Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16812 articles
Browse latest View live

யோகி சந்திப்பு -கடிதங்கள்

$
0
0

 

1

 

அன்புள்ள ஜெ,

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது; யோகி (சந்திப்பு)பற்றி நீங்கள் நித்யாவுடன் விவாதித்ததை “வாழ்விலே ஒரு முறை- முடிவின்மையில் இருந்து ஒரு பறவை” யில் எழுதி இருந்தீர்கள்; அதில் ஒரு வரி வரும்;

நீங்கள் நித்யாவிடம் கேட்பதாக

நான் அவரை எரிச்சல் ஊட்டியிருப்பேனோ ” என்று ,

அதற்கு நித்யாவின் பதில் ” அது உன்னால் முடியுமா”

இது என் நினைவில் என்றும் இருக்கிறது, இதில் இருந்து எனக்கு பல திறப்புகள் கிடைத்துள்ளன

நன்றி

ராமகிருஷ்ணன்

 

maxresdefault

 

அன்புள்ள ஜெ,

யோகியை நீங்கள் சந்தித்து உரையாடியதைப்பற்றி சமீபத்தில் பவா செல்லத்துரை எழுதியிருந்தார். அதற்கு முன்னர் நீங்கள் எழுதியிருந்தீர்கள். இப்போது மா தேவகியின் டைரியை வாசித்தேன். மூன்றும் வெவ்வேறு கோணங்களில் ஒரே நிகழ்ச்சி.

மா தேவகி உங்களுக்குள் என்ன நிகழ்ந்தது, எதனால் அந்நிலையில் இருந்தீர்கள் என உணரவில்லை. எழுத்தாளர்களின் தேடலும் கொந்தளிப்பும் பொதுவாக ஆன்மிகமான திசையில் செல்பவர்களுக்குப்புரிவதில்லை. அவர்களுக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் எல்லாமே சாமானியர்கள்தான்.

அமைதியும் அடங்குவதும் ஆன்மிகத்தின் வழி என்றால் கலை இன்னொரு ஆன்மிகப்பயணம் என்றும் அதன் வழி கொந்தளிப்பும் சுயமறுப்பும்தான் என அவர்கள் புரிந்திருப்பதில்லை. நானறிந்த பல துறவிகளுக்கு இலக்கியம் என்றால் கதைஎழுதிப்படித்தல் மட்டும்தான். கலை என்றால் கேளிக்கை மட்டும்தான்.

ஆகவே உங்களை ஒரு துடுக்கான பொறுமையில்லாத வருகையாளன் என்று மட்டும்தான் மா தேவகி பார்க்கிறார். உங்கள் தேடல் அதற்கு அடியில் இருந்தது என அவருக்குத்தெரியவில்லை

நீங்கள் உங்களுக்கு அந்தச்சந்திப்பு என்ன பாதிப்பை அளித்தது என இன்றுவரைக்கும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

சண்முகம்

 

 

1

 

 

அன்புள்ள ஜெமோ

நீங்கள் யோகியைச் சந்தித்ததைப்பற்றிய மா தேவகியின் பதிவை வாசித்தேன். யோகி உங்களுக்கு அளித்த அந்த ஆழ்ந்த கவனமும் கனிவும் ஆச்சரியமளிக்கின்றன. நீங்கள் அவர் அருளுக்குப்பாத்திரமாகியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். அவர் உங்களைச் சாதாரணமாக அணுகவில்லை. உங்களுடன் ஆழமான உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்

ஆர். லட்சுமணன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18

$
0
0

 

அன்புள்ள ஜெ,

 

விழாவைப்பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு இனிய அயர்ச்சி. கணங்களில் அமிழ்ந்திருக்கவே மனம் விரும்பியது. நான் ஆ.மாதவன் விழாவில் பங்குகொள்ளவில்லை. பிற அனைத்து விழாக்களிலும் பங்கேற்று இருக்கிறேன். சென்ற காலங்களின் நினைவுகள், நண்பர்கள், கொண்டாட்டங்கள் என்னை அலைகழித்தபடி இருந்தன. எல்லோரையும் நினைத்துக்கொண்டேன். விழா பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. என்னையும் ஒரு நண்பர் ‘அண்ணா’ என்று விளித்து கடிதம் எழுதியபோது தான் துணுக்குற்றேன். பாரதி, சங்கர கிருஷ்ணா மற்றும் இன்னபிறர்களை கண்டபோது எனக்கு பின்னே நீண்ட வரிசை உருவாகிவிட்டிருந்தது உரைத்தது. சென்ற ஆண்டு தேவதச்சன் உரையாடலின் போது ‘மிட்டாய் கரைந்துவிடுவதன்’ பதட்டத்தை பற்றி சொன்னார். சுவைக்கவும் வேண்டும் கரையவும் கூடாது. காலத்துக்கு எதிராக மல்லுக்கு நிற்கத்தான் வேண்டும்.

 

இவ்வாண்டு நிகழ்ந்த விழா எல்லாவகையிலும் மிக சிறப்பாக அமைந்துவிட்டது. மதிய உணவுக்கு நம் நண்பர்கள் குஜராத்தி சமாஜில் உண்ண முடியாத அளவிற்கு கூட்டம். எதிரே இருந்த ஹோட்டலில் எல்லோரும் சேர்ந்து உணவுண்டு பேசி கொண்டிருந்தோம். விழாவும் உங்கள் அண்மையும், நண்பர்களுடனான உரையாடலும் புதிய உத்வேகத்தை எப்போதும் அளிக்கும். நிறைவையும், நம் வாசிக்க / எழுத இவ்வளவு இருக்கிறதே எனும் மலைப்பையும் ஒரு சேர அளிக்கும்.

 

சிவ பிரகாஷும், இரா.முருகனும் இந்தாண்டு நான் கண்டடைந்தவர்கள். அவருடைய மாத்ருகா நாடகமும் தமிழில் வர வேண்டும். அவருடைய கவிதைகள் பற்றியும் கொஞ்சம் பேசியிருக்கலாம் என தோன்றியது. கல்பற்றா நாராயணனின் அரங்கும், ராஜீவனின் அரங்கும் இதேயளவு பரவசத்தை அளித்தது ஆனால் அவை வேறு மாதிரியான அனுபவங்கள். காஷ்மீரி சைவத்தின் தனித்துவத்தை பற்றி அவர் சொன்னவை முக்கியமானவை. உணர்ச்சி பெருக்கில் மார்க்சிய இயக்கத்தில் சேர இருந்தவரை  ஈ.எம்.எஸ். தடுத்து நிறுத்தியதை அவர் குரலிலேயே நன்றியுடன்J நினைவு கூர்ந்தார்.

 

பரீட்சைக்கு படிப்பது போல் விழாவிற்கு வரும் எழுத்தாளர்களை வாசித்து கொண்டிருந்தோம். இது என்னடா கஷ்ட காலம் என சோர்வாகவும் இருந்தது. எதுவுமே பேசவேண்டியதில்லை என்றாலும் கூட, எழுத்தாளனிடம் கைகொடுக்கும் மனதிடத்தை அந்த வாசிப்பே அளிக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இரா.முருகன் என் நிலத்தை சார்ந்தவர், சுவைமிக்க செம்மண் ஊரணிகளை எழுதியவர். குலகதைகளை இரண்டு விதமாக எழுதலாம். புலி நக கொன்றை ஒரு வகை என்றால் அரசூர் வரிசை மற்றோர் வகை. பிராமண வாழ்வியலை தான் இரண்டுமே பேசுகின்றன. கருப்பு நகைச்சுவை, பாலியல் எள்ளல்கள், மாய யதார்த்தவாதம் மட்டுமல்ல அவருடைய படைப்புகள், வேறு எவரும் காட்டியிராத சில வாழ்வுகளையும் அவை தாங்கி வந்திருக்கின்றன. வேதம் கற்றும் வெறும் ‘காரியங்களை’ மட்டும் செய்யும் சுந்தர கனபாடிகளின் பாத்திரமும், நித்ய சுமங்கலி சுப்பமாளின் பாத்திரமும் பிராமண வாழ்வியல் பதிவுகளில் வேறு எவரும் தொடாதவை. நானும், காளியும், சுந்தரவடிவேலனும் மீண்டும் மீண்டும் அரசூர் நாவலின் சில பகுதிகளை பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். பாரதியின் சின்ன சங்கரனின் தாக்கத்தில் அரசூரின் ஜமீன்தார் ராஜா உருவானதாக முருகன் கூறினார்.

 

சமகால நிகழ்வுகளை தமிழ் எழுத்தாளர்கள் எழுத தயங்குவதை பற்றிய ஒரு கேள்விக்கு “சைக்கிள் டயர ஏத்தியே தமிழ் எழுத்தாளன கொன்னுறலாம்..அவ்ளோ தான் சார் அவன்” என்றார் நாஞ்சில். உண்மை. சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 52 நூல்கள் எழுதியிருப்பதாக சொன்னார். திருப்பூரை மையமாக கொண்டு எத்தனையோ சமகால விஷயங்களை எழுதிருக்கிறேன் என்றார். மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நான் அவரை வாசித்ததில்லை. இத்தனை நூல்கள் எழுதியவர் தான் கவனிக்கப்படவில்லை எனும் அங்கலாய்ப்பை அங்கே கூறியபோது உண்மையிலேயே வெட்கமாக இருந்தது. அடுத்தாண்டு அவருக்கு ஒரு தனி அமர்வு வைக்க வேண்டும். வாசித்து விட்டு வருவோம்.

 

பவாவின் கதை கூறல், வண்ணதாசனின் உரை, உங்கள் உரை, மருத்துவர். சிவராமனுடனான உரையாடல்(அவரை எனது ஆசிரியருள் ஒருவராகவே எப்போதும் கருதி வருகிறேன்), ஆவணப்படம், வினாடி வினா, உணவு, தங்குமிடம் பற்றியெல்லாம் எல்லோரும் எழுதிவிட்டார்கள். வெகு சிறப்பாக இருந்தது என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஏதுமில்லை. மற்றுமோர் விழா, மற்றுமோர் ஆண்டு காத்திருக்கிறது.

அன்புடன்

சுனில்

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

நாளொரு வண்ணமுமாக விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய வாசகர்களின் தொகுப்புகள் தங்கள் தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன.ஒவ்வொன்றும் படிக்க படிக்கத்  திகட்டாததாகவுள்ளது.இன்று உங்கள் கைவண்ணத்தில் மேலும் மெருகூட்டுகிறது!.நீங்கள் குறிப்பிட்டது போல் அரசு நடத்தும் இலக்கியவிழாக்களில் ஒரு வழக்கமான சம்பிரதாயத்தன்மை நிறைந்து காணப்படும் இதைப்போன்று ஒரு ‘உயிர்ப்பு’  இருக்காது.

 

 

விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய விவரங்களை வண்ணப்படத்துடன் பிரதானமாக வெளியிட்ட “ஹிந்து தமிழ்’ நாளிதழும் போற்றுதலுக்குரியது.அடுத்து வரும் வருடங்களில்  அகிலஇந்திய அளவிலும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய கருத்து.விழா சம்பந்தமான புகைப்படங்கள் பலவும் அருமையாக இருந்தது

 

 

இனிமேல்தான் காணொளிக்காட்சிகளை பார்க்கவேண்டும். இறுதியாக இந்தமாதிரி விழாக்களில் நேரில் கலந்துகொள்ள ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும் அது எனக்கு இல்லை!வருங்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

 

நன்றி.

 

அன்புடன்,

 

அ .சேஷகிரி.

 

காளிப்பிரசாத்

 

 

அன்புள்ள சார்,

 

 

விழா முடிந்த மறுநாள் நானும் சுந்தரவடிவேலனும் சிமோகா ரவி குடும்பத்தினருடன் மருதமலை சென்றோம். அப்படியே பேரூர். இரண்டுமேகாண்பது இதுவே முதல்முறை. மருதமலையை தெரியும். போனதில்லை. பேரூர் கேள்விப்படுவதே இப்போதுதான். இரண்டில் எது சிறப்பு என்றால், அழகில், எளிமையில் முருகன். அமைதியில், அகங்காரத்தில் சிவன்.

 

 

மூன்றாவது நாட்களாக அதே காரில் சுற்றுகிறோம். சனிக்கிழமை இரா. முருகனை அழைத்து வரவேண்டி விமானநிலையம் சென்றபோது சுனிலும் உடனிருந்தார்.  அனைவரும் அரசூர் வம்சம் படித்திருந்தோம். ஆனால், அவர் ஆளுமை பற்றி தெரியாது. இப்படி கொண்டாட்டமாக எழுதுபவர்களுக்கேயான ஒரு முசுடுத்தன்மை இருக்கலாம். மனிதவளத்துறை தலைவராக இருந்தாராம். ஐயையோ அகம்பாவியா இருப்பார். அஜீத்துக்கும் கமலுக்கும் பஞ்ச் டயலாக் வேற  எழுதிருக்கார். நல்லா கோத்து விட்டார் கி்விஸ் செந்தில். இந்த தருணத்தில் பரீக்ஷா  ஞாநி அவர்களை நினைக்கிறேன். எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர்களின் ஆளுமைகளையும்,எளிய வாசகர்களுக்கு டீ, மேரி பிஸ்கெட் கொடுத்து புரியவைத்தவர். இல்லாவிடில் நான் கன்யாகுமரியில் இருந்த உங்களையோ கனடாவில் இருந்த ஷோபாவையோ எப்போது பார்த்திருக்க முடியும்.

 

 

விமானமும் ஒருமணிநேரம் தாமதமாம். அரங்கில் பாரதிமணி அவர்கள் விவாதம்.. பட்டையைகிளப்புகிறார் பாட்டா என ரிலையன்ஸ் தகவல். நாம் மட்டும் ஏன் சும்மா நிற்கவேண்டும் என் யோசிக்கிறோம்.  வெறித்த பார்வையும்  தூக்கிப்பிடித்த பெயரட்டைகளுமாய் நிற்கும் மனிதர்களுக்கிடையே ஒரு மணிநேரமாய் விலா நோக சிரித்துக்கொண்டிருக்கும் நால்வரை பொதுமக்கள் கனிவோடும், கடுப்போடும் கடந்து செல்கிறார்கள்.

 

 

நாங்கள் இரா.முருகன் அவர்களைப் பார்த்தது இல்லை. ஆகவே ஒரு மானசீகமான விளையாட்டில் இருக்கிறோம்.  தோராயமாக ஒருவரை பிடித்து நீங்கள் இரா.முருகனா எனக்கேட்டு ஷிமோகர் அழைத்து வர வேண்டும். அவரைபோட்டோவை பார்த்து சுந்து உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான தரவுகளை நானும் சுனிலும்தருவோம். இது விமானம் வரும் வரைக்குமான விளையாட்டு.

 

 

முதலில் ஒருவர் வருகிறார் அவரை மானசீகமாக ரவி அழைத்து வருகிறார்.

 

”அண்ணா பொட்டிய வைங்கோ..ஆரு தூக்டிட்டு போகப்போறாங்கோ?” லேய் சுந்து.. ..இவரா பாரு…

 

இவரு இல்லண்ணா கும்பகோணம் அண்டா  மாதிரி இருக்காரு..

 

”நீங்க இல்லீங்கலாம்ணா.. போங்கோ…”

 

அவர் முனகியபடி செல்கிறார்.. சும்மா போறவன கூட்டிவச்சி அண்டா கிண்டாங்கிறாங்க..

 

 

இப்படியாக ஒவ்வொருவராக வந்து புண்பட்டு / மகிழ்ந்து செல்கிறார்கள். இப்படி அடுத்தவரை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ந்த அந்த ஒருமணிநேர குதூகலத்தை பேலியோக்காரர்கள் கூட தன் வாழ்நாளில் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

 

 

ஒன்று முப்பதுக்கு இரா.முருகன் அவர்கள் வருகிறார். நாங்கள் எண்ணியதற்கு நேர்மாராக இருக்கிறார். அமைதியாக, சொல்லெண்ணிப்பேசுபவராக, முந்தையநாள் கச்சேரியில் கேட்ட ஆலாபனைக்கு இன்னும் உருகி போனில் சொல்லிக்கொண்டுருப்பவராக..

 

 

 

சுப்பம்மா பாட்டி, எழுத்திகாரம், ஐயணை என அவர் புனைவுலகம் பற்றி பேசுகிறோம். அன்னபூர்ணாவில் மதிய உணவு முடித்து அரங்கிற்கு வருகிறோம். உரை முடித்து வாசகர்கள் உரையாடலாம் என்ற போது, “ நடையிலும், புனைவுலக சாத்தியங்களிலும் சுஜாதாவைத் தாண்டிச் செல்கிறீர்கள். ஆனால், சுஜாதாவைப் பின்பற்றி எழுதுபவராக அறியப்படுகிறீகள். இது பற்றி உங்கள் கருத்து என்ன” என்ற அற்புதமான கேள்வியை முதல்வரி இல்லாமல் கேட்கிறேன். கேட்டவுடனே அந்த அபத்தம் உரைக்கிறது. நீங்கள் அரங்கில் இருக்கிறீர்களா என பதட்டமாக பார்க்கிறேன். இல்லை.. ஜாஜா மட்டும் இரு மிஸ்ஸுகிட்டயே சொல்றேன் என்பது போன்ற பாவனையில் முறைக்கிறார். ஆனால், இரா.முருகன் இந்த கேள்வியை ஷார்ட்பிட்ச் பந்தை எதிர்கொள்வது போல அனயாசமாக தட்டுகிறார். “ அது எனக்கு ஒரு இசையாகவும், வசையாகவும் இருக்கிறது..”

 

 

அடுத்து கேள்வி கேட்பதில் என் தம்பியாக இருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் தன் கேள்வியை கேட்கிறார்..” அதெப்படி சார், சாமிநாதன் முன்னோர்கள் ஆவிகூடல்லாம் பழகறான்?” இதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஆச்சரியமானது. அதை நான் இங்கு எழுதப்போவதில்லை..  கிட்டத்தட்ட நாவலின் மையமாக இருக்கும், அதை தாங்கிப் பிடிக்கும் சாமிநாதன் மரண நிகழ்வு உண்மையில் என்ன அது மாய யதார்த்த வாதத்தில் எப்படி மாறுகிறது என உரைக்கிறார்..அதன்பின் இப்படி முடிக்கிறார்.. “ அவ்ளோதாங்க.. மத்தபடி ஆவி சம்போகம்லாம் வாய்ப்பு இல்லீங்க..” தம்பி மிக்க ஏமாற்றத்தோடு அமர்கிறார்..

 

 

 

பிறகு, சிறப்பு விருந்தினரிடம் கேள்வி கேட்பதில் என் அண்ணனாக ஏற்கனவே நிரூபித்து இருக்கும் கடலூர் சீனு ஒரு கேள்வி கேட்கிறார். ஆனால் அது நோபாலாக அதுவும் பவுண்டரிக்கு செல்கிறது. மகன் லெக் ஸ்பின்னர் என்றால் இவர் சச்சின் போல் இருக்கிறார். அடுத்தநாள் நாஞ்சில் அவர்கள், என் அருகில் இருப்பவன் நல்லவனா இல்லை அயோக்கியனா என தெரியும் என்ற போது, ஒரு திடுக்கிடு உடல்மொழியைக்காட்டி தொண்ணூற்று ஒன்பது வரை அடித்த சச்சின்,  விழா உரையில் சதமடிப்பார் என் எண்ணிக்காத்திருந்தேன்…

 

 

 

ஞாயிறு காலை கல்யாண்ஜி பேசுகையில் அரங்கிற்கு வந்தார் சிவபிரகாஷ் அவர்கள். தமிழ் கவிதை பற்றி அவருக்கு என்ன தெரியும்?. ஆனால், தேநீர் இடைவேளை போது “ இந்தப்பக்கம் போகணூமா “ என என்னிடம் கேட்டபோதுதான் அவருக்கு தமிழ் ஒரளவு பேசவும் தெரியும் என உணர்ந்தேன். கரைக்கால் அம்மையார் முதல் கவிஞர் சுகுமாறன் வரை தமிழின் அத்துணை முக்கியமான ஆளூமைகளைப்பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார் என்பது தனிப்பேச்சிலும் அரங்கிலும் உணரமுடிந்தது. கிராதம் எழுதும்போது இயல்பாக அவர் ஞாபகம் வந்தது என நீங்கள் சொன்னீர்கள். அதன்பின் அவர் பேச்சுக்களை செய்கைகளை சார்வகன், பைராகி யாகவே கண்டுவந்தேன்.  :-) விழா அரங்கில் “ மன்னிக்கவும், நான் உங்கள் தாய்மொழியில் பேசப்போவதில்லை.. என் தாய்மொழியிலும்” எனத்துவங்கி ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை மிகச்சிறப்பானது. அவன் ஆணையிடுவதில் குழந்தை போல என்ற கண்ணன் குறித்த வெண்முரசு வரி ஞாபகம் வருகிறது. இனி ஒரு இந்திய எழுத்தாளருக்கும் விருது வழங்கவேண்டும் என சொல்லி உடனே நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்.

 

 

 

முந்தைய விழாவில் கவிஞர் தேவதச்சன் படைப்புகளை அறிமுகம் செய்து கொண்டேன். கல்யாண்ஜி படைப்புகளை ஏற்கனவே படித்திருந்தாலும், அவரை இன்னும் நெருக்கமாக உங்களின் மற்றும் பவா அவர்களின் உரை மூலமாக அறிந்தேன். இரா.முருகன் மற்றும் ஹெச்.எஸ்.எஸ் ஆகியோரின் படைப்புகள்  இந்த விழா மூலமாக நான் கண்டறிந்தவை. அதற்கு(ம்) உங்களுக்கு நன்றிகள்

 

அன்புடன்,

R.காளி ப்ரஸாத்

சௌந்தர் ,அரங்கசாமி

 

 

இனிய ஜெயன்,

 

வணக்கம்.

 

விஷ்ணுபுரம் விருது விழாவில் இரண்டு நாட்களும் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். தங்களைச் சந்தித்ததும், இவ்விழாவில் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை. நிரம்பி வழியும் ஒரு குளத்தினைப் போன்று தளும்பிக் கொண்டிருந்த மனநிலையிலிருந்து இன்றுதான் வெளிவர முடிந்தது.

 

மிகவும் தேர்ந்த இசைக்கலஞரின் இசைநிகழ்வு போல் மிகக் கச்சிதமாய் அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. இத்தனை படைப்பாளிகளை, இத்தனை வாசகர்களை ஓரிடத்தில் பார்த்தது புது அனுபவம்.

 

வண்ணதாசனைக் கேட்டபோதும், பார்த்தபோதும் மனசுக்குள் நாகலிங்கப்பூவின் வாசம் திரண்டெழுந்தது. அதேமாதிரி உங்களைக் கண்டதும்,பேசியதும் கன்னியாக்குமரிக் கடல் பார்த்த அனுபவம் போன்றது. நாஞ்சில் நாடனின் ஒவ்வொரு சொல்லும் அம்பறாத்தூணியிலிருந்து புறப்பட்டு வந்து மனதைத் தைத்தது. சிவப்பிரகாஷ் தன் உரையில் சிந்தனையின் தடத்தை நீட்டிக் கொண்டே சென்றது கொஞ்சம் புதிதாக இருந்தது.

 

சூத்ரதாரி, லக்‌ஷ்மிமணிவண்ணன், சுகா பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

விவேகானந்தருக்குக் கிடைக்காத நூறு இளைஞர்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள் ஜெயன். வாழ்த்துக்கள்.

 

நன்றி.

 

தஞ்சையிலிருந்து,

 

சந்தானகிருஷ்ணன்.

மதிப்பிறகுரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

விழா பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். மிக பெரிய மன எழுச்சி அடைந்ததை போல் உணர்கிறேன். இலக்கியம் அதன் வாசகர்களை பெருக்கி கொண்டே இருக்கிறது , இந்த ஆண்டு பெரும் இளைஞர் கூட்டம் கலந்து கொண்டிருப்பதாக அணைத்து பதிவுகளிலும் தெரிகிறது. கலந்து கொள்ள இயலாமல் எங்கோ இருந்து கொண்டு மானசீகமாக அந்த 2 நாட்களையும் நினைத்து கொண்டு, நம் விழாவின் பதிவுகளையும் ,காணொளிகளையும் பார்த்து கொண்டு இருக்கும் மிக பெரிய வாசகர் உலகம் இந்த விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் விருதுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறது.

 

 

வர முடியாமல் போன வருத்தங்கள் இருந்தாலும் , விருது விழா நிகழ்ச்சியை சிறந்த காணொளி வடிவத்தில் காண முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. விழாவில் கலந்து கொண்டதை போன்ற உணர்வு தந்தது.ஸ்ருதி டிவி க்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி வரும் காலங்களில் முந்தைய நாள் விவாத அரங்கையும் காணொளி மூலம் காண முடியும் எனில் என்னை போன்ற வாசகர்கள் முழுவதுமாக அந்த விழாவில் பங்குபெற்றதை போல் உணர்வார்கள்.நம் விழா இனி வரும் காலங்களில் இன்னும் பிராம்மாண்டமாய் , அதன்  வீச்சை நாடு முழுவதும் செலுத்தும்  என்பதை இப்போதே உணர முடிகிறது.

 

 

டிசம்பர் மாதம் இலக்கிய வாசகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமான நாட்களாக ஆகி இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

 

என்றும் வாசிப்புடன்

சரவணன்

 

image

 

வணக்கம் ஜெ

நல்லா இருக்கீங்களா? மின்மினிப் பூச்சிகள் ஒன்று சேர்ந்து பறந்து தீயாக மாறினால், கண் கலங்கத்தானே செய்யும்? இத்தனை இயல்பான ஒரு படைப்பாளி கரடியின் ஏக்கத்தின் தேனைப் பரவச நிலையில் சொல்லும் போது கண் கலங்கத்தானே செய்யும்? உங்களோடு இரயிலில் பயணிக்கும் நாடாச்சி நான் தானே என்று தளுதளுத்து அன்பின் கவிஞன் கேட்கின்றபோது கண் கலங்கத்தானே செய்யும்?முழுக்க முழுக்க அன்பு செய்தலையே இயல்பாகக் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அதனால்தான் இந்த உலகம் மழையோடு இருக்கிறது என்று இன்னொரு பாணன் ஆணித்தரமாக சொல்லும்போதும் கண் கலங்கத்தானே செய்யும்?

 

 

பக்கத்து இருக்கைப் பையன் பாதி வடையைப் பங்கிட்டுக் கொடுக்கும் காலத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம் என்று என்னூர் எழுத்துக்காரன் சொல்லும்போது கண் கலங்கத்தானே செய்யும்? இன்னும் போய், தங்கள் உணவைப் பொருட்படுத்தாது, நிகழ்வுகளைத் தியாகம் செய்து உழைத்து சிவந்துபோய் சுற்றித்திரிந்த ரசிகர்களையும் புதியவர்களையும் பார்க்கும்போது கண் கலங்கத்தானே செய்யும்?

பாத்துமாவின் ஆட்டோடும் சிறைச்சாலை மதில்களோடும் அரசூர் வம்சத்துக்காரர்கள் ஏறி மிதித்து சப்தித்து வெண்முரசு முழக்கித் தணியவில்லை தாகம், தூக்கம் தாண்டி எத்தனை நாட்கள் நீடிக்கும் இந்த நினைவுகள்? எட்டுத்திக்கும் மத யானை ஏறி சமவெளி தாண்டி ஒரு சிறு இசை தேடிச் சென்று மணல் உள்ள ஆற்றில் இறங்கிக் குளித்து இறுதியாக நட்சத்திரங்கள் ஒளிந்திருந்த கருவறையில் சாந்தமடையட்டும் வாசகனின் தவிப்பு.

 

 

இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒவ்வொரு வாசகனையும் தன் வாழ்க்கையில் ஒரு சிறு படி மேலே ஏற்றி விட்டிருக்கிறது. அவன் தூக்கம் இனி தொலைந்து வாசித்து வாசித்து தினசரி பிறப்பானாக.

 

 

கல்யாண்ஜியின் கையைப் பிடித்துக் கொள்ளவா என்று கேட்டேன் ஜெ. உங்கள் எல்லோர் கையையும் பிடிக்கத்தானே நான் இன்னும் இருக்கிறேன் என்று அரவணைத்துக் கொண்டார்.

உங்களருகில் எப்போது வந்தாலும் தோள் மேல் கை போட்டுத்தான் பேசுகிறீர்கள் ஜெ. எதற்காக எங்களுக்கு இந்தவொரு வாய்ப்பு? பவாவும் கூட பேசுகின்ற போதெல்லாம் தழுவிக் கொண்டு கண் பார்த்து விசாரிக்கிறார். வந்திருந்த ஒவ்வொரு படைப்பாளியும் நெஞ்சில் பதிந்து சென்றிருக்கிறார்கள் ஜெ.

 

 

வலைப்பக்கத்தில் வந்திருக்கும் நிகழ்ச்சி குறித்த பதிவுகளைப் பாருங்கள். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு வித எழுத்து நடை. எப்படிச் சாத்தியம் இது? சம காலத்தில் எழுதிப் படைத்து எப்படி வாசிக்கவென்றும் சொல்லி, கூடவேயிருந்து சிந்தனைகளை மாற்றிச் செல்லும் படைப்பாளிகளால் தான் இது சாத்தியம். சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் ஜெ. விஷ்ணுபுரம் அமைப்பு நண்பர்களுக்கு பாராட்டுக்கள் ஜெ. இன்னும் இருக்கிறது உலகம், அதில் நாம் இருப்போம் வாசித்து, படைத்து, கண் கலங்கி….

 

 

சுஷில் 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை…கிருஷ்ணன்

$
0
0

 

IMG_8242

 

இது போன்ற கூடுகைகளின் நோக்கமே முக்கிய அல்லது சில மாறுபட்ட  சிந்தனைகளை கவனப்படுத்த அல்லது உருவாக்க முடியுமா என்பது தான். கடந்த காலங்களில் மலையாளக் கவி  டி பி ராஜீவன் கவிதைகளில் இருந்து படிமத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டியதன் அரசியல் அவசியம் பற்றி பேசினார், அது ஊட்டி முகாம் வரை நீடித்தது. சென்ற ஆண்டு கே என் செந்தில் தற்காலத்திய நெருக்கடி என்பது  ‘கருணையின்மை’ தான் என்றார், அது அப்போதே சிந்திக்க வைத்தது, இப்படி விஷ்ணுபுரம் கூடுகைகளுக்கு சில தவிர்க்க இயலா சிந்தனை முக்கியத்துவம் உண்டு. சில சமயம் அது திறம்படக் கூறல் மற்றும் சிலாகித்தல் ஆக இருக்கக் கூடும், சிலசமயம் ஆச்சர்ய தகவல்களாக இருக்கும்,  எல்லாவற்றிற்கும் மேலாக சிலசமயம் புது சிந்தனைகள் மற்றும் அதுகுறித்த அறிமுகங்கள்.

 

இந்த 2016 லும் அப்படி பலவாறாக நிகழ்ந்தது. ஒப்புநோக்க இது ஊட்டி கூடுகைகளுக்கு நிகராகவே இருந்தது. கடந்த எல்லா ஆண்டு விஷ்ணுபுர டிசம்பர் கூடுகைகளின் கிரீடம் இது தான். அடுத்த ஆண்டு கூட இந்த உயரத்தை எட்டிப் பிடிப்பது சற்று சிரமம் தான். இம்முறை சரஸ்வதி தேவியின்  கூடவே அதிருஷ்ட தேவியின் ஆசியும் இருந்தது. கோவைக்கு வந்து இறங்கியபோதே “மோட்டார்” ஸ்ரீனிவசன் என சற்று மேம்பட்ட பெயரை தனக்குத் தானே சூட்டிக்கொள்ளும் “மென்டலின்” ஸ்ரீனிவசனுடன் எனது விவாதம் துவங்கிவிட்டது. ஒரு கால கட்டத்தின் குரல் என ஒரு எழுத்தாளனையோ, கவியையோ அல்லது அக்காலகட்ட எழுத்தாளர்கள் சிலரையோ சொல்லலாகுமா, 10,20 ஆண்டுகளுக்குப் பிறகு  வலிந்து வட்டம் ஒன்றை போட்டு அதற்குள் அவர்களை புகுத்திக்கொள்ளல் ஆகாதா என்பதே அவ்விவாதம். இன்றில் நின்று கடந்த காலத்தை நாம் வரையறுக்கிறோம், பின்னர் எழுத்துலக சிந்தனையை வரையறுக்கிறோம், தர்க்கப்  பொருத்தம் காரணமாக நாம் ஒப்புக்கொள்கிறோம். இந்த வரையறை பொருத்தப்பாடு  இரண்டுமே தவறாகவும் இருக்கலாம். வரலாறு தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.

 

நாஞ்சில் அமர்வில் அவர் கூறிய பேசாமல் செய்பவர்கள் -பலா பூக்காது ஆனால் காய்க்கும், பிரகடனப் படுத்திவிட்டு செய்பவர்கள் -மா கொத்து கொத்தாக பூக்கும் கூடவே மிகுதியாக காய்க்கும், வாய்ச்சொல் வீரர்களுக்கு – பாதிரி, பூத்துத் தள்ளும் காய்ப்பது அபூர்வம் என மேற்கோள் காட்டியது புருவத்தை உயர்த வைத்தது, பாரதியைத் தவிர வேறு படிக்காத அல்லது பாரதியிலும் ஓரிரண்டு கவிதைகளை மட்டுமே படித்தது போல தோற்றமளிக்கும் அராத்து பாரதி மாஜிக் பற்றி கேள்வியை அல்ல தனது கருத்தை கேள்விபோல எழுப்பினார், நாஞ்சிலும்  அதை  ஒப்புக்கொண்டு  ‘சூதர் அவையினிலே தொண்டு மகளிர் உண்டு …….” கவிதையை அக்கணம் பாடினார், கவிதைக்கு சொற்தேர்வும், சொல் இணைவும் முக்கியம், பாரதி ஒரு யுக புருஷன் அவர்போல அரிதாகத் தான் தோன்றுவார் என்றார். ஏனோ “பாரதி மகாகவியா” என்கிற சிற்றிதழ் விவாதம் இங்கு சுட்டிக் காட்டப்படவில்லை. இதைக் குறித்து வைத்துக் கொண்ட தேவதேவன் கடைசி அமர்வில் அதை மறுத்துப் பேசினார். கவிஞனுக்கு மனத்தால் எட்டிப் பிடிக்கும் இடம்தான் முக்கியம் அதை வெளிப்படுத்த மொழி ஒரு கருவி மட்டுமே என்கிற அவரது வாதத்தை நாஞ்சில் மீண்டும் மறுத்து அப்படி என்றால் மௌனத்தாலேயே கவிதை எழுதி வாசித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானே என்றார், இவ்விவாதம் இனியும் தொடரும். தேவதேவன் இதை விடமாட்டார் என எண்ணுகிறேன், அல்லது  இதை அவர் மறந்து போக நாம் அனுமதிக்க கூடாது.கள்ள மௌனம் என்னும் சொல்லாட்சி, யானையின் பல்வகைப் பெயர்கள், குறித்தும் அவரது உரையாடல் நீண்டது.

 

பாரதி மணி கலைக்கு சேவை செய்ய யாரும் நாடகத்திற்கு வருவதில்லை எனவும், காவியத் தலைவன் படம் அறியாமையால் எடுக்கப் பட்டது எனவும் கூறினார்.  50 ஆண்டுகளுக்கு முன் பெண் வேடம் இடும் சிறுவர்கள் அனுபவிக்கும் பாலியல் தொந்தரவு சொல்லி மாளாது என்றார். ஒருபால் உறவு அப்போது சாதாரணம், இப்போது ஒப்பு நோக்க மிக அரிது என எண்ணை வைத்தது. ஒரு பெண் வேடமிட்ட நடிகரை, சில ஜமீன்தார்கள் நாடகம் முடிந்து அதே பெண் உடையில் தமது பங்களாவுக்கு வந்து தங்களுக்கு  மது பரிமாறினால்  மட்டும் பொதும் என ரூ.5000/- வழங்கினார்கள் எனவும் அது இன்றைய தேதியில் 10 லட்சம் பெரும் எனக் கூறினார்.  நமது நாடகங்கள் சற்று பின்தங்கித் தான் உள்ளது என்றார், மைக்கில் இருந்து விடுபடவே பல வருடமானதாக சொன்னார், நவீன நடக  முயற்சி தமக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும், அதில் கோணலான பரிசோதனைகள் உள்ளன, கலை இல்லை எனவும் கூறினார். என்றாலும் நாடக இயக்கங்கள் குறித்தோ, வெவ்வேறு மொழி நாடகங்கள் குறித்தோ, நாடக முன்னோடிகள் குறித்தோ, நாடக சரித்திர மாற்றம் குறித்தோ அவரால் எதுவும் சொல்ல இயலவில்லை. மசால் வடை இடும் பக்குவம், அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவர் தந்தை கவிஞர் ஹன்ஸ்ராஜ் பச்சனிடம்  பையன் என்ன செய்கிறான் எனக் கேட்டது, பின்னர் அமிதாப் அவர் என்னை உண்மையிலேயே தெரியாமல் இருந்தால் ஒரு முட்டாள் எனவும் ,அதைத் தெரிந்தே கேட்டிருந்தார் என்றால் என்னைவிட பெரிய நடிகர் எனவும் ஒரு பேட்டியில் கூறியது சுவாரஸ்யமாக இருந்தது.

 

இரா முருகன் வருவதற்கு சற்று தாமதம் ஆன இடைவெளியில் ஜெயமோகன் மேடை ஏற்றப் பட்டார், பொதுவாக ஊட்டி விஷ்ணுபுரம் அமர்வுகளிலும்,கோவை கூடுகைகளிலும் ஜெயமோகனை பற்றியோ அவரின் படைப்புகள் பற்றியோ ஏதும் பேசுவதில்லை என்கிற எழுதப்படாத விதியை நாம் கடை பிடிக்கிறோம். வேண்டுமென்றால் அரங்கிற்கு வெளியேயோ, காலை மாலை நடையிலோ அவரிடம் அவர் படைப்புகள் குறித்து உரையாடலாம். ஆனால் நேரமின்மை காரணமாக மாலை நடையே இல்லை, எனவே சில வாசக வாசகிகள் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு திடீர் உப்புமா அமர்வாக ஜெயமோகன் அமர்வு ஒரு 20 நிமிடம்.  ஏன் கண்ட கண்ட அவசியமற்ற எழுத்தாளர்களை எல்லாம் படித்து எழுதி எங்களையும் சுற்றலில் விடுகிறீர்கள் என்பது போன்ற நகைக்காக சில பேசப்பட்டதே ஒழிய, வெண்முரசில் புதிய சொல்லாக்கம் என்பது  தவிர்த்து பெரிதாக எதுவும் நிகழவில்லை. வேண்டுமானால் விஷ்ணுபுரம் சார்பில் தனியாக ஜெயமோகன் வாசக சந்திப்பை நாம் நடத்தலாம்.

 

இரா.முருகன் சமீபத்தில் நமது நண்பர்களால் மிகுந்த ஸ்வாரஸ்யமான எழுத்தாளர் என சிலாகிக்கப் பட்டவர். jump cut  எனும் வெவ்வேறு காலத்தை எழுத்தில் உறுத்தலில்லாமல் இணைக்கும் யுக்தி பற்றி பேசியது புதிது. புகை இலை விற்கும் பிராமணர்கள் பற்றி அரசூர் வம்சத்தில் வருவது, சிவகங்கையில் மலையாளம் கலந்த தமிழில் சில பாத்திரங்கள் உரையாடுவது தம்மை மீறியது எனக் கூறினார். மார்குவிஸ் தான் தமது ஆதர்ச எழுத்தாளர் எனவும், மாய எதார்த்தம் தனக்கு பிடித்தமானது எனவும் கூறினார். இவர் மறுநாள்  மேடையில் எழுதி வைத்து படித்தது பின்பற்ற கடினமாக இருந்தது.

 

பவாவின் அமர்வு தான் அன்றைய நாளின்  ஹிட். சக்காரியாவின் தேன் என்னும் சிறுகதை,  அதை கரடி எனக்கூறியிருக்க வேண்டும் என துவங்கி, ஒட்டர்களின் கதை, தாம் பாம்பு பிடிக்கும் இருளர்களுடன் சென்றது, ஜப்பான் கிழவன் கதை, அதே போல ஒரு படம் பார்த்தது, திருவண்ணாமலையில் யோகி ராம் சூரத் குமாரின் இருப்பு, அவருடனான நட்பு, அவர் மகனை இழந்தபின் மனைவியுடன் சென்றது, பின் எந்த மாறுதலும் இல்லாமல் திரும்பியது, பல்வேறு வெகுஜனக் கூட்டங்களை நடத்தியது போன்றவை வியக்க வைத்தது. தனது தெருவில் குடியிருக்கும் ஒருவன் தன்னை ஒரு கதை சொல்லி என உணரவேண்டும், அதே எனது சாதனை என்பதே அவரது key note.

 

இலக்கிய குவிஸ் பலரை வசீகரித்தாலும் அது அவ்வளவு தகுந்ததாக இல்லை. தகவலை தெரிந்து வைத்திருக்கும் சோதனையே மிகுதியாக இருந்தது. gestalt theory, catharsis போன்ற இலக்கிய கோட்பாடுகள், மாய எதார்த்தம், மீ எதார்த்தம் போன்ற இலக்கிய யுக்திகள் , நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கிய போக்குகள் குறித்து எந்த கேள்வியும் இல்லை. ஆக இது ஒரு இலக்கியத் தகவல் களஞ்சிய வினாடி வினா. இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது, இளம் வாசகர் பாரதி பலரின் தூக்கத்தை கெடுத்தார்.

 

கு சிவராமனின் அமர்வும் எதிர்பாரா தீவிரம். முடிக்க இரவு 10.30 ஆனது. ஒருங்கிணைக்கப் பட்ட மருத்துவம், மேலை நாடுகளில் எல்லாம் ஜப்பானிய, சீன பாரம்பரிய மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் ஒருங்கிணைத்து வழங்கப் படுகிறது அவ்வாறு இந்தியாவில் இருப்பதில்லை எனக் கூறினார். ஒரு மிட்டாயில் 45 உள்ளீடுகள் இருப்பதாகவும் அனைத்தும் ரசாயனம் எனவும் கூறினார். ‘ரெட் மீட் ‘ புற்று நோய்க்கு காரணமாவது பற்றியும் கூறினார். பேலியோ டயட் பற்றி கேட்ட போது ஒரு ஆய்வு முடிவு வந்து ருசுப்படுத்த 20,30 ஆண்டுகள்  பிடிக்கும், இதன் எதிர் விவளைவுகள் பின்னரே தெரியும் என்றார். புற்றுநோய்க்கும் புகையிலைக்கு ஆன தொடர்பை நிருபிக்க 30,40 ஆண்டுகள் ஆனதாகவும், இங்கிலாந்தில் முதல் புற்றுநோய்  காரணி அலசல் அமர்வில் அனைவரும் புகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் மிகப் பிரபலம் எனக்கூறினார். மருந்து அரசியல் குறித்தும் விளக்கினார். மிகுந்த சமநிலையுடன் கூடிய உரையாடல் அவருடையது, கண் கொட்டாமல் அனைவரும் பங்கேற்றனர்.

IMG_8441

கிருஷ்ணன், ராஜகோபாலன்

 

மறுநாள் நாயகன் சிவப்பிரசாத். கடந்தமுறை ஜோடி குரூஸ், இம்முறை இவர். நவீன ஜனநாயக சிந்தனைகள் நமக்கு ஆங்கிலம் வழி வந்தது, அது நம்மை விடுவித்தது. அதே ஆங்கிலம் இன்று கான்வென்டுகளாக நின்று நம்மை அடிமைப் படுத்துகிறது என்றார். ஒரு கலைஞன் பிரச்சாரத்தை மீறி எழவேண்டும், கலை பிரச்சாரத்தை மீறி எழும் என்றார். மறுநாள் மேடையில் பேசும் போது தமிழகத்தில் அரசியல் மேடைகளில் உரத்து பேசுதலும், அடுக்கு மொழியும் அதிகம் இது பிற மொழிகளில் இல்லை, ஆனால் இதன் எதிர்வினையாக  தமிழ் நவீன கவிதைகளில் இந்த உரத்து பேசுதல், அடுக்கு மொழிகள்  இல்லை, அது அடங்கிய குரலில் நுட்பமாக பேசுகிறது என்றார். இது ஆந்திரம், கர்நாடகம், ஹிந்தியில் தலைகீழாக நிகழ்கிறது என்றார். மிக  கூரிய அவதானிப்பு இது. மேலும் அமர்வில் ஒரு எழுத்தாளனின் சுதந்திரத்தை விட பொறுப்பை தான் நான் வலியுறுத்திக்கிறேன்  என்றது அவரைப் போல தடாலடி கவிஞரின் வாயில் இருந்து சற்றும் எதிர்பாராதது. இவர் அசல் சிந்தனையாளராக அக்கணம் தோன்றினார்.

 

 

உணவு இடைவேளைக்கு பிறகு பஷீர் பற்றி சு வேணுகோபால் மற்றும் ஜெயமோகனின் விவாதம். பஷீருக்கு நேர்ந்த வாழ்வனுபவம் அரிது, பெரிது. ஒப்பு நோக்க அது குறைவாகவே அவர் படைப்பில் வெளிப்பட்டு இருக்கிறது என்றார்.   இன்றைய வாசகனுக்கு சு வேணுகோபாலின் உக்கிரமே உவப்பானது, பஷீரின் ஆன்மிகம் சற்று தொலைவாகவே இருக்கும். என்றாலும் ஜெயமோகனின் வாதம் அசரவைத்தது, தத்துவமற்ற ஆன்மிகம் அவருடையது  முழுமையாக உணர்ந்தபின்  சிரிக்கும்  சூபி பஷீர் என்றார். இந்தியாவின் சிறந்த 10 எழுத்தாளர்களில் பஷீரும் ஒருவர் என்றார். வக்கீலுக்கு படித்து பெயிலாகி இருக்க வேண்டும். ஒரு வாசகியும் ஜென்மதினம் கதை பற்றி கூறினார். சு வேணுகோபாலுக்கு பதில் சொல்ல நேரம் வாய்க்காமல் வண்ணதாசன் வந்தார்.

 

 

தன்னை கல்யாண்ஜியாக வண்ணதாசனாக அணுகுவதைவிட கல்யாணியாக அணுகுவது பிடிக்கும் என்றார். தயக்கத்துடன் ஆரம்பித்து பின்பு தோழமையுடன் அனைவருடனும் உரையாடினார், விஜயா வேலாயுதம் போர்த்திய பொன்னாடை நழுவியது, இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் நழுவி தற்போது அறிவிக்கப் பட்டிருக்கிறது என சாகித்ய அகாடமி பற்றி சொல்லாமல் சொன்னார். அவருக்கெனவே வந்திருந்த வாசகர்கள் நெகிழ்தனர், தழுதழுத்தனர். அவரது கவிதைகள் கதைகளை அங்கேயே வசித்துக் காட்டினர். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக அங்கு தோன்றினார். இறுதிக்கட்டத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் காணப் பட்டர், அவரின் குவைக்கோல் நிலத்தடி நீரை அறிந்துகொண்டது.  விஜயா வேலாயுதம்  இறுதியில் எதிர்பாராமல் மைக்கை கைப்பற்றி கடந்தகால ஏக்கத்தை நிரவச் செய்தார், அது வயசாளிகளின் உலகம், இளைஞர்களிடேயே அதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை, நித்தமும் நிகழ்காலத்தில் வாழும் வாசகர்களிடையே அதற்கு எந்தப் பொருளும் இல்லை. இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து 3 நபர்கள் அவையறியாது பேசிவிட்டனர். இதை அடுத்த கூடுகைகளில் தவிர்த்துவிடவேண்டும் என நண்பர்கள் சொன்னார்கள், இதை எனக்கும்  நானே சொல்லிக்கொள்கிறேன்.

 

இறுதியாக சுப்ரபாரதி மணியன், பாவண்ணன், நாஞ்சில், இரா.முருகன்  மற்றும் தேவதேவனின் கூட்டு அமர்வு. நாடகம் பற்றி பேச்சு வந்தது. நாடகத்திற்கு தமிழகத்தில் இன்று வரவேற்பில் என்றால் அது தனது வடிவத்தை மாற்றிக்கொள்ளலாம் என ஒரு வாசகர் கேட்டார். அவரது சிபாரிசு குறும்படம் போல நவீன திரைக்கு மாறலாம் என்பது. தேவதேவன், இதை கடுமையாக மறுத்தார். நாடகம் ஒரு தூய காலை வடிவம் அது ஒருவரின் உடலில் இருந்து நேரிடையாக வெளிப்படுவது, நாம் நேரில் ஒருவரைக் காணும் அனுபவம் மகத்தானது என்றார். தான் வண்ணதாசனை சந்திக்க முயன்றதை கூறினார், அவரது கவிதைகளை படித்திருந்தாலும் அவரை சந்த்தித்தால் தான் அது முழுமை பெரும் என தனக்கு தோன்றியதாக கூறினார். நேரடி உடல் வெளிப்பாடு ஒரு தரிசனம்.

 

எப்படி எனது தெரியவில்லை சுப்ரபாரதி மணியன் தலைப்பை முன்னுணர்ந்தது போல ஒரு அச்சிட்ட தாளை கொண்டுவந்தது அதை 15 நிமிடம் படித்து அயர்ச்சியை ஊட்டினார். பிறகு தான் தெரிந்தது  “நவீன இலக்கியம் பெரிதும் வீழ்ச்சியைத் தான்பேசுகிறதா ?” என்கிற அன்றைய தலைப்பிற்கும் அதற்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு தமது படைப்பையே முன்வைத்தார், இங்கு வாசிப்பில் ஒரு அரசியல் உள்ளது என்றார்.  எந்த தலைப்பாக இருந்தாலும் இதைதான் அவர் படித்திருப்பார். நேரமின்மை காரணமாக  இந்த இறுதி அமர்வு வலிந்து முடித்துவைக்கப்பட்டது,  திகட்டத்  திகட்ட புகட்டப் பட்ட தேனமுது இது, வாசகர்கள் 130 பேர் மேலும் மேலும் என்றனர் காலம் போதும் என திரையிட்டது நாம் விழாவிற்கு சென்றோம்.

 

இரண்டு நாளும் இமை சோராது, தளராது கவனித்து, கணமும் தவறவிடாது அணைத்து அமர்வுகளில் பார்வையாளராக பங்கேற்ற 60 ஐ தாண்டிய நாஞ்சில் ஒரு ஞான உபாசகனின் முன்மாதிரி. அவர் முன் பணிகிறேன்.

 

கிருஷ்ணன்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பணமில்லாப் பொருளாதாரம் –பாலா

$
0
0

.untitled

சென்னை நுங்கம்பாக்க நெடுஞ்சாலையில், லேண்ட்மார்க் என்னும் பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. உண்மையிலேயே லேண்ட்மார்க்தான். புத்தக ஆர்வலர்கள், புத்தகங்களைப் பார்வையிட்டு, திறந்து, நுகர்ந்து, புத்தகங்கள் வாங்கிச் செல்வார்கள். வார இறுதியில் அங்கே செல்வது, பலருக்குப் பெரும் பொழுதுபோக்கு. பல இயக்குநர்கள், உதவி இயக்குநர்களாக இருக்கும் போது, ஓசியில் புத்தகம் படிக்க என்றே அதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அந்தக் கடை மரித்து, சில வருடங்களாகின்றன. இன்று சென்னையின் பல புத்தகக்கடைகள், பொழுதுபோக்கு சாதனங்கள், சினிமா சி.டிக்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறிவிட்டன. புத்தகங்கள் ஒரு மூலையில் கிடக்கின்றன.

இணையம் என்னும் பெருவழியில், பொருளாதாரப் பரிமாற்றங்கள் துவங்கியதின் பலி, சென்னை மற்றும் மும்பையின் புத்தகச் சில்லறை நிறுவனங்கள். காரணம், இணையவழிப் பரிமாற்றம், சுலபம் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதும் கூட. கால மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதன் காரணமாக, மிக எளிதாக நுகர்வோர் மாறிவிட்டனர்.

இந்திய வேளாண் பொருளாதாரம், மொத்தப் பொருளாதார மதிப்பில் 14% இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 50% மக்கள் இப்பொருளாதாரத்தை நம்பி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 22-30 சத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். கிட்டத்தட்ட 25 சத மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். எனில், 25-30 கோடி மக்கள் அதிகம் கல்வியறிவில்லாத, குறைந்த பட்ச வருமானத்துக்கு வழியில்லாதவர்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 75%.

இந்தப் பொருளாதாரம் தான் நமது முதன்மைப் பொருளாதாரம். இது பெரும்பாலும் உணவு உற்பத்தியில் இருக்கிறது. அதற்கடுத்து, சிறு தொழில்கள், கைவினைப் பொருள் பொருளாதாரம் என்னும் அடுக்கு இருக்கிறது. அதற்கடுத்தபடியாகத் தான் உற்பத்தி, கட்டுமானம், சேவை என்னும் பொருளாதாரங்கள் உள்ளன. அதிலும், கட்டுமானம் போன்ற துறைகளில் இருக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களே.

ஊரக மற்றும் சிறு தொழில்களில், பொருள் மற்றும் சேவைகள் பெரும்பாலும் பண மூலமாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தில் மொத்தத்தில் 10% மக்களே, பணமில்லாத ஒரு பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். நகரப் பொருளாதாரமும், பெரும்பாலும் பணப்படிமாற்றங்களின் அடிப்படையில் இயங்குகின்றது என்பதே இதன் பொருள்.

எனில், இந்தப் பணமில்லாப் பரிமாற்றத்தின் தேவை என்ன? பொருளாதார நோக்கில், பணம் அல்லது இணயம், ஒரு பரிமாற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படவேண்டுமெனில், அது மிகக் குறைந்த செலவு பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

எடுத்துக் காட்டாக, சென்னை போன்ற ஒரு மாநகரில், மின் கட்டணம் செலுத்த வேண்டுமெனில், பைக் அல்லது பஸ் பிடித்து, கட்டண அலுவலகம் சென்று பணம் கட்டுதலின் விலை மிக அதிகம். 5000 மதிப்புள்ள மின் கட்டணத்துக்கு, 2 மணி நேரமும், 20 ரூபாயும் பிடிக்கும். இதுவே வங்கி மூலம் செலுத்தும் போது, கட்டணமில்லாச் சேவை இருக்கிறது. ஒரு நகரத்தில் வசிக்கும், மத்தியமருக்கு இது பெரும் வரப்ப்ரசாதம். அடுத்து, சிறு கடைகளில் பொருள் வாங்கும் போது, பணம் உபயோகிக்காமல், மொபைல் வழி வசதிகள் உள்ளன – இவற்றுக்கு 1-2% வரை சேவைக் கட்டணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இப்போதைக்கு இலவசம். ஆனால், இவையிரண்டுக்கும் தேவை – தடையில்லா இணயச் சேவையும் அதற்கான அடிப்ப்டைக் கட்டுமானமும்.

இதுவே ஒரு கிராமப் பகுதியில், நடக்கும் பரிமாற்றங்களைப் பார்ப்போம் – தினசரிக் கூலி கொடுத்தல், சிறு அங்காடிகளில் பொருட்களை வாங்குதல் போன்றவை இணயம் மூலம் மாற வேண்டுமெனில், என்னென்ன விஷயங்கள் மாற வேண்டும்?

  1. அடிப்படைக் கல்வி
  2. தடையில்லா இணையக் கட்டுமானம்

 

இரண்டையும் 100% கொண்டு வர எத்தனை காலம் தேவை?

மிக முக்கியமாக, ரூபாய் நோட்டைக் கொண்டு, பரிவர்த்தனைகள் செய்ய இன்று ஒரு ஊரக ஏழை மனிதர் / ஊரகத் தொழில் முனைவோர் இருவரும் செலவு செய்வதில்லை. நூறு ரூபாய் நோட்டு, நூறு ரூபாயின் மதிப்புக்கே மாற்றிக் கொள்ளப்படுகிறது. ரூபாய் நோட்டை அடிக்க மற்றும் மாற்ற செலவு செய்வது அரசு. இணையச் சேவைக் கட்டுமானம் ஊரக மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கப் போவதில்லை. பரிமாற்றத்துக்கும் பிற்காலத்தில் ஒரு குறைந்த பட்ச சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் செலவை ஊரக மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்னும் கேள்விக்கு ஒரு பொருளாதாரரீதியான பதில் தேவை.

இந்தப் பரிமாற்றத்தின் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்? இந்தப் பரிமாற்றம் மிக அதிக பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும்? 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க ஆகும் செலவு ரூபாய் 3. அதை நாடெங்கும் கொண்டு சேர்த்தல், மற்றும் பாதுகாத்தல் போன்ற விஷயங்களுக்கு 1 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், மொத்த செலவு 4 ரூபாய். ஒரு 500 ரூபாய் நோட்டு, கிழிந்து மட்கும் முன்னர், குறைந்த 10 ஆயிரம் முறைகள் உபயோகிக்கப்படுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். குறைந்தது 1000 முறை மாற்றலாம் என்பது எனது ஊகம். எனில், ஒரு மாற்றத்துக்கு ஆகும் செலவு, 0.5 பைசா. அதையும் அரசு செய்கிறது இப்போது.

கட்டணமின்றியோ அல்லது, சேவைக்காகும் செலவு, அந்தச் சேவையை உபயோகிப்பதால் வரும் நன்மையை விடக் குறைவாகவோ இல்லாத பட்சத்தில், எதற்காக ஒரு நுகர்வோர் இணையச் சேவையை உபயோகிக்க வேண்டும் என்பதும் ஒரு கேள்வி.

முதலில், ஏன் பரிமாற்றங்கள் இணையம் மூலமாக நடக்க வேண்டும்?

  1. பணப் பரிமாற்றத்தில், வரிகள் கட்டாமல் ஏமாற்றப்படுகின்றன. எனவே இணையப் பரிமாற்றத்தில் அவை பதியப்பட்டு, வரிகள் கட்டுவது அதிகமாகும்.

இது ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வருடம் 10 லட்சம் வரை தொழில் செய்யும் குறு நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் எளிது. பத்து லட்சம் வரை தொழில் செய்யும் ஒரு குறுந்தொழில் அதிபர் அதிகபட்சமாக 25% லாபம் பார்க்கிறார் என வைத்துக் கொண்டாலும், அது 2.5 லட்சம் – மாதம் இருபதாயிரம் ரூபாய். இதை வைத்துக் கொண்டு, விற்பனை வரி கட்டுவதோ/சேவை வரி கட்டுவதோ/கணக்கு வைத்துக் கொள்வதோ பொருளாதார ரீதியாகச் சாத்தியம் இல்லை என்பதே. இங்கே, இதைக் கட்டாயப்படுத்தினால், குறுந்தொழில்கள் மரித்தே போகும். குறும் பொருளாதாரச் செயல்பாடுகளை நிறுவனப்படுத்துதல், சாத்தியமில்லை என்பதால் இந்த விலக்கு.

இங்கேதான், கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளான தான்ஸானியா மற்றும் கென்யாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பெரும் பாடம் உள்ளது. இங்கே நிறுவனங்களின் பில்லிங் மெஷின்கள், அரசின் வருவாய்த் துறையோடு இணைத்திருப்பது கட்டாயம். 10 லட்சத்துக்கும் அதிகமாகத் தொழில் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும், தனது பில்லிங் மெஷினை, அரசின் வருவாய்த்துறையோடு இணைத்திருக்க வேண்டுவது கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரலாம். அந்த மெஷினை, இவ்விரு நாடுகளின் அரசுகளும் இலவசமாக வழங்குகின்றன. முதல் கட்டமாக, இதைச் செயல்படுத்தலாம். இதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய வரிகளை வசூலிப்பது மிகச் சுலபமாகும். விற்பனை வரித்துறை இதை நேரடியாகச் செய்வதை விட, பாஸ்போர்ட் துறை போல, நல்ல தனியார் துறையிடம், இச்சேவை வழங்குதலை விட்டுவிடலாம் (அதாவது பில்லிங் மிஷினை, தொழில் நிறுவனங்களோடு இணைப்பது மற்றும் செயல்படுத்துவதை மட்டும்). 10 லட்சத்துக்கும் அதிகமாகத் தோழில் செய்பவரின் கல்வித் தகுதியும், தொழில்நுட்பத்தை உள்வாங்கும் மனநிலையும் இருக்குமாதலின், இதை நிறைவேற்றுவது எளிது.

  1. நே ர மற்றும் பரிமாற்றுச் செலவு சேமிப்பு:
  2. வங்கிகள் மூலமும், நிறுவனங்கள் தனது சேவைத் தளங்களின் மூலமும், பணப்பரிமாற்றங்கள் நிகழ்த்துவது, நகர மற்றும் ஊரக குடிமகன்களுக்கு மிக நன்மையளிப்பதாகும். தடையற்ற இணையச் சேவை இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், மளிகைக் கடைகளில் / மருந்துக் கடைகளில் மொபைல் மூலமாக பண மாற்றம் செய்வது, எந்த அளவு குடிமகன்களுக்குப் பயனளிக்கும் எனத் தெரியவில்லை.

50000 ஆயிரத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் வங்கிகளில் செய்ய வேண்டுமெனில், வருமான வரி எண் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. 3 லட்சத்துக்கு மேல் பரிமாறப்படும் எல்லாப் பரிமாற்றங்களும் ஏற்கனவே வங்கிகளால், வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இது போன்ற பரிமாற்றங்கள் பற்றிய தகவல் களஞ்சியம் அரசின் கைகளில் உள்ளது. தேவையெல்லாம், கோடிக்கணக்கான அந்தத் தகவல்களைச் சலித்து, அதில் வரி ஏய்ப்புப் பரிமாற்றங்களை அடையாளம் காணுவதும், அவற்றை நூல் பிடித்து, வரி ஏய்ப்பவர்களைப் பிடிப்பதும் தான்.

இன்று வரி ஏய்ப்பவர்களைப் பிடிக்காமல் இருப்பதன் முக்கியக் காரணம் – அவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாமல் அல்ல. அத்தகவல்களை முன்னெடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய நிறுவனத்தில் உள்ள குறைபாடுகள். விற்பனை வரி மற்றும் வருமான வரி அலுவலகங்கள் மிகப் பெரும் ஊழல் நிறுவனங்கள். இவற்றுக்கான சரியான தலைமை, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு – இம்மூன்றையும் இணைத்து, ஒரு நேர்மையான நிர்வாகத்தைத் தந்தாலே இந்தியாவின் வரி ஏய்ப்பு பெருமளவில் குறைந்து விடும். இதுதான், ஊழலை ஒழிக்கும் கொள்கையை முன்வைத்திருக்கும் மோதி அரசு செய்ய வேண்டியது. இதில் விற்பனை வரி, மாநிலங்களின் அதிகாரத்தில் வருவதெனினும், ஜி.எஸ்.டிக்குப் பின், இது மத்திய அரசின் கீழும் வரும்.

இப்பரிமாற்றங்களில், இறுதி மைல் தொடர்பு என்னும் ஒரு பதம் உண்டு. நாட்டின் கஜானாவில் இருந்து, அலுவலகம் மூலமாகவோ / தொழில் மூலமாகவோ, பணம், மின் அணுப்பரிமாற்றம் மூலம் தனி நபரை அடையலாம். அங்கிருந்து, அவரும், சில பரிமாற்றங்களை, மின் அணுப்பரிமாற்றம் மூலம் செய்யலாம். ஆனாலும், தன் சொந்தச் செலவுகளுக்காக, அத்தனி நபர் இன்றும், பணத்தைத் தான் பெரும்பாலும் உபயோகிக்கிறார். தொழில்நுட்ப உலகின் தலையாய நாடான அமெரிக்காவில், இன்றும் 45% பரிமாற்றங்கள் பணம் மூலமாக நடக்கின்றன என ப்ளூம்பெர்க் என்னும் நிறுவனத்தின் புள்ளி விவரங்களை ப.சிதம்பரம் மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.

எனவே செய்ய வேண்டியது பணமில்லாப் பொருளாதார நடவடிக்கைகள் அல்ல. அவை ஊழலை ஒழிக்க அதிகம் உதவாது. வலுக்கட்டாயமாக அது திணிக்கப்பட்டால், அது மேலும், பொருளாதாரத் தட்டின் கீழ் நிலையில் உள்ள, நோட்டுப் பொருளாதார மக்களையே அதிகம் பாதிக்கும். ஏற்கனவே நிகழ்ந்துள்ள பணப்பரிமாற்றம் கொணர்ந்த எதிர்மறை விளைவுகளை இது அதிகரிக்கவே செய்யும்.

இன்று தொழில்களை அதிகம் பாதிப்பவை, வருமான வரி, உள்ளூர் நுழைவு வரி, விற்பனை வரி போன்றவைகளை வசூலிப்பதில் உள்ள ஊழல். இவற்றைத் தொழில்நுட்பம் கொண்டும், மேம்பட்ட நிர்வாக முறைகள் கொண்டும் நிர்வகிக்க முற்பட வேண்டும்.

இன்று, வேளாண்மை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, வேளாண் வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான், சில ஏக்கர் திராட்சை விவசாயிகள் (ஜெயலலிதா / சுப்ரியா சூலே) போன்றவர்கள் ஏக்கருக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்ட முடிகிறது. இத்திட்டம் பெரும் ஓட்டை. இவ்வாறு இரு தொழில் செய்பவர்களின் வேளாண்மை வருமானமும் வரிக்குட்படுத்தப் பட வேண்டும். நிதி மோசடி செய்பவர்களின் தண்டனைக்காலம் ஏழாண்டுகள் மட்டுமே. அவை 14 ஆண்டுகளாக மாற்றப்பட வேண்டும். லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டம் மீண்டும் சீர்திருத்தப்பட்டு, ஊழல் குற்றச் சாட்டில் மாட்டும் அதிகாரிகள் மீது, சர்ஜிகல் ஸ்டரைக் நடத்த, சி.பி.ஐ / விஜிலன்ஸ் நிறுவனங்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இன்று நாடெங்கும் நடத்தப்படும் ரெய்டுகள், அரசியல் பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும். இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அனைத்து சாத்தியங்களும், மெஜாரிட்டி அரசின் தலைவரான மோதியின் கைகளில் உள்ளன என்பதுதான் நிஜம். செய்வாரா என்பது கோடிப்பொன் பெரும் கேள்வி!

பாலா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74

$
0
0

[ 22 ]

பன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு  ஏழாகப்பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப்பிரிந்து அத்தனை அங்காடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்திமாற்றிக்கொண்டனர்.

கின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய கற்கள். ஆனால் அவற்றை மதிப்பற்றவை என்று சொல்லி விலக்கினால் அவர்கள் அதைப்போன்றவைதான் என எண்ணி அருமணிகளையும் வீசிவிடக்கூடும் என்பதனால் எல்லா கற்களையும் ஒரே விலைக்கு அவர்களிடம் பெற்றுக்கொண்டனர் வணிகர். அவர்களின் ஈட்டல்கள் அருமணிகளில் மட்டுமே இருந்தன. ஒரு அருமணி நூறு எளியகற்களுக்கான இழப்பை ஈடுசெய்தது.

அருமணிகள் கிடைத்ததும் அவற்றை பாலில் இட்டு பால்நிறம் மாறுவதைக்கொண்டும், சிறுபேழைக்குள் இட்டு மூடி துளைவழியாக நோக்கி உள்ளே ஒளி எஞ்சுவதைக்கொண்டும் ஒளியோட்டத்தை மதிப்பிட்டனர். சிறிய மரப்பெட்டிக்குள் அவற்றை வைத்து ஊசித்துளைவழியாகச்செல்லும் ஒற்றை ஒளிக்கீற்றை அதன்மேல் வீழ்த்தி பிறிதொரு துளைமேல் விழிகளை அழுத்திவைத்து நோக்கி அவற்றின் உள்நீரோட்டத்தை கணித்தனர். பூனைக்கண்போல எருமையின் உள்விழிபோல பனித்துளிபோல அனல்பொறிபோல உள்ளிருந்தும் வெளியிலிருந்தும்  வண்ணங்கள் கொண்ட மணிகள்.

மலையேறிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட பீதர்குழுக்கள் அனைத்துக்குமே அருமணிகள் வாய்த்தன. ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே தெய்வவிழிகளைப்போன்ற மணிகள் அமைந்தன. “அருமணியின் மதிப்பு என்பது அதைப்போன்ற பிறிதொன்றில்லை என்பதனால் உருவாவதே. தெய்வத்தன்மை என்பது பிறிதொன்றிலாமை மட்டுமே” என்று பாணன் சொன்னான். “அரியசொல் போல” என்று முதியபீதர் சேர்த்துக்கொண்டார். “சொல்வதற்குரிய தருணத்தில் சொல்வதற்குரிய முறையில் சொல்லப்பட்ட சொல் முடிவின்மையை ஒளியென தன்னுள் சுருட்டிக்கொண்டது. அது கூழாங்கற்கள் நடுவே அருமணி.”

சிறந்த கல் கிடைத்த பீதர்குழு அதை அறிவிக்கும்பொருட்டு தங்கள் சிறுகடைக்குமேல் அனலுமிழும் முதலைநாகத்தின் கொடி ஒன்றை பறக்கவிட்டது. அதைக்கண்டதும் வணிகக்குழுக்களில் பாராட்டொலிகள் எழுந்தன. சிறுவணிகர்கள் வந்து அந்த அருமணிகொண்டவனிடம் தங்களுக்கு அவன் அன்றைய உணவையும் குடியையும் அளிக்கவேண்டும் என கோரினர். அவனைச் சூழ்ந்துநின்று அவன் குலத்தையும் வணிகக்குழுவையும் வாழ்த்தி கூவினர். பாணர் அந்த அருமணியைப்பற்றி அப்போதே கவிதை புனையத்தொடங்கினர். அதன் கதைகளை அவர்கள் காற்றினூடாக மொழியில் அள்ளி எடுத்து வைத்தனர்.

உச்சிப்பொழுது கடந்ததுமே மலைகளின்மேல் முகில்திரை சரிந்து இருண்டு மூடியது. குளிர்ந்த ஊசிகள் போன்ற நீர்த்துளிகள் காற்றில் வந்து அறைந்தன. கடைகளை மூடிவிட்டு தோல்கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை வைத்துக்கொண்டு சூழ்ந்தமர்ந்து கிழங்குகளையும் ஊனையும் சுட்டுத்தின்றபடி தேறல் அருந்தினர். அதன்பின் அருமணிகளைப்பற்றியே பேசினர். அப்படியே விழுந்து துயின்று கனவுகண்டு எழுந்தமர்ந்து உளறி உடல்நடுங்கினர். “அருமணிகளுக்குக் காவலாக இரு தேவர்கள் உள்ளனர். பகற்காவலன் விழித்திருக்கையில் நமக்கு இனிய எண்ணங்களை அளிக்கிறான். இரவுக்காவலன் துயிலில் வந்து கொடுந்தோற்றம் காட்டி அச்சுறுத்துகிறான்” என்றனர் பாணர்.

அருமணிகளை கடல்வரை கொண்டுசென்று சேர்ப்பது பெரும்பாடு. அவர்களிடம் அருமணி இருக்குமென்பதை அனைவரும் அறிந்திருப்பர். வில்லவர்கள் சூழ சென்றாலும்கூட வழியெங்கிலும் கொள்ளையர்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சரளமரத்தின் சிறுகொட்டையில் துளையிட்டு உள்ளே இருக்கும் பருப்பை அகற்றிவிட்டு அதில் அருமணிகளை இட்டு பசையிட்டு ஒட்டி பணியாட்களைக்கொண்டு விழுங்கச்செய்வார்கள். ஒவ்வொருநாளும் அவன் மலத்திலிருந்து அதை திரும்ப எடுத்து கழுவி இன்னொரு கொட்டைக்குள் இட்டு மீண்டும் விழுங்கச்செய்வார்கள்.

அருமணி எந்த ஏவலனின் குடலுக்குள் இருக்கிறதென அவ்வணிகக்குழுவிலேயே பிற ஏவலருக்கு தெரிந்திருக்காது. பிறரிடம் சொல்லாமலிருப்பதே அந்த ஏவலனின் உயிருக்கும் உறுதியளிப்பதென்பதனால் அவனும் பகிர்ந்துகொள்வதில்லை. வணிகக்குழுக்களைத் தாக்கும் கொள்ளையர் அவர்கள் அனைவரையும் கொன்று அத்தனைபேர் வயிற்றையும் கிழித்துப் பார்ப்பார்கள். அவ்வாறு பெருவாய் என வயிறு திறந்து கிடக்கும் பிணங்களை அவர்களனைவருமே செல்லும் வழிகளில் கண்டிருந்தனர்.

அவ்விதை எவ்விதமேனும் திறந்தால் தன் உடலுறுப்புகளை வைரக்கூர் வெட்டிச்செல்லுமென்றும் குருதிவார விழுந்து இறக்கவேண்டியிருக்குமென்றும் அதை விழுங்கியவன் அறிந்திருப்பான். தன்னை பாம்பு உறையும் புற்று என்றும் வாளிடப்பட்ட உறை என்றும் உணர்வான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை காணமுடியும். அவன் சொல்லடங்கி தனித்திருப்பான். தன் உடலை எடைகொண்டதைப்போல கொண்டுசெல்வான். தன்னை ஓர் அரும்பொருளென ஒருகணமும் நச்சுத்துளியென மறுகணமும் உணர்ந்துகொண்டிருப்பான். கனவுகண்டு எழுந்தமர்வான். நடுங்கி அதிர்ந்து மெல்ல அமைந்தபின் இருளுக்குள் நெஞ்சைத் தொட்டு புன்னகைசெய்வான்.

தன் உடலில் இருந்து அருமணி வெளியே சென்ற முதற்கணம் ஆறுதலடைவான். சற்றுநேரத்திலேயே தனிமைகொண்டு பதைக்கத் தொடங்குவான். அதை மீண்டும் விழுங்கும்வரை தன்மேல் சூழும் பொருளின்மையை அவனால் தாளமுடிவதில்லை. மீண்டும் அது தன் வயிற்றை அடைந்ததும் முகத்தில் நிறைவு தெரிய நீள்மூச்சுவிட்டு அமைவான். “சுடர் ஏற்றப்படும்போதே அகல். திரியணைந்தபின் அகலில் குடியேறும் மூத்தவளின் வெறுமை” என்று அதை ஒரு பாணன் சொன்னான்.

அருமணி சுமப்பவர்களை முத்துச்சிப்பிகள் என்றழைத்தனர். சூக்திகர்களுக்கு வணிகக்குழுக்களில் பெருமதிப்பிருந்தது. மணியை கையளித்ததும் அவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். ஆனால் கைநிறையப்பெற்ற பொற்காசுகளை பொருளற்ற ஓடுகளாகவே அவர்களால் காணமுடியும். அந்த ஆண்டுமுழுக்க அவர்கள் தாங்கள் சூக்திகர்களாக இருந்தோம் என்பதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அருமணி தங்களுக்குள் இருந்தபோது உயர்ந்த எண்ணங்களுக்கு ஆளானதாகவும் தெய்வங்களால் சூழப்பட்டிருந்ததாகவும் சொல்வார்கள். நாளடைவில் அதை அவர்களே நம்பத் தொடங்குவார்கள். உயர்ந்த எண்ணங்களால் உள்ளம்நிறையப்பெற்று மேலெழுவார்கள். ஓர் அருமணி இருந்த இடத்தை நிரப்ப எத்தனை அரியவை தேவை என எண்ணி வியப்பார்கள்.

ஆனால் கின்னரஜன்யர்களுக்கு அவை பொருளற்றவை என்றே தோன்றின. கின்னரர்களிடமிருந்து அவற்றைப்பெற்று சிறிய குலுக்கைகளில் போட்டு கூரைமேல் கட்டிவைத்தனர். அவை நஞ்சு என்றும் குழவியர் கையில் கிடைக்கலாகாதென்றும் அவர்கள் எண்ணியமையால் எப்போதும் இல்லங்களின் முகப்பில் உத்தரங்கள் எழுந்துசந்தித்த கூம்பின் உச்சியில் கணுமூங்கில் சாற்றிவைத்து ஏறிச்சென்று எடுக்கும் உயரத்திலேயே வைத்திருந்தனர். அவற்றை அவர்களுக்குள் எவரும் திருடுவதில்லை என்பதனால் கண்காணிப்பு இருப்பதுமில்லை. அர்ஜுனன் ஊரினூடாக தோளில் காவடியில் நீர்க்குடுவைகளை சுமந்து சென்றுகொண்டிருந்தபோது அவனுக்கு அனல் அளித்த பெண் திண்ணையிலிருந்து எட்டிநோக்கி கைதட்டி அழைத்து “குறிமரமே, ஒருகணம் இங்கு வருக!” என்றாள்.

அவன் அருகே  சென்றபோது அவள் பாறைமுகடுவளைவில் மலைத்தேன்கூடு என தொங்கிய உறியை சுட்டிக்காட்டி “அந்தக் குலுக்கையை எடுத்துத்தர இயலுமா?” என்றாள். அருகே இருந்த நீண்ட கணுமூங்கிலை சுட்டிக்காட்டி “இதனூடாகத்தான் ஏறிச்செல்லவேண்டும்… எங்கள் மைந்தர் எளிதாக ஏறுவார்கள்” என்றாள். அர்ஜுனன் சுற்றும் நோக்கியபின் அருகே சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சிறுகோடரி ஒன்றை எடுத்து அதன் கட்டுக்கயிற்றை நோக்கி வீசினான். குலுக்கை அறுந்து கீழே விழுந்தபோது ஒற்றைக்கையால் அதை ஏந்தி பிடித்துக்கொண்டான். அவள் வியப்பொலி எழுப்பி நோக்க அதை நீட்டி “கொள்க!” என்றான்.

அவள் “எப்படி அத்தனை கூர்மையாக எறியமுடிந்தது?” என்றாள். “ஒருமை” என்றான் அர்ஜுனன். “எப்படி?” என அவள் மீண்டும் கேட்டாள். “படைக்கலங்கள் அனைத்தும் கூரியவை. கூர்மை என்பது ஒருமுனை நோக்கி ஒடுங்குதல்” என்றான் அர்ஜுனன். “விழிகளும் கைகளும் சித்தமும் ஒற்றைப்புள்ளியென்றாவது இது.” அவன் திரும்பிச்செல்ல முயன்றபோது அவள் அக்குலுக்கையை தரையில் கொட்டினாள். அதில் ஒளிவிடும் மலரிதழ்கள்போல நீலமும் பச்சையும் சிவப்பும் நீர்மையுமாக வண்ணம் மின்னும் அருமணிகள் பரவின. அவள் அவற்றிலிருந்து கைப்பிடி அள்ளி “இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

“எனக்கா?” என்றான். “நான் செய்தது சிறிய பணி, இளையவளே.” அவள் கன்னங்கள் குழியச் சிரித்து “இவற்றின்பொருட்டு அல்லவா இத்தனை மலையேறி வருகிறீர்கள். உங்களுக்கு அளிக்கவேண்டுமென நினைத்தேன்” என்றாள். “நன்று, நான் இதை ஏற்கப்போவதில்லை. எனக்கு பொருட்களில் நாட்டமில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “பொருளுக்கில்லை என்றால் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்று அவள் கேட்டாள். “ஓர் இடத்திற்கு நான் செல்வது முந்தைய இடத்திலிருந்து விலகும்பொருட்டு மட்டுமே” என்றான் அர்ஜுனன்.

அவள் ஒருகணம் கழித்து சிரித்து “மிகச்சரியான சொற்களை எடுக்கிறீர்கள்” என்றாள். மீண்டும் சிரித்து “எண்ணவே வியப்பாக இருக்கிறது, இப்படியன்றி வேறு எப்படியும் இதை சொல்லிவிடமுடியாது” என்றாள். அர்ஜுனன் “நான் சொல்வலன் என்று சொல்லமாட்டேன். ஆனால் எந்தப்படைக்கலத்தையும் முழுதுறக் கற்பவன் சித்தமும் சொல்லும் கூர்கொள்ளப்பெறுகிறான்” என்றான். “ஏன்?” என்றாள் அவள். அவனிடம் பேசமட்டுமே அவள் விழைகிறாள் என்பதை விழிகள் காட்டின. முகம் அவன் காதல்மொழிசொல்லக் கேட்பவள்போல மலர்ந்திருந்தது. கண்களில் சிரிப்பென தவிப்பென ஓர் ஒளி அலையடித்தது.

“புறப்பொருள் என்பது உள்ளமே” என்றான் அர்ஜுனன். “புறப்பொருளில் நாம் ஆற்றும் எதுவும் உள்ளத்தில் நிகழ்வதே. மரத்தை செதுக்குபவன் உள்ளத்தை செதுக்குகிறான். பாறையை சீரமைப்பவன் உள்ளத்தையே சீரமைக்கிறான். படைக்கலத்தை பயில்பவன் உள்ளத்தையே பயில்கிறான். படைக்கலம் கைப்படுகையில் உள்ளமும் வெல்லப்படுவதை அவன் காண்பான்.” ஏன் அதை அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என அவன் வியந்தான். அறியா மலைமகள். அவளிடம் ஏன் மதிப்பை ஈட்ட விழைகிறேன்? இல்லை, இத்தருணத்தை திசைதிருப்ப விரும்புகிறேன். இச்சொற்கள் வழியாக இப்போது இருவர் நடுவே நுரைகொண்டெழும் விழைவை மூடிப்போர்த்திவிட முனைகிறேன்.

“ஆம், அதை நானும் உணர்ந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “வெண்ணை திரட்டுகையில் கலங்கி நுரைகொள்வது உள்ளம். திரண்டுவருவது உள்ளறிந்த ஒரு மெய்.” அவன் அவளை வியப்புடன் நோக்கினான். அவளை சற்றுமுன் எளிய மலைமகள் என அவன் கருதியதை எண்ணிக்கொண்டான். அப்படியல்ல என்று அவன் உள்ளூர அறிவான். இல்லையென்றால் அவன் அவள் முன் தன் திறனை காட்டியிருக்கமாட்டான். கணுமுளைமேல் ஏறி அக்குலுக்கையை எடுத்தளித்தபின் விலகிச்சென்றிருப்பான். அவள் அவனை அழைத்த குரலின் முதல்துளியிலேயே அவளை அறிந்திருக்கமாட்டான்.

“நன்று” என அவன் முழுமையாக தன்னை பின்னிழுத்துக்கொண்டான். “படைக்கலத்தேர்ச்சி என்பது உள்ளம் தேர்வதே. சொல்லோ அம்போ வெறும் கருவிதான்.” அவன் தலைவணங்கி தன் காவடியை தோளிலேற்றிக்கொண்டான். அவள் மேலும் பேசவிழைபவள்போல அவனுக்குப்பின்னால் வந்தாள். அவள் கைகளின் விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடுவதைக் கண்டதும் அவன் நெஞ்சு மீட்டப்பட்டது. விழிகளை விலக்கி “வருகிறேன்” என்றான்.

“இந்தக்கற்களை இவர்கள் எதற்காக பெற்றுச்செல்கிறார்கள்?” என்றாள் அவனுடன் வந்தபடி. “இவற்றை யவனர் வாங்கிக்கொள்கிறார்கள்” என்றான் அர்ஜுனன் நடந்துகொண்டே. “ஏன்?” என்றாள். “இவை அணிகலன்கள்” என்றான். அவள் “எங்கள் பாணர் பிறிதொன்று சொன்னார். இவை தெய்வங்களின் விழிகள். இவற்றை அவர்கள் நெற்றியில் சூடும்போது பிறிதொரு நோக்கு கொள்கிறார்கள். அர்ஜுனன் நகைத்து “ஆம், அவ்வாறும் சொல்லலாம்” என்றான். அவள் மேலும் தொடர்ந்தபடி “அவர்கள் அதன்பின் கின்னரரை காணமுடியும். அவர்களிடம் பேசமுடியும்” என்றாள்.

“ஏன், இந்த அருமணிகள் உங்களுக்கும் விழியாகலாமே?” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இப்போதே கின்னரர்களிடம் பேசமுடியுமே? எங்களுக்கு இவ்விழிகள் தேவையில்லை. எங்கள் விழிகள் இந்தக் கற்களைவிட அரியவை.” அவன் அறியாமல் அவளுடைய பச்சைநிறக் கண்களை நோக்கியபின் புன்னகையுடன் “ஆம்” என்றான். “உங்களுக்கும் இவ்விழிகள் தேவையில்லை. நான் உங்கள் விழிகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவை மற்றவர்களின் விழிகளைப்போன்றவை அல்ல. அவை பச்சைநீல வண்ணம் கொண்டிருக்கவில்லை. கன்னங்கரிய மணிக்கல் போலிருக்கின்றன. அவற்றின் ஒளி ஆழமானது.”

அவன் மெல்லிய திணறலொன்றை அடைந்தான். அவளை தவிர்த்துச்செல்ல விரும்பினான். அவள் மேலும் உடன் வந்தபடி “உங்கள் உடலெங்கும் இருக்கும் வடுக்களும் விழிகளைப்போல ஒளிகொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் நோக்கு இருக்கிறது. நீங்கள் திரும்பிச்செல்லும்போதும் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் விரைந்து காலடிகளை எடுத்துவைத்தான். அவள் அவனுடன் வந்தபடி “விண்ணவர்க்கரசன் உடலெங்கும் விழிகொண்டவன் என்கிறார்கள். அவரை எண்ணாமல் உங்களை நோக்கமுடியவில்லை” என்றாள். அவன் எவரேனும் நோக்குகிறார்களா என விழியோட்டினான். எங்கும் முகங்கள், ஆனால் எவையும் நோக்கவில்லை.

“கண்ணோட்டமில்லா கண்கள் புண்கள் என்கின்றனர். புண்கள் கண்களாகுமென்றால் நீங்கள் கனிந்திருக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் “புண்களினூடாக மானுடரை நோக்க கற்றுக்கொண்டேன்” என்றான். “ஆம், அப்படித்தான் நானும் எண்ணினேன்” என அவள் உவகையுடன் மெல்ல குதித்தபடி சொன்னாள். அவள் அணிந்திருந்த கல்மணிமாலைகள் கூடவே ஒலித்து பிறிதொரு சிரிப்பொலியெனக் கேட்டன.

“நீங்கள் என் குடில் வழியாகச் செல்வதை நோக்குவேன். உங்கள் விழிகளெல்லாம் என்னை நோக்குவதைக் காண்பேன்” என்றாள். பின்னர் சிரித்தபடி “இங்குள்ள அத்தனை பெண்களும் உங்களைத்தான் நோக்குகிறார்கள் என்று அறிவீர்களா?” என்றாள். “பெண்களை நான் கடந்துவந்துவிட்டேன், இளையவளே” என்றபின் அர்ஜுனன் தன் கூடாரம் நோக்கி சென்றான். அவள் அங்கேயே நின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்நோக்கை அவன் தன் உடலால் கண்டான். மலைமகள்களுக்கு அச்சமும் நாணமும் மடமும் பயிற்றுவிக்கப்படவில்லை. அவையில்லாத இடத்தில் வெற்றுடல்போல் வெறும்வேட்கையே எழுந்து நின்றது. ஆனால் அது உளவிலக்களிக்கவில்லை. தூயதென இயல்பானதெனத் தோன்றியது. அதன்முன் அணிச்சொற்களும் முறைமைகளும் பொருந்தா ஆடைகளெனப் பட்டன.

[ 23 ]

அர்ஜுனன் கூடாரத்திற்குள் வேட்டையாடிக் கொணர்ந்த பறவைகளை சிறகு களைந்துகொண்டிருந்தபோது முதியபீதர் உள்ளே வந்தார். சிறகுபோன்ற கைகள் கொண்ட ஆடையை அணைத்துக்கொண்டு அவனருகே அமர்ந்தார். அவன் அப்போதுதான் அவரைக் கண்டு வணங்கினான். அவர் அவனை சுருங்கிய கண்களால் நோக்கி “நீங்கள் பேசிக்கொண்டு வருவதை கண்டேன்” என்றார். அவர் சொல்வதென்ன என அவன் உடனே புரிந்துகொண்டான். பேசாமல் தலையசைத்தான்.

“நான் உன்னிடம் எச்சரித்தேன்” என்றார் அவர். “நான் அத்துமீறவில்லை” என்றான் அவன். “எல்லைகள் மீறப்பட்டுவிட்டன. அதை நெடுந்தொலைவிலேயே எவரும் காணமுடியும்” என்றார். “ஆண்கள்கூட மறைத்துக்கொள்ளமுடியும். பெண்களின் உடல் அனைத்தையும் காட்டுவது.” அர்ஜுனன் “அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “இல்லை, இம்முறை நீ தெளிவாகவே நீ யார் என அவளுக்குக் காட்டினாய்” என்று அவர் சொன்னார். அவன் புருவம்சுருங்க அவரை பார்த்தான். “உன் வில்திறனை நீ காட்டியதற்கு பிறிதேதும் நோக்கமில்லை. மயில் தோகைவிரிப்பதன்றி வேறல்ல அது.”

“இங்கு எவரும் நீ யாரென அறிந்திருக்கவில்லை, நான் அறிவேன். மும்முறை நான் கங்கையினூடாக பயணம்செய்திருக்கிறேன்” என்றார். அவன் பெருமூச்சுவிட்டான். “ஏன் இக்கோலத்தில் இருக்கிறாய் என நான் அறியேன். ஆனால் நீ எங்கும் உன்னை ஒளித்துக்கொள்ள முடியாது. விண்ணவனாகிய உன் தந்தையின் பெருவிழைவை உடல் முழுக்க கொண்டவன் நீ. உன் விழிகளைக் கண்ட பெண்கள் அக்கணமே அனல்கொள்வார்கள்” என்று அவர் சொன்னார். “ஒரு சொல்லும் இன்றியே அந்தப்பெண் அதை அறிந்துகொண்டிருப்பாள் என நான் உணர்ந்தேன்.”

“ஆம், அவள் கூரியவள்” என்றான் அர்ஜுனன். “இளையவனே, அக்குலத்திலேயே கூரியவள்தான் உன்னை நோக்கி வருவாள். வான்நாரைகளில் விசைமிக்கதே முதலில் பறக்கும்” என்று அவர் சொன்னார். “அவளில் எழுவது இக்குடியின் எல்லைகளை மீறவிரும்பும் ஒன்று. அது அவள் குருதியில் நுரைக்கிறது. அது மிகமெல்லிய விழைவாக தன்னை வெளிப்படுத்தினால் இனிய நகையாகவும் அழகிய சொல்லாகவும் எழலாம். ஆனால் உள்ளே இருப்பது காலப்பெருக்கை நிகழ்த்தும் விசை. அதையே ஆற்றலன்னை என வழிபடுகின்றனர். அவளுக்கு கை ஆயிரம். நா பல்லாயிரம். விழி பலப்பல ஆயிரம். பெருங்கடல் அலை என வந்து உன்னை அவள் இழுத்துச் சுருட்டிச் சென்றுவிடுவாள்.”

அர்ஜுனன் “ஆம், அவளுடைய விழைவை நான் உணர்கிறேன்” என்றான். “பெண்கள் அனைவரிலும் விழைவு இருக்கும். ஆனால் அவை அஞ்சி கட்டுக்குள் நின்றிருக்கும். அவர்களில் ஆற்றல்மிக்கவளே பெருவிழைவை அடைவாள். அவளை அக்கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தடுக்கவும் முடியாது” என்றார் பீதர். “மீறத்துணிபவள் மீறும் தகுதிகொண்டவள் என்பதை ஒவ்வொருமுறையும் காண்கிறேன், இளையபாண்டவனே.”

அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “நான் அதை விரும்பவில்லை” என்றான். “நாங்களும் விரும்பவில்லை” என்றார் அவர். “நீ அதை வென்றுசெல்லக்கூடும். அதைப்போன்ற பலவற்றைக் கண்டவனாக இருப்பாய். ஆனால் நாங்கள் இங்கே நெடுங்காலமாக அமைத்துள்ள இந்த வணிகவலை அறுபடும். மீண்டும் அதை நெய்து சீரமைக்க நெடுங்காலமாகும்.” அர்ஜுனன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “இன்றே கிளம்பிச்செல்க! கீழே சிற்றூர்களில் ஒன்றில் எங்களுக்காகக் காத்திரு. உடனே இங்கிருந்தே எழுந்து விலகு!” என்றார்.  ”அவ்வண்ணமே” என்று அர்ஜுனன் எழுந்து தன் வில்லம்பை எடுத்துக்கொண்டான்.

அவன் கடைக்குச் சென்று தன் முதன்மை வணிகரிடம் ஏனென்று விளக்காமல் முதுபீதரின் ஆணையை மட்டும் சொல்லி விடைபெற்றுக்கொண்டான். தன் பொதியைக்கூட எடுத்துக்கொள்ளாமல் மலைப்பாறைகளின் அரணைக் கடந்து அப்பால் சென்றான். அவன் கிளம்பிச் செல்வதை வேறு எவரிடமும் சொல்லவில்லை. மூடுபனி எழத்தொடங்கியிருந்த பிற்பகல். கடைகளை மூடி பொருட்களை எடுத்து தொகுத்துக்கொண்டிருந்தனர் ஊழியர்கள்.  கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை கொண்டுவைத்துக்கொண்டிருந்தனர் சிலர். அவன் பனித்திரைக்குள் மறைந்தபோது எவரும் நோக்கவில்லை. உருளைக்கற்கள் பரவிய சேற்றுச்சாலையில் அவன் தன் முன் தெரிந்த சில சில எட்டுகளை மட்டும் நோக்கியபடி நடந்தான்.

சாலை வளைவு ஒன்றைக் கடக்கையில் மிகமெல்லிய ஓசையிலேயே அவன் படைக்கலங்களை கேட்டுவிட்டான். உடல் அசைவற்று நிற்க இடக்கைமட்டும் வில்லை தூக்கியது. “அசையாதே” என ஓர் ஒலி பனிக்கு அப்பால் கேட்டது. பட்டுத்திரையில் ஓவியமென கின்னரஜன்யன் ஒருவன் எழுந்துவந்தான். அவன் விழிகளை அவன் சந்தித்தபின்னரே அவனை மானுடனாக எண்ண முடிந்தது. மேலும் நால்வர் சித்திரமெனத் தோன்றி சிலையென முப்புடைப்பு கொண்டனர். முன்னால் வந்தவன் வெறுப்பு நிறைந்த முகத்துடன் “மானுடனே, உன்னை முன்னரே எச்சரித்திருக்கவேண்டும். இங்கு வரும் எவரும் அறிந்தபின்னரே வருவார்கள் என எண்ணியிருந்தோம். பிழையாயிற்று” என்றான்.

அர்ஜுனனின் கண்களையே பிறர் நோக்கி நின்றனர். அவர்களின் கைகளில் கூர்முனை கொண்ட வேல்கள் பாயக்காத்து நின்றிருக்கும் நாகங்களென நீண்டு அசைவற்று நின்றன. “எங்கள் குலமகளிடம் நீ பேசிக்கொண்டிருப்பதை பலர் நோக்கினர். உன்னவர் பலர் வியந்துமிருப்பர். உன் பிணம் இங்கு கிடப்பது அவர்களுக்கு சிறந்த அறிவுறுத்தலென அமையும்” என்றபடி அவன் தன் வேலை தூக்கினான்.

அர்ஜுனனின் விழிகள் வலப்புறம் அசைய அவ்வசைவால் ஈர்க்கப்பட்டு அவன் தோழர்களின் நோக்கு வலப்புறமாக ஒருகணம் சென்று மீள்வதற்குள் அவன் வேல் முனையைப்பற்றி அதை பின்னால் உந்தி அவ்வீரர்தலைவனின் தோளுக்கு கீழிருந்த நரம்புமுடிச்சைத் தாக்கினான். அவன் வலிப்பு கொண்டு கீழே விழுவதை நோக்கி பிறர் கண்கள் சென்று மீள்வதற்குள் அவர்களின் உயிர்நாண் இணைவுகளில் அவன் வேல் முனை பதிந்து மீண்டது. ஈரப்பொதி மண்ணில் பதியும் ஓசையுடன் அவர்கள் விழுந்தனர்.

வலிப்பு கொண்டு வாய்நுரை வழிய கைகால்கள் மண்ணிலிழுபட கிடந்தவர்களை அவர்களின் ஆடைகளாலேயே கைபிணைத்துக்கட்டி இழுத்துச்சென்று ஒரு மரத்தடியில் நீண்டுநின்றிருந்த பாறைக்கு அடியில் கிடத்தினான். அவர்களின் தலைவன் நினைவுமீண்டு “உன்னை விடமாட்டோம். உன் தலையை எங்கள் தெய்வங்களுக்கு முன் படைப்போம்” என்றான். பிறரும் நினைவுமீண்டனர். அவர்களின் விழிகள் அர்ஜுனனை நோக்கின. அவன் கைகளை கட்டிக்கொண்டு அவர்களை நோக்கி நின்றான். பின்னர் திரும்பி ஊர் நோக்கி சென்றான்.

அவர்கள் திகைத்து அவன் செல்வதை நோக்கிக்கிடந்தனர். தலைவன் கட்டுகளை அவிழ்த்து எழும்பொருட்டு உடலை உந்தி திமிறினான். அவன் எழக்கூடுமென்ற ஐயமே இல்லாதவனாக திரும்பி நோக்காமல் அர்ஜுனன் நடந்தான். அவன் முன் பாதை முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தது. அவன் காலடியோசை அதில்பட்டு அவன்மேலேயே வந்து பெய்தது. ஊர் எல்லைக்குள் அவன் நுழைந்தபோது தோல்கூடாரங்கள் அந்திமுகில்கள் என உள்ளே எரிந்த அனல் தெரிய சிவந்திருந்தன. வெளியே எவருமிருக்கவில்லை.

அவன் அவள் இல்லத்தை அடைந்து சிலகணங்கள் நோக்கி நின்றான். பின்னர் வில்லின் நாணில் ஒருகல்லைவைத்து அவள் மூடிய சாளரத்தின் கதவின் மேல் எய்தான். மூன்றுமுறை எய்தபோது அக்கதவு திறந்தது. புதரிலிருந்து மலர்க்கழி ஒன்றை அவன் ஒடித்து வைத்திருந்தான். அவள் மார்பில் அந்த மலர்க்கணை சென்று விழுந்தது. திகைத்து பின்னடைந்து அதை எடுத்து நோக்கியபின்  கதவைத்திறந்தபடி சற்றுநேரம்  காத்திருந்தாள். பின்னர் கதவு மூடியது.

பின்கட்டின் கதவு திறக்கும் ஓசை கேட்டது. அர்ஜுனன் இல்லத்தின் பின்பக்கம் சென்று அவள் வெளியே வந்து சுற்றிலும் பார்ப்பதை கண்டான். பனியிலிருந்து எழுந்து அவள் முன் சென்று நின்றான்.  அவள் அவனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டாள். கன்னங்களில் குழிவிழ  சிரித்தாள். செந்நிற ஒளியுடன் அவளுக்குப்பின்னால் திறந்திருந்த கதவு அவ்வில்லமும் சிரிப்பதைப்போல தோன்றவைத்தது.

அவன் அருகே சென்றபோது நாணம் கொள்ளவோ விழிகளை விலக்கிக்கொள்ளவோ செய்யவில்லை. அவன் அவளை அணுகி இடையை வளைத்து அவளைப் பற்றி தன் உடலுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டு அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்வி முத்தமிட்டான். அவளை உண்ணவிழைபவன்போல அவளில் புகுந்து திளைப்பவன்போல அவளுடனான தொலைவை தவழ்ந்து தவழ்ந்து கடப்பவன் போல.

அவள் விடுவித்துக்கொண்டு “உள்ளே வருக!” என்றாள். “யார் இருக்கிறார்கள்?” என்று அவன் கேட்டான். “யார் இருந்தாலென்ன?” என்று அவள் அவன் காதில் அனல்படிந்த குரலில் சொன்னாள். உள்ளே அனல்சட்டியின் செவ்வொளி பரவியிருந்தது. சுவர்களிலும் கூரையிலும் பதிக்கப்பட்டிருந்த மென்மயிர்த் தோல்பரப்பு அவ்வொளியில் அனல்போலத் தெரிந்தது. அவள் அவனை தன் உடலால் வளைத்து கவ்விக்கொண்டாள். காமம் கொதித்த அவள் மூச்சை அவன் செவிகள் உணர்ந்தன. அவள் உருகும் மணத்தை மூக்கு அறிந்தது. மென்மயிர்த்தோல் பரப்பிய மஞ்சத்தில் அவளுடன் அவன் அமர்ந்தான். உடல்களால் ஒருவரை ஒருவர் இறுதிக்கணத்திலென பற்றிக்கொண்டனர்.

பின்னர் நெடுநேரமென உணர்ந்து விழிப்புகொண்டு எழுந்தபோதுதான் அவன் அவள் பெயரை கேட்டான். “பார்வதி” என்று அவள் மறுமொழி சொன்னாள். அவன் மெல்லிய திடுக்கிடலுடன் அவள் விழிகளை நோக்கினான். அதிலிருந்த அனல் அணைந்து கனிவு நிறைந்திருந்தது. “நான் யார் என நீ கேட்கவில்லை” என்றான். “பெயரையும் குலத்தையும்  மட்டும்தானே இனி அறியவேண்டியுள்ளது?” என்றாள் அவள்.

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்

$
0
0

reception

ஊட்டி நாராயணகுருகுலத்தை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். நித்ய சைதன்ய யதி இருந்த இடம். இப்போது சுவாமி வியாசப்பிரசாத் அவர்களால் பராமரிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் அங்குதான் குருநித்யா காவிய முகாம் நிகழ்கிறது. இவ்வாண்டும் ஏப்ரலில் நிகழ்த்துவதாக இருக்கிறோம்.

குருகுலம் முழுக்கமுழுக்க அறிவார்ந்த தத்துவவிவாதங்கள் மட்டுமே நிகழும் இடம்.பக்திமுறைகள்,மதச்சடங்குகள் ஏதுமில்லை. ஆகவே  அதிக வருகையாளர்கள் இப்போது இல்லை. ஆனால் நிறைய கட்டிடங்கள் இருப்பதனால் பராமரிப்பு சற்று கடினம்

குருகுலத்தைச் சுற்றி உயிர்வேலிதான் இருந்தது. ஆனால் சமீபமாக காட்டெருதுக்கள் உள்ளே வருகின்றன. நண்பர்கள் பலர் அவற்றைப் பார்த்திருப்பார்கள். அவை அவ்வப்போது ஆபத்தையும் விளைவிக்கின்றன அவற்றை உயிர்வேலியால் தடுக்கமுடியவில்லை. ஆகவே ஒரு முட்கம்பிவேலி அமைக்கத் திட்டமிருக்கிறார்கள்.

அதன்பொருட்டு ஒரு நிதிவசூலை சுவாமி வியாசப்பிரசாத் மேற்கொண்டுவருகிறார். குருகுல நெறிகளின்படி ஒரு குறிப்பிட்ட நோக்குடன் மட்டுமே நிதி வசூல்செய்யப்படும். நிரந்தர நிதி அமைக்கப்படாது. ஆகவே எப்போதுமே அன்றாட நிதியில்தான் குருகுலம் செயல்படும்

நிதியுதவி அளிக்கவிரும்பும் நண்பர்கள் அளிக்கலாம். வருமானவரி விலக்கு உண்டு. என் தனிப்பட்ட விண்ணப்பமாகவும் இதைக்கொள்க

 

ஜெ

 

 

Cheques are to be drawn in favor of Narayana Gurukulam

Postal Address:

Swamy Vyasaprasad

Narayana Gurukulam

Fern Hill PO

Nigiris District

Tamilnadu India

 

Bank Transfers can be made to the following account

AC Name: Narayana Gurukulam

Ac No: 10834912288

IFS Code: SBIN 0000891

State Bank of India Branch Udhagamandalam

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புத்தாண்டில்…

$
0
0

2

 

அன்புடன் ஆசிரியருக்கு

 

இந்த வருடத்தை உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கினேன். 2014 டிசம்பரில் முதற்கனல் வாசித்தேன். இந்த மூன்று டிசம்பர்களுக்கு இடையில் நான் வாசித்தவற்றை எண்ணிக் கொள்கிறேன். அதிலும் உங்களுடன் முறையான உரையாடல் தொடங்கியது கீதை உரையை கேட்ட பின்னே என்பதே ஒரு வித பெருமிதத்துடன் என்னால் உணர முடிகிறது. அதன் பிறகு வெய்யோன். வெண்முரசு நாவல் வரிசையில் எழுச்சியும் கொந்தளிப்புமாக வெகு அணுக்கமாக உணர்ந்த நாவல் வெய்யோன். அதன் பிறகு விஷ்ணுபுரம் கொற்றவை ஆகிய நாவல்களை மீள் வாசிப்பு செய்ததுடன் பின் தொடரும் நிழலின் குரல் வெள்ளையானை காடு போன்ற உங்களுடைய மற்ற பெரிய நாவல்களையும் ரப்பர்ஏழாம் உலகம்கன்னியாகுமரி உலோகம் இரவு, கன்னி நிலம், அறம் தொகுப்பு இணையத்தில் கிடைக்கும் மற்ற சிறுகதைத் தொகுப்புகள் சிலுவையின் பெயரால், முன் சுவடுகள், புல்வெளி தேசம் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என பெரும் புனைவுகளில் இருந்து அபுனைவுகள் வரை நீண்டது. மேலும் காண்டீபம் வரை வெண்முரசை மீண்டும் வாசித்தேன்.

 

எதை வாசிக்கலாம் என யார் கேட்டாலும் அவர்களிடம் முதலில் பரிந்துரைக்கும் நூலாக நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் இருந்தது. மேலும் தலைகீழ் விகிதங்களையும் பொன்னியின் செல்வனையும் பள்ளியில் படிக்கும் போது ஒரே நேரத்தில் வாசித்தேன். இரு படைப்புகளுமே என்னை கவர்ந்தன. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை உணர முடிந்தது. அவ்வேறுபாடு என்ன என்பதை புறவயமாக பிறருக்கும் எடுத்துக் கூறும் வகையில் விளக்கிய நூல் நாவல் கோட்பாடு.

 

இவ்வாண்டில் அறிமுகம் செய்து கொண்ட இரு பெரும் படைப்பாளிகள் அசோகமித்திரனும் டால்ஸ்டாயும்தண்ணீர்,  கரைந்த நிழல்கள், இன்று என அவர் படைப்புகளை கால வரிசைப்படுத்தி அடுக்கும் போது ஒரு படைப்பாளியின் பரிணாம வளர்ச்சியை கண் முன்னே காண முடிந்தது. டால்ஸ்டாயின் நாயகர்கள் வழியே அவரின் பரிணாம வளர்ச்சியை காண முடிந்தது. போரும் வாழ்வும் (மொழிபெயர்ப்பு டி.எஸ்.சொக்கலிங்கம்) அன்னா கரீனினா(மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்) புத்துயிர்ப்பு(மொழிபெயர்ப்பு:கிருஷ்ண்ணையா) என அவருடைய பெருநாவல்களையும்  தால்ஸ்தோய் குறுநாவல்களும் சிறுகதைகளும் (மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்) எனும் நூலையும் வாசித்தேன்.

 

கல்லூரியிலேயே சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை வாசித்திருக்கிறேன். அவருடைய பிற நாவல்களான ஜே.ஜே சில குறிப்புகள் மற்றும் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகியவற்றை இவ்வருடம் வாசித்தேன். பிந்தையதே எனக்கு அணுக்கமாக இருந்தது.

 

தமிழின் முன்னோடி படைப்பாளிகள் சிலரையும் இவ்வாண்டு வாசிக்க முடிந்தது. .நா.சுவின் பொய்த்தேவு .சா.ராவின் புத்ர பா.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி .மாதவனின் புணலும் மணலும் ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் வேதசகாயகுமார் தொகுத்த புதுமைபித்தன் சிறுகதைகள் என நவீன தமிழ் இலக்கியத்துக்கு என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

 

அம்மையால் ஊட்டி சந்திப்புக்கு வர முடியாமலாகி பின்னர் கொல்லிமலை சந்திப்பில் கலந்து கொண்டது சிறந்த அனுபவம். மேலும் சங்கரர் உரை காந்தியம் தோற்கும் இடங்கள் சிங்கப்பூர் பயணம் என உங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் jeyamohan.in வழியே ஏறக்குறைய அருகிருந்து காண முடிந்தது.

 

அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல விஷ்ணுபுரம் விருது விழாவின் இரு நாட்கள். குறைந்த நாட்களிலேயே வண்ணதாசனை வெகு நெருக்கமாக உணர முடிந்தது. இரா.முருகன் பவா செல்லதுரை என நிகழ்ச்சியில் பங்கேற்ற படைப்பாளிகளை வாசிக்கவும் விஷ்ணுபுரம் விருது விழா களம் அமைத்தது. கொல்லிமலை மற்றும் கோயம்புத்தூர் சந்திப்புகள் வழியே ஜினுராஜ்,சிவா,சசிகுமார்,ஷாகுல், சுஷில், விஷ்ணு பிரகாஷ், கமலகண்ணன், பிரபு, மகேஷ் (சிலர் விடுபட்டிருக்கலாம்) என பல நண்பர்கள் அறிமுகமாயினர்என் அலுவலக சூழலிலும் கிறிஸ்டி, மணிகண்டன் என சில இலக்கிய வாசகர்கள் இவ்வாண்டு அறிமுகமாயினர்.

 

வெய்யோனில் தீர்க்கதமஸின் மறு ஆக்கம் குறித்து என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டதுடன் என்னுடைய இவ்வாண்டு தொடங்கியது. உக்கிரசிரவஸ் சௌதி குறித்த  சொற்களுடன் இவ்வாண்டு நிறைவுற்றிருக்கிறது. நினைவில் நிறுத்தக் கூடிய மிகச் சிறந்த ஆண்டாக இதனை மாற்றிய உங்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

 

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்

 

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

 

அன்புள்ள சுரேஷ்

 

புத்தாண்டு நினைவின் மிகச்சிறந்த அம்சம் சென்ற ஆண்டை நிறைவுடன் நினைத்துப்பார்ப்பதுதான். நான் அப்படி நிறைவுடன் எண்ணிக்கொள்ளாத புத்தாண்டு ஏதும் சென்ற இருபத்தைந்தாண்டுக்காலத்தில் கடந்துசென்றதில்லை. ஆனால் நான் புத்தாண்டில் சூளுரைகள் எதையும் எடுத்துக்கொள்வதில்லை, ஏனென்றால் வெறுமே ஆசைப்பட்டு செய்யாமல் விடுபவை என ஏதுமில்லை எனக்கு.

 

2016 கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்து நான் ஆற்றிய  சங்கரர் உரையுடன் ஆரம்பித்தது. தொடக்கத்திலேயே ஒரு தீவிரமனநிலையை அது உருவாக்கியது. அப்துல் ஷுகூர் கண்ணூர் அருகே பெடயங்கூரில் தன் டீக்கடையில் நடத்திவரும் இலக்கியச் சந்திப்புக்கு நண்பர்களுடன் சென்றது முதற்பயணமாகவும் உற்சாகமான தொடக்கம்

 

சென்ற ஆண்டில் முக்கியமாக இளையவாசகர் சந்திப்புகள் நிகழ்ந்தன. ஈரோடு, கொல்லிமலை, கோவை, ஊட்டி சந்திப்புகள் மிகமுக்கியமானவை. எனக்கு முற்றிலும் புதிய மிக இளையவயதினரான வாசகர்களை அவை அறிமுகம் செய்துவைத்தன. இந்தவருட விஷ்ணுபுரம் விழா இத்தனை சிறப்பாக நிகழ இந்த இளையவாசகர்களின் வரவு மிக முக்கியமானது. எங்கள் ஓய்வுவிடுதியான ஈரட்டியில் நிகழ்ந்த நண்பர் சந்திப்பு ஓரு சிரிப்புவிழாவாக அமைந்தது.

 

அதன்பின் பயணங்கள். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே ஸ்பிடி சமவெளிப்பயணம். அதன்பின்  பெரிதும் சிறிதுமாக பல பயணங்கள். ஆண்டு முடிவில் கேதார்நாத் பயணம். டிசம்பரிலேயே காகதீய பேரரசின் நிலங்கள் வழியாக ஒரு நீண்டபயணம் ,கிருஷ்னை நதிக்கரை வரை.  இவ்வருடம் மட்டும் இருபத்தைந்துநாட்கள் இமையமலையில் இருந்திருக்கிறேன்

 

சென்ற ஆண்டில் கணிசமான பொழுதுகள் வெளிநாடுகளில் கழிந்தன. ஜூனில் ஓர் ஐரோப்பியப் பயணம் வாய்த்தது. பிரிட்டன், பிரான்ஸ், ரோம், சுவுஸ், ஜெர்மனி வழியாக வந்த பயணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு. அதை ஒரு புனைவுக்காக சேமித்திருக்கிறேன். நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், சதீஷ், சிவா கிருஷ்ணமூர்த்தி, கிரிதரன் ராஜகோபாலன், சிறில் போன்றவர்களுடன் சிலநாட்கள். கனவுபோலிருக்கின்றன இன்று அவை.

 

அதன்பின் இரண்டுமாதம் சிங்கப்பூர். இளமையிலேயே ஓர் ஆசிரியனாக ஆகவேண்டுமென்ற கனவு இருந்தது. அதை நிறைவுசெய்துகொண்டேன். பாகுலேயன்பிள்ளை ஜெயமோகன் என என் அப்பாவின் பெயருடன் இணைந்த என் பெயர் பொறிக்கப்பட்ட அந்த அலுவலக அறை நான் என்றும் நிறைவுடன் நினைவுகூர்வது. சிங்கப்பூரில் வாசகர் சந்திப்பு நிகழ்ந்ததும் மலேசியா சென்றதும் மகிழ்வான நினைவுகள்.

 

வழக்கம்போல ஒவ்வொருநாளும் வெண்முரசு. சென்ற ஆண்டு வெண்முரசின் உச்சங்கள் என நான் நினைக்கும் நாவல்கள் எழுந்தப்பட்டன.  பன்னிருபடைக்களம், சொல்வளர்காடு, கிராதம் ஆகியவை நான் எழுதியவற்றிலேயே செறிவான ஆக்கங்கள்.  கூடவே சிறுகதைகள். இரு தொடர்களையும் ஊடாக எழுதியிருக்கிறேன். குங்குமத்தில் முகங்களின் தேசம். ஜன்னல் இதழில் பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் இரண்டுமே இவ்வாண்டில் நிறைவுற்றன. சுட்டிவிகடனில் வெள்ளிநிலம் தொடங்கியிருக்கிறது.

 

சினிமாவுக்காக எழுதியது, பயணம்செய்தது வேறு. அதுவும் இவ்வாண்டு நிறைவுதருவதாகவே இருந்தது. எந்திரன்2 வருமாண்டின் உற்சாகமான அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.மேலும் மூன்று சினிமாக்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். சினிமாப்பயணங்களாக மட்டும் பத்துமுறை வெளியூர். இறுதியாக மும்பையில் எந்திரன் முதற்தோற்ற வெளியீடு.

 

இறுதியாக விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நிறைந்தது 2016. இதுவரை நிகழ்ந்தாவற்றிலேயே சிறந்த விஷ்ணுபுரம் விருதுவிழா இதுவே. சென்ற ஆண்டு முழுக்க வழக்கம்போல நண்பர்களுடனேயே இருந்திருக்கிறேன். நண்பர்கள் சூழ இருப்பதைப்போல நான் கொண்டாடும் தருணங்கள் வேறில்லை

 

சென்ற ஆண்டின் துயரம் குமரகுருபரனின் மறைவு. இக்கசப்பையும் அளிக்காமல் வாழ்க்கையை நிறைவுசெய்வதில்லை காலம்.தவிர்க்கத்தவிர்க்கத் ஏக்கம் நிறைக்கும் நினைவாக குமரகுருபரன் நின்றிருக்கிறார் என்னுள்

 

வருமாண்டும் உற்சாகமாகவே தொடங்கவிருக்கிறது. ஜனவரி14 முதல் மூன்றுநாள்  கோவையில் திருக்க்குறள் குறித்து ஓரு தொடர்உரை ஆற்றுகிறேன். ஜனவரி இறுதியில் சிலநாள் துபாயில். பிப்ரவரியில் இளையவாசகர் சந்திப்பு நிகழ்த்தலாமென எண்ணம். மார்ச்சில் மலேசியா செல்வதாக உள்ளேன். ஒரு இலக்கியச் சந்திப்பு. இங்கிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். ஏப்ரலில் ஊட்டி இலக்கிய முகாம். இவ்வருடம் ஜூனில் சிரபுஞ்சியில் மழைபார்க்கச் செல்லவேண்டுமென திட்டம். கண்டிப்பாக மேலும் ஓர் இமையப்பயணம்

 

இப்பிறப்பை நிறைவுறச்செய்ய ஒரு வாழ்க்கை போதாது என்னும் உணர்வே இருபத்தைந்தாண்டுக்காலமாக என்னை இயக்கும் விசை.என்னையே பலவாகப்பிரித்துக்கொள்கிறேன். படைப்பாளி, பயணி, சினிமாக்காரன், குடும்பத்தவன்,தனியன் என. எல்லா வகையிலும் இந்த ஆண்டை பெருகிநிறைத்திருக்கிறேன். நன்று தொடர்க

 

ஜெ

 

பிகு

 

எழுதி முடித்ததும் எனக்கே சந்தோஷமாக ஆகி  என்னை நானே பாராட்டிக்கொள்ளும்பொருட்டு கீழே போய்  பாசிப்பருப்புப் பாயசம் செய்து மொத்தத்தையும் நானே குடித்துமுடித்தேன். வீட்டில் யாருமில்லை

பழைய கட்டுரைகள்

 

அதுநீயே 2010

வியாசனின் பாதங்களில் 2014

புத்தாண்டுச் சூளுரை 2015

வரும் ஆண்டும் 2016

புத்தாண்டும் உறுதிமொழியும்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75

$
0
0

[ 24 ]

காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன?” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன?” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா?” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு?” என்றாள். அவன் தலையை அசைத்தபடி புரண்டு அமர்ந்து அவள் திறந்துவைத்திருந்த சாளரத்தினூடாக வெளியே வெண்ணிற வானம் தெரிவதை நோக்கினான்.

அவள் “நீங்கள் கிளம்பலாம். இன்னும் சற்றுநேரத்தில் எங்கள் ஊர் துயிலெழுந்துவிடும்” என்றாள். ஆடையணிந்து மென்மயிர் மேலுடையின் தோல்நாடாவை கட்டாமல் விட்டிருந்தாள். இருகைகளையும் தூக்கி கூந்தலை அள்ளிச் சுழற்றி முடிந்தபடி “இப்போது பனிமேல் ஒளி படர்ந்திருக்கிறது. வெண்திரை. எவரும் பாராமல் கிளம்பிச் சென்றுவிடமுடியும்” என்றாள். அவள் விழிகளை நோக்காமல் அவன் அந்தச் சாளரத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அந்த அறை நீருக்குள் இருப்பதுபோல நெளிந்துகொண்டிருந்தது. காலையொளி சாளரத்தில் எழுந்தபின்னரும் பறவைகளின் ஒலியே இல்லாமலிருப்பது விந்தையாக இருந்தது.

“கிளம்புங்கள்” என்றாள். அர்ஜுனன் “உன் தந்தையும் தமையன்களும் எழட்டும்… அதன்பொருட்டே காத்திருக்கிறேன்” என்றான். ஒரு கணம் அவள் விழிகள் நிலைத்தன. பின்னர் புன்னகையுடன் “நன்று” என்றாள். அர்ஜுனன் “அவர்கள் எவரும் இறந்துவிடமாட்டார்கள்” என்றான்.  “தெரியும்” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள். அர்ஜுனன் “வேறென்ன தெரியும்?” என்றான். “நீங்கள் வெல்வீர்கள்” என்றாள். “எப்படி?” என்று கேட்டபடி அவன் கைகளை தலைக்குமேல் கோத்துக்கொண்டான். “நீங்கள் எப்போதும் வெல்பவர்.”

அர்ஜுனனின் விழிகள் சுருங்கின. அவள் “உங்கள் நடத்தையிலிருக்கும் நிமிர்வு அதைத்தான் காட்டுகிறது. சிலருக்கு ஊழ் அவ்வாறு அமைகிறது, அவர்கள் வெற்றியன்றி எதையும் அடைவதே இல்லை” என்றாள். அவனை அவள் அறிந்துகொள்ளவில்லை என உணர்ந்ததும் அவனுக்கு ஒளிந்திருக்கும் உவகை ஒன்று ஏற்பட்டது. “நேற்று நான் இங்கிருந்து கிளம்பிச்சென்றேன்” என்றான். அவள் “என்னை விட்டுவிட்டா?” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “என்னிடம் கிளம்பிச்செல்லும்படி அறிவுறுத்தினார் வணிகர்தலைவர். செல்லும் வழியில் சிலர் என்னை அச்சுறுத்தினர். அவர்களை வென்றுவிட்டு திரும்பிவந்தேன். ஏனென்றால் அச்சுறுத்தலுக்குப் பணிவது என் இயல்பல்ல.”

“என் தமையனாகத்தான் இருக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். “அவர் இன்னமும் வீடுதிரும்பவில்லை.” அர்ஜுனன் “அஞ்சவேண்டியதில்லை, அப்பாதையில் முதல் நடமாட்டம் தொடங்கும்போது விடுவிக்கப்படுவார். குளிருக்கான ஆடைகளும் அவர்கள் உடலில் இருந்தன” என்றான். அவள் கண்களின் முனையிலிருந்த மெல்லிய நகைப்பு அவனை புன்னகைக்க வைத்தது. “உனக்கு அவரை நான் வென்றது உவகையூட்டுகிறதுபோலும்” என்றான். “இல்லை என்று சொல்வேன் என நினைக்கிறீர்களா?” என்றாள். அவன் நகைத்தான்.

“உண்மையிலேயே பிடித்திருக்கிறது. ஆண்மான்கள் கொம்புகோப்பதை பெண்மான்கள் நின்று  விரும்பி நோக்குவதை கண்டிருக்கிறேன்” என்றாள் அவள். வெளியே குரல்கள் கேட்கத்தொடங்கின. “நன்று, முதற்புலரியிலேயே வணிகர்கள் அவ்வழி சென்றுவிட்டார்கள்” என்றபடி அர்ஜுனன் எழுந்தான். தன் ஆடையை அணிந்துகொண்டு வில்லை வலத்தோளிலிட்டு அம்புத்தூளியை இடத்தோளிலிட்டபடி கதவைத்திறந்து வெளியே சென்றான். அங்கிருந்த இரண்டு முதியபெண்கள் அலறியபடி எழுந்துகொண்டனர். அறைகள் தோலுறையிடப்பட்டவை என்பதனால் ஒலி வெளியே வருவதில்லை என எண்ணிக்கொண்டான். முகப்புக் கதவைத்திறந்து திண்ணையில் இறங்கினான்.

பெண்களின் அலறலோசை கேட்டு எழுந்து திரும்பியவர்கள் உள்ளிருந்து அவன் வருவதை கண்டார்கள். கூச்சல்களுடன் பலர் வேல்களைத் தூக்க அர்ஜுனன் அவர்களை நோக்கி விழிகளை திருப்பவில்லை, ஆனால் அவன் உடல்விழிகள் அவர்களை நோக்கிவிட்டன. முந்தையநாள் அவனிடம் தோல்வியடைந்த முதன்மை வீரன் கையசைத்து அவர்களை தடுத்தான். அர்ஜுனன் நிமிர்ந்த தலையும் இயல்பான நடையுமாக திண்ணை முனையில் சென்றுநின்றான். உரத்த குரலில் “குலத்தோரே, மூத்தவர்களே, நான் இந்த இல்லத்துப் பெண்ணை காந்தர்வமுறைப்படி மணம்கொண்டிருக்கிறேன். ஷத்ரிய குலத்தவனாகிய என் பெயர் அர்ஜுனன். அஸ்தினபுரியின் குருகுலத்து அரசனாகிய பாண்டுவின் மைந்தன்” என்றான்.

அங்கு நின்றிருந்த முதியவர்கள் வியப்பொலி எழுப்பினர். சிலர் அவனைப் பார்க்கும்பொருட்டு முண்டியடித்து முன்னால் வந்தனர். அறைகூவும் குரலில் அர்ஜுனன் சொன்னான் “செவிகூருங்கள்! நீங்கள் திரளாக என்னைத் தாக்கினால் அஸ்தினபுரியின் அரசர் படைகொண்டுவந்து உங்கள் குடிகளை முற்றாக அழிப்பது முறை என்றாகிறது. நீங்கள் இங்கு அமைத்திருக்கும் இந்தப் பாறைக்காவல் எல்லாம் என் தமையன் படைகொண்டுவந்தால் ஒரு பொருட்டே அல்ல என்று உணருங்கள்.” ஒவ்வொரு முகத்தையாக நோக்கியபடி “இல்லையேல் எனக்கு நிகரான ஒரு வீரன் எழுந்து வந்து என்னுடன் போர்புரியட்டும்” என்றான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். “இல்லை, உங்களில் இருவர் என்னிடம் போரிடட்டும்.” அவர்களை நோக்கியபடி அவன் மீண்டும் சொன்னான் “அன்றி ஐவர் போரிடட்டும்.” மெல்லிய நகையமைந்த இதழ்களுடன் மீண்டும் நோக்கியபின் “உங்கள் வீரர் பதின்மர் ஒரே காலத்தில் என்னிடம் போரிடலாம். என் அறைகூவல் இது” என்றான். இளைஞன் ஒருவன் கைகளைத் தூக்கியபடி ஏதோ சொல்ல முன்னால் வந்தான். முதியவர் ஒருவர் அவனைத் தடுத்து “நீர் மாவில்லவராகிய பார்த்தன் என்றால் இங்குள்ள நூறுபேர்கூட உம்முடன் நிகர்நின்று போரிட இயலாது. எங்கள் இளையோரை நீர் கொல்லாமல் விட்டமைக்காக நன்றி சொல்கிறோம்” என்றார்.

கைகளைக் கூப்பியபடி அவர் அவனருகே வந்தார். “உங்கள் மூத்தவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் அரண்களெல்லாம் மானுடர்களுக்கு. காற்றின் மைந்தனுக்கல்ல. நாங்கள் எளியவர்கள், எங்கள் தனிநெறிகளுடன் இங்கு வாழ்கிறோம். அந்நெறிகளைப் பேணும்பொருட்டே மண்ணில் வாழும் மானுடர்களிடமிருந்து எங்களை முற்றிலும் அகற்றிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் முன்பு அம்மானுடரால் அகற்றப்பட்டவர்கள் நாங்கள். சிப்பியில் பிறந்தவர்கள் சிறகு பெற்றது இங்குதான். எங்கள் வாழ்க்கை இங்கு சிறுகச்சிறுக தழைத்துச் செறிந்துள்ளது. சிலந்திவலையை அறுத்துச்செல்லும் கருவண்டுபோல நீங்கள் உட்புகுந்திருக்கிறீர்கள்.  இது முறையா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்க!” என்றார்.

“மூத்தவரே, உங்கள் குலமுறைமைகளையும் அறநெறிகளையும் இறையாணைகளையும் நான் போற்றுவேன். ஆனால் பெண்ணின் கருப்பைக்குமேல் எந்த நெறியும் முற்றாணை கொண்டதல்ல” என்று அர்ஜுனன் சொன்னான். “பெண்ணின் விழைவு என்பது நீர்தேடி மண்ணுக்குள் செல்லும் வேர்போன்றது. அறியவொண்ணாதது. தன் வேட்கையையே விசையெனக் கொண்டு புதுவழி தேர்வது. கிளைகளை வெட்டலாம். அடிமரத்துக்கு கற்சுற்றமைக்கலாம். வேர்களை எவரும் மட்டுப்படுத்துவதில்லை. கட்டற்ற வேர்களே செழித்த மரத்தின் வல்லமை என்பதை உணருங்கள்.”

“உங்கள் பெண்ணைக் கவர நான் இங்கு வரவில்லை. ஆனால் என்னை தடுக்கும்பொருட்டு உங்கள் இளையோர் வந்து சூழ்ந்தபோது அவர்களின் அச்சத்தைக் கண்டேன். அவர்களை எளிதில் வெல்லமுடிந்தபோது அவர்களின் ஆற்றலின்மையைக் கண்டேன். உங்கள் மகளிர் இன்னமும் சிறைப்பட்டிருப்பார்களென்றால் உங்கள் குலம் பாறைமேல் மரமென வேரொடுங்கி தேம்பி அழியும் என்று எண்ணினேன். ஆகவேதான் இங்கே வந்தேன்” என்றான் அர்ஜுனன். “இவள் உங்கள் குலத்தின் அரசி. இவள் கருவில் உங்கள் குடிவழிகள் பாடிப்பரவும் மாவீரர்கள் எழுவார்கள்” என உள்ளே சுட்டிக்காட்டி சொன்னான்.

அங்கே நிகழ்வதை நோக்கி ஊரிலிருந்து ஒவ்வொருவராக வந்து கூடத்தொடங்கினர். குலத்தலைவரை அழைத்துவர சிலர் ஓடினர். “என்ன? என்ன நிகழ்கிறது?” என்றார்கள் சிலர். முதியவர் ஒருவர் அவர்களை கைதூக்கி அமைதிப்படுத்திவிட்டு அர்ஜுனனிடம் “நாங்கள் எங்களை கின்னரர்களுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள், ஷத்ரியரே” என்று உரைத்தார். “எங்களை இங்கு வாழச்செய்தவர்கள் அவர்கள். நீங்கள் மீறியது எங்கள் நெறிகளை அல்ல, அவர்களின் ஆணைகளை. உங்களை தண்டிக்கவேண்டியவர்கள் அவர்கள். நீங்கள் போரிடவேண்டியதும் அவர்களுடன்தான்.”

உடனே “ஆம், ஆம்” என்று குரல்கள் எழுந்தன. “கின்னரர்கள் வரட்டும்… அவர்கள் முடிவு சொல்லட்டும்” என்றனர் சிலர். குலத்தலைவர் “அவர்கள் இனிமேல் வரப்போவதில்லை என நாம் அறிவோம்” என்று கைகாட்டி அவர்களை அடக்கினார். “நாம் இவர்களை நம் பூசகமன்றுக்குக் கொண்டுசெல்வோம். நம் தெய்வங்களுடன் உரையாடுபவர் நமது முதுபூசகர் மட்டுமே. அவர் சொல்லட்டும்.” “ஆம், அதுவே முறை” என்று குரல்கள் எழுந்தன. “அவர் அனைத்துமறிவார். அவர்மேல் எழும் தெய்வங்களின் ஆணை வரட்டும்.”

நான்கு வேல்வீரர்களுடன் குலத்தலைவர் விரைந்து வந்தார். இருவர் ஓடிச்சென்று அவரிடம் நடந்தவற்றைச் சொன்னபடி உடன் வந்தனர்.  வந்ததுமே கைதூக்கி உரத்தகுரலில் “வீரரே, எங்களுடன் பூசகமன்றுக்கு வருக!” என்றார் குலத்தலைவர். “அவளும் வரட்டும்… அவள் ஊழையும் கின்னரரே முடிவு செய்யட்டும்” என்றாள் ஒரு முதுமகள். குலத்தலைவர் “மற்ற வணிகர்கள் அனைவரும் உடனே கூடாரங்களைக் கலைத்து மலையிறங்கட்டும்… நான் ஆணையிட்டேன் என உரை. நம் அரண்கள் பூசனையிட்டு மூடப்படட்டும். கின்னரர் நமக்கிடும் ஆணையை தலைசூடுவோம்” என்றார். நான்கு வீரர்கள் அவருக்குத் தலைவணங்கி ஈட்டிகளுடன் கிளம்பிச்சென்றார்கள்.

அர்ஜுனன் திரும்பி இல்லவாயிலை நோக்க அங்கே பார்வதி கவரிமானின் மென்மயிர்ப்பீலியை தலையணியாகச் சூடி வந்து நின்றிருப்பதைக் கண்டான். அவள் அவன் விழிகளை சந்தித்ததும் புன்னகை செய்தான். அத்தகைய தருணங்களில் பெண்களில் எழும் உறுதியை அவன் பலமுறை அறிந்திருந்தாலும் எப்போதும் எழும் அவ்வியப்பையும் அடைந்தான். அவர்கள் ஆண்களை நம்பியிருப்பதாக தோற்றமளிக்கிறார்கள். ஆனால் அந்தத் துணிவு ஆண்களைச் சார்ந்து உருவாவது அல்ல. எங்கிருந்து அது எழுகிறது என அவன் மீண்டும் தன்னிடமே கேட்டுக்கொண்டான்.

அத்தனை தோற்றநிமிர்வுக்கும் அடியில் அவன் சற்று அஞ்சிக்கொண்டிருந்தான். எதை அஞ்சுகிறோம் என்றே அறியாமலுமிருந்தான். அக்கணம் அவளுடைய அப்புன்னகையைத்தான் பற்றுறுதியாகக் கொண்டிருந்தான். எல்லா தருணங்களிலும் பெண்களின் துணிவை பற்றிக்கொண்டே என் எல்லைகளை கடந்திருக்கிறேன். எல்லைகளைக் கடக்கும்பொருட்டே அவர்களிடம் செல்கிறேன்.

[ 25 ]

முதுபாணன் ஒருவன் கைமுழவை முழக்கி அவர்களை பூசனைமன்றுக்கு இட்டுச்செல்லவிருப்பதை ஊருக்கு அறிவித்தான். அவர்கள் கைகளைத் தூக்கி குரலெழுப்பி அதை ஆதரித்தனர். “செல்க!” என்றார் குலத்தலைவர். அவர்கள் இருவரையும் நடுவே செல்லவிட்டு கின்னரஜன்யர் முன்னும்பின்னும் நிரைவகுத்தனர். முதலில் பாணன் சிறுமுழவை மீட்டியபடி சென்றான்.

அந்த மலைச்சரிவில் அத்தனை இல்லங்கள் இருப்பதை அர்ஜுனன் அப்போதுதான் உணர்ந்தான். தேனடைபோல பாறைகளைக் குடைந்து ஒன்றுக்குமேல் ஒன்றென குகையில்லங்களை அமைத்திருந்தனர். கற்களை அடுக்கி உள்ளே தோற்சுவரமைத்த உயரமற்ற இல்லங்கள் சரிவில் ஒன்றுக்குமேல் ஒன்றென எழுந்திருந்தன. தேனீக்கள்போல அவற்றிலிருந்து மக்கள் இறங்கி வந்து ரீங்கரித்தபடி அவர்களை சூழ்ந்தனர்.

அர்ஜுனன் அப்பெண்களின் விழிகளை நோக்கினான். அவை அவனை நோக்கியபின் அவளைச் சென்று சந்தித்து மீண்டன. கிளர்ச்சியும் ஆவலும் பதற்றமும் கொண்ட விழிகள். ஆனால் அவையனைத்திலுமே ஒரு களிப்பும் இருப்பதை சற்றுகழித்தே அவன் உணர்ந்தான். அவளை திரும்பிப்பார்க்கவேண்டுமென விழைந்து அதை கட்டுப்படுத்திக்கொண்டான். அவள் விழிகளின் களிப்பைத்தான் அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். அவளுடன் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். கண்முன் எழுந்த பலநூறு ஆடிகளில் அவள்தான் பெருகிச் சூழ்ந்திருக்கிறாள்.

அவள் முகம் அப்போது மலர்ந்திருக்கும் என அவன் உய்த்து அறிந்தான். அவள் உடலெங்கும் நடனமென ஒரு துள்ளல் இருப்பதை அணிகளின் ஓசையே காட்டியது. வென்றவளின் ஊரணிக்கோலம் என நடந்துகொண்டிருப்பாள். அவள் கால்கள் நிலம்படுகின்றனவா? அவள் விழிகளுக்கு முன் மானுடர் எப்படி தெரிகிறார்கள்?

அப்போது தோன்றியது அந்தத் துணிவு எங்கிருந்து வருகிறதென்று. ஆண்கள் இழப்பதற்கே அஞ்சுகிறார்கள். நிலத்தை, மரபை, குலத்தை, குடியை, பெயரை, இல்லத்தை. திரும்பிவரும் வழியை உறுதி செய்துகொள்ளாமல் செல்வது எப்போதுமே அவர்களுக்கு இயல்வதல்ல. பெண்கள் கூட்டுப்புழு சிறகு பெற்றதுபோல பெற்றவையும் கொண்டவையும் பூண்டவையுமான அனைத்திலிருந்தும் பறந்தெழுபவர்கள். திரும்பி நோக்காமல் சென்றுவிடும் வல்லமை கொண்டவர்கள். மலையிறங்கும் ஆறுகள். அவர்கள் சென்றடையும் இடம் மட்டுமே சித்தமென எஞ்சுகையில் இழப்பென ஏதுமில்லை.

அந்த எண்ணம் எழுந்ததுமே அவன் இயல்புநிலையை அடைந்தான். அதுவரை இருந்த சிறிய பதற்றம் முழுமையாக விலகியது. ஒரு புதிய எண்ணம் எழுவதைப்போல இன்பமளிப்பது வேறேதுமில்லை. அது தன் கணு ஒன்று முளைப்பதைக் காணும் மரக்கிளையின் இன்பம்போலும். அவனுடைய நடை எளிதாகியது. விழிகளை ஓட்டி அச்சூழலை நோக்கியபடி நடந்தான். அவன் இயல்படைந்ததை அவளும் உணர்ந்ததை அவள் அணியோசை சற்று நிலைத்ததிலிருந்து அவன் உணர்ந்தான். விழிபடும் உணர்வை தோல் எப்படி அடைகிறது என்பது தீராவிந்தை என்று தோன்றியது.

எண்ணியிராத கணத்தில் அவனை ஓர் உணர்வு ஆட்கொண்டது, அப்பெண்ணுடன் அவன் அப்படி முன்னரும் நடந்திருப்பதாக. எங்கே எங்கே என தவித்தலைந்த உள்ளம் பின்பு உணர்ந்தது அவளை அவன் நன்கறிந்திருந்தான் என. ஒரே பெண். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை, சுபகை… வெவ்வேறு உருவம்கொண்டெழுந்து ஆட்கொள்கிறார்கள். அவர்கள் என்றுமிருப்பவர்கள்.

எங்கோ சென்றலைந்த சித்தம் இயல்பாக நீண்டு தொட்ட ஓர் முனை அவனை சிலிர்க்கச்செய்தது. அவள் பெயர் பார்வதி என அவன் நினைத்துக்கொண்டான். மலைமகள். நிலமகளும் அலைமகளும் என்றானவள். திருமகளும் சொல்மகளும் அனல்மகளுமென உரு நிறைந்தவள். அவளை திரும்பி நோக்கினான். அவள் நிமிர்ந்த தலையுடன் புன்னகை நிலைத்த முகத்துடன் நடந்துகொண்டிருந்தாள். ஏதோ களிமயக்கிலென கண்கள் சிவந்திருந்தன.

அவர்கள் பூசனைமன்றுக்குச் சென்றுசேர்ந்தபோது பெருந்திரள் உடனிருந்தது. நான்கு ஊர்களுக்கு நடுவே இருந்த பெரிய பாறைச்சரிவு ஒன்றில் இருந்தது மேலே கூரையில்லாத இறைப்பதிட்டை. அணுகுந்தோறும் நீர்வரிகள் சூடி காட்டெருது என நின்றிருந்த மையப்பாறை தெளிவுகொண்டது. ஆயிரம்பேர் நிற்பதற்கு ஏற்ற பெரிய பாறைப்பரப்பின் நடுவே ஆளுயரத்தில் நின்ற அதன்மேல் புடைப்புச்சிற்பமாக ஏழு கின்னரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பலிபீடமாக போடப்பட்டிருந்த தட்டைக்கல் மேல்  மலர்களும் காலையில் படைத்த அன்னமும் இருந்தன. அவற்றை சிறுகுருவிகள் எழுந்தமர்ந்து கொத்திக்கொண்டிருந்தன. முழவோசையில் அவை எழுந்து வளைந்து மிக அப்பாலென நின்றிருந்த தேவதாரு மரத்தின் இலைத்தழைப்பை அடைந்து புகுந்து மறைந்தன.

இறைபீடத்தின் அருகே கற்பாளங்களை அடுக்கிக் கட்டிய சிறிய இல்லமொன்றிருந்தது. அதனுள் இருந்து முதுபூசகர் எழுந்து வந்து அவர்களை நோக்கிநின்றார். அவர்கள் அருகணைந்ததும் அவர் கைகளை விரித்துக்காட்ட தொடர்ந்து வந்த அனைவரும் அகன்று நின்று பெரிய வட்டமொன்றை சமைத்தனர். குலத்தலைவரும் குடிமூத்தார் எழுவரும் மட்டும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகே சென்றனர். முழவோசை நின்றது. அதுவரை இருந்த அகஒழுங்கை அவ்வமைதி சிதறடிக்க மரம் முறிந்து விழுந்ததும் வானில் தவிக்கும் பறவைகளென நிலையழிந்தன எண்ணங்கள்.

பூசகர் வெண்ணிற மென்மயிர் ஆடை அணிந்து தலையில் வெண்கவரிமானின் பனிக்குச்ச வாலை இறகுபோல் அணிந்திருந்தார். கந்தக மஞ்சளோடிய சுண்ணத்தாலானதுபோன்ற முகம். உலர்ந்த சேற்றுக்குழிபோல் விரிசல்கள் சூழ்ந்த விழிப்பள்ளத்திற்குள் கண்மணிகள் மங்கிய சிப்பி போலிருந்தன. ஒன்றன்மேல் ஒன்றென அணிந்த மயிர்த்தோலாடைக்குள் அவர் உடல் வெறும் எலும்பாலானதுபோல் தோன்றியது. மெல்லிய நடுக்கம் ஒன்று அவர் உடலில் ஓடிக்கொண்டிருந்தது. சிவந்த கீறல்போன்ற உதடுகள் உள்ளடங்கியிருந்தன. “வருக!” என அவர் சொன்னபோது பற்கள் கூழாங்கற்கள்போல் தெரிந்தன.

அவர் கைகாட்டி அவர்கள் இருவரையும் பலிபீடத்தருகே போடப்பட்டிருந்த கல்மணைகளில் அமரும்படி சொன்னார். அர்ஜுனன் அமர்ந்தபின்னர்தான் ஏழு கின்னரர்களின் காலடியில் மல்லாந்துகிடந்த ஊர்ணநாபனை கண்டான். அது அவன் சிலைதானா என மீண்டும் கூர்ந்து நோக்கினான். எட்டு கைகளும் பெருவயிற்றின்மேல் புடைத்த விழிகளும் பற்கள் செறிந்த வாயுமாக கிடந்த ஊர்ணநாபனின் அனைத்து விரல்களிலிருந்தும் எழுந்த சரடுகளை கின்னரர் பற்றிக்கொண்டிருப்பதை மெல்லிய கோடுகளாக செதுக்கியிருந்தனர். அவன் ஆணுறுப்பு வேர்போல மண்ணில் ஆழ்ந்திறங்கியிருந்தது.

பூசகர் அவனை நடுங்கும் தலையுடன் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் திரும்பி குலத்தலைவரையும் பிறரையும் விலகிச்செல்லும்படி கைகாட்டினார். அவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கியபின் விலகிச்சென்றனர். அவனை சற்றுநேரம் நோக்கியபின் பூசகர் மெல்ல முனகினார். பின்னர் “நீர் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரான அர்ஜுனன் என அறிந்தேன்” என்றார். “ஆம்” என்று அவன் சொன்னான். “நீர் என் குடிப்பெண்ணை மணந்ததை முதுதந்தையாக நான் ஏற்கிறேன்” என்று அவர் சொன்னார். “இக்குடி பெருகவேண்டுமென்றால் இது மண்ணுக்கு இறங்கியாகவேண்டும். வேலிகளை உடைத்து இதன் வேர்கள் செல்லவேண்டும்…”

அவர் குரல் முனகல்போல ஒலித்தது. “ஏனென்றால் மேலே செல்ல இடமில்லை. மேலே அவர்கள் இருக்கிறார்கள். கின்னரர்கள். அவர்களின் வாழ்க்கை வேறு. அவர்கள் விழைவதை எல்லாம் வானமே அளிக்கும். அவர்களுக்கு மண்ணே தேவையில்லை.” அர்ஜுனன் அவர் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் உடலின் அனைத்து நரம்புகளும் விசையழிந்து தளர்ந்திருப்பதை உணரமுடிந்தது. “ஆனால் நாங்கள் இங்கு எங்கள் வாழ்க்கையை வாழவில்லை. கட்டுண்டிருக்கிறோம். நாங்கள் அடிமைகள். அவர்களால் வளர்க்கப்படும் விலங்குகள். எங்கள் உடல்களை அவர்கள் ஆளவில்லை. எண்ணங்களில் நிறைந்திருக்கிறார்கள்.”

அவருடைய விழிகள் ஒளிகொண்டபடியே வருவதை தன் உளமயக்கா என அவன் ஐயத்துடன் நோக்கினான். “அவர்கள் முடிவெடுக்கவேண்டும். அவர்கள் ஒப்பாமல் இங்கு எதுவும் நிகழமுடியாது.” அவர்தான் பேசுகிறாரா என அர்ஜுனன் ஐயுற்றான். அவருடைய விழிகள் நிலைகுத்தி நின்றன. இமைகள் அசையவில்லை. “அவர்களை வென்றுவருக… அவர்களை வென்றுவருக! இளவரசே, இக்குலத்தை விடுதலைசெய்க!” என்று அவர் சொன்னார். அவர் குரல் அவ்வுடலில் இருந்து எழவில்லை. சொற்களை அறியாமல் சிறிய இதழ்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. காற்றில் ஏதோ பசையை அளாவுவதுபோல அவர் விரல்கள் அசைந்தன.

அர்ஜுனன் “அவர்களின் படைகளேதும் இங்கில்லையே! ஆண்டுக்கு ஒருமுறைகூட அவர்கள் இங்கு வருவதுமில்லை” என்றான். “ஆம், அவர்கள் எவ்வகையிலும் இங்கில்லை. இளையவரே, இங்கு ஆண்டுதோறும் பொருட்களுடன் இறங்கி வருபவர்களும் அவர்களல்ல” என்றார் பூசகர். “அவர்கள் மேலே இருக்கிறார்கள். நாம் அவர்களை நோக்கவும் முடியாது.” அவர் இல்லை இல்லை என்பதுபோல தலையை அசைத்தார். “அவர்களின் படைக்கலங்களை நாங்கள் அறிந்ததில்லை. அவர்களின் ஒரு சொல்லையேனும் நாங்கள் கேட்டதில்லை. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்தையும் அவர்கள் ஆள்கிறார்கள். இங்குள்ள மரங்களையும் பாறைகளையும்கூட கையாள்வது அவர்களே.”

அர்ஜுனன் அவ்விரல்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அவை எதையோ நெய்கின்றன. “ஏனென்றால் அவர்கள் எங்கள் கனவுகளுக்குள் புகுந்திருக்கிறார்கள். இவையனைத்தையும் சமைக்கும் கனவை எங்களுக்குள் அவர்களே அமைக்கிறார்கள். கனவுவழியாக எதையும் மீறிச்செல்லலாம். இளையவரே, கனவை மீறிச்செல்வது எளிதல்ல மானுடனுக்கு… கனவுகளை அடிபணியச் செய்தவன் கருவுக்குள் நோய்கொண்ட குழவி… கனவுகளே மீறல். கனவுகளே கடத்தல். கனவுகளே ஆக்கல். இளையவரே, கனவுகளும் பிறருடையதென்றானவன் அடிமையென்றறியாமல் அடிமையென்றிருக்கும் இழிசினன்.”

அவர் விரல்களைவிட்டு அவன் விழிகள் முகத்துக்குச் சென்று இயல்பாக மீண்டபோது அவை மெல்லிய சிலந்திவலைச் சரடை பின்னிக்கொண்டிருப்பதை கண்டான். விழிகளை பலமுறை இமைத்து அதை நோக்குமயல் என தள்ளமுயன்றான். ஆனால் மேலும் மேலும் அவை தெளிவடைந்தன. அச்சரடுகள் தரையில் படர்ந்து நீண்டு பனிவெண்மைக்குள் புகுந்து மறைந்தன. அவர் குரல் எழுந்தது. பெரும்பன்றியின் உறுமல்போன்ற ஆழமும் கார்வையும் கொண்ட ஒலி. “இங்கு காத்திருக்கிறேன். இந்த மண்ணின் அடியில்” என்றார் அவர். “சென்று வென்றுவருக… அவர்களை வென்று வருக!”

“நீங்கள் யார்?” என்றான் அர்ஜுனன். அவ்வினாவுடன் இயல்பாக அவன் விழிதிரும்பி ஊர்ணநாபனை நோக்கியது. “அடியிலிருப்பவன். தோற்கடிக்கப்பட்டவன்” என்று அவர் சொன்னார். “என் சரடுகள் அறுபடுவதில்லை…” அவர் முன்னும்பின்னும் உடலை ஊசலாட்டினார். கைகள் மேலே தூக்கி விரிந்தபோது அந்தச் சரடுகள் ஒளியாலானவை என தெரிந்தன. “செல்க… மலையேறிச் செல்க… வென்று மீள்க…” அர்ஜுனன் சித்தம் உறைந்திருக்க அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “நீ வெல்வாய்… நீ வென்றாகவேண்டும்!”

அவன் அப்போதுதான் அவள் இருப்பை உணர்ந்தான். திரும்பி நோக்கியபோது அவள் துயிலில் என விழிசொக்கி அவர் உடலின் ஆட்டத்திற்கிணைய மெல்ல ஆடிக்கொண்டிருப்பதை கண்டான். அவள் அவருடன் அச்சரடுகளால் பிணைக்கப்பட்டிருந்தவள் போலிருந்தாள். அப்படி எண்ணியதுமே அவன் அச்சரடுகளை பார்த்துவிட்டான். “ஆம்” என்று அவன் சொன்னான். “நான் சென்று வெல்கிறேன்.” அவர் தலை சொடுக்கிச் சொடுக்கி திரும்பியது. காற்றில் துழாவிய கைகள் எதையோ வனைந்தன. கலைத்து மீண்டும் அமைத்தன. “ஆம் ஆம் ஆம்” என்றார். “நீ வென்று வருவாய்… நீ வென்று வந்தாகவேண்டும்!”

மெல்ல அவர் வலப்பக்கமாக சரிந்து விழுந்தார். கால்கள் மெல்ல உதைத்துக்கொண்டு அமைந்தன. அவன் பெருமூச்சுடன் உடலை இயல்பாக்கிக்கொண்டான். அருகே பார்வதியும் பக்கவாட்டில் சரிந்து விழுந்திருந்தாள். அவன் அவளைப்பற்றி சற்று உலுக்கினான். அவள் விழித்துக்கொண்டு “என்ன?” என்றபின் பூசகரை நோக்கி திகைப்புடன் “என்ன ஆயிற்று?” என்றாள். “விழித்துக்கொள்வார்” என்றான். “என்ன சொன்னார்?” என்றாள். “நான் இன்று காலை கண்ட கனவை விளக்கினார்” என்றான் அர்ஜுனன்.

அவள் விளங்காமையுடன் நோக்கினாள். “நீ ஒரு பெருஞ்சிலந்தியாக பதினாறு கைகள் விரித்திருந்தாய். உன் கையிலிருந்து எழுந்த ஒளிச்சரடுகளில் நான் சிக்கியிருந்தேன். நீ வெறிகொண்டு நடனமிட நானும் அச்சரடுகளால் ஆட்டுவிக்கப்பட்டு ஆடிக்கொண்டிருந்தேன்” என்றான் அர்ஜுனன். அவள் அவன் சொற்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை. திரும்பி பூசகரை நோக்கி “என்ன சொன்னார்?” என்றாள். “நீ காலையில் இட்ட ஆணையைத்தான்” என்றான் அர்ஜுனன். “என்ன?” என்று அவள் அவனிடம் திரும்பி கேட்டாள். அவன் “நான் இன்றே கிளம்புகிறேன்” என்றான்.

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்


என் சிறுகதைகள் ஒலிவடிவாக

$
0
0

என் சிறுகதைகளை ஒலிக்கோப்புகளாக வாசித்து யூடிய்யுபில் ஏற்றியிருக்கிறார் கிராமத்தான் என்னும் வாசகர். ஆர்வமுள்ள நண்பர்களுக்காக

 

சோற்றுக்கணக்கு

 

கோட்டி

 

ஓலைச்சிலுவை

ஊமைச்செந்நாய்

உலகம் யாவையும்

 

 

தாயார் பாதம்

யானைடாக்டர்

 

 

பெருவலி

மத்துறு தயிர்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்

$
0
0

1

இனிய ஜேயெம் (சீனுவை சந்தித்தேன் அல்லவா :)

பாலாவின் அக்கறை கொண்ட நல்ல கட்டுரையை வாசித்தேன் , சில மாற்றுக்கள் மட்டும் ,

இந்திய அரசு ஆதார் வழி பணமில்லா பிளாஸ்டிக் கரன்சியை கொண்டுவந்துள்ளது , இறுதிப் பயனாளர்கள் பைசா செலவின்றி இணையம் இன்றி பணம் செலுத்த பெற அரசே வழி வகுத்துள்ளது ,

பக்கத்தில் உள்ள நாடார் கடைக்கு போகிறீர்கள் ,அவர் தன் சொல்போனில் 500-1000 ரூபாய் மதிப்புள்ள கைரேகை ஸ்கேனரை இணைத்துள்ளார் ,16 ரூபாய்க்கு அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு (10 ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை ஒருநாளைக்கு) பொருள் வாங்குகிறீர்கள் , உங்கள் ஆதார் கார்ட் அல்லது செல் எண்ணை உள்ளிடுகிறீர்கள் ,கைரேகை வைக்கிறீர்கள் , அதிகபட்சம் 5-8 வினாடிகளில் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து நாடார் கணக்குக்கு மாறிவிடும் ,

உலகின் முதல் மின்னணு வாக்கு எந்திரம் உபயோகிக்கும் தேசம் உலகின் முதல் கைரேகை பாதுகாப்பு பண பறிமாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது ,மிகமிக பாதுகாப்பானது . முழுக்க இலவசம் -இருவருக்கும் , கடைக்காரர் மட்டும் இணையம் கொண்ட செல் வைத்திருந்தால் போதும் . வியாபாரம் தேவை என்கிறவர்கள் வைத்துக்கொள்வர் , பில் இல்லாமல் எல்லாம் எனக்கே என்பவர் ஏய்க்க முயல்வார்(இந்த செயலிக்கு பீம் என அம்பேத்கார் நினைவாக பெயர் வைத்துள்ளார்கள் , காகித நோட்டில் காந்தி ,நவீன இந்தியாவின் அடையாளத்திற்கு அம்பேத்கார் ,மகிழ்ச்சி)

பேடிஎம் போன்ற நிறுவனங்கள் முழுக்க உள்ளூர் மொழிகளில் இயங்குகின்றன ,ரேசன் கடைகள் தமிழில்தான் SMS அனுப்புகின்றன ,எனவே மொழிச்சிக்கல் கடக்க இயலாததல்ல , ( மேலும் உலகின் பீகாரான ஆப்ரிக்காவில் மொபைல் வழி பணப்பறிமாற்றம் மிக வெற்றிகரமாக நடந்துகொண்டுள்ளது ,நடத்துவது நம் ஏர்டெல்.

இரண்டாவதாக விவசாய வருவாய் குறித்து ,இரட்டை தொழில் செய்பவர்க்கு வரி என்றால் இன்று இருக்கும் விவசாய காதலை மக்கள் கைவிடுவர் ,விவசாய முதலீடு சுத்தமாக நின்றுவிடும் , விவசாய வருமான வரம்பு அல்லது எதாவது யோசிக்கலாம் .

அரங்கா

அன்புள்ள ஜெமோ

 

பாலா எழுதிய கடிதம் சிறப்பாக இருந்தது. அவரிடம் மோடியின் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பற்றிய ஆழமான அவநம்பிக்கை இருக்கிறது. அவர் முகநூலில் மிகவும் கடுமையாக எழுதியவற்றை நானும் வாசித்திருக்கிறேன். ஆனாலும் இந்தக்கட்டுரை முக்கியமானது என நினைக்கிறேன்

 

ஒன்றுதான் சொல்லவேண்டும். இந்தமாதிரியான முயற்சிகள் தோல்வியடையலாம். ஆனால் முயற்சிசெய்வதே பாவம் அதன் நோக்கமே ஏழைகளை அழிப்பதுதான் என லபோதிபோ கூப்பாடு போடும்போது போடுபவர்களின் கிரிடிபிலிடி தான் இல்லாமலாகும்

 

ஜெயராமன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆசிரியனின் பீடம்

$
0
0

1

ஜெயமோகன் சார்,

இந்தக் கடிதத்தை எழுத முக்கியக் காரணம் மிகுந்த மன உளைச்சல் தான் என்பதை முன்பே நான் சொல்லிவிடுகிறேன். கட்சிகள் மத்தியில் அரசியல் நடந்தால் அதை பொருட்படுத்தவே மாட்டேன். அது அவர்களுடைய இயல்பு. அரசியல் அவர்களுக்கு அவசியம். நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு தேவையே இல்லை. நான் நம்பிக்கை வைத்திருக்கும் முக்கியமான தரப்பினர் படைப்பாளிகளும், பேராசிரியர்களும் தான். அதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது.

இவர்கள் சந்திக்காமல் இருந்தாலே போதும். அப்படித்தான் இதுவரை இருந்து வந்துள்ளனர். படைப்பாளிகளை பேராசிரியர்கள் மதிப்பதில்லை. படைப்பாளிகள் பேராசிரியர்களை மதிப்பதில்லை. இந்த முரண்பாடு பனிப்போர் போன்று இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த மாநாடு ஒன்றில் இரண்டு தரப்பினரையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை இவர்கள் செய்யாமலே இருந்திருக்கலாம். Pandora பெட்டியை அந்தப் பேராசிரியர் திறந்து விட்டார். பெரும் சண்டை இரண்டு பேருக்கு மத்தியில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் என்னிடம் பேசும் போதெல்லாம் “நாங்க எழுதினா தானே உங்களுக்கு Project” என்று காரணமே இல்லாமல் என்மீது பாய ஆரம்பித்து விடுகிறார். பின்பு தான் தெரிந்தது: இது ஒரு தனிப்பட்ட எழுத்தாளனின் வெறுப்பு அல்ல என்றும் இது போன்று ஒரு சூழ்நிலை நம் மத்தியில் நிலவுகிறது என்பதையும் புரிந்துக் கொண்டேன். சரி, பேராசிரியர்களின் பதில் என்னவென்று இந்தப் பக்கம் வந்தால், அவர்களுடைய வெறுப்பு அதற்கும் அதிகம். “உன்னோட கதைய Syllabusல வைக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதே நான் தான்” என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள்.

எனக்கு இப்போது யார் பக்கம் நியாயம் இருக்கிறது இல்லை என்பது பொருட்டல்ல. பெரும்பாலான ஆசிரியர்களின் வெற்று வார்த்தைகளின் மூடத்தனத்தால் என்னைப் பல ஆண்டுகள் புத்தறிவு பெறாமல் இருளிலேயே வைத்திருந்ததைப் பல ஆண்டுகள் நான் அனுபவித்திருக்கிறேன். எதோ ஓரிரண்டு ஆசிரியர்கள் மாத்திரம் தான் அந்த சிறிய அறிவு தீபத்தை அணையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது படைப்பாளிகளின் தாக்குதல் அந்த ஓரிரண்டு பேர்கள் மீதுதான் தொடுக்கப்படுகிறது. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர்களை நான் சல்லிக் காசுக்கும் மதிப்பதில்லை. ஒரே அதிகாரம், அதட்டல்.

இப்போது என்னுடைய பிரச்சனையே இந்த இரண்டு சாராருக்கும் இடையே உள்ள போராட்டம் தான். இப்போது உங்களிடம் இருந்து எனக்கான பதில் யார் சரியானவர் என்பது கிடையாது. இதற்கான தீர்வை கொடுக்க உங்களால் மாத்திரமே முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். காரணம் நான் உங்களில் ஒரு பேராசிரியருக்கான ஆளுமையைத்தான் முதலில் பார்த்திருக்கிறேன்/படித்திருக்கிறேன். அதற்குப் பின்புதான் என்னைப் பொருத்த வரையில் நீங்கள் ஒரு படைப்பாளி. ஒரு முறை ஆய்வின் மூன்றுத் தன்மைகளைப் பற்றி பேசியிருந்தீர்கள். ஒன்று கோட்பாட்டின்படியான ஆய்வு, இரண்டாவது தனிநபர் சொந்தக் கருத்துக்கள் சார்ந்த ஆய்வு. மூன்றாவது கல்விப்புலத்தின் ஆய்வு என்று. இவை மூன்றில் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வே நம்பகமானது என்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

இப்போது எதிர்காலத்தைப் பற்றிய என்னுடைய முடிவுகள் இரண்டு. ஒன்று மாதசம்பளத்திற்கு இனிமேல் வேலை செய்வது. தால்ஸ்தாயும் வேண்டாம், தாஸ்தாவஸ்கியும் வேண்டாம். இரண்டாவது, புரோமோஷனுக்காக பொறுப்பற்ற கட்டுரைகளை எழுதி என்னுடைய CVயை எப்படியாவது ஐம்பது பக்கங்களுக்கு நீட்டிப்பது. அதற்கு அநேக ஸ்காலர்ஷிப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான முன்மாதிரிகள் எனக்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் ரசனையைக் கொன்று வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொன்று நன்றாக வாழ்வேன். யார் கேட்கப்போகிறார்கள். ஒன்று பணம் பதவிக்காக வாழ்வது இல்லை என்றால் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள என் எதிர்காலத்தைத் தொடருவது. பக்தினை என்னுடைய எதிர்காலக் கனவாக வைத்திருந்தேன். நான் எந்த வழியை தெரிந்தெடுப்பது என்பதை உங்களுடைய பதில் தான் தீர்மானிக்கும். பதில் அளிக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை. குழப்பத்தில் என்னுடைய எஞ்சிய காலத்தைப் பயனற்ற விதத்தில் கழித்துவிடுவேன். நன்றி.

அன்புடன்

*

அன்புள்ள அ

உங்கள் இக்கட்டும் சோர்வும் புரிகிறது. ஆனால் ஒன்று புரிந்துகொள்ளுங்கள், நம் சூழலில் உலகியல் வெற்றிகருதாது வேறெந்த விஷயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்குமே இத்தகைய பெருஞ்சோர்வின் தருணங்கள் உண்டு. சொல்லப்போனால் அதுவே மிகுதி. இலக்கியமே கூட. நீங்கள் வெற்றிபெற்ற இலக்கியவாதிகள் என்பவர்களே கூட மிகமிகச்சிறிய வட்டத்திற்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே. இருட்டில் வழிதுழாவி நடப்பவர்கள் அனைவருமே

ஆனால் எந்தச்செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் அதற்கான நிகர்பலன் ஒன்றுண்டு என்று கூறவே நான் விழைகிறேன். ஏனென்றால் அதைநம்பியே நான் சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கும் சோர்வுக்காலங்கள் வரும். ஆனால் உடனே அந்த மூடுபனியை ஊதி அகற்றிவிடுவேன். ஏனென்றால் அது செயல்கொல்லி. அதில் கொஞ்சமேனும் மறைமுகமகிழ்ச்சி கொள்ள ஆரம்பித்தால் அவ்வளவுதான்.

கல்வித்துறை இன்றிருக்கும் நிலையில் எவ்வகையிலும் நம்பிக்கை கொள்ள இடமில்லை, எல்லா திசைகளிலும் சிறுமை என நான் அறிவேன். ஆயினும் முன்னால் வந்தமரும் மாணவர்களில் எங்கோ ஒரு கண்ணும் காதும் திறந்திருக்கிறது என நம்பவேண்டியதுதான். ஏனென்றால் நான் இன்றுவரை சந்தித்த நல்ல ஆசிரியர்கள் எவரும் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் வெறுமையை உணர்ந்ததில்லை. வணிகர்கள், சினிமாப்பிரபலங்கள், உயரதிகாரிகள், அரசூழியர்கள் என பெரும்பாலும் அனைவருமே சென்றடையும் வெறுமை அது. ஆசிரியர்தொழில்  மட்டும் அதற்கு தன்னை அர்ப்பணித்தவரைக் கைவிடுவதே இல்லை ஆசிரியன் இறுதியில் அவனே சென்று அமரும் ஒரு பீடம் உண்டு.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யாரோ சிலர்!

$
0
0

download

 

ஜெ,

துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியது இது..

வண்ணதாசன் பல விருதுகளைப் பெற்றவர்.. இவ்வாணடு கோவையை சேர்ந்த யாரோ சிலர் நடத்தும் விஷ்ணுபுரம் எனும் அமைப்பின் விருது கிடைத்தது

உங்களைப்பற்றி அவரிடம் எடுத்துச்சொல்ல நான் சென்னை செல்லலாம் என நினைக்கிறேன்

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெயராமன்,

 

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு விமர்சனக்குறிப்பு எழுதினேன். வண்ணநிலவன் கதைகள் சுந்தர ராமசாமி உட்பட பிராமணர்களால் சில குறிப்பிட்ட பிராமணக் கதாபாத்திரச் சித்தரிப்பு காரணமாக கொண்டாடப்பட்டவையே ஒழிய கணிசமான கதைகள் உளவியல்நுட்பமோ பார்வை விரிவோ இல்லாத செண்டிமெண்ட்படைப்புகள்தான் . வார இதழ் கதைகளின் இன்னொரு வடிவங்கள் அவை. தளுக்கான ஆண்பெண்  உறவுகளை மட்டுமே வாசிப்பதில் ஆர்வம் கொண்டு எழுந்துவந்த ஒரு தலைமுறையை அவை கவர்ந்தன –  என்று .. அன்று ஆரம்பித்த மனச்சிக்கல் இது

 

பொதுவாகவே ‘நான்லாம் ஒண்ணுமே இல்லீங்க’ என்று ஆரம்பிக்கும் அதீதப்பணிவு , தன்னிரக்கம் ததும்பும்  எளிமை போன்றவற்றை நடிக்கும் இவ்வகை மனிதர்கள் வன்மங்களை ஆண்டுக்கணக்காக சுமந்துகொண்டு அலைவதைக் காணலாம். இன்றுவரை இந்த பிள்ளைப்பூச்சி படும் பாடை பார்க்கையில் அப்படி கறாராக எழுதியிருக்கவேண்டாமோ என்ற இரக்கமே ஏற்படுகிறது. அது எதையும் முடிந்தவரை கூர்மையாக சொல்லவேண்டும் என்ற வெறி இருந்த காலம். இவர்கள் எழுதும் பல்லிமிட்டாய்களையே சப்பிக்கொண்டிருந்த ஒரு வாசகச்சூழலை உடைக்கவேண்டியிருந்த கட்டாயம். சரிதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை..

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76

$
0
0

[ 26 ]

வெண்பனி ஒளிகொண்டு ஊரை மூடியிருந்த முதற்காலையில் அர்ஜுனன் தன் சிறுகுடிலில் இருந்து கதவைத்திறந்து மென்மயிர்த்தோலாடை உடல்மூடியிருக்க வெண்குஞ்சித் தலையணி காற்றில் பிசிற வெளியே வந்தான். தோளில் வில்லும் அம்புறையும் அமைந்திருந்தன. அவனைக் காத்து அவ்வூரின் அனைத்து இடங்களையும் நிறைத்தபடி கின்னரஜன்யர் நின்றிருந்தனர். அவனைக் கண்டதும் எழுந்த வியப்பொலி பெருமுரசொன்றின் உறுமலின் கார்வையுடன் பரவியது.

பல்லாயிரம் விழிகளுக்கு முன் எழுந்தபோதுதான் அவன் முதன்முறையாக நான் என முழுதுணர்ந்தான். எப்போதுமே விழிகளுக்கு முன்பு நிகழ்ந்துகொண்டிருந்தான் என அப்போது உணர்ந்தான். எவருமறியாத இடங்களின் முழுத்தனிமையில் சென்றுகொண்டிருக்கும்போதுகூட விழியறியா நோக்குகளால் சூழப்பட்டிருந்தான் என்று அறிந்திருந்தான். அணிகொண்டு மேடையிலெழுந்த நடிகனின் தன்னிலை அவனில் நிறைந்தது. சூழ்ந்திருந்த விழிகள் பெருகி திசைவளைவு என்றாயின.

புன்னகையுடன் அனைவரையும் நோக்கி கைகூப்பினான். அவர்கள் அவனுக்கு வாழ்த்துரைக்கவோ வணங்கவோ செய்யவில்லை. விழிகள் திகைப்புடன் பதைப்புடன் நோக்கி அமைந்திருந்தன. அவர்கள் முந்தையநாளிரவே அங்கு வந்து கூடியிருந்தார்கள் என்பதை நனைந்து சொட்டிக்கொண்டிருந்த மென்மயிராடைகள் காட்டின. பலர் உடல்நடுங்கிக்கொண்டிருந்தனர். இரவில் அவர்கள் மூட்டிய அனல்பள்ளங்கள் அணைந்து புகைவிட்டுக்கொண்டிருந்தன. கடுங்குளிரில் அங்கே அவனுக்காக அவர்கள் காத்திருக்கையில் அவன் உள்ளே கம்பளியின் கனலுக்குள் உடல்சுருட்டி கருக்குழவி எனப் படுத்து துயின்றுகொண்டிருந்தான்.

கனவுக்குள் அவன் அப்பெருவலையில் ஆடிக்கொண்டிருந்தான். நடனமிடுகிறதா உயிர்தப்பத் துடிக்கிறதா அப்பூச்சி? அளியது, சிறியது. ஆனால் துடிநடனமிட்டு முடிவதுதான் எத்தனை சிறப்பானது! அகல்சுடரும் அவிநெருப்பும் கொண்டுள்ள பேறு அது. காலையில் முதற்சங்கின் ஒலி கேட்டபோது அவன் பிறைநிலவணிந்த புரிவேணி பறக்க அனலேந்திய ஒருகையும் வேலேந்திய மறுகையுமாக ஊழ்நடனமிட்டுக்கொண்டிருந்தான். ஊழியொலியெனச் சங்கு. நெருப்பொலியும் அறியாநகைப்பொலியும் எழுந்தமைந்த ஆழத்து இருள்.

எழுந்து அமர்ந்து தன்னை தொட்டுத்தொட்டு தொகுத்துக்கொண்டான். இரண்டு கின்னரஜன்யப் பெண்கள் அகன்ற மரக்குடைவுக் கலத்தில் கொதிக்கும் நீருடன் வந்தனர். அதில் மரவுரியை முக்கி ஆவியெழ உடலை துடைத்துக்கொண்டான். அவர்கள் அளித்த ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றென அணிந்துகொண்டான். உடல்கொண்ட அனலுக்கு அத்தனை காப்பு என எண்ணி புன்னகைத்தான். ஒரு பெண் சிரித்தபடி “உங்களை எண்ணி இங்கே அவள் காத்திருப்பதாக சொல்லச் சொன்னாள்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்தான். “அவள் தவத்தால் நீங்கள் வெல்வீர்கள்” என்றாள் இன்னொருத்தி. “வெல்வது அவளே” என்றான் அர்ஜுனன்.

அவள் சிரித்தபோது இன்னொருத்தியும் இணைந்துகொண்டாள். அச்சிரிப்பையா கேட்டேன்? உடனொலித்த முழவு எது? வெளியே முழவொலிகள். மானுடக்குரலிணைந்த முழக்கம். “வெளியே யார்?” என்றான். “குலத்தார்… நீங்கள் செல்லவிருப்பதை அறிந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்.”

முந்தையநாள் முதுபூசகர் எழுந்து வந்து அவன் கின்னரர்நாட்டுக்கு செல்லவிருப்பதைச் சொன்னபோது குலத்தலைவரும் குடிமூத்தாரும் முதலில் பொருள்கொள்ளவில்லை. “இவரை விட்டுவிடலாமென்கிறீர்களா, பூசகரே?” என்றார் குடிமூத்தார் ஒருவர்.

“இவர் சென்றுவிட்டாரென்றால் அவளை என்ன செய்வது? உடன் அனுப்புவதா?” என்றார் குலத்தலைவர். பூசகர் “இவர் மலையேறி கின்னரநாட்டுக்கு செல்கிறார். அங்கே அவர்களை நேர்கண்டு ஒப்புதல்பெற்று திரும்புகிறார்” என்றார். சிலகணங்களுக்குப் பின்னரே அவர்களுக்கு உளம்தெளிந்து “மேலேயா? மேலே செல்வதென்றால்…” என்றார் குலத்தலைவர். “இவர் செல்வார்” என்றார் பூசகர். சற்றுநேரம் நோக்கி நின்றபின் “அவ்வாறே ஆகுக!” என்றார் குலத்தலைவர். திரும்பி நடக்கையில் மெல்ல அச்சொல் அனைவருக்கும் பரவி முழு அமைதி அவர்களை வளைத்து அழுத்திப்பிணைத்தது. அவர்களின் காலடியோசைகள்மட்டும் ஒலித்தன. அவளும் அவனும் மட்டுமே அந்நிரையில் இயல்பான முகமலர்வுடன் நடந்தனர்.

இல்லமுகப்பை அடைந்ததும் குலத்தலைவர் “பூசகரின் ஆணை அது என்றால் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை, வீரரே. எங்களை ஆளும் கின்னரமூதாதையரின் சொற்களைக் கேட்கும் நேர்ச்செவி கொண்டவர் அவர் மட்டுமே” என்றார். “அவரிலெழுந்து கின்னரர் ஆணையிட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் உங்களை வரவழைக்க விழைகிறார்கள் என்றே பொருள். யாரறிவார்? அளிகொண்டிருக்கலாம், அருள்வதற்காக இருக்கலாம்” என்றார் இன்னொருவர். “தெய்வங்களை நாம் அளக்கவியலாது” என்றார் இன்னொருவர். அர்ஜுனன் “நான் நாளை காலையிலேயே கிளம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு அவளை திரும்பியும் நோக்காமல் குடிலுக்குள் சென்றான்.

கைகூப்பியபடி அவன் முற்றத்திலிறங்கியபோது அவர்கள் பிளந்து வழிவிட்டனர். அவன் நடக்கத் தொடங்கியபோது முணுமுணுப்புகளினாலான முழக்கம் அவனைச் சூழ்ந்திருந்தது. அவன் ஊரின் வடஎல்லையை அடைந்தபோது தன்னைத் தொடர்ந்து இளையவர் சிலர் வந்துகொண்டிருப்பதை செவிகளால் அறிந்தான். கின்னரஜன்யநாட்டின் எல்லை என குறிக்கப்பட்டிருந்த மலைப்பாறையில் பள்ளச்செதுக்கு ஓவியமாக கின்னரன் ஒருவன் கைவேலுடன் நின்றிருக்கும் சிலை இருந்தது. அவன் அதை அணுகி ஒரு கணம் நோக்கிவிட்டு கடந்துசென்றான்.

அப்பால் மலைச்சரிவில் கரியபாறைஎன மலைஎருது ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. அவன் காலடிகளைக் கேட்டதும் அது தலைதூக்கி நோக்கியது. அதன் உடலெங்கும் தொங்கிய கரியமுடியில் பனிமணிகள்  சிறிய காய்கள்போல தொங்கிக்கிடந்தன. அவன் அருகணையக் கண்டதும் அது தலையைத் தாழ்த்தி விழிகளை உருட்டி துருத்தி என மூச்சுவிட்டது. முன்காலால் ஈரமண்ணை கிளறியது. அர்ஜுனன் அதை நோக்கியபடி நடந்து அணுகியபோது அப்பெரிய உடலில் எதிர்பார்க்கமுடியாத விரைவுடன் திரும்பிப் பாய்ந்து மலைச்சரிவில் மேலேறிச் சென்றது. அதன் கால்பட்ட உருளைக்கற்கள் உருண்டு கீழே வந்தன. கிளறப்பட்ட மண் புண்போலத் தெரிந்தது. சேற்றின் புதுமணம் எழுந்தது.

அவன் தனக்குப் பின்னால் இளையவர் சிலர் ஓடிவருவதைக் கேட்டு நின்றான். மூச்சிரைக்க வந்து அவன் முன் நின்ற நால்வரில் முதல்வன் “நாங்களும் வருகிறோம், இளவரசே” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “போதும் இந்த அடிமைவாழ்வு… அறுத்துக்கொண்டு சென்றாகவேண்டும் இந்த எல்லைகளை…” என்று இன்னொருவன் சொன்னான். “நீங்கள் போரிடச் செல்கிறீர்கள் என நாங்கள் அறிவோம்… நீங்கள் எங்களுக்காக தனிமையில் இறந்தால் அந்தப் பழியிலிருந்து நாங்கள் விடுபட முடியாது. உடன்வருகிறோம், உடன்மடியவும் சித்தமாக உள்ளோம்” என்றான் ஒருவன்.

“நான் போரிடச் செல்கிறேன் என எப்படி அறிந்தீர்கள்?” என்றான் அர்ஜுனன். “நேற்று என் கனவில் அப்போரை நான் கண்டேன்” என்றான் முதல்வன். “நான் அதை இவர்களிடம் சொன்னேன். இவர்களும் அக்கனவை வேறுவகையில் கண்டிருக்கிறார்கள்.” இன்னொருவன் “வேறுபலரும் அதே கனவை கண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அது என் போர்” என்றான் அர்ஜுனன். “இல்லை, அது எங்களுக்கான போர். அதுவும் எங்கள் கனவில் வந்தது…” என்றான் முதல்வன். “அவர்கள் உங்களுக்காக அங்கே காத்து நின்றிருப்பதைக் கண்டோம்…”

அர்ஜுனன் புன்னகையுடன் அவன் தோளில் கைகளை வைத்தான். “நன்று. நான் எனக்கிடப்பட்ட பணியை நிறைவேற்றுகிறேன். நீங்கள் எண்ணுவதுபோல நான் தோற்பவன் அல்ல. திசைவென்றவன், தேவர் அருள்கொண்டவன். வென்று மீள்கிறேன்.” ஒருவன் “மீளா அடிமைத்தனமென்றால் என்னவென்று இன்று அறிந்தோம்” என்றான். “முன்பு எப்போதோ உடல்பின்னி ஒன்றென வாழ்ந்தோம் என்கின்றன கதைகள். ஆனால் அன்று அனைவரும் ஒற்றைப்பெருந்திரளாக இருந்தோம். இன்று ஒவ்வொருவருக்கும் அகமென ஒன்று உருவாகியிருக்கிறது. அருமணியென ஒளிவிடும் பெருநஞ்சு. அதைச் சுமந்தலைகிறோம்.”

“இரக்கமற்ற தலைவனுக்குத் தேரோட்டும் பாகன் எங்கள் உள்ளம்” என்றான் இன்னொருவன். “உள்ளமும் உள்ளாழமும் முரண்படுவதன் பெரும்பதைப்பையே இங்கே வாழ்வென கொண்டிருக்கிறோம். இளமையில் திமிறித்துடித்து தவித்து இயலாமையை உணர்ந்து அடங்குவதையே இங்கே அமைதி என்று அறிகிறோம். இனியும் தாளமுடியாது. அதற்கெதிரான போரில் ஒரு துளிக் குருதியேனும் சிந்தினோம் என்றாகட்டும்” என்றான். “இது எனக்கிடப்பட்ட போர். இதில் நான் எவரையும் உடன்சேர்க்கவியலாது. அனைத்துப் போர்களும் கல்விகள்தான் எனக்கு. என் மெய்மையைத் தேடி சென்றுகொண்டிருக்கிறேன். மீண்டுவந்து பார்ப்போம்” என்றபின் அர்ஜுனன் நடந்தான்.

மலையடுக்குகள் மேலெழுந்து வந்து திசைமறைத்தபடியே இருந்தன. பின்னர் அவன் குவைமடிப்புகளில் வெண்பனி விழுந்து வேல்முனை வடிவில் நீண்டிருப்பதைக் கண்டான். விழுந்த மேலாடை என, வெண்ணிற ஆட்டின் முகம் என  பனியின் வடிவுகள். வானில் கட்டிய வெண்பட்டுத் தோரணம் என பனிமுகடுகளின் நிரை தெரியலாயிற்று. குளிரை முதலில் காற்றென பின் நீரென பின் இரும்பென உணரலானான். குளிரில் சொற்களும் நடுங்கி உறைந்துவிடுவதை ‘நாரை’ என்னும் ஒற்றைச்சொல் நெடுநேரம் உள்ளே நின்றுகொண்டிருப்பதிலிருந்து உணர்ந்தான். நாரை என்று சொல்லிக்கொண்டபோது அச்சொல் அசைந்தது. பனிமலை என நகர்ந்து நாரை என்றே நின்றது. நாரை என எதை சொல்கிறேன்? வெண்ணிற நாரை. இந்த மலை ஒரு பெருநாரை. நாரைக்கூட்டம்.

நாரைகள் அவனைச் சூழ்ந்து சிறகுகோட்டி அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அவற்றின் கூரலகுகளின் முனையை மெல்லிய தன்னுணர்வாக அறியமுடிந்தது. ஒரு சிறு கலைவில் அவை சிறகுவிரித்து எழுந்து பறந்து வானை மூடிவிடக்கூடும். அவற்றின் குரல் உறையிலிருந்து வாளை உருவுவதுபோல, முரசுத்தோலை கோல்வருடிச்செல்வதுபோல செம்புக்கலம் இழுபடுவதுபோல செவிதுளைக்க ஒலிக்கக்கூடும். வெண்நாரைகள் குளிர்ந்திருந்தன. வெண்நாரைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. மெல்லிய உறுமல். ஓநாய். அல்லது யானை. இது வெள்ளை யானை. வயிறதிரும் உட்பிளிறல்.

அவன் கண்ணெதிரே பெரிய பனிமலை ஒன்றின் விலா அசைந்து ஆடையென மெல்ல நழுவி  கீழிறங்கத் தொடங்கியது. அதன் கீழெல்லையில் வெண்நுரையலை ஆடைநுனியென நெளிந்து வளைந்தெழுந்தது. ஒருகணம் உள்நடுங்கியபின்னரே அது மிக அப்பாலிருக்கிறதென்பதும் அதற்கும் தனக்கும் நடுவே பெரும்பள்ளமொன்று கீழிறங்கிச் செல்கிறதென்பதும் சித்தத்தை வந்தடைந்தன. வெண்ணிற அருவியென இறங்கியது பனிப்படுகை. கீழே எங்கோ காற்று அறைபட்டுப் பொங்கி மேலெழுந்து வந்து அவனை மூடி அதிரச்செய்து கடந்துசென்றது. மலைமுகடுகள் எங்கெங்கோ ஓலமிட்டுக்கொண்டிருந்தன.

அவன் நெடுநேரம் சென்றுகொண்டிருந்தான். அது ஒரு கணத்தின் உள்சுழல்விரிவுதான் என்றும் தோன்றியது. அமர்ந்து ஓய்வெடுத்தான். தன் ஆடைகளையே கூடாரமாகக் கொண்டு உள்ளே ஒடுங்கிக்கொண்டபோது நத்தை என உணர்ந்தான். முதற்சில நாட்கள் கையிலிருந்த சுடப்பட்ட உலர்ந்த ஊனையே மென்று உண்டான். பின்னர் வரையாடு ஒன்றை வீழ்த்தி அதை சுட்டு உண்டான். மீண்டும் மீண்டும் சென்றுகொண்டே இருந்தான். பதினேழு நாட்களுக்குப்பின் அவன் மலையுச்சியில் முதல் கின்னரனைக் கண்டான்.

அவன் அங்கே ஒரு சிறிய அசைவெனத் தோன்றினான். அங்கிருந்து வந்த முதல் அம்பை அர்ஜுனனின் உடல் இயல்பாகத் தவிர்த்தது. மேலும் மேலுமென வந்த அம்புகளை பாறையொன்றுக்குப்பின் மறைந்து தவிர்த்தான். மலைவிளிம்பில் மேலும் நான்கு கின்னரர் தோன்றினர். அவன் அம்புபட்டு ஒருவன் கீழே விழுந்தான். மேலும் ஒருவன் திரும்புவதற்குள் விழுந்தான். மீண்டும் ஒருவன் தலைதோன்றியதுமே விழுந்ததும் அவர்கள் புரிந்துகொண்டனர். பின்னர் நெடுநேரம் அங்கே அசைவு தெரியவில்லை.

பின்னர் முழவோசை எழத்தொடங்கியது. அதன் மொழியை அர்ஜுனன் புரிந்துகொண்டான். மூன்று அம்புகளை நேர்மேலே எழுப்பினான். அவற்றின் மொழியை அவர்கள் புரிந்துகொண்டதும் மலைவிளிம்பில் வெண்ணிறமான தலையணி அணிந்த கின்னர முதியவன் ஒருவன் தோன்றினான். கைகளை விரித்து ஆட்டி அவனை வரவேற்றான். அர்ஜுனன் எழுந்து மீட்டுக் கைவீசினான். அங்கிருந்து கின்னரர்கள் நீண்ட சரடு ஒன்றில் ஒருவர் பின் ஒருவராக இறங்கி அவனை நோக்கி வரலாயினர்.

[ 27 ]

அர்ஜுனனை அவர்கள் மலைப்பிளவு ஒன்றுக்குள் அழைத்துச்சென்றனர். அதன் முகப்பை பார்ப்பதுவரை நெடிதுயர்ந்த மலை விலா நோக்கி செல்வதாகவே அவன் எண்ணிக்கொண்டிருந்தான். ஒரு குன்றைச் சுற்றிக்கொண்டு அப்பால் சென்று அந்தத் திறந்த வாயைக் கண்டபோது அதைப்போல ஒரு கோட்டையை கண்டதே இல்லை என உணர்ந்தான். உள்ளே சென்றபோது குளிர் எண்ணியிராதபடி குறையத் தொடங்கியது. உலைமுகம் என நீராவி வந்து முகத்திலறைய மெல்லிய வியர்வை பொடித்தெழலாயிற்று.

வெண்ணிறக் கோட்டையெனச் சூழ்ந்திருந்த பனிமலைகளின் நடுவே பச்சைக் குறுமரங்கள் செறிந்த சோலை தெரிந்தது. அங்கிருந்து நுரைகிளம்புவதுபோல வெண்மயிராடை அணிந்த மக்கள் கிளம்பி அவர்களை நோக்கி வந்தனர். இடையிலிருந்த குழந்தைகளும் பருத்திப்பூக்கள்போல தெரிந்தன. சிறிய வட்டமுகங்களில் ஒட்டிவைக்கப்பட்ட பச்சைமணிக் கண்கள். மொட்டுபோன்ற உதடுகள். விழிகளிலெல்லாம் அச்சமும் வியப்பும்தான் இருந்தது. அவன் திரும்பி நோக்கியபோது குழந்தைகள் அலறியபடி அன்னையரை பற்றிக்கொண்டன. பெண்கள் மூச்சொலியுடன் பின்னால் சென்றனர். அவர்கள் அனைவரும் அவன் தோளுக்குக் கீழே நின்றிருக்கும் உயரம் கொண்டிருந்தனர். பெண்கள் அவன் இடையளவே இருந்தனர்.

அவனை அவர்களின் ஆலயமாகத் தெரிந்த குகை ஒன்றுக்கு அழைத்துச்சென்றனர். அதன் வாய்முகப்பில் அமைந்திருந்த பலிபீடத்தருகே கொண்டுசென்று நிறுத்தினர். அப்பால் கருங்கல்லால் ஆன மிகச்சிறிய இருக்கை.   சோலைக்குள் அமைந்திருந்த உயரமற்ற கல்குடில்களிலிருந்து திரண்டு வந்த மக்கள் அவர்களுக்குப் பின்னால் கூடிநின்று அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர். முழவோசையும் மணியோசையும் தொலைவிலென கேட்டன. பின் நேர்முன்னாலிருந்த மலையின் மடிப்பிலிருந்து எழுந்தன. பின்னர் குகைக்குள் ஆழத்தில் அதன் மாற்றொலி எழுந்தது.

அவன் அப்பால் கின்னரர்களின் தலைவர் தன்னவர் சூழ வருவதைக் கண்டான். அவனுடன் வந்தவர்கள் மீட்டிய முழவும் எழுப்பிய மணியும் ஓசையிலா அசைவாக இருக்க சூழ்ந்த மலைகள் கார்வையுடன் அவ்வொலியை சுழற்றி நிறைத்துக்கொண்டிருந்தன. தலைவர் வெண்மயிராடை அணிந்து தலைக்குமேல் மூன்றடுக்காக  உயர்ந்த வெண்மயிர் முடிசூடி கையில் வளைகோலுடன் வந்தார். அவருடைய தாடி இடைவரை வெண்ணிற அலைகளாகத் தொங்கியது. வெண்குழல்கள் தோளில் சரிந்திருந்தன. அணுகுந்தோறும் அவை அவர் அணிந்திருப்பவை எனத் தெரிந்தது. அவர்கள் ஒரு சடங்கென நடந்து அவன் நின்றிருந்த குகைமுகப்பை அடைந்தனர்.

அவர்கள் அணுகி வந்ததும் முன்னால் வந்த முதுமகன் ஒருவன் அர்ஜுனனிடம் “அரசரை வணங்குக!” என்றான். அச்சொல் அர்ஜுனனை திகைக்கச் செய்தது. அஸ்தினபுரியின் கிளைமொழி அது. அவன் விழிகளின் திகைப்பை நோக்கி புன்னகைத்தபடி அவன் “உன் உள்ளத்திலிருந்து அம்மொழியை எடுக்கிறேன்” என்றான். அவன் பேசுகிறானா விழிகளால் உணர்த்துகிறானா என அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவன் அரசனை முழந்தாளிட்டு வணங்கினான். அரசர் தன் கோல்சாய்த்து அவனுக்கு வாழ்த்தளித்தார்.

இருவர் சென்று அப்பால் நின்றிருந்த பட்டைக்கற்கள் இரண்டை விலக்கிச் சரித்தனர். அரசனுக்குரிய கல்பீடம் பச்சைநிற ஒளிகொள்ளத்தொடங்கியது. மழைக்காலச் சுனைநீரின் நிறம் மேலும் ஒளிகொண்டு உச்சிவெயில் பட்ட நீரென ஆயிற்று. அவர் அதில் ஏறி அமர்ந்தார். அவர் கையிலிருந்த கோலை ஒருவர் பெற்றுக்கொண்டார். அவருடைய சிறிய விழிகள் அவனை நோக்கி சற்றுநேரம் நிலைத்திருந்தன. அவன் எண்ணிய அனைத்துடனும் அவரும் உடனிருந்தாரென்று உணர்ந்தபோது உள்நடுக்குடன் தன்னை கட்டுப்படுத்தினான். அவர் புன்னகையுடன் “அந்தக் குகைதான்” என்றார்.

அவன் திரும்பி அதைப் பார்த்தான். “அது இங்கு எப்போதும் திறந்திருக்கிறது” என்று கின்னர குலத்து அரசர் சொன்னார். “அது எங்கள் மூதாதையர் வந்த வழி… இந்த மலையுச்சியில் இருந்து விண்ணுக்குச் செல்லும் பாதையும் அதுவே.” அவர் அமர்ந்திருந்த பீடம் இளந்தளிர் என ஒளிகொண்டது. அதன்மேல் அவர் பச்சைப்புழுபோல உடல் மிளிர அமர்ந்திருந்தார். “மானுடனே, நாங்கள் அங்கே விண்ணுருவிலிருக்கிறோம். இது எங்கள் மானுடத்தோற்றம். நீ போரிடவேண்டியது அவர்களிடம்தான்.”

அர்ஜுனன் அவருடைய விழிகளை நோக்கிக்கொண்டு நின்றான். கூர்ந்து நோக்க நோக்க அவை நோக்கு தொடாத தொலைவுக்கு அகன்றுகொண்டிருந்தன. “இங்கிருப்பவை தனிப்பொருட்கள். அவற்றை இணைத்திருக்கும் சரடு சொல் எனும் சொல்லால் சுட்டப்படுவதுமட்டுமே. சொல்பின்னி எழுகின்றது புவி”  என்றார். “அங்கு மண்ணில் வாழ்பவர்களிடம் திகழ்வது அவர்களின் சொல். அது வேர்விட்டு முளைத்தெழுந்த அடியாழமே எங்கள் சொல்வெளி. எங்கள் சொல் முளைத்தெழுந்த ஆழம் அக்குகைக்குள் வாழும் சொல்” என்றார்.

“சொல்வெளியை அள்ளி முடிச்சிட்டு அமைத்த மையமே வேதம்” என அவர் தொடர்ந்தார். “அது ஒரு பீடம். அங்கமைகின்றன தெய்வங்கள். அது ஒரு படைக்கலம். அதன் கூரே நெறிகள். வேதத்தை உறுதிசெய்பவர்கள் மொழியை கட்டுகிறார்கள். மொழியை ஆள்பவர்கள் புவியை வெல்கிறார்கள்” என்றார் அவர். அர்ஜுனன் அச்சொற்களை அவருடைய ஒவ்வொரு உதடசைவுடனும் இணைந்து கேட்டபடி நின்றான். “சென்று அதை வென்று வருக… எங்கள் வேதத்தின்மேல் ஒரு சொல் உன்னுடையது அமையும் என்றால்மட்டுமே நீ எங்களை வென்றாயென்று பொருள். சென்று மீள்க!”

அவர் கைகாட்ட அர்ஜுனனின் இருபக்கங்களிலும் நின்றவர்கள் “வருக!” என்றனர். அவன் எழுந்து தன் வில்லுடன் அவர்கள் இட்டுச்சென்ற வழியே நடந்தான். அவனைச் சூழ்ந்திருந்த முகங்கள் அலைநீரில் குமிழிகள் என அசைந்தன. ஒரு சொல்லும் இல்லாத நோக்குகள். அவன் அக்குகை வாயிலை அடைந்ததும் நின்றான். அவர்கள் “செல்க!” என்றபின் திரும்பிச்சென்றனர். எடைகொண்ட கால்களை சித்தத்தால் உந்தி அசைத்து முன்னெடுத்து அவன் உள்ளே நுழைந்தான்.

அக்குகை வெண்பனியாலானது. வெண்பனியாலான இருள் நிறைந்திருந்தது உள்ளே. அவன் காலடிகள் உள்ளிருந்து அவனை நோக்கி அணுகிவருவதைப்போல உணர்ந்தான். அவன் அங்கேயே நிற்க அவனிலிருந்து பிரிந்த பிறிதொன்றென அவன் முன்னால் சென்றான். அவனை ஆடிகள் என சூழ்ந்துகொண்டன பனிக்குகைச் சுவர்கள். முற்றிலும் ஓசையற்றிருந்தது அவ்விடம் என உணர்ந்தபோது அறிந்தான் ஆடியென்றாலும் அவை அவன் பாவையை காட்டவில்லை.

முன்னரே அறிந்த இடம்போல் அது தோற்றம்காட்டுவது எதனால் என்று அவன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு அடிவைப்பையும் முன்னர் பலமுறை செய்திருந்தான். முன்னர் அறிந்த எண்ணங்களையே கொண்டிருந்தான். இந்தக் கணம் இப்படியே நிகழ்ந்திருக்கிறது. இப்படியே அடுத்த கணமென்றாகியிருக்கிறது. இந்த இடம் எது? எங்குள்ளது இந்த ஆழம்? அக்கணம் எதிரே முதல்முறையாக தன் ஆடிப்பாவையை கண்டான். திடுக்கிட்டு அசைவிழந்து நின்ற அவனை நோக்கி அது மெல்ல வந்துகொண்டே இருந்தது.

அது வெளியே அவன் கண்ட  கின்னர குலத்தரசர் என அறிந்தான். வெண்ணிறத்தில் வெண்பாவை எனத் தெரிந்த அவ்வசைவை எப்படி நான் என உணர்ந்தேன் என அவன் வியந்தான். “போருக்கெழுக!” என்றது பெருங்குரல் ஒன்று. அவர் கையில் அந்த நீண்ட வளைதடி தோன்றியது. அது சுழன்று தன்மேல் விழுவதற்குள் அவன் காண்டீபத்தை எடுத்து வளைத்து அவர்மேல் அம்பெய்துவிட்டிருந்தான். மறுகணமே அவருடன் அவன் ஒரு போரில் ஈடுபட்டுவிட்டிருந்தான். அவன் செய்த அத்தனை போர்களிலும் வில்லுடன் முற்றிலும் இணைந்து நெளிந்து நடனமிட்ட அவன் உடலுக்குள் விலகி விழிமட்டுமேயாக நோக்கி நின்றிருந்த உள்ளம் அப்போரில் முற்றிலும் ஈடுபட்டு தன்னை அழித்துக்கொண்டிருந்தது.

முதலில் அவ்வுரு கரைந்து எழுந்த துரோணரின் உருவம் கண்டு அவன் திகைத்தான். மறுகணமே அவ்வுருவை யமனின் தண்டாயுதத்தால் அடித்து சிதறடித்தான். மறுகணமே இடப்பக்கம் பெருநகைப்புடன் எழுந்த பீஷ்மரை குபேரனின் அந்தர்த்தானமென்னும் அம்பால் வீழ்த்தினான். அவர் நிலத்தமைவதற்கு முன்னரே பின்னால் ஜயத்ரதன் வில்லுடன் எழுந்தான். வருணனின் பாசவாளியால் அவனை அவன் கொன்றான். இடிபோல நாண் ஒலித்தபடி முன்னால் கர்ணன் தோன்றினான். அர்ஜுனன் வஜ்ரத்தை அம்பாக்கி அவனை உடைத்து வீழ்த்தினான்.

வெற்றிநகைப்புடன் அவன் முன்னால் செல்ல எதிரே வில்லுடன் எழுந்த இளைய யாதவனைக் கண்டு அவன் திகைத்து செயலிழந்தான். கரியவனின் வெறித்த விழிகள் அவனை அறியவில்லை. அம்முகத்திலெழுந்த பெருஞ்சினத்தைக் கண்டு அர்ஜுனன் பின்னடைந்தான். அவனை நோக்கி வந்த அம்பை தடுக்கும்பொருட்டு  மண்ணில் விழுந்து புரண்டு எழுந்தான். “யாதவரே…” என்று அவன் கூவினான். “என் முன் நில்… இல்லையேல் தலைகொடுத்து விழு!” என்று கண்ணனின் குரல் ஆணையிட்டது. “இல்லை, இப்பிறப்பில் எவர் முன்னும் தோற்பதில்லை” என்றபடி அர்ஜுனன் அம்புகளை எய்தான்.

அவன் தொடுத்த அம்புகளெல்லாம் சென்று ஆடிப்பாவையிலென கரியோன் மேல் விழுந்து ஓசையுடன் தெறித்தன. போர் மட்டுமே அளிக்கும் பேருவகையுடன் அவன் வெறிகொண்டு நகைத்தபடி அம்புகளைப் பொழிந்தான். இக்கணம் இறப்பேன், இதோ பிறந்தெழுந்தேன். மீண்டும் ஓர் இறப்பு. கணமே வாழ்வென்றாகும் காலப்பெருக்கு. அம்புகளால் ஆன காலம். அம்புகள் சூழ்ந்த வெளி. அம்புகளால் இவனுடன் இணைக்கப்பட்டிருக்கிறேன். இந்த அம்புவலையில் சிக்கியிருப்பவன் நான், மறுபக்கம் அவன். அம்புத்தூளி ஒழிந்தது. அருகிருந்த கற்களைப் பெயர்த்து அம்புகளென எய்தான். அவன் ஆடைகள் கிழிந்து அகன்றன. அணிகள் உடைந்தன. உடலெங்கும் தைத்த அம்புகளிலிருந்து குருதி தெறித்து  குகைச் சுவர்கள் செந்நிறத் தசைப்பரப்பென்றாயின.

அவன் எதிரே நின்றுபோரிட்ட இளைய யாதவனின் முகம் இருள்நீரில் நீந்தும் மீனென வாய்பிளந்து பல்நிரை காட்டியது. அவன் அம்புகளை உடலெனும் கவசத்தால் ஏற்று ஆமையென குவிந்தெழுந்தது. அம்புகளைத் தொடுத்து பன்றியென உறுமியது. குருதிவெறிகொண்டு சிம்மம் என முழங்கியது. இவன் குறியோன். இவன் அனலோன். இவன் வில்லுடன் எழுந்த ராகவன். இவன் ஆழியிலமைந்தவன். இவன் இருளென சுருண்டு அவனை ஏந்தியவன். இவன் ஜயன், இவன் விஜயன். இருளெனப் பெருகி எண்ணிலாக் கைகளுடன் அவனைச் சூழ்ந்துகொண்டது விண்ணளந்த பேருருவம்.

அவன் போரிட்டபடியே பின்னகர்ந்தான். வில் உடைந்து தெறிக்க படைக்கலமேதுமில்லாமல் வெறுங்கையுடன் குருதிமூடிய வெற்றுடலுடன்  நின்று தவித்தான். அவனை கரிய அலையென பெருகியணைந்தது யாதவனின் விண்ணுருவம். கொலைவிழிகள். குருதிச்சுவையூறிய வாயில் கொடுஞ்சிரிப்பு. அறியாத்தவிப்பில் அவன் பாய்ந்து பற்றி கிழிக்கமுற்பட்ட குகைச்சுவரில் ஓர் இடைவெளி விழுந்தது. அதனூடாக அவன் தலைகீழாக பிதுங்கி சிறுகுகைவழியில் வழிந்த சேற்றுநீரினூடாக விரைந்து சென்று எங்கோ விழுந்தான்.

குரல்கள் அவனை சூழ்ந்துகொண்டன. கூச்சல்கள். “விலகுங்கள்! விலகுங்கள்!” எனும் ஒலிகள். அவனுக்கு குளிர்ந்தது. கைகளை மார்புடன் சேர்த்து உடல்சுருட்டி குறுகிக்கொண்டான். விழிதிறக்கமுடியாமல் தலை எடைகொண்டிருந்தது. மென்மையான சூடான குருதிச்சேற்றில் புதைந்துகிடக்க விழைந்தான். அச்சேறு அவன் எண்ணங்களையும் மூடி அவனை தன்னில் அழுந்தவைத்துக்கொண்டது.

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

விவேக் ஷன்பேக் மொழியாக்கம், கடிதம்

$
0
0

1

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

 

சரவணக்குமாரின் விவேக் ஷன்பேக் தமிழாக்க நூல் பற்றிய கடிதத்திற்கு உங்கள் பதிலைப் படித்தேன். என் இரு கன்னங்களிலும் அறை வாங்கியதாக உணர்ந்தேன். சில நாட்கள் கழிந்தும் கடக்கமுடியாததால் எழுதுகிறேன்.

 

 

நானும் அந்த நூலை விஷ்ணுபுரம் விருது விழாவின்போது வாங்கினேன். வாங்கும்போது மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களில் முதல் பக்கத்திற்கும் முன் அட்டைக்கும் இருந்த முரணை கவனித்தேன். அது ஒரு மோசமான வியாபாரத் தந்திரம், ஏமாற்று வேலை என்று எனக்குள்ளும்தான் ஒரு மெல்லிய கசப்பு எழுந்தது. சரவணகுமாரும் அவர் நண்பர் சொன்னது சரி எனப் பட்டதால்தானே உங்களுக்கு எழுதினார்? அப்போது நாங்கள் இருவரும் எங்களைப்போல நினைத்திருக்கக்கூடிய மற்றவர்களும் மிகமிக ஆபத்தானவர்கள், 500 ரூ மேல் நம்பவோ தனிப்பட்ட செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவோ தகுதியற்றவர்களா? உங்கள் சொற்கள் பலித்துவிடுமோ என்று அறம் ஆச்சி போல பயந்துபோயுள்ளேன்.

 

 

 

நீங்கள் முன்னுரை மட்டுமே எழுதியிருந்து, “ஜெயமோகன் முன்னுரையுடன்” என வெளியிட்டிருந்தாலும் எனக்கு மறுப்பு இல்லை. (கதைகளுக்கு முன் பதிப்புரை தவிர முன்னுரை எதுவும் இல்லை. நீங்கள் எழுதிய முன்னுரை பின் அட்டையிலிருப்பதுதானா?) அத்தகைய வியாபார தந்திரங்கள் தவறு எனக் கருதவும் இல்லை. கசப்பு மற்ற மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்கள் அட்டையில் விடுபட்டதனால்தான். உங்கள் பெயரைவிட சிறிய எழுத்துக்களிலாவது அவர்கள் பெயர் அட்டையில் இடம் பெறவில்லை என்பதால்தான். மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு கவனிக்கப்படாதது குறித்து நீங்களும் எழுதியதாக நினைவு.

 

 

எச்செயலுக்கும் அவரவர் நியாயங்கள் உண்டு. உங்கள் விளக்கத்தை நூல் வாங்குபவன் எவ்வாறு அறியமுடியும் என்பது மட்டுமல்ல விளக்கம் முழு நிறைவைத் தரவில்லை. அட்டையில் குறிப்பிட்ட விலை ரூ 60. உள்ளே குறிப்பிட்ட விலை ரூ 100. ரூ 100 க்குத்தான் விற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ரூ 40 விலை உயர்ந்தபோது, மொழிபெயர்ப்பாளர்கள் பலராகியபோது, குறைந்தது மாறிய மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்களையும் விலையையும் ஸ்டிக்கராக அட்டையில் ஒட்டி இருக்கலாம்.

 

 

சரவணக்குமாரின் கடிதத்தில் ‘மோசமான வியாபாரத் தந்திரம்’, ‘ஏமாற்று வேலை’ என்று இருந்தது. ‘ஊழல்’, ‘வணிக மோசடி’, ‘வணிகச்சதி’ என்றெல்லாம் அதில் காணும் நுண்வாசிப்பு எனக்கு அமையவில்லை.

 

 

அச்சடித்த 300 பிரதிகள்கூட 5 ஆண்டுகள் ஆகியும் விற்றுத்தீரவில்லை. இதற்கு இத்தனை கூச்சல் குழப்பமா என்று இக்கணம் எனக்குத் தோன்றுகிறது. மிச்சமிருக்கும் பிரதிகளில் மேற்கூறியவாறு ஸ்டிக்கரை ஒட்ட ஆலோசனை கூறி வம்சி ஷைலஜாவிற்கும் இக்கடிதத்தின் நகல் ஒன்றை அனுப்பியுள்ளேன்.

 

 

அப்பாடா! எழுதி முடித்து வெளியே வந்துவிட்டேன். நிம்மதி.

 

பா. ராஜேந்திரன்

 

 

திரு ராஜேந்திரன்

இப்போது இன்னும் உறுதியாகத் தெரிகிறது. உங்கள் மனநிலை உள்ள ஒருவரை 250 ரூபாய்க்குமேல் நம்பமுடியாது

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20

$
0
0

15673028_1325672277456186_1614750268106035554_n

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

விஷ்ணுபுரத்தின் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவமான பயனுண்டு. அவர்களது, ஓராண்டு பசியும் ஒரே விழாவில் தீர்க்கப்படுவதோடு, அடுத்த ஓராண்டிற்கான பசியும் அழகாய், அர்த்த புஷ்டியுடன் தூண்டிவிடப்படுவதுமே அது. விஷ்ணுபுரம் விருது விழா 2017 முடிந்து சொந்த ஊருக்கு மீள்வதற்கு, கோவை பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது – ஆப்பிள் கடைக்காரர், ஆட்டோ ஓட்டுநர், பேருந்திற்காக காத்திருக்கும் யாரோ ஒரு அக்கா, குடித்துவிட்டு மல்லாந்திருக்கும் ஒருவர் என – எந்த ஒரு முகத்தைப் பார்த்தாலும், அவர்களை இலக்கிய வாசகர்களாகவே நினைத்துக் கொள்ளும் மனத்தின் விசித்திரத்திலிருந்து, இவ்விழா ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரத்தை குறிப்பிட விழைகிறேன்.

ஜெ பல இடங்களில் திருவிழாக்கள் பற்றிச் சொல்லும் போது, ஒரு பெரும் மக்கள் திரள் ஒற்றை முகம் கொள்ளும் விந்தையைச் சொல்வார். அதை, இவ்விழா நிகழ்வுகள் நடந்த இரண்டு நாட்களிலும், நாமும் நண்பர்களும் துல்லியமாய் அனுபவித்தோம் என்று பின்னர் தோன்றியது. குறிப்பாக, விருது விழாவில், வெளிவந்த கைதட்டல்களும், கண்ணீர் ததும்பல்களும் அப்படியே ஒற்றை முகமாய், ஒற்றை மனமாய் ஒரு திரளோர் வடித்தது.

விழாவிற்கு வருகையில், என் மனதில் இருந்த எண்ணம், அல்லது ஒழுங்குணர்வு என்பது ‘ஜெயமோகன் அவர்களிடமும் பிற ஆளுமைகளிடமும் நாம் ஒவ்வோர் அசைவையும் கற்றுக் கொள்ளவும், மெளனமாய் ரசித்து மகிழ்ந்து கொள்ளவும் மட்டுமே இவ்விழாவிற்குச் செல்கிறோம்; காரணமின்றி, அதிக பிரசங்கித் தனமாக, ஜெவை அணுகி, பேசி தொந்தரவு செய்யும் விதமாக எதுவும் செய்துவிடக்கூடாது’ என்று இருந்தது. காரணம், இது தனிப்பட்ட ‘ புதியவர்கள் சந்திப்பு’ போன்ற விழா அன்று; மாறாக ஆண்டுதோறும், பெருகிவரும், தீவிர வாசகர்களையும் அவர்களது ‘ஆர்வ மற்றும் ஆர்வகோளாறுகளை’யும் கொண்ட விழா என நினைத்ததே.

மாறாக, நான் விழாவில் நுழைந்து, பின்னால் சென்று நின்று, ‘நாஞ்சில் நாடன்’ அவர்களைக் கவனித்து ரசித்துக் கொண்டிருக்கையில், எதார்த்தமாக ஜெவே என்னருகே வந்து, சில நிமிடங்கள் என்னைத் தழுவி விசாரித்தது பெரும் பேறு. அப்பேறு பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்தது என்னை, இரு நாட்களில். ஜெ அவர்கள் மீது எல்லோரும் – குறிப்பாக புது வாசகர்கள் – தனது, வியப்பை தன் மீதான தனிப்பட்ட நல்லூழாகவே குறிப்பிடுகிறார்கள். அனைத்து உண்மையான வாசகர்களுக்கும், ’ஜெயமோகன் தன்னுடன் வெகு சிறப்பாக இம்முறை உரையாடினார்; தன்னை வெகு நெருக்கமாக உணர்ந்து வைத்துள்ளார்’ என்ற மகிழ்வும், வியப்புமே எஞ்சியிருக்கிறது.

எப்படி இத்தனை செறிவுடைய விழாவினிடையே, ஒவ்வொருவரையும், ஒரே அளவிற்கு சென்று சேர ஜெயமோகனால் முடிகிறது என்று யோசித்து வியக்கும் நேரத்தில், ‘இன்றைய காந்தி’ யை அறிந்தவருக்கு இது இயல்பே என்பதும் உடன் தோன்றுகிறது. Positive Gossip – அவர் இல்லாத போது அவரைப் பற்றிய நேர்மறையான பேச்சு – என்ற ஒன்று ஜெயமோகனுக்கு, கிடைத்த அளவிற்கு மனப்பூர்வமாக யாருக்கும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.

தாமஸ் மண் பற்றிய அறிமுகத்தை நான் கோரியபோது, ஜெ வழங்கிய அறிமுகமென்பது மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. Death in Venice ஐ இப்புத்தாண்டில் தொடங்கப் போகிறேன். தொடர்ந்து, தாமஸ் மண்ணை வாசிக்கும் திட்டம் உள்ளது. மேலும், இலக்கிய வினாடி வினாவைச் சுட்டி குறிப்பிடாதவர்கள் யாருமில்லை என்பதே அதன் வீச்சினைப் பேசுகிறது. நான் பாரதிநாதன் அவர்களது ‘தறியுடன்’ நாவலை பெற்றேன் அந்நிகழ்வில். அதற்கும் ஒரு சிறு அறிமுகம் ஜெவிடமிருந்து கிடைத்தது கூடுதல் மகிழ்வு.

unnamed

ஒரு பேரதிர்ச்சி என்னவென்றால், இன்னும் ஓராண்டில் வெண்முரசு நிறைவு பெறும் என்று ஜெ தெரிவித்ததே. உடனேயே அந்நிறைவால் வரப்போகும் வெறுமை மனதில் வெட்டிச் சென்றது. இருந்தாலும், எங்களை ‘அசோகவனம்’ வழிதெரியாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் என்று நினைக்கையில் அவ்வெறுமை விலகுகிறது. வெண்முரசு நாவல்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

சென்ற முறை 2016ல் விஷ்ணுபுரம் விழாவின் நிறைவு தந்த கிளர்ச்சி என்னை ஒரு வாசகனாக்கியது. இந்த முறை, என் வாசிப்பிற்க்கான, வெகு சவால்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு, புதிய நாளையும் ஒரு புத்தாண்டிற்குச் சமமான மனக்கிளர்ச்சியுடன் அணுகிடும் மனப்பண்பை உருவாக்கிய வாசிப்பு என்பது விஷ்ணுபுரத்தின் தாக்கமே. விஷ்ணுபுரத்தின் விரல்கள் இன்னும் ஓராண்டிற்கு என்னைத் தழுவிக்கொண்டே இருக்கப்போகிறது.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
நன்றி.

கோ.கமலக்கண்ணன்

அன்புள்ள கமலக்கண்ணன்

 

என்னைப்பொறுத்தவரை திரும்பிப்பார்க்கையில் நண்பர்களுடன் பேசிய, பயணம்செய்த நாட்களே இலக்கிய வாழ்க்கையை அர்த்தப்படுத்துபவையாக உள்ளன. ஆகவே இலக்கியம் என்பதை ஒரு பெரிய நட்புக்கூடலாகவே எப்போதும் பார்க்கிறேன்.  இதற்குள் விழுமியங்கள் உண்டு. இலக்கியம் என்னும் பொதுவட்டம் முக்கியமானது. அதற்குள் அனைவரும் நண்பர்களே. ஆகவேதான் நட்பில் கசப்புகளைச் சேர்க்கும் எதையும் எதன்பொருட்டும் ஒப்புக்கொள்வதுமில்லை

 

விஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பொறுத்தவரை வந்தவர்களை இனிய வரவாக எடுத்துக்கொண்டேன். வராத சிலரை எண்ணிக்கொண்டும் இருந்தேன். நண்பர் பெங்களூர் ‘சர்வர்’ கிருஷ்ணன், ஏ.வி.மணிகண்டன், அருணாச்சலம் மகராஜன்  விஜயகிருஷ்ணன் ,ரகு , மொரப்பூர் தங்கமணி என அவர்களின் பட்டியலே அடிக்கடி மனதுக்குள் வந்துசென்றது.வெ.அலெக்ஸ் உடல்நலமின்றி இருப்பதனால் வரமுடியவில்லை. இது ஒருவகையான வருடாந்தர நட்புக்கூடல்தான் . இதே இனிமையுடன் தொடரவேண்டும்

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

 

வணக்கம். ஒருவாரமாகியும் இன்னும் ” விஷ்ணுபுரம்” விழா நினைவுகளிலிருந்து நான்  மீண்டு வரவில்லை.

 

உங்களுள் ” வண்ணதாசன்” புகுந்து விட்டது போல் இருந்தீர்கள் .இல்லை நீங்கள் சுபாவமாகவே இப்படித்தானா எனக்குத்தெரியவில்லை.” வைக்கம் முகம்மது பஷீரின்” கதையை சொல்லும் போது ஈஸிசேரில் அமர்ந்து ஓரக்கண்ணால் பஷீரைப்பார்க்கிற அந்த “சேவல்”உங்கள் விவரிப்பில் என் கண்முன்.

 

எதெதற்காகவோ ஒன்றுமே சாதிக்காமல், தான் தான் பெரிய ஆள் என்று புழங்குகிற மனிதர்கள் இருக்குமிடத்திலிருந்து வந்த நான், சுவற்றோரமாக சாய்ந்து கூட்டத்தின் கடைசியில் நின்றுகைகட்டி மற்றவர்கள் பேசுகிறதை பொறுமையாக்க்கேட்கிற ” ஜெயமோகனை” பார்த்த போது அத்தனை இஷ்டமாக இருந்தது.

 

 

சலூன் வைத்திருக்கிற ” காசர்கோடு மலையப்பனை” நினைவுபடுத்தி பேசினபோதும்,” வண்ணதாசன்” என்கிற ஸ்க்ரூ ட்ரைவர் அன்பை மட்டுமே திறப்பது .அது ஏன் ஒரு சமூகத்தின் பிரச்சனையை பேசவில்லை எனக்கேட்பது சரியல்ல” என்றபோதும் உங்களின் இக்கருத்திற்காக ஒலித்திட்ட கைத்தட்டலில் என் கை ஓசை அதிகமாக இருந்திருக்கும்.

 

 

உங்கள் மகன் ” அஜிதனை” பற்றி,” சவுக்கு” எழுதின நாட்களில் நீங்கள் தருமபுரியிலிருந்தது பற்றி எனக்கு பதில் தர  நீங்கள் பேசினபோது  இத்தனை எளிமையான மனிதரா என  வியக்க வைத்தீர்கள்.விழாமேடையில் நீங்கள் வண்ணதாசனை கூட்ட மாகப்பறந்த மின்மினி பூச்சிகளுக்கு ஈடாக , சுடாத,எரிக்காத காட்டுத்தீயாகஇருள் பிரியாத நேரத்தில் மொத்த காட்டையுமே வெளிச்சம் போட்டுக்காட்டின மின்மினி பூச்சிகளாக சொன்னது சிலிர்த்தது. அபாரம் ஜெயமோகன்.

 

 

விஷ்ணுபுரம் விழா அறிவித்ததிலிருந்தது உங்கள் வலைப்பக்கத்தை நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.அதில் இடம்பெற்ற வண்ணதாசன்விருது  தொடர்பான கடிதங்களில்” செல்வராஜின்” கடிதத்தை முன் வைத்து வண்ணதாசன் பேசின ஏற்புரையில் கூட்டம் கரைந்ததற்கு நீங்கள் அல்லாமல் வேறு யாரும் காரணமில்லை.

 

 

உங்களின் மொத்த கதைகளையும் படித்தும் ,மற்றெல்லோரின் புத்தகங்களையும் படித்தும்,வரிக்கு வரி நினைவில் வைத்துக்கொண்டு நடைபெற்ற போட்டிகளில் வென்று உங்களோடு விவாதித்த பல அறிவுஜீவி வாசகர்களின் பார்வையில் படும்போது அத்தனை விவரமில்லாதவர்களாக ,ஒரு சாதரண மேலெழுந்தவாரியாக படிக்கிற வாசகர்களாக வண்ணதாசனின் வாசகர்களாகிய நாங்கள் தெரிந்திருப்போம். அதைபற்றி எந்த புகாருமில்லை. ” செல்வராஜ்” எழுதினது போல அறிவாளியாக மாற எல்லாம் எனக்கு விருப்பமில்லை.

 

ஆனால் ” தேவதேவனையும்,நாஞ்சில் டனையும்,பாட்டையாவையும்,கலாப்ரியாவையும ,சுகாவையும்,பாவண்ணனையும், பவா செல்லதுரையையும் இன்னும் தன் எளிமையான ஆங்கிலத்தால் அனைவரையும் கவரும்படி உரை நிகழ்த்தின  கன்னட எழுத்தாளர் ” சிவப்ரகாஷ் ” அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் ,அவர்கள் பேசுவதை கேட்கும் அருமையான நேரமும் உங்களால் ,உங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் ” விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தால்” சாத்தியமானது.

 

உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகளும்,பேரன்பும்,நன்றியும்.

 

காயத்ரி சந்திரசேகர்

 

அன்புள்ள காயத்ரி,

 

உண்மைதான். பின்மயக்கம் மிஞ்சிப்போய்விடக்கூடாது, புத்தாண்டில் வேறு விஷயங்களில் ஈடுபடவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். இருந்தாலும் நீடிக்கிறது.

 

நான் எப்போதும் சொல்வதுபோல விஷ்ணுபுரம் விழா ஒரு நட்புக்கூடலாகவே இருக்கவேண்டும். நட்பார்ந்த சந்திப்புகள் வழியாக, அரட்டைகள் வழியாக நாம் கற்றுக்கொள்வது மிக அதிகம். அதில் மேல் கீழ் என எவருமில்லை. விவாதங்கள் நிகழலாம், ஆனால் அவை மிகச்சிறிய வட்டத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்குள் மட்டுமே நிகழவேண்டும். அங்கே அகங்காரம் இருக்கக்கூடாது

 

விஷ்ணுபுரம் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதில் அபாரமான மகிழ்ச்சி ஒன்று உண்டு. நான் அவ்வப்போது சந்திக்கும், பெரும்பாலும் கடிதங்கள் மூலம் மட்டுமே உரையாடும் பலரை அங்கே சந்திக்கிறேன். விவாதங்களில் ஈடுபட்டு அதை இழக்க விரும்பவில்லை

 

ஜெ

 

 

முந்தைய பதிவுகள்

 

விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10

விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 13 ராஜீவ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 14

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 15

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 16 தூயன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 17

ஒருங்கிணைதலின் கொண்டாட்டம் ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவு 18

விஷ்ணுபுரம் விருதுவிழா பேசப்பட்டவை கிருஷ்ணன்

 

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

 

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

 

 

புகைப்படங்கள்

 

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

 

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

 

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

 

 

=============================================================

 

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

 

============================================================

 

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கிள்ளை

$
0
0

 

index

அன்புள்ள ஜெயமோகன்,

சமீபத்தில் பிறந்த என் ஆண் பிள்ளையின் பெயர் சூட்டு விழாவின் ஒரு பகுதியாக தொட்டிலிடும் நிகழ்வும் இருந்தது. அப்போது பாடலாக அன்னமாசார்யாவின் கீர்த்தனையான “ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ முகுந்தா…” பாடப்பட்டது.

பெண் பிள்ளை பிறந்திருந்தால் என்ன பாடியிருப்பார்கள் என என் சிந்தனை சென்றது. பெண் தெய்வங்களுக்கான தாலாட்டு பாடல்கள் உள்ளனவா என இணையத்தில் தேட ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருவேளை பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடியிருப்பார்களோ என்று எண்ண, ஏனோ ‘சின்னஞ்சிறு கிளி’ என்ற வரி பள்ளி நாட்களில் என் நண்பன் எடுத்து வளர்த்த கிளிக்குஞ்சை ஞாபகப்படுத்தியது. நீங்கள் கிளியை அதன் மழலை பிராயத்தில் பார்த்திருக்கிறீர்களா?.

பாரதி என்ன பதத்தில் இந்த ‘சின்னஞ்சிறு கிளி’யை பயன்படுத்தியிருப்பாரோ தெரியாது. எனக்குள் அது பாரதி காலத்து பெண்ணின் வாழ்க்கை குறித்த மினிமலிச ஓவியமாக இப்படி விரிந்து கொண்டே செல்கிறது.

“பிறப்பில் அருவருக்கப்பட்டு, பின் வண்ணமேறி சிறகு முளைத்தவுடன் சிறகு முறிக்கப்பட்டு, யாராலோ கூண்டிலைடைக்கப்பட்டு, உடையவனின் சொல்லையே வழிமொழிந்து….”

மகள்களுக்கான பாடல்களை ஆண்கள் யாரும் எழுதத் தேவையில்லை. அதை அவர்களே இயற்ற வல்லவர்கள் என்று புரிந்து கொண்டாலே போதும் என நினைக்கிறேன்.

ஜெ. விஜய்.

ஜெய்சல்மர், ராஜஸ்தான்.

*

அன்புள்ள விஜய்

கிள்ளை என்பது மழலைக்கு நிகரான ஒரு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. கிளியின் பல்வேறு இயல்புகள் கவிதையில் கையாளப்பட்டிருந்தாலும் அது மானுடமொழியை பயின்றுபேசுவதில் உள்ள குதலையின் பேரழகுதான் கொண்டாடப்பட்டிருக்கிறது. பெண்குழந்தைக்கு கிள்ளை என்று ஒப்பு சொல்லப்பட்டது அதனால்தான்

அதிலும் பெரும்பாலும் அது இளங்கிளிதான். மழலையிலும் மழலை கோருகிறது கவிதையுள்ளம். கிளியை தூதுவிடுதல் நம் மரபில் இருக்கும் முக்கியமான கவிதை வடிவம். சுகசந்தேசம் என பெயர்கொண்ட சம்ஸ்கிருதகாவியங்கள் பல உண்டு

சரியாகச் சொல்லத்தெரியாத ஒன்றைத் தூதுவிடுவதிலுள்ள அழகு எண்ணுகையில் உவகை அளிக்கிறது. மழலையால் மட்டுமே சொல்லத்தக்க சில உண்டு அல்லவா

அழகர் கிள்ளைவிடுதூதில் பலபட்டடை சொக்கநாதப்புலவர் சொல்லும் வரி இது

அளிப்பிள்ளை வாய்குழறும் ஆம்பரத்தில் ஏறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் – கிளிப்பிள்ளை
சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின் அத்தைப் போலும் ஒரு பேறுண்டோ?

அணில்பிள்ளை சொல்லெடுக்காது வாய் குழறும். குயில்குஞ்சு வான்தொடும் மரக்கிளையில் ஏறிக்கொள்ளும் கிளிப்பிள்ளைதான் சொன்னதைச் சொல்லும். அதைவிட பெரிய பேறு ஏது?

கிளிப்பாட்டு ஒரு தனிக்கவிதைவடிவமாகவே தென்மொழிகளில் உள்ளது. பாரதி சின்னஞ்சிறு கிளியிடம் மட்டும் பேசவில்லை. நெஞ்சில் உரமும் இல்லாத நேர்மைத்திறமும் இல்லாத மானுடரைப்பற்றியும் கிளியிடம்தான் சொல்கிறார்

மலையாளத்தின் முதற்கவிஞர் துஞ்சத்து எழுத்தச்சன் அத்யாத்மராமாயணம் என்னும் முதற்காவியம் கிளிப்பாட்டு வடிவில்தான். ’சாரிகப்பைதலே கேள்குக” என்றுதான் அது தொடங்குகிறது. கிளிக்குஞ்சே கேள் என. ஆம், கிளிமதலைதான். சின்னஞ்சிறு கிளி.

அந்த மழலையை உருவகமாக எடுத்துக்கொள்வது ஒரு வாசிப்பு. கூண்டை உருவகமாக எடுத்துக்கொள்வது இன்னொரு வாசிப்பு. சரிதான், லா.ச.ரா சொல்வதுபோல அவரவர் பூத்தபடி

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசன் ஆவணப்படம்

$
0
0

வண்ணதாசனைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம். வண்ணதாசனைப்பற்றி முழுமைப்படுத்தப்பட்ட முதல் ஆவணப்படம் இது

 

 

 வண்ணதாசன் விழா அனைத்து இணைப்புக்களும்

 

 

 

 

 

 

 


தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணநிலவனின் பொருமல்

$
0
0
download

 

 

அன்புள்ள ஜெ,

துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக வெளியான “யாரோ சிலர்” என்ற பதிவு அந்த வாசகரால் புரிந்து கொள்ளப்பட்ட வடிவம் என்று நினைக்கிறேன்.

“சாகித்ய அகாடமியின் சரியான தேர்வு” என்ற தலைப்பில் துக்ளக்கில் வெளியான வண்ணநிலவனின் பதிவு “. . . அவரது இலக்கியச் செயல்பாட்டிற்காக, இந்த ஆண்டு வண்ணதாசனுக்கு இரண்டு விருதுகள் கிடைதுள்ளன. ஒன்று – கடந்த 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது. இன்னொன்று – அவ்வளவாக வெளியுலகத்துக்குத் தெரியாத, கோவை நண்பர்கள் வழங்கும் விஷ்ணுபுரம் விருது. விருதுகளால் வண்ணதாசன் கொண்டாடப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே இலக்கியச்சிந்தனை விருது, இளையராஜா அளிக்கும் பாவலர் விருது, கலைமாமணி விருது, சாரல் விருது, எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் வழங்கும் விருது என்று பல விருதுகளை வாங்கிக் குவித்தவர்தான் வண்ணதாசன். இந்த விருதுகளை மட்டுமல்ல, மேலும் பல விருதுகளையும் அடைய அவருக்கு எல்லாத்தகுதியும் உண்டு. . . . . ”

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

***

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

விஷ்ணுபுரம் விருது விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்றது.

விழா ஏற்பாட்டாளர்களுக்கும், களத்தில் பங்குபெற்று உதவிய அனைத்து நண்பர்களுக்கும், நன்றியையும், வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன்.

விழாவில் பங்கேற்க முடியாதது வருத்தமும், மனச்சோர்வும் தருகின்றது, கலந்து கொள்ள முடியாத காரணத்தை முன்பே தங்களுக்கு எழுதி இருந்தேன்,

திரு H. S. சிவப்ரகாஷ் அவர்களின் ஆளுமையையும், அவரின் சிந்தனை மரபையும், கருத்துக்களின் ஆழத்தையும், தவறவிட்டது, தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் இழப்பு,

இந்த ஆண்டு உதகை காவிய முகாமில் பங்குபெற வேண்டும் என ஆர்வத்துடன் விரும்புகிறேன், இப்பொழுதே கோரிக்கையும் வைக்கிறேன், அனுமதி அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் எழுத்துக்களில், பல இடங்களில் திரு. நித்திய சைதன்யா யதி பற்றியும், குருகுலம் பற்றியும், நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள், என் மனதில் ஒரு படிவமாக பதிந்தது, ஒரு உணர்வு சித்திரமாக நிலை பெற்று விட்டது, குருகுலத்தில் தங்களை சந்தித்து உரையாடி, முகாமின் இலக்கிய தீவிரத்தில் திளைக்க வேண்டும் என்று ஆவல்கொள்கிறேன்.

02 -01 -2017 இல், வந்த யாரோ சிலர்! பதிவு, சிறு ஏமாற்றும் அளிக்கின்றது,

துக்ளக் இதழில் :

இந்த ஆண்டு வண்ணதாசனுக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன, ஒன்று சாகித்திய அகாடமி விருது, இன்னொன்று, அவ்வளவாக வெளியுலகத்துக்கு தெரியாத, கோவை நண்பர்கள் வழங்கும் விஷ்ணுபுரம் விருது, விருதுகளால் வண்ணதாசன் கொண்டாடப்படுவது ஒன்றும் புதிதல்ல, ,,,,,,,,,என்று செல்கிறது அந்த கட்டுரை பகுதி

இதில் எந்த இடத்திலேயும் அவர் விஷ்ணுபுரம் விருதை, குறை சொல்ல வில்லை என்றெ எண்ணுகிறேன்,

தங்களுக்கு எழுதிய நண்பர், ஆர்வத்தின் காரணமாக, அவசர கோலத்தில் அப்படி எழுதியிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

அப்படி பட்ட ஒரு தவறான கேள்விக்கு, தங்களுடைய பதில், சிறு ஏமாற்றும் அளிக்கின்றது.

நான் திரு. வண்ணதாசனின் வாசகன் அல்ல,,அவரின் எழுத்தின் மேல் எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது இல்லை, அவர் மீது தங்கள் வைக்கும் விமர்சனைங்களை ஏற்கிறேன்.

ஆனால், நான் திரு, ஜெயமோகன் அவர்களின் வாசகன், அதனாலேயே எனக்கு என்று ஒரு வாசிப்பு தரம் இருக்கிறது என்று எண்ணுகிறவன் நான். அந்த தரம், சில ஆதாரமற்ற கேள்விகளுக்கான பதில்களால் சஞ்சலம் அடைவதை என் மனம் விருப்பவில்லை.

இதை ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

நன்றி

வே. அழகு மணிகண்டன்

***

அன்புள்ள ஜெ

வண்ணநிலவன் பற்றிய உங்கள் பதிவு வருத்தமளிக்கிறது. அந்தப்பதிவில் சொல்லப்பட்டிருந்த வரி வண்ணநிலவன் எழுதியது அல்ல. அதை முகநூலில் பிச்சைக்காரன் என்பவர் எழுதியிருந்தார். அவர் ஒரு வம்புப்பத்திரிகையில் வேலைபார்ப்பவர். நாலாந்தர கிசுகிசுக்களையும் திரிப்புகளையும் எழுதிவருபவர். உங்களைப்பற்றியும் நிறைய அவதூறுகளை எழுதியிருக்கிறார். அவரோ அல்லது வேறுயாரோ அதை உங்களுக்குக் கடிதமாகவும் எழுதியனுப்பிவிட்டார்கள். வண்ணநிலவன் உத்தேசித்தது அது அல்ல

செல்வக்குமார்

*

அன்புள்ள நண்பர்களுக்கு

வண்ணநிலவன் சென்ற பல ஆண்டுகளாக எழுதிவரும் ஒற்றைவரிக் குசும்புகளின், பொருமல்களின் ஒரு பகுதியாகவே நான் அந்த வரியை வாசித்தேன். இதை பொதுவாக உதாசீனம் செய்துவிட்டுச் செல்லலாம். அதுவே என் வழக்கம். ஆனால் இதுவே ஒருவகை ‘கருத்தாடலாக’ சென்றகாலச் சிற்றிதழ்ச் சூழலில் இருந்துவந்தது. அத்தகைய தருணங்களில் எல்லாம் நேருக்குநேராக நின்று அப்பட்டமாக உடைத்து பேசுவதையே மாற்றுவழியாக, சரியான முறையாக, நான் செய்திருக்கிறேன். சுந்தர ராமசாமி இப்படி பூடகமாக எழுதியபோதும்கூட.

வண்ணநிலவன் விஷ்ணுபுரம் விருதைப்பற்றி ஒரு வரி சொல்லத்தெரியாதவர் அல்ல. அது எவரால் ஏன் வழங்கப்படுகிறதென அறியாத அப்பாவியும் அல்ல. இது போன்ற தந்திரங்கள் உண்மையான தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்யப்படும் இலக்கிய முயற்சிகளை, அவற்றில் ஈடுபட்டுள்ள பலநூறு இளையதலைமுறையினரின் ஆர்வத்தைச் சிறுமை செய்பவை.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77

$
0
0

[ 28 ]

அர்ஜுனன் விழித்துக்கொண்டபோது கல்லால் ஆன சிற்றறைக்குள் வெம்மைமிக்க தசையென அணைத்திருந்த மென்மயிர்ப் போர்வைக்குள் இருந்தான். உள்ளே எரிந்த கனலின் ஒளியில் அச்சிற்றறை செங்குருதி என ஒளி நிறைந்திருந்தது. கைகளை ஊன்றி எழமுயன்றபோதுதான் உடலில் ஆழ்ந்த வலியை உணர்ந்தான். முனகியபடி படுத்துக்கொண்டபோது விழிகளுக்குள் அலையலையாக குருதியின் ஓட்டத்தை கண்டான். கீழே விழுந்துகொண்டே இருப்பதைப்போல் உணர்ந்தான். அவன் படுத்திருந்த மென்மயிர்ப் படுக்கை அலைபாயும் நீர்ப்பரப்பெனத் தோன்றியது.

அவனுடைய முனகலை அவனே கேட்டான். மெல்ல எழுந்து அவனருகே வந்து குனிந்த முகத்திலிருந்து பிறிதொரு முனகல் எழுந்தது. “யார்?” என்று அவன் அஞ்சிய குரலில் கேட்டான். “நான் பூசகன். அஞ்சவேண்டியதில்லை, இளைய பாண்டவனே” என்றார் பூசகர். “உன்னை நான் மீட்டு இங்கே கொண்டுவந்தேன்.” அர்ஜுனன் கண்களை மூடி எண்ணங்களால் காலங்களை தொட்டுவிட முயன்றான். சலித்து சோர்ந்து பெருமூச்சுடன் ஓய்ந்தான். “எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்றான்.

“உன்னை அவர்கள் கொண்டுவந்து இவ்வூர் எல்லையில் போட்டுவிட்டு சென்றிருந்தனர். கடும் காய்ச்சல் கண்டிருந்தது. உடலெங்கும் காயங்கள் சீழ்கொண்டிருந்தன” என்று அவர் சொன்னார். “புண்கள் ஆற இன்னும் நாட்களாகும். ஆனால் உயிர்பிழைத்துவிட்டாய்.” அர்ஜுனன் கண்களை மூடியபடி “ஆம், நான் எளிதில் சாகமாட்டேன்” என்றான். அவர் “நீ மீண்டு வருவாய் என நான் எண்ணவில்லை. உன்னை மேலே அனுப்பியபோதிருந்த நம்பிக்கை நீ சென்றகணமே முற்றிலும் அழிந்தது” என்றார்.

அர்ஜுனன் “நான் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை” என்றான். “ஆம், அவர்களின் வேதம் வல்லமை மிக்கது. அது நம் சொற்கள்மேல் படர்ந்து அனைத்தையும் தான் இணைத்துக்கொண்டுவிடுகிறது. நம்முடன் நாமே போர்புரியும்படி செய்கிறது” என்றபடி அவர் அருகே பீடத்தில் அமர்ந்தார். “அதை மகாநாராயணம் என்கிறார்கள்.” அவன் திடுக்கிட்டு போர்வையை விலக்கிவிட்டு எழுந்தமர்ந்து “என்ன சொன்னீர்கள்?” என்றான். “அவர்களின் தெய்வம் ஏந்திய படைக்கலம் அது” என்றார் பூசகர். “உன்னை உளமயக்குக்கு ஆளாக்கினேன். நிகழ்ந்ததை எல்லாம் உன் சொற்களினூடாக அறிந்துகொண்டேன். நீ சென்ற அக்குகை சுக்லபிலம் எனப்படுகிறது. அதற்குள் உறையும் தெய்வத்தை நீ எதிர்கொண்டாய்.”

அவன் அச்சொல்லை வறண்ட உதடுகளால் உச்சரித்தபடி தலையைச் சாய்த்து கண்களை மூடிக்கொண்டான். அவன் விழியோரம் வழிந்த நீர் கன்னங்களில் இறங்கியது. மூக்கை உறிஞ்சும் ஒலி கேட்டு அவர் மீண்டும் அருகே குனிந்தார். “நீ தோற்கவில்லை, இளையவனே. பெருந்தெய்வம் ஏந்திவந்த படைக்கலத்தின் முன்புகூட நிமிர்ந்து நின்றிருக்கிறாய். உன்னை ஆட்டுவிக்கும் ஊழ் பெரிது.” அர்ஜுனன் ஆம் என தலையசைத்தான். “நீ எஞ்சியிருப்பது எதனால் என நான் எண்ணி எண்ணி வியக்கிறேன். நானறியா பெருநோக்கம் ஒன்று இருக்கலாம்.”

அர்ஜுனன் தன் காய்ச்சலை காதுகளில் உணர்ந்துகொண்டு அசைவிலாது கிடந்தான். கைகால்களில் இனிய தளர்வும் கண்களில் அனல்பட்ட எரிதலும் இருந்தன. மூச்சு மூக்குத்துளைகளை வறளச்செய்தது. ஆனால் வாயில் எச்சில் கசந்தது. “நான் இங்கிருப்பதை அவள் அறிவாளா?” என்றான். அவர் “இல்லை, இவ்வூரில் எவரும் அறியவில்லை” என்றார். அவன் பெருமூச்சுடன் “நன்று” என்றான். “பால் அருந்துகிறாயா?” என்றார் பூசகர். “தேவையில்லை… என் நா சுவையிழந்துள்ளது” என்றான் அர்ஜுனன்.

“ஆம், ஆனால் தொண்டைக்கு பால் தேவையிருக்கும்” என்றபடி அவர் எலும்புகள் ஒலிக்க மூச்சால் உடலை உந்தி எழுந்துசென்று அருகிருந்த அனலில் சிறுசெம்புக்குடுவையை வைத்து வெம்மையூட்டி அதிலிருந்த பாலை மூங்கில்குவளையில் ஊற்றி எடுத்துவந்தார். “நேற்றுவரை உனக்கு சிறு குழாய் வழியாக உணவூட்டினேன். இது மூலிகைப்பால். உடலுறுப்புகள் அனைத்தையும் நனைத்து உயிரூட்டுவது” என்றார். அர்ஜுனன் கைகளை ஊன்றி விலா எலும்புகள்மேல் மிகக்கூரிய வலியை உணர்ந்தபடி எழுந்தமர்ந்து அதை வாங்கி அருந்தினான்.

நாவில் பால் பட்டதுமே உடல் குமட்டியது. ஒவ்வாத எதையோ வாயில் கொண்டதுபோல. ஆனால் தொண்டை இனிதாக அந்த எரிதலை பெற்றுக்கொண்டது. வயிற்றிலிருந்த அனல் அது சென்று படிந்ததும் அணைந்தது. சிலகணங்களில் குருதியெங்கும் இளவெம்மையாக அது ஓடிநிறைவதை உணரமுடிந்தது. “உப்பும் இனிப்பும் கலந்த பால்” என்று அவர் சொன்னார். “மறுபிறப்படைந்துவிட்டிருக்கிறாய். பாலே அமுது” என புன்னகைத்தபோது கூழாங்கற்பற்கள் தெரிந்தன. தலை ஆடியது. “நான் உன்னை மீட்டதை தெய்வங்களுக்கு சொன்ன மறுமொழி என்றே எடுத்துக்கொள்கிறேன்” என்றபடி குவளையை திரும்பக்கொண்டுசென்று வைத்தார்.

“நான் உயிர்வாழ விரும்பவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “திசைவென்று நான் அடைந்த படைக்கலங்களனைத்தும் பொருளற்றவை என இப்போது உணர்கிறேன்.” அவர் புன்னகைத்து “எப்போதும் ஒரு படைக்கலம் அப்பால் இருந்துகொண்டிருக்கும்” என்றார். “அதன் பொருளென்ன என்று எனக்குப் புரியவில்லை” என்றான். அவன் சொல்வதென்ன என்று அவர் உணர்ந்து புன்னகைத்து “அங்கிருந்துதானே இப்பயணம் தொடங்கியது?” என்றார். அவன் திகைப்புடன் அவரை நோக்கினான். “அவ்வண்ணமென்றால் நான் தேடுவதை இன்னமும் அடையவில்லை அல்லவா?” என்றான். அவர் “ஆம்” என்றார்.

அவன் பெருமூச்சுடன் உடலை தளர்த்தினான். அவனுள் எழுந்த எண்ணங்களைத் தொடர்ந்துசென்று சில சொற்களை எடுக்க முயன்றான். ஆனால் நழுவி நழுவிச் சென்றன அவை. அவற்றை தேடிச்செல்லும்தோறும் அவன் தன்னிலை அழிந்துகொண்டிருந்தது. தன் குறட்டையொலியை கேட்டுக்கொண்டு அவன் விழித்தான். வாய் ஒழுகியிருந்தது. “துயின்றேனா?” என்றான். கணப்பருகே உடலைச் சுருட்டிப் படுத்திருந்த அவர் “ஆம், சற்றுநேரம்” என்றார். “உடல் இத்தனை சோர்வை அறிந்ததே இல்லை” என்றான். “இறந்துபிறக்காமல் மெய்யான எதையும் அறிந்துவிடமுடியாது, பாண்டவனே” என்றார் பூசகர்.

“நான் இருந்தாகவேண்டுமா?” என்றான். “ஆம், இல்லையேல் நீ எஞ்சியிருக்கமாட்டாய்” என்றார். “ஏன்?” என்றான். “நீ வெல்வாய்” என்றார். அவன் சிலகணங்களுக்குப்பின் “நான் இனி அறியவேண்டியதென்ன, பூசகரே?” என்றான். “அறியேன். இவை நமக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஏதோ ஒன்று எஞ்சியிருக்கிறது” என்றார். “இல்லை, நாம் அவ்வாறு எண்ணிக்கொள்ளவேண்டியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “மகாநாராயணம் இன்று இறுதியானது. நிகரான பிறிதொன்று நாளை எழலாம். இன்று இதுவே இவையனைத்தையும் ஆள்கிறது.”

“ஆம், இந்த யுகத்தின் வேதம் அது” என்றார் அவர். “ஆனால் அடிமுடியறியவொண்ணா ஒன்றின் ஓர் உருவம் மட்டுமே அது. ஒவ்வொன்றையும் தொட்டு நாம் சென்றறியும் பிறிதொன்று உள்ளது. அனைத்துமான ஒன்று.” அவன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “ஆழ்ந்து சென்றறியலாகும். அகன்றுசென்று தொட்டுவிடலுமாகும். அது அங்குள்ளது என்பதில் ஐயமே இல்லை” என்றார் பூசகர். “அதை எங்கு சென்று தேடுவது? எவ்வண்ணம் அறிவது?” என்றான் அர்ஜுனன்.

அவர் அவனை தன் வெண்பனித் திவலைபோன்ற விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் விரல்கள் அசையத் தொடங்குவதை அவன் கண்டான். அவை வலைபின்னும் சிலந்தியின் கால்கள் போன்று நடுங்கி அதிர்ந்தன. அவற்றில் அந்த மென்சரடை காணமுடிந்தது. அவன் அவரை கூர்ந்து நோக்கியபடி படுத்திருந்தான். மூச்சில் எழுந்தமைந்த மார்புக்குள் காற்றின் அழுத்தம் வலியளித்தது. அவருடைய விரல்கள் விரிந்து நெளிய தன்னையும் இணைத்துக்கொண்டு அந்த வலை நெசவுகொள்வதை அறிந்தான். அவர் விழிகள் வெறித்து அசைவிழந்தன. உதடுகளின் நடுக்கத்திற்கு அப்பாலிருந்தென உறுமலொன்று எழுந்தது.

“சொல்க…” என்று அவர் எவரிடமோ கேட்டார். “சொல்க, என்ன செய்யவேண்டும்? இவன் செல்லவேண்டியது எங்கு? சொல்க! ஆழ்ந்தவரே, மறைந்தவரே, அங்கிருப்பவரே, அறிந்தவர் நீங்கள். சொல்க! எங்கள் வழியென்ன?” அக்குரல் மன்றாடியது. “சொல்க, முற்றிலும் வென்றவர்களுக்கும் முழுதாகத் தோற்றவர்களுக்கும் மெய்யறியும் வல்லமை உண்டு என்பர் மூத்தோர். சொல்க! எந்தையே, சொல்க!”

அறையை வெள்ளிவலைச்சரடுகள் முற்றிலுமாக மூடிவிட்டன என அவன் கண்டான். அசைவற்றவனாக அவன் நோக்கிக்கிடந்தான். அவன் எண்ணங்கள் அதிர்வுகளாக அந்த வலையை அடைந்தன. எண்ணங்களை பார்க்கமுடிந்தது. விரல் நீட்டினால் அவ்வெண்ணங்களை தொட்டறியமுடியும். எண்ணங்களை சீண்டி மீட்டமுடியும். சரடின் மறுமுனையில் அவன் பிறிதொன்றை அறிந்தான். பிற எண்ணம் ஒன்று. குரலல்ல, மொழியுமல்ல. எண்ணமென்றே அவனை அடைந்தது. உள்ளமென அவனுள் நிகழ்ந்தது, ஆனால் பிறிதாகவே இருந்தது.

“பேரனல்.” அவன் அவ்வெண்ணம் செந்நிறத்தில் எரிவதைக் கண்டான். நெருப்பாலான நீள்சரடு ஒன்றின் அதிர்வு. “அடியிலி, முடியிலி.” அவன் வேறெங்கோ அதை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் மெல்லிய வலிப்பொன்று அவன்மேல் படர்ந்தது. தன் வலக்கால் துடிப்பதைத்தான் அவன் உணர்ந்தான். அதை அடக்கமுயல்கையிலேயே வாய் கோட்டிக்கொண்டது. வலக்கை இழுத்து வளைந்தது. பார்வை மங்கலாகி அனைத்தும் ஊசலாடின. நினைவின் இறுதிக்கரைவில் அவன் அனல் என்னும் சொல்லில் நின்றிருந்தான். மீண்டும் விழித்தபோது அனல் என்னும் சொல்லில் எழுந்திருந்தான். அவனுக்குமேல் பூசகர் குனிந்து நோக்கிக்கொண்டிருந்தார்.

“விடாய்” என்று அவன் சொன்னான். அவர் எழுந்துசென்று பாலைச் சூடாக்கி குவளையில் கொண்டுவந்து அவன் கடைவாயைத் திறந்து ஊட்டினார். அதைப் பற்ற அவன் கையை தூக்கமுயன்றபோதுதான் கை அருகே ஒரு அடிபட்ட நாகமெனக் கிடந்து நெளிவதைக் கண்டான். “கை கை” என்றபோது கடைவாயில் பால் வழிந்தது. “நரம்புகள் இழுபட்டுள்ளன, இளவரசே. சீராக சிலநாட்களாகும்” என்றார் அவர். அவன் தன் உடலே எண்ணங்களுக்குத் தொடர்பின்றி கிடப்பதை உணர்ந்தான். “ஆனால் உடல் துடிக்கிறது. அது நன்று. உள்ளத்தை உந்தி அதற்குள் செலுத்திக்கொண்டே இரு. அது உயிர்கொள்ளும்” என்றார் அவர்.

அர்ஜுனன் தலையை அசைத்து கண்களை மூடிக்கொண்டான். அவனில் கண்ணீர் வழியத் தொடங்கியது. “காய்ச்சல் நின்றிருக்கிறது. புண்கள் ஆறத் தொடங்குகின்றன என்று பொருள்” என்றார் பூசகர். “முன்பென என் கை செயல்கொள்ளுமா?” என்றான். “கை என்பது சித்தத்தின் கருவி” என்றார் பூசகர். அவன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “நீ ஆற்றவேண்டியவை பல உள்ளன, இளவரசே” என்று பூசகர் சொன்னார். “நேற்று நான் அறிந்தவை அனைத்தையும் உன்னிடம் சொல்லவேண்டும்.”

அர்ஜுனன் “நான் நேற்று கண்டது…” என தொடங்கினான். “அதுவே அங்கிருப்பது. என்றுமுள்ளது. ஆக்கமோ அழிவோ அற்றது. முழுமுதலானது. அதை அனலென்றால் சைவர். புனலென்றால் வைணவர். ஆற்றலென்றால் அன்னைநெறியர்” என்றார் பூசகர். அவன் அவர் சொற்களுக்காக காத்திருந்தான். “நான் பெற்றது ஒன்று. இப்போது சொல்வது அதை மொழியென்றாக்குவது” என்று பூசகர் சொன்னார். “இப்பகுப்புகளுக்கு என்ன பொருளென்று அறியேன். ஆனால் இப்பகுப்புகளினூடாக அன்றி நாம் எதையும் அறியமுடிவதில்லை. அலைகளாகவன்றி கடலை எவர் காணமுடியும்?”

“அழியா அனலை அறிய முயன்ற இருவரால் தோன்றியவை வேதங்கள் என்றறிக! தொல்வேதங்களனைத்தும் பிரம்மனிலிருந்து எழுந்தவை. நாகவேதமும் அசுரவேதமும் மற்றும் இம்மண்ணிலுள்ள அனைத்து நிஷாதவேதங்களும் பிரம்மனால் உருவாக்கப்பட்டவை. அவற்றைக் கறந்தெடுத்த சாறென்றமைந்த வாருணம், மகாருத்ரம், மாகேந்திரம், மகாவஜ்ரம் என்னும் பிற வேதங்களனைத்தும் பிரம்மஜன்யம் என்றே அழைக்கப்படுகின்றன” என்று பூசகர் சொன்னார். “விண்ணளாவ விரிந்தெழுந்து அறிந்தவை. முடிவின்மைக்கு நிகராக ஒரு சொல்லை வைத்தவை. அனலுக்கு மாற்றென மலரை வைத்தவை. அவற்றை கவிதைகள் என்கின்றனர் கற்றோர்.”

“இளையோனே, அவையனைத்தையும் தன்னுள் அடக்கி எழுந்தது மகாநாராயணவேதம். ஆழ்ந்து சென்று அறிந்த நுண்சொல் அது. முடிவின்மையை ஓர் ஒலியென்றாக்கிக்கொண்டது. அனலின் அடியிலிக்கு நிகரென நுண்சொல்லில் எழும் ஒலியின்மையை முன்வைத்தது” என்றார் பூசகர். “நீ மகாநாராயணத்தால் வெல்லப்பட்டாய். உன்னுள் இருந்து பெருகி எழுந்து உன்னைச் சூழ்ந்தது. உன் எதிரியென வந்து உன்னை வென்றது.”

அர்ஜுனன் “அதற்கும் அப்பால் அமைந்துள்ளது என்ன?” என்றான். “அது வேதம் கடந்தது” என்று அவர் சொன்னார். “வேதக்கனி அது என்கின்றனர். கனியென்று எழுவதே முன்பு அதன் விதையென்றும் இருந்தது. சென்று அதை அடைக! அதை அடையாமல் வேதமென எழுந்த எதையும் வென்று கடக்கவியலாது.” அர்ஜுனன் விழிகள் மட்டுமென்றாகி அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “அதை பாசுபதம் என்கின்றனர்” என்று அவர் சொன்னார்.

[ 29 ]

நாற்பத்தெட்டு நாட்களாயிற்று அர்ஜுனன் மீண்டும் தன் உடல் திரும்ப. அவன் கிடந்த அந்த கல்சிற்றறை உண்மையில் தன் சிறு கல்லில்லத்தின் அடியில் பல்லாண்டுகளாக பூசகரால் தோண்டி உருவாக்கப்பட்ட வளை. அது அங்கிருப்பதை அக்குடிகள் எவரும் அறிந்திருக்கவில்லை. அதனுள் கூட்டுப்புழு என அர்ஜுனன் வளர்ந்து உருமாறிக்கொண்டிருந்தான். அவர் அளித்த பச்சிலைச்சாறும் வேர்ப்பொடிகளும் அவன் உடலனலை ஓம்பின. புண்பட்ட பழைய உடல் உயிரிழந்து கருகி சருகுப்பரப்பாகி உரிந்து அகன்றது. உள்ளிருந்து புதிய தளிருடல் எழுந்து வந்தது.

ஒவ்வொருநாளும் அவன் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தான். முதலில் இருந்த அச்சங்களும் ஐயங்களும் துயரும் மெல்ல அகன்றன. கொந்தளிப்புகள் அமைதிகொண்டன. பின்னர் நாளெல்லாம் ஒரு சொல்லும் நாவிலெழாமலானான். உள்ளே ஓடிக்கொண்டிருந்த சொற்பெருக்கும் தேய்ந்திற்று ஓய்ந்தது. அமைதி காலத்தை இல்லாமலாக்கியது. காலமென்பது உள்ளும் புறமும் ஓடும் சொற்களே என்றறிந்தபின் விழிப்பா துயிலா என்றறியாத நிலையில் இருப்புணர்வொன்றாக மட்டுமே எஞ்சி தனியறைச் சுடர் என அசைவிழந்து நின்றிருந்தான்.

அவன் உடல் தேறி எழுந்து உடலுக்கு நீர்விட்டு பூசகர் அளித்த ஆடையை அணிந்துகொண்டபோதுதான் மீண்டும் சொற்தளத்திற்கு வந்தான். முந்தையநாள் இரவு பூசகர் அவன் உடலில் நூறு நரம்புமுடிச்சுகளில் ஊசிகளால் மெல்ல குத்தி நோக்கியபின் “நரம்புகள் இறுக்கம்கொண்டுவிட்டன, பாண்டவனே. நீ மீண்டுவிட்டாய்” என்றார். “மீண்டும் எழும் உடல் பிறந்தெழுந்த குழவிக்குரியதென உயிர்நனைந்து துடித்திருக்கிறது. இன்று நீ இளைஞனைப்போல் சென்று களம்நிற்க முடியும்.” அவன் சொற்களுக்கு அப்பாலிருந்தான். அவர் சொன்னதைக் கேட்ட உள்ளம் வேறெங்கோ இருந்தது.

மறுநாள் அவனை ஆடைகளைந்து அமரச்செய்து கொதிக்கும் மருந்திலை நீரைவிட்டு நீராட்டினார். அவன் எழுந்ததும் வேர்ச்சாறு கலந்த பாலை அருந்தும்படி நீட்டினார். அவன் முதல்முறையாக ஒரு சொல்லை அடைந்தான். “அனல்.” அதை அவன் சொல்லியிருக்கவேண்டும். அவர் “ஆம், அனலெழுந்துள்ளது. நீ உடல்சிறந்துள்ளாய், பாண்டவனே” என்றார். அவன் “நான் கிளம்பியாகவேண்டும்” என்று சொன்னான். “ஆம், அனல்தேடிச் செல்லவேண்டும் என்பதற்காகவே உயிர்கொண்டிருக்கிறாய். இன்றே கிளம்புக!” என்றார் பூசகர்.

மலைச்சிற்றூர்கள் முழுதடங்கிவிட்டிருந்தன. குனிந்து நோக்கினால் கால்கள் தெரியாதபடி வெண்பனி மூடியிருந்தமையால் முகிலில் நீந்திச்சென்றுகொண்டிருக்கும் உணர்வே எழுந்தது. அவன் ஊரைக்கடந்து வெளியே சென்றதை எவரும் பார்க்கவில்லை. பார்வதியின் இல்லத்தைக் கடந்துசென்றபோது அதன் மூடிய சாளரங்களுக்கு அப்பால் அவள் நோக்கு கூர்கொண்டிருப்பதான உணர்வை அவன் அடைந்தான். அவன் காலடிகள் பனிக்குள் நீரில் இலைவிழும் மெல்லொலியுடன் கேட்டன. மிக அப்பால் ஒரு கூரை சொட்டும் ஒலி கேட்டது. மலையிடுக்குகளில் காற்று ஊதிச்செல்லும் முழக்கம் எழுந்து அமைந்தது.

ஊரெல்லையில் அவன் மூச்சொலியை கேட்டான். பின்னர் பனிப்பரப்பில் ஒரு கரியதீற்றல் என அந்தக் காட்டெருதைக் கண்டான். மேலும் அணுகியபோது அதன் விழிகளை அருகிலெனக் கண்டான். அது மூச்சு சீறி தலைதாழ்த்தியது. கழுத்தின் மயிர்த்தோகைகள் நிலம் தொட்டு அசைந்தன. பெருந்திமில் தலையென எழுந்து நின்றது. அவன் அஞ்சாது நெருங்கிச்செல்ல அது மேலும் ஓர் அடி முன்னால் எடுத்துவைத்தது. அவன் அருகே சென்று அதன் நெற்றியில் கைவைத்தான். திமில் சிலிர்க்க காதுகள் தழைய அது மீண்டும் மூச்சொலித்தது. அவன் அதன் விலாவை வருடியபடி கடந்துசென்றான்.

அவனை நோக்கியபடி அது பின்னால் நின்றது. மெல்லிய குரலில் “க்ரம்?” என்று கேட்டது. அவன் திரும்பி நோக்கியபோது தலையை அசைத்தது. அவன் அதன் விழிகளை நோக்கியபடி நின்றான். அது அவனருகே திமில் அசைய நடந்துவந்து காதுகள் உடுக்கின் சரடுமுழைபோல ஆடி அடித்துக்கொள்ள தலையை ஆட்டியபின் தும்மல்போல் ஓர் ஒலி எழுப்பியது. மீண்டும் முரசுத்தோலில் கோல் தொட்டதுபோல “க்ரம்?” என்றது. அவன் அதை நோக்கிக்கொண்டு நின்றான்.

கால்களை எளிதாக எடுத்துவைத்து எடைமிக்க உடலை மேலேற்றி அது சரிவில் சென்றது. அவன் அதைத் தொடர்ந்து சென்றான். அது அவன் தொடர்வதை அறிந்திருந்தது. அவன் களைப்புடன் நின்றபோது அப்பால் அதுவும் தயங்கி நின்றது. கீழே கிடந்த கற்களை எடுத்து வாய்க்குள் போட்டு பல்படாமல் குதப்பிவிட்டு உமிழ்ந்தது. மீண்டும் நடந்தபோது அவன் தொடர்கிறான் என்பதை உறுதிசெய்துகொண்டது.

அன்று மாலை அது சென்றடைந்த சிறிய மலைப்பொந்துக்குள் அவன் ஒடுங்கிக்கொண்டான். தன்னிடமிருந்த உலர் உணவை உண்டு அங்கே படிந்திருந்த பனிப்படலத்தை உடைத்து நீராக்கி அருந்தினான். அது மூன்றுகாலில் நின்றபடியே தலைதாழ்த்தி விழிசொக்கித் துயின்றது. துயிலிலும் அதன் செவிகள் ஓசைக்கேற்ப அசைந்துகொண்டிருந்தன உடல் சிலிர்ப்பும் விதிர்ப்பும் கொண்டது. மூச்சொலியுடன் விழித்து கால்மாற்றி நின்றது. காலையில் அதன் ஒலிகேட்டு அவன் விழித்துக்கொண்டான். அது கிளம்பியபோது உடன் கிளம்பினான்.

ஒரு வினாவும் இன்றி அந்த ஏற்பு நிகழ்ந்ததை அவன் எண்ணி வியப்பு கொள்வதற்கே மூன்று நாட்கள் கடந்துவிட்டிருந்தன. கிளம்பும்போது எங்கு செல்கிறோம் என அவன் திட்டமிட்டிருக்கவில்லை. மீண்டும் கின்னரர் உலகம் என்றே எண்ணியிருந்தான் என பின்னர்தான் உணர்ந்தான். எங்கிருந்தோ ஓர் அழைப்பு வரும் என அவன் உள்ளம் சொன்னது. “செல்க, அது உன்னை அழைத்துக்கொள்ளட்டும்” என்றுதான் பூசகரும் சொல்லியிருந்தார். ஆகவேதான் தெளிவான அவ்வழைப்பு வியப்பை அளிக்கவில்லை.

ஏழு நாட்கள் அவன் அவ்வெருதுடன் நடந்தான். அது களைப்படையவில்லை. பனித்துகள்களையும் குற்றிச்செடிகளின் சிறிய காய்களையும் அன்றி எதையும் உணவாகக் கொள்ளவில்லை. அவன் ஏழாம்நாள் தங்கியிருந்த பாறைப்பிளவுக்குள் மென்மணல்குழிக்குள் மலைக்கிழங்குபோல ஆழ்துயிலில் இருந்த பனிக்கீரி ஒன்றைப்பிடித்து கல்லுரசி நெருப்பிட்டு சுட்டு உண்டான். அவற்றைப் பிடிக்கும் முறையை அடைந்ததும் தயக்கமில்லாது சென்றுகொண்டே இருந்தான்.

எட்டாவது நாள் புலரியில் ஒரு பெரிய மலைப்பிளவை எருது சென்றடைந்தது. அங்கிருந்து உருளைக்கற்களுடன் மண் பொங்கி அருவியென வழிந்து பெரிய கூம்பாக நின்றது. அதன்மேல் எருது ஏறிச்சென்றபோது கற்கள் உருண்டுருண்டு விழுந்தன. அவன் ஏறியபோது அவனை முட்டித் தெறித்து கீழே சென்றன. அந்தக் கூம்பு ஏறத்தொடங்கியபின்னர்தான் எத்தனை பெரிதென்று தெரிந்தது. துணிக்குவியல்போல அது அவன் ஏறுந்தோறும் தழைந்து கீழே வந்தது. பின்னர் அந்த எருது கால்வைத்த இடங்களில் மட்டுமே தான் காலை வைக்கவேண்டும் என்று கண்டுகொண்டான்.

மேலேறிச்சென்று மலைப்பிளவினூடாக அப்பால் நோக்கியபோது திகைப்புடன் நெஞ்சுவிரிய மூச்சிழுத்துவிட்டான். அங்கே பசுமைதேங்கியதுபோல ஒரு சிறிய சோலை இருந்தது. உயரமில்லாத சோலைமரங்கள் பச்சை நுரைக்குமிழிகள்போல இலைக்குடை சூடி நின்றன. நடுவே ஓடிய சிற்றோடைகளின் இருமருங்கிலும் நாணல்கள் அடர்ந்திருந்தன. சோலையின் மையமாக ஓடிய ஆறு அப்பால் பிறிதொரு மலைப்பிளவின் வழியாக ஊறிவந்து இரையெடுத்த மலைப்பாம்புபோல சற்று பெருத்து மீண்டும் ஒடுங்கி அவன் காலடியில் ஒரு பாறைவெடிப்புக்குள் புகுந்து மறைந்தது. நீர் விழும் ஒலியை கேட்கமுடியவில்லை. ஆனால் காலில் அந்த நீரோடையின் அதிர்வை அறியமுடிந்தது.

எருது கீழே இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அவன் கால்களை எடுத்து வைத்து உடல்நிகர்செய்து மெல்ல கீழிறங்கினான். கீழிறங்குவது மேலும் கடினமாக இருந்தது. இருமுறை வழுக்கி விழுந்து கைகளை ஊன்றி அமர்ந்தான். மேலே நின்றபோது அத்தாழ்வரையின் நெடுந்தொலைவை நீள்விழிக்கோணத்தில் நோக்கியமையால் ஆழம் தெரியவில்லை. அவன் நோக்கிய மரக்கொண்டைகள் புல்பத்தைகள்போல மிகக்கீழே இருந்தவை. இறங்கி செல்லச்செல்ல வியர்வை வழியலாயிற்று.

அந்தச் சிற்றாறும் அதன் கிளையோடைகளும் வெம்மைகொண்டு கொதித்துக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. அதிலிருந்து நீராவி புகைபோல தயங்கி எழுந்து வெண்மைகொண்டு காற்றில் பட்டுச்சல்லா போல சுழன்றாடிக்கொண்டிருந்தது. அவன் நடுவே இருமுறை அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு கீழிறங்கினான். அந்தியிருண்ட பின்னரே கீழே சென்று சேர்ந்தான். அங்கிருந்த பாறை ஒன்றில் இளைப்பாறினான். காலையில் எழுந்தபோது எருது அவன் அருகே இல்லை என்பதை அறிந்தான். அதன் குளம்புகளுக்காக தேடியபோது அப்பகுதியெங்கும் பலநூறு குளம்புத்தடங்களை கண்டான்.

எழுந்து நின்று அந்நிலத்தின்மேல் காலையொளி பரவுவதை நோக்கினான். நீள்வட்டமாக மலைகளால் சூழப்பட்டிருந்தது அத்தாழ்வரை. அங்கே கதிர் எழுவது பிந்தியும் அணைவது முந்தியும் நிகழுமெனத் தெரிந்தது. அங்கிருந்த வெந்நீர் ஆறு குளிரை மிகவும் குறைத்துவிட்டிருந்தது. அந்த மரங்களும் செடிகளும் அவ்வெப்பத்தை உண்டு அங்கு வாழ்பவை என்று தெரிந்தது. குனிந்து நிலத்தை நோக்கியபடி நடந்தான். மானுடக் காலடிகள் எவையும் தென்படவில்லை. செவிநிறைக்கும்படி பறவைக்குரல்களும் குரங்குகளின் ஓசைகளும் கேட்டுக்கொண்டிருந்தன.

ஆற்றுக்குச் செல்லும் ஓடையொன்றின் வெம்மையெழுந்த நீரை அள்ளி முகம் கழுவிவிட்டு அருந்தினான். கனிந்து நின்ற அத்திப்பழங்களை பறித்து உண்டான். அச்சோலையை சுற்றிவந்தான். மரநிழலிலும் புதர்களிலும் எருதுகள் கால்மடித்துக் கிடந்து கண்களைமூடி அசைபோட்டன. புதர்களுக்குள் செவிவிடைத்து விழி உருட்டி நின்றிருந்த மான்கள் அவன் காலடி அணுகியதும் வால் விரைத்து அசைய ஓசை ஒவ்வொன்றுக்கும் சிலிர்த்து ஒற்றை நாண் எய்த அம்புக்கூட்டமென பாய்ந்து மறைந்தன. புதர்களிலிருந்து ஓணான்களும் அரணைகளும் எழுந்து சருகோசையுடன் ஓடின. மரக்கிளைகள் முழுக்க சிறிய கிளிகளின் ஓசை நிறைந்து அவற்றை கிலுகிலுப்பைச் செண்டுகளென்றாக்கியது.

உயிர் நிறைந்திருந்த காடு. மானுடவாழ்வுக்கான ஒரு சிறு அடையாளம்கூட தெரியவில்லை. அவன் மரங்களிலோ பாறைகளிலோ குழூஉக்குறிகள் தெரிகின்றனவா என்று நோக்கினான். பின்னர் குனிந்து கூர்ந்து நோக்கி ஒரு கல்லை எடுத்துப்பார்த்தான். அது வேல்முனை போலிருந்தது. கைகளால் செதுக்கப்பட்டதென்று தெரிந்தது. படைக்கலமாகும் கூர்கற்களை அவன் முன்னரும் கண்டிருந்தான். எச்சரிக்கையுடன் திரும்பி அந்தச் சோலையை விழிகளால் அளந்தான். அதற்குள் மானுடர் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என உறுதிசெய்துகொண்டான்.

ஆற்றங்கரை வரை சென்றபோது அவன் உடல் மயிராடைக்குள் வியர்த்து வழியத் தொடங்கியது. ஆடைகளைக் கழற்றி அப்பால் வைத்துவிட்டு வெண்ணிறமான சேறுபடிந்த அதன் கரையில் கால்புதைய நடந்து நீரை அணுகினான். கைசுடும் அளவுக்கு கொதித்து குமிழியிட்டது ஆற்றுப்பெருக்கு. அதில் சென்றிணைந்த ஓடைகளின் நீரையே தொடமுடிந்தது. நீரை அள்ளி தலைமேல் விட்டுக்கொண்டு திரும்பியபோது அவன் பாதிமண்ணில் புதைந்ததாக ஒரு சிவக்குறியை கண்டான்.

இல்லை, விழிமயக்கு, அது மலையாறு உருட்டிவந்த மோழைக்கல் மட்டுமே என சொல்லிக்கொண்டான். ஆனால் அவன் விழிகள் உறுதிசெய்துவிட்டிருந்தன. அருகணைந்து குனிந்து சூழ்ந்திருந்த மண்ணை விலக்கி நோக்கினான். சிவக்குறி பதிந்திருந்த ஆவுடை தெரிந்தது. அதை பெயர்த்தெடுத்த பள்ளத்தில் மண்புழுக்கள் நெளிந்தன. நீர் ஊறி மேலெழுந்து அதை மூடியது. அவன் அதை எடுத்து அருகே நிறுத்தினான். அவன் கையளவே இருந்தது. ஆற்றில் வந்த உருளைக்கல்லை செதுக்கி அமைத்தது. ஆவுடை சீரற்ற வடிவுகொண்டிருந்தது. அதை கல்லால் அடித்தே செதுக்கியதுபோல.

அதை சேறு அகல ஓடைநீரில் கழுவி எடுத்துக்கொண்டுசென்று அங்கிருந்த பாறை ஒன்றன் மேல் வைத்தான். கைகளால் மும்முறை அள்ளி அதற்கு நீராட்டு செய்தான். நீலமும் சிவப்பும் மஞ்சளும் என சுற்றிலும் அலர்ந்து நின்றிருந்த மலர்களைக் கொய்து அதன்மேல் இட்டு வணங்கினான். அவன் உள்ளம் பொருளற்ற ஏதோ சொற்களாக இருந்தது. ஒரு சொல்லில் தடுக்கி அவன் திகைத்தான். அனல். உடலுக்குள் ஒரு சொடுக்கலை உணர்ந்தான். தன் ஆடையை முழுமையாக கழற்றி வீசினான். இருகைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி அங்கே நின்று விழிமூடி தன்னுள் அந்த அனலுருவை காணலானான்.

தொடர்புடைய பதிவுகள்

கன்றுகள் காடாகவேண்டும்!

$
0
0

3

 

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன்.

இன்று மார்கழி 2, ஒரு வித திருப்தியுடன் எந்த வகையில் என்று தெரியவில்லை ஆனால் எண்ணிக்கொள்ளும்படியான நிறைவு இந்த கடிதம் எழுதிகிறேன். கார்த்திகை மாத மூன்றாம் வாரத்தில் தோட்டப் பணி தொடங்கி கார்த்திகை 24 அன்று செடி நடவு தொடங்கி அன்றே இனிதே நிறைவேறியது. அனைத்தும் மரப்பயிர் 30 வகையான மரங்கள், மரங்கள் என்பதை கடந்து புளி, புன்ணை, கொடுக்காப்புளி, கொய்யா, பலா, தான்றிகாய் என்று பல்லுயிர் பெருக்கம் நோக்கத்துடன் களவை, பின் நாட்களில் அடுத்த சந்ததிக்கு மரமாகலாம்.

அனுபவம் இல்லாது அனுமானங்கள் நல்ல பாடங்கள் கற்றுதருகிறது. கார்த்திகையில் மழை வரும், 15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் என்பதை கேட்டு சரி ஒரு மழை வந்திருச்சு உழவு பன்னியாச்ச இன்னொரு மழை வந்திரும், கிணற்றில் உள்ள தண்ணீரை இயந்திர மூலம் இறைப்போம் என்று களம் கண்டோம். நடவு நாள் நெருங்க நெருங்க பதட்டம் தான் மழை இல்லாததால் (எண்ணிக்கையில் குறைவாகயுள்ள) இயந்திர இறைப்பான்கள் கண்மாய் பாசனங்களுக்கு சென்றுவிட்டது. இன்றோடு நடவு முடிந்து 9 நாட்கள் ஆயிற்று முன்று முறை இடங்கர் வண்டி மூலமாக தண்ணீர் ஊற்றியுள்ளோம், இன்னும் சில முறை தொடரும், ஆழ்துளைக் கிணறு பணிகள் தொடங்கியுள்ளது எப்படியும் மாதம் பிடித்துவிடும் முடிவடைய.

ஆறாம் பணியும் முதல் கட்டம் நிறைவுற்றது.  ஐந்தாம் பணி மின்சாரம்ம்ம்ம் இத்தனை ‘ம்’ தேவைப்படுது சார் ;) மீண்டும் சென்றோம் வேளாண் வகை நேரடி சாத்தியம் இல்லையாம், இலவச இணைப்பு வின்னப்பித்த பிறகு அதன் அடிப்படையில் வேளாண் (3.50 பைசா) விண்ணப்பிக்கவேண்டுமாம். இலவச மின்சாரம் விண்ணப்பிக்க, காரம நிர்வாக அலுவலர் பணிகள் முடிக்க வேண்டும், பற்றோன்னடங்கல், சிட்டாடங்கள், கிணறு உரிமைதாரர் சான்றிதழ், இதில் கிணறு புஞ்சை வரை படத்தில் இல்லை ஆகையால் தாலுக் அலுவலகத்தில் எழுதி வைத்து நில அளவிடுவர் வந்து அதனை வரைப்படத்தில் ஏற்றவேண்டும் இப்படி நீண்டுக்கொண்டேபோகிறது. இதற்கேல்லாம் இப்பொது யோசிப்பதில்லை சார் அது அது பாடு நடக்கட்டும் என்ற தொடர்கிறோம். ஒரே சாத்தியம் மாற்று சூரிய சக்தி மின்சாரம் தான்.

வங்கி வகையில் மூன்றாவது 13% குறையாது என்ற வகையில் முடிவுற்றது. நான்காவதாக என்னும் ஒரு வங்கி புதிதாக கிளை தொடங்கியுள்ளன்ர் சாத்தியங்கள் உண்டு என்று கூற, நாங்கள் விண்ணப்பித்து அவர்கள் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருக்கிறார்கள்..

கடந்த நான்கு வாரங்களில் பாடங்கள் குறிப்பிட சில,

அ இன்றைய உணவு முறையும் பழக்கவழக்கங்களும் முறைப்படுத்தவேண்டும் உடல் -> உழைப்பிற்கு தயாராக. ஒரு வரிசை வாயிக்கால் எடுப்பதற்குள் முச்சு முட்டுது சார் ;). இதில்லாமல் நுணுக்கங்கள்  வேறு.

ஆ ஆட்களை வேலை வாங்க தனி திறமை வேண்டும். ஆள் இருந்தால் ஒரு மாதிரி ஆள் இல்லையேன்றால் ஒரு மாதிரி. உடல் உழைப்பு கடினம் ஆகையால் கடிந்து கொள்ளமுடியாது ஆனால் அவர்களாவே அந்த  வேலைக்கான அறத்தை பின்பற்றினால்தான் உண்டு (அறம் செய விரும்பு). தொடர்ச்சியின் பலனாக அந்த இடம், ஆட்கள் பழகிய பின் ஒரு புரிதல் வந்து அதற்கு பிறகு அனைத்தும் சரியாகுமாக என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

இ புவிசார் (ஊர், வட்டம், கருவிகள் வாடகைதார்கள், ஓட்டுனர்கள்) ஒத்துழைப்பு மிக அவசியம் முன் திட்டங்களும் கை கொடுக்காது அவ்வப்போது தேவைப்படுவது அவ்வப்போது தான் தெரியவருகிறது நிறைவேற்ற அகவாசம் குறைவே ஆகையால் உள்ளூர் பழக்கம் மிகுந்த உதவி. அனைத்து கருவிகளும் வண்டிகளும் சொந்தமாக இருப்பின் ஒரு வேளை முன் திட்டங்கள் கை கொடுக்களாம்.

இதற்கும் அப்பால் மன வல்லமை எந்த அளவு என்ற சோதனைகள் கடந்து கொண்டிருக்கும் காலம், இதில் நிறைவு, காரியங்கள் நல்ல படியாக முடிந்து கொண்டிருக்கிறது. முன்னோர்கள், பெரியோர்கள் ஆசிர்வாதங்கள் இருந்து அருளவேண்டும். கன்றுகள் காடாக அருளவேண்டும்

இத்தனை சிரமமில்லாமல் இருந்திருக்களாம் சில காலம் தாமதித்திருந்தால் ஆனால் ‘பருவத்தே பயிர் செய்’ என்பதை தொற்றிக்கொண்டேன். இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை என்ற நம்பிக்கை.

என் தந்தைக்கு சிறப்பு நன்றிகளை பதிவுசெய்யவேண்டும்.

மற்றபடி, தாங்களையும் தங்கள் இலக்கிய சுற்றத்தையும் பின் தொடர்கிறேன் ஆனால் கலந்துகொள்ளமுடியவில்லை விரைவில் வேகத்தை ஈடுசெய்யவேண்டும். விஷ்ணுபுரம் விருது விழா சிறப்புறப் பிரார்த்திக்கிறேன்.

 

நன்றி

நாராயணன் மெய்யப்பன்

 

இயற்கைவேளாண்மை அனுபவங்கள் நா மெய்யப்பன் கடிதங்கள் 1

இயற்கைவேளாண்மை அனுபவங்கள் நா மெய்யப்பன் கடிதங்கள் 2

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16812 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>