Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16818 articles
Browse latest View live

ஈரோடு சந்திப்பு 2017 –கடிதம் 3

$
0
0

b

அன்புடன் ஆசிரியருக்கு ,

 

முதலில் இது போன்றதோர் சந்திப்பை ஒருங்கிணைத்து, இளைய வாசகர்கள் பங்குபெற வாய்ப்பளித்தமைக்காக தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இத்தனை இளம் வயதில், தமிழிலக்கியத்தின் உச்ச ஆளுமையுடன் இரு நாட்களை கழிப்பது என்பது எத்தனை  பெரிய வாய்ப்பு. இது என்னுள் ஏற்படுத்திய தாக்கம் எளிதானதல்ல.

 

சந்திப்புக்கு முதல் நாள், தேர்வுக்கு தயாராவதை போல ஒருவித தவிப்பில் இருந்தேன். சந்திப்பன்று, உள்நுழையும்போதே நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த தாங்கள் ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றீர்கள். அப்போது என்னுள் நிரம்பிய உற்சாகம் இரு நாட்களுக்கு வடியவில்லை. மீசையற்ற முகத்தில் உங்களை பார்த்து பழகிய எங்களுக்கு, மீசையுடன் கூடிய உங்கள் முகம் ஒரு புது அனுபவம்.

 

இரண்டு நாட்களில் இலக்கியம், வரலாறு, தத்துவம், இசை, அரசியல், அறிவியல் மற்றும்  சூழியல் என ஒட்டுமொத்த அறிவுலகத்தின் சுருக்க வடிவத்தையும் அளித்துவிட்டீர்கள். தொடர்ச்சியாய், சோர்வின்றி உரையாடிய உங்கள் தீவிரம் ஆதர்சமாய் அமைந்தது. இலக்கிய வாசிப்பிலும், பொது அறிவுத் தளத்திலும் என்னுடைய நிலை குறித்த தெளிவையும் அடைய முடிந்தது. இலக்கியத்திற்கு புதிய என்னை போன்றவர்களின் தயக்கத்தையும், முதிர்ச்சியற்ற தன்மையையும், அறியாமையும், சில நேரங்களில் அபத்தங்களையும் தாங்கள் பெருந்தன்மையுடனும், பெருங்கனிவுடனும் பொறுத்து நாங்கள் சௌகரியமாய் உணரும்படி விவாதங்களை நடத்திச் சென்றீர்கள்.

sai

மாலையில், தங்கள் உரையாடலுடன்  கூடிய இனிய நடைப்  பயணமும், இரவில், தமிழின் மாபெரும் கதைசொல்லி ஒருவரிடம் இருந்து நேரடியாய்  பேய்க் கதை  கேட்டதும், கிடைப்பதற்கரிய கொண்டாட்ட  அனுபவங்கள். விஷ்ணுபுரம் விழா மற்றும் இச்சந்திப்பு நிகழ்வுகளின் இன்னொரு முக்கியமான பயன் ஒத்த இயல்புடைய நண்பர்களின் அறிமுகம். சுரேஷ் பிரதீப் , ஷாகுல் ஹமீது, கணபதி மற்றும் விஷால் ராஜா போன்ற நாளைய எழுத்தாளர்களின் அறிமுகமும், நட்பும், அன்பும் தரும் மகிழ்ச்சி ஈடில்லாதது.உங்கள் புத்தகக் கட்டிலிருந்து  வெங்கட் சாமிநாதனின் கையெழுத்துடன்  கூடிய அவரது இரு புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.

 

இச்சந்திப்பை ஒருங்கிணைத்து சிறு அசௌகரியம் கூட நிகழா வண்ணம் நிகழ்த்திக்காட்டி நல்லுணவு அளித்து, அன்புடன் உபசரித்த திரு.கிருஷ்ணன், திரு.செந்தில் ஆகியோருக்கு நன்றி. கலந்துகொண்ட நண்பர்களுக்கு எனது அன்பு.

இறுதியாய் கனிவுடன் கட்டித் தழுவி தாங்கள் விடை கொடுத்தது,  நெகிழச்  செய்த உச்ச கணம் . அப்பேறுக்காய் மீண்டும் உங்கள் பாதங்களை சென்னி சூடிக்கொள்கிறேன்.

 

அன்புடன்,

பிரபு சாய் பிரசாந்த் .

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒருமரம்,மூன்று உயிர்கள்

$
0
0

index

 

என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் “நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்” என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார்.சொன்னேன். அவர் என்னிடம் “அவனுங்க கிடக்குறானுங்க லூசுப்பசங்க” என்றார்.

அவர் தினசரி பார்க்கும் லாபமே பல லட்சங்களிருக்கும். அதன் காரணமாக இப்படி ஆணவமாய்ப் பேசுகின்றார். ஏதோ ஒரு தொழி்லில் கொடி கட்டிப் பறப்பதனாலேயே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? தன்னைப் பற்றிய மதிப்பீடே அவன் வெளிப்புறத்தில் சாதிக்கும் சாதனையை அடிப்படையாக வைத்துத்தான் எனில் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்க முடியாதவன் என்ன ஆவான்? அவனுக்கு இந்த சமூகம் எந்த வகையிலும் ஒத்து வராத ஒன்றாகி விடுமே?

நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்காமல் உள் நோக்கிய அகப்பயணம் மூலம் தானே தன்னைப் பற்றிய ஒரு உயர் அபிப்ராயத்தை அடைந்து கொண்டார்கள். எனக்கு சரியாகக் கேள்வி கேட்கத் தெரியவில்லை. நான் கேட்க‌ வருவதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கே.ஆர்.மணி, மும்பை

அன்புள்ள மணி,

பக்கத்திலேயே ஒரு சங்கீதவித்வான் இருப்பார். அவரிடம் சென்று அந்த மளிகைக்கடைக்காரரைப் பற்றி கேட்டுப்பாருங்கள். ‘பாட்டெல்லாம் கேப்பாரோ?’ என்பார். ‘இல்லை ‘ என்றார். ‘சரிதான் காட்டுப்பயல்…காது இருந்தா போருமா?’ என்பார்.

சாதனை என்பது அவரவருக்கே. நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். அந்த வாழ்க்கை பக்கத்துவீட்டுக்காரனின் கண்ணில் என்னவாகத் தெரிகிறது என்பதில் அர்த்தமே இல்லை.

மனிதர்களுக்கிடையே திறன்கள், ருசிகள் ஆகியவற்றில் பிறப்பிலேயே பெரும் இடைவெளி உள்ளது. அதை ஒட்டியே அவர் செய்யக்கூடியவையும் செய்யவேண்டியவையும் அமைகின்றன. மளிகைக்கடைக்காரர் அறிவார்ந்த விஷயங்களில் ஏன் ஈடுபடக்கூடாது என்பது ஊருயிர் ஏன் பறக்கக்கூடாது என்று கேட்பது போல. அதற்குச் சிறகு அளிக்கப்படவில்லை என்பதே பதில். கீதை சொல்வதை வைத்துப்பார்த்தால் அதற்கான தன்னறம் [சுவதர்மம்] ஊர்ந்து வாழ்வதே.  ஆகவே ஊர்வதே இயல்பானது, அதுவே மேன்மையானது பறப்பன எல்லாம் அசட்டுத்தனமானவை என்றெல்லாம் அது ஒரு சுயபுரிதலை அல்லது சுயநியாயப்படுத்தலை உருவாக்கிக்கொண்டுமிருக்கும்.

ஒரு பறக்கும் உயிர் தன் இயல்பு பறப்பதே என உணராமல் ஊருயிரின் மதிப்பைத் தேட விழைந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தால் அது ஊருயிர்களாலேயே கேலிக்குரியதாகப் பார்க்கப்படும், ஏனென்றால் அதனால் ஒரு திறமையற்ற ஊருயிராகவே இருக்க முடியும். தன் இயல்பு எதுவோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதலே தன்னறம். அதுவே நிறைவைத்தரும்.

முப்பதாண்டுக்காலம் வணிகத்தில் பெருவெற்றியை ஈட்டிவிட்டுத் தன் உள்ளம் கோரும் நிறைவு அதில் இல்லை என்பதனால் விவசாயத்துக்குத் திரும்பியவர்களை, சேவைக்கு வந்தவர்களை நாம் அறிவோம். அவர்களுடைய உண்மையான தளத்தை நோக்கி அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் பக்கத்திலேயே ஒரு நம்பர் ஒன் மளிகைக்கடைக்காரர் ‘பணத்தையும் தொழிலையும் விட்டுட்டு இங்க வந்திருக்கான், லூசுப்பய’ என்று சொல்லக்கூடும்.

அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள்தான் பலர். அதில் வெற்றிகொள்ளும்போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததுமே அந்த எக்களிப்பு வந்துவிடுகிறது. நான் இவர்களிலேயே இருவகையினரைக் காண்கிறேன்.

ரயில்களில் முதல்வகுப்பு கூபேக்களில் வரும் புதுப்பணக்காரர்கள்,  நிறையப் பணமீட்டும் டாக்டர்கள் போன்ற தொழில்நிபுணர்கள் ஒருவகை. அதிலும் டாக்டர்களில் வசூல்ராஜாக்கள் பெரும்பாலும் முதல்தலைமுறையில்தான் பணத்தைப் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி மொழியே உண்டு.  இந்த ஆசாமிகள் சுயததும்பலால் நிறைந்திருப்பார்கள். அவர்களின் பேச்சில் சிரிப்பில் உடலசைவில் எல்லாமே ’காசு வச்சிருக்கேன்ல’ என்றபாவனை.

இவர்கள் ரயிலில் ஒருவரைச் சந்தித்ததுமே அவரது பொருளியல்நிலையை அறிய முயல்வார்கள். சமூகத்தொடர்புகளைக் கேட்பார்கள். அதன் பின்னர் தன்னுடைய பணம் , சமூகத்தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘புதுசா ஸ்கோடா ஒண்ணு வாங்கினேன்…என்னமோ தெரியல, அப்பப்ப சிக்கிக்குது…’ ‘போனவாட்டி இப்டித்தான் ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாங்காக் போயிருந்தப்ப பாத்தீங்கன்னா…’

நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப்பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனை. மிதப்பாக இருப்பார்கள்.  ஒரேசமயம் அலட்சியமாகவும் அடக்கமாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம் திமிராகவும் பண்பாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம்  நுண்ணிய ரசனையுடையவர்களாகத் தோற்றமளிக்கவும் வேண்டும், மிகமிக லௌகீகருசிகளையும் கொண்டிருக்கவேண்டும். இந்த முரணியக்கத்தை நெடுங்காலப்பழக்கம் மூலம் கற்றுத்தேர்ந்தவர்கள்.

இந்த இருசாராருக்குமே நரகம் என்ற ஒன்று உண்டு, அது அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம்தான். ஒருமுறை ஒரு நட்சத்திரவிடுதியில் இருவர் பேசிக்கொண்டிருக்க நான் அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இருவருமே ஏதோ தொழிலதிபர்பிள்ளைகள். சட்டென்று கமல்ஹாசன் அங்கே வந்தார். அந்தக் கூடமே அவரை நோக்கித் திரும்பியது. பெரும்புகழ் மட்டுமே அளிக்கும் கம்பீரமும் தோரணையுமாக கமல் எல்லாரிடமும் நாலைந்து சொற்கள் பேசி சென்றார்.

அவர் சென்றதுமே இவர்கள் இருவரும் முகம் சிவந்து ஏதோ ஜென்மவிரோதியைப்பற்றிப் பேசுவதுபோல அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். வசைகள், அவதூறுகள், இளக்காரங்கள், நக்கல்கள். எனக்குப் பரிதாபம் வந்து தொண்டையை அடைத்தது. எவ்வளவு எளிய மனிதர்கள். எவ்வளவு சாமானியர்கள். அவர்களுக்கான நரகம் அவர்கள் அருகே எப்போதுமே உள்ளது. அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்கமுடியாது. உங்கள் மளிகைக்கடைக்காரரின் அருகிலேயே அவரைவிடக் கொஞ்சம் அதிகமாகச் சம்பாதிக்கும் இன்னொரு வியாபாரி இருந்து இவரைக் கனவிலும் நினைவிலும் கொத்திப்பிடுங்கிக்கொண்டிருப்பார்.

ஆம், இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அகங்காரம் அடிபட்டுக்கொண்டும் இருக்கும்.  உண்மையான இன்பமென்பது இயற்கையால் அளிக்கப்படவே இல்லை. புலனின்பங்கள் கிடைக்கலாம். ஆனால் மனிதன் விசித்திரமான பிராணி. பத்தாயிரம் வருடப் பண்பாடு அவனுள் உருவாக்கிய தன்னுணர்வு காரணமாக அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும்போதாது, அது பிற எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் அவன் புலன்கள் சுவையையே அறிவதில்லை.

இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம் என்கிறார் சாக்ரடீஸ். படைப்பாக்கத்தின் இன்பம் அதைவிடவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதைவிடவும் முழுமையான இன்பம் தன்னைச்சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள். அந்தத் தருணங்களை அடைவதற்கு இந்த மனிதர்களுக்கு அவர்கள் கைகளில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.

லௌகீகம் முக்கியமே அல்ல என்று நான் சொல்லமாட்டேன். அது பலசமயங்களில் ஏணிப்படி. அதிலேறிச் சென்றே அதற்கப்பாற்பட்ட விஷயங்களைத் தொடமுடியும். ஆனால் அதிலேயே மூழ்கியவர்கள் இழப்பவை பெரிது. ஒரே மரம்தான். சில உயிர்கள் அதன் இலைகளை உண்கின்றன. சில உயிர்கள் கனிகளை. சில உயிர்கள் மலர்களின் தேனை மட்டும். தேனுண்ணும் உயிர் இலையுண்ணும் உயிரிடம் சுவை பற்றி என்ன பேசமுடியும்? எதை விளக்கமுடியும்?

மரங்கள் செறிந்த இந்த மாபெரும் காட்டுக்கு மூவகை உயிர்களும் எப்படியோ தேவைப்படுகின்றன, அவ்வளவுதான்.

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 14, 2011

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–25

$
0
0

25. எஞ்சும் ஒளி

மூதரசி அப்போதே தன் கணவரின் அறைக்கு சென்றாள். அவர் மைந்தனின் அறையில் இருப்பதாக சேடி சொன்னாள்.  “அரசர் அணிபுனையும் நேரம் இது, மூதரசி. அருகிருந்து அதைப் பார்ப்பது மூதரசரின் வழக்கம்” என்றாள். முதுமகளின் கண்கள் புன்னகையுடன் விரியக்கண்டு அவள் அதை மகிழ்வுடனே எதிர்கொள்கிறாள் என்று புரிந்துகொண்ட சேடி தன் குரலில் உள்ளடங்கியிருந்த பகடியை இனிய நகையாட்டாக மாற்றிக்கொண்டாள்.  “அரசர் அணியவேண்டிய ஒவ்வொரு நகையையும் முந்தைய நாளே அவரே எடுத்துவைக்கிறார். அதை அவர் அணியும்போது அருகில் நின்று நோக்கிக்கொண்டிருப்பார். கோழிப்போர் காண்பவனின் உடலசைவுகள் அவரில் தெரியும் என்பார்கள்” என்றாள்.

முதுமகள் சிரித்துவிட்டாள். “அணி புனைந்துமுடித்து அரசர் கிளம்பும்போது மேலும் ஒரு அணியை எடுத்துக்கொண்டு பின்னால் செல்வார். அதை அவரே அணிவிப்பார். மறுநாள் அந்தப் புதிய அணியையும் சமையர்கள் சேர்த்துக்கொள்வார்கள். மூதரசர் பிறிதொரு அணியை கையில் எடுத்துக்கொள்வார். கருவூலத்தையே அரசர் உடல் சுமக்க வைத்துவிடுவார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றாள் சேடி. “ஆம், தேனில் விழுந்த வண்டென இனித்தே சாகும் நல்லூழ் கொண்ட மனிதர் என்கிறார்கள் நிமித்திகர்கள். பிறிதொருமுறை இளம் தந்தையென வாழும் பேறு பெற்றவர்” என்றாள் முதுமகள்.

சேடியர் சென்று மூதரசரை வரச்சொன்னார்கள். விரைந்த காலடிகளுடன் வந்த மூதரசர் “என்ன? என்ன வேண்டும் உனக்கு? நான் அங்கே பணியிலிருக்கிறேன் என்று தெரியுமல்லவா? அரசர் இப்போது கிளம்பப்போகிறார். கிளம்புகையில் என்னை எதிர்பார்ப்பார். என்ன சொல்லப்போகிறாய்?” என்று உரத்த குரலில் துணைவியிடம் கேட்டார். அவள் புன்னகையுடன்  “அமருங்கள்” என்றாள். “அமர்வதற்கு பொழுதில்லை. பணிகள் குவிந்துகிடக்கின்றன” என்றபடி அவர் அமர்ந்தார். முதுமகள் திரும்பிப்பார்க்க சேடி புன்னகையுடன் வெளியேறி வாயிலை மூடினாள். “என்ன? ஏதாவது காதல் விளையாட்டுக்கு திட்டமா?” என்று கேட்டு அவர் எருமைபோல ஒலியெழுப்பி சிரித்தார்.

“உங்கள் மைந்தனிடம் அவன் அருநிதி காக்கும் பூதமல்ல, அரசன் என்று நீங்கள் எடுத்துரைக்கவேண்டும்” என்றாள் அன்னை. “அவனுக்குத் தெரியாததையா நான் எடுத்துரைக்கப்போகிறேன்? அவன் பேரறத்தான்” என்றார் முதியவர். “ஆம், அது முன்பு” என்றாள் மூதரசி சினத்துடன். “அன்று அவன் உடல் அறத்தின் ஒளி கொண்டிருந்தது. அவன் நகங்கள் விழிகளென ஒளிவிட்டன.” மூதரசர் எழுந்து “ஏன்? இன்று என் மைந்தனுக்கென்ன குறை?” என்றபடி முகம் வலித்து சீறி உறுத்து விழித்து  அவளை நோக்கி வந்தார்.

கைகளை வீசி தலையை ஆட்டி மூச்சு ஊடுகலக்க “இன்று புதுத்தளிரென ஒளிவிடுகிறது அவன் உடல். பால்மாறா பைதலின் விழிகள் போலிருக்கின்றன அவன் கண்கள். அவன் நகைப்பு விளையாட்டுப் பையனைப்போல் தோன்றுகிறது. நோக்கி நோக்கி சலிக்காமல் அவன் அறைவிட்டு நீங்காதிருக்கிறேன். என்னிடமா சொல்கிறாய்?” என்றார் கிழவர். அவள் அவ்வுணர்ச்சியால் சீண்டப்பட்டு சினம்கொண்டாள். அவள் குரல் மேலெழுந்தது. “ஆம், இன்று அவன் ஒளி கொண்டிருக்கிறான். அது மாளாக்காமத்தின் ஒளி. காம விழைவு மனிதனை இளமை கொள்ளச்செய்கிறது. பத்து அடி தொலைவிலேயே ஒருவன் காமத்தில் திளைப்பவன் என்பதை சொல்லிவிட முடியும். அவ்வொளி ஒரு காலத்தில் உங்கள் உடலிலும் இருந்தது. அன்றதை நான் வெறுத்தேன். இன்றும் அவ்வாறே” என்றாள்.

இதழ்கோண நகைத்தபடி கிழவர் “அதை சொல்! நீ முதுமைகொண்டு அழிந்து கொண்டிருக்கிறாய். அவனோ உயிர் பெருகி இளமை நோக்கி செல்கிறான். தாயும் மகனுமாக இருந்தாலும் இரு உயிர்கள் நீங்கள். அந்தப் பொறாமை உனக்கு” என்றார். “ஏன், அந்தப் பொறாமை உங்களுக்கு இல்லையா?” என்று கேட்டாள் மூதரசி. “இல்லை, ஏனெனில் அவனாக நின்று அதை நடிப்பவன் நான். மீண்டும் அவ்வுடலில் புகுந்து வாழ்கிறேன்” என்றார். முகம் இழுபட்டுக் கோண இடறிநின்ற பற்கள் தெரிய அவள் “நாணில்லையா?” என்று சீறினாள்.

“இல்லை. எந்த நாணமும் பிழையுணர்வும் அறக்குறையும் என்னில் இல்லை. வாழ்வு இனிது. காமமன்றி பிறிதனைத்துமே பொய்யானவை” என்றார் கிழவர். “அறத்தையும் பொருளையும் கொண்டு காமத்தை கட்டுப்படுத்தவே மூதாதையர் முயன்றிருக்கிறார்கள். ஏனெனில் எளியோரின் காமம் கட்டுக்குள் நின்றாகவேண்டும். படையானைநிரை சங்கிலியில் பிணைக்கப்பட்டு துரட்டியால் மிரட்டப்பட்டிருக்க வேண்டும். பட்டத்து யானைக்கு தடைகள் தேவையில்லை.” அவள் நடுங்கும் தலையுடன் கூர்ந்து நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவர் எக்களிப்புடன் “என்ன பார்வை?” என்றார். அவள் தலையசைத்தாள்.

“முதுமகளே, உண்மையில் உன் முகம் நோக்கவே நான் விரும்பவில்லை. அச்சுருக்கங்களில் இருக்கும் இறப்பு என்னை கசப்படையச் செய்கிறது. இன்று என் மைந்தனின் முகமன்றி வேறெந்த முகமும் எனக்கு முதன்மையானதல்ல. செல்!” என்றார் கிழவர். அவள் தளர்ந்து குரல் தழைந்து “நான் சொல்வதை சற்று செவிகூர்ந்து கேளுங்கள். எல்லையற்ற ஒன்று புவியிலிருக்க இயலாது. புலியின் பசியைவிட விரைவாக அமைக்கப்பட்டுள்ளன மானின் கால்கள். எங்கோ ஒவ்வொன்றும் பிறிதொன்றால் தளையிடப்பட்டிருக்கின்றது என்று அறிவதே அறத்தின் முதற்படி” என்றாள்.

“நெறிநூல்களை திரும்பச்சொல்லாதே! நானே அவற்றை மறக்க முயன்றுகொண்டிருப்பவன்” என்றார் கிழவர். “காமம் பெருநதிகளைப்போல. அவற்றின் குறுக்கே அணைகள் நில்லா. கடல் ஒன்றே அதன் இலக்கு.” அவள் “ஆம், காமம் கட்டற்றது. கட்டற்ற காமத்தைப்போல் அழிவை அளிப்பது பிறிதொன்றுமில்லை” என்றாள். கிழவர் சலிப்புடன் “பெருந்துயருற்றுவிட்டான் என் மைந்தன். ஒரு பிறவிக்குரிய அனைத்து கப்பங்களையும் தெய்வங்களுக்கு கட்டிவிட்டான். இனி அவன் மகிழ்ந்தாடட்டும். உனது சிற்றறிவின் சொற்களைக் கொண்டு அவனை எரிச்சல் மூட்டாதே!” என்றார்.

பெருமூச்சுடன் தளர்ந்து “நன்று, நானே சென்று அவனிடம் சொல்கிறேன். நீங்கள் அறமுரைக்க வேண்டுமென்று விழைந்தேன். நீங்களிருக்கையில் என் நா எழக்கூடாதென்றே தயங்கினேன். நீங்கள் ஆற்றாதபோது அக்கடனை ஆற்றும் பொறுப்பு எனக்குண்டு. அன்னையென சென்று அவன் முன் நிற்பேன். அறமென நான் எண்ணுவதை அவனிடம் உரைப்பேன்” என்றாள்.  அவர் ஏளனத்துடன் நகைத்து “செல், இன்று உன் சொற்களைக் கேட்கும் செவி அவனுக்கில்லை. உன் உடலில் ஊர்ந்து அவனை அணுகும் இறப்பைக்கண்டு அவன் முகம் சுளித்து துரத்திவிடுவான். நீ யார், எங்குளாய் என்று அப்போதறிவாய். செல்!” என்றபடி பீடத்தில் அமர்ந்து சுவடிக்கட்டொன்றை எடுத்து புரட்டத்தொடங்கினார்.

imagesசில கணங்கள் அவரை நோக்கி நின்றபின் முதுமகள் கதவைத் திறந்து ஓசையற்ற காலடிகளுடன் வெளியே சென்றாள். மேலாடையை தோளில் சுற்றியபடி அங்கு நின்ற ஏவலனிடம் “என்னை அரசரிடம் அழைத்துச் செல்” என்றாள். தலைவணங்கி அவன் அவளை அழைத்துச் சென்றான். ஊர்வசிக்கென புரூரவஸ் கட்டிய காமமண்டபத்திற்கு வெளியே ஆணிலிகள் எழுவர் காவல் நின்றனர். அரசி வருவதைக் கண்டதும் அவர்களின் தலைவி அருகே வந்து வணங்கி “அரசர் இப்போது…” என்றாள். “அறிவேன். நான் வந்துளேன் என்று சொல்!” என்றாள் கிழவி. “இப்போது எவரையும் உள்ளே விடமுடியாது, அரசி” என்று தலைவி சொன்னாள். “நானும் உள்ளே நுழையக்கூடாதென்பது ஆணை.”

“நான் உள்ளே செல்கிறேன். என் தலையை வெட்டி அவனிடம் கொண்டுவை” என்றபடி முதுமகள் முன்னால் நடந்தாள். “அரசி, நான் சொல்வதை கேளுங்கள். இப்போது அரசர்…” என்றபடி அவளுக்குப் பின்னால் ஆணிலிகள் மூவர் சென்றனர். “விலகுங்கள்!” என்று சீறிவிட்டு தன் முழுதுடலாலும் பெருங்கதவைப்பற்றி இழுத்து ஓசையுடன் திறந்து முதுமகள் உள்ளே சென்றாள். அங்கே குந்திரிக்கப்புகை பட்டுச்சல்லாபோல படர்ந்து காட்சிகளை மறைத்தது. வெண்திரைக்கு அப்பாலிருந்த சூதர் மென்மையாக இசையெழுப்பிக்கொண்டிருந்தனர். அக்காட்சி அவளுக்கு முதலில் ஓர் திரைஓவியம் போலிருந்தது.

ஏழு ஆடையிலாப் பெண்கள் நடுவே வெற்றுடலுடன் மெய்திளைத்து காமத்திலாடிக்கொண்டிருந்த புரூரவஸ் ஓசை கேட்டு திரும்பிப்பார்த்தான். ஒருகணமும் அவன் விழிகளில் நாணம் எழவில்லை. உடல் கூச்சம்கொண்டு சுருளவுமில்லை. நச்சுச் சிரிப்பொன்று உதட்டில் எழ “இங்கு வரலாகாதென்று நீ அறிய மாட்டாயா, முதுமகளே? இல்லை அறிந்து மகிழ்ந்துதான் வந்தாயா?” என்றான். நாணமற்ற அப்பெண்களும் வியர்வையும் நகைகளும் மின்னும் முலைகளும் இடைகளுமாக நகையாட்டு தெரிந்த கண்களுடன் முதுமகளை நோக்கினர். ஒருத்தி ஏதோ முனக பிறர் நகைத்தனர்.

“இங்கு நீ உயிரலையில் திளைப்பதாக உன் தந்தை சொன்னார். நீ திளைப்பதை நோக்கிச் செல்லலாம் என்று வந்தேன்” என்றாள் அன்னை. “இதற்கு முன் இதை பார்த்திருக்கமாட்டாய்” என்றான் புரூரவஸ். “பார்த்துளேன். அழுகிய ஊனில் புழுக்கள் நெளிவதை” என்றாள் அவள். அவன் உரக்க நகைத்து “நன்று, உன் உள்ளம் எரிவது அச்சொற்களில் தெரிகிறது. நோக்கினாய் என்றால் கிளம்பு” என்றான். “நான் உன்னிடம் அறமுரைக்க வந்துளேன். காமத்தில் திளைக்கும் உன்னிடம் அதை எப்படி சொல்வது என்று உன் தந்தை என்னிடம் சொன்னார். காமத்தின் உச்சத்தில்தான் அதை சொல்லவேண்டும் என்று நான் கருதினேன். ஏனெனில் உன் இழிகற்பனை செல்லும் எல்லைக்கெல்லாம் விழைவை ஓட்டி நீ இங்கு அமைத்திருக்கும் இக்களியாட்டங்களின் நடுவே உன்னுள் எழுந்த ஆழத்தில் திகைத்து நின்றிருக்கிறது ஒரு உள்ளம். நான் சொல்வதை அந்த உள்ளம் கேட்கட்டும்” என்றாள் முதுமகள்.

அவன் எழுந்தமைந்து “ஆம், சொல். காமம் கலந்தால் எல்லாமே கலை என்றான் பாணன். அன்னை நல்லுரை கலைவடிவு கொள்வதெப்படி என்று பார்க்கிறேன்” என்றான். அவள் விழிகள் பதறாமல் அவனை நோக்கி “மைந்தா, காமம் மனிதனைப் பெருக்கும் இன்பமல்ல. ஒவ்வொரு கணமும் அவனை குறைக்கும் இன்பம். விளைநிலத்து விதை என அவனைப் பெருக்குவது அறம் ஒன்றே. காமத்தையும் செல்வத்தையும் அறியாது அறம் நோக்கி சென்றதன் தோல்வியை முன்பு நீ அறிந்தாய். நன்று! இப்போது காமத்தைத் தொடர்வதன் எல்லையை அறிந்துவிட்டாய். செல்வத்தையும் அறிந்துளாய். கடந்து சென்று அறத்தை அறி. இது தெய்வங்கள் உனக்களித்திருக்கும் நல்வாய்ப்பென்று உணர். இல்லையேல் பேரழிவை நீ சந்திப்பாய்” என்றாள்.

நச்சுத்துளி சூடிய அரவப்பல்லென இளிவரல் முனைகூர்த்து நின்ற விழிகளுடன் அவளை நோக்கிய புரூரவஸ் “நன்று! சற்றுமுன் என்  பாங்கனிடம் கேட்டேன், காமத்தில் நான் இழந்திருக்கும் இன்பம் ஏதென்று.  அரசே, முள்வேலிகளைப் பிளந்து குருதி கீறிய உடலுடன் சென்றடைகையிலேயே காமம் முழுதமைகிறது. உங்களைத் தடுக்கும் வேலிகள் இங்கில்லை, ஆணையிடும் குரல்கள் பின்னால் ஒலிக்கவில்லை, கால்தடம் முகர்ந்து வேட்டை நாய்கள் தொடர்ந்து வரவுமில்லை. அதையே நீங்கள் இழக்கிறீர்கள் என்றான். நன்று, அவன் அதைச் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் சொற்களுமாக நீ வந்துவிட்டாய். முடிந்தவரை உன் சினத்தை உமிழ்ந்துவிட்டு செல்! இவ்வின்பம் பெருகட்டும்” என்றான்.

சில கணங்கள் அவனை நோக்கி நின்றபின் “ஊழுக்குமுன் சொல் வீசி நிற்பது கை வீசி கடலலையைத் தடுப்பதுபோல என்று சூதர் பாடல் உண்டு. அதை நன்கறிந்தும் நான் இங்கு சொல்ல வந்தது, இவற்றை சொல்லாமலானேன் என்ற உணர்வை நான் பின்னால் அடையக்கூடாது என்பதற்காக மட்டுமே. சொல்லிவிட்டேன். கீழ்மகனே, நீ அடைவதை அடை” என்றபின் திரும்பிச்சென்றாள். அவன் பின்னால் நகைத்து அப்பெண்களிடம் ஏதோ சொல்ல அவர்கள் சேர்ந்து சிரிக்கும் ஒலி அவளைத் தொடர்ந்து வந்தது.

அங்கு நின்றிருக்கையில் தன் உள்ளம் எவ்வுணர்வையும் அடையவில்லை என்றே எண்ணியிருந்தாள். ஆழம் அலையற்றிருந்தது. உடல் நடுக்கமோ பதற்றமோ இன்றி நின்று சொல்கோத்தது. கதவைக் கடந்து வெளியே வந்ததும்தான் தன் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பதை, கால்கள் உளம்தொட்ட இடத்தில் விழாது பிறழ்வதை அவள் உணர்ந்தாள். விழுந்துவிடலாகாது என்ற ஒரே எண்ணமே அவளை செலுத்தியது. அறியாது கைநீட்டி அவளை பற்றவந்த ஏவலனை “உம்” என்ற ஒற்றைச் சொல்லில் விலக்கினாள்.

மூச்சை சீராக இழுத்து விடும்போது உடல் ஒருநிலைப்படுவதை காலடிகள் நிலைகொள்வதை அவள் உணர்ந்தாள். ஒரு மூச்சு, பிறிதொரு மூச்சு, மேலும் ஒரு மூச்சென்று நடந்தாள். இடைநாழியைக் கடந்து தன் அறைவாயிலை அடைந்ததும் ஏவலனிடம் விலகிச்செல்லும்படி கைகாட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றாள். முதுகுக்குப்பின் கதவு மூடியதும் பேரலையென துயரம் வந்து அவளை அறைந்தது. ஒரு பெருநகர் ஒரே கணத்தில் பனித்திரைஓவியமென மறைவதுபோல வாழ்வென அவளறிந்தவை அனைத்தும் இல்லாதாயின என்றுணர்ந்தாள். வெறுமை நிறைந்து உடல் பலநூறுமடங்கு எடைகொண்டது.

கதவில் சாய்ந்து நின்று ஆடிக்கொண்டிருந்த முழங்கால்களுடன் மஞ்சத்தில் விழிமூடி படுத்திருந்த தன் கணவனை பார்த்தாள். அவர் மார்பின்மீது சுவடிகள் கலைந்து கிடந்தன. முகம் இனிய கனவொன்றில் மலர்ந்து நிலைத்திருந்தது. எங்கிருந்து என்று அறியாமல் ஒரு அழுகை வந்து அவளை உலுக்கியது. விசும்பி அழத்தொடங்கியவள் அவ்வொலியை செவியால் கேட்டதுமே பெருங்குரலெடுத்து தேம்பலானாள். அவள் உள்ளத்தில் ஒரு பகுதி எவரோ அழுவதுபோல் அதை நோக்கி நின்றது. அத்தனை தொலைவு வந்தவளுக்கு நான்கடி வைத்து படுக்கை வரை செல்லமுடியவில்லை. தரையில் அமர்ந்து தலையில் கை வைத்து மெலிந்த மூட்டுகளில் முகம் சேர்த்து தோள் குலுங்க அழுதாள்.

அவ்வழுகை அவரை எழுப்பவில்லை என நெடுநேரம் கழித்து உணர்ந்ததும் கையூன்றி மெல்ல நிமிர்ந்து தவழ்ந்து மஞ்சத்தை நோக்கி சென்றாள். அதன் காலைப் பற்றியபடி மெல்ல எழுந்து அவரை நோக்கியபோது மெல்லிய ஐயம் ஒன்று எழுந்தது. இல்லை இல்லை என்று சித்தம் கைவீசி கூச்சலிட்டாலும் கடுங்குளிர் எனச் சூழ்ந்து பெருகிய அவ்வெண்ணம்  உருமுழுத்து விழிதுறுத்து பீடத்தில் அமர்ந்தது. “ஆம் ஆம் ஆம்” எனும் சொல்லாக இருந்தது உள்ளம்.

அருகில் சென்று தன் கணவரின் காலடிகளை தொடுவதற்குள்ளாகவே அவளுக்கு தெரிந்துவிட்டிருந்தது. மெலிந்த  கால்களை மெல்ல தொட்டு உலுக்கி “அரசே” என்றாள். உடல் அசைந்தபோது அவர் தலை அசைந்தது. ஆம் என அவர் புன்னகையுடன் சொல்வதைப்போல. தோள்களை மெல்ல தொட்டு உலுக்கி “அரசே” என்றபின் மூக்கில் கைவைத்து பார்த்தாள். பின்பு நீண்ட மூச்சுடன் நெற்றியில் கலைந்துகிடந்த அவரது குழலை அள்ளி பின்னால் நீவிச்செருகி வைத்தாள். மீண்டும் மீண்டும் மூச்சுக்கள் எழுந்து உடல் உலுக்க வெளிப்போந்தன.

உடனே சென்று ஏவலரை அழைக்க அவள் விழைந்தாலும் உடல் அசையவில்லை. அந்தக் கணங்கள் பிசின் என அவளை இழுத்துக்கட்டி வைத்திருந்தன. பலநூறுமுறை உள்ளத்தால் எழுந்தபின்னரும் எழாது அங்கிருந்தாள். பின் உள்ளமும் களைத்து அதை கைவிட்டாள். அவர் அருகிலேயே அமர்ந்திருக்க விழைந்தாள். அவ்வெண்ணம் வந்ததுமே மீண்டும் அவருடன் இருக்கப்போவதில்லை என்னும் உணர்வை அடைந்தாள். அவள் அவரை மணக்கையில் ஏழு வயது. அவருக்கு பதினெட்டு. பெண்ணென்று அவளறிந்த ஒரே ஆண். அன்றைய அவர் முகத்தை நினைவில் மீட்கமுயன்றாள். அது உருக்கொள்ளாமை கண்டு திகைத்தபின் மைந்தன் பிறந்த நாளை நினைவுகூர்ந்தாள். அன்றைய வண்ணங்கள்கூட நினைவில் அசைந்தன. ஓசைகளை நீருக்கு அப்பாலென கேட்கமுடிந்தது. அவர் முகம் நினைவில் எழவில்லை.

“என்ன இது?” என அவள் தன்னுள் வியந்தாள். ஒவ்வொரு காலகட்டமாக அவரை நினைவுகூர முயன்றாள். இறுதியாக அவரைப் பார்த்த காட்சி அன்றி எந்த முகமும் நினைவில் எழவில்லை. “என்ன இது! என்ன இது!” என உள்ளத்தின் ஒரு மூலை வியந்தபடியே இருந்தது. பின்னர் அவள் அம்முயற்சியை கைவிட்டாள். அவளால் புரூரவஸின் அத்தனை காலகட்டங்களையும் பெட்டிக்குள் சுருட்டிவைத்த ஓவியங்களைப்போல எடுத்து விரிக்கமுடிந்தது. அவன் கையறைந்து எச்சில் வழிய தவழ்ந்த முகம்.  சோறூட்டும்போது இதழ்கோட்டி சுவையறியும் முகம். முதல் படைக்கலத்தை அஞ்சியபடி கையில் எடுத்தபோதிருந்த முகம். முகங்கள் நிரைவகுத்தன. ஒவ்வொன்றும் விழிக்கூர் கொண்டு மிக அருகே என அவளை நோக்கின.

அவன் நோயுற்றதும் மீண்டதும் அக்கணம் என அவளுக்குத் தெரிந்தன. பெண்களுடன் அவன் இருந்த காட்சியை நினைவு விரித்துக்கொண்டபோதும் அதிலும் அவள் சினம்கொள்ளவில்லை என்று தெரிந்ததும் அவள் புன்னகை புரிந்தாள். அப்புன்னகை அவள் உடலையும் எளிதாக்கியது. அவர் அருகே மஞ்சத்தில் இயல்பாக அமர்ந்துகொண்டாள். “தீங்கேதுமின்றி நீணாள் வாழவேண்டும்” என அவள் புரூரவஸ் குறித்து நினைத்துக்கொண்டாள். தான் தீச்சொல்லிடுவதுபோல் ஏதேனும் சொல்லிவிட்டோமா என அஞ்சினாள். இல்லை, ஒன்றும் சொல்லவில்லை என்று தேறினாள். ஊழ் அவனை ஆட்டுவிக்கிறது. ஆனால் இறுதியில் மெய்யறிந்து அமைவான் என்றே சொல்கின்றன பிறவிநூல்கள்.

அவள் கால்நீட்டி அவர் அருகே படுத்துக்கொண்டாள். உடல் தளர்ந்தபடியே வந்தது. புரூரவஸையே நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்ததும் அவ்வண்ணமென்றால் நான் இவரை விரும்பவில்லையா என கேட்டுக்கொண்டாள். பொருளற்றிருந்தது அவ்வினா. பிறிதொரு ஆணை நினைத்ததில்லை. காமத்தில் களித்ததுண்டு.  பொன்னொளிர் மைந்தனை அளித்தவர் என பெருமிதம் கொண்டதுண்டு. ஆனால் விரும்பியதில்லையா என்ன? விருப்பம் என்றால் என்ன? வாழ்வின் அந்தந்த கணங்களில் உள்ளம் அணுகியதுண்டு, விழைவுகொண்டதுண்டு. மாறா விருப்பமே அன்பு எனப்படுகிறது. அன்பென்று உணர்ந்ததுண்டா?

அன்பு வெறும் சொல்லென்றிருந்தது. அன்பு அன்பு அன்பு என சொல்லிக்கொண்டே சென்றது உள்ளம். அன்பென்றால் என்ன? தன்னை விடுத்து அவருக்கென வாழ்வது. அவர் நலனையே சூழ்வது. அவருக்குப் பணிவிடை செய்வது. உடனிருக்க விழைவது. ஆம், அவை அன்புதான் என்றால் அன்புகொண்டிருந்தாள். அக்கணமே உணர்ந்தாள், அவர் அவள் உள்ளை நனைக்கவே இல்லை என. உடனிருந்து வாழ்ந்தொழுகி மறைந்த மனிதர். வாழ்வு பிணைக்கப்பட்ட நுகத்தின் மறுபக்க இணை. பிறிதென்ன? ஆம், பிறிதென்ன? அன்பென்று எண்ணிக்கொள்ளலாம். அவ்வாறுதான் எண்ணிக்கொள்கிறாள். ஆனால்…

அவள் அப்போது ஆழ்ந்து அறிந்தாள், அவர் தனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை என. அக்கணம் உண்மையில் பேரிழப்பை அவள் உணரவில்லை என. முதுமையில் கணவனை இழந்த பெண்டிர் அனைவரும் உணரும் உண்மைபோலும் இது. இளமையில் இழந்திருந்தால் இழப்புகள் ஒன்றன்மேல் ஒன்றெனப் பெருகி இந்த வெறுமையை மறைத்திருக்கும். இளமையில் கணவனை இழக்கும் பெண்கள் நல்லூழ் கொண்டவர்கள். எஞ்சிய நாளெல்லாம் இழப்பின் துயரை அன்பின் கலுழ்வு என எண்ணிக்கொண்டிருக்கலாம்.

கணவன் பெண்ணை உள்தொடுவதே இல்லை. அவன் கறக்கும் பசு. காதலை, காமத்தை, குடியை, அடையாளத்தை சுரந்தளித்து அகிடுவற்றி வெறுமைகொள்ளும் உயிர். ஏன் இத்தனை கடுமையாக எண்ணிக்கொள்கிறேன்? ஏனென்றால் இது உண்மை. கணவன் ஒரு பொருட்டே அல்ல பெண்களுக்கு. அவன் உயிர் அளித்த தந்தை அல்ல. மெய்யளிக்கும் ஆசிரியன் அல்ல. உயிர் பகிர்ந்த மைந்தனும் அல்ல. ஒரு வெறும் நிமித்தம் மட்டுமே. குடும்பமும் குலமும் குமுகமும் பெண்களுக்கு எப்பொருளும் அளிப்பதில்லை. அவை ஆண்களின் படைப்புக்கள். அவள் அவற்றுக்கு அப்பாலிருந்துகொண்டிருப்பவள். அங்கிருந்து எதுவும் அவளுக்கு வந்துசேரமுடியாது.

தந்தை என்னும் சொல் அவளுக்குள் இனித்தது. எழுபதாண்டுகளுக்கு முன் இளஞ்சிறுமியாக தன் தொல்குடிச் சிற்றூரில் துள்ளி அலைந்ததை எண்ணிக்கொண்டாள். அவள் முகத்தில் நகை எழுந்தது. உடலைக் குறுக்கி இனிய மெய்ப்பை அடைந்தாள். ஒளிரும் இலைநுனிகளின் காலை. மலர் மணமும் இளஞ்சேற்று மணமும் கலந்த காலை. எங்கு சென்றுகொண்டிருக்கிறேன்? என்னுடன் இருக்கிறார்கள் தோழிகள். கலகலவென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். குடிநீர் சேந்த குடங்களுடன் சென்றுகொண்டிருந்தனர்.

மாலிகை குனிந்து மண்ணில் பதிந்த காலடிகளை நோக்கி மான் என்றும் நாய் என்றும் பன்றி என்றும் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள்தான் ஆண்புலியின் தடத்தை கண்டாள். ஆண்புலித் தடத்தைக் கண்டவளுக்கு காமம் வாய்க்கும் என்று மூத்தவளாகிய சந்திரை சொன்னாள். நாணி நகைத்து அடித்து ஓடியவளை மண் அள்ளிவீசி வசைபாடி அழுதாலும் அதன்பின் மாலிகை கால்தடங்களை பார்க்காமலிருக்க முடியாதவளாக ஆனாள்…

உச்சிப்பொழுது கடந்தபோது உணவருந்த அழைக்கவந்த சேடி முதிய அரசரின் அருகே மூதரசி குழவிபோன்று தெளிந்த முகத்துடன் நீண்ட சீர்மூச்சுடன் துயின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அவளை எழுப்புவதற்கு முன்னர் அவள் அரசர் முகத்தை நோக்கி அவர் இறந்துவிட்டிருப்பதை உணர்ந்தாள். மூச்சு நின்று வெளிவர பின் அவள் திரும்பி காவலரை அழைத்துவர ஓடினாள்.

தொடர்புடைய பதிவுகள்

இசை -கடிதங்கள்

$
0
0

 

rahman_2633264f

 

அன்பு ஜெமோ,

 

நலன்தானே? நானே வருகிறேன் பாடலைப்பற்றி நீங்கள் எழுதியத்தைக் கண்டு ஆனந்தக்கூத்தாடினேன்!

 

பின்னே, எங்குமே ஒலிக்காமல் எத்தனை முறை அந்தப்பாடலைக் கேட்டிருப்பேன்! இரண்டு வருடம் முன்பு அந்தப்பாடலின்மேல் பித்தாய் இருந்தபோது உங்களுக்கு எழுதிய கடிதத்தை இணைத்துள்ளேன்!

 

 

8

 

 

ஒரு அபாரமான இசை மரபை, வெவ்வேறு உணர்ச்சிகளையும் நுட்பமாய் சொல்லத்தெரிந்த மரபை வெறும் 200 பக்திப் பாடல்களாக மாற்றி வைத்திருக்கிறோம்.  அதனால்தான் கர்நாடக இசையை காதலுக்கும் காமத்துக்கும் ரஹ்மான் பயன்படுத்தும் போது, சிலிர்க்கிறது, கிறங்கவைக்கிறது என்று நினைக்கிறேன்.

 

https://www.youtube.com/watch?v=AhyORM6li7E

 

பாரம்பர்யத்தின் இடம் என்ன என்று அலசும் படத்துக்கு வெறுமனே இசையைத் தராமல், “இன்றைக்கு பாரம்பர்ய இசையின் இடம் என்ன?” என்று ரஹ்மான் முற்றிலும் புதிய திறப்பை உருவாக்கிக்கொள்கிறார்.

 

இந்தக் கேள்வியின் உச்சம் ‘நானே வருகிறேன்’ என்கிற உணர்ச்சிகரமான பாடல் என்று தோன்றுகிறது. சொல்லப்படும் விஷயத்தின் மேன்மை, குழப்பம், சிக்கல், புனிதம், சிலிர்ப்பு எல்லாவற்றுக்கும் மேல், திகைப்பு, தொலைந்து போதல் என அற்புதமான கலவை. பல ஆண்டுகளில் பல மொழிகளில் வந்த பாடல்களில் இந்த அளவுக்கு என்னைத் தூண்டிய வேறொரு பாடல் இல்லை.

தாளம் பிடிபடவே நான்கு முறை கேட்கவேண்டியதாயிற்று. இதுவரை 25 முறை கேட்டிருப்பேன். ஒவ்வொருமுறையும் “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே, சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே” என்று ஒரு கர்நாடக கஸல் போல ஆரம்பிக்கும் போது மனம் தளும்புவதை நிறுத்த முடியவில்லை. நன்றி சொல்லி தீரும் விஷயமும் இல்லை.

 

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

ரஹ்மானின் இரண்டு பாடல்களையும் பற்றிய சிலாகிப்பினை அடுத்து நாளுக்கு இருபது முறையாவது நானே வருவேன் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன் ஓகே கண்மனி பாடல்கள் வெளிவந்த போது எண்ணிறந்த முறைகள் அப்பாடலைக் கேட்டிருந்தேன்.  இந்த ரசனையைப் பதிவிட்டதற்கு முதலில் நன்றி.

 

பெண் மனதின் உள்ளே காதல் வைக்கும் வெடிகுண்டுகளின் சத்தம் இசையாக மாறும் விதம் இந்த பாடல். என்னைப் பொறுத்தவரை, ரஹ்மானின் ஒவ்வொரு பாடலும், மெல்ல விரிந்து, பலமுறைக் கேட்ட பின் உருமாறிக் கொண்டே இருக்கும் திறன் பெற்றவைதான்.

 

தாங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தது போல, திரை இசை பற்றி யாரிடம் பேசினாலும், இளையராஜாவா ரஹ்மானா என்ற கேள்வி வந்துவிடுகிறது. ரஹ்மானுக்கு எதிராகப் பேசுபவர்களிடம் ஒரு  பிரச்சனையைத் தொடர்ந்து காண்கிறேன். அவர்கள் ரஹ்மானின் மிகச் சிறந்த பாடல்களைக் கேட்பதே இல்லை.

 

தொலைகாட்சி அலைவரிசைகளில் காண்பிக்கப்படும் வெகு சில பாடல்களை மட்டுமே அவர்கள் கேட்டிருக்கிறார்கள். தமிழிலேயே பல பாடல்களை பெரும்பாலும் கேட்கத் தவறிவிடுகிறார்கள்.

 

தமிழில் சில பாடல்களில் மலிந்திருக்கும் வார்த்தைகள் ஆபாசங்களாய் நல்ல இசையைக் கெடுத்து  விடுகிறது, உதாரணமாக அழகிய தமிழ்மகன் படத்தில் வரும் மர்லின் மன்றோ பாடலைச் சொல்ல விரும்புகிறேன். இரண்டாவது பிரச்சனை, காட்சியாக்கத்தில் சில பாடல்கள் வீண்டிக்கப்பட்டு விடுகின்றன. மணிரத்னம் அவர்கள் மட்டுமே இதைக் கடக்கும் சிறந்த பாடல்களைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தருகிறார்.

 

ஹிந்தி பாடல்களில், ரஹ்மானது இசைக்கு அதிக வாய்ப்பு தரப்படுவதாகவே தெரிகிறது. சில ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் கூட, முழுமையாக மொழி புரியாததால் ஹிந்தியில் வருகையில் சிறப்பாகத்தான் தோன்றுகிறது.

 

ரஹ்மானின் ஹிந்தி பங்களிப்பில்,  பல பாடல்கள் இருந்தாலும், இந்த இரண்டு பாடல்களை சாதனைப் பாடல்களாக குறிப்பிட நினைத்து நிறைகிறேன். கேட்டிருப்பீர்கள் முன்னரே… இருந்தாலும் ஒரு சின்ன நினைவூட்டுதல்…

 

  1. குன் ஃபாயா குன் https://www.youtube.com/watch?v=T94PHkuydcw
  2. தூ குஜாhttps://www.youtube.com/watch?v=lJdeU9VUFDE

 

இரண்டிலும் சுழன்றடிக்கும் விசும்பின் ஓசை நம் அகத்தைச் சிதறடிக்கும் அனுபவம்.

 

இரண்டும் இம் தியாஸ் அலியின் படங்கள் என்பது சிறப்பு.

 

அன்புடன்

கமலக்கண்ணன்.

 

 

அன்புள்ள ஜெ

 

அதிகம் கேட்கப்பட்டாலும் சரியாக கேட்கப்படாத பாடல்களில் ஒன்று ரஹ்மானின் நானே வருவேன். அற்புதமான பாடல். நீங்கள் சொன்னதுபோல அடுக்கடுக்காக விரிவது. அதை நீங்கள் சுட்டிக்காட்டி எழுதியிருப்பதை மிகவும் விரும்பினேன். நன்றி

 

ஜெயபாஸ்கரன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சந்திப்புகள் கடிதம் 4

$
0
0

1

 

அன்புள்ள ஆசானுக்கு,

 

நெடுநாட்களாக இவற்றை எழுதவேண்டுமென்பது எண்ணம். சோம்பேறித்தனத்தின் விளைவு எழுத விடவில்லை.

 

சில கடிதத் தொடர்பிற்கு பின்னர், கொல்லிமலை இளம் வாசகர் வட்ட சந்திப்பின் வழியே நேரில் உங்களை சந்தித்தேன். தலையை துவட்டியவாறே அடுத்து யார் குளிக்க போறீங்க என்ற கேள்வியுடன் உள்ளறையில் இருந்து வெளியே வந்தீர்கள். ஒரு பரவசம், ஒரு மகிழ்ச்சி என்னுள்.

 

பொதுவான அறிமுகங்கள் என ஆரம்பித்து கதைகள், கவிதைகள், அரசியல் என நீண்ட விவாதத்தில் நான் கண்டுகொண்டது “edge” என்ற பதத்தை. இரு சாராரின் விவாதத்தை எது முன்னெடுத்து செல்கிறது என்பதை. ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் முன்பு அதைனைப் பற்றிய உள்ளார்ந்த அறிவு அவசியம்; இல்லாவிடில் அது வெறும் வெற்று அரட்டையாக முடிந்து போகும் என உணர்ந்து கொண்டேன்.

 

ஷாகுல் ஹமீதின் சிறுகதை வாசிப்பு, அது சார்ந்த அலசல்கள், டிராக்டர் மீதமர்ந்து மலைப்பயணம், பாதிப் புதைந்த சமணச்சிலை, அம்மன் தரிசனம், சிறு மலையேற்றம், மலைமீதமர்ந்து கண்ட சூரிய அஸ்தமனம்,  இருள் சூழுந்த மலைக்காட்டின் நட்சத்திரங்கள், மின்வெளிச்சம் பெற்ற நகர், அருமையான இயற்கையுணவு என அத்தனையும் நாளும் கணினிக்குள் தலையை சொருகித்திரியும் எனக்கு ஒரு புது அனுபவம்.

 

சிறு சிறு சங்கடங்கள் எழாமலில்லை. செறிவான விவாதங்கள் இல்லை என சிலர் குறைபட்டுக்கொண்டனர். மீனாம்பிகை அவர்களின் எதோ பிக்னிக் போறமாதிரி வந்திருக்காங்க என்ற வரிகள் என்னை மிகவும் பாதித்தன. உண்மையில் தவறு என்னிடத்தில். உங்களை சந்தித்தால் போதுமென்று வந்துவிட்டேன். சுற்றிலும் புதியவர்கள். இயல்பாக பேச வரவில்லை. என்ன கேட்கவேண்டுமென்று கூட தெரியவில்லை. நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றாலே நாலடி தள்ளி நிற்கும் எனக்கு, இந்த சூழலை முழுவதுமாக அனுபவிக்கும் வாய்ப்பு சற்றே குறைபட்டது. உங்களிடம் என்னை நிறுவிக்கொள்ளும் லாவகமும் தெரியவில்லை. அத்துனை பேர் இருந்தும் கொஞ்சம் தனிமையாய் உணர்ந்தேன். உங்களின் எழுத்துகளிடம் நெருக்கமான எனக்கு உங்களிடம் நெருங்க இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை போலும்.

 

முதல் நாள் இரவில் சரியான தூக்கமில்லை. அருகில் படுத்திருந்தவர் சிறிது நேரத்திலேயே குறட்டை என்ஜினை ஆன் செய்துவிட்டார். பெரிய மலைப்பாம்பு போல உருண்டு உருண்டு படுத்து படுத்தி எடுத்துவிட்டார். மறுநாள் காலை மிளகுத் தோட்டத்தின் ஊடேயான மலையேற்றம் புத்துணர்வு அளித்தது. தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கோம்பை, ஜெர்மன் ஷெப்பர்டு நண்பர்களை சற்று நேரம் கவனித்துக் கொண்டிருந்தேன். மிளகின் கொடிகளை தடவிக்கொண்டே இன்னும் நான் நிறைய வாசிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். உணவு சமைத்துக் கொடுத்த அம்மாக்களிடம் சென்று நன்றி கூறிவிட்டு உள்ளே வந்தேன்.

 

ஷாகுல் ஹமீதுக்கு போட்டியாக இன்ஸ்டன்ட் சிறுகதையொன்றை ஒருவர் வாசிக்கத் துவங்கினார். முடிவில் செவுளில் ஓங்கி அறைவீர்கள் என்று காத்திருந்தேன். சுத்த நான்சென்ஸ் என்பதோடு நிறுத்திக்கொள்ள ஈரோடு கிருஷ்ணன், சந்திப்பை நிறைவு செய்து வைத்தார். கொண்டுவந்த “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” நூலில் கையெழுத்து வாங்கிக்கொண்டது சந்திப்பை முழுமையாக்கியது. தாகூர் அவர்களின் முகம் பொறித்த நாணயத்தை உங்களிடம் கொடுத்தது ஆசானுக்கான காணிக்கையானது.

 

உடனே இக்கடிதத்தை எழுதக்கூடாதென ஒரு எண்ணம். இதோ சந்தித்தது ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆகவே எழுதினேன். இடையில் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவிற்கான மின்னஞ்சலழைப்பு உங்களிடமிருந்து. நிச்சயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. தவறுதான். கண்ணாடி முன்னின்று எதிரே தெரிந்த உருவத்தில் காரி உமிழ்ந்து கொண்டேன். கிறிஸ்துமஸ்; கிறிஸ்துவன்; பெற்றோர் கண்முன் வர விழா வருகை இயலாமல் போனது. நீங்கள் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. ஒதுக்கிவிடமாட்டீர்கள் என்று எண்ணிக்கொண்டேன். பிராயச்சித்தமாக இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் “விஷ்ணுபுரம்” வாங்கிவிட்டேன். படித்துவிட்டு என் அவதானிப்பை எழுதுகிறேன்.

 

என்றும் அன்புடன்,

 

ஜி எஸ் லெனின்

கள்ளக்குறிச்சி

 

 

 

gsleny

அன்புள்ள லெனின்

 

இத்தகைய சந்திப்புகளில் ஒரு பொதுவான தயக்கம் உருவாவது இயல்பே. ஒன்று, வந்துள்ளவர்களில் பெரும்பாலானவர்களைப்பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. புதியவர்கள் நடுவே ஒரு பெரிய தயக்கம் உருவாவது இயல்பு. ஈரோடு சந்திப்பில்கூட மதியத்திற்குப்பின் வந்திருந்தவர்கள் கொஞ்சம் நெருக்கம் கொண்டு அதன்பிறகே பேசலானார்கள். இன்னொன்று, நாம் சந்திப்பு குறித்தும் நபர்கள் குறித்தும் கொண்டுள்ள உளச்சித்திரங்கள் நேர்ச்சந்திப்பில் கலையும். இவற்றுக்கெல்லாம் தயாராகவே வரவேண்டும். தயக்கம், தனிமைப்படுதல் ஆகியவற்றின் வழியாக இழக்கப்படுவது நம் நேரமும் உழைப்பும்தான்

 

இத்தகைய சந்திப்புகளில் குறைந்தது பேசுவதற்குச் சிலவற்றை தயாரித்துக்கொண்டு வரலாம். முக்கியமாக கூடுமானவரை நேர்மையாக, தீவிரமாக இருக்கவேண்டும். போதும் மற்றபடி ‘தகுதிகள்’ ஏதும் தேவையில்லை. சந்திப்புகள் சிலசமயம் வேடிக்கையாக, சிலசமயம் தீவிரமாக, சிலசமயம் நட்பார்ந்தவையாக இருக்கும். கொல்லிமலைச் சந்திப்பில் அந்த மலைப்பாறைமேல் அமர்ந்து பேசியது அற்புதமான அனுப்வம். அன்று பேசியவையும் முக்கியமனாவைதான்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எஸ்.கெ.பி.கருணாவும் ஒத்திசைவும்

$
0
0
index

ஒத்திசைவு ராமசமி

 

 

அன்புள்ள ஜெ

உங்கள் நண்பர் ஒத்திசைவு ராமசாமி உங்கள் இன்னொரு நண்பர் எஸ்.கெ.பி.கருணா பற்றி எழுதியிருக்கும் இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா? உங்கள் பெயரும் இதில் அடிபடுவதனால் கேட்கிறேன். மௌனமாக இருப்பீர்கள் என நினைக்கவில்லை

 

ஆர்

 

s-k-p

எஸ்.கெ.பி கருணா

 

அன்புள்ள ஆர்,

 

உண்மையில் மௌனமாகவே இருக்கவேண்டும், ராமசாமியின் அந்த சிறு உள்வட்டக்குறிப்பை பிரபலமாக ஆக்காமலிருக்கும்பொருட்டு. ஏனென்றால் இன்று இணையம் என்பது ஒரு வெறுப்புக்கலம். காழ்ப்புகளும் வெறுப்புகளும் எவர்மீதேனும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அதில் இறங்கி விளையாடுவது எளிதல்ல.கலக்குவது அபாயமும் கூட.

 

ஆனால் எஸ்.கெ.பி. கருணா என் விருப்பத்திற்குரிய நண்பர். ராமசாமி என் நண்பர் அல்ல, அவ்வாறான நெருக்கமேதும் எனக்கும் அவருக்கும் இடையே இல்லை. அவரைப்பற்றி அறிந்து அவர் மேல் பெருமதிப்பு கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான். இத்தருணத்தில் நான் எஸ்.கெ.பி.கருணா பற்றி பேசவேண்டியது நட்பு முறையில் ஒரு பொறுப்பு என்றே நினைக்கிறேன்.

 

அதற்கு முன் ராமசாமி இன்றிருக்கும் மனநிலை பற்றி சொல்லவேண்டும். அவரை இரு உணர்ச்சிகள் ஆள்கின்றன. ஒன்று, முழுஅவநம்பிக்கை மற்றும் அதன் விளைவான பெருங்கசப்பு. இன்னொன்று, கறுப்புவெள்ளைச் சித்திரங்களைத் தீட்டிக்கொள்ளும் வெறுப்பரசியல்.

 

ராமசாமி அவர்கள் என்னைவிட மூத்தவர், கல்வித்தகுதியில் நான் நினைக்கமுடியாத அளவு உயர்ந்தவர், நான் அடுத்தபிறவியில் ஆசைப்படும் சேவைசார்ந்த வாழ்க்கையை தெரிவுசெய்துகொண்டவர். ஆகவே நான் அவரை விமர்சிப்பது மிகையான செயல்பாடு. ஆலோசனை எல்லாம் சொல்வது அராஜகம். ஆகவே அந்தத் தொனி வந்துவிடக்கூடாதென்று கவனமாக இருக்கிறேன். அவருடைய வாழ்க்கைச்சூழல், அனுபவங்களில் இருந்து அவர் சென்றடைந்த இடம் அதுவாக இருக்கலாம்

 

ஆனால் நான் என் வரையில் அவநம்பிக்கை, கசப்பு நோக்கிச் சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறேன். அவநம்பிக்கை, கசப்பு கொள்ளும் சூழல் இங்குள்ளது என்பதை நானும் எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். ஆனால் நம்பிக்கையின் பொறிகளை எப்போதும் கண்டடைகிறேன். முடிந்தவரை அதில் மூழ்கி முடிந்தவரை என் தளத்தில் என்னால் இயல்வதைச் செய்துகொண்டும் இருக்கிறேன்.

 

என் உணர்வுகள் சார்ந்து கறுப்புவெள்ளையாக அரசியலைப் பார்ப்பதும், இலக்கியச்சூழலை அணுகுவதும் நிகழக்கூடாதென்பதும் என் உறுதிகளில் ஒன்று. அவ்வாறு இயல்பாக இருக்கமுடியவில்லை என்பதும், தொடர்ந்து அதற்காக முயலவேண்டியிருக்கிறது என்பதும், அடிக்கடி உணர்வுபூர்வமான எதிர்வினைகள் நிகழ்ந்துவிடுகிறது என்பதும் உண்மை

 

ராமசாமி அவர்களின் அக்குறிப்பு அவருடைய அந்த இரு உணர்வுநிலைகலில் இருந்து உருவானது. அவர் நம்ப விழைவதை அடைந்து ,அதை பெருக்கிக்கொண்டு சொல்லும் நிலைபாடு. அதனுடன் விவாதித்தல் அரிது. இது உங்களைப்போன்ற சிலருக்காக மட்டும்.

 

பல ஆண்டுகளுக்கு முன் நான் பவா செல்லத்துரையின் இல்லத்தில் ஒருவரைச் சந்தித்தேன். பீடி பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக பவாவின் அப்பாவிடம் அரசியல் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்றார் பவாவின் அப்பா. மிகமிகநேர்மையாக முப்பதாண்டுக்காலம் அரசியலில் ஈடுபட்டிருந்தவர். திமுகவின் கொள்கைகளுக்காக அரசியலில் ஈடுபட்டு சொந்தச் செல்வத்தை இழந்தவர். ’வெறுங்கால்த் தொண்டர்’ என்போமே அத்தகையவர். அப்போதும் இருளர் முதலியவர்களுக்காக பணியாற்றிக்கொண்டிருந்தார்

 

அத்தகைய ஒருவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தால் நாம் ஆச்சரியப்படமாட்டோம். திமுக ஊழல்கட்சி, குடும்பநலக் கட்சி என்னும் சித்திரமே நம்முள் உள்ளது. திமுக அரசியல்வாதி என்னும்போதே நம்முள் என்.கே.பி.ராஜாவும் ,வீரபாண்டி ஆறுமுகமும் , கே.என்.நேருவும் நினைவில் எழுந்துவிடுவார்கள். அவர்கள் குறுநில மன்னர்கள். ஆனால் திமுக அரசியலில் கொள்கைநம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கொண்ட எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள், ஓரளவு இருக்கவும் செய்கிறார்கள். இன்றைய திமுக ஆதரவாளருக்கு அவர்களுக்கும் திமுக குண்டருக்கும் இடையே வேறுபாடில்லை, அல்லது குண்டர் அதிகாரம் கொண்டவர் என்பதனால் மேலும் முக்கியமானவர். திமுக எதிர்ப்பாளர்களுக்கும் அந்த வேறுபாடு தெரியாது, குண்டர்களே அவர்களின் முன்னுதாரணங்கள்.

 

ஆனால் திமுகவின் அடிப்படையில் ஓர் இலட்சியவாதம் இருந்துள்ளது, ஓரளவு அது நீடிக்கிறது. பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி, மத ஆதிக்க எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என அதற்கு ஒரு தளம் உள்ளது. அது சார்ந்து செயல்பட்ட இலட்சியவாதிகளும் பலர் உள்ளனர். ஓர் எழுத்தாளனாகிய நான் அவர்களையும் கருத்தில்கொண்டே என் தரப்பை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.  அந்த எண்ணத்தை அப்போதுதான் அடைந்தேன்

 

பவாவுடன் நடந்த அந்த உரையாடல் வழியாகத்தான் நான் திரு கு.பிச்சாண்டி அவர்களைப்பற்றி அறிந்தேன். அன்று திருவண்ணாமலைக்கு நான் மிக அணுக்கமானவன். ஆகவே பலதரப்பட்ட மக்களை சந்திப்பவனாகவும் அங்குள்ள அரசியலை நன்கு அறிந்தவனாகவும் இருந்தேன். கு.பிச்சாண்டி அவர்களை இதுவரை நான் சந்தித்ததில்லை.நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக அறியவந்தவற்றில் இருந்து அவரைப்பற்றி மிக உயர்வான எண்ணமே எனக்கு உருவானது.

 

குறிப்பாக அன்று நான் அறிந்திருந்த இடதுசாரிகள் அவருடைய நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றைப்பற்றிப் பெருமதிப்புடன் மட்டுமே பேசிவந்தனர். அவரைத் தங்களில் ஒருவராக எண்ணினர். அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொறுப்பில் இருந்திருக்கிறார். திமுக அரசியலார்வலர்கள் அவரை ‘நல்லமனிதர், ஆனால் பிழைக்கத்தெரியாதவர்’ என்றனர். அதன்பின் பிழைக்கத்தெரிந்தவர்களால் கு.பிச்சாண்டி ஓரம்கட்டப்பட்டார். அவர்கள் பூதாகரமாக எழுந்தனர். கு.பிச்சாண்டி அமைச்சராக இருந்தவர், ஆனால் இன்றும் பொருளியல்நெருக்கடிகளுடன் எளிய வாழ்க்கை  வாழும் சேவைமனம்கொண்ட அரசியல்வாதிதான்.

 

மேலும் பல ஆண்டுகள் கழித்தே எஸ்.கே.பி. கருணாவைச் சந்தித்தேன். அவர் கு.பிச்சாண்டியின் தம்பி என மேலும் பிந்தியே அறிந்தேன். அவர்களின் குடும்பம் திருவண்ணாமலையின்  வணிகர்கள். அவர்களின் தந்தை குப்புசாமி அவர்கள் லாரி,பேருந்து தொழில் செய்தவர். இப்போதும் அத்தொழில்கள் அவர்களுக்கு உள்ளன. ஆரம்பகால திராவிட இயக்க அரசியலில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர்.

 

அவர்களிடம் இன்றிருக்கும் செல்வம் அவர்களின் தந்தையாரால் ஈட்டப்பட்டது. அது அங்குள்ள பிழைக்கத்தெரிந்தவர்களின் செல்வத்துடன் ஒப்பிட்டால் பெரிய செல்வமும் அல்ல. கு.பிச்சாண்டி கட்சியரசியலில் அதில் தன் பங்கை பெரும்பாலும் இழந்தார் என்பதே உண்மை. அவர் ஒரு தொண்டர்சூழ் அரசியல்வாதி. மக்கள் பிரச்சினையில் சொந்தக்காசுடன் இறங்குபவர். ஆகவே வேறுவழியில்லை.

 

எஸ்.கே.பி. பொறியியல்கல்லூரி எஸ்.கெ.பி.கருணாவின் குடும்பச் சொத்தில் தொடங்கப்பட்டு குடும்பச் சொத்தை கரைத்துக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். ஆனால் அமைச்சரின் தம்பியின் பொறியியல் கல்லூரி, வேறு எப்படி அது வந்திருக்கும் என ஓர் எளிய சமன்பாட்டை நாம் போடுவோம். தனிப்பட்டமுறையில் அறியாமலிருந்திருந்திருந்தால் நானும் அதையே செய்வேன்.

 

இனி ராமசாமியின் கேள்விகள். எஸ்.கெ.பி.கருணா உழைத்துச் சாப்பிடுகிறாரா, இல்லை பெற்றோர் ஈட்டிய காசில் வாழ்கிறாரா என்பது. உழைத்து மட்டுமே சாப்பிடவேண்டும், மற்றவர்களை வைவேன் என ராமசாமி உறுதி எடுத்திருந்தால் அவர் தினசரி பல்லாயிரம் பக்கம் எழுதவேண்டியிருக்குமே என்று தோன்றுகிறது. நல்லவேளை என் அப்பாவிடமிருந்து எனக்கு ஒன்றும் வந்துசேரவில்லை. என்ன ஒரு ஆறுதல்!

 

அதன்பின்னரும் என்னவகையான உழைப்பு தேவை என்றெல்லாம் ராமசாமி அவர்கள் பேச ஆரம்பித்து விட்டால் அந்த செத்துப்போன குஜராத்திக்கிழவர் தவிர அத்தனைபேரும் அயோக்கியர்கள் என்னும் முடிவுக்குத்தான் வருவார். அப்படி என்றால் நமக்கும் ஒருவகை தெளிவு கிடைக்கும். மற்றபடி கருணா அவர் நம்பும் கல்விப்பணியில் கடுமையாக உழைத்து அப்பா தேடிவைத்ததை அருமையாகச் செலவிட்டு வருகிறார் என்பதே நான் அறிந்தது

 

அடுத்தது, அவருடைய கல்விக்கொள்கை. நானும் காந்திய நம்பிக்கைகொண்டவன். ஆனால் சர்க்காவால் நூல் நூற்று வாழாதவனெல்லாம் செருப்பாலடிக்கத்தவன் என்று சொல்லும் காந்தியவாதி அல்ல.  கருணாவின் கல்விக்கொள்கை, அனுபவங்கள் பற்றி நான் அவரிடம் உரையாடியதுண்டு. அவருடையவை அனுபவம் சார்ந்த புரிதல்கள். இங்கே எது சாத்தியமோ அதைச்செய்வதற்கான முயற்சிகள்

 

இங்கே நாகர்கோயிலில் ஒரு மருத்துவர் உண்டு. மிகுந்த அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் அத்தொழிலைச் செய்பவர். அவர் ஒருமுறை என்னிடம் சொன்னார். அலோபதி மருத்துவத்திற்கு மருத்துவம்பார்க்க ஒரு முறைமை இருக்கிறது. படிப்படியாக பல அவதானிப்புகள் வழியாக அந்த மருத்துவம் செய்யப்படவேண்டும். எடுத்த எடுப்பிலேயே முறிமருந்துகள் அளிக்கக்கூடாது. அதைத்தான்  கல்விநிலையங்களில் கற்பிப்பார்கள். அவர் தொழிலை ஆரம்பித்தபோது அப்படித்தான் செய்தார். தொழில் படுதோல்வி. மனைவியின் நகைகளை விற்று சாப்பிடவேண்டிய நிலை.

 

ஏனென்றால் மக்கள் டாக்டரிடம் சென்றதுமே ஒரே மாத்திரையில் நோயை அவர் சரிசெய்யவேண்டுமென நினைக்கிறார்கள். அப்படிச் செய்பவர்களிடம் மட்டுமே மேலும் செல்கிறார்கள். அவர்களிடம் அலோபதியின் முறைமை என்ன, அதை மீறினால் என்ன விளைவு ஏற்படும் என விளக்க முடியாது. ஆகவே ஒரு குறைந்தபட்ச அறத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். அதாவது கடுமையான மருந்துகளை பயன்படுத்துவதில்லை. லாபநோக்கில் மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை. நோயாளியிடம் அலோபதியின் முறைமை பற்றி ஒரு சுருக்கமான விளக்கம் அளிப்பார். அவர் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நோயாளி விரும்பும் உடனடி மருத்துவம்தான்.

 

அஜிதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் நான் அவரிடம் சென்றபோது பல ஆய்வுகளுக்குப்பின் அவனுக்கு மருந்து தேவையில்லை, தொடர்ச்சியாக நிறைய புரோட்டீன் உணவு மட்டும் கொடுத்தால்போதும் என்றார். நான் ஆச்சரியத்துடன் ”இப்படித்தான் நீங்கள் மருத்துவம் செய்கிறீர்களா?” என்று கேட்டேன். ”உங்களிடம் அலோபதி பற்றி முதலில் பத்துவரி சொன்னேன். நீங்கள் செவிசாய்த்தீர்கள். ஆகவே இதைச்சொல்கிறேன். எப்படியாவது பையனுக்கு நாளைக்கே சரியாகணும் டாக்டர் என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் நோய்முறி மருந்துகளை எழுதியிருப்பேன்” என்றார்.

 

இன்றைய சூழலில் இலட்சியவாதத்தில் நம்பிக்கைகொண்டவர்களில் இருவகை மனிதர்கள் உண்டு. மூர்க்கமாக இச்சமூகத்தின் கருத்தியல்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராக தன் கொள்கைகளை முன்னிறுத்திப்போராடுபவர்கள் முதல்வகை. சமரசமற்றவர்கள். ஆகவே தனியர்கள். பெரும்பாலும் தோல்வியடைபவர்கள். ஆகவே கசப்பு நிறைந்தவர்கள்- மிகச்சிலரே அக்கசப்பைக் கடக்கமுடியும். காந்தி போல அல்லது அண்ணா ஹசாரே போல அல்லது நானாஜி தேஷ்முக் போல அல்லது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியினர் போல. இந்தவகையைச் சேர்ந்தவர் ராமசாமி அவர்கள். நம்பிக்கை இழந்தவர், கசந்தவர்.

 

இன்னொரு வகையினர் உரிய சமரசங்களுடன் ,தங்கள் எல்லைக்குள் முடிந்தவரை தாங்கள் நம்பும் இலட்சியவாத அம்சம் கொண்ட வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டவர்கள். அவர்களுக்குக் குற்றவுணர்ச்சி இருக்கும். தங்கள் எல்லைகள் குறித்த அறிதலும் இருக்கும். ஆகவே முதல்வகையினரிடமிருக்கும் ‘நான் இலட்சியவாதி’ என்னும் தோரணை இருக்காது.  ‘இவ்வளவுதாங்க நம்மால முடியும்’ என்னும் பாவனையே இருக்கும். நான் இவ்வகைப்பட்டவன். எஸ்.கெ.பி.கருணாவும் இவ்வகையினரே.

 

ஆகவே என்னை ராமசாமி அவர்கள் என் சமரசங்களுக்காக வசைபாடினால் ’பரவாயில்லை, வேண்டியதுதான். உங்க நிலையிலே நின்னுட்டு அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு சார், மன்னிச்சிடுங்க’ என்றே சொல்வேன். ஆனால் அதை அனைவருக்கும் உரிய அளவுகோலாக அவர் ஆக்கினால் அதில் உள்ள நடைமுறைப் பிழையை சுட்டிக்காட்டுவேன். வெறும் அவநம்பிக்கையால், வெறுப்பரசியலால் பச்சை அயோக்கியர்களையும் சமரசங்கள் கொண்ட நேர்மையானவர்களையும் ஒரேவகையானவர்களாக எண்ணி வசைபாடுவது அயோக்கியர்களுக்கு ஆதரவான குரலாக மட்டுமே பொருள்படும். ’ஸுத்தன் துஷ்டனின் ஃபலம் செய்யும்’ என ஒரு மலையாளச் சொலவடை உண்டு. தூய்மையானவன் தீயவனின் விளைவை உருவாக்கக்கூடும் என்பது பொருள்.

 

இன்றைய சூழலில் ஒரு பொறியியல் கல்லூரியை எப்படி பயனுள்ளதாக நடத்தமுடியும், அப்படி நடக்கிறது எஸ்.கெ.பி.பொறியியல் கல்லூரி. மாணவர்களுக்கு நவீன அறிவியலை, பொறியியலை சாத்தியமான அளவுக்குக் கொண்டுசெல்ல கருணா முயல்வதை நான் அறிவேன். ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு இருக்கும் பொருளியல் எல்லைகள் பல. அதனுள் நின்றுகொண்டு அலைந்து திரிந்து அவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

 

ஆனால் அவை இன்றைய சூழலில் பத்து சதவீதம் மாணவர்களுக்குக்கூட பயன் அளிப்பவை அல்ல. ஏனென்றால் இங்குள்ள பள்ளிக்கல்விமுறை வெளியே அனுப்பும் மாணவர்களின் தரமும் இயல்பும் வேறு. அவர்களுக்கு எதையும் வாசிக்கத்தெரியாது. புரிந்துகொள்ளும் பயிற்சி குறைவு. ஆர்வம் அதைவிடக்குறைவு. மேலும் அவர்களிலேயே  கீழ்நடுத்தர மாணவர்களே இன்று இத்தகைய பொறியியல் கல்லூரிகளுக்கு வருவார்கள். ஆகவே எஞ்சியவர்களுக்கு மூர்க்கமான மனப்பாடக் கல்வியையே அங்கே அவர் பரிந்துரைக்கிறார்.

 

’எப்படியாவது மார்க். எப்படியாவது ஒருவேலை. இதைத்தவிர இங்கே வருபவர்களிலே பெரும்பாலானவர்களுக்கு நோக்கம் இல்லை. அவங்க அப்பா அம்மாவுக்கும் அதேதான். அதைக்குடுக்காம இந்த கல்லூரியை நடத்தமுடியாது’ என ஒருமுறை சொன்னார். கிராமப்புறச் சூழலில் இருந்து வருபவர்களின் கனவு அந்த மாணவனின் வேலையினூடாக ஒரு பொருளாதார மீட்பு. அது இன்றைய சூழலில் இக்கல்வி வழியாக கண்டிப்பாகச் சாத்தியமாகிக்கொண்டுதான் இருக்கிறது. வேறெந்தக் கல்வியைவிடவும். நம் சூழலில் நான் அறிய பல்லாயிரம் உதாரணங்கள். கருணாதன் கல்லூரி சார்ந்தே  பலநூறு உதாரணங்களை அளிக்கமுடியும்.

 

சரி , உண்மையான பொறியியல் கல்வி, சிந்தனைக்கல்வியை இங்கே அளிக்கமுடியுமா? நான் சென்னை ஐஐடியில் மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். உயர்தர மாணவர்கள் பயிலும் பல  ‘உச்சகட்ட’  பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்றிருக்கிறேன். அவர்களிலும் அதே ஐந்து சதவீதம் பேர்தான் எதையாவது புரிந்துகொள்ளக்கூடியவர்கள். மற்றவர்கள் வெறுமே தெரிந்துகொண்டு ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள் மட்டுமே. ஒரு சிறிய கொள்கையை, கோட்பாட்டைக்கூட எந்தக்கொம்பனும் அவர்களுக்குப் புரியவைத்துவிட முடியாது.சாதாரணக்கல்லூரி மாணவர்களுக்கு மெல்லிய பதற்றமும் அடக்கமும் இருக்கும். உயர்தரத்தினருக்கு தாங்கள் தேர்வுசெய்யப்பட்ட ரத்தினங்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதிசெய்யத்தக்க முதல்தர உற்பத்திகள் என்னும் போலிச்செருக்கு மண்டையை களியாக மூடியிருக்கும் என்பதே வேறுபாடு.

 

ஆகவே இது இந்தியாவின் பிரச்சினையாக இருக்கலாம். நம் கல்விமுறை இப்படியா அல்லது நம் மரபணுவே இப்படித்தானா, தெரியவில்லை. நம்மால் முடிவது வெள்ளைக்காரனுக்கு எடுபிடியாக வேலைபார்த்து டாலர் சம்பாதிப்பது என்றால் அதைச்செய்வோம். அந்த அளவுக்கு இங்கே வறுமை குறையட்டும். அவ்வகையில் பார்த்தால்கூட இங்கே சொந்தச்செலவில் பொறியியல் கற்றுக்கொண்டு சம்பாதித்து குடும்பத்தை கரையேற்றுபவன், இந்தியாவுக்கு பணம் சம்பாதித்து அளிப்பவன் இந்தியாவின் அரசுநிதியில் கற்றுக்கொண்டு அமெரிக்கா ஓடும் ஐஐடி மேன்மக்ககளைவிட மேலானவன், பயனுள்ளவன்.

 

கடைசியாக, இந்த மிகைக் கட்டணம். தனியார்க் கல்லூரிகளில் இன்று நன்கொடையல்ல, உரிய கட்டணம் வசூலிக்கவே தலையால் தண்ணீர்குடிக்கிறார்கள் என்பதே உண்மை. பலவகையான சர்க்கஸ்கள் வழியாக பேராசிரியர்களுக்கு ஊதியமளிக்கிறார்கள், அவ்வளவுதான்.

 

சரி, உடனே இத்தகைய பொறியியல் கல்லூரிகள் பெரிய மோசடிகள் என்றும் மக்களுக்கு எளிய தொழிற்கல்வி போதும் என்றும் இலட்சிய முழக்கமிடலாமா? இடலாம். இதேபோல வெளிநாட்டு மோகம் வேண்டாம், உழைப்பாளர் இங்கேயே வேலைசெய்யலாமே என முழங்கலாமா? ஆம், அதுவும் இலட்சியமுழக்கமே.

 

ஆனால் இந்தக் கல்வியால், வெளிநாட்டு பணவரவால்தான் எண்பதுகள் வரை இருந்த உச்சகட்ட வேலையில்லாத் திண்டாட்டம் சற்றேனும் ஒழிந்தது. எண்பதுகளில் தமிழகத்திலிருந்த கிராமப்புற வறுமை மறைந்தது. லட்சக்கணக்கான குடும்பங்கள் அடுத்தகட்டத்திற்கு வந்தன. இது யதார்த்தம். என்னைப்போன்ற யதார்த்தவாதிகள் இதை ஆக்கபூர்வமானதாகவே பார்ப்போம். அடுத்தகட்டமாக மேலும் நல்ல கல்வி அளிக்கப்படலாமே என கோருவோம்.

 

கருணா அவர் ஆர்வம் கொண்டுள்ள ஒரு துறையில்  முழுத்தீவிரத்துடன் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார் என நான் பல மாணவர்களை அடிப்படையாகக்கொண்டு அறிந்தேன். சென்ற காலங்களில் நண்பர் முத்துராமனின் பரிந்துரைப்படி ஈழ அகதிமாணவர்கள் பலருக்கு அவர் இலவச இடமளித்துக் கல்வியளித்திருக்கிறார். பலருக்கு அதிதீவிர மனப்பாடக் கல்விதான் அளிக்கப்பட்டது. அவர்களால் அதுதான்முடியும் என்றால் அது. ஆனால் ஆர்வமுள்ளவர்களுக்கு சற்றேனும் மேம்பட்ட கல்வி அளிக்கப்படுகிறதா என்றால் ஆம் என்பதே ஆறுதலான பதில்தான்.

 

அப்படியென்றால் எஸ்.கெ.பி கருணா இந்தியக்கல்விமுறையை மாற்றியமைக்க தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கலாமே என ராமசாமி கேட்கலாம். செய்யலாம்தான். ஆனால் அவர் தன்னை கல்வியாளர் என்றோ சமூகசேவகர் என்றோ சொல்லிக்கொள்வதில்லை. முடிந்தவரை தன் எல்லைக்குள் நேர்மையாகச் செயல்படுகிறார் என்பதைக்கூட அவர் சொல்வதில்லை, நான் அவரை அறிந்தமையால் சொல்கிறேன்.

 

ஒத்திசையாத ராமசாமி போன்றவர்கள் நமக்குத் தேவை. ஒத்திசையும் என்னையும் எஸ்.கெ.பி.கருணாவையும் போன்றவர்களும் ஓரமாக ஆங்காங்கே பொத்தினாற்போல  இருந்துவிட்டுப் போகலாம் என்பதே என் எண்ணம். அதாவது மலையாளத்தில் ‘ஒந்நு ஜீவிச்சு போகட்டே ஆசானே’ என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

என் கவலை எல்லாம் இப்படியே போனால் ராமசாமி அவர்களிடம் வசைபெறுவது ஒரு தகுதியாக ஆகிவிடக்கூடாது என்பதுமட்டுமே.கடைசியில் அதற்காக அவரிடம் லஞ்சம்கொடுக்க ஆட்கள் வரும் நிலை ஏற்பட்டுவிடும். அவர் வாங்கவும் மாட்டார், ரொம்ப கஷ்டம்

 

ஜெ

 

ஒத்திசைவு ராமசாமி குறிப்பு 1

ஒத்திசைவு ராமசாமி குறிப்பு 2

=====================================

வலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி

 

சுஜாதாவை அடையாளம் காண்பது

கருணா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முகம் -கடிதம்

$
0
0
mukam

ஜெயமோகன் புகைப்படம் ஜெயக்குமார் ,கோவை

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

முகம்சூடுதல் படித்தேன். முகம்சூடுதல் என்ற தலைப்பே ஒரு கவிதை. தத்துவம். அழகியல். தங்களின் பெரும்பான்மையான கட்டுரைகளின் தலைப்பு பாதி விஷயத்தை சொல்லிவிடுகிறது. கட்டுரையை வாசித்த பின் மீண்டும் தலைப்புக்கு வரும் பொழுது ஒரு பரிபூரண வட்டம் நிறைவடைகிறது. பூச்சூடுதல், முடிசூடுதல், பிறைசூடுதல் என்பதையெல்லாம் தாண்டி முகம்சூடுதல் எனும் வார்த்தையை முதல் முறையாக படிக்கிறேன். கடந்த சில நாட்களாக முகம்சூடுதல் என்ற வார்த்தையை ஆசை தீர பல முறை உச்சரித்து மகிழ்கிறேன்.

முடி” சிறுகதை எழுதிய மாதவனால் மட்டுமே இப்படியொரு முடி சார்ந்த வினாவை கேட்க முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு திருக்குறள் மேற்கோளுடன் நீங்கள் தந்த சுவாரசியமான பதிலும் அந்த குறளும் எளிதாக மனதில் பதிந்து விட்டது. “ஆரோக்ய நிகேதன்” வழியாக பார்த்தால் “நீட்டல்” என்பதை ஆயுர்வேதம் என்று சொல்லலாமா? இயற்கையின் வழியே சென்று இயற்கையை அரவணைத்து வாழ்வது. “மழித்தல்” என்பது அல்லோபதி போல் தெரிகிறது. புதுமை, மாற்றம் என்று தற்காலிக விடுதலை கொடுத்தாலும் , ஒரு முறை மழிக்க தொடங்கிவிட்டால் கடைசி வரை மழித்து போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த நீட்டல், மழித்தல் தவிர சமணர்கள் வேறு முடியை பிடுங்கி எறிகிறார்கள். துறவு என்ற இலக்கு என்னவோ ஒன்றுதான், ஆனால் செல்லும் வழிகள்தான் எத்தனை எத்தனை?

மழித்தல் , பிடுங்கி எறிதல் இரண்டும் பிரச்சனையின் ஒரு பகுதியை (அதாவது தலை பகுதியில்) மட்டும் தீர்க்கிறது. மற்றபடி ஆண் பெண் இரு பாலரின் இதர பிற உறுப்புகளுக்கெல்லாம் சென்றால் கொஞ்சம் சிக்கல்தான். இன்றைய காலத்தில் தெருவுக்கு தெரு அழகு நிலையங்களும் , தொழில்நுட்பமும் வந்துவிட்டது. அந்த காலத்தில் துறவிகள் என்ன செய்தார்களோ?

முடி தவிர, முடியின் நிறமும் ஒரு பிரச்னை. தும்பை , மல்லிகை, வெண்ணிலா , வெண்புறா, என்று எதிலும் வெண்மையை கொண்டாடும் சமூகம், முடியில் வெண்மை வந்துவிட்டால் பதறுகிறது. சாயம் பூசி மறைக்க முயல்கிறது. நாற்பது வயதுக்கு மேல் மனிதர்கள் வித விதமான தலைச்சாயங்கள் முயற்சித்தபடி, வண்ண வண்ண கோமாளிகளாய் திரிகிறார்கள்.

மைக்கேல் ஜாக்சனின் “MAN IN THE MIRROR” என்றொரு பாடல். அவரது மரணத்துக்கு பின் மிக அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல். கருப்பராக பிறந்து தன் திறமையால் பணம் மற்றும் உலகப்புகழின் உச்சிக்கு சென்ற பின், மைக்கேல் ஜாக்சன் சூட விரும்பிய முகம் ஒரு வெண்முகம். ஆனால் ஒவொவொரு முறையும் தன முகத்தை கண்ணாடியில் பார்க்கும்பொழுது அவர் மனம் அமைதியடைந்ததா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

மகாபாரதத்தில் அபிமன்யுவின் திருமண வைபோகத்தில் ஒரு மாயக்கண்ணாடி கிடைக்கிறது. நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை அந்த கண்ணாடி காண்பிக்கும் என்று கேள்விப்பட்டு , அனைவரும் அதை பார்த்து மகிழ்ந்து விளையாடுகிறார்கள். கிருஷ்ணர் கண்ணாடியை பார்த்தால் யார் தெரிவார் என்று அனைவருக்கும் ஆவல். பாமா, ருக்மிணி என்று ஊகிக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் கண்ணாடியை காணும் பொழுது தெரிவதென்னவோ சகுனியின் முகம். தர்மமும் அதர்மமும் மோதும் பொழுதெல்லாம், இன்றும் இந்த முகம்சூடுதல் விளையாட்டு தொடர்கிறது.

காலத்தின் கோலத்தால் அகம் என்னும் கண்ணாடியில், கறைகளும் கசடுகளும் படிந்து, முகம் என்பது ஒரு கலங்கிய சித்திரமாகவே தெரிகிறது. முறையான பயிற்சிகள், முயற்சிகள் மூலமாக அழுக்குகளை துடைத்து அகக்கண்ணாடியை பார்த்தால், பளிச்சென்று முகம் தெரியுமோ? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகம்சூடுதல் என்பது ஒரு வகையில் அகம்சூடுதல் தானோ?

அன்புடன்,

ராஜா.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெறுப்புடன் உரையாடுதல்

$
0
0

images

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம்.

தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. அதில் வாசகர்களின் விமர்சனங்களும் பிரசுரிக்கப்பட்டது. நானும் சில கருத்துகளை எழுதி இருந்தேன். அதில் என்னை திட்டியும், அறிவுரை கூறியும் பலபேர் எழுதி இருந்தனர். இந்திய தேசியம் அதில் கேள்விக்கு இலக்காகி விமர்சிக்கபட்டிருந்தது. அஹிம்சை ஒரு போதும் விடுதலை போராட்டங்களில் வெல்லமுடியாது என்று பலர் விவாதித்தனர். காந்தியை ஒரு பம்மாத்துகாரர் என்றும் சிலர் வாதிட்டனர். விவாதம் செய்தவர்கள் நேதாஜியை போற்றி, அவர் வழி வந்தவர்தான் பிரபாகரன் என்றனர். நான் நேதாஜி பற்றி குறைவான மதிப்பீடுகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் அவருடைய சித்தாந்தம் இந்திய விடுதலையில் வெற்றி பெறவில்லை எனபது குறித்து எனக்கு வேறு கருத்து இல்லை.

நான் தங்களுடைய காந்தியம் குறித்த பதிவுகளை ஓரளவு படித்திருக்கிறேன். நீங்கள் காந்திய வழிகளில் நம்பிக்கை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. உங்களை தவிர வேறு யாரும் என் குழப்பங்களை தீர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். காந்திய வழி இந்திய விடுதலையில் எப்படி வெற்றி பெற்றது?, ஆயுதம் ஏந்திய மற்றவர்களால் ஏன் வெற்றிபெற முடியவில்லை?. வெற்றி பெறுவதற்கு ஆயுதபலமும் செல்வமும் போதுமான அளவு இருந்திருந்தால் நேதாஜி இந்திய விடுதலையை சாதித்திருக்க முடியுமா?. அப்படியானால் காந்திய வழி பலவீனர்களின் கொள்கையா?. இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட கோடானு கோடி மக்களின் அஹிம்சை சார்ந்த முயற்சிகளால் நாம் விடுதலை அடையவில்லையா?. மக்களின் மனோபலத்தைவிட ஆயுதங்களின் பலம் பெரிதா?

இப்போது இணையதளங்களில் வெளிவரும் பல பத்திரிகைகள் உமிழும் இந்திய வெறுப்பு மிக அச்சமூட்டுகிறது. இன்றைய இளைய சமுகம் இணையதளங்களை பரவலாக பயன்படுத்தும் பட்சத்தில் இத்தகைய தவறுதலான வழிகாட்டுதல்கள் இந்திய தேசியத்தின் மைய கருத்தையே அசைத்துவிட வாய்ப்பிருப்பதாக படுகிறது. இந்திய தேசியத்தின் மேன்மையை பரப்பும் அறிவியக்கம் வலுவானதாக இருக்கிறதா?.

தங்கள் கருத்துகள் என் குழப்பங்களை தீர்க்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்

குருமூர்த்தி பழனிவேல்

நைஜீரியா

 

 

i

 

அன்புள்ள பழனிவேல்,

உங்கள்மேல் கொட்டப்பட்ட வெறுப்பு மிக இயல்பானது. காந்தியக் கோட்பாடென்பது எப்போதுமே வெறுப்புக்கு எதிரான ஒன்று. ஆகவே எப்போதுமே வெறுப்புதான் அதை எதிர்கொள்கிறது. காந்தி அவர் வாழ்ந்த காலத்திலேயே உச்சகட்ட வெறுப்பு, அவதூறு ஆகியவற்றின் நடுவிலேயே வாழ்ந்தார். அவற்றுடன்தான் அவர் மீண்டும் மீண்டும் உரையாடிக் கொண்டிருந்தார்.

வெறுப்பு எரியும் மனங்களைப் பொறுத்தவரை உண்மையில் அவர்களுக்கென கோட்பாடோ, கொள்கையோ, ஏன் இலட்சியமோ கூட ஏதுமில்லை. அவற்றின் தன்னியல்பால் அவை வெறுப்பைக் கக்குகின்றன. அவ்வெறுப்பைக் கக்குவதற்கான ஒரு காரணமாக ஏதேனும் அரசியலை சமூகநோக்கத்தைக் கண்டுகொள்கின்றன. அந்த நோக்கத்தை உச்சகட்ட அறம் சார்ந்ததாக, சமூகக் கோபம் சார்ந்ததாக முன்வைக்கின்றன. அந்தநோக்கத்தைக் கொண்டு தங்கள் அதிகார வெறியை, மானுடவெறுப்பை நியாயப்படுத்துகின்றன. ஆனால் உள்ளூர உள்ள சக்தி என்பது அப்பட்டமான வெறுப்பு மட்டுமே

இதற்கான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். எந்த இலட்சியத்துக்காக இவர்கள் அவ்வெறுப்பைக் கக்குவதாகச் சொல்கிறார்களோ அந்த லட்சியங்களையே தங்கள் வெறுப்பின் பொருட்டு காலில்போட்டு மிதிப்பார்கள். மக்களுக்காக ஆயுதமேந்துபவர்கள் மக்களையே கொன்றுகுவிப்பார்கள். உதாரணமாக, முன்பு மாவோ அதை சீனத்தில் செய்தார் என்பது நாற்பது வருடம் மறுக்கப்பட்டு இன்று அவர்களாலேயே ஒத்துக்கொள்ளப்பட்ட வரலாறு. நேற்று ஆந்திராவிலும் இன்று வடஇந்தியக் கிராமங்களிலும் மாவோயிஸ்டுகள் அதையே இப்போது செய்கிறார்கள்.

வன்முறை மற்றும் ஆயுதமேந்திய போராட்டங்களில் இருக்கும் ‘மனக்கிளர்ச்சி’ வேறு வகையான சமூகப்போராட்டங்களில் இல்லை. பொதுவாக இவற்றைப் பற்றியெல்லாம் ஆரம்பத்தில் பேசுபவர்கள் தனிவாழ்வில் எந்த வன்முறையையும் எதிர்கொள்ள முடியாத அறிவுஜீவிகளாக இருப்பார்கள். அவர்களின் எளிய அன்றாட அலுப்பை அகற்றும் ஒரு சிந்தனையாக அது இருக்கிறது. தங்களை அதிதீவிரமானவர்களாக சமரசமற்றவர்களாக உருவகித்துக்கொள்ள அது உதவுகிறது. இந்தப்பாவனைக்காக, இது உருவாக்கும் அகங்கார திருப்திக்காக அவர்கள் பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவார்கள். அவர்களை பலியிடுவார்கள்.

வன்முறை சார்ந்த உணர்வுகளும் எண்ணங்களும் மிக எளிதாக தூண்டிவிடப்படத்தக்கவை. ஆகவே இரண்டாம் தர அறிவுஜீவிகளும் சுயநல அரசியல்வாதிகளும் அதை உடனடியாகக் கையிலெடுக்கிறார்கள். மனிதர்கள் நடுவே மிக மிக எளிதாக பிரிவினையை உருவாக்கலாம். எந்த சமூகத்திலும். மிகச்சிறப்பாக இதை ஹிட்லர் அவரது சுயசரிதையில் விளக்குகிறார். ஒரு மேடையில் ஒருவன் உண்மையிலேயே எதிர்மறையாக உணர்ச்சிவசப்பட்டால் போதுமானது அந்த உணர்ச்சிகளை அவனால் அவனைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்துக்கு கொடுத்து விட முடியும். அது நியாயமான உணர்ச்சிதானா, அதன் மூலம் உண்மையான பலன்கள் இருக்குமா என்றெல்லாம் அம்மக்கள் எண்ண மாட்டார்கள். அதுவே மனித இயல்பு.

அத்தகைய ‘உண்மையான’ எதிர்மறை உணர்ச்சியை எப்படி அடைவது? பேசுபவன் தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான வெறுப்பை வளர்த்துக் கொண்டாலே போதுமானது. அந்த வெறுப்பு அவனில் இருந்து ஒரு சக்தியாக வெளிப்படும். அதுவே ·பாசிசத்தின் ஆற்றல். வெறுப்பு என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் ஆயுதம் என்பதை நவீன அரசியல் கற்றுக்கொண்டது. அவ்வெறுப்பை உருவாக்க மதம், இனம், இனக்குழு அடையாளம் என எதையும் பயன்படுத்த முடியும் என்று அது அறிந்தது. உலகம் முழுக்க இன்று பெருகும் குருதி என்பது அந்த அறிதலில் இருந்து வந்ததுதான். காந்தியம் அந்த வெறுப்பரசியலுக்கு எதிரான மானுட அறத்தின் குரல்.

***

காந்திய வழியிலான போராட்டத்தின் மூன்று அடிப்படை விதிகள்தான் அதை நூற்றாண்டின் இன்றியமையாத முறையாக ஆக்குகின்றன.

ஒன்று, ஒரு போராட்டம் அந்த போராட்டத்தை நடத்தும் மக்களுக்குக் கற்பிப்பதாக, அவர்களை மேம்படுத்துவதாக அமையவேண்டும். எந்த ஒரு சமூகமும் பற்பல கூறுகளினால் ஆனதாகவே இருக்கும். அந்தகூறுகளுக்குள் உக்கிரமன உள்முரண்பாடுகள் இருக்கும். அவர்கள் ஒரு பொது இலக்குக்காக மேற்கொள்ளும் போராட்டமானது அவர்களுக்குள் பரஸ்பர விவாதத்தையும் உரையாடலையும் உருவாக்க வேண்டும். அவர்களின் முரண்பாடுகள் நடுவே இயல்பான சமநிலையை உருவாக்க வேண்டும்.

காந்திய வழியிலான போராட்டத்தின் இயல்பு என்பது மக்களை மீண்டும் மீண்டும் ஒன்று திரட்டுவதுதான். அப்போது அவர்கள் நடுவே உள்ள முரண்பாடுகள்தான் மேலெழுந்து வரும். அம்முரண்பாடுகள் நடுவே ஒய்யாமல் சமரசம் செய்துகொண்டே இருக்கும் அது. அந்தச் சமரசம் வழியாக ஒரு பொதுத்திட்டத்தை ஒரு பொதுக்கனவை அம்மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும். அதுவே அந்தப் போராட்டத்தின் அடிப்படை வலிமையாகவும் இருக்கும் இது நீண்டகால அளவில் நிகழும் ஒரு செயல்பாடாகும். ஆகவேதான் காந்திய இயக்கம் மிக நிதானமான சீரான படிப்படியான போராட்டத்தை முன்வைக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்திய சமூகத்தின் அத்தனை உள்முரண்பாடுகளும் ஒரு பொது இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு மெல்ல மெல்ல சமரசப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தன்னுடைய ஆன்மபலத்தை முழுக்க காந்தி இந்த சமரசத்துக்கே செலவிட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் சமரசம் செய்திருக்கிறார். அவர் வரும்வரை உயர்மட்டம் சார்ந்து நடந்து வந்த போராட்டத்தை அடித்தளம் வரை கொண்டு சென்றிருக்கிறார். சமூகத்தின் அத்தனை தரப்புகளையும் போராட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்

பல வருடங்களுக்கு முன்பு மூத்த கம்யூனிஸ்டுத்தலைவரான சி.அச்சுதமேனன் என்னிடம் சொன்னார். சுதந்திரப் போராட்டம் வழியாக காந்தி இந்திய சமூகத்தை அரசியலுக்குக் கொண்டு வந்தார். இந்தியாவின் கோடானுகோடி அடித்தள மக்களுக்கு அரசியல் பங்கேற்பு என்னும் அதிகாரம் அவர்களுக்கிருப்பதை உணர்த்தினார். அந்த அடித்தளம் மீதுதான் இந்தியாவில் இடதுசாரி அமைப்புகள் உருவாக்கப்பட்டன என்று. இந்திய தலித் இயக்கமும் அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டதே. அதை அம்பேத்காரும் உணர்ந்திருந்தார்.

ஆக, காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது உண்மையில் அந்த அரசியல் விழிப்பு இயல்பாகவே கொண்டு வந்த அடுத்த கட்டம் மட்டுமே. இந்தியாவின் பெரும்பாலான மக்கள் அரசியலதிகாரத்துக்குத் தொடர்பில்லாமல் தங்கள் மூலைகளில் முடங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காந்தி அவர்களுக்கு அரசியலை வழங்கிவிட்டார். அதன்பின் அவர்கள் அதிகாரமின்றி அமைய முடியாது. அதன் பின் அவர்களை ஜமீன்தார்களும் குறுநிலமன்னர்களும் அவர்கள் மேல் அமர்ந்து பிரிட்டிஷாரும் ஆள முடியாது.

அதாவது தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்களை அடக்கும் சக்தியை எதிர்கொள்ளும் போராட்டம் அது. தங்கள் குறைகளைக் களைவதன் மூலம் தங்கள் அடிமைத்தனத்தை வெல்லும் போராட்டம். அதுவே காந்திய வழியிலான போராட்டத்தின் முதல் அடிப்படையாகும்

இரண்டாவதாக, பிழைகளைக் களைவதற்கான வழிமுறைகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் இயல்பு காந்தியப் போராட்டத்துக்கு உண்டு. ஒரு போராட்ட நிலைபாடு தவறாக இருப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. மானுடப்பிழைகள். தத்துவப்பிழைகள். வரலாற்றுப்புரிதலின் பிழைகள். ஒருபோதும் பின்னால் போக முடியாத ஒரு போராட்டத்தின் இழப்புகள் சாதாரணமானவை அல்ல.

ஏனென்றால் சமூகப்போராட்டங்கள் கோடானுகோடி மக்களைச் சார்ந்தவை. அம்மக்களின் பல்லாயிரமாண்டு கால வாழ்க்கை. அவர்களின் வரலாறு, பண்பாடு என நூற்றுக்கணக்கான நுண்கூறுகள் அப்போராட்டத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றை அனைத்தையும் புரிந்துகொண்டு அப்பழுக்கற்ற ஒரு போராட்டவழியை உருவாக்குவதென்பது முற்றிலும் இயலாத ஒன்று. ஆகவே முற்றிலும் சரியான ஒரு பாதையும் இருக்கப் போவதில்லை

காந்தி தன் போராட்டத்தை பலமுறை பின்னுக்கிழுத்திருக்கிறார். தான் உத்தேசித்த போராட்டம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது தான் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்றோ எண்ணிய கணமே அவர் பின்னகர்ந்திருக்கிறார். மறுபரிசீலனை செய்திருக்கிறார். மீண்டும் புதிய வழியில் தொடங்கியிருக்கிறார். காந்திய வழியிலான போராட்டத்துக்கு மட்டுமே இந்த வாய்ப்பு இருக்கிறது

மூன்றாவதாக, வரலாற்றிலும் சமூகச் செயல்பாடுகளிலும் இறுதித்தீர்வு என்ற ஒன்று இல்லை என்ற புரிதல் காந்திய வழிகளின் அடிப்படை தரிசனமாகும். இறுதியான வழி ஒன்றை கண்டடைந்து விட்டேன், அதைத்தவிர வேறெதையுமே ஒத்துக்கொள்ள மாட்டேன் என்ற நிலை ஒரு அபத்தமான அகங்காரமே அன்றி சமூகத்தையோ வரலாற்றையோ புரிந்து கொண்ட ஒன்றல்ல. காந்தி முரணியக்கத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர். எந்த விசைக்கும் இணையான எதிர்விசை உண்டு. அந்த எதிர்விசையுடனான முரண்பாடும் சமரசமும் அடங்கியதே போராட்டம். எந்தப்போராட்டமும் எப்போதும் எதிர்தரப்புடனான பேச்சுவார்த்தைக்குத் தயராக இருந்தாக வேண்டும்.

காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஆங்கில அரசை வேருடன், வேரடி மண்ணுடன், ஒழித்துக்கட்டுவதற்கான ஒன்றாக இருக்கவில்லை. அது பிரிட்டிஷ் ஆதிக்கத்துடனான ஒரு நீண்ட உரையாடலாகவே இருந்தது என்பது இன்று வியப்பளிக்கிறது. எப்போதும் அவர் பிரிட்டிஷாருடன் பேச தயாராக இருந்தார். தன் தரப்பை அவர்களுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தார். அடைந்தார், அடைந்தவற்றை தக்கவைத்துக் கொண்டு மேலும் பேசினார். பிரிட்டிஷார் தன் எதிரிகள் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களை அசுரர்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிக்கவில்லை. அவர்களுக்காகவும் சேர்த்தே தான் போராடுவதாக அவர் சொன்னார்.

அதனால்தான் பிரிட்டிஷாரை இந்திய அதிகாரத்திலிருந்து அகற்ற அவரால் முடிந்தபோதும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையும் பிரிட்டிஷ் நீதிநிர்வாகத்தையும் பிரிட்டிஷ் இதழியலையும் அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது. இன்றும் இந்திய நாகரீகத்தின் செல்வங்களாக அவை நீடிக்கின்றன. யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார்.

நான்காவதாக காந்தியப்போராட்டம் என்பது ஒருமுனைகொண்ட ஒன்றாக இருப்பதில்லை. ஏற்கனவே சொன்னதுபோல அது ஒரு மாபெரும் சமூக உருவாக்கமாகவும் இருக்கிறது. ஒரு அடிமைத்தனத்துக்கு எதிராக போராடும்போது அந்த அடிமைத்தனத்துக்குக் காரணமாக அமையும் பலநூறு விஷயங்களை கண்டடைந்து ஒவ்வொன்றாக அவர் விலக்கினார். அந்த முனைகளில் எல்லாம் அவர் போராட்டத்தைக் கொண்டு சென்றார். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய காந்தி கிராமம் கிராமமாகச் சென்று கக்கூசில் மலம் கழிப்பதைப்பற்றி பிரச்சாரம் செய்தார். கிராமப் பொருளாதாரத்தை மீட்டமைக்க முயன்றார். மதச்சீர்திருத்தம் செய்ய போராடினார்.

 

 

இந்தியாவைச் சுற்றியிருக்கும் எந்தநாட்டிலும் இல்லாத வலுவான ஜனநாயகம் இந்தியாவில் இருக்கிறது. அதன் குறைகளும் போதாமைகளும் எத்தகையதாயினும் அதை சாதாரணமாகக் கூட நாம் பிறநாடுகளுடன் ஒப்பிட முடிவதில்லை. இந்த ஜனநாயக விழுமியங்கள் சுதந்திரப் போராட்டம் மூலமே இங்கே உருவாகியது. அது காந்தியப் போராட்டமாக இருந்ததே ஒரே காரணம்.

காந்திய வழிமுறைகளை நிராகரிப்பவர்கள் கடந்த உலக வரலாற்றில் எத்தனை ஆயுதபோராட்டங்கள் வெற்றிபெற்றன என்று சொல்ல வேண்டும். கொஞ்சம் வரலாற்றுப் பிரக்ஞையுடன் திரும்பிப் பார்ப்பவர்கள் சென்ற நூறு வருடங்களில் உலகத்தில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் ஆயுதப்போராட்டம் நிகழ்ந்ததோ அங்குள்ள மக்களுக்கு அழிவையன்றி வேறெதையுமே- ஆம், எதையுமே– அவை அளிக்கவில்லை என்பதையே காண்பார்கள்.

அவற்றின் அழிவுத்தன்மைக்குக் காரணங்கள் என்ன என்று நோக்கினோமென்றால் அவையெல்லாமே காந்திய வழிமுறைகளின் சிறப்பியல்பாக நாம் சுட்டும் விஷயங்கள் இல்லாமைதான் என்பதையே காண்கிறோம். பிரம்மாண்டமாக எழுந்து அரைநூற்றாண்டுக்காலம் பல்வேறு சிந்தனையாளர்களால் மீண்டும் மீண்டும் பேசப்பட்ட ருஷ்ய, சீன புரட்சிகள். அம்மக்களுக்கு அவை அளித்தது என்ன? பேரழிவையும், அடிமைத்தனத்தையும் மட்டும்தானே? அப்பட்டமாக வரலாறு இவ்விஷயத்தை திறந்து வைத்திருக்கிறது இன்று. இருந்தும் நேற்றுவரை அவற்றை நியாயப்படுத்தியவர்கள் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் காந்தியை குறைகூற வருகிறார்கள்.

ருஷ்ய, சீனப்புரட்சிகள் முதல் இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் நடந்துவரும் இனக்குழுச் சண்டைகள் வரை அனைத்திலும் நாம் காணும் பொது அம்சம் ஒன்றுதான். அவை தங்கள் உள்முரண்பாடுகளுக்கே ஆயுதங்களை முதலில் பயன்படுத்தின. தங்களுக்குள் கொன்று கொண்டு அழிந்தன. சந்தேகங்கள், துரோகங்கள், பேதங்கள் அவற்றின் விளைவான படுகொலைகள். ஆயுதம் எடுத்த எந்த ஒரு அமைப்பும் தன்னைச் சார்ந்தவர்களையே அதிகமும் கொன்றிருக்கிறது. ருஷ்ய வரலாறானாலும் சரி, சீன வரலாறானாலும் சரி, எந்த ஒரு உலக ஆயுதப்போராட்ட வரலாறானாலும் சரி. ஒரு விதிவிலக்கு கூட உலகத்தில் இன்று வரை கிடையாது.

ஏனென்றால் முரண்பாடுகளை சமரசப்படுத்திக் கொண்டு ஒன்று திரட்டிக் கொண்டு முன்னகரும் வாய்ப்பை வன்முறை முற்றாகவே தவிர்த்துவிடுகிறது. உரையாடலையே இல்லாமல் செய்துவிடுகிறது. ஆயுதமேந்திய சமூகம் அந்த உரையாடலின்மை காரணமாகவே இறுகி விடுகிறது. அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டதாக ஆகிவிடுகிறது. ஆகவே அதன் உள்முரண்பாடுகள் மெல்ல பெருகுகின்றன. அழிவை உருவாக்குகின்றன.

இன்று ருஷ்ய, சீன பரிசோதனைகளைப் பற்றிப் பேசும்போது சர்வ சாதாரணமாக அவை ‘கம்யூனிச அமலாக்கத்தில் நிகழ்ந்த சிறிய பிழைகளும் பின்னடைவுகளும்’ என சொல்லுபவர்களைக் காண்கிறோம். கோடானுகோடி மக்கள் புழுப்பூச்சிகளைப் போல செத்தொழிந்தார்கள் என்பதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. ஆயுதப்போராட்டம் ஒவ்வொரு கணமும் பின்பக்கம் பாலங்களை எரித்தபடியேதான் முன்னகர்கிறது. அழிவை மட்டுமே நம்பி அது இயங்குகிறது. அதன் தவறுகளின் விலை மிகமிக அதிகம். எப்போதும் ஏழை எளிய மக்களே அந்த விலையை கொடுக்கிறார்கள். தங்கள் உயிரால். குளக்குகளை ஒழித்ததும் கலாச்சாரப் புரட்சியும் தவறுகள் என ஸ்டாலினிஸ்டுகளும் மாவோயிஸ்டுகளும் சொல்லலாம். செத்தொழிந்த மனிதர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

ஆயுதப் போராட்டம் என்பது எப்போதுமே இறுக்கமான விவாதத்துக்கு இடமே இல்லாத இறுதிமுடிவு ஒன்றை எடுத்த பின்னர் தான் முன்னகர்கிறது. ஆனால் எந்த மேதாவியும் எந்நிலையிலும் வரலாறு சார்ந்தும் சமூகம் சார்ந்தும் அப்படி ஒரு முடிவை எடுத்துவிட முடியாது. ஐம்பதுவருட வரலாற்றை ஒருவன் திரும்பிப் பார்த்தாலே போதும் எத்தனை நம்பமுடியாத திருப்பங்கள். எத்தனை அற்புதமான சாத்தியக்கூறுகள். எத்தனை புதிய விசைகள்… அந்த எல்லையை உணர்ந்த ஒரு போராட்டம் எப்போதும் தன் மறுவிசையையும் கணக்கில் கொண்டதாகவே இருக்கும். எப்போதுமே அது ஓர் உரையாடலாகவே இருக்கும்.

காந்திய வழிமுறை விவாதத்தை அனுமதிக்கிறது என்பதனாலேயே அதைப் பற்றிய எல்லா கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்தைப்பற்றி இன்றுகூட நம்மிடையே சீரான பதிவுகள் இல்லை. சுபாஷ் ஆயுதமேந்திய போராட்டத்துக்குப் போகவில்லை. அவரை அன்றைய உலக சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. அவரது இயக்கத்துக்குள் உக்கிரமான வடக்கு தெற்கு பாகுபாடுகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அவரது ஆயுதப்போராட்டம் என்பது ஒரு பெரும் கேலிக்கூத்தாகவே கடைசியில் முடிந்தது. ஜப்பானியர்களின் எடுபிடிகளாகவே அவரது படைகள் இருந்தன. அதிகார பூர்வ ஆவணங்களின் படி ஐ.என்.ஏ எத்தனை போர்முனைகளில் நேரடியாக போர் செய்தது? ஒரே ஒரு போர்முனையில்தான்!

அனைத்தையும்விட முக்கியமான ஒன்று உண்டு. எந்த மக்களுக்காக சுபாஷ் ஆயுதமேந்தினாரோ அந்த மக்களின் ரத்தத்தின் மேல் நடந்துசென்றார் அவர். சயாம் மரண ரயில் பாதைத் திட்டத்தில் பல லட்சம் எளிய தமிழர்கள் இந்தியர்கள் செத்தழிவதை அவர் மீண்டும் மீண்டும் கண்டார். அந்த மானுட அழிவைப் பற்றி அவரது மனசாட்சி மௌனமாகியது. அந்த தகவல் காந்திக்கு தெரிந்திருக்குமென்றால் காந்தி அந்த மௌனத்தை கொண்டிருப்பாரா?

**

இந்நூற்றாண்டின் உலக அரசியலைப் பார்த்தால் நாம் காண்பது அர்த்தமில்லாது நடத்தப்படும் போராட்டங்களின் பேரழிவை. இவை பெரும்பாலும் சில அறிவுஜீவிகளினால் ஆரம்பத்தில் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு அதிகார சக்திகளினால் வளர்க்கப்படுகின்றன. பின்னர் அகங்காரங்களால், அதிகார விருப்புகளால், அதன் பொருட்டு உருவாக்கப்படும் வெறுப்புகளால், ஒன்றில் இருந்து ஒன்றாகத் தொடரும் வன்முறைகளால் நீடிக்கின்றன.

இந்தக்கணம் ஆப்ரிக்காவில் குறைந்தது பதினைந்து நாடுகள் உள்நாட்டுப்போர்களால் முழு நிர்மூலமாகியிருக்கின்றன. காங்கோ, சோமாலியா, எதியோப்பியா, சியரா லியோன், ரவாண்டா என மானுட ரத்தம் ஆறாக ஓடிய நாடுகளின் பட்டியலை நாம் போட முடியும். இந்த உள்நாட்டுப் போர்களுக்கான காரணம் என்ன? கேட்டால் மிக எளிதான பதிலே வரும், இனக்குழுக்கள் நடுவிலான அவநம்பிக்கை. அந்த அவநம்பிக்கை எப்படி வந்தது? ஆயுதத்தால்தான். அந்த ஆயுதத்தை இரு தரப்புக்கும் தயாரித்து வழங்கும் நாடுகளிடம்தான் நாம் நியாயம் கோரி கூக்குரலிடுகிறோம்.

நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்து கொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.

ஆப்ரிக்கா உள்நாட்டுப் போர்களால் அழியத்தான் வேண்டுமா? இனக்குழுக்கள் எல்லாம் தனிநாடுகளாக பிரியும் உரிமைக்காக அடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் செத்தொழியத்தான் வேண்டுமா? அந்த அவநம்பிக்கைகளைக் களைய வழிகளே இல்லையா என்ன? அந்த வழிகளை கண்டடையவே முடியாதா? ஐரீஷ் விடுதலைப்போரும் ஸ்பானிய உள்நாட்டுப்போரும் எல்லாம் என்ன ஆயின? அவையெல்லாம் சமரசபட்டு இன்று ஐரோப்பாவே ஒரே நாடாக அமையும் அளவுக்கு அவர்கள் செல்ல முடியும் என்றால் நாம் ஏன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்நாட்டுப்போர்களை உருவாக்கிக் கொண்டு அழியவேண்டும்?

கண்ணெதிரே ஒரு மாபெரும் முன்னுதாரணம் உள்ளது. அந்த உதாரணம் ஆப்ரிக்காவுக்கு மட்டுமல்ல உலகுக்கேதான். பிரம்மாண்டமான ஓர் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல யாருக்காவது ஏதாவது ‘நியாயங்கள்’ இருந்தது என்றால் அது நெல்சன் மண்டேலாவுக்கு மட்டுமே. கொடுமையான நிற அடக்குமுறை. ஈடிணையற்ற சுரண்டல். மீண்டும் மீண்டும் ஆயுதப்போராட்டத்துக்கான கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவரது கட்சியிலிருந்தே வன்முறை விரும்பிகள் பிரிந்து சென்று கொண்டே இருந்தார்கள்.

ஆனால் அவர் காந்தியில் இருந்து கற்றுக்கொண்டிருந்தார். தன் மக்களுக்கு அவர் அளித்தது தங்களை மேம்படுத்திக்கொள்ளும் போராட்டத்தை. அதன்பொருட்டு அவர் தன்னை சிறையிலடைத்துக்கொண்டார். இந்நூற்றாண்டின் மாபெரும் காந்திய போராட்டம், மாபெரும் சத்யாக்ரகம் என்று ரோபன் தீவில் மண்டேலா இருந்த இருபத்தேழு வருடத்து சிறைவாசத்தையே சொல்வேன். அவரது சொந்த மக்களை அது அரசியலியக்கத்துக்குக் கொண்டுவந்தது. அவர்களிடையே அது உரையாடலை உருவாக்கியது.

அதைவிட அவரது எதிரிகளின் மனசாட்சியுடன் அது உரையாடலை திறந்தது. மண்டேலாவின் போராட்டத்தில் ஒருகட்டத்தில் உலகமெங்குமிருந்த வெள்ளைய நாடுகள் ஆவேசத்துடன் பங்கெடுத்துக்கொண்டதை நாம் அறிவோம். தென்ஆப்ரிக்கா பெற்ற சுதந்திரம் என்பது படிப்படியாக நடந்த அந்த உரையாடலின் விளைவே. அது ஆப்ரிக்கர்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல, வெள்ளையர்கள் உட்பட அங்கிருந்த அனைவருக்குமான சுதந்திரம். வன்முறை இல்லாமல் நிகழ்ந்த விடுதலை. நம் கண்ணெதிரே நிகழ்ந்த வரலாறு அது.

மண்டேலாவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவர் திரும்பத் திரும்ப சமரசம் செய்து கொண்டிருந்தார் என்பதையே காண்கிறோம். மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தார். ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் பல்வேறு குழுக்களுடன். பல்வேறு உபதேசிய அமைப்புகளுடன். ஜுலுக்களுடன். வெள்ளையருடன். அவரது வரலாற்றாசிரியர்கள் அவரை ஒரு ‘மாபெரும் சமரசநிபுணர்’ என்று சொல்கிறார்கள்:

ஈழத்தில் ரத்தம் ஓடிக்கொண்டிருந்தபோது காங்கோ சிதைந்து விழுந்து கொண்டிருந்தபோது அதே நேரத்தில் அமைதியான தேர்தல் வழியாக ஆப்ரிக்காவில் ஆட்சிக் கைமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்ததை நாம் தொலைக்காட்சியில் கண்டோம். நாம் கற்றுக்கொள்ளத் தயங்கும் பாடங்கள் அங்கே அரங்கேறின.

நெல்சண் மண்டேலா ஆயுதமெடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இன்னொரு ரவாண்டா. இன்னொரு காங்கோ. ஆனால் இன்னும் நான்கு மடங்கு பெரியது. மானுடம் கண்ட மாபெரும் உதிரவெள்ளம் அங்கே ஓடியிருக்கும். ஆப்ரிக்காவின் முதல் பல இன தேர்தல்கள் முடிந்து நெல்சன் மண்டேலா பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை நான் தொலைக்காட்சியில் கண்டதை நினைவுறுகிறேன். ஜூலு மக்கள் தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகக்கூடும் என்ற அச்சத்தால் தெருக்களில் ஆயுதங்களுடன் திரண்டார்கள். அந்த அச்சம் எவரால் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவர்களின் வெறிக்கூச்சல்களை தொலைக்காட்சியில் கண்டு நான் அதிர்ந்து இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். ஆப்ரிக்க நாடுகளின் வரலாற்றை வைத்துப்பார்த்தால் ஒரு மாபெரும் ரத்தக்களரி ஆரம்பமாகிறதென்றே எண்ணினேன்.

 

 

ஆனால் தன் காந்திய ஆயுதத்தால் அந்த நெருக்கடியை வென்றார் மண்டேலா. ஜூலு தலைவர்களுடன் திறந்த மனத்துடன் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொண்டார். தன் தியாகம் மூலம் இணையற்ற பொறுமை மூலம் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பொன்னாக மாற்றினார். போர்களின் இருள் சூழ்ந்த ஆப்ரிக்கக் கண்டத்தில் தென்னாப்ரிக்கா மட்டும் ஜனநாயகத்துடன் எஞ்சுவது அதனாலேயே.

காந்திய வழிமுறைகளின் நிரந்தர வெற்றிக்கும் சமகால முக்கியத்துவத்துக்கும் நம் கண்ணெதிரில் உள்ள சான்று இது. ஆயுதவழிமுறைகளின் நிச்சயமான தோல்விக்கும் அவை உருவாக்கும் பேரழிவுக்கும் சான்றுகள் என ஆயுதம் ஏந்திய எல்லா போராட்டங்களையும் சொல்லலாம். ஆனாலும் நாம் வெறுப்பாளர்களின் வசைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களின் வெறுப்புதான் ஆயுதத்தை நாடுகிறது. அந்த வெறுப்புடன் ஓயாது உரையாடுவோம். கைகுலுக்க எப்போதும் கரங்களை நீட்டிக்கொண்டே இருப்போம்.

 மறுபிரசுரம்/முதற்பிரசுரம் May 26, 2009

 

 

காந்தியும் அம்பேத்காரும்

அரசியல்சரிநிலைகள்

இரு காந்திகள்.

படிப்பறைப் படங்கள்

எனது இந்தியா

காந்தியின் எளிமையின் செலவு

ஃபுகோகா :இருகடிதங்கள்

மலேசியா, மார்ச் 8, 2001

 

தொடர்புடைய பதிவுகள்


ஜக்கி கடிதங்கள் –பதில் 3

$
0
0

ja

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வெண்கடல், விசும்பு படித்து விட்டு செறிவான சொற்கள் கொண்ட நீலம் வாசித்தேன்.  உங்களுக்கு முன்பு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன், ஒன்று உங்கள் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டது – நல்லவேளையாக மற்றவை வெளியிடப்படவில்லை.  இனி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுமுன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது “நீலம்”  தெரியாமல் எதையும் பேசக்கூடாது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியது.  இப்போது ஈஷாவில் சில வகுப்புகள் கற்றவன் என்ற முறையிலும், பதினைந்து ஆண்டுகள் தன்னார்வத் தொண்டனாக பல்வேறு நிகழ்வுகளில் இருப்பவன் என்ற முறையிலும் என் எண்ணங்கள் சிலவற்றை கூற விரும்புகிறேன்.  முதலில் நடுவுநிலை நின்ற உங்களுக்கு நன்றி.  ஈஷாவின் வகுப்புகளின் வாயிலாக உடல்-மனம் ஆரோக்கியம் சார்ந்த பயன்களை நான் பெற்றேன் என்பது உண்மை – அவற்றை இங்கு விவரிப்பது தேவையற்றது என்பதால், ஈஷாவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை மற்றும் அணுகுமுறை பற்றி மட்டும் என் கருத்துக்களை சிலவற்றை பதிவு செய்கிறேன்.

 

ஈஷாவின் மீதான என் ஈடுபாடு என் சொந்த பாட்டிக்குக் கூட எரிச்சல் ஏற்படுத்தியது “நமக்கு குரு மஹாபெரியவர் தான்,  அப்பழுக்கற்ற ஞானி அவரை விட்டு விட்டு போயும் போயும் இவரா உன் குரு ? ஆதிசங்கரர் தான் ஜகத்குரு இவரெல்லாம் ஜகத்குருவா? -எதுவுமே தெரிந்து கொள்ள விரும்பாமல் கடுமையான எதிர்ப்பு காட்டினார்.  “அவர் தன்னை ஒருபோதும் ஜகத்குரு என்று சொல்லவில்லை, சத்குரு என்று மட்டுமே சொல்கிறோம்.  ஆனால் நீங்கள் இப்படி சொல்வதால் நான் அவரை ஜகத்குரு என்றும் சொல்வேன்.  இந்தியாவிற்கு வெளியே சென்றிராத ஆதிசங்கரர் ஜகத்குரு எனும்போது உலகின் பல்வேறு பாகங்கள் சென்று வகுப்புகள் எடுக்கும் என்குரு அதற்கு அதிகம் பொருத்தமானவர்”  என்றேன்.  உறவினர் வட்டத்தில் என்மீது ஒரு கேலியான நோக்கு உண்டு.

 

 

பல ஆண்டுகள் முன்னமே கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் பரப்பப்பட்ட “கஞ்சா” என்ற ஒரு பொய் அடிக்கடி  சிலர் மீண்டும் மீண்டும் கூறுவார்கள்.  “நான் வகுப்புகள் சில செய்திருக்கிறேன்.  பல நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்கிறேன்.  எந்த நிகழ்வும் இல்லாத போதும் ஆசிரமத்தில் தங்கியும் இருக்கிறேன்.  இதுவரை அங்கு உணவிலோ, அருந்திய நீரிலோ, வேறு எவ்வகையிலோ தவறாக ஏதும் கண்டதில்லை.  ஒருவேளை அவ்வாறு நான் ஏதும் உணர்ந்தால் நானே வெளியே சென்று அவை பற்றி பரப்பத் தொடங்கி இருப்பேன்.  இல்லாத ஒன்றை ஏன் மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள் ? இங்கு தங்கி வகுப்புகள் பயின்று சென்ற பல்லாயிரம் பேர்களும் அறிவிலிகள் அல்லது நேர்மையற்றவர்கள் என்று கருதுகிறீர்களா?.  உங்களுக்கு பிடிக்காது என்ற ஒன்று மட்டுமே கொண்டு தீயது என்பீர்களா ?.  – பதில் சொல்லி மாளாது எனக்கு.

 

“ஈஷாவில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா ?”

 

“என்ன நடக்கிறது ? நீங்கள் அங்கு போயிருக்கிறீர்களா ?”

 

“சேச்சே நான்லாம் ஏன் அங்க போறேன் ?” – இப்படி சிலர்.

 

எல்லாவற்றுக்கும் விளக்கமாக பதில் சொன்னால், “உங்களையெல்லம் மூளை சலவை செய்து வைத்திருக்கிறார்” என்பார்கள்.  “உங்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.”

 

“யார் மூளை  சலவை செய்யப்பட்டவர்கள் ?.  எதையும் உள்ளபடி நோக்க முடியாமல் ஐரோப்பிய, சீனத்து மாசேதுங் போன்றவர்களின் கருத்துக்களுக்கு மூளையை அடகு வைத்து விட்டு, வெறும் வெறுப்பை மட்டுமே கக்க பயிற்றுவிக்கப்பட்ட நீங்கள் தான் மூளை  சலவை செய்யப்பட்டவர்கள்.   எதிர்ப்பில் – முரண்படுவதில் தவறே இல்லை.  அடிப்படை நேர்மை வேண்டாமா ? – காழ்ப்பின் பின்னணியில் எப்போதும் ஏதோ ஒரு வேற்றுமத அடிப்படைவாத அமைப்பு அல்லது வறட்டு நாத்திக இடதுசாரி அமைப்பு – அதெல்லாம் ஆராய்வது இங்கு குப்பையை கிளறும் வேலை.  உங்கள் நேரத்தை தவறியும் வீணாக்க விளைய மாட்டேன்

 

கடந்த ஆண்டு நெருக்கடி மிகுந்ததாக இருந்தது.  பொய்கள் புயல் வேகத்தில் பரப்பப்பட்டன.  திருமண மண்டபங்களில் நடக்கும் ஏழு நாள் வகுப்பு – எங்கள் பகுதில் நாங்கள் வைத்த அட்டைகள் கிழிக்கப்பட்டன.  பலவிதமான அச்சறுத்தல்கள் இருந்தன.  குருவிடம் இருந்து ஒரு உறுதியை நான் எதிர்பார்த்தேன், அதேவிதமான எதிரிபார்ப்பு பல்லாயிரம் ஈஷா அன்பர்களிடமும் இருந்தது.  வெளியூரிலிருந்து திரும்பிய சத்குரு ஊடகங்களில் பொய்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.  அடுத்து வந்த சத்சங்கத்தில்,  எங்கள் யோக அன்பர்களில் ஒருவர் கேட்ட முதல் கேள்வி  “என்ன சத்குரு ஏழாயிரம் கிட்னி திருடிடீங்க ?” என்பதுதான் .  சத்குருவின் சிரிப்பு அடங்க ஓரிரு நிமிடங்கள் ஆனது.  “இன்னும் அதிகமா சொல்லி இருக்கலாம்.  இவ்வளவு பேர் இருக்கீங்க வெறும் ஏழாயிரம் தானா?.  ஆமாம்  நீங்க எல்லாருமே உங்க கிட்னியை உங்க பேண்ட் பாக்கெட்ல தானே போட்டு கொண்டுவறீங்க ? இத சொன்னவருக்குத்தான்  யாரோ மூளை திருடிட்டாங்க போல இருக்கு”  என்றார்.  தொடர்ந்து சத்சங்கத்தில் நான் எதிர்பார்த்த எதிர்வினையும்  உறுதியும்  தரப்பட்டது.

 

கடந்த ஆண்டின் அவதூறுகளுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே 112 அடி ஆதியோகி சிலை அமைக்கப்படுவதை சத்குரு எங்களுக்கு தெரிவித்து விட்டார்.   மொத்தம் நான்கு ஆதியோகி சிலைகள் இந்தியாவின் நான்கு திசைகளில், வட நாட்டில் ஒன்று, மேற்கு-கிழக்கே  ஒவ்வொன்று  என்று.

 

 

இப்போது போட்டோஷாப் போட்டு முகநூலில் அவதூறு பரப்புரை செய்பவர்கள்.  “உங்கள் குரு தனக்குத் தானே சிலை வைத்துக்கொண்டு சிவன் சிலை என்று சொல்கிறார்” என்று.  பார்ப்பவர்கள் அத்தனை பேரும் அறிவிலிகள் என்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு.  கண்களை மூடி முகத்தை சற்று  மேல் நோக்கி வைத்து தாடி தலைப்பாகையுடன் இருக்கும் யாருடைய முகத்தையும் அதற்கு பொருத்திக் காட்ட முடியும். மன்மோகன் சிங்கின் தாடி தலைப்பாகை பொருத்தி அது மன்மோகன் சிங்கின் சிலை என்று சொல்லிவிடலாம். ஏன் ஒசாமா பின்லாடனின் தாடி தலைப்பாகை பொருத்தி அது அவரது சிலை என்று கூட சொல்லலாம்.  போகட்டும்.  நேர்மையும் நடுவுநிலமையும் கொண்ட உங்களைப் போல் சிலர் இருப்பது மகிழ்வு தருகிறது.

 

உங்கள் நேரத்தை நான் வீணடித்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.  ஒன்றே  ஒன்று – உடுமலை டாட் காமில் இருந்து “நீலம்” என் வீட்டிற்கு வந்த நாள் தற்செயலாக பிப்ரவரி 14, காதலர் தினம்.  அன்று முகநூல் நுழைந்த போது சத்குருவின் இணையப் பக்கத்திலிருந்து அன்றய கருத்தாக ராதையின் காதல் – பேரன்பு  பற்றி கூறப்பட்டிருந்தது.  அடர்த்தியான சொற்களின் பெருக்கான நீல நதி என்னையும் தன் பெருக்கில் இழுத்துக் கொண்டது.  நீலத்தின் தொடர்ச்சியான மௌனத்தை இப்போதுதான் கலைத்தேன்.

 

அன்புடன்

விக்ரம்,

கோவை

 

அன்புள்ள விக்ரம்

 

நான் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களாக இன்றிருப்பவர்கள் என நினைக்கும் பத்துபேரில் ஐவர் ஜக்கி குருகுலத்துடன் பல்லாண்டுகளாக தொடர்புடையவர்கள். அங்கே பயிற்சிசெய்தவர்கள். நான் மிக மதிக்கும் பத்து அறிவுஜீவிகளில் நால்வர் அங்கே சென்று பயிற்சி மேற்கொண்டவர்கள். அறிவார்ந்த தேடலும் கூர்மையும் கொண்ட என் வாசகர்கலில் கணிசமானவர்கள்  அக்குருகுலத்துடன் தொடர்புடையவர்கள்

 

நான் ஆசிரியர் என மதிக்கும் எழுத்தாளர் தன் வாழ்க்கையின் இறுதியில் மகளின் இறப்பால் நிலைகுலைந்து துயிலின்மையும் சோர்வும் கொண்டிருந்தார். அப்போது ஜக்கி குருகுலத்துடன் தொடர்புடைய உணவக உரிமையாளர் ஒருவரால் அவர் ஜக்கியிடம் அழைத்துச்செல்லப்பட்டார். மிக எளிய சிலவகுப்புகள், பயிற்சிகளுக்குப்பின் அவர் தேறி மீண்டுவந்தார். அதை அவரே பதிவுசெய்யவில்லை என்னும்போது நான் பெயர்குறிப்பிட முடியாது. ஆனால் நண்பர்கள் அனைவரும் அறிந்த செய்தி இது.

 

இவர்கள் அனைவரையும் முட்டாள்கள் என்றும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் மதிக்கத்தக்க ஒரு விமர்சனத்தை, பொருட்படுத்தத்தக்க ஒரு குற்றச்சாட்டைக் கூட முன்வைக்காமல் வெறுமே காழ்ப்பையும் அவதூறையும் கக்கும் கும்பலையே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் அல்லது விலைபோனவர்கள் என நினைக்கிறேன்

 

குறிப்பாக சில இணையதளங்கள் தொடர்ச்சியாக  அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. அவற்றின் பின்புலங்களை விசாரித்தபோது பெரும்பாலானவற்றில் மாற்றுமத அடிப்படைவாதிகளின் தொடர்பு இருப்பதைக் காண்கிறேன். உண்மையில் இதுவே அச்சுறுத்துகிறது. இப்படி சமூக ஊடகங்களைக் கைப்பற்றிக்கொண்டிருக்கும் இந்தச்சிறிய கும்பலால் ஒரு பெரிய பாதிப்பை உருவாக்கமுடிவது மிக ஆபத்தானது.

 

இந்துமதத்திற்குள் கிளைகள் எழுந்து விரிவது ஈராயிரம் வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. எப்படி ஓர் ஒருங்கிணைவு வழியாக இந்துமதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கிறதோ அதற்கு நேர் எதிர்விசையாகச் செயல்படும் விசை அது. எந்த ஒரு ஐம்பதாண்டுக்காலத்திலும் இந்துமதத்திற்குள் துணைமதங்கள், வழிபாட்டுமரபுகள் [cults] மத அமைப்புக்கள் பிரிந்து எழுந்து செயல்படுவதையும் காணலாம். இந்து மதம் ஒற்றை அமைப்பாக செயல்படவே முடியாது. பன்மையே இதன் இயல்பு

 

அந்தப்பிரிவுகளுக்குள் விமர்சனமும் விவாதமும் நிகழவேண்டும். அவை கடுமையாகக்கூட இருக்கலாம். அந்த விவாதமே இது வெறும் அமைப்பாக, ஒற்றைநோக்கு கொண்டதாக தேங்கிவிடாமல் காக்கிறது. ஓஷோவோ ஜக்கியோ நாளை இவ்வாறு இன்னும் எழப்போகும் பலநூறு பிரிவுகளோ இதன் வளர்ச்சியை, உயிர்த்துடிப்பையே காட்டுகின்றன

 

ஆம், இத்தகைய ‘கட்டில்லாத ‘ வளர்ச்சி என்பது மோசடிகளும், பிழைகளும், ஊழல்களும் கொண்ட பல போக்குகளையும் உருவாக்கும். நாளைக்கே நீங்கள் ஒரு இந்துமதத் துணைப்பிரிவை தொடங்கமுடியும் என்னும்போது எந்த ஒழுங்கையும் எதிர்பார்க்கமுடியாது. காடு முளைத்துப்பரவுவதுபோலத்தான். இந்த ஒழுங்கின்மையிலுள்ள உயிர்த்துடிப்பே இந்துமதத்தின் வல்லமை. ஒழுங்கை உருவாக்கபோய் இதை ஓர் இயந்திரமாக, கட்டிடமாக ஆக்கினால் இதன் உயிர் அழியும்

 

ஆகவே இவ்வகை அமைப்புக்கள் அனைத்தையும் இந்து சமூகமே கூர்ந்த விமர்சனத்திற்கு ஆளாக்குவது அவசியம். அவற்றின் நடைமுறைகள் கண்காணிக்கவும் விமர்சிக்கப்படவும் வேண்டும். அவற்றின் தரிசனங்கள் மறுத்து விவாதிக்கப்படவேண்டும். தகுதியற்றவை வெளிச்சத்திற்கு வருவதன் மூலம் இயல்பான அழிவை அடைந்தாகவேண்டும். எப்படி புதிய கிளைகள் உருவாகின்றனவோ அப்படி பல பழைய கிளைகளும் அழிந்துகொண்டேதான் உள்ளன.

 

இது ஓர் அழியா உயிர்ச்செயல்பாடு . இப்படி இந்துமதத்தைப் புரிந்துகொண்டால் இதன் பிரிவுகளை சிதைவு அல்லது ஒழுங்கின்மை என எண்ண மாட்டோம். இதன் உள்முரண்பாடுகளை ஒற்றுமையின்மை என நினைக்கமாட்டோம். இதிலுள்ள படைப்பூக்கத்தன்மையைப் புரிந்துகொள்வோம்.

 

ஜக்கி குருகுலம் மீது திட்டவட்டமான தத்துவ, அரசியல் நிலைபாடுகளுடன் விமர்சனங்களை முன்வைக்கும் மாற்றுத்தரப்புகளும், பிழைகள் இருந்தால் ஆதாரபூர்வமான செய்திகளுடன் அவற்றை எதிர்ப்பவர்களும் உருவாகி வந்தால் இந்தக்குப்பைகள் விலகுமென்று நினைக்கிறேன்

 

ஜெ

 

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 1

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 2

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜக்கி கடிதங்கள் 4

$
0
0

adi

 

ஜெ,

 

நான் ஈஷா யோக மையத்திலும் அருகே ஆதியோகி சிலை நிறுவப்பட்ட இடத்திலும் சென்று தேடுதேடென்று தேடினேன். அருகே எங்குமே காடு என ஏதும் இல்லை. காட்டை அழித்து சிலை நிறுவப்பட்டது என விகடன் செய்தி சொல்லி ஒரு படம் காட்டுகிறது சுற்றிலும் நெடுந்தொலைவுக்கு சோளக்காடு. சோளக்காடு எப்படி காடாக ஆகும்? அந்தப்பக்கம்கூட சோளக்காடுதான்.அது எப்படி ரிசர்வ் ஃபாரஸ்ட் ஆகும்? அப்படியென்றால் காட்டை அழித்து ஆக்ரமித்து சோளம்போட்டவர்கள் யார்? அவர்களெல்லாம் தண்டிக்கப்பட்டாயிற்றா?

 

ஆதியோகி சிலைக்கு பல கிலோமீட்டர் தொலைவில் நீலமாகத் தெரிவதுதான் மலை. அந்த ஏரியாவே விவசாய பூமியாக ஆகி ஐம்பதாண்டுகள் கடந்துவிட்டன. பட்டா நிலத்தை பணம்கொடுத்து வாங்கி அந்தச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.  அது காடா? அப்படியென்றால் காட்டை பட்டாபோட்டுக்கொடுத்தவர்கள் யார்? ஒருவேளை இந்தச் சோளக்கொல்லைகளை உருவாக்கியவரே ஜக்கி என்கிறார்களா?

 

ஒரு செல்போன் போட்டோவைக்கொண்டே புரிந்துகொள்ளமுடியும் இந்த  உண்மையை யார் எதற்காக இப்படி வெறிகொண்டு ஊடகம் முழுக்கப் பரப்புகிறார்கள்? இவர்களின் சுற்றுச்சூழல் அக்கறையின் உண்மையான பெறுமதி என்ன? இவர்களின் லாபம்தான் என்ன?

 

முருகேசன் சண்முகம்

 

அன்புள்ள முருகேசன் சண்முகம்,

 

திடீரென்று உருவாகிவந்துள்ள இந்த மரப்பாசம், இயற்கைப்பற்று ஒருவகையில் நல்லதுதான். இதைக்கேட்கும் ஆயிரத்தில் ஒருவராவது மற்ற இயற்கை அழிவுகளைப்பற்றி கொஞ்சமேனும் செவிகொடுக்கக்கூடும்

 

சென்ற திமுக ஆட்சியில் மதுரைக்குள் குடியிருப்புகளாக ஆன ஏரிகள் எத்தனை தெரியுமா? தமிழகம் முழுக்க அரசியல்வாதிகளின் பொறியியல் கல்லூரிகள் ஆக்ரமித்துள்ள வனபூமி [100 வருட லீஸ் ] எவ்வளவு தெரியுமா?

 

சென்ற பல ஆண்டுகளில் தெங்குமராட்டா போன்ற இடங்களில் உண்மையிலேயே சட்டவிரோதமகா காடுகளை ஆக்ரமித்து அமைக்கப்பட்ட குடியிருப்புகள், விளைநிலங்களை கையகப்படுத்த சட்டநடவடிக்கைகளை அரசு எடுக்கும்போது அதற்கு எதிராக போராடுவது யார்?

 

இந்த கும்பலின் கூச்சலைக் கேட்டு ஒரு பத்துபேர் அதைக்கணக்கெடுக்க ஆரம்பித்தாலே நாட்டுக்கு நல்லதுதானே?

 

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28

$
0
0

28. மலர்திரிதல்

“புரூரவஸ் பன்னிரண்டு ஆண்டுகாலம் குரங்குகளுடன் அந்தக்காட்டில் இருந்தான் என்கின்றன கதைகள்” என்று முண்டன் சொன்னான். “காட்டில் அவன் பிறிதொரு குரங்கென்றே ஆனான். அறத்தின்பொருட்டு காமத்தையும் பொருளையும் விட்டவன் பின்னர் அவையிரண்டின்பொருட்டு அறத்தை விட்டான். பின்னர் மூன்றையும் விட்டு விடுதலை ஆகி விலங்கென்று மகிழ்ந்திருந்தான். சூரியன் சமைத்ததை உண்டான். மரங்கள் நெய்ததை உடுத்தான். பாறைகள் கட்டியதற்குள் துயின்றான்.  இருகாலமும் இல்லாமல் இருந்தான். நினைவுகளோ கனவுகளோ இல்லாமல் திளைத்தான்.”

“முதற்கதிரை நெஞ்சில் அறைந்து ஒலி எழுப்பி எதிர்கொண்டான். அந்தி அமைவை தனிக்கிளையில் அமர்ந்து ஊழ்கத்தில் மூழ்கி அனுப்பி வைத்தான். இருசுடர்களுக்கு பொழுதுகளை அவியாக்கி வேள்வி இயற்றினான். கற்றதனைத்தையும் அங்கு அவன் மறந்தான். கற்றலில்லாமல் இருந்த உள்ளம் உணர்தலை மேலும் மேலுமென கூர்தீட்டிக்கொண்டது. உணரப்பட்ட காடு அவன் உள்ளென்றாகியது. அதிலெழுந்தன சுனைகள், ஓடைகள், ஆறுகள். உயர்ந்தன மலைகள். குளிர்முகில்சூடி நின்றன. பெருமழையில் குளிர்ந்தது நிலம். தளிரும் மலரும் சூடியது பசுமை” முண்டன் தொடர்ந்தான்.

பீமன் அவன் முன் கைகளை மார்பில் கட்டியபடி ஊர்வசியின் ஆலயத்தின் படியில் அமர்ந்து சிறியவிழிகள் கனவிலென தணிந்திருக்க அப்பேச்சை கேட்டிருந்தான். “அந்நாளில் ஒருமுறை குரங்குகளுடன் அவன் கிளைவழியாகச் செல்கையில் சுனை சூழ்ந்த அச்சோலையைக் கண்டான். அங்கு சென்று சுனைக்கரை சேற்றில் இறங்கி நீரருந்த குனிந்தபோது தன் முகத்தை நோக்கி மின்பட்டது என தான் என்னும் உணர்வை அடைந்து திகைத்து எழுந்து நின்றான். நினைவுகள் அலையென வந்தறைய மூச்சுவாங்கினான். அகன்று மறைந்த எடையனைத்தும் வந்து அவன் தோளில் அமர உடல்குனித்தான்.”

“என்ன?” என்றது பெருங்குரங்கு. “இங்குதான் அவளைக் கண்டேன்” என்றான். “இங்கா?” என்றது குரங்கு. “ஆம், இங்கே…” என்று அவன் சொன்னான். “நெடுங்காலம் முன்பு. ஒருவேளை அவள் வந்து சென்ற தடம்கூட இங்கிருக்கலாம்.” மூக்கைச் சுளித்தபடி முகர்ந்து அலைந்த குரங்கு ஒரு மூக்குமலரைக் கண்டெடுத்து “இது அவளுடையதா?” என்றது. புரூரவஸ் அதை ஒருகணம் நோக்கியதுமே உடல் அதிர்ந்து விழிமங்கலடைந்தான். கால்கள் நடுங்கி நிலம் கவ்வாமலாயின. பின்னர் மூச்சைக் குவித்து சொல்லென்றாகி “ஆம், அவள் அணிந்திருந்தவைதான்” என்றான்.

மெல்ல உளம் மின்ன “அவள் வந்தபோது அணிகள் இல்லாத காட்டுப்பெண்ணாக இருந்தாள். இது நான் அவளுக்கு அளித்த அணிகளில் ஒன்று. அவளுடைய சின்னஞ்சிறு மூக்கை இது அழகுபடுத்தியது. அனைத்து அணிகளையும் அவள் கழற்றிவிட்டுச் சென்றாள். ஆனால் எஞ்சிய அந்நகைகளில்  இது இருக்கவில்லை என இப்போது உணர்கிறேன். அன்று அந்நகைகளை நோக்கவே என் நெஞ்சுகூடவில்லை.” குரங்கு அதை வாங்கி நோக்கி “இதை ஏன் அவள் கொண்டு சென்றாள்? ஏன் இங்கே விட்டாள்?” என்றது.

அவன் மறுமொழியில்லாமல் அதை நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகள் நெஞ்சுலையச் செய்தன. “அவள் முகம் இம்மண்ணுக்குரியதல்ல என்று என் உள்ளாழம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவள் ஒரு கானணங்கு என்று ஐயம்கொண்டிருந்தேன். அணுக்கத்தில் அரையிருளில் அவள் முகத்தை நோக்குகையில் கருவறைத்தெய்வம் போலிருந்தாள். அறியா நோக்கு ஒன்று அவள் விழிகளை அச்சுறுத்துவதாக ஆக்கியது. ஆகவே இந்த மூக்குமலரைச் செய்து அம்முகத்தில் அணிவித்தேன். அவளை என் குடிக்குள் நகருக்குள் அரண்மனைக்குள் கொண்டுவந்து சேர்த்தது இது.” அதைச் சுழற்றி நோக்கியபின் “அவளை பெண்ணென்று மண்ணில் நிறுத்தியது இந்த அணியே” என்றான்.

“அவள் யார்?” என்றது குரங்கு. “அவள் சென்றபின் கடுந்துயரில் துயில்கெட்டு அரைமயக்கில் சித்தம் சிதறி அலைய எங்குளோம் என்றில்லாது இருந்த நாட்களில் ஒருமுறை அவளை என் கனவில் கண்டேன். பிறிதொரு நிலம். பொன்னொளிர் பாறைகள். அந்திச்செவ்வொளி. அவள் பூத்த மலர்மரத்தின் அடியில் நின்றிருந்தாள். நான் நன்கறிந்த அந்த மணம். அதுதான் என்னை அங்கு இட்டுச்சென்றது. அவளை தொலைவிலேயே கண்டு ஓடி அருகணைந்தேன். கைகளை பற்றிக்கொள்ளச் சென்றபோது அவள்  பின்னடைந்தாள். விழிகளில் என்னை மறுக்கும் அயன்மை.”

கூரிய குரலில் “மானுடனே, நான் ஊர்வசி. விண்மகள். உன் கையணைந்ததும் வாழ்ந்ததும் கனிந்ததும் இங்கு நான் கண்ட ஒரு கனவு. நீ என்னை தீண்டலாகாது. ஏனென்றால் இது உன் கனவு” என்றாள். நான் மேலும் அறியாது ஓர் அடி எடுத்துவைக்க “என் ஒப்பின்றி தீண்டினால் உன்னை சிதறடிப்பேன்” என்றாள். நான் அஞ்சி பின்னடைந்தேன். அவள் நானறிந்தவள் அல்ல என விழியும் செவியும் சொல்லிக்கொண்டிருந்தன. அவளே என உள்ளம் தவித்தது.

விண்ணவனின் அமராவதிப்பெருநகரின் ஆடற்கணிகை அவள், நாரதரின் தீச்சொல்லால் மண்ணுக்கு வந்தவள் என்று அறிந்தேன். “அறிந்து கடந்தேன் அங்குள்ள வாழ்க்கையை. இனி மீளமாட்டேன், செல்க!” என அவள் சொன்னபோது ஒருகணம் என் அச்சத்தைக் கடந்து பாய்ந்து சென்று அவள் கைகளைப் பற்றினேன். அவை அனலென்றாகி பற்றி எரிந்தன. என் உடல் அழல்கொண்டு எரியலாயிற்று. பின்னர் இரவும் பகலும் எரிந்துகொண்டிருந்தேன்.

நோயில்  கிடந்தபோது என் விழிதொடும் எல்லையில் சொல்தொடா தொலைவில் அழியாது நின்ற அவள் தோற்றத்தை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தேன். ஒருகணமும் பிறிதிலாத வலி. என் அலறல்களுக்கும் அரற்றல்களுக்கும் விம்மல்களுக்கும்  அப்பால் அவள் தெய்வவிழிகளுடன் புன்னகைத்து நின்றிருந்தாள். நான் ஏங்கி எரியும் வன்பால் என அவளுக்குக் கீழே விரிந்திருந்தேன். துளித்து உதிராமல் முத்தென ஒளிவிட்டபடி இருந்தாள் அவள்.

என்னை என் நகர்மக்கள் மூங்கில் பாடையில் தூக்கிக்கொண்டு போகும்போது தலைக்கு மேல் அவள் புன்னகைத்தபடி வந்து கொண்டிருப்பதையே நான் பார்த்தேன். அவர்கள் சிதை மேல் என்னை வைப்பதையும் சந்தனப்பட்டைகளால் என் உடலை மறைப்பதையும் இசையும் வாழ்த்துக்களும் முழங்க ஈமச்சடங்குகளில் ஈடுபடுவதையும் உடலில் எங்கோ இருந்த அறியா விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தேன். உண்மையில் அவையெல்லாம் விரைவில் முடிந்து என் உடல் எரிகொள்ள வேண்டுமென விழைந்தேன். முள்ளில் சிக்கிய பட்டாடை என எனது சித்தம் அவ்விழிந்த உடலில் மாட்டி துடித்துக்கொண்டிருக்கிறதென்று தோன்றியது. திமிறுந்தோறும் சிக்கி பறக்கும்தோறும் கிழிபட்டுக்கொண்டிருந்ந்தேன்.

இதுதான் அந்த தருணம். இதோ, இன்னும் சிறு பொழுது. இன்னும் சில கணங்கள். என் மைந்தன் சிதையை வணங்கி சுற்றிவருவதை உணர்ந்தேன். என் கால் தொட்டு தொழுதபின் தயங்கிய அவனை குடிமூத்தார் கைபற்றி ஊக்க அனற்கலயத்தை அவன் வீசினான். அரக்கில் நெருப்பு பற்றிக்கொண்ட திப்பெனும் ஒலியைக் கேட்டு ஒருகணம் விதிர்த்தேன். என் காலை அனல் வந்து தொட்டபோது மீண்டும் ஒரு முறை விதிர்த்தேன். இரு விதிர்ப்புகளுக்கு நடுவே நான் அவளை மீண்டும் கண்டேன். இதே சுனைக்கரையில், இதே சோலையில்.

இங்கே அவள் இலைநிழலசைவுக்கு நடுவே விழிமாயமோ எனத் தெரிந்தாள். அவளைக்கண்டதும் எழுந்த உவகையால் விழுந்துவிடுபவன்போல நடுங்கினேன். பாய்ந்து அருகே சென்று அவளை  ”சியாமை!” என அழைத்தேன். திரும்பி நோக்கியபோது அவள் என்னை அறியவில்லை என்று தோன்றியது.  ”சியாமை, நான் புரூரவஸ்… உன்னை மணந்தவன்!” என்றேன்.

அவள் அருகே வரும்தோறும் சியாமை எனும் உருவம் மென்பட்டு ஆடையென அவள் உடலில் இருந்து நழுவிச் சரிந்து அவள் ஊர்வசி என்றானாள். என் முன் வந்து நிற்கும்போது பெண்மையின் அழகும் தேவர்களின் மிடுக்கும் கலந்து முந்தையோர் குகைகளில் வரைந்த வண்ண ஓவியம் போலிருந்தாள். மானுடரைக்கடந்து அப்பால் நோக்கும் தேவவிழிகள். அவளை முன்பு எப்போது கண்டேன் என உள்ளம் தவித்தது. பின் அது கனவிலென உணர்ந்தேன். இதுவும் கனவா என திகைத்தேன்.

மானுடர் அறியமுடியாத  புன்னகை கொண்ட உதடுகள். தழலென முகில்கீற்றென அணுகிவந்தாள். “அரசே, நான் யாரென்று முன்னரே சொன்னேன். எதன் பொருட்டு இவை நிகழ்ந்தன என்றும் சொன்னேன். மீண்டும் ஏன் என்னைப்பார்க்க வந்தாய்?” என்று கேட்டாள். நான் கைகூப்பி கண்ணீருடன் “ஆம், தேவி. ஏன் இந்த ஆடல் என்று உன் ஆடலைச் சொன்னாய். இதில் நான் ஆற்றும் பணி என்ன என்று நான் இன்னும் அறியவில்லை. இவ்வாடலினூடாக நான் எங்கு செல்கிறேன்? எதை வென்று எங்கு அமையப்போகிறேன்? அதை சொல், நான் விடுதலைபெறுவேன்” என்றேன்.

அவள் என் விழிகளை நோக்கி “மானுடர் ஊழும் தேவர்களின் ஊழும் வெவ்வேறு திசை கொண்டவை. மானுடர் சிறுபூச்சிகள், புகைச்சுருள்கள், மகரந்தப்பொடிகள்.  தேவர்கள் அவர்களைச் சுமந்து சுழன்று செல்லும் பெருங்காற்றுகள்.  நானறிந்தவற்றால் உங்களுக்கு பயனேதுமில்லை” என்றாள். “நீ ஆற்றுவதை நீயும் அறியமாட்டாயா என்ன? உன் ஊழை சொல். அதன் துளியே என்னுடையதும்” என்றேன். “எவருக்காயினும் ஊழ் அறியாப்பெருவலையே” என்றாள்.

“நான் உன்னிடம் கேட்க வேண்டிய வினா ஒன்றே. அதற்கு மட்டும் மறுமொழி சொல். அவ்வினா இருக்கும் வரை என் உடல் விட்டு உயிர் எழமுடியாது. அனைத்தும் அமையும் முழுமையின் முடிவிலியில் பிறிதிலாது என்னால் பொருந்தவும் இயலாது” என்றேன். “சொல்க!” என்று அவள் சொன்னாள். “நான் உன் முன் ஆடையின்றி வரலாகாதென்று என்னை ஏன் கோரினாய்? அதன்பொருட்டு என்னை ஏன் பிரிந்தாய்?” என்றேன்.

அவள் புன்னகை மாறுபட்டது. விழிதிருப்பி “முன்பு உன் மூதன்னை தாரையை சந்திரன் ஏன் விழைந்தான்? அவளை வியாழன் ஏன் ஏற்றுக்கொண்டான்? மீண்டும் அவள் ஏன் சந்திரனுடன் சென்றாள்? ஏன் அவள் செருக்கி மகிழ்ந்து யானைமேல் அமர்ந்திருந்தாள்?” என்றாள். நான் திகைத்து “அறியேன்” என்றேன். “ஒவ்வொரு முறையும் அக்கதைகளை நான் எண்ணியதுண்டு. எண்ணம் சென்று எட்டியதே இல்லை” என்று தவிப்புடன் சொன்னான்.

“நீ இதை அறியும் கணம் இன்னமும் கூடவில்லை” என்றாள் ஊர்வசி. “சொல்!” என்று கை நீட்டி அவள் தோளைப்பற்றினேன். அங்கு வெறுமையை என் கை உணர்ந்தது. அத்தருணத்தில் என் காலை என் மைந்தனின் கைள் பற்றின. விறகுக்கட்டைகள் சரிய சிதையிலிருந்து புரண்டு கீழே விழுந்தேன். மண் என்னை இரும்புப்பலகை போல எழுந்து ஓங்கி அறைந்தது. என் நெஞ்சுக்குள் மூச்சு வெடித்தெழுந்தது.

புரூரவஸ் அந்த மூக்குமலரை கைகளால் மெல்லச்சுழற்றியபடி நோக்கிக்கொண்டிருந்தான். பொன்னிலும் மணியிலும் அமைந்த வாடாச்சிறுமலர் அதைச்சூழ்ந்து வெறும்வெளியை விழிகளால் செதுக்கி ஒரு முகத்தை உருவாக்கிவிட முயல்பவன் போலிருந்தான். குரங்கு அவனை நோக்கி விழிசிமிட்டியும் சிறுசெவி மடித்தும் உடல்சுரண்டியும் அமர்ந்திருந்தது.

மெல்ல அவன் அருகே அவளிருக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து நோக்கியபோது கரிய உடலில் நிலவொளி மிளிர அப்பால் சுனைக்கரையில் முழங்கால் மடித்து முட்டுகளில் முகம்சேர்த்து நீள்கூந்தல் வழிந்து நிலம்வளைந்திருக்க அமர்ந்திருக்கும் அவளைக் கண்டான். அவன் கையிலிருந்த மூக்குமலர் அவள் மூக்கில் இருந்தது. அதன் ஒளியில் அவள்  முகம் மையம்கூர்ந்திருந்தது.

புலிக்கால்முண்டன் பீமனின் அருகில் வந்தான். “மாமல்லரே, இப்போது ஒரு வாய்ப்பு. புரூரவஸ் என்றாகிச் சென்று அவளிடம் அவர் விழைந்த வினாவைக்கேட்டு அறிந்து மீள்க! அவள் மறுமொழி சொல்வாளெனில் நீங்கள் கொண்ட முடிச்சொன்றும் அவிழலாம்.” கைகளைக் கட்டி ஊர்வசியின் ஆலய கற்சுவரில் சாய்ந்து துயிலிலென சரிந்திருந்த பீமன் திடுக்கிட்டவன்போல எழுந்தான். பின்னர் “ஆம்” என்றான். பெரிய பற்களைக்காட்டி புன்னகைசெய்து “செல்க!” என்றான் முண்டன்.

பீமன் சருகுகளில் காலடிகள் ஒலிக்க மெல்ல நடந்து ஊர்வசியின் அருகே சென்று நின்றான். நீரில் அவன் உருவைக்கண்டு சற்று திடுக்கிட்டு தலை தூக்கி பார்த்தாள். பின்னர் விழிகளில் நகை எழ எழுந்து அவன் அருகே வந்து புன்னகைத்தாள். “நீயா?” என்றாள். “குரங்கெனவே மாறிவிட்டாய்.” பீமன் “ஆம், நான் கொண்டவை ஆனவை கருதியவை அனைத்தும் எங்கோ உதிர்ந்துவிட்டன. பிறிதொருவனாக இங்கிருக்கிறேன். இங்கிருந்தும் உதிர்த்துச் செல்ல ஒன்றே உள்ளது” என்றான்.  மானுடம்கடந்த நோக்கு வெறித்த விழிகளுடன் “என்ன?” என்று அவள் கேட்டாள்.

“முன்பு நான் கேட்ட அதே வினாதான், விண்மங்கையே. ஆடையின்மையை நீ அஞ்சியது ஏன்?” அவள் அவன் கண்களை நோக்கி துயருடன் புன்னகைத்தாள். “இல்லை, அவ்வினாவுடன் அனைத்தும் முடிந்துவிடக்கூடும். பிறிதொன்று தொடங்கலுமாகும். அதைச்சொல்ல பொழுது கனியவில்லை, பொறுத்தருள்க!” என்றாள். “சொல், நீ என்னை ஏன் பிரிந்தாய்?” என்று அவன் உரக்கக்கூவியபடி முன்னால் சென்றான்.

“எனில் இவ்வினாவுக்கு விடை சொல்க! புதனில் அமைந்த இரு தந்தையரின்  குருதியில் இளையை விரும்பியது எது? இளனை விரும்பியது எது?” என்றாள் அவள். “ஆணென்றும் பெண்ணென்றும் உன்னை கருசுமந்தனர். மூன்று முதலறங்களில் அறத்தை உனக்களித்தது யார்? பொருளையும் இன்பத்தையும் உனக்களித்தவர் யார்?” அவள் மேலும் அணுகி வந்து புன்னகை சிரிப்பென ஆக, விழிகளில் சிறு நஞ்சொன்று குடியேற “சந்திரகுலத்தவனே, உன்னிலமைந்த எதை விழைந்து வந்தாள் விண்மகள்?” என்றாள். “அவற்றுக்கு விடையறிந்தால் அவள் சென்றதென்ன என்றும் அறிவாய்.”

அவன் திகைத்து நிற்க அவள் மென்காலடி வைத்து பின்னால் சென்று இலைகளினூடாக வந்த ஒளிக்கதிர்களால் பின்னப்பட்ட காற்றுவெளியினூடாக தன் வண்ணங்களைக் கலந்து கரைந்து விழிவிட்டகன்றாள்.  அவள் கேட்ட வினாக்கள் உண்மையில் சொல்வண்ணம் கொண்டனவா என அவன் உள்ளம் வியந்தது. அவள் மறைந்தபோது சொற்களும் இழுக்கப்பட்டு உடன் சென்று மறைய அவன் உள்ளம் வெறுமைகொண்டது. விலகி அந்நிகழ்வைக் காட்டிய காலவெள்ளப்பரப்பு இருவிளிம்புகளும் இணைந்து ஒற்றைப்பெருக்கென்றாகியது.

பீமன் திடுக்கிட்டு விழித்து “சென்றுவிட்டாள்” எனக்குழறினான். உடனே தன்னை உணர்ந்து தன் கைகளால் தரையை அறைந்து “சென்றுவிட்டாள்! சென்றுவிட்டாள்!” என்று கூவினான். “விழிதிறவுங்கள், பாண்டவரே. நீங்கள் இருப்பது நெடுந்தொலைவில், நெடுங்காலத்துக்குப்பின்” என்றான் முண்டன். பீமன் எழுந்து அவன் தோளைப்பற்றி உலுக்கி “நான் அவ்வினாவை கேட்டேன். அவள் மறுமொழி அளிக்கவில்லை” என்றான். “அதை அறியுமிடத்தில் நானில்லை என்று அவள் எண்ணினாள். மறுவினாக்களினூடாக கடந்துசென்றாள்” என்றான்.

முண்டன் புன்னகைத்து “உங்கள் மூதாதை மண்ணில் மூன்று முறை ஊர்வசியைப் பார்த்ததாக கதைகள் சொல்கின்றன. எனவே மீண்டும் அவ்வினாவை சென்று அவளிடம் கேட்க உங்களுக்கு வாய்ப்புள்ளது. அவள் விடையுரைத்தாகவேண்டும்” என்றான். “ஏனென்றால் மூன்றாம் முறை புரூரவஸ் அவள் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார். அவள் அளித்த விடையால் நிறைவடைந்து மீண்டார் என்கின்றன நூல்கள்” முண்டன் சொன்னான்.

“அவர் காட்டில் கல்லாலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தன்னுள் வேர் செலுத்தி  ஆழ்ந்தார். புதுத்தளிர்கொண்டு எழுந்தார். அவரை முழுமைகொண்ட முனிவர் என அறிந்தனர் குருநகரியின் குடிகள். அவருடைய மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் குடிகளும் திரண்டு வந்து அவரை அடிபணிந்து வணங்கினர். நெற்றியில் நிலவெழுந்து அவர் விசும்பு என்றானபோது அவரை பேரறச்செல்வர் என கல்நிறுத்தி தங்கள் குலதெய்வமென வணங்கினர். அவர் ஊர்வசியைக் கண்ட அச்சுனைக்கரையில் அவளுக்கு சிற்றாலயம் ஒன்றை அமைத்து சிலைவடித்தனர்.”

“இங்கிருந்து நீங்கள் அங்கே செல்லமுடியும்” என முண்டன் சொன்னான். “இம்முறை விடைபெற்று மீள்வீர்கள். புரூரவஸ் பெற்ற விடைகள் நூலில் இல்லை, அவற்றை ஊழ்கத்தால் மட்டுமே அறியலாகும் என்கிறார்கள். அவ்வூழ்கம் இன்று உங்களுக்கு அமையட்டும்.” பீமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். அவன் கைகட்டி ஆலயப்படியில் மீண்டும் அமர அவனருகே வந்த முண்டன் “உளம் அமிழுங்கள். மீண்டும் அத்தருணத்தை சென்றடையுங்கள்” என்றான்.

பீமன் தோள்தளர்ந்தவனாக அப்படிகளில் நீர்ப்படலம்போல் படிந்தான். திரும்பி கருவறையில் அமர்ந்த ஊர்வசியின் தெய்வ முகத்தை பார்த்தான். பொழுது சற்று மாறியிருந்தமையால் ஒளிக்கோணம் மாறுபட்டு நோக்கு பிறிதொன்றென ஆகிவிட்டிருந்தது. அதில் இருந்த கனவு அகன்று மானுட அன்னையருக்குரிய கனிவு குடியேறியதாகத் தோன்றியது. “ஆம், அமிழ்க!” என்று முண்டன் சொன்னான். பீமன் கண்களை மூடிக்கொண்டான். முண்டன் கைநீட்டி அவன் இருபுருவங்களுக்கு நடுவே மெல்ல தொட்டபோது மாபெரும் சுட்டுவிரலொன்றால் சுண்டித் தெறிக்கவிட்டு இருள் வெளிக்குள் சென்றுகொண்டே இருக்கும் உணர்வை அடைந்தான்.

மீண்டும் குரங்குடன் அச்சுனைக்கரையை அடைந்தான். முன்பெனவே அவள் அங்கு அமர்ந்திருந்தாள். மேலும் தனிமையும் துயரும் கொண்டிருந்தாள். அவன் காலடி ஓசையைக்கேட்டு திரும்பிப்பார்த்து துயர் படர்ந்த புன்னகையுடன் “நீயா?” என்றாள். “ஆம் நானேதான்” என்று அவன் சொன்னான். எழுந்து அவன் அருகே வந்து “மீண்டும் ஒருமுறை உன்னை நான் காண்பேன் என்று வகுக்கப்பட்டுள்ளது. இன்று நீ வருவாய் என்றும் அறிவேன்” என்றாள்.

பீமன் “ஆம்” என்றான். “நான் உன்னிடம் ஒரு வினாவை கேட்க வந்துள்ளேன்.” அவள் புன்னகையுடன் “கேள், அதுவே இறுதிவினா அல்லவா?” என்றாள். அவன் “இங்கிருந்து நீ முற்றிலும் உதிரவில்லையா என்ன? ஏன் மீண்டும் இச்சுனைக்கரைக்கே வந்தாய்? விண்ணவளே உன்னில் எஞ்சியிருப்பதென்ன?” என்றான்.

அவள் விழிகள் மாறுபட்டன. இமை தாழ்ந்து, முகம் பழுத்தது. நீள்மூச்சுடன் முலைகள் எழுந்தமைந்தன. ஒரு சொல்லும் உரைக்காமல் திரும்பி நடந்தவளை அவன் பின்னால் சென்று அழைத்து “சொல்!” என்றான். அவள் சொல்லற்ற விழிகளால் நோக்கியபின் அணையும்சுடர் என மறைந்தாள்.

பீமன் விழித்தெழுந்து “இம்முறையும் நான் அதை கேட்கவில்லை. பிறிதொன்றை கேட்டேன்” என்றான். “ஆனால் அவ்வினாவுக்கான விடை எனக்குத் தெரியும்” என்றான். முண்டன் “அதுவே உங்கள் மூதாதையை விடுவித்த சொல்லாக இருக்கக்கூடும்” என்றான் முண்டன். “நூல்கள் என்ன சொல்கின்றன?” என்று பீமன் கேட்டான். முண்டன் பெரிய பற்களுடன் புன்னகைத்து “இளவரசே, மானுடன் உண்மையிலேயே அறியத்தக்க எதுவும் நூல்களில் எழுதப்பட்டதில்லை. நூல்கள் புதையலுக்கு வழிசுட்டும் வரைபடங்கள் மட்டுமே” என்றான்.

பீமன் நீள் மூச்சுடன் தலையசைத்து “நன்று! இது இவ்வாறுதான் நிகழமுடியும்” என்றான். எழுந்தபோது அவன் முகம் தெளிவடைந்திருந்தது. “நாம் இங்கிருந்தும் கிளம்பியாகவேண்டும் எனத் தோன்றுகிறது. நான் உணர்ந்த இன்மலர் மணம்  இதுவல்ல.” முண்டன் புன்னகைத்து “ஆம், நீங்கள் முன்னரே உளம்கிளம்பிவிட்டீர்கள்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

ஜக்கி -கடிதங்கள் 5

$
0
0

adi

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2

 

இனிய ஜெயம்,

அவர் அளிக்கும் ஞானத்தை குறைசொல்ல உங்களுக்கு என்ன தகுதி?

உங்கள் ஆணவத்தைக் களைந்து யோசித்துப்பார்க்கவும்

நேற்றைய இடுகையில் சீனிவாசன் என்பவரது பதிலில் இருந்த இதே வரிகளை கொஞ்சமும் பிசகாது அதற்க்கு முந்தையநாள் ராதாகிருஷ்ணனுடன் விவாதிக்கும்போது ராதாகிருஷ்ணன் என்னை கேட்டார்.

வரலாற்று, பண்பாட்டு பின்புலத்தில் வைத்து ஜக்கியின் பங்களிப்பை மதிப்பிடுகையில் அதை வாட்ஸப்பில் பரப்பி உய்யும் பக்தாள், அவரது ஆளுமையை வரையறை செய்தால், உங்களது அகங்காரத்தை களைந்து சரணகதி அடைந்து உய்யுமாறு தக்க தருணத்தில் தடுத்தாட் கொள்கிறார்கள்.

எளிய பதில். ஆனால் வெகுமக்களுக்கு ஒரு போதும் புரியாத பதில். பார்வையற்றவன்தான் சூரியனை நம்ப வேண்டும். பார்வை கொண்டவனுக்கு வேறு அறிதல். தடவிப்பார்த்து ஒளியை அறிவார்கள், கண்களால் கண்டு ஒளியை அறிபவர்களின் அறிதலை எங்கனம் அடைய முடியும்?

உங்களில் சுடர் எரியாமல், இது சூரியன், இது எரிமலை என நீங்கள் வகுக்கும் எதற்கும் பொருளில்லை. எழுத்துக்கூட்டியே வாசிக்கத் தெரியாத ஒருவன் தேவத்தவனை பார்த்து விட்டால் கவிதை வாசகன் ஆகி விட முடியுமா என்ன?

ராதா கிருஷ்ணன் இலக்கிய வாசகர் என்பதால் இலக்கியம் கொண்டே உதாரணம் சொன்னேன். பாலகுமாரன் எழுத்தாளர். அவரும் கர்ணனின் கதை என்ற தலைப்பில் கர்ணன் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு ஒரு லட்சம் பேராவது வாசகர்கள் அவருக்கு இருப்பார்கள். ஜெயமோகன் எழுத்தாளர். அவரும் கர்ணன் குறித்து வெய்யோன் என்ற தலைப்பில் நாவல் எழுதி இருக்கிறார். அவருக்கு ஒரு ஐம்பது ஆயிரம் வாசகர்கள் இருப்பார்கள். இலக்கிய ரசனை மதிப்பீட்டு அடிப்படையில் ஜெயமோகன் மேலானவர். அதை மறுக்க இயலாது அல்லவா?

அது போலவே ஜக்கியின் ஆளுமையும். அவர் ”ஆகி அமர்ந்த ” ரமணர் அல்ல. சகலருக்குமான ”யோகா குரு ” மட்டுமே. வெய்யோனின் உள்ளடக்கம் ஜெயமோகன் வசம் இருப்பதால் அவர் வெய்யோன் எழுதுகிறார். வெய்யோனின் உள்ளடக்கம் பாலகுமாரனிலும் இருக்கிறது அவர் ”மக்களுக்காக” கர்ணனின் கதை நாவல் எழுதுகிறார் என நீங்கள் சொன்னால் அது உங்கள் நம்பிக்கை. அவ்வளவே.

இவை போக, அகங்கார கருத்தியல் அதிகாரம் வேறு, வரையறை செய்து கொள்ளல் வேறு. எனக்கு உடலில் எதோ சிக்கல். குறிப்பிட்ட யோக முறையை தினமும் பயில்வதின் மூலம் அப் பிணியில் இருந்து மீள இயலும் எனில், ஈஷா போன்றதொரு அமைப்பில் இணைந்து அதை மேற்கொள்ள எனக்கு எந்த தடையும் இல்லை. சத்குரு என்பது நம்பிக்கை. யோகா செயல்பாட்டு வழிமுறை. என இவற்றின் ஒவ்வொரு அலகும் நான் அறிவேன். அகங்காரி இந்த வழிமுறையை மறுத்து சீரழிவான். என்னை போன்ற ஆட்கள் சந்தப்பவாதிகள் என ”எள்ளி ”நகையாடப் பெறுவர்.

இந்து நாளிதழில், மக்கள் கருத்து என்றொரு பகுதி வரும். மூன்றே வாய்ப்பு. உதாரணம். ஜக்கி செயல்பாடுகள். ஒன்று. . . சரி, இரண்டு. . . தவறு, மூன்று. . . கருத்துக்கள் ஏதும் இல்லை. இதில் வாக்களிக்க வேண்டும். கருத்துச் செயல்பாட்டாளன் இந்த மூன்றில் ஒருவன் அல்ல, என்று ஒரு போதும் புரிந்துகொள்ள இயலாத சீனிவாசன்கள் மத்தியில்தான் நீங்கள் பேச வேண்டியது இருக்கிறது.

அன்றைய எனது நிலையில் உள்ள சிக்கலில்தான் நீங்கள் என்றும் செயல்பட்டு வருகிறீர்கள் என்பதைக் காண்கிறேன். வாழ்த்துக்கள்.

கடலூர் சீனு

***

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் நேற்று நீண்ட கட்டுரைகளை வெளியிட்டபோதுகூட தோன்றவில்லை. இன்று இணையத்தில் அக்கட்டுரையை ‘அற்புதமாக’ புரிந்துகொண்டு எழுதப்படும் ‘ஆழமான’ எதிர்வினைகளைப் பார்க்கையில்தான் நீங்கள் ஏன் எழுதவேண்டும் என்று புரிந்தது. இல்லையேல் இதே மூடத்தனத்துக்குள் உழன்று உழன்று வேறுஒருவகை சிந்தனைமுறை இருக்கிறது என்றே அறியாமலிருந்துவிடுவோம்

நீங்கள் வாசிக்கமாட்டீர்கள் என்பதனால் மாதிரிக்கு ஒன்று. [ ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடியாது ] இதேமாதிரியான அசட்டுத்தனங்கள், இன்னும் கூட கீழே நின்றிருக்கும் நையாண்டிகள் நக்கல்கள் – இவ்வளவுதான் ஒட்டுமொத்த இணையஎதிர்வினை. என்ன ஒரு தன்னம்பிக்கையுடன் இதையெல்லாம் பதிவுசெய்கிறார்கள். இவர்கள் ஜக்கியை என்ன உலகத்தையே அறிவுரைசொல்லித் திருத்தும் மேதைகள் அல்லவா?

ஜக்கி மாதிரி ஏன் இப்படி எளிமையிலும் எளிமையாகப்பேசவேண்டும் என நினைப்பதுண்டு. இந்தக்கும்பலுக்கு எளிமைக்கும் கீழே ஏதாவது இருந்தால் அதுதான் பிடிகிடைக்கும். எவ்வளவு அசட்டு உலகம்! இணையம் இதையெல்லாம் இப்படியே பதிவுசெய்வதனால்தான் இப்படித்தான் இவர்களின் லெவல் என்று தெரிகிறது. இல்லையேல் நம்பியிருக்கவே மாட்டோம்

கூடவே, இப்படியெளிமல்லாம் புரிந்துகொள்ளும் சூழலில் என்னத்தைப்பேசி என்ன என்றும் தோன்றுகிறது

மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்

நானும் பல எதிர்வினைகளைப் பார்த்தேன். ஒன்று உண்மையிலேயே நான் எழுதிய கட்டுரையில் எதுவுமே புரியாமல் எழுதப்பட்டவை. மேலே சொன்ன கட்டுரைபோல. அவையே அதிகம். இரண்டாவது வகை சொல்வதற்கு ஒன்றுமில்லாத வசைகள்

இணையம் செய்த பெரிய தீங்கு நம் ஆட்களின் உண்மையான புரிந்துகொள்ளும் திறன் என்ன, சிந்தனைத் தரம் என்ன என்பதை அப்பட்டமாகக் காட்டியதுதான். சோர்வளிப்பது அது. சுந்தர ராமசாமித் தலைமுறை அதிர்ஷ்டம் செய்தது. தெரிந்து கொள்ளாமலேயே ஒரு கற்பனையில் முன்னால் சிலரை உருவகித்து பேசிக்கொண்டு சென்றுவிட முடிந்தது அவர்களால்

ஜெ

***

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 1

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 2

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜக்கி கடிதங்கள் -6

$
0
0

wpid-wp-1488155550714.jpeg

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2

 

ஆத்மநமஸ்காரம்.

இன்று தங்களின் வலைதளத்தில் சித்தாஸ்ரமம் பற்றி “கேரளத்திலுள்ள சித்தாஸ்ரமம் என்னும் தொன்மையான அமைப்பு கட்டற்ற பாலுறவை தன் உறுப்பினர்களுக்கு அமைத்துள்ளது. அன்னைக்கும் மகனுக்கும் இடையேகூட உறவு அனுமதிக்கப்பட்டுள்ளது அங்கு.”

என்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு மேலதிகமாக சித்தாஸ்ரமம் பற்றி என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதைக் குறித்த ஐயத்தாலேயே இந்தக் கடிதம்.

நம்முடைய பிதா உலக சாந்தியின் பொருட்டு நமக்களித்த வாழ்க்கை முறையே சாமாஜம் ஆகும். இங்கு ஆண் பெண் என்கிற பேதம் இல்லாததாகும். சுக்கிலம் என்பது பிரம்மமாகும். அவ்வாறான சுக்கிலத்தை உலக சாந்தியின் பொருட்டு சந்தானம் உண்டாக்க வேண்டி மட்டுமே நாசம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் கட்டற்ற பாலுறவு என்பதாக அபத்தமான ஒரு வாதத்தை முன் வைத்த காரணத்தினாலேயே இவ்வாறு எழுத நேரிட்டது அன்றி நமது பிதா கூறியவாறு சமாஜத்தின் நோக்கம் உலகோர் நலமடைய வேண்டியல்லாது உலகோருக்கு புரிய வைக்க வேண்டி அல்ல.

நன்றி

முத்துக்குமார்

*

மதிப்பிற்குரிய முத்துக்குமார் அவர்களுக்கு

மன்னிக்கவும், அச்சொல்லாட்சி பிழையானதுதான்

எளிய ஒழுக்கநெறிகளுக்கு அப்பாற்பட்டு பாலுறவை நோக்கும் அணுகுமுறை என சொல்லியிருக்கவேண்டும்.

ஜெ

 

ஆத்மநமஸ்காரம்.

 

தனது வயிற்றில் பிறந்ததாலேயே தாம் அன்னையாகும் என்றும் தமது பிள்ளை நிமித்தம் தனக்கும் தனது நிமித்தம் பிள்ளைக்குமான கடமைகள் என்று யாதொரு பந்தமும் இல்லை என்பதே சித்தாஸ்ரம சட்டமாகும் அன்றி இங்கு பாலுறவு என்பது குழந்தை பேற்றிற்காக மட்டுமே அதுவும் அவரவரது விருப்பத்தின் பேரில் மட்டுமேயாகும்.
தங்களது கருத்துக்கான நமது மறுப்பையும் தங்களது தளத்தில் பதிவு செய்வது அனைவருக்கும் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.
நன்றி.

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஜக்கி – அவதூறுகள், வசைகள், ஐயங்கள் வாசித்தேன். நான் உங்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.

ஜக்கியின் அத்தனைக்கும் ஆசைப்படு ஆனந்தவிகடனில் வெளிவந்த சமயம் முதல் நான் ஜக்கியை வாசித்தும் அவர் பேச்சுக்களை கேட்டும் வருகிறேன். குமுதத்தில் நித்தியானந்தாவின் கதவைத்திற காற்று வரட்டும் தொடர் ஏற்படுத்திய ஒரு திறப்பை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என்னிடம் ஜக்கியை பற்றியும் நித்தியானந்தாவைப் பற்றியும் என் நண்பர்கள் விவாதித்ததுண்டு. ஒரு சிலர் பகுத்தறிவாளர்களின் பேச்சுக்களைக் கேட்டு அதை மறுபடி ஒப்புவிப்பவர்கள் இன்னும் சிலர் ஆழமான கடவுள் நம்பிக்கை பக்தியுடையவர்கள். இந்து மதத்தில் பக்தியும் நம்பிக்கையும் உடையவர்கள் கார்ப்பரேட் சாமியார்களை விமர்சிப்பதற்கு கூறும் காரணம் அவர்களின் நிறுவனங்களின் செல்வ செழிப்பின் மீதான பார்வை தான். அவர்களைப் பொருத்தவரை ஒரு சாமியார் கோவணத்தைத் தவிர வேறு எதையும் சொந்தமாக வைத்திருக்கக்கூடாது. இராமகிருஷ்ணரைப் போலவும் ரமணரைப் போலவும் மிக எளிமையான வாழ்க்கை முறையை தேர்வு செய்திருக்க வேண்டும். உல்லாசமான கார்களில் வலம் வரும் சாமியார்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் அவர்களுக்கு கூறியதெல்லாம் ஒரு சாமியார் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் நம் நாட்டில் இல்லை. அவர் செயல்பாடு பிடிக்கவில்லையென்றால் அங்கு போகவேண்டிய அவசியமில்லை. சட்ட ரீதியாக தவறு செய்திருந்தால் நிரூபணம் செய்யுங்கள் தண்டனை பெற்றுக் கொடுங்கள் அதை விடுத்து வெறுமனே சமூக வலைதளங்களில் கூச்சலிடுவதால் என்ன பயன். ஆனால் அதற்கு அவர்கள் கூறிய பதில் தான் என்னை துணுக்குற வைத்தது. மக்கள் அறியாமையை பயன்படுத்தி கார்ப்பரேட் சாமியார்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று. என்னால் நீங்கள் கூறியது போல விரிவாக விளக்கிக் கூறும் ஞானம் இருக்கவில்லை. நான் கூறியதெல்லாம் ஒன்றுதான். மக்களை முட்டாளாக எண்ண வேண்டியதில்லை. அதுவும் கார்ப்பரேட் சாமியார்களிடம் பெரும்பாலும் செல்பவர்கள் நிரம்பப் படித்த நிறைய சம்பாதிக்கும் மனிதர்கள். அவர்கள் அறியாமையுடன் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று. இன்று நீங்கள் விரிவாக கூறிய கருத்துக்களை அவர்கள் முன் வைக்க இயலும்.

நான் இதை எழுதுவதற்கு காரணம் உங்களின் வாசகனாக இருப்பதை நான் பெருமையாக எண்ணுகிறேன் என்று கூறத்தான். இன்னும் சொல்லப்போனால் நான் உங்களின் வாசகன் மட்டுமே இந்நாள் வரை. இன்னும் பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை உங்களின் கட்டுரைகளை வாசித்து குறிப்பெடுத்து வைத்துள்ளேன். முழுநேர வாசகனாக வேண்டும் என்பதே அவா. மற்றவர்களை வாசித்ததில்லை ஆதலால் தெரியாது. ஆனால் இச்சூழலில் அனைத்து தரப்புகளையும் காழ்ப்பின்றி முன்வைத்து அறிவார்ந்த தளத்தில் விவாதிக்கும் எழுதும் ஒரு எழுத்தாளருடைய வாசகன் என்பது நிச்சயம் பெருமைக் கொள்வதற்குரிய விஷயம் தான்.

என்னிடம் அடையாளச் சிக்கல் எப்போதும் இருந்துள்ளது. ஆனால் இதை எழுதும் இந்த நொடி எனக்கு தோன்றுவது நான் நல்ல வாசகனாக இந்திய ஞான மரபின் மேல் நம்பிக்கை உரியவனாக ஆக வேண்டும் என்பதே.

அன்புடன்,

முருகன்.

 

அன்புள்ள ஜெ,

ஈஷா யோகா மையம் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றிய எதிர்ப்புநிலை வதந்திகளுக்கு தாங்கள் அளித்த மிகத்  தெளிவான ஆழமான பதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அமைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் மற்றும் எனது கணவர் மோகன் இருவரும்    தங்களுடைய நீண்ட நாள் வாசகர்கள். மேலும் ஈஷா அன்பர்கள் கூட. உண்மையில் தங்களுடைய படைப்புகளை வாசிப்பதற்க்கும் புரிந்துகொள்வதற்கும் ஈஷா யோகா பயிற்சியே காரணமாக அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக ஈஷா மையத்தின் எதிர்ப்பு (நேரடி மற்றும் இணையதள) தாக்குதலுக்கு தங்களின் பதில் மிகக் கைகொடுத்தது.
 தங்களின் ஒவ்வொரு படைப்பையும் வாசித்து முடிக்கும் தருவாயிலும் கடிதம் எழுத நினைத்து வார்த்தை கிடைக்காமல் விட்டுவிடுவேன்.
இன்று நன்றிப் பெறுக்குடன் எழுத விழைகிறேன்.
 நன்றி,
ராஜி மோகன்.

 

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 1

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 2

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜக்கி கடிதங்கள் 7-பொய்யின் ஊற்றுமுகம்

$
0
0

ja

ஜெ,

ஜக்கி மீதான வன்மமும் இணைய வசையும் எங்கிருந்து துவங்கியது என நீங்கள் அறியத்தான் வேண்டும்

இணைய எழுத்தாளர், விகடன் ஊழியர் அதிஷா என்பவரின் வேலை அது, பிப் 20 அன்று அவர் எழுதிய பொய்யும் அவதூறும் மட்டுமே நிறைந்த கட்டுரைதான் இணைய புரளிகளின் துவக்கம், விகடனில் கட்டுரைகள் வரவைத்து புரளிகளை பொதுவுக்கு கொண்டுசென்றதும் அவர்தான்.

கோவையை சேர்ந்தவரும், பலமுறை ஈஷா சென்றவரும் ஆன அந்த இதழாளர் மர்மமான காரணங்களால் தன்னெஞ்சறிந்தே பொய் சொன்ன கட்டுரை இது.

http://www.athishaonline.com/2017/02/blog-post_20.html?m=1

உங்கள் கட்டுரை வந்தபின் அதை எதிர்கொள்ள வழியற்று ஊதுகிறார்,குனிகிறார்,காசு வாங்கிவிட்டார் என்கிறார் பாவம்.

நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லைகொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். ஏற்கனவே காடுகளின் பரபரப்பளவு குறைந்துவரும் நிலையில் மேலும் மேலும் ஆக்கிரமிப்பது தவறில்லையா? - அவருடைய வரி.

பத்து வருடமாக அவருக்கு ஈஷாவை தெரியும், எங்கே காடு அழிக்கப்பட்டது ? அது முழுக்க பட்டாநிலம். மேய்ச்சல், விவசாய நிலம்.மரங்களே இல்லாமல் இருந்த விவசாய நிலத்தில் ஈஷா வந்தபின் 20 ஆயிரம் மரங்களாவது இருக்கின்றன.

முதலில் லிங்கம் வைத்திருந்தாலும்எங்களுக்கு மதமில்லை என்றனர். ஆனால் விபூதி கொடுத்தனர். பிறகு லிங்கத்திற்கு பின்னாலேயே சக்தி பீடமோ என்னமோ ஒன்றை வைத்து குங்குமம் கொடுக்க ஆரம்பித்தனர். மலைச்சுனையிலிருந்து இயற்கையாக வருகிற நீரை உறிஞ்சி குளம்வெட்டி உள்ளேயே புனிதக் குளியலுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இது எதுவுமே இந்துமதத்திற்கு தொடர்புடையது இல்லையாம்எல்லாமே ஓர் இறை கொள்கைதானாம்இப்போது ஆதியோகி என மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றை நட்டுவைக்க போகிறது ஈஷா. இதுவும் கூட இந்துமதம் தொடர்பானது இல்லையாம்...

ஆக அவரது காழ்ப்புக்கு ஈஷாவின் இந்துமத அடையாளங்களும் மோடியின் வருகையுமே காரணம்.

ஆனால் அந்த சிலையை வைக்க வெறும் 300 சதுர மீட்டர் அளவுக்குத்தான் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால் சிலையை சுற்றி ஒருலட்சம் சதுர அடியில் பார்க்கிங், மண்டபங்கள், பூங்கா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டது

முழுப்பொய், காட்டில் இருந்து 2 கிமீ தள்ளி ஐம்பதாண்டுக்காலமாக விவசாய நிலமாக இருந்த, விலைகொடுத்து வாங்கப்பட்ட சொந்த இடத்தில் 100 அடிமட்டுமே நிரந்தர கட்டுமானம் உள்ளது.

ஒரு நாட்டின் பிரதமர் கிளம்பி வருகிறார். அவருக்கு இந்த சாமியாரின் மீதிருக்கிற அத்துமீறல் வழக்குகள் பற்றி ஒன்றுமே தெரியாதாஇப்படி ஒரு முட்டாளைப்போல கிளம்பிவந்து அந்த சாமியாரோடு இழித்தபடி மேடையில் உட்கார்ந்திருந்தால்அவனுடைய குற்றங்களுக்கு துணைபோவதாக ஆகிவிடாதா?

என்ன ஒரு பத்திரிக்கையாளர் பண்பு! முட்டாள் பிரதமர் இளித்தபடி அவனுடன். .. இதே மொழியில் இவர்கள் மதிப்பவர்களை பிறர் எழுதினால் எப்படி எதிர்கொள்வார்கள்? அப்போது பண்பு பண்பு என்று கூவுவார்கள்.

இந்த அஞ்சாப்பொய்கள் அவசியம் பதிந்துவைக்கப்பட வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.

ஈஷா குறித்த என் வருத்தங்களும்…

ஈஷாவின் ஒருகோடி மரம் வளர்க்கும் அறிவிப்பு (2006 வாக்கில்) இந்த விமர்சனக்குரலுக்கு எதிர்வினை மட்டும்தான் என தோன்றுகிறது, ஒரு கோடி மரங்கள் நிச்சயம் 2016 ல் இல்லை, இருந்திருந்தால் அறிந்திருப்போம்.

நான் சிலமுறை ஈஷா போயிருக்கிறேன் ( நிச்சயமாக உபயோகமான ஆரம்ப யோகா வகுப்புக்கும்)சின்மயா, தயானந்த சரஸ்வதி ஆசிரமங்கள் போலவே காட்டை ஒட்டி ஆசிரமம் அமைந்துள்ளது, அந்த காடுகள் கானுயிர்கள் நிறைந்தவை.இந்த ஆசிரமங்களால் அதிகரிக்கும் வாகன, மனித நடமாட்டங்களும் விழாக்களின் போது கூடும் லட்சக்கணக்கான மக்களும் நிச்சயமாக சூழியலுக்கு எதிரானவைதான்.

குறிப்பாக சிவராத்தியின்போது கூடும் வாகன ஓசையும், ஸ்பீ்க்கர்களால் எழும் பேரோசையும், அதீத மின்னொளியும் கானுயிர் சூழலுக்கு எதிரானவை, இதை படிக்கும் நண்பர்கள் ஜக்கிக்கு கொண்டு போய் சேர்த்தால் நல்லது.

அரங்கா

***

அரங்கா

அந்த இளைஞரை நான் அறிவேன். வழக்கம்போல அண்டிப் பிழைக்கத் தெரிந்த அடிமாட்டுத் தொண்டர். இந்த நாட்டில் இந்துத்துறவியை, பிரதமரை அவன் இவன் என்றெல்லாம் எழுதமுடியும். அல்லாது ஊரைச் சுரண்டி குடும்பமாகக் கொழுத்த உள்ளூர் தானைத் தலைவர்களையா அப்படி எழுதமுடியும்? கட்டைப் பஞ்சாயத்துக்காரர்களை, ஏரித்திருடர்களை, மணல்கொள்ளையரையா எழுதமுடியும்?

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கல்வியழித்தல்

$
0
0

333

அன்புமிக்க திரு. ஜெயமோகன்

வாசிப்பு பற்றி குமார் முல்லக்கல் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதிலளித்திருக்கிறீர்கள்.

“கற்றாரை யான் வேண்டேன் ;

கற்பனவும் இனியமையும்”

என்னும் மாணிக்க வாசகரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றறிய ஆவல்

மரபின் மைந்தன் முத்தையா

***

Dear J,

ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து… .

”ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை இப்படிச் சொல்கிறார். காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம், இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை முள்ளை அறிவால் எடுத்தபின் அதையும் வீசிவிடவேண்டும். ”

நீங்கள் கல்வியழித்தல் குறித்து பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நடைமுறையில் அது சாத்தியம்தானா என்று ஐயப்படுகிறேன்

-Ram

***

அன்புள்ள ராம், முத்தையா,

இருவரும் கிட்டத்தட்ட ஒரே வினாவைக் கேட்டது ஆச்சரியம் அளிக்கவில்லை. இந்தக் கேள்வியை நான் என்னிடம் கேட்டுக்கொள்ளும்போது எனக்குச் சில தெளிவுகள் உருவாகின்றன. அவையே எனக்கு முக்கியமானவை.

கல்வியும் கல்வியழிதலும் நம் வாழ்வில் ஒவ்வொரு கணமும் நடந்து கொண்டிருக்கின்றன. மிக இளம் வயதிலேயே நாம் வந்து பிறந்த பண்பாட்டாலும் சூழலாலும் பயிற்றுவிக்கப்படுகிறோம். அதற்கு முன்னரே நம்முடைய அடிப்படை விலங்கியல்புகளால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். பிறகு நாம் கற்பவை அனைத்துமே ஏற்கனவே கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தை நீக்கம் செய்தபின் அங்கே அமர்ந்து கொள்பவைதான். நாம் அறியும் ஒவ்வொன்றும் ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றை பொய்யாக்குகிறது. அந்த வெற்றிடத்தில் தன்னை அமர்த்திக் கொள்கிறது. கல்வியழிதல் நிகழ்ந்த பின்னர்தான் கல்வி நிகழமுடியும்.

அறிவதொவ்வொன்றும் அறியாமையையே என்று நாராயணகுரு சொல்கிறார். நாம் ஒன்றை அறியும்போது அக்கணத்தில் நாம் அறிவது அறியாமையையே. அந்த வெற்றிடத்தை நாம் உணரும்போது மட்டுமே புதிய அறிதல் சாத்தியமாகிறது. அந்த கல்வியழிதலுக்கு நாம் தயாராகவில்லை என்றால்தான் நம் அறிதல் தரைதட்டி நிற்கிறது. அதுவே மூடத்தனத்தின் உச்ச நிலை என்பது. பெரும்கல்வியாளர்கள் பெருமூடர்களாக ஆகும் தருணம் அதுதான்

ஜென் கதையில் தன்னிடம் வந்து கோட்பாடுகளாகப் பேசும் ஒரு அறிஞருக்கு நிறைந்த கோப்பையில் மேலும் டீயை விடச்சொல்லி அந்த டீ வெளியே வழிந்தோடுவதைச் சுட்டி ஜென் மாஸ்டர் சொன்னது இதைத்தான். கற்றதை எந்த அளவுக்கு விடுகிறோமோ அந்த அளவுக்கே கல்வி சாத்தியம். கணிப்பொறியியலில் நேற்று கற்றதை கைவிடாமல் இன்று கற்க முடியாது என்பது ஒரு பாடம் என்று ஒருமுறை ஒரு நண்பர் சொன்னார். எங்கும் அதுதான்

இயல்பாக நடந்துகொண்டிருக்கும் இந்த விஷயத்தை நாம் பெரும் குருநாதர்களின் அருகே செல்லும்போது தீவிரமாக உணர்கிறோம். அவர்கள் நமக்குக் கற்பிப்பவை அதிகமென்பதனால் அவர்கள் நம்மில் இருந்து வெளியே துரத்தும் கல்வியும் மிக அதிகம். அது உண்மையில் வேதனையான ஒரு அனுபவம். சில குருநாதர்கள் மென்மையாக அதைச் செய்யும்போது சிலர் மிகத்தீவிரமான வன்முறையுடன் அதைச் செய்கிறார்கள்

மில ரேபா என்ற திபெத்திய ஞானியின் வாழ்க்கை வரலாறு இதைத்தான் காட்டுகிறது. மிக முக்கியமான தியான நூல் அது கவிதை நூலும் கூட. ஞானம் தேடி தன்னை அணுகும் மிலரேபாவை மிகக் கடுமையான உடல் மன வலிகளினூடாக அழைத்துச் செல்கிறார் குருநாதர். அந்த துயரங்கள் வழியாக மெல்ல மெல்ல தன் கற்றலை அழித்து கற்கத்தயாரான சீடராக ஆகிறார் மில ரேபா. அவரது கவிதைகள் அந்தப் பரிணாமத்தைக் காட்டுகின்றன.

நித்யாவின் வாழ்க்கையில் இதைக் காணலாம். நடராஜகுரு நித்யாவை கடுமையான முறையில் உடைத்து மறுஆக்கம் செய்கிறார். நித்யாவில் ஊறியிருந்த அவரது காலகட்டத்தைச் சேர்ந்த பல சிந்தனைகளை பிடுங்கி ரத்தம் வழிய வெளியே வீசுகிறார் நடராஜ குரு. புத்தங்களை பிடுங்கி வீசுகிறார். வீட்டைவிட்டு வெளியே துரத்துகிறார். கண்ணீர்விட்டு கதறும் வரை கிண்டல் செய்கிறார். பலமுறை நித்யா கோபித்துக்கொண்டு ஓடிப்போகிறார், நடராஜகுரு தேடிவந்து கூட்டிச்செல்கிறார்.

ஆனால் நித்யா மிக மென்மையானவர். அதிர்ந்துபேசுவதும் ஏளனம் செய்வதுமெல்லாம் அவர் அறியாதவை. பூ மலர்வது போல பேசக்கூடியவர். ஆனால் தொண்ணூறுகளில் நான் அவரைச் சந்தித்தபோது கடுமையான மன வலியை அனுபவித்தேன். ஆரம்ப நாட்களில் அவருடன் நான் விவாதித்தேன். நான் கற்றவற்றை தக்க வைத்துக் கொள்வதற்கான கடைசி முயற்சிகளில் ஈடுபட்டேன். ஒவ்வொருமுறையும் கடுமையான மனச்சோர்வை அடைந்துதான் அவர்முன் இருந்து வெளியே வருவேன்.

அப்படியானால் நான் கற்றவை அடைந்தவை அனைத்துமே பொய்யா, நான் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையே வீண்தானா என்று மயங்கினேன். மெல்ல மெல்ல அந்த அலை அடங்கியபோது ‘கற்பனவும் இனி அமையும்’ என்று அவர்முன் அமர்ந்துகொண்டேன்.
ஒரு நல்ல நூலின் முன், ஒரு அறிஞனின் முன் நம் கல்வியை கொஞ்சமேனும் நாம் அழித்துக்கொள்ளாவிட்டால் நாம் எதுவுமே கற்கப்போவதில்லை என்றே பொருள். சுந்தர ராமசாமியிடம் மட்டுமல்ல நித்யாவிடம் வந்து கூட தாங்கள் சொல்ல வேண்டியதை மட்டுமே சொல்லிவிட்டுச் செல்லும் பலரை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக அதிதீவிரக் கோட்பாட்டு நம்பிக்கையாளர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்க ஏதுமில்லை. கற்றவற்றை உலகுக்குச் சொல்லி உலகை மாற்றும் வேலை மட்டுமே இருக்கிறது

மதம், அரசியல், தத்துவம் சார்ந்து இவ்வாறு இறுகிப் போனவர்களைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார் என்று எண்ணுகிறேன். இந்த வரிகளுக்கு நிகரான வரிகளை நாம் திருமந்திரத்திலும் சித்தர் பாடல்களிலும் காணலாம். இயேசு ‘நீங்கள் மனம் திருந்தி குழந்தைகளைப்போல ஆகாவிட்டால் விண்ணுலகில் நுழைய மாட்டீர்கள்’ என்று சொல்வதும் இதையே. ஒருகல்வியின் முன் நாம் பெற்ற முந்தைய கல்வி அழியுமென்றால் அந்த முந்தைய கல்வி எல்லாம் வீணா? அல்ல அவை படிகள். அப்படிகள் வழியாக ஏறித்தான் அந்த படியை நாம் அடைந்திருக்கிறோம். முந்தைய படிகளை நிராகரித்தே புதிய படியை அடைந்தோம். ஒரு கல்வியழிதலுக்கு நாம் தயாராவதே அக்கல்வி நமக்களிக்கும் விவேகம் மூலம்தான்.

மேலும் உக்கிரமான முறையில் அந்த கல்வியழிவு நிகழ முடியும். விவேகானந்தர் ராமகிருஷ்ணரை பார்க்கச் சென்றபோது பிரம்மசமாஜத்தின் சீர்திருத்தக் கருத்துக்களினால் மனம் நிறைந்தவராக இருந்தார். அவர் கண்களுக்கு விக்ரக ஆராதனை செய்யும் ஓர் அஞ்ஞானியாகவே ராமகிருஷ்ணர் தோன்றினார். ராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கண்டதும் கண்கலங்கி அழுகிறார். ஏன் இத்தனை தாமதம், உனக்காக எத்தனை நாளாகக் காத்திருந்தேன் தெரியுமா என்று அணைத்துக் கொள்கிறார். மனம் கலங்கிய விவேகானந்தர் ஓடிவிடுகிறார்

மீண்டும் சந்திக்கும் போது ராமகிருஷ்ணர் அவரை தன்னுடன் தியானத்தில் அமரச்செய்கிறார். அப்போது விவேகானந்தரை ராமகிருஷ்ணர் சற்று தீண்டுகிறார். அந்த தொடுகையால் சட்டென்று தியான அனுபவத்தின் அடியற்ற ஆழத்தை உணரும் விவேகானந்தர் கதறி விடுகிறார். இறந்துவிடுவோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் அந்தத் தருணத்தில் அவரது கல்வி பூர்ணமாக அழிந்துவிடுகிறது. தூய உள்ளத்துடன் அவர் ராமகிருஷ்ணர் முன் தன் ஆத்வாவை திறந்து வைக்கிறார்

கல்வி துளித்துளியாக பாறை இடுக்கு வழியாக ஊறி தேங்கும் நீர் போன்றது. யோகஞானம் என்பது சுனாமி அலை. அது கல்வியை முழுமையாக அடித்துக் கொண்டு சென்றுவிடும். அந்த மகத்தான கல்வியழிதலை ஞானிகளின் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.

மறுபிரசுரம் . முதற்பிரசுரம் May 4, 2009

 

ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…

 

தொடர்புடைய பதிவுகள்


ஜக்கி கடிதங்கள் 8

$
0
0

ja

 

அன்புள்ள ஜெ

நம்மாழ்வாரின் தோற்றத்தை வேடம் போடுகிறார் என்று சொன்ன ஜெயமோகன் ஜக்கியின் தோற்றம் குறியீடு என்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உங்கள்மேல். இது புதிது

மகேஷ்

*

அன்புள்ள மகேஷ்,

நான் சொல்லும் விளக்கங்களை எதிர்கொள்ளமுடியாத தவிப்பு. இதற்கும் ஏராளமான முட்டாள்கள் கிளம்பி வருவார்கள் என்னும் நம்பிக்கை –வேறென்ன?

நம்மாழ்வார் எங்கள் வழிகாட்டி. இந்த தளத்தில் இலக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்தால் இன்றும் அவர் மரபு சார்ந்த இயற்கை வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகளின் அறிவுப்பு மட்டுமே வெளிவரும். அவருக்குத்தான் இறுதிநாள்வரை அதிகாரபூர்வமாக நிதி திரட்டி அளித்தோம். பலநூறுபேரை நானே அவரிடம் ஆற்றுப்படுத்தியிருக்கிறேன்.

ஜக்கி என் ஆசிரியரோ, அணுக்கமானவரோ அல்ல. அவரிடம் எவரையும் ஆற்றுப்படுத்துவதுமில்லை. ஜக்கியின் மீதான வசைகளில் உள்ள காழ்ப்பையும், அரசியல் – மதப்பின்னணியையும் அடையாளம் காட்டுவது மட்டுமே என் பணி.

ஜக்கி அளிப்பது ஓர் அகவயப்பயிற்சி. ஆகவே அதற்கு குறியீடுகளும் பிம்பங்களும் தேவையாகலாம். அவரே உருவாக்கிக்கொண்ட ஒரு வழி அது. அதற்கான குறியீடுகளை அவரே உருவாக்கலாம். அது மதம், மதம் எப்போதுமே அடையாளங்கள் சார்ந்தது.

நம்மாழ்வார் ஓர் அறிவியலாளர். அவர் பேசியது சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட அறிவியல் அணுகுமுறை ஒன்றை. அதை அவர் காலப்போக்கில் ஒருவகை மதம்போல, வெறும் நம்பிக்கையாக ஆக்கியதையே ஏற்புடையது அல்ல என்றேன். அது தவறான முன்னுதாரணமாக ஆகி இயற்கை வேளாண்மையின் அடிப்படையை அழித்துக் கொண்டுள்ளது என்றேன். மாற்று மருத்துவம், இயற்கைவாதம் போல இன்று நிலவும் பலவகையான அறிவியல் அடிப்படை அற்ற நம்பிக்கைகளின் பகுதியாக அதை ஆக்கிக்கொண்டிருக்கிறது என்றேன்.

நம்மாழ்வார் தன் அறிவியலை வெறும் அரசியல் காழ்ப்பு ஆக, மொழி-இனவாதமாக, குறுங்குழு அரசியல்வாதிகளின் கருத்துக்களின் பக்கவாத்தியமாக இறுதியில் மாற்றினார். அதன்வழியாக அதன் பெறுமானத்தை அழிக்க காரணமானார். அது கண்டிக்கத்தக்கது. ஆனாலும் அவருடைய பங்களிப்பு முன்னத்தி ஏர் போன்றது. ஆகவே அவர் முக்கியமான ஆளுமைதான். நான் எழுதியது இதையே.

அவருடைய தோற்றமும் குறியீடு என்றே சொல்லியிருந்தேன். வேடம் என்று அல்ல. அதன் அவசியமும் எனக்குத் தெரிந்தது. அதை காந்தியின் தோற்றத்துடன்தான் அந்தக் கட்டுரையிலேயே ஒப்பிட்டிருக்கிறேன். மக்களிடம் சென்று சேர அக்குறியீடு அவருக்கு உதவியது என்றே சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இன்று இயற்கை வேளாண்மையை அப்படி ஒரு மரபு சார்ந்த தோற்றத்துடன், மரபு சார்ந்த மொழியில் முன்வைக்கக்கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால் மரபு என்ற பேரில் சொல்லப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளுடனும் அதுவும் சென்று சேர்கிறது. அதை நவீனஅறிவியலின் ஓர் உச்சநிலையாகவே கொண்டு செல்லவேண்டும். அந்தத் தோற்றத்துடன் – நான் நம்மாழ்வாரிடமே சொன்னது இது.

அதற்கு இத்தனை திரிபுகள். இத்தனை ஒற்றைவரிகள். இங்கு எத்தனை முட்டாள்களிடம்தான் பேசுவது!

ஜெ

***

நம்மாழ்வார் அஞ்சலி

நம்மாழ்வார் ஒரு முரண்பாடு

விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்

நம்மாழ்வார் ஒரு மறுப்பு

நம்மாழ்வார் ஒரு கடிதம்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கடலூர் சீனுவின் நேற்றைய கடிதம் கண்டேன். அவர் என்ன சொல்கிறார்? ஒருவர் ஞானி அல்லது ஞானி அல்ல என்பதற்கு என்ன வரையறை உள்ளது? சத்குரு ஞானி அல்ல என்பது இவருக்கு எப்படித் தெரியும்? அல்லது ரமணர் ஞானி என்பது இவருக்கு எப்படித் தெரியும்? ஒன்று அவர் “நீங்கள் சத்குரு ஞானி என்று நம்புகிறீர்கள். நான் ரமணர் ஞானி என்று நம்புகிறேன்” என்று சொல்ல வேண்டும் அல்லது “நான் ரமணர் ஞானி என்று நம்புகிறேன். சத்குரு ஞானியா என்பது எனக்குத் தெரியாது” என்று சொல்ல வேண்டும்.

சத்குரு ஞானி அல்ல என்று அவர் வரையறுப்பதன் அளவுகோல் என்ன? என் அறிவுக்கு இரண்டே வழிதான் தோன்றுகிறது. ஒன்று சீனு தானே ஞானி என்று கூறிவிட வேண்டும் அதனால் ஞானியாகிய தனக்கு யார் ஞானி யார் ஞானி அல்ல என்று தெரியும் என்று கூறவேண்டும் (கிட்டத்தட்ட அவர் இந்த அடிப்படையில் கூறுவது போலவே தோன்றுகிறது – தான் கண் உடையவர், சத்குரு ஞானி என்று கருதுவோர் பார்வையற்றவர் என்கிறாரா?). இரண்டாவது வழி, அவருக்கு மிகவும் பிடித்த பகவான் ரமணர் கூறிய வரைவிலக்கணத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். “எக்காலத்தும் எவ்விடத்தும் அஞ்சாத தீரமுடைமை. தான் மட்டுமே ஞானி மற்றவர் தாழ்வு என்று கருதாத தன்மை.” முதல் வழியில் சீனுவை மறுக்க வழியில்லை. இரண்டாவது வழியை கொண்டால், சத்குரு ஞானி என்று உறுதியாக கூறுவேன். எக்காலத்தும் எவ்விடத்தும் அஞ்சாத தீரமுடைமையை அவரிடம் எப்போதும் காண்கிறேன். தான் மட்டுமே ஞானி மற்றவர் தாழ்வு என்று கருதாததன்மை – இதையும் எப்போதும் அவரிடம் காண்கிறேன்.

ஞானம் என்பது உடல்-மனம் கடந்த ஒன்று என்று கருதப்படும் நிலையில், ஜெயமோகன்-பாலகுமாரன் என்று இலக்கிய ரசனையை கொண்டு ஒப்பிட்டு ஞானத்தை விளக்க முற்படுவது பொருந்தாது. எவ்வளவு நுட்பமானதாயினும் இலக்கிய ரசனை மனதின் செயல்பாடே அல்லவா? மனதிற்கு அப்பாற்பட்ட ஒன்றை சீனு எதைக்கொண்டு வரையருக்கிறார்? ரமணர் கூட ஜனகர் பற்றி கூறி – ஞானி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் கூறமுடியாது அது அவரவர் இஷ்டம் என்கிறாரே? ஞானி இப்படித்தான் இருக்க வேண்டும் நீங்கள் எப்படி கட்டாயப்படுத்தலாம் என்பதாகவே அவர் கூறுகிறாரே?

எனக்கு இவரைப் பிடிக்கும் அவரைப் பிடிக்காது என்பது தாண்டி சீனு கூறுவது என்ன?

//அவரது ஆளுமையை வரையறை செய்தால், உங்களது அகங்காரத்தை களைந்து சரணகதி அடைந்து உய்யுமாறு தக்க தருணத்தில் தடுத்தாட் கொள்கிறார்கள்// – அப்படித்தானே செய்வார்கள்? அப்படி செய்தால் தானே அவர்கள் பக்தர்கள்?

ரமணரின் ஆளுமையை வரையறை செய்தால், சீனு தடுத்தாட்கொள்ள மாட்டாரா? ரமணரின் காலத்திலேயே அவரிடமே “இங்கு வந்ததால் நாங்கள் ஓன்றும் உணரவில்லை” என்று கூறியவர்கள் இருந்தார்கள் அல்லவா? முன்முடிவுகளுடன் இவர் நிச்சயம் ஞானி அல்ல முடிவு கட்டிவந்து அவரிடம் பேசிச்சென்று “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று வெளியே பேசி இருப்பார்கள் இல்லையா? அத்தகையவர்களை ரமணரை ஏற்றுக்கொண்ட பக்தர்கள் தடுத்தாட்கொள்ளவே செய்வார்கள் இல்லையா?

சீனு ரமணரின் காலத்தில் இருந்தால் அவர் ரமணரை ஏற்றுக்கொண்டிருப்பார் என்பது என்ன நிச்சயம்? அதற்கும் காலத்தால் முந்திய ஒருவரே மெய்ப்பொருள் – இது பொய் எனக்கொள்ள மாட்டார் என என்ன நிச்சயம்? முன்முடிவுகள் அப்போது இருத்திருக்காது என்று எவ்வாறு கூறுவார்?

என்னைப் பொறுத்தவரையில் சத்குரு ஞானிதான் என்று நம்புகிறேன். அவரை எனக்குப் பிடிக்கும் அவரை நம்புகிறேன். என் போன்றவர்களாவது சத்குருவின் சமகாலத்தில் வாழ்ந்து அவரை அருகிருந்து பார்த்து ஞானி என்று நம்புகிறோம். சீனு ரமணரை நூல்களின் வாயிலாகவும் புகைப்படத்தின் வழியாகவுமே கண்டு ஞானி என்று நம்புகிறார்.

ரமணரை ஞானி என்று நம்புவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சீனு சத்குரு ஞானிதான் என்று ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயமும் இல்லை.

பிடிக்கும் பிடிக்காது என்பதைத் தாண்டி இதில் விவாதம் கொள்ள பெரிதாக என்ன இருக்கிறது?

சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தெரிந்தது போல் காட்டக்கூடாது என்பதற்கும் “ஏசுவே மெய்யான தேவன்” என்பது போல் ஒரு அடிப்படைவாதம் தேவையில்லை என்பதற்கும் தான் இதை எழுதுகிறேன். சீனுவின் மீது மிகுந்த அன்பு உண்டாகிறது – ரமண பக்தரான அவரைப் போற்றுவேன்.

அன்புடன்,

விக்ரம்,

கோவை

*

அன்புள்ள விக்ரம்,

பல்வேறு கோணங்களை விவாதிக்கவே அக்கடிதம். என் அபிப்பிராயம் இதுவே. பொதுவாக மெய்யறிதல் என்பது அகவயமானது. அதை விவாதித்து அறிய, நிறுவ முடியாது. தெளிவாகத்தெரியும் ஒரு நுண்ணுணர்வு மட்டுமே அதற்கு உதவும்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

ஏற்கனவெ பலர் எழுதியதுதான். நீங்கள் சொன்னது போல நானும் ஈஷா யோகா செய்யும், உங்கள் வாசகர்களில் ஒருவன் தான். பலமுறை குடும்பத்துடன் அங்கே தங்கியிருக்கிறேன். 500 ரூ. நிகழ்வுகளிலும், 20000 கட்டணம் கேட்கும் நிகழ்வுகளிலும் கலந்திருக்கிறேன். ஒருமுறைகூட கட்டணத்தின் பொருட்டு விதிமுறைகள் மாறியதில்லை. 20000 செலுத்தும்போதும் தாமதமாக வந்தால் வகுப்புக்குள் அனுமதியில்லை.

அவர்களின் நோக்கம் குறுக்கு வழியிலோ ஏமாற்றியோ பணம் சம்பாதிப்பது இல்லை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். அவர்களின் யோகா பலனளித்தது என்பதற்கு நானும் ஒரு சாட்சி. மற்றபடி, தியானலிங்கம், பாதரசலிங்கம், லிங்கபைரவி போன்ற இடங்களில் எந்த அதிர்வும், அனுபவமும் எனக்கு ஏற்பட்டதில்லை. தியானலிங்கத்தில் அமாவாசை/பௌர்ணமி நள்ளிரவு தியானம் செய்வதற்கும், என் வீட்டின் அறையில் செய்வதற்கும் ஒரு வேறுபாடும் எனக்குத் தெரிவதில்லை. ஆனால், இதெல்லாம் ஒரு குறியீடுகள் என்ற அளவில் என்னைக் கவரவே செய்கின்றன.

நீங்கள் சொன்னதுபோல ஈஷா நிறுவனம் விதிமுறைகளை மீறியிருந்தால்
ஆதாரங்களுடன் வாதிடலாம். வசைகளும் அவதூறுகளும் அதைக் கூறுபவர்களின்தகுதிகளையே காட்டுகின்றன.

நன்றி,
ரத்தன்

*

அன்புள்ள ரத்தன்,

இந்த யோகமுறைகள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் ஒரு உளக்கூர்மையை அடைவதற்குரியவை. யோகம் என நம் மரபில் சொல்லப்படுவதை இன்னும் விரிவாக வரையறை செய்யவேண்டும். மெய்மையை அறிந்து உணர்ந்து அதுவாக ஆகவேண்டும். அதற்குத் தடையாக அமைவது நம் அறிதல் உணர்தல் ஒன்றுதல் தளத்தில் உள்ள தடைகள். அதை தொடர் பயிற்சியின் மூலம் அகற்றுவதே யோகம். அது மிக நெடிய ஒரு பயணம். யோகிகளுக்குரியதே யோகம்

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜக்கி -இறுதியாக…

$
0
0

ja

ஜக்கி – அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1

ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2

ஜக்கி விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த வகையான விவாதங்கள் நான் அடிப்படையான சிலவற்றை சொல்வதற்குரிய தருணங்கள் மட்டுமே.

இறுதியாக மின்னஞ்சலில் வந்த சில வினாக்கள்.

இந்து மதத்திற்கு அமைப்பு தேவையில்லை, அதுவே அதன் வல்லமை என்றீர்கள். இப்போது அமைப்பு வேண்டும் என்கிறீர்களா?

நம் சூழலில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்பதுமுறை சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவே மீண்டும்.

இந்துமதத்திற்குள் அமைப்புகள் என்றும் இருந்தன. நம் மடங்கள் அனைத்தும் அமைப்புகளே. மூன்றடுக்காக அமைப்புக்கள் உருவானதைப் பற்றி நான் முன்னரே பேசியிருக்கிறேன். . சிருங்கேரி மடம் ஓர் அமைப்பாகச் செயல்பட்டு எப்படி இந்துமதத்தைக் காத்தது என்றே சங்கரர் உரையிலும் விரிவாக சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இந்துமதமே ஓர் அமைப்பு என ஆவது இந்துமதத்தை அழிக்கும். இந்துமதத்திற்கு ஒரு மைய அதிகார அமைப்பும் , ஊர்தோறும் அதனால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் கிளைகளும், உறுப்பினர் பட்டியலும், அவர்கள் மேல் அமைப்பின் நேரடி அதிகாரமும்,  தீர்ப்பளிக்கும் அதிகாரம் கொண்ட மதகுருக்களின் சபைகளும் ஒருபோதும் உருவாகக்கூடாது.

ஆகவே இந்துமதத்தை எதனடிப்படையிலேனும் ஒற்றை அமைப்பாகத் திரட்டும் எம்முயற்சியையும் எதிர்க்கிறேன். இந்துக்களின் பிரதிநிதிகளாக நின்று பேசும் எவரும் அதிகாரபூர்வமானவர்கள் அல்ல என்கிறேன். முன்பும் பலமுறை சொன்னது இது.

இந்துமதம் கிளைத்துப்பரவுவது. ஏனென்றால் இது பன்மையிலிருந்து மையங்களால் தொகுக்கப்பட்டது. உட்கூறுகள் தனித்தரிசனங்களாக, மதங்களாக, வழிபாட்டுமுறைகளாக பிரிந்துகொண்டும் இருக்கும். இதற்கு வேரிலும் முளைக்கும் செடி என ஓர் உவமையைக்கூட முன்னர் சொல்லியிருந்தேன். ஆனால் எல்லா அமைப்புக்களும் இந்துமதத்தின் கிளைகளாக, உட்பிரிவுகளாக எழுந்தவை மட்டுமே. எவையும் ஒட்டுமொத்தமாக இந்துமதத்திற்கான அமைப்புகள் அல்ல.

ஆகவேதான் இந்துமதத்திற்குள் இருந்து ‘எதுவும்’ கிளைத்துவர அனுமதிக்கப்படவேண்டும் என்கிறேன். இஸ்லாமியப் பண்பாட்டுக் கலப்புள்ள ஷிர்டி சாயிபாபா  வழிபாடு, மெய்வழிச்சாலை ஆண்டவர் அமைப்பு போன்றவைகூட. அவை விவாதிக்கப்படவேண்டும். மறுதரப்பால் மறுக்கப்படவேண்டும். ஆனால் தடைசெய்யப்படக்கூடாது. எல்லா வகை மீறல்களுக்கும் இதற்குள் இடமிருக்கவேண்டும். ஏனென்றால் ஞானத்தின் பாதை கட்டற்றது.

ஜக்கி சைவத்தை மாற்றியமைக்கிறார், இதை சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? சிவனுக்கு எங்குமே சிலைகள் இல்லையே?

அதை சைவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்? அவரை பின்தொடர்பவர்கள் ஏற்றுக்கொண்டால்போதும். அது அவரது தரிசனம், அவர் உருவாக்கும் அடையாளம். அவர் தன் நோக்கில் சைவம், யோகம் எதையும் மறுவரையறை செய்யலாம். அப்படி மறுவரையறை செய்யப்பட்ட பலநூறு மரபுகள் இப்போது உள்ளன.

அந்தப்போக்குக்கு எப்போதுமே அனுமதியுண்டு இந்துமரபில். அதைத்தான் சொல்கிறேன். மரபான சைவர்கள் அதை மறுக்கலாம், சைவசித்தாந்திகள் எதிர்த்துவிவாதிக்கலாம். அது நிகழவேண்டும் என்கிறேன்.

இஷ்டப்படி சிலைகளை உருவாக்கலாமா? கட்டுப்பாடே இல்லையா?

யார் கட்டுப்படுத்துவது? அப்படி ஒரு மையம் இருந்ததில்லை, இருக்கக்கூடாது என்றுதான் சொல்கிறேன். ஏனென்றால் இங்கே அமைப்பு என்பதே இல்லை. சென்ற சில ஆண்டுகளில் நீங்கள் பார்த்த பல சிலைகள், வடிவங்கள் புதிதாக உருவானவையே. உதாரணம், கண்திருஷ்டி கணபதி.

சேலம் அருகே கந்தாஸ்ரமம் என்னும் மலையில் அதை உருவாக்கிய சாந்தானந்த சுவாமிகள் நிறுவிய சொர்ண ஆகர்ஷண பைரவர், பஞ்ச முக ஆஞ்சநேயர், மனைவியுடன் கூடிய நவக்கிரகங்கள் என வேறெங்குமில்லாத சிலைகள் உள்ளன. புராணங்களும் சிலைகளும் ஒரு மீமொழி [meta language] எனலாம். தங்கள் குறியீடுகளால் அவை அவற்றை நிறுவியவரின் தரிசனத்தை பேசுகின்றன. இந்துமதம் இந்தச் சுதந்திரமான தேடல் வழியாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் சாமியார்கள்தான் இனிமேல் எதிர்காலமா?

அல்ல. நான் நம்பும் சிந்தனைகளுக்கு கார்ப்பரேட் அமைப்பு தேவையில்லை. ஆனால் வேறுதரப்புகளும் இங்குள்ளன. நவீனவாழ்க்கை சார்ந்தவை. அவற்றுக்கு அவ்வமைப்பு தேவையாக இருப்பதனால் அவை உருவாகின்றன.

நித்தியை எதிர்த்த நீங்கள் ஏன் ஜக்கியை ஆதரிக்கிறீர்கள்?

நித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன் , சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல. அவர் தன்னை கடவுள் என்கிறார். அது மோசடி. ஆகவே எதிர்த்தேன், வசைபாடவில்லை, தடைசெய்யக்கோரவுமில்லை. கவனம் என அறிவுறுத்தினேன். ஜக்கி செய்வது ஒரு கருத்தைப் பரப்புதல். அதனுடன் விவாதிப்பதோ புறக்கணிப்பதோ அறிவுடையோர் செயல். வசைபாடுவதல்ல.

மூடநம்பிக்கைகளை பரப்பாதவரை, நோயை குணப்படுத்தல் என்றெல்லாம் அறிவியலுக்கு எதிரான பேச்சுக்களை பரப்பாதவரை, பழமைவாதத்தில் ஊன்றி சாதியக்காழ்ப்பை முன்வைக்காதவரை அவை செயல்படும் உரிமைகொண்டவையே.

ஜக்கி மீதான எதிர்ப்பை இந்துமதம் மீதான எதிர்ப்பாக ஆக்குகிறேனா?

இல்லை. ஜக்கி என்றல்ல, இந்துமதத்தின் எந்த ஒரு அமைப்பும் நிலமோசடி செய்தால், சூழலை அழித்தால், பொதுநன்மைக்கு எதிராக செயல்பட்டால் ஜனநாயகமுறைப்படி எதிர்க்கப்படலாம். எதிர்த்தும் போராடலாம்.

ஆனால் வெறும் அவதூறுகள் வசைகள் அத்தகைய பொதுநன்மை சார்ந்த அக்கறையை காட்டவில்லை. ஜக்கி வெறுப்புக்காக மட்டுமே சூழியலை கையிலெடுக்கும் கும்பல்கள் அப்பட்டமான மாபெரும் சூழியல் அழிவுகளை, பொதுச்செல்வக்கொள்ளைகளை ஆதரிப்பவர்கள், காணாமல் கடந்துசெல்பவர்கள்.  ஆகவே அவர்களின் நோக்கத்தை திறந்துகாட்டுகிறேன்.

அப்படி இல்லை என்றால் அவர்களே சொல்லட்டுமே, ஜக்கியை எதிர்க்கிறோம் இந்துமதத்தை அல்ல என்று. இன்றுவரை ஒருவர்கூட அப்படி சொல்லவில்லையே.

ஜக்கி கடிதங்கள் 8

ஜக்கி கடிதங்கள் 7

ஜக்கி கடிதங்கள் 6

ஜக்கி கடிதங்கள் 5

ஜக்கி கடிதங்கள் 4

ஜக்கி கடிதங்கள் 3

ஜக்கி கடிதங்கள் 2

ஜக்கி கடிதங்கள் 1

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29

$
0
0

29. பிறிதொருமலர்

வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை நோக்கி ஓநாய்போல மூக்கு கூர்ந்தபடி நடந்தான். அந்த மணம் மிக அருகே என ஒருகணம் வீசியது, மிக அப்பாலென மறுகணம் தோன்றியது. அது வெறும் உளமயக்கே என அடிக்கடி மாயம் காட்டியது. அந்த ஊசலில் ஆடிச் சலித்து அதை முழுமையாக விலக்கியபடி நடந்தபோது அதுவே வந்து அவர்களை அழைத்துச்சென்றது.

ஊர்வசியின் ஆலயத்திலேயே அவர்கள் ஓர் இரவை கழித்தனர். இரும்புநீர்மை என குருதி மாறி தசைகள்மேல் பேரெடையைச் சுமத்தியது போன்றதொரு களைப்பு பீமனை ஆட்கொண்டது. உடலை சற்றும் அசைக்கமுடியாதவனாக அவன் சருகுமெத்தைமேல் படுத்து இருண்டுவிட்ட வானை நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்கள் துளித்து ஒளிகொண்டு ததும்பி அதிர்ந்து நின்ற வானம். மெல்லிய அதிர்வொன்று நிகழ்ந்தால் அவையெல்லாம் பொலபொலவென உதிர்ந்து மண்ணை நிரப்பிவிடுமென்று  இளவயதில் கேட்ட கதையை நினைவுகூர்ந்தான்.

அவன் அருகே அமர்ந்திருக்க சதசிருங்கத்தின் ஏரிக்குமேல் எழுந்த விண்மீன்பரப்பை சுட்டிக்காட்டி தருமன் சொன்னான் “அங்கு நின்றிருப்பது இலைக் கருமை தழைத்த ஒரு பெருமரம், மந்தா. அதில் கரிய சிறகுள்ள பறவைகள் என இப்போது பறந்தலைபவர்கள் கந்தர்வர்கள். கண்ணுக்குத் தெரியாத இன்னிசை எழுப்புபவர்கள் தேவர்கள். இந்த இனியமணம் அதன் மலர்கள் எழுப்புவது.”

அவ்வெண்ணம் எழுந்ததுமே திரும்பிவிடலாம் என்று தோன்றியது. மறுகணமே உள்ளம் எழுந்து கிளம்பிவிட்டது. உடலை அசைக்க அதனால் முடியவில்லை. இரும்புத்துண்டில் கட்டப்பட்ட பறவை என அது சிறகடித்துச் சுழன்று வந்தது. அறியா மணமொன்றைத் தேடி அலைவதன் அறிவின்மையை அவன் அருகில் மலை என கண்டான். அது வெறும் உளமயக்கு. அல்லது ஓர் அகநகர்வு. அதை பருவெளியில் தேடுவதைப்போல பொருளிலாச் செயல் பிறிதொன்றில்லை.

ஏன் இதற்கென கிளம்பினேன்? உண்மையிலேயே அவள் விழிகனிந்து கேட்ட அக்கணத்தில் என் உள்ளம் எழுச்சிகொண்டதா? இல்லை, நான் நாப்போக்கில் சொன்னதுபோல அர்ஜுனன் மீண்டுவந்தான் என்பதனால்தான் என்பதே உண்மையா? அல்லது அங்கே இருந்த சலிப்பை வெல்லவா? ஒருவேளை நானும் ஒரு பயணம் செய்யவேண்டும் என்னும் சிறுவனுக்குரிய வீம்பா? எதுவோ ஒன்று. ஆனால் இனிமேலும் இதை நீட்டித்தால் வீணனென்றே ஆவேன்.

அவன் உள்ளூர புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தான். ஆனால் உடல் கற்சிலை என மண்ணில் அழுந்திக்கிடந்தது. பெருமூச்சுடன் கலைந்து “நாம் எங்கு செல்லவிருக்கிறோம்?” என்றான். “அறியேன்” என்றான் முண்டன். “ஏனென்றால் நானும் இந்தப் பயணத்தை முதல்முறையாக நிகழ்த்துகிறேன். என்னிடம் கதைகள் உள்ளன என்பதற்கப்பால் நானும் உங்களைப்போன்றவனே” என்றான். பீமன் நெடுநேரம் வானை நோக்கிக்கொண்டிருந்தான். மீண்டும் பெருமூச்சுக்கள் விட்டபடி தன்னுணர்வுகொண்டு “இது முடிவடையாத பயணம் எனத் தோன்றுகிறது. மறுமுனையில் ஒளிதெரியா சுரங்கப்பாதை” என்றான்.

“எல்லா அகவழிப் பயணங்களையும்போல” என்றான் முண்டன். பீமன் கையூன்றி தன் உடலைப் புரட்டி ஒருக்களித்து “உம்மிடம் கதைகள் உள்ளன அல்லவா? அவற்றைக்கொண்டு கழங்காடவும் அறிவீர். ஆடுக!” என்றான். “இப்போதா?” என்றான் முண்டன். “இப்போது ஒளியில்லை. கழங்குகள் கண்ணுக்குத்தெரியாது.” பீமன் “கைகள் கழங்குகளை அறிந்தால் போதும்” என்றான். முண்டன் “ஆம், அதுவும் மெய்யே” என்றான். எழுந்தமர்ந்து தன் இடைக்கச்சையிலிருந்து கழற்சிக்காய்களை எடுத்துப் பரப்பினான். அவன் கைகள் அதில் ஓடத்தொடங்கின.

“பெயர்கள், பெயர்களின் நிரையன்றி பிறிதில்லை. நிரையெனில் சரடு எது? சரடெனில் வலை எது? பெயர்கள் விண்மீன்கள்போல தனிமைசூழ்ந்தவை. மின்னிநடுங்கும் விழிகள் அவை. இருள் சூழ்ந்த ஒளித்துளிகள். எவ்வொலிகளின் துளிவடிவுகள் அவை?” அவன் நாவிலிருந்து பொருளின்மை சூடிய சொற்கள் பொழியலாயின. “விஷ்ணு, பிரம்மன், சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன். ஆ… இடக்கை அள்ளிய இவை எவை? லட்சுமி, சரஸ்வதி, தாரை, இளை, ஊர்வசி. ஓ… இவள் இந்துமதி. இவள் அசோககுமாரி.”

கழற்சிகள் அவன் கைகளில் அந்திப்பறவைகள் சேக்கேறும் மரக்கிளையில் என பூசலிட்டு சுற்றிவருவதைக் காணமுடிந்தது. “கலையறிந்தவள் இந்துமதி. திருமகள் அசோககுமாரி. தனியள் ஊர்வசி. கோட்டெயிர் கொற்றவை போலும் அவள். ஆ… இவள் தாரை. மூதன்னை. குருதி ஊறிய முதல் கருவறை. நோக்குக, இது இளை! இருமுலையில் ஒன்று நஞ்சு, ஒன்று அமுது. இருவிழிகளில் ஒன்று ஆண், ஒன்று பெண். இவன் சந்திரன். வளர்ந்து மறைந்து மீண்டும் எழுந்து தேய்ந்தெழுகிறான் புரூரவஸ். இவள் ஊர்வசி. இருண்டிருக்கிறாள். கரியள்…”

அவன் சொற்கள் ஒழுகிச்சென்றன. பொருளின்மை கொள்கையில் சொற்கள் மேலும்மேலும் நுண்மையாகின்றன. ஆடைகழற்றிய குழவிகள்போல. இல்லை, எங்கும் தொடாத ஒளிபோல. சொற்களை அவன் அச்சத்துடனும் திகைப்புடனும் நோக்கிக்கொண்டிருந்தான். சொற்கள் ஏன் ஒன்றுடன் ஒன்று இணைவதே இல்லை? அவை பொருளென்னும் பிறிதொன்றால் இணைக்கப்படுகின்றன. அக்கணங்களுக்கு மட்டும். விளிம்புரசிக்கொண்டு விலகிவிடுகின்றன. விண்மீன்கள் ஏன் உரசிக்கொள்வதுமில்லை?

“இவள்!” என்றான் முண்டன். அவன் கையில் ஒரு கழற்சிக்காய் இருந்தது. மற்ற அத்தனை காய்களும் மெல்ல நாகம் பெட்டிக்குள் சுருண்டமைவதுபோல சரடாக மாறி அவன் கச்சைக்குள் சென்று அமைந்தன. “இவள் அவளே” என்றான். “யார்?” என்றான் பீமன் கனவுக்குரலில். “இவளை உமை உருவாக்கினாள் என்பது கதை” என்றான். “சொல்க!” என்றான் பீமன். “பெண்ணை எதிலிருந்து எழுந்தவள் என வகுக்கும் ஒரு நிமித்திக மரபுண்டு. மண்ணில் மைதிலி. புனலில் சத்யவதி. அனலில் துருபதன் கன்னி. அரசே, காற்றில் பிறப்பவர்களும் உண்டு. தாமரையில், அல்லியில், குவளையில், மந்தாரையில், செண்பகத்தில் பிறப்பவர்களுண்டு. வெண்தூவி அன்னத்தில், தாவும் சிட்டுக்குருவியில், மீன்கொத்தியில் பிறப்பவர்களுமுண்டு. மீனிலும் சங்கிலும் முத்துச்சிப்பியிலும் எழுந்தவர்களுமுண்டு.”

“இவள் மரத்தில் மலர்ந்தவள். ஆகவே இவளை அசோகசுந்தரி என்று சொல்கின்றனர் முனிவர்” என முண்டன் சொன்னான். “பாற்கடலை விண்ணவரும் ஆழுலகோரும் சேர்ந்து கடைந்தபோது எழுந்தது கல்பமரம். அதன் அலைவளைவு தண்டாக, நுரைகள் தளிரென்றாக, துமிகள் மகரந்தமென்று மாற உருக்கொண்டெழுந்தது. நோக்குவோர் இயல்புக்கேற்ப வண்ணமும் மணமும் கொள்வது. தூயநெஞ்சத்து முனிவருக்கு வெள்ளை மந்தாரம். கண்ணில் காமம் விரிந்த கன்னியருக்கு நெஞ்சை மயக்கும் பாரிஜாதம். அழிவின்மை கொண்ட தேவருக்கு அது சந்தனம். இன்பம் நாடும் உலகோருக்கு அசோகம். தெய்வங்களுக்குப் படையலாகும்போது ஹரிசந்தனம்.”

இளைஞனாகவும் கன்னியாகவும் ஆகி காதலாடும்பொருட்டு விண்ணில் உலாவிய சிவனும் உமையும் தொலைவில் எழுந்த நறுமணத்தை அறிந்தனர். “அது பாரிஜாதமணம் அல்லவா?” என்றாள் உமை. “ஹரிசந்தன மணம் வீசும் அது கல்பமரம். பாற்கடலில் எழுந்தது” என்றான் சிவன். அவர்கள் அருகணைந்தபோது அன்னை அவன் தோளை அணைத்து தன் முலையொன்றால் அவனை எய்து “எனக்கு மட்டும் ஏன் அது பாரிஜாதம்?” என்றாள். “ஆம், இப்போது நான் மந்தாரத்தை உணர்கிறேன்” என்றான் சிவன். அவர்கள் தழுவிக்கொண்டனர். இரு உடல்களாக இரு வகை அனல்கொண்டனர். முடிவிலா ஆடல் நிகழலாயிற்று. உமை மூச்சொலிக்கிடையே அவன் காதில் “அது சந்தனம்” என்றாள். “ஆம்” என்றான் அவன்.

எழுந்து அமர்ந்து அவன் விழிகளை விலக்கும்பொருட்டு மறுபக்கம் நோக்கிய தேவி அந்த மரத்தைப் பார்த்து “என்ன மரம் இது? எதை நமக்குக் காட்டுகிறது?” என்றாள். “நாம் யாரென்று” என்றான். “நான் இப்போது யார்?” என்றாள். “அதை கேள்” என்றான் சிவன். அவள் கைநீட்டி ஒரு மலரைப்பற்றி “அசோக மணம்” என்றாள். “உலகியலின் நறுமணம். நீ அகம் கனிந்து அன்னையென்றாகியிருக்கிறாய்” என்றான் சிவன். அவள் அந்த மலரைப் பறித்து கையில் எடுத்தாள். அது ஓர் அழகிய கன்னி என அவள் முன் நின்றது.

சிவன் “நீ உளம்கொண்ட மகள்” என்றான். “இவளை அசோகசுந்தரி என்றழை!” உமை அவளை அருகழைத்து நெஞ்சோடணைத்து குழல் முகர்ந்தாள். “இனியவள்” என்றாள். “இவளுக்கு உகந்த துணைவன் எங்குள்ளான்?” என்று திரும்பி தன் கணவனிடம் கேட்டாள். “தேவகன்னி இவள். தேவர்க்கரசனுக்கு அன்றி பிறருக்கு துணையாகலாகாது” என்றான். “தேவர்தலைவனுக்கு அரசி இருக்கிறாள்” என்ற உமை “தேவர்க்கரசனுக்கு நிகரென்றாகி அவன் அரியணையில் அமர்பவனுக்கு துணைவியாகுக!” என்றாள்.

சிவன் நகைத்து “அத்தகைய ஒருவன் பிறக்க இன்னும் நீண்டகாலம் ஆகும். சந்திர குருதிமரபில் ஆயுஸின் மைந்தனாக அவன் பிறப்பான். அவன் பெயர் நகுஷன்” என்றான். உமை “அவனுக்காகக் காத்திரு. அவனை அடைந்து மைந்தனைப் பெறும்வரை உன் இளமை மாற்றமின்றி நீடிக்கும்” என அவளை வாழ்த்தினாள். அவள் அன்னையின் கால்தொட்டு வணங்கி மண்ணில் ஒரு பொற்துளி என உதிர்ந்தாள்.

tiger அறச்செல்வன் என்று பெயர்கொண்டிருந்தான் ஆயுஸ். தந்தையிடமிருந்து கற்ற நெறிகள் அனைத்தையும் தலைகொண்டிருந்தான். ஊனுணவு உண்ணவில்லை. உயிர்க்கொலை செய்யவில்லை. எனவே போருக்கு எழவில்லை. புலவர் அவைகளில் நூலாய்ந்தும் வைதிகர் அவைகளில் மெய்ச்சொல் அறிந்தும் முனிவர் நிலைகளில் யோகத்திலமர்ந்தும் நாடுபுரந்த அவனை அறத்தோன் என்னும் சொல்லாலேயே குடிகளும் பிறஅரசரும் அழைத்தனர்.

ஆயுஸ் அயோத்தியின் அரசர் சுவர்ஃபானுவின் மகள் இந்துமதியை மணந்தான். அவர்கள் நீண்டநாள் காதலில் மகிழ்ந்திருந்தும்கூட மைந்தர் பிறக்கவில்லை. இந்திரனை வெல்லும் மைந்தன் அவர்களுக்கு பிறப்பான் என்று நிமித்திகம் சொன்னது. அதற்காகக் காத்திருந்து சலித்த ஆயுஸ் அருந்தவத்தாராகிய வசிட்டரைச் சென்றுகண்டு தாள்பணிந்து தனக்கு மைந்தன் உருவாக அருளும்படி கோரினான். “நான் அருளி உனக்கு மைந்தன் பிறப்பதாக என் உள்ளம் சொல்லவில்லை, நீ துர்வாசரிடம் செல்!” என்றார் வசிட்டர்.

துர்வாசர் “நீ பெறப்போகும் மைந்தன் நான் உளம் கொள்பவன் அல்ல. நீ செல்லவேண்டிய இடம் அந்தணராகிய தத்தாத்ரேய மாமுனிவரின் குருநிலை” என்றார். நோன்பிருந்து வணங்கிய கைகளுடன் தத்தாத்ரேயரின் தவக்குடிலுக்குச் சென்றான் ஆயுஸ். அங்கே அம்முனிவர் முப்புரிநூல் அணியாமல், இருவேளை நீர்வணக்கமும் மூன்றுவேளை எரியோம்புதலும் ஒழித்து காமத்திலாடிக்கொண்டிருப்பதை கண்டான். அழகிய மங்கையர் அவருடன் இருந்தனர். அவர்கள் கழற்றி வீசிய அணிகளும் ஆடைகளும் மலர்க்கோதைகளும் அங்கே சிதறிக்கிடந்தன. காமச்சிரிப்பும் குழறல்பேச்சும் ஒலித்தன.

ஆயுஸ் உள்ளே செல்ல ஒப்புதல் கோர “வா உள்ளே” என்றார் தத்தாத்ரேயர். “இது உகந்த தருணமா?” என அவன் தயங்க “நான் முப்போதும் இப்படித்தான்… விரும்பினால் வருக!” என்றார். அவன் கைகூப்பியபடி குருநிலைக்குள் சென்றான். மதுமயக்கில் சிவந்த விழிகளுடன் இருந்த தத்தாத்ரேயர் அரசனை நோக்கி சரியும் இமைகளைத் தூக்கி சிவந்த விழிகள் அலைய “நீ யார்?” என்றார். “முனிவரே, நான் துர்வாசரால் உங்களிடம் ஆற்றுப்படுத்தப்பட்டேன். பெருவல்லமைகொண்டு இந்திரனைவெல்லும் மைந்தனை நான் பெறுவேன் என்கின்றன நிமித்திக நூல்கள். அத்தகைய ஒரு மைந்தனுக்காக நாங்கள் காத்திருக்கத் தொடங்கி நெடுநாட்களாகின்றன. கனி உதிர்ந்து எங்கள் மடி நிறைய உங்கள் சொல் உதவவேண்டும்” என்றான்.

“அரசே, நான் இங்கு செய்துகொண்டிருப்பது என்ன என்று நீ பார்த்திருப்பாய். நான் அந்தணன் அல்ல, அறவோனும் அல்ல. என் சொல் முளைத்தால் அது நன்றென்று கொள்ளமுடியாது” என்றார். “நான் துர்வாசரால் இங்கு அனுப்பப்பட்டேன். அவர் அறியாதவரல்ல. தங்கள் அருளால் மட்டுமே என் மைந்தன் மண்நிகழ்வான்” என்றான் ஆயுஸ். “அரசே, என் வாழ்க்கையை நீ அறியமாட்டாய். நினைவறிந்த நாள்முதல் முழுப்புலனடக்கம் பயின்றவன் நான். நாச்சுவையை முற்றிலும் ஒறுத்தேன். குளிருக்கும் வெயிலுக்கும் பழகி தோலை கல்லாக்கினேன். நாற்றத்திற்கு மூக்கை அளித்து நறுமணத்தை அறியாதவனானேன். விழியின்பம் அளிக்காத வெறும் பாலையில் வாழ்ந்தேன். செவியின்பம் அளிக்கும் சிறுபூச்சிகளைக்கூட தவிர்த்தேன். உறவை நான் அறியவில்லை. காமத்தை திறக்கவே இல்லை.”

“அவ்வண்ணம் முற்றிலும் புலன்வாயில்களை மூடி அமர்ந்து நெடுந்தவம் இயற்றினேன். படிகளில் ஏறி பின் பறந்து பின்னர் கரைந்து பின்னர் முற்றழிந்து அதுவென்றாகும் கணத்தில் என் முன் ஓர் அழகி தோன்றினாள். நான் அவளைக் கண்டதும் அஞ்சி விழிமூடினேன். இமையூடாகத் தெரிந்தாள். அணுகி வந்து என் முன்நின்றாள். அச்சம் காமம் என்றாக நான் அவளை தொட்டேன். என்னை சிறுமகவென ஆக்கி தன் மடியிலிட்டாள். அனைத்தையும் மறந்து அவள் முலையுண்டு மகிழ்ந்து அங்கிருந்தேன்.”

“மீண்டதும் நான் என் உடலெங்கும் புலன்கள் விழித்துக்கொண்டிருப்பதை கண்டேன். நானிருந்த செம்புலத்தில் எத்தனை வண்ணங்கள், எத்தனை புள்ளொலிகள், எத்தனை தளிரோசைகள் என அறிந்தேன். அள்ளி அருகிருந்த ஊற்றுநீரை உண்டபோது நாவினிமையில் திளைத்தேன். வெந்தமண்ணில் விழும் முதல்மழைத்துளி மணல் அலைகளை மலரிதழ் வளைவுகளென மணக்கச்செய்வதை அறிந்தேன். இன்காற்று உடல்தழுவ சிலிர்த்தேன். அவையனைத்தையும் நான் முன்னரே அறிந்திருப்பதையும் உணர்ந்தேன்.”

“என் முன் இருந்த மென்மணல்வெளியில் பெண்ணுடல் தெரியலாயிற்று. வளைவின் அழகுகள், குழைவின் மெருகுகள், குன்றெனும் எழுச்சிகள், ஓடையெனும் கரவுகள். காமத்தில் உடல் எழ கைமணலை அள்ளி எழுக என் விழைவு என்றேன். சிலம்பொலி கேட்க திரும்பி நோக்குகையில் இவளைக் கண்டேன். பிறிதொரு கைப்பிடி மண்ணை அள்ளி இவளில் இல்லாதவை எழுக என்றேன். அவள் வந்தாள். இருவரும் அல்லாத ஒருத்தி வருக என்றேன். மூன்றாமவள் அமைந்தாள். அதன் பின் பெண்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள்.”

“நுகர்வில் திளைக்கும் புலன்களுக்கு நடுவே நான்குமுனைகளையும் தாவித்தாவி இணைக்கும் எண்காலி என இருந்த ஆறாவது புலன் மனம். தன் முதுகில் சுமந்திருந்த மூட்டைச்சுமையே புத்தி. எட்டு காலை அசைத்தசைத்து ஓயாது பின்னச்செய்யும் ஒன்றென அதன் உள்ளுறைந்த தன்னிலை சித்தம். அவ்வலையே அதுவென்று எண்ணும் அதன் அறியாமையே அகங்காரம். ஒன்பது இருப்புகளையும் கரைத்து ஒளியென புறவுலகில் பரவியமைவதே முழுமை என உணர்ந்தேன்.”

“யோகமுழுமை என்பது உள்ளொடுங்குதல், போகமுழுமை வெளிவிரிந்தமைதல். உள்ளணைத்து புலன்களை வெளிப்பொருள் விரிவின் பகுதியென்றாக்குவது கள். களிமயக்கில் திளைக்கையில் உணவில் பிறந்து உணவை உண்டு உணவில் கழித்து உணவில் திளைத்து உணவில் இறந்து உணவாகும் சிறுபுழுவின் இன்ப முழுமையை அடைந்தேன். அவ்வாறு இங்கிருக்கிறேன்” என்றார் தத்தாத்ரேயர். “நச்சுக்கலம் என உலகோர் என்னை சொல்லக்கூடும். என்னில் ஒருதுளியையும் பிறருக்கு அளிக்க முடியாது.”

“அதையறிந்தல்லவா துர்வாசர் என்னை இங்கு அனுப்பியிருப்பார்?” என்றான் ஆயுஸ். “அறியாதும் அனுப்பியிருக்கலாம். சென்று அதையும் கேட்டு வருக!” என்றார் தத்தாத்ரேயர். ஆயுஸ் மீண்டும் துர்வாசரிடம் சென்று தத்தாத்ரேயர் இருந்த நிலையைச் சொல்லி செய்யவேண்டுவதென்ன என்று கேட்டான். “சிப்பியில் மாசும் பாம்புள் நஞ்சும் முத்தென்றாகின்றன. அவருள் எது ஒளிகொண்டிருக்கிறதோ அதை மைந்தன் என அளிக்கும்படி கோருக!” என்றார் துர்வாசர்.

திரும்பிவந்த ஆயுஸ் “அந்தணரே, எது உங்களை ஒளிவிடச்செய்கிறதோ அதுவே என் மைந்தனாக எழுக!” என்றான். “என்னுள் எரிவது காமம். அனல்துளி, தடைகள் அனைத்தையும் உணவென்று கொள்வது. தன்னை தானே அன்றி அவிக்கமுடியாதது” என்றார் தத்தாத்ரேயர். “அதுவே என் மைந்தனாகுக!” என்றான் ஆயுஸ். “அனலை வாங்கிக்கொள்கிறாய், அது முதலில் இருந்த கலத்தையே எரிக்கும். நீ துயருற்று அழிவாய்” என்றார் தத்தாத்ரேயர் “ஆம், அதை நான் முன்னரே எந்தையிடமிருந்து அறிந்துள்ளேன். அவ்வாறே ஆகுக!” என்றான் ஆயுஸ்.

தத்தாத்ரேயர் அளித்த மாங்கனியுடன் அரண்மனை மீண்டான் ஆயுஸ். அதை தன் மனைவிக்கு அளித்தான். அதை உண்ட அந்நாளில் இந்துமதி ஒரு கனவுகண்டாள். அவள் காலைப்பற்றி கொடி ஒன்று மேலேறியது. கவ்வி தொடைசுற்றி அவள் கருவறைக்குள் புகுந்தது. தொப்புளினூடாக அதன் தளிர்நுனி வெளிவந்தது. மூக்கில் வாயில் செவிகளில் எழுந்து கிளைத்தது. அது ஒரு மாநாகம் என அவள் அறிந்தாள். வேர் மண்ணில் விரிந்து பற்ற வால்நுனிகளென தளிர்த்தண்டுகள் விரிய இலைத்தழைப்பென படம் எடுத்து அது மரமென்றும் நின்றிருந்தது.

அவளுக்குள் அந்நாகம் பெருகிக்கொண்டே இருக்க தசைகள் இறுகிப்புடைத்தன. நரம்புகள் பட்டுநூல்களென இழுபட்டுத் தெறித்து அறுந்தன. உச்சித்தலை பிளந்து மேலெழுந்த மரம் இரு கிளை மூன்று கிளை நான்கு கிளை என விரிந்தது. அதில் மலர்கள் எழுந்து கனி செறிந்தது. பறவைகள் அடர்ந்து அது ஓயாது ஒலிகொண்டது. அவள் உடல் பட்டுச்சீலை என கிழிபடும் ஓசையை கேட்டாள். மரப்பட்டை போல உலர்ந்து வெடித்து விழுந்தாள். மரத்தின் வேர்கள் அவளை அள்ளிப்பற்றி நொறுக்கிச் சுவைத்து உண்டன. இறுதித்துளியும் எஞ்சுவதுவரை விழிமலைக்க அவள் அந்த எழுமரத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.

நாற்பத்தைந்து நாட்களுக்குப்பின் அவள் கருவுற்றிருப்பதை மருத்துவர் உறுதிசெய்தனர். அவள் அக்கனவை கணவனிடமும் சொல்லவில்லை. அவன் அவளிடம் தத்தாத்ரேய முனிவரின் அருளால் அந்தணனுக்கு இணையான அறச்செல்வன் ஒருவன் தோன்றவிருப்பதாகவே சொல்லியிருந்தான். எனவே அவள் அக்கனவை தானே சொல்லிக்கொள்ளவும் அஞ்சினாள். சொல்லப்படாத கனவு அவளுக்குள் வளர்ந்தது. கருங்கல் உருளைபோல ஆகி எப்பொழுதும் உடனிருந்தது.

பன்னிருமாதம் கடந்தபின்னரே இந்துமதி குழந்தையை பெற்றாள். வயிறு வளர்ந்து எடைகொண்டு கால்தாளாமலானமையால் அவள் எப்போதும் படுக்கையிலேயே இருந்தாள். அவள் உண்டு ஊறச்செய்த குருதி அந்த மைந்தனுக்கு போதவில்லை. எனவே அவள் மெலிந்து பழுத்திலைபோல மஞ்சள் நிறம்கொண்டு வாய்வறண்டு விழிவெளுத்து தோல் பசலைகொண்டு சொல்லும் எழா சோர்வுடன் கிடந்தாள். வெறித்த விழிகளுக்கு முன் சூழ்ந்தோர் எவருமறியா ஒன்றை அவள் கண்டுகொண்டிருந்தாள் எனத் தோன்றியது. அடிக்கடி ஒலியென்றாகாச் சொற்களை அவள் உதடுகள் அசைவென காட்டிக்கொண்டிருந்தன.

நாள்கடக்குந்தோறும் மருத்துவர் அஞ்சலாயினர். தாதியர் “உள்ளிருப்பது குருதிவிடாய் கொண்ட கொடுந்தெய்வம் போலும். அவரை கருவமைந்தே உண்கிறது” என்றனர். நாள்தோறும் மருத்துவர் வந்து நோக்கி அரசனுக்கு செய்தி சொன்னார்கள். “அவர் இங்கிருந்து அகன்றுவிட்டார், இனி மீளமாட்டார்” என தலைமை மருத்துவர் தன் மாணவர்களிடம் சொன்னார். அவள் விழிகளிலும் ஏதும் தெரியாதாயின. அவள் ஓர் ஓவியத்திரையென்று ஆகியதுபோல உணர்ந்தனர்.

ஒருநாள் மாலை அவள் அலறும் ஒலிகேட்டு அனைவரும் ஓடிச்சென்று நோக்கினர். அவள் எழுந்து அமர்ந்து கைகள் பதற உடைந்த குரலில் கதறிக்கொண்டிருந்தாள். “எருமை! எருமையை விரட்டுக! எருமை!” என்றாள். “அரசி, அரசி” என சேடி அவளை உலுக்கினாள். “எருமையில் குழந்தையை கொண்டுவருகிறான்… எருமைமேல் அமர்ந்திருக்கிறது” என அவள் நீர் வறண்டு அச்சம் மட்டுமே வெறிப்புகொண்டிருந்த விழிகளால் சொன்னாள். “அரசி படுங்கள்… படுங்கள்!” என்றாள் முதியசேடி. “இருண்டவன்… இருளேயானவன்… தென்திசைத்தலைவன்… அதோ!”

துணிகிழிபடும் ஒலி கேட்டது. சூடான குருதியின் வாடை. முதுசேடி தன் கையை வெங்குருதி தொட்டதை உணர்ந்து அரசியை தள்ளிப் படுக்கச்செய்தாள். கதவைத் திறந்து வெளிவருபவன்போல அரசியின் இறந்த கால்களை அகற்றி மைந்தன் வெளிவந்தான். கரியநிறம் கொண்டிருந்தான். வாயில் வெண்பற்கள் நிறைந்திருந்தன. அவன் அழவில்லை, புலிக்குருளைபோல மெல்ல உறுமினான். மருத்துவச்சி கதவைத் திறந்து ஓடிவந்தபோது தொப்புள்கொடியுடன் குழவியை சேடி கையில் எடுத்திருந்தாள். நோக்கும்போதே அவள் அறிந்தாள்… அரசி இறந்துவிட்டிருந்தாள்.

மைந்தனை நோக்க ஓடிவந்த அரசனிடம் அரசியின் இறப்பே முதலில் சொல்லப்பட்டது. அவன் ஒருகணம் விழிமூடி நெற்றிநரம்பொன்று புடைத்து அசைய நின்றபின் “நன்று, அவ்வாறெனில் அது” என்றபின் குழந்தையைக் கொண்டுவர ஆணையிட்டான். அப்போதே உறுத்த உடலும் தெளிமுகமும் கொண்டிருந்தது குழவி. அவன் குனிந்து அதை நோக்கியபோது அதுவும் அவனை நோக்கியது. அவன் “நகுஷன்” என்றான். “நிமித்திகர் கூற்று முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது. இவன் இந்திரனை வெல்பவன். நகுஷன் என பெயர் கொள்பவன்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

புதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை

$
0
0

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

 

நண்பர்களே,

இவ்வாண்டு ஈரோட்டில் நடத்திய புதிய வாசகர் சந்திப்பு தீவிரமும் உற்சாகமுமாக கழிந்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், குறியீடுகள், சிந்தனை முறைகள் என பல தலைப்புகளில் விசை குன்றாமல் இயல்பாக உரையாடல் நடைபெற்றது. புதியவர்களின் சில சிறுகதைகளும் கட்டுரையும் விவாதிக்கப்பட்டது. ஈரோடு சந்திப்புக்கு விண்ணப்பித்த அனைவரையும் அழைத்துக்கொள்ள இயலவில்லை, எனவே அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக வரும் மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் தஞ்சை, வல்லத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா கலை & அறிவியல் கல்லூரியில் அடுத்த புதிய வாசகர் சந்திப்பை நடத்த உள்ளோம். ஜெயமோகன் இரு நாட்களும் அக்கல்லூரியில் தங்கி வாசக நண்பர்களை சந்திப்பார், மார்ச் 19 இரவு தான் ஊர் திரும்புகிறார். சந்திப்பு மார்ச் 18 காலை 10 மணி முதல் 19 மதியம் 1.30 வரை நடைபெறும்.

கடந்த முறை விண்ணப்பித்து தகவலும் தெரிவிக்காமல் தவறியவர்கள் மற்றும் முதல் நாள் கலந்து கொண்டு அன்றே திரும்பிச் சென்றவர்கள் என ஒரு சிலர் இருந்தனர். அவர்கள் தகுதியும் தீவிரமும் கொண்ட பிற வாசகர்களின் இடத்தை வீணடித்துவிட்டனர். எனவே ஏற்கனவே விண்ணப்பித்து உரிய தகவல் தெரிவிக்காமல் தவறியவர்கள், சம்பிரதாயமாக விண்ணப்பிப்பவர்கள் ஆகியோர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். உண்மையிலேயே உறுதிப்பாடும் தீவிரமும் இருக்கும் வாசகர்கள் மட்டும் பெயர், வயது, தொழில், தொலைபேசி எண், முகவரி மற்றும் சுயவிபரத்துடன் கீழ்கண்ட விண்ணப்பத் தாளை நிரப்பி விண்ணப்பித்தல் நன்று, ஏற்பாடுகள் செய்ய எளிதாக இருக்கும்.

அதே போல ஏற்கனவே புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள், அவர்களையும் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சந்தித்த புதிய வாசகர்களை மீண்டுமொருமுறை இவ்வாண்டுக்குள் சந்திக்கும் திட்டமும் ஜெயமோகனுக்கு உண்டு, அங்கு பார்த்துக்கொள்ளலாம், அல்லது “ஜெ”வை அவர் இல்லத்தில் சந்திக்கலாம்.

கடந்த ஈரோடு சந்திப்புக்கு பதிவு செய்து இடம் கிடைக்காதவர்கள் இப்போதும் விண்ணப்பித்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம்

தொடர்புக்கு meetings.vishnupuram@gmail.com

கிருஷ்ணன்,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

 

தனித்தொடர்புக்கு :

கிருஷ்ணன், ஈரோடு : 98659 16970, (salyan.krishnan@gmail.com)

சக்தி கிருஷ்ணன், திருச்சி : 98942 10148.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தேவதேவன் –கடிதம்

$
0
0

தேவதேவன்

 

இனிய ஜெயம்,

கவிதை.

நீர்நடுவே

தன்னை அழித்துக்கொண்டு;

சுட்டும்விரல்போல் நிற்கும்

ஒரு பட்டமரம்.

புரிந்துணர்வின் பொன்முத்தமாய்

அதில் வந்து அமர்ந்திருக்கும்

ஒரு புள்.

தேவதேவன்.

ஒரு கவிஞன் தன்னைக் குறித்தும் தன்னில் வந்தமரும் கவிதை கணத்தை குறித்தும் சொன்ன கவிதை.

கவிதை ஒரு கவிஞனால் எழுதப்படுவது என்ற தேவதேவனின் சொல்லை இக் கவிதையுடன் இணைக்கையில் இக்கவிதை கொள்ளும் ஆழம், அது உணர்த்தும் தவிப்பு தாள இயலா நிலைக்கு தள்ளுகிறது.

கவிஞன் அவன் தோப்பில் ஒரு மரம் அல்ல. சூழச்சூழ நீர் நடுவே ”அது” ”அது” என சுட்டும் சுட்டு விரல் போல, பிரிந்து தனித்து நிற்கும் ஒரு பட்டமரம்.  தனியன். பித்தன்.

அவனைப் புரிந்து கொண்டு, அவனில் வந்தமர்ந்து, அவனுக்கு பொன்முத்தம் இடும் புள்  கவிதை.

தன்னை அழித்தேனும் அதற்காக காத்திருக்கும் ஒருவனே கவிஞன். அவனில் வந்து கூடுவதே கவிதை.

இரு உலகப்போர் நடுவே திரண்டு வந்த வடிவும், கசப்பும்  உள்ளுறையுமே, இங்கே  தமிழில் துவங்கிய நவீன கவிதை வரலாற்றின் தோற்றுவாய். விதவிதமான சரிவுகள், அழிவுகள்,இருள்.

தேவதேவனும் தன்னை அழித்துக் கொள்ளும் நவீன கவிஞர்தான். பாரிய வேறுபாடு. தேவதேவன் தன்னை ஒளியின் முன் வைத்து அழித்துக் கொள்கிறார். மெய்ப்பொருளில் கரைத்துக் கொள்கிறார்.

ஒரு காரணமும் இல்லாமல்

தளிர்பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தது

கொன்றை.

காரணமற்ற இந்த சிரிப்பின் முன் தன்னைக் கரைத்துக் கொள்ளும் கவிஞன்.

மீறி விதிவசமாய் உதிந்த இலை ஒன்றை

தன் சுற்றமமைத்துக்கும் குரல்கொடுத்து

குழுமி நின்று

தாங்கித் தாங்கித் தாங்கித்

அப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்

மெல்ல மெல்ல மெல்ல

பூமியில் கொண்டு சேர்த்தது.

எத்தனை பெரிய லீலை. அந்த லீலை முன் வியந்து நிற்கும் கவிஞன். தொடர்ச்சியாக வீரியம் கொண்டு உள்ளே எழுகிறது ஆனத்தின் இக் கவிதை.

அகாலம் .

ஒரு இலை உதிர்வதால்

மரத்துக்கு ஒன்றுமில்லை,

ஒரு மரம் படுவதால்

பூமிக்கு ஒன்றுமில்லை,

ஒரு பூமி அழிவதால்

பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை,

ஒரு பிரபஞ்சம் போவதால்

எனக்கு ஒன்றுமில்லை.

உதிர்சருகின் முழுமை முன் வியந்து நிற்கும் ஒரு உள்ளம். வியப்பின் அக் கணம் கடவுளின் உள்ளத்தை அடையும் நிலை. பிரபஞ்சமே போனாலும் எனக்கொன்றும்மில்லை என்று சொல்லும் அகாலத்தின் உள்ளம். அகாலத்தின் பாவனை கொண்டு கடவுளின் உள்ளத்தை எய்தும் ஒரு மனம்.

உதிர் சருகில் பிரபஞ்ச நடனத்தை காட்டும் ஒரு கவிதை. பிரபஞ்ச நடனம் என்பதை உதிர் சருகாக்கிக் காட்டும் ஒரு கவிதை.

சங்கத் கவிதை அழகியல், பக்திக்கவிதைகள் உணர்வு கொண்டு முயங்கும் தேவதேவனின் கவிதை வரிகளைத்தான் இந்த உணர்வுக்கு இணை சொல்ல அழைக்க முடியும்.

ஆம்.. எல்லாம் எவ்வளவு அருமை.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16818 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>