Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16748 articles
Browse latest View live

சில சிறுகதைகள் -3

$
0
0

Madhavan_Elango

 

அன்பு ஜெயமோகன்,

 

உங்கள் கடிதம் கண்டேன். என்னுடைய தந்தையைப் பற்றி இதற்கு முந்தைய கடிதங்களில் ஒன்றில் கூறியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடன் சனிக்கிழமையன்று ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். அதிகமாக உங்களுக்கு நான் எழுதிய கடிதங்களை பற்றியே பேச்சு சுற்றி வந்தது. என்னைவிட அவர் உங்களை நன்றாக புரிந்துகொண்டுள்ளார் போலிருக்கிறது. “He is honest to his feelings. That’s how a writer should be. Isn’t it?” என்று கேட்டார். கிட்டத்தட்ட அதையேதான் நீங்களும் தெரிவித்திருந்தீர்கள்.

 

இன்னொரு விஷயம். கடந்த வாரமே நான் எழுதவேண்டும் என்று நினைத்தது. தங்கள் வாசகர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களில் இருந்து ஒன்றை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் தளத்தின் வாசகர்கள் எல்லோருமே தேர்ந்த வாசகர்களாக இருக்கிறார்கள். அனைவருமே நன்றாகவும் எழுதுகிறார்கள்.

 

தங்களுடைய வாசகி லோகமாதேவியை நிச்சயம் அறிவீர்கள். உங்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னைஅறிந்துகொண்டிருக்கிறார். பொள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் அவர், “ஜெயமோகன் இல்லாத நாட்கள் எனக்கில்லை” என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளுமளவிற்கு தங்களின் அதிதீவிர வாசகி. கடந்த வாரம் அவர் என்னுடைய “முடி” என்கிற சிறுகதையை வாசித்துவிட்டு அதைப் பற்றி விமர்சனம் எழுதி அனுப்பினார். அதைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் அந்தச் சிறுகதையையும் தங்கள் வாசிப்புக்கு இணைத்துள்ளேன்.

 

கதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதற்காக அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு சிரத்தையுடன் நீண்ட விமர்சனம் எழுதி அனுப்பியுள்ளது ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.

 

முடி – மாதவன் இளங்கோ சிறுகதை

 

download

அன்புள்ள ஜெமோஅவர்களுக்கு,

வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்னுடைய சமீப சிறுகதை முயற்சியை தங்கள் பார்வைக்கு வைக்க விழைகிறேன்.
Regards,
சிவா கிருஷ்ணமூர்த்தி

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நடுங்கும் நட்சத்திரங்கள்

$
0
0

 

ஆதிப்படிமங்கள் கவிதையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு கவிஞனும், ஒவ்வொரு கவிதையும் அவற்றை பொருள்மாற்றம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒருவரின் சூரியன் அல்ல பிறிதொருவரது. ஒருவரின் கடல் அல்ல பிறிதொருவர் காண்பது. ஆயினும் அனைத்துக் கவிதைகளுக்கும் பொருள் அளித்தபடி வெளியே கடல் அலையடித்துக்கொண்டிருக்கிறது

 

Sugumaran-Photo

கடலினும் பெரிது

சுகுமாரன்

 

விரும்பியதை அடைய
ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள்

காலடி மணலில் பிசுபிசுத்த
முதல் கடலைத் தாண்டினேன்
பாதத்தில் புரண்டு கொண்டிருந்தது
இரண்டாம் கடல்
கணுக்காலைக் கரண்டிய
மூன்றாம் கடலை உதறித் தள்ளியும்
முழங்காலில் மண்டியிட்டது
நான்காம் கடல்
இடுப்பை வருடிய ஐந்தாம் கடலைப்
புறக்கணித்து நடந்தேன்
கழுத்தை நெரிக்க அலைந்தது
ஆறாம் கடல்
தலையை ஆழ மூழ்கடித்து
உட்புகுந்து ஆர்ப்பரித்த
ஏழாம் கடலைக்
கொப்பளித்துத் துப்பியதும்
‘வெற்றி உனதே, இனி
விரும்பியதை அடையலாம்’ என்றார்கள்.

உப்பை ருசித்தபடி கேட்டேன்
‘ஏழினும் பெரிய கடல் இல்லையா?’

 

என்னும் கவிதையை வாசித்ததும் நினைவுகள் வாசித்த அனைத்து கவிதைகளையும் தொட்டுக்கொண்டன. ‘ஏழாம் கடலினக்கரே’ என்னும் மலையாளச் செம்படவப்பாடல்.

 

சுகுமாரனின் கடல் கடந்துசெல்வதற்குரியது.  பிறருக்கு அது அரியது, ஆனால் கவிஞனால் கடக்கத்தக்கது. அலையலையாக கரையில் அறைந்து அறைகூவிக்கொண்டிருப்பது அது.

 


download (1)

 கொண்டுவந்த கடல்

யுவன் சந்திரசேகர்

 

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.

 

யுவனின் கடல் நேர்மாறாக அள்ளி கொண்டுவந்து உடைமையாக்கப்படவேண்டியது. சிப்பி போல சோழி போல கையில் அகப்படுவது. அகப்படாத ஒன்றாக அப்பால் விரிந்திருப்பது.

 

பிறிதொரு கடலை தற்செயலாக வாசித்தபோது கண்டடைந்தேன். இந்தக்கடல் அச்சுறுத்துகிறது. அள்ளமுடியாததாக, அறியமுடியாததாக, விண்மீன்களை நடுங்கச்செய்வதாக விரிகிறது

photo (1)

கடலைக் களவாடுபவள்

 

சுஜாதா செல்வராஜ்

 

கடலாடி மகிழும் மகள்

நம்ப மறுக்கிறாள்

கடலை

உடன் எடுத்துச்செல்லுதல்

இயலாதென்பதை

தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள்

குடிபுக முடியாதென்பதையும்

ஆமை ஓட்டிற்குள் மழைக்கு

ஒதுங்கமுடியாதென்பதயும்

 

 

பதறப் பதற

கிளிஞ்சல்களைப்

பொறுக்கத் தொடங்குபவள்

அரற்றிக்கொண்டு வருகிறாள்

வீடுவரை

உணவை மறுதலித்து

விழிகளை நிறைத்தபடி

உறங்கிப்போகுமவள்

விரலிடுக்கில் உறுத்தும்

மணலும்

உள்ளங்கைக்குள் புதையும்

கிளிஞ்சல்களும்

கடலுக்கு

வலைவீசிக்கொண்டிருக்கும்

நடுநிசிப் பொழுதில்

நடுங்கும் நட்சத்திரங்கள்

இமை தாழ்த்தி

உறைகின்றன

 

பெண்ணின் பார்வையில் விரிவைப்பார்த்த மறுகணமே எல்லைகளை உணர்ந்து பின்வாங்கி சுருங்குவதாக கடல்காணும் அனுபவம் அமைகிறதோ என்று தோன்றியது. அன்னையின் பார்வையில் மகளுக்குச் சொல்லப்படுகிறது இக்கவிதை.

 

தமிழ்க்கவிதை மரபில் செவிலிக்கூற்று எனப்படும் கவிதைகள் ஒரு நிரை. நற்றாய் என்று செவிலி சொல்லப்படுகிறாள். சங்கப்பாடல்களில் இருந்து ஆழ்வார் பாடல்களுக்குக் குடியேறிய ஓர் அழகியல் அது. உலகை அறிந்த அன்னை மகளுக்குச் சொல்லும் வரிகள் அவை. இயல்பாக அம்மரபில் சென்றமைகின்றது இக்கவிதை

 

சொல்லப்படமுடியாதவற்றை எவ்வண்ணமோ சொல்லிவிடும்போதே அது கவிதை. நடுநிசிப் பொழுதில் நடுங்கும் நட்சத்திரங்கள் என்னும் வரி நெடுநேரம் உடனிருந்தது என்னுள். இயல்பாக எளிய விஷயமொன்றைச் சொல்லிவிட்டதனாலேயே நிறைவளித்தது இது

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22

$
0
0

[ 31 ]

செல்லுந்தோறும் சிறகுகொண்டது தண்டகாரண்யப் பெருங்காடு. அதன் வடபுலச்சரிவில் இலை வெளுத்து, கிளைதேம்பி தனித்து சோர்ந்து நின்றிருந்த மரங்கள் மறையலாயின. வேர்கள் மண்கவ்வி நரம்புகள் என கொடிகள் பின்னிப்புடைத்த அடிமரங்கள் எழுந்து கிளை பருத்து விரிந்து தழைத்து வான்மூடி பறவைக்குரல் சூடி நின்றிருந்த பெருமரங்களின் காடு வரலாயிற்று. கீழிருந்து பாறையில் படரும்  செந்நிறக் கொடி என மலைச்சரிவில் பற்றி வளைந்து மேலேறிய பாதை இலைத்தழைப்புக்குள் புகுந்து குகை வழியென ஆயிற்று.

KIRATHAM_EPI_22

அதன் மறுமுனையில் ஒளி தெரியாமல் ஆனபோது பைலனின் கையை பற்றிக்கொண்டு ஜைமினி “அடர்காடு. இங்கு கொடு விலங்குகள் உண்டா?” என்றான்.  “விலங்குகள் எங்குமுள்ளன” என்றான் பைலன். “விலங்கில்லாத காடு இமயமலையின் உச்சியில் கூட இல்லை என்கிறார்கள். நான் இருமுறை யானைகளை எதிர்கொண்டிருக்கிறேன்” என்று ஜைமினி சொன்னான்.  “கண்களை மூடிநின்று வேதச்சொல் எடுத்து ஓதினேன். அவை விலகிச் சென்றுவிட்டன.”

முன்னால் சென்றுகொண்டிருந்த சண்டன் திரும்பி  “அவை ஊனுண்ணிகள் அல்ல. பசித்த புலி ஒருவேளை எவற்றையும் சுவைத்து உண்ணக்கூடும்.” என்றான். ஜைமினியின் முகம் சுருங்கியது.  தன் கைகளால் காற்றில் தாளமிட்டபடி உடலில் மெல்லிய நடனத்துடன் முன்னால் சென்ற சூதனை நோக்கி திரும்பி பைலனிடம் மெல்லிய குரலில் “நான் இவனை வெறுக்கிறேன். இவ்வுலகில் இவனுக்கு அனைத்துமே நகைப்புக்குரியதாகத் தெரிகிறது” என்றான்.

“ஆம்” என்று பைலன் சொன்னான்.  “ஆம், அது ஒரு தத்துவம். தொல்காலம் முதலே அதையும் நம் எண்ணமுறைமையில் ஒன்றெனப் பயின்று வருகிறார்கள்.” ஜைமினி  “அந்த இளிவரலுடன் இவன் எங்கு அமரமுடியும்? எதை ஏற்க முடியும்? எதை சூடி நின்றிருக்க முடியும்?” என்றான்.  புன்னகையுடன் “அவர் அமர்ந்திருப்பவர் அல்ல. சென்று கொண்டிருப்பவர்” என்றான் பைலன்.

ஜைமினி எரிச்சலுடன் “இச்சொற்கள் எனக்கு சலிப்பூட்டுகின்றன. மானுடர் அனைவரும் தங்கள் பிறவி ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். விண்புகும் வழியொன்றே அவர்கள் தேடுவது” என்றான்.  “அவர் விழையும் விண் சொல்லுக்குள் உள்ளது. அதற்குள் செல்லும் ஏணி ஒன்றும் அவரிடம் உள்ளது. யாரறிவார்? நானும் நீங்களும் அழிந்த பின்னரும் மானுடத்தின் சொல்வெளியில் அவர் வாழக்கூடும்.”

“இவ்வெளிய சூதனின் பெயர் வரலாற்றில் வாழுமா என்ன?” என்றான் ஜைமினி. “விண்மீன்கள் செறிந்த வான்பரப்புபோல மொழி நம்மை சூழ்ந்திருக்கிறது. அறிந்த விண்மீன்கள் சில, அறியாதவை கோடி.  நாம் அவற்றைப் பார்க்காதபோது அவை ஒவ்வொன்றும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றன” என்று பைலன் சொன்னான். “அவர் இருப்பார். அவர்கள் என்றும் வாழும் ஒரு பெருக்கு.”

ஜைமினி “நீர் சொல்வதை என்னால் உணரமுடியவில்லை. உண்மையில் நீங்கள் இருவரும் பேசிக்கொள்வதில் பெரும்பகுதி எனக்கு புரியவில்லை. பொருளுறுத்துவதைவிட களியாடுவதற்கே சொற்களை கையாள்கிறீர்கள். உங்கள் நடுவே பகடைகளென உருண்டுகொண்டிருக்கும் சொற்கள் வேதத்திலிருந்து எழுந்து வந்தவை என்று உணர உணர என் உள்ளம் சினம் கொள்கிறது” என்றான். சொன்னபோது எழுந்த அந்த உணர்வு வளர்ந்து “உங்கள் இருவரையும் நோக்கி கூச்சலிட்டு வசைபாடவேண்டும் என்று தோன்றுகிறது” என சேர்த்துக்கொண்டான்.

“அவ்வசைபாடும் சொல்லும் வேதத்திலிருந்து எழுந்ததல்லவா?” என்று முன்னால் நின்று இடையில் கைவைத்து சூதன் கேட்டான். ஜைமினி விழிகளை திருப்பிக்கொண்டு நிற்க பைலன் நகைத்தான். “வசைவேதம் என்று ஒன்றை நாம் உருவாக்குவோம், அந்தணரே. அது வேதநிழலெனத் தொடரட்டும்” என்றபின் சண்டன் கைகளை வீசி வேதத்தின் அனுஷ்டுப்பு சந்தத்தில் இழிவசைகளால் ஆன பாடலொன்றைப் பாடியபடி முன்னால் சென்றான். பைலன் நகைக்க முற்பட்டு ஜைமினியின் விழிகளை கண்டபின் அடக்கிக்கொண்டான்.

“நாம் பேசுவது இவனுக்கு கேட்டுக்கொண்டிருக்கிறதா?” என்று ஜைமினி பைலனின் காதில் கேட்டான். “அவர் கேட்காத ஒன்றுமில்லை. வேண்டாதபோது காதுகளை மூடிக் கொள்ளவும் கற்றிருக்கிறார்” என்று பைலன் சிரித்தபடி சொன்னான். “எப்படி நாம் பேசிக்கொள்வது?” என்றான் ஜைமினி. “நீர் அவர் நம்முடன் இருக்கிறார் என்று எண்ண வேண்டியதில்லை. நினைப்பெழுந்ததை பேசலாம். அவர் எச்சொல்லாலும் துயரோ சினமோ உறப்போவதில்லை. சொல் அனைத்தும் மகிழ்வூட்டுவதே என்று எண்ணும் சூதர் அவர்” என்றான் பைலன்.

அவர்கள் பசுமை இருள் சற்று விலகி வெற்றுப்பாறை ஒன்று தெரியும் இடத்தை கண்டனர். “சொல்லின் இடைவெளி. காவியத்தின் தெய்வங்கள் இளைப்பாறுவதற்கான இடம்” என்றபடி சண்டன் அதை  நோக்கி சென்றான். பாறை இடுக்கில் எழுந்த அரச மரம் ஒன்று பசுமைக்குடை என நின்றது. அதன் கீழ் இருந்த பாறையில் சென்று அமர்ந்தபடி “உணவருந்துவதற்கு உகந்தது. உணவு இருந்தால் மேலும் இனிமைகொள்ளக்கூடும்” என்றான்.

பைலனும் ஜைமினியும் கால் சோர்ந்து வந்து அவனுக்கருகே அமர்ந்தனர். ஜைமினி சூதன் அமர்ந்த பாறையில் தொற்றி ஏறி சூதனுக்கு மேல் தன் கால் அமையும்படி அமர்ந்துகொண்டான். சூதனின் காலடியில்  அமர்ந்த பைலன் விழிதூக்கி ஜைமினியை நோக்கியபின் சூதனின் கண்களை சந்தித்து புன்னகைத்தான்.

“அந்தணரே, தங்களிடம் உணவு இருக்கிறதா?” என்றான் சண்டன். எரிச்சலுடன் “அந்தணரை உத்தமரே என்றுதான் கீழ்க்குலத்தோர் அழைக்கவேண்டும் என்கிறது கர்த்தம ஸ்மிருதி” என்றான் ஜைமினி. “உணவுக்காக எவரையும் எப்படியும் அழைக்கலாம் என்பது சூத ஸ்மிருதி. உணவிருக்கிறதா, உத்தமரே?” ஜைமினி சினத்துடன் தன்னிடமிருந்த உலருணவுப் பொதியை எடுத்து முன்னால் இட்டான். சண்டன் “அதை எடுத்து சூதன் உண்ணப்போவதால் அதில் தூய்மையற்றிருக்கும் பகுதியை எனக்கு அளிக்கலாமே” என்று பைலனிடம் சொன்னான்.

பைலன் சிரித்துக்கொண்டே அந்தப் பொதியை எடுத்து பகிர்ந்து பாதியை சண்டனுக்கு அளித்தான். ஜைமினி இன்னொரு சிறிய பொதியை எடுத்து பிரித்து தான் உண்ணத்தொடங்கினான். “உத்தமரை இப்போது ஒரு புலி வந்து அடித்து உண்ணும் என்றால் அது நோன்புணவை உண்ணுவதன் நலன்களைப் பெறும் அல்லவா?” என்று சூதன் கேட்டான். ஜைமினி உண்பதை நிறுத்திவிட்டு முறைத்தான். பைலன் சிரித்துக்கொண்டு “அந்தப் புலியை  அது இறந்தபின் உண்ணும் புழுக்களும் நோன்புணவை அருந்தும் பயன்களைப் பெறுகின்றன” என்றான்.

ஜைமினி எழுந்து அப்பால் சென்றான். சூதன் அதை அறியாதவன்போல “இப்புவியிலுள்ள அனைத்தையும் உண்கின்றன புழுக்கள். காலத்தின் வடிவம் அவை” என்றான். பைலன் “சமண அன்னநிலையில் நீங்கள் பாடிய அந்தக் காவியம் முடிவுறவில்லை, சூதரே” என்றான். “ஆம், அது மேலும் பல பகுதிகள் கொண்டது” என்றான் சண்டன். “நான்கு திசைகளையும் வென்றெழுந்த பெருவில்லவனின் கதை அது. நான்காவது திசை வென்றதை இரண்டாம் பகுதியாகவே ஆசிரியர் எழுதியிருக்கிறார்.”

ஆர்வத்துடன் அங்கிருந்தே “இரண்டாவது திசை எது?” என்று ஜைமினி கேட்டான். சூதன் திரும்பி நோக்க மேலும் அணுகியபடி “கிழக்கா மேற்கா?” என்றான். “வடக்கு” என்று சண்டன் சொன்னான். “அதெப்படி தெற்கிலிருந்து கிழக்கு அல்லது மேற்குக்குத்தானே செல்ல முடியும்?” என்று ஜைமினி அவனருகே வந்து நின்றபடி கேட்டான். “அது தொட்டுத் தொடரும் பாதை. இது ஊசலின் மறு எல்லை. இப்பயணம் இவ்வாறே அமைய முடியும்” என்றான் சூதன்.

“வடக்கின் அரசன் குபேரன் அல்லவா?” என்று ஜைமினி கேட்டான். “ஆம், குபேரனிடமிருந்து அர்ஜுனன் பெற்றுக்கொண்ட மெய்மையை சொல்லும் பகுதியைச் சொல்கிறது  சம்விரதர் சொல்கோத்து அமைத்த  அர்ஜுனேந்திரம் என்னும் காவியத்தின் மறுபகுதி” என்றான் சண்டன். ஜைமினி சிரித்தபடி “அர்ஜுனன் பெருஞ்செல்வன் ஆகிவிட்டானா?” என்றான். “பெறுபவன் எப்படி செல்வனாக ஆகமுடியும்?” என்றான் சண்டன்.

[ 32 ]

யமபுரியிலிருந்து மீட்டெடுத்த இளமைந்தனின் உடலுடன் அர்ஜுனன் யமுனைக்கரையில் எழுந்தான். விழிதிறந்த அம்மைந்தன் பசித்து கைகால் உதறி அழத்தொடங்கினான். தன் சுட்டு விரலை அவன் இதழ்களில் கொடுத்து உளம் கனிந்து “நிறைக!” என்று அர்ஜுனன் சொன்னபோது அதில் பாலூறியது. மைந்தன் உடல் எம்பி எழுந்து துள்ளும் சிறு கைகளை விரல் சுருட்டி ஆட்டி, உள்ளங்கால்கள் உட்சுருங்கி விரிய இதழோசையுடன் அவ்வமுதை சப்பி உண்டான். அவன் இதழ்க்கோடியில் பால்நுரை மெல்ல எழுந்து வந்து கன்னவளைவில் வழிந்து மென்கழுத்தை நனைப்பதை அர்ஜுனன் குனிந்து பார்த்தான்.

ஜாதவேதனின் இல்லத்திற்கு  அவன் சென்று சேர்ந்தபோது  அர்ஜுனனின் உடலெங்கும் அமுது நிறைந்திருந்தது. விரல் நுனிகள் அனைத்தும் பால் நிறைந்த முலைக்காம்புகள் என தரிப்பு கொண்டன. தித்திப்பில் திளைக்கும் நாவென ஆகிவிட்டிருந்தது அவன் உடல். எண்ணங்கள் அனைத்தும் தேனில் புழுவென நெளிந்து வழுக்கிக்கொண்டிருந்தன. மைந்தன் அவனுடன் இணைந்து அன்னையென அவனை எண்ணத்தொடங்கிவிட்டிருந்தான்.

இல்லத்து முற்றத்தில் மைந்தனுடன் அவன் கால் வைத்ததுமே திண்ணையில் அமர்ந்திருந்த ஜாதவேதன் எழுந்து இரு கைகளையும் விரித்து கூவி அழுதபடி அவனை நோக்கி ஓடி வந்தான். அவ்விரைவிலேயே கால்தடுக்கி முகம் அறைபட மண்ணில் விழுந்து இரு கைகளையும் நீட்டி அர்ஜுனனின் கால்களை பற்றிக்கொண்டான். “எந்தையே! என் குலதெய்வமே!” என்று கதறி அழுதான். சொல் விக்கி அவன் உடல் வலிப்புகொண்டது. குருதியும் கண்ணீரும் புழுதியுடன் கலந்து அவன் முகத்தில் வழிந்தன.

அவனை தோள் தழுவி எழுப்பி அமரச்செய்து அவன் மடியில் மைந்தனை படுக்கவைத்து “இதோ உன் மூதாதையர் மீண்டு வந்திருக்கின்றனர்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம். நான் இறந்து மீண்டு வந்திருக்கிறேன். இனி எனக்கு இறப்பில்லை. அமுது நிறைந்துள்ளது என் மடியில்! ஆராவமுது!” என்று கூவி  அள்ளி மைந்தனை உடல் சேர்த்து வெறி கொண்டு முத்தமிட்டான். முத்தமிட்டு முத்தமிட்டு ஆற்றாமல் மூச்சிரைத்து நெஞ்சு விம்மினான். அவனாக மாறி அம்முத்தங்களை தானுமிட்டு நின்றான் அர்ஜுனன்.

“இனி இவன் பெயர் அமிர்தன். இறப்பற்றவன். அமிர்தன்! ஆம் அமிர்தன்!” என்று சொல்லி அவனை தூக்கி வானோக்கி நீட்டி “எந்தையரே, இனி மகிழுங்கள். இனி நிறைவடையுங்கள். என் குருதி இனி வாழும்” என்று கூவினான். அப்படியே மயங்கி பின்னால் சரிந்தான். அவன் கைகால்கள் மீண்டும் வலிப்பு கொண்டன. அவன் மடியில் குழந்தை அள்ளிப்பற்றியபடி அமர்ந்திருந்தது. தந்தையின் மணத்தை அது அறிந்துவிட்டிருந்தது. அவன் ஆடையை கைபற்றிச்சுருட்டி வாயில் வைத்து கவ்வியபடி கால்சுழித்தது.

ஓசை கேட்டு இல்லத்தின் இருளுக்குள்ளிருந்து பரல் மீனென வெளிறிய அவன் மனைவி தோன்றினாள். நெடுநாள் ஒளிகாணாதவள்போல அவள் கண்கள் சுருங்கின. வெறித்த நோக்குடன் அங்கு என்ன நிகழ்கிறது என்பதை பார்த்திருந்தாள். அக்காட்சி அவள் உள்ளத்தைச் சென்றடைய நெடுநேரமாயிற்று. எண்ணியிரா கணம் ஒன்றில் எண்ணத்தில் அனல் பற்றிக்கொண்டு விலங்குபோல அலறியபடி பாய்ந்து வந்து ஜாதவேதனின் மடியில் நெளிந்த மைந்தனை அள்ளிச்சுழற்றி மார்போடணைத்தாள். பெருங்கூச்சலுடன் பாய்ந்து இல்லத்திற்குள் ஓடினாள்.

அர்ஜுனன் அந்தணனை மெல்ல தூக்கி அழைத்துச்சென்று இல்லத்துக்கு முன் கால்கழுவ வைத்திருந்த கலத்துநீரை அள்ளி அவன் முகத்தில் அறைந்து நினைவு மீளச்செய்தான். ஜாதவேதன் “என் மைந்தன் என் மைந்தன்” என்று  கைகள் பதைக்க நீட்டியபடி  கூவினான். மைந்தனை மீண்டும் பறிகொடுத்துவிட்டோமா என அஞ்சி எழுந்து “என் மைந்தன் எங்கே? என் மைந்தனை எவர் கொண்டுசென்றார்கள்?” என்றான். அனைத்தும் உளமயக்கோ என்று தோன்ற “பாண்டவரே! பாண்டவரே” என்று கூவினான்.

“நலமாயிருக்கிறான் குழந்தை. உங்கள் மனைவியிடம் இருக்கிறான்” என்று அர்ஜுனன்  கூறினான். ஜாதவேதன் பெருமூச்சுகளும் விம்மல்களுமாக மெல்ல அடங்கினான். கண்களை துடைத்துக்கொண்டு “வருக இளவரசே, என் இல்லத்தில் ஒருவாய் நீர் உண்டு என் குலத்தை வாழ்த்துக!” என்று கண்ணீருடன் அர்ஜுனன் கைகளை பற்றினான்.

அச்சிறு புல்வீட்டிற்குள் நுழைந்து ஜாதவேதன் இட்ட தோலிருக்கையில் அர்ஜுனன் அமர்ந்தான். ஜாதவேதன் அடுமனைக்குள் சென்று என்ன இருக்கிறது என்று அறியாமல் அனைத்துக் கலங்களையும் துழாவி ஒரு மூங்கில் குவளையில் ஆறிய பாலுடன் வந்து “இது ஒன்றே எனக்கு அளிப்பதற்கென்று இருக்கிறது. ஏழை நான். உணவென்றாகி வந்த வேதத்தையும்  இத்தனைநாள் மறந்துவிட்டிருந்தேன். சற்று பொறுங்கள், அரசே! நான் உணவாக்குவேன்” என்றான்.

“ஆகட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். மீண்டும் ஓர் அலையென நினைப்பெழ “எங்கே என் மைந்தன்?” என்று கூவியபடி ஜாதவேதன் உள்ளே சென்றான். இல்லத்தின் சிற்றறைக்குள் மைந்தனுடன் புகுந்து கதவை உள்ளிருந்து மூடிவிட்டிருந்தாள். “பாரதி, என்ன செய்கிறாய்? கதவைத் திற” என்று அவன் கூவினான். கதவை ஓங்கித் தட்டியபடி “என்ன செய்கிறாய் என் மைந்தனை? பிச்சி, பேதை, திற கதவை!” என்று கூச்சலிட்டான்.

உள்ளிருந்து உறுமல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. அவன் செவிகூர்ந்துவிட்டு அஞ்சி அர்ஜுனனிடம் ஓடிவந்து  “பாண்டவரே, கதவை திறந்து கொடுங்கள். அவள் பிச்சி. என் குழந்தையை அவள் கொன்றுவிடுவாள்” என்றான். “எந்தப் பிச்சியும் தன் குழந்தையை கொல்வதில்லை” என்று அர்ஜுனன் சிரித்தான். அறைக்குள் இருந்து நெஞ்சில் அறைந்து அழும் பேரொலி கேட்டது. “அழுகிறாள். குழந்தை இறந்துவிட்டதென்று தோன்றுகிறது. அழுகிறாள்” என்று ஜாதவேதன் கண்ணீருடன் அர்ஜுனனின் கைகளைப்பற்றி இழுத்தபடி கூறினான்.

“நாம் அவ்வுணர்வை புரிந்துகொள்ள முடியாது, அந்தணரே. இளமைந்தர் நமக்குரியவர்கள் அல்லர். அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணையட்டும்” என்று அர்ஜுனன் அமர்ந்தபடியே சொன்னான். “அஞ்சுகிறேன், பாண்டவரே. அவளை நான் அறிவேன். ஊனுண்ணி விலங்கென என்னை உறிஞ்சி உண்ட பிடாரி அவள்” என்று கூறியபடி மூடிய கதவின் வாயிலின் முன்னாலேயே ஜாதவேதன் அமர்ந்து அழுதான்.

அன்று முழுக்க அன்னையும் மைந்தனும் அச்சிற்றறையின் இருளுக்குள் இருந்தனர். வாயிலுக்கு வெளியே தந்தை தலையில் அறைந்து அழுதபடியும் தவித்தபடி எழுந்து அமர்ந்தும் சோர்ந்து மீண்டும் விழுந்தும் காத்திருந்தான். மறுநாள் புலரியில் அறைக்கதவு திறந்து அன்னை தன் மைந்தனுடன் வெளிவந்தாள். சோர்ந்து விழிமயங்கி இருந்த ஜாதவேதன் அவ்வோசை கேட்டு துடித்து எழுந்து நோக்கியபோது அவன் முன்பென்றோ கண்டு மறந்திருந்த அவள் கன்னிமுகத்தை கண்டான். சொல் மறந்து இரு கைகளையும் கூப்பினான்.

அவள் இடையில் இருந்த மைந்தன் ஒரு முலை பற்றி அருந்த மறுமுலையில் இருந்து பால் ஊறி பீறிட்டு நிலத்தில் சொட்டிக்கொண்டிருந்தது. ஓசை நிறைந்த காலடிகளுடன் எவரையும் பார்க்காதவள்போல நடந்து அவள் வெளியே சென்றாள். ஜாதவேதன் எழுந்து அர்ஜுனனிடம் ஓடிவந்து “மீண்டும் அவள் முலை ஊறியிருக்கிறது. இது எவ்வண்ணம் என்று தெரிந்திலேன்” என்றான். “மண் செழிக்க மழையை அனுப்பும் பெருநெறியின் ஆணை அது” என்று அர்ஜுனன் சொன்னான். “தங்களை மறந்துவிட்டேன், பாண்டவரே. உணவருந்துங்கள்” என்று அடுமனை நோக்கி ஓடினான் ஜாதவேதன்.

அவ்வில்லத்தில் அர்ஜுனன் ஆறு நாட்கள் தங்கியிருந்தான். ஒவ்வொரு நாளும் பகல் முழுக்க அக்குழவியை மாறி மாறி முலையூட்டியபடி அன்னை இல்லத்தைச் சுற்றிய குறுங்காட்டில் அலைந்தாள். மானுட விழிகள் எதையும் அவள் விழிகள் சந்திக்கவில்லை. இரவில் மீண்டு வந்து அடுமனைக்குள் அமர்ந்து மாதப்பசி கொண்ட ஓநாய் என அனைத்து உணவையும் அள்ளி விழுங்கினாள். மைந்தனை தன் முலைகளுக்கு நடுவே அணைத்தபடி விழுந்து துயின்றாள். அவன் ஒவ்வொருமுறை அசையும்போதும் விழித்தெழுந்து உறுமியும் முத்தமிட்டும் தழுவியும் ஆற்றுப்படுத்தினாள்.

ஜாதவேதன் அர்ஜுனனுக்கும் அவளுக்கும் உணவு சமைத்தான். பித்து எழுந்தவன்போல அவன் பேசிக்கொண்டே இருந்தான். பிறந்து மறைந்த அத்தனை பிள்ளைகளையும் அவன் ஒவ்வொரு நாளென கணமென காட்சியென நினைவில் மீட்டுக்கொண்டுவந்தான். அத்தனைபேரும் ஒரு மைந்தன் என வந்து தன் முன் நின்றிருப்பதுபோல. அவன் மனைவியோ அனைத்து மைந்தர்களையும் மறந்து முதல் குழவியை ஈன்றவள் போலிருந்தாள்.

ஏழாவது நாள் அவள் மெல்ல மீண்டு வந்தாள். தோட்டத்திலிருந்து அவள் வருகையில் வில்லுடன் எதிரே சென்ற அர்ஜுனனை நோக்கி கைகளைக் கூப்பி விழிதாழ்த்தி நின்றாள். அர்ஜுனன் அருகே நின்று புன்னகை செய்து “உன் மைந்தன் மீண்டுவிட்டான், அன்னையே” என்றான். “ஆம், இனி இப்புவியில் நானடைவதற்கொன்றுமில்லை” என்று அவள் சொன்னாள். “நான் இன்னும் ஏழு பிறவி எடுத்து தங்கள் தேருக்குப் புரவியாக வேண்டும். அது ஒன்றே என் வேண்டுதல்” என்றபின்  எழுந்த அழுகையை அடக்கியபடி மைந்தனை அணைத்து இல்லத்திற்குள் புகுந்தாள்.

மறுநாள் ஜாதவேதன் அர்ஜுனனிடம்  வந்து “அவள் மீண்டுவிட்டாள். இன்று என்னிடம் சொல்லாடினாள். இளவரசே, அவளிடம் இயல்பாக சொல்லுரைத்து எத்தனையோ நாளாகிறது. இத்தனை காலம் அவளில் இருந்த கொலைத்தெய்வத்தின் முகம் விலகி சில கணங்களிலேயே அவள் இயல்முகம் மீண்டு வந்ததை எண்ணி வியக்கிறேன். அவளுக்குள் இருந்திருக்கிறதா அது?” என்றான். உவகையுடன் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் திரிந்தான். “அதைவிட அந்த வெறிமுகத்தை எப்படி இத்தனை விரைவில் நான் முற்றிலும் மறந்தேன் என்று எண்ணுகையில் விந்தையால் என் உள்ளம் திகைக்கிறது” என்றான்.

“மானுடர் தங்கள் விழைவால் உருவாக்கிக்கொண்ட உலகம் இது” என்று அர்ஜுனன் புன்னகை செய்தான். பின்னர் குரல் தழைந்து முகம் திருப்பி “இத்தனை நாள் நான் இங்கிருந்ததே மீண்டும் அம்மைந்தன் என் கைக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான். அவனைத் தழுவி முத்தமிட்டு வாழ்த்தி மீள்கிறேன். என் உடல்நிறைந்திருக்கும் அமுதை அவனுக்களிக்காமல் இங்கிருந்து நான் செல்ல முடியாது” என்றான்.

“அவ்வண்ணமே” என்று சொல்லி உள்ளே சென்று மனைவியுடன் மைந்தனை அழைத்து வந்தான் ஜாதவேதன். அவள் அருகே வந்து மண்டியிட்டு அர்ஜுனனின் மடியில் தன் மைந்தனை வைத்தாள். ஓயாது முலையுண்டதனால் உடல் ஒளிபெற்று விழிகள் கூர்கொண்டிருந்த மைந்தன் “ந்தை” என்ற ஒலியெழுப்பி காலுதைத்து மெல்ல புரண்டு அர்ஜுனனின் மார்பிலிருந்த ஆடையை பற்றிக்கொண்டான்.

குனிந்து அவன் நெற்றியில் கன்னங்களில் இளந்தோள்களில் முத்தமிட்ட அர்ஜுனன் அவனைத் தூக்கி அண்ணாந்து மென்வயிற்றில் தன் மூக்கையும் வாயையும் புதைத்து அசைத்தான். கைகால்கள் நெளிய துள்ளிக் குதித்து மைந்தன் நகைத்தான். இரு கைகளையும் கூப்பி அன்னை அமர்ந்திருந்தாள்.

மைந்தனை அன்னையிடம் அளித்து அர்ஜுனன் எழுந்தான். “இது முடியாத சுழல் என்றுணர்ந்தேன், அன்னையே. என்னுள் நிறைந்த அமுதனைத்தையும் இவனுக்கு அளித்து இங்கிருந்து கிளம்பலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஒரு துளி அளிக்க ஓராயிரம் துளி பெருகும் ஊற்று அது என்று அறிந்தேன். இவ்வொரு மைந்தனை அமுதூட்டியே இப்பிறப்பை இங்கு கழித்துவிடுவேன். என் கடன்கள் என்னை அழைக்கின்றன. செல்லும் தொலைவு காத்திருக்கின்றது. வழி அளிக்கவேண்டும்” என்றான்.

ஜாதவேதன் “இன்னும் ஒரு வாரம் இங்கிருக்க வேண்டும், பாண்டவரே. இக்குடில் தாங்கள் தங்குமிடமல்ல என்றறிவேன். என்றாலும் என் மைந்தனுக்கு இடையணி அணிவித்து பெயர் சூட்டும் விழா ஒன்று ஒருக்கியிருக்கிறேன். வரும் முழுநிலவுநாளில் அவனுக்கு மெய்ஆசிரியனாக தாங்கள் அமர்ந்து அச்சடங்கை செய்ய வேண்டும். அருள வேண்டும்” என்றான்.

அச்சொல்லுக்கு முன்னரே தன்னால் உடனே கிளம்பமுடியாதென்று அர்ஜுனன் அறிந்திருந்தான். அது ஒரு நிமித்தம் என அமைய “ஆம், அவ்வாறே” என்றுரைத்தான்.

தொடர்புடைய பதிவுகள்

நீர் நிலம் நெருப்பு –ஆவணப்படம் பதிவுகள்

$
0
0

நீர் நிலம் நெருப்பு ஆவணப்படம் பற்றிய இரு வலைப்பதிவுகள்

 

ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம்

 

ஜெயமோகன் பற்றிய ஆவணப்படம் 

 

https://www.youtube.com/watch?v=l_TLOCliA00&feature=youtu.be

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் –விமர்சனங்கள்

$
0
0

images

 

 

மடத்து வீடு சிறுகதை பற்றிய குறிப்புகள் -

நமது குரலை நாமே ரெக்கோர்டிங்கில் கேட்பது (அல்லது காணொளியில் நம்மை நாமே பார்ப்பது) எப்பவும் சற்று நிலைகுலையச்செய்யும் அனுபவம். “இது நான் தான்” என்று மனம் ஒப்புக் கொள்ள மறுக்கும். ஆனால் அது முக்கியமான நிகழ்வு. It is a reality check about ourselves.

”மடத்து வீடு” கதையில் முதியவரின் நடத்தையைப் பற்றி கேட்கையில் இளைஞர்களுக்கு ஏற்படுவது கிட்டத்தட்ட இதே அனுபவம் தான். முக்கியமாக, பெண்களை “objectify” செய்யும் ராஜேஷ் மீது தான் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவனைப் பற்றிய மனக்காட்சியும் நிஜமும் பிளவு பட்டு கண்முன் நிற்கின்றன.

ஆனால் இந்த மையச்சரடு கதையில் ஒரு பின்குறிப்பு போலத்தான் தென்படுகிறது. கதையில் அழுத்தம் இல்லை. முடிச்சவிழ்ந்த மூட்டைப்போல சிதறிக் கிடக்கின்றது.

தேவைக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் கவனத்தைக் குலையச் செய்கின்றன. உதாரணத்திற்கு, இது narrative-ஆகவே எழுதக்கூடிய கதை. கதைக்கூறுபவரும் ஒரு கதாப்பாத்திரமாக வருவதைத் தவிர்த்திருக்கலாம். அவனுடைய கதாப்பாத்திரம் கதைக்கு எதையுமே அளிக்க வில்லை.

Macro வருணனையிலிர்ந்து ஆரம்பித்து, பின்னர் அந்த வீட்டைப் பற்றி, உறுப்பினர்களைப் பற்றி பேசிய பின்னர்தான் கதாப்பாத்திரங்கள் நமக்கு அறிமுகமாகின்றன. அதற்குப் பிறகு திரும்பி வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறோம். மாறாக, கீழே குறிப்பிட்டிருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கல்லூரி முடிந்து சாயங்காலம் பேருந்திலிருந்து இறங்கியபோது, பெட்டிகடையிலிருந்து அருண் பார்த்துவிட்டு கூப்பிட்டான். கூடவே ஒருவன், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் சட்டையில் நின்றான். மெலிதாக தாடிவிட்டிருந்தான். கையில் ஒரு இரும்பு காப்பு. விரலிடுக்கில் சிகரெட் புகைந்தது. அவனை காட்டி, இது என்னோட ஃபிரெண்ட். என்றான் அருண்.  மடத்து வீட்டுக்கு போறோம், வர்றியா? என்று கேட்டான். உடனே அந்த பெண்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வீட்டில் வீசிவிட்டு அவர்களோடு நடந்தேன்.”

அது வாசகர் மனதில் உடனே வீட்டைப் பற்றி, பெண்களைப் பற்றி கேள்விகளை எழுப்பும். அவர்கள் நடந்து செல்லச் செல்ல அந்த இடத்தை பற்றிய, வீட்டைப் பற்றிய வருணனைகளைக் சொல்வதற்கு வலிமையான கட்டத்தை உருவாக்கியிருக்கும். கதைக்கூறுபவரும் வாசிப்பவரும் சக பயணிகளாகச் செல்ல வழிவகுக்கும். இப்பொழுதிருக்கும் வடிவத்தில் தான் ஏற்கனவே கண்டு அறிந்ததை நமக்குத் தெரிவிப்பது போல இருக்கிறது. It makes the first person narrative redundant.

எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்.. மேலே பேச முடியாமல் விம்மினாள்.

வித்யா மூலம் கூறுவதைக்காட்டிலும் இதை ஒரு நிகழ்வாக எழுதியிருந்தால் கதையின் மையம் வலிமையாக முன்வந்திருக்கும்,

மேலும், அப்பாவின் இத்தகைய நடத்தையை அறிந்த பெண்களுக்கு ஆண்கள் மீது பொதுவான கசப்பு அல்லது கோவம் அல்லது அருவருப்பு எஞ்சுவதே பெரும்பாலும் நேரக்கூடியது. ராஜேஷின் அசட்டுத்தனத்துக்கு ஈடுகொடுக்கும் நடத்தை இயல்பாகத் தெரியவில்லை.

ப்ரியம்வதா

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

இத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பதிவிட்டிருந்த சிறுகதைகள் பற்றி என் விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். இது எனக்கும் எளியபயிற்சியாக இருக்மென்பதால் செய்து பார்த்தேன்.

நண்பர் சுனில் கிருஷ்ணனின் ‘ருசி’ சிறுகதை: http://padhaakai.com/2014/03/02/ruchi-2/

இதேத் தளத்தில் அவரின் ‘வாசுதேவன்’ என்கிற கதையைப் வாசித்ததாக ஞாபகம். நோய்மையை சுமந்து வாழ்வினை துக்கத்தோடுஅனுகும் ஒரு மனிதனைக் காணச்செல்கிறவர்களைப் பற்றியது என நினைக்கிறேன். (கதையின் தலைப்பு மட்டும் நன்றாக நினைவிருக்கிறது).அதொரு நல்ல சிறுகதையாக இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்புகூடியதாலே இக்கதையை வாசித்தேன்.

ருசி கதை அன்றாட மனித அகவுலகம் சார்ந்த எளிய கதைதான். கதையின் மையம் அவனுக்கு அக்கணத்தின் தோன்றியிருக்கும் பழையஏமாற்றமானää பலியுணர்வுள்ள ஒரு உணர்ச்சி. அது யார்மீது என்பதை யூகிக்க விடாமலோ அல்லது அதைப்பற்றிய அவனின் எண்ணங்களைகுவிக்காமலோ கதை வௌ;வேறு தகவல்களில் அலைகிறது. பின்னால் மூட்டைப்பூச்சிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அதையும்உடைத்துவிடுகிறார். ருசி என்ற தீவிர உணர்வை, எண்ணத்தை இன்னும் நுட்பமாக பதிவுவிட்டு கதையின் கருவுடன் இணைத்திருக்கலாம்.இரயிலின் அன்றாட வாழ்வு விவரிப்புகளைச் சொல்லிக்கொண்டும்போகும்போது ‘சரி  அடுத்து என்ன’ என்று நகரும்போது கதைமுடிந்துவிடுகிறது. வாசகனை கணிக்க விடக்கூடிய சாத்தியங்கள் சேர்க்கபடவில்லை.

மடத்துவீடு: மடத்துவீடு 

எளிய கருத்துச்சொல்லல் வகையைச் சார்ந்த கதைதான் இது. ஆண் துணையற்று தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் இளைஞர்கள்ஒருகணத்தில் சட்டென திருந்துவதுபோன்ற கதைகள் வழக்கொழிந்து நாளாகிவிட்டது. மனம் திருந்துவதெல்லாம் இப்போது யாரும் கிடையாது.சரிதான் என்று விலகிவிடுவதோடு சரி. கதை அங்கிருந்து எதிர்புறமாகவோ அல்லது அப்பெரியவரின் மனநிலையிலோ வேண்டுமானால்எழுதிப்பார்த்திருக்கலாம். நடையும், உரையாடல்களும் செறிவாகவும், நவீனத்துக்குறியதாக இருக்கின்றன. திரு. ராம் செந்தில் அவர்களுக்குகதைக்கான மொழி அழகாக வருகிறது புதிய கருவுடன் இணைந்தால் நல்ல சிறுகதையாக வருமென நினைக்கிறேன்.

விடிவு: http://solvanam.com/?p=46758

 

எதிர்பாராமல் நிகழும் சம்பவமும் அதனால் அழுத்தும் குற்றவுணர்வைப் பற்றிய கொண்ட தொடக்கநிலை கதைதான் இதுவும்.சிறுகதைக்கு முடிவு எவ்வளவு முக்கியமானதோ அதுபோல அதன் தொடக்கமும் வாசகனை சட்டென கதைக்குள் உள்ளிழுக்கச் செய்யவேண்டும். இக்கதை அதைச் செய்யவில்லை. உள்ளே செல்வதற்குள் நேரமும், அயற்சியும் அடைந்துவிட்டேன். அலுவலகம் சார்ந்த பரிவாரவிவரனைகள் இவ்வளவு தேவையில்லை. உதாரணமாக ‘சார்’ போன்றவை. இவை வாசகனை அலுப்பூட்டும் பகுதிகள். ரவிக்கும் ராஜாவுக்குமானநட்பு ஆழமாக சொல்லப்படாதபோது கதையில் அதன் இழப்பும், அவனின் குற்றவுணர்வும் சரியாக கடத்தப்படவில்லை. அழுத்தமாககூறியிருந்தால் கதையின் மையத்தை இன்னும் வலுவாக்கியிருக்கும். வெறும் சம்பவமாக நின்றுவிடுகிறது. கதையின் முடிவை வாசிக்கத்தொடங்கியதுமே யூகித்துவிடமுடிகிறது. காரணம் நட்பு, இழப்பு போன்ற ஒரே வகை மாதிரிகளால். ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளாகஇருந்தாலும் இன்றைய வாசகன் அதை வேறு வடிவமாகவோ, வெறொரு பார்வையிலோ சொல்வதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.திரு காளிபிரசாத்தின் முதல் கதை என்பதற்கான மொழி தடைகள் ஏதுமில்லாமல் வேகமாகவே கொண்டு செல்வதில் பாராட்டுகிறேன்.

புத்தரின் வீடு: http://tarunam.blogspot.com/2016/04/sirukathai.html

சமீபத்திய ஈழ சிறுகதைகளை வாசித்த வகையில் இச்சிறுகதை சற்று மாறுதலான ஒன்றை எடுத்திருக்கிறது.  ஆனால் எல்லா ஈழசிறுகதைகளை போன்றே வாசிக்கின்றபோது தோன்றும் முன்கணிப்பு இதிலும் சரியாக ஏற்பட்டுவிடுகிறது.  மாறுதலாக கதை சிங்களதரப்பிலிருந்து தொடங்குகிறது ஆனால் அதுவும் உரையாடல், மொழிநடையில் ஏனோ ஈழத்தமிழர்களையே நினைவுப்படுத்துகிறது. புத்தகொள்கையோடு வாழ்ந்திருக்கும் ஒரு எளிய மனிதனின் அறம் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும்போதும், அவனின் அடுத்த தலைமுறைக்குமேசென்று சேர்வதில்லை என்கிற மையத்தை சுற்றி சுழல்கிறது. ஆனால் போரின்போது ஏற்படும் குரூரங்களும், வன்மங்களும் மனிதகுணங்களுக்கு இயல்பானதே. சிங்கள இராவணுத்தின் போக்கு அப்படித்தான் இருக்குமென அவருக்கு அப்போதுதான் தெரிகிறதா? மேலும்போர்ச்சூழலைப்பற்றிய அழுத்தமான ஏதேனும் சில வரிகள் இல்லை. போர் முடிந்து வரும் மகன் திருந்துகின்ற இடத்தை யூகித்த பின்பும் கதைநீண்டுகொண்டே செல்கிறது.

கதையின் தொடக்கமும் கருவும் மிகச்சிறந்த சிறுகதைக்கான கூறுகளை கொண்டிருந்தும் முழுச்சித்தரமாக மாறவில்லை. சமீபத்திய ஈழசிறுகதைகளிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறது.

ஜெ இவைகள் என் வாசிப்பின் வழியும் இத்தளத்தினை தொடர்ந்து வாசிப்பதாலும் அமைந்த என் தனிப்பட்ட பார்வைதான். இதுசரியானதா என தெரியவில்லை. ஆனால் இவ்விமர்சனத்தினூடே என்னையும் வளர்த்துக்கொள்ள முடியுமென நம்புகிறேன். உங்களின் கருத்தைதெரிந்துகொள்ள ஆவல்.

அன்புடன்

தூயன்

 

புதுக்கோட்டை

 

அன்புள்ள ஜெமோ

 

கதைகளை வாசித்தேன். இரண்டு கதைகளிலுமே பொதுவான சிந்தனைகள்தான் இருந்தன. ராம் செந்தில் கதையில் பெண்களை வெறும் காமமாகவே ஆண்கள் பார்ப்பது பற்றிய பரவலான சிந்தனை வெளிப்பட்டது. இலங்கைக்கதையில் சிங்களர்களில் பௌத்தமரபைப்பின்பற்றுபவர்களுக்கு இருக்கும் குற்றவுணர்ச்சி. ஆனால் நவீன இலக்கியத்துக்கு இது போதாது. ஒரு சூழலில் பொதுவாகப்பேசப்படுவதை கதையாக ஆக்கினால் அதற்கு இலக்கிய மதிப்பு இல்லை. கதை என்றால் அதில் ஒரு சாட்டை இருக்கவேண்டு. அதிர்ச்சி நிலைகுலைவு என எதையாவது நல்ல சிறுகதை தரவேண்டும். சரிதானே என்று நினைக்கவைத்தால் போதது. இந்தக்கதைகளின் முக்கியமான பிரச்சினையே இதுதான்

 

சத்யா

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மா.அரங்கநாதன் கதைகள் பற்றி…

$
0
0

maarangana4[10]

 

 

அன்பு ஜெயமோகன்,

 

இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் ‘சிறுகதை’. சிறுகதை என்றால் சிறிய கதை என்றுதான் வாசிப்பு வாசம் இல்லாத என்னுடைய நண்பர்கள் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘சிறுகதை என்றால் என்ன?’ என்று நீங்கள் உட்பட பல மேதைகள் தெளிவாக ஏற்கனவே எழுதிவிட்டார்கள். தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளை பெரும்பாலும் வாசித்துவிட்டேன் போலிருக்கிறது என்று நினைத்து நான் பெருமிதம்கொள்ளும் பொழுதெல்லாம் ‘கல்லாதது உலகளவு’ என்று யாரேனும் வந்து என் தலையில் கனமாகக் குட்டுகிறார்கள்.

 

இந்த முறை அதைச் செய்தது சகோதரர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள். கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த போது வாங்கி வந்த புத்தகங்களே நிறைய வாசித்து முடிக்கப்படாமல் இருப்பதால், ஆகஸ்டு மாதம் மீண்டும் வந்த பொழுது புத்தகக் கடைகளுக்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு வந்து புத்தகக் கடைகளுக்குச் செல்லாமல் திரும்பியது அநேகமாக அதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். வாசு அவர்கள் நிறைய புத்தகங்கள் கொடுத்து அனுப்பினார். “உங்களுக்காக நான் எடுத்து வைத்த இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வர முடியாமல் போய்விட்டது” என்று வருத்தப்பட்டார். அவர் கொடுத்த புத்தகங்களில் ஒன்றுதான் – ‘மா.அரங்கநாதன் கதைகள்’. இதற்கு முன்பு மா.அரங்கநாதனின் ஒரே ஒரு கட்டுரையைக்கூட வாசித்ததில்லை. வாசி என்று வாசு கொடுத்திருக்கிறார் என்பதால் வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. ஆனால் மா.அரங்கநாதன் கதைகள் ஏன் இவ்வளவு நாட்களாக என் கண்களில் படவில்லை? ஏன் பேசப்படவில்லை? அல்லது நான் ஏன் கேள்விப்படவில்லை? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். என் கேள்விகள் அத்தனைக்கும் அவருடைய சிறுகதை ஒன்றே பதிலாகக் கிடைத்தது. ‘சித்தி’ என்கிற சிறுகதை அது.

 

எனதன்பு திலீப்குமார் உட்பட பல படைப்பாளிகளை உங்களின் திறனாய்வாளன் பட்டியல் மூலமாகவே அறிந்துகொண்டேன். அதன்  பிறகு அந்தப் படைப்பாளிகளின் நூல்களை வாங்கி வாசித்தேன். ஒருவேளை, நீங்கள் மா. அரங்கநாதனை விட்டு விட்டீர்களா என்று கோபம் வந்தது. அந்தப் பட்டியலை மீண்டும் எடுத்துப் பார்த்தேன். தவறு என்னிடமே. நான்தான் உங்களுடைய பட்டியலில் இடம்பெற்றிருந்த மா. அரங்கநாதன் கதைகளை தவறவிட்டிருக்கிறேன். Shame on me.

 

அந்தச் சிறுகதையை தட்டச்சு செய்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு சோம்பலாக இருந்ததால், இணையத்தில் தேடினேன். நல்லவேளையாக அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைத்தது.

 

http://azhiyasudargal.blogspot.be/2010/05/blog-post_19.html

 

இந்தக் கதையை வாசித்த பிறகு நாட்டிய சாஸ்திரத்திலிருந்து சில வரிகள் நினைவுக்கு வந்தது.

 

“யதோ ஹஸ்த ததோ திருஷ்டி

யதோ திருஷ்டி ததோ மனா

யதோ மனஸ் ததோ பாவா

யதோ பாவா ததோ ரசா”

 

‘கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் செய்யும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்’. இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும், எழுத்து உட்பட. நாம் செய்யும் செயலில் கலையில் சித்தி உண்டாக இந்த விழிப்புணர்வும், ரசனையும் முக்கியம் அன்றோ?

 

மா. அரங்கநாதன் அவர்களுடைய தளத்தைக் கண்டடடைந்து அவரது நேர்காணல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு கம்பீரமான குரல்!

 

https://www.youtube.com/watch?v=AvzPDipjez0

 

ஆகஸ்டு மாதம் நான்  இந்தியாவில் இருந்தபோது, தான் அவரைச் சந்திக்க புதுவைக்குச் செல்வதாக வாசு கூறினார். நானும் அவரோடு சென்றிருக்கவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

 

தமிழ் எழுத்துலகில்தான் எத்தனை மேதைகள்!!

 

என்றும் அன்புடன்,

மாதவன் இளங்கோ

 

அரங்கநாதன் சிறுகதைகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சில சிறுகதைகள் -4

$
0
0

download (1)

 

கே.ஜே.அசோக் குமாரின் பாம்புவேட்டை என்னும் சிறுகதை. சொல்வனம் இதழில்

p

அன்பிற்க்கும், மதிப்பிற்க்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலமா?

என்னுடைய சிறுகதையை இணைத்துள்ளேன். தங்கள் கருத்துதை எதிர்பார்க்கிறேன்

யாதும் காமமாகி நின்றாய்

மகேந்திரன்

*

மு தூயன் கதை

தில்லையம்மா

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23

$
0
0

[ 33 ]

வளர்பிறைக்காலம் முடிவுவரை அர்ஜுனன் ஜாதவேதனுடன் அங்கிருந்தான். மைந்தனுடன் விளையாடி தன் உள்ளுருகி எழுந்த அமுது அனைத்தையும் அவனுக்கு ஊட்டி அவ்வின்பத்தில் கணம் கணம் என நிறைந்து திளைத்தான். ஒன்றுபிறிதொன்றைக் கண்டடைந்து நிறைத்து தானழிவதே உயிர்களுக்கு விண்ணென்றானது வகுத்தளித்த பேரின்பம் என்று அறிந்தான்.

ஜாதவேதன் தன் மைந்தன் உயிர்மீண்ட செய்தியை தன் நூற்குலத்தையும் குடியையும் சேர்ந்த நூற்றெட்டு அந்தணர்களுக்கு நேரில் சென்று அறிவித்தான். அவனுக்கு அமிர்தன் என்று பெயர் சூட்டுவதைச்சொல்லி இடையணிநாளில் நிகழவிருக்கும் வேள்விக்கும் விருந்துக்கும் அழைப்பு விடுத்தான். “நம் வாழ்வில் முதன்மை நாள் அது. நாம் அமுதத்தால் வாழ்த்தப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறியட்டும்” என்று அவன் தன் மனைவியிடம் சொன்னான். “ஒன்றும் குறையலாகாது. ஒரு கணமும் முழுமையின்றி கடந்துசெல்லலாகாது.”

“ஆம், நாம் வாழ்ந்ததே இந்நாளுக்காகத்தான்” என்றாள் அன்னை. “அழைக்கப்படவேண்டியவர்களில் எவரும் விடுபடக்கூடாது.” அவர்கள் அமர்ந்து எண்ணி எண்ணி அழைப்புக்குரியவர்களை சேர்த்துக்கொண்டனர். அந்நாளுக்குரிய  அனைத்தையும் ஒருக்குவதில் ஈடுபட்டு மெல்ல மெல்ல அதில் மூழ்கினாள். வேடர்களைச் சென்று கண்டு தேனுக்கும் தினைக்கும் சொல்லி வந்தாள். வேட்டுவப் பெண்களிடம் விறகுக்கு சொன்னாள். ஆயர்குடிகளில் நெய்யும் பாலும் குறித்துவைத்தாள்.

இல்லத்துப் பின்கட்டில் மண்ணில் புதைத்திருந்த கலங்களிலிருந்து எஞ்சிய கூலம் அனைத்தையும் எடுத்து உலர்த்திப் புடைத்து சேர்த்து வைத்தாள். முன்பு இல்லமெங்கும் புதைத்திட்டு மறந்த பொன் முழுக்க எடுத்துச் சேர்த்து ஒவ்வொருவருக்கும் அளித்தாள். நினைவுகூர்ந்து நினைவுகூர்ந்து பொன்னை எடுக்க எடுக்க உவகை கொண்டாள். கனவிலும் மண்ணைத்தோண்டி பொன்னெடுத்துக்கொண்டிருந்தாள். நினைவொன்றை சித்தம் தொட்டெடுக்கையில், மண்ணைத் தோண்டுகையில் எண்ணியிராத ஒரு பொன் கிடைக்கையில் கூவிச்சிரித்தபடி எழுந்து கைவீசி ஆடினாள்.

பின் மண்மட்டுமே எஞ்சியபோது அவளுக்குள் ஏமாற்றம் தோன்றலாயிற்று. தோண்டித் தோண்டி சலித்தபின்னரும் மண்கெல்லி நோக்குவதை நிறுத்தமுடியவில்லை. வேள்விக்குரிய அவிப்பொருள்  சேர்த்துவர புலரிமுதல் அந்தி வரை அலைந்த ஜாதவேதன் அவளை பின்னர்தான் கூர்ந்தான். “என்ன செய்கிறாய்? மண்ணில் நட்டால் முளைப்பதல்ல பொன். நிறுத்து!” என்று கடிந்தான். “எங்கோ இன்னுமிருக்கிறது பொன். நான் கனவில் கண்டேன்” என்றாள் அவள். “பொன் இருப்பது வெளியே. வேதத்தை வலையாக்கி அதை நான் சேர்த்துக்கொண்டுவருகிறேன். இது நம் மைந்தனின் நாள்” என்றான் ஜாதவேதன்.

நாளும் அந்திக்குப்பின் அந்தணனும் மனைவியும் தனித்தமர்ந்து தங்கள் கையிலிருப்பதையும் மிஞ்சி தேவைப்படுவதையும் பற்றி பேசினர்.  நாள் செல்ல நாள் செல்ல இருப்பது குறைய வேண்டுவது வளர்ந்தது. பின்னர் இடைப்பட்ட கணக்கு பேருருக்கொண்டு அவர்கள் முன் நின்றது. அவர்களின் பதற்றம் மிகுந்தது. தன்னிரக்கமும் எரிச்சலும்  மேலெழுந்தது. ‘இன்னும் சற்று… இன்னும் சில…’ என்று சொல்லிச்சொல்லி கணக்கிட்டவர்கள் ‘இன்னும் எவ்வளவு? இன்னும் எதுவரை?’ என ஏங்கலாயினர்.

“என் தகுதிக்கு மீறி அழைத்துவிட்டேன், பாண்டவரே” என்றான் ஜாதவேதன். “நூற்றெட்டு அந்தணர் அமர்ந்து செய்யும் வேள்விக்கு உரிய நெய் என நான் எண்ணியதைவிட பன்னிருமடங்கு அதிகம் தேவைப்படுகிறது. அத்தனை பெரிய வேள்விக்கு வரும் விருந்தினர் உண்பதற்கு உரிய அன்னமும் இன்னும் ஒருக்கப்படவில்லை. வேள்வி முடிந்து அவர்கள் எழும்போது அளிக்கப்படும் நற்கொடையும் சேரவில்லை. அவர்கள் அணிவதற்கு பட்டு, அவர்கள் துணைவியருக்கு ஆடை, அவர்களின் இளமைந்தருக்கு பரிசுகள் என இருந்தால் மட்டுமே அது வேள்வியென்றாகும்.”

“அளிக்கப்பட்டதை மறந்து பெறப்படாததை எண்ணிக் கணக்கிட்டுச் சொல்லி நிலைநிறுத்துபவர்கள் அந்தணர். நானும் அவ்வாறுதான் இருந்தேன். அதை எண்ணும்போது என் நெஞ்சு பதைக்கிறது” என்றான். நிலைகொள்ளாமல் கைகளை அசைத்து “உள்ளம் சென்ற தொலைவுக்கு என் செல்வம் செல்ல மறுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான். வான்நோக்கி ஏங்கி “தெய்வங்களே, என்னை ஏன் கைவிட்டீர்கள்?” எனக் கூவினான்.

அறைக்குள் இருந்து எட்டி நோக்கிய அவன் துணைவி “களஞ்சியம் நிறைந்திருக்கும் இல்லத்தில் பிறக்கவேண்டிய மைந்தன் வெறும் சொல் மட்டும் நிறைந்திருக்கும் இல்லத்தில் பிறந்துவிட்டான்” என்றாள். சினம்கொண்ட ஜாதவேதன் “அது என் பிழை அல்ல. களஞ்சியம் நிறைந்த இல்லம் கொண்டவனுக்கு நீ அவனை பெற்றிருக்கவேண்டும்” என்றான். “களஞ்சியத்தை நிறைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு…” என்றாள் அவள். “ஏழை அந்தணன் என்றுதானே வந்தாய்?” என்று அவன் கூவ “ஆம், ஆனால் செயலற்றவன் என அறிந்திருக்கவில்லை” என்று அவள் திருப்பிக் கூவினாள்.

அர்ஜுனன் அவர்களைத் தடுத்து  “அஞ்சவேண்டியதில்லை, அந்தணரே. என்னால் ஆவதை நான் சேர்த்து அளிக்கிறேன்” என்றான். “தாங்கள் பாண்டவர் என்றறிவேன். ஒரு சொல் ஓலையில் எழுதி அளியுங்கள், இங்கிருக்கும் குடித்தலைவர்  இல்லத்திற்குச் சென்று வேண்டிய அனைத்தையும் பெற்றுவிடுவேன்” என்று ஜாதவேதன் சொன்னான். “இல்லை அந்தணரே, நான் நகர் புகுவதில்லை என்ற நெறி கொண்டவன். கான்புகுவதற்காக உடன்பிறந்தாருடன் அஸ்தினபுரிவிட்டு நீங்கியவன். நான் அதைச் செய்வது முறையல்ல” என்றான்.

ஜாதவேதனின் முகம் சற்று சுருங்கியது. “தாங்கள் இரவும் பகலும் தோளில் வைத்து கொஞ்சி அலையும் மைந்தனுக்காக இச்சிறு செயலை செய்வீர்கள் என்று எண்ணினேன், பாண்டவரே. நன்று, மைந்தனைவிட நெறியே உங்களுக்கு முதன்மையானது என்றுரைக்கிறீர்கள். அதுவும் அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி திரும்பி நடந்தான். அவன் மனைவி “நமக்கு நம் மைந்தன் முதன்மையானவன். அனைவருக்கும் அப்படியா?” என்றாள்.

அர்ஜுனன் அவள் விழிகளை சந்தித்ததும் நெஞ்சதிர்ந்து விழிதிருப்பிக்கொண்டான். ஜாதவேதன் உடலசைவுகளில் தெரிந்த எரிச்சலை நோக்கியதும் அந்தணனும் மனைவியும் இளமைந்தனை தங்கள் கையிலெடுத்தே நாட்களாகின்றன என்பதை உணர்ந்தான். தவழ்ந்து அவன் அவர்கள் அருகே செல்லும் போதுகூட எரிச்சலுடன் “அருகே வராதே, எண்ணை கொப்பரையை கவிழ்த்துவிடுவாய்” என்று ஜாதவேதன் சொன்னான். அடுமனைக்குள் சென்று அன்னையின் ஆடையை அவன் பற்றினால் “விலகிச் செல்! அடுப்பில் எரிகொள்ளி இருப்பதை அறியமாட்டாயா, மூடா?” என்று அவள் சினந்தாள்.

அவர்கள் விலக்கம் கொள்ள கொள்ள மைந்தன் மேலும் மேலும் அர்ஜுனனை அணுகினான். எப்போதும் அஞ்சியவன்போல அவன் ஆடைகளை பற்றிக்கொண்டான். நாளெல்லாம் அவன் தோள்களில் அமர்ந்திருந்தான். ஒரு கணமும் கீழிறங்க மறுத்தான். மைந்தனை தூக்கிக்கொண்டே காட்டிற்குச் சென்று பெருங்கலம் நிறைய மலைத்தேன் எடுத்து வந்தான் அர்ஜுனன். ஜாதவேதனிடம் அதை அளித்து “நறுமலைத்தேன் இது. ஊர்த்தலைவரிடம் கொண்டு சென்று உரிய விலை பெற்று வருக!” என்றான்.

ஜாதவேதன் விழிகளை விலக்கி  “தேனுக்கு இப்போது மதிப்பொன்றுமில்லை, பாண்டவரே. ஊர்த்தலைவர் இதை பொருட்டென எண்ணமாட்டார். ஊர்மன்றிலும் சந்தையிலும் நூறு வேடர்கள் கலம் நிறைய தேனுடன் கொள்வாரின்றி அமர்ந்திருக்கிறார்கள். நானோ அந்தணன். வணிகம் செய்யக் கற்றவனுமல்ல” என்றான்.

“மலைப்பொருள் எதுவென்றாலும் கொண்டுவருகிறேன். வேள்வி சிறக்கட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான்.  “எனக்குத் தேவை வேள்விச்செல்வம். மலைப்பொருளை விற்று நான் நினைக்கும் பணத்தை ஈட்ட முடியாது” என்றான் ஜாதவேதன். “நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, மலைப்பொருளுக்கு ஓர் இயல்பு உண்டு. மிகுதியாகக் கிடைக்கும்தோறும் அதன் விலை இறங்கிவிடும்.”

அர்ஜுனன் சில கணங்கள் அவனை நோக்கி நின்றபின் மைந்தனை தூக்கிக்கொண்டு விளையாடச்சென்றான். “தேன்! தேன்!” என்று மைந்தன் துள்ள தன் கையிலிருந்த எஞ்சிய தேனடையைப் பிழிந்து அவன் வாயில் விட்டான். முகம் நிறைந்து உடலில் வழிய அமிர்தன் தேனை உண்டான். தேன் தட்டை வீசியபின் அவனுடலில் படிந்திருந்த இனிமையை தன் நாக்கால் தொட்டு அர்ஜுனன் உண்டான்.

வேள்வி நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தணனும் மனைவியும் அர்ஜுனன் இருப்பதையும் மறந்தனர். அவனுக்கு உணவளிக்க நினைவு கொள்ளவில்லை. அவனோ உணவை எண்ணவும் இல்லை. காடுகளில் அலைந்து சந்தனமும் பலாசமும் கொண்டு வந்து சேர்த்தான். கஸ்தூரியும் புனுகும் சவ்வாதும் கொண்டு வந்து வேள்விக்கு அளித்தான். அவை ஒருபொருட்டல்ல என்னும் நோக்குடன் ஜாதவேதன் அவற்றை பெற்றுக்கொண்டான்.

மைந்தனை உடல்கழுவ கொண்டுசெல்கையில் கொல்லைப்பக்கம் நீரோடைக்கரையில் அந்தணன் துணைவி தனித்திருந்து கண்ணீர்மல்க தனக்குள் பேசிக்கொள்வதைக் கண்ட அர்ஜுனன் “அன்னையே, இன்னும் என்ன துயர்? மைந்தன் முழுநலத்துடன் இருக்கிறானே?” என்றான். அவள் சினத்துடன் திரும்பி “இருந்தென்ன பயன்? இவன் வளர்ந்து எப்போது எங்களுக்கு உணவளிக்கப்போகிறான்? அதுவரை இவ்வாறு உழைத்து தேய்ந்து மடியவேண்டுமென்பது எங்கள் ஊழ்” என்றாள்.

திகைத்த அர்ஜுனன் ஏதோ சொல்லெடுப்பதற்குள் கழுவிக்கொண்டிருந்த கலன்களை கையிலெடுத்தபடி அவள் நிமிர்ந்து “வேதம் நன்குணர்ந்த அந்தணர்கள் அரசர்களுக்கு எரிசெயல் ஓம்பி பொன் பெற்று வந்து மாளிகை கட்டுகிறார்கள். எனக்கு வாய்த்தவனோ ஊக்கமில்லா மூடன். இப்பிறப்பெல்லாம் சிறுகுடிலில் கரிபடிந்த கலன்களைக் கழுவி, புகையூதி கண்கலங்கி, மிச்சில் உணவை உண்டு, கந்தல் அணிந்து வாழ்ந்து மறைய வேண்டுமென்பது என் ஊழ் போலும். முற்பிறப்பில் செய்த பிழை இவ்வாறு வந்து சூழ்ந்திருக்கிறது. பிறகென்ன சொல்ல?” என்றாள்.

“தங்கள் குறை என்ன, அன்னையே?” என்று அர்ஜுனன் கேட்டான். பேசியபடியே அடுமனைக்குள் சென்ற அவள் உளவிசையுடன் ஆடையைச் சுழற்றி இடையில் செருகியபடி வெளியே வந்து “என் குறை இதுதான். நூற்றெட்டு அந்தணர்களுக்கும் மைந்தர் இருக்கிறார்கள். அவர்களின் காதணிவிழாவும் சொல்லணிவிழாவும் நிகழ்ந்ததெவ்வாறு என்று அறிவேன். இங்கு  நான் எண்ணி எண்ணி வைத்திருக்கிறேன் அரிசிமணிகளை. அவர்களின் பெண்டிர் இங்கு வந்தமரும்போது எதை சமைத்து பரிமாறுவேன் என்று தெரியவில்லை. அவர்களின் இதழ்களில் விரியும் கெடுநகைப்பை இப்போதே காண்கிறேன். ஒவ்வொரு முகத்திற்கு முன்னும் ஒருமுறை இறந்து எழப்போகிறேன். அதைக் காணாமல் இப்போதே செத்தழியவேண்டும். அதுதான் என் விழைவு… போதுமா?” என்றாள்.

சீற்றத்துடன் திரும்பி,  அர்ஜுனன் கையிலிருந்து இறங்கி எச்சில் வழிய நகைத்தபடி தவழ்ந்துசென்று  எழுந்து அவள் ஆடையைப் பற்றி இழுத்த மைந்தனின் முதுகில் ஓங்கி அறைந்து “இவன் மீண்டு வரவில்லை என்றால் இந்தத் துயர் இருந்திருக்காது. பிறக்கவில்லை என்றே இருந்திருப்பேன். எந்த தீக்கணத்தில் அதை விரும்பினேன்? ஏதோ கொடுந்தெய்வம் இந்தப் பொறியில் என்னை சிக்க வைத்தது!” என்றாள்.

அடிபட்டு அமர்ந்து வாய்திறந்து கண்ணீர் உதிர கதறி அழுத மைந்தனைத் தூக்கி தன் தோளில் அமர்த்தி அர்ஜுனன் வெளியே சென்றான். அன்று முழுக்க நிலையற்றவனாக காடுகளில் அலைந்துகொண்டிருந்தான். அவனுள் எழுந்த வினாக்களை எதிர்கொள்ள அவனே அஞ்சினான். குழந்தையை கொஞ்சிக்கொஞ்சி அவற்றை அப்பால் துரத்தினான்.

மாலையில் திரும்பி அந்தணனின் இல்லத்திற்கு வந்தபோது அவன் முற்றம் முழுக்க கலங்கள் ததும்ப நெய்யும் தேனும் வந்து நிறைந்திருப்பதை கண்டான். மூட்டைகளில் அரிசியும் கோதுமையும் அடுக்கப்பட்டிருந்தன. அடுமனையாளர்கள் கொல்லைப்பக்கம் கொட்டகை கட்டி வெண்கல உருளிகளை உருட்டி அடுப்பிலேற்றிக் கொண்டிருந்தனர். பணியாட்கள் இல்லத்துக்கு முன் கட்டப்பட்ட பெரிய பந்தலில் தோரணங்களை அமைத்துக்கொண்டிருந்தனர். வைதிகர் அமர்ந்து வேள்விக்களத்திற்கு வாஸ்து வரையக் கோடுகள் வரைந்து கொண்டிருந்தனர்.

அவன் வருவதைக் கண்டதும் வைதிகர் மதிப்புடன் எழுந்து நின்றனர். வீரர்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க! அஸ்தினபுரியின் இறைவர் வாழ்க!” என்று குரல்கள் எழுப்பினர். திகைத்து நின்ற அர்ஜுனன் திரும்பி ஜாதவேதனை நோக்க அவன் அஞ்சாது அவன் கண்களை நோக்கி “ஆம், நான் சென்று ஊர்த்தலைவரிடம் சொன்னேன். சான்றுக்கு தாங்கள் அணிந்து கழற்றி வைத்த கணையாழி ஒன்றையும் கொண்டு சென்று காட்டினேன். அவரே தங்களைத் தேடி சற்று கழித்து இங்கு வருவார்” என்றான்.

கட்டற்று எழுந்த பெருஞ்சினத்துடன் கை ஓங்கியபடி அர்ஜுனன் காலடி எடுத்து முன்னால் வந்தான். “நான் ஆணையிட்டிருந்தேன். உமக்கு நான் ஆணையிட்டிருந்தேன்” என்று கூவினான். ஜாதவேதன் வெறுப்பில் வெறித்த விழிகளுடன் கைவிரித்து “அந்தணனை அடிக்க கையோங்குகிறீர்களா? அவ்வாறே ஆகுக!” என்றான். அர்ஜுனன் கை தழைத்து “உத்தமரே, வேதம் அறிந்த தாங்கள் இதை செய்யலாமா? அறத்துக்கு உகந்ததா இது?” என்றான்.

“இதுவே எனக்கு உகந்தது. இன்று எனக்குத் தேவை பொருள். என் மைந்தனை குடியவை முன் தகுந்த முறையில் நிறுத்த அதுவன்றி வழியில்லை. அதன் பொருட்டே இதைச் செய்தேன். எனக்கு இதில் பிழையென ஏதுமில்லை” என்றான் ஜாதவேதன். “மைந்தனை மீட்க விழைகையில் பொருளை நீர் எண்ணவில்லை” என்றான் அர்ஜுனன். ஜாதவேதன் உரக்க “ஆம், மைந்தன் உயிர் பெரிதே எனக்கு. ஆனால் அவன் நோயின்றி உயிர்கொண்டு நிற்கும்போது அவனைவிடப் பெரிது பொருள்தான். இதில் என்ன ஐயம்?” என்றான்.

திகைத்து அங்கு நின்ற அனைவரையும் நோக்கி சொல்லெடுக்க பலமுறை வாயசைத்த பின் திரும்பி நடந்தான். அவன் பின்னால் வந்த ஜாதவேதன் “இளைய பாண்டவரே, தங்களை வருத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. எந்நூலிலும் நோக்குக! எந்த அறிஞனிடம் வேண்டுமானாலும் உசாவுக! தென்திசைத் தலைவனே உயிருக்கு முதல்வன். ஆனால் வாழ்வுக்கு முதல்வன் குபேரனே. அவனைவிட ஒருபடி மேலானவன் வடதிசை ஆள்பவனே” என்றான்.

ஒரு முதியவைதிகர் தொலைவில் நின்றபடி “உலகியலோருக்கு உகந்தவன்  செல்வத்துக்கு இறைவனே. காலனை வழுத்துபவர்கள் இருக்கிறார்கள்.  குபேரன் அருளியவர்களே மெய்யாக வாழ்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் திரும்பி நோக்க வைதிகர் தலைவர் “ஆம், இளைய பாண்டவரே! இப்புவியில் நோயும் இறப்பும் அணுகும்போது மட்டுமே அறத்திற்கிறைவன் எண்ணப்படுகிறான். அல்லும் பகலும் வாழ்த்தப்படுபவன் வடதிசை அண்ணலே” என்றார். தலையசைத்து “நன்று” என்றபின் அர்ஜுனன் திரும்பி நடந்தான்.

[ 34 ]

ஊழித்தொடக்கத்தில் விளையாடும் இளமைந்தன்போல தன் சுட்டுவிரலை காற்றில் அசைத்தசைத்து பன்னிரண்டாயிரம்கோடி பெருமலைத் தொடர்களைப் படைத்தபின் பிரம்மன் அவ்விரலை கட்டைவிரலில் தொட்டு மெல்ல சுண்டியபோது மிகச்சிறிய விதை ஒன்று பறந்து விழுந்தது. அதை சுட்டுவிரலால் தொட்டெடுத்து இடக்கை உள்ளங்கையில் வைத்து முகம் முன்னால் தூக்கி நோக்கி புன்னகைத்தார். விழி விலக்கி தன் முன் திசைகளை நிரப்பி எழுந்தெழுந்தமைந்துசென்ற மலையலைகளைப் பார்த்தபடி அவ்விதையிடம் “உன் பெயர் திருணபிந்து. நீயும் இம்மலைகளுக்கு நிகரென ஆகுக!” என்றார்.

அதை மெல்ல ஊதி கீழே விரிந்துகிடந்த மண்பரப்பில் விழச்செய்தார். மண் தொட்ட அவ்விதை கைகூப்பி முனிவரென எழுந்தது. திருணபிந்து  மண்ணில் புதைந்து உயிர்பெருக்கி எழுந்தது.  மண்ணை உண்டு உருப்பெருக்கி பரவி பன்னிரண்டாயிரம் கோடி மலைகளையும் முழுக்க மூடியது. புவியெங்கும் ஒருகணமும் ஓயாது நிகழ்ந்து கொண்டிருந்தது அவரது வேள்வி. பெருந்தழல் எழுந்து அவிகொண்டது. பசுமை விளைந்து அவியாகியது.

தன் அவியிலிருந்து அவர் ஈன்றெடுத்த மகள் ஹவிர்ஃபு எனப்பட்டாள். பேரழகியென அவள் வளர்ந்து நின்றபோது பிரம்மனிடம் “எந்தையே, என் மகளுக்குரிய கணவன் யார்?” என்றார் திருணபிந்து. சுட்டுவிரலால் காற்றில் ஒரு முகம் வரைந்து பிரம்மன் புலஸ்தியர் என்னும் பிரஜாபதியை படைத்தார்.  “குன்றாத பிறப்பாற்றல் கொண்டவர் இவர். பெருகிநிறைபவளான உன் மகளே இவருக்குரிய துணைவி” என்றார்.

புலஸ்தியர் ஹவிர்ஃபுவை மணந்தார். கணந்தோறும் என பல்லாயிரம் கோடி மைந்தரைப் பெற்று விண்ணில் மிதந்தலைந்த உலகங்களை முழுதும் நிரப்பினர் அவர்களிருவரும். ஹவிர்ஃபு புலஸ்தியருக்கு  ஈன்ற முதல் மைந்தர் விஸ்ரவஸ் என்று அழைக்கப்பட்டார். அழியாச்சொல் என எழுந்து சொல் பெருக்கி விரிந்து சித்தம் நிறைத்த விஸ்ரவஸ் பரத்வாஜ முனிவரின் மகளாகிய தேவவர்ணினியை மணந்தார். அந்திமஞ்சள் நிறம் கொண்டிருந்த தேவவர்ணினி கணவருடன் கூடி மகிழ்ந்த இரவொன்றில் உடலோய்ந்து உளம் நிறைந்து துயிலில் படுத்திருக்கையில் கனவில் பொன்னிறமான புல்தளிர் ஒன்றைக் கண்டு புன்னகைத்தாள். விழித்துக்கொண்டு எழுந்து தன் அருகே படுத்திருந்த விஸ்ரவஸின் தோளை உலுக்கி சொன்னாள் “தளிரொன்றின் ஒளியை நான் கண்டேன்.  பிறிதெங்கும் இல்லாது தன்னுள்ளிருந்தே எடுத்து தான் சூடி நின்ற ஒளி அது.”

விஸ்ரவஸ் அவள் தோள்மேல் கைவைத்து காதில் குழையை வருடி கழுத்தின் மென்வரிகளில் விரலோட்டியபடி “தன்னுள்ளிருந்து ஒளியெழச்செய்யும் ஆற்றல் கொண்டவை இரண்டே. விண்ணில் ஆதித்யர்கள், மண்ணில் மெய்யெழும் சொல்” என்றார். “பிறிதொன்றும் உள்ளது. அதை சற்று முன்தான் கனவில் கண்டேன்” என்றாள் தேவவர்ணினி.  “அவ்வண்ணம் ஒன்று இப்புவியில் இல்லை. அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றார் விஸ்ரவஸ். “அது உன் விழைவு மட்டுமே. துயில்க!” என அவள் தலையை வருடி முத்தமிட்டார்.

அவள் “இல்லை, நானறிவேன். அது கனவு மட்டும் அல்ல” என்றாள். “மலர் விரிவதற்கு முந்தைய மணமெழலே கனவு. இனிய ஒன்று நிகழவிருக்கிறது.” அவர் புன்னகையுடன் அவள் கன்னத்தை வருடி “நான் என்ன செய்யவேண்டும்? சொல்” என்றார். “தங்கள் மூதாதையாகிய படைத்தோனை அழைத்து கேளுங்கள். இன்று நான் கனவில் கண்டதென்ன என்று” என்றாள் அவள்.

சற்றே சினம் கொண்டபோதிலும் அவர் எழுந்து அறையில் இருந்த அகல் அருகே சென்று அழியாச்சொல்லை ஆகுதியாக்கி அதை வேள்வித்தீயாக  மாற்றினார். “எந்தையே, சொல்க! ஆதித்யர்களுக்கும் வேதப்பொருள் சுமந்த சொற்களுக்கும் அப்பால் தன்னொளி கொண்ட பிறிதேது உள்ளது இப்புவியில்?”  புன்னகைத்து பிரம்மன் சொன்னார் “உயிர்.” விஸ்ரவஸ் வியப்புடன் “உயிர் ஒளிர்வதை நான் கண்டதில்லை” என்றார். “ஒளிரும்” என்றார் பிரம்மன். “இளந்தளிரில் உயிரின் ஒளி வெளிப்படுகிறது. தளிர் முதிரும்போது மூவகை வினைகளும் வந்து அதை சூழ்கின்றன. பின்பு அது தன்னை மூடி நிற்பதையே தானெனக் காட்டுகிறது.”

“ஏதோ ஒரு தருணத்தில் சில நொடிகளில் மட்டுமே உயிரின் ஒளி வெளிப்படுகிறது. காதலின் கனிவில், தாய்மையின் நெகிழ்வில், ஊழ்கத்தின் முழுமையில், பெரும் கருணையில், பேரறத்தில்” என்று பிரம்மன் சொன்னார். “அவள் தன் கனவில் கண்டது அது. ஒரு புல்லிதழின் மென்தளிர். தளிரெல்லாம் பொன்னே.  காலையில் எழுவது விண்ணுலாவியான ஆதித்யனின் செந்தளிர். மாலையில் பழுத்து மீண்டும் அத்தளிரென்றாகி அவன் மறைவதே வாழ்வின் நெறி. குலமூதாதையாகிய திருணபிந்துவையே அவள் கண்டாள். அவள் வாழ்க!”

பிரம்மன் மறைந்ததும் விஸ்ரவஸ் திகைப்புடன் “உன்னில் எழுந்தது உயிரின் ஒளி. புவியின் முதல் தளிர் அது” என்றார். அவள் அவரை அணைத்து  “எனக்கு அவ்வொளி கொண்ட மைந்தன் ஒருவனை தருக!” என்றாள். “அவர் சொல்லிச் சென்றதை நீயும் கேட்டாயல்லவா? அது தளிரின் ஒளி. தளிரென்பது நோக்கியிருக்கவே முதிர்ந்து இலையாவது. விழியறியாது நிறம் மாறும் இளங்கதிர் போன்றது” என்றார் விஸ்ரவஸ்.

“வளராத தளிரொன்றை எனக்கு அருள்க!” என்றாள். “வளராது இருக்கையில் அது தளிரே அல்ல” என்றார் விஸ்ரவஸ். “உயிர்கள் அனைத்தும் மாறுபவை. மாறுதலுக்குப் பெயரே உயிர்.” அவள் இளமைக்குரிய வீம்புடன் “நானறியேன். எனக்கு குன்றாத் தளிரொளி கொண்ட மைந்தன் தேவை. பிறிதொரு குழவியை நான் ஏற்க மாட்டேன்” என்றாள். “வளரா மைந்தனா? அறிவில்லையா உனக்கு?” என்று அவர் சினக்க அழுதபடி அவள் எழுந்து சென்றாள்.

அவர் உளம் பொறுக்காது அவள் பின்னால்  சென்று “நீ பேசுவதென்ன என்று அறிவாயா? தளிரொளி கொண்டு காலமுடிவு வரை மாறாதிருப்பது இயல்வதாகுமா?” என்றார். “நானறியேன். என் கனவில் வந்ததனாலேயே அது ஒன்றைத் தவிர பிறிதெதையும் நான் ஏற்கக்கூடாது என்பதே என் உள்ளம் கொள்ளும் கூற்று. ஒரு விழைவு எழுவதென்பது தற்செயல் அல்ல. அது எழவேண்டுமென்று எங்கோ ஒன்று எண்ணுகிறது. இவ்விழைவு எழுந்தமையாலேயே இது நிகழ்ந்தாகவேண்டும்” என்றாள்.

“இது நிகழ இயலாது, சிறுமியென பேசாதே!” என்றார் விஸ்ரவஸ். “இல்லையேல் எனக்கு மைந்தனே தேவையில்லை” என்றாள் அவள். கடும் சினம் கொண்டு, பின் அவள்மேல் கொண்ட பேரன்பினால் மெல்ல கனிந்து துயர் மிக்கவரானார் விஸ்ரவஸ். செய்வதென்ன என்று அறியாமல் நிலைகுலைந்து இருந்தபின் தெளிந்து தன் தந்தையாகிய புலஸ்தியரிடம் சென்றார். அவர் தவச்சாலைக்குள் சென்று தாள் பணிந்து முகமன் உரைத்தபின் கேட்டார். “தந்தையே, அழியாத் தளிர் ஒன்றை விழைகிறாள் என் துணைவி. நான் என்ன செய்வேன்?”

புன்னகைத்து “அது பெண்களின் பேதைமை. ஆனால் பிள்ளையும் பெண்களும் கொள்ளும் பேதைமைக்குப் பின் இருப்பது சொல்தொட்டு அறியமுடியாத நுண்மை ஒன்று. அதை பேணுக!” என்றார் புலஸ்திய முனிவர். “அறிக, மைந்தா! புவியில் என்றும் அழியாதிருக்கும் பொருட்களே உலோகமெனப்படுகின்றன. அழியும் அழகுகளை அழியாது நிறுத்துவதற்கென்றே பிரம்மனால் படைக்கப்பட்டவை அவை. நீரின் ஒளியை இரும்பில் நிறுத்தலாம். அனலை செம்பின் சிவப்பில். வெயிலொளியை வெள்ளியில். புவியெங்கும் எழுந்து மறையும் புதுத்தளிரின் ஒளியை வைப்பதற்கு என்றே ஓர் உலோகம் மண்ணில் உள்ளது. அதன் பெயர் பொன். அதுவாகுக உன் மைந்தனின் உடல்” என்றார்.

ஆலிலையின் தளிர், மூங்கில்குருத்து, கொன்றைமலர், வேம்பின் முளை என வண்ணங்களைக் கலந்து எடுத்த வண்ணத்தில் மண்ணிலிருந்து பொன்னை எடுத்தார் விஸ்ரவஸ். “இப்பொன்னிறத்தில் எனக்கு ஒரு மைந்தனைத் தருக!” என்று அகிலம் படைத்த முதல்வனை எண்ணி வேண்டினார்.  பொன்னுருகிச் சொட்டியது அவர் மனைவியின் வயிற்றுக்குள். பொன் பெருகி வளர்ந்தது. அவ்வொளி கொண்டு அவள் உடல் அனல்சூடிய அகல்விளக்கு போல மிளிரத்தொடங்கியது.

கருவுற்றிருந்த அவளைக் காண வந்த நாரதர் சொன்னார் “இறைவி, உன்னில் எழுந்திருப்பவன் ஒரு தேவன். பொன்னுருக் கொண்டவன். பொன்னே உலோகங்களில் முதன்மையானது.  பொன்னில் எழுவது உலோகங்களின் கொழுந்துப்பருவம். குன்றா இளமை கொண்டவனாக இருப்பான் உன் மைந்தன். இப்புவியில் இனிவரும் பொருளனைத்தும் பொன்னாலேயே மதிப்பிடப்படும். பொருள்கள் அனைத்திற்கும் மதிப்புசொல்லும் பொருள் என்று அதுவே அமைந்திருக்கும். அப்பொருளின் தலைவனாக அவன் என்றுமிருப்பான்.”

KIRATHAM_EPI_23

அவ்வாறு பிறந்தெழுந்தான் குபேரன். என்றும் மாறாத குழந்தை உடல் கொண்டிருந்தான். குறுகிய கைகால்களும் கொழுவிய முகமும் தொந்தியும் கொண்ட பொன்மைந்தனை அள்ளி நெஞ்சோடணைத்து தேவவர்ணினி விழிநீர் உகுத்தாள்.

தொடர்புடைய பதிவுகள்


தேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்!

$
0
0

j

 

பெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது என்று உற்றுப்பார்த்தால் அவளின் தாயாகவும் அவனைச் சார்ந்த பெண்களாகவும் இருப்பார்கள். பொதுவாக அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு மிக இயல்பானது. ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமானதும் அந்தரங்கமானதுமாக இருந்துவிடுவதுண்டு. ஆண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும், பெண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும் என்பதை மென்மையாகவும் கடுமையாகவும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதில் பெரும்பங்கை செலவழிப்பதது தாய்மார்கள்

அனோஜன் பாலகிருஷ்ணன் தேவகிச்சித்தியின் டைரி பற்றி எழுதிய கட்டுரை

தேவகிச்சித்தியின் டைரி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் –விமர்சனங்கள் 3

$
0
0

r

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். தங்கள் தளத்தில் வெளியான சிறுகதைகள் குறித்து என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். மொத்தம் ஐந்து கதைகள் படித்தேன். அதில் நான்கு கதைகள் பற்றி எழுதியுள்ளேன்.

நன்றி,

சங்கர்

1.மடத்து வீடு – ராம் செந்தில்

வாசகசாலை அமைப்பு சென்னையில் மாதம் இருமுறை சிறு பத்திரிக்கைகள், இடைநிலை இதழ்கள் ஆகியவற்றில் வெளியாகும் சிறுகதைகள் குறித்து உரையாடல் நடத்துவார்கள். நான் இரு முறை கலந்துகொண்டேன். இரு முறையும் சிறுகதையின் வடிவம், வாசிக்கப் பெற்றவை சிறுகதையா இல்லையா என்றே விவாதம் சென்று முடியும். அப்படி ஒரு விவாதத்தில் தோழி ஒருவர் சொன்னது – “எனக்கு சிறுகதைன்னா படிச்சு முடிச்சவுடன புத்திசாலித்தனமான ஏமாற்றம் ஏற்படணும்”. பல நேரங்களில் சிறுகதைக்கான விளக்கங்களில் கதையின் முதல் வரியிலிருந்தே கதை தொடங்க வேண்டும், கதையின் முடிவிலிருந்து வாசகனை வேறு தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் நாம் பேசுவோம். ஆக தொடர் வாசிப்பின் மூலம் நமக்கென்று ஒரு டெபனிசன் உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் படைப்பை மதிப்பிடுவோம். அதுவே எழுத அமரும்போது நமக்கு ஒரு டெம்ப்ளேட் உருவாக்கித் தரும். மடத்து வீடு சிறுகதை அத்தகைய டெம்ப்ளேட்டில் எழுதப்பட்டு அதற்குள்ளேயே சிக்கிக்கொண்டுவிட்டது என்று தோன்றுகிறது.

முதற் பாதியில் விவரணைகள் மேல் கவனம், பிற்பாடு தனியாக இருக்கும் பெண்களின் மேல் நடத்தப்படும் பாலியல் வன்முறை, கடைசியில் பெரியவரின் காமம் என கதை அமைந்துள்ளது. பல கிளைகளாக விரிவது நாவல். பல கிளைகளில் பயணித்து நம் கண்களுக்குத் தெரியாத ஆணி வேரை நோக்கிச் செல்வது சிறுகதை. இது என்னுடைய டெபனிசன். ஒரு வீட்டில் மூன்று பெண்கள் அவர்களைப் பார்ப்பதற்கு மூன்று பேர் போகிறார்கள் என்ற உடனேயே நமக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. கதையும் அதற்கேற்றாற்போல்தான் பயணிக்கிறது. கடைசியில் நாம் எதிர்ப்பார்க்காத ஒன்றை ஆசிரியர் வைத்தாக வேண்டும். எனவே அவர் ஒரு முடிவைத் தருகிறார். அதைத் தொடர்ந்து ஒரு சுபம் கார்டு – பெரியவரால் ஏற்படும் பிரச்சனைகளால் அப்பெண்கள் படும் வேதனையைப் பார்த்து மூன்று ஆண்களும் வழியும் கண்ணீரை ஒருவருக்கொருவர் தெரியாமல் துடைத்துக்கொள்கிறார்கள்.

சிறுகதைக்கான காலம் குறைவு. அதைக் கருத்தில் கொண்டே கதை முதல் வரியிலிருந்தே தொடங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். எனவே விவரணைகளைக் குறைத்து நேரடியாக வீட்டிற்குள் கதை சென்றிருக்கலாம்.

உத்தி தெரிந்திருக்கிறது. படைப்பு அதை மீறி செல்ல வேண்டும். அப்பொழுதுதான் மனதைத் தொடும். அது இக்கதையில் ஆசிரியருக்கு கை கூடவில்லை.

  1. புத்தரின் கண்ணீர் – உதயன் சித்தாந்தன்

நல்ல கதை. எனக்கு இக்கதைப் பிடித்திருந்தது. போரை விரும்பாத தந்தை, போருக்குப் போகும் மகனை நினைத்துக் கவலைக்கொள்ளுதல், போரில் தன் மகன் வீரத்துடன் செயல்பட்டான் என்று கேள்விப்படும்போது மகிழ்தல், தன் மகனின் நலனுக்காக பிரார்த்தித்தல் பின் மீண்டும் தன் மகன் செய்த போர்க்குற்றங்களை நினைத்து வருந்துதல் என ஒரு சராசரி மனிதனின் உண்மையான உணர்வுகளை அழகாக படம்பிடித்துக்காட்டுகிறது. கதை எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. அம்மா, அப்பா, தங்கை என வாழும் சராசரி மனிதன் போருக்குச் சென்றவுடன் மிகக்கொடூரமான முறையில் குற்றங்கள் செய்கிறான். அவனை அவ்வாறு மாற்றுவது எது, போர்க்களத்தில் எது தர்மம்? எது அதர்மம்? அன்றாட வாழ்க்கையில் இருக்கும் நியாய தர்மங்கள் அங்கு செல்லுபடியாகுமா? எப்பொழுது சாவோம் என்று தெரியாமல் ஒவ்வொரு நொடியும் கடக்கும் ஒருவனிடம் என்னென்ன நல்லொழுக்கங்களை எதிர்பார்க்கிறோம்? எதிர்ப்பார்க்கலாம்? போரே குற்றம் எனில் போர்க்குற்றங்கள் எனக் கூறி தண்டனைக் கூறுவது ஏமாற்று செயல் ஆகாதா? என இக்கதை விரிந்திருந்தால் பெரிய உயரத்தை எட்டியிருக்கும். அதற்கான எல்லா சாத்தியங்களும் இக்கதையில் உள்ளன. ஒரு வேளை ஒரு நெடுங்கதையாகவோ அல்லது குறு நாவலாகவோ எழுதப்பட்டிருந்தால் அது சாத்தியமாகியிருக்கும். சிறுகதையாக்க வேண்டும் என்பதால் சட்டென்று, சினிமாவில் க்ளைமேக்சில் ஒரே காட்சியில் மனம் திருந்தும் வில்லனைப் போல் மகன் மனமுடைவது கதையைக் கீழிறக்கிவிட்டது. இருந்தும் இது ஒரு நல்ல கதையே.

  1. விடிவு – காளி பிரசாத்

கதையின் முடிவில் கண்ணீர் எட்டிப்பார்த்துவிட்டது. குற்ற உணர்வுக்கு ஆளான ஒருவர் எதிர்பார்ப்பது ஒரிரு ஆறுதலான வார்த்தைகள்தான். அப்படியிருக்க பாதிக்கப்பட்டவர்களே கையைப் பிடித்துக்கொண்டு அழுவது மிகவும் நெகிழ வைக்கும் தருணம். அவ்வுணர்வு நம்மிடையே கடத்தப்படுவதில் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் விவரணைகளை ஆரம்பத்தில் குறைத்திருக்கலாம். ரவி குற்றவுணர்வுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளாவதை இன்னும் முன்னரே காட்டத் தொடங்கியிருக்கலாம். இதுவும் ஒரு நல்ல கதை.

  1. முடி– மாதவன் இளங்கோ

நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் இதைப் போல் பல கதைகள் படித்துவிட்டதால் பெரிய பாதிப்பை எதுவும் ஏற்படுத்தவில்லை. நேராக நடந்து ஒரு திருப்பத்தில் மறைந்து போகிறது. மனைவியின் நோயினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பாஸ் கதை சொல்லியையும் மற்றவர்களையும் திட்டிக்கொண்டே இருக்கிறார். கதை சொல்லிக்கு தலை முடி கொட்டுவது பிரச்சனை. இரண்டையும் இணைக்கும் இடமாக கடைசி வரியில் பாஸ்ஸின் மனைவிக்கு தலையில் முடி இல்லை என்று வருகிறது. சம்பந்தம் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை பாஸ்ஸிற்கு தலையில் முடியில்லை அதனால் முடி இருப்பவர்களைப் பார்த்தால் திட்டுகிறார் என்று இருந்திருந்தால் எதாவது சம்பந்தம் இருந்திருக்கும். வேறேனும் கதையில் இருக்கிறதா என்று கூர்ந்து பார்க்க இயலவில்லை. கதை வெளியே தள்ளிக்கொண்டே இருந்தது. ஆரம்ப நிலைக் கதையாக பார்க்கலாம்.

சங்கர் விஸ்வநாதன்

***

அன்புள்ள ஜெ

நீங்கள் வெளியிட்ட கதைகளில் அனைத்தையும் வாசித்தேன். புத்தரின் கண்ணீர் கதையின் பிரச்சினை என்ன? ஒன்று கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்கள் ஆசிரியராலேயே நேரடியாகச் சொல்லப்படுகின்றன. அவற்றில் எந்தப் புதுமையும் இல்லை. வழக்கமான டைப் கதாபாத்திரங்கள். முடிவும் டைப் முடிவு.

அந்தக்கதை எனக்கு ஆசி கந்தராஜாவின் ஒரு கதையை ஞாபகப்படுத்தியது. ஒருவர் செல்லமாக நாய் வள்ர்க்கிறார். தொழில் நிமித்தமாக அவர் கொரியா செல்கிறார். அங்கே நாய் இறைச்சி சாப்பிட நேர்கிறது. திரும்பி வந்தால் அவரது நாய்கள் அவரை பக்கமே விடவில்லை

இந்தக்கதை அந்த சிங்களச்சிப்பாய்க்கும் அவன் அம்மாவுக்கும் அல்லது தங்கைக்குமான உறவாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அவன் அவர்களுடைய டார்லிங் பாய். ஆனால் போர்முனையில் ஒரு கற்பழிப்புக்கு துணை நிற்கிறான். இதில் வருவதுபோல அவன் அப்படிச்செய்யும் வீடியோவை அவர்கள் பார்க்கவில்லை. பார்த்தபின் அவர்கள் விலகிச்செல்வதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் அவர்களுக்கு இவனுடைய முகத்தைப்பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. அவர்கள் அவனை கற்பழிப்பவனாகவே பார்க்கிறார்கள். பார்த்ததுமே நடுங்குகிறார்கள். அதைவிட அவனுக்கும் அவர்கள் வெறும் சதையாகவே தெரிகிறார்கள். இது ஒரு நல்ல கதையாக இருந்திருக்கும்

நல்லகதை தேவையான விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு மிச்சத்தை எல்லாம் வெட்டி வீசிவிடும். அது இதில் இல்லை. எல்லாமே அள்ளி வைக்கப்பட்டிருக்கிறது

மடத்துவீடு கதையின் பெரிய பிரச்சினை அந்தப்பையன்கள் ஆபாசமாகப்பேசுவதை அந்தப்பெண்கள் என்கரேஜ் செய்வதாக அதில் வருவதுதான். அப்படி அவர்கள் செய்வதாக இருந்தால் அவர்களின் பிரச்சினை, கட்டாயம் என்ன? அப்படிச்செய்தபின்னரும் அவர்களின் உள்மனசின் நோக்கம் என்ன? இதெல்லாம்தான் கதை

அந்தப்பெண்கள் இந்தப்பையன்கள் பேசுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு துணி தைத்துக்கொடுப்பது மாதிரியான வேலைகள் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் உள்ளூர அவர்கள் மனம் வெதும்புகிறார்கள் என்றாவது கதை இருந்திருக்கலாம்

விடிவு ஒரு ஆரம்பநிலைக் கதை. கதையில் ஃபோக்கல் பாய்ண்ட் இரண்டு. ஒன்று கிளைமாக்ஸ். இன்னொன்று கிளைமாக்ஸை மறைக்கும் ஒரு விஷயம். இதில் ரெண்டுமே இல்லை. கதையில் எல்லாருமே கதைசொல்லியை ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்பதற்கான முகாந்திரம் இல்லை. இதையும் நான் இப்படிச் சொல்லிப்பார்ப்பேன். உண்மையிலேயே கதைசொல்லி செய்யும் தவறுதான் அந்தப்பையன் சாகக் காரணம். அவன் குற்றவுணர்ச்சியால் குமுறிக்கொண்டிருந்தாலும் மறைக்கிறான். அது அந்த அம்மாவுக்குத் தெரிந்தாலும் மன்னிக்கிறாள். ஏனென்றால் தன் மகனின் தோழனாக அவள் அவனைப்பார்க்கிறாள்

அப்படி என்றாலும் அசோகமித்திரனின் அவனுக்குப்பிடித்தமான நட்சத்திரம் அப்பாவின் தோழர் போன்ற பல கதைகளில் அசோகமித்திரன் இதை எழுதிவிட்டார்

ஆனந்த் சீனிவாசன்

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

புத்தரின் கண்ணீர், வடிவு பற்றி எனது குறிப்புகள்:

புத்தரின் கண்ணீர்

சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின் இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள் ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது. பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது. அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.

கவனத்தை ஈர்க்கும் தொடக்கம். பிரம்மாண்டமான, வரலாறு சார்ந்த புனைவை எதிர்பார்க்கச் செய்தது.

ஆனால் நான்காவது பத்தியிலேயே கதையின் முடிச்சு பிரசுரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உச்சக்கட்டத்தை எதிர்நோக்கி நின்றிருக்க, கதை அப்படியே முடிந்து விடுகிறது. மலையேறச் சென்றவனுக்கு முடிவற்ற சமவெளியில் சிக்கிக்கொண்ட அனுபவத்தைத் தான் அளிக்கிறது புத்தரின் கண்ணீர்.

சந்தன சராசரி இளைஞனிலிருந்து புலிகளை அழிக்கத் துடிப்பவனாகவும் பின்னர் வன்மம் மிக்கவனாகவும் மாறுகிறான். இது சொல்லப்படுகிறதே தவிர ஆராயப்படவில்லை. எனவே கதையே வெறும் செய்தியாக தங்கிவிட்டது.

இருந்தாலும் மொழியும் அழகுணர்ச்சியும், சலிப்படையாமல் கதையின் கடைசி வரை செல்ல உதவியது. எழுதிப்பழகிய கை என்று நினைக்கிறேன்.

விடிவு

விடிவு கதையின் வடிவமே பெறவில்லை. நடந்ததும் நினைத்ததும் அப்படியே பதிவு செய்யப்பட்டது போல காட்சி அளிக்கின்றது. ரவியின் குற்ற உணர்வு, துயரத்திலும் சமநிலை இழக்காத தாயினூடாக அடையும் விடுவிப்பு – நல்ல சிறுகதை முளைக்க இந்த கதைக்கருவில் போதுமான வலிமை உள்ளதா என்ற ஐயம் எழுகிறது.

பல கதாப்பாத்திரங்களை நீக்கலாம் (கோதண்டராமன், சாரி, மோகன்…) எண்ண ஓட்டங்களை வடிகட்டி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க நிறைய வாய்ப்பு உள்ளது. கதையின் மையத்தை வெளிச்சத்தில் காட்ட உதவும்.

ப்ரியம்வதா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சில சிறுகதைகள் – 5

$
0
0

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.சில சிறுகதைகளை உங்கள் தளத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள்.அவைகளைவாசித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய சிறுகதை ஒன்றின் இணைப்பினை அனுப்புகிறேன்.வாசித்துப் பாருங்கள்.
நன்றி
மோனிகா மாறன்.

http://solvanam.com/?p=45857

v0_master

அன்புள்ள ஜெயமோகன்,
நலமா ?
மீண்டும் புதியவர்களை அறிமுகப் படுத்தும் உங்களுடைய நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். இத்துடன் சொல்வனத்தில் வெளியான என்னுடைய இரண்டு சிறுகதைகளை அனுப்புகிறேன். உங்களுக்கு சமயம் கிடைக்கும் போது படித்து, பிடித்தால் உங்களுடைய இணையதளத்தில் சுட்டிக் காட்டலாம்.
பருவமழை : http://solvanam.com/?p=32745
மனிதக்குணம் :  http://solvanam.com/?p=42789
நன்றி,
தருணாதித்தன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பன்னிரு படைக்களம் -செம்பதிப்பு முன்பதிவு

$
0
0

1

பன்னிரு படைக்களம் – வெண்முரசு நாவல் வரிசையில் பத்தாவது நாவல்.

992 பக்கங்கள் கொண்ட நாவல்.

இதுமகாபாரதத்தின் அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நிகழ்வு அத்தகைய ஒன்று. உண்மையில் அது மகாபாரத மூலத்தில் பல நூற்றாண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. மகாபாரதம் முன்வைக்கும் திரௌபதியின் ஆளுமைக்கும் சரி, பாண்டவர்களின் இயல்புகளுக்கும் சரி, கௌரவர்களின் பெருமைக்கும் சரி, பொருந்தாததாகவே அது உள்ளது. ஆனால் அது மிக முக்கியமான நாடகத்தருணம். எவ்வகையிலோ இந்தியாவின் ஆதாரமான உளவியல் சிக்கல் ஒன்றைக் காட்டுகிறது. பெண்மையின், தாய்மையின் பிரம்மாண்டத்தை எதிர்கொள்ளமுடியாத ஆண்மையின் எல்லைகளைக் காட்டுகிறது. ஆகவே தவிர்க்கக்கூடியதும் அல்ல. இந்த இரட்டைத்தன்மைதான் இந்நாவலின் மையம். ஆகவே இது இரட்டைமை என்னும் சரடையே பின்னிப்பின்னிச் செல்கிறது.

இந்தியப்பண்பாட்டின் இரட்டைத்தன்மை அதன் வேதங்களில், அரசியலில், பண்பாட்டுநிகழ்வுகளில் அனைத்திலும் முகம் கொள்வதை இந்நாவல் காட்டுகிறது. வெண்முரசில் அதன் முதல்நாவல் முதல் உருவாகிவந்துள்ள அடிப்படையான மோதல் இந்நாவலில் முனைகொள்கிறது. அவ்வகையில் பன்னிரு படைக்களம் திகிரி சுழன்று திரும்பும் புள்ளி. வெண்முரசின் இதுவரையிலான நாவல்களை வாசித்து, பிரதிக்குள் பின்னிச்செல்லும் உட்பிரதியை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்குரியது இதன் கூறுமுறை.இந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: நவம்பர் 30, 2016.

முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:

* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.

* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறதாவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.

* முன்பதிவு திட்டத்தில் ப்ரீ ஆர்டர், விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.

* டிசம்பர் முதல் வாரத்தில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.

* ஆசிரியர் கையெழுத்து வேண்டும் என்றால் ஆர்டர் செய்யும் போது (பெயரை)குறிப்பில் தெரியப்படுத்தவும்,

* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.

* எம் ஓ, டிடி, செக் மூலம் பண அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.

* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும்.

* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும்.

* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் nhm-shop@nhm.in என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.

*

 

ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.nhm.in/shop/Panniru_Padaikkalam_Classic_Edition.html

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24

$
0
0

[ 35 ]

பொன்னொளிர் குழந்தை வளர்ந்து ஆண்மகன் என்றாகியது. ஆயினும் அதன் உடல் நடைதிருந்தாக் குழவி போன்றே இருந்தது. அன்னை அதை பேருருவ மகவென்றே எண்ணினாள். நெஞ்சுகுழைந்து அமுதூட்டினாள். குழல் அள்ளிக்கட்டி மலர்சூட்டிக் கொஞ்சினாள். தூக்கி தோளில் வைத்து விண்ணகப் பாதைகளில் நடந்து ஆறுதிசை காட்டி மகிழ்வித்தாள். முகில் அள்ளிக் களித்தும் விண்மீன்களை வாரிச் சிதறடித்தும் விளையாடியது அது. தான் ஓர் இளைஞன் என்றே அது அறிந்திருக்கவில்லை.

ஒருநாள் விண் வழி ஒன்றில் அது ஆடிக்கொண்டிருக்கையில் அவ்வழியே காசியப முனிவர் சென்றார். அவர் அணிந்திருந்த சடைமகுடத்தைக் கண்டு நகைத்த குழந்தை விண்மீன்களை அள்ளி அவர்மேல் எறிந்தது. தன் மேல் வழிந்தொளிர்ந்து விழுந்த விண்மீன்களைக் கண்டு சினந்து திரும்பிய முனிவர் குழவியுடல் கொண்ட இளைஞனைக்கண்டு  “நீ யார்?” என்றார்.

“தேவவர்ணினியின் மைந்தன்.  விஸ்ரவஸுக்குப் பிறந்தவன். பிரம்மனின் கொடிவழிவந்த தேவன்” என்றான் குபேரன். “நன்று! பொன்னுடல் கொண்டிருக்கிறாய். அன்னையால் இன்னமும் குலவப்படுகிறாய் என்று எண்ணுகிறேன். என்று எழுந்து கைகால் கொண்டு ஆண்மகனாகப்போகிறாய்?” என்றார் காசியபர். “ஆண்மகனாவது எதற்கு?” என்றான் குபேரன்.

“இளைஞனே, குழவிப்பருவத்திற்கும் மானுடனுக்குமான வேறுபாடென்ன என்று அறிவாயா?” என்று முனிவர் கேட்டார். “அறியேன்” என்றான் குபேரன். “குழவி பிறிதொருவர் ஆட்சியின் கீழ் இருக்கிறது. கொஞ்சப்படினும் கொண்டாடப்படினும் அது அடிமையே.  மானுடன் பிறர் மேல் ஆட்சி செய்கிறான். எப்பருவத்திலாயினும் பிறர் ஆட்சிக்குக் கீழ் இருப்பவர்களுக்கு முழுவளர்ச்சி கிடையாது. எத்தகையவராய் இருப்பினும் அவர்கள் குழந்தைகளே” என்றபின் அவர் நடந்து சென்றார்.

அவ்எண்ணம் கணம்தோறும் எடைகொள்ள தன் அன்னையிடம் மீண்டு வந்த குபேரன் தனித்திருந்து நெஞ்சுலைந்தான். அன்னை அவன் உள்ளத்திலமைந்தது என்ன என்று நூறுமுறை கேட்டும் அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை.  ஏழிருநாட்கள் தன்னுள் இருண்டு அமர்ந்திருந்தபின் எழுந்து வந்து அன்னையிடம் “அன்னையே, இன்னும் எத்தனை நாள் உங்களுக்கு குழந்தையாக இருப்பேன்? என்று கேட்டான்.

“வாடாத் தளிருடல் உனக்கு வேண்டுமென்று எண்ணினேன். அதன்பொருட்டே உன்னை குழவியெனப்பெற்றேன். என்றும் நீ எனக்குக் குழவிதான்” என்றாள் அன்னை. “ஆம். உங்கள் நோக்கில் மட்டும் என்றும் குழந்தையாக இருக்கிறேன். ஆனால் இப்புடவியை நான் ஆளவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.

அன்னை திகைத்தாள். “புடவியை ஆள்வதென்பது எளிதல்ல மைந்தா, ஆள்பவன் ஒவ்வொரு நாளும் இழந்துகொண்டிருப்பவன்” என்றாள் அன்னை. “அவ்வாறென்றால் இழப்பதுதான் ஆள்வதற்கான வழியா?” என்றான் மைந்தன். அவன் என்ன புரிந்துகொள்கிறான் என்றுணராமல் “ஆம், தன்னை முற்றிழப்பவன் முற்றதிகாரத்தைப் பெறுகிறான்” என்றாள் அன்னை. “அவ்வண்ணமே” என்று எழுந்து குபேரன் தென்திசைக் கடல் நோக்கி சென்றான்.

கடல் ஆழத்தில் மூழ்கி இறங்கி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். கடல்மேல் சென்ற கலங்கள் இருண்ட ஆழத்தில் ஒளிர்ந்த பொன்னைக் கண்டன. மீன்கள் அதை அணுகி பொன்னொளி பெற்று திரும்பி வந்தன. கடல் ஆழத்தில் குடிகொள்ளும் அந்தப்பொன் தப்தகாஞ்சனம் எனப்பட்டது. அதைப்பற்றிய கனவுகள் மண்ணில் பரவின.

தவம் முதிர்ந்து கனிந்தபோது குபேரன் பொன்னலையென உருகி பரவி கடலாழத்தில் ஒளிவிட்டுக் கொண்டிருந்தான். அவன் தவம் கண்டு மூதாதை பிரம்மன் இரங்கினார். அவன் முன் தோன்றி கைதொட்டு சுட்டுவிரலில் ஒரு பொன்னிறப்பொட்டு என மேலெடுத்தார். “என்ன வேண்டும்? கேள் இளமைந்தா!” என்றார். “இப்புடவியை நான் ஆளவேண்டும், எந்தையே” என்றான் குபேரன். “நீ பொன்னுக்கு இறைவன். புவி அனைத்தும் செல்வத்தால் ஆனது, செல்வமனைத்தையும் நீயே ஆள்க!” என்றார் பிரம்மன்.

“தனியொன்றை ஆள நான் விரும்பவில்லை. புடவியின் அனைத்தையும் ஆளும் ஆற்றலையே நான் கோருகிறேன். பிறிதொன்றும் எனக்குத்தேவை…” என்றான் குபேரன்.      ”சிறுமைந்தர் போல பேசாதே. இது வாழ்வறிந்தவனின் விழைவு அன்று” என்றார் பிரம்மன். “எனக்கு திசைநான்கும் வேண்டும். வானும் மண்ணும் வேண்டும்…” என்று குபேரன் கைகளை உதறி காலால் நிலத்தை உதைத்தான். “மைந்தா புரிந்துகொள், நீ செல்வத்தின் தெய்வம். புடவியின் அனைத்தையும் ஆள செல்வத்தை அமைப்பதென்பது பேரழிவை விளைப்பது” என்றார் பிரம்மன்.

“எனக்கு வேண்டும்… எனக்கு வேண்டும்” என்று குபேரன் சிணுங்கினான். “நான்கு இழைகளால் நெய்யப்பட்டது இப்புவிவாழ்க்கை. நான்கு திசைகளென அவை அமைந்துள்ளன. தென் திசையை இறப்பு ஆள்கிறது. வடதிசையை நீ ஆள்க! இறப்பும் செல்வமும் துலாவின் இரு தட்டையும் நிகர் செய்க!” என்றார் பிரம்மன்.

“இப்புவியை ஆளும் வல்லமை பெறும் வரை இக்கடல்விட்டு நான் வெளிவருவதில்லை” என்றான் குபேரன். “மைந்தா, ஒருபோதும் நிகழாததற்கு விழைவு கொள்கிறாய்” என்று பிரம்மன் திரும்பினார். “அவ்வண்ணமெனில் இன்னும் பல்லாயிரம்கோடி வருடங்கள் இன்பதுன்பம் இருத்தல் இன்மையென அனைத்தையும் துறந்து வாழ்கிறேன் நன்று” என்றபடி அவன் நீர் புகுந்தான்.

உளம் கேளாது எட்டி அவனைப்பற்றி இழுத்து நெஞ்சோடணைத்து பிரம்மன் சொன்னார் “உன்னை அவ்வண்ணம் விட உன் முதுதந்தையின் உள்ளம் ஒப்பவில்லை. ஒன்று சொல்கிறேன். புவியை ஆளும் தேவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் அனைவரையும்விட மேலாக நீயே வழிபடப்படுவாய். எளிய மாந்தர் உன்னையே அவர்கள் என காண்பார்கள். உன் பொன்னொளியை மீறிச்செல்லும் அகவிழி கொண்டவர் மட்டுமே பிறரை காண்பார்கள். இப்புவியில் பிறந்திறந்து மாயும் பலகோடி மாந்தரில் மிகச்சிலரே நீயன்றி பிறரைக்காண்பார். நீயே இப்புடவியை ஆள்வதற்கு நிகர் அது.”

முகம் மலர்ந்த குபேரன் “ஆம், அது போதும்” என்றான். “நீ வடதிசையில் அமர்க! உன் நகர் அங்கு அமைக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார். வெற்றிக்களிப்புடன் குதித்துக் கும்மாளமிட்டபடி அன்னையிடம் ஓடிவந்தான் குபேரன். நானே அனைத்தையும் ஆள்வேன். நானே ஆள்வேன்” என்றுகூச்சலிட்டான். அவளை அள்ளித்தூக்கிச் சுழற்றி நடனமாடினான்.

குபேரன் வடக்கு திசையில் அமைத்த நகரம் அளகாபுரி என்று அழைக்கப்பட்டது. இரும்பாலானது அதன் புறக்கோட்டைவட்டம். செம்பால் ஆனது உட்கோட்டை. வெள்ளியாலான நகர்க்கோட்டைக்குள்  சந்திரனின் வெண்குளிர் ஒளி எப்போதும் நிறைந்த வானம் கவிந்திருந்தது. .வெண்பட்டு என மெல்லிய தரை அங்கிருந்தது. நகரக்கட்டடங்கள் அனைத்தும் ஆடகப்பொன்னால் ஆனவை. பொற்சுவர்கள். பொற்கட்டிகளால் ஆன படிகள். பொற்தூண்கள். பொற்பாளக்க்கதவுகள். கிளிச்சிறைப்பொன்னால் ஆனவை இல்லங்களின் உட்பகுதிகள். மாடமுகடுகள் சாதரூபப் பொன்னுருக்கிச் செய்தவை. மணிகள் மணல் பெருக்கென இறைந்து கிடந்தன.

அங்கே மரங்களும் செடிகளும் பொன்னே. மலர்களும் தளிர்களும் பொன்னே. வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும் பொன்னால்  அமைக்கப்பட்டு மரங்களில் பதிக்கப்பட்டிருந்தன. குபேரபுரியின் காவலரும் ஏவலரும் தவிர அங்கு உயிரசைவென ஏதுமில்லை. பொன்னே ஒளியென்று நிறைந்திருந்தது. பொன்னே நறுமணமாக வீசியது. பொன்னே இன்னிசையாக சூழ்ந்திருந்தது. விழிகளுக்குள் புகுந்து சித்தமாக ஆனதும் பொன்னே.

குபேரனின் கருவூலங்கள் பதினாறாயிரத்தெட்டு. அவற்றில் அருமணி முதல் அனைத்து செல்வங்களும் நிறைந்திருந்தன. அள்ளப்படுவது அக்கணமே ஊறி நிறையும் தன்மைகொண்டிருந்தது அது. அங்கு உலவியவர்களின் நிழல்களும் பொன் நிறத்தில் விழுந்தன. அங்குள்ள இருட்டும் அடர்பொன்னிறமே.

பொன் விழைந்து இறந்தவர்கள் அங்கு வந்தனர். ஊழிக்காலம் அங்கு பொன்னை உண்டு பொன்னில் படுத்து பொன்னை உயிர்த்து பொன்னில் எண்ணம்கொண்டு பொற்கனவுகளில் ஆடினர். பொன் திகட்டி பொன்னைவெறுத்து அங்கு ஒருகணமும் வாழமுடியாமலாகி கால்வைக்கக்கூசி எண்ணஎண்ண துயர்கொண்டு கண்ணீர் உதிர்த்து அழுது மேலும் ஒரு ஊழிக்காலம் அங்கே தவம் செய்தபின்னர் மண்ணில் மீண்டும் பிறந்தார்கள். அவர்களுக்கு கலையோ கவிதையோ ஊழ்கமோ முதன்மையாக இருந்தது. பொன்னை பொன்னின் பொருட்டே அவர்கள் வெறுத்தார்கள்.

குபேரனுக்கு அளகதளம் என்னும் என்னும் மணியாலான சிம்மாசனம் இருந்தது. அவன் மணிமுடி சுவர்ணஜ்வாலா எனப்பட்டது. அவன் செங்கோல் காஞ்சனகீர்த்தி. அவன் கொடி சோனஜிஹ்வா. அவன் அரியணையை பொன்னிற ஆமைகள் தாங்கியமர்ந்திருந்தன. அவன் இலச்சினை வெள்ளி உடலும் பொன்னாலான கொம்புகளும் கொண்ட வெள்ளாடு. அவன்  அரண்மனை பொன்னில் எழுந்த நுரை என பன்னிரண்டாயிரம் பொற்கும்மட்டங்களும் பொற்கோபுரங்களும் கொண்டிருந்தது. அதனுள் பதினாறாயிரத்தெட்டு பொற்தூண்களால் ஆன ஆட்சிமண்டபத்தின் நடுவே அரியணையில் கையில் பொன் நிற கதாயுதத்துடன் அமர்ந்து அவன் இப்புவியாளும் பெருவிழைவுகளை அளந்தான்.

ஒவ்வொருவர் கனவிலும் வந்து பொன் காட்டி உயிர்ப்பை எழுப்பி மறைந்தான். பொன் பொன் என விழைந்த மானுடர் துழாவித்தவித்து  அலைக்கும் கைகளுக்கு அப்பால் எட்டி எட்டிச் சென்று நகைத்தான். தெய்வங்களுக்காக புவி மானுடர் வணங்கி அள்ளியிட்ட மலர்களில் பெரும்பகுதியை அவனே பெற்றுக்கொண்டான். அவர்களின் வாழ்த்துரைகள் ஓரிரு சொல்லன்றி பிற அனைத்தும் அவனையே சென்றடைந்தன. அவர்கள் முன் திசைத்தேவர்களாக மும்முதல்வர்களாக அன்னையராக தேவியராக உருக்கொண்டு அவனே தோன்றினான். வேள்விகளில் தேவர்கள் அனைவரின் உருவமும் தானே கொண்டு வந்து அவிபெற்று மீண்டவன் அவனே.

எனினும் அருள் புரியும் கனிவு அவனில் கூடவில்லை. பொன்மேல் அமர்ந்து பொன்னென ஆகிய அவன் உள்ளம் மலர் மென்மையை அறியவே இல்லை. அடம்பிடிக்கும் குழந்தையாக, அனைத்தையும் விழைபவனாக, பெற்றுக்கொள்ளமட்டுமே எண்ணுபவனாக அவன் இருந்தான்.  அள்ளக்குறையாது பொருள் நிறைந்திருந்தபோதும் ஒரு துளியை இழந்தால் அதையே எண்ணி அவன் ஏங்கினான். ஒற்றைப்பொன்னின் ஒலியையே அவன் செவி இசையென எண்ணியது.  செல்வமென்பது செல்லக்கூடியதென்றே அவனுக்கு பொருள் பட்டது. அளிப்பதென்பது இழப்பதென்றே அவன் உணர்ந்தான்.

அவனிடமிருந்து அருள் பெற்றவர்கள் அவனை வணங்கியவர்கள் அல்ல. அவனைக் கடந்து பிற தெய்வங்களை வணங்கி அவர்களிடமிருந்து அருள் பெற்று அவனிடம் வந்வர்களே. அத்தெய்வங்களின் ஆணையை மீறமுடியாமல் மட்டுமே தன் உறுதி இறங்கி அவன் தன் கருவூலத்தை திறந்தான். அள்ளி பொருள் கொடுக்கையில் ஒவ்வொரு மணிக்கும் நாணயத்திற்கும் தன்னுள் கணக்கு வைத்தான். அளித்தவற்றை எண்ணி எண்ணி சினந்து ஏங்கினான். அளித்த பொருள் உள்ளத்துள் பெருக  பெற்றவர்களால் தான் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்படுவதாக எண்ணினான்.

[ 36 ]

ஜாதவேதனின் இல்லத்திலிருந்து கிளம்பிய அர்ஜுனன் உளம் தளர்ந்திருந்தான். வடக்கு நோக்கி செல்ல வேண்டும் என்னும் ஆணையை அவனறியாமலேயே சித்தத்திலிருந்து கால்கள் பெற்றுக்கொண்டன. வழியை அவன் விழிகள் நோக்கவில்லை. செவி அறியவில்லை. கான் வாழ்க்கையின் நெடும்பழக்கத்தால் ஊர்களுக்குள் செல்லும் வணிகப்பாதைகளைத் தவிர்த்து காட்டுக்குள் ஊடுருவிச்செல்லும் மேய்ச்சல்பாதையை அவன் தேர்ந்தான். அவனை ஊர்களும் ஆயர்மன்றுகளும் ஓசையின்றி நழுவவிட்டுக்கொண்டிருந்தன.

மூன்று நாட்கள் சென்றபின்னரே தான் செல்ல வேண்டிய இடம் என்னவென்று அவன் சித்தத்தில் வினா எழுந்தது. அதன் பின்னர் அவன் குபேரனைப்பற்றி என்ணலானான். அந்நிகழ்வுகளுக்கோர் ஒழுங்கும் இலக்கும் இருப்பதை அப்போது உணர்ந்தான். ஊர்ப்பெரியவர் ஒருவரிடம் “குபேரனுக்கான ஆலயம் எங்குள்ளது?” என்றான். “குபேரனுக்கு ஆலயம் கட்டுவதில்லை, வீரரே. அனைத்து ஆலயங்களும் குபேரனுக்குரியவையே” என்றார் அவர் நகைத்தபடி. “வேளாண்மூத்தோரிடம் குபேரனைப்பற்றி கேட்கலாமா? வணிகர்களிடம் கேளுங்கள்.”

ஊர்பாதை ஒன்றின் முனம்பில் தன் ஏவலர் எழுவருடனும் காவலர் மூவருடனும் பொதிவிலங்குகளை அவிழ்த்து நீர் அருந்த விட்டு, தோல் விரிப்பைப்பரப்பி பஞ்சுத் தலையணை இட்டு குடபண்டி எழுந்திருக்க கொழுவிய கன்னங்கள் தொங்க அரைத்துயிலில் என விழிகள் புதைந்து  படுத்திருந்த பெருவணிகன் ஒருவனை அர்ஜுனன் கண்டான். அவனை அணுகி வணங்கி “தங்கள் சொல்லிலிருந்து செல்வழிபெற வந்தவன். அயலூர் வழிப்போக்கன். என் பெயர் சரபன். வில்லறிந்த ஷத்ரியன்” என்றான். “சொல்க!” என்றான் வணிகன்.

“தாங்கள் இப்பெருநிதியை பெற்றது குபேரனின் அருளால் என்று எண்ணுகிறேன். குபேரனை காணும் வழி எது? எங்கேனும் எவ்வண்ணமேனும் தாங்கள் அவனை அறிந்துளீரா?” என்றான் அர்ஜுனன். கண்கள் சிரிப்பில் விரிய “அமர்க, வீரரே!” என்றான் பெருவணிகனாகிய மித்ரன்.  அர்ஜுனன் அமர்ந்ததும் இன்னீரும் உணவும் கொண்டுவர ஆணையிட்டான். தன்னைப்பற்றி சொன்னான்.

நான் உஜ்ஜயினியை சேர்ந்தவன், ஷத்ரியரே. இளமையில் நான் அறிந்தது வறுமையை மட்டுமே. ஒருவேளை உணவுக்காக, மழையில் கூரைக்காக, ஆண்டிற்கொருமுறை கிடைக்கும் ஆடைக்காக பிறிதொரு வணிகனின் கடையாளாக இருந்தேன். அவன் கைகளால் நாளும் அடிவாங்கினேன். அவன் உறவினர்களால் சிறுமை செய்யப்பட்டேன். நான் எனக்குரிய நற்பொழுது எழும் என்பதை நம்பினேன். ஒவ்வொரு நாளும் அதை கனவு கண்டுகொண்டிருந்தேன்.

ஒரு நாள் முன்புலரியில் ஆற்றில் இருட்டிலேயே நீராடி கடை திறப்பதற்கு முன்பே அங்கு செல்லும்பொருட்டு வந்துகொண்டிருந்தபோது தரையில் ஒரு வெள்ளி நாணயம் கிடப்பதை பார்த்தேன். இரவில் ஆற்றுநீரில் பரல்மீன் மின்னுவதுபோல அது சாலையில் கிடந்தது. அகம் படபடக்க அதை எடுத்து என் கண்ணில் வைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதை என் ஆடையில் பதுக்கியபடி அவ்வணிகனின் கடை முன் சென்று நின்றேன்.

அதைக் கொண்டு மூவேளை உணவருந்தலாம். புதிய ஆடை ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இனிய கனவுகள் ஒவ்வொன்றாக என்னுள் எழுந்தன. அதை என் ஆடைக்குள் மேலும் மேலும் பொதிந்து ஒளித்து வைத்தபடி கடையருகே ஒரு சிறு பொந்துக்குள் உடலொதுக்கி படுத்துத் துயின்றேன். என் கனவில் நான் அந்த ஒரு நாணயத்தை முடிவில்லாமல் செலவழித்துக்கொண்டே இருந்தேன். உலகையே அதைக்கொண்டு வாங்கினேன். விழித்துக்கொண்டதும் தெரிந்தது, அந்நாணயம் என்னிடம் இருப்பதுவரை மட்டுமே அந்தக்கனவுகளுக்கு பொருளுண்டு என. எந்நிலையிலும் அதை இழக்கலாகாதென்று முடிவுசெய்தேன். அதை அதைவிடப்பெரிய நாணயத்தால் மட்டுமே ஈடுவைக்கவேண்டும் என உறுதிகொண்டேன்.

அந்த நாணயம் விழுந்தகிடந்த இடம் என் நினைவில் மீண்டும் எழுந்தது. மிதித்து பதிந்துசென்ற காலடி ஒன்றில் கிடந்தது அந்த நாணயம் என்று அப்போதுதான் தெளிந்தேன். அக்காலடிகளை மீண்டும் மீண்டும் என் நினைவில் ஓட்டிக்கொண்டிருந்தேன். கனவுகளில் மீளமீளக் கண்டேன். நெடுநாட்ளுக்குப்பின் ஒரு  புலரிக்கனவில் அதைத் தொடர்ந்து சென்றபோதுதான் பொன்னிறமான இரு கால்கள்  புழுதியை மிதித்துச் செல்வதை கண்டேன். வளர்ந்தும் குழந்தையென உடல் கொண்ட ஒருவன்.

வீரரே அவனை குபேரன் என்று நான் உணர்ந்தது மேலும் நெடுங்காலம் கழித்துதான். அன்று முதல்நாள் விழித்தெழுந்ததும் நான் செய்ய வேண்டியதென்ன என்று தெரிந்தது. அந்த வெள்ளி நாணயத்தைக் கொண்டு எளிய தின்பண்டங்களை வாங்கிக்கொண்டேன். படைவீரர்கள் இடங்கள்தோறும் சென்று அவற்றை விற்றேன். அன்று மாலை என் எளிய வயிற்றுப்பசிக்கு உணவை மட்டும் எடுத்துவிட்டு எஞ்சியதை சேர்த்தேன். என் நாணயம் அப்படியே கையில் இருப்பதை கண்டேன். செல்வம் என்பது தீ போல படர்ந்து பெருகுவது என உணர்ந்தேன்.

இங்குள்ள எளிய மக்கள் செல்வமென்றால் பொருட்குவை என்று எண்ணுகிறார்கள். கருவூலம் என்கிறார்கள் அரசர்கள். தெய்வத்திடம் அது உள்ளது என்று சொல்கிறார்கள் வைதிகர்கள். அல்ல, செல்வமென்பது நம் கையில் உள்ள ஒற்றைக் காசுதான். ஒற்றைக் காசின் மடங்குகள்தான் இப்புவியிலுள்ள அனைத்துச் செல்வமும். அதை அறிந்ததே என் வெற்றி. நான் கண்ட குபேரன் அவனே.

“ஆனால் அது வணிகர்களின் குபேரன். அரசர்களின் குபேரன் அவன் அல்ல” என்றான் வழியில் அவன் சந்தித்த ஒரு சூதன். “வீரரே, சூத்திரரும் அந்தணரும் குபேரனை அறியாதவர்கள். வணிகர்களிடம் அவ்வண்ணம் தோன்றிய குபேரன் அரசர்களிடம் வேறுமுகம் காட்டியிருக்கக் கூடும் அல்லவா?” உணவுநிலையில் அவனிடம் பேசிக்கொண்டிருந்த  அர்ஜுனன் ஆம் என தலையசைத்தபடி கையிலிருந்த ஒழிந்த தொன்னையை வீசிவிட்டு எழுந்தான்.

“இங்கே கமலதலம் என்னும் சிற்றூரில் ஊர்த்தலைவன் ஒருவன் குபேரனை கண்டுவிட்டான் என்கிறார்கள். அவன் இன்று ஒரு சிற்றரசனாக வளர்ந்துவிட்டிருக்கிறான். அவன் வழித்தோன்றல்கள் அரசனும் ஆகக்கூடும்” என்றான் சூதன். அவனிடம் விடைபெற்று கிளம்பிய அர்ஜுனன் கமலதலம் என்னும் ஊர் நடுவே புதிதாக எழுந்துவந்த ஏழுநிலை மாளிகை ஒன்றில் இருந்த ஊர்த்தலைவனை அணுகினான். அவன் ஷத்ரியன் என்று அறிந்ததும்  உள்ளே செல்ல  ஒப்பு அளித்தனர்.

வெள்ளியாலான பெரிய பீடத்தில் அமர்ந்திருந்த வியாஹ்ரதந்தன் என்னும் அந்த ஊர்த்தலைவன் அவனை வரவேற்று அமரச்செய்தான். “என்னிடம் நீங்கள் காவல்பணியாற்ற விழைந்தால் மகிழ்வேன், வீரரே. நான் வில்லவர்களையே நாடுகிறேன். நீங்கள் பெருவில்லவர் என்பதற்கு உங்கள் கைகளே சான்று” என்றான். “நான் பயணமொன்றில் இருக்கிறேன். நீங்கள் குபேரனைப் பார்த்தவர் என்றறிகிறேன். அவனை நானும் காணவிழைகிறேன்” என்றான் அர்ஜுனன்.

“நான் குபேரனை முழுமையாக பார்த்ததில்லை, வீரரே” என்றான் வியாஹ்ரதந்தன். “இச்சிற்றூரில் பிறரைப் போலவே எளிய வாழ்வை வாழ்ந்தேன். ஏவலரை அனுப்பி ஒவ்வொரு நாளும் இம்மலையிலிருந்து மலைப்பொருட்களைத் திரட்டி காவலர் துணையுடன் அருகிருக்கும் சந்தைகளுக்குக் கொண்டுசென்று விற்பதே என் தொழில். ஒருமுறை என் கையில் இருந்த கொம்பரக்குடன் சந்தையில் அமர்ந்திருந்தேன். அதை விற்று பணம் கொண்டு வந்தால் ஒழிய அன்று என் சிற்றூரே பட்டினியாகிவிடும் என்னும் நிலை. பட்டும் ஆடையும் அணிந்து என்னை அணுகிய வணிகனொருவன் என் கொம்பரக்குக்கு மூன்று பணம் அளிப்பதாக சொன்னான். என் தேவையும் அதுதான். பொருளைத் தருவதாக தலையசைக்கப்போகும் கணம் அவன் தலைக்கு மேல் ஒரு பொன்னிறப் பறவை கூவியபடி பறந்து செல்வதை கண்டேன்.”

அதற்கென நான் விழி தூக்கியபோது அவ்வணிகனின் கண்களை கண்டேன். அவன் நெஞ்சில் எண்ணியது ஐந்து பணம், சொல்லென எடுத்தது நான்கு பணம், நாவில் ஒலித்தது மூன்று பணம் என்று உணர்ந்தேன். “பத்து பணத்திற்கு ஒரு நாணயம் குறையாது” என்றேன். திகைத்து அவன் புருவம் விலக்கினான். “இதற்கா? இது என்ன பொன்னா வெள்ளியா?” என்றான். “கொம்பரக்கு. என் பொருளுக்கான மதிப்பை நான் அறிவேன்” என்றேன். ஏளன நகைப்புடன் கடந்து சென்றான். பிறிதொருவன் என்னை அணுகி “பத்து பணத்திற்கு கொம்பரக்கு என்றால்  உனக்கு என்ன விலை சொல்வாய், மூடா?” என்றான். “இது பத்து பணம் மட்டுமே. என் மதிப்பை நான் அறிவேன்” என்றேன். என் விழிகளில் இருந்த உறுதியைக் கண்டு திகைத்து கடந்துசென்றான்.

நான் என்ன சொல்கிறேன் என என் ஏவலருக்கு புரியவில்லை. என் முன் இருந்த பொருளை கூர்ந்து நோக்கினேன். பத்து பணம் பத்து பணம் என்று அதை நோக்கி மீளமீள சொல்லிக் கொண்டேன். ஆம் இதன் மதிப்பு பத்து பணம். இதை நான் முடிவுசெய்கிறேன், நானே முடிவுசெய்வேன். பிறிதொருவன் கேட்டபோது என் குரலில் இருந்த உறுதியைக் கண்டு “ஏழு பணம், என்ன சொல்கிறாய்?” என்றான். “பத்து பணம். சற்றும் குறையாது” என்றேன்.

அந்திப்பொழுது வந்து கொண்டிருந்தது. என்னுடன் வந்த  அனைவரும் சோர்ந்துவிட்டனர். என் உறுதியை அவர்கள் தங்களுக்குள் வசைபாடினர். சில பெண்கள் அழவும் தொடங்கிவிட்டனர். இளமைந்தர் பசித்தழுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். நான் நடுங்கும் கைகளுடன் குளிரில் உடல் குறுக்கி அங்கு அமர்ந்திருந்தேன்.

பிறிதொருவன்  அணுகி “எட்டு பணம். கொம்பரக்கை கொடுத்துவிடு. இவ்விலை இதுவரை இங்கு அளிக்கப்பட்டதில்லை” என்றான். “பத்து பணம் அன்றி விற்பதில்லை. பொருளுடன் திரும்ப என் ஊருக்குச் செல்லவும் தயக்கமில்லை” என்றேன். மூன்று பணம் என முதலில் விலை சொன்ன அவ்வணிகனே வந்தான். “ஒரு பணம் குறைத்து ஒன்பது” என்றான்.  அக்கணமே “இதோ, உனக்காக” என்று அவனிடம் அப்பொருளைக் கொடுத்து பணம் பெற்று திரும்பினேன்.

அன்றைய செலவுக்கான மூன்று பணத்தை எடுத்து வைத்த பின் எஞ்சிய ஆறு பணத்தை கையில் வைத்து நோக்கியபடி என் ஊர் வரை நடந்தேன். நான் அடைந்தது என்ன என்று என்னிடமே கேட்டுக் கொண்டேன். மானுடனின் விழைவை! பேருருக் கொண்டு இப்புவியை மூடியிருப்பது அதுதான். குபேரனின் பொன்னொளிர் தோற்றம் என்பது அதுவே. நான் வணிகம் செய்யவேண்டியது அவ்விழைவுடன்தான். என் கையில் இருப்பதென்ன? இது நான் எனக்களித்த விலை. என் விலையை பிறர் முடிவு செய்யலாகாது. ஆம் அதுவே குபேரனின் ஆணை. வீரரே, அந்த இரு அறிதல்களிலிருந்து எழுந்ததே இப்பெருஞ்செல்வம்.

“குபேரனை முழுமையாகக் கண்ட எவரேனும் உள்ளனரா என்று நானறியேன். செல்வத்தை அடைந்தவர் அனைவரும் குபேரனை தங்கள் சிற்றறிவுகொண்டு சற்றே கண்டறிந்தவர்களே” என்றான் வியாஹ்ரதந்தன். “வீரரே, உங்கள் மேல் பொன்மழை பெய்ய அந்தச் சிறுதோற்றமே போதும்.” அர்ஜுனன்   “நான் விழைவது செல்வத்தை அல்ல. செல்வத்தின் இறைவனை மட்டுமே” என்றபடி எழுந்துகொண்டான்.

தொடர்புடைய பதிவுகள்

கெய்ஷா -கடிதங்கள்

$
0
0

17

அன்புள்ள ஜெமோ,

 

 

கெய்ஷா சிறுகதை சிறப்பு. சோழர்கள் காலத்திலும் இது போன்ற விஷயங்கள் உண்டென்று படித்த ஞாபகம். (அரசனுக்கு அணுக்கி , அரசிக்கு அணுக்கன்). ஸ்பீல்பெர்க் தயாரித்த  “the memoirs of geisha” எனும் திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் பார்த்ததால் , உங்களின் கெய்ஷா சிறுகதையை சிரமமின்றி படிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது.

 

காமத்தின் அடித்தளத்தில் கட்டப்படும் காதல் மாளிகைகளின்  வாசல்கள், கோபுரங்கள் , சன்னல்கள், கதவுகள், சுவற்றில் வேலைப்பாடுகள் என்று நுணுக்கமாக ரசித்துவிட்டு , பிறகு அந்த மாளிகைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு காமத்தின் தரையில் நின்றுகொண்டு உரையாடினால் இந்த சிறுகதை போல் இருக்குமோ ?

 

ஒரு கட்டத்தில் யாருக்கு யார் கெய்ஷா என்பது போல் , ஒரு விறுவிறுப்பான விளையாட்டின் இறுதிசுற்றுக்கு அழைத்து சென்றுவிட்டு, வென்றது யார் என்று வாசகர்களிடம் விட்டு விட்டீர்கள். மிக அருமை.

 

முதலில் ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ , இரண்டாவதாக ‘கெய்ஷா’.  ஜப்பானின் கலாச்சாரம் சார்ந்த இன்னும் ஒரு பத்து சிறுகதைகளாவது நீங்கள் எழுத வேண்டும். ஒரு தொகுதியாக வெளியிட வேண்டும்..

 

நன்றி.

 

அன்புடன்,

ராஜா,

சென்னை.

 

 

Hi

Short stor

 

கெய்ஷா சிறுகதைy is the worst ever and that didn’t expect this from you Mr. Mohan.

All these days I  misunderstanding a madman as being an enlightened man.
You addressed that Japanese girl as a small boy and that  the Indian men are more inclined towards Gay relationship.
Indian men are really afraid of a real woman .
The idea of Physical immortality will appear more to woman than to men.

 

Regards,
Sheela

 

அன்புள்ள திரு ஜெயமோகன்,

நேற்று உங்களுடைய சிறுகதை கெய்ஷா படித்தேன். உண்மையில் அது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான கதையாய் இருக்கும். அல்லது செயற்கையான கதையாய் இருக்கும் என்கிற உணர்வில்தான் படித்தேன்.

ஆனால், கெய்ஷா மற்றும் கதைநாயகனின் உரையாடலில் என்னுடைய எண்ணத்தின் நிறம் மாறியது. ஒரு அற்புதமான கதையை படிக்கிறோம் என்கிற உணர்வு என்னுள் வளர்ந்தது.

இயற்கையான மென்மையான மேன்மையான உரையாடல் என்னை வியக்கச் செய்து கொண்டே இருந்தது.

இறுதியில் அந்தக் கதை எப்படி முடிய வேண்டுமோ அப்படித்தான் முடிந்திருக்கிறது. ஆனால், அதை யாரும் எதிர்பார்க்க முடியாது. அந்த முடிவு மிகவும் வியப்பளிப்பதாய், வீரியமானதாய் இருக்கிறது. அந்த முடிவு கதைக்குள் ஏராளமான மலர்களை பூத்துக் குலுங்கச் செய்கிறது.

கதையின் விஷயங்களை விவரித்துப் பேச தயக்கமாய் இருக்கிறது. சுருதி சேர்ந்திருக்கும் ஒரு இசையின் குறுக்கே நம் குரலை வெளியிடுவது அது புகழ்வதற்காகவே என்றாலும் அபஸ்வரமாக அல்லவா போய்விடும்?

உங்கள் உடலில் வளர்ந்திருக்கும் வண்ணச் சிறகுகள் என் கண்களுக்குத் தெரிகின்றன. நீங்கள் பறக்கப்போகிறீர்கள் என்பதை நான் கொண்டாட வேண்டும் போல இருக்கிறது.

நேற்று இரவு அலுவலகம் முடிந்து திரும்பும்போது இந்தக் கதையைப் படித்தேன். அதன்பின் அவ்வளவு நெருக்கமாக உங்களை உணர்கிறேன்.

அன்புடன்,

குமாரநந்தன்.

 

 

அன்புள்ள ஜெ

 

கெய்ஷா சிறுகதை வாசித்தேன். இத்தகைய கதை எப்படி முடியும் எதைச்சொல்லும் என்று ஒரு கணக்கு நம் வாசக அனுபவத்தில் இருந்து வந்துவிடுகிறது. அந்தப்பெண் ஏமாற்றுக்காரியா இல்லையா, இவன் அவளை ஏமாற்றுகிறானா இல்லையா என்பது ஒரு சரடு. இந்தக்கதை செக்ஸ் பற்றி எதையாவது சொல்லப்போகிறதா என்பது இன்னொன்று

 

கதை அப்பட்டமாகப்பேசிச் செல்கிறது. உண்மையில் செக்ஸின் அர்த்தம் என்ன, எதுவரை அதுபோகும் என்பதெல்லாம் பேசப்படுகிறது. செக்ஸைப்பற்றி பேசிப்பேசிச்சென்று மனிதனுக்குத்தேவை உண்மை அன்பு மட்டும்தான், பெண்ணிடமிருந்து மனிதன் எதிர்பார்ப்பது அதுதான் என்று முடிகிறது. சொல்லப்போனால் அன்புதான் செக்ஸை தீவிரமாக ஆக்குகிறது. அன்புதான் செக்ஸில் இருக்கும் ஒரே ஒரு டெக்னிக்

 

ஆனால் அதை கெய்ஷா வழங்கமுடியாது. அவள் அதை அவனுக்கு உணர்த்திவிட்டு நீ தேடி அடையவேண்டியது இதுதான் முட்டாளே என்று சொல்லிவிட்டுச் செல்கிறாள். அவள் ஒரு தேவதை. வானத்திலிருந்து வந்தவள். அவள் இங்கே இவனுக்குத்துணைவியாக இருக்கமுடியது. அவள் இதேபோல அனைவருக்கும் அவருக்குத்தேவையான ஒன்றை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பாள்

 

சபா குழந்தைச்சாமி

 

 

கெய்ஷா சிறுகதை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் -கடிதங்கள்4

$
0
0

images

 

ஆசானே

 

எதுவாக இருந்தாலும் பேசித்தீத்துக்கலாம். கோபம்லாம் இருக்கும். அதுக்காக ஒரு லிமிட் தாண்டிப்போயிரப்பிடாது கேட்டேளா? இதுக்குமேலும் அமெச்சூர் கதை போட்டு சாவடிசீங்கன்னா… வேண்டாம் . சொல்லீட்டேன்

 

செல்வா

 

அன்புள்ள செல்வா

சரி நிப்பாட்டியாச்சு

ஆறுதல் அடையுங்கள்

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

இந்தத் தளத்தில் நீங்கள் சுட்டிகொடுக்கும் கதைகள் எப்படியோ உங்களுக்குப் பிடித்தமானவையாகவே இருக்கும். இப்போது வரும் கதைகள் அப்படித்தெரியவில்லை. ஓரிரு கதைகள் மட்டும்தான் படிக்கும்படி உள்ளன. பலகதைகள் ஒழுங்காகப் பத்திகூட பிரித்துப்பிரசுரிக்கப்படவில்லை. இவற்றை ஏன் பிரசுரிக்கிறீர்கள் என அறிய ஆவல்

 

ஜெயச்சந்திரன் ஆர்

 

 

அன்புள்ள ஜெயச்சந்திரன்

 

நான் படித்துப்பிரசுரிக்கவில்லை. இவை எனக்குச் சுட்டி அளிக்கப்பட்டவை. என் கருத்துக்களை மன்றாடி கேட்டுக்கொள்வார்கள். ஆனால் 90 சதவீதம் எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவற்றை நினைவில் வைத்திருந்து எங்கோ ஒருநாள் என்னிடம் கசப்பாக வெளிக்காட்டுவார்கள். என் நண்பர்களாக இருந்து வெளியே சென்று வசைபாடுபவர்கள் பலரிடம் இதைக் கண்டுகொண்டிருக்கிறேன் . ஆகவே சரி வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என இக்கதைகளை சுட்டி கொடுக்கிறேன். ஏற்கனவே பிரசுரமானவற்றுக்கு மட்டுமே சுட்டி. நானே எதையும் பிரசுரிக்கவில்லை.

 

சிறுகதைகளை எழுத ஆரம்பிக்கும்போது எல்லாருக்குமே ஒரு அமெச்சூர்த்தனம் இருக்கத்தான் செய்யும். நடை தெளிந்திருக்காது. கரு சாதாரணமாக இருக்கும். கதைக்கரு தேவையற்ற சித்தரிப்புகளுக்குள் சிக்கி இருக்கும். கதைக்கரு தெளிவாக முன்னெழும் அளவுக்கு சித்தரிப்பு இருக்காது. அவற்றை வாசகர்கள் சுட்டச்சுட்டத்தான் தெளிவு வரும். ஆனால் வாசக எதிர்வினைகளே இல்லாத சூழலில் அது சாத்தியமல்ல.

 

இதன்மூலம் அந்தத்தெளிவு கிடைத்தால் நல்லதுதானே? இந்த வரிசையில் கதை வெளிவந்த சுமார் 12 பேர் என்னுடைய எதிர்கால எதிரிகள் என தெரிந்தும் இதைச்செய்தது இந்நோக்கத்தால்தான்

 

ஜெ

 

 

இனிய ஜெயம்,

ருசி வாசித்தேன். நல்ல கதை.  கதை சொல்லியின்ன்  உணர்ச்சிகளுடன்  நம்மை  இயந்து பயணிக்க வைக்கும்  மொழியும் வடிவும்  நன்றாகவே கூடி வந்திருக்கிறது. இது நியாயமா  எனக் கேட்கக் கிளம்பும் ஒருவன், தனது அற்பத்தனத்தை ”கண்டு கொண்டு”  நியாயம் கேட்கும் தகுதியை இழக்கும் தருணத்தைக் கண்டு கொண்டு ஊர் திரும்ப முடிவு செய்யும் தருணம், நுட்பமாகவும் அழகாகவும் திரண்டு வந்திருக்கிறது.
முன்பு ஒரு பழைய சிவாஜி படம் பார்த்தேன். சிவாஜி மல்டி மில்லினியர்.  ஒரே மகள். அவளை காதலுக்கு தொலைத்தவர்.  ஒரு சின்ன மகளை பேத்தி போல வளர்க்கிறார்.  அவளுக்கு மூளையில் எதோ  பின்நவீனத்துவ கலாட்டா ஆகி சீரியஸாக கிடக்கிறாள். பார்த்து விட்டு வெளியே வரும் சிவாஜி ஒரு கோன்ஐஸுக்கு ஆர்டர்  தருவார்.
சமீபத்தில் நான் மிக மனம் சோர்ந்து அமர்ந்திருந்த தருணம் , நண்பர்  வா முதல்ல ஏதாவது சாப்பிடுவோம் , தெம்போட இருந்தாத்தான் சோகத்த சுமக்க முடியும்  என்று சொல்லி  அவர் ஆர்டர் செய்தது  குலோப் ஜாமூன்.
சிவாத்மா சொன்னார் என் தோழி ஒருத்தி இருக்கா  மூட் ட்ராப் ஆகிடிச்சுன்னா சட்டுன்னு ஏதாவது ஹோட்டல் போய் ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்ட ஆரம்பிச்சிடுவா. பாக்க பயமா கூட இருக்கும் அப்டி சாப்பிடுவா  என்றார்.
உண்மையில் இந்த மனச் சோர்வுக்கும், ருசிக்கும் ஏதேனும்  ஏதேனும் தொடர்பு உண்டா என அறியேன், ஆனால் அதை இக் கதையில் வாசிக்கையில்  இலக்கியம் பேசக் கூடிய உண்மை  அது  எனத் தோன்றியது.
நல்ல கதை. கொஞ்சமாக எதோ குறைகிறது. அது என்ன என சொல்லத் தெரியவில்லை.

 

கடலூர் சீனு

 

அன்புள்ள சீனு

 

ஏதோ குறைகிறது, என்னவென்று சொல்லத்தெரியவில்லை, பொதுவாச்சொன்னா போன்ற வரிகள் விமர்சனமே அல்ல. அதேபோல சினிமாத்தனமா இருக்கு, செண்டிமெண்டா இருக்கு, இன்னும் சரியா வரலை, இதேமாதிரி படிச்சிருக்கேன் , முடிவ ஊகிச்சேன் போன்ற வரிகளும் விமர்சனம் அல்ல.

 

இவை கமெண்டுகள். இலக்கியமனநிலைக்கு எதிரானவை. ஏன் இப்படி இருக்கிறது, என்ன செய்திருக்கலாம் என்பதை மட்டுமே வாசகன் ஆசிரியனிடம் சொல்லவேண்டும்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சில சிறுகதைகள்–6

$
0
0
download (1)
அன்புள்ள ஜெயமோகன்,
இன்று சிறுகதைகள் எழுதுபவர்களின் கதைகள் உங்கள் தளத்தில் விவாதிக்கப்படுவதையும் விரிவாக உரையாடப்படுவதையும் கண்டேன். என்னுடைய சிறுகதை ஒன்றின் சுட்டியை இணைத்திருக்கிறேன். இக்கதை எவ்வகையாக விவாதிக்கப்படுகின்றது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்

 

 

 

அன்புள்ள ஜெ,
இத்துடன் என் அறிவியல் சிறுகதையின் சுட்டியை இணைத்துள்ளேன். தங்கள் மேன்மையான கருத்தை  தெரியப்படுத்துங்கள்.
நன்றி
சத்திஷ்

 

ஜெ

 

இன்னொரு கதை, உங்கள் பார்வைக்காக

 

கலைச்செல்வி | பதாகை

கலைச்செல்வி
[இத்துடன் கதைகளுக்கான சுட்டிகொடுப்பது முற்றும்.  எவரும் மேலும்  அனுப்பவேண்டியதில்லை]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25

$
0
0

[ 37 ]

தன் வடபுலப்பயணத்தில் பெருஞ்செல்வர் பன்னிருவரை அர்ஜுனன் சென்று கண்டான். ஒவ்வொருவரும் குபேரனை உணர்ந்திருந்தனர். அவனை குறைபடக் கண்டிருந்தனர். முழுமையாக எவரும் கண்டிருக்கவில்லை.  “முழுமையாக அவன் தன்னுருவை திருமகளுக்கு மட்டுமே காட்டுவான் என்கிறார்கள். பிறர் அவன் முழுவுருவைக்காணும் திறனற்ற உள்ளம் கொண்டவர்கள். செல்வம் சித்தம் மயக்குவது. பெருஞ்செல்வம் பித்தாக்குவது” என்றார் முதிய வைதிகர் ஒருவர். “செல்வமென குபேரன் கொண்டிருப்பதெல்லாம் திருமகளின் வலக்கையின் மலர்வரிகளுக்குள் அடங்கும்” என்றார்.

குபேரனின் ஒரு நிழலசைவைக் கண்டவர்கூட அக்கணத்திலிருந்து  தொடங்கி நுரை பெருகுவதுபோல் பெருகி  பேருருவம் கொண்டு நின்றிருந்தனர். ஒவ்வொரு கணமும் அவனையே எண்ணிக்கொண்டிருந்தனர். வடதிசையில் அவன் பெருநகர் உள்ளது என்பதற்கப்பால் அவர் எவரும் அவனை கண்டதில்லை.  பசித்து துயில்பவனின் கனவில் உணவுக்குவையென, இளம் கன்னியின் கனவில் பொற்குவியலென, இல்லறத்தான் கனவில் ஏழடுக்கு மாளிகையென, அரசனின் கனவில் நிறைகருவூலம் என தன்னை உருமாற்றிக் காட்டிக்கொண்டே இருக்கும் மாயன் அவன் என்றனர்.

தேடி அலைந்து சலித்து வடதிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள் ஒரு சிற்றோடைக்கரையில் தன் கையால் மூங்கில் வெட்டிக் கட்டிய சிறு குடிலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த முதிய அந்தணரை அவன் கண்டான். அவன் களைத்திருந்தான். இரவு தங்குவதற்குரிய மரத்தடியை தேடிக்கொண்டிருந்தான். அக்குடில் அவனை முகம் மலரச்செய்தது. அருகணைந்து குடில்முன் அமர்ந்து மாலைவெயிலணைவதை நோக்கி நின்றிருந்த அவருக்கு வணக்கம் சொன்னான்.  “வருக!” என்று அவர் புன்னகையுடன் அழைத்தார்.

“களைத்துளேன். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்த வழிப்போக்கன். போர்க்குலத்தான்” என்று அர்ஜுனன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். “இன்று இரவுணவுக்கென அமுது சமைத்துள்ளேன். அதை இரண்டென பகுத்து நாம் உண்போம். விருந்தால் அது இனிமைகொள்ளவேண்டும் என இன்றைய நெறிவகுத்தோன் எனக்கு அருளியிருக்கிறான்” என்று சொல்லி அந்தணர் தன் இல்லத்திற்குள் சென்று உணவை கொண்டுவந்து அவன் முன் வைத்தார். அதைப்பகிர்ந்து இருவரும் உண்டனர்.

“என் பெயர் சௌம்யன். இக்குடிலில் தனிமையில் வேதம் ஓதி ஊழ்கம் பயின்று வாழ்கிறேன்” என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நிலவு எழும் நாள் இன்று. காடு கனவு கொள்ளத்தொடங்கும் பொழுது. சொல்லாடிக் களித்திருக்க ஓர் அயலவன் வந்திருப்பது நல்லூழே” என்றார் அந்தணர். “வராதிருந்தால்….?” என்று அர்ஜுனன் குறும்பாகக் கேட்டான்.  “தனிமை அதற்கிணையாகவே இனிது” என்றார் அந்தணர் நகைத்தபடி.

உணவுண்டபின் குடில் முற்றத்தில் ஈச்சை ஓலைப்பாயை விரித்து நிலவு நோக்கி இருவரும் படுத்திருந்தனர். “தாங்கள் இங்கு வேறு என்ன செய்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன்.  “ஒன்றும் செய்வதில்லை. உவகை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கையைத் தேடி இங்கு வந்தேன். இவ்வோடைக்கரையில் இக்குறுங்காட்டைக் கண்டதும் இதுவே அவ்விடம் என்று தெளிந்து இங்கு குடில்கட்டி தங்கினேன். இங்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகின்றன. ஒருநாள் சேர்த்ததை மறுநாளுக்கு கொண்டு செல்வதில்லை. உணவும் நினைவும்” என்றார் சௌம்யர்.

KIRATHAM_EPI_25

“ஒவ்வொரு நாளும் அன்று புதிதெனப் பிறந்தெழுகிறேன். என்னுடன் சூரியனும் எழுகிறான். விலங்குகள் பறவைகள் புட்கள் பூச்சிகள் ஒவ்வொன்றும் என்னைப்போல் பிறவிகொள்கின்றன. எங்களுக்குரிய அனைத்தும் இக்காட்டில் நிறைந்துள்ளன. நாளில் கொண்ட எதுவும் நினைவில் எஞ்சாது இங்கு வந்து படுக்கிறேன். தலைக்கு மேல் விண்மீன்களென விரிந்துள்ளது பெருவெளி. என் கையில் எதுவும் இல்லை என்பதனால் அவ்விரிவு என்னுடையதாகிறது” என்றார்.

அர்ஜுனன் நீள்மூச்சுடன்  “ஆம், விடுபடுவதே பேரின்பம். அதை என்னால் உணரமுடிகிறது” என்றான். “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று சௌம்யர் கேட்டார்.  “குபேரனைத்தேடி” என்று அர்ஜுனன் சொன்னான். தன் கதையை சொல்லிவிட்டு  ”அந்தணரே, தாங்கள் குபேரனை முழுதுறக் கண்ட எவரையேனும் அறிந்துளீரா?” என்றான்.  சௌம்யர் இயல்பாக “அவனை முழு வடிவில் நான் கண்டுள்ளேன்” என்றார்.

அர்ஜுனன் திகைப்புடன் “தாங்களா…?” என்றான். “ஆம். அயோத்திநாட்டில்  அஸ்வினிபுரம் என்னும் நகரில் வாழ்ந்திருந்த பெருவைதிகனின் மைந்தனாக நான் பிறந்தேன். எந்தை வேள்விச்செயல் தேர்ந்தவர். அரசர்களுக்கு உலகியல்நலன் நாடும் பெருவேள்விகளை நிகழ்த்தி வைப்பவர். ஆநிரையும் பொற்கிழிகளும் கூலக்குவைகளுமாக இல்லம்திரும்பும் தந்தையையே நான் இளமைமுதல் கண்டு வளர்ந்தேன். நான் பிறந்தது செல்வத்தின் நடுவே. பொன்னளைந்து வளர்ந்தேன். பொன்னை அறிந்தவன் பொன்னை மட்டுமே அறிந்திருப்பான். பிற அனைத்தும் பொன்னாலேயே அவனுக்குப் பொருள்படும். நானும் அவ்வண்ணமே இருந்தேன்.”

வேதம் என்பது சொல்லுக்கு நூறு பொன்னின் எடை கொண்டது என்று எந்தை என்னிடம் சொன்னார். அதுவே எனை வேதம் கற்கத்தூண்டியது. கற்கக் கற்க வேதம் விரிந்தது. பொன்குவிகிறது என்றே என் உள்ளம் மகிழ்ந்தது. பொன்னென்பதனால் நான் ஒருதுளியையும் வீணாக்கவில்லை. பிறிதெதையும் பொருட்படுத்தவுமில்லை. இளமை முதிர்வதற்குள் நான் வேதம் முழுதறிந்து நால்வகைக்கூற்றும் தேர்ந்தவனாக ஆனேன்.

எந்தை மறைந்தபின் நானும் என் வைதிகர்குலத்தின் முதல் வைதிகனானேன். வேள்விச் சாலைகளிலிருந்து வேள்விச்சாலைகளுக்கு சென்றேன். ஈட்டிக் குவித்து என் இல்லத்தை பொன்னால் நிறைத்து வைத்திருந்தேன். பொன் அளையும் நாகொண்டவன் என ஆணவம் கொண்டிருந்தேன். என்னைக் காணவருபவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு, பொன்கறக்கும் பசுவே என் வேதம் என்று.

அன்றொரு நாள் பெருவேள்வி ஒன்றில் முதன்மை தலைவனாக அமர்ந்தேன். வேதச் சொல்லெடுத்து எரியோம்பிக்கொண்டிருக்கையில் அதில் ஒரு சொல் என் நாவில் எழவில்லை என்பதை அறிந்தேன். உடனோதியவர்கள் அச்சொல்லை ஓதி முன் சென்றுவிட்டிருந்தனர். நான் அச்சொல்லையே மீண்டும் அச்சத்துடன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். அவ்வரி வந்தது, அச்சொல் என் நாவிலெழாது நழுவிச்சென்றது. என் உளவியளையாட்டா அது? நான் அஞ்சுவதனால் அப்படி நிகழ்கிறதா? நான் அதை கூர்வதனால் உள்ளம் என்னுடன் ஆடி மாயம் காட்டுகிறதா?

அவ்வரி வந்தது, அச்சொல்லுக்கு முந்தைய சொல் துல்லியமான ஓசையுடன் நிகழ்ந்தது. அச்சொல் இல்லையென நடித்து அதற்கு மறுசொல் என் நாவில் ஒலித்துச்சென்றது. அந்தவேள்வியில் நூறுமுறை அச்சொல் வந்தது, ஒருமுறைகூட என் நாவில் அது அமரவில்லை. வேள்விமுடிந்து எழுந்து சென்றபோது நான் பித்தனைப்போலிருந்தேன். பிறர் என் உள்ளம் கொண்ட குழப்பத்தை அறியவில்லை. நான் மட்டுமே அறிந்த ஒன்று அது என்பது முதலில் என்னை ஆறுதல்கொள்ளச் செய்தது. பின்னர் அதுவே என்னை பதற்றத்துக்குள்ளாக்கியது.

அச்சொல்லை மட்டுமே என் சித்தம் தொட்டு அளைந்துகொண்டிருந்தது. அச்சொல்லை என் உள்ளத்தால் பற்ற முடிந்தது. புரட்டிப்புரட்டி அதன் அத்தனை ஒலியமைவையும் பொருளமைவையும் காணமுடிந்தது. வேண்டுமென்றே அதை சொல்ல முயன்றேன். அச்சொல் மட்டும் நாவில் வந்தது. வேதவரியென சொல்கையில் மட்டும் அது நாவில் நிகழவில்லை.

மிகமிக அஞ்சிவிட்டேன். அது ஏதோ தேவனின் தீச்சொல். அல்லது உளநோயின் தொடக்கம். அதை எண்ணவேண்டாம், அதை விட்டு விலகிச்செல்வதே நன்று. ஆனால் விலகமுயலும்தோறும் அணுகினேன். அச்சொல்லை அன்றி வேறெதையும் எண்ணாதவனாக ஆனேன். அச்சொல் அறியாப்பேய்த்தெய்வம் போல அச்சமூட்டும் பேருருக்கொண்டு என்னைச்சூழ்ந்தது. இரவுகளில் துயிலிழந்தேன். பகலில் முற்றிலும் தனித்திருந்தேன்.

என் விழிகள் மாறுபட்டன. முகம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. என் மனையாட்டி என்னிடம் மீளமீளக் கேட்டாள் “என்ன ஆயிற்று? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? எதையாவது அஞ்சுகிறீர்களா? எதையேனும் எண்ணி வருந்துகிறீர்களா?” ஓசையற்ற அசைவாக என் உதடுகளில் அச்சொல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. எனக்கு பீடைகூடிவிட்டது என்றனர் முதியவர். உள்ளச்சிதைவு என்றனர் தோழர்.  என் மனைவி கதறி அழுதபடி “என்ன ஆயிற்று உங்களுக்கு? மீண்டுவாருங்கள். நம் குழந்தைகளை என்ணுங்கள்” என்று என்னை உலுக்கினாள்.

என் செல்வம் துணைநின்றது. முதுவைதிகர் எழுவர் என்னை நடுவே இருத்தி வேள்விசெய்து  அவியும் பலியும் அளித்து என்னில் கூடிய தெய்வத்தை விரட்டமுயன்றனர். புறக்காட்டிலிருந்து பூசகனை வரவழைத்து வெறியாட்டு நிகழ்த்தினர். குறவப்பூசகன் வந்து தீயாட்டும் தெய்யாட்டும் நிகழ்த்தினான். மருத்துவர் பலர் வந்து  நெல்லிக்காய் தளமும் வில்வதளமும் வைத்து என் சித்தத்தை குளிர்விக்க முயன்றனர். ஒவ்வொன்றும் பிறிதெங்கோ நிகழ அச்சொல்லில் அமைந்திருந்தது என் சித்தம்.

நான் என்னை நோக்கிக்கொண்டிருந்தேன். கற்ற அனைத்தும் முழுமையாக நினைவிலிருந்தன. அவ்வொரு சொல் மட்டும்தான் நாவை அறியவில்லை. ஏன்? ஏன்? ஏன்? யார் விளையாடுவது என்னுடன்? அது ஓர் அறைகூவல். ஒரு இளிவரல்.  என் முன் அமர்ந்து முதிய நிமித்திகர் ஒருவர் சோழிபரப்பி வினாக்களம் அமைத்து உசாவிக்கொண்டிருந்தார். கையை ஓங்கி அறைந்தபடி நான் எழுந்தேன். “போதும்!” என்று கூவினேன். என்னைத்தடுத்த அனைவரையும் பிடித்துத் தள்ளிவிட்டு என் ஊரிலிருந்து வெளியேறினேன்.

செல்லும்வழியிலேயே என் ஆடைகளை அணிகலன்களை அடையாளங்களை களைந்தேன். என் உள்ளக் கொந்தளிப்பு அமைய ஏழுநாட்களாயின. அப்போது கங்கைக்கரைக்கு வந்துவிட்டிருந்தேன். அங்கிருந்து மேலும் வடக்காக கிளம்பிச்சென்றேன். எதைத் தேடி கிளம்பினேன் எங்கு செல்கிறேன் என்றெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சிலதருணங்களில் நம்மிடமிருந்து விலக நாம் நாமறிந்த அனைத்திலிருந்தும் தப்பி ஓடுகிறோம்.

வீரரே, உண்மையில் அது மிகச்சிறந்த ஒருவழி. நாம் என்பது நம்மைச்சூழ்ந்திருப்பவையே. ஊர், குலம், உறவு, மனை, செல்வம், ஆடைகள், அணிகள், பெயர்… அவற்றிலிருந்து நம்மை உருவி வெளியே எடுக்கும்போது நாம் அறிகிறோம் நாம் அவை அல்ல என்று. அந்த விடுதலையை அடைய துறந்தேகுவதைப்போல சிறந்த வழி பிறிதில்லை.

நூறுநாட்கள் வடதிசைநோக்கி சென்றேன். ஒரு அன்னசாலையில் ‘குபேரன்’ என்னும் சொல் காதில் விழுந்ததும் என் அகம் கொப்பளித்தெழுந்தது. என் உள்ளம் அனைத்தையும் உதறித்தெளிந்து அடுத்த அடியெடுத்துவைக்க உதவும் சொல்லுக்காக காத்திருந்தமையால் அச்சொல் அப்படி பொருள்கொண்டது. நான் உசாவவேண்டியது அவனிடம்தான். அவனைத்தான் அதுகாறும் நான் வழிபட்டிருந்தேன். வேதச்சொல்லை எனக்கு மீட்டளிக்கவேண்டியவன் அவன். வேதமாகி என்னுள் நிறைந்தவன்.

குபேரதீர்த்தம் என்னும் சுனையைப்பற்றி சொன்னார்கள் அவ்வழிப்போக்கர்கள். அப்படி ஒரு சுனை உண்மையில் உண்டா அது சூதர்களின் தொல்கதை மட்டும்தானா என்பதுதான் அவர்களின் சொல்லாடலாக இருந்தது. அது வடபுலத்தில் எங்கோ மலைமடிப்புக்குள் உள்ளது. அதில் பொன்னே நீரென ஊறும். அதைச்சூழ்ந்து பொன்மலைகள் அமைந்திருக்கும். பொன்னாலான கூழாங்கற்களும் சேறும் சூழ்ந்த அச்சுனைக்கு சுற்றிலும் செழித்திருப்பதும் பொன்நாணலும் பொற்செடிகளும்தான். பொற்பாறைகளில் படிந்திருப்பதும் பொற்பாசியே.

உரக்கநகைத்து ஒருவன் சொன்னான் “காசில்லாமல் பசித்திருந்த எவனோ ஒருவனின் கனவில் வந்த இடம் அது.” ஆனால் நான் அப்படி ஓர் இடமுள்ளது என உறுதிகொண்டேன். அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொல்கதைகளில் இருந்து சொன்ன வழியடையாளங்களை உளம்கொண்டு மேலே நடக்கலானேன்.  முந்நூறுநாட்கள் ஒவ்வொரு வழிக்குறியாகத் தேடிக் கண்டடைந்து சென்றேன்.

குபேரதீர்த்தத்திற்கு தவமுனிவர் அன்றி பிறர் செல்லமுடியாதென்றே இறுதியாக எனக்கு வழி சொன்ன முனிவர் சொன்னார். “நான் செல்வதே ஒரு தவம். சென்றடையாது உயிர்வாழமாட்டேன்” என்று அவரிடம் சொன்னேன். என் உடல் நலிந்தது. சடை அடர்ந்து கண்களில் பித்து நிறைந்தது. பிறிதொரு எண்ணமும் அற்றவனாக சென்றுகொண்டே இருந்தேன். இறுதியில் அந்த சுனையை சென்றடைந்தேன்.

பொன்மயமான அதன் கரையிலமர்ந்து தவம்செய்தேன். பதினெட்டுநாள் பிறிதொன்றிலாது என்னுள் மூழ்கினேன். என்னுள் இருந்து ஒவ்வொரு சொல்லாக உதிர்த்தேன். அந்த ஒற்றைச் சொல் மட்டும் எஞ்சியிருக்க அதுவே நான் என்றாகி அமர்ந்திருந்தேன். அச்சொல் முதலில் ஒரு வினாவாக இருந்தது. அதன்மேல் மோதிமோதி என் சித்தம் அதை ஒரு விடையென ஆக்கிக்கொண்டது.

விழிக்குள் பொன்னொளி சூழக்கண்டு இமைதிறந்தேன். பொன்னுடல் ஒளிவிடத் தோன்றிய  குபேரனை முழுமையாகக் கண்டேன். பொன்னுடல் கொண்ட மானுடன் ஒருவனை அவன் ஊர்தியாக்கியிருந்தான். வீரரே, அந்த மானுடன் நான். என் இளமைத்தோற்றம் அது. குபேரனின்  ஊர்தி மானுடனே என அறிந்திருப்பீர். ஒவ்வொருவரும் தங்கள் வடிவில் காணும் மானுடன் அவன்.

குழந்தையின் கொழுத்த குற்றுடல். இடுங்கிய சிறுகண்கள். பொற்கதாயுதம். மறுகையில் பொன்னூறும் கலம். கீழ்க்கையில் தாமரை. “என்ன விழைகிறாய்?” என்று திருந்தாக்கிளவியில் கேட்டான். “எந்தையே, நான் வேதச்சொல் ஒன்றை மறந்தேன். அது என் நாவிலெழவேண்டும்” என்றேன். “என்னிடம் செல்வத்தையே கோருவார்கள். வேதச்சொல்லை எவரும் கேட்டதில்லை” என்று அவன் சொன்னான். தந்தைக்கு விடைசொல்லும் மைந்தன்போல தடுமாறினான்.

“எனக்கு வேதமே செல்வம். வேதம் அழிந்தால் நான் முற்றழிவேன்.  அந்த ஒற்றைவேதச்சொல் அழியும் என்றால் முழுவேதத்தையும் நான் இழக்கலாகும். அந்த வேதச்சொல்லை மட்டுமே வேண்டுகிறேன்” என்றேன். “நான் அச்சொல்லை மீட்டளிக்க இயலாது” என்று அவன் சொன்னான். சீற்றத்துடன் “பிறிதொன்றும் வேண்டேன். நீ எழுந்தருளியும் எனக்குக் கனிய  உனக்கு ஆற்றலில்லை என்றே கொள்கிறேன்” என்று நான் சொன்னேன்.

அவன் “என்னிடம் உள்ளது அளவிலாச் செல்வம். ஆனால் செல்வம் மட்டுமே உள்ளது” என்றான். “அச்செல்வத்தில் இச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டு எனக்கு அளி” என்றேன். “அச்செல்வத்தைப்பெற்று அமைக!” என்றான். “செல்வத்தைப் பெரிதென எண்ணியிருந்தால் நான் கிளம்பியிருக்கவே மாட்டேன். உன் செல்வத்தைக்கொண்டு அச்சொல்லை மீட்டெடுத்த வாக்தேவியிடமிருந்து வாங்கி எனக்கு அளி” என்றேன்.

“ஆம், அதைச்செய்கிறேன்” என்று அவன் விழிமூடினான்.  அவனருகே அவனைப்போன்றே தோன்றிய மூன்று குபேரபுரியின் ஏவலர் தோன்றினர் “வாக்தேவியை அணுகி என் செல்வத்தில் அச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டுவருக!” என்றான். அதன்பின் என்னை நோக்கி புன்னகைத்து “என்னிடம் உள்ளது குன்றாப்பெருஞ்செல்வம். இப்புடவியையே நான் வாங்கமுடியும்” என்றான். குழந்தைமை பேதைமையாக ஆகும் சிரிப்பு அது என எனக்குப்பட்டது.

அவர்கள் வரக்காணாதபோது “எங்கு சென்றார்கள்?” என நிலையழிந்தான். “எங்கே சென்றீர்கள்?” என இரைச்சலிட்டான். அவர்கள் வரக்கண்டு “அதோ வருகிறார்கள்” என்றான். “வாங்கிவந்துவிட்டார்கள்” என்று சிரித்தான். அவர்கள் அருகணைந்து தலைவணங்கி “அரசே, சொல்லரசி அச்சொல்லை ஒரு துலாவின் தட்டில் வைத்தாள். மறுதட்டில் இணையான செல்வத்தை வைத்து எடுத்துச்செல்லுங்கள் என்றாள். நாங்கள் பொற்குவை ஒன்றை வைத்தோம். பொன்மலை ஒன்றை வைத்தோம். பொன்மலைகளை அள்ளி அள்ளி வைத்தோம்” என்றான் ஒருவன்.

“அரசே, நம் கருவூலத்தையே வைத்தோம். நம் நகரை நம் உலகையே வைத்தோம். அச்சொல் அசையவே இல்லை. வாக்தேவி நகைத்து மூடர்களே உங்கள் அரசனும் நீங்களும் அமர்ந்தாலும்கூட நிகராகாது என்றாள்” என்றான் இன்னொருவன். குபேரன் திகைத்து என்னை நோக்கி “நீ யார்? ஏன் என்னை இந்த இடரில் சிக்க வைத்தாய்?” என்று சீறினான். “அரசே, வேதச்சொல்லுக்கு இணையாகும் ஏதும் நம்மிடம் இல்லை என்று அவ்வன்னை சொன்ன போது வானம் இடிசூழ்ந்து ஆம் ஆம் என்றது” என்றான் மூன்றாமவன்.  ”நான் அன்னையிடம் சொல்வேன்… அன்னையிடம் சொல்லிவிடுவேன்” என குபேரன் அழுதான்.

நான் திகைப்புடன் நோக்க அவன் நிலத்தில் விழுந்து கைகால்களை உதைத்தபடி “நான் அழுவேன்… நான் அழுவேன்… அவளை அடிப்பேன்…” என்று கதறத் தொடங்கினான். அவர்கள் அவனை இழுத்துச்சென்றார்கள். அவன் ஊர்தியாகிய என் வடிவன் என்னை நோக்கி சிரித்தபடி உடன் சென்றான்.

என்ன அதெல்லாம் என்று எனக்குப்புரியவில்லை.  குபேரதீர்த்தத்தில் இருந்து நான் திரும்பினேன். திரும்பும் வழியில் என் எண்ண அலைகள் ஓய்ந்திருப்பதை, நான் எடையற்றவனாக இருப்பதை உணர்ந்தேன். சிரிக்கத் தொடங்கினேன். சிரித்து சிரித்து மண்ணில் விழுந்து எழுந்து மீண்டும் சிரித்தேன். சிரிப்புடன் சிற்றூர்களை கடந்து சென்றேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவர்களை அறியாமல் சிரிக்கலாயினர்.

அச்சிரிப்பினூடாக என் நா மறந்த அச்சொல் மீண்டு வந்தது. அவ்வேதவரியை சொன்னேன். சொல் அமைந்திருந்தது. உண்மையா என நானே வியந்து மீண்டும் மீண்டும் சொன்னேன். அச்சொல் அங்குதான் இருந்தது. ஒன்றுமே நிகழாததுபோல. அனைத்தும் என் உளமயக்கென்பதுபோல. அதை மீண்டும் மீண்டும் சொன்னபடி நான் அழுதேன்.

“அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்தேன். வேதத்தின் அச்சொல்லை மட்டுமே இங்கு நான் ஓதிக்கொண்டிருக்கிறேன். அச்சொல்லாக நிறைந்துள்ளது இக்காடு” என்றார் சௌம்யர். அர்ஜுனன் நீள்மூச்சுடன் உடல் எளிதாக்கி புரண்டு படுத்தான். அவன்மேல் பனிக்கால நிலவு செம்பொன்னொளியுடன் நின்றது. “அச்சொல் எது?” என்று அவன் கேட்டான். “ஹிரண்ய” என்றார் சௌம்யர். “பொன் எனும் சொல். வேதம் பிரம்மத்தையும் கூழாங்கல்லையும் அனலையும் இளந்தளிரையும் அதைக்கொண்டே குறிக்கிறது.”

[ 38 ]

அர்ஜுனன் நூறு  நாட்கள் நடந்து குபேரதீர்த்தத்தை சென்றடைந்தான். ஏழுமலைமுடிகள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதை முதல் வழிக்குறி. சிம்மவாய் எனத் திறந்த குகை என்பது அடுத்தது. முதலைமுதுகுபோன்ற பாறைநிரை பிறகு. பூதங்களின் பாலம் தொடர்ந்து வந்தது. நெருப்பாக நீர் வழியும் பேரருவி பின்னர். சிரிக்கும் மலை அதற்கு அப்பால். வெண்பனி உருகி வழியும் முடி பின்னர். அதன்பின் அவன் குபேரதீர்த்தத்தை தொலைவிலேயே கண்டான்.

பனிமலை முடிகள் சூழ்ந்த சிறிய தாழ்வரை அது.  மஞ்சு உருகிய நீர் வந்து சேர்ந்து உருவான நீள்வட்ட வடிவான சுனை. நீலநிறத்தில் நீர் தேங்கி வான் தளும்பக் கிடந்தது. அதனருகே வெண்ணிறச் சேற்றுப்பரப்பில் ஒரே ஒரு காலடிமட்டும் சென்று திரும்பிய தடம் உலர்ந்து பளிங்குப்பாறையில் செதுக்கிய சிற்பம் போலாகி தெரிந்தது. அது சௌம்யரின் காலடி என அவன் உய்த்துக்கொண்டான்.

மண் உதிர்ந்த சரிவில் தொற்றி அந்தச் சுனையைநோக்கி இறங்கிச் சென்றான். இருமுறை பிடியுடன் மண் விரிசலிட்டு வர விழுந்து அடுத்த மண்மேட்டைப் பற்றிக்கொண்டு நின்றான். மூச்சிரைக்க இறங்கி அச்சுனை அருகே சென்று நின்றபோது அங்கே முன்னரே வந்திருப்பதாக ஓர் உணர்வுதான் ஏற்பட்டது.  அந்த மண் வெண்சுண்ணத்தாலானது. மெல்லிய கந்தகம் கலந்த நீர் எடைகொண்டதாக இருந்தது. அதில் மீன்களோ பிற சிற்றுயிர்களோ இருக்கவில்லை.

அருகே சென்று குனிந்து நோக்கியபோது அச்சுனையின் ஆழம் அச்சுறுத்தியது. அடியிலி என்றே அவன் விழி மயங்கியது. அது ஒரு பெரும் குகையின் வாய். அக்குகை எங்கு செல்லக்கூடும்? மலையிறங்கி ஆழத்திற்கு என்றால் அங்கே நீர் எப்படி நிற்கிறது? மலைஏறிச்சென்றால் அது அங்குள்ள பனிமுடிகளில் ஒன்றில் சென்று முடியலாம். அல்லது விண் நோக்கி வாய்திறந்திருக்கலாம். வெறும் வெளியை அள்ளி அள்ளி குடித்துக்கொண்டிருக்கலாம்.

அவன் அதனருகே ஒரு பாறையில் அமர்ந்தான். மடியில் கைகளை வைத்து கண்களைத் திறந்து  ஊழ்கத்தில் ஆழ்ந்தான். மேற்கே சரியத்தொடங்கிய சூரியக்கதிர் கசிந்து பரவி நீரொளி கொண்டிருந்தது வானம். முகில்கள் வெண்நுரைக் குவைகளாக அசைவற்று நின்றன. தொலைவில் மலைமுடிகள் சூடிய பனிப்பாளங்கள் மெல்ல அண்மை கொண்டு விழிகூசும்படி வந்து விரிந்தன.  மயங்கிய விழிகளுக்கு முகில்களும் பனிமுடிகளும் ஒன்றெனக் கலந்து காட்சியளித்தன.

அவன் உள்ளம் மெல்ல ஏமாற்றம் கொள்ளத் தொடங்கியது. இது வெறுமொரு சுனைதான். அவன் அதுவரை கண்டிருந்த பல்நூறு சுனைகளில் ஒன்று மட்டுமே. இமயமலைகளுக்குள் அப்படி பல்லாயிரம் பனிச்சுனைகள் உள்ளன. அங்கே செல்வது அரிதென்பதனாலேயே அவை அரிதாகத் தோன்றுகின்றன. அரியவற்றை மேலும் அரிதாக்க எழுகின்றன தொல்கதைகள். விண்ணளாவும் நம்பிக்கைகள். ஆம். எழவேண்டியதுதான். மீள்வதே முறை. ஆனால் அவன் உள்ளம் கொண்டிருருந்த இனிய சோர்வு அவனை அங்கேயே அமரச்செய்தது.

அவன் சற்று துயில்கொண்டிருக்கவேண்டும். விழிப்பு வந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது. தன்னைச்சூழ்ந்த பொன்னொளியைக் கண்டு திகைத்தபடி எழுந்தான். சூழ்ந்திருந்த அத்தனை மலைகளும் பொற்கூம்புகளாக ஒளிவிட்டன. முகில்கள் பொற்சுடர்களாக எரிந்தன. அவன் நின்றிருந்த மண்ணும் அருகிருந்த சேறும் கூழாங்கற்களும் பொன்னென்றாகிவிட்டிருந்தன. அவன் மெல்ல நடந்து அச்சுனையை அணுகினான். அது பொன்னுருகி ததும்பியது.

அவன் அதனருகே நின்று குனிந்து நோக்கினான். உள்ளே பொன்மலைகள் எழுந்த ஒரு வெளி தெரிந்தது. அதை ஊடுருவிச்சென்றது பொன்னாலான பாதை ஒன்று. அவன் கால்கள் நடுங்கின. தன் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே குதித்துவிடுவோம் என அவன் அஞ்சினான். ஆனால்  பின்னகரக்கூடவில்லை. பொன் அவன் சித்தத்தை நிறைத்தது. அனைத்து எண்ணங்களும் பொன்னென்றாயின.

அவன் விழிகளை மூடித்திறந்தான். நீரில் எழுந்த அவன் பாவை அவனை விழி மூடாது நோக்கியது. “விலகு… நான் உன்பாவை” என்றது. “தன் பாவைகளால்தான் ஒவ்வொருவரும் ஆழங்களுக்குள் கவரப்படுகிறார்கள்.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “பொன்னொளிர் பாவை! இதுநாள் வரை எங்கிருந்தது இது?” அது சிரித்தது. “நான் நீ….” அவன் பின்னகர விரும்பினான். ஆனால் அப்புன்னகை அவனை கவ்வி வைத்திருந்தது. “நீ விலகு என்கிறாய். ஆனால் என்னை ஈர்க்கிறாய்.” அது நகைத்தது. “ஆடிப்பாவைகள் அனைத்துமே அப்படித்தான்.”

அவன் இருமுறை தள்ளாடினான். விலகு விலகு. இதுவே தருணம். விலகிவிடு. அவ்வெச்சரிக்கை ஒலியே அவனைச் சீண்டி முன் செலுத்தியது. எம்பி அந்நீரில் பாய்ந்தான். நீர் என அவனை அள்ளி அணைத்து குளிரக்குளிர இறுக்கி உள்ளிழுத்துக்கொண்டது அது. பின்னர் அவன் இருபக்கமும் பொன்னிற அலைகளாக மலைகளை காணத்தொடங்கினான். எரிந்தபடி பொன்முகில்கள் நெளிந்தன. பொன்னாலான பாதை சுருளவிழ்ந்து நீண்டு அவனை கொண்டுசென்றது.

தொடர்புடைய பதிவுகள்

தெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி

$
0
0

download

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

 

தெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி  தங்களுடைய கருத்தினை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

 

சமகால நவீன இலக்கியத்தில் சிறந்தவற்றை நானும் தேடி வருகிறேன். என்னுடைய ரசனை சற்று மாறுபடக் கூடும். மகம்மது கதீர்பாபு (Mohammed Khadeerbabu) “போலேரம்ம பண்ட கதலு”, “தர்கா மிட்ட கதலு” இவை இரண்டுமே முஸ்லிம் பின்னணியில் அவர் எழுதிய கதைகள். ஆர்.கே. நாராயணன் எழுதிய “மால்குடி டேஸ்” க்கு இணையாக இவற்றை சொல்ல முடியும். அதே சுவையுடன்  மொழி பெயர்க்ககூடியவர்கள்  இதனை தமிழில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

 

போய ஜங்கய்யா (Boya Jangayya) அவர்களின் “ஜாதர” என்ற படைப்பு, ஏறக்குறைய “மாதொருபாகன்” கதையின் கருத்தை மையமாக கொண்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி உள்ளது.

 

ரங்கநாயகம்மா அவர்களின் படைப்பில் ஜாதி வேற்றுமைகளை கருத்தாக கொண்ட நாவலான  “பலிபீடம்”,  பெண் விடுதலை மையமாகக் கொண்ட “ஜானகி விமுக்தி” குறிப்பிடத்தக்கன. 1962-63ல் வெளிவந்த “பலிபீடம்”  1975ல் திரைப்படமாகவும் வந்து பாராட்டை பெற்றுள்ளது. அவருடைய சுமாரான படைப்பு “பேகமேடலு”. அதன் தமிழாக்கம் தான் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்கள். அவருடைய சமீபத்திய படைப்பான “கள்ளு தெரிசின சீதா” ஒரு பெண்மணியின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது

 

 தான் எழுதிய கதைகளையே, தனக்கு இப்போது உடன்பாடு இல்லாத விஷயங்களை  மாற்றி அமைத்து (அதற்கான விளக்கத்துடன்)     புதிதாக வரும் பதிப்புகளில் வெளியிட்டு வருகிறார் ரங்கநாயகம்மா.

 

கடந்த இருபது ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு இலக்கியத்தில்  (தெலுங்கிலிருந்து தமிழ் மற்றும் தமிழிலிருந்து தெலுங்கு) ஈடுபட்டு வருகிறேன்.

 

நான் முதல் முதலில் மொழிபெயர்த்தது எண்டமூரி அவர்களின் அந்தர்முகம் என்ற புதினம். அதே தலைப்பில் தமிழில் வெளியாகி உள்ளது. (அல்லயன்ஸ் பதிப்பகம்) இவர்   குடும்பம், விஞ்ஞானம், மாந்த்ரீகம் என  பல தரப்பட்ட தளங்களில் எழுதி உள்ளார். இவரது நாற்பது நாவல்களை நான் மொழிபெயர்த்துள்ளேன்.

 

“நாவல் ராணி” என்று போற்றப்படும் யத்தனபூடி சுலோசனா ராணி குடும்பப் பின்னணியில் எழுபது நாவல்கள் எழுதியுள்ளார். அதில் ‘செகரட்ரி’ என்னும் நாவலின்  தொன்னூறாவது பதிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இவர் நாவல்கள் 16 என் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளன.

 

பெண்ணியம் சார்ந்த எழுத்துக்கள் என்று முத்திரை இருந்தாலும், சற்று மாறுபட்ட கோணத்தில் எழுதி வருபவர் ஒல்கா. “விமுக்தா” என்ற அவருடைய கதைத் தொகுப்பு, சீதையின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்ட ராமாயணக் கதைகள். வனவாசத்தின்போது  அரண்மனையில் யாரையும் சந்திக்காத ஊர்மிளை மற்றும்  அகலிகை, சூர்பனகை, ரேணுகா ஆகியோரை  சந்தித்து உரையாடியதால் ஏற்பட்ட அனுபவங்கள் பின் வரும் நாளில் சீதைக்கு  ஏற்படுத்திய புரிதலை விளக்கும் விதமாக கதைகள் அமைந்துள்ளன, “விமுக்தா” என்ற இந்த படைப்பிற்காக 2015 சாஹித்ய அகாதமி விருது அவருக்குக் கிடைத்துள்ளது.   இதன் தமிழாக்கமான “மீட்சி” அதே ஆண்டில் எனக்கு சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்றுத் தந்தது.

 

அவருடைய மற்ற படைப்புகளான சுஜாதா, தொடுவானம் தொட்டு விடும் தூரம், ஒரு பெண்ணின் கதை ஆகியவற்றையும்  பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (PEOPLE’S WAR GROUP ஸ்தாபகர் சீதாராமய்யாவின் மனைவி) தனது தொன்னூறாவது வயதில் எழுதிய  தன்வரலாறு, “ஆளற்ற பாலம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

கவனசர்மா, P.சத்யவதி, விவின மூர்த்தி, முஹம்மது கதீர் பாபு, பெத்திண்டி அசோக் குமார், டி. காமேஸ்வரி, சிலகலூரி தேவபுத்திர, ஸ்ரீவல்லி ராதிகா போன்றவர்களின் சமீபத்திய   சிறுகதைகளை நான் விரும்பிப் படிக்கிறேன்

 

வணக்கத்துடன்

கௌரி கிருபானந்தன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் விமர்சனம் -5

$
0
0

1

 

அன்புள்ள ஆசானுக்கு,

மடத்து வீடு சிறுகதையை நான் படிக்கும் முன்பே சிலர் விமர்சனமிட்டிருந்தனர், தரமான விமர்சனங்களான அவைகளை விட சிறப்பாக நான் சொல்ல எதுவும் இல்லை,  அதனால் பிடித்த வரியினை மட்டும் குறிப்பிடுகிறேன் .
//வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.//
கதையின் இரண்டாம் முறை வாசிப்பில் மொத்த கதையும் இந்த வரியில் உச்சம் கொள்வதை உணர்ந்தேன், அந்த மொத்த வீட்டில் இருண்டு, உடையாமல், பாசியில்லாமல், கரி படியாமல் நிறத்தை தக்க வைத்திருப்பது பொம்மையின் ரவிக்கை என்பது முக்கியமான குறியீடு, அவ்வீட்டு பெண்கள் மானத்தோடு, கற்போடு வாழ்கிறார்கள் என்ற கதையின் முடிவை இவ்வரியில் உணரமுடியும் .
மிக எளிதாக புறந்தள்ள கூடிய, கதையே உணர நேரமெடுக்கும் வகையில் சிறுகதை உள்ளது தான் இக்கதையின் பலவீனம், கதையின் தளத்தில் அத்தகைய விமர்சனங்கள் காணப்பட்டது . கதை ஆசிரியர் படிமங்களை, வர்ணனைகளை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார்,  அதுவே இக்கதையின் தளத்தை உயர்த்தியிருக்கிறது .
நன்றி
சிவா

 

ருசி

 

ருசி மீதுள்ள மோகம் மனிதனைச் சுயநல வாதியாக மாற்றும். புலன் சார்ந்த வாழ்க்கை (ருசி குறியீடாக அமைகிறது) மனிதனைத் தன்னலம் மட்டுமே கருதும் ஒட்டுண்ணியாக்கக் கூடும்.

 

ஏமாற்றியவனைத் தேடிச் செல்கையில் ரயில் பயணத்தில் இதைக் கண்டடைகிறான். தேடல் அடங்கிவிடுகிறது. இதுதான் கதையின் மையம் என்று நினைக்கிறேன்.

 

ஆனால் ரயிலில் நிகழ்வது சாதாரணமான சம்பவம். It is too weak to carry the weight of this theme.அதனால் “slice of life” கதை போல நின்றுவிடிகிறது.

 

முடி

 

எழுத்து இயற்கையாக உள்ளது. நகைச்சுவையும் சுய ஏளனமும் வாசகரின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் மிக வெளிப்படையான, எளிதில் ஊகிக்கக் கூடிய கதைக்கரு. நல்ல blog post எனலாம், சிறுகதையாக ஏற்க முடியவில்லை.

ப்ரியம்வதா

 

8

 

அன்புள்ள சார்,

 

செளந்தர் தன் யோகாசென்டரில் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு செய்திருந்தார். அதில் சில பாசுரங்களை தனித்தனியாக ஓதவேண்டும். அதில் எனக்கென வாய்ந்த ஒன்று அரியைத்தொழுது மனம்வருந்தி பின் சிவனடி பணிவது போல் பொருள் கொண்டது.( அல்லது நான் அப்படிப் புரிந்து கொண்டேன் ).
விஷ்ணுபுரத்துக்காரனை இப்படிப்பாட வைக்கலாமோ என நினைத்து உளம் கலங்கினேன். ஆனால் அதன்பின் கிராதம் வரை சிவதரிசனமாகவே இருக்கிறது.

(

முற்றோதலில், காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலியே.. என்பதை கபாலியே என வாசித்துமுடித்துவிட்டு நெருப்புடா என ஹம்செய்த அருணாசலம் பற்றி இப்போது சொல்ல ஏதுமில்லை )

 

பிறகு, ரேஷன்கார்டு விஷயமாக திருச்சி சென்ற போது உத்தமர் கோயில் என்னும் வைணவ திவ்யதலத்திற்கு சென்றிருந்தேன். அதிலும் கபாலத்தை ஏந்திய பிச்சாண்டவர். அந்தக்கோநிலுமே, பிச்சாண்டவர் கோயில் என்றும் பிரம்மா கோயில் என்றும்தான் அழைக்கப்படுகிறது. ஏகப்பட்ட சிவன் கோயில்களுக்கு சென்றிருந்தாலும், பிச்சாண்டவரை காண்பது இதுவே முதல் முறை.  கிராதம் படிக்கையில் பிச்சாண்டவர் நேரில் வறாரே என ஏவிஎம் ராஜன் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட போது, “நவீன நாவலுக்கெல்லாம் இந்தளவு பொங்கக்கூடாது.. எதானாலும் ஒரு இனிய ஜெ. கடிதம் எழுதி நேரடியாக பொங்கிக்கொள்ள சுரேஷ்பாபு அறிவுறுத்தினார்..”  எழுதிப்பார்த்தபோது,   சரியாக வராததால்  நானும் நிறுத்திவிட்டேன்.

 

கவிஞர் குமரகுருபரன் பற்றி நீங்கள் சொன்னபோது, இளையவர்கள் இயற்கையாக மரணிக்கும்போது எழும் பதட்டம் பற்றி விளக்கினீர்கள்..நேற்று இரவு என் சித்தப்பா மரணச்செய்தியை கேட்டுத்தவித்த அப்பா பெரியப்பா வைக் கண்டபோது, அதை நேரடியாக அனுபவிக்கும் போதுதான் நன்றாக புரிந்துகொண்டேன்.

 

இந்தச் சிறுகதை முயற்சியும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஒரு சிறுகதையை எப்படி வாசிப்பது என்பதையை நான்  இப்போதுதான் உணர்கிறேன்.

 

நேற்று இரவு சித்தப்பா வீட்டில் இருக்கும் போது எனது விடிவு சிறுகதையை நீங்கள் தளத்தில் சுட்டி அளித்திருந்த்து கண்டு அந்தநேரத்திலும் மிக உணர்ச்சிகரமாகவும் சற்று பெருமையாகவும்  உணர்ந்தேன் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

 

 

ஒரு உரையாடலில் இதை கதையாக எழுதச்சொன்னவர் சுரேஷ்பாபு, கதை பிரசுரமாவதற்கு முன், நட்பாஸ், துரைவேல்சார் ஆகியோர் இது பற்றி பேசினார்கள். முதலில் கதை எழுதும் போது அது மனதுக்குள் கொண்ட வடிவத்தை எழுத்தில் கொண்டுவரவில்லை என்பதை இருவரும் சுட்டிக்காட்டினர். எழுதுபவனுக்கு தெரிவது வாசகனுக்குத் தெரியவாய்ப்பில்லை. எனவே சற்று விளக்க வேண்டும் என்பது போல..அதன் பிறகு அதைச் சரிசெய்த பிறகே சொல்வனத்தில் வெளியானது.

 

இந்தக்கதை சொல்வனத்தில் வந்தபோது நம் நண்பர்கள் இதுபற்றிப் பேசினார்கள்… அக்டோபர் இரண்டு அன்று வந்ததால்  எல்லோரும் உண்மையையே கூறினார்கள்..

 

ராகவ், இது பற்றி நான் உங்களுக்கு எழுதிய கடித்த்தையுமே நினைவு வைத்திருந்தான். கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் பேரு வைத்து கதாபாத்திரமாக்கியது அளித்த குழப்பத்தை ஜாஜா, தனா, கிருஷ்ணன் ஆகியோர்  தெரிவித்தார்கள்.

 

 

சுரேஷ் வெ, அருணாசலம், சுனில், ஷிமோகா ரவி, செந்தில், கவிதா ஆகியோர் என் மனம் புண்படக்கூடாது என கவனமாக இது நல்ல கதைதான், முதல்முயற்சி வீண்போகலை.. ம்ஹூம் அழப்பிடாது  என ஆற்றுப்படுத்தினர்..

 

டாக்டர் வேணு வெட்றாயன், survivor’s guilty என்பதையும் தாண்டி இதில் உள்ள முக்கியமான தருணங்களைக் கூறி இதையெல்லாம் நிரப்பியிருந்தால் பின் நவீனத்துவ பாணியாகியருக்கும் ஆனால் இப்போது இது நவீனத்துவ பாணிபோல் உள்ளது எனக் கூறினார். கவர்னர் ஸ்ரீநிவாசன் அவர்களும் இதையே கூறினார்.

 

கதை யதார்த்தத்திற்கு சற்று அருகில் இருப்பதாலேயே உண்மையாக இருக்கிறது. ஆகவே தொடர்ந்து எழுதவும் எனச்சொல்லி, சில குறைகள் உள்ளன அவற்றைத் தவிர்க்கவும் உறவுமுறையை கடலூர் சீனு கூறினார்.

 

கடைசிவரி ஓரளவு காப்பற்றியதாக அனைவரும் சொன்னார்கள்.

 

இவ்வாறு எனக்கு தனியாக போனில் அழைத்தும் கடிதமெழுதியும் அளித்த பின்னூட்டங்களால் சிறுகதை பற்றி எனக்குமே ஒரு தெளிவு இப்போதுதான் உண்டானது.(கெய்ஷா கதை அருணாசலத்தின் பரிமேலழகர் உரை இல்லாமலேயே ஓரளவு புரிந்த்து)

 

இது சார்ந்த உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

 

இத்துணை பணிகளுக்கிடேயேயும் இதையும்  வாசித்து சுட்டி அளித்த உங்களைப் பணிவுடன் வணங்குகிறேன். பாதம் பணிகிறேன். உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளேன்.

 

எல்லா, போற்றுதல்களையும்  தூற்றுதல்களையும் சிவா கிருஷ்ணமூர்த்திக்கே அர்ப்பணிக்கிறேன்….

 

 

இதன் முதல் வடிவத்திற்கு, துரைவேல் அவர்களின் கடிதம்,

/

 

//அன்புள்ள காளி
கதையைப் படித்தேன். இதைப்போன்ற கதைகள் அடங்கிய தொடர் ஒன்றை சுஜாதா எழுதியிருந்தார். தூண்டில் கதைகள் என்றுவ் பெயரிடப்பட்டிருந்த தொடர். அது.  கதையின் முடிவு வாக்கியத்தில் கதையை முழுவதுமாக தலைகீழாக திருப்பிவிடும்.  அந்த முடிவு வாக்கியத்துக்ககாகவே முழு கதையும் எழுதப்பட்டிருக்கிறது என நம்மை உணரவைக்கும்.    அதைப்போன்ற கதை இது.

 

 

கதை ராஜாவின் இறப்பின் பின்னான  நிகழ்வுகளைசொல்லிச் செல்கிறது.  ஆனால் ராஜா விபத்தில் இறந்துவிட்டான் என்பது கதையின் இறுதிப்பகுதிக்கு சற்று  முன்தான் உறுதிப்படுத்தப்படுகிறது. இது கதையின் முற்பகுதியில் ஒரு மர்மத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்தத் தகவல் தெரியாமல் நாம் படிக்கையில் பலவேறுபட்ட  தகவல்கள் பொருத்தமற்ற வகையில் சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. அதனால் முதல் முறை படிக்கும்போது நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது. பின்னர் கதையை இரண்டாம் முறை படிக்கையில் அனைத்தும் சரியாக பொருந்திவருவதும் அனைத்து தகவல்கள், நிகழ்வுகளுக்கு அர்த்தமிருப்பதாகவும் தெரிகிறது. இன்னும் கேட்டால் நான் மூன்றாவது முறை படித்தபின்தான். அனைத்து வாக்கியங்களும் எவ்வளவு அவசியமானவை என உணரமுடிந்தது.  இந்த கதை கூறல் முறையே கதையின் பலமாக இருக்கிறது.
 

ஆனால் அதுவே கதையின் பலவீனமாகவும் இருக்கிறது. ஒரு சிறுகதைக்கு ஒரு குறிக்கோள்தான் இருக்க வேண்டும் என நினக்கிறேன்.   ராஜாவின் அம்மா ரவியை குற்ற உணர்விலிருந்து விடுவிப்பது.  ஆனால் கதையின் போக்கு ஏதோ முதலில்  ஒரு பிரச்சினை, காவல் நிலையத்தோடு தொடர்புடையது, ரவி அலுவலகம் சம்மபந்தப்பட்டது, ரவியும் சம்பந்தப்பது,  ராஜா சம்பந்தப்பட்டது, எனச் சென்று இறுதியில் ராஜாவின் சாலை விபத்தில் மரணம் பற்றியது என கதையின் இறுதிப்பகுதியில் முந்தைய பகுதியில் சொல்லப்படுகிறது. அதுவரை வாசகன் என்ன நடக்கிறது என யூகித்துக்கொண்டே படிக்கவேண்டியிருக்கிறது.  அதனால் என்னால் முதல் முறை படிக்கையில் கதை பாத்திர உருவாக்கங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.  இன்னமும் என்னால் ராஜா ரவி இருவரும் ஒரே வண்டியில் சென்றார்களா? தனித்தனி வண்டியில் சென்றார்களா? என்ற குழப்பம் இருக்கிறது. அல்லது ராஜா தன் காதலியுடன் தனியாக சென்று வரும்போது விபத்து ஏற்பட்டு அதை ரவி மறைக்க முயல்கிறானா என்றுகூட ஒரு குழப்பம் ஏற்பட்டது.
 

ஆனால் இந்த சிறிய  கதையிலேயே ஒரு இளைஞன் ஒரு குடும்பத்துடன் கொள்ளும் நட்பு,  தனித்து வாழும் இளைஞனின் குடும்ப நினைவு, குடும்பத்தின் கண்காணிப்பில் வாழும் இளைஞன் அதை மீற நினைக்கும் உளவியல், குற்றவாளிக்கூண்டில் நிற்பவனின் தவிப்பு ஆகியவை நன்றாக கூறப்பட்டிருக்கிறது.  ரவி தன் நண்பன் ராஜாவின் மரணம் அவனுக்கு அளிக்கும் துயரத்தை ராஜாவின் அன்னை அவனுக்கு அளிக்கும் விடுவிப்புக்கு பின்னரே உணரவும் அனுபவிக்க முடிகிறது என்பது சிறப்பான உளவியல்.
முடிவாக கதை நன்றாக இருக்கிறது. ஆனால் ராஜாவின் மரணம் முன்னரே சொல்லப்பட்டிருந்தால் கதை ஒரே குறிக்கோளுடன் தெளிவாக பயணித்திருக்கும் என நினக்கிறேன். விமோசனம் என்பது பழைய தேய்வழக்கான சொல்.  வேறு தலைப்பு பற்றியும் காதாசிரியர் யோசித்துப்பார்க்கலாம்.
11 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:41 ///

அன்புடன்,

R.காளிப்ரஸாத்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கூண்டு

$
0
0

1

 

ஜெ

 

ஒரு சாதாரணமான சந்தேகம். நீங்கள் வங்கிகளுக்கோ அரசு அலுவலகங்களுக்கோ செல்லும்போது நீங்கள் அறியப்பட்ட முகம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லையா? தெரிந்தா அப்படி நடக்கிறார்கள்?

 

மகாதேவன்

 

 

அன்புள்ள மகாதேவன்,

 

நீங்கள் அரசு ஊழியர்களைப்பற்றித் தெரிந்துகொண்டிருக்கவில்லை. என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் அரசு அலுவலகங்களில், அரசு வங்கிகளில் ஒருவர் கூட என்னை அறிந்திருப்பதைக் கண்டதில்லை. நான்  இருபதாண்டுக்காலம் பணியாற்றிய துறையிலேயே கூட தர்மநாயகம்பிள்ளை என்பவர் தவிர எவருமே என் எழுத்துக்கள்   எதையுமே வாசித்ததோ ,எழுத்தாளராக என்னை அறிந்ததோ இல்லை. பிறர் பின்னாளில் நான் சினிமாவில் இருப்பதாக ஒர் அறிமுகத்தை மட்டுமே அடைந்தார்கள்.

 

நான் செல்லும் வங்கிகளில் ஐசிஐசி வங்கியில் ஒரு பெண்ணுக்கு என்னை அடையாளம் தெரியும். மற்றபடி அரசு வங்கிகளில் அதற்கான வாய்ப்பே இல்லை. அதை நான் எதிர்பார்ப்பதுமில்லை. ஏனென்றால் அரசூழியர்களை இருபதாண்டுக்காலம் அணுக்கமாக அறிந்தவன் நான். என்று பணிக்கு சேர்கிறார்களோ அன்றோடு அவர்கள் எதையும் கவனிப்பதை, கற்றுக்கொள்வதை முழுமையாகவே விட்டுவிடுவார்கள். மெல்லமெல்ல மூளை அதற்கேற்ப தளர்வடைந்து கற்றுக்கொள்ளவே முடியாமலாகிவிடும். மிகமிகச் சாதாரணமான விஷயங்கள்கூட நினைவில் நிற்காது

 

நீங்கள் வங்கிகளில் இப்போது பார்ப்பீர்கள். ஒவ்வொரு நாளும் வேலைசெய்யும் கணிப்பொறியையே தொட்டுத்தொட்டு பார்த்துப்பார்த்து டைப் செய்வார்கள் பெண்கள். பக்கத்து ஊழியரிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் உலகம் மிகமிகச்சிறிது.  திரும்பத்திரும்ப அலுவலக விஷயங்கள், ஊதியப்பிரச்சினைகள் மட்டுமே பேசப்படும். வருடக்கணக்கில் அதையே பேசி அதிலேயே உழன்று அப்படியே அதில் மூழ்கி மறைவார்கள். ஓய்வுபெற்று இருபதாண்டுகளானாலும் அதே அரசூழியர்களாக அதே வேலையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்

 

அன்றாடச்சவால் உள்ள வேலைகள் உண்டு. அவை பெரும்பாலும் சீருடைப்பணிகள். காவல்துறை போல. அங்குள்ளவர்கள் அதற்கான புத்திசாலித்தனத்தை அடைந்திருப்பார்கள். நான் பேசிக்கொண்டிருப்பது  வெள்ளைக்காலர் ஊழியர்களைப்பற்றி. அவர்களின் கண்களே ஒருமாதிரி மங்கலடைந்துவிட்டிருப்பதைப் பார்க்கலாம். அறுபது வயதுக்குள் நம்பமுடியாத ஒரு மானசீக முதுமையை அடைந்துவிட்டிருப்பார்கள். அது அவர்களின் விதி. மிகமிகச் சிலரே அதை மீறி முன்னகர முடியும்.

 

ஏனென்றால் உயிர்கள் வேட்டையாடி வாழப் படைக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் வேட்டையாடவும் வேட்டையாடப்படவும் அவர்களின் சூழல் அமைந்தாகவேண்டும். கூண்டில் அடைக்கப்பட்ட விலங்கு சாகத் தொடங்குகிறது. அரசுப்பணி ஒரு பெரிய கூண்டு

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16748 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>