Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16718 articles
Browse latest View live

உசாவல்

$
0
0

je

ஜெயமோகனைத் தெரியுமா?

தெரியும்

படித்திருக்கிறீர்களா?

இருக்கிறேன்

பழகியிருக்கிறீர்களா?

இருக்கிறேன்

அவர் எழுதிட்டே இருப்பாரா

ஆமாம்

நல்லா எழுதுவாரா?

ஆமாம்

பேசிட்டே இருப்பாரா?

ஆமாம்

நல்ல பேசுவாரா?

ஆமாம்

நல்ல மனுஷரா?

அப்படித்தான் தெரியுது

ரொம்பப் பெரிய எழுத்தாளரோ?

தமிழில் முக்கியமான எழுத்தாளர்

பணக்கஷ்டம் ஏதும் உண்டோ?

அப்படி எதுவும் தெரியல

ஒருமாதிரி என்கிறார்களே!

சேச்சே! நல்லா எழுதறவங்க எல்லாரும் அவங்க உலகத்தில் இருப்பாங்க. அவ்ளோதான்

மனைவி, குழந்தைகள்?

அற்புதமான குடும்பம் அவருக்கு. அன்பான மனைவியும் நல்ல குழந்தைகள் – ஒரு பையனும் ஒரு பொண்ணும்

வேற ஏதும் பிரச்னை அவருக்கு?

அப்படி ஒண்ணும் எனக்குத் தெரியலியே

ஏன் இதெல்லாம் கேட்கறீங்க. அவர் எழுத்து அவ்ளோ பிடிக்குமா?

சேச்சே, படிக்க எனக்கு ஏது நேரம். பையன் பிறந்திருக்கு. ஜெ-ல் ஆரம்பிக்கிற பேர் வைக்கணுமாம். ஒருத்தர் ஜெயமோகன்னு வைங்க. பெரிய எழுத்தாளர் பேரு, ராசியா இருக்கும்னு சொன்னார். அதான் உங்ககிட்டே விசாரிச்சிக்கிட்டேன்.

*

நான் எழுதிய குறிப்பு

பி கே சிவக்குமார்

***

pk

அன்புள்ள பி.கே.சிவக்குமார்

அருண்மொழியிடம் காட்டினேன். ”நியூ ஜெர்சிக்காரர்தானே?”

“ஆமாம்” என்றேன்

“என்னது இவ்ளவு நல்ல ஃப்ரண்ட். கேட்டா சரியா சொல்லவேண்டியதுதானே?” என்றாள்

”என்ன?’ என்றேன்

“எல்லாம் ஓக்கே. ஆனா வாரத்துக்கு ரெண்டுநாள் கொஞ்சம் ஸ்க்ரூ லூஸா இருக்கும்னு?” என்றாள்

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

செவிக்குரிய குரல்கள் எவை?

$
0
0
sundar

சுந்தர்லால் பகுகுணா.

அன்புள்ள ஜெ,

 ஒரே ஒரு வினா. நீங்கள் சுப.வீரபாண்டியன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் உங்களைப்பற்றியும் இன்றைய காந்தியைப்பற்றியும்கூட எழுதியிருக்கிறார். சுப.உதயகுமார் பற்றி எழுதியதனால் இதைக் கேட்கிறேன்

அன்புடன்

எஸ்.ஆர்.மாதவன்

medha

மேதா பட்கர்

அன்புள்ள மாதவன்,

நான் யார் என்பது எனக்குத்தெரியும். எந்த எழுத்தாளனும் அவனுடைய முக்கியமான படைப்பை எழுதியதுமே அதை உணர்வான். அந்தப்பீடம் மீது நின்றுகொண்டே எழுத்தாளன் என்பவன் எதிர்வினையாற்றுவான்

நான் எதிர்வினையாற்றுபவர்கள் இருவகை. முதல்சாரார், உண்மையில்  கற்றவர்கள், சிந்தனைத்தளத்தில் பங்களிப்புள்ளவர்கள். அவர்கள் மேல் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கையில்கூட அவர்கள் மேல் உண்மையான மதிப்பு கொண்டிருக்கிறேன். நான் உணர்ச்சிகரமானவன் என்பதனால் சிலசமயம் பேச்சு சற்றுகூடிப்போகும்.[இப்போது என் தளத்தை பெண்கள் எடிட் செய்வதனால் கொஞ்சம் நிதானம் வந்துள்ளது. ஆனாலும் அவர்களை மீறி சில பிரசுரமாகிவிடும்] அப்படி கூடிப்போகும்போது அதற்காக வருந்துவேன்.

எனக்கு எதிர்நிலை எடுப்பவர்கள் கெட்டவர்கள் என்று நம்பவேண்டும் என்றுதான் என் வஞ்சம் சொல்கிறது. அதை என் மூளையால் அடித்து ஒடுக்கித்தான் அவர்களை நோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது. அவர்களின் நூல்களை பயில்வதுதான் அதற்கான சிறந்த வழி., அப்போது அவர்கள் நம் ஆசிரியர்களாக ஆகிவிடுகிறார்கள். நாம் ஆசிரியர்களை அனைத்துக்கும் அப்பால் நேசிக்கமுடியும்.

amark

உதாரணமாக அ.மார்க்ஸ். அவருடைய கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய அரசியல் எதிர்மறைத்தன்மையும் அழிவுப்போக்கும் கொண்டது. ஆனால் அவர் எழுதிய அத்தனை நூல்களையும் வாசிக்கிறேன். பெயர் சொல்லாவிட்டாலும் அவருக்கு எழுத்திலும் மானசீகமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டே இருக்கிறேன்.

அவர் மிகக்கடுமையாக என்னைப் பற்றி எழுதியிருக்கிறார். உண்மையாகவே எந்த வருத்தமும் இல்லை. அப்படி அவர் எழுதக்காண்கையில் ஒருவகை மகிழ்ச்சிதான். எப்படியோ நாம் சற்று அத்துமீறியிருந்தால் நிகராகிவிட்டது, குருசாபம் என்றெல்லாம் ஒன்றும் வந்து விழுந்துவிடாது என்னும் ஆறுதல். மிகக்கடுமையான பூசலில் இருக்கிறோம் என்றாலும் எஸ்.வி.ராஜதுரையும் எனக்கு அந்நிலையில் இருப்பவரே.

eSvi

எஸ்.வி.ராஜதுரை

இன்னொரு தரப்பு, செயல்பாட்டாளர்கள். அவர்களின் பணி மிகமிகக் கடினமானது என்று எனக்குத்தெரியும்.பேசுவது எளிது, இந்நாட்டில் மக்களைத் திரட்டுவதும் அவர்களிடையே பணியாற்றுவதும் மிகமிக சவாலானது. உளச்சோர்வு கொள்வோம், தோல்விகள் அடைவோம்.கைவிடப்படுவோம். ஆயினும் அத்தகையவர்களால்தான் நம் சமூகம் முன்னேறுகிறது. அவர்கள் நம் சமூகத்தின் உப்பு

ஆகவே நான் களத்தில் நின்று பணியாற்றும் அத்தனைபேரிடமும் மானசீகமான பணிவையே கொண்டிருக்கிறேன். அவர்கள் செய்வதை என்னால் செய்யமுடியாது என ஆழமாக உணர்வதனால்தான். எழுதவந்த காலம் முதல் அத்தகையவர்களைப் பற்றி எழுதி வந்திருக்கிறேன். அவர்கள் வீரநாயகர்கள், நான் அவர்களைப் போற்றும் கவிஞன் என்றே உணர்கிறேன்

நானாஜி தேஷ்முக் முதல் அண்ணா ஹசாரே வரை, கிருஷ்ணம்மாள்- ஜெகன்னாதன் முதல் டாக்டர்.கே வரை, ஈரோடு ஜீவா முதல் என்னைவிட இளையவரான வா.மணிகண்டன் வரை என் மனநிலை இதுவே. எந்தத் தயக்கமும் இல்லாமல் அத்தகையோருக்காக நான் குரல்கொடுப்பது இதனால்தான்

KrishnammalJagannathan

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

இவர்களிலும் எனக்கு ஒவ்வாத கருத்துடையவர்கள் உண்டு. பீயூஷ் மனுஷ் பேசுவதும் சரி, உதயகுமாரின் அரசியல்நோக்கும் சரி என்னால் ஏற்கமுடியாதனவே. ஆனால் அவர்கள் ஆற்றும் பணி முக்கியமானது என நினைக்கிறேன்

இந்தியா போன்ற நாட்டில் சூழியல் சார்ந்தும், மக்களின் வாழ்வுரிமைசார்ந்தும், மனித உரிமைகள் சார்ந்தும் மிகவலுவான அமைப்பு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாகவேண்டும். அரசின் முற்றாதிக்கத்துக்கு அத்தளங்களை விட்டுவிடக் கூடாது. இங்கே அரசு என்பது அதிகாரிகள்தான். அரசியல்வாதிகளும் அவர்களை இயக்கும் பெருமுதலாளிகளும்தான். அவர்களின் கருணைக்கு எளியோரை விட்டுவிடக்கூடாது.


Sugathakumari1 (1)

சுகதகுமாரி

மக்களின் எதிர்ப்பு ஒருங்கிணைக்கப்படுவதும் அது மிகவலுவான ஒரு தரப்பாக நின்றிருப்பதும் நம் ஜனநாயகத்துக்கு மிகமிக அவசியமானது. இந்த எண்ணத்தை நான் என் இளமைக்கால ஆசிரியர்களான காந்தியவாதிகள் பி.கே.பாலகிரு￰ஷ்ணன் ஜி.குமாரபிள்ளை, எம்.கே.கங்காதரன் ஆகியோரிடமிருந்து பெற்றேன். இன்றும் என்னை இயக்கும் நம்பிக்கைகளில் ஒன்று இது

ஆகவேதான் சுந்தர்லால் பகுகுணா, மேதா பட்கர், சுகத குமாரி, அன்னா ஹசாரே என அத்தனை களப்பணியாளர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அதற்காக பயணங்கள் செய்திருக்கிறேன். பலரை நேரில் சென்று சந்தித்திருக்கிறேன். எண்பதுகளில் எழுதவந்த காலம் முதல் என் எழுத்தின் கணிசமான ஒரு பகுதி அவர்களைப் பற்றித்தான். [பழைய தினமணி இதழ்களில் அக்கட்டுரைகள் பல இருக்கலாம்]

இவர்கள் இரு சாராரையும் பற்றி நான் கருத்துச் சொல்வேன். மறுப்பேன், வாதாடுவேன், கண்டிப்பேன். அவர்களைப்பற்றிய மதிப்புடனேயே அதைச்செய்வேன். ஏனென்றால் நான் இத்தலைமுறையின் முக்கியமான எழுத்தாளன். வாழும் சொல் கொண்டவன். பாரதியின் புதுமைப்பித்தனின் வழித்தோன்றல்.

எழுத்தாளன் ஒரு கருத்து சொல்கையில்,ஒருவரை எதிர்கொள்கையில் அவன் இருக்கும் மரபு என்ன என்னும் உணர்வு அவனுக்கு வேண்டும். தமிழ் எழுத்தாளர்களுக்குப் பொதுவாக இல்லாமலிருக்கும் உணர்வென்பது இந்த நிமிர்வே. ஜெயகாந்தனிடமிருந்து அதை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். எழுத்தாளன் என்னும் தன்னுணர்வுகொண்ட அத்தனைபேரிடமும் என் கோரிக்கை இதுவே

மூன்றாவது தரப்பு சிந்தனையோ களப்பணியோ இல்லாத வெற்று அரசியல்வாதிகள். அவர்கள் இன்று திசையெங்கும் பெருகி நாள்தோறும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேச்சுக்களுக்கும் அறிவியக்கத்துக்கும் ஊடாட்டமே இல்லை. என் நோக்கில் சீமான், திருமுருகன் காந்தி, நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, வினவு கோஷ்டியினர் போன்றவர்களும் அத்தகையவர்களே. அவர்களின் ஏதேனும் ஒவ்வாத கருத்து மக்களிடையே செல்வாக்கு பெறும் என்றால் அதைக் கண்டிக்கலாம்.

nanaji

நானாஜி தேஷ்முக்

 

இன்று சமூகவலைத்தளங்கள் வந்தபின்னர் எந்த முட்டாளும் கணிப்பொறியில் அமர்ந்து எல்லாம்தெரிந்தவர்போல கருத்துச் சொல்லலாம்.ந் நேற்று டீக்கடையில் நின்று இதைச் சொல்லிக்கொண்டிருந்தனர். எதையும் செய்யாதவர்கள். எதையும் இழக்காதவர்கள். அதற்கான ஆன்மிகமான துணிவோ அர்ப்பணிப்போ இல்லாத எளியவர்கள். ஏதேனும் மத, சாதி, அரசியல் பற்று கொண்டவர்கள். அதனடிப்படையில் எந்த சிந்தனையையும் எந்தக் களப்பணியையும் இழிவுபடுத்த தங்களுக்கு உரிமை உண்டு என நினைக்கும் அறிவிலிகள். இவர்களை நான் ஒருபொருட்டாக நினைப்பதில்லை.

சுப.வீரபாண்டியன் இவர்களில் யார்? கண்டிப்பாக முதல் இரண்டு தரப்பிலும் அவர் இல்லை. அவர் எதையாவது வாசிப்புசார்ந்து, சிந்தனை சார்ந்து சொல்லி நான் அறிந்ததே இல்லை. அவர் களப்பணியாளரா? இல்லை, அவருடையது சுயமுன்னேற்ற கட்சியரசியல் மட்டுமே அவர் மூன்றாம் தரப்பும் அல்ல. சீமான் போல திருமுருகன் காந்தி போல அவருக்கு எந்த பின்னணியும் இல்லை.

 va.manikandan

வா மணிகண்டன்

 அப்படியென்றால் அவர் யார்? வெற்றிகொண்டான் போல, தீப்பொறி ஆறுமுகம் போல, வண்ணை ஸ்டெல்லா போல, நாஞ்சில் சம்பத் போல, வே.மதிமாறன் போல ஒரு எளிய கட்சிப்பிரச்சார மேடைப்பேச்சாளர் மட்டுமே. தமிழகத்தில் தெருவுக்குத்தெரு இத்தகையவர்கள் மலிந்திருக்கிறார்கள். வெறுப்பரசியலின் மொழியில், மலினமான ரசனைக்கு உணவிடும்வகையில் எகிறி எகிறிப் பேசிக் எளியவர்களைக் கவர்பவர்கள். அதற்கான கூலியைப் பெற்று வாழ்பவர்கள். அவர்கள் சொல்வனவற்றுக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஆக, என் அக்கறையின் பட்டியலை அளித்துவிட்டேன். நாளுக்கு ஒரு கடிதம் இந்தக்கூட்டத்தில் எவரேனும் பேசுவதை மேற்கோளாக்கி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு வந்துகொண்டிருக்கிறது. அனைவருக்கும் ஒரே பதில், இறுதியாக

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39

$
0
0

38. முகில்பகடை

flowerஅரசவைக்கு அருகே இருந்த சிற்றறையில் விராடரும் அவருடைய அகம்படியினரும் அரசிக்காக காத்துநின்றிருந்தனர். பேரரசி வருவதைப் பார்த்து விராடரின் கோல்காரன் கையசைத்தான். அப்பால் பேரவையில் மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் முழங்கின. அங்கிருந்த அமைச்சர் அழைக்க கோல்காரன் சீரடி வைத்து முன்னே சென்று அவைக்குள் புகுந்து அறிவிப்புமேடைமேல் வெள்ளிக்கோலைச் சுழற்றி “நிஷாதகுடிகளின் விராடக்கூட்டமைப்பின் தலைவர், நிஷதப் பேரரசர் மாமன்னர் மகாகீசகரின் வழித்தோன்றல், தீர்க்கபாகு அவை புகுகிறார்” என்று அறிவித்தான். வாழ்த்தொலிகளின் நடுவே இரு கைகளைக் கூப்பியபடி விராடர் நடந்து சென்று அரியணை அருகே நின்று இருபுறமும் நோக்கி வணங்கினார். இரு குடித்தலைவர்கள்  வந்து அவரை வழிநடத்தி அரியணை அமரவைத்தனர்.

சுதேஷ்ணையின் கோல்காரன் அவை புகுந்து அவள் வரவை அறிவித்தான். “கேகயத்து அரசி, விராடபுரியின் பேரரசி, சுதேஷ்ணை அவைபுகுகிறார்” என்று அவன் கூவ அவை வாழ்த்தொலிகளை சீரான அலைகளாக எழுப்பியது. சுதேஷ்ணை அவைபுகுந்து வணங்கி அவை மேடையில் ஏற இரு மூத்தகுடி பெண்டிர் அவளை கைபற்றி அழைத்துச் சென்று அரியணையில் அமரவைத்தனர். அவளுடன் சீர்நடையிட்டுச் சென்ற திரௌபதி அரியணையின் பின்பக்கம் நின்றாள்.

ஏவலர் பொற்தாலத்தில் கொண்டு வந்த மணிமுடியை குடிமூத்தார் இருவர் விராடருக்கு அணிவித்தனர். மங்கல மூதன்னையர் இருவர் அரசியருக்குரிய மணிமுடியை சுதேஷ்ணைக்கு அணிவித்தனர். கருவூலத்திலிருந்து வந்த செங்கோலை மூத்த குடிமக்கள் இருவர் எடுத்தளிக்க விராடர் வாங்கி வலக்கையில் பற்றி ஊன்றிக்கொண்டார். அந்தணர் எழுவர் வந்து கங்கைநீர் தெளித்து விராடரையும் அரசியையும் வாழ்த்தி வேதம் ஓதினர். அவர் கைகூப்பி அவ்வாழ்த்தை ஏற்று அமர்ந்திருந்தார்.

வாழ்த்தொலிகள் பெண்டிரின் குரவையொலிகளுடன் கலந்தொலித்துக்கொண்டிருக்க கோல்காரன் வந்து உத்தரனின் அவை நுழைவை அறிவித்தான். உத்தரன் சற்று அப்பால் அவையினர் அனைவரும் நோக்கும்படியாக நின்று தன் ஆடை மடிப்புகளை சீரமைத்துக்கொண்டிருந்தான். கழுத்தில் அணிந்திருந்த சரப்பொளி அவன் திரும்பித் திரும்பி சேடியரிடம் பேசுகையில் அடுக்கு குலைந்திருந்தது. அவன் பெயர் அறிவிக்கப்பட்டபோது ஒரு சேடி அதை சுட்டிக்காட்ட அவன் பதற்றத்துடன் அதை சீர் செய்யத்தொடங்கினான். அவன் பெயர் அறிவிக்கப்பட்டு முடிந்த பின்னரும் அவன் அதை அறியவில்லை.

இரு சேடியர் அவனைத் தொட்டு “இளவரசே, தங்கள் பெயர்” என்றனர். “என்ன?” என்று அவன் கேட்டான். ஒருத்தி உரக்க “அவை புகுங்கள்” என்றதும் துரத்தப்பட்டவன்போல பாய்ந்து அவைக்குள் புகுந்து விரைந்து வந்துவிட்டோமோ என்ற தன்னுணர்வை அடைந்து நின்று மிக மெல்ல நடந்து அரச மேடைக்கருகே வந்து கைகூப்பி வணங்கினான். அது நன்கு பயிலாத நடனம்போல் தோன்றியது. அவையின் பின்பகுதிகளில் சிரிப்பொலி எழுந்தது. அது தனக்குரிய பாராட்டென்று எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை வணங்கி அவன் நடந்து அன்னையருகே சென்று நின்றான்.

அங்கு நின்றிருந்த மூதன்னையர் கைகாட்டி “மறுபுறம்” என்றனர். “என்ன?” என்று அவன் கேட்டான். “தங்கள் இடம் மறுபுறம், இளவரசே” என்றாள் மூதன்னை. அவையே அக்குழப்பத்தை நோக்கி சிரித்துக்கொண்டிருந்தது. உத்தரன் அரியணையை பின்பக்கமாக சுற்றி வந்து தந்தை அருகே நின்றான். தன் கழுத்திலணிந்திருந்த அணிகளை சீரமைத்து ஆடைமடிப்புகளை நீவிக்கொண்டான்.

உத்தரையின் கோல்காரன் அவை புகுந்து அவள் வரவை அறிவித்தான். “விராடபுரியின் இளவரசி உத்தரை அவை புகுகிறார்.” உத்தரன் அவையினர் பேரொலி எழுப்பி அவளை வரவேற்பதை பார்த்தான். பின்பு திரும்பி அவள் அவை புகுவதை நோக்கினான். அவளை அவர்கள் மதிப்பது அவ்வொலியில் அவனுக்குத் தெரிந்தது. அது அவனுக்கு உவகையை அளித்தது. உத்தரையின் மேலாடை சற்றே சரிந்து பின்னால் இழுபட்டது. தொடர்ந்து வந்த சேடியிடம் உத்தரன் கையால் சுட்டி “மேலாடை, மேலாடை!” என்று காட்டினான். அவள் புருவம் தூக்கி “என்ன?” என்றாள். “மேலாடை” என்றான் அவன்.

அவனருகே நின்றிருந்த காவலன் “இளவரசே, அசையாமல் நில்லுங்கள்” என்றான். “ஏன்?” என்று அவனிடம் கேட்டான். காவலன் பல்லை கடிக்க அவன் திரும்பி சேடியிடம் “மேலாடையை பற்று, கால் தடுக்கப்போகிறது” என்று மீண்டும் சொன்னான். சேடி குனிந்து மேலாடையைப்பற்றி எடுக்க புன்னகையுடன் “ஆம்” என்று தலையசைத்தான். பின்னர் காவலனிடம் “என்ன சொன்னாய்?” என்றான். காவலன் பெருமூச்சுடன் தலைவணங்கினான்.

உத்தரை அவைபுகுந்து அனைவரையும் வணங்கி அரசமேடையில் ஏறி தன் அன்னையை நோக்கி செல்ல அவள் பின்னால் சென்ற அச்சேடியிடம் அவளுடைய ஆடை நீட்சியை மேலும் சற்று தூக்கிக்கொள்ளும்படி உத்தரன் கைகாட்டினான். அவள் இதழ்கோட புன்னகைத்து அப்பால் சென்றாள். உத்தரை சென்று நின்று மீண்டும் ஒருமுறை வணங்கியதும் வாழ்த்தொலிகள் உச்சமடைந்து மறைந்தன. உத்தரன் தன் உடைவாள்மேல் கைவைத்து அதை மெல்ல அசைத்தான். அது எழுப்பிய ஓசை கேட்டு விராடர் திரும்பிப்பார்த்தார். காவலன் “வாள்மேல் கைவைக்க வேண்டாம், இளவரசே” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அது முறைமை அல்ல” என்று அவன் சொன்னான். “நன்று” என்று அவன் கையை எடுத்தான். அந்தக் கையை எங்கு வைப்பது என்று தெரியவில்லை. ஆகவே மார்பில் கட்டிக்கொண்டான்.

அவை அமைதியடைந்திருந்தது. அது சோர்வின் அமைதி என அவர்கள் அமர்ந்திருந்தமை காட்டியது. எவரும் எதையும் செவிகொடுக்கவில்லை. நிமித்திகன் மேடையேறி விராட அரசகுடியின் கொடிவழியினர் பெயர்களை ஒவ்வொன்றாக அறிவித்துக்கொண்டிருந்தான். மகாகீசகரிலிருந்து தொடங்கிய இருபத்திஎட்டு அரசர்களின் பெயர்கள் சொல்லி முடிக்கப்படுகையில் வெளியே வாழ்த்தொலியும் சங்கொலியும் எழுந்தன. அனைவரும் உயிரசைவுகொண்டு திரும்பி நோக்கினர். நிமித்திகன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கி “மச்சர்குலத்து இளவரசர், பெரும்படைத்தலைவர் கீசகன் வருகிறார்” என அறிவித்தான்.

அவ்வாறு அவையறிவிப்பு அரசகுடியினருக்கு மட்டுமே அமைந்தது. ஆகவே அரசரிடம் கூறும் தன்மையில் திரும்பி ஆனால் அறிவிப்பின் குரலில் அதை அவன் சொன்னான். விராடர் கைகாட்டினார். அவர் ஏற்கெனவே அரைத்துயிலில் ஆழ்ந்திருந்தார். மங்கிய கண்களுக்கு கீழே தசைவளையங்கள் தளர்ந்து தொங்கின. வாய் சற்றே திறந்திருக்க அவ்வப்போது குறட்டைபோல் ஓர் ஓசை எழுந்தது. அரசி வாயிலை சுருங்கிய விழிகளுடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். உத்தரன் தன் ஆடையை சீரமைத்தபோது காவலன்மேல் கைபட அவனை நோக்கி புன்னகை செய்தான்.

தோளில் வெண்பட்டுச் சால்வை நழுவி தரையிழைய கங்கணம் அணிந்த பெரிய கைகளைக் கூப்பியபடி கீசகன் அவைக்குள் நுழைந்தான். உத்தரன் கீசகன் நுழைவதை பார்க்கவில்லை. சலிப்புடன் அவை முறைமையை கேட்டுக்கொண்டு எழுந்த கோட்டுவாயை அடக்கிக்கொண்டிருந்தவன் அவை பெருமுழக்கமிடுவதைக் கண்டு திடுக்கிட்டு வாயிலைப் பார்த்து கீசகன் நுழைந்ததைக் கண்டான். முழுதணிக்கோலத்தில் மெல்ல நடந்து அவைக்குள் வந்த கீசகன் விராடர் முன்வந்து முறைப்படி தலைவணங்கி முகமனுரைத்தான். “நிஷதப்பேரரசின் அரசருக்கு தலைவணங்குகிறேன். வெற்றியும் சிறப்பும் சூழ்க! திருமகள் மடியமர்க! படைநிரைகளை பார்வையிடச் சென்றிருந்தேன், வருவதற்கு சற்று பிந்திவிட்டது. பொறுத்தருளவேண்டும்.”

சலிப்புடன் “நன்று” என்று விராடர் சொன்னார். கீசகன் சீர்நடையிட்டுச் சென்று அவனுக்குரிய பீடத்தில் அமர்ந்தான். அவன் அன்னச்சிறகு வடிவில் தோள்வளைகள் அணிந்திருந்தான். மார்பில் இடைவரை வந்த பெரிய சரப்பொளி நலுங்கியது. காதுகளில் மச்சக்குழைகளில் அருமணிகள் ஒளிசிதறின. இடையில் பொற்கச்சையை இறுக்கி அதில் செவ்வைரங்கள் அனலென சுடர்ந்த பொற்செதுக்குப்பிடி கொண்ட குத்துவாளை அணிந்திருந்தான். அவன் அமர்ந்தபோது அணிகள் பலநூறு இமைப்புகள் கொண்டன.

கீசகனுக்குரிய பீடம் பிற பீடங்களிலிருந்து தனித்து சற்று உயரத்தில் போடப்பட்டிருந்தது. மற்ற பீடங்களைவிட மும்மடங்கு பெரிதாக, அவனுடலுக்கு உரியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது பிறிதொரு அரியணை என்பதை அவையோர் அறிந்திருந்தனர். அவன் அப்பீடத்தில் சரிந்தமர்வதுவரை அவை வெடிப்பொலியுடன் வாழ்த்துரைத்தபடியே இருந்தது. அவன் அமர்ந்து அவையை நோக்கி தலையசைத்து வணங்கியதும் வாழ்த்தொலிகள் மெல்ல அமைந்து அவையினர் தங்கள் பீடங்களில் மீண்டும் அமர்ந்தனர். அவன் உடலை எளிதாக்கி கால்களை நீட்டிக்கொண்டு கைகளை மார்பில் கட்டிக் கொண்டான்.

உத்தரன் அவனுடைய பேருடலையே பார்த்துக்கொண்டிருந்தான். இரு கைகளும் இரு தனிமனிதர்களைப்போல் பீடத்தின் கைப்பிடியில் அமைந்திருந்தன. இரு தோள்களும் இருபக்கமும் விரிந்து எழுந்திருக்க அவன் தலை படகில் அமர்ந்திருக்கும் மனிதனைப்போல அவனுக்குத் தோன்றியது. அதை எவரிடமாவது சொல்ல விரும்பி திரும்பி காவலனைப் பார்த்துவிட்டு அவன் கண்களால் உளம் அடங்கப்பெற்றான். அவன் தொடைகளும் இரு மல்லர்களின் பெருவயிறுபோலத் தோன்றின. ஆனால் கணுக்கால்களும் பாதங்களும் மிகச் சிறியவை. அவன் அதை எவரிடமாவது சொல்ல விரும்பினான். ஆனால் காவலனுக்கு அப்பால் மறுபக்கம்தான் சேடியர் நின்றிருந்தனர்.

மீண்டும் நோக்கை விலக்கி கீசகனின் தோளிலிருந்து இறங்கி புயத்தின் தசையில் பாறைமேல் விழுதென வளைந்து படிந்து முழங்கையில் கிளைபிரிந்திருந்த நரம்பை உத்தரன் பார்த்தான். இளவயதில் அவன் மடியில் அமர்ந்து அந்நரம்புகளை அழுத்தி விளையாடும் வழக்கம் அவனுக்கு இருந்தது. “அது என்ன?” என்று அவன் கீசகனிடம் ஒவ்வொரு முறையும் கேட்பான். “குருதிக்குழாய்” என்று அவன் சொல்வான். “அதற்குள் என்ன ஓடுகிறது?” என்று அவன் கேட்பான். “யவனமது, சற்று குருதி” என்று கீசகன் மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி சொல்ல அவன் தன் கையை நீட்டி அதில் மெல்லிய நீல நரம்பைக் காட்டி “இதில் என்ன ஓடுகிறது?” என்பான். “அதில் ஓடுவது அச்சம்” என்று சொல்லி தன்னைச் சூழ்ந்திருந்த அணுக்கர்களைப் பார்த்து நகைப்பான். அவன் வேடிக்கை சொல்லும்போது உடன் நகைப்பதையே தொழிலெனக்கொண்ட அவர்கள் நகைத்து கூச்சலிட்டு அறையை நிறைப்பார். உத்தரன் அவர்களை மாறிமாறி நோக்கியபின் தானும் நகைப்பான்.

கீசகனின் நோக்கு இயல்பாக அவையைத் துழாவி திரௌபதியைத் தொட்டு திகைத்து விலகி மீண்டும் அவளை வந்தடைந்து நிலைகொண்டது. அவள் அவன் விழிகளை நேருக்கு நேராக நோக்கியபின் இயல்பாக திரும்பிக்கொண்டாள். அந்நோக்கிலிருந்த இயல்புத்தன்மையால் சீண்டப்பட்டவன்போல அவன் மெல்ல அசைந்தான். மின்மினிகள் பரவிய மரத்தடிபோல அவன் உடலில் நகைமணிகள் ஒளியசைவுகொண்டன. வளைந்த மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி அவளையே நோக்கிக்கொண்டிருந்தான்.

உத்தரன் கீசகன் திரௌபதியை நோக்குவதை அப்போதுதான் பார்த்தான். திரும்பி திரௌபதியைப் பார்த்து அவள் தோள்களும் எத்தனை பெரியவை என்ற எண்ணத்தை அடைந்தான். பெண்களுக்கு அத்தனை பெரிய தோள்கள் அமைந்திருப்பதை அவன் முன்னர் கண்டதில்லை. முற்றிலும் நிகர்நிலைகொண்ட தோள்கள். எடைதூக்கும் துலா நடுவே நின்றிருக்கும் அச்சு என தலை. நன்கு தீட்டி மெல்லிய எண்ணெய்ப் பூச்சு அளிக்கப்பட்ட கற்சிலை போன்று மின்னும் உடல். சுவரில் வரையப்பட்ட கொற்றவைப் பாவைகளில் விரிந்து எழுந்தவை போன்ற நீள்விழிகள். அலையலையென இறங்கி தொடை வரை வந்த நெளிகூந்தல். விரிந்த தோள்களுக்கும் திரண்ட பின்பகுதிக்கும் நடுவே இறுகிய இடை.

பெண்டிர் நிற்கையில் ஒரு காலை சற்று முன்நகர்த்தி இடையொசித்து தோள்சரித்து நிற்பதைத்தான் அவன் அதற்குமுன் பார்த்திருந்தான். பேராலயத்தில் எட்டு கைகளிலும் படைக்கலமேந்தி நின்றிருக்கும் கொற்றவையின் நிகர்நிலையில் அவள் நின்றமை அவனுக்கு அச்சத்தை அளித்தது. விழிகளை விலக்கிக்கொண்டான். அவளை எதிர்கொள்ள தன்னால் முடியாது எனத் தோன்றியது. மீண்டும் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். மூக்கு வளைவு, சிறிய உதடுகள் அனைத்தும் சிற்பச்செதுக்கென கூர்மைகொண்டிருந்தன. அவன் பெருமூச்சுவிட்டான்.

அவன் அவையைப் பார்த்தபோது அங்கிருந்த அனைவரும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தான். அவைநிகழ்வுகள் வழக்கம்போல சென்றுகொண்டிருந்தன. பொதிவண்டியின் காளைகளின் கழுத்து மணியோசைபோல அவ்வுரையாடல் என்று அவனுக்குத் தோன்றியது. கூர்ந்து கேட்டால் வெவ்வேறு வகையான ஓசைகளும் தாளமும் தெரியும். பொதுவாகக் கேட்டால் ஒரே ஓசை மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருப்பதுபோல் தோன்றும். நிமித்திகர் அறிவிப்புகளை முடித்து இறங்கிச் சென்றதும் அமைச்சர் அவை மேடையில் ஏறி அன்று நிகழவேண்டிய அலுவல்களைப்பற்றி கூறினார். ஏடு ஒன்றிலிருந்து ஆணைகளை அவர் படிக்க அருகே நின்றிருந்த சிற்றமைச்சர்கள் உரக்க “மறுப்புகள் உண்டா?” என்றனர். அவை சோர்ந்த கலைந்த குரலில் “இல்லை” என்றது. முரசில் ஒருமுறை முட்டி “ஆணை எழுந்தது!” என நிமித்திகன் அறிவித்தான்.

குடிமூத்தார் ஒருவர் எழுந்து சூலகக்குடியின் மேய்ச்சல்புறங்களில் சற்று வறட்சி இருப்பதையும் ஆநிரைகள் போதிய உணவில்லாமல் மெலிவதையும் கூறினார். அப்பகுதிக்கு மேலதிக உலர்புல் வந்து சேரும்படி வணிகர்களுக்கும் ஆணையிட வேண்டும் என்றார். விராடர் அவ்வண்ணமே என்று தலையசைக்க கீசகன் எழுந்து “எந்தக் குடிக்கும் அவர்களின் அன்றாடச் செயல்களை நிகழ்த்துவதற்கு அரசர் உதவலாகாதென்பது அரசநூல் வகுக்கும் நெறிகளில் ஒன்று. அவ்வாறு அரசு உதவத் தொடங்கினால் அது முடிவின்றி நீளும். இப்பகுதி ஆண்டில் ஒருமுறை மழையைப் பெறுவது என்பது உங்களுக்குத் தெரியும் ஆநிரைகளை அதையொட்டி பெருக்குவது உங்கள் பொறுப்பு. ஆநிரைகள் உண்பதற்கான உலர்புல்லை முன்னரே சேர்த்து வைக்காதது உங்கள் பிழை. உங்கள் பிழைகள் எதற்கும் அரசு நிகர் செய்யாது” என்றான்.

“ஆனால்…” என்று அவர் சொல்லத் தொடங்க “இது அரசநெறி. அதை மீற வேண்டுமென்று அரசர் ஆணையிட்டால் அவ்வண்ணமே” என்றான் கீசகன். விராடர் குறுஏப்பம் விட்டு “ஆம், அவர் சொல்வது சரியானதே. நாளை இதே கோரிக்கையுடன் பிறிதொருவர் வந்தால் நாம் என்ன செய்வோம்?” என்றார். அவர் உரக்க “சென்ற பதினாறு வருடங்களில் இம்முறைபோல ஒருமுறையும் மழை பொய்த்ததில்லை. அதிலும் விராட நாடெங்கும் மழை பொழிந்தபோது எங்கள் மலைப்பகுதியில் மட்டும் மழை பொய்த்துள்ளது. இதை நிமித்திகர் உரைக்கவில்லை. கணியரும் கூறவில்லை. நாங்கள் எப்படி இதை முன் உணர்ந்திருக்க முடியும்?” என்றார்.

அவையை நோக்கித் திரும்பி “கேளுங்கள், எங்கள் மலைப்பகுதிக்கு முறையான வண்டிப்பாதை இல்லை. எனவே உலர்புல் வர இயலாதென்று வணிகர்கள் சொல்கிறார்கள். கழுதைகளிலும் அத்திரிகளிலும் புல்லை ஏற்றிக்கொண்டு வரலாம். அச்செலவை எங்களால் ஏற்க இயலாது. அதைத்தான் இந்த அவையில் நான் சொன்னேன்” என்றார். “நாங்கள் மரப்பட்டைகளையும் கற்றாழைகளையும் வெட்டி மாடுகளுக்கு உணவளிக்கிறோம். கோல்கொண்டமர்ந்த அரசனின் கீழ் கன்றுகள் உணவில்லாமல் இறந்தால் அந்தப் பழி எங்களுக்கில்லை…”

கீசகன் தாழ்ந்த குரலில் “நீங்கள் அரசுக்கு ஆணையிடுகிறீர்கள்” என்றான். அவர் அவனுடைய சிறிய கண்களைப் பார்த்து குரல் தணித்து நோக்கு விலக்கி “இல்லை, மன்றாடுகிறோம்” என்றார். “ஒன்றுமட்டும்தான் தடை இதில். இத்தருணம் மீண்டும் எக்குடிக்கும் நிகழலாம். ஒவ்வொரு முறையும் அரசு தன் கருவூலத்திலிருந்து கொடையளிக்க இயலாது. இத்தருணத்தை நீங்களே எதிர்கொள்ளவேண்டும். அதை பிற குடியினர் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். பிறிதொரு வழியில்லை” என்றான் கீசகன்.

உத்தரன் சலிப்புடன் திரும்பி பெருமூச்சுவிட்டான். விராடர் திரும்பி நோக்க சேடி ஒருத்தி வெற்றிலைத் தாலத்தை நீட்டினாள். அதில் ஒரு சுருளை எடுத்து வாயிலிட்டார் அரசர். அவள் மெல்ல பின்னகர உத்தரன் அவளிடம் “நான் எப்போது அமரமுடியும்?” என்று கேட்டான். “சற்று நேரத்தில்” என்று அவள் உதடசைவால் சொன்னாள். “கால் கடுக்கிறது” என்று அவன் சொன்னான். தன் விழிகளால் சுட்டிக்காட்டி ‘தரையில் அமருங்கள்’ என்றாள் அவள். உதடசைவிலிருந்து அவள் என்ன சொல்கிறாளென்பதை புரிந்துகொண்டு ‘உன்னை நான் பிறகு சந்திக்கிறேன்’ என்று அவன் விழிகாட்டினான். அவர்கள் விழிகளால் பேசிக்கொள்வதைக் கண்ட முதுமகளொருத்தி இளஞ்சேடியிடம் விழிகளால் ‘பின்னால் போ’ என்றாள். அவள் தலைதாழ்த்தி பின்னால் சென்றாள்.

உத்தரன் விழிகளை விலக்கிக்கொண்டு அவையை பார்த்தான். அனைவரும் சோர்ந்ததுபோல் இருந்தனர். சொல்லைப்போல் சோர்வுறச் செய்வது பிறிதில்லை என்று அவன் எண்ணினான். பிறிதொரு குடித்தலைவர் எழுந்து ஏதோ ஒரு கோரிக்கையை சொல்ல அனைவரும் கீசகனை பார்த்தனர். கீசகன் “அரசாணை குடிமுறைப்படி நிகழட்டும்” என்றான். “ஆம் அமைச்சரே, அரசாணை எழுக!” என்றார் விராடர். அமைச்சர் “இது சார்ந்து முன்னரே படைத்தலைவரின் செயலாணை ஒன்றுள்ளது. அதையே மீண்டும் பிறப்பிக்கலாம்” என்றார். “அவ்வண்ணமே” என்றார் விராடர். முரசு முழங்க ஆணை அறிவிக்கப்பட்டது.

flowerவெளியே இருந்து காவலன் ஒருவன் எட்டிப்பார்த்துவிட்டு வெளியே செல்லப்போக விராடர் அவனை நோக்கி “வருக” என்றார். அவன் வந்து வணங்கி முகமன் உரைத்து “அரசரை சந்திக்க காந்தார நாட்டிலிருந்து நூல்கற்ற பேரறிஞர் ஒருவர் வந்துள்ளார். அவைபுக ஒப்புதல் உண்டா என்று வினவுகிறார்” என்றான். விராடர் அவைநிகழ்வுகளால் சலிப்புற்றவர் போன்றிருந்தார். ஆர்வத்துடன் “காந்தார நாட்டிலிருந்தா? இத்தனை தொலைவுக்கு ஏன் வந்தார்?” என்றார். கீசகன் “அவர் ஷத்ரியர் அல்ல என்றால் அவைபுகலாம்” என்றான். “ஆம், ஷத்ரியர் அல்ல என்றால் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றார் விராடர். காவலன் வணங்கி வெளியே சென்றான்.

விராடர் கீசகனிடம் “நமது அவையில் நூல் கற்றோர் சிலரே. மேலும் சிலர் இருப்பது இந்நகரை ஆள்வதற்கு உதவும்” என்றார். கீசகன் இகழ்ச்சியுடன் “பதினாறு ஆண்டுகளாக இங்கு நகராள்கிறேன். இன்றுவரை நாம் செவிகொள்ளும் ஒரு சிறந்த கருத்தை எந்த நூலறிஞரும் சொன்னதில்லை. நாம் ஆணையிடுவதை இயற்றுவதற்கேகூட நாமே கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இங்குள்ள அமைச்சர்கள் கண்டறிவதெல்லாம் அவற்றை இயற்றாமல் இருக்கும் குறுக்கு வழிகளை மட்டுமே” என்றான். விராடர் நகைத்து “ஆம், மெய்தான்” என்றார்.

சுதேஷ்ணை எரிச்சலை மறைக்கும்பொருட்டு சிரித்துக்கொண்டு “ஆனால் அறிஞர்கள் மிகுந்தோறும் அவைத்திறன் மேம்படுகிறது அல்லவா? நமது அரசு இப்போது வணிகத்திலும் அயலுறவிலும் விரிந்து வருகிறது. அவை பெருகுவது தேவைதான்” என்றாள். “அவை என்பது படை போன்றது. படைத்தலைவனின் எண்ணமே படையென பரு வடிவாகிறது. ஆள்பவனின் அறிவே அவையென அவன் முன் திரள்கிறது” என்று கீசகன் சொன்னான். “நாம் பார்ப்போம். காந்தாரத்திலிருந்து ஒருவர் வரும்போது புதிய சிலவற்றை நம்மால் எதிர்பார்க்க முடியுமல்லவா?” என்றாள் சுதேஷ்ணை. “ஐயமே தேவையில்லை. எந்த வினாவுக்கும் ஏதேனும் ஒரு நூல் வரியை மேற்கோள் காட்டும் பிறிதொரு கற்ற மூடராகவே அவர் இருப்பார். ஊன்றிக் கேட்டால் முதல் மேற்கோளுக்கு முற்றிலும் மாறான பிறிதொன்றை சொல்வார்” என்று கீசகன் சொன்னான். அவன் அணுக்கர்கள் நகைத்தனர்.

காவலன் அவைக்குள் நுழைந்தபோது அத்தனை விழிகளும் அத்திசை நோக்கி திரும்பின. இரு புரியாக தாடியை முறுக்கி முடிச்சிட்டு, தலையில் கரிய துணியொன்றை பாகையாகக் கட்டி, மரவுரி அணிந்து, தோல்கச்சை சுற்றி கையில் சுவடிக்கூடையுடன் தருமன் அவை நுழைந்தார். அவையை வணங்கிவிட்டு மன்னரை நோக்கி இடைவரை குனிந்து வணங்கினார். “என் பெயர் குங்கன். காந்தார நாட்டவன். உவச்சர் குலத்தில் பிறந்து நிமித்தநூல் கற்றேன். கணிகனாகத் தேர்ந்தேன். எட்டு குருநிலைகளில் அரசுசூழ்தலையும் நெறிநூல்களையும் பயின்றேன். இன்று விராடப் பேரரசரின் அவை புகும் பேறு பெற்றேன். பேரரசியின் கருணையை அடைவேன் என்றால் நிறைவுறுவேன்” என்றபின் திரும்பி “ஆனால் இந்த அவையில் நான் மட்டுமே சொல்லும் சொல் என ஏதும் எழ வாய்ப்பில்லை. உள்ளே நுழைந்ததுமே அவ்வெளிமையுணர்வை அடைந்தேன். கருணையினால் என்னை அவையமர்த்துக! தகுதியினால் அல்ல” என்றார்.

விராடர் நகைத்து “ஏன்?” என்றார். “உள்நுழையும்போதே பெரும்படைத்தலைவரை பார்த்தேன். நான் முகக்குறிநூல் கற்றவன். எட்டுமுறை சொல்சூழ்ந்து உட்பொருள் அறியும் நுண்திறன் கொண்டவர் என்பதை காட்டுகிறது அவர் விழி. அவர் விழைந்தால் அவர் விழையும் சொல்லை கோத்து அளிப்பவனாக இருப்பேன்” என்றார். கீசகன் முகம் மலர்ந்ததை உத்தரன் பார்த்தான். சிறிய கண்களில் மெல்லிய நகைப்புடன் “எவரிடம் முகப்புகழ் உரைக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம், தங்களிடம் புகழ்மொழிகள் கரும்பாறையில் ஏவப்பட்ட அம்புகளென முட்டி பயனற்று உதிருமென்றும் உணர்ந்திருக்கிறேன்” என்றார் தருமன்.

உரக்க நகைத்தபடி கீசகன் “நன்று. சொல்தேர்ந்தவர் நீர்” என்றான். “அப்பால் நிமித்த குறியும் தேர்ந்தவன். அது என்னவென இந்த அவையில் என்னால் கூற முடியாது. ஆனால் மச்சஇளவரசருக்கு அது தெரியும் என அறிவேன்” என்றார் தருமன். கீசகன் கண்கள் ஒரு கணம் மாறின. அவன் விழிகளைத் தவிர்த்து மீண்டும் விராடரை வணங்கிய தருமன் “விராடபுரி பெருவெற்றியை அடையப்போகிறது. தென்னகம் முழுக்க இக்கொடி பறக்க இருக்கிறது. பாரதவர்ஷத்தின் அரசியல் நெறிகளை அமர்ந்து ஆய்ந்து அதை அறிந்த பின்னரே இங்கு வரத் தலைப்பட்டேன். இங்கு அவையமர்ந்திருக்கையில் இமயமலைமுடியில் அமர்ந்து சூழ்ந்த நிலவிரிவை பார்க்கும் முழுமை நோக்கை நான் அடைய முடியும். ஆகவேதான் நெடுந்தொலைவு நடந்து ஓராண்டு கடந்து இங்கு வந்து சேர்ந்தேன்” என்றார்.

மீசையைச் சுழற்றியபடி “என்னை நீர் முன்னறிந்திருக்கிறீரா?” என்று கீசகன் கேட்டான். “நேர்ச்சொல்லெடுத்து உரைக்கவேண்டும் என்றால் இளவரசே, நான் தங்களை மட்டுமே அறிந்தேன். இந்நகருக்குள் புகுந்த பின்னரே தாங்கள் அரசரல்ல படைத்தலைவரென்று அறிந்தேன்” என்றார் தருமன். “நன்று குங்கரே, நீர் இந்த அவையில் அமரலாம். விழைந்த இடத்தை விளையும் செயல் மூலம் அடையலாம்” என்று கீசகன் சொன்னான். சுதேஷ்ணை  “குங்கரே, தாங்கள் இங்கு அவை நுழைகையில் இங்கொரு சொல்லாடல் முடிந்திருந்தது. அதை அமைச்சர் உரைப்பார். உம் கருத்து என்ன என்று சொல்லும்” என்றாள். தருமன் “ஆணை, அரசி” என தலைவணங்கினார்.

அமைச்சர் சொல்லி முடித்ததும் தருமன் கீசகரை நோக்கி “தாங்கள் உரைத்தவற்றிலிருந்து மாறுபட்டு நான் உரைக்கிறேன் என்றால் பொறுத்தருள்க, இளவரசே. என் சொல் மாறுபடுமென்றால் என் அறிதல் பிழையானதென்பதை முன்னரே ஒப்புக்கொள்கிறேன்” என்றபின் “ஒரு குடி அடையும் இழப்புகளுக்கு ஒருபோதும் அரசு நிகர் செய்யலாகாது. அது வரும் நாளில் வரவிருக்கும் அனைத்து இழப்புகளுக்கும் அத்தனை குடிகளும் அரசிடம் இழப்புக்கொடை கேட்க வாய்ப்பளிக்கும். அரசின் செயல் ஒரு தனிநிகழ்வு அல்ல, முடிவிலாது நீண்டு எழப்போகும் அனைத்து செயல்களுக்கும் முற்கோளும் கூட. எந்த முடிவும் இது இனி வரும் காலங்களில் எப்படி தொடரும் என்று எண்ணாமல் எடுக்கப்படலாகாது” என்றார்.

“அத்தருணத்தில் உரிய முடிவை எடுப்பவர்கள் எண்ணிச் சூழ்பவர்கள். வரும் தருணத்தையும் எண்ணி அம்முடிவை எடுப்பவர்களே பேரரசுகளை உருவாக்குபவர்கள். அவர்களால்தான் பெருநிலங்களை ஆளமுடியும்” என்றார் தருமன். “ஓர் அவையில் அத்தகைய ஒருவர் மிக அரிதாகவே அமையமுடியும், மலைகள் நடுவே உச்சிமுடிபோல. அத்தகையோரை புரிந்துகொள்ள முயலக்கூடாது. அடிபணிந்தாகவேண்டும்.”

மீசையை சுட்டுவிரலால் நீவியபடி புன்னகையுடன் தருமனையே பார்த்துக்கொண்டிருந்தான் கீசகன். தருமன் தலைவணங்கி “நான் தங்கள் சொல்லுக்கு மாற்றென எதுவும் சொல்லவில்லை என்று எண்ணுகின்றேன்” என்றார். இல்லை என்பதுபோல் கீசகன் கைகாட்டினான். “அப்படியானால் எந்தக் கொடையும் அளிக்கவேண்டியதில்லை அல்லவா?” என்று விராடர் கேட்டார். “இல்லை அரசே, ஒரு குடியை கைவிடுவதும் முற்கோளென்றாகுமே? வருங்காலத்தில் இடருறும் குடிகளை அரசு காக்காதென்பது ஒரு சொல்லென்று நிலைபெறுமே? ஆகவே அதை தவிர்த்தே ஆகவேண்டும்” என்று தருமன் சொன்னார்.

கீசகன் விழிகள் சற்று சுருங்க கூர்ந்து பார்த்தான். “இந்நாட்டில் எங்கு வழக்கத்திற்கு மிகுதியாக மழை பெய்துள்ளதென்று பார்ப்போம். பொய்த்த மழையின் முகில்கள் அங்கு சென்று பெய்திருக்கின்றன என்றே அதற்குப் பொருள். அந்த மழையைப் பெற்றவர்கள் இம்முறை சென்ற முறையைவிட மிகுதியாக அளிக்கவிருக்கும் வரியை மழைபொய்த்த குடியினருக்கு அளிக்கட்டும். பின்னாளில் இவர்கள் மண்ணில் மழை பொழியும்போது அதை கருவூலத்திற்கு அளிக்கட்டும். எவரும் கைவிடப்படவும் இல்லை. எவருக்கும் அரசுக் கருவூலம் கொடையளிக்கவும் இல்லை என்றாகும்” என்றார் தருமன்.

சில கணங்கள் அவை அமைதியாக இருந்தது. அது கீசகனின் சொல்லுக்காக காத்திருந்தது. கீசகன் எழுந்து “உரிய சொல், உரிய முறையில் உரைக்கப்பட்டது. நன்று” என்றான். “ஆம், அறிஞனின் சொல்! நெறியையும் நெறிக்கு அப்பால் செல்லும் உள்ளுணர்வையும் வெளிப்படுத்துவது. நாம் நமது அவையில் முதன்மை அறிஞர் ஒருவரை பெற்றிருக்கிறோம்” என்று விராடர் சொன்னார். அவை வாழ்த்துக்குரலெழுப்பியது. தருமன் அவைநோக்கி தலைவணங்கினார். “இந்த அவையில் முதன்மை அறிஞராக தாங்கள் வீற்றிருக்கவேண்டும், குங்கரே” என்று விராடர் சொன்னார்.

“பெரும்படைத்தலைவர் அவ்வாறே ஆணையிடுவாரென்றால் அது என் நல்லூழ்” என்றார் தருமன். “நாம் உம்மை அவ்வாறு பணிக்கிறோம்” என்று கீசகன் சொன்னான். கீசகனை நோக்கி மீண்டும் ஒருமுறை தலைவணங்கினார் தருமன்.  உத்தரன் நீள்மூச்சுவிட்டு அசைந்து நின்றான். அவனிடம் காவலன் “இனி தாங்கள் அமரலாம், இளவரசே” என்றான். “இனி நூலாய்வுதான்.” உத்தரன் “அவை முடியப்போகிறது. இனி அமர்ந்தால் என்ன, இல்லையேல் என்ன?” என்று முணுமுணுத்தபடி தனக்கு அளிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

இசையும் மொழி

$
0
0

ramez

அன்பு ஜெ.,

”நான் எண்ணும் பொழுது…” – எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல். குறிப்பாக, பயணங்களில் கேட்பேன். அப்பாடலின் மூலப் பிரதியாக ஹிந்தியில் வந்த “நா ஜியா லாகே நா”-வைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால அதற்குமான மூலப் பிரதி ’சலீல்தா’வின் தாய்மொழியான வங்காளத்தில் (அதே லதா பாடியது) “நா மொனோ லாகே நா” என்பதாகும். சலீல்தா அமைத்த மெட்டுக்களில் மிக ஆத்மார்த்தமான ஒன்றாக இப்பாடலை, அதிலும் அதன் பல்லவியை உணர்கிறேன். இத்தகவலைச் சுட்டிக்காட்டுவதன் பின்னணி, என்னதான் இசைக்கலைஞன் மொழிகளைக் கடந்தவொரு பிரபஞ்ச மொழியில் இயங்குபவனாக இருந்தாலும் அவனது தாய்மொழி சார்ந்து இயங்குகையில்தான் அந்த இசை என்னும் மீமொழி அவனில் பேரழகு கொள்கிறது என்று படுகிறது. ’நமது’ இசைஞானி நல்ல சான்று அல்லவா? அதற்காகத்தான் இத்தகவலை எழுதத் தோன்றிற்று. மேலும், ஹிந்தி திரையுலகின் இசைத்துறையில் கணிசமாக வங்காளிகளே பங்களிப்புச் செய்திருக்கிறார்கள் என்பதன் காரணிகள் பற்றியும் இங்கே யோசிக்கத் தூண்டுகிறது. (தந்தையும் தனயனுமான எஸ்.டி.பர்மன் மற்றும் ஆர்.டி.பர்மன், தனயனின் பல அற்புதமான பாடல்களுக்குக் குரல் நல்கிய கிஷோர் குமார் ஆகியோர் ஒரு பொற்காலத்தையே உருவாக்கியவர்கள் அல்லவா?).

salil

ரமீஸ் பிலாலி

திருச்சி.

அன்புள்ள ரமீஸ் பிலாலி அவர்களுக்கு,

நலம்தானே? பிரபஞ்சக்குடிலில் [பிரபஞ்சக்குடில்] சாரா பற்றிய கட்டுரை வாசித்தேன். நல்ல கட்டுரை

நீங்கள் சொல்வதை நாம் வெவ்வேறு தளங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது. உலக இசைமேதைகள் அப்படி மொழி எல்லைக்குள் இயங்கியவர்களா? இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது

ஆனால் திரையிசைக்கு மொழி முக்கியமா? ஆம், முக்கியம் என்று தோன்றுகிறது. இது சலீல்தாவின் பெரும்பாலான பாடல்களைக் கேட்கும்போது தோன்றுவது. அவருடைய அற்புதமான பல பாடல்களில் இசையில் வரிகள் அமையவில்லை. அந்த வரிகளின் உணர்வுகளுக்கும் இசைக்குமிடையே ஒரு விலகல் இருந்துகொண்டே இருக்கிறது. [இதைச்சொன்னால் என் நண்பரும் சலீல்தாவின் பக்தருமான ஷாஜி சென்னை சங்கைக்கடிக்க வருவார்.]

சலீல்தா மலையாள மொழியை கற்றுக்கொள்ளவில்லை. அதன் நுட்பங்களுக்குள் அவர் செல்லவில்லை. ஆகவே மிக நல்ல வரிகள் கூட சம்பந்தமில்லாத இசையை அணிந்திருக்கின்றன. நான் என்னும் பொழுது பாடலில்கூட இசை சரியாக சொற்பொருளில் அமையவில்லை. ”நான் எண்ணும்பொழுது” என தொடங்கும் வரிகளில் உள்ள கடந்தகால ஏக்கம் அல்ல அந்த மெட்டு அளிப்பது

உண்மையில் நான் நெடுங்காலம் ‘நான் என்னும் பொழுது’ என்ற பொருளில் ‘நான் எனப்படும் தற்காலம்’ என்று இவ்வரிகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கவித்துவமாக இருப்பதாகக்கூட தோன்றியது.

ஜெ

***

இனிய உரையாடல். அதை நிறைவுறுத்த இசையுடன் இசைந்த சலீல்தாவின் பாடல்

***

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அமுதம் – கடிதங்கள்

$
0
0
surya
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
அமுதமாகும் சொல் சமீபத்தில் படித்தேன். அது தந்த ஆச்சரியங்களில், அதிசயங்களில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறேன். ஒரு சொல் திறந்து ஒரு பிரபஞ்சமாக விரியும் என்றால், நீங்கள் இதுவரை எழுதிய, பேசிய சொற்கள் எத்தனை எத்தனை பிரபஞ்சங்களை வாசகர்களுக்கு திறந்து காண்பித்திருக்கும் என்பதை நினைத்தாலே பிரமிக்கிறது. இது போன்ற எழுத்துக்களை ஒருஇருபது வருடம் முன்பே படித்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் முதலில் எழ, பிறகு இப்போதாவது படிக்க முகூர்த்தம் வாய்த்ததே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

வேதங்கள், மந்திரங்கள் என்றாலே அது எனக்கானது இல்லை , வேறு யாருக்கோ என்ற மனநிலையில் இருந்தேன். இக்கட்டுரை படித்த பிறகு வேதங்களில் மந்திரங்களில் பொதிந்துள்ள பொக்கிஷங்களை தேடி செல்ல மனம் விரும்புகிறது. இப்பொழுதெல்லாம் ஒரு கதையோ, கவிதையோ, கட்டுரையோ படிக்கையில், அதன் மொத்த சாராம்சத்தை உள்ளடக்கிய ஒரு சொல் அதனுள் இருக்கிறதா என்று மனம் துழாவுகிறது. சமீபத்தில் அறம் தொகுதியில் உள்ள “மத்துறு தயிர்” சிறுகதையை மீண்டும் படிக்க நேர்ந்தது.

முதல் வாசிப்பில் இந்த சிறுகதை குரு சிஷ்யன் பற்றிய கதை என்று நினைக்க, இரண்டாம் வாசிப்பில் ‘ராஜபிளவை’ எனும் சொல் மேலும் மேலும் பிளந்து பிளந்து , விரிந்து விரிந்து பல பிரபஞ்சங்களை திறந்தது. குரு-சிஷ்யன் பிரிவு, காதலன்-காதலி பிரிவு, கணவன் (ராமன்) – மனைவி (சீதை) பிரிவு, மேய்ப்பனை பிரிந்த ஆட்டுக்குட்டி, பரமாத்மாவை பிரிந்து தத்தளிக்கும் ஆத்மா என்று பிரிவின் துயரத்தின் பல்வேறு பரிமாணங்களை , ஆழங்களை, அகலங்களை காண்பிக்கிறது “மத்துறு தயிர்”.

பால் தயிராக வேண்டும் என்றால் சிறிதளவு தயிர்/உறை மோர் எடுத்து பாலில் விடுகிறோம். அது போல் குருவின் சிறு பகுதி சிஷ்யனுக்குள் நுழைந்த பிறகு பல மாற்றங்கள் நிகழ்கிறது. பால்->தயிர்->நெய்->தீபம்->ஒளி எனும் அற்புத பயணம் சில சமயம் ஊழ்வினையால் முழுமை அடையாமல், பயணத்தின் திசை மாறி இருளில் முடிந்து விடுகிறது. கதையின் நாயகன் கடைசி வரியில் குருவை மானசீகமாய் வணங்கி விட்டு இருளில் சென்று மறைகிறார். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி “இருளிலிருந்து ஒளிக்கு” என்கிற “அமிர்த சொல்” மட்டுமே என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்,

ராஜா,

சென்னை.

***

அன்புள்ள ராஜா,

ஒரு குறிப்பிட்ட மனநிலை அமைவதுவரை சில விஷயங்கள் திறந்துகொள்வதில்லை. அதற்காகக் காத்திருக்கவேண்டியதுதான். தொடங்குக

ஜெ

***

அன்புள்ள ஜெ

அமுதமாகும் சொல் சுருக்கமான அழகான கட்டுரை. விரிவான கட்டுரைகளை எழுதுபவர் நீங்கள் என்கிறார்கள்.குறைவான சொற்களில் ஒரு விஷயத்தை முழுமையாகவே விளக்கும் செறிவான கட்டுரைகள் பலவற்றை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். காந்தியம் என்றால் என்ன என்ற சுருக்கமான கட்டுரை, தமிழ் தி ஹிந்துவில் வெளிவந்தது, அத்தகைய கட்டுரை. தடம் இதழில் வெளிவந்த உணர்கொம்புகள் கட்டுரையும் அப்படிப்பட்டது. ஆனால் அமுதமாகும் சொல் ஒரு கிளாஸிக் உதாரணம். மிகச்சுருக்கமான கட்டுரை இது. ஆனால் சொல்லவேண்டிய எல்லாமே சொல்லப்பட்டுள்ளது. சொல் எப்படி மந்திரமாக ஆகும் என்றும் அது நவீன வாழ்க்கையில் எப்படி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்லி இரண்டுவகையான மந்திரங்களையும் விளக்குகிறீர்கள். முக்கியமான திறப்பு அது

ராமச்சந்திரன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பார்ப்பனன் என்னும் சொல்

$
0
0
vaiyapuri pillai

எஸ்.வையாபுரிப்பிள்ளை

அன்புள்ள ஜெயமோகன்,

‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.”

சுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கதினரின் பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று அடையாளப் படுத்துகிறீர்கள். உங்கள் பதிவு வலையேற்றம் செய்யப்ப்டுவதற்கு சற்று முன் நான் பேஸ்புக்கில் எழுதியக் குறிப்பில் இருந்து:

“ஒருச் சொல் காலப்போக்கில் வெவ்வேறு அர்த்தங்களையும் குறியீடுகளையும் அடையும். தொன்றுத் தொட்டு இலக்கியத்திலும் பொது வழக்கிலும் ‘பார்ப்பான்’ என்பது ‘பார்ப்பனர்’ என்பதும் வழக்கத்தில் இருந்தவையே. பாரதியே ‘பார்ப்பான்’ என்று தான் எழுயிருக்கிறான் என்பார்கள். ஆமாம். ஆனால் அதே பாரதி ‘செட்டி’, ‘பறையன்’ என்றும் எழுதியிருக்கிறான். இன்று தலித் சமூகத்தினரை பழங்கால வார்த்தையைக் கொண்டழைப்பது ஆபாசம், வக்கிரம், சட்ட விரோதம். அந்தச் சொல் தங்களை அவமதிப்பதாக அவர்கள் எண்ணுவதால் இன்றுத் தங்களை குறிப்பதற்கென்று வேறுச் சொல்லையே பயன் படுத்த அவர்களும் சட்டமும் கூறுகிறது.

ஈவெராவின் வெறுப்பரசியலால் இன்று பிராமணர்கள் ‘பார்ப்பான்’, ‘பார்ப்பனர்’ ஆகியவை வசைச் சொற்கள் என்றுக் கருதுகிறார்கள். ஒருச்சமூகம் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் தான் இன்று தலித் சமூகத்திடையேக் கூட காந்தி உபயோகித்த ‘ஹரிஜன்’ எனும் பெயர் மறுக்கப்படுகிறது.”

அரவிந்தன் கண்ணையன்

***

aravi

அரவிந்தன் கண்ணையன்

அன்புள்ள அரவிந்தன்,

ஓர் எளிய விவாதத்தில் இருந்து தொடங்குகிறேன். 1926-ல் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமையில் தமிழ்ப்பேரகராதி ஒன்றை தயாரிக்கும்பணியை அன்றைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் அரசு தொடங்கியது. 1936லும் 1939லும் அதன் முதல்வடிவம் வெளியாகியது. 1954ல் தான் முழுமையான வடிவம் வெளியாகியது.

ஒரு மொழியின் முதல் பேரகராதி உருவாக்கம் என்பது எளிய பணி அல்ல. சொற்களைத் திரட்டுவதற்கும் தொகுப்பதற்கும் இன்றைய நவீன வசதிகள் இல்லை. தமிழ் மக்களிடையே புழங்கும் சொற்கள் அனைத்தும் தமிழ்ச்சொற்களே என்பது அவ்வகராதியின் முதல்கொள்கை. அச்சொல் தமிழிலக்கியத்தில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆதாரமாக எடுத்து அளித்தார்கள்.

இன்றும் பிரமிப்பூட்டும் பணியாக அது உள்ளது. ஆலயம் தொழுவதுபோல் ஒவ்வொருநாளும் இந்த பேரகராதியின் அட்டையை பிரித்துக்கொண்டிருக்கிறேன். மிக அரிய, வழக்கொழிந்துபோன வட்டாரச்சொற்களைக்கூட அதில் காணமுடிகிறது. நானும் நாஞ்சில்நாடனும் சமீபத்தில் மலேசியாவில் இப்பணியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நாஞ்சில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

ஆனால் எஸ்.வையாபுரிப்பிள்ளை அன்றைய பலதரப்பினராலும் மிகமிகக் கீழ்த்தரமாக வசைபாடப்பட்டார். அவருடைய தாயின் கற்பே பெரும்பாலும் வசைக்குரியதாக இருந்தது. திராவிட இயக்கத்தவர் தேவநேயப் பாவாணர் தலைமையில் அதற்கு எதிரான பெரிய வெறுப்பியக்கத்தையே ஆரம்பித்தனர். அவர்கள் ஆட்சிக்குவந்தால் வையாபுரிப்பிள்ளையின் அகராதி கடலில் தூக்கிப்போடப்படும் என்றும், புதிய ‘சரியான’ அகராதி தயாரிக்கப்படும் என்றும் சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த ஐம்பதாண்டுக்காலத்தில் இன்றுவரை அப்படி ஒரு பேரகராதி முழுமையாகத் தயாரிக்கப்படவில்லை. பல திட்டங்கள் வகுக்கப்பட்டு பலகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பெரும்பாலான முயற்சிகள் பாதிக்கிணறு தாண்டின. பல முயற்சிகள் வையாபுரிப்பிள்ளை அகராதியின் எளிய நகல்கள். வையாபுரிப்பிள்ளை அகராதியே இன்றும் தமிழ்ப்பேரகராதியாக நீடிக்கிறது. அதற்கு மறு அச்சுதான் வந்திருக்கிறதே ஒழிய மறுபதிப்பு கொண்டுவர இன்று ஆளில்லை.

அந்த எதிர்ப்புகள் குவிமுனை கொண்ட இடம் என்ன தெரியுமா? அவ்வகராதியில் வையாபுரிப்பிள்ளை ‘முதலி’ ‘செட்டி’ என்று சொற்பொருள் கொடுத்திருந்தார். அது தங்கள் சாதியினரை இழிவுசெய்வது என்றும் முறையே முதலியார் என்றும் செட்டியார் என்றும்தான் இருக்கவேண்டும் என்றும் அச்சாதியினர் பொங்கி எழுந்தனர். அவர்களை ஆதரித்து களமிறங்கினர் திராவிட இயக்கத்தவர்.

வையாபுரிப்பிள்ளை செட்டி என்றும் முதலி என்றும்தான் நூல்களில் இருக்கிறது என்றும், அச்சாதியினர் தங்கள் பெயரை தாங்களே எழுதும்போது செட்டி என்றும் முதலி என்றும்தான் எழுதுகிறார்கள் என்றும், ஆர் விகுதி மதிப்புக்குரியவர்களைச் சுட்டும்போது பிறரால் சொல்லப்படுவது என்றும், தன் பெயரை தானே பிள்ளைவாள் என்று போட்டுக்கொள்வதில்லை என்றும் சொல்லிப்பார்த்தார். கண் உடையும் வசை. இன்றுகேட்டாலும் கூசும் சொற்கள்.

அவர்கள்தான் இன்று பார்ப்பனர் என்று சொல்லலாம் அது வசை அல்ல என்று சொல்கிறார்கள். வையாபுரிப்பிள்ளை பார்ப்பனன் என்னும் சொல்லை அகராதியில் சேர்த்திருக்கிறார். அது வசை அல்ல. ஆவணப்படுத்தல்.

தங்கள் தலைவர்களை பெயர் சுட்டிச் சொல்வதே அவமதிப்பு என எண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலைகொண்ட கும்பல் இதைச் சொல்கிறது. பட்டப்பெயரால் தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்பவர்கள் உலகநாகரீகம் பற்றிப் பேசுகிறார்கள்.

அத்தனைக்கும் மேலாக சில சொற்கள் சொல்பவரால் வசை என பொருள் அளிக்கப்படும். கேரளத்தின் கீழோர் தமிழர்களை பாண்டிகள் என்பார்கள். நேர்ப்பொருள் பாண்டியநாட்டைச்சேர்ந்தவன் என்பதே. அவர்கள் அளிக்கும்பொருள் இழிந்தவன் என்பது. ஆகவே அது ஒரு வசைச்சொல்லே. சென்னையில் தெலுங்கர்களை கொல்ட்டிகள் என்கிறார்கள். வேடிக்கைச்சொல் அது. ஆனால் வசையாக அது பயன்படுத்தப்படும் என்றால் வசையே

ஒரு சாதி அல்லது குழு தங்களை ஒரு சொல் வசை எனக் கருதுகிறது என்றால் அதை சொல்வது வசையேதான். தமிழ்மரபில் முடவன் என்றும் நொண்டி என்றும் பெட்டை என்றும் பேடி என்றும் மூளி என்றும் எத்தனையோ சொற்கள் உள்ளன. அவை இன்று வசைகளாக ஆகிவிட்டன .அதைத் தவிர்ப்பதே நாகரீகம்.

ஆனால் அரசியல்நாகரீகத்திற்கும் வெறுப்பரசியலுக்கும் என்ன தொடர்பு? திராவிட இயக்க மேடைப்பேச்சாளர்கள் கடந்துசென்ற எல்லைகள் எல்லாம் மிகமிக அரியவை.

தங்களைத் தாங்களே வசைபாடிக்கொள்ளும்போதும் அவர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அதன் தடயங்களை பாரதிதாசன் அண்ணாத்துரைபற்றிச் சொன்னபோதும் வை.கோபாலசாமி மு.கருணாநிதி பற்றி சொன்னபோதும் கண்டோம்.

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40

$
0
0

39. நிலைக்கல்

flower“ஒவ்வொரு தருணத்திலும் வாள்முனையில் குருதித்துளி என வரலாறு ததும்பி திரண்டு காத்திருக்கிறது. ஓர் அசைவு, ஒரு காற்று போதும்” என்று விறலி சொன்னாள். “அவ்வாறு நிகழ்ந்தது அந்த ஊண்மனைக் கொலை. நளன் வாள்தாழ்த்திய பின்னரே என்ன நிகழ்ந்தது என உணர்ந்துகொண்டார். மேலும் முன்னகர்வதே வழி என அவர் வாள் அவரிடம் சொன்னது. அவர் ஆணைக்கேற்ப காளகக்குடியினர் உணவை அள்ளி வாயிலிட்டு உண்ணத் தொடங்கினர். பெரும்பாலானவர்களுக்கு அன்னம் இறங்கவில்லை. மூச்சு திணறினர், இருமினர். நீரை எடுத்துக் குடித்து அதையும் விழுங்க முடியாது குமட்டல் கொண்டனர்.”

அகத்தளத்தின் சிற்றவையிலமர்ந்து சுதேஷ்ணையும் திரௌபதியும் விறலியின் கதையை கேட்டுக்கொண்டிருந்தனர். “அன்று பந்தியிலிருந்து எழுந்து சென்றவர்கள் பலரும் நடக்கமுடியாமல் படிகளில் கால்தளர்ந்து அமர்ந்தனர். சிலர் வெளியே வாயுமிழ்ந்தனர். சிலர் தேரிலேறி அமர்ந்ததும் கண்கலங்கி அழத்தொடங்கினர். செய்தி நகரெங்கும் பரவியதும் குடிகள் அனைவருமே நளனுக்கும் தமயந்திக்கும் எதிராகத் திரும்பினர். ஆனால் படைகளின் வாள்நிழலில் சொல்லெடுக்க எவராலும் இயலவில்லை. குடிக்கூடல்களில் முணுமுணுப்புகளாக, உறுமல்களாக எதிர்ப்புகள் எழுந்தன” என்றாள் விறலி.

புஷ்கரன் தன் அரண்மனைக்குச் சென்றதுமே கருணாகரர் சென்று அவனை வயப்படுத்த முயன்றார். மூத்தவனுக்கும் இளையவனுக்குமான பூசலை முடிந்தவரை சீரமைக்க எண்ணினார். ஆனால் புஷ்கரன் எவ்வகையிலும் செவிகொடுக்க சித்தமாக இருக்கவில்லை. குடித்தலைவரின் இறப்பு நிகழ்ந்த அந்நாளில் மணமங்கலம் நிகழமுடியாது என்று அவன் சொன்னான். காளகக்குடி மூத்தவர் எழுவர் சென்று தன் அகத்தளத்து அவையில் அவர்களை சந்தித்த தமயந்தியிடம் சீர்ஷரின் உடலை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரினர். அவள் அவரை அரசமுறைப்படி சிதையேற்ற தானும் உடன் வருவதாக சொன்னாள். அவர்கள் அதற்கு ஒப்பாமல் அந்த உடலை தாங்களே தங்கள் குலமுறைப்படி சிதையேற்றுவதாக சொன்னார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் விழிதொட்டுக்கொள்ளவே இல்லை.

“அவர் குடித்தலைவர். அவருடைய உடல் அரசச்செங்கோல் தாழாமல் சிதையேற முடியாது” என்றாள் அரசி. “இங்கே தெற்கு மயானத்தில் அவரை சிதையேற்றுவோம். அனைத்து ஏற்பாடுகளும் செய்யவேண்டும் என்று நான் கருணாகரருக்கு ஆணையிடுகிறேன். அரசியென நான் வந்து சிதைமுன் முடிதாழ்த்துகிறேன்.” அவர்கள் சொல்லில்லா முகத்துடன் நின்றனர். “குடியவை கூடுக! அரசுமேல் எத்தகைய பழிநிகரை அவர்கள் ஆணையிட்டாலும் அதை ஏற்கிறேன்” என்றாள். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். கருணாகரர் “ஏதேனும் ஒரு வழியை நாம் கண்டடைந்தே ஆகவேண்டும், குடித்தலைவர்களே” என்றார். “அதன்பொருட்டு எதற்கும் நான் ஒருக்கமே” என்று தமயந்தி சொன்னாள்.

அவர்களில் மூத்தவரான சுநீதர் “அதை நாங்கள் கூடிப் பேசி முடிவெடுத்து சொல்கிறோம். அதற்குமுன் சீர்ஷரின் உடலை எங்களிடம் அளிக்க ஆணையிடுக! அவரை நாங்கள் எங்கள் குடிமண்டபத்திற்கு கொண்டுசென்று வைத்து பிழைநிகர் செய்யவேண்டும். அதற்கு பன்னிரண்டு நிலை சடங்குகள் உள்ளன என்கிறார்கள். அதன் பின்னர் நாளை புலரியில் சிதையேற்றம் நிகழட்டும்” என்றார். “ஆம், உங்கள் குடியவை கூடி ஆவன செய்யட்டும். அது ஆணையிடும் எச்செயலுக்கும் அரசு ஒருக்கமாகவே உள்ளது” என்றாள் தமயந்தி. அவர்கள் அதை ஏற்று பிறவற்றை பின்னர் உரைப்பதாக உறுதியளித்து திரும்பிச்சென்றார்கள்.

சீர்ஷரின் உடலில் வெட்டுண்ட தலையை சேர்த்துப்பொருத்தி தையலிட்டனர் மருத்துவர். அதை கஸ்தூரியும் புனுகும் சவ்வாதும் பூசி சந்தனப்பேழையில் நிறைத்த நறுமணநீற்றில் வைத்து ஏற்றி காளகக்குடிகளின் குடிமண்டபத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அரசின் சார்பில் நளனின் உடைவாளை ஏந்தி சிம்மவக்த்ரன் செல்ல மணிமுடியின் இறகொன்றை தன் தலையில் சூடியபடி நாகசேனர் உடன் சென்றார். சீர்ஷரின் உடல் அரண்மனை வளைவை விட்டு பெருஞ்சாலையை அடைந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் குறுமுழவுகளையும் துடிகளையும் முழக்கி பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். காளகக்குடியினர் நெஞ்சில் அறைந்து அழுதபடி தேருக்குப் பின்னால் ஓடினர்.

கருணாகரரை அழைத்த அரசி “அங்கே குடியவை கூடட்டும். அதற்கு நானே மணிமுடியும் செங்கோலுமாகச் சென்று அவை நிற்கிறேன். அவர்கள் என்னை எச்சொல்லால் பழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். இத்தருணத்தை நாம் கடந்துசென்றே ஆகவேண்டும், அமைச்சரே” என்றாள். “ஆம், ஆனால் உடல் அங்கு சென்றதும் குடிகளின் உணர்ச்சிப்பெருக்கு சற்று நேரம் அலையடிக்கும். அது சற்று அடங்கட்டும். மூத்தார் அவையமர்ந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்ததும் தாங்கள் கிளம்பலாம்” என்றார்.

“அவர்கள் அரசர் வந்து பிழைபொறுக்கக் கோரவேண்டுமென விரும்புவார்கள். அரசரிடம் பேசி அழைத்துவருகிறோம் என்போம். அதற்கு நமக்கு இரண்டு நாட்கள் பொழுது கிடைத்தால் போதும். இப்போதுள்ள உணர்வெழுச்சிகள் இரண்டு நாட்களுக்குள் நுரையடங்குமென நினைக்கிறேன்.” தமயந்தி பெருமூச்சுவிட்டு “எண்ணிப் பார்க்கையில் அச்சம் சூழ்கிறது. நாமறியா ஏதோ தீயூழ் சூழ்வதுபோல” என்றாள். கருணாகரர் வெறுமனே தலைவணங்கினார்.

ஆனால் சீர்ஷரின் உடலை அவர்கள் குடிமண்டபத்தில் மக்கள் முன் வைக்கவில்லை. அரசப்படைகளிடமிருந்து அதை பெற்றுக்கொண்டு அப்படியே தட்டுத்தேர் ஒன்றில் ஏற்றிக்கொண்டு நகரைவிட்டு வெளியேறினர். அவர்களுடன் காளகக்குடிகளின் பெருந்திரள் சூழ்ந்து வெறிக்கூச்சலும் போர்விளியும் முழக்கியபடி சென்றது. சிம்மவக்த்ரன் புரவியில் திரும்பி வந்து தன் அறையில் நிலையழிந்து காத்திருந்த தமயந்தியிடம் செய்தியை சொன்னான். கருணாகரர் “மிகச் சிறந்த சூழ்ச்சி. அவ்வுடலுடன் அவர்கள் விஜயபுரிக்கு திரும்பிச் செல்வார்கள் என்றால் செல்லும் வழியெங்கும் காளகர் அவர்களுக்குப்பின் திரள்வார்கள். பிற குடியினரும் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றன. இறந்த உடல்போல மிகச் சிறந்த படைக்கொடி பிறிதில்லை” என்றார். “அவர்களை தடுத்து நிறுத்துவோம்” என்றார் நாகசேனர். “இல்லை, இத்தனை பெருங்கூட்டம் உடன்செல்கையில் அதை செய்ய முடியாது” என்றான் சிம்மவக்த்ரன்.

நாகசேனர் “இந்த எண்ணம் எவர் உள்ளத்தில் எழுந்தது? இத்தனை தெளிவாக திட்டமிட அங்கு எவருமில்லையே?” என்றார். “அது கலிங்க இளவரசியின் திட்டம்” என்றார் கருணாகரர். “அவளை கலிங்க அரசவையில் நான் முதலில் கண்டபோது அந்தச் சூழ்ச்சி எதையும் உணரமுடியாத மெல்லியள் என்று எண்ணினேன். அவள் அவையில் எழுந்து நின்று நீர்படர்ந்த விழிகளுடன் புஷ்கரரை அவளுக்குத் தெரியாது என்று சொன்னபோது பிறிதொன்றாக அது இருக்கவியலாதென்றே எண்ணினேன். பதினேழு அகவை முடிந்ததும் எந்தை என்னை அமைச்சுப்பணிக்குள் கொண்டுவந்தார். இங்கே அமைச்சனாக ஆகி நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் நான் கண்ட முகங்கள் பல ஆயிரம். என் கணிப்பு முற்றிலும் பிழையானது இவளிடம்தான்.”

தமயந்தி கசப்பான புன்னகையுடன் “அவள் இதை வகுக்கவில்லை, அமைச்சரே” என்றாள். கருணாகரர் “அரசி, அவள்…” என சொல்லத்தொடங்க “அவளால் சிறிய அடுமனை சூழ்ச்சிகளை மட்டுமே எண்ண முடியும். இத்தனை விரிவாக அரசசூழ்ச்சிகளை வகுக்க முடியாது. அதற்கு நிஷதகுடிகளின் அடுக்குகளை, அவர்களின் உணர்வுகளை, இங்குள்ள அரசியல் தருணத்தை நன்கறிந்திருக்கவேண்டும். அவளுக்கு நூலாயும் வழக்கமே இல்லை” என்றாள் தமயந்தி. “அவளுடன் பிறிதொருவன் இருக்கிறான். ரிஷபன் என்பது அவன் பெயர். அவன் வகுத்தது இது.” கருணாகரர் தயக்கத்துடன் “அவனா? அவனைப்பற்றி…” என்றார். “ஒற்றர்செய்திகள் எனக்கும் வந்தன. அவளுடைய கரவுக்காதலன். ஆனால் அது மட்டுமல்ல அவன் பணி. அவன் அவளை அருகிருந்து இயக்குகிறான்” என்று தமயந்தி சொன்னாள்.

“அவ்வண்ணமென்றால் நாம் இனிமேல் அவனுடன்தான் கருநீக்கி களமாடவிருக்கிறோம்” என்றார் நாகசேனர். “யாரென்று அறியாத ஒருவனுடன். அவன் எதற்கு இதை செய்யவேண்டும்? மாலினிதேவியின் கொழுநனாக அவனால் முடிசூட்டிக்கொள்ளமுடியுமா என்ன? அவனை காளகர் ஏற்பார்களா?” தமயந்தி “அவளை ஏற்கலாமே? புஷ்கரன் போரில் இறந்தார் என்றால் முதிராமைந்தன் ஒருவனை முடிசூட வைத்து அவள் அரசாளலாமே?” என்றாள்.

கருணாகரர் “அவன் கலிங்க மன்னர் சூரியதேவருக்கு அவருடைய முதிய அகவையில் நாகர்குலத்து இளவரசி ஒருத்தியில் பிறந்த மைந்தன் என்கிறார்கள் ஒற்றர். அவன் பானுதேவரிடம் அணுக்கனாக இளமையிலேயே வந்து சேர்ந்துகொண்டிருக்கிறான். அரண்மனையில் அவருடைய மைந்தன் போலவே வளர்ந்திருக்கிறான். அப்போதுதான் அவனுக்கும் மாலினிதேவிக்கும் உறவு அமைந்திருக்கிறது. அது உடன்பிறந்தார் உறவு என்றே அரண்மனையினர்கூட எண்ணுகிறார்கள். பானுதேவருக்கே அதை குறித்து சரியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் அங்கே அவருடைய அரசின் முதன்மை அரசுசூழ்வோனாக அவனே திகழ்ந்தான்” என்றார்.

“புஷ்கரனை வென்றெடுக்கும் சூழ்ச்சியேகூட அவனிடமிருந்து தொடங்கியிருக்கலாம் என்கின்றனர் நம் ஒற்றர். அவனுக்கு மகதம், வங்கம், அவந்தி, மாளவம் என அனைத்து அரசர்களுடனும் நேரடித்தொடர்பு உள்ளது. அவர்களின் ஒற்றர்களை அவன் நாள்தோறும் சந்தித்துக்கொண்டிருந்தான் எனத் தெரிகிறது” என்று கருணாகரர் சொன்னார். தமயந்தி “அவனைப் பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்துவர ஒற்றர்களை அனுப்பியிருக்கிறேன். அந்த நாககுலத்து அரசி என்பவர் யார் என்று அறிந்துவர தலைமை ஒற்றர் சமதரே சென்றிருக்கிறார்” என்றாள்.

flowerசெல்லும் வழியெங்கும் சீர்ஷரின் உடல் மன்றுவைக்கப்பட்டு காளகக்குடிகளால் அரிசியிடப்பட்டு வணங்கப்பட்டது. செல்லச்செல்ல அனைத்து நிஷதகுடிகளும் திரளலாயின. அவருடைய இறப்பைப்பற்றிய கதைகள் ஒன்றிலிருந்து ஒன்றெனக் கிளைத்து வளர்ந்தன. அனைத்து கதைகளிலும் எதிரியாக தமயந்தியே இருந்தாள். அவர் ஊண்நிரையில் தமயந்தியால் உரிய பீடம் அளிக்கப்படாது சிறுமைப்படுத்தப்பட்டார் என்றும் அதை எதிர்த்துப் பேசியபோது நளனால் கழுத்து வெட்டப்பட்டார் என்றும் எளிய கதையே முதலில் சொல்லப்பட்டது. அவர் கலிக்கு ஒரு பிடி அன்னம் எடுத்துப் படைத்து வணங்கியபின் உண்டதைக் கண்டு தமயந்தி சினந்து எழுந்து அவர் தலையை வெட்ட ஆணையிட்டாள் என்று அக்கதை உருமாறியது.

உணவுக்குமுன் அனைவரும் இந்திரனை வணங்கி அவன் மிச்சில் என எண்ணி அன்னத்தை எடுக்கவேண்டும் என்று புஷ்கரன் அறிவித்தபோது சீர்ஷர் மட்டும் வாளாவிருந்ததாகவும், அதைக் கண்ட புஷ்கரன் அவர் ஏன் இந்திரனை வணங்கவில்லை என்று கேட்டபோது கலியின் காலடிகளை அன்றி பிறிதொரு தெய்வத்தை அவர் வணங்குவதில்லை என்று அறிவித்ததாகவும், இந்திரனை அவர் வணங்கியாகவேண்டும் அது அரசாணை என புஷ்கரன் சொன்னதாகவும் ஒரு கதை சொன்னது. “என் தெய்வம் கரிநிறக் கலி. என் கொடி காகம். பிறிதொரு தெய்வமும் இல்லை. தலைக்குமேல் மற்றொரு கொடியும் இல்லை” என்று சீர்ஷர் சொன்னார். சினந்தெழுந்த தமயந்தி அவர் இந்திரனை வணங்காவிட்டால் அவர் தலை அப்போதே வெட்டி உருட்டப்படும் என அறிவித்தாள்.

“என் தலை உருளும், வணங்காது” என்றார் சீர்ஷர். அவருடைய தலையை வெட்ட அரசி ஆணையிட்டாள். வீரர்கள் எவரும் வாள் உருவவில்லை. நளனிடம் வெட்டும்படி சொன்னாள். அவன் திகைத்து நின்றான். “நீர் என் குழந்தைக்குத் தந்தை என்றால் வெட்டுக” என்று அரசி தன் மகன் தலைமேல் கைவைத்து ஆணையிட்டாள். “இல்லையேல் இக்கணமே இவனுக்கு நீர் தந்தை அல்ல என்று சொல்லிடுவேன்” என்றாள். நளன் வாளை உருவி சீர்ஷரை வெட்டினான். அவர் முகத்திலிருந்த புன்னகை வெட்டுண்ட தலையிலும் இருந்தது. அவர் உடல் அசையாமல் அப்படியே நின்றது.

அரசி அதை உதைத்துத் தள்ளும்படி நளனிடம் சொன்னாள். நளன் ஏழு முறை உதைத்த பின்னரே உடல் நிலத்தில் விழுந்தது. நளன் தலையை எடுத்து அரசியின் காலடியில் வைத்தான். அவள் அதை தன் கால்களால் தொட்டு உருட்ட அவள் பாதங்கள் குருதியால் சிவந்தன. “இந்திரனை வணங்கி அனைவரும் அன்னம் கொள்க!” என்று அரசி ஆணையிட்டாள். ஆனால் காளகக்குடித் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் “கலிதேவனே வாழ்க” என்று உரைத்து அவ்வுணவை எடுத்து உண்டார்கள். அதைக் கண்டு அரசி சினத்துடன் கூச்சலிட்டபடி எழுந்தாள். ஆனால் பிற குடிகளும் அதைப்போல கலியை வணங்கியபடி உண்ணத்தொடங்க அவளால் அங்கே நிற்கமுடியவில்லை. வெறிகொண்டு தன் ஆடையை கிழித்துவீசியபடி, அலறிக்கூச்சலிட்டபடி அவள் வெளியே ஓடினாள்.

அரண்மனை இடைநாழிக்கு ஓடி அவள் அங்கிருந்த வீரர்களிடம் “கலியை வணங்கும் அனைவரையும் கொல்லுங்கள்! அவர்களின் தலைகளை கொண்டுவாருங்கள்!” என்றாள். சிம்மவக்த்ரன் “கொல்லுங்கள். கலிவழிபாடு செய்பவர்களை கொன்று குவியுங்கள்” என வாளை உருவி ஆணையிட்டான். ஆனால் நிஷதவீரர்கள் அனைவரும் அசையாமல் நோக்கி நின்றனர். அரசி ஓசை கேட்டு ஓடிச்சென்று சாளரம் வழியாக நோக்கினாள். நகரில் உணவுண்ணக் குவிந்திருந்த பல்லாயிரம் குடிகள் ஒரே குரலில் “எங்கள் குலமாளும் தேவா, காகக்கொடி கொண்டவனே, கலிவீரனே வாழ்க!” என முழங்கி அன்னம் எடுத்து உண்ட ஓசை பெருமுரசுகளின் முழக்கமென எழுந்து அவளை சூழ்ந்தது.

தன் தலைமயிரைப் பிடித்து இழுத்து அவள் கூச்சலிட்டாள். தூண்களை ஓங்கி ஓங்கி உதைத்தாள். “எவரையும் விடப்போவதில்லை. கலிவணக்கம் செய்பவர் அனைவரையும் வேருடன் அழிப்பேன்” எனக் கூவினாள். அப்போது அவள் நிழலாக பின்பக்கச் சுவரில் ஒரு பேருருவம் எழுந்தது. அதைக் கண்டு அஞ்சி அவள் திரும்பி ஓடினாள். படிகளில் ஏறமுடியாமல் மயங்கி விழுந்தாள். “அவளை தூக்கிச்சென்றவர்கள் அந்த நிழல் சுவரில் அப்படியே ஓர் ஓவியமெனப் பதிந்து நின்றிருப்பதைக் கண்டு அஞ்சி ஓலமிட்டனர்” என்றாள் அக்கதையைச் சொன்ன முதிய விறலி. அதைக் கேட்டு நின்றவர்கள் கைகளைத் தூக்கி ஒரே குரலில் “குடிகாக்கும் கலிதேவனே, வாழ்க!” என கூவி வாழ்த்தினர்.

விஜயபுரிக்கான வழியில் சரபபதம் என்னும் ஊரில் சீர்ஷரின் உடல் வைக்கப்பட்டபோது வெறியாட்டு கொண்டெழுந்த முதிய பூசகர் ஒருவரில் சீர்ஷர் தோன்றினார். “என் குடி இந்நாநிலத்தை ஆளும். அதன்பொருட்டு முதற்பலியாவதற்காகவே நான் மண்ணில் எழுந்தேன். என் கடனை நான் விரும்பிச்சென்று முடித்தேன். என் குடிகளே, அஞ்சற்க! ஒருங்கு கூடுக! இனி நம் மூதாதையருக்கு மலரும் நீரும் தேவையில்லை. இனி படைக்கலமே உங்கள் வழிபாட்டுப்பொருளென்றாகுக! இனி நீங்கள் படைக்கும் அன்னம் எதிரிகளின் குருதி கலந்ததாக அமைக! இனி நிகழும் அத்தனை களத்திலும் என் குருதி உங்கள் காவல்தெய்வமென நின்றிருக்கும்” என்றார்.

நெஞ்சிலறைந்து அழுதனர் பெண்கள். ஆண்கள் வாள்களையும் வேல்களையும் தலைக்குமேல் தூக்கி போர்க்கூச்சலிட்டனர். அவை நடுவே நின்றிருந்த புஷ்கரன் தன் வாளை மும்முறை தலைக்குமேல் தூக்கி ஆட்ட அங்கிருந்த அத்தனை குடிகளும் கைகளையும் படைக்கலங்களையும் தூக்கி “நிஷதகுடி வெல்க! கலி வெல்க!” என்று முழக்கமிட்டனர். “இனி போர்! போர் மட்டுமே” என்றான் புஷ்கரன். “ஆம் ஆம் ஆம்” என்று அக்கூட்டம் அலைக்கொந்தளிப்பு கொண்டது. சீர்ஷருக்குப்பின் கோல்கொண்ட சுநீதர் தன் கைகளைத் தூக்கி “நம் குடி வெல்லும்! முதற்பலியைக் கொண்டது நம் குலதெய்வமே” என்றார்.

flowerபன்னிரண்டாம்நாள் சீர்ஷரின் உடல் விஜயபுரியை சென்றடைந்தது. அதை மலைத்தேனிலிட்டு பதம் செய்து கொண்டுசென்றனர். அங்கே தெற்குக் காட்டில் அமைக்கப்பட்ட சிதையில் அவர் உடலை வைத்து நிஷதகுடிகளின் அத்தனை தலைவர்களும் வந்து வணங்கி கோல்தாழ்த்தினர். சுநீதர் தலைமையில் காளகக்குடியின் ஏழு முதியவர்கள் அவருக்கு நீரும் மலருமிட்டு வணங்க புஷ்கரனே அவர் மைந்தன் என்று அமைந்து அரிசியிட்டு அடிமலர் அணிவித்து துளைப்பானையால் சூழ்நீரூற்றி சடங்குகள் செய்தான். முடிமழித்து நீராடி வந்து எரியூட்டினான். எரியெழுந்ததை புகையினூடாகவே அறியும் அளவுக்கு நகரின் திறந்த வெளியெங்கும் நிஷதகுடிகள் செறிந்திருந்தார்கள். அவர்கள் எழுப்பிய வாழ்த்தொலி நெடுநேரம் எழுந்து அடங்கி அலையெனச் சூழ்ந்துகொண்டிருந்தது.

சீர்ஷரின் இறப்பு பதினாறுநாள் துயராட்டாக விஜயபுரியில் நிகழ்ந்தது. பெண்கள் வண்ண ஆடையும் அணியும் ஒழிந்து மலர்முடியாது ஒரு பொழுதுண்டு நோன்பிருந்தனர். ஆண்கள் முதற்புலரியில் எழுந்து நீராடி மலர் கொண்டுசென்று சீர்ஷரின் எரிகுழியிலிட்டு வணங்கினர். அவரைப் பற்றிய கதைகளும் பாடல்களும் பகலெல்லாம் அங்காடிமுனைகளிலும் தெருக்களிலும் திண்ணைகளிலும் அகத்தளங்களிலும் ஒலித்தன. அவற்றைக் கேட்டு அவர்கள் கண்கலங்கி நெஞ்சுபற்றி விம்மியழுதனர். சில தருணங்களில் அவர்களின் முதுபெண்டிரில் மூதன்னையர் வெறிகொண்டெழுந்து “குருதி! குருதி அளித்து தொழுக! கொடுஞ்சினம் கொண்டிருக்கிறோம்! குருதிவிடாய் கொண்டிருக்கிறோம்! குலமூத்தாரை பழி கொண்டவர்களின் குருதியுடன் எழுக நம் குலங்கள்!” என்று நின்றாடினர்.

ஒவ்வொரு நாளும் விஜயபுரியைச் சூழ்ந்திருந்த நிஷாதர்களின் ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் நிரைநிரையாக கிளம்பி வந்து நகரின் அனைத்து வெளிகளையும் நிறைத்தனர். முன்னரே வந்தவர்கள் கோட்டைக்கு வெளியே மலையடிவாரம் வரை விரிந்திருந்த புதர்க்காடுகளை அழித்து குடிலமைத்து தங்க, அங்கே ஒரு நகரமே உருவாகிவந்தது. அந்நகரம் பெருகிச்சென்று மலைச்சரிவை தொட்டது. பகலில் கோட்டைமேல் நின்று நோக்குகையில் அங்கே ஒரு பெரும்படை பாடிவீடமைத்திருப்பதுபோலத் தோன்றியது. இரவில் காட்டுத்தீ பற்றி சூழ்ந்திருப்பதுபோல விழிமயக்கியது. இரவும் பகலும் அதன் அவியா முழக்கம் கோட்டை அலையாழியால் சூழப்பட்டிருப்பதுபோல் எண்ணச் செய்தது. அவர்களுக்குரிய உணவுப்பொருட்களுடன் வந்த வண்டிகள் ஒவ்வொருநாளும் இருமடங்காயின. அவற்றை விற்கும் சந்தைகள் உருவாயின. அவர்கள் வழிபட சிற்றாலயங்கள் எழுந்தன. அன்னநிலைகளும் அறச்சாவடிகளும் அமைந்தன. அந்த மக்கள்திரள் நகரமென்றே ஆகி அவ்வாறே நிலைகொள்ளுமென விழியுண்மையாகத் தெரிந்தது.

பதினாறாம் நாள் சீர்ஷரின் எலும்புகளை ஈமச்சடங்கு செய்யும் பூசகர் வழிகாட்ட புஷ்கரன் எடுத்து பசும்பாலில் கழுவி சிறு கலத்திலிட்டு அரண்மனையின் தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்ட சிறு பீடத்தில் கொண்டுவந்து வைத்தான். அதன் அருகே அணையா விளக்கு பொருத்தப்பட்டது. நகரை நிறைத்திருந்த நிஷதகுடிகளிலிருந்து பெண்கள் தாலங்களில் அரிசியும் மலரும் நெய்விளக்கும் ஏந்தி பலநூறு நிரைகளாக அரண்மனை முற்றம் நோக்கி வந்தனர். அவர்கள் அரிமலரிட்டு வணங்கி மீள்வதற்காக நூற்றெட்டு பீடங்கள் அமைக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் அங்கே நிஷாதர்களின் குடித்தெய்வங்கள் வெறியாட்டென எழுந்தன. “போர்! போர்!” என அவை அறைகூவின.

நாற்பத்தோராம் நாள் புஷ்கரன் சுநீதர் வழிகாட்ட, குடிப்பூசகர் உடன் வர நீராடி உடலில் ஈரம் சொட்ட வெண்ணிற ஆடை அணிந்து சீர்ஷரின் எலும்புகள் அமைந்த கலத்தை தலைமேல் ஏந்தியபடி பத்ரை நதிக்கு நடந்துசென்றான். அவனைச் சூழ்ந்து வெண்ணிறத் துணியை சுவரெனப் பற்றியபடி பூசகர்கள் சென்றனர். முழவுகளை இசைத்தபடி சாவுச்சூதர் உடன்செல்ல காவல்நிலைகள் அனைத்திலும் அரசமுரசுகளும் கொம்புகளும் முழக்கமிட்டன. செல்லும் வழியெங்கும் அவன் கால் தரையில் படாமல் துணிகளால் வழிப்பாவாடை விரித்தனர். அவன் செல்வதை இருமருங்கும் திரண்டு நின்று நோக்கிய நிஷதகுடிகள் நெஞ்சிலறைந்து அழுதனர். “எந்தையே! மூதாதையே! விண்நிகழ்பவரே!” என குரல்கள் எழுந்தன. அவன் கோட்டைக்கு வெளியே சென்றபோது அவனுக்குப்பின் அக்கோட்டை இடியோசை எழுப்பி முழங்கியது.

சீர்ஷரின் எலும்புகளை புஷ்கரன் பத்ரையின் பெருக்கில் இறங்கி நின்று மூழ்கி கரைக்கையில் அதன் இரு கரைகளும் மானுடர்களால் ஆன மலைகள் போலிருந்தன. அவர்கள் எழுப்பிய வாழ்த்தொலிகள் நீரில் அலைகளை எழுப்பின என்று தோன்றியது. புதுக் கலத்தில் பத்ரையின் நீரை அள்ளி தலையில் வைத்து ஆடையிலும் குழலிலும் நீர் சொட்ட எழுந்து கரைமீண்ட புஷ்கரன் “எந்தையே, சென்றுவருக! உங்கள் குருதி முளைத்தெழுக!” என்றபோது நெடுநேரம் ஐம்புலன்களையும் மூடி கண்களுக்கு நடுவே ஒளியலைகளை எழுப்பிய ஒலிக்கொந்தளிப்பு அங்கே நிலவியது. தலையில் பத்ரையில் அள்ளிய நீருடன் நகருக்குள் நுழைந்தபோது நகரம் அன்னையை கன்றென ஓலமிட்டு அவனை எதிரேற்றது.

புஷ்கரன் காளகக்குடி மூத்தாரும், பூசகரும், அமைச்சரும், அகம்படியினரும் சூழ தலையில் நீர்க்கலத்துடன் தென்றிசை மயானக்காட்டுக்குள் சென்றான். சுநீதர் குடிக்கோல் ஏந்தி முன்னால் நடந்தார். பூசகர் சீர்ஷர் எரிந்த சிதைக்குழியை பத்ரையின் நீரை ஊற்றி மலரும் அரிசியும் இட்டு மூடினர். அதன்மேல் சிறிய மேடென மண்குவிக்கப்பட்டு கனிமரம் ஒன்று நடப்பட்டது. அருகே ஓர் ஆள் ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் குடிமூத்தவர்களுக்குரிய நிலைக்கல்லை பன்னிரு பணியாளர்கள் இழுத்துவந்து அழுத்தி நட்டனர். நீரூற்றி இறுக்கி கல்லிட்டு நிறுத்தப்பட்ட நிலைக்கல்லுக்கு சிவப்பு ஆடை கட்டி மஞ்சளும் செந்தூரமும் பூசி மலர்மாலை சூட்டினர். அதன்முன் விரிக்கப்பட்ட காம்புடன் கூடிய முழு வாழையிலையில் பச்சை ஊனும், அப்பங்களும், நுரைக்கும் கள்ளும் படைக்கப்பட்டன. குடிமூத்தாரும் புஷ்கரனும் மலரும் நீரும் படைத்து நடுகல்லை வணங்கினர்.

அப்போது நகர் முழுக்க அனைத்து மணிகளும் முழக்கப்பட்டன. இல்லங்களில் இருந்த கைமணிகளையும் தட்டுமணிகளையும் தெருக்களில் கொண்டுவந்து ஒலித்தனர். நகரம் மணியோசையின் சரடால் நூறாயிரம் முறை என சுற்றிக் கட்டப்பட்டது. ஓசை அவிந்த பின்னரும் நெடுநேரம் அந்த மீட்டல் அவர்களின் செவிகளில் எஞ்சியிருந்தது. அன்றிரவு நகரில் எவரும் உணவுண்ணலாகாதென்று நெறி இருந்தது. அன்று நகரிலுள்ள அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டன. கரிய இருள் வந்து நகரை முழுமையாக மூடியது. இல்லையென்றே ஆகி இரவில் புதைந்தன கோட்டைகளும் காவல்கோட்டங்களும் மாளிகைகளும் மரங்களும். விழியென ஏதுமில்லை முகத்தில் என மயங்கிய சிறுவர் அழுதபடி அன்னையரை அணைத்துக்கொண்டனர். இருளுக்குள் அந்த மணியோசையின் கார்வை அலைகளாக எஞ்சியிருந்தது. தலைக்குள் தேனீ சுழல்வதுபோல ஓயாதொலித்தது. புலரிக்கதிர் எழுவதுவரை அவர்களனைவரையும் கரிய பட்டுநூலால் ஒன்றெனக் கட்டி வைத்திருந்தது.

நாற்பத்தொன்றாம்நாள் இரவு முழுத் துயில்நீப்புக்குப்பின் மறுநாள் புலரியில் ஏழு வகை இனிப்புகளும் ஐவகை கனிகளும் மூன்று வகை ஊனுமாக திரள்விருந்து நிகழ்ந்தது. மூன்று நாட்களாகவே அவ்விருந்தை ரிஷபனின் தலைமையில் விஜயபுரியின் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் ஒருங்கமைத்துவந்தனர். அன்றுவரை இருந்த துயரை அழுக்கு ஆடையை என கழற்றி வீசிவிட்டு உண்டாட்டில் திளைத்தனர் நிஷாதர். கூச்சலிட்டும் ஆர்ப்பரித்தும் ஒருவருக்கொருவர் உணவுப்பொருட்களை எடுத்து வீசியும் உண்டனர். உண்ணுதல் உணவின் மிகையால் ஊண்விளையாட்டென்று ஆகியது. உணவை அள்ளி ஒருவர்மேல் ஒருவர் வீசினர். உணவிலாடி உணவில் வழுக்கி விழுந்து உணவில் புரண்டனர். நகரம் புழு நிறைந்த உணவுக்கலம்போல மானுட உடல்களால் அலைநெளிபட்டது.

பின்னர் கள்மயக்கிலும் ஊண்மயக்கிலும் கால்தளர்ந்து கண்சரிந்த இடங்களிலேயே விழுந்து துயின்றனர். மறுநாள் முதலிருளில் அவர்களுக்குமேல் மென்மழைச் சாரல் ஒன்று பொழிந்தது. அதை குளிர்ந்த பட்டாடை ஒன்றின் வருடல் என, இறகுகளால் மூடும் பெரிய அன்னைப்பறவை என கனவுக்குள் கண்டு திகைத்து விழித்தெழுந்தனர். பின்னர் இடமும் காலமும் தெளிவுற களைத்துத் துவண்ட கால்களுடன் சென்று தங்கள் இல்லங்களுக்குள் படுத்துக்கொண்டனர். மறுநாள் பொழுது விடியவேயில்லை. வானைமூடி செறிந்த கருமுகில்களில் இருந்து தடித்த பட்டுச்சரடுகள்போல இறங்கிய மழை விழுதுகளென மண்ணில் ஊன்றி அசையாமல் நின்றது.

மழைபெருகி தெருக்கள் ஆறுகளென்றாயின. நகரெங்கும் குவிந்திருந்த மிச்சிலும் குப்பையும் கழுவிக்கொண்டுசெல்லப்பட்டன. அடுமனைக் கலங்கள் அனைத்தும் ஊறி தாங்களே தங்களை கழுவிக்கொண்டன. கூரைவிளிம்புகள் வெள்ளித் திரைகளென நின்று பொழிந்த நீர்ப்பரப்பை சூடியிருந்தன. தலைக்குமேல் மழையின் நில்லா பேரொலி. நீர்ப்பரப்பென்றான வானுக்குள் இடி மின்னி நீரை அனலென்றாக்கி அணைந்துகொண்டிருந்தது. இல்லங்களுக்குள் மரவுரிகளாலும் கம்பளிகளாலும் உடல்போர்த்தி அமர்ந்து விழிகள் மட்டுமே உயிருடன் எஞ்சியவர்கள்போல மழையை நோக்கிக்கொண்டிருக்கையில் அவர்கள் முன்பு நிகழ்ந்த அனைத்தையும் முற்றிலும் மறந்தவர்கள்போலத் தோன்றினர்.

தொடர்புடைய பதிவுகள்

அபிப்பிராய சிந்தாமணி -கடிதங்கள்

$
0
0

Abippiraya  Sinthamani_9788184936490_KZK - W

அன்புள்ள  ஜெயமோகன்,

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புத்தகத்தைப் படித்து ரசித்து ரசித்து சிரித்து மகிழ்ந்து இன்னும் சிரித்துக்கொண்டேஇருக்கின்றேன்.

அடேங்கப்பா! என்ன ஒரு கிண்டல்,நக்கல்,பகடி,எதார்த்தம்.

தென்குமரித் தமிழ் விளையாட்டு.அற்புதம்.கெட்ட வார்த்தைகள் வெகுஇயல்பு.எங்க ஊர் மக்கள் மாதிரியே சில குணாதிசயங்கள்.

இரண்டு மூன்று நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த

இரவில் உங்கள்  எழுத்து  உந்திய சிரிப்பு சத்தம் கேட்டு என் தம்பி ஓடிவந்து  என்ன ஆயிற்று என்று கேட்டு அவனுக்கும் சிலவற்றைப்படித்துக்காட்ட ஒரே கலாட்டா.

அதுவும் அந்த ஏரிக்கரையின்மேலே போற பெண்மயில்  அய்யோ!!.ஷெரீப் இருந்திருந்தால் சிரித்துக்கொண்டே இரண்டாம்முறை செத்திருப்பார்.

இன்னும் நிறைய.

உடல்  தேறிவிட்டது.நன்றி  நண்பரே.

இயகோகா சுப்பிரமணியம்.

***

அன்புள்ள இயகோகா அவர்களுக்கு

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நானே அவ்வப்போது எல்லாவற்றையும் பார்த்துச் சிரிக்கவேண்டியிருக்கிறது. இல்லையேல் கடந்துசெல்ல முடியாது

ஜெ

***

அன்புள்ள ஜெ

அபிப்பிராயசிந்தாமணியின் பல கட்டுரைகளை இணையத்தில் வாசித்திருக்கிறேன். அபூர்வமான நகைச்சுவை. பல இடங்களில் வாய்விட்டு வெடித்துச்சிரித்தேன் [வாயுவிட்டு என்று டைப்போ வந்துவிட்டது] வாழ்த்துக்கள் ஜெ. உங்கள் இன்னொரு முகம். அதில் கிளாஸ் என்பது பத்தினியின் பத்துமுகங்கள். என் மனைவியிடம் வாசித்துக்காட்டி அவளுடைய பதினொன்றாவது முகம் தெரியவந்தது

மாதவன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியநட்பு, புகைப்படங்கள்…

$
0
0

thikasi

அன்பின்

ஜெ.மோ. அவர்களுக்கு

“எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன்.” [ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன் ]

மேற்படியான தங்களின் வரி இந்த ரம்ழான் மாத நோன்பு பிடிக்க எழுந்திருக்கும் இந்த அதிகாலைப் பொழுதில் என் 25 / 30 ஆண்டுகால வாசிப்பு பயணத்தின் பயனெதுவென கண்டுகொண்ட தரிசனத்தை தருகிறது. எல்லோரையும் போல பூந்தளிர், அம்புலிமாமாவில் ஆரம்பித்து இலக்கியம், சமூகவியல், தத்துவம், மதம் குறித்த பார்வை ஒரு முழு சுற்றுசுற்றிவிட்டு பிள்ளையாரைப் போல நின்ற இடமே என் புத்தகயாவாகிப் போனது. தமிழகத்தின் வட மாவட்டத்தைச் சேர்ந்த என் பால்யகால நண்பர்களான அரவிந்தனாகிய அழகியபெரியவன் – இராமபிரபுவெனும் யாழன்ஆதியுடன் தனிப்பட்ட முறையிலும், அவர்களின் ஒட்டுமொத்த படைப்புகள் மற்றும் செயல்பாட்டுக்காகவும் கொண்டிருக்கும் உறவு ஆத்மார்த்தமானது. இதொரு தொடக்கம், அங்கு தொடங்கியது கால, தேச இடைவெளி கடந்து எங்கெங்கோ வேர்விட்டு படர்ந்துவிரிகிறது. நன்றி – நமஸ்காரம்

கொள்ளு நதீம்

***

அன்புள்ள கொள்ளு நதீம்

இலக்கிய நட்புகள் பிறநட்புகளைப்போல எளிமையான கொடுக்கல் வாங்கல்கள் அல்ல. அறிவார்ந்த உறவுகள் என்பதனால் எப்போதும் மோதல்களும் இருக்கும். அப்பாற்பட்டு பேணினால் அவை திரும்பி நோக்கும்போது வாழ்ந்தோம் என்ற நிறைவை அளிப்பவை/. பிற உலகியல் உறவுகளில் அந்நிறைவு நிகழ்வதே இல்லை. இதை நான் பல பெரியவர்களின் உறவுகளில் கண்டிருக்கிறேன். வெங்கட் சாமிநாதனுக்கும் தி.க.சிவங்கரனுக்குமான உறவு ஓர் உதாரணம்.,

வாழ்த்துக்கள்

ஜெ

***

அன்பு ஆசானுக்கு ,

நான் ஜெயக்குமாரன். photographer . ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவன் . சந்திப்பு முடிந்தவுடன் நீண்ட கடிதம் ஒன்றை தொடர்ந்து எழுதி இன்னும் உங்களுக்கு அனுப்பாதவன். அடிக்கடி மனதில் தோன்றினவற்றை தொடர்ந்து எழுதி அக்கடிதத்தை முடிக்கும் போது ஏப்ரல் மாதம் ஆகியிருந்தது. 2 மாதம் கழித்து இதை அனுப்புவது சரியில்லை என விட்டுவிட்டேன். விஷயம் அதுவல்ல .
எனது முகநூல் பக்கத்தில் நம் வாசகர் சந்திப்பின் போது உங்களை எடுத்த படங்களை சமீபத்தில் பதிவிட்டேன். இன்று காலை ஆனந்த விகடனிலிருந்து அழைத்தார்கள். என்னுடைய பல படங்களை உபயோகிக்க கேட்டிருந்தார்கள் . அதில் உங்கள் படமும் ஒன்று. மற்ற படங்களை அனுப்பி விட்டேன் . அனுமதி இல்லாமல் உங்கள் படத்தை அனுப்புவது சரியல்ல என்று தோன்றியது. முகநூல் பதிவு கீழே .

https://www.facebook.com/jaidigitalworks/posts/850932815044885?pnref=story

அன்பும் நன்றிகளும் ,

ஜெயக்குமாரன்

***

அன்புள்ள ஜெயக்குமாரன்

வாழ்த்துக்கள். படங்களில் தொடர்ந்து நடிப்பது ஆர்வமூட்டுவதாகவே இருக்கிறது

ஜெ

***

திரு ஜெ அவர்களுக்கு,

தங்களின் வலைத்தளத்தில், அம்பேத்கரின் தம்மம் 1-4 கட்டுரைகளை வாசித்ததிலிருந்தே ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.ஓவ்வொரு புத்தகத்திரு விழாவின் போதும் NCBH ல் சொல்லி வைத்து இதுவரை மறுபதிப்பு வரவே இல்லை.

சென்னை அண்ணா சாலையிலுள்ள தமிழ் முழக்கம் புத்தகக் கடையில் சொல்லி வைத்ததில் டாக்டர் வீ சித்தார்த்தா (பெரியார் தாசன்) அவர்களின் மொழி பெயர்ப்பில் 1996ல் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பவுத்த ஆய்வு மையம் வெளியிட்ட பதிப்பு கிடைத்து வாசித்து வருகிறேன். நூலை வாசிக்க தங்கள் கட்டுரையே தூண்டுதலாக அமைந்தது. நன்றி. NCBH வெளியீடு மொழி பெயர்ப்பு யார் எனத் தெரிய ஆவல். அன்புடன்

சேது வேலுமணி

***

அன்புள்ள சேதுவேலுமணி,

அது ‘வாசிக்க’ வேண்டிய நூல் அல்ல. ஒரு மதமூலநூல் போல கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கவேண்டியது. நூல் உங்களுடன் எப்போதுமிருக்கட்டும்

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மு.வ

$
0
0

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
டாக்டர் மு.வா பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? (புனைவுகளை தவிர்த்துவிடுங்கள்) அவரது மொழி ஆராய்ச்சி, கல்வித்துறை பணிகள் குறிப்பிட தகுந்ததுதானா?

தங்கள் உளமறிந்த வாசகன்,
கு.மாரிமுத்து

மு.வரதராஜன்

அன்புள்ள மாரிமுத்து

மு வரதராசன் அவர்களின் பங்களிப்பு மூன்றுதளத்தில். அவர் ஒரு கல்வியாளர். இலக்கிய ஆராய்ச்சியாளார். நாவலாசிரியர். இந்த மூன்று கோணங்களிலும் அவரைப்பற்றி விவாதிக்கலாம்.

மு.வவின் முதன்மையான பணி என்பது கல்வியாளர் என்ற அளவிலேயே. பிற பணிகளை அவரது கல்விப்பணியின் ஒரு பகுதியாகக் காண்பதே பொருத்தமானது. மரபான முறையில் தமிழ் கற்றவர். அக்கால் முறைப்படி வித்வான் தேர்வு எழுதி சிறப்பாக வெற்றிபெற்று தமிழாசிரியரானார். சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னை பல்கலைகழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். பின்னர் மதுரைப் பல்கலை துணைவேந்தராக இருந்து ஓய்வுபெற்றார்.

முவவின் கல்வித்துறைச் சாதனைகளில் முதன்மையானது தமிழாசிரியர் என்ற பதவிக்கு மதிப்பு ஏற்படுத்தியளித்த பேராசிரியர்களில் ஒருவராக அவர் விளங்கியதுதான். அக்காலத்தில் தமிழாசிரியர்கள் ஒரு போட்டித்தேர்வு எழுதி வென்று ஆசிரியர்களாக ஆனவர்கள். பெரும்பாலும் ஆங்கிலம் அறியாதவர்கள். ஆகவே பிற துறைகளில் பட்டம்பெற்ற ஆசிரியர்கள் தமிழாசிரியர்களை ஏளனமாக அணுகும் நிலை இருந்தது. ஊதியத்தில்கூட பெரும் ஏற்றத்தாழ்வு இருந்தது. பல்கலைப்பதவிகளுக்கு தமிழாசிரியர்கள் வருவதும் அபூர்வம்.

t.p.mee

தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை

avvai

அவ்வை துரைசாமிப்ப்பிள்ளை

 

மு.வ அவரது பதவிகளில் புகழ்பெற்றிருந்தார். அவரது அறிவுத்திறனும்,அனைவரையும் அணைத்துச்செல்லும் போக்கும், அபாரமான ஒழுக்கநோக்கும் அவருக்கு கடைசிவரை எங்கும் பெருமதிப்பை உருவாக்கியளித்தன. அவரது மாணவர்கள்ள் அரைநூற்றாண்டு தாண்டியும்கூட அவரை இன்றும் பக்தியுடன் நினைவுகூர்கிறார்கள். அவரது காலகட்டத்தில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், அவ்வை துரைசாமிப்பிள்ளை போன்ற பேரறிஞர்களால் அவரது இடம் ஒரு படி கீழேதான் இருந்தது. ஆனால் இன்று நோக்கும்போது தமிழ் கல்விவரலாற்றின் ஒளிமிக்க பெயர்களில் ஒன்று மு.வ.

ஒரு கல்வியாளர் என்றநிலையிலேயே அவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. அதாவது மரபிலக்கியத்தை கல்வித்துறைசார்ந்த தேவைகளுக்காக ஆய்வுசெய்யும் முறையில் அமைந்தவை அவை. தகவல்களை தேடி தொகுத்து வைக்கும்தன்மைகொண்ட ஆய்வுகள். சங்க இலக்கியத்தில் இயற்கை [The Treatment of Nature in Sangam Literature] என்ற தலைப்பில் மு.வ செய்த ஆய்வேடு சிறந்த உதாரணம். அந்த ஆய்வேட்ட்டை ஒட்டியே அவர் பின்னாளில் நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணை விருந்து முதலிய நூல்களை எழுதினார். அவை அப்பாடல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை எடுத்துச்சொல்பவை அவ்வளவே.

உதாரணமாக சங்க இலக்கியத்தில் இயற்கைகுறித்து ஆராயும் மு.வ சங்க இலக்கியங்கள் இயற்கையை அகக்குறியீடாக மாற்றும் நுட்பத்தை அறியவேயில்லை. பின்னாளில் அகநிலக்காட்சி [ Interior landscape] என்று ஏகே ராமானுஜன் உலகுக்கு அறிமுகம்செய்த அவ்வியல்பு சங்ககால அழகியலுக்கே உரிய தனித்தன்மை. உலகுக்கு தமிழின் கொடை. ஆனால் மு.வ. மிக எளிமையாக சங்ககால மக்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து அதை வர்ணித்துபாடினார்கள் என்ற அளவில் நின்றுவிடுகிறார். கச்சிதமான பள்ளி ஆசிரியராக!

மு.வவின் இலக்கிய ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சிக் கோணத்தில் பெரிய மதிப்பு ஏதும் இல்லை. அவற்றை எஸ்.வையாபுரிப்பிள்ளை, கெ.என் சிவராஜபிள்ளை போன்ற முதல்தலைமுறை ஆய்வாளர்களுடனோ அல்லது அவரது சமகாலத்தவர்களான தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றவர்களின் ஆய்வுகளுடனோ ஒப்பிட்டால் இந்த வேறுபாடு புரியும். அவர்கள் மரபிலக்கியத்தின் உள்தொடர்ச்சியை கண்டறிவதிலும் காலக்கணிப்பிலும் புதிய கண்டறிதல்களை நிகழ்த்தி பெரும் பங்களிப்பை ஆற்றியவர்கள். முவ அப்படி ஏதும் செய்யவில்லை. வெறுமே நயம்பாராட்டி சில தகவல்களைச் சுட்டுகிறார்.

ஏனென்றால் மு.வவுக்கு இலக்கியமல்லாத துறைகளில் ஆர்வமும் பயிற்சியும் இருக்கவில்லை. தத்துவம், மெய்யியல், சமூகவியல், வரலாறு போன்ற துறைகளின் கோணங்களில் இலக்கியங்களுக்குள் சென்று கேள்விகளை உருவாக்கி முடிவுகளுக்கு வர அவர் முயலவில்லை. இலக்கிய ஆக்கங்களை வாழ்க்கை சார்ந்து அணுகவும் அவரால் முடிந்ததில்லை. ஆகவே அவரது மரபிலக்கிய ஆய்வுகளுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை. இன்று அவை வாசிக்கப்படுவதும் இல்லை.

இலக்கியவரலாற்றாசிரியராக முவவுக்கு ஓர் இடம் உண்டு. ஆனால் அந்த இடம் மிகைப்படுத்தப்பட்டது. அவரது தமிழிலக்கிய வரலாறு நெடுங்காலம் கல்வித்துறையில் ஒரு பாடநூலாக இருந்தது. ஆனால் மரபிலக்கிய வரலாற்றை பொறுத்தவரை அவர் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. மு.அருணாச்சலம் போன்றவர்களின் நூல்களை ஒட்டி தொகுத்து தருவதுடன் சரி. அந்நூலில் நவீன இலக்கியம் குறித்த பகுதிகள் மனம்போனபோக்கில் தவறான, போதாத தகவல்களுடனும் வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையேயான வேறுபாடுபற்றிய புரிதல் இல்லாமலும் எழுதப்பட்டுள்ளன.

உண்மையில் அப்பகுதிகள் அவரால் எழுதப்படவில்லை, அவரது சில மாணவர்கள் எழுதினார்கள் என சொல்லப்படுகிறது. நவீன் இலக்கியம்பற்றி பிழையான புரிதல்களை நெடுங்காலம் கல்வித்துறையில் நிலைநாட்டியது அது. நவீன இலக்கிய வரலாற்றுக்கு சிட்டி சிவபாத சுந்தரம் எழுதிய இருநூல்கள் [தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி, தமிழ்ச்சிறுகதை வரலாறு] தான் இன்று ஆதாரநூல்களாகும். ஆனாலும் மு.வவின் நூல் ஒரு பாடநூலாக ஒருகாலகட்டத்திற்கு ஓரளவு பயன்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

மரபிலக்கிய தளத்தில் மு.வவின் முக்கியமான சாதனை என்று சொல்லப்படவேண்டியது அவரது திருக்குறள் உரை. அவரது பெரும்புகழ்பெற்ற நூல் அதுவே. அவருக்கு பெரும்செல்வத்தையும் அது ஈட்டியளித்தது. அன்றுவரையிலான உரைகளை ஒட்டி எழுதப்பட்ட ஒரு எளிய நூல்தான் அது. ஆனால் அன்றைய முக்கியமான தேவை ஒன்றை அது நிறைவுசெய்தது. குறளுக்கு மதச்சார்பற்ற, பகுத்தறிவுக்கு ஒட்டிய, ஒரு நவீன உரை தேவையாக இருந்தது. அதை மு.வ.அளித்தார். இன்றும் ஒரு மாணவருக்கு பரிந்துரைக்கக்கூடிய நல்ல குறள் உரை அதுவே. நல்லாசிரியராக மு.வ தமிழுக்கு ஆற்றிய கொடை அது.

மு.வ அறுபதுகளில் கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, கரித்துண்டு, செந்தாமரை, பாவை, அந்த நாள், மலர் விழி, அல்லி, கயமை, மண் குடிசை போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். அந்தக்காலகட்டத்தில் அவை குறிப்பிடத்தக்க வணிக வெற்றியும் ஈட்டியிருக்கின்றன. இலக்கியவாதியாக அவருக்கு அன்று முக்கியமான இடம் இருந்தது. அகல்விளக்கு எனும் நாவலுக்கு 1961ல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

Vi.Sa.Khandekar

வி.எஸ்.காண்டேகர்

 

ஐம்பதுகளில் தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களின் மொழியாக்கத்தில் வி.எஸ்.காண்டேகர் எழுதிய மராத்தி நாவல்கள் வெளியாகி பரவலான வாசக ஆதரவைப் பெற்றன. அது சுதந்திரப்போராட்டத்தின் இலட்சியவாத அலை அடங்காத காலகட்டம். அதை நேருயுகம் எனலாம். இலட்சியவாதியின் காதலையும் போராட்டங்களையும் பற்றிய நாவல்களுக்கு அன்று பெரிய மதிப்பிருந்தது. சராசரி வாசகன் தன்னை இலட்சியவாதியாக எண்ணிக்கொண்டான், காதலிக்கப்படவும் ஆசைப்பட்டான். காண்டேகரின் படைப்புகள் அவர்களுக்கான இலட்சியவாத நாவல்கள்.

காண்டேகரின் நாவல்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. அவை ஒரு பாடநூல் போல சீரான கதையோட்டம் கொண்டவை. அத்தியாயங்களின் முகப்பில் எப்போதும் இலட்சியங்களைப்பற்றியும் மனித இயற்கையைப் பற்றியும் ஒரு குட்டிச் சொற்பொழிவு இருக்கும். கதைமாந்தர்கள் சில கொள்கைகளின் பிரதிநிதிகளாக நின்று முறையான வாதங்களைத்தான் உரையாடல்களாக முன்வைப்பார்கள். தியாகம் போன்ற விழுமியங்கள் போற்றப்படும். காண்டேகரை கையில் பென்சில் இல்லாமல் வாசிக்கக்கூடாது என்பார்கள்.

தமிழில் காண்டேகரின் பாதிப்பு என்பது மிக ஆழமானது. தமிழில் ஏற்கனவே ஒரு கேளிக்கை எழுத்து வேரூன்றியிருந்தது. அதன் நாயகராகிய கல்கியின் யுகம் அது. கூடவே தேவன், ஆர்வி, எல்லார்வி, மாயாவி என வணிக எழுத்தாளர்கள் உருவாகி வந்திருந்தனர். விகடன், கல்கி, கலைமகள் இதழ்களால் இவர்கள் உருவாக்கப்பட்டு முன்வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு இலக்கிய அடையாளமும் அளிக்கப்பட்டது.

இலக்கிய எழுத்து சிற்றிதழ்களின் மிகச்சிறிய வட்டத்துக்குள் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அது எழுத்து போன்ற சிற்றிதழ்களின் காலம். க.நா.சு இலக்கியத்தை ஐரோப்பா நோக்கி திருப்பி வைத்த காலகட்டம். ’சரஸ்வதி’ ’தாமரை’ இதழ்கள் வழியாக முற்போக்கு இலக்கியம் உருவாகி வந்துகொண்டிருந்தது. அதற்கும் பிற இலக்கியவாதிகளுக்கும் விவாதங்கள் நிகழ்ந்தன. புதுக்கவிதை உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால் இவற்றை பரவலாக எவரும் அறியவில்லை. மு.வ போன்ற கல்வியாளர்களுக்குக்கூட நவீன இலக்கியத்தளம் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

இந்நிலையில் அன்றைய வாசகர்களில் கணிசமானவர்களுக்கு வணிகக் கேளிக்கை எழுத்துமேல் அவநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தேவன் முதலியோரால் எழுதப்பட்ட வெறும் வேடிக்கைக்கதைகளை அன்றைய இலட்சியவாத வாசகர்கள் நிராகரித்தார்கள். இலட்சியவாதப்பிரச்சாரமே இலக்கியத்தின் மையநோக்காக அவர்கள் எண்ணினார்கள். அவர்களே காண்டேகரின் வாசகர்கள் ஆனார்கள். காண்டேகர் அவர்களால் பேரிலக்கியவாதியாக கருதப்பட்டார்.

காண்டேகரைப் பின்பற்றி எழுத ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர் மு.வ. அவரது நாவல்களை வைத்து அவரை தமிழ்க்காண்டேகர் என்று சொல்லிவிடலாம். எந்த வணிக இதழின் ஆதரவும் இல்லாமலேயே மு.வ பெற்ற வெற்றி கவனத்துக்குரியதே. பின்னர் வணிக இதழ்கள் அந்த வகையான எழுத்தின் வணிகச் சாத்தியங்களை கண்டுகொண்டன. அகிலன்,நா.பார்த்தசாரதி போன்றவர்கள் காண்டேகரின் பாணியை வணிக எழுத்துக்குள் கொண்டுசென்று வெற்றிபெற்றார்கள்.

காண்டேகர், மு.வ போன்றவர்களின் நாவல்கள் அன்று பெற்றிருந்த ஆதரவை இன்று ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ள முடிகிறது. நாடெங்கும் இலட்சியவாதம் அலையடித்த காலம். எழுபதுகளில்தான் பெரும் ஊழல்கதைகள் வெடித்து மெல்லமெல்ல ஜனநாயகம் மீதான அவநம்பிக்கை உருவானது. அவசரநிலைக்காலத்தால் அது முழுமையான கசப்பாக மாறியது. அந்த இலட்சியவாதக் காலகட்டத்தில் அதிகமாக வாசித்தவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள். அவர்களே இலட்சியவாதத்தை கிராமம் தோறும் கொண்டு சென்றவர்கள். மாணவர்கள் அடுத்தபடியாக. அவர்களுக்கான இலக்கியமாக இருந்தன இந்நூல்கள்.

அத்துடன் எனக்கு ஒன்றும் தோன்றுகிறது. அன்று மேடைப்பேச்சு ஒரு முக்கியமான ஊடகமாக பரவி விட்டிருந்தது. தமிழகத்தில் எங்கும் கூட்டங்கள் நிகழ்ந்த காலம் அது. கூட்டம் கேட்பதை தங்கள் இளமைக்காலத்து முக்கியமான பொழுதுபோக்காக இன்றைய முதியவர்கள்பலர் சொல்வதைக் காணலாம். எல்லா படித்தவர்களும் கூட்டங்களில் பேசவேண்டியிருந்தது. காண்டேகர் மற்றும் மு.வ நூல்களில் இருந்து மேற்கோள்களை உருவி சொற்பொழிவை அமைப்பது அன்றைய வழக்கம்.நான் மு.வ.நூல்களை சொற்பொழிவாளர்களிடமே அதிகம் கண்டிருக்கிறேன்.

மு.வவின் நாவல்களையும் பாடப்புத்தகநாவல்கள் எனலாம். பள்ளி கல்லூரிகளின் பாடத்திட்டத்துக்கு ஒப்ப எழுதப்பட்டவை என்று தோன்றும். பெரும்பாலும் பண்பாட்டுச்சிக்கல்களை கதைமாந்தர்களின் விவாதங்கள் வழியாக முன்னெடுக்கும் நாவல்கள் இவை. எளிதில் ஊகிக்கக்கூடிய முடிச்சுகளும் மரபான தீர்வுகளும் கொண்டவை. செயற்கையான உணர்ச்சிகர தருணங்கள் அமைந்தவை. ஆசிரியரின் சிந்தனைகளை நேரடியாகவும் உரையாடல்களிலும் முன்வைப்பவை. அத்துடன் மு.வவின் நாவல்கள் செந்தமிழ் நடையில் அமைந்தவை. உரையாடல்களும்கூட இலக்கணத்தமிழில் கல்லூரி நாடகங்கள்போலிருக்கும்.

இலக்கியக் கலை என எது உலகமெங்கும் கருதப்படுகிறதோ, எது தமிழில் சாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுகோலின்படி மு.வவின் நாவல்களுக்கும் இலக்கியக்கலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவரை தமிழின் இலக்கியவாதிகளின் பட்டியலில் எந்த இடத்திலும் சேர்க்க முடியாது. இலக்கியம் என்பது ஒருவர் தான் நினைப்பதையெல்லாம் சீரான மொழியில் எழுதி வைப்பது அல்ல. அது தன்னுள் இறங்கிச்செல்லும் பயணம். அதன் வழியாக தான் வாழும் சமூக ஆழ்மனத்துக்குள் ஊடுருவிச்செல்லல். மொழியின் நேரடித்தொடர்புறுத்தலை அதன் கற்பனைச் சாத்தியங்களைக்கொண்டு மீறிச்செல்லுதல்.

வாசகனுக்கு விஷயங்களை தெரியப்படுத்துதல் அல்ல இலக்கியத்தின் வழி. வாசகன் கற்பனையை தூண்டிவிடுதல். வாசகன் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நிகரான ஒரு கற்பனைவாழ்க்கையை தன் சொற்கள் வழியாக வாழச்செய்தல். அதன் வழியாக அவன் தன் சிந்தனைகளை தானே கண்டடையும்படிச் செய்தல். இலக்கியம் என்பது மொழி வழியாக சமகாலச் சிந்தனைகளை மீறிச்செல்லுதல். இலக்கியம் என்பது மொழிக்குள் உள்ள நுண்மொழி ஒன்றில் நிகழும் உரையாடல். மு.வவுக்கும் அந்த வகையான இலக்கியத்துக்கும் தொடர்பேதும் இல்லை.

இலக்கியத்தில் முவவின் பங்களிப்பு என்ன? அவரது காலகட்டத்தில் பொதுவாகப்பேசபப்ட்ட பொதுவான இலட்சியவாதச் சிந்தனைகளை அன்றைய இளம் வாசகனுக்கு கதைவடிவில் கொண்டுசென்றார், அவ்வளவுதான். அது ஜனநாயகப் பண்புகள் பரவலாக ஆரம்பித்த காலகட்டம். சமூகசீர்திருத்த எண்ணங்கள் முளைத்து வந்த வரலாற்றுச் சந்தர்ப்பம். பெண்சுதந்திரம், தனிமனித அறம், பொதுக்குடிமைப்பண்புகள் போன்றவற்றை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்களாக அமைந்தன மு.வவின் நூல்கள்.

மு.வவின் காலகட்டத்துக்குப் பின்னரும்கூட அவரது பாணி எழுத்து ஓரளவு செல்வாக்குடன் இருந்தது. கு.ராஜவேலு, ய.லட்சுமிநாராயணன், வெ.கபிலன், டேவிட் சித்தையா போன்ற பலர் அப்பாணியில் எழுதினார்கள். அவர்கள் காலப்போக்கில் காணாமலானார்கள்.நா.பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரின் அவருடைய எழுத்துமுறையின் பாதிப்பு உண்டு

மு.வ அவரது கல்வித்துறைப் பங்களிப்பு காரணமாக அவரது மாணவர்களால் இன்றும் கல்வித்துறைக்குள் நிலைநிறுத்தப்படுகிறார். ஆனால் அவர்களும் ஓய்வுபெற சமீபகாலமாக அவரது இடம் முற்றிலுமாக மறைய ஆரம்பிக்கிறது.

மு.வ ஓர் ஆசிரியர். ஓர் ஆசிரியராக அவரது காலகட்டத்துக்கு அவர் பணியாற்றினார். அவரது நூல்கள் ஆசிரியர் தன் மாணவர்களுக்காக எழுதிய பாடநூல்களைப்போன்றவை. அவரது நாவல்களுக்கு இலக்கிய முக்கியத்துவம் என ஏதும் இல்லை. ஆனால் ஒருகாலகட்டத்தில் அக்கால இலட்சியங்களை அவை ஒரு சாராருக்கு எடுத்துச் சென்றன. அந்த அளவிலேயே அவருக்கு தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம்.

ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 24, 2010

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41

$
0
0

40 குருதிமை

flowerமூன்றாம்நாள் மழைவிட்டு துளிச்சொட்டலும் நீர்ப்பிசிறுக் காற்றுமாக நகரம் விம்மிக்கொண்டிருக்கையில் அரண்மனை முரசுகள் முழங்கின. அவ்வோசையை அவர்கள் இடியொலியாகவே கேட்டனர். நீர்த்திரை அதை ஈரத்துணிபோல மூடியிருந்தமையால் மிக மெல்ல அப்பாலெங்கோ என ஒலித்தது. பின்னர்தான் அது முரசெனத் தெளிந்தனர். ‘நோக்குக! நோக்குக! நோக்குக!’ என முழங்கியது முரசு. நிமித்திகன் உரத்த குரலில் அன்று அந்தியில் கலிதேவனுக்கான பூசனை நிகழப்போவதை அறிவித்தான். “நம் மூத்தவர் விண்புகுந்தார். மழைவிழுந்து நகர் தூய்மைகொண்டது. நாம் அளித்த பலிகளில் முதன்மையானதை நம் குடிகளுக்கிறைவன் ஏற்றுக்கொண்டார். வருக, இறையடி பணிக! அருள்பெறுக!”

நீர்க்காற்று நகரைச் சூழ்ந்து வீசிக்கொண்டிருக்க மரங்களின் இலைகளும் கூரைகளும் பளிங்குக் கற்களென சொட்டிக்கொண்டிருந்தன. பகல் முழுக்க நகரம் ஓசையடங்கி நனைந்த துணிபோல அசைவிலா அலைகளாக கிடந்தது. உச்சிப்பொழுதுக்குப் பின்னர் மெல்ல விழித்தெழுந்தபோதுகூட தோல்நனைந்த முரசின் ஓசையென்றே முழங்கியது. மூன்றுநாள் மழை அனைவருக்கும் உடலோய்ந்த உள்வாழ்க்கை ஒன்றை அளித்திருந்தது. விழிகள் ஒளிக்கு கூசின. புறவுலகை மறுத்தது உள்ளம். அவர்கள் நினைவுகளில் கனவுகளில் தனிமையில் திளைக்க விரும்பினர். தனிமை துயர் கொண்டது. அதன் இனிமை எஞ்சியிருந்த அவர்களின் உள்ளம் களியாட்டை வெறுத்தது. அவர்கள் அகத்தில் இனிய சிறு மின்னல்கள் எழுந்தமைந்துகொண்டிருக்க அவ்வப்போது மெய்ப்புகொண்டனர். விழியமைந்து மென்துயிலில் மூழ்கியபோது கரிய அலைகளின்மேல் நின்று ததும்பிய செந்தாமரையைக் கண்டனர். வெண்ணிற முகில் கரைந்தும் திரண்டும் யானை வடிவுகொண்டு வானில் மிதந்தது. அதை ஊடுருவிய ஒளி பாலென பளிங்கென கண்களை நிறைத்தது.

அன்று கதிர்முகம் தெளியவேயில்லை என்பதனால் பொழுதடைவதை உணரமுடியவில்லை. அரண்மனையில் அந்திமுரசு முழங்கியதும் பிற முரசுகளும் ஒலிக்கத் தொடங்கின. புற்றுவாய் திறந்து ஈசல்கள் எழுவதுபோல மக்கள் தங்கள் இல்ல வாயில்களில் இருந்தும் தெருமுனைத் திறப்புகளில் இருந்தும் எழுந்து சாலைகளை அடைந்தனர். துளிசேர்ந்து பெருக்காகி கரைதொட்டு நிரப்பியபடி நகர்மையத்தில் அமைந்த கலிதேவனின் ஆலயத்தை நோக்கி சென்றார்கள். அவர்கள் அணிந்திருந்த வண்ண ஆடைகளும் தலைப்பாகைகளும் கலந்த கொப்பளிப்பின்மேல் தெருமுனை மீன்நெய்ப் பந்தங்களின் தழலொளி அலையடித்தது.

சூழ்ந்திருந்த கூட்டம் அவர்களை தனிமையின் இனிய துயரிலிருந்து விடுவித்தது. பேச்சொலிகளும் முழவொலிகளும் கலந்த முழக்கம் அவர்களின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த மெல்லிய தன்மொழியை அணையச்செய்து அகத்தை கூச்சலாக ஆக்கியது. ஓசைமிகுதல் என்பது வெறி, களிப்பு, கொண்டாட்டம். தளர்வுடன் இருந்த அவர்களின் தோள்கள் நிமிர்ந்தன. தாழ்ந்து நிலம்நோக்கிய தலைகள் விரைத்தெழுந்தன. அடிநோக்கி அமைந்த சீர்நடை துள்ளலென்றாகியது. அப்பெருங்கூட்டத்தை அவர்கள் அறியாது அகநடனமிடச் செய்தது முரசின் தாளம். மேலிருந்து நோக்கிய காவலர்கள் அத்திரளில் நடனம் சிறிய அலைகளாக எழுந்து கொண்டிருப்பதை கண்டார்கள்.

நகரின் தென்மேற்கு மூலையில் இருந்த கலியின் சிற்றாலயத்தில் இருந்து பிடிமண் எடுத்துவந்து நகர்நடுவே அமைக்கப்பட்ட ஏழடுக்கு ஆலயம் அது. சுற்றிலும் மிக விரிவான செண்டுவெளி இருந்தது. அதிலிருந்து பதினெட்டு பெரிய படிகள் ஏறிச்சென்று கலியின் ஆலயச் சுற்றுக்கட்டை அடைந்தன. நூற்றெட்டு தூண்களால் தாங்கப்பட்ட கோபுரத்திற்குக் கீழே கருவறைக்குள் கலி கருநாகங்களும் காகங்களும் பொறிக்கப்பட்ட பீடத்தின்மேல் அமர்ந்திருந்தான். கோபுரத்தின்மேல் காகக்கொடி காற்றில் பறந்தது. அத்தனை தூண்களிலும் காகமுகம் கொண்ட விளக்குமகளிர் சிலைகளின் கைகளில் நெய்யகல்கள் பீதர்நாட்டுக் கண்ணாடியாலும் தீட்டப்பட்டச் சிப்பியாலுமான காற்றுமறைப்புக்குள் சுடர்கொண்டிருந்தன.

நான்கு எல்லையும் திறந்துகிடந்த செண்டுவெளிக்குள் பதினெட்டு சாலைகளிலிருந்து மக்கள் வந்து பெருகி நிறைந்தார்கள். அதன் நான்கு திசைகளிலும் அமைந்திருந்த முரசுமேடைகளில் பெருமுரசுகள் துள்ளுநடையில் துடித்துத்துடித்தொலிக்க கொம்புகளும் முழவுகளும் இணைந்துகொண்டன. உடுக்கோசையில் எழுந்துவரும் காட்டுத்தெய்வங்கள்போல விழிகளில் மதமும் வெறியும் தெரிய மக்கள் தோன்றினர். கைகளை விரித்து தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டனர். அவிழ்குழல்கற்றைகளைக் சுழற்றியபடி வெறிகொண்டு ஆடினர் முதுபெண்டிர். சிலம்புகளும் கழல்களும் ஒலிக்க கால்கள் மண்ணை மிதித்து மிதித்து நடனமிட்டன.

நிஷதகுடிகளின் தலைவர்கள் அனைவரும் தங்கள் தொல்முறைப்படி இடைவளைத்து தோள்சுற்றிச் சென்ற ஒற்றைமான்தோலாடையும், தழல்வரிப்புலித்தோலாடையும், இருளலையும் கரடித்தோலாடையும் அணிந்து கழுகிறகும் காக்கையிறகும் காட்டுச்சேவல்இறகும் கொண்ட மரக்கொந்தைகளை தலையில் சூடி கைகளில் குடிக்கோல்களுடன் வந்து கலிதேவனின் ஆலயத்தின் முகமண்டபத்தில் நிரைகொண்டு நின்றிருந்தார்கள். உள்ளே பூசகர்கள் கலிவழிபாட்டுக்கென நீலமலர்களையும் காட்டுச்சுனையில் ஊறிய நூற்றெட்டு குடம் நீரையும் கொண்டுவைத்தனர். அடுமனைப்பூசகர் நுரைக்கும் கள்ளையும் இலையப்பங்களையும் பனையோலைச் சுருளப்பங்களையும் சுட்ட அப்பங்களையும் கொண்டு வைத்தனர்.

காளகக்குடிகளின் ஏழு மூத்தவர்களால் வழிநடத்தப்பட்டு புஷ்கரன் முழுதணிக்கோலத்தில் ஆலயமுகப்பிற்கு தேரில் வந்து இறங்கியபோது பெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கின. செண்டுவெளியை நிறைத்திருந்த குடிகள் வாழ்த்தொலி எழுப்பினர். இசைச்சூதர் மங்கல இசைமுழக்கி சூழ்ந்திருந்த காற்றை அக்காட்சிகள் அனைத்தும் வரையப்பட்ட ஓவியத்திரைச்சீலை என்றாக்கினர். புஷ்கரனுடன் உடனுறைத் துணைவனாக ரிஷபன் அணிச்செதுக்குப் பிடிகொண்ட உடைவாள் ஏந்தி வலப்பக்கம் நடந்து வந்தான். வாழ்த்தொலிகளும் குரவையோசையும் சூழ அவர்கள் வந்து கலிதேவனின் கருவறைக்கு முன்னால் பலிபீடத்திற்கு வலப்பக்கமாக நின்றனர்.

செந்திரைகள் அலைய அரசபல்லக்கு வந்து நிலம் அமைந்தது. அதனருகே மரப்பீடம் கொண்டுபோடப்பட்டது. திரைவிலக்கி கைகூப்பியபடி இறங்கிய மாலினிதேவி இடையிலும் தோளிலும் காளகக்குடிப் பெண்களுக்குரிய முழங்கால்வரை வரும் ஒற்றை மான்தோலாடை சுற்றியிருந்தாள் கல்மாலைகளும் கல்குழைகளும் அணிந்து புலித்தோல் கச்சை கட்டி தலையில் காகஇறகுகள் கொண்ட முடிவளை சூடியிருந்தாள். காளகக்குடியினரான ஏழு சேடியரால் சூழ்ந்து வழிநடத்தி அழைத்துவரப்பட்டு ஆலய முகப்பை அவள் அடைவதுவரை குடிகளின் வாழ்த்துக்களே அவளை ஏந்தி வந்தன.

காளகக்குடியின் மூத்த பெண்டிர் பன்னிருவர் நிறைநீர்க்குடங்களும் அகல்சுடர்களும் ஏந்தி உடன்வர புஷ்கரனின் அன்னை சம்புகை கலிங்க இளவரசியை எதிர்கொண்டு கல், மண், நீர், மலர், கனி என்னும் ஐந்து கான்மங்கலங்கள் கொண்ட தாலத்தை அளித்து நெற்றியில் பலிவிலங்கின் குருதி உலர்ந்த கருஞ்சாந்தால் பொட்டிட்டு வாழ்த்தினாள். அவள் குனிந்து அன்னையின் கால்தொட்டு சென்னி சூடினாள். அன்னையர் அவளை அழைத்துவந்து கலிதேவன் முன்னால் நிறுத்தினார்கள். பூசகக்குலத்து மூதன்னையர் எழுவர் செங்குருதி நிறைந்த குவளைகொண்ட கரித்தாலத்தை உழிந்து காட்டி கண்ணேறு கழித்தனர். கலியின் காலடியில் எழுபத்திரண்டு நாள் வைத்து வழிபட்டு எடுத்த கருந்தாலியை பூசகி எடுத்து நீட்ட புஷ்கரனின் அன்னை அதை மாலினியின் இடக்கையில் காப்பெனக் கட்டினாள். பிறிதொரு மூதன்னை அளித்த நெய்விளக்குடன் அவள் சென்று கலிதேவனின் கருவறை முகப்பில் பலிபீடத்தின் இடப்பக்கம் நின்றாள்.

சுநீதர் கைகாட்ட கலிதேவனின் தலைப்பூசகர் வழிபடுமுறைமைகளை தொடங்கினார். நூற்றெட்டு கலம் நீரால் கரியதேவன் முழுக்காட்டப்பட்டான். அதன்பின் பலிஎருமையின் செங்குருதி முழுக்கு. பின்னர் பால்முழுக்கு. தேன்முழுக்கு, நீறுமுழுக்கு. ஐம்முழுக்குகளுக்குப்பின் மீண்டும் பதினெட்டு கலம் நீரால் முழுக்காட்டு. கரிய ஆடையும், காகச்சிறகு மணிமுடியும், நீலமணிக் கழல்களும் கச்சையும் ஆரங்களும் வளையல்களும் பூட்டப்பட்டபின்  நீலமலர்க்காப்பு அணிவிக்கப்பட்டது. பெண்டிரின் குரவை எழுந்து சூழ்ந்தது. கலிதேவனுக்குரிய குறுமுழவான உறுமி தோற்பரப்பில் பிரம்புக்கோல் வருட சினந்த புலி என ஓசையிட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்குள்ளும் வாழ்ந்த தொல்குடி நினைவு ஒன்று பதறி கிளைநுனியில் தவித்து நின்றிருந்தது.

சிவந்த வெறிவிழிகளும் தோள்களில் படர்ந்த சடைவிழுதுகளும் ஏழு திரிகளாக நெஞ்சில் விழுந்த சடைத்தாடியும் கலிதெய்வத்தின் காகச்சிறகு சூட்டுத்தழும்பாக வரையப்பட்ட விரிந்த மார்பும் கொண்டிருந்த முதன்மைப்பூசகர் கையில் பொசுங்கி வெடித்து நீலச்சுடரசைய எரியும் நெய்ப்பந்தத்துடன் வீரிட்டலறி விதிர்த்த உடலுடன் கருவறையிலிருந்து வெளியே பாய்ந்து வந்தார். தன் கையிலிருந்த சாம்பலை மாலினிதேவியின் முகத்தின்மேல் ஊதியபின் அறியா விலங்கொன்றின் அமறல்போல் ஒலித்த குரலில் “பெண்ணே, இது கலிதேவனின் வினா. நீ நிஷதகுடிகளில் முதன்மையானதான காளகக்குடியின் வருமகள் என கற்குழையும் கருகமணியும் அணிந்து அமர ஒப்புகிறாயா?” என்றார்.

அவள் திகைக்க அருகே நின்ற முதுமகள் “ஆம் என்று சொல்க!” என்றாள். அவள் உதடுகள் மெல்ல அசைந்தன. இடத்தோள் விதிர்த்தது. “சொல், சொல்” என்றாள். அவள் மூக்குத் துளைகள் விரிந்து சுருங்கின. முலைகள் எழுந்தமைந்தன. “சொல், ஒப்புகிறாயா?” என்றார் பூசகர். “சொல்” என்றாள் மூதன்னை. அவள் தொண்டையை செருமினாள். “மூன்றாம்முறை இது… சொல்க!” என்றார் பூசகர். அவள் “ஆம், ஒப்புகிறேன்” என்றாள். “ஒப்புகிறாயா?” என அவர் மீண்டும் இருமுறை கேட்க “ஆம், ஒப்புகிறேன்” என அவள் தாழ்ந்த குரலில் விழிதாழ்த்தி மறுமொழி உரைத்தாள். அவள் இடத்தொடை ஆடியபடியே இருந்தது.

அதே வெறியுடன் புஷ்கரனை நோக்கித் திரும்பி அலறலுடன் அவன் முகத்தில் நீறை ஊதிய பூசகர் “கேள், மகனே. கலியின் சொல் இது. கேள்… இதோ நின்றிருக்கும் இச்சிறுமகளை மணம்கொண்டு மைந்தரை ஈன்று குடிசிறக்க ஒப்புகிறாயா?” என்றார். அவன் சுநீதரை நோக்கிவிட்டு “ஆம், ஒப்புகிறேன்” என்றான். அவர் மீண்டும் கேட்க அவன் மும்முறை அதை சொன்னான். பூசகர் இரு கைகளையும் விரித்து முழவுக்குரலில் “சொல், இவளுடன் அரியணை அமர்ந்து நிஷதகுடிகளை முழுதாள ஒப்புகிறாயா? என் தேவனென எழுந்தருளிய கலிதெய்வத்தை முழுமுதலோன் என்று இக்குடிகளுக்குமேல் நிறுத்த ஒப்புகிறாயா?” என்று கேட்டார். புஷ்கரன் கூப்பிய கைகள் நடுங்க உதடுகள் இறுகி அசைய தள்ளாடுபவன்போல நின்றான். “சொல்! ஒப்புகிறாயா?” என்றார் பூசகர். “ஆம், ஒப்புகிறேன்” என்று புஷ்கரன் முணுமுணுத்தான்.

“அருளினோம்! அருளினோம்! அருளினோம்!” என்று கூவியபடி பூசகர் கருவறைக்குள் ஓடினார். அவர் உடல் விதிர்த்து துள்ளியது. கருவறையில் கருங்கல்லில் செதுக்கப்பட்டு நெடுங்காலம் எண்ணை பூசப்பட்டமையால் முடியின் கருமையொளி கொண்டிருந்த கலிதேவனின் சிலையின் இரு பக்கமும் நின்றிருந்த காவல்தேவர்களின் வளைகோட்டுவாய் திறந்த முகங்களில் வெள்ளிவிழிகள் பதிக்கப்பட்டிருந்தன. தழல் நெளிந்த பந்தங்களின் வெளிச்சத்தில் அவை சினந்த நோக்குகொண்டு அசைந்துகொண்டிருந்தன. கலியின் கண்கள் நீலப்பட்டால் மூடிக் கட்டப்பட்டிருக்க திறந்த செந்நிற வாயில் வெண்பற்கள் தெரிந்தன. தொங்கிக் கிடந்த நீள்நாக்கில் தொட்டு வைக்கப்பட்ட குருதி வழிந்து துளித்து நின்றது.

சிலையின் காலடியில் இரு உயிருள்ள முதிய காகங்கள் சிறகு கோட்டி தோளுக்குள் தலைபுதைத்து அமர்ந்திருந்தன. அவற்றின் விழிகள் சோர்ந்து தழைந்து மீண்டும் விழித்தன. அவை எப்போதும் அங்கே இருந்துகொண்டிருப்பவை. இறகுகள் பாதி உதிர்ந்த காகம் பல ஆண்டுகளாக அங்கிருக்கிறது என குடியினர் அறிந்திருந்தனர். பூசகர் “எந்தையே, இறையே, சொல்க! உலகாளும் கருமையே சொல்க! வருநெறி சொல்க! எழுமுலகு என்னவென்று நற்சொல் தருக!” என்று கூவினார். காகங்களில் ஒன்று நீர் விழுந்ததுபோல சிலிர்த்து விழிப்புகொண்டு தலையைத் தூக்கி விழிகளை உருட்டி சுடர்களை நோக்கியபின் “காவ்!” என்றது. அடிவயிற்றில் வேல்குத்து பட்டதுபோல துடித்த பூசகர் “ஆ!” என அலறி இரு கைகளையும் விரித்தார். பிடரி சிலிர்த்து சடைவிரிந்து பறக்க சுழன்று ஆடினார்.

ஆட்டவிசையில் கலியின் காலடியிலிருந்த பள்ளிவாளை எடுத்து சுழற்றி மும்முறை துள்ளி நடனமிட்டுச் சுழன்று தன் நெற்றியில் ஓங்கி ஓங்கி வெட்டினார் பூசகர். உடற்தசைகள் இழுபட்டு அதிர விலங்குபோல ஊளையிட்டபடி சுழன்றார். பசுங்குருதியின் மணம் எழுந்தது. அவர் முகமும் நெஞ்சும் தோள்களும் குருதியால் செந்நிறம் கொண்டன. “அருளினேன்! குருதியருளினேன்! செங்குருதி! கொழுங்குருதி! வஞ்சக்கனல் எரியும் குருதி!” என்று கூவியபடி வெளியே வந்து கையை அவர்கள்மேல் உதறினார். குருதித்துளிகள் அவர்கள் இருவர் தலையிலும் முகத்திலும் தெறித்து துளிவழிவாகி இறங்கின. புருவங்களில் குருதி தொங்கி நோக்கு மறைக்க புஷ்கரன் கருவறையில் அமர்ந்திருந்த கரிய உருவத்தின் கண்களையும் திறந்த சிவந்த வாயையும் நோக்கினான்.

“நிகழ்க! கலிதேவனின் ஆணை இது! நிகழ்க!” என்று பூசகர் கூவினார். காளகக்குடி மூத்தார் திரும்பி “தாலி! தாலி எங்கே?” என்றனர். அன்று உச்சிப்பொழுதில் அவர்களின் குடியவை கூடி அமர்ந்து பனையோலையில் புஷ்கரனின் குடிநிரையும் பெயரும் குறியும் பொறித்து இறுகச்சுருட்டி எண்ணைக்கரி பூசி கருஞ்சரடில் கட்டி கொண்டுவந்திருந்த தாலி ஒரு கரிய கொப்பரையில் கட்டப்பட்டிருந்தது. அதை தாலத்தில் செம்மலர்களும் வெண்ணீறும் இட்டு வைத்திருந்தனர். தலைகளுக்கு மேலாக அது பறப்பதுபோல வந்தது. அதை சுநீதர் வாங்கி தாலத்துடன் துணைப்பூசகர் கையில் அளித்தார். கலியின் காலடியில் அதை வைத்து ஒரு துளிக் குருதியும் ஒரு மலரிதழும் வைத்து வணங்கி திருப்பியளித்தார் பூசகர்.

அதை வாங்கி சுநீதர் புஷ்கரனிடம் நீட்டி “அவள் கழுத்தில் இதை கட்டு. அவள் நம் குலக்கொடியென்றமைக!” என்றார். அவன் அதை எடுத்து முன்னகர மூதன்னையர் மாலினிதேவியை முன்னால் செலுத்தினர். அவள் கழுத்தும் தோள்களும் மெய்ப்புகொண்டு மயிர்நிரைகளாக தெரிந்தன. அவளை மூதன்னையர் விழாமல் தாங்கிப்பிடித்திருந்தார்கள். புஷ்கரன் கருந்தாலியுடன் அவளை நோக்கியபடி நின்றான். பெண்டிரின் குரவையோசையும் உறுமியின் அமறலும் இணைந்து சூழ்ந்தன. “கட்டுக!” என்றார் சுநீதர். அவன் கைநீட்ட அவள் விழிதூக்கி அவனை நோக்கினாள். திடுக்கிட்டு அவன் கைகளை பின்னிழுத்துக்கொண்டான். “கட்டுக, இளவரசே!” என்றார் சுநீதர். அவன் நெஞ்சு துடித்தது. ஒருகணம் அவன் தன் வலப்பக்கம் ரிஷபனின் உடல் வெம்மையை உணர்ந்தான். “கட்டுங்கள்” என்றான் ரிஷபன்.

புஷ்கரன் அந்தத் தாலியை அவள் கழுத்திலிட்டு முதல் முடிச்சை கட்டினான். இரண்டாவது முடிச்சை அவன் அன்னை கட்டினாள். மூன்றாம் முடிச்சை குலமூதாட்டி ஒருத்தி கட்டினாள். நான்காம் முடிச்சை ஆலயத்தின் பூசகி கட்ட ஐந்தாம் முடிச்சை அவர்களின் அணுக்ககுலத்தைச் சேர்ந்த மூதன்னை ஒருத்தி கட்டினாள். ஆறாவது முடிச்சை மலைத்தெய்வங்களின் பொருட்டு சிறுமி ஒருத்தி கட்ட ஏழாவது முடிச்சை மாலினியே கட்டிக்கொண்டாள். சுநீதர் “இளவரசே, உங்கள் உடைவாளை உருவி கலிதேவனின் காலடியில் தாழ்த்திவிட்டு வான்நோக்கித் தூக்கி மும்முறை ஆட்டுங்கள்” என்றார். ஒரு முதியவர் “அந்த மரபு இல்லையே?” என்றார். “அம்மரபு உருவாகட்டும்” என்றார் சுநீதர். “ஆனால்…” என அவர் முனக “இனி நமக்கு புஷ்கரரே அரசர்! புஷ்கரர் மட்டுமே அரசர்!” என்றார் சுநீதர்.

“ஆம்!” என்று ஒரு குலமூத்தார் கூவினார். “நம் அரசர் இவர் மட்டுமே. நாம் வெல்வோம். நம் குடிகள் நம் நிலத்தை முழுதாளும்.” குடிமூத்தார் அனைவரும் கோல்களைத் தூக்கி “ஆம் ஆம் ஆம்” என கூவினர். புஷ்கரன் திகைத்தவன்போல நின்றான். “வாளை உருவுக, இளவரசே” என்றார் சுநீதர். புஷ்கரன் தன் இடைவாளை உருவி கலியின் காலடிநோக்கி நீட்டினான். அது பாம்புநாக்கென நடுங்கியது. அதன்மேல் தன் கையில் வழிந்த குருதித்துளிகளைச் சொட்டி மலர் ஒன்றை இட்டு “பழிகொள்க! வெற்றிசூடுக!” என்று பூசகர் வாழ்த்தினார். அவன் வாளைச் சுழற்றித் தூக்கி தலைமேல் எழுப்பினான். “அமைதி… அமைதி” என்றார் சுநீதர். புஷ்கரன் கைகள் நடுங்க உடல் மெய்ப்புகொண்டது. “வஞ்சினம் உரையுங்கள், இளவரசே” என்றார் சுநீதர். “அது நம் தெய்வத்தின் ஆணை” என்றார் இன்னொருவர்.

அவன் மூச்சுவாங்கினான். வாள் கையில் காற்றுபட்ட கொடி என படபடப்பதாகத் தோன்றியது. “உம்” என்றார் சுநீதர். அவன் வாளை ஆட்டினான். வெளியே முரசுகள் முழங்க பல்லாயிரம் குரல்கள் வெடித்தெழுந்து “காளகக்குடி வெல்க! கலிமைந்தர் வெல்க! புஷ்கரர் வெல்க!” என ஓசையிட்டன. அவன் கண்கள் கசியும்படி மெய்விதிர்ப்புகொண்டான். “குருதியால் கழுவுவேன்! குருதி ஒன்றை மட்டுமே நிகர்வைப்பேன்! ஆணை! ஆணை! ஆணை!” என்றான். “ஆம், ஆணை! ஆணை! ஆணை!” என்றனர் சூழ்ந்திருந்த குடித்தலைவர்கள். வாளைத் தாழ்த்தியபின் உடலில் நுரைத்த ஆற்றல் அனைத்தும் ஒழுகி மறைய தலைசுற்றுவதுபோல உணர்ந்தான். பெருமூச்சுவிட்டபடி தோள்தளர்ந்தான்.

“மங்கலம் கொள்க!” என்றார் பூசகர். கலிக்குப் படைத்த அப்பம், மலர், சிறு பனைகொட்டையில் கள் மூன்றையும் ஒரு தாலத்தில் வைத்து அவனுக்கு அளித்தார். “இருவரும் ஓருடல் கைகளென கொள்க அதை” என்றார் சுநீதர். புஷ்கரனும் மாலினியும் கைநீட்டி அத்தாலத்தை வாங்கிக்கொண்டனர். பூசகர் பலிக்குருதி மையைத் தொட்டு இருவருக்கும் பொட்டு அணிவித்தார். “தெய்வம் துணைகொள்ளும். எதற்கும் அஞ்சேல். எங்கும் தளரேல். எந்நிலையிலும் பின்நோக்கேல். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் பூசகர். அவர்கள் இருவரும் அவரை வணங்கி விலகினர்.

flowerசுநீதர் பெருமூச்சுடன் உடல் இயல்பாகி முகம் மலர்ந்து “மணவினை முடிந்தது. கலிங்க இளவரசி நம் குடிக்கு தலைவியென்றானாள். நிஷதகுலம் என்றும் இந்நாளை கொண்டாடட்டும். இத்தருணம் நம் கொடிவழிகளின் நினைவில் வாழட்டும்” என்றார். அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு சிரித்து முகமன் பரிமாறிக்கொண்டார்கள். “செல்வோம்” என்று சுநீதர் புஷ்கரனை தொட்டார். எரிச்சல் கொண்டவன்போல, எதையோ எண்ணி தடுமாறுபவன்போல கைவிரல்களால் காற்றில் எதையோ சுழற்றியபடி புஷ்கரன் அவருடன் நடந்தான். ரிஷபன் வாளேந்தி உடன் வந்தான். சுநீதர் “நாம் அரண்மனைக்கு செல்கிறோம். ஊருண்டாட்டு ஒருங்கமைந்துள்ளது. அடுமனைப் புகையின் மணம் எழுகிறது” என்றார். ரிஷபன் “நம் தேர் மறுபக்கம் சென்று நின்றுள்ளது, அரசே” என்றான். புஷ்கரன் சினத்துடன் அவனை நோக்கி “தெரியும்” என்றான்.

“இருவரும் இணைந்து மக்கள் நடுவே செல்லவேண்டும். அவர்களின் நல்வாழ்த்துக்கள் பொழியட்டும்” என்றார் சுநீதர். புஷ்கரனின் இடப்பக்கம் மாலினிதேவி வந்து நின்றாள். அவர்களின் ஆடைமுனைகளை மூதன்னையர் சேர்த்துக்கட்டினர். வாழ்த்தொலி எழுப்பியபடி மக்கள் அரிசியையும் மலரையும் அவர்கள்மேல் தூவினர். மாலினியின் சுட்டுவிரலை தன் சுட்டுவிரலால் பற்றியபடி புஷ்கரன் மக்கள் நடுவே உருவான ஆழ்நெடும்பாதையில் நடந்தான். வாளுடன் ரிஷபன் உடன் வந்தான். மலர்களும் அரிசியும் உடல்மேல் விழுவது அவனுக்கு உளப்புரட்டலை அளித்தது. தலையில் தொங்கிநின்ற மலர்களை தட்டிவிட விரும்பினான். சூழ தெரிந்த பல்விரிந்த முகங்கள் கெடுகனவிலென இளித்தன. கண்கள் ஒவ்வொன்றிலும் வெறிப்பு. கொன்று உண்ணும் கான்விலங்கின் அறியாமை கலந்த உவகை.

தேர் வந்து நின்றது. சுநீதர் “அரண்மனைக்குச் செல்லுங்கள், இளவரசே. அரசஆடையில் உண்டாட்டுக்கு எழுந்தருளுங்கள். அரசியும் ஆடைமாற்றி வந்து சேரட்டும். அதற்குள் இங்குள்ள மக்கள் வழிபாடு முடிந்து ஊண்கூடங்களுக்கு வந்துவிடுவார்கள்…” என்றார். அவன் “நன்று” என்றபின் படிகளில் கால்வைத்து மேலேறினான். ரிஷபன் வாள் தாழ்த்தி வணங்கி மூன்று எட்டுவைத்து பின்னடைந்தான். மாலினிதேவி அவனுக்குப் பின்னால் படியிலேறி அவனருகே அமர்ந்தாள். தேர் மெல்லிய உலுக்கலுடன் உயிர்கொண்டது. புரவி ஒன்று சீறி மூச்சுவிட்டது. வெளியே அரசர் கிளம்புவதை அறிவிக்கும் முரசொலியும் கொம்பொலியும் எழுந்தன. தேர் நகர்ந்து உலுக்கி மெல்ல சாலையை அடைந்து விரைவுகொண்டது. குளிர்ந்த காற்று திரைச்சீலைகளை அசைத்தபடி உள்ளே பெருகிவந்தது.

அவன் மீண்டும் புரவியின் சீறலோசையை கேட்டான். ஆனால் அது அருகிலென சித்தம் உணர்ந்ததும் திரும்பிப் பார்த்தான். மேலாடையால் முகத்தை மூடியபடி மாலினிதேவி அழுதுகொண்டிருந்தாள். சில கணங்கள் அவன் அவளையே நோக்கினான். இருமுறை வாயும் கையும் அசைந்தன. சொல்லெடுக்காமல் திரும்பி கண்களை மூடிக்கொண்டான். சகடஒலியின் நேர்த்தியான தாளம் அவனை ஆறுதல்படுத்துவதாகத் தோன்றியது.

தொடர்புடைய பதிவுகள்

தொடங்குமிடம்

$
0
0

hands

அன்புள்ள ஜெ ,

நம்மை சுற்றியிருக்கும் வறுமையையும், பாலின அத்துமீறலையும், குழந்தைகள் அனுபவிக்கும் வன்கொடுமைகளையும், எளியோர் ஏமாற்றப்படுவதையும் எப்படித்தான் பார்த்துக்கொண்டு கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம்? இன்று காலை இறந்த ஒரு தாயிடம் குழந்தை பால்குடித்து கொண்டிருந்தது பற்றி செய்தி படித்து மனம் கலங்கிப்போனேன்.

இந்த மாதிரி சோகங்களை தவிர்க்கவே மனம் நினைக்கிறது. வர வர படம் பார்த்தல் கூட ஜி.வி.பிரகாஷ் படம் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கப் பிடிக்கவில்லை. புத்தகங்களில் கூட நல்ல முடிவுடன் கூடிய சோக நிகழ்வுகள் இல்லாத புத்தகங்களையே படிக்கிறேன். இந்தியாவை விட்டு வெகு தொலைவில் இருப்பதால் பல துக்க செய்திகளை தவிர்க்க முடிகிறது. திரும்பி வந்து grass root level சமூக சேவைகளில் ஈடுபட ஆசை. குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சொல்லிக் கொடுத்தாலும் மனம் நிறையும். ஆனால் பிறர் துன்பம் கண்டு ரொம்பவே கலங்கிப் போய்விடுகிறேன். என் சிறு வயது சோகங்கள் கூட காரணமாக இருக்கலாம்.

உங்கள் எழுத்துக்களில் (கட்டுரைகளில்)ஒரு நிதானம் என்னை வசீகரிக்கிறது.எனக்கு ஏதேனும் ஆலோசனை சொல்ல முடியுமா?

நன்றியுடன்,

ஸ்ரீ

***

அன்புள்ள ஸ்ரீ,

உங்கள் மிகையான உணர்வுகள் விலகியிருப்பதனால் வருபவை. களத்தில் உண்மையிலேயே பணியாற்றுபவர்களைப் பாருங்கள். அவர்கள் எளிதில் கலங்குவதில்லை. அனுபவங்கள் உணர்வுகளில் நிதானத்தை அளிக்கின்றன. பலகோணங்களில் பார்க்கச்செய்கின்றன. ஆகவே சமநிலையை அளிக்கின்றன.

மிகைக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்துபவர்களைக் கூர்ந்து நோக்கினால் அவர்கள் பெரும்பாலும் நேரடி யதார்த்தங்களுடன் சம்பந்தமற்றவர்கள். ஆகவே ஒற்றைநிலைபாடுகள் கொண்டவர்கள். தங்களைச் சார்ந்தே யோசிப்பவர்கள். தங்கள் பிம்பங்களை உருவாக்கிக்கொள்ளவே அந்த மிகையுணர்ச்சி. அது அவர்களுக்கு இரக்கமானவர் என்றும் நீதிசார்ந்தவர் என்றும் போராளி என்றும் கலகக்காரர் என்றும் பலவகையான தோற்றங்களை அளிக்கின்றன. அத்தோற்றங்களை நம்பி அவர் மேலும் மேலும் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடைகிறார். அதைத் தன்னையும் பிறரையும் நம்பவைக்க மேலும் பெருக்கிக்கொள்கிறார்.

ஆகவே உண்மையான ஆர்வமிருந்தால் சிறிய அளவிலேனும் எதையாவது செய்யத் தொடங்குங்கள். அதன் சிக்கல்களை சந்தியுங்கள். அது அளிக்கும் நிறைவையும் ஏமாற்றத்தையும் சந்தியுங்கள். எல்லாவற்றையும் சீராக்கியபின், தனக்குரிய இடத்துக்குத் திரும்பியபின், அதேபோன்ற பலவற்றுக்குப்பின் எவரும் எதையும் செய்வதில்லை. செய்ய விரும்பினால் மிக அருகே, அன்றாடவாழ்க்கையின் ஒருபகுதியாகவே, செய்வதற்குரியவை கண்ணுக்குப்படும்

ஜெ

 ***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பெரியசாமி தூரன்

$
0
0
PeriasamyThooran

பெரியசாமி தூரன்

முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் அனுமதி பெரும்பாலும் கிடைக்காது. பள்ளியிறுதி வரை நான் பார்த்த மொத்த படங்களே பத்துக்குள்தான். சேர்த்து வைத்து புகுமுக வகுப்பில் பார்த்துத் தள்ளினேன். எங்களுக்கு கலை,கேளிக்கை எல்லாமே கோயில்திருவிழாக்கள்தான். பதினைந்து கிலோமீட்டர் வட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருவிழாக்கள் உண்டு. திற்பரப்பு, திருவட்டாறு, குழித்துறை, பாறசாலை போன்ற பெரிய கோயில்களில் வருடத்தில் பத்துநாள் திருவிழா.

பெரும்பாலான பெரிய திருவிழாக்கள் மன்னர்காலத்திலேயே ஒழுங்குசெய்யப்பட்டவை. கதகளி, ஓட்டந்துள்ளல், திருவாதிரைக்களி போன்ற கேரளச் செவ்வியல் கலைகள் முக்கியமாக நடக்கும். கதகளியில் எனக்கு ஒரு பித்து உண்டு. சிறிய அம்மன், சாஸ்தா கோயில்களில் அவற்றை நடத்துபவர்களின் ருசியை நம்பலாம் கம்யூனிஸ்டுகள் அன்று பல கோயில்களைக் கையில் வைத்திருந்தார்கள். குறிப்பாக மஞ்சாலுமூடு கோயிலில் நடக்கும் மலையாள சமூக நாடகங்கள் மிகவும் பிரபலம். பாட்டு கச்சேரிகள் சில இடங்களில் இருக்கும். எங்கள் குழு மாதம் இரு திருவிழாவுக்குச் சென்றுவிடுவோம். அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது

அப்போதுதான் நயினாரின் பாடலைக் கேட்டேன். தொழில்முறைப் பாடகர் அல்ல.வற்கலை ராதாகிருஷ்ணனின் கதாபிரஸங்கம் தொடங்குவதற்கு முன்பு ஒரு மணிநேரம் ‘சும்மா’ ஒரு பாட்டு, பக்கமேளம் உள்ளூரிலேயே. அவரது கணீரென்ற குரல் முதலியேயே என்னைக் கவர்ந்தது. சுத்தமான தமிழ்ப்பாடல்களை மட்டுமே பாடினார். ஒரு பாடலைக் கேட்டு என்னவென்றே தெரியாத மன எழுச்சிக்கு ஆளாகி நான் கண்ணீர் சிந்தினேன். ‘என்னடா? என்னடா?’ என்று நண்பர்கள் உலுக்கினார்கள். சொல்லத்தெரியவில்லை. மனம் பாகாக மாறி ஓடி மறைந்துவிட்டது. ”முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்!”

இன்றும் அவ்வனுபவத்தை என்னால் மீட்டெடுக்க முடிகிறது. நான் அன்றுகூட பக்தன் இல்லை. கடவுள் நம்பிக்கை எங்கொ இருந்தாலும் அது பகவதிமீது தானே ஒழிய முருகனோ சிவனோ விஷ்ணுவோ அல்ல. நவீன இலக்கிய வாசிப்பு அதி தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. கம்யூனிஸ்டுக் கட்சி தொடர்பும், ஈடுபாடும் இருந்தது. அப்படியும் ஒன்று என்னை மீறி நிகழ்ந்துவிட்டது. மனிதவாழ்க்கையின் மீட்பற்ற பிரம்மாண்டமான தனிமையையும் அதன் கையறுநிலயையும் நான் சட்டென்று உணர்ந்தேன் என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சியை வைத்து என்னை நெடுங்காலம் நண்பர்கள் கிண்டல்செய்வார்கள்.

மேலும் நாலைந்து வருடம்கழித்து பழைய குமுதம் இதழில் ஒரு செய்தியை வாசித்தேன். கோவையில் ஓர் அரங்கில் மதுரை சோமு அந்தப்பாடலை பாடினார். ”முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்” சோமு எப்படிப் பாடியிருப்பார் என்பதை இசைரசனை உள்ளவர்கள் ஊகிக்க முடியும். அதைக் கேட்டுக்கொண்டிருந்த குள்ளமான, கண்ணாடி போட்ட, ஒரு மனிதர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தாராம். அந்த மனிதர் பெயர் பெரியசாமி தூரன். அவர்தான் அந்தப்பாடலின் ஆசிரியர்.

*

பெரியசாமி தூரன் சிறுபிள்ளைகளுக்கெல்லாம் தெரிந்த பெயர். ஆரம்பப்பள்ளிமுதல் சிறுவர்கள் அவர் எழுதிய பாடல்களைப் பாடித்தான் வளர்ந்திருப்பார்க்ள். பெ.தூரன் என்றபெயரை நானெல்லாம் பேத்தூரன் என்று நெடுநாள் சொல்லிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் நண்பரின் குழந்தையும் அவ்வாறே சொல்வதைக் கேட்டேன். குழந்தைகள் வாயில் பெயர் ஒலிப்பதென்பது பெரிய அதிருஷ்டம். தூரனுக்கு அந்த யோகம் இருந்தது.

ஆனால் கணிசமான தமிழர்கள் ஆரம்பப்பள்ளிக்கு பிறகு தூரனைப்பற்றி எதையுமே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். தூரனுக்கு மூன்று முகங்கள் உண்டு. குழந்தையிலக்கிய ஆசிரியர், தமிழிசைப்பாடலாசிரியர். இவ்விருதளங்களிலும் இன்றும் அவரது பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மகாராஜபுரம் சந்தானத்தின் இசை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சுத்தானந்த பாரதியார், பெரியசாமி தூரன் இருவரில் ஒருவர் இயற்றிய கீர்த்தனைகளில் ஒன்று வந்துவிடும். சஞ்சய் சுப்ரமணியம், அருணா சாய்ராம் போன்றவர்களின் கச்சேரிகளிலும் தூரனின் கீர்த்தனைகள் ஒலிக்கும்.

ஆனால் தூரனின் வாழ்க்கையின் பெரும்பகுதி வேறுவகையான பிரம்மாண்டமான அறிவுச்செயல்பாடுகளுக்காகவே செலவிடப்பட்டது. தமிழகம் கண்ட மாபெரும் அறிஞர்களில் ஒருவர் அவர்.

kavimani

கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை

vaiyapuri pillai

எஸ்.வையாபுரிப்பிள்ளை

நவீனத்தமிழின் அடிப்படைக் கட்டுமானங்களை உருவக்கியவர்கள் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை எஸ்.வையாபுரிப்பிள்ளை, பெ.தூரன், என்ற மூவரைச் சொல்லலாம். தேசிகவினாயகம்பிள்ளையின் கல்வெட்டு ஆராய்ச்சி முறைமை, வைபாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி, பெ.தூரனின் கலைக்களஞ்சியம் ஆகியவை முன்னோடிப் பணிகள். வழிகாட்டிக கொடிகள்.

அறுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் மிக அதிகமாக தமிழுக்குப் பங்களிப்பாற்றிய ஆட்சி தொடக்க இருபதாண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியே என்பதே உண்மை. தமிழை ஒரு நவீன மொழியாக உருவாக்கவும், அன்றாடப்பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் தொலைநோக்குள்ள திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பேரறிஞர்கள் அவற்றில் பொறுப்பில் அமர்த்தப்பட்டு போதிய நிதியும் ஒதுக்கப்பட்டது. தமிழகம் முழுக்க நூலக இயக்கம் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டது. இந்தச்செயல்பாடுகளில் அன்றைய கல்வியமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமையும் வழிகாட்டலும் மிக முக்கியமானவை.

 .

ts

தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்

விளைவாக தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் முயற்சிகள் தமிழில் நிகழ்ந்தன. இன்றும் நாம் புழங்கும் பலநூறு ஆட்சிச்சொற்கள் அப்போது ஆட்சிச்சொல்லாக்க குழுவினரால் உருவாக்கப்பட்டவை. இந்திய மொழிகளில் முன்னோடி முயற்சியாக ஒரு முழுமையான பேரகராதி உருவாக்கப்பட்டது. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் அந்தப் பேரகராதிக்கு இன்றுவரை உரிய முறையில் மறுபதிப்பு கொண்டுவரக்கூட பிறகுவந்த ஆட்சிகளால், மொழிக்கென அவர்கள் செலவழித்த கோடானுகோடிகளால் முடியவில்லை. இதை தீவிர திராவிட இயக்க ஆதரவாளரான தமிழாய்வாளர் ஆ.இரா.வெங்கடாடலபதியே குறிப்பிட்டிருக்கிறார். பிறகு அகராதி முயற்சிகள் பல நடந்தன. அவையெல்லாம் திறனற்ற நகல் முயற்சிகளாக நீண்டு முடிவடையாமலேயே நின்றுவிட்டன.

அதேபோல முக்கியமானது தூரனின் பெரும் கலைக்களஞ்சியம். ஒரு மொழியின் முதல் பேரகராதியும் முதல் கலைக்களஞ்சியமும் எத்தகைய மகத்தான சாதனைகள் என்பதை இன்று பலரும் எண்ணிப்பார்ப்பதேயில்லை. கலைக்களஞ்சியத்துறையின் தலைவராக இருந்த போதிலும் கிட்டத்தட்ட தனியாளாகவே அவர் அப்பெரும்பணியை செய்து முடிக்கவேண்டியிருந்தது என்பதை தமிழ்ச்சூழலை வைத்துப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

தூரன் தன் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய நாட்களில் அவரது உழைப்பைப்பற்றி சமகால அறிஞர்களான கி.வ.ஜகன்னாதன் போன்றவர்கள் பெரிதும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 20 வருடங்கள் ஒவ்வொருநாளும் விழித்திருக்கும் நேரம் முழுக்க அவர் அதில் ஈடுபட்டிருந்தார். நகலெடுக்கும் வசதிகளும் பிற வசதிகளும் இல்லாமலிருந்த அக்காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் கையாலேயே குறித்துக்கொண்டு எழுதி அகர வரிசை அட்டைபோட்டு வேலைசெய்துகொண்டே இருந்திருக்கிறார். ஒரு சாதாரண உரையாடலின் போது சில நிமிடங்கள் பேசிவிட்டு ஓரமாக நகர்ந்து தன் வேலையில் மூழ்கிய தூரனைப்பற்றி கி.வ.ஜ சொல்கிறார்.

கலைக்களஞ்சியத்துக்குப் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியம் ஒன்றையும் தூரன் உருவாக்கினார். இக்கலைக்களஞ்சியங்களின் அருமையை அறிய வேண்டுமென்றால் கால் நூற்றாண்டு கழித்து பெரும் நிதியுதவியுடன் பலநூறு பேர் எழுத தஞ்சை தமிழ் பலகலைக்கழகம் உருவாக்கிய வாழ்வியல் களஞ்சியம் என்ற கலைக்களஞ்சியத்துடன் ஒப்பிட வேண்டும். பெரும்பாலும் தூரனின் கலைக்களஞ்சியத்தை நீர்த்துப்போன மொழியில் நகலெடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவற்றின் பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியம் என்ற தகுதிக்குள் வராதவை.

தூரனின் கலைக்களஞ்சியத் தொகுதிகளின் பயன் என்ன? எளிமையாக ஒன்றை கவனித்துப் பார்க்கலாம். அவரது கலைக்களஞ்சியங்கள் வரத்தொடங்கியபின்னரே தமிழில் பொது அறிவு துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. அவற்றை பெரும்பாலும் தமிழாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாமே தூரனின் கலைக்களஞ்சியத்தின் மறு பிறப்புகள். தூரனின் கலைக்களஞ்சியம் நூறாக ஆயிரமாக பிளந்து பரவி தமிழ் அறிவுலகை உருவாக்கியது என்றால் மிகையல்ல.

அத்துடன் அனைத்து தளங்களுக்கும் தமிழைக் கொண்டு போக தூரன் செய்த ஆரம்பகால கடும் முயற்சி கலைச்சொற்களை தேவையாக்கியது. பலவகையான சொற்றொடர் முறைகளை தேவையாக்கியது. அந்தச் சவாலை அவர் சத்தித்ததாலேயே அவரது கலைக்களஞ்சியம் நவீனத்தமிழுக்கு அடித்தளமாக அமைந்தது.

நான் என் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையில் தூரனின் கலைக்களஞ்சியத்தொகுதியின் தீவிர வாசகனாக இருந்தேன். அக்காலத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கட்டுரை பேச்சுப்போட்டிகளுக்காக நாங்கள் நண்பர்கள் முண்டியடித்து, அக்கலைக்களஞ்சியங்களை நூலகமாக இருந்த ஆசிரியர் ஓய்வறையில் தரையில் அமர்ந்து படித்து குறிப்பெடுப்போம். வேறு கலைக்களஞ்சியங்கள் எதையுமே கண்டிராத அந்த வயதில் அந்தக் கிராமத்துப் பள்ளியில் அந்நூல்கள் மானுட அறிவின் பிரம்மாண்டத்தை உணர்த்துவனவாக இருந்தன.

ஈரோடு மாவட்டம் மஞ்சக்காட்டு வலசை என்ற கிராமத்தில் 1908ல் செப்டெம்பர் 26 ஆம் நாள் பிறந்தார் தூரன். தூரன் என்பது கொங்கு கவுண்டர்களில் ஓரு துணைப்பிரிவு. தந்தை பழனியப்பக் கவுண்டர். தாய் பாவாத்தாள். மொடக்குறிச்சியில் ஆரம்பப்பள்ளிக்கல்வி பெற்றபின் ஈரோடு மாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி முடித்தார். அப்போது ஆசிரியராக இருந்த திருமலைச்சாமி அய்யங்காரால் அவருக்கு தமிழார்வம் உருவானது.

1939ல் காளியம்மாளை மணம்புரிந்துகொண்டார். மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு குழந்தைகள்.தூரன் 1927 சென்னை மாநிலக்கல்லூரியில் அறிவியல்பாடங்களில் இண்டர்மிடியட் படித்து வென்றார். 1929ல் கணிதத்தில் எல்.டி பட்டம்பெற்று ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். 1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபபளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியிலும் பின்னர் போத்தனூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் இயங்கிய ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவர் முறைப்படி மரபிசையைக் கற்றுத்தேர்ந்தார்.

சிறு வயதிலேயே உறுதியான காங்கிரஸ்காரர். சுதந்திரத்துக்குப்பின் தி.சு.அவினாசிலிங்கம் அழைப்பை ஏற்று 1948 முதல் 1968 வரை இருபதாண்டுக்காலம் தன்னாட்சி உரிமையுடன் இயங்கிய தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் பொறுப்பில் இருந்து கலைக்களஞ்சிய வெளியீட்டில் ஈடுபட்டார். சராசரி 750 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக இந்நூல் வெளிவந்தது. அத்தகைய ஒரு கலைக்களஞ்சியம் இந்திய மொழிகளில் தமிழிலேயே முதலில் வெளிவந்தது. பின்னர் தன் சொந்த முயற்சியால் 1976 வரை உழைத்து சராசரி 100 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார்.

தூரனின் சாதனைகளில் முக்கியமானது பாரதியார் 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் எழுதிய படைப்புகளைத் தேடி எடுத்து ஆவணப்படுத்தி காலவரிசைப்படி தொகுத்து ‘பாரதி தமிழ்’ என்ற பேரில் வெளியிட்டது. பாரதி ஆய்வுகள் தமிழில் தொடங்கப்படுவதற்கான வழிகாட்டி முயற்சி என்பதுடன் பாரதி படைப்புகள் அழிந்துவிடாமலிருக்க தக்க நேரத்தில் செய்யப்பட்ட பெரும்சேவையுமாகும். திரு.வி.கவின் ஆலோசனைப்படி இதை தூரன் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

தூரன் கவிதைகள், கதைகள், இதழியல்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என கிட்டத்தட்ட 20 நூல்களை படைத்திருக்கிறார். தூரனின் கவிதைகள் பாரதி கவிதைகளின் பாதிப்பில் எழுந்த நேரடியான மொழி எழுச்சி கொண்டவை. ஆனால் பாரதியிடம் இருந்த நவீன படைப்புத்திறன் அவரிடம் இல்லை. இலக்கியப் படைப்பாளியாக தூரனின் பங்களிப்பு முக்கியமானதல்ல.

தூரன் 1980 முதல் நோய்வாய்ப்பட்டிருந்தார். 1987 ல் ஜனவரி 20 ஆம் நாள் மரணமடைந்தார். கடைசிக்காலத்தில் கிட்டத்தட்ட முழுமையான புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்தார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் உதவி மட்டுமே இருந்தது. சிற்றிதழ் சார்ந்த சூழலில் மட்டுமே அவரது பெரும் சாதனைகளைப்பற்றிய மெல்லிய பிரக்ஞை எஞ்சியிருந்தது. ‘நான் செத்தால் ரேடியோவிலே கூட சொல்லமாட்டாங்களே ராமசாமி” என்று அவர் வாதநோய் கண்டு படுக்கையில் இருக்கையில் பார்க்கவந்த சுந்தர ராமசாமியிடம் கண்ணீர் மல்கச் சொன்னார்.

தூரனைப்பற்றிய தொகை நூல் ஒன்றை பாரதீய வித்யா பவன், கோவை மையம் வெளியிட்டிருக்கிறது. சிற்பி பாலசுப்ரமணியம் தொகுப்பாசிரியராகவும் பேராசிரியர் இராம இருசுப்பிள்ளை, டாக்டர் ஐ.கெ.சுப்ரமணியம் ஆகியோர் இணையாசிரியர்களாகவும் செயல்பட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் வந்திருக்கிறது இந்த நூல்.

தூரனின் நூற்றாண்டு முடிந்த பின்னர் இதை எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். தான்சார்ந்த மொழிக்கும் பண்பாட்டுக்கும் தன் இறுதிச்சொட்டு உழைப்பை அளித்து மறைந்த அந்த எளியமனிதரைப்பற்றி சம்பிரதாயமாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. எளிமை, தனக்குள் மூழ்கி உழைக்கும் அர்ப்பணிப்பு ஆகியவை அடிப்படை விழுமியங்களாக இருந்த ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி பெரியசாமி தூரன்.

தூரன் பற்றிய சுட்டிகள்

பெரியசாமி தூரன் பாடல்கள் –டி கெ சங்கரநாராயணன்

http://sanimoolai.blogspot.com/2008/10/blog-post.html
http://groups.google.com.br/group/minTamil/msg/9662f6db6f265c70

http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=89&cid=14&aid=4786&m=c

http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html

======================================

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Oct 27, 2008

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42

$
0
0

41. தனிநகை

flowerவிராடபுரியின் அரண்மனையில் திரௌபதிக்கு தனியறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அரசி சுதேஷ்ணையின் ஆணைப்படி அவ்வறையை அவளுக்குக் காட்டுவதற்கு அவளை அழைத்துச் சென்ற தலைமைச்சேடி பிரீதை அவளிடம் “இங்கு இளம் சேடியர் எவருக்கும் தனியறைகள் ஒதுக்கப்படுவதில்லை. அவர்கள் பொதுக்கூடங்களில்தான் அந்தியுறங்க வேண்டுமென்பது ஆணை” என்றாள். திரௌபதி திரும்பி அவளை பார்க்கவில்லை. அவள் மெல்லிய சிரிப்பொலியுடன் “எவர் எங்கு எவருடன் சென்றிருக்கிறாளென்ற கணக்கை தலைமைச்சேடி எடுக்கவேண்டுமல்லவா? அதற்கு உகந்த வழி அதுவே அன்றி, தனியறைகள்தோறும் சென்று கதவைத்தட்டவா முடியும்?” என்றாள்.

திரௌபதி அவளை நோக்காமலேயே நடந்தாள். எதையோ மிதித்து குழப்புவதுபோன்ற காலடிகளுடன் ததும்பும் தடித்த வெண்ணிற உடலை உந்தி உந்தி நடந்தாள் பிரீதை. உருண்ட முகமும் மின்னும் சிறிய கண்களும் கொண்ட பிரீதை முன்பொரு காலத்தில் அழகியெனக்கூட தோன்றியிருக்கக்கூடும். வாழ்வினூடாக ஊறி அவள் முகத்தில் தேங்கியிருந்த அறியமுடியாத நஞ்சு ஒன்று பார்த்த முதற்கணமே எரிச்சலையும் வெறுப்பையும் உருவாக்குவதாக இருந்தது. மூச்சிரைத்தபடி வியர்வை வாடை எழ அவள் நடந்தாள். அவள் மூச்சில் வெந்த ஊனின் கெடுமணம் இருந்தது.

“இந்த அறையில் முன்பு நான்தான் தங்கியிருந்தேன். என்னை அடுமனைக்கூடத்தின் தலைவியாக அமர்த்தியபோது இங்கிருந்து ஒழிந்து சென்றேன். அதிலிருந்து இங்கு எவரும் தங்குவதில்லை. உள்ளே பெட்டிகள்தான் இருந்தன. அரசி ஆணையிட்டதனால் இதை தூய்மை செய்யச்சொன்னேன்” என்று சொல்லி அவள் நீண்ட மூவெட்டுத் தாழ்க்கோலால் அதன் பூட்டை திறந்தாள். மும்முறை சுழற்றி உள்ளே தாழ்விலகும் ஒலியை கேட்டபின் கதவை தள்ளித்திறந்து “குனிந்து வரவேண்டும். தலை மேலே முட்டக்கூடும்” என்று சொல்லி உள்ளே சென்றாள்.

திரௌபதி மிகவும் குனியவேண்டியிருந்தது. மிகச்சிறிய அறை. இருகைகளையும் விரித்தால் இரு சுவர்களையும் தொடமுடியுமென்று தோன்றியது. சிறிய ஒரு சாளரம் மட்டுமே இருந்தது. கைகளை தூக்கினால் மச்சுப்பலகை முட்டியது. முழங்காலளவு உயரம் கொண்ட சிறிய மஞ்சம் ஒன்று அறையில் போடப்பட்டிருந்தது. அந்த மஞ்சம் அளவுக்கே இடம் எஞ்சியிருந்தது. “இங்கு ஒரு பெரிய மரப்பெட்டி உள்ளது. உங்கள் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். அதை மூடி தரையில் அமர்ந்து பெட்டி மேல் ஓலைகளை வைத்து எழுதவும் செய்யலாம்” என்று பிரீதை சொன்னாள். “நீங்கள் ஓலைகளில் எழுதுவதை விரும்புவீர்களென்று அரசி என்னிடம் சொன்னார்.”

மீண்டும் அந்தச் சிரிப்பு. அது வெறும் ஒலியாகவே அவளிடமிருந்து எழுந்தது. முகத்திலும் கண்களிலும் அச்சிரிப்பு தெரியவில்லை. “மலரையோ கணையாழியையோ அனுப்புவதைவிட ஓர் ஓலையில் இரண்டு வரி எழுதி அனுப்பினால் ஆண்கள் பெரிதும் மகிழ்கிறார்கள். நூல்கற்கத் தெரியாதவர்களுக்குக்கூட கற்ற பெண்ணொருத்தியுடன் கூடுவது பெருமிதத்தை அளிக்கிறது” என்றாள். “அடுமனைச்சேடியரில்கூட எழுத்து தெரிந்தவளுக்கு மதிப்பு மிகுதி. இங்கே அனிதை என்று ஒருத்தி இருந்தாள். காவியம் கற்றவள் என்பார்கள். புரவிச்சூதன் ஒருவனுடன் சென்றாள். அவன் அவளை அயலூர் விடுதியில் கைவிட்டுவிட்டுச் சென்றான் என்றார்கள்.”

திரௌபதி அவளை நோக்கி திரும்பி “என்னுடைய மரவுரிகளும் தலையணைகளும் எங்கே?” என்றாள். அவள் தடுமாறி “அங்கே வெளியே” என்றாள். நேருக்கு நேர் விழிநோக்கிப்பேசுவது அவளை நிலைகுலைய வைக்கிறது என்பதை திரௌபதி முன்னரே கண்டிருந்தாள். பிறரில் அவள் எழுப்பும் வெறுப்பும் கசப்பும் அவள் தனக்குச் சுற்றும் போட்டுக்கொண்டிருக்கும் அரண். “அவற்றை எடுத்துக்கொண்டு வந்து இந்த மஞ்சத்தில் வை” என்று திரௌபதி ஆணையிட்டாள். அறியாது “அவ்வாறே” என்றபின் பிரீதை சட்டென்று முகம் சிவந்து விழிகள் எரிய “சேடியர் தங்கள் பணிகளை தாங்களேதான் செய்துகொள்ளவேண்டும்” என்றாள்.

“நன்று! இப்பணிகளைச் செய்ய பிறிதொரு சேடியை அனுப்பும்படி நான் அரசியிடம் சொல்கிறேன்” என்றாள் திரௌபதி. பிரீதை தடுமாறி “இல்லை, நான் அவ்வாறு சொல்லவில்லை. இதோ எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லி வெளியே சென்றாள். அங்கு அவள் பிறிதொரு சேடியை நோக்கி “யாரடி? அங்கு என்ன செய்கிறாய்? இந்த மரவுரிகளையும் தலையணைகளையும் எடுத்து உள்ளே வைக்கவேண்டுமென்று உன்னிடம் பலமுறை சொல்லியிருந்தேனல்லவா? எழுதித்தந்தால்தான் செய்வீர்களோ? சவுக்கின் சுவை என்ன என்று உங்கள் தோல்களுக்கு இன்னும் தெரியவில்லை. நான் எப்போதும் இதேபோல பொறுமையாக இருக்க மாட்டேன்” என்று கூச்சலிட்டது கேட்டது.

மாநிற உடலும் நீண்ட முகமும் பெரிய கண்களும் கொண்ட சேடிப்பெண் ஒருத்தி மரவுரியையும் தலையணையையும் உள்ளே எடுத்துக்கொண்டு வந்து மரவுரிகளை சீராக விரித்து அவற்றில் தலையணையை வைத்தாள். திரௌபதி மரப்பெட்டிமேல் அமர்ந்து சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். முதற்கணம் மிகச்சிறிதென்று தோன்றிய அவ்வறை விரிந்துகொண்டிருந்தது. அவளுக்கு மட்டுமேயான ஒரு சிறிய இடம். அலைவிரிவில் ஓர் ஓடம்போல.

மரவுரிகளை விரித்து முடித்து நிமிர்ந்து நின்ற இளம் சேடி தாழ்ந்த குரலில் “பிறிதேதாவது…?” என்றாள். திரௌபதி திரும்பிப்பார்த்து “உன் பெயரென்ன?” என்றாள். அவள் முகம்சிவந்து விழி தாழ்த்தி மெல்லியகுரலில் “சுபாஷிணி” என்றாள். “நான் சூதப்பெண். இங்குதான் பிறந்து வளர்ந்தேன்.” திரௌபதி “இசை கற்றிருக்கிறாயா?” என்று கேட்டாள். “இல்லை, நாங்கள் அடுமனையாளர்கள்” என்று அவள் சொன்னாள். “என் அன்னை இங்குதான் பணியாற்றினாள். சென்ற ஆண்டு வயிற்றுச் சூலை நோயால் உயிர் துறந்தாள். தந்தை எவரென்று அவள் என்னிடம் சொன்னதில்லை.”

திரௌபதி “உன் குரல் நன்று, நீ பாட்டு கற்றிருக்கலாம்” என்றாள். “இங்கு அதற்கெல்லாம் பொழுதே இல்லை” என்றாள் சுபாஷிணி. அவள் செல்லலாம் என திரௌபதி விழிகாட்டி சாளரத்தை நோக்கினாள். அவள் அங்கேயே நிற்பதை விழிமுனையால் கண்டு புருவத்தை தூக்கினாள். அவள் தயங்கி “ஒன்று சொல்லவா?” என்றாள். “சொல்” என்றாள் திரௌபதி புன்னகையுடன். “தாங்கள் சூதப்பெண் அல்ல, ஷத்ரியப்பெண். சூதப்பெண்களுக்கு இவ்வாறு ஆணையிட முடியாது. தாங்கள் எங்கோ அரசொன்றை ஆண்டவர். அரியணை அமர்ந்தவர். அதை இங்கு அனைவருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“நன்று” என்று திரௌபதி புன்னகைத்தாள். “தாங்கள் யாரென்று நான் கேட்கப்போவதில்லை. கேட்கக்கூடாதென்று பேரரசியின் ஆணை என்றார்கள்” என்று சுபாஷிணி சொன்னாள். “ஆனால்…” என்றபின் சொல்நிறுத்தி திரும்பிச் செல்ல முயன்றாள். “சொல், என்ன?” என்றாள் திரௌபதி. “ஒன்றுமில்லை” என்றாள் அவள். “சொல்! என்ன சொல்ல வந்தாய்?” என்றாள் திரௌபதி. “தாங்கள் ஏதோ மாற்றுருக்கொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். மாற்றுருவேயானாலும் எங்கள் கூட்டத்தில் ஒருவர் இவ்வண்ணம் பேரரசியரின் தோற்றத்துடனும் நிமிர்வுடனும் இருப்பது மிகப்பெரிய உவகையளிக்கிறது” என்றாள்.

“ஏன்?” என்றாள் திரௌபதி. நாணப்புன்னகையுடன் “தனியறையில் அமர்ந்து பகற்கனவு காணும்போது தங்களைப்போல நானும் ஆவதாக கற்பனை செய்துகொள்ளலாம் அல்லவா?” என்று அவள் சொன்னாள். அவ்விளமையின் தூய சிரிப்பு திரௌபதியை மலரவைத்தது. “அருகே வா!” என்றாள். அவள் கால் உழற்றி தயங்கி சிறுமியைப்போல அருகே சென்றதும் அவள் கைகளைப்பற்றி இழுத்து அருகணைத்து “உனக்கு என்ன வயதாகிறது?” என்றாள் திரௌபதி. “பதினாறு” என்றாள் சுபாஷிணி.

“கனவுகள் காணும் வயது. கனவு காண்பதில் பிழையொன்றுமில்லை. குற்றவுணர்வோ நாணமோ கொண்டு அதை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. உன் வயதில் நானும் மிகப்பெரிய கனவுகளைக் கண்டேன். இன்று எண்ணுகையில் அக்கனவுகளுக்கு நடைமுறைப் பொருளென்று ஏதுமில்லை என்று தோன்றுகிறது. அக்கனவுகள் அளித்த இன்பம் மட்டுமே அவற்றின் பயன்” என்றாள் திரௌபதி. அவள் “தாங்கள் கண்ட கனவுகள் எதுவும் நிறைவேறவில்லையா?” என்றாள்.

திரௌபதி புன்னகையுடன் “கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது கனவுகளைத் துரத்துவதைப்போல வாழ்க்கையை வீணடிப்பது பிறிதொன்றில்லை என்று தோன்றுகிறது. கனவுகளில் அமர்ந்து திளைத்து மகிழ்ந்து அவற்றிலேயே மூழ்கி மறைய முடியுமென்றால் அதுவே பெருங்கொடை” என்றாள்.

“நீங்கள் நூல்கற்ற விறலியைப்போல் பேசுகிறீர்கள்” என்றாள் சுபாஷிணி. “நான் நூல்கற்றிருக்கிறேன்” என்றாள் திரௌபதி. வெளியே பிரீதை “ஏய் சுண்டெலி, அங்கு என்ன செய்கிறாய்? உன்னிடம் நான் சொன்னதென்ன?” என்று குரலெழுப்பினாள். “அய்யோ… நான் செல்லவேண்டும்” என்ற சுபாஷிணி புன்னகையுடன் “சுண்டெலி என்பது நான்தான். என் முகம் கூரியது என்கிறார்கள்” என்றாள். சிறிய வாயிலுக்கப்பால் பிரீதை தோன்றினாள். திரௌபதியின் கைகளை உதறி பின்னால் நகர்ந்த சுபாஷிணி “நான் இவர்களிடம்…” என்று ஏதோ சொல்லத் தொடங்க அவள் “உன் தோலை உரிக்காமல் இன்று விடப்போவதில்லை. ஒருநாழிகையாக ஒரு வேலையை செய்கிறாயா? வா, வாடி” என்றாள்.

திரௌபதி பிரீதையிடம் “உள்ளே வா” என்றாள். “யாரிடம் சொல்கிறாய்? என்னிடமா?” என்றாள் அவள். “உன்னிடம்தான். உள்ளே வா” என்றாள் திரௌபதி. அவள் முகம் சிவக்க மூச்சு சீற “நான் இங்கே சேடியர்தலைவி… நான்…” என பேசத்தொடங்க “உள்ளே வா” என்றாள் திரௌபதி. அவள் கண்ணறியா சரடொன்றால் இழுக்கப்பட்டதுபோல உள்ளே வந்ததும் “உன்னிடம் ஒரு சொல் தனியாக நான் சொல்லவேண்டும்” என்றாள் திரௌபதி. “என்ன சொல்லப்போகிறாய்?” என்று ப்ரீதை படபடப்புடன் கேட்டாள். அவள் உடலே சிவந்து வியர்வை பொடித்தது. “என்ன சொல்லப்போகிறாய்? நான் யார் என்று அறிவாயா?” என்றாள்.

“அறிந்த பின்தான் இதை சொல்கிறேன். இனி எனக்கெதிராகவோ எனக்கு வேண்டியவர்களுக்கு எதிராகவோ ஓர் எண்ணம் உன் உள்ளத்தில் எழுந்ததென்று நானறிந்தால் உன்கழுத்தில் குறுவாளைப் பாய்ச்ச தயங்கமாட்டேன். என்னால் அது மிக எளிதாக இயலும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. பிரீதை இருகைகளும் தளர்ந்து தொடைமேல் உரசி விழ தொங்கிய முலைச்சுமைகள் எழுந்தமைய “நான் இங்கு…” என்று தடுமாறினாள். “இனி இந்த அகத்தளம் முழுவதும் என் ஆணைகள் மட்டுமே செல்லும். மறுசொல் எடுக்கவோ எண்ணவோ எவருக்கும் ஒப்புதல் இல்லை. அவ்வாறு என் சொல் கடந்து செல்லும் எவரும் இங்கு உயிர் வாழமாட்டார்கள்” என்றாள் திரௌபதி.

அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “ஏனெனில் ஐந்து கந்தர்வர்களால் காக்கப்படும் பெண் நான். உனது அத்தனை கரவுச் செயல்களையும் நன்கறிந்தவள். இனி அறியவேண்டுவதும் ஏதேனும் இருந்தால் ஓரிரவுக்குள் என்னால் அறியவும் இயலும்” என்றாள் திரௌபதி. அவள் கால் தளர்ந்து கைநீட்டி சுவரை பற்றிக்கொண்டு “கரவு என்று எதை சொல்கிறீர்கள்? நான் ஏதுமறியேன்” என்றாள். திரௌபதி “இவ்வரண்மனையிலிருந்து கீசகருக்கு செய்திகளை கொண்டு செல்லும் சிலரில் ஒருத்தி நீ. இங்கு நான் வந்த முதல்நாள் நானும் அரசியும் தனித்திருந்து பேசுகையில் அவ்வறைக்கு வெளியே நீ நின்றிருந்தாய். அரசி பேசுவது உனக்கு காதில் விழவில்லை. ஆனால் அரசியிடம் நான் எத்தனை பொழுது பேசினேன் என்பதை உடனடியாக கீசகனிடம் சென்று சொன்னாய்” என்றாள்.

கையசைத்து முகம் பதறி “இல்லை…” என்று சொல்லத் தொடங்கிய பிரீதை “நான் என்ன செய்வேன்? சொல்லும்படி எனக்கு ஆணையிட்டால் அதை செய்துதான் ஆகவேண்டும்? கீசகரின் ஆணையை மீறும் ஆற்றல் கொண்ட எவரும் இந்த நகரில் இல்லை” என்றாள். திரௌபதி “ஆம், நீ சொல்லக்கூடாதென்று நான் ஆணையிடவில்லை. நீ சொல்வது எனக்குத் தெரியும் என்று மட்டும்தான் சொன்னேன். செல்க!” என்றாள். அவள் கைநீட்டி “நான் எளியவள். நினைவறிந்த நாள்முதலாய் இங்கு அண்டிப்பிழைப்பவள். எவருக்கும் உளமறிந்து எந்தத் தீங்கும் செய்ததில்லை. வாழ்வதின் பொருட்டு எதையோ செய்கிறேன்” என்றாள். “ஆம், எந்தத் தீங்கும் செய்யாமலிருக்கும் வரை உனக்கும் எத்தீங்கும் நிகழாது” என்று திரௌபதி சொன்னாள். கைகூப்பியபின் கண்ணீரைத் துடைத்தபடி பிரீதை வெளியேறினாள்.

சுபாஷிணி அவள் செல்வதைப் பார்த்தபின் நெஞ்சில் கை வைத்து “ஐயோ” என்றாள். “என்ன?” என்றாள் திரௌபதி. “அவள் யார் தெரியுமா? அவளுக்கு நாவில் நஞ்சு. கண்களில் அதைவிடக்கொடிய நஞ்சு. இங்கு அவளை அஞ்சாத பெண்கள் எவருமே இல்லை” என்றாள். “இனி அஞ்ச வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “ஆம், நான் உங்கள் கண்களில் பட்டுவிட்டேன். இனி எதையும் நான் அஞ்சவேண்டியதில்லை” என்று சுபாஷிணி சொன்னாள். பிறகு தாழ்ந்த குரலில் “மெய்யாகவா?” என்றாள்.

“என்ன?” என்றாள் திரௌபதி. “ஐந்து கந்தர்வர்கள் இருக்கிறார்களா?” என்றாள். “ஆம், ஐந்துபேர். நான் ஐந்து கந்தர்வர்களை மணந்தவள்” என்றாள். அவள் மேலும் குரல்தாழ “எங்கிருக்கிறார்கள்?” என்றாள். கண்களில் சிரிப்புடன் “இங்கு” என்றாள் திரௌபதி. அவள் கழுத்திலும் தோளிலும் மெய்ப்பு எழுந்தது. அழுவதுபோன்ற குரலில் “இங்கென்றால்…” என்றாள். “இந்த அறைக்குள்” என்றாள் திரௌபதி. “ இந்த அறைக்குள்ளா?” என்று அவள் அறியாது பின்னடைந்தாள். “அஞ்ச வேண்டியதில்லை. அவர்கள் உன்னை பார்ப்பார்கள். உன்னால் அவர்களை பார்க்க இயலாது” என்றாள் திரௌபதி.

அவள் நீள்மூச்சுவிட்டாள். பிறகு “பொய்தானே?” என்றாள். “மெய்” என்று திரௌபதி சொன்னாள். “நான் யானைமேல் ஏறியதை நீ சாளரத்தின் அருகே நின்று பார்த்தாய் அல்லவா?” அவள் “அய்யோ இல்லை” என்றாள். “நீ ஒரு தூணை பற்றிக்கொண்டு நின்று பார்த்தாய். நான் பிரீதையுடன் வரும்போது எங்களுக்குப் பின்னால் வந்தாய். வரும்போது ஓசை கேட்காமலிருக்க சிலம்புகளைக் கழற்றி மடியில் கட்டிக்கொண்டாய். இப்போது அவை மடியில் உள்ளன. வெண்கலச் சிலம்புகள். உன் அன்னைக்குரியவை.”

அவள் “அய்யோ!’ என கன்னத்தில் கைவைத்து வியந்தாள். மடியில் இருந்து சிலம்பை எடுத்துக்காட்டி “என் அன்னையிடமிருந்த ஒரே அணி இதுதான். அன்னை இறந்தபின் இதை எனக்கு அளித்தார்” என்றாள். பித்தளையாலான பழைய சிலம்பின் செதுக்குகளில் களிம்பு படிந்திருந்தது. திரௌபதி “உனக்கு நேர்பின்னால் என் கந்தர்வன் ஒருவன் வந்துகொண்டிருந்தான்” என்றாள். “அவன் பெயர் என்ன?” என்றாள் சுபாஷிணி. “ஃபால்குனன். பெண்களை விரும்புபவன்” என்றாள் திரௌபதி. “யானைமேல் எப்படி ஏறினீர்கள்?” என்றாள். “விருகோதரன் என்ற கந்தர்வனின் ஆணைக்கு யானை பணிந்தது” என்றாள்.

“புரவிகளுக்கு?” என்றாள் சுபாஷிணி “புரவிகளை மாத்ரன் என்ற கந்தர்வனைக் கொண்டு ஆள்கிறேன்” என்றாள் திரௌபதி. அவள் பெருமூச்சுவிட்டாள். “வருவது உரைக்க நேமிகன் என்னும் கந்தர்வன் உதவுவான். நான் விரும்பிய நூலில் உள்ள வரிகளை எடுத்து அளிப்பவன் யமன் என்னும் கந்தர்வன்.” அவள் “உங்கள் ஆணைப்படி அவர்கள் நடப்பார்களா?” என்றாள். “ஆம், ஆணையிடவே வேண்டியதில்லை. எண்ணினால் போதும். அதை நிகழ்த்துவார்கள்.”

சில கணங்களுக்குப்பிறகு “அப்படியென்றால் உங்களை அவர்கள் ஏன் ஒரு பேரரசியென்று ஆக்கக்கூடாது?” என்று சுபாஷிணி கேட்டாள். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியென்றே அவர்களால் என்னை ஆக்க முடியும். அதை நான் இப்போது விழையவில்லை” என்று திரௌபதி சொன்னாள். சிலகணங்கள் அவளை நோக்கி நின்றுவிட்டு “நீங்கள் மானுடப்பெண்ணே அல்ல. நீங்களும் ஒரு கந்தர்வப்பெண்ணோ என்று தோன்றுகிறது” என்றாள். திரௌபதி வெறுமனே சிரித்தாள். அவள் நெஞ்சில் கைவைத்து “சிரிக்கையில் மிக அண்மையில் வந்துவிட்டீர்கள். உங்களால் இப்படி சிரிக்க முடியுமென்றே என்னால் எண்ணமுடியவில்லை. கொற்றவைபோல தோன்றினீர்கள். சிரிக்கையில் திருமகள் போல ஆகிவிட்டீர்கள்” என்றாள்.

திரௌபதி புன்னகைத்து “உன்னிடம் எப்போதும் சிரித்துதான் பேசுவேன், சரியா?” என்றாள். “அய்யோ… நெடுநேரமாயிற்று, என்னை தேடுவார்கள். நான் வருகிறேன். பணிகள் உள்ளன” என்று சுபாஷிணி வெளியே சென்றாள்.

flowerஅரசியின் அறையிலிருந்து திரௌபதி நள்ளிரவில்தான் தன் அறைக்கு திரும்பிவருவது வழக்கம். அந்த அறை அவளுக்கு மிக அணுக்கமானதாக ஆகிவிட்டிருந்தது. அதற்குள் தனிமையில் அரையிருளில் சாளரம் வழியாகத் தெரியும் விண்மீன்களை நோக்கியபடி அவள் விழித்திருப்பாள். அறியாது துயிலில் ஆழ்கையில் கனவுக்குள் எப்போதும் ஒரு விண்மீனாவது எஞ்சியிருக்கும். அந்த அறை சிறிதாக இருப்பதனாலேயே அத்தனை அணுக்கம் கொள்கிறது என்று தோன்றியது. அவள் அணிந்த ஆடைபோன்றிருந்தது அது. கரவுத்தோற்றம் போல.

புலரியில் எழுந்து நீராடி ஆடையணிந்து அரசியின் அறைவாயிலை அடைவாள்.  அரசி துயிலெழுந்து அணிச்சேடியருக்காக காத்திருக்கும் பொழுது அது. அவளைக் கண்டதும் அரசி உடல் எளிதாகி பெருமூச்சுவிடுவாள். “வந்துவிட்டாயா?” என்பதுதான் எப்போதும் அவள் கேட்கும் முதல் வினா. திரௌபதி புன்னகைத்து “நன்றாகத் துயின்றீர்களா?” என்று கேட்பாள். “ஆம், நான் எப்போதுமே துயில்கிறேன். பகலில் சற்று ஓய்வெடுப்பதற்குக்கூட என்னால் முடிவதில்லை” என்று அரசி சொல்வாள்.

பின் எப்போதுமுள்ள அந்த வினா “நீ ஏனடி என்னுடன் இரவு தங்குவதில்லை? காவல்பெண்டு என்றால் இரவுதானே உடனிருக்கவேண்டும்?” அவள் புன்னகையுடன் “நான் என் கந்தர்வர்களை காணும்பொழுது இரவுதானே?” என்பாள். “நீ விளையாடுகிறாயா என்றே தெரியவில்லை” என்று அரசி சலிப்புடன் சொல்வாள். “இங்கு நான் உங்களுக்கு அமைத்துள்ள காவலர்கள் என்னால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அவர்களை நீங்கள் என்னைப்போலவே நம்பலாம்” என்பாள் திரௌபதி. “இந்த அரண்மனையில் எவரையுமே நம்பமாட்டேன்” என்பாள் சுதேஷ்ணை.

ஆனால் பகலெல்லாம் நீளும் தொடர் அலுவல்களில் இருந்து முழுமையாக தன்னை விலக்கிக்கொள்ளும் ஒரு தருணம் அவளுக்கு வேண்டியிருந்தது. அவள் அரசியுடன் அவை அமரும்போதும் ஆலயங்களுக்குச் செல்லும்போதும் குடிக்கூடல்களில் நின்றிருக்கும்போதும் அரசியருகே வாளேந்தி நின்றிருந்தாள். அரசிக்குரிய நேரடிச் சிற்றேவல்களை செய்தாள். அரசியின் காவல்பணிகளை ஒருங்கிணைத்தாள். அவற்றைவிட முதன்மையாக ஓயாமல் புலம்பிக்கொண்டே இருந்த சுதேஷ்ணையின் சொற்களுக்கு செவியளித்துக்கொண்டே இருந்தாள். திரும்பத்திரும்ப கேட்டவை என்றாலும் அவளால் உளமளிக்காமலிருக்க இயலவில்லை. அவள் உளமளிக்கிறாள் என்பதனாலேயே மீண்டும் விரித்துரைத்தாள் சுதேஷ்ணை. “நான் அரசி அல்ல. கைவிடப்பட்ட அன்னை. எனக்கு எவருமே இல்லை” என்று அவள் திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டு சொல்லும்போது கண்களில் நீர்ப்படலம் வந்து ஒளிரத்தொடங்கிவிடும்.

அவள் மைந்தர் இருவருமே அவள் சொல்வனவற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. உத்தரை நீர்த்தாமரைபோல ஒளியுடன் ததும்பிக்கொண்டிருந்தாள். ஆகவே அன்னையின் எளிய சொற்களைக்கூட எரிச்சலுடன்தான் எதிர்கொண்டாள். சினந்து கூச்சலிட்டாள். தன் தனிமைக்குள் அவள் அன்னையை விடவேயில்லை. உத்தரன் ஏற்கனவே அனைத்தையும் உணர்ந்து கனிந்தவனாக தோற்றம் சூடியிருந்தான். அன்னை பேசத்தொடங்கும்போதே குழவியின் குதலைப்பேச்சை கேட்கும் தந்தையின் முகத்தை சூடிக்கொண்டான். எளிய நகையாட்டுடனும் இனிய அணைப்புடனும் அவள் சொல்வதை கேட்டபின் அதை அக்கணமே தவிர்த்துவிட்டுச் சென்றான். அரசி அரசரை சந்திப்பதே மிக அரிதாக இருந்தது. ஆகவே அவள் எப்போதும் திரௌபதியிடம்தான் பேசிக்கொண்டே இருந்தாள்.

“அந்த ஆணிலியிடம் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது, சைரந்திரி. என்னால் அது என்ன என்று சொல்லக்கூடவில்லை. அவனை தொலைவில் பார்க்கையில் நிமிர்வுள்ள ஆண்மகன் என்றே தோன்றுகிறது. அணுகிவருந்தோறும் பெண் என்றாகி பேரழகியாக மாறி நிற்கிறாள். அவள் நடனமாடுவதை ஒருநாள் அவளறியாமல் நோக்கினேன். என்னதான் கற்பிக்கிறாள் என்று பார்க்கவேண்டுமே? என்னை அழைத்துச் செல் என்று உத்தரையின் அணிச்சேடியிடம் சொன்னேன். பக்கத்து அறையிலிருந்து சாளரம் வழியாக நோக்கினேன். சொல்லாமலிருக்கமுடியவில்லை. நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். கேகயத்தில் வாழ்ந்த என் கன்னிநாட்களுக்கே சென்றுவிட்டேன். என் உளம்நிறைந்த ஆண் ஒருவருடன் இளங்காட்டில் நடனமிட்டுக்கொண்டிருந்தேன்.”

நீள்மூச்சுடன் “ஆம் எனக்கு அவ்வண்ணம் ஆண்கள் இருந்தனர். நானும் எத்தனை கதைகளை கேட்டுவளர்ந்தவள்! அவனுக்கு முகமோ உடலோ இல்லை. அவன் இறுதிவரை ஓர் உடலென என் முன் வரவேயில்லை. ஆனால் ஒருபோதும் என்னுள் இருந்து அவன் விலகியதுமில்லை” என்றாள் சுதேஷ்ணை. “இந்த ஆணிலி அக்கனவுகளை எழுப்புகிறான். தன்னைச்சூழ்ந்திருந்த அனைத்தையும் உடன் நடனமிடச்செய்கிறாள். மானுடரை மட்டுமல்ல. மெய், தூண்களும்கூட அவளுடன் ஆடுவதை கண்டேன். அவ்வாறு ஆட எளிய மானுடரால் இயலாது. அவன் உடல் புல்நுனியில் நின்றிருக்கும் பனித்துளியில் வானம் என நிலைகொண்டு பெருகியிருக்கிறது என்று ஒரு விறலி என்னிடம் சொன்னாள். மெய்.”

“அவன் அவளுக்கு எதை கற்பிக்கிறான் என்று நான் கேட்டேன். அதற்கு இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும்தான் என்கிறாள் உத்தரை. சினம்கொண்டு இவ்வுலகிலுள்ள அனைத்தையும் என்றால் அரசு சூழ்தலையுமா என்று நான் கேட்டேன். ஆம் அன்னையே அதையும்தான் என்றாள். அது மெய்யென்று நானே தெரிந்துகொண்டேன். உத்தரை புரவியேறுவதும் யானையேறுவதும் முழுமையாக மாறிவிட்டன. முன்பெல்லாம் இருவர் புரவிக்கடிவாளத்தையும் சேணத்தையும் பற்றிக்கொள்ள இருமுறை துள்ளி மூன்றாம்முறை கால்தூக்கி வைப்பாள். சென்ற நாளில் பார்த்தேன், பட்டாம்பூச்சி எழுந்து மலர்மேல் அமர்வதுபோல புரவிஏறினாள். யானைமேல் அமர்ந்திருக்கையில் முகிலில் ஊர்பவள் போலிருக்கிறாள்.”

“அவள் வாளேந்திச் சுழற்றுவதைப்பற்றி சேடி சொன்னாள் என்று சென்று பார்த்தேன். வாள் அவள் கையில் வெள்ளிமின்னல்போல ஒளிச்சுழிபோல வெண்ணிறமலர்போல இருந்தது. என்னால் விழிகளை நம்பவே முடியவில்லை. ஒற்றைக்கையால் நாணிழுத்து மூன்று அம்புகளை எடுத்துத் தொடுத்து மூன்று இலக்குகள்மேல் எய்தாள். கந்தர்வர்கள் எவரேனும் அவளுருவில் அங்கு வந்துவிட்டார்களோ என்றே ஐயுற்றேன். அவ்வித்தைகளை அவளுக்கு பிருகந்நளை எங்கே கற்றுக்கொடுத்தாள் என்று கேட்டேன். விந்தை, அவள் நடனமன்றி எதையுமே கற்றுக்கொடுக்கவில்லை. நடனத்தினூடாக இவையனைத்தையும் இவள் கற்றுக்கொண்டிருக்கிறாள்.”

“அவள் நிற்பும் நோக்கும் மாறிவிட்டன. தோள்கள் நிமிர்ந்து இடைநேராக அசைய இட்டகாலடிமேல் எடுத்தகாலை வைத்து நடக்கிறாள். ஆழ்ந்த குரலில் ஆணையிடுகிறாள். சொற்கள் ஒவ்வொன்றும் மும்முறை எண்ணி எடுத்தவைபோல் உள்ளன” என்றாள் சுதேஷ்ணை. “அது நல்லதுதானே? அவள் பேரரசியாவாள் என்றல்லவா நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்?” என்றாள் திரௌபதி. “நிமித்திகர் சொல்லவில்லை. சோலைக்கு வந்துள்ள அருகநெறிக் கணியர் சொன்னார். அதுதான் என் நம்பிக்கை. பேரரசர்களின் மைந்தர்கள் எவருக்கேனும் மகள்கொடை கேட்டு வருவார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். இவள் செய்வதென்ன? இந்த ஆணிலியிடம்…”

திரௌபதி “ஆணிலிதானே?” என்று புன்னகையுடன் சொன்னாள். “அதுதான் எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றாள் சுதேஷ்ணை. “ஆனால் அதைவிட நான் அஞ்சுவது அந்த அரைமுனிவனை. அவன் யார்? முனிவன் போல மாற்றுருக்கொண்டவன். அறிஞன். ஆனால் அவன் கூர்வாளை பட்டில் சுற்றிவைத்திருப்பதைப்போலத் தோன்றுகிறான். வந்த முதல்கணமே அவன் கீசகனை வென்றதை நீ பார்த்தாய் அல்லவா? கீசகனைப்போன்ற அரசியல்சூழ்ச்சி தேர்ந்தவனே அவனை தன் அணுக்கனாக வைத்திருக்கிறான் என்றால் இவன் எப்படிப்பட்டவன்? நூல் தேர்ந்தவன் என்கிறார்கள். அவன் கற்ற நூல்களில் சூது கொடிய பிழை என்று இல்லையா என்ன? கீசகனுக்கு அரசியல் அறிவிக்காத பொழுதெல்லாம் அரசருடன் அகத்தளத்தில் அமர்ந்து சூதாடிக்கொண்டிருக்கிறான்.”

“அரசர் இப்போது பெண்களை மறந்துவிட்டார். குடியும் கூட குறைந்துவிட்டது. எழுந்ததுமே முதல்வினா குங்கன் எங்கே என்றுதான். குங்கன் கீசகனுடன் சென்றிருக்கிறான் என்றால் பதைபதைப்புடன் உலவியபடி அடிக்கொருமுறை வருகிறானா என்று பார்க்கிறார். வந்ததுமே காதலியைக் கண்ட இளையோன் போல கண்கள் சிரிக்க பாய்ந்துசெல்கிறார். தழுவிக்கொள்கிறார். பின்னர் ஒரு கணமும் பிந்துவதில்லை. சூதுக்களம் பரப்பியாகவேண்டும். அமர்ந்து பகடையுருட்டத் தொடங்கவேண்டும். உயிர்காக்கும் மருந்தை அள்ளி அருந்துவதுபோல. தெய்வங்களுக்கு பூசெய்கை இயற்றுவதுபோல.”

“அவன் உண்மையில் பகடையென வைத்தாடுவது அவரைத்தான். இன்று அவன் என்ன சொன்னாலும் அவர் செய்வார் என்ற நிலை. அதன் மாயம் என்ன என்று நான் ஒற்றர்களிடம் கேட்டேன். அரசருக்கு ஏன் இன்றுவரை சூதில் பித்து எழவில்லை என்றால் அவர் வெல்வது மிக அரிதென்பதனால்தான். அவரால் உளம்நிறுத்த முடியாது. தொடர்ச்சி பேணமுடியாது. குடியால் நனைந்து ஊறிய சித்தம். அதை நீருக்குள் மூழ்கி நுரையெழுப்பும் பெருவாய்த் தவளை என்று அவைச்சூதர் காமர் சொன்னார் ஒருமுறை. இவனுடன் ஆடத்தொடங்கிய அன்றே ஒருமுறை இவர் வென்றார். அது இவன் விட்டுக்கொடுத்து வென்றதும் அல்ல. மிகத்தற்செயலாக கூரிய நகர்வொன்றை அவர் நடத்தினார். அத்தருணத்தை பயன்படுத்திக்கொண்டான் அவன். அவரை வெல்ல விட்டான். தன்னால் மிகக்கூரிய நகர்வை நடத்த முடியும் என அவரை நம்பவைத்தான். பற்றிக்கொண்டுவிட்டார்.”

“அதன்பின் வெற்றி எப்போதும் அவர் அருகே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறான். எளிதில் அதை அளிப்பதில்லை. ஆனால் அது கையெட்டினால் தொட்டுவிடக்கூடியதென்றும் காட்டிக்கொண்டிருக்கிறான். பறவைகளின் ஆடல் அது. அருகே நின்றிருக்கும். பற்றமுயன்றால் பறக்கும். விழிவிலக்கினால் வந்து தோளில் அமரும். பெண்களின் வித்தையும் அதுதானே? அவரை அவன் பித்தனாக்கி தன் ஆட்டக்களத்தில் நிறுத்தியிருக்கிறான்” என்ற சுதேஷ்ணை பெருமூச்சுடன் “நான் உத்தரனிடம்தான் சொல்லிக்கொண்டிருந்தேன் இதையெல்லாம். அவன் சொன்னான் பிருகந்நளையை அவன் பொறுப்பேற்று நோக்கிக் கொள்வதாக” என்றாள்.

“யார்?” என்றாள் திரௌபதி. அதிலிருந்த நகைப்பை உணர்ந்த அரசி “உத்தரனால் இதையெல்லாம் செய்ய முடியும். சிறந்த ஒற்றன் வழியாக அவன் பிருகந்நளையை வேவுபார்த்து அவளுடைய கரவு என்ன என்பதை நோக்கி என்னிடம் சொல்வான். அவள் மாற்றுருக்கொண்டு வந்தவளா? தீயதெய்வங்கள் எவற்றையேனும் வழிபட்டு உடன்கொண்டிருக்கிறாளா? அதை அறியாமல் எனக்கு ஆறுதல் இல்லை” என்றாள். திரௌபதி “ஆம், அதை உத்தரர் அறிந்து சொல்லக்கூடும்” என்றாள். “அதன்பின்னர்தான் குங்கனையும் வேவுபார்க்கவேண்டும்” என்றாள் அரசி.

ஒவ்வொருநாளும் சலித்து களைத்து அவள் அந்த அறைக்குள் திரும்பினாள். உள்ளே நுழைந்து கதவை சாத்திக்கொண்டு ஆடைகளை கழற்றத் தொடங்கும்போது நிகழ்ந்த அனைத்தும் மீண்டும் அவள் உள்ளத்தில் ஓடத்தொடங்கும். புன்னகை வந்து இதழ்களில் அமையும். பின்னர் அவ்வறைக்குள் எப்போதும் அப்புன்னகை வந்தது. அறைக்குள் அப்புன்னகையை விட்டுவிட்டு காலையில் கிளம்பிச்சென்றாள். அதன் கதவை திறக்கையில் அப்புன்னகை தாவி வந்து அவளை தழுவிக்கொண்டது.

தொடர்புடைய பதிவுகள்

அரசியலும் மேற்கோள்திரிபுகளும்

$
0
0

அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள ஜெமோ,

முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்).

https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed

Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி அரவிந்தன் நீலகண்டன் இத்தனைத் துணிவாக எழுதியிருக்கிறார்! சொல்லப்போனால் அவரது எழுத்தை நம்பிப் படிப்பவர்களுக்கு இழைத்துள்ள துரோகம். தன் பிற கட்டுரைகள், ஆய்வுகள்மீதும் ஐயத்தையும் நம்பிக்கையின்மையையும் கொள்ளச்செய்யும் என்ற அளவில், அவர் தனக்குத்தானே  செய்துகொண்ட துரோகமுங்கூட எனலாம்.

இத்தனைத் தில்லாலங்கடிகள்செய்து அம்பேத்கரை இந்துமதத்தின்மீது soft corner கொண்டவர்போலவும் இஸ்லாம், கிறித்தவத்தைத்தான் அவர் மிகுதியாக வெறுத்தாரெனவும் காட்டுவதற்கு வலதுசாரி அறிவுஜீவிகள் ஏன் அண்மைக்காலமாக மும்முரம் காட்டுகிறார்கள்?

செய்வதை கொஞ்சம் மெனக்கெட்டு ஒழுங்காகச் செய்தாலும் பரவாயில்லை. பெரிய அம்பேத்கரிய ஆய்வாளர்தான் என்றில்லாமல் அடிப்படையான ஒருசில கட்டுரைகள், சிறுநூல் படித்தோரே கிழித்துத் தோரணங்கட்டி அம்பலப்படுத்திவிடுமளவுக்கு அசட்டையான செயல். பச்சையான திரிபுகளும், பலவற்றைத் தன்சார்புக்கேற்ப out of contextஇல் எடுத்துப் பயன்படுத்துவதுமுமாக ஒரு கட்டுரை.

தாங்கள் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்? தங்களது எண்ணங்களையும் அறியவேண்டுகிறேன்.

நன்றி.

அருண்குமார் சூரியமூர்த்தி

***

kesava guha

கேசவ குகா

அன்புள்ள அருண்,

அரசியல்தரப்புக்களை எடுத்துக்கொண்டு முழுமூச்சாக விவாதிப்பவர்களின் எல்லா வாதங்களும் இத்தகையவையே.

அம்பேத்கர் எழுந்திய பல ஆயிரம் பக்கங்களில் இருந்து ’சாதி ஒழிப்பு’ ‘காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தது என்ன?” என்னும் இரு சிறுநூல்களை மட்டும் அம்பேத்கரின் அறிவுத்தரப்பாக இந்தியா முழுக்க கொண்டுசென்ற ஓர் அரசியல்ச் செயல்பாடு எழுபதுகள் முதல் இங்கே நாற்பதாண்டுகளாக நிகழ்ந்தது. அந்நூல்களை அம்பேத்கரின் அறிவுச் செயல்பாட்டுப் பரப்பில் இருந்து பிரித்துத் தனித்துக் காட்டுவதைப்போல மாபெரும் திரிபுவேலை பிறிதில்லை.

அம்பேத்கரின் கருத்துக்களின் வரலாற்றுப்பின்புலம், அவருடைய உணர்வுநிலைகள் அந்நூல்கள் உருவான சூழல் ஆகிய அனைத்தையும் தவிர்த்துவிட்டு அந்நூல்கள் அவருடைய கொள்கைப்பிரகடனங்கள் என்றே முன்வைக்கப்பட்டது இத்தரப்பால். அவ்விரு நூல்களின் வரிகளில் இருந்து மேலும் அவருடைய கருத்துக்களைத் திரித்து அவர் மதமாற்றத்தை ஊக்குவித்தார் என்றும் , ஆகவே கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கு தலித்துக்கள் மாறவேண்டும் என்றும் [கவனிக்க பௌத்தமதத்திற்கு அல்ல] வாதிடும் அறிவுஜீவிகளின் மிகப்பெரிய அணி ஒன்று இங்கே உருவானது.

அம்பேத்கர் கிறித்தவ ,இஸ்லாமிய மதங்களை விரிவாக நிராகரித்தே பௌத்தத்தை தழுவ முன்வந்தார் என்பதை இவர்கள் மழுப்பிவிடுகிறார்கள். அவருக்கு கிறித்தவ மதத்தின் நிறுவன அமைப்புமேல் ஆழமான ஐயம் இருந்தது. இஸ்லாம் மீது மேலும் கடுமையான கண்டனங்கள் இருந்தன. அவற்றை அவர் மிகவிரிவாக, தெளிவாக பதிவுசெய்திருக்கிறார். ஆனால் அம்பேத்கர் கிறித்தவ இஸ்லாமிய மதங்களை கறாராக அணுகி நிராகரித்தார் என்பதையே ஓர் அறிவுச்சமூகம் முழுமையாக மறைத்தது. கூடுமானவரை திரித்தது.

காரணம் தலித்துக்களை மதம் மாற்ற முனையும் கிறித்தவ , இஸ்லாமியத் தரப்பின் ஆதரவை அது நாடி நின்றது.  கேசவ குகா கூட இச்சிறு கட்டுரையிலேயே அந்தத் திரிபுகளைச் சாமர்த்தியமாகச் செய்கிறார். அம்பேத்கர் ஒரு கடுமையான எதிர்வினையில் இந்துமதத்தின் ஒடுக்குமுறையுடன் ஒப்பிடுகையில் கடந்தகாலத்தில் நிகழ்ந்த  கிறித்தவ இஸ்லாமிய மதங்களின் கட்டாயமதமாற்றம்கூட தலித்துக்களுக்கு நல்லதே செய்தது, அவர்களை அது அவர்களின் சூழலில் இருந்து விடுவித்தது எனலாம்   – என்று சொல்வதை தலித்துக்களுக்கு அம்பேத்கரின் பரிந்துரை அது என்று காட்ட முயல்கிறார்.

கேசவ் குகா போன்றவர்களின் தரப்பு எப்போதுமே சுற்றிச்சுற்றி  ‘மதமாற்றத்தை அம்பேத்கர் ஊக்குவித்தார்’ என்னும் ஒற்றைப்புள்ளியிலேயே தான் சென்று நிற்கும். அவருக்கு பௌத்தம் என்ன, அம்பேத்கர் கூட ஒரு பொருட்டு அல்ல.

இவர்களின் தரப்புக்கு நேர் எதிராக அரவிந்தன் நீலகண்டனின் தரப்பு மிகச்சமீபகாலமாக எழுந்து வந்துள்ளது. அது அம்பேத்கர் இஸ்லாம் குறித்துச் சொன்ன மிகக்கடுமையான விமர்சனங்களை, நிராகரிப்புகளை எடுத்து தொகுத்து முன்வைக்கிறது. கிறித்தவத்தின் நிறுவன அமைப்பு குறித்த அவருடைய விமர்சனங்களை தொகுக்கிறது. அவற்றின் விவாதச்சூழலில் இருந்து வெட்டி மேற்கோள்களாக எடுக்கிறது. அதாவது முதல் தரப்பு செய்த அதே செயல்களை அதே பாணியில் இவர்களும் செய்கிறார்கள்.

arun2

அருண் குமார்

 

அம்பேத்கர் இந்துமதத்தை அதன் சாதிய அடிப்படையின்பொருட்டு, அதன் கொள்கையாளர்கள் சாதியை விட்டுவிட பிடிவாதமாக மறுத்தமையினால் கசப்புற்றுதான் நிராகரித்தார். கிறித்தவ இஸ்லாமிய மதங்களின் அடிப்படைகளை நிராகரித்த அம்பேத்கர் இந்துமதத்தின் மெய்ஞானத்தையோ தத்துவத்தையோ நிராகரிக்கவில்லை, பௌத்த தரப்பில் நின்று மறுத்துவாதிடுகிறார்.

அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவர்களின் சிக்கல் அடுத்தபடிக்குச் சென்று இந்துமதத்தை மட்டும் அல்ல இந்துத்துவ அரசியலையே அம்பேத்கர் அப்படியொன்றும் நிராகரிக்கவில்லை என்று காட்டுவது எப்படி என்றுதான் ஆகவே இந்த மேற்கோள்திரிபு

அரசியல்தரப்புகள் எதுவானாலும் மேற்கோள்களைக் கொண்டு விளையாடுவதையே தங்கள் வழிமுறையாகக் கொண்டிருக்கும். ஏனென்றால் அரை உண்மையை வாதத்திறன் மூலம் முழு உண்மையாக ஆக்க அவர்கள் முயல்கிறார்கள். இதில் கேசவ குகா போன்றவர்களின் தரப்புக்கு அரைநூற்றாண்டு பயிற்சி உண்டு என்பதனால் நுட்பமாக , கூட்டாக அதைச் செய்கிறார்கள். இவர்கள் மூர்க்கத்துடனும் வேகத்துடனும் ஒற்றைக்குரல்களாக இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அரவிந்தன் நீலகண்டன் காந்தி, நேரு குறித்தெல்லாம் இதேபோன்று இந்துத்துவ அடிப்படைவாதத்தின் கசப்பை கொட்டியிருக்கிறார். திரிபுகள் செய்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் இன்று இதற்கு மறுபக்கமாக நிற்கும் நம் இடதுசாரித்தரப்பும் அரவிந்தன் நீலகண்டனும் அங்கே ஒன்றாகவே ஒலித்தனர் என்பதுதான். காந்தி குறித்து இடதுசாரிகள் சொல்லாத திரிபா என்ன?

ambe

இத்தகைய மேற்கோள்போருக்குள் செல்வது நம்மை இன்னொரு அரசியல்தரப்பாக ஆக்கிவிடும், நாமும் அதையே செய்யவேண்டியிருக்கும். பொதுவாசகன் இருதரப்பையும் கவனிப்பதும், அவனுடைய தர்க்கத்துக்கும் அறவுணர்வுக்கும் உகக்கும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதுமே உகந்தது.மேற்கோள்களை மயிரிழைபிரித்து மெய் நோக்கிச் செல்லவேண்டியதில்லை. சுதந்திரமான நியாய உணர்வு மட்டுமே போதும்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பச்சைக்கனவு

$
0
0

Monsoon_Trip_Day_02-3523

என் வலக்கையின் மணிக்கட்டு ஓரமாக ஒரு சிவந்தபுள்ளி. அது அரித்துக்கொண்டே இருக்கிறது. இனியதோர் இருப்புணர்த்தல். அதுதான் மழைப்பயணம் முடிந்து வந்த நினைவு. அட்டை கடித்த தடங்கள் சில அரித்து சிவந்து தடித்து புள்ளியாகி கொஞ்சநாள் நீடிக்கும்.

ஆனால் இம்முறை அட்டைக்கடி மிகக்குறைவு. ஏன் என்று தெரியவில்லை. அட்டைகள் பெருகிக்கிடக்கவேண்டிய ஈரச்சதுப்புகள் பலவற்றை தாண்டிக்கடந்தோம்,. சென்றமுறை கால்களெல்லாம் ஒட்டிக்கொண்டு நெளிந்த மேற்குமலையின் உரிமையாளர்களை பெரும்பாலும் காணமுடியவில்லை. இத்தனைக்கும் சென்றமுறை போல உப்புக்கரைசலுடன் நாங்கள் செல்லவுமில்லை. உப்பு வாங்கி காரிலேயே மறந்துவைத்துவிட்டார்கள்.

Monsoon_Trip_Day_02-1200584

முப்பதாம்தேதி நான் நாகர்கோயிலில் இருந்து சென்னை ரயிலில் கிளம்பினேன். நெல்லையில் இருந்து ஜான் பிரதாப் குமாரும் வந்து சேர்ந்துகொண்டார். அவர் நெல்லையிலிருந்து ஏறுவார் என எண்ணினேன். என்னுடன் வருவதற்காக நெல்லையில் இருந்து நாகர்கோயில் வந்திருந்தார்.

அவருடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டே சென்றேன். அவர் கொண்டுவந்திருந்த சப்பாத்தி –வெங்காயக்கூட்டை சாப்பிட்டேன். இரவு 10.30 க்கு திண்டுக்கல்லில் இறங்கினோம். கிருஷ்ணன், ஏ.வி.மணிகண்டன், ராஜமாணிக்கம், ஈஸ்வரமூர்த்தி மணவாளன் ஆகியோர் ஈரோட்டிலிருந்து வந்து எங்களை சந்தித்தனர். திருச்சியில் இருந்து சக்தி கிருஷ்ணன்.

Monsoon_Trip_Day_02-1200588

ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் சென்னை கோஷ்டி வந்துசேர்ந்தது. ஜானகிராமன், அனந்தமுருகன் ஆகியோருடன் மயிலாடுதுறை யோகீஸ்வரன்.  கோவையில் இருந்து நரேன் அவர் காரில் விக்ரம்,பாரி , தாமரைக்கண்ணன் ஆகியோர் சூழ வந்தார். மொத்தம் 15 பேர்.

நாங்கள் காலை எட்டுமணிக்குத்தான் பீர்மேட்டில் அறை எடுத்திருந்தோம். 11 மணிக்கே திண்டுக்கல்லில் ஒருங்குகூடிவிட்டோம். அப்போதுதான் என் அறிவிப்பைப் பார்த்துவிட்டு சின்னமனூரில் இருந்து சிவக்குமார் மின்னஞ்சல் செய்திருந்தார். என் வாசகர், சின்னமனூரில் சந்திக்கமுடியுமா என்று கேட்டார்.

 

IMG_20170701_024016

அவர் அப்போதுதான் அறிமுகம். அவரை அழைத்தேன், சின்னமனூருக்கு நள்ளிரவில்தான் வருவேன், பரவாயில்லையா என்றேன். நல்வரவு என்றார். ஆகவே ஒரு பெருங்கூட்டமாக அவர் இல்லத்தை இரவு 12 மணிக்குச் சென்றடைந்தோம்.

Monsoon_Trip_Day_01-1200396

சிவக்குமார் வீடு மிகப்பெரியது. அனைவருக்கும் இடமிருந்தது. அவர் மனைவி ஆசிரியை. இரு மகள்கள், நிவேதா, தர்ஷினி. சிவக்குமார் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர். சின்னமனூரிலெயே பிறந்து அங்கேயே வாழ்பவர். நள்ளிரவானாலும் எங்களை உபசரித்தார்.

அந்த நள்ளிரவிலும் இரு பெண்குழந்தைகளும் நல்ல உடையணிந்து எங்களை வரவேற்பதற்காக ஒருங்கி நின்றிருந்தனர். அவர்களின் குடும்பமே எங்களை உபசரித்தது. அவர்களுக்கு அந்தக் கஷ்டத்தைக்கொடுக்க கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டபோது பரவாயில்லை என்று தோன்றியது.

Monsoon_Trip_Day_01-1200389

வாகமண்- மழையும் புல்லும்

 

இரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கேயே படுத்து கொஞ்சம் தூங்கினோம்.நான் உடனே தூங்கிவிட்டேன்  ரயிலில் அமர்ந்து வந்த முதுகுவலி இல்லாமலானது.

நண்பர்கள் இரண்டுமணிவரைக்கும் ஊஞ்சலிலும் கூடத்திலுமாக அமர்ந்து சிரித்துக்கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்கள். சக்தி கிருஷ்ணன் நல்ல ‘ஸ்டேண்டப் காமெடியன்’ ஆக வரவேண்டியவர். வழக்கறிஞராக இருக்கிறார் [அல்லது இரண்டும் ஒன்றே தானோ?]

Monsoon_Trip_Day_02-1200586

மழைக்குள்…

 

காலை இளவெயிலில் பீர்மேட்டைச் சென்றடைந்தோம். சற்றுமுன்னர்தான் மழை விட்டிருந்தது. சாலையில் பொழியும் அந்த அருவி கொட்டியது. மலைச்சரிவுகள் ஈரப்பசுமையுடன் ஒளிகொண்டிருந்தன. முகில்கள் கரைந்து நீண்டு வந்து மூடி மீண்டும் விலக பசுமையே குவிந்தெழுந்து கூர் கொண்ட மலைகள் வானில் நீந்துவன போலத் தெரிந்தன

 

Monsoon_Trip_Day_01-1200529

மழைச்சிரிப்பு

 

முதல்முறை பீர்மேடு கிருஷ்ணன்கோயில் விடுதிக்குச் சென்றபோது இருந்த அதே நண்பர். அதே சூழல். பத்தாண்டுகள் கடந்துவிட்டன என்பது இழப்புணர்வு கலந்த மகிழ்ச்சியை அளித்தது. மழைச்சட்டைகளைப் போட்டுக்கொண்டு பொடித்தூறலில் உணவகத்திற்குச் சென்றோம்.

முதல்முறை நாங்கள் வந்தபோது பீர்மேட்டில் அருமையான குழாய்ப்புட்டு கிடைத்தது. அடுத்தமுறை ‘சார் புட்டெல்லாம் பழைய கதை. இப்ப பரோட்டாதான் இருக்கு’ என்றார். பரோட்டா போய் ‘சார் பர்கர்தான் இருக்கு’ என்று சொல்லிவிடுவார்களோ என அஞ்சினேன். பரோட்டா இருந்தது.

Monsoon_Trip_Day_01-1200519

மலையுச்சியில்…உடுக்குமுடி

 

உச்சிவேளையில்தான் வாகைமண் சென்றோம். ஆனால் வானம் இருண்டு அதிகாலை போலிருந்தது. செல்லும்போதே தரையிறங்கிய ஒரு மேகத்தைக் கடந்துசென்றோம். மேகம் உண்மையில் இனிய வெக்கையுடன் இருந்தது. வெக்கை குளிர் கொள்வதை உணரமுடிந்தது. அடுத்த வளைவில் மழைக்குள் புகுந்துவிட்டோம்

வாகமண் புல்வெளி ராணுவத்திற்குச் சொந்தமானது. அதில் சாலை அமைத்து கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதை தடுக்கவே முடியாது. அங்கே ஒரு கட்டிடத்தைக் கட்டுவது அங்கிருக்கும் அபாரமான பசுமையின் ஒளியை அழிப்பது என உணரத்தெரிந்த அதிகாரிகள் பல்லாயிரம்பேரில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். மிகப்பெரும்பாலானவர்கள் புளிச்சேப்பம் விடும் படித்த முட்டாள்கள்.

Monsoon_Trip_Day_03-1200643

ஓடை, வரையாடு – இரவிகுளம் உச்சிப்பாறையிலிருந்து

 

வாகமண் புல்வெளிக்கு இப்போது ஓரளவு சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கிவிட்டார்கள். வாசலில் நுழைவுச்சீட்டும் உண்டு. முன்பு நாங்கள் கேட்பாரில்லாமல் நுழைந்த வாசல். சுற்றுலாப்பயணிகளுக்காகத்தான் அந்த கட்டுமானங்கள் என நினைக்கிறேன். கொஞ்சநாளில் பர்கர் கிடைக்க ஆரம்பித்துவிடும்.

சாலையில் இருந்து விலகிச்சென்று புல்வெளியின் பசுமைக்குள் அமிழ்ந்தோம். இளவெயில் பரவிய பச்சை அலைகள். ஒளிகொண்டு அமைந்த தொடுவானம். குளிர்ந்த காற்றில் ஏறிவந்து சூழ்ந்து பின் விலகிச்சென்றன முகில்குவைகள்.

Monsoon_Trip_Day_01-1200553

உடுக்குமுடி இரட்டை ஆறுகள்

 

பின்னர் இடியுடன் மழை. நீர்ச்சரடுகள் பெருகி அறைந்து அறைந்து தள்ளின. மழைச்சட்டைக்கு உள்ளே மழை நுழையும் அளவுக்கு வேகம். நடக்க நடக்க தள்ளாடி விழப்போனோம். அங்கே வாயிலில் ஒருவர் ஐஸ்கிரீம் விற்றார். குளிர்மழைக்குள் நுன்று நடுநடுங்கியபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். பாதி ஐஸ்கிரீம் கரைந்து மழையில் சென்றுவிட்டது என்று கிருஷ்ணன் மனக்கஷ்டப்பட்டார்

மீண்டும் வாகமண் சாலைச்சந்திப்புக்கு வந்தோம். அங்கிருந்து இரண்டு மகேந்திரா ஜீப்புகளில் ஏறி உடுக்குமுடி சென்றோம். சாலையே இல்லாத மலைச்சரிவில் முன்னர் சென்றதடமே சாலை என்று சென்றன வண்டிகள். நினைத்துப்பார்க்க முடியாத ஒரு மலையேற்றம். நீர் வழிந்து ஓடி உருவான பள்ளங்கள் வழியாக விழுந்தும் தவழ்ந்தும் சென்று உச்சியை அடைந்தோம்

Monsoon_Trip_Day_01-1200570

உடுக்குமுடி ஒரு மலையுச்சி. அங்கிருந்து சுற்றிலும் உள்ள இடுக்கி மாவட்டத்தைப் பார்க்கமுடியும். ஆனால் அப்போது எல்லா பக்கமும் வெண்முகில்கள்தான். முகில்கள் வெண்பட்டென ஒளிகொண்டிருக்கையிலேயே இருளத்தொடங்கி புகைபோல ஆகி குளிர்ந்தன. மழை கடந்துசென்றுகொண்டிருந்தது.

திரும்பும் வழியில் இரு ஆறுகள் முட்டிக்கொள்ளும் சந்திப்பை சென்று பார்த்தோம். ஓர் ஆறு செயற்கையானது. மலையைக் குடைந்து நீரை இடுக்கி அணைக்குக் கொண்டுசெல்கிறார்கல். ஓன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக ஆறு பீரிட்டு வந்து இணையாக பாறைகளில் அருவியாக விழுந்து வந்த காட்டாறுடன் கலந்து ஒன்றாகிச் செல்கிறது.

Monsoon_Trip_Day_02-1200579

மழைபெய்துகொண்டே இருந்தது. பாரி, ஈஸ்வரமூர்த்தி இருவரும் இறங்கி நீராடினார்கள். வானில் ஓசை நிறைய மழைபெய்யும்போது சுற்றிலும் ஓலமிடும் நீரை பார்ப்பது மிச்சமில்லாமல் நீரால் நிறைக்கப்படுதல்

ஏழுமணிக்கு விடுதிக்குத் திரும்பிவந்தோம். சிவக்குமார் ஏகப்பட்ட பிஸ்கட், பேரீச்சம்பழம் ஆப்பிள் கொடுத்தனுப்பியிருந்தார். நண்பர்கள் சுற்றிவளைத்துக் கட்டியதுபோக எஞ்சியதை இரவுணவாக சாப்பிட்டேன்

Monsoon_Trip_Day_01-1200562

விடுதியில் நான்கு மெத்தைகள். எட்டுபேர் அதில் படுத்தோம். எஞ்சிய ஏழுபேரும் தரையில் படுக்கவேண்டும். கிருஷ்ணனிடம் தரை குளிருமே என்று சொல்லியிருந்தேன். ’போர்வை விரித்து படுக்கலாம் சார், குளிராது’ என ஆணித்தரமாகச் சொல்லியிருந்தார். ஆனால் தரை ஜில்லிட்டிருந்தது

அங்கிருந்த சூரல்நாற்காலிகளில் போடப்பட்டிருந்த குஷன் சிறிய மெத்தைகள்போலிருந்தது. அதை விரித்து நான் எழுவருக்கும் படுக்கை தயாரித்திருந்தேன். அது குளிரை தடுத்தது. கிருஷ்ணன் “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்று தரையில் போர்வை விரித்துப்படுத்தார். காலையில் அவர் நான்கு நாற்காலிகளிலாக படுத்திருந்தார். இரவில் தரையிலிருந்து வந்த குளிர் அவரை நடுநடுங்கச்செய்ததாகச் சொன்னார்.

1

இரவிகுளம் – வரையாடு பார்க்கும் மாடங்கள்

 

அன்றுகாலை இரண்டே கழிப்பறைகளில் அத்தனைபேரும் சென்று தயாராகி கிளம்ப ஒன்பது மணி. எங்கள் திட்டம் பருந்துப்பாறையில் காலை உதயம் பார்ப்பது. காலைச்சாப்பாடு முடித்து அங்கே சென்றபோது ஒன்பது மணி. ஆனால் அப்போதுதான் உதயம்போலத் தெரிந்தது

 

பருந்துப்பாறை உச்சி கேரளத்தின் மிக உயரமான இடம். அங்கிருந்து சூழ்ந்திருக்கும் மலையுச்சிகளைப் பார்ப்பது ஒருவகை ஊழ்கநிலை. முன்பு நாங்கள் தனியாக மூடுபனிக்குள் நின்றிருப்போம். ஒருமுறை சரிவிறங்கி அருவியெனக்கொட்டும் நீரோடை வரைச் சென்றதும் உண்டு. அது சுற்றுலாமையமாக ஆகிவிட்டிருந்தது

Monsoon_Trip_Day_02-1200592

இரவிகுளம், மழையில்

அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. ஆகவே நல்ல கூட்டம். டீ காப்பி சுண்டல் மாங்காய் வியாபாரம். இன்னும் சிலநாட்களில் அதை கொடைக்கானல் போல ஒரு சந்தைமையமாக ஆக்கிவிடுவார்கள். மலைமேல் இருந்து கீழே பொழியும் அருவிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

உச்சிவேளை ராமக்கல்மெட்டு சென்றோம். ஏற்கனவே சென்ற இடம். மூணார் அருகே நெடுங்கண்டம் என்னும் இடத்திற்கு அருகே உள்ள குன்று இது. கடல்மட்டத்தில் இருந்து 1100 மீட்டர் உயரம். தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நிலத்தை நோக்கி அமைந்துள்ள இந்த மலையுச்சி கடுமையான காற்றுக்கு புகழ்பெற்றது. சாதாரணமாகவே எழுபது கீமீ வேகத்தில் மலைகாற்று வீசும், உச்சமாக நூறுகிமீ வேகம்.

Monsoon_Trip_Day_02-1200603

வாகமண்

2005ல் இந்த இடத்தை ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்க நெடுங்கண்டம் பஞ்சாயத்தார் முடிவுசெய்து இங்கே சங்கப்பாடல்களை நினைவுறுத்தும்வகையில் குறவன் குறத்தி சிலை ஒன்றை அமைத்தனர். புகழ்பெற்ற சிற்பி சி.பி.ஜினன் அமைத்த அந்த இருபதடி உயரமான கான்கிரீட் சிலை  மலையுச்சியில் அமைந்துள்ளது.

பெரிய அளவுடையதென்றாலும் அழகான நவீனச் சிலை. ஆனால் பன்னிரண்டு ஆண்டுகள் ஆவதற்குள் பல இடங்களில் விரிசல்கள் தோன்றிவிட்டன.

Monsoon_Trip_Day_01-1200494

குளிர்மழைக்குள் ஐஸ்கிரீம்

ராமக்கல் மெட்டில் மழையே இல்லை. மழையை மேற்குத்தொடர்ச்சிமலை தடுத்து நிறுத்தி வெறும் குளிர்காற்றை தமிழகம் நோக்கி அனுப்புவதை அங்கே கண்கூடாகவே காணலாம்.

மறுபக்கம் அரைப்பாலைநிலம் போல தமிழ்ச்சமநிலம் விரிந்து கிடந்தது. மழையில் இருந்து அங்கே வந்தமையால் அந்த குளிர்காற்றை ரசிக்கமுடியவில்லை. உடனே மீண்டும் மழைக்குள் நுழையவேண்டுமென்றே தோன்றிக்கொண்டிருந்தது.

Monsoon_Trip_Day_02-3532

பருந்துப்பாறை

பின்மாலையில் கிளம்பி தேவிகுளம் சென்றோம். செல்லும் வழியே ஒரு கனவில் சுழன்றுகொண்டிருப்பதுபோல. லா.ச.ராவின் பச்சைக்கனவு நினைவுக்கு வந்தது. பச்சைவெளியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் அக்கணத்தில் மின்னல்தாக்கி பார்வையிழக்கிறான். கண்ணுக்குள் பச்சை நிறம் எஞ்சிவிடுகிறது. பின்னர் அவன் பச்சை நிறமாக மட்டுமே அனைத்து காட்சிகளையும் நினைவில்கொண்டு பச்சை நிற உலகில் வாழ்ந்து மடிகிறான்

பச்சை மட்டுமேயான உலகு. ஒளியும் நிழலும் பச்சை. பச்சை என்பது நீரின் ஓர் அழகுத்தோற்றம். மலைமடிப்புகள் அனைத்திலும் வெண்ணிற அருவிகள் பெய்துகொண்டிருந்தன. ஆழங்கள் அனைத்திலும் நீரோடைகள் நெளிந்து கிடந்தன

Monsoon_Trip_Day_02-3540

மாலை ஓர் ஊரில் வண்டியை நிறுத்திவிட்டு மழையில் இறங்கி இரண்டு கிமீ நடந்தோம். உடல்மேல் மழை அறைய சூழ்ந்திருக்கும் மரங்கள் நீர்ச்சரடுகளால் நெளிய நீர்விசைக்கு உடலைக்குனிந்தபடி நடந்தோம்

மாலையில் ராஜாக்காடு. அங்கே வியாபாரிகள் கூட்டமைப்பின் விடுதியில் தங்கினோம். இரவு அங்குள்ள விடுதியில் மலையாளப்பாணியில் கஞ்சியும் வறுத்தமீனும் அவியலும் சட்டினியும் சாப்பிட்டேன். நான்மட்டும்தான், மற்றவர்கள் மலையாள உணவுக்கு வரவில்லை.

Monsoon_Trip_Day_02-3554

திங்களன்று காலையில் இரவிகுளம் சென்றோம். நாங்கள் செல்லும்போதே மழை தூறிக்கொண்டிருந்தது. இரவிகுளம் குறிஞ்சிபூக்கும் மலையுச்சி. அதைப்பார்க்க வந்ததைப்பற்றி சங்கசித்திரங்களில் ஒரு கட்டுரை இருக்கும் [பூவிடைப்படுதல்]

அன்றை விட இன்று சுற்றுலாமையமாக ஆகியிருந்தது. உள்ளே செல்ல கட்டணம் உண்டு. முன்பு கண்ணன் தேவன் நிறுவனத்தின் வேட்டைநிலமாக இருந்தது 1971ல்தான் அரசால் கைப்பற்றப்பட்டு வரையாடு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

ii

இரவிகுளம் அருவி இணையத்திலிருந்து

பேருந்தில் ஏற்றிக்கொண்டு மலையுச்சியில் விட்டுவிடுவார்கள். முகில்களுக்குள் ஊடுருவி நின்ற மொட்டைப்பாறை மலையுச்சி. மேலே மலையில்  ஓர் அருவி கொட்டுவதைக் கண்டேன். அதை அருவி எனக்கொண்டால் இந்தியாவிலேயே உயரமான அருவி. ஏன் உலகிலேயே உயரமான சிலவற்றுள் ஒன்று.

Monsoon_Trip_Day_03-1200758

பருந்துப்பாறை

மலை உச்சியில் இருந்து வளைந்த பாறைவழியாக வழிந்திறங்கும் காட்டு ஆறு அது. _ உயரம். ஆனால் மழைநின்றதும் தானும் நின்றுவிடும். ‘தேனருவி அலையெழுந்து வானின்வழி ஒழுகும்’ என்னும் வரிக்கு அப்போது பொருள் கிடைத்தது. “செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுக்கும்’ என்றே தோன்றியது. நீர்ப்பிசிறுகளே முகிலாகி வானைமூடி சூரியனை முழுமையாக மூடியிருந்தன

மலை உச்சி நோக்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்துசெல்லவேண்டும். மழை பெய்துகொண்டே இருந்தது. கைகள் விரைக்கும் குளிர். இரவிகுளம் காடு வரையாடுகளுக்குச் சரணாலயம். மக்களுக்குப் பழகிய வரையாடுகள் அருகிலேயே மேய்ந்துகொண்டிருக்கும். நாங்கள் மழைப்பெருக்கில் உடல்குறுக்கி நின்றுகொண்டிருந்த ஒரே ஒரு வரையாட்டை பார்த்தோம்

Monsoon_Trip_Day_01-1200329

வாகமண், இஞ்சிப்புல்

மலைச்சரிவுகளில் அருவிகள் இறங்கிச்சென்றன. நாங்கள் பார்த்திருக்கையிலேயே அருவி ஒன்று புதிதாக உருவாகியிருந்தது. மழை வலுக்க மேலும் சிறிய அருவிகள் தோன்றின. அவையனைத்தும் ஓசையுடன் கீழே சென்று ஓடையாகி காட்டுக்குள் மறைந்தன

மழையின் மீது பயணம்செய்வதுபோல உணர்ந்தோம். மழை ஒரு வெள்ளிப் பறக்கும் கம்பளம். கீழே பசுமையின் அலைகள். வானத்தின் ஒளி. ஒளியே அத்தனை குளிராகச் சூழ்ந்திருந்தது எனத் தோன்றியது.

Monsoon_Trip_Day_01-1200449

மழையில் [ஜான் பிரதாப்] வாகமண்

மதியம் ஒரு மணிக்குத் திரும்பினோம். இரவிகுளத்திலேயே இருதரப்பாக பிரிந்தோம். நானும் சக்திகிருஷ்ணனும் அனந்தமுருகனும் ஜானகிராகமும் ஜான் பிரதாப்பும் மூணார் வழியாக தேனி இறங்கி திண்டுக்கல் வந்தோம். திண்டுக்கல்லில் இருந்து எனக்கும் ஜானுக்கும் எட்டுமணிக்கு ரயில்.

ரயிலில் எட்டுமணிக்கே தூங்கும்பொருட்டு படுத்துவிட்டேன். அலர்ஜிக்காக ஒரு மாத்திரை போட்டிருந்தமையால் நல்ல தூக்கம். அரைவிழிப்பில் பச்சைவெளிகளினூடாகவே சென்றுகொண்டிருந்தேன்.

Monsoon_Trip_Day_01-1200378

பச்சை இருள், வாகமண்

இரவு இரண்டரை மணிக்கு நாகர்கோயில். விடிகாலையில் அருண்மொழியை எழுப்பக்கூடாது. ஆகவே ரயில் நிலையத்தில் அமர்ந்து இரண்டு மணிநேரத்தைப் போக்கிவிட்டு ஐந்தரை மணிக்கு வீட்டுக்குச் சென்றேன்.

நாகர்கோயிலில் ஓரிரு நாட்களாக மழை இல்லை. சாலை உலர்ந்திருந்தது. தேனி சமவெளிக்கு இறங்கியதுமே அதுவரை இருந்த ஈரப்பசுமை வெறும் கனவாக ஆகிவிட்டிருந்தது. நீரற்ற வெறும் முகில்கள். மெல்லிய சாரல் அவ்வப்போது. மற்றபடி புழுதி மூடிய செம்மண்நிலம். நாகர்கோயிலில் அமர்ந்து அந்த கனவை திரும்ப மீட்டெடுக்க ஆரம்பித்தேன்.

படங்கள் ஏ வி மணிகண்டன்

படங்கள் 1

படங்கள் 2

 படங்கள் 3

தொடர்புடைய பதிவுகள்

கிராதம் –செம்பதிப்பு முன்பதிவு

$
0
0

kiratham

கிராதம் – வெண்முரசு நாவல் வரிசையின் பன்னிரண்டாவது நாவல். ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அதன் பன்னிரண்டாவது நூல் இது.

இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் உண்டு.வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.

அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேதமுதல்வனிடமிருந்து பாசுபதவேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயணவேதத்தின் உச்சத்தைக் கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. வேதம் எங்கிருந்தெல்லாம் ஊறியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் அவன் பயணம் நிகழ்கிறது. ஆளுமையின் அனைத்து வடிவங்களிலும் அமைந்து அறிந்து அவன் மீள்வதே இதன் கதை.

உலகக் காப்பியவரலாற்றில் மாவீரர்களின் பயணங்களை மெய்ஞானப் பயணங்களாகச் சித்தரிப்பது பொதுவான வழக்கம். ஒருபக்கம் எளிய வீரகதையாகவும் மறுபக்கம் அகப்பயணமாகவும் தோன்றும் ஒரு கதையாடல் தொன்மைக்காலம் முதலே இங்கு இருந்துள்ளது. அந்த காவியப்போக்கு கொண்ட நாவல் இது.

இதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யமுடியாது.

இப்புத்தகம் உங்களுக்கு 2017 ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் – ஜீலை 25, 2017.

முன் பதிவு செய்பவர்களுக்கு தபால் செலவு கிடையாது. எனவே ஆர்டர் செய்யும்போது ‘ரிஜிஸ்டர் புக் போஸ்ட்’ என்பதைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.

செக், டிடி, எம் ஓ மூலம் முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

ஜெயமோகன் கையெழுத்து தேவைப்படுபவர்கள், நீங்கள் முன்பதிவு செய்தபின்பு, எங்கள் பிரதிநிதி உங்களைத் தொடர்புகொள்ளும்போது அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்

 

கிழக்கு இணையதளம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43

$
0
0

42. சூரணங்கு

flowerமுக்தன் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கே அவனுக்காகக் காத்திருந்த உத்தரனின் அகத்தளக் காவலன் கஜன் ஓடி அருகே வந்து “மூத்தவரே, உங்களை உடனே அழைத்து வரும்படி இளவரசரின் ஆணை” என்றான். “என்னையா?” என்று திகைப்புடன் கேட்டபடி புரவியிலிருந்து இறங்கினான் முக்தன். “உங்களைத்தான்” என்றான். “ஆனால் உங்கள் இல்லம் எனக்கு தெரியவில்லை. அதை எளியவனாகிய நான் தேடிக் கண்டுபிடிப்பதும் இயல்வதல்ல. எப்படியும் தாங்கள் இங்கு வருவீர்கள் என்று காத்திருக்கிறேன். நல்லவேளை வந்துவிட்டீர்கள்” என்றான்.

“ஏன் ஒற்றர்களை வைத்து கண்டுபிடிப்பதற்கென்ன?” என்றான் முக்தன். “ஒற்றர்களையா? ஒற்றர்கள் யார் இவர் சொன்னால் கேட்கிறார்கள்? நானேகூட உங்கள் இல்லத்தை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் அப்படியே சென்று இளவரசர் ஆணையிட்டார் என்று ஏதேனும் படைப்பிரிவுக்குள் நுழைந்துகொள்ளலாமா என்று பார்த்தேன்” என்றான். சிரித்தபடி “தேடமாட்டாரா?” என்றான் முக்தன். “தேடமாட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னால் நான் வந்து அவர் முன் நின்றால்கூட என் முகம் அவர் நினைவில் நிற்காது. உடனடியாக நிறைவேற்றியாகவேண்டிய பிறிதேதேனும் ஆணை ஒன்றை எனக்களிப்பார். உங்களுக்குத் தெரியாது, எங்களது இளவரசரைப்போல விந்தையான ஒருவரைக் காண்பது மிக அரிது.”

அவன் அருகே வந்து புரவியின் கடிவாளத்தை பிடித்துக்கொண்டு “ஆனால் கருணை கொண்டவர் இளவரசர். எளியோர் எவராயினும் அவர் அருகே சென்று நின்று கண்ணீர் உகுக்க முடிந்தால் அதை அவரால் புரிந்துகொள்ள முடியும்” என்றான் கஜன். புரவியை கொண்டுசென்று தளையில் கட்டியபின் “வருக!” என்றபடி அவன் முன்னால் நடந்தான். முக்தன் பின்னால் சென்றபடி “என்னை எதன்பொருட்டு அழைத்துவர ஆணையிட்டார் என்று உனக்குத் தோன்றுகிறது?” என்றான். “நீங்கள் எங்கள் அரண்மனைச் சேடியர் எவருக்கேனும் காதல்பரிசுகள் அளித்திருக்கலாம்” என்றான் கஜன்.

“நானா?” என்றான் முக்தன் திகைப்புடன். “அல்லது நீங்கள் அவர்கள் எவரையாவது மிரட்டியிருக்கலாம்” என்றான் கஜன். “என்ன சொல்கிறாய்?” என்று முக்தன் எரிச்சலுடன் கேட்டான். “அரண்மனைப் பெண்டுகள் தவிர பிற எதன் பொருட்டேனும் அவர் எதையேனும் செய்து எப்போதும் பார்த்ததில்லை” என்றான் கஜன். முக்தன் எரிச்சலுடன் “அரண்மனைப் பெண்டுகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றான். “ஒருவேளை அரண்மனைப் பெண்கள் எவரேனும் உங்களைப் பார்த்து காதல் கொண்டிருக்கலாமோ?” என்றான் கஜன். “உளறாதே” என்றான் முக்தன். “அதற்கு வாய்ப்புள்ளது, மூத்தவரே. நீங்கள் சற்று முன் புரவியில் வந்து இறங்குவதைப் பார்த்தபோது நானேகூட ஓர் இளவரசரென்று எண்ணிவிட்டேன்” என்றான். “பேசாமல் வா” என்றபடி முக்தன் நடந்தான்.

மைய அரண்மனையின் வலப்பக்கம் கையணைப்பாக இருந்த உத்தரனின் அரண்மனையை இடைநாழிகளினூடாக அணுகியபோது கஜன் அருகே வந்து “சற்றுமுன் பேசும்போது இந்த எண்ணம் எனக்கு வந்தது, மூத்தவரே. உண்மையிலேயே நீங்கள் இளவரசரைப்போல் இருக்கிறீர்கள். இத்தோற்றத்தில் நீங்கள் இளவரசர் முன் சென்றால் அவர் அதை விரும்பப்போவதில்லை” என்றான். முக்தன் “அதற்கு நான் என்ன செய்வது?” என்றான். “உங்கள் உடலை மாற்றிக்கொள்ளுங்கள். கைகளை மார்பில் கட்டி தோள்களைக் குறுக்கி குனிந்து நின்று பேசுங்கள். நேருக்கு நேர் நின்று இளவரசரின் விழிகளை சந்திக்கவே வேண்டாம்” என்றான்.

முக்தன் உதடுகளை கோணினான். கஜன் “இதை நான் நோக்கியிருக்கிறேன். எவரேனும் அவரது விழிக்கு விழி நோக்கி பேசினால் அவருக்குள் ஏதோ உளஅசைவு உருவாகிறது. சீறத் தொடங்கிவிடுகிறார்” என்றான். முக்தன் “அது நாய்களின் குணம்” என்றான். கஜன் நகைத்து “ஆமாம். நானும் அவ்வாறே எண்ணினேன். நாய்கள் தங்களை எவரேனும் தாக்கிவிடக்கூடும் என்று அஞ்சிக்கொண்டிருக்கின்றன. விழிகளுக்குள் பார்த்தால் அவை தங்கள் அச்சத்தால் நம்மை கடிக்க வருகின்றன” என்றான். “நான் பார்த்துக்கொள்கிறேன், வா” என்றபடி முக்தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.

கஜன் இடைநாழிக்குள் நுழைந்து அங்கிருந்த முதிய காவலனிடம் “இளவரசரின் ஆணைப்படி புரவிக்காரரை அழைத்து வந்திருக்கிறேன்” என்றான். பழுத்த சிறிய கண்களில் துயில் எஞ்சியிருக்க வழிந்திருந்த வாயை கையால் துடைத்தபடி “புரவிக்காரரையா? எதற்கு? இப்போது யாரையும் பார்க்க முடியாது” என்றார் முதிய காவலன். “இளவரசரே சொல்லித்தான் நான் வந்தேன்” என்றான் முக்தன். “எவர் சொன்னாலும் பார்க்க முடியாது” என்றபின் கஜனிடம் “என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றாயா? என் ஆணை இல்லாமல் எவரும் இந்த அரண்மனைக்குள் நுழைய நான் விடப்போவதில்லை. நான் யாரென்று நினைத்தாய்? இந்த அரண்மனை என்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கிறது” என்றார் கிழவர். “இளவரசர்…” என்று முக்தன் தொடங்க “இளவரசரே வந்து சொன்னாலும் நான் ஒப்பப்போவதில்லை” என்றார்.

“நன்று” என்றபின் கஜன் திரும்பிப்பார்த்து “வருக!” என்று அழைத்தபடி முன்னால் சென்றான். “காவலர் தலைவர்…” என்று முக்தன் தயங்க “அவர் இங்கிருந்து ஓசையிடுவார். நீங்கள் வாருங்கள்” என்றான் கஜன். முக்தன் “அவ்வாறு வருவது…” என்று தொடங்க கஜன் “வருக” என்று கையை பற்றி இழுத்து உள்ளே இட்டுச் சென்றான். அவர்களுக்குப் பின்னால் “ஏய்! என்ன இது? நில்லுங்கள்! எங்கே செல்கிறீர்கள்? என்னைக் கடந்து எவரும் செல்ல நான் ஒப்பப்போவதில்லை. நான் என்ன செய்வேன் தெரியுமா? நான் யார் என்றால்…” என்று முதியவர் கூச்சலிடுவது கேட்டது. “அவர் காவலர் தலைவர் அல்லவா?” என்றான் முக்தன். “வாயில் ஒரு பல்கூட இல்லாத முதியவரை காவலர் தலைவராக அமர வைத்திருக்கிறார்களென்றால், அதன் நோக்கம்தான் என்ன?” என்று கஜன் கேட்டான். “ஆம்” என்றபின் திரும்பிப் பார்த்த முக்தன் “மிகவும் முதியவர்” என்றான். “அரசரையே சிறுவனாக பார்த்தவர்” என்றான் கஜன்.

“எழாமலேயே கூச்சலிடுகிறார்” என்றான் முக்தன். “ஏனென்றால் எழுந்து பின்னால் வர அவரால் முடியாது.” முக்தன் “ஆனால் அவர் எங்காவது  நம்மைப்பற்றி சொல்லி முறையிடமுடியும்” என்றான். “எங்கு முறையிடுவார்? இளவரசரிடம்தானே? உடனடியாக என் தலையை வெட்டி தாலத்தில் கொண்டு வரும்படி ஆணையிடுவார். அந்த ஆணையை அருகிலிருக்கும் சேடி கேட்டு சிணுங்கவேண்டுமென்று விரும்புவார். அவள் நகைத்தால் இவரும் சேர்ந்து நகைப்பார். ஆணையைப் பெற்ற வீரன் அவ்வாறே என்று சொல்லி வணங்கி வெளியே வந்து வாளால் முதுகை சொறிந்துகொண்டு திரும்பிப்போய் தன் பழைய பணியில் ஈடுபடத் தொடங்கிவிடுவான். அரை நாழிகைக்குப் பிறகு என்னை அழைத்து நறுமணப் பாக்கும் இன்கடுநீரும் கொண்டுவரும்படி ஆணையிடுவார். இங்கு நடப்பதையெல்லாம் நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் முழுமையாக நம்பவே போவதில்லை” என்றான்.

பெண்களின் சிரிப்பொலிகள் கேட்டன. “என்ன செய்கிறார்கள்?” என்று முக்தன் கேட்டான். “தாயம் உருட்டி விளையாடுகிறார்கள்” என்றான் கஜன். முக்தன் “தாயம் உருட்டியா? அது என்ன விளையாட்டு?” என்று கேட்டான். கஜன் “இது உயிருள்ள தாயம்” என்றான். “உயிருள்ள தாயமென்றால்…” என்று முக்தன் கேட்க “இரண்டு கைகளும் இரண்டு கால்களும் கொண்டது. பெண்கள் அதை உருட்டி விளையாடுவது அதற்கு மிகவும் பிடிக்கும். கிளுகிளுவென்று சிரித்துக்கொண்டே இருக்கும்” என்றான். “உன் வாயில் மீறல் நிறைய வருகிறது” என்றான் முக்தன். “இந்த மாளிகையிலேயே குறைவாக மீறுபவன் நான்” என்றான் கஜன்.

முக்தன் புன்னகைத்து அவனைப் பார்த்து “நீ விரைவில் வேறெங்கோ செல்வாய் என்று நினைக்கிறேன்” என்றான். அவன் “உண்மையாகவா, மூத்தவரே? என்னை படைப்பிரிவுகளுக்கு அனுப்பிவிடுவார்களா? இங்கே இந்த இளிவரலாடலில் உளம் சலித்துள்ளேன்” என்றான். “யார் கண்டது? ஒருவேளை கழுமேடைக்குக்கூட அனுப்பலாம்” என்றபின் “என் வரவை உள்ளே சென்று சொல்” என்றான் முக்தன். முறைத்து நோக்கியபின் “சொல்கிறேன்” என்று சொல்லி கஜன் கதவைத் தட்டாமல் நேராக உள்ளே சென்றான்.

உத்தரன் அவனைப் பார்த்ததும் உரத்த குரலில் கூச்சலிடுவது திறந்த கதவினூடாக கேட்டது. “யார் நீ? எதற்காக உள்ளே வந்தாய்? நான் அரசுசூழ்தலில் ஈடுபட்டிருக்கும்போது வாயிலில் நின்று உத்தரவு பெறாது உள்ளே வரக்கூடாதென்று அறியாதவனா நீ?” கஜன் “இளவரசே…” என்று சொல்ல அவனை சொல்மறித்து “யாரங்கே? உடனே இந்தச் சிறுவனைப் பிடித்து கைகால் கட்டி சிறையிலிடுங்கள். மாலை என் அவைக்கு இவனை இழுத்து வாருங்கள்” என்று உத்தரன் கூவினான். “அரசே, நான்…” என்று கஜன் சொல்ல “பேசாதே” என்று உத்தரன் கூச்சலிட்டான். “இல்லையேல் என் வாளால் உன் தலையை வெட்டுவேன்.”

முக்தன் உள்ளே சென்று தலைவணங்கி “தங்கள் ஆணை நிறைவேற்றப்படும், இளவரசே” என்று சொன்னான். “உடனடியாக…” என்று உத்தரன் கைநீட்டி ஆணையிட்டான். அவனைச் சூழ்ந்திருந்த பெண்கள் அனைவரும் முக்தனைப் பார்த்து புன்னகைத்தனர். அவர்களின் நோக்கை தன் உடலில் இலைகள் வருடுவதுபோல உணர்ந்தபடி “தங்கள் ஆணைப்படி இந்த வீணனின் தலையை வெட்டுகிறேன், இளவரசே” என்றபின் கஜனிடம் “வா” என்றான் முக்தன். பதற்றத்துடன் “என்ன இது?” என்றான் கஜன். “நீ சொன்னதை நன்றாகவே நான் புரிந்துகொண்டுவிட்டேன்” என்றபடி அவனை இழுத்து வெளியே கொண்டுவந்த முக்தன் சிரித்தபடி “நீயே அஞ்சிவிட்டாயே” என்றான்.

“மூத்தவரே, நீங்கள் அனைத்தையும் அரைநாழிகையில் புரிந்துகொண்டுவிட்டீர்கள்” என்றான் கஜன். “நேராகக் கிளம்பி காவல்பிரிவுகளுக்குச் சென்றுவிடு” என்றான். கஜன் ஆவலுடன் “காவல்பிரிவுகளுக்கா?” என்றான். முக்தன் “ஆம், காவல்பிரிவில் தீர்க்கன் என்று ஒருவன் இருப்பான். அவனிடம் சென்று நான் உன்னை அனுப்பினேன் என்றும் அது இளவரசரின் ஆணை என்றும் சொல். உனக்கு காவல் பணி கிடைக்கும்” என்றான். “எங்கு காவல் பணி? கோட்டை முகப்பிலா?” என்றான் கஜன். சலிப்புடன் “கோட்டை முகப்பில் போர்க்கலை தெரிந்த வீரர்களைத்தான் வைப்பார்கள்” என்றான் முக்தன். கஜன் “அவ்வாறென்றால் கருவூலத்திலா…?” என்றான்.

எரிச்சலுடன் தலையை அசைத்தபின் “அல்ல, பேரரசரின் முதன்மை மெய்க்காவலராக உன்னை நிறுத்தப்போகிறார்கள்” என்றான். பாய்ந்து அவன் கைகளைப் பற்றியபடி கஜன் “மூத்தவரே, இந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். எந்தை நான் பணிக்குச் சேரும்போது படிப்படியாக உயர்ந்து நீ பேரரசரின் வேளக்காரப்படை வரை செல்ல வேண்டும் என்றுதான் சொன்னார். இத்தனை விரைவாக அது நிகழுமென்று நான் எண்ணவே இல்லை” என்றான். “இளவரசரைவிட அறிவுடன் இருக்கிறாய். உண்மையில் நீ இங்குதான் இருக்கவேண்டும். உகந்த பணியாள் பிறிதொருவர் அவருக்கு அமையப்போவதில்லை” என்று முக்தன் சொன்னான்.

“என்ன சொல்கிறீர்கள்? நான்… நீங்கள்… இப்போது…” என்று அவன் ஆவலும் பதற்றமுமாக சொல்தடுக்கி பேசத்தொடங்க அவன் கையை விட்டுவிட்டு “இரு, நான் வருகிறேன்” என்றபின் மீண்டும் உள்ளே சென்ற முக்தன் உத்தரன் முன் தலைவணங்கி “தங்கள் ஆணை நிறைவேற்றப்பட்டது” என்றான். ஐயத்துடன் அவனை நோக்கியபின் சேடியரை நோக்கி மெல்லிய மீசையை நீவியபடி “நன்று” என்றான் உத்தரன். “தங்கள் பணிக்காக வந்துள்ளேன்” என்றான் முக்தன். உத்தரன்  “ஆனால் நீயும் ஆணை பெறாதுதான் உள்ளே வந்தாய்” என்றான். “ஆம், ஆனால் நான் தங்களுடைய ஒற்றன். ஆணை பெறாது உள்ளே வரலாமென்று என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்” என்றான் முக்தன். “யார்? நானா?” என்றான் உத்தரன். “ஆம், நான் உங்கள் தனி ஒற்றனல்லவா?” என்றான் முக்தன்.

“ஆம், தனி ஒற்றன்” என்றபின் “உன் பெயர் என்ன?” என்றான் உத்தரன். “சேடியர் முன் என் பெயரை நான் உரைக்கலாகாது” என்றான் முக்தன். சேடியர் ஓரிருவர் சிரிக்குமொலி கேட்டது. “ஆம், உரைக்கலாகாது” என்று உத்தரன் குழப்பமாக அவர்களை நோக்கியபின் சொன்னான். “உண்மையில் நான் தங்கள் பெயரையே சேடியரிடம் உரைப்பதில்லை” என்றான் முக்தன். சேடியர் சிரிக்க உத்தரன் அவனை சற்று குழப்பத்துடன் ஓரக்கண்ணால் பார்த்து “ஆம், சேடியரிடம் சொல்லெண்ணிப் பேசவேண்டும்” என்றபின் நிமிர்ந்து அமர்ந்து “சரி, நீ உளவறிந்த செய்திகளை சொல்!” என்றான். “இளவரசே, இச்சேடியர் நடுவே அதை சொல்ல முடியாது. அவர்களை சற்று விலகி அமரும்படி ஆணையிடுங்கள்” என்றான் முக்தன்.

உத்தரன் கைநீட்டி “ஆம், அனைவரும் இணைவறைக்குச் சென்று காத்திருங்கள். இந்த அரசுசூழ்தலை முடித்து ஆணைகளை பிறப்பித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்றான். அவர்கள் எழுந்து ஆடைகளைத் திருத்தி அணிகள் ஓசையிட மெல்லிய குரலில் பேசிக்கொண்டு தோள்கோத்தும் கைகளை பற்றிக்கொண்டும் விலகிச்சென்றனர். “இவர்களில் சிலர் மச்ச இளவரசரின் ஒற்றர்களாக இருக்கலாம்” என்று முக்தன் சொன்னான். “இவர்களா? இவர்கள் அனைவரும் எனது காதலிகள். என் பொருட்டு உயிரைக் கொடுக்கவும் சித்தமானவர்கள்” என்று உத்தரன் சொன்னான். “ஆம், அது அவர்களின் கண்களிலேயே தெரிகிறது. பெருங்காதல். அவர்கள் உங்கள் பொருட்டு முதலைகள் நிறைந்த அகழிகளில் குதிப்பார்கள். அனலெரியும் காட்டிற்குள் புகுவார்கள்.”

உத்தரன் நகைத்து “பெண்களை புரிந்துகொள்வது கடினம் என்கிறார்கள். அது மிக எளிது” என்றான். “பெண்களின் காதல் ஆண்களுக்கு தெய்வம் அளித்த நற்கொடை. ஆனால் அது அத்தனை ஆண்களுக்கும் அளிக்கப்படுவதில்லை. செல்வமும் குடிப்பிறப்பும் வீரமும் தகுதியும் கொண்டவர்களுக்கு மட்டுமே வாய்க்கிறது அது” என்று முக்தன் சொன்னான். “உண்மைதான்” என்று சொன்னபின் ஐயங்கொண்டவன் போல முக்தனை பார்த்துக்கொண்டிருந்தான் உத்தரன்.

“என்னை தாங்கள் இப்போது வரச்சொன்னது ஏனென்று அறிந்துகொள்ளலாமா?” என்றான் முக்தன். உத்தரன் “நான் வரச் சொன்னேனா?” என்றான். “காலையில் உங்கள் சொல்லுடன் ஓர் இளையவன் வந்தான்” என்றான் முக்தன். “ஆம், நான் காலையில் உன்னைப்பற்றி எண்ணிக்கொண்டேன்” என்றபின் ஓரக்கண்ணால் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு “ஆனால் அது எதற்கென்று நினைவுகூர முடியவில்லை” என்றான் உத்தரன். பின்னர் எதையோ எண்ணிக்கொண்டு “நான் உன்னை வரச் சொல்லவில்லை, புரவிப் பணியாளன் கிரந்திகனைத்தான் வரச் சொன்னேன்” என்றான். உடையை அள்ளி அணிந்து எழுந்து “நான் உடனே அவனை பார்க்கவேண்டும்” என்றபின் “நீயும் என்னுடன் வா” என்றான்.

flowerஉத்தரன் தன் தேரில் ஏறிக்கொண்டு “நீ என்னுடன் வா” என்றான். முக்தன் தன் புரவியில் ஏறி தேரைத் தொடர்ந்தான். தேர் சென்று புரவிக்கொட்டிலை அடைந்தது. உத்தரன் அதிலிருந்து இறங்கி கண்களுக்குமேல் கைகளை வைத்து “ஏன் இத்தனை வெயில்?” என்றான். “அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, இளவரசே” என்றான் முக்தன். “ஆம், நம்மால் அனைத்து இடங்களிலும் கொட்டகை போட முடியாது” என்றான் உத்தரன். “நான் உன்னை ஏன் அழைத்தேன்?” என்று முக்தனிடம் கேட்டான். “உளவறியும்பொருட்டு” என்றான் முக்தன். “ஆம், உளவறியும்பொருட்டு” என்ற உத்தரன் “இப்போது நினைவுகூர்கிறேன். நீ என் இளையவளுக்கு நடனம் கற்பிப்பவனின் அணுக்கன் அல்லவா?” என்றான். “உன் பெயர் முக்தன் என்றார்கள்.”

“ஆம், அந்தப் பெயரில்தான் நான் உளவறிகிறேன்” என்றான் முக்தன். “யாருக்காக உளவறிகிறாய்?” என்றான் உத்தரன். “தங்களுக்காகத்தான், தங்கள் ஆணைப்படி” என்றான் முக்தன். “ஆம், எனது ஆணைப்படிதான். இப்போது நினைவு வருகிறது” என்றபின் மேலும் குழப்பமடைந்து கொட்டிலை பார்த்தான் உத்தரன். அங்கே காதரன் வாயில் ஒரு புல்சரடுடன் வந்து வேடிக்கை பார்த்தது. உத்தரனைக் கண்டு ஆர்வத்துடன் ‘ரீர்ரீ’ என்றபின் தலையை ஆட்டி ஆட்டி புல்லை வாய்க்குள் இழுக்க முயன்றது. புல் அதன் வாயில் இருந்து எச்சில்கோழையுடன் வழிந்தது. உத்தரன் ஓரக்கண்ணால் முக்தனை பார்த்துவிட்டு “உத்தரை எவ்வாறு உணர்கிறாள்?” என்றான்.

“எவ்வாறு என்றால்…?” என்றான் முக்தன். “அவள் பிருகந்நளையை பற்றி என்ன நினைக்கிறாள்?” என்றான் உத்தரன். “ஆசிரியர் என்று” என்றான் முக்தன். “மூடா, அதை நான் அறியமாட்டேனா? அதற்கு எனக்கு ஒற்றன் தேவையா?” என உத்தரன் கூவினான். “இளவரசிக்கு அந்த ஆணிலியோடு என்ன உறவு? அதை கேட்டேன்.” பணிவுடன் “உறவு என்றால்…?” என்றான் முக்தன். “மூடா, அவள் அவனை காதலிக்கிறாள் என்று என் சேடியரில் ஒருத்தி சொன்னாள்” என்றான் உத்தரன். முக்தன் நகைத்து “காதலா? இருவரும் தோழியர் என்றல்லவா தோன்றுகிறது?” என்றான். “ஏன், தோழியை காதலிக்கக்கூடாதா?” என்றான் உத்தரன். தாழ்ந்த குரலில் “அரண்மனை அகத்தளங்களில் அவ்வழக்கம் உண்டென்று கேட்டிருக்கிறேன்” என்று முக்தன் சொன்னன். உத்தரன் திடுக்கிட்டு “இல்லையில்லை, நான் அப்பொருளில் சொல்லவில்லை” என்றான்.

“தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை” என்றான் முக்தன். “அவள் இயல்பே மாறிவிட்டதென்று அகத்தளங்களில் சேடியர் பேசிக்கொள்கிறார்கள். காதல்கொண்டவள்போல கண்மயங்கி அலைகிறாளாம். நானே பார்த்தேன், தனக்குத் தானே பேசிக்கொள்கிறாள், பாடிக்கொள்கிறாள், தனித்திருந்து சிரிக்கிறாள். ஒவ்வொரு நாளும் ஓர் ஓவியத்தை வரைபவள்போல் தன்னை அணி செய்துகொள்கிறாள். நடையில் துள்ளலும் கையசைவில் சுழற்சியும் வந்துவிட்டது. அவள் அந்த ஆணிலியை காதலிக்கவில்லையென்றால் வேறு யாராவது காதலர்கள் அவளுக்கு இருக்கிறார்களா? அதை நான் அறிந்தாகவேண்டும்” என்றான்.

முக்தன் “இளவரசியர் காதல் கொள்வது இயல்புதானே? காட்டில் மழை பெய்தால் ஊருக்குள் ஆறு பெருகிவருவதுபோல உடனே நமக்கு தெரிந்துவிடும். ஆவன செய்யவேண்டியது அரசரின் பொறுப்பு” என்றான். “நான் சொல்ல வருவது அது அல்ல. அவள் இப்பேரரசின் இளவரசி. அவளுக்கு பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் எவரேனும் கன்யாசுல்கம் அளித்து மணத்தூது அனுப்பவேண்டுமென்று நாங்கள் எண்ணியிருக்கிறோம். மகதமும் கலிங்கமும் வங்கமும் மாளவமும் அவந்தியும் என தொன்மையான ஷத்ரிய நாடுகள் எதிலிருந்து மணச்செய்தி வந்தாலும் அதை ஏற்க காத்திருக்கிறோம்” என்றான் உத்தரன்.

“இயல்புதானே…?” என்றான் முக்தன். “நாம் ஷத்ரிய அரசரிடம் மணஉறவை ஏற்படுத்திக்கொண்டால் நமது அண்டை நாடுகள் நமது முன் படைநிற்க இயலாதாகும். விதர்ப்பமும் சதகர்ணிகளும் இப்போது தயங்கி அஞ்சி நிற்கிறார்கள். ஆனால் ஒருநாள் நம்மை வென்றுவிடவேண்டுமென்ற விழைவும் அவர்களிடம் இருக்கிறது. ஷத்ரிய மணஉறவொன்று அமையுமென்றால் அதன் பின் அவர்கள் நம்மை களத்தில் எதிர்க்க முடியாது. இது மிக நுட்பமான அரசியல் சூழ்ச்சி. எளிதில் புரிந்து கொள்ளமுடியாது” என்றான் உத்தரன். “ஆம், எனக்கு ஓரளவே புரிகிறது” என்று முக்தன் சொன்னான்.

“உன்னிடம் அதை விளக்கமாக நான் சொல்லமுடியாது” என்றான் உத்தரன். “ஆகவே இந்தப் பகையரசர் எவரேனும் பெண்டிர் உளம் மயக்கும் கலை பயின்ற மாயாவி ஒருவனை ஆணிலி தோற்றத்தில் இங்கு அனுப்பியிருக்கக்கூடுமோ என்று சேடியரில் ஒருத்தி கேட்டாள்.” முக்தன் “ஆம், இருக்கக்கூடும்” என்றான். “அவன் அவள் உள்ளத்தை கைப்பற்றி வைத்திருக்கிறான். அவளை பிச்சியும் பேதையும் ஆக்கிவிட்டிருக்கிறான். அவன் அதில் முழு வெற்றி அடைவதற்குள் அவனை பிடித்தாகவேண்டும். இச்செய்தியை உடனடியாக தந்தையிடம் தெரிவிக்கவேண்டும். அதற்கு போதிய சான்று தேவை” என்றான் உத்தரன்.

“இதற்கெல்லாம் என்ன சான்று அளிக்க முடியும்? இளவரசியை கொண்டு நிறுத்தி அவர் உளம் மாறியிருப்பதை காட்டவேண்டியதுதான்” என்றான் முக்தன். உத்தரன் “அல்ல. நீ அந்த மாயாவியை கூர்ந்து நோக்கு. அவன் எங்காவது மந்தணப் பூசனைகள் செய்கிறானா, நுண்சடங்குகள் எதையாவது ஆற்றுகிறானா, தனிமையில் இருக்கையில் கந்தர்வர்கள் எவரேனும் அவனை தேடி வருகிறார்களா என்று அறிந்து சொல். இவையனைத்தையும் நீ என்னிடம் வந்து சொன்னபின்னர் நான் முடிவெடுக்கிறேன்” என்றான்.

“அவ்வாறு மந்தணச் சடங்குகள்…” என்று முக்தன் தொடங்க “மந்தணச் சடங்குகளினால் மட்டுமே இளவரசியின் மனம் கொய்ய முடியுமென்பதை நீ அறிந்திருக்கமாட்டாய். உன்னைப்போன்ற எளியவர்களுக்கு அதை புரியவைப்பது கடினம். உளங்கவர் வித்தைகள் பலநூறு உள்ளன. சான்றாக அன்ன தந்திரம். மாமன்னர் நளன் தமயந்தியை அதைக் கொண்டுதான் கவர்ந்தார். அன்னத்தின் தூவியால் ஆற்றப்படவேண்டியது அது” என்றான்.

உத்தரன் தொடர்ந்தான் “இளம்அன்னத்தின் தூவியை எடுத்து அதை ஒரு துளி பாதரசம் சேர்த்து நன்றாக அரைத்து, தென்கிழக்காகச் செல்லும் தென்னைமரத்தின் வேரின் சாற்றைக் கலந்து, கவர எண்ணும் பெண்ணின் தலைமுடியில் ஒரு சுருளை எரித்து, அக்கரியை அதனுடன் குழைத்து புருவத்தில் தேய்த்தபடி அவளை நோக்கினால் அவள் விழி நம்மை சந்தித்ததுமே அடிமையாகிவிடுவாள். ஆடிப்பாவைபோல் நாம் கைகால் தூக்க அவளும் தூக்குவாள். பூதம்போல நமக்கு ஏவல் புரிவாள்.”

“இப்போது புரிகிறது” என்று முக்தன் சொன்னான். “என்ன?” என்றான் உத்தரன். “இத்தனை பெண்கள் இங்கு பித்திகளைப்போல் எப்படி கிடக்கிறார்கள் என்று” என்றான் முக்தன். சிறிய பதற்றத்துடன் “அதாவது நான்…” என்று உத்தரன் தொடங்க “தாங்கள் எந்த மாயத்தையும் செய்பவரல்ல. ஆனால் தாங்கள் அனைத்தும் அறிந்த இளவரசர். சுட்டு விரலசைத்தால் தங்களுக்குத் தேவையான மையும் மாயப்பொருளுமாக எத்தனையோ மாயாவிகள் இங்கு வந்து நிற்பார்கள். யார் கண்டது? இவ்வரண்மனை முழுக்க உங்களுக்கு ஏவல் செய்யும் கந்தர்வர்கள் காணா வடிவில் இருக்கக்கூடும். இப்போதுகூட உங்களைச் சுற்றி பலர் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது” என்றான்.

உத்தரன் தலையை அசைத்து “ஆம், பிறரறியாத பல ஆற்றல்கள் எனக்குண்டு” என்றான். “உண்மையில் தங்களைப் பார்க்கவே நான் அஞ்சுகிறேன்” என்றான் முக்தன். “நன்று, நீ என் ஒற்றன். இளவரசியையும் அந்த ஆணிலியையும் கூர்ந்து நோக்கு. அவள் உளம்மாற்றம் என்ன என்பதை என்னிடம் சொல்” என்றான். முக்தன் “சொல்கிறேன்” என்றான். “வரும் முழுநிலவில் அரண்மனை மகளிருடன் அந்த ஆணிலி கரவுக்காட்டுக்கு செல்லவிருக்கிறான். அங்கு இரவெல்லாம் இசையும் நடனமும் உணவும் மதுவும் என களியாட்டு நிகழும் என்றார்கள்” என்றான் உத்தரன். “நானும் என் தோழியருடன் அங்கே செல்லவிருக்கிறேன். எவருமறியாமல் நீ அங்கிருக்கவேண்டும்.”

“ஆணை” என்றான் முக்தன். “இப்போது ஏன் அந்த கரவுக்காட்டுக்கு நிலவாடலுக்குச் செல்கிறான்? அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. ஆகவேதான் நானும் உடன்செல்கிறேன். ஆனால் என்னால் அவர்களுடன் சேரமுடியாது. நீ அவர்களை காட்டுக்குள் இருந்து கூர்ந்து நோக்கு. பிருகந்நளையின் மாயம் என்ன என்று கண்டு என்னிடம் சொல்” என்றான் உத்தரன்.

உள்ளிருந்து நாமர் வந்து வணங்கி “வருக, இளவரசே!” என்றார். “கிரந்திகன் எங்கே? அந்த அறிவிலியை நான் அரண்மனைக்கு வரச் சொல்லியிருந்தேனே?” நாமர் “அவர் காரகனை பழக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். “இனி என்ன பழக்குவது? நான் அதை நன்றாகவே பழக்கிவிட்டேனே?” என்றான். திரும்பி காதரனைப் பார்த்து “இது என்ன இவ்வளவு வளர்ந்துவிட்டது?” என்றான். “நான்கு மாதங்களாகின்றன அல்லவா? ஓராண்டில் முழு வளர்ச்சி அடைந்துவிடும்” என்றார் நாமர். “அதன் தமக்கை ஒருத்தி உடன் வருவாளே?” என்றான் உத்தரன். “பத்மையா? அவளை நேற்றுமுதல் பயிற்சிக்கு கொண்டுசெல்கிறார்கள்…”

காரகன் தொலைவில் தெரிந்தது. பெருகி அணுகி குளம்போசை நிலத்தை அதிரச்செய்ய வந்து நின்றது. முக்தனின் தலையளவு உயரமிருந்தது அதன் முதுகு. அது தன் எடைமிக்க தலையை குனித்து அவன்மேல் நீராவி நிறைந்த மூச்சை விட்டது. உத்தரன் அதன் மேலிருந்த கிரந்திகனிடம் “மூடா, அதை மிகையாக ஓடவிடாதே என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன். குளம்புகள் விரிந்துவிட்டால் அதன் நடை மாறிவிடும்” என்றான். கிரந்திகன் இறகு உதிர்வதுபோல இறங்கி நின்று வணங்கி “ஆம், இளவரசே. நினைவிருக்கிறது. தாங்கள் இன்று வர பிந்தியமையால் நான் சற்று பயிற்சி அளித்தேன்” என்றான்.

உத்தரன் “களைத்துவிட்டான் என் மைந்தன்” என்று சொல்லி காரகனின் விலா நோக்கி கையை கொண்டு செல்ல அது கனைத்தபடி விலா விதிர்க்க துள்ளி விலகியது. திடுக்கிட்டு கையை இழுத்துக்கொண்டு பின்னால் விலகிய உத்தரன் “களைப்பு… என்னை அது தெரிந்துகொள்ளவில்லை” என்றான். “ஆம், தாங்கள் ஒருமுறை சுற்றிவரலாம்” என்றான் கிரந்திகன். “இல்லை… நான் நாளைக்கு வருகிறேன். இன்றைக்கு களைத்துவிட்டிருக்கிறான்” என்றான் உத்தரன். “இல்லை, இளவரசே… அவனே உங்களை கொண்டு செல்வான்…” உத்தரன் அலறலாக “வேண்டாம்…” என்றான். “நானே செல்கிறேன்… நானே செல்கிறேன்…”

கிரந்திகன் முக்தனை நோக்கி புன்னகைத்து “இளவரசருக்குரிய தனிப்புரவி. அவரைத்தவிர என்னை மட்டுமே ஏற்கும்” என்றான். உத்தரன் “ஆம், இதன்மேல் ஏறித்தான் நான் கரவுக்காட்டுக்கு செல்லவிருக்கிறேன்” என்றபின் “நான் அதை சொல்லத்தான் வந்தேன். கரவுக்காட்டுக்கு என்னுடன் நீயும் வரவேண்டும்” என்றான். “நான் எதற்கு?” என்றான் கிரந்திகன். “மூடா, நான் களியாட்டுக்குச் செல்லும்போது புரவியை பார்த்துக்கொள்ள வேண்டாமா?” என்றான் உத்தரன். காதரன் அருகே வந்து கிரந்திகனின் உடலில் தன் உடலைத் தேய்த்தது. நாமர் “தமக்கை இல்லாமல் மிகத் தனிமையாக உணர்கிறது” என்றார். “அது நன்று. களிற்றுப் புரவிகளின் மீது இனிமேல்தான் ஆர்வம் வரும்” என்றான் கிரந்திகன்.

உத்தரன் காரகனை தொடப்போக அது திரும்பி ‘ர்ர்ர்’ என சீறியது. அவன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டு “ஏன் சினம் கொள்கிறது?” என்றான். “சினமல்ல, அன்புதான்” என்ற கிரந்திகன் காரகனைத் தட்டி “ஏறிக்கொள்ளுங்கள், இளவரசே” என்றான். “இன்றைக்கு வேண்டுமா?” என்று உத்தரன் தயங்க “ஏறுங்கள்” என்றான் கிரந்திகன். “நானும் களைத்திருக்கிறேன்” என்று சொல்லி ஒருகணம் காத்திருந்தபின் உத்தரன் கால்வளையத்தில் மிதித்து உடலை உந்தினான். கிரந்திகன் அவன் பின்பக்கத்தை தூக்கிவிட கால்சுழற்றி புரவிமேல் அமர்ந்தான். “மெதுவாக” என்றான். கிரந்திகன் புரவியிடம் மெல்லிய ஒலியில் ஏதோ சொல்ல அது காதுகளை பின் கோட்டி அச்சொற்களை கேட்டது. பின்னர் பெருநடையாக விரைந்தது. அது கிளம்பியதும் நிலைதடுமாறி “ஆ” என்று கூவிய உத்தரன் அந்த ஓசையையே அதைச் செலுத்தும் ஒலியாக மாற்றி “ஆ ஆ” என்றான். நாமர் முக்தனை நோக்கி புன்னகை செய்தார்.

தொடர்புடைய பதிவுகள்

வெற்றி தெலுங்கில்

$
0
0
baskar

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

‘வெற்றி’ சிறுகதையை ‘கெலுபு‌'(gelupu) என்று தெலுங்கில் மொழிபெயர்த்தேன். இந்த மாத ‘ஈமாட்ட’ (eemaata.com) இலக்கிய இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு கதை மிகவும் பிடித்தது என்று தெரிவித்தனர்.

கதையின் மொழிபெயர்ப்பு லிங்க்கை தங்களின் வலைப்பூவில் பதிவிடும்படி வேண்டுகிறேன். தமிழ் வாசகர்களின் வழியாக அவர்களின் தெலுங்கு நண்பர்களுக்கு இந்தக் கதை சென்றடையும் வாய்ப்புள்ளது.

http://eemaata.com/em/issues/201707/12369.html?allinonepage=1

தெலுங்கு வாசகர்களிடமிருந்து வரும் கருத்துக்களை இந்த மாத இறுதியில் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

கதையை மொழிபெயர்க்க அனுமதியளித்தமைக்கு மீண்டுமொருமுறை  நன்றி.

அன்புடன்

பாஸ்கர்

***

Respected Sir,

Namaste.  I’m writing this to share my appreciation on your Tamil Story Vetri,  translated into Telugu by Shri Avineni Bhaskar and published in a Telugu web Magazine “Eemata” Jul 2017 edition.

I felt the story is extremely good and haunting as the awful treatment of Lata by everybody and her heroism in holding ground, against all odds is very well executed.

The story, named “Gelupu”, (in Telugu) with its elaborate narration, reminded me of Somerset Maugham.  All the characters breathed and walked in front of me all the while.  As Tamil is a completely unknown language to me, this Telugu translation seemed very sublime.  I sincerely wish that we get to read more from you in Telugu.

With best Regards Sir,

Sujata Manipatruni

***

தொடர்புடைய பதிவுகள்

வேதா நாயக் –இலக்கிய ஓவியங்கள்

$
0
0

vedha

ஜெ

இணையத்தில் வேதா நாயக் என்பவர் இலக்கியநூல்களின் தலைப்புக்களை ஒட்டி வரைந்து, புகைப்படக்கலவை செய்து உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். முகநூல் ஒரு வெட்டி அரட்டைக்கூடம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற தீவிரமான முயற்சிகளும் நிகழ்கின்றன. இவை மிகப்பெரிய அளவிலே படைப்புக்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கின்றன. குறிப்பாக இளம் வாசகர்களிடம்

தயா

முகநூல் இணைப்பு

https://www.facebook.com/vedha.nayak.5?hc_ref=SEARCH&fref=nf

பத்மவியூகம்

p

 ரப்பர்

rabbar

நீலம்neelamகொற்றவைkorravaiடார்த்தீனியம்darttheniyamபின்தொடரும் நிழலின் குரல் pinலங்காதகனம்laமேற்குச்சாளரம்mee

அன்புள்ள தயா,

அற்புதமான கற்பனைகள். இலக்கியமறிந்த ஓவியக்கலைதெளிந்த கலைஞன். ஐயமில்லை. இவரை ஏன் பதிப்பாளர்கள் அட்டைப்படம் அமைப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?

பல படங்கள் அந்நூலைப்பற்றிய ஒரு கனவை எழுப்பி பிற்பாடு அந்நூலைப்பற்றி நினைக்கையில் முதலில் எழுந்துவருவனவாக உள்ளன

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16718 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>