Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16942 articles
Browse latest View live

நவவேதாந்தம்

$
0
0

இந்திய வேதாந்த மரபின் நவீன வடிவம். வேதாந்தக் கொள்கை காலப்போக்கில் சாதிய அமைப்புடனும், இந்திய ஆசாரவாதத்துடனும், இந்து வழிபாட்டு முறைகளுடனும் சமரசம் செய்துகொண்டு அதன் அடிப்படைகளை தவறவிட்டுவிட்டது என்று எண்ணிய ஞானிகள் வேதாந்தத்தின் தத்துவ அடிப்படைகள் சமரசமில்லாமல் வலியுறுத்தியமையால் உருவானது. பின்னர் அவர்களின் மாணவர்களால் இந்திய வேதாந்தத்தை நவீன காலகட்டத்தின் மானுடவிடுதலைக் கருத்துக்களுடனும், சமூக மறுமலர்ச்சிக் கருத்துக்களுடனும், நவீன ஐரோப்பிய தத்துவக் கருத்துக்களுடமும் இணைத்து விரிவாக்கம் செய்வதன் வழியாக விரிவாக்கப்பட்டது. இந்திய மறுமலர்ச்சியில் நவவேதாந்தம் பெரும் பங்களிப்பாற்றியது. உலகுதழுவிய இந்து தத்துவமாக இன்று நிலைகொள்கிறது.

நவவேதாந்தம்

நவவேதாந்தம்
நவவேதாந்தம் – தமிழ் விக்கி

படுகளம் -9 (நாவல்)

$
0
0

என் அழுகையோசை கேட்டு அம்மாவும் சின்னவளும் ஓடி வந்து என் அருகே அமர்ந்தனர். அம்மா என்னை பிடித்து தன் தோளோடு அணைத்துக்கொண்டு “ஏலே, என்னலே? சொல்லு, என்னலே? என்னல, சொல்லுலே மக்கா” என்று பதறினாள். சின்னவள் என் கையை பிடித்துக்கொண்டு “அண்ணா! அண்ணா!” என்று அழுதாள்.

அம்மாவின் மடியில் அப்படியே விழுந்துவிட்டேன். அவள் இடுப்பைச் சுற்றிப்பிடித்துக்கொண்டு தோள்கள் அதிர அழுதேன். அம்மா என் தலைமுடியை வருடிக்கொண்டு “ஒண்ணுமில்ல மக்கா… நமக்கு தெய்வம் துணையிருக்கு… நமக்கு தெய்வம் துணையிருக்குலே…” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் மெல்ல அடங்கினேன். மூக்கை சிந்தியபடி எழுந்தேன். அம்மா முந்தானையால் என் முகத்தை துடைத்தாள்.

“ஏவாரத்திலே விளுந்திட்டியாலே?” என்றாள் அம்மா.

“ஆமா”

“மாரி சொன்னான், அந்த முடிவாப்போறவன் போர்ட கொண்டு வச்சு மறைச்சிட்டானாமே…”

அம்மாவுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. நான் அதையே அப்போது ஆறுதலாக உணர்ந்தேன். நான் எதையும் சொல்லவேண்டியதில்லை.

“கைமீறி வட்டிக்கு பணம் எடுத்திருக்கே… அது களுத்தை பிடிக்கும். எல்லாம் நினைச்சுத்தான் பயப்படுதேன்னு நினைக்கேன்… செரி, போட்டு, எல்லாம் செரியாயிரும். பாத்துக்கிடலாம்…”

நான் பெருமூச்சு விட்டு எழுந்தேன். கழிப்பறைக்குச் சென்று சிறுநீர் கழித்து முகம் கழுவிவிட்டு வந்தேன்.

அம்மா என்னைப்பார்த்து “இப்ப இதையே நினைச்சு சும்மா மனச உளட்டிக்காதே. புரிஞ்சுதா? இந்த குழப்பத்திலே இருக்கிற வளியும் அடைஞ்சுதான் தெரியும்… பல்லக்கடிச்சுட்டு ஒரு வாரம் தள்ளிப்போடு. ஒரு வாரம்லே மக்கா. எந்த பெரிய துக்கமும் ஒரு வாரம்தான். அந்த ஏளுநாளை எப்டியாவது கடத்திட்டோம்னா எல்லாம் சரியாப்போயிரும். இந்த ஏளு நாளுக்குள்ள வாற நெனைப்புகளுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்ல பாத்துக்கோ…” என்றாள்.

நான் மீண்டும் மெத்தைமேல் அமர்ந்தேன். அம்மா என் தொடையில் கை வைத்து “அப்டியே விட்டிரு. காந்திமதியம்மை மேலே பாரத்தைப் போட்டுட்டு பேசாம இரு… நீ கடைக்கு போகவேண்டாம். இங்க இரு. ஏவாரத்தை பத்தி நினைக்காதே… உனக்கு பிடிச்ச சினிமா உண்டுமானா பாரு. சாப்பிடு. தூங்கு… ஒண்ணையும் நினைக்காதே… எல்லாத்தையும் ஒரு வாரம் களிஞ்சு பாத்துக்கிடலாம் கேட்டியா?” என்றாள்.

நான் அம்மாவை அப்படி பார்த்ததே இல்லை. அப்படி உறுதியாகவும் தெளிவாகவும் அவளால் பேசமுடியும் என்றே தெரிந்திருக்கவில்லை. சமையல், சொந்தக்காரர்கள், கோயில் தவிர எதைப்பற்றியும் அம்மா பேசி நான் கேட்டதே இல்லை.

நான் திரும்பி சின்னவளைப் பார்த்தேன். அவள் முகம் பீதியில் சுருங்கியிருந்தது. அவள் தோளில் கையை வைத்து “ஒண்ணுமில்லட்டீ” என்றேன். புன்னகை போல என் உதடுகள் வளைந்தன.

“அண்ணா!” என்று சொல்லி அவள் அப்படியே என் மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.

“சரிதான், இப்ப நீ தொடங்கியாச்சாக்கும்? நான் வாறேன். கொளம்புக்கு கரைச்சு வச்சிருக்கு” என்று அம்மா எழுந்து சென்றாள்.

நான் சின்னவளின் தலைமேல் கைவைத்து வருடியபடி “ஒண்ணுமில்லட்டீ… பாத்துக்கிடலாம்… அம்மை இருக்காள்லா?” என்றேன். சட்டென்று ஒரு சிலிர்ப்பு உருவானது. அம்மை என்றபோது நான் அக்கணம் என் அம்மாவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

சின்னவள் எழுந்து  கண்களை துடைத்துக்கொண்டு “நான் வேணுமானா படிப்பை நிப்பாட்டுதேன்” என்றாள்.

“அதுசரி, சந்தடி சாக்கிலே அப்டி ஒரு குறுக்குப்பிளான் போடுதியாக்கும்? கோட்டிக்காரக் களுத, அடிச்சு பல்லப் பேத்திருவேன். ஒளுங்கா படிடீ” என்று சிரித்தேன்.

அவளும் சிரித்தாள். அவள் ஓர் இளம்பெண் ஆகிவிட்டிருப்பது அந்தச் சிரிப்பில்தான் தெரிந்தது. அழகான பல்வரிசை, கரிய ஈறுகள்.

“படிப்பு லெச்சணம் இப்ப நீ சொன்னப்பவே தெரியுது… இந்த வருசம் பத்தாம்கிளாஸு அவுட்டுதான். என்ன?”

“இல்லண்ணா, நான் நல்லா படிக்குதேன்.”

“டிசம்பர்ல என்ன ரிப்போட்டுன்னு எனக்கு தெரியும்.”

“நான் அதுக்குப்பிறவு நல்லா படிச்சேன்” என்று சொல்லும்போதே அவளுக்கு கள்ளச்சிரிப்பு வந்தது. “பாஸாயிடுவேன் அண்ணா.”

“செரி போயி படி. மனசிலே ஒண்ணையும் வச்சுக்காதே… இதொண்ணும் உனக்குள்ள விஷயம் இல்ல. அம்மை இருக்காள்லா?”

அவள் தலையசைத்தபின் எழுந்து சென்றாள். நான் எழுந்து நின்றேன். இரு கைகளையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தேன்.

“ஏலே, மீனு வாங்கட்டாலே? சின்னான் வந்திருக்கான்…” என்றாள் அம்மா.

“வாங்கு… என்ன மீனு?”

“சாளைதான்… புளிமொளமா வைக்குதேன்.”

“கொஞ்சத்தப் பொரிச்சிரு” என்றேன்.

அம்மா “செரி” என்றாள். “இங்க கொண்டுவந்தா கொள்ளவெல சொல்லுவான்… ஆனா இந்த வேகாவெயிலிலே ஆரு சந்தமுக்கு வரை போறது? கடைப்பையனுங்கள அனுப்பினா சைக்கிளிலே போயி வாங்கியாருவானுக” என்றபடி வெளியே சென்றாள்.

அவள் நடிக்கவில்லை. இயல்பாகவே இருக்கிறாள். மெய்யாகவே கொஞ்சம்கூட பயப்படவில்லை. அணுவளவுகூட கவலைப்படவில்லை. இரண்டு பெண்களுடன் ஒரு பெண்மணி அப்படி இருக்க முடியுமா? ஆனால் இருக்கிறாள். பொய் இல்லை. கண்முன் இருக்கிறாள்.

டிவியில் என்ன படம் என்று தேடினேன். டைரக்டரின் படம், ஒரு ஃப்ரேமிலேயே அது அவர் என்று தெரிந்துவிடும், ஒளிவிடும் புதர்கள், உள்ளொளி கொண்ட மேகங்கள், நிழல்களாடும் தரை, விரிந்த கூந்தல்கொண்ட மாநிறப் பெண்கள்… பெரிய பொட்டு வைத்த முகங்கள், கனவில் ஆழ்ந்து சரிந்த இமைகள்… நான் மெய்மறந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். நாடகமே இல்லாத அவருடைய காட்சிகள். வெறுமே ஒழுகிச்செல்லும் ஒளியாலான ஒரு படம். அது வாழ்க்கை அல்ல, வாழ்க்கை என அவர் நினைத்தது. வண்ணங்கள் செறிந்தது. இனிய இசைகொண்டது.

படம் முடிந்தபோது நான் நிம்மதியாகிவிட்டிருந்தேன். அந்தப்படம் எனக்காக அவரே வந்து நின்றதுபோல இருந்தது. அது ஓர் அற்புதமான நிமித்தம். அவர் எப்போதுமே தன் மாணவர்களைக் கைவிடுவதில்லை. எல்லா பலவீனங்களுடனும் மாணவர்கள் முன் நின்ற மனிதர்.

“சோறு வைக்கட்டாலே?”

அம்மா தோசைக்கல்லில்தான் மீன் பொரிப்பாள். அந்த வாசனை வீடெங்கும் நிறைந்திருந்தது. கைகழுவச் சென்றபோது நான் மெல்லிய ஒலியில் அந்தப்படத்தின் பாட்டை சீட்டி அடித்துக்கொண்டிருந்தேன்.

சாப்பிடும்போது அம்மா “நல்லா சாப்பிடு… இப்பதான் சாளை சீசன்… மீனிலே நல்லது சாளையாக்கும்” என்றாள்.

“ஆமா” என்றேன்.

“உனக்க அப்பா தின்னு சலிக்க மாட்டாரு… வாளையும் சாளையும் வாழ்க்கையிலே  வெளிச்சம்னு ஒரு தடவ சொன்னாரு.”

“அப்பா அப்டியெல்லாம் பேசுவாரா என்ன?”

“ஏல, அவரு கவிதையெல்லாம் எளுதினவருல்லா?”

“ஆரு, நம்ம அப்பாவா?”

“பின்ன? கல்யாணத்துக்கு மிந்தி நெறைய எளுதியிருக்காரு. கண்ணதாசனை பாக்கணுமுண்ணு மெட்ராஸுக்கு போயி நாலஞ்சுமாசம் காவலு கெடந்து பாத்து ஒரு புக்கிலே கையெளுத்து வாங்கிட்டு வந்தாரு. முத ராத்திரியிலே ஒரு நோட்டுபுக்க வைச்சு வாசிச்சு காட்டினாரு…”

“எப்டி, நல்ல கவிதையா?”

“ம்ம்… கணக்குப்பேரேட்டிலே எளுத நல்லாருக்கும்”

நான் வெடித்துச் சிரித்துவிட்டேன். எத்தனை அற்புதமான விமர்சனம். அம்மா இத்தனை நுட்பமாகப் பேசுவாள் என்றே எனக்கு தெரியாது.

அன்று ஒரே குதூகல மனநிலையில் இருந்தோம். எல்லாவற்றையும் தூக்கிவீசிவிட்டு கொண்டாட விரும்பினோம். அத்தனைபெரிய துக்கம், நெருக்கடிக்குப் பிறகுதான் அப்படி ஒரு சிரிப்பு சாத்தியம். மரணம் நடந்த வீடுகளில் சில நாட்களுக்குப்பின் அப்படி ஒரு கொண்டாட்டம் அமைவதை முன்பு கண்டிருக்கிறேன்.

நான் சின்னவளிடம் “அப்பா கவிதையை படிச்சிருக்கியாடீ?” என்றேன்.

“எங்க காட்டுதாரு? என்னமோ எளுதி எளுதி வைக்குதத பாத்திருக்கேன்.”

“இவ பிறந்தப்ப ஒரு கவிதை எளுதினாரு… அதை இவள தூக்கி மடியிலே வைச்சு காதிலே பாடிக்காட்டினாரு.”

“இவ என்ன செய்தா?”

“ஒரே அளுகை… பிறவு அப்டியே பளகிப்போச்சு. அச்சடிச்ச எதைப் பாத்தாலும் மூஞ்சி சுருங்கிரும்லா?”

“ஏட்டி, படிக்குதியா?”

“படிக்காம? இப்பகூட படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.”

“ஆமா, படிச்சே. ஓரக்கண்ணாலே சினிமாவ எட்டிப்பாத்துட்டு படிச்சு நீ வெளங்கினே.”

கைகழுவி படுக்கையறைக்குச் சென்றேன். ஒரு தூக்கம் போடவேண்டும் என்று தோன்றியது. மனம் உல்லாசமாக இருந்தது. நிம்மதியாக, எந்த சுமையும் இல்லாமல், நாளை என்பதே இல்லாமல்…

படுத்து அக்கணமே தூங்கிவிட்டேன். அம்மா பீரோவிலிருந்து எதையோ எடுக்கும் ஓசைகேட்டு கண்விழித்தேன். எங்கிருக்கிறேன் என்றே சிலநிமிடங்கள் புரியவில்லை.

“என்னலே, எந்திரி… மணி அஞ்சாச்சு”

“அஞ்சா?” என்று திகைத்து எழுந்து அமர்ந்தேன். சன்னல் வழியாக வெளிச்சம் மங்கியிருப்பதைக் கண்டேன்.

“நல்லா உறங்கினே, செரி உறங்கட்டும்னு விட்டுட்டேன்.”

“நீ இங்க என்ன செய்யுதே?”

“துணியெல்லாம் அடுக்கி வைச்சேன்… ராத்திரிக்கு இங்கியே சாப்பிடு. நாளைக்கு காலம்பற வள்ளியூரு வரைக்கும் போகணும்.”

“எதுக்கு?”

“நம்ம குலதெய்வம் தென்கரை மகாராஜன்லா… போயி என்ன ஏதுன்னு அவன்கிட்ட சொல்லிட்டு வருவோம்… காட்டிலே இருந்தாலும் நாட்டிலே நடக்குததெல்லாம் அறிஞ்சவனாக்கும் அவன்.”

நான் தலையசைத்தேன்.

“கடைய பய பாத்துக்கிடுவான்ல?” என்றாள்.

“மாரி பாத்துக்கிடுவான். மத்த பயக்கள இந்த மாசத்தோட அனுப்பிருவேன்” என்றேன்.

அம்மா என்னருகே அமர்ந்து “நீ வேற மாதிரி ஒண்ணும் சிந்திக்கலே இல்ல?” என்றாள்.

அவள் என்ன கேட்கிறாள் என்று எனக்குப் புரிந்தது. உண்மையில் நான் அதைச் சிந்தித்திருந்தேன் என்றும் அப்போதுதான் தெரிந்தது. அந்த உறைநிலையே அதனால்தான். நான் ஒன்றும் சொல்லவில்லை.

“சினிமா டிராமான்னு காட்டிக்காட்டி ஒவ்வொருத்தருக்கும் அதுதான் முதல்ல நினைவுக்கு வரும்… அது மாதிரி முட்டாத்தனம் வேற இல்ல” என்றாள். “இருக்குதது எல்லாம் போனா என்ன? கைகாலு இல்லியா? ஏலே நான் ஒத்த ஒருத்தியா எட்டூருக்கு சமைச்சுப் போடுவேன். எங்கியாம் போயி ஒரு மெஸ்ஸு வைச்சாக்கூட அஞ்சு வருசத்திலே வீடுகட்டிப்போடலாம் பாத்துக்க…”

நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். மிக இயல்பாக அதைச் சொல்லிக்கொண்டு ஒரு பனியனை மடித்து நீவி உள்ளே வைத்தாள்.

உண்மைதான், எத்தனை வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நான் ஏன் எண்ணவே இல்லை.

அம்மா சொன்னாள் “நாலுபேரு முன்னாடி தலநிமுந்து நிக்கமுடியாது, மானம் மரியாத போயிடும்… இதெல்லாம்தான் ஒவ்வொருத்தனும் யோசிக்குதது. நீ இத்தன வருசத்திலே அப்டி மத்தவனுக யாரப்பத்தியெல்லாம் யோசிச்சே? யாருக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு என்ன தெரியும்? ஆரும் ஆரையும் கவனிக்குதது இல்லை. அவனவனுக்கு அவனவன் பொழைப்புதான் முக்கியம். பேச்சு வந்தா ஒரு வாரம், பத்துநாள். பிறவு அவனவன் வேலையப் பாக்கப் போயிருவான். செரி, இங்க இருக்க கஷ்டமா இருந்தா ஊர விட்டுப் போயிருவோம். உலகம் விரிஞ்சுல்லா கெடக்கு…”

“ஆமா” என்றேன். “உனக்க சாளைப்புளிமுளம் இருக்க வரைக்கும் நமக்கு ஒரு கொறையும் இல்லை.” வேடிக்கையாக தொனித்தாலும் அதை மெய்யாகவே நம்பித்தான் சொன்னேன்.

அம்மா புன்னகைத்து “நம்ம ரங்கம்மை ஆச்சிக்க வீட்டுக்காரரு தவறினப்ப அவளுக்கு எட்டு பிள்ளைக. எட்டும் கண்ணுமுளிக்கா பிராயம். கடன் தவிர ஒத்தச்சல்லி கையிலே இல்ல. அவ இட்டிலிக்கடை வைச்சு பிள்ளைகள ஆளாக்கினா. அவளுக்க மூத்தமகன் பணகுடியிலே இப்ப ஓட்டலு நடத்துதான். ஆச்சி கடசீகாலத்திலே காரிலே இருந்து எறங்காமல்லா சுத்திவந்தா.”

“நீயும் காரிலே சுத்தணுமாக்கும்?”

“ஏன் சுத்தப்பிடாதா? சும்மா சொன்னேன்… பொட்டச்சி நினைச்சாலும் இங்க நடக்கும்.”

எனக்கே தெரிந்திருந்தது, அப்படி மொத்த குடும்பத்தையே கட்டி எழுப்பிய பெண்களைப் பற்றி. ஆரல்வாய்மொழிப் பெரியம்மா, கடுக்கரைப் பாட்டி. பலபேர், அவர்கள் பேச்சில் வந்துகொண்டேதான் இருந்தனர்.

“ஒண்ணும் செய்ய முடியாதுன்னா குறைஞ்ச சேதாரத்திலே எல்லாத்தையும் முடிச்சு என்ன மிஞ்சுதுன்னு பாரு… என்ன மிஞ்சினாலும் அது லாபம்னு வையி… பாத்துக்கிடலாம்…” என்று அம்மா சொன்னாள். எட்டிப்பாத்து “ஏட்டீ இவளே, மல்லிப்பூக்காரன் போறானா பாருடீ… அவன் பாட்டுக்கு சத்தம்போடாம போயிடப்போறான்” என்றாள்.

“சத்தம் கேக்கல்லே.”

“நீ வாசலிலே போயி நின்னு பாக்கதுக்கு என்ன கொள்ளே? எப்பபாரு டிவி முன்னாடி இருக்கது… படிப்பு லெச்சணம் அப்டி. என்னத்த பரீட்சை எளுதினாளோ… அந்த பேப்பர திருத்துதவன் பைத்தியம் புடிச்சு அலையப் போறான்…” என்றபின் “அப்பல்லாம் பொருளு விக்குதவனுக நல்லா கத்திக்கூப்பாடு போடுவானுக. இப்ப ஒரு ஆரன் அடிச்சுட்டு போறானுக. கத்துறதுக்கு கூச்சம்…” என்று பேசிக்கொண்டே வெளியே சென்றாள்.

“எனக்கு மல்லிப்பூ வேண்டாம்.”

“நல்லாருக்கே, நல்ல நாளும் அதுவுமா பொட்டப்புள்ள சாயங்காலம் பூ வைக்காமலா? பெரியவ வந்தா கேப்பா.”

“அப்ப அவ வைக்கட்டும்… பூ வைச்சா பேனு வருது”

நான் எழுந்து கழிப்பறை சென்றேன். வியர்வையில் உடல் கசகசவென்றிருந்தது. உடையை கழற்றிவிட்டு குளிர்ந்த நீர்விட்டு குளித்தேன். குளியல் என்னை தெளிவடையச் செய்தது.

திண்ணைக்கு வந்து அமர்ந்தேன். அம்மா காபி கொண்டுவந்து தந்தாள். அதை குடித்தபடி மஞ்சளாகிக் கொண்டிருந்த வெயிலை பார்த்தேன். புழுதிமணம் கொண்ட காற்று வீட்டின் கொல்லைப்பக்கமிருந்து வந்து சாலை நோக்கிச் சென்றது. சாலையில் இருந்து வரும் காற்றில் டீசல்நெடி இருக்கும்.

எல்லாம் முழுமையாகவே சாந்தமாகிவிட்டது. செய்யவேண்டியது ஒன்றேதான். கடையின் பொருட்களை கிடைத்த விலைக்கு விற்று காசாக்கவேண்டும். கடையை கைமாற்றிவிடவேண்டும். ஏஜென்ஸிகளுக்கு கட்டிய வைப்புத்தொகைகளை திரும்பப்பெற முடியும். நிலங்களையும் வீட்டையும் விற்றால் கடன் முழுமையாக அடைந்துவிடும். ஓரிருலட்சம் மிச்சம்கூட நிற்கும். கிளம்பிவிடவேண்டியதுதான். ஏதாவது செய்யலாம், எத்தனையோ வாய்ப்புகள். என் முகமறிந்த பலர் சென்னையில் இருந்தார்கள்.

அவ்வளவுதான், ஒரு மாதமாகலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு நல்லது. ஓர் ஏக்கம் எழுந்தது, தொலைவில் இருந்து கேட்கும் ஓர் இனிய இசை போல. இந்த நகரை நான் எப்போதைக்குமாக விட்டுப்போகக்கூடும். திரும்ப வரவே மாட்டேன். அதற்குத்தான் வாய்ப்பதிகம். அப்பாவின் நினைவுகள். நான் பிறந்து வளர்ந்த இந்த வீடு. என் தாத்தாவின் பெயர் பதித்த கல்லால் ஆன பெயர்ப்பலகை. காந்திமதியுடன் நெல்லையப்பன் அமர்ந்திருக்கும் பெரிய கோயில்…

ஒரு கணம் நெஞ்சடைத்தது, உடனே மீண்டுவிட்டேன். எல்லாரும்தான் ஊர்களை விட்டுச் செல்கிறார்கள். படிப்புக்கும் வேலைக்கும். வெளிநாடு சென்று அங்கேயே வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள். பிறந்த ஊரிலேயே வாழ்வோம் என்று எவருக்காவது உறுதிசொல்லியிருக்கிறேனா என்ன?

“நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வாறேன்மா.”

“பாத்துப்போ… பைக்கு வேண்டாம் கேட்டியா?”

“சரி”

அம்மா இயல்பாக மிக ஜாக்ரதையாக இருக்கிறாள். நான் புன்னகையுடன் செருப்பை மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கினேன்.

“கோயிலுக்குபோயி அப்பா பேரிலே ஒரு அர்ச்சனை செய்யி…” என்று அம்மா பின்னால் வந்தாள்.

“ஏன்?”

“இண்ணைக்கு அப்பா பத்தி பேசினோம்லா? சும்மா அப்டி ஒரு நெனைப்பு உனக்கு வராதே… உன்னைய நம்பி ரெண்டு குமருகளை விட்டுட்டு போயிட்டாரு… அந்தக் கவல இருந்தது கடைசிநாளிலே… எங்கிட்ட இப்டி இருக்கேனேடீன்னு சொன்னாரு. நம்ம பய பொறுப்பானவன், அவன் பாத்துக்கிடுவான்னு நான் சொன்னேன். நீ ஒரு அர்ச்சனை பண்ணிடு… நச்சத்திரம் ராசி தெரியும்லா?”

“தெரியும்” என்றேன்.

என்ன ஒரு ஜாக்ரதை, எவ்வளவு நுட்பமான சொற்கள். நான் அறிந்த அம்மாவே இல்லை. அம்மாவை திறந்து உள்ளிருந்து இன்னொரு பெண்மணி வெளியே வந்ததுபோல தோன்றியது. ஆனால் இந்த முகமும் நான் ஏற்கனவே அறிந்ததுதான் என அப்போது தெரிந்தது.

அம்மா எப்போதுமே பெரிதாகப் பதறுவதில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிளில் சென்று பஸ்மேல் மோதி விழுந்துவிட்டேன். இரண்டு எலும்பு முறிவு. அப்பா பதறி அழுது கலாட்டா செய்துவிட்டார். அம்மா நிதானமாக ஆகவேண்டியதைச் செய்தாள்.  அப்பா ரத்த அழுத்தம் அதிகமாகி ஆஸ்பத்திரியிலேயே இன்னொரு படுக்கையில் கிடந்தார். அம்மா ஊரிலிருந்து சண்முகம் மாமாவை போன்  செய்து வரவழைத்தாள். குணமாகி நான் திரும்பிய பின் ஒருநாள்கூட அந்த விபத்தையோ ஆஸ்பத்திரியையோ பற்றி பேசியதுமில்லை.

கோயில்முன் நல்ல கூட்டம். அர்ச்சனைத்தட்டு வாங்கி உள்ளே சென்றால் எல்லா சன்னிதியிலும் கூட்டம் நெரிசலிட்டது. அர்ச்சகருக்கு என்னை தெரியும். புன்னகை செய்தார். அப்பா பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு சுற்றிவந்து குளத்துப் படிக்கட்டுகளில் இறங்கி உள்ளே சென்று சற்றுநேரம் அமர்ந்திருந்தேன். கோயில் பெரும்பாலும் இருண்டு கிடந்தது. ஆகவே விளக்குகள் மேலும் ஒளிகொண்டிருந்தன. நீரின் கரியபரப்பில் நெளியும் கோடுகளாக ஒளி அலைபாய்ந்தது.

என் அகம் அத்தனை அமைதியாக இருந்தது. நல்லதுதான் என்று ஒரு சொல் மனதில் வந்தது. நான் ஆணவம் கொண்டுவிட்டேன். எல்லாம் அத்தனை எளியவை என்று நினைத்துவிட்டேன். இளமையில் அப்படித்தான். நான் நினைப்பதை நான் செய்யமுடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

சினிமா எடுப்பதைப் பற்றியே டைரக்டர் அப்படிச் சொல்வார். இளைஞர்கள் சினிமா எடுப்பது பற்றி கற்பனை செய்யும்போது அவர்கள் நினைப்பது அப்படியே திரையில் வந்துவிடும் என்று எண்ணிக்கொள்வார்கள். அதற்கு எதிரான விசைகள் நூறு உண்டு. நடிகர்களின் மனநிலை, மொத்தக்குழுவின் மனநிலை, அவர்கள் புரிந்துகொண்ட வடிவங்கள், படப்பிடிப்பின் நிர்வாகச் சிக்கல்கள், படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் இயல்புகள்…

“நமக்கும் நமக்கு எதிரான சக்திகளுக்கும் நடுவிலே ஒரு காம்ப்ரமைஸாத்தான் சினிமா உண்டாகி வருது… சினிமா முழுக்க முழுக்க நம்முளுது இல்ல, அதிலே பாசிட்டிவ் நெகட்டிவா எல்லா சக்திகளோட பங்களிப்பும் இருக்கு. அதனாலே நான் நினைச்சது இது இல்லைன்னு சொல்லாத டைரக்டரே இல்ல. எடிட் பண்ணி எடிட் பண்ணி அவனுக்கு திருப்தி வர்ரதே இல்லை. ரிலீஸ் டேட் சொல்லி புரடியூசர் நெருக்கலைன்னா டைரக்டரே படத்தை கொன்னிருவான்” என்று ஒருமுறை சொன்னார். “அவனுக்கு அவன் படத்த பிடிச்சிருக்கணும்னா நாலஞ்சு வருசம் தாண்டணும்.”

இந்தப் பாடம் நல்லதுதான். எடுத்த எடுப்பிலேயே இத்தனைபெரிய அடி விழுவது ஒரு பயிற்சி. எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட்டேன். இனி எனக்கு இதைவிடப்பெரிய இழப்பேதும் வரப்போவதில்லை.

அம்மா அழைத்தாள். “ஏலே சாப்பிட வாறேல்ல? மீன்கொளம்பு சுண்டவைச்சிருக்கேன். தோசை சுட்டு தாறேன்.”

“வாறேன்” என்றேன்.

எட்டரை ஆகியிருந்தது. ஒன்பதுக்கெல்லாம் நடை சாத்திவிடுவார்கள். உள்ளூர்க்காரர்களுக்குத்தான் இந்த இடமெல்லாம் தெரியும். ஆகவே இங்கே வந்து பார்க்க மாட்டார்கள். கம்பிவேலியில் உள்ளே வருவதற்கான இடம் எங்கே என்று உள்ளூரிலும் சிலருக்கே தெரியும்.

நான் மீண்டும் சன்னிதிப்பக்கம் வந்தபோது அவரைப் பார்த்தேன். காசிலிங்கம் தன்னந்தனியாக நின்று கும்பிட்டுக்கொண்டிருந்தார். அர்ச்சகர் அளித்த விபூதியை பெற்றுக்கொண்டு மீண்டும் ஒருமுறை வணங்கிவிட்டு திரும்பினார். அவருடன் அந்த நெட்டையனும் இருந்தான். அவர்கள் வாசலைநோக்கிச் சென்றனர்.

என் உடலெங்கும் அனல் பரவுவதுபோல் உணர்ந்தேன். கல்தூணை பிடித்துக்கொண்டு நின்றேன். கண்கள் இருட்டி வந்தது. நிதானம் மீண்டபோது அவர் வெளியே சென்றுவிட்டிருப்பதை கண்டேன். அப்போது தெரிந்தது என்னால் அதை அப்படி விடமுடியாது என்று.

(மேலும்)

பித்தன் வருகை

$
0
0

புதுமைப்பித்தனின் மார்பளவுச் சிலை ஒன்று அஜிதனுக்கு திருமணப்பரிசாக வந்தது. அதை அவனுக்குத் தர மறுத்து என்னுடைய புத்தக அடுக்கில் வைத்துக் கொண்டேன். அடிக்கடி பார்க்கக்கூடியதாக. ஏற்கனவே அங்கே அசோகமித்திரன் படம். நேர் எதிரில் நித்ய சைதன்ய யதி படம். மேஜைமேல் அருண்மொழி படம்.

எல்லாம் ஒரு மனநிலைக்காகத்தான். பிடித்தமான விஷயங்கள் சுற்றிலும் இருக்கட்டுமே. கையருகே சூடான கறுப்புக் காபி வெப்பக்குடுவையில் காத்திருப்பதுபோலத்தான்.

உண்மையில் எழுதும் இடத்தைப் பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேன். பத்மநாபபுரத்தில் என் எழுத்தறை ஒரு சிறிய ஆறடிக்கு ஆறடி சதுரம். எனக்கு முதல்முறையாக ஓர் எழுத்தறை அமைந்தது அப்போதுதான். உள்ளே என் சிறிய நூலகம், ஒரு மேஜை, நாற்காலி. இருபுறமும் சன்னல்கள். ஒரு சன்னல் வழியாக சமையலறை தெரியும். இன்னொன்று வழியாக முற்றத்தின் மாமரம்.

அதன்பின் இந்த வீட்டின் கீழிருக்கும் சிறிய அறை. அங்கே பழைய கணிப்பொறியுடன் அமர்ந்திருப்பேன். அருகே படுக்கை. அருண்மொழிக்கும் குழந்தைகளுக்கும் இன்னொரு படுக்கையறை. 2006ல் இந்த மாடியை கட்டினேன். இங்கே ஓர் எழுத்தறை, ஒரு படுக்கையறை. இது என் உலகமாக இருக்கிறது இப்போது.

எழுதும் இடத்தை  இனிதாக்கிக் கொள்வது என் வழக்கம். எனக்கு பிரியமானவற்றை கொண்டு வந்து வைப்பேன். ஜன்னல் வழியாக தெரியும் மரத்தை, அறைக்குள் வரும் பல்லியை,சரிந்து உள்ளே வரும் வெயிலை எல்லாவற்றையும் ‘திட்டமிட்டு’ ரசிப்பேன். அதை நானே சொல்லிக்கொள்வேன். நாம் சொல்வதை நம் அகம் நம்பும். வேறெவரை விடவும் நாம் கவனிப்பதும் ஏற்றுக்கொள்வதும் நம்மைத்தானே?

மெல்ல மெல்ல அந்த இடம் மிகமிக அணுக்கமானதாக ஆகிவிடும். அந்த இடத்துக்காக என் அகம் ஏங்கும். அங்கே செல்ல தவிக்கும். அங்கே அமர்ந்ததுமே ஒரு நிம்மதியும் பரவசமும் எதையாவது எழுதவேண்டும், வாசிக்கவேண்டும் என்னும் எண்ணமும் உருவாகும். அமர்ந்தாலே எழுதமுடியும்.

இங்கே அமர்ந்தபடி தொலைபேசியில் பேசமாட்டேன். மின்னஞ்சல்களைப் பார்ப்பதுமில்லை. மின்னஞ்சல்களை செல்பேசியில் பார்ப்பேன். ஏனென்றால் உளச்சோர்வு அளிக்கும் எதிர்மறைச் செய்திகளுடன் இந்த இடத்தை நான் தொடர்புபடுத்திக் கொள்வதில்லை. இது தித்திக்கும் ஓர் இடம்.

நான் வழக்கமாகத் தங்கும் விடுதியறைகளையும் இப்படி ‘தன்வய’ப்படுத்திக் கொள்வதுண்டு. அந்த அறைக்கு நானே சொல்வேன் ‘நீ ஓர் இனிய இடம். உன் அனைத்துமே இனியவை. உன்னை நான் விரும்புகிறேன். நீ எனக்கு அருள்க’ சொல்லி எழுதி அதை இனிதாக்கிக் கொண்டால் அறை மலரத்தொடங்கிவிடுகிறது.

இந்த அறையில் புதுமைப்பித்தனின் வரவு ஓர் இனிய நிகழ்வு. அவர் முகத்தில் ஓர் அப்பாவித்தனமும் குசும்பும் உண்டு. அவர் வளராமலேயே நின்றுவிட்ட சிறுவன் என்று தோன்றும். கூர்மையானவர், ஆனால் உலகியலை அறியாமலேயே சென்றுவிட்டவர். சற்றே சலிப்புகொண்ட அசோகமித்திரனின் முதிய முகத்திற்கு இப்படி ஓர் எதிர்முனை தேவைதான்.நேர்முனையும் எதிர்முனையும்.

நேர் எதிரில் நித்ய சைதன்ய யதி. அது நியூட்ரல் முனை. எர்த். மண்ணுடன் விண்ணின் முடிவிலா ஆற்றலை இணைக்கிறது.

புதிய வாசிப்பறை 2009

படிப்பறைப் படங்கள்
இன்றைய வாசிப்பு 2020

அழகும் ஆடம்பரமும்

அடவியும் அறைகளும்

 

அழைப்பு, கடிதம்

$
0
0

அழைப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ

அழைப்பு கதையின் மையம் அந்த முடிவின்மையின் அழைப்புதான். அது ஒரு பெரிய விசை. அதிலிருந்து தப்பவே முடியாது. இந்த உலகை கவ்விப்பிடித்துக்கொண்டு தாக்குப்பிடிக்கலாம். வேலை, குடும்பம், உறவுகள், காமம், வெற்றி, பணம் புகழ் எல்லாமே அந்த ஈர்ப்பில் இருந்து தப்புவதற்காகத்தான். கதவைத்திறது முடிவிலா வெளியில் சிதறிப்பரந்து போல ஒருவன் கதையில் வருகிறான். அவன் உணர்ந்த அந்த ஈர்ப்புதான் பயங்கரமானது

அதியமான் கிருஷ்ணா

 

அன்புள்ள ஜெ,

அழைப்பு கதை படித்தேன் கதை முடிந்தும் என் மனதின் உரையாடல் தொடர்ந்தது. அந்த உரையாடலை இங்கு பகிர்கிறேன்.

உரையாடல் :

அதற்கு முடிவில்லை என்றால் தொடக்கமும் இல்லை. அது அனைத்தும் நிரந்தரமாக அங்கே உள்ளது.

இல்லை, சிறு திருத்தம். அனைத்தும் அல்ல.

அது அனைத்தும் ஒன்றுதான்.

எப்படி?

அது தொடங்கவுமில்லை, வளரவுமில்லை, முடிவதுமில்லை..

வளர்வதில்லையா ?

ஆம் அது வளர தேவையுமில்லை.

இதற்கு மகிழ்ச்சி உண்டா ?

அது எப்படி மகிழ முடியும் ?

அது திகழ மட்டும் தான் முடியும்.

அது பெரும் அச்சம் தரும் வெறுமை.

அந்த வெறுமையா நம் அனைவரின் வாழ்வின் தேடல்?

இனி எப்படி…எதை நாம் அறிய விளைவது ?

அறிவை நாடாதிருப்பது தான் உண்மையான இறப்பு.

ஆனால் இந்த வேற்றுலகம் இறந்த சடலம்மல்ல. இது முழுமையாக விழித்துள்ளது.

பிறந்திருந்தால் தானே இறப்பதற்கு.

அப்படியானால் இது தன்னை அனைத்தும் உணர்ந்திருக்கும்.

முழு அறிவு ! முழு பிரக்ஞை!

அதற்கு எல்லை இல்லை.

அப்படியானால் நாம் அதை சார்ந்தவரா?

இருக்கலாம். அது நம்மை அறியலாம்.

நாம்?

அதை உணரும் போது அதில் கலக்கலாம்.

அதில் மகிழ்ச்சி இருக்குமா? அல்லது பேர் வறுமையை?

இருமை இல்லாமல் உணர்வது அறிவது  எப்படி?

இருமையை அறியலாம். ஒருமையை உணரலாம்.

இரண்டும் அறிவே.

மேதைகள் கலை மூலம் இதையே நிகழ்த்துகிறார்கள்.

என்னால் ஒரு படத்தை முழுமையாகவே காண இயலும். அதில் உள்ள மேதாவி தன்மையை கூர்ந்து கவனிக்க சுலபத்தில் இயலாது.

அப்படி நான் பார்க்க வேண்டுமென்றால் அந்த படத்தை பல முறை பார்க்க வேண்டும். அப்பொழுது கலை நுட்பங்கள் தெரியும். ஆனால் பிறகு அதே படத்தை மீண்டும் எப்பொழுதும் முழுமையாக பார்க்க இயலாதது.

மேதைகளால் நெருங்கி நுட்பமாக பார்க்கவும் முடியும், விலகி முழுமையாக பார்க்கவும் முடியும்.

இந்தத்தன்மையே பல அரிய கலைகளை சாத்தியமாக்கி இருக்கும்.

இது சாமான்ய வாழ்க்கைக்கு பெரும் வரம். நெருங்கவும் இயலும் விலகவும் இயலும்.

அறிவைத்தேடி நெருங்கவும் விலகவும் இருக்கும் இந்த இயக்கம் தான் மழிச்சி.

கலை நம்மை இங்கு இந்த பாதை வழியில் கொண்டு செல்லுமா ?

தக்க குருவின் வழிகாட்டல் அங்கு கொண்டு செல்லுமா ?

நன்றி,

அருண் குமார் மோகன்தாஸ்.

யுவன் சந்திரசேகர் சந்திப்பு –வான்கூவர்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வான்கூவரில் , மகேந்திராவும், ஆனந்தும் ஒருங்கமைத்த யுவன் சந்திரசேகர் அவர்களுடனான சந்திப்பிற்கு அமெரிக்காவிலிருந்து  நண்பர்கள் விஜய்யும் (கலிபோர்னியா), சீனிவாசன் (சியாட்டல்) சென்று வந்தார்கள். யுவன் உரையாக ஆற்றுவதைவிட, வாசகர்களுடன் உரையாடினால் நன்றாக இருக்கும் என்று விரும்பியதால்நிகழ்வு அப்படியே அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்த் நிகழ்வின் காணோளியை என்னிடம் பகிர்ந்தார். வெளிநாடு வரும் எழுத்தாளர்களிடம் கேட்கப்படும் சில வழக்கமான கவலை நிறைந்த பெற்றோர்களின் கேள்விகள் இருந்தாலும் யுவனுக்கென்று உள்ள கூறுமுறையில், புதுவாசகர்களுக்கு தெளிவை கொடுக்கும் பதில்கள் உள்ளன. Chatgpt-கிட்ட ஜோக் கேட்டா சொல்லும், ஆனா அது சிரிச்சிக்கிட்டே ஜோக் சொல்லுமா என எதிர் கேள்வி கேட்கும் யுவனுடனான இந்த உரையாடலை பல்லாயிரம் வாசகர்களுக்குப் போய்ச்சேரட்டுமென, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கத் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

கே.தாமோதரன்

$
0
0

இந்திய சிந்தனை மரபை மார்க்ஸியக் கோணத்தில், காழ்ப்புகளின்றி ஆய்வுசெய்த முன்னோடி அறிஞர் கே.தாமோதரன். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முன்னோடித்தலைவர்களில் ஒருவர். பின்னர் வந்த தேபிப்பிரசாத் சட்டோபாத்யாய போன்ற ஆய்வாளர்களின் முன்முடிவுகள் கொண்ட, கசப்புகள் நிறைந்த ஆய்வுமுறையுடன் ஒப்பிடுகையில் தாமோதரனின் நடுநிலையும் இலக்கியநுண்ணுணர்வும் வியப்புக்குரியது.

கே.தாமோதரன்

கே.தாமோதரன்
கே.தாமோதரன் – தமிழ் விக்கி

படுகளம் -10 (நாவல்)

$
0
0

வள்ளியூர் அருகே நம்பியாற்றங்கரையில் இருக்கும் சித்தூர் தென்கரை மகாராஜா கண்டன் சாஸ்தா கோயிலுக்கு நான் மூன்று முறை அதற்கு முன்னர் சென்றதுண்டு. கடைசியாக ஆறாண்டுகளுக்கு முன்பு சண்முகம் மாமாவின் மகள் செண்பகவல்லியின் திருமணத்திற்கு பிறகு புதுமாப்பிளையுடன் சென்றது. அப்போது அம்மாவும் அப்பாவும் சொந்தக்காரர்களுமாக எட்டு கார்களில் சென்றோம். பொங்கலிட்டு வழிபட்டுத் திரும்ப ஒரு முழுநாளும் ஆகியது.

என் நினைவில், அந்த இடமே அமைதியாக, ஆளோய்ந்து கிடக்கும். ஆற்றில் மழைக்காலத்தில் மட்டும்தான் தண்ணீர் இருக்கும். மற்றபடி ஒரு திறந்த வெளிதான் அது. ஆனாலும் அங்கே ஆறு இருக்கும் உணர்வு இருக்கும். ஆறு மண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்வார்கள். ஏராளமான குட்டிக்குட்டி சன்னிதிகள் உண்டு. பழங்காலத்தில் ஓலைக்கூரை போட்ட குடிசைகளாகத்தான் இருந்தன என்றும் அண்மையில்தான் கான்கிரீட் கட்டிடங்கள் வந்தன என்றும் அப்பா சொன்னார். ஆனால் அந்தக் கட்டிடங்களே சிறியவைதான்.

தென்கரை மகாராஜன் யானை வாகனம் மேல் ஒரு காலை மடித்து அமர்ந்திருக்கும் சாஸ்தா. ஒரு கை தொங்கவிட்டு, ஒரு கை அபயஹஸ்தமாகக் காட்டி, ஓங்கிய மணிமுடியுடன் இருந்தார். நெல்லைப் பகுதியில் பெரும்பாலான சாதிகளுக்கு அவர் பொதுவான குலதெய்வம். சிலை கொஞ்சம் மழுங்கியிருந்தது. அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணை கரிய பொருக்காக பீடத்தில் காய்ந்திருந்தது.

அம்மாவும் நானும் மட்டும்தான் சென்றிருந்தோம். சின்னவளுக்கு தேர்வுகள் இருந்தன. பெரியவளுக்கும் காலேஜ் இருந்தது. நான் நெல்லையிலேயே ஒரு டாக்ஸி சொல்லியிருந்தேன். அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம். காலையில் நெடுஞ்சாலையில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் அம்புபோல பாய்ந்து செல்வது இனிமையாக இருந்தது. அப்படியே கொஞ்சம் கண்ணயரலாமென்றுகூட தோன்றியது. பூமியில் இருந்து எழுந்து வானில் பறந்து எங்கோ செல்வதுபோல் எண்ணிக்கொண்டேன்.

முந்தைய நாள் இரவு நான் சற்றும் தூங்கவில்லை. பகல் முழுக்க தூங்கியதுகூட காரணமாக இருக்கலாம். இரவில் விழித்திருந்தால் அம்மா ஏதாவது நினைப்பாள் என்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்திருந்தேன். ஆனால் படுத்திருந்தால் காலம் துளித்துளியாக நகர்வதுபோலிருந்தது. நீண்டநேரம் சென்றபின் செல்போனை எடுத்துப் பார்த்தால் பத்து நிமிடம்கூட ஆகியிருக்கவில்லை. அம்மா தூங்கிவிட்டாள் என்று குறட்டைச்சத்தத்தை கேட்டு உறுதிசெய்தபின் மெல்ல எழுந்து சென்று திண்ணையில் அமர்ந்துகொண்டேன்.

கொசுக்கள் என்னை மொய்த்தன. கையால் முகத்தை வருடியபோது ரத்தவாடையுடன் பல கொசுக்கள் நசுங்கின. ஒட்டுக்கூரைக்கு அடியில் படுத்திருந்த தெருநாய் முனகி வாலாட்டியது. அந்த நாயின் முகமே எனக்கு நினைவில்லை. அது இரவு தூங்க மட்டும்தான் அங்கே வருகிறதுபோல.

நான் சாலையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. எதிர்காலமென்பதே மனதில் எழவில்லை. ஆனால் ஒன்று தெரிந்தது, என்னால் மற்ற அனைவரையும் விட்டுவிட முடியும். காசிலிங்கத்தை விடவே முடியாது. ஊரை விட்டுச் செல்லலாம். ஆனால் அவரிடமிருந்து விலகவே முடியாது.

அந்த சந்திப்பு எப்படி அத்தனை துல்லியமாக நினைவிருக்கிறது என வியந்தேன். அந்தக் கடையின் ஒவ்வொரு இடத்தையும், அந்த வினைல் போர்டு சுவரின் ஒவ்வொரு தடத்தையும் நினைவில் இருந்து எடுக்கமுடிந்தது. அப்படியே அக்கணம் நிகழ்வதுபோல அந்தச் சந்திப்பை மீண்டும் அகத்தில் விரித்துக்கொள்ள முடிந்தது. அந்தக் காட்சி பழுதடைந்த டிவி போல திரும்பத் திரும்ப என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. அதன்மேல் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை.

என் மனம் மோசமாக நோயுற்றிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் ஒரு முழுப்பகலும் அந்த சந்திப்பை முழுமையாகவே மறந்ததுபோல் இருந்திருக்கிறேன். அப்போது அது எங்கிருந்தது? அவரைத் திரும்ப ஆலயத்தில் பார்க்கவில்லை என்றால் என் மனம் அப்படியே அதை உதிர்த்துவிட்டிருக்குமா?

“என்னலே இங்க உக்காந்திட்டிருக்கே?” என்றபடி அம்மா வந்து பின்னால் நின்றாள். “கொசுவுல்லா கடிக்குது? இரு கொசுவத்தி எடுத்திட்டு வாறேன்.”

அம்மா கொசுவத்திச் சுருளை கொண்டுவந்து அருகே வைத்தாள். கொசுக்களின் ரீங்காரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

“மனச உளப்பிக்காதே… அப்டித்தான் இருக்கும். இந்த எடத்திலே இருக்கிறப்ப இதிலேதான் இருப்போம். எந்த துக்கமானாலும் எடத்த மாத்தி மனுசமொகங்களையும் மாத்தினா பாதி ஆயிரும்.”

“நான் எங்கயும் போகப்போறதில்லை” என்றேன்.

அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

“இங்கதான் இருப்பேன்… பயப்படாதே. நான் ஒண்ணும் ஆயிடமாட்டேன். தோக்குற அளவுக்கெல்லாம் ஒண்ணும் ஆயிடல… விட்டுட்டுப்போக என்னால முடியாது.”

அம்மா எதிர்த்து வாதிடவில்லை. “செரி, என்னவானாலும் மெள்ளமா முடிவுசெய்வோம். நாளைக்கு தென்கரை மகராஜனை பாப்பமுல்லா? அவனறியாததா? ஒரு வளி காட்டுவான்.”

கோயிலை அடைந்ததுமே அம்மா கைகூப்பி விட்டாள். அதன்பின் கைகள் பிரியவே இல்லை. சுடலைமாடன், அரவணைப்போத்தி, முத்துப்பட்டன் என ஏகப்பட்ட தெய்வங்கள். ஒவ்வொன்றாக நின்று நின்று கும்பிட்டாள். தென்கரை மகாராஜனுக்கு நெய்யபிஷேகம் செய்ய கால் லிட்டர் நெய் வாங்கிச் சென்றிருந்தோம். பதினெட்டு தெய்வங்களுக்கும் மலர்மாலைகள்.

வணங்கி முடிந்தபோது அம்மா தெளிவடைந்தவள் போலிருந்தாள். ஆனால் என்னால் எங்கும் நெடுநேரம் கைகூப்பி நிற்கவோ மனம்குவிக்கவோ முடியவில்லை. ஒப்புக்கு வணங்கிவிட்டு அம்மா வணங்கி வரும்வரை விலகிக் காத்து நின்றிருந்தேன். உடலெங்கும் ஒரு பரபரப்பு இருந்துகொண்டிருந்தது. ஏதோ எதிர்பார்ப்பவன் போல.

அம்மா “போறப்ப சாப்பிட்டுட்டுப் போலாம்பா” என்றாள். வரும்போது இருவரும் வீட்டில் ஒரு கப் காபி மட்டும்தான் சாப்பிட்டிருந்தோம்.

காரில் ஏறிக்கொண்டு டிரைவரிடம் “போலாம்” என்றேன்.

வண்டி கொஞ்சம் பழையது போல. இருமுறை உறுமி உதறிக்கொண்டது. அவர் மீண்டும் மீண்டும் இயந்திரத்தை இயக்கினார். “பேட்டரி பளசு சார்” என்று என்னிடம் சொல்லி புன்னகைத்து மீண்டும் இயக்கினார்.

என்னால் அதைத் தாள முடியவில்லை. வண்டியின் உறுமலும் திணறலும் பெரும் வதையாக இருந்தது. கதவைத் திறந்து வெளியே குதித்துவிடலாமா என்று தோன்றி கையை வைத்துவிட்டேன். சட்டென்று ஓர் உலுக்கலுடன் கிளம்பி முன்னகர்ந்த கணத்தில் என்னுள் ஒரு நரம்பு உடைபடுவதுபோலத் தோன்றியது. கைவிரலால் கண்களை அழுத்தியபடி பின்னால் சாய்ந்துகொண்டேன்.

அப்போது எதையோ நினைத்தேன். மிகவேகமாக, ஒருகணம் போல எதுவோ வந்துசென்றது. அது என்ன? அது என்ன? எந்த எண்ணம் அது? ஏதோ ஒன்று. ஏதோ ஒன்று. ஆனால் சென்று தொடமுடியவில்லை.

கார் வேகமெடுத்தபோது நான் அந்த வேகத்துடன் சேர்ந்து மெல்ல அமைதியடைந்தேன். என்னை மறந்து, மெதுவாக உடல் தளர்ந்து, அரைத்தூக்கம் போல ஒரு நிலையை அடைந்தேன். அப்போது ஏற்கனவே நன்றாகத் தெரிந்த ஒன்று திரும்ப நினைவுக்கு வருவதுபோல அது என்னுள் எழுந்தது. பூர்ணமங்கல்யா கடை காசிலிங்கத்திற்குரியது அல்ல.

அதை எவரோ என்னிடம் எப்போதோ சொன்னார்கள். அந்த வரியை நான் அப்போது கவனிக்கவுமில்லை. அந்த வரி அப்படி நினைவுக்கு வருகிறதென்றால் என்ன பொருள்? அதிலும் இங்கே, என் குலதெய்வத்தின் சன்னிதியில்.

அதன்பின் என்னால் காரில் அமர்ந்திருக்க முடியவில்லை. கைகளை நெரித்துக்கொண்டும் எழுந்து எழுந்து அமர்ந்துகொண்டுமிருந்தேன். “நேரா நம்ம கடைக்கு விடு… என்னைய இறக்கி விட்டுட்டு அம்மைய வீட்டிலே விட்டிரு” என்றேன்.

“டிபன் சாப்பிடணும்டா”

“இப்ப போயிடலாம்… வளியிலே நல்ல கடை ஒண்ணும் இல்லை.”

அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

கடையில் இறங்கியதும் நான் என் இருக்கையில் அமர்ந்து ஒரு கணம் யோசித்தேன். பூர்ணமங்கல்யா கடையைப் பற்றி விசாரிக்கக்கூடாது. அதற்குள் நினைவு வந்துவிட்டிருந்தது, என்னிடம் அதைச் சொன்னவர் சுடலைப்பாண்டி மாமாதான். நானே மாமாவிடம் சென்று கேட்கலாகாது. அவரே வருவார். அவருக்கு என் சரக்குகளை விற்பது பற்றி நான் சொல்லவேண்டிய முடிவு மிச்சம் இருந்தது.

அவர் நான் வந்தபின் ஒருமணிநேரம் இடைவெளி விட்டு இயல்பாக வருவதுபோல வந்தார். “வள்ளியூரு போயிருந்தியோ… மாரி சொன்னான்… குலதெய்வக்கோயிலு அங்கயில்லா?”

“ஆமா”

“எங்க குலதெய்வம் காரையாறு சொரிமுத்தையன் கோயில்…” என்றபடி அமர்ந்தார். “அடிக்கடி போறதில்லை… கையிலே காசுவேணும்லா?”

நான் அவரிடம் “சரக்கு விசயம் பேசியாச்சு மாமா. அது முடிச்சிரலாம். ஏஜென்ஸிக்கெல்லாம் என்னென்ன குடுத்திருக்குன்னு ஒரு கணக்கு போடவேண்டியிருக்கு” என்றேன். பிறகு “இப்ப நாம முனிசிபாலிட்டியிலே ஒரு கம்ப்ளெயிண்டு குடுத்திருக்கோம்லா? அவன் கேக்கான் நம்ம கெட்டிடத்துக்கு நம்ம கிட்ட தாய்ப்பத்திரம் இருக்கான்னு… பிரச்சினை வருமா?”

“ஏலே, இந்த தெருவிலே எந்தக் கடைக்கு தாய்ப்பத்திரம் இருக்கு? இருந்தா நெல்லையப்பன் கோயிலுக்கும் திருவாவடுதுறைக்கும் இருக்கும்… எல்லாம் கைவச உரிமைதான்…”

“பெரியகடையெல்லாம் கட்டியிருக்காங்க”

“பெரிய ஓட்டலு லாட்ஜு எல்லாம் இருக்கு… எல்லாமே அந்த உரிமைதான்… “ மாமா அவரே அந்த வரியைச் சொன்னார். “முஸ்லீம் சொத்துன்னாக்க பட்டா இருக்கும். வெள்ளைக்காரன் காலத்து பட்டா அது. பக்கா டாக்குமெண்டு… இருந்தா என்ன? எவன் கைவசம் வச்சிருக்கானோ சொத்து அவனோடது. இந்தா பூர்ணமங்கல்யா கடை இருக்கு. அந்த மண்ணு பளையகாலத்திலே ஒரு நவாபு குதிர கட்டுத லாயமா வச்சிருந்தது. அது அப்டியே கைமாறி வந்து பேட்டையிலே முத்துவாப்பா ராவுத்தருக்கு கிடைச்சுது. பட்டா அவர் பேரிலதான். அவருக்க காலத்திலே இங்க எண்ணைக்கடை போடுகதுக்கு வாடகைக்கு குடுத்தாங்க. கோயிலுக்கு எண்ணை காண்டிராக்டு சம்முகலிங்கம் பிள்ளை. அவரு மகன் கும்பலிங்கம் பிள்ளை அதைத் துணிக்கடையா ஆக்கினாரு. இப்ப காசிலிங்கம் கொளிக்குதாரு… அப்ப எடுத்தது. இப்பவரை அவரு கையிலேதான் இருக்கு.”

“அவரு வெலைக்கு வாங்கிக்கிடலியா?”

“வாங்கச்சொல்லி பாய் நடையா நடந்தாரு… கும்பலிங்கம் அவர கோர்ட்டுக்கு இளுத்தாரு… முப்பத்தேளு வருச கேஸு முடிஞ்சு மூணு வருசமாச்சு. சொத்துக்கு ஏக உரிமை பாய்தான்னு தீர்ப்பு வந்தாச்சு… காலி பண்ணச் சொல்லி பாய் நோட்டீஸ் குடுத்ததும் காசிலிங்கம் பாத்தாரு, கடைய புதியபஸ்டாண்டு பக்கம் மாத்தி பெரிசா கட்டிடலாம்னு எடம் வாங்கிட்டாரு… இப்ப அங்க வேலை நடக்குது, ஏளுமாடி கட்டிடம், கீள பார்க்கிங். அது வரைக்கும் வாடக குடுக்காரு… வாற ஆவணிக்குள்ள கடைய காலி பண்ணி ஒப்படைக்கிறேன்னு பேச்சுன்னு சொன்னாக…”

நான் ஒவ்வொரு சொல்லாக பொறுக்கிக்கொண்டேன்.

“புதிய பஸ்டாண்டு பக்கம் பெரிய கடைங்க வருது… பூர்ணமங்கல்யாவுக்கு போட்டின்னா மூலக்கரைப் பார்ட்டிங்க நடத்துத சில்பா சில்ஸாக்கும்… அவனுகளும் ஏளுமாடி கார்ப்பார்க்கிங்னு கட்டுதானுக… ஆனைச்சண்டை, நாம எலி மாதிரி கீள வாளுதோம்… நமக்கு என்னத்துக்கு ஊரு வம்பு? நம்ம பொளைப்பே நாறிக்கெடக்கு, என்ன சொல்லுதே” என்றார் சுடலைப்பாண்டி மாமா.

அவர் செல்வது வரைக்கும்கூட என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. “எனக்கு ஒரு அத்தியாவசிய சோலி கெடக்கு” என்று சொல்லி கிளம்பினேன்.

மாலைக்குள் நகராட்சி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் இரண்டுக்கும் சென்றுவிட்டேன். மொத்தம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் லஞ்சச் செலவு. எல்லா ஆவணங்களுக்கும் ஒளிநகல் எடுத்து கையில் தந்துவிட்டார்கள்.

அந்தியில் என் பைக்கில் நான் அல்லாப்பிச்சை ராவுத்தரின் இல்லத்துக்குச் சென்று விட்டேன். நான் நினைத்ததுபோலவே அது இல்லை. முஸ்லீம்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழும் பழைய இடுங்கலான தெரு அது. அந்நேரத்தில் தெரு முழுக்க தலைகளாக இருந்தது.

அல்லாப்பிச்சை ராவுத்தர் என்று பலரிடம் கேட்டேன். அங்கே அப்படி பலர் இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஒருவர் டெய்லர். ஒருவர் பலசரக்குக்கடை வைத்திருந்தார். “ஆனை வாடகைக்கு விடுதாரே அவரா?” என்று ஒருவன் கேட்டான். “ஆமாம்” என்று சொல்லிவிட்டேன். அவர்தான் என்று ஏனோ தோன்றிவிட்டது.

அவருடைய வீடு ஒரு மிகப்பெரிய பழைய கட்டிடம். இரண்டு அடுக்கு கொண்டது. பழங்கால தார்சுக்கூரை. சுதையாலான கனத்த சுவர்கள். வெளிவாசல் மிகச்சிறிதாக இருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் கேட்டபோது உள்ளே செல்லும்படிச் சொல்லிவிட்டார். சுரங்கப்பாதை போல வழி மடிந்து சென்றது. உள்ளே சென்றால் அங்கே பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உண்டு என்று தெரிந்தது. அந்தக்காலத்தில் தீவட்டிக்கொள்ளையர்களை அஞ்சி வீடுகளை இப்படி கட்டியிருக்கிறார்கள். ஒருவர் ஒருவராகத்தான் உள்ளே செல்லமுடியும்.  கடைசி எல்லையில் ஒரு பகுதியில் அவர் குடியிருந்தார்.

ஒருகாலத்தில் அது ஒரு முஸ்லிம் பிரபுவின் அரண்மனையாக இருந்திருக்கும். இப்பகுதியில் ஆட்சிசெய்த ஏதாவது படைத்தலைவனின் தங்குமிடமாகக்கூட இருந்திருக்கலாம். வாசல் சிறியதானாலும் அறைகளெல்லாம் மிகப்பெரியவை. ஆனால் எங்கும் சன்னல் என்பதே இல்லை. அத்தனை ஆண்டுகளாகியும் சுதை உடைந்து விழவில்லை. சுண்ணாம்பு மங்கலாகி மண்நிறத்திற்கு மாறியிருந்தது.

அல்லாப்பிச்சை ராவுத்தரின் வீட்டு முன் நின்று “பாய், சார்!” என்று பலவாறாக அழைத்துப் பார்த்தேன்.

ஒரு பையன் எட்டிப்பார்த்தான். பன்னிரண்டு வயது இருக்கும். ஒல்லியான உடல். நல்ல கருப்பு நிறம். பெரிய வெள்ளைவிழிகளுடன் கூடிய முட்டைக் கண்கள்.

“அல்லாப்பிச்சை ராவுத்தர் வீடு…”

“இதாக்கும், ஆரு?”

“அவரைப் பாக்கணும்… பிசினஸ் விசயமா”

“வாப்பா தொளுகைக்கு போயிருக்காரு… இப்ப வந்திருவாரு… அரமணிக்கூர் களிஞ்சு வாங்க… ஆருண்ணு சொல்லணும்?”

“பள்ளிவாசல் எங்க இருக்கு?”

“இந்த தெரு முக்கிலதான்… பச்ச பெயிண்டு அடிச்ச கேட்டு மட்டும்தான்… பள்ளிவாசலு உள்ள சின்னதா இருக்கும்.”

“செரி”

எளிதில் பள்ளிவாசலை கண்டுபிடித்துவிட்டேன். அவ்வேளையில் அதிகம்பேர் தொழுகைக்கு வரமாட்டார்கள் என்று தோன்றியது. எதிரில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு அல்லாப்பிச்சை ராவுத்தர் பற்றி கேட்டேன். “அவரு இப்பதான் உள்ள போனாரு… வந்திருவாரு” என்றார். வரும்போது அவரே எனக்குச் சுட்டிக்காட்டுவார் என்று தெரிந்தது.

அதேபோல தொழுகை முடிந்து நாலைந்துபேர் திரும்பி வந்தபோது கடைக்காரர் “அந்தா வாறாருல்லா?” என்றார்.

ராவுத்தர் வட்டத்தாடி வைத்து மீசையில்லாமல் மேடேறிய நெற்றியில் நிஸ்காரத் தழும்புடன் ஓங்குதாங்காக இருந்தார். நல்ல கருப்பு நிறம். சிவப்போடிய உருண்ட பெரிய கண்கள். அரைக்கை சட்டை போட்டிருந்தார், ஆனால் கை முழங்கைக்கு கீழே வந்தது. அது கீழ்ப்பகுதியில் ஜிப்பா போலிருந்தது.

நான் அருகே சென்று “வணக்கம் பாய்” என்றேன்.

“சலாம்… சொல்லுங்கய்யா…”

என்னை அறிமுகம் செய்துகொண்டேன். என் அப்பாவை அவருக்குத் தெரிந்திருந்தது. “நல்ல மனுசன்லா… ஒருக்கா நமக்கு ஒரு பாட்டு வாசிச்சுக் காமிச்சாரு. அல்லா பத்தி எளுதியிருந்தார். நமக்கு விளங்கிக்கிட அறிவு இல்ல… தம்பி மெட்ராஸிலே எஞ்சீனியரிங்குல்லா படிச்சீக?”

“ஆமா, முடிக்கல. அப்பா போனதும் சட்டுன்னு வாற மாதிரி ஆயிட்டுது.”

அவர் “அடாடா” என்றார். “அதும் நல்லதுக்குன்னு வைங்க. அல்லா கணக்க நாம அறிய முடியாது. தம்பி தொளிலு செஞ்சு கோடீஸ்வரனாகணுமுண்ணு அல்லா திட்டம்னா எதிர்த்து நிக்க முடியுமா?” என்று சிரித்தார்.

ஒரு சில நிமிடங்களில் அவருடன் நான் அடைந்த நெருக்கத்தை வாழ்நாளில் டைரக்டரிடம் மட்டுமே அடைந்திருக்கிறேன். அவர் உடலின் அளவுக்கு நான் அருகே ஒரு சிறுவனாக உணர்ந்தேன். “சொல்லுங்க, நாம என்ன பண்ணணும்?” என்று கேட்டார்.

நான் “அதுக்கு முன்னாலே நான் என்ன நடந்ததுன்னு சொல்லுறேன் ராவுத்தர் மாமா…” என்றேன். சொல்லச்சொல்ல அறியாமலேயே இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து வணங்குவதுபோல் வைத்துக்கொண்டேன். என் நெஞ்சு உடைந்து சொற்களாக தெறிப்பது போலிருந்தது.

சொல்லி முடிந்ததும் அவர் கண்களில் மெல்லிய ஈரத்துடன் பெரிய கனமான கையால் என்னை தோள் சுற்றி அணைத்துக்கொண்டார். ஒன்றும் சொல்லவில்லை.

“நான் இப்ப வந்தது ஒரே விசயத்துக்காகத்தான். பூர்ணமங்கல்யா நெலம் உங்களுக்கு பாத்தியப்பட்டதுன்னு கேட்டேன். அத எனக்கு கிரயம் பண்ணிக்குடுங்க… நீங்க கேக்குத நியாயமான வெலைய குடுத்திடுதேன்…”

அவர் பேசுவதற்கு முன் நான் “அங்க சொந்தமாட்டு தொளில் தொடங்குத எண்ணம் உங்களுக்கு இருக்குமானா ஒரு வருசம் களிஞ்சு நான் அதே நிலத்த வாங்கின வெலையோட பிரீமியம் சேத்து உங்களுக்கே வித்துடுதேன்… இது என் வாக்காக்கும்” என்றேன்.

“நீ என்னமோ வெளையாடப்போறே… நீ  சின்னப்பையன் பாத்துக்கோ”

“வெளையாடத்தான் போறேன்… உங்க ஆசி இருக்கணும் மாமா.”

அவர் “பெரிய கைகளாக்கும்… எங்ககிட்ட பொதுவா அவனுக வெளையாட மாட்டானுக. எங்களுக்கே தண்ணி காட்டிட்டானுக…” என்றார்.

“என்னை மாதிரி ஒருத்தனை அவரு பாத்திருக்க மாட்டாரு.”

அவர் சட்டென்று தன் தொடையில் தட்டி உரக்கச் சிரித்து “அது ஆம்புளத்தனம்… அப்டி பேசணும்யா… அந்த நம்பிக்க வேணும்… ஆனா நான் நான்னு நினைச்சுக்கிடாதே. ஆண்டவன் அருளாலேன்னு சொல்ல பளகிக்கோ. அவ்ளவுதான்” என்றார்.

“ஆண்டவன் அருளாலே” என்றேன்.

“அந்த நெலத்துக்கு என்ன வெலைன்னு இப்ப சொல்ல முடியாது… எப்டியும் ஒரு ஏளெட்டு கோடி இருக்கும்… உங்கிட்ட பணமிருக்காக்கும்?”

“வீடு இருக்கு… ஊர்ல நெலமிருக்கு. அதுமேலே கொஞ்சம் கடனும் உண்டு. அதை அடைச்சா வீட்ட வித்துடுவேன். சொத்துக்குண்டான அட்வான்ஸ் ரெண்டுகோடிய குடுத்திருவேன்… மேக்கொண்டு சொத்தக்காட்டி பொரட்டீர முடியும்…”

“எப்டீன்னு நான் கேக்கல்ல… உங்கிட்ட கணக்கு இருக்கும்”

“எங்கிட்ட எல்லா பேப்பரும் இருக்கு. பிளான் பக்காவா வச்சிருக்கேன்.”

“வீட்டுக்கு வா பேசுவோம்…” என்றார். செல்லும் வழியில் மேலும் கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருந்தார். “அவனுக ஆளை வைச்சு உன்னை காலிபண்ணினா என்ன செய்வே?”

“பாப்போம்… ஆளு எல்லா எடத்திலயும் இருக்கு. பெரியமனுசனுக்கு ஒளிஞ்சுநின்னு செஞ்சாகணும்கிறது பலவீனம்… நாம எந்த எல்லைக்கும் எறங்க முடியும்” என்றேன்.

அவர் வீட்டில் மிகப்பெரிய கூடத்தை தட்டிபோட்டு தடுத்து அறைகளாக்கியிருந்தனர். “இந்த வீடு உங்களுதா?” என்றேன்.

“பட்டா நம்முளுது… ஆனா பன்னிரண்டு குடும்பம் இருக்கு… ரெண்டு குடும்பம் பெருகி பன்னிரண்டா ஆயிருக்கு… எல்லாம் நம்ம சாதிசனம், நாம ஆரையும் போகச்சொல்ல முடியாது” என்றார். “அந்த மசூதியே நம்ம உப்பாப்பா கட்டினதுதான்… அந்தக் காலத்திலே இந்த ஏரியாவே நம்முளுதுதான்னு சொல்லுவாக.”

அவருடைய மகனே டீ கொண்டுவந்தான். “பாலில்லா டீ சாப்பிடுவீகதானே?”

“ஆமா”

முன்பு எனக்கு பாலில்லா டீ பிடிக்காது. டைரக்டர் எவ்வளவோ சொல்லியும் நான் குடித்ததில்லை. நெத்திலி வறுத்ததும் பாலில்லா டீயும் அவருடைய விருப்பம்.  ஆனால் அன்று அந்த டீ மிக அற்புதமாக இருந்தது.

“நமக்கு எட்டு பிள்ளைக… ரெண்டுபேரு நம்மகூட தொளிலிலே இருக்கான். நமக்கு நாலு ஆனை நிக்குது. கோயில்கொடை, சந்தனக்கூடு, அந்தோணியார் ஊர்வலம்னு போகும். பையன் ரெண்டுபேரு பாத்துக்கிடுதானுக… மூணு பொட்டப்புள்ளைக. இந்த நெலம் முடிஞ்சா அதுகளுக்கு ஒரு நல்லது பாக்கணும்.”

“முடிவு சொல்லுங்க ராவுத்தர் மாமா, உங்கள நம்பி இருக்கேன்.”

“ஒண்ணு செய்ங்க, நாளைக்கு ஒரு பத்து மணிக்கு வாங்க.”

நான் வணங்கி விடைபெற்றுக் கொண்டேன். எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று தோன்றியது. அவர் சம்மதிக்கவில்லை என்றால்கூட அது என் நல்லதுக்காகத்தான் இருக்கும்.

மறுநாள் காலை கோயில் போய் கும்பிட்டுவிட்டு பத்து மணிக்கு அவர் இல்லத்திற்குச் சென்றேன். அவர் வாசலுக்கே வந்து வரவேற்றார். எங்கோ கிளம்பிச்செல்வதுபோல உடையணிந்து புதிய வெண்ணிற வலைத்தொப்பி வைத்திருந்தார்.

“கோயிலுக்குப் போனிகளோ, விபூதி போட்டிருக்கீக”

“ஆமா” என்றேன்.

“வாங்க” என்று உள்ளே அழைத்துச் சென்றார். எனக்கு எந்த படபடப்பும் இல்லை. உள்ளம் அமைதியாக இருந்தது. முதல்முறையாக எனக்கு ஓர் ஆழமான துணைவர் அமைந்திருக்கிறார்.

“சாப்பிட்டீகளா?”

“ஆமா”

“டீ குடிங்க… பாலு இருக்கு”

“இல்ல, பாலில்லா டீ போரும்… அதான் நல்லாருக்கு”

பாலில்லாத டீ அன்றும் மகத்தானதாக இருந்தது. இருவரும் இரும்பு நாற்காலிகளில் எதிரெதிராக அமர்ந்திருந்தோம்.

“எங்காச்சும் போறிகளா?” என்றேன்.

“இல்ல, காலம்பற ஏர்வாடி ஆத்தங்கரப் பள்ளிவாசல் போயிட்டு வந்தேன்… சையத் அலி பாத்திமா, ஷேக் முகமது வலியுல்லாஹ் அடங்கின எடம்… சகலஜாதி சனங்களும் வந்து கும்பிட்டுப்போவாங்க… நமக்கு அந்த எடம் ஒரு இது… அங்க நானும் கையிலே கால்காசில்லாம போயி உக்காந்திருக்கேன், நாப்பது வருசம் முன்னாடி… ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை உண்டுல்லா?”

“நானும் போகணும்” என்றேன்.

“போகலாம்… இணைவைப்பு அது இதுன்னு சிலபேரு சொல்லுவாக. ஆரும் இணை வைக்கல்ல. இணைவைக்க முடியுமா? அங்க அடக்கமாகி இருக்கிறவங்க நம்மள மாதிரி மனுசங்க. நாம ஏறிட்டிருக்குத ஏணியிலே கடைசிப்படி வரைக்கும் ஏறி மேலே போனவங்க. அவங்களை வணங்குததுன்னா மேலே நிக்கிறவங்க கிட்ட எய்யா கொஞ்சம் கையக்குடுன்னு கேக்குததுதான்… மத்தபடி படைச்சவன் கிட்ட கேக்குதத அவன் கிட்டதான் கேக்கணும்… என்ன சொல்லுறீக?”

“ஆமா”

“அங்க போயி ஒரு பத்து நிமிசம் இருந்தா தெளிவு வரும்னு தோணிச்சு. அதான் போனேன்.”

நான் காத்திருந்தேன்.

“தம்பியாபிள்ள, நீங்க உங்ககிட்ட இப்ப என்ன இருக்கோ அதைக் குடுத்திருங்க.  கிரயம் பண்ணி குடுத்திருதேன்… வீடுகீடெல்லாம் விக்கவேண்டாம்… ஒரு லெச்சம்னாக்கூட போரும். வாள்ந்த வீட்ட விக்கக்கூடாது. அது செத்துப்போன வாப்பாக்கு செய்யுத தப்பாக்கும்… இப்ப சொத்த வாங்கிக்கிடுங்க… ஒரு வருசம் களிஞ்சு திரும்பக்குடுங்க… இல்ல அப்ப வெலபேசி வாங்குறதானா வாங்கிக்கிடுங்க… நான் வந்து பதிஞ்சு தாறேன்.”

நான் கைகூப்பினேன்.

“இது யார் மேலேயும் விரோதத்தாலே இல்ல. நமக்கு அப்டி யார்மேலேயும் எந்த வெறுப்பும் இல்ல. எல்லாரும் மனுசங்கதான். என்னத்தையாவது கட்டிப்புடிச்சுக்கிட்டு அதான் சதம்னு கிடக்குத சின்ன சீவனுகதான்… உங்க அப்பா எனக்கு அல்லா பத்தி ஒரு பாட்டு படிச்சு காட்டினது, பள்ளிவாசல் முன்னாடி நாம சந்திச்சது எல்லாம் ஒரு நல்ல நிமித்தமாக்கும்னு தோணுது. நீங்க மேலே வந்திருவீக… ஒரு ஆலமரம் மொளைக்குத ஆண்டவனருளாலே நான் பாக்குதேன்… ஒரு கொடம் தண்ணி அல்லா கிருபையாலே நானும் ஊத்துதேன்… நடக்கட்டும். இன்ஷால்லாஹ்!”

(மேலும்)

முதற்புளிப்பு

$
0
0

செம்பருவம்

பச்சைமாங்காய் மேல் ஏன் அந்த பிரியம் என்று தெரியவில்லை. என் சிறு வயதில் ஒட்டுமாங்காய் எங்களூரில் கிடையாது. நான் கல்லூரியில் படிக்கும்போது நாகர்கோயிலில் என் பேராசிரியர் ராஜன் நாயரின் இல்லத்தில்தான் முதன்முதலாக ஒட்டுமாமரத்தைப் பார்த்தேன். அத்தனை பெரிய காய்கள் குலைகுலையாக காய்த்து கிளைதாழச்செய்திருந்தன.

ராஜன் நாயர் “இவற்றின் பழங்கள் நன்றாக இருக்காது. பச்சையாகத் தின்னலாம், சுவையானவை” என்றார். அவர் மனைவி நறுக்கி உப்பு மிளகாய் போட்டுக்கொண்டுவந்து அளித்த மாங்காய் துண்டங்கள் நான் என்றுமே அறிந்திராத சுவை கொண்டிருந்தன.

எனக்கு மாங்காய்களைப் பிடிக்கிறதா, அல்லது அவற்றின் மணத்தையா? அதை எங்களூரில் சுனைமணம் என்போம். மாங்காயின் காம்பு உடைந்து வரும் பாலின் மணம். எரிவது, குருதியை நினைவூட்டுவது, உதடுகளில் பட்டால் கொப்பளிக்கும்.கண்களில் பட்டால் உடனே நீர்விட்டு கழுவவேண்டும். முலைப்பால் விடவேண்டும்.

ஆனால் அந்த மணம்தான் கோடைக்குரியது. கோடை என் இளமையில் இனிய நீண்ட கனவு. பள்ளி விடுமுறை. அன்றெல்லாம் பிள்ளைகளை மே மாதம் மேலும் கடுமையான பயிற்சிகளுக்கு அளிக்கும் வழக்கமில்லை. மே மாதம் முழுக்க அலைச்சல்தான். காடுகளில் வேட்டை. வயல்களில் வெள்ளரிக்காய் தோட்டம் அமைத்திருப்பார்கள், அவற்றில் இரவுக்காவல். ஆறுகளிலும் ஓடைகளிலும் குளியல்.

மேமாதம் திருவிழாக்களுக்குரியது. ஓர் ஊருக்குச் சென்று திருவிழா முழுக்க கதகளி பார்த்து அது முடிந்ததும் அப்படியே அடுத்த ஊர். மே இறுதியிலேயே எங்களூரில் வானம் கறுக்கலாகும். அவ்வப்போது இடியுடன் கோடை மழை பெய்யும். ஜூனில் மழை கொட்டத் தொடங்கும்போது பள்ளிகள் திறக்கும்.

கோடையை மாம்பிஞ்சுக்காலம், மாங்காய்க்காலம், மாம்பழக்காலம் என மூன்றாகவே பிரிக்கலாம். முதல் மாம்பிஞ்சுகள் மிக அரியவை. அவற்றுக்காக அடிதடிகள் நிகழும். அவை மிகப்பிஞ்சாக இருக்கையில் துவர்ப்புச்சுவை மிகுந்திருக்கும். மென்று சக்கையை துப்பவேண்டியிருக்கும். முற்றிய மாங்காய் கடும்புளிப்பு. பின்னர் உள்ளுறைந்த மென்சிவப்பாக இனிமை. அதன்பின் மாம்பழங்கள்…

அன்றெல்லாம் சில வகை மாங்காய்களுக்கு விலையே இல்லை. காட்டுமாம்பழம் என்பார்கள். புறம்போக்கில், கோயில் நிலங்களில், காடுகளில் தானாகவே வளர்ந்து பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றிருக்கும் மாமரங்கள் உண்டு. அவற்றின் காய்கள் மிகச்சிறியவை. மிக உயரத்தில் அவை நிற்பதனால் எறிந்து வீழ்த்த முடியாது. ஏறிப்பறிப்பதும் மிகக்கடினம்.

ஆனால் அவை காற்றில் உதிர்ந்துகொண்டே இருக்கும். சதைப்பற்று குறைவானவை. கெட்டியான தோல்கொண்டவை. கையில் வைத்து ஓர் உருட்டு உருட்டி உறிஞ்சினால் மாம்பழச்சாறு. ஒருநாளில் ஐம்பது நூறு மாம்பழங்கள் சாப்பிட்டுவிடுவோம். மதிய உணவுக்கு வீடுதிரும்பும் வழக்கமே அன்று கிடையாது.

மாங்காய்த்தோழர்கள் என பல முகங்கள் நினைவிலெழுகின்றன. ராதாகிருஷ்ணன் இன்றில்லை. எட்டான் இல்லை. ராபின்ஸன் இல்லை. பலர் என்னை விட வயதானவர்கள். மாங்காய் ஒன்றை கையில் எடுக்கையில் நான் வாழ்ந்து நிறைத்துக்கொண்ட அரிய நாட்களின் சுவையை மணமாக, இனிப்பாக அறிகிறேன்.

நான் எதையும் தவறவிடவில்லை. எனக்கு இலக்கியச்சுவையை ஊட்டிய அம்மாவை விட சுதந்திரத்தின் சுவையை அனுமதித்த அப்பா ஒரு படி கூடுதலாக நன்றிக்குரியவரா? எங்கு சுற்றி எப்போது திரும்பினாலும், முகமெல்லாம் மாங்காய்ப்பால் பட்ட கரிய வடுவுடன் இருந்தாலும், வெயிலில் தலைமுடி காய்ந்து செம்புச்சுருள் போலிருந்தாலும், உடலெங்கும் வேர்க்குரு படர்ந்திருந்தாலும் ஒரு சொல்கூட சொல்லாத வயக்கவீட்டு பாகுலேயன் பிள்ளையின் மணம் இந்த இளமாங்காய்களுக்கு. புளிப்பு, துவர்ப்பு. ஆனால் அவை மெல்ல இனிமையாக ஆகிக்கொண்டிருக்கின்றன.


தத்துவத்தால் மனிதனுக்கு என்ன பயன்?

$
0
0

தத்துவம் என்றாலே பயனற்றது என்னும் எண்ணம் நம்மில் பலருக்கு என்றும் உண்டு. ஆனால் வாழ்க்கையில் அன்றாடத்தை மீறிய ஓர் இக்கட்டு வரும்போது மிகச்சாமானியர்கள்கூட தத்துவத்தையே பற்றிக்கொள்கிறார்கள். தத்துவம் பேசுகிறார்கள். அவர்கள் அறிந்த அந்த தத்துவம் மதத்தில் இருந்து தன்னியல்பாக அவர்களுக்கு வந்ததாக இருக்கும். அதையே முறையாக, முழுமையாக கற்பவர் அடையும் விடுதலை என்பது அசாதாரணமான ஒன்று

எல்லா காணொளிகளும்

இரு கேள்விகள்

$
0
0

என்னுடைய பிரச்சினை என்பது என்னால் புதிய மக்களுடன் பழக முடியாது என்பதுதான். எனக்கு தத்துவம் பயில ஆர்வமுண்டு. இந்திய தத்துவ நூல்கள் பலவற்றை படித்ததும் உண்டு. ஆனால் தத்துவ வகுப்புகளுக்கு வருவதற்காக மனத்தடை உள்ளது. நான் என்ன செய்யவேண்டும்?

கூடியிருந்து கற்றல்…

In today’s age, all of us are caught up in our work. It is difficult to extricate ourselves from it, even for a day. Such is the state of affairs. That being so, isn’t it good to learn something worthwhile in whatever time we have? Online education is an effective way to do this, is it not?

More about online classes…

அழைப்பு- கடிதம்

$
0
0

அழைப்பு (சிறுகதை)

வணக்கம் ஜெ

தமிழ் விக்கியில் சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் வேதாந்தம் பற்றிய பதிவுகளின் தொடர்ச்சியாக இச்சிறுகதையை பார்கிறேன்.
மனித அறிவில் இருந்து தொடங்கி பிரபஞ்சத்தை விளக்குவது என்பதற்கு மாறாக பிரபஞ்சத்தில் பூமி என்பதில் தொடங்கி மனித மனதின் நான்கு நிலைகளை பற்றி கதை குவிகிறது. முற்றிலும் உரையாடலால் சொல்லப்பட்டிருக்கும் கதை. உபநிஷடம், சாக்ரட்டிக் டயலாக், catechism, என அறிவின் நடை.
கவிதை நம் ஆழ்மனதில் புதைகொள்கிறது. ஒரு கவிதையை வாசித்து சில நாட்கள் அது நம் நினைவிலேயே இருக்காது. எப்போதோ ஒரு தருணத்தில் அது சட்டென நினைவில் எழுந்து இக்கவிதை இப்போ வரை அதே சந்தத்துடன் நியாபகம் இருக்கிறதா என் வியக்க செய்யும். அவ்வாறு இன்று காலை என்னுள் எழுந்த வரிகள் ஹேம்லட்டின் வரிகள்.
Who would fardels bear,
To grunt and sweat under a weary life,
But that the dread of something after death, The undiscovered country from whose bourn No traveler returns, puzzles the will
And makes us rather bear those ills we have Than fly to others that we know not of?
Thus conscience does make cowards of us all, And thus the native hue of resolution
Is sicklied o’er with the pale cast of thought,
And enterprises of great pith and moment
With this regard their currents turn awry
And lose the name of action.
ஹேம்லட்டும் ஒருவேளை எல்சினோரின் மதில்சுவரில் அழிவின்மையின் எல்லையில் தான் நின்றுகொண்டிருந்தானோ?
ஓம் மற்றும் விஷ்ணு அக்கதவை திறக்காமல் விட்ட தருணம் (an enteprise of great pith and moment), ஒரு கதைசொல்லியின்(narrator) குரல் இவ்வரியை கூறியிருக்கும்- thus conscience does make cowards of us all.
அறிவின் எல்லையில் நின்று அழிவின்மையை அறிய முற்படும் அனைவரும் ஹேம்லட் தான்.
ஸ்ரீராம்
அன்புள்ள ஜெ
அழைப்பு கதையை ஒருவர் திமுக- பிஜெபி அரசியலுக்குள் கொண்டுசென்று ’விமர்சனம்’ எழுதியிருந்ததை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். இருவரும் கொஞ்சநேரம் சிரித்தோம். தமிழ்ச்சூழலுக்கு இந்தவகையான கதைகள் ஒருவகையால லக்சுரி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இதற்கும் நல்ல வாசகர்கள் சிலர் இருப்பார்கள். காலம், முடிவிலி, அழிவின்மை என்னும் pure – anti empirical ideas கொஞ்சமாவது ஏற்கனவே அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கும் அதைச் சென்று சீண்டும் கதை இது. நீ immortality யை வைத்து முதுகுசொறிபவன் என்று ஒரு சினிமாவில் ஒரு வசனம் வரும். பழைய ஹங்கேரி சினிமா. எங்கே நிற்பது, எதுவரை பேசுவது என எல்லாருக்கும் தெரியும். கதவைத்திறப்பது எளிய விஷயமே அல்ல
ரவீந்திரன்

போர்வாள்

$
0
0

போர்வாள் (1947) திராவிட இயக்கத்தின் சார்பில் வெளிவந்த இதழ். காஞ்சி மணிமொழியார் நிர்வாக ஆசிரியராகவும், மா. இளஞ்செழியன் ஆசிரியராகவும் செயல்பட்டனர். தனித்திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி, அது பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து போர்வாள் இதழ் வெளியிட்டது.

போர்வாள்

படுகளம் -11 (நாவல்)

$
0
0

இரண்டு நாட்களில் பத்திரப்பதிவு முடிந்தது. அத்தனை எளிதாக அது முடியுமென நான் நினைத்திருக்கவே இல்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில் காசிலிங்கத்திற்கு ஆளிருக்கும், செய்தி உடனடியாக அவருக்குச் சென்றுவிடும் என்று நான் நினைத்தேன். ஆகவே என்ன செய்யலாம் என்று சென்னையில் என் நண்பரிடம் கேட்டேன். ஒன்றுடனொன்று இணைந்த இரண்டு சொத்துக்களை ஒரே இடத்தில் ஒன்றாகப் பதிவுசெய்யலாம் என்று சொன்னார்.

அல்லாப்பிச்சை ராவுத்தருக்குச் சொந்தமான எட்டு செண்ட் நிலம் நாகர்கோயில் அருகே எடலாக்குடியில் இருந்தது. ஒரு வயலாக இருந்து பின்னர் எடலாக்குடியின் மொத்தச் சாக்கடையும் வந்துசேர்ந்து ஒரு கரிய குட்டையாக ஆகிவிட்டிருந்தது. அதையும் நெல்லையின் சொத்தையும் சேர்த்து நாகர்கோயிலில் பதிவு செய்தோம். அது ஒரு நல்ல முடிவு என அங்கே சென்றபின் தெரிந்தது. நாகர்கோயில்காரர்களுக்கு நெல்லை என்பது அந்நியநாடு போல அவ்வளவு மனத்தொலைவு.

பதிவு முடிந்து பட்டா மாறுதலை உடனடியாகச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். பட்டா மாற்றம் செய்வது வரை அவர்கள் ஏதாவது வில்லங்கம் செய்ய வாய்ப்பிருந்தது. இரண்டு லட்சம் செலவாகியது. மூன்றே நாட்களில் ரகசியமாகப் பட்டா மாறுதல் முடிந்தது.

நான் ராவுத்தர் மாமாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மட்டும்தான் கொடுத்தேன். “போறும், சௌரியப்படி பிறவு குடுங்க” என்றார்.

“உங்களை ஏதாவது பண்ணிடுவாரான்னு பயமிருக்கு” என்றேன்.

“என்னையா, என்னை ஒண்ணும் செய்துக்கிடமுடியாது. நான் பளைய ஆளாக்கும். மூணு ஜமாத்துலே நான் உக்காராம பேச்சு நடக்காது. முப்பாட்டன் காலத்து கௌரவம் அது. நம்ம கிட்ட அப்டி ஒண்ணும் வச்சுக்கிட மாட்டாங்க. நம்ம பேரச்சொன்னா உங்களையும் சூதானமாத்தான் பாப்பாங்க.”

மேற்கொண்டு எனக்குத் தேவை ஒரு வழக்கறிஞர். திறமையான வழக்கறிஞர்கள் பலர் உண்டு, ஆனால் அவர்கள் எனக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை. வழக்கறிஞர்கள் அப்படி இருப்பதுமில்லை. எனக்குத் தேவை ஓர் யானைவேட்டுவன். அடிக்கடி டைரக்டர் சொல்லும் உவமை அது. ஏதோ பழைய பாட்டில் இருந்து அதை எடுத்திருந்தார். முதல் வேட்டை, அதில் யானையையே வீழ்த்திவிடுபவன் அதன்பின் வெற்றியை மட்டுமே காண்பான். அப்படி ஒரு வாய்ப்பு இளைஞர்களுக்கு எளிதில் வருவதில்லை.

நான் சென்னைக்குச் சென்று டைரக்டரின் நண்பரான ஆடிட்டரைப் பார்த்தேன். பெரிய ஒரு ஆளுடன் மோத நம்பகமான வக்கீல் வேண்டும் என்று மட்டும் அவரிடம் சொன்னேன்.

“நம்ம பயதான்… இப்பதான் ஆரம்பிச்சிருக்கான். சூட்டிகையான ஆளு. இங்க லாக்காலேஜிலே படிச்சப்ப சினிமா டைரக்டர் ஆகணும்னு நினைச்சான். கொஞ்சம் அங்க இங்க அலைஞ்சு ஒரு குறும்படத்தை எடுத்ததும் சினிமால்லாம் அவனுக்கு செட் ஆகாதுன்னு தெரிஞ்சுபோச்சு. ஊர்ப்பக்கமே போய்ட்டான். அவன் அப்பாவும் சித்தப்பாவுமெல்லாம் லாயர்தான். ஐயரு.  இவனுக்கு அவங்கள நம்பாம தனியா நிக்கணும்னு ஆசை… பேசிப்பாரு. டைரக்டர் பேரச்சொல்லு, எந்திரிச்சு நின்னிருவான்.”

நான் கிருஷ்ணகோபாலை அவருடைய அலுவலகத்திற்குச் சென்று பார்த்தேன். நான் வருவதாகச் சொல்லியிருந்தேன், எதற்கு ஏது என்று சொல்லவில்லை. ஆடிட்டர் பெயரை மட்டும் சொன்னேன்.

கோர்ட் அருகே பழைய கட்டிடத்தின் மாடியில் இருந்தது கிருஷ்ணகோபாலின் அலுவலகம்.  புதியதாகத் தொடங்கியது என்று நன்றாகவே தெரிந்தது. ஏலத்தில் எடுத்து அடுக்கப்பட்ட லா ஜேர்னல் பைண்டு தொகுப்புகள் கண்ணாடியிடப்பட்ட அடுக்குகளில் இருந்தன. கம்ப்யூட்டர், ஃபைல்கள். ஒரு ஜூனியர் பையன் செல்போனில் ஏதோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

என்னை அறிமுகம் செய்துகொண்டேன். வழக்கு விஷயமாக வந்தேன் என்று சொன்னபோது பெரிய ஆர்வமேதும் பையன் காட்டவில்லை. “உக்காருங்க, இப்ப வந்திருவாரு” என்று சொல்லிவிட்டு மீண்டும் செல்போனில் ஏதோ பார்க்கலானான். நான் வந்திருக்கும் செய்தியை அவன் யாருக்கும் ஃபோன் செய்து சொல்லவில்லை.

இருபது நிமிடங்களுக்குள் கிருஷ்ணகோபால் வந்துவிட்டார். என்னை விட ஓரிரு ஆண்டு மூத்தவர். நல்ல சிவப்பு நிறம், பலாச்சுளை போல ஒளி ஊடுருவும் காதுமடல்கள், மீசையற்ற சிவந்த மெல்லிய உதடுகள், கூர்மையான சின்ன மூக்கு, பனித்துண்டு போல கெட்டியான துல்லியமான கண்ணாடி. நன்றாகச் சாப்பிட்டு வளர்ந்த பெரியவீட்டுப் பையன் என்று தோலின் மெருகும் தழைந்த தாடையும் காட்டின.

என்னை அறிமுகம் செய்துகொண்டு, டைரக்டர் பேரைச் சொன்னேன். மெய்யாகவே எழுந்து நின்றுவிட்டார். “ஆ, உங்கள நான் பாத்ததில்லியே அங்க… அப்பல்லாம் அடிக்கடி போயி பாப்பேன்… அங்கேயே அவருகூடவே நெறைய வேளை சாப்பிட்டிருக்கேன்… என் தோளிலே கைய வைச்சுட்டு நடந்திருக்கார்…” என்றார். பரவசமாக “பேசிட்டே இருப்போம்… அப்ப டிவியிலே சின்ன சினிமாக்கள் எடுத்துக்கிட்டிருந்தார். எல்லாம் லிட்டரேச்சர் கதைகள்…”

பேசப்பேச அந்தப் பரவசம் இருவருக்குமே அமைந்தது. நான் டைரக்டரைச் சந்தித்தது கூடவே இருந்தது எல்லாவற்றையும் சொன்னேன். “நம்மூர் ஆளுதானே அங்க சீனியரு? அவர பாத்திருக்கீங்களா? அவரு இப்ப எளுத்தாளர்லா? திருநவேலி பத்தி நுட்பமா எளுதுவார்…” என்றார்.

ஒரு கட்டத்தில் நெருங்கி, மிக மிகத் தெரிந்தவர்களாக ஆகிவிட்டோம். “என்ன விஷயம்? ஏதோ கேஸ்னீக?” என்றார்.

நான் நேரடியாக எல்லாவற்றையும் சொன்னேன். “நான் திட்டமிட்டிருக்கிறது ஒரு ஆனைவேட்டை… யானைவேட்டுவன்னு டைரக்டர் சொல்வாரே…”

“ஆமா, எங்கிட்டயும் சொல்லியிருக்காரு” என்று முகம் மலரச் சொன்னார்.

“என்ன செய்யலாம்னு நான் இன்னும் முடிவு செய்யல. அதை நாம் சேந்து முடிவுசெய்வோம். நீங்க என்கூட நிக்கணும்.”

முகம் மலர்ந்து என் கையைப் பிடித்து குலுக்கி ”இனி இது என்னோட கேஸ்… இது போறும்” என்றார்.

அன்று நாங்களிருவரும் வெளியே சென்றோம். “வாங்க இங்க ஒரு நல்ல வெஜிட்டேரியன் ஓட்டல் இருக்கு, மசால்தோசை சும்மா அசத்தீருவான்” என அழைத்துச் சென்றார். வாயில் வைக்க முடியவில்லை.

ஆனால் பேசிக்கொண்டே இருந்தோம். கிருஷ்ணகோபால் பேசிப்பேசி தனக்கே தெளிவுபடுத்திக் கொள்பவர் என்று தெரிந்தது.

“பெரிய ஒரு ராட்சசனைக் கண்டா அவன நம்மாலே தொடமுடியாதுன்னு ஒரு பயம் எல்லாருக்கும் வந்திடும்… அந்தப் பயம்தான் ராட்சசனோட சக்தியே… கொஞ்சம் கொஞ்சமா அவனும் எந்த சக்தியும் தன்னை தோக்கடிக்கவே முடியாதுன்னு நினைச்சுக்கிட ஆரம்பிச்சிருவான். அங்கதான் உண்மையிலே அவனோட தோல்வி ஆரம்பிக்குது. அவனாலே சின்ன விசயங்களை கவனிக்க முடியாது. கீழ குனிஞ்சு பாக்கவே முடியாது. அவன மாதிரி பெரிய வேற ராட்சசனுங்களை மட்டும்தான் பாப்பான்…”

அங்கே காபி மட்டும்தான் நன்றாக இருந்தது. மசால்தோசை மொறுமொறுவென்று இருக்கவேண்டும் என்பதற்காக சோடா உப்பைப் போட்டு அசட்டுத்தனமாக அப்பளம் போல ஆக்கியிருந்தனர்.

“பெரிய ராட்சசனுக்கு இருக்கிற வீக்னெஸ் ரெண்டு. ஒண்ணு, அவனால சின்ன விஷயங்கள பாக்க முடியாது. ரெண்டு, அவனுக்குச் சமானமான இன்னொரு ராட்சச எதிரி இருப்பான். அவங்க ரெண்டுபேரும் போடுற சண்டை நடுவிலே ஒரு சின்ன விஷயம் வந்து தடுமாற வைச்சிரும். ஆனைகள் சண்டைபோடுறப்ப ஒரு முயல் வந்து ஒரு ஆனையோட காலை எடறிவிட்டிருச்சின்னு வைங்க… ஆனைய முயல் வீழ்த்துற கதை நடந்திரும்…”

காபியை ஆறவிட்டிருந்தார். அதை உறிஞ்சி முகம் சுளித்து “ஆறிப்போச்சு” என்றபின் “அதான் நம்ம கதை… பாத்திருவோம்” என்றார். “அண்ணா, இன்னொரு காப்பி, சூடா…”

இரண்டே நாளில் எல்லா காகிதங்களும் தயாராகி விட்டன. நான் இரண்டு நாளும் எல்லாவற்றையும் மறந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். டைரக்டர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நான்கு மலையாளப்படங்களின் சிடிக்கள் கிடைத்தன. தினம் இரண்டு படம் பார்த்தேன். தன்னந்தனியாக தாமிரவருணி கரையில் குறுக்குத்துறை சுப்ரமணிய சாமி கோயில் அருகே சென்று அமர்ந்துவிட்டு வந்தேன்.

குறுக்குத்துறை கோயில் ஓர் அற்புதம். தாமிரவருணியில் ஆண்டுக்கு ஒரு பெருவெள்ளம் கணக்கு. சுப்ரமணிய சாமி கோயில் மூழ்கியது என்பதுதான் தந்தியில் வெள்ளம் பற்றிய செய்தியே. ஆயிரமாண்டு ஆகிவிட்டது அதைக் கட்டி. ஆனால் அப்படியே நின்றுகொண்டிருக்கிறது. பெருவெள்ளத்தை கணக்கில்கொண்டே அதைக் கட்டியிருக்கிறார்கள். நானெல்லாம் போய்விடுவேன். நெல்லையில் இன்று வாழும் அனைவரும் போய்விடுவார்கள். அவர்களின் கொள்ளுப்பேரர்களும் எள்ளுப்பேரர்களும் போய்விடுவார்கள். இன்றுள்ள எல்லாக் கட்டிடங்களும் போய்விடும். ஒரு சிறு தடையம்கூட மிஞ்சாது. கோயில் அங்கேதான் இருக்கும்.

கிருஷ்ணகோபால் கூப்பிட்டார். “திரி பத்தவைச்சிருவோம்” என்றார்.

அவர் திட்டமிட்டபடி, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் நானும் அவருமாக காரில் பூர்ணமங்கல்யா கடைக்குச் சென்றோம். டாக்ஸியை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றோம்.

மேலாளர் என்னை கண்டதும் சங்கடமாக உதடு மட்டும் அசைய சிரித்தார், கண்கள் அலைமோதின. நான் அவரிடம் “முதலாளியப் பாக்கணும். பிஸினஸ் விஷயமா…” என்றேன்.

“உங்கள மறுபடி உள்ள விடக்கூடாதுன்னு உத்தரவு” என்றபின் மீண்டும் சங்கடமாகச் சிரித்தார்.

“போயிச் சொல்லுங்க… வக்கீலோட வந்திருக்கேன்னு.”

கிருஷ்ணகோபால் “இப்ப எங்க நல்லதுக்காக வரலை, அவரோட நல்லதுக்காக வந்திருக்கோம்னு சொல்லுங்க… என் பேரையும் அட்ரஸையும் எழுதித்தாறேன்.”

அவர் எழுதியபோது கீழே ‘சன் ஆஃப்…’ என அவருடைய அப்பா பெயரை எழுதியிருந்தார். காகிதத்துடன் மேலாளர் உள்ளே சென்றபோது என்னிடம் திரும்பி புன்னகைத்து “அப்பாவை இங்க எல்லாருக்கும் பயம்… அவரு இப்டி பலபேரோட செண்டர் ஸ்க்ரூவை கழட்டியிருக்கார்” என்றார்.

உடனே நெட்டையன் எங்களை நோக்கி வந்தான். “கூப்பிடுறார்… ஆனால் அஞ்சே அஞ்சு நிமிஷம். அதுக்குமேலே கிடையாது. அவரு ரொம்ப பிஸி இண்ணைக்கு” என்றான்.

“உங்க பேரு என்ன?” என்றார் கிருஷ்ணகோபால்.

“கிருஷ்ணையன்…”

அவர் சாதியைச் சொல்லி அதுதானே என்று கிருஷ்ணகோபால் கேட்டார்

“ஆமா” கிருஷ்ணையன் குழம்பிப்போனதுபோல தெரிந்தது.

“அதாவது ஒரு அடிதடி, போலீஸ் கேஸ்னு வந்தா சாதி சப்போட்டு இருக்காது… அத தெரிஞ்சுகிட்டேன்… சரி”

“என்ன கேஸு?”

“ஒண்ணுமில்ல”

“என்ன கேஸுன்னு கேட்டேன்”

“சரீ”

“என்ன?” என்றபடி நின்றுவிட்டான்.

“இப்ப கேஸு இல்ல, இனி கேஸு வரலாம்ல?”

“அதுக்கு நான் என்ன செய்தேன்?”

“நீரு ஒண்ணும் செய்யவேண்டாம்… யானைகள் சண்டைபோடுறப்ப ஊடால புகுந்தா நசுங்கீருவீரு… நானறிஞ்சு எந்த முதலாளியும் அடியாளுக்கு அடிபட்டா மருந்துக்கு காசு குடுத்ததில்ல… சரி”

“இப்ப எங்க அடி?”

“விடும் வேய்… வாரும்”

அவர் முன்னால் செல்ல கிருஷ்ணையன் என்னை சந்தேகமாக பார்த்தான். நான் புன்னகை புரிந்தேன். கிருஷ்ணகோபால் வித்தை தெரிந்தவன், வெறும் வாய்சாலக்காரன் அல்ல என்று உறுதியடைந்தேன்.

அதே வினைல் போர்டு கண்ணாடியறை வாசல். அந்த நாள் அப்படியே மீண்டும் நிகழ்வதுபோல. என் நெஞ்சு துடித்தது. எதையாவது பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

கிருஷ்ணையன் உள்ளே சென்று மீண்டு வந்து உள்ளே செல்லும்படி கைகாட்டினான். நாங்கள் சென்றதும் உடன் வந்து எங்கள் பின்னால் வழக்கம்போல கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.

அதேபோல வெள்ளை ஆடை, கம்ப்யூட்டர் ஒளியில் மின்னும் மெல்லிய மூக்குக்கண்ணாடி. மென்மையான பச்சை பரவிய மேலுதடு. அதே போல நிமிர்ந்து அதே போல பார்த்தார்.

“குட்மார்னிங் காசிலிங்கம். என் பேரு கிருஷ்ண கோபால், இவர் என்னோட கட்சிக்காரர். முன்னாடி பாத்திருப்பீங்க… கேன் ஐ சிட்?”

கேட்காமலேயே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து என்னிடம் அமரும்படி சைகை காட்டினார் கிருஷ்ணகோபால்.

அந்த தோரணை காசியை அமைதியிழக்கச் செய்வதைக் காணமுடிந்தது. எப்போதுமே எக்ஸெல் ஷீட்டைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார் போல. கொஞ்சநேரம் வெளியே வருவதே அவருக்கு ஒரு தொந்தரவாக இருக்கிறது என்று  தோன்றியது. டைரக்டர் சொல்வார், “ரொம்ப சங்கீதம் கேட்காதே. அப்டியே மைண்டு செட் ஆயிட்டா வெளியே வரத்தோணாது. வந்தா எரிச்சல் வந்திட்டே இருக்கும். நல்ல மியூஸிக் சென்ஸ் உள்ளவங்களுக்கு வெளியுலகமே புடிக்காது… ராஜாவோட பிரச்சினையே அதான்.”  இது இவருடைய சங்கீதம்… வங்கியில் பணம் சேர்வதன் இன்னிசை.

என்ன சிந்தனை செய்துகொண்டிருக்கிறேன்? அபத்தமாக, பொருத்தமில்லாமல். ஆனால் அந்த திசைதிரும்பல் என் பதற்றத்தைக் குறைத்தது. என் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை அந்த எண்ணம் உருவாக்கியது. அது என் முகத்தில் எழுகிறதென்பதே என்னை ஆற்றல் மிக்கவனாக ஆக்கியது. அரைக்கணம் என் கண்களைப் பார்த்த காசிலிங்கம் அமைதியிழப்பது தெரிந்தது.

அவ்வளவுதான் இவர். இந்த வெள்ளுடைத் தோரணைகளுக்கு அடியில் இருப்பவர் மிகமிகக் கவலைகொண்ட மனிதர். எதிர்பாராத பெருவெற்றியை அடைந்து, அந்த வெற்றியைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் செல்வந்தர்களில் ஒருவர். என் புன்னகை மேலும் கொஞ்சம் விரிந்தது.

“சொல்லுங்க…”

“உங்களோட இந்த கடையிருக்கிற எடத்தையும் கட்டிடத்தையும் என் கட்சிக்காரர் விலைகுடுத்து வாங்கியிருக்கார்… இது டாக்குமெண்டு காப்பி… வில்லங்கமில்லா பக்கா பட்டா… பாத்துக்கலாம்” என்று மேஜை மேல் ஃபைலை வைத்தார் கிருஷ்ணகோபால்.

காசிலிங்கம் நடுங்கிவிட்டது எனக்கு தெரிந்தது. அவருடைய பாவனை மிகமிக இயல்பாக, மென்மையாக இருந்தது. கண்களில், கைவிரல்களில் எங்கும் நடுக்கமில்லை. ஆனால் எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் அங்கே அவராக அமர்ந்திருந்தது நானே. என் இன்னொரு வடிவமே.

அவர் டாக்குமெண்டை எடுத்து பார்த்தார். அது பிழை. அதை தொட்டே பார்த்திருக்கக் கூடாது. அடுத்து இன்னொரு நுட்பமான பிழை செய்தார். அரைக்கணம் கிருஷ்ணையனைப் பார்த்தார். அவருடைய அச்சத்தை எனக்கும் கிருஷ்ணகோபாலுக்கும் காட்டிவிட்டார். அதை ஐயர் தவறவிடவே மாட்டார்.

மிக விரைவாக ஆவணங்களைப் பார்த்துவிட்டு காசிலிங்கம் என்னைப் பார்த்தார். அவர் மனதுக்குள் என்னென்ன ஓடுகிறது என்று என்னால் ஊகிக்க முடிந்தது. எப்படி நான் பணத்தைப் புரட்டினேன், நான் எவருடையவோ பினாமியாக இருக்கிறேனா, ஏதாவது சதியா… அந்த ஐயமும் குழப்பமும் பெருகவேண்டும். அதுதான் நல்லது.

“இப்ப நாங்க வந்தது, உங்க கிட்ட இந்த நோட்டீஸை தர்ரதுக்காக” என்று கிருஷ்ணகோபால் இன்னொரு கவரை நீட்டினார். “இதை ஏற்கனவே சட்டபூர்வமா ரிஜிஸ்டர்ட் தபால்ல அனுப்பிட்டேன். நேத்தே உங்க கடையிலே கையெழுத்துபோட்டு வாங்கிட்டாங்க. இன்னும் உங்க டேபிளுக்கு வந்திருக்காது. அதான் இன்னொரு காப்பிய நேரிலே தந்துட்டு போகலாம்னு வந்தேன்.”

அவர் அதை பிரித்துப் பார்க்கவில்லை. முந்தைய ஆவணத்தைப் பார்த்திருக்கக் கூடாது என இப்போது உணர்ந்துவிட்டார்.

“அதாவது கண்டெண்டை சுருக்கமாச் சொல்லிடறேன். அப்றமா ஆறுதலா உக்காந்து வாசிச்சுப்பாருங்க. நீங்க இப்பவே, முடிஞ்சா இன்னிக்கே இந்தக் கடைய காலி பண்ணணும்… இது எங்க பிராப்பர்ட்டி. நீங்க சட்டவிரோதமா ஆக்ரமிச்சு வைச்சிருக்கீங்க.”

“இன்னிக்கே…” சட்டென்று சிரித்துவிட்டார். “இந்தக் கடைய?”

“ஆமா, இன்னிக்கே… இல்லேன்னா ஆளை கூட்டிட்டு வந்து எல்லாத்தையும் இழுத்து வெளியே போடவேண்டியிருக்கும்… ஆட்களுக்குச் சம்பளமே குடுக்கவேண்டியதில்லை. கடையிலே இருக்கிற ஸ்டாக்கே காணும்… நூறு இருநூறு ஆள கூட்டிருவோம்… நயினார்குளம் பக்கமா போயி ஒரு சத்தம் குடுத்தா போறும்…”

அவர் கண்கள் ஒரு கணம் இடுங்கின.

“போலீஸ்ல நீங்க கம்ப்ளெயிண்ட் குடுக்கலாம்… அத நாங்க பாத்துக்கிடுவோம்… உள்ளதச் சொல்லிடறேனே, நாளைக்கு மத்தியான்னம் ஆளு உள்ள நுழைஞ்சிரும். ரவுடிங்கள ஏற்பாடு செஞ்சு நிப்பாட்டுறதானா நிப்பாட்டுங்க. அப்ப அடிதடி ஆயிடும். அந்த நியூஸு தந்தியிலே வரும்… அப்றம் நல்லா ஏவாரம் ஆகும்… அப்டி ஒரு நாலஞ்சு அடிதடி, நாலஞ்சு கஸ்டமர் மண்டை உடைஞ்சா தந்திக்காரனுக்கும் கொண்டாட்டம்தானே? உங்க பிராண்டுக்குத்தான் சிக்கல்…” கிருஷ்ண கோபால் புன்னகைத்து “நான் சும்மா அப்டி வைல்டா நினைச்சுப் பார்த்தேன்…” என்றார்.

“நான் இங்க வாடகைக்கு இருக்கேன்… ஒரு வருசம் பழைய ஓனர் கிட்ட டைம் வாங்கியிருக்கேன்… இன்னும் ஆறேளு மாசம் பாக்கியிருக்கு.”

“இல்லியே, வாடகைக்கு இருக்கீங்கன்னா வாடகைப் பத்திரம் வேணுமே, இருக்கா?”

அவர் முதல்முறையாக திகைத்தார்.

கிருஷ்ணகோபால் உடனே தொடர்ந்தார். “நீங்க அல்லாப்பிச்சை பாய்க்கு வாடகை குடுத்ததுக்கு ஒரு எவிடென்ஸும் இல்லை. இருக்குன்னா காட்டுங்க. அவருக்கு உங்க அக்கவுண்டிலே இருந்து ஏதாவது காசு போயிருந்தா அது வாடகை இல்லை.”

காசிலிங்கம் கையை கோத்துக்கொண்டார்.

“அப்ப, நீங்க யாரு? அம்பது அறுபது வருசமா இந்த எடத்த ஆக்ரமிச்சு வைச்சிருக்கிற ஒரு முதலாளி… லேன்ட் ஓனர் கோர்ட்டுக்குப் போயி நடையா நடந்து தீர்ப்பு வாங்கியாச்சு. கோட்டு எடத்தக் காலி பண்ணணும்னு சொல்லியாச்சு. ஆனால் வம்படியா உக்காந்துட்டிருக்கீங்க… பல வாட்டி கோர்ட் ஆர்டரக் காட்டி காலிபண்ணணும்னு அல்லாப்பிச்சை பாய் நோட்டீஸ் விட்டிருக்காரு. அதுக்கு நீங்க ரெஸ்பாண்ட் பண்ணலை…”

“யாரு நோட்டீஸ் விட்டது? எங்க?” அவர் சீற்றத்துடன் கேட்டார். முழுமையாகவே ஆட்டத்தில் தோற்றுவிட்டார் என்று அந்த சீற்றம் காட்டியது. என் புன்னகையை என்னால் மறைக்க முடியவில்லை. என் புன்னகை அவரை மேலும் வீழ்த்தியது.

“நான், அல்லாப்பிச்சை ராவுத்தரோட வக்கீலும் நான்தான்…” என்றார் கிருஷ்ண கோபால் “இதுவரை உங்களுக்கு ஆறு நோட்டீஸ் விட்டிருக்கேன்… உங்க ஆபீஸ்ல நோட்டீஸை கையெழுத்து போட்டு வாங்கியிருக்கீங்க. எங்க கிட்ட நகல் இருக்கு. எல்லாத்தையும் நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல சப்மிட் பண்ண முடியும்… இனிமே இது கிரிமினல் கேஸு, சிவில்கேஸு முடிஞ்சுபோச்சு… தெரியும்ல?”

“மிரட்டுறீங்களா?” என்று அவர் சிரித்தபோது முகம் கடும் சீற்றத்தில் சிவந்து தலையில் மெல்லிய நடுக்கம் தெரிந்தது.

“ஏன் மிரட்டக்கூடாதா சார்?” என்று கிருஷ்ணகோபால் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“நீங்க கெளம்பலாம்… கிருஷ்ணா”

“அடிக்கப்போறியா கிருஷ்ணா?” என்றார் கிருஷ்ண கோபால். முன்னரே அதை யோசித்து அவர் அவனிடம் பேசியிருந்தார் என அப்போது தெரிந்தது.

கிருஷ்ணையன் தயங்கினான்.

“அவன் வரமாட்டான். அவன் சட்டம் தெரிஞ்ச ஆளு” என்றார் கிருஷ்ணகோபால். “வக்கீல் மேலே கையவைச்சு ஜெயிலுக்குப்போயி களி திங்க அவன் என்ன மொரட்டு முட்டாளா?” அந்த காட்சியை கிருஷ்ணகோபால் நன்றாக ஒத்திகை பார்த்திருக்கவேண்டும். உற்சாகமாக மேஜைமேல் கையை வைத்துக்கொண்டு “அப்ப மெரட்டலை முழுசா சொல்லிடறேன். சட்டப்படி நீங்க உடனே காலி பண்ணணும்… நாங்க ஆளு வைச்சு காலி பண்ண வைக்ற மாதிரி ஆயிடக்கூடாது. அப்டி காலிபண்ண நாங்க வர்ரப்ப நீங்க தடுத்தா நீங்கதான் அத்து மீறின ஆள் ஆயிடுவீங்க… உங்களுக்குச் சட்டபூர்வமா எந்த உரிமையுமில்லாத எடத்திலே அடிதடியிலே ஈடுபட்டது நீங்கன்னு ஆயிடும்…”

முன்னால் குனிந்து “ஆக்சுவலா இன்னொரு ஐடியா தோணுது” என்று கிருஷ்ணகோபால் தொடர்ந்தார். “நீங்க காலிபண்ணின எடத்திலே இந்த கடைய நாங்க நடத்திட்டிருக்கோம், இது நாங்க நடத்துற கடை. எங்களோட சரக்கு… நீங்க ஆளைக் கூட்டிட்டு வந்து எங்க சட்டபூர்வமான எடத்திலே இருக்கிற சட்டபூர்வமான சொத்துக்களை திருடீட்டு போக டிரை பண்ணினீங்கன்னு கேஸை கொண்டு போயிடலாம்… சரீ, உங்ககிட்ட டாக்குமெண்ட் இருக்கும். ஆனா அதெல்லாம் கோர்ட்ல இல்ல? கோர்ட்டுலே எல்லாம் எப்ப பேசுறது? அரெஸ்ட் பண்ணி பதினஞ்சுநாள் ரிமாண்டுலே வைக்க அதெல்லாம் தேவையில்லை…”

“செய்ங்க”

“செய்றோம்… நீங்க எப்டி தலைகீளா குதிச்சாலும் ஒரு ஃபேக்ட் மாறாது. கடை எங்களுது. எங்களோட சட்டபூர்வச் சொத்து. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கோர்ட் ஆணைய மீறி ஆக்ரமிச்சு வைச்சிருக்கிறது நீங்க… வாறோம்.”

“ஃபோர்ஜரி… எங்க கடைக்கு நோட்டீஸ் ஒண்ணும் வரலை”

“ஆமா, ஃபோர்ஜரியேதான்… எப்பவுமே வக்கீல் நோட்டீஸ்ல பாதி அப்டித்தான். உங்க கடை சீலை எடுக்க எனக்கு எவ்ளவு நேரமாகும்? இது நான் ரெடி பண்ணின சீல்தான்… இது சிலசமயம் பிராப்பரா கோர்ட்ல நிக்காது. ஆனா அதெல்லாம் கோர்ட்ல சிவில் கேஸ் நடக்கிறப்ப. இது கிரிமினல் கேஸு… ஆக்ரமிச்சு உக்காந்து அடாவடி பண்றவரு நீங்க. அதுக்குண்டான சப்போர்ட்டிங் டாக்குமெண்டுதான் இதெல்லாம்… ஒரு எஸ்.ஐ இதப்பாத்து கன்வின்ஸ் ஆனாபோதும்…”

“அத நான் பாத்துக்கிடுதேன்” என்றபோது அவர் குரல் நன்றாகவே நடுங்கியது. தளர்ந்துவிட்டார் என தெரிந்தது.

“சரி, பாப்போம்” என்ற கிருஷ்ண கோபால் சட்டென்று சிரித்து “ஏன் சார், ஒரே வாரத்திலே மூலச்சொத்தை வாங்கி, டாக்குமெண்டோட வாறவன் ஒரு சாமானிய ஆளுன்னு நினைக்கிற நீங்க தானா இவ்ளவு பெரிய வியாபாரத்த நடத்துறீங்க? நம்ப முடியல.”

“கெட் அவுட்” என்று அவர் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டார்.

“அதான் கெளம்பிட்டோமே” என்றபின் கிருஷ்ணகோபால் வெளியே நடந்தார்.

நான் அவரை பார்த்தேன். கண்களில் மெல்லிய நீர்த்திரை. உதடுகள் துடிக்க, முகம் சிவக்க, ஒரு கிலோமீட்டர் ஓடிவந்தவர் போல நின்றார். கை நீட்டியபடியே நின்றது. என் கண்களை உணர்ந்ததும் கையை தாழ்த்தினார். அமர்ந்துகொண்டார்.

(மேலும்)

ஆழ்ந்திருந்து அறிதல்

$
0
0
குரு நித்ய சைதன்ய யதி

அன்புள்ள ஜெ

தியான வகுப்புகள் மற்றும் யோக வகுப்புகள் பற்றிய காணொளியை பார்த்தேன். என்னுடைய குடும்பத்தில் இருந்தே சிலர் எனக்கு அனுப்பியிருந்தார்கள். இந்த பயிற்சிகளைப் பற்றி தெரியும். ஆனால் இன்று எல்லா இடங்களிலும் நிகழும் தியானம் யோகம் பயிற்சிகளிலிருந்து இவை எப்படி வேறுபடுகின்றன?

அர்விந்த்ராஜ்

சௌந்தர்

அன்புள்ள அர்விந்த்,

தியானம், யோகம் ஆகியவை இன்று இந்தியாவை விட உலக அளவில்தான் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் மூன்று வழிமுறைகள்தான்  மிகப்பிரபலம்.

  • தியானத்தை எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகம் செய்யும் ஆழ்நிலை தியானம். இதை மகரிஷி மகேஷ் யோகி உலகமெங்கும் கொண்டுசென்றார். அதன் மேம்படுத்தப்பட்ட பல முறைகள் இன்று புகழ்பெற்றுள்ளன
  • யோகப்பயிற்சிகளை திருமலை கிருஷ்ணமாச்சாரி, பி.கே.எஸ். அய்யங்கார் மற்றும் டி.கே.வி.தேசிகாச்சாரியார் போன்றவர்கள் உலகமெங்கும் கொண்டுசென்றனர். இன்று அது ஒரு சர்வதேச அளவிலான பயிற்சிமுறையாக நிலைகொண்டுவிட்டது
  • திபெத், ஜப்பானிய பௌத்த அறிஞர்களால் விபாசனா முறை உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டது. அவை இரண்டும் இணைந்து புதிய முறைகள் உருவாகியுள்ளன.

இன்று உலகில் இப்பயிற்சிகள் இல்லாத நாடுகள் மிகமிகக்குறைவு. இஸ்லாமிய நாடுகள் உட்பட

தில்லை செந்தில் பிரபு

இப்பயிற்சிகள் ஏன் தேவையாகின்றன? உலகம் மேலும் மேலும் தொழில்நுட்பமயமாகி வருகிறது. கடுமையான போட்டியின் வழியாகவே கல்வி, வேலை, தொழில் எல்லாமே நிகழ்கின்றன. ஆகவே மனிதர்கள் எப்போதும் முழுச்செயல்வேகத்துடன் இருந்தாகவேண்டியிருக்கிறது. அதை தவிர்க்கவே முடியாது.

ஒரு விலங்கு வேட்டையாடும்போதும், வேட்டையாடப்படும்போதும்தான் அது உச்சகட்ட செயல்வேகத்துடன் உள்ளது. அட்ரினல் என்னும் மூளைச்சுரப்பி (Adrenal ) அச்செயல்வேகத்தை உருவாக்குவதற்காகவே உள்ளது. அது எப்போதாவதுதான் உயிர்களுக்குத்தேவையாகிறது. அது சுரந்தால் உயிர்களின் இதயவேகம் அதிகரிக்கும். ரத்தத்தில் குளூக்கோஸ் தேவை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கூடும். ஆனால் நமக்கு இன்று ஒவ்வொருநாளும் அச்சுரப்பி சுரந்தாகவேண்டியிருக்கிறது. இது நம்மை நோயுறச்செய்கிறது.

இன்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவை பெருகியுருப்பதற்குக் காரணம் இதுதான். மன அழுத்தம் அதன் விளைவான மனச்சோர்வு பெருகியிருப்பதும் இதனால்தான். கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி பெருகியிருப்பதும் இதனால்தான். இவை நாகரீகம் உருவாக்கும் நோய்கள்.

இந்நோய்களுக்கான மருத்துவமுறைகள் உள்ளன. கடுமையான நிலையில் மருத்துவத்தையே நாடவேண்டும். ஆனால் இந்நோய்கள் வராமல் தடுப்பதும், வந்தபின் வாழ்க்கைமுறையை சீரமைத்துக்கொள்வதும் மேற்குறிப்பிட்ட யோகம், தியானம் முறைகள் வழியாக சாத்தியம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் அவை புகழ்பெற்றுள்ளன.

வி.அமலன் ஸ்டேன்லி

(வி.அமலன் ஸ்டேன்லி நடத்தும் விபாசனா பயிற்சிகள்,நாள் ஜூலை 5,6  மற்றும் 7  (வெள்ளி, சனி ,ஞாயிறு)

அம்மூன்று முறைகளையும் குறைந்த செலவில் பயிற்றுவிக்க ஆசிரியர்களைக் கண்டடைந்துள்ளோம். பிற அமைப்புகளிலுள்ள இரு பிரச்சினைகளை தவிர்க்கிறோம்

  1. பல அமைப்புகள் இப்பயிற்சிகளை ஓர் முதன்மையான மனிதரைச் சார்ந்து நடத்துகின்றன. அவரை வழிபடச்செய்கின்றன. அல்லது வேறுவகையான மதவழிபாடுகளை சேர்த்துக்கொள்கின்றன. இங்கே எந்த வழிபாடுகளும் இல்லை. எந்த மதச்சடங்குகளும் இல்லை. எல்லா மதத்தவரும், நாத்திகர்களும் கலந்துகொள்ளலாம்.
  2. பல அமைப்புகள் franchise முறைப்படி இவற்றை நடத்துகின்றன. ஓராண்டு பயிற்சி பெற்றவர் அடுத்து வருபவர்களுக்குக் கற்பிப்பார். நாங்க அந்த முறையை தவிர்க்கிறோம். ஏனென்றால் தியானம், யோகம் ஆகியவை வெறும் உடற்பயிற்சிகளோ மனப்பயிற்சிகளோ அல்ல. அவற்றுக்கு ஓர் ஆசிரியர் வேண்டும். அவர் குரு நிலையில் இருப்பவராக இருக்கவேண்டும். அவர் தன் மாணவர்களிடம் முழுமையான மனத்தொடர்பு கொண்டிருக்கவேண்டும். வாழ்க்கை முழுக்க வழிநடத்தவேண்டும்.அவருக்கு தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றில் பயிற்சி இருக்கவேண்டும். மனமுதிர்ச்சி பெற்ற ஆளுமையாக அவர் இருக்கவேண்டும். அத்தகைய ஆசிரியர்களையே நாங்கள் முன்வைக்கிறோம்.

எங்கள் பயிற்சிகளை குரு சௌந்தர் (யோகம்) தில்லை செந்தில்பிரபு (தியானம்) வி.அமலன் ஸ்டேன்லி (விபாசனா) ஆகியோர் நடத்துகிறார்கள். அவர்கள் வெறும் பயிற்சியாளர்கள் அல்ல, பெரும் ஆசிரியர்களும் வழிகாட்டிகளும் ஆவார்கள்.

ஜெ

காணொளிகள்

 

 

 

நாத்திகன் கோயிலுக்கு செல்வது…

$
0
0

நான் ஒரு நாத்திகன். சிற்பக்கலையை ரசிக்க மட்டும் நான் ஆலயத்திற்குப் போவது சரியாகுமா? ஆலயங்களை நான் மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள் இல்லையா? பக்தர்கள் அப்படிச் சொல்லலாமே?

நாத்திகன் கோயிலுக்குச் செல்லலாமா?

What is Gurukula model education? Why it needed? What are the special features?

On the gurukula model of education 


படுகளம் -12 (நாவல்)

$
0
0

வெளியே வந்ததுமே கிருஷ்ணகோபால் “அவர எந்திரிக்க வைக்கணும், கத்த வைக்கணும், அந்த திட்டத்தோடத்தான் வந்தேன். செஞ்சாச்சு” என்றார்.

“பயந்திட்டார்ல?”

“கடுமையா… ஆனா அந்தப் பயத்தக் கண்டு நாம ஓவரா பாய்ஞ்சிரக்கூடாது. ஏன்னா இப்டி பயந்துட்டதை நெனைச்சா ரோஷம் வந்திரும். ஓங்கி நம்மள அடிச்சிருவார். இப்ப நாம உடனே தோசக்கல்ல சூடு ஆத்தணும். கொஞ்சம் தண்ணிய சுர்ருனு ஊத்தி பிரஷ்ஷாலே தேச்சுவிட்டா ஆறிடும்… அப்பதான் சமையல் நடக்கும்”

“என்ன செய்வார்?” என்றேன்.

“எல்லா டாக்குமெண்டையும் உடனே செக் பண்ணுவார். ஒரு நல்ல வக்கீல்கிட்ட போயி எல்லாத்தையும் செக் பண்ணுவார்.”

“பாத்துக்கலாம்னு வக்கீல் சொல்லிட்டா?”

“ஒரு பணக்காரன் சுட்டுவெரலிலே பிளேடு காயத்தோட வந்தாலும் டாக்டர் உடனே அட்மிட் பண்ணத்தான் செய்வார். வக்கீல் ஒருநாளும் இது சின்ன விசயம்னு சொல்லவே மாட்டார். நாம சொன்னத விட படுசீரியஸான பிரச்சினை இதுன்னு இன்னும் பயமுறுத்தி விட்டிருவார். அதான் நமக்கு வேணும். பிரச்சினை பெரிசு, ஆனா தன்னாலே ஈஸியா சமாளிச்சிர முடியும்னுதான் வக்கீல் சொல்லுவார். ஆனா இவரு பிரச்சினைய அந்த வக்கீலாலே தீத்திரமுடியும்னு சொல்றத மட்டும் நம்ப மாட்டார்…”

நாங்கள் சரவணவிலாஸ் போய் ஒரு காபி குடித்தோம். கிருஷ்ண கோபால் குடிப்பது காபியே அல்ல, சர்க்கரை ஜெல்லி என எனக்கு தோன்றியது. காபியே கொஞ்சம்தான் இருந்தது, அதில் நான்கு ஸ்பூன் சர்க்கரை போட்டுக்கொண்டார்.

“என்ன நடக்குதுன்னு பாப்போம்… நான் உங்கள அங்க ஒரு நிமிசம் விட்டுட்டு சட்டுன்னு வெளியே வந்தது ஒரே காரணத்துக்காகத்தான். அவருக்குமேலே உங்களுக்கு ஒரு சாஃப்ட்னெஸ் உண்டு. உங்க கண்ணிலே அது தெரியும்… அத அவரு புரிஞ்சுகிட்டார்னா உடனே ஒரு காம்ப்ரமைஸுக்கு வருவார்… ஆனா அப்டி சுளுவா வந்திரமாட்டார்… ஒரு மெரட்டல் கண்டிப்பா இருக்கும்.”

“அத நான் பாத்துக்கறேன்” என்று சொன்னேன்.  எழுந்துகொண்டதும் “சரி, பேனரை எடுத்துடறேன்னு சொல்லிட்டு வருவாரோ?” என்றேன்.

“அப்டி வந்தா சரியான தத்தின்னு அர்த்தம். என்ன நடந்ததுன்னு இப்ப நல்லாவே புரிஞ்சிருக்கும். அவரு அன்னிக்கு உங்க கிட்ட அப்டி தெனாவெட்டா நடந்துகிட்டது அவரோட இயல்பு இல்லை. அவரு உங்கள ஒரு பொருட்டா நினைக்கலை. அதோட உங்கள அவமானப்படுத்தி அனுப்பினா அதுக்குமேலே உங்களால தொந்தரவு இருக்காதுன்னு நினைச்சு வேணும்னே அதைச் செஞ்சார்… ஆயிரம் பேரைச் சீண்டினா அதிலே ஒருத்தன் சீறி எந்திரிப்பான். புழுன்னு நாம நினைக்கிறது எப்பவும் புழுவா இருக்காது, பாம்பாவும் இருக்கலாம். மகாபாரதத்திலே பரீக்ஷித்னு ஒரு ராஜா அப்டித்தான் பாம்ப புழுன்னு நினைச்சு செத்தான்…” என்றார் கிருஷ்ணகோபால். “இப்ப அவருக்கு நீங்க ராஜநாகம்னு தெரியும்… தப்பு பண்ணிட்டோம்னும் தெரியும். இன்னிக்கு தூங்க மாட்டார். இனி பலநாள் தூங்க முடியாது.”

கிருஷ்ணகோபாலை அவருடைய காரில் அனுப்பிவிட்டு நான் திரும்பிச் செல்லும்போது ஓர் இடத்தில் சட்டென்று ஆட்டோ ஓட்டுநரின் தோளைத் தொட்டு “நிப்பாட்டுங்க” என்றேன்.

“ஏன் சார்?”

“வீட்டுக்குப் போகவேண்டாம்…” எனக்கு எங்கே செல்லவேண்டும் என்று தெரிந்திருந்தது.

செவத்தபெருமாள் வீட்டில் அவர் இல்லை. இருக்க மாட்டார் எனறு எனக்கு தெரியும். சாந்தி வாசலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். சுருட்டை முடி நாரதர்கொண்டை மாதிரி தலையின்மேல் இருந்தது. கரிய கழுத்தில் ஒரு வெள்ளிச் செயின் ஒரு சரிகைக்கோடுபோல மின்னியது. சரியான படிப்புப் பைத்தியம் என்று நினைத்துக்கொண்டேன். “அப்பா இருக்காரா?”

“இல்லியே”

“மணி?”

“மணியா? மணி இங்க வாறதில்லியே”

“ஓ… மணி பாக்கணும்னு சொன்னாப்ல…” என்றேன். அவளுடைய சுருட்டை முடி கரிய மோதிர வளையங்களாக இருந்தது. “எண்ணை தேச்சு குளிக்கிறீகளோ?” என்றேன்.

அவள் புன்னகைத்து “ஆமா” என்றாள். அரைக்கணம் அவள் தன் கண்களை தாழ்த்தியது அழகாக இருந்தது.

“மணி எங்கேருப்பான்னு தெரியுமா?” என்றேன். அந்த மனநிலையில் அவள் அதைச் சொல்லாமலிருக்க முடியாது.

“மணியா? அவன் நம்பியண்ணாச்சிக்க பொகையில மண்டியிலதான் படுத்துக்கெடப்பான்…” என்றாள். “தேரடிமுக்கிலே இருந்து ஒரு சந்து போகுதுல்லா? அதிலே முருகேசன் டாக்டரோட கிளினிக்குக்குப் புறத்தாலே இருக்கு அந்த மண்டி…”

“செரி வாறேன், அப்பா வந்தா கேட்டதாச் சொல்லுங்க”

நான் நம்பிநாயகம் பிள்ளையின் புகையிலை மண்டிக்குச் சென்றேன். மட்கும் புகையிலையின் கடும்நெடி பரவிய தாழ்வான பழைய கட்டிடம். ஓட்டுக் கட்டிடமாக ஒரு காலத்தில் இருந்தது. இடிந்துவிட்டதனால் மேலே தகரக்கூரை போட்டிருந்தார்கள். அங்கே ஓர் ஒல்லியான வாட்ச்மேன் மட்டும்தான் இருந்தான்.

“மணி வரச்சொன்னான்” என்றேன். “ஒரு விசயம் பேசணும்” சட்டென்று ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். அவன் கண்கள் மாற கைநீட்டி வாங்கி லுங்கியை தூக்கி உள்ளே இருந்த நீலநிறமான கால்சட்டையின் பைக்குள் போட்டுக்கொண்டான்.

“மணி உள்ள இருக்கான்ல?”

“மணியா… இப்பம் அவன்…” என்றபின் என்னை ஏற இறங்கப் பார்த்தான் “உள்ள தூங்கிட்டிருக்கான். நல்ல லெக்கு இல்ல” என்றான்.

“பேசிக்கிடுதேன்” என்றேன்.

அவன் உள்ளே செல்ல சைகை காட்டினான். “அந்த சாய்ப்புரூமிலே பெஞ்சிலே கெடக்கான்.”

ஓலைக்கூரை போட்டு இழுத்துக் கட்டப்பட்ட சாய்ப்பறை ஒரு ஆள் நிற்குமளவே உயரம் கொண்டது. கதவு ஒருக்களித்து திறந்திருந்தன் வழியாக உள்ளே அரையிருளில் ஒரு மரபெஞ்சில் மணி மல்லாந்து படுத்து வாய்திறந்து தூங்கிக்கொண்டிருந்தைக் கண்டேன். குரல்வளை புடைத்திருந்தது. மஞ்சள்நிறமான பற்களின் தவிட்டுநிற அடிப்பக்கம் தெரிந்தது. மூக்குக்குள் ரோமங்கள் செறிந்திருந்தன. குறட்டையில் நெஞ்சு ஏறியிறங்கியது. ஒல்லியான சிறிய உருவம் கொண்ட ஆள். அவன் எப்படி ஒரு ரவுடி ஆனான்? ஆனால் பெரும்பாலான ரவுடிகள் அப்படிப்பட்டவர்கள்தான்.

நான் கதவை சற்று அசைத்தேன். அக்கணமே குறட்டை நிற்க மணி மடிப்புக்கத்தி போல சட்டென்று எழுந்தமர்ந்தான். கையில் ஒரு பிளேடு மின்னும் குத்துக்கத்தி இருந்தது. “ஆரு?” என்றான்.

“நாந்தான்…” என்றேன். “உன்னை பாக்கவந்தேன். ஒரு தொளில்…”

“வட்டி காரியங்கள்லாம் செவத்தபெருமாள்ட்ட பேசிக்கிடுங்க.”

“இது அதில்ல, வேற… நீ எனக்கொரு காரியம் செய்யணும். நீ நினைக்குதத விட கூடுதலா நான் பணம் தாறேன்.” என் பையில் இருந்து ஒரு கத்தை ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்தேன். “இதிலே பத்தாயிரம் இருக்கு. இது சும்மா நீ என்ன ஏதுன்னு காது குடுத்து கேக்குததுக்குண்டான காசு… தெரியுதா?”

அவன் முகம் மாறியது. நோட்டுக்கட்டையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தான். பிறகு “அவங்களுக்கு எதிராட்டு நான் ஒண்ணும் செய்ய முடியாது. அது பெரிய எடமாக்கும்” என்றான்.

“அவங்க பெரிய எடம்னு எனக்கும் தெரியும். இது அவங்க சம்பந்தமான விசயமே இல்லை. இது வேற…”

“பொறவு?”

“அந்த பேனரை எடுத்து உடைச்சு கிளிச்சு போடணும்…”

“என்ன சொல்றீரு?”

“ஆமா, அதும் பகல்ல வந்து செய்யணும்…”

“சும்மாருப்பானுகளா?”

“அத நான் பாத்துக்கிடுதேன்…”

“அது நடக்காது, கெளம்பும்வே.”

“சொல்லுறதக் கேளு… ஒண்ணு, நீ அதைச் செய்தா நீ சாமானியப்பட்டவன் இல்லேன்னு காட்டிருவே. இப்ப உன் லெவல்ல பத்துப்பதினஞ்சுபேரு மார்க்கெட்ல இருக்கானுக. இதச் செஞ்சா மத்தவனுக பயந்திருவானுக. மணி அடுத்த லெவலுக்கு போயிருவே… இந்தா இந்த மாதிரி நாத்தக்குடோன்ல பகலுறக்கம் தேவையா? எல்லாரும்தான் கேடித்தனம் செய்யுதான், ஆனா அதுக்குண்டானத அறுவடை பண்ணிக்கிடுதான். உனக்கு என்ன மிச்சம் சொல்லு?”

அவன் பேசுவதற்குள் நான் தொடர்ந்தேன் “…ஏன்னா நீ சின்ன ஆளு. பெரிய வேலைகள் உனக்கு வாறதில்லை. கொலைன்னாக்கூட சும்மா கேக்க ஆளில்லாத சின்ன ஏவாரிங்கதான்… பெரிய வேலை வரணுமானா பெரிய வேலைகளைச் செஞ்சு தாக்குப்பிடிக்குற ஆளுன்னு நீ காட்டணும். நீ செய்யி, தாக்குப்பிடிக்குததுக்கு உண்டான செலவ நான் பாத்துக்கிடுதேன். நீ அரெஸ்ட் ஆனா உடனே நம்பர் ஒன் வக்கீலு உனக்காக வருவாரு, நான் கேரண்டி.”

மணி என்னை கவனித்தான். உடனே ஏதோ எண்ணம் எழ அவன் வாய் அசைந்தது. நான் அதற்குள் மேலும் பேசினேன்.

“…செவத்தபெருமாளுக்கு தெரியவேண்டாம். நீ செஞ்சபிறகு அவருக்கு தெரியட்டும். ஏண்டா செய்ஞ்சேன்னு கேப்பாரு. அவரு சொன்னதாட்டு நான் சொன்னேன், சொல்லி ஏமாத்திப்பிட்டேன்னு சொல்லிடு… எப்டீன்னா, இப்ப நான் செவத்தபெருமாள்கிட்ட வட்டிக்கு காசு வாங்கியிருக்கேன். இந்த பேனராலே என் கடை படுத்துப்போச்சு, பணம் கட்ட முடியல்ல. அத நான் செவத்தபெருமாள் கிட்ட சொல்லுதேன். அவரு உங்கிட்ட சொல்லச் சொல்லுதாரு. அவரு தலையிட்டதா தெரியக்கூடாதுன்னு அவரு சொன்னதனாலே நான் நேரிலே வந்து உங்கிட்ட சொல்லுதேன்… இப்டி நான் சொன்னதா நீ செவத்தபெருமாள் கிட்ட சொல்லு… விசயம் அதுக்குள்ள முடிஞ்சிரும். மிச்சத்த நான் பாத்துக்கிடுதேன்.”

சில நிமிடங்கள் மீசையை முறுக்கியபடி மணி நிலத்தை பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு என்னை பார்த்து புன்னகைத்தான். பணத்தை எடுத்து மடியில் செருகிக்கொண்டான். “மேக்கொண்டு ஒரு எளுவது ஆகும்” என்றான். “ரெண்டு பேரு கூடுதலாட்டு சேத்துக்கிடணும்…”

“செரி… இன்னொரு பத்து தனியா வைச்சுக்கோ” என்றேன். “காசிலிங்கத்துக்கூட ஒரு ஆளு இருக்கான்… செக்யூரிட்டி மாதிரி…”

“என்ன ஆளு?”

“அடிதடி இல்லா கூட்டம்தான்” அவன் சாதியைச் சொன்னேன்.

“செரி”

“அவன சும்மா ஒண்ணு மிரட்டி வைக்கணும்… ஒரு அடி பிடரியிலே நல்லா விளணும்… அவன் நம்மள அடிக்கிறதுக்குள்ள நாம முதல் அடியையும் போட்டிரணும்… அதுக்கு வேற ஆளை வைக்கிறதானா அதும் செய்யி… நான் பாத்துக்கிடுதேன்.”

“இதுக்கு நான் போறும்…”

“மேக்கொண்டு பெரிய வேலை சிலது நம்ம வக்கீல் சொல்லுவாரு… உனக்குத்தான் தருவேன். செரியா?” என எழுந்துகொண்டேன். இன்னொரு பத்தாயிரம் ரூபாய் கட்டை அவன் முன் வைத்தேன். அவன் முகம் மலர்வதை, அதை காட்டிக்கொள்ளாமலிருக்க உடனே கடுகடுவென வைத்துக்கொள்வதை கவனித்தேன்.

“எப்ப செய்வே?”

“மத்தியான்னம்…”

“வேண்டாம், சாயங்காலம், ஒரு அஞ்சுமணிக்கு”

“செரி”

“பேனர பாத்திருக்கேல்ல? நல்ல ஆளமா நட்டிருக்கானுக”

“ஒரு வண்டிய வைச்சு தட்டிப்போடுதேன்.”

“எந்தக் காரணத்தாலேயும் என்னை ஃபோனிலே கூப்பிடக்கூடாது. இனிமே நாம நேரிலே சந்திக்கவேண்டியதில்லை… தெரிஞ்சுதா?”

“சரி”

புன்னகையுடன் வெளியே வந்தேன். வாட்ச்மேன் எழுந்து நின்று வணக்கம் சொன்னான். அவனுக்கு மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தபின் ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்தேன். எந்த பதற்றமும் இல்லாமல் தூங்கினேன். விழித்தபோதும் எந்த பதற்றமும் இல்லை. நான் வேறொருவனாக மாறிவிட்டிருந்தேன். எப்போதிலிருந்து?

உடனே அதற்குப் பதில் தெரிந்தது, அவர் என் முன் கண்கலங்கி நிற்பதைக் கண்டதில் இருந்து. நான் வென்றுவிட்டேன். ஆட்டம் முடிந்துவிட்டது. இனி வெற்றிக்குரியவன் நான் என நிரூபிப்பதுதான் மிச்சம். யானை விழுந்துவிட்டது, இனி அதை குதறி கடித்து மென்று தின்று பசியாறவேண்டும். வெள்ளெலும்பு மிஞ்சும் வரை தின்று களியாடவேண்டும். இனி செந்நாயின் காலம்.

நாலரை மணிக்கு நான் என் பைக்கில் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிட்டேன். அங்கேயே அமர்ந்து அந்த பேனரை பார்த்துக் கொண்டிருந்தேன். ஐந்து மணி அணுகிக்கொண்டிருந்தது. ஆனால் என்னிடம் பதற்றமே இல்லை. பேனரில் இருந்த பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடுமையான லிப்ஸ்டிக். ஆகவே அவர்களின் பற்கள் பெரிதாகத் தெரிந்தன. மிக மெலிந்த பெண்கள். கழுத்தில் நரம்புகள் புடைத்து, தோளெலும்பு தெரிய, கூடுபோலிருந்தனர். டைரக்டருக்கு அத்தகைய பெண்களையே பிடிக்காது. அவருக்கு வெள்ளைநிறமான பெண்களையே பிடிக்காது. ‘மும்பை மாடல்லாம் பொண்ணே இல்லை, பார்பி பொம்மை’ என்பார்.

ஐந்து பத்துக்கு பெரிய பம்பர் கொண்ட ஒரு பழைய டாட்டா லாரி ஓசையிட்டபடி விரைந்து வந்தது. வந்த விசையிலேயே அந்த பேனர் மேல் பெரிய ஓசையுடன் முட்டியது. மீண்டும் பின்னடைந்து சீறி வந்து விசையுடன் முட்டியது. முதல் முட்டிலேயே வளைந்த பேனர் அசைந்து வளைந்தது. இரண்டாம் முட்டில் வளைந்து சாய மூன்றாம் முட்டில் நன்றாகவே கவிழ்ந்து விட்டது.

லாரியில் இருந்து இறங்கிய ஒருவன் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்ட அறுவைக்கருவியால் அந்த பேனரின் நிலைக்கம்பிகளை அறுக்க ஆரம்பித்தான். ரீர்ரீ என ஓசை கேட்டது. பொறிகளைக்கூட பார்க்க முடிந்தது. மணி ஓர் அரிவாளுடன் இறங்கி அதைப் பார்த்தபடி நின்றான். அவனுடன் ஓட்டுநரும் இன்னொருவனும்  இருந்தனர். லாரிக்குள் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது.

அரை மணி நேரத்திற்குள் பேனர் கீழே கிடந்தது. தரையோடு தரையாக கீரைத்தண்டை வெட்டுவதுபோல வெட்டிவிட்டான். வலுவான கருவி அது. மணி அதை வந்து பார்த்து கணக்கிட்டுவிட்டு ஆளைக்கூட்டி வந்திருக்கிறான்.

எல்லா கடைகளில் இருந்தும் ஆட்கள் எட்டிப்பார்த்தனர். மணி அவர்களை பார்வையைச் சுழற்றி பார்த்தான். பேனரை நால்வருமாகச் சேர்ந்து அப்படியே தூக்கி லாரிக்குள் போட்டார்கள். மணி முன்பக்கம் ஏறிக்கொள்ள, லாரி கிளம்பிச் சென்றது.

நான் ரஃபீக்கை ஃபோனில் அழைத்தேன். “பாய், நாந்தான்…”

ரஃபீக் ஏதோ வண்டியில் வந்துகொண்டிருந்தான். செய்தி அவனுக்கு தெரிந்திருந்தது. “பாய், செய்தி தெரிஞ்சிருக்கும்…”

“என்னடா, வெளையாடுறியா? வெளையாட்டுன்னு நினைச்சியா? டேய்…”

“பாய், நான் மரியாதைய விடப்போறதில்ல. இப்ப நீங்க இங்க வரவேண்டாம்… வந்து ஒண்ணும் ஆகப்போறதில்லை. ரவுடிங்க சட்டுன்னு உங்கள வெட்டிப்போட்டுட்டான்னா அது எனக்குப் பிரச்சினை… கொலைக்கேஸ் வரை போக எனக்கு விருப்பமில்லை… அதச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.”

“நீ ஆளு தெரியாம வெளையாடுறே… உன்னை அழிச்சிருவேன்.”

“பாய், நான் யானைகிட்ட வெளையாடுறவன். நீங்க சும்மா சின்ன ஆளு. வெலகிக்குங்க. இல்லேன்னா வசமில்லாம அடிபட்டிரும்… எனக்கு உங்கமேலே விரோதம் இல்லை… என்னை சீண்டாதீங்க. அழிச்சிருவேன்… புரியுதா… அழிச்சிருவேன்…”

அந்த குரல் ரஃபீக்குக்குப் புதியது. அவரால் பேசமுடியவில்லை.

“அப்ப அங்க வந்தவன் ஒரு சாமானிய ஆளு. இப்ப பேசிட்டிருக்கிறவன் எதுக்கும் துணிஞ்சவன், எரக்கமே இல்லாத கொலகாரன்… புரியுதா?”

“நீ என்னலே செய்வே? என்னலே செய்வே?”

“வீடு புகுந்து உன் பெஞ்சாதி புள்ளை நடுவால வைச்சு உன் கைய வெட்டவா? வெட்டிக்காட்டவா? இன்னிக்கே செய்யவா?”

“ஏலே, செஞ்சுபாருலே… செஞ்சுபாருலே…”

“பாய், எதுக்கு சத்தம்போடுறீக? பட்டப்பகல்ல இப்டி ஒரு பேனர ஆளவைச்சு தூக்க உங்களாலே முடியுமா? முடியாதுல்ல? அத நான் செஞ்சிருக்கேன்… அப்ப என்னாலே இதையும் செய்ய முடியும்… நான் சவால் விட்டிருக்கிறது உங்களுக்கில்ல, காசிலிங்கத்துக்கு. நீங்க வெலகிக்குங்க…”

“ஏய், உனக்கும் வீட்டிலே பொட்டைக்குட்டிக இருக்கு”

“ஆமா, ஆனா அவங்கள ஒரு ரவுடி ஒருவாட்டி தொட்டாக்கூட காசிலிங்கத்தோட பொஞ்சாதியையும் மகளையும் வெட்டிக் கொன்னுட்டு செயிலுக்குப் போவேன்… அவ்ளவுதான்.”

ரஃபீக் திகைத்துவிட்டார்.

“பேசாம திரும்பிப்போங்க… எது சட்டப்படியோ அதைச் செய்ங்க. சரியா?”

“தம்பி, உன் நல்லதுக்காகச் சொல்லுதேன். நீ யார் பேச்சையோ கேட்டுட்டு துள்ளுதே. இது பெரிய பெரிய முதலைங்க உலாவுத எடம்… அழிச்சிருவானுக. வேண்டாம், சொல்லுததக் கேளு… நீ நல்ல பையன். படிச்சவன்…”

“ரொம்ப முன்னாலே போயாச்சு பாய்… விசாரிச்சு பாருங்க, பூர்ணமங்கல்யா பட்டுமாளிகை இருக்குத எடம் இப்ப யாருதுன்னு…”

நான் ஃபோனை அணைத்துவிட்டு கைகளை கட்டி அமைதியாக அமர்ந்திருந்தேன். ஓட்டலே என்னை கவனித்துக்கொண்டிருக்கிறது என்று தெரிந்திருந்தேன். கண்ணுக்குத்தெரியாத ஓர் ஊர்தியில் அதிவேகத்தில் வானில் பறப்பதுபோல் இருந்தது. மூளைக்குள் ஏதோ புதிய ஹார்மோன் நமநமப்பாக ஊறி, உடலெங்கும் தினவாகப் பரவியது. குருதியை அது தேனாக மாற்றிவிட்டது. என் தோல் மிகமிக மென்மையாக மாறி சுற்றிலுமிருந்த காற்றை உணர்ந்தது. ஒரு சிறு தொடுகையில் என் உடல் அதிர்ந்துவிடக்கூடும்.

“தம்பி, இன்னொரு காபி” என்றேன்.

“சரிண்ணே” என்றான் சுயம்பு.

ஓட்டல் சட்டென்று சாதாரண நிலைக்குத் திரும்பியது. டபராக்கள் ஓசையிட்டன. குரல்கள் கலைந்து எழுந்தன.

இந்த உணர்வுக்காகத்தான் கொலைகள் செய்கிறார்கள். கொலை செய்தவர்கள் மீண்டும் மீண்டும் செய்யத்துடிக்கிறார்கள். இதில்தான் நிழல் உலக மன்னர்கள் திளைக்கிறார்கள். இதற்காகத்தான் போர்கள் நடந்தன. மாமன்னர்களை ஆட்டுவித்த உணர்வு இதுதான். இதுதான் வணிகத்தின் அடிப்படையாக இருக்கும் உணர்வு. ஒரு நிறுவனத்தை அடித்து நொறுக்கி மட்டவிலைக்கு வாங்கியபின் இந்த உணர்வு இருக்கலாம். ஒரு பெரிய லாபத்திற்குப் பின் இந்த உணர்வு மிஞ்சலாம். பணம் அல்ல, அதிகாரம்கூட அல்ல, இந்த மிதப்புதான். அழிப்பதில் இருக்கும் களிப்பு. அழித்தபின் வரும் தினவு… இதுவேதான். இதன்மேல்தான் அவர் அமர்ந்திருந்தார்.

நான் என் கடைமுன் பைக்கை நிறுத்தினேன். சட்டென்று கடைக்குள் வெளிச்சம் பெருகி வந்து திறந்து கிடந்ததுபோல் தோன்றியது. மாரி பயத்துடன் எழுந்து நின்றான். பக்கத்து கடையில் சுடலைப்பாண்டி மாமா என்னை முன்னரே பார்த்துவிட்டிருந்தார். ஆனால் பரபரப்பாக வியாபாரம் செய்வதுபோன்ற ஒரு பாவனையில் இருந்தார்.

நான் புன்னகையுடன் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அவர் என்  பார்வையை உணர்ந்ததும் பதறினார்.

ஓர் எண்ணம் எழுந்தது. அந்த ரசாயன மிதப்புதான். அதை நான் குறைக்க விரும்பவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் அதில் திளைக்க விரும்பினேன். கைதட்டி “டேய்” என்றேன்.

சுடலைமாமா வேறெங்கோ பார்த்தார். “டேய், சுடலை உன்னத்தான். வாடா இங்க”

சுடலை மாமாவின் கடைப்பையன்கள் திகைத்து அவரைப் பார்க்க அவர் என்னை வாய்திறந்து பார்த்தார். அவர் உடல் பதறிக்கொண்டிருந்தது.

“கூப்பிட்டா வரமாட்டியாடா வெண்ண?” என எழுந்தேன்.

“இதோ வந்திட்டேன்” என்று அவர் பதறியபடி ஓடி வந்து என் கடைக்குள் நுழைந்து என் முன் நின்றார். “நான் ஒரு தப்பும் பண்ணல்ல… நான் இங்க…”

“நீ ஒரு தப்பும் பண்ணல்ல… ஆனா என் சரக்கை பாதிவெலைக்கு வாங்கித்தாறதாச் சொல்லி அட்வான்ஸ் வாங்கினே…”

நான் அதை குத்துமதிப்பாகத்தான் சொன்னேன். ஆனால் சுடலை மாமா பதறி “நான் கேக்கல்ல. அவனுக குடுத்தானுக… நான் அதை இப்பமே கூப்பிட்டு திருப்பிக் குடுத்திருதேன்… எனக்கொண்ணும் தெரியாது. நான் புள்ளக்குட்டிக்காரனாக்கும்” என்றார். குரல் உடைந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“இந்த கட்டிடம் முனிசிப்பல் ஏரியாவிலே நீட்டிட்டிருக்குன்னு ரஃபீக் கிட்ட நீதான் சொன்னே.”

“நான் சொல்லல்ல”

“டேய்…”

“அவருதான் கேட்டாரு… தம்பி”

“ம்?”

“அவருதான் கேட்டாரு ஐயா… நான் ஒண்ணுமே சொல்லல. அவரு கேக்குறப்ப மறுத்துச் சொன்னா அது நம்ம தலைக்கு தீம்பாயிரும்னு நினைச்சேன்… நான் ஒண்ணும் செய்யல.”

“டாக்குமெண்ட் டீடெயில குடுத்தது நீ…” உண்மையில் எனக்கு அது எதுவுமே அதற்கு முன் தெரிந்திருக்கவில்லை.

அவர் “மாப்பாக்கணும்… ஒரு தடவ மாப்பாக்கணும்” என்று கைகூப்பி அழுதார்.

“…இனி என் விசயத்திலே தலையிட்டேன்னா குடலு இந்த முச்சந்தியிலே கெடக்கும், தெரியுதா?”

“மாப்பாக்கணும்… பிள்ளக்குட்டிக்காரனாக்கும்… தெரியாம செஞ்சுபோட்டேன்.”

“போயி மத்தவனுககிட்ட சொல்லு… ஒருத்தனும் ஒண்ணும் பாக்கல்ல. எதுவும் கேக்கல்ல. சாட்சி மயிருன்னு எவனாவது எறங்கினான், பின்ன பெஞ்சாதி கையாலே தண்ணி குடிச்சு சாகமாட்டான்… தெரியுதா?”

“நான் ஒண்ணுமே செய்யல்ல… நான் ஏளையாக்கும்…”

“வியாபாரி சங்கத்திலே போயி நான் சொன்னேன்னு சொல்லு. இப்ப நான் அங்க வருவேன். தலைவர்கிட்ட நான் பேசணும்” என்றேன். “ம்ம்ம் போடா”

அவர் கும்பிட்டுக்கொண்டே கண்ணீருடன் பின்னால் நகர்ந்து பொறியில் இருந்து வெளியே பாயும் எலி போல ஓடினார்.

(மேலும்)

சந்திரிகா ஹாஸை விலாசம்

$
0
0

சந்திரிகா ஹாஸை விலாச நாடகம் மராட்டியர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட நூல். மராட்டியர் ஆட்சியில் நாடகத்தை கல்யாணம், விலாசம், நாடகம் என கூறும் வழக்கம் இருந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை

சந்திரிகா ஹாஸை விலாசம்

சந்திரிகா ஹாஸை விலாசம்
சந்திரிகா ஹாஸை விலாசம் – தமிழ் விக்கி

கடற்கொள்ளையர், வைரங்கள், தீவுகள்

$
0
0

இன்றைய வாசிப்பு

ஐரோப்பிய இலக்கியத்தில் ‘கடற்சாகச எழுத்து’ என ஒரு வகைமை உண்டு. நான் முதலில் வாசித்த அத்தகைய நாவல் Westward Ho!. அது ஒரு கடற்சாகச நாவல். நான் முட்டிமோதி அதை வாசிக்கையில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் கிடைத்த தோல் அட்டைபோட்ட கிளாஸிக் பதிப்பு. 1930 வாக்கில் லண்டனில் அச்சிடப்பட்டது. ஏதோ வெள்ளைக்காரரின் நன்கொடையாக அந்நூலகத்திற்கு வந்தது.

பழைய ஆங்கிலம். ஆகவே சொற்றொடர் சொற்றொடராக வாசிக்க வேண்டியிருந்தது. ஒருமாதம் இரவும் பகலுமாக வாசித்தேன், என் அப்பாவின் சேம்பர்ஸ் அகராதி துணையுடன். அதை வாசிக்கச் செய்தது அந்த சாகசம் மட்டுமே. அதை வாசித்த நாட்களில் நான் ஐந்து வரிகளில் ஐம்பது பக்கங்கள் அளவுக்கு கற்பனை செய்தேன். நான் வாசித்த நாவலை என்னிடமிருந்து கேட்டிருந்தால் சார்ல்ஸ் கிங்ஸ்லி திகைத்திருப்பார்.

 

அந்த வேகத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நான் அன்றிருந்த உலகம் எவ்வளவு சிறிது என அறியவேண்டும். ஒரு கிராமம், அதைப்போன்ற இருபது கிராமங்கள், காடு. ’உலகம்’ என நான் கற்பனைசெய்தது வேறெங்கோ இருந்தது. பனிமலைகள், எரிமலைகள், பாலைவெளிகள், பெருங்கடல்கள்… அவற்றை காண எந்த வழியும் இல்லை.

நாகர்கோயில் சென்றால், அதிர்ஷ்டம் இருந்தால் அரிதாக வரும் ஆங்கிலப்படங்களைப் பார்க்கலாம். ஸ்பான், சோவியத் நாடு இதழ்களின் வண்ணப்படங்களில் வெளிநாட்டு நிலக்காட்சிகளை பார்க்க பத்து கிலோமீட்டர் நடந்து செல்வோம். தொலைக்காட்சி வந்து உலகமெனும் விந்தையை இல்லாமலாக்கிவிட்டது என்றுகூட படுகிறது

அன்றுமுதல் இன்றுவரை சில ஈர்ப்புகள் தொடர்கின்றன. ‘கௌபாய்’ படங்கள். படக்கதைகள். படங்கள் இவ்வளவு கொட்டிக்கிடக்கையில் ஏன் படக்கதைகள்? படத்தில் எல்லாவற்றையும் காட்டிவிடுகிறார்கள். என் கனவில் நான் பலமடங்காக விரித்துக்கொள்ள இடமில்லை. படக்கதைகள் என் கற்பனைக்கான தொடக்கங்களை அளிக்கின்றன, எனக்கு அவ்வளவு போதும்.

முத்து காமிக்ஸின் பராகுடா பதினேழாம் நூற்றாண்டில் நிகழ்கிறது. கடலாதிக்கத்தில் ஸ்பெயின் ஓங்கியிருக்கும் காலம். ஆழ்கடல்களுக்கு அப்பாலுள்ள நிலங்கள், ஆளில்லா தீவுகள், புதையல்கள், துரதிருஷ்டம் கவ்விய வைரங்கள், கடற்கொள்ளையர்கள், வீரசாகச இளைஞர்கள், சீமாட்டிகள் என ஐரோப்பிய மாலுமிக் கதைகளில் காணக்கிடைக்கும் எல்லாம் அடங்கியது பராகுடா என்னும் காமிக்ஸ் கதைத்தொடர்

ஸ்பெயினில் இருந்து கிளம்பும் டோனா எமிலியோ சான்ஸே டெல் ஸ்கியூபோ என்னும் சீமாட்டியிடமிருந்து கஷார் என்னும் வைரம் இருக்கும் இடத்திற்கான வரைபடம் பராகுடா என்னும் மர்மமான கொள்ளைக் கப்பலை நடத்தும் கொள்ளையனான பிளாக் டாக்குக்கு கிடைக்கிறது. ப்யூர்ட்டோ பிளாங்கோ என்னும் தீவுக்குச் செல்கிறது அக்கப்பல். கடற்கொள்ளையர்கள், அடிமைவணிகர்கள் ஆளும் தீவு அது. அங்கிருந்து அந்த வைரத்தைச் சுற்றிச்சுற்றி செல்கிறது கதை.

ஐரோப்பிய படக்கதைகளில் மட்டும் சாத்தியமான அபாரமான படங்கள். மிகமிக நுணுக்கமான தரவுகளுடன், விரிவாக வரையப்பட்ட முழுமையான ஓவியங்கள் கொண்டது ஒவ்வொரு கட்டமும். ஆடைகள், அணிகலன்கள், கட்டிடங்கள், நில அமைப்புகள் எல்லாமே திகைப்பூட்டுமளவுக்கு அசலானவை. அதேசமயம் சினிமாவில் சாத்தியமே இல்லாத காட்சிக் கோணங்கள்.

படக்கதை சினிமாவை விட வேகமானது. சினிமாவின் ஒரு ‘ஷாட்’ குறைந்தது முப்பது செகண்ட் நீளலாம். ஒரு காட்சி இரண்டு நிமிடங்கள். ஆனால் இரண்டே படச்சட்டகத்தில் அந்த காட்சியை முழுமையாக நம் கற்பனைக்குள் செலுத்திவிடுகிறது படக்கதை.

ஜீன் டூஃபா

பெல்ஜியச் சித்திரக்காரர் Jean Dufaux வரைந்து உருவாக்கிய காமிக்ஸ் இது. சமகாலத்தின் மிகச்சிறந்த படக்கதை வல்லுநராக அவர் கருதப்படுகிறார். படக்கதைகள் எல்லா அகவையினருக்கும் கற்பனைகளை தூண்டவேண்டும். ஒரு வரலாற்றாய்வளனுக்கும் அவற்றில் ஆர்வமூட்டும் சில இருக்கவேண்டும். அத்தகையவை ஜீன் டுவா வரையும் படக்கதைகள்.

அசோகமித்திரனை அவர் வாழ்க்கையின் இறுதியில் சந்தித்தபோது அப்போது வாசித்துக் கொண்டிருப்பது அலக்ஸாண்டர் டூமாவின் ‘‘The Count of Monte Cristo’ என்னும் சாகசநாவல் என்று சொன்னார். ”நீ வாசிச்சிருக்கியோ?” என்றார். நான் அதிகம் வாசிக்கப்படாத பிளாக் டியூலிப் உள்ளிட்ட நாவல்களை வாசித்திருக்கிறேன் என்றதும் பரவசமானார். நாங்கள் ஒரே மனநிலையில் இருந்து அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

இன்றிருந்திருந்தால் பராகுடாவை அசோகமித்திரனுக்கு அனுப்பி வைத்திருப்பேன்.

ஆன்மிகக் கல்வியில் இலக்கியத்தின் இடமென்ன?

$
0
0

இன்று கொஞ்சம் வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள். ஆகவே ஆன்மிக நூல்கள் பெரும்பாலும் விற்கின்றன. அவர்களுக்கு இலக்கியம் சார்ந்து ஒரு விலக்கம் உள்ளது. இலக்கியம் வெறும் பொழுதுபோக்கு என்று நினைப்பவர்கள் உண்டு. நேரடியாக கருத்துக்களை வாசிக்கமுடியாதவர்கள் புனைவை வாசிக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். இலக்கியம் ஓர் அடிப்படையான கல்வி, அது இல்லாமல் எதுவுமே கற்கமுடியாது என்பதே உண்மை.

ஆலயங்களில்…

$
0
0

நான் வெண்முரசு ஆரம்பகாலத்திலிருந்து உங்கள் வாசகிஇது எனது முதல் கடிதம்முந்தைய தலைமுறையைச் சேர்ந்த முதியவள்உங்களது தளங்களில் வரும் கடிதங்களைப் படிக்கும்போதெல்லாம் நான் உணர்வது வியப்பும் மகிழ்ச்சியுமே.

ஆலயங்களில், கடிதம்

Can We teach literature? What kind of classes possible? What can be taught and what not?

Is it possible to ‘teach’ literature?

(Unified wisdom today)

Viewing all 16942 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>