![]()
வள்ளியூர் அருகே நம்பியாற்றங்கரையில் இருக்கும் சித்தூர் தென்கரை மகாராஜா கண்டன் சாஸ்தா கோயிலுக்கு நான் மூன்று முறை அதற்கு முன்னர் சென்றதுண்டு. கடைசியாக ஆறாண்டுகளுக்கு முன்பு சண்முகம் மாமாவின் மகள் செண்பகவல்லியின் திருமணத்திற்கு பிறகு புதுமாப்பிளையுடன் சென்றது. அப்போது அம்மாவும் அப்பாவும் சொந்தக்காரர்களுமாக எட்டு கார்களில் சென்றோம். பொங்கலிட்டு வழிபட்டுத் திரும்ப ஒரு முழுநாளும் ஆகியது.
என் நினைவில், அந்த இடமே அமைதியாக, ஆளோய்ந்து கிடக்கும். ஆற்றில் மழைக்காலத்தில் மட்டும்தான் தண்ணீர் இருக்கும். மற்றபடி ஒரு திறந்த வெளிதான் அது. ஆனாலும் அங்கே ஆறு இருக்கும் உணர்வு இருக்கும். ஆறு மண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்வார்கள். ஏராளமான குட்டிக்குட்டி சன்னிதிகள் உண்டு. பழங்காலத்தில் ஓலைக்கூரை போட்ட குடிசைகளாகத்தான் இருந்தன என்றும் அண்மையில்தான் கான்கிரீட் கட்டிடங்கள் வந்தன என்றும் அப்பா சொன்னார். ஆனால் அந்தக் கட்டிடங்களே சிறியவைதான்.
தென்கரை மகாராஜன் யானை வாகனம் மேல் ஒரு காலை மடித்து அமர்ந்திருக்கும் சாஸ்தா. ஒரு கை தொங்கவிட்டு, ஒரு கை அபயஹஸ்தமாகக் காட்டி, ஓங்கிய மணிமுடியுடன் இருந்தார். நெல்லைப் பகுதியில் பெரும்பாலான சாதிகளுக்கு அவர் பொதுவான குலதெய்வம். சிலை கொஞ்சம் மழுங்கியிருந்தது. அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணை கரிய பொருக்காக பீடத்தில் காய்ந்திருந்தது.
அம்மாவும் நானும் மட்டும்தான் சென்றிருந்தோம். சின்னவளுக்கு தேர்வுகள் இருந்தன. பெரியவளுக்கும் காலேஜ் இருந்தது. நான் நெல்லையிலேயே ஒரு டாக்ஸி சொல்லியிருந்தேன். அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம். காலையில் நெடுஞ்சாலையில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் அம்புபோல பாய்ந்து செல்வது இனிமையாக இருந்தது. அப்படியே கொஞ்சம் கண்ணயரலாமென்றுகூட தோன்றியது. பூமியில் இருந்து எழுந்து வானில் பறந்து எங்கோ செல்வதுபோல் எண்ணிக்கொண்டேன்.
முந்தைய நாள் இரவு நான் சற்றும் தூங்கவில்லை. பகல் முழுக்க தூங்கியதுகூட காரணமாக இருக்கலாம். இரவில் விழித்திருந்தால் அம்மா ஏதாவது நினைப்பாள் என்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்திருந்தேன். ஆனால் படுத்திருந்தால் காலம் துளித்துளியாக நகர்வதுபோலிருந்தது. நீண்டநேரம் சென்றபின் செல்போனை எடுத்துப் பார்த்தால் பத்து நிமிடம்கூட ஆகியிருக்கவில்லை. அம்மா தூங்கிவிட்டாள் என்று குறட்டைச்சத்தத்தை கேட்டு உறுதிசெய்தபின் மெல்ல எழுந்து சென்று திண்ணையில் அமர்ந்துகொண்டேன்.
கொசுக்கள் என்னை மொய்த்தன. கையால் முகத்தை வருடியபோது ரத்தவாடையுடன் பல கொசுக்கள் நசுங்கின. ஒட்டுக்கூரைக்கு அடியில் படுத்திருந்த தெருநாய் முனகி வாலாட்டியது. அந்த நாயின் முகமே எனக்கு நினைவில்லை. அது இரவு தூங்க மட்டும்தான் அங்கே வருகிறதுபோல.
நான் சாலையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. எதிர்காலமென்பதே மனதில் எழவில்லை. ஆனால் ஒன்று தெரிந்தது, என்னால் மற்ற அனைவரையும் விட்டுவிட முடியும். காசிலிங்கத்தை விடவே முடியாது. ஊரை விட்டுச் செல்லலாம். ஆனால் அவரிடமிருந்து விலகவே முடியாது.
அந்த சந்திப்பு எப்படி அத்தனை துல்லியமாக நினைவிருக்கிறது என வியந்தேன். அந்தக் கடையின் ஒவ்வொரு இடத்தையும், அந்த வினைல் போர்டு சுவரின் ஒவ்வொரு தடத்தையும் நினைவில் இருந்து எடுக்கமுடிந்தது. அப்படியே அக்கணம் நிகழ்வதுபோல அந்தச் சந்திப்பை மீண்டும் அகத்தில் விரித்துக்கொள்ள முடிந்தது. அந்தக் காட்சி பழுதடைந்த டிவி போல திரும்பத் திரும்ப என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. அதன்மேல் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை.
என் மனம் மோசமாக நோயுற்றிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் ஒரு முழுப்பகலும் அந்த சந்திப்பை முழுமையாகவே மறந்ததுபோல் இருந்திருக்கிறேன். அப்போது அது எங்கிருந்தது? அவரைத் திரும்ப ஆலயத்தில் பார்க்கவில்லை என்றால் என் மனம் அப்படியே அதை உதிர்த்துவிட்டிருக்குமா?
“என்னலே இங்க உக்காந்திட்டிருக்கே?” என்றபடி அம்மா வந்து பின்னால் நின்றாள். “கொசுவுல்லா கடிக்குது? இரு கொசுவத்தி எடுத்திட்டு வாறேன்.”
அம்மா கொசுவத்திச் சுருளை கொண்டுவந்து அருகே வைத்தாள். கொசுக்களின் ரீங்காரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.
“மனச உளப்பிக்காதே… அப்டித்தான் இருக்கும். இந்த எடத்திலே இருக்கிறப்ப இதிலேதான் இருப்போம். எந்த துக்கமானாலும் எடத்த மாத்தி மனுசமொகங்களையும் மாத்தினா பாதி ஆயிரும்.”
“நான் எங்கயும் போகப்போறதில்லை” என்றேன்.
அம்மா ஒன்றும் சொல்லவில்லை.
“இங்கதான் இருப்பேன்… பயப்படாதே. நான் ஒண்ணும் ஆயிடமாட்டேன். தோக்குற அளவுக்கெல்லாம் ஒண்ணும் ஆயிடல… விட்டுட்டுப்போக என்னால முடியாது.”
அம்மா எதிர்த்து வாதிடவில்லை. “செரி, என்னவானாலும் மெள்ளமா முடிவுசெய்வோம். நாளைக்கு தென்கரை மகராஜனை பாப்பமுல்லா? அவனறியாததா? ஒரு வளி காட்டுவான்.”
கோயிலை அடைந்ததுமே அம்மா கைகூப்பி விட்டாள். அதன்பின் கைகள் பிரியவே இல்லை. சுடலைமாடன், அரவணைப்போத்தி, முத்துப்பட்டன் என ஏகப்பட்ட தெய்வங்கள். ஒவ்வொன்றாக நின்று நின்று கும்பிட்டாள். தென்கரை மகாராஜனுக்கு நெய்யபிஷேகம் செய்ய கால் லிட்டர் நெய் வாங்கிச் சென்றிருந்தோம். பதினெட்டு தெய்வங்களுக்கும் மலர்மாலைகள்.
வணங்கி முடிந்தபோது அம்மா தெளிவடைந்தவள் போலிருந்தாள். ஆனால் என்னால் எங்கும் நெடுநேரம் கைகூப்பி நிற்கவோ மனம்குவிக்கவோ முடியவில்லை. ஒப்புக்கு வணங்கிவிட்டு அம்மா வணங்கி வரும்வரை விலகிக் காத்து நின்றிருந்தேன். உடலெங்கும் ஒரு பரபரப்பு இருந்துகொண்டிருந்தது. ஏதோ எதிர்பார்ப்பவன் போல.
அம்மா “போறப்ப சாப்பிட்டுட்டுப் போலாம்பா” என்றாள். வரும்போது இருவரும் வீட்டில் ஒரு கப் காபி மட்டும்தான் சாப்பிட்டிருந்தோம்.
காரில் ஏறிக்கொண்டு டிரைவரிடம் “போலாம்” என்றேன்.
வண்டி கொஞ்சம் பழையது போல. இருமுறை உறுமி உதறிக்கொண்டது. அவர் மீண்டும் மீண்டும் இயந்திரத்தை இயக்கினார். “பேட்டரி பளசு சார்” என்று என்னிடம் சொல்லி புன்னகைத்து மீண்டும் இயக்கினார்.
என்னால் அதைத் தாள முடியவில்லை. வண்டியின் உறுமலும் திணறலும் பெரும் வதையாக இருந்தது. கதவைத் திறந்து வெளியே குதித்துவிடலாமா என்று தோன்றி கையை வைத்துவிட்டேன். சட்டென்று ஓர் உலுக்கலுடன் கிளம்பி முன்னகர்ந்த கணத்தில் என்னுள் ஒரு நரம்பு உடைபடுவதுபோலத் தோன்றியது. கைவிரலால் கண்களை அழுத்தியபடி பின்னால் சாய்ந்துகொண்டேன்.
அப்போது எதையோ நினைத்தேன். மிகவேகமாக, ஒருகணம் போல எதுவோ வந்துசென்றது. அது என்ன? அது என்ன? எந்த எண்ணம் அது? ஏதோ ஒன்று. ஏதோ ஒன்று. ஆனால் சென்று தொடமுடியவில்லை.
கார் வேகமெடுத்தபோது நான் அந்த வேகத்துடன் சேர்ந்து மெல்ல அமைதியடைந்தேன். என்னை மறந்து, மெதுவாக உடல் தளர்ந்து, அரைத்தூக்கம் போல ஒரு நிலையை அடைந்தேன். அப்போது ஏற்கனவே நன்றாகத் தெரிந்த ஒன்று திரும்ப நினைவுக்கு வருவதுபோல அது என்னுள் எழுந்தது. பூர்ணமங்கல்யா கடை காசிலிங்கத்திற்குரியது அல்ல.
அதை எவரோ என்னிடம் எப்போதோ சொன்னார்கள். அந்த வரியை நான் அப்போது கவனிக்கவுமில்லை. அந்த வரி அப்படி நினைவுக்கு வருகிறதென்றால் என்ன பொருள்? அதிலும் இங்கே, என் குலதெய்வத்தின் சன்னிதியில்.
அதன்பின் என்னால் காரில் அமர்ந்திருக்க முடியவில்லை. கைகளை நெரித்துக்கொண்டும் எழுந்து எழுந்து அமர்ந்துகொண்டுமிருந்தேன். “நேரா நம்ம கடைக்கு விடு… என்னைய இறக்கி விட்டுட்டு அம்மைய வீட்டிலே விட்டிரு” என்றேன்.
“டிபன் சாப்பிடணும்டா”
“இப்ப போயிடலாம்… வளியிலே நல்ல கடை ஒண்ணும் இல்லை.”
அம்மா ஒன்றும் சொல்லவில்லை.
கடையில் இறங்கியதும் நான் என் இருக்கையில் அமர்ந்து ஒரு கணம் யோசித்தேன். பூர்ணமங்கல்யா கடையைப் பற்றி விசாரிக்கக்கூடாது. அதற்குள் நினைவு வந்துவிட்டிருந்தது, என்னிடம் அதைச் சொன்னவர் சுடலைப்பாண்டி மாமாதான். நானே மாமாவிடம் சென்று கேட்கலாகாது. அவரே வருவார். அவருக்கு என் சரக்குகளை விற்பது பற்றி நான் சொல்லவேண்டிய முடிவு மிச்சம் இருந்தது.
அவர் நான் வந்தபின் ஒருமணிநேரம் இடைவெளி விட்டு இயல்பாக வருவதுபோல வந்தார். “வள்ளியூரு போயிருந்தியோ… மாரி சொன்னான்… குலதெய்வக்கோயிலு அங்கயில்லா?”
“ஆமா”
“எங்க குலதெய்வம் காரையாறு சொரிமுத்தையன் கோயில்…” என்றபடி அமர்ந்தார். “அடிக்கடி போறதில்லை… கையிலே காசுவேணும்லா?”
நான் அவரிடம் “சரக்கு விசயம் பேசியாச்சு மாமா. அது முடிச்சிரலாம். ஏஜென்ஸிக்கெல்லாம் என்னென்ன குடுத்திருக்குன்னு ஒரு கணக்கு போடவேண்டியிருக்கு” என்றேன். பிறகு “இப்ப நாம முனிசிபாலிட்டியிலே ஒரு கம்ப்ளெயிண்டு குடுத்திருக்கோம்லா? அவன் கேக்கான் நம்ம கெட்டிடத்துக்கு நம்ம கிட்ட தாய்ப்பத்திரம் இருக்கான்னு… பிரச்சினை வருமா?”
“ஏலே, இந்த தெருவிலே எந்தக் கடைக்கு தாய்ப்பத்திரம் இருக்கு? இருந்தா நெல்லையப்பன் கோயிலுக்கும் திருவாவடுதுறைக்கும் இருக்கும்… எல்லாம் கைவச உரிமைதான்…”
“பெரியகடையெல்லாம் கட்டியிருக்காங்க”
“பெரிய ஓட்டலு லாட்ஜு எல்லாம் இருக்கு… எல்லாமே அந்த உரிமைதான்… “ மாமா அவரே அந்த வரியைச் சொன்னார். “முஸ்லீம் சொத்துன்னாக்க பட்டா இருக்கும். வெள்ளைக்காரன் காலத்து பட்டா அது. பக்கா டாக்குமெண்டு… இருந்தா என்ன? எவன் கைவசம் வச்சிருக்கானோ சொத்து அவனோடது. இந்தா பூர்ணமங்கல்யா கடை இருக்கு. அந்த மண்ணு பளையகாலத்திலே ஒரு நவாபு குதிர கட்டுத லாயமா வச்சிருந்தது. அது அப்டியே கைமாறி வந்து பேட்டையிலே முத்துவாப்பா ராவுத்தருக்கு கிடைச்சுது. பட்டா அவர் பேரிலதான். அவருக்க காலத்திலே இங்க எண்ணைக்கடை போடுகதுக்கு வாடகைக்கு குடுத்தாங்க. கோயிலுக்கு எண்ணை காண்டிராக்டு சம்முகலிங்கம் பிள்ளை. அவரு மகன் கும்பலிங்கம் பிள்ளை அதைத் துணிக்கடையா ஆக்கினாரு. இப்ப காசிலிங்கம் கொளிக்குதாரு… அப்ப எடுத்தது. இப்பவரை அவரு கையிலேதான் இருக்கு.”
“அவரு வெலைக்கு வாங்கிக்கிடலியா?”
“வாங்கச்சொல்லி பாய் நடையா நடந்தாரு… கும்பலிங்கம் அவர கோர்ட்டுக்கு இளுத்தாரு… முப்பத்தேளு வருச கேஸு முடிஞ்சு மூணு வருசமாச்சு. சொத்துக்கு ஏக உரிமை பாய்தான்னு தீர்ப்பு வந்தாச்சு… காலி பண்ணச் சொல்லி பாய் நோட்டீஸ் குடுத்ததும் காசிலிங்கம் பாத்தாரு, கடைய புதியபஸ்டாண்டு பக்கம் மாத்தி பெரிசா கட்டிடலாம்னு எடம் வாங்கிட்டாரு… இப்ப அங்க வேலை நடக்குது, ஏளுமாடி கட்டிடம், கீள பார்க்கிங். அது வரைக்கும் வாடக குடுக்காரு… வாற ஆவணிக்குள்ள கடைய காலி பண்ணி ஒப்படைக்கிறேன்னு பேச்சுன்னு சொன்னாக…”
நான் ஒவ்வொரு சொல்லாக பொறுக்கிக்கொண்டேன்.
“புதிய பஸ்டாண்டு பக்கம் பெரிய கடைங்க வருது… பூர்ணமங்கல்யாவுக்கு போட்டின்னா மூலக்கரைப் பார்ட்டிங்க நடத்துத சில்பா சில்ஸாக்கும்… அவனுகளும் ஏளுமாடி கார்ப்பார்க்கிங்னு கட்டுதானுக… ஆனைச்சண்டை, நாம எலி மாதிரி கீள வாளுதோம்… நமக்கு என்னத்துக்கு ஊரு வம்பு? நம்ம பொளைப்பே நாறிக்கெடக்கு, என்ன சொல்லுதே” என்றார் சுடலைப்பாண்டி மாமா.
அவர் செல்வது வரைக்கும்கூட என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. “எனக்கு ஒரு அத்தியாவசிய சோலி கெடக்கு” என்று சொல்லி கிளம்பினேன்.
மாலைக்குள் நகராட்சி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் இரண்டுக்கும் சென்றுவிட்டேன். மொத்தம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் லஞ்சச் செலவு. எல்லா ஆவணங்களுக்கும் ஒளிநகல் எடுத்து கையில் தந்துவிட்டார்கள்.
அந்தியில் என் பைக்கில் நான் அல்லாப்பிச்சை ராவுத்தரின் இல்லத்துக்குச் சென்று விட்டேன். நான் நினைத்ததுபோலவே அது இல்லை. முஸ்லீம்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழும் பழைய இடுங்கலான தெரு அது. அந்நேரத்தில் தெரு முழுக்க தலைகளாக இருந்தது.
அல்லாப்பிச்சை ராவுத்தர் என்று பலரிடம் கேட்டேன். அங்கே அப்படி பலர் இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஒருவர் டெய்லர். ஒருவர் பலசரக்குக்கடை வைத்திருந்தார். “ஆனை வாடகைக்கு விடுதாரே அவரா?” என்று ஒருவன் கேட்டான். “ஆமாம்” என்று சொல்லிவிட்டேன். அவர்தான் என்று ஏனோ தோன்றிவிட்டது.
அவருடைய வீடு ஒரு மிகப்பெரிய பழைய கட்டிடம். இரண்டு அடுக்கு கொண்டது. பழங்கால தார்சுக்கூரை. சுதையாலான கனத்த சுவர்கள். வெளிவாசல் மிகச்சிறிதாக இருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் கேட்டபோது உள்ளே செல்லும்படிச் சொல்லிவிட்டார். சுரங்கப்பாதை போல வழி மடிந்து சென்றது. உள்ளே சென்றால் அங்கே பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உண்டு என்று தெரிந்தது. அந்தக்காலத்தில் தீவட்டிக்கொள்ளையர்களை அஞ்சி வீடுகளை இப்படி கட்டியிருக்கிறார்கள். ஒருவர் ஒருவராகத்தான் உள்ளே செல்லமுடியும். கடைசி எல்லையில் ஒரு பகுதியில் அவர் குடியிருந்தார்.
ஒருகாலத்தில் அது ஒரு முஸ்லிம் பிரபுவின் அரண்மனையாக இருந்திருக்கும். இப்பகுதியில் ஆட்சிசெய்த ஏதாவது படைத்தலைவனின் தங்குமிடமாகக்கூட இருந்திருக்கலாம். வாசல் சிறியதானாலும் அறைகளெல்லாம் மிகப்பெரியவை. ஆனால் எங்கும் சன்னல் என்பதே இல்லை. அத்தனை ஆண்டுகளாகியும் சுதை உடைந்து விழவில்லை. சுண்ணாம்பு மங்கலாகி மண்நிறத்திற்கு மாறியிருந்தது.
அல்லாப்பிச்சை ராவுத்தரின் வீட்டு முன் நின்று “பாய், சார்!” என்று பலவாறாக அழைத்துப் பார்த்தேன்.
ஒரு பையன் எட்டிப்பார்த்தான். பன்னிரண்டு வயது இருக்கும். ஒல்லியான உடல். நல்ல கருப்பு நிறம். பெரிய வெள்ளைவிழிகளுடன் கூடிய முட்டைக் கண்கள்.
“அல்லாப்பிச்சை ராவுத்தர் வீடு…”
“இதாக்கும், ஆரு?”
“அவரைப் பாக்கணும்… பிசினஸ் விசயமா”
“வாப்பா தொளுகைக்கு போயிருக்காரு… இப்ப வந்திருவாரு… அரமணிக்கூர் களிஞ்சு வாங்க… ஆருண்ணு சொல்லணும்?”
“பள்ளிவாசல் எங்க இருக்கு?”
“இந்த தெரு முக்கிலதான்… பச்ச பெயிண்டு அடிச்ச கேட்டு மட்டும்தான்… பள்ளிவாசலு உள்ள சின்னதா இருக்கும்.”
“செரி”
எளிதில் பள்ளிவாசலை கண்டுபிடித்துவிட்டேன். அவ்வேளையில் அதிகம்பேர் தொழுகைக்கு வரமாட்டார்கள் என்று தோன்றியது. எதிரில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு அல்லாப்பிச்சை ராவுத்தர் பற்றி கேட்டேன். “அவரு இப்பதான் உள்ள போனாரு… வந்திருவாரு” என்றார். வரும்போது அவரே எனக்குச் சுட்டிக்காட்டுவார் என்று தெரிந்தது.
அதேபோல தொழுகை முடிந்து நாலைந்துபேர் திரும்பி வந்தபோது கடைக்காரர் “அந்தா வாறாருல்லா?” என்றார்.
ராவுத்தர் வட்டத்தாடி வைத்து மீசையில்லாமல் மேடேறிய நெற்றியில் நிஸ்காரத் தழும்புடன் ஓங்குதாங்காக இருந்தார். நல்ல கருப்பு நிறம். சிவப்போடிய உருண்ட பெரிய கண்கள். அரைக்கை சட்டை போட்டிருந்தார், ஆனால் கை முழங்கைக்கு கீழே வந்தது. அது கீழ்ப்பகுதியில் ஜிப்பா போலிருந்தது.
நான் அருகே சென்று “வணக்கம் பாய்” என்றேன்.
“சலாம்… சொல்லுங்கய்யா…”
என்னை அறிமுகம் செய்துகொண்டேன். என் அப்பாவை அவருக்குத் தெரிந்திருந்தது. “நல்ல மனுசன்லா… ஒருக்கா நமக்கு ஒரு பாட்டு வாசிச்சுக் காமிச்சாரு. அல்லா பத்தி எளுதியிருந்தார். நமக்கு விளங்கிக்கிட அறிவு இல்ல… தம்பி மெட்ராஸிலே எஞ்சீனியரிங்குல்லா படிச்சீக?”
“ஆமா, முடிக்கல. அப்பா போனதும் சட்டுன்னு வாற மாதிரி ஆயிட்டுது.”
அவர் “அடாடா” என்றார். “அதும் நல்லதுக்குன்னு வைங்க. அல்லா கணக்க நாம அறிய முடியாது. தம்பி தொளிலு செஞ்சு கோடீஸ்வரனாகணுமுண்ணு அல்லா திட்டம்னா எதிர்த்து நிக்க முடியுமா?” என்று சிரித்தார்.
ஒரு சில நிமிடங்களில் அவருடன் நான் அடைந்த நெருக்கத்தை வாழ்நாளில் டைரக்டரிடம் மட்டுமே அடைந்திருக்கிறேன். அவர் உடலின் அளவுக்கு நான் அருகே ஒரு சிறுவனாக உணர்ந்தேன். “சொல்லுங்க, நாம என்ன பண்ணணும்?” என்று கேட்டார்.
நான் “அதுக்கு முன்னாலே நான் என்ன நடந்ததுன்னு சொல்லுறேன் ராவுத்தர் மாமா…” என்றேன். சொல்லச்சொல்ல அறியாமலேயே இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து வணங்குவதுபோல் வைத்துக்கொண்டேன். என் நெஞ்சு உடைந்து சொற்களாக தெறிப்பது போலிருந்தது.
சொல்லி முடிந்ததும் அவர் கண்களில் மெல்லிய ஈரத்துடன் பெரிய கனமான கையால் என்னை தோள் சுற்றி அணைத்துக்கொண்டார். ஒன்றும் சொல்லவில்லை.
“நான் இப்ப வந்தது ஒரே விசயத்துக்காகத்தான். பூர்ணமங்கல்யா நெலம் உங்களுக்கு பாத்தியப்பட்டதுன்னு கேட்டேன். அத எனக்கு கிரயம் பண்ணிக்குடுங்க… நீங்க கேக்குத நியாயமான வெலைய குடுத்திடுதேன்…”
அவர் பேசுவதற்கு முன் நான் “அங்க சொந்தமாட்டு தொளில் தொடங்குத எண்ணம் உங்களுக்கு இருக்குமானா ஒரு வருசம் களிஞ்சு நான் அதே நிலத்த வாங்கின வெலையோட பிரீமியம் சேத்து உங்களுக்கே வித்துடுதேன்… இது என் வாக்காக்கும்” என்றேன்.
“நீ என்னமோ வெளையாடப்போறே… நீ சின்னப்பையன் பாத்துக்கோ”
“வெளையாடத்தான் போறேன்… உங்க ஆசி இருக்கணும் மாமா.”
அவர் “பெரிய கைகளாக்கும்… எங்ககிட்ட பொதுவா அவனுக வெளையாட மாட்டானுக. எங்களுக்கே தண்ணி காட்டிட்டானுக…” என்றார்.
“என்னை மாதிரி ஒருத்தனை அவரு பாத்திருக்க மாட்டாரு.”
அவர் சட்டென்று தன் தொடையில் தட்டி உரக்கச் சிரித்து “அது ஆம்புளத்தனம்… அப்டி பேசணும்யா… அந்த நம்பிக்க வேணும்… ஆனா நான் நான்னு நினைச்சுக்கிடாதே. ஆண்டவன் அருளாலேன்னு சொல்ல பளகிக்கோ. அவ்ளவுதான்” என்றார்.
“ஆண்டவன் அருளாலே” என்றேன்.
“அந்த நெலத்துக்கு என்ன வெலைன்னு இப்ப சொல்ல முடியாது… எப்டியும் ஒரு ஏளெட்டு கோடி இருக்கும்… உங்கிட்ட பணமிருக்காக்கும்?”
“வீடு இருக்கு… ஊர்ல நெலமிருக்கு. அதுமேலே கொஞ்சம் கடனும் உண்டு. அதை அடைச்சா வீட்ட வித்துடுவேன். சொத்துக்குண்டான அட்வான்ஸ் ரெண்டுகோடிய குடுத்திருவேன்… மேக்கொண்டு சொத்தக்காட்டி பொரட்டீர முடியும்…”
“எப்டீன்னு நான் கேக்கல்ல… உங்கிட்ட கணக்கு இருக்கும்”
“எங்கிட்ட எல்லா பேப்பரும் இருக்கு. பிளான் பக்காவா வச்சிருக்கேன்.”
“வீட்டுக்கு வா பேசுவோம்…” என்றார். செல்லும் வழியில் மேலும் கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருந்தார். “அவனுக ஆளை வைச்சு உன்னை காலிபண்ணினா என்ன செய்வே?”
“பாப்போம்… ஆளு எல்லா எடத்திலயும் இருக்கு. பெரியமனுசனுக்கு ஒளிஞ்சுநின்னு செஞ்சாகணும்கிறது பலவீனம்… நாம எந்த எல்லைக்கும் எறங்க முடியும்” என்றேன்.
அவர் வீட்டில் மிகப்பெரிய கூடத்தை தட்டிபோட்டு தடுத்து அறைகளாக்கியிருந்தனர். “இந்த வீடு உங்களுதா?” என்றேன்.
“பட்டா நம்முளுது… ஆனா பன்னிரண்டு குடும்பம் இருக்கு… ரெண்டு குடும்பம் பெருகி பன்னிரண்டா ஆயிருக்கு… எல்லாம் நம்ம சாதிசனம், நாம ஆரையும் போகச்சொல்ல முடியாது” என்றார். “அந்த மசூதியே நம்ம உப்பாப்பா கட்டினதுதான்… அந்தக் காலத்திலே இந்த ஏரியாவே நம்முளுதுதான்னு சொல்லுவாக.”
அவருடைய மகனே டீ கொண்டுவந்தான். “பாலில்லா டீ சாப்பிடுவீகதானே?”
“ஆமா”
முன்பு எனக்கு பாலில்லா டீ பிடிக்காது. டைரக்டர் எவ்வளவோ சொல்லியும் நான் குடித்ததில்லை. நெத்திலி வறுத்ததும் பாலில்லா டீயும் அவருடைய விருப்பம். ஆனால் அன்று அந்த டீ மிக அற்புதமாக இருந்தது.
“நமக்கு எட்டு பிள்ளைக… ரெண்டுபேரு நம்மகூட தொளிலிலே இருக்கான். நமக்கு நாலு ஆனை நிக்குது. கோயில்கொடை, சந்தனக்கூடு, அந்தோணியார் ஊர்வலம்னு போகும். பையன் ரெண்டுபேரு பாத்துக்கிடுதானுக… மூணு பொட்டப்புள்ளைக. இந்த நெலம் முடிஞ்சா அதுகளுக்கு ஒரு நல்லது பாக்கணும்.”
“முடிவு சொல்லுங்க ராவுத்தர் மாமா, உங்கள நம்பி இருக்கேன்.”
“ஒண்ணு செய்ங்க, நாளைக்கு ஒரு பத்து மணிக்கு வாங்க.”
நான் வணங்கி விடைபெற்றுக் கொண்டேன். எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று தோன்றியது. அவர் சம்மதிக்கவில்லை என்றால்கூட அது என் நல்லதுக்காகத்தான் இருக்கும்.
மறுநாள் காலை கோயில் போய் கும்பிட்டுவிட்டு பத்து மணிக்கு அவர் இல்லத்திற்குச் சென்றேன். அவர் வாசலுக்கே வந்து வரவேற்றார். எங்கோ கிளம்பிச்செல்வதுபோல உடையணிந்து புதிய வெண்ணிற வலைத்தொப்பி வைத்திருந்தார்.
“கோயிலுக்குப் போனிகளோ, விபூதி போட்டிருக்கீக”
“ஆமா” என்றேன்.
“வாங்க” என்று உள்ளே அழைத்துச் சென்றார். எனக்கு எந்த படபடப்பும் இல்லை. உள்ளம் அமைதியாக இருந்தது. முதல்முறையாக எனக்கு ஓர் ஆழமான துணைவர் அமைந்திருக்கிறார்.
“சாப்பிட்டீகளா?”
“ஆமா”
“டீ குடிங்க… பாலு இருக்கு”
“இல்ல, பாலில்லா டீ போரும்… அதான் நல்லாருக்கு”
பாலில்லாத டீ அன்றும் மகத்தானதாக இருந்தது. இருவரும் இரும்பு நாற்காலிகளில் எதிரெதிராக அமர்ந்திருந்தோம்.
“எங்காச்சும் போறிகளா?” என்றேன்.
“இல்ல, காலம்பற ஏர்வாடி ஆத்தங்கரப் பள்ளிவாசல் போயிட்டு வந்தேன்… சையத் அலி பாத்திமா, ஷேக் முகமது வலியுல்லாஹ் அடங்கின எடம்… சகலஜாதி சனங்களும் வந்து கும்பிட்டுப்போவாங்க… நமக்கு அந்த எடம் ஒரு இது… அங்க நானும் கையிலே கால்காசில்லாம போயி உக்காந்திருக்கேன், நாப்பது வருசம் முன்னாடி… ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை உண்டுல்லா?”
“நானும் போகணும்” என்றேன்.
“போகலாம்… இணைவைப்பு அது இதுன்னு சிலபேரு சொல்லுவாக. ஆரும் இணை வைக்கல்ல. இணைவைக்க முடியுமா? அங்க அடக்கமாகி இருக்கிறவங்க நம்மள மாதிரி மனுசங்க. நாம ஏறிட்டிருக்குத ஏணியிலே கடைசிப்படி வரைக்கும் ஏறி மேலே போனவங்க. அவங்களை வணங்குததுன்னா மேலே நிக்கிறவங்க கிட்ட எய்யா கொஞ்சம் கையக்குடுன்னு கேக்குததுதான்… மத்தபடி படைச்சவன் கிட்ட கேக்குதத அவன் கிட்டதான் கேக்கணும்… என்ன சொல்லுறீக?”
“ஆமா”
“அங்க போயி ஒரு பத்து நிமிசம் இருந்தா தெளிவு வரும்னு தோணிச்சு. அதான் போனேன்.”
நான் காத்திருந்தேன்.
“தம்பியாபிள்ள, நீங்க உங்ககிட்ட இப்ப என்ன இருக்கோ அதைக் குடுத்திருங்க. கிரயம் பண்ணி குடுத்திருதேன்… வீடுகீடெல்லாம் விக்கவேண்டாம்… ஒரு லெச்சம்னாக்கூட போரும். வாள்ந்த வீட்ட விக்கக்கூடாது. அது செத்துப்போன வாப்பாக்கு செய்யுத தப்பாக்கும்… இப்ப சொத்த வாங்கிக்கிடுங்க… ஒரு வருசம் களிஞ்சு திரும்பக்குடுங்க… இல்ல அப்ப வெலபேசி வாங்குறதானா வாங்கிக்கிடுங்க… நான் வந்து பதிஞ்சு தாறேன்.”
நான் கைகூப்பினேன்.
“இது யார் மேலேயும் விரோதத்தாலே இல்ல. நமக்கு அப்டி யார்மேலேயும் எந்த வெறுப்பும் இல்ல. எல்லாரும் மனுசங்கதான். என்னத்தையாவது கட்டிப்புடிச்சுக்கிட்டு அதான் சதம்னு கிடக்குத சின்ன சீவனுகதான்… உங்க அப்பா எனக்கு அல்லா பத்தி ஒரு பாட்டு படிச்சு காட்டினது, பள்ளிவாசல் முன்னாடி நாம சந்திச்சது எல்லாம் ஒரு நல்ல நிமித்தமாக்கும்னு தோணுது. நீங்க மேலே வந்திருவீக… ஒரு ஆலமரம் மொளைக்குத ஆண்டவனருளாலே நான் பாக்குதேன்… ஒரு கொடம் தண்ணி அல்லா கிருபையாலே நானும் ஊத்துதேன்… நடக்கட்டும். இன்ஷால்லாஹ்!”
(மேலும்)