சுடலைப்பாண்டி மாமாவிடம் நான் கடன் வாங்கவிருக்கும் செய்தியைச் சொன்னேன். “அங்கதான் போகணும்போல இருக்கு.”
நாங்கள் டீ குடித்துக்கொண்டிருந்தோம். மாமா டீயை கையில் வைத்தபடி கண்களைச் சுருக்கி கேட்டார். “எவ்ளவு வேண்டியிருக்கும்?”
“இருபது”
“ஏலே, என்னல சொல்லுதே? இருபதா? ஏற்கனவே பதினஞ்சு இருக்கு…”
“ஆமா”
“அப்ப மொத்தம் முப்பத்தஞ்சு… வட்டி எவ்ளவு தெரியுமா? வருசத்துக்கு இருபத்தொண்ணு லட்சம். மாசம் கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் லட்சம்… ஏலே, இந்தக் கடைய வைச்சு மாசம் ரெண்டரலட்சமாவது நீ லாபம் பாத்தாகணும்… நடக்குத காரியமா?”
“லாபம் வரும்ணு நினைக்கேன்”
“நான் சொல்லுறதக் கேளு, வேண்டாம். செரிவராது”
“வேற வழியில்ல” என்றேன்.
“நான் சொல்லுறதச் சொல்லணும். இந்த கடைவீதியிலேயே எனக்குத்தெரிஞ்சு ஏளு பேர் செத்திருக்கானுக. அஞ்சுபேரு தற்கொலை. ரெண்டுபேரு கொலை… எல்லாம் இந்தமாதிரி அகலக்கால் வைச்சதனாலே வந்த வினை… “
“ஆனா நாம தொளிலுதானே செய்யப்போறம், வட்டியக் குடுத்திருதோம்”
“இங்கபாரு, தொளிலுன்னா என்ன? நாம போடுத கணக்கு. அது ஒருபக்கம், அந்தப்பக்கம் மார்க்கெட்டு போடுத கணக்கு இருக்கு. அது என்னதுன்னு நமக்குத் தெரியாது. இங்க ரெண்டு சர்க்காரு இருக்கு, வடக்க சர்க்காரையே நடத்துத பெரிய பெரிய வியாபார தெய்வங்கள்லாம் இருக்கு… அவனுகதான் மார்க்கெட்டு. அதப்பத்தி நமக்கு ஒண்ணுமே தெரியாது. கண்ணமூடிட்டு பகடையிலே பணம் கட்டுத மாதிரி ஏவாரம் செய்யுதோம். கவர்மெண்டு ஒரு பாலிசிய மாத்தினா மொத்தமும் ஊத்திக்கிடும். ஏலே, இங்க பத்து வருசம் முன்னாடி சிடி விக்கக்கூடிய எட்டு கடை இருந்திச்சு… இப்பம் ஒண்ணுகூட இல்ல. டெக்னாலஜி மாறிப்போச்சு. ஆரு என்ன செய்ய முடியும்? கணக்கு தப்பினா நஷ்டம்… நஷ்டம் வந்தாலும் நாம நிக்கணும். நம்ம சொத்துக்கு உள்ளயே நம்ம முதலீடு இருந்தாகணும்… கப்பலு மூழ்கினா ஏறிப்போறதுக்கு ஒரு படகு இருக்கணும் பாத்துக்கோ.”
நான் நகங்களைப் பார்த்தபடி பேசாமலிருந்தேன்.
“மாமன் சொல்லுதத புரிஞ்சுக்கோ. அவனுகள்ட்ட வட்டிக்கு பணம் வாங்காம இருக்க முடியாது. ஆனா நம்ம நிஜலாபத்தை நாம அவனுகளுக்கு காட்டவே கூடாது. பாதிக்குப்பாதிதான் காட்டணும். அதில ஒரு பங்குதான் அவனுகளுக்கு நாம குடுக்குத வட்டீங்குதது. நான் என்ன கோட்டிக்காரன்னா நினைக்கே? எனக்கு நம்ம கடையிலே நாலு வினோலியம் ரேக்கு அடிச்சு, நியான் போர்டு வைச்சு, வெளக்கு போட்டு மினுக்கத் தெரியாதா? நம்ம லாபம் வெளியே தெரிஞ்சிரும்.அப்ப வந்து நிப்பான், அம்பது லெச்சம் கடன் வாங்கு, வட்டியக் கட்டுன்னு. இப்டியே இருந்தெடம் தெரியாம இருக்குததுதான் நமக்கு லாபம். எனக்கு இப்ப இருபது லச்சம்தான் கடன். அதுக்குண்டான வட்டிதான். சொத்து எல்லாம் சீவைகுண்டம், மெய்ஞானபுரம்னு வாங்கி போட்டிருக்கேன்… இவனுக கிட்ட சிக்கினா காட்டுநாய்கள் கிட்ட சிக்கினதுமாதிரி… காட்டிலே அதுக மானு மிளான்னு தின்னு போட்டிருக்கும் பாத்திருக்கியா? வெள்ளைவெள்ளெலும்பா கெடக்கும். ஒரு துளிச் சதை மிச்சமிருக்காது. வாலுமுடிகூட மிஞ்சாது… வேண்டாம்.”
“எனக்கு வேற வழி தெரியல்ல… இனி முன்னாடிப்போக மட்டும்தான் முடியும்”
“உன்னை மொத்தமா உறிஞ்சிப்பிடுவாங்க… சொல்லுதேன்னு தப்பா நினைக்காதே. சொத்து போனா பரவாயில்லை. உன் தங்கச்சிக்குட்டிகளை கண்ட கிரிமினலுங்களுக்கு கட்டிவைக்கச் சொல்லுவானுக. அம்புரோஸ் நாடாரு அப்டித்தான் குடும்பத்தோட செத்தாரு தெரிஞ்சுக்கோ.”
நான் நடுங்கிவிட்டேன். என் கையில் இருந்த செல்போனை கீழே வைத்தேன். விரல்கள் துடித்துக்கொண்டிருந்தன. ஆனால் இரு நிமிடங்களுக்குப்பின் செல்போனை திரும்ப எடுத்துக்கொண்டேன். “நான் முடிவெடுத்தாச்சு மாமா” என்றேன்.
அவர் சட்டென்று எழுந்து டீ டம்ப்ளரை வைத்துவிட்டு தன் கடைக்குச் சென்றார். நான் அவர் செல்வதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்.
வடிவேலு செட்டியாரும் என்னிடம் எதிர்ப்பு தெரிவித்தார். “தற்கொலை செய்றது மாதிரி… அகலக்கால் வைக்கவே கூடாது. அவனுகளுக்கு வியாபாரம் தெரியாது. இப்ப இருபது லச்சம் வாங்கிறீங்க. அப்ப இருபது லெச்சம் வாங்குற ஆள் ஆயிட்டீங்க. ஏவாரம் சரியாப்போகலேன்னா அத குறைக்க முடியாது. ஒத்துக்கிட மாட்டானுக. ஏமாத்துறீங்கன்னு நினைப்பானுக. அரிவாளோட வந்து நிப்பானுக. ஏவாரம் நம்ம கையிலே இல்ல… நாம நினைச்சது நடக்கணும்னு இல்ல”
“இனி யோசிக்க ஒண்ணுமில்லை”
“தெரியும், அப்டி மாறிரமாட்டீங்க. ஏன்னா இது விதி. ஜாதகத்தை பாத்தா சொல்லிப்போடலாம், ஏன் ஒருத்தருக்கு ஒரு நேரத்திலே ஒண்ணு தோணுதுன்னு ஆரும் சொல்லிக்கிட முடியாது… அவனவன் தலையிலே எளுதியிருக்கு…”
நான் சோதிடர்களைச் சென்று பார்க்கும்படி வடிவேலு செட்டியார் சொன்னார். எனக்கு பயம், அவர்கள் என்னை தடுத்துவிடுவார்கள் என்று. ஆகவே போகவில்லை. இரண்டு நாட்கள் தயங்கிக்கொண்டே இருந்தேன். உள்ளம் கொப்பளித்துக் கொண்டே இருந்தது. தற்கொலைக்கு முன்பு ஒருவனின் மனம் இப்படித்தான் இருக்குமா? இல்லை, இது தற்கொலை மனநிலை அல்ல. கொலை. கொலைக்குப்பின் ஒருவன் முன்பிருந்த நிலைக்குத் திரும்ப முடியாது. எப்போதைக்குமாக எல்லாமே மாறிவிடுகிறது. குதிப்பதுதான் அது. கீழே இருண்ட ஆழத்தில் என்ன இருக்கிறதென்றே சொல்ல முடியாது.
குதித்தாகவேண்டியதுதான். யோசித்து குதிக்க முடியாது. கண்மூடித்தனமாகக் குதிக்க வேண்டியதுதான். யோசித்துச் செய்யவேண்டும் என்று எல்லாரும்தான் சொல்கிறார்கள். ஆனால் எல்லா செயலிலும் ஒரு கண்மூடித்தனமான அம்சம் இருக்கிறது. படிப்பு, திருமணம் என எதுவானாலும் கொஞ்சம் அதிருஷ்டத்தை நம்பித்தான் செய்யவேண்டியிருக்கிறது. எல்லா முடிவுகளையும் அங்கே இங்கே முட்டி மோதி யோசித்து ஒரு கணத்தில் சட்டென்று யோசிக்காமல் எடுத்துவிடுகிறோம்.
ஒரு கட்டத்தில் அந்த முடிவைப்பற்றி நான் ஒன்றும் யோசிக்க வேண்டியிருக்கவில்லை நான் அங்கே சென்று, அவரிடம் பணத்தை வாங்குவேன் என்பது எனக்கே உறுதியாக ஆகிவிட்டிருந்தது. ஏற்கனவே நிகழ்ந்த ஒன்றைப்போல, மாற்றமுடியாததாக அது ஆகிவிட்டிருந்தது. ஒன்றைப்பற்றி நிறைய யோசித்தோம் என்றால் அந்த எண்ணம் நம் உடலின் ஒரு பகுதிபோல ஆகிவிடும். அதன்பின் அது நமக்கு அன்னியமல்ல. நமக்கு அது துணுக்குறலை, கவலையை, தயக்கத்தை அளிப்பதில்லை. தெரிந்த ஒருவரிடமென அதனுடன் உறவாடுகிறோம். நம்மை அது கைபற்றி அழைத்துச்செல்கிறது.
செவத்தபெருமாளை நானே தேடிச்சென்றேன். சாலையோரமாக நெஞ்சளவு சுற்றுச்சுவர் கொண்ட, இருபது முப்பது ஆண்டு பழைய, கான்கிரீட் வீடு. வீட்டுச்சுவர்மேல் காகிதப்பூச்செடி வளர்ந்து தழைந்திருந்தது. ஒரு சிவப்பு பொலிரோ வண்டி நின்றிருந்தது.
நான் இளங்காலையிலேயே சென்றுவிட்டேன். செவத்தபெருமாளின் மகள் வாசலில் நடந்தபடியே கல்லூரிப்பாடம் படித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் “ஆரு?” என்றாள்.
அவளுடைய கூந்தல் நுரைபோல இருந்தது. அதை ரப்பர்பாண்ட் போட்டு முடிச்சிட்டிருந்தாள், ஆனால் அது கொண்டைபோல தலைக்குப் பின்னால் நின்றது. கரிய நிறம், சற்று குண்டான பெண். ஆனால் கண்களும் சிரிப்பும் இளமையின் அழகுடன் இருந்தன.
“செவத்தபெருமாள் மாமா..”
“இங்கதான்…”
“அவரப் பாக்கணும்”
“அப்பா…” என அவள் உள்ளே போனாள். போகும்போது படியை துள்ளி தாவிக் கடந்தாள்.
நீளவாக்கினால வீடு. முகப்பில் ஜெயில்போல பெரிய கிரில். உள்ளே பெரிய சோபாக்கள் தெரிந்தன. பாலிஸ்டர் திரைச்சீலைகள் சன்னல்களிலும் உள்வாசலிலும் காற்றில் நெளிந்தன. முற்றத்தில் நன்றாக இலைதழைத்த ஒரு வேப்பமரம் நின்றிருந்தது. நெல்லையில் மிகப்பொலிவுடன் இருக்கும் தாவரம் வேப்பமரம்தான் என நினைத்துக்கொண்டேன்.
செவத்தபெருமாள் சட்டை இல்லாமல் ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு வந்தார். “வாங்க வாங்க, ஏது இந்தப்பக்கம்?” அவர் கொஞ்சம் குழம்பியிருப்பது கண்களில் தெரிந்தது.
“உங்கள ஒரு அவசர விசயமா பாக்கணும்.”
“உள்ள வாங்க.”
உள்ளே சோபாக்கள் மிகப்பெரியவையாக, மிகமிக அலங்காரமானவையாக, ஆனால் அமர்வதற்கு மிக அசௌகரியமானவையாக இருந்தன. நான் சாய்ந்து அமர விரும்பினேன். ஆனால் ஏழடி உயரமானவர்கள்தான் அப்படி அமர முடியும்.
“சொல்லுங்க தம்பி, டீ சாப்பிடுறிகளா?”
“காப்பி…”
“ஏ குட்டி, ஒரு டீயும் ஒரு காப்பியும் கொண்டா… எனக்க மகளாக்கும். கம்ப்யூட்டரு படிக்குதா.”
“ஓ” என்றேன். அந்த பெண் எட்டிப்பார்த்தாள்.
அவளை பார்த்து புன்னகைத்து “எஞ்சீனியரிங்கா?” என்றேன்.
“இல்ல, எம்சிஏ”
“நல்லது” என்றேன்.
அவள் புன்னகைத்து உள்ளே சென்றாள். சிறிய வரிசையான வெண்பற்கள், கரிய ஈறுகளுடன் அந்தச் சிரிப்பும் நெல்லைக்குரியது.
“சொல்லுங்க”
“கடைய விருத்தி பண்ணலாம்னு இருக்கேன்… கொஞ்சம் பணம் வேணும்”
“நல்லது, குடுக்கலாமே… நம்ம பணம். அது எங்க இருந்தா என்ன? ஏஜென்ஸி ரினியூ பண்ணுதிகளோ?”
“இல்ல, ரீடெயில் பண்ணலாம்னு இருக்கேன். அந்த எடம் அதுக்குண்டானது. ஏஜென்ஸி எடுத்தா பெரிய மேனேஜ்மெண்ட் சிஸ்டம் வேணும்… பெரிசாத்தான் பண்ணணும். அது இப்ப நமக்கு வாய்ப்பில்ல.”
“சரிதான்”
“கடைய எடுத்துக் கட்டணும். ஏஜென்ஸிக்காரனுகளுக்கு அட்வான்ஸ் குடுக்கணும்”
“எவ்ளவு தேவைப்படும்?”
“முப்பது” என்றேன்.
அவர் ஒருகணம் என்னை நிலைத்து பார்த்து “அதாவது பளைய பதினஞ்சோடு சேத்து முப்பது இல்லியா?”
“இல்ல, மேக்கொண்டு முப்பது. மொத்தம் நாப்பத்தஞ்சு… செரி, முப்பத்தஞ்சு. மொத்தம் அம்பதா இருக்கட்டும்”
அவர் என்னை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். பிறகு “வட்டிக்கணக்கெல்லாம் தெரியும்லா?” என்றார்.
“தெரியும்”
“மூணுமாசத்துக்குமேலே வட்டி நின்னா ஆளு வந்திரும்… மணி வருவான். இல்ல அதுக்கும் மேலே ஆளிருக்கு”
“குடுத்திருவேன்”
“வீட்டிலே பொட்டச்சிங்க மட்டும்தான் இருக்காளுக, யாவகம் இருக்குல்லா?”
அவர் அதை என்னைப் பார்க்காமல் தரையை பக்கவாட்டில் பார்த்துக்கொண்டு கேட்டார். கன்னங்கள் சற்றுக்கோணலாக இழுபட்டிருந்தன.
“ம்” என்றேன்.
“அம்பது வேண்டாம்… அஞ்சு குறைச்சுக்கிடுவோம். அம்பதுக்குமேலே போனா வேற குரூப்பாக்கும் இங்க குடுக்கல் வாங்கல். எல்லாம் ஒரே பணம்தான்னு வைங்க.”
“சரி”
நான் ஏன் அப்படி ஒரு தொகையைக் கேட்டேன் என ஒருபக்கம் என் அகம் வியந்தது. என்னவானால் என்ன, வாங்க முடிவெடுத்துவிட்டேன். முதலீடு பெரிதானால் லாபமும் பெரிதாக இருக்கலாம்.
அவர் “செக்கு குடுப்பேளா?” என்றார். “வீட்டுப்பத்திரம் அடமானத்திலே இருக்குன்னு தெரியும்”
“குடுத்திருதேன்.”
“ஏற்கனவே நாலு லீப்பு குடுத்திருக்கீக. இதுக்கு மேக்கொண்டு எட்டு குடுக்கணும். அதுக்குமேலே கொஞ்சம் டம்மி ரசீது இருக்கு. அதிலேயும் கையெளுத்து போட்டுக்குடுக்கணும்… நாம கோர்ட்டுக்கெல்லாம் போறதில்லை. அதுக்கு எங்க நேரம்? ஆண்டுக்கணக்கா இளுப்பான். ஆனா நடமொறை இதாக்கும்.”
“குடுத்திருதேன்”
நான் செக்லீப் கொண்டு சென்றிருந்தேன். கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தபோது அந்தப்பெண் காபி கொண்டுவந்தாள். நான் அவளைப் பார்த்து புன்னகைத்து “எந்த காலேஜ்?” என்றேன்.
“சேவியர்ஸ்”
“நானும் அங்க படிச்சிருக்கணும்… மெட்ராஸ் போயிட்டேன்.”
“மெட்ராஸிலே எங்க?”
“பாமால…”
“நானும் மெட்ராஸிலே படிக்கேன்னு சொன்னேன். எனக்கு அண்ணா யூனிவர்சிடியிலேயே கெடைச்சிருக்கும். அப்பாதான் வெளியூரு வேண்டாம்னுட்டாக.”
“பொட்டக்குட்டிக கண்முன்னாடி நிக்கணும்ங்க, காலம் கெட்டுக்கிடக்கு. என்னங்குதீக?” என்றார் செவத்த பெருமாள்.
“ஆமா” என்று செக் லீப்களை கொடுத்தேன்.
அவர் மகளிடம் நான் பேசியதுமே அவர் கொஞ்சம் இலகுவானதுபோல் இருந்தது. “தம்பி தொளில் எல்லாம் பாத்து எடுத்து செய்வீகன்னு நினைக்கேன். தொகை பெரிசு… வட்டியும் ஜாஸ்தி. நீங்க படிச்சவுக. உங்களுக்கு நான் ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல.”
“பாத்துக்கிடுதேன்”
“இந்த வட்டித்தொளிலும் நாத்தப்பிசினஸாக்கும். இந்தத் தொளிலிலே நீங்க யாரை கண்ணால பாக்குதிகளோ அவங்க ஒரு ஆளே இல்லேன்னு நினைங்க. நாங்க எங்க பணத்தை சுத்துக்கு விடலை. இது பெரிய பெரிய மொதலைங்களுக்க பணம். எனக்கு இதிலே ஒரு பர்சண்டேஜுதான். அதுக்குள்ள வசூலுக்கான செலவையும் களிச்சா அரப்பர்சண்டேஜு… நானும் இதிலே சிக்கிக்கிட்டிருக்கவந்தான். நான் இதவிட்டு வெளியே போகமுடியாது. வெளியே பலகோடி நிக்குது. அத மீக்கணுமானா மேக்கொண்டு உள்ள பணம் போட்டுக்கிட்டே இருக்கணும். புலிமேலே யாத்திரன்னு வைங்க. இறங்கினா புலி நம்மளத்தான் முதல்ல திங்கும்… புரியுதுல்ல?”
“ஆமா”
“அப்ப இதில நமக்கு உறவு ,சொந்தம், பந்தம் ,பாசம் ஒரு மயிரும் இல்ல. இது வேட்டக்காடாக்கும். கொல்லணும், இல்லேன்னா சாகணும். எரக்கம் பாக்குத ஓநாய் பட்டினி கெடந்து சாகும்னு எனக்கு தொளில் சொல்லிக்குடுத்த ராமசாமித் தேவரு அடிக்கடிச் சொல்லுவாரு… பதிமூணு வருசம் முன்னாடி குடும்பத்தோட ராமேஸ்வரம் போயி கடலிலே குதிச்சு செத்துட்டாரு. எதுக்குச் சொல்லுதேன்னா, இப்ப நாம பேசிக்கிட்டிருக்கிறதனாலே நமக்குள்ள ஒரு இசைவும் கெடையாது பாத்துக்கிடுங்க. உங்க சங்க அறுக்கணுமானா ஒரு நிமிசம் யோசிக்காம அறுக்கச் சொல்லிப்போடுவேன்…”
“புரியுது”
“அதுமட்டுமில்ல, உங்க தங்கச்சிங்கள புடிச்சு விக்கணுமானாலும் செய்வேன்.” அவர் நிமிர்ந்து என்னை பார்த்தார். குழிவிழுந்த கண்கள், ஒரு கண்வெள்ளையில் கரிய புள்ளி. நரைமுடி எழுந்து நின்ற புருவம்.
நான் தலையசைத்தேன்.
“அப்ப செரி, பாப்பம். செந்தூரான் அருள் இருக்கட்டும்.”
நான் கைகூப்பி எழுந்துகொண்டேன். அவரும் எழுந்து வாசல்வரை வந்தார். வேட்டியை அவிழ்த்து கட்டி செருகியபடி “நல்லது” என்றார்.
நான் சாலைக்கு வந்தபோது ஏனோ புன்னகைத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டி உடைந்து சீழெல்லாம் வெளியேறியது போல இருந்தது மூளை. செவி வழியாக குளிர்ந்த காற்று தலைக்குள் புகுந்து சுழல்வதுபோல் இருந்தது. வழியில் கிருஷ்ணப்ப கோனார் கடையில் புகுந்து ஒரு ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தேன். அங்கே கேட்டுக்கொண்டிருந்த ‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் நாணும் விழியிலே’ பாட்டுக்கு என்னையறியாமலேயே தாளமிட்டேன்.
இரண்டுநாட்கள் கழித்து சுடலைப்பாண்டி மாமா என்னிடம் “வாங்கிட்ட போல?” என்றார்.
“ம்” என்றேன்.
அவர் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை. அன்று ஃபேப்ரிக்கேட்டர் வந்து கடையை அளவெடுத்தார். வடிவேலுச் செட்டியார் அதை வந்து பார்த்தார். ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார்.
நான் ஒருமாதகாலம் பெரும்பாலும் அலைந்துகொண்டிருந்தேன். நெல்லைக்குள், மதுரையில். பன்னிரண்டு ஏஜென்ஸிகளுக்கு முன்பணம் கொடுத்து சோப்பு, பவுடர், காஸ்மெட்டிக்ஸ், ஹார்லிக்ஸ் என எழுபது பொருட்கள் ‘சப்ளை’ எடுத்தேன். அவற்றை நான் முழுவிலை கொடுத்து வாங்கியதற்குச் சமம்தான். விற்றே ஆகவேண்டும். சும்மா ஃபோனில் விசாரித்ததுமே இருநூற்றைம்பது பொருட்களுக்கு சப்ளை கொடுத்துவிட்டனர். எந்தப் பொருளுக்குமே கிராக்கி இல்லை. சில பொருட்கள் விற்காதவற்றை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்னும் அடிப்படையில் கொடுக்கப்பட்டன, அவை எல்லாமே போலிப்பொருட்கள். அவற்றில்தான் பெரிய லாபம். பெரும்பாலான பொருட்கள் விற்கவில்லை என்றால் இருபது முப்பது சதவீதம் விலை குறைத்து திரும்ப எடுத்துக் கொள்வார்கள் என்னும் ஒப்பந்தம்.
கடையில் ரேக்குகள், வினைல் போர்டு, நியான் போர்டு எல்லா வேலையும் முடிய ஒரு மாதமாகியது. அதன்பின் சரக்குகள் வர ஆரம்பித்தன. மாரியுடன் இன்னொரு பையனையும் வேலைக்கு எடுத்தேன். விஜய் ரசிகனாகிய பரமசிவம் தன்னை ’விஜய்பரம்’ என அறிமுகம் செய்துகொண்டான். ஆனால் சூட்டிகையான பையன்.
கடை தொடக்கவிழாவை ஒரு வெள்ளிக்கிழமை கொஞ்சம் எளிமையாகவே நடத்தினேன். காலையில் சென்று காந்திமதி நெல்லையப்பரை கும்பிட்டுவிட்டு வந்தேன். என் அம்மாவும் தங்கைகளும் வந்திருந்தனர். சொந்தக்காரர்களாக சண்முகம் மாமாவும் கிருஷ்ணன் மாமாவும் மட்டும்தான் வந்திருந்தனர். அண்டையிலிருந்த கடைக்காரர்களை அழைத்திருந்தேன். ஆளுக்கொரு காபி, லட்டு, காரச்சேவு. கிருஷ்ணசாமி ஐயர் வந்து ஒரு சுருக்கமான கணபதி ஹோமம் செய்தார். என் அம்மா குத்துவிளக்கேற்றி கடையைத் திறந்துவைத்தார். எல்லாருமே கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தனர். என் தங்கைகள் மட்டும்தான் உற்சாகமாக இருந்தார்கள்.
செவத்தபெருமாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்து நானும் பையன்களும் மட்டும் கடையில் அமர்ந்திருக்கையில் வந்தார். அப்போது சாயங்காலம் ஐந்து மணி. முதல் நாளே முப்பத்திரண்டாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருந்தது.
செவத்தபெருமாள் என்னிடம் “கொஞ்சம் லேட்டாய்ப்போட்டுது… ஒரு சோலியா போயிருந்தேன். மட்டுமில்ல, நம்மளப் பாத்தா இங்க உள்ளவனுக மூஞ்சி காட்டுவானுக… நாம என்ன சொல்லுதது? நல்லது நடக்கட்டும். என்னப்பன் செந்தூரான் துணை உண்டு” என்றார்.
“எல்லாம் பெரியவுங்க ஆசி” என்றேன்.
மறுநாள் கடையை மூடும்போது கணக்கிட்டபோது நாற்பத்தெட்டாயிரம் ரூபாய் விற்பனை. பாதிநாள் விற்பனை அது. விடுமுறைநாள்கூட அல்ல. தோராயமான கணக்கின்படி பத்துசதவீதம் நிகரலாபம் நிற்கும். அதாவது ஐந்தாயிரம். அப்படியென்றால் நன்றாக விற்றால் சாதாரணமாக ஒருநாளில் பத்தாயிரம் கூட லாபமே நிற்கும். வட்டிகட்டி மிச்சமும் கணிசமாக இருக்கும். கடைவீதியில் உண்மையில் எவர் எவரிடமிருந்து பிடுங்குகிறார்கள் என்பதே மர்மம்தான்.
தொடக்கத்தில் பிராண்டட் பொருட்களே அதிகம் விற்றன. மெல்ல மெல்ல விற்பனை வேரூன்றினால் மற்ற பொருட்களும், போலிப்பொருட்களும் நிறைய விற்கும் எனத் தெரிந்தது. அவற்றின் லாபம் இருபத்தைந்து சதவீதம் வரை. ஓராண்டில் ஒருநாளில் முப்பதாயிரம் வரைக்கும்கூட லாபம் பார்க்க முடியும். சுடலைப்பாண்டி மாமா விற்கும் உள்ளாடைகள் மிகமிகத் தரமற்றவை. பெரும்பாலும் கழிவுச்சரக்குகள். அவற்றை வாங்கி பளபளப்பாக பேக் செய்து, போலி பிராண்ட் முத்திரைகளுடன் விற்கும் நிறுவனங்கள் உள்ளன. பாதிக்குப் பாதி லாபம் அதில். என் கடையில் சாதாரணமான ஒரு பிளாஸ்டிக் பொருளுக்கு ஐநூறு ரூபாய் விலை இருந்தது. அடக்கவிலை முப்பதுரூபாய் கொண்ட சீனத்தயாரிப்பான பிளாஸ்டிக் பொம்மையை நூற்றியிருபது ரூபாய்க்கு விற்றேன். மூன்று நாட்கள்கூட அது உடையாமலிருக்காது, அந்தக் குழந்தைதான் அடிவாங்கும்.
அந்த முதற்சில நாட்களில் நான் அடைந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். கனவுகளில் இருந்து கனவுகள். என்னையே நான் பாராட்டிக்கொண்டேன்.
ஒருவாரம் கழித்து சுடலைப்பாண்டி மாமாவே என்னிடம் “நான் எனக்க ஏவாரத்தை வைச்சு சொன்னேண்டே… உனக்கு நல்லா எகிறி அடிக்குதுன்னு நினைக்கேன். நீ ஜெயிச்சா மாமாவுக்கு அதில சந்தோசம்தான்” என்றார்.
நடராஜ நாடார் “எடம் அப்டி… நானும் அப்பவே நினைச்சேன்… நல்ல முக்கு வளையுத எடம். நேராட்டு உள்ள ஏறிடுதான். உள்ள நிறைய நேரம் நின்னு அலசி ஆராய்ஞ்சு வாங்க நேரமில்ல. அதனாலே சட்டுன்னு வாங்கிட்டு போயிடுதான்…” என்றார்.
வடிவேலுச் செட்டியார் “ஒரு நாளுக்குள்ள முந்நூறுபேரு உள்ள வாறானுகன்னா உள்ள கணக்கிலே ஏவாரம் சுமார்னுதான் சொல்லணும்…ஆனா வாறவனுக என்னமாம் வாங்கிருதானுக. புள்ளகுட்டியோட வாறானுக. கிராமத்துப் பொம்புளைங்க ஜாஸ்தி. பெரும்பாலும் வெளியூரு… அவனுக அடுத்தாப்ல நெல்லையப்பன பாக்க வந்தா உண்டு இல்லேன்னா இல்ல. பொருளு எப்டி இருந்தாலும் கம்ப்ளெயிண்டு வராது” என்றார்.
கிருஷ்ணசாமி “வே, அப்ப தேர்த்திருளாவிலே புது வீடு கட்டீருவீருன்னு தோணுதே” என்றார்.
“வட்டிய ஒளுங்கா கட்டாதீரு… நீரு கொளிக்குதீருன்னு செவத்தபெருமாளு நினைச்சுக்கிடுவாரு… இளுத்தடிக்கணும். கண்ணாலே தண்ணி விடணும்… மூணு நாலு தவணையா மாசம் முளுக்க இளுத்து இளுத்து கட்டணும்…” என்று சுப்ரமணிய பிள்ளை சொன்னார். “நல்ல ஏவாரி லாபத்தை வெளியே காட்டமாட்டான்… எவன் ரொம்பப் புலம்புதானோ அவந்தான் சம்பாரிக்கான்னு அர்த்தம் கேட்டுக்கிடும்”
நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டேன். ஆனால் மாதந்தோறும் வட்டியை சரியாக ஒன்றாம் தேதி கட்டிக்கொண்டே இருந்தேன். ஆறுமாதத்தில் மூன்று முறை நான் வாங்கிய பொருட்களை முழுமையாக விற்று புதிய பொருட்களை வாங்கி விட்டேன். அதன்பின் மீண்டும் செவத்தபெருமாளை போய் பார்த்தேன். இன்னும் ஒரு இருபது லட்சம் வாங்கினேன். அதை வைப்புநிதியாக கட்டி மேலும் பிராண்டட் பொருட்களை வாங்கினேன். அந்தப் பொருட்களை காட்டி பிராண்ட் இல்லாத பொருட்களை நூறுக்கும் மேற்பட்ட ஏஜென்ஸிகளில் இருந்து வாங்கினேன்.
என் கடை முழுக்க பொருட்கள். நடனமாடுவது போலத்தான் உள்ளே செல்லவேண்டும். ஒரு கம்ப்யூட்டர் வாங்கி டெய்ஸி என்னும் பெண்ணை வேலைக்கு வைத்து கணக்குகளை அதில் ஏற்றினேன். சாம் என்ற இன்னொரு பையனும் வேலைக்கு வந்தான். ஒரு கட்டத்தில் மதியமும் விற்பனை நடக்க ஆரம்பித்தது. காலை எட்டுக்கு கடைதிறக்க ஆரம்பித்தேன். பிறகு ஆறரைக்கே திறக்கலானேன். காலைப்பூஜை முடிந்து கோயிலில் இருந்து வருபவர்கள் என் கடைக்குள் நுழையலானார்கள். உச்சகட்டமாக ஒருநாளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகியது.
தேர்விழா நெருங்கிக்கொண்டிருந்தது. “தேர்த்திருளாலே நீ மீன்பிடிக்கவேண்டாம்டே, மீனு கூட்டம்கூட்டமா உன் வலைக்குள்ள வந்து விளும். அப்டியே நேரா அதுகளே சட்டிக்குள்ள போயிரும்” என்று சிவலிங்கம் சொன்னார்.
மொத்த கடைவீதியிலேயே என்னை அறியாத எவருமில்லை என்றாயிற்று. நான் தெருவில் சென்றால் பலர் வணக்கம் சொன்னார்கள். பலர் நின்று ஓரிரு வார்த்தை பேசினார்கள். பழுத்த கண்களுடன் நடராஜ நாடார் என் தோள்மேல் கைவைத்து சொன்னார் “நல்லா போகுதுன்னு சொன்னாங்க. சந்தோசம். அந்த எடம் அப்டியாக்கும். அப்பாகிட்ட நான் சொல்லிட்டே இருந்தேன், கொஞ்சம் பணத்த போட்டு விருத்தி பண்ணினா அள்ளிக்குடுக்கும்னு. கேக்கல்ல, இப்ப நீ ஜெயிச்சுட்டே.”
தேர்த்திருவிழா நாள் அறிவிக்கப்பட்டது. நான் எல்லா ஏஜென்ஸிகளிடமும் பேசி மேலும் பொருட்களை கொண்டுவந்து நிறைத்தேன். கடைக்குப்பின்னால் இருந்த பழைய வீட்டை வாடகைக்கு வாங்கி கதவுகளை கொஞ்சம் வலுப்படுத்தி கொடவுனாக ஆக்கிக்கொண்டேன். அங்கே ஒரு வாட்ச்மேனையும் நியமித்தேன். திருவிழாவில் விற்கத்தக்க மலிவான அழகுப்பொருட்களை வாங்கி கொடவுனை நிரப்பினேன்.
அந்நாட்களில் என் உடலே பரபரப்பாக இருந்தது. இரவு சென்று படுத்தால் தூக்கம் வராது. கணக்கு பார்க்காமல் தூங்க முடியாது. கணக்கு பார்த்தால் உள்ளம் கிளர்ச்சி அடைந்து தூக்கம் இல்லாமலாகும். திட்டங்கள் திட்டங்களாக மண்டை ஓடிக்கொண்டே இருக்கும். ரகசியமாக கொஞ்சம் குடிக்க ஆரம்பித்தேன். என் படுக்கையறையில் பீரோவுக்குள் வாங்கி வைத்திருந்தேன். பிளேக்லேபில் விஸ்கி. ஒரு லார்ஜ் தண்ணீர் விட்டு குடித்துவிட்டு படுத்தால் அப்படியே தூங்கிவிடமுடியும். அம்மாவுக்கு தெரியாமல் குடிக்க வேண்டும் என்பதனால் இரவு சாப்பிட்ட பிறகுதான் குடிப்பது.
ஆனால் காலையிலேயே எழுந்துவிடுவேன். ஐந்தரைக்கே விழிப்பு வந்துவிடும். குளித்து உடைமாற்றி பைக்கில் ஏறும்போது ஆறரை. ஏழுமணிக்கு கடையில் இருப்பேன். என் உடல் ஆறுமாதத்தில் ஏழு கிலோ கூடிவிட்டிருந்தது. தொப்பை, தாடையில் பை. தூக்கமின்மையால் கண்கள் தளர்ந்திருந்தன. கன்னத்தில் ஒரு கருமை பாசிபோல படிந்திருந்தது. கடைவீதியில் இருக்கும் அத்தனை வணிகர்களுக்கும் உரிய அதே முகம் அமைந்துவிட்டது.
ஒரு வெள்ளிக்கிழமை காலை நான் என் கடைக்கு வந்தபோது முதலில் ஒன்றுமே புரியவில்லை. என் கடை அங்கு இல்லை. அதெப்படி என ஒரு கணம் திகைத்த பின்புதான் புரிந்துகொண்டேன், ஒரு மாபெரும் விளம்பரத்தட்டி என் கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்தது. பூர்ணமங்கல்யா பட்டுமாளிகையின் விளம்பரத்தில் நான்கு நடிகைகள் விரித்த சிறகுபோல வண்ணப்பட்டாடைகளை வீசி சிரித்தபடி நின்றிருந்தனர். கடையை அந்த தட்டி முழுமையாகவே மூடியிருந்தது.
(மேலும்)