Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16960 articles
Browse latest View live

கரு- விமர்சனம்

$
0
0

 

 

கரு [குறுநாவல்]- பகுதி 1

கரு [குறுநாவல்]- பகுதி 2

அன்புள்ள ஜெ,

’கரு’ குறு நாவல் வெளிவந்த அன்றே வாசித்துவிட்டேன். ஆனால் இப்போதுதான் எழுதி அனுப்ப முடிந்தது. வாசிப்பை எழுத ஆரம்பித்தால் அதனுடன் என் பயண அனுபவங்களும் கனவும் சேர்ந்துகொண்டன.

***

ஹிமாசல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் ரிவால்சர் (Rewalsar) என்ற இடத்தில் குரு பத்மசாம்பவர் (திபெத்தில் ரின்போச்சே என்று அழைக்கப்படுகிறார்) இளவரசி மந்தார்வாவுக்கு ரகசியமாக தாந்திரீக ஞானத்தை அளித்ததால் கோபப்பட்ட மன்னன் அவரை உயிருடன் எரிக்க முயன்றதாக தொன்மம்.  புகை விலக தாமரை மீது தியானத்தில் அமர்ந்திருக்கும் பத்ம சாம்பவரை கண்டு மன்னன் மனம் திருந்தி இளவரசி மந்தார்வாவை குருவுக்கு மணம்செய்து வைத்தான். பத்மசாம்பவர் அங்கிருந்து திபெத்துக்கு பெளத்தத்தை எடுத்துச்சென்றார். இது எட்டாம் நூற்றாண்டு ரிவால்சர்.

குரு பத்மசம்பவர்

இன்று ரிவால்சரில் மலைகள்சூழ பத்மசாம்பவருக்கு 123 அடி உயர பிரம்மாண்டமான சிலை உள்ளது. அப்படி ஒரு இருப்பே ஒரு தரிசனம். அந்த ஊரும் குளமும் அவர் காலடியில்தான் இருக்கிறது. ஒரு குருவின் காலடியில் மக்கள் பிறந்து வாழ்ந்து மடியப்போகின்றார்கள்!  மொத்த வாழ்க்கையும் அருகமர்தல்தான். மூடு பனித்திரை விலகி அந்த ஞான குருவின் தரிசனம் எழும்போது அந்த கனவுக்குள் நுழைந்துவிடலாம். அங்கிருந்து திபெத்துக்கும் ஷம்பாலாவுக்கும் ஒரு கனவுப்பாதை இருக்கிறது.

ஹிமாசல பிரதேசத்தில் குல்லு மாவட்டத்தில் நக்கர் (Naggar) என்ற இடத்தில் ரோரிச்சின் நினைவு இல்லம் இன்றும்  நல்ல நிலையில் இருக்கிறது. சில சமயம் பயணங்களில் எந்த மேலதிக தகவலும் இல்லாமல் ஒரிடத்திலோ அல்லது ஒரு மனிதரையோ சென்றடைய நேரிடும். அங்குச் சென்று பார்த்தால் கற்பனை செய்யாத அளவுக்கு அந்த இடமோ அல்லது மனிதரோ வளர்வது ஒரு இனிய பயண அனுபவம்.  ரோரிச் குடும்பம் அப்படி ஒரு அனுபவம். முதல் மாடியில் உள்ள போஸ்டர் குறிப்புகள். ஆர்ட் கேலரியில் உள்ள நிகோலஸ் மற்றும் ஸ்வெஸ்திலாவ் ரோரிச்சின் ஓவியங்கள். புகைப்படங்கள். The Urusvati Himalayan Research Institute  சுவற்றில் வரையப்பட்ட இமயமலை வரைபடங்கள். ஆய்வக உபகரணங்கள். என ஆர்வமூட்டும் இடம்.

ஹெலனா ரோரிச் ’அக்னி யோகா’ என்ற தன் பிரபஞ்ச  தத்துவத்தை முன்வைத்தார். முதன்மையாக அது கிழக்கின் ஞானத்தையும் மேற்கின் அறிவியல் மற்றும் தத்துவத்தையும் இணைக்கும் ஒரு ஹோலிஸ்டிக் தத்துவம்.

நிகோலஸ் ரோரிச்சின் சமாதி. ரோரிச்சின் இரண்டாம் தாய்நாடு இந்தியா.  சமாதி அவரது இல்லத்தை ஒட்டி அமைந்திருக்கிறது. கல்லறை வாசகம் இந்தியில் ‘பாரத் வர்ஷத்தின் மஹான் மித்ர மஹார்ஷி நிகோலஸ் ரோரிக்’ என்று அவரை குறிப்பிடுகிறது.

ரோரிச்சின் இல்லத்திலிருந்து ஷம்பாலாவுக்கு ஒரு கனவுப்பாதை இருக்கிறது.

ரோரிச் நினைவு இல்லம் குல்லு

***

சமீபகாலமாக நூற்றுக்கணக்கான நகரங்கள் வழியே பயணம் செய்துகொண்டிருக்கிறேன். பாலைவன நகரங்கள், ஆற்றங்கரை நகரங்கள், மலை நகரங்கள். சமவெளி நகரங்கள். கோட்டை நகரங்கள் என.  ஒர் இடத்தின் தனித்தன்மை என்ன என்று கற்பனையில் மீட்டிக்கொண்டே இருப்பேன்.  அதற்கு இணையாக மானுடத்தின் கற்பனை நகரங்கள். ஆழி நகரங்கள், வன நகரங்கள், பாலை நகரங்கள் மற்றும் மலையுச்சி நகரங்கள். மனிதன் முற்று அறிய முடியாத ஒரு நிலவிரிவு இருந்தால் அதன் உள்ளே ஒரு கற்பனை நகரம் இருந்தாகவேண்டும்.  அறியமுடியாத வெளி விரிவில் மேலே சொர்க்க நகரங்கள். கீழே நரக நகரங்கள்.

பயணங்களில் மலைபித்து ஒரு தனிவகை. ராஜஸ்தானின் தெற்கு எல்லையில் அதாவது அபு மலையில் இருந்து வரும் ஆரவல்லி மலைத்தொடர்ச்சி ஹரியானாவை அடைய அடைய சிந்திய மணிகள் போல சிதறிக்கிடக்கும். ஹரியானாவின் தெற்கில் தோஷி ஹில் (Doshi hill) எனப்படும் எக்ஸ்டின்க்ட் எரிமலைக் குன்று உள்ளது.  சிறிய ஒற்றை குன்றுதான். ஆனால் கொஞ்சம் செங்குத்தானது. உருகி வழிந்த பெரும் பாறைப் பரப்பை பார்த்து வியந்துகொண்டே மலையேறலாம்.  மேலே ஏறி உச்சியை அடைந்தால் U தான் மலையுச்சி. அதாவது உச்சியில் கிரேடர். மீண்டும் இறங்க வேண்டும்.  கிரேடர் கிண்ணத்தில் சியவன மகரிஷியின் கோயிலும் சிவாலயமும் ஏரியும் இருந்தன. இந்திய மண்ணின் அனைத்து மலையுச்சிகளிலிருந்தும் கிளம்பி இமயமலையில் சென்று முடியும் கற்பனை Zipline ஒன்று உள்ளது. அதேபோல எண்ணற்ற ஜிப்லைன்களில் தொற்றி பூமியின் அனைத்து மலையுச்சிகளிலிருந்தும் சாகசபித்தர்கள் இமயமலையில் கால்பதிக்கிறார்கள்.

நிகோலஸ் ரோரிச் சமாதி

உலகத்தின் கூரை அல்லது உச்சி நிலம் என்பது உண்மையில் ஒரு கனவுதான். மானுட Spirit ன் அல்லது பித்தின் குவிமையம்.   உலகத்தின் கூரையில் ஏறி கூவ வேண்டும் – சாகசபித்து.  உலகத்தின் கூரையை வென்றெடுக்க வேண்டும் – நிலப்பித்து. உலகத்தின் கூரையில் உள்ளவர்களை மதம் மாற்ற வேண்டும் – மதமாற்ற பித்து.

உலகத்தின் கூரையில் ஒன்றை நிறுவிவிட்டால் அனைத்து இடங்களிலும் நிறுவியதற்கு சமானம்தானே! தன் வாழ்க்கையின் calling இந்த விந்தை நிலத்திலிருந்துதான் வரவேண்டும் என்று நினைக்கும் ஆடம் போன்றவர்கள். இந்தியவடிவில் வெட்டப்பட்ட ஒரு பெரும் தாமரை இலையில் நீர்த்துளிகளைப் போல துறவிகள் காலகாலமாக இந்தமண்ணில் இலக்கின்றி வழுக்கி அலைகிறார்கள். முக்தா அதில் ஒருவர். இவர்களுடன் மலைக்கொள்ளையர்கள், மலைமக்கள், ராணுவம் என பலவகையான கதைமாந்தர்கள்.

திபெத் என்ற அமைதியான தவநிலத்தில் மதமாற்றம் என்பது ஒரு அத்துமீறல்தான் என்று தோன்றுகிறது. அந்தப்பனிவெளியில் குழந்தை சார்ல்ஸ் தவறியது போல கிறிஸ்துவத்தின் ஆன்மா எங்கோ தவறிவிடுகிறது. அதன்பின் வெற்று மதப்பரப்பு நடவடிக்கையாக மாறிவிடுகிறது. மதத்தை பரப்ப சென்ற சூசன்னாவுக்கே அந்த நிலத்தில் crisis of faith வருவதுதான் உச்சம். ’ஏசு ஷம்பாலாவில்தான் இருப்பார்’. ‘ நான் ஷம்பாலாவுக்கு செல்லவே விரும்புவேன்’ என்று சொல்லும்போது அவள் நம்பிக்கையே மாறிவிடுகிறது. மேலும் யங் ஹஸ்பெண்ட் படையெடுப்பின் தோட்டா அந்த முதிய பிட்சுவை துளைக்கிறது. கிழக்கின் ஆன்மாவை நோக்கி பாய்ந்த தோட்டாதான் அது என்று நினைப்பதையும் தவிர்க்கமுடியவில்லை.

அன்னையர்களுக்கு வழிகாட்டும் நீலக்கண்களும் சிவப்புதாடியும் கொண்ட இளைஞன் மூலம் குறுநாவல் பிறவிசுழற்சி மறுபிறப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஆடம் நிகழ்வுகளை கோர்த்துக்கொண்ட விதத்தில் நிகழ்வுகளின் அறியமுடியாமை குறித்த வினா எழுகிறது. பிரபஞ்சத்தின் முடிவின்மை முன் அறியமுடியாமை முன் தர்க்கத்தின் பொருள் என்ன? ஒருவேளை ஒவ்வொன்றும் இலக்குடையதாக இருந்தால் மனித எண்ணங்களுக்கு என்னதான் அர்த்தம்? ஆடமுக்கு வழிகாட்டியாக அவன் அப்பா வருகிறார். அப்போது ’பெரிய பாதம்’ கொண்டு வழிகாட்டும் பனிமனிதன் யார்?

போ-சு ஆறு மீண்டும் மீண்டும் வருகிறது. முதிய பிட்சு சூசன்னாவின் மகன் சார்லஸைப் பற்றி ஆன்னியிடம் சொல்கிறார். இதன் வழியே நிகழ்வுகளின் புறவயதர்க்கம் ரத்துசெய்யப்படுகிறது. பனிவெளியின் கடுங்குளிரில் எப்படியோ பாலாடை போல மனதின் தர்க்க ஏடு உறைந்து அறுபடுகிறது. பின் கனவும் உருவெளித்தோற்றங்கள் என  ஆழ் உள்ளம் வெளிப்படுகிறது. இந்த பனிவெளி ஒரு பெரிய ஆடி என்கிறார் பெட்ரூஸ்.  அங்கு நடமாடும் மனிதர்கள் உருவெளித்தோற்றங்கள். அந்த ஆடியை பூமி முழுவதும் விரித்தால் மானுடம் என்பதே ஒர் அலையடிக்கும் பிம்பம்தானா? என்ற விசித்திரமான கற்பனை எழுகிறது.

ஷம்பாலா ஒரு கனவு. கருப்பை. பிறவிசுழற்சியை அறுத்தவர்களின் வெளி.  என ஷம்பாலாவை குறு நாவல் பல விதங்களில் விவரிக்கிறது. புராணங்கள். மதங்கள், மார்க்கங்கள் அனைத்தும் ஷம்பாலாவுக்கு விளக்கம் தருகின்றன. அவதாரங்கள் தோன்றும் கருப்பை அது. ஞானத்தின் தொடக்கமும் அதுவே முடியும் அதுவே. விதை நிலம். உண்மையில் ஷம்பாலா உச்சி நிலத்தில் வைக்கப்பட்ட மானுடத்தின் உச்ச கனவுதான். மனதை பித்துகொள்ளச் செய்யும் கனவு.

***

ஒரு கனவுப்பயணம். கன்யாகுமரியில் இருந்து தொடங்கி இந்திய பெருநிலத்தின் vibrant வாழ்க்கையின் வழியேச் செல்லவேண்டும். நாகரிகத்தின் பிடியில் வாழும் நகர மனிதன் முதல் இயற்கையின் மடியில் வாழும் வனமனிதன் வரை அணுகியறிய வேண்டும்.  குமரி முனை முதல் இமய நுனி வரை ஒரு துளையைப்போட்டு ஒரு பெரும் குச்சியை நுழைத்து இந்தியாவை திருப்பி திருப்பி அதன் வரலாற்றை பார்க்கவேண்டும். கற்பனைகட்டி எழுப்பிய கலைபொக்கிஷங்களை தரிசிக்கவேண்டும். அகல்சுடரில் தெரியும் கருவறை தெய்வத்தின் அருகமர வேண்டும். மசூதியின் அமைதியிலும் சூபி தர்க்காவின் தாளத்திலும் கால இடம் மறக்கவேண்டும். சிலுவையில் பறந்தெழுந்த ஏசுவின் முன் உளம் கனிய வேண்டும். ‘ஓம் கார் சத் நாம்’ எனத் தொடங்கும் சீக்கிய குருகிராந்த சாகிபை வலம்வர வேண்டும். தீர்த்தங்கரரின் விஸ்வரூப சிலையின் முன் நின்று  இருப்பைப் பற்றி வினவவேண்டும்.  பெளத்த தர்மசக்கரத்தை சுழற்றும் ஒரு கையாக இருந்தல் வேண்டும்.

கடல். பாலை. மலை. மடுவு. ஏரி. ஆறு. சமவெளி. மீண்டும் கடல். பாலை. மலை. மடுவு. ஏரி. ஆறு. சமவெளி என ஏறியிறங்கி அலைந்து திரிந்து இமயத்தில் முதலடி வைத்து வெளி இமயமலையின் அழகை நான்கு பருவ நிலைகளில் பார்த்துக்கொண்டேச் செல்லவேண்டும். பசும்மலைகள் சூழ ஒர் உயர்ந்த மலையுச்சியின் மேலே நின்று தூரத்தில் தெரியும் வெண்பனியுச்சியின் பின் அப்பாலுக்கு அப்பால் மறையும் செம்பொட்டு சூரியனின் வண்ணத்திலோ இருமலைகளுக்கு இடையில் மிகக்கீழே அசைவற்று கிடக்கும் ஆற்றின் அமைதியிலோ எங்கோ தன்னுணர்வு இழக்கவேண்டும். பைன் மரத்தின் நிழலிலோ மலையின் ஏற்றத்திலோ தேவதாரின் உயரத்திலோ மலையின் இறக்கத்திலோ குமரி முதல் அறிந்த ஒவ்வொன்றையும் பஞ்சை போல ஊதிப்பறக்கவிடவேண்டும். பின் பத்து திசை பனி வெளியை உடலால் மட்டும் அறிந்து கடக்கவேண்டும். உயர் பனிஏரியின் தூய நீலத்தில் சித்த அலைகள் அடங்கி அந்த வெண்பனிவெளியில் கனவுப்பயணம் எங்கோ கனவைத் தாண்டியிருக்க வேண்டும்.

***

ஹிமாசல பிரதேசத்தின் அந்த மலைக்கிராமத்தில் அந்த ஞானகுருவின் காலடியில் ஒரு கிராமமே பிறந்து வாழ்ந்து மறைகிறது. அதுபோல காலம்காலமாக இமயத்தின் ’அருகருமர்ந்த’ பெரு நிலம்தான் இந்தியா. மனித மனத்தை போல இந்திய மண்ணையும் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம் எனலாம். ஹரித்துவார் என்ற கங்கைகரையோர நகரம் ஹரியின் வாசல். அதுபோல ஷம்பாலா என்பது துரியத்தின் வாசல். இமயமலை என்ற பேரிருப்பாக எழுந்துள்ளது துரியத்தை நோக்கிய  அழைப்புதான்.  உலகத்தின் கூரையில் இருந்து ஒரு மணியோசை போல பத்துதிசைகளிலும் ஒலிக்கும் அழைப்பு அது.

அன்புடன்,

ராஜா

 

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்தக்குரல்கள்

$
0
0

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

சென்ற ஆண்டு என்மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டபோது இணையத்தில் ஒரு பெருங்கும்பல் கொண்டாட்டமிட்டது. கேலி கிண்டல் வசைகள். அப்போது ஒரு நண்பர், கணிப்பொறித்துறையின் மிக உயர் பதவியில் இருப்பவர், அப்படி களியாட்டமிட்டவர்களின் முழுப் பட்டியலை எடுத்து எனக்கு அனுப்பினார்.

அவர்களில் பலர் புனைபெயரில் போலி ஐடிகளில் எழுதியிருந்தனர். எனக்கு அது ஒரு பெரிய கண்திறப்பு. ஒன்று, இந்த போலி ஐடி வைத்துக்கொள்வது எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது என்ற புரிதல். இரண்டு மணிநேரத்தில் போலி ஐடி வைத்திருப்பவரின் ஃபோன் எண், ஆதார் எண் வரை இணைய நிபுணர்களால் எடுத்துவிடமுடியும். குறிப்பாக செல்பேசியில் இருந்து பதிவு போட்டால் அரைமணிநேரம்கூட ஆவதில்லை.

இரண்டு, அவ்வாறு வசைபாடியவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் மாற்றுமதத்தவர். வெறும் மதக்காழ்ப்புதான் அவர்களின் உந்துசக்தி. அவர்கள் திக, திமுக, கம்யூனிஸ்ட் என பல வேடமிட்டிருக்கலாம். அடிப்படையில் கிறித்தவ, இஸ்லாமிய மதத்தவர்.

அவர்களில் பலர் எனக்குத் தெரிந்தவர்கள் என்பதும் என்னிடம் வேறு முகம் காட்டியவர்கள் என்பதும் பெரிய அதிர்ச்சி. பலர்மேல் மிக எளிதாக என்னால் மறுதாக்குதல் தொடுத்திருக்கமுடியும். என் அதிதீவிர வாசகர்கள் தலைமைவகிக்கும் நிறுவனங்களின் எளிய ஊழியர்கள் அவர்களில் பலர். என் நண்பர்களான திரை இயக்குநர்களிடம் உதவியாளர்களாகப் பணியாற்றுபவர்கள் சிலர்

ஒருநாள் முழுக்க யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அனுப்பியவரின் நோக்கம் அந்தத் தாக்குதலில் இருந்த மதவெறியைச் சுட்டிக்காட்டுவது. அவருடைய அரசியல் அது. அதற்கு நான் ஆட்படவேண்டுமா என்று யோசித்தேன். அதைவைத்து இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்தவர் அனைவரையும் மதிப்பிட ஆரம்பித்துவிடுவேனா? கொஞ்சமாவது வஞ்சம் வந்துசேருமா?அது எனக்கு ஒரு வீழ்ச்சியாக ஆகுமா?

ஒரே அழுத்து. மொத்த தகவலையும் அழித்தேன். இப்போதும் அவர்களில் பலருடன் பேசிக்கொண்டேதான் இருக்கிறேன். அவர்களில் ஒருவர்–  புளிச்சமாவு என்று நாளுக்கொரு பதிவு போட்டுக்கொண்டே இருப்பவர்– கூப்பிட்டு என் கதை ஒன்றை நெட்ப்ளிக்ஸுக்காக அளிக்கமுடியுமா [இலவசமாக] என்று கேட்டார். சரி என்றபோது சிரித்துக்கொண்டிருந்தேன்.

இதுதான் என் அரசியல். எழுத்தியக்கம் என்பதில் எங்கோ கொஞ்சம் காழ்ப்பு இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் புலமைக்காய்ச்சல், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கருத்தியல் முரண்பாடுகள். அதோடு இலக்கியம் என்பதே மனப்பதிவுகளின் உலகம். ஒருவர் அவர் எழுத்து செயல்பாடு வழியாக என்னவாக என்க்கு தென்படுகிறார் என்பது என் பார்வை. அதை நான் முன்வைக்கையில் எங்கே தாக்குதலாக ஆகிறது என்று கணிக்கமுடியாது.

ஆகவேதான் எந்நிலையிலும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. எந்நிலையிலும் சொல்வதற்கு கருத்து என ஒன்று இல்லாவிட்டால் மறுப்பும் எழுதுவதில்லை. வசையாளர்களின் பிரச்சினை அவர்களுக்குரியது, அவர்கள்தான் அதை தீர்த்துக்கொள்ளவேண்டும். ஒருவகையில் அவர்கள் என்னுடைய பிரச்சாரகர்கள்.

ஆகவே நண்பர்கள் நான் ‘பொறுமையிழந்து’விட்டதாக எண்ணவேண்டாம். இப்போதும் அதே நிலைபாடுதான். அதே பொறுமைதான். ஆனால் இலக்கியச்சூழலுக்கு வெளியே உள்ள அரசியல்வாதிகள்,சாதிச்சங்க ஆட்கள் இலக்கியவாதிகளை மிரட்டுவதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

$
0
0

முக்தா சொன்னார், “முன்பெல்லாம் பாடபேதங்களைப் பற்றி எனக்கு ஒரு பெரிய பதற்றம் இருந்தது. எந்த மூலநூல் என்றாலும் அதன் மூலபாடம் என்ன, பாடபேதங்கள் என்னென்ன, பாஷ்யங்கள் என்ன, பாஷ்யபேதங்கள் என்னென்ன் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். அது ஒரு மனநோயாகவே ஆகிவிட்டிருந்தது”.

ஏனென்றால் Institute of Parapsychology And Marginal Psychology யில் என்னுடைய வேலையே பழைய நூல்களை பாடபேதம் நோக்கி, பிழைப்பட்டியல் தயாரித்து, சொல்லடைவு பொருளடைவுடன் பிரசுரிப்பதுதான். என் இருபது வயதுமுதல் நான்காண்டுகாலம் அதைத்தான் நான் செய்துகொண்டிருந்தேன். பெரும்பாலானவை பௌத்தநூல்கள், தாந்த்ரீகநூல்கள்.

நூல்களில் மூழ்கிக்கிடப்பது மிக நல்லது. அதிலும் சென்றகால நூல்கள். நான் இப்படிச் சொல்கிறேனே, சமகாலநூல்களை மட்டுமே படிக்கும் ஒருவனைப்போல மடையனையே பார்க்கமுடியாது. அவன் அலைகளை மட்டுமே கண்டு கடலை அறியாதவன். பழையநூல்கள் காலத்தால் வடிகட்டப்பட்டவை, ஆகவே அவை நிலையான சிலவற்றைச் சொல்பவை. நான் புதியநூல்கள் அனைத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பவன்.

ஆனால் நூல்கள் ஒரு தருணத்தில் நம்மை சூழ்ந்துகொள்கின்றன. வெளியேற வழியே இல்லாததுபோல ஆகிவிடுகிறது. நூல்களைச் சொல்லிப் பயனில்லை. அவை நம்மிடம் பேசுகின்றன. நாம் அவற்றிடம் பேசுகிறோம். நம்மிடம் பேசும் எவரிடமும் எதனிடமும் திரும்பப்பேச ஆரம்பிப்பது நமக்குள்ள வழக்கம். ஒருகட்டத்தில் நூல்கள் நம்மிடம் பேசுவதைவிட மேலாக அவற்றுடன் நாம் பேச ஆரம்பித்துவிடுகிறோம்.

நூல்களில் இருந்து பெற்ற சொற்களை நாம் நம் ஆழத்தில் புதைக்கவேண்டும். புதைக்கப்படாத விதை முளைப்பதில்லை. நூலில் இருந்து அமைதியைப் பெற்றுக்கொண்டவனே உண்மையில் அந்நூலைச் சென்றடைந்தவன்.

புத்தகம் அளிக்கும் அத்தனை சொற்களையும் திருப்பி அடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புத்தகத்துடன் பேட்மிண்டன் விளையாடுகிறார்கள். ஆனால் புத்தகம் ஒரு சொல் அடித்தால் இவர்கள் நூறு சொல்லை திருப்பி அடிப்பார்கள். கடைசியில் சொற்களாலேயே ஒரு பெரிய அறையை கட்டிக்கொள்கிறார்கள். அதற்குள் இவர்களின் சொற்களையே இவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அது நம் மூச்சை நாமே விட்டு மூச்சுத்திணறுவது போல. சிலர் அதிலேயே வாழ்ந்து மடிகிறார்கள். புழுக்கள் தங்கள் உணவிலேயே வாழ்ந்து அங்கேயே சாவதுபோல. ஆனால் எல்லாருக்கும் அந்த நிலை சற்றேனும் அனுபவப்பட்டிருக்கும். அதை உணர்ந்த கணமே கிழித்துக்கொண்டு பறந்துவிட்டால் தப்பினோம். நான் ஒருநாள் காலையில் IPMPயின் அறையிலிருந்து தப்பி இமையமலைக்கு போனது அப்படித்தான்”.

ஊட்டியில் குருவின் காலைவகுப்பு முடிந்தபின் உருவாகும் ஓய்வான, அப்படியென்றால் மந்தமான, சூழல். உருக்கி ஊற்றப்பட்டது போன்ற வெயிலில் இலைகள் பளபளத்து அசைந்தன. முந்தையநாள் மழைக்குப்பின் புற்கள் மேலும் செழித்தவை போலத் தோன்றின. காற்று வீசுகையில் காதுமடல்களில் குளிர் சிலிர்த்தது

குருவின் வகுப்பை கேட்டு நினைவிலிருந்து திரும்ப எழுதிக் கொண்டிருந்தனர். ஏழெட்டுபேர் எழுதியதை பின்னர் அமர்ந்து ஒப்பிட்டு பிழைகள் திருத்தினர். ஒவ்வொருவரின் பதிவும் இன்னொருவரின் பதிவிலிருந்து நுட்பமாக மாறுபட்டது. சொற்களில், கருத்துப்பதிவில், வரிகளின் அடுக்கில்.

“ஒருவர் எழுதியது உயர்வு இன்னொருவர் எழுதியது குறைவு என்றிருப்பதைக் கூட புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவரின் எழுத்திலும் ஒவ்வொன்று சிறப்பாக பதிவாகியிருப்பது ஆச்சரியம்தான்” என்றார் ராமகிருஷ்ணன்.

“அது கேட்பவர் எவர் என்று காட்டுகிறது” என்றார் முக்தா.

சட்டென்று வீசிய காற்றில் அத்தனை மரங்களும் மறுபக்கமாக இலைமடிந்து நிறம் மாறி குலுங்கி கொப்பளித்து சட்டென்று அமைதியடைந்தன. சிறிய குருவிக்கூட்டம் ஒன்று அந்தக்காற்றில் ஏறி வந்து இறங்கி முற்றத்தில் தங்கள் சிறு நிழல்களுடன் நடந்து சிற்றடி எடுத்துவைத்து மேயத்தொடங்கியது.

“உலகத்திலுள்ள அனைத்து நூல்களுமே பாடபேதங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றன என்று ஒரு பொன்மொழி உண்டு” என்று முக்தா சொன்னார்.

முக்தா தொடர்ந்தார். “மூலநூல்களை மையமாகக் கொண்ட மதங்களில் பாடபேதமில்லாமல் அந்நூலை உருவாக்கி பேணுவதற்காக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக முயல்கிறார்கள். பேரறிஞர்கள் தலைமுறை தலைமுறைகளாக அதன்பொருட்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். பாடபேதம் உருவாக்குவது மரணதண்டனைக்குரிய குற்றம் சில மதங்களில்.

ஆனால் அத்தனை நூல்களும் பாடபேதங்கள் கொண்டவையே. ஏனென்றால் முதலில் அவை மொழியாக்கம் செய்யப்படவேண்டும். மொழியாக்கமே ஒரு பாடபேதம்தான். ஆகவேதான் அத்தனை மூலநூல்களுக்கும் மேலும் மேலும் ‘சரியான’ மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

மூலவடிவங்களிலேயே வாசிப்புகள் ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், தருணத்திற்கு தருணம் மாறுபடுகின்றன. ஏனென்றால் சொற்களும் சொற்சேர்க்கைகளும் முடிவில்லாமல் அர்த்தங்களை உருவாக்குபவை. அப்படியென்றால் எல்லா வாசிப்புகளும் பாடபேதங்களே.

இந்தியாவில் பாடபேதம் என்பதை ஓர் அறிவுச்செயல்பாடாகவே அங்கீகரித்துவிட்டார்கள். பிரச்சினையை எளிதாகக் கடந்து சென்றுவிட்டார்கள். உரை எழுதுவதென்பது அதிகாரபூர்வமாக பாடபேதங்களை உருவாக்குவது. ஒரேவரியில் இருந்து சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் வேறுவேறு தத்துவங்களையே உண்டு பண்ணிவிட முடிகிறது. துணிந்தால் விவேகசூடாமணிக்கு ஓர் உரையெழுதி ஆதிசங்கரருக்கு வேதாந்தம் என்றால் என்ன என்று நாம் கற்பிக்கமுடியும். ஆனால் இன்னமும்கூட மீமாம்கர்கள் எதுபாடம் எது பேதம் என்பதையே தங்கள் வாழ்நாள் அலைபாய்தலாகக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி கேள்விப்பட்டேன், ஒரு மீமாம்சகர் வேதமோதி அவியிட்டு வேள்வி நிறைவுசெய்தார். யாகஸ்தம்பத்தில் இடிமின்னலுடன் இந்திரன் எழுந்தான். ஆனால் ஏதோ சின்ன வேறுபாடு. இவருக்குச் சந்தேகம். கேட்டபோது இந்திரன் சொன்னான், “நான் நகல் இந்திரன், ஒருசில பிழைகள் இருக்கும். நீ சொன்ன வேதம் பாடபேதம்” என்று.” எழுதிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பி நோக்கிச் சிரித்தார்கள்.

முக்தா தானும் சிரித்து “இன்னொரு கதையும் உண்டு என்றார். ஒரு மீமாம்சகர் பரமபதம் அடைந்தார். அங்கே சென்றபின் அவர் கேட்டார், வேதத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்று. பார்த்தபோது தெரிந்தது, அவர் ஓதியது பாடபேதம். ‘இல்லை, கொள்கைப்படி பாடபேதத்தை என்னால் ஏற்கமுடியாது. என்னை பரமபதத்தில் இருந்து கீழே தள்ளுங்கள். நான் சரியானதை ஓதி திரும்ப வருகிறேன்’ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.”

மீண்டும் சிரிப்பு. உன்னிக்கிருஷ்ணன் “பலவகையான பாடபேதங்கள் உண்டு. வலியதளி வைதிகர்கள் காசியில் வேதம் ஓதியபோது வேறுபாடு தெரிந்தது, கடைசியில் கண்டுபிடித்தனர். வலியதளி கோயில் அருகே கொட்டிக்கொண்டிருந்த ஓர் அருவியில் சத்தமும் அதில் சேர்ந்துவிட்டிருக்கிறது” என்றார்.

”ஆமாம், பற்பல தலைமுறைகளின் பல்லாயிரம் ஏப்பங்களின் பெருந்தொகுப்பு வேதங்களில் உள்ளது என்பார்கள்” என்று முக்தா சொன்னார். “ஆனால் நான் பாடபேதமே உருவாக்க முடியாத நூல் ஒன்றை ஒருமுறை பார்த்தேன்.”

முக்தா சொன்னார். நான் 1950-ல் திபெத்திற்குள் நுழைந்தேன். அப்போது அது சீனாவின் பகுதியாக ஆகவில்லை. ஆனால் அதைப்பற்றிய பதற்றங்கள் இருந்துகொண்டிருந்தன.

திபெத்தின்மேல் என்றுமே பேரரசுகளின் கண் இருந்து கொண்டிருந்தது. எண்ணூறுகளில் அதை கைப்பற்ற பிரிட்டிஷ் பேரரசு திட்டமிட்டது. இல்லையேல் அதை ரஷ்யப்பேரரசு கைப்பற்றிவிடும் என அது அஞ்சியது. இரு பேரரசுகளின் உளவாளிகளும் திபெத்திற்குள் அலைந்து கொண்டிருந்தனர். மதப்பரப்புநர்களாக, மலைப்பயணிகளாக, பௌத்த அறிஞர்களாக.

நான் ஒவ்வொருவரையும் அவ்வாறு சந்தேகப்பட்டேன். என்னை ஒவ்வொருவரும் அவ்வாறாக சந்தேகப்பட்டார்கள். அதைமீறி நம் தனிப்பட்ட திறனாலும் நம்முடைய நல்லூழாலும் சில தொடர்புகள் ஏற்பட்டன. ஆனால் நான் திபெத்தில் அலைந்த காலகட்டத்தில் எந்த நாளிலும் சாக வாய்ப்பிருந்தது.

திபெத்திய நிர்வாகம் அன்று தலாய்லாமாவின் கையில் இருந்தது. அவர்கள் எவரைச் சிறையிட்டாலும் நாடுகடத்த மட்டுமே செய்தனர், கொலை செய்யவில்லை. அதுதான் அவர்களின் பண்பாடு, ஆனால் அது பெரிய தவறாக ஆகியது. அவர்கள் பலநூறு ஒற்றர்களை திருப்பி அனுப்பிவிட்டனர், அவர்கள் சேகரித்த தகவல்களுடன்.

அந்த ஒற்றர்களின் செய்திகளினூடாக, அவர்களை உடனழைத்துக் கொண்டுதான் கர்னல் யங்ஹஸ்பெண்ட் 1903-ல் திபெத்தின் மேல் படையெடுத்து வந்து லாசாவை கைப்பற்றினார். மடாலயங்களைச் சூறையாடினார். திபெத் என்னும் மறைஞானக் கட்டமைப்பின் சரிவு அங்கே தொடங்கியது.

திபெத் மலையுச்சி சமவெளியில் அலைந்து கொண்டிருந்த ஒற்றர்களுக்கு இன்னொரு ஒற்றரால்தான் ஆபத்து இருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றனர், சிறிய சந்தேகம் வந்தாலும் போதும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.

கொல்வதோ மிக எளிது. ஏனென்றால் பெரும்பாலான நிலம் பனிப்பரப்பு. சாட்சிகளே இல்லாத வெளி. கொல்லப்பட்டவர் கண்டெடுக்கப்படவே நெடுநாட்களாகும். ஒருவேளை கண்டெடுக்கப்படாமலேயே போகவும்கூடும்.

நான் அப்படி ஓர் ஒற்றனைச் சந்தித்தேன். அவன் மங்கோலியன். மங்கோலியர்களை நம்மால் திபெத்தியர்களிடமிருந்து பிரித்தறிய முடியாது. நான் அவரை திபெத்தின் மடாலயம் ஒன்றில் பிக்ஷுவாக சந்தித்தேன். அவன் அங்கே எட்டு ஆண்டுகளாக பிக்ஷுவாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

நான் லாஸாவிலிருந்து பதினாறு கிலோமீட்டர் அப்பாலிருந்த ட்ரா யேர்பா [Dra Yerpa] என்ற மடாலயத்தில் பதினெட்டு மாதம் தங்கியிருந்தேன். ட்ரா யேர்பா விந்தையான ஒரு மடாலயம். அதை மடாலயம் என்பதைவிட மென்பாறையில் அமைந்த குகைகளின் தொகுதி என்று சொல்லலாம். பலகுகைகள் இயற்கையானவை. பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து கொண்டிருப்பவை. போன் மதத்தின் தெய்வங்களுக்குப் பலிகொடுக்க பயன்படுத்தப்பட்டவை. பின்னாளில் பௌத்த மதத்திற்குள் வந்தவை. சில குகைகள் விரிவாக்கப்பட்டவை, புதிதாகச் செதுக்கப்பட்டவை.

சுண்ணப்பாறைகளாலான செங்குத்தான மலைமுடிகள் சூழ்ந்திருக்க ஒரு மலைச்சரிவில் அமைந்திருக்கிறது இந்த மடாலயம். இதன் அனைத்துச் சாளரங்கள் வழியாகவும் நேர் எதிரில் இருக்கும் இன்னொரு மலைச்சிகரத்தைப் பார்க்கலாம். அதன்மேல் தொன்மையான தியாகமயானங்கள் உள்ளன. அப்படித்தான் சொல்கிறார்கள். சடலங்கள் அங்கே கொண்டு சென்று வைக்கப்படும். மலைக்கழுகுகள் அவற்றை கொத்தி உண்ணும். நான் அங்கே சென்றபோதுகூட அவ்வழக்கம் பௌத்தர்களிடையே இருந்தது.

அங்கிருந்த குகைகள் சிறு ஆலயங்களாக மாறி வழிபடப்பட்டன. பொதுயுகம் 604-ல் யார்லங் வம்சத்தின் 33 ஆவது அரசரான சோங்ஸ்டன் காம்போ அங்கே இன்றிருக்கும் பெரிய மடாலயத்தை கட்டினார். இங்கிருக்கும் யேஷே என்ற வஜ்ரயோகினியின் கோயில் முக்கியமான ஓரு தாந்த்ரீக மையம். இங்கு புத்தர் வஜ்ரயோகினியுடன் புணர்ச்சிநிலையில் அமர்ந்திருக்கிறார். எல்லையற்ற ஆற்றலும் எல்லையற்ற ஞானமும் ஒன்றாக ஆகும் ஒரு கணத்தின் சிற்பவெளிப்பாடு அது. வஜ்ராயன பௌத்தம் உருவாக்கிய படிமங்களில் தலையாயது.

அந்தக் குகைகளில் பெரும்புகழ்பெற்ற பல லாமாக்கள் தங்கள் இறுதித் தியானத்தைச் செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நான் அங்கிருக்கையில்கூட பல சிறுகுகைகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பிற மானுடரையே பார்க்காமல் தவம்செய்யும் லாமாக்கள் இருந்தனர். சிலரை நான் நிழலசைவாக பார்த்திருக்கிறேன். சிலரை அவர்கள் அங்கிருக்கிறார்கள் என்ற உள்ளுணர்வாலேயே அறிந்திருக்கிறேன். அங்கிருந்தபோது நான் அடைந்த சில அனுபவங்கள் உள்ளன, அவற்றை பின்னர் சொல்கிறேன்.

அங்கே நான் தங்கியிருந்த அனுபவம் விந்தையானது. அங்கே எவரையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக்கொண்ட பின்னர் சமையல் வேலையும் தூய்மை வேலையும்தான் அளிக்கப்படும். அவை அந்தக் கடும்குளிரில் முதுகை உடைக்கும் வேலைகள். எந்த மறுநினைவும் இல்லாமல் முழுமூச்சாக பகலெல்லாம் வேலை செய்து இரவில் தள்ளாடி நடந்து மென்மயிர்ப் போர்வைக்குள் சுருண்டு தூங்கி காலையில் அப்படியே எழுந்து மீண்டும் வேலை.

ஒருவகை தியானம்தான் அது. நினைத்துப் பார்த்தால் நான் மனமே இல்லாமல் எண்ணங்களே இல்லாமல் இருந்த நாட்கள் அதைப்போல பிறகு எப்போதும் அமையவில்லை என்றுகூட தோன்றுகிறது. வேலை என்னை பித்துப்பிடிக்க வைத்தது. என்னிடமிருந்த எல்லா ஞானமும் பறந்து போயிற்று. என் கடந்தகாலமே உதிர்ந்து எங்கோ மறைந்தது.

ஒரு திபெத்திய மடாலயத்தை தூய்மை செய்யவேண்டிய தேவையே இல்லை. அங்கே அன்றெல்லாம் எவருமே வருவதில்லை. எவரும் நடமாடுவதுமில்லை. தூசி இல்லை. பனி இருப்பதனால் பாசிப்படர்வும் இல்லை. ஆனால் தூய்மை செய்யும்படி ஆணையிட்டுக் கொண்டே இருப்பார் அதற்குப் பொறுப்பான லாமா. ஏன் என்று எண்ணவும் நமக்கு நேரமிருக்காது

அப்படி ஒன்பது மாதங்கள். நான் ஒருநாள் விடியற்காலையில் விழித்துக்கொண்டபோது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற வியப்பை அடைந்தேன். கிளம்பிச் சென்றுவிடவேண்டும். இங்கே இருந்தால் என்னை ஓர் எறும்பாக ஆக்கிவிடுவார்கள். இந்த மடாலாயம் ஓர் எறும்புப் புற்று. எங்கோ ராணி இருக்கிறது. எஞ்சிய ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான வேலை வகுத்து தரப்பட்டிருக்கிறது. அதை செய்து செய்து அதிலேயே சாகவேண்டியதுதான்.

அன்று நான் வேலை செய்யப்போவதில்லை என்று தீர்மானித்தேன். லாமாவிடம் சொல்லிவிட வேண்டியதுதான், நான் அதற்காக வரவில்லை, கிளம்பிவிடுகிறேன் என்று. அதற்கான சொற்களை நான் உருவாக்கிக்கொண்டேன். கைகளையும் முகத்தையும் நீராவியால் தூய்மை செய்தேன். அங்கே பனியாடைகளை உலர்ந்த வெப்பக்காற்றால் தூய்மைசெய்ய ஓர் அமைப்பு இருந்தது. அதில் அவற்றை வாட்டிக்கொண்டேன்.

அப்போது இளைய துறவி ஒருவர் என்னை அழைத்து லாமா டென்ஸின் க்யாட்ஸோ என்னை அழைப்பதாகச் சொன்னார். அவர் பெயருக்கு ஞானக்கடல் என்று பொருள். அவரை நான் ஒரே ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன். அதுவும் மிகத்தொலைவில் இருந்து. அவர் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.

அவர் என்னை அழைக்கவில்லை, தவறு ஏதோ நடந்துவிட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆகவே தயக்கத்துடன்தான் சென்றேன். என்னை வஜ்ரயோகினியின் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

அது ஓர் அறை எனத் தோன்றும், ஆனால் அது இயற்கையான குகை. ஆழ்ந்த சிவப்புநிறம் பூசப்பட்ட மரத்தாலான முகப்பு கொண்டது. குருதிச்சிவப்பும் நீலமும் கலந்து வரையப்பட்ட ஓவியம் பரவியிருக்கும் பெரிய வாசல்கதவில் பித்தளைக் குமிழ்களும் தாழும். அதை திறந்து உள்ளே செல்லச் சொன்னார் என்னை அழைத்துச்சென்ற பிக்ஷு. உள்ளே நுழைந்தபிறகுதான் அது குகை என அறிந்தேன்.

தரையில் அடர்சிவப்பான மென்மயிர்க் கம்பளம். மரப்பட்டையாலான உட்சுவர்களில் பல்லாயிரம் சிறிய அறைகளில் பொன்பூசப்பட்ட மரத்தாலான புத்தர்சிலைகள் ஊழ்கத்தில் நிலம் தொட்டபடியும், அறிவுறுத்தியபடியும், ஆணையிட்டபடியும், ஆழிசுழற்றியபடியும் அமர்ந்திருந்தன.

நேர் எதிரில் வஜ்ரயோகினியின் சிலை. ஆயிரமிதழ்கொண்ட பொற்றாமமரை மேல் அமர்ந்திருக்கும் கோலம். தலைமயிர் பெரிய கொண்டை வளையங்களாக கட்டப்பட்டு தோளில் அமைந்திருந்தது. இரு கைகளிலும் வஜ்ராயுதங்கள். செக்கச்சிவந்த ஆடையின் பொன்வேலைப்பாடுகள் செறிந்திருந்தன. வெண்ணிற மேலாடை முகில்கீற்றுபோல வளைந்து நெளிந்து உடலை மூடியிருந்தது.

சிலைக்கு முன்னால் இரண்டு வரிசையாக மென்மையிர் போர்த்த மெத்தையாலான பீடங்கள். ஒவ்வொன்றின் முன்னும் சிறிய மேஜைகளில் விரிக்கப்பட்ட நூல்கள். அன்று அங்கே காகிதநூல் வழக்கத்திற்கு வரவில்லை. வெண்மையான ஃபிர்ச் மரப்பட்டைகளாலும் ஆட்டுத்தோலாலும் பட்டுத்துணியாலும் ஆனவை அந்நூல்கள். பிரார்த்தனைக்குரிய மணிக்கலங்களும் சுழலும் உடுக்கைகளும் குழல்களும் கொம்புகளும் வைக்கப்பட்டிருந்தன.

இருக்கைகளின் முகப்பில் மெத்தைமேல் லாமா டென்ஸின் க்யாட்ஸோ அமர்ந்திருந்தார். மிக முதியவர். அவர் விழிகள் மேலும் சிறிதாகி முகச்சுருக்கத்தின் ஆழமான மடிப்புகளுக்கு நடுவே இரண்டு காராமணிகளை செருகி வைத்திருப்பதுபோல தோன்றின. ஆழ்சிவப்புக் கம்பிளியாடை. கையில் பொன்னாலான ஒரு கங்கணம். ஒருகையில் படிக மணிமாலை சுழன்று கொண்டே இருந்தது. அவர்விரல்கள் அவற்றை உருட்டி நகர்த்திக் கொண்டே இருந்தன.

நான் சென்று அவர் முன் விழுந்து முறைப்படி வணங்கினேன். அமர்ந்து கொள்ளும்படி கைகாட்டினார். நான் அமர்ந்ததும் புன்னகைத்து “தென்னகத்தில் இப்போது நல்ல மழை” என்றார்.

அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தலைவணங்கினேன்.

“தெற்கே, பரசுராமக்ஷேத்திரத்தில், நீ பிறந்த மண்ணில்” என்று சொல்லி புன்னகை செய்தார்.

நான் அதையும் புரிந்து கொள்ளாமல் தலைவணங்கினேன்.

“நீ கடுமையாக உழைப்பதாக நீ எண்ணுகிறாய்” என்று அவர் சொன்னார். புன்னகைத்து “உன் உடல் ஓய்வுகொள்ளலாம்…”

நான் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தேன். அவர் என்னிடம் பேசும்போதுகூட கையில் அந்த மணிகள் ஓடிக்கொண்டிருந்தன. அது அவருடைய இன்னொரு மனம். அல்லது அதுதான் அவருடைய மனம், இந்த உரையாடல் மேலே எழும் அலை.

“நாளைமுதல் நீ இங்கே ஒரு குகையில் தனித்திருக்கலாம். உனக்கான உணவு அங்கே அளிக்கப்படும்” என்று லாமா டென்ஸின் க்யாட்ஸோ சொன்னார்.

நான் முகம் மலர்ந்து மீண்டும் வணங்கினேன்.

“அங்கே வெறுமே இருந்தால் போதும். ஆனால் வெறுமே இருக்கவேண்டும். நூல் எதையும் வாசிக்கக்கூடாது. எதையும் வரையக்கூடாது, செதுக்கக்கூடாது. கைத்தொழில் எதையும் செய்யக்கூடாது. எவரிடமும் பேசக்கூடாது, உனக்கு நீயேகூட ஓசையிட்டு உரையாடிக் கொள்ளக் கூடாது”

“செய்கிறேன்” என்றேன்.

“நல்லது, நன்றே நிகழ்க!” என்று லாமா டென்ஸின் க்யாட்ஸோ வாழ்த்தினார்.

நான் திரும்பும்போது உற்சாகம் கொண்டிருந்தேன். இதோ என்னை ஞானத்தேடல் கொண்டவன், யோகம் செய்ய தகுதியானவன் என்று குரு அங்கீகரித்திருக்கிறார். முதல்படியை தாண்டிவிட்டேன். இனி நான் செல்லக்கூடிய பாதை மிக நீண்டது, அதன் தொடக்கப்புள்ளி இது. நான் அத்தனை தொலைவு கடந்து திபெத்துக்கு வந்ததே இதற்காகத்தான்.

என் அறையிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கான புதிய ஆடையையும் போர்வையையும் காலணிகளையும் கையுறைகளையும் பிக்ஷுக்கள் அளித்தார்கள். அவை அனைத்துமே கன்னங்கரியவை. உணவு உண்பதற்கான கலம் ஒரு கரிய கொப்பரை- நம்மூர் சாமியார்களின் திருவோடேதான்.

ஆடைகளை நான் அணிந்து கொண்டேன். இருட்டுக்குள் என் உடல் மூழ்கிவிட்டதுபோல பிரமை எழுந்தது. என் மூக்கும் கண்களும் வாயும் மட்டுமே வெளியே தெரிந்தன. காலணிகளின் அடிப்பகுதியில் மரக்கட்டைக்கு அடியில் மரநார் வைத்து தைக்கப்பட்டிருந்தது. நான் நடந்தபோது சேற்றில் மிதித்துச் செல்வதுபோல தோன்றியது. தயங்கி தயங்கி காலடி வைத்தேன். அதன்பின் நின்றுவிட்டேன்.

பின்னர் என் அகம் ஏன் தத்தளிக்கிறது என்று எனக்கு புரிந்தது. நடந்தபோது முற்றிலும் காலடியோசை இல்லை. நம் காலடியோசைகள் நாம் நடக்கும்போது நம்முடன் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் கேட்டுக்கேட்டு பழகிவிட்டோம். ஓசையின்றி காலடி விழுமென்றால் நாம் நடப்பதை நம் அகம் நம்புவதில்லை. ஆகவே அது பதறுகிறது.

அந்த குகையறைக்குள் சென்றபின் கண்டுகொண்டேன், நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஓசை தேவைப்படுகிறது. தொலைபேசியை இயக்கும்போது அந்த ஓசை வரும்படி ஏன் அமைக்கப்பட்டிருக்கிறது? ஓசையின்றி ஒரு செயல் நிகழுமென்றால் கூடவே நம் அகமும் அமைதியாகி காலத்தை உணர்ந்து பதற்றம் கொள்வது ஏன்? எண்ணை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு ஊற்றப்படும்போது அதை கவனிக்காமலிருக்க முடியவில்லை. நெடுநேரம் எண்ணை ஊற்றப்பட்டால் நம் நரம்புகள் வெடித்துவிடும்போல் ஆகிவிடுகின்றன. நாம் செய்வது நமக்கே தெரியவேண்டும். நம்மை நம் காது கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். நம் மனம் நம்மை அப்படித்தான் அறிகிறது.

இல்லாவிட்டால் நம்மை நாம் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஓசை தேவையில்லை. அல்லது நாம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். அனைத்துக்கும் மேலாக நம்மை எவரேனும் பார்க்கவேண்டும். அவ்விழிகளை நாம் சந்திக்கவேண்டும்.

ஆனால் அந்தக் குகையறைக்குள் எதற்குமே வழியில்லை. அதன் சுவர்களும் மென்மயிர்ப் பரப்பால் ஆனவை. அதன் தரையும் அவ்வாறே. நான் அணிந்திருக்கும் ஆடைகள் காலணிகள் கையுறைகள் அனைத்துமே மென்மயிராலானவை. அங்கே ஓசையெழுப்பும் பொருளே இல்லை. ஆடியில்லை. நான் பேசவும்கூடாது. அதாவது நான் இருக்கிறேன் என்பதற்கு என் மனம் உணரும் தன்னுணர்வு அன்றி சான்றே இல்லை.

முதலில் உள்ளே சென்றதுமே ஒரு புதைவுணர்வு ஏற்பட்டது. மூச்சுத்திணறலாக அதை உணர்ந்தேன். அங்கே காற்றே இல்லாததுபோல. தலைக்குமேல் மலை இருப்பதைப்போல. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது. மெல்லமெல்ல அந்த பதற்றம் குறைய ஏழெட்டு நாள் ஆகியது.

உணவையும் நீரையும் வெளியே கொண்டுவந்து வைத்துச் செல்வார்கள். அவர்களை நாம் பார்க்கமுடியாது. பின்னிரவில் மணியடிக்கையில் எழுந்து காலைக் கடன்களுக்குச் செல்லலாம். சிறுநீர் கலத்தையும் கொண்டு சென்று தூய்மை செய்து வரலாம். ஒவ்வொரு குகைக்கும் ஒரு வகை மணியோசை. ஆகவே ஒருவர் இன்னொருவரை பார்க்கவே முடியாது.

அங்கே நான் அடங்கிக் கொண்டே இருந்தேன். அதன் ஒவ்வொரு படியாக பின்னர் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். முதலில் அந்த இடத்தை என் வயப்படுத்திக் கொள்ள முயன்றேன். அங்கே நான் வசதியாக சொகுசாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டேன். அச்சுவர்களை தொட்டுப்பார்த்தேன். அந்த அறைக்குள் நடந்தேன். வெவ்வேறு வகையாக அங்கே படுத்தும் அமர்ந்தும் அதை என் உடலுக்கு பழக்கப்படுத்தினேன். இருக்கையையும் படுக்கையையும் இரண்டுமுறை இடம் மாற்றிக்கொண்டேன்.

மெல்ல மெல்ல அந்த அறை என் உடலாயிற்று. உடல் போலவே என் பிரக்ஞையால் மட்டுமே அறியக்கூடுவதாயிற்று. அதாவது நான் அதை மறந்தேன், ஆனால் நான் என என்னை எண்ணுகையில் அந்த அறையுடன் சேர்த்தே எண்ணலானேன். அதன்பின் என் அகம் பிரிந்து செயல்படத் தொடங்கியது.

என் அகம் முதலில் கட்டற்ற ஓலமாக இருந்தது. நினைவுகள், எண்ணங்கள், அகச்செயல்கள். அவை புதுவெள்ளம் பெருக்கெடுக்கும் ஆறுபோல கொப்பளித்துச் சுழித்துச் சென்று கொண்டிருந்தன. முதலில் காமம். பலபெண்களுடன், முதன்மை ஆண்குரங்குபோல.

பின்னர் ஆணவம், என்னை எவரென அனைத்து இடங்களிலும் நிலைநாட்டுவது. உலகையே வென்று என் காலடியில் விழச்செய்வது. சக்கரவர்த்தி என ஆவதுதான் அது. சக்கரவர்த்தி என்பது மனிதனின் பகற்கனவிலிருந்து உருவாகிவந்த ஒரு பதவி. ஒரு சக்கரவர்த்தி குடிகொள்ளாத மானுட அகமே இல்லை.

ஆனால் அவை எழுச்சிகள். அவை மீண்டும் நிகழவேண்டுமென்றால் வீழ்ச்சி தேவை. அதன்பொருட்டு கழிவிரக்கம். நான் தனியன், கைவிடப்பட்டவன், புரிந்துகொள்ளப்படாதவன், வெறுக்கப்படுபவன். அந்த ஏக்கத்தின் உச்சியில் விழிநீர் கசியும் சிறுமையிலிருந்து மீண்டும் ஓங்கி எழுதல்.

ஆனால் மிகவிரைவிலேயே அகநாடகங்கள் சலித்துவிட்டன. கதைசொல்லிகளுக்கு மட்டுமே அகநாடகங்களில் வாழ்நாள் முழுக்க திளைக்கமுடியும். மற்றவர்களுக்கு கதைகள் தீர்ந்துவிடுகின்றன. வெளியே இருந்து கதைகள் வரவில்லை என்றால் தேய்ந்த தடத்திலேயே ஓடிச் சலித்துவிடுகின்றன. தேய்ந்த ஆணியில் சுழலும் சக்கரம்போல அது ஓடுவதே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும். அது இருப்பதும் இல்லாததும் ஒன்றே என்று ஆகும்.

அதன்பின் அகம்நிகழா அசைவின்மை. உள்ளம் கொப்பளித்தபோது ஒருநாள் என்பது பற்பல மடங்கு நீளம். உள்ளம் அமைந்தபின் நாட்களே தெரியவில்லை. அந்த அறைக்குள் இரவுபகல் இல்லை. ஒரு மணியோசையால் நாட்கள் துண்டுபடுத்தப்படுகின்றன.

அந்த வெறுமையை அகம் தாங்கிக் கொள்வதில்லை. அது அந்த கரும்பாறைமேல் அறைந்து அறைந்து விரிசலிட செய்கிறது. உள்ளே வேர் எழுந்து முளைக்கச் செய்கிறது. கனவுகள் வரலாயின. துளித்துளி நிகழ்வுகளாக அல்ல, தொடராக, பெருக்காக. ஒரு மாற்றுலகாக.

நான் நல்ல காய்ச்சலின் போதுதான் அத்தகைய கனவுகளை கண்டிருக்கிறேன். எந்த முயற்சியும் இல்லாமல் அவை என்மேல் ஓரு நீரோடை போல சென்றுகொண்டே இருக்கும். விழித்தாலும் துயின்றாலும் அவை மாறுபடுவதில்லை. எழுந்து அமர்ந்தாலும் நடந்தாலும்கூட அவை கலைவதில்லை.

அவற்றுக்கு எந்த ஒழுங்கும் இல்லை. இடமோ காலமோ கூட அவற்றை வகுக்கவில்லை. எங்கும் நிகழ்ந்தன. கேரளத்தில் என் வீட்டில். என் தந்தையும் தாயும் உடன்பிறந்தாரும் இருந்தனர். எங்கள் நாயும் பசுவும் இருந்தன. அண்டைவீட்டார் ஊரார் இருந்தனர். ஊடே எங்கள் கோயிலின் வேட்டைக்கொருமகன் தெய்வம். சாஸ்தாக்கள், பகவதிகள், குளிகன்கள், மறுதாக்கள், கடுத்தாக்கள், மாதிகள், நீலிகள், யட்சிகள்.

என் அலைச்சல்களின் நகரங்கள். இருண்ட பாலத்தடியில் அழுக்குக் குவியல்களுக்குள் தூங்கும் தொழுநோயாளிகள். காசநோய்ச் சளி துப்பப்பட்டிருக்கும் கடைத்திண்ணைகள். பட்டினியால் செத்த சடலங்கள் விழுந்து கிடக்கும் பிகாரின் தெருக்கள். பிச்சைக்காரர்கள் மண்டிய ரயில்நிலையங்கள். வெறிமின்னும் கண்கள் கொண்ட சாமியார்கள் நிறைந்த காசி. பனிபடிந்த இமையமுடிகள் அப்பால் தெரியும் கேதார்நாத்.

நான் படித்தறிந்த நூல்களின் சொற்கள் ஊடே புகுந்தன. மேடம் பிளவாட்ஸ்கி, ஷெர்பாட்ஸ்கி, மோனியர் விலியம்ஸ், மாக்ஸ்முல்லர், தாஸ்குப்தா, சர்.ஜான் வுட்ரோஃப், அரவிந்தர். திபெத்தைப் பற்றி எழுதிய சரத் சந்திர தாஸ், நிகோலஸ் ரோரிச், ஹெலெனா ரோரிச். அச்சொற்களில் இருந்து எழுந்த மனிதர்கள். நிலவெளிகள். மின்னும் பனிபடிந்த மலைப்பாதைகள்.

கனவுகளை அஞ்சத்தொடங்கினேன். எப்போதாவது நினைவு மீளும்போது அக்கனவுகளை நினைவுகூர்ந்து அவற்றின் அராஜகப்பெருக்கை கண்டு பிரமித்தேன். என் சித்தம் பிறழ்ந்துவிட்டிருக்கிறதா? அல்லது சித்தப்பிரமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேனா? வெளியேறிவிடவேண்டும். இந்தச் சிறுகுகை என்னை அழித்துவிடும்.

ஆனால் ஆயிரம் அன்புக்கைகளால் கனவுகள் என்னை அள்ளி எடுத்துக்கொள்ளும். அன்னைப் பசுவின் நாக்குபோல நக்கி ஈரமாக்கும். சிறகுகளால் வெதுவெதுப்பாக மூடிக்கொள்ளும். இப்படியே சாவேன் என்றால் நன்றல்லவா? ஒருவன் அடையும் சிறந்த சாவு என்பது தன் கனவில் தானே மூழ்கி மறைவது அல்லவா? தேனீ தேனில் மூழ்கிச் சாவதுபோல!

ஒருநாள் விழிப்பு கொண்டபோது நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் நான் என்று என் அகம் கூவிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். மறுகணம் அச்சம் நெஞ்சை அடைக்க, நெஞ்சில் உதைவாங்கியவன் போல அப்படியே பின்னால் விழுந்துவிட்டேன். நான் எவரென்றே எனக்கு தெரியவில்லை

நான் யார்? என் பெயர் என்ன? எங்கிருக்கிறேன்? எப்படி இங்கே வந்தேன்? ஒன்றும் நினைவில்லை. நான் யார்? என் பெயர் என்ன? அதையே அரற்றிக்கொண்டிருந்தேன். எட்டு பதினாறு முப்பத்திரண்டு அறுபத்துநான்கு அறுபத்து நான்காயிரம் கைகளால் வெளியை துழாவித் துடித்தேன். என் பெயர் மட்டும் போதும், அதை மட்டும் கண்டடைந்தால் போதும், எஞ்சிய அனைத்தையும் மீட்டுக்கொள்வேன். அதற்கு முன் என் முகத்தை நான் பார்க்கவேண்டும். என் முகம் எப்படி இருக்கும்? அதை என்னால் நினைவுகூரவே முடியவில்லை

அந்த அச்சத்தை என்னால் எத்தனை விளக்கினாலும் உனக்கு பகிர்ந்துவிட முடியாது. என்னுடையது என நான் எண்ணிய எதுவுமே என் நினைவில் இல்லை. என் பெயர், சொந்த முகம், உறவினர், சொந்த நிலம், கடந்தகால நினைவுகள் எதுவும். ஆனால் நான் என்னும் தன்னுணர்வு இருந்தது. அது அஞ்சி, பதைத்து, கூவி, அலறிப் பரிதவித்தது.

நான் குகைவாசலை திறந்து தலையில் கைகளால் அறைந்தபடி ஓடினேன். செல்லும் வழியிலேயே கால்தவறி முகம் அறைந்து விழுந்தேன். மீண்டும் எழுந்து ஓடியபோது என் மூக்கிலிருந்தும் கிழிந்த உதடுகளிலிருந்தும் ரத்தம் வழிந்தது. விலங்குபோல ஓலமிட்டுக் கொண்டிருந்தேன்.

இடைவழியிலேயே மயங்கி விழுந்த என்னை தூக்கிக் கொண்டு சென்று படுக்கச் செய்தார்கள். நான் கண்விழித்தபோது என் பழைய அறையில் இருந்தேன். என் பெயர், என் முகம், என் நினைவுகள் அனைத்தும் ஒரே கணத்தில் மீண்டுவந்தன. “ஆ!”என்று கூச்சலிட்டபடி எழுந்து சென்று அங்கிருந்த சிறிய ஆடியில் என் முகத்தை பார்த்தேன். நானேதான்.

நான் பழைய ஆழ்சிவப்பு ஆடை அணிந்திருந்தேன். தலை மழிக்கப்பட்டிருந்தது. கண்கள் களைத்திருந்தன. உதடுகள் வீங்கியிருந்தன. ஆடியை வைத்துவிட்டு அந்த மஞ்சத்திலேயே அமர்ந்திருந்தேன். “ஆம்! ஆம்! ஆம்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். எவருக்கோ அறிக்கையிடுவதுபோல. எதையோ ஆமோதிப்பதுபோல.

பின்னர் எழுந்து சென்று சிறிய கண்ணாடிச் சன்னல் வழியாக வெளியே தெரிந்த மலைச்சரிவையும் அப்பால் அடுக்கடுக்காக கண்கூசும் ஒளியுடன் எழுந்த மலைமுடிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றின் உச்சியில் வெண்பனித் தீற்றல்கள் தூய நீலவானில் சிதறிக் கிடந்த கீற்றுமுகில்களுடன் கலந்திருந்தன. அமைதியில் உறைந்திருந்தன. காலத்தை அறியாதவையாக இருந்தன. அன்றுதோன்றி மறுநாளே மறையும் நாய்க்குடைகள்போல மிகமிக மென்மையான வெண்ணிறம் கொண்டிருந்தன.

நான் அழத்தொடங்கினேன். என் விசும்பலோசை எனக்கே கேட்க மேலும் மேலும் விசைகொண்டு அழுதேன். அழுந்தோறும் கரைந்து கரைந்து எடையில்லாதவனாக ஆனேன். சன்னலிலேயே தலைவைத்து சற்று தூங்கினேன்

அத்தனை இனிய துயிலை நான் அடைந்ததே இல்லை. மிகமிக இனிமையான ஒரு மயக்கவெளி அது. என் அகமும் உடலும் தித்திப்பதுபோல. அத்தனை ஓய்வாக உணர்ந்தேன். நூறுகிலோ எடையை நாலைந்துநாள் தூக்கி சுமந்துவிட்டு அமர்வதுபோல என்று நினை. அல்லது பத்துநாள் விழித்துவிட்டு தூங்குவதுபோல என்று எண்ணிக்கொள்.

அதில் நான் ஒரு கனவுகண்டேன். ஒரு புத்தகத்தை நான் படித்துக்கொண்டிருந்தேன். அது செந்நிறமான தோலேட்டில் பொன்னிற எழுத்துக்களால் எழுதப்பட்டது. அதன் ஒவ்வொரு சொல்லும் என்னை கொந்தளிக்கவும் பரவசம் கொள்ளவும் செய்தன. அதை வாசித்துக்கொண்டே இருக்கையில் விழித்துக்கொண்டேன். என் அறைக்குள் லாமா டென்ஸின் க்யாட்ஸோ வந்து நின்றிருந்தார்.

நான் எழுந்து வணங்கினேன். அவர் என்னிடம் “என்ன கனவு?”என்றார்

“என்ன?” என்று நான் கேட்டேன்

“இப்போது நீ கண்டது?”

“ஒரு நூலை படிப்பதுபோல…” என்றேன் “செந்நிறமான தோலேடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நூல். திபெத்திய மொழியில் அமைந்தது”

அவர் புன்னகையுடன் என்னை பார்த்து “அதை நீ எங்கிருந்து எடுத்தாய்?” என்றார்

நான் நினைவுகூர்ந்து “அது ஒரு பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அமிதாப புத்தரின் பொன்வண்ணச் சிலை. அவருக்கு நேர்முன்னால் தாராதேவியின் சிலை. தாராதேவியின் காலடியில் வெண்கலத்தாலான ஒரு பீடம். அதில் இருந்தது இந்நூல்”

அவர் “நல்லது” என்று மட்டும் சொன்னார்.

நான் “அப்படி ஒரு நூல் இருக்கிறதா? உண்மையிலேயே எங்காவது இருக்கிறதா?”என்று கேட்டேன்.

“இல்லை… நான் கேள்விப்பட்டதில்லை”என்று அவர் சொன்னார். ஆனால் அவர் முகம் மாறியதை நான் நினைவுகூர்ந்தேன்.

அவர் “நீ ஓய்வெடுக்கலாம். மீண்டும் தியானத்திற்கு நீ செல்வதா வேண்டாமா என்று நான் சொல்கிறேன்” என்றார்.

அவர் சென்றபின் நான் படுக்கையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தக்கனவை மிகத் துல்லியமாக என் உள்ளத்தில் மீட்டிக்கொண்டேன். அந்த சிலை இருந்த அறை ஒரு மடாலயத்தின் கோயில் என்று தெரிந்தது. அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது. அந்த அறை மடாலயத்திற்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட குகை என்றுகூட உணரமுடிந்தது. ஆனால் அதன் சுவர்களும் கூரையும் சுருங்கி விரிந்து குவிந்து பரவிய சற்றே அழுக்கான வெண்ணிறத்திரைச் சீலையால் ஆனவை.

அன்று இரவு நான் நெடுநேரம் தூங்கவில்லை. மடாலயம் மிகமிக அமைதியானது. ஆனால் எனக்கு அது ஒரு தொழிற்சாலைபோல ஓசையிடுவதாகத் தோன்றியது. ஒவ்வொரு ஓசைக்கும் நான் திடுக்கிட்டுக் கொண்டிருந்தேன்.

விடியற்காலையில் தூங்கினேன். மீண்டும் அதே கனவு. அந்நூலை நான் மிகமிக அணுக்கமாகக் கண்டேன். அதன் தோல்பரப்பின் விரிசல்களையும் நுண்ணிய துளைகளையும்கூட

விழித்துக்கொண்டபின் எழுந்து அமர்ந்து நெடுநேரம் எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் என் அறைக்குள் அமர்ந்து மலைமுடிகளின் மேலே மட்டும் பனி ஒளிவிடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

முன்கூட்டியே ஒப்புதல் பெறாமல் எவரும் தலைமை லாமா அவர்களைச் சந்திக்கக் கூடாது என்று சட்டம். இருந்தாலும் நான் கிளம்பிச் சென்றேன். அவ்வேளையில் அவர் வஜ்ரயோகினி ஆலயத்தில் இருப்பார் என்று தெரிந்திருந்தது எனக்கு

நான் அங்கே சென்றபோது முன்பெனவே அவர் அங்கே தனித்திருந்தார். நான் உள்ளே நுழைந்து அவரை அணுகி தலைவணங்கினேன். அவர் என்னை எதிர்பார்த்திருப்பதுபோல தோன்றியது

நான் நேரடியாகவே அதைப்பற்றி பேசினேன். “குரு, என்னை வாழ்த்துங்கள். நான் அதை கனவுகண்டுவிட்டேன். கனவு காண்பவர்கள் அடைவார்கள் என்று முதுசொல் உள்ளது”

அவர் வெறுமே பார்த்துக்கொண்டிருந்தார்

“அந்த பொன்னிறநூல் எங்குள்ளது? அதை நான் வாசிக்க என்ன செய்யவேண்டும்?”

“அது இங்கே திபெத்தில்தான் உள்ளது. ஆனால் எளியோரிடமிருந்து அது மறைக்கப்பட்டுள்ளது”என்று டென்ஸின் க்யாட்ஸோ சொன்னார். “இங்கே ஒரு மடாலயத்தின் பாதாள அறையில். அதை ஒருவன் வாசிப்பது உகந்தது அல்ல”

“ஏன்?”என்று நான் கேட்டேன்

“அது முடிவற்றது. எவரும் அதிலிருந்து வெளியே வர முடியாது” என்று டென்ஸின் க்யாட்ஸோ சொன்னார் “அறிவின் முடிவின்மையை உணர்த்தும்பொருட்டு அது உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. அது ஒருவனின் கனவில் வருவதென்பது ஒர் அழைப்பு. ஆனால் அது வீடுபேறின் அழைப்பல்ல, மாளா இருளின் அழைப்பாகவும் இருக்கலாம்”

“குரு, அதை நான் அடையவிரும்புகிறேன். அது எனக்காக அளிக்கவிருப்பது எதுவாக இருந்தாலும் சரி, நான் அங்கே செல்லவேண்டும், அதைப்பார்க்கவேண்டும்” என்றேன். “அதை நோக்கிச் செல்லும் வழியை எனக்குச் சொல்லுங்கள்”

“இல்லை, நான் உனக்குச் சொல்லமுடியாது. அந்த பொறுப்பை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது”

“நான் இங்கே உண்ணாநோன்பிருப்பேன். உயிர்துறப்பேன்”

“நான் அதைச் சொல்லி நீ சென்றடையும் இருளைவிட இறப்பு எளியதுதான்”

“குரு என்மேல் கனிவுகாட்டுங்கள்”

“உன்மேல் கனிவதனால்தான் சொல்ல மறுக்கிறேன்”

நான் பெருமூச்சுவிட்டேன். அதன்பின் ஒன்றும் கேட்பதற்கில்லை

“நான் இங்கிருந்து இன்றே கிளம்புகிறேன்” என்றேன்

“உனக்கு நலம் நிகழட்டும்”என டென்ஸின் க்யாட்ஸோ வாழ்த்தினார்

நான் வணங்கி விடைபெற்றேன். என் அறைக்கு வந்து தேவையான ஆடைகளையும் குறைந்த அளவு உணவையும் பொட்டலம் கட்டினேன். மடாலயத்தில் நான் விடைபெறும்படி அணுக்கமாக எவரும் இல்லை.

அப்போதுதான் அந்த மங்கோலியத் துறவி என் அறைக்குள் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு என்னிடம் “கிளம்புகிறாயா?”என்றார்

“ஆம்”என்றேன்

“அந்த மாயநூலை தேடியா?”

நான் திகைப்புடன் பார்த்தேன்

“நீ பேசியதைக் கேட்டேன்“ என்று அவர் சொன்னார். “நானும் அந்நூலைத் தேடித்தான் இங்கே வந்தேன்”

“அப்படியொன்று மெய்யாகவே இருக்கிறதா?”

“இருக்கிறது”என்று அவர் தன்னிடமிருந்த புகைப்படம் ஒன்றை காட்டினார். “பார்”

அது கருப்புவெள்ளை புகைப்படம். ஆனால் அந்த நூலேதான். அந்த இடமும்கூடத்தான் அதில் தாராதேவியின் சிலையும் இருந்தது

“இதேதான், இதேதான்!” என்று பதற்றத்துடன் சொன்னேன். .

“இந்தப்புகைப்படம் 1921ல் எடுக்கப்பட்டது. இன்னொரு துறவியிடமிருந்து இதை நான் பெற்றுக்கொண்டேன். அவருக்கும் எங்கிருந்தோ கிடைத்தது. இது எங்குள்ளது என்று எவரும் சொல்வதில்லை.நான் எட்டு ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். எனக்கு இன்றுவரை அங்கே செல்லும் வழி தெரியவில்லை. நான் அறிந்ததெல்லாம் கொஞ்சம்தான்”

அவர் தொடர்ந்தார். “சமீபத்தில்தான் ஒன்று தெரிந்தது, இது எங்குள்ளது என்று பெரும்பாலானவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது. அங்கே செல்ல ஒரே வழிதான், அது கனவில் வரவேண்டும். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் அங்கு செல்லும் வழியில் ஒரு பகுதி தெரியும், ஒருவரின் கனவில் அனைத்தும் ஒன்றாகக் கோக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக வெளிப்பட்டுவிடும். அவர் உடனே கிளம்பிவிடுகிறார்”

“எனக்கு வழி தெரியவில்லை”என்றேன்

“ஆமாம், ஆனால் நாம் சேர்ந்து செல்லலாம். என்னிடம் இப்பகுதியின் முழு வரைபடமும் உள்ளது. நீங்கள் உங்கள் கனவில் தெரிந்தவற்றைச் சொல்லி வழிகாட்டுங்கள். செல்லுமிடத்தை அதுதானா என்று உறுதியளியுங்கள்”

“ஆனால் வழி என் கனவில் வரவில்லை”என்றேன் மீண்டும்

“இல்லை, முன்பு கனவில் வழி வந்திருக்கும்… அதை இதனுடன் இணைத்திருக்க மாட்டீர்கள். நாம் செல்லும்போது அந்த இடத்தை நீங்கள் முன்பு கனவில் கண்டதுண்டா என்று மட்டும் சொல்லுங்கள், போதும்”

நான் “சரி”என்றேன்

“என்னால் கழுதைகள், பயணச்சரக்குகள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்யமுடியும்… நாம் கிளம்புவோம்” என்று அவர் சொன்னார்

முக்தா சொன்னார். அவர் பெயர் பாட் எர்டீன். மங்கோலிய மொழியில் அதற்கு உறுதியான ஆபரணம் என்று பொருள். அவர் ரஷ்யாவின் ஒற்றர், ஆனால் பிறப்பால் பௌத்தர். கிட்டான் என்ற தொன்மையான இனத்தைச் சேர்ந்தவர். கிழக்கு மங்கோலியாவில் கெர்லென் ஆற்றங்கரையில்  உள்ள அழிந்துபட்ட பௌத்த நகரமான பார்ஸ்-ஹாட் [Bars-Hot] என்னுமிடத்தில் பிறந்தவர். இன்று அது ஹெடோங் என அழைக்கப்படுகிறது.

அவர் ஒற்றராக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால் அவர் அனைத்தையும் மிக விரைவாக ஏற்பாடு செய்தார்.ஒருநாள் புலரிக்கு முன் நாங்கள் மடாலயத்தில் இருந்து வெளியேறி ,நாங்கள் நான்கு கழுதைகளில் பொதிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு வழிகாட்டிகளுடன் லாசாவை விட்டு அகன்று, திபெத்தின் வடமேற்காக பயணம் செய்தோம்.

எங்கள் பயணம் அன்று மிகமிக அரிதான ஒன்று. திபெத்தின் அன்றைய மையப்பாதைகள் எல்லாமே மடாலயங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பவையாகவே இருந்தன. நாங்கள் சென்றது முற்றிலும் புதிய ஒரு தடத்தில்.நாகு நகரைஅடைந்து உள்ளே நுழையாமலேயே வடமேற்காகத் திரும்பிச் சென்றோம்.

திபெத்தின் நிலவெளியினூடாக பயணம் செய்வதென்பது ஓர் அகவெளிப்பயணமேதான். மலைகள்சூழ்ந்திருக்கும் சமவெளி. தொலைவில் ஏதேனும் ஊர் இருப்பதை அங்கிருந்து தூண் போல எழுந்து நாய்க்குடை போல வானில் விரிந்திருக்கும் வெண்புகையில் இருந்து மட்டுமே உணர முடியும். ஏனென்றால் ஊர்கள் எப்போதும் பள்ளத்திலெயே இருந்தன. பனி உருகிய நீர் சென்று சேரும் இயற்கையான ஏரி ஒன்று அங்கே இருக்கும். சிலசமயம் மேட்டில் நிற்கையில் அந்த ஏரிப்பரப்புகள் கண்கூசச்செய்யும்.

ஊர்களில் இருந்து குரல்கள் எழுவது ஒரு விந்தை. கூரிய குரல்கள் நம்பமுடியாத அளவுக்கு நெடுந்தொலைவுக்கு காற்றால் கொண்டுவரப்படும். நாம் பனிப்புகைமூடிய சூழலில் திசையை கண்ணுக்கெட்டிய பொருட்களை வைத்து கணித்து சென்றுகொண்டிருக்கையில் மிக அருகே ஒரு கைக்குழந்தையின் அழுகை ஒலிக்கும். ஆனால் அது ஓரிரு கிலோமீட்டர் அப்பாலுள்ள ஒரு சிற்றூரில் எழுந்த ஓசையாக இருக்கும். அதை காற்று அள்ளிவந்து நம் காதில் போடும். நாம் துணுக்குற்று உடல்நடுங்க நின்றுவிடுவோம்

அடுத்த ஓசை கேட்காது. செவிகூர்ந்தால் ஆழ்ந்த அமைதி, அல்லது காற்றின் முழக்கம். நெஞ்சு படபடக்கும். அது பேய்களின் விளையாட்டல்ல என்று நாமே நம் அகத்துக்குச் சொல்லிச் சொல்லி நிறுவவேண்டும்.

அக்குரல்களைக்கொண்டு திசையையும் புரிந்துகொள்ள முடியாது காற்று மலைமேல் பட்டு எதிரொலியை நேர் எதிராக திருப்பித்தந்திருக்கலாம். அங்கே மலை இருக்கவேண்டும் என்றும் கட்டாயமில்லை. மேகமே உறுதியான மலைபோல ஆகி ஒலியை எதிரொலிக்கக் கூடியதுதான்

நாங்கள் பதினெட்டு நாட்கள் பயணம் செய்தோம். பாட் மிக இயல்பாக பழகினான். நிறைய பேசினான். நாங்கள் எளிதாக நெருக்கமானவர்கள் ஆனோம். பாட் அவனுக்கே ஒரு திட்டம் வைத்திருந்தான்.முதல் இரண்டுநாட்கள் சென்றதும் அவன் ஒரு மலையை காட்டி  “இந்த மலைப்பாதையை நீ பார்த்திருக்கிறாயா?” என்றான்

பார்த்திருந்தேன் என்பதை என்னாலேயே நம்பமுடியவில்லை. நான் சற்றுநேரம் திகைத்து நின்றிருந்தேன். பிறகு “ஆம்” என்றேன். என் கனவில் வந்த இடம் அது

மீண்டும் நெடுந்தொலைவுக்குப் பின் அவன் உருண்டு வந்து சாலையோரமாக நின்றிருந்த ஒரு பாறையைச் சுட்டிக்காட்டி கேட்டான். “இதை பார்த்திருக்கிறாயா?” அதை நான் பார்த்திருந்தேன்

சாலை ஒரு பெரும் பாறையில் முட்டி ஓடைபோல வழிந்து சுழன்றுசென்றது.  அந்தப்பாறையில் புடைப்புச்சிலையாக முப்பதடி உயரமுள்ள போதிசத்வரின் உருவம் இருந்தது. தொலைவிலிருந்து பார்த்தபோது இன்னொரு பாறைக்குமேல் எட்டிப்பார்ப்பதுபோல போதி சத்வரின் முகம் மட்டும் தெரிந்தது.

“இதை நீ பார்த்திருக்கிறாயா?” என்றான் பாட்

“ஆம் பார்த்திருக்கிறேன்… பார்த்திருக்கிறேன்” என்று நான் சொன்னேன்

“இப்படித்தான் இங்கே போகமுடியும் என்று சொன்னார்கள். என் கனவில் இது வருவதற்காக நான் பல ஆண்டுகள் காத்திருந்தேன். அதற்கு முன் இப்படி கனவில் வழிகண்டுதான் அங்கே செல்லமுடியும் என்பதை நம்பவே எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆயின. ஆனாலும் ஆச்சரியமாகவே இருக்கிறது” என்று பாட் சொன்னான்

நங்கள் அப்படி பதினேழு இடங்களை அடையாளம் கண்டுகொண்டோம். திபெத்தின் வடமேற்காக பனிமலைகளின் சரிவில் ஏறிச்செல்ல தொடங்கினோம். அது சமவெளியின் முடிவு. மீண்டும் மலையடுக்குகள்

நான் “அந்த மடாலயம் இங்கே இருக்கிறதா?”என்றேன்

“இங்குதான் இருக்கவேண்டும்…பார்ப்போம்” என்று அவன் சொன்னான்

“அவர்கள் நம்மை வரவேற்பார்களா?”என்றேன்

“அவர்களால் நம்மை புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் கனவில் அழைப்பு வராமல் ஒருவர் இங்கே வரமுடியாது” என்றான் பாட்

நாங்கள் ஒரு மலைவிளிம்பை அடைந்தபோது மிக அப்பால் பிறிதொரு மலைச்சரிவில் அந்த மடாலயத்தை நான் கண்டேன். அக்கணமே அடையாளம் கண்டுகொண்டேன். “அதுதான்” என்றேன்

பல கனவுகளில் நான் அந்த மடாலயத்தை கண்டிருக்கிறேன். குகையிலிருந்த போது வந்த கட்டுக்கடங்காத கனவுகளில் நான் அங்கே நின்று அதை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். காட்சி மட்டுமல்ல அப்போது அங்கே விழுந்திருந்த ஒளியும்கூட அப்படியே

அது மாலைநேரம். சாய்வான ஒளியில் மடாலயத்தின் செந்நிறச் சுவர்களும் கூரைஓட்டின் வளைந்த பரப்பும் மின்னிக்கொண்டிருந்தன. கூழாங்கற்களின் பெருக்காக கீழிறங்கிச் சென்ற மலைச்சரிவே பொன்னாக வழிந்திருந்தது. அதன் தலைக்குமேல் எழுந்த மலையடுக்குகள் சுடர்முகம் கொண்டிருந்தன.

மேகங்களை ஜ்வாலாமுகிகள் என்று காளிதாசன் சொல்கிறான். தழலுக்கு முகம் கொடுத்தவர்கள், தழலே முகமானவர்கள். அந்த மலைகள் உறைந்த மாபெரும் தழல்கள் போலிருந்தன. அவை பனிமுடிகளைச் சூடியிருந்தன. இமையத்தொடரின் மலைகள் அனைத்துமே கனவுகளில் பிரமித்து அமர்ந்திருப்பவை. இந்த பல்லாயிரம் பல்லாயிரம் சிகரங்களில் ஒருமுறையேனும் மானுடக்கண்படாதவைகூட உண்டு. ஒரு சொல்லால் கூட சென்றடையப்படாதவை உண்டு.

நான் பெருமூச்சுக்களாக விட்டுக்கொண்டிருந்தேன். பாட் என் தோளை தொட்டு “வா” என்று சொன்னான்

மலைச்சரிவில் கழுதைகளை ஆதரவாகக் கொண்டு சென்றோம். எங்கள் கால்பட்டு உருளைக்கற்கள் பாதாளம் நோக்கி உருண்டு சென்றன. தோன்றி நெடுநேரமாகியும் கழுதைக்கு முன் காரட் போல மடாலயம் அங்கேயே நின்றிருந்தது. அவ்வெண்ணம் வந்ததும் நான் புன்னகைத்தேன். எல்லா மடாலயங்களும் காரட் வண்ணம்தான். அதன்பின் நான் பாட்டிடம் மடாலயம் என்பதை குறிக்க காரட் என்றே சொன்னேன்

அங்கே சென்று சேர்ந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது. அங்கிருந்து அந்திப் பிரார்த்தனையின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. முற்றத்தில் நாங்கள் நின்றோம். குளிர் நடுக்கி எடுத்தது. பனியிலிருந்து வருவதைவிட காற்றிலிருந்து வரும் குளிருக்கு வீச்சு அதிகம்

ஒரு முதிய பிக்ஷு வெளியே வந்து நாங்கள் யார் என்று விசாரித்தார்

நான் அவரிடம் உண்மையைச் சொன்னேன். ட்ரா யேர்பா மடாலயத்தில் நான் தங்கியிருந்ததும், லாமா டென்ஸின் க்யாட்ஸோ அவர்களால் குகைத்தியானத்திற்கு பணிக்கப்பட்டதும் ,அப்போது ஒரு பொன்னிற நூலை வாசிக்கும் கனவு வந்ததும், கனவிலிருந்த அடையாளங்களை கொண்டே அது வரை வந்ததும். ஒன்று மட்டும் பொய், பாட்டை எனக்கு துணையாக லாமா டென்ஸின் க்யாட்ஸோ அனுப்பியதாக நான் சொன்னேன்

அவர் மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை.  “உள்ளே வாருங்கள்” என்று அழைத்தார்

மிகச்சிறிய மடாலயம் அது. ஆனால் மிகமிக தொன்மையானது. அதுவும் பாறையில் உருவான குகைகளுக்குமேல் கட்டி நீட்டப்பட்டதுதான். அங்கே ஏழெட்டுபேர் கூட தங்கமுடியாது. குளிர்காலத்தில் முற்றாகவே பனியால் மூடிவிடக்கூடும். குளிர்காலத்தில் அங்கே எவரும் தங்கவே வாய்ப்பில்லை என்று தோன்றியது

எங்களுக்கு அளிக்கப்பட்ட அறை மிகச்சிறியது. இருவர் படுக்கமுடியும். அமர்வதென்றால் அதிலேயே எழுந்து அமர்ந்துகொள்ளலாம். நான் உயரமானவன் என்பதனால் என் தலை மேலே கூரையில் இடிக்கும். தரை மென்மயிர்க் கம்பளத்தாலானது. சுவர்களும் கூரையும் செந்நிற வண்ணம் பூசப்பட்ட மரத்தாலானவை

ஆனால் கீழிருந்து மண்குழாய்கள் வழியாக கொண்டுவரப்பட்ட சூடான காற்று அறையினுள் இருந்த செம்புத்தகட்டை பழுக்கக் காய்ச்சி உள்ளே வெம்மையை நிறைத்தது.அந்த மண்குழாய்கள் மடாலயத்தின் அடியில் இருந்த பெரிய அடுப்பு ஒன்றுடன் தொடர்புகொண்டிருந்தன. அது இரவும்பகலும் எரிந்தது.

ஒரு கருவறைபோல அந்த அறையை உணர்ந்தேன். பனிவெளியில் திறந்த வானின் கீழ் பலநாட்கள் பயணம் செய்தபின் கிடைக்கும் அத்தகைய அறைகள் அளிக்கும் இன்பம் நம்மை மீண்டும் குழந்தையாக, எளிய மிருகமாக ஆக்குவது. அறை சிறிதாகும்தோறும் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்

முக்தா சொன்னார். காலையில் எழுந்தபோது நான் புத்தம்புதியவனாக இருந்தேன். அத்தனை ஆழ்ந்த துயில் மட்டுமே அத்தனை புதிய உள்ளத்தை அளிக்க முடியும். எங்கள் அறைக்கு ஒரே ஒரு கண்ணாட்சி சன்னல்தான். இரட்டை கண்ணாடிகள் கொண்டது. அறைக்கு உள்ளே வெப்பம் நிறைந்திருந்தது. சன்னலின் அரைத்திறப்பின் வழியாக வெளிக்காற்று உள்ளே வந்தது. அதனருகே சென்று முகத்தை வைத்தேன். குளிர் என் நுரையீரலை நிறைத்தது.

மெத்தைக்குவியல்கள் மேல் தவழ்ந்து கதவை திறந்தேன். குளிர்க்காற்று உள்ளே அறைந்ததும் பாட்  ‘ம்ம்ம்’ என்று முனகினான்

நான் வெளியே சென்றேன் சிறிய இடைநாழியில் தரையில் பலகை விரித்திருந்தார்கள். சுவர்களிலும் இரட்டைப் பலகை. எவரோ பேசிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது. அந்த ஓசையை இலக்காக வைத்து நடந்து சமையற்கட்டை சென்றடைந்தேன்

அங்கே இரண்டு பிக்ஷுக்கள் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். ஒருவர் முந்தைய நாள் எங்களை வரவேற்றவர்

சமையலறை மிகச்சிறியது. அடுப்பும் பாத்திரங்களும் கரண்டிகளும் எல்லாமே அதிகம்போனால் ஏழெட்டுபேருக்கு சமைப்பதற்குரியவை. அதையொட்டிய பெரிய அறை கரியும் விறகும் சேகரித்து வைப்பதற்குரியது

நான் அவர்களை வணங்கினேன். அவர்கள் திபெத்திய மொழியில் வணக்கம் சொன்னார்கள். நான் அவர்கள் அருகே அமர்ந்த போது ஒருவர் எனக்கு மக்காச்சோள சூப்பை ஒரு மரக்கிண்ணத்தில் கரண்டியால் கோரி விட்டு அளித்தார். கொன்றைபோன்ற ஏதோ மரத்தின் நெற்றினால் ஆன கரண்டி.

கொதிக்கக் கொதிக்க அந்த இனிய சூப்பை அருந்தினேன். என் உடல் இதமாக தளர்த்திக்கொண்டது. அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். என்பெயர் முக்தா என்பதை அவர்கள் முடா என்றனர்

அவர்களில் ஒருவர் நியிமா. சூரியன் என்றுபொருள். இன்னொருவர் ஷெரிங். நீண்டவாழ்க்கை என்று பொருள். அங்கே மூன்று பிக்ஷுக்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரையும் தவிர மேலும் முதியவரான ஒருவர் இருந்தார். அவரே தலைமை லாமா. அவர் பெயர் யோண்டென் க்யாட்ஸோ. நான்காவது தலாய் லாமாவின் பெயர் அது.

“இந்த மடாலயத்தின் பெயர் என்ன?” என்று நான் கேட்டேன்

நியிமா புன்னகைத்து  “இந்த மடாலயத்திற்கு பெயர் இல்லை” என்றார்

ஷெரிங் “இதை பொதுவாக பேச்சா கோம்பா என்கிறார்கள்” என்றார்.

பேச்சா என்றால் திபெத்திய மொழியில் புத்தகம். நான் அவரிடம் “இங்கே புத்தகங்கள் எங்கே உள்ளன?”என்று கேட்டேன்

“இங்கே புத்தகங்கள் இல்லை, இருப்பது ஒரே ஒரு புத்தகம்தான்” என்றார். “அந்தப் புத்தகத்தைப் பேணுவதற்காகவே இந்த மடாலயம் அமைக்கப்பட்டது. அதை இங்கே தங்கி படிக்கலாம்”

“எவர் வேண்டுமென்றாலும் வரலாமா?” என்றேன். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது

“ஆமாம், இங்கே அனுப்பப்படும் எவரும் வரலாம்”

“அப்படி பலபேர் வருவதுண்டா”என்றேன்

“ஆமாம், ஆண்டுக்கு இருபதுபேர் வரை வருவார்கள்” என்றார் நியிமா

நான் மேலும் சற்று தயங்கி “இந்த நூலை நாம் படிக்க மட்டும் செய்யலாமா?நகல் எடுத்துக்கொள்ளலாமா?”என்றேன்

“நகல் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான எல்லா பொருட்களையும் இங்கேயே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்’

நான் சோர்ந்துவிட்டேன். அப்படியென்றால் திபெத்தின் எல்லா மடாலயங்களிலும் இதன் நகல் இருக்கும். இதற்காகவா இத்தனை தொலைவு வந்தேன்?

“இதன் நகல்கள் எல்லா மடாலயங்களிலும் இருக்கும் அல்லவா?” என்றேன்

“ஆமாம், கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளாக இங்கே வந்து நகல் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்”.

நான் சலிப்புடன் பெருமூச்சுவிட்டேன். இது எப்போதுமே நடப்பதுதான். மிக அரிய ஒன்றுக்காக தேடிச்செல்வது போன்ற பாவனை எப்போதுமே ஆன்மிகமரபில் உண்டு. அகத்தே தேடும் ஒன்றை புறத்தே ஒரு பொருளாக கற்பனைசெய்துகொள்வோம். அதைத் தேடி காடுமேடெல்லாம் அலைவோம். சித்தர் மரபில் அரிய வேர்கள், கற்களுக்கான தேடல்கள் நிறையவே காணலாம். அப்படி தேடிச்சென்று அடையும்போது தெரியும், அவை மிகச்சாதாரணமாக கிடைப்பவையே என்று. செல்லும் பயணமே நாம் அடைவது, இறுதியில் கைப்பற்றுவது அல்ல.இருந்தாலும் ஏமாற்றமே நீடித்தது

பாட் சற்று பிந்தி எழுந்தான். அப்போது நான் மடாலயத்தின் முற்றத்தில் நின்று மலைகள் ஒளிகொண்டு எழுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். இமைய மலைமுடிகள் ஒளிகொள்வது ஓர் அற்புதமான நாடகக் காட்சி. அப்பால் தன் விளக்குகளுடன் மறைந்திருக்கும் அரங்கநிபுணன் ஒவ்வொரு மலைமுடியாக ஒளியை பாய்ச்சுகிறான்.

முதலில் மிகத்தொலைவில் மேகக்குவியல்களுக்குள் மேகத்தாலானவை போல தெரிந்துகொண்டிருக்கும் மலைமுடிகளில் ஒரு முனை மட்டும் செந்நிறமாகச் சுடர்விடுகிறது. அதைப்பார்த்துக்கொண்டே நின்றிருப்போம். அடுத்த மலைமுடி எது என நம்மால் ஊகிக்கவே முடியாது. இன்னொன்று ஒளிவிடும்போது  “ஆ!” சிறுவனைப்போல கைகொட்டி துள்ளிக்குதிக்க தோன்றும். முற்றிலும் எண்ணாத திசையில் பிறிதொன்று சுடரும்.சம்பந்தமே இல்லாத இன்னொன்று. சட்டென்று நாம் கணித்து வைத்திருக்கும் ஒன்றே ஒளிர்கிறது. ஆனால் அடுத்து இன்னொன்று எங்கோ ஒளிகொள்கிறது.

மெல்ல ஒளிரும் மலைகளாலான ஒரு மாலை வானின்கீழ் தெளிகிறது. மேகங்களின் முகங்களும் அதற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மலைகள் ஒளிகொள்ளும் கோணத்திற்கும் மேகங்கள் ஒளிகொள்ளும் கோணத்திற்கும் தொடர்பே இல்லை. மலைகள் உலையின் அனல் போல சிவந்து, மெல்ல வெளிறி, மலரிதழ்கள் போல ஆகி, வெண்ணிறத் தீற்றலாக மாறின. சாணியுருளைகள் வெந்து விபூதியாகி கிடப்பதுபோல

பாட் என்னருகே வந்து “நாம் முதிய லாமாவைச் சந்திக்கவேண்டும். அந்த நூலை நாம் பார்கவேண்டும்” என்றான்

நான் “எனக்கு ஆர்வமில்லை” என்றேன்.

“ஏன்?”என்று அவன் திகைப்புடன் கேட்டான்

“இங்கே வருவதுமட்டுமே முக்கியம் என்று தோன்றுகிறது. வந்துவிட்டோம். இனி என்ன?”

“முட்டாள் மாதிரி உளறாதே… நாம் வந்ததே அந்த நூலை பார்ப்பதற்காகத்தான்”

நான் முதல்முறையாக ஓர் அச்சத்தை அடைந்தேன். அவன் ஓர் ஒற்றனாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அங்கே வந்து சேர அவனுடைய உதவி தேவை. ஆகவே அவனை கூட்டிக்கொண்டேன். அந்த நூலை அவன் கவர்ந்துசெல்லக்கூடுமா? என் சுயநலத்திற்காக அந்த நூலுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கி அளித்திருக்கிறேன்!

உடனே சென்று தலைமை லாமாவிடம் அவன் ஒரு திருடன் என்று சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர் என்னையும் சேர்த்தே சந்தேகப்படுவார். அவர்களுக்கு இங்கே காவலர் எவருமில்லை. ஆனால் எந்த மடாலயத்திற்கும் பரம்பரையான காவலர்கள் என்று சிலர் இருப்பார்கள். அருகே இருக்கும் பழங்குடிகளுக்கு எங்களைப் பற்றி செய்தி தெரிவிக்க அவர்களுக்குரிய ஏதாவது வழி இருக்கும். புகைபோடுவது, மணியோசை, பறவைகள்….

“சரி நாம் சென்று அனுமதி கேட்போம்” என்று நான் சொன்னேன்.

“நீ அடைந்த அந்தச் சலிப்பு இங்கே வந்ததும் எனக்கும் ஏற்பட்டது” என்று பாட் சொன்னான். “இந்த இடம் இத்தனை சாதாரணமாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை”

நியிமாவிடம் நாங்கள் யோண்டென் க்யாட்ஸோ அவர்களைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னோம். அவர் எங்களை அழைத்துச் செல்வதாகச் சொன்னார்

நாங்கள் காலையில் உணவு அருந்திவிட்டு காத்திருந்தோம். நியிமா எங்களை வந்து சைகையால் அழைத்தார்

நியிமா இடுங்கலான வராந்தா வழியாக ஒரு சிறிய கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அதன் கதவை திறந்து உள்ளே சென்றபின் வந்து எங்களிடம் உள்ளே வரும்படி சைகை காட்டினார்

நாங்கள் உள்ளே சென்றோம். வழக்கமான திபெத்திய மடாலயங்களின் அதே அமைப்புதான். நேர் எதிரில் மைத்ரேயபுத்தர். இருபுறமும் அவலோகிதேஸ்வரரும் அமிதாபரும்.மரத்தாலான ஆளுயரச் சிலைகள். பொன்பூச்சு கொண்டவை. சிவந்த உதடுகளும் கரிய விழிகளும் சிவந்த ஆடையும் பொறிக்கப்பட்டவை.

அங்கே சிவப்புக்கம்பிளி போடப்பட்ட இருக்கையில் யோண்டென் க்யாட்ஸோ அமர்ந்திருந்தார் மிகமிக வயதானவர். நன்றாக வளைந்த சுருங்கிய உடல். மேல் இமை தொய்ந்து சுருங்கி உருகிவழிந்ததுபோல கண்கள்மேல் கிடந்தது. விழிகள் எங்கிருக்கின்றன என்றே தெரியவில்லை. ஈரமான மஞ்சள்பட்டுபோல சுருக்கங்கள் மண்டிய முகமும் உடலும்

நாங்கள் வணங்கி அவர் முன் அமர்ந்தோம். நான் அவரிடம் நான் ட்ரா யேர்பா மடாலயத்தில் தங்கியிருந்ததையும், அங்கே தனிமைக்குகையில் கண்ட கனவுகளையும் சொன்னேன். அங்கே கனவினூடாகவே வழிகாட்டப்பட்டதை குறிப்பிட்டேன்

ஆனால் அவரிடம் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. அவர் வேறு ஒரு மொழியில் நியிமாயிடம் எங்களை அழைத்துச் செல்லும்படிச் சொன்னார். நியிமா எங்களிடம் வாருங்கள் என்று சைகை காட்டினார். நாங்கள் வணங்கி எழுந்துகொண்டோம்

செல்லும்போது பாட் சற்று ஏமாற்றம் அடைந்தான். “அவர் நம்மை பெரிதாக பொருட்படுத்தவில்லை… ஒன்றுமே சொல்லவில்லை” என்றான்

“என்ன சொல்லியிருக்கவேண்டும்?”என்றேன்

“அவர் நம்மை வாழ்த்தியிருக்கலாம். அல்லது நமக்கு அறிவுரையாவது சொல்லியிருக்கலாம்”

நான் புன்னகைத்தேன்

எங்களை அந்த மடாலயத்தின் பின்பக்கம் அழைத்துச் சென்றார் நியிமா அங்கே நிற்கும்படிச் சொல்லிவிட்டு ஒரு சிறிய கதவை திறந்து உள்ளே சென்றார். கதவு மூடிக்கொண்டது

எனக்கு பாட்டை எப்படி கையாள்வது என ஓர் எண்ணம் வந்தது. நேரடியாகவே அவனிடம் “பாட், நான் என்னைப் பற்றிச் சொல்கிறேனே, நான் ஒரு பிரிட்டிஷ் உளவாளி.நான் இந்த நூலைத்தேடித்தான் வந்தேன்” என்றேன்

அவன் திகைப்பதற்குள் “நீ ரஷ்ய உளவாளி என்று எனக்குத்தெரியும்” என்றேன்

அவன் பெருமூச்சுவிட்டு “எனக்கும் சந்தேகம் இருந்தது”என்றான் “ஆனால் நான் உளவறிய வந்தவன் அல்ல. இது எனக்கு தனிப்பட்ட தேடலும்கூட. உளவறிந்தாலொழிய நான் இங்கே வரமுடியாது என்பதனால் வந்தேன்” என்றான்

“நானும் அவ்வாறுதான்” என்றேன். “இந்த நூலை என்ன செய்வது என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். இதை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போகலாம். அது கொஞ்சம் கடினமானதுதான், ஆனால் செய்துவிடலாம். இவர்கள் நம்மை கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களை ஏமாற்றி கொண்டுசென்றுவிடலாம்” என்றேன்

அவன் சிந்தனையுடன் என்னைப் பார்த்தான்

“ஆனால் இங்கிருந்து தப்பிப் போவது மிகக்கடினம்.இந்த பிக்ஷுக்களுக்கு இங்கிருக்கும் கிராமங்களின் இடையர்களுக்குச் செய்திசொல்ல ஏதாவது முறை இருக்கும். நாம் எந்தத்திசையில் சென்றாலும் வெட்டவெளியில் தன்னந்தனியாக செல்லவேண்டியிருக்கும். நம்மை பிடித்துவிடுவார்கள். இடையர்கள் நம்மை தயக்கமில்லாமல் கொல்வார்கள்”

அவன் விழிகளை பார்த்தபடி தொடர்ந்தேன் “ஆனால் அதையும்கூட எப்படியாவது ஏமாற்றி சென்றுவிடலாம், ஆனால் நாம் இந்நூலை எடுத்துச்சென்றால் இதை நாம் எவ்வகையிலும் பயன்படுத்தமுடியாது. இந்நூலில் திபெத்தின் பொக்கிஷங்களைப் பற்றிய செய்தியோ ரகசியப் பாதுகாப்பு முறைகளைப் பற்றிய செய்தியோ அல்லது ஏதாவது மருந்துகளைப் பற்றிய செய்தியோ இருக்கும் என்றுதான் நம்மை அனுப்பியவர்கள் எதிர்பார்ப்பார்கள். இதை நாம் இங்கிருந்து எடுத்ததுமே இவர்கள் எச்சரிக்கைகொண்டு அனைத்தையும் மாற்றிவிடுவார்கள். கொண்டுசென்றும் பயனில்லாமல் போகும்”

அவன் சிலகணங்கள் யோசித்துக்கொண்டிருந்தான். பிறகு “நீ என்ன செய்யப்போகிறாய்?”என்றான்

“நான் இதை நகல்செய்யப்போகிறேன். நுணுக்கமாக, எழுத்து எழுத்தாக. அடையாளங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் சேர்த்து. என்னை ஒரு சாதாரண பௌத்தப் பயணி என அவர்கள் நம்பும்படி நடந்துகொள்வேன். இந்நூலின் உள்ளடக்கச் செய்தி திபெத்துக்கு வெளியே செல்லவில்லை என அவர்கள் நம்பும்படிச் செய்வேன்”

அவன் சற்றுநேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அவன் உள்ளம் பல திசைகளில் பயணம் செய்வது தெரிந்தது. பிறகு “ஆம், நீ சொல்வது உண்மை” என்றான்

அவன் ஏற்றுக்கொண்டுவிட்டான் என்று தெரிந்தது. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

கதவு திறந்தது. நியிமா வெளியே வந்து தலைவணங்கினார். “இந்நூலை வாசிப்பவர்கள், நகலெடுப்பவர்களுக்கு மூன்று நெறிகள் உள்ளன. அவற்றை உறுதியாக கடைப்பிடிக்கவேண்டும்” என்றார்

நாங்கள் ஆம் என்று தலைவணங்கினோம்.

“ஒன்று, இதை ஒருசமயம் ஒருவர் மட்டுமே வாசிக்கவேண்டும். இரண்டு, அதை அவர் எவரிடமும் விவாதிக்கக்கூடாது. நகலெடுத்த பின்னரும் பகிர்ந்துகொள்ளக்கூடாது. மூன்று, இதன் இறுதி சொல்லை படித்தபின் அல்லது நகலெடுத்தபின் அக்கணமே அறையிலிருந்து வெளியேறிவிடவேண்டும். அப்படியே மடாலயத்திலிருந்தும் அகன்றுவிடவேண்டும். நான்கு, ஒருவர் ஒருமுறையே இந்த மடாலயத்திற்கு வரமுடியும். கிளம்பியபின் திரும்பி வரவே கூடாது”.

நாங்கள் அதை ஏற்றுக்கொண்டதாகச் சொன்னோம்.அவர் வாருங்கள் என்று கைகாட்டினார். நாங்கள் அந்தச் சிறிய அறைக்குள் சென்றோம். அங்கே தரையில் ஏற்கனவே ஓர் இரும்புக்கதவு திறந்திருந்தது.  அதன்கீழே படிகள் இறங்கிச் சென்றன.

கையில் சிறிய விளக்குடன் நியிமா கீழே செல்ல பாட்டும் நானும் தொடர்ந்து சென்றோம்.அந்தப்படி அத்தனை ஆழமிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது இன்னொரு அறைக்கான ஏணிப்படி அல்ல. நீளமான ஒரு சுரங்கம் போன்ற குழாய். நூறுபடிகளுக்குமேல் இருக்கும்.

அது ஒரு சிறிய அறைக்குள் சென்று நின்றது. அதன் சுவர்களில் திபெத்திய காவல்சிம்மங்கள் கீழ்நோக்கி வாய்திறந்திருந்தன. அவற்றின் கைகள் சுவர்களை நரம்புகள் புடைக்க பிடித்திருந்தன. வாயில் வெண்பற்கள் செறிந்திருந்தன. கடைவாயில் வளைந்து மேலேறிய தந்தங்கள். துறித்து உந்திய உருண்டை விழிகள்.

அவ்வறையின் சுவரில் வலப்பக்கம் பெக்ட்ஸே என்னும் உக்கிரமான காவல் தேவன். இடப்பக்கம்  பால்டன் லமோ என்ற பேருருக்கொண்ட பெண் பேய்த்தெய்வம்.அவர்கள் இருவருக்கும் நடுவே பழைய இடையர்களின் பலித்தெய்வமான ட்ஸென் ஒரு கையில் துரட்டியும் மறுகையில் பாசமும் சடைமுடிக்கற்றையுமாக நின்றது. நேர் எதிரில் தேவு ரங் என்னும் பேய்த்தெய்வம் விரித்த சடை மரம்போல விரிந்து கால்வரை பரவியிருக்க ஈட்டியுடன் நின்றிருந்தது.

அந்த அறையின் நான்கு சுவர்களிலும் குகைவழிகள் இருந்தன. ஒன்றினூடாக வந்திருந்தோம். அவர் இன்னொன்றை நோக்கி அழைத்துச் சென்றார். அங்கிருந்த  சிறிய குகைவழியாக இறங்கினோம். இருளுக்குள் அந்த சிறு விளக்குச் சுடர் எங்களை அழைத்துச் சென்றது. அது ஒரு சிவந்த சிறிய வண்ணத்துப்பூச்சி போல பறந்து அமிழ்ந்து இறங்கிக்கொண்டிருந்தது

அடுத்த தளத்தில் நான்கு சுவர்களிலும் நீலமும் சிவப்பும் கருமையும் கொண்டு வரையப்பட்ட நான்கு திபெத்திய தாந்த்ரீக தேவர்களின் உருவங்கள் கீழ்நோக்கி வெறித்திருந்தன. எட்டு தலைகளும் நூறு கைகளும் கொண்டு எருமைமேல் அமர்ந்திருக்கும் யமந்தகர்.பதினாறு கைகளுடன் அனல் உமிழ்ந்துகொண்டிருந்த சக்ரசம்வரர், கதாயுதத்துடன் வெறித்த கண்களும் வெண்பற்கள் பரவிய முகமும் கொண்ட காலதேவர், எலும்புருக்கொண்ட முகமும் பேய்விழிகளும் தொங்கும் முலைகளும் கொண்ட ஏகஜாதி. .

அங்கும் நான்கு வாசல்கள். அதில் ஒன்றின் வழியாக அடுத்த அறைக்குள் சென்றபோது நான் களைத்திருந்தேன். அது எந்த இடம் என்றே தெரியவில்லை. மலைக்குள் இறங்கிச் செல்கிறோமா? அல்லது மலையின் சரிவிலா?

மூன்றாவது அறையில் நான்கு சுவர்களிளிலும் நான்கு போதிசத்வர்களின் உருவங்கள் மரத்தால் செய்யப்பட்டு பொன்வண்ணம் பூசப்பட்டு பதிக்கப்பட்டிருந்தன. அறையின் சுவர் வளைந்து குடைபோன்ற கூரையென்றாகியது.  அவர்களின் தலைகள் எழுந்து சென்று குனிந்து நோக்கின. அவர்களின் மணிமுடிகள் கூரையின் மையத்திலிருந்த தலைகீழ் தாமரையில் சென்று இணைந்தன

ஆகாசகர்ப்பர் என்று பாலியில் சொல்லப்படும் நம்க்யால் நியிங்போ சுடர்விடும் விண்முகில்களாலும் வானவிற்களாலும் சூழப்பட்டவராக நின்றிருந்தார். சென்ரிஸிக் எனப்படும் அவலோகிதேஸ்வரர் ஒரு கையில் தாமரையும் இன்னொரு கையில் வஜ்ராயுதமும் ஏந்தி நின்றிருந்தார்.ஒருகையில் உலகஉருளையை பொற்குவை என ஏந்திய க்ஷிதிகர்பர் என்னும் போதிசத்வர் திபெத்தில் அவர் நியுங்போ என அழைக்கப்படுகிறார். மகாஸ்தாமப்பிராப்தர் என பாலியில் குறிப்பிடப்படும் துசென் டோப் எனப்படும் பேராற்றல் வடிவமான போதிசத்வர் ஆயிரமிதழ் தாமரைமேல் அமர்ந்திருந்தார்.

கொடூரமான காவல்தெய்வங்களும் உக்கிரமான தாந்த்ரீக தெய்வங்களும் அளிக்காத பதற்றத்தை போதிசத்வர்களின் பார்வை பரிதவிப்பை அளித்தது. நியிமா அங்கிருந்த நான்கு குகைவழிகளில் ஒன்றுக்குள் நுழைந்தார். அதன் வழியாக அவர் இறங்கிச் சென்ற பின் வெளிச்சம் ஒரு சிவப்பு வட்டமாக தெரிந்தது. பாட் என்னை பார்த்தான். நான் முதலில் இறங்கினேன், தொடர்ந்து அவன் வந்தான்

நாங்கள் சென்றடைந்த அறை வட்டமானது. இருபத்தைந்தடி உயரமான இயற்கையான குகை அது. அது ஒரு பிலம் என்று தெரிந்தது. அந்த பிலம் வரை மேலிருந்து போடப்பட்ட துளைதான் நாங்கள் வந்த பாதை. அவ்வாறு நான்கு வழிகள் வந்து அங்கே திறந்திருந்தன

பிலத்தின் வெவ்வேறு வெடிப்புகளிலிருந்து மெல்லிய காற்று வந்து உள்ளே சுழன்றுகொண்டிருந்தது. அங்கே இதமான சூடும் இருந்தது. அவர் தன் கையில் இருந்த விளக்கின் சுடரால் அங்கிருந்த கொழுப்பாலான மெழுகுவத்திகளை பற்றவைத்தார். அவற்றுக்குமேல் கண்ணாடிக் குமிழிகளை பொருத்தினார். சிவந்த பழங்கள் போல அந்த விளக்குகள் மெல்லிய வெளிச்சத்தை பரப்பி அந்த அறையை நன்றாகக் காட்டின.

தலைக்குமேல் சுண்ணாம்புக் கூம்புகள் தொங்கி நின்றன. கீழே உறைந்த நுரையென கூம்புகள் எழுந்திருந்தன. சுண்ணாம்புப் பாறையின் அலைகளும் மடிப்புகளும் திரைச்சீலைகள் போல, வெவ்வேறுவகையாக அவிழ்ந்து விழுந்த துணிகளின் குவியல்கள் போல, பன்றியின் முலைகள் போல சூழ்ந்திருந்தன

குகையறையின் நடுவே விந்தையான ஒரு சிலை இருந்தது, திபெத்தில் நான் எங்குமே அப்படி ஒருசிலையை பார்த்ததில்லை. மூன்று போதிசத்வ உருவங்கள் ஒன்றாக இணைந்த உடல். நேர் எதிரில் மைத்ரேயர் மூன்றடுக்கு கொண்ட மணிமுடி சூடி ஒருகையில் வஜ்ராயுதமும் மறுகையில் தாமரையும் ஏந்தி நின்றிருந்தார், அவருடைய உடலுடன் ஒட்டியபடி இடப்ப்பக்கம் அமிதாபர் இடதுகையில் அமுதகலம் வைத்திருந்தார். மைத்ரேரரின் வஜ்ராயுதமேந்திய இடதுகையே அமிதாபரின் வலதுகையாக இருந்தது.

வலப்பக்கம் மைத்ரேயரின் தாமரை ஏந்திய வலக்கையை தன் இடக்கையாகக் கொண்டு மஞ்சுஸ்ரீ நின்றிருந்தார். தன் வலக்கையில் அறிவுறுத்தல் முத்திரை காட்டியிருந்தார்.மூவரின் தலைகளும் இணைந்து ஒற்றை மணிமகுடத்தைச் சூடியிருந்தன. மரத்தால் செய்யப்பட்டு பொன்பூச்சு அளிக்கப்பட்ட பதினைந்தடி உயரமான கூட்டுச்சிலை. அச்சிலைக்கு நேர்முன்னால் தாராதேவியின் சிலை அமர்ந்திருந்தது

நான் கனவில் கண்ட அதே இடம், ஆனால் இத்தனை தெளிவாக இல்லை. திரைச்சீலைகள் என நான் கண்டவை சுண்ணாம்புப்பாறையின் அலைகள். முன்னர் கனவில் கண்ட ஓர் இடத்தை நேரில் காண்பது படபடப்பை அளித்தது. அப்போது காண்பது கனவு என மயங்கவைத்தது.

அச்சிலைக்கு நேர்முன்னால் ஒரு பெரிய வெண்கலப் பேழை இருந்தது. அதன் மூடி ஒரு பெரிய கடலாமை ஓடு போல அமைக்கப்பட்டிருந்தது. பொன்னிறமான கடலாமை ஓடு. வெண்கலத்தால் செய்யப்பட்டு பொற்பூச்சு அளிக்கப்பட்டது. ஆமையின் முதுகிலிருந்த நுட்பமான செதுக்குகள் ஓம் மணிபத்மே ஹும் என்னும் மூலமந்திரத்தின் அலங்காரவடிவ எழுத்துக்கள் என்று தெரிந்தது

நியிமா அதன் பக்கவாட்டில் இருந்த எட்டு குமிழ்களை வெவ்வேறு திசைநோக்கி நகர்த்தினார். அப்படி அறுபத்துநான்கு நகர்வுகள் அதற்கு சிக்கலான கணக்கு இருந்தது. மிகப்பொறுமையாக நினைவிலிருந்து வழுவாமல் அதைச் செய்யவேண்டும்.

அத்தகைய பூட்டுக்களை திபெத்தில் நான் முன்னரே கண்டிருந்தேன். அவற்றில் பிழைக்கு இடமே கிடையாது. அறுபத்துநான்கில் ஒன்று பிழையானாலும் பின்னர் திறக்கமுடியாது. அதற்கான வழி தெரிந்தவர் வரவேண்டும். பெரும்பாலும் அது ஒன்றுக்குமேற்பட்டவர்கள் சேர்ந்து செய்யவேண்டியதாக இருக்கும்

அதன் பூட்டு உள்ளே விடுவிக்கப்படும் ஓசை கேட்டது. அவர் அந்தப்பேழையை திறந்தார். அதன் உள்ளே செந்நிறமான தசைக்கதுப்பு போல பட்டுதுணியிட்ட மெத்தை. அதன்மேல் ஒரு செந்நிறமான தோலுறையிடப்பட்ட அகன்ற தட்டுப்பேழை. அதை எடுத்து உள்ளிருந்து அந்த நூலை உருவி எடுத்தார். பளபளக்கும் தங்கத்தகடால் அட்டையிடப்பட்ட புத்தகம் அது

அதைக் கண்டதும் என் மனம் படபடக்க தொடங்கியது. நா வரள்வதுபோலவும் கைகால்கள் தளர்வதுபோலவும் தோன்றியது. அதற்கு எத்தனை நகல்கள் வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஆனால் அதை நானும் பார்த்துவிட்டிருக்கிறேன்.

அந்த நூலை அவர் சிறிய பீடத்தின்மேல் வைத்தார். அதன் பொன்னிற அட்டை வழவழப்பாக வெறுமையாக இருந்தது. அடையாளங்களோ குறியீடுகளோ இல்லை. எழுத்துகள் ஏதுமில்லை. அலங்காரச் செதுக்குகள்கூட இல்லை.

அதுவே வியப்புக்குரியது. திபெத் அலங்காரங்களின் நிலம். அங்கே அனைத்தையுமே நுணுநுணுகிச் செதுக்குவார்கள். பளிச்சிடும் வண்ணங்களில் வரைவார்கள். வெளியே பெரும்பாலான மாதங்களில் வெறுமை நிறைந்திருக்கும் விரிந்த நிலம். அதற்கு மாற்றாக அவர்கள் அத்தனை மலர்களையும் அத்தனை தளிர்களையும் அத்தனை சிறகுகளையும் தங்கள் பொருட்களில் செய்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு சிறு சிற்பத்தில் அல்லது கூஜாவில் அல்லது பேழையில் அல்லது டாங்காவில் எதற்காக அத்தனை அணியலங்காரங்கள் என்று நமக்குத் தோன்றும். ஆனால் ஆறுமாதகாலம் ஓர் அறையில் அந்த ஒரே பொருளை நாளெல்லாம் பார்த்துக்கொண்டு வாழவேண்டியிருக்கையில் அந்த அலங்காரங்கள் போதாது என்று நம் மனம் ஏங்கும் தருணம் வரும்.

ஆகவே அந்த வெறும்பரப்பு எனக்கு திகைப்பை அளித்தது. அதில் நான் நுட்பமாக பார்க்கவேண்டிய ஏதோ செதுக்குகளோ எழுத்துக்களோ இருக்கும் என்று நினைத்தேன். நோக்க நோக்க அந்த வெறுமை மேலும் அறைந்தது

நியிமா அதை எங்களிடம் சுட்டிக்காட்டி “இதை ஒரு சமயம் ஒருவர் படிக்கலாம். நகல் எடுக்கலாம். அப்போது மற்றவர் இந்த அறைக்குள் இருக்கவேண்டும். நீங்கள் இங்கே எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் தங்கலாம். உங்களை நான் அழைத்துவந்து விடுவேன். திரும்பி மேலே செல்வது உங்கள் விருப்பம். நீங்கள் விரும்பும்போது இந்த நான்கு பாதைகளில் ஒன்றின் வழியாக மேலேறி வந்துவிடலாம்.ஆனால் அதற்குமுன் இந்நூலை இந்தப் பெட்டிக்குள் முன்பெனவே வைத்து மூடிவிடவேண்டும். வைத்து மூடாவிட்டால் மீண்டு செல்லும் வழிகள் திறந்திருக்காது” என்றார்

“எந்தப்பாதையும் மேலே செல்லுமா?”என்று நான் கேட்டேன்

“செல்லும்”என்று அவர் சொன்னார். “ஆனால் எல்லா பாதையும் இங்கே வராது”

“அதெப்படி?” என்று நான் வியந்தேன்.

பாட் “நாங்கள் முறை வைத்துக்கொள்கிறோம்” என்றான்

“நெறிகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்

நாங்கள் இருவரும் “அவ்வாறே”என்று தலைவணங்கினோம்

அவர் தலைவணங்கி வெளியே சென்றார். நான் பாட்டிடம் “நீ படி” என்றேன்

அவன் “இல்லை, நீயே தொடங்கு”என்றான்

நான் அந்த நூல் அருகே சென்று மென்மயிர் உறையிட்ட மெத்தையில் அமர்ந்தேன். அந்த புத்தகம் எடைமிக்கதாக இருந்தது. அதை திருப்பி வைத்துக்கொண்டு திறப்பதை எண்ணி தயங்கிக்கொண்டிருந்தேன்

ஏன் தயங்குகிறேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அதை திறக்கும்போது நான் எதையோ தொடங்குகிறேன் என்று உள்ளுணர்வு சொன்னது. நல்லதோ தீயதோ, பெரிய ஒன்றை. திரும்பிச்செல்லமுடியாத ஒன்றை. என்னை நிரந்தரமாக மாற்றிவிடக்கூடியதை

அதன் அட்டையை திறந்தேன். அதுவும் எனக்கு ஏமாற்றம் அளித்தது.அதை திறக்க சிலவகையான பூட்டுக்கள் இருக்கும் என நினைத்திருந்தேன். நுட்பமான ஒரு புதிர் விளையாட்டு. ஒரு கணக்குபுத்தகத்தை திறப்பதுபோல அதை திறக்கமுடிந்தது.

உள்ளே அதன் முதல்பக்கம் மெல்லிய தங்கத்தகடால் ஆனது. அதில் தாராதேவியின் கோட்டுவடிவம்.  “ஓம் மணிபேமே ஹும்” என்னும் மந்திரம்.அடுத்த பக்கத்தில் மஞ்சுஸ்ரீயின் கோட்டு வடிவம். “ஓம் ஆஹ் ஹுங் பென்ஸா குரு பேமா ஸித்தி ஹங்!”

அதன்பின் ஒன்றோடொன்று ஒட்டி உருவாக்கப்பட்ட கெட்டியான ஆட்டுத்தோலால் ஆன ஏடுகள். அவற்றின் ஓரங்கள் மெல்லிய வெண்கலத்தகடால் மடித்து விளிம்பிடப்பட்டிருந்தன. எழுத்துக்கள் பொன்னாலானவை. கூர்ந்து பார்த்தேன். பொன்னேதான். அவை எழுதப்பட்டவை அல்ல, அச்சிடப்பட்டவை. எழுத்துக்கள் சுண்ணாம்புப் பலகையிலோ களிமண் பலகையிலோ அச்சாகச் செய்யப்பட்டு உருகிய பொன்னில் முக்கி தோலில் பதித்து அச்சிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுத்துக்கள் இருந்தன.

பிராமியில் இருந்து உருவான தொன்மையான திபெத்திய எழுத்துருவில் எழுதப்பட்ட வரிகள் நெருக்கமானவையாக அமைந்திருந்தன. அவற்றை புரட்டிப் புரட்டி பார்த்தேன்.அவை எளிதாகப் படிக்கும்படியாக அமைந்திருந்தன. எந்த மர்மமும் இல்லை. வழக்கமான திபெத்திய வஜ்ராயன மார்க்க மறைநூல்களைப்போல குறியீடுகளாலும் உருவகங்களாலும் எழுதப்பட்ட ஈரடிகள் ஒன்றின்கீழ் ஒன்றாக அமைந்திருந்தன. பெரும்பாலான சொற்களும் வரிகளும் ஏற்கனவே எனக்குத்தெரிந்தவையாகவே தோன்றின

அதுவரை நான் இறுக்கமாக, பதற்றமாக இருந்தேன். சட்டென்று எளிதாகி புன்னகை புரிந்தேன். அவ்வளவுதான். இந்த நூலின் முக்கியத்துவம் இது இத்தனை தொலைவில் இத்தனை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே. இதன் பலநூறு நகல்கள் மடாலயங்கள் தோறும் இருக்கும். ஒருவேளை நான் முன்னரே முழுமையாகப் படித்ததாகவே இருக்கக்கூடும்.

நான் அதை நகல் செய்ய தொடங்கினேன். பாட் மடியில் கைவைத்து தியானத்தில் அமர்ந்திருந்தான். நீலநிற மையில் தூரிகைப் பேனாவை தோய்த்து கெட்டியான காகிதத்தில் அந்த எழுத்துக்களை நோக்கி நோக்கி எழுதிக்கொண்டிருந்தேன். ஏதோ மலைப்பாறையின் வயிற்றுக்குள் அமர்ந்திருக்கிறேன் என்னும் உணர்வு எனக்கு இருந்தது. பழத்தின் சுளைக்குள் கொட்டைக்குள் வாழும் சிறு புழுபோல.

தொடர்ச்சி

தங்கப்புத்தகம் பகுதி 2

தொடர்புடைய பதிவுகள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

$
0
0

 

தங்கப்புத்தகம் [குறுநாவல்]- 1 தொடர்ச்சி

முக்தா சொன்னார். மறுநாள் முதல் நானும் பாட்டும் அந்த நூலை நகல்செய்ய தொடங்கினோம். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து மடாலயத்தை தூய்மைசெய்வது, விறகு வெட்டுவது, நீர்கொண்டுவருவது, மாவு அரைப்பது, சமைப்பது ஆகியவற்றில் பிட்சுக்களுக்கு உதவினோம்.

அதன்பின் நியிமா எங்களை அந்த குகைவழிப்பாதை வழியாக மலையின் கருவுக்குள் இருக்கும் அறைக்குக் கொண்டுசென்று பூட்டை விடுவித்து அந்நூலை எடுத்து அளித்தார். மாலையில் நாங்களே அந்நூலை அந்த தட்டுப்பேழைக்குள் மீண்டும் வைத்து பெரிய பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டு நாங்கள் அந்த வாசல்களில் ஒன்றினூடாக மேலேறுவோம்.ஒவ்வொரு அறையிலும் அப்போது தோன்றியபடி ஒரு பாதைக்குள் நுழைவோம். அந்த முதல் அறையில் திறக்கும் ஒரு வாசலினூடாக வெளிவருவோம்.அங்கிருந்து மடாலயத்திற்குள் சென்றுவிடுவோம்.

அந்த அறையில் நாங்கள் உள்ளே செல்லும் சுரங்கப்பாதையின் இரும்புவாசல் மூடப்பட்டிருக்கும். அதைத்திறப்பதற்கு எட்டு பித்தளைக் குமிழிகள் இருந்தன. அவற்றை வெவ்வேறு வகையில் அசைத்து பூட்டை விடுவிக்கவேண்டும் என்று தெரிந்தது.

நியிமா உதவியில்லாமல் அங்கே நுழைவது எளிதல்ல என்பதை கண்டுகொண்டோம், மேலிருந்து கீழே வரும் வழி திறக்கும் அறையின் சாவி அவரிடம்தான் இருந்தது. அவர் அதை எங்களிடம் தரவில்லை. அவர் உள்ளே வந்து சுரங்கப்பாதையை திறந்தபின்புதான் எங்களை உள்ளே அழைத்தார்.

அதைவிட சிக்கலான ஒன்று இருந்தது. கீழிறங்கும் வழி சென்று சேர்ந்து மேலும் இறங்கும் ஒவ்வொரு அறைக்கும் நான்கு வாசல்கள். ஒவ்வொரு முறையும் அவர் ஒவ்வொரு வாசல் வழியாக நுழைந்தார். அந்த வாசலை எப்படித் தெரிவுசெய்கிறார் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மேலே வாசல்கள் மூடிக்கொண்டன. ஆனால் மேலே செல்லும்போது அந்தவாசல்கள் எல்லாமே திறந்தும் கிடந்தன.

ஒருவேளை மேலே சுரங்கப்பாதையின் வாசலை திறந்து கீழே வந்தால்கூட தவறான வழியை தெரிவு செய்து மேற்கொண்டு செல்லமுடியாமலாகி, தலைக்கு மேலே வாசலும் மூடிவிட்டால் அது பொறிதான்.

அந்த அறை மலைகளுக்குள் எங்கே இருக்கிறது? மடாலயத்தையும் அது அமைந்திருக்கும் மலைச்சரிவையும் வைத்து ஒரு வரைபடத்தை நான் ரகசியமாக உருவாக்கிப் பார்த்தேன். ஆனால் அதை என்னால் நிறைவூட்டும்படி கணிக்க முடியவில்லை. அந்த பிலத்திற்கு வேறுசில திறப்புகள் உண்டு, அங்கிருந்தே காற்று உள்ளே வருகிறது. பாறைகள் வழியாக அங்கே எரிமலைக்குழம்பின் சூடும் வந்து சேர்கிறது.

நான் அந்த நூலை நகல் எடுப்பதில் ஒருநாளில் நான்கு மணிநேரத்தைச் செலவு செய்தேன். நான்கு மணிநேரம் பாட்டுக்கு. காலை எட்டு மணிக்கு நாங்கள் உள்ளே சென்றால் மாலை நான்கு மணிக்கு வெளியே வந்தோம்.

பின்னர் அந்த நான்குமணி நேரத்தை இரண்டு இரண்டு மணிநேரங்களாக பகுத்துக்கொண்டோம். இரண்டுமணி நேரம் எழுத்து இரண்டு மணிநேரம் கண்களுக்கு ஓய்வு என்பது மேலும் வசதியாக இருந்தது. விரைந்து நூலை முடிக்கும்நிலை வந்தது

ஆனால் நாங்கள் பணியை முடிக்கமுடிக்க ஏமாற்றத்தையே அடைந்தோம். அது அரிய செய்திகள் எதையும் சொல்லவில்லை. வழக்கமான வஜ்ராயன பௌத்த நூல்தான் அது. பதினான்கு அத்தியாயங்கள் கொண்டது. முதல் அத்தியாயம் வஜ்ராயனத்தின் ஏழு அடிப்படை மந்திரங்களையும் அவற்றின் சொல்லமைப்பையும் அவற்றை பொருள்கொள்ளும் முறையையும் அவற்றின் உச்சரிப்பையும் கூறுவது

இரண்டாவது அத்தியாயத்தில் வஜ்ராயனத்தின் காலசக்கரத்தைப் பற்றிய விவரிப்பு. அடுத்த அத்தியாயத்தில் வஜ்ராயனத்தின் காவல்தேவதைகளின் வல்லமை குறித்தது. தொடர்ந்த இருஅத்தியாயங்கள் திபெத்தில் பரவலாக உள்ள போதிசத்வர்களைப்பற்றிய விவரிப்புகளும் அவர்களுக்குரிய மந்திரங்களும் உபாசனை முறைகளும்.

ஆகாசகர்ப்பர், அவலோகிதேஸ்வரர், க்ஷிதிகர்ப்பர், மகாஸ்தாமப்பிராப்தர், மஞ்சுஸ்ரீ, சமந்தபத்ரர் ஆகியவர்களுக்கு தனித்தனி அத்தியாயங்கள். பத்மபாணி, வஜ்ரபாணி ஆகியோருக்கு ஓர் அத்தியாயம். அவர்களின் தோற்றம், அவர்களின் இயல்பு, அவர்களை  வழிபடும்முறை ஆகியவை செய்யுள் வடிவில் அளிக்கப்பட்டிருந்தன.

மைத்ரேய புத்தருக்கு இறுதி அத்தியாயம். மைத்ரேயரின் இருப்பிடம், அவருடைய நுண்ணுருவத் தோற்றம், அவர் எழுவதற்கான முற்குறிப்புகள், அவருடைய ஆகாயவடிவத் தோற்றம், அவர் வந்தபின் உருவாகும் தர்மலோகத்தின் விவரணை ஆகியவை அதில் கூறப்பட்டிருந்தன.

கூடுதலான ஓர் அத்தியாயம் பொருளடக்கம், அத்தியாய வைப்புமுறை, அடிப்படையான நூலமைப்பு ஆகியவையும் எவரெவர் அந்நூலை பயிலவேண்டும், எவ்வண்ணம் பயிலவேண்டும், என்னென்ன ஆசாரங்களைக் கடைப்பிடிக்கவேண்டும், என்னென்ன நோன்புகள் பேணப்படவேண்டும் ஆகிய செய்திகள்.

அந்நூலை நகலெடுத்து நிறைவுசெய்துகொண்டிருந்தோம். இறுதி அத்தியாயத்தின் எட்டு ஈரடிகள் மட்டுமே எனக்கு எஞ்சியிருந்தன. முடித்துவிட்டால் அக்கணமே அங்கிருந்து மேலே சென்று எங்கள் பொதிகளை எடுத்துக்கொண்டு அபப்டியே கிளம்பி திரும்பிப்பாராமல் மடாலயத்தில் இருந்து சென்றுவிடவேண்டும். ஒருபோதும் திரும்பி வரக்கூடாது.

பாட் அந்நூலில் முழுமையாகவே ஆழ்ந்துவிட்டிருந்தான். அவனுக்கு வேறு நினைப்பே இல்லை என்று தோன்றியது. எங்களிடையே உதிரிச் சொற்கள் தவிர பேச்சே கிடையாது. அவன் கண்கள் கிறுக்கனின் கண்கள் போல நிலையழிந்து அலைமோதின. கைகளால் காற்றில் சுழித்தான். உதடுகளால் எதையோ ஓசையில்லாது சொல்லிக்கொண்டான். எதையோ நினைவுகூர்ந்தவன் போல திகைத்து நின்றான். தனக்குத்தானே ஆமோதிப்பவன்போலவும் மறுப்பவன் போலவும் தலையை அசைத்துக்கொண்டான். அவ்வப்போது தன் தலையில் கையால் வெறியுடன் தட்டிக்கொண்டான்

நானும் அப்படித்தான் இருந்தேனா? என் நடத்தைச் சிக்கல்கள் எனக்கே தெரிய வாய்ப்பில்லை. அங்கிருந்த பிக்ஷுக்கள் அவர்களின் உலகில் இருந்தனர். எங்களுடன் அவர்கள் தேவையில்லாது ஒரு சொல்கூட பேசவில்லை. நியிமா பெரும்பாலான நாட்களில் வெறும் விழிகளாலும் முகபாவனைகளாலுமே எங்களை அழைத்துச் சென்றார்.

அன்று எங்கள் அறையில் நான் நகலெடுத்த காகிதங்களைச் சீராக அடுக்கி என் தோல்பைக்குள் வைத்தேன். அந்த நூலை அப்படியே நகலெடுத்தேன் என்பது ஒரு பெரும்பணிதான் என்று தோன்றியது. ஆனால் அந்த நிறைவுடன் படுத்து மெல்லிய தூக்கம் ஒன்றுக்குப்பின் விழித்துக்கொண்டபோது அதைச் சரியாகச் செய்தேனா என்ற பதற்றம் எனக்குள் எழுந்தது. ஒரு எழுத்துகூட மாறாமல் அதை நகல்செய்துகொண்டேனா?

அந்த தொல்மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு, அதன் எழுத்துரு பிராமியிலிருந்து உருவானது. அதன் உச்சரிப்பு சீன,மங்கோலிய மொழிகளைச் சார்ந்தது. இந்த விசித்திரமான இணைவு அதற்கு நம்பமுடியாத வாய்ப்புகளை அளித்தது. கலைடாஸ்கோப் போல மாறிக்கொண்டே இருக்கும் மொழி அது. உச்சரிப்பும் எழுத்துருவும் இணைந்து தொட்டும் விலகியும் நடனமிட்டுக்கொண்டே இருந்தன,.அவற்றின் நிழல்பெருக்கம்போல அர்த்தங்கள் முடிவிலாது உருவாகிக்கொண்டே சென்றன.

அந்த எழுத்துக்களை உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றலாம். எழுத்தை மாற்றி உச்சரிப்பை மாற்றலாம். ஓர் எழுத்தை சற்றே மாற்றி எழுதி அச்சொல்லின் அர்த்தத்தை மாற்றிவிடலாம்.ஓர் எழுத்து தன்னளவிலேயே சுதந்திரமானது. அது சிறுபூச்சிபோல. எங்குவேண்டுமென்றாலும் சென்றமரும். முட்டையிட்டு தன்னைப் பெருக்கிக்கொள்ளும்

பாட் என்ன இருந்தாலும் மங்கோலியன். திபெத்திய மொழி அவர்களின் மொழிக்கு நெருக்கமானது. அவனுடைய நகலை என் நகலுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலென்ன? அச்செயல் விலக்கப்பட்டது, அதன் விளைவுகள் என்ன என்றுகூடத் தெரியவில்லை. ஆனால் என் முதல் தயக்கம் எண்ண எண்ண நீங்கியது. வேறுவழியே இல்லை, பிழையான ஒரு நகலுடன் செல்வது அந்தப் பயணத்தையே வீணடிப்பது. வருவது வரட்டும், செய்வது நல்ல நோக்கத்துடன்தானே?

நான் பாட் தூங்குகிறானா என்று பார்த்தேன். அவன் சீரான மூச்சை விட்டுக்கொண்டிருந்தான். எங்கள் அறைக்குள் இரவில் சிறிய கொழுப்பு மெழுகுவத்தி எரிந்துகொண்டிருக்கும். அந்த வெளிச்சம் மென்மையான செந்நிறச் சவ்வுபோல அறையை மூடியிருக்கும். இரவில் விழித்தெழுந்தால் ஒரு ரெம்ப்ராண்ட் ஓவியத்தில் நாம் இருப்பதாக பிரமை ஏற்படும்.

நான் மெல்ல எழுந்து அவனுடைய தோல்பையை எடுத்தேன். அதற்கு பூட்டு எதுவும் இல்லை. அவனுடைய இன்னொரு அலுமினியப்பெட்டிக்குத்தான் பூட்டு போட்டிருந்தான். இரவில் அவன் அந்த காகிதங்களை படித்துக்கொண்டிருந்ததை நான் தூங்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவன் அந்தக் காகிதங்களை துளையிட்டு பட்டுநூலால் கோத்து புத்தகம் போல வைத்திருந்தான். நான் அதைப் பிரித்து முதல் பக்கத்தை படித்தேன். நான் எழுதியதைப்போலவே இருந்தது. ஒவ்வொரு வரியாக படித்துக்கொண்டே சென்றேன்.

சட்டென்று ஓர் ஊசி என் மேல் குத்தியதுபோல உணர்ந்தேன். ஒரு சொல் புதிதாக இருந்தது. அதை நான் எழுதினேனா? என்னுடைய தாள்களை எடுத்துப் பார்த்தேன். முதல்வரியிலேயே நான் நடுங்கிவிட்டேன். அவன் எழுதி வைத்திருந்ததற்கும் நான் எழுதி வைத்திருந்ததற்கும் சம்பந்தமே இல்லை.

தலையில் கையை வைத்துக்கொண்டு சோர்ந்து அமர்ந்துவிட்டேன். மீண்டும் பார்த்தேன். என்ன வேறுபாடு? நான் அதை பார்த்து அப்படியேதானே எழுதினேன்? அதை ஓர் ஓவியம்போல நகல்செய்துகொண்டேன். என்ன நடந்தது? ஓவியங்களே கூட அறையின் வெளிச்சத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பார்கள்

என்மேல் பார்வையை உணர்ந்தேன். திரும்பி பார்த்தேன். பாட் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நான் பார்வையை தாழ்த்தி “முற்றிலும் வேறு பிரதி” என்றேன்.

அவன் ஒன்றும் சொல்லவில்லை

நான் கண்ணீருடன் “எனக்கு இந்த நூலை பிரதியெடுக்கும் தகுதி இல்லை. இந்த மொழிக்கு அன்னியமானவன் நான். இது என்னை ஏமாற்றுகிறது” என்றேன்

அவன் இம்முறை மெல்ல தொண்டையோசையை எழுப்பினான். பின்னர் “அப்படி அல்ல”என்றான்

அவன் என்ன சொல்லப்போகிறான் என்று நான் பார்த்தேன்

“அந்த நூலில் ஏதோ மாயம் இருக்கிறது” என்று பாட் சொன்னான். “நான் சிலநாட்களுக்கு முன்பு அந்நூலை முந்தையநாளின் தொடர்ச்சியை நகல் செய்வதற்கு முன்பு முன்பு நகல்செய்த பகுதியை ஒருமுறை படித்துப் பார்த்தேன். அதிலிருந்த ஒருவரியை சரியாக நகல்செய்துகொண்டேனா என்ற சிறு சந்தேகம் வந்தது.  ஒருசில சொற்கள் மாறியிருக்கின்றனவா? அப்படி நிகழ வாய்ப்பில்லையே. ஒரு சொல்லை மட்டும் நினைவில் பதித்துக்கொண்டேன். திரும்ப அறைக்கு வந்து என் கையில் இருந்த நகலைப் பார்த்தேன்.அந்தச் சொல் அதில் இல்லை. முற்றாகவே மாறியிருந்தது”

பாட் சொன்னான் . “எப்படி அது நடந்தது என்றே தெரியவில்லை. என் தலையில் நான் அறைந்து கொண்டேன். மறுநாள் கீழே சென்று அந்தப் பகுதியை அச்சு அசலாக அப்படியே நகல்செய்தேன். அதைச்செய்து முடித்தபோது நிறைவு வந்தது. இனிமேல் கவனமாக இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். அந்த நிறைவுடன் இரண்டுநாட்கள் நகல் வேலையை தொடர்ந்தேன். ஆனால் மீண்டும் ஒருநாள் முந்தைய பக்கத்தைப் பார்த்தபோது அந்தச் சந்தேகம் வந்தது. மேலே வந்து என் நகலை பார்த்தேன். அந்தப்பக்கத்தை நான் நகல்செய்த பிரதியில் மாற்றி எழுதியிருந்தேன்”

நான் அச்சத்துடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சிறிய அறைக்குள் வேறெவரோ எங்களுடன் வந்து அமர்ந்துகொண்டதுபோலிருந்தது

பாட் சொன்னான். “அதன்பிறகு நான் நகல்செய்த இரண்டு பக்கங்களை உடையில் மறைத்து கீழே கொண்டுசென்றேன். அவற்றை அங்கிருந்த பக்கங்களுடன் ஒப்பிட்டேன். முதல்பார்வைக்கு ஒன்றுதான். ஆனால் முற்றிலும் வேறுபிரதி. அதை விட ஒன்றை கவனித்தேன். நான் இரண்டு முறை பிரதியெடுத்த பக்கங்கள் இரண்டு வெவ்வேறு பிரதிகள், அங்கிருந்தது இன்னொன்று”

பாட் தொடர்ந்தான். “நான் நிலைகுலைந்துபோனேன். முதலில் நம்பவே முடியவில்லை. அதற்கு ஏதாவது தர்க்கபூர்வமான காரணம் இருக்கவேண்டும் என்றே என் மனம் ஓடியது. அறையின் வெளிச்ச வேறுபாடுகளால் அவ்வாறு நிகழ்கிறதா? அந்தப் புத்தகத்தை குறிப்பிட்டவகையில் சாய்த்தோ சரித்தோ வைத்தால் எழுத்துக்களில் மாறுபாடு வருகிறதா?”

“அல்லது நம் மனம் நகலெடுக்கும்போது ஊடாக புகுந்துவிடுகிறதா? அது சாத்தியம்தான். நாம் முதற்சில சொற்களைப் படிக்கிறோம். அவற்றைக்கொண்டு ஓர் அர்த்ததை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த அர்த்ததின் நீட்சியை நம் மனம் கணக்கிட்டு அடுத்தடுத்த எழுத்துக்களை வாசிக்கிறது. அர்த்தத்தை உருவாக்கிக்கொண்டே போகிறது. அதன்பின் அந்த அர்த்தம்தான் தெரியும். மொழி என்பது தூய அர்த்தமாக மாறிவிடும். எழுத்துக்களும் சொற்களும் மறைந்துவிடும். மொழி செயல்படுவதே அப்படித்தான். சுவரில் ஒரு கறையை பன்றி என்று நினைத்துவிட்டால் அங்கே பன்றி தெரிவதுபோல”

“ஒவ்வொரு எழுத்தும் அர்த்தத்தின் துளி. ஒவ்வொரு சொல்லும் ஒர் அர்த்த அலகு. அர்த்தங்களை அடுக்கி அடுக்கி ஒரு கட்டுமானத்தை உருவாக்குகிறது நம் மனம் ஒவ்வொரு சொல்லும் அதன்பின் அந்த கட்டுமானத்தின் ஒரு பகுதிதான். ஒவ்வொரு எழுத்தும் அதன் துளிதான். அவற்றுக்கென தனியான அர்த்தம் கிடையாது. அந்த மொத்தக் கட்டுமானம் தன் மாபெரும் எடையால் ஒவ்வொன்றையும் பிடித்து நிறுத்திவிடுகிறது”.

“ஆகவே அடுத்தநாள் ஒன்று செய்தேன். நான் இரண்டுமுறை பிழையாக எழுதிய அந்தப்பக்கத்தை பின்னாலிருந்து சொல் சொல்லாக எழுதினேன். அர்த்தமே என் மனதில் உருவாகாதபடி. அன்று வென்றுவிட்டேன் என்று தோன்றியது. அறைக்கு வந்தபோது வென்றேனா என்ற சந்தேகம் எழுந்தது. மறுநாள் அந்த பக்கத்தை கொண்டுசென்று அங்கிருந்த பக்கத்துடன் ஒப்பிட்டேன். அங்கிருந்தது மற்றொன்று”

“அன்று மேலும் வெறிகொண்டேன். பின்னாலிருந்து எழுத்து எழுத்தாக எழுதினேன். ஒவ்வொரு எழுத்தும் வெறும் படம். கோடுகோடாக புள்ளி புள்ளியாக. அன்று அந்த ஒரே ஒரு பக்கத்தைத்தான் என்னால் எழுதி எடுக்க முடிந்தது. மூட், நான் மறுநாள் சென்று அந்தப் பக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன்.ஆமாம், அங்கிருந்தது வேறொன்று”.

“என் மண்டைக்குள் அமிலம் ஊறியதுபோல எரிச்சல். மண்டையே இரும்பாலானதுபோல எடைகொண்டது. உள்ளிருந்து அழுத்தம் எழுந்தது. முட்டைபோல என் தலையோடு வெடித்துவிடும் என்று ஒரு திமிர்ப்பு. சுவரில் தலையை ஓங்கி அறைந்துகொள்ளவேண்டும். இந்த மடாலயத்தின் சன்னல் வழியாக தலைகீழாக அந்த பாறைமேல் விழுந்துவிடவேண்டும்“

“பின்னர் இதை விடமாட்டேன் என்று உறுதிசெய்துகொண்டேன். “ஆமாம் விடமாட்டேன், விடமாட்டேன்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். மந்திரம்போல. அதைச் சொல்லும்போதெல்லாம் பற்களைக் கடித்து கைகளை முறுக்கிக்கொள்வேன், ஒரு மற்போருக்குப் போவதற்கு முந்தைய கணம்போல என் உடலில் தசைகள் இறுகியிருக்கும்.நரம்புகள் துடிக்கும். பாட் கொந்தளிப்புடன் சொன்னான்”

நான் அவன் உணர்வுகளை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பாட் எழுந்து தன் தோல்பையில் இருந்து ஒரு கத்தை காகிதங்களை எடுத்து என் முன் வைத்தான். “பார்” என்றான்

நான் அவற்றை எடுத்துப் புரட்டியபோது கைகள் நடுங்கின. நான் எண்ணியது சரிதான். அவை அனைத்திலும் இருந்தது அந்நூலின் ஒரே பக்கம். எண்பத்திஏழு நகல்கள். ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டவை.

எடைதாளாதவன்போல அவற்றை மேஜைமேல் வைத்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியாமல் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்

பாட் பல்லைக் கடித்து தலையை அசைத்தான். தாளமுடியாத வலிகொண்டவன் போல அவன் கழுத்தில் நீலநரம்புகள் புடைத்திருந்தன

உறுமலோசையில் அவன் சொன்னான். “அந்த நூலின் மாயம் இதுதான். அதை நம்மால் நகல் எடுக்க முடியாது. இன்னொரு பிரதிதான் உருவாக்கமுடியும். திபெத் முழுக்க அத்தனை மடாலயங்களிலும் இந்நூலின் நகல்கள் இருக்கக்கூடும். பலநூறு நகல்கள். ஆயிரத்தி இருநூறாண்டுகளாக எத்தனையோ லாமாக்கள் இங்கே வந்து நகல்செய்துகொண்டு சென்றவை”

“ஆனால் அவை எவையும் இந்நூல் அல்ல, இந்நூலில் இருந்து அந்த லாமாக்கள் அடைந்தவைதான். அவை அந்த லாமாக்களைத்தான் காட்டுகின்றன. அவற்றின் வழியாக இந்நூலை எவரும் வந்தடைய முடியாது. சொல்லப்போனால் எவரும் இந்நூலை வந்தடைய முடியாது. அவர்கள் இதிலிருந்து தனக்குரிய நூலையே பெறுவார்கள்”.

“இந்நூலை வாசிக்கக்கூட முடியாது. வாசிக்கையிலேயே நாம் நமது நூலை உருவாக்கிக் கொள்கிறோம். அது அந்நூலை நமக்கு அளித்து அதைக்கொண்டு தன்னை முற்றாக மூடிக்கொள்கிறது. மூட், ஆயிரத்திநாநூறு ஆண்டுகளாக இந்நூல் வாசிக்கப்படவே இல்லை. பாட் கைகளை தூக்கி உரக்கச் சொன்னான். ஒருவராலும் வாசிக்கப்படாத நூல் இது!” என்றான் பாட்.

நான் உள்ளூர பதறிவிட்டேன். என் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. எழுந்துசென்று தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் என் உடலில் மனம் செயல்படவில்லை

பாட் தலையை அசைத்தபடி தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். “எவ்வளவு பெரிய அறைகூவல். மனிதனை சிறுபுழுவாக அணுவாக மாற்றிவிட்டு நின்றிருக்கும் ஆணவம் இது. எவரும் எதுவும் செய்யமுடியாது. நூல்கள் அறிவை உருவாக்குபவை. இந்த சபிக்கப்பட்ட நூல் அறியாமையை உருவாக்குகிறது. அறிவுக்கு எல்லை உண்டு, அறியாமைக்கு எல்லையே இல்லை”.

அவன் சட்டென்று சிரித்தபடி எழுந்து கைவிரித்து கூவினான். “முழுமுட்டாளாக ஆக்கப்பட்டுவிட்டேன். நான் வாசிக்கவே முடியாத ஒரு நூலின் முன் நின்றிருக்கிறேன். உண்மையில் அந்த நூல் அங்கே இருக்கிறதா? இல்லை அதுவும் ஒரு மாயத்தோற்றம்தானா?”

எதிர்பாராதபடி அவன் விம்மி அழுதான். அப்படியே தளர்ந்து அந்தக் கட்டிலில் அமர்ந்தான். கண்ணீர் வழிய, உதடுகள் துடிக்க முனகலோசையில் சொன்னான்.   “நான் எதற்காக இங்கே வந்தேன்? எந்த சபிக்கப்பட்ட பொழுதில் இந்த நூலைப்பற்றிய செய்தியை நான் அறிந்தேன்? இதிலிருந்து எனக்கு விடுதலையே இல்லை.ஆமாம், நான் இதில் சிக்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மீட்பே இல்லை!”

நான் மெல்லிய குரலில் “பாட்” என அழைத்தேன். “நீ சொல்வது உண்மை என்றால் நாம் நம்மால் முடிந்த ஒரு நகலுடன் இங்கிருந்து சென்றுவிடுவதே நல்லது”

அவன் கண்ணீர் வழிந்த கண்களுடன் என்னை பார்த்தான்.

நான் சொன்னேன். “வேறுவழியே இல்லை. நான் நாளை நகல்செய்து முடித்துவிடுவேன். நாளையே கிளம்பிவிடுவேன்”

அவன் பெருமூச்சுவிட்டு அப்படியே படுத்தான்.கருக்குழந்தைபோல உடலைச் சுருட்டிக்கொண்டான்.

“பாட், நீ முடிக்க இன்னும் எத்தனை நாளாகும்?”

“நான் ஒரே ஒரு வரியை மட்டுமே மிச்சம் வைத்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான்

“அப்படியென்றால் நாம் நாளையே கிளம்பிவிடுவோம். இந்த மாயச்சுழலில் நாம் சிக்கிக்கொள்ளவேண்டாம்” என்றேன். “ஏனென்றால் இந்த மாயம் நம்மிடம் இல்லை. ஆகவே இதை நாம் வெல்லமுடியாது. இது இந்தப் பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலேயே உள்ள ஏதோ மாயம்… மனிதர்கள் அதை அறியமுடியாத அளவுக்குச் சிறியவர்களாக இருக்கலாம்”

அவன் முனகினான்

“என்ன சொல்கிறாய்? நாளையே கிளம்பிவிடுவோமா?”

“சரி” என்று அவன் சொன்னான். போர்வைக்குள் புதைந்தவனாக “வேறுவழியில்லை… வேறுவழியில்லை”என்றான்.

 

முக்தா சொன்னார். நான் மறுநாள் காலை எழுந்தபோது முதல் எண்ணமாக அங்கிருந்து கிளம்பவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் முந்தைய நாள் இருந்த பதற்றம் இல்லாமலாகியிருந்தது. மெல்லிய சந்தேகம் தோன்றிவிட்டிருந்தது. பாட் சொல்வது உண்மையா, அல்லது அவனுடைய மனப்பிரமையா? நானே அதை சோதித்துப் பார்த்தால் என்ன?

பாட் இரவெல்லாம் தூங்கவில்லை என்று தெரிந்தது. அவன் கண்கள் வீங்கி சிறிய கீறல்கள் போல தெரிந்தன. முகமெங்கும் சிவந்த தடிப்புகளும் இருந்தன. அவன் தலையை அசைத்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தான்.

நான் அன்று கீழே சென்றதுமே அந்நூலின் ஒரு பக்கத்தை நுணுகிநுணுகி நகல் எடுத்தேன். பின்னர் உடனே அந்தப் பக்கத்தையே மீண்டும் நகல் எடுத்தேன்.மீண்டும் ஒருமுறை நகல் எடுத்தேன். மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். மூன்று வெவ்வேறு பிரதிகள்.

மிகநுட்பமான மாறுதல்கள்தான். ஆனால் வாசித்துச் செல்கையில் ஒரு வார்த்தையின் அர்த்தம் மாறுவது விசையுடன் மலையிலிருந்து கீழிறங்கும் ஓடை ஒரு பாறையில் முட்டுவதுபோல. திசையும் விசையும் முழுமையாகவே மாறிவிடும்.

இன்னொரு சமயம் என்றால் எனக்கு பொறுமை சிதறியிருக்கும். ஆனால் அப்போது முன்னரே அப்படி என்று தெரிந்திருந்தமையால் அது ஒரு உற்சாகமான விளையாட்டாக மாறியது. ஒரே பக்கத்தை மீண்டும் மீண்டும் எழுதி அவற்றை ஒப்பிட்டு அவை நுட்பமாக மாறியிருக்கும் விந்தையிலேயே திளைத்துக்கொண்டிருந்தேன்

அன்று மேலே செல்லும்போது என் மனம் மலர்ந்திருந்தது. முகம் புன்னகையில் பொலிந்திருக்க வேண்டும். ஆனால் பாட் எதையுமே கவனிக்கவில்லை. அவன் மேலே சென்றதும் என்னிடம் “இந்த பாதைகளில்தான் ஏதோ உள்ளது” என்றான்

“என்ன சொல்கிறாய்?”என்றேன்

“இவர்கள் அந்த புத்தகத்தை நாள்தோறும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்”

“என்ன உளறுகிறாய்? இதோபார், இவை ஒரேநாளில் தொடர்ச்சியாக நான் எழுதியெடுத்த அறுபது பிரதிகள்…அறுபதும் வேறுவேறு”’

ஆனால் அவனிடம் எந்த தர்க்கமும் இருப்பதுபோல தெரியவில்லை. “நாம் கீழே செல்லும்பாதையை ஏன் அவர்கள் அத்தனை விசித்திரமாக வைத்திருக்கிறார்கள்?” என்று இன்னொரு கோணத்தில் பேசிச் சென்றான்

“அந்த புத்தகத்தை பாதுகாப்பதற்காக” என்றேன்

“அந்த புத்தகத்தை அங்கிருந்து வெளியே கொண்டுவந்து பார்க்கவேண்டும். அந்த அறையில்தான் ஏதோ இருக்கிறது. இங்கே பகல்வெளிச்சத்தில் பார்த்தால் அது ஒரு சாதாரணமாகக் கூட தெரியலாம். அந்த இடமும் அங்கே செல்லும் பாதையும் நம்மை சுழற்றியடிக்கின்றன”

“இந்த மாயங்கள் வெறும் தொழில்நுட்பங்கள்”என்று நான் சொன்னேன். “மேலே குமிழிகளை திருகும்போதே இங்கே ஒரு வழி அமைந்துவிடுகிறது. அதன் வழியாக மட்டுமே கீழே வரமுடியும். ஆனால் மேலே செல்லும்போது எல்லா வழிகளும் திறந்திருக்கின்றன. அவ்வளவுதான்”

“அத்தனை எளிதானது அல்ல” என்றான்

“சரி, இன்னும் கொஞ்சம் சிக்கலாக ஏதாவது இருக்கலாம். அதை அறிந்து நாம் என்ன செய்யப்போகிறோம்?”

“நான் அதை மேலே கொண்டுவரப்போகிறேன்”

“அந்த புத்தகத்தை உள்ளே வைத்து பெட்டியை மூடினால்தான் மேலே வரும் வாசல்கள் திறக்கும் என நினைக்கிறேன்” என்று நான் சொன்னேன்.

“நான் முயன்றுபார்க்கப் போகிறேன்”

“இதோபார், நமக்கு பல வாய்ப்புகள் இல்லை. நீ அந்த புத்தகத்தை உள்ளே வைக்காமல் வெளியே வர முயன்றால் பாதை மூடிவிடும். நாம் சிக்கிக்கொள்வோம்”

“ஆம், ஆனால் ஏதாவது வழி கண்டுபிடித்தாகவேண்டும்” என்றான்

“உளறாதே” என்றேன். நான் வேறொரு மனநிலையில் இருந்தேன். அவனுடைய அந்த கொந்தளிப்பு எனக்கு எரிச்சலூட்டியது

“அந்த நூலில் உண்மையாகவே இருப்பது என்ன?யோசித்துப் பார்த்தாயா? அந்த நூல் இங்கே திபெத்தில் ஒரு மிகப்பெரிய அறிவியக்கத்தை உருவாக்கியிருக்கிறது. நேற்றெல்லாம் அதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். திபெத்திய நூலகங்களில் இந்நூலின் நகல்கள் எத்தனை இருக்கின்றன என்று என் நினைவிலிருந்தே தொகுத்துப் பார்த்தேன். எழுபதுக்கும் மேல். அப்படியென்றால் ஆயிரம் புத்தகங்களாவது இருக்கும். மேலும் பல ஆயிரங்கள் இருக்கலாம்…”

“அவை ஆயிரம் தனி நூல்கள். ஆயிரம் கருத்துநிலைகள், ஆயிரம் தரிசனஙகள். அவை ஒவ்வொன்றுக்கும் உரைகளும் விளக்கங்களும் எழுதப்பட்டன. அவற்றுக்கு வழிநூல்கள் எழுதப்பட்டன. அவை ஒன்றோடொன்று மோதின, ஒன்றுடன் ஒன்று இணைந்தன. அவ்வாறு மேலும் பல்லாயிர கருத்துக்களையும் தரிசனங்களையும் உருவாக்கின. இந்த ஆயிரத்துநாநூறு ஆண்டுகளில் அவை எத்தனை ஆயிரம் நூல்களாக மாறியிருக்கும்!”

“மிகமிகப் பிரம்மாண்டமான அறிவியக்கம் அது. அது திபெத்திலிருந்து எழுந்து இன்று உலகமெங்கும் சென்றுகொண்டிருக்கிறது. இன்று இலங்கையிலும் பர்மாவிலும் தாய்லாந்திலும் உள்ள தேரவாதத்திலும், ஜப்பானின் ஜென்பௌத்ததிலும் எல்லாம்கூட திபெத்திய வஜ்ராயனத்தின் செல்வாக்கு உள்ளது. அதாவது இந்த ஒருநூலில் இருந்து உலகம் எங்கும் சென்றுகொண்டிருக்கிறது நம்மால் அறியமுடியாத ஏதோ ஒன்று!”

“இத்தனை பிரதிகளை உருவாக்கும் அது உண்மையில் என்ன? அதை அறிந்தே ஆகவேண்டும். உலகையே வடிவமைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை உலகில் எவருமே அறியமுடியாது என்றால் மனிதமூளைக்கு என்ன அர்த்தம்? மனிதன் என்பதற்குத்தான் என்ன அர்த்தம்?” பாட் மூச்சுவாங்க பேசினான்

“இதை விடவே முடியாது என்னால். நான் அந்நூலை அங்கிருந்து வெளியே கொண்டுவருவேன். அதை பகல்வெளிச்சத்தில் வைத்துப் பார்ப்பேன். சரியான நகல் ஒன்றை எடுப்பேன். அதை கொண்டுசென்று லாஸாவின் பெரிய மடாலயத்தின் மையக்கோயிலில் வைப்பேன். இவ்வளவுதான் என்பேன். இந்த உண்மையில் இருந்து எது முளைக்கிறதோ அதுபோதும் மனிதனுக்கு. முடிவில்லாத மாயையில் இருந்து உருவாகும் எதுவும் தேவையில்லை”

“ஒருவேளை இந்த நூலின் உண்மைவடிவம் வெளிவந்தால் அந்த அறிவியக்கம் அப்படியே நிலைத்துவ்டக்கூடும்.ஆயிரக்கணக்கான நூல்கள் அப்படியே பொருளிழந்து காலத்தில் மறைந்துவிடும். ஒரு யுகமே முடிவுக்கு வந்துவிடும். ஆம், அப்படித்தான் நடக்கும்.ஆனால் அதுதான் இயல்பானது. ஏனென்றால் வரவிருப்பது அறிவியலின் யுகம்” பாட் சொன்னான்.

“நான் இந்த நூலின் உண்மைவடிவை எழுதிஎடுத்தால் அதை கொண்டுசென்று மாஸ்கோவின் அருங்காட்சியகத்தில் வைப்பேன். அங்கேதான் இருக்கவேண்டும் இது. இதனருகே இதைப்பார்த்து எழுதப்பட்ட பல்லாயிரம் நகல்களும் நகல்களின் நகல்களும் அவற்றின் விளக்கங்களும் வழிநூல்களும் மறுப்புநூல்களும் தொகுப்பு நூல்களும் வந்து குவியும். அனைத்தையும் அப்படியே அருங்காட்சியகத்தில் அடுக்கி வைத்துவிடவேண்டும்”.

“அவற்றில் இருந்து எழவிருக்கும் நவீன மனிதன் பெறவிருப்பது ஒன்றை மட்டும்தான். சென்றயுகம் எப்படி விந்தையான மாயைகளால் கட்டப்பட்டது என்னும் செய்தி. மனிதனின் அறிதல்குறைபாடுகளாலேயே அந்த மாயைகள் உருவாயின. அந்த மாயைகளை கற்பனையால் பெருக்கிப்பெருக்கி நுரையாலான மலைகளை உருவாக்கிக்கொண்டார்கள். அவற்றின்மேல் தங்கள் நகரங்களையே அமைத்தார்கள். வருந்தலைமுறை அதைக் கண்டு புன்னகையுடன் கடந்துசெல்லும். அப்படித்தான் நிகழும், அது மாற்றமுடியாத விதி. அதை நான் செய்தாகவேண்டும்”.

அவன் இரவில் பேசிக்கொண்டே இருந்தான். காய்ச்சல் கண்டவன் போல. சித்தம் பிறழ்ந்தவன்போல. ஆனால் நான் என் நெஞ்சுக்குள் ஊறிய இனிய கற்பனைகளில் திளைத்துக்கொண்டிருந்தேன். முடிவில்லாமல் ஆடும் ஒரு விளையாட்டை நான் கண்டுகொண்டேனா என்ன?

மறுநாள் நான் அந்த பக்கத்தை மீண்டும் மீண்டும் நகல் செய்தேன். அவற்றை ஒப்பிட்டேன். அவற்றிலிருந்த வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் குறித்தேன். அதில் ஏதாவது ஒத்திசைவோ வடிவ ஒருமையோ தெரிகிறதா என்று பார்த்தேன்.மீண்டும் மீண்டும் அதைச் செய்தேன். எதுவோ தென்பட்டது, மறைந்துகொண்டது

அன்று திரும்பும்போது நான் ததும்பிக்கொண்டிருந்தேன். என் விரல்நுனிகளில் குருதி வந்து முட்டி நின்றது. நான் வேறொரு வழியில் அந்நூலை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். அந்நூலின் அசல்வடிவம் என்ற கேள்வியே பொருளற்றது. அது உருவாக்கும் மாயத்தின் விதிகளும் ஒழுங்கும் என்ன என்று அறிந்தால்போதும், அந்நூலை அறிந்துவிடலாம்.

இந்நகல்கள் அனைத்திலும் ஓர் ஒழுங்கு உள்ளது. அதை என்னால் உணரமுடிகிறது, ஆனால் அதை தொகுத்து வகுத்துக்கொள்ளமுடியவில்லை. ஆனால் முடியும், அதற்கான வாய்ப்பு தெரிகிறது. எனக்குத்தேவை மேலும் மேலும் நகல்கள். ஆயிரக்கணக்கானவை. மாதிரிவடிவங்கள் பெருகப்பெருகத்தான் பொதுத்தன்மைகளும் விதிகளும் துலங்கி வரும். இது ஒரு புள்ளிவிவர விளையாட்டு மட்டுமே.

அறைக்குச் சென்றபின் நான் என் காகிதங்களை ஒப்பிட்டு ஒரு பட்டியலிடத் தொடங்கினேன். பட்டியலை அட்டவணையாக ஆக்கவேண்டும். அட்டவணையிலிருந்து தேற்றங்கள்

பாட் புலம்பிக்கொண்டே இருந்தான். “அந்த பாதையின் புதிரை உடைக்கமுடியாது. அது எப்படி செல்லும்போது சிக்கலாக மீள்வதற்கு அத்தனை எளிதாக இருக்கிறது? நான் அந்தப்பேழையை வெறுமே மூடிவிட்டு வெளியேற முடியுமா என்று பார்த்தேன். இல்லை. அந்த புத்தகத்தை உள்ளே வைத்தால் மட்டும்தான் அந்தப்பேழையை மூடமுடியும். அல்லது அந்தப் புத்தகத்தின் அதே அளவுள்ள ஒரு பொருளை செய்யவேண்டும்”

“அல்லது அந்த அறையிலிருந்து வெளியேறும் வழி உண்டா? அது பிலம். பிலங்கள் எப்போதுமே மண்ணுக்குள் மலைக்குள் அமைந்திருக்கும் மிகப்பெரிய விரிசல்கள். அவற்றில் முன்பு உப்புக்கள் இருந்திருக்கும். பனியுருகிய நீரால் அவை கரைந்து அகன்றிருக்கும். அந்த உப்பு சென்ற பாதை அங்கே இருக்கும். அங்கிருந்து வெளியே செல்ல வழி இல்லாமலிருக்காது”

திடீரென்று ஒன்று தோன்றியது, அவன் வெளியேறுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான். நான் உள்ளே செல்வதைப்பற்றிப் எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

 

முக்தா சொன்னார். மறுநாள் இருவரும் இருவேறு நிலைகளில் அந்த நூல் இருந்த அறைக்குச் சென்றோம். அது ஒரு சிலந்திபோல அந்த பாதாள அறையில் இருந்து வலைபின்னி எங்களைச் சிக்கவைத்திருந்தது. ஆனால் நான் மகிழ்ச்சியுடன் அதை நோக்கிச் சென்றேன், தேன்நாடிச்செல்லும் தேனீ போல. அந்த நூலை ஆவலுடன் எடுத்து அந்த பக்கத்தை பிரித்து நகல் எடுத்தேன்.

அதை மீண்டும் மீண்டும் வெறியுடன் பிரதிசெய்துகொண்டே இருந்தேன். வெவ்வேறு வகையில். கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக. ஒற்றை எழுத்தை விட்டு விட்டு சொற்களை எழுதி முடித்தபின் அவ்வெழுத்துக்களை தனியாக எழுதிச் சேர்ந்தேன். ஒவ்வொன்றும் வேறுவேறு பிரதிகள். பின்னர் அவன் வந்து அமர்ந்து நகல்செய்யும்போது நான் அங்கேயே அமர்ந்து என் பிரதிகளை ஒப்பிட்டு பட்டியலிட்டு அட்டவணையிட்டேன். அட்டவணையை வரைபடமாக ஆக்கினேன்.

நாள் செல்லச் செல்ல என் வெறி ஏறியது. என் அறைக்குள் அடுக்கடுக்காக தாள்கள். அவற்றை இரவெல்லாம் ஒப்பிட்டு பட்டியலிட்டு அட்டவணையாக்கி வரைபடமாக ஆக்கினேன். அவனை நான் மறந்தே போனேன் .அவனும் என்னிடம் பேசவில்லை.

நான் மிகவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. ஒவ்வொருநாள் இரவும் மிக மிக அணுக்கமாக சென்றுவிட்டேன் என்று உணர்ந்தேன். ஆனால் காலையில் அந்த தொலைவு கூடிவிட்டிருக்கும். புதிய சிக்கல்களும் பிறழ்வுகளும் பிறவழிகளும் கண்ணுக்குப் படும். அது என்னை மேலும் வெறிகொண்டவனாக ஆக்கும்.

அந்த நகல்கள் உருவாகும் சூத்திரத்தை உருவாக்கிவிட்டால் அந்நூலே தேவையில்லை. அந்தச் சூத்திரத்தின்படி எந்த நூலையும் அவ்வண்ணம் முடிவிலாது வாசிக்கமுடியும். உலகிலுள்ள எல்லா நூல்களும் மூலநூல்கள் ஆகுமென்றால் நூல் என்பதற்கு என்ன பொருள்? நானே அந்த வேடிக்கை எண்ணத்தால் சிரித்துவிட்டேன்.

என் சிரிப்பொலி என்னை விழிப்புறச் செய்தது. நான் அந்த சுரங்க அறைக்குள் அமர்ந்து அட்டவணையிட்டுக்கொண்டிருந்தேன். பாட் அந்த நூலின்முன் அமர்ந்திருந்தான்.

அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தபோது திடுக்கிட்டேன். அவன் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

“என்ன செய்கிறாய்?” என்று மெல்ல கேட்டேன்

அவன் விசும்பி அழுதபடி தலைகுனிந்தான்

“நகல் எடுக்கவில்லையா?”

“என்ன பயன்? இதை நகலெடுக்கவே முடியாதென்றால் நகலெடுத்து என்ன செய்ய? என்னுள் இருப்பதையே நான் எழுதிக்கொள்வேன் என்றால் இது எதற்காக?”

என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை

“இந்த சபிக்கப்பட்ட நூல் எனை கேலிசெய்கிறது. என்னை பைத்தியமாக ஆக்குகிறது”

நான் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுடைய அந்த உணர்வுகள் முற்றிலும் உண்மையானவை. ஆனால் அந்த உணர்வுகளுடன் என்னால் இசைய முடியவில்லை. ஏன் அவன் அதை அத்தனை தீவிரமாக எடுத்துக்கொள்கிறான்

“பாட் ஏன் நீ இதை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது?”என்றேன். என்னைப்பார், நான் இதை ஒரு ஆடலாக மாற்றிக்கொண்டுவிட்டே

“விளையாட்டா? விளையாட்டா?” என்றபடி அவன் எழுந்து என்னை நோக்கி வந்தான். “விளையாட்டு என்றா சொல்கிறாய்? எது விளையாட்டு? உலகமெங்கும் பரந்திருக்கும் ஒரு மாபெரும் அறிவியக்கம் அடிப்படையில் ஒன்றுமில்லை என்றா? அறியமுடியாமையையே அறிவென்று ஆக்கி நிறைத்து வைத்திருக்கிறார்கள். அது விளையாட்டா என்ன? எத்தனை ஆயிரம்பேர் இதன்பொருட்டு வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். எத்தனை ஆயிரம்பேர் இதற்காக வாழ்க்கையையே தவமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்”

அவன் என்னை தாக்கிவிடுவான் என்று தோன்றியது.

“இது ஒரு தீயதெய்வம். மனிதனுடன் விளையாடுவதற்காக மண்ணின் ஆழத்தில் இருந்து எழுந்து வந்தது. இந்த ரகசியக்குகைக்குள் இருந்துகொண்டு உலகை ஆட்டுவிக்கிறது … இது” அவன் சட்டென்று எட்டி அந்த புத்தகத்தை உதைத்தான். அது அப்பால் சென்றுவிழுந்தது

என் உள்ளத்தில் அந்த உதை விழுந்ததுபோல உணர்ந்தேன்

“இது ஒரு நஞ்சு. உலகம் முழுக்க இது பரவிக்கொண்டிருக்கிறது. இது உலகையே பைத்தியக்காரவிடுதியாக ஆக்கிவிடும்… இது எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை. எந்த வழியையும் காட்டுவதில்லை. நமது பதிலே சரி என நம்மிடம் சொல்கிறது. ஒவ்வொருவரும் நம்பும் வழியே சரியென கேட்கும் ஒவ்வொருவருக்கும் சொல்கிறது..வெறும் ஆணவங்களை மோதவிட்டு பொய்யை பிரம்மாண்டமாக கட்டி எழுப்பியிருக்கிறது”

“பாட், ஒருவேளை எல்லா மதங்களும் இப்படித்தானோ?” என்றேன்

அவன் திகைத்தான்

“எல்லா மூலநூல்களும் இப்படித்தானா?”என்றேன்

அவன் தளர்ந்து அப்படியே அமர்ந்துகொண்டான்

“கார்ல் மார்க்ஸின் மூலநூலும்கூட? என்றேன்

அவன் தலையை அசைத்துக்கொண்டான். பின் தன் மொட்டைத்தலையில் கையால் தட்டினான்

“இது ஒன்றுதான் மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி போல தோன்றுகிறது. ஒவ்வொருவரும் அவரவருக்குரியதை சொல்ல அவற்றுக்கிடையே ஓர் ஒத்திசைவாக, சமரசப்புள்ளியாக, மையமாக ஏதோ ஒன்று திரண்டு வந்தால் அதுதான் மெய்மை போல” என்றேன்

“போதும்” என்று அவன் சொன்னான். அவன் உடல் தூக்கி தூக்கி போடுவதை கண்டேன்

பிறகு அவன் நிமிர்ந்தபோது கண்களில் நீர் படிந்திருந்தது. “அப்படியென்றால் எதற்காக இத்தனை தேடல்? இத்தனை உழைப்பு? இவ்வளவு கூரிய ஆராய்ச்சி?” என்றான்

“நம்மால் வெறும்வெளியில் ஒரு நூலை உருவாக்கிக் கொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். முன்பே ஒரு நூல் இருக்கவேண்டும். அதை நாம் கனவுகாணவேண்டும். அதைத்தேடி வரவேண்டும். அரியபொக்கிஷம் போல அடையவேண்டும். அதை அணுவணுவாக நகல்செய்தோம் என்று நாம் நம்பவேண்டும். அதை வழிபடவேண்டும். அதைத்தான் நாம் உலகுக்குச் சொல்லமுடியும்…” என்று நான் சொன்னேன்

“எண்ணிப்பார், நாம் இதை ஒப்புநோக்காமல் அப்படியே கொண்டுசென்றிருந்தால் உலகுக்கு இதை எப்படி அளித்திருப்போம்? மாற்றமே இல்லாத சொல் என்றுதானே? அழிவில்லாத மூதாதை ஞானம் என்றுதானே?” என்றேன் “அப்படி ஐயமே இல்லாமல் ஒன்றைச் சொல்பவர்கள்தான் பிறர்மேல் செல்வாக்கு செலுத்துகிறார்கள். அவர்கள்தான் சிந்தனை மரபை உருவாக்குகிறார்கள். தான் சொல்வது வழிவழியாக வந்தது என்றும் என்றுமுள்ள மெய்மை என்றும் அவர்கள் உண்மையிலேயே நம்பாமல் அப்படிச் சொல்லமுடியாது”

“நாம் ஒப்புநோக்கியது தவறா?” என்றான் பாட்

“அப்படித்தான் தோன்றுகிறது”

“அறிவு என்பது பிழையாகவும் அறியாமை ஞானமாகவும் எப்படி ஆகிறது?” பாட் கேட்டான்

நான் அதற்கு பதில் சொல்லவில்லை

“நான் கொந்தளிப்பது இந்த மாயத்தைப் பார்த்துத்தான்…” சட்டென்று அவன் அந்த நூலை எடுத்தான்.  “இதை நான் அழிக்க முடியும்… இப்படி ஒன்று இல்லாமலேயே போகட்டும்… இதை…” அவன் அங்குமிங்கும் பார்த்து அதை தூக்கியபடி மெழுகுவத்தியை நோக்கிச் சென்றான்

“இது இல்லாமலானால் இதை நோக்கி எழுதப்பட்ட எல்லா நகல்களும் உண்மையாக ஆகிவிடும்” என்றேன்

அவன் கை தளர்ந்தது

“இதை நம்மால் அழிக்கவே முடியாது. நாம் இங்கே எதையேனும் அறிந்தோம் என்றால் அதற்கு இந்த நூல்தானே சான்று” என்றேன்

அவன் அதை அப்படியே வைத்துவிட்டு அமர்ந்து கொண்டு “உண்மைதான்”என்று பெருமூச்சுவிட்டான்

நாங்கள் அந்த அறையிலேயே அமர்ந்திருந்தோம். பின்னர் அந்நூலை பேழைக்குள் வைத்துவிட்டு மேலே சென்றோம்

வெளியேறி இடைநாழியில் நடக்கும்போது பாட் சட்டென்று சிரித்தான். “திபெத்திய மெய்ஞானம் அழியவே அழியாது” என்றான்

“ஏன்?”என்றேன்

“ஏனென்றால் அதற்கு மையமே இல்லை. அதன் எல்லா புள்ளிகளும் மையங்கள்தான்”

நான் புன்னகைத்தேன்

“மூலமே பொய் என்றால் எல்லா நகல்களும் உண்மைகள்தானே? பிழைகள் என்றும் திரிபுகள் என்றும் எதுவுமே இல்லைதானே?”

“ஆமாம்” என்றேன்

அவன் மீண்டும் சிரித்தான். ஏனோ அவனுக்குச் சிரிப்பு பொங்கிப்பொங்கி வந்துகொண்டிருந்தது. அறைக்குச் செல்லும்போது அவனிடமிருந்து சீறலோசைகள் போல சிரிப்பு எழுந்துகொண்டிருந்தது

அன்று அவன் மெத்தையில் அமர்ந்தபடி “நான் நாளை கிளம்பிச் செல்கிறேன்” என்றான்.

“ஏன்?” என்று திரும்பி பார்த்தேன்

“அவ்வளவுதான்… இதற்கு அர்த்தமே இல்லை”

“நீ முடித்துவிட்டாயா?”

“சொன்னேனே ஒரே ஒரு வரி… அதை எழுதிவிட்டு மேலே வந்துவிடுவேன்… அதுவும் எனக்காக இல்லை, என்னை அனுப்பியவர்களுக்காக. முட்டாள்கள், அவ்ர்கள் எனக்குச் செலவுசெய்தது வீண். ஆனால் அவர்களுக்கு அது தெரியக்கூடாது”

“பாட் நீ ஏன் எனக்கு உதவக்கூடாது? இதோபார், நான் மிகமிக முக்கியமான சிலவற்றை கண்டடைந்திருக்கிறேன்.இந்த நூலின் ரகசியமே எனக்கு தெரியும். இன்னும் சில முடிவுகள் தெரிந்தால்போதும், இதை ஒரு சூத்திரமாகவே ஆக்கிக்கொள்ள முடியும்”

அவன் என்னை பார்த்துக்கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தான்

“இந்த நூல் உருவாக்கும் பிரதிகளுக்கு இடையே உள்ள பொதுத்தன்மை என்ன என்று பார்த்தேன். அந்த பொதுத்தன்மைகளை குறுக்கிக் குறுக்கி கொண்டுவந்து ஒரு பொதுவிதியாக ஆக்கமுடியுமா என்று பார்க்கிறேன். இதோ எட்டு விதிகள் இருக்கின்றன. எட்டும் நிரூபிக்கப்பட்டவை. ஆனால் எட்டுவிதிகள் இருக்கமுடியாது. எட்டையும் இணைக்கும் பொதுவான விதி என ஒன்று வேண்டும். அதை உருவாக்கிவிட்டோம் என்றால் இந்த நூலை நாம் வென்றுவிடுவோம்” என்றேன்

அவனருகே அந்தக் காகிதங்களை பரப்பி உத்வேகத்துடன் நான் சொன்னேன்“இதுவரை இந்த நூல் அனைவரையும் தோற்கடித்திருக்கிறது. நாம் இதை வெல்லமுடியும். நீ எனக்கு உதவினால்போதும். இன்னும் சில நாட்கள்…உண்மையில் மிகமிக நெருங்கிவிட்டேன். கடைசிப்படி…”

அவன் என்னைக் கூர்ந்து பார்த்தபடி “இதை நீ எத்தனை நாட்களாகச் செய்கிறாய்?”என்றான்

“பத்து நாட்களாக, உண்மையில் பதினாறு…”

“ஒரே பக்கத்தை?”

“ஆமாம், அதை உதாரணமாக எடுத்துக்கொண்டு…”

“உன்னை அந்தப் பக்கத்தில் அது சிறையிட்டிருக்கிறது”

நான் எரிச்சலுடன் “என்ன சொல்கிறாய்?”என்றேன்

“நீ அந்த ஒரு பக்கத்தில் சிக்கிக் கொண்டாய். அதிலிருந்து நீ விடுபடவே முடியாது”

“உளறாதே”

“நீ நகலெடுத்தவை அந்த புத்தகத்தின் சாத்தியங்களை காட்டுகின்றனவா உன் வாசிப்பின் சாத்தியங்களையா? மூட், அது உன்னுடைய சாத்தியங்கள் மட்டும்தானே?

“வாயை மூடு!” என்று கூவியபடி நான் எழுந்தேன். “வாயை மூடு…. உன் மண்டையை அறைந்து உடைப்பேன்”

அவன் என்னை பரிதாபத்துடன் பார்த்தான். “நான் உன்னை பலநாட்களாக பார்த்துவருகிறேன். நீ கிறுக்கன்போல ஆகிவிட்டாய். தனக்குத்தானே பேசிக்கொள்கிறாய். சிரிக்கிறாய், கொந்தளிக்கிறாய்… உன்னைப் பார்க்கவே பயமாக இருக்கிறது”

“நீதான் கிறுக்கன். நீதான் சிக்கிக்கொண்டிருக்கிறாய். அறிவுகெட்டவனே, நீ திரும்பிப்போக மாட்டாய்” என்று நான் கூவினேன்.

பின்னர் மூச்சிரைக்க அமர்ந்துகொண்டேன். தலையை கையால் தாங்கியபடி மேஜைமேல் கவிழ்ந்தேன்.என்னையறியாமலேயே கண்ணீர் உதிரத்தொடங்கியது. என் உடலே பனிக்கட்டி போல உருகி சொட்டிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்

நெடுநேரம் கழித்து அப்படியே படுத்துக்கொண்டேன். அவன் அதுவரை என்னை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் மெல்ல “மூட்” என்றான்

“ம்” என்றேன்

“இது நமக்கு வேண்டாம். இங்கிருந்து சென்றுவிடுவோம்” என்று பாட் சொன்னான். “உண்மையில் நாம் சிக்கிக்கொண்டிருப்பது இந்த நூலில் அல்ல. நாம் நம் அகத்தில்தான் சிக்கிக்கொள்கிறோம். இந்த நூல் ஒரு குறியீடு. நம் நமது நம்பிக்கைகளிலும் ஆணவங்களிலும் அலைக்கழிகிறோம்”

நான் “ஆமாம்”என்றேன்

“ஆனால் இந்த இடம் ஆபத்தானது. மனிதனின் அகத்தை பயன்படுத்திக்கொள்ளும் எந்தப்பொருளும் கொலைக்கருவியாகக் கூடும். உதாரணமாக, தன் நினைவின் மீதான நம்பிக்கை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பது. ஆனால் ஒரு சுழல்வழிப்பாதை அந்நம்பிக்கையை கொண்டே அவனைக் கொன்றுவிடும்… இந்த இடமும் இந்த புத்தகமும் அப்படிப்பட்டவை… நாம் கிளம்பிவிடுவோம்”

“ஆமாம்”என்றேன்

“நல்லிரவு” என்றான்

நான் பெருமூச்சுடன் “நல்லிரவு என்று சொன்னேன்.

அவனும் பெருமூச்சுவிட்டான். திரும்பிப் படுத்துக்கொண்டு ஒரு சிறிய படிகமணிமாலையை உருட்டியபடி மணிபத்மநாமத்தை சொன்னான். பின்னர் அவனுடைய தூக்கத்தின் ஓசை கேட்டது.

நான் தூங்கிவிட்டேன். உடற்களைப்பு தீர தூங்கியபின் கனவு வந்தது. அந்த பொன்னிறப் புத்தகம். அதை புரட்டிப்புரட்டி அதன் பொன்னெழுத்துக்களை வாசித்துக்கொண்டே சென்றேன். என் அகம் பரபரத்தது. நான் அந்த விதியை கண்டுகொண்டேன்

உடனே விழித்துக்கொண்டேன். அந்த விதியை கண்டுகொண்டேன் என்பதுதான் நினைவில் இருந்தது, அந்த விதி என்ன? எழுந்து சென்று என் காகிதங்களை எடுத்து அட்டவணைகளையும் வரைபடங்களையும் ஆராயலானேன். அந்த விதியை மிகமிக அணுக்கமாகக் கண்டேன். கனவில் வந்து என்னைத் தொட்டுச் சென்றது. அது என் அருகேதான் நின்றிருக்கிறது

ஒருவேளை ஒரே ஒரு அடிதான் தேவைபோலும். ஒரு சிறிய திறப்பு. பெரும்பாலான கண்டுபிடிப்புகளை இந்த நேரத்தில்தான் கைவிடுகிறார்கள். உளம் சோர்ந்துவிடுகிறார்கள். சலிப்புற்றுவிடுகிறார்கள். நம்பிக்கை இழக்கிறார்கள். அந்நம்பிக்கையின்மையை உருவாக்குபவர்கள் அப்போது தேடிவருவார்கள். அதற்குரிய செய்திகளே காதில் விழும். பிரபஞ்சநியதி தன் கடைசி சோதனையை முன்வைக்கிறது. அதையும் தாண்டுபவர்களுக்குரியதே உண்மை. உண்மையின் இறுதித்திரை ரத்தத்தால் ஆனது என்று ஒரு பௌத்த மூதுரை உண்டு.

இவன் என்னை பின்னிழுக்க வந்தவன். இவன் என்னுடன் வந்ததே இதற்காகத்தான். இவனுடைய சோர்வும் சலிப்பும் என்னை சிகரத்திலிருந்து கீழே உருட்டிவிடும்பொருட்டு. இவனைப் பொருட்படுத்த மாட்டேன். இவன் கிளம்பிச் செல்லட்டும், நான் கிளம்பமாட்டேன்

 

முக்தா சொனனார். அந்த இரவில் நான் நீண்ட ஆழமான தூக்கத்தை அடைந்தேன். காலையில் கையில் அந்த தங்கப்புத்தகத்துடன் லாமா டென்ஸின் க்யாட்ஸோ வந்து என்னை தட்டி எழுப்பினார்.  “இதோ நீ தேடுவது” என ஒருவரியைச் சுட்டிக்காட்டினார். அந்த பக்கத்தில் அந்த விதி ஈரடிகளாக எழுதப்பட்டிருந்தது. ஆ என்றபடி எழுந்துகொண்டேன்

நியிமா என் முன் நின்றிருந்தார். “பாட் எங்கே?”என்றார்

நான் எழுந்து அமர்ந்தேன். “பாட்? அவன் இங்கேதான் இருந்தான்…” என்றேன்

“நீ நெடுநேரம் விழித்தெழவில்லை என்பதனால் அழைக்கவந்தேன். நீ மட்டும்தான் அறையில் இருக்கிறாய்… அவனைக் காணவில்லை”

நான் “அவன் இங்குதான் இருப்பான்… எங்காவது” என்றேன்

“இது மிகச்சிறிய மடாலயம்… இங்கெ ஒருவர் மறைந்துவிடமுடியாது”

நான் தேடுகிறேன் என்று சொல்லி மேலங்கியை போட்டுக்கொண்டேன். பாட்டை தேடிக்கொண்டு அறைகள் தோறும் சென்றேன்

ஒருவேளை கிளம்பிச் சென்றிருப்பானா? நான் முற்றத்தை சென்றுபார்த்தேன். எங்கள் கழுதைகள் கொட்டிலில்தான் இருந்தன.

ஷெரிங் என் பின்னால் வந்து நின்று “நடந்துகூட சென்றிருக்க முடியாது. மென்பொருக்குப் பனியில் காலடிகளே இல்லை”என்றார்

நான் உள்ளே சென்றேன். பதற்றம் கொள்ளத் தொடங்கியிருந்தேன். நியிமா விரைந்த சிற்றடிகளுடன் எதிரே வந்தார். “தலைமை லாமா, அவன் அந்த புத்தகத்தை தேடிச் சென்றிருக்கலாம் என்கிறார்” என்றார்

“அவன் இன்று கிளம்புவதாக இருந்தான். ஒரு வரி மட்டுமே மிச்சம் வைத்திருந்தான்”

அவர் விரைந்து செல்ல நான் அவருடன் சென்றபடி “நானும் வரலாமா?”என்றேன்

“வா”என்றார்

அந்த அறையை திறந்தார். அதன் நிலவறை வாசலின் குமிழிகளை இழுத்ததுமே நின்று என்னை பார்த்து “கீழே சென்றிருக்கிறான்” என்றார். “இந்தப்பூட்டு இரவில் ஒருமுறை திறக்கப்பட்டிருக்கிறது”

“எப்படித்தெரியும்?”

“இதன் குமிழிகளை இழுக்கும் கணக்கு ஒவ்வொருமுறை திறக்கும்போதும் மாறிக்கொண்டே இருக்கும்…நான் நேற்று திறந்தபிறகு இன்று திறப்பதற்குள் ஒன்று கூடியிருக்கிறது” அவர் தலைகுனிந்து எண்ணிக் கணக்கிட்டு குமிழிகளை தள்ளினார். அறுபத்துநான்குமுறை தள்ளியபோது அது உள்ளே திறந்துகொண்டது

குகைவழிப்பாதையில் இறங்கியபோது அவர் “மேலே திறப்பதற்கு ஏற்ப உள்ளே வழிகள் திறக்கும்… அதை தெரிந்துகொள்வது எளிதல்ல. அவன் நீண்டநாட்களாகவே இந்தக் கணக்கை போட்டிருக்கவேண்டும்”

நான் அச்சத்துடன் “அவன் அந்த புத்தகத்துடன் தப்பிச் சென்றிருக்கக்கூடும்” என்றேன்

“வாய்ப்பே இல்லை, அவன் இந்த மடாலயத்திலிருந்து வெளியே செல்லவில்லை”

“அவனுக்கு சில துணைவர்கள் இருக்கலாம்” என்றேன். “அவன் ருஷ்ய ஒற்றனாக இருக்கலாம்”

அவர் ஒன்றும் சொல்லவில்லை

அவர் வழிகளை தெரிவு செய்து கீழே சென்றார். ஒவ்வொரு அறையிலும் இருந்த காவல்தேவதைகளும் போதிசத்வர்களும் பேருருவம் கொண்டு உறுத்துப் பார்ப்பதாகத் தோன்றியது. அவர்கள் முன் நான் சிறுபூச்சியாக ஊர்ந்துகொண்டிருந்தேன். ஒரு காலடியில் அவர்கள் என்னை மண்ணோடு தேய்த்துவிடமுடியும்.

கீழே மைய அறைக்குள் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. “இங்கே வந்திருக்கிறார்” என்று நியிமா சொன்னார்

நான் அந்த பேழையைப் பார்த்தேன். அது திறந்திருந்தது. அந்த தங்கப்புத்தகம் உள்ளே இல்லை.

நியிமா “அவர் வெளியே போயிருக்க முடியாது” என்றார். அந்த அறையின் தரையை கூர்ந்து பார்த்தபடி சுற்றிவந்தார். பிறகு மறுபக்கம் தெரிந்த இருண்ட சிறிய பாறைவிரிசலைச் சுட்டிக்காட்டி “இந்தவழியாகச் சென்றிருக்கிறார்” என்றார்

அதன்வழியாகத்தான் உள்ளே காற்று வந்துகொண்டிருந்தது. அதற்குள் நுழையவேண்டும் என்றால் மண்டியிட்டு தவழ்ந்து போகவேண்டும்.

நியிமா குனிந்து நிலத்தோடு படுத்து “பாட்!” என்று கூப்பிட்டார். உள்ளே எங்கோ எதிரொலி முழங்கியது. நானும் அருகே படுத்து “பாட்!பாட்!”என்று கூவினேன். உள்ளே ஏராளமான குகைவழிப்பதைகள் இருக்கக்கூடும். அந்த குரல் ஏராளமான குரல்களாக மாறிச் சென்று மீண்டும் வந்து செல்வதை கேட்டேன். குகை ஓங்காரமிட்டுக்கொண்டே இருந்தது

“பாட்! பாட்!” என்று அழைத்துக்கொண்டே இருந்தோம். எந்த ஒலியும் கேட்கவில்லை

நியிமா “இதற்குள் சென்றால் மீளவே முடியாது. ஆயிரம் விரிசல்கள் என்றுதான் இந்த  குகைவழிக்கே பெயர்” என்றார்

“இதற்குள் முன்பு எவராவது போயிருக்கிறார்களா?”

அவர் ஒன்றும் சொல்லவில்லை. அந்த பேழையை அணுகி அதற்குள் இருந்த சிலகுமிழ்களை திருகி இழுத்து குறிப்பிட்டவைகையில் வைத்தபின் போகலாம் என்று கைகாட்டினார்

நான் சோர்ந்து ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து வெளியே வந்தேன். மேலே வந்து நின்றபோது கால்தளர்ந்து விழப்போய் சுவரை பிடித்துக்கொண்டேன்

செத்த உடல்போல ஆகிவிட்டிருந்தேன். என்னை உந்தி நீக்கி அறைக்குள் சென்றேன். அங்கே பாட்டின் பெட்டியும் தோல்பையும் ஆடைகளும் இருந்தன. படுக்கையில் படுத்துக்கொண்டு கண்களை மூடினேன். பாட் அந்த அறைக்குள் இருப்பதாக கற்பனைசெய்துகொண்டேன்

அவன் ஏன் அங்கே சென்றான்? எதற்காக அந்நூலை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றான்? நேற்றிரவு என்னிடம் அவன் பேசியது வேறு. அதன் பின் என்ன நடந்தது? அவன் கனவு கண்டிருக்கவேண்டும். ஆம், அக்கனவில் அந்த நூல் வந்திருக்கும். அது அவனை அழைத்திருக்கும்

நான் அழத்தொடங்கினேன். ஒரு சொல் இல்லாமல் ஏங்கி ஏங்கி அழுதுகொண்டே இருந்தேன். அழுந்தோறும் என் அகத்திலிருந்த வெறுமை கூடிக்கூடி வந்தது. நெடுநேரம் அழுதபின் அப்படியே தூங்கிவிட்டேன்.

அத்தனைபெரிய வெறுமையை உள்ளம் தாளமுடியாது, நான் தூங்கியது அதனால்தான். எடையுள்ளவற்றை இலைகள் நழுவவிடுவதுபோல உள்ளம் சுமைகளை விட்டுவிடுகிறது. வெறுமையே உள்ளம் கொள்ளும் சுமைகளில் பெரியது

நான் விழித்துக்கொண்டபோது என் அறைக்குள் காலை வெளிச்சம் நிறைந்திருந்தது. இரவில் கண்கூசும் விளக்குகள் எரிவதாகவே எனக்கு தோன்றியது. எழுந்து அமர்ந்தபோதுதான் அது காலை என தெரிந்தது. நான் முக்கால்பகலும் முழு இரவும் தூங்கியிருக்கிறேன் என்று தெரிந்தபோது திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன்

மிகநீண்டநேரத் தூக்கத்தால் என் உடல் வலித்துக் கொண்டிருந்தது. வாய் உலர்ந்து உதடுகள் ரப்பர் போலிருந்தன. கண்களும் முகமும் வீங்கியிருப்பது போல் தோன்ற கைகளால் தேய்த்துக் கசக்கிக் கொண்டேன். எழுந்து நின்றபோது தலைசுழன்றது. கால்கள் வீங்கியிருக்கின்றனவா?

என் கண்ணில் எதுவோ பட்டது. உள்ளம் அதிர்ந்து வயிற்றில் ஒரு சில்லிடல். அதன்பின்னரே அது என்ன என்று கண்டேன். பாட்டின் பெட்டி. அவனுடைய தோல்பை. துயரம் கடுங்குளிர்போல எல்லா திசைகளிலும் இருந்து வந்து சூழ்ந்துகொண்டது. மீண்டும் மெத்தையில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கிக் கொண்டேன்

நெடுநேரம் ஆகியிருக்கலாம். மெல்ல தூரத்திலிருந்து வரும் காற்றின் ஓசைபோல ஒர் எண்ணம். ஒருவேளை பாட் மீண்டு வந்திருக்கலாம். அல்லது அவன் தப்பிச்சென்ற செய்தியாவது வந்திருக்கலாம். ஏன் நம்பிக்கையை விடவேண்டும். வாய்ப்பிருக்கிறது, ஆம், வாய்ப்பிருக்கிறது…

நான் எழுந்து வராந்தா வழியாக ஓடினேன். சமையலறையில் நியிமா இருந்தார். அவருடன் ஷெரிங் சமையலுக்கு உதவிக்கொண்டிருந்தார். நான் பௌத்த வணக்கத்தைச் சொன்னேன். அவர் கண்கள் சுருங்க வழக்கம்போல சிரித்து என்னை வாழ்த்தினார்

“பாட்… பாட் என்ன ஆனான்?” என்றேன்

“அவன் அந்த வழியாகத்தான் சென்றிருப்பான்… அவன் மீளமுடியாது. அது மிக ஆழமான சிக்கலான பாதை”

“அதன் வழியாக போய்விடலாம் என்று எப்படி தோன்றியது அவனுக்கு?”

“அப்படி தோன்றலாம்… அங்கே குனிந்து பார்த்தால் சிலசமயம் வெளிச்சம்தெரியும்… அது மறுமுனை வாசலின் வெளிச்சம்போல தோன்றும். உண்மையல்ல அது. பனிப்பரப்பில் பட்டு தெரியும் வெளிச்சம்” என்றார் நியிமா

நான் தளர்ந்தேன். அவர் எனக்கு சூப்பை கோப்பையில் அள்ளி கரண்டி போட்டு அளித்தார் நான் அதை இரண்டுகைகளாலும் வாங்கிக்கொண்டு குடித்தேன்

சூப் என்னை தெளிவடையச் செய்தது. “நியிமா நான் கிளம்புகிறேன்” என்றேன்

அவர் புன்னகைத்து “நல்லது”என்றார்

“நான் லாமா யோண்டென் க்யாட்ஸோ அவர்களிடம் விடைபெறவேண்டும்” என்றேன்.

“நீங்கள் சென்று அவரைச் சந்திக்கலாம்… நாங்கள் இங்கே புகையிடுகிறோம். கீழே இடையர் கிராமத்தில் இருந்து வழிகாட்டி வருவார்”

நான் என் அறைக்குள் சென்று என் பைகளை கட்டினேன்.நகலெடுத்த அந்த நூலின் பக்கங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அருகே இன்னொரு தோல்பையில் பாட் எடுத்த நகல்கள்.

சற்றுநேரம் அவற்றை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த எண்ணமும் இல்லாமல் மனம் ஒழிந்துகிடந்தது. ஒருகணத்தில் ஏன் அப்படி பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்து துணுக்குற்றேன். அவற்றை அப்படியே ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு சென்று பின்பக்கம் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் பெரிய அடுப்பிற்குள் போட்டேன்.

அவை சட்டென்று பற்றிக்கொண்டு எரிந்தெழுந்து மறைவதைக் கண்டபோது என் உள்ளே நூற்றுக்கணக்கான சரடுகள் அறுந்தன. அப்போது நான் அடைந்த விடுதலையை முன்பு எப்போதுமே அறிந்ததில்லை. மேலும் சில கட்டைகளை எடுத்து வைத்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்தேன்.

என் பொதிகளை கொண்டுசென்று முற்றத்தில் வைத்தேன். யோண்டென் க்யாட்ஸோ அவர்களின் அறைக்கு சென்று வெளியே காத்திருந்தேன். அவரை நாம் அழைக்கக்கூடாது என்பது நெறி. பேசாமல் நிற்கவேண்டும், எவ்வளவுநேரமானாலும். அவரே நம்மை அழைப்பதுவரை.

சற்றுநேரத்தில் கதவு திறந்து அவர் உள்ளே வரும்படி அழைத்தார். நான் உள்ளே சென்று அவரை பணிந்து வணங்கினேன். அமரும்படிச் சொன்னார். மெத்தையிருக்கை மேல் அமர்ந்தேன். அவருடைய சிறிய மேஜைமேல் அந்த தங்கப்புத்தகம் இருந்தது

“இது…”என்றேன்

“கீழே ஓடையில் கிடைத்தது… இங்கிருந்து எது மறைந்தாலும் அங்கே வந்துவிடும்” என்றார் லாமா யோண்டென் க்யாட்ஸோ

நான் நெஞ்சு படபடக்க அவரை வெறுமே பார்த்திருந்தேன். என் எண்ணத்தை உணர்ந்தவராக “ஆனால் சிறியபொருட்கள் மட்டும்தான் கிடைக்கும்….உடல்கள் அல்ல” என்றார்

நான் விழிகளை தாழ்த்திக்கொண்டேன். பாட்டை மலையின் குடல்கள் செரித்துக்கொள்ள தொடங்கியிருக்கும் என்று தோன்றியது.

“நீ கிளம்புகிறாய் என்று சொன்னார்கள்”

“ஆம்”என்றேன்

அவர் தலையசைத்தார். அதே உணர்ச்சியில்லாத தலையாட்டல். எழுந்து வணங்கி விடைபெற்றுக்கொண்டேன்

முற்றத்தில் மென்மையான வெயில் நிறைந்து நின்றது. நேர்முன்னால் மலைமுடிகளின் சரிவுகள் கண்கூசும்படி ஒளிவிட்டன. பனிமுடிகள் மலைகளின் கூரியமுனைபோலிருந்தன. சிலசமயம் வெயிலொளி காலத்தையே மிளிர்வு கொள்ளச்செய்கிறது என்று தோன்றுமே, அத்தகைய தருணம்.

நியிமா  “வழிகாட்டி வந்துகொண்டிருக்கிறான்” என்று சுட்டிக்காட்டினார்

மிகக்கீழே ஒரு கழுதையில் ஒருவன் வந்துகொண்டிருந்தான். எறும்புபோல. அவனைப் பார்த்தபடி மடாலயத்தின் படிகளில் அமர்ந்திருந்தேன். துயரமில்லை, மகிழ்ச்சியில்லை, நிறைவுமில்லை, குறைவுமில்லை.

 

முக்தா சொன்னார். நான் மீண்டும் ட்ரா யேர்பா மடாலயத்தை வந்தடைந்தேன். அங்கே நான் திரும்பி வந்தது சிறிய வியப்பை ஏற்படுத்தியதை பிக்ஷுக்களின் முகங்களிலிருந்து உணர்ந்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் எதையும் கேட்கவில்லை. சூடான சூப் அருந்தி ஓய்வெடுத்தேன். அன்று முழுக்க மலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்

அன்றிரவு ஆழ்ந்து உறங்கினேன். காலை எழுந்ததும் முந்தையநாளின் தொடர்ச்சி என்பதுபோல வேலைசெய்யத் தொடங்கினேன். பாத்திரங்களைக் கழுவினேன்.மடாலயத்தை தூய்மைசெய்தேன்.விறகு வெட்டினேன். தண்ணீர் சுமந்தேன். அங்கிருந்தவர்கள் நான் சென்றுமீண்டதையே அறியாதவர்கள் போலிருந்தனர். இரண்டுநாட்களில் அதை மறந்தும்விட்டனர்

மூன்றுமாதங்களுக்குப் பின் ஒருநாள் பிக்ஷு வந்து என்னிடம் லாமா டென்ஸின் க்யாட்ஸோ என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். நான் அப்போது கூடத்தின் மென்மயிர்ப்பரப்பை பிரஷ்ஷால் சீவி தூசியை அகற்றிக்கொண்டிருந்தேன். கைகளை தட்டிவிட்டு அவருடன் சென்றேன்

லாமா டென்ஸின் க்யாட்ஸோ அவர்களைச் சந்திப்பதற்காக யேஷேவின் கோயிலுக்கு வெளியே காத்திருந்தபோது என்னுள் எண்ணம் என ஏதுமில்லை. அங்கே அவரைச் சந்திப்பதற்காக முன்பு காத்திருந்த நினைவுகூட. நான் முந்தைய வாழ்விலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தேன்

உள்ளே வரலாம் என மணியோசை எழுந்தது. நான் உள்ளே சென்றேன். லாமா டென்ஸின் க்யாட்ஸோ அவருடைய உயரமான பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு அப்பால் யேஷூதேவி கீழிருந்த மெழுகுவிளக்குகளின் ஒளியில் பொன்னொளி கொண்டிருந்தாள் அவள் நீண்ட கனவுமயங்கிய கண்கள் தழைந்து என்னை நோக்கின

“மீண்டும் குகையறைக்குச் செல்கிறாயா?”என்று லாமா டென்ஸின் க்யாட்ஸோ கேட்டார்

“ஆம்”என்று நான் சொன்னேன்

“ தியானநூல் உடனிருக்கிறது அல்லவா?”

“இருக்கிறது” என்றேன்

“அது நிலையானதா, உலகனைத்துக்கும் உரியதா?”

“ஆமாம்” என்றேன்

 

முக்தா சொன்னார். நான் அந்தக் குகைச்சிற்றறைக்குள் பன்னிரண்டு மாதங்கள் இருந்தேன். அங்கிருந்து கூட்டுப்புழு சிறகடித்து வெளிவருவதுபோல வெளிவந்தேன். அதன்பின் நான் என்னவானேன்? இப்படி வகுத்துக்கொள்கிறேன், எதையுமே அடையமுடியாதவனாக மாறினேன். ஆகவே எதையும் இழக்க இல்லாதவனாகவும் ஆனேன்.

குருவின் உரையை பிரதி எடுக்கும் வேலைகள் முடிந்து காகிதங்களை அடுக்கிக்கொண்டிருந்தார்கள். முக்தா எழுந்து பெரிய சால்வையை உடலைச் சுற்றிப் போட்டுக்கொண்டு சமையலறை நோக்கிச் செல்வதை பார்த்துக்கொண்டு நான் அமர்ந்திருந்தேன்

 

[நிறைவு]

தொடர்புடைய பதிவுகள்

விண் வரை- கடிதங்கள்

$
0
0

விண் வரை…

வெண்முரசும் தமிழும்

அன்புள்ள ஜெ,

வெண்முரசும் தமிழும் கட்டுரையை வாசித்தேன். இன்றைக்கு தமிழில் எத்தனைபேர் கம்பராமாயணம் வாசிக்கிறார்கள்? அந்தத் தமிழ் எத்தனைபேருக்கு தெரியும்? எத்தனைபேருக்கு அதற்கான பொறுமையும் மனமும் உள்ளது? அவர்கள் மிகச்சிலர்தான். அதைப்போல சிலர் வெண்முரசுக்கு இருப்பார்கள். வெண்முரசின் மொழி தமிழில் ஒரு பெரிய பாய்ச்சல். தூயதமிழ் அதேசமயம் தனித்தமிழ்ப்பாவனைகள் ஏதுமில்லாமல், செயற்கையாக இல்லாமல் இயற்கையாக நிகழ்வதை இந்நாவலின் களத்திலேதான் வாசிக்கமுடிகிறது.

நானும் பள்ளியில் தமிழ் படித்தவன் அல்ல. ஆனா ஆவன்னா அளவுக்குத்தான். எனக்கு மழைப்பாடல் முடிவதுவரைக்கும்கூட கஷ்டம் இருந்தது. ஆனால் இன்றைக்கு யோசிப்பதே அந்த மொழியில்தான். நான் வெண்முரசின் நடை ஏன் தனித்தமிழக இருந்தாலும் எளிதாக இருக்கிறது என்று யோசித்தேன். வெண்முரசின் நடை இன்றைய சாதாரண பேச்சுநடையை தனித்தமிழில் எழுதியதுபோல இருக்கிறது. உணர்ச்சிகளுக்குள் போகும்போது ஓசையழகையோ வேகத்தையோ அடைகிறது. இந்த இயல்பான ஓட்டம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

இதற்கான வாசகர்கள் என்றும் இருப்பார்கள். ஒரு நூறுபக்கத்தை வேறு திசைதிரும்பல் இல்லாமல் வாசிப்பவர்கள் தமிழ்நாட்டிலேயே ஒரு சில ஆயிரங்கள்தான் இருப்பார்கள். வெண்முரசு அவர்களுக்கான படைப்பு

 

சந்திரசேகர்

 

அப்போது அகத்தில் ஓர் அச்சம் இருந்தது ,இது முடிவதுவரை வாழ்வு வேண்டும் என்ற வரியை வாசித்தேன். 2013 டிசம்பரில் வெண்முரசு ஆரம்பித்த சமயத்தில் எழுதிய கடிதம் நினைவுக்கு வருகிறது. பல வருடங்கள் போயிட்டே இருங்க என்று சொல்லியாதாக நினைவு, இந்த கடைசி பகுதி முடியும் போது கிட்டதட்ட 7 வருடங்கள்.

வேண்டுமானால், 27வது பகுதியாக நாவலின் நீட்சியாக ஒரு முழு தொகுப்பு பார்வையாக, நாட்டின் இன்றைய பெயர்கள், வரலாற்றில் இன்று இருக்கும் அந்த கதைகளின் நிலைமை ,  உங்களுக்கு நடந்த சில அனுபவங்கள் என மற்றுமொரு பகுதி எழுதனும் என்று நினனத்து கொண்டால் இது இறுதி பகுதி எனும் அழுத்த சுமையை இறக்கி வைக்க உதவும்.

ஒரு துகள் அளவு கூட, ஒரு அணுவின் கடைசி அளவுக்கு கூட பயம், எண்ணம் வேண்டாம். சிலைக்கு கண் திறப்பது போல, குழவி தாய் வயிறு விட்டு வரும் கடைசி நிகழ்வு போல… இந்த கடைசி பகுதியும் நிறைவுறும்.

யோகி ராம்சுரத்தை சந்தித்து ஒரு மாதம் ஆகி நீங்கள் யதியை முதலில் சந்தித்தது பற்றி எழுதியதாக நினைவு. எதுவும் அவ்வளவு சீக்கிரமாக தடைபடாது. வழக்கு இன்ன பிற கொந்தளிப்புகளில் விலகியும், பயணங்களில் இந்த தொற்று பற்றிய விழிப்புடனும் இருக்கவும்.

அன்பு ஜெய்… எழுத்தில் சென்றபடி இருப்பது உங்களின் பாதை. எழுத்தின்றி வெறுமனே இருத்தலும் துறத்துலும் உங்களுக்கு இல்லை என தோன்றுகிறது.

நலம் பேணுக. பூர்ணமாக நாவலை முடிக்குக. வணக்கமும் வேண்டுதல்களுடன்

 

லிங்கராஜ்

 

அன்புள்ள ஜெ.

 

வெண் முரசின் தமிழ்  பற்றிய கடிதமும் பதிலும் படித்தேன்.

அகராதி தேவைப்படாமல் வெண் முரசு படித்த நூற்றுக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்.

ஏறக்குறைய 8 வயதிலிருந்து வாசிக்க ஆரம்பித்த பழக்கம் .கடந்த 40 வருடங்களில் நான் வாசித்த தமிழ் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த மொழியழகு பெற்ற நூல் ெவண் முரசு என்று உலகுக்கு ஓங்கி பறையறைந்து சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

கட்டியிழுக்கும் அந்த தமிழ்.போதையூட்டும் மொழி நடை.

சப்புக் கொட்ட வைக்கும் அந்த மொழியின்பம் தரும் கலைச்சொற்கள்.

அது தரும் மட்டில்லா ஆனந்தம் பருக பருக இன்னும் இன்னும் என்று தூண்டும் தவிப்பு இருக்கிறதே …

இந்த தொடரில் பல விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரையே செய்ய தகுந்த நூறு விஷயங்கள் இருக்கின்றன.

 

உதாரணத்துக்கு

வெண் முரசில் உளவியல்

வெண் முரசில் ஆளுமை திறன்

வெண் முரசில் அரசு சூழ்தல்

வெண் முரசில் காதல்

 

இப்படிப் பலப்பல இருந்தாலும் அந்த தமிழ்நடைக்கே காதலாகிப் போனேன்.என்னைப் போன்றவர்களின் இதய பீடத்தில் என்றென்றும் இருப்பீர்கள்.

தமிழ்தமிழ் என முழங்கும் எவராகிலும் இந்த தொகுப்பில் ஒன்றாவது வாசிப்பாராயின் தமிழ் எவ்வளவு  இனிய மொழி என்று உண்மையாய் உணர்வார்கள்.

இன்று என் தந்தையின் 4ம் ஆண்டு நீர்க் கடன்.எள்ளும் நீரும் அள்ளி நிறைவுறுக என்று சொல்லியே நீர்க் கடன் செலுத்தினேன்.

 

உங்கள் தமிழ் கொடை

 

நன்றி

தில்லை செந்தில் பிரபு

கோவை

 

அன்புள்ள அப்பாவுக்கு,

வெண்முரசும் தமிழும் என்று தலைப்பில், தங்களின் வார்த்தைகளை வாசித்தேன். நான் இயற்பியல் துறையில் முதுகலை பயிலும் மாணவி. வயது(23).  சிறு வயது முதல் ஆங்கில வழி கல்வி தான்  ( CBSE) . புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பதே கிடையாது அப்பா. கடந்த ஒரு வருடமாக வெண்முரசு படிக்கிறேன். இப்போது (பன்னிரு படைக்களம்) படித்து வருகிறேன். வெண்முரசு புத்தகம் கையில் இல்லாமல் என்னை பார்க்க இயலாது என்றும், ஜெயமோகனாக மாறிவிட்டாய் என்று கேலி செய்த நண்பர்கள்  பல. என்னை பார்த்து வெண்முரசு நாவலை படித்தவர்களும் உண்டு.

கல்லூரி கலந்துரையாடலில் தங்களின் வெண்முரசுக்கு முதல்நிலை. சிறுவயது முதல், என்னால் ஒரு இடத்தில் அமைதியாகவோ, ஒரு விஷயத்தில் 1 நிமிடம் மேல் கவனம் செலுத்த இயலாது ஆனால் என்னை முழுவதுமாக மாற்றியது வெண்முரசு தான் . நீங்கள் கூறுவது போல்” இந்த மொழி என் அகத்துக்கு உகந்தது ”. தங்களின் எழுத்தினூடாக, என்னை நானே கண்டடையும் தருணங்கள் பல அமைந்துள்ளன. எனது ஆய்வறிக்கை எழுத தொடங்கும் முன், வெண்முரசு தான்  என்றும் துணையாக நிற்கும். தாங்கள் விழைவது போல், நாளை என்பதே வெண்முரசு மட்டும் தான் என ஆசைப்படும் இளம் வாசகி. தமிழின் மகத்தான இலக்கியச் செல்வங்கள் எல்லாம் வெண்முரசுயின்  துணையோடு அணிவகுத்து வாசிக்கப்படும் என பிரார்த்திக்கிறேன்.

 

காயத்ரி தனசேகரன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘பிறசண்டு’ ,தேனீ- கடிதங்கள்

$
0
0

‘பிறசண்டு’ [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

பிரசண்டு கதையில் வரும் மாயக்காரனாகிய திருடன் ஒரு கற்பனையா? உண்மையில் அப்படி இல்லை. என் வீட்டில் முன்பு ஒரு சிறுவன் பெரிய பித்தளைக் கடாரத்தை உருட்டிக்கொண்டு போய்விட்டான். விற்றும்விட்டான். கடைசியில் போலீஸ் பிடித்தார்கள். மூன்றுமாசம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்து அந்தவழியாக போனான். என் பாட்டி “ஏண்டா இப்டி பண்ணி அடிவாங்குறே?”என்று கேட்டாள். “தவுலா பிறந்தா அடிவாங்கணும்லா அம்மணி?”என்னு அவன் கேட்டன. பாட்டி சிரித்துவிட்டாள்

ஆச்சரியம் என்னவென்றால் பாட்டிக்கு அந்தப் பையனை ரொம்ப பிடித்துவிட்டது. சூட்டிகையான பையன் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். பாட்டி அவனுக்கு நிறைய பணம் கொடுத்திருக்கிறாள் என்பதுகூட பின்னாடிதான் தெரிந்தது

 

எஸ்.சந்தானகிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

‘பிறசண்டு’ சிறுகதை பலிக்கல் கதையின் வேறு ஒரு வடிவம். அநீதியால் தண்டனை அனுபவித்த அப்பாவி மனிதனின் முதுமைக்கலாம்.

ஆனால் எனக்கு இக்கதை ‘பலிக்கல்’ கதையை விட அதிர்ச்சி கொடுத்தது. எவ்வளவு மன்னிப்புகளுக்கும் கண்ணீர்களுக்கும் மத்தியில் நாம் வாழ்கிறோம்.

“அடிக்கடி வீட்டுக்கு வாடே” என்று அந்த கிழவர் சொல்கிறார். அந்த மன்னிப்புகள் தான் அற சக்கரத்தை சுழலவிடுகின்றன.

அவர் அசடனாக, ஏமாளியாக இருக்கலாம், ஆனால் அதையும் கடந்த ஒரு பரிசுத்தசம் அவரிடம் உள்ளது.

“எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்.

அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூப்பூக்கும்..”

என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் மனதுள் ஓடுகின்றது.

 

தங்கள்,

கிஷோர் குமார்.

திருச்சி.

தேனீ [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

தேனீ கதையை பலர் ஒரு கண்ணீருடன் நினைத்திருக்கலாம். இங்கே பெண்களின் கனவுகள் திருமணத்துடன் இல்லாமல் போவதைப்பற்றி பலர் எழுதி குவித்திருக்கிறார்கள். ஆண்களின் கனவுகள் ஒரு வேலையிலேயே இல்லாமலாகின்றன. பெண்களுக்கு திருமணம் போலத்தான் ஆண்களுக்கு வேலையும்.ஆண்கள் அதையே நினைத்து அதுக்காகவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.வாழ்க்கையையே வேலைக்கு கொடுத்துவிடவேண்டும். கனவு இலட்சியம் கலை எதுக்குமே பிறகு வாழ்க்கையில் இடமில்லை.

ஒரு பெர்சனாலிட்டியாக நிமிரவேண்டிய காலகட்டத்தில் தன் தொழிலுக்காக வாழ்க்கையை செலவிட்டவர்களைப்போல துரதிருஷ்டமானவர்கள் வேறில்லை. தேனிலிருந்து பிரிக்கப்பட்ட தேனீக்கள். தேனை மனசுக்குள்ளேயே வைத்திருக்கவேண்டியவர்கள். கல்லை நக்கி இனிப்பை அறியவேண்டிய நிலையில் இருப்பவர்கள்

சரவணக்குமார்

என் அன்பு ஜெ,

சண்முகத்தின் அப்பா ஒரு தேனீயே தான். அப்படியான தேனீ மனிதர்களை இந்த வாழ்வில் சந்திக்கும் போதெல்லாம் நெகிழ்ந்ததுண்டு.

“குடுக்காதவன் விரியமாட்டான்விரியாதவனுக்கு மெய்யான சந்தோசம்னு ஒண்ணு இல்லை”.  இந்த வரிகளை எல்லாம் என் தந்தையின் காதுகளில் உரக்க சொல்ல வேண்டும் போலிருந்தது ஜெ. என் தந்தை அவர் குடும்பத்தில் மூத்த அண்ணன். அவர் அவரின் சகோதரிகள் இருவருக்கும் எதுவுமே செய்ததில்லை. என்றோ செய்த சிறு உதவிகளையும் அவர் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு தந்தையாகவும் அவர் தன் கடமைகளைச் செய்ததில்லை. தான், தனக்கு, எனது என்ற சுயநலத்தின் உச்சமாயிருப்பவர். நித்தமும் குடிக்கும் பழக்கம், மனிதரை அப்படி மாற்றிவிடுமோ என்னவோ.

தேன்சிட்டுகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பொறாமை வருவதுண்டு. அது தன் குங்சுகளை பறக்கும் வரை உடனிருந்து பாதுகாத்து உணவளித்து, தன் சமூகத்தின் ஓர் அங்கமாக ஆக்கும் வரை கண் ஓய்வதில்லை. ஓர் தந்தைக்கும் தாய்க்கும் அப்படிப்பட்ட கடமை உண்டு தானே. அவர்கள் அதை செய்யாதபோது தான் சமூகத்தில் ஊனம் ஏற்பட ஆரம்பிக்கிறது. ஒரு வகையில் சமூகத்தின் பல பிரச்சனைகளின் வேராக இந்த தாய், தந்தையர் இருக்கின்றனர். நீங்கள் அஜிதனின் சிறு வயதில் நிகழ்ந்த ஓர் அனுபவத்தை பகிர்ந்திருந்தீர்கள். ”அந்த தைலத்தில் எனக்கு மிகவும் பிடித்த நபர் தான் தேய்த்துவிட வேண்டும்னு போட்டிருக்கு” என்று நீங்கள் உங்கள் மனைவியிடம் சொல்லும்போது அஜிதனின் கண்ணீர் உங்கள் கழுத்துகளில் விழுந்ததாகச் சொல்லியிருந்தீர்கள். அப்போது நானும் தேம்பி அழுதிருந்தேன் என் சிறுபிராய ஏக்கங்களையும் உடன் சேர்த்து… சண்முகத்துக்கு நல்ல அப்பா வாய்த்திருக்கிறார். அவருக்கு இருக்கும் இந்த அனுபவங்களைப் போல சொல்ல எனக்கு ஒன்றுமில்லையே என்று ஏங்கினேன். ஒரு தந்தையாக, சமூகத்தில் நல்ல மனிதனாக ஒருவன் விட்டுச் செல்ல வேண்டிய நல்ல நினைவலைகளை அவன் அப்பா விட்டுச் சென்றிருக்கிறார். அவனுக்காக மகிழ்ந்தேன்.

சண்முகத்தின் அப்பாவான தேனீ மனிதன் சமூகத்தின் ஆணி வேர். இவர் போன்றவரால் தான் சமூகம் தழைக்கிறது. நல்ல கணவருக்கேற்றார்போல் மனைவியும் அமைந்திருப்பது சிறப்பின் உச்சம்.

தேனீயை மூன்று இடங்களில் சொல்லியிருந்தீர்கள். ஒன்று அவரின் சுறுசுறுப்பைக் குறிப்பிடுகையில்; இரண்டாவது தேன் மேல் தேனீக்கு இருக்கும் காதலைப்போல, அவருடைய அப்பாவுக்கு ராஜரத்தினம் பிள்ளை/ அவரின் இசை மேல் இருந்த காதல் பற்றி சொல்லும் போது, மூன்றாவது அப்பா சண்முகத்தின் வாயில் ஒழுகிய நீரை தேனுன்னு குடித்தது. நான்காவது ஓரிடம் உள்ளது ஜெ. அது, இந்த கதையை சொல்லிமுடித்தபின் சண்முகம் ஏன் தூணை நக்கினான் என்பதை நாராயணனனும் நாமும் அறியும் இடம்.

ஒரு குறுந்தொகைப் பாடல் நினைவிற்கு வந்தது.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறி எயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”

 

தேனீ கிடைத்த பூவிலுள்ள தேனையெல்லாம் உரிஞ்சும் குணம் கொண்டதல்ல. சிறந்த பூவிலுள்ள தேனையல்லவா சுவைக்கக் கூடியது. அப்படி சண்முகத்தின் அப்பா என்ற தேனீ மனிதன் சுவைத்த ஆகச் சிறந்த தேன் ராஜரத்தினத்தின் இசை. ஏதோ ஓர் காலவெளியினின்று, அந்த இசை அவரை அடைந்து அவர் மகிழ்ந்ததில் மகிழ்ச்சி எனக்கு. அதே தேனைத்தான் சண்முகம் சுவைக்க அவ்வபோது வருவார் போலும். அப்படி இலயித்து தேனை சுவைத்துக் கொண்டிருக்கும் போது நாரயணின் கண்களில் பிடிபட்டுவிட்டார். அவர் பிடிபட்ட காரணத்திற்காகவே நாரயணனுக்கும், எங்களுக்கும் இந்த தேனீ சிறுகதை கிடைத்தது.

இதை படித்து முடித்துவிட்டு ராஜரத்தினம் அவர்களின் நாதஸ்வர இசையைக் கேட்டேன். தேன் மாதிரியே இனித்தது ஜெ. “தேனுல்லா! தேனுல்லா!”…

உண்மையில் பிரேமை அற்புதமான வார்த்தை தான் ஜெ.

-பிரேமையுடன்

இரம்யா.

 

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்

மலேசிய அழகியல் விமர்சனத்தில்…

$
0
0

 

ஒரு மொழியின் முன்னோடி இலக்கியவாதிகளை அவர்களின் சூழல், அவர்கள் எடுத்துக்கொண்ட அறைகூவல்கள் ஆகியவற்றை கருத்திக்கொண்டு அழகியல்நோக்கில் ஆராய்வது அங்கு பின்னாளில் இலக்கியம் உருவாகி வருவதற்கு மிகமிக முக்கியமான அடித்தளம். தமிழகத்தில் க.நா.சு,சி.சு.செல்லப்பா இருவருமே அந்த பணியை செய்து விமர்சனப்பார்வைக்கு வழிவகுத்தனர். பின்னாளில் வெங்கட் சாமிநாதன் ,சுந்தர ராமசாமி போன்றவர்கள் அப்பணியை முன்னெடுத்தனர். இலங்கையில் மு.தளையசிங்கம் அதற்கு ஒரு தொடக்கத்தை அளித்தார்

பொதுவான அரசியல்நோக்கு சார்ந்த விமர்சனங்கள்தான் இயல்பாக எழுந்துவரும். சமகால  அரசியலைவைத்து எழுத்தாளன் என்ன நிலைபாடு எடுத்துள்ளான், எப்படி அதைச் சொல்கிறான், அது ஏற்கத்தக்கதா இல்லையா  என்பதை ஆராய்ந்து மதிப்பிடும் போக்கு இது. தமிழகத்தில்  தி.க.சிவசங்கரன்  இலங்கையில் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் இப்பணியைச் செய்தார்கள்.

அரசியல் விமர்சனத்தைப் பொறுத்தவரை முழுக்கமுழுக்க அரசியல்கோட்பாடு சார்ந்து, புறவயமாக நடத்தப்பட்டால் மட்டுமே அதற்கு  அரசியல் ரீதியாகவேனும் மதிப்பு. அரசியலில் செயல்படுபவர்களால் செய்யப்பட்டால் அது அவர்களின் அரசியல்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கட்சிகட்டலின் நீட்சியாகவே நடைபெறும். அதன்பின் அங்கே எழுதுபவன் நம் கட்சியா எதிர்க்கட்சியா என்ற கேள்வி மட்டுமே உண்டு. வெற்றுரைகளே பாராட்டாகவும் வசைகளே விமர்சனங்களாகவும் எழும். இது இலக்கியத்தை அழிக்கும் ஒரு நோய்

தமிழ்ச்சூழலில் அன்றாட கட்சியரசியலின் தரப்புகளும் குழுக்களும் அவற்றைச்சார்ந்த கசப்புகளும் காழ்ப்புகளுமே அரசியல்விமர்சனங்களாக வெளிவருகின்றன. அந்த கட்சிகட்டல்களுக்குள் சென்று நிற்கும் சாரமற்ற படைப்பாளிகள் மட்டுமே அரசியல்ரீதியான பாராட்டுக்களை பெற்று திளைக்கிறார்கள். அரசியல் விமர்ச்னம் பெரும்பாலும்  தரமற்ற வெற்றுக்கூச்சல்கள் போடுபவர்களையே இலக்கியவாதிகளாக முன்னிறுத்த நேர்வது இப்படித்தான். நல்ல எழுத்தாளன் நுண்ணுணர்வாலேயே அங்கே செல்லாமல் தவிர்ப்பான். அரிதாக சில வாய்ப்புள்ள எழுத்தாளர்களும் அங்கே சென்று அழிவதுண்டு.

இச்சூழலில்தான் அழகியல்விமர்சனம் மேலும் அழுத்தமான தேவை உடையதாகிறது. எவர் முன்னோடிகள், ஏன்  என்று அது நிறுவும். அவர்களின் எழுத்தின் அழகியல்போதாமைகள் வெற்றிகளை அடையாளம் காணும். அவர்கள் உருவாக்கிய தொடக்கத்தை கண்டறிந்து மேலே செல்லும் வழிகளை காட்டும். சொல்லப்போனால் ஆரோக்கியமான stem cell களை அடையாளம் காணும் முயற்சிதான் அழகியல் விமர்சனம் என்பது.

நவீன் மலேசிய இலக்கிய முன்னோடியான அ.ரங்கசாமியின் நாவல்களை பற்றி எழுதியிருக்கும் இந்த இலக்கியவிமர்சனம் அவ்வகையில் மிக முக்கியமான ஒன்று

அ.ரெங்கசாமி நாவல்கள்- ம.நவீன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

$
0
0

 

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

அன்புள்ள ஜெமோ,

 

கீழ்க்கண்ட குறிப்பு முருகானந்தம் ராமசாமி அவர்களால் எழுதப்பட்டது. இந்த விவகாரத்தில் மிக நிதானமாக எழுதப்பட்ட குறிப்பு இது என்பது என் எண்ணம். என்னுடைய கருத்துக்களும் இதுவே. உங்கள்மேல் கண்மூடித்தனமான காழ்ப்புடன், அதை மட்டுமே வைத்து பிரச்சினையை அணுகுபவர்களையே இணையத்தில் பார்க்கிறேன். அந்த பட்டியலில் நான் இல்லை. ஆனால் இது என்னுடைய கருத்து என்பதைச் சொல்லவிரும்புகிறேன்

 

எஸ்.டி.செந்தில்குமார்

ஜெயமோகன் – பா.செயப்பிரகாசம் ஆகியோருக்கிடையிலான சர்ச்சை பரஸ்பரம் வழக்கு தொடுப்பதான அறிவிக்கைகளுடன் சூடுபிடித்திருக்கிறது.. பா.செ.வை விமர்சிக்கும் பெயரற்ற ஒரு கடிதத்தை ஜெ.தனது இணையதளத்தில் பிரசுரித்திருந்தார். சமகாலத்தில் ஒரே மொழிச்சூழலில் செயல்படும் எழுத்தாளரை பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கும் கடிதத்தை பெயரின்றி பிரசுரிப்பதை ஜெ.மோ தவிர்த்திருக்க வேண்டும்.. பெயர்கூட வெளியிட துணிவற்ற ஒருவர் கருத்தியல் செயல்பாடுகளில் பங்கேற்று என்ன கிழிக்க போகிறார்..? மேலும் பா.செ.தன்மீதான விமர்சனத்தை மறுத்து எழுதினால் யாரை நோக்கி எழுதுவது..? கடிதம் எழுதியவரை நோக்கியா.? வெளியிட்டவரை நோக்கியா..? இல்லை சுவரை பார்த்து பேசிக்கொள்வதா..? என்பது கேள்வி.. பா.செயப்பிரகாசத்திற்கு ஆதரவாக வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கைக்கு ஏதேனும் பொருள் உண்டென்றால் மேற்குறிப்பிட்டநியாயமே.

மற்றபடி பா.செயப்பிரகாசத்தின் அதிகார எதிர்ப்பு புரட்சிகளை பற்றிய பிலாக்கனங்கள் அபத்தமானவையும், உள்ளீடற்றவையும் என்பதே எனது தரப்பு.. பா.செ. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் பலனாக மக்கள் தொடர்பு அலுவலர் பதவியை பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து இந்த அதிகார அமைப்பின் ஒரு பகுதியாக ஆகி அதிகாரத்தின் அத்தனை நெளிவுசுழிவுகளுக்கும் வளைந்து கொடுத்து சமத்காரமான லொளகீக வாழ்வை அமைத்துக்கொண்டவர்..

அவர் பதவிக்காலத்தில் அரசு எனும் அதிகார நிறுவனத்தில் நிகழும் அத்தனை அறமீறல்கள் சட்டமீறல்கள் முறைகேடுகள் அனைத்தையும் முனகல்கூட இன்றி கடந்தவர்.. எழுத்துக்களில் மட்டுமே அதிகார எதிர்ப்பு அரசியல் பேசியவர்..அதிகார அமைப்பின் அத்தனை சவுகர்யங்களிலும் திளைத்துக்கொண்டு குண்டூசியளவு இழப்பைக்கூட அடையாதவர்.சமூகத்தில் எளியவர்களின நலன் பொருட்டு அதிகாரத்துடன் ஓயாமல் மோதிச்சிதைந்து போன லட்சியவாத ஊழியர்களை கண்டிருக்கும் ஒருவர் பா.செ போன்றவர்களின் அதிகார எதிர்ப்பு அதிகாரமாளிகையின் திருஷ்டி பொம்மைக்கு ஒப்பானது என்பதை உணர்வார்..

மேம்போக்கான எதார்த்தவாதம், உடன் ஆங்காங்கு புரட்சித்தூவல்கள், தவிர பா.செ. எழுத்துக்களில் மெய்நோக்கை உணர முடித்ததேயில்லை. ஒப்புநோக்க இதே வகையிலான சு.சமுத்திரம் ராஜம்கிருஷ்ணன் ஆகியாரிடம் வெளிப்படும் அநீதிக்கெதிரான ஆவேசம் கூட பா.செ.விடம் இருக்காது.எனவே அந்த கூட்டறிக்கை முன்வைக்கும் பா.செ.குறித்த மிகைபிம்பம் அர்த்தமற்றது..

இறுதியாக இருதரப்பும் வழக்கு தொடர்வது பற்றி பேசுகிறார்கள்..எந்த வகையிலும் கருத்தியல் செயல்பாடுகளை அளக்கும் பொறுப்பை அதிகாரத்திடம் அளிப்பது தவறானது.. இது அடிப்படையில் எழுத்தின் ஆதார நோக்கத்தையே சிதைப்பது..எல்லா நிலைகளிலும் கருத்திற்கான மறுப்பு என்பது விசையுடன் முன்வைக்கப்படும்எதிர்வினையே தவிர வழக்கு அல்ல.. இன்று தங்களுக்குள் ஏற்படும் முரண்பாட்டை வழக்கின் மூலம் எதிர்கொள்ள முற்படும் எழுத்தாளர்கள் படைப்பின் உள்ளடக்கமாக என்ன இருக்க வேண்டும் ? என்பதை தங்கள் அரசியல் கோணங்களில் தீர்மானிக்கத்திரியும் குண்டர்களுக்கே வலிமை சேர்க்கிறார்கள்..! நாளை எழுத்திற்கான தணிக்கையை அதிகாரம் எடுத்துக்கொள்ள வழிசமைக்கிறார்கள்..! இதை தவிர்ப்பதே அவர்கள் சுதந்திரமான கருத்துச்சூழலுக்கும், விழிப்புள்ள குடிமைச்சமூகத்திற்கும் ஆற்றும் நன்மையாக இருக்க முடியும்..

 

 

அன்புள்ள செந்தில்

முருகானந்தம் அவருடைய தரப்பைச் சொல்லியிருக்கிறார்.

இதைப்பேசும் ஒவ்வொருவரிடமும் நான் சொல்லவிருப்பது ஒன்றே, எந்த எழுத்துக்கு எதிராகவும் எந்த அதிகார அமைப்பையும் நான் நாடியதில்லை. சில மனிதஉரிமைக்குழுக்களின் பின்புலத்துடன் சட்டநடவடிக்கை என்று பூச்சாண்டி காட்டியவர் பா.செயப்பிரகாசம்தான். அவருடைய வக்கீல்நோட்டீசை இணையத்தில் கண்டபின்னரே மறுநடவடிக்கை பற்றி யோசித்தேன். ஆகவெ கருத்துவிவாதத்தில் நீதிமன்றம் போவதைப்பற்றிய பேச்சுக்களை முழுக்க அந்த அரசு உயரதிகாரியிடம் பேசுங்கள்.

என் தளத்தில் அந்தக்கடிதம் பிரசுரமான சூழலைச் சொல்கிறேன். பொதுவாக இங்கே இடதுசாரி தீவிர இயக்கங்களில் இருந்தவர்கள் பல்வேறு காவல்துறை கண்காணிப்புகளுக்கு உட்பட்டு, பலவகையிலும் இழுத்தடிக்கப்பட்டு, வதைக்கப்பட்டு எங்காவது ஒதுங்கியவர்களாகவே இருப்பார்கள். ஒரு பிழைப்புக்காக சிறியவேலைகளில் சென்று சேர்ந்திருப்பார்கள். சிலர் அரசுவேலைகளில். பலர் தொகுப்பூதியங்களில்.அவர்களின் எஞ்சியகால வாழ்க்கை என்பது ஒரு பெரிய துயரக்கதை.

90களில் இதே செயப்பிரகாசத்தின் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஈரோட்டில் வெற்றிலை பாக்குக்கடை வைக்கவும் திருப்பூரில் டெய்லர் வேலை செய்யவும் நிதியுதவி செய்ய நண்பர்களிடம் பணம் திரட்டியிருக்கிறோம். எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தெரியும்.

அந்த தோழர்களைப்போன்றவர்கள் மிகமிக அமுங்கியகுரல் கொண்டவர்கள். ஓர் அழுகையைத்தான் அவர்களால் முன்வைக்கமுடியும். மீண்டும் பொதுத்தளத்திற்கு வந்து பேசமுடியாது. அதற்கு ஒரு பொருளியல்சூழல் தேவையாகிறது. ஆகவே அந்தக்குரல் பெரும்பாலும் எழுவதே இல்லை. அப்படி பலரை நீங்களும் பார்க்கமுடியும்- ஒருவரி எழுதுங்கள் என்றால் பதறிவிடுவார்கள். ஆகவே அவ்வியக்கங்களைப் பற்றிய இத்தகைய ஒரு வெளிப்பாடு அரிதானது- பதிவுசெய்யத் தேவையானது. இது இங்கே அநாமதேயமாக மட்டுமே வெளிப்பட முடியும்.   ‘முதலில் பெயரைச் சொல்’ என்றால் அந்தக்குரலே பதிவாகாமல் போய்விடும்.

ஓர் உதாரணம் சொல்கிறேன், இந்திய அரசின் உளவுத்துறை அதிகாரி பற்றிய ஒரு விமர்சனம் அதன் உள்ளே இருந்த ஒருவரால் எப்படி வெளியிடப்பட்டிருக்க முடியும்?பா.செயப்பிரகாசம் அண்டர்செகரட்டரி நிலையில் பணி ஓய்வுபெற்ற மிகமிகச் செல்வாக்கான மனிதர்- கூடவே புரட்சியாளர் என்று பிம்பமும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பும் உருவாக்கி வைத்திருப்பவர். பெரும்சூழ்ச்சியாளர்.அவருக்காக அவருடைய சாதியின் அரசியல்வாதி முதல் கம்யூனிஸ்டுக் கட்சிகள் வரை களமிறங்குகிறார்கள் என்பதே சான்று.

ஓர் அண்டர்செகரட்டரியின் புரட்சிகரம் பற்றி நம்ப அந்த கண்டனக்கடிதத்தில் கையெழுத்திட்ட எவருக்குமே வெட்கமே இல்லை. இன்று வழக்கு என்று வரும்போது சமத்காரமாக தான் சூரியதீபன் என்ற பெயரில் எழுதவில்லை என்று சட்ட அறிக்கை விடும் அவருடைய போலித்தனம் பற்றியும் அவர்கள் நாணப்போவதில்லை.

அந்தக் கடிதம் பா.செயப்பிரகாசம் பற்றியது அல்ல. அவருடைய இயக்கத்தில் இருந்தவர் இயல்பாக அந்த வரியை எழுதியிருக்கிறார். அந்தக்கடிதம் பலவகையிலும் முக்கியமான ஒன்று. ஓர் ஆவணம் அது. அதை நான் எழுதியதாக வேண்டுமென்றே பிரச்சாரம் செய்கிறார்கள். நான் அதை எழுதமுடியாது என்று எவருக்கும் தெரியும்- அது உள்ளே இருந்து மட்டுமே வரக்கூடிய கடிதம்.

இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்து, பின்னர் வெளிவந்து, ஒரு எளிமையான மாறுபாட்டுக்குறிப்பை எழுதிய சாம்ராஜ் போன்ற கவிஞர்கள் இவர்களால் எப்படியெல்லாம் வேட்டையாடப்பட்டர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சங்கர ராமசுப்ரமணியன் என்ற தனிக்கவிஞனின் ஒரு கவிதைக்காக வீடுதேடிச் சென்று மிரட்டியவர்கள், மன்னிப்பு எழுதி வாங்கியவர்கள் இவர்கள்.  பொதுவெளியில் அப்படைப்பாளிகள் ஆதரவு தேடி எழுப்பிய குரல் இன்றும் உள்ளது- அன்று இன்று கண்டனம் தெரிவித்து கையெழுத்து போடும் எந்த எழுத்தாளனின் கண்டனக்குரலும் எழவில்லை. எந்த நம்பிக்கையில் ஒரு எளிய முன்னாள் ஊழியர் கடிதம் எழுதமுடியும்?

அந்த கடிதத்தில் பா.செயப்பிரகாசம் பற்றிய குறிப்பை தனியாக நான் கவனிக்கவில்லை. அது சுட்டிக்காட்டபின்னரே அதை கவனித்தேன். இது உண்மை, பெரும்பாலும் எவருக்கும் இப்படி ஆகும். நாம் கவனிக்கும் பலவிஷயங்கள் இருக்கையில் சில தவறிப்போகும். செயப்பிரகாசம் பற்றி பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அவை, இயல்பாக அவை அதில் இடம்பெற்றன. அவற்றை எழுதியவரின் உணர்ச்சிகள். அவற்றை மட்டுமே ஒருவர் எழுதி அனுப்பியிருந்தால் அவற்றை முருகானந்தம் சொல்வதுபோல பிழை என எடுத்துக்கொண்டிருக்கலாம்

உண்மையில் தனியாக அந்தக்குற்றச்சாட்டு மட்டுமாகப் பார்த்தால் அது பெயரிலியாக வெளியிடப்பட்டது பிழையானதுதான். அது ஒரு கடிதம் மூலம் சுட்டப்பட்டிருந்தால் உடனடியாக ஒரு மன்னிப்புக் குறிப்புடன் அவ்வரியை நீக்கியிருப்பேன். ஆனால் இதைப்பயன்படுத்தி இந்தப் போலிப்புரட்சியாளர்- போலி எழுத்தாளர் தன்னை ஒரு பிம்பமாக காட்டும்பொருட்டு கையெழுத்துவேட்டை ஆடி, ஆர்ப்பாட்டம் செய்யும்போது , சட்டமிரட்டல் விடுக்கும்போது, அந்த பொறுப்பை எழுதியவர்மேல்  தள்ளிவிடாமல் என் கருத்தைச் சொல்வதே நேர்மை, அப்படிச் செய்தால் அது அநாமதேயக் குற்றச்சாட்டை வேண்டுமென்றே செய்தேன் என்று ஆகும். ஆகவே அதற்கு நான் பொறுப்பேற்றேன்..

பா.செயப்பிரகாசத்தை அவதூறு செய்யும் நோக்கம் எல்லாம் எனக்கு எவ்வகையிலும் இல்லை. அவதூறு என்ன, விமர்சனமே செய்யப்போவதில்லை. அவரை பொருட்படுத்தும் நோக்கமே இல்லை.என் இலக்கிய அளவுகோல்களின்படி இந்த செயப்பிரகாசம் யமுனா ராஜேந்திரன் எல்லாம் ஓரிரு வார்த்தைகளுக்குக்கூட தகுதியானவர்கள் அல்ல. உண்மையில் இப்படியாவது இவர்களைப் பற்றி எழுதநேர்வது கூச்சமளிக்கிறது. இலக்கிய முன்னோடிகள், சிந்தனையாளர்களைப் பற்றி பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய கையால் இந்தப் போலிக்ளைப் பற்றி நான் ஒரு வார்த்தைகூட எழுதியிருக்கக்கூடாது.

1986 ல் சுந்தர ராமசாமி கலைகள் கதைகள் சிறுகதைகள் என்று ஒரு கட்டுரை எழுதினார்.தமிழில் சிறுகதைகள் எழுதிய பெரும்பாலும் அனைவரையும் சுட்டிக்காட்டி விமர்சனபூர்வமாக அவர்களின் இடத்தை நிறுவும் அக்கட்டுரை ஆ.மாதவன் கதைகள் என்னும் தொகுப்பின் முன்னுரையாக இடம்பெற்றது.அதில் பா.செயப்பிரகாசம் பற்றி குறிப்பே இல்லை. அதை அன்று அவரை புரட்சியாளர் என்று நம்பிய ஒருவர் சுட்டிக்காட்ட நான் சுந்தர ராமசாமியிடம் சொன்னபோது அவரை ஒரு பொதுவரலாற்றில் பெயராகச் சுட்டலாம்.ஒருபோதும் விமர்சனபூர்வ வரலாற்றில் குறிப்பிடக்கூடாது– அதற்கான தகுதி அவருக்கில்லை என்றார். அவரை வாசித்து குமட்டலெடுத்தபின் என் நிலைபாடும் அதுவே. பொய்யைப்போல கீழ்மை இலக்கியத்தில் வேறில்லை.

இந்தக் கண்டன அறிக்கைகள் இன்று எப்படி வாங்கப்படுகின்றன என்று எவருக்கும் தெரியும். சம்பந்தப்பட்ட நபர் அவரே போனில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்போகிறேன் என்று மொட்டையாகச் சொல்வார், நேரில்கூப்பிட்டதற்காகவும் பொதுமரியாதைக்காகவும் ‘ஆமா தோழர் செய்யவேண்டியதுதான்’ என்று சொன்னால் கண்டன அறிக்கையில் பெயர் வந்துவிடும். அதிலும் பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் உயர்ந்த அரசுப்பதவியில் இருந்த பெரும்சூழ்ச்சியாளர்கள். எவருக்கும் அச்சமூட்டுபவர்.

விளைவாக அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அதில் சேர்க்கப்பட்டுவிடுகிறார்கள். சிலசமயம் அறிக்கைகளை அளித்து ஒப்புதல் பெற்றபின் மேலதிக வசைகள் சேர்க்கப்படுகின்றன. இதெல்லாமே அரசியல்வாதிகள் செய்யும் சில்லறைச் சூழ்ச்சிகள். இதில் எழுத்தாளர்கள் ஈடுபடுத்தப்படலாகாது. ஒரு அறிக்கையிலுள்ள அத்தனை வரிகளுக்கும் அதில் பெயருள்ள அனைவரும்தான் பொறுப்பு. அதை எழுத்தாளர்கள் உணரவேண்டும்.

அதோடு கண்டன அறிக்கை என்பதெல்லாம் மிகப்பெரிய விஷயம். ஒரு பொதுநலம்நாடும் விஷயத்துக்காக அதைச் செய்யலாம். எழுத்தாளர்களின் பூசல்களுக்கெல்லாம் இப்படி கண்டன அறிக்கை சேர்வதெல்லாம் எழுத்தாளர்களுக்கு எவ்வகையிலும் கௌரவம் அல்ல.அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒரு கண்டனம் தெரிவித்திருந்தால் அது வெறும் கருத்துமாறுபாடு. இந்த கீழ்த்தர வசைகொண்ட கண்டன அறிக்கைகளில் அவர்கள் பங்குசேர்வது அப்படி அல்ல.

தமிழ்ச்சூழலில் எழுத்தாளர் –செயல்பாட்டாளர் என அறியப்படும் பலருக்கும் நேர்மை, உண்மை பற்றி எந்த அக்கறையும் இல்லை. கட்சிகட்டுதல் தனிநபர் காழ்ப்பு சார்ந்தே யோசிக்கிறார்கள். அவர்களில் பலரைப்பற்றியும் எனக்கு புதிய திறப்புதான் கிடைத்தது.

இதில் மிகமிக வருத்தமளிப்பது இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளின் நிலைமை. தேசிய அளவிலான இருகட்சிகள், மாபெரும் வரலாற்றுபோராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தவை, ஓர் அரசு உயரதிகாரியின் ’லாபியிங்கால்’ ஒரு தனி எழுத்தாளனுக்கு எதிராக அணிதிரண்டு செயல்பட்டன என்பது கேவலம். உண்மையில் தனிப்பட்ட முறையில் அது எனக்கு பெருமைதான், அக்கட்சிகளுக்குத்தான் வருத்தம்தரும் சரிவு. முகநூல்போராளிகளால் அக்கட்சிகள் எந்த பாதாளத்திற்கு இழுக்கப்பட்டுள்ளன என்பது அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகளின் மொழியே சான்று

இதை தனிப்பட்ட முறையில் மாநில,தேசிய அளவில் பொலிட் பியூரோவின் கவனத்திற்கு கொண்டுசெல்லவிருக்கிறேன். அவர்கள் கண்டுகொள்ளாமல் போகலாம், ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.

ஜெ

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

பா.செயப்பிரகாசம் பற்றி

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைத் திருவிழா-2,செய்தி[சிறுகதை]

$
0
0

 

“செல்லம், இந்த லெட்டரை கொஞ்சம் படிச்சு காட்டுவியா?” என்று கீழிருந்து கெஞ்சலான குரல் வந்தது. அனந்தன் செம்பன்குளத்தின் பெருவரம்பாக அமைந்திருந்த ஆறடி மண்சாலையில் சென்றுகொண்டிருந்தான்.

மறுபக்கம் சாலையிலிருந்து இறங்கிச் செல்லவேண்டிய ஆழத்தில் இருந்த ஓலைக்கூரைவீட்டின் முன்னால் பகவதியம்மை மூச்சிரைத்தபடி நின்றிருந்தாள். அவள் கையில் நீல இன்லெண்ட் லெட்டர். அருகே அவளுடைய மகன் அவள் இடுப்புவேட்டியின் நுனியை ஒருகையால் பிடித்துக்கொண்டு மறுகையில் ஒரு மாம்பழத்துடன் நின்றான்.

அவள் அவனைக் கண்டபின் குடிலுக்குள் சென்று அந்த லெட்டரை எடுத்துக்கொண்டு ஓடிவந்திருந்தாள். அவளுடைய கழுத்து மூச்சில் ஏறியிறங்கியது. கழுத்துக்குழி பதைத்தது. கன்னங்கள் ஈரமாக பளபளத்தன. மேலே முந்தானையாகப் போட்ட வெள்ளை துண்டு விலகி பெரிய மார்பகங்களின் இடைவெளி வாழையிலையின் நடுவளைவுபோல பளபளப்பாகத் தெரிந்தது.

அனந்தன் “நான் பிளாக்காப்பீஸுக்கு போகணுமே” என்றான்

“ஒரு அஞ்சுமினிட்டு மக்கா…வந்து படிச்சு காட்டிட்டு போ… எனக்க செல்லம்ல?” என்றாள்

அனந்தனுக்குக் கூச்சமாக இருந்தது. மென்மீசையெல்லாம் வந்தபிறகு ஓர் அன்னியப்பெண் செல்லம் ஏன்றெல்லாம அழைப்பதென்றால்… அவன் குடில்களில் வேறு எவராவது இருக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்தான். பகலில் அந்த குடில்களில் எவரும் இருப்பதில்லை. வெள்ளாவி வைத்த துணிகளுடன் குளத்திற்கு துவைக்கச் சென்றிருப்பார்கள். மறுபக்கம் நீர்விளிம்பில் இட்ட கற்களில் இருந்து மரம்கொத்திகளின் ஓசைபோல துவைக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது

“பாம்பேயிலே இருந்து அவ்வோ விட்ட லெட்டராக்கும்… போஸ்டாப்பீசிலேருந்து குடுத்தனுப்பி  நாலஞ்சு நாளாச்சு மக்கா. இங்க ஒருத்தருக்கும் எளுத்து வாசிப்பு தெரியாது… எப்பிடி நான் வாசிப்பேன். ஒருக்க வந்து வாசிச்சு காட்டுடே… மகாராஜாவாட்டு இருப்பே”

அனந்தன்  செம்மண் சரிவில் மண்வெட்டியால் கொத்தி உருவாக்கிய கால்தடம் வழியாக இறங்கி கீழே சென்றான். எல்லாமே தாழ்வான கூரைகொண்ட மண்சுவர் குடில்கள். மண்ணாலான திண்ணைக்கு அப்பால் ஒரே அறை. பின்பக்கம் சமைப்பதற்கான மேலும் தாழ்வான சாய்ப்பு அறை. அவ்வளவுதான் வீடே

ஆனால் எல்லா வீடுகளுக்கு முன்னாலும் வீட்டளவுக்கே உயரமான வெள்ளாவிப்பானை கரிபடிந்து நின்றிருந்தது. களிமண்ணால் செய்யப்பட்ட பெரிய அடுப்பின்மேல் நிலையாகப் பதிக்கப்பட்டது. அதற்குள் நீரூற்றவும் துணிகளை போடவும் போட்ட துணிகளை எடுக்கவும் ஏணி வைத்துத்தான் ஏறவேண்டும். மூங்கில் ஏணி அருகே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அடுப்பில் சாம்பல் பூத்துகிடந்தது.

அனந்தன் முற்றத்தில் நின்று “துவைக்கப் போகல்லியா?”என்றான்

“இல்ல, இப்பம் நான் துணி எடுக்குறதில்லை. கோமதியக்காவுக்கு எனக்க பிடாகைப் பங்கை குடுத்தாச்சு. வீட்டிலே இருந்து பெட்டி போட்டு மடக்கி குடுத்து அவ குடுக்கிறத வாங்குவேன்…அது கைச்செலவுக்கு வரும்… இதுக ரெண்டையும் வச்சுக்கிட்டு எங்க போவ…” என்றாள் பகவதியம்மை “வா மக்கா, இரு”

அவள் திண்ணையில் ஒரு பனையோலை தடுக்கை எடுத்து போட்டாள். அவன் அதில் அமர்ந்துகொண்டான்

“குமரேசன் இப்பம் பம்பாயிலயா?”என்றான்

“ஆமா, போயி நாலு மாசமாச்சு. அங்க மாசச் சம்பளமாக்கும்  மாசம் நாநூறு ரூவா. செலவுபோக முந்நூறு ரூபா  அனுப்பிருவாரு. இங்க முந்நூறு ரூபாயை கண்ணால பாக்கணுமானா ஒரு வருசம் குனிஞ்சு நிமிரணும்லா?” அவள் குரலை தாழ்த்தி “முந்நூறு ரூபா வார விசயம் இங்க யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா கடன் வாங்க வந்திருவாளுக… பைசா போன வளி தெரியாது” என்றாள்

“ஆமா”என்று அவன் சொன்னான்

அவள் திண்ணையில் அருகே அமர்ந்துகொண்டாள். பையன் அவள் உடலுடன் நெருங்கி அமர்ந்து அவனை கூர்மையாக பார்த்தான்

“இவனுக்க பேரு மாணிக்கம்லா?”

“ஆமா, வயசு ரெண்டாவது”

“பேசமாட்டானா?”

“பேசுவான்… வேற ஆளுக கிட்ட பேசமாட்டான்… உள்ள கிடக்குதது சின்னவ. அவளுக்கு ஏளுமாசம்” என்றாள்

அவன் இன்லண்ட் லெட்டரை பார்த்தான். சீரான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. “இது குமரேசன் எளுதினதா?”

“அவருக்கு எளுத்து தெரியாது… இது அங்க ஆருகிட்டயோ குடுத்து எளுதினதாக்கும்” என்று பகவதியம்மை சொன்னாள். “முதல் ரெண்டு லெட்டரையும் போஸ்டாப்பீஸுக்கு போயி நாடாருகிட்ட சொல்லி வாசிச்சு பாத்தேன். அவரு முளுக்க வாசிச்சு காட்ட மாட்டாரு. உள்ள என்ன எளுதியிருக்குன்னு ரெண்டு வார்த்தை சொல்லுவாரு…இங்க நாலஞ்சு குட்டிக பள்ளிக்கூடம் போகுதுக. அதுக கிட்ட வாசிக்க குடுத்தா பைசா அனுப்புத காரியம்லாம் தெரிஞ்சுபோயிடும்…” கெஞ்சலாக “நீ கொஞ்சம் வாசிச்சு காட்டு மக்கா”

அனந்தன் கடிதத்தை வாசித்தான். “இங்க நான் சுகம். அங்க நீ சுகமா? நம்ம குளந்தைகள் சுகமா? மாணிக்கம் சுகமா? சின்னக்குட்டி சுகமா? பின்ன இங்க  நிறைய தேய்ப்பு வேலை உண்டு. ராத்திரிவரை தேப்புவேலை. ராத்திரியிலே உறங்குதது மட்டுப்பாவிலேயாக்கும். இங்க மளை இல்லை. மளைவந்தா உள்ள உறங்கணும். நல்ல வெயிலு உண்டும். பைசா அனுப்பியிருக்கேன். போஸ்டாபீஸிலே போட்டு வையி. ஆருகேட்டாலும் குடுக்காதே. கடன்கேட்டாலும் குடுக்காதே.வட்டிக்கு கேட்டாலும் குடுக்காதே. நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குத பணமாக்கும். பத்திரமா வச்சுக்கோ. கோமதி அக்காவை கேட்டதாச் சொல்லு. கோமதி அக்காவுக்கு வேணுமானா கொஞ்சம் சகாயம் செய். மத்த பொம்புளைக கூட பேச்சு வேண்டாம். பத்திரமா இருந்துக்க. பிள்ளைகளை பாத்துக்க. விசயங்களுக்கு லெட்டர் போடு. இப்படிக்கு குமரேசன்”

அவள் “அங்க துவைக்குத வேலை இல்லை. தேய்ப்புவேலை மட்டுமாக்கும்” என்றாள்

“ஆருகூட போனாரு?”என்று அனந்தன் கேட்டான்

“அவருக்க மாமனுக்க மகன் அங்க லாண்டரி வச்சிருக்காரு… அவரு நல்ல சௌகரியமா ஆயிட்டாரு.. இங்க வீடும் தோப்பும் எல்லாம் வாங்கியாச்சு. வாறியாடேன்னு கேட்டாரு. நான் போகவேண்டாம்னு சொன்னேன். போடி, இங்க நாலணாவுக்கு நாலு வேட்டி துவைச்சு எப்ப மனுசனா சீவிக்குததுன்னு சொல்லிப்போட்டாவ… திருவனந்தபுரம் போயி அப்பிடியே ரயிலு ஏறி போனதாக்கும்… போறதுக்கு ரெண்டுநாளு… பாம்பேன்னா வானத்துக்கு பக்கத்திலேல்லா?”

அனந்தன் புன்னகைத்தான், கடிதத்தை மடித்தான்.

அவள் சட்டென்று கண்கலங்கி “முகம் பாத்து நாலு மாசமாச்சு… ஒத்த ஒருத்தியா இங்க கெடக்கேன். ஆதரவா, எதமா ஒரு வார்த்தை எளுதல்ல”என்றாள்

அவள் முகத்தை பார்த்த அனந்தன் “எளுதியிருக்கு” என்றான்

அவள் புருவம் சுருங்க “எளுதியிருக்கா? எங்க?” என்றாள்

“இதிலே” என்றான்.  “அதை நான் எப்டி வாசிக்குததுன்னு நினைச்சேன்…”

“அதுக்கென்ன? படிச்சு காட்டு செல்லம்” என அவள் அருகே சற்று வந்தாள். முகம் சொல்லுக்காக குவிந்தது.

அனந்தன் அவள் கண்களை பார்த்தான். அவை சட்டென்று ஈரமும் பளபளப்பும் கொண்டவை போல ஆகிவிட்டிருந்தன

அவன் தயங்கினான். அவள் “படி பிள்ளே” என்றாள்

அவள் சற்று கொழுத்த பெண். கன்னங்கரிய நிறம். உருண்டையான முகம். மிகப்பெரிய எருமைக்கண்கள். ஆனால் உதடுகளும் மூக்கும் செவியும் எல்லாம் சிறியவை. கழுத்து மிகமெலிந்தது. அவள் நடிகை சரிதா போல இருப்பதாக அப்போது அவனுக்கு தோன்றியது.

அவன் அந்த நீலக்காகிதத்தைக் கசக்குவதுபோல பிடித்தபடி அமர்ந்திருந்தான். சட்டென்று எழுந்து போய்விடவேண்டும் என்று தோன்றியது.

“படிடே… என்ன இப்பம்? அவ்வோ எளுதினதுதானே?”

அவனுக்கு மூச்சுத்திணறியது. குரல் அடைப்பது போலிருந்தது “என்..” என்றபோது ஒலி வெளிவரவில்லை. தொண்டையை கனைத்து “என் அருமைச் செல்லக்குட்டிக்கு” என்றான்.

அவள் மிகமெல்லிய ஒரு முனகலோசையை எழுப்பினாள். அவனுக்கு அந்த ஓசை மிகமிகக் கூரிய ஒரு வருடல் போல இருந்தது. அவன் நெஞ்சு படபடத்தது. கைகள் நடுங்கின. கண்களில் நீர் ததும்பிவிடும்போலிருந்தது. மீண்டும் ஒருமுறை ““என் அருமைச் செல்லக்குட்டிக்கு” என்றான்

அவளிடம் எதிர்வினை இல்லை. அவள் அவன்முன் இல்லை என்று தோன்றியது.அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் உடல் அனல்வெம்மைகொண்டு,  கருமைக்குள் சிவப்புகலந்ததுபோல தெரிந்தது. கழுத்தில் புல்லரித்திருப்பதன் புள்ளிகள் தெரிந்தன

அவள் “ம்ம்” என்றாள். அவனுக்கு மட்டுமே அந்த ஓசை கேட்கமுடியும்.

“என் அருமை செல்லக்குட்டிக்கு, நீ இல்லாம இங்க என்னாலே இருக்க முடியல்லை” என்று அனந்தன் வாசித்தான். “நான் எப்பமும் உனக்க நினைப்பாத்தான் இருக்கேன். உன் முகத்தைத்தான் எப்பமும் நினைச்சுக்கிட்டே இருக்கேன். உன் கண்ணு ரெண்டும் எப்பமும் என் மனசுக்குள்ளே இருக்கு. நீ என்கூடவே இருக்கமாதிரியே இருக்கு. இனிமே எப்பம் உன்னைய பாப்பேன்னு நினைக்குறப்ப அழுகையாட்டு வருது…”

அவள் பெருமூச்சுவிட்ட ஒலியில் அவன் நிறுத்திக்கொண்டான். காகிதத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். பிறகு தொடர்ந்தான்.

“நான் இங்கே  கொஞ்சம் சம்பாதிச்சபிறவு ஓடி வந்திருதேன். நாம சேந்து சந்தோசமா இருப்போம். நான் தேதிய எண்ணிக்கிட்டே இருக்கேன்” என்று அனந்தன் வாசித்தான். அவன் குரல் தாழ்ந்து கிசுகிசுப்பாக ஒலித்தது. நெஞ்சின் இரைச்சல் தாளமுடியாமல் அவன் படிப்பதை நிறுத்தினான்.

அவள் “ம்” என்றாள்.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய இமைகள் சரிந்திருந்தன. மூடிய இமைகள் இப்படி பளபளப்பாக இருக்குமா? உள்ளே கருவிழிகள் ஓடும் அசைவு வண்டுபோல தெரிந்தது. உதடுகள் ஈரமாகி சற்றே வளைந்திருக்க கழுத்திலும் தோள்களிலும் வியர்வையின் பளபளப்பு.

அவள் “ம்ம்” என்றள். அவன் குரல் சற்று தெளிந்து வந்தது  “நான் உன் அழகைப்பற்றி நினைச்சுக்கிட்டே இருக்கேன். பகவதி, நீ காராமணி பயிறு மாதிரி நெறம் கேட்டியா? உன் முகம் வட்டமா அழகாட்டு இருக்கும். உன் சின்ன உதடு பூவு மாதிரி இருக்கும்”

அவன் நிறுத்திவிட்டான். மிகமிக அடர்த்தியான குளிர்ந்த காற்றுப்பரப்பு ஒன்றை உடலால் கிழித்து அப்பால் கடந்து “அந்த சின்ன உதட்டிலே முத்தம் குடுக்கேன்” என்றான்.

அவளிடமிருந்து ஓசையே இல்லை. கைகளால் கன்னங்களை ஏந்தி முலைகள் தொடையில் அழுந்த குனிந்து அமர்ந்திருந்தாள். அவளுடைய வகிடு தெரிந்தது. அவள் கழுத்து அசைந்துகொண்டே இருந்தது.

அனந்தன் “உன் அன்புள்ள கணவன் குமரேசன்” என்றான்.

அவள் அசையவில்லை. அவன் அப்படியே அமர்ந்திருந்தான். நெடுநேரம் ஆனதுபோல் இருந்தது. சூழ்ந்திருந்த தென்னை மரங்களில் காற்று ஓலைகளை சுழன்றாடச் செய்தது. அந்த ஓசை மழைபோல கேட்டுக்கொண்டிருந்தது.

பிறகு அவள் விழித்தெழுந்தாள். கண்கள் காய்ச்சல் வந்ததுபோலச் சிவந்திருந்தன. சிறிய மேலுதட்டுக்குமேல் கண்ணாடியில் நீராவி பனித்ததுபோல வியர்வை. ஒன்றும் சொல்லாமல் கைநீட்டினாள். அவன் அவள் முகத்தை பார்க்காமல் கடிதத்தை நீட்ட அவள் அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அவன் மேலும் சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து சரிந்த மண்பாதை வழியாக்க மேலே சென்றான். குளத்தில் நீர் கண்கூசும்படி பளபளத்து அலைகொண்டது. அதன் மறுகரையில் துணிதுவைப்பவர்களின் அசைவு ஓசையின்றி தெரிய கல்லில் துணி அடிக்கப்படும் ஓசை சற்றுநேரம் கழித்து எழுந்து மறுகரையில் முட்டி இரண்டிரண்டாக கேட்டது. அந்த ஓசை அவன் உடல்மேலேயே கூழாங்கற்கள் போல விழுந்தது.

அவனால் நடக்க முடியவில்லை. கால்கள் தளர்ந்திருந்தன. மெல்லமெல்ல களைப்பு ஓங்கி கண்கள் கூசி மூடிக்கொள்ள அவன் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் நடந்துகொண்டிருந்தான். அவன் மேல் துவைக்கும் ஓசை கொத்திக் கொத்தி தொடர்ந்துவந்தது.

நெடுநேரம் கழித்து பிளாக் ஆபீஸ் வாசலை அடைந்தபோதுதான் விடுபட்டான். உடல் வியர்த்திருக்க அதன்மேல் காற்று குளிர்ந்து வீசியது. பிளாக்காபீஸ் மாதவன் போற்றி “என்னடே, ஆளு ஒரு மாதிரி இருக்கே?”என்றார்.

“தண்ணி வேணும்” என்று அவன் சொன்னான்

அங்கிருந்து திரும்பும்போதுதான் அவனுக்கு ஒரே கணத்தில் எல்லாம் உறைத்தது. நிகழ்ந்தவற்றை மீண்டும் நினைத்துக்கொள்ள நாணியவனாக தனக்குத்தானே தலையை அசைத்தான். நேராக எதிர்ப்பக்கம் சாலைக்குச் சென்று சுற்றிக்கொண்டு குருவிக்காடு ஜங்ஷன் வழியாக வீட்டுக்குச் சென்றான்.

வீட்டுக்குச் செல்லும் அந்த பாதை முழுக்க அவன் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். அந்த சந்தர்ப்பத்தை, அவன் வாசித்த அந்த வார்த்தைகளை அத்தனை துல்லியமாக காட்சி காட்சியாக, சொல் சொல்லாக நினைவிலிருந்து எடுத்தான். ஆனால் உடனே ஒட்டுமொத்தமாக அனைத்துமே மறந்துபோய் ஒரு மொத்தையான நினைவாக எஞ்சியது.

அதை நினைக்கக்கூடாது என்று அவன் விலக்கினான். அதை விலக்க விலக்க அப்படியே அசையாமல் நின்றது. சாலையில் எதையாவது பார்த்து அந்த நினைப்பில் கொஞ்ச தூரம் வந்தபோது சட்டென்று எழுந்து முன்னால் வந்து நின்றது

வீட்டுக்கு வந்தபோது அவன் களைத்துப்போயிருந்தான். பிளாக்காப்பீஸில் வாங்கிய பூச்சிமருந்தை அப்பு அண்ணாவிடம் அளித்துவிட்டு உள்ளே சென்று கட்டிலில் படுத்துக்கொண்டன். அவனுடைய அறைக்குள் அவனுடைய கட்டிலில் படுத்தபோது ஆறுதல் உருவாகியது.

மெல்ல எல்லாம் நிலைமீண்டபோது அவன் அனைத்தையும் நிதானமாக எண்ணிப்பார்த்தான். அவள் அவன் வாசித்தவை அந்தக் கடிதத்தில் இல்லை என்று தெரிந்துகொண்டிருப்பாளா? அதெப்படி தெரியும்? அவளுக்கு வாசிக்க தெரியாது. இனி அவள் அதை இன்னொருவரிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லப்போவதுமில்லை.

ஆனால் உண்மையாகவே தெரியாமலிருக்குமா என்ன? அவன் குரல் அப்போது எப்படி இருந்திருக்கும்? அவன் முகத்தை அவள் பார்க்கவே இல்லை. அவன் மெல்ல மெல்ல நிம்மதியிழக்க தொடங்கினான். அவளுக்கு தெரியாமலிருக்காது. அப்போது தெரியாவிட்டாலும் மீண்டும் ஒருமுறை யோசிக்கும்போது தெரிந்துவிடும்.

தெரிந்துவிட்டது, அதனால்தான் அவள் ஒன்றுமே சொல்லாமல் உள்ளே போனாள். ஆனால் அவள் அந்த வார்த்தைகளால் உணர்ச்சிவசப்பட்டுக்கூட அவ்வாறு போயிருக்க வாய்ப்புண்டு.

இல்லை, அவளுக்கு தெரிந்துவிட்டது. அவன் அவளுக்கு அவன்மீதிருந்த எல்லா மதிப்பையும் அழித்துக்கொண்டுவிட்டான். அவள் இப்போது அவனைப்பற்றி கசப்புடன் நினைத்துக்கொள்வாள். மனதுக்குள் வசைபாடுவாள், வெறுப்பாள். நேரில் மறுமுறை கண்டால் அவனை அவமதிக்கக்கூடும். ஒன்றும் சொல்லவேண்டியதில்லை, பேசாமல் திரும்பிக்கொண்டாலே அவமதிப்புதான்

நினைக்க நினைக்க அவன் உடல் எரிவதுபோலிருந்தது. படுத்திருக்க முடியவில்லை. எழுந்து கொல்லைப்பக்கம் சென்றான். அங்கிருந்து தோப்புக்குச் சென்றான். அப்படியே ஆற்றுக்கு போனான். எங்கே போனாலும் அந்த நினைப்புகள் கூடவே வந்தன.

ஏன் அப்படி தோன்றியது? அவளை அப்படி பார்த்ததே இல்லை. அவள் கண்ணுக்கு அழகு என்றுகூட தோன்றியதில்லை. அந்த சந்தர்ப்பத்தை அவன் எந்த மறுநினைப்பும் இல்லாமல் தற்செயலாக விரிவாக்கிக்கொண்டான், அவ்வளவுதான். அந்த சந்தர்ப்பத்தை கைவிட மனமில்லை

“ஏம்லே ஒருமாதிரி இருக்கே?”என்று தங்கையாநாடார் கேட்டார். அவருக்குப் பின்னால் வந்த குளிப்பாட்டப்பட்ட எருமை அவனைப் பார்த்தது. அதே கன்னங்கரிய பெரிய கண்கள்

அவன் திரும்பி வீட்டுக்கு வந்தான். அம்மாவின் டப்பிக்குள் இருந்து ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டான். சட்டையை சுருட்டி கையில் எடுத்தபடி ஆற்றில் இறங்கி அப்பால் ஏறி மாறப்பாடி ஜங்ஷனுக்கு போனான். பதினாறு இ வந்து நின்றிருந்தது. அதில் ஏறி அமர்ந்துகொண்டான்.

எங்கே போகிறோம்? எங்கே போனாலும் இந்த சிந்தனைகள் கூடவேதான் இருக்கப்போகின்றன. ஆனால் ஆச்சரியமாக அவனுடைய வழக்கமான இடங்களைவிட்டு பஸ் நகருந்தோறும் அவனுடைய எண்ணங்களும் மாறின

அருமனையில் கிருஷ்ணப்பிரியா தியேட்டரில் மலையாளப்படம். அங்கத்தட்டு, பிரேம் நஸீர் விஜயஸ்ரீ நடித்தது. வண்ணப்படம். வரலாற்றுப்பின்னணி. விஜயஸ்ரீ நல்ல வெண்ணிறம், பருமன். பெரும்பாலான காட்சிகளில் அரையாடைதான். “தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி! தாளத்தினொத்தொரு பாட்டுபாடி ! குறுமொழிகுளங்ஙரை குளிக்கான்வா, குறுந்தேனிடத்திலே கிளிமகளே”

படம்முடிந்தபோது அவன் முற்றிலும் வேறொரு இடத்தில் இருந்தான். மணிகண்டவிலாஸில் பரோட்டாவும் பீஃபும் சாப்பிட்டுவிட்டு திரும்பியபோது எதுவுமே நினைவில்லை. “தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி!” பாட்டு மட்டும் ஓடிக்கொண்டிருந்தது

இரண்டுநாள் கழித்து அவன் குருவிக்காட்டு ஜங்ஷனிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது எதிரே பகவதியும் கோமதியும் வந்துகொண்டிருந்தனர். அவள் இடுப்பில் பெண்குழந்தை இருந்தது. அவளைப்போலவே கரிய நிறமும் பெரிய கண்களும் கொண்டது

எதிரிலிருந்து கடுங்குளிர் காற்று வந்து அறைந்த்துபோல அனந்தன் நடைதளர்ந்தான். எங்கும் திரும்பி செல்லமுடியாது. அவளை எதிரெதிர் கண்டே ஆகவேண்டும். அவன் பார்வையை அங்குமிங்கும் அலையவிட்டு நடந்தான்

கோமதி “பிள்ளே, அங்கிண ரேசனிலே அரிசி குடுகானுகளா?”என்றாள்

“குடுக்கானுக” என்றான்

“மண்ணெண்ணை” என்றாள்

“மண்ணெண்ணை அடுத்த வாரம்னு நினைக்கேன்”என்றான் அனந்தன்

பகவதி “சீனி குடுக்கானுகளா?”என்றாள்

அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். இயல்பான முகம், இயல்பான சிரிப்பு, சாதாரணமான கண்கள்.

அவன் குழறியகுரலில் “சீனி, சீனியும் குடுக்கானுக”என்றான்.

“ஓ” என்று சொல்லி அவள் புன்னகைத்தாள்

“வாறேம் பிள்ளே” என்றாள் கோமதி அவர்கள் கடந்துசென்றனர்

அவன் அப்பால் சென்றதும் ஆறுதல் அடைந்தான். ஆனால் நடக்க நடக்க சிறு ஏமாற்றம் ஏற்பட்டது. அப்படியென்றால் அவன் வாசித்ததை அவள் கண்டுபிடிக்கவில்லை.

அதெப்படி என்று வியப்பு ஏற்பட்டது. ஆனால் உண்மையிலேயே அவளுக்குத் தெரியவில்லை. அவள் அந்த கடிதத்தை புரிந்துகொள்ளவில்லை. ஏனென்றால் அவளுக்கு கடிதம் என்பதே புதிய விஷயம். அவளுக்கு அவள் கணவன் எழுதிய நான்கே நான்கு கடிதங்கள்தான் அதுவரை வந்திருக்கும். எஞ்சிய மூன்று கடிதங்களையும் போஸ்ட்மேன் எபனேச நாடார் படித்து உள்ளடக்கத்தை சுருக்கமாகச் சொல்லியிருப்பார்.

அவர் ஒருநாளில் நாற்பது ஐம்பது கடிதங்களை வாசிக்கவேண்டும். எப்போதுமே சலிப்பான முகம் கொண்டவர். கோயில்வட்டம் சர்ச்தெரு இரண்டு இடங்களுக்கு மட்டும்தான் அவரே லெட்டர் கொண்டுசென்று கொடுப்பார். மிச்சமெல்லாம் சொல்லி அனுப்புவதுதான். நேரில் சென்று வாங்கிக்கொள்ளவேண்டும். அல்லது கொடுத்தனுப்புவார்.

அனந்தன் அவள் முகத்தை நினைத்துக்கொண்டிருந்தான். கடிதத்தை வாசிக்கும்போது அவள் முகத்தை பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அப்போது நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது. அப்போது அவள் அவன் கண்களைப் பார்த்திருந்தால் அவன் எழுந்து ஓடிவந்திருப்பான்

நேரம் செல்லச்செல்ல அந்த ஏமாற்றம் ஒரு சிறிய கீறலின் எரிச்சல்போல நீடித்தது. பின்னர் அது எங்கோ மறைந்தது. அவ்வப்போது அவன் அந்த சந்தர்ப்பத்தை நினைத்துக்கொள்ளும்போது சிறிய கசப்பு மட்டும் எழுந்தது

பிறகொருநாள் அவன் நினைத்துக்கொண்டான். இன்னொரு கடிதம் வந்தால் அவள் அவனை வாசிக்க அழைப்பாளா? அதை எப்படி அறிவது? அந்த முந்தைய கடிதம் வந்திருக்கக்கூடிய நாளை கணித்து சரியாக ஒருமாதம் கடந்து அவன் அவள் வீடு இருக்கும் திசைக்குச் சென்றான். ஆனால் அவள் வீட்டை அடைவதற்கு முன்னரே கால்கள் பதற திரும்பிவிட்டான்.

இரண்டுநாட்கள் அதையே நினைத்துக்கொண்டிருந்தான். அதன்பின் முழுத்துணிவையும் திரட்டிக்கொண்டு _குளத்தின் வரம்புப்பாதை வழியாக அவள் வீட்டுக்குமேல் நடந்தான். தொலைவிலேயே அவள் திண்ணையில் குழந்தையுடன் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டான். நிதானமாக நடக்கவேண்டும் என்று நினைத்தான். ஆனால் நடக்க நடக்க நடை தள்ளாடி செயற்கையாக ஆகியது. கழுத்தை இரும்புபோல இறுக்கியபடி நடந்து அவள் வீட்டை கடந்தான்

நெடுந்தொலைவு சென்றபிறகுதான் அவன் இயல்படைந்து நீண்ட மூச்சுக்களை விட்டான். பின்னர் ஏமாற்றம் அடைந்து திரும்பிப்பார்க்கப்போய் மயிரிழையில் விலகிக்கொண்டான். நடந்து நடந்து அந்த இடத்தை கடந்தபின் வியர்வையில் நனைந்த சட்டையை தூக்கி விட்டுக்கொண்டான்.

அவள் தன்னை பார்க்கவில்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது.  நெடுநேரம் அங்கே ஒரு இலுப்பை மரத்தடியில் நின்று யோசித்துப் பார்த்தான். அதன்பின் திரும்பி நடந்தான். இம்முறை அவள் வீட்டை திரும்பிப் பார்த்தான். அவள் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் வீட்டுக்கு திரும்பியபின் எரிச்சலுடன் இருந்தான். மீண்டும் ஒருமுறை அவள் வீட்டுக்கு முன்பாக நடந்தால் என்ன என்று தோன்றியது. அது மிகவும் கீழிறங்குவதாக ஆகிவிடும் என்று எண்ணி தவிர்த்தான்.

அந்த பிடிவாதம் இரண்டுநாட்களுக்கு நீடித்தது. சும்மா போனால் என்ன? அந்தவழியாக பிளாக்காப்பீஸ் போவதுதான் வசதியானது. அதிலென்ன இருக்கிறது? அவனே சொல்லிச்சொல்லி தன்னை உந்திக்கொண்டு மீண்டும் அவ்வழியாகச் சென்றான். இம்முறை அவள் அவனை பார்த்தாள் என்பது உறுதியாக தெரிந்தது.

ஒருவேளை கடிதம் வராமலிருந்திருக்குமோ? கடிதம் வந்ததா என்று எப்படி தெரிந்துகொள்வது? அவன் யோசித்து பலமுறை ஒத்திப்போட்டு போஸ்டாபீஸ் சென்றான். நாடார் அவனிடம் “லெட்டர் இல்லை” என்று கைகாட்டினார்

“அப்பாவுக்கு இல்லை, எனக்கு” என்றான்

“என்ன லெட்டர்?”

“காலேஜ் லெட்டர்”

“வந்தா தாறேன் என்ன?”

அவன் மீண்டும் ஒருமுறை அவள் வீடுவழியாகச் சென்றான். போஸ்டாபீஸுக்கும் போனான். நாடார் “லெட்டர் இல்லியே மக்கா” என்றார்

போஸ்டாபீஸில் அவனை அடிக்கடிப் பார்ப்பது போஸ்ட்மாஸ்டர் கிருஷ்ணையருக்கு கொஞ்சம் வித்தியாசமா தெரிய ஆரம்பித்தது. “வே இவன் நம்ம கரடிக்க பயலாக்குமே.. என்னடே?” என்றார்

“ஒண்ணுமில்லை” என்றான் அனநத்ன் “லெட்டர் போட்டேன்”

“போட்டாச்சுல்லா, போ”

“இல்ல” என்றான். எச்சில் விழுங்கி “அதை திரும்ப எடுக்கணும்”

“ஆகா, அது நடக்காதுல்லா. அது இனி சர்க்காருக்க முதலாக்கும். அதை திரும்ப எடுக்க முடியாது…” என்றார் கிருஷ்ணையர்

“ஏன்?” என்று அவன் கேட்டான்

“அது நீ போட்ட லெட்டர்னு ஆதாரம் உண்டாடே? சங்கதி பதினஞ்சுபைசா லெட்டராக்கும். ஆனா அதுக்கு பின்னாலே சில சர்க்காரு சட்டவட்டங்களெல்லாம் உண்டு, போ போ சோலியப்பாரு”

“நான் எளுதினதுல்லா?”என்றான் அனந்தன்

“இதுக்குள்ள போட்டாச்சுன்னா அதுக்க சொந்தக்காரன் அட்ரஸிலே இருக்கப்பட்டவனாக்கும்…” என்றார் கிருஷ்ணையர்.

அவன் திரும்பியபோது கிருஷ்ணையர் பின்னால் “லவ்லெட்டராடே?”என்றார்

அவன் அதன்பின் போஸ்டாபீஸ் போகவில்லை. எதிரில் கண்ணன் பார்பர்ஷாப்பிலேயே நின்று தினதந்தியை படித்தான்.

ஒருநாள் அவன் போஸ்டாபீஸுக்கு வெளியே கோமதி அமர்ந்து வெற்றிலைபோட்டுக்கொண்டிருந்ததை பார்த்தான். அவன் மனம் திடுக்கிட்டது. அவன் எண்ணியது  போலவே அவள் அங்கே நின்றிருப்பதைக் கண்டான்

பார்பர்ஷாப்பில் மறைவாக நின்று அவன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தான். அவள் கையில் இன்லண்ட் இருந்தது. அதை போஸ்டாபீஸில் நின்றிருந்த எல்.ஐ.சி அருணாச்சலம் பிள்ளையிடம் கொடுத்து வாசித்துத் தரும்படி கேட்டாள். அவர் கண்ணாடியை போட்டுக்கொண்டு அதை வாசிப்பதை அவன் கண்டான்

அனந்தன் பார்பர்ஷாப்புக்குள் நுழைந்து பெஞ்சில் ஒடுங்கி அமர்ந்துகொண்டான். அவளும் கோமதியும் கிளம்பிச் செல்வதை தொலைவிலேயே பார்த்தான். நெடுநேரம் அவன் காய்ச்சல் கண்டவன்போல அங்கேயே அமர்ந்திருந்தான். பின்னர் பெருமூச்சுவிட்டுக்கொண்டு கிளம்பி வீட்டுக்குச் சென்றான்

அவன் வீட்டுக்குச் செல்வதற்குள் பலமுறை நின்றுவிட்டான். அப்படியே எங்காவது ஓடிவிடவேண்டும் போலிருந்தது. தலையில் மடேர் மடேர் என்று அறையவேண்டும் போலிருந்தது. கண்ணீர் வழிய அவ்வப்போது துடைத்துக்கொண்டான்

வீட்டுக்குச் சென்றபோது அவன் அந்த உணர்ச்சிகளை கோபமாக மாற்றிக்கொண்டான். “எருமை! எருமை!”என்று சொல்லிக்கொண்டான். பல்லைக் கடித்து கைகளை சுருட்டி “எருமை! காரானெருமை!”என்று ஓசையின்றி உறுமினான்

அறைக்குள் அவனால் இருக்கமுடியவில்லை. உள்ளே நீராவி நிறைந்திருப்பதுபோல புழுங்கியது. அம்மாவின் சம்புடத்தைப் பார்த்தான். அதில் பணம் இல்லை. ஆனால் மூக்குத்தியின் திருகாணி கிடந்தது

அதை எடுத்துக்கொண்டு சட்டையை சுருட்டி தாளில்பொதிந்து கையில் வைத்தபடி அவன் தோட்டம் வழியாக ஆற்றில் இறங்கி மறுகரையை அடைந்து மாறப்பாடி ஜங்ஷனில் பஸ் ஏறினான். அருமனைக்குப்போய் குமாரசாமி தட்டானின் கடையில் அந்த திருகாணியை விற்றான் ஐம்பதுரூபாய் கிடைத்தது

மார்த்தாண்டம் பஸ்ஸில் ஏறிக்கொண்டான். அங்கே இறங்கி சாமுவேல் ஓட்டலில் பரோட்டா பீஃப் சாப்பிட்டுவிட்டு திருவனந்தபுரம் பஸ்ஸில் ஏறிக்கொண்டான். தம்பானூரில் இறங்கி நின்று விஜயஸ்ரீ நடித்த படங்கள் என்னென்ன என்று பார்த்தான். பழைய படங்கள் சாலை சிவா தியேட்டரில்தான் ஓடும்.  ‘ஜீவிக்கான் மறந்நுபோய ஸ்த்ரீ’ ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்துவிட்டு ஸ்ரீபத்மநாபா தியேட்டருக்குப் போய் அக்ஞாதவாசம் பார்த்தான்.

இரவில் ரயில்நிலையத்திலேயே தங்கிவிட்டு விடியற்காலையில் பஸ் ஏறி திரும்பி வந்தான். பஸ்ஸில் அரைத்தூக்கத்தில் பாட்டுக்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஜீவிக்கான் மறந்நுபோய ஸ்த்ரீ படத்தின்  ‘வீணபூவே குமாரனாசான்றே வீண பூவே’ பாட்டும் ‘தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி’ பாட்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. விஜயஸ்ரீ அரைநிர்வாணமாக ஓவியன் முன் நின்று போஸ் கொடுத்தாள். தடித்த வெண்ணிறமான பெண்.

அவன் திரும்பி வந்தபோது காய்ச்சல் இருந்தது. இரவெல்லாம் ரயில்நிலையத்தின் பனியில் படுத்திருந்தான். அப்பா அவன் வீட்டுக்கு வராத செய்தியையே அறியவில்லை. அம்மா “எங்கடா போனே? புத்திகெட்ட நாயே?”என்றாள். அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு கிடந்தான். தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி!  “என்னடா முழிக்கே?” அவன் முனகினான். அவன் காதில் அந்தப்பாட்டே கேட்டுக்கொண்டிருந்தது. தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி!

நான்குநாட்கள் காய்ச்சல் இருந்தது. ஆனைமலைக் கம்பவுண்டரின் கலக்குமருந்தை குடித்தபோது குணமாகியது. அவன் எழுந்தபோது காலேஜ் திறந்திருந்தது.  ஒவ்வொருநாளாக அவனை அதிலிருந்தெல்லாம் தள்ளிக்கொண்டு சென்றது.

மெல்ல மெல்ல அவன் தெளிவடைந்தான். அப்படி என்னதான் நடந்துவிட்டது? அவன் செய்தது ஒரு சிறிய குறும்புதான். அவளிடமே போய் அதைச் சொல்லிவிட்டால் தீர்ந்தது.  “ஒரு வெளையாட்டுக்கு அப்டி வாசிச்சுப்போட்டேன். மனசிலே வைச்சுக்கிடாதே” அவ்வளவுதான். அவள் அவனை விட மூத்தவள். பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள். அவன் அறிந்த மூத்த பெண்கள் எல்லாருமே அப்படித்தான்

அதோடு அதெல்லாம் முடிந்துவிடும். அதன்பின் அவளிடம் மறுபடியும் சாதாரணமாகப் பேசமுடியாமலாகலாம். அது தேவையுமில்லை. இந்த அசௌகரியம் மனதிலிருந்து போய்விடும்

ஆனால் அதற்கு அவளை தேடிப்போகவேண்டும். அவள் வீட்டுக்கு முன்னால் சென்று அவளை வெளியே அழைத்து சொல்லவேண்டும். அப்போது உடன் எவரும் இருக்கக்கூடாது. அதைச்செய்ய அவனால் முடியும் என்று தோன்றவில்லை. தற்செயலாக எங்காவது தனியாகச் சந்திக்கலாம். ஆனால் அவள் எங்கும் போவதுமில்லை. பெரும்பாலும் கோமதியுடனேயே சென்றாள்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு அவன் நகர்ந்துகொண்டிருந்த குலசேகரம் பஸ்ஸில் பாய்ந்தேறியபோது அவள் உள்ளே நின்றிருந்தாள். கூட்டமில்லை. ஆனால் எல்லா சீட்டிலும் ஆளிருந்தனர்.

அவன் அவளை முதலில் பார்க்கவில்லை. டிக்கெட் எடுத்தபின் முன்னகர்ந்தபோதுதான் அங்கே நின்றிருந்தவள் அவள் என்று கண்டான்.

அவன் மிகமிக விலகிவந்துவிட்டான் என்று நினைத்திருந்தான். ஆனால் அது ஒருவட்டம், ஒரே சுழற்சியில் அவன் மிக அருகே சென்றுவிட்டான். அவன் பின்னால் செல்லலாமா என்று பார்த்தான், இடமில்லை. முன்னால் சென்றுதான் ஆகவேண்டும். அவளருகே செல்லவேண்டும். அவன் நெஞ்சு படபடக்க இரண்டு அடி எடுத்து வைத்தான்.

அப்போது அவனுக்கு மிகநுட்பமான ஓர் உணர்வு ஏற்பட்டது, அவன் அந்தக் கடிதத்தை வாசித்தபோது இருந்த உடலசைவு அவளில் ஏற்படுவதாக அறிந்தான், ஆனால் அவளை அவன் பார்க்கவில்லை.

திடுக்கிட்டு அவன் விழிதூக்க அவள் கண்களை சந்தித்தான். அவள் புன்னகைத்தாள். சாதாரணமான புன்னகைதான், ஆனால் கண்களில் அதற்குமேல் ஒன்றும் இருந்தது

அவன் கண்களை விலக்கிக் கொண்டான். மீண்டும் அவன் பார்த்தபோது அவள் கண்களால் சந்தித்து புன்னகையுடன் திரும்பி சன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தான். முன்பு அவன் கண்டதுபோல அவள் உடல் அனல்கொண்டு சிவப்பு ஓடியிருந்தது. மெல்லிய வியர்வை பூத்திருந்தது. அவள் முகத்தில் பஸ்ஸின் சன்னல்வெளிச்சம் அலையலையாக விழுந்து கொப்பளித்துக்கொண்டே இருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தங்கப்புத்தகம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

அன்புள்ள ஜெ,

 

தங்கப்புத்தகம் கதை வாசித்தேன். கூடு,கரு உட்பட இந்தக்கதைகளுக்கெல்லாம் ஒரு ‘பேட்டர்ன்’ உள்ளது. முதலில் கொஞ்சம் வேடிக்கை கலந்த ஒரு தத்துவவிவாதம், அதிலிருந்து ஒரு கதை, அந்தக்கதையே சாகசமாகவும் உருவகமாகவும் இருக்கும். அந்த தத்துவ விவாதத்தின் விளக்கமாகவோ விரிவாக்கமாகவோ கதை அமைவதில்லை. கதைக்கு அது ஒரு பிளாட்ஃபார்ம் மட்டும்தான். அங்கிருந்து கதை விரிந்து விரிந்து வேறுவேறு இடங்களுக்குச் செல்கிறது. கரு, கூடு எல்லாமே அப்படி எங்கோ சென்று நின்று அந்த தத்துவ விவாதத்தை ‘திரும்பிப்பார்க்கும்’ கதைகளாக அமைந்திருக்கினன.

 

தங்கப்புத்தகம் பாடபேதம் என்பதைப் பற்றிச் சொல்கிறது. மூலநூல் என்று ஒன்று இருந்தால் அதை பிரதியெடுக்க முடியுமா என்று பேசுகிறது. முடிவில்லாத நகல்களை உருவாக்கும் மூலநூல் ஒன்றைச் சொல்லி உலகிலுள்ள எல்லா மூலநூல்களும் அத்தகையவைதான் என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் மூலநூல் என்பது அதுதானா? இல்லை என்றே கதை முடிகிறது. மூலநூல் உன்னிடம் உள்ளதா, அது உலகனைத்துக்கும் பொதுவானதா என்று கேட்கப்படும்போது முக்தா கடைசியில் ஆமாம் என்றுதான் பதில் சொல்கிறார்

 

மகாதேவன்

 

அன்புள்ள ஜெ,

 

தங்கபுத்தகம் குறுநாவல் வாசித்தேன். ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் பிரதிகள் மாறுவதை எப்படி புரிந்து கொண்டேன்னா அந்த தங்க புத்தகத்தை கடலாக அதிலிருக்கும் வார்த்தைகளை அலைகளாக உருவகித்து கொண்டேன்,  அலைகளை கணநேரத்திற்கொருமுறை அதன் வடிவம் மாறிவிடுமென்பதால் ! முக்தா அதன் மாற்றத்திலிருக்கும் சூத்திரத்தை அறிந்து கொள்ள முயல்வதை கூட அலைகளை உருவாக்கும் காற்றின் இயக்கத்தினை அட்டவணை படுத்துகிறார் என்று எண்ணிக்கொண்டேன் படித்து வரும்போது அவரை சுனாமி தாக்கும் நிகழ்வு வர போகிறது என்று எண்ணி கொண்டேன் :)

உண்மையில் இந்த கதையை அதன் நேரடி அர்த்தத்திற்குள் சென்று புரிந்து கொள்வது எல்லாம் எனக்கு கடினம் சார்,  அதற்கு நான் நிறைய எல்லா விதங்களிலும் பயணிக்கணும்.

 

இந்த குறுநாவலில் வந்த தெய்வங்கள் பெயர்கள் எல்லாம் இணையத்தில் தேடி புகைப்படங்களை பார்த்தேன், வஜ்ரயோகினி,  palden lhama என ஒரு சில மற்றும் கிடைக்கல,  இது ஒரு புது உலகம் என தோன்றியது, முன்பு உங்கள் தளத்தில் வந்த பயணக்கட்டுரைகளில் இந்த தெய்வங்களின் படங்களை பார்த்திருக்கேன்,  ஆனால் இப்போது இந்த திபெத்திய பவுத்த உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் வருகிறது.  இந்த தங்க புத்தகத்தில் உள்ளவைகளாக வருகிற வஜ்ராயன 7 அடிப்படைகள், அந்த அபிதாசர், வெஜ்  பற்றி எல்லாம் உள்ள இந்த நூல் படித்து இந்த உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன், இதன் தமிழாக்கம் இருக்குமோ என்றுகூட யோசித்து பார்த்தேன்.

 

சார்,  நித்ய சைதன்ய யதியின் உபநிஷ விளக்க நூலில் சம்பூதி, அசம்பூதி பற்றி விளக்குகிறார், ஒருவர் பல்லாயிரம் வருட மனித வாழ்க்கையில்,  பிரபஞ்சதில் மாற்றத்தை செலுத்திவிட கூடிய ஆற்றல் மனிதனுக்குள் இருக்கிறது என்கிறார், நல்ல சம்பூதியின் விளைவாக பசுமை புரட்சியை சுட்டிக்காட்டுகிறார்,  தீய சம்பூதியின் விளைவாக அணுஆயுத விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார், அதில் வளராத நாடுகள் அணுஆயுத விஷயங்களில் இருக்கும் அசம்பூதி நிலையை நல்ல விஷயமாக கூட சுட்டி காட்டுகிறார். தாவரங்களின் இயற்கையான பரிணாம வளர்ச்சியில் இடையில் புகுந்து மரபணு மாற்றம் செய்து நமக்கேற்ப மாற்றுவதை கூட தீய சம்பூதியாக சொல்கிறார் என்றுதான் ஞாபகம்.  சார் உங்கள் எழுத்து வேகத்தை, தரத்தை நல்ல சம்பூதியின், மனித ஆற்றலின் உச்சத்தை காட்டும் எடுத்துக்காட்டாகவே வாய்பிளந்து பார்க்கிறேன்,  நல்லவேளை நீங்கள் எதுவும் தீவிரவாத குழுவுக்குள் செல்லவில்லை !

 

ராதாகிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலமே

விஷ்ணுபுரம் நாவலில் ஒரு அழகான வரி வரும். ‘சீடா ஞானமென்பதே முடிவில்லாத பாடபேதங்களின் வரிசைதானே?’. நூல்களை வாசிக்க வாசிக்க அந்த எண்ணம்தான் வலுவாக எழும். உரைகளால் ஆனதே அறிவுத்துறை. குரானுக்கும் பைபிளுக்கும் கீதைக்கும் மட்டும் அல்ல ஷேக்ஸ்பியருக்கும் உரைகள்தான் நிறைந்திருக்கின்றன. உரைகள் எல்லாமே பாடபேதங்கள்தான்

சத்யமூர்த்தி எஸ்

அன்புக்கும், மதிப்புக்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

அன்புக்கும், மதிப்புக்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒரு மொழிபெயர்ப்பாளனின் உள்ளத்தை ஒருவனால்  ஊடுருவிச் சென்று அவனது ஆன்ம ஆழத்தை எட்ட முடியுமா? தங்கப்புத்தகம் என் நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துவிட்டது. ஹரிவம்சம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். தங்கப்புத்தகம் என்ற தலைப்பைக் கண்டவுடனேயே,”அஃது என்ன தங்கப் புத்தகம்?” என்ற ஓர் உணர்வு மேற்கொண்டு மொழிபெயர்க்கவி்டாமல் “போ! படி!” என்றது. முக்தாவின் கனவைப் போலத்தான்.

 

நேற்றிரவு 2 மணிக்குப் படிக்கத் தொடங்கினேன் என்று நினைக்கிறேன். இப்போதும் மூன்றாவது முறையாகப் படிக்கிறேன்.. இன்னும் என்னை நானே உணர முடியாதது ஏதேனும் இருக்கிறதா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன். இப்போது என்னால் ஒன்று மட்டுந்தான் சொல்லமுடிகிறது “உங்கள் கைகள் பொற்கைகள்”. குட்டுப்பட்டாலும், அணைக்கப்பட்டாலும் அடைவது மோட்சம்தான். காய்த்த மரம்தான் கல்லடி படும். நீங்கள் தொடர்ந்து கல்லடி படுவதில் வியப்பேதுமில்லை.

“நூல்களில் இருந்து பெற்ற சொற்களை நாம் நம் ஆழத்தில் புதைக்க வேண்டும். புதைக்கப்படாத விதை முளைப்பதில்லை. நூலில் இருந்து அமைதியைப் பெற்றுக் கொண்டவனே உண்மையில் அந்நூலைச் சென்றடைந்தவன்.”, “அலைகளை மட்டுமே கண்டு கடலை அறியாதவன்” எனத் தொடக்கத்தில் சொல்லப்படும் இந்தச் சொற்கள் இந்தக் குறுநாவல் முழுவதும் தொடர்ந்து பயணிக்கின்றன.

கனவுகளின் மெய்ம்மையைச் சுட்டிக் கண்ணாடி போலப் பிரதிபலிக்கிறீர்கள்.

அன்புடன்

செ.அருட்செல்வப்பேரரசன்

arulselvaperarasan@gmail.com

http://mahabharatham.arasan.info
https://www.facebook.com/arulselva.perarasan
https://www.facebook.com/tamilmahabharatham

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சாதியமும் புரட்சிகரமும்

$
0
0

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

பா.செயப்பிரகாசம் பற்றி

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

அன்புள்ள ஜெ

நேரடியாக ஒரு கேள்வி. பா.செயப்பிரகாசம் அவர்களை சாதியவாதி என நம்ப உரிய முகாந்திரங்கள் உள்ளன என்று எழுதியிருக்கிறீர்கள். இவை என்ன என்று சொல்லவேண்டும் அல்லவா? அப்படிச் சொல்வது பா.செயப்பிரகாசத்தின் வாழ்நாள் பணியை அவமதிப்பது என்கிறார் பெருமாள்முருகன். எதிர்த்தரப்பாக அல்ல, வாசகனாக இதைக் கேட்கிறேன்

எம்.சிவக்குமார்

 

அன்புள்ள சிவக்குமார்,

திரு.பா.செயப்பிரகாசம் சாதியமைப்புகளுடனும் இணைந்து சாதிப்புலத்தில் செயல்படுபவர் என்பது எப்போதுமே மார்க்ஸிய-லெனினியச் சூழலில் பேசப்படும் ஒரு செய்தி. ஒர் ஆண்டுகூட இது பேசப்படாமல் இருந்ததில்லை.

ஒரு வாசகனாக இவ்வாறு அறிவுச்சூழலில் பேசப்படுவதுதான் எனக்குத் தெரியும். அவற்றுக்கு பா.செயப்பிரகாசத்தால் பதில் ஏதும் சொல்லமுடியவுமில்லை. அவற்றை வாசிக்கவும் அவற்றில் இருந்து கருத்துருவாக்கம் செய்யவும் எனக்கு உரிமை உண்டு. அதற்குப்பெயர்தான் கருத்துச்செயல்பாடு. பா.செயப்பிரகாசம் அவரை சாதியவாதி என அடையாளப்படுத்தும் அவருடைய முன்னாள் தோழர்களுக்கு நேராக கிளம்பியிருக்கவேண்டும். நான் பொதுவெளியில் கிடைக்கும் அச்சான்றுகளில் இருந்து என் மனப்பதிவை உருவாக்கிக் கொள்கிறேன். அவரை பொய்யாக ஏதும் சொல்லிவிடவில்லை. புதிதாகவும் சொல்லவிலை.

ஆகவே அவருடைய இயக்கத்தில் இருந்த ஒருவர் அவரைப்பற்றி எழுதும்போது அவருடைய இந்த பிம்பத்தைத்தான் இயல்பாகக் குறிப்பிட முடியும்.தமிழக அரசில் திமுக அதிமுக அனைத்துக்கும் அணுக்கமாக இருந்து அரசியல் செய்த ஒரு சூழ்ச்சியாளர் வேறெப்படியும் இருக்கமுடியாது.

ஏற்கனவே ஒரு விவாதத்தில் நான் எஸ்.வி.ராஜதுரையை அன்னியநிதி பெறுபவர் என்று குற்றம்சாட்டிவிட்டேன் என்று கொதிப்படைந்தனர். அதை ஒரு செய்தியாகப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அது நான் அவருடைய முன்னாள் தோழர்கள் எழுதிவெளியிட்ட கட்டுரைகளில் இருந்து, அவர்களின் நூல்களில் இருந்து அறிந்துகொண்ட செய்தி. அக்குற்றச்சாட்டு அவர்மேல் அவருடைய தோழர்களால் முன்வைக்கப்படவில்லை என்று அவரே சொல்லமாட்டார். அவரே அதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார்.

இன்று தமிழ் எழுத்தாளர்கள் ஏதோ பா.செயப்பிரகாசத்தை நான் முதல்முறையாக சாதியவாதி என்று குற்றம்சாட்டிவிட்டேன் என்று கொதிப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. எப்போதுமே அவர் அப்படித்தான் பார்க்கப்பட்டார். இது இன்றுள்ள சிலருக்கு உண்மையிலேயே தெரியாமலிருக்கலாம். ஆனால் பெருமாள் முருகனுக்கும் சுகுமாரனுக்கும் எல்லாம் மிக நன்றாகத் தெரிந்த விஷயம்.

நீங்கள் பா.செயப்பிரகாசம் என்று சும்மா கூகிளில் தேடிப்பாருங்கள், உடனே வரும் கட்டுரைகளில் இருந்தே  அவர் சார்ந்த ஒரு கூட்டம் இடதுசாரிப் பரப்பில்  ஒரு சாதியக் குறுங்குழுவாக எப்ப்டிச் செயல்படுகிறது என எழுதப்பட்ட கட்டுரைகள் கிடைக்கும்

உதாரணமாக, இப்போது என்னை மிரட்டுவதற்காக இவர்கள் சார்பில் வக்கீல்நோட்டீஸ் அனுப்பியிருப்பவர் அஜிதா என்பவர். இவர் பி.வி.பக்தவத்சலம் என்ற வழக்கறிஞரின் மகள். இவர்கள் பா.செயப்பிரகாசத்துடன் இணைந்து ஒரு சாதிக்குழுவாக செயல்பட்டிருக்கிறார்கள், மார்க்ஸிய இயக்க வரலாற்றையே சிதைத்து தங்களுக்குச் சாதகமாக எழுத முயன்றிருக்கிறார்கள் என்பதற்கான சான்று இந்தக் கட்டுரை.

ஒரு பிரபலம்; ஒரு குறுநூல்; ஊடகங்கள் இ.செந்தில்

இந்தக்கட்டுரையை விட கறாராக எழுதப்பட்டது இதில் குறிப்பிடப்படும் த.நா.மா.லெ.க வெளியீடான “புரட்டுகளாலும் வரலாற்றுத் திருட்டுகளாலும் புனையப்பட்ட ஒரு பொய்மாலை” என்ற நூல். இவர்களின் சாதியக்குறுங்குழு அணுகுமுறையின் அழிவுப்போக்கை சுட்டிககட்டும் புகழ்மிக்க நூல் இது.

என் தளத்தில் ஒரு முன்னாள் இடதுசாரி எழுதிய கடிதத்தில் உள்ள ஒரே வரிதானே இந்த கட்டுரையில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டுள்ளது? எங்கே அவதூறு வருகிறது?  அந்தக் கட்டுரைக்கு பா.செயப்பிரகாசம் என்ன மறுப்பு தெரிவித்தார்? எங்கே பொங்கினார்? ஆக, அவர் தேடுவது வெறும் விளம்பரம். எழுத்தாளன் என்றால் தனியாள், எளிய இலக்கு என நினைக்கிறார். நானும் ஒரு சாதிய பின்புலத்தை காட்டியிருந்தால் அடக்கி வாசித்திருப்பார்

இதையெல்லாம் நான் சொல்லவில்லை இந்த விவாதமெல்லாம் பதினைந்தாண்டுகளாக அனேகமாக நாள்தோறும் நடப்பது. நான் மேற்கோள்தான் காட்டுகிறேன்.இந்த சாதியக்கூட்டமைப்பு பற்றியெல்லாம் எழுத்தாளர்களுக்கு தெரியாமலிருக்கலாம். அத்தனை ‘களப்பணியாளர்களுக்கும்’ தெரியும். அவர்களின் சொந்த சாதிய பார்வை என்ன என்பதைக்கொண்டே அவர்களின் அணுகுமுறையை நாம் பார்க்கவேண்டும்.

எழுத்தாளனின் அணுகுமுறை அல்ல இது. ஓர் உதாரணம் சொல்கிறேன், சென்ற ஆண்டு நான் தாக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரிய சாதியச்சங்க அமைப்பான என் சாதிச்சங்கம் என்னை அணுகியது, என்னை ஆதரிப்பதாகச் சொன்னது. குமரிமாவட்டத்திலேயே ஆயிரம்கோடி ரூபாய்க்குமேல் சொத்து உள்ள அமைப்பு அது. என் பள்ளித்தோழன் அதில் பொறுப்பில் இருக்கிறான். நான் மறுத்துவிட்டேன். அந்த ஆதரவைப் பெறுவது ஓர் எழுத்தாளனுக்கு பீடல்ல என்று சொல்லிவிட்டேன். வேறு எழுத்தாளர்களுக்கும் இதையே சொல்லியிருக்கிறேன். கண்மணி குணசேகரனை கடுமையாக கண்டித்து எழுதியிருக்கிறேன்

இதோ புரட்சிகரச் சாதியக்குறுங்குழு திராவிட அரசியல் செய்யும் அரசு உயரதிகாரி எழுத்தாளர் [எத்தனை அடையாளங்கள்,  அந்தப் பெருமாள் ஒருவரே இதற்கு சமானமானவர்] ஒருவரை நம் எழுத்தாளர்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர் மார்க்ஸியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம்,திராவிடம் ஆகிய கருத்தியல்களில் ஒரே சமயம் சமரசமின்றி செயல்படுபவர் என்கிறது அறிக்கை– இப்படி ஒரு அபத்தத்தில் கையெழுத்திட இந்த எழுத்தாளர்களுக்கு கூசவில்லையா? நல்ல முன்னுதாரணம். இதில் ஆவேசமாக ஈடுபடும் யமுனா ராஜேந்திரனும் இந்த சாதியக்குறுங்குழுவில் இடம்பெறுபவர்தான்.

ஆக,  எல்லாருக்கும் சாதியக்குழுவாகச் செயல்பட்டாலும் புரட்சியாளராக தோற்றமளிக்கமுடியும் என்ற உறுதிப்பாடு கிடைக்க்கிறது. கையெழுத்து ஏன் போடமாட்டார்கள்?

ஒரு வேடிக்கை, ஒரு நண்பர் இவருடைய இருளுக்கு அழைப்பவர்கள் என்ற கதையை சுட்டி ஒரு கடிதம் போட்டிருந்தார். நீதிமன்றங்கள் பன்றித்தொழுவங்கள், வர்க்கச்சார்புடன் அப்பட்டமாக அநீதி மட்டுமே வழங்குபவை என்று எகிறிக்குதிக்கும் கதை. இதை எழுதியவர் எந்த நம்பிக்கையில் நீதிமன்றத்துக்கு என்னை அழைக்கிறார்? ‘அதுவேற வாயி’ என்பார். நீதிமன்றத்துக்கு வந்தால் சூரியதீபனா நானா அய்யய்யோ என்பார். இந்த நடிப்பைத்தான் குமட்டலெடுக்கும் போலித்தனம் என்கிறேன்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

$
0
0

கௌரி லட்சுமி பாய்

“ஸ்ரீபத்மநாபஸேவினி, வஞ்சிதர்ம வர்த்தினி, ராஜராஜேஸ்வரி, ஆயில்யம் திருநாள் கௌரிலட்சுமிபாய் தம்புராட்டி ஸவிதம்!” என்று கோல்காரன் அறிவித்து வெள்ளிக்கோலை தாழ்த்தி தலைவணங்கினான்.

ராஜராஜ வர்மா திரும்பி பார்வதிபாயிடம் அருகே வரும்படி கைகாட்டினார். பார்வதிபாய் தன்னருகே நின்றிருந்த ருக்மிணிபாயையும் ராமவர்மாவையும் விழிகளால் தன்னை தொடரும்படி அழைத்துவிட்டு அவர் அருகே சென்று நின்றாள்.

உள்ளிருந்து வைத்யமடம் நீலகண்டன் நம்பூதிரிப்பாடும் மாணவர்களும் ஓசையில்லாமல் வெளியே வந்தனர். மாணவர்களின் கைகளில் மருந்துப் பெட்டிகள் இருந்தன. நீலகண்டன் நம்பூதிரிப்பாடு ராஜராஜவர்மாவை நோக்கி தலைவணங்கினார்.

“எப்படி இருக்கிறது?” என்று ராஜராஜ வர்மா  தாழ்ந்த குரலில் கேட்டார்.

நீலகண்டன் நம்பூதிரிப்பாடு கண்களைத் தாழ்த்திக்கொண்டு “இன்றைக்கு, இல்லாவிட்டால் நாளைக்கு” என்றார்.  “கேட்பதும் சொல்வதும் எத்தனை விரைவில் நடக்குமோ அந்த அளவுக்கு நல்லது. வைத்தியம் நின்றுவிடும் இடம் இது. இனி ஈஸ்வரஹிதம்.”

ராஜராஜ வர்மா  தலையசைத்தார். அவர் அதை எதிர்பார்த்திருந்தார்.

நீலகண்டன் நம்பூதிரிப்பாடு தலைவணங்கி கடந்து சென்றதும் ராஜராஜ வர்மா  பெருமூச்சு விட்டார்.

உள்ளிருந்து காளிப்பிள்ளை ஒரு பெரிய மூங்கில்பெட்டியுடன் வெளியே வந்தாள். ராஜராஜ வர்மா  அவளிடம் “பார்க்கலாமா?” என்றார்.

காளிப்பிள்ளை “துணிமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்… வந்திருக்கும் செய்தி தெரியும்…” என்றபின் சென்றாள்.

ராஜராஜ வர்மா  பெருமூச்சுவிட்டார். அமைதியற்ற அசைவுகளுடன் பார்வதிபாயையும் மகனையும் பார்த்தார்.

பின்பக்கம் காலடியோசைகள் கேட்டன. தற்காலிகத் திவான் பொறுப்பிலிருந்த பாப்புராவும் பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளையும் விரைந்த காலடிகளுடன் வந்தனர்.

பாப்பு ராவ்  அருகே வந்து ராஜராஜ வர்மாவுக்கு முன் முறைப்படி தலைவணங்கி “சர்வமங்களம்” என்றார். “காலையிலேயே கேள்விப்பட்டேன்… உடனே வரமுடியவில்லை. கச்சேரியில் ஒரு வேலை.” என்றார். பார்வதிபாயை ஒருமுறை பார்த்துவிட்டு “உண்மையில் நேற்று மாலையே நிலைமை மோசமாக இருந்தது என்றார்கள். நான் நேற்று நேராக கர்னல் மன்றோவின் மாளிகைக்குப் போய்விட்டேன். இரவெல்லாம் அங்கேதான் இருந்தேன். அவருக்கு பெரிய கவலை, ராணியின் உடல்நிலை இப்படி இருக்கிறதே என்று. குழந்தை எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்டார். குழந்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னேன்.”

“குழந்தைக்கு பால்கொடுக்க இரண்டு விருஷலிகளை ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளை ஊடே நுழைந்து சொன்னார். பாப்பு ராவ் அவரை முறைத்தார். பாச்சு அண்ணாவிப் பிள்ளை பணிவுடன் புன்னகைத்தார்.

ராஜராஜ வர்மா “நான் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். நீங்கள் கச்சேரிக்கு போங்கள்” என்றார்.

“ஆமாம், கச்சேரியில் வேலை குவிந்து கிடக்கிறது. கர்னல் மன்றோ என்னை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளச் சொன்னார். ராவ் சாகேப், நீங்கள்தான் இனி கிட்டத்தட்ட திருவிதாங்கூரின் திவான் என்று சொன்னார். நான் என்ன சொல்ல? துரையே, நீங்கள் ராஜாவுக்குமேலே இருக்கும் ராஜா. நான் உங்கள் சேவகன் என்று சொன்னேன் ஹெஹேஹெ!” என்றார் பாப்பு ராவ் “என் வேலையை நான் செய்கிறேன். நான் ஒரு எளிய சேவகன்… அதற்குமேல் எனக்கென்ன?”

“சரி பார்ப்போம்” என்று ராஜராஜ வர்மா  எரிச்சலுடன் சொன்னார்.

“சரி, நான் வந்ததைச் சொல்லிவிடுகிறேன். இதை நான் சொல்லும்போது சாட்சிவேண்டும் என்றுதான் பேஷ்கார் பாச்சு அண்ணாவிப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டுவந்தேன்” என்றார் பாப்பு ராவ்.

“சொல்லுங்கள்… இதோ கூப்பிட்டுவிடுவார்கள்” என்றார் ராஜராஜ வர்மா, அவருடைய முகம் மாறிவிட்டது.

பாப்பு ராவ்  பார்வதிபாயை பார்த்தார்.

“அவள் இருக்கட்டும்… அவள்தான் இனி அடுத்த ராஜரத்தம்” என்றார் ராஜராஜ வர்மா.

“ஆமாம், அதை நான் யோசித்தேன்”என்றார் பாப்பு ராவ். “நான் சொல்லவேண்டியதை கர்னல் மன்றோ சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆகவே இவை எதுவுமே என் சொற்கள் அல்ல” குரலைத் தழைத்தார். “ஆகவே என் மேல் எந்தக் கோபமும் வந்துவிடக்கூடாது”

“இல்லை” என்று ராஜராஜ வர்மா சொன்னார்.

“அங்கே போய் அமர்ந்து பேசலாமே, ராஜகீய விவகாரம்.”

“இங்கேயே சொல்லலாம்” என்று ராஜராஜ வர்மா சொன்னார்.

“தெரியுமே, திருவிதாங்கூரின் இன்றைய நிலை மிகமிகப் பரிதாபம். சட்டம் ஒழுங்கு கர்னல் மன்றோ புண்ணியத்தால் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாயர்குழுக்களை ஒடுக்கிவிட்டோம். சந்தைகள் சீராக நடைபெறுகின்றன. ஆனால் நிதி நிலைமை? நான் என்ன செய்யப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனின் அருளால் என் நாவில் சரஸ்வதியும் கண்ணில் லட்சுமியும் கையில் துர்க்கையும் குடிகொள்ளவேண்டும்” என்று பாப்பு ராவ்  சொன்னார்.

ராஜராஜ வர்மா அவரை பார்க்காமல் அறைவாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்  பாப்பு ராவ் அவரிடம் “உங்களுக்கும் திருவிதாங்கூருக்கும் சம்பந்தம் கிடையாது. நீங்கள் சங்கனாச்சேரி கோயித்தம்புரான், இங்கே மகாராணிக்கு கணவராக வந்தவர். இங்குள்ள நிலைமையை உங்களுக்குச் சொல்லி புரியவைப்பது கடினம்” என்றார்.

பாச்சுஅண்ணாவிப் பிள்ளையிடம் திரும்பி பாப்பு ராவ் சொன்னார் “கோயித்தம்புரான் என்றால் யார் என்று கர்னல் மன்றோ போனவாரம் கூட என்னிடம் கேட்டார். பழைய சோழர்காலத்தில் கோயிலுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் சோழர்கள் போனதுமே அரசர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். கோயில்கல் தம்புரான் என்றால் தம்புரான் மாதிரி என்றேன். யானைக்கு குழியானை மாதிரியா என்று துரை கேட்டார்… ஒரே சிரிப்பு ஹெஹேஹெ.”

பேஷ்கார் பாச்சு அண்ணாவிப்பிள்ளை கூடவே சேர்ந்து இழுத்து இழுத்துச் சிரித்தார்.

ராஜராஜ வர்மா  முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமைதியாக  “சொல்லுங்கள்” என்றார்.

அத்து மீறிவிட்டோமா என்று அதன்பிறகே பாப்புராவுக்கு தோன்றியது. “நான் சொன்னேன், அப்படியெல்லாம் சொல்லிவிடக்கூடாது துரையே. சங்ஙனாச்சேரி நீராழிக் கொட்டாரத்தில் ராஜராஜ வர்மா தம்புரான் என்றால் சாதாரணம் இல்லை. நாடும் கொடியும் குலமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மலையாளத்திலும் சம்ஸ்கிருதத்திலும் மகாவித்வான். பரப்பனங்காடு ராஜவம்சம். மகாராணிக்கு கோயிதம்புரான் என்றால் உயிருக்கு சமானம். ஆகவேதான் சங்கனாச்சேரி லக்ஷிபுரம் அரண்மனையை கட்டி அவருக்கு பரிசாக அளித்தார்கள்”

பாப்பு ராவ் பாச்சு அண்ணாவிப் பிள்ளையிடம் திரும்பி “தெரியுமே, அதற்குண்டான செலவைப்பற்றிக்கூட கர்னல் மன்றோ ஒரு கடுமையான கடிதம் அனுப்பியிருந்தார்கள். மகாராணி வழக்கமாக அப்படி கடுமையான கடிதங்கள் வந்தால் வருத்தப்படுவதுண்டு. மன்னிப்பு கோரி கர்னல் மன்றோவுக்கு கடிதமும் அனுப்பிவிடுவார். ஆனால் அரண்மனை கட்டிய செலவைப்பற்றி மட்டும் வருத்தமே படவில்லை. கர்னல் மன்றோவுக்கு பதிலும் அளிக்கவில்லை” என்றார்’

பாச்சு அண்ணாவிப் பிள்ளை “தெரியுமே… என்னிடமும் சொன்னார்கள். பாச்சுபிள்ளே, இது நம்முடைய தம்புரானுக்கான செலவல்லவா என்று”

பாப்பு ராவ் திரும்பி ராஜராஜவர்மாவிடம் “கர்னல் மன்றோவையும் சொல்லி பயனில்லை. திருவிதாங்கூர் இன்றைக்கு இருக்கும் நிலை இதுதான். ஏற்கனவே கடனில் மூழ்கி ராணுவக் கட்டணமும் கப்பமும் கட்டமுடியாமல் நாடு தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்தான் வேலுத்தம்பி தளவாய் பதவிக்கு வந்தார். நான் எல்லாவற்றையும் சரிசெய்து ஒழுங்காக கப்பங்களை கட்டி நாட்டின் நிதிநிலைமையை மேம்படுத்துவேன் என்று சொன்னார். ஆனால் என்ன நடந்தது?”

அவர் பார்வதிபாயை நோக்கி “அந்த ஜயந்தன் நம்பூதிரி செய்த தப்பு என்ன? கர்னல் மன்றோவுக்கு கொடுக்க வேண்டிய கப்பத்தையும் ராணுவக் கட்டணத்தையும் கொடுப்பதற்கு கொஞ்சம் கெடுபிடியாக வரிவசூல் செய்தார். அது என்னவோ மிகப்பெரிய அநீதி என்று சொல்லி மக்களை தூண்டிவிட்டு இவர் பதவிக்கு வந்தார். புண்ணை வாளால் அறுத்து வீசியதுபோல இன்னும் பெரிய புண் மிச்சம்.”

ராஜராஜ வர்மாவிடம் “இவர் மூன்றுமடங்கு கெடுபிடியாக வரிவசூல் செய்தார். அதற்கு எதிராக மக்கள் எழுந்தபோது வரிவசூல் செய்த பணத்தை செலவிட்டு அவர்களை அடக்கினார். அதையும் சேர்த்து கட்டவேண்டிய நிலுவைத்தொகை இருமடங்கு ஆகியது. வேலுத்தம்பி ஊரை அடித்துச் சுருட்டி சேர்த்து கம்பெனிக்குக் கட்டிய மொத்த கப்பம் அறுபதாயிரம் ரூபாய். ஆனால் அவர் சாகும்போது விட்டுச்சென்ற நிலுவைக் கப்பம் எட்டுலட்சம்… ”

கையை தூக்கி சுட்டுவிரலை காட்டி “ஆமாம் எட்டு லட்சம். அதற்கு எழாண்டு வட்டியும் அதன்பிறகான நிலுவையும் சேர்த்து இப்போது பதினேழு லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு இருபத்திரண்டு லட்சம் ஆகிவிடும். பிரிட்டிஷ் சம்ஸ்தானங்களிலேயே மிகப்பெரிய தொகை நிலுவையில் இருப்பது திருவிதாங்கூர்தான். வைஸ்ராயே கவர்னரை கூப்பிட்டு நேரில் கேட்டுவிட்டார். கர்னல் மெக்காலே அவரால் முடியாது என்று கைவிரித்துவிட்டு போனார். கர்னல் மன்றோ செய்து காட்டுகிறேன் என்றுதான் திருவிதாங்கூருக்கே வந்தார்…”

“அவர் இல்லாவிட்டால் இந்த நாடு என்னவாகியிருக்கும். மகாராணி ஆட்சியில் அவரே திவானாக இருந்து நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனால் இங்கே போக்கிரி நாயர்களும் பொறுக்கி நாயர்களும் அடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நம்பமுடியாது” என்று பாப்பு ராவு தொடர்ந்தார் “ஆனால் நாயர்களின் எதிர்ப்பு உமித்தீ போல. இல்லை என்று தோன்றும், காற்றுவந்தால் தழல்விடும்… ”

அவரே சிரித்துக்கொண்டு “ஆனால் கர்னல் மன்றோவிடம் அவர்களின் ஆட்டம் நடக்காது. அவருக்கு டெல்லி கல்கத்தா வரை ராஜ்ஜியம் இருக்கிறது. மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்ற யானையின் வாலை பார்த்தாலே இந்த நாயர்கள் அய்யோ மலைப்பாம்பு என்று அலறிவிடுவார்கள்” என்று பாப்பு ராவ் சொன்னார்.

“சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்” என்றார் ராஜராஜ வர்மா.

“சொல்ல வந்தது இதுதான். கர்னல் மன்றோ கவலையுடன் இருக்கிறார். மகாராணி கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி இரண்டு ஆண்டுகளாகவே சரியான நிலையில் இல்லை. ஓராண்டாக உடல்நிலை மிகவும் சரியில்லை. கர்ப்பம், குழந்தை பிறந்த சிக்கல், அந்தக் குழந்தைக்கு ஒழுங்காகப் பால்கூட கொடுக்கமுடியவில்லை…” என்றார் பாப்பு ராவ்.

“இந்த நிலையில் வரிவசூலை எப்படிச் செய்ய முடியும்? மொத்த வரிவசூலையும் கட்டினாலும் ஆண்டுதோறும் கொடுக்கவேண்டிய ராணுவப் பாதுகாப்புச் செலவுக்கும் மதராஸுக்கான கப்பத்திற்கும் போதாது. அபராதத்தொகை வட்டியுடன் அப்படியே நிற்கும். பழைய நிலுவைக்கு வட்டியையாவது கட்டிக்கொண்டிருந்தால் நல்லது. ஆலப்புழை துறைமுகத்தில் இருந்து மட்டும்தான் சுங்கதீர்வை கொஞ்சமாவது வருகிறது… கொல்லமும் அஞ்சுதெங்கும் வளரவே இல்லை. இப்படியே நிலுவைத்தொகை வளர்ந்தால் திருவிதாங்கூரே பிச்சைக்கார நாடாக ஆகிவிடும்” என்றார் பாப்பு ராவ்.

“இப்போதே அப்படித்தான் இருக்கிறது, அரண்மனைச் செலவுக்கே பணமில்லை. மகாராணிக்கு மருத்துவம் பார்க்கவே பணமில்லை என்று சொல்லிவிட்டீர்கள்” என்றார் ராஜராஜ வர்மா.

“அதை நான்தான் சொன்னேன். நான் என்ன செய்வேன்? அது கர்னல் மன்றோ உத்தரவு. அரண்மனைக்கான மொத்தச் செலவு இத்தனைக்கு மேல் போகக்கூடாது என்று தெளிவாகவே சொல்லிவிட்டார். அரண்மனையின் காவல்படையை இருபது சதவீதம்தான் வைத்திருக்கிறோம். சேவகர்கள் பத்தே பத்து சதவீதம். மொத்தமே பன்னிரண்டுபேர். அரண்மனையின் சமையலறையில் சமைக்கவேண்டிய பொருளையே அளந்தும் எண்ணியும் கொடுக்க வேண்டியிருக்கிறது… இதன்நடுவே மருத்துவம் எப்படி பார்ப்பது?”

பாப்பு ராவ்  குரலை தாழ்த்தி தொடர்ந்தார் “போர்ச்சுக்கல் மருத்துவர்கள் நல்லவர்கள், ஆனால் அவர்கள் பொன்பணம் அல்லவா கேட்கிறார்கள். நம்பூதிரி வைத்தியர்கள் நல்லவர்கள். அவர்கள் மகாராணிக்கு இலவசமாக சிகிழ்ச்சை அளிக்க கடமைப்பட்டவர்கள்.”

“சரி, இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“ஒன்றுமில்லை. இதோ இளம்ராஜா ராமவர்மா தம்புரான் நிற்கிறார். சுவாதித்திருநாள் மகாராஜா என்று கர்ப்பத்திலேயே முடிசூட்டிக்கொண்டவர். கர்பஸ்ரீமான். இப்போதே சங்கீத சாகரத்தை தொட்டுவிட்டார் என்கிறார்கள். அவர் நாளை அரியணை அமரும்போது எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும். அதுவரை ரீஜண்ட் மகாராணியாக இருக்கப்போகிறவர் இளையராணி உத்ரட்டாதி திருநாள் கௌரி பார்வதிபாய் தம்புராட்டி… அவரும் இங்கே இருக்கிறார். நான் பேசிக்கொண்டிருப்பது நடுவே இருக்கும் ஆண்டுகளைப் பற்றி…”

“சரி, நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று ராஜராஜ வர்மா சலிப்புடன் அறைக்கதவை நோக்கி நடந்தார்.

பாப்பு ராவு சிற்றடிகளுடன் பின்னால் வந்து “இல்லை நான் சொல்லவருவது ஒரு சின்ன விஷயம்… அதாவது பழைய சேரமான் பெருமாள் குலசேகரத் தம்புரான் காலம் முதல் இங்கே ஒரு ரகசிய நிதி இருந்து வருகிறது…. ”

“அதெல்லாம் வெறும் பழமைப்பேச்சு…” என்றார் ராஜராஜவர்மா.

“ஆமாம், அதை நானும் கர்னல் மன்றோவிடம் சொன்னேன். ஆனால் அவர் உமையம்மை மகாராணியின் காலம் முதல் உள்ள எல்லா ஓலைகளையும் ஆராய்ச்சி செய்கிறார். உமையம்மை மகாராணி பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து நெடுமங்காட்டுக்கு வந்தபோது கூடவே கொண்டுவந்த மூடுவண்டிகளைப் பற்றிய ஒரு குறிப்பு அரண்மனை ஓலைகளில் இருக்கிறது. நான்கு காளைகளை கட்டி இழுத்து கொண்டுவரப்பட்ட பெரிய பன்னிரண்டு வண்டிகள் வந்திருக்கின்றன.  அவ்வளவு பெரிய வண்டிகள் எடைமிக்க பெட்டிகளை ஏற்றுவதற்காகத்தான் என்று கர்னல் மன்றோ நினைக்கிறார். அந்தப் பெட்டிகளில் இருந்த செல்வம் எங்கே?”

“இருக்கலாம்… ஆனால் அதற்குப் பின்னால் வந்தவர் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் மகாராஜா. இந்த திருவிதாங்கூரை உருவாக்கிய அரசர். அவர் துறைமுகங்களை கட்டினார். திருவனந்தபுரத்தில் அரண்மனைகளை கட்டினார். பத்மநாபசாமி கோயிலை எடுத்து கட்டினார்… அதற்குச் செலவாகியிருக்கும்” என்றார் ராஜராஜ வர்மா.

“ஆமாம், அதை நான் சொன்னேன். ஆனால் கர்னல் மன்றோ சொன்னார், மார்த்தாண்டவர்மா போர்புரிந்து வென்றவர். கொல்லம், கொடுங்கல்லூர், கொச்சி ராஜாக்களை வென்றவர். அவருடைய ஆட்சிக் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி இல்லாமலாகிவிட்டது. ராணி மீனாட்சியை சந்தா சாகிப் கொன்றபிறகு அங்கே மதுரையில் அரசாங்கமே இல்லை. ஆகவே ஆண்டுதோறும் கட்டவேண்டிய கப்பம் மிச்சம்…  அவரிடம் இருந்த செல்வம் செலவாகியிருக்க வாய்ப்பே இல்லை. அவர் செலவழித்ததெல்லாம் அவர் ஈட்டிய செல்வம்தான். அதிலேயே மிச்சமும் வந்திருக்கும்”

ராஜராஜ வர்மா தெரியவில்லை என்பதுபோல கையை விரித்தார்.

“அந்த செல்வம் எங்கேயோ இருக்கிறது, இங்கே எங்கேயோ. அது அப்படி போய்விடாது. அது குலசேகரப்பெருமாள் தலக்குளம் சொரூபத்து தம்புராட்டிக்கு கொடுத்த செல்வம். அதைக்கொண்டுதான் திருவிதாங்கூர் அரசவம்சமே உருவாகியிருக்கிறது. அந்த புராதனமான பொக்கிஷத்தை அப்படி தவறவிட்டுவிடமாட்டார்கள்.”

“அதற்கு என்ன செய்யவேண்டும்?” என்றார் ராஜராஜவர்மா.

“திருவிதாங்கூரின் தாய்வழி மரபின்படி அந்தச் செல்வம் இருக்கும் இடம் பற்றிய செய்தி அரசிகளுக்கு மட்டும்தான் தெரியும். மகாராணி கௌரி லட்சுமிபாய் தம்புராட்டிக்கு தெரியும்..” பாப்பு ராவ்  குரலை தாழ்த்தி “தெரிந்திருந்தால் அவர் அதை இளையராணி கௌரி பார்வதிபாய் தம்புராட்டியிடம் சொல்வார். அவருடைய உடல்நிலையை வைத்துப் பார்த்தால் இன்றே சொல்லியாக வேண்டும். அவர் அனைவரையும் பார்க்க வரச்சொல்லியிருப்பதைப் பார்த்தால் அவர் இன்று அதை சொல்லக்கூடும்”

ராஜராஜ வர்மா கோபத்தை அடக்கிக்கொண்டார். முகம் நன்றாகச் சிவந்துவிட்டது.

“அதை அவர் சொன்னதுமே இளையராணி திருவுள்ளம் கனிந்து கர்னல் மன்றோவிடம் அதைச் சொல்லிவிடவேண்டும். அதை உங்களிடம் சொல்லவேண்டும் என்று கர்னல் மன்றோ எனக்கு ஆணையிட்டார். சொல்வது அடியவன் கடமை” என்றார் பாப்பு ராவ்.

“பாப்பு ராவ், அப்படி ஒரு குடும்ப ரகசியத்தை மகாராணி இவளிடம் சொன்னால் அதை அவள் வெளியேசொல்வாள் என்று நினைக்கிறீர்களா?” என்றார் ராஜராஜ வர்மா.

“சொல்லியாகவேண்டும்… ஏனென்றால் நாம் நாகத்தின் நிழலில் நின்றிருக்கும் தவளைகள் போல” என்றார் பாப்பு ராவ் . “யோசித்துப் பாருங்கள், இதோ நம் மகாராணி கௌரி லட்சுமிபாய் அவர்களுக்குச் சாகும் வயதா? இருபத்தைந்து வயது… முகத்தில் பால்மணம் மாறவில்லை. முறையான மருத்துவச் சிகிழ்ச்சை இருந்திருந்தால் பிழைத்திருக்க மாட்டாரா? அந்தக்குழந்தைக்கு அன்னையின் பால் கிடைத்திருக்காதா?” அவர் கூர்ந்து பார்த்து “பிரசவம் நடந்த அன்று நீங்கள் இங்கே இல்லை. அரண்மனை மருத்துவரும் இல்லை. ஊர்பெயர் தெரியாத ஒரு வயற்றாட்டி மருத்துவம் பார்த்தாள். அவள் இன்று இல்லை…”

“மிரட்டுகிறீர்களா?” என்று ராஜராஜ வர்மா கேட்டார். அவர் தலை நடுநடுங்கியது.

“அதாவது சங்கனாச்சேரி கோயில்தம்புரான் ராஜராஜ வர்மா அவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது” என்று பாப்பு ராவ் புன்னகை செய்தார். பாச்சு அண்ணாவிப் பிள்ளையும் புன்னகை செய்தார்.

“மிரட்டலேதான். என்னுடைய மிரட்டல் என்றே வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாடு இன்று கர்னல் மன்றோவுக்குச் சொந்தம். ஆகவே இதன் செல்வங்களும் அவருக்குரியதே. அவற்றை மறைப்பது திருட்டுக்குற்றம்” பாப்பு ராவ் கிசுகிசுப்பான குரலில் “குற்றங்களை கர்னல் மன்றோ பொறுப்பதில்லை. எனக்கும் தண்டனைகளில் ஆர்வம் அதிகம்” என்றார்.

ராஜராஜ வர்மா மெல்ல அடங்கினார். அவர் உதடுகள் புன்னகையில் வளைந்தன. “பாப்பு ராவ், பிராமணனாக பிறந்தவர் நீங்கள். ஆகவே தொலைதூர நாடான மைசூரிலிருந்து வந்தவர் என்றாலும் இங்குள்ள மரபுகள் புரியும் என நினைக்கிறேன்…” என்றார். “இன்றைக்கு சரியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1750 ல் இங்கே ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தது. இந்த நாட்டை உருவாக்கிய மகாராஜா மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் தன் உடைவாளை உருவி அனந்தபத்மநாபனின் சன்னிதிமுன் வைத்து இந்த நாட்டை அப்படியே பத்மநாபசாமிக்கு காணிக்கையாக்கினார். அதை இங்கே திருப்படித்தானம் என்கிறார்கள். அதன்பிறகு இந்த நாடு அனந்தபத்பநாப சாமிக்குச் சொந்தமானது. அரசிக்கோ, கர்னல் மன்றோவுக்கோ, அல்லது என்னைப் போன்ற வேறெந்த ஒட்டுண்ணிக்கோ அல்ல…”

“நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன்” என்று பாப்பு ராவ்  சொன்னார். “மகாராணி கௌரி லட்சுமிபாய்க்கு இருபத்தைந்து வயது… இளையராணி கௌரி பார்வதிபாய்க்கு பதிமூன்று வயதுதான்…” அவர் பார்வதிபாயை பார்த்து புன்னகைத்து “அக்காவை விட பன்னிரண்டு வயது குறைவு” என்றார்.

பார்வதிபாய்  “எனக்கு நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை” என்று புன்னகையுடன் சொன்னாள்.

பாப்பு ராவ்  உதடுகள் விரிந்திருக்க, கண்களில் சிரிப்பில்லாமல்,  “இளையராணி கௌரி ருக்மிணி பாய்க்கு நான்கு வயது… இளவரசர் சுவாதித் திருநாள் ராமவர்மாவுக்கு இரண்டு வயது… இளவரசர் மார்த்தாண்டவர்மாவுக்கு வெறும் எட்டு மாதம்… அனைவரும் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்கவேண்டும்” என்றார்.

“படைவீரன் வெற்றியைத்தான் வேண்டிக்கொள்ளவேண்டும் நீண்ட ஆயுளை அல்ல என்பார்கள்” என்று பார்வதிபாய் சொன்னாள். “தெரிந்திருக்கும், தீர்ககாயுஸ் என்று படைவீரர்களை வாழ்த்தும் வழக்கம்கூட இல்லை.”

பாப்புராவின் புன்னகை மறைந்தது.

பார்வதிபாய் மென்மையான புன்னகை மாறாமலிருக்க “எனக்கு தமிழ் சொல்லித்தந்தது வள்ளியூர் சுப்பு அண்ணாவிப் பிள்ளை…  பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளையின் ஏற்பாடுதான்” என்றாள்.

“ஆமாம், அவர் என் சொந்தக்காரர். தாய்மாமன் மாதிரி” என்றார் பாச்சு அண்ணாவிப் பிள்ளை.

“அவர் ஒரு பழைய புத்தகத்திலிருந்து நாற்பது ஈரடிப்பாட்டு சொல்லித்தந்தார். தமிழிலுள்ள பழைய அர்த்தசாஸ்திரம் என்று சொன்னார்” என்று பார்வதி பாய் அந்தப் பாடலை சொன்னாள் “தற்காத்து தற்கொண்டார் பேணி தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்.”

பாச்சுஅண்ணாவிப் பிள்ளை குழப்பமான புன்னகையுடன் “தெரியவில்லை தம்புராட்டி” என்றார்.

“அவரிடமே போய் கேளுங்கள்” என்று பார்வதிபாய் சொன்னாள்.

“கேட்கிறேன் கேட்கிறேன்” பாச்சு அண்ணாவிப் பிள்ளை பணிந்து சொன்னார். அவருடைய உடல்மொழியே மாறிவிட்டிருந்தது.

பாப்பு ராவ் அவர்களை மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். பார்வதிபாய் அவரிடம் “நீங்கள் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றாள், புன்னகைத்துவிட்டு முன்னால் சென்றாள்.

 

கௌரி பார்வதி பாய்

அவர்கள் அறைக்குள் நுழைந்தபோது ராஜராஜ வர்மா பெருமூச்சு விட்டார். “இங்கே நிகழ்ந்ததை எல்லாம் லட்சுமியிடம் சொல்லவேண்டியதில்லை” என்றார்.

“சொல்லவில்லை” என்றாள் பார்வதிபாய்.

லட்சுமி பாய் விரிந்த தாழ்வான கட்டிலில் வெண்ணிற விரிப்பிடப்பட்ட மெத்தைமேல் படுத்திருந்தாள். அவள் முகம் வற்றி ஒடுங்கி கண்கள் குழிக்குள் சென்றுவிட்டிருந்தன. உதடுகள் வரண்டு கன்னங்கள் ஒட்டியிருந்தமையால் பற்கள் சற்று மேலெழுந்தது போல தோன்றியது. உடல் வெளிறிச் சுருங்கி அவள் சிறுமி போல ஆகிவிட்டிருந்தாள்.

அவர்கள் அருகே சென்றதை அவள் அறியவில்லை. அருகே நின்றிருந்த முதிய மருத்துவச்சியான பகவதிக்குட்டி “எழுப்பணுமா?” என்றாள்.

“ஆமாம்” என்றார் ராஜராஜ வர்மா.

அவள் மெல்ல குனிந்து “மகாராணி, மகாராணி, மகாராணி” என்று சீராக கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள். லட்சுமிபாயின் விழியிமைகள் அசைந்தன. உலர்ந்து கூம்பிய உதடுகள் மெல்ல பிரிந்தன.

“அக்கச்சி” என்று அருகே மண்டியிட்டு அவள் கையைப்பற்றிக் கொண்டு பார்வதிபாய் அழைத்தாள்.

“பாறு” என்று லட்சுமிபாய் அழைத்தாள். மிகமிக அரிதாக அவர்கள் மட்டும் தனித்திருக்கையிலேயே அவ்வாறு அவள் அழைப்பது வழக்கம்.

“தம்புரான் வந்திருக்கிறார். குழந்தைகள் வந்திருக்கின்றன அக்கச்சி” என்று பார்வதிபாய் சொன்னாள். திரும்பி ருக்மிணி பாயையும் ராமவர்மாவையும் இழுத்து லட்சுமிபாயின் அருகே நிற்கவைத்தாள்.

லட்சுமி பாயின் முகம் மலர்ந்தது. அவள் தன் மெலிந்த கையை நீட்டினாள். அவள் விரல்கள் சிறிய குச்சிகள் போல ஆகிவிட்டிருந்தன. அவளுடைய பழைய முத்திரை மோதிரம் நழுவிவிழுந்துவிடாமலிருக்க துணியால் சுற்றப்பட்டிருந்தது.

ருக்மிணி பாய் அருகே சென்று நின்றாள். அவள் இடையை பிடித்து அருகே இழுத்தபோது லட்சுமி பாயின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

“தம்பியை பார்த்துக்கொள் ருக்மிணி” என்றாள் லட்சுமி பாய்.

ருக்மிணி பாய் தலையசைத்தாள்.

“அச்சன் தம்புரானைப் பார்த்துக்கொள், அவருக்கு ஒன்றும் தெரியாது” என்றபடி அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

நெஞ்சில் கைகளைக் கூப்பி வைத்துக்கொண்டு குனிந்து நின்றிருந்த ராஜராஜ வர்மா கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தார்.

“வேண்டாம் அழக்கூடாது” என்று லட்சுமி பாய் சொன்னாள். “விதி அவ்வளவுதான்…”

அவர் உரக்க விசும்பினார்.

அவள் திரும்பி ராமவர்மாவை பார்த்தாள். புன்னகைத்து அருகில் வர தலையசைத்தாள். அவன் ஓர் அடிவைத்து அருகே சென்றான். அவன் தலையில் கைவைத்தாள். திரும்பி பெருமிதமான புன்னகையுடன் கேட்டாள்.

“கர்ப்பஸ்ரீமான், இல்லையாடி பாறு?”

பார்வதிபாய் புன்னகைத்தாள்.

“அம்மாவன் இவனுக்காக பாடிய பாட்டு, அதை பாடுடி.”

பார்வதி பாய் “ஓமனத்திங்கள் கிடாவோ நல்ல கோமளத் தாமரப்பூவோ பூவில் விரிஞ்ஞ மதுவோ! பரிபூர்ணேந்து தன்றே நிலாவோ!” என்று மெல்ல பாடினாள்.

லட்சுமி பாய் அதில் சேர்ந்துகொண்டாள். அவள் குரல் மிகமிக சன்னமாக இருந்தது. உதடுகள் அசைவதுதான் தெரிந்தது. ஆனால் முகம் மலர்ந்து கனிந்திருந்தது.

பாடி முடித்ததும் லட்சுமி பாய் பெருமூச்சுவிட்டாள். நிமிர்ந்து ராஜராஜ வர்மாவை பார்த்து “போகலாம்… நான் இவளிடம் பேசவேண்டும்” என்றாள்.

ராஜராஜ வர்மா தலைவணங்கி ருக்மிணிபாயையும் ராமவர்மாவையும் கூட்டிக்கொண்டு வெளியே சென்றார். அப்பால் நின்றிருந்த பகவதிக்குட்டியும் உடன் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

லட்சுமி பாயின் முகம் மாறியது. “கர்னல் மன்றோ உன்னிடம் பேசினாராடி?” என்றாள்.

“இல்லை அக்கச்சி, ஆனால் அவர் சொன்னதாக பாப்பு ராவும் பாச்சு அண்ணாவியும் வந்து பேசினார்கள்.”

“நினைத்தேன்…” என்றாள். “அவர்கள் என்ன கேட்டார்கள் என்று எனக்கு தெரியும். மிரட்டினார்களா?”

பார்வதிபாய் “அக்கச்சி, என்னை மிரட்ட யாராலும் முடியாது.”

லட்சுமி பாய் திடுக்கிட்டவள் போல நிமிர்ந்து பார்த்தாள். பின் அவள் கண்ணில் நீர் பரவியது. நடுங்கும் கைகளை நீட்டி பார்வதிபாயின் கைகளை பிடித்துக்கொண்டாள். “ஆமாம் பாறு. நீ துர்க்கையின் ரூபம்… நீதான் இனி திருவிதாங்கூருக்கும் என் குழந்தைகளுக்கும் காவல்.”

“நான் பார்த்துக்கொள்கிறேன் அக்கச்சி” என்று உறுதியான குரலில் பார்வதிபாய் சொன்னாள்.

“ராஜநாகத்திடம் புதையலை ஒப்படைத்துப் போவதுபோல உன்னை நம்பி நான் போவேன்… பகவதீ, தேவீ, எவ்வளவு பயந்தேன். எவ்வளவு அழுதேன். நீ என் தங்கை என்பதனாலேயே உன் பூர்ணரூபம் எனக்குத் தெரியாமல் போய்விட்டதே.”

பார்வதிபாய் “பத்மநாபனும் பகவதியும் எனக்கு துணையுண்டு” என்றாள்.

“பாப்பு ராவ் பேராசைக்காரன்… அன்னியநாட்டான். இந்த பாச்சு அண்ணாவி நாஞ்சில் நாட்டுக்காரன். அவன் எப்படி துணிந்து வந்து உன்னை மிரட்டினான்!”

“பாச்சு அண்ணாவி வந்தது நல்லது அக்கச்சி” என்று பார்வதிபாய் புன்னகையுடன் சொன்னாள். “நான் ரீஜண்ட் ராணியாக ஆனால் அந்த வாரமே அவரை ஒரு வீரன் தலைவெட்டிக் கொல்வான். தலையில்லாத சடலம் பாப்பு ராவ் வீட்டு முன்னால் பகல் முழுக்க கிடக்கும்.”

“அய்யோ அய்யய்யோ!” என்று மெல்ல கூச்சலிட்டபடி லட்சுமி பாய் பார்வதிபாயின் கையை பிடித்து உலுக்கினாள். “என்னடி, என்னடி சொல்கிறாய்?”

“பாப்பு ராவைக் கொன்றால் திருவிதாங்கூருக்கு பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் அக்கச்சி…”

“எடீ… வேண்டாமெடீ.”

“மன்றோ துரைக்கும் ஒரு செய்தி சொல்லவேண்டுமே.”

“எடீ மகாபாவீ… இதெல்லாம் என்னடீ?” என்று லட்சுமி பாய் பதறினாள்.

பார்வதிபாய் புன்னகையுடன் “இது ராஜ்யவிவகாரம் அக்கச்சி.. ” என்றாள்.

லட்சுமி பாய் அவளை சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பெருமூச்சுடன் “இருக்கலாம்… வாளென்றால் கூர்மையாகத்தான் இருக்கவேண்டும்” என்றாள். “என்னால் முடியவில்லை பாறு… நான் எல்லாவற்றுக்கும் பயந்தேன். எல்லாவற்றுக்கும் விளக்கம் அளித்தேன். மன்றாடவும் கெஞ்சவும் கூட செய்தேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சமாவது நிறைவை தருவது நான் அழுததெல்லாம் தனிமையில்மட்டுமே என்பதுதான்.”

“நீ மென்மையானவள் அக்கா.”

“ஆமாம். நான் பாடவும் வீணைவாசிக்கவும் கதகளி பார்க்கவும் மட்டும்தான் ஆசைப்பட்டேன். காயலில் படகில் போகவும் காட்டுக்குள் பரணில் தங்கவும் கனவுகண்டேன். இந்த சிம்மாசனம் நான் நினைத்ததே இல்லை… ” அவள் சற்றுநேரம் பேசாமல் இருந்தாள். மூச்சிரைப்பை சமன் செய்கிறாள் என்று தெரிந்தது.

“பாறு, எனக்கிருந்த மிகப்பெரிய தவறு ஒருவிஷயத்தின் நியாயத்தைச் சொல்லி புரியவைத்துவிட்டால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பியது… நான் அடைந்த எல்லா ஏமாற்றமும் அவமானமும் துக்கமும் அதனால்தான்” என்றாள் லட்சுமி பாய்.

“ஒருகையில் துரட்டியும் மறுகையில் கரும்பும் இருந்தாலொழிய யானை படியாது அக்கச்சி.”

“இதெல்லாம் உனக்கு யாரடி சொல்லித்தந்தது?”

“நானே கற்றுக்கொண்டேன்… நீ ஆட்சிசெய்த ஐந்து ஆண்டுகளில் அருகே நின்று பார்த்தேனே…”

சட்டென்று லட்சுமி பாய் சிரித்துவிட்டாள். “நான் உனக்கு வகுப்பு நடத்தியிருக்கிறேன்” என்றாள். அந்த சிரிப்பு அவளை மீளவைத்தது. அவள் திணறல் குறைந்தது. “பாறு, நம்மிடம் ஒரு பெரும்செல்வம் இருக்கிறது தெரியுமா?”

“கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“அதைப்பற்றிய எல்லா கதைகளும் உண்மை… அது அந்த பிரிட்டிஷ் வைஸ்ராயையே விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு பெரிய செல்வம்…அதில் ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒரு பகுதி போதும், நம் கடனெல்லாம் அடைந்துவிடும்”

பார்வதிபாய் தலையசைத்தாள்.

“வடக்கே கொடுங்கல்லூர் என்று இன்றைக்கு அழைக்கப்படும் ஊருக்கு பழையகாலத்தில் வஞ்சி என்று பெயர். அங்குள்ள கொன்றைவனநாதரின் கோயிலுக்கு வஞ்சைக்குளம் என்றுதான் இன்றும் பெயர். வஞ்சியை தலைநகரமாக கொண்டு ஆண்ட பெருமாள்களில் கடைசிபெருமாளான சேரமான் பெருமாள் ராமவர்மா குலசேகர நாயனார் இன்றைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கே வந்தார். திருவட்டாறில் ஒரு அரண்மனை கட்டி குடியிருந்தார்” என்று லட்சுமி பாய் சொன்னாள்.

“அன்றைக்கு திருவிதாங்கூர் இல்லை. சோழர்களின் ஆட்சி இருந்தது. இந்த நாட்டை சோழர்கள் பல நாடுகளாக பிரித்து பலரை அதற்கு பொறுப்பாக்கியிருந்தார்கள். வேணாடு, நாஞ்சில்நாடு, திருப்பாப்பூர் என்று பலபகுதிகளாக இருந்தது அன்றைய நாடு” என்றாள் லட்சுமி பாய்  “குலசேகரப் பெருமாள் அன்றிருந்த தலக்குளம் ஸ்வரூபம் என்ற சிற்றரசில் பனங்காவு அரண்மனையில் இருந்து ஒரு இளவரசியை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு அப்போது அறுபது வயது. இளவரசிக்கு பதினாறு வயது”

“குலசேகரப்பெருமாள் அந்த இளவரசிக்கு சேரன் செங்குட்டுவனின் கிரீடத்தையும் உடைவாளையும் செங்கோலையும் கருவூலத்தையும் பரிசாக கொடுத்தார். சேரன் செங்குட்டுவனின் வாளும் செங்கோலும் அவளிடமிருந்ததனால் அவளை மற்றவர்கள் அரசியாக ஏற்றுக்கொண்டாகள். அவளுடைய வம்சம்தான் திருவிதாங்கூர் அரசகுடும்பம். ஆகவேதான் நாம் வஞ்சியின் அரசர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம்”

“அந்த கருவூலம் அப்படியே நம்மிடம் இருக்கிறது. அது பெண்களின் சொத்து. அரசராக ஆண் இருந்தாலும்கூட ராஜகுடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு மட்டுமே அந்த பொக்கிஷம் இருக்கும் ரகசியம் தெரியும்…” என்று லட்சுமி பாய் சொன்னாள் “எனக்கு முன்பிருந்த அம்மை மகாராணி சொன்னார்கள். நான் உனக்குச் சொல்கிறேன்.”

அருகே வரும்படி லட்சுமி பாய் கைகாட்ட பார்வதிபாய் குனிந்தாள்.

“அது இருக்குமிடம் பத்மநாபசாமி கோயிலின் அடியிலுள்ள ஏழு நிலவறைகள். அங்கே அப்படி ஒரு நிலவறை இருப்பதே எவருக்கும் தெரியாது” என்று லட்சுமி பாய் சொன்னாள். “அங்கே பொன்னும் முத்தும் வைரமும் நிறைந்திருக்கிறது. மலைபோன்ற செல்வம். ஆனால் அது நமக்குரியது அல்ல, பத்மநாபசாமிக்குரியது. அதில் ஒரு திருகாணி அளவுக்கு பொன்கூட நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது” என்றாள் லட்சுமி பாய்

“பாறு, இந்த அரண்மனையில் சென்ற ஆண்டில் பலமுறை சமையலுக்கு அரிசி இல்லாமல் ஆகியிருக்கிறது. நாஞ்சில்நாட்டு வேளாளப் பிடாகைகளுக்கு ரகசியமாக ஆளனுப்பி அரிசி வாங்கியிருக்கிறேன். அரண்மனையின் சேவகர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாமல் நான் கர்னல் மன்றோவை தேடிப்போய் கெஞ்சியிருக்கிறேன். எல்லாம் இந்த மாபெரும் செல்வத்தின் மேலே அமர்ந்தபடி…”

“மிகப்பெரிய வேடிக்கை. ஆனால் ராஜ்யபாரம் என்பதே பெரிய வேடிக்கைதான்…” என்று லட்சுமி பாய் தொடர்ந்து சொன்னாள். மீண்டும் அவளுக்கு மூச்சிரைக்க தொடங்கியது. “அரசியரான நமக்கு மட்டுமே தெரிந்த பாஷையாகிய ஸ்ரீபரையில் நான் உனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அது என் அறையில் என்னுடைய சொந்த துணிப்பெட்டியின் அடியில் இருக்கிறது. துணிப்பெட்டியை கவிழ்த்தால் அடியில் அதைச் சேர்த்து ஒட்டியிருப்பது தெரியும்”

“அதில் அந்த நிலவறைகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. அதற்குரிய சாவிகள் தனியாக இல்லை. இந்த அரண்மனையின் நாநூறு சாவிகளில் அந்த அறைகளுக்குரிய பதினெட்டு சாவிகளும் உள்ளன. அவற்றை வரிசையாக பயன்படுத்த ஒரு கணக்கு உண்டு. அதுவும் அந்த கடிதத்தில் இருக்கும்”

“அக்கச்சி அதை நீ எழுதினாயா?”

”இல்லை, அம்மைமகாராணி எனக்கு கொடுத்த கடிதம் அது”

“நீ அந்த பொக்கிஷத்தை திறந்து பார்த்தாயா?”

“இல்லை பாறு, எனக்கு தைரியம் இல்லை. அது குபேரனின் கருவூலம் போன்ற செல்வம் என்றாள் அம்மை மகாராணி. வைரங்களே ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதை பார்த்தால் நான் கிறுக்காகிவிடுவேன் என்று தோன்றியது” என்று லட்சுமி பாய் சொன்னாள் “அம்மை மகாராணி அதைச் சொல்லிக் கேட்டபோதே எனக்கு பலநாட்களுக்குக் கொடூரமான கனவுகள் வந்துகொண்டிருந்தன.”

“அதை எடுக்க என்ன நிபந்தனை?”

“இங்கே பஞ்சம் வந்து பட்டினியால் மக்கள் சாகவேண்டும்… பஞ்சம்போக்க கஞ்சித்தொட்டி திறப்பதற்கு மட்டும்தான் அதிலிருந்து செல்வத்தை எடுக்கவேண்டும்… மிக ரகசியமாக எடுக்கவேண்டும். அங்கிருந்து எடுத்தது என்று எவருக்குமே தெரியக்கூடாது.”

“நான் எடுக்கப்போகிறேன்.”

“என்னடி சொல்கிறாய்?”

“இங்கே பஞ்சம் இல்லை. இங்கே காய்ச்சில்கிழங்கும் கீரையும் இருக்கும்வரை பஞ்சம் வராது… ஆனால் அங்கே பாண்டிநாடு முழுக்க பஞ்சம்தான். இங்கே கஞ்சித்தொட்டி திறப்பேன். பஞ்சம் பிழைக்க வரும் மக்களுக்கெல்லாம் மேற்குமலையைச் சுற்றியிருக்கும் காடுகளை கொடுப்பேன். ஓராண்டு விவசாயம் செய்ய பணமும் கொடுப்பேன்” என்று பார்வதிபாய் சொன்னாள் “அடுத்த ஆண்டே அவர்கள் தீர்வை தர ஆரம்பிப்பார்கள்… தீர்வை வருமானம் பலமடங்காகும். ஐந்தாண்டில் திருவிதாங்கூர் எல்லா கடன்களையும் அடைத்துவிடும். இங்கே எல்லாம் சரியாகிவிடும். வியாபாரமும் கல்வியும் பெருகும்.”

“நீ செய்வாயடி… உன்னால் முடியும். இப்படியெல்லாம் நீ யோசிப்பாய் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் உன்னை என் செல்லப்பெண்ணாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.”

லட்சுமி பாய் பெருமூச்சுவிட்டாள்.

“அக்கச்சி, நான் நிறைய யோசித்திருக்கிறேன். இங்கே இதுவரை ஆட்சிசெய்தவர்களுக்கு தெரியாத ஒன்று இது. நாட்டில் மக்களிடம் பணமிருந்தால்தான் இங்கே கஜானாவில் பணம் வந்துசேரும்” என்றாள் பார்வதி பாய் “அதற்கு எல்லா ஜாதிகளும் பணம் சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கடுமையாக உழைப்பார்கள், பணம் சம்பாதிப்பார்கள். சம்பாதித்த பணத்தை அவர்கள் புதைத்து வைக்கக்கூடாது. வெளியே காட்டவேண்டும். அதைப்பார்த்து மற்றவர்களும் சம்பாதிப்பார்கள்.”

“அதற்கு என்ன செய்வாய்?”

“இப்போது தாழ்ந்த சாதிகள் நகைபோடக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. எல்லா சாதிகளும் பொன் போடலாம் என்று ஆணையிடுவேன்.”

“பிறகு?” என்றாள் லட்சுமி பாய்.

“எல்லாருக்கும் கட்டாயமாக ஆரம்பக்கல்வி அளிப்பேன்” என்று பார்வதி பாய் சொன்னாள். “படித்த மக்களால் வறுமையில் இருக்க முடியாது. அவர்கள் பணம் சம்பாதிப்பார்கள். இன்றைக்கு திருவிதாங்கூரில் முக்கால்வாசி மக்கள் மிருகங்கள்போல இருக்கிறார்கள். வயிறுநிறைந்தால் தூங்கிவிடுகிறார்கள்.”

“சரி பிறகு?”

“குடியான் அடியான் முறையை ஒழிப்பேன். சம்பளம் இல்லாமல் வேலையே இருக்கக்கூடாது.”

“அரசாங்கத்திற்கு மக்கள் இலவசமாக ஊழியம் செய்யும் வழக்கம் இருக்கிறது” என்றாள் லட்சுமி பாய்.

“அப்படியென்றால் ஊழிய முறையையும் ஒழிப்பேன்.”

புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு “இதையெல்லாம் எப்போது யோசித்தாய்?”

“அக்கச்சி, நான் உங்களிடம் நீங்கள் பதவிவிலகி என்னை அரசியாக்குங்கள் என்று கேட்கலாமென்று நினைத்தேன்… எனக்கு பதினெட்டு வயதானபிறகு.”

“உனக்கு எதற்கடி பதினெட்டு வயது? நான் ரீஜண்ட் ஆனபோது உனக்கு எட்டு வயது… நீ அப்போதே ராணியாகியிருக்கலாம்” என்றாள் லட்சுமி பாய்.

பார்வதிபாய் புன்னகைத்தாள்.

இருவரும் எல்லாவற்றையும் பேசி முடித்ததுபோல சற்றுநேரம் அமைதியாக இருந்தனர். லட்சுமி பாய் கைநீட்டி ஒரு கயிற்றை இழுத்தாள். வெளியே மணியோசை எழுந்தது.

பகவதிப் பிள்ளை வந்து தலைவணங்கினாள் “என் குழந்தையை கொண்டுவா” என்றாள்.

அவள் வெளியே சென்று குழந்தையை கொண்டுவந்தாள். மார்த்தாண்டவர்மா மூங்கில்தொட்டிலில் துணிச்சுருளுக்குள் தூங்கிக் கொண்டிருந்தான்

தொடாமல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி பாய். பிறகு  கொண்டுபோகலாம் என்று தலையசைத்தாள். பகவதிப்பிள்ளை குழந்தையைக் கொண்டுசென்றாள்.

வெளியே எவரிடமோ காவலன் “ஸ்ரீபத்மநாபஸேவினி, வஞ்சிதர்ம வர்த்தினி, ராஜராஜேஸ்வரி ஆயில்யம் திருநாள் கௌரிலட்சுமி பாய் தம்புராட்டி ஸவிதம்!” என்று கூறியது கேட்டது.

லட்சுமி பாய்யின் உதடுகள் ஏளனச்சிரிப்பால் வளைந்தன. ஆனால் அச்சிரிப்பில் அவள் அழகாக ஆனாள். இளமையானவளாக, சிறுமியாக. “பாறு, நம்மை தத்து எடுப்பதற்கு முன்பு சேங்ங கோவிலகம் கொட்டாரத்தில் சின்னப்பெண்களாக விளையாடியதெல்லாம் நினைவிருக்கிறதா?”

“ஆமாம்” என்றாள்.

“ஒருமுறை காயலில் நாம் இருவர் மட்டும் ஒரு சிறிய கைவள்ளத்தில் துடுப்பிட்டுப் போனோமே?”

“ஆமாம்.”

“அந்த தோணிப் பாட்டு ஞாபகம் இருக்கிறதாடி?”

“இருக்கிறது.”

“பாடு.”

பார்வதிபாய் தொண்டையை கனைத்து மெல்ல பாடினாள்.

“ஒந்நாம் துழ, ரண்டாம் துழ ,மூநாம் துழ போணே!

நாலாம் துழ, அஞ்சாம் துழ, ஆறாம் துழ போணே!

திரகொள்ளும் காயலில் என்றே ஆலோல களிவள்ளம்

கரகாணா கடல்தேடி என்ற அலங்கார களிவள்ளம்!”

அவளுடன் மெல்ல லட்சுமி பாய் பாடிக்கொண்டிருந்தாள். இமைகள் சரிந்து முகம் கூம்பியிருந்தாலும் புன்னகை நிறைந்திருந்தது. பார்வதிபாய் அவளை பார்த்தபடி பாடிக்கொண்டிருந்தாள். லட்சுமி பாயின் உதடுகள் அசையவில்லை என்று கண்டதும் நிறுத்திக் கொண்டாள். அவள் கையை தன் கையால் பிடித்தபடி  உள்ளிருந்து எழுந்த ஒன்றால் ஒளிகொண்டிருந்த அந்த முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

***

தொடர்புடைய பதிவுகள்

வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது

$
0
0

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

 

ஜெ,

சென்ற ஆண்டு, சமகால சிறுகதைகள் மீதான விவாதம், தமிழ் இளங்கவிஞருக்கு, மூத்த மலையாள கவிஞர் பி ராமன் அவர்களின் வாழ்த்துரை என ஒரு பெரிய நிகழ்வாக விஷ்ணுபுரம் குமரகுருபரன் மூன்றாம் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்வருடம், ஊட்டி குரு நித்யா காவிய முகாம் ஒத்திவைக்கப்பட்ட பொழுதே இவ்வாண்டிற்கான குமரகுருபரன் விழா நடைபெறுவதிலும் கொரோனாவின் பாதிப்பு இருக்கும் என எண்ணினோம். இறுதியாக தாங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து, குமரகுருபரன் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 10 அன்று, விருது பெறும் கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களின் இல்லத்திற்கே சென்று, விருதை அளித்து அவரை கவுரவிப்பது என முடிவு செய்தீர்கள். தொடர்ந்து, வேறு ஒரு சந்தர்பத்தில் விருது விழா நடைபெறும் எனவும்.

இன்று மாலை, கவிதா சொர்ணவல்லி, புகைப்பட கலைஞர் கார்த்திக், ராஜகோபாலன், சண்முகம், சௌந்தர், சுரேஷ், காளிபிரசாத் மற்றும் நான் கவிஞர் வேணுவை சந்திப்பதாக முடிவு செய்தொம். சென்னை அருகே, அடையாறு ஆற்றின் முதல் உற்று உருவாகும் மலைப்பட்டு ஏரியின் அருகே மணிமங்கலத்தில் உள்ள அவரது குடியிருப்பில் உள்ள ஒரு பூங்காவில் சந்திப்பு நடைப்பெற்றது. இத்தனை நபர்கள் தகுந்த சமூக இடைவெளியுடன் கூட திறந்த வெளி அவசியமாக இருந்தது. வெளிச்சம் மறைவதற்குள் முதலில் விருது அளித்து, புகைப்படங்கள் எடுத்துவிட்டோம். பிறகு வேணு, தனது குடும்ப நபர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, வேணுவின் கவியுலகு குறித்து ஒரு உரையாடல் தொடங்கியது. சமகால கவிஞர்களின் கவியுலகு பெரும்பாலும் அகச்சிக்கல்கள், உணர்வெழுச்சிகள் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வேணுவின் கவியுலகு இதனிலிருந்து முற்றிலும் விளக்கியுள்ளது. இது குறித்து வேணுவிடம் கேட்ட பொழுது, “எண்ணங்கள் உணர்வுகள் பல்கி பெருகக்கூடிய மனநிலை, ஒன்றிலிருந்து ஒன்றென விரிந்து செல்லக்கூடிய தன்மை, ஒரு கவியனுபவம். அதன் எதிர் திசையில், உணர்வுகள் அருகி, அற்றுபோகும் இன்மை வேறு வகை கவியனுபவம். இந்த இரண்டு எதிர் எல்லைகளுக்கிடையேயான பயணத்தின் எந்த நிலையிலும் கவிதை நிகழலாம். எங்கு நிகழ்கிறது என்பதை பொறுத்து கவிதையின் தன்மை மாறுபடும். இதில், எண்ணங்கள் ஏதும் இல்லாத அந்த ஏகாந்த நிலை கவிதை பிறக்கக்கூடிய ஒரு தளம். தியானம் போன்ற பயிற்சிகள் மூலமாகவோ, தன்னிச்சையாகவோ அடையக்கூடிய அந்த தருணம், கவியனுபவத்திற்கு நிகரான ஒரு அனுபவம். இது தான் நான் உத்தேசிக்கும் கவியனுபவம்.” என கூறுகிறார். அந்த சலனமற்ற stillnessல் இருந்து வேணுவின் கவிதைகள் பிறக்கின்றன.

அந்த நிலையில் எழும் கவிதைகளுக்கும் தத்துவார்த்த தேடல்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி கேட்டதற்கு, “வாசகர்கள் அந்த கவிதைகளை, பல கோணங்களில் ஒரு  கோணமாக தத்துவார்த்த நோக்கில் வாசிக்கலாம்.  ஆனால், தன்னளவில் கவிதைக்கு தத்துவத்தில் இருந்து ஒரு விலகல் அவசியமாகிறது” என கூறுகிறார். “தத்துவார்த்தம் ஒரு அறிவு செயல்பாடு. சொற்களால் ஆனது. ஆனால், சொற்களுக்கும் தர்கங்களுக்கும் அப்பாற்பட்டு நிகழ வேண்டியது கவிதை. அது தனித்து இயங்க வேண்டிய செயல்பாடு.”

இவ்வகையில் வேணுவிற்கு முன்னோடியாக ந. பிச்சமூர்த்தி அவர்களை நண்பர்கள் குறிப்பிட்டார்கள். ஆரம்பகால நகுலன், பிரமிள் கவிதைகளும் ஒப்பிட்டு பேசினார்கள். இவ்வரிசையில் தேவதேன் வேணுவின் கவியுலகிற்கு மிகவும் நெருங்கி வரும் கவிஞர். அதே சமயம், வேணுவின் கவிதைகளில் உள்ள காட்சி சித்தரிப்புகள் அவரை, தேவதச்சனுக்கு அருகில் கொண்டு செல்கிறது என்ற பார்வையையும் நண்பர்கள் முன்வைத்தார்கள்.


\
உரையாடலின் ஊடே, வேணு தான் 2010ல் இருந்து கவிதைகள் எழுதி வருவதாகவும், ஆரம்பம் முதலே அறிவார்த்தமாக எழுதப்படும் கவிதைகள், எண்ணி உருவாக்கப்படும் படிமங்கள் போன்றவற்றின் மீது விலக்கம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். அதே சமயம், தனது கவிதைக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லாமல், தனது கவிதையாகவே வாழும், தேவதேவன் அவர்கள் தனக்கு மிக அனுக்கமாக கவிஞர் என குறிப்பிடுகிறார்.

தனது கவிதைகள் ‘அலகில் அலகு’ என்ற தொகுதியாக வெளிவர ‘ஜாஜா’ ராஜகோபாலன் அளித்த ஊக்கம் முக்கியமானதாக இருந்ததாக கூறினார்.

 

குமரகுருபரனின் பிறந்தநாள் அன்று, அவரது நினைவு விருதை கவிஞருக்கு அளித்துவிட்டோம். விருது விழா நடைபெறுவதற்கு ஏற்ற சூழல் விரைவில் அமைய வேண்டும் என்ற விருப்பம் ஒரு பக்கம். அதே சமயம், இணையம் வழியாக இந்த விருதையும் கவிஞரையும் கவனப்படுத்த சில நிகழ்வுகளை வரும் நாட்களில் ஒருங்கிணைக்கும் எண்னமும் உள்ளது.

 

அன்புடன்,

லாஓசி 

 

கருவெளிஎங்கும்

மின்னி மின்மினுங்கும்

விண் மின்மினிகள்.

– அலகில் அலகு, வேணு வேட்ராயன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தங்கப்புத்தகம்- கடிதங்கள்

$
0
0

 

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் கதையை வாசித்தேன். பௌத்தப் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் அடிப்படையில் அது வேதாந்தக் கதை. வேதாந்தத்தில் பிரம்மம் அறிதற்கு அப்பாற்பட்டது. பிரம்மஸ்வரூபமான பிரபஞ்சமும் சரி, அதன் எந்த ஒரு பொருளும் சரி, அறிவுக்கு அப்பாற்பட்டவை. நாம் அறிவதெல்லாம் அறிவு ஒன்றையே என்று நாராயணகுருவும் சொல்கிறார்.

நாம் நம் ஆணவம் கலக்காமல் அல்லது நம்முடையை தேவையோ பயமோ கலக்காமல் எதையும் அறியமுடியாது. நாம் அறிவதெல்லாம் நம் அறியும் சாத்தியங்களுக்குள் நின்றுகொண்டுதான். மானுட அறிவேகூட மானுடனால் எதை அறியமுடியுமோ அதுதான். அந்த எல்லைதான்.

அந்தப் புத்தகம் பிரம்மம் என்றால் அதன் பிரதிகளை உருவாக்குவது மாயை. மாயை கலக்காமல் அந்த பிரம்மத்தை அணுகவே முடியாது. மாயையை முடிவில்லாமல் உருவாக்கி அந்தப்புத்தகம் அங்கே இருக்கிறது. அது மாயைக்கு அப்பாற்பட்டும் அமைந்துள்ளது. அது தொடப்படுவதே இல்லை

ஆனால் அது உருவாக்கும் அந்த நகல்களும் அதுதான். அதை அறிந்தாலே பிரம்மத்தை அறிந்ததுதான். ஆகவேதான் முக்தா தன்னிடமிருப்பதும் மூலநூலே என்று சொல்கிறார்

 

ஆர்.ராஜசேகர்

 

 

ந்அன்புநிறை ஜெ,

 

நலமாக இருக்கிறீர்களா?

 

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. தங்கப் புத்தகம் வாசித்தேன் – இவ்வரியே முழுமையான உறுதியுடன் எழுத முடியவில்லை. எனது பிரதியைத்தானே வாசித்திருக்க முடியும்.

கதையை வாசிக்க முதலில் வெண்முரசு மனதில் வந்தது. காலம் காலமாக சொல்லப்படும் கதை, மீண்டும் அதை எழுதுவதில் என்ன இருக்கிறது என்ற எதையுமே வாசிக்காத தரப்பின் கூக்குரல்கள்.

அது மீண்டும் மீண்டும் எழுத எழுத வேறு வேறு உரு காட்டி தான் வேறொன்றாகி நிற்கும் மெய்மை. முதல் வியாசனுக்கும் மாயம் காட்டி எங்கோ இருக்கும் அந்த மூலம். எழுத்தென எழுந்த பிறகும் ஒவ்வொரு வாசகரும் தன் வாசிப்பில் சென்றடைந்த அத்தனை ஆயிரம் பிரதிகள். உள்ளே இறங்க சரியான தெரிவுகள் இருந்தால் மட்டுமே அதைக் காணவாவது நேரும்.  மேலேறி அகன்று செல்லும் பாதை திறந்தே கிடக்கிறது. உள்முகமாகச் செல்லத்தான் சரியான தெரிவுகளும் வழிகாட்டியும் தேவை.

பின்னர் தோன்றியது வெண்முரசு என்றல்ல எழுத்தென எழுதிய தவம் அனைத்துமே மீண்டும் மீண்டும் அந்தத் தங்கப் புத்தகத்தை நகல் எடுக்கும் முயற்சிகள்தானா? அதை வாசித்து அறியும் ஒவ்வொருவரும் அவரவரையே நகல் எடுத்துக் கொண்டிருக்கிறோம். எனில் எத்தனை எத்தனை அறம், எவ்வளவு வெண்முரசுகள், எத்தனை ஆயிரம் புனைவுக் களியாட்டுகள், கதைத் திருவிழாக்கள்.

சரியான தெரிவுகள் மட்டுமே இலக்கு நோக்கி இட்டுச் செல்லும். அது கனவுகளில் உரியதைத் தெரிவு செய்வதில், வழித்துணையை தெரிவு செய்வதிலிருந்து தொடங்கிவிடுகிறது. இறுதியாக ஒன்றுமே இல்லை என நம்பச் செய்யும் ஞானத்தின் எளிமை ஒரு எல்லையிலும், மிகச் சிக்கலான விளையாட்டென ஆற்றல் மறுமுனையிலும் ஆடி ஆடி மையம் கொள்ளும் துலாமுனை.

எல்லையற்ற ஆற்றலும் எல்லையற்ற ஞானமும் முயங்கும் அப்புள்ளிஅங்கே அமைந்து விட இயல வேண்டும், விலகி விட முடிய வேண்டும். இன்றேல் முடிவற்ற பிலம்தான்.

இக்குகையுறை  நாட்களிலும் மீண்டும் மீண்டும் அந்த மலைவெளிகளில் திரிய தங்கள் எழுத்துக்களே துணை.

 

மிக்க அன்புடன்,

சுபா

 

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

தங்கப்புத்தகம் சுழற்றிச்சுழற்றிக் கொண்டுபோகும் கதை. உருவகக்கதை. அந்த உருவகம் முக்கியமானது. ஆனால் அதைக்காட்டிலும் அதனுடன் இணைந்துள்ள பலவகையான உணர்ச்சிகளைச் சொல்லியிருக்கும் விதமும் அந்த உணர்ச்சிகளை இயற்கைமேல் ஏற்றியிருக்கும் விதமும்தான் அதை கதையழகு கொண்டதாக ஆக்குகிறது. அவர் மலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி, அந்த மலைகள் ஒரு சிம்பனி போல தோன்றி அரங்கிலே நிறைந்து மறைவது, அற்புதமான விவரிப்பு. அதுதான் அந்தக்கதையின் சாராம்சத்தைக் காட்டுவதாகவும் இருக்கிறது

 

மகேஷ்

 

அன்புள்ள ஜெ,

 

உங்களுடைய தங்கப்புத்தகம் குறுநாவலை வாசித்தேன்.

 

மூலநூல்களையும் அதன் வழி வரும் பாடபேதங்களையும் நாம் அணுகும் முறை கொண்டு உருவான கதை என்றே இதைக் கருதுகிறேன். முக்தாவின் கனவைக் கொண்டு இது ஒரு சாகசத்தன்மை மீதுரப்பெற்றுள்ள படைப்பாகவும்  எண்ணலாம்.

மனம்போன போக்கில் புரிந்து கொள்வதைப் பாடபேதம் என்று கூறுவர்கள். அதற்குள் வாசகன் மட்டுமே இருப்பான். இக்கதையும் அப்படியான ஒன்றுதான். அந்த இரண்டு வாசகர்கள் பற்றிய கதை இது. பாட் உம் முக்தாவும்.

இக்கதையை இலக்கியம் பற்றிய புரிதலும் சித்தாந்தங்களின் சிறிய அறிமுகங்களும் இல்லாதவர்கள் வாசிக்காமல் விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. இதற்குள் உள்நுழைவது மிகச்சிரமமாக இருக்கும். உங்கள் கதைகளுடன் உரையாடத் தகுதி வேண்டும் என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்.

திபேத் என்ற பீடபூமியை ஆக்கிரமிக்க பிரிட்டிஷ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலமாகவே விரும்பின. அதற்குள் ஒற்றர்களை அனுப்பி அதன் சமூக-அரசியல்-புவியியல் நிலைப்பாடுகளை அறிய முயன்றனர். எனினும் அதன் ஞான மரபுகளை யாராலும் திருட முடியவில்லை. களவு போகாத பொக்கிஷமாக நிலைத்து நின்றது.

மதங்களையும் சித்தாந்தங்களையும் விமர்சனம் செய்யும் வடிகாலாகவும் இக்கதையை அணுகலாம்.

உதாரணமாகக் கம்யூனிசத்தின் மூல நூலான கார்ல் மார்க்ஸின் மூலதனம் என்ற நூலை வெறும் ஆணவங்களை மோதவிட்டு பொய்யைப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பியிருக்கிற ஒன்றாகவே இக்கதையின் ஓரிடத்தில் கூறப்படுகிறது. உண்மையும் அதுதான்.

முக்தா என்பவர் திபெத் சென்றிருந்தார். அங்கு ஆஸ்ரமத்தில் இருக்கும்போது கனவில் ஒரு தங்கப்புத்தகத்தைக்  காண்கிறார். அந்நூலை அடைவதற்கு முக்தாவும் பாட் என்கிற ரஷ்ய உளவாளியும் முனைகின்றனர். அதன் ஒரு பக்கமே ஓராயிரம் அர்த்தங்களாக விரிவுறுகிறது. அந்த மூல நூல் முடிவில்லாத ஒன்றாக அமைகிறது. பாடபேதமே உருவாக்க முடியாத நூல் ஒன்று என்பதை அவர் மிகத் தாமதமாகவே உணர்கிறார்.

“மனிதனின் அகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்தப்பொருளும் கொலைக்கருவியாகக் கூடும். உதாரணமாக, தன் நினைவின் மீதான நம்பிக்கை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பது. ஆனால் ஒரு சுழல்வழிப்பாதை அந்நம்பிக்கையைக் கொண்டே அவனைக் கொன்றுவிடும்… இந்த இடமும் இந்த புத்தகமும் அப்படிப்பட்டவை” என்று கதையில் ஒரு உரையாடல் வருகிறது. இக்கதையின் மிக முக்கியமான உரையாடல் பகுதி இதுவாகும். தங்கப்புத்தகம் பற்றிய உண்மையான கருத்து இது.

ஆனால் அவருடன் கூட இருக்கும் ரஷ்ய உளவாளி அந்த நூலை அப்படியே எடுத்துக் கொண்டு செல்ல முனைகிறான். அவன் திரும்பமுடியாத பாதாளத்தில் அகப்பட்டு காணாமல் போகிறான். முக்தா பூரணமாகாத பாடபேதங்களுடன் பழைய ஆஸ்ரமம் திரும்புகிறார்.

“நம்மால் வெறும்வெளியில் ஒரு நூலை உருவாக்கிக் கொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். முன்பே ஒரு நூல் இருக்கவேண்டும். அதை நாம் கனவு காணவேண்டும். அதைத்தேடி வரவேண்டும். அரியபொக்கிஷம் போல அடையவேண்டும். அதை அணுவணுவாக நகல்செய்தோம் என்று நாம் நம்பவேண்டும். அதை வழிபடவேண்டும். அதைத்தான் நாம் உலகுக்குச் சொல்லமுடியும்”

இக்கதையின் மிகப் பெரிய அர்த்தமாகத் திருப்தியின்மை அல்லது முடிவின்மை  முன்வைக்கப்படுகிறது. அது கற்றலின் தேடலின்  ஊழ்கத்தின் முடிவின்மை என்று நாம் கருதலாம்.

சமகாலநூல்களை மட்டுமே படிக்கும் ஒருவனைப்போல மடையனையே நாம் பார்க்கமுடியாது. அவன் அலைகளை மட்டுமே கண்டு கடலை அறியாதவன் என்றும் கூறுகிறார். நிச்சயமாக இக்கதை ஜெயமோகனின் மிகச்சிறந்த குறுநாவல்களில் ஒன்று என்றே கருதமுடியும். இக்கதையைக் கூட தங்கப்புத்தகம் போல பல திசைகளில் இருந்து உருவாகும் முடிவின்மைக்குள் வகைப்படுத்தலாம்.

நள்ளிரவு வாசிக்கத் தொடங்கிய கதை இரண்டு மணிக்குள் முடித்து விட்டேன். வழக்கமாகக் கதைகளைப் print எடுத்து விட்டே பின்பு ஆறுதலாக வாசிப்பேன். ஆனால் நள்ளிரவில் print எடுப்பது வீட்டில் தூங்குவோரின் தூக்கத்தைக் கெடுக்கும் என்பதால் Tab மூலம்  வாசித்துவிட்டேன்.

இக்குறுநாவலின் கரு உங்கள் பத்தாயிரம் கிலோமீட்டர் பயணங்களால் ஆனது என்பதை நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன். இது உங்கள் கதைச் சன்னதத்தின் மற்றுமொரு தங்கப்படைப்பு.

 

சுயாந்தன். 

தொடர்புடைய பதிவுகள்

செய்தி- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-2,செய்தி[சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

செய்தி கதையின் மையமான வரி கடிதத்தை தபாலில் சேர்த்துவிட்டால் திரும்ப எடுத்துவிட முடியாது என்பதுதான் என்பது என் வாசிப்பு. அவன் செய்தியை அளித்துவிட்டான், அது போய்ச் சேர்ந்துவிட்டது. அவன் நினைப்பதுபோல அது வாபஸ் பெறத்தக்கது அல்ல. அது அவளுடைய சொத்து. அவளுடைய புன்னகை அதைத்தான் காட்டுகிறது

 

எஸ்.ராஜேஷ்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இன்று செய்தி சிறுகதையை வாசித்து விட்டதும் உடனடியாக இதை எழுதுகிறேன்.

சிறிய கதை. காமத்தின் முதல் அழைப்புகளில் தடுமாற்றமடையும் இளமை பற்றியது. அது காமத்தை நேரடியாகச் சந்திக்க முடியாமல் பல டிஃபென்ஸ் மெகானிசங்களைப் பயன்படுத்துவதை மிகவும் ரசித்தேன். வாளிப்பான பெண்ணின் சிலிர்ப்பும் அதற்குத் தான் காரணம் என்ற ஆனந்தமும் நிழல் போல தொடர்ந்து வருகிறது. அவன் பெயரே அனந்தன். எருமையின் எடையும் சதைகளும் நிறமும் பயத்தையும் அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தையும் ஒரு சேர வரவழைப்பன. அதைக் கண்டு கொள்கிறது அனந்தனின் ஆழ்மனம்.

தங்கபுத்தகத்தில் வருவதைப் போலவே இதிலும் மையத்தில் ஒரு நூல் இருக்கிறது. அது இண்லேண்ட் லெட்டர். அதில் தனது புனைவையும் சேர்த்து நகலெடுத்து அவளுக்கு அளிக்கிறான் அனந்தன்; இப்படி ஒரு கற்பனையை நான் உருவாக்கிக் கொண்டேன். மீசையரும்பும் பருவத்தில் ஒரு பெண்குரல் ‘செல்லம்’ என்று அழைக்கிறது. அது அவனை நின்ற இடத்திலேயே பறக்கச் செய்வதும், அவன் அவளை நேருக்கு நேர் சந்திக்க துணிவின்றி பதுங்கிக் கொள்வதும் அப்பருவத்தில் தவறாமல் நிகழ்ந்திருக்கும் கணங்களின் சேகரிப்புகள்.

ஒரு கன்ஃபெசன். படித்து முடித்ததும் ‘தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி’ பாடலை யூடியூபில் பார்த்தேன். மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டும் மனதில் காட்சியாய் விரிந்து கொண்டும் இருந்திருக்கக் கூடிய  உறக்கம் கெடுத்திருக்கக் கூடிய பாடல்தான் என்று தோன்றியது.  ‘வீணப் பூவே குமாரனாசாந்தே’ என்ற பாடலையும் கேட்டேன். அது அற்புதமான மெலடி. காமத்தைக் கலைக்குள் வைத்து காதல் என்று சொல்லும் பாடல் என்று முன்னதிலிருந்து இதைப் பிரித்தறிந்து கொண்டேன்.

 

நன்றி

கமலக்க்ண்ணன் கோபிநாதன்

 

அன்புள்ள ஜெ

மிகச்சிறியகதையாக தோன்றியது செய்தி. ஆனால் வார்த்தைகளைப் பார்த்தேன். பெரியகதைதான். வாசிப்பு தெரியவில்லை. இந்தக்கதையை மீண்டும் வாசித்தேன். இது இவ்வளவு உயிர்ப்புள்ளதாகத் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று. அதற்குக்காரணம் அந்த சூழலும் மெய்யான வாழ்க்கையும்தான் என்று தோன்றியது. இந்தக்கதையையே அவள்- நான் என்றே எழுதியிருக்கலாம். ஆனால் அந்த பெண்ணின் சூழல், அந்த ஏரிக்கரை வீடு, அவளுடைய தோற்றம் எல்லாமே அத்தனை விரிவாகச் சொல்லியிருந்ததுதான் மெய்யக்வே ஒரு உலகத்துக்குள் போய் அந்த வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தை அளித்தது. அதுவே கதையை ஒரு இனிமையான அனுபவமாக ஆக்கியது

சரவணக்குமார்

வணக்கம் ஜெ

 

செய்தி சிறுகதையை வாசித்தேன். எருமை மாட்டின் தினவைப் போன்றதாகத்தான் இருக்கிறது இளமைக்கே உரிய பாலியல் கவர்ச்சி. அந்தத் தினவினால் உந்தப்பட்டுச் செய்யப்படும் செய்கைகள் காமத்தின் முதற்சுவையைத் தரக்கூடியன. காலமெல்லாம் முதல் இனிப்பென நினைவில் இருக்கும்.

 

அரவின் குமார்

தொடர்புடைய பதிவுகள்


ஒரு துளி நீலம்–சுனில் கிருஷ்ணன்

$
0
0

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

மெய்யியலுக்கு மிக நெருக்கமான கலைவடிவம் கவிதைதான். நவீன காலகட்டத்தில் கூட அரவிந்தரின் சாவித்திரி மெய்யியலை பேசும் கவிதை வடிவ காப்பியம் தான். தமிழில் மெய்யியல் தள கவிதைகளுக்கு பாரதி துவங்கி ஒரு மரபு இருக்கிறது. பிச்சமூர்த்தி, நகுலன், பிரமிள், அபி, தேவதேவன், தேவதச்சன் ஷங்கர், சபரி வரை அது நீள்கிறது. வேணுவின் கவிதைகள் சபரி அல்லது ஷங்கரின் கவிதைகளில் இருக்கும் பகடித்தன்மை இல்லாதது. ஆகவே சமகாலத்திலிருந்து விலகியது. அபி, தேவதச்சன் கவிதைகளுக்கு நெருக்கமானது வேணுவின் கவியுலகம் என தோன்றியது. தமிழ் கவிதைகளின் மெய்யியல் தளம் அதிகமும் வேதாந்தம் சார்ந்தது.

ஒரு துளி நீலம்- அலகில் அலகு தொகுப்பு குறித்து

தொடர்புடைய பதிவுகள்

பா.செயப்பிரகாசமும் மாற்றிதழ்களும்

$
0
0

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

பா.செயப்பிரகாசம் பற்றி

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

சாதியமும் புரட்சிகரமும்

அன்புள்ள ஜெயமோகன்

முருகானந்தம் ராமசாமியின் முகநூல் குறிப்பை வெளியிட்டிருந்தீர்கள். அதற்கு மாறான ஒரு குறிப்பு இது. இதுவும் உங்கள் கவனத்துக்கு வரவேண்டும்

எஸ்.சிவக்குமார்

மனஓசையும் பா.செயப்பிரகாசமும்

சி.சு.செல்லப்பாவுக்கு தமிழ் சிறுபத்திரிகை உலகில் என்ன இடம் இருக்கிறதோ அதே இடம் பா.செயப்பிரகாசத்துக்கும் உண்டு. ‘எழுத்து’ம் ‘மனஓசை’யும் இல்லையெனில் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

மிகைப்படுத்தவில்லை. இன்று காத்திரமான சிறுபத்திரிகை தீவிர இலக்கியவாதிகளாக அறியப்படும் பலர் ‘மனஓசை’யில் எழுதத் தொடங்கியவர்கள்தான். அவர்களை அடையாளம் கண்டு மேடை ஏற்றி அழகுப் பார்த்தது ‘மனஓசை’யே.

இத்தனைக்கும் புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றின் வெகுஜன திரள் சார்பாக வெளிவந்த பத்திரிகையே ‘மனஓசை’. என்றாலும் அப்பத்திரிகையின் ஆசிரியராக பா.செயப்பிரகாசம் இருந்ததாலேயே அரசியல் பண்பாட்டுத் தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே கலைத்தன்மைக்கும் அவரால் அழுத்தம் கொடுக்க முடிந்தது.

உண்மையிலேயே அது பெரிய விஷயம். சாதனை என்றும் சொல்லலாம். ஏனெனில் ‘மனஓசை’க்கு முந்தைய காலம் தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த கொந்தளிப்பான கட்டம்.

நாடு விடுதலை… நிர்மாணம்… மொழிவாரி மாநிலங்கள்… இந்தி எதிர்ப்புப் போராட்டம்… அதைத் தொடர்ந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம்… நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த உழவர் புரட்சியை அடுத்து இந்தியா முழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைக்கு எதிராக தொண்டர்கள் மத்தியில் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டம்… மார்க்சிய லெனினிய அமைப்புகளின் தோற்றம்… ஆயுதப் புரட்சியும் அழித்தொழிப்பும் முன் எடுக்கப்பட்ட சூழல்… இதனால் புரட்சிகர அமைப்புகளில் ஏற்பட்ட பின்னடைவு…

இந்தப் படிப்பினையில் இருந்து ஆயுதப் புரட்சிக்கு முன் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கோட்டயம் வேணு முன்வைத்த Mass Line… இதற்கு புரட்சிகர அமைப்புகளில் ஒருசாரார் மத்தியில் கிடைத்த ஆதரவு… இதனை அடுத்து குழு, கூட்டுக்குழு, வெகுஜன திரள் என தமிழக மார்க்சிய லெனினிய அமைப்புகளில் ஏற்பட்ட பிளவு…

வெண்மணியில் எரிக்கப்பட்ட உயிர்கள்… தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், பொன்பரப்பி, அன்றைய ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டம்… ஆகிய இடங்களில் அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த தேவாரம் தலைமையில் வேட்டையாடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மா லெ தோழர்கள், அமைப்பினர்…இதனை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவதற்காக உருவான மக்கள் உரிமைக் கழகம்…இப்படி நாடு முழுக்கவும் மாநிலம் நெடுகவும் புறச்சூழல்கள் நிலவி வந்த நேரத்தில் சிறுபத்திரிகைகள் ‘கலை கலைக்காகவே’ கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தன… இதற்கு எதிராக இடதுசாரிகள் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள்…

இதற்கு மத்தியில்தான் ‘மனஓசை’ 1980களில் பிறந்தது.உண்மையில் ‘கலை இலக்கியம் யாவும்’ மக்களுக்கே’ என்ற இலக்குடன் ‘மனஓசை’ பயணப்பட்டாலும் கூடவே ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டின் பக்கம் சாய்ந்தவர்களையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தன் பக்கம் இணைத்தது என்பதுதான் முக்கியமான விஷயம்.

இந்த இணைப்பே இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் உருவாகவும் வித்திட்டது.பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘மனஓசை’ இப்படி இரு தரப்புக்கும் பாலமாக அமைந்ததால்தான்… எஸ்.வி.ராஜதுரையால் துணிச்சலாக ‘இனி…’ மாதப் பத்திரிகையை கொண்டு வர முடிந்தது.

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் சார்பாக அனுராதா ரமணனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘சுபமங்களா’ மாத இதகட்ட அமைக்கப்பட்ட சாரம் சர்வநிச்சயமாக ‘மனஓசை’தான்.

மதுரைக் கல்லூரியில் பயின்ற காலத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜனுடன் ஏற்பட்ட அறிமுகம்… அவர் வழியாக தனக்குப் படிக்கக் கிடைத்த ‘சரஸ்வதி’, ‘எழுத்து’ பத்திரிகைகள் என வளர்ந்த பா.செயப்பிரகாசம், சேலத்தில் 1971ல் பணியாற்றியபோது ‘வானம்பாடி’ முதல் இதழைப் பார்க்கிறார். ‘வானம்பாடி’ குழுவினருடன் அறிமுகம் ஏற்படுகிறது. என்றாலும் அவர்களது வார்த்தை ஜால கவிதைகளில் அவர் மயங்கவில்லை.

இப்படி இருந்த பா.செயப்பிரகாசத்தை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த இடதுசாரிய கருத்தியல் பக்கம் திருப்பியது தமிழ்நாடன்தான். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தாமரை’யில் பா.செயப்பிரகாசத்தின் ‘குற்றம்’ சிறுகதை முதன் முதலில் வெளிவந்தது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை எல்லாமே இன்றும் பா.செயப்பிரகாசத்தின் பெயர் சொல்லும் படைப்புகள்.

எலும்பும் தோலுமாக இருக்கும் ஒருவன் சுடுகாட்டில் கட்டுமஸ்தான வஸ்தாதுவை புரட்டி எடுக்கும் ‘ஜெருசலேம்’ இன்றும் நினைவில் நிற்கும் ஒரு சோறு பதமல்லவா..?

என்ன… ‘மனஓசை’க்கு ஆசிரியரானதும் தன் படைப்புத்தன்மையை குறைத்துக் கொண்டார். இந்தக் காலத்தில் இவர் எழுதிய சிறுகதைகளிலும் பிரச்சாரம் தூக்கலாகவே இருந்தன.

என்றாலும் தன் ஆசிரியத்துவத்தில் பல காத்திரமான நல்ல படைப்புகளை வெளியிட்டார். சிறப்பான பல கதைகள் வந்தன. இலக்கிய சிந்தனை போன்ற அமைப்புகளால் அந்த மாதத்துக்கான சிறந்த கதை என தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.

குறிப்பிடத்தகுந்த மொழியாக்கக் கதைகள், மொழியாக்கக் கவிதைகள் பிரசுரமாகின.மாற்று புரட்சிகர அமைப்பில் இயங்கிய கோ. கேசவனை தொடர்ந்து ‘மனஓசை’யில் எழுத வைத்தார். சீரழிவுக் கலாச்சாரம் குறித்தும் சோழர் காலத்தில் நடைபெற்ற கலவரங்கள் பற்றியும் கோசவன் எழுதிய கட்டுரைகள் பெரும் திறப்பை நிகழ்த்தின.

கோவை ஞானி, அ.மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும், கலை இலக்கியப் பிரச்னைகள் குறித்து நடத்திய உரையாடல்கள், விவாதங்களும் தொகுக்கப்பட வேண்டியவை. போலவே பெட்ரோல்ட் பிரெக்ட் குறித்த அ.மார்க்ஸின் தொடர். குறிப்பாக தோழர் வசந்தகுமார் திராவிட இயக்க கலாச்சாரம் தொடர்பாக எழுதிய ஆய்வுத் தொடர் அன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

பெருமாள் முருகன், தேவிபாரதி, மனுஷ்யபுத்திரன், இந்திரன், பாவண்ணன், பழமலை, சுயம்புலிங்கம், சுப்ரபாரதிமணியன்… என பலரது பெயர்களை முதன்முதலில் பார்த்ததும் அவர்களது படைப்புகள் அறிமுகமானதும் ‘மனஓசை’ வழியாகத்தான்.

ஆப்பிரிக்க – மூன்றாம் உலகக் கவிதைகளை இந்திரனும், மலையாளக் கவிதைகளை சுகுமாரனும் தொடர்ந்து ‘மனஓசை’யில் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

எல்லா மனிதர்கள் மீதும் எல்லாவிதமான விமர்சனங்களும் உண்டு. அதையெல்லாம் மீறி, தன் காலத்தில், தனக்கு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் அந்த மனிதன் என்ன செய்தான்… எந்தவிதமான தாக்கத்தை சூழலில் ஏற்படுத்தினான்… என்பதை வைத்துதான் அவனது இருப்பை அளவிட முடியும்.

போலவே அந்தந்த காலகட்டத்தை பொறுத்துதான் அந்தந்த படைப்புகளை மதிப்பிட முடியும். பா.செயப்பிரகாசத்தின் எழுத்துக்களை அவரது காலத்தை சேர்ந்த மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுடன்தான் உரசிப் பார்க்க வேண்டும்.

வெறும் கால்களுடன் மண் தரையில் ஓடிய வீரனின் வேகத்தை ஷூக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அதை அணிந்து கொண்டு இயந்திரத்தால் சமமாக்கப்பட்ட தரையில் ஓடும் வீரனின் வேகத்துடன் ஒப்பிடுவது தவறல்லவா..?

இலக்கியம் என்பது ரிலே ரேஸ் போன்றது.உலகமயமாக்கலுக்கு பின் பரவலான இணையப் பயன்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டையும், ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற வாழ்வியலையும் சிந்தாமல் சிதறாமல் இணைத்துக் கொடுத்து இன்று மைதானத்தில் ஓட வைத்துக் கொண்டிருப்பது ‘மனஓசை’தான்… பா.செயப்பிரகாசம்தான்.எனவேதான் இன்றைய தமிழ் இலக்கியத்தின் வேர்களில் ஒருவராக அவர் வாழ்கிறார்.

என்ன… கிளைகளுக்கும் இலைகளுக்கும் வேரின் வியர்வை ஒருபோதும் தெரிவதில்லை… தன்னைத் தாங்கிப் பிடிப்பதே அந்த வேர்தான் என்பதையும் அவை அறிவதில்லை…

ழுக்கு ஆசிரியராக கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்றதும் அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தையே முற்றிலுமாக மாற்ற முடிந்தது.

திறமை இருந்தும் மேடை கிடைக்காமல் அல்லாடிய அப்போது இளைஞனாக இருந்த ஜெயமோகனை… தான் கொண்ட கொள்கைகளுக்கு முரணாக இருந்தாலும் திறமைசாலி என மதித்து கோமல் சுவாமிநாதனால் தொடர்ந்து ‘சுபமங்களா’வில் எழுத வைக்கவும் முடிந்தது.

இதற்கான விதை ‘மனஓசை’தான்… அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தை நிர்ணயித்த அதன் ஆசிரியரான பா.செயப்பிரகாசம்தான்.

அரசியல் பண்பாட்டுக் கட்டுரைகளுடன் மக்கள் நலன் சார்ந்த – அதேநேரம் இலக்கியத் தரத்துடன் சிறுகதைகள்… உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களின் கவிதைகள்… மக்களின் பிரச்னைகளை முதன்மைப்படுத்திய மேற்கத்திய கோட்பாட்டு அறிமுகங்கள்… என இன்றைய இடைநிலை பத்திரிகைகளுக்கான இலக்கணங்களை மிகத்துல்லியமாக வரையறுத்துக் கொடுத்தது சாட்சாத் ‘மனஓசை’தான்.

இந்த சாரத்தைதான் கண்ணன் 1990களின் மத்தியில் எடுத்துக் கொண்டார். தன் தந்தை சுந்தர ராமசாமியால் நடத்தப்பட்ட ‘காலச்சுவடு’ காலாண்டிதழை தன் பொறுப்பில் இரு மாத இதழாக அவர் கொண்டு வர எண்ணியபோது அவர் முன்னால் தமிழகச் சூழலில் சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாவாக – ப்ளு பிரிண்ட் ஆக – இருந்தது ‘மனஓசை’யே.

ஒருவேளை கண்ணன் இதை மறுக்கலாம் அல்லது உண்மையிலேயே தனக்கான ப்ளு ப்ரிண்ட் ஆக வேறு மேற்கத்திய பத்திரிகையை அவர் கொண்டிருக்கலாம்.

ஆனால், ‘மனஓசை’ எப்படிப்பட்ட வரையறைகளுடன் பா.செயப்பிரகாசத்தால் கொண்டு வரப்பட்டதோ… அதே இலக்கணத்துடன்தான், கண்ணன் பொறுப்பேற்றது முதல் ‘காலச்சுவடு’ வருகிறது என்பதை மறுக்கவே முடியாது.

என்ன… ‘மனஓசை’ இடதுசாரி கருத்தியல்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ‘காலச்சுவடு’ வலதுசாரி கருத்தியல்களுடன் அனைத்து தரப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. கட்டடங்கள் வேறு வேறு. ஆனால், கட்டடம்

***

அன்புள்ள சிவக்குமார்

இது போய்க்கொண்டே இருக்கிறது. வாசகர்களுக்கே சலித்திருக்கும்

கே.என் சிவராமன் கொடுத்திருக்கும் இந்தக்கோணம் முக்கியமானதுதான். புனைவெழுத்தாளராக பா.செயப்பிரகாசத்தின் இடம் ஏதுமில்லை. அவருடைய அரசியலைப் பற்றி அவருடைய முன்னாள்தோழர்களின் சொற்களை எடுத்துக்கொண்டாலே அது நேர்மையானதுமல்ல- அது ஒரு சமரசநாடகம், ஒருவகையான பொதுப்பாவலா- பெரும்பாலான வானம்பாடி கவிஞர்களைப்போல வாயுபச்சாரம்.

ஆனால் ஓர் இதழாளராக அவருக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. அதை கே.என்.சிவராமன் கூறியிருப்பதை நான் ஏற்கிறேன்.ஆனால் வழக்கமான முகநூல் குறிப்புகளில் இருப்பதுபோல இது ஒரு மிகைப்பேச்சு, தழுதழுப்பு. அதைக் கழித்துவிட்டு இதைக் கருத்தில்கொள்ளலாம்தான்.

எழுபதுகள் முதல் இடதுசாரி தீவிரப் பிரசுரங்களுக்கு அழகியல்பார்வை என ஏதும் இருந்ததில்லை. சோஷலிச யதார்த்தவாதம் சார்ந்த பார்வைகூட இருந்ததில்லை. அவர்களின் அன்றைய கட்சி அரசியலின் கூச்சல்களே அவற்றில் மிகுந்திருக்கும். இலக்கியம் என்பது ஒருவகையான துண்டுப்பிரசுரம் என்னும் மனநிலை. கட்சிக்குள்ளே இருந்தே எழுத்தாளர்களை தேடும் மனநிலை.

சரஸ்வதி விஜயபாஸ்கரன்

ஏறத்தாழ இதே பார்வைதான் இடதுசாரி கட்சி இதழ்களுக்கும் இருந்தது. அந்தப்பார்வையில் உடைவை உருவாக்கிய முன்னோடி இதழாளர் விஜயபாஸ்கரன். அவருடைய சரஸ்வதி இதழ்தான் தமிழ் இடதுசாரி இதழ்களுக்கெல்லாம் முன்னோடி. ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் ஜி.நாகராஜனும் உருவாகி வந்த களம் அது. இடது அரசியலின் நேரடி நீட்சியாக அன்றி அதை தனியான ஒரு பண்பாட்டுட்செயல்பாடாகப் பார்க்கும் கோணம் முதலில் தமிழில் விஜயபாஸ்கரனால்தான் தொடங்கிவைக்கப்பட்டது.

தி.க.சிவசங்கரன்

சரஸ்வதி கட்சிச்சார்பு இதழ், கட்சி இதழ் அல்ல. அதை கட்டுப்படுத்தும்பொருட்டு கட்சியால் தாமரை இதழ் தொடங்கப்பட்டது.சரஸ்வதி வீழ்ச்சியடைந்தது. ஆனால் தாமரைக்கு ஆசிரியராக தி.க.சிவசங்கரன் வந்தபோது அவர் விஜயபாஸ்கரனின் வழியையே பின்பற்றினார். இலக்கியவிமர்சகர் என்ற வகையில் தி.க.சிவசங்கரனுக்கு எந்த இடமும் இல்லை- ஆனால் கி.ராஜநாராயணன் முதல் பிரபஞ்சன் வரை ரண்டு தலைமுறை எழுத்தாளர்களுக்கு தாமரையில் களம் அமைத்துக்கொடுக்க அவரால் முடிந்தது. அது ஒரு முதன்மைப் பங்களிப்புதான்

தீவிர இடதுசாரி இதழ்களின் பார்வை இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை மறுப்பதாகவும் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை மறுப்பதாகவும் இருந்தது. மனஓசை அதில் ஓர் உடைவு. வ.ஜெயபாஸ்கரன், தி.க.சிவசங்கரன் வரிசையில் பா.செயப்பிரகாசம் அந்த உடைவை அங்கே நிகழ்த்தினார்.

பா.செயப்பிரகாசம்

அன்று எழுதுவதற்கு சிற்றிதழ்களில் பெரிய தேக்கம் உருவாகியிருந்தது. இடதுசாரிப் பார்வை உடைய, அல்லது ஓரளவு அதற்கு ஒத்துப்போகக்கூடிய படைப்பாளிகளைக் கண்டடையவும் அவர்களுக்குக் களம் அமைத்துக்கொடுக்கவும் பா.செயப்பிரகாசம் என்னும் சூரியதீபனால் இயன்றது.அது அவர் தமிழுக்கு அளித்த பங்களிப்பு. அவ்வகையில் முதல் இருவரின் வரிசையில் வைக்கப்படவேண்டியவர்தான்.

அந்த இடத்தை அவருக்கு அளிக்கத்தான் வேண்டும். இன்று சூரியதீபன் என்றபெயரில் அவர் எழுதினார் என்பது அவர்மேல் வைக்கப்படும் அவதூறு என்று அவருடைய வழக்கறிஞ்சர்கள் கூறும்நிலையில் கே.என்.சிவராமன் நீதிமன்றம் வந்து இக்கருத்தை வலியுறுத்துவாரா என்ற சந்தேகம் எனக்கிருந்தாலும்கூட

*

சி.சு.செல்லப்பா

ஆனால் இந்த குறிப்பில் பா.செயப்பிரகாசத்திற்கும் [அதாவது சூரியதீபனுக்கு] மனஓசைக்கும் கே.என்.சிவராமன் அளிக்கும் இடம் மிகையானது. ஒருவருக்காக ஒட்டுமொத்த வரலாற்றையும் திரிப்பது. இது எப்போதும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆகவே மீண்டும் பதிவுசெய்கிறேன்

சி.சு.செல்லப்பாதான் தமிழ்ச் சூழலில் சிற்றிதழ் என்ற கருத்தை முன்வைத்தார்- அதன் வரையறை இதுதான். தன் பிரதிகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே கட்டுப்படுத்திக்கொண்டு, குறைவான செலவில் வெளிவரும், குறிப்பிட்ட நோக்கம் கொண்டு மட்டும் வெளிவரும் இதழே சிற்றிதழ்.

தொடக்க காலத்தில்  அச்சு- வினியோகம் குறைவாக இருந்தபோது எல்லா இதழ்களுமே சிறிய இதழ்கள்தான். சிற்றிதழ்வேறு, சிறிய இதழ்வேறு. பேரிதழ்கள் தோன்றியபின் அவற்றுக்கான மாற்று என தோன்றியதே சிற்றிதழ். சிறு அமைப்புக்களின் முகப்பிதழ்கள் குறைவான எண்ணிக்கையில் வரலாம், அவை சிற்றிதழ்கள் அல்ல.

நா.பார்த்தசாரதி

இலக்கியத்தில் சிற்றிதழ் என்பது எழுத்துதான். குறைவாக அச்சிட்டால் அமைப்புபலம் தேவையில்லை.ந் செலவு இல்லை. ஆகவே வாசகரசனையுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டியதில்லை – இதுதான் இந்த சிற்றிதழ் என்னும் கருத்தின் மையம். இது ஓர் அமெரிக்கக் கருத்துரு. அதாவது திட்டமிட்டே தன்னை சிறிதாக நிறுத்திக்கொள்ளும் இதழ்

தமிழில் அதற்கு முன்பு வந்துகொண்டிருந்த சுதேசமித்திரன், மணிக்கொடி ஆகியவை சிற்றிதழ்கள் அல்ல. அவை சிறிய இதழ்கள். சரஸ்வதி, தாமரை ஆகியவையும் சிற்றிதழ்கள் அல்ல. அவை இடைநிலை இதழ்களே.

பகீரதன்

சிற்றிதழ் இயக்கம் எழுபதுகளில் உச்சம் அடைந்தபோது இடைநிலை இதழ்களுக்கான தேவை உணரப்பட்டது. அதற்கான பலமுயற்சிகள் நிகழ்ந்தன, எவையும் வெற்றிபெறவில்லை. பகீரதன் தொடங்கிய சத்திய கங்கை நா.பார்த்தசாரதியின் தீபம், கஸ்தூரிரங்கனின் கணையாழி ஆகியவை இடைநிலை இதழ்களாகவே முதலீட்டுடன், விளம்பரங்களுடன் தொடங்கப்பட்டன. பின்னர் சிற்றிதழ்களாக மாறின. ஜெயகாந்தன், விந்தன், க.நா.சு என பலரும் பல முயற்சிகள் செய்திருந்தனர்

ஐராவதம் மகாதேவன்

இடைநிலை இதழுக்கான களம் அமைந்தது தினமணியின் தமிழ்மணி வழியாக. அதற்கு பொறுப்பேற்றவர்கள் அன்றைய ஆசிரியர் ஐராவதம் மகாதேவனும் ராஜமார்த்தாண்டனும்.அதுதான் உண்மையில் ஓர் இடைநிலை இதழுக்கு தேவையான விரிந்த வாசகப்பரப்பை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து அந்த அலையை முன்னெடுத்தது கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா. இவ்விரு இதழ்களுக்கு பெரிய நிறுவனங்களின் அமைப்பு – நிதிப்பின்னணி இருந்தது.

கோமல் சுவாமிநாதன்

ஐராவதம் மகாதேவனுக்கு முன்னுதாரணமாக இருந்தது பயோனியர் என்னும் இதழின் இலக்கிய இணைப்புப் பக்கம். கோமல் சுவாமிநாதன் பகீரதனின் ஞானகங்கையுடன் நெருக்கமாக இருந்தவர். தீபம் இதழுக்கு பங்களிப்பாற்றியவர். இரண்டுமுறை கலைந்த கனவு மீண்டும் நனவானது என்று அவர் சுபமங்களா பற்றிச் சொல்வார். அவருடைய முன்னுதாரணம் ஆரம்பகட்ட தீபம் இதழ்களே.

பாவை சந்திரன்

அதன்பின் இந்தியா டுடே வந்தது. ஏற்கனவே திசைகள் என்ற இதழ் வழியாக ஒரு மாற்றிதழ் முயற்சியை செய்து தோல்வியடைந்திருந்த மாலன் அதில் புத்திலக்கியத்தை அறிமுகம் செய்தார். அதற்கு வாசந்தி ஆசிரியராக வந்து அந்த இயக்கத்தை முன்னெடுத்தார். குங்குமம் இதழில் உதவிஆசியராக இருந்தபோது தொடர்ச்சியாக நவீன இலக்கியத்தை அதில் அறிமுகம் செய்த பாவை சந்திரன் தமிழரசி நடராஜனின் புதியபார்வை இதழ் வழியாக நவீன இலக்கியத்திற்கு இடமளித்தார்

மாலன்

காலச்சுவடு தெளிவாகவே சிற்றிதழாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. அது எட்டு இதழ்களுடன்ந் நின்று மீண்டும் தொடங்கியபோதுதான் இடைநிலை இதழ் என்னும் கனவு அதற்கு வந்தது. இடைநிலை இதழ்களாகிய உயிர்மை, அமிர்தா ஆகியவை பின்னர் வெளிவந்தன.  குமுதமும் விகடனும் இடைநிலை இதழ்களுக்கான முயற்சியை தொடங்கி நிறுத்திக்கொண்டன. இணையம் வந்ததும் இடைநிலை இதழ்களுக்கான இடம் இல்லாமலாகிவிட்டது. இனி அவை வரலாற்றுப்பக்கங்களிலேயே நீடிக்கும்

வாசந்தி

இது வரலாறு. இதில் வெவ்வேறு பங்களிப்புகள் உள்ளன. வெவ்வேறு இடங்களில் இருந்து இவர்கள் தங்கள் தூண்டுதல்களைப் பெற்றுள்ளனர். பா.செயப்பிரகாசம் இடதுசாரி இதழ்களில் இலக்கியத்திற்கான இடத்தை உருவாக்கிய மூன்று முன்னோடிகளில் ஒருவர் என்றால் அது வரலாற்று உண்மை. ஆனால் நம்மால் அங்கே நிற்கமுடியாது. மற்ற அத்தனைபேருடைய பங்களிப்பையும் மிதித்து தள்ளி இவரே அனைத்தும்’ என்று சொல்லி கூச்சலிடாமல் நமக்கு ஆறாது. இதுதான் நம்முடைய மாறா  நோய்

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

$
0
0

மாதவன் அண்ணனை நான் அழைத்துச் சென்றேன். தட்டுத்தடுமாறி வரம்பு வழியாக வந்த மாதவண்ணன் என்னிடம் “நான் இந்த ஏரியாவுக்கெல்லாம் வந்ததே இல்ல கேட்டியா?” என்றார்.

“உங்க வயலு இங்க இருக்கே? வடக்கே வயலு? நாலாம்கண்டம்?” என்றேன்.

“ஆமா, ஆனா அதெல்லாம் அப்பா பாத்துக்கிடுதாரு. நமக்கு எங்க நேரம்? நம்ம ஆபீஸுக்கு போயிட்டு வாறதுக்கே விடிஞ்சு இருட்டீடுது… இந்த ஆண்டுதான். அடுத்த வருசம் பிரமோசன் ஆனா மெயின் தமிழ்நாட்டிலே போஸ்டிங் போட்டிருவான். திருநெல்வேலியிலே போஸ்டிங் போட்டான்னாக்கூட வந்திட்டு போயிட்டு இருக்கலாம். இல்லேன்னா கஷ்டமாக்கும்.”

நான் “தமிழ்நாடு நல்ல ஊராக்கும்” என்றேன். ஆனால் மேற்கொண்டு தமிழ்நாட்டின் சிறப்புகள் எனக்கு ஞாபகம் வரவில்லை.

“நான் போயிருக்கேன்.. நம்ம பிரபேசன் பீரீட் அங்கேல்லா? தண்ணியில்லா காடாக்கும். கோயில்பட்டி ஏரியாவிலே வெயிலு என்னா அடி அடிக்கும்ங்குதே? தீயாக்கும், வானத்திலே இருந்து தீ எறங்கும். வெயிலுகாலம்னு இல்லை. அங்க பன்னிரண்டு மாசமும் வெயிலுகாலமாக்கும்” என்றார் மாதவண்ணன்.

வயல்வரப்பிலிருந்து அக்கரை ஆறடிச்சாலையை அடைந்தோம். “இங்க ஏம்டே இப்டி புல்லுபிடிச்சு கெடக்கு?”

“இங்க மாடு நிறைய இருக்குல்லா?” என்றேன்.

மாதவண்ணன் என்னை விசித்திரமாக பார்த்தார்.

“அதுக மேயணும்லா?”

அவர் மேலும் விசித்திரமாக பார்த்தார்.

நான் பேச்சை மாற்ற “தமிழ்நாட்டிலே காமராஜ் இருக்காரு” என்றேன்.

“அவரு எங்க இருக்காரு? தோக்கடிச்சு அனுப்பியாச்சே… அவரு எங்கயோ டெல்லியிலே போயி கெடக்காரு… பாவம்” என்றார் மாதவண்ணன் “ரொம்ப தூரமாடே?”

“வந்தாச்சு.”

“தமிழ்நாட்டுலே போஸ்டிங்னா கஷ்டம்தான். நான் மட்டும் தனியா போயி கிடக்கணும். இவள கூட்டிட்டுப் போகமுடியாது. இங்க அம்மை அப்பனுக்க சம்ரச்சணையிலே இருக்கிறப்பமே மூணுகரு தாங்காம விளுந்துபோட்டு… மூணுமாசப்பிள்ளைதான், போறது வெறும் ரெத்தக்கட்டி. ஆனா அவளுக்கு ஓரோண்ணும் ஒரு பிரசவமாக்கும்.”

அவர் ஒரு ஓடையை மிகக்கவனமாக கடந்து “தாளுமாதிரி வெளுத்துப்போயிருவா. மனசும் கலங்கீரும். வாயில தோணினத பேசுறது, முகம்பாத்தா ஆளுதெரியிறதில்லை… ராத்திரியிலே எந்திரிச்சு ஓடுகதும் உண்டு. நீ சின்னப்பையன், உங்கிட்ட சொல்லப்பிடாது. டேய், நானெல்லாம் அவகூட தனியா இருக்கதுக்கே இப்பல்லாம் பயப்படுதேன்” என்றார்.

நான் எனக்கு அளிக்கப்பட்ட அந்த மதிப்பை பயன்படுத்திக் கொள்ளும்பொருட்டு “கரு ஏன் நிக்குததில்லை?” என்றேன்.

“ஓரோருத்தரும் ஓரோண்ணு சொல்லுதாங்க. கருப்பையிலே பிரச்சினைன்னு மிஷனாஸ்பத்திரியிலே சொன்னாங்க.ரக்தமேகம்னு நாணுப் பணிக்கர் சொல்லுதாரு. ஏதோ யட்சி சினைமுட்டையை தின்னுட்டுப்போறான்னு அப்புப் பாட்டா சொல்லுதாரு… நாம என்ன கண்டோம்.”

மாதவண்ணன் பேசிக்கொண்டே வந்தார். “நாமளா ஒரு பாவமும் செய்யல்ல. மனசறிஞ்சு ஒருத்தனுக்கும் ஒரு தீமையும் செய்யல்ல. ஆனால் வாறது வழியிலே தங்குமா? வேரிலே உள்ளது கொம்பிலே பூக்கும்னாக்குமே சொல்லு. நம்ம பரம்பரையிலே என்ன பாவமோ என்ன பழியோ? நம்ம கைக்கும் காலுக்கும் நாம பொறுப்பு. நம்ம ரத்தத்துக்கு நாம பொறுப்பில்லை இல்லியா?”

அவர் எப்போதுமே அப்படித்தான். அவருக்கு அவரே பேசிக்கொள்வார். எப்போதுமே துயரத்துடன் இருப்பவர் போலிருப்பார். அவருடைய வயதை ஒத்த எவருடனும் அவர் பேசிக் கேட்டதில்லை. என்னை மாதிரி சிறுவர்களுடன்தான் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். அதுவும்கூட விளையாட்டாகவோ சிரிப்பாகவோ பேசுவதில்லை. அவருடைய பிரச்சினைகளைத்தான் விரிவாகச் சொல்வார்.

அவர் பஞ்சாயத்து ஆபீஸில் வேலை பார்த்தார். எங்களூரில் துணியால் தைத்த பனியன் போடும் இளைஞர் அவர் ஒருத்தர்தான். அவர் போடும் சட்டையும்கூட முழங்கைவரை கையுடன் ஒற்றைப் பாக்கெட் வைத்தது. என் அப்பா வயதானவர்கள்தான் அதைப் போடுவார்கள்.

காக்கிநிறத்தில் ஒரு துணிப்பை வைத்திருந்தார். அதில் ஃபைல்கள் சோற்றுடப்பாவுடன் காலையில் கையை தூக்கித் தூக்கி வெட்டுக்கிளி போல தாவித்தாவி நடந்து குருவிக்காடு ஜங்ஷனுக்குப் போய் மாதவண்ணன் 3E பஸ்ஸில் ஏறி உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து ஆபீஸுக்கு போய்விட்டு திரும்பிவருவார். அவர் வந்துசேர மாலை ஏழுமணி ஆகிவிடும். அதேபோல தாவித்தாவி வருவார். நாங்கள் அப்போது கோயில்முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்போம்.

“இங்கயாடே?” என்று மாதவண்ணன் கேட்டார். “எடம் ரொம்ப ஒதுக்குபொறமா இருக்கு பாத்துக்கோ. சாராயம் குடிக்கவனுக வாற எடம் போல இருக்கு.”

நான் “இங்க நல்ல சாராயம் கிட்டும்” என்றேன் “அந்தா அந்த கைதைச்செடிக்க அந்தாலேதான் அம்புரோஸுக்க வீடு… அங்க உண்டு.”

“அய்யோ… நம்மள பாத்தா தப்பா நினைச்சுப்போடுவானுகளே.”

“அம்புரோஸுக்க சாராயம் நல்லதாக்கும்… நீலமா எரியும்.”

“நீ சும்மா வாடே” என்று மாதவண்ணன் சொன்னார். “சாராயம் குடிக்கவனுகளை போலீஸுக்கு பிடிச்சு குடிக்கணும்… நான் போனவாரம் ஆத்திலே எறங்குறப்ப நம்ம ஞானப்பன் ஆடி ஆடி வாறன். ஆனைமேலே இருக்கிறது மாதிரி ஒரு நடை… என்னையப் பாத்ததும் டேய் அடைக்கோழின்னு விளிச்சான். அடைக்கோழி அவனுக்க அப்பன்… குடிகாரன்கிட்ட நமக்கென்ன பேச்சு… நான் அப்டியே மேலே தாணுபிள்ளை தோட்டத்திலே ஏறி மறைஞ்சிட்டேன்.”

“ஞானப்பம் குடிக்குதது அரிஷ்டம், அது நாறும். இங்க அம்புரோஸ் காய்ச்சுதது நல்ல கதளிவாழைப்பழம் போட்ட மணமான சாராயமாக்கும்.”

“நீ எப்டிடே இதெல்லாம் தெரிஞ்சிருக்கே?”

“அப்பு அண்ணா குடிப்பாரு. எங்க அப்பாவுக்கும் வாங்கிட்டு போவாரு” என்றேன். “நான் அச்சு ஆசானுக்கு வாங்கி குடுத்திருக்கேன்.”

“உங்கப்பாவுக்கு எதுக்கு சாராயம்?”

“இங்கிலீஷ் பேசணும்லா?”

மாதவண்ணன் அதை யோசித்தபடி என்னுடன் வந்தார்.

அம்பாடி குளத்தின் தெற்குகரையிலிருந்த குசமேட்டை அடைந்தோம். குசமேட்டை குளத்தின் கரைவரம்பு என்றுதான் சொல்லவேண்டும். அம்பாடிக்குளம் மிகப்பெரியது. ஆகவே கரைவரம்பும் பெரியது. அங்கே குயவர்களின் வீடுகள் வரிசையாக இருந்தன. நாற்பது வீடுகளுக்குமேல் இருக்கும்.

அந்த வீடுகளின் தொடர்ச்சியாக இரண்டு சூளைகள். அவை செங்கல் அடுக்கி கட்டைப்பட்ட குள்ளமான வீடுகள் போலிருக்கும். உள்ளே பச்சைக்களிமண்ணால் ஆன பானைகளையும் சட்டிகளையும் சீராக அடுக்கி செங்கல் வைத்து மூடிவிட்டு, மண்ணுக்கு அடியில் சுரங்கம்போல ஆழமான அடுப்புக்குள் விறகை அடுக்கி தீபோட்டு அதையும் மூடிவிடுவார்கள். உள்ளே காற்றுபோவதற்கு களிமண் சுவரில் கட்டைவிரல் அளவுக்கு சிறிய துளைகள் வரிசையாக போடப்பட்டிருக்கும்.

சூளையில் தீ கொழுந்துவிட்டு எரியும் என நான் அங்கே வருவது வரை நினைத்திருந்தேன். அது வெந்நீர் போடும் ஒதுக்கு அடுப்பு போல கனல் மட்டும்தான் கொண்டிருக்கும், கொஞ்சமாகத்தான் புகையும் எழும் என்று அதைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. மேலே புகைபோவதற்கு களிமண்ணாலான குழாய் இருந்தது. அது பெரிய சுருட்டுபோல புகைந்தது.

முதல்நாள் என்னை அங்கே அழைத்து வந்திருந்த லாரன்ஸிடம் “கீழே இருக்கிற பானைமட்டும்தான் வேவுமா?” என்று கேட்டேன்.

“ஏல சூளைய நல்லா மூடிருவானுக. உள்ள தீ அப்டியே தண்ணி மாதிரி நெறைஞ்சிருக்கும் தெரியுமா?”என்றான்.

குசமேட்டில் எல்லாமே மிகச்சிறிய குடிசை வீடுகள். களிமண்ணாலான ஆளுயரச் சுவருக்குமேல் பெரிய ஓலைக்கூடையை கவிழ்த்தது போன்ற கருகிப்போன கூரை. தொலைவிலிருந்து பார்த்தால் அங்கே பெரிய சருகுக்குவியல்கள் வரிசையாக இருப்பதுபோலத் தெரியும். வீடுகளுக்கு முன்னால் முழங்கால் அளவு உயரமான மண் திண்ணை. உள்ளே படுப்பதற்கும் புழங்குவதற்கும் எல்லாம் சேர்த்து ஓர் அறை. சமைப்பதற்கு ஒரு சின்ன சாய்ப்பறை, அவ்வளவுதான் வீடு.

ஆனால் எல்லா வீட்டுக்கும் முன்னால் சற்று அகலமான ஓலைக்கொட்டகைகளை போட்டிருந்தனர். சுவராகவும் ஓலைக்கீற்றுகளை வைத்து கட்டப்பட்டவை. அவற்றில்தான் அவர்கள் மூங்கிலால் அடுக்கடுக்காக தட்டுவைத்து கட்டி அதில் பச்சைக்கலங்களை காயவைப்பார்கள். ஒரு சிறுகொட்டகைக்குள் இருநூறு முந்நூறு பானைகளும் சட்டிகளும் ஒரே சமயம் காய்ந்துகொண்டிருக்கும்.

அவர்கள் நாற்பது வீட்டுக்காரர்களும் முறைவைத்து அந்த இரண்டு சூளைகளையும் பயன்படுத்தினார்கள். எல்லாமே கூரையிட்ட இடம் என்பதனால் மழைக்காலத்திலும் பானைசெய்து சுட்டு எடுத்தார்கள். ஆண்கள் பானைகளை சேர்த்து கட்டி தலையில் ஏற்றிக்கொண்டு சந்தைக்கு போவார்கள். பெண்கள் கடவங்களில் சட்டி பானை கோருவை மூடிகளுடன் ஊருக்குள் கொண்டு சென்று விற்பார்கள்.

அப்போது எல்லா வீடுகளுக்கு முன்னாலும் பெண்கள் அமர்ந்து மரத்தாலான ஆப்புதட்டிகளால் சற்றே காய்ந்து இறுகிய பசைநிலையில் இருந்த சட்டிகளையும் பானைகளையும் தட்டித்தட்டி மெலிதாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளே மரத்தாங்கு கொடுத்து சுழற்றிச் சுழற்றி தட்டினர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் கைதட்டும் ஓசைபோல கேட்டுக்கொண்டிருந்தது.

எல்லாருமே கிழவிகள். எல்லாருமே வாயில் வெற்றிலை போட்டு நிறைத்து வைத்திருந்தனர். எங்களை கூர்ந்து பார்த்தனர். ஆனால் கைகள் தட்டிக்கொண்டே இருந்தன.

ஆண்டிக் குயவனின் வீட்டுக்கு முன்னால் மேலேறிச் செல்ல சிறிய படிகள்போல மண்ணில் கொத்தப்பட்டிருந்தது. நான் மேலேறிச் சென்றுவிட்டேன். மாதவண்ணன் மிக மெதுவாக நடுங்கி நடுங்கி காலெடுத்துவைத்து மெலே வந்தார்.

“இதாக்கும் வீடு” என்று நான் சொன்னேன்.

“இதாடே? ஆரையும் காணமே.”

“உள்ள இருப்பாரு.”

“ஆண்டி இருக்காரா?” என்று மாதவண்ணன் கேட்டார். உரக்க “ஆண்டி இருக்காரா? நான் நாகமங்கலம் வீட்டிலே இருந்து மாதவன்… ஆண்டி இருக்காரா.”

பக்கத்துவீட்டில் பானை தட்டிக்கொண்டிருந்த கிழவிகள் எவரும் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் அவர்கள் தங்கள் பானைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.

பக்கவாட்டில் கொட்டகையில் ஆண்டியின் குயச்சக்கரம் இருப்பதை நான் பார்த்தேன். அருகே குழைத்த களிமண் உருளைகள். களிமண் உருண்டை ஒன்று சினைப்பன்றி கிடப்பதுபோல பெரிதாக தெரிந்தது. களிமண் கலங்கள் பின்னால் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவை அடைகாப்பதற்காக வைக்கப்பட்ட முட்டைகள் போல என்று எனக்கு தோன்றியது.

“ஆண்டி இருக்காரு… பீடி வாங்க போனாருன்னு நினைக்கேன்” என்று சொல்லி குயச்சக்கரத்தை சுட்டிக்காட்டினேன். “பானை வனைஞ்சிட்டு இருந்திருக்காரு…”

“அதுக்கு நடுவிலே என்னத்துக்கு பீடி?” என்று மாதவண்ணன் சொன்னார்.

“பீடி சக்தியாக்கும்” என்று நான் சொன்னேன். ஆர்வத்துடன் குயச்சக்கரத்தை நோக்கிச் சென்றேன்.

குயச்சக்கரம். சிறிய மாட்டுவண்டிச்சக்கரம் போன்றது. அதை தரையில் இருந்த மரத்தாலான குமிழியில் பொருத்தியிருப்பார்கள். அதன் அச்சுப்பரப்பு ஒரு வட்டமான பீடம். அதில் களிமண்ணுருண்டையை வைத்து வேகமாகச் சுழற்றிவிட்டு விரல்களால் மென்மையாக பிடித்தாலேபோதும் சட்டியின் விளிம்பு உருண்டு வரும். அதற்கு சுருட்டுவது என்று பெயர்.

ஆனால் மிகக்கவனமாக அதை தொட்டுக் கொண்டிருக்கவேண்டும். கொஞ்சம் அழுத்தினால் விளிம்புவட்டம் சட்டென்று மெலிந்து உடைந்துவிடும். பிடி கொஞ்சம் அகன்றால் அது தடித்து குழைந்து வளைய தொடங்கும். எப்போது அப்படி ஆகிறது என்று சொல்லவே முடியாது. மண் நம் கைக்குக்கீழே நம் கையை அது எடுத்துக்கொண்டு தானாகவே உருண்டு வடிவம் கொண்டு வரும், நம்மை மீறியே நெகிழ்ந்து உருவழிந்து மீண்டும் களிமண்ணாகும்.

நான் அங்கே ஆண்டி சட்டியும் பானையும் செய்வதை அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது உண்டு. ஆண்டியிடம் கேட்டு பலமுறை சக்கரத்தை சுழற்றி கலம் சுருட்ட முயன்றதும் உண்டு. ஒருமுறைகூட என் கையிலிருந்து கலம் எழுந்ததில்லை. ஆனால் என் கைக்குக்கீழே மண் குழைந்து உருவம் கொள்ளும்போது ஒரு பெரிய பரவசம் ஏற்பட்டது. மண் என்னுடன் உரையாடுவதுபோல.

நான் நடக்கும் மண், அள்ளிவிளையாடும் மண், கொத்திக்கிளைத்து அள்ளி கொட்டி, மிதித்துக் குழைத்து வேலைச்செய்யும் மண். என் ஊர், மரங்கள், மலைகள் எல்லாமே அமைந்திருக்கும் மண். அது மிகப்பிரம்மாண்டமானது. ஒரு மாபெரும் எருமைபோல். அதன்மேல் சின்னஞ்சிறு உண்ணிகள் போல மனிதர்கள். அவர்கள் இருப்பதையே அது அறிவதில்லை. அவர்கள் அதனிடம் உரையாடவே முடியாது. ஆனால் குயச்சக்கரத்தின் களிமண் நிலத்தின் உதடு. அது குவிந்து நெளிந்து நெகிழ்ந்து பேசுகிறது. என்ன பேசுகிறது என்று அறியமுடியாது. ஆனால் பேசுகிறது.

மாதவண்ணன் “அது என்னடே?” என்றார்.

“நான் காட்டித்தாறேன்.. குயச்சக்கரம்…” என்று நான் சென்று அதன்பின் வைக்கோல்புரி போட்டு அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். அதைச் சுழற்றிவிட்டேன். அது விசைகொண்டு சுழன்றதும் களிமண் உருண்டையை எடுத்து அந்த மையத்தில் வைத்தேன். கட்டைவிரலால் அழுத்தி மெல்லச் சுழற்றியபோது ஒரு கலத்தின் விளிம்பு தோன்றியது. ஓர் உதடு கூம்புவதுபோல.

“டேய் டேய்… அய்யோ இப்டியா செய்யுதானுக! அய்யோ… உருண்டு வருதே! ய்யம்மா!”

மாதவண்ணன் கைகால்கள் பதற தவித்தார்.அவருடைய உணர்ச்சிகள் எனக்கு வேடிக்கையாக இருந்தன. “தக்ளி வச்சு பஞ்சிலே நூலு நூக்குத மாதிரியாக்கும்…” என்று நான் சொன்னேன்.

வேறெங்கிருந்தோ ஊறி வந்து துளிப்பதுபோல என் கையில் எழுந்து வந்தது. அல்லது குளுமையான உருண்டையான ஒரு தாமரைப் பூ.

“டேய் எங்கேருந்துடே வருது… இது எங்கேருந்து வருதுடே?”

“மண்ணாக்கும்” என்றேன்.

“மண்ணு தெரியுதே… இந்த வளைவு, இந்த ரூபம்… அய்யோ அப்பிடியே கீறிக்கிட்டு எந்திரிச்சு வருதே… சாமி பிரத்யட்சப்படுதது மாதிரீருக்கே… தள்ளுடே… நான் செய்யுதேன்டே.”

“மெதுவாச் செய்யணும்.. கொஞ்சம் கை தளந்தாலும் போச்சு” என்றேன். “தண்ணியிலே குமிழி வாறது மாதிரியாக்கும். சட்டுன்னும் காணாம போயிரும்”

“ஆமா மண்ணுலே குமிழி” என்றார். அவர் அமர்ந்து சக்கரத்தைச் சுற்றிவிட்டு மண்ணை பிடித்தார். அவர் கை நடுங்கியது. மண்ணிலிருந்து உருவாகி வந்த ஒரு வளையம் சட்டென்று நெளிந்து மறைந்தது.

“ஏண்டே?” என்று திகைப்புடன் என்னிடம் கேட்டார்.

“சொன்னேன்ல? கைய வளைக்கப்பிடாது”

“இருடே இப்ப பாரு” என்று மீண்டும் அதை சுழற்றிவிட்டு மண்ணை வனையத்தொடங்கினார். வளையம் உருவானதுமே மெலிந்து கரைந்து மீண்டும் மண்ணுருளை ஆகியது.

மாதவண்ணனின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. “ஏம்டே? ஏன் வரேல்ல?”

ஆண்டி “ஈசியா வந்திடாது… வந்தா நாம குசவன் ஆயிருவோம்லா?”

“பாப்போம்” என்று மாதவண்ணன் பல்லைக் கடித்தார். வெறியுடன் மீண்டும் மண்ணை வனையத் தொடங்கினார். அது மீண்டும் கலைந்தது.

“அப்டி இறுக்கிப் பிடிக்கப்பிடாது… விட்டு பிடிக்கணும்”

“மண்ணு குழைஞ்சிருக்கு” என்றார். “இரு, பாப்போம்.”

அவர் உடலெங்கும் களிமண் ஆகிவிட்டது. முகத்தில் மண் தீற்றல்.

‘”போரும் எந்திரிங்க” என்றேன்.

என் குரலை அவர் கேட்கவே இல்லை. மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார். அவர் வெறிகொள்ள கொள்ள அந்த வளையம் ஒருமுறைகூட உருவாகாமல் ஆகியது. அவர் சக்கரத்தை நிறுத்திவிட்டு தலைகுனிந்து அமந்திருந்தார்.

“போதும் மாதவண்ணா” என்றேன்.

“ம்ம்ம்” என்று உறுமிவிட்டு மீண்டும் சுழற்றி மண்ணை வனையத்தொடங்கினார். அவர் ஆளே மாறிவிட்டதுபோல தோன்றியது.

அவர் கைக்கு கீழே குயச்சக்கரம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கொட்டகை சரிந்து கிடக்கும் ஒரு வண்டி என்று நான் கற்பனை செய்தேன். அல்லது நான் சரிந்து தொங்கியபடி ஒரு வண்டி ஓடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். வண்டிச்சக்கரத்தில் சிக்கிய சேறு கலமாக திரண்டு வருகிறது. அல்லது மத்தில் வெண்ணை எழுகிறது.

ஆண்டி மேலிருந்து பீடியை இழுத்தபடி வந்தார். அவனைக் கண்டதும் புன்னகைத்து புகையை விட்டார்.

“ஆண்டி வாறாரு” என்றேன். ஆனால் மாதவண்ணன் அதைக் கேட்கவில்லை.

ஆண்டி அவரை அப்போதுதான் பார்த்தார். “ஏமானா, எப்ப வந்தீரு?”

மாதவண்ணன் குயச்சக்கரத்தை நிறுத்தி மூச்சிரைத்தார்.

“என்ன செய்யுதாரு?” என்று ஆண்டி என்னிடம் கேட்டார்.

“சட்டி” என்றேன். “வரமாட்டேங்குது.”

“வரணும்னு உண்டும்னா வரும்…” என்றார் ஆண்டி “இதுவரை இந்த மண்ணிலே எம்பிடு கலம் வந்திருக்கும். மறுக்கா மண்ணாப் போயிருக்கும்…”

மாதவண்ணன் சீற்றம் கொண்டார். எழுந்து வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு “கலம் வாறது இருக்கட்டும், வேய் ஆண்டி, நீரு கைய நீட்டி பைசா வாங்கிட்டுப்போயி எம்பிடு நாளுவே ஆச்சு?”

“ஏமானே அது சட்டியும் கலமும் இல்லல்லா? பாவையாக்கும். பாத்துச்செய்யணும். பதமாட்டு சுட்டு எடுக்கணும்..”

“அதுக்காக? இப்பம் மாசம் ரெண்டாச்சு… நீரு செய்தீரா இல்லியா? இல்லேன்னா பைசாவ திருப்பிக் குடும்”

“செய்தாச்சு… அடிச்சுருட்டுத வேலை நடந்திட்டிருக்கு… இண்ணைக்கில்லேன்னா நாளைக்கு சூளையிலே ஏறீரும்”

“இங்கபாரும், இன்னும் நாலுநாளிலே ஆடிவெள்ளி ஒடுக்கம்… அடுத்தவெள்ளி ஆவணியிலே…ஆவணிவிட்டா பிறவு அடுத்தமாசமாக்கும்…”

“நாளைக்கு தந்துபோடுதேன்னு சொன்னேன்லா?”

“வண்ணாத்திக்கிட்ட நாலுதடவை சொல்லிவிட்டாச்சு. அப்பா ரெண்டு தடவை வந்தாச்சு… அதாக்கும் இப்ப நானே வந்தேன்.. இந்த காட்டுமேடு ஏறி வந்திட்டேன்”

“தாறேன்ன்னு சொல்லுதேனே”

“அதை செஞ்சாச்சா? செஞ்சா எந்த நெலையிலே இருக்கு?” என்று மாதவண்ணன் கூச்சலாக கேட்டார்.

“வனைஞ்சாச்சு… உருட்டு முடிஞ்சு தட்டுகதுக்கு குடுத்திருக்கு. இது சில்பமாக்கும்… பானைமாதிரி உருட்டித் தட்ட முடியாது பாத்துக்கிடுங்க. வீதுகட்டியும் சுத்துகட்டியும் முழைக்கட்டியும் வச்சு மெள்ளமெள்ள தட்டி எடுக்கணும்…அது பொம்புளையாளுக்க சோலி. நான் செஞ்சுகுடுத்து நாலஞ்சுநாளாச்சு.. ஈரவைக்கோல போட்டு மூடி வீட்டுலே வச்சிருக்கா… நான் என்ன செய்ய?”

“ஏன் உன் வீட்டுக்காரிக்கு என்ன சீக்கு?”

ஆண்டி பார்வையை தாழ்த்தி சற்றுநேரம் சும்மா நின்றார். பின்னர் பீடியை இறுதியாக இழுத்து வீசிவிட்டு “சின்னக் குட்டி ஒண்ணு கெடந்துது, வெசக்காய்ச்சலிலே போயிட்டுது… ஒரு மாசமாச்சு” என்றார். “நான் சூளையெறக்கி நாப்பது நாளாச்சு… இது பின்னே அட்வான்ஸ் வாங்கியாச்சு, சாமிகாரியம்னாக்கும் நான் சம்மதிச்சது”

மாதவண்ணன் என்னை குழப்பமாக பார்த்தார். அவருக்கு ஆண்டி சொன்னது சரியாகப் புரியவில்லை என்று தோன்றியது.

ஆண்டி குரல் மேலும் தழைய “வனையதுக்கு கை நிக்கல்ல… எப்பவும் கையிலே வெறையல்… சக்கரம் சுத்தினா மண்ணு சரிஞ்சிரும்… மூக்குமுட்ட குடிக்காம தூங்க முடியாது. குடிச்சு தூங்கி எந்திரிச்சா கையிலே ஜன்னி வந்த லெச்சணம்… என்னண்ணு வனைய?” என்றார்.

“இந்த மண்ணை வச்சு பிசைஞ்சு பிசைஞ்சு…இந்த சக்கரமேடையிலே மண்ணு இருந்து சுத்திக்கிட்டே இருக்கும். விடப்பிடாது, விட்டா பின்ன இந்த கையிலே விஸ்வகர்மா வரமாட்டார்னு நினைச்சு விடாம செஞ்சிட்டே இருந்தேன்… முளுராத்திரியும் இருந்து ஒத்த ஒரு சட்டிய செய்ய பாத்திருக்கேன். பகலு முழுக்க சக்கரம் சுத்தி ஒரு சட்டிகூட இல்லாமல் களிமண்ணை குழைச்சு போட்டுட்டு எந்திரிச்சிருக்கேன்…”

“செய்யல்லியா? அப்ப பைசாவ குடுத்திடும்” என்றார் மாதவண்ணன்.

“அய்யா செஞ்சாச்சு… எனக்க வேலை முடிஞ்சாச்சு… சொன்னேம்லா?” என்றார் ஆண்டி “ஒரு வாரம் முன்னாலே குடிச்சுட்டு ஆலங்காட்டு பொத்தையிலே விளுந்து கிடந்தேன். அப்ப ஒரு சொப்பனம். எனக்க குட்டி வந்து நிக்குதா. இடுப்பிலே வெள்ளி அரஞாண்கொடி மட்டும்தான். அப்பா அம்மை விளிக்கான்னு சொன்னா. அம்பிடுதான். அந்தாலே எந்திரிச்சிட்டேன். நேரா வந்து உக்காந்து வனைஞ்சிட்டேன்… தொட்டா ஜீவன் வந்திரும்ங்குத மாதிரி பாவையாக்கும்…”

“அது எங்க? சும்மா சொன்னா ஆச்சா? காட்டும்வே” என்றார் மாதவண்ணன்

ஆண்டி என்னிடம் “பிள்ளே, பிள்ளை உள்ள போயி அவகிட்ட கேக்கணும்…அவ எடுத்து காட்டித்தருவா… பாத்திட்டு வரணும்”

”செரி” என்றேன்.

மாதவண்ணன் “நான் பாக்கணுமே” என்றார்.

“உடைமைக்காரன் முளுசாத்தான் பாக்கணும்… அதாக்கும் சாஸ்திரம்” என்றார் ஆண்டி.

“சாராயத்தை குடிச்சுட்டு பைசாவ செலவாக்கிப்போட்டே” என்றார் மாதவண்ணன் “அதாக்கும் கதை, எனக்கு விசயம் தெரியாம இல்லை”

“பிள்ளை பாத்துட்டு வந்து சொல்லட்டு” என்றார் ஆண்டி.

“நான் பாக்குதேன்” என்று நான் குடிலைநோக்கிச் சென்றேன். ஒட்டுத்திண்ணையில் ஒரு பழைய சிவப்பு ஃப்ராக் கிடந்தது. குழந்தைகள் அணிவது. திண்ணையில் ஏறி உள்ளே சென்றேன்.

அறையில் எவரும் இல்லை. வீட்டிலேயே யாருமிருப்பதுபோல தோன்றவில்லை. பின்பக்கம் சமையலறை சாய்ப்பிலும் யாருமில்லை. திரும்பிவிடலாமா என்று எண்ணியபோது கொல்லைப்பக்கம் ஒட்டுத்திண்ணையில் எவரோ இருப்பது தெரிந்தது. ஆளை தெரியவில்லை, அவர் நிழல் நீண்டு முற்றத்தில் விழுந்திருந்தது. அது ஆண்டியின் மனைவி வள்ளி. எங்கள் வீட்டுக்கு கலங்கள் கொண்டு வருபவள்.

நான் அங்கே சென்றேன். நான் சென்ற அசைவைக்கூட அவள் அறியவில்லை. நான் நிலைக்கதவை கையால் தட்டினேன். பிறகு “ஆண்டி விளிச்சாரு” என்றேன்

அவள் திரும்பி பார்த்தாள். முகம் வெளிறி வற்றி சருகுபோல் இருந்தது. உதடுகளும் இரு சருகுகள். இமைகள் இரு சருகுகள். கண்கள் உலர்ந்த கூழாங்கற்கள். “ஆண்டி விளிச்சாரு”

“ஏன்?”

“அவரு செய்த பாவை எங்க இருக்குன்னு கேட்டாரு”

“அங்க” என்று முகவாயால் காட்டினாள்.

நான் அவர் சுட்டிய பனையோலைப் பெட்டியை பார்த்தபின் “தட்டல்லியா?”என்றேன்

“இல்ல”

“ஏன்?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை. நான் அந்தப் பனையோலைப் பெட்டியை அணுகி குனிந்து அதன் மூடியை திறந்தேன். உள்ளே வைக்கோல்கூளம் நீர் தெளித்து ஈரமாக வைக்கப்பட்டிருந்தது. அதை அள்ளி விலக்கினேன். நடுவே மண்ணாலான பாவை இருந்தது

முதற்கணம் நான் திடுக்கிட்டு நிமிர்ந்துவிட்டேன். நெஞ்சு படபடக்க மீண்டும் குனிந்து பார்த்தேன். அங்கே ஒரு குழந்தை கைகளை விரித்து கால்களை தூக்கி படுத்திருப்பதுபோலவே இருந்தது

வழக்கமாக பாவைகளுக்கு சிவப்பு நீல வண்ணங்கள் பூசப்பட்டிருக்கும்.ஆகவே அவை குழந்தைபோலவே தெரியாது. மண்ணாலான பாவை குழந்தையின் உடல்நிறம்போலவே இருந்தது. கைகால்களில் விரல்களும் நகங்களும் இருந்தன. சிறிய தொந்தியில் தொப்புள். கைகளில் குழந்தைக்கைகள் போலவே மடிப்புகள்.

கண்கள் இரு சிறிய வட்டங்கள்தான் என்று கூர்ந்து பார்த்தபோது தெரிந்தது. ஆனால் முகமாகப் பார்த்தபோது அவை பார்வை கொண்டிருந்தன. குழந்தை என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. என்ன செய்யப்போகிறேன் என கவனிப்பதுபோல. அதன் கைகால்கள் அசைய தூக்கு என்று எம்புவதுபோல தோன்றியது

நான் அதை குனிந்து எடுத்தேன். அது அத்தனை கனமாக இருக்கும் என நினைக்கவில்லை. என் கையிலிழுந்து வழுவி விழப்போயிற்று

“அய்யோ!” என்று வள்ளி பின்னாலிருந்து கூவினாள்.

நான் அதை அப்படியே தரையில் வைத்துவிட்டேன். அது குளுமையாக மென்மையாக இருந்தது. என் கையின் தடம் அதன் இடையில் பதிந்து தெரிந்தது.

“அப்பிடி எடுக்கப்பிடாது பிள்ளே” என்று வள்ளி எழுந்து அருகே வந்தபடி சொன்னாள். “தலை வளைஞ்சு போயிரும்”

கீழே கிடந்த பாவையின் அடியில் இரு கைகளையும் கொடுத்து மெல்ல தூக்கி எடுத்தாள். அதை பார்த்துக்கொண்டே இருந்தாள். அவள் அழுதுவிடுவாள் என நான் நினைத்தேன். ஆனால் கண்கள் வரண்டுதான் இருந்தன

பாவையை அப்படியே எடுத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் ஒட்டுத்திண்ணைக்குச் சென்றாள். அதை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தாள். அவள் அதை மெல்ல கையால் வருடுவதை கண்டேன்.

நான் அங்கே நின்று அவளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் பாடத்தொடங்கிவிடுவாள் என்று எனக்கு தோன்றியது. ஆனால் ஒன்றும் நிகழவில்லை. அவள் அங்கேயே அப்படியே அசைவில்லாமல் அமர்ந்திருந்தாள்

நான் வெளியே வந்தேன். மாதவண்ணன் மீண்டும் குயச்சக்கரத்தில் அமர்ந்து வனைந்துகொண்டிருந்தார். மண் அவர் கையில் திரண்டு கலத்தின் விளிம்பாக எழுந்து மீண்டும் குழைந்து மறைந்தது. நீர்க்குமிழியேதான். சேற்றில் அப்படி குமிழி எழுந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சேற்றுநீரில் கல் எறிந்தால் அதைப்போல ஒன்று எழும்

“பாவையப் பாத்தியளா பிள்ளே?”என்றார் ஆண்டி

“ஆமா பாத்தேன்” என்றேன். “சின்னப்பிள்ளை போல இருக்கு”

“முக்கூட்டாலு யட்சிக்கு வைக்கிறதுக்காக்கும்” என்று மாதவண்ணன் சொன்னார் “தோசம் போவும்னு சொன்னாங்க”

“அதாவது யட்சிக்கு பாவையை குடுத்தா அதை அவ கொஞ்சிகிட்டு இருப்பா. நீங்க பிள்ளைய பெத்திருவீங்க” ஆண்டி சொன்னார். “இங்க பிள்ளைதீனி யட்சிகள் அம்பிடு பேருக்க ஆலமரத்துக்க அடியிலயும் கிடக்குதது நம்ம பாவைகளாக்கும்”

“ச்சே” என்றார் மாதவண்ணன். அவர்கையில் கலம் மீண்டும் குழைந்து மண்ணாகியது.

“பிள்ளே, ஒண்ணு நினைக்கணும். கலம் வரணும்னு இருந்தா அதுவா வந்திரும். நாம நம்ம கைய குடுக்கணும். நாம செய்யுதோம்னு நினைக்கப்பிடாது. கையே அதுவே வனைஞ்ச தப்பில்லாம வந்திரும்… குசவன் கத்துக்கிடுத தொளிலு அதாக்கும். கலம் உருண்டு வாறப்ப அவனுக்க மனசும் பேச்சும் நடுவாலே போய் கலைக்காமப் பாத்துக்கிடுதது”

“பாப்பம்” என்று மாதவண்ணன் மீண்டும் வனைய தொடங்கினார்

ஆண்டி இன்னொரு பீடியை பற்றவைத்துக்கொண்டு “விடமாட்டாரு போல” என்றார்

“ஆண்டியே, நான் பிஎஸ்சி பரிச்சை பதினெட்டு தடவை எளுதி ஜெயிச்சவனாக்கும்” என்றார் மாதவண்ணன்.

“இந்தப் பரிச்சையிலே படிச்சா பாஸ் இல்லை. படிச்சதையெல்லாம் மறந்தா பாஸ்” என்றார் ஆண்டி

மாதவண்ணன் மீண்டும் வனையத்தொடங்கினார். அவருடைய முகமும் கையும் ஒன்றாக அதில் ஈடுபட்டன. அவர் எதையுமே அறியவில்லை. ஆண்டி என்னைப்பார்த்து புன்னகை செய்தார்.

கலம் மீண்டும் நழுவியது. மாதவண்ணன் பெருமூச்சுவிட்டபின் உடனே மீண்டும் மண்ணை உருட்டி செய்ய தொடங்கினார். அவர் உதடுகள் அழுத்தமாக குவிந்திருந்தன. முகம் கூர்மைகொண்டிருந்தது. அவர் ஏன் அத்தனை வெறிகொள்கிறார் என்று எனக்கு புரியவில்லை.

மீண்டும் கலம் நழுவியபோது மண்படிந்த கையை உதறியபடி அவர் பெருமூச்சுவிட்டார். தொண்டைமுழை ஏறி இறங்கியது

“பிள்ளே இப்ப போகணும்… பாவையை கூடிய சீக்கிரம் கொண்டு வாரதுக்கு பாக்குதேன்”

திடீரென்று எழுந்த சீற்றத்துடன் “அதை நீரு சொன்னா போராது. உம்ம கெட்டினவ சொல்லணும்… இப்ப அவள்லா பாவையைத் தட்டமாட்டேன்னு சொல்லுதா” என்றார் மாதவண்ணன் “இங்க வேற யாராவது தட்டுவாங்களா?”

‘இல்ல அப்டி மொறை இல்லை. நான் வனைஞ்சத அவ தட்டினா அவ எனக்க கெட்டினவ ஆயிடுவா”

“ஓ , அப்டி ஒரு மொறை இருக்கோ”

“ஆமா” என்றார் ஆண்டி “எனக்க கலத்தை வனையுதியாட்டீன்னுதான் நாங்க சம்பந்தம் கேட்டுக்கிடுதது”

மாதவண்ணன் மீண்டும் மண்ணை உருட்டி வைத்தார்.

“அதை விடணும் பிள்ளே, அது பிறவு செய்யலாம்”என்றார் ஆண்டி

“பாத்திருவோம்… இந்த மண்ணுக்காவது எனக்க நெஞ்சிலே தீ தெரியுதான்னுட்டு” என்றார் மாதவண்ணன்

“பூ பறிக்குத இருக்கணும் கை. பூவை பறிக்குறப்ப மனசு கனியும்லா… அப்டி மனசு மாறினாத்தான் களிமண்ணு பூக்கும்” என்று ஆண்டிசொன்னார்

மீண்டும் களிமண் கலைந்ததும் மாதவண்ணா சீற்றத்துடன் என்னை நோக்கி கத்தினார். “டேய் நீ உள்ள போயி அவ கிட்ட கேட்டுட்டு வா, அவ வனைவாளா இல்லியான்னு”

“அவங்க ஒண்ணுமே பேசல்லியே”

“நான் கேட்டேன்னு சொல்லுடா போடா” என்றார் மாதவண்ணன். அவர் முகம் சிவந்திருந்தது. மூச்சிரைத்தது. கண்களில் நீர்ப்படலம் தெரிந்தது.

“உள்ள போயி கேட்கணும் பிள்ளே” என்றார் ஆண்டி “ஏமான் கேக்குதாரு…. பிள்ளைக்க காரியமாக்கும்னு சொல்லணும்…பிள்ளை சொனனலாவது அவளுக்கு கேக்குதான்னு பாப்பம்”

நான் உள்ளே போனேன். ஆண்டி எனக்குப் பின்னால் “போரும் பிள்ளே, அப்டி ஒருநாளிலே உண்டாகி வரணும்னு நினைக்கப்பிடாது.நம்ம கையை பூமாதேவி அனுக்ரகிக்கணும்லா?” என்றார்

“அப்டி விடக்கூடாதில்லா?”என்றார் மாதவண்ணன் “பாப்போம்”

நான் உள்ளே சென்றேன். மிக அருகே என விசும்பலோசை கேட்டது. மெல்ல காலடி எடுத்துவைத்து பின்பக்கம் சென்றேன். வள்ளி அங்கே அமர்ந்திருந்தாள். அந்த பாவையை மடியிலிட்டு கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தாள்

அவள் அழுவதை பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றேன். அப்படி பார்க்கக்கூடாது, அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த காட்சியிலிருந்து கண்களை விலக்க முடியவில்லை

பிறகு எப்போதோ அவள் சற்று அசைந்தாள்.நான் திடுக்கிட்டு அவள் என்னை பார்த்துவிடுவாள் என்ற உணர்வை அடைந்தேன். அவள் பார்க்கிறாளா என்று ஒரு கணம் பார்த்துவிட்டு மெல்ல பின்னடைந்து வெளியே வந்தேன்

மாதவண்ணன் “யம்மா! யம்மா!” என்றுகூச்சலிட்டார்.“பகவதீ! எனக்க பகவதீ!” என்று கண்ணீர் விட்டார். நான் அவருடைய கைகளின் நடுவே ஒரு பானை திரண்டிருப்பதை கண்டேன். மிகச்சிறியது, மிக தடிமனாகவும் இருந்தது. ஆனால் முழுமையான கலம்

“பொத்தி எடுங்க… பொத்தி எடுங்க… அம்பிடுதான்”என்றார் ஆண்டி

மாதவண்ணன் அதை கீழே கைகொடுத்து வெட்டி அள்ளி இருகைகளிலும் எடுத்தார். என்னை நோக்கி திரும்பி “டேய்,பாருடே” என்றார்

அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

நான் அருகே சென்று அதை தொடப்போனேன். “டேய்!” என்று அவர் திரும்பிக்கொண்டார்

“அதை கையிலேயா வச்சிருக்கப்போறீரு? அந்தால அப்பிடியே வையும்…”என்றார் ஆண்டி

மாதவண்ணன் மிக மெதுவாக அதைவைத்தார். “இதை தட்டி சூளைவச்சு எனக்கு குடுக்கணும். நான் வாங்கிக்கிடுதேன். வெலைகுடுத்து நான் வாங்கிக்கிடுதேன்”என்றார்.

“வெலை வேண்டாம்.. ஏமான் வச்சுக்கிடணும். ஏமான் வனைஞ்சதுல்லா?”என்றார் ஆண்டி

மாதவண்ணன் அதை மிக மெல்ல தட்டில் வைத்துவிட்டு “கைகழுவணுமே” என்றார். அவரே பக்கெட்டில் இருந்த தண்ணீரை கண்டு அங்கே போய் கைகழுவினார்

ஆண்டி என்னிடம் “பிள்ளே அவகிட்ட சொல்லிட்டிகளா?”என்றார்

“இல்லை”என்றேன். “அவுங்க அழுதிட்டிருக்காங்க”

“அழுதிட்டிருக்காளா?” என்றார் ஆண்டி “பிள்ளை கண்ணாலே பாத்தியளா?”

”ஆமா பாத்தேன். சத்தம்போட்டு அழுதிட்டு இருந்தாங்க… மடியிலே அந்த பாவையை வச்சு தொட்டுத்தொட்டுப் பாத்துட்டு அழுதாங்க”

ஆண்டி ஒன்றும் சொல்லவில்லை. மாதவண்ணன் என்னைப் பார்த்துவிட்டு அவரிடம் “என்னவே ஆண்டி இது? நோம்புக்கு பாவை கிடைக்குமா கிடைக்காதா?” என்றார்

“கண்டிப்பா கிடைக்கும். நாளைக்கு சாயங்காலம் சூளையிலே ஏத்துவேன். மூணாம் நாள் சாயங்காலம் கொண்டுவந்து குடுக்கேன்” என்றார் ஆண்டி.

அவர் முகத்தில் இருந்த அமைதியைக் கண்டு மாதவண்ணன் “உம்மை நம்புதேன்” என்றார். என்னிடம் “போவம்டே” என்றார்

நாங்கள் மீண்டும் இடைவழிக்கு வந்ததும் மாதவண்ணன் “டேய், ஆரும் அறியப்பிடாது. அந்த அம்புரோஸுக்க வீட்டுக்குப் போயி ஒரு சின்னக்குப்பி சாராயம் வாங்கிட்டு வாடே.. நீ சொன்னியே , அந்த கதளிப்பழ மணமுள்ள சாராயம்” என்றார்

“நான் வாங்கிட்டு வாறேன்… எனக்குத்தெரியும்” என்றேன்.

***

தொடர்புடைய பதிவுகள்

தங்கப்புத்தகம்- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ,

தங்கப்புத்தகம் கதையின் மிகப்பெரிய அழகாக நான் கண்டது. அகமும் புறமும் தனித்தனியாக வர்ணிக்கப்பட்டிருப்பதுதான். இமையமலைகளின் பேரழகு நுணுக்கமாக வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம், நாடகக் கதாபாத்திரங்கள் போல அவை ஒவ்வொன்றாக தோன்றும் காட்சி, ஒரு அற்புதம். ஆனால் அதற்குச் சமானமானது அகம் சொல்லப்பட்டிருக்கும் விதம். நுணுக்கமான செய்திகள்.

உண்மையில் கொஞ்சமாவது இந்த யோக – தியான முறைகளை செய்யாதவர்களால் இதைச் செய்யமுடியாது. நாம் எழுப்பும் ஒலி எப்படி நமக்கே நம் இருப்பை காட்டிக்கொண்டிருக்கிறது என்பதும். நம் ஓசையை நாமே கேட்கவில்லை என்றால் நாம் எப்படி நிலைகுலைந்துவிடுகிறோம் என்பதும் மிகமிக முக்கியமான ஒரு விஷயம். அந்த அறையை உடலாக ஆக்குவது. அதன்பிறகு அதற்குள்ளேயே தனியாக ஆவது அதன்பின் அதிலிருந்து வெளியேறுவதற்கான பித்து.

அந்த தனிமையில் மனசு பீரிட்டு வெளிவரும் விதம் இதுவரை தமிழில் எழுதப்பட்டதில்லை. தமிழிலக்கியத்தின் முக்கியமான குறைபாடாக நான் பார்ப்பதே இதைத்தான். எழுத்தாளனுக்கு இருந்தே ஆகவேண்டிய தத்துவப் பயிற்சியும்சரி ஆன்மிகநாட்டமும் சரி இங்கே மிகப்பெரும்பாலானவர்களுக்கு கிடையாது. ஆகவே அவர்க்ளால் இந்த ஆழங்களை தொடவே முடிவதில்லை

 

எஸ்.ரவி

 

ஜெ,

 

முக்தானந்தா மற்றும் பாட் இருவரும் அறிதலின் பாதையில் செல்கிறார்கள்,  முக்தா அடைந்து விடுகிறார், அவர் அடைந்தது என்ன,  அதன் வழி என்ன என்பதுதான் இந்த கதையின் மையம் என்று நினைக்கிறேன்,  பாட் தங்கபுத்தகத்தை வெல்ல விழைகிறார், முக்தானந்தா அதை புரிந்து கொள்ள முனைகிறார்,  இதுதான் வித்யாசம் முதல் நோக்கில் என்று நினைக்கிறேன்.

சார் இன்னொன்று ஞாபகம் வருகிறது, அதுவும் நித்ய யதி நூலில் இருந்துதான் தங்கத்தை ஆபத்தான ஒன்றாக சொல்கிறார், அதாவது ஹிரண் (தங்கம் ) என தொடங்கும் ஹிரண்யக்ஷ, ஹிரண்யகாசிப் புராண பாத்திரங்கள் எல்லாம் துர் தேவதைகள் என,  அறிதலை மறைக்கும் பொன் வட்டம் ( சூரிய ).. என செல்லும் அந்த உரை.  எனக்கு தங்கபுத்தகம் என்றதும் இது ஞாபகம் வந்தது,  முக்தா இந்த பொன் வட்டத்தை விலக்கி அதை அறிய முயற்சிக்கிறார் என்று தோன்றியது. பாட் அந்த புத்தகத்தை அறிந்து கொள்வதில்தான் தன் வெற்றி இருப்பதாக எண்ணி கொள்வதுதான் அவரின் வீழ்ச்சியின் காரணம் என்று கூட எண்ணினேன்,

முக்தாவின் நிறைவுக்கு காரணம் அறிதலை  உள்வாங்கி கொண்டதை தலையில் ஏற்றி கொள்ளவில்லை என்பதை நூல் பிரதிகளை எரிப்பதன் வழியாக கதையின் வழியாக சொல்லபடுகிறது என்று எண்ணினேன், கூடவே கதையின் முடிவு இடத்தில் குகைக்குள் செல்ல அந்த தலைமை (பெயர் மறந்து விட்டேன் ) துறவி தியான நூல் உடன் உள்ளதா என்று கேட்கும் இடம் முக்கியமானது,  இந்த தங்க புத்தகம் அனுபவத்தை /அறிதலைதான் அவர் குறிப்பிடுகிறார்.

உண்மையில் இதை எழுதுவதன் வழியாக முக்தா அறிந்து கொண்டது என்ன என்பதை நான் அறிந்து கொள்ள முடியுமா என்று பார்த்தேன்,  ம்கூம் :) அந்நூலின் சூத்திரத்தை புரிந்து கொள்வதாக கனவு அவனுக்கு வருகிறது, அந்த கனவில் அவனை இங்கு அனுப்ப விரும்பாத தலைமை துறவி கூட வந்து அந்த நூலில் இரு வரிகளை எடுத்து காண்பிப்பதாக வருகிறது,  அதன் பிறகு பாட் காணாமல் போகும் நிகழ்வு வந்து விடுகிறது, ஒருவேளை பாட்’டின் மரணம்தான் முக்தாவிற்கு அறிதலை அளிக்கிறதோ, ஆனா அப்படி இருக்காது என்றே நினைக்கிறேன்,  ஒரு மரணம் தரும் அதிர்ச்சிக்கு எதற்கு இவ்வளவு ஆழமான அறிதலை நோக்கி செல்லும்,  மாறாக இந்த அறிதலின் பாதையில்தான் அடைகிறார் என்று நினைக்கிறேன்,  இந்த கடிதத்தில்  ஒரு பத்து நினைக்கிறேன் எப்படியும் வந்திருக்கும், எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை என்பதால்!

இந்த குகைபாதையை தியான அனுபவமாக கூட அணுகலாம் போல.  ஒன்று தோன்றுகிறது எதையும் விட்டுவிட்டு வரும்பொழுதுதான் திரும்புதலின் பாதை கிடைக்கிறது, மாறாக எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றால் அங்கேயே சிக்கி பாட் மாதிரி காணாமல் போக வேண்டியதுதான் :)

 

ராதாகிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

 

தங்கப்புத்தகம் தியான அனுபவத்தின் இரண்டு முகங்களை காட்டுகிறது. மந்திரம் உடைய தியானம், இல்லாத தியானம். மந்திரம் இல்லாத தியானத்தையே முதலில் செய்கிறார் முக்தா. அது கழுகொம்பு இல்லாத அலைச்சலாக இருக்கிறது. அடுத்து ஒரு மந்திரம் தேவை என்று உணர்ந்து அதற்காகச் செல்கிறார். அந்த மந்திரத்துக்கும் அவருக்குமான உறவுதான் அந்த நூல்

நம் மரபிலே மூலநூல், மூலமந்திரம் என்று இரண்டு உண்டு. அந்த மூலநூலை அறிந்துகொள்வது முக்கியம் அல்ல. அதை தியானித்து எடுத்துக்கொள்வதுதான் முக்கியம். அதன் சிக்கல்களும் போராட்டங்களும்தான் அந்த மடாலயத்தில் நிகழ்கின்றன. அந்த மந்திரம் என்ரு அந்த நூலை சொல்லலாம். அதை எப்படி எடுத்துக்கொள்வது? சூரியன் அங்கே இருக்கும். அது உன் கண்ணுக்கு எப்படி படுமோ அதுதான் உன் சூரியன். மரத்தின் சூரியன் வேறு. இது என் குரு சொல்வது. மூலமந்திரத்திலிருந்து தன் தியான மந்திரத்தை உருவாக்கிக்கொண்டதுமே அவர் அறிந்துவிடுகிறார். அவருக்கு அதுதான் ஆதாரம். அவ்வ்ளவுதான் மனிதனின் எல்லை

 

சந்தானம்

 

அன்புள்ள ஜெமோ

 

வெகு நாட்களுக்குப் பிறகு வெளியான அன்றே தங்கப் புத்தகம் வாசிக்க முடிந்தது. தற்போதைய மன நிலையில் அதுவும் கூட ஒரு அழைப்பு என்றே தோன்றியது. இந்தக் குறுங்கதையை இருவரின் பயணம் என்ற ஒற்றை வரியில் சுருக்கி விட முடியும் என்று தோன்றுகிறது. ஒருவருக்கு அகமுகமாகவும், மற்றொருவருக்கு புறமாகவும் நிகழும் பயணம்.  அகமுகமாக பயணத்தைத் துவங்கும் எல்லா பயணிகளுக்கும் ஆங்காங்கே சில மைல்கற்கள் அமைந்து வழி காட்டுகிறது. ஆனால் அதைக் கூட பயணி அந்த இடத்தைச் சென்று சேர்ந்த பின்னர்தான் அது மைல் கல்  என்று புரிந்து கொள்கிறான்.  சிலசமயம் அத்தைகைய வழி காட்டுதல்களுக்கு புறவயமாக தன்னைப் போலவே  சில வழிகாட்டிகளும் அமைந்து விடுகிறார்கள். அவர்களில்லாது இவனின் பயணம் சாத்தியப் படுவதில்லை ஆனால் அந்தப் பயணம் அவருக்கானது அல்ல. அவர் அந்த அகப்பயணிக்கான ஒரு கருவி மட்டுமே.  இதைப் புரிந்து கொள்ளும் பொழுது நாம் மெய்மையின் நூலை இறுகப் பற்றியிருப்போம். அதைப் புரிந்து கொண்டால் பின்னர் அனைத்திலிருந்தும் விடுபடுதல் எளிதாகிறது. முக்தாவைப் போல. பின்னர் திபேத்தின் மடாலயமோ, பரசுராம ஷேத்திரமமோ, ஊட்டியோ எதிலும் வேறுபாடு இல்லை.  இன்னும் சொல்லப் போனால் அவருக்கு டென்சினோ அல்லது ஊட்டி ஆஸ்ரமத்தின் குருவோ தானோ  கூட ஒன்றுதானே.

இதற்குள் பலதடவை அந்தக் குறுங்கதையை வாசித்து விட்டேன் ஒவ்வொரு முறையும் சில புதிய நுணுக்கமான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நம்முடைய அனுபவங்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. என் முன் இருப்பதெல்லாம் ஒரு கேள்வி தான், இப்படியான படைப்பை எழுதி முடித்த பின், மனக் கொந்தளிப்பில்லாமல் இருக்க முடிகிறதா. இது கிட்டதட்ட ஒரு தரிசனத்தின் வெளிப்பாடு அதை மிக நுணுக்கமாக சொற்களாக்கியிருக்கிறீர்கள்.  எப்படி அந்த நிமிடங்களை கடந்து வருவீர்கள். இல்லை எழுதுவதே இது போன்ற கொந்தளிப்பான நிமிடங்களைக் கடந்து வரும் உத்தியா.

 

அன்புடன்.

கிருத்திகா ஸ்ரீதர்

 

அன்புள்ள கிருத்திகா

உண்மையில் ஒரு கொந்தளிப்பு உண்டு – அது எழுதும்போது அல்ல, எழுதாத போது. அதை கடந்துவரும் வழிதான் இணையத்தில் பூசல்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

லட்சுமியும் பார்வதியும், செய்தி- கடிதங்கள்

$
0
0

கதைத் திருவிழா-2,செய்தி[சிறுகதை]

அன்புள்ள ஜெ

செய்தி சிறுகதை ஒரு அழகான இனிமையான கதை. சில பழைய நினைவுகள் தித்திக்குமே அதைப்போல. இரண்டு முதல் அனுபவங்கள், இரண்டுபேருக்குமே. ஒரு பெண்ணிடம் உன்னை முத்தமிடவேண்டும் என்று ஆசை என்று அவன் சொல்வது அவனுக்கு முதல் முறை. அப்படி ஒருவன் தன்னிடம் காதல்மொழி சொல்லும் அனுபவம் அவளுக்கும் புதிதாக இருக்கலாம். அவள் ஒளிகொண்டு பொலிவது அதனால்தான். காதலின் இனிமை புனிதம் பற்றியெல்லாம் சொல்லப்படுகிறது. குற்றவுணர்ச்சியும் ஆக்ரமிப்பு உணர்ச்சியும் இல்லாத மென்மையான காதலும் அப்படி இனிமையானது தூய்மையான இன்பம் என்றுதான் தோன்றுகிறது

எஸ்.அருண்குமார்

வணக்கம் ஜெயமோகன்.

நலம்தானே

செய்தி சிறுகதை படித்தேன். இதை எழுதுவது கம்பிமேல் நடக்கும் வித்தைதான். துளி தவறினாலும் கதையில் காமம் மேலே வந்துவிடும் அபாயம் உள்ளது.

பதின்பருவ வயதில் ஏற்படும் பாலியல் உணர்வும்,அதனால் தனியாக ஒரு பெண் அழைக்கும்போது ஏற்படும் எண்ணங்களும்தான் கதைசொல்லிக்கு ஏற்படுகின்றன

அவளைப் பார்க்க முதலில் செல்லும்போதே சுற்றுமுற்றும் யாரும் இல்லை என்று பார்த்து விட்டுச் செல்லும் அவனுக்கு அவள் மார்பகங்கள் தெரிகின்றன. பின்னால் கடிதத்தில் இருப்பதைப் படித்து முடித்தபின் அருகில் அமர்ந்து என்னைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லையா என்று கேட்கும்போது அவளின் உருவ அழகு அவனை இன்னும் கவர்வது அவன் பார்வையின் மூலம் தெரிகிறது. அந்த வயதின் அவத்தை இது.

அந்த அழகுதான் கடிதத்தில் இல்லாத வருணனையையும்,அவள் பற்றிய அவன் விருப்பங்களையும் அவள் கணவன் எழுதியதாகச் சொல்ல வைக்கிறது.

அதே மனநினைவுகளுடன்தான் விஜயஸ்ரீயைப் பார்க்கிறான் அது அவனின் பாலுணர்வைத் தூண்டுகிறது. ஆனால் மனத்தின் ஓரத்தில் இருக்கும் நேர்மை வந்து தான் அவளைப் பயன்படுத்திக் கொண்டு அவளின் முகத்திற்கு எதிரேயே அவளைப் பற்றிப் பாலியல் நோக்கில் படித்துக் காட்டியதை எண்ணிப் பயப்படுகிறான். அப்பொழுது கூட அவன் வருத்தப்படவில்லை.

யாராவது மீண்டும் அக்கடிதத்தைப் படித்துத் தான் இல்லாததைப் படித்ததைக் கண்டுபிடிப்பிடித்துவார்களா என அஞ்சுகிறான்.ஆனால் அவனால் அவளை மறக்கவும் முடியவில்லை. போய்ப்பார்க்கவும் அச்சமாக இருக்கிறது. குற்றமுள்ள நெஞ்சாகத் தன்னை உணர்கிறான்.

இறுதியில் இரண்டு பேரின் கண்களும் பேசுவதில் கதை அற்புதமாக முடிகிறது. அவனைப் பற்றி அவளும் அவளைப்பற்றி அவனும் எண்ணுவதை வாசகரின் ஊகத்துக்கே விட்டுவிடுவதுதான் சிறப்பாக இருக்கிறது.

வளவ. துரையன்,

 

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

கேரளவரலாற்றுப் பின்னணியில் வெளிவந்திருக்கும் நான்காவது கதை இது என்று நினைக்கிறேன். [ஆயிரம் ஊற்றுக்கள், போழ்வு,இணைவு] இந்தக்கதை உருவாக்கும் உணர்ச்சிகள் விசித்திரமானவை. ஒன்று இது சேரசோழ பாண்டிய வரலாறு போல இல்லை. அதெல்லாமே லெஜெண்ட் மாதிரி ஆகி ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. அவற்றில் ஒரு யதார்த்தத்தை உருவாக்கவே முடியது. புராணமாகவே சொல்லமுடியும். இது பக்கத்திலுள்ள கதை. ஆகவே இதிலுள்ள யதார்த்தம் துல்லியமாக இருக்கிறது. அரச சம்பிரதாயங்கள் பேச்சுமொழி எல்லாமே. இரண்டாவதாக பழைய கதைகளில் அரசுச்சூழ்ச்சிக்ளை எல்லாம் நம்மால் சரியாக கற்பனைசெய்ய முடியாது. ஆனால் இந்தமாதிரி கதைகளில் சூழ்ச்சிகளை மிகநெருக்கமாகச் சொல்லமுடியும். உண்மையில் அரசியல் என்பது இப்ப்டிப்பட்ட சூழ்ச்சிகளாலானதாகவெ இருக்கும்

ஆனால் அதேச்மயம் இது வரலாறு. ஆகவே சமகால வரலாற்றிலிருந்து ரொம்ப தள்ளி இருந்துகொண்டிருக்கிறது. இதனால் இதற்கு இன்றைய அரசியலில் இருக்கும் பாலிமிக்ஸ் அம்சம் வருவதில்லை. இது வேறுவகையானது. இதுக்கு ஒரு லெஜெண்டின் இயல்பும் இருக்கிறது. லட்சுமி பார்வதி ரெண்டுபேருமே ஒரு வகையான உருவகங்களாகவே இருக்கிறார்கள். புனைவுக்கு அந்த சுதந்திரமும் இருக்கிறது. இந்த இரு அரசிகளையும் வைத்து எல்லா அரசிகளுக்கும் ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கிவிடமுடியும் ஒருத்தி லட்சுமி, இன்னொருத்தி துர்க்கை. லட்சுமிக்காக துர்க்கை சீறி எழுகிறாள்

எஸ்.அர்விந்த்

ஜெ

லட்சுமியும் பார்வதியும் கதையில் லட்சுமிபாய் அரசி சொல்லும் ஒரு வரி என்னை மனம்கலங்கவைத்துவிட்டது. நினைக்க நினைக்க ஆறவே இல்லை. லட்சுமிபாய் தம்புராட்டி சொல்கிறார், ஒரு நியாயத்தை விளங்க வைத்துவிட்டால் மனிதர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பியதுதான் தன் தவறு என்று. அது இளமையில் நாம் நினைப்பது. ஆனால் மக்கள் நியாயங்களை அல்ல, தங்களுக்குச் சௌகரியமான நியாயங்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை அறிவதைத்தான் Coming of age என்று சொல்கிறர்கள். இந்தக்கதையை வாசித்தால் லட்சுமி முதிர்ச்சியையே அடையவில்லை. ஆனால் பார்வதி ஏழு வயசிலேயே முழுமுதிர்ச்சி அடைந்த அரசியாக இருக்கிறார் என்று தெரிகிறது. மற்றமனிதர்கள் ஒரு கையில் கரும்பும் இன்னொரு கையில் துரட்டியுமாக அணுகப்படவேண்டியவர்கள் என்ற முதிர்ந்த பார்வையை அவர் அடைந்திருக்கிறார்

சாரங்கன்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16960 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>