்கு பொருளும் இரந்துபெற வந்தேன். எனக்களிக்கப்படும் அனைத்தையும் பெறும் உரிமை கொண்டவன். இவர்கள் எவரையும் நான் அழைக்கவில்லை. எதையும் கவரவுமில்லை. எனக்களிக்கப்பட்டவை இவை. என்னைத் தொடர்பவர் இவர்கள்” என்றான்.

“இது மாயை. இது கீழ்மையால் வல்லமை கொண்ட காட்டாளனின் நுண்சொல் வித்தை… இதை என் தூயவேதத்தால் வெல்வேன்” என்று அத்ரி தன் கையைத் தூக்கினார். அதர்வவேத மந்திரத்தைச் சொல்லி அவன் மேல் தீச்சொல்லிட்டார். அவன் புன்னகையுடன் அவரை நோக்கி “வேதங்கள் இதோ என் பின் வந்து நின்றிருக்கின்றன, முனிவரே” என நான்கு பசுக்களை சுட்டிக்காட்டினான். அவர் திகைத்து மெல்ல கை தழைத்தார்.

அவன் புன்னகையுடன் “தூயவை மட்டும் நிறைந்த உங்கள் வேதக்காட்டில் இப்போது எஞ்சியிருப்பது என்ன, முனிவரே?” என்றான். அவர் தழைந்து கண்ணீர் நனைந்த குரலில் “இது மாயம்… இது வெறும் மாயம்” என்றார். “சரி, மாயத்தை அவிழ்க்கிறேன்” என்று தன் கையறியாது மீட்டிக்கொண்டிருந்த கங்காள ஒலியை நிறுத்தினான். அவனைச் சூழ்ந்திருந்த பெண்கள் நிலைமீண்டு அஞ்சியும் நாணியும் கூவியபடி ஆடைகளை அள்ளி தங்கள் உடல் மறைத்தனர். ஆடையற்றவர் தோள்குறுக்கி நிலத்தில் கூடி அமர்ந்தனர். இளையோர் விழிப்பு கொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி வியக்க பசுக்கள் கன்றுகளை நோக்கி குரலெழுப்பின.

“இப்பெண்களில் காட்டாளனைப் புணராத ஒருவரேனும் உளரேல் அழைத்துச்செல்க!” என்றான் அவன். அத்ரி தனக்குப் பின்னால் வந்து கூடிய முனிவர்களை விழிநோக்கி தயங்கி நின்றார். “இவ்விளையோரில் காட்டாளனாக ஒருகணமேனும் ஆகாத ஒருவன் உளன் என்றால் கூட்டிக்கொள்க!” என்று அவன் புன்னகையுடன் சொன்னான். அத்ரியின் உதடுகள் சொற்களின்றி அசைந்தன. “காட்டை நினைத்து அசைபோடாத ஒரு பசுவையேனும் அழைத்துச்சென்றால் நீங்கள் அமுதுகொள்ளலாம்” என்று அவன் மேலும் சொன்னான்.

அத்ரி சினத்துடன் “நீ வேதமுனிவரை இழிவுசெய்கிறாய், கீழ்மகனே” என்று கூவினார். “காட்டாளத்தியாகி உங்கள் மனைவியர் அளித்த கொடையை காட்டாளனாக மாறி நுகராதவர்கள் உங்களில் எவர்? முனிவரே, உங்கள் கையில் இருக்கும் அவ்விறகுக் கட்டையை காட்டாளன் அல்லவா ஏந்தியிருக்கிறான்!” என்று அவன் வெண்பல்நிரை காட்டிச் சிரித்தான். அத்ரி தன் கையிலிருந்த கழியை அப்போதுதான் உணர்ந்தார். அதை கீழே வீசிவிட்டு “ஆம், மானுடராக நாங்கள் மாசுள்ளவர்களே. ஆனால் மாசற்றது எங்கள் சொல்லென நின்றிருக்கும் வேதம். அதுவே எங்கள் அரணும் அரசும் தெய்வமும் ஆகும்” என்றார்.

“காட்டாளன் அறியாத வேதம் இந்நான்கில் ஏதேனும் உள்ளதென்றால் அழைத்துச்செல்க!” என்று அவன் பசுக்களை சுட்டிக்காட்டினான். அத்ரி முன்னால் நின்ற அதர்வம் என்னும் கரிய பசுவை தொடையில் தட்டி அழைத்தார். அது சீறி மூக்கு விடைத்து விழியுருட்டி தன் கொம்புகளைச் சாய்த்தது. அவர் அஞ்சி பின்னடைந்து சாம்பல்நிறமான சாமம் என்னும் பசுவின் திமிலைத் தொட்டு “என் அன்னையல்லவா?” என்றார். அது கொம்புகளைச் சரித்து குளம்பெடுத்து முன்னால் வைத்தது. செந்நிறப்பசுவான யஜுர் அவரை நோக்கி விழிசரித்து காதுகளை அடித்துக்கொண்டது. வெண்பசுவான ரிக்கை நோக்கி கைகூப்பி “என் தெய்வமே, என்னுடன் வருக!” என்றார் அத்ரி. அது அவரை அறியவே இல்லை.

கண்ணீருடன் “தோற்றேன். இன்றுவரை வென்றேன் என நின்று தருக்கிய அனைத்தையும் முற்றிழந்தேன். இனி நான் உயிர்வாழ்வதற்குப் பொருளில்லை” என்று கூவியபடி அவர் தன் இடையாடையை அவிழ்த்து வடக்குநோக்கித் திரும்ப அவன் அவர் தோள்களில் கையை வைத்தான். “வெங்குருதியையும் விழிநீரையும் அறியாமல் எவரும் வேதத்தை அறிவதில்லை, முனிவரே” என்றான். “நீ யார்? நீ யார்?” என்று அவர் உடல் நடுங்க கூவினார். “காட்டுச்சுனையிலிருந்து காட்டை விலக்குவது எப்படி?” என்றான் அவன் மேலும். “நீ காட்டாளன் அல்ல… நீ காட்டாளன் அல்ல” என்று அவர் கூச்சலிட்டார்.

அவன் விலகிச்செல்ல அவர் அவனைப்பற்றி இழுத்து “சொல், நீ யார்? நீ யார்?” என்றார். “இங்கு ஒருவர் மட்டிலுமே என்னை உண்மையுருவில் கண்டவர். உங்கள் அறத்துணைவி. அவரிடம் கேளுங்கள்” என்றபின் அவன் திரும்பிச் சென்று சுகந்தவாகினியை கடந்தான். அவன் கால்பட்டு ஒரு உருளைக்கல் பெயர்ந்து உருண்டது. நாய் எழுந்து வால்குழைத்து முனகியது. அவன் நடந்துசெல்ல அவனைத் தொடர்ந்து நோயும் சென்றது. அவர்கள் கங்காள ஒலியுடன் நடந்து மரக்கூட்டங்களுக்கிடையே மறைந்தனர்.

அத்ரி திரும்பி தன் குடிலுக்குள் ஓடினார்.  அங்கே வெளியே நிகழ்ந்தவை எவற்றையும் அறியாமல் அடுமனையில் துவையல் அரைத்துக்கொண்டிருந்த அனசூயையிடம் “சொல், நீ கண்டது என்ன? சொல்!” என்று கூவினார். “என்ன கண்டேன்? எதைக் கேட்கிறீர்கள்?” என்றாள் அவள். “சற்றுமுன் நீ கொண்டுசென்று கொடுத்த பிச்சையை ஏற்ற இரவலன் யார்? சொல்!” என்றார் அவர். “நான் கண்டவன் ஒரு இளஞ்சிறுவன். காட்டுக்குலத்தவன். ஆடையற்ற சிற்றுடலில் சாம்பல் பூசியிருந்தான். இடக்கையில் கப்பரையும் வலக்கையில் கழியும் ஏந்தி இடையமைந்த கங்காளத்தை மீட்டிக்கொண்டிருந்தான். மாசற்ற வெண்பல் சிரிப்பு கொண்ட அவனைக் கண்டதும் என் முலைக்கண்களில் பாலூறியது. இக்கணம்வரை அவனைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.”

KIRATHAM_EPI_04_UPDATED

அவர் திகைத்து நின்றிருக்க அவள் தொடர்ந்தாள் “அவன் தோள்களில் மானும் மழுவும் பச்சைகுத்தப்பட்டிருந்தன. நெற்றியில் அறிவிழி ஒன்று பொட்டெனத் திறந்திருந்தது. செஞ்சடைக்கற்றையில் பிறைநிலவென வெண்பல் ஒன்றைச் சூடியிருந்தான். அவனுக்கு இருபக்கமும் காலைச்சூரியனும் அணையாத சந்திரனும் நின்றிருக்கக் கண்டேன்.”

அம்பு விடுபட்ட வில் என நாண் அதிர நிலையழிந்து துவண்ட அத்ரி மீண்டெழுந்து  “எந்தையே!” என்று கூவியபடி வெளியே ஓடினார். நெஞ்சில் அறைந்தபடி “வந்தவன் அவன். ஆடல்வல்லான் ஆடிச்சென்ற களம் இது. முனிவரே, துணைவரே, நாமறியாத வேதப்பொருளுரைக்க எழுந்தருளியவன் பசுபதி. கபாலன். காரிமுகன், பைரவன், மாவிரதன். அவன் நின்ற மண் இது. அவன் சொல்கேட்ட செவி இது” என்று ஆர்ப்பரித்தார்.

அழுதபடியும் சிரித்தபடியும் ஓடிச்சென்று அவர் அந்த உருளைக்கல்லை எடுத்து அந்த இடத்திலேயே சிவக்குறியாக நிறுவினார். “இது கிராதசிவம்!” என்றார். நால்வேதப்பசுக்களை நான்கு திசையிலும் நிறுத்தி அவற்றின் பால்கறந்து அதில் ஊற்றி முழுக்காட்டினார். “சிவமாகுக! ஓம் சிவமாகுக!” எனக் கூவியபடி கைகூப்பினார்.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16723 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>