Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16776 articles
Browse latest View live

இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள்

$
0
0

critic_ostrich

அன்பு ஜெயமோகன்,

சிறுகதைகள் குறித்த தங்கள் கடிதங்களை வாசித்தேன்.

இந்த வரிசையில் வெளிவந்துள்ள 12 கதாசிரியர்களும் என்னுடைய ‘எதிர்கால எதிரிகள்’ என்று எழுதியிருந்தீர்கள். பரவாயில்லை, 90% எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதிலாவது எனக்காக 10% இடத்தை விட்டுவைத்தீர்களே.

ஆனால் இந்த ‘எதிர்கால எதிரிகள்’ பட்டியலில் என்னை ஏன் சேர்த்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது வெறும் புள்ளியியல் விவரமே ஆயினும், ‘பகை’, ‘எதிரி’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் நீங்கள் கூறுவதிலிருந்து, எனக்கு சில விஷயங்கள் புரிகிறது. இதற்கு முன்பு அவ்வாறு பலர் நடந்துகொண்டு, அதனால் நீங்கள் மனம் புண்பட்டிருக்கிறீர்கள். அதன் காரணமாகவே பகை வந்துவிடக்கூடாது, நண்பர்கள் எதிரிகளாகிவிடக்கூடாது என்று தயக்கமும், அச்சமும் கொள்கிறீர்கள்.

ஆனால் உங்களைப் பல நாட்கள் வாசித்து வருபவன் என்கிற முறையில் இந்தத் தயக்கம் எனக்கு வியப்பளிக்கிறது. உண்மையாகவே உங்களுக்கு இந்த தயக்கமும், அச்சமும் இருக்கிறதா என அறிய விரும்புகிறேன். உண்மையெனில், உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மேலும், இந்த விஷயத்தில் நான் எதிரியாகிவிடுவேன் என்கிற அச்சம் உங்களுக்கு வேண்டாம். நான் இதுவரை உங்களுக்கு எழுதிய கடிதங்களில் இருந்தே என்னைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றிய என்னுடைய கருத்தையும் உங்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். என் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் நான் எதிரியாக வேண்டுமென்றால் என்றால் முதலில் என்னுடைய தந்தைக்கே நான் எதிரியாக வேண்டும். நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது வேறு யாராவது பார்த்தால் மிரண்டுபோவார்கள். நான் அவருக்கு விமர்சகன். அவர் எனக்கு விமர்சகர். அது போலவே நீங்களும். எதைப் பற்றியும் மீதான என்னுடைய பார்வையை எடுத்துரைப்பேன். எடுத்துரைப்பது எதிரியாவது ஆகாது. அப்படியே இருந்தாலும், எதிர்திசைக்கு அர்ஜுனன் சென்று விடுவானோ என்கிற அச்சம் துரோணருக்கு எதற்கு?

இலக்கிய உலகில் இருக்கும் குழுக்களையெல்லாம் அறிவேன். நான் எந்த குழுக்களிலும் இருக்க விரும்பாதவன். குழு தரும் அடையாளம் என்னைச் சிறைப்படுத்திவிடும். என் சுதந்திரத்தையும் பறித்துவிடும். என்னைக் குருடனாக்கிவிடும். அடையாளமற்று இருப்பதையே நான் விரும்புகிறேன். நான் உங்களுக்கு கடிதம் எழுதுவதன் காரணமாகவே என்னை உங்களின் அடிவருடி என்றும்கூட சிலர் அழைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கு என்னைப் பற்றி ஒரு அணுவும் தெரியாது என்றே அர்த்தம். வேண்டுமானால் அவர்கள் நான் சமீபத்தில் எழுதிய ‘பயணி’ கட்டுரையை வாசிக்கலாம்.

“Criticisms are like chisels; They can make a beautiful sculpture out of a stone. Only when they are used by Sculptors.” – சில வருடங்களுக்கு முன்பு நான் எழுதியது. நீங்கள் அத்தகையதொரு சிற்பி என்பதால்தான் என்னுடைய சிறுகதையை அனுப்பினேன். வாசகர்கள் அனைவரிடமும் பகிர்ந்து விமர்சனம் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதுவும் நல்லதற்கே. உங்கள் நோக்கமும் புரிந்தது. நீங்களே கூறியதுபோல் வாசக எதிர்வினையற்ற சூழலில் அது ஒரு பெரிய திறப்பு. பல உளிகளைப் பார்க்கவும் சந்தர்ப்பம் கிட்டியது. அவற்றில் எத்தனை உண்மையிலேயே சிற்பிகள் கையாண்டவை என்பதும் நன்றாகவே தெரிந்தது.

சினம் கொள்ளவேண்டாம். இதுவரை இருபது கதைகளாவது எழுதியிருப்பேன். ஒரு வாசகனாக அதில் எத்தனை ‘உண்மையிலேயே’ சிறுகதைகள் என்பதையும் நன்றாக அறிவேன். நான் வெறும் வாசகன் மட்டுமே. எழுத்து என் கிளைவிளைவே. ஆறு வருடங்களுக்கு முன்பு உங்களுடைய நேர்காணல் ஒன்று சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருந்தது. அதில் நீங்கள் இவ்வாறு கூறியிருந்தீர்கள்:

“மனிதர்கள் புலம்பெயரும்போது வெகு தீவிரமான அகச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். திடீரென்ற தனிமை, புதிய சூழல் இவை, அதுவரை மனிதனின் மனதில் மூடிக்கிடந்த புனைகதையின் வாசலைத் திறந்து விடக்கூடும்.”

நான் எழுத ஆரம்பித்தது இப்படியே. திலீப்குமார் ஒரு சில கதைகளைப் பற்றி சொல்லும்போது, இவை எல்லாம் monologic-ஆக இருக்கிறது என்று கூறினார். அதற்குக் காரணமும் இந்த திடீர் தனிமையே. நான் ஒரு ‘extrovert’. எனக்குப் பேசுவதற்கு ஆட்கள் வேண்டும். அவர்களிடமிருந்தே எனக்கான சக்தியை நான் பெறுகிறேன். ஆனால் இங்கு ஆத்ம நண்பர்களும், ஒத்த சிந்தனையாளர்களும் கிடைப்பது ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாயிருக்கவில்லை.

எனவே எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுத்து நான் என்னுடனேயே பேசிக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட வழிவகை எனலாம். இவற்றையெல்லாம் சிறுகதையாக எழுதவேண்டும் என்று முனைந்து எழுதவில்லை. இவை வெறும் எண்ணப்பதிவுகளே. வெறும் thoughtful responses. That’s it. என் பெல்ஜிய நண்பர் ஒருவர் என்னைப் பிடித்துக்கொண்டு அழுதது இன்னும் என் கண்களிலேயே இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வெளிவர முடியாமல், ஆற்றாமையினாலேயே ‘முடி’ சிறுகதையை ஒருநாள் நள்ளிரவு வேளை எழுத ஆரம்பித்து மூன்று மணிவரை எழுதி முடித்துவிட்டு, தாங்கவியலா துக்கத்தினால் காலை வரை உறங்கவில்லை. அப்படியே அதை என்னுடைய நண்பர் பாஸ்கருக்கு அனுப்பிவிட்டேன்.

‘அம்மாவின் தேன்குழல்’, ‘அமைதியின் சத்தம்’ போன்ற கதைகளை வெங்கட் சாமிநாதன் விமர்சித்திருக்கிறார். ‘அம்மாவின் தேன்குழல்’ கதையில் கடைசி பாராவை எடுத்துவிட்டால் அது நல்ல கதை என்றார் வெ.சா. வல்லமை இதழில் வெளியான அந்தக் கதையை அந்த வருடத்தின் சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்த நாஞ்சில் நாடன் அதைப் பற்றி, ‘பதாகை’ இதழில் வெளியான தன்னுடைய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“கொஞ்சம் நெட் ரைட்டிங் வாசனை இருக்கு. காப்பியை பித்தளை டம்ளர்ல குடிக்கிறதுக்கும் ப்ளாஸ்டிக் டம்ளர்ல குடிக்கிறதுக்கு வித்தியாசம் இருக்கு.”

அதைக் குறிப்பிட்டு நீங்களும் உங்கள் தளத்தில் பதில் எழுதியிருந்தீர்கள். ஆனால் அப்போது உங்களுக்கு என்னைத் தெரியாது.

நாஞ்சில் பேட்டியில் ஒருவிஷயம் சொல்கிறார், அவர் மட்டுமே சொல்லக்கூடியது அது. இணைய எழுத்தைப்பற்றிச் சொல்லும்போது காபியாக இருந்தாலும் அதை பிளாஸ்டிக் டம்ளரில் குடித்தால் நன்றாக இல்லை, வெண்கலக் கோப்பையில்தான் குடிக்கவேண்டும் என்கிறார். உண்மையில் அந்த வேறுபாடு அழகியல் சார்ந்தது.

நான் புன்னகைப்பதைக் கண்டு அஜிதன் என்ன என்று கேட்டான். ‘புரட்சியாளர்கள் புதுமையை நாடுவது எப்படி ஒரு இயல்பான இணைவோ அதைபோல அழகியலாளர்கள் கொஞ்சம் பழமைவாதிகளாக இருப்பதும் இயல்பான இணைவுதான். என்ன சொல்கிறாய்?” என்றேன்

பதினாறு வருடங்களுக்கு முன்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நான் ஒரு greenhorn-ஆக சேர்ந்த பொழுது, அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் சேர்ந்து peer programming செய்வார்கள். அருகே அமர்ந்து அவர்கள் program செய்வதை நாங்கள் அவதானிக்கவேண்டும். கேள்விகள் இருந்தால் கேட்கவேண்டும். நாங்கள் எழுதும்போது அவர்களும் கவனித்துப் பல நுட்பங்களை சொல்லிக் கொடுப்பார்கள். அபிலாஷ் சந்திரன் போன்றவர்கள் உங்களைப் போன்ற துரோணர்களுடன் அருகே இருந்து உரையாடிப் பெற்றுக்கொண்டதைப் பற்றியெல்லாம் அர்ஜுனர்களாய் கம்பீரமாக நின்று கூறும்போதெல்லாம் வெளியிலிருந்து ஏக்கத்துடன் ஏகலைவனாய் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என் போன்றவர்களுக்கு.

இன்றைக்கு உங்களைப் போன்று வாசகர்களுடனும், எழுத்துலகிற்குள் புதிதாய் நுழைந்தவர்களுடனும் அன்றாடம் உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் குறைவு. அதிலும் என் போன்ற வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு அதெல்லாம சாத்தியமே இல்லை. இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. வல்லமை, சொல்வனம் போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்த பிறகே பல பேருடன் தொடர்பு கிடைத்தது. எனக்கு வேண்டியதெல்லாம் அனுபவம் மட்டுமே. ஏனையவை ஏதாவது கிளைவிளைவாகக் கிடைத்தால் மகிழ்ச்சி.

அதேசமயம் எதைச் செய்தாலும் முழுமையான அர்ப்பணிப்புடன்தான் செய்ய விரும்புகிறேன். கற்றுக்கொள்ள முயல்கிறேன். பயிற்சி செய்கிறேன். மா.அரங்கநாதனின் ‘சித்தி’ கதையில் வரும் ஓட்டக்காரனைப் போல் ஓடுவதற்காகவே, ஓட்டத்தை ரசித்துக்கொண்டே, ஓடிக்கொண்டிருக்க விரும்புகிறேன். விழாமல் ஓடுவதற்கு சொல்லிக்கொடுங்கள். எதிரியாகி விடமாட்டேன். ஆனாலும் என்ன? நேரிடையாகவே மோதுவேன். மறைந்திருந்து தாக்கமாட்டேன். தாக்கினாலும் தகர்ந்துவிடவா போகிறீர்கள்?

அன்புடன்,

மாதவன் இளங்கோ

 

 

அன்புள்ள மாதவன்,

நீங்கள் நினைப்பதுபோல ஒன்றுமில்லை. நான் சொன்னவை எப்போதும் இருப்பவை, எழுதவந்த காலம் முதல் பார்த்துக்கொண்டிருப்பவை. அதனால் நான் புண்பட்டுவிடுவதோ அல்லது குறைந்தபட்சம் சீண்டப்படுவதோகூட இல்லை. என் இயல்பென்பது முழுமையாகப் புறக்கணித்து மேலேசெல்வதே. நான் இத்தனைஎழுதுவது,இவ்வளவு வாசிப்பது, இவ்வளவு செயல்படுவது அவ்வியல்பால்தான்.

அதை நானே முயன்று கற்றுக்கொண்டேன். ஒரு மனிதரை, ஒரு நிகழ்வை என் உள்ளத்திலிருந்து முழுமையாக அழிக்க அதிகபட்சம் ஒருமணிநேரம் போதும். ஒரு புன்னகை, முற்றாக என்னை உள்ளிழுத்து வைத்துக்கொள்ளும் ஒரு வேலையில் ஈடுபடுதல் அல்லது ஒரு பயணம் . குளியல்போல. மீண்டும் நினைக்கையில் நெடுந்தொலைவில் இருக்கும் அனைத்தும். இங்கு நான் ஆற்றவேண்டியது எதுவோ அதை மட்டுமே முதன்மையானதாகக் கருதுகிறேன்.

ஆகவே நான் இக்கருத்துக்களை கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்வதற்கான காரணம் இப்படி ஒரு விஷயம் நம் சூழலில் உள்ளது என்பதைச் சுட்டுவதற்காக மட்டுமே

*

என் ஆற்றலை என் கலையின் வெற்றிதோல்விகளை நான் நன்கறிவேன். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அது தெரியும். ஏதேனும் தளத்தில் ஓரளவேனும் சாதித்தவர்களுக்கு அது மிகத்தெளிவாகவே தெரியும். அதன்பின்னரும் அவர்கள் எதிர்வினைகளை கூர்ந்து நோக்குவது அவர்கள் அறியாத புதிய கோணங்களுக்காக. மானுட இயல்புகளை கவனிப்பதற்காக.

எதிர்வினைகளை எந்தவகையிலும் பொருட்படுத்தக்கூடாது என்று நான் எழுதவந்த காலத்தின் இருபெரும் ஆளுமைகளான சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இருவருமே சொல்லியிருக்கிறார்கள். ஜெயகாந்தன் நான் அவரை எடுத்த பேட்டியில் அதைத் தெளிவாகவே சொல்கிறார்.

சுந்தர ராமசாமியின் தரப்பு என்னவென்றால், எதிர்வினை என்பது சமகாலம் சார்ந்தது. அன்றாடம் சார்ந்தது. சராசரியிலிருந்து எழுவது. அதற்கு செவிசாய்க்கும் எழுத்தாளன் கீழே சென்றுவிடுவான். அவன் கவனிக்கவேண்டியது அவனுடைய சொந்த அழகுணர்வும் நீதியுணர்வும் நிறைவடைகின்றனவா, அவன் எண்ணிய இலக்கு நோக்கிச் செல்கிறானா என்று மட்டுமே

ஜெயகாந்தன் இன்னொரு கோணத்தில் எதிர்வினையாற்றும் சமகாலத்தவன் பெரும்பாலும் தன் சிறுமையை மட்டுமே எழுத்தாளனுக்குக் காட்டுகிறான் என்று சொன்னார். வாசகர்கடிதங்களை தான் படிப்பதே இல்லை என்றார். எதிர்வினையாற்றும் வாசகன் பெரும்பாலும் இயலாமையை அல்லது தாழ்வுணர்வைக் கொண்டு அவன் தன் காலகட்டத்தின் முக்கியமான ஆளுமைகளை மதிப்பிடுகிறான். அவர்கள் முக்கியமானவர்கள், தான் முக்கியமானவன் அல்ல என அவன் உணர்கிறான். அவர்கள் சாதனையாளர்கள், தான் சாமானியன் என்பதே அவனைச் சீண்டுகிறது. அவ்வுணர்ச்சியே அவன் விமர்சனத்தின் அடிப்படையாக அமைகிறது என்றார்.

அவ்வகையில் சமகாலத்துச் ‘சிறிய’ எழுத்தாளர்களின் கருத்துக்களுக்கு சருகுகளின் மதிப்புகூட இல்லை என்றார் ஜெயகாந்தன். படைப்பூக்கத்துடன்எழுதமுடியாதவனின் உள்ளம் ஒரு இருண்ட நரகம். அங்கிருந்து அவனுடைய புகைச்சல் மட்டுமே வெளிப்படமுடியும்.

*

உண்மையில் என் கால்நூற்றாண்டுக்கால அனுபவத்தில் எதிர்மறை விமர்சனங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே எவ்வகையிலேனும் பொருட்படுத்தத் தக்கது. விஷ்ணுபுரமோ, பின் தொடரும் நிழலின் குரலோ ,காடோ ,ஏழாம் உலகமோ வெளிவந்த காலகட்டத்தில் எழுந்த எதிர்வினைகளை இன்று வாசித்தால் அந்நாவல்கள் இன்று அடைந்துள்ள வாசகப்பரப்பை காணும் எவரும் அதிர்ச்சியையே அடைவார்கள்.

அதன்பின்னரும் விவாதம் என்பது முக்கியமானதே என்று நினைக்கிறேன். அது எழுத்தாளன் தனக்கு நிகரானவர்களாக நினைக்கும் ஆளுமைகளுடனான கருத்தாடலாக இருக்கலாம். அல்லது அடுத்த தலைமுறையிலிருந்து எழுந்து வரும் முக்கியமான புதிய குரலுடன் நிகழும் உரையாடலாக இருக்கலாம்.

வாசக எதிர்வினைகள் இருவகையில் முக்கியமானவை. ஒட்டுமொத்தமாக, ஒற்றைத்தரப்பாக, ஒரு சராசரி அடிப்படையில் கவனத்திற்குரியவை. அவை தான் எழுதியது வாசிக்கப்பட்டதா என அறிவதற்கான சான்றுகள். இன்னொன்று வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே ஒர் அந்தரங்கமான சந்திப்புப்புள்ளி உள்ளது. அதை எழுத்தாளன் வாசகனிடமிருந்து அறியும் தருணம் அவனுக்கு தன் எழுத்தைப்பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்குவது.

*

எழுதத்தொடங்கும் காலகட்டத்தில் எழுத்தளர்களுக்கு இருவகை எதிர்வினைகள் முக்கியமானவை. ஒன்று, அச்சூழலின் முதன்மையான இலக்கியவாதிகளின் நோக்கு. அது அங்கீகாரம் அல்லது தீர்ப்பு அல்ல. அச்சூழலில் அதுவரை அடையப்பட்ட தரத்தின் அளவீடு அது.

இன்னொன்று உடன் எழுதும் எழுத்தாளர்களின் மதிப்பீடு. அவர்கள் உங்களுடன் உடன் ஓடுபவர்கள். வடிவம் சார்ந்த நோக்கு முதல் தரப்பில் இருந்தும் பார்வை சார்ந்த மதிப்பீடு இரண்டாம் தரப்பில் இருந்தும் கவனிக்கத்தக்கது.

நான் எழுதவந்த காலகட்டத்தில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஞானி, சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், கோமல் சாமிநாதன் எனப்பலர் தொடர்ந்து எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். கணிசமானவை கறாரான எதிர்மதிப்பீடுகள்.

அதேபோல நான் பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், ந.ஜெயபாஸ்கரன், யுவன் சந்திரசேகர் போன்ற அன்றைய இளம் எழுத்தாளர்களுடன் தொடர்சியான உரையாடலில் இருந்தேன். பலருக்கு ஒவ்வொருநாளும் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அவர்கள் எழுதும் அனைத்தையும் விமர்சனம் செய்வேன். ஒருநாளுக்கு சராசரியாக பத்து கடிதங்கள் வரும் அன்று எனக்கு.

ஆகவேதான் இக்கதைகளை பிரசுரித்து எதிர்வினைகளைக் கோரினேன். எதிர்வினையாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள் என்பதைக் காணலாம். அந்த எதிர்வினைகள் எழுத்தாளர்களுக்கு முக்கியமானவை

எஸ்ரா பவுண்ட் சொன்ன ஒரு வரி எனக்கு முக்கியமானதென அடிக்கடித் தோன்றும். தன்னளவில் ஒரு நல்ல படைப்பையேனும் எழுதாத ஒருவரின் இலக்கியமதிப்பீட்டை பொருட்படுத்த வேண்டியதில்லை. நான் பொருட்படுத்துவேன், வெறும் விமர்சகர்களின் மதிப்பீட்டை அல்ல, அவர்களின் ஆய்வுக்கருவிகளை மட்டும்.

*

விமர்சனரீதியான வாசிப்பு இல்லாமல் எவரும் தன் மொழியை, வடிவை தீட்டிக்கொள்ளமுடியாது. எது தன் வல்லமை, எங்கே சரிகிறோம் என உணர முடியாது

எங்கே பிரச்சினைகள் வருகின்றன? உண்மையில் ஊக்கத்துடன் எழுதிக்கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி, தன்னால் மேலும் நெடுந்தொலைவு செல்லமுடியும் என உணர்பவர் எதிர் விமர்சனங்களால் புண்படுவதில்லை. அவ்விமர்சனம் அவர் எழுதிய படைப்பின் நுண்மைகள் அனைத்தையும் தொட்டபின் மேலும் கோருவதாக இருக்கும் நிலையில் அவரால் அக்குரலை உதாசீனம் செய்யமுடியாது

எழுத்தாளன் புண்படுவது புறக்கணிப்பை வெளிப்படுத்தும் ஒற்றைவரி நிராகரிப்புகள் மற்றும் கிண்டல்களில். போகிற போக்கிலான சீண்டல்களில். ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக படைப்பூக்கத்துடன் இருக்கும் ஒரு படைப்பாளிக்கு அதுவே கூட பழகிவிட்டிருக்கும். அதன் பின் உள்ள உணர்வுகளை அவனால் புரிந்துகொள்ளமுடியும்

1988ல் கணையாழியில் நான் ‘கிளிக்காலம்’ என்னும் கதை எழுதியிருந்தேன். மறு இதழில் கணையாழியில் வெளிவந்தவற்றிலேயே மோசமான கதை அதுதான் என ஒரு கடிதம் வந்திருந்தது. கணையாழியின் அன்றைய எழுத்துமுறைக்கு முற்றிலும் ஒவ்வாத கதை அது. மூன்று இளைஞர்களின் பாலியலுணர்வின் தொடக்கத்தை, ஒருவனின் பாலியல் களங்கமின்மையின் அழிவை சித்தரிக்கும் கதை. கணையாழிக்கதைகள் நடுத்தவ நகர்ப்புற வர்க்கத்தின் அன்றாடச்சிக்கல்களை மிக உள்ளடங்கிய தொனியில் செய்திநடையில் வெளிவந்துகொண்டிருந்த காலம்

நான் கடுமையாகப்புண்பட்டேன். ஆனால் நேரில் சந்தித்தபோது அசோகமித்திரன் என் உணர்ச்சிகளில் உள்ள அர்த்தமின்மையை சுட்டிக்காட்டினர். அந்த வாசகரின் அழகுணர்வு இலக்கியவாசிப்பு எதுவும் எனக்குத்தெரியாது. அவர் எதிர்பார்க்கும் கதையை நான் எழுதவில்லை என்று மட்டுமே அதற்குப்பொருள். “அது அவரோட லிமிட்’ என்று அசோகமித்திரன் சொன்னார். அது ஒரு பெரிய விழிப்புணர்வாக அன்று இருந்தது

ஆக, பொதுவான எதிர்வினைகளை எளிதில் கடந்துபோகமுடியும். உண்மையான புண்படுதல் நிகழ்வது அந்த எழுத்தாளன் தன் உண்மையான எல்லையை விமர்சகர் சுட்டிக்காட்டுவதை உணரும்போதுதான். ஆனால் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.

*

நான் சமகால இளம் எழுத்தாளர் எவரையும் எதிர்மறையாக விமர்சனம் செய்யவேண்டாம் என்ற கொள்கையை கடந்த பல்லாண்டுக்காலமாகக் கொண்டிருக்கிறேன். எப்போதாவது ஒருவரி தற்செயலாக, எழுத்தினூடாக வெளிவந்தால் ஆயிற்று. மற்றபடி விமர்சனமே சொல்வதில்லை . ஆனால் அனைத்தையும் வாசித்துப்பார்க்கிறேன்

தவிர்ப்பதற்கான பல காரணங்களில் முதன்மையானது அவர்கள் எவ்வகையிலும் அதை விரும்புவதில்லை என்பதே. முன்னரே அவர்கள் வரச்சாத்தியமான எதிர்மறை விமர்சனத்திற்கு எதிரான வாதங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். விமர்சனத்தின் நோக்கங்களை ஐயப்படுவது, விமர்சகனின் நேர்மையை மறுப்பது அதற்கான குறுக்கு வழி. தங்களை கறாராக அணுகக்கூடியவர்கள் என தாங்கள் நினைப்பவர்களை முன்னரே மட்டம்தட்டி தங்களை மேலெ நிறுத்திக்கொள்ளும் ஒரு பாவனையை நடித்துக்கொள்வது சமீபத்திய உத்தி.

அவர்கள் ஒரு சிறு முகநூல் வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் நூல்கள் அந்த வட்டத்திற்குள் இரண்டுமாதக்காலம் ஓர் அலையை உருவாக்குகின்றன. அதில் மகிழ்ந்து திளைக்கிறார்கள். அது தீவிரமான வாசகர்வட்டம் என நினைத்துக்கொள்கிறார்கள். எதிர்மறை விமர்சனம் அந்த வட்டத்தை அழிக்கும் என கவலைப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் மகிழ்ந்திருப்பதென்றால் இருக்கட்டுமே என்றே எனக்கும் படுகிறது.

ஏனென்றால் இந்த எதிர்மறை மனநிலையின் உச்சத்தில் ஓர் இளம் எழுத்தாளர் நிற்பாரென்றால் அவருக்கு எதிர்மறை விமர்சனங்களால் எந்தப்பயனும் இல்லை. அவரது வன்மமும் கோபமும் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு. அவர் எழுதச் சாத்தியமானவற்றையும் அம்மனநிலை அழிக்கும். மேலும் சிற்றிதழ்ச்சூழலில் எந்த உணர்வும் ஆறப்போடப்படும். முகநூலில் வஞ்சமும் கசப்பும் மாதக்கணக்கில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

இந்த எதிர்மறை மனநிலையை முகநூல்சூழல் எப்படி உருவாக்கியிருக்கிறது என்பதை முன்னரே சுட்டியிருந்தேன். இங்கே இன்று இலக்கியத்தில் எவரை வேண்டுமென்றாலும் எவர் வேண்டுமென்றாலும் எள்ளி நகையாடலாம், ஒட்டுமொத்தமாக நிராகரிக்கலாம். ‘உனக்கு என்ன தகுதி அதற்கு?” என்னும் கேள்வியே எழுவதில்லை. அனைவரும் சமம் என்பதை தரம் எவருக்கும் தேவையில்லை என ஆக்கிவிட்டிருக்கிறார்கள். மதிப்பீடுகள் இல்லை. ஆகவே மதிப்புக்குரியவர்களும் இல்லை.

பலசமயம் கருத்துக்கள் அவற்றைச் சொல்பவரின் தகுதியால்தான் முக்கியத்துவம் கொள்கின்றன. அவருடைய எழுத்துக்களின் பின்னணி அக்கருத்துக்களை முழுமையாக்குகிறது. அதை முழுமையாக நிராகரித்து அவரை சில்லறைப்பூசல்களின் இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டால் விமர்சனம் பொருளற்றதாகிறது. முகநூல் அதற்கான களம். முகநூல் இருக்கும் வரை இலக்கியவிமர்சனமே சாத்தியமில்லை என்றுகூடத் தோன்றுகிறது.

ஆகவே எதிர்மறை விமர்சனம் இன்று ஒரு வீண் உழைப்பு. எனவே எதிர்காலத்திலும் எந்த இளம் எழுத்தாளரைப்பற்றியும் எந்த விமர்சனமும் சொல்லும் எண்ணம் எனக்கில்லை.

பாராட்டுதலாகச் சுட்டிக்காட்டவேண்டிய ஆக்கங்களை பற்றி மட்டுமே அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறேன். அவை கவன ஈர்ப்பு மட்டுமே.

இங்கே இந்தக்கதைகளை மட்டும் விமர்சனம் செய்யலாமென நினைப்பது இவர்களே இவற்றை எனக்கு அனுப்பி கருத்து கேட்பதனால் மட்டும். ஆனால் மிக விரைவிலேயே இவர்களும் அந்த முகநூல் சூழலுக்கே செல்லப்போகிறார்கள். நக்கல்கள், கிண்டல்கள், மதிப்பின்மையை வெளிக்காட்டும் தோரணைகள், உள்நோக்கம் கற்பித்தல்கள் வழியாக தங்களை காத்துக்கொள்ள உந்தப்படலாம். ஏனென்றால் நான் தொடர்ந்து கண்பது அது. அதைத்தான் சற்று கிண்டலாகச் சுட்டினேன்.

ஜெயமோகன்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31

$
0
0

[ 48 ]

பீதர் வணிகர்களுடன் அர்ஜுனன் பிங்கலத்தில் இருந்து எலிமயிரின் நிறம் கொண்டிருந்த தூசரம் என்னும் பாலையை கடந்தான். மரவுரியின் நிறம் கொண்டிருந்த கபிலத்தையும் பூர்ஜப் பட்டை என வெளிறிய பாண்டகத்தையும் கடந்தான். வெயில் என்பது நிலத்திற்கு ஒன்று என்று உணர்ந்தான். மரப்பட்டைகளை உலர்த்திவெடிக்கவைக்கும் வெயிலை அவன் அறிந்திருந்தான். கற்பாறைகளை விரிசலிடச்செய்யும் வெயிலை அங்கு கண்டான்.

நீர் என்பது தேக்கமென பெருக்கென அதுவரை அறிந்திருந்தான். அது துளிகள் மட்டுமே என உணர்ந்தான். கழுதைகளில் ஏற்றப்பட்ட தோற்பைகளில் நீர்கொண்டுசென்றனர். ஒவ்வொருவருக்கும் உரிய நீர் அன்றுகாலையிலேயே வழங்கப்பட்டது. எரிக்கும் வெயிலில் அதை துளித்துளியாக அருந்தியபடி முன்சென்றனர். கையில் நீர் இருக்கும் எண்ணமே கடும் விடாயை தாங்கச்செய்யும் விந்தையில்  திளைத்தனர். அதில்  சிறுபகுதியை மறுநாளைக்கென சேர்த்துவைத்தவர்கள் பற்களைக் காட்டி மகிழ்ந்து நகைத்தனர். இரவில் துயில்வதற்கு முன் அந்த நீரை நாவில் விட்டுச் சுழற்றி அமுதென சுவைத்தனர்.

நீர்த்துளியை விரல்நுனியில் தொட்டு கண்முன் தூக்கி நோக்கினான் அர்ஜுனன். அதன் ஒளியும் ததும்பலும் முழுப்பும் நெஞ்சை ஆட்கொண்டன. அதன் வளைவுகளில் பாலைநிலப்பரப்பு வளைந்து சுருண்டிருந்தது. விழிகளைச் சந்திக்கும் விழிமணி. விழியே  நீரென்றாகியதா என்ன? சொட்டுவதும்  வழிவதும் தேங்குவதும் பெருகுவதும் விரைவதும் பொழிவதும் அலைகொள்வதும் திசையென்றாவதுமான விழியா அது?

கடக்கும்தோறும் பாதை நீண்டு வர கால்கள் தன்விழைவால்  நடந்தன. நடப்பதே அவற்றின் இருப்பு என்பதுபோல. துயிலிலும் கால்கள் நடந்துகொண்டிருப்பதாக உணர்ந்தான். அதுவரை அவன் கொண்டிருந்த நடையே மாறலாயிற்று. புதையும் மணலுக்குள் முழுக்காலையும் பதியவைத்து சிறிய அடிகளாக தூக்கி வைத்து சீரான விரைவில் நடக்கவேண்டியிருந்தது. நடைமாறுபட்டதும் நடப்பதும் எளிதாயிற்று. ஒருகட்டத்தில் அத்திரிகளும் ஒட்டகைகளும்கூட அப்படித்தான் நடக்கின்றன என்று தோன்றியது.

நாள் செல்லச்செல்ல ஒவ்வொரு நோக்கிலும் பாலையின் வடிவங்கள் பெருகின. இன்மையென, வெறுமையென, மாற்றமின்மை எனத் தெரிந்த வறுநிலம் மெல்ல தன் உயிர்க் களியாட்டத்தை காட்டலாயிற்று. பொருக்கு என எழுந்த சிறுகூடுகளுக்குள் வெண்ணிற எறும்புகளின் உலகம் கலைந்து பரவியது. சிதல்வரிகளுக்குள் ஆழ்ந்த பாதைகள் இருந்தன.  நொதித்த மாவில் என மென்மணலில் விழுந்த சிறுதுளைகளிலிருந்து கரிய எறும்புகள் கசிந்தவைபோல் எழுந்து நிரைவகுத்துச் சென்றன. கற்களின் அடியிலிருந்த விரிசல்களில் இருந்து சிற்றுயிர்கள் எட்டிப்பார்த்தன. ஒட்டகக் குளம்போசையின் நடுவே விரைந்து உட்புகுந்து மறைந்தன.

சாறே அற்றவைபோல, மறுகணம் பற்றிக்கொள்வனபோல தெரிந்த முட்புதர்கள் அனைத்திலும் புழுதிபடிந்து மண்வடிவெனத் தோன்றிய இலைகள் உயிருடனிருந்தன. அவற்றை உண்ண இருளுக்குள் விழிமின்ன எலிபோன்ற சிறு விலங்குகள் வந்தன. அவற்றை பிடிக்க பட்டுநாடா போன்ற வண்ணப்பட்டைகளுடன் பாலைநாகங்கள் பாறைகளுக்கிடையே இருந்து வளைந்து எழுந்தன.

உலோகமென மயல் காட்டிய கூர்முட்களில்கூட உயிர் இருந்தது. புலரியில் அந்த முள்முனைகளில் மென்மயிர் நுனியில் என பனித்துளிகள் நடுங்கின. அத்துளிகளை சிறு சிப்பியளவே இருந்த குருவிகள் வந்து அமர்ந்து கோதுமை மணிகள் போன்ற அலகுகளால் கொத்தி உறிஞ்சி உணடன. சாம்பல்நிறச்சிறகுக்கு அடியில் கொன்றைமலர் வண்ணம் கொண்ட அடிவயிறுள்ளவை. வெண்பஞ்சு நெஞ்சும் இளநீலவரிகொண்ட சிறகுகளும் கொண்டவை. கோவைப்பழம்போல் சிவந்தவை சிலவற்றின் சிறகுகள். பழுத்த மாவிலைபோல் பொன்மின்னியவை சில.

முள் மட்டுமேயாகி, கீழே வலையென நிழல்விரித்து நின்றிருந்த மரங்களுக்குள் மலர்செறிந்ததுபோல் நூற்றுக்கணக்கில் சிறிய குருவிகள் அமர்ந்து சலங்கைகள் குலுங்குவதுபோல் ஒலி எழுப்பி பேசிக்கொண்டிருந்தன. காலடியின் ஓசை கேட்டு அவை காற்று அள்ளி வீசிய மலர்கள் என எழுந்து சுழன்று பறந்து அமைந்தன. தொலைவில் வண்ணப் பட்டுத்துவாலை ஒன்று பறந்தலைவதெனத் தோன்றியது.

அனலென நாக்கை நீட்டிப்பறக்க வைத்தபடி சாலையோரப் பாறையொன்றில் அமர்ந்து நடுங்கி வண்ணம் மாற்றிக்கொண்டது உடும்பு. ஓசை கேட்டு வால் வில்லென வளைய கன்னச்செதில்கள் சிலிர்த்து விடைக்க தலையை மேலும் கீழும் அசைத்து நெருப்பொலியை எழுப்பியது. வண்ணமணித்தொகை என தன் வாலை சிலம்பொலியுடன் ஆட்டிக்காட்டி மணலுக்குள் தலைபதித்துக் கிடந்த நச்சு நாகம் ஒன்றை காவல்வீரன் நீண்ட கழியால் அள்ளி எடுத்து வீசினான். மென்மணல் சரிவில் அலைவடிவை வரைந்தபடி அது வளைந்து சென்று மணலுக்குள் தலை பதித்து தன்னை இழுத்து உள்ளே பதுக்கிக்கொண்டது.

மணல்மேல் கால்பரப்பி நடந்த வெண்சிறு சிலந்திகள் துளைகளுக்குள் சென்று மறைந்தன. முட்புதர்களுக்குள் பனி நிற வலைச்சுழிகள் அழகிய உந்திக்குழிகள்போல் இருந்தன. பொன்னிறக் கூழாங்கற்கள்போல வண்டுகள் சிறகுகள் ரீங்கரிக்க சுற்றிவந்தன. அவற்றை உண்பதற்காக மணலில் கால்பதிய வாலசைத்து எம்பி அமர்ந்து நடந்தன நீளவால்கொண்ட குருவிகள்.

“உயிர்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், நீரின் சாயல் காற்றிலிருந்தால் போதும், அங்கு உயிர் இருக்கும்” என்றார் போ என்னும் பெயர்கொண்ட முதுபெருவணிகர். “வீரரே, நீர் என்பது உயிரின் மறுபெயர்.” வெந்துவிரிந்த வறுநிலம் நோக்கி “இங்கு மழை பெய்வதுண்டா?” என்றான் அர்ஜுனன். “மழைக்காலம் என்று ஒன்றில்லை. பல்லாண்டுகளுக்கு ஒருமுறை எப்போதேனும் பெய்யலாம். ஆனால் காற்றில் நீர் உண்டு. குளிர்ந்து காலையில் அவை இலைகள் மேல் பரவுகின்றன. இச்சிற்றுயிர்களுக்கு அந்த நீரே போதும்.”

“இங்கு பெரிய உயிர்களும் உள்ளன” என்று அர்ஜுனன் இரும்பாலான கவசமணிந்த புரவிபோல அவர்களின் பாதையைக் கடந்துசென்ற ஒரு பெரிய எறும்புதின்னியை நோக்கியபடி சொன்னான். “இளையபாண்டவரே, குருதியும் நீரல்லவா?” என்றார் போ. அச்சொல்லாட்சி அவனை ஒரு கணம் திகைக்கச் செய்தது. உடனே புன்னகைத்து “ஆம்” என்றான்.

முகிலற்றிருந்த நீலவானத்தின் தூய்மை ஒரு அழியா இருப்பென தலைக்கு மேல் ஏறி எப்போதும் தொடர்ந்தது. நிற்கும்போதெல்லாம் அதை அண்ணாந்து நோக்காமல் இருக்க முடியவில்லை. பாலையில் நுழைந்ததுமுதல் வானத்தின் முகிலின்மை அளித்து வந்த மெல்லிய பதற்றம் நாள்செல்லச் செல்ல விலகியது. அளியின்மை எனத் தோன்றியிருந்த அது மாசின்மை எனத் தோன்றத்தொடங்கியது.

இளைப்பாறுவதற்காக பாலைச்சோலைகளில் படுக்கும்போது வான் முழுமையாகத் தெரியும்படி முள்மர நிழல்களைத் தவிர்த்து பாறையடிகளில் அவன் மல்லாந்தான். வானை நோக்கிக் கொண்டிருக்கையில் அங்கிருந்து ஒலியின்மை வழிந்து தன்னைச் சூழ்ந்து மூடிக்கொள்வதை அவன் விழிகளால் பார்த்தான். உள்ளமென்று அவன் உணர்ந்த சொற்பெருக்கு ஓய்ந்து துளித்துச் சொட்டி மறைய முற்றிலும் இன்மையில் ஆழ்ந்து விழிதிறந்து கிடந்தான்.

விண்ணிலுள்ளது தூயநீர்ப்பெருக்கு என்கின்றது வேதம். மாமழை அக்கடலின் ஒரு துளிக்கசிவே. வருணன் அத்துளியின் காவலன். வருணனைப்போன்ற துளிகள் சென்று சேர்ந்தெழுந்த பெருங்கடல் ஒன்று அங்குள்ளது. இவ்விண்மீன்கள் நீர்த்துளிகளா என்ன? சுட்டுவிரல்முனையில் பழுத்துத் ததும்பி சொட்டத்துடிக்கும் விழிகளா?  எவரேனும் தொட்டு உசுப்புகையில் துடித்து வந்து அள்ளிப்பற்றிக்கொண்டு எரித்துக் கொழுந்தாடத் தொடங்கியது காலம்.

கழுகின் உகிர்க்கால்கள் போல புழுதிப்பரப்பை அள்ளிநின்ற வேர்ப்பற்றும் யானைக்கால்கள் போன்று கருமைகொண்டு முரடித்த அடிமரங்களும் கொண்ட மரங்கள் குறுகிய கிளைகளை நீட்டி குற்றிலைகளும் முட்களுமாக செறிந்திருந்த சோலைகள். தெற்கிலிருந்து நிலைக்காது வீசும் காற்றுக்கு வடபுலம் நோக்கி சீவப்பட்ட மயிரென வளைந்து நின்றிருந்தன அவை. சருகுகள் மென்மணலால் மூடப்பட்டிருந்தன. கால்கள் வைக்கையில் அழுந்தி ஆழங்களில் தீப்பற்றிக் கொள்ளும் ஓசை எழுப்பின.

“சருகுகளின் மேல் கால்வைக்க வேண்டாம்” என்று வணிகர்கள் எச்சரித்துக் கொண்டிருந்தனர். “நாகங்கள் உள்ளிருக்கும், கருதுக!” காலில் தோல் உறையிட்ட அத்திரி ஒன்றின்மேல் ஏறி ஒருவன் சரிவிலிறங்கிச் சென்று குவிந்த ஆழத்தில் சேறு தேங்கிய வளையத்தின் நடுவே சந்தனச்சட்டத்திற்குள் ஆடி என வானொளி ஏற்று நடுங்கிக் கொண்டிருந்த நீர்ப்பரப்பு வரை சென்று வழி உருவாக்கினான். முன்னும் பின்னும் சென்று அவன் உருவாக்கிய அவ்வழியினூடாக மட்டுமே பிறர் நடந்து சென்றனர்.

மூங்கில் குவளைகளில் நீரள்ளி முதலில் போவுக்கு அளித்தனர். அதை வாங்கி தலைவணங்கி தெய்வங்களுக்கு வாழ்த்துரைத்தபின் அவர் அருந்தினார். பின்னர் அர்ஜுனனுக்கு அதை அளித்தார். “இனிது… நீரளவு இனிதென ஏதுமில்லை புவியில்.” வரிசையாக அனைவருக்கும் நீர் அளிக்கப்பட்டது. ஓர் ஆழ்ந்த இறைச்சடங்குபோல அவர்கள் அமைதியுடன் நீர் அருந்தினர். நீரை உடல் ஏற்றுக்கொள்ளும் ஒலி எழுந்தது. அவி ஏற்கும் அனலின் ஒலிபோல. உயிர் மண்ணை உணரும் ஒலி என அர்ஜுனன் நினைத்தான்.

மானுடர் அருந்திய பிறகு அத்திரிகளுக்கும் இறுதியாக ஒட்டகைகளுக்கும் நீரளிக்கப்பட்டது. மணற்காற்று  ஓலமிட்டுக் கொண்டிருந்த இரவில் வெடித்துச் சாய்ந்தும் காற்றில் அரித்து ஊன்போல உருக்காட்டியும் நின்ற பாறைகளுக்கு அடியில் காற்றுத்திசைக்கு மறுபக்கம் அவர்கள் தங்கினர். அப்பால் பாறைமேல் மணலை அள்ளி வீசி மழையோ என ஓசையிட்டுக்கொண்டிருந்தது காற்று. தோலாடைகளால் முற்றிலும் உடல் மறைத்து முகத்தை மட்டும் காற்றுக்கு வெளியே நீட்டி அமர்ந்தபடியே துயின்றனர்.

 [ 49 ]

மழை என ஒவ்வொருநாளும் மயல்காட்டியது பாலை நிலம். ஒவ்வொருநாளும் காலையில் கடுங்குளிரில் உடல் நடுங்கி பற்கள் கிட்டிக்கத்தான் போர்வைக்கூடாரத்திற்குள் அவன் விழித்துக்கொண்டான். குளிர் குளிர் குளிர் என உள்ளம் ஓடிக்கொண்டிருக்கும். குளிரில் தோள்கள் இறுகிக்கோட்டியிருக்கும். கழுத்துத் தசைகள் எடைதூக்குவதுபோல இறுகி நிற்கும். கைவிரல்பூட்டுகள் எலும்பு ஒடிந்தவைபோல உளையும். கால்விரல்கள் மரத்து உயிரற்றிருக்கும். காதுமடல்கள் எரியும்.

உள்ளே கம்பளியும் வெளியே தோலும் வைத்து தைக்கப்பட்ட அந்தப்போர்வை அவன் உடலின் மூச்சையும் வெம்மையையும் உள்ளே சேமிப்பது. பின்னிரவில் அந்த வெம்மை கருப்பை போலிருக்கும். எந்த அணைப்பிலும் அந்த ஆழ்ந்த அன்பை உணர்ந்ததில்லை. விடியலின் இருளுக்குள் அந்த வெம்மையை  விண்மீன் மினுங்கும் கரியவானம் அள்ளி உண்டுவிடும். உடல் உயிரென எஞ்சியிருக்கும் வெம்மையை மூச்சினூடாக வெளியே அனுப்பிக்கொண்டிருக்கும். சற்று நேரத்திலேயே நடுங்கி அதிரத்தொடங்கும்.

பின்னர் சூரியனுக்கான தவம். கணம் கணம் என. எண்ணம் எண்ணம் என. விண்மீன் விண்மீன் என. அலையலையென காற்றில் காலம் அள்ளி வரப்பட்டு அவனைச்சூழும். அள்ளிச்செல்லப்பட்டு அடுத்த அடுக்கு வந்தமையும். காற்றில் எப்போதும் ஒரே மணம். புழுதி. ஆனால் வந்தபின் அந்த மணத்தின் வேறுபாடுகளை காணப்பழகிக்கொண்டான். காலைப்புழுதியில் குளிர்ந்த பனியின் ஈரம் கலந்திருக்கும். பின்னர் நீராவி. பின்னர் வறுபடும் மணல். பின்னர் மணலுமிழும் அனல். பின்னர் வெந்த சுண்ணம். பின்னர் மெல்லிய கந்தகம். பின்னர் இருளுக்குள் இருந்து முள்மரங்களின் மெல்லிய தழைமணம்.

ஒளியெழுந்ததும் கண்கள் வழியாகவே உடல் வெப்பத்தை அள்ளிப்பருகத் தொடங்கும்.  உடல்தசைகள் நீர்பட்ட களிமண் என இறுக்கம் அழிந்து குழைந்து நீளும். கைகால்கள் சோர்வு கொண்டு இனிமையடையும். கண்கள் சொக்கி மீண்டும் ஓர் இன்துயில் வந்து எடையென உடல்மேல் அமையும். சித்தம் ஒளியுடன் குழைந்து மயங்கும். குருதிக்கொப்புளங்கள் அலையும் செவ்வெளியில் சூரியக்கதிர்கள் அதிர்ந்துகொண்டிருக்கும். உடலெங்கும் குருதி உருகி கொப்பளிப்பு கொள்ளும். செவிமடல்களில் குருதியின் துடிப்பை உணரமுடியும்.

எழுந்து நோக்கும்போது முள்முனைகளில் எல்லாம் பனித்துளிகள் ஒளிவிட்டுக்கொண்டிருக்க அருமணிகள் கனிந்த வயல் எனத் தெரியும் பாலை. விண்சுரந்த நீர். விண்ணில் வாழ்கின்றன பெருங்கடல்கள். ஆனால் நோக்கி நிற்கவே அவை உதிராது காற்றில் மறையும். பின்னர் நீள்மூச்சுடன் பாலைநிலம் வெம்மைகொள்ளத் தொடங்கும். வானிலிருந்து வெம்மை மண்ணை மூடிப்பொழிந்துகொண்டிருக்கும். பின்காலையாகும்போது மண்ணிலிருந்து வெம்மை மேலெழத் தொடங்கும். பின்னர் வானிலிருந்து வரும் காற்று மண்ணின் அனலை அவிப்பதாகத் தெரியும்.

உச்சிப்பொழுதே பாலையில் பெரும்பொழுது. அறத்தின் துலாமுள் என கதிரவன் அசைவற்று நின்றிருக்க நிழல்கள் தேங்கிய பாறைகள் வெம்மைகொண்டு  கனலுண்டு கனலுமிழ்ந்து உருகுநிலையை நோக்கி செல்வதுபோலிருக்கும். பின்மாலையில் வெம்மை இறங்குகிறதா இல்லையா என உள்ளம் ஏங்கும். அப்போது மென்மையாக காதை ஊதும் நீராவி மழை என்று சொல்லும். மழை என உள்ளம் குதித்தெழும். ஆம், மழையேதான். மழைவிழுந்த வெம்புழுதியின் தசைமணம். மழைக்காற்றின் மென்குளிர். அது மயலா மெய்யா? இல்லை உணர்கிறேன். உண்மையே அது. மழை.

“மழை!” என அவன் அருகே வந்த வணிகரிடம் சொன்னான். “மழையேதான்.” அவர் இதழ்கோட்டிய புன்னகையுடன் “அதன் பெயர் மாயாவருணன். மழையெனக் காட்டுவான். மழைத்துளிகளைக்கூட உதிர்ப்பான். மழைக்காக ஏங்கும் உயிர்களுடன் விளையாடுவான். வருணனை வெறுக்கச்செய்யும்பொருட்டே அவன் தோன்றுகிறான்.” அர்ஜுனன் விண்ணை நோக்கினான். தென்கிழக்கே முகில்கள் தெரிந்தன. “முகில்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்றான்.

“ஆம், அவை நீர்சுமந்த கடல்முகில்கள் அல்ல. மண்ணில் இருந்து எழுந்தவை. மேலெழுந்து குளிர்ந்து குடையாகின்றன. அவைதான் மாயாவருணனின் கருவிகள்.” அர்ஜுனன் அவர் சொன்னதை நம்பவில்லை. மழை மழை  என உள்ளம் தவிக்க முகில்களை நோக்கிக்கொண்டிருந்தான். முகில்கள் காற்றில் புகை எனக்கரைந்து வானில் மறைந்தன. மேலும் மேலும் நீராவி சுமந்து தோலை வியர்க்கவைத்த காற்று மீண்டும் வெம்மைகொள்ளத் தொடங்கியது. மூச்சுத்திணறல் வந்தது. கண்ணிமைகள் வியர்த்து விழிகளுக்குள் உப்பு சென்றது. விடாய் எழுந்து உடலகம் தவித்தது.

“நீர் அருந்தலாகாது. மழைவருமென எண்ணி நீரை அருந்தவைக்கும்பொருட்டே மாயாவருணன் இதை செய்கிறான்” என்றார் வணிகர். “பாலையில் தவித்து இறக்கும் மானுடர் அருகே வந்திறங்கி அவன் நடனமிடுகிறான். வெள்ளெலும்புகளைச் சுற்றி அக்காலடிகளை காணமுடியும்.” அர்ஜுனன் அந்த மழைமயக்கு மெல்ல விலகி சூரியன் மேலும் ஒளிகொள்வதையே கண்டான். மெல்ல அந்தி. இருள்மயக்கில் மீண்டுமொரு நீராவிப்படலம் வந்து செவிதொட்டு ஏக்கம் கொள்ளச்செய்தது.

மாயாவருணனை அறிந்த தேர்ந்தவணிகரும் கூட ஏமாற்றம்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ஒருமுறை நன்றாகவே வான் மூடிவிட்டது. திசைகள் மயங்கும் இருள். ஆடைவண்ணங்கள் மேலும் ஆழம் கொண்டன. “மழை” என்றான் அர்ஜுனன். “பார்ப்போம்” என்றார் போ. மேலும் மேலும் இருட்டிவந்தது. வெம்மை முழுமையாக மறைந்து குளிர் காதுகளைத் தொட்டது. உடல் சிலிர்ப்பு கொண்டது. “ஆம், மழையேதான்” என்றான். “பார்ப்போம்” என்று போ சொன்னார்.

முதல்மழைத்துளியின் ஓசையைக் கேட்டதும் அவன் உடல் அதிரத் தொடங்கியது. சிற்றம்பு வந்து மென் தசையை தைப்பதுபோல மீண்டுமொரு மழைத்துளி. “ஆம், மழை” என்று அவன் கூவினான். “மழை! மழை!” பலர் கூவத்தொடங்கினர். இளைஞர் கைகளை விரித்து கூச்சலிட்டபடி ஆடலாயினர். “மழைதான்…” என்றார் போ.  ”பாணரே, சொல்க! இது மழையா?” என்றான் ஒருவன். பீதர்நாட்டுப்பாணன் சுருங்கிய கண்களுடன் நகைத்து “ஆம், மழை” என்றான். “அனைத்துக்குறிகளும் மழை என்கின்றன.”

மழைத்துளிகள் கூடை கவிழ்த்து கொட்டியதுபோல விழுந்தன. அக்கணமே மண்ணிலிருந்து எழுந்த நீராவிக்காற்று அவற்றை அள்ளிச் சிதறடித்தது. வானிலெழுந்த முகில்பரப்பு விரிசலிடலாயிற்று. சூரிய ஒளி அதனூடாக வந்து மண்ணில் ஊன்றி நின்றது. அதில் செந்நிறமாக புழுதிகலந்த நீராவி ஒளியுடன் அலையடித்தது. வானம் பெரும் பெட்டகம்போல் திறக்க பாலை செந்நிற ஒளிகொண்டபடியே வந்தது.

சற்றுநேரத்திலேயே முகில்பரப்பு இரண்டு பகுதிகளாகப்பிரிந்து தெற்கும் மேற்குமென வளைந்தது. பாலை முன்பிருந்ததுபோலவே வெயில்படர்ந்து விழிகூசச் சுடர்ந்தது. வணிகன் ஒருவன் குனிந்து புழுதியில் இருந்து நீர்த்துளி விழுந்து உருவான உருளையை கையில் எடுத்தான். “பனிப்பழமா?” என்றான் ஒருவன். “இல்லை நீர்தான்” என்றான் அவன்.

போ தன் ஆடையிலிருந்த மண்ணைத் தட்டியபடி “முகில் என நின்றது புழுதி” என்றார். புழுதியை மண்ணில் இருந்து எழும் வெங்காற்று மேலே கொண்டுசென்று முகிலீரத்துடன் கலந்துவிடுவதைப்பற்றி ஒருவன் சொன்னான். “வானில் ஒரு சேற்றுச்சுவர் அது” என்றார் போ. பெருமூச்சுடன் தனக்குத்தானே என “எத்தனை அறிந்தாலும் மாயாவருணனிடமிருந்து எவரும் முற்றிலும் தப்பிவிடமுடியாது” என்றார்.

பாணன் உரக்க நகைத்து “அத்தனை தெய்வங்களுக்கும் மாயவடிவங்கள் உள்ளன, பெருவணிகரே” என்றான். மூச்சிழுக்க முடியாதபடி காற்று எடை கொண்டதாகத் தோன்றியது. குருதி அழுத்தம் கூடி உடலை உடைத்துத் திறக்க விரும்பியது. “ஒரு மழை… ஒருமழை இல்லையேல் இறந்துவிடுவேன்” என முதல்முறையாக வந்த இளவணிகன் ஒருவன் கூவினான். தலையை ஓங்கி ஓங்கி அறைந்தபடி “வாழமுடியாது…. என் உடல் உருகிக்கொண்டிருக்கிறது” என்றான்.

“இந்த நீர்த்துளிகள் நச்சுக்கு நிகரானவை” என்றார் போ. “மாயாவருணன் உமிழ்வது இந்த நச்சுமழை.” பாதையின் ஓரத்தில் சிற்றுயிர்கள் இறந்து கிடப்பதை அவர்கள் கண்டனர். சிறிய ஓணான்கள் பல்லிகள் வெண்வயிறுகாட்டி எஞ்சிய உயிர் வயிற்றில் பதைக்க விரல்கள் விரிந்து சுருங்க வால்நுனி அசைய கிடந்தன. ஒருநாகம்கூட நாவீசியபடி நெளிந்துகொண்டிருந்தது. “நூறு மாயாவருணன்களைக் கடந்தே வருணனை அடையமுடியும்” என்றான் பாணன்.

[ 50 ]

பாறைகளற்று நெடுந்தொலைவு வரை அலையலையாகக் கிடந்த ஊஷரத்தைக் கடப்பதற்கு நெடுநாட்களாயிற்று. அங்கு கிடைத்த நீர் உப்பு மிகுந்திருந்தது. அதை வடிகட்ட அரிப்புகளை அவர்கள் கொண்டுவந்திருந்தனர். மென்மணலை சுண்ணத்துடன் பிசைந்து அழுத்திச்செய்த மணற்பலகை அரிப்புகளினூடாக முதலில் நீர் ஊறி கீழே வந்தது. பின்பு மூங்கில் சக்கைகளும் படிகாரமும்  கலந்து உருவாக்கப்பட்ட அரிப்புகளில் பலமுறை வடிகட்டி எடுக்கப்பட்டது. அதன்பின்னும் அது மெல்லிய உப்புச்சுவையுடன் இருந்தது.

“குருதிச்சுவை” என்று அர்ஜுனன் அதைக்குடித்தபடி சொன்னான். “கண்ணீரின் சுவையும்கூட” என்றார் போ. இளையவணிகன் ஒருவன் “ஏன் கன்னியின் இதழ்ச்சுவை என்று சொல்லக்கூடாதா?” என்றான். வணிகர்கள் நகைத்தனர். “மைந்தனின் சிறுநீரின்சுவை” என்றார் போ. பீதர்நாட்டில் இளமைந்தரின் சிறுநீரின் சிறுதுளிகளை தந்தையர் அருந்துவதுண்டு என்றான் பீதர்நாட்டுச் சூதன். “அது தன் குருதியை தானே அருந்துவது.”

உப்பரித்த நிலம் வழியாக நிழல் தொடர நடந்தனர். பின் நீளும் நிழலை நோக்கி சென்றனர். உப்பு விரைவிலேயே காற்றை வெம்மை கொள்ளச்செய்தது. நிலத்தில் இருந்து எழுந்த வெம்மை காதுமடல்களை, மேலுதடுகளை, மூக்குவளைவை, இமைகளை எரியச்செய்தது. மணல் இளகி கால்களை சேறென உள்வாங்கியதால் நடப்பதும் கடினமாக இருந்தது.

நெடுங்காலத்திற்கு முன் ஏதோ நீர் தேங்கி பின் வற்றிவிட்டிருந்த குட்டைகள் விளிம்புகளில் அலையலையாக உப்புப்படிவு இதழ்கள் போல் ஒன்றன்மேல் ஒன்றென பதிந்திருக்க மாபெரும் மலர்போல் விரிந்து தெரிந்தன. “அவற்றை மண்மலர்கள் என்கிறார்கள். வான்மழையை அளிக்கும் தெய்த்திற்கு மண் மலர்படைத்து வரவேற்கிறது” என்றார் போ. பீதர்நாட்டுச் சூதன் “புன்னகைகள்” என்றான்.

எப்போது முளைத்தன என்று தெரியாத மரங்கள் அக்குட்டைகளைச் சூழ்ந்து நின்றிருந்தன. தொலைவிலிருந்து பார்க்கையில் சற்றுமுன் காட்டு நெருப்பு எழுந்து எரிந்து எஞ்சிய அடிமரங்கள் அவை எனத் தோன்றின. அருகணைந்தபோதுதான் அவை மட்கி அழிந்து பல்லாயிரம் ஆண்டுகளாகியிருக்கக்கூடும் என்று தெரிந்தது. விழுந்து கிடந்த மரங்கள் கல்லென மாறிவிட்டிருந்தன. சில மரங்கள் வெண்ணிற உப்பாக உருக்கொண்டிருந்தன.

வணிகர்கள் உப்புப்பரப்பை உடைத்துக் கிளறி உள்ளே புதைந்திருந்த உலர்ந்த மீன்களை வெளியே எடுத்தனர். உப்பில் அமைந்திருந்தமையால் அவை கெடா ஊனுடன் இருந்தன. “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை” என்றான் ஏவலன். ஆனால் சற்றுமுன் உயிரிழந்தவை போலிருந்தன. அர்ஜுனன அவற்றின் விழிகளை நோக்கியபோது மெல்லிய துயில் ஒன்றுக்கு அப்பால் அவன் பார்வையை அவை உணர்ந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது.  மீன் விழிகள் நீர்ச்சொட்டு போன்றவை. நீர் விழிகள் என மீன்களைச் சொல்லும் கவிதைவரியை நினைவுகூர்ந்தான்.

“இங்கு பறவைகள் மீன் கொள்ள வருவதுண்டு” என்று இன்னொரு ஏவலன் சொன்னான். “நீள் அலகால் அவை மீன்களை கிளறி எடுக்கின்றன. எனவே ஆழத்தில் உப்பில் சிக்கிக்கொண்ட மீன்களை மட்டுமே மானுடர் எடுக்கமுடியும். இப்பாலைப்பரப்பில் செல்பவர்களுக்கு அது நல்லுணவு. ஆனால் மிகை உப்பால் விடாய் கூடி வரும். உப்பு நீரிலேயே இவற்றை பலமுறை கொதிக்கவிட்டு செறிந்துள்ள உப்பை அகற்ற வேண்டும். மீண்டும் நன்னீரில் கொதிக்கவிடவேண்டும்.”

“சுழல்காற்று எழுகையில் இவை உப்புடன் எழுந்து வானுக்குச் சென்றுவிடுவதுண்டு. அங்குள்ள நீராவியில் உப்பு உருகிக்கரைய இவை மழையெனக் கொட்டியதாகவும் கதைகள் உண்டு. இறையருளால் வானிலிருந்து உணவு பொழியும் என்கிறார்கள் இங்குள்ளோர்” என்றார் போ. உப்புநீரை அள்ளி யானங்களிலாக்கி அங்கிருந்த சுள்ளிகளைக்கொண்டு தீமூட்டி வாற்றி நீர் எடுத்தனர். அதில் மீன்களை வேகவைத்து உலர்ந்த கோதுமைத்தூளுடன் உண்டனர்.

அதன் பின் காற்றோ வானோ உயிர்க்குலங்களோ ஓசை எழுப்பாமையால் முற்றிலும் அமைதிகொண்டிருந்த விமூகமென்னும் பாலையைக் கடந்து சென்றனர். “அதற்கப்பால் உள்ளது லவணம். அதை சுற்றிக்கொண்டுதான் நாங்கள் செல்வோம். லவணம் இறந்தவர்களின் நிலம் என்று அழைக்கப்படுகிறது” என்றார் போ. “அங்கு ஒரு கடல் இறந்து கிடக்கிறது என்கிறார்கள்.”

அர்ஜுனன் புருவம் சுருக்கி நோக்கினான். “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வேறு வகையான மானுடர்கள் வாழ்ந்ததாகவும் விண்ணிலிருந்து அனல் வடிவ இறைவனால் அவர்கள் அனைவரும் உப்புச் சிலைகளென மாற்றப்பட்டதாகவும் இங்குள்ள தொல்கதைகள் சொல்கின்றன. முற்றிலும் உப்பாலானது அந்நிலம். உப்புச் சுவருக்கு அப்பால் உப்பு செறிந்த நீரால் உயிர்கள் வாழா கடல் ஒன்று  உள்ளது என்றும் அங்கே ஆழத்தில் நீரின் தேவன் வாழ்வதாகவும் சொல்கிறார்கள்” என்றார் பீதர்குலத்துப் பாணர்.

“அந்த இடத்தை நாடியே நான் வந்தேன்” என்றான் அர்ஜுனன். “நான் அறிந்து எவரும் அங்கு சென்றதில்லை. சென்று மீண்டேன் என்று ஒரு சொல்லும் காதில் விழுந்ததில்லை” என்றார் போ. “நான் அதை வெல்லும் பொருட்டே வந்தவன்” என்றான் அர்ஜுனன். “தெய்வங்களை அறைகூவலாகாது, வீரரே. இப்பெரும்பாலையைப் பார்த்தபின்னருமா மானுடம் என்னும் நீர்க்குமிழியை நம்புகிறீர்?” என்றார் பாணர். போ புன்னகையுடன் “சில மானுடர் தெய்வங்களால் தங்களை அறைகூவும்பொருட்டு தெரிவுசெய்யப்படுகிறார்கள் பாணரே” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

சுட்டி விகடனில்…

$
0
0

Chutti_Vikatan-Tamil-Logos-400-4

 

சுட்டி விகடனின் 18 ஆவது ஆண்டு நிறைவு இதழ் கடைகளுக்கு வந்துவிட்டது. அதில் நான் ‘வெள்ளிநிலம்’ என்று ஒரு குழந்தைகள் நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி சிறுவர் மலர் இணைப்பில் நான் எழுதிய பனிமனிதன் நாவலின் தொடர்ச்சி இந்நாவல். அதில் வந்த பாண்டியன், டாக்டர், கிம் ஆகிய கதாபாத்திரங்கள் மட்டும் . திபெத், ஸ்பிடி சமவெளி, லடாக், பூட்டான் என கதையின் களம் இமையமலைதான்.

 

பனிமனிதனை குழந்தைகளாக வாசித்த பலர் என் வாசகர்களாக இன்று இருக்கிறார்கள். வாசிக்கும் குழந்தைகளுக்குரிய எழுத்து அது. அதாவது, நடை மிக எளிதாக இருக்கும். நிகழ்வுகள் சிக்கலற்றவை. ஆனால் அடிப்படையில் ஒரு தீவிரமான புனைவு. பனிமனிதன் ஆழமான மானுடக்கேள்விகளை எழுப்பிய நாவல். இதுவும் அவ்வகையிலேயே இருக்கும்

 

அடிப்படையில் இது ஒரு சாகசநாவல். குழந்தைகளுக்குப்பிடித்தமான மாயநிலம். பரபரப்பான சாகசக்காட்சிகள், கூடவே கொஞ்சம் அறிவியல் ஆகியவையே பனிமனிதன் மிக விரும்பப்பட்டமைக்குக் காரணம். இந்நாவலில் அறிவியலுடன் கொஞ்சம் வரலாறும் இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். குழந்தைகளுக்கு வாசிக்கக்கொடுக்கலாம். வாசித்துக்காட்டலாம்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் என் மதிப்பீடு -2

$
0
0

சிலசிறுகதைகள் 2  குறித்து என் பார்வைகளை முன்வைக்கும் முன் சில சுயவிளக்கங்கள். சம்பந்தமே இல்லாமல் எவரெல்லாம்  புண்படுவார்களோ, முகநூலில் குமுறுவார்களோ அவர்களிடமெல்லாம்  ‘மன்னிச்சிடுங்கண்ணாச்சி’ சொல்லிக்கொள்கிறேன்.

 

என் சிறுகதை விமர்சனத்தில் ஒரு சின்ன அத்துமீறல் உள்ளது. அது கதையை எப்படி எழுதியிருக்கலாம் என்று சொல்வது. விமர்சகன் அதைச் சொன்னால் ‘டேய் போடா’ என்றுதான் எழுத்தாளன் சொல்லவேண்டும். நான் சற்று ‘மூத்த’ எழுத்தாளன் என்பதனால் இந்த உரிமையை எடுத்துக்கொள்கிறேன்.

 

அதேபோல விமர்சகன் எழுத்தாளனை நோக்கிப் பேசக்கூடாது. அவன் எவனாக இருந்தாலும் விமர்சகன் என்பவன் எழுத்தாளனின் நுண்ணுணர்வோ, அறிவாற்றலோ கொண்டவன் அல்ல. விமர்சகனின் பணி மேலான வாசிப்பை உருவாக்குவதே. அவன் இடம் தேர்ந்த வாசகன் என்பதுதான் அவன் சகவாசகனை நோக்கியே பேசவேண்டும். வாசகன் வாசிக்காத இடங்களை சுட்டி வாசிப்பை விரிவாக்கும் முதன்மை வாசகனே நல்ல விமர்சகன்.

 

ஆனால் நான் படைப்பாளியை நோக்கிப் பேசுகிறேன். இதுவும் அத்துமீறல்தான். இலக்கியமுன்னோடிகள்  வரிசை விமர்சனங்களில் வாசகனை மட்டுமே இலக்காக்குகிறேன். இங்கே கொஞ்சம் அத்துமீறுவதற்கான உரிமையையும்  ‘முன்னோடி’ என்பதனால் எடுத்துக்கொள்கிறேன்

 

அப்படியெல்லாம் இல்லை, அந்த இடத்தை எனக்கு அளிக்கப்போவதில்லை என்னும் வாசகர்கள் ,எழுத்தாளர்கள் இதைப்புறக்கணித்துவிடலாம்.

 

*

 

காளிப்பிரசாத்

 

 

காளிபிரசாத்தின் விடிவு அவரது முதல் கதை. முதல் கதை என்ற வகையில் இயல்பாகவும் தடையின்றியும் செல்லும் மொழிநடை அமைந்திருப்பதைக் குறிப்பிட்டு பாராட்டியாக வேண்டும். சிறுகதை நவீன இலக்கியத்தின் ஒரு வடிவம் என்ற வகையில் அதன் தோற்றத்திலேயே புறவயமான ஒரு நடையை அடிப்படையான தேவையாகக் கொண்டுள்ளது. நிகழ்வுகளையும் அந்நிகழ்வுகளின்மேல் எதிர்வினையாக எழும் எண்ணங்களையும் குறைந்த சொற்களில் வாசகன் ஊகிக்கும்படி வாய்ப்புகளை அளித்து சொல்வது அதனுடைய வழிகளில் முக்கியமானது.

 

சிறுகதை முன்னோடிகளாகிய ஓ.ஹென்றி, செக்காவ், மாப்பாசான் ஆகியோருடைய கதைகளில் இந்த புறவய நடை அமைந்தபிறகு இன்றுவரை சிறுகதையின் மைய ஓட்டமாக இருப்பதே இதுதான். ஜி.நாகராஜன் சிறுகதைகளைப்பற்றிப்பேசியபோது  ‘கதையில் என்ன எண்ணப்பட்டது என்பதை சொல்லவேண்டியதில்லை. என்ன நிகழ்ந்தது என்பதைச் சொன்னாலே போதுமானது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

இந்த மைய ஓட்டத்திற்கு எதிர்வினையாக வெறும் எண்ணங்களே ஆன கதைகளும் உணர்வுகளைச் சொற்களாக நேரடியாக வெளிப்படுத்துவதை மட்டுமே செய்யும் கதைகளும் எழுதிப்பார்க்கப்பட்டன. மௌனியின் சிறுகதை ஒரு உதாரணம். இன்னொரு வகையில் கு.ப.ராஜகோபாலனின் விடியுமா போன்ற சிறுகதைகள் உதாரணம்.

 

காளிபிரசாத்தின் முன்னுதாரணமாக புறவய நிகழ்வுகளையும் அவற்றின் இயல்பான உள எதிர்வினைகளை மட்டுமே எழுதி கதையை நிறுவும் அசோகமித்திரன் இருப்பதைக் காண முடிகிறது. முதற்கதையிலேயே தமிழின் முக்கியமான முன்னோடி புனைகதை எழுத்தாளர் ஒருவரின் நேரடியான செல்வாக்கு இருப்பதும் வரவேற்புக்குரியதே.

 

இக்கதை இறந்து போன நண்பன் ஒருவனின் கதாபாத்திரத்தை பற்றி ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதை ஒரு கதைச் சரடாகவும் அவனுடைய இறப்பிற்கு பிந்தைய அரசுச் சடங்குகள் மற்றும் சட்ட சிக்கல்களைப் பற்றிய ஒரு சரடாகவும் பின்னிச் செல்கிறது. முதல் சரடு கதை சொல்லியின் நினைவிலும் இரண்டாவது சரடு அவன் எதிர்கொள்ளும் புற உலகிலும் இருக்கிறது. இவை பெருமளவு குழப்பமில்லாமல் பின்னப்பட்டிருப்பதும் சிறுகதையின் வடிவத்தில் ஆசிரியருக்கு உள்ள தேர்ச்சியைக் காட்டுகிறது .முதல் கதை என்னும் போது இது குறிப்பிடத்தகுந்த வெற்றியே

 

சிறுகதையின் வடிவு என்பது கூரிய தொடக்கம்,  மையம் கொண்ட கதை ஓட்டம், புறவயமான நடை, காட்சித்தன்மை, இறுதியில் உச்சமும் திருப்பமும் கவித்துவ உட்குறிப்பும் அமையும் இயல்பு – ஆகியவற்றைக் கொண்டது. இது இலக்கணம்

 

காளிப்பிரசாத்தின் இக்கதை இறுதி முடிச்சை நம்பி இருப்பது. இறுதி முடிச்சை நம்பி இருப்பதில் அதன் உடல் பகுதியில் அம்முடிச்சுக்கு நேர்மாறான கதை சித்தரிப்பை அளிப்பதும், அம்முடிச்சுடன் நேரடியாகத் தொடர்பற்ற தகவல்களை தந்து வாசகனுடைய கவனத்தை திசை திருப்புவதும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உத்தி அப்போதுதான் கதை முடியும்போது அந்த திருப்பம் வாசகனை ஒரு மெல்லிய அதிர்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்லவைக்கிறது. அவ்வகையில் சிறுகதையின் வடிவத்தையும் காளிபிரசாத் சிறப்பாகவே அடைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

 

கதை முழுக்க பலவகையிலும் புழங்கி வரும் ஏராளமான தகவல்கள் அக்கதை எப்படி முடியும் என்பதை வாசகன் ஊகிக்காதபடி அவன் கவனத்தை திசை திருப்பி விளையாடிச் செல்கின்றன. ஆனால் இச்சித்தரிப்பின் முக்கியமான குறைபாடாக இருப்பது இந்த திசைதிரும்பலுக்காகவும், சட்ட சிக்கல் உட்பட நடைமுறை வாழ்க்கையை சொல்லும் நோக்கத்திற்காகவும் தேவையற்ற மனிதர்கள்  மற்றும் தேவையற்ற தகவல்கள் உள்ளே கடந்து வருவது. இது சிதறலை உருவாக்குகிறது. சிதறல் என்பது ஒரு வடிவக்குறைபாடே.

 

உதாரணமாக இக்கதையில் கோதண்டராமன் போன்ற அலுவலக நண்பர்களைப்பற்றிய குறிப்புகள் அனைத்தும் இந்தக்கதை அவர்களை நோக்கிச் செல்கிறதோ எனும் எண்ணத்தையும், அல்லது ரவியுடன் வாழ்க்கையுடன் கோதண்டராமனுக்கு ஏதோ ஒரு நுட்பமான உறவிருக்கிறதோ என்ற எண்ணத்தையும் உருவாக்குவதாக இருக்கிறது. சிறுகதையின் வடிவில் முடிவை வாசகனுக்குக் காட்டாத கைத்திறன் இருப்பது நல்லது. ஆனால் அது வாசகனை திட்டமிட்டு திசை திருப்புவதாகவோ அல்லது அவனது கவனத்தை கதையிலிருந்து விலக்குவதாகவோ அல்லது வேறு கதைகளை அவன் கற்பனை செய்யும் விதமாகவோ அமைவதென்பது சரியானதல்ல

 

ஆக இதன் புறவயச் சித்தரிப்பில் கோதண்டராமன் போன்று சம்மந்தமில்லாத கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்கள் இல்லாமல் இருதிருந்தால் , ஏதோ வகையில் வெளியே நடக்கும் ஒவ்வொரு செயல்களில் இருந்தும் ரவியின் குணச்சித்திரத்திற்கு இயல்பான ஒரு ஊசல் சென்று மீண்டிருந்தால் கதை வடிவம் இன்னும் ஒழுங்காக அமைந்திருக்கும்.

 

இறுதியாக, இக்கதையின் முடிச்சு பழகிப்போனது . இன்று விகடன் உட்பட வணிக இதழ்களிலேயே இத்தகைய கதைகள் சாதாரணமாக வெளிவரத்தொடங்கிவிட்டன. முப்பதாண்டுகளுக்கு முன் அசோகமித்திரன் இத்தகைய கதைகளை எழுதும் போது அன்றாடத்தன்மையிலிருந்து ஒரு மெல்லிய பேருணர்ச்சி வெளிப்படுவது அழுத்தமான விளைவுகளை உருவாக்கியது.  ‘அவனுக்குப்பிடித்தமான நட்சத்திரம்\ போன்ற அசோகமித்திரனின் ஆரம்பகால கதைகளிலேயே இதை அவர் முயன்றிருக்கிறார். இன்று அக்கதைகளையே பெரிய அளவில் நம்மால் சொல்ல முடியவில்லை என்னும் போது அதே பாணியில் எழுதப்பட்ட ஒரு புதிய கதை அதன் வீச்சை பெருமளவுக்கு இழந்து விடுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.

 

மனிதர்கள் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் ஒரு குறிப்பிட்ட வகையில் எதிர்வினை ஆற்றுகிறார்கள்; சிலர் மட்டும் தன் ஆழத்தின் இயல்பால் மேலே சென்று  ஓர் மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறார்கள். அத்தகைய  கதாபாத்திரத்தைக் காட்டுவது  இக்கதையின் வடிவம். இது சிறுகதையின் பழகிப்போன கூறுமுறைகளில் ஒன்றாக இன்று மாறிவிட்டிருக்கிறது.  இதேபோல ஒருவனை ஐயப்படுதல், பின்பு அவன் எப்படிப்பட்டவன் என்று தெளிதல் இன்னொரு மாதிரிவடிவம்.

 

இப்படிச் சொல்லலாம். 1. ஒரு கதாபாத்திரம் மீதான தவறான புரிதலைக் களைதல் 2 தெரியாத ஒரு செய்தியை ஒரு கதாபாத்திரம் வெளிப்படுத்துதல் 2 எதிர்பாராதபடி ஒரு கதாபாத்திரம் வேறுவகையில் வெளிப்படுதல் ஆகியவை ஒரு வகை ‘டெம்ப்ளேட்டுகள்’

 

கதை எழுதத்தொடங்கும்போதே இயல்பாக இத்தகைய கதைகள் தான் எழுதத்தோன்றும். ஏனென்றால் இவை அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் நாம் நமது முன் தீர்மானங்களை வாழ்க்கை முறியடிக்கும்போதே வாழ்க்கையின் உணர்வு சார்ந்த உண்மையை அறிகிறோம். உடனே அதை எழுதும்படி நமது கைகள் பரபரக்கின்றன. நமது முன் தீர்மானத்தை கதையின் உடலாகவும் நமது அறிதலை கதையின் உச்சமாகவும் வைத்துக் கொண்டால் ஒரு சிறுகதை வடிவம் இயல்பாக வந்துவிடும்.

 

ஆனால் அது பழகிப்போன வடிவம் என்றும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். சிறுகதை எழுத்தின் ஆரம்ப கட்டத்தில் கதைக்கருவை தேர்ந்தெடுப்பது ஒரு அறைகூவல். நூறு வருடங்களாக சிறுகதை எழுதப்பட்ட நம் மொழியில் வாழ்க்கையின் பல்வேறு தருணங்கள் மேதைகளால் எழுதப்பட்டுவிட்ட பின்னர் புதிதாக ஒன்றை எழுதுவதென்பது எளியதல்ல.

 

ஆனால் இன்னொரு வகையில் அது எளிதுதான். ஏற்கனவே கதைகள் சொல்லப்பட்டுவிட்ட முறைமைகளை உணர்ந்து அத்தகைய கூறுகளை தவிர்த்து விட்டால் நம் வாழ்வில் எஞ்சுவது எதுவோ அது எல்லாமே புதிய விஷயமாகவே இருக்கும். காளிபிரசாத் அப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும் தொடர்ந்து எழுத வேண்டுமென்றும் விரும்புகிறேன்.

 

images (2)

சுனீல் கிருஷ்ணன்

*

 

சுனில் கிருஷ்ணனின் ருசி கதையும் ஓர் அன்றாட உண்மையை புனைவினூடாக சென்று தொட முயல்கிறது. இக்கதையின்முக்கியமான அம்சம் என்பது வாசகனை நம்பி கதையின் அந்த நுண்ணிய தருணத்தை குறைந்த அளவு மட்டுமே காட்டி நிறுத்தியிருக்கும் தன்னம்பிக்கைதான். வாசகனிடம் சொற்பொழிவாற்றவோ வாசகனிடம் தேவைக்கு மேல் உரையாடவோ தான் சித்தரிக்கும் வாழ்க்கையை அலகுகளாகப்பகுத்து முன்வைக்கவோ ஆசிரியர் முயலவில்லை.

 

இக்கதையில் இருப்பது ஒரு தருணம் மட்டுமே. கதை சொல்லி அத்தருணத்தை தன் உள்ளம் வழியாகவும் அவ்வுள்ளத்தால் வந்தடையும் புறச்சூழல் வழியாகவும் வந்தடைகிறான். இவ்விரு சரடுகளும் பெருமளவுக்கு நேர்த்தியாகவே சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இக்கதை இன்றுவரை தமிழ்ச்சிறுகதை வந்தடைந்த பாதையிலேயே உள்ளது. ஆகவே புதியதாக இல்லை. சிறுகதையில் நேற்றைய நேர்த்திக்கு மதிப்பில்லை. புதியதன்மை – novelty – தான் முதன்மைக்குணம். திறனும் முழுமையும் அதற்குப்பின்னரே

 

உதாரணமாக கதை சொல்லியை ஏமாற்றி சுரண்டி சென்றுவிட்ட ஒருவனைப்பற்றி கதை சொல்லி அடையும் ஆங்காரமும் கோபமும் கதைக்குள் வந்து கொண்டே இருக்கின்றன. ஜானகிராமன் கதைகளைப்பார்த்தால் கதைசொல்லியே தன் உடன் வரும் எவரிடமேனும் சற்று வளவளப்பு எனத் தோன்றத்தக்க உரையாடல் வழியாக நேரடியாக சொல்வது போல் அமைந்திருக்கும். அசோகமித்திரன் கதைகளில் வரும்போது அவனுடைய உள்ளத்தில் நிகழ்ந்த எண்ணம் வழியாகவே அது காட்டப்பட்டிருக்கும். இக்கதையில் ‘எப்படி ஏமாற்றிவிட்டான், மூட்டைப்பூச்சி போல் உறிஞ்சிவிட்டு ஏமாற்றிச் சென்றுவிட்டான்’ என்று  கதைசொல்லியின் உளக்குமுறலாக பல முறை திரும்ப வருகிறது. கதையே சிறிது எனும்போது இத்தனை முறை இது திரும்ப சொல்லப்படுவது வாசகனுக்கு தே வையற்றது.

 

இன்றைய ஓர் இளம் எழுத்தாளன் ஜானகிராமனோ அசோகமித்திரனோ அதை சொன்ன பாணியில் அன்றி வேறு எவ்வகையில் இதை சொல்லியிருக்க முடியும் என்றே யோசிக்க வேண்டும். ஒர் உரையாடலில் வரும் குறிப்பாக அல்லது ஒரு உருவகமாக  அல்லது இதுவரைச் சொல்லப்படாத வெவ்வேறு வகைகளில் அதைக் குறிப்பிட்டிருக்கலாம். அப்படி ஒரு புதிய பாதை கண்டடையும்போது மட்டுமே இக்கதை அடுத்த தலைமுறை எழுத்தாளனின் கதையாக அறியப்படும். இன்று அது அசோகமித்திரனின் கதைகளின் ஒரு மெல்லிய நீட்சியாகவே நின்றுகொண்டிருக்கிறது.

 

ஒரு கதை எழுதிய பின்னர் இது எவ்வகையில் அசோக மித்திரனிடமிருந்தோ ஜானகிராமனிடமிருந்தோ வண்ணதாசனிடமிருந்தோ மேலே செல்ல முடியும் என்று எண்ண ஆரம்பிக்கும் போதே அக்கதையில் உள்ள குறைபாடுகள் கண்ணுக்குத் தென்படும்.  இது இளம் எழுத்தாளனுக்கு ஒரு முக்கியமான சவால்

 

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். அந்தக் கதைசொல்லி ஒரு ரயில் நிலையத்தில் வாங்கும் அந்த மக்ரூனியுடன் அவன் சுரண்டப்பட்டதும் இணைந்திருந்தால் ,அவ்விரண்டும் ஒரே கூற்றாக கதைக்குள் இயல்பாக வந்திருந்தால், இக்கதை அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கும். உள்ளத்துக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான், பின்னர் மக்ரூனி வாங்குகிறான் என்ற அளவிலேயே இப்போது நின்று விடுகிறது. அவற்றுக்கிடையே உள்ள உறவு இக்கதையில் இவ்வடிவில் இல்லை.

 

மக்ரூனியை தயாரித்து விற்கும் ஒரு தொழிற்சாலையை இவர்கள் நடத்தியிருக்கலாம். வாங்கி விற்கும் ஒரு கடையை நடத்தியிருக்கலாம். அல்லது மக்ரூனியுடன் அந்த நண்பன் எவ்வகையிலோ தொடர்பு கொண்டிருக்கலாம். பல ஆண்டுகளாக மக்ரூனி என்பதே அவன் கைநடுங்க வைக்கும் ஒரு உணவாக இருந்திருக்கலாம்.

 

இன்று அவன் பிடிபட்டுவிட்டான் என்னும் போது ஒரு மக்ரூனியை வாங்கி இவன் உண்ணுகிறான் என்ற இடத்திலே கதை தொடங்கியிருக்கலாம். அதில் ஒரு துளியைக் கூட பங்கு வைக்க அவனுக்குத் தோன்றவில்லை என்பது அவனே உணரும்போது அந்தக் கதை முடிவுக்கு வருவது இயல்பாக அமைந்திருக்கும்.

 

அத்துடன் ருசி என்பதற்கும் அந்த ஏமாற்றப்பட்ட நிகழ்வுக்குமான உறவு கதைக்குள் வந்திருக்கவேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து சுவைத்த ஏதோ ஒன்றின் சுவையாக மக்ரூனி மாறியிருக்கலாம். அவர்கள் சேர்ந்து சுவைத்த நட்பு. அல்லது சேர்ந்து சுவைத்த பிறரது குருதி. எதுவோ. சுவைதான் கதை. ஆனால் அது எப்படி ஏமாற்றப்பட்ட உணர்வுடன் இணைகிறது என்பது வாசக உள்ளம் கோருவது.

 

இன்னொன்று ஒரு கதையின் அறஅடிப்படை என்பதும்  வாசகனுக்கு திருப்தியூட்டக்கூடியதாக இருக்கவேண்டும். ஒரு பொட்டலம் இனிய உணவை எவருடனும் பகிர்ந்துகொள்ள தனக்கு தோன்றவில்லையே என்பது கதை சொல்லிக்கு ஒரு குற்ற உணர்வையோ அல்லது தன்னைப்பற்றிய ஒரு புரிதலையோ உருவாக்குவது இயல்பானதே ஆனால் அதன் பொருட்டு தன்னை ஏமாற்றிச் சென்றுவிட்ட ஒருவனை முழுமையாக அவன் மன்னித்துவிடுவான் என்றால் அந்த அற தன்மை சமநிலை அடையவில்லை.

 

ஏனென்றால் இப்படிச்சொல்லலாம். ஏமாற்றிச் சென்றவன் செய்தது ஒரு  ’குற்றம்’. பிறருக்கு  கொடுக்காமல் உணவை உண்பது ஒரு ’பிழை’. இரண்டும் சமானமானவை அல்ல. இந்த அம்சம் தான் இந்தக்கதையை படிக்கும் போது வாசகனுக்கு நிறைவுணர்ச்சியை அளிக்காமல் இருக்கிறது.

 

இதை எப்படி சமன் செய்திருக்கலாம் என்பது ஆசிரியருடைய சொந்த நீதியுணர்ச்சியை சார்ந்த ஒன்று நான் என்ன செய்திருப்பேன்? கதைசொல்லியை ஏமாற்றிச்சென்றவனுடைய ஏமாற்றுதலில் தனக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கிறது,  அது பிறருக்குப் பகிராத தன்னியல்பால் தன்னை மட்டுமே சார்ந்து எண்ணும் தனது மனப்போக்கினால் தனக்குத் தானே இழைத்துக் கொண்ட  ஒரு குற்றம் என்று அந்தக் கதை சொல்லி உணர்வான் என்றால் ஓரளவுக்கு இந்த சமன்பாடு சரியாக வருகிறது.

 

கதையின் கலைக்குறைபாடு என்று முக்கியமாக இன்னொன்றைச் சொல்லவேண்டும். உள்ளத்து உணர்வுகளை எழுதும்போது அவ்வுணர்வுகளை நேரடியான சொற்களில் சொல்வதை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது.  அதோடு அந்த உணர்வை வாசகன் அறிந்து கொண்ட பிறகும் கூட ஆசிரியன் சொல்லிக் கொண்டிருப்பான் என்றால் ஒரு சலிப்பை வாசகன் அடைவான்.

 

’ஆவேசமும் கோபமும் உள்ளூர நிறைத்து பொங்கின இரவெல்லாம் நினைவுகள் கற்பனைகள் அவனை விதவிதமாக சிறுமை செய்வது போல அவமதிப்பது போல பெரிய மனுஷத்தனத்துடன் மன்னிப்பது போல கெஞ்சி இறைஞ்சுவது போல…’ என்று சொல்லும் இடத்திலேயே அவ்வுணர்வுகள் வெளிப்பட்டுவிட்டன. அதைத் திரும்ப சொல்ல வேண்டியதில்லை.

 

உணர்வுகள் அல்லது எண்ணங்கள் கறாரான குறைந்த பட்ச சொற்களில் தான் சொல்லப்படவேண்டும். உணர்வுகளைப்பொறுத்தவரை அவற்றை நேரடியாக சொல்ல சொல்ல அவை வலுவிழக்கவே செய்யும்.  ‘உள்ளம் கொந்தளித்தது’ என்பது எந்த வகையிலும் உள்ளக் கொந்தளிப்பைக் காட்டாது. ’அழுகை வந்தது’ என்பது எந்த வகையிலும் துயரை காட்டாது. அவை சொற்கள். சொற்கள் பொருளை அளிப்பவை, உணர்வை அல்ல. ஆகவேதான் நாம் புனைவை எழுதத் தொடங்குகிறோம். அதற்குத்தான் படிமங்களையும் உருவகங்களையும் ஆசிரியர்கள் பயன்படுத்தினார்கள்.

 

இதன் போதாமை என்பது ஒரு வாசகனை அவன் அற உணர்வை தொட்டு நிலை குலையும் அளவுக்கு இதன் அறம் சார்ந்த வினா வலுவானதாக இல்லை என்பதே. அந்தக் கொந்தளிப்பு நிறைவூட்டும்படிச் சொல்லப்படவில்லை. அந்தக் கண்டடைதல் வாசகன் தன்னைக் கண்டடைவதாக ஆகவில்லை. ஆயினும் நுட்பமாகச் சொல்லப்பட்ட நல்ல கதை, ஆனால் முன்னோடிகளைக் கடந்து போகவில்லை என்றே சொல்வேன்.

 

சுனீல் கிருஷ்ணனின் ஆற்றல் புறவுலகை நுட்பமாகச் சொல்லும் திறன், அன்றாடவாழ்க்கையின் தருணங்களில் அறக்கேள்விகளை எழுப்பும் பார்வை ஆகியவை. அவை வளரட்டும்.

 

=========================================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

 

=================================================================================

 

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

 

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

2.0

$
0
0

20161118_214547

 

எந்திரன்2 அல்லது 2.0 வின் முதல்தோற்ற வெளியீட்டுவிழா வரும் 20 ஞாயிறன்று மும்பையில் நிகழவிருக்கிறது.அழைப்பிதழே ஆல்பம் போலிருந்தது.

 

நான் வழக்கமாக சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை. எனக்கு அவற்றில் பெரிய இடமும் இல்லை என்பது ஒரு விஷயம். பலசமயம் நான் பயணங்களில் இருப்பதனால் கலந்துகொள்ள முடிவதுமில்லை. கடல், பாபநாசம் போன்ற படங்களின் விழாக்களில்  வெளிநாட்டில் இருந்தேன். எந்திரன் தொடக்கவிழாவின்போதும் வெளிநாட்டில்.

 

சினிமாவிழாக்கள்  பெரிய ஊடகக் கொண்டாட்ட நிகழ்வுகள். அங்கே விண்மீன்கள்தான் முதன்மை.நான் அங்கே என்ன செய்யப்போகிறேன் என்று  தெரியவில்லை. இருந்தாலும் ஞாயிறுகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்புகிறேன். ஊருக்கு நேற்று முன்தினம்தான் வந்தேன். கர்ணன் படவேலைகள்.

 

சினிமாக்கள் எப்படியோ இந்தியாவில் ஒரு சமகாலச் சரித்திரமாக ஆகிவிடுகின்றன. அவை நிகழும்போது ஓர் அன்றாட மனநிலையில் நாம் இருந்தாலும் திரும்பிச்சென்று பழைய செய்திகளைப் பார்க்கையில் ஒருகாலகட்டத்தின் பகுதியாக இருந்தமையின் மெல்லிய பரவசத்தை அடையமுடிகிறது. அவ்வகையில் எந்திரன் வெளியீட்டுவிழா ஓர் அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.

 

2.0 அனைத்துவகையிலும் ஒரு பெரிய தொழில்நுட்பக் களியாட்டம். ஷங்கரின் மனம் பொதுமக்களின் ரசனையை நுட்பமாக பின் தொடர்வது. நான் பார்த்தவரை இந்திய அளவில் சினிமாத் தொழில்நுட்பத்தின் உச்சம் இப்படம்தான்.

 

நான் படப்பிடிப்புக்கு எல்லாம் போனேன். என்ன நடகிறதென்றே புரியவில்லை. சினிமா சர்வதேசத் தொழில்நுட்ப நிபுணர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது.மாரி இ வாக்ட், ஜான் ஹ்யூக்ஸ், வால்ட் ஜோஸ், கென்னி பேட்ஸ் , நிக் போவல், ஸ்டீவ் கிரிஃபின் என்று நம் சினிமாத்தொழில்நுட்பர்களின் பெயர்கள் திரையில் ஓடும் காலம். இயக்குநர் ஓர் இசையமைப்பாளர் போல கையசைத்து அவர்களை வழிநடத்தவேண்டியிருக்கிறது.

 

அக்‌ஷய்குமாரின் வில்லன் கதாபாத்திரத்தை நானே திரையில் பார்க்க விழைகிறேன். கிறிஸ்டோபர் நோலன் படங்களின் வில்லன்களைப்போன்ற தத்துவார்த்தமான ஆழம் கொண்ட கதாபாத்திரம்.

 

அத்துடன் வழக்கம்போல நம் உச்சவிண்மீனின் ஒளி. நான் பள்ளி மாணவனாக இருந்தபோது மூன்றுமுடிச்சு படத்தில் அவரைப் பார்த்தேன். இன்றுவரை நம்மை கவர்ந்திருக்கும் அந்தத் தோரணையும் துடிப்பும் முழுமையாக வெளிப்படும் படம்  இது

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33

$
0
0

[ 53 ]

அருகிலெனத் தெரிந்தாலும் அந்தக் கடல் சேய்மையிலேயே உள்ளதென அர்ஜுனன் அறிந்திருந்தான். மலைகளும் கடல்களும் போன்ற பேருருவ இருப்புகள் அண்மையை நடிக்கத் தெரிந்தவை. அணுகுபவனை நோக்கி சேய்மையில் நின்று நகைக்கக்கூடியவை.

அவன் அக்கரிய கடலை அணுக மேலும் நான்கு நாட்களாயின. அது முற்றிலும் ஓசையற்றிருந்தது, எனவே தன்னைக் கடலென்றே காட்டவில்லை. பெருமலைகள் ஒளிந்து அமர்ந்திருப்பதை அவன் கண்டிருந்தான். கடல் ஒன்று பதுங்கியிருப்பதை அப்போதுதான் கண்டான்.

கரும்புகை என முதலில் தோன்றியது. விண்சரிவில் தீற்றப்பட்ட ஒரு கரிக்கறை என பின்னர் தெரிந்தது. மேலும் அணுகியபோது வாசல்களோ மாடங்களோ அற்ற பெருங்கோட்டை என விரிந்தது. பின்னர் அவ்வண்ணமே திசைமறைத்து நின்றது. அவன் அதை நோக்கியபடியே நடந்தான், துயின்றுவிழித்தான். காலையில் எப்படித் தெரிந்ததோ அப்படியே மாலையிலும் அமைந்திருந்தது. ஒளியின்மை. அசைவின்மை. பருவின்மை கொண்ட இருப்பு. இருப்பெனக் காட்டும் இன்மை.

கையிலிருந்த நீர் முற்றிலும் தீர்ந்துபோன அன்றுதான் அவன் உப்புப்படுகையை வந்தடைந்தான். கண்களை ஒளியால் நிறைத்து இமையதிர்ந்து சுருங்கவைக்கும் வெண்மை. வெண்ணிற நுரைபடிந்து வற்றியதுபோல் தெரிந்த விளிம்புக்கு வந்துசேர்ந்து அங்கே நின்றான். காலை வைத்து அந்த மென்மையை உடைக்க அவனுக்குத் தோன்றவில்லை. கொக்கிறகின் பீலிவரி. நீரில் மிதந்து வந்து கரையில் படிந்த இலவம்பஞ்சு.

அதற்கப்பால் உப்பு தடிமன் கொண்டு அலைகளாக ஆகியது. பனிப்பரப்பு. பளிங்குப்பரப்பு. உடலை சித்தத்தால் உந்திச்செலுத்தி அவன் முன்னால் சென்றான். கால் வைத்த உப்பு நொறுங்கியது. மேலும் கால் வைக்க உடல்கூசியது. மேலும் மேலுமென பலமுறை உடல் ஆயம் கொண்டபின்னரே காலை வைக்கமுடிந்தது. உப்பு நொறுங்கும் ஒலி. வஞ்சம் கொண்ட சிரிப்பின் ஒலி. கீழே குனிந்து நோக்கியபோது பற்களைக் கண்டான்.

பற்களின் பரப்பு. அவன் கண்களை மூடிக்கொண்டு அசைவற்று நின்று உடலில் ஓடிய அச்சத்தை உளவிசையால் நிகர்செய்துகொண்டான். அந்த மாபெரும் அரைவட்டத்தை ஒரு புன்னகை என அவன் கண்டான். பின்னர் வெறிகொண்டவனாக ஓடத்தொடங்கினான். கைகளை விரித்து கூச்சலிட்டபடி பித்தன்போல ஓடி உப்பில் கால்வழுக்கி விழுந்து புரண்டு எழுந்தமர்ந்து மூச்சிரைப்புடன் நோக்கினான். அவனைச் சூழ்ந்திருந்தது உச்சிவானின் ஒளி.

அவன் ஒளிமேல் நடந்தான். கண்விழிப் புள்ளிகள் சுருங்கி ஊசித்துளையென்றாகி அந்த ஒளிப்பரப்பை காட்சியாக மாற்றலாயின. இரவணைந்தபோது வானிருண்டு மூடிய பின்னரும் அவனைச் சூழ்ந்திருந்தது அதுவரை உப்புப்படுகை அள்ளி உண்டு உள்ளே தேக்கியிருந்த ஒளி. இரவெல்லாம் அந்த ஊமையொளி காலடியில் நிறைந்திருந்தது. அதன்மேலேயே படுத்துத் துயின்றான். வானில் முகில்கள் மேல் துயில்வதாக கனவுகண்டான்.

ஒரு மென்சரடில் சிலந்தியென காற்றில் மிதந்தலைவதாக உணர்ந்து விழித்துக்கொண்டபோது மேலே விண்மீன்கள் அதிர்ந்து நின்றன. அவனைச் சுற்றி இருந்த வெண்ணிற மென்பரப்பில் குளிரே ஒளியென்றிருந்தது. விடாய் அறிந்தே விழித்திருப்பதை உணர்ந்தான். நாவால் உதடுகளை நக்கியபோது உப்புப்பொருக்கு உள்ளே சென்றது. அதை துப்புமளவுக்கு வாயில் எச்சில் இருக்கவில்லை.

நாக்கு கோடையில் வற்றிய சுனையருகே பாறையில் உலர்ந்து ஒட்டியிருக்கும் நீரட்டை போலிருந்தது. வாய்க்குள் தசைப்பரப்புக்கள் தோலென நாவுரசின. தொண்டை மணலால் அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் உட்குழாய்களில் அனலோடியது. கீழே அடிவயிறு நீர் நீர் என எம்பித் தவித்தது. விடாய் கால்களை தளரச்செய்தது. கைவிரல்களை நடுங்கவைத்தது. மூச்சில் வெம்மையென ஓடியது. சித்தத்தில் நீர்க்காட்சிகளை உருவாக்கியது.

அப்பால் அப்பாலென மயலூற்றுக்கள் அழைத்தன. அலைகள். ஒளிகள். நெளிவுகள். குளுமைகள். நீர் ஒரு பூண் அணி. மணிமுடி, கல்லாரம், மேகலை.  நீர் ஒரு வாள். நீர் ஒரு கேடயம். நீர் ஒரு பட்டாடை. ஒரு திரை. ஒரு தாலம். ஓர் ஏடு. இரக்கமற்ற ஏதோ ஒன்று எழுதப்பட்டது. இரக்கம் எனப் பொருள் அளிக்கும் வரிகள் அவை.

வேண்டுமிடத்திற்கு வரும்பொருட்டே வழிவெனும் இயல்பைக் கொண்டுள்ளது நீர். மழையென இழிந்து அருவியெனப் பொழிந்து ஆறெனச் சரிந்து நதியெனப் பெருகி கிளையென விரிந்து கழனிகளில் நிறைகிறது. மண் நெகிழவைக்கிறது. இளஞ்சேற்றின் நெகிழ்வு. முலைகொண்ட அன்னை மகவுக்களிக்கும் முத்தம் என கண்கனிந்த தருணம். இளஞ்சேற்றின் மணம். முலைப்பால் குருதி. உருகிவரும் மென்கதுப்புத்தசை.

வேண்டுக, வந்தாகவேண்டும். விழைக, பொழிந்தாகவேண்டும். அறம்நின்று  ஆணையிடுக, அமுதாகிச் சுரந்தாகவேண்டும். நீர் ஒரு வாக்குறுதி. ஒரு கருணை. ஒரு பேரருள். நீரென்றாகியது பருவெளியின் கனிவு. கற்பாறைகளும் கடுமண்ணும் அளிகொண்டல்லவா நீர்மையென்றாகின்றன? முலையென ஊறுவது அன்னையின் சித்தம் கொண்ட உறுதி. கொலைக்கூர் வெண்தேற்றை கொண்ட பெரும்பன்றியின் முலைக்கொத்துக்களில் வெண்ணிறத்துளி என ஊறி நிற்பதும் அவ்வெண்தேற்றையென தன்னை எழுப்பிக்கொண்டதே  அல்லவா?

நீர்மையென்பது ஓர் அறிவுறுத்தல். ஒவ்வொருநாளும் வான் கனிந்தாலன்றி வாழ்க்கை இல்லை. அறியா வெளி அளித்தாலன்றி அமுதென ஒன்றில்லை. விசும்பு துளிகூராமல் பசும்புல் இல்லை. பசும்புல்லே, மழைகொண்ட உயிர்வடிவே, வான் வளர்க்கும் மண்ணே. பசுமையே. பசுமையென்பதுதான் என்ன? இளந்தளிர்களில் எத்தனை வண்ணங்கள்! பொன்னிறமென்மை, வெள்ளிக்கூர்மை, செம்புச்செம்மை. அனைத்தும் முதிர்ந்து பசுமை. பசுமையின் நீர்மையே தளிரா?

தேங்கி அலையடிக்கும் முடிவிலி என நீலம். நீர் நீலம் கொள்கையில் தன்னை விலக்கிக்கொள்கிறது. வேட்டைக்கு  குட்டிகளை விட்டு விலகிச் செல்கிறது அன்னைச்சிம்மம். நீலம் அளியின்மையின் நிறம். முடிவிலி என்பதே அளியற்றது. முடிவுகொண்டவை மட்டுமே மானுடனுக்கு அணுக்கமானவை. காலம் முப்பிளவு கொண்டு சூழ்ந்தவன் மானுடன். எல்லை வகுக்கப்பட்டவன். எல்லைகொண்டவை மட்டுமே மானுடனை அறியும். ஏனென்றால் எல்லைகொண்டவற்றை மட்டுமே மானுடன் அறியமுடியும்.

முடிவிலிகள் இரக்கமற்றவை. முடிவிலி என்பதே வகுக்கப்பட்டு இங்கென்றும் இன்றென்றும் இருப்பென்றும் ஆனவற்றை உறிஞ்சி உறிஞ்சி உண்ணும் அலகிலா விடாய்கள்தான். வானம் மண்ணை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. உயிர்களை உண்கிறது. இதோ இந்த உப்பை, அந்தக் கற்பாறையை நக்கிக்கொண்டிருக்கிறது. அங்கெங்கோ மலைகளை அது கரைத்துண்கிறது. பனித்துளிகளை சுனைகளை ஆறுகளை ஏரிகளை அருந்துகிறது. பெருங்கடல்களை வற்றவைக்கிறது.

மண்ணிலிருந்து நீர்மையை அள்ளிக்கொள்கிறது வானம். உருவழித்து அருவமாக்கி தன்னுள் வைத்துக்கொள்கிறது. வானென்று நாமறிவது இன்மையும் நீரும் ஊடுபாவென ஓடி நெய்தெடுத்தது. மண்ணமைந்த நீரெல்லாம் வானுக்குரியவை. சிறகுகொண்டு எழுந்து வானில் நிறைந்த பின்னரும் மண்நோக்கிக் கனிந்து குளிர்ந்துகொண்டிருக்கும் நீரே, நீயே அன்னை.

துளித்து கண்ணென ஆகி நோக்கி ஒளிர்கிறாய். பொழிந்து பல்லாயிரம்கோடி குளிர்முத்தங்களாகி மூடிக்கொள்கிறாய். தழுவிச்சிலிர்க்கிறாய். அமுதாகிறாய். வளைந்தோடி குருதிச்சரடாகிறாய். கடலை அடையும் நதிகளின் தயக்கம்தான் என்ன? மானுடனை நோக்கி கனிந்திருக்கும் தெய்வமென்பது நீர் மட்டுமேதானா?

விடாய், விடாய், விடாய். அதுவே சித்தம். அதுவே சித்தப்பெருக்கு. அதுவே இருப்பு. அதுவே இயக்கம். விடாய் என்பது ஓர் அறிவிப்பு. மிருத்யூதேவி வரும் காலடியோசை. விடாய் இனிது. அது தசைகளை மெல்ல சுருளச்செய்கிறது. அறம்பொருளின்பவீடென ஆன அனைத்தையும் ஒன்றெனச் சுருக்கி பிறிதிலாது ஆக்கி இலக்களிக்கிறது.

விடாய் வாழ்க! விடாய்கொண்டு மறைந்தவர் விண்புகுவர். அவர்கள் மண்ணுதிர்வதில்லை. விண் அவர்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. மண்ணில் அவர்களுக்கு கடன்களேதுமில்லை. கொடுத்தல், பெறுதல், அறிதல், இயற்றல், ஆதல் என ஏதும் எஞ்சுவதில்லை. அவர்கள் உண்ணாத நீர் உருவழிந்து செறிந்த விண்ணில் அவர்கள் மென்பஞ்சு முகிலென மாறி நீர் ஒற்றிஎடுத்து எடைகொண்டு கனிந்து அமர்ந்திருப்பர்.

விடாய், விடாய், விடாய். பிறிதொன்றுமில்லை. சொற்களை சிதறடிக்கிறது அது. அள்ளி அள்ளி வைக்கும் அத்தனை எண்ணங்களையும் விடாயெனும் ஒற்றைச் சொல்லாக உருமாற்றி விளையாடுகிறது. நாவறிந்து தொண்டை உணர்ந்து உடலாகி நின்ற விடாயை உளம் அறிந்துவிட்டபின் எங்கோ உயிர் அறிந்துவிடுகிறது. அக்கணமே அது உலகமைத்த விசைகளில் ஒன்றெனக் காட்டுகிறது.

நீரே பிறப்பு. விடாய் இறப்பு. நாதுழாவி இறப்பை நெருங்கும் முதியவர்களின் வாய்க்குள் செல்லும் இறுதிநீர் அறிந்த ஒன்று. இங்கிருந்து பெற்றுக்கொள்ளும் இறுதி. இங்கு வந்தபின் பெற்றுக்கொண்ட முதல்துளியின் மறுநுனி.

உடலென்றானது அனலும் அதை அவிக்கும் நீரும் கொண்டுள்ள நிகர். நீரழிகையில் உள்ளுறை அனலெழுந்து உண்ணத் தொடங்குகிறது அன்னத்தை. குருதி என்பது நீர்மைகொண்ட அனல். அனல் உறையும் நீர். குருதி எரிக்கிறது என் தசைகளை. குருதி புகைந்து கண்கள் நோக்கிழக்கின்றன. செவிமடல்களில் தழலாடத் தொடங்கிவிட்டது.

அவன் மயங்கி விழுந்திருந்ததை விழித்துக்கொண்டதும்தான் உணர்ந்தான். விழிக்கச்செய்ததும் விடாயே. உப்புவெளிக்கு அப்பால் அந்தக் கரிய நீர்க்கோட்டை எழுந்து வானளாவ நின்றிருப்பதை நோக்கியபடி அங்கேயே படுத்திருந்தான். எங்கு செல்கிறேன்? நுழையவிடாத அக்கருந்திரையை அணுகி என்ன செய்யப்போகிறேன்? மறு எண்ணம் எழவிடாமல் எழுந்து அதை நோக்கி தன்னை மீண்டும் செலுத்தினான்.

கால்கள் எங்கோ மிதித்துக்கொண்டிருந்தன. சித்தம் எங்கோ திரிகளாகப் பிரிந்துகொண்டிருந்து. உயிர் சிதையென்றாகி உடலை எரித்தது. உயிரால் உடலை எரித்தழிக்கமுடியுமா? பெருந்துயர் ஒன்று காட்டுகிறது பொருளற்ற துயர்களை உருவாக்கி ஆடி உவகைகொண்டிருக்கும் மானுட மடமையை. நீரே ஆகிய நீரென்றே எஞ்சிய நீரென்றே கனிகிற நீரன்றி பிறிதிலாத தெய்வமொன்று எழுக! அதைத் தொழுக தெய்வங்கள்!

மீண்டும் அவன் மயங்குவதை உணர்ந்தான். காட்சி அலையடித்தது. திசையென்றான வெண்ணொளி கொப்பளித்தது. விளிம்புததும்பும் கலமென   ஆடியது தொடுவான். விழக்கூடாது, விழமாட்டேன், விழுந்தால் இறப்பு. விழுவதே இறுதிக்கணம். ஆனால் விழவில்லை. அவன் காலூன்றி நின்றிருந்தான். அப்பால் ஒரு மென்குரல். அவன் திரும்பிப்பார்த்தபோது அவளைக் கண்டான்.

கொழுவிய உடலில் பெரிய முலைகள் ததும்பி அசைந்தன. உருள்தொடைகள் நடையில் இறுகி மீண்டன. அருகே வந்து புன்னகைத்தபோது அவள் உதடுகள் செந்நிறமாகக் கசிந்திருப்பதைக் கண்டான். “நானேதான்…” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “அருந்துக!” என்றாள். “நான் விடாய் கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அருந்துக!” அவன் குனிந்து அவள் முலைகளைப் பற்றி சுவைத்தான். அவை வறண்டிருந்தன. வெறிகொண்டவனாக அவளை அவன் இழுத்து உண்டான். அவள் வெறுமைகொண்டிருந்தாள்.

மூச்சிரைக்க நிமிர்ந்தான். அவள் விழிகள் நீல ஒளிகொண்டிருந்தன. “நீ யார்?” என்றான். “மூத்தவள். நான் மட்டுமே இத்தனை தொலைவுவரை வருவேன்.” அவள் உடல் தேய்த்த சந்தனமென ஒளிகொண்டிருந்தது. மலர்வரிகள் படிந்த தோல். முலைகளுக்குமேல் மணல்வரிகளென பருத்தமைக்கான வெண்விரிசல்கள். “நீ மிருத்யூ. வியாதி. நித்ரை” என்றான். “நான் ஸ்வப்னை, சுஷுப்தி, பூர்ணை” என்றாள் அவள். “கொள்க!” என தன் இதழ்களை நீட்டினாள்.

அவன் அதைக் கவ்வி உறிஞ்சினான். இனிய கனிபோல சாறு ஊற்றெடுத்து அவன் தொண்டையை நிறைத்தது.  அருந்த அருந்த மேலும் வெறிகொண்டு அவளை உறிஞ்சிக்கொண்டே இருந்தான். அவள் திமிறாமல் மெல்ல உடலமைந்து அவனுக்கு தன்னை அளித்தாள். அவள் குருதி இனிய குளிருடன் இருந்தது. அமுதென்பது குருதி. குருதி வெறும் நீரல்ல. அதில் ஓடுகின்றன எண்ணங்கள், விழைவுகள், கனவுகள். இத்தனை ஆழ்ந்தவளா? இத்தனை கூரியவளா? இவளை நான் இன்றுதான் அறிகிறேனா?

உண்டு முடித்து அவன் நோக்கியபோது தோலுறை நீர் இழந்து சுருங்கியதுபோல அவள் அவன் கையில் இருந்தாள். கைநெகிழ அவள் கீழே தளர்ந்து விழுந்து உப்பில் படிந்தாள். முதுமகள். நீண்ட பழுப்புநிறப் பற்கள். எலும்புகள் உந்திய முகம். ஒட்டிய கன்னங்கள். நரம்பெழுந்த கழுத்து. வறுமுலைகள். சுருங்கி வலிந்த வயிறு. எலும்பெழுந்த விலா. சுள்ளிக்கைகால்கள். அவள் உடல் அவன் கண்முன்னால் மட்கிக்கொண்டிருந்தது.

அவன் விழித்துக்கொண்டபோது உப்பில் கிடந்தான். எழுந்தமர்ந்தபோது குருதி மணத்தை உணர்ந்தான். வெண்ணிற உப்புப்பரப்பில் செங்குருதிச் சொட்டுகள் உதிர்ந்து இதழ் விரிந்திருந்தன. வீசியெறிந்த செந்நிற மலர்மாலை என. மறுகணம் அவன் தன் கையை நோக்கினான். அவன் கைநரம்பு உடைந்து குருதி வழிந்து உள்ளங்கையை அடைந்து விரல்நுனிகளில் திரண்டு சொட்டிக்கொண்டிருந்தது. கையைத் தூக்கி வாயில் வைத்து அதை சுவைத்தான். ஏற்கெனவே அக்குருதியை வேண்டுமளவு உண்டிருப்பதை உணர்ந்தான்.

அவன் தொண்டை ஈரமாகியது. நாக்கு சுவையறிந்து சுழன்றது. உடலுக்குள் பல்லாயிரம் நாக்குகள் எழுந்து அத்துளிகளை வாங்கிக்கொண்டன. தன்னை உறிஞ்சி அருந்தியபடி அவன் முன்னால் சென்றான். கால்கள் தள்ளாடின. கண்கள் ஒளியணைந்து மயங்கி மீண்டன. ஆயினும் நாவூறத்தொடங்கியது. அனல் அவிந்து தொண்டை அமைந்தது.

தன் குருதியை அருந்தியபடி அவன் நீர்க்கோட்டையின் அருகே சென்று நின்றான். உப்புப்படுகைக்கு அப்பால் விழிஎல்லை வரை கரியநீர் அசைவில்லாது தேங்கி நின்றிருந்தது. கருங்குழம்புபோன்ற நீர். நீர்ப்பாறை. குற்றலைகள் அதன் உடலை சிலிர்க்கச்செய்தன. மாபெரும் மீன் ஒன்றின் செதில். அவன் அதை நோக்கி நின்று சற்றுநேரம் சித்தம் அழிந்து அஸ்தினபுரியில் அம்பு பழகினான். வேர்கள் அலைபாய்ந்த நீர்ப்பரப்பினுள் நீந்தினான்.

பின் விழித்துக்கொண்டு அந்த நீர்ப்பரப்பை நோக்கினான். கருங்கல் உடைத்து எடுக்கப்பட்ட பரப்பு. வான்பொழிந்த ஒளியெல்லாம் அதன் ஆழத்திற்குச் சென்று மறைய மேல்பரப்பில் மெல்லிய கசிவு மட்டும் இருந்தது. உயிரில்லா நீர். நீருக்குள் குனிந்து நோக்க அங்கே நெளிவுகளைக் கண்டான். உயிரல்ல என சித்தம் உணர்ந்தது. அனல் அல்ல. நாகம் அல்ல. நெளிவு.

மெல்ல காலடி எடுத்து வைத்து அந்நீருக்குள் நுழைந்தான். இடைவரை சென்றபோது நீர் சேறென காலில் சிக்குவதை உணரமுடிந்தது. அள்ளி கையில் எடுத்தான். மதுத்தேறலின் அடியூறல் போன்ற வீச்சமும் எடையும் நிறமும் கொண்டிருந்தது. வாயில் விட்டதுமே துப்பிவிட்டான். உப்பு செறிந்த ஊன் மட்கிய சேற்றுக்குழம்பு. மேலும் சென்றபின் அவன் ஒன்றை உணர்ந்தான். நீர் அவனை வெளியே தள்ளியது. மூழ்க முயன்றாலும் அதன் ஆழம் ஏந்திக்கொண்டது.

நீர்நிலைகள் வாயில்களால் ஆனவை என்று அவன் அறிந்திருந்தான். அனைத்து கதவுகளையும் முழுமையாக மூடியிருந்தது அந்த நீர். உள்ளே ஆழ்ந்த இருட்டைக் கண்டான். இருட்டுக்குள் ஏதோ நெளிவுகள் தெரிந்தன. செல்லமுடியாத அந்த ஆழத்தில் அமைந்திருப்பது என்ன உலகம்? அதுதான் வாருணமா? மூச்சுக்கு மெல்ல அசைந்தபோது உதைத்து மேலே எழுப்பிவிட்டது ஆழ்நீர்ப்பரப்பு. மீண்டும் மீண்டும் மூழ்க முயன்று மேலே வந்துகொண்டிருந்தான்.

இது நீரல்ல. இது பாலையைப் பிழிந்தெடுத்த சாறு. வெந்நிலத்தின் குருதி. இது ஏதோ வஞ்சக்கொடுந்தெய்வம் வாற்றி எடுத்த மதுத்தேக்கம். அவனை வெறி கொள்ளச்செய்யும் அனைத்தும் இதில் கரைந்துள்ளன. இது பிறருக்கு நஞ்சு. நச்சுப்பெருங்கோப்பை. பாலையில் கனிந்த நச்சுப்பழம்.

[ 54 ]

அவன் மேல் பெரிய நீர்க்கொப்புளம் ஒன்று வந்து மோதியது. மீன் என நினைத்து அவன் விலகிக்கொண்டதும் பிறிதொன்று வந்தது . அவை மலர்வெடிக்கும் ஓசையுடன் நீர்ப்பரப்பின் மேல் விரிந்து வட்டங்களாகி அகன்றன. நீர்க்கொப்புளங்கள் சுழியென்றாகி உள்ளிருந்து மெல்ல ஒரு தலை எழுந்துவந்தது. நெற்றி, நீள்மூக்கு, குமிழுதடு, முகவாய், கழுத்துக்குழைவு, மார்புச்சரிவு, முலைஎழுச்சி. நீலநிறமான இமையாவிழிகளால் அவள் அவனை நோக்கினாள்.

அப்பால் எழுந்த குமிழிச்சுழியில் இன்னொருத்தி எழுந்தாள். அப்பால் பிறிதொருத்தி. ஏழு கன்னியர் அவனைச் சூழ்ந்துகொண்டனர். அவர்களின் நீண்ட செந்நிறக்கூந்தல்கள் நீலநீரில் செஞ்சேற்றுக் கீற்றுபோல அலைபாய்ந்தன. அவன் அவர்களை திகைப்புடன் நோக்க ஒருத்தி சிட்டுக்குருவி அலகுபோல பொன்னிற நகங்கள் நீண்ட விரல்கள்கொண்ட கையை நீட்டி “வருக!” என்றாள்.

அவன் “ஆம்” என்றான். அவர்கள் புன்னகையுடன் “வாருணத்திற்கு வருக, இளைய பாண்டவரே!” என்றனர். அவன் தன் கையை நீட்ட அதை பற்றிக்கொண்டனர். நீருக்குள் அவர்களுடன் அமிழ்ந்தபோது திரைகள்போல நீர்ப்படலங்கள் விலகி ஆழம் திறந்துகொண்டது. மூழ்கி நீருள் கண்திறந்ததுமே அவர்களின் இடைக்குக்கீழே மீனுடல் இருப்பதை அவன் கண்டான். பெரிய செதில்வால்கள் அசைந்தசைந்து துழாவின.

KIRATHAM_EPI_33

நீராழத்திலிருந்து மனிதமுகம் கொண்ட கரிய பெருநாகங்கள் நெளிந்தெழுந்து வந்து அவனைச் சூழ்ந்துகொண்டன. அவற்றின் மணிவிழிகளில் அவனை அறிந்த வெறிப்பு இருந்தது. அவன் உடலில் அவற்றின் வளைவுகள் உரசி தழுவிச் சென்றன. ஆழத்தில் அவன் கண்ட அனைத்து உடல்களும் நெளிந்துகொண்டிருந்தன. அவன் தன் கைகளை நோக்கினான். எலும்புகளற்றவையாக அவை நெளிந்தன. உடல் நாகமென வளைந்து சுழன்றது.

மேலும் மேலுமென அவன் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தான். திறந்து வந்தணைந்த ஆழங்களிலிருந்து நீரரமகளிரும் நீர்நாகங்களும் எழுந்து வந்து சூழ்ந்துகொண்டிருந்தனர். உடல்களாலான நெளியும் காடு ஒன்று அவனைச் சுற்றி பரவி உடன் வந்தது. அவன் விழிகள் மேலும் கூர்கொண்டபடியே வந்தன. கரிய மாளிகை ஒன்றை நீரின் இருளுக்குள் கண்டான். அது நீர்ப்பாவை என நெளிந்துகொண்டிருந்தது.

அதன் வாயிலை அடைந்ததும் நீரரமகள்கள் திரும்பி வருக என கைகாட்டி உள்ளே சென்றனர். மாளிகையின் வாயிலுக்குள் மேலும் குளிர் தேங்கியிருப்பதை உணர்ந்தான். உள்ளே பெருந்தூண்களும் உத்தரங்களும் நெளிந்தன. தரை அலையடித்தது. கூரை வளைந்தாடியது. படிகள் திரைச்சீலைகள் என ஆடின. அவன் மேலேறி இடைநாழிகளினூடாக நெளிந்து சென்று அரசவை ஒன்றுக்குள் நுழைந்தான்.

அங்கே நூறு அன்னையர் அமர்ந்திருந்த அவைநடுவே அரியணையில் அமர்ந்திருந்தவளை அவன் முன்னர் கண்டிருக்கவில்லை, ஆனால் அவளை நன்கறிந்திருந்தான் என உணர்ந்தது நெஞ்சு. ஒளிர்நீல மணிமுடியும் இளநீல ஆடையும் அணிந்திருந்தாள். வலக்கையில் வளைந்த முனைகொண்ட செங்கோலில் காகம் செவ்விழிகளுடன் சிறகு விரித்து அமர்ந்திருந்தது. அவள் உடல் விளக்கேற்றப்பட்ட நீர்த்தாலமென உள்ளொளி கொண்டிருந்தது. விழிகள் கனிந்து அவனை நோக்கின.

“அன்னையே, வணங்குகிறேன்” என்றான் அர்ஜுனன். “நல்லூழ் தொடர்க!” என்று அவள் சொன்னாள். “நான் ஜேஷ்டை. எழுவரில் முதலோள். திருமகளுக்கு மூத்தோள். அமுதுடன் பிறந்தேன். அனல்வண்ணன் மகளென்றானேன். இங்கு அரசியென்றமர்ந்திருக்கிறேன்.” அர்ஜுனன் வியப்புடன் “அன்னையே, விழிகொள்ளாப் பேரழகு கொண்டிருக்கிறீர்கள். மண்ணில் உங்களை அழகிலியாகவே அறிந்திருக்கிறோம்” என்றான்.

“அங்கு நான் அழகிலியே” என அவள் புன்னகைத்தாள். அக்கூடமே ஒளிகொண்டது அதன் அழகால். “உங்கள் விழைவுகளாலும் அச்சங்களாலும் காழ்ப்புகளாலும் திரிபடைந்த உருவையே நான் அங்கு சூடுகிறேன்.” அவன் பெருமூச்சுவிட்டான். “தன்னுருவில் உங்களை பார்க்கும் பேறுபெற்றேன்” என்றான். “நான் மெய்மகள். திருமகளைத் துறந்து கடந்தவர் அடையும் முழுமை” என்றாள் அவள்.

அருகிருந்தவர்களை நோக்கி “அவர்கள் துயர்களென நோய்களென தனிமையென மண்ணில் உங்களால் உணரப்படுகிறார்கள். இங்கு உண்மையென தெளிவு என துணிபு என அமர்ந்திருக்கிறார்கள்” என்றாள். “இவன் ஆற்றலை அளிக்கும் பலன். என் முதல் மைந்தன். இவள் அழியா உவகையை அளிக்கும் சுரநந்தினி. இவள் களிமயக்கை அளிக்கும் சுரை. அங்கு நீங்கள் அறியும்தருணத்தில் எல்லாம் அடைவது என் இவ்விரு மகள்கள் அளிக்கும் உணர்வுகளையே.”

பெருந்தோள் கொண்ட பலன் கைகளைக் கட்டியபடி நிமிர்ந்து நின்றிருந்தான்.  இளநீல ஆடையணிந்த சுரநந்தினியும், சுரையும்  அவனை நோக்கி புன்னகை செய்தனர். “இவன் அதர்மகன்” என்று அவள் தன் இளைய மகனை சுட்டிக்காட்டினாள். கரிய உடல்கொண்டிருந்த அவன் விழிகள் மட்டும் வெண்மையாக தெரிந்தன. “நெறிகளென நீங்கள் உணர்வன அனைத்தையும் அழிப்பவன் இவனே. இவன் துணையின்றி எவரும் எதையும் முழுதறிய முடியாது.”

அர்ஜுனன் அவர்களை வணங்கி “இன்று மெய்யருளப்பட்டேன்” என்றான். “இளையோனே, என்னைக் கடந்தே எவரும் வாருணத்திற்குள் நுழைய முடியும். இவ்வாயிலை கடப்பதற்கு நான் அளிக்கும் ஆணைநெறி ஒன்றே. நீ பெற்றும் கற்றும் அறிந்த அனைத்து நெறிகளையும் அறங்களையும்  உதறுக! ஒன்றை மட்டும் கொண்டுசெல்ல நான் ஒப்புகிறேன். அதை மட்டும்  நெஞ்சில்கொண்டு இவ்வாயிலைக் கடந்து உள்ளே செல்லலாம். அங்கு உபவாருணம் உனக்கு வழிதிறக்கும்.”

அர்ஜுனன் தலைவணங்கி “அன்னையே, பெரும்பாலையில் முழுதுலர்ந்து அறிந்த ஒன்றுண்டு என்னுள். மெய்மைக்கு முன் முழுவெறுமைகொண்டு நின்றாகவேண்டும். நான் கொள்வதென நெறியேதுமில்லை” என்றான். மூத்தவள் புன்னகைத்து “நன்று, எந்நெறியை நீ கொள்ள விழைந்திருந்தாலும் அவ்வாயிலை கடக்க ஒப்பியிருக்கமாட்டேன்” என்றாள். அவன் அந்த அவையமர்ந்திருந்த தேவியரை வணங்கி நடந்து மறுபக்கம் சென்று அங்கிருந்த வாயிலினூடாக வெளியே சென்றான்.

அங்கே ஏழு நாகங்கள் அவனுக்காக காத்திருந்தன. முதன்மைநாகம்  வளைந்து தலைவணங்கி “வாருணத்தின் காவலர்கள் நாங்கள். எங்கள் தலைவர் தட்சசாவர்ணியிடம் உங்களை கொண்டுசெல்கிறோம்” என்றது. அவற்றுடன் நாகமென நெளிந்து மேலும் ஆழம் நோக்கி சென்றான்.  அங்கே பொன்னிறமான மாளிகை ஒன்று ஒளியாடியது. அதை அணுகி அதன் வாயிலினூடாக அவனை நாகங்கள் கொண்டுசென்றன.

நாகவளை போன்ற குகைவழிகள் பொன்னாலானவை. பொன்னொளியே வழிநடத்தியது. அதனுள் சென்றதும் நாகங்களும் அவனும் பொன்னுடல் கொண்டனர். வளைவழி சுருண்டு தேங்கி வளைந்து உருவான அரண்மனையின் ஆழத்திலிருந்தது கோளவடிவ அரசவை. அதில் புற்றுவடிவப் பீடங்களில் உடல் சுருட்டி அவையமர்ந்திருந்தன பெருநாகங்கள். நடுவே அரியணையில் பொன்நாகப் பேருடல்கொண்ட தட்சசாவர்ணி அமர்ந்திருந்தான்.

அர்ஜுனன் அவன் முன் சென்று நின்று வணங்கினான். “சொல் ஓதப்படும் அவைகளில் எல்லாம் நின்றிருக்கும் நாகங்கள் நாங்கள். நீரிலும் நெருப்பிலும் வளைபவர்கள். முதற்காவியம் கண்ட புற்றுறைமுனிவரை இங்கே நீ காண்கிறாய்” என்றான் தட்சசாவர்ணி. அவையமர்ந்திருந்த நாகச்சுருளுடல் கொண்ட முனிவரைக் கண்டு அர்ஜுனன் தலைவணங்கி “உங்கள் காவியத்தால் சொல்லென்பது துயருக்கு நிகர்வைக்கவேண்டியது என்று அறிந்தோம், முனிவரே. வணங்குகிறேன்” என்றான். வேடகவிஞர் கைதூக்கி அவனை வாழ்த்தினார்.

“இந்த அவையில் மண்ணிலுள்ள நச்சுக்கள் அனைத்தும் பொன்னொளி கொண்டு அமைந்துள்ளன, வீரரே” என்றான் தட்சசாவர்ணி. அவன் திரும்பி அங்கிருந்த நாகங்களை நோக்கினான். புற்றுறைமுனிவர் “நஞ்சென்பதெல்லாம் நீரில் கரைவதென்பதனால் வாருணமே நஞ்சுக்கு மையநிலை என்று அறிக! அமுதென்பதனாலேயே நீர் நஞ்சாகும் விழைவையும் தன்னுள் கொண்டது. பெருவிழைவுடன் நஞ்சை நாடுகிறது நீர். ஆழச்சென்றும் ஊறிக்கடந்தும் நஞ்சுகளை தான் பெற்றுக்கொள்கிறது.  தேங்குகையில் தன் தனிமையையே நஞ்சென்று ஆக்கிக்கொள்கிறது” என்றார்.

“ஆம்” என்றான் அர்ஜுனன். “நீர் கொண்ட அனைத்து நஞ்சுகளையும் எண்ணுக! உண்ட நஞ்சுகள், தொட்டுக் குருதியில் கலந்த நஞ்சுகள், எண்ணிப்பெருக்கிய நஞ்சுகள், கற்றறிந்த நஞ்சுகள், கரந்த நஞ்சுகள் அனைத்தையும் முற்றிலும் இங்கு உதறி அந்த நீர்வாயிலைக் கடந்து மகாவாருணத்திற்குள் நுழைக!” என்றான் தட்சசாவர்ணி.

“முற்றுதறப்போவதில்லை, பொன்னாகரே” என்றான் அர்ஜுனன். “ஒரு துளி நஞ்சு எஞ்சாது மெய்மையை அறியமுடியாது. அந்நஞ்சையும் இழந்தால் அறிவதற்கொரு தன்னிலை எஞ்சாது எனக்கு. மெய்மையென்றே ஆவேன். மீண்டுவரமாட்டேன்” என்றான். தட்சசாவர்ணி “ஆம், உண்மை” என்றான். வால்மீகி புன்னகைத்தார்.

“கருவிற்குள் வந்து கடித்த பாம்பின் முதற்துளியை மட்டும் உடன்கொண்டு அங்கு செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். தட்சசாவர்ணியும் வால்மீகியும் வாழ்த்த தலைவணங்கி அடிவைத்து அவ்வாயிலை நோக்கிச்சென்று தொட்டுவணங்கி திறந்து கடந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதைகள் விமர்சனம் 10

$
0
0
11

ரியாஸ்

 

ஜெ,

தில்லையம்மா தூயனுடைய ஆரம்பகாலச் சிறுகதை.
இப்போது தூயன் எழுதும் கதைகள் செறிவானவை என்பது எண்ணம். ஆனால் தில்லையம்மா கதைக்கு வரும் விமர்சனங்கள் அதை எழுதியவருக்கு தர்மசங்கடத்தை அளிக்கும் என்றே நினைக்கிறேன்.

அக்கதையைப் பற்றிய விமர்சனமாக மட்டும் அதைக் கொள்ளலாம் தான், ஆனால் ஆரம்பகாலத்தில் எழுதிய முதிர்ச்சியற்ற கதைக்கு இப்போது வரும் விமர்சனங்கள், அந்த கதையை எழுதியவரை பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுமோ என்று ஐயுறுகிறேன். நான் தூயன் மற்ற கதைகள் எதையும் படித்திராமல் உங்கள் தளத்தில் வெளியிடப்பட்ட தில்லையம்மாள் கதையின் வழியாகவோ அல்லது அதற்கு வந்த விமர்சனங்களின் வழியாகவோ அறிமுகமாயிருந்தால் தூயனின் மற்ற கதைகள் எதையும் படித்துப் பார்ப்பதைப் பற்றி யோசிக்க மாட்டேன்.

ஆனால் நான் தூயனின் மற்ற கதைகளை படித்திருப்பதால் தூயனின் எழுத்தைப் பற்றி ஒரு புரிதல் இருக்கிறது. அந்த ஒரு கதையை வைத்தே தூயனின் மற்ற கதைகளையும் எடை போடும் நிலைக்கு வந்துவிட வேண்டாம் என்பதே என்னுடைய எண்ணம்.

முகம்மது ரியாஸ்

***

அன்புள்ள ஜெ

சிறுகதைகள் குறித்த உங்களின் பார்வைகளை வாசித்துவருகிறேன். அக்கதைகளுக்கு நான் எழுதியவற்றோடு ஒப்பிடும்போது நான் ஓரளவேனும் சரியாக சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

நண்பர் மனோகர் தில்லையம்மா கதையைப் பற்றி குமுறியிருக்கிறார். உண்மையில் இன்று வாசகனுக்கு ஏற்படுகிற கோவம். எனக்குமட்டுமல்ல சுனில், கே.ஜே.அசோக்குமார் போன்றவர்களுக்கும் இங்கிருப்பது தொடக்கக்காலக் கதைகள் தான். இன்று அவர்களை தொடர்ந்து வாசிப்பவனாக என்னால் அதைச் சொல்ல முடியும். என்னுடை கதையும் தொடக்கத்தில் எழுதியதே .

மிகச்சாதாரணமானதுதான். கல்லூரியில் படிக்கும்போது டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டிக்கெல்லாம் எழுதி அனுப்பியிருக்கிறேன். கல்கியில் வந்திருக்கிறது. இலக்கியத்தில் தீவிர வாசிப்பில் இருந்தபோது தினமணியில் பிரசுரமானதும் நானே சற்று நெளியத்தான் செய்தேன்.

ஆனால் இங்கு அச்சுட்டியைக் கண்டதும் பேரதிர்ச்சி. இன்று நான் எழுதுவதும் அவதானிப்பதும் இது அல்ல. நண்பர் சுனில், அகில் குமார், காளி ப்ரசாத் போன்றவர்கள் குறிப்பிட்டிருப்பதில் காணலாம். இலக்கியத்திற்கும் எழுத்துக்காக மட்டுமே என் எண்ணங்கள். உங்கள் கடிதங்களிலே குறிப்பிட்டிருக்கிறேன்.

சமீபத்திய கதையொன்றை அனுப்பி விமர்சனம் கோரலாமென்கிற ஆவலில் இருந்தேன். அதற்குள் ‘முற்றும்’ போட்டுவிட்டீற்கள்.

பரவாயில்லை மனோகர்* போன்றவர்களுக்கு ‘இதுபோன்று எழுதக்கூடாது’ என்கிற அளவுகோலுக்கு இருக்கட்டும்.

அன்புடன்
தூயன்

***

அன்புள்ள ரியாஸ் மற்றும் தூயன்

தூயன் அவரே அக்கதையின் சுட்டியை எனக்கு அனுப்பியிருந்தமையால்தான் பிரசுரமாகியது. நான் என் மின்னஞ்சலுக்கு வந்த கதைகளை மட்டுமே அளித்திருந்தேன்

அந்தக்கடிதமும் அதற்கு முன்னால் அத்தனை கதைகளையும் அமெச்சூர் கதை என்று சொல்லி வந்த கடிதமும் என்னைப்பொறுத்தவரை உசிதமானவை அல்ல. ஆனால் அவற்றை பிரசுரம் செய்தமைக்கு ஒருகாரணம் உண்டு. வாசகன் என்றால் யார் என்பதை காட்ட.

வாசகன் என நாம் சொல்வது ஒரு பெரிய கூட்டுநனவிலி. கட்டற்றது. பலவகையான உணர்வுகள் கலந்தது. ஆர்வம் அகந்தை தாழ்வுணர்ச்சி என . கிண்டல் வியப்பு ரசிப்பு நெகிழ்ச்சி என அது வெளிப்படும் விதங்களும் பலவகையானவை. ஒர் எழுத்தாளன் இந்த விராடவடிவை எதிர்கொள்ளவேண்டும். தான் எதிர்கொள்பவர்களைப்பற்றி அவனுக்கு ஒரு புரிதல் ஏற்படுவது மிக முக்கியமானது.

எதிர்பாராத உவகைகள் நெகிழ்வுகள் அதில் உண்டு. கசப்பும் வருத்தமும் அளிக்கும் தருணங்களும். நான் எனக்கு நேர்ந்த பல விஷயங்களை இவ்விவாதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். அசோகமித்திரன் அளித்த அறிவுரையையும்

என் கதைகளில் 8 கதைகள் இன்று எவருக்கும் வாசிக்கக்கிடைக்காது. பழைய தீபம் இதழில் எழுதியவை. அவற்றில் ஒன்று [தஸ்தயேவ்ஸ்கியின் முகம்]எவராலோ கண்டெடுத்து வெளியிடப்பட்டது. வெளிவந்தபோது மூத்த எழுத்தாளர்களால் நிராகரிக்கப்பட்டவை. நானும் அவை சரியாக வரவில்லை என எண்ணி தவிர்த்துவிட்டேன்.

ஏனென்றால் அத்தகைய ஒரு கதையைக்கொண்டு நம் படைப்பித்திறனை குறைத்துமதிப்பிட வாய்ப்பிருந்தது. இனிமேல் அப்படி இல்லை. என் முக்கியமான ஆக்கங்கள் எவை என எல்லாருக்கும் தெரியும். இன்று அவை ஆய்வுப்பொருளாக மட்டுமே கருதப்படும்

இதுவும் எழுத்துப்பயிற்சியின் ஒருபகுதி. எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான்

ஜெ

***

சார்

வணக்கம்.

இலக்கியம் படைக்கப்படுவது அக சீண்டலுக்கான வடிகால் என்று கூறிக் கொண்டாலும் அது படிக்கப்படுவதிலும் விமர்சிக்கப்படுவதிலும் தனது இன்பானுபவத்தை நீட்டித்துக் கொள்கிறது. தனது படைப்பை குறித்த விமர்சனம் எதுவாகினும் அதன் மீதான கவனத்தை கூர்த்தீட்டியே படைப்பு மனம் வைத்திருக்கிறது. காலச்சூழல் அதற்கு நேர் எதிராக சென்று கொண்டிருக்கும் நிலையில் இத்தனை எளிமையாக பல படிகள் கீழிறங்கி படித்து.. விமர்சிப்பது என்பது தமிழ்சூழலுக்கும் படைப்பாளிகளுக்கும் மிக அவசியம் என்றே தோன்றுகிறது. சொல்லும் கருத்துகள் இனிப்பு கலவாது இருப்பதென்பது தங்களின் பாணி. மற்றபடி தங்கள் விமர்சனத்தின் மீது விமர்சனம் வைக்க இயலாது என்பதில் so called எதிரிகளுக்கும் மாற்று கருத்து இருக்க இயலாது என்றே கருதுகிறேன். நுண்ணுணர்வான கலை மனம் வாய்க்க பெறுவதே ஒரு வரம்தான். வாய்த்ததை பகிர்வதும் ஒரு மேன் நிலைதான். மாற்றமேதுமில்லை.

அன்புடன்

கலைச்செல்வி.

*

அன்புள்ள கலைச்செல்வி,

இங்கே நான் முன்வைக்க விரும்புவது ஒரு விவாதத்தை மட்டுமே,விவாதத்தின் எல்லா சாத்தியங்களும் நிகழட்டும் என்பதே என் எண்ணம்

ஜெ

 

 

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தொழிற்சங்கம் தேவையா-கடிதங்கள்

$
0
0

parvathi_1764449h

 

 

அன்புள்ள ஜெ,

மென்பொருள் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் தேவையா இல்லையா என்பதில் பதில் என்னிடம் இல்லை, ஆனால் இந்த அனுபவம் ஒரு புதிய பரிணாமத்தை தந்தது.

நான் அமெரிக்காவில் வளைகுடா பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஒரு கைபேசி தயாரிக்கும் MNC மென்பொருள் வேலைக்கு சென்றிருந்தேன். வேலை குறைப்பு அறிவிப்பு வரும் என எல்லோரும் அதை பற்றி உணவு நேரங்களிலும் பேசிக்கொண்டிருந்தனர், அலுவலக வளாகத்தில் ஒரு இழவு வீட்டின் அமைதியை அறிவிப்பு வரும் நாள் வரை உணர முடிந்தது. அந்த நாளும் வந்தது சுமார் 300-400 பேர்கள் ஒரே நாளில் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். மக்கள் கவலையுடன் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதும் ஒரு சிலர் அன்றே வேலையை விட்டு விலக்கப்பட்டனர் வேறு சிலர்களுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வரை நேரம் இருந்தது.

நான் ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால் இங்கு இல்லை என்றாலும் வேறு இடத்தில வேலை கிடைக்கும் அது வரை என் இந்திய அலுவலகம் சம்பளம் தரும். ஆனால் வேலை இழந்த மக்கள் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டமோ கோபமோ படவில்லை. ஏன் இந்த மக்கள் இப்படி இருக்கிறார்கள், அமெரிக்காவில் தொழிற்சங்கம் இருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது ஒரு போராட்டம் நடத்தி முதலாளிகளுக்கு புரியவைத்திருக்கலாம் என தோன்றியது. அன்றுபல அதிகாரிகளுக்கும் வேலை போனது அதனால் யார் யாருக்கு உணர வைப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது. அமெரிக்காவில் குழு உணர்வும் போராட்ட உணர்வும் இல்லாமல் மக்கள் இருப்பதை பார்த்த பொழுது எனக்கு கவலை ஏற்பட்டது மற்றும் அமெரிக்கா கலாச்சாரத்தில் மீது வெறுப்பு உண்டானது.

சில நாட்கள் பிறகு வேலை இழந்த மக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு மின்னஞ்சல் குழு உருவாக்கினர். அதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் உருவாகினார். அவர் Bay Area எங்கு எல்லாம் வேலை கிடைக்கும் என்ற மின்னஞ்சல் அனுப்புவதும். நேர்முக தேர்வுகளில் என்ன கேள்விகள் கேட்கின்றனர் என்ற தகவலும் பரிமாறி கொண்டனர். வேலை இழந்ததால் அலுவலகம் வர முடியாதவர்கள் ஒன்று சேர்ந்து படிக்க, தகவல் பெற்று கொள்ள ஒரு சிறு அலுவலகம் திறந்தனர். ஒருங்கிணைப்பாளர் பல மனிதவள மேலாளர்களுடன் பேசி அங்கு வேலை தேவைகளை சேகரித்து கொடுத்தார். அவரும் வேலை இழப்பில் பாதிக்கப்பட்டவர். எனக்கு தெரிந்த வரை எல்லோருக்கும் வேலை கிடைத்து விட்டது.

இந்த மாற்றம் எனக்கு தொழிற்சங்கம் இருந்தால் போராட்டம் மட்டும் நடத்திவிட்டு தலைவர் வீடு சென்றிருப்பாரோ? ஆனால் இங்கு எந்த அறிவிப்பும் பலகையும் இன்றி ஒரு தொழிற்சங்கம் உருவாகி வேலை முடிந்தவுடன் (எல்லோருக்கும் வேலை கிடைத்தவுடன் ) கலைக்கப்பட்டதாக தான் தோன்றியது.

அன்புடன்

ஆனந்த்

***

ஜெ

வங்கிவேலையில் கோல்டன் ஹேண்ட்ஷேக் என்னும் ஒரு திட்டம் உண்டு. ஆட்குறைப்புக்காக. அது அடிப்படையில் தவறானது. பணம் வாங்கிக்கொண்டு வேலையிலிருந்து நின்றுவிடலாம். கோடிக்கணக்காகச் செலவிடுகிறார்கள். ஆனால் வேலையிலிருந்து நிற்பவர்கள் அடுத்த வேலைக்கு திறமையும் வாய்ப்பும் உள்ளவர்கள். திறமையோ ஊக்கமோ இல்லாதவர்கள் தங்கிவிடுகிறார்கள். குறிப்பாக குடிகாரர்கள், வயதான குடும்பத்தலைவிகள். மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பம் பிடிகிடைப்பதில்லை. கற்றுக்கொள்ள மூளையும் இல்லை. இன்னமும் ஒற்றைவிரலால் கம்ப்யூட்டரில் பார்த்துப்பார்த்துத் தட்டுபவர்களே அதிகம். இதுதான் பிரச்சினை. வங்கி அதிகாரியாக இதைச் சொல்கிறேன்

எஸ்.ஆர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் என் மதிப்பீடு -3

$
0
0

Madhavan_Elango
சிறுகதைகளைப்பற்றி நான் சொன்ன கருத்துக்கள் சார்ந்து எதிர்வினைகள் என ஏதும் வரவில்லை. ஆசிரியர்கள் இதை கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

மாதவன் இளங்கோவின் முடி சிறுகதை சிறுகதைக்குரிய வரையறுக்கப்பட்ட வடிவத்தை இயல்பாக சென்றடைந்திருக்கிறது. ஒன்று குவிமையம். முடி என்பதில் தொடங்கும் கதை இறுதிச் சொல் வரை திசை மாறாமல் நேராக வளர்ந்து செல்கிறது. இரண்டாவதாகக் கதை சொல்லியின் விவரணைகள் சூழலையோ கதாபாத்திரங்களையோ அறிமுகம் செய்யும் போது சொல்லிச் செல்லல் நினைவோட்டல் என்ற முறையில் அலைபாயவில்லை. மூன்றாவதாக கதை இறுதி வரியில் திரும்பி வலுவான ஒரு முடிச்சை உருவாக்குகிறது. அவ்வகையில் வாசிக்கத்தக்க சுவாரசியமான ஒரு கதை இது.

ஒரு மனிதனின் இயல்புக்கும் அவனுடைய தனி வாழ்க்கைக்குமான தொடர்பு அதில் உள்ள முரண்பாடு சிறுகதைக்கு என்றும் ஒரு முக்கியமான கதைக்கருவே. உதாரணமாக வண்ணதாசனின் கதை ஒன்றில் அலுவலகத்துக்கு வந்தவுடனேயே கழிப்பறையையும் தன் மேஜையையும் தூய்மை செய்யக்கூடிய ஒருவர், ஒழுங்கையும் கச்சிதத்தன்மையையும் ஒரு வெறியுடன் கடைப்பிடிக்கும் ஒருவர் ,அவருடைய இல்லத்தில் அதற்கு எந்தவகையிலும் சாத்தியமில்லாத ஒரு வாழ்க்கை வாழ நேர்கிறதென்பதை காட்டியிருப்பார்.

இத்தகைய சித்தரிப்பினூடாக வாசகன் வாழ்க்கை நிகழும் விதிகளில் ஒன்றை சென்று தொடமுடிகிறது. அதில் அவன் தன் சொந்த அனுபவத்தை பொருத்திக் கொள்கிறான். வாசித்த கதைச் சூழலில் விடுபட்ட விஷயங்களை நிறைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஓயாது தன் கீழ் ஊழியர்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுத்து அவர்களை முடி உதிர வைக்கும் மேலதிகாரி இல்லத்தில் புற்றுநோய் கொண்ட மனைவியை வைத்திருக்கிறார். பேரன்புடன் அவளுக்கு பணிவிடை புரிகிறார். அவள் முற்றிலும் முடியை இழந்துவிட்டிருக்கிறாள் என்பது மேலோட்டமாக நோக்கினால் ஒரு முடிச்சு மட்டுமே. ஆனால் துயரடைந்த ஒருவர் பிறருக்கு ஏன் துயரை அளிக்கிறார்? பேரன்பு கொண்ட ஒருவர் ஏன் அதை குடும்பத்திற்கு வெளியே அளிக்க முடியவில்லை? ஒருபுள்ளியில் மிகக்கனிந்து உச்சத்திற்கு செல்பவர் இன்னொரு புள்ளியில் ஏன் இறுக்கம் கொள்கிறார்? — என்பது போன்ற வாழ்க்கை சார்ந்த பல கேள்விகளை இக்கதை சார்ந்து எழுப்பிக் கொள்ள முடிகிறது.

இது நாம் அன்றாட வாழ்க்கையில் பார்ப்பது தான். இந்தியாவின் பெரும்பாலான அலுவலகங்களில் நடுவயது கடந்த பெண்கள் அதிகாரிகளாகவோ ஊழியர்களாகவோ இருந்தார்கள் என்றால் மிகக்கடுமையானவர்களாகவும் குரூரமானவர்களாகவும் இருப்பதைப்பார்க்கிறேன். எந்நிலையிலும் ஒரு சிறு கனிவைக்கூட அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. பொதுவெளியில் இத்தகைய முகத்தைக் காட்டும் பெண்கள் இல்லத்தில் மிகக்கனிந்த அன்னையராக இருப்பார்கள். இதற்கு நேர்மாறாக பொறுமையும் கனிவும் குறைந்த பொதுவெளி முகங்கொண்ட ஆண்கள் இல்லத்தில் மிகக்குரூரமானவர்களாகவும் கறாரான தந்தையராகவும் இருக்கிறார்கள்.

மனிதர்கள் வெவ்வேறு வேடங்கள் வழியாக வாழ்க்கைக் களங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் இவை அவர்களுடைய இயல்புகளே அல்ல அவர்களின் நடிப்புகள் மட்டுமே ஒரு பூட்டுக்குள் நுழையும்போது தன்னை உருமாற்றிக் கொள்ளும் ஈயச்சாவி போன்றது மனித இயல்பு .இல்லத்தில் கனிவையும் பெருந்தன்மை கொண்ட தந்தையாக இருக்கும் அந்த அதிகாரி அலுவலகத்தில் வேலை வெறி பிடித்த குரூரமானவராக இருக்கும் போது தராசின் இன்னொரு தட்டு நிகர் செய்யப்படுகிறது. அது அவருக்கு தேவையாக இருக்கிறது.

ஒருவகையில் சாதாரணமானவர்கள் எதிரில் சென்று தொட்டு அடையாளப்படுத்தப்படும் ஒரு கதைக்கருவை எடுத்து பிசகின்றி அதை சொன்னதிலும் மாதவன் இளங்கோ வெற்றி பெறுகிறார்.

இக்கதையின் குறைபாடுகள் என்ன? முதன்மையாக இதன் நடை இலக்கிய வாசகனுக்கு மிக ஒவ்வாமையை அளிப்பது .மாதவன் இளங்கோவின் வாசிப்பு பெரும்பகுதி விகடன், குமுதம் வகைக் கதைகளைச் சார்ந்தது என்றும் ஆழமான இலக்கிய எழுத்தின் பாதிப்பு அவருக்கு இல்லையென்றும் இந்த நடை காட்டுகிறது. ஒரு இலக்கிய படைப்பில் இன்று ”அது மட்டுமா?” ”சொன்னால் நம்ப மாட்டீர்கள்” போன்ற வார்த்தைகளோ ”எவரையும் விட்டு வைப்பதில்லை இந்த மனிதர்” போன்ற ஒற்றை வரிகளோ ”இவையெல்லாம் எதற்குச் சொல்கிறேன்” என்றால் என்பது போன்ற தொடக்கங்களோ பயின்று வருவதில்லை. அதை ஒரு பழமையான மொழி நடையின் பகுதிகள் என்று கருதப்படுகின்றன. சொல்லப்போனால் வார இதழ்களில் அடித்து தேய்த்து காயப்போட்ட ஒரு வகையான மொழி நடை அது.

’இன்னும் சில நாட்களில் மொத்தமாக கொட்டி தீர்ந்துவிடும்’ என்னும் ஒற்றை வரியால் ஒரு கதையை தொடங்குவது கூட தேய்வழக்கே. ஒரு சிறுகதையின் முதல் வரி ஒரு தேய்வழக்காக அமைவது மிக சோர்வூட்டக்கூடியது. இந்தக் கதையை தன்னிச்சையாக நான் சென்றடைந்திருந்தால் இந்த ஒரு வரிக்கு அப்பால் உறுதியாக மேற்கொண்டு படிக்க மாட்டேன். முதல் வரி என்பது அந்த மொத்த கதையின் உணர்வு நிலையையும் பார்வையையும் ஏதோ ஒரு வகையில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

தமிழ் சிறுகதையின் அழகிய முதல் வரிகள் பல ஒரு வாசகன் நினைவில் நின்றிருக்கும். சுந்தர ராமசாமியின் பிரசாதம் ‘எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான்’ என்று ஆரம்பிக்கும். ஒரு எண்ணாக சுருங்கிவிட்ட காவலர் ஒருவரின் வாழ்க்கையை பற்றிய ஒரு பார்வை அதில் உள்ளது. கூடவே அந்தக் கதை முழுக்க ஓடும் இனிய பிரியமான பகடியின் ஒலியும் அதில் உள்ளது. சரியான முதல்வரிக்காக சிறுகதை ஆசிரியன் காத்திருக்கத்தான் வேண்டும். அந்த வரி அமையுமென்றால் கதையின் ஒட்டுமொத்த மொழிநடையையும் அது தீர்மானித்துவிடும்.

அல்லது அசோகமித்திரனின் பல கதைகளில் மிக எளிய இயல்பான ஒரு ஆரம்பம் இருக்கும். நான் பெரிதாக ஒன்றும் சொல்லவரவில்லை என்னும் திட்டமிட்ட பாவனை அது. கதை அந்தப்பாவனைக்கு அப்பால் எங்கோ தான் இருக்கும்.

இக்கதையின் இரண்டாவது குறை இயல்பென்பது ஒரு குணச்சித்திரத்தையோ அது சார்ந்த நிகழ்வையோ மிக விரிவாக விளக்குவது. பார்க் போலன் என்னும் மேலதிகாரி தன் முடி கொட்டுவதற்கான காரணம் என்று சொல்லும் கதைசொல்லி அதன் பிறகு அவருடைய கறாரான குரூரமான இயல்புகளைப்பற்றி விளக்கி விளக்கிச் சொல்லிக்கொண்டே செல்கிறான்

சிறுகதைகளை அடிக்கடி படிக்கும் பழக்கமுடியவர்கள் அந்த பல பத்திகளை எளிதில் கடந்து சென்று விடுவார்கள். பார்க்போலன் வேலை வெறிபிடித்தவ, இரக்கமற்ற ஒரு அதிகாரி என்றால் அதைச் சொல்வதற்கு ஒரு பத்தி போதும் வேலைக்கு முன்னதாக வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார் ,கிளம்பிச்சென்றால் குறை சொல்வார்,செய்ய முடியாத வேலைகளை சுமத்துவார்- இவை அனைத்தையுமே ஒரு பத்தியில் சொல்ல முடியும்., குரூரமான அதிகாரி அப்படித்தானே இருப்பார். புதிதாக என்ன?

மேலதிகமாக கதைக்குள் அவருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறதென்றால் அவருடைய குணாதிசயத்தின் தனிச்சிறப்புகள், சாதாரணமாகக் காணமுடியாத தன்மைகள் சொல்லப்படிருக்க வேண்டும். பார்க் போலனுடைய இயல்புகளாகச் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே எந்த ஒரு குரூரமான மேலதிகாரிக்கும் பொருந்தக்கூடிய பொது இயல்புகள் மட்டுமே. அந்தப்பொது இயல்புகளை பெரிதாக பட்டியலிட்டுச் செல்லும் போது கதை மிக சோர்வூட்டக்கூடியதாக உள்ளது.

கதை எழுதிப்பயிலும்போது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இது. எனது மனைவி சந்தேகப்பிராணி என்று சொல்லிவிட்டால் அது ஒரு ‘மாதிரி\ கதாபாத்திரம் . இன்னின்ன வகையாக சந்தேகப்படுவாள் என்பதற்கு இரண்டோ அல்லது மூன்றோ வரிகளில் உதாரணம் காட்டிக் கடந்து சென்றுவிடலாம். இதுவரைக்கும் எவரும் சொல்லாத ஒரு குணாதிசயம் அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் மட்டுமே பலபத்திகளுக்கு அவளுடைய இயல்புகள் சொல்லப்படவேண்டும். மற்றபடி அவள் சந்தேகப்படும் விதங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுக் கொண்டு செல்வது வாசகனுடைய கற்பனையை நம்பாமல் இருப்பது மட்டுமே.

இன்னொன்று ,இத்தகைய கதாபாத்திரங்களை விவரிக்கும் போது நான் சாயங்காலம் வேலையை விட்டுக் கிளம்பும்போது அவர் இப்படிச்சொல்வார் என்றெல்லாம் வரும் ஒற்றை வரிகள் எந்த வகையிலும் உதவாது. அது ஒரு நிகழ்வாக ஆக வேண்டும். நிகழ்வுக்கு ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும்.

உதாரணமாக எனக்குத் தெரிந்த மேலதிகாரி ஒருவர் வேலையைவிட்டு ஒருமணி நேரம் பிந்தியே வீட்டுக்குக் கிளம்பும் ஊழியரைப்பார்த்து மிக இயல்பாக அவர் அன்று முடித்திராத ஒரு வேலையைப்பற்றிக் கேட்பார். அந்தக் குற்ற உணர்வை உருவாக்கியே அவரை வீட்டுக்கு அனுப்புவார். அன்று மதியத்திலேயே அவர் அவ்வூழியர் அந்த வேலையை முடித்திருக்க மாட்டார் என்று குறித்து வைத்திருப்பார். அவர் அப்படிக் கேட்பதல்ல முக்கியம், அவர் அதை முன்னதாகவே திட்டமிட்டிருக்கிறார் என்பதுதான். இத்தகைய ஒரு நுட்பமான இரு இயல்பை ஒரு தனித்தன்மையை சொல்லும் போது மட்டும்தான் அந்தக் கதபாத்திரம் வாசகனுடைய மனதுக்குள் நுழைகிறது.

அதே போன்று பார்க் போலனின் குணச்சித்திரத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. ஆகவே அவருடைய உடல் தோற்றம் என்ன என்பது இந்தக் கதைக்கு முக்கியமானது. பதற்றம் கொள்பவரா? பொறுமையாக வேலை செய்து கொண்டிருப்பவரா? பேசும்போது அவரது குரல் திக்குமா? அல்லது ஓங்கி ஒலிக்குமா? திட்டும்போது அவருடைய முகம் சிவக்குமா? கண்கள் ஈரமாகுமா? அவருடைய கைகளின் அசைவுகள் என்ன? முக பாவனைகள் என்ன? அவர் எப்படி உடையணிந்து வருவார்? கவனமற்ற பொருத்தமற்றவை ஆடையா? அல்லது எண்ணி அமைக்கப்பட்ட கச்சிதமான ஆடையா?

இவை அனைத்தும் இந்தக் கதை முடியும் போது வரும் அவருடைய குணச்சித்திரத்தை வாசகன் அணுக்கமாக உணர்வதற்கு மிக முக்கியமானவை. அவரை அவன் கண்ணால் பார்க்கவேண்டும். நேரில் அப்ழகிய அனுபவத்தை அடையவேண்டும். ஆசிரியன் அல்லது கதைசொல்லி சொல்லி அறிந்த செய்தியாக இருக்கக்கூடாது. இதில் எந்த தகவலும் இந்தக் கதைக்குள் இல்லை. ஆகவே வெறும் ஒரு பெயராகவே அந்தக் கதாபாத்திரம் இருக்கிறது என்று தோன்றுகிறது.

கதையை கதை சொல்லியே கதைக்குள் சொல்வது போல் அமைக்கும்போது மொத்தக்கதைக்கும் ஒரு ஒழுங்கும் ஒருமையும் வந்துவிடுகிறது .ஆனால் பெரும்பாலான நிகழ்வுகள் வெறும் கூற்றுகளாகவே ஆகிவிடும் அபாயம் உண்டு. சிறுகதை விதிகளில் ஒன்று ‘ கதையை சொல்லாதே ,காட்டு’ என்பதுதான். இந்தக்கதை காட்டப்படவே இல்லை. நான் கதைக்கு உள்ளே வரும்போதே அந்த அலுவலகத்தின் சித்திரம் என்ன என அறிய விரும்புவேன். ஒருகதைமுழுக்க நான் அங்கே வாழவேண்டும் அல்லவா? அந்த அலுவலகம் அனைத்து ஊழியர்களையும் மேலதிகாரி ஒரே பார்வையில் பார்க்கும்படியான பெரும் கூடமா? கண்ணாடித்தடுப்புகள் கொண்டதா? எப்படி மேலதிகாரி ஊழியர்களைக் கண்காணித்தார்? உள்ளே வரும்போது கார்டுகளை பயன்படுத்தவேண்டுமா?

அந்த அலுவலகத்தைக் கண்ணால் பார்க்காதவரை இந்தக் கதை மிக மிக குறைவுபட்ட ஒன்றாகவே தெரியும். கதை என்னில் நிகழவேண்டும் ஆகவே காட்டப்படவேண்டும் கதையை வாசகன் தெரிந்து கொள்ள கூடாது, அவனும் உள்ளே சென்று வாழவேண்டும். இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் மிகக் குறுகிய சித்தரிப்பாக அமைந்துள்ளது இந்தக் கதை.

கதையின் மிக முக்கியமான இன்னொரு குறைபாடென்பது முடியை பற்றிய அதனுடைய சித்தரிப்பில் தேவையில்லாத வரும் விளம்பரங்களைப்பற்றிய குறிப்பு. ஒரு கதை தொடங்கும்போது முடியைப்பற்றியதாக இருந்தால் முடிக்கும் அவனுக்குமான உறவென்ன, முடி அவனை எப்படிக் காட்டுகிறது, எப்படி அவனுடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதுமட்டுமே அந்தக் கதைக்கு முக்கியமே ஒழிய அந்த விளம்பர உலகம் அல்ல. ஒருவகையில் அது கதைக்கு தேவையில்லாத திசை திரும்பலாகவே அமையும்

உதாரணமாக முடி தன்னை இளமையாகக் காட்டும்என்று அவன் நினைக்கிறான் என்று கொள்வோம். முடி தன்னை அதிகாரம் உடையவனாகக் காட்டும் என்று அவன் நினைக்கலாம். முடியைப் பேணுவதற்கு அவன் என்னென்ன செலவழித்திருக்கிறான் என்று காட்டலாம். அவனுக்கு மேல் இழைக்கப்பட்ட அதிகாரத்திற்கு எதிராக அவன் பேணிக்கொள்ள விரும்பும் ஒன்றாக முடி இருக்கும் போது அது ஒரு குறியீடு அவனுடைய தன்மானத்தின், சுயத்தின் அடையாளம் அது என்னும் போது அந்த அடையாளம் அந்த முடிக்கு அளிக்கப்பட்டு சித்தரிப்பு அமைந்திருக்க வேண்டும்.

தன் முடியை அவன் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் ஒரு காட்சி, ஒவ்வொரு நாளும் உதிர்ந்த முடியை அவன் பார்த்துக் கொள்ளும் ஒரு தருணம் இதற்குள் இருந்திருந்தால் இக்கதை குறியீட்டுத்தன்மை கொண்டு மேலே சென்றிருக்கும். எத்தனை சித்திரங்கள் அப்படிச் சாத்தியம்! உதிர்ந்தமுடி காற்றில் சுருண்டு சுருள்களாக அவன் அறை முழுக்க விழுந்து கிடக்கிறது ,உதிர்ந்த மயிரில்லாமல் ஒரு கவளம் சோறு கூட அவனால் உண்ணப்படவில்லை என்றெல்லாம் எழுதப்படுமென்றால் அந்தக் கதையினுடைய அர்த்தம் வேறு அல்லவா. இக்கதையில் முடி வேறு எவ்வகையிலும் பொருள் வளர்க்கப்படவில்லை.

இறுதியாக பார்க் போலனின் இல்லத்தைப்பற்றிய சித்திரம் அந்தப்பெண்களைப்பற்றிய சித்திரம் குறைவான சொற்களில் அவற்றை அளித்திருப்பது சரியானது. ஆனால் மேலதிகமான ஒன்று அதில் இருந்திருக்க வேண்டும். அவர் அங்கு அலுவலகத்துக்கு நேர்மாறான மனிதராக இருக்கிறார் என்பதுதான் நமது அனுபவங்களைப்பார்த்தால் தெரியும் கணிசமான அரசு அதிகாரிகள் அவர்களது இல்லத்திற்கு சென்றால் உருவம் சிறியவர்களாகத் தோன்றுவார்கள். தோள்க்குறுகலோ உடல்த் தளர்ச்சியோ கொண்டவர்களாகத் தோன்றுவார்கள். அந்த மாற்றம் மிக முக்கியமான விஷயம். எப்படி பார்க் போலன் அவர் இல்லத்தில் வேறு மாதிரி தோற்றம் அளித்தார் என்ற சித்திரம் இந்தக் கதைக்குள் வரவே இல்லை.

இறுதியாக பார்க்போலன் அவருடைய குரூரத்தையோ கோபத்தையோ சொல்லி மன்னிப்புக் கேட்பது போல எழுதப்பட்ட இந்தக் கதை எளிமையான மனமாற்றத்தின் கதையாக வாசகனால் வாசிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அந்தக் கடைசிக் காட்சியை அமைதியாக, வெளிப்படையாக எதுவும் சொல்லாததாக, போகிறபோக்கில் வருவதாக அமைப்பதுதான் ஆசிரியரின் வெற்றி

வாழ்க்கையின் ஒரு தருணத்தை தொட்டெடுத்த கதையை கூறு முறையால் சாதாரணமாக ஆக்கி முன்வைத்திருக்கிறார் என்று தோன்றியது. மாதவன் இளங்கோவின் பலம் வாழ்க்கைத் தருணங்களை தெருப்பது. பலவீனம் பயிற்சியற்றதும் வார இதழ்களின் பொதுவாசகப்பரப்புக்கு உரியதுமான மொழிநடையும் சித்தரிப்பில்லாமல் கதையைச் சொல்லிவைக்கும் முறையும்.

download
சிவா கிருஷ்ணமூர்த்தியின் what an wonderful world. தொடர்ந்து எழுதிப்பழகி வருவதன் திறன்கொண்ட சரளம் கைகூடிய கதை. ஓர் அறிமுக எழுத்தாளர் என்றோ தொடக்க நிலை எழுத்து என்றோ இதைச் சொல்ல முடியாது. தொகுப்பு வெளியிட்டு தமிழ் இலக்கிய எழுத்தின் பட்டியலுக்குள் அவர் இன்னும் வரவில்லை என்றாலும் எழுத்தாளர்களில் ஒருவராகவே அவரைக்காண வேண்டும். ஆரம்ப கட்ட எழுத்தின் சிக்கல்கள் எதுவுமே இந்தக் கதையில் இல்லை என்று சொல்லலாம்.

ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிவிட்ட முதிர்ந்த எழுத்தாளர் எடுத்துக் கொள்ளும் நுட்பமான சவால் ஒன்று உள்ள சிறுகதை இது. அதாவது இச்சிறுகதை ஆரம்ப கட்ட எழுத்தாளர் எழுதும் சிறுகதை போல ஒற்றை சரடு கொண்டது அல்ல. குறைந்தது மூன்று வெவ்வேறு கதைகள் இதில் உள்ளன. மூன்று கதைகளும் சொல்லப்படாமலேயே குறிப்புணர்த்தப்படுகின்றன. மூன்றும் திறமையுடன் பின்னி ஒற்றை கதையாக ஆக்கப்பட்டுள்ளன.

கதை சொல்லிக்கும் அவனுடைய மகனுக்குமான உறவு ஒரு கதை .மகன் ஒரு மேலை நாட்டுச் சூழலில் பிறந்து வளர்ந்தவன். அங்குள்ள சபை நாகரிகம் மேஜை நாகரிகம் ஆகியவற்றை இயல்பென ஏற்றவன். அங்குள்ள ஆடம்பரம் சமூக கௌரவம் போன்றவற்றை உணரத் தொடங்கிவிட்டவன். அதனூடாக தன் தந்தையிடம் இருந்து விலகிச்செல்லத் தொடங்கிவிட்டான். ஒரு கட்டத்தில் தந்தை பழமையானவராகவும் பொருத்தமற்றவராகவும் வேறு ஒரு உலகத்தைச் சார்ந்தவராகவும் அவனுக்குத் தோன்றத்தொடங்குகிறார்

இன்னொரு கதை, புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரின் வாழ்க்கை. பல்வேறு இடங்களில் முட்டி மோதி லண்டனுக்கு வந்து வசதியான வாழ்க்கை ஒன்றை அமைத்துக் கொண்டவர். அதை அவர் இலங்கையில் அடைந்திருக்க முடியாது அவரது ஜாகுவார் கார் இலங்கையில் பெரும் தொழிலதிபர்கள் வாங்கக்கூடியது. ஆனால் தான் பாதிக்கப்பட்டவர், இழப்பை ச்சந்தித்தவர் என்ற பாவனையை அவர் விரும்புகிறார். அதே சமயம் இலங்கை மேல் ஒரு ஆணித்தரமான விலக்கமும் இங்கிலாந்து மேல் மிகப்பெரிய மோகமும் கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் வாழ்க்கை பற்றிய நுட்பமான தகவல் தெரிந்து வைத்திருக்கிறார். எந்தப்பள்ளி மேன்மையானது, எந்தப்பள்ளி பழமையானது எந்தப்போட்டி முக்கியமானது என்றெல்லாம் அவருக்கு அத்துபடி

எப்படி இலங்கையில் இருந்து முற்றிலும் வெட்டிக் கொண்டு இங்கிலாந்தின் வாழ்க்கைக்குள் முழுமையாகத் தன்னை திணித்துக் கொள்வது என்று அவருக்குத் தெரியும். ஒரு தலைமுறைக்குள் தன் பிள்ளைகளைக் கொண்டு வந்து அந்த வாழ்க்கையின் உச்சியில் நிறுத்தவும் அவரால் முடியும். ஆனால் வேறு வழியில்லாமல் அங்கிருப்பதாக ஒரு மெல்லிய தன்னிரக்கத்தை அவர் நடிக்க வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டே 2009-ல் இலங்கையில் நடந்த இறுதிப்போரையும் அதன் அழிவுகளையும் தனது சொந்த துக்கம் போல் அவர் காட்டுகிறார்.

மூன்றாவது கதை இவ்விருவருக்கும் அனுமதியில்லாத அங்கிருக்கும் ஒரு வாழ்க்கை. ஒரு கண்ணாடித் தடுப்புக்கு இப்பால் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் அவர்கள் நுழைய முயன்றால் அந்தக்கண்ணாடித்தடுப்பு அவர்களைத்தடுத்து வெளியே நிறுத்தும்.அதை தெரிந்து கொள்ளலாம், ஈடுபடமுடியாது. தங்கள் அடுத்த தலைமுறை அதை வெல்வதை இப்பால் இருந்து பார்க்க முடியும். ஒவ்வொரு கணமும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த வாழ்க்கை அவர்களுக்கு இருக்கும் விமர்சனம் என்ன மதிப்புகள் என்ன என்பது கதையின் உச்சமாக அமைகிறது.

கரிய தோற்றமும், இலங்கை உச்சரிப்பு கொண்ட தமிழும், முற்றிலும் அந்நியமான ஒரு நிலத்திலிருந்து வந்த பழக்கவழக்கங்கள் கொண்ட இலங்கைத்தமிழருக்கு கறுப்பர்கள் ஏறத்தாழ குரங்குகள் என்று சொல்ல மனத்தடை இல்லை. அவர் அதனை ஏன் சொல்கிறார் என்பது கதைக்கு வெளியே சென்று யோசிக்கவேண்டியது. தன்னை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்வதற்காக சொல்லலாம். அவர்களில் ஒருவன் தான் என்று அவர்கள் எண்ணிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையாக இருக்கலாம். இலங்கையிலிருந்து லண்டனுக்கு வந்து அதன் அடித்தட்டில் தன்னை பொருத்திக் கொண்டமையால் தானிருந்த அடித்தட்டை விலக்கி மேலே செல்லும் யத்தனமாக இருக்கலாம். மேட்டிமை வாதத்தை வெளிப்படையாக முன்வைப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் ஆழ்ந்த சுய இரக்கம் ஒண்றையும் உள்ளே கொண்டிருப்பார்கள்.

இந்த மூன்று வெவ்வேறு கதைகளை மகனுடன் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று அங்கு நடக்கும் கோடை விழாவில் கலந்து கொள்வது என்ற ஒற்றை சம்பவம் வழியாக மிக இயல்பாக கடக்க சிவா கிருஷ்ணமூர்த்தியால் முடிந்திருக்கிறது. ஆகவே இது ஒரு முக்கியமான சிறுகதையாக அமைகிறது. இந்த மூன்று கதைகளுக்குள்ளும் ஒன்றுக்கொன்று கோடுகளை இழுத்துக் கொள்ள வாசகனுக்கு வாய்ப்பிருக்கிறது. செல்வேந்திரன் மிக இயல்பாக கறுப்பு நிறத்தவரைப்பற்றிச் சொல்வதை என்றேனும் ஒருநாள் கதை சொல்லியின் மகனும் தந்தையைப்பற்றி சொல்லக்கூடும். செல்வேந்திரனுக்கு மகனுக்கு அந்தக் களியாட்டத்தில் ஈடுபடுவதற்குரிய அடையாளமென்ன? அவன் தன்னை எப்படிக் கருதிக்கொள்கிறான்?

ஒரு பன்மைத்துவ சமூகத்தின் இக்கட்டுகளையும் சிக்கல்களையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சொல்ல சிவா கிருஷ்ணமூர்த்தியால் முடிந்திருக்கிறது. ஒரு கோடைக் கொண்டாட்டத்தில் வெள்ளையர்களின் பண்பாட்டு வெளிப்பாடுக்கு நிகராகவே கறுப்பின பாடலொன்று அதே முக்கியத்துவதுடன் அங்கு பாடப்படுகிறது. பல தலைமுறைகளுக்கு முன் அங்கு வந்தவர்கள் என்பதனாலேயே கறுப்பினர்கள் அந்தப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஒரு தலைமுறைக்கு முன் அங்கு சென்றதனாலேயே அந்தப்பண்பாட்டின் பகுதியாக ஆகாமல் இவர்கள் வெளியே நிற்கிறார்கள்.

தங்களது சொந்த ஊரை, ஆடைகள் களைந்திட்டு நீரில் குதிப்பது போல் அந்தப்பண்பாட்டில் குதிக்க அவர்களால் முடியவில்லை. அந்த தயக்கத்தையே இனவெறுப்பாக மாற்றி சொல்கிறார்கள். இன்னும் நுட்பமாக பார்த்தால் இலங்கைத்தமிழரான செல்வேந்திரன் இன்னொரு தமிழனாக கதை சொல்லியை அடையாளம் காண்கிறார். நம்மவர் என்ற வட்டத்தைப்போட்டுக் கொள்கிறார். ஆனால் அந்த வட்டத்துக்குள்ளே பிறர் என்று அவரை இந்தியத் தமிழனாக அடையாளம் காணவும் செய்கிறார்.இந்த ஒதுக்கம், வட்டம் போட்டுக்கொள்வது ஒரு தற்காப்பு உத்தி .தன்னிரக்கம் கொண்ட பாவனை செய்வது போலவே இந்த வளையத்தையும் அவர் பாவனை செய்கிறார்.

மிகச் சாதாரணமான நிகழ்வுகள் கொண்ட ஒரு கதையை தொடும் ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள ஒரு வாழ்க்கையின் நுணுக்கம் எழுந்து வருவது என்பது இலக்கியத்தின் வெற்றி என்றே சொல்லத்தோன்றுகிறது.

இக்கதையின் குறைபாடுகள் என்று சொல்லத்தக்கவை மிகச்சிலவே முக்கியமானது கதையின் முதல்சில பத்திகள் ஒரு பொய்யான தொடக்கத்தை வாசகர்களுக்கு அளிக்கலாம் என்பது. சைக்கிளில் மகனுடன் பள்ளி நடக்கும் கோடை விழாவுக்குப்போகும் தந்தை என்பது தந்தைக்கும் மகனுக்குமான உறவைப்பற்றிச் பேசி முடிவடைக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதற்கேற்ப மகனின் குணச்சித்திரமும் தந்தைக்கும் மேல் அவன் கொண்டிருக்கும் விலக்கமும் சுட்டப்படுகிறது. அதன் பின்னரே செல்வேந்திரன் வருகிறார். கதை உச்சம் அவரில்தான்

இது தடுக்கச் சாத்தியமான ஒரு சிறிய இடர் மட்டுமே. கதைத்தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் தந்தைக்கும் மகனுக்குமான உரையாடலிலேயே, அவர்களுக்கான இடைவெளியை சொல்லும்போதே, அதற்குள் செல்வேந்திரன் ஒரு பேசுபொருளாக இருக்கும்படி அமைத்துக் கொண்டால் போதும். கதை தொடக்க வரி செல்வேந்திரனை குறித்ததாக இருந்திருந்தால் போதும்

இப்போது இருக்கும் வடிவில் இருந்து இக்கதை இன்னொரு மெல்லிய உயரத்தை எப்படி அடையலாம் என்றால் உரையாடல்களை அதை இப்போதிருக்கும் மிகச் சரளமான அன்றாடத்தளத்திலிருந்து சற்று விலக்கி கொஞ்சம் நகைச்சுவை கலந்ததாக அமைத்திருந்தால். உரையாடல் முழுக்க மெல்லிய புன்னகை ஒன்று ஊடாடியிருந்தால் இக்கதை தமிழின் முதன்மையான கதைகளில் ஒன்றாக ஆகியிருக்கும்.

ஐயமின்றி சிவா கிருஷ்ணமூர்த்தியை தமிழில் தொடர்ந்து எழுத வேண்டிய முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக இக்கதை எனக்கு அடையாளம் காட்டுகிறது.

 

 

=========================================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

 

=================================================================================

 

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

 

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஊடகமாயை

$
0
0

ஜெ

மீடியா செய்திகளை வெளியிடவில்லை, உருவாக்குகிறது. மக்களின் இன்னல்களை அது சொல்லவில்லை, மாறாக அவற்றைக் கூட்டிக்காட்டி வதந்திபரப்பி மேலும் இன்னல்களை உருவாக்குகிறது

இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது மீடியாவுக்கும் அரசுக்குமானபோர். கறுப்புப்பணத்தின் கைத்தடியாக இருக்கிறது மீடியா

இது டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி. வரிசையில் நின்ற ஒருவரிடம் போட்டோ எடுத்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள். நேர் எதிராகச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்

11

இவர்கள் ஏடிஎம் கூட்டம் என் வெளியிடும் பெரும்பாலான செய்திகள் பொய். இருப்பதிலேயே கூட்டமான ஏடிஎம்களை படமெடுத்து வெளியிட்டனர். அந்த பதற்றத்தில் மக்கள் மேலும் குவிந்தனர். கூட்டம் குறைந்தபின்னரும் பழைய படங்களையே வெளியிடுகின்றார்கள்

இவர்களின் நோக்கம்தான் என்ன?

 

சந்தோஷ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34

$
0
0

55 ]

விண்ணொளியால் ஆன ஜலதம், கொந்தளிப்புகளால் ஆன தரங்கம், கொப்பளிக்கும் அலைகளால் ஆன கல்லோலம், நீலநீர் ஊசலாடும் உத்கலிகம், சிலிர்த்து விதிர்க்கும் குளிர்ப்பரப்பாலான ஆர்ணவம் ஆகிய ஐந்து ஆழங்களை அர்ஜுனன் கடந்துசென்றான். ஆறாவது ஆழமான ஊர்மிகத்தில் மூழ்கிய பெருங்கலங்கள் அன்னைமடியில் துயிலும் மதலைகள் என மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. ஏழாவது ஆழமான தரளம் கரிய நீர்க்குமிழி ஒன்றின் பரப்பு போல மாபெரும் விழியொன்றின் வளைவு போல மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது.

நீருக்குள் அவனை ஆழ்ந்து மேலும் ஆழ்ந்து அழைத்துச்சென்றனர் நாகர்கள். ஆழத்தை அறியும்தோறும் அவன் உடல் எடைகொண்டபடியே சென்றது.  எடைமிகும்தோறும் இறுகி சுருங்கி ஒளிகொண்டது. பாதரசம்போல ஆயிற்று அவன் குருதி. ரசம் உறைந்து ஒளிரும் உலோகமென உடல்கொண்டான். அவன் நகங்கள் மீன்விழிகளென்றாயின. அவன் உள்ளம் உடலுக்குள் செறிந்து ஒளிகொண்டு பிறிதொரு விழி என ஆகியது.

தரளத்தின் மென்பரப்பை மெல்ல கைகளால் தொட்டுத் திறந்து அவனை உள்ளே அனுப்பினர். அவனுக்குப்பின்னால் ஒளிக்குமிழி வாயில் மூடியது. அப்பால் அவன் வருணனின் மாளிகையை கண்டான். நோக்கு நிலைக்க  நெஞ்சழிந்து நெடுநேரம் அப்படியே மிதந்துகொண்டிருந்தபின் அதைநோக்கி சென்றான்.

முற்றிலும் நீராலானது. அதன் நூற்றெட்டு அடுக்குகளும் ஆயிரத்தெட்டு உப்பரிகைகளும் பத்தாயிரத்தெட்டு சாளரங்களும் செழித்து கிளையும் இலையும் விரித்து குமிழிகளையும் மலர்களையும் சூடி நின்றிருக்கும் நீர்ச்செடிக்குவை என நின்று நெளிந்துகொண்டிருந்தன. மிதந்து அணுகிய அர்ஜுனனை ஏழு வாருணீகர் வந்து எதிர்கொண்டு அழைத்துச்சென்றனர்.

வாருணீகர் நெளியும் நீருடலும் நீல விழிகளும் கொண்டிருந்தனர். அவர்களின் சிறகுகள் நீரலைகள்போல நீருக்குள் மிதந்து பறந்தலைந்தன.  பெருமாளிகையின் முதல்வாயிலை அவர்கள் சுட்டுவிரலால் தொட்டதும் நீர்க்குமிழிப்படலமென வண்ணச்சித்திரம் காட்டி நின்றிருந்த அது உடைந்து திறந்து அவர்களை உள்ளே விட்டது. பின்பக்கம் மீண்டும் அது குமிழியென மூடிக்கொண்டது.

அவனைநோக்கி சிரித்த வாருணீகன் “இவையனைத்தும் குமிழிகளே” என்றான். “நீர்க்குமிழிகளே நீருக்குள் கடினமானவை” என்றான் இன்னொருவன். அவன் கைகளைப்பற்றி அணுகிய  இன்னொரு வாருணீகன் “இந்த மாளிகையே நீர்க்குமிழிகளாலான நுரை” என்றான். “நீங்கள் நோக்குவது நுரையின் ஒருபகுதியை. பதினெட்டுலட்சம் குமிழிகள் கொண்டது இந்நுரைப்படலம்” என்றான் ஒருவன். “குமிழிகள் அனைத்திலும் ஒரேதருணத்தில் தோன்ற இயன்றவர் என் தலைவர்” என்றான் பிறிதொருவன்.

“வருக!” என அவனை அழைத்துச்சென்றனர். நீர்க்குமிழியின் உட்பக்கமென சுவர்களில் வண்ணச்சித்திரங்கள் இழுபட்டும் சுருண்டும் அசைந்த அறைக்குள் சென்றதும் அவனை மூன்று மைந்தர் எதிர்கொண்டழைத்தனர். “வருக, இளையபாண்டவரே! நான் மேற்றிசைத்தலைவரின் மைந்தனான சுஷேணன். இவர்கள் என் இளையோரான வந்தியும் வசிஷ்டனும். உங்களை எதிர்கொண்டழைக்கும்படி அரசரின் ஆணை” என்றான் மூத்தவன். “வாருணர்களை வணங்குகிறேன்” என்றான் அர்ஜுனன்.

“நாங்கள் எங்கள் தந்தைக்கு அமைச்சர்களாகவும் இங்கு அமைந்துள்ளோம்” என்றான் சுஷேணன். “நீங்கள் இங்கு வந்தது ஏன் என நாங்கள் அறியலாமா?” என்றான் வந்தி. “நான் வருணனை வென்று செல்ல வந்துள்ளேன். திசைத்தெய்வங்களை வெல்லாமல் திசைமையத்தில் அமர இயலாதென்று உணர்ந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன். “இளவரசே, நீங்கள் வென்று கடக்க விழையும் வருணன் யார்?” என்றான் சுஷேணன். “ஏனென்றால் இங்கு மூன்று வருணர்கள் உள்ளனர்.”

அர்ஜுனன் திகைப்புடன் நோக்க வசிஷ்டன் புன்னகையுடன் சொன்னான் “இளவரசே, காசிய பிரஜாபதிக்கு அதிதியில் பிறந்த பன்னிரு மைந்தர்களில் ஒருவர்  முதல் வருணன். தாதா, ஆரியமான், மித்ரன், சுக்ரன், அம்சன், பகன், விவஸ்வான், பூஷா, சவிதா, துவஷ்டா, விஷ்ணு ஆகியோருடன் வருணனும் விண்ணில் ஒரு மீன் என பிறந்தார். ஒளியுடன் பெருவெளியில் திகழ்ந்தார். திசைகளை பிரம்மன் படைத்தபோது மேற்குக்கு அவரை தலைவனாக்கினார். பின் ஏழு கடல்களை பிறப்பித்தபோது அவற்றின் முடிவிலா அலைகளை ஆள்பவராக ஆக்கினார். நான் ஆதித்யனாகிய வருணனின் மைந்தன்.”

“நான்  தொல்லரசனாகிய வருணனின் மகன்” என்றான் வந்தி. “புலக பிரஜாபதிக்கு க்‌ஷமை என்னும் மனைவியில் பிறந்தவர் கர்த்தம பிரஜாபதி. பொறுமையின் மைந்தர். உர்வரியான் ஸஹிஷ்ணை என்னும் உடன்பிறந்தார் கொண்டவர். வளத்தான் இடமும் பொறுத்தாள் வலமும் நிற்க பெருந்தவம் செய்து பிரஜாபதி என்றானவர்.”

தவம் செய்கையில் புகைஎழக்கண்டு நெருப்பென எண்ணி விழிதிறந்தார்.  தொலைவில் ஒரு புகை எழக்கண்டார். அதன் சுருள்களை ஒரு மங்கையின் கூந்தல் என அவர் உள்ளம் எண்ணியது. அக்காமம் அவளை உருக்கொள்ளச் செய்தது. இடைதிரண்டு முலை முகிழ்த்து முகம்கொண்டு அவள் எழுந்தாள். அவளை அவர் தூம்ரை என்றழைத்தார், அவளைக்கூடி அவர் ஒரு மைந்தனைப் பெற்றார்.

தூயவனாகிய அவனை அவர் சுசித்மான் என அழைத்தார். ஒளி ஊடுருவும் உடல்கொண்டிருந்தான் அம்மைந்தன். கங்கைக்கரையில் அவன் இளையோருடன் நீராடச்சென்றபோது அலைகளில் மூழ்கி மறைந்தான். உடன்சென்றோர் அஞ்சி ஓடிவந்து கர்த்தமரிடம் அச்செய்தியை சொன்னார்கள். அவர் அப்போது வேள்வியில் இருந்தார். எடுத்த நெய்க்கரண்டியை வானில் நிறுத்தி, “இக்கணமே என் மைந்தன் திரும்பி வரட்டும்” என ஆணையிட்டார்.

கங்கைவழியாக கடலுக்குச் சென்றுவிட்டிருந்தான் சுசித்மான். கர்த்தமரின் ஆணையை தேவர்கள் கடலரசனிடம் வந்து சொன்னார்கள். “பிரஜாபதியின் ஆணை. அவரால் சொல்லப்பட்ட வேதச்சொல் முழுமையடையவில்லை. அது முழுமையடையும்வரை இப்புவியில் எதுவும் பிறக்கமுடியாது” என்றனர். ஆழிவேந்தன் அம்மைந்தனை இரு கைகளாலும் அள்ளி எடுத்தான். தான் ஒரு முதலை என உருக்கொண்டு தன்மேல் அவனை ஏற்றி கங்கைவழியாக நீந்தி கர்த்தமரின் வேள்விச்சாலையை வந்தடைந்தான்.

நீர்மணிமாலைகளையும் பவள ஆரங்களையும் மைந்தன் அணிந்திருந்தான். சங்குகளால் வளையலும் அருமணிகள் பதிக்கப்பட்ட முடியும் கொண்டிருந்தான். மைந்தனை அள்ளி அணைத்த கர்த்தமர் அவனை வரமென வந்தவன் என்னும் பொருளில் வருணன் என்றழைத்தார். கடல்களை அவன் ஆளவேண்டுமென ஆணையிட்டார். அந்த ஆணையின்படி ஏழ்கடல்களின் அரசனென ஆனான் வருணன்.

இளமைந்தனாகிய வருணன் முதிர்ந்து முடிசூடி பாரதவர்ஷத்தின் மேற்குத்திசையை முழுதாண்டான். மேற்குக்கடல்களின் அலைகள் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டன. அவன் கையசைத்த  திசைகளில் கடற்காற்றுக்கள் வீசின. அவன் ஆணைப்படி பல்லாயிரம் நாவாய்கள் கடல்களின் மேல் ஏறி அயல்நிலங்களை சென்றடைந்தன. கடற்பறவைகள் போல துறைநகரங்களில் அவன் கலங்கள் சென்றணைந்து பாய்விரித்து மீண்டன. தனித்த நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அயல்மகரந்தங்களுடன் வந்தன அந்தக்கலங்கள். ஒவ்வொரு குலத்துக்கும் பிறகுலத்திலிருந்து குருதியுடன் விந்தைப்பொருட்களுடன் புத்தறிதல்களுடன் அவை சென்று சேர்ந்தன.

அவனை கடல்களின் அரசன் என்று சூதர் பாடினர். மொழிகளை ஆள்பவன் விழியெட்டா நெடுந்தொலைவுகளை சுருட்டி கையிலொரு பாசக்கயிறெனச் சூடியவன். காற்றுகளை அறிந்தவன். நீர்வெளியில் இருந்து மழைகொண்டு மண்மீது பரவும் பருவக்காற்றுகளின் தேவன். வான்மழைகளை வகுப்பவன். நாற்பருவங்களை நிலைநிறுத்துபவன். அவனுக்கு கடல்முகங்கள் தோறும் ஆலயங்கள் அமைத்தனர். அங்கே அவன் செதிலெழுந்த முதலைமேல் அமர்ந்து பலிகளை பெற்றுக்கொண்டான். அவனுக்கு அளிக்கப்படும் அவி காரென வரும் இந்திரனுக்கும் நாளென வரும் கதிரவனுக்கும் சுவையென வரும் சோமனுக்கும் நோயென்றும் மருந்தென்றும் வரும் அஸ்வினிதேவர்களுக்கும் செல்கின்றது என்று கொண்டனர்.

“அவனே எந்தை” என்றான்  வந்தி. அர்ஜுனன் “ஆம். அறிந்துள்ளேன்” என்றான்.  அவனை நோக்கி புன்னகைத்த சுஷேணன் “எந்தை பிறிதொரு வருணன். இங்கு முன்புவாழ்ந்த அசுரகுடித்தலைவர்” என்றான். அவர்கள் பெரும்பாலையில் இருந்த ஏழு ஊற்றுக்களை நம்பி தொல்பழங்காலம் முதல் வாழ்ந்தவர்கள். வானிலிருந்து வந்தணையும் பறவைகளும் மண்ணுள் ஒளிந்து வாழும் சிற்றுயிர்களும் முள்மரங்களின் கனிகளுமே அவர்களின் உணவாக இருந்தன. கள்ளிச்செடியென இலையிலும் கிளையிலும் வேரிலும் முளையெழுவது, வெறுநிலத்திலும் அழியாமலிருப்பது அக்குலம்.”

ஆனால் ஏழு ஊற்றுக்களும் மெல்ல வற்றலாயின. அக்குடிகள் கிடைக்கும் நீரை பகிர்ந்துகொண்டு அங்கேயே வாழ்ந்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்தது வெண்ணிற அனலால் ஆன மணல்வெளி. அது அப்பால் செல்ல ஒப்பாத தெய்வங்களின் கோட்டை என அவர்கள் எண்ணினர். ஒருநாள் அவர்களின் குடித்தலைவர் மண்மறைந்தார். தன் ஒரேமைந்தனிடம் உன் குருதி இது, உன்னவர் என்று சொல்லி கைகாட்டிவிட்டு கண்மூடினார். இளமைந்தன் குடித்தலைமை கொண்டான்.

கடக்கமுடியாதவை என்னவென்று தன் தந்தையிடமிருந்து அவன் தந்தை கற்றிருந்தார். அவற்றை கடக்கலாம்போலும் என்னும் எண்ணத்தை அவன் தன் குருதியின் ஆழத்திலிருந்து அடைந்தான். தன்குடிகளை அழைத்தபடி எரிமணல்வேலியை கடந்து சென்றான். சினம்கொண்ட தெய்வங்கள் அவன்மேல் அனல்சொரிந்தன. எரிவளியெனச் சூழ்ந்து கொப்பளித்தன.  உறுமி எச்சரித்தது வானம்.

அஞ்சாது தன்னை எதிர்த்து நிற்பவனை தெய்வங்கள் விரும்புகின்றன. குளிர்ந்த காற்று வந்து அவர்களை மூடியது. பாலையின் சிறகென மணல் எழுந்து வானைமூடி வெயிலை அணைத்தது. வானிலிருந்து மீன் என உணவு பொழியலாயிற்று. அதை உண்டபடி அவர்கள் அலையற்ற கரிய கடலொன்றை வந்தடைந்தனர். உப்புக்களால் வேலியிட்டு காக்கப்பட்டது அக்கடல். இனிய ஊற்றுக்களால் சூழப்பட்டிருந்தது. அக்கடலில் இருந்து கைகளாலேயே மீன்களை பிடிக்கமுடிந்தது. அம்மீன்களைக் கொள்ளவரும் பறவைகளை கண்ணி எறிந்து கொள்ளமுடிந்தது. அக்கடலோரம் அவன் தன் குடிகளை தங்கும்படி செய்தான்.

அவன் குடி அங்கே பெருகியது. நெடுந்தொலை கிழக்கின் ஒதுங்கிய துறைநகர்களுக்கு அவர்கள் முதலைவடிவ நாவாய்களில் ஏறிச் சென்றனர். உப்பின் உடைமையாளர்கள் என்பதனால் அவர்கள் லவணர் என அழைக்கப்பட்டனர். அவர்களின் உப்புத்தூண்கள் மலைச்சிற்றூர்கள் வரை சென்றன. கடல்கடைந்து இனிய வெண்ணையை எடுப்பவர்கள் அவர்கள் என்று கொள்ளப்பட்டனர். கடலுக்குத் தலைவர்களான அவர்களின் தலைவனை சிற்றூர்கள் தோறும் தெய்வமென நிறுவி வழிபடலாயினர். கடல்களை ஆள்பவனாகிய அவனே மழைகளை நிலைநிறுத்துபவன் என்று தொல்கதைகள் சொல்லின.

அவர்களின் ஆயிரத்தெட்டு தொல்லூர்கள் அலையற்ற கரியகடலைச்சூழ்ந்தே அமைந்திருந்தன. அவர்களின் கிளைக்குடிகள் தொலைவிலிருந்த பெருங்கடல் துறைகளில் குடியேறியிருந்தாலும் மூத்தாரும் முதலோரும் அலையிலாக்கடல் அருகிலேயே வாழ்ந்தனர். எவரையும் உள்ளே செல்ல ஒப்பாத அதன் அடித்தட்டு தெய்வங்கள் வாழும் ஆழம் என அவர்கள் அறிந்தனர். இறந்தவர்களை அக்கடலுக்குள் செலுத்தி ஆண்டுதோறும் பலிகொடுத்து வணங்கினர்.

“பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் அக்கடலில் மீன்கள் இறந்து மறையலாயின. மீன் என விளங்கிய விழிகளை மூடி கடல் துயில்கொள்கிறது என்றனர் அவர்களின் பூசகர். அவர்கள் தங்கள் ஊர்களை கைவிட்டுவிட்டு தொலைவிலிருந்த பெருங்கடல்துறைகளை நோக்கி சென்றனர். அங்கிருந்து கிழக்கும் மேற்குமாக விரிந்து சென்றுகொண்டே இருந்தனர். அலையிலாக்கடல் அவர்களின் மொழியிலும் கனவிலும் மட்டும் எஞ்சியது.” என்றான் சுஷேணன். “இளையபாண்டவரே, தாங்கள் இறங்கி வந்துள்ளது அம்மக்களின் தெய்வங்களும் முன்னோர்களும் வாழும் ஆழத்திற்கு என்றறிக! அவர்களின் முதற்றாதையாகிய வருணனின் மைந்தன் நான்.”

“இம்மூன்று தெய்வங்களும் இந்நீராழத்திற்குள் கோல்கொண்டுள்ளன” என்றான் சுஷேணன். “இவர்களில் நீங்கள் சென்று கண்டு வெல்ல விழைவது எவரை?” அர்ஜுனன் “கசியபரின் மைந்தரை வேதத்தால் வெல்ல விழைகிறேன். கர்த்தமரின் மைந்தரை என் குருதியால் கடக்க விழைகிறேன்.  இளவரசர்களே, தொல்குடி அசுரர் தலைவரை என் தோள்கொண்டு எதிர்க்க எண்ணுகிறேன். மூவரையும் கடந்து எனக்கென எழும் நாலாமவரிடமிருந்து எனக்குரிய மெய்மையை நான் பெற்றாகவேண்டும்” என்றான்.

புன்னகைத்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் சுஷேணன். “வேதமொன்றே தெய்வங்களை வெல்வதென்று அறிந்திருப்பீர்கள். மூவருக்கும் உரிய வேதங்களை கற்று தெளிவுற்றிருப்பீர் என எண்ணுகிறேன். உங்களுக்குரிய வழிகள் திறப்பதாக!” வந்தி “செல்வதற்குரிய வேதத்துடன் மீள்வதற்குரிய வேதமும் உங்களுடனிருக்கட்டும்” என்றான். வசிஷ்டன் “வேதமென்றானது  துணைவருக!” என்று வாழ்த்தினான்.

[ 56 ]

வருணனின் மாளிகையின் முதற்கதவைத் திறந்ததும் அங்கு நின்றிருந்த கடைவாருணனாகிய புஷ்கரன் வணங்கி “வருக, இளையவரே! நான் வாருணனாகிய புஷ்கரன். உங்களை எந்தையர் மூவரிடமும் அழைத்துச்செல்ல வந்துள்ளேன்” என்றான். வணங்கி “நன்று” என்றான் அர்ஜுனன். “அளவிலா அருளும் எல்லையில்லா முனிவும் கொண்டவர் அவர் என அறிந்திருப்பீர்” என்றான் புஷ்கரன். அர்ஜுனன் “ஆம், இரண்டையும் பெரும்பாலைகளில் அறிந்தேன்” என்றான்.

முதல் வாயிலை அடைந்ததும் புஷ்கரன் “இது என் எல்லை, இனி உங்கள் பயணம்” என்றான். அர்ஜுனன் தலைவணங்கி முன்னால் சென்றான். நீர்க்குமிழி வாயிலின் அருகே இரு வாருணீகர் தோன்றினர். பொன்னிறமான கொம்புகள் எழுந்த வரையாட்டின் தலைகொண்டிருந்தனர். “வருக!” என்று வணங்கி உள்ளே அழைத்துச் சென்றனர். “வருணனை வாழ்த்தும் முதல் வேதச் சொல்லை ஓதுக, வீரரே! அதுவே இங்குள்ள முறை” என்றான் ஒரு வாருணன். “அது அவருக்குரிய வரியாக இருந்தாகவேண்டும். இல்லை என்றால் நீங்கள் மீள இயலாது என்று அறிக!”

அவர்கள் ஒரு குமிழிக்கதவைத் திறந்து அவனை உள்ளே கொண்டுசென்றார்கள். அலைகொண்டு மெல்ல ஆடிநின்ற நீர்வெளிக்குள் இறங்கி ஈர்த்து இழுத்து எடுத்துக்கொண்ட அடியிலி ஒன்றை நோக்கி அவன் ஆழ்ந்து சென்றான். நீலநிறமான இருளுக்குள் ஒளியும் நாகங்களும் நெளிந்தாடின. விழிகளென மட்டுமே தோற்றம் காட்டிய மீன்கள் உருக்கொண்டு எழுந்து அணுகி விலகி உருகி மறைந்தன.

அர்ஜுனன் உள்ளே நுழைந்த நீர்க்குமிழியறை வெண்ணிற ஒளிகொண்டிருந்தது. அவ்வவையில் உதத்யரும் கஸ்யபரும் உள்ளிட்ட முனிவர்கள் அமர்ந்திருந்தனர். “அறம் ஓம்பி அமைந்த முனிவர் அனைவரின் மெய்யுடல்களும் இங்குள்ளன. அவர்கள் எங்கிருந்தாலும் இங்கும் இருப்பார்கள்” என்றான் வாருணீகன். அர்ஜுனன் விஸ்வாமித்திரரை வசிட்டரை பிருகுவை கௌதமரை அங்கே கண்டான். நோக்க நோக்க அச்சபை விரிந்தபடியே சென்றது.

அவைமேடையில் நீர்க்குமிழியாலான வெண்ணிற அரியணையில் பொன்னிற உடலுடன் வருணன் தன் துணைவி கௌரியுடன் அமர்ந்திருந்தான். அவன் வலக்கையருகே பாசக்கயிறு அமைந்திருந்தது. அர்ஜுனன் உள்ளே நுழைந்ததும் தலைவணங்கி “நீரின் தலைவனை, பெருங்கடல்களை ஆள்பவனை, மழையென காப்பவனை, நெறிகளில் கட்டுண்டவனை வணங்குகிறேன்” என்றான்.

வருணனின் விழிகள் சுருங்கின. “நான் எங்கு கட்டுண்டவன்?” என்றான். “அரசே, பெருங்கடல்கள் பல்லாயிரம்கோடிமுறை எழுந்தமைந்தாலும் கரைமீறுவதில்லை. அவற்றைக் கட்டியிருக்கும் நெறியே கரையை ஆள்கிறது.  அது உம் கையிலிருக்கும் அக்கயிறு. ஆனால் நீங்கள் மானுடர் இயற்றும் நான்கு அறங்களால் கட்டப்பட்டவர். வேள்வியும் அறமும்  கொடையும் புரத்தலும் வாழும் மண்ணில் நீங்கள் பெய்திறங்கியாகவேண்டும்” என்றான்.

“ஆம்” என்று வருணன் சொன்னான். “என்னை வென்று மீள நீ வந்திருப்பதாக அறிந்தேன்.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “யமனிடம் தண்டகை என்னும் படைக்கலத்தையும் குபேரனிடம் அந்தர்த்தானை என்னும் ஆவத்தையும் பெற்று மீண்டேன். உங்களிடமிருந்து வெல்லற்கரிய அம்பொன்றை பெறவிழைகிறேன்.” வருணன் “என்னை வென்று அதைக் கொள்க!” என்றான் வருணன். “வேதச்சொல்லால் உங்களை வெல்லலாம் என்பது நெறி. அரசே, உங்கள் செவியறிந்த முதல்வேதச்சொல்லையே படைக்கலமாகக் கொண்டுள்ளேன்” என்றான்.

வருணன் முகம்கூர்ந்தான். அர்ஜுனன் உரத்தகுரலில் சந்தம் கூட சொல்கூர்மை திகழ ரிக்வேதச் செய்யுளைப் பாடினான்:

“வருணனே,  இறைவடிவோனே உன்னை வணங்குகிறேன்

நாங்கள் எளிய மானுடர்

நாள்தோறும் உன் நெறிகளை மீறிக்கொண்டிருக்கிறோம்

எங்களை இறப்புக்கு இரையாக்காது அருள்க!

ஒவ்வாதன கண்டு நீ கொள்ளும் பெருஞ்சினத்தால்

எங்களை அழிக்கலாகாது எந்தையே.

உன் அளிதேடி இதோ வந்துள்ளோம்.

உன் நெஞ்சத்தை வேதச்சொல்லால் கட்டுகிறோம்

கடிவாளமிட்ட புரவிகளால் தேரை என”

வருணனின் முகம் மலர்ந்தது. “ஆம், இவ்வேதச்சொல்லையே நான் எந்தை பிரம்மனிடமிருந்து ஏழுகடல்களின் உரிமையைப்பெற்றபோது என்னை வாழ்த்தி முனிவர்கள் பாடினர்.” அர்ஜுனன் “ஆம், இதுவே தொன்மையானது” என்றான். “நன்று. நீ என்னை வென்றாய். ஆனால் என் முகங்கள் மூன்று. அவற்றையும் வென்று மீள்க!” என்றான் வருணன்.

மூன்று அஜமுக வாருணீகர்களுடன் அர்ஜுனன் சென்றான். நீர்க்குமிழி வாயிலைத் திறந்து அவனை மேலும் ஆழத்திற்கு செலுத்தினர் அவர்கள்.  நீர்த்துளிகள் ஒவ்வொன்றும் நூறாயிரம் மடங்கு எடைகொண்டிருந்த கர்த்தம் அணுவடிவ உயிர்கள் மட்டுமே கொண்ட ககனம்  ஒவ்வொன்றும் உடலழிந்து சாரம் மட்டுமென்றே ஆகியிருந்த நிம்னம் அலைகளே அற்ற தாரம் நீர்செறிந்து பாறையென்றான குப்தம் பாறைசெறிந்து வைரமென்றான காகம் செறிவே ஒளியென்றான நிவதம் என்னும் ஏழு ஆழங்களைக் கடந்து இறங்கிச்சென்றான்.

அங்கே ஒளிக்குமிழி எனத்தெரிந்த ஆழ்வருணனின் மாளிகையை அணுகினான். அங்கிருந்த வாருணீகர் வெள்ளியாலான கலைமான் கொம்புகளும் குளம்புகளும் கொண்டிருந்தனர். “வருக, இளவரசே!” என அவர்கள் அவனை வரவேற்றனர். “ஆழங்களின் வருணரின் அவைக்கு வருக!” என அழைத்துச்சென்றனர்.

அவன் அவர்களுடன் மூத்த வருணனின் அரசவைக்குள் நுழைந்தான். “இவர்  நீர்களின் தலைவராகிய வருணனின் பிறிதொரு வடிவம் அல்லவா?’ என்றான் அர்ஜுனன். “அல்ல, இவர் வருணரின் தந்தை” என்றான் முதல் வாருணீகன். “தந்தையின் நாவிலிருந்து மைந்தர் முளைத்தெழுந்தார். அவரது சொல்லே மைந்தர்” என்றான் இரண்டாவது வாருணீகன். “தந்தை முடிவிலாத கைகளால் ஆனவர். செயல்வடிவர். அவரை வெல்வது எது என்றறிக!” என்றான் மூன்றாமவன்.

செந்நிறமான பெருங்குமிழிக்குள் அமைந்திருந்தது  முந்தைவருணனின் அவைக்கூடம். அங்கே அமர்ந்திருந்த அரசர்கள் அனைவரையும் அர்ஜுனன் கண்டான். பரதன், உபரிசிரவஸு, சிபி, தசரதன், ராமன், யயாதி, குரு, வாலி, மாவலி என அவனறிந்த முகங்கள். அரசர்களின் முகங்களாக முளைத்து மண்ணில்பெருகியிருந்தவை. “இது துலாமுள் ஆடாது மண்புரந்து மழைநிகழ்த்திய மாமன்னர்களின் அவை” என்றான் வாருணீகன்.

அர்ஜுனன் அவர்களை உடல் பணிந்து வணங்கினான். மேலே பெரிய செங்குருதித்துளி என ஒளி கொண்டிருந்த அரியணைமேல் நீண்ட வெண்தாடியுடன், தோளில் புரண்ட வெண்குழல்கற்றைகளுடன் அமர்ந்திருந்த முதிய வருணனை நோக்கி திரும்பி “நெறிகளின் தேவனே, உமக்கே அடைக்கலம்”  என மண் தொடக்குனிந்து வணங்கினான். அவனருகே முதிய வருணானி அமர்ந்திருந்தாள். “அறத்தானின் அறத்துணைவி எனக்கு அன்னையெனக் கனிக!” என்றான்.

செந்நிறத் தலைப்பாகையும் செம்மணிக்குண்டலங்களும் அணிந்திருந்த அமைச்சர் எழுந்து “இளவரசே, முதுவருணரின் அவைக்கு வருக! அரசரை வென்று சொல்கொண்டு மீள விழைகிறீர்கள் என்றறிந்தோம். அரசரை வாழ்த்தும் முதல் தொல்வேதச் சொல்லை சொல்க! அதுவே ஆம் என்றால் அவர் அருள் கொண்டு மீளலாம்” என்றார்.

முதியவருணனின் குரல் அலையோசைகளின் முழக்கம் கொண்டிருந்தது. “இளையோனே, அச்சொற்கள் என் முழுமையை ஒரு துளியேனும் எஞ்சாமல் அள்ளி தன்னுள் நிரப்பியவை. அச்சொற்கள் அன்றி பிற எதைச் சொன்னாலும் நீ இங்கு சிறையிடப்படுவாய் என்று அறிக!”

அவருடைய கைகள் பெருகுவதை அவன் கண்டான். ஓரிரு கணங்களில் கடலலைப்பெருக்கென பல்லாயிரங்களென கைகள் விரிய அவர் பேருருத்தோற்றம் கொண்டார். அவன் அவரை நோக்கியபடி “ஆம், ஆணை” என்றபின் முந்தைய அவையில் பாடிய அவ்வேதவரிகளையே மீண்டும் பாடினான். “உன் நெஞ்சத்தை வேதச்சொல்லால் கட்டுகிறோம், கடிவாளமிட்ட புரவிகளால் தேரை என” என்று மும்முறை ஓதிமுடித்தான்.

முதியவருணனின் கண்கள் கனிந்தன. புன்னகையுடன் திரும்பி “ஆம், நான் முதலைவடிவ கடரசன் மேலேறி கரையணைந்தபோது எந்தை கர்த்தமர் இச்சொற்களைப் பாடியபடி கைநீட்டி என்னை அணைந்தார். என்னைத்தூக்கி தன் தலைமேல் வைத்துக்கொண்டு இவனே அவன் இவனே ஆம் என்று கூவினார். அன்று நான் இக்கடல்கள் அனைத்தையும் அரசெனக் கொண்டேன்” என்றார்.

“நன்று, உனக்கென கனிவுகொண்டேன். இளையோனே, எங்களுக்கெல்லாம் பெருந்தந்தை ஆழங்களின் அடியில் இன்னொரு அவையில் கொலுவமர்ந்திருக்கிறார். அங்கு சென்று அவர் சொல்லையும் வென்றுவருக!” என்றார் வருணன். “அவ்வாறே” என வணங்கி அவன் மூன்று  மான்கொம்பு வாருணீகர்களுடன் சென்றான்.

அவர்கள் அவனை அழைத்துச்செல்கையில் ஒருவன் “அங்கிருப்பவர் ஒவ்வொரு மூச்சிலும் நுரைக்குமிழிகள் என வருணர்களை முடிவிலாது பிறப்பிக்கும் மூதாதை என்று அறிந்துள்ளோம். எவரும் அவரைக் கண்டதில்லை” என்றான். பிறிதொருவன் “பெருங்கடல்களை தன் பிடரிமயிர் சிலிர்ப்பின் நீர்த்துளிகளெனச் சூடியவர். புயற்காற்றுகளை இமையசைவாகக் கொண்டவர்” என்றான். “சொல்லப்படும் அனைத்துச் சொற்களுக்கும் அப்பாற்பட்டவர். அனைத்து எண்ணங்களுக்கும் அடியிலிருப்பவர். அனைத்துக் கனவுகளாலும் ஆனவர்.”

நீர்ப்படல வாயிலைத் திறந்து அவனை அப்பால் செறிந்திருந்த இருளுக்குள் செலுத்தினார்கள். விழிகள் அழியும் திமிரம், உடலும் நோக்கழியும் அந்தகம், எண்ணம் நோக்கழியும்  சாரதம், உருவங்களேதும்  எஞ்சாத சியாமம், எண்ணங்களே மிஞ்சாத தமம், இருள் ஒளிகொள்ளத்தொடங்கும் அசிதம், இருளே ஒளியென்றான கிருஷ்ணம் என்னும் ஏழு ஆழங்களைக் கடந்து அவன் முதல்வருணனின் மாளிகையை அடைந்தான்.

பன்றிமுகமுள்ள மூன்று வாருணீகர்களால் அவன் அழைத்துச்செல்லப்பட்டான். அவர்கள் இருளுடல் இருள்நீரில் வடிவுகொண்டும் வடிவழிந்தும் தெரிந்தனர். அவர்களை நோக்கி அறிந்தபின்னரே அவர்களுக்கு விழிகளில்லை என்பதை அவன் அறிந்தான். தான் அவர்களை விழிகள் வழியாக நோக்கவில்லை என்பதை அதன் பின்னர் உணர்ந்தான்.

“பெருஞ்சினத்தவர் இங்கமைந்த எந்தை. அவர் அவைபுகுந்து தேவரோ மானுடரோ அசுரரோ இதுவரை மீண்டதில்லை” என்றான் ஒருவன். “அவர் அவைக்குச் சென்று அருள்பெற்று மீள்பவர் அனைத்து நெறிச்சரடுகளுக்கும் அப்பால் முதல்நெறியென்று அமைந்துள்ள ஒன்றை அறிந்தவர் ஆவார்” என்றான் இன்னொருவன். மூன்றாமவன் “அவர் அருள் கொண்டவர் தன்னை தன் அறச்சரடுகளால் முழுக்க பிணைத்துக்கொண்டவர் ஆகிவிடுவார்” என்றான்.

முதல்வருணனின் அவை நீலநிறமாக இருந்தது. அதனுள் நுழைந்த அர்ஜுனன் அங்கே அவன் முற்றிலும் அறியாத குலத்தலைவர்கள் செறிந்திருப்பதைக் கண்டான். தங்கள் குடிக்குறிகளையும் குலமுடிகளையும் அணிந்து கோல்சூடியிருந்தனர். முகங்கள்தோறும் தொட்டுத்தேடியபின் முதல் முகத்தை அவன் அடையாளம் கண்டான். அஸ்தினபுரியின் தொல்குடித்தலைவர் ஒருவர் அவர் என அறிந்த மறுகணமே அனைவரையும் அடையாளம் காணலானான். குலத்தலைவர்களாக, குடிமூத்தோராக, தெருக்களிலும் அங்காடிகளிலும் கழனிகளிலும் சாவடிகளிலும் நிறைந்திருக்கும் குடிமக்கள்பெருக்காக.

அரசமேடை கரிய கல்லால் ஆனது. அதன்மேல் கரிய உடல்கொண்ட வருணன் எரியும் அனல்விழிகளுடன் அமர்ந்திருந்தார். தோளில் வழிந்து தொடையில் விழுந்து தரையில் கிடந்தன சடைமுடிக்கற்றைகள். சடைத்திரிகளான தாடி மடியில் விழுந்திருந்தது. வடிகாதுகள் தசைவளையங்கள் என தோளில் தொங்கின. “எந்தைக்கு வணக்கம். எளிய மைந்தன் தங்கள் அவைநாடி வந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன்.

“நீ பாண்டுவின் மைந்தன் அல்லவா?” என்றார் அவர். அவர் கைகளில் நீண்ட பறவையலகுகள் போல நகங்கள் எழுந்திருந்தன. “உன் தந்தையின் நெறித்தூய்மையால் இங்கு வந்தாய் நீ.” அர்ஜுனன் “ஆம், எப்போதும் அவரால் வழிநடத்தப்படுகிறேன்” என்றான். “உன் தந்தை நீயென்றாக விழைந்தார். எனவே நீ நிகழ்கிறாய்” என்றார் வருணன். “எந்தையே, நான் தங்கள் அருள்கொண்டு செல்ல வந்தவன்.”

“நீ என் தொல்குடி என்னைப்பற்றிப் பாடிய வாழ்த்தை அறிவாயா?” என்றார் வருணன். “வெயிலெரியும் பாலைகளில் வழிதவறும்போதும், விழிதிறந்த சுனைகளைக் கண்டு ஓடிச்சென்று அள்ளி வாயில் விடுவதற்கு முன்னரும் விண்மீன்களை நோக்கி படுத்திருக்கையிலும் விடியொளியில் விழிதிறந்து எழுந்த உடனேயும் அவர்கள் அதைப்பாடினர். உங்கள் மொழிகளனைத்தும் எழுந்த வயல். உங்கள் குடிநிரைகள் அனைத்துக்கும் ஊற்று.”

“அதைச்சொல்கையிலேயே நீ எங்களவன் ஆகிறாய்” என்றார் ஒருவர். “இல்லையேல் நீ அயலவன், இங்குள்ள கோடானுகோடி விழியிலா மீன்களில் ஒன்று என காலமிலாது வாழ்வாய்.” அர்ஜுனன் அவரை வணங்கி “அறிவேன், மூத்தவரே. நீங்கள் என் குடிமூத்தவராகிய குருவின் முகம் கொண்டவர். அவருக்கும் மூத்தவர்கள் சூடிய முகம் நீங்கள். உங்கள் முகம் கொண்டு இங்கு நின்றிருக்கிறேன்.” அவருடைய கண்கள் கனிந்தன. “சொல்” என்றார்.

அர்ஜுனன் அந்த முதல்வேதப்பாடலையே பாடினான் “வருணனே,  இறைவடிவோனே உன்னை வணங்குகிறேன். நாங்கள் எளிய மானுடர். நாள்தோறும் உன் நெறிகளை மீறிக்கொண்டிருக்கிறோம். எங்களை இறப்புக்கு இரையாக்காது அருள்க!” அவன் பாடிமுடித்ததும் முகம் மலர்ந்த வருணன் “ஆம், தொன்மையான பாடல். நம் குடியின் வாழ்த்து” என்றார். “நன்று மைந்தா, நீ என்னவன். வருக!”

அவர் கைநீட்ட அவன் அணுகி அவர் காலடிக்குச் சென்று குனிந்து நகங்கள் நீண்டு பின்னிய முதியகாலடிகளைத் தொட்டு வணங்கினான். அவர் அவன் தலைமேல் கைகளை வைத்தார். “முதல்மைந்தனைத் தொட்டபோது இவ்வெழுச்சியை அடைந்தேன்” என்றார். அவனை தோள்பற்றி இழுத்து தன் மடியில் அமரச்செய்துகொண்டார். திரும்பி அருகிருந்த வருணையிடம் “இவனை நினைவுகூர்கிறாயா?” என்றார்.

“இவனுக்களித்த முலைப்பாலின் எச்சத்தை உடலில் உணர்கிறேன்” என்றாள் அவள். கைநீட்டி அவன் கன்னங்களை வருடியபடி “அழகன்! என் மைந்தன். அவன் விழிகளால் பெண்கள் பித்தாகிறார்கள்” என நகைத்தாள். வருணன் வெடிப்புறு குரலில் நகைத்து “அன்னையை மகிழ்விப்பவன் வாழ்நாளெல்லாம் பெண்டிரை வென்றுகொண்டிருப்பான்” என்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து உடல்குலுங்க நகைத்தனர்.

வருணை அவன் கைகளை வருடி “படைக்கல வடுக்கள்” என்றாள். “இவை புண்ணென்றிருக்கையில் வலித்திருக்கும் அல்லவா?” அர்ஜுனன் “போரே வலியளிப்பதுதான், அன்னையே” என்றான். வருணன் “உன்னை எவரும் போரில் வெல்லமுடியாது, மைந்தா” என்றார். “கேள், தந்தை உனக்களிக்கவேண்டியதென்ன?” அர்ஜுனன் “உங்கள் மிகச்சிறந்த சொல்லை” என்றான்.

“ஆம், அதுவே முறை” என்றார் “இதுவே அது. வல்லமை எதுவும் கட்டுண்டாகவேண்டும்” என்று சொல்லி அவன் நெற்றிமேல் கையை வைத்தார். அர்ஜுனன்  கைகூப்பி அதை ஏற்றான். மும்முறை அந்த அழியாச்சொல்லை தன்னுள் சொல்லி பதித்துக்கொண்டான். “அனைத்தையும் கட்டும் சரடொன்று உள்ளது. அறமெனும் சொல். அதை உனக்களிக்கிறேன். உன் அம்பென்று அது அமைக!” என்றார். “ஆம், அருள் அது” என்றான் அர்ஜுனன்.

அவர் திரும்பி நோக்க அமைச்சர் ஒருவர் அணுகி ஒரு தாலத்தில் வைக்கப்பட்ட பாசச்சுருளை அவரிடம் நீட்டினார். அவர் அதை எடுத்து சுருட்டியதும் யானைவால்முடியைப்போல சுருட்டி கணையாழியாக்கினார். அவன் கையில் அதை அணிவித்து “இது உன்னுடன் என்றுமிருக்கட்டும்!” என்றார். “தங்கள் ஆணை” என்றான் அர்ஜுனன்.

“மைந்தா, என்னிடம் நீ கோருவதென்ன?” என்றாள் வருணை. “மைந்தர் அன்னையிடம் எதையும் கோரலாகாது. பசிப்பதற்கு முன் ஊறுபவை முலைகள்” என்றான் அர்ஜுனன். “நீ என்றுமே சொல்வலன்…” என்று சிரித்த வருணை அவன் தலையில் மெல்ல அடித்து “மூடா மூடா” என்றாள். அவன் குழல்களைப்பற்றி மெல்ல உலுக்கி “என் மகன்” என்று முகம் கனிந்து விழி நீர்மைகொள்ள தனக்குள் என சொன்னாள்.

தொடர்புடைய பதிவுகள்

கெய்ஷா -கடிதங்கள் -4

$
0
0

17

அன்புள்ள ஜெயமோகன்

கதையை படித்தவுடன் தங்களின் ‘எத்தனை பாவனைகள்!’ (http://www.jeyamohan.in/90572#.WCf_aC197IU) பதிவும் ஞாபகத்திற்கு வந்தது. இரண்டுமே ஒன்றுதான். ஒரு சேவை தொழிலாளி போல, சாதாரணமாக வந்து அமரும் கெய்ஷாவை தான் அறிவாளி என்னும் அகங்காரத்துடன் அணுகும் ஆணின் பார்வையில் தொடங்குகிறது. எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள் என அவள் அவனுடைய அகங்காரத்தை திருப்தி செய்கிறாள்.

ஆனால் ஒரு மாயகணத்தில் எல்லாம் புரண்டு விடுகிறது. அவன் எதிர்பார்க்கும் குற்றவுணர்ச்சியையும் தன்னிரக்கமும் கண்டு கொள்கிறாள். அவனுள்ளும் அது அந்த அறிவு பாவனைக்குள் தளும்பிகொண்டுள்ளதா.

கதையை படிக்கும்போது ஒரு இந்திய ஆணின் மனவமைப்பை, பெண்ணின் மீது எப்போதும் ஆதிக்கும் கொள்ளும் அகங்காரத்தை காட்டுகிறது என்று நினைத்தேன். ஆனால், எங்கோ உலகின் மற்ற மூலையிலிருந்து மற்ற கலாச்சாரத்திலிருந்து வரும் ஒரு ஆணை, அவ்வளவு சுலபமாக அவள் மதிப்பிடுகிறாள் என்றால், ஆண்களின் வகைமாதிரிகள் சிலவேதானா.

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் படித்தேன். 2000ல் விஷ்ணுபுரம் படித்தபின் நான் தங்களை பற்றிகொண்டேன். அப்பொது இருந்த மிகபெரிய மன உளைச்சலின் மிக பெரிய வெற்றிடத்தை நிரப்ப. அன்றிலிருந்து ஒருநாளும் தங்களின் எழுத்து இல்லாமல், தங்களை பற்றி பேசாமல் நாள் சென்றதில்லை. ஆம் நானும் வயதடைவதில்லை, உங்களின் எழுத்தை தொற்றி கொண்டபின்.

அன்புடன்
ஆனந்தன்
பூனா

***

அன்புள்ள ஜெ

கெய்ஷா கதையை மிகவும் பிந்தித்தான் வாசித்தேன். வெண்முரசு மனநிலையிலேயே இருப்பதனால் வேறு கதைகளை வாசிக்க ஒரு மனத்தடை எப்போதும் என்னிடம் இருந்தது. அத்துடன் கெய்ஷா என்றபேரும் ஈர்ப்பாக இருக்கவில்லை

ஆனால் கதையை வாசிக்கவைத்தது ஒரு வாசகி எழுதிய வசைக்கடிதம். உடனே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். நேரடியான கதை. நேரடியான சித்தரிப்பு. வெண்முரசுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஸீரோ நெரேஷன் பாணி. வர்ணனைகள் விவரணைகள் மன ஓட்டம் ஒன்றும் இல்லை

கதைமுடிந்ததும்தான் மீண்டும் ஆரம்பிக்கிறது. ஒருவன் தனக்கு சமானமான அறிவுள்ள ஒரு பெண்ணைக் கண்டுகொண்டதும் என்ன செய்வான் என்பதுதான் கதை. தன் மூளையை பலவகையில் அவள் மேல் உரசிப்பார்ப்பான். அவள் அவனைக் கண்டுபிடிக்கவேண்டும் என நினைப்பான். கண்டுபிடித்ததும் உருகி  அனைத்தையும் அவனே அள்ளி அள்ளி முன்வைப்பான்

அவனுடைய ஆண் எனும் அகங்காரத்தை அவள் கண்டுகொள்கிறாள். மோசமான மணவாழ்க்கை. ஆகவே நல்ல பாலுறவே இல்லை. அவனை ஆணாக ஒருத்தி பார்க்கிறாள், பாலுறவில் லயித்து அவனுடன் இருக்கிறாள் என்பதே அவனை அவனுக்குக் காட்டிவிடுகிறது

அவள் அந்த ஆழ்மன விருப்பத்தை ஒரு நுணுக்கமான நாடகம் வழியாகக் கண்டுபிடிக்கிறாள். கவபத்தாவின் கதையை அவள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறாள் என்பது ஒருபக்கம். ஆனால் அவன் ஏன் அதை அங்கே நினைவுகூர்கிறான் என்பது மேலும் முக்கியம். அந்த க்ளூ வழியாக அவள் அவனைக் கண்டுபிடித்துவிட்டாள்

அவள் அவனை ஜெயித்துவிட்டுச் சென்றுவிட்டாள். அவன் இனி அவளைப்போன்ற ஒரு பெண்ணுக்காகத் தேடிக்கொண்டே இருப்பான் இல்லையா?

எஸ்.ஆர்.ரவி
கெய்ஷா கதை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சலபதியின் ஆங்கிலம்

$
0
0

 

116

 

அன்புள்ள ஜெயமோகன்,

சலபதியின் மொழியாக்கம் குறித்து இன்று நீங்கள் எழுதியதைப் படித்தேன். சலபதியை இங்குப் பலரும் கொண்டாடுவது எனக்குப் புரியாதது. அவரின் “கவிஞனும் காப்புரிமையும்” குறித்து நான் விரிவாக விமர்சித்துள்ளேன். தப்பும், தவறும் மலிந்த மிகச் சாதாரண நூல் அது () . அது குறித்து எழுதும் போது தான் சலபதி ஆங்கிலத்தில் ஜெயகாந்தன் பற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்தது 

“Dandapani Jayakanthan, 71, was pushing forty when he received the Sahitya Akademi award for in 1972″. ஜெயகாந்தன் சாஹித்ய அகாதமி வாங்கியது 1972-இல், 38-ஆவது வயதில். மேலும் “pushing forty” என்பது ஒரு சரித்திர ஆசிரியர் ஞானபீடம் வென்ற இலக்கியவாதியைப் பற்றி எழுதும் போது சரியான சொற்றொடர் அல்ல. ஆங்கிலம் அறிந்தோர் அப்படி எழுத மாட்டார்கள்.

“When literary writing in Tamil was getting ghettoised in the little magazines” — இப்படியா எழுதுவார்கள்??? ‘ghettoized’ என்ற வார்த்தையின் பிரயோகம் தெரியாமல் எழுதி இருக்கிறார்.

“Jayakanthan soon graduated from short stories to novels” — இது என்ன கர்மம். மீண்டும் மீண்டும் பொருத்தமில்லாத சொல்லாட்சி.

“It is difficult to imagine today the furore caused by the short story Agni Pravesam in which an orthodox mother, without any moralising, exonerates her seduced daughter” — அந்தக் கதையில் அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டதாகத் தான் பலரும் அர்த்தம் கொண்டார்கள், தன் வசமிழந்ததாக அல்ல. அவள் கற்பழிக்கப் பட்டாளா, தன் வசமிழந்தாளா என்பது வேறு விவாதம். ஆனால் சலபதி அதைக் கூடச் சரியாக எழுதவில்லை.

“once even took on Periyar E.V. Ramasamy who smilingly acknowledged the young man’s diatribe” — ஜெயகாந்தன் பெரியாரை மறுத்து திருச்சி எழுத்தாளர் மாநாட்டில் பேசியதை ‘diatribe’ என்கிறார். தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். அந்த உரை பெரியாருக்கு மரியாதையுடன் தன் தரப்பு வாதங்களை ஒரு இலக்கியவாதியாக முன் வைத்த மிகப் பண்பான உரை. அதைப் போய்…..

அண்ணாதுரையின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டது குறித்து ‘Economic Times’ பத்திரிக்கையில் சலபதி எழுதிய பத்தி அபத்தக் களஞ்சியம்.

“in the aftermath of the nationalization of Bharathidasan’s works” என்று எழுதுகிறார். ‘aftermath’ என்பது ‘negative connotation’ உள்ள வார்த்தை. ‘in the aftermath of the earthquake” போன்றப் பிரயோகத்தில் வர வேண்டியதை…….

“All works more so of great people, are eminently social products. Ultimately, its ownership should vest with the people, intellectual property rights and GATT notwithstanding” — ஒரே வாக்கியத்தில் பாங்கில்லாத வாக்கியத்தை நொந்துக் கொள்வதா இல்லை அபத்தமான கருத்தை நொந்துக் கொள்வதா என வாசகனைத் திண்டாட வைக்கிறார். அந்தக் கட்டுரை உள்ளடக்கிய இவரின் கவிஞனும் காப்புரிமையும்காப்புரிமைப் பெற்றது தான்.

மொழிமாற்றம் செய்வது என்பது வெறும் துபாஷி வேலை என்று சலபதி போன்றோர் நினைக்கிறார்கள். சலபதி எழுதாமல் இருந்தால் ஆங்கிலமும், சரித்திரமும் பிழைக்கலாம். (என் தமிழை விட சலபதியின் ஆங்கிலம் பெட்டர் என்று அவர் ஆதரவாளர்கள் குதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்).

அரவிந்தன் கண்ணையன்

 

 

 

 

A-R-Venkatachalapathy

 

அன்புள்ள அரவிந்தன்,

நீங்கள் இந்த இணைப்பைக் கொஞ்சம் பார்க்கலாம். உங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு நண்பர் தமிழ்விமர்சகரான நாகார்ச்சுனன் செய்த மொழியாக்கம் பற்றி அனுப்பியது. [முள்வில்லில் பனித்துளி அம்புகள்]தமிழில் ஜேம்ஸ் ஜாய்ஸ், போர்ஹெஸ், கார்லோஸ் புயண்டஸ் போன்ற சிக்கலான மொழிநடை கொண்ட எழுத்துக்களைப்பற்றி அதிகம் பேசியவர் நாகார்ச்சுனன்.

எனக்குள்ள சிக்கல்களில் ஒன்று, இது வேறு தமிழ் எழுத்தாளர்களுக்கும் இருக்கலாம், தமிழின் சொற்றொடரமைப்பு என் சிந்தனையின் தாளமாக உள்ளது என்பதுதான். அதன் ஓசை முக்கியமாக. ஆகவே இன்னொரு மொழி தமிழின் மாற்று வடிவமாகவே வரும். நான் ஆங்கிலத்தில் ஒரு நல்ல சொற்றொடரை வாசித்தால் அதை பின்னர் தமிழ்ச்சொற்களாகவே நினைவிலிருந்து எடுக்கிறேன் என்பதை கவனித்துள்ளேன்.

அதாவது இயல்பாகவே நான் தமிழாக்கம் செய்தே வாசிக்கிறேன். ஆகவே ஆங்கிலத்தில் வாசித்த நூல்களைப்பற்றி எழுதும்போது நடை என்னும் அம்சத்தைப்பற்றி நான் கருத்தே சொல்வதில்லை. அது என் தலைக்கு அப்பாற்பட்டது. ஆங்கிலம் மட்டும் அல்ல என் தாய்மொழியான மலையாளமே எனக்கு மிக அன்னியமொழியே. தமிழ் அல்லாது எம்மொழியிலும் என்னால் தேர்ச்சி பெறமுடியாதென இப்போது உணர்கிறேன்.

மேலும் சமீபமாக பழைய இந்தியவியல், தத்துவவியல் நூல்களை வாசித்து நவீன ஆங்கிலமே கொஞ்சம் அன்னியமாக ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் பென் ஓக்ரியின் ஃபேமிஷ் ரோட் ஐ கொஞ்சம் வாசித்தபோது திகைப்பு வந்தது. இங்குள்ள மொழியாக்கக்காரர்களுக்கும் இச்சிக்கல் இருக்கலாம்

ஜெ

 

பி-கு

ஒரு ஜோக். திருவனந்தபுரத்தில் ஒர் மலையாளி தமிழ் அச்சகம் நடத்திவந்தார். ஓரளவு தமிழ் எழுத வாசிக்க தெரியும். ஒரு உத்தரக்கிரியை பத்திரிகை அடிக்கவேண்டும். வாடிக்கையாளர் எழுதிக்கொடுத்திருந்த தாள் தொலைந்துவிட்டது. நல்லவேளையாக செத்தவர் பெயரும் விலாசமும் வாடிக்கையாளர் பெயரும் எல்லாம் தெரியும். ஒரே தெருக்காரர்கள். ஆனால் செத்துப்போனார் என்பதை எப்படி தமிழில் மங்கலமாகச் சொல்வது?

வாசலில் மூட்டைதூக்கும் கருப்பசாமி இருந்தார். நெல்லைக்காரர். ஏலே உங்கப்பன் செத்தா என்னன்னுலே சொந்தக்காரங்களுக்குச் சொல்லுவீக?” என்றார். என்னா சாமி, இன்னமாதிரி எங்கப்பாரு மண்டைய போட்டாரு சாங்கியத்துக்கு வாருங்கன்னு சொல்லுவோம்என்றார் கருப்பசாமி

அந்தமாதிரியே போட்டு பத்திரிகை அச்சிடப்பட்டது!

சலபதியின் மொழியாக்கம் பற்றி

முள்வில்லில் பனித்துளி அம்புகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் விமர்சனம் -11

$
0
0

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கடைசி ஐந்து கதைகளைப் பற்றி

பருவமழை

கலை போலவே அறிவியலுக்கும் நம் நாட்டில் அளிக்கப்படும் மதிப்பு குறைவுதான். அவற்றில் உடனடி பயனைத் தேடும் கூட்டம் தான் அதிகம். இந்த கருவைத் துழாவுகின்றது பருவமழை.

எழுத்துமுறையின் சிக்கல்களை ஒதுக்கி வைத்துப் பார்க்கையில் இந்தக் கதையில் மூலப் பிரச்சினை என்பது ராமச்சந்திரனுள் செல்லாமல் மேலோட்டமாக நிகழ்வுகளை மட்டும் அளிப்பதுதான். சராசரி மனிதனுக்கு அறிவியலின் முக்கியத்துவம் புரிபடாமல் இருக்கலாம். ஆனால் அதிலேயே ஊரிப்போன ஒருவரால், தான் கடை பிடிக்கும் அறிவியலின் நேர்மைக் காத்து வேலையிலிருந்து நீங்குபவரால் (வேண்டிய பதிலைக்கொடுத்து வேலையைத் தக்க வைத்துக்கொன்டிருக்க முடியும்) சலனமே இல்லாமல் எப்படி ஜோதிடம் என்ற அரைகுறை அறிவியலுக்குள் நுழைய முடியும்? பருவமாற்றம் போல அவருடைய வாழ்க்கையும் மாற்றம் அடைவது அவர் தெரிவிக்கும் எதிர்ப்பா, அல்லது பிழைப்பதன் கட்டாயமா? இவ்வீழ்ச்சியைப் பின் தொடர்ந்திருந்தால் சிறப்பான கதையாக அமைந்திருந்திருக்கக் கூடும்.

மனிதக்குணம்

இவ்வரிசையில் ருசி/நகர்வு பற்றிப் பேசும் இரண்டாவது கதை. சுவாரஸ்யமான ஆரம்பம், இயல்பான வர்ணனைகள் மூலம் கதைக்கூறும் இடங்களின் வண்ணங்களையும் உயிரோட்டத்தையும் அளிக்கிறார் ஆசிரியர். நுகர்வு நாட்டத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் நடுவில் சிக்கிக் கொண்டுள்ள பெரியவர், அதை புரிந்துகொள்ளக் கூடிய விருந்தாளி – இவை தான் கதையின் முக்கிய அம்சங்கள்.

கதை வீழும் இடங்கள் – (1) தலைப்பு போலவே மிக மிக வெளிப்படையாக, நேர்முகமாக சிதம்பரம் அய்யாவைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வது. கதைத் தானாக அந்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்க வேண்டும். (2) கடைசியில் பெரியவரின் செயலை, ஒரு கணத்தில் நிகழ்கிற தடுமாற்றமாக அளிக்காமல் தினமும் நிகழும் ஏமாற்றம் போல அமைத்தது.

மஞ்சுக்குட்டி

தில்லையம்மா போல இதுவும் மெல்லுணர்வு சார்ந்த கதை. பெரும்பாலும் ஒற்றைப்படையான சித்தரிப்புகள், மஞ்சுளா குடித்த பிறகு சற்று மாறுகிறது. காதல், கள்ளக்காதல் – இவற்றை மையமாக கொண்ட கதைகள் சலிப்பூட்டுகின்றன. எழுத்துமுறையின் இன்னொரு பிரச்சினை மஞ்சுளாவின் காதலனின் பார்வையிலிருந்து சொல்ல ஆரம்பித்து, மஞ்சுளாவின் குரலில் முடிகிறது. கதையில் குறிப்பிடத்தக்க ஒன்று – முதல் பத்தியில் சாப்பாட்டைப் பற்றிய விவரிப்பு உண்மையிலேயே பசியைக் கிளப்பியது.

10.5

விறுவிறுப்பாக நகர்கிறது ஆனால் ஆழமான எதையுமே தேட முயற்சிக்காத கதை. சொல்லவந்ததை பெரும்பாலான தமிழ்ப் படங்கள் போல climax dialogue தெரிவிக்கிறது.

அசங்கா

முறைமீறிய உறவு சராசரி மனிதனுள் குற்ற உணர்ச்சியை உருவாக்குவதில் எதிர்பாராதது எதுவும் இல்லை. குற்ற உணர்ச்சியையும் மனசாட்சியையும் குறியீடுகள் மூலம் முன்வைப்பது பின்தங்கிய உத்தி போல தோன்றுகிறது (பழைய படங்களில் முத்தங்களை குடை அல்லது பூவின் பின் மறைப்பது போல). நவீன இலக்கியம் இதை நேர்முக்மாகவே அணுகலாம்.

ஆனால் அடிப்படையில், காதல் அல்லது முறைமீறிய உறவு போன்றவை நல்ல இலக்கியத்திற்கு உகந்த கதைக்கருக்கள் அல்ல என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவை எல்லோரிடமும் பெரும்பாலும் ஒரே மாதிரியான (homogeneous) உணர்வெழுச்சிகளையே உருவாக்குகின்றன. எதிர்மறையான அல்லது புதிதான கருத்துக்களுக்கு மிகச் சிறிய இடம் தான் அளிக்கின்றன. அதனால் இவற்றை மையமாகக் கொள்ளும் மஞ்சுக்குட்டி, அசங்கா போன்ற கதைகள் சோர்வடையச்செய்கின்றன.

இதைக் கடந்து எழுதக்கூடியவராக தெரிகிறார் அனோஜன்.

ப்ரியம்வதா

***

அன்புள்ள ஜெ

சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல சிவாகிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைதான் இந்த வரிசையிலேயே முக்கியமான ஒன்று. இந்தப் படைப்பாளியை இதுவரை கவனிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். உண்மையில் அந்தச்சிறுகதையின் முடிச்சு ஒன்றும் பெரிய விஷயமில்லை. அதை வைத்துக் கதையை வாசித்தால் கதை சரியாகப்பிடி கிடைக்காமலும் போகக்கூடும். அந்தக்கதை நெடுகவும் உள்ள மென்மையான பண்பாட்டுக் குறிப்புகள்தான் மேலும் முக்கியமானவை.

குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களுக்கு அந்தப்புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள ஆர்வம் என்ன என்பது. அவர்களுக்கு அந்த நாட்டின் பண்பாடு அரசியல் கேளிக்கை ஒன்றுமே முக்கியம் கிடையாது. அவர்கள் பார்ப்பதெல்லாமே அந்தநாட்டிலே எப்படி மேலே தொற்றிக்கொண்டு செல்லலாம் என்று மட்டும்தான். அதைத்தான் செல்வேந்திரனிடமும் காண்கிறோம். அவர் படிப்பு சம்பந்தமான எல்லா தகவல்களையும் கையில் வைத்திருக்கிறார். இதை அமெரிக்க தமிழர்களிடமும் பார்க்கமுடியும்

முடி சாதாரணமான கதை. இந்தக்கதைக்கு பெல்ஜியப் பின்னணியும் விளம்பரம் பற்ற்யத் தகவல்களும் எதற்கு என்று புரியவில்லை. அப்படி மேலதிகமான தகவல்களைத்தந்து அதையெல்லாம் வாசகன் கவனிக்கவேண்டும் என்று ஆசிரியன் நினைத்தால் கதைக்குள் அதற்கான பின்புலத்தேவை இருக்கவேண்டும். இல்லை குறியீட்டுத்தேவை இருக்கவேண்டும். இரண்டும் இல்லாமல் எனக்கு இதுதான் தெரியும் என்பதனால் எழுதினேன் என்று சொன்னால் அது பெரிய தவறு. இந்தக்கதையை மைலாப்பூர் பின்னணியிலேயே எழுதியிருக்கமுடியும்

அனோஜன் பாலகிருஷ்ணனின் கதையும் அதேபோல தேவையில்லாமல் நிறைய தகவல்களைத் தந்துகொண்டே செல்கிறது. அந்தத்தகவல்களுக்கெல்லாம் கதைக்குள் என்ன தேவை என்பது எனக்குப்பிடி கிடைக்கவில்லை. அந்தப்பெண் சிங்களப்பெண் என்பதனால் அந்த உறவுக்கு கூடுதலாக என்ன கனம் கிடைக்கிறது? அந்தப்பூனை சிங்கம் என்று வாசிக்கவேண்டுமா?

ரகுநாதன் பாலகிருஷ்ணன்

பிகு கூக்ள் டைப் பண்ணினேன் பிழை திருத்தி வாசிக்கவும்

 

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வறுமையில் இறந்தாரா சுஜாதா?

$
0
0

untitled

அன்புள்ள ஜெமோ

ஒருசின்ன சந்தேகம், நீங்கள் எந்திரன்2 படத்தில் பணியாற்றியதை அறிந்ததனால் இதை எழுதுகிறேன். எந்திரன் 1 உட்பட நிறையபடங்களில் பணியாற்றிய சுஜாதா போதிய பணம் இல்லாமல் வறுமையில் இருந்ததாக இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

சுஜாதாவின் மனைவி அளித்த பேட்டிகளில் இறுதித்தருவாயில் நான் உனக்கு ஒன்றுமே சேர்த்துவைக்காமல் போகிறேன்என்று வருந்தியதாகவும் அவரது இறுதிக்கால மருத்துவச்செலவுக்குக்கூட கமல்ஹாசனும் மணிரத்தினமும்தான் சிறிய தொகை கொடுத்து உதவினார்கள் என்றும் சொல்கிறார்.

உங்கள் அனுபவம் என்ன? உங்களுக்கு அங்கே போதிய பணம் அளிக்கப்படுகிறதா?

சுந்தர்

 

அன்புள்ள சுந்தர்

முதலில், சுஜாதா வறுமையில் வாடினாரா என்பது பற்றி. இப்படி எழுதுபவர்களில் கணிசமானவர்கள் வெறும் கணிநிரல் எழுத்தர்கள். அவர்கள் ஒரு பகற்கனவில் ஆசைப்படக்கூடிய உச்சகட்ட பதவி ஒன்றில் இருந்தவர் சுஜாதா. இந்திய மின்னணு நிறுவனம் [BEL]-ல் இயக்குநர் அளவில் பதவி வகித்தவர். ஓர் இந்தியர் அரசுசார் துறையில் அடையக்கூடிய உச்சகட்ட பதவி, உச்சகட்ட ஊதியம். அந்தப்பதவியிலேயே வறுமைதான் என்றால் பிரணாப் முகர்ஜியின் பதவிதான் வறுமைக்கு அப்பாற்பட்டது.

அப்பதவியில் இருந்தபடியே சுஜாதா வாரம் ஒன்றுக்கு ஏழு தொடர்கதைகள் எழுதினார், மனைவி பேரில். தனக்கு வார இதழ்கள் பெரும் பணம் தந்திருக்கிறார்கள் என அவர் குறைந்தது பத்து இடங்களிலாவது எழுத்தில் சொல்லியிருக்கிறார்

அவரது ஆரம்பகட்டத்திலேயே அவர் கதைகள் சினிமாவாக ஆரம்பித்துவிட்டன. இது எப்படி இருக்கு, ப்ரியா எல்லாமே உரிய பணம் கொடுத்து வாங்கப்பட்ட கதைகள். கொடுக்கப்பட்ட பணம் என்ன என்று சுஜாதாவே சொல்லியிருக்கிறார். அன்று ஒரு நல்ல கார் வாங்கும் அளவுக்குப் பணம். அதன்பின் சினிமாவுக்கு வந்தார். தமிழ் சினிமாவில் மிக அதிகமாகப் பணம் வாங்கிய வசனகர்த்தா அவர்தான். ஏனென்றால் அவர் எழுதியவை பெரும்பாலும் நட்சத்திரப்படங்கள்.

அவர் எழுதிய எந்தப்படத்திலும் அவருடைய தனித்திறன் வெளிப்பட இடமிருக்கவில்லை. அவை இயக்குநர்படங்கள் என்பது ஓர் உண்மை. ஆனால் அவருடைய பெயர் அவற்றின் வணிகமதிப்புக்கு உதவியது என்பது முக்கியமானது. ஆகவே அவருக்குப் பணம் அளிக்காமலிருக்க முடியாது

கண்டிப்பாக ரஜினிகாந்தோ கமலஹாசனோ வாங்கும் பணம் அல்ல அது. ஆனால் அது குறைவான பணமும் அல்ல. இப்படிச்சொல்கிறேன். அவர் உயரதிகாரியாக ஒருவருடம் முழுக்க ஈட்டிய ஊதியத்தைவிட அதிகமாக ஒரு படத்திற்கு வாங்கிக்கொண்டிருந்தார். வருடம் மூன்று படம் செய்தார், கடைசிநாள்வரை. அவருக்கு என்ன அளிக்கப்பட்டது என்று எனக்குத்தெரியும். சொல்லப்போனால் நான் என்ன வாங்கவேண்டுமென்று அவர் எனக்கு அறிவுரையும் சொன்னார்.

சுஜாதா பணத்தை விட்டுக்கொடுப்பவர் அல்ல. நின்றுபோன படங்களுக்கான ஊதியத்தைக்கூட அவர் பலமுறை கேட்டு வாங்கிக்கொண்டது எனக்குத்தெரியும். என்னிடம் அப்படித்தான் செய்யவேண்டும் என சொன்னார். நான் அப்படி எவரிடமும் கேட்பதில்லை. ஆனால் இன்றுவரை சினிமாவில் எனக்கு வராதபணம் என ஏதுமில்லை. வரவேண்டிய பணத்தை நான் நினைவுகொள்வதே இல்லை. படநிறுவனமே என்னைக்கூப்பிட்டு பணம் கொடுப்பதே வழக்கம்.

எனக்கும் சினிமாவில் நான் நிறைவடையும் அளவுக்கு ஊதியம் இருக்கிறது. கண்டிப்பாக அது நட்சத்திரங்கள் பெறும் பணம் அல்ல. ஆனால் அது ஏதேனும் துறையில் மாதச்சம்பளம் வாங்குபவர்கள் சற்று பொறாமைகொள்ளும் ஊதியம்தான். அத்தனையும் வெள்ளைப்பணம்தான். வருடம்தோறும் டிடிஎஸ் கட்டி மீட்டுக்கொள்கிறேன்.

சுஜாதா ஓய்வுக்குப்பின் மூன்று நிறுவனங்களில் உச்சகட்ட பதவி வகித்தார். குமுதத்தில். பின்னர் மின்னம்பலம் இணைய நிறுவனத்தில். பின்னர் ஒரு திரைநிறுவனத்தில். மூன்றிலுமே பெரும் சம்பளம் வாங்கினார். கூடவே சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டிருந்தார்.

சுஜாதாவின் மருத்துவச்செலவுக்கு உதவ மணி ரத்னமும் கமலஹாசனும் முன்வந்திருக்கலாம். ஏனென்றால் இன்றுகூட அவர்கள் அவரைப்பற்றி மிக நெகிழ்ச்சியுடன் மதிப்புடன் நினைவுகூர்கிறார்கள். அவரைப்பற்றி பேசாமல் ஓர் உரையாடல் இதுவரை நிகழ்ந்ததில்லை. அவர் அவர்களுக்கு தொழில்கூட்டாளி மட்டும் அல்ல. குடும்ப நண்பர், அந்தரங்கமான விஷயங்களில்கூட வழிகாட்டி. குறிப்பாக கமல் சுஜாதாமேல் கொண்டிருக்கும் நட்பும் மதிப்பும் நம் சூழலில் மிக அபூர்வமானவை.

சுஜாதா எதையும் கோட்டைவிட்டவர் அல்ல. நன்றாக பணம் ஈட்டினார். முறையாக வருமானவரி கட்டியாகவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதை மற்றவர்களுக்கும் வலியுறுத்தினார். அவருக்கிருந்த உடல்நிலைக்குறைவு அவரது தோரணையைச் சற்று குறைக்கும் என்பதனால் அதைப்பற்றிய பேச்சையே தவிர்த்தவர் அவர். ஒரு சம்பிரதாயமான நலம் விசாரிப்பையே விரும்பாதவராக இருந்தார்.

சுஜாதா எங்கும், எவர்முன்னாலும் ஒருபடியேனும் கீழிறங்கியவர் அல்ல. மரியாதையை எங்கும் எதிர்பார்க்கும் பழைய பாணி மனிதர் அவர். அது அவருக்கு எங்கும் கிடைத்தது. நானே ஒரு மூத்த மாமாவிடம் கொள்ளும் விலக்கம் , மரியாதையுடன் மட்டுமே அவரிடம் பேசுவது வழக்கம். அதாவது அவர் பேசுவார், நான் கேட்டுக்கொண்டிருப்பேன்

சினிமாவில் வழக்கமாக உள்ள எதன்வழியாகவும் அவர் தன்மதிப்பை குறைத்துக்கொள்ளவில்லை. நான் சுஜாதாவிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான அம்சம் இது. அவர் வாழ்ந்த வரை திரையுலகிலும் ஒரு பிதாமகனுக்கான இடம் அவருக்கிருந்தது. அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் பெருமதிப்புடன் மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.

சுஜாதாவின் இரு மகன்களும் மிகவசதியான பதவிகளில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு அவர் வறுமையில் இறந்தார், மனைவி நிராதரவாக இருக்கிறார்கள் என்றால் அவரது மகன்களிடம்தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றுதான் அர்த்தம் வரும். அந்த அம்மாள் ஒன்றும் புரியாமல் பேசுகிறார்கள். அவர்களை எனக்கு ஓரளவு தெரியும். அவர்களால் அவர்களின் சொற்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என ஊகிக்கமுடியல்லை

அவர்களை பேசவிட்டு அந்தச் சொற்களைக்கொண்டு சுஜாதாவின் ஆளுமையை கீழிறக்க ஊடகவியலாளர் முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. சுஜாதா எதையாவது மனமார வெறுத்தார் என்றால் அவரை பரிவுடன் பிறர் பார்ப்பதைத்தான். அது அந்தக்கால மனிதர்களின் இயல்பு. மதிப்புடன் மட்டுமே பார்க்கப்பட விரும்பியவர்கள் அவர்கள்.

அந்த மதிப்பை நாம் அவருக்கு அளிக்கவேண்டும். அவரை விமர்சிக்கலாம், அவர் அதைப் புரிந்துகொண்டவர்தான். கிண்டல் செய்யலாம், அவருக்கு அது உண்மையில் மிகவும் பிடிக்கும். அனுதாபப் படவேண்டாம். அவரது புகழிருப்புக்கு அது இழிவு.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஊடகமாயை -2

$
0
0

 

 

1ஊடகங்கள் உருவாக்கும் மாயையைப்பற்றி சொல்லியிருந்தேன். ஊடகங்கள் நடுநிலையானவை, மக்களை பிரதிநிதிப்படுத்துபவை என்பது ஒரு பொய்த்தோற்றம். அவை முதலாளிகளால் நடத்தப்படுபவை. திட்டவட்டமான உள்நோக்கம் கொண்டவை. ஊடகங்கள் முக்கியமானவை. ஆனால் அவை அரசின் திட்டங்களை தடுக்கவோ திசைதிருப்பவோ முடியும் என்னும் அதிகாரத்தை அவற்றுக்கு நாம் அளித்துவிடக்கூடாது. அவை நினைத்தால் எதைவேண்டுமென்றாலும் உண்மை என காட்டிவிடமுடியும் என அனுமதிக்கக்கூடாது

 

இந்தச்செய்தியைப்பாருங்கள். இன்று செய்தியூடகங்கள் முழுக்க இதைத்தான் கூவிக்கொண்டிருந்தன.

வங்கியில் பணம் எடுக்க காத்திருப்பு: தந்தை உடன் வந்த 4 வயது சிறுமி காய்ச்சலில் இறந்த சோகம்

 

இந்தச்செய்தியை வாசித்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிக்கொதிக்கும் அப்பாவிகள் உண்டு. இதையே சாக்காக வைத்து போலிக்கொந்தளிப்பைக் காட்டும் அரசியல் காழ்ப்பாளர்கள் உண்டு. கொஞ்சம் பொதுப்புத்தி இருப்பவர்கள் சிந்திக்கலாம்

 

சாகும்நிலையில் உள்ள ஒரு குழந்தையுடன் , அதற்கு உரிய மருத்துவசிகிழ்ச்சை அளிக்காமல் வங்கிக்கு வந்த அந்தத் தந்தையின் பொறுப்பு என்ன? முன்னரே பணம்கட்டாமல் எந்த ஆஸ்பத்திரியிலும் குழந்தையை அனுமதிக்கமாட்டார்களா? அப்படியென்றால் அந்த டாக்டர்களை விடப்பெரிய குற்றவாளிகள் யார்? அங்கே ஓர் அரசு மருத்துவமனை கூடவா இல்லை? அங்கும் காசில்லையேல் துரத்திவிடுவார்கள் என்றால் அந்த ஆஸ்பத்திரி ஊழியர்களின் பொறுப்பு என்ன?

 

சரி, சாகும்நிலையிலுள்ள குழந்தையுடன் வந்தவருக்குக்கூட வரிசையில் முன்னுரிமை அளிக்காமலிருக்கும் அளவுக்கு நீசர்களா அந்த வங்கியில் நின்றிருந்தவர்கள்?

 

எந்தக்கேள்வியுமே நம் மனதில் எழவில்லை என்றால், மோடி மட்டும்தான் குற்றவாளி என்று சொல்லி உடனே ஃபேஸ்புக்கில் எம்பிக்குதிக்கிறோம் என்றால் நாம் ஊடகத்தின் அடிமைகளாக நம்மை ஒப்புக்கொடுக்கிறோம் என்றே பொருள்.

 

மோடியை வில்லனாக்க நாலாந்தர செண்டிமெண்டுகளை சமைக்கும் அவசரத்தில் ஒட்டுமொத்த தேசத்தையே கருணையற்ற கொலைக்காரர்களின் தேசமாகச் சித்தரிக்கிறார்கள் .

 

ஒரு திருவிழாக்காலகட்டத்தில் ரயிலுக்கே பலமணிநேரம் வரிசை காத்திருக்கவேண்டிய இந்தத் தேசத்தில் ஏடிஎம்களில் நான்குநாட்கள் நின்றமையால் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து உதிர்கிறார்கள் என நம்மிடம் சொல்கிறது ஊடகம். என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் ஊடகம் இத்தனை கீழிறங்கி நான் பார்த்ததில்லை.

 

ஊடகமாயை 2

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35

$
0
0

[ 57 ]

தண்டகாரண்யம் வறண்டு தூசுபடிந்த புதர்களுடன் சூழ்ந்திருந்தது. முட்புதர்களுக்குள் சருகுகள் சலசலக்க ஓடி பாறைமேல் தாவி ஏறிநின்று செதில் உப்பி வண்ணம் மாற்றிக்கொண்ட பச்சோந்தியின் களைத்த கண்களில் நீண்ட கால வறட்சியின் சலிப்பு தெரிந்தது. காலடி பதிந்த இடங்களில் கூழாங்கற்கள் எழுந்து உருண்டு சரிவிறங்கி சருகுகளை ஒலிக்கச்செய்தன. வியர்வை உடலில் வழிய இடையில் கைவைத்து நின்று “நீர் இருக்கிறதா, பைலரே?” என்று ஜைமினி கேட்டான்.

“அது உள்ளம் கொண்ட விடாய். நீர் இப்போது கேட்ட கதை அவ்விடாயை அளிக்கிறது” என்றான் பைலன். “மிகக்குறைவாகவே நீர் உள்ளது. நீரின் பசுமை தெரியத்தொடங்கிய பின்னர் நாம் நீர் அருந்துவதே நன்று.” விண்ணை நோக்கி “வெளித்துக்கிடக்கிறது. மரங்களின் இலைகள்கூட தளர்ந்துவிட்டிருக்கின்றன. சோர்ந்த பசுவின் காதுகள்போல தொங்குகிறது இந்த செண்பகமரத்தின் இலை” என்றான்.

சண்டன் “அது சிறந்த கவிதை” என்றான். “நானும் கவிதை எழுதுபவனே” என்றான் ஜைமினி. “ஆம், நான் இல்லை என்று சொல்லவில்லையே? இதுவும் கவிதைதான்” என்றான் சண்டன். “கவிஞர் பலவகை. சொல்லை படைக்கலமாக்கியவர். சொல்லை துடுப்பென ஆக்கியவர். சொல்சூடி வானெழுபவர். சொல்லை ஆடையென அணியென சூடிக்கொள்பவர்.” ஜைமினி “நான் என்ன செய்யவேண்டுமென எனக்கே தெரியும்” என்றான். “அது நன்று. தெளிவிருப்பவர்கள் நெடுந்தொலைவு அலையவேண்டியிருக்காது” என்றான் சண்டன்.

பைலன் “சற்று தொலைவுதான். மலைச்சரிவில் ஒரு உணவுநிலை உள்ளது என்கிறார் சண்டர்” என்றான். “எனக்கு உடனடியாக அருந்த நீர் வேண்டும். அதன்பின்னரே நான் கால்வைக்க முடியும்” என்றான் ஜைமினி. “நீர் மிகச்சிறிதளவே உள்ளது. ஒருவேளை உமக்கே தேவையாகலாம்” என்றான் சண்டன். “நீர்” என்றான் ஜைமினி. சண்டன் நீரை கொண்டுசென்று அவனுக்கு அளிக்க அதை வாங்கி முழுக்க குடித்தபின் குடுவையை திருப்பி அளித்தான். “முற்றருந்தலாகாது என்பது ஒரு முறைமை” என்றான் பைலன். ஜைமினி அதைக் கேளாதவன் போல “செல்லலாம்” என்றான்.

“செல்வோம்” என்றான் சண்டன். அவர்கள் காய்ந்த நிலத்தினூடாக கூர்ந்த முட்களை ஒதுக்கி உருளும் பாறைகளைக் கடந்து சென்றார்கள். “சொல்க!” என்றான் பைலன். “யவனநாட்டிலிருந்து  திரும்பி வந்துகொண்டிருந்த காப்பிரிநாட்டு வணிகக்குழுவினர் பாலைநிலத்தில் வெற்றுடலுடன் சடைக்கற்றைசூடி சிரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த பித்தனை கண்டார்கள். அவனை அவர்கள் தங்கள் அத்திரிகள் ஒன்றின்மேல் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களின் காப்பிரிநாட்டு துறைநகர் ஒன்றுக்கு கொண்டுசென்றார்கள்.”

“அங்கே சென்று நீரைக் கண்டபின்னர்தான் அவன் மீண்டான். முதன்முதலாக மானுடரைக்கண்டதும் அவனால் அதை அடையாளம் காணவே முடியவில்லை. ஆனால் அவனுள் இருந்த விலங்கு சுனைகளைக் கண்டடையும் திறன்கொண்டிருந்தது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அவன் மொழியிழந்திருந்தான். அனைத்து முறைகளையும் இழந்திருந்தான். கடல்கண்டதும் கைவிரித்து அதை நோக்கி ஓடி மயங்கி விழுந்தான். பதினெட்டு நாட்கள் அழுதபடியும் அரற்றியபடியும் அரைவிழிப்பு நிலையில் இருந்தான். அதற்குள் அவன் உடலின் குலக்குறிகளிலிருந்து அவன் அர்ஜுனன் என அவர்கள் உணர்ந்துகொண்டிருந்தனர்.”

“விழித்து மொழியெழுந்ததும் அவன் கிழக்கு என்றே சொன்னான்” என்றான் சண்டன். “அங்கிருந்து காப்பிரிகளின் கலத்தில் ஏறி தென்முனை சுற்றிக்கொண்டு அவன் கிழக்கே இந்திரகீல மலையை தேடிச்சென்றான்.” முகம் மலர்ந்து கேட்டுக்கொண்டு வந்த பைலன் சண்டனை நோக்கி முன்னால் சென்று உள்ள எழுச்சியுடன் “திசைவெற்றி என்னும் சொல்லே உள்ளத்தை எழுச்சி கொள்ளச்செய்கிறது, சண்டரே” என்றான்.

தோளில் இட்ட முழவை விளையாட்டாகத் தட்டியபடி வேர்கள் மேல் தாவித்தாவி முன்னே சென்ற சண்டன்  நின்று திரும்பிநோக்கி “ஆம், தவழ்ந்து இல்லம் விட்டு வெளியே வந்து படியில் அமர்ந்து தொலைவை நோக்கும் குழவி அடையும் முதல் உணர்வு அது. வெல்வதற்குத் திறந்திருப்பவை திசைகள் என்ற எண்ணம் அதை ஒவ்வொரு கணமும் தூண்டிக்கொண்டிருக்கிறது” என்றான்.

“ஒவ்வொரு முறை நாம் பார்க்கும்போதும் அதன் கால்கள் கொண்டுசெல்லும் தொலைவின் இறுதி எல்லையில்தான் அது நின்றுகொண்டிருக்கிறது. பின்னர் எப்போதோ திசைகள் சுவர்களாகின்றன. உள்ளே நின்று நெஞ்சில் அறைந்து தொண்டை உடையும்படி கூவி ஓங்கி உதைத்து கொந்தளிக்கிறோம்.  தலையை அறைந்து யார் அங்கே, என்னை கேட்கிறீர்களா, எனக்கு மறுமொழி அளிப்பீர்களா, என்னை அறிவீர்களா என்று ஆர்ப்பரிக்கிறோம். சோர்ந்து உடைந்து தனிமையிலமர்ந்து கண்ணீர்விடுகிறோம்.”

“பின்பு ஒரு கட்டம் வருகிறது. திசைகள் இறுகி கோட்டைகளாகின்றன. முடிவின்மையிலிருந்து அலையலையென எழுந்துவரும் அனைத்தையும் தடுத்து அப்பால் நிறுத்தி நம்மைக் காக்க உறுதிகொண்டு நின்றுள்ளன. திசைகளுக்கு அப்பாலுள்ள வெளி அச்சுறுத்துகிறது. திசைகளுக்குள் அடைபட்ட வெளி குழப்புகிறது. இன்னும் சிறிதாகுக இக்கோட்டை, இன்னும் அணுகுக இச்சுவர்கள் என்று ஏங்குகிறோம். நாம் விழைய விழைய திசைகள் அணுகி வருகின்றன. சிற்றூராகின்றன. இல்லச்சுவர்களாகின்றன. கவசமாகின்றன. உடை என்றாகின்றன. தோல் என்றாகின்றன.”

சண்டன் முழவில் கையோட்டி “தந்தனத் தானன தானே – தன தந்தன தானன தானே” என்றான். மெல்ல துள்ளி ஆடியபடி “வயதேற வயதேற சுருங்குவதேனடி  கண்ணே? வாழ்க்கை அறிந்திட அறிந்திட அகலுவதேனடி பெண்ணே? விழிசூட மொழிசூட மழலையென்றாகிறார் கண்ணே – மாந்தர் வீட்டுக்குள் ஒடுங்கும் விந்தைதான் என்னடி பெண்ணே?” என்று பாடினான். பைலன் “வீட்டுக்குள் ஓட்டுக்குள் அடங்குவதேனடி பெண்ணே – வெளியென திசையென வேறொன்று நிற்கையில் கண்ணே?” என்று உடன் பாடினான்.

ஜைமினி “இதென்ன காட்டுத்தனமான பாடல்? இலக்கணமே இல்லை” என்றான். அவன் அருகே சென்று மிக அருகே குனிந்து “காட்டு வெள்ளம் கரைமீறி வருகுது பெண்ணே – கண்டு குளிரென்று குடிலுக்குள் ஒளிவாயோ கண்ணே?” என்றான் சண்டன். ஜைமினி பல்லைக்கடித்து முன்னால் சென்றான்.

சண்டன் முழவின் கதி மாற்றி முழக்கி “எட்டு திக்கும் ஆடையென்றாகிடும் வெறுமை – விண் தொட்டு தலையெழ நின்றிடும் முழுமை” என்றான். பைலன் உரக்க நகைத்து “எவராயினும் திசைகளை சூடிக்கொண்டுதான் விண்ணேகுகிறார்கள் மனிதர்கள்” என்றான். சண்டன் “ஆம், ஆனால் உயிருடன் உணர்வுடன் ஆடை களைந்து இல்லம் களைந்து ஊர் களைந்து அச்சம் களைந்து ஆணவம் களைந்து அமையும் உணர்வனைத்தையும் களைந்து திசைகளைச் சூடி நின்றிருப்பதற்கோர் ஆண்மை வேண்டும்” என்றான்.

“அருகநெறியினரின் பாதை அது” என்றான் ஜைமினி. “அவர்கள் தங்கள் உடலை இழிவுசெய்பவர்கள். உடல் இறைவாழும் ஆலயம். அதை இடிபாடுகளாகக் கொண்டு அலைகிறார்கள்.” சண்டன் அவனை நோக்கி சென்று முழவை முழக்கியபடி “ஆலயம் கண்டவர்  அறிவதேயில்லை கண்ணே – அணி ஆலயம் என்பதும் ஆடையே யாகும் பெண்ணே” என்றான். ஜைமினி “நாம் இங்கே என்ன செய்கிறோம்? இருட்டுவதற்குள் செல்ல நெடுந்தொலைவு எஞ்சியிருக்கிறது” என்றான்.

முழவை விரைந்து முழக்கிய சண்டன் சட்டென்று தன் மரவுரியைக் கழற்றி அப்பாலிட்டான். வெற்றுடலுடன் கால் தூக்கி வெறிநடமிட்டுச் சுழன்றாடி நின்றான். ஜைமினி திகைத்து அப்பால் திரும்ப அவன் முன்னால் சென்று நின்று தட்தட்தட் என்று முழவை அறைந்து “அந்தணரே, அந்த முப்புரியை கழற்றி வீசுக! அந்த மரவுரியை வீசுக! காற்றை அணிக! திசைகளை அணிக! வேதமழையின் முதல்துளி உங்கள் மேல் விழட்டும்” என்றான். ஜைமினி “அப்பால் செல்க!” என்றான்.

பைலன் தன் ஆடையைக் களைந்து வீசினான். கைகளைத் தூக்கியபடி சண்டனுடன் சேர்ந்து நடனமிட்டான். “ஆம், ஆம், ஆம்!” என்று முழவு முழங்கியது. “ஆம்! ஆம்! ஆம்!” என்று பைலன் கைகொட்டி ஆடினான். “ஆம், ஆம், ஆம்! செத்ததன் வயிற்றினில் சித்தம் இருப்பது பித்தர் அறிவாரோ? ஆம், ஆம், ஆம்! பித்தென்றும் பிழையென்றும் முற்றி எழுவதை மூடர் அறிவாரோ? பற்றிடும் யாவிலும் பேய்கள் வாழ்வதை பாவியர் அறிவாரோ? கற்றிடும் சொற்களே கால்தளை ஆவதை கவிஞர் அறியாரோ?”

அப்பால் ஒரு மரத்தடியில் சென்று வேர்களில் அமர்ந்து அவர்களை விழிசுருக்கி நோக்கிக்கொண்டிருந்தான் ஜைமினி. அவர்கள் ஆடுந்தோறும் வெறிகொண்டனர். வெறியேறும்தோறும் விசைகொண்டனர். விசைமுழுக்கும்தோறும் தாளம் பிசிறின்றி எழுந்தது. கைகளும் கால்களும் விழிகளும் விரல்களும் தாளமென்றேயாகி துடிக்க அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைத்தாடினர். ஒருவரோடு ஒருவர் நிறைந்து ஆடினர்.

மின்னலில் அவர்கள் ஒளியெனத் தெரிந்து அணைய ஜைமினி பாய்ந்து எழுந்தான். இடியோசை காட்டுக்குள் விழுந்து முழக்கம்கொண்டது. முகில்கள் பிளிறியமைந்ததுமே பிறிதொரு பெருமின்னலால் மரங்களனைத்தும் வெண்தழல்களாகி துடித்தணைந்தன. இடியோசை எழுந்து முற்றமைதியை விரித்தது. மீண்டும் செவி எழுந்தபோது காடெங்கும் பறவைக்குரல்கள் எழுந்து முழக்கமாவதைக் கேட்டான். மரக்கிளைகளில் குரங்குகள் கிளர்ச்சிகொண்டு தாவிப்பாய்ந்து சுழன்றுவந்தன.

தொலைவில் மண்மணம் எழுந்தது. இளநுங்கின் மணம் என ஒருமுறையும் வறுபட்ட பருப்பின் மணமென மறுமுறையும் புதுக்குருதியா என ஆழத்திலும் ஐயமெழுப்பும் மணம். உள்ளம் கிளர்ந்தெழ எழுந்த ஜைமினி மீண்டும் அமர்ந்துகொண்டான். ஆனால் அவன் கால்கள் துடித்து மண்ணில் அசைந்தன. அதை உணர்ந்ததும் அவன் அவற்றை இறுக ஊன்றி அழுத்திக்கொண்டான்.

முதல் மழைத்துளி அவன் மேல் விழுந்தது. உடலைக்குறுக்கி மழைத்துளிகளின் அறைதலை வாங்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்த காடு பேரொலியாகியது. மின்னலில் நனைந்துசொட்டிய இலைகள் வெள்ளியொளிகொண்டு மின்னி அணைந்தன. மீண்டுமொரு இடிப்பெருக்கு. மீண்டுமொரு மின்னல் அதிர்வு. அவர்கள் மழையில் ஆடிக்கொண்டிருப்பதை அவன் அடிமரத்தின் குவைக்குழி ஒன்றுக்குள் உடலை நன்கு செலுத்தி ஒடுங்கிக்கொண்டு விழிவிரித்து நோக்கிக்கொண்டிருந்தான்.

KIRATHAM_EPI_35

“அந்தணரே, விடாய் தீர இந்த நீர் போதுமா?” என்றான் சண்டன். மழைக்குள் அவன் பற்கள் வெண்மையாக தெரிந்து மறைந்தன. “உங்கள் விடாய் தீர்ந்த பின்னர் எஞ்சும் மழையை என்ன செய்வீர்கள்?” ஜைமினி முகம் திருப்பி அப்பால் நோக்கினான். சண்டன் “காய்ந்த நிலமென விரிக! மழைமுழுமையையும் பருகலாகும்”  என்றான். பைலன் “வருக, ஜைமின்யரே!” என்றான். ஜைமினி திரும்பி நோக்காமல் மழை தழுவ சிலிர்த்துக்கொண்டிருந்த நெல்லிமரத்தை நோக்கிக்கொண்டிருந்தான்.

[ 58 ]

உடைகள் நீர்சொட்ட உடல்குளிர்ந்து நடுநடுங்கிக்கொண்டிருக்க அவர்கள் உணவுநிலையை சென்றடைந்தனர். அங்கே முன்னரே ஐம்பதுக்கும் மேற்பட்ட வழிநடையர் கூடியிருந்தனர். அடுமனைப்புகை தொலைவிலெழக்கண்டதும் உளம் மலர்ந்த சண்டன் “அன்னம்!” என்றான். பைலன் “ஆம், அன்னம்” என்று கூவினான். ஜைமினி சிரித்தபடி “நீங்கள் கொள்ளும் மகிழ்ச்சிகளில் நான் தடையின்றி பங்கெடுப்பது இதில் மட்டுமே” என்றான்.

“திசைவென்றவனின் கதையை நாம் இன்னமும் முடிக்கவில்லை, சண்டரே” என்றான் பைலன்.  ஜைமினி “திசை மூர்த்திகளிடமிருந்து அர்ஜுனன் மெய்யறிதல்களை பெற்றான். அவர்கள் அவனை வாழ்த்தி சொல்லளித்தனர். அது எப்படி வென்றதாகும்?” என்றான். “வெல்லப்படாத எதுவும் அடையப்படுவதில்லை, அந்தணரே” என்றான் சண்டன்.

சீற்றத்துடன் ஜைமினி “தெய்வங்களை எவரும் வெல்வதில்லை. வேள்விக்கு முன் வந்து அவி கொள்ளும் விண்ணவர் திசைவேந்தர். மானுடன் அவர்களை வெல்ல முடியாது” என்றான். அதே சிரிப்புடன் “வென்றவர் அனைவரும் தெய்வங்களை வென்றவர்களே” என்றான் சண்டன். “தெய்வங்கள் வெல்வதற்குரிய இலக்குகள் என்றறிந்தவனே வெல்வதற்கு எழுகிறான். தெய்வங்களை அடைகிறான். கடந்து சென்று தெய்வமென்றும் ஆகிறான்.”

ஜைமினி “உமது எளிய சூத மெய்யறிவு அவ்வாறு சொல்லலாம். வேத மெய்மை அதை ஏற்காது” என்றான். சண்டன் “மெய்மை எனும் பசுவை ஓட்டி வந்து இல்லத்தூணில் கட்டி கறந்தெடுத்த பாலே வேதம் என்று பிராம்மணம் ஒன்று சொல்கிறது. வெல்லப்படாத ஒன்றை எப்படி கட்டிவைத்தார்கள் உமது வேத மூதாதையர்?’’ என்றான். ஜைமினி உரக்க “நான் உங்களிடம் பேச விரும்பவில்லை. நீங்கள் இருவருமே வேத மறுப்புக் கொள்கை கொண்டவர்கள்” என்றான்.

“அந்தணரே, வேத மறுப்புக் கொள்கை கொண்ட இருவருடன் சொல்லுரசி உங்கள் வேதத்தை கூர்தீட்டிக் கொள்ளலாமல்லவா?” என்று  கேட்டபின் பைலனை பார்த்தான் சண்டன். பைலன் புன்னகைத்தான். “நான் உங்களிடம் பேச விரும்பவில்லை” என்றபின் ஜைமினி முன்னால் நடந்தான். அவர்களிடமிருந்து முற்றிலும் விலகுவதுபோல நடந்துசென்று பின்னர் தயங்கி நின்று அவர்கள் வருவதற்காக காத்தான்.

பைலன் “எந்தச் சொல்லாடலையும் அவர் விரும்புவதில்லை” என்றான். “அஞ்சுகிறார். நம்பிக்கைகளை சூடியிருப்பவர்கள் கைக்குழந்தைகளை இடையில் வைத்த அன்னையரைவிட எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். அமுதூட்டி நெஞ்சணைத்து துயில்கையில் விழித்திருந்து   பேணி வளர்க்கிறார்கள். ஒவ்வொரு கணமும் அதையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பிறனெல்லாம் எதிரியே என அச்சம் கொள்கிறார்கள்” என்று சண்டன் நகைத்தான்.

“நான்காவது பாதம் அர்ஜுனனின் இந்திர உலக பயணத்தைப் பற்றியதல்லவா?” என்று பைலன் கேட்டான். “காப்பிரிகளின் கலங்களுடன் அவன் கிழக்கே சென்றதாக சொன்னீர்கள். இந்திரகீலம் கிழக்கே எங்கோ உள்ளது என்பார்கள். பாரதவர்ஷத்தில் பல இந்திரகீலங்கள் உள்ளன.” சண்டன் “இந்திரவில் சூடி நிற்கும் மலைகளனைத்தும் இந்திரகீலங்களே” என்றான். “ஆனால் கீழைக்கதிர் பாரதவர்ஷத்திற்குள் காலடி வைப்பது இந்திரகீலத்தின் உச்சிப்பாறைமேல் என்பார்கள். அது காமரூபத்திற்கும் மணிபூரகத்திற்கும் அப்பால் விரிந்துள்ள மானுடர் அணுகமுடியா பசுங்காடுகளுக்கும் அப்பால் எங்கோ உள்ளது.”

அச்சொற்களை தொலைவிலிருந்தே கேட்டு மரங்களைப் பார்த்து அக்கறையற்று நிற்பது போன்ற தோரணையில் ஜைமினி அவர்களை எதிர்நோக்கினான். அதைப் பார்த்த சண்டன் புன்னகையுடன் பைலனைப் பார்த்து கண்களை காட்டினான். பைலன் “அவர் அர்ஜுனனை வழிபடுகிறார்” என்றான். “அவர் வேதமெய்யறிந்த பெருவீரர் என அவருடைய குருமுறை எண்ணுகிறது.” அவர்கள் அருகே சென்றதும் ஜைமினி “நாம் அன்னசாலையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்” என ஆர்வமற்றவன்போல் சொன்னான்.

“இந்திர உலகுக்குச் சென்று தன் பெயர்த்தந்தையைப் பார்த்து பணிந்து மெய்யறியவைப் பெற்று அர்ஜுனன் மீண்டதை முழுமையான தனி பாதமாகவே கவிஞர் பாடியிருக்கிறார் அல்லவா, அது ஏன்?” என்று பைலன் கேட்டான். “மூன்று திசைகளிலிருந்தும் அவர் பெற்றது மெய்யறிதலின் மூன்று முகங்களை. கிழக்கில் எழுவதே முதல்மெய்மை” என்றான் சண்டன். “அப்படியென்றால் கிழக்கல்லவா முதலில் சென்றிருக்க வேண்டிய திசை?” என்று ஜைமினி தன்னை அறியாமலேயே சண்டனின் அருகே வந்து கேட்டான். “ஆம், அந்தணரே. ஆனால் அறிதலில் மட்டும் படிப்படியாக மேலெழுவதே உகந்தது” என்றான் சண்டன்.

“இருண்ட தெற்கின் இறப்புலகில் இருந்து தொடங்கி உயிர் முளைகொண்டெழும் கிழக்குவரை செல்வதே உகந்த சுற்று” என்றான் பைலன். சண்டன் உரக்க நகைத்து “நாம் அப்படி சொல்லிக்கொள்ளலாம். அப்படி நிகழ்ந்தது என்று மட்டுமே சூதனால் பாடமுடியும்” என்றான். ஜைமினி “சண்டரே, வேதமெய்ப்பொருளை அறிய வேத முதன்மைத் தெய்வமாகிய இந்திரனிடமல்லவா அர்ஜுனன் சென்றிருக்க வேண்டும்?” என்றான்.

“வேதமூதாதையர் அறிந்த முதல்தெய்வம் யமனே” என்றான் சண்டன். “இப்பெருநிலம் முழுக்க இன்னமும் ஆழ்காட்டுக்குள்ளும் உயர்மலைகளுக்குமேலும் தொல்குடிகள் வாழ்கின்றனர். அவர்கள் நாவில் வாழ்கின்றது வேதமெனும் கனிவிளைந்த சொற்காடு. அவர்களின் முதல்தெய்வம் காலமும் இறப்பும் நோயும் மீட்புமெனத் தோன்றி அருளும் தென்புலத்தோன். அவர்களின் மூதாதையரை அழைத்துச்சென்றவன், அவர்கள் வாழும் தென்னுலகை ஆள்பவன். அனைத்துக்கும் பொருள் அளிக்கும் முழுமையில் குடிகொள்பவன்.”

“பின்னர் எழுந்தவன் குபேரன். ஈட்டிவைக்கும் அனைத்துக்கும் தலைவன். அந்தணரே, வடக்கே இமயமலையுச்சியில் கீரி ஒன்றுள்ளது. மண்ணுக்குள் ஆழ்துளையிட்டு வாழ்வது. பனிக்காலம் முழுக்க அங்கே மறைந்திருப்பதனால் அது ஒவ்வொரு மணியாகச் சேர்த்து கரந்து வைக்கும் இயல்புகொண்டது. குளிர்காலத்தில் மலைக்கீரி வளைகளை அகழ்வது அங்குள்ளவர்களின் தொழில்களில் ஒன்று. பல தருணங்களில் பொன்னும் அருமணிகளும் அங்கே சேர்க்கப்பட்டிருக்கும். அக்கீரியை அவர்கள் தெய்வமென வழிபடுகிறார்கள். அதை குபேரன் என்கின்றன தொல்கதைகள். கொழுத்து உருண்ட அதன் வடிவிலேயே குபேரனும் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.”

“வருணன் மேலைநிலத்தில் மழைநோக்கி அமர்ந்திருக்கும் மக்களின் வேதத்தில் எழுந்த தெய்வம். வேழாம்பலும் மழைக்குருவிகளும் அவனை அறிகின்றன என்கின்றனர் தொல்குடிகள். முதல்மூவரும் அமர்ந்த வேதபீடத்தை பின்னர் இந்திரன் வென்றான் என்கின்றனர் வேதமறிந்த அறிவர். வகுக்கப்பட்ட தொல்வேதம் வருணனின் புகழ் பாடியது. தொடர்ந்த நால்வேதம் இந்திரனையே முதல் தலைவனாகக் கொண்டது. விரிந்த பாலைநிலத்திலிருந்தும் காடுசெறிந்த தென்னிலத்தில் இருந்தும் மலைமேல் பனியுலகில் இருந்தும் நமது மூதாதையர் புல்வெளி விரிந்த பசுநிலத்திற்கு வந்தபோது கண்ட தேவன் அவன்.”

“புல்வெளிகளைப் புரக்கும் தெய்வம் அவர்களுக்கு மேலும் உகந்தவனாக ஆகியிருக்கலாம். இன்றும் பசும்புல்வெளியின் மீது இளமழை நின்றிருக்கையில் கதிரெழக்காண்பது ஒரு பெருங்காட்சியே” என்றான் பைலன். “இம்மண்ணில் காலூன்றி நின்று மானுடர் காணும் காட்சியில் மழைவில்லுக்கு நிகரான அழகு கொண்டது வேறொன்றுமில்லை. இடியோசைக்கு நிகரான ஆற்றல் கொண்ட எதுவுமில்லை. குளிர் காற்றுக்கு நிகரான இனிமைகொண்ட எதுவும் இல்லை.”

ஜைமினி முகம் மலர “ஆம், எங்கள் குல மூதாதையர் என்றும் இந்திரன் பூசகர்களாகவே இருந்துள்ளனர். இந்திரநாதம் விண்ணில் எழும் நாளிலேயே அவர்கள் மூதாதையரை வாழ்த்தும் வேள்விகளை செய்வார்கள்” என்றான். “ஏனென்றால் இந்திரன் பிறரைப்போல அசுரர்களிடமிருந்து எழவில்லை. ஒருபோதும் அசுரர்களால் வழிபடப்பட்டதில்லை” என்றான் சண்டன். ஜைமினி  சினத்துடன் “மீண்டும் மீண்டும் அனைத்தையும் அசுரர்களிடம் கொண்டுசென்று சேர்க்கவே விழைகிறீர்” என்றான். “ஆம், ஏனென்றால் நான் அசுரன்” என்றான் சண்டன்.

அதன்பின்னர் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அன்னசாலை அணுகிவந்தது. சிறிய மண்பாதை ஒன்று அதை நோக்கி இறங்கிச்சென்றது. மழைநனைந்து மிதிபட்டு அது சேறாகிவிட்டிருந்தது. அவர்கள் அதில் ஒவ்வொருவராக இறங்கிச்சென்றனர். ஜைமினி “அவ்வண்ணமென்றால் வருணனை வைதிகர் போற்றுவது ஏன்?” என்றான். “அவன் இந்திரனுக்கு உகந்த தோழனாக ஆனான் என்பது தொல்கதை” என்றான் சண்டன். ஜைமினி “எப்படி?” என்றான்.

“நீங்கள் அறிந்திருப்பீர்கள், அந்தணரே. விருத்திராசுரனுக்கு எதிரான போரில் வருணன் இந்திரனுடன் துணைநின்றான். அதன்பொருட்டே வேள்விகளில் அவிகொள்ளலானான். அவிகொண்டு அவன் ஒளிபெற்று ஆதித்யனாக மாறினான். வைதிகர் வணங்கும் தெய்வமென்று அமர்ந்தான்” என்றான் சண்டன். “இங்கே மிக அருகில் கரூஷம் என்னும் சுனை ஒன்றுள்ளது. விருத்திரனைக் கொன்ற பழியை இந்திரன் அங்குவந்து நீராடி தவமிருந்து அகற்றிக்கொண்டதாக சொல்கிறார்கள் இங்குள்ள தொல்குடிகள். நாளை நாம் அங்கு செல்வோம்.”

ஜைமினி ஒன்றும் சொல்லவில்லை. பைலன் “இனிய இரவொன்று அமையுமென நினைக்கிறேன். இன்னுணவு, குளிர்ந்த மழைக்காற்று” என்றான். அன்னசாலையில் இருந்து வெளியே வந்த புரப்போன் கைகூப்பி “அந்தணர்களுக்கும் வழிப்போக்கருக்கும் நல்வரவு. உணவுகொண்டு எங்களை வாழ்த்துக!” என்றான். “ஆம், இனிய அன்னசாலை. பாலையில் சுனைபோல பேரருளின் வடிவம் இது” என்றான் பைலன். “நீராடி உணவுண்ணலாம். அப்பால் ஒரு சிறு சுனை உள்ளது. மழைக்குளிரில் அந்நீர் இனிய வெம்மையுடன் இருக்கும்” என்றான் புரப்போன்.

“நீராடியபடியேதான் வந்தோம்” என்றான் சண்டன். பைலன் “ஆம்” என்றான். ஜைமினி “நீராடாது உணவுண்பதா? நீர் அந்தணர் அல்லவா?” என்றான். பைலன் சண்டனிடம் “நீர் சென்று உணவுண்ணும். எனக்கு வேறுவழியே இல்லை” என்றான். சண்டன் “உமது ஊழ் அது” என்றபின் சிரித்தபடியே முழவுடன் விலகிச்சென்றான். “நீராடி வருக அந்தணரே, நான் என் முழவை உலரச்செய்யவேண்டும். மூன்று உழக்கு மது அருந்திய நாவென உளறுகிறது” என்றான்.

“நீராடுவோம்” என்றான் ஜைமினி. அவர்கள் அன்னசாலையை சுற்றிக்கொண்டு நடந்தனர். “இவர் சொல்லும் கதைகளை எல்லாம் நான் உதிரிச்செய்திகளாக முன்னரே கேட்டிருக்கிறேன்” என்று ஜைமினி சொன்னான். “அவற்றில் எப்பொருளும் இல்லை. அவை மெய்யறிதலை வெறும் குலப்போராகவும் அரசாடலாகவும் குறுக்கிவிடுகின்றன. அவற்றுக்குள் சென்றுவிட்டவரால் மெய்மையை ஒருபோதும் சென்று தொடமுடியாது.” பைலன் “நடக்காத பறவை ஒன்று இல்லை, ஜைமின்யரே” என்றான்.

ஜைமினி “உம்மை அவருடைய மாயம் கட்டிவிட்டது. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை இனி” என்றான். அவர்கள் குறும்புதர்கள் சூழ்ந்த சிறிய சுனையை அணுகியபோது அங்கே சிறுவன் மட்டும்  நீராடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். சுனையில் இருந்து நீர் அள்ளிக் குளிப்பதற்காக கமுகுப்பாளைத் தொன்னைகள் போடப்பட்டிருந்தன. அவன் நீரை அள்ளி மேலே விட்டு உடல் சிலிர்த்து உரக்க நகைத்தான்.

ஜைமினி முகம் மலர்ந்து “அந்தணர்” என்றான். “ஆம், நான் முதலில் ஏதோ வெண்ணிற மரம் என நினைத்தேன்” என்றான் பைலன். காற்று வீச மழைத்துளிகள் சொட்டியபடி கிளைகள் அசைந்தன. அவர்கள் அருகே அணுகியபின்னர்தான் சிறுவன் அவர்களைக் கண்டான். “வணங்குகிறேன், உத்தமர்களே” என்றான். “அங்கிரீச மரபில் வந்தவனும் விஸ்வகரின் மைந்தனுமாகிய என் பெயர் சுமந்து.” ஜைமினி தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

பைலன் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது “ஆம், உங்களை நான் கேள்விப்பட்டேன். நான் வைஜயந்தம் என்னும் சிற்றூரில் ஒரு வேதசாலைக்குச் சென்றபோது என்னைப்போலவே ஒரு சிறுவன் வந்துசென்றதாகச் சொன்னார்கள். உங்கள் பெயரையும் சொன்னார்கள்” என்றான். “என்னைப்போலவே செல்கிறீர்களா?” என்றான் பைலன்.

“ஆம், நான் வேதமெய்ப்பொருள் அறிந்த வியாசராகிய கிருஷ்ண துவைபாயனரை அன்றி பிறிதெவரையும் இனிமேல் ஆசிரியன் எனக்கொள்ளமாட்டேன் என்று உறுதிகொண்டுள்ளேன்” என்றான் சுமந்து. “கிழக்கே வங்கத்தில் என் சிற்றூரான தீர்க்கஜலத்தில் இருந்து குடியும் குலமும் விட்டு நான் கிளம்பியது அதன்பொருட்டே. தனியாக இத்தனை தொலைவு வந்துவிட்டேன். சென்றடையாமல் ஓய்வதில்லை.”

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதை விமர்சனம் 12

$
0
0

download

 

அன்புள்ள ஜெ

 

நான் சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையை ஆரம்பத்தில் கொஞ்சம் வாசித்துவிட்டு விட்டுவிட்டேன். மேலோட்டமான கதை என நினைத்தேன். அதன் தொடக்கமும் கதையோட்டமும் வழக்கமாகக் கணையாழி இதழில் அந்தக்காலத்திலே வந்துகொண்டிருந்த சம்பிரதாயமான கதைகளைப்போல இருந்தன. ஒரு பிடிப்பான தொடக்கம் இல்லை. நீங்கள் சொன்னபின் வாசித்தேன் முக்கியமான சிறுகதை என்று தோன்றியது. ஆனால் ஆசிரியர் இன்றைக்குச் சிறுகதை வாசிப்பு அடுத்தகட்டத்துக்குச் சென்றுவிட்டது என்பதை அறிந்திராமல் சம்பிரதாயமாக மெல்ல தொடங்கிவிட்டார் என நினைக்கிறேன்

 

சங்கரநாராயணன்

 

 

அன்புள்ள ஜெ,
சிறுகதைகளைப்பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சிறுகதைகளை வாசித்துவிட்டேன். ஆனால் இந்தக்குறிப்புகளை வாசித்தபின்னர் அக்கதைகளைப்போய் வாசிக்கையில்தான் நான் என்ன விட்டுவிட்டேன் என்று தெரிகிறது. உதாரணமாக ராம் செந்திலின் கதையில் நான் அந்தப்பெண்கள் பாவனைதான் செய்கிரார்கள் என்பதைப்புரிந்துகொள்ளவே இல்லை.
அதேபோல இந்த விமர்சனங்கள் ஒரு கதையில் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதோடு மட்டும் அல்லாமல் அவைகளை எப்படிச் சமாளித்துச்செல்வது என்பதையும் காட்டுகின்றன. பலகதைகளில் நீங்கள் சொன்ன உத்திகள் அற்புதமான்வை. உதாரணமாக லண்டன் கதையில் அந்த இலங்கைக்கதாபாத்திரம் முன்னாடியே சொல்லப்பட்டிருக்கலாம் என்பது ஒரு நுணுக்கமான குறிப்பு
சினிமாவில் இதைச்செய்வார்கள். யார் கதைக்கு முக்கியமோ அவர்கள் கதைக்குள் முன்னாடியே வந்துவிட்டிருப்பார்கள்
ஆர். எஸ். மோகன்
senthilஅன்புள்ள ஜெ,
நலம்தானே?
மடத்துவீடு சிறுகதை பற்றி உங்களுக்கு கடிதம் எழுதியபோது, நீங்கள் தளத்தில் பிரசுரிப்பீர்கள் என்று நினைக்கவில்லை. ஒரு துவக்கநிலை எழுத்தாளனுக்கு இவ்வளவு விரிவான விமர்சனங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கவில்லை. உங்களாலயே அது சாத்தியமானது.  கடிதம் எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மிகுந்த உற்சாகத்தை இது தந்திருக்கிறது.
கதையில் வரும் படிமங்கள் குறித்து அனிஷ்கிருஷ்ணன், சிவா ஆகியோர் எழுதியிருந்தனர். ப்ரியம்வதா விரிவாக தனது கோணத்தை எழுதியிருந்தார். நண்பர் கடலூர் சீனு உட்பட நிறைய பேருக்கு, அந்த பெண்கள் எப்படி பாலியல் சீண்டல்களை அனுமதிக்கிறார்கள் என்கிற கேள்வி இருந்தது. மற்றொரு நண்பர், அப்படி இயல்பாக பேச முடிகிறதென்றால் அது குறித்த பின்னணியை எழுதவேண்டாமா? என்றும் கேட்டிருந்தார்.அந்த பெண்களின் சூழல் தான் பின்னணி என்று எழுதியிருந்தேன்.
இந்த மையத்தை நீங்கள் விரிவாக தொட்டெடுத்து காட்டியபோது,  மிகவும் மகிழ்வாக உணர்கிறேன், ஜெ. நன்றி.
வீடு பற்றிய விரிவான வர்ணனை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த பெண்களை பற்றி எழுத ஆரம்பித்தபோதே, கற்பனையில் அந்த பெண்பொம்மைகளும், வீடும் ஏறிக்கொண்டது. புதியவர்களுக்கான கதைகள் எழுதியபோதும், வீடு பற்றி மிகவிரிவாக எழுதியிருந்ததை, ஜாஜா குறிப்பிட்டு, கதையை ஜிம்மில் சேர்க்கும்படி கூறியது ஞாபகமிருக்கிறது. மனிதர்கள் என்றாலே, வீடு எப்படியிருக்கும் என்றே யோசிக்கமுடிகிறது. இனி கவனத்தில் கொள்கிறேன்.
தொடர்ந்து ஆலோசனை கூறி, பிரசுரித்து ஊக்கமளித்த பாஸ்கர், சிவா கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் நன்றி.
அன்புடன்
ராம் செந்தில்
images (2)

அன்புள்ள ஜெ,

முதலில் இந்த கதைகளை நீங்கள் வாசித்து இத்தனை நீண்ட விமர்சனம்/ ஆலோசனை எழுதியிருக்க வேண்டியதே இல்லை. எனினும் பொருட்படுத்தி அக்கறையுடன் எழுதி இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது, இக்கதைகள் சுட்டியளித்து வெளிச்சம் பாய்ச்சியதும் நிச்சயம் ஒரு கவனத்தை அளித்துள்ளது.
‘வருங்கால எதிரி’ எனும் பதத்தை வாசிக்கும் போது முதலில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. விமர்சனங்களை எதிர்பார்த்தே உங்களுக்கு அனுப்பியிருந்தேன்எ. கறாரான நிராகரிப்பாக இருந்தாலும் சரிதான். நான் எனது ஆளுமையை அகங்காரத்தை இறுக்கி கொள்ளாமல் முடிந்தவரை அதிலிருந்து விடுபட்டு, என்னை சிதறடித்து, படைப்பூக்கத்தை பெற முடியுமா என பார்க்கிறேன், காந்தியோ அல்லது இயல்போ, அல்லது போதிய துணிவின்மையோ அல்லது இவற்றின்கலவையோ தெரியவில்லை. ஆகவே எனக்கு இந்த சொற்கள் பெரிதாகப்படவில்லை. ஆகவே அவை என்னை எந்த அளவிலும்பாதிக்கவில்லை. நீங்கள் ஒருமுறை சொன்ன நித்யாவின் கதை இன்றளவும் என்னை வழிநடத்துகிறது. நித்யா ஒரு ஹிப்பி பெண்ணிடம் முத்தம் பெற்ற கதை. ‘it is human’. உங்களுக்கு இதையெல்லாம்எழுத தேவையில்லை, ஆனால் எங்கே நான் புன்பட்டிருக்கிறேனோ என நீங்கள் எண்ணிவிட கூடாது என்பதால். சீனு எழுதியதில் காளி புண்பட்டுவிட்டார் ஏனெனில் கதை வரிசைப்படி அவர் தாம் மூன்றாமவர் நான் நான்கமவராக்கும்:)
வாசுதேவனோடு சேர்த்து இதுவரை பனிரெண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். எல்லாமே இணைய இதழ்களில் வெளியானவை தான். நண்பரின் தளத்தில் வெளியான ஒரு கதையும், உங்கள் தளத்தில் வெளியான கதையும் தவிர்த்து மீதி பத்து கதைகளில் எட்டு பதாகையிலும் இரண்டு சொல்வனத்திலும் வெளியாகியுள்ளன. பதாகை எனக்கு ஏதுவாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் எடிட்டோரியல் வழிமுறை. நானொரு கதை அனுப்பினால், அதை பதாகை எனது பெயரை நீக்கிவிட்டு பதாகைக்கு கதை எழுதும் வேறு நான்கு எழுத்தாளர்களுக்கு அனுப்பும். அவர்கள் இக்கதை பிரசுரிக்கதக்கதா என சிபாரிசு செய்வார்கள். அடுத்த கட்டமாக அவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்படும். எந்தெந்த கருத்துக்கள் எவர் கூறியது என கூறாமல், அவை எனக்கு அனுப்பப்படும். பிரசுரிக்கலாம், அல்லது திருத்தங்களுடன் பிரசுரிக்கலாம், அல்லது நிராகரிக்கலாம் என மூன்றில் ஏதோ ஒன்றை சொல்வார்கள். அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளை கருத்துக்களை ஏற்கவோ நிராகரிக்கவோ எனக்கு உரிமை உண்டு. உறுதியாக என் கதை குறைந்த பட்சம் நான்குபேரால் அக்கறையுடன் வாசிக்கபடுகிறது என்பது தான் முதன்மை காரணம். இணைய இதழ்கள் ஒர்வகையில் சிற்றிதழ்கள் போலத்தான். சில நூறுகளுக்கு மேல் அதன் வாசகர் பரப்பு கிடையாது. பெரும்பாலும் அவையும் ஓரிருவரின் தனிப்பட்ட ஆர்வம்/ உழைப்பின் மீது தான் நடக்கிறது. பதாகை, கபாடபுரம், இன்மை போன்ற இதழ்களை கூறலாம். சொல்வனம், வல்லினம் போன்ற இதழ்கள் சற்றே பெரிய அமைப்பு கொண்டவை. அச்சிதழ்களில் காலச்சுவடு, உயிர்மையுடன் ஒப்பிடலாம். வாசகர்எண்ணிக்கை சில ஆயிரங்களை தொடலாம்.  இணைய இதழ்களில் நம் படைப்பை காண அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்பது மற்றொரு வசதி. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி தரமற்ற ஆக்கங்கள் இணைய இதழ்களிலும் அச்சிதழ்களிலும் வரவே செய்கின்றன. என்ன செய்ய சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்.
ருசி 2014 ஆம் ஆண்டு எழுதிய கதை. அதையெல்லாம் ஒரு சாக்காக கொள்ள முடியாது தான். இந்த கதையை அதற்காக துறக்கவும் முடியாது.அது நான் எழுதிய கதை தானே. ஏனெனில் அதே ஆண்டு வேறு நல்ல கதைகளும் எழுதியதாக நம்புகிறேன்.. அதற்கு பின்னர் எழுதியவைகளில் திருப்தி அளிக்காதவையும் உண்டு. நீங்கள் சுட்டியளித்த பின்னர் இந்த கதையை வாசித்த போது இதன் பிழைகளை ஓரளவு புரிந்துகொண்டேன். மோசமான கதையல்ல ஆனால் நன்றாக வந்திருக்க கூடியது.உங்கள் விரிவான விமரிசனம் எங்கெல்லாம் இது அழுத்தமாக இருந்திருக்கலாம் என சுட்டிகாட்டியது. சிங்கப்பூர் கதைகளின் மீதான விமரிசனங்களும், இக்கதைகளின் மீதான விமரிசனங்களும் இளம் எழுத்தாளனாக எனக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்கும். முக்கியமான ஒரு விஷயத்தையும் கற்று கொண்டேன், பொறுமை. கதையை அவசரப்பட்டு பதிப்பிக்க கூடாது. அதிலிருந்து நமது பிணைப்பை துண்டித்துக்கொண்டு, அது நமது கதை என்பதை மறந்துவிட்டு வாசித்து பார்க்க வேண்டும். அப்போதும் கதை தேறினால் பிரசுரத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த சுய மதிப்பீட்டை பழகிக்கொள்ள முயல்கிறேன்.
நன்றி
சுனில்
Madhavan_Elango
மிக்க நன்றி, ஜெயமோகன்.
எனக்கு மிகவும் நெருங்கியவர்கள்கூட, “நீங்கள் என்னென்னவோ எழுதிப் பகிர்ந்துகொண்டிருப்பதை பார்க்கிறேன். ஆனால் வாசிக்க நேரமிருப்பதில்லை” என்று கூறுமளவிற்கு, ‘வாசக எதிர்வினையற்ற’ என்று மட்டுமல்லாமல் ‘வாசிப்பு வாசமே இல்லாத’ சூழலில், அதற்கும் மேலாக பிறருக்காக ‘நேரமே இல்லாத’ ஒரு நிலையில், நீங்கள் ‘வெண்முரசு’ எனும் மாமலையைத் தோள்களில் சுமந்துகொண்டு, இடையறாத இலக்கியச் செயல்பாடுகள், பயணங்கள், திரைப்படத்துறை என்று பல திறக்குகளில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருந்தாலும், இடையே என் போன்ற எளியவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, சிரத்தையோடு பதிலளித்துக்கொண்டும், தொடர்ந்து உரையாடல்கள் நிகழ்த்திக்கொண்டும் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.
சமீபத்தில் என் கல்லூரி நண்பர்கள், “‘உன்னுடைய நேரத்தை எப்படி நிர்வகிக்கிறாய். எங்களுக்கெல்லாம் நேரமே போதவில்லை!” என்று வாட்சேப்பில் கேட்டார்கள். இதற்கெல்லாம் பதிலே சொல்ல முடியாது எனினும், உண்மையில் நான் செய்துகொண்டிருப்பது ஒன்றுமே இல்லை. உங்கள் ஆவணப்படத்தில் நீங்கள்  தட்டச்சு செய்யும் வேகத்தை அவர்கள் பார்த்திருக்கவேண்டும். உங்களின் அந்த உழைப்புக்கு என் வந்தனங்கள். என் மீதான அக்கறைக்கும் நன்றிகள்.
என்னுடைய அலுவலகத்தில் மாதத்துக்கு ஒருமுறை மொத்த அணியினரையும் ஒன்றுகூட்டி ஆய்வு சந்திப்புகளை நடத்துகிறேன். சந்திப்பின் துவக்கத்தில் அனைவரிடமும் பச்சை, சிவப்பு மற்றும் நீலம் என்று மூன்று வெவ்வேறு வண்ணத்தாள்களை (post-it) தந்து அவர்களுக்கு பத்து நிமிடங்கள் வழங்குவேன்.
1. பச்சை நிறத் தாள்களில் அணியில் ‘நன்றாக’ சென்றுகொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றி எழுத வேண்டும். அவற்றை ‘எந்திரங்கள்’ (engines) என்று அழைக்கிறேன். இவைதான் நம்மை முன்நகர்த்திக் கொண்டு செல்பவை. அவற்றை எப்பாடுபட்டேனும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும்.
2. சிவப்பு நிறத்தாள்களில் அணியில் ‘மோசமாக’ செயல்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றியும், எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் இடர்களைப் பற்றியும் எழுதவேண்டும். அவற்றை ‘நங்கூரங்கள்’ (anchors)  என்று அழைக்கிறேன். இவைதான் நம்மை விடாமல் பற்றிக்கொண்டு பின்னிழுத்துக் கொண்டிருப்பவை. அவற்றை எப்பாடுபட்டேனும் களைய முயற்சிக்கவேண்டும்.
3. நீல நிறத்தாள்களில் ‘பிரச்சினைகளைக் களையும் நடவடிக்கைகளையும், புதிய யோசனைகளையும்’ எழுதச் சொல்கிறேன்.
பச்சை, சிவப்பு, நீளம் என மூன்று அமர்வுகளாக சந்திப்பு  நடக்கும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒவ்வொருவரும் அவர்கள் எழுதியிருப்பதை வாசித்து விளக்கிவிட்டு வெள்ளைப்பலகையில் ஒட்டிவிடவேண்டும். அது சார்ந்து விவாதங்கள் சீரிய முறையில் நிகழும். ஒவ்வொரு மாதமும் நிகழும் இந்தச் சந்திப்பு என்னளவில் மிகவும் முக்கியமானது. எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன். இந்த சந்திப்பை எந்த காரணத்துக்காகவும் விலக்குவதை நான் விரும்புவதில்லை. அலுவலகத்தில் மட்டுமல்ல வீட்டிலும் இதைக் கடைப்பிடிக்கிறேன். கடந்தமாதம் என் மகன், “நீ அதிகமாக வாட்சேப் உபயோகிக்கிறாய். எனக்கான நேரம் ஒதுக்குவதில்லை’ என்று கோபப்பட்டான். அதன் காரணமாகவே வீட்டில் ‘no device day’ என்கிற விதியை அறிமுகப்படுத்தினோம். அதிகமான ‘ரெட் கார்டுகள்’ அவனிடமிருந்துதான் வரும். அதுவும் எனக்காகத்தான் இருக்கும். :-)
உங்கள் விமர்சனத்தை நான் வாசிக்கும் பொழுது இந்த ஆய்வு சந்திப்புதான் எனக்கு நினைவுக்கு வந்தது. முடி சிறுகதையை ஆழமாக வாசித்து உங்கள் மதிப்புரையை விரிவாக பச்சை, சிவப்புத் தாள்களில் எழுதி ஒட்டியிருந்தீர்கள். பச்சையைவிட சிவப்புத்தாள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்ததையும் கண்டேன். தமிழ் இலக்கிய உலகில் முதன்மையானவர்களில் ஒருவரான உங்களிடமிருந்து வரும் இந்த மதிப்பீடு என்னளவில் மிகவும் முக்கியமானது. ‘இது எனக்குப் பொக்கிஷம்’ என்று க்ளீஷேவாக சொல்லிவிட்டுப் பூட்டி வைத்துவிடாமல், கையிலேயே வைத்துக்கொண்டு என்னைத் திருத்திக்கொள்ளவே விரும்புகிறேன். இனி நான் நீலத்தாள்களை கையிலெடுக்கவேண்டும்.
“தேவையற்றவை விழுந்தால்தானே சிலையொன்று உருவாகும். அது வேண்டாம் என்றால் நான் கல்லாக இருக்கவே விரும்புகிறேன் என்றாகிவிடும்.” என்று நான் உங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். நான் கல்லாக இருக்க விரும்பவில்லை. அதன் காரணமாகவே என்னுடைய முந்தைய கடிதத்தை உங்களுக்கு எழுதியதும். வெங்கட் சாமிநாதன் அவர்கள் என்னுடைய ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையைப் பற்றி ஒருமுறை பேசும்போது, “நல்ல கதை. ஆனால் இந்த melodrama சமாசாரங்களை விட்டு விடு மை டியர் மாதவன்” என்று கூறினார். அதன் பிறகு, அதற்கான பயிற்சியாகவே ‘முடி’ மற்றும் இன்னும் சில கதைகளை எழுதினேன். அவர் குறிப்பிட்ட melodrama அம்சங்களைப் பொருத்தவரை, அந்தப் பயிற்சியில் ஓரளவுக்கு  வெற்றியும் பெற்றேன் என்றே நினைக்கிறேன். ஆனால் இதை அவர் சொல்லாமல் விட்டிருந்தால் அவை இன்னமும் என்னோடு ‘உணர்ச்சிக் கொந்தளிப்புகள்’ தொடர்ந்து வந்திருக்கும். என்னுடைய எல்லா கதைகளையும் பொறுமையாக வாசித்து விட்டு வாழ்த்திய  திலீப்குமார், உங்களைப் போன்றே பல கருத்துக்களை வழங்கினார். அவருடைய கடிதமும் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு நான் கதைகள் எழுதவே இல்லை. இடைப்பட்ட நேரத்தில் கதைகளுக்கான கருக்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனது. அதில் சிலவற்றை எழுத ஆரம்பித்து பாதியிலேயே விட்டுவிட்டேன். சிலவற்றை முடித்து விட்டேன், ஆனால் திருப்தியில்லை. எழுதவே இல்லை என்பதை விட பிரசுரத்துக்கு அனுப்பவில்லை என்பதுதான் சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் வெ.சா அவர்களின் நினைவு நாள் அன்று ஒரு சிறுகதை எழுதினேன். அது என்னளவில் ஓரளவிற்கு திருப்தியளித்த கதை. நான் ‘முடி’ கதையில் முயன்ற ஒரு விஷயம் இதில்தான் முழுமையாகக்  கைக்கூடியிருக்கிறது என்று நினைக்கிறேன். முடி கதை வாசித்தவர்களில் என் தம்பி மட்டுமே அந்த முயற்சியைப் பற்றி பேசியிருந்தான். ஆனால், அதைப் பற்றி (நீங்கள் உட்பட) வேறு யாரும் பேசாததிலிருந்து, அது சரியாகக் கையாளப்படவில்லை என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். எனக்கும் அப்போது அதில் முழு திருப்தி இருக்கவில்லைதான். முந்தைய கடிதத்தில் கூறியிருந்தது போல சில மணிநேரங்களில் எழுதி உடனே அனுப்பிவிட்டேன். இதை தேர்ந்த எழுத்தாளர்கள் செய்யலாம். என்னைப் போன்ற மாணவர்கள் செய்யக்கூடாது. செய்தால் அது அசட்டுத்தனமே அன்றி வேறில்லை.
இரண்டு விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். என் வாசிப்பைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். உண்மையில் நான் வெகுஜன இதழ்களில் வரும் கதைகளைவிட, தீவிர இலக்கியவாதிகளின் படைப்புகளையே அதிகம் வாசித்திருக்கிறேன்; விரும்புகிறேன். ஆனால், நீங்கள் கூறியுள்ளது போல் ஆழமான இலக்கிய எழுத்தின் பாதிப்பு முடியில் இல்லை என்பதுவும் முற்றிலும் உண்மை. பொதுவாக நான் என் மனதின் ஓட்டத்தைத் தொடர்ந்து சென்று எழுதுகிறேன். ‘பார்வையை மாற்றி’ ஓரிருமுறை வாசித்து, திருத்தியிருந்தால் அவற்றைக் களைந்திருக்கலாம். அப்படிச் செய்யாததற்குக் காரணம் நான் மேலே கூறிய அதே அசட்டுத்தனம்.
Something else -
ஆனால், ஏன் என் மனம் அப்படி செயல்படுகிறது? ஏன் அது ஆழத்தைத் தொட முயலவில்லை? நான் ஏன் ‘பார்வையை மாற்றி’ என்று கூறுகிறேன்? இது உளவியல் சார்ந்தது. என் ஆளுமை சார்ந்தது. அதற்கு நான் காரல் யுங் பற்றியும் மையர்ஸ் அண்ட் பிரிக்ஸ் பெண்கள் உருவாக்கிய எம்.பி.டி.ஐ (MBTI) பற்றி பேசவேண்டும். காரல் யுங் பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் MBTI பற்றி எழுதியிருக்கலாம். ஆனால் எனக்கு நினைவிலில்லை. MBTI-யை பற்றி என்னுடைய பெல்ஜியம் ஆசான் யோஸ் மோன்ஸ் அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். இரண்டு வாரப் பயிற்சி. இதைப் பற்றி அறிந்துகொண்ட நாள் புத்தனானதைப் போல் உணர்ந்தேன். இது பற்றி அவரிடம் சொன்ன பிறகு வியந்து என்னை மதிய உணவுக்கு அழைத்தார். மதிய உணவுக்கு சென்றவன், இரவு உணவுக்கு பிறகே வெளியே வந்தேன். கிட்டத்தட்ட பத்து மணிநேர உரையாடல். மிகையில்லை.
நான் யாரென்பதே எனக்கு அப்போதுதான் புரிந்தது. என் மனைவி யாரென்று புரிந்தது. என் தந்தையின் பார்வையில் என் தாயும், என் தாயின் பார்வையில் தந்தையும் ஏன் அப்படித் தெரிகிறார்கள் என்று புரிந்தது. என் தம்பியைப் புரிந்துகொண்டேன். உலகில் உள்ள அத்தனை சச்சரவுகளும் இதுவே காரணம் என்று தோன்றியது. என் உடன்பணிபுரிபவர்கள் உட்பட நானறிந்த அத்தனைப் பேரும் அன்றிலிருந்து வேறு மனிதர்களாகத் தெரிந்தார்கள். நான் பறந்துகொண்டே இருந்தேன். அது ஒரு பரவச மனநிலை. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிட்டதாக உணர்ந்த தருணமது.
நீங்கள் யாரென்பதைக்கூட உங்கள் (கட்டுரை, புனைவு அல்ல) எழுத்தின் மூலமாக ஊகித்து வைத்திருக்கிறேன். சுஜாதா யாரென்பதும், எஸ்ரா யாரென்பதும், சாரு, மனுஷ்யபுத்திரன், ஞாநி இவர்களெல்லாம் யாரென்பதையெல்லாமும் ஊகித்து வைத்திருக்கிறேன். உங்களை நேரில் சந்திக்கும் போது இதுகுறித்தே முதலில் பேச விரும்புகிறேன். இதைப் பற்றி விரிவாகவே எழுத இருக்கிறேன். இப்போதைக்குச் சுருக்கமாகச் சொன்னால் நானொரு ‘Extroverted-iNtuition’ வகையறா. ஆழமான, தீவிர இலக்கியங்கள் ‘Introversion-Sensing’ எழுத்தாளர்களுக்குக் கைவந்தக் கலை. அது அவர்களுக்கு இயல்பாக வரும். என்னைப் போன்றவர்களால் முடியாதென்பதில்லை. அதற்கு நாங்கள் மெனெக்கெட வேண்டும். வேறொரு கண்கொண்டு பார்க்கவேண்டும். சுயத்தை இழக்கவேண்டும். இவற்றைப் பற்றி அறிந்திருப்பதால், அவர்களைப் போல வாழ்க்கையைப் பார்க்க ‘முயல்வதன்’ மூலம், ‘எழுதப் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம்’ அவ்வாறு படைக்க முடியும். ஆனால், அது ஒரு போலச் செய்தலே. அப்படிச் செய்வதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் வணிக இலக்கியங்கள் விரும்பி வாசிக்கப்படுவதும், ஐரோப்பிய நாடுகளில் தீவிர இலக்கியங்கள் வாசிக்கப்படுவதற்கும்கூட காரணம் இருக்கிறது. இந்தியா ஒரு ‘Extroverted-iNtution-Feeling’ dominated society. ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ‘iNtroverted-Sensing-Thinking’ societies. அவ்வளவு தூரம் எதற்குப் போகவேண்டும். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும்கூட இந்த வேறுபாடுகள் பொருந்தும். மேலும் ‘வணிக’ இலக்கியம் என்று அழைப்பதை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. உதாரணத்துக்கு பெல்ஜியத்தில் தீவிர இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் அதிகமாக விற்கப்படுகிறது என்பதற்காக அதை ‘வணிக இலக்கிய’ வகையில் சேர்க்க முடியுமா?  ஒரு சமூகத்தில் பெரும்பான்மையோர் ‘உளவியல் ரீதியாக’ ஒன்றை விரும்புவதால், அது மற்றெனையவற்றைவிட மிக எளிதாகவே விற்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பான்மையானோர் அப்படி எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் காரணம் வணிக ரீதியானது அல்லவே. வணிகத்தைப் பற்றி வணிகர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். வணிக எழுத்து எழுதுபவன், வணிக எழுத்து வாசிப்பவன் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ‘வெகுஜன’ அல்லது நீங்கள் கூறியது போல் ‘பொதுவாசக’ என்பது கூடப் பரவாயில்லை. ஆனால், அதுவும் சரியான இலக்கிய வகைமைப்படுத்தல் இல்லை. இது பற்றி என்னுடைய ஆசான் யோஸ் மோன்ஸிடமும் விவாதித்திருக்கிறேன்.
வணிக இலக்கியம், தீவிர இலக்கியம் பற்றி இதுவரைப் பேசிய யாருமே (நீங்கள் உட்பட) இதை உளவியல் ரீதியாக அணுகவில்லை என்பது வேதனையான உண்மை.  இலக்கியம் மட்டுமல்ல, எந்தக் கலையும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப்படுவதற்கு காரணம், ஒவ்வொருவிதமாக ரசிக்கப்படுவதற்கும் உலவிய காரணம்தான்.  மீண்டும் சொல்கிறேன். இது காலை, இலக்கியம் சார்ந்தது மட்டுமல்ல. It’s a broader subject.
இந்தச் சிக்கல் குழந்தை வளர்ப்பிலும் இருக்கிறது. ‘introverted’ குழந்தையை ‘ஊமைக்கொட்டான்’ என்று ஒதுக்குவது, ‘extroverted’ குழந்தையை ‘வாயாடி’ என்று நையாண்டி செய்வது. இரண்டு ‘extroverted’ பெற்றோருக்குப் பிறந்த ‘introvert’ குழந்தை படும்பாட்டை என் கண்ணால் கண்டிருக்கிறேன். அதற்குப் பின்னால் அவர்களுக்கு MBTI வகுப்பு எடுக்கவேண்டியதாய்ப் போயிற்று. எனவே எல்லாப் பெற்றோர்களும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று இது. கடந்த முறை இந்தியாவுக்கு வந்த பொழுது ஒரு கல்லூரியில் MBTI வகுப்பு எடுத்தேன்.  வகுப்பின் முடிவில், ஒரு பெண் என்னிடம் வந்து, “சார், நீங்கள் இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள்? இன்னும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு தெரிந்திருந்தால் எனக்கு விவாகரத்து நடந்திருக்காது” என்று கூறினார். பெற்றோர் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்கவேண்டிய ஒன்று. நானே அலுவலகத்தில் presentation செய்வதாக இருந்தால், அது யாருக்கு என்று தெரிந்துகொண்ட பிறகே தயாரிக்கிறேன். ‘sensing’ ஆசாமிகளாக இருந்தால் நிறைய facts & figures போட்டு presentation முழுக்க bulletin points-ஆக இருக்கும். ‘intution’ ஆசாமிகளுக்காகவென்றால், presentation முழுக்க படங்களாக இருக்கும். ஒரு வீடியோ நிச்சயம் இருக்கும். மாற்றி செய்தால் முடிந்தது கதை. இரண்டும் கலந்து செய்துவிடுவது எப்போதும் நல்லது. இப்படிப் பதினாறு வைகையான மனிதர்கள். அதற்கு மேலும் இருக்கலாம் ஆனால் தனித்துவமாக பதினாறு. அது சார்ந்து இன்னும் பல நுட்பமான விஷயங்களும், உதவிக்குறிப்புகளும் இருக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் என் பயிற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும். ;-) அல்லது  இது குறித்து என்னிடமிருந்து ஒரு நீண்ட கட்டுரையை நீங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இப்போதைக்கு ஒரு ஜோக்:
- – -
ஒரு intution திருடனும், sensing திருடனும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திருடச் சென்றார்களாம். பதிமூன்றாவது மாடியில் ஒரு வீட்டில் திருடிக் கொண்டிருக்கும்போது யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டதாம். இருவரும் நடுங்கி விட்டார்களாம். sensing திருடன் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவந்து, “நாம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோம். வீட்டுக்காரர் வந்துவிட்டார்” என்றான்.
உடனே intution திருடன், “வேறு வழியில்லை. வா. ஜன்னல் வழியே கீழே குதித்து விடலாம் ” என்றான்.
அதற்கு sensing திருடன், “விளையாடுகிறாயா? நாம் இப்போது 13-ஆவது தளத்தில் இருக்கிறோம்.” என்று கோபப்பட்டானாம்.
அதற்கு intution “Come on. This is not the time to be superstitious.”என்றானாம்.
- – -
இதுதான் பிரச்சினையே. பார்வைகள் வேறு. இன்னும் எத்தனையோ இருக்கிறது இதுபற்றி பேச.
மன்னிக்கவும். உங்களுக்கு எழுத ஆரம்பித்தால், எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விடுகிறேன். அதற்குக் காரணம், கட்டுக்குள் இருப்பதற்கு நான் sensing அல்ல. கட்டற்ற intution வகையறா. எனவே லா.ச.ரா-வை போன்று நீங்கள் குறிப்பிட்ட ‘நினைவோட்டல்’ முறையில் அலைபாய்ந்திருக்கவேண்டும். உண்மையில் என்னுடைய ஆளுமைக்கு நான் லா.ச.ரா போல்தான் முடியை எழுதியிருக்கவேண்டும்.  இப்போது யோசித்துப் பாருங்கள் ஒரே நேர்க்கோட்டில் முடியை எழுதுவதற்கு நான்  எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன் என்று ;-). ஆம். லா.ச.ரா ஒரு intution மனிதர்தான். அசோகமித்திரன் ‘sensing’. மன்னிக்கவும் இவற்றுக்கெல்லாம் நல்லதொரு தமிழ் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கே சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பது என் கருத்து (உதாரணம்: judging மற்றும் perceiving). இதில் உங்கள் உதவி நிச்சயம் எனக்குத் தேவை.
அன்பும் நன்றியும்,
மாதவன் இளங்கோ

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நீர் நிலம் நெருப்பு -கடிதங்கள்

$
0
0

 

 

சமகாலத் தொழில் நுட்பப் பெருக்கத்தில் குறும்படம் எனும் கலை-ஆவண வடிவம் படும் பாட்டை மனதில் நினைத்தவாறு அசிரத்தையுடன்தான் பார்க்க ஆரம்பித்தேன். உங்கள் படைப்புகள், படைப்புகளுக்கு வெளியிலான செயல்பாடுகள், தனிப்பட்டப் பேச்சுகள், கடிதங்கள் இவை சேர்ந்த மிக அணுக்கமான மனச்சித்திரம் ஒன்று எனக்குள் உண்டு. இப்படம் மிகையாகக் காட்டி, பேசி அச்சித்திரத்தைச் சற்று வெளிறச் செய்துவிடுமோ என்ற அச்சம்கூட இருந்தது.

ஆனால் தனிமையில் அமர்ந்து உங்களோடு உரையாடுவது போன்று ஒரு நெருக்கம், கடைசிவரை அப்படியே அத்தனை இயல்பாகப் படம் நகருகிறது. உங்கள் உள்ளங்கைச் சூட்டை உணர முடியும் என்பது போலக்கூட இருந்தது. இப்படம் உங்களைக் குறித்த மனச் சித்திரத்துக்கு இன்னும் வண்ணமும் கூர்மையும் சேர்த்திருக்கிறது என்று சொல்வேன். அஜிதன் சிறந்தவொரு திரைக்கலைஞனாக வருவார். பிரியங்கள் உங்களுக்கும் அஜிதனுக்கும்.

அசதா.

***

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களைப் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அது பற்றி தோன்றியது இது..

ஜெயமோகனைப் பற்றிய இந்த ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவருடைய மகன் அஜிதன் இயக்கி, எடிட் செய்திருக்கிறார். நல்ல முயற்சி.

ஓர் எழுத்தாளனின் படைப்புகளை ஒரு தீவிரமான வாசகன் மேலதிகமாக உள்வாங்குவதற்கு எழுத்தாளனின் பின்னணி பற்றி அறிந்திருப்பது கூடுதல் பயன். ஏனெனில் எழுத்தாளனின் இளம் மனது அனுபவங்கள் மூலம் உருவாகும் ஆழ்மன அடுக்குகள்தான் அவனுடைய ஏறத்தாழ அனைத்து பிற்கால படைப்புகளுக்கும் ஆதார சுருதியாக அமைகின்றன.

இந்த ஆவணப்படத்தில் தன்னுடைய இளமைக்கால பின்னணி, வாழ்ந்த இடங்கள், தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர், இளமையின் நினைவுகள், முதல் நாவல், முதல் காவியம் முதல் வெண்முரசு வரை ஜெயமோகன் விளக்கிக் கொண்டு செல்கிறார். நமக்கு சில இடங்களில் புன்னகையும், சிரிப்பும், வெடிச்சிரிப்பும் தோன்றுகின்றன. பல இடங்களில் நெகிழ்வு. ஜெயமோகனும் அஜிதனும் அமர்ந்து உரையாடும் காட்சி அத்தனை அழகாக இருக்கின்றது.

ஆவணப்படத்தின் துவக்கத்தில் இருளும் ஒளியுமான பின்னணியில் ஜெயமோகனின் உருவம் ஓர் ஓவியம் போலவே காட்சியளிக்கிறது. காட்சிகளின், உரையாடலின் கூடவே பயணிக்கும் புகைப்படங்கள் நன்று.

‘ஜெயமோகனின் கீபோர்டு மாத்திரம், எழுத்து எழுத்தாக அல்லாமல் வாக்கியம், வாக்கியமாக அடித்து தள்ளும்’ என்று அராத்து ஒருமுறை குறிப்பிட்டார். ஜெயமோகன் உபயோகப்படுத்தும் கீபோர்டை பார்த்ததும் அதுதான் நினைவிற்கு வந்தது. பாவம், எத்தனை அடிவாங்கியிருக்கும்?

கீபோர்டுகளின் ஒலி மட்டும் தொடர வேறு வேறு காட்சிகளுடன் நிறையும் இந்த ஆவணப்படம் அர்த்தம் மிகுந்ததாய் உருவாக்கப்பட்டுள்ளது.

கலையுணர்வோடு காட்சிகளை நோக்கத் தெரிந்த இளம் கண்களின் வழியாக இது பதிவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அழகியலும் பொருளும் இணைந்த காட்சிகளின் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது. ஒலித்தரம் சற்று மேம்பட்டிருக்கலாம். மெலிதான பின்னணி இசை ஆவணப்படத்தின் தேய்வழக்கு மரபு என்றாலும் அது இணைக்கப்பட்டிருக்கலாம்.

ஜெயமோகனின் வாசகர்களுக்கு அவரை இன்னமும் சற்று ஆழமாக அறிந்து கொள்ள உதவும் ஆவணப்படம்.

சுரேஷ் கண்ணன்

***

அண்ணன், சிறப்பான ஒரு ஆவணத்தை அஜிதன் எடுத்திருக்கிறான். குமரியின் அழகும் உங்கள் எழுத்தின் ஆழமும் இணைந்த கலவை. உங்கள் எழுத்து ஒளிபெற்று துலங்கும் ஒரு ஆவணப்படம் தான் இது, சந்தேகம் இல்லை. சில நகைச்சுவைக் காட்சிகள் உங்களை அருகில் பார்த்தது போல் இருந்தாலும், அஜிதன் காட்சிகளை வெட்டி இணைத்த விதம் என்னை வெகுவாக கவர்ந்தது. சான்றாக பலவற்றைக் கூறலாம் என்றாலும் உங்கள் தாயாரின் தற்கொலைக் குறித்த வாக்குமூலத்தை அடுத்த “அலைக்காழிப்பைக்” காண்பிக்கும் சித்திரம் அவன் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை உணர்த்த போதுமானது. அஜிதனை சிறுவனாக பார்த்திருக்கிறேன், இன்று என்னைக் கவரும் ஒரு இளம் படைப்பாளியாக அவன் எழுந்து நிற்பது ஒரு பரவசத்தை அளிக்கிறது, கூடவே எதிர்கால இளைஞர்கள் குறித்த நம்பிக்கையும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் என் மதிப்பீடு -4

$
0
0

 

புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால் உண்டு. சிலம்புவித்தை கற்றுக் கொள்பவர்கள் சிலம்பை மறந்தால் அன்றி களம் நின்று போராட முடியாது., அதைப்போல மொழிநடை தன்னியல்பாக கைகளில்எழுந்து வருமளவுக்கு உள்ளம் பழகினாலன்றி இலக்கிய நடையில் சரளமான ஓட்டத்தை உருவாக்க முடியாது.

எண்ணி எண்ணி கதை எழுதுவதாகவும், ஒவ்வொரு சொல்லாகக் கதையை கோர்ப்பதாகவும் அவ்வப்போது சில எழுத்தாளர்கள் சொல்வதுண்டு. உண்மையிலேயே ஒரு எழுத்தாளர் அப்படிச் செய்தார் என்றால் அது துளிகளின் திரட்டாகவே இருக்கும். புனைவுக்கு இருந்தாகவேண்டிய ஓட்டம் அமையாது

பெரும்பாலான நல்ல கதைகள் ஒரே வீச்சில் உருவாகுபவை. ஒரு கனவு போல  உணர்ச்சிகரமான ஒரு பேச்சு போல. மௌனி சொல்லெண்ணி கதை எழுதியதாக சொல்வார்கள். அவருடைய ஒரு சில நல்ல கதைகள் தவிர மிகப்பெரும்பாலான கதைகள் வெற்றுச் சொற்கோவைகளாக இருப்பதற்கு அது ஒரு காரணம்.

கதைப்பயிற்சி என்பது மொழி தன்னிச்சையாக வெளிப்படும்படி ஆசிரியன் தன் மனதைப்பழக்குவதுதான் அதுவே எழுத்தாளனின் நடையை உருவாக்குகிறது. பல்லாயிரம்பேர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் மொழியில் ஒரு எழுத்தாளனுக்கு மட்டும் தனித்துவமான அடையாளம் எப்படி உருவாகிறது? அவனுடைய முகம் எப்படி தனித்துவம் வாய்ந்ததோ கைரேகை எப்படி தனித்துவம் வாய்ந்ததோ அப்படித்தான் மொழியும்.

ஒவ்வொருக்கும் அவர்களுக்கான அந்தரங்கமான உள் மொழி ஓட்டம் ஒன்று இருக்கும். மனம் என்று அவன் அதைத்தான் உணர்ந்து கொண்டிருப்பான். அந்த மொழிக்கு மிக நெருக்கமாக எழுத்து மொழியைக் கொண்டு வரும்போது அது அவருக்கு மட்டுமே உரித்தான நடையாக மாறுகிறது.

எழுத வரும் எவரும் எழுதும் சூழலில் பிறர் எழுதுவதைப்படித்து அதன் பாதிப்பில்தான் எழுத வருகிறார்கள். எந்தப்பெரும் எழுத்தாளனுக்கும் தொடக்கத்தில் பிற எழுத்தாளர்களின் நேரடி பாதிப்பு இருக்கும். எழுத எழுத அப்பாதிப்பு குறைந்து அவனுடைய ஆழ்மன மொழி நேரடியாகவே புனைவு மொழியாக ஆகும்.

இப்பரிணாமம் தொடர் பயிற்சியால் நிகழ்வது. சலிக்காமல் நிறைய எழுதுவதன் மூலமாகவே இது சாத்தியமாகும். ஆனால் இவ்வாறு எழுதும் படைப்புகள் அனைத்தும் பிரசுரமாகும் என்றால் ஆரம்பத்திலேயே அவ்வெழுத்தாளனைப் பற்றிய பிழையான சித்திரம் உருவாகிவிடுகிறது. இன்றைய வாசகன் மிகப்பொறுமையற்றவன் அதிகபட்சம் ஒர் எழுத்தாளனுடைய இரண்டோ மூன்றோ கதைகளை அவன் வாசித்துப் பார்க்கக்கூடும். அத்துடன் அவ்வெழுத்தாளனைப் பற்றிய உளச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்வான். அதை அவனால் கடக்க முடியாது. கடக்கும் அளவுக்கு பொறுமையை, கவனிப்பை அவன் எழுத்தாளனுக்கு அளிப்பதில்லை.

மிகச்சில எழுத்தாளர்கள்தான் அந்த ஆரம்பகட்ட எதிர்மறைச் சித்திரத்தை கிழித்து வெளிவந்திருக்கிறார்கள். மிக வலுவான இரண்டாம்கட்ட கதைகள் வழியாக இது நிகழ வேண்டும். உதாரணம், கந்தர்வன். சாதாரண தீக்கதிர்க்கதைகளைத் தான் அவர் வாழ்நாளில் பெரும்பகுதியிலும் எழுதியிருக்கிறார். ஆனால் கடைசிச் சில வருடங்களில்  எழுதிய கதைகள் அவருக்கு இலக்கியத்தில் அழியாத இடத்தை உருவாக்கிக் கொடுத்தன.

இளம் எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டும். அதேசமயம் வெற்றிபெற்றது என்று அவர்களுக்கு உள்ளூர நம்பிக்கை வரும் படைப்பை மட்டுமே வெளியே அளிக்கவேண்டும். இவற்றை என் அனுபவத்திலிருந்து தான் சொல்கிறேன். எனது முதல் கதை பிரசுரமானது எனது எட்டாவது வகுப்பு படிக்கும்போது. கல்லூரி இறுதியாண்டில் மட்டும் வெவ்வேறு பெயர்களிலாளாக நாற்பது கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆனால் எனது முதல்கதை என்று நான் இன்று அறிவிக்கும் கதை கணையாழியில் வெளி வந்த நதி.

அதற்கு முன்பு எப்படியும் இருநூறு கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. அவற்றில் இருபது கதைகளை இன்றைய இலக்கிய தரத்தைக் கொண்டவை என்றே சொல்ல முடியும். ஆனால் அவற்றை நான் ஒட்டுமொத்தமாக நிராகரித்தேன். அக்காலத்தில் என் பெயரிலேயே வெளிவந்த கதைகளைக் கூட பின்னாளில் தொகுப்புகளில் எடுத்துக் கொண்டதில்லை.

வேறு பெயர்களில் நான் பிரசுரித்ததற்கு முக்கியமான காரணம் அவை என் பெயருடன் தொடர்பு படுத்தக் கூடாது என்பதுதான். அன்று அவ்வலவு எழுதி பிரசுரத்திற்கு அனுப்பியமைக்கு அப்போது பணம் கிடைப்பதும் ஒரு காரணமாக இருந்தது. எனது கல்லூரி வாழ்க்கை முழுக்க எழுத்தில் ஈட்டிய பணத்தில் தான் கொண்டாடப்பட்டது.

ஆக நிறைய எழுத முயலும்முனையும் எழுத்தாளன் குறைவாகவே பிரசுரிக்கவேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்டிருக்கிறான். இந்த சமன்பாடைத்தான் எழுத்தாளன் கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு முக்கியமான இடர் உள்ளது நிறைய எழுதும் காலகட்டத்தில் எல்லாமே எழுதுவதற்குரிய கருத்துக்களாக கண்ணில் படும். சாலையில் செல்லும் போது ஒரு நிகழ்வு சற்றே கவனத்தைக் கவர்ந்தால் அக்கணமே அது ஒரு கதையல்லவா என்று தோன்றிவிடும். உடனே அமர்ந்து அதை எழுதத்தோன்றும்.

இளம் எழுத்தாளன் எழுத ஆரம்பிக்கும் காலத்தில் எழுதிப்பார்ப்பதற்கான ஒரு பயிற்சிமுறையாக தோன்றுவதை எல்லாம் அவ்வபோது எழுதிக் கொண்டிருப்பது நல்லதுதான். வாரம் ஒரு சிறுகதை வீதம் ஒரு வருடம் எழுதக்கூடிய ஒருவன் அதற்கு அடுத்த வருடத்திலேயே தன்னியல்பான மொழிநடையை அடைந்திருப்பான்.

ஆனால் அதற்கு அடுத்தகட்டத்தில், கதைகளைப் பிரசுரித்து கவனத்தை கோரும் நிலையில் அவ்வாறு கண்ணில்பட்ட அனைத்துக் கதைக்கருக்களையும் எழுதுவது என்பது தனக்கு எதிராக தானே போஸ்டர் ஒட்டிக் கொள்வதற்கு நிகர் .அன்றாட வாழ்க்கை எழுதுவதற்கான கருப்பொருள்கள் நிறைந்ததுதான். வாழ்க்கைநிகழ்வுகளில் பிறரிடம் நாம் சொல்ல விரும்பும் ஏதோ ஒன்று ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்குள் அது வரவேண்டுமா என்பது முக்கியமான வினா.

இரண்டு காரணங்கள் ,ஒன்று அவை ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டவை. ஒரு விதவையின் துயரம் என்பது இன்றும் யதார்த்தமே. ஆனால் ஆ.மாதவய்யா நூறு வருடங்களுக்கு முன் எழுதிய கரு அது. இன்று அதை திரும்ப எழுதும்போது எந்தப் புதுமையும் அதில் வாசகனுக்கு இல்லை. வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கைவிடுவது இன்றும் ஒரு யதார்த்தம். ஆனால் வாசகன் அதில் புதிதாகத் தெரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை. எழுதிச்சலித்துவிட்ட விஷயம் அது

நவீன இலக்கியத்திற்குள்  நுழையும் ஓர் அனுபவம் அல்லது அறிதல்  அனன்யதா என்னும் வடமொழிச் சொல்லால் குறிக்கப்படும் ஒரு குணத்தைக் கொண்டிருக்கவேண்டும். பிறிதொன்றிலாமை என்று தமிழில் அதை சொல்லலாம். வேறெங்கும் கிடைக்காத, வேறெவரும் சொல்லாத ஒரு விஷயம் அதில் நடந்திருக்க வேண்டும். அந்த அம்சம் இல்லாதபோது அது எவ்வளவு கவனமாக எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் தன் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது.

அதற்கு ஒரே வழி அந்தக் கதை உங்களில் எந்த அளவுக்கு பாதிப்பை செலுத்தியிருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்வதுதான். பலநாட்களுக்கு அந்த அனுபவம் உங்களைச் சீண்டியதா, நிம்மதியிழக்க வைத்ததா என்று கவனியுங்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகும் அந்த நிகழ்வு உங்களில் அதிர்வலைகளை எழுப்பினால் அது கதை ஆகும் தகுதி கொண்டது.

ஒர் அனுபவத்திலிருந்து மேலும் மேலும் என அறிதல்கள் எழுந்துவருமென்றால் மட்டுமே அது படைப்பாகத் தகுந்தது. ஒர் அனுபவம் வாழ்க்கையில் உங்களுக்கு மறக்கமுடியாத படிப்பினையாக அமையுமென்றால்தான் அது எழுதத் தக்கது. அந்த மேலதிக அழுத்தம் அனுபவத்துக்கு இல்லாத போது அதை புனைவாக்குவதைப்பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டும்.

இங்கு நம்மை ஏமாற்றும் அம்சம் ஒன்று உண்டு. மேதைகள் என்று நாம் சொல்லும் பெரும்படைப்பாளிகள் மிக எளிய அனுபவங்களை கதையாக்கி இருக்கிறார்கள். அசோகமித்திரன் அவ்வகையில் இளம்எழுத்தாளர்களை மிகவும் ஏமாற்றும் ஒரு படைப்பாளி.

உதாரணமாக கொத்தனார் ஒருவன் சிமெண்டு வாங்குவதற்கு காசுவாங்கி அந்தக் காசை மது அருந்துவதற்கு செலவிடும் ஒரு தருணத்தை கதையாக்கி இருப்பார். அதைப்போன்ற நூற்றுக்கணக்கான தருணங்கள் நம் வாழ்க்கையில் இருக்கும், அதை நாமும் கதையாக்கலாமே என்று தோன்றும். ஆனால் நாம் அசோகமித்திரன் அல்ல.

மேதைகள் இரண்டு வகையில் கதையை முக்கியமாக்குகிறார்கள் ஒன்று, ஒரே சாதாரண நிகழ்வைக் கதையாக்கும்போது அதை மிகச்சரியாக மொத்த வாழ்வுக்கும் பொருத்துவதனூடாக வாழ்வின் பொது உண்மை ஒன்றைச் சொல்ல அவரால் முடிந்திருக்கும். சூரியனை நோக்கி ஒரு சரியான கோணத்தில் கண்ணாடிக்கல்லை திருப்பி வைப்பது போன்றது அது. அசோகமித்திரனின் பல கதைகளை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மேலோட்டமான வாசகப் பார்வையில் அன்றாட வாழ்க்கையின் ஒரு தருணம் போன்றிருக்கும் அக்கதை எதை பிரதிநிதித்துவப்படுத்துவது என்று பார்த்தால் மொத்தவாழ்க்கையின் பொருளின்மையோ பொருளையோ காட்டி நிற்பதைக் காணமுடியும். உதாரணம் புலிக்கலைஞன்.

இன்னொன்று அசோகமித்திரன் ஒரு கதை எழுதும்போது அசோகமித்திரன் எழுதிய புனைவுலகு என்ற பிரம்மாண்டம் அதற்கு பின்னணியாக அமைந்துள்ளது. அதுவும் அந்தக் கதைக்கு பொருள் கொடுக்கிறது. அது அசோகமித்திரனின் கதை என்பதனாலேயே நாம் மேலதிகமாகக் கவனிக்கிறோம். அவருடைய வாழ்க்கைப்பார்வை என்ன அவருடைய தரிசனம் என்ன என்று நமக்குத் தெரியும், அதுவும் சேர்ந்து அந்தக் கதைக்கு அர்த்தத்தை உருவாக்குகிறது.

காஃப்காவின் குட்டிக் கதைகளை தனியாக எடுத்து ஒரு பிரசுரித்தால் அது பொருளற்ற சாதாரணமான ஒரு பத்தியாக அமையும் .ஆனால் காஃப்காவின் தனிவாழ்க்கையும் காஃப்காவின் புனைவுலகும் சேர்ந்து அந்தக் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. ஆக இளம் எழுத்தாளர்கள் எளிய கருக்களை எடுப்பதென்பது மிக அபாயகரமானது.

 

 

*

download (1)

கே ஜே அசோகுமார்

 

 

இந்த சிறுகதை விவாதத்தில் நான் எடுத்துக் கொண்ட மூன்று கதைகளுமே  மேலேசொல்லப்பட்ட இக்குறைகளைக் கொண்டவை. இவற்றில் கே.ஜே.அசோக்குமாரின் பாம்புவேட்டை என்னும் கதை எழுதித் தேர்ந்த ஒரு கையால் உருவாக்கப்பட்டது என்பதற்கான தடயங்கள் உள்ளன. சரளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது அக்கதை. பாவண்ணன் போன்ற முன்னோடி எழுத்தாளரின் பாதிப்பும் உள்ளது.

நிகழ்வுகளையும் நினைவுகளையும் எண்ணங்களையும் பின்னி ஒற்றை மொழிப்பரப்பாக ஆக்க ஆசிரியரால் முடிந்திருக்கிறது . சரளமான வாசிப்பனுபவம் அளிப்பதாக உள்ளது அக்கதை. ஆகவே மொழி நடை சார்ந்து இவருக்கு மேலதிக பயிற்சிகள் தேவையில்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது.

சூழலை நுணுக்கமான தகவல் வழியாகச் சொல்லவும் கதாபாத்திரங்களை கண்முன் காட்டவும் அசோக்குமாரிடம் திறமை இருக்கிறது. இன்று இக்கதையை வைத்துச் சொல்லப்போனால் அவருடைய எதிர்காலச் சாத்தியங்கள் சரளமான மொழிநடையிலும் நுண்தகவல்களைக் கொண்டு சூழலையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கும் திறமையிலும் அமைந்துள்ளன என்று தோன்றுகிறது.

இக்கதையிலிருந்து தெரியும் அவரது பலவீனங்கள் என்ன? முதலாவதாக, ஒரு கதையாக ஆவதற்கான அழுத்தம் இல்லாத எளிய கருவொன்றை எடுத்திருக்கிறார் என்பது. ஒரு வணிகன் தனது இரைகளை எப்படி வீழ்த்துகிறார் ,அவர் முன் வந்து சேரும் ஒருவர் எப்படி இரையாக ஆகிறார் என்பதே கரு. அதற்கு உருவகமாக அந்த எலியைப் பின்தொடரும் சாரைப்பாம்பைப் பின்தொடரும் பெரிய பாம்பு என்னும் உருவகத்தை பயன்படுத்தியிருக்கிறார்.

வணிகரின் அந்தக் குணம் மிக இயல்பான ஒன்று. உண்மையில் வணிகர்களைப்பற்றி ஒரு பொதுப்படுத்தல் மட்டும்தான் இங்கு இருக்கிறது. மேலதிகமாக  கதைசொல்லி அறிந்து, நமக்குச்சொல்லும் வாழ்க்கை உண்மை என்ன? இக்கதையினூடாக மட்டுமே வாசகன் அறிந்து கொள்வது என்ன? அவ்வறிதல் இக்கதையாலன்றி எங்கும் அறியப்படமுடியாத ஒன்றா? இல்லை என்பதே பதில்

இந்த குறையால் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்த முடியாமல் தேங்கிவிடுகிறது இந்தக் கதை. இதை கதை சொல்லியின் பார்வையின் போதாமை என்று சொல்லலாம். ஆசிரியர் அவரை வெகுவாக பாதித்த ஒன்று வாசகனையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி பாதிக்காத ஒன்றை புனைவாக்க வேண்டுமா என்று அவர் யோசிக்கலாம்.

கதைத்தொழில்நுட்ப ரீதியாக இக்கதையின் குறைபாடுகள் என்ன?  புறவயமான எளிய தகவல்களை சரளமாகச் சொல்லிச் செல்லும்போது அவை வாசகன் மனதில் நின்றாக வேண்டுமென்பதில்லை.இக்கதைக்குள்  ஒரு விபத்து சாதாரணமான வார்த்தையில் சொல்லப்படுகிறது. அந்த விபத்தைப்பற்றி மேலதிகமான ஒரு ஆர்வம் வாசகனிடம் உருவாகும்போது விபத்துக்குள்ளானவன் ஆஸ்பத்திரியில் இருக்கும் சித்திரம் வந்துவிடுகிறது. ஆஸ்பத்திரியில் அவனுடைய எண்ணங்களைப் பின் தொடரும்போதே அவன் பணியாற்றும் அந்த வணிகரின் உளச்சித்திரத்திற்குள் சென்றுவிடுகிறது கதை. வணிகர்கள் வழியாக சென்று அவருடைய வாழ்க்கை நோக்கைச் சென்றடைந்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்து கதை முடிகிறது. இத்தகைய ஊசலாட்டத்தை சிறுகதை வாசகன் எதிர்மறையாகத்தான் பார்ப்பான். அவனுள் கதை திரளாமல் ஆசிரியரே கதைக்களங்களை மாற்றிக் கொண்டிருப்பதுபோல் உள்ளது.

கதை இப்படி அழுத்தமாக எதையும் உருவாக்காமல் நழுவி உருண்டு செல்வதே இதை வாசக அனுபவமாக ஆக்காமல் நின்றுவிடச்செய்கிறது. கதை வாசகனை உள்ளே இழுத்தபின் அவனுடைய ஊகங்களையும் கருத்தில்கொண்டு தன்னை வளர்க்கவேண்டும். அவன் ஆர்வத்தைத் தக்கவைக்கவேண்டும். ஆகவேதான் சிறுகதையில் எது தொடங்குகிறதோ அதுதான் வளரவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இக்கதையில் விபத்து, ஆஸ்பத்திரி என கதைவிரிந்தபின்னர் தொடர்பே இல்லாமல் அந்த முதலாளி உள்ளே வருகிறார்

எளிதில் இதை சீரமைத்திருக்கலாம். உதாரணமாக இக்கதை விபத்தாகி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது அவனுடைய முதலாளி வந்து பார்க்கும் கணத்தில் தொடங்கியிருந்தால் வாசகனுக்கு இவன் ஆஸ்பத்திரியில் இருப்பதும் அவன் முதலாளியினுடைய குணச்சித்திரமும் ஒரே சமயத்தில் குவிமையமாக ஆகியிருக்கும். இரண்டையுமே சொல்லிவந்து கதையை முடித்திருக்க முடியும்

இன்னொரு மிகப்பெரிய பலவீனம் என்பது இக்கதையின் மையமாக உள்ள அந்த வணிகர் வெறுமே நினைவுகளில் மட்டும்தான் வருகிறார் என்பது. அப்படி வரக்கூடாதா என்று கேட்டால் எப்படியும் வரலாம் என்பதே பதில். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் கதைக்குள் நேரில் வரும் ஒரு கதாபாத்திரம் அளிக்கும் அழுத்தமான சித்திரம் ஒரு கதாபாத்திரத்தின் நினைவில் வரும் கதாபாத்திரத்தால் அளிக்கப்படுவதில்லை. நினைவில் வரும் கதாபாத்திரம் ஒருவகையில் வழுக்கிச் செல்லும் சித்திரம்தான்.

இக்கதையின் இன்னொரு பிழை என்பது கதைத்தொடக்கத்திலேயே ஒரு பெண்ணைப்பற்றிய குறிப்பு வருவது. எவ்வகையிலும் அது கதைக்குள் வளரவில்லை. எதையும் சுட்டவில்லை. இது போலிக்குறிப்பு என கதைத்தொழில்நுட்பத்தில் சொல்லப்படும். கதையில் ஒரு துப்பாக்கி சொல்லப்பட்டால் கதைமுடிவுக்குள் அது வெடித்தாகவேண்டும் என்பது இதைத்தான். ஏனென்றால் வாசகன் அங்கே கற்பனைசெய்ய ஆரம்பித்துவிடுகிறான். அவனை விட்டுவிட்டு ஆசிரியன் தன்போக்கில் செல்லமுடியாது.

இக்கதையில் மறைமுகமாக நிகழ்வுகள் நிறைந்துள்ளன. இளைஞனாக வேலைக்குச் சேர்வதிலிருந்து விபத்துக்குள்ளாவது வரை அவன் வாழ்க்கை முழுக்க சொல்லப்படுகிறது. ஆனால் நேரடியாக நிகழ்வுகள் என்று எதுவுமே இல்லை. ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் ஒருவனுக்கு அவன் உதவியாளன் உணவு கொண்டு வருவதும் செல்வதும் தவிர எதுவுமே இல்லை.  ஆகவே இது கதையல்ல. ஒரு சாதாரன அனுபவப்பதிவு மட்டுமே

கதைக்குள் ஒரு களம் இருக்க வேண்டும் ஒரு வாழ்க்கை தொடங்கி, ஒரு கண்டடைதலை நோக்கிச் சென்று, முடிவடைய வேண்டும். சிறுகதை என்பது  வலுவான திருப்பம் மூலம் உயிர் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு சாதாரண கண்டடைதலை சொல்வதற்காகச்சென்று முடியும் அனுபவக்குறிப்புக்கு சிறுகதை என்னும் வடிவம் இல்லை.    முடிவின் கணத்தில் மீண்டும் தொடங்கும் ஒன்று, முடிவுக்கணத்தில் எதிராகத் திரும்பி புதிய வளர்ச்சியை அடையும் ஒன்று, தான் சிறுகதையாக கருதப்படமுடியும். அல்லது மேலதிகமான கவித்துவ உட்குறிப்புகள் மூலம் விரிவடையும் ஒன்று

இம்மூன்றுமே நிகழாதபோது இக்கதையை நினைவுகளின் மூலம் வெளிப்படும் ஒரு வாழ்க்கைச் சித்திரம் என்பதற்கு அப்பால் சிறுகதையாகச் சொல்லி வகுத்துவிட முடியாது. அத்துடன் அவ்வாழ்க்கை சித்திரமும் வாசகனுக்கு எந்த புதிய அறிதலையும் அளிக்காமல் நின்றுவிடுகிறது. சிறுகதை ‘நிகழ’ வேண்டும். அதன் குணச்சித்திரங்களுடன் வாசகன் உடன் வாழவேண்டும். அவ்வாழ்க்கை களத்திலிருந்து முன்பு அறிந்திராத ஒரு மெய்மையை வாசக்ன் அறிய வேண்டும். அது  இக்தையில் நிகழவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

p

 

யாதும் காமமாகி நின்றாய் மகேந்திரன் மிக ஆரம்பநிலையில் எழுதிய ஒரு கதை. அனேகமாக அவருடைய முதல்கதையாக இருக்கலாம். இக்கதையிலும் சிறுகதையின் வடிவம் என்பதோ பார்வை என்பதோ ஒருமையோ இல்லை, ஓர் ஆணும் பெண்ணும் ஒரு புதுநிலத்திற்குச் சென்று உல்லாசமாக இருக்கிறார்கள் என்பது ஒரு சிறுகதை அல்ல ,அது தொடக்கம் மட்டும்தான். இக்கதையை ஒருவரிடம் சொன்னால், சரி அப்படி இருந்து என்ன ஆனார்கள் என்றுதான் கேள்வி வரும். அந்தக் கேள்விக்கான விடையே சிறுகதை. ஆகவே ஒரு சிறுகதைக்கான முதல் பத்தி மட்டும் தான் விரித்து எழுதப்பட்டது போல் உள்ளது இக்கதை.

 

ஒரு பெண்ணை காமத்துடன் அணுகும் ஒருவனின் களியாட்டத்தை ஓரளவுக்கு தனிப்பட்டக் குறிப்புத்தன்மையுடன் எழுத முயன்றிருக்கிறார். புனைவெழுத்தின் விதிகளில் ஒன்று மிக அந்தரங்கமான ஒன்றை கூடுமானவரை புறவயமாக சொல்ல முயலவேண்டுமென்பதுதான். அப்போது தான் அதற்கு ஒரு தெளிவான வெளிப்பாடு அமையும். அந்தரங்கமான ஒன்றை மேலும் அந்தரங்கமான மொழியில் சொல்வதென்பது ஒரு பெரிய புனைவுப் பரப்பிற்குள் நிறுத்தித்தான் சாத்தியமாகும். அதுவும் மொழிதேர்ந்த எழுத்தாளன் மட்டுமே செய்யக்கூடியது அது. வெறும் துயரத்தை வெறும் காதலை வெறும் தனிமையை மட்டும் மொழியாக மாற்றினால் அது எங்கும் தொடர்புறுத்தாமல் வெறும் மொழி விளையாட்டாக மட்டுமே நின்றுவிடும்.

இக்கதையின் கதாபாத்திரங்கள் எவையும் நமக்கு அணுக்கமானவை அல்ல. ’அவன்’ மட்டும் தான் ’அவள்’ மட்டும் தான். அவர்களின் முகமோ குணமோ திரளவில்லை. அவர்கள் செல்லும் நிலமும் காட்டப்படவில்லை. அவர்களின் உணர்வுகளில் ஒரு சிறு பகுதி மட்டுமே சொல்லப்படுகிறது. அப்படி சொல்லப்பட்ட ஒன்றும் நமக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒன்று. இதில் மேலதிகமாக வாசகன் கவனம் கொள்ள வேண்டுவது என்ன? வாசகன் எந்த உணர்வை அடைய வேண்டுமென்று ஆசிரியர் விரும்புகிறார். இவ்வனுபவத்திலிருந்து கதாசிரியன் பெற்ற பகிர விரும்பும் அறிதல் என்ன?

வெறும் உணர்ச்சிகளை புனைவுகள் என்று எண்ணி மயங்கும் ஒரு நிலை இளம் எழுத்தாளனின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்வது. அதை சிறுகதை எழுத்தின் பிழைபுரிதல்களில் ஒன்றாகவே சொல்லலாம். தத்துவ சிந்தனையில் உள்ள fallacy என்று சொல்லப்படும் பிழைபுரிதல்களில் ஒன்று உணர்வு நிலையை சிந்தனை என்று மயங்குவது. தத்துவக்கல்வி பெறும்போது நமக்கு இதை ஆசிரியர்கள் புரியவைப்பார்கள். கால-இடத்திற்குள் நிற்கும் ஒர் அனுபவத்தை மானுடப் பொதுமையாக்குவது இரண்டாவது பிழைபுரிதல். புனைகதையிலும் ஏறத்தாழ அது பொருந்தி வரும். ஒரு தனிமனித அனுபவத்தை ,சாதாரண உணர்வுநிலையை கலை வெளிப்பாடென்று கருதும் பிழையே இக்கதையில் நிகழ்ந்துள்ளது.

தூயனின் தில்லையம்மா விமர்சகர்கள், வாசகர்கள் பலர் சொன்னது போல மிக எளிமையான ஒரு கதை .வணிகக்கேளிக்கை எழுத்தின் மாதிரிவடிவம் இது, அதற்குமேல் ஒன்றுமில்லை. வஒவ்வொரு காலகட்டத்திலும் புனைகதையில் டெம்ப்ளேட்டுகளை அல்லது மாதிரிவடிவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவான வாசகனுக்கு இந்த மாதிரிவடிவங்கள் தான் அதிகம் வந்து சேர்கின்றன. தினமலர் கவிதைகளை எடுத்துப்பார்த்தால் முதிர்கன்னி, அனாதை விடுதியில் இருக்கும் பெற்றோர், வரதட்சினைக் கொடுமை, சாதிக்கொடுமை என்று ஒரு சில தலைப்புகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒரேவகைக் கவிதைகள் வந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

மாதிரிவடிவங்கள் உண்மையில் முதன்மையான படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நல்ல படைப்புகளின் நகல்கள். அந்த நல்ல படைப்புகளின் வடிவ அமைப்பை மட்டும் ஓர் அச்சாக ஆக்கிக்கொண்டு அதைப்படைக்கிறார்கள். தேர்ந்த வாசகனுக்கு சலிப்பூட்டினாலும் ஒருவகையான இலக்கிய நிகழ்வுதான் இது. இலக்கியம் என்பது நீரில் கல்விழுந்த அலைவட்டம். அவ்வட்டம் விரிந்து விரிந்து சாதாரண மனிதர்களைச் சென்றடையும்போது எளிமையான மாதிரிவடிவங்களாக மாறித்தான் செல்லமுடியும்.

ஒரு பொதுவாசகன் அந்த மாதிரிவடிவங்கள் வழியாகத்தான் இலக்கியத்துக்குள் வருவான். முதல் வட்டம் சலித்து இரண்டாவது வட்டத்தை வந்து சேர்வான். இரண்டாவது வட்டத்திலிருந்து மூன்றாவது வட்டத்திற்கு வந்து கடைசியாக கல் விழுந்த மையத்திற்கு வந்துசேர்வான். அவன்தான் இலக்கிய வாசகன். தில்லையம்மா அந்த முதல்வட்டத்திற்குள் எழுதப்பட்டிருக்கிறது. எவ்வகையிலும் இலக்கியத்தகுதி கொண்ட படைப்பு அல்ல. தூயன் அது தன் ஆரம்ப கதை என்றும் ,வாசிப்பினூடாக தான அடுத்த அடுத்த கட்டங்களுக்கு வந்துவிட்டதாகவும் அறிவித்திருப்பதனால் அக்கதையையும் இணையத்தில் இருந்து நீக்கியிருப்பதனால் அதைப்பற்றி விரிவாக விவாதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் இளம் எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றை மட்டும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இந்த மாதிரிவடிவம் மிக எளிமையான வடிவில் நாம் எழுத ஆரம்பிக்கும் போதே நம் முன் வந்து நிற்கிறது. அதை நாம் பின்னாளில் கடந்துவிடுவோம். ஆனால் நாம் தேர்ந்த எழுத்தை எழுதுகிறோம் என்று எண்ணும் போதுகூட  நம்மை அறியாமலேயே அது நமக்குள் இருக்கும்.வைரஸ் போல. உதாரணமாக,  ஒரு சமூக உண்மையை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக சொல்ல வைப்பது ,அனைவரும் அறிந்த ஒரு அன்றாடக் கருத்தை சொல்லும் பொருட்டு ஒரு கதையை கட்டமைப்பது, எவரும் எண்ணியிராத ஒரு தளத்தை கதையில் முன்னரே புதைத்துவைத்து திறப்பது,  ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை சொல்லிவிட்டு அது நன்னோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு நாடகம்தான் என்று காட்டுவது  – போன்ற பல மாதிரிவடிவங்கள் நமது மூளைக்குள் எங்கோ படிந்திருக்கும்.

படைப்பூக்கத்துடன் நாம் எழுதும்போது அவை நமக்கு தொந்தரவாக அமையாது. ஆனால் எங்கோ ஓரிடத்தில் புனைவு தரைதட்டும்போது இந்த மாதிரிவடிவங்கள் நமது கைக்கு எழுந்து வரும். உணர்வு ரீதியாக நாம் பேசும்போது தேய்வழக்குகளை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் மனத்தொய்வில்லாமல் அன்றாட வாழ்க்கையில் பேசும்போது ‘பார்த்து ரொம்ப நாளாயிற்று’ ’அடிக்கடி கூப்பிடுங்கள்’,‘காசு வரும்போகும், மனசுதான் முக்கியம்’ போன்று தேய்வழக்குகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தேய்வழக்குகளுக்கு இணையானவை இந்த மாதிரிவடிவங்கள். நமது புனை கதைக்குள் மாதிரிவடிவங்களின் செல்வாக்கு மறைமுகமேனும் இல்லாமல் இருக்க பார்த்துக்கொள்வது மிக அவசியமான ஒன்று.

புதியபடைப்பாளிகளின் படைப்புகளின் எல்லாச் சிக்கல்களும் எப்படியோ இந்தக் கதைகளைப்பற்றிய விவாதத்தில் பேசுபொருளாகிவிடும். அவற்றை கவனமாகக் களையவேண்டியதில்லை. அவற்றை அறிந்து விவாதித்து உள்ளத்தில் பதியவைத்துக்கொண்டாலே போதும், இயல்பாகவே நாம் அவற்றிலிருந்து வெளியே சென்றுவிடுவோம். நண்பர்கள் ஊக்கத்துடன் எழுத வாழ்த்துக்கள்

 

 

==========================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16776 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>