Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17263 articles
Browse latest View live

அறம்செய விரும்பு -தகவல்கள்

$
0
0

 

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

வணக்கம். நலம். தாங்களும் குடும்பத்தார்களுக்கும் நலம் விளைக பிராத்திக்கின்றேன். அறம் செய விரும்பு (http://www.jeyamohan.in/17071#.V1hWusdCJE4) சார்பாக ஒரு தகவல்,

 

ஔவையை வணங்கி, வையகமும் விரியும் வலையில் ‘அறம் செய விரும்பு’ (www.aramseyavirumbu.com) – ஆத்திசூடி பிரத்தியேகமான இணையதளத்திற்கு தமிழ் மொழியில் முகவரி ‘http://www.அறம்செயவிரும்பு.com’ பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.

 

 

சில செய்யுள்கள் பார்வைக்கு, கருத்துக்கள் இருப்பின் பகிரவும் பெரும் உற்சாகமாகயிருக்கம்.

அறம் செய விரும்பு – http://www.அறம்செயவிரும்பு.com/wikis/1

எண் எழுத்து இகழேல் – http://www.அறம்செயவிரும்பு.com/wikis/7

பருவத்தே பயிர் செய் – http://www.அறம்செயவிரும்பு.com/wikis/22

வீடு பெற நில் – http://www.அறம்செயவிரும்பு.com/wikis/102

வைகறைத் துயில் எழு – http://www.அறம்செயவிரும்பு.com/wikis/107

 

நன்றி.

நாராயணன் மெய்யப்பன்

www.அறம்செயவிரும்பு.com

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குறுங்கதை வடிவம்

$
0
0

1

அன்புள்ள ஜெயமோகன்,

குறுங்கதைகள் என்னும் வடிவம் புதியதாக உருவாகி வந்தது என்பதைப்போல அராத்து பற்றிய குறிப்பில் நீங்கள் எழுதியிருந்தீர்கள். குறுங்கதை வடிவில் உலக அளவில் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது ஒன்றும் புதிய விஷயம் அல்ல

 

செல்வராஜ்

 

அன்புள்ள செல்வராஜ்,

 

நான் காஃப்காவின் குட்டிக்கதைகளைக்கூட அறிந்திராத அளவுக்கு வாசிப்பற்றவன் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பரவாயில்லை, நம் அறிவு அப்படித்தானே நம்மால் நிரூபிக்கப்படுகிறது?

 

குட்டிக்கதைகள் என்பவை உலக இலக்கியத்தின் மிகமிக ஆரம்பகாலப் படைப்புகள். நாட்டார்கதைகளின் அடிப்படையே அவைதான். அவை தேவதைக்கதைகள் நீதிக்கதைகள் என பலவகை. அவற்றிலிருந்தே சிறுகதை என்னும் வடிவம் உருவாகிவந்தது.

 

சிறுகதையின் தனிவடிவம் உருவானபின்னர் குட்டிக்கதை என்னும் வடிவம் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைந்தது. உருவகத்தன்மை கொண்ட கவித்துவமான புனைவுத்துளி ஒருவகை. பகடியோ விளையாட்டோ கொண்ட சிறிய சித்தரிப்பு இன்னொரு வகை. முதல்வகைக்கு காஃப்காவின் குட்டிக்கதைகளையும் இரண்டாம் வகைக்கு ஜான் அப்டைக்கின் குட்டிக்கதைகளையும் உதாரணமாகச் சொல்லலாம்

 

Sudden fiction மற்றும் flash fiction என்ற பேரில் இவ்வெழுத்துமுறையின் பல்வேறு வகைமாதிரிகள் வெளிவந்துள்ளன. பெருந்தொகைகளாகவே பல உள்ளன. சுந்தர ராமசாமியின் கையெழுத்துடன் என்னிடம் இரு தொகுதிகள் உள்ளன.

 

மறைந்த சுஜாதா இரண்டாம் வகைக் குட்டிக்கதைகளுக்கு பெரிய ரசிகர். அவ்வடிவில் பல கதைகள் அவரால் தமிழுக்கு அறிமுகம்செய்யப்பட்டவை. ஒற்றைவரிக்கதைகள் [கரடிவேடம் போட்டவனின் கடைசி வரி ‘சுடாதே’] போன்றவற்றை அவர் எடுத்துரைத்திருக்கிறார்.

 

இன்று ஒரு புதியகலைவடிவமாக உருவாகிவரும் நுண்கதை அல்லது நுண்சித்தரிப்பு என்பது சற்று மாறுபட்ட அழகியல் கொண்டது. அது செவ்வியல் சிறுகதைக்கும், மேலே குறிப்பிட்ட உருவகக்கதைக்கும், விளையாட்டுக்கதைக்கும் பிறகு வந்த உருவாகி வந்துள்ள வடிவம்

 

அதன் இலக்கணத்தை, இதுவரை எழுதப்பட்டவற்றை வைத்து, ஓரளவு இப்படிச் சொல்லலாம்.

 

  1. படிமமோ உருவகமோ இன்றி சொல்லப்படுவது
  2. சொல்விளையாட்டோ மொழிச்சுழற்றலோ அற்ற சுருக்கமான நேரடியான கூற்று கொண்டது
  3. வாழ்க்கையின் ஒரு தருணத்தை அல்லது ஒரு நுண்மாறுதலை மட்டுமே குறிவைப்பது
  4. வளர்ந்துசெல்லும் தன்மை அற்றது.

ஒரு வியப்பு, கண்டடைதல், சீண்டல் கணத்தை மட்டுமே இலக்காக்கி, கூடுமானவரை விவரிக்காமல் சொல்லப்படும் கதைகள் இவை என்று சொல்லலாம். இவற்றில் உள்ள ஒரு வகையான மீறல், துடுக்குத்தனம் இவற்றின் அழகியலில் முக்கியமானது. ஆனால் இவற்றின் இலக்கியமதிப்பு இனிமேல்தான் உருவாகவேண்டும் என்பது என் எண்ணம்.

 

நான் சமீபத்தில் வாசித்த ஒரு மலையாள குறுங்கதை.

*

’நான் உன்னை விரும்புகிறேன். நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது?’

ரொம்ப ஸாரி, நான் ஒரு லெஸ்பியன். என் தோழியுடன் சேர்ந்து வாழ்கிறேன்

ஓக்கே ஓக்கே . அதில் வெட்கமோ தயக்கமோ கொள்ள ஒன்றுமே இல்லை. இன்றைய வாழ்க்கையில் இது மிகமிகச் சாதாரணமானது. எல்லா செக்ஸும் போலத்தான் அதுவும். நாம் நண்பர்களாகவே இருப்போம்

நன்றி. நீ இத்தனை முற்போக்காக இருப்பாய் என நான் நினைக்கவே இல்லை. எனக்கு அதில் வெட்கமெல்லாம் இல்லை

சரி , ஒரு சின்ன சந்தேகம். நீ  அதில் ஆண் பார்ட்னரா இல்லை பெண் பார்ட்னரா?

ச்சீ, நான் பெண்.

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81

$
0
0

[ 9 ]

துரியோதனன் மிகவும் சோர்ந்திருந்தான். சாய்வு பீடத்தில் தன் உடலைச் சாய்த்து இருகைகளையும் கைப்பிடிமேல் வைத்தபடி தலையை பின்னுக்குச் சரித்து அமர்ந்தான். “படைப்புறப்பாட்டுக்கு முன்னர் கூட இத்தனை களைத்ததில்லை, அங்கரே” என்றான். கர்ணன் அவன் அருகே பீடத்தில் அமர்ந்து கலைந்த தன் தலையை இருகைகளாலும் கோதி பின்னுக்கு கொண்டுசென்று நாடாவால் முடிந்தபடி “உள்ளம் மிக விரைந்து முன்னால் செல்கிறதல்லவா?” என்றான். “உள்ளவிரைவு இத்தனை களைப்படையச் செய்யும் என்று இன்றுதான் உணர்ந்தேன்” என்றான் துரியோதனன்.

துச்சாதனன் வாயிலருகே தூண்சாய்ந்து நின்றான். துரியோதனனிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. கர்ணன் திரும்பி துச்சாதனனிடம் “நீ சென்று படுத்துக்கொள், இளையோனே!” என்றான். “நான்…” என்று அவன் தொடங்க “நான் அரசருடன் இருக்கிறேன். நீ சென்று படுத்துக்கொள்” என்று மீண்டும் சொன்னான். தலை தாழ்த்தி கதவைத் திறந்து துச்சாதனன் நடந்து மறைந்தான். துயிலும் துரியோதனனை பார்த்தபடி கர்ணன் அமர்ந்திருந்தான். அவனை எழுந்து மஞ்சத்தில் படுத்துக்கொள்ளச் சொல்லலாமா என்று எண்ணினான். பின்பு அவனே விழிக்கட்டும் என்று முடிவு செய்து ஓசையற்ற காலடிகளுடன் எழுந்துசென்று சாளரத்துக் கதவைத் திறந்து வெளியே இருளை நோக்கியபடி நின்றான்.

மேற்குவாயிலில் மாளிகை நிரைகளுக்கும் மரக்கிளைகளுக்கும் அப்பால் ஏரியின் மீது மெல்லிய இரவொளியின் நெளிவு தெரிந்தது. வடக்குக் கோட்டத்தில் களிறொன்று பிளிறியது. குளிர் அடங்கத் தொடங்கியிருப்பது காற்றில் மெல்லிய தூசு மணமும் வெம்மை நிறைந்த ஆவியும் கலந்திருப்பதிலிருந்து தெரிந்தது. இரவணைந்த பறவைகள் சில எழுந்து சிறகடித்து மீண்டும் அமைந்தன. வானத்தில் மெல்லிய சாம்பல் ஒளிப்பரப்பின் பகைப்புலத்தில் பறவைக்கூட்டங்கள் நீரில் மிதந்துசெல்லும் சருகுப்படலமென வலசை சென்றுகொண்டிருப்பதை காணமுடிந்தது.

துரியோதனன் ஏதோ சொன்னது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்தபோது வாயை சப்புக்கொட்டியபின் அவன் அசைந்து அமர்ந்து மீண்டும் குறட்டைவிடத் தொடங்கியதை கண்டான். பானுமதியின் பெயரா என்று எண்ணிக்கொண்டான். பல மாதங்களாக பானுமதியை துரியோதனன் சந்திக்கவேயில்லை. மூன்று முறை லட்சுமணை மட்டும் வந்து அவனை பார்த்துச் சென்றாள். அவளைக் கண்டதுமே அறியாது சற்று கனிந்து அக்கனிவை தானே உணர்ந்து உடனே இறுகி முறைமைச் சொல் உரைத்து திருப்பி அனுப்பினான் துரியோதனன்.

“தந்தைக்கு என்ன ஆயிற்று, மூத்த தந்தையே? அவர் பிறிதொருவராக மாறிவிட்டாரென்று மகளிர் மாளிகையில் சொல்கிறார்களே?” என்றாள் லட்சுமணை. கர்ணன் புன்னகைத்தபடி “ஆம், ஆனால் சில நாட்களில் அவர் திரும்பிவிடுவார். பொறு” என்றான். அவள் அவன் கையை பற்றியபடி “மூத்த தந்தையே, அஸ்தினபுரிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசி வருகிறார்கள் என்றார்கள். என்றைக்கு வருகிறார்கள்?” என்றாள். “வருவாள்” என்றான் கர்ணன். “நான் அவர்களை பார்க்க விழைகிறேன்.” “ஏன்?” என்றான் கர்ணன். அவள் கரிய கன்னங்களில் நாணம் சிவக்க “என்னைப்போலவே அவர்களும் கிருஷ்ணை அல்லவா?” என்றாள். பின்பு விழிகள் மாற “அவர்கள் பெயரை ஏன் எனக்கு இட்டார் தந்தை?” என்றாள்.

கர்ணன் நகைத்து “நீயும் கரியவள் என்பதனால்” என்றான். “ஆம். அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றபின் அவள் வெண்பற்கள் ஒளிவிடச் சிரித்து “அவர்களை எனக்குப் பிடிக்காதென்றுதான் அன்னையிடமும் பிறரிடமும் சொல்லிவந்தேன். அவர்கள் நகர் நுழைவதை அறிந்ததிலிருந்து அவர்களை எனக்குப் பிடிக்கும் என்பதை மறைக்கவே முடியவில்லை” என்றாள். “ஏன் மறைக்கவேண்டும்?” என்றான் கர்ணன். “என்னைப்போல் ஒருவர் எனக்கு முன்னரே இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய குறை?” என்றாள். “அது பெருமையல்லவா?” என்றான். “என்ன பெருமை? நான் வளர்ந்து அமரவேண்டிய அனைத்து இருக்கைகளிலும் அவர்கள் முன்னரே அமர்ந்துவிட்டார்கள்” என்றாள்.

கர்ணன் உரக்க சிரித்துவிட்டான். அவள் குழலை வருடி “அதனாலென்ன? அதைவிட பெரிய அரியணை உனக்காகக் காத்திருக்கும்” என்றான். “என்ன அரியணை? அவர்கள்தான் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி. அதற்குமேல் உலகத்தின் சக்ரவர்த்தினியாக நான் ஆவதா?” என்றாள். “ஆக முடியும். பாரதவர்ஷத்திற்கு அப்பால் கிழக்கிலும் மேற்கிலும் எத்தனை நாடுகள் உள்ளன? உனது தந்தை அஸ்வமேதமும் ராஜசூயமும் இயற்றியபின் நீ அரியணை அமர்ந்தால் இந்திரப்பிரஸ்தத்தின் கிருஷ்ணையை விட பெரியவளாவாய்” என்றான் கர்ணன்.

அவள் சிரித்தபடி “சரிதான், பார்ப்போம்” என்றாள். பின்பு அவனைவிட்டு சிறுதுள்ளலுடன் ஓடினாள். அவள் செல்வதை அவன் புன்னகையுடன் நோக்கி நின்றான். எப்போது சிறுமியிலிருந்து பெண் எழுகிறாள்? எப்போது பெண்ணிலிருந்து சிறுமி எழுகிறாள் என்பதை அறியமுடியாதது போலத்தான். வாசல் கதவை எவரோ தட்டுவதுபோல் உணர்ந்து கர்ணன் திரும்பி நோக்குவதற்குள் கதவு விரியத்திறந்து விதுரர் உள்ளே வந்தார்.   எவராலோ துரத்திவரப்பட்டவர் போல மூச்சிரைத்தார்.

கர்ணன் திகைப்புடன் “வணங்குகிறேன், அமைச்சரே” என்று தலைவணங்க அவர் அடைத்தகுரலில் “பேரரசர்” என்றார். ஒன்றும் புரியாமல் “யார்?” என்றான் கர்ணன். “பேரரசர், திருதராஷ்டிரர்” என்று விதுரர் அழுந்திய குரலில் சொன்னார். கர்ணன் திடுக்கிடலுடன் துரியோதனனை அணுகி அவன் தோளைத் தட்டி “அரசே! எழுங்கள் அரசே!” என்றான். அதற்குள் சஞ்சயனின் தோள்பற்றி திருதராஷ்டிரர் தலைகுனிந்து உள்ளே வந்தார். அவரது பேருடல் வாசலை முழுக்க மூடியது.

தலையை சற்றே திருப்பியபடி “அறையில் வேறெவரும் இருந்தால் வெளியே போகலாம்” என்றார் திருதராஷ்டிரர். துரியோதனன் பாய்ந்து எழுந்து “யார்?” என்றான். “பேரரசர்” என்றான் கர்ணன். துரியோதனன் கண்களைக் கசக்கியபடி திருதராஷ்டிரரைப் பார்த்து ஒருகணம் சொல்லிழந்து, உடனே மீண்டு “வணங்குகிறேன், தந்தையே” என்றான். “விதுரா, நீ வெளியே செல்லலாம்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர்  தலைவணங்கி சஞ்சயனுடன் வெளியே சென்று கதவை இழுத்து மூடினார்.

கர்ணன் தானும் கடந்துசெல்ல முயல அவர் கைநீட்டி “நீ இங்கிருக்கலாம், மூத்தவனே. நீ என் குருதி” என்றார். சிறிய திடுக்கிடலுடன் கர்ணன் “தந்தையே!” என்றான். “நீ இவன் உடலின் மறுபாதி. நான் இவனிடம் பேசவந்ததை நீயும் கேட்கவேண்டும்” என்றார். “நான் அங்கு வந்திருப்பேனே, தந்தையே” என்றான் துரியோதனன். “பலமுறை உன்னை அழைத்தேன். நீ வரவில்லை” என்றார் திருதராஷ்டிரர். தயங்கி கர்ணனை நோக்கிவிட்டு “ஆம். பணிகள்” என்றான் துரியோதனன்.

திருதராஷ்டிரர் “இன்றிரவு இதை வந்து சொல்லவேண்டுமென்று தோன்றியது. இதைக் கடந்தால் ஒருவேளை சொல்ல முடியாது போகலாம்” என்றார். அவன் “சொல்லுங்கள், தந்தையே” என்றான். “மைந்தா, இது வேண்டாம். இச்சூதால் எந்த நலனும் நிகழப்போவதில்லை. இன்று என் விழியிழந்த உள்ளத்தால் காலத்தின் நெடுந்தொலைவை பார்க்கிறேன். வழிவழியாக இங்கு பிறந்து வரும் ஒவ்வொரு தலைமுறையும் உன் பெயர் சொல்லி பழியுரைக்கும். நீ இழிபுகழுடன் என்றும் நூல்களில் வாழ்வாய். இது வஞ்சத்தின் வெளிப்பாடு. அரசன் நிலம் விழைவது அறம். ஆனால் குலம் கோத்து கிளைவிரிப்பது அவனது பேரறம். பேரரசனாக அல்ல. உன் தந்தையாக இதை கோருகிறேன். அழுக்காறை விட்டுவிடு!” என்றார்.

துரியோதனன் எரிச்சலுடன் “தந்தையே, தாங்கள் இப்போது வந்து இதை சொல்கிறீர்கள்…” என்றான். “இப்போது மட்டுமே இதை சொல்லமுடியும். நாம் அறியாத பெருவல்லமை கொண்ட எவரோ நம்மை இக்களத்தில் இயக்குகிறார்கள். கனவிலென அவர்களுக்கு நாம் அடிமைப்பட்டிருக்கிறோம். அரைக்கணம் எழும் விழிப்பில் திமிறி விலகிக்கொண்டால் நாம் தப்ப முடியும். இது அந்தக் கணம். அருள் கூர்ந்து நான் சொல்வதை புரிந்து கொள், மைந்தா! தருமன் மீது நீ கொண்ட காழ்ப்பு பொருளற்றது. அவன் தன்னியல்பாலேயே பேரறத்தான். நாமனைவரும் அவனுக்கு முன் மிகச்சிறியோர். எளிய விழைவுகளாலும் வஞ்சத்தாலும் அலைக்கழிக்கப்படும் மானுடர். அவனோ நிலைபெயராமை கொண்ட நெஞ்சத்தால் என்றும் முனிவர்களால் வாழ்த்தப்படப் போகிறவன்.”

“அவன் புகழைச் சொல்லவா இங்கு வந்தீர்கள்?” என்று துரியோதனன் உரக்க கேட்டான். “ஆம், அவன் புகழைச் சொல்லவே வந்தேன். அத்துடன் உன் இழிவைக் குறிப்பிடவும்தான். இத்தருணம் வரை உன் விழிநோக்கி அதை நான் சொல்ல முடியவில்லை. என் இளையோனின் மைந்தரைக் கொல்ல நீ அரக்கு மாளிகை அமைத்ததை மூன்றாம் உள்ளத்தால் நான் அறிவேன். பல்லாயிரம் சொற்களையும் பலகோடிக் கனவுகளையும் அள்ளி அள்ளிக் குவித்து மூடியும் அது என் உள்ளத்தின் ஆழத்தில் எங்கோ துளிவிதையென நீர்காத்து உறைந்தது.”

துரியோதனன் உடல் நடுங்க “தந்தையே!” என்றான். “இழிமகனே, இத்தனைநாள் என் விழிப்புக்கும் கனவுக்கும் அது சிக்காது ஆக்கினேன். அதை விப்ரரிடமிருந்து மட்டுமே என்னால் ஒளிக்கமுடியவில்லை. சற்று முன் அவர் என் கனவில் வந்தார். உன்னிடம் வந்து பேசும்படி சொன்னார்” என்றார் திருதராஷ்டிரர் “விழியால் அறிவதைவிட நுட்பமாக விழியின்மையால் அறியமுடியும், அறிவிலியே. நீ யாரென்று எனக்குத் தெரியும். ஏனெனில் நான் நீ. உன் வடிவில் எழுந்து நின்றாடும் இத்தீமை விழியிழந்த என் இருள் உள்ளத்தில் எங்கோ ஒளிந்து கிடந்தது. மூதாதையர் அருளால் ஒவ்வொரு கணமும் அதை வென்று இதுநாள் வரை அறம் பிழையாது வாழ்ந்தேன். உன் பொருட்டு நெறியழிந்தேன் என்னும் இழிசொல்லுடன் நான் நூல்களிலும் நினைவுகளிலும் வாழலாகாது.”

கைநீட்டி பெருங்குரலில் அவர் சொன்னார் “அப்பேரறத்தான் நீ இழைத்த பழியைப் பொறுத்து தந்தையென உன்னை நான் வெறுக்கலாகாதென்று அறிவுறுத்தி எனக்கு எழுதிய ஓலையை சற்றுமுன் கனவில் விப்ரர் எனக்கு வாசித்துக் காட்டினார். நெஞ்சில் அறைந்து கண்ணீர்விட்டு அழுதபடி விழித்துக்கொண்டேன். அவன் கால்களில் என் தலையை வைத்து பன்னிருமுறை பொறுத்தருளும்படி கோரினேன்.” அவர் முகம் உணர்வெழுச்சியால் நெளிந்தது. “மைந்தா, நீ இழைக்கப்போவது அதற்கு நிகரான பிறிதொரு இழிசெயல். சூது எவருக்கும் மேன்மை தந்ததில்லை. நச்சுக்கடல் கடைந்து எவரும் அமுதம் எடுக்கப்போவதில்லை.”

“நெறி நூல்களை நானும் அறிவேன். சொற்களில் சலிப்புற்று என்றோ விலகிவிட்டேன்” என்று துரியோதனன் பற்களை நெரித்தபடி  சொன்னான். “எவ்வகையிலும் ஒரு அணுவிடைகூட நான் பின்காலெடுத்து வைக்கமாட்டேன். தந்தையே, நான் முடிவு செய்துவிட்டேன். நாளை புலரியில் பன்னிருகளம் கூடும். மாதுலர் என் பொருட்டு பகடை உருட்டுவார். நான் வெல்வேன். அக்கீழ்மகனின் முடித்தலைமேல் என் கால் வைப்பேன். அவ்விழிமகளை இழுத்து வந்து என் அவை முன் நிறுத்துவேன்.”

“நிறுத்து! அதே அவையில் உன் தலைகொய்து தெற்கு நோக்கி கொண்டுசெல்ல என்னால் ஆணையிட முடியும்” என்றார் திருதராஷ்டிரர். “முடியுமென்றால் அதை செய்யுங்கள். இரண்டு வழிகளே என் முன் உள்ளன, தந்தையே. ஒன்று, நான் எண்ணியபடி செல்லல். பிறிதொன்று உங்கள் கையால் இறத்தல். மூன்றாவதொன்றை என்னிடம் பேசவேண்டியதில்லை” என்றான் துரியோதனன்.

“மைந்தா…” என்று தழுதழுத்த குரலில் திருதராஷ்டிரர் கைநீட்டினார். பின்னடைந்து கையை நீட்டி அவரை விலக்கியபடி துரியோதனன் சொன்னான் “தெய்வங்களே வந்து சொன்னாலும் இனி என் உள்ளம் விலகாது. நான் அடைந்த இழிவுகளைக் கடந்து இனி ஒரு சொல்லும் என் சித்தம் ஏற்காது. அறவுரைகள் போதும். தாங்கள் செல்லலாம்!” திருதராஷ்டிரர் “மூடா, இவனொருவனை நம்பியா நீ போருக்கு அறைகூவுகிறாய்? இச்சூதுக்களத்தில் அனைத்தும் முடியுமென்றா எண்ணுகிறாய்? தொடங்குவதனைத்தும் அழிவதிலேயே முடியும் என்பதே இயற்கையின் நெறி. போர் வரும். வந்தே தீரும்” என்றார் திருதராஷ்டிரர்.

“போர் சூழும் என்றால் எதிர்நிற்பவன் எதிரற்ற படையாழி ஏந்திய இளைய யாதவன் என்றுணர்க! அவனுடன் இணைந்தவனோ பாரதவர்ஷத்தை வென்று வந்த விஜயன். பீமனுக்கு ஒருபோதும் நீ இணையானவன் அல்ல” என்றார் திருதராஷ்டிரர். கர்ணனைச் சுட்டி “ஆம், இவன் வெல்லக்கூடும். ஆனால் இவன் பிறப்பு இவனுக்குக் கீழே ஷத்ரியர்களை அணிதிரட்ட விடாது. இவன் உன் களத்தில் இருந்தாலும் பயனற்றவனே. நீ செல்வது உன் இறப்பின் களத்திற்கென்று உணர். மைந்தா, அதை நன்கு என் விழிகளுக்குள் காண்கிறேன். ஒரு காட்டுக்குளத்தருகே நீ உடல் சிதைந்து கிடப்பதை பலமுறை கனவில் கண்டிருக்கிறேன். இத்தனை நாள் அஞ்சி அஞ்சி உன்னை நான் அணைகட்டி நிறுத்தியது அதன் பொருட்டே” என்றார்.

அவர் அறைக்குள் அறியாது நின்றிருந்த வேறெவரிடமோ பேசுவதுபோல தலைதிருப்பியிருந்தார். “என் உள்ளத்தில் இருந்து விப்ரர் மறைந்த ஒரு கணத்தில் இப்பன்னிரு படைக்களத்திற்கு நான் ஒப்புதல் அளித்தேன். மீண்டெழுந்து வந்து அவர் இறுதியில் அறிவுறுத்தியதும் இங்கு வந்தேன். வேண்டாம்! பிறிதெவருக்குமாக இதை சொல்லவில்லை… உனக்காக சொல்கிறேன்” என்றார்.

துரியோதனன் முற்றிலும் அடங்கி குரல் தழைந்தான். “தந்தையே, தாங்கள் செய்வதற்கொன்றே உள்ளது” என்றபின் திரும்பி நோக்கி அறைமூலையில் இருந்த கதாயுதத்தை எடுத்து அவரை நோக்கி வீசினான்.  அவர் இயல்பாக அதை பற்றிக்கொள்ள முழந்தாளிட்டு அவர் எதிரில் அமர்ந்து தன் தலையை காட்டினான். “இத்தனை சொற்களுக்கு மாற்றாக ஒரே அடியில் என் தலை பிளந்து தள்ளிவிட்டு நீங்கள் திரும்பிச் செல்லலாம். பிறிதொரு வழியும் உங்களுக்கில்லை.”

திருதராஷ்டிரர் கதாயுதத்தை தரையில் வீசினார். அவரது கைகள் தளர்ந்தவையென இருபக்கமும் விழுந்தன. நீண்ட மூச்சில் கரிய பெருநெஞ்சு எழுந்தமைந்தது. “ஆம். வெல்லற்கரியது. நிற்றற்கரியது. கடத்தற்கரியது. காலம் தோறும் மானுடர் அதன் முன் நின்று கதறுகிறார்கள். ஓங்கித் தலையுடைத்து மடிகிறார்கள். அது மானுடரை அறிவதே இல்லை” என்றார்.

அவர் நெஞ்சு விம்மிக்கொண்டே இருந்தது. தனக்கென எழுந்த குரலில் “எளியவனென்று முற்றிலும் கைவிடப்பட்டவனென்று முன்னரே வகுத்த பாதையில் செல்லும் துளியென்று உணரும் தருணம் ஒன்று ஒவ்வொருவருக்கும் உண்டு. இது அது. இன்று இறந்தேன்” என்றபின் திரும்பி நடந்தார்.

கதவை அவரே திறந்து வெளியே செல்ல விதுரர் அவர் கைகளை பற்றிக்கொண்டார். துரியோதனன் திரும்பி விழிதூக்கி அருகே நின்றிருந்த கர்ணனிடம் “என்ன எண்ணுகிறீர், அங்கரே? தந்தையின் சொற்களில் ஒன்றை நீங்களும்  நினைத்துக்கொண்டால்… அதோ கிடக்கிறது கதாயுதம். எடுத்து என் தலையை சிதறடியுங்கள். அதனுள் கொப்பளிக்கும் அமிலத்தின் அனலிலிருந்து அவ்வண்ணமேனும் நான் விடுதலை கொள்கிறேன்” என்றான்.

கர்ணன் தணிந்த உறுதியான குரலில் “என்றும் நான் உங்களுடன் இருப்பேன், அரசே. ஒரு சொல்லும் ஓர் எண்ணமும்  மாற்றில்லை” என்றான்.

[ 10 ]

பின்னிரவின் வெம்மையைச் சுமந்து காற்று வீசத்தொடங்கியபோது பீடத்தில் கால்நீட்டி அமர்ந்து அரைத்துயிலில் இருந்த நகுலன் விழித்துக்கொண்டான். கருந்திரி எழுந்து அகல்விளக்குச் சுடர் எண்ணைக்குள் இறங்கியிருந்தது. பட்டாம்பூச்சியின் இறுதித்துடிப்பு அதில் தெரிந்தது. அறையின் இரு தூண்களும் அதற்கேற்ப நடமிட்டன. மூடிய விழிகளுக்குள்ளேயே அவ்வசைவைக் கண்டுதான் அவன் விழித்துக்கொண்டான் என்று எண்ணினான். எழுந்து ஆடையை சீர்செய்தபடி கதவைத் திறந்து இடைநாழியில் வந்து ஒளியேந்திய மாளிகைகளின் ரீங்கரிக்கும் பரப்பாகத் தெரிந்த அஸ்தினபுரியை நோக்கிக் கொண்டிருந்தான்.

மாளிகைமுற்றத்தில் பல்லக்கு வந்து நிற்பதை கண்டான். மூன்று எண்ணைப் பந்தங்களை ஏந்திய காவலர்கள் முதலில் அணைந்து அவற்றை தூண்களில் பொருத்தினர். கொம்பூதியும் வரவறிவிப்போனும் தொடர்ந்துவர பாஞ்சாலத்தின் விற்கொடி பறந்த பல்லக்கு எட்டு போகிகளால் சுமக்கப்பட்டு நீரிலென தத்தித் தத்தி மேலேறி வந்தது. செந்நிற ஒளியில் அதன் செம்பட்டுத் திரைச்சீலை நிறமற்றதுபோல் தோன்றியது. அதைத் திறந்து வெளியே வந்த திரௌபதி தன் ஆடையை இழுத்து முகத்தை மறைத்து மெல்ல நடந்தாள். பல்லக்கில் அவளுடன் வந்த அணுக்கத்தோழி மூங்கில் கூடையையும் தாலத்தையும் எடுத்துக்கொண்டு அவளைத் தொடர்ந்தாள்.

கீழே வீரர்கள் அவளை வாழ்த்துவதும் ஸ்தானிகருடன் அவள் உரையாடுவதும் கேட்டது. மரப்படிகளில் அவள் காலடி ஓசை எழுந்தபோது அவன் திரும்பி அவள் வரவை நோக்கி நின்றான். இறுதிப்படிகளில் ஏறி திரும்பி நோக்கி ஸ்தானிகரிடம் “அணைந்ததுமே என்னிடம் செய்தியை அறிவியுங்கள்” என்றபின் அவள் அவனை நோக்கி புன்னகைத்தாள். அவளுக்குப் பின்னால் ஏறிவந்த சேடியிடம் “தாலங்களை மஞ்சத்தறையில் வை” என்று சொல்லிவிட்டு அவனிடம் “துயிலாதிருந்தீர்களா?” என்றாள்.

“ஆம். நீ முன்னரே வருவாய் என்று நினைத்தேன்” என்றான். “அங்கு மகளிர் மாளிகையில் அன்னையரும் நூற்றுவரின் துணைவியரும் துச்சளையுமாக பெருங்கொண்டாட்டமாக இருந்தது” என்று அவள் சொன்னாள். “என்ன செய்தீர்கள்?” என்று அவன் புன்னகையுடன் கேட்டான். “அதை மட்டும் எந்தச் சொல்லாலும் சொல்ல முடியாது” என்று வெண்பற்களைக்காட்டி அவள் சிரித்தாள். “உண்மையில் ஒன்றுமே செய்யவில்லை.”

“பேசிக் கொண்டிருந்தீர்களா?” என்றான் நகுலன். “சொல்லப்போனால் பேசிக்கொண்டும் இருக்கவில்லை. ஒன்றுமே நிகழவில்லை. வீணாகச் சிரித்தோம்,  ஒருவரை ஒருவர் துரத்தினோம், மலரள்ளி வீசிக்கொண்டோம். குழந்தைகளை கொஞ்சினோம். மாலைமுதல் இதுவரை மகிழ்ந்திருந்தோம் என்பது மட்டுமே சொல்லமுடியும்” என்றாள் திரௌபதி. “பொருளின்றி மகிழ்ந்திருக்க குழந்தைகளால்தான் முடியும்” என்றான் நகுலன். “குழந்தைகளாகும் கலை பெண்களுக்குத் தெரியும்” என்றாள் அவள். “அங்கு ஆண்கள் இருக்கக்கூடாது, அவ்வளவுதானே?” என்றான். “இருக்கலாம். சிறுவர்களாக…” என்றபடி திரும்பி “இருங்கள். நீராடி ஆடைமாற்றி வருகிறேன்” என்றாள்.

அவன் மஞ்சத்தறையின் உள்ளே சென்று அமர்ந்தான். ஏவலன் உள்ளே வந்து அகலுக்கு எண்ணை ஊற்றி புதுத்திரியிட்டு சுடரேற்றிவிட்டுச் சென்றான். அவளுடைய பட்டாடையின் சரசரப்பு கேட்பதுவரை அவன் காத்திருந்தான். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போது அவளிடமிருந்த அமைதியும் இறுக்கமும் முற்றாக விலகிவிட்டிருப்பதை உணர்ந்தான். அவள் முகத்திலிருந்த புன்னகை தன் முகத்தில் பற்றிக்கொண்டு ஒளிகொண்டு எரிவதை அறிந்தான்.

அவள் உள்ளே வந்து “என்ன சிரிப்பு?” என்றாள். “புன்னகைப்பதற்குத்தான் எவ்வளவு தசைகள் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றான். “அதைவிட உள்ளம் பணியாற்ற வேண்டியிருக்கிறது” என்றபடி அவள் அறைக்குள்ளிருந்த ஆடியில் தன் முகத்தை நோக்கி முன் நெற்றி மயிரை கைகளால் நீவி காதுகளுக்குப்பின் ஒதுக்கினாள். மேலாடையை சீரமைத்தபடி அவன் முன் வந்து “நாளை பகடைக்களம் அல்லவா?” என்றாள். “ஆமாம்” என்றான்.

“நல்லவேளை, மங்கல நிகழ்வொன்றும் அதைத் தொடர்ந்து இருக்காது. வெற்றி எனினும் தோல்வி எனினும் அது அங்கு ஆண்களுடன் முடியும்” என்றாள். “ஏன்?” என்றான் நகுலன். “நான் விலக்காகியிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “ஒருவேளை ஆடல் முடிந்தபின் ஆலயத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால்…?” என்று நகுலன் கேட்டான். “நான் கலந்துகொள்ள முடியாது. அதை சேடியிடம் சொல்லி அறிவிக்க வேண்டியதுதான்” என்றாள். “உண்மையில் நான் அங்கு வரவிரும்பவில்லை. சொல்வதற்கு இனி இது உள்ளது. நன்று.”

நகுலன் “தனியறைக்கு செல்லவிருக்கிறாயா?” என்றான். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவ்விரவில் அவளுடன் இருக்க விழைந்தான். அதை அவள் உணராமல் “ஆம். அதைச் சொல்லிவிட்டு செல்லலாம் என்றுதான் வந்தேன். நீங்கள் துயிலலாம்” என்றாள். “நீ அஞ்சவில்லையா?” என்றான் நகுலன். “எதை?” என்று அவள் கேட்டாள். “நாளை நிகழவிருக்கும் பகடையாட்டத்தை?” என்றான். அவள் “அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆவது அணைக!” என்றாள்.

“நான் அஞ்சுகிறேன். மீளமுடியாத சேற்றுக்குழி ஒன்றை நோக்கி மூத்தவர் சென்று கொண்டிருப்பதைப்போல் தோன்றுகிறது” என்றான். அவள் விழிகள் மாறுபட்டன. தலையை மறுபக்கம் திருப்பியபடி “அது அவர் ஊழென்றால் எவர் என்ன செய்ய முடியும்?” என்றாள். “அவரது ஊழ் மட்டுமல்ல. உடன்பிறந்தாரின் ஊழ். உனது ஊழ். நமது மைந்தரின் நகரத்தின் குடிகளின் ஊழ்” என்றான் நகுலன். “ஆம். அனைத்தும் பகடைக்காய்களின் உருளலில் தீர்மானிக்கப்படுகிறது.” உடனே தொண்டை அசைய தலைசரித்து சிரித்து “எவ்வண்ணமாயினும் அது ஒரு பகடையாட்டத்தினால் முடிவாவதே” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான். “ஒரு மூங்கில் பாலம் சரிந்ததனால் முன்பு பிரக்ஜ்யோதிஷம் நூறாண்டுகாலம் அடிமைப்பட நேர்ந்தது என்பார்கள்.” அவன் “இத்தனை எளிதாக இதை எடுத்துக்கொள்வாய் என்று நான் எண்ணவில்லை” என்றான். “எளியது அவ்வண்ணமே எடுத்துக் கொள்ளத்தக்கது” என்றாள்.

பின்பு எழுந்து “நன்று. துயில்நீப்பு எவ்வகையிலும் தேவையானதல்ல. ஓய்வெடுங்கள்” என்றாள். நகுலன் “நீ துயில் நீப்பாய் என்று எண்ணினேன்” என்றான். “நானா? இங்கு வரும்போதே களைப்பில் என்னுடல் இடப்பக்கமாக சரிந்துகொண்டிருந்தது. குருதிவிலக்கு ஆனபின்பு கண்களை திறக்கவே முடியாதென்று தோன்றுகிறது. நல்லவேளையாக நாளை காலை நான் ஆற்றவேண்டிய அரசபணிகள் ஏதுமில்லை. நன்கு விடியும்வரை ஒதுக்கறையில் துயிலலாம்” என்றாள் திரௌபதி.

அவள் அறையைவிட்டு வெளியே செல்ல அவன் உடன் வந்தான். அவள் இடைநாழியில் நின்றபடி “இன்று மகளிரறையில் அரசரின் மகள் லட்சுமணையை பார்த்தேன். பார்க்க என்னைப்போலவே கரியவள். தந்தையும் தாயும் கிருஷ்ணை என்றே அழைக்கிறார்கள் அவளை” என்றாள். “உன்னைப்போலவே பேரரசியாகட்டும்” என்றான். “அவள் குழப்பத்தில் இருக்கிறாள். பேரரசியாக அரியணை அமர்வதா, விறலியாக யாழுடன் அலைந்து திரிவதா என்று. என்னைப் பார்ப்பது வரை விறலி என்றே முடிவு செய்திருந்தாள்.”

முகம் மலர, கண்கள் சுருங்க சிரித்தபடி “கன்னித்தன்மையின் தூய்மை! அவள் கன்னங்களை தொட்டுத் தொட்டு எனக்கு சலிக்கவில்லை” என்றாள். நகுலன் அவள் சிரிப்பையே நோக்கிக்கொண்டிருந்தான். “வருகிறேன்” என்று தலையசைத்தபடி கால்சிலம்புகள் ஒலிக்க நடந்து மறைந்தாள். நகுலன் அவளை நோக்கிக் கொண்டிருக்கையில் தன் முகம் புன்னகையில் விரிந்திருக்கையிலும் புகைசூழ்வது போல் உள்ளத்தில் வந்து நிறைந்த அறியாத்துயர் ஒன்றை உணர்ந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

வாசிப்பு அன்றும் இன்றும்

$
0
0

Tamil_News_large_696867

 

1982ல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அன்றைய வார இதழ் ஒன்றில் புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் என்னும் கதை மறுபிரசுரமாகியிருந்தது. உடன் ஒரு குறிப்பு, ‘இவர் பெயர் புதுமைப்பித்தன். இவர் தமிழின் முதன்மையான சிறுகதை ஆசிரியர். இவர் எழுதிய காஞ்சனை என்னும் தொகுப்பில் உள்ள கதை இது’

 

தமிழின் முதன்மையான இலக்கியமேதையை அவற் மறைந்து முப்பத்தைந்தான்டுகளுக்குப்பின் இப்படி அறிமுகம்செய்ய வேண்டிய நிலை அன்றிருந்தது. மௌனியின் சிறுகதைத்தொகுதியை அவரது நண்பர் கி.ஆ.சச்சிதானந்தம் என்பவர் பீக்காக் பதிப்பகம் என்னும் பெயரில் நூலாகக் கொண்டுவந்தார். இருபதாண்டுகளில் நூறுபிரதிகூட விற்கவில்லை.

 

தமிழின் மிகப்பெரும்பாலான வாசகர்களுக்கு அன்று இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, லா.சரா, அசோகமித்திரன். சுந்தர ராமசாமி எவரையும் அறிமுகமில்லை. அது வார இதழ்களின் பொற்காலம். அதில் வரும் தொடர்கதைகளையே நாவல்களாக நினைத்துக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதுபவர்களே இலக்கியவாதிகளாகக் கருதப்பட்டனர்.

 

அன்றெல்லாம் புத்தகவிற்பனை மிகமிகக்குறைவு. கலைமகள் பிரசுராலயம். வானதி பதிப்பகம், மீனாட்சி புத்தகநிலையம் போல ஒருசில பதிப்பகங்கள்தான். தொடர்கதை தொகுதிகளையே நூல்களாக மக்கள் வாசித்துவந்தனர்.

 

மாற்றம் ஏற்பட்டது தொண்ணூறுகளில்தான். தினமணியின் தமிழ்மணி இணைப்புக்கு இலக்கியத்தை பரவலாக கொண்டுசென்றதில் முக்கியப்பங்களிப்பு உண்டு. வாசிக்கக்கூடிய புதிய தலைமுறை உருவாகி வந்தது.நவீன இயந்திரங்கள் புத்தக அச்சை எளிதாக்கின. இணையம் புத்தகங்களை பரவலாக அறிமுகம் செய்தது

 

இன்று தமிழில் புத்தகம் விற்பது மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு. ஆனால் நேற்றைய நிலையுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய புரட்சி. இன்றைய புத்தகக் கண்காட்சியில் குவியும் வாசகர்களைக் கண்டால் பழைய எழுத்தாளர்கள் ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள்.

 

நேற்று பொழுதுபோக்கு ஊடகங்கள் அதிகமிருக்கவில்லை. சினிமா அபூர்வமாகவே பார்க்கப்பட்டது. வானொலி அரசுத்துறையாக இருந்தது. ஆகவே வாசிப்பே பொழுதுபோக்காக இருந்தது. வாசிப்புக்கு அறிவைத் தேடுதல், ஆழ்ந்த அனுபவங்களை அடைதல் என்னும் பயன்கள் உண்டு என்பதையே அன்றிருந்தோர் அறிந்திருக்கவில்லை. சுவாரசியமாக இருந்தால் நல்ல படைப்பு என நினைத்தனர்

 

இலக்கியம் சிற்றிதழ்களுக்குள் முந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்டு ஐயாயிரம் பேரால் மட்டும் வாசிக்கப்பட்டது. இன்று இலக்கிய வாசிப்பே ஓங்கி நிற்கிறது. பழைய இலக்கியவாதிகளின் நூல்களெல்லாமே மறு அச்சாகிவிட்டன. ஆனால் பழைய கேளிக்கை எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டனர்.

 

இன்று பொழுதுபோக்குக்கான எழுத்தும் வாசிப்பும் மிகவும் குறைந்துள்ளது. இலக்கியமும் பயன்தரு எழுத்தும் பெருவாரியாக வாங்கி வாசிக்கப்படுகின்றன. இளையதலைமுறையினரில் உயர்படிப்புள்ளோர் தமிழில் வாசிக்கிறார்கள். கப்ரியேல் கார்ஸியா மார்க்யூஸின் நூறாண்டுகாலத் தனிமை என்னும் உலகப்புகழ்பெற்ற இலக்கியம் ஒருவருடத்தில் இருபதிப்புகள் வெளிவந்துள்ளது

 

வாசிப்பில் நிகழும் இந்த ஆக்கபூர்வமான மாறுதல் தொடரவேண்டும்.

 

[தினமணி நாளிதழுக்காக எழுதியது ]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆடம்பரமும் நகலும்

$
0
0

 

1

அன்புள்ள ஜெமோ

 

நிங்கள் இத்தனை பிராண்ட் கான்ஷியஸ் ஆக இருப்பீர்கள் என நினைக்கவில்லை இதையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க ஒரு மனநிலை வேண்டும். லக்சுரிகளில் உங்களுக்கு ஆர்வமே இருக்காது என்பதே என் எண்ணமாக இருந்தது

எஸ் ஆர் சரவணன்

 

அன்புள்ள சரவணன்

 

நான் எழுதியது பிராண்ட் களைப்பற்றியோ ஆடம்பரங்களைப்பற்றியோ அல்ல. உண்மையில் சிக்கனம் பற்றி. உச்சகட்ட விலையுள்ள பிராண்ட்கள் பெரும்பாலும் வெற்றுச்செலவு. இருபதாயிரம் ரூபாய் சட்டைகள், முப்பதாயிரம் ரூபாய் செருப்புகள் அப்படிப்பட்டவை. நான்சந்திக்கும் தொழில்முறை நண்பர்கள் அவற்றைத்தான் அணிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவை அடையாளம். நான் அவ்வடையாளங்களால் அறியப்பட விரும்புவதில்லை

 

ஆனால் அடிப்படையான பிராண்ட்கள் தரம் என்றே அறியப்படுகின்றன. ஒரு ஜாக்கி ஜட்டி பிற ஜட்டிகளைவிட 30 சதம் விலை அதிகம். மும்மடங்கு உழைக்கும். ஆகவே அடிப்படையான பிராண்டுகளையே என்னைப்போல சிக்கனம் நாடும் ஒருவர் வாங்கி பயன்படுத்துவார். டியோரோசெல் வாங்கி போட்டால் என் ஒலிப்பதிவுக்கருவி ஒரு மாதம் உழைக்கும். ஐந்தில் ஒரு பங்கு விலையுள்ள போலி இரண்டுநாட்களுக்குக் கூட வராது

 

இந்தப் போலிப்பொருட்கள் மிகப்பெரிய மோசடிகள். அவற்றுக்கு நாம் அளிக்கும் விலை வீண். அந்தச்சுரண்டலைத்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆடம்பரத்தைப்பற்றி அல்ல

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82

$
0
0

[ 11 ]

பன்னிரு பகடைக்களத்தில் அவையமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அஸ்தினபுரியின் முதற்குடிகள் காலையிலேயே வந்து முற்றத்தில் குழுமினர். ஏவலர் அவர்கள் அழைப்போலைகளை சீர்நோக்கி முகமன் உரைத்து அவைக்குள் அனுப்பினர். சூழ்ந்த நூற்றெட்டு தூண்களுக்குப் பின்னால் அமைந்த இருபத்துநான்கு படிகளில் நிரைவகுத்திருந்த பீடங்களில் அவர்கள் ஓசையின்றி வந்தமர்ந்து நிரம்பிக் கொண்டிருந்தனர். அவைக்களத்தில் எப்போதும் செறிந்திருந்த அமைதி அவர்கள் ஒவ்வொருவரையும் அமைதிகொள்ளச் செய்ததனால் ஆடிப்பரப்பில் பாவைப்பெருக்கு நிறைவதுபோல ஓசையின்றி அவர்கள் செறிந்தனர்.

இரண்டாம் சுற்றில் வணிகர்களும் ஷத்ரியர்களும் குடித்தலைவர்களும் அமரத்தொடங்கினர். ஒருவருக்கொருவர் விழிகளாலும் கைகளாலும் முகமன் உரைத்தனர். தங்கள் பீடங்களில் அமர்ந்ததும் அதுவரை கொண்டிருந்த உடலிறுக்கத்தை மெல்ல தளர்த்தி பெருமூச்சுவிட்டு இயல்படைந்தனர். உடல்கள் தசை தளரும்போது அத்தனை ஒலியெழும் என்பதை அவ்வமைதியின் நடுவில் நின்றிருந்த நிமித்திகர் நோக்கி வியந்தார்.

அரசகுடியினர் வந்து அமரத்தொடங்கினர். கௌரவர்களின் துணைவியரின் தந்தையரும் உடன்பிறந்தாரும் வரிசை முறைப்படி முகமன் உரைக்கப்பட்டு பீடம் காட்டி வரவறிவிப்புடன் அமரச்செய்யப்பட்டனர். முதன்மைநிரையில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சல்யரும் சுபாகுவாலும் சகதேவனாலும் அழைத்துவரப்பட்டு அமர்ந்தனர். துர்மதனும் துச்சகனும் காந்தாரநாட்டு சுபலரையும் மைந்தரையும் அவையமர்த்தினர். சைப்யரும் காசிநாட்டரசரும் அருகே அமர்ந்தனர். துரோணரையும் கிருபரையும் விதுரர் தலைவணங்கி அழைத்துவந்து அமரச்செய்தார். நகுலனும் சுஜாதனும் இருபுறமும் நின்று பீஷ்மபிதாமகரை அழைத்து வந்து மையப்பீடத்தில் அமர்த்தினர். அஸ்தினபுரியில் இருந்த அரசகுடியினர் அனைவரும் வந்துகொண்டிருப்பதை அவையமர்ந்த நகர்மக்கள் நோக்கிக் கொண்டிருந்தனர்.

அவையமர்ந்த ஒவ்வொருவரும் விளங்காத அச்சத்தால் நிலையழிந்து அலையும் விழிகளுடன் தளர்ந்த தோள்களுடன் இருந்தனர். தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டவர்கள் என்பதனால் அவர்கள் தோற்றங்களும் ஒன்றுபோல் இருந்தன. அவை நடுவே நின்று நோக்கிய நிமித்திகர் அவர்களின் மார்பணிகள் இணைந்து ஒரு வளைவுக் கோடாக சுற்றிவருவதை கண்டார். அதற்கு மேல் பற்களால் ஆன வெண்கோடு முல்லைச்சரம் போல தெரிந்தது. அதற்கு மேல் நீலமலர்ச்சரம் போல விழிகளின் கோடு தெரிவதை கண்டார். அதற்குமேல் தலைப்பாகைகளினாலான வண்ணச்சரம்.

அவர்களின் விழிகளும் உடையின் சரசரப்பொலிகளும் இணைந்த மெல்லிய முழக்கம் குவையில் பட்டு உச்சிக்குச் சென்று குவிந்து சங்குக்குள் காது வைத்தது போல் தலைக்குள் ரீங்கரித்தது. பகடைக்களத்தின் இருபக்கமும் தூண்களின் மேல் எழுந்திருந்த மகளிருக்கான உப்பரிகைகளில் அரசகுடியினர் தங்கள் அகம்படிச் சேடியருடன் வந்து அமரத்தொடங்கினர். திருதராஷ்டிரர் விழியின்மையால் அவ்வவைக்கு வரவில்லை. பேரரசர் வராமையால் காந்தாரியரும் வரவில்லை. கௌரவர்களின் துணைவிகள் ஒவ்வொருவராக வரவறிவிக்கப்பட்டு கொம்பொலியும் மங்கல இசையுமாக வந்து அமர்ந்தனர். இறுதியாக அசலையுடனும் கிருஷ்ணையுடனும் பானுமதி வந்து அவையமர்ந்தாள். திரௌபதியின் வரவறிவிக்கப்படவில்லை என்பதை அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவள் குருதிநீக்கில் இருப்பதாக செய்தி உதடுகளில் இருந்து செவிகளுக்கென பரவி அவையில் சுழன்று வந்தது.

பாண்டவர்கள் ஐவரும் விதுரரால் வரவேற்கப்பட்டு அவைக்குள் நுழைந்தனர். சௌனகர் தொடர வந்த தருமன் அவையை நோக்கி தலைக்குமேல் கைகூப்பி வணங்கிவிட்டு இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி நின்ற பீடத்தில் சென்று அமர்ந்தார். பின்னர் துச்சாதனன் துர்மதன் இருவரும் துணைவர கர்ணன் வந்து அவையமர்ந்தான். விகர்ணனும் துர்விமோசனும் அழைத்துவர சகுனி பெரிய பட்டுச்சால்வை தோளில் சரிய மெழுகுபோன்ற உணர்வற்ற முகத்துடன் அவைபுகுந்து தன் இருக்கையில் அமர்ந்தார். இரு ஏவலரால் தூக்கிவரப்பட்ட கணிகர் அவர் அருகே மரவுரிமெத்தையாலான தாழ்ந்த பீடத்தில் அமர்த்தப்பட்டார். அவர் உடலை மெல்லச் சுருட்டி அட்டை போல உருண்டு அசைவிழந்தார்.

வெளியே பெருமுரசுகள் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் ஆர்த்தன. மங்கல இசை கேட்டதும் அலையலையாக அப்பெரும் பகடைக்களம் எழுந்து நின்று கைகுவித்தது. துரோணரும் கிருபரும் பீஷ்மரும் அன்றி பிற அனைவரும் எழுந்து வணங்கினர். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் கொடிக்காரன் முன்னால் வந்தான். செங்கோலை ஏந்தி கவசவீரன் தொடர்ந்தான். மங்கலச்சூதரும் அணிச்சேடியரும் வந்தனர். தொடர்ந்து துரியோதனன் இருபுறமும் அமைச்சர்கள் சூழ, வெண்குடை மேலே நலுங்க கைகூப்பியபடி  அரசப்பாதையினூடாக நடந்துவந்து அரியணையில் அமர்ந்தான்.

அஸ்தினபுரியின் மணிமுடி பொற்தாலத்தில் வந்தது. அதை அமைச்சர் கனகர் எடுத்தளிக்க அவன் சூடிக்கொண்டு கோலேந்தி அமர்ந்தான். அவையினர் ஒற்றைப் பெருங்குரலில் “குருகுலவேந்தர் வாழ்க! அஸ்தினபுரியின் அரசர் வாழ்க! தார்த்தராஷ்டிரர் வாழ்க! வெற்றி கொள் பெருவீரர் வாழ்க! குருகுலமுதல்வர் வெல்க!” என்று வாழ்த்தினர்.

நிமித்திகர் அறிவிப்பு மேடையில் எழுந்து தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் அவை அலையலையென ஆடையொலியுடனும் அணியொலியுடனும் அமைந்து படிந்தது. தன் மேடையிலிருந்து நோக்கிய நிமித்திகர் பல்லாயிரம் விழிகளாலான சுழிஒன்றின் நடுவில் தான் நின்றிருப்பதை உணர்ந்தார். உரத்த குரலில் “வெற்றி சிறக்க! மூதாதையர் மகிழ்க! மூன்று தெய்வங்களும் அருள்க! அஸ்தினபுரி வெல்க! குருகுலம் தொடர்க! அரியணை அமர்ந்து காக்கும் அரசர் புகழ் செல்வம் வெற்றி புதல்வர் சொல் என ஐந்துபேறும் பெற்று நிறைக! மனைமாட்சி பொலிக! வயல் நிறைக! களஞ்சியங்கள் ததும்புக! கன்றுமடிகள் ஒழுகுக! அவி பெற்று அனல் எழுக! இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக! தேவர்கள் அறிக! ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.

நிமித்திகர் தன் வெள்ளிக்கோலை கிடைமட்டமாக மேலே தூக்கியபோது அனைத்து ஒலிகளும் அடங்கி அவை முற்றமைதி கொண்டது. அவர் இதழ்கள் ஒட்டிப்பிரியும் ஒலிகூட கேட்கும் அளவுக்கு அப்பெருங்கூடம் ஒலிக்கூர்மை கொண்டிருந்தது. மணிக்குரலில் “சான்றோரே, குடிமூத்தோரே, அவைமுதல்வரே, அஸ்தினபுரி அரியணை அமர்ந்த அரசரின் குரல் என இங்கு நின்று ஓர் அறிவிப்பை முன் வைக்க ஆணையிடப்பட்டுள்ளேன். இன்று இந்த அவையில் நிகழவிருப்பது ஒரு குடிக்களியாடல். தொல்புகழ் கொண்ட அஸ்தினபுரியின் இளவரசர்கள், குருகுலத்தோன்றல்கள், விசித்திரவீரியரின் பெயர்மைந்தர் தங்களுக்குள் இனிய ஆடல் ஒன்றை நிகழ்த்தவிருக்கிறார்கள்” என்றார். “அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த மாமன்னர் துரியோதனரின் விழிமுன் இவ்வாடல் நிகழும்.”

“சான்றோரே, விசித்திரவீரியரின் மைந்தர்களாகிய பேரரசர் திருதராஷ்டிரருக்கும் விண்புகழ் கொண்ட அவரது இளையோன் பாண்டுவுக்கும் பிறந்த மைந்தர்களால் இந்நகர் பொலிவுற்றதென தெய்வங்கள் அறியும். அவர்களுக்குள் எழுந்த தெய்வங்களின் ஆணை பெருகுக, வளர்க, பரவுக என்று இருந்தது.  அவ்வாறு பரவும் பொருட்டு அவர்கள் தங்கள் குடிநிலத்தை இருநாடுகளாக பகிர்ந்துகொண்டனர். பாரதவர்ஷமெங்கும் கிளைவிரித்துப் பரவும் இரு பெருமரங்களின் விதைகளென்றாயின இந்நகரங்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் குருகுலத்தின் இருவிழிகள். இருகைகளில் ஏந்திய படைக்கலங்கள். இருகால்கள் சொல்லும் பொருளும் என அமைந்த சித்தம். அவை வெல்க!”

“முன்னர் இந்திரப்பிரஸ்த நகரில் நிகழ்ந்த ராஜசூயத்தில் சத்ராஜித்தென அரியணை அமர்ந்து மணிமுடி சூடி பாரதவர்ஷத்தின் தலைமேல் தன் செங்கோலை நாட்டியவர் இக்குடி பிறந்த மூத்தோர் யுதிஷ்டிரர். அன்று அவர் காலடியில் தலைவணங்கினர் பாரதவர்ஷத்தை ஆளும் ஐம்பத்து ஐந்து ஷத்ரியர்கள். சிறுகுடி ஷத்ரியர்கள் நூற்றெண்மரும் நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் நாகர்களும் என விரிந்த பாரதவர்ஷத்தின் ஆள்வோர் பெருநிரை அன்று முடிபணிந்து குடியென்றானது. அன்று அவ்வவையில் சென்றமர்ந்து முடிதாழ்த்தி வாழ்த்தி மீண்டவர் நம் அரசர்.”

“துலாவின் மறுபக்கமென அஸ்தினபுரி இருப்பதால் இங்கும் ஒரு ராஜசூயமும் அஸ்வமேதமும் நிகழவேண்டுமென அரசர் விழைந்தார். அதன் பொருட்டு பாரதவர்ஷத்தின் அரசர் அனைவருக்கும் செய்தி         அனுப்பப்பட்டது. அப்போது எழுந்த முதல் இடர் என்பது ராஜசூயம் வேட்ட இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இந்த ராஜசூயப்பந்தலில் எவரென அமர்ந்திருப்பார் என்பதே. சத்ராஜித்தென அமர்ந்தவர் பிறிதொரு வேள்விப்பந்தலில் இரண்டாம் இடத்தில் அமரலாகாது என்பது நெறி என்பதால் என்ன செய்வது என்று வினா எழுந்தது. இக்குடியின் மூத்தோரும் நிமித்திகரும் அமைச்சரும் கூடி எடுத்த முடிவென்பது மூப்பிளமை முடிவெடுக்க இவ்வண்ணம் ஒரு பன்னிரு பகடைக்களம் அமைப்பதே.”

“இது அஸ்தினபுரிக்கு புதிதல்ல. இங்கு மாமன்னர் ஹஸ்தி அமைத்த பன்னிரு பகடைக்களம் பல தலைமுறைக்காலம் பொன்றாப் புகழுடன் இருந்துள்ளது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசகுடியினர் அனைவரும் வந்தமர்ந்து பகடையாடி மகிழ்ந்த ஒலிகள் இங்குள்ள காற்றில் இன்னமும் உள்ளன என்கின்றன நூல்கள். அப்பன்னிரு பகடைக்களத்தைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களான த்யூத விலாசம், த்யூத கமலம், த்யூதிமதி பரிணயம் போன்ற காவியங்கள் இன்னும் இங்கு சூதர்களால் பாடப்படுகின்றன” என்றார் நிமித்திகர். “அந்நூல்கள் விரித்துரைத்த அவ்வண்ணமே கலிங்கச் சிற்பியான காளிகரின் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்களால் நூல்முறைப்படி அமைக்கப்பட்டது இப்பெரும் பகடைக்களம்.”

“இங்கு அவை நடுவே அமைந்துள்ள களமேடை என்பது என்றும் இங்கே இருந்ததென்று விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மாமன்னர் ஹஸ்தியும் மூத்தோரும் எண்ணக்கடவார்களாக! அவையோரே! உடன் பிறந்தாரிடையே உரிமைப் பூசல் எழுகையில் குருதி சிந்தும் போரென்பது அறமல்ல என்றுணர்ந்த அஸ்தினபுரியின் மூதாதையரால் ஆணையிடப்பட்ட நிகரிப்போர் இது” என்று நிமித்திகர் தொடர்ந்தார். “இதுவும் படைக்களமே. இங்கு நிகழ்வதும் போரே. போருக்குரிய அறங்களனைத்தும் இங்கு செயல்படும்.  போர் வெற்றியென்றே இக்களத்தில் இறுதிநிற்றல் கருதப்படும். வென்றவர் தோற்றவர் மேல் முழுதுரிமை கொள்கிறார். இக்களத்தில் முன்வைக்கப்படும் வினவிற்கான விடை சொல்லும் தகுதியை அவருக்கு இக்களம் வெல்லல் அளிக்கும்.”

“பன்னிரு பகடைக்களம் தூயது. முன்பு முக்கண் இறைவன் தன் தலைவி உமையுடன் அமர்ந்து ஆடியது இது என்பது பராசர முனிவரின் புராண மாலிகையின் கதை. அன்னையும் அப்பனும் ஆடிய பகடைக்களமாடலைப் பற்றி புனையப்பட்ட கைலாச மகாத்மியம்,  பார்வதி பரிணயம், திரயம்பக விலாசம், மஹாருத்ர பிரகடனம் போன்ற காவியங்களை இவ்வகையில் நூல் கற்றோர் நினைவு கூர்வார்களாக!”

“அவையோரே, பகடைக்களத்தின் நெறிகளைப்பேசும் த்யூதரங்க சூக்தம், த்யூதஸ்மிருதி ஆகிய நூல்களின் அடிப்படையில் இங்குள்ள நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை நடுவராக அமர்ந்திருப்போர் அந்நெறிகளின் அடிப்படையில் இங்கு நிகழ்பவற்றை வகுத்துரைக்க வேண்டுமென்று அரசரின் ஆணைப்படி அடியேன் கோருகிறேன்” என்றார் நிமித்திகர். “அவர்களின் கூற்று இறுதி முடிவென்றாகவேண்டும். ஆடல்கள் அனைத்திலும் நெறியென்றாகும் மூவிழியன் இங்கு அனலென நின்றெழுக! ஆம், அவ்வாறே ஆகுக!”

நிமித்திகரின் சொற்களை அங்கிருந்த ஒவ்வொருவரும் குவை மாடத்தின் தெய்வப்பரப்பிலிருந்து ஏதோ ஒரு முகம் செவியருகே அணுகி சொல்வதுபோல் உணர்ந்தார்கள். சிலர் தேவர்களால் சிலர் அசுரர்களால் சொல்லப்பட்டார்கள். அவையில் கணிகர் கண்மூடி துயில்பவர்போல் தன் தாழ்ந்த பீடத்தில் உடல் தளர்ந்து சுருண்டிருந்தார். பன்னிரு பகடைக்களத்தின் மையத்தில் அமைந்த ஆடுகளைத்தை நோக்கி விழியசையாது மடியில் கைகோத்து சற்றே தொய்ந்த தோள்களும் மயிருதிர்ந்த வெண்தாடியும் சுடர்வெண்மை கொண்ட முதிய உடலுமாக சகுனி அமர்ந்திருந்தார். இரு கைகளை கூப்பியபடி எவரென்று நோக்காது நிமிர்ந்த உடலுடன் யுதிஷ்டிரர் பீடம்கொண்டிருந்தார்.

நிமித்திகர் “அவையீர் அறிக! இக்களமாடலுக்கு அறைகூவல் விடுத்தது அஸ்தினபுரியின் அரசரும் குருகுலத்தோன்றலுமாகிய மாமன்னர் துரியோதனர். அவருக்கு பிதாமகர் பீஷ்மரும் பேரரசர் திருதராஷ்டிரரும் ஒப்புதல் அளித்தனர். ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும் வாழ்த்துரைத்தனர். அவ்வொப்புதலை பேரமைச்சர் விதுரர் நேரில்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரருக்கு அறிவித்தார். அது ஒரு மணிமுடியின் போர்க்கூவலும் கூட” என்றார்.

“அவ்வழைப்பை இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் ஏற்று களமாட ஏற்பளித்தார். பேரரசி குந்தியும் குலப்புரோகிதரான தௌம்யரும் உறுதுணையாகிய துவாரகையின் தலைவர் கிருஷ்ணனும் அவருக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி தம்பியருடனும் அமைச்சருடனும் தேவியுடனும் அவர் இந்நகர் புகுந்து இந்த அவையமர்ந்துள்ளார்” என்றார் நிமித்திகர். “அஸ்தினபுரியின் அரசர் தரப்பிலிருந்து இக்களம்நின்று ஆடுவதற்கு அரசரின் மாதுலரும் அஸ்தினபுரியின் காவலருமான காந்தார இளவரசர் சகுனி அழைக்கப்பட்டுள்ளார். அவ்வழைப்பை ஏற்று அவர் பன்னிரு பகடைக்களத்தின் இடப்பக்கத்தில் இருந்து ஆடுவார். இந்திரப்பிரஸ்தத்தின் தரப்பில் அறைகூவல் விடப்பட்ட யுதிஷ்டிரரே களம் அமைத்து வலப்பக்கம் அமர்ந்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு  தெய்வங்களுக்கு உகந்த போர் நிகழ்க! எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க! ஓம்! அவ்வாறே ஆகுக!”

நிமித்திகர் வெள்ளிக்கோல் தாழ்த்தி அமைய அம்மேடைக்குக் கீழே இருபுறமும் அமைந்திருந்த இரு சிறுமுரசுகளையும் அறைவோர் கோல்சுழற்றி முழக்கினர். ஏழு கொம்பூதிகள் எழுந்து ஒற்றை பிளிறலென ஓசை எழுப்பி தலை தாழ்த்தி அமைந்தனர். சகுனி தன் பீடத்தின் கைப்பிடியை வலக்கையால் பற்றி ஊன்றி மெல்ல எழுந்து புண்பட்ட காலை நீட்டி இழுத்தபடி இரண்டடி எடுத்துவைத்து குனிந்து தாழ்வான பீடத்தில் அமர்ந்திருந்த கணிகரின் மெலிந்த கால்களைத் தொட்டு சென்னி சூடினார். கணிகர் அரைப்பங்கு மூடிய விழிகளுடன் கனவிலென அமர்ந்திருந்தார். வாழ்த்து உரைக்கவோ கைகளை தூக்கவோ செய்யவில்லை.

சகுனி திரும்பி அவையை வணங்கிவிட்டு உடல் கோணலாக அசைய நடந்து படியிறங்கி களமுற்றத்தின் இடப்பக்கத்தில் போடப்பட்டிருந்த மேடையை அடைந்து நின்றார். குனிந்து பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட நடுவட்ட குறுமேடையைத் தொட்டு தலையில் வைத்து வணங்கி பீடத்தில் அமர்ந்தார். அவரது ஏவலன் சேக்கைமெத்தை போடப்பட்ட குறுபீடமொன்றை கொண்டு வந்து அவரது காலருகே வைத்தான். புண்பட்ட காலை பல்லைக்கடித்தபடி முகம் சுளித்து மெல்ல தூக்கி அதன்மேல் வைத்து பெருமூச்சுடன் கையால் நீவிக்கொண்டார்.

தருமன் எழுந்து கைகூப்பி அவையை வணங்கினார். நெஞ்சில் கூப்பிய கை அமைந்திருக்க சென்று பீஷ்மரின் காலைத் தொட்டு வணங்க அவர் தருமன் தலையில் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தார். கிருபரையும் துரோணரையும் வணங்கிவிட்டு துரியோதனனை நோக்கி தலைதாழ்த்தி முகமன் உரைத்தார். கூப்பிய கரங்களுடன் நிமிர்ந்த நடையில் படியிறங்கி பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட மேடையில் வலப்பக்கமாக அமைந்திருந்த பீடத்தில் சென்று அமர்ந்தார்.

அமைச்சர் கனகர்  “அவையீர் அறிக! மூதாதையர் கேட்கக்கடவது! தேவர்கள் நோக்கு திகழ்க! தெய்வங்கள் உணர்க! இதோ பன்னிருபகடைக்களம் எழுகிறது” என்றார். முரசுகளும் கொம்புகளும் எழுந்தமைய அனைவரது விழிகளும் ஆடற்களத்தை நோக்கி குவிந்தன.

[ 12 ]

பன்னிரு பகடைக்களம் தொடங்குவதற்காக கொம்பு ஒலித்தமைந்தது. சகுனி மெல்லிய குரலில் தருமனுக்கு வாழ்த்துரைத்தார். தருமன் மறுமுகமன் சொல்லி வாழ்த்து சொன்னார். பொற்பேழையில் பகடைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. களநடுவராக வலப்பக்கம் கிருபரும் இடப்பக்கம் துரோணரும் தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். ஒவ்வொருவராக தங்கள் எண்ணப்பெருக்கிலிருந்து உதிர்ந்து சித்தம் குவிந்து நோக்கத்தொடங்கினர்.

சகுனி உரத்த குரலில் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை அஸ்தினபுரியின் அரசரின் சார்பில் இந்நிகரிப்போருக்கு அறைகூவுகிறேன். இப்போரில் எவர் வென்றாலும் அது போர்வெற்றியென்றே கொள்ளப்படும் என்று அறிக!” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்!” என்றார் சகுனி. “அதை அறிந்திருப்பீர், அரசே.” யுதிஷ்டிரர் குழப்பத்துடன் “தனித்தனியாக பந்தயம் வைத்து ஆடுவது என்று என்னிடம் சொல்லப்படவில்லை. எனது வெற்றியையோ தோல்வியையோ பந்தயமாக வைப்பது என்றே நான் புரிந்து கொண்டிருந்தேன்” என்றார்.

“அவ்வண்ணமில்லை” என்று சகுனி புன்னகையுடன் சொன்னார். “இவ்வாடற்களத்தின் நெறிகளை முன்னரே தங்களுக்கு அனுப்பியிருந்தோம். இது ஒவ்வொரு ஆடலுக்கும் ஒரு பந்தயமென வைத்து ஆடுவது.” “இல்லை, அது எனக்கு சொல்லப்படவில்லை” என்றார் தருமன். “அஞ்சுகிறீர்களா?” என்றார் சகுனி. “அச்சமில்லை… நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றார் தருமன்.

“இதோ, முதல் ஆடலுக்கு அஸ்தினபுரியின் கருவூலத்தின் அனல் என சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஹஸ்தியின் பொன்றாப் புகழ்கொண்ட மணிமுடியை பந்தயமாக வைக்கிறேன். நிகரென ஒன்றை பந்தயமாக வைத்து ஆடுக!” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா? அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும்?” என்றார்.

“அஸ்தினபுரியின் அரசர் அதன் கருவூலத்திற்கு உரிமையானவர். தன்னிடமுள்ள முதன்மை செல்வத்தை வைத்து ஆட அவருக்கு நூலொப்புதல் உண்டு” என்றார் சகுனி. பெருமூச்சுடன் தருமன் “அதற்கிணையாக நான் வைக்கக்கூடுவது இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியையும் செங்கோலையும் பொற்தேரையும் மட்டுமே” என்றார். “நன்று!” என்றபடி பகடையை நோக்கி கைகாட்டினார் சகுனி.

தருமன் பகடைக்காய்களை எடுத்து தன் கைகளில் மும்முறை உருட்டி பரப்பினார். அவை சூழ்ந்திருந்த அத்தனை தலைகளும் எண்களை பார்ப்பதற்காக சற்றே முன்னகர்ந்தன. எண்களைப் பார்த்து அறிவிக்கும் இடத்தில் நின்றிருந்த நிமித்திகன் உரத்த குரலில் “ஆறு!” என்றான். தருமன் தன் படைவீரர்களை பருந்துச்சூழ்கை என அமைத்து புரவித்தலைவனை முன் அமைத்தார்.

சகுனி பகடைகளை உருட்டியபோது இரண்டு விழுந்தது. நிமித்திகன் “இரண்டு” என அறிவித்தபோது அவையெங்கும் மெல்லிய புன்னகையொன்று பரவுவதை விழிதிருப்பாமலேயே யுதிஷ்டிரர் கண்டார். தன் யானைகளை முன் நகர்த்தி நடுவே கதாயுதமேந்திய மல்லனை அமைத்தார் சகுனி. தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவன் பருந்துப்படை சிறகு முன்னோக்கி குவிந்து அணுகியது. சகுனி தன் காலாள் படைகளை ஒருங்கமைத்து நடுவே தனது கதைமல்லனை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்.

இரு படையோனும் முகம் நோக்கி நின்றனர். “தங்கள் முறை, மாதுலரே” என்று புன்னகையுடன் சொன்னபடி தருமன் சகுனியை நோக்கி பகடைகளை நீட்டினார். அவர் அதை வாங்கி கண்களைச் சுருக்கி ஒருகணம் தன்னிலாழ்ந்து பின்பு மெல்ல உருட்டினார். அவர் உடலில் ஒரு நடுக்கம் இருந்து கொண்டிருப்பதை தருமன் கண்டார்.

பகடைகள் உருண்டு மூன்று என மீண்டும் விழுந்தன. மூன்று என்று உரக்க அறிவித்தான் நிமித்திகன். அதிர்ந்து கொண்டிருந்த இருவிரல்களால் மூன்று காய்களை முன்னிறுத்தி தனது தலைமல்லனை பாதுகாத்தார் சகுனி. தருமனின் முகமெங்கும் புன்னகை பரவியிருந்தது. வலக்கையால் தன் குழலை மெல்ல தள்ளி தோளுக்குபின் இட்டபடி பகடைக்காக கை நீட்டினார். பகடையை வாங்கி சகுனியை கூர்ந்து நோக்கியபடி மெல்ல உருட்டி பரப்பினார். பன்னிரண்டு என்று நிமித்திகன் அறிவித்தபோது அவை ஒற்றைப்பெருமூச்சொன்றை எழுப்பியது.

மீண்டும் பகடை உருண்டபோது பன்னிரு வீரர்களால் சூழப்பட்ட தருமனின் மல்லனால் சகுனியின் மல்லன் வீழ்த்தப்பட்டான். அவன் படைசூழ்கை சிதறடிக்கப்பட்டது. தன் மல்லனை முதலில் நிறுத்தி ஒழிந்த பகடைக்களத்தை நோக்கி புன்னகைத்தபின் விழிதூக்கி கிருபரை பார்த்தார் தருமன். கிருபர் “முதல் ஆட்டத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் வென்றார் என்று அறிவிக்கப்படுகிறது” என்றார். துரோணர் “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது” என்றார்.

சகுனி மயிர் உதிர்ந்த வெண்தாடியை கழுத்திலிருந்து மேலே நீவி பற்றி இறுக்கி மெல்ல கசக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருக்க துரியோதனன் எழுந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே, கருவூலத்தில் காவலில் இருக்கும் ஹஸ்தியின் மணிமுடி தங்களுக்குரியதாகுக!” என்றான்.  ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றான். புன்னகையுடன் திரும்பி தன் இளையோரை நோக்கியபின் “அடுத்த சுற்றுக்கு நான் சித்தம்” என்றார் தருமன்.

தொடர்புடைய பதிவுகள்

பத்மவியூகம்: கடிதம்

$
0
0

1

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,

“பத்மவியூகம்” என்னைப் பதறவைத்தபடியே என் மனதைப் புரட்டிப்போட்டுவிட்டது. கடக்க முடியா புத்திரசோகத்தையும் கடந்து ஏதோ ஒரு இறுக்கமான அமைதி குடிகொண்டதை பத்மவியூகம் சிறுகதையைப் படித்துமுடிக்கையில் உணர்ந்தேன்.       “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே….” என்று சுபத்ரை குமுற, அதற்கு அவள் அண்ணன் கிருஷ்ணன், “யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?” என்று பதிலுரைக்கையில் நானும் உறைந்து நின்றேன். ஏனெனில் எனக்குள் குடைந்துகொண்டிருந்த சில கேள்விகளுக்கு பதில் கிடைத்திருந்தது.

மனிதமனம் ஒரு கணம் கூட ஒருநிலையில் இருப்பதில்லை. மகனை இழந்து ஆற்றவொண்ணாத்துயரை அனுபவித்துக் கொண்டிருக்கையில்கூட அதற்கு சற்றும் பொருந்தா மனநிலையாகிய இன்ப உணர்வையும் அனுபவிக்கிறது. அபிமன்யு இறந்துவிட்டான்; வருந்துகின்றாள் அன்னை சுபத்ரை. ஆனால் அதேசமயத்தில் அதற்குக் காரணம் அர்ச்சுனந்தான் என்று தேடித்தேடி சொல்லம்புகளைத் தொடுத்து அவனுடைய இதயத்தைக் குத்திக்கிழித்து அவன் வலிகண்டு இன்பமடைகிறாள். அடுத்தவரின் வேதனையில்தான் நம் மனம் ஆறுதலடைகிறது. இந்த மனித மனத்திற்குத்தான் எத்தனை குரூர புத்தி! எல்லாவற்றையும் இந்த பரந்தவெளியுலகனைத்தையும் மாற்றி அமைத்துவிடலாம் என்ற அகங்காரம்! ஆனால் இந்த அகங்காரத்திற்கும் சரியான பதிலடி இருக்கிறது இந்த பத்ம வியூகத்தினுள். “நம் அகங்காரம் சிலசமயம் கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது இயக்கம் கூட நியதியின் விளையாட்டுதான் என்று”. இது போதும் இது ஒன்று போதும்.

பகவத்கீதையின் சாராம்சத்தை தெரிந்துகொள்ள விழைபவர்கள் இப் “பத்மவியூகம்” படித்தாலே  போதும்.  கட்டுப்பாடற்று அலைபாய்ந்து காரணகாரியங்களைத் தேடிக்கொண்டிருந்த என் மனதில் இப்போது இதுவரையில்லாத தெளிவும் தைரியமும் குடிகொண்டு ததும்பி வழிவதை பெருமிதத்தோடு உணர்கிறேன். இந்தத் தத்துவ விசாரத்தை அறிந்துகொண்ட கணம்  நான் இந்த உலகையே வென்றுவிட்டதாக எனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டேன். என் சிந்தனைக்கு முதிர்ச்சியையும் ஆத்மார்த்தமான மனநிறைவினையும் தந்த பத்மவியூகத்திற்கு என் நன்றிகள்!

 

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
கிறிஸ்டி.

 

தொடர்புடைய பதிவுகள்

முழுடிக்கெட்!

$
0
0

1

 

 

நான் 1985ல் லா.ச.ரா எழுதி முத்துப்பதிப்பகம் வெளியிட்ட த்வனி என்னும் சிறுகதைத்தொகுதியை வாங்கினேன். மூன்று ரூபாய் விலை. 1978ல் வெளியானது. முத்துப்பதிப்பக உரிமையாளர் என்னிடம் சொன்னார். ”முந்நூறு பிரதி அடிச்சேன் சார். இன்னும் எம்பது இருக்கு”

எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் அதற்கு மூன்று மாதம் முன்னால் நாகர்கோயில் ஜெயகுமாரி ஸ்டோர்ஸ் என்னும் புத்தகம் மற்றும் எழுதுபொருள் கடை நகுலனின் நினைவுப்பாதையை வெளியிட்டிருந்ததை நான் வாங்கினேன். நகுலனின் செலவில் வெளியான நூல். நாற்பதுபிரதிகள் பத்துவருடங்களில் விற்கப்பட்டிருந்தன. பின்னர் அதை சுந்தர ராமசாமியே ஆளனுப்பி பழையதாள் விலைக்கு வாங்கி இலக்கியவாசகர்களுக்கு இலவசமாக அனுப்பிவைத்தார். நகுலனைப்பற்றி சிற்றிதழ்களில் பேச்சுக்கள் ஆரம்பமானது அதற்குப்பின்னர்தான்

இதுதான் அன்றைய பிரசுரச்சூழல். அது வார இதழ்களின் பொற்காலம். குமுதம் விகடன் கல்கி ராணி என்னும் நான்கு இதழ்களைசார்ந்தே இருந்த வார இதழ் இயக்கம் குங்குமம், சாவி, இதயம்பேசுகிறது, தாய், தேவி பாக்யா என வளர்ந்து மூடியிருந்தது. சுஜாதாவும் பாலகுமாரனும் நட்சத்திரங்கள். சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி ஆகிய மூவரும் பெண் நட்சத்திரங்கள். இலக்கியவாதிகளாக மக்கள் அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே.

சுந்தர ராமசாமியை அவரது எதிர் கடையில் வேலைபார்த்த என் நண்பன் ராஜாமணிக்கே தெரியாது. சுஜாதாவின் வெறிரசிகன். ‘நீ எதுக்குலே அந்த சுதர்சன் ஓனருக்க கடையிலே எப்பமும் போயி இருக்கே? டவல் ஏவாரம் செய்யுதியா?” என்று அவன் கேட்டான். இவ்வளவுக்கும் அவரது ஜே.ஜே.சிலகுறிப்புகள் அப்போது புயலைக்கிளப்பிக்கொண்டிருந்தது. டீக்கோப்பைப்புயல் என்றால் அது மிகை, டீஸ்பூனுக்குள் புயல். அசோகமித்திரனைப்பற்றி அவரது பிள்ளைகளுக்கே தெரிந்திருக்காது

இச்சூழலில்தான் நான் எழுதவந்தேன். நான் என் ஆரம்பப்பள்ளி வயதிலேயே சாண்டில்யனையும் சுஜாதாவையும் வாசித்து வந்தவன்.  பள்ளிநாட்களிலிருந்தே பிரபல வார இதழ்களில் எழுதிக்குவித்தவன். ஆகவே அந்த எழுத்து எனக்கு சவாலாகத் தெரியவில்லை. கதை எழுதி கிடைக்கும் காசில் நண்பர்களுடன் பரோட்டா பீஃப் சாப்பிடுவேன். பரோட்டா அப்போதுதான் வரத்தொடங்கியிருந்தது. சினிமா பார்ப்பேன். ஒருதலை ராகத்தை மட்டும் நாற்பது முறை பார்த்திருப்போம்.

இலக்கியம் எனக்கு மலையாளம் வழியாக அறிமுகமாகியது. என் அம்மா சிறந்த இலக்கியவாசகி. நான் அம்மாவின் ஆதர்ச எழுத்தாளர்களான வைக்கம் முகமது பஷீர், ஹெமிங்வே, ஜார்ஜ் எலிய்ட வழியாக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டேன். தல்ஸ்தோயை நான் அம்மாவுக்கு அறிமுகம் செய்தேன்

 

நடுவே அரசியலில் புகுந்து ஆன்மீகமாகத் தட்டழிந்து ஒருவழியாக காசர்கோட்டில் தொலைபேசித்துறை ஊழியராக ஆனபின் மீண்டும் எழுதத் தொடங்கினேன். அப்போது சுந்தர ராமசாமியுடன் நேரடி உறவு உருவானது. அவரது தூண்டுதலால் நவீன இலக்கியத்திற்குள் நுழைந்தேன். 1986ல் கொல்லிப்பாவை இதழில் வெளிவந்த ‘கைதி’ என்னும் கவிதைதான் நவீன இலக்கியத்திற்குள் என் காலடி. நவீனத்துவத்தின் நிரந்தரக் கரு, எங்கோ அடைபட்டுவிட்டதான பதற்றம் , பதிவான கவிதை அது. அதை கொல்லிப்பாவையின் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் பாராட்டி எனக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார்

தொடர்ந்து கணையாழியில்   ‘நதி’ வெளிவந்தது. அசோகமித்திரனின் சிறிய குறிப்புடன் அக்கதை பிரசுரமாகி என்னை ஓர் எழுத்தாளன் என எனக்குக் காட்டியது. தீபம் இதழில்  ‘ரோஜாபயிரிடுகிற ஒருவர்’ ‘எலிகள்’ என கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1988ல் கோவை ஞானி  ஆசிரியத்துவத்தில் வெளிவந்த நிகழ் இதழில் வெளிவந்த  ‘போதி ‘, ‘படுகை’ ஆகிய இருகதைகளும் ஓர் எழுத்தாளனாக என்னை நிலைநிறுத்தின.

அக்கதைகளைப்பற்றி அன்று தொடர்ச்சியாக விவாதங்கள் நிகழ்ந்தன.படுகை மாயத்தன்மை கொண்ட சித்தரிப்பும் நாட்டார்பாடல்களின் மொழியும் கொண்ட படைப்பு. அதே வருடம் பொன் விஜயனின் புதியநம்பிக்கை இதழில் ‘மாடன்மோட்சம்’ வெளிவந்தது. நான் தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியன் என இந்திரா பார்த்தசாரதி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார்.  தமிழ்ச்சிறுகதையின் அடுத்தகட்டம் என்று அசோகமித்திரன் ஓரிடத்தில் எழுதினார்.

1988லேயே நான் ரப்பர் நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். அதன் முதல் வரைபடம் கொஞ்சம் பெரியது. அதை எழுதிமுடித்தபின்னர்தான்  நூலாக்கம் பற்றி யோசித்தேன். அன்று சொந்தச்செலவில்தான் எவரானாலும் நூல்வெளியிடவேண்டும். நீலபத்மநாபன் அன்று இலக்கிய நட்சத்திரம். அவரது நூல்களையே ஜெயகுமார் ஸ்டோர்ஸ் பணம் பெற்றுக்கொண்டுதான் வெளியிட்டு வந்தது.

மேலும் ஓராண்டுக்காலம் கழித்தபோது அகிலன் கண்ணன் நடத்திவந்த தமிழ்ப்புத்தகாலயம் அமரர் அகிலன் நினைவாக ஒரு நாவல்போட்டியை அறிவித்தது. டாக்டர் தா வே வீராச்சாமி, கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் நடுவர்கள். அச்சில் இருநூறு பக்கங்களுக்குள் நாவல் இருந்தாகவேண்டும். நான் என் நாவலில் இருபது சதவீதம் பகுதியை வெட்டி வீசி சுருக்கி அதை அனுப்பிவைத்தேன். வெளியேகொடுத்து தட்டச்சு செய்து வாங்க முந்நூறு ரூபாய் ஆகியது. அதுவே எனக்கு அன்று பெரிய தொகை

போட்டியில் முதல் பரிசு ரூ இரண்டாயிரத்தை ரப்பர் பெற்றது. 1990 அக்டோபரில் நாவலை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. அந்தவெளியீட்டுவிழாவன்று சென்னையில் பெருமழை. அண்ணாசாலையில் செத்த பூனைச்சடலம் ஒழுகிச்செல்வதைக் கண்டேன். இடுப்பளவு நீரில் துழாவி விழா நிகழுமிடத்திற்குச் சென்றேன். விழாவில்  ஞானக்கூத்தன், சா.கந்தசாமி போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்திரா பார்த்தசாரதியையும் அவர் மனைவி இந்திராவையும் அன்றுதான் சந்தித்தேன். அகிலனின் உறவினர்கள் அரங்கை நிறைக்க நூல் வெளியிடப்பட்டது

நூல் வெளியாகி சிலநாட்களிலேயே இரு வாசகர்கடிதங்கள் வந்தன. முதல் கடிதம் கோவை விஜயாவேலாயுதம் அவர்களால் எழுதப்பட்டிருந்தது. இரண்டாவது கடிதம் தியடோர் பாஸ்கரன் எழுதியது. இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு பேருந்தில் நடத்துநர் எனக்கு முழு டிக்கெட் வாங்கவேண்டும் என்று சொன்னபோது அக்கா முகம் சோர்ந்தாள். என் முகம் மலர்ந்தது. அம்மலர்ச்சியை அன்று அடைந்தேன்.

 

[அந்திமழை இதழில் வெளியான கட்டுரை]

 

ரப்பர் நினைவுகள்

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83

$
0
0

[ 13 ]

அஸ்தினபுரியின் விரித்த கைகளில் வைத்த தாமரைபோல் வடிவுகொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்தின்மீது வானமென கவிந்திருந்த குவைக்கூரைப் பரப்பை பின்னிநிறைந்த உடல்களாக மாற்றிப் பரவியிருந்த தேவர்களும் அசுரர்களும் நாகங்களும் இருட்தெய்வங்களும் பூதங்களும் கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் எண்திசைக்காவலரும் ஏழுமீன் முனிவரும் அருந்தவத்தோரும்  விழிதிறந்து கீழே நோக்கிக்கொண்டிருந்தனர். பெருமூச்சுடன் வசிஷ்டர் “முதற்பிழை” என்றார். விஸ்வாமித்திரர் “எப்போதும் முதலில் எழுவது அமுதே” என்றார்.

கரியநாகம் ஒன்று நெய்யருவிபோல வழிந்திறங்கி தருமனுக்குப் பின்னால் சென்று வளைந்து அவன் இடத்தோளுக்கு மேலாக எழுந்து ஏழுதலைப்படம் விரித்து ஆடியது. இந்திரன் சலிப்புடன் “எவர் வெல்லவேண்டுமென்பதை பகடைக்களம் தன் கோடுகளில் முன்னரே எழுதி வைத்திருக்கிறது. அவனுக்கு முதல் வெற்றியை அளித்து உள்ளத்தில் மாயையின் களிப்பை நிரப்புகிறது. ஊழென தன்முன் விரிந்துள்ள பகடைக்களத்தை ஆளும் தெய்வமென அவன் தன்னை எண்ணத்தொடங்குகிறான்… மூடன்” என்றான்.

சோமன் “அவனுள் இன்னும் வாழும் பேரறத்தானைச் சூழ்ந்துள்ளன அவன் மூதாதையர் அளித்த நெய்யும் சோமமும் உண்ட தெய்வங்கள். எளிதில் அவன் தோற்கமாட்டான்” என்றான். “பார்ப்போம்” என்றபடி கரிய உடல் வளைவுகளைச் சுழித்துச் சீறியது வாசுகி. அருகணைந்த அனலோன் “அவன் அகச்செவிகள் மூடியபடியே வருகின்றன. இத்தனை அருகே சூழ்ந்தும் அவன் தெய்வங்களை உணரவில்லை” என்றான். “ஆனால் அவன் உணர்ந்துகொண்டிருக்கிறான் என்னை!” என்றபடி கார்க்கோடகன் சகுனியின் மேல் எழுந்து மலைவாழையிலை போல படம் திருப்பினான். “அவன் காதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மெல்ல மெல்ல என்று.”

சகுனி தன் கையை தூக்கி “இந்திரப்பிரஸ்தத்திற்கரசே, இவ்விரண்டாவது ஆடலில் அஸ்தினபுரியின் சார்பாக அமர்ந்துள்ள நான் இந்நகரத்தில் ஓடும் மூன்று பேராறுகளை தங்களுக்கு பந்தயமென வைக்கிறேன்” என்றார். தருமன் புன்னகையுடன் “அதற்கு நிகரென இந்திரப்பிரஸ்தத்தின் பன்னிரு துறைமேடைகளையும் நான் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.  சகுனி “ஏற்றேன்” என்றார். “அஸ்தினபுரியின் ஆறுகள் வழியாக இந்திரப்பிரஸ்தத்தின் வணிகர்கள் ஒழுகுவார்கள்” என்று தருமன் சிரித்தபடி பகடைகளை சகுனியிடம் அளித்தார். எவ்வுணர்ச்சியுமில்லாமல் “நன்று” என்றபடி சகுனி பகடைகளை உருட்டினார்.

“ஆறு” என்று அறிவித்தான் நிமித்திகன். அவரது படைமுகப்பில் ஆறு வில்லவர்கள் எழுந்து முன்நின்றனர். தருமன் பகடைகளை வாங்கி நடனமென கைநெகிழ  உருட்டி  குனிந்து பார்த்தார். “பன்னிரண்டு” என்று அறிவித்தான் நிமித்திகன். தருமன் தாடியை நீவியபடி திரும்பி அர்ஜுனனை பார்த்தார். பின்பு இருவிரல்களால் காய்களை நகர்த்தி கவசப்படை ஒன்றை தன் களத்தில் அமைத்தார். “மூடன்! மூடன்!” என்றார் வசிஷ்டர். “வெல்லும்போதே அச்சம் கொள்ளாதவன் சூதில் கடந்து செல்வதில்லை” என்றார். விஸ்வாமித்திரர் “அவன் ஊழ் அவனைச் சூழ்ந்துள்ளது” என்று நகைத்தார்.

கூரையிலிருந்து வழிந்திறங்கிய பிறிதொரு நாகம் தருமனின் அருகே தலைதூக்கி வலத்தோள் வழியாக நோக்கி நின்றது. சகுனி தன் வில்லோர் படையை அம்பென குவித்து முன் கொண்டுவர அகல்விளக்கின் சுடரைப் பொத்தும் கைகளைப்போல் தன் படையை மாற்றி அதை சூழ்ந்தார் தருமன். இருமுறை ஒன்பதும் ஒருமுறை எட்டும் பிறிதொருமுறை பன்னிரண்டும் அவருக்கு விழுந்தன. தன் முழுப்படையுடனும் அலைபோல் அறைந்து சகுனியின் படையை சிதறடித்தார். இறுதிக்காயும் களம் விட்டுச் சென்றபோது வில்லேந்திய அவர் படைத்தலைவன் சகுனியின் அரியணையில் ஏறி அமர்ந்தான்.

கைகளை கட்டிக்கொண்டு தன் பீடத்தில் சாய்ந்து “இவ்வாடலும் முடிந்தது, மாதுலரே” என்றார் தருமன். சகுனி நீள்மூச்சுடன் “ஆம்” என்று தலையசைத்தார். துரியோதனன் எழுந்து இறுகிய முகத்துடன் கையில் நீர்விட்டு தன் நதிகளை தருமனுக்கு அளித்தான். சூழ்ந்திருந்த அவை உடலசைவில்கூட உளம் எஞ்சாமல் சிலைத்திருந்தது. தருமன் “மூன்றாவது ஆடலை தாங்கள் தொடங்கலாம், மாதுலரே” என்றார். “அல்லது ஆடலை முடிப்பதென்றாலும் ஆகும்.” சகுனி “எளிதில் முடியாது இப்போர்” என்றார். “ஆம்” என தருமன் புன்னகைத்தார்.

வசிஷ்டர் கைகளை நீட்டி “மூடா! நிறுத்து! போதும்!” என்றார். இரு நாகங்களும் பத்தி புடைக்க அவர் இருபக்கங்களிலும் விரிந்து மெல்ல அசைய அவர் செவியசையும் வேழமுகம் கொண்டவராகத் தோன்றினார். சகுனி “இந்திரபுரிக்கரசே! இதோ அஸ்தினபுரியின் தலைவர் தனது மணிமுடியையும் செங்கோலையும் பந்தயமென வைக்கிறார்” என்றார். தருமன் புன்னகையுடன் துரியோதனனை பார்த்தபின் “ஒப்புகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரியணையை நான் பந்தயமென வைக்கிறேன்” என்றார்.

“என்ன செய்கிறான்…!” என்று கூவியபடி தெற்குமூலையிலிருந்து முப்புரிவேலை சுழற்றியபடி யமன் எழுந்தான். “விதுரா, நீ என்ன செய்கிறாய் அங்கு? சொல் அவனிடம்!” அக்குரலைக் கேட்டவர் போல விதுரர் உடல் அதிர சற்று எழுந்து பின் அமர்ந்தார். “நிறுத்து அவனை…!” என்று யமன் கூவ விதுரர் நிலையழிந்தார். ஆனால் அக்குரல் தருமனை சென்றடையவில்லை.

சகுனிக்கு மூன்று விழுந்தது. அவரது குதிரைப்படைத்தலைவன் இருகுதிரை வீரர்களுடன் களத்தில் எழுந்தான். பகடையை கையில் தருமன் வாங்கியதும் யமன் அவனை அணுகி அவன் நெற்றியை ஓங்கி அறைந்து “நிறுத்து, மூடா! நீ எல்லை கடக்கத் தொடங்கிவிட்டாய்” என்றான். கைகளும் தலையும் அதிர தருமன் ஒருகணம் பின்னகர்ந்தார். தலையை கையால் மெல்ல தட்டிக்கொண்டார். நீள் மூச்சு விட்டு அதை கடந்து சென்றார்.

அவர் பகடைநோக்கி கைகளை நீட்ட அக்கையைத் தொட்டு அதில் வால் சுழற்றி பின்னி மேலேறி அவன் கைவிரல்களுக்கு நிகராக தன் பெரும் பத்தியை விரித்தது நாகம். பிறிதொன்று அவன் காதில் மெல்லிய சீறலாக “ஆடு, வெற்றி அணுகுகிறது. இவ்வாடலுடன் இக்களம் விட்டெழுந்து வெல்லற்கரிய பாரதவர்ஷத்தின் சத்ரபதி நான் என்று கூவு! இதுவே அத்தருணம்” என்றது.

வருணன் “பகடைப்புரளல் என்பது தெய்வங்களும் அஞ்சும் முடிவிலி. அவனோ தன் விரல்களில் அது ஆற்றப்படுவதாக எண்ணுகிறான். வீணன்!” என்றான். “சூது கண்டு மகிழ்பவர்களும் வீணர்கள்தான். மூடர்கள்தான்” என்று திரும்பி அவனை நோக்கி சீறினான் யமன்.  “அறத்தான் நான் என்பதே ஆணவங்களில் தலையாயது. அவன் வீங்கியவன். அழுகுபவன்” என்று சலிப்புடன் விஸ்வாமித்திரர் சொன்னார்.

ஒன்பது விழுந்ததும் புன்னகையுடன் மீசையை மேல் நோக்கி நீவியபடி தருமன் தன் படையை முன்னெடுத்தார். எட்டும் ஆறும் பன்னிரண்டும் ஒன்பதுமென பகடை அவருக்கு அள்ளித்தர அவர் தரப்பிலிருந்து களங்களுக்குள் வில்லம்புவேல்யானைபுரவி கொண்டு எழுந்த படைவீரர்கள் இரு கைகளையும் விரித்த நண்டு போலாகி சகுனியின் படை நோக்கி சென்றார்கள்.

சகுனி தன் பகடையை உருட்டியபோது பன்னிரண்டு விழுந்தது. அவரது முகம் மெழுகுப்பொம்மையென ஆயிற்று. வலசைப்பறவைகளென கூர்முனை கொண்ட அவரது படை இருபுறமும் வீரர்களை திரட்டிக்கொண்டு தருமனை நோக்கி வந்தது. மீண்டுமொரு பன்னிரண்டு. தருமன் இருமுறை மூன்று விழுவதைக் கண்டு முதல்முறையாக உள்ளம் நடுங்கினார். ஆனால் அவர் செவியருகே என ஒரு குரல் “பன்னிரண்டு வருகிறது… இதோ” என்றது. சகுனியின் ஒன்பதுக்குப் பின் அவருக்கு இரண்டு விழுந்தது. கைகள் நடுங்க காய் நகர்த்தினார்.

மீண்டும் சகுனிக்கு பன்னிரண்டு விழுந்தது. தனக்கு நான்கு என்பதை காண்கையில் விழிமுன் நீராவியென காட்சி அலையடிப்பதை தருமன் உணர்ந்தார். “அஞ்சாதே… எண் எத்தனை விழுந்தாலும் ஆடுபவனே களம் அறிந்தோன்” என்றது நாகம். “நீ ஊழையும் வென்றுகடப்பதைக் காணட்டும் இந்த அவைக்களம்.” அவர் நெஞ்சை நிறைத்த பெருமூச்சை ஊதி வெளிவிட்டார். “உன் முன் விரிந்திருப்பது நீ எண்ணி ஆடி வென்று கடக்கும் களம்… எண்ணல்ல, உன் எண்ணத்திறன் வெல்லட்டும்.”

மீண்டும் ஒரு முறை பன்னிரண்டு விழ தருமனின் படையைச் சூழ்ந்து சிதறடித்து அவர் அரியணையைச் சூழ்ந்து நின்றது சகுனியின் படை. அவர் மணிமுடியைச் சூடினான் சகுனியின் படைத்தலைவன். சகுனி பெருமூச்சுடன் மெல்ல உடல் தளர்ந்து தன் காலை கையால் தூக்கி அசைத்து அமர்த்தினார். ஏவலன் ஒருவன் பொற்கிண்ணத்தில் அவருக்கு இன்நீர் கொண்டு வந்தான். அதை அருந்தி மரவுரியால் தாடியில் நீர்த்துளிகளை துடைத்தபின் புன்னகைத்தார்.

சிதறிய தன் களத்தை நோக்கி தாடையை கையில் தாங்கி தருமன் அமர்ந்திருந்தார். “அரசே…” என்றான் ஏவலன். விழித்தெழுந்து “ஆம்” என்றார். அவன் சொன்னதை புரிந்துகொண்டு தருமன் எழுந்து பொற்கிண்டியின் நீரை கையிலிட்டு மும்முறை சொட்டி “இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியை அஸ்தினபுரியின் அரசருக்கு கொடையென இதோ அளித்தேன். ஆம். அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றார். பீமனின் உடலில் நிகழ்ந்த அசைவை ஓரவிழி காண உடல் துணுக்குற்று திரும்பி நோக்கினார். பின்னர் தோள்கள் தளர விழியோரம் ஈரம்கொள்ள தலையை இல்லை என்பதுபோல் அசைத்தார்.

“விதுரா, இத்தருணம் உன்னுடையது. எழுக!” என்றான் யமன். விதுரர் எழுந்து உரத்த குரலில் “மணிமுடியும் கோலும் வைத்து சூதாடுவதற்கு மரபுள்ளதா, மூத்தவரே?” என்றார். துரியோதனன் “அதை ஆடுவோர் முடிவு செய்யட்டும். மரபென்று ஒன்றும் இதிலில்லை” என்றான். கணிகர் “அமைச்சரே, தெய்வங்களைக்கூட வைத்து ஆடியிருக்கிறார்கள் முன்னோர். நூல்களை நோக்குக!” என்றார். விதுரர் தருமனிடம் “அரசே, இது குடிவிளையாட்டென்றே சொல்லப்பட்டது. முடிவைத்து ஆடுதல் முறையல்ல” என்றார்.

தருமன் தவிப்புடன் வாயசைக்க “போதும்… முடிவைத்ததும் நீங்கள் முழுக்க தோற்றுவிட்டீர்கள். இனி அஸ்தினபுரியில் ராஜசூயம் நிகழலாம். அஸ்வமேதப்புரவி உங்கள் மண்ணை மிதித்துக் கடக்கலாம்…. இதற்காகத்தானே இந்த ஆடல்!” என்றார் விதுரர். “போதும், அரசே. கைகூப்பி களம் விட்டு எழுங்கள்!” என்று குரல் உடைய விதுரர் கூவினார். “இப்போதெழுந்தால் உங்கள் குடி எஞ்சும். சொல் மிஞ்சும்…”

தருமன் நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் முன் நின்று யமன் கூவினான் “நீ முற்றிலும் தோற்பாய். மூடா, இன்னுமா அதை உணரவில்லை நீ? விலகு!” அவர் செவியருகே அசைந்த நாகம் காற்றென சொன்னது “அடுத்த களத்தில் நின்றிருப்பதென்ன? அதை அறியாமல் விலகுவாயா? அது நீ இதுவரை காணாத பெருங்கொடை என்றால் நீ இழப்பதென்ன என்று அறிவாயா?” இன்னொரு நாகம் “அஞ்சி எழுகிறாயா? எக்களமாயினும் அஞ்சாமையே வீரமெனப்படுகிறது” என்றது.

“இல்லை. நான் ஆடவே விழைகிறேன்” என்றார் தருமன். அதை அவர் வாய் சொல்ல செவிகள் கேட்டன. உள்ளம் திடுக்கிட்டு நானா நானா சொன்னேன் என வெருண்டது. “போதும், அரசே… போதும்… நான் சொல்வதை கேளுங்கள்” என்றார் விதுரர். “இனி ஒரு களம். அங்கே நிறுத்திக் கொள்கிறேன்” என்று தருமன் சொன்னார். “அமைச்சரே, இனி ஒரு சொல் எடுக்க உங்களுக்கு ஒப்புதலில்லை… அமர்க!” என்றான் துரியோதனன். கைகள் பதைக்க கண்ணீர் ததும்ப விதுரர் அமர்ந்தார்.

சகுனி “தாங்கள் எப்போது விழைந்தாலும் நிறுத்திக் கொள்ளலாம், இந்திரபுரிக்கரசே” என்றார். தருமன் “நான் ஆடுகிறேன்” என்றார். “அச்சமிருந்தால் எளிய பந்தயங்களை வைக்கலாம். உங்கள் மேலாடையை, கச்சையை, கணையாழியை… எதை வேண்டுமென்றாலும்” என்றபின் நகைத்து “ஆனால் நான் வைப்பது அஸ்தினபுரியின் அரசையும் தலைநகரையும்… ஆம்” என்றார் சகுனி. தருமன் வெறிகொண்டவராக பகடைகளை கையிலெடுத்து உருட்டியபடி உரத்த குரலில் “இதோ இந்திரப்பிரஸ்தப் பெருநகரை, அதன் மேல் மின்கதிர் சூடி அமர்ந்த இந்திரன் பேராலயத்துடன் வெண்கொற்றக்குடையுடன் கோட்டைகளுடன் காவலருடன் நால்வகைப் பெரும்படையுடன் இப்பகடைக்களத்தில் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.

“நன்று” என்று புன்னகைத்த சகுனி துரியோதனனை நோக்கி திரும்ப துரியோதனன் எழுந்து கைகளைத் தூக்கி “இங்கு நிகழ்க இறுதிப்போர்!” என்றான். தருமன் பகடையை உருட்ட வசிஷ்டர் “அவன் முகம் ஏன் பெருவலி கொண்டவன் போலிருக்கிறது?” என்றார். “அது ஓர் உச்சம். உச்சங்களில் மானுடர் தங்கள் எல்லைகளை கண்டடைகிறார்கள். அதைக் கடந்து தங்களுள் உறையும் தெய்வங்களை முகம்கொள்கிறார்கள்” என்றார் விஸ்வாமித்திரர். “அதன்பொருட்டே வலியை துயரை சிறுமையை இறப்பை விரும்பி தேடிச்செல்கிறார்கள்.”

தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவர் கொண்டிருந்த மெல்லிய பதற்றம் அடங்க புன்னகையுடன் தன் படைகளை ஒருக்கினார். தனக்கு மூன்று விழுந்ததும் படைக்களத்தின் மூலையில் சகுனி ஒரு சிறு படையை அமைத்தார். மீண்டும் ஒரு பன்னிரண்டு விழுந்ததும் துணைப்படையை அமைத்தார் தருமன். அவர் கொண்டிருந்த கலக்கம் மறைய தாடியை நீவியபடி புன்னகையுடன் சகுனியை நோக்கினார்.  மறுமுறை சகுனிக்கு பன்னிரண்டு விழுந்தது. தருமனின் இடதுவிழி அனலில் விழுந்த வண்ணத்துப்பூச்சி என சுருங்கி அதிர்ந்தது.  மீண்டுமொரு பன்னிரண்டு விழுந்ததும்  சகுனியின்  படை பெருகி பிறிதொரு பன்னிரண்டில் மும்மடங்காகியது. பிறிதொரு பன்னிரண்டில் பேருருவம் கொண்டது.

செயலற்றுப் போய் நடுங்கும் கைகளுடன் தருமன் உருட்டிய பகடையில் ஒன்று விழ அவர் தன் நெற்றி மையத்தை இருவிரலால் அழுத்திக்கொண்டு தலைகுனிந்தார். பிறிதொருமுறை பன்னிரண்டு விழுந்தபோது சகுனியின் படை அவரை முழுமையாக சூழ்ந்துகொண்டது. மீண்டும் இருமுறை பன்னிரண்டு விழுந்தபோது தருமனின் படைகள் களத்திலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டன. அவர் அரியணை மீது ஏறி நின்ற சகுனியின் வேல்வீரன் “வெற்றி” என்றான். “சகுனிதேவரின் படை வெற்றிகொண்டது” என கிருபர் அறிவித்தார்.

கைகால்கள் உயிரை இழந்தவைபோல் தளர தன் பீடத்தில் மடிந்து விழுந்திருந்தார் தருமன். அவைக்கூடத்தில் சுழன்ற காற்றில் அவர் குழல் தவிப்புடன் பறந்துகொண்டிருந்தது. ஒன்றும் நிகழாதது போல் தன் காய்களை ஒருங்கமைத்து மீசையை நீவி முன் செலுத்தியபடி திரும்பி ஏவலனை பார்த்தார் சகுனி. அவன் கொண்டு வந்த இன்நீரை சில மிடறுகள் அருந்தியபின் குவளையை திருப்பி அளித்தார்.

“அவன் தன் தவக்குடிலுக்கு மீள்கிறான்” என்றான் சோமன். “அங்குள்ள அமைதியை, குளிர் தென்றலை, தளிர்ப்பச்சை ஒளியை அறியத் தொடங்கிவிட்டான். இங்கிருந்து இனி அவன் ஆடமுடியாது.” தருமன் அருகே சென்று அவர் தலை மீது கைவைத்து யமன் சொன்னான் “மைந்தா, எழுக! இங்கு நிறுத்திக்கொண்டாலும் நீ மீளலாகும். போதும்! உன் எல்லையை கண்டுவிட்டாய்.” “ஆம், தந்தையே! இதற்கப்பால் இல்லை” என்றார்.

“இதுவா உன் எல்லை? மூடா, இவ்வளவா நீ?” என சீறியது நாகம். “நான்கு முறை பன்னிரண்டென பகடை புரண்டால் உன் கல்வியும் திறமும் தவமும் அழியுமா? நான்கு பகடைக்கு நிகரல்லவா நீ?” மெல்ல உடலசைத்து அவர் மடியில் உடல் வளைத்தெழுந்து முகத்துக்கு முன் படம் தூக்கி நின்ற இன்னொரு நாகம் கேட்டது. “அஞ்சுகிறாயா? எதை அஞ்சுகிறாய்? ஊழையா? உனது ஆற்றலின்மையையா?”

“அறியேன்” என்றார் தருமன். “அறிவிலியே, ஓர் ஆடலில் தோற்றதற்காக களம் விட்டு விலகுகையில் நீ இயற்றுவதென்ன என்று அறிவாயா? ஒற்றைக் காலடிக்கு அப்பால் உனக்கென காத்து நிற்பது எதுவென்று நீ எப்படி அறிந்தாய்? இத்தோல்விக்கு ஒரு கணம் முன்பு இதை அறிந்திருக்கவில்லை. வரும் வெற்றிக்கு ஒருகணம் முன்பும் நீ அறியாதிருக்கக்கூடும் என்று ஏன் எண்ணவில்லை? இனி ஒரு களம். ஆம், ஒற்றைக்களம்.  வென்றால் நீ இழந்தவை அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என்றால் இக்கணத்தின் எண்ணங்களுக்கு என்ன பொருள்?”

தருமன் “அறியேன்” என்றார். “நீ அஞ்சியவை அகன்றவை எத்தனை பொருளிழந்தன காலத்தில் என்று கண்டிருப்பாய். இத்தருணமும் அதுவே.  எடு பகடையை!” என்றது நாகம். தருமன் “ஆனால் நான் தோற்றால்…” என்றார். “ஏற்கெனவே தோற்றுவிட்டாய். முடியும் நாடும் இழந்த பின்னர் வெறும் தரையில் நின்றிருக்கிறாய். இழப்பதற்கு உன்னிடம் ஏதுமில்லை. எஞ்சுவதை வைத்து ஆடி வென்றால் அனைத்தையும் நீ அடையமுடியும் என்றால் அதைவிட்டு விலகுவாயா?” நாகம் விழியொளிரச் சீறியது. “அவ்வண்ணம் விலகியபின் அதை எண்ணி எண்ணி வாழ்நாளெல்லாம் வருந்துவாய்…”

சகுனி பகடையை தன் கைகளால் தொட்டபடி உரக்க “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே! இதோ, நான் மீண்டும் ஆட சித்தமாக இருக்கிறேன். இந்த பன்னிரு களமேடையில் தாங்கள் இழந்த அனைத்தையும் அஸ்தினபுரியின் அரசர் பந்தயம் வைக்கிறார். தன்னையும் உடன் பந்தயமென வைக்கிறார். தன் தம்பியரை சேர்க்கிறார். இதுவே அறைகூவல்களில் தலையாயது. ஆடுகிறீர்களா?” என்றார்.

தருமன் துலாமுள்ளென நின்று தடுமாற அவர் தோளைத்தொட்டு “மைந்தா, எழு! இது உன் களமல்ல. இங்கு நிகழ்வது என்னவென்று நீ அறியவில்லை” என்றான் யமன். மறுபுறம் தோன்றிய அனலோன் “உன் முன்னோர் எனக்கு அளித்த அவியின் பொருட்டு ஆணையிடுகிறேன்! இதற்கப்பால் செல்லாதே! இங்கு நிகழ்வது ஆடல் அல்ல. தன் விழைவே என கையை பயிற்றுவித்த ஒருவனின் பகடைகளுடன் நீ பொருதுகிறாய். நிறுத்து! எழுந்து விலகு!” என்றான்.

“அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை” என்றபடி எட்டு கைகளும் எரியும் விழிகளுமாக கரிய தெய்வமொன்று தோன்றியது. “ஏழு பாதாளங்களுக்கும் அடியில் இருக்கும் இன்மையெனும் கருவெளியின் தெய்வம் நான். பதினான்கு உலகங்களாலும் அழுத்தி உட்செலுத்தப்பட்டவை புதைந்துள்ள நிலம் அது. யுதிஷ்டிரா, இளமையிலிருந்து நீ வென்றுகடந்தவை அனைத்தும் இன்று என் கையில் உள்ளன. ஒவ்வொன்றாக பேருருக்கொண்டு அவை இப்போது உன்னிடம் வருகின்றன.” அதன் குழல் ஐந்து புரிகளாக தொங்கியது. கூந்தல் கரிமுனை அனலென பறந்து சீறியது.

தருமன் குளிர்கொண்டவராக நடுங்கினார். “காமமும் குரோதமும் மோகமும்” என்றது கரியதெய்வம். “ஆடுக! அறத்தோனாக அமர்ந்து நீ இழந்தவற்றை வெறும் களிமகனாக நின்று வெல்க!” தருமன் கைகள் நடுங்க “எங்கிருக்கிறீர், அன்னையே? இக்குரல் என்னுள் எழுவதா?” என்றார். “உன்முன் நின்று பேசுகிறேன். எத்தனை நாள்தான் அறத்தோனாக மேடை நடித்து சலிப்பாய்? கவசங்களையும் ஆடைகளையும் தசையையும் தோலையும் கழற்றி வீசு! நீயென இங்கு நில்! இருளென விழைவென வஞ்சமென தனிமையென ஓங்கு!”

“உண்மைக்கு பேராற்றல் உண்டென்று அறிக!” என்றது தெய்வம். “அறத்தோர் அனைவரும் ஒருகணமேனும் அமர்ந்து எழுந்த பீடம் ஒன்றுள்ளது, மைந்தா. அதுவே கீழ்மையின் உச்சம். நிகரற்ற வல்லமை கொண்டது அது. முற்றிருளுக்கு நிகரான படைக்கலம் பிறிதொன்றில்லை. ஒருபோதும் ஒளி அதை வெல்வதில்லை என்றுணர்க! எழுக!”

தருமன் பகடைக்காய்களைத் தொட்டு “என் நான்கு தம்பியரையும் அவர்களின் இளமைந்தர்களையும் இப்பன்னிரு பகடைக்களத்தில் பந்தயமென வைக்கிறேன்” என்றார். அவையில் அமர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் முதுகில் ஒரு சாட்டை அறைந்து சென்றதுபோல் அதை உணர்ந்தனர். சௌனகர் “அரசே..” என்றார். துரியோதனன் கைகளை தட்டிக்கொண்டு எழுந்து “சொல் எழுந்துவிட்டது. அவை கேட்டுவிட்டது. இனி அரசர் பின்சுவடு வைக்க மாட்டார் என்று நம்புகிறேன்” என்றான். “இல்லை” என்றார் தருமன். துரியோதனன் உரக்க சிரித்து “அஸ்தினபுரிக்கு தொழும்பர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள். ஆட்டம் நிகழட்டும்” என்றான்.

சகுனி பகடையை நோக்கி எடுத்துக்கொள்ளும்படி விழிகாட்ட தருமன் அவற்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து தலைகுனிந்து வேண்டினார். “எந்தையரே! தெய்வங்களே! எனக்காக அல்ல, இங்கு பிழைத்தது என்ன என்று அறிவேன். நான் இழைப்பவை எவையென்றும் தெளிந்துள்ளேன். இத்தனை தொலைவு வந்துவிட்டேன். இழந்து மீண்டு இழிவுறுவதைவிட அறியாத இவ்விருட்பாதையில் ஒற்றை அடி முன்னெடுத்து வைத்தால் ஒருவேளை கைவிட்டுச் சென்ற அனைத்தையும் வெல்ல முடியுமென்று எண்ணியே இதை ஆற்றுகிறேன். என் பிழை பொறுத்தருளுக! எந்தையர் செய்த தவத்தின் பொருட்டும் என் தம்பியரின் பேரன்பின் பொருட்டும் எனக்கு அருள்க! நான் வென்றாக வேண்டும்” என்றபின் பகடையை உருட்டினார்.

அதில் ஒன்று விழுந்தது. அவரால் நம்பவே முடியவில்லை. “ஒன்று” என குரல் ஒலித்தபோது குளிர் காற்றொன்று அறைக்குள் வந்து சுழன்று சென்றதுபோல கூடத்தில் அமர்ந்தவர்கள் சிலிர்த்தனர். ஒற்றை வீரனாக தருமனின் வில்லவன் களம் நின்றான். பன்னிரண்டு பெற்ற சகுனியின் படை பரல்மீன் கூட்டமென கிளம்பியது. இரண்டும் மூன்றும் மீண்டும் ஒன்றும் விழுந்தது தருமனுக்கு. ஓரிரு துணைவருடன் தனித்து அவர் படைவீரன் சகுனியை நோக்கி சென்றான். நான்கு முறையும் பன்னிரண்டு விழ சகுனி அவரை வென்று களம் நிறைத்தார்.

தருமன் விழிகள் நோக்கிழக்க எங்கிருக்கிறோமென்றே அறியாமல் அமர்ந்திருந்தார். பின்னர் விழித்துக்கொண்டு தன்னுள் திரும்பி ஓடினார். தன் தவக்குடிலை அடைந்து அங்கே தனித்த பாறைமேல் விழிமூடி அமர்ந்தார். அவர் முகம் தெளிவடைந்தது. இயல்பாக உடல் நீட்டினார். அவரில் எழுந்த அமைதியை அவை திகைப்புடன் நோக்கியது. பெருமூச்சுடன் இருகைகளையும் தூக்கி சோம்பல்முறித்து கையால் புண்பட்ட காலை தூக்கி அசைத்தமர்த்தி முனகிக் கொண்டார் சகுனி. முகத்திலோ விழிகளிலோ எவ்வுணர்வும் எஞ்சியிருக்கவில்லை.  அவை ஓர் உயிர்கூட அங்கிலாததுபோல் முற்றிலும் அமைதியில் அமைந்திருந்தது. கண்களை மூடி குவித்த கைகளின் மேல் தாடியுடன் முகவாயை ஊன்றி ஆழ்துயிலிலென பீஷ்மர் அமர்ந்திருந்தார்.

தருமன் அருகே குனிந்து ஏவலன் “அரசே…” என்றான். அவர் திடுக்கிட்டு விழித்து “ஆம், ஆம்” என்றபடி கை நீட்ட பொற்குவளையிலிருந்து ஊற்றிய நீரை வாங்கி “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்று சொட்டினார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் தங்கள் பீடங்களிலிருந்து எழுந்தனர். மேலாடைகளை சீரமைத்தபடி நிரைவகுத்து அவைமுன் வந்து நின்றனர். அர்ஜுனன் ஒருகணம் விழிதூக்கி அவையை நோக்கியபின் தலைகவிழ்ந்தான். பீமன் செருகளத்தில் எதிர்மல்லனை நோக்கி நிற்கும் தோரணையில் இருபெரும் கைகளை விரித்து நெஞ்சை நிமிர்த்தி தலை தூக்கி தருக்கி நின்றான். ஏதும் நிகழாதவர்கள் போலிருந்தனர் நகுலசகதேவர்கள்.

துரியோதனன் நகைத்தபடி “தேர்ந்த தொழும்பர்கள்! எந்த அரசனுக்கும் நல்ல தொழும்பர் அருஞ்செல்வங்களே” என்றான். பீமனிடம் “அடேய் மல்லா, தொழும்பர்கள் மேலாடை அணியலாகாது என்று அறியமாட்டாயா?” என்றான். துச்சாதனன் “ஆம், அவர்கள் அணிபூணுவதும் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை” என்றான்.

“ஆம் அரசே, அறிவோம்” என்றபடி பீமன் தன் மேலாடையை எடுத்து இடையில் இறுக கட்டிக்கொண்டான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் தங்கள் மேலாடையை இடையில் சுற்றினர். காதணிகளையும் ஆரங்களையும் தோள்வளைகளையும் கங்கணங்களையும் கணையாழிகளையும் கழற்றி ஒரு வீரன் கொண்டுவந்து நீட்டிய தாலத்தில் வைத்தனர். துரியோதனன் “போர்க்களத்திலன்றி தொழும்பர்கள் காலணி அணிவதும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல” என்றான். பீமன் “ஆம், பொறுத்தருள்க!” என்றபடி தன் பாதக்குறடுகளை கழற்றினான். அவற்றை இரு ஏவலர்கள் இழுத்து அகற்றினர். திறந்த மார்புடன் நால்வரும் சென்று அவைமேடையின் இடப்பக்கமாக கைகட்டி நின்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு –சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு

$
0
0

q

அன்புள்ள ஜெ.

நான் ”சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு” ஆசிரியர் – மிஷல் தனினோ (மொழிபெயர்ப்பு –வை.கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம்) புத்தகத்தை வாசித்தேன்.

இந்த புத்தகம், இலக்கியம், பாரம்பரியம், நிலவியல், புதைபொருள் ஆய்வுகள், காலநிலை சாஸ்திரம் மற்றும் பல அறிவியல்களின் வண்ணமயமான ஊடுபாவுகளால் நெய்யப்பட்டுள்ளது.

இலக்கியம்,தத்துவம்,அறிவியல் போன்ற எந்த துறையில் ஆர்வம் இருப்பவராக இருந்தாலும், அவர்களுக்கு வரலாற்று உணர்வின் அவசியத்தை  நீங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளீர்கள். அதை நான் 2014 ஊட்டி சந்திப்பிலும், கோவையில் நடந்த பகவத்கீதை உரையிலும் அதை நான் நேரடியாக உங்கள் மூலம் உணர்ந்துள்ளேன். அந்த வகையில் இந்த புத்தகம் மிக முக்கியமானதாக எனக்கு பட்டது. இந்த புத்தகம் இந்தியாவின் முன் வரலாற்று காலகட்டத்தை (PRE HISTORIC PERIOD) பற்றி மிக விரிவாக ஆராய்கிறது. காணாமல் போன சரஸ்வதி நதியை கண்டடைவதுடன் முதல் பகுதி தொடங்குகிறது. அதற்கு நூலாசிரியர் மூன்றுவிதமான சான்றுகளை எடுத்துக்கொள்கிறார் 1. இலக்கிய சான்று 2. உள்ளுர் நம்பிக்கைள் மற்றும் கதைகள் 3. பல்வேறு துறையை சேர்ந்த அறிவியல் ஆய்வுகள்.

குறிப்பாக இலக்கியச்சான்றை பற்றி குறிப்பிடும் போது இலக்கியத்தில் மிகை மதிப்பீடுகளும் தொன்மமாக்கலும் இருக்கும். ஆனால் இலக்கியம் சாராம்சத்தை பெரும்பாலும் மாற்றுவதில்லை. அந்த வகையில் இலக்கியத்தையும் எடுத்துகொள்கிறார்.

முதல் பகுதியில் 1788ல் புராதான சரஸ்வதியின் துண்டாடப்பட்ட பகுதியான கக்கர் நதியின் குறிப்புகளை கொண்ட பிரிட்டிஷ் மேஜரின் புத்தகத்தோடு தொடங்கி 2006ல் ஐ.எஸ்.ஆர்.ஒ விஞ்ஞானிகளின் செயற்கைகொள் மூலம் கண்டடைந்து வரையப்பட்ட புராதான சரஸ்வதியின் நதியின் வரைபடத்தை வரையும் வரை தொடர்ந்தது. சரஸ்வதி நதியின் இருப்பையம் காலத்தையும் நிறுவுகிறார் ஆசிரியர்.

இரண்டாவது பகுதியில் 1924ல் ஜான் மார்ஷல், தயா ராம் ஷானி, மது ஸ்வரூப் வத்ய ஆகியவர்களின் துணையோடு ஹரப்பா மொஹஞ்ஜோதரோ நாகரிகத்தை அகழ்வாய்வின் மூலம் கண்டடைகிறார். இந்திய சுதந்திரத்தின் போது 40 அகழ்வாய்விடங்களாக இருந்த்து தற்போது தோராயமாக 3000-3500 இடங்களாக அதிகரித்துள்ளது.

ஹரப்பா காலகட்டம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. (முற்காலம், முழுவளர்ச்சி காலகட்டம், பிற்காலம்). முதலில் சிந்து சமவெளி நாகரிகமாக இருந்தது பின்பு சரஸ்வதி படுகையிலும் குஜராத் பகுதியிலும் (60%) அதிகமான அகழ்வாய்விடங்கள் இருந்ததால் சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாறியது. ஹரப்பாவாசிகள் அப்போதிருந்த எகிப்து மெசபடோமியா நாகரிகங்களோடு வணிக தொடர்பு வைத்திருந்தார்கள். ஹரப்பா நாகரிகம் 8 லட்சம் ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இப்போதிருக்கும் இந்தியாவின் கால் பகுதியாகும். இவ்வளவு பெரிய பரப்பாக இருந்தும் அங்கு இராணுவம் அரசர் இருந்ததற்கான எவ்விதமான சான்றும் கிடைக்கவில்லை. இது ஒரு பெரும் புதிர்தான். ஹரப்பா நாகரிகத்திலிருந்த முக்கியமான நான்கு நகரங்களின்(பனவாலி,காலிபங்கன்,லோத்தல்,தோவிரா) கட்டமைப்பு மிக விரிவாக ஆராயப்படுகிறது.ஹரப்பா நாகரிகம் மறைந்ததற்கான மூன்று காரணங்களை குறிப்பிட்டு அதில் சுற்றுப்புறச்சூழலில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சுற்றுபுறச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் சரஸ்வதி நதி பல துண்டுகளாக பிரிந்து பின்பு அது வறண்டது. அத்தோடு சரஸ்வதி நதிகரையில் தோன்றி வளர்ந்த ஹரப்பா நாகரிகம் மறைந்ததா அல்லது தொடர்ந்ததா என அடுத்த பகுதியில் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். இவ்வளவு விரிவான ஆராய்ச்சிகள் நடந்திருந்தாலும் நமது பாடதிட்டத்தில் 1930ல் நடந்த ஆய்வு முடிவுகளே மாணவர்களுக்கு இன்றும் பாடமாக உள்ளது. மேலும் அதீத மனித செயல்பாடுகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலால்  3000 வருட கங்கை சமவெளி நாகரிகம் 21ஆம் நூற்றாண்டு முடிவுக்கு வரக்கூடும் என எச்சரிக்கை செய்து இந்த பகுதியை நிறைவு செய்கிறார்.

மூன்றாவது பகுதியை ஹரப்பா நாகிரிகத்திற்கும் பின்பு வந்த சரித்திரகால கங்கை சமவெளி நாகரிகத்திற்குமுள்ள தொடர்பை மிக விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். மேற்கண்ட இரண்டு நாகரிகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறும் பல்வேறு அறிவியல் மற்றும் மொழியில் அறிஞர்களின் கருத்தகளை முன்வைத்து அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார். பல்வேறு விஷயங்களில் குறிப்பாக நகரஅமைப்பு மற்றும் கட்டிடக்கலை, ஹரப்பாவில் பின்பற்றபட்ட எடைகளும் அளவுகளும், தொழில்நுட்பமும் சின்னங்கள், எழுத்துகள், மதம் சார்ந்த வாழ்க்கை, மற்றும் கலாச்சார ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளையும் தொடர்ச்சியை மிக விரிவாக ஆராய்கிறார்.

ராஜேஷ் கோச்சர் என்ற வானசாஸ்திர இயற்பியல் நிபுணர் (ASTROPHYSICIST) கி.பி 2000 தில் வெளியிடப்பட்ட ஆய்வுமுடிவுகளும் அதை தொடர்ந்த வரலாற்றிஞர் இர்ஃபான் ஹபீப் வெளியிட்ட கட்டுரையும் சரஸ்வதி நதியை சாட்சி கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறது. (ஏற்கெனவே 1883ல் இந்தியவியலாளரான எட்வர்ட் தாமாஸ் இந்த ஆரிய படையெடுப்பை வலியுறுத்தியுள்ளார்) மேற்கண்டவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை மிக விரிவாகவும் ஆழமாகவும் பல்வேறு அறிஞர்கள் மற்றும் ஆய்வுகளின் துணைகொண்டும் மறுதலிக்கிறார் மிஷல் தனினோ. இந்த விவாதம் விஷ்ணுபுரம் நாவலில் வரும் ஞானவிவாத களத்தையும், வெண்முரசு பன்னிருபடைகளத்தில் ராஜஸுயப்பகுதியில் வரும் ஞான விவாதத்தை நினைவு படுத்துகிறது.

இரு நாகரிகங்களுக்கும் இடையேயான ஒற்றுமையையும் தொடர்ச்சியையும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெளிவான சித்திரத்தை கொடுத்த பிறகும் ஒரு அறிவியலாளராக புத்தகத்தை முடிக்கிறார் மிஷல் தனினோ. அவருடைய வார்த்தைகளில்

”சரஸ்வதி நதியின் பரிணாம வளர்ச்சியின் பாதை மிகவும் சிக்கலானது நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தையும் நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது. வருங்காலத்தில் புவியியல், புராதன காலநிலை சாஸ்திரம், ஐசோடோப்புப் பரிசோதனைகள், புதைபொருள் ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆராய வேண்டியுள்ளது.”

இறுதியாக இந்த புத்தகம் கீழ்கண்ட விஷயங்களில் ஒரு தெளிவை கொடுக்கிறது.

  •  ஆரியபடையெடுப்பு ஒன்று நிகழ்ந்த்தற்கான எவ்விதான அறிவியல் சான்றும் இல்லை என்பதன் மூலம் அதை நிராகரிக்கிறார்.
  •    வேத இருண்ட காலம் (VEDIC DARK AGE) ஒன்று இல்லை என நிராகரிக்கிறார்.
  • சரஸ்வதி செழுமையாக ஒடியபோது தான் அதன் கரைகளில் வேதம் உருவாக்கபட்டது. சரஸ்வதி செழுமையாக ஒடிய காலம் கி.மு 3000 – 2500. ஆகவே ஹரப்பா காலமும் வேத காலமும் ஒன்றுதான் என நிறுவுகிறார்.
  •   காந்தி முன்னிறுத்திய மையமில்லா அரசுக்கான ஆணிவேர் சமணத்தின் பங்கு என வாசித்திருந்தேன் (இன்றைய காந்தி) இந்த புத்தக வாசிப்பு சரித்திரத்திற்குகால கட்டத்திற்கு முன்பே இருந்திருக்கிறது என்கிற முடிவை நோக்கி நகர்த்துகிறது.
  •    இலக்கியதின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

 

இந்த புத்தகத்தில் நான் தொகுத்துக் கொண்ட விஷயங்களை சற்று விரிவாக எழுதியுள்ளேன்.

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு- சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு.

மிஷல் தனினோ இந்நூலின் ஆசிரியர். இவர் பிரான்ஸில் 1956ல் பிறந்தவர். இந்திய கலாசாரம் நாகரிகம் ஆகியவைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டபடி தன் 21வது வயதிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.

இந்த நூல் மூன்று பகுதிகளாக உள்ளது. முதல்பகுதியில் காணாமல் போன சரஸ்வதியை கண்டடைந்த வரலாற்றையும் இரண்டாவது பகுதி அந்த நதியில் தோன்றிய இந்தியாவின் முதல் நாகரிகத்தை பற்றியும் மூன்றாவது பகுதி சரஸ்வதி நாகரிகத்திற்கும் கங்கை சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பை பற்றியும் பேசுகிறது.

காணாமல் போன சரஸ்வதி

1788 முதல் 2006 வரை பல்வேறுதுறையை சேர்ந்த அறிஞர்களின் ஆய்வுகளும். கட்டுரைகளும் தற்போது துண்டு துண்டாக பிரிந்து பல்வேறு நதிகளாக உள்ள சரஸ்வதியின் பழையபாதையை முடிவு செய்கிறது. அதை ஆசிரியர் ஒரு நாவலுக்குரிய அம்சத்தோடு பதிவு செய்திருக்கிறார். அந்தப் பாதையின் சில உச்ச புள்ளிகள்.

  • 1788 ல் சர்வேயர் ஜெனரல் மேஸஸ் ரென்னெல் வெளியட்ட MEMOMERIS OF A MAP OF HINDUSTAN  என்ற புத்தகத்திலும் மற்றும் 1812ல் லெப்டினட் கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய “துண்டாடப்பட்ட ராஜஸ்தானின் வரலாறும் பழம்பொருட்களம்” என்ற புத்தகத்திலும் சரஸ்வதியின் ஒரு பகுதியான கக்கர் நதியை பற்றிய குறிப்பு வருகிறது.

 

  • 1844ல் மேஜர் எப். மெக்கீஸன் பவல்பூருக்கும் சிர்ஸாவிற்கும் உள்ள பாதையை பற்றி சமர்பித்த ஆவணம் மிக முக்கியமானது. இந்த பாதையானது வரலாற்றில் முன்பே பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 1037ல் கஜினி முகமது மகன் முதலாம் மசூத்தால் படையெடுப்பதற்கும், கி.பி. 1338ல் அரபுநாட்டு பயணி இபின் பாதஷா டில்லி செல்வதற்கும், கி.பி. 1398ல் தைமூர் படையெடுப்பிற்கும் இந்த பாதையை பயன்படுத்தியுள்ளார்.

 

  • 1855ல் பிரெஞ்சு ஆய்வாளர் லூயி விவயன் தெஸான் மார்த்தான் ஒரு A STUDY ON TH EGOGRAPHY AND THE PRIMITIVE PEOPLE OF INDIA’S NORTH WEST ACCORDING TO VEDIC HYMNS” ஆய்வு கட்டுரையை சமர்பித்தார். அது 1860 புத்தகமாக வெளிவந்தத்து

 

  • 1886ல் பிரிட்டீஷ் புவியியலாளர் R.D. OLDHAM சரஸ்வதியின் மறைவுக்கான காரணம் பூகம்பமே என யூகித்தார்.

 

  • ஹென்றி ஜார்ஜ் ராவர்டி வெளியிட்ட கட்டுரை ஹக்ரா நதி (இது துண்டாடப்பட்ட சரஸ்வதி நதியாகும்) கி.பி 14ஆம் நூற்றாண்டு வற்றியதாக குறிப்பிடுகிறார்.

 

  • மார்க் ஆரல் ஸ்யின் (1862-1944) 20 ஆம் நூற்றாண்டின முக்கியமான அகழவாராய்ச்சியாளர். பூகோளவியல் நிபுணர். இவர் முன்வரலாற்று காலகட்ட ஆராய்ச்சியின் முன்னோடி ஆவார்.  1917ல் ”ரிக் வேதத்த்திலுள்ள சில நதிகளின் பெயர்கள் பற்றி” என்ற கட்டுரையில் நதி ஸ்துதி ஸுக்கத்த்தில் பட்டியலிடப்பட்டுள்ள நதிகளை அடையாளம் காட்டுகிறார. இவர் மூன்று விதமான சான்றுகளை முதன்முதலாக ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டார். அவைகள்
  1. ரிக்வேதத்தில் சொல்லப்பட்ட செய்திகள்
  2. உள்ளுர் மக்களிடையே நிலவி வந்த நம்பிக்கைகள்
  3. ஆகழவாராய்வு முடிவுகள்
  • கி.மு.1900ஆண்டுக்கு பிறகு நிகழ்ந்த ஒரு பெரிய பூகம்பம் யமுனையின் அருகிலிருந்த நிலப்பரப்பை 20 முதல் 30 மீட்டர் உயரத்திற்கு தூக்கிவிட்டது என்று K.S. வாத்திய என்ற புவியில் அறிஞர் குறிப்பிடுகிறார். அந்த பூகம்பம் PAVANTO SAHIB VALLEY வழியாக செல்லும் பிளவில் ஏற்பட்டது. இன்றும் அந்த பூகம்ப பிளவு செயல்நிலையில் இருக்கிறது. இதனால் யமுனைநதியின் தடம் மாறியுள்ளது.
  • மேற்கண்ட படம் மூன்று ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானிகளால்(ஜே.ஆர்.ஷர்மா, ஏ.கே.குப்தா, பி.கே.பத்ரா 2006ல் வெளியிடப்பட்டது இது சரஸ்வதியின் புராதன நதித்தடங்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இதில் சரஸ்வதி நதியின் பாதை தெளிவான ஒற்றைத்தடமாக இருக்கவில்லை. இந்தப் பகுதியின் வரலாறு எத்தனை சிக்கலானது என்பதையே இது காண்பிக்கிறது

 

சரஸ்வதி நதியை பற்றி வேதம் மற்றும் புராண இலக்கியங்களின் குறிப்புகள்

  • ரிக் வேதத்தில 45 ஸ்லோகங்களில் 72 தடவையாக சரஸ்வதி நதியை பற்றி உள்ளது. அதில் மூன்று ஸ்லோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டும் உள்ளது.
  • ரிக் வேதத்தின் நதி ஸ்துதி ஸுக்கத்த்தில் வேதகாலத்தின் 19 நதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. இந்த ஸுக்கதத்தின் 5, 6 பிரிவில் சரஸ்வதி நதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • வேதகாலத்திற்கு பிறகு பல நூற்றாண்டு காலத்திற்கு பிறகு வந்த ப்ராமணங்களிலும் மகாபாரத்த்திலும் சரஸ்வதி நதி விநாசனம் (த்ருஷதியும் சங்கமிக்கும் இடத்திற்கு கிழே இன்றை இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது) என்ற இடத்தில் மறைந்த்தாக குறிப்பிடப்படுகிறது.
  • மகாபாரத்த்தில் உதத்ய மகரிஷியின் கதை சரஸ்வதி நதியின் மறைவை விளக்குகிறது.
  •    கி.பி. 6ஆம் நூற்றாணடில் வராஹமித்ர்ரால் எழுதப்பட்ட ப்ருஹத் சம்ஹிதையில் சரஸ்வதி நதி விநாசனம் சிறிய அளவில் பாய்ந்துள்ளது என குறிப்பு வருகிறது.
  •      பலராமர் மூலம் யமுனை நதி தடம் மாறியுள்ள கதை மகாபாரதத்தில் உள்ளது.
  •    சட்லஜ் (சுதத்ரி) நதி பலநூறாக பிரிந்த்தை குறிப்பிடும் வஷிஷ்டர்- விஸ்வாமித்ரர் கதையும் மகாபாரதத்தில் உள்ளது.
  •  12 வருட பஞ்சகாலமும் அதனால் ஆயிரக்கனக்கான ஏரிகள் வற்றியைதை பற்றியும் மகாபாரதம் பேசுகிறது.

1

 

அகழ்வாராய்வு மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த முடிவுகளும் வேதம் மற்றும் இலக்கியங்களின் குறிப்புகளும். சரஸ்வதி நதியின் இருப்பையும்  மற்றும் மறைவை பற்றிய கருத்துகள் கிட்ட தட்ட ஒரேமாதிரியாக உள்ளது.

படம் 2.2 நதி ஸுக்த்த்தில் குறிப்பிடப்பட்டுள்ள நதிகளின் வரைபடம்

 

இந்தியாவின் முதல் நாகரிகம்

1843ல் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம்மால் பரிந்துரைக்கப்பட்டு 1871ல் இந்திய அகழ்வாராய்ச்சி துறை ஆரம்பிக்கப்பட்டது கன்னிங்ஹாம் இந்திய சரித்திரகால அகழ்வாராய்வுக்கு முன்னோடி ஆவார். இவர் 1853 மற்றும் 1856ல் ஹரப்பா பகுதிகளை பார்வையிட்டார். 1871ல் இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தலைவராக அவர் ஹரப்பாவை பார்வையிடும் போது முன்பு கண்ட பிரமாண்ட புராதானக் கோட்டைகளின் மதில்கள் காணமற் போய்விட்டன என்றும், 160 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட லாகூர் – முல்தான் ரயில் பாதைக்கு அவை அஸ்திவாரக் கற்களாகப் பயன்படுத்துவிட்டன என வேதனையுடன் எழுதியிருந்தார்.

1902ல் இந்திய வைஸ்ராய் கர்ஸ்ன்பிரபுவால் ஜான் மார்ஷல் என்பவர் அகழ்வாராய்ச்சித்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1909லும் பின்னர் 1914 லிலும் ஜான்மார்ஷல் தன் உதவியாளர்களை ஹரப்பாவிற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்தார். . 1917ல் தயா ராம் ஷானி என்ற சமஸ்கிருத மொழிப்புலவரும் கல்வெட்டெழுத்து ஆராய்ச்சியாளராகிய அவர் ஹரப்பா பகுதியை ஆய்வு செய்தார். 1921ல் ஹராப்பாவில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. 1924ல் மது ஸ்வரூப் வத்ஸ என்பவரை மொஹஞ்ஜோதரோவில் அகழ்வாய்வுக்கு அனுப்பிவைத்தார். 800 கி.மீ தொலைவிலுள்ள ஹரப்பாவிலும் மொஹஞ்தரோவிலும் ஒரே மாதிரியான முத்திரைகளும் சுட்ட செங்கற்களையும் சுட்டி காட்டினார். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ஜான் மார்ஷல் ILLUSTRATED LONDON NEWS இதழில் 20 செப். 1924ல் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றிய கட்டுரையாக வெளியிட்டார். (1917ல் இத்தாலியை சேர்ந்த இந்தியவியலாளர் LUJGI PIO TESSITORY காலிபங்கனில் அகழ்வாராய்ச்சியை தொடங்கினார். அப்போது கிடைத்த சில முத்திரைகளை அவர் ஜான் மார்ஷலுக்கு தெரிவித்திருந்தால் இந்திய முதல் நாகரிகத்த்தை கண்டுபிடித்தவராகியிருப்பார். இவர் 1919ல் தன்னுடை 32வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்)

ஹரப்பா நாகரிகம் 8 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் இருந்திருக்கின்றது.  இது இன்றைய இந்தியாவின் கால் பகுதியாகும். ஆனால் ராணுவம் இருந்த்தற்கான எவ்வித சான்றும் கிடைக்கவில்லை. இது ஒரு ஆச்சர்யமான விஷயம் தான்.

1947 அகழ்வாய்விடங்க் 40 ஆக இருந்தது 1960ல் 100, 1979ல் 800, 1984ல் 1400, 1999- 2600ஆகவும் தற்போது 3700 ஆகவும் உயர்ந்துள்ளது.

GREGORY POSSESL என்ற அமெரிக்க அகழ்வாராய்ச்சியாரள் ஹரப்பாவில் மிகவிரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார. 2600 ஆய்வுபகுதிகளை பற்றிய கெஜட்டியரை 1999ல் வெளியிட்டுள்ளார்.

ஹரப்பா நாகரிகத்தை பற்றிய சில குறிப்புகள்

  •   மொஹஞ்ஜோ-தரோ நகரத்தின் மக்கள் தொகை 40 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை இருக்கலாம் என மதிப்பிடுகிறார் (GREGORY)
  • வரலாற்றுக்கு முந்தைய எகிப்திலோ மெசபடோமியோவிலோ கோயில்களும் அரண்மைனைகளுமே பிரமாண்டமாக இருந்தது. ஆனால் மொஹஞ்ஜோதரோவிலோ ஹரப்பாவிலோ அற்புமாக கட்டப்பட்டவை எல்லாம் மக்களுக்காகத்தான்.
  •  மெசபடோமிய அரசர்கள் ஹரப்ப நகைகளை மிகவும் விரும்பினர். இவர்கள் மெலூஹா என்று குறிப்பிடுவது சிந்து சமவெளி நாகரிகத்தைதான் இருக்கும் என பல அறிஞர் குறிப்பிடுகிறார்கள்.
  •  ஹரப்பா நாகரிகத்தில் மொஹஞ்ஜோ தரோ, ஹரப்பா , கன்வேரிவாலா (காலிஸ்தான்) ராக்கிகாட் (ஹரியானா), தோலவிரா (கட்ச்ரண்) ஆகிய ஐந்து நகரங்களை மையமாக கொண்டு ஒன்பது விதமான அதிகார மையங்கள் (DOMAIN) இருந்ததாக கிரிகரி சொல்கிறார். அவருடைய பார்வையில் இந்த அரசியல் அமைப்பானது ஒருவகையில் குழுமத் தன்மை கொண்ட ஒன்று “ ஒற்றை அரசருக்கு பதிலாக பல்வேறு குழுக்களை கொண்ட (அ) தலைவர்களை கொண்டது என்று சொல்கிறார் (GREGORY)
  •  கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் இரண்டாயிரம் கி.மீ. கொண்ட ஹரப்பா நாகரிகத்தில் ராணுவம் இல்லை. அரசர் இல்லை. இது ஒரு பெரும் புதிர்தான்.
  •  இது வரை செய்த அகழ்வாராய்ச்சி ஒட்டுமொத்த ஹரப்பா நிலப்பரப்பில் 5%  ஆகும்.
  •  முக்கிய நகரங்கள் 1. மொஹஞ்ஜோதரோ (200-300 ஹெக்டேர்கள்) 2. ராக்கிகரி (105 ஹெ.) 3. பனவாலி (10 ஹெ) 4. காலிபங்கன் (12 ஹெ) 5. ரங்கப்பூர்-குஜராத் (50 ஹெ) 6. லோத்தல் (7ஹெ) 7. தோலவிரா – (48ஹெ) 8. கன்வேரிவால்-கோலிஸ்தான் – 80 ஹெ.

ஹரப்பாவின் காலகட்டம் பற்றி பல்வேறு அறிஞர்கள் கால வரையரை

நாகரிக கட்டம் சக்ரவர்த்தி கெனோயர் கிரிகரி பொஸ்ஸல்
முற்கால ஹரப்பா 3500-2700 5500-2600 3600-2600
முழு வளர்ச்சி ஹரப்பா 2700-2000 2600-1900 2500-1900
பிற்கால ஹரப்பா 2000-1300 1900-1300 1900-1300

 

புகழ்பெற்ற வராலற்று அறிஞரும் பிகானீர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர்தார் கே.எம். பணிக்கர் சிபாரிசால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசால் இந்திய பகுதிகளில் ஆராய்ச்சி தொடர்ந்தது.

சுதந்திரத்திற்கு பிறகான அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாற்றியது.

ஹரப்பா அகழாய்வு இடங்கள் சதவீத அடிப்படையில்

சரஸ்வதி படுகை 32%
குஜராத் 28%
பலுசிஸ்தான் 11%
சிந்து 9%
பிற 20%
பாகிஸ்தானின் பஞ்சாப் 5%

 

கிரிகரி பொஸ்ஸல் மூன்று கட்டங்கள் தொடர்பாக நடந்த அகழ்வாராய்ச்சி,பூகோள ஆய்வுகளின் முடிவுகள் (பெரிதும் வில்ஹெம்மினுடையது) ஆகியவற்றை ஒன்று சேர்த்த ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்.

  1. கி.மு. 3000 வரை சரஸ்வதியும் அதன் உபநதியாக இருந்த யமுனாவும் சட்டெலஜ்ம் கரைபுரண்டு ஒடின. இது ஆரம்ப காலகட்டத்தை சேர்ந்தது
  2. முழுவளர்ச்சி கட்டதின் ஏதோ ஒரு நேரத்தில் யமுனா நதி கங்கை நதித்தொடரால் இழுக்கபட்டுவிடுகிறது. இதன் விளைவாக த்ருஷ்வதியும் சரஸ்வதியின் மத்திய பாகமும் வறண்டு போயின. சட்லஜ் மேற்கு நோக்கி (ரூபாருக்கு அருகில்) வழிமாறிச் சென்றது. அதன் கிளைகள் ஹனுமான்காட் பகுதிக்கும் ஃபோர்ட் அப்பாஸுக்கும் இடையில் கக்கர்-ஹக்ராவின் பல இடங்களில் சங்கமித்தன.
  3. நகர்மயத்துக்ப் பிந்தைய காலகட்டத்தில் (கி.மு 2000-1500) சட்லெஜ் மேலும் வழிமாறி ஃபோர்ட் அப்பாஸுக்குக் கீழ்பகுதயில் ஹக்கராவை சந்திக்கிறது.சரஸ்வதி நதிக்கும் அதன் உபநதிகளுக்கும் அவற்றின் மேற்பகுதகளில் மழை பெய்தால் மட்டுமே நீரோட்டம் இருக்கும் என்ற நிலை உருவானது.

புதிய தளங்கள்

இந்த பகுதியில் முக்கியமான  நான்கு ஹரப்பா நகரங்களின் அமைப்பை விவரித்துள்ளார்.

பனவாலி  – 10 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த ஹரப்பா நகரம் ஹரியாணாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் கக்கர் நதியின் ஒரு பழைய படுகையின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1970ல் இங்கு அகழாய்வுகள் நடத்தி ஆர்.எஸ். பிஷத் சொல்கிறார் . பனவாலி ஒரு மாநிலத்தின் தலைநகராகவே ஒரு முக்கியமான அரசு நிர்வாகத் தலைமையகமாகவோ இருந்திருக்கும். மேலும் சிந்து சமவெளி நாகரிக்க் காலத்தில், சரஸ்வதியின் நதிக்கரையில் ஒரு வளம்  மிகுந்த வர்த்தக மையமாகவும் இது இருந்திருக்க வேண்டும். இந்நகரில் ஆரம்பத்தில் 1x2x3 அளவிளான  செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது பின்பு நகர்மயமாக்கப்பட்ட கால கட்டத்தில் 1x2x4 அளவினாளான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.. இங்கு ஒரு வீட்டின் பிரதான அறையில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தன. WASH BASIN கொண்ட முழுமையான ஒரு குளியலறை கூட இங்கு காணப்பட்டது. அக்னி பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலும் இருந்துள்ளது சந்தேகமின்றி தெரிகிறது

காலிபங்கன் – இது பனவாலியிலிருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ளது. நதியின் தடத்தில் கீழே வந்தால் கக்கர் நதியின் இடது கரையிலுள்ளது. இதன் நகர அமைப்பு மொஹஞ்ஜோதாரோவை போலவே இருக்கிறது (2:1 விகித்த்தில் 240 x120 m). இதன் நகரமைப்பை பார்க்கும் போது ஹரப்பாவின் பொறியியலாளர்களும் திட்ட வரைவாளர்களும் ஒவ்வொரு விஷயத்திலும் துல்லியமான விகதங்களையே பின்பாற்றியிருக்கிறார்கள், தெருக்களின் அகலம் 1.8m, 3.6m, 5.4m. 7.2m என 1:2:3:4  என்ற அளவில் வெகு துல்லியமாக ஜியோமதி வகையில் அதிகரித்துச் செல்கின்றன. நகரின் தென்பகுதியில் நான்கு திசைகளிலுமாக செங்கற்கள் உபயோகித்து கட்டப்பட்ட பெரிய மேடைகள் நிறையக் காணப்பட்டன. பி.கே. தாப்பர், பி.பி. ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஆய்வு நடத்திய பி.பி. லாலை பொருத்த வரையில் இந்த இடம் மதச்சடங்குகள் நடத்துவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் . இதற்கு சான்றுகளும் கிடைத்துள்ளன. இங்குள்ள வீடுகளில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மதரீதியான சடங்குகளை செய்யும் போது மிருகங்களை பலிகொடுக்கப்பட்டிருக்கலாம் (1.5 x 1m  குழியில் மான் கொம்பும் வேறு மிருகங்களின் எலும்புகளும் காணப்பட்டுள்ளது).

லோத்தல் – குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து 70 கி.மீ தென்மேற்காக கிளைநதியான பொகாவேவுக்கு அருகில் இருக்கிறது. இங்கிருந்த 23 கி.மீ தொலைவிலுள்ள GULF OF CAMBAYவில் சபர்மதி நதி கலக்கிறது. இந்த நகரை சுற்றிலுமுள்ள வெளிப்புற மதில் 12 மீ முதல் 21 மீ வரை கனத்தில் இருந்த்து. இது வெள்ளத்தை தடுப்பதற்காக இருக்கலாம். இது பனவாலி நகரத்தின் அமைப்பை ஒத்திருக்கிறது. நகரின் கிழக்கு பாகத்தில் 217 மீ x 36 மீ நீர்நிலை (BASIN) நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய இடம். இதில் 1.5 மீ முதல் 1.8 மீ வரை கனமுள்ள லட்சக்கணக்கான சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது DOCKYARD ஆக இருந்திருக்கலாம் என அகழ்வாய்வாளர் S.R. ராவ் யூகிக்கிறார்.

தோலவிரா – இந்த நகரம் 1966ல் ஆய்வாளர் ஜே.பி. ஜோஷியால் கட்ச் ரண் பகுதியிலிருக்கும் காதர் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு 20 வருடங்களுக்கு பிறகு ஆர்.எஸ்.பிஷத் தலைமையில் இங்கு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஹரப்பாவின் முழு வளர்ச்சிக் கட்டத்தில் கடல் காயல் போல இருந்திருக்கிறது. அதில் படகுகளும் கப்பல்களும் எளிதல் செல்ல முடிந்திருக்கும் (கி.மு. 1 ஆம் நூற்றாண்டு வரை இந்த நிலை ஒரளவு தொடர்ந்தது என்பதை கிரேக்க ஆவணங்களிலிருந்து அறிகிறோம்).

தோலவிராவில் அனைவரையும் வியப்பில் ஆழத்தக்கூடியதாக இருக்கிறது. காரணம்

  1. இதன் வித்தியாசமான நகமைப்பு. 47 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. கோட்டை கொத்தளங்கள் காலிபங்கனை போன்று 4 மடங்கு பெரியவை. வெளிக்கோட்டை பரப்பு காலிபங்கனை போலவே (120மீ x 120 மீ) இருந்த்து. நகரமைப்பு 3 பகுதிகளை கொண்டது (மொஹஞ்ஜோதரோவில் 2 பகுதிகள் மட்டுமே) இந்நகரில் ஒரு பெரிய மைதானம் இருந்த்து (283 மீ x 47மீ) 6:1 விகிதம் லோத்தலை போலவே. இங்கு மட்டும்தான் கருங்கல் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. நீர் சேமிப்பு இந்நகரில் சிறப்பாக இருந்த்து. பாறையை குடைந்து நீர்தேக்கம் இங்கிருக்கிறது

கோட்டைவயின் வடக்கு வாசலுக்கு அருகிலிருந்த ஓர் அறையில் கண்டுபிடிக்கபட்ட 3 மீ நீளமுள்ள ஒர் கல்வெட்டு படிகத்தால் செய்யப்பட்ட 35 செ.மீ உயரமுள்ள பத்து குறியீடுகள் ஒரு பரப்பளவில் செதுக்கப்பட்டுள்ளன. இது அனைத்து தரப்பு மக்களாலும் படிக்கும் படியாக இருந்திருக்க வேண்டும் ஆகவே கல்வி அனைத்து தரப்பையும் சேர்ந்திருக்கிறது என யூகிக்கலாம்.

 

இவ்வளவு ஆராய்சிகளுக்கு பிறகும் சிந்து சமவெளி நாகரிகம் சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாறியதற்கு பிறகும் நமது பள்ளி மாணவர்கள் 1930களில் தெரியவந்த விஷயங்களையே இன்றும் நமது பாடத்திட்டத்தில் படித்துகொண்டிருக்கிறார்கள்.

ஹரப்பா நாகரிகம் அழிந்ததற்கான மூன்று வித கருத்துகள்.

  1. வெளியிலிருந்து வந்த ஆக்ரமிப்பாளர்கள் சிந்து சமவெளி நாகரிகங்களை அழித்தனர்
  2. அரசியல் (அ) பொருளாதார பிரச்சனைகள்
  3. சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால்.

நூலாசிரியர் 3வது காரணத்தால் ஹரப்பா நாகரிகம் அழிந்திருக்கும் என முடிவுக்கு வருகிறார். இதற்கு அகழாய்வு, புவியியல் மற்றும் இலக்கியச் சான்றுகளையும் காட்டுகிறார்.

சட்லெஜ் நதி திசை மாறியதால் சரஸ்வதியின் நீரோட்டம் வற்றியது. சிந்து நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்த்து. இதன் காரணமாக சிந்து பிரதேசத்தில் வெறும் ஆறு பிற்கால ஆய்விடங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த இரண்டாவது பகுதியை ஒரு எச்சரிக்கையோடு முடிக்கிறார் மிஷல் தனினோ (நூலாசிரியர்).

கங்கை யமுனை, பிரம்மபுத்ரா உட்பட இமயமலை பனியாறுகளால் நீர்வரத்து பெறும் நதிகள் அனைத்தும் பெரும் அபாயத்தை சந்திக்கவிருக்கின்றன. 30 முதல் 50 ஆண்டுகளுக்குள் மேற்கண்ட நதிகள் மழையை மட்டும் சார்ந்திருக்கம் நிலை ஏற்படும். ஹரப்பாவில் ஏற்பட்டதோ இயற்கை நிகழ்வு ஆனால் புவி வெப்பமயமாதல் முழுக்க முழுக்க மனிதர்களால் இழைக்கப்படுவது.ஹரப்பா வாசிகளுக்காவது குடியேற மற்ற பகுதிகள் இருந்தன. 3000 வருட கங்கைச் சமவெளி நாகரிகம் முடிவுக்கு வரும் நூற்றாண்டாக 21ம் நூற்றாண்டு இருக்கக்கூடும். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்னும் சில ஆண்டுகள் நம் கையில் இருப்பதை சூழிலியலாளர்களின் மிகுந்த நம்பிக்கைவாதிகளாக இருப்பவர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடு அவசியம் என முடிக்கிறார்.

பகுதி 3 சரஸ்வதியிலிருந்து கங்கை வரை

பல்வேறு துறையை சேர்ந்த அறிஞர்கள் சரஸ்வதி நாகரிகத்திற்கும் கங்கை நாகரிகத்திற்கும் சம்பந்தமில்லை என் கூறியுள்ளார்கள. அவர்களின் சில கூற்றுகள் முன்வைத்து இந்த பகுதியை ஆரம்பிக்கிறார் நூலாசிரியர்.

ரொமிலா தாப்பர் – இவர் புராதான இந்திய பற்றிய ஆய்வுகளுக்காக புகழ் பெற்ற வரலாற்று அறிஞர். இவர் சமீபத்தில் வெளிட்ட புத்தகத்தில் ஹரப்பா நாகரிகம் தொடர்ந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை என்கிறார். இவரது கோட்பாட்டின் படி, ஹரப்பா கலாசாரம் அங்குமிங்குமாகச் சில இடங்களில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் ஹரப்பா உலகம் முழுவதாகச் சிதறிவிட்டது என்கிறார்.

ஷெரின் ரத்னாகர் .-ஹரப்பா கலாசாரம் உண்மையிலேயே முடிவுக்கு வந்துவிட்டது எனச் சொல்கிறார். சிற்பக்கலை, கட்டிடக்கலை, கடல் வழிப்பயணம் ஆகிய அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டன என்கிறார்.

அமலானந்தகோஷ் – இவரும் இந்த தொடர்ச்சியின்மையையே குறிப்பிடுகிறார்.

மார்டிமர் வீலர் – ஹரப்பா நாகரிகத்த்தையும் கங்க சமவெளிநாகரிகத்தையும் வேத இருட்டுக்காலம் (VEDIC DARK AGE)  என்று ஒன்று பிரித்ததாக குறிப்பிடுகிறார்.

பெர்னாரட் சர்ஜண்ட் – இவர் பிரெஞ்சு அறிஞர்- ”சிந்து சமவெளி நாகரிகம் இந்திய நாகரிகத்தின் நேரடியான மூல நாகரிகம் அல்ல. சமீபத்தில் வந்து சேர்ந்த வேத ஆரியர்களால் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் கங்கைச் சமவெளி நாகரிகம்தான் இந்திய நாகரிகத்தின் “நேரடியான மூல நாகரிகம்“ என்கிறார். ஹரப்பா இந்தியாவுக்கும் சரித்திரகால இந்தியவுக்குமிடையே மாபெரும் தொடச்ச்சியின்மை இருக்கிறது என்கிறார். தொர்ச்சியின்மை என்ற வார்த்தைதான் ஆக்ரமிப்பு கருத்தை முன்வைப்பவர்களின் முக்கிய ஆயுதம் ஆகும்.

வரலாற்றிஞர் மற்றும் அகழவாராய்ச்சியாளர் STUART PIGGOT. ஆய்வாளர் A.L. பாஷம், அமெரிக்காவை சேர்ந்த சமஸ்கிருத மொழிப்புலவர் மைக்கேல் விட்ஸெல் ஆகியவர்கள்  வேத இருண்ட காலம் என்ற கருத்தை ஓப்புக்கொள்கிறார்கள.

இருநாகரிகத்திற்கும் உள்ள வேற்றுமையை ஒப்புக்கொள்ளாத அறிஞர்களின் கூற்றுகள்.

கிரிகரி பொஸ்ஸல் – இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர். சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் முடிவு என்பதற்கு பதிலாக உருமாற்றம் என்கிறார்.

ஜிம் ஷாப்பர் – பிற்கால ஹரப்பா காலகட்டத்தை உள்ளுர்மய காலகட்டம் என்ற புதிய பதத்தை பயன்படுத்தி அழைக்கிறார்.

கெனோயர் – ஹரப்பா நாகரிகத்தின் முடிவு என்ற ஒன்று இல்லை மாறாக அது தொடர்ச்சியில் மாற்றம் என்கிறார்.

மிஷல் தனின்னோ (நூலாசிரியர்) இரு நாகரிகங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்யலிடுகிறார்.

நகரஅமைப்பு மற்றும் கட்டிடம்

  1. நகரங்களை சுற்றியுள்ள கோட்டை கொத்தளங்கள் அகழிகைகள் ஹரப்பா காலகட்டத்தை போலவே வரலாற்று காலகட்டத்திலும் தொடர்கிறது.  (மதுரா, கௌசாம்பி (யமுனை கரை) ராஜ்காட் (வாராணாசி அருகில்), சிசுபால்காட் (புவனேஸ்வருக்கு அருகில்) உஜ்ஜெயனி (இந்தூருக்கு அருகில்), ராஜ்கிர், வைசாலி (பிஹார்) ). கௌடில்யரின் “ அர்த்த சாஸ்திரத்தில் அகழிகைகள் அமைப்பது தொடர்பான விரிவான யோசனைகள் கூறப்பட்டுள்ளது.

 

2.பனவாலி அரைவட்ட வடிவ கோவில் போல் கி.மு 200ல் கட்டப்பட்ட அட்ரஞசிக்கேடா (ஆக்ராவிற்கு 90 கி.மீ வடகிழக்கிலுள்ளது) அதே போல நீளஅகல விகிதங்களுடம் உள்ளது.

 

  1. பொது பயன்பாட்டுக்கான கட்ட்டங்கள் மிகப்பெரிய அளவிலாக கட்டப்பட்டிருத்தல். (மொஹஞ்ஜோதரோவிலுள்ள 5×4 தூண்கள் கொண்ட மண்டபம் போல் பாடலிபுத்திரத்திலுள்ள மண்டபமும் 10×8 தூண்கள் கொண்டது)

 

  1. ஹரப்பா வீடுகள் நடுவில் ஒரு முற்றமும் இதைச்சுற்றி மூன்று பக்கங்களில் அறைகளும் , நான்காம் பக்கத்தில் ஒரு அகன்ற நுழைவாயில் உள்ளது. இதே அமைப் அலகாபாத்த அருகிலுள்ள “பிடா“(BHITA) வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

5.காலிபங்கனில் வீட்டுதளங்களில் உபயோகிக்கப்பட்ட மண்ணும், அடுப்புகரியும் சேர்ந்த விஷேச கலகை 4500 வருடங்களுக்கு பிறகு இன்றும் காலிபங்கனை சுற்றியுள்ள வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது

  1. ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட விளக்கு மாடங்கள் இன்றும் பாகிஸ்தானி பிராக் பகுதி வீடுகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது

7.தோலவிரா – 2000 ஆண்டிற்கு பிறகான காம்பல்யாவின் கோட்டை அமைப்புகள் வேறுபட்ட இரு நகர்புறக்கட்டடங்களை இணைக்கும் சங்கலியின் ஒரு கண்ணி ஆகும்.

8.ஒன்றுக்கொன்று செங்குத்தாக வெட்டிச்செல்லம் தெருக்களின் அமைப்பு. (மொஹஞ்ஜோதரோவிலுள்ள அதன் திட்ட அமைப்போடு காந்திரத்தின் சிர்கபா நகரமும். நேபாளத்தலுள்ள 15ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட திமி நகரஅமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.)

 

எடைகளும் அளவுகளும்

  1. ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட எடை அமைப்புகள் அர்த்த சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் எடை அமைப்பிற்கு ஆதாரமாக இருக்கிறது. மேலும் “குந்துமணி” என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது . இதே மதிப்புக்ள ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாக பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (METROLOGIST) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  2. வி.பி. மெய்ன்கர் அவரது சக ஆய்வாளர் எல.ராஜுவும் துல்லியமாக கணக்கிட்டு 1.78 செ.மீ என்பதை ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட அடிப்படை அலகாக குறிப்பிடுகிறார்கள். இது அர்த்த சாஸ்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அங்குலத்தோடு ஒத்துபோகிறது

அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள்

1 அங்குலம் = 8 குந்துமணியின் நீளம் = நடுவிரலின் அதிக பட்ச அகலம்=1.78 செ.மீ

108 அங்குலம் =  1 தண்டம் (தனுஷ்) = 1.92 மீட்டர்

10 தண்டம் = 1 ரஜ்ஜு = 19.2 மீட்டர்

2 ரஜ்ஜு  = 1 பரிதேசம் = 38.4 மீட்டர்

(நேபாளத்தின் திமி நகரின் தெருக்களுக்கிடையெ உள்ள தூரம் 38.4 மீ ஆகும்)

1.9 மீ என்பது தோலவிராவின் நகரஅமைப்புக்கு அடிப்படையாக இருக்கிறது என மிஷல் தனினோ குறிப்பிடுகிறார் 108 ஐ தேர்தெடுத்த்தில் வானசாஸ்திரக் கணக்கீடுகளுக்கும் பங்கு இருந்திருக்கலாம. சூரியனுக்கும் பூமிக்குமிடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தின் அடிப்படையில் 108 மடங்காக உள்ளது என்று விஞ்ஞானியும் இந்திய வரலாற்று அறிஞருமான சுபாஷ் கக் கூறுகிறார்

  1. டில்லியிலுள்ள இரும்பதூணின் அளவுகள் தோலவிரவின் அடிப்படையான அலகான 1.92மீ அடிப்படையில் உள்ளது. அவ்வாறு பார்க்கும் போது தோலவிராவில் பின்பற்றப்கட்ட விகிதங்களே இத்தூணிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சின்னங்கள் மற்றும் சிலைகள்

  1. சிலை வடிவமைப்பதற்கு பயன்படுத்திய LOST WAX CASTING  என்று மெழுகு அச்சுமுறை இன்றும் தமிழ்நாட்டிலுள்ள சுவாமி மலையில் பயன்படுத்தப்படுகிறது.
  2. ஹரப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்வஸ்திக் முத்திரை, முடிவிலாத எட்டு. ஒன்றை வெட்டிக்செல்லும் வட்டங்கள் (புத்த கயாவிலுள்ள போதி சிம்மாசனத்தின் உச்சத்தில் இதேசின்னம் உள்ளது). யுனிகார்ன் போன்ற சின்னங்கள் சரித்திரகாலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு சான்று கிடைத்துள்ளது.
  3. காளை உருவம் இல்லாத ஹரப்பா முத்திரைகளோ, மண்பாண்டங்களோ இல்லை. ரிக் வேதமும் இந்த காளையையே பிற எல்லாவற்றையும் விட புகழ்ந்து பாடுகிறது.

 

எழுத்துக்கள்

  1. சிந்து சமவெளி குறியீடுகளுக்கும் கங்கை சமவெளியில் கிடைத்துள்ள நாணயங்களில் காணப்பட்ட உருவங்களுக்கும் இடையில் பொதுவான அம்சங்களை சவிதா சர்மா முன்வைத்துள்ளார். சிந்து சமவெளி சித்திர எழுத்து கி.மு 1800 வாக்கில் மறைந்த்து. பிராமி எழுத்தோ (கி.மு 5ஆம் நூற்றாண்டு)  அகர வரிசையினால் ஆனது. சிந்து சமவெளி எழுத்தோ சித்திர எழுத்துகள். அனைத்து இந்திய எழுத்துகளுக்கும் பிராமிதான் மூலவடிவம். ஆனால் 19ஆம் நூற்றாண்டிலிருந்த பெரும்பாலான அறிஞர்கள் பிராமி எழுத்துகள் வேறொன்றிலிருந்தோ (அ) செமிட்டிக் எழுத்திலிருந்தோ உந்துதல் பெற்ற உருவான ஒன்றாக சொல்கிறார்கள் (அதிலும் அராமிக் மொழியில் இருந்து உருவானதாக பிற்கால ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்) ஆனால இது வெறும் யூகமாகவே இருந்து வருகிறது. இந்த யூகம் சிந்துசமவெளி நாகரிக எழுத்துகள் பிந்தைய சரித்திர கால எழுத்துகளில் தாக்கம் செலுத்தியியருக்காலம் என்ற ஆய்வை தீவிரமாக மேற்கொள்ளவிடாமல் தடுக்கிறது. சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட கூட்டெழுத்துகள் , உச்சரிப்பை மாற்றும் அடையாளங்கள் பிராமி முறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

2

மதம் சார்ந்த வாழ்க்கை

  1. பசுபதி உருவத்தை ஜான்மார்ஷல் ஆதி சிவனாக பார்த்தார். ஜான்மார்ஷல் சிவனை திராவிட கடவுள்களாக பார்த்ததை மிஷல் தனினோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை, காரணம் ரிக் வேதத்தில் சிவன் ருத்ரன் என்ற பெயரிலும் யஜுர் வேத்த்தில் சிவன் என்ற பெயரிலேயே இடம் பெற்றிருக்கிறது.
  2. ஹரப்பாவில் ஒரு எருமைமாடு கொல்லப்படும் காட்சி பல வில்லைகளில் காணப்படுகிறது. வேதத்திலும் எருமை பலி புகழ்ந்து பேசப்படுகிறது. இந்த ஹரப்பா வடிவம் துர்க்கா தேவி மஹிஷாஸுரனை கொல்லும் சம்பத்தை நினைவூட்டுகிறது என் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்
  3. ரிக்வேதம் கொம்பை பல இடங்களில் குறியீட்டு வாசகமாக பயன்படுத்தியுள்ளது. இது உள்அர்த்தங்களை புரிந்து கொள்வதற்கான சூட்சமத்தை தருகிறது.  ரிக்வேதத்தில் ஸவிதார் என்ற சூரியதேவன் “உண்மை என்ற தனது கொம்பை எங்கும் பரப்புகிறான்“ என்று அது சொல்கிறது. இந்த உருவக குறியீட்டை வரைய ஒற்றை கொம்பு மிருகத்தை விட பொருத்தமான வேறு எதுவம் இருக்க முடியாது.
  4. அக்னி வழிபாடு – ஹரப்பா, மொஹஞ்ஜோதரோவில் தேவி வழிபாடு பிரபலமாக இருந்திருக்கிறது. சரஸ்வதி பிரதேசத்திலும் குஜராத்திலும் அக்னி வழிபாடு நடைபெற்றிருக்கிறது. பனவாலியில் தகூஷிணாக்னி (அரைவட்டவடிவ ஹோமகுண்டம்). லோத்திலில் ஆஹவானியம் (சதுர வடிவ ஹோமகுண்டம), காலிபங்கனில் காரஹபத்யம் (வட்டவடிவ ஹோமகுண்டம்) மேற்கண்ட மூன்றும் தோலவிரவிலும் காணப்படுகிறது. பிற்காலத்தில் எழுதப்பட்ட சுல்ப சூத்திரங்கள் வேதகுண்டங்களின் அளவுகளை விவரமாக எடுதுரைக்கிறது.
  5. ஹரப்பாவில் புதைமாடம் H-ல் கிடைத்த வண்ணமயில் பறவையின் உடலுக்குள் படுத்தநிலையில் மனித உடல் இருக்கிறது.  இதற்கு இறந்த மனிதர்களின் உடல்கள் புழுக்களும் பறவைகளும் குறிப்பாக மயில்களும் தின்றன என்ற மகாபாரத வாக்கியத்தை கோசம்பி சுட்டிகாட்டுகிறார். ஹரப்பா வாசிகளுக்கு மறுபிறவியில் நம்பிகை இருந்திருக்கிறது ஆனால் இறந்தவர்களை விட உயிர் வாழ்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

கலாச்சாரம்

  1. ஹரப்பாவில் சமூகம் சார்ந்த அதிகாரப் பரவலாக்கம் (செயல்பாடுகளும் கூட) வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சம் இருந்தது. ஆளும் வர்க்கம் என்ற ஒன்று இல்லாதிருந்த்து, கங்கை சமவெளி நாகரிகத்தின் தொடக்க காலங்களிலும் இப்படிப்பட்ட சமூக அமைப்புதான் நிலவியது. தர்மம், அர்த்த, காம, மோட்சம் ஆகிய நான்கு குறிக்கோள்கள்தான் சரித்திர இந்தியாவின் கலாசார அடித்தளமாக விளங்கின. வர்த்தகத்தையம் செல்வத்தையும் பெருக்கியதன் மூலம் மேற்கண்ட மூன்று குறிக்கோள்களை ஹரப்பாவாசிகள் நடைமுறைபடுத்தியிருக்கிறார்கள் (இராணுவத்தை பயன்படுத்தாமல்), யோக, தியான முறை மூலம் மோட்சத்தை அடைவதிலும் ஆர்வமாக இருந்திருக்க வேண்டும் என யூகிக்கலாம்

 

சி.கெனோயர் சொல்லும் சாராம்சம் ” சிந்துநதி நாகரிகத்திற்கும் பிந்தைய சரித்திரகால நாகதரிகத்திற்கும் இடையே நிறைய தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன. மண்பாண்ட தயாரிப்பு முறைகள் பெரிய அளவில் மாறவில்லை. நகைகள் வேறு விலையுயர்நத பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகிறனற்ன. ஆகவே சரித்திரத்துக்கும் முந்தைய காலத்தையும், சரித்திர காலத்தையும் பிரிக்கும்  இருண்ட காலம் என்று ஒன்று உண்மையில் இல்லை” என்கிறார்.
ஆய்வாளர் டி.பி.அக்ர்வாலின் கருத்து ” ராஜஸ்தான் பெண்மணிகள் இன்று அணியும் வளையல்கள் , அதன் பாணி , உச்சி வகிட்டில் சிந்தூரம் இட்டு கொள்வது யோகா, இருபடிநிலையிலான எடையும் அளவுகளும், வீடுகளுக்கான அடிப்படைக் கட்டுமான வழிமுறைகள் ஆகிய அனைத்துக்கமே சிந்து சமவெளி நாகரிக்காலத்தில் வேர்களைக் காணமுடியும். மிகவும் விசித்தரமான விஷயம்தான் என்றாலும் இதுதான் உண்மை. ஹரப்பாவாசிகளின் கலாசார, மத பழக்க வழக்கங்கள் பிந்தைய இந்திய கலாசாரத்திக்கு அஸ்வதிவாரமாக அமைந்திருகின்றன.”

ஸ்டுவர் பிக்காட் மேற்கிலிருந்து வந்தவர்களால் மூர்க்கமாக ஹரப்பா சிதைக்கபட்டதற்கான எந்த ஒரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்.

” இரு நாகரிகங்களுக்கும் இடையிலான 700 வருடகாலம் என்பது  சீர்குலைந்து போன இருண்ட காலமல்ல மாறாக மறு ஒருங்கிணைப்புக்கும் விரிவாக்கத்திற்குமான காலம்.ஆகவே இருண்ட காலம் (VEDIC DAR AGE)  என்று முன்பு சொன்ன கருத்தாக்கங்கள் இன்று காலாவதியாகிவிட்டது ” என்று ஜிம் ஷாஃபர்  உறுதியாக சொல்கிறார்.

வேதகாலம் கி.மு 2500 – 3000சார்ந்த்து என்கிறார் மிஷல் தனினோ

இவ்வாறு பல அறிவியல் மற்றும் இலக்கிய சான்றுகளின் அடிப்படையிலும் பல்வேறு துறையை சேர்ந்த அறிஞர்களின் முடிவுகளின் அடிப்படையிலும். இரு நாகரிகத்திற்குமான தொடர்ச்சியையும் ஒற்றுமையையும் என  நிறுவுகிறார் நூலாசிரியர் மிஷல் தனினோ.

3

ஆப்கானிஸ்தானிய சரஸ்வதி

1883ல் இந்தியவியலாளரான எட்வர்ட் தாமஸ் ”உண்மையான சரஸ்வதி பாய்ந்தோடிய பகுதி பஞ்சாப் சமவெளி அல்ல தெற்கு ஆஃப்கானிஸ்தானின் ஹெல்மண்ட நதிதான் அது என்று வாதிட்டார். ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து தெற்கு நோக்கில் புலம் பெயர்ந்து வந்த வழியில் ஹெல்மண்ட நதிக்கரையில் சிறிது காலம் தங்கினார்கள். அதன் பிறகு இந்திய உபகண்டத்தில் நுழைந்து தங்களுடைய கிழக்கு நோக்கியுள்ள பயணத்தை தொடருகையில், சிந்து நதியையும் அதன் கிளை நதிகளையும் கடந்து சென்று கடைசியில் சர்சுதி நதியை அடைந்தனர். தாமஸைப் பொறுத்தவரையில் இந்த நதி எப்பொழுதுமே அளவில் சிறியதாகதான் இருந்திருக்கிறது. ஆனால் ஆரியர்கள் தாங்கள் கடந்து வந்த ஆஃப்கானிய பிரமாண்ட நதியின் நினைவைப் போற்றும் வகையில் “ சரஸ்வதி” என்ற பெயரை இந்தச் சிறிய நதிக்கு சூட்டினார்கள் என்கிறார்.

இந்த உணர்சிமயமான காட்சிகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு புனைவுத்தன்மை நீக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டு சரஸ்வதி-ஹக்ராஅடையாளப்படுத்தலை மறுதலிக்கும் சிலரால் முன்வைக்கபடுகிறது.அவர்களில் ஒருவர் வானசாஸ்திர இயற்பியல் நிபுணர் (ASTROPHYSICIST) ராஜேஷ் கோச்சர். 2000ல் இவர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இது தொடர்பான அழுத்தமான கோட்பாட்டை முன் வைக்கிறது. இதற்கு ஒரு வருடத்திற்குள் சரஸ்வதி சாட்சிக் கூண்டிலிருந்து குற்றவாளிக் கூண்டுக்கு இழுத்துச் செல்லபட்டுவிட்டாள். இந்திய மத்தியகாலம் பற்றிய  வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப் எழுதிய கட்டுரையின் தலைப்பே அதன் தீர்மானத்தை சுட்டுவதாக இருந்த்து. கட்டுரை தலைப்பு ”சரஸ்வதி நதியைக் கற்பனை செய்து பார்த்தல் – அடிப்படை அறிவின் தற்காப்பு வாதம். (IMAGINING RIVER SARASVATHI – A DEFENCE OF COMMON SENSE )”.

இர்ஃபான் ஹபீபை பொறுத்தவரையில் சரஸ்வதி நதி என்ற ஒன்று ஒருபோதும் இருந்த்தே இல்லை. அது வெறும் ரிஷிகள் மற்றும் நம்முடைய கற்பனைகளில் இருக்கும் நதி மட்டுமே ஆகும். இந்தக் கட்டுரையின் முடிவில் ஹபீப் இந்த விஷயத்தில் தன் கருத்தியலையும் புகுத்துகிறார். ”சர்ஸ்வதி நதி ஒரு காலத்தில் மகத்தானதாக இருந்த்து என்று சொல்வது திராவிட மற்றம் ஆரியர்கள் அல்லாதவர்களிடமிருந்து சிந்து (சரஸ்வதி) சமவெளி கலாசாரத்தை தட்டிப் பறிப்பதற்கு சமமானது” என்கிறார்.

இப்படி வாதிடுவதன் மூலம் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய ஆரிய-திராவிட இனப்பாகுபாட்டை மீண்டும் உயிர்பிக்கப் பார்க்கிறார் ஹபீப். நல்லவேளையாக இன்றைய மானுடவியல் நிபுணர்களும் மரபியல் நிபுணர்களும் அதை நிராகரித்துவிட்டிருக்கிறார்கள்.

ராஜேஷ் கோச்சர் மற்றும் இர்ஃபான் ஹபீப் ன் குற்றசாட்டுகளை அத்தியாயம் 11ல் நூலசிரியர் விரிவாக விளக்கி ஆய்வு முடிவுகளையும், அறிஞர்களின் துணை கொண்டும் நிராகரிக்கிறார்.இந்த விவாதம் விஷ்ணுபரத்தில் வந்த ஞான விவாத்த்தையும். பன்னிருபடைகளத்தில் ராஜஸுயத்தில் நடந்த விவாத்த்தை நினைவு படுத்துகிறது.

11வது அத்தியாயத்தின் இறுதயில் இந்த ஆய்வின் சிக்கல்தன்மையை பற்றி மிஷல் இவ்வாறு கூறுகிறார்.

”சரஸ்வதி நதி பற்றிய நம் ஆய்வுகளின் மூலம் ஒரு விஷயம் தெளிவாக தெரியவந்திருக்கிறது. அது மற்றெல்லா இடங்களையும் போலவே இங்கும் உண்மை நிலைமையை அறிவது அத்தனை எளிதல்ல. பனிக்காலத்தின் கடைசிக் கட்டம் முதல் சட்டென்று வறண்டுபோன கி.மு.1900 வரை திட்டவட்டமாக வரையறுக்கப்ட்ட ஒரு பாதையில், தடையின்றி பாய்ந்தோடிய ஒரு மாபெரும் நதி இருந்திருக்கவில்லை அதன் பரிணாம வளர்ச்சியின் பாதை மிகவும் சிக்கலானது நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தையும் நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது. வருங்காலத்தில் புவியியல், புராதன காலநிலை சாஸ்திரம், ஐசோடோப்புப் பரிசோதனைகள், புதைபொருள் ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆராய வேண்டியுள்ளது.”

இறுதியாக சரஸ்வதி நதியை சுட்டிக்காட்டும் ஆறு அறிஞர்களின் வரைபடங்களை கொண்டு 11வது அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்.

 

4

 

இதுவரை நாம் பார்த்து வந்ததை இவ்வாறு தொகுத்து இறுதி அத்தியாத்தில் முடிக்கிறார்.

  • ஆரம்பத்தில் யமுனையும் சரஸ்வதியும் அருகருகே இருந்தன.
  • யமுனை நதி நீரும் சட்லெஜ் நதி நீரும் கலந்த்தால் சரஸ்வதி கரைபுரண்டு ஓடி கட்ச் ரண் பகுதயில் கடலில் கலக்கிறாள்.
  • பின்பு பூகம்பம் போன்ற நிகழவால் சரஸ்வதியை விட்டு பிரிகிறாள். பிறகு சரஸ்வதி த்ருஷதியும் சங்கமிக்கும் இடத்திற்கு கிழே இன்றை இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் விநாசனம் என்ற இடத்தில் மறைகிறாள்.
  • சட்லெஜ் நதி சரஸ்வதியில் இணைவது மாறியதாலும், பருவமழை குறைவதும் ஷத்ரானாவுக்கும் கோலிஸ்தானுக்கமிடைய மிகப்பெரிய வெற்றிடம் உருவாகிறது.
  • பிற்கால ஹரப்பா மக்களும் அவர்களுக்கு பிறகு வந்தவர்களும் (சிவப்பு வண்ண மண் பாண்டங்கள் காலகட்டம், வண்ணச் சுடுமண் கால கட்டம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்) கிழக்கு நோக்கி புலம் பெயர்கிறார்கள்.
  • கங்கை சமவெளியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்தை வாழ்வாதாரமாக்க் கொண்டிருந்த மக்களுடைய குடியிருப்புகள் காணப்பட்டிருக்கின்றன.
  • அவர்களும் அங்கு புதிதாக வந்த குடியேறிய பிற்கால ஹரப்பாவாசிகளுடைய கலச்சார சங்கம்ம் நடத்திருக்க வேண்டும்.(இது தொடர்பாக மிகக் குறைவான ஆவணங்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த சங்கமத்தின் விளைவாக கி.மு.முதலாயிரம் ஆண்டில் அந்த பிரதேசம் நகர்மயமாகியிருக்க வேண்டும்.
  • பிற்கால ஹரப்பாவாசிகள் புலம் பெயர்ந்தாலும் சரஸ்வதி நதியை மறக்கவில்லை அதன் புனிதத்ன்மையை யமுனை கங்கைக்கு கொடுத்தனர். முப்பெரும் நதி தேவிகள் உருவாகி ஒரு புனித திரிவேணி சங்கம் உருவானது. உலகப்புகழ் பெற்ற கும்பமேள நடக்கும் புண்ணிய ஸ்தலமாக மாறியது.
  • பல வழிகளில் கங்கைச் சமவெளி நாகரிகம் சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் மறு அவதாரமாயிற்றோ அப்படியே கங்கையும் சரஸ்வதியின் மறு அவதாரமாக மாறிவிட்டாள்.

தொன்ம உலகில் பாய்ந்த நதியை நாம் பூமிக்கு கொண்டுவந்துவிட்டோம். இவள் காணாமல் போய்விட்டாள். ஆனால் மறக்கப்படவில்லை. வறண்டுபோனாலும் கூட அவள் “வாக்கு மற்றும் உத்வேகத்தின் மறு அவதாரமாக மதிப்பில் உயர்ந்துவிட்டிருக்கிறாள். அந்த நதியின் கடைசி துளியும் வறண்டுவிட்டது. ஆனால், அவள் ஒவ்வொருவருடைய உண்மையான சிந்தையிலும் வாக்கிலும் வசித்திருப்பாள். ஒரு நாளும் வற்றப் போவதில்லை அந்த நதியின் ஊற்று. “உனது புனித நீர் ஒட்ட மொத்த பிரபஞ்சத்தையும் நிரப்புகிறது“ என்று மகாபாரத்த்தில் வசிஷ்ட மகரிஷி சரஸ்வதியை பார்த்துக் கூறுகிறார்.

முடிவற்ற மறு பிறவியை விளக்க இதைவிடச் சிறந்த உருவகம் இருக்கவே முடியாது.

இறுதியாக ரிக் வேத்த்தின் சரஸ்வதி ஸ்துதி ஸ்லோகத்தோடு புத்தகத்தை நிறைவு செய்கிறார் நூலாசிரியர் மிஷல் தனினோ.

ஹரப்பாவின் மூன்று காலகட்டத்தின் சரஸ்வதி நதியின் வரைபடம்

5

தற்போது இங்கிலாந்து ஐரோப்பா பயணத்திலிருப்பீர்கள. தங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துகள்.

இந்த புத்தகதின் கருத்துக்கு இசைவான (அ) வேறுபட்ட படைப்புகளோ கட்டுரைகளோ வந்திருந்தால் பரிந்துரைக்கவும்.

 

இப்படிக்கு

ரா.சந்திரசேகரன்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘

$
0
0

1

 

பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும் சாக்கடைத் திறப்புகள். சரிந்த பாசிபற்றிய படிக்கட்டின் வழியாக நடந்தேன். மூதாதையருக்காக நீர்க்கடன்செய்யும் திரள். மரண மந்திரங்கள். துயரம் கப்பிய முகங்கள். இறந்துபோன ஏதோ காலத்தின் இன்றைய தோற்றங்களாக துறவிகள்.

மணிகர்ணிகா கட்டத்தின் ஆரவாரத்தை தாண்டி நடந்தேன். பிறகு தாங்க முடியாத அமைதி கனத்து வழிந்த இடமொன்றை அடைந்தேன். அங்கும் இடிந்த படிக்கட்டு. தளும்பிச் செல்லும் நதி. அதன்மீது அசையும் ஒரு தோணி. நீர்ப்பரப்பை தொட்டு உயர்ந்த ஒரு மீன்கொத்தி. படிக்கட்டில் நிதானமாக நீராடும் காவியுடையணிந்த சடாதாரி. சட்டென்று எங்கோ `ஹரிபோல்! ஹரிபோல்!’ என்று ஒலிகேட்டது. மரணத்தின் கட்டியம் என மனம் சிலிர்த்தது. ஒரு கணத்தில் காசியின் விசுவரூபம் எனக்குப் புலனாயிற்று.

காசி ஒரு மாபெரும் இடுகாடு. ஆனால் அங்கு வாழ்வு அனைத்து எக்காளங்களுடனும் நுரைத்து குமிழியிட்டபடியேதான் இருக்கிறது. எத்தனை மதங்கள், எத்தனையெத்தனை சித்தாந்த தரிசனங்கள். எத்தனை ஞானியர். அந்தப் படிக்கட்டின் முன் என் கல்வியும் கர்வமும் நுரைக்குமிழியென்றுப் பட்டது. அந்த படிக்கட்டில் காளிதாசன் அலைந்து களைத்து வந்து அமர்ந்திருக்கக் கூடும். அங்குதான் ஜகன்னாத பண்டிதன் தற்கொலை செய்துகொண்டிருப்பான். அங்கே சுப்பையா தன் குடுமியை துறந்து பாரதி ஆக உருமாறியிருக்கக் கூடும். வேர்த்து தலை சுழன்று அமர்ந்துவிட்டேன். அப்போது அப்படி அதற்கு முன்பு பலதடவை நான் அமர்ந்ததுண்டு என்று தோன்றியது. பல ஜென்மங்களில் பல யுகங்களில் இன்னும் இந்த நதி ஓடும், முடிவின்றி என்று மனம் அரற்றியது. நதியைப் பார்த்திருக்கையில் காலத்திசைவெளியின் முடிவின்மையில் மனம் விரைந்தபடியே இருப்பது ஒரு பேரனுபவம்.

அவ்வனுபவத்தைத் தரும் அசாதாரணமான நாவல் ஒன்றை அடுத்த வருடமே படிக்க நேர்ந்தது, மலையாளம் மூலம். குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய `அக்னி நதி.’ தமிழ் எழுத்தாளரான சௌரி 1971இல் இதை மொழி பெயர்த்தார். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது.அன்றுமுதல் இந்நாவல் தமிழில் ஆர்வத்துடன் வாசிக்கபப்டுகறது. எனக்கு நண்பர் கோணங்கி இந்நாவலை அறிமுகம் செய்தார்

உத்தரப்பிரதேசத்து இஸ்லாமியப் பிரபு குடும்பத்தில் பிறந்த குர்அதுல் ஐன், அலிகட் பல்கலையில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். டெய்லி டெலிகிராப், பிபிஸி ஆகியவற்றின் நிருபராக லண்டனில் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பி உருது மொழியில் எழுதத் தொடங்கினார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் உதவி ஆசிரியராக இந்திய இலக்கியச் சூழலில் பரவலாக அறியப்பட்டார். 1990இல் இவருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது. 1993ல் எனக்கு `சம்ஸ்கிருதி சம்மான்’ விருது கிடைத்தபோது இவரிடமிருந்து அதைப்பெறும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

அக்னிநதி `கௌதம நீலாம்பரன்’ என்ற இளம் பிரம்மச்சாரி ஒரு நதியை நீந்திக் கடப்பதுடன் தொடங்குகிறது. அது சரயூ அல்லது கோமதி நதி. கௌதம நீலாம்பரன் ஞானத் தேடலுடன் சாக்கியமுனி புத்தனின் அருகாமைக்காக சிராலஸ்தி முதல் பாடலிபுத்திரம் வரை அலைகிறான். அவனுடைய தேடலையும் அவனுடன் இணைத்து சித்தரிக்கப்படும் பிற கதாபாத்திரங்களின் தேடல்களையும் விவரித்தபடி நகர்கிறது நாவல். பிக்குணியாக விரும்பும் நிர்மலா, அவள் தோழி சம்பகா, பிக்கு ஹரிசங்கர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் தங்கள் கேள்விகளால் வழிநடத்தப்பட்டு, துரத்தப்பட்டு முன்னகர்கிறார்கள். பயணத்தில் அதன் முடிவில்லாத சாத்தியங்களில் ஒன்றில் மோதி நின்று விடுகிறார்கள், மறைகிறார்கள். அந்தத் தேடல் மட்டும் முன்னகர்கிறது.

பாடலிபுத்திரத்துப் படித்துறையில் சரயூ நதியின் அலைகளில் நீந்தும் கௌதம நீலாம்பரனை தொடரும் நாவல் ஒரு வரியில் நழுவி வேறு காலகட்டத்தில் அந்நதிக்கரையில் வந்து சேர்ந்த அபுல் மன்சூர் கமாலுத்தீனிடம் வந்து விடுகிறது. “சரயூ நதியின் பேரலைகள் கௌதம நீலாம்பரனின் தலைக்கு மேல் எழுந்து வியாபித்தன… மறுபக்கம் ஒருவன் குதிரையிலிருந்து இறங்கி கடிவாளக் கயிற்றை ஆலமர வேரில் முடித்தான். கறுப்பு வண்ணக் குதிரை. அவன் பெயர் மன்சூர் கமாலுத்தீன்’’. இதுதான் நாவலின் நகர்வு உத்தி. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாறுவதில்லை. ஆனால் மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். காலம் மாறி விடுகிறது மாறாமலிருப்பது நதி. அதன் ஒரே படித்துறை வழியாக வரலாறும் சுழித்தோடுகிறது. நவீன இந்தியாவில் பாட்னா நகரில் அதே படித்துறையில் கௌதம நீலாம்பர தத்தன், சாக்கிய முனி கௌதமனின் சொற்களை நினைவு கூர்கையில் முடிகிறது இந்த அபூர்வமான நாவல்.

குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதியில் சீராக வளர்ச்சிபெறும் கதைக்கட்டுமானம் இல்லை. அல்லது நாம் அறிந்த வகையான கதை இல்லை. கௌதமநீலாம்பரனின் கதையுடன் நாவல் தொடங்குகிறது. அது புத்தரின் கோட்பாடுகள் தேசத்தை குலுக்கிய காலகட்டம். எங்கும் தத்துவ விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அறுபத்திரண்டு மதங்களும் அவற்றின் உட்பிரிவுகளும் வாழ்ந்த பூமியில் சாக்கிய இளவரசனின் புதியமதமும் உருவாகிறது. கௌதம நீலாம்பரன் அந்த தத்துவ விவாதங்களால் ஈர்க்கப்படுகிறான். மறுபக்கம் காதலாலும் காமத்தாலும். அலைச்சலும் ஆவேசமும் மிக்க நாட்கள்.மகதத்தை சந்திரகுப்த மௌரியன் சாணக்கியனின் உதவியுடன் கைப்பற்றும் நாட்கள். போரும் கொடுமைகளும் நிறைந்த காலகட்டம். அனைத்தையும் இழந்து தன்னை கண்டடையும் அவன் கடைசியில் கலையில் சரண் அடைகிறான். மகத்தான மோகினிச்சிலை ஒன்றை அவன்செய்கிறான். அதுவே அவன் வாழ்வின் உச்சமும் சாரமும். அவன் மறைகிறான்.

அடுத்த கதை பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் அபுல் மன்சூர் கமாலுத்தீனின் இந்தியவருகை. ஆப்கானியர் சாரிசாரியாக இந்தியாவில் நுழைந்த காலகட்டம். சுல்தான் ஹ¤சேனின் தூதராக இந்தியா வந்து தொன்மையான கலைகளையும் இலக்கியத்தையும் தேடி அலைகிறான். முகலாய ஆட்சி நிறுவப்படும் போர்ச்சூழல். கமால் போர்வீரனாகிறான். பெருவெள்ளத்துரும்புபோல அலைக்கழிந்து சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில் ஒரு எளியபெண்ணை மணம்புரிந்துகொண்டு வேளாண்மை செய்து மக்களைபெறுகிறான். கற்றதையெல்லாம் மறந்து சிந்திப்பதை துறந்து இசையில் தஞ்சமடைகிறான். அவனைப் யாரோசில போர்வீரர்கள் சாதாரணமாகக் கொன்று வீழ்த்துகிறார்கள்.

மூன்றாவது கதை பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றிய காலகட்டம். லண்டனில் கவிதையும் தத்துவமும் பயின்று வழக்கறிஞர் ஆக எண்ணும் சிரில் பிரிட்டிஷ் ஆட்சி அளிக்கும் செல்வத்தைப்பற்றியும் போகங்களைப்பற்றியும் அறிந்து இந்தியா வந்து வணிகனாகிறான். கொள்ளை வணிகமும் ஊழலும் புரிந்து கோடிகள் திரட்டி பெண்களையும் பாரத மண்ணையும் நுகர்பொருளாக மட்டுமே கண்டு வென்று கொண்டு விலக்கி போகத்தில் ஆழ்ந்து திளைத்து முதிர்ந்து இறக்கிறான். தன்னந்தனியனாக. தான் அடைந்தது என்ன என்று தெரியாதவனாக. ஆனால் இழந்தது என்ன என்பதை இறுதியில் தெளிவாகவே கண்டுகொண்டவனாக.

சிரிலின் கீழ் குமாஸ்தாவாக இருக்கும் கௌதம நீலாம்பர நாத் தத்தாவின் வழியாக நீளும் கதை அவர் காசியில் கற்று பண்டிதரானதையும் அவரது மகன் காலகட்டத்தில் இந்திய சுய உணர்வு உருவாக ஆரம்பிப்பதையும் காட்டுகிறது. வங்கப்பஞ்சங்கள். கல்கத்தா நகரின் எழுச்சி. புராதன நகர்கள் சிதைந்து அழிகின்றன. புதிய காலகட்டம் பிறக்கிறது. லக்னோவில் தொடரும் கதை இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் நீள்கிறது. சிப்பாய் கலவரம். காங்கிரஸின் உதயம். இந்த இடத்தில் கதையின் போக்கு மாறுகிறது. சுருக்கமான வரலாற்றுச்சித்தரிப்புக்குப் பதிலாக விரிவான தற்கால விவரிப்பு இடம்பெறுகிறது. தலயத் , கமால், கௌதம நீலாம்பரன், ஹரிசங்கர், சம்பா ஆகியோரினூடாக இந்திய விடுதலையும் தேசப்பிரிவினையையும் இந்தியா தன்னைக் கண்டடைய நிகழ்த்தும் அலைபாய்தல்களையும் சித்தரிக்கிறது

‘1925ல் பாசேஜ் டு இந்தியா நாவலை எழுதியபோது இ.எம்.பாஸ்டர் ஒரு முஸ்லீமை இந்தியாவின் பிரதிநிதியாக உருவகித்தார். இன்று அவர் எழுதியிருந்தால் அவ்வாறு உருவகித்திருக்க மாட்டார். ஒரு இந்துவே இந்தியாவின் பிரதிநிதியாக இப்போது கருதப்பட இயலும்’ .கமால் இந்நாவலில் உணரும் இச்சிக்கலையே நாவலின் இப்பகுதியெங்கும் காண்கிறோம். தேசம் என்ற பொது அடையாளம் இல்லாமலாகிறது. இரு தேசியங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. முஸ்லீம் லீகில் இணைந்து பாகிஸ்தானுக்காக வாழ்நாள் முழுக்க போராடிய கமாலின் தந்தை நவாப் லக்னோவை விட்டு அங்கே போக விரும்பவில்லை. முஸ்லீம்களுக்கு தனிநாடு என்பது அவர் நம்பிய கோட்பாடு. லக்னோ அவரது உயிர்மூச்சான மண். ஆனால் கமால் என்றுமே பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிரி. பிரிவினைக்குப்பின்னர் தன் நாடாக இந்தியாவை நினைத்து லண்டனில் இருந்து இந்தியா வருகிறான். இங்கே அவனுக்கு வேலை இல்லை. தெரிந்த உயர்வற்கத்தினர் எவரும் இல்லை. வேலைதேடி உழன்று சலித்து அவன் வேறுவழியில்லாமல் பாகிஸ்தான் செல்கிறான். பாகிஸ்தானையே நாடாகக் கொள்கிறான்

நாவல் மேலும் விரிந்து கிழக்குபாகிஸ்தான் வங்கதேசமாகப் பிரியும் இடம் வரை வந்து நிற்கிறது. மீண்டும் ஒரு சிரில் மீண்டும் ஒருமுறை வங்கத்துக்கு வருகிறான். மீண்டும் கொந்தளிக்கும் நதி அவனை எதிர்கொள்கிறது. சந்தால்களின் வறுமை. மதக்காழ்ப்புகள். போராட்டச் சூழல். கௌதம நீலாம்பர, ஹரிசங்கர் ஆகியோரின் அன்னியப்படல் மூலம் முடிவை நோக்கிச்செல்லும் நாவல் வரலாறு என்பது என்ன என்ற வினாவை அவர்கள் தங்கள் அளவில் எதிர்கொள்ளுவதை காட்டுகிறது. அன்னியமாகும் ஒருவன் அடிப்படையில் வரலாற்றிலிருந்து அன்னியமாகிறான். வரலாறென்பது பொருளிலா பேரியக்கமான கடந்தகாலமே என்று உணர்தலே அவன் அடையும் வெறுமையின் சாரம்.

கௌதமநீலாம்பரன் சிராவஸ்தியில் மௌரியர் காலத்தில் கௌதம நீலாம்பரன் செய்த அந்த மோகினிச்சிலையை தொபொருளாக காண்கிறான். அதை உருவாக்கிய கலை எழுச்சியைப்பற்றி எண்ணிக்கொள்கிறான். நதிக்கரையில் அதே படித்துறையில் அவன் அமர்ந்துகொண்டு நீல நீரலைகளைக் காணும் இடத்தில் இந்த நாவல் நிறைவு பெறுகிறது. ” அன்னையே நான் உன் மடியில் நிற்கிறேன். நான் தோல்வி காணவில்லை.எனக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.நான் புண்படுத்தபப்டவும் இல்லை.நான் முழுமையானவன்.பூர்ணன்.என்னை எவராலும் அழித்துவிடமுடியாது.”

*

அக்னி நதியின் வலிமை அதன் தாவிச்செல்லும் சித்தரிப்பில் உள்ளது. வானில் பாயும் குதிரைபோல கதை காலகட்டங்களை சாம்ராஜ்யங்களின் உருவாக்கத்தை அழிவை தொட்டுச்செல்கிறது. இதன் அமைப்பு மிக நுண்ணிய திட்டமிடல்கொண்டது. மௌரியப்பேரரசின் எழுச்சி , முகலாய வருகை, ஆங்கிலேயவருகை, சுதந்திர எழுச்சி, சுதந்திரத்துப் பிந்திய தொழில்மய நவீன வாழ்க்கையின் தொடக்கம் என இது தன் கதைகளத்தை அமைத்துள்ளது. எல்லாக் காலகட்டத்திலும் நடப்பது ஒன்றே. அதிகாரத்தின் குரூரமான போர். அழிவு.அதன் மானுடதுயரம். அதையெல்லாம் கண்டு அதன் சாரமென்ன எனறு ஆராயும் சிந்தனையாளர்கள். அவர்களின் அலைச்சல். தனிமை. அதனூடாக கலைகள் மூலம் மனிதமனம் கொள்ளும் மீட்பு. மீண்டும் மீண்டும் இதையே சொல்ல்லிச்செல்கிறது இந்நாவல்

பல இடங்களை சுருக்கமாகச் சொல்லி பெரிய காலமாற்றத்தை காட்டுகிறது இந்நாவல். பெரும் சரித்திர நிகழ்வுகள் போகிற போக்கில் யாரோ சொல்வதுபோலவோ முக்கியமற்ற தகவல் போலவோ சொல்லப்படுகின்றன. சாணக்கியன் என்ற பிராமணனின் உதவியுடன் தனநந்தனை வீழ்த்தி சந்திரகுப்தன் அரசேறும் செய்தி அகிலேசனின் சில சொற்கள் வழியாக காட்டப்படுகின்றது. பெரும் காட்சிவர்ணனைகளும் சித்தரிப்புகளும் இல்லை என்பதை ஒரு குறையாகவும் நிறையாகவும் சொல்லலாம். வரலாறென்பதே நாம் சுதாரிப்பதற்குள் நம்மை சூழ்ந்து தாண்டிச்சென்று பின்னர் நமக்கே செவிவழிச்செய்தியாக மாறிவிடும் ஒன்றுதான் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அதேபோல வழிப்போக்கர்களால் இசையும் நாட்டியமும் பரத்தைமையும் கோலோச்சிய லக்னோவின் சித்தரிப்பு கௌதம நீலாம்பர நாத தத்தாவின் நோக்கில் சில காட்சிகளாக சொல்லப்படுகிறது. பேரழகியும் செல்வந்தர்கள் காலடியில் பணிந்து நின்றவளுமான கணிகை சம்பா சிப்பாய் கலவரத்தால் அனைத்தையும் இழந்து தெருவில் பிச்சையெடுத்து அபின் வாங்கியுண்ணும் சித்திரம் சாதாரணமாக முன்வைக்கப்பட்டு நாவல் தாண்டிச்செல்கிறது. வரலாற்றுநதியின் ஓட்டத்தில் எல்லாமே வெறும் காட்சிகள் மட்டுமே.

ஆனால் இந்நாவலின் அமைப்பில் உள்ள ஒரு சமநிலையின்மை உள்ளது. இதன் வடிவத்தில் மூன்றில் ஒருபங்குமட்டுமே மொத்த இந்தியவரலாற்றுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கதை சட்டென்று சமகாலத்தில் வந்து சாவகாசமாக விரிகிறது. இதன்காரணமாக கணிசமான வாசகர்கள் சற்று சலிப்படையக்கூடும். சமகால இந்தியாவின் வரலாற்றுப்புலம்தான் நாவல் என்றால் ஆசிரியை கதையை இங்கேயே தொடங்கி பின்னால் சென்றிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகவே அக்னி நதியை வாசிக்கும் வாசகர்களில் ஒருசாராருக்கு அது சமகாலத்தை நெருங்க நெருங்க உருவாகும் கறாரான யதார்த்தம் பிடிக்காமலாகிறது. ஆனால் ஆசிரியையின் திட்டம் தெளிவானது. கௌதம நீலாம்பரன் ஒரு புள்ளி என்றால் கமால் இன்னொரு புள்ளி. இருவரும் வரலாறுமுழுக்க நீண்டு வருகிறார்கள். இரு சரடுகளாக பின்னிப்பிணைந்து. தேசப்பிரிவினை அவர்களை இரண்டு துருவங்களாக மாற்றுகிறது. நாவலின் முடிவுப்புள்ளி அப்பிரிவில்தான் உள்ளது. அதை மையமாக்கி வாசிக்கையில் நாவலின் அமைப்பும் அதற்கேற்ப அமைந்திருப்பதை காணலாம்.

&&&&

வரலாற்றின் இரு முகங்களை நாம் அடிக்கடி உணர்ந்திருப்போம். நாம் வரலாறு என சாதாரணமாக உணர்வது நமக்குக் கற்பிக்கப்படும் பழங்காலம். நம்மிடமிருந்து மிக மிக விலகிய ஓர் அற்புத உலகம் அது. ஐதீகங்களின் தொன்மங்களின் உலகம். அங்கேயுள்ள எல்லாமே படிமங்களாக ஏற்கனவே மாறிவிட்டவை. பேரழிவும் துக்கங்களும் கூட கனவுச்சாயை பெற்று இனியவையாக மாறிவிட்டிருக்கின்றன. ராஜராஜசோழனும் கபிலனும் காளிதாசனும் புத்தரும் உயிருடன் நடமாடும் உலகம் என்றால் அது என்ன? நம் ஒவ்வொருவரின் ஆழத்திலும் உறைந்துள்ள நுண்ணிய கனவுலகம் தானே அது?

பெரும்பாலான சரித்திர நாவல்கள் உண்மையில் ஐதீக நாவல்களே. அபூர்வமாக சிலநாவல்கள் படிமநாவல்கள் ஆகின்றன. பொன்ன்னியின்செல்வன் ஒரு ஐதீகநாவல். யவன ராணி ஒரு ஐதீக சாகச நாவல். வரலாறு என்பது ஐதீகமல்ல. ஐதீகம் என்பது விழுமியங்கள் இணைக்கப்பட்டு மறு ஆக்கம்செய்யப்பட்ட நிகழ்வு. விழுமியங்களின் சாரம் இல்லாத ‘சாதாரண’ நிகழ்வுகளின் வரிசையால் ஆனதே வரலாறு.ஆஅகவே அது கனவுச்சாயை இல்லாமல் கறாரான உலகியல்தன்மையுடன் இருக்கும். சிறந்த உதாரணம் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’ தமிழில் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’

அக்னிநதியின் தொடக்கப்பகுதி ஐதீகப்பரப்பில் உள்ளது. கனவு நிகர்த்த ஓர் உலகம். சித்தரிப்பில் கூட ஒரு கனவைக் கொண்டுவர குர் அதுலைன் ஹைதர் முயன்றிருப்பதைக் காணலாம். மெல்லமெல்ல கதை வரலாறாக மாருகிறது. அப்படியே பரிணாமம்பெற்று சமகால வரலாறாக மாறுகிறது. நாம் வாழும் காலம்வரை வந்து நிற்கிறது அது. நாவல் இரு பகுதிகளாக ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பதாகவும் சிலருக்குப் படுகிறது. உண்மையில் அப்படி இரு வண்ணங்களில் அமைந்திருப்பதே இந்நாவலின் சிறப்பு. இதன் மையப்பொருளே அம்மாற்றம்தான். புத்தமதம் பித்துபோல வளரும் ஒரு காலத்தில் தொடங்கும் நாவல் சமகாலத்தில் வந்து நிற்கிறது. ஒரே படித்துறை. மீண்டும் மீண்டும் வெவ்வேறுபெயர்களில் அந்தப்படித்துறை நாவலில் வந்துகொண்டே இருக்கிறது. காலந்தோறும். ஒருகரை கனவாகவும் மறுகரை நிஜமாகவும்கொண்டு ஓடும் காலநதியில் அமைந்திருக்கும் படித்துறையாக நாவலில் அது கொள்ளும் நிறமாற்றமே இந்நாவலின் மையமாகும்.

இநாவலை வாசிக்கும்போது வாசகன் கொள்ள வேண்டிய கவனங்கள் பல. நேர்வாசிப்பாக ஒரு சீரான கதையோட்டமாக வாசித்து முடிக்கலாம். தேர்ந்த வாசகனின் கற்பனை ஊடுபாவாக நகர்வதற்கான பலவேறு சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்பதே இந்நாவலின் வலிமையாகும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஒரே பெயரில் மீளமீள வருகின்றன. ஒரே பெயர் கொண்ட கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் உள்ள பிரச்சினை என்ன என்று நோக்குவது நாவலை புரிந்துகொள்ள மிகவும் உதவும். முதல்கமால் தத்துவஞானம் தேடி கங்கை கரைக்கு வருகிறான். கடைசிக்கமால் வேலைதேடி அலைகிறான். ஒவ்வொருவரையும் நதி எப்படி எதிர்கொள்கிறது என்று நோக்கும் வாசகனுக்கு பலவகையான மனத்திறப்புகள் ஏற்படும். இளவெயிலும் மழையும் கலந்த பருவத்தில் அதில் குதித்து நீந்தி திளைத்து மறுகரை ஏறுகிறான் கௌதமநீலாம்பரன். பிரிட்டிஷ் பிரஜையான சிரில் அங்கே அவ்ரும்போது அது கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆறு இங்கே காலநதியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது

தேவதேவதைகளை அதிகமறியேன்
தேவதையொன்றை நன்கறிவேன்
தீம்புனலாறு மகாநதி
தீயென இயல்பு தீரா வலிமை
மண்ணகத்தேவதை மன்னிய சினத்தள்
தண்ணாத எழுச்சியின் தனித்தலைவி
தன் பருவங்களுக்கெல்லாம் தனிநாயகி

என்ற டி எஸ் எலியட்டின் கவிதைவரிகள் முகப்பில் ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இந்நாவலின் மைய கவியுருவகம் [மெட்ட·பர்] என்ன என்பதை முதலியேயே வாசகனுக்குச் சுட்டிவிடுகின்றன. இவ்வாறு மைய உருவகம் ஒன்றை வைத்து புனையபடும் நாவல்களில் அந்த மைய உருவகம் யதார்த்தத்தில் பதிந்துள்ள ஒரு பருப்பொருளாக — ஓர் இடமாகவோ பொருளாகவோ மனிதராகவோ — இருக்கும். அது நாவலெங்கும் பல்வேறு வகையில் யதார்த்தமாக விவரிக்கப்பட்டிருக்கும். கதைமாந்தருடன் பல்வேறு வகையில் தொடர்புகொண்டிருக்கும். அந்த மைய உருவகத்தை நாவல் கூறவிரும்பும் கருத்தாக எடுத்துக் கொண்டு அது நாவல் முழுக்க எப்படி இலங்குகிறது என்ரு நோக்குவதன் மூலமே நாம் அந்நாவலை முழ்மையாக புரிந்துகொள்ள முடியும். கோமதியை காலநதியாக, அப் படித்துறையை அந்நதிக்கரையின் ஒரு இடமாக — என் இந்தியாவாக– வைத்துக்கொண்டு இந்நாவலைப்படிக்கும்போது நதியின் ஒவ்வொரு வர்ணனையும் கவித்துவ விரிவடைவதைக் காணலாம்.

இந்நாவலுக்கு வடிவ அளவிலும் தரிசன அளவிலும் பொருத்தம் கொண்ட நாவல் ஒன்று உள்ளது. 1961ல் நோபல் பரிசு பெற்ற யூகோஸ்லாவிய நாவலாசிரியர் இவோ ஆண்ட்ரிச் எழுதிய ‘ட்ரினா நதிப் பாலம்’. இருநூற்றை ஐம்பது அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்ட அந்தப்பாலத்தின் ஒருபக்கம் விஷ்கிராத் என்ற செர்பிய நகரம் உள்ளது. நகரத்தின் மையமே அந்தப்பாலத்தில் இருந்து சற்று தள்ளித்தான். மறுபக்கம் துருக்கியர்களின் ஓட்டோமான் பெரரசு. துருக்கியர் ஐரோப்பாவில் நுழைவதற்கான வாசல் அந்தப்பாலம். ஏறத்தாழ மூன்று நூற்ராண்டுக்காலம் அந்தப்பாலம் வழியாக நடந்த போர்களையும் அப்பாலத்தை மையமாக்கி நடந்த அதிகாரவிளையாட்டுகளையும் சொல்லும் காவியநாவல் இது. இரு கலாச்சாரங்களுக்கு இடையே இரு மதங்களுக்கு நடுவே பற்பல நூற்றாண்டுக்காலம் நீண்டு நின்ற மாபெரும் அதிகாரப்போட்டியை சித்தரித்துக்காட்ட அந்தப் பாலத்தை மையமாக்கிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். நாடுகளுக்கு நடுவேயான போர்களின் மானுடப்பெரழிவையும் தியாகங்களின் முடிவிலாத தொடரையும் கண்ணீரையும் கனவையும் சொல்கியிருக்கிறார். குர் அதுர்ஐன் ஹைதரின் அக்னிந்தியில் வரும் படித்துறை பலவகையிலும் அந்தப்பாலத்துக்கு நிகரானதாகும்

மனிதர் மறக்கவிரும்பும் அனைத்தையும்
நினைக்க வைக்கும் தேவதை அவள்…

என்று ஆசிரியர் எடுத்துக் கொடுத்திருகும் வரி. வரலாறு மனிதர்கள் மறக்க நினைக்கும் விஷயங்களும் நினைக்க விரும்பும் விஷயங்களும் பிரித்துக்காண முடியாமல் கலந்துள்ள பெருங்கலவை. வரலாற்றை ஒவ்வொரு கணமும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான். தான் வாழும் வாழ்க்கை வரலாற்றின் இயல்பான தொடர்ச்சி என்று நம்ப தன் சிந்தனையின் கடைசித்துளி வரை செலவழிக்கிறான்.வரலாற்றுக்கு ஒரு சாரம், ஒரு திசைவழி உண்டு என்றும் அது இயற்கையின் இயற்கையை ஆளும் இறைவனின் இச்சை என்றும் நம்ப விழைகிறான். இதையே வரலாற்றுவாதம் [ ஹிஸ்டாரிசிசம்] என்று நவீன சிந்தனை சொல்கிறது. வரலாற்றுவாதம் மூலமே தன் வாழ்க்கைக்கு ஒரு பொருளை மனிதன் தேடமுடியும். அரசியல்சமூகவியல் கோட்பாடுகள், தரிசனங்கள் எல்லாமே வரலாற்றுக்குப் பொருள்கொள்ள மனிதன் உருவாக்கியவை. ஆனால் அப்படி ஒரு பொருள் உண்மையாகவே வரலாற்றுக்கு உண்டா?

”முழுவரலாறும் ஆழங்காணமுடியாத ஒரு கடல்.அதில் நீயும் நானும் இலைகளைப்போல அல்லாடிக்கொண்டிருக்கிறோம். எனக்கு முன்னால் அறியப்பட்டுள்ள தகவல்களுக்கு நான் பொறுப்பாளியா என்ன?” என்று வரலாறை எழுத முற்படும் ஹரிசங்கர் கேட்கிறான். இந்துக்களுக்கு வரலாறு இல்லை. ஒரு மனிதனின் வாழ்வென்பது எரிந்து அணையும் சுடர். ஆகவே அவன் உடலும் எரிந்தழிவதே முறை. வாழ்க்கையை தத்துவங்களாக்கி அவற்றை மட்டுமே எஞ்சவிடுவது இந்துக்களின் முறை

ஆனால் எதிர்காலத்துக்காக கல்லறைகளை உருவாக்கும் இஸ்லாமியர்களுக்கு வரலாறு என்பது கல்லறைகளின் கதை மட்டுமே ”இவ்வளவு அரும்பெரும் சிறப்புகள் இருந்தும் இவ்வளவு அறிந்தும் மனிதகுலம் நாசம் அடைந்தே வருகிறது. மனித ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரணகளங்கள் வெறியாவேசத்துடன் பரவுகின்றன.வரலாற்றில் அவனுக்கு எவ்வளவுக்கு ஆர்வம் இருந்ததோ அவ்வளவுக்கு இப்போது அருவறுப்பு ஏற்பட்டுவிட்டது. அவன் சுல்தான்களின் ஆட்சி அவர்களின் காலம் கோலம் அனைதையும் மறந்துவிடவே விரும்பினான்” கமால் அறியும் வலராறு அர்த்தமற்ற ஆதிக்க வெறிமட்டுமே.

கௌதம நீலாம்பரன், கமால் இருவருமே கடைசியில் கலைகளில் தான் சென்று அணைகிறார்கள். வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளையும் கல்லறைகளையும் விட்டுவிட்டுச் செல்கிறது. அந்த காலகட்டத்தின் ஆத்மாவின் பதிவுகள் என கலைகள் மட்டுமே எஞ்சுகின்றன.

வரலாறு ஒரு நதி. அதன் ஓட்டத்தைக் காணமுடிகிறது. நம் அறிவைக்கொண்டு அதன் ஓட்டத்துக்கு ஒரு நோக்கத்தை உணர முடியவில்லை. அதன் ஓட்டத்தைக்காணும்தோறும் நாம் அற்பமானவர்களாக சிறுத்து நமது உள்ளத்துச் சாரங்களை நிழந்து வெறுமைகொண்டு அதன் கரையில் நிற்கிறோம். அக்னிநதி அந்த வெறுமையின் தரிசனத்தை அளிக்கும் நாவல்.

[அக்னி நதி _ குர்அதுல் ஜன் ஹைதர், தமிழில்: சௌரி; நேஷனல் புக் டிரஸ்ட்]

 

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jan 29, 2007

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84

$
0
0

[ 14 ] 

தென்மேற்கு மூலையிலிருந்து ஒளிரும் விழிகளுடன் கரிய கன்னியொருத்தி எழுவதை வடமேற்கு மூலையில் அமர்ந்த அனலோன் முதலில் பார்த்தான். வெருண்டு அவன் சீறியபோது தேவர்கள் அனைவரும் அத்திசை நோக்கி திரும்பினர். நாகங்கள் சினந்து உடல் சுருட்டி பத்தி விரித்து விழி கனன்றன. ஐம்புரிக்குழலும் வலக்கையில் தாமரையும் இடக்கையில் மின்கதிர்படையும் கொண்டிருந்தாள். அவள் குழல் நீரலையென பறந்தது. கால்களில் செந்தழல் வளையங்களென கழல்கள் ஒளிவிட்டன.

அவள் இடப்பக்கத்திலிருந்து கோரைப்பற்களும் உகிரெழுந்த பதினெட்டு கைகளும் கொண்ட பெருந்தெய்வமொன்று தோன்றியது. வலப்பக்கம் செந்தழல் உடலுடன் புகைச்சுருள்குவை என குழல்பறக்கும் தெய்வம் எழுந்தது. ஒன்று பலவாக அவர்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள். தேவர்கள் ஒருவரை ஒருவர் கைபற்றிக் கொண்டனர். அரக்கர்கள் மெல்ல ஒருவரை ஒருவர் அணுகி ஒற்றை கரிய படலமென மாறினர். நாகங்கள் ஒன்றுடன் ஒன்று உடல் சுருங்கி ஒரு வடமென்றாகி வளைந்து இறுகி வட்டாயின. நீர்ப்பரப்பில் ஊறிக்கலக்கும் வண்ணப்பெருக்கு போல அத்தேவியர் முழுவானின் வளைவையும் நிரப்பினர். முகிலென மாறி கீழிறங்கி சூழ்ந்தமைந்தனர். அவர்களின் விழிகள் விண்மீன்களென மின்னிக்கொண்டிருந்தன.

சகுனி “ஆடலை இங்கு முடிக்கலாம் என்று எண்ணுகிறேன், அரசே. இனி ஆட தங்களிடம் எதுவுமில்லை” என்றார். தருமன் தன் இருகைகளிலும் நகங்கள் உள்ளே பதிந்து இறுக, இதழ்களை கிழிக்கும்படி பற்களைக் கடித்து அசைவிழந்து அமர்ந்திருந்தார். பன்னிரு பகடைக்களம் கடுங்குளிரால் இறுகியதுபோல் இருந்தது. “இனியொன்றும் இயற்றுவதற்கில்லை. இங்கு முடியட்டும் இந்த ஆடல்” என்று விதுரர் உரக்க கூறினார். சீற்றத்துடன் திரும்பி அவரைப் பார்த்த தருமன் “நிறுத்துங்கள்! ஆட வந்தவன் நான். எதுவரை ஆடுவேன் என்று முடிவு செய்யவும் நானறிவேன்” என்றார். விதுரர் “மைந்தா…” என்று உரக்க அழைத்தார்.

குருதி படிந்த விழிகளுடன் “விலகிச் செல்லுங்கள்! எவர் சொற்களும் எனக்குத் தேவையில்லை. இனியும் ஆட விழைகிறேன்” என்றார் தருமன். சகுனி இதழ்கோட நகைத்து “எதை வைத்து ஆடுவீர்? எஞ்சுவதென்ன? நீங்கள் உட்பட பாண்டவர் ஐவரும் தங்கள் மைந்தர்களுடன் அஸ்தினபுரிக்கு தொழும்பர்களென்று ஆகிவீட்டீர். தொழும்பர்களிடம் செல்வமென ஏதும் எஞ்சமுடியாது” என்றார். உரத்த குரலில் “தொழும்பர்களுக்கும் துணைவியர் உண்டு, மூடா” என்று தருமன் கூவினார். “என் துணைவியை இங்கு பந்தயம் வைக்கிறேன்.”

“துருபதன் மகளை, அனலில் எழுந்த அணங்கை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை பந்தயம் வைக்கிறேன்” என்றார் தருமன். உளவிசை உந்த எழுந்தார். கைகளை விரித்து “ஆம், இதோ என் தேவியை வைத்து ஆடுகிறேன்” என்றார். பித்தனைப்போல சிரித்து கைகளை ஆட்டியபடி அரங்கை சுற்றிநோக்கினார். “இனி ஒன்றும் இல்லை. இறுதியை பந்தயம் வைக்கிறேன். அவ்வுலகை பந்தயம் வைக்கிறேன். மூதாதையர் ஈட்டிய அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன்.” சிரித்துக்கொண்டே திரும்பி “சொல்லும்! எதிர் பந்தயம் என எதை வைக்கிறீர்?” என்றார்.

சகுனி ஆழ்ந்த மென்குரலில் “அரசே, நீங்கள் இழந்த அனைத்தையும் பந்தயமென வைக்கிறோம். உடன் அஸ்தினபுரி நகரை, அரசை, அதிலமைந்த அரியணையை, அதிலமர்ந்த அரசரை, அவ்வரசரின் உடன்பிறந்தோர் அனைவரை, அவர்களின் மைந்தர்கள் ஆயிரவரை, அக்குலத்து மகளிர் அனைவரை, மூதாதையர் ஈட்டிய புகழை, நல்லூழை, தெய்வங்கள் அருளிய அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.

தருமன் பால்நுரை குளிர்நீர் பட்டதென அடங்கினார். கண்களில் நீர்மை மின்ன பெருமூச்செறிந்தார். “ஆம், அனைத்தும் தேவை. இவ்வுலகே தேவை, என் தேவிக்கு நிகராக. இங்கு எழுக மானுடரை எண்ணி நகைக்கும் தெய்வங்கள் அனைத்தும். இவ்வாடல் எங்கு சென்று முடிகிறதென்று பார்ப்போம். வென்றால் இப்பீடத்திலிருந்து தேவனென எழுவேன். வீழ்ந்தால் நெளியும் இழிபுழுவென ஏழுபிறவிக்காலம் கீழ்மைகொள்வேன். அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.

சகுனி தன் பகடைகளை எடுத்து நெஞ்சோடு சேர்த்து  ஒருகணம் ஒருங்கமைந்து பின் உருட்டினார். “ஒன்று!” என அறிவித்தான் நிமித்திகன். அங்கிருந்தோர் விழிகளால் செவிகளால் அவ்வாடலை காணவில்லை. அப்பகடைக்களத்திற்குள் தாங்களும் வீரர்களென அமர்ந்து அதில் ஆடிக்கொண்டிருந்தனர். “பன்னிரண்டு!” என்று தருமனுக்கு அறிவித்தான் நிமித்திகன். “ஏழு!” என்றது சகுனியின் பகடை.

இருபடைகளும் பெருவஞ்சத்தின் மாளா ஆற்றலுடன் களம்நின்றன. மழைமுகில் சூல் கொண்டு ததும்புவதுபோல் விண்ணில் உருபெருத்து பழுத்தனர் பெருந்தேவியர். பகடை உருளும் ஓசையன்றி பிறிதொன்றும் எழவில்லை.

பன்னிரண்டு என விழுந்தது சகுனியின் தெய்வம். தன் படைகளை விரித்து நாகமொன்றை அமைத்தார். நடுவே பதுங்கி பின்னகர்ந்தது தருமனின் படை. பன்னிரண்டுகள் என உருண்டு விழ விழ நாகங்கள் சீறிப்பெருத்தன. நச்சுப்பற்கள் முனைகொள்ள சினத்துடன் வால்வளைத்து உடல் சொடுக்கி எழுந்தன. சிம்மம் அஞ்சி காலெடுத்து வைத்து தன் அளைக்குள் சென்று உடல் வளைத்தொடுங்கியது. அணுகி வந்த நாகங்கள் அதைச்சூழ்ந்து வலையென்றாயின. வெருண்டு உறுமிய சிம்மத்தின் உடலில் மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுந்தன. எங்கோ எண்ணித் தொட்டளிக்கப்பட்ட கணம் ஒன்றில் முதல் நாகம் சிம்மத்தின் காலை கவ்வியது. மறுகணம் நாகங்களால் முற்றிலும் பொதியப்பட்டு சிம்மம் மறைந்தது.

அவையோர் ஒவ்வொருவராக விண்ணில் இருந்து உதிர்வதுபோல பகடைக்களத்தில் பீடங்களில் வந்தமைந்தனர். பல்லாயிரம் நாகச் சீறல்களென மூச்சுகள் எழுந்தன. பின்பு தொலைதூரத்துத் திரையசைவொன்று பெருநெருப்பின் ஒலியென கேட்கும் அளவுக்கு பன்னிரு பகடைக்களத்தில் முற்றமைதி சூழ்ந்திருந்தது.

தருமன் ஒவ்வொரு மயிர்க்காலும் குத்திட்டு நிற்க இரு சுட்டுவிரல்களால் நெற்றிப்பொட்டை அழுத்தி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவையமர்ந்த முதற்கணத்திலிருந்த அதே போன்று சகுனி அமர்ந்திருந்தார். கணிகர் அங்கிலாதவர் போல் கண்மூடி கனவு நிறைந்த முகத்துடன் கிடந்தார். பீஷ்மர் துயிலிலென அப்பால் இருக்க துரோணரும் கிருபரும் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கி அவை நிரையை விழிசுழற்றி சொல் எழாது நின்றனர்.

பெண்டிரவையில் வளைகள் உதிர கைகள் தாழும் ஒலி கேட்டது. மெல்லிய விம்மலொன்று வாள்வீச்சென கூடத்தை கடந்துசென்றது. இடியோசையென அங்கிருந்த அனைத்து உடல்களையும் விதிர்க்கச் செய்தபடி தன் தொடையை ஓங்கி அறைந்து துரியோதனன் எழுந்தான். “ஆம், இனியொன்றும் எஞ்சுவதற்கில்லை. இதோ, இந்திரப்பிரஸ்தத்தின் இறுதித்துளியும் அஸ்தினபுரிக்கு அடிமையென்று ஆயிற்று. ஆ!” என்று கூவினான். “எங்கே ஏவலர்கள்? எங்கே படைவீரர்கள்?” என்றான்.

படைவீரர்கள் நால்வர் அவனை நோக்கி ஓடிவந்து வணங்கினர். “சென்று இழுத்து வாருங்கள் அந்தத் தொழும்பியை. இவ்வவை முன் நிறுத்துங்கள் அவளை! இனி அவள் ஆற்றவேண்டிய பணி என்ன என்று அறிவிக்கிறேன்” என்றான் துரியோதனன்.

மாபெரும் நீர்ச்சுழியென பன்னிரு பகடைக்களத்தைச் சூழ்ந்திருந்த அனைவரும் துரியோதனனின் ஆணையை கேட்டனர். தங்கள் ஆழத்தில் எப்போதும் திறந்திருக்கும் பிறிதொரு செவியால் அதை சொல்எழாது உள்வாங்கினர். தீயவை எதையும் தவறவிடாத செவி, மலரிதழ் மேல் ஊசி விழுவதை தவறவிடாத பேராற்றல் கொண்டது அது. விழியும் செவியும் நாசியும் ஒன்றேயான நாகத்தின் புலன்.

அசைவிழந்து அமர்ந்திருந்த அவை நோக்கி இருகைகளையும் ஓங்கித் தட்டி வெடிப்பொலி எழுப்பி எழுந்து நின்று ஆர்ப்பரித்தான் துரியோதனன். “சென்று அழைத்துவாருங்கள். இன்று அவள் அரசியல்ல. அஸ்தினபுரியின் தொழும்பியென்று அவள் அறியட்டும்.”

தருமன் தன் கால்கள் உடலுடன் தொடர்பின்றி துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அவர் உடலிலிருந்து சீற்றத்துடன் எழுந்த ஓர் ஆண்மகன் உடைவாளை உருவி துரியோதனனை நோக்கி பாய்ந்தான். திகைத்து நின்று அவ்வுடைவாளைத் திருப்பி தன் கழுத்தை வெட்டிக்கொண்டு குருதி கொப்பளிக்க அக்களமேடையில் விழுந்து துடித்தான். பிறிதொருவன் குளிர்ந்த குருதியுடன் எடைமிக்க பாதங்களை எடுத்து வைத்து பின்னோக்கி நடந்து அவனுக்குள்ளேயே புகுந்து இருண்ட அறைகளுக்குள் நுழைந்து ஒவ்வொரு வாயிலாக மூடிக்கொண்டே போனான்.

குளிர்ந்துறைந்த பனித்துளிகள் போன்ற கண்களுடன் சகுனி கைகளை கட்டிக்கொண்டு தன் பீடத்தில் சாய்ந்து அசைவற்றிருந்தார். பாண்டவர் நால்வரும் ஒருவர் கைகளை ஒருவர் பற்றியபடி கடுங்குளிரில் நின்றிருக்கும் கன்றுகளைப்போல உடல் விதிர்த்துச் சிலிர்க்க நின்றிருந்தனர். துரியோதனன் தருமனை நோக்கி கைசுட்டி “அடேய்! இந்தத் தொழும்பனை அவனுக்குரிய இடத்தில் நிற்க வை!” என்றான். தலைவணங்கி இருவீரர் யுதிஷ்டிரரை அணுகி குனிந்து நோக்கினர். அதன் பொருள் உணர்ந்தவர் போல தன் தலையணியைக் கழற்றி கீழே வைத்தார். அணிகலன்களை உருவி அதனருகே போட்டார். காலணிகளையும் மேலாடையையும் கழற்றிவிட்டு இடையாடையுடனும் வெற்றுமார்புடனும் நடந்து சென்று பீமனின் அருகே நின்றார்.

அவையிலிருந்து துரோணர் எழுந்து தயங்கிய குரலில் “அரசே, இது ஒரு குலக்களியாட்டு. இவ்வுணர்வுகள் அவ்வெல்லையை கடக்கின்றன என்று சொல்ல விழைகிறேன்” என்றார். “தாங்கள் உத்தரபாஞ்சாலத்தின் அரசனின் தந்தை. அஸ்தினபுரியின் அரசியலுக்குள் தங்கள் சொல் நுழையவேண்டியதில்லை” என்று துரியோதனன் கூரியகுரலில் சொன்னான். “ஆம், ஆனால்…” என்று அவர் சொல்லத்தொடங்க “இதற்குமேல் ஒருசொல்லும் இங்கு தாங்கள் சொல்ல வேண்டியதில்லை, ஆசிரியரே. எல்லை கடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்!” என்றான்.

கிருபர் “பெண்களை அவைமுகப்புக்குக் கொண்டுவரும் வழக்கமே இங்கில்லை, சுயோதனா” என்றார். “அந்தணர் வில்லேந்தும் வழக்கம் மட்டும் இங்கு உண்டா? உங்கள் சொல் இங்கு விழையப்படவில்லை” என்றான் துரியோதனன். “அடே சூதா, காளிகா!” என்றான். மூத்த பணியாள் “அரசே” என்றான். “சென்று அழைத்துவா அவளை” என்றான் துரியோதனன். “இங்கு நிகழ்ந்தவற்றை அவளிடம் சொல். எனது சொற்களை சொல். தொழும்பியை பணி செய்ய அரசன் அழைக்கிறான் என்று கூறி கூட்டிவா!”

[ 15 ]

பீடம் உரசி ஒலிக்க விகர்ணன் எழுந்தான். “நில்லுங்கள்!” என்றான். அவை திகைத்து யாரென நோக்கியது. அனைவரும் அது கர்ணனின் குரலென எண்ணினர். பின்னர்தான் விகர்ணனை அடையாளம் கண்டனர். “யாரவன்?” என்றது ஒரு குரல். “கௌரவர்களில் ஒருவன்” என்றது பிறிதொரு குரல். திகைப்புடன் அவனை நோக்கிய துரியோதனன் “அடேய்! அமர்! ஒருசொல் சொன்னால் இக்கணமே உன் தலையை வெட்டி இந்த அவையில் வைப்பேன்” என்றான்.

பணிவுமாறாத குரலில் “தலைக்கென அஞ்சவில்லை. நான் தங்கள் இளையோன்” என்றான் விகர்ணன். “மூத்தவரே, இதுநாள்வரை நானறிந்த அஸ்தினபுரியின் அரசரின் இயல்பல்ல இது. தாங்கள் பெருவிழைவு கொண்டவர். அணையா சினம் கொண்டவர். ஆனால் ஒருபோதும் சிறுமை வந்து ஒட்டியதில்லை என்றே உணர்ந்திருக்கிறேன். குருவின் கொடிவழி வந்தவருக்கு, தார்த்தராஷ்டிரருக்கு ஏற்புடையதல்ல இது. குலப்பெண்ணை அவைக்குக் கொண்டுவருவதென்பது நம் குடிக்கும் மூத்தாருக்கும் அழியாப்பழி என அமைவது” என்றான்.

“அவள் குலப்பெண்ணல்ல, மூடா! சற்றுமுன் இப்பகடைக்களத்தில் பணயமென வைக்கப்பட்ட தொழும்பி” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால்  அது வெறும் ஒரு குலக்களியாட்டென்றே இங்கு சொல்லப்பட்டது. எக்களியாட்டின் பொருட்டும் குலநெறிகள் இல்லாமல் ஆவதில்லை” என்றான் விகர்ணன். வெறுப்புடன் முகம் சுளித்து “அக்குலநெறியை அறியாமலா அவள் கணவன் இங்கே அவளை வைத்து ஆடினான்?” என்றான் துரியோதனன். “கேட்பதென்றால் அவனை கேள், மூடா!”

“அது அவரது பிழை. அஸ்தினபுரியின் அரசன் என அப்பிழைக்கு அவரை தண்டியுங்கள். அதை வைத்து மேலும் சிறுமையை நீங்கள் சூடிக்கொள்ள வேண்டியதில்லை. உயர்ந்த பெண்ணின் கருவில் உதித்தோர் ஒவ்வொரு பெண்ணையும் மதிக்கக் கற்றிருப்பார்கள் என்பது நூல்கூற்று. இங்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இழிவு செய்யப்படுவார்கள் என்றால் இழிவடைபவர் நூற்றுவரைப் பெற்று பேரன்னையென அரியணை அமர்ந்திருக்கும் நமது அன்னை, பாரதவர்ஷத்தின் பேரரசி காந்தாரி. இங்கு நான் குரல் எழுப்புவது என் அன்னையின் பொருட்டே” என்றான்.

கர்ணன் சினத்தை அடக்கி எழுந்து அவனிடம் கைநீட்டி “இளையவனே, அரசு சூழ்தலில் குரலெழுப்புமளவுக்கு இன்றுவரை நீ முதிர்ந்ததில்லை. உன் குரலை இன்று எவரும் கேட்கப்போவதுமில்லை” என்றான். பணிவுடன் “நூற்றுவரில் ஒரு குரலேனும் எழுந்தாக வேண்டும், அங்கரே. இல்லையேல் எந்தையும் தாயும் பழிசூடுவார்கள். இறப்பென்றாலும் சரி, நான் இதை ஒப்பமாட்டேன்” என்றான் விகர்ணன். அப்பாலிருந்து குண்டாசி எழுந்து “ஆம், இது அறமல்ல. அன்னை வயிற்றில் பிறந்தோர் ஏற்கும் செயலுமல்ல” என்றான்.

துச்சாதனன் தன் இரு கைகளை ஒங்கித்தட்டி ஓசையெழுப்பியபடி எழுந்து அவர்களை நோக்கி உரத்தகுரலில் “அவையோர் அறிக! இதோ என் சொல்!” என்று கூவினான். “அஸ்தினபுரியின் அரசர்! குருகுலமூத்தவர்! கௌரவர்களின் முதல்வர்!  அவரது சொல்லுக்கும் எண்ணத்திற்கும் மாற்றென நூற்றுவரில் ஒரு மூச்சேனும் இதுவரை எழுந்ததில்லை. அவ்வண்ணம் ஒன்று எழுமாயின் அதற்கு கொலைப்படைக்கருவி என எழுவது என் கைகள். விகர்ணா, உனது சொற்கள் என் தமையனுக்கெதிரானவை. பிறிதொரு சொல் நீ எடுப்பாயென்றால் இந்த அவையிலேயே உன் தலை உடைந்து இறந்து விழுவாய். குண்டாசி, உன்னை ஒரு நீர்த்துளியை சுண்டி எறிவதுபோல உடைத்து இங்கு வீசத்தயங்க மாட்டேன்.”

விகர்ணன் தலைகுனிந்து “பொறுத்தருள்க, மூத்தவரே! இச்சொல்லை இங்கு சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை” என்றான். “நூற்றுவருக்கெதிராக உன் குரல் எழுகிறதா? அதை மட்டும் சொல்! மூத்தவரை அவையில் அறைகூவுகிறாயா?” என்றான் துச்சாதனன். “நான் அறைகூவவில்லை. அவரது கால்களில் என் தலையை வைத்து மன்றாடுகிறேன். இன்று நிலைமறந்து செய்யும் இச்செயல் வழியாக என்றும் சான்றோர் நாவில் இழிமகனென அவர் குடியேற வேண்டாம் என்று கோருகிறேன்” என்றான் விகர்ணன். குண்டாசி கசப்புடன் உரக்க நகைத்து “ஆம், அவர் ஏற்கெனவே பெற்றுள்ள இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றே நானும் கூறுகிறேன்” என்றான்.

கர்ணன் சினம் எல்லைகடக்க கைகளைத் தட்டி ஓசையிட்டு “இரு கௌரவரும் தங்கள் பீடத்தில் இக்கணமே அமரவேண்டுமென்று நான் ஆணையிடுகிறேன். இனி ஒரு சொல்லும் அவர்கள் உரைக்கலாகாது” என்றான். விகர்ணன் தலைதாழ்த்தி “ஆம், என் சொற்கள் முற்றிலும் பொருளிழந்து போவதை நான் உணர்கிறேன்” என்றான். இருகைகளையும் விரித்து தன் உடன்பிறந்தோரை நோக்கி திரும்பி “தமையர்களே, இளையோரே, நீங்கள் கேளுங்கள். உங்கள் உள்ளங்களுக்குள் என் சொற்களில் ஒன்றேனும் ஒளியேற்றட்டும். இப்பெரும்பழி நம் குலத்தின்மேல் படிய நாம் ஒப்பலாமா? நம் அன்னையின் பொருட்டு உங்கள் அகம் எழுக! தொல்புகழ் யயாதியின் அவையில் தேவயானி சூடியிருந்த மணிமுடியின் பேரால் கேட்கிறேன். இப்பழியை நாம் ஏற்கலாமா?” என்றான்.

பெரும் சினத்துடன் சுபாகு எழுந்து “வாயை மூடு, அறிவிலியே! என்னவென்று எண்ணினாய்? மூத்தவருக்கும் அங்கருக்கும் மேலாக நெறியறிந்தவனா நீ? இனி இந்நாட்டை அறமுரைத்து வழிநடத்தப்போகிறாயா? அல்லது செங்கோலேந்தி அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்து ஆளலாம் என்று எண்ணுகிறாயா?” என்றான். துர்மதன் “நீயுரைத்த ஒவ்வொரு சொல்லுக்காகவும் மும்முறை உன்னை கொல்லவேண்டும். குக்கல் சொல் கேட்டு களிறு வழிநடக்க வேண்டுமென்று விழைகிறாயா? அமர்ந்துகொள்! இல்லையேல் உன்னை இக்கணமே கிழித்துப்போடுவேன்” என்றான். துச்சலன் குண்டாசியிடம் “உடன்பிறந்தார் என்பதற்காக மட்டுமே இச்சொல் வரை உன்னை பொறுத்தேன். இனி இல்லை” என்றபடி வெறியுடன் அருகே வந்தான்.

ஒவ்வொருவராக கௌரவ நூற்றுவர் எழுந்து விகர்ணனையும் குண்டாசியையும் நோக்கி கைநீட்டி கூச்சலிடத்தொடங்கினர். “கொல்! அவனை இக்கணமே கொல்!” என்றான் சுபாகு. “வெறும் கைகளால் அவனை கிழித்துப்போடுவேன்” என்றான் துர்மதன். துரியோதனனின் உடலிலிருந்து உதிர்ந்து நூறு துரியோதனர்களாக எழுந்து அவனைச் சூழ்ந்தவர்கள் போலிருந்தனர். மேலும் மேலும் பெருகிக்கொண்டிருந்தனர்.

விகர்ணன் திகைப்புடன் திரும்பி நோக்க அங்கிருந்த ஒவ்வொருவரும் துரியோதனனென உருமாறுவதை கண்டான். ஒவ்வொரு படைவீரனும் ஒவ்வொரு குடித்தலைவரும் ஒவ்வொரு பெருவணிகரும் துரியோதனனின் விழியும் முகமும் கொண்டனர். அஸ்தினபுரியின் குடிமக்கள் அனைவரும் துரியோதனன் என்றே ஆயினர். ஊற்றுக்கண்  உடைந்து வழிந்து பெருகி சுழித்து சுழன்று சுழலென்றாகி பெரும் வட்டமென தன்னைச் சூழ்ந்த துரியோதனனின் பல்லாயிரம் முகங்களைக் கண்டு விகர்ணன் திகைத்தான்.

“மூத்தவரே, என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்தருளுங்கள்” என்றான். யார் கர்ணன், யார் துச்சாதனன், யார் துர்மதன், யார் துச்சலன், யார் சுபாகு, யார் சுஜாதன் என்றே அவனால் கண்டறிய முடியவில்லை. கால்தளர விழிமயங்க வறண்ட இதழ்களை நாவால் தீட்டியபடி துரோணரையும் விதுரரையும் பார்த்தான். அவர்கள் விழிகளும் துரியோதனன் விழிகளென ஆகிவிட்டனவா என்று தோன்றியது. பீஷ்மரை நோக்கினான். விழிமூடி உடல் குறுக்கி அவர் அமர்ந்திருந்தார்.

அச்சுழியிலிருந்து இரு கைகள் நீண்டெழுந்து வந்து அவனை பற்றின. “இல்லை! நானில்லை!” என்று அவன் கூவினான். ஒலி எழாது உதடுகள் அசைய “விட்டுவிடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்!” என்று அலறினான். சுழியின் விசை அவனை இழுத்தது. பேருருக்கொண்ட கருநாகத்தின் ஆற்றல் எழுந்த சுழற்சி. அவன் அதில் விழுந்தான். கணத்திற்குள் மூழ்கி உள்கரைந்தான். பெருவிசையுடன் சுழற்றிச் செல்லப்பட்டான். அவனைச் சூழ்ந்து அவன் உடலே நின்றிருந்தது. கரிய பேருடல். அதன் பரப்பெங்கும் ஒளிவிடும் நாகமணிக்கண்கள் நிறைந்திருந்தன. அவை வஞ்சத்துடன் விழைவுடன் புன்னகைத்து சிமிட்டிக் கொண்டிருந்தன.

தோள் தட்டி ஆர்ப்பரித்தனர் துரியோதனர்கள். கைநீட்டிக் கூச்சலிட்டனர். வெடித்து நகைத்து கொப்பளித்தனர். வெறிகொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி நகையாடினர். சிலர் பெருந்தோள் புடைக்க கைதூக்கி போர்க்குரல் எழுப்பினர். சிலர் நெஞ்சில் ஓங்கி அறைந்து மல்லுக்கு அழைத்தனர். பன்னிரு பகடைக்கள மாளிகைக்குள் நுரைவிளிம்பை மீறும் மதுக்கிண்ணம் போல் துரியோதனனே நுரைத்து குமிழியிட்டுக் கொண்டிருந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

குறுங்கதைகள், ஜாக்கி, கடிதம்

$
0
0

அன்புள்ளஜெயமோகன்

குறுங்கதைகள் தொடர்பாக உங்களுக்கு வந்த மெயில்களைப் பார்த்தேன். ஃபேஸ்புக்கிலும் இது தொடர்பாக சில பதிவுகளைப் பார்த்தேன். அப்படி என்ன நடக்கக்கூடாத தப்புநடந்துவிட்டது? ஏன் சிலர் இப்படி பதறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தவிஷயத்தில் நீண்ட அனுபவம் இருப்பதால் உங்களுக்குப் புரிந்திருக்கும்!

என்னாப்பா குறுங்கதை எழுதும் நீயே (இதற்கும் கடுப்பாவார்கள்:-)) ஜெயமோகனுக்கு லெட்டர் போட்டா பெருசா நீட்டமா போட்டுடற என பலரும் அலுத்துக் கொண்டதால், பாயிண்டுகளாக நம்பர் போட்டு எழுதிவிடுகிறேன்.

1) தடம் இதழில் நீங்கள் எழுதிய கட்டுரை தலைப்பே, தமிழ்சிறுகதை100 ஆண்டுகள். அதை ஒட்டி நான் ஒரு கடிதம் போட்டேன். உடனே குறுங்கதை ஸ்பானிஷில் எழுதி இருக்கிறார்கள், லத்தீனில் அல்ரெடி எழுதி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். பபிள்கம் மாம், ஷட் புட் பூம் என்று பல விநோதமான பெயர்களையும் உதிர்க்கிறார்கள்.

2) நான்தான் உலகிலேயே குறுங்கதைகளை முதலில் எழுதினேன் என நானோ, தமிழில் தான் குறுங்கதை முதலில் எழுதப்பட்டது என நீங்களோ குறிப்பிடவில்லை. நீங்கள் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளீர்கள். //ஆகவே இன்று உலகளாவிய தளத்தில் வந்துகொண்டிருக்கும் குறுஞ்சித்தரிப்பு [மைக்ரோநெரேஷன்] தமிழில் எவ்வகையில் உள்ளது என்று பார்த்தேன்.//

3) ஒரு ஆர்வலர் உங்கள் பேஜில் “குறுங்கதைகள்” என்பதை காப்பி செய்து கூகிளில் பேஸ்ட் செய்து பார்த்த அடுத்தகணம் உங்களுக்கு கடிதம் எழுதுகிறார்.

4) உங்களை கிண்டல் செய்தேன் என உளவு கூற பலர். தற்கொலை குறுங்கதைகள் விழாவிற்கு கவுதம்மேனனை அழைத்தேன். உடனே அவர் படத்தை நான் கிண்டல் செய்து எழுதி இருந்ததை அவருக்கு மெயில் அனுப்புகிறார்கள். அவர் ஃபேஸ்புக் பேஜில் போடுகிறார்கள். நான் என்ன கிண்டல் செய்து எழுதி என் பர்ஸுக்குள்ளா வைத்துக்கொள்கிறேன்? பொதுவில்தானே போடுகிறேன். இவர்கள் ஏன் பாவம் பலருக்கும் பர்ஸனல் ஆன்லைன் குரியர்பாய் வேலை பார்க்கிறார்கள்:-)

5) //எந்த ஒரு வடிவமும் அடிப்படையில் பிற வடிவங்களால் ஆகாத ஒன்றை தொட்டு எடுத்து ஒரு வாழ்க்கையைக் காட்டும்போதே பொருள்படுகிறது. வாழ்த்துக்கள்// உண்மைதான். வாழ்வில் சின்ன சின்ன அபத்தங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு சின்ன அபத்தத்தை தொட்டுக்காட்ட, நீட்டி முழக்கி சிறுகதை எழுதி பெரும்பாவம் செய்ய மனம் ஒப்பவில்லை. ஆனாலும் சின்ன அபத்தங்களாக இருப்பினும் சில வீரியம் மிக்கவைகளாக இருக்கின்றன. அதை வேடிக்கையாக சொல்ல குறுங்கதை வடிவம் ஏதுவானதாக இருக்கிறது. உங்கள் தளத்துக்காக இப்படி சிரமப்பட்டு எழுதுகிறேன். சோம்பலானவர்களுக்கு குறுங்கதை வசதியானது என்பது முதற்காரணம்:-)

6) சாரு அடிக்கடி சொல்வார், ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லையென்றால் நீங்கள்ளாம் எழுதியே இருக்கமாட்டீர்கள் என்று. அது சரியான கணிப்பு. ஃபேஸ்புக்கை தொறந்தமா, நாலுலைன் எழுதி போஸ்ட் போட்டமா என்ற வசதியும் குறுங்கதைகள் செழிக்க காரணம். சில பாலுணார்வு சார்ந்த காமடிகளை சொல்ல இந்த வடிவம் சிறப்பானதாக இருக்கிறது.

7) குறுங்கதைகள் என்பது ஒரு பொது வடிவமாக உலக அளவில் பார்க்கப்பட்டாலும், தற்கொலை குறுங்கதைகள், விளையாட்டாக எழுதப்பட்டு இருப்பினும் அது தன்னளவில் ஒரு தனித்துவமான வடிவத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது என்றே நினைக்கிறேன். (இந்த கடிதத்தை தொடர்ந்து சண்டை போட தீனி கொடுக்க வேண்டாமா:-))

8) நீங்கள் போலி பிராண்டுகளைப் பற்றி எழுதப்போக, அதற்கும் உங்களுக்கு ஒருவர் கடிதம் போட்டு, நான் ஜாக்கி ஜட்டி போடறேன், அது மும்மடங்கு நல்லா உழைக்குது என நீங்கள் உரத்து சொல்லும்படி ஆகிவிட்டது. சாரு ரெமிமார்டினுக்கு இலவச விளம்பரம் அளித்தார். உங்கள் பிளாகும் உலக அளவில் படிக்கப்படுவதால், ஜாக்கியிடம் ராயல்டீ… ச்சிச்சீ…. பிராண்ட் அம்பாஸிடர் தொகை கிடைக்க வழிவகை உள்ளதா என அரங்கசாமியிடம் கேட்கச் சொல்ல வேண்டும்.

9) இந்த சம்பவத்தை (!) வைத்து ஒரு ஜாலியாக ஒரு போஸ்ட் போட்டேன். அதை எப்படியும் ஆன்லைன் கூரியர் பாய்ஸ் உங்களிடம் நான் டைப் செய்து கொண்டிருக்கும் போதே கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள்!

10) எனக்கு மட்டும் படம் வரைய தெரிந்து இருந்தால், சாருவை கால்வின்க்ளெயின் ஜட்டியோடு பப்பில் ஆடுவது போலவும். உங்களை ஜாக்கி ஜட்டியோடு, கடற்கரை ஓரம் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் நின்று கொண்டு இருப்பது போலவும் கார்டூன் வரைந்து இருப்பேன்.

குறுங்கதை

நீங்கள்வெளியிட்டு இருந்த மலையாள குறுங்கதை படித்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. இதைத்தான் ஃபேஸ்புக்கில் “செம” என்று சுருக்கமாக கூறுகிறார்கள். இந்த கதையை நீங்கள் வெளியிட்டதற்கு ஏதும் விமர்சனம் வரவில்லையா? ஆச்சர்யமாகத்தான் உள்ளது. அது சம்மந்தமாக ஒரு ரகசியம் சொல்லிவிடுகிறேன். சில ஆண்கள், இதற்காகவே பெண்கள் போல நடிக்கிறார்கள்:-)

எப்படியோ கஷ்டப்பட்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு பணிவு மற்றும் போலி பணிவு இல்லாமல் எழுதிவிட்டதாக நம்புகிறேன்.

பணிவன்புடன்

அராத்து.

 

அன்புள்ளஅராத்து

இலக்கிய விவாதம் என்பது இங்கெல்லாம் இப்படித்தான் நடக்கும். சாருநிவேதிதாவின் இலட்சிய இலக்கியபுரியான லத்தீன் அமெரிக்காவில்தான் அடுத்தகட்டமாக பப்பில் கட்டிப் புரள்வார்கள்

வர வர காந்தியவாதி என்றே என்னை நம்பி ஜாக்கி ஜட்டி கூட போட விடமாட்டேன் என்கிறார்கள். லங்கோட்டில் பிராண்ட் உள்ளது என கடிதம் வந்துவிடுமோ என்றே பயந்தேன்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆன்மீகம்,கடவுள், மதம்

$
0
0

FOT1161411

 

திரு ஜே அவர்களுக்கு,

வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை.

நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்ற நாவலையும் ராபர்ட் கலைச்சோ எழுதிய ‘க’ என்ற நாவலையும் தற்பொழுது படித்து வருகிறேன். இவைகள் முடிந்த பிறகு கொற்றவை படிக்கலாம் என நினைக்கிறேன்.

தங்களுடய வலைத்தளத்தையும் ஓரிரு மாதங்களாகப் படித்து வருகிறேன். தங்களை கோவை புத்தகக்கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். கை குலுக்கியிருகிறேன். எனது ஊர் குமரிமாவட்டம்.

நான் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவன். சமயம் வாய்க்கும் போதெல்லாம் சர்ச்சுக்கு செல்கிறேன். ஆனால் சமீப காலமாக என்னுள் சில மாற்றம். சொல்லத் தெரியவில்லை. பிரபஞ்சம் என்றால் என்ன? எப்படி உருவானது? திருமறையில் (பைபிள்) சொல்லக்கூடிய படைப்பின் வரலாறு உண்மை தானா? உண்மையிலேயே சொர்க்கம் என்பது உண்டா? சிந்திக்கத் தொடங்கினேன். விடை தெரியவில்லை. ஆனால் இப்பொழுதும் சர்ச்சுக்கு சென்று வருகிறேன். நான் அறிந்தும் கேட்டும் வாசித்தும் இருக்கிற இந்து புராணகதைகளும் நம்ப முடியவில்லை. தங்களுடைய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற புத்தகம் வாசித்த பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மொத்தத்தில் எனக்குக் கடவுள் என்ற தத்துவம் உண்டா? என்று வினவத் தோன்றுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் என் மனது சஞ்சலப்படுகிறது. எதையோ தேடுகிறதுபோல் இருக்கும். எனக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுகிறது. நான் திரும்பவும் ஏசுவைப்பிரார்த்திக்கிறேன். பரவசமடைகிறேன்.

இப்பொழுது தாங்கள் ஆன்மீகத்தை வேறுவிதமாகக் கூறிவருவதை கவனித்துவருகிறேன். இன்னும் முழுமையாகப் புரியவில்லை. அதைக் கொஞ்சம் விளக்க யாசிக்கிறேன்.

இவண்

த. அருளப்பன்

அன்புள்ள அருளப்பன்,

நான் ஆன்மீகம் பற்றி பல தளங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். அவற்றை தொடர்ந்து கவனித்து உங்களுக்குள் விவாதித்துக்கொள்ளும்போதே நான் சொல்வதென்ன என்பதை நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். ஆன்மீக விஷயத்தில் ஏன் இந்தச்சிக்கல் என்றால் நாம் சிறுவயதிலேயே ஆன்மீகம் சார்ந்த பலவற்றை நம்மையறியாமலே கற்று நம்பி வாழ ஆரம்பித்துவிடுகிறோம். ஆகவே நாம் புதியதாகக் கற்கும் எதுவும் ஏற்கனவே கற்கப்பட்டவற்றை அழித்து அங்கே தன்னை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சில அடிப்படை விஷயங்களை முதலிலேயே தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆன்மீகம், கடவுள், மதம் மூன்றையும் நாம் ஒன்றாகவே எண்ணிக்கொண்டிருக்கிறோம். இளமையில் நமக்களிக்கப்படும் சித்திரம் அதுவே. ஆனால் சிந்திக்க ஆரம்பிக்கும்போது அவற்றைத் தனித்தனியாக வரையறைசெய்துகொள்வதே சரியான புரிதலை உருவாக்கும்.

ஆன்மீகம் என்பது நம் வாழ்க்கையை, மானுட வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் அறிவதற்கான ஒரு மானுடமுயற்சி. முழுமைநோக்கு அல்லது சாராம்சநோக்கு என அதை விளக்கலாம்.

இந்திய மதங்களில் ’இதம்’ என்ற சொல் முக்கியமானது. ’இது’ என அச்சொல்லுக்கு அர்த்தம். இதெல்லாம் என்ன, இதெல்லாம் ஏன், இதெல்லாம் எவ்வாறு என்ற வினாக்களுக்கான பதில்தேடலே ஆன்மீகம்.

கடவுள் என்பது அந்தத் தேடலில் நம் முன்னோரால் கண்டடையப்பட்டு நமக்களிப்பட்டுள்ள ஒரு பதில் மட்டுமே. அந்தப் பதிலானது கடவுள் என ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் உண்மையில் அது பலவகையாக விளக்கப்படுவது. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் ‘இந்த உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய ஓர் ஆளுமை அல்லது இருப்பு’. இஸ்லாமுக்கும் அப்படித்தான்.

இந்து மரபின் அடிப்படையாக உள்ள கடவுள் உருவகம் பிரம்மம். பிரம்மம் என்றால் இந்த முடிவற்ற பிரபஞ்சத்துக்கு எது மூலகாரணமாக உள்ளதோ அது. இந்தப் பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் ஒரு தோற்றம் மட்டுமே. அந்த மூலகாரணம் எப்படிப்பட்டது என்று அறியவோ விளக்கவோ முடியாது.

ஆனால் இப்பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் இன்னொரு வடிவம் என்பதனால் இதில் உள்ள எல்லாமே அதுதான். அதாவது மோர் என்பது உண்மையில் பால்தானே? ஆகவே இப்பிரபஞ்சத்தை, இதில் உள்ள எல்லாவற்றையும் அந்த மூலகாரணமாக எண்ணலாம். ஒரு மரமோ, மிருகமோ , பாறையோ , புயலோ, மழையோகூட அதன் தோற்றமே.இங்குள்ள அன்பு கருணை வீரம் எல்லாமே அதன் தோற்றமே

இவ்வாறு இந்து மரபு பல்வேறு கடவுள்களை உருவகித்துக்கொண்டது. எங்கெல்லாம் நம்மை நம் அன்றாடப் பார்வைக்கு அப்பால் பார்க்கச்செய்யும் ஒரு பிரம்மாண்டம் தென்படுகிறதோ அங்கெல்லாம் கடவுளைக் கண்டது. இவை இருவகை. பொருட்கள், கருத்துக்கள். ஆயிரம் விழுது பரப்பிய ஓர் ஆலமரம் பொருள்வடிவமான கடவுள் என்றால் ஒரு அகோர வீரபத்ரர் வீரம் என்ற விழுமியத்தின் வடிவமான கடவுள். ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற பெருங்கடவுள்கள் பற்பல விழுமியங்களைத் தொகுத்து உருவகித்த ஒட்டுமொத்த வடிவங்கள்.

ஆனால் அவை எல்லாவற்றையும் பிரம்மம் என்றுதான் இந்து மரபு சொல்லும். அறியமுடியாத பிரம்மத்தை இந்த அறியக்கூடிய வடிவத்தில் வழிபடுகிறோம் என்று அதற்குப்பொருள். இந்த விஷயத்தைக் குறியீடுகள் மூலம் விளக்குபவைதான் புராணங்கள்.

பௌத்தம் கடவுள் என்றால் பிரபஞ்சத்தை இயக்கும் முழுமுதல் நெறி அல்லது விதி என்று உருவகித்து அதை மகாதர்மம் என்ற சொல்லால் குறிப்பிட்டது.அதன் வடிவமாக புத்தரின் உடலை பிற்காலத்தில் உருவகித்துக்கொண்டார்கள்.

இந்த ’கடவுள்’ என்ற கருதுகோள் நமக்கு ஏன் தேவையாகிறது? மூன்று அடிப்படைக் காரணங்களுக்காக.

1. நாம் வாழும் இந்த வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் முன்பின் தொடர்பு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. பிறப்பு இறப்பு நோய் இழப்பு மகிழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த ஓட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே நமக்கு ஒரு பதற்றம் ஏற்படுகிறது

கடவுள் என்ற உருவகம் இதைப்பற்றிய பதற்றத்தை தீர்க்க உதவுகிறது. வாழ்க்கையை கடவுளை வைத்து எளிமையாக வகுத்துக்கொள்ளமுடியும். கடவுள் என்பது எளிமையான திட்டவட்டமான விடை. மானுட வாழ்க்கையில் நம்பிக்கையையும் பிடிப்பையும் அந்த உருவகம் அளிக்கிறது

2. மனிதன் அன்பு,பாசம், கருணை, தியாகம், ஒழுக்கம் போன்ற பல நற்பண்புகளையும் பல்வேறு அறங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். இந்தப் பண்புகளும் அறங்களும் சீரான சமூகச் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. கடவுள் என்ற உருவகம் இந்த எல்லா நற்பண்புகளையும் அறங்களையும் தொகுத்துக்கொண்ட ஒரு வடிவமாக உள்ளது. ‘அன்பே சிவம்’ ‘ஏசு அன்பாக இருக்கிறார்’ போன்ற வரிகள் இதையே குறிக்கின்றன

இந்தப் பண்புகளையும் அறங்களையும் நம் மனத்திலும் சமூக மனதிலும் நிலைநாட்ட கடவுள் என்ற உருவகம் உதவுகிறது. கடவுள் பக்தி என்பது சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த அறங்கள் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கை என்றுதான் அர்த்தம் கொள்கிறது. அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்

3. மனிதனுக்கு இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ஒரு தனிமை உணர்ச்சி உள்ளது. ஆகவே அவனுக்கு தலைக்குமேலே அவனை பார்க்கக்கூடிய அவனைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தந்தை, அல்லது எஜமான், அல்லது அரசன் அல்லது அளவிடமுடியாத ஆற்றல் தேவையாகிறது. அதாவது மனிதனுக்கு வேண்டிக்கொள்ளவும் மன்றாடவும் புகார்செய்யவும் ஒரு இடம் தேவை. கடவுள் அந்த இடம்.

கடவுள் உண்டா இல்லையா என்பது பொத்தாம்பொதுவான கேள்வி. எந்தக் கடவுள், எப்படிப்பட்ட கடவுள் என்பதே இன்னும் குறிப்பான கேள்வி. அத்துடன் இந்தப் பிரபஞ்சத்தை ஆளும் ஒரு அலகிலா ஆற்றல் உண்மையில் உள்ளதா இல்லையா என்பது ஆன்மீகமான கேள்வி. அதை ஆன்மீகதளத்தில் எழுப்பிக்கொள்ளலாம். அதைக் கடவுளுடன் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை.

நடைமுறை வாழ்க்கையில் கடவுள் உங்களுக்கு எதற்காகத் தேவைப்படுகிறார் என்பதே இன்னும் முக்கியமானது. உங்களுக்கு ஏசு எதற்காகத் தேவைப்படுகிறார்? உங்கள் மனதில் ஏசு உயர் பண்புகளுக்கும் அறத்துக்கும் வடிவமாக இருக்கிறார் என்று கொள்வோம். ஏன் அவர் உண்டா இல்லையா என்று நீங்கள் விவாதிக்கவேண்டும்? அந்தப் புராணக்கதைகள் உண்மையா பொய்யா என ஏன் நினைக்கவேண்டும்.

பண்புக்கும் அறத்துக்கும் வடிவமான ஏசுவைப் பணிந்து அவர்முன் கண்னீருடன் மண்டியிடுவதில் என்ன நஷ்டம்? உங்கள் ஆன்மாவில் அவர் அன்பையும் பண்பையும் தியாகத்தையும் நிறைக்கிறார்தானே?ஆகவேதான் தேவாலயத்தில் பிரார்த்தனைசெய்தால் நீங்கள் நிறைவடைகிறீர்கள்.அந்த நிறைவை நீங்கள் இழக்க வேண்டியதில்லை.

ஒரு எளிய லௌகீகனாக உங்கள் அச்சங்களைக் களையவும் உங்கள் துயரங்களை இறக்கி வைக்கவும் உங்களுக்கு ஒரு கடவுள் தேவைப்படுவார் என்றால் அந்தக் கடவுளிடம் அதைச் செய்வதில் பிழை ஒன்றும் இல்லை. தேவாலயத்தில் அதை செய்யலாம்.

கடவுள் உண்டா இல்லையா என்பதை முதலில் முடிவுசெய்துவிட்டுதான் இதையெல்லாம் செய்வேன் என்று நினைப்பதில் அர்த்தமில்லை. இந்தக் கடவுள் உருவகம் உங்களுக்கு எதை அளிக்கிறது என்பதே முக்கியம்.

கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக அமைப்புதான். பிறப்பது முதல் இறப்பது வரையிலான சடங்குகளின் தொகை அது. ஒரு மக்கள்கூட்டத்தை இணைத்துக்கட்டும் நம்பிக்கை.

அந்த சமூக அமைப்பு உங்களுக்கு ஒரு சமூகவாழ்க்கையை வாழ உதவுகிறது என்றால் அதில் இயல்பாக நீடிப்பதே சரியானது. அந்தச்சடங்குகள் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவான புற அடையாளமும் வாழ்க்கைநெறியும் உருவாகிறது என்றால் அதைக் கடைப்பிடிப்பதிலும் பிழை இல்லை. உங்கள் குடும்பம் அதில் இயல்பாக வாழ்கிறது என்றால் அதை அவர்கள் அனுபவிக்க அனுமதிப்பதே விவேகம்.

ஆன்மீகமான தேடலைக் கடவுள் மதம் இரண்டுக்கும் அப்பால் வைத்துக்கொள்ளவும். அது மிகமிக அந்தரங்கமானது. ஒரு குரு அமைந்தால் அவரிடமன்றி எவரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது. அதைப் புறவயமாக விவாதிக்கக் கூடாது.

ஆன்மீகம் என்பது நாம் நமக்குரிய விடையை நாமே கண்டடைந்து அதை நம்முள் நிறைத்துக்கொள்வதாகும். அது பல படிகளிலாக நம்முடைய அகத்தில் நாம் சிறுவயது முதலே பெற்று நிறைத்திருக்கும் ஏராளமான நம்பிக்கைகள் அழிந்து , மனப்பழக்கங்கள் மாற்றம் கொண்டு, நாமே மெல்லமெல்ல மாற்றம் அடைந்து நாம் சென்று சேரும் ஓர் இடம். அந்தப் பயணத்தின் எல்லாப் படிகளும் அந்த வகையில் நம்மை மேலே கொண்டுசெல்லக்கூடியவையே.

ஆன்மீகத்தை ஒரு தூய மெய்த்தேடலாக , மத அடையாளம் அற்றதாக, அந்தரங்கமானதாக வைத்துக்கொள்வதே நல்லது. ஆன்மீகதளத்தில் நீங்கள் இந்துவோ கிறித்தவனோ அல்லாமல் ஒரு தூய மானுடப்பிரக்ஞையாக மட்டுமே இருப்பதே ஒரே வழி. அந்நிலையில் எல்லா மதநூல்களும் எல்லா ஞானங்களும் உங்களுக்கு ஒன்றே.

அப்படி நீங்கள் தேடினால் பைபிளையே மதம், கடவுள் இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆன்மீகநூலாக வாசிக்கலாம். ஏசுவை மனிதகுமாரனாக அல்லாமல் மகத்தான ஞானகுருவாக அணுகலாம்.அதற்கான எல்லா வழிகளும் அதற்குள் உள்ளன.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

கடவுள்நம்பிக்கை உண்டா


ஆன்மீகம் போலி ஆன்மீகம் மதம்


கடவுள் மதம் குழந்தைகள்

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம்Oct 10, 2011

தொடர்புடைய பதிவுகள்

குமரகுருபரனுக்கு விருது

$
0
0

13413619_1391576790868228_372599603473980680_n

 

கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்

 

13407273_1391576814201559_2489482053634144581_n

தொடர்புடைய பதிவுகள்


அசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது

$
0
0

1374507701043

 

கனடா இலக்கியத்தோட்ட விருது  கண்டிவீரன் என்னும் தொகுதிக்காக ஷோபா சக்திக்கும் அபுனைவு பிரிவில் குறுக்குவெட்டுக்கள் என்னும் தொகுப்புக்காக அசோகமித்திரனுக்கும் வழங்கபட்டுள்ளன

ஷோபா சக்தியும் அசோகமித்திரனும் தமிழ் இலக்கிய உலகின் இரு பெரும் படைப்பாளிகள். இருவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85

$
0
0

[ 16 ]

கோல் விழுந்துகொண்டிருந்த முரசின் உட்பக்கமென முழங்கிக்கொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்திற்குள் கூப்பிய கைகளுடன் காளிகன் நுழைந்தான். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “அமைதி! இதோ வருகிறான் சூதன்! கேட்போம் அவனை!” என்றான். “அமைதி! அமைதி!” என்றனர் அவை முழுக்க நிறைந்திருந்த அவனுடைய மாற்றுருக்கள். மெல்ல அவை அடங்கியது. காளிகன் கூப்பிய கைகளை விலக்காமலேயே படிகளில் ஏறி துரியோதனன் அருகே வந்து நின்றான்.

“எங்கே அவள்? அஸ்தினபுரியின் முதற்தொழும்பி…” என்றான் துரியோதனன். காளிகன் முகம் சிறுகுழந்தையென உவகையில் மலர்ந்திருந்தது. சொல்லெடுக்க இயலாமல் உதடுகளை அசைத்தான். கர்ணன் துரியோதனனை நோக்கி கைகாட்டிவிட்டு “சொல்! நீ அங்கு என்ன பார்த்தாய்?” என்றான். அவன் மேலும் சொல்லுரைக்க  இயலாமல் உதடுகளை அசைத்தான். கர்ணன் சினத்துடன் “சொல், மூடா! என்ன கண்டாய் அங்கு?” என்றான்.

காளிகன் “நான் மகளிர் மாளிகைக்கு சென்றேன்” என்றான். “ஆம், அதை அறிவோம். அங்கு என்ன கண்டாய்? அவள் என்ன உரைத்தாள்? சொல் இந்த அவைக்கு!” என்றான் கர்ணன். “அரசே, அவையீரே, இங்கிருந்து கிளம்புகையில் அரசரின் ஆணையை சென்னி சூடிச் செல்லும் எளிய ஏவலன் என்றே என்னை உணர்ந்தேன். நன்றோ தீதோ அறமோ மறமோ ஒன்று தேரும் உரிமை என்போல் ஏவலருக்கில்லை. ஏழு தலைமுறையாக எங்கள் தலையை அஸ்தினபுரி அரசரின் காலடியில் வைத்தவர்கள் நாங்கள். ஆணையிடப்பட்டதை அவ்வண்ணமே செய்யும் எண்ணம் ஒன்றே என்னுள் இருந்தது. என்னுடன் ஏழு படைவீரர்களை அழைத்துக்கொண்டு உருவிய வாளுடன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இருந்த மகளிர் மாளிகைக்கு சென்றேன். என் எதிர்வந்த செவிலியிடம் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எங்கே என்று கேட்டேன்.”

அரசி குருதிவிலக்காகி இருப்பதாகவும் வடக்குத் துணைமாளிகையில் ஒதுக்கத்தில் அமர்ந்திருப்பதாகவும் சொன்னார்கள். அங்கு ஆண்களுக்கு நுழைவொப்புதல் இல்லை என்றார் காவலர்தலைவர். “நான் அரசரின் ஏவலன், ஆணை பெற்று வந்தவன், அஸ்தினபுரியின் எப்பகுதியிலும் நுழைவேன், எனக்கு ஒப்புதல் தேவையில்லை. விலகுக!” என்றபடி வீரர்களை விலக்கி முன்னால் சென்றேன். “என்ன இது? இது எவ்வண்ணம்?” எதிரே கைவிரித்து வந்த முதுசெவிலியை “விலகு…! அரசாணை” என  ஆணையிட்டு பிடித்து ஒதுக்கிவிட்டு முன்னால் நடந்தேன்.

எனக்குப்பின்னால் பதறியபடி அவள் வந்தாள். “நில்லுங்கள்! நான் சொல்வதை கேளுங்கள்! இது முறையல்ல. பெண்களின் ஒதுக்கமென்பது ஏழு தெய்வங்களால் காக்கப்படும் இடம். அங்கு மங்கையர் அன்னையராக மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். அங்கு ஆண்கள் நுழையலாகாது என்பது ஆன்றோர் வகுத்த விதி” என்று அவள் கூவினாள்.

“வாயை மூடு, இழிபிறவியே! பிறிதொரு சொல் உரைத்தால் உன் நாவை வெட்டி இங்கு வீசுவேன்” என்று கூவியபடி நான் மேலே நடந்தேன். அங்கிருந்த காவலர்கள் வாளுடன் என்னை எதிர்கொள்ள அஸ்தினபுரியின் ஆணைக் கணையாழியை தூக்கிக்காட்டி “இது அரசரின் ஆணை” என்றேன். படைக்கலம் தாழ்த்தி அவர்கள் வழிவிட்டனர். ஒதுக்கமாளிகையை நோக்கிச் சென்று அதன் வாயிலில் இருந்த செவிலியிடம் “வரச்சொல் உன் அரசியை!” என்றேன். இருகைகளையும் விரித்து அவள் என்னை தடுத்தாள். “இதற்கப்பால் ஆண்களுக்கு ஒப்புதல் இல்லை. இங்கு உங்களை தடுத்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு” என்றாள்.

“விலகு! இல்லையேல் உன் தலை இங்கு உருளும்” என்றேன். “அவ்வண்ணமே ஆகுக! என்றேனும் ஒருநாள் அரசியின்பொருட்டு உயிர் துறக்க உறுதிகொண்டவள் நான். இழிமகனே! இங்கு நாங்கள் எழுவர் இருக்கிறோம். ஏழு பெண்டிரின் தலைகொய்த குருதியில் நடந்தே நீ இதற்கப்பால் அரசியை அணுக முடியும்” என்றாள்.

முதல் நின்றவள் நெஞ்சில் பாய்ச்சுவதற்காக எனது உடைவாளை உருவினேன். அப்போது உள்ளிருந்து அரசியின் பெருந்தோழி மாயை வந்தாள். “அவனை உள்ளே அனுப்பும்படி அரசியின் ஆணை” என்றாள். என்னைத் தடுத்த செவிலி திகைப்புடன் திரும்பி “உள்ளே அனுப்புவதா? அவ்வண்ணம் ஒரு முறைமையில்லையே…!” என்றாள். மாயை “அவன் வருக என்றார் அரசி” என்றாள். செவிலி “குருதிவிலக்கான பெண்ணை அவள் இளமைந்தரன்றி பிற ஆண்கள் நோக்கலாகாது” என்றாள்.

பெருந்தோழி புன்னகைத்து “வந்திருப்பது தன் மைந்தனே என்றார் அரசி” என்றாள். விழிகளில் குழப்பத்துடன் அவர்கள் வழிவிட்டனர். பெருந்தோழி மெல்லடி வைத்து என்னை அணுகி “வருக, மைந்தா!” என்றாள். நான் என் கையில் இருந்த கத்தியை பார்த்தேன். அது ஒரு தாழைமலர் இதழாக மாறிவிட்டதுபோல் விழிமயக்கேற்பட்டது.

அவளை நோக்கி “நீ ஏதோ மாயம் செய்கிறாய்” என்றேன். என் குரல் சிறுமைந்தனின் குரல் போன்றிருப்பதாக தோன்றியது. அவள் இனிதாக புன்னகைத்து “என்னை மாயை என்பார்கள். வருக!” என்று என் கைகளை பற்றினாள். பிறிதொரு கையால் என் தோளை அணைத்து “வா!” என்றாள். மறைந்த என் அன்னையின் குரலென்றே அதை கேட்டேன்.

அரசே, சிற்றடி எடுத்து வைத்து சிறுவன் போலவே அவளுடன் சென்றேன். நான் சென்றது எவ்விடம் என்று இந்த அவையில் என்னால் சொல்ல முடியாது. அப்பெண் மாயம் கற்றவளா? மகேந்திர வித்தையால் என் உள்ளத்தைக் குழைத்து காட்சிகளையும் ஒலிகளையும் தானே அமைத்து எனக்களித்தாளா? நான் நுழைந்தது ஒதுக்கறையின் முதல் வாயிலை என்று உறுதிபடச் சொல்வேன். சென்ற வழியோ நான் இதுவரை அறிந்திலாதது.

அரசே, அங்கே மெல்லிய இசையொன்று சூழ்ந்திருக்க கேட்டேன். பீதர் நாட்டு வெண்பட்டாலானவை போன்று சுவர்கள் ஒளிவிட்டன. மலைவாழை அடிபோல வெண்பளிங்குத் தூண்கள். பால்நுரை போன்ற திரைச்சீலைகள். என் ஆடிப்பாவை என்னை நோக்கிய வெண்தரை. என் விழிகள் பாலென பட்டென பளிங்கென விரிந்த வெண்மையால் முற்றிலும் நிறைந்திருந்தன. அவ்வினிய இசை என்னை வழிகாட்டி அழைத்துச் சென்றது.

என் கைபற்றி உடன்வந்தவள் அந்த இசையின் பருவடிவமென்று அதிர்ந்து கொண்டிருந்தாள். “வருக!” அருகே என் செவிக்குள் ஒரு குரல் ஒலித்தது. நான் சென்று நின்ற அவையில் ஓர் அரியணையில் வெண்ணிறப் பட்டாடையும் ஒளிவிடும் நீர்த்துளி வைரங்களும் இளநீலமோ வெண்மையோ என்று விழிதிகைக்கும் மணிமுடியும் அணிந்தவளாக அன்னை அமர்ந்திருக்கக் கண்டேன். நானறிந்த அத்தனை பெண்முகங்களும் ஒரு முகமானது போல். திருமகளா? தெற்கு ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள ராதையா? மகாகௌரியா? புலரி ஒளிகொண்ட சாவித்ரியா? அல்லது என் மறைந்த அன்னையா? மூதன்னையரா? என் மடிக்கு கன்னிமுகம் சூடி வந்த மனைவியா? கருக்குழந்தையென என் கையில் தவழ்ந்த என் மகளா? அல்லது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியேதானா? அறியேன்.

அவ்விழிகள் மிக கனிந்திருந்தன. முலையூட்டிக் கொண்டிருக்கும் அன்னையின் விழிகள் மட்டுமே அத்தனை கனிந்திருக்கும். இவ்வுலகில் நிகழ்பவை அனைத்தையும் பொறுத்தருளும் பேரருள் கொண்டவை அவை. “எதற்கென வந்தாய், மைந்தா?” என்று அவள் கேட்டாள். அவளைச் சூழ்ந்து நின்றிருந்தனர் நூற்றெட்டு வெண்ணிறக் கன்னியர். என் உள்ளத்தை உணர்ந்தபின் என்னால் அவள் கால்களைத்தான் நோக்க முடிந்தது. குளிர்ந்தவை. மீன்விழிகள் என மின்னும் வைரங்கள் பதித்த கணையாழிகளை அணிந்திருந்தாள். மண்டியிட்டு அக்கால்களை நோக்கினேன். அவ்வைரங்கள் ஒவ்வொன்றும் விழிகளென மாறி என்னைப்பார்த்து கனிந்து புன்னகைத்தன. “சொல்!” என்றாள்.

“அன்னையே, அங்கு அவையில் மாமன்னர் துரியோதனர் தன்னிலிருந்து தான் ஊறிப்பெருகி பேருருக் கொண்டு எழுந்து நின்றிருக்கிறார். உங்களை அவைக்கு இழுத்துவரும்படி ஆணையிட்டார்” என்றேன். உரக்க நகைத்து “அவ்வாடலில் நான் மகிழ்ந்தேன் என்று அவனிடம் சொல். மைந்தரின் மடமையும் ஆணவமும் அன்னைக்கு உவப்பளிப்பதே. அவனிடம் மூன்று வினாக்களை மட்டுமே நான் எழுப்பினேன் என்று சொல்” என்றாள். “அருள்க, அன்னையே!” என்றேன்.

“தொழும்பியராக ஒரு குலப்பெண்ணை அவன் அவைக்கு கொண்டு செல்லும்போது என்றேனும் ஒருநாள் தன் அன்னையும் உடன்பிறந்தாளும் துணைவியரும் அவ்வண்ணம் கொண்டு செல்லப்படுவதும் அரசமுறையே என்று உணர்கிறானா? இத்தருணத்தில் அவன் வென்று தருக்க எண்ணுவது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியையா அல்லது தான் தன்னுள் விழையும் முதற்பெண்ணையா? பெண்ணை எவ்வழியிலேனும் ஆண் முற்றிலும் வெல்லமுடியுமென்று அவன் எண்ணுகிறானா? கேட்டுவா!” என்றாள்.

“ஆம், இறைவியே! அவரிடம் அவ்வினவைக் கேட்டு மீள்கிறேன்” என்றேன். “என் துணைவனென அங்கிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் அரசனிடம் கேள். அவன் தன் நாட்டை வைத்திழந்தான். பின்னர் தம்பியரை வைத்திழந்தான். தன்னையே வைத்திழந்தானா? தன்னையிழந்தவன் எவ்வண்ணம் என்னை வைத்திழக்க முடியும்? தன் உடல்மேலும் உயிர்மேலும் உரிமை இல்லாதவன் பிறிதொருவள் மேல் எவ்வுரிமையை கொண்டான்? எங்ஙனம் என்னை களப்பணயமென வைத்தான்?” என்றாள். “ஆணை அன்னையே, அவ்வண்ணமே கேட்கிறேன்” என்றேன். தலைவணங்கி திரும்பி வந்தேன்.

“அரசே, பல்லாயிரம் வெண்தாமரை மலர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி பூத்துச் சொரிந்த தடாகம் ஒன்றின்மேல் கால்படாது நடந்து வரும் உணர்வை அடைந்தேன். அரண்மனை முற்றத்திற்கு வந்து விழுந்தேன். விண்ணிலிருந்து உதிர்ந்த கந்தர்வன் போல் இருந்தேன். எங்கிருக்கிறேன் என்றறியவே நெடுநேரமாகியது. அங்கு நின்றிருந்த காவலர் என்னை இருகைகளையும் பற்றித்தூக்கி “என்ன நிகழ்ந்தது?” என்றனர். “அறியேன். என்னை அரசரிடம் கொண்டு செல்லுங்கள்” என்றேன்.

இரு கண்களிலும் கண்ணீர் வார தலைக்கு மேல் கைகூப்பி காளிகன் சொன்னான் “அன்னையை கண்டுவிட்டேன். இப்பிறவியில் இனி விழிகள் காண ஏதுமில்லை.” துரியோதனன் இதழ்கள் வளைய சிரித்து “நான் எண்ணினேன். அவளிடம் இருப்பது ஆட்சித்திறனும் சூழ்ச்சித்திறனும் மட்டுமல்ல, நாமறியா மாயத்திறன் ஒன்றும் கூட” என்றான். கர்ணன் “ஆம் அரசே, தொன்று தொட்டே பாஞ்சாலம் இந்திரமாயத்திற்கும் மகேந்திர மாயத்திற்கும் புகழ் பெற்றது” என்றான்.

சினம் எழ “மாயத்தால் வெல்லப்படுவதல்ல அஸ்தினபுரியின் அரசவை” என்றான் துரியோதனன். “அனைத்து மாயங்களையும் அறுக்கும் விசை மறுத்துத் தருக்கி நிற்கும் ஆண்மைதான். அவளுக்கு ஆண்மை என்றால் என்னவென்று காட்டுகிறேன்.” திரும்பி பாண்டவரை நோக்கி இளிவரலாக நகைத்து நிலத்தில் துப்பி “இப்பேடிகளை மட்டுமே அறிந்திருக்கிறாள். ஆகவேதான் என் அவைக்களத்துடன் சொல்லாடுகிறாள்” என்றான்.

“காமிகா!” என்று துரியோதனன் அழைத்தான். “அவன் படைத்தலைவன். ஷத்ரியன்!” என்றான். காளிகனை நோக்கி “வெற்று உளமயக்குக்கு விழியளிக்கும் சூதன் நீ. இச்செயலுக்கு நீ உகந்தவனே அல்ல. வீரர்களே, இவனை அகற்றுக! இனி அவளிடம் செல்ல உளம் வைரம்பாய்ந்த ஷத்ரியன் எழுக!” என்றான்.

விகர்ணன் அவன் உடல் அறியாக் காற்றால் கொந்தளிக்கும் காட்டுப்புதர்மரம் போல அவை நின்று ஆடுவதை நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை மானுடருக்குள்ளும்  அவைநடிகன் ஒருவன் வாழ்கிறான். தன் அகத்தை அசைவென குரலென உணர்வென மிச்சமின்றி கொட்டி நிரப்ப விரும்புபவன். அகமே புறமென மாறி நின்று கனல்பவன். அவனை கட்டுப்படுத்தும் சித்தச்சரடொன்று அறுந்துவிட்டால் எழுகிறான். ஆடத்தொடங்கிவிட்டால் சூழ்ந்திருக்கும் அனைத்தையும் இணைத்து அவையொன்றை அமைக்கிறான். அதில் தன் வெளிப்பாட்டை தானே உணர்ந்து சுவைகண்டபின் அவன் அடங்குவதில்லை.

காமிகன் வந்து தலைவணங்கி “ஆணை அளியுங்கள், அரசே!” என்றான். துரியோதனன் “என்ன கேட்டாள்? தன்னை வைத்திழந்தபின் அவளை வைத்திழக்க அரசனுக்கேது உரிமை என்றா? அதோ நின்றிருக்கிறான் அவளை வைத்தாடிய கீழ்மகன். அவனிடமே கேள்!” என்றான். தருமனை நோக்கி “சொல், அடிமையே! உன் மறுமொழி என்ன?” என்றான். தருமன் தலைகுனிந்து உடல் மட்டும் சிலிர்த்துக்கொண்டிருக்க அசையாது நின்றார். “நன்று! அடிமை அரசுசூழ்தலில் பங்கு கொள்ளக்கூடாது. அடிமையின் நாவில் அமையவேண்டும் முதற் தளை” என்று துரியோதனன் சிரித்தான்.

காமிகனை நோக்கி “அவள் அவை நின்று சொல்சூழ விழைகிறாளா? நெறிநூல் கேட்க விரும்புகிறாளா? சொல் அவளிடம், தன்னை வைத்து அவன் இழந்தான் என்றால் பராசர ஸ்மிருதியின்படி அப்போதே அவளும் அடிமையாகிவிட்டாள். லகிமாதேவியின் ஸ்மிருதியின்படி எப்போதும் பெண்ணென்று எஞ்சும் அவள் தன் கைபிடித்து உரிமைகொண்ட கணவன்  சூதில் வைத்திழந்தபோது அடிமையானாள்” என்றான். “அதை மீறவேண்டுமென்றால் இங்கு வந்து சொல்லட்டும், இவர்கள் ஐவரும் அவள் கொழுநர்கள் அல்ல என்று… ஆம், ஐந்துமுகத்தாலியை கழற்றி அவைமுன் வீசி சொல்லட்டும்!”

கர்ணன் “நாங்கள் ஏற்று ஒழுகுவது நாரதஸ்மிருதியை என்று சொல். எந்த நெறியின்படி ஐவருக்கும் துணைவியாகி அவள் மைந்தரைப் பெற்றாள் என்று சென்று கேள். ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்பவளே கற்புள்ள பெண் என்கின்றன எங்கள் நெறிகள். எங்கு எதன்பொருட்டு ஒரு காலடி எடுத்து வெளியே வைத்தவளாயினும் அவள் பரத்தையே. இங்கு அவள் பரத்தையென்றே அழைத்துவரப்படுகிறாள். பலர்பார்க்கும் அவைமுன் பரத்தை வந்து நிற்பதில் முறைமீறலென ஏதுமில்லை” என்றான்.

துரியோதனன் “ஆம்! அதுவே எங்கள் மறுமொழி” என்றான். அரியணையில் சென்றமர்ந்து “சென்று சொல் அச்சிறுக்கியிடம்! அவள் என்னிடம் கேட்டவற்றுக்கு என் மறுமொழி இது. என் அன்னையர், உடன்பிறந்தோர், துணைவியர், மகளிர்  ஆண்மை கொண்ட பெருங்குடிப்பிறந்த பெண்கள். பெண் சிம்மம் நாய்முன் தலைவணங்கி நிற்காது. நின்றதென்றால் அது சிம்மமே அல்ல. அது வாலாட்டி கால்நக்கி குழைவதே நெறி.  இதோ, குடிப்பெண்ணை பகடைப்பணயம் வைத்து ஆடி நின்றிருக்கும் இழிமகனின் துணைவியென ஆனதினாலேயே குலத்தையும் குடிப்பெருமையையும் பெண்ணெனும் தகைமையையும் அவள் இழந்துவிட்டாள்” என்றான்.

“ஆம், என் குடிப்பெண்டிர் எவரேனும் இத்தகைய ஓர் இழிமகனை கைபிடித்து இல்லறம் கொள்வார்களென்றால் இதைவிட பன்னிருமடங்கு இழிவை அவர்கள் சூடுவார்களாக!” என்று அவன் கூவினான். மூச்சிரைக்க கைகளை தட்டிக்கொண்டு துரியோதனன் சொன்னான் “என்ன சொன்னாள்? இவ்வவையில் நான் இழுத்து வரப்போவது எவளை என்றா? ஆம். இங்கு சூழ்ந்துள்ள அத்தனை பேரும் அறியட்டும். அவளை என் நெஞ்சுக்குள்ளிருந்துதான் இழுத்து இங்கு கொண்டுவந்து அவைமுன் விடவிருக்கிறேன். குருதி சிதற ஈரல்குலையை பிழிந்தெடுத்து வைப்பதுபோல அதை செய்கிறேன்.”

குரல் உடைய நெஞ்சை அறைந்து அவன் கூவினான் “எங்கோ அன்று அவளிருந்த அரியணை ஏதென்று அறிந்திருந்தால் இவ்வண்ணம் இழிந்திருக்கமாட்டாள். சென்று சொல், அந்தப் பொதுமகளிடம். அவள் கால்களில் பணிந்த முதல் தலை என்னுடையதென்று. கன்னியென அவள் காலடிகள் பதிந்த மண்ணனைத்தும் என் நெஞ்சம் மலர்ந்து விரிந்ததே என்று!” அவன் உதடுகள் இறுக கழுத்துத் தசைகள் அதிர சொல் அடைத்து திணறினான்.

பின்னர் மூச்சை மீட்டு “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை அல்ல.  பாஞ்சாலத்துக் குலமகளை  அல்ல. பாண்டவர்களின் தேவியையும் அல்ல. பெண்ணென்று வந்து என் முன் பெருகி எழுந்து முழுமை காட்டிய ஒன்று. கட்டைவிரல் முனையாலேயே முழுதும் தன்னைக் காட்டும் பெரிது. எதன் பொருட்டு ஆண் முழுதமைந்து வாழமுடியுமோ, எதற்காக சிரமறுத்து வீழமுடியுமோ, எதன் பொருட்டு விண்ணையும் மண்ணையும் புல்லெனக் கருதமுடியுமோ அதுவாக அமைந்த ஒன்று. பெரும்பெண்மை. பேரன்னை. அறுத்து குருதி பெருக நான் என்றோ வீசிய ஒன்றை கடக்கிறேன். ஆம், அதையே இழுத்து வந்து இங்கு நிறுத்த விரும்புகிறேன். அவள் முகத்தை நோக்கி நீ என் அடிமை என்று சொல்ல விரும்புகிறேன். அவள் தலைமேல் கால் வைத்து மிதித்தேறியே நான் நான் என்று கூவ விரும்புகிறேன்” என்றான்.

“சென்று சொல், அழைப்பது அஸ்தினபுரியின் அரசன் என்று. காலவடிவன். கலி எழுந்தவன். கொதிக்கும் குருதிக்கலமென தன் தலையை சுமந்தலையும் வெறியன்” என்றான் துரியோதனன். ஒருகணம் தளர்ந்து மேலும்  வெறிகொண்டு இருகைகளையும் விரித்து தூதனை நெறித்துக் கொல்ல விழைபவன் போல அருகே சென்று தொண்டை நரம்புகள் புடைக்க இரு கண்களும் நீர் கொண்டு கசிந்து வழிய கூவினான் “என்ன கேட்டாள்? பெண்ணை வெல்ல ஆணால் முடியுமா என்றா? முடியாதென்றே ஆகட்டும். ஆம், ஒருபோதும் இயலாதென்றே ஆகட்டும். ஆனால் இப்புவியில் பெண்ணென்றும் ஆணென்றும் பிரிந்து வந்த நாள் முதல் அவ்வெல்லமுடியாமைக்கு முன் நெஞ்சறுத்து குருதி பெருக்கி விழுந்த பல்லாயிரம் ஆண்களில் ஒருவனாக நான் இருக்கிறேன். சென்று சொல்! ஆம், நான் மகிஷன், நான் நரகன், நான் ராவணப்பிரபு!” அவன் நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்து நகைத்தான். “ஆம்! ஆம்! சென்று சொல், மூடா!”

காமிகன் “ஆம் அரசே, ஆணை!” என்று தலைவணங்கி வெளியேறினான். தளர்ந்தவன் போல அரியணையில் விழுந்து தன் தலையை கையால் பற்றிக்கொண்டான் துரியோதனன்.

தொடர்புடைய பதிவுகள்

கரைந்த நிழல்கள் வாசிப்பனுபவம்

$
0
0

அன்புடன்  ஆசிரியருக்கு

அசோகமித்திரனின்  தண்ணீர்  இப்போது  தான்  படித்து  முடித்தேன். தண்ணீருக்கு  பின்பாகவே கரைந்த  நிழல்கள்  எழுதப்பட்டிருக்க வேண்டும். இன்று அதன்பிறகு  எழுதப்பட்டது. தன்னை  வாசிப்பவர்களை தொடர்ந்து  முன்னுக்கு  இழுக்கும்  படைப்பாளியாக அசோகமித்திரன் எனக்கு  இப்போது  தெரிகிறார்.

இன்று  சில மாதங்களுக்கு  முன்பாகவே வாசித்திருந்தேன். கரைந்த  நிழல்கள் நான்  வாசித்தவற்றில் முக்கியமான  படைப்பெனக் கொள்கிறேன். அந்நாவலுடனான  என்  வாசிப்பனுபவம்.
http://sureshezhuthu.blogspot.in/2016/06/blog-post_59.html?m=1

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

தொடர்புடைய பதிவுகள்

பெண்களின் காதல்

$
0
0

ஜெ அவர்களுக்கு ,

அன்பு வணக்கம். உங்களைப் பற்றி அறியும் வாய்ப்பினைச் சில நாட்கள் முன்புதான் பெற்றேன். படித்தேன், உங்களது படைப்புகளை. மனதில் இனம் புரியாத அழுத்தம். காரணம் உங்கள் எழுத்தின் வலிமை தந்த வலி. பாராட்ட வயதில்லை. பரவசத்தைப் பகிர்ந்து கொள்ளத் தந்த வாய்ப்பிற்கு நன்றி .

நேற்று இரவு இமை உறங்கி மனம் உறங்கா நேரத்தில் எழுந்த ஒரு கேள்வி! ஆண்களின் காதல் பகிரங்கமாகப் பலர் மத்தியில் பேசப்படும்போது, ஏன் பெண்களின் காதல் மட்டும் பலரால் புழுதி அளவு கூடப் பேசப்படவில்லை. ஒருவேளை என் அறிவிற்கு எட்டாமல் இருக்குமோ?

பெண்களின் காதல் பற்றி நீங்கள் எழுதிய கதை, உங்களைக் கவர்ந்த கதை, உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எழுதிய கதை பற்றி எனக்குச் சொல்லுங்களேன். இதை நான் காதல் மீது கொண்ட ஆர்வத்தால் மட்டும் அல்ல, பெண்கள் மீது கொண்ட ஆர்வத்தால் கேட்கிறேன் எனக்குள் எழுந்த எண்ணத்திற்கு உங்களிடம் இருந்து பதில் எதிர் பார்க்கின்றேன்

உங்கள் எழுத்தால் கவரப்பட்ட தோழியாக.

குறிப்பு : பிழை இருந்தால் இச்சிறுமியை மன்னிக்கவும்.

அன்புடன்,

சிவரஞ்சனி.

கும்பகோணம்.

 

தி.ஜானகிராமன்

அன்புள்ள சிவரஞ்சனி

உண்மையில் இந்தக்கோணத்தில் நான் அதிகமும் யோசித்ததில்லை. ஏனென்றால் காதல் எனக்கு அத்தனை முக்கியமான பேசுபொருளாகத் தோன்றியதில்லை. ஒப்பீட்டளவில் நான் காதலைப்பற்றிக் குறைவாகவே எழுதியிருக்கிறேன். என் இலக்கு எப்போதுமே வரலாறாக, ஒட்டுமொத்த மனிதக்கதையாகவே இருந்துள்ளது. அந்த ஒட்டுமொத்தத்தின் ஓர் அம்சமாகவே காதலை நான் பார்க்கிறேன். அப்போதுகூடக் காமத்தையே அதிகமும் பேசுபொருளாகக் கொண்டிருக்கிறேன். காதலை அதன் உன்னதமாக்கப்பட்ட ஒரு நிலை என்றே பலசமயம் முன்வைத்திருக்கிறேன்.

காதலைப்பற்றி நான் எழுதிய முக்கியமான நூல் என்றால் ’காடு’ தான். அது முதிரா இளமையின் காதலைப்பற்றியது. ஒரு சிறிய ஒளியாக வாழ்க்கையில் பரவி அணைந்து மொத்த வாழ்நாளுக்கும் நீளும் கனவாக அது இருக்கிறது. ஆனால் அதுகூடக் காதலை உன்னதமாக்கும் நூல் அல்ல. காதலின் வசீகரமும் அதன் நடைமுறைப்பக்கமும் ஒரேசமயம் அதில் விரிகிறது.

தன் அடிப்படை இச்சைகளை உன்னதப்படுத்திக் கொள்வதன் மூலம் அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான் மனிதன். காமமும், வன்முறையும் அடிப்படை இச்சைகள். காதலாகவும் வீரமாகவும் அவை உன்னதப்படுத்தப்படுகின்றன. காதலும் வீரமும் மனிதனை அவனுடைய மிகச்சிறந்த சில தளங்களைக் காணச் செய்யும் உச்சநிலைகள். அந்த உச்சநிலைகளை இன்னும் மகத்தான சில உச்சநிலைகளுக்கான குறியீடுகளாகப் பேரிலக்கியங்கள் கையாள்கின்றன. அவ்வாறுதான் சாலமனும், ஆண்டாளும் நித்ய காதலர்கள். யுலிஸஸும் வர்த்தமானரும் மகாவீரர்கள்.

உலக இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சியைக் காணலாம். அவை ஆரம்பத்தில் காதலை வெறும் காமமாகப் பார்க்கின்றன. இரு உடல்கள் இணைவதற்காகக் கொள்ளும் விழைவாகவும், பிரிவதன் வலியாகவும், கூடுதலின் உவகையாகவும் மட்டுமே சித்தரிக்கின்றன. பின்னர் காதலை அவை உடல்சாராத ஒன்றாக உன்னதப்படுத்திக் கொள்கின்றன. இரு நெஞ்சங்கள் ஒன்றில் ஒன்று நிறைவு காண விழையும் தூய தவிப்பாக, சுயமிழந்து கரையும் பரவசமாக, தனித்திருப்பதன் ஆறாத நிறைவின்மையாகக் காட்டுகின்றன. பின்னர் அந்தத் தூய காதல் ஒருவகை உச்ச அனுபவமாகக் காட்டப்படுகிறது. இறையனுபவமாக, பிரபஞ்ச அனுபவமாக ஆகிறது.

தமிழே சிறந்த உதாரணம். சங்க இலக்கியங்களில் உடல்சார்ந்த காமமே உள்ளது. காதல் என்ற சொல்லேகூட விருப்பம் என்ற பொருளிலே உள்ளது. நான் இன்று சொல்லக்கூடிய எந்த உன்னததளமும் அந்தக் காதலுக்கு இருப்பதாகத் தெரிவதில்லை. ஆனால் சங்ககால அழகியலை நாலாயிர திவ்யப் பிரபந்தம் பக்திக்காக விரித்தெடுத்த போது உடல்சாராத தூய காதல், இரண்டின்மையை நோக்கித் தாவி எழும் ஆன்மாவின் தவிப்பு, தன்னிலையழிவின் உச்சகணம் முன்வைக்கப்பட்டது.

ஆஷாபூர்ணா தேவி

 

அன்றுமுதல் இன்று வரை தமிழில் காதல் பற்றிய பற்றிய எல்லா ஆக்கங்களும் இந்த இரு வகை மாதிரிகளுக்குள் செல்பவையாக உள்ளன. இந்த இரு சரடுகளையும் கொண்டு எல்லா ஆக்கங்களையும் நாம் ஒருவகையில் புரிந்துகொள்ளமுடியும். சிலசமயம் படைப்புகள் இவ்விரு சரடுகளையும் பின்னிக்கொள்கின்றன. உடல் வழியாக ஆன்மாவைக் கண்டுகொள்கின்றன, அல்லது ஆன்மாவின் காதலில் ஊடுருவும் உடலைக் கண்டுகொள்கின்றன.

முதல்வகைப் பார்வை, யதார்த்தப் பிரக்ஞை கொண்டதாக உள்ளது. இரண்டாம் வகைப்பார்வை கற்பனாவாதப் பண்புள்ளதாக உள்ளது. முதல் வகையைச் சார்ந்தவையே நாம் அதிகமும் வாசிக்கும் வணிக இலக்கியங்கள். வணிக சினிமாக்கள். தூய ஆன்மீகக் காதலை அவை இலட்சிய வடிவமாக முன்வைக்கின்றன. அவற்றை விட்டுவிடுவோம். இலக்கியமாகக் கொள்ளத்தக்கவற்றில் அத்தகைய காதல் கதைகளுக்குச் சிறந்த உதாரணம் வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’.

நவீன இலக்கியம் என்பது இங்கே நவீனத்துவ இலக்கியமாகவே இருந்தது. நவீனத்துவம் என்பது தர்க்க நோக்கை அடிப்படைவிதியாக முன்வைக்கும் ஒரு அறிவியக்கம், அழகியல் மரபு. ஆகவே யதார்த்தபோதம் என்பது அதில் மையமாக இருக்கிறது. அங்கே தூய அகம் சார்ந்த எழுச்சிகளுக்கு இடமில்லை. அந்த எழுச்சிகளை ஐயப்பட்டுத் தர்க்கபுத்தியால் அணுகக்கூடியது அது. காதலைக் காமமாகவே அதனால் காணமுடியும். காமத்தின் மிக அதி நுட்பமான ஆடலாக அது காதலை வகுத்துக்கொள்ளும்.

நவீனத்துவப் படைப்புகளில் கணிசமானவை காமத்தின் நுண்தளங்களைப் பற்றியவைதான். ஆர்..ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’, ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து’ போன்று பல உதாரணங்கள் சொல்லமுடியும். அவற்றில் காதலை மிக யதார்த்தமான சூழலில் நிறுத்திக் கறாராகப் பேசிய ஆக்கம் என்றால் ப.சிங்காரத்தின் ’கடலுக்கு அப்பால்’ நாவலை உதாரணமாகச் சொல்லலாம்.

தி.ஜானகிராமனின் படைப்புகள் உணர்ச்சிகரமான கற்பனாவாதத்தன்மை கொண்டவை. ஆனால் அவற்றின் மையத்தரிசனம் எப்போதும் காமத்தைப்பற்றிய யதார்த்தம் சார்ந்த ஒரு விவேகமாகவே உள்ளது. மிகச்சிறந்த உதாரணம் ’மோகமுள்’ . நுண்மையான ஒரு காதலைச் சொல்லிச்செல்லும் அந்நாவல் அதைக் காமத்தின் நுண்வடிவம் மட்டுமே என்று சொல்லி அமைகிறது. ’செம்பருத்தி’யும் அப்படிப்பட்ட நாவலே..

 

MTE5NTU2MzI0OTQxMDA2MzQ3

 

உங்கள் வினா பெண்களின் காதல் எழுதப்படவில்லையே என்பது. ஒரு கவிதை, பாதசாரி எழுதியது.

முத்தத்தில் உண்டோடி

உன்முத்தம் என்முத்தம்

இது நம் முத்தம்

காதலைப்பற்றிப் பேசும்போது ஆணின் காதல் பெண்ணின் காதல் எனப் பிரிக்கமுடியுமா என்ன? காதலில் ஆணும் பெண்ணும் சந்திக்கும் புள்ளிதானே பேசப்படுகிறது? ஆண் எழுத்தாளர்கள் எழுதியவையும் பெண்களைப்பற்றித்தானே? ஆண் எழுத்து பெண் எழுத்து என்று முழுமுற்றாகப் பிரிக்கும் அசட்டு விமர்சன நோக்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அடிப்படையில் அவை, இலக்கியத்துக்கே எதிரானவை.

ஏனென்றால் கற்பனை மூலம் ஒரு மனித மனம் இன்னொரு மனிதமனத்தை உள்ளே சென்று அறியமுடியும் என்ற சாத்தியக்கூறில் இருந்தே இலக்கியம் என்ற கலைவடிவம் உருவாகி இருக்கிறது. எந்த எழுத்தாளனும் தன்னுடைய சொந்த அனுபவத்தை மட்டும் எழுதுவதில்லை. அப்படி எழுதுபவன் இலக்கிய எழுத்தாளன் அல்ல, செய்தியாளன் மட்டுமே. இலக்கியவாதி எழுதுவது பிறரது அனுபவங்களை. கற்பனைமூலம் அவன் அந்தப் பிற உலகங்களில் புகுந்து அந்த அனுபவங்களைத் தான் அடைந்து அதை எழுதுகிறான்.

வாசிப்பு என்பது இச்செயலின் மறுபக்கம் மட்டுமே. யாரோ ஒரு மனிதன் எழுதி மொழியில் பதிவாக உங்களுக்குக் கிடைக்கும் ஒரு ஆக்கத்தை வைத்துக்கொண்டு நீங்கள் அந்த மனிதனின் அந்தரங்கத்தில் நுழைய முடிகிறது. அவன் காட்டும் யதார்த்தங்களுக்குள் செல்ல முடிகிறது. அந்தக் கதைமாந்தருடைய அகங்களுக்குள் செல்ல முடிகிறது. அந்தச் சாத்தியமே இலக்கியத்தை உருவாக்குகிறது.

 

 

குர் அதுல் ஐன் ஹைதர்

 

இந்த சாத்தியத்தை வாழ்நாளில் ஒருமுறைகூடச் சந்திக்காதவர்கள் உண்டு. தினமும் இலக்கியம் வாசித்தாலும் சுட்டசட்டி சட்டுவமாகவே அதில் கிடப்பார்கள். இலக்கியத்தை வைத்துக்கொண்டு கற்பனை செய்ய அவர்களால் இயலாது. இலக்கியத்தை வெறும் தகவல் குவியலாக மட்டுமே அவர்களால் பார்க்க முடியும். அவர்களுக்கு ஒரு ஆணின் அகத்தைப் பெண் எழுத முடியும் என்றோ, ஒரு பெண் குழந்தையின் அகத்தை ஒரு கிழவர் எழுதிவிட முடியும் என்றோ நம்ப முடியாது.

இந்த ஆசாமிகள்தான் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்பது போன்ற பிரிவினைகளைப் போடுகிறார்கள். இப்பிரிவினைகளால் ஒரு இலக்கிய ஆக்கத்தின் உருவாக்கச் சூழலையோ அதன் மேலோட்டமான மொழி மற்றும் அமைப்பையோ பற்றி சில புதிய தகவல்களைச் சொல்லிவிட முடியும். ஆனால் ஒருபோதும் இலக்கியத்தின் சாராம்சமான இடத்துக்குச் செல்லமுடியாது. நீங்கள் இளம் வாசகர் என்றால் இந்தக் குரல்களை முழுமையாகவே தவிர்த்துவிடுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் இவர்கள் இருப்பதையே கண்டுகொள்ளாதீர்கள்.

என் நோக்கில் தல்ஸ்தோயின் நடாலியாவோ, தஸ்தயேவ்ஸ்கியின் சோனியாவோ, தி.ஜானகிராமனின் யமுனாவோ ஆண்களால் படைக்கப்பட்ட பெண் பொம்மைகள் அல்ல. அவர்கள் உண்மையான மனிதர்கள். மனிதர்களுக்குரிய எல்லாச் சிக்கல்களும், எல்லாப் பிரச்சினைகளும், எல்லா முரண்பாடுகளும் கொண்டவர்கள். அவர்கள் உண்மையான மனிதர்கள்தான்; புனைவெனும் கண்ணாடிப்பிம்பம் வழியாக அவர்களை நாம் காண்கிறோம், அவ்வளவுதான்.

அப்படி உயிருள்ள உண்மையான மனிதர்களாக அவர்களை நாம் பார்த்தால் மட்டுமே அவர்களை நாம் அறிய முடியும். அவர்களுடன் வாழமுடியும். அவர்களுக்குள் செல்லமுடியும். அவர்களை யாரோ ஓர் எழுத்தாளன் அவனுடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயற்கையாகச் செய்தான் என நினைத்தால் அக்கணமே அந்தக் கதாபாத்திரங்கள் செத்துச் சடலவடிவங்களாக ஆகிவிடும். நீங்கள் அதைப் பிணப்பரிசோதனை மட்டுமே செய்யமுடியும்

இலக்கிய ஆக்கங்கள் கற்பனை மூலம் உருவாக்கப்படுபவை. வாசகனின் கற்பனையை நோக்கி முன்வைக்கப்படுபவை. அந்தக்கற்பனையை ரத்து செய்துவிட்டு அவற்றை அணுகுவதென்பது நிறக்குருடன் ஓவியத்தைப் பார்ப்பது போன்றது. இன்று இளம் வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால் ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே. இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்க முடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புகளைப் பொத்திக்கொள்ள உருவாக்கிக் கொள்ளும் ஒரு எளிய தற்காப்பு முறை மட்டுமே.

 

அநுத்தமா

 

இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கி வீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது. ஆஷாபூர்ணா தேவி போல, குர் அதுல் ஐன் ஹைதர் போல. ஒரு பெண்ணாக அல்ல, ஒரு மனித உயிராகத் தன்னை உணர முடிந்தால் மட்டுமே முக்கியமான ஆக்கங்களை எழுத முடியும். அப்படி உணரக்கூடிய ஓர் எழுத்தாளன் எந்த மானுட அனுபவத்திற்குள்ளும் தன் கற்பனைமூலம், கருணை மூலம் சென்று விட முடியும்.

எந்த ஆண் இலக்கியவாதியும் தன்னை- தான் எழுதும் கணத்தில்-ஆண் என உணர்ந்து எழுதுவதில்லை. அதேபோல எந்தப் பெண் இலக்கியவாதியும் தன்னை எழுதும் கணத்தில் பெண் என உணர்ந்து எழுதுவதில்லை. உண்மையான படைப்பூக்கத்தை எழுத்திலோ வாசிப்பிலோ உணர்ந்த எவருக்கும் இது புரியும். பிறரிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. படைப்பெழுச்சியின் கணம் என்பது மகத்தான ஒரு தன்னிலையழிவு நிகழும் தருணம். அப்போது இலக்கியவாதி இல்லை. அவன் [அல்லது அவள்] எவரைப்பற்றி எழுதுகிறானோ அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவன் ஒவ்வொரு கதைமாந்தருக்குள்ளும் குடிபுகுந்து அந்தக்கதாபாத்திரங்களாகத் தன்னை உணர்ந்து அதை எழுதுகிறான். அப்படி எழுதினால் மட்டுமே அது எழுத்து.

தல்ஸ்தோய், வெளியே ஒரு கிழவனாக நின்று அன்னா கரீனினாவைப் பார்த்து எழுதவில்லை. அவர் அன்னாவாக வாழ்ந்து அதை எழுதினார். யமுனா என்ற பெண், தி.ஜானகிராமன் தன் விருப்பப்படி உருவாக்கிய ஒரு செய் பொருள் அல்ல. அவளுக்குள் சென்று அவர் அவள் வழியாக உலகைப் பார்த்திருக்கிறார். பாபுவும் ராஜமும் ரங்கண்ணாவுமாக அவரே வாழ்ந்திருக்கிறார். தமிழில் காதலைப்பற்றி நன்றாக எழுதிய எல்லா எழுத்தாளர்களும் பெண்களின் காதலைப்பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

 

ஜார்ஜ் எலியட்

ஜார்ஜ் எலியட்

 

உலகில் மகத்தான பெண்ணெழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களின் எழுத்துக்களுக்கும் மகத்தான் ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கும் ஒரு வாசகனாக எந்த வேறுபாட்டையும் நாம் காணமுடியாது. ஓர் உதாரணம் சொல்கிறேன். எண்ணூறுகளில் ஆங்கிலத்தில் ஜார்ஜ் எலியட் என்ற ஆண் பேரில் அற்புதமான ஆக்கங்களை எழுதியவர் ஒரு பெண்- மேரி ஆன் என்று பெயர். அவர் பெண் என்பதே ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. அது தெரியாமலே போயிருந்தால் எவருமே அவரது ஆக்கங்களில் பெண்கூறுகளைக் கண்டுகொண்டிருக்கமாட்டார்கள்.

தமிழில் காதலைப்பற்றி எழுதிய பெண்களில் குறிப்பிடத்தக்க இரு ஆக்கங்கள் என நான் நினைப்பவை ஹெப்சிபா ஜேசுதாசனின் ’புத்தம்வீடு’, அநுத்தமாவின் ‘கேட்டவரம்’ ஆகியவை. அவற்றை நாம் தமிழில் ஆண்களால் எழுதப்பட்ட எந்த ஆக்கத்தில் இருந்தும் எவ்வகையிலும் தனித்துக்காண முடியாது.

ஆணோ பெண்ணோ, எழுத்தாளன் எழுதும் உச்சநிலை என்பது ஒன்றுதான் – மொத்த மானுடத்திற்கும் பிரதிநிதியாக நின்று வாழ்க்கையைப் பார்ப்பது அது.

ஜெ

அக்னிநதி -குர் அதுலைன் ஹைதர்

அநுத்தமா

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Oct 22, 2012

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86

$
0
0

[ 17 ]

சகுனி கைநீட்ட  ஓர் ஏவலன் அருகே வந்து அவர் தோளை பற்றினான். வலிகொண்ட காலை மெல்லத்தூக்கி எழுந்து அவன் தோள்பிடித்து நடந்து கணிகரின் அருகே தன் பீடத்தில் அமர்ந்தார். அவர் அணுகியதையே கணிகர் அறிந்ததுபோல் தெரியவில்லை. ஏவலர்கள் இருவர் வந்து பன்னிரு பகடைக்களத்தில் பொருளிழந்து வெற்றுப்பொருட்களென்றாகி பரவியிருந்த காய்களைப் பொறுக்கி தந்தப்பேழைகளில் சேர்த்தனர். பகடைக்களம் வரையப்பட்ட பலகையை ஒருவன் அகற்ற முயல துரியோதனன் உரக்க “அது அங்கிருக்கட்டும்! அங்குதான் அவ்விழிமகளை கொண்டு வந்து நிறுத்தப்போகிறேன். பாரதவர்ஷத்துடன் அவள் பகடையாட விழைந்தாள். எனது பகடைக்களத்தில் அவளும் ஒரு காயென்று வந்து நிற்கட்டும் இங்கே” என்றான்.

கர்ணன் புன்னகைத்தான். துரியோதனன் சிற்றமைச்சரைப் பார்த்து “அந்தப் பகடைகளை எடுத்து இங்கே அளியுங்கள்” என்றான். பகடைகளை பொற்பேழையிலிட்டு அவனிடம் அளித்தான் ஏவலன். அதை தலைமேல் தூக்கி “நூறாயிரம் நூல்களை, சூதர்பாடல்களை, வேதம் மறுத்தெழுந்த படைப்பெருக்கை வென்றவை இவை” என்றான் துரியோதனன். சூழ்ந்திருந்த அவையினர்  நகைத்தனர். துர்மதன் “கௌரவரின் வழிபடுதெய்வம் வாழ்கிறது அதில்” என்றான். துச்சலன் “எழுத்துக்களை வென்றன எண்கள்” என்றான். சிரிப்பொலிகள் அலையலையாக எழுந்தன.

விகர்ணன் அவர்களை திரும்பித்திரும்பி பார்த்தான். ஒவ்வொருவரிலிருந்தும் அவர்கள் அக்கணம் வரை வென்றுவென்று கடந்து வந்த பிறிதொருவர் எழுந்து நின்றது போல் வெறி கொண்டிருந்தன விழிகள். கள்மயக்கைவிட, காமமயக்கைவிட, வெற்றிமயக்கைவிட வல்லமை கொண்டது கீழ்மையின் பெருமயக்கு என்று விகர்ணன் எண்ணிக்கொண்டான். கைகளைக் கூப்பியபடி கண்ணீர் வழிய தன் இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான்.

ஏவலனை அழைத்து மேலும் மேலும் மது கொணரச்சொல்லி உண்டு மூக்கிலும் இதழோரத்திலும் கோழை வழிய வலப்பக்கமாகச் சரிந்து இறந்த உடலென கிடந்தான் குண்டாசி. பெருந்தசைகள் புடைத்தெழ கௌரவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டனர். சிலர் கைவீசி மெல்ல நடனமிட்டனர். சிலர் ஆடைகளைத் தூக்கி மேலே வீசிப்பற்றினர். அவன் திரும்பி பீஷ்மரை பார்த்தான். இருகைகளையும் கோத்தபடி கண்கள்மூடி அங்கில்லையென அவர் அமர்ந்திருந்தார். துரோணரும் கிருபரும் உதடுகளை இறுக்கி விழிகள் பொருளற்ற ஏதோ ஒன்றை வெறிக்க சரிந்திருந்தனர். பற்றற்றவர் போல் தாடியை நீவியபடி விதுரர் இருந்தார்.

அவர்கள் எதை நோக்கி ஆழ்ந்திருக்கிறார்கள்? எப்போதும் அறிந்த ஒன்றையா? என்றும் உடனிருக்கும் ஒன்றையா? அவர்கள் எதிர்கொண்டிராத தருணம். கற்றவையும் கனிந்தவையும் கேள்விக்குள்ளாகும் தருணம். அரசும் குடியும் வெறிகொண்டு எழுந்த அவையில் அவர்கள் செய்வதற்கொன்றுமில்லை போலும். ஆனால் எழுந்து உடைவாளெடுத்து தங்கள் கழுத்தில் பாய்ச்சிக் கொள்ளலாம். அவைமுன் செத்துவிழலாம். ஆனால் கற்பாறை எனக் குளிர்ந்து காத்திருக்கிறார்கள். ஒருகணத்தில் உள்நடுக்கமென அவன் ஒன்றை உணர்ந்தான். அத்தனை பேரிலும் தோன்றி பேருருக்கொண்டு நின்றிருப்பது ஒன்றே. அது பெண்முன் தன்னைத் தருக்கி எழும் ஆண்மையின் சிறுமை.

“ஆம்!” என்றது ஒரு குரல். திடுக்கிட்டவன் போல் அவன் திரும்பிப்பார்க்க தன்னருகே எருமைத்தலையும் கல்லுடைந்த துண்டுபோன்ற விழிகளும் குளம்புகள் கொண்ட கால்களுமாக ஒருவன் நின்றிருப்பதை கண்டான். “யார்?” என்று அவன் கேட்டான் “எருமையன்” என்றான் அவன். அவன் சொல்லுடன் ஊனின் ஆவியெழுந்த மூச்சு கலந்திருந்தது. “எனது குலமூத்தார் முன்பு ஒரு படைக்களத்தில் இவளால் கொல்லப்பட்டார். நெஞ்சுபிளந்து இவள் காலடியில் விழுகையில் இப்புவி வாழும் அனைத்து ஆண்களும் என் குருதியில் ஒரு துளியேனும் கொள்க என்று அவர் சொன்னார்.  புடவியைப் பகடையாக்கி ஆடும் பிரம்மம் ஆம் என்றது அப்போது.”

நிரைவகுத்த வெண்பற்கள் தெரிய அவன் நகைத்தான். “இங்குள அனைவருக்கும் இடது செவியருகே நான் நின்றிருக்கிறேன். வலதுசெவியருகே அவர்களின் வழிபடுதெய்வங்களும் முன்னோரும் அவர்கள் கற்ற நூல்களின் உரையும் நால் வேதங்களும் ஆறு அறங்களும் நின்றுள்ளன. அத்தனை குரலுக்கும் என் குரல் நிகர். அணுகுகையில் அவற்றைவிட ஓர் அணுவிடை மிகுதி. எதிர்த்துப் போரிடுகையில் ஆயிரம் முறை பெரிது.”

“இல்லை! இல்லை!” என்று விகர்ணன் சொன்னான். “விலகு! இது ஏதோ உளமயக்கு. என் சித்தம் கொள்ளும் வெற்றுக்காட்சி.” அவன் நகைத்து  “மாயமில்லை இளையோனே, இவ்வவையில் இறுதியாக நான் எழுந்தது உன்னருகேதான். அங்கு பார், பீஷ்மரின் அருகே செவியாட்டி நான் நின்றிருக்கிறேன். துரோணரின், கிருபரின், ஏன் விதுரரின் அருகிலே கூட” என்றான்.

விகர்ணன் அச்சத்துடன் நெஞ்சை அழுத்தியபடி நோக்கினான். அங்கிருந்த ஒவ்வொருவர் அருகேயும் கரிய நிழலென அரைக்கணம் தோன்றி, விழிமயக்கோ என விளையாடி, மீண்டும் விழிமின்ன எழுந்து பல்துலங்க உறுமி மறைந்த எருமையனை கண்டான். “காலம்தோறும் பெண்மை வென்று கொண்டிருக்கிறது. மண் என விரிந்து இங்கெழுந்தவை அனைத்தையும் அவள் உண்கிறாள். மழையெனப் பொழிந்து இங்குள்ள அனைத்தையும் புரக்கிறாள். முலையெனக்கனிந்து இங்குள அனைத்தையும் ஊட்டுகிறாள். வெல்பவள், கடக்க முடியாதவள், ஆக்கி அளித்து ஆடி அழிப்பவள். அவளுக்கு எதிராக நின்றிருக்க கல்வியோ வீரமோ தவமோ உதவுவதில்லை. மதவிழியும் இருளுடலும் கொம்பும் கொண்ட நானே அதற்கு உதவுபவன். என்னைத் தவிர்க்க இயலாது எவரும்.”

உரக்க நகைத்து “தவிர்த்தவன் ஆணெனப்படுவதில்லை. அவனை பேடி என்கின்றனர். கோழை என்கின்றனர். பெண்ணன் என்று பழிக்கின்றனர்” என்றான். “உண்மையில் அருகில் நானில்லாத ஆணை பெண்ணும் விரும்புவதில்லை. ஏனெனில் அவள் அவனிடம் நிகர் நின்று போரிலாடி வெல்ல வேண்டும். அவன் நெஞ்சில் கால்வைத்து தருக்கி எழவேண்டும். அவளுக்கு எதிர்நிலை நானே. நோக்குக!”

அவன் கைசுட்ட விகர்ணன் துரியோதனனின் அருகே பேருருக்கொண்டு நின்ற மகிஷனை கண்டான். அவ்வளவே உயரத்துடன் கர்ணனருகே நின்றிருந்தான் பிறிதொருவன். துச்சாதனனிடம் துர்மதனிடம் துச்சலனிடம் சுபாகுவிடம் சுஜாதனிடம். கௌரவர் ஒவ்வொருவர் அருகிலும். அவன் உரக்க நகைத்து அவன் தோளைத்தொட்டு “பார்! மூடா, இந்த அவையிலேயே நான் நிழல்பேருரு என  அருகணைய அமர்ந்திருப்பவன் பீஷ்மன்!” என்றான். வளைந்த பெருங்கூரை முட்ட கரியமுகில்குவை போல் எழுந்து நின்றிருந்தான் பீஷ்மரின் துணைவனாகிய மாமகிடன்.

அவரது இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருப்பதை, உதடுகள் அழுந்தி அழுந்தி மீள்வதை, தாடை அசைவதை விகர்ணன் கண்டான். “ஆயிரம் நூல்கள், பல்லாயிரம் நெறிகள், வாழ்ந்த கணமெலாம் வழுத்திய மூதாதையரின் கனிந்த சொற்கள்… அங்கே துலாவில் அவர் அள்ளி அள்ளி வைப்பவை இப்புடவிக்கு நிகரானவை. அனைத்தையும் வென்று வென்று மேற்சென்று எழுந்து நின்றிருக்கிறேன்” என்றான் மகிஷன். வெறிகொண்டு அக்கனவை உதறி திமிறி “விலகு! விலகு!” என்றான் விகர்ணன்.

“எளிதில் அவ்வண்ணம் விலக இயலாது. ஏனெனில் நீயும் ஒரு ஆண்மகனே” என்றான் மாமயிடன். “எவ்வண்ணம் நான் வெல்வேன்? எந்தையே, உன்னைக்கடந்து எப்படி செல்வேன்?” என்றான் விகர்ணன். “என்னைக் கடப்பதற்கு வழி ஒன்றே. என்னிடம் போரிடாதே. துளிக்குருதி சொட்டினாலும் ஒன்று நூறெனப் பெருகும் ஆற்றல் கொண்டவன் நான். என்னை வென்றவன் பெண்ணில் நல்லாளுடன் இருந்த பெருந்தகை ஒருவனே. தன்னைப் பகுத்து பெண்ணென்றான தாயுமானவன் அவன். உன்னை இரண்டெனப் பகுத்து என்னை எதிர்கொள்!”

“பெண்ணென்றா?” என்று அவன் கேட்டான். “ஆம். உன் முலைகள் ஊறவேண்டும். கருப்பை கனியவேண்டும். அன்னையென கன்னியென மகளென என்னை நீ தொடவேண்டும். என்னை வென்று கடக்க வழி என்பது ஒன்றே. ஆணென நின்று நீ கைக்கொள்ளும் அத்தனை படைக்கலத்திலும் எழுவது உனது கீழ்மை. கீழ்மைக்கு முன் ஆடிப்பாவையென பெருகி நிற்பது எனது வலிமை.”

“நான் அடிபணிகிறேன். உன் மைந்தனென்றாகிறேன்” என்றான் விகர்ணன். “மைந்தன் என்பதனால்தான் இக்கணம் வரை நீ சொல்லெடுக்கிறாய், மூடா” என்றான் மகிடன். விகர்ணனை சூழ்ந்து நிழல் அலைக்கொந்தளிப்பென சுழித்தது பன்னிரு பகடைக்களம். ஒவ்வொரு நிழலும் தன் கையில் ஒருவனை வைத்திருந்தது, களிப்பாவையென. அவனை கைமாற்றி வீசி விளையாடியது. அவன் தலையைச் சுண்டி தெறிக்கவைத்தது. கால்களைச் சுழற்றி வீசிப்பிடித்தது. “இரண்டென்றாகுக! ஆம், இரண்டென்றாகாது வெல்வதில்லை எவரும்” என்றான் மாமயிடன்.

[ 18 ]

அவை வாயிலில் வீரர்களின் குரல்கள் எழுந்தன. இரு காவலரை விலக்கி காமிகன் அங்கே தோன்றினான். துரியோதனன் உரத்த குரலில் “வருக! எங்கே அவள்?” என்றான். “அரசே, அரசி என்னுடன் வரவில்லை” என்றான் காமிகன். சினந்து “என்ன நிகழ்ந்ததென்று சொல், மூடா” என்றான் துரியோதனன். அஞ்சி துரத்தப்பட்டவன் போல் மூச்சிரைக்க  அருகணைந்த காமிகன் “அரசே!” என்றான். சினத்துடன் பீடம் விட்டெழுந்து அவனை அணுகி “என்ன நிகழ்ந்தது? சொல்!” என்றான் துரியோதனன்.

“அரசே, அரசி இல்விலக்கி அமர்ந்திருக்கும் புறமாளிகையை என் படைவீரருடன் அணுகினேன்” என்றான் காமிகன். “அங்கே எதிர்ப்பிருக்கக்கூடும் என்றெண்ணி நூற்றுவரை என்னுடன் அழைத்துக்கொண்டேன். போரென்றால் அவ்வண்ணமே என்று உறுதிகொண்டே அங்கே சென்றேன்.”

வாயிலில் நின்றிருந்த செவிலியரிடம் “விலகுங்கள்! தடுத்து ஒரு சொல் சொல்பவர்கள் அக்கணமே வெட்டி வீழ்த்தப்படுவார்கள்” என்றேன். அவர்கள் அஞ்சி வழிவிட முதற்சுற்று வாயிலைக் கடந்து உள்ளே சென்றேன். என்னை நோக்கி கன்னங்கரிய பெண்ணொருத்தி வந்தாள். “யார் நீ?” என்று அவளை கேட்டேன். பற்கள் ஒளிர புன்னகைத்து அவள் “நான் ஐங்குழல்கொண்ட அரசி திரௌபதியின் அணுக்கத்தோழி மாயை” என்றாள். “எங்கே உன் தலைவி? அவளை அவைக்கு இழுத்துவரும்படி அரசாணை” என்றேன்.

மெல்ல இதழ்கோடச் சிரித்து “முடிந்தால் இழுத்துச் செல், மூடா!” என்றபோது அவளது விழிகள் சிம்மத்தின் விழிகள்போல் முத்துவெண்மை கொண்டன. நான் என் வாளை உருவி அவளை அணுகியபோது தரையிலிருந்து அவள் நிழல் எழுந்து பிறிதொரு மாயையாகியது. சுவரிலிருந்த நிழல் எழுந்து மற்றொரு மாயையாகியது. பறக்கும் கருங்குழலும் அனலென எரியும் விழிகளுமாக அவள் பெருகினாள். அவ்வறையின் அனைத்து வாயில்களிலிருந்தும் ஐம்புரிக்குழலும் திறந்த வாய்க்குள் எழுந்த கோரைப்பற்களும் சிம்மவிழிகளுமாக பெண்கள் வந்தனர். அறியாத பிடாரிகள். குருதி வேட்கை கொண்டு நெளியும் செவ்விதழ் பேய்கள். காளிகள். கூளிகள். சுவர்கள் கருமைகொண்டன. கன்னங்கரிய தூண்கள். கருமை நெளியும் தரை. இருள் இறுகி எழுந்த மாளிகை அது.

அரசே, அப்பெண்களைக் கடந்து செல்ல அஞ்சி நின்றேன். என்னை குளிர் சூழ்ந்தது. என் கையிலிருந்த படைக்கலங்கள் நழுவின. ஒருத்தி என் அருகே வந்து கைபற்றி “வருக!” என்றாள். என் படைவீரர்கள் அஞ்சி நின்றுவிட்டனர். நான் மட்டும் இருளுக்குள் கருமைக்குள் இன்மைக்குள்ளென புதைந்து புதைந்து உள்ளே சென்றேன். இருள் அள்ளி உருவாக்கிய மாளிகை இருளிலாடி நின்றது. இருளினாலான தூண்களுக்கு மேல் இருள் குவிந்த குவை மாடம். அங்கு இருண்ட அவைக்கூடம். அதன் நடுவே இருளுருகி எழுந்த பீடமொன்றில் அமர்ந்திருந்தாள் ஒருத்தி.

பதினாறு தடக்கைகளில் படைக்கலங்கள். ஐம்புரிக் குழற்பெருக்கு. அனல்விழிகள். இடியெனச் சூழ்ந்த குரலில் “எங்கு வந்தாய்?” என்றாள். “உன்னை இழுத்துச்சென்று என் அரசன் அவை முன் நிறுத்த வந்துள்ளேன். நான் அரசகாவலன்!” என்றேன். “சென்று சொல்க! தன் நெஞ்சு பிளந்து என் காலடியில் குருதி கொடுக்க உறுதிகொண்டவன் எவனோ அவன் எழுக என்று. ஒருதுளியேனும் எஞ்சாமல் மாமயிடனுக்கு தன்னை அளித்தவன் எவனோ அவன் வருக என்று” என்றாள். “ஆம், அன்னையே” என்றேன். தலைவணங்கி இங்கு மீண்டேன்.

துரியோதனன் “அவளது மாயங்கள் அளவிறந்தவை. அத்தனை உளமயக்குகளுக்கு முன்பும் நின்றிருப்பது விழிமூடாமை ஒன்றே. அஞ்சாதவனை ஆட்கொள்ளும் மாயமென்பது தேவரும் கந்தர்வரும் அறியாதது. தம்பியரே, உங்களில் எவர் சென்று அவளை இழுத்துவர முடியும்?” என்றான். அக்கணமே துச்சாதனன் கைகளைத் தூக்கி “நான் சென்று இழுத்துவருகிறேன், மூத்தவரே. அதற்குரியவன் நானே” என்றான்.

“ஆம், மாமயிடன் பேருருக்கொண்ட வடிவன் அவன்” என்றான் விகர்ணனை நெருங்கி நின்ற மகிடன். “அவன் என்னைக் கண்டதுமே ஆடியில் நோக்குபவன்போல் உணர்ந்து முகம் மலர்ந்தான். அரசனும் அவனுக்கு ஒரு படி கீழேதான்.” விகர்ணன் “ஏன்?” என்றான். “நூறுமுறை அணுகியே அரசனை வென்றேன். அவன் மடியிலிருந்து அக்கரிய மகளை எளிதில் அகற்ற என்னால் முடியவில்லை” என்றான் மகிடன். “வலத்தொடையில் அமர்ந்திருந்தாள். தாமரைநூல் அது. ஆனால் விண்ணவரும் அசுரரும் இழுத்த வாசுகி போன்றது.”

அவைநிறைத்த பல்லாயிரவர் “ஆம், செல்க! செல்க! இழுத்துவருக அவளை” என்று கூவி ஆர்த்தனர். இருகைகளையும் விரித்து அலையலையென நடனமிட்டபடி “சென்று வருக! அவளை கொண்டு வருக!” என்றனர். புடைத்த தோள்களுடன் திமிறெழுந்த நடையுடன் துச்சாதனன் அவை விட்டு வெளியே சென்றான்.

[ 19 ]

துச்சாதனன் புறமாளிகையின் வாயிலுக்கு வந்தபோது அங்கு மாயை அவனுக்காக காத்து நின்றிருந்தாள். உடலெங்கும் தசைகள் எழுந்து இறுகி அமைந்து அலைபாய, மதம் நிறைந்த விழிகள் சேற்றில் குமிழிகளென உருள, அறியாத ஒழுக்கொன்றால் அடித்துவரப்பட்டவன் போல அணுகிய அவன் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து “எங்கே அவள்? எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் இழிமகள்? அவளை அவைக்கு இழுத்துவரும்படி அரசரின் ஆணை” என்றான்.

மாயை தலைவணங்கி புன்னகைத்து “தங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்கள், இளவரசே” என்றாள். “ஆம், அந்தத் தன்னுணர்வு அவளுக்கிருந்தால் நன்று. தொழும்பி இருக்கவேண்டிய இடம் அரண்மனையல்ல, புறக்கூடம். அவள் ஆற்றவேண்டியது அடிமைப்பணி. அவையில் அதை அரசர் அவளுக்கு அறிவுறுத்துவார். எங்கே அவள்?” என்றான்.

“வருக!” என்று மாயை தலைவணங்கி அவனை அழைத்துச் சென்றாள். அவள் வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். வெண்மலர்களை தலையில் சூடி, சங்குவளையும் பாண்டிய நாட்டு வெண்முத்து கோத்த ஆரமும் அணிந்திருந்தாள். இனிய புன்னகையுடன் “இது நீங்கள் அரைமணிக்கிண்கிணி ஒலிப்ப ஆடிவளர்ந்த அரண்மனை என்றே கொள்க என்று அன்னை சொன்னாள். அங்கிருப்பவளும் தங்கள் அன்னையென்றே எண்ணுக!” என்றாள்.

துச்சாதனன் “விலகு! உனது மாயத்திற்கு அடிமைப்படுபவனல்ல நான். எந்த வலையையும் கிழித்துச் செல்லும் வண்டு. நூறு கைகளை தட்டி விலக்கியே என்னை இவ்வண்ணம் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே அவள்?” என்றான்.

வெண்சுவர்களும் பால்விழுதென எழுந்த தரையும் வெண்ணெய்த்திரள் போன்ற தூண்களும் நுரையென அலையடித்த திரைகளும் கொண்ட அந்த மாளிகை அஸ்தினபுரியில் அதற்குமுன் இருந்ததா என்று அவன் ஐயம் கொண்டான். பெண்கள் குருதிவிலக்குக்கு சென்றமைவது தாழ்ந்த கூரையும் கரிய தூண்களும் கொண்ட புறச்சாய்ப்புகளில்தான் என்று அறிந்திருந்தான். இது இவள் அளிக்கும் விழிமயக்கு. இதை வெல்லும் ஒரே வழி என் ஊன்விழிகளுக்கு அப்பால் உளவிழி இல்லாமல் ஆக்கிக் கொள்வதே. ஆம், என் ஊன் விழியால் மட்டுமே இதை பார்ப்பேன். எனது வெறுங்கால்களால் மட்டுமே இதன் மேல் நடப்பேன். வெறும் உயிரென்றும் உடலென்றும் மட்டுமே இங்கே நிறுத்துவேன். நான் விழியிழந்த தந்தையின் மைந்தன்.

தன்னை தான்வகுத்து தன்மேல் சுமத்தியபடி அவன் நடந்தான். இனிய இசை சூழ்ந்த அறை. அதன் முதல்வாயிலை திறந்தபோது அங்கு வெள்ளியலையென கீழாடையும் வெண்பட்டு மேலாடையும் அணிந்து தரையில் விரிக்கப்பட்ட ஈச்சை மரப்பாயில் அமர்ந்து தன்முன் சுண்ணத்தால் வரையப்பட்ட நாற்களத்தில் மலர்மொட்டுகளை வைத்து தன்னுடன் தான் ஆடிக்கொண்டிருந்தாள் திரௌபதி. காலடிகேட்டு அவள் விழிதிருப்பி அவனை நோக்கி இனிய புன்னகையுடன் “வருக மைந்தா, உனக்கென்றே காத்திருந்தேன்” என்றாள்.

உரத்த குரலில் “எழுக! இழிமகளே, உன்னை என் தமையன் அரசவைக்கு இழுத்து வர ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “இழுத்துச்செல்ல வேண்டியதில்லை. உன் விழைவுப்படி உடன் வரவே இருந்தேன்” என்றாள். எழுந்து தன் ஆடை திருத்தி “இந்த நாற்களத்தில் நீல நிற மொட்டாக உன்னை வைத்திருந்தேன். இதனுள் நீ நுழையும் வாயில் எப்போதும் திறந்திருந்தது” என்றாள்.

“நீ மாயம் காட்டுகிறாய். இவ்வுளமயக்குக்கு ஒருகணமும் ஆட்படேன். எழுக! இல்லையேல் உன் கூந்தல் பற்றிச் சுழற்றி இழுத்துச்சென்று அவை நிறுத்துவேன்” என்றான் துச்சாதனன். அவள் தன் குழலை அள்ளிச் சுழற்றி முடிந்து “அதற்குத் தேவையில்லை. உன்னுடன் வருவதற்கு விழைவு கொண்டிருக்கிறேன்” என்றாள் கனிந்த புன்னகையுடன். “ஏனெனில் இது உனது களம். இங்கு நின்றாடுவதற்காகவே என் உடலில் இருந்து பிரிந்தவன் நீ” என்றாள்.

நடுக்கு ஓடிய குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நெடுநாட்களுக்கு முன் கன்னியென காந்தாரத்தில் நான் இருந்தேன். அன்று என்னை கீழ்குலத்தாள் என்று துறந்து சென்றான் மகதத்து மன்னன். அச்செய்தி என்னை வந்தடைந்த கணம் என்னுள் ஊறிய ஒரு துளி நச்சின் கசப்பை அடிநாவில் உணர்ந்தேன். கற்றவற்றால் தேர்ந்தவற்றால் மூதன்னையர் கொடுத்தவற்றால் அதை இனிதென ஆக்கி உண்டு செரித்தேன். கடந்து கடந்து வந்து மறந்தபின் கண்ணிழந்தவனை கணவன் என்று அடைந்தபின் கருநிலவெழுந்த இரவொன்றில் என் கனவில் நீ முதல் முறையாக எழுந்தாய். கரிய உடல். கையில் கதாயுதம். கண்களில் மதமும் மூச்சில் ஊன்வாடையும். உன் கால்களில் குளம்புகளும் தலையில் நீண்டு வளைந்த கரிய கொம்புகளும் இருந்தன. அதன் பின் என்றும் என் உடலுக்குள் நீ வாழ்ந்தாய். உடல் விட்டு பிரிந்து இளமைந்தனாக எழுந்தாய். நீ காத்திருக்கிறாய் என்றறிந்தேன். உனக்கென மறுமுனையில் நானும் காத்திருந்தேன்.”

“போதும்! இனி ஒரு சொல் எடுக்காதே! என்னை பித்தனாக்க எண்ணுகிறாய்” என்றான் துச்சாதனன். “கும்பக்களத்தில் நின்று நீ ஆடிச் சோர்ந்து வீழும் அப்பன்னிரு பகடைக்களத்தில் சிம்மக்களத்தில் நின்றிருக்க நான் வந்தாக வேண்டும்” என்றபடி அவள் அவன் அருகே வந்தாள். சினந்து உரக்க “பித்தெழுந்துவிட்டதா உனக்கு? நீ பேசுவது என்னவென்றறிவாயா?” என்றான் துச்சாதனன். உரக்க நகைத்து “அச்சத்தில் அறிவிழந்துவிட்டாய். அல்லது இங்கு மதுவருந்தி களிகொண்டிருக்கிறாய். கீழ்மகளே, இவ்வண்ணமே நீ வந்து என் தமையனின் பகடைக்களத்தில் நிற்கவேண்டும்” என்று கூவியபடி  பாய்ந்து குழலைப்பற்றினான்.

அவள் அன்னத்தின் இறகென முகில்கீற்றென நிலவொளியென எடையற்றிருந்தாள். தன் ஒற்றைக்கையால் நிலம் தொடாது தூக்கி இழுத்தபடி அவன் நடந்தான். ஏழு அடிவைத்து அம்மாளிகை விட்டு வெளிவந்ததுமே சித்தம் குழம்பி கொந்தளித்து கனவிலிருந்து விழித்துக்கொண்டான். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்ததுமே நிலையுறுதிகொண்டான். எளிய சாய்ப்புமாளிகையின் வாயிலுக்கு வெளியே சேடியரும் செவிலியரும் அஞ்சி உடல் நடுங்கி விதிர்த்து நோக்கி நின்றிருந்தனர். சிலர் நெஞ்சறைந்து கூவி அழுதனர். சிலர் கால்தளர்ந்து விழுந்தனர். காவலர் விறைத்த உடலோடும் இறுகப்பற்றிய படைக்கலங்களோடும் சிலைத்து நின்றிருந்தனர்.

அவள் மெல்லிய உதடசைவுகளுடன், பாதி சரிந்த விழிகளுடன், மெய்ப்பு கொண்டு மெல்ல அதிர்ந்த கரிய உடலுடன் அவன் கையில் இருந்தாள். அவள் குழல் பற்றி இழுத்து இடைநாழியினூடாக அவை நோக்கி நடந்தான். கால் தளர்ந்து அவன் கைவிசையால் விரல் இழுபட வந்தாள்.  உறுமியபடியும் உரக்க நகைத்தும் தரையில் காறித்துப்பியும் எடைஒலிக்கும் காலடிகளை எதிரொலி தொடர அவன் நடந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 17263 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>